Sidebar

18
Thu, Jun
சமீபத்திய செய்திகள்

இலங்கை மருதமுனை விவாதம் 1994

31.01.1994, 01.02.1994 ஆகிய இரண்டு நாட்கள் இலங்கையில் உள்ள மருதமுனை எனும் ஊரில் ஒரு விவாதத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்லாஹ் அல்லாதவர்களுக்காக, கந்தூரிகளில் அறுக்கப்பட்ட பிராணிகள் உண்பது ஹலாலா? ஹராமா?

நடைமுறையிலுள்ள கத்முல் குர்ஆனும் கப்ராளிகளும்?

மவ்லூது ஓதலாமா?

கந்தூரி மற்றும் நினைவு நாட்கள் கொண்டாடலாமா?

ஆகிய நான்கு தலைப்புகளில் விவாதம் நடக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது.

எதிர்த் தரப்பில் பல ஆண்டுகள் வேலூர் பாகியாதுஸ்ஸாலிஹாத் அரபுக் கல்லூரியில் பேராசியராகப் பணியாற்றி, தற்போது அத்திக் கடையில் பணியாற்றி வரும் மவ்லவி ஷரபுத்தீன் பாகவி அவர்களும், மவ்லவி அப்துல் வஹ்ஹாப் நூரி அவர்களும் இலங்கையைச் சேர்ந்த மவ்லவி ஏ.எல். பத்ருதீன் மற்றும் இரு மவ்லவிகள் ஆகிய ஐந்து மவ்லவிகள் கலந்து கொண்டனர்.

நமது தரப்பில் பி. ஜைனுல் ஆப்தீன், அப்துல் மஜீத் உமரி, அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸீ மற்றும் இலங்கையைச் சேர்ந்த இரு மவ்லவிகள் ஆகிய ஐவர் கலந்து கொண்டனர்.

இரு தரப்பிலும் தலா ஐவர் வீதம் பத்து நபர்களைக் கொண்ட ஏற்பாட்டுக் குழுவினர் இதற்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படக் கூடாது என்று கருதி இரு தரப்பிலும் தலா இருபத்தி ஐந்து நபர்கள் வீதம் மொத்தம் ஐம்பது நபர்கள் மட்டுமே பார்வையாளர்களாக அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் வீடியோ மூலம் இந்த விவாதத்தை அறிந்து கொள்ள வேண்டும் எனவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஒவ்வொரு தலைப்புக்கும் மூன்று மணி நேரம் ஒதுக்கப்படடிருந்தாலும் இரண்டு நாட்களிலும் முதல் தலைப்பில் விவாதம் நடந்தும் முடிவுக்கு வரவில்லை.

இரு தரப்பையும் சேர்ந்த ஏற்பாட்டுக் குழுவினர் மறு நாளும் விவாதம் தொடர்ந்து நடைபெறும் என இரண்டாம் நாளின் முடிவில் அறிவித்தனர்.

எத்தனை நாட்களானாலும் நாம் நீடிக்கத் தயார் என்று கூறி நமது தரப்பில் இதை ஏற்றுக் கொண்டோம்.

ஆனால் எதிர்த் தரப்பினர் தொடர்ந்து விவாதிக்க நாங்கள் தயாரில்லை என்று பகிரங்கமாக அறிவித்து விட்டனர். ஒரு தரப்பினர் தயாராக இல்லாத நிலையில் விவாதத்தைத் தொடர இயலாது என ஏற்பாட்டுக் குழுவினர் அறிவித்தவுடன் விவாதம் முடிவுக்கு வந்தது.

எந்த ஷிர்க்கை ஆதரிப்பதற்காக எதிர்த் தரப்பினர் விவாதத்திற்கு வந்தனரோ அவற்றையெல்லாம் ஷிர்க் என்று அவர்களே ஏற்றுக் கொள்ளக் கூடிய நிலைக்கு ஆளானார்கள்.

இந்த விவாத நிகழ்ச்சிகள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேவையுடையோர் ஷஜம்யிய்யது அன்ஸாரிஸ் ஸுன்னத்தில் முஹம்மதியா, பரகஹதெனிய, எனும் முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.

விவாதம் சம்பந்தமான விமர்சனத்தில் இரு தரப்பினரும் ஈடுபடக் கூடாது வீடியோவில் மக்கள் பார்த்து உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும் என்று ஏற்பாட்டுக் குழுவினர் இரு தரப்பையும் கேட்டுக் கொண்டதால் அது பற்றிய விபரங்களை வீடியோ மூலமே அறிந்து கொள்க!

05.08.2009. 4:24 AM

மதுரை ஜகாத் விவாதம்

மதுரை ஜகாத் விவாதம் - ஒரு பார்வை

بَلْ نَقْذِفُ بِالْحَقِّ عَلَى الْبَاطِلِ فَيَدْمَغُهُ فَإِذَا هُوَ زَاهِقٌ وَلَكُمُ الْوَيْلُ مِمَّا تَصِفُونَ

உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது. நீங்கள் (தவறாக) வர்ணிப்பதால் உங்களுக்குக் கேடுதான்.

(அல்குர்ஆன் 21:18)

وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا

 உண்மை வந்து விட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழியக் கூடியதாகவே உள்ளது.

(அல்குர்ஆன் 17:81)

மேற்கண்ட இறை வசனங்கள் உண்மையான இறை நம்பிக்கையாளர்களுக்கு ஒரு பாடத்தை உணர்த்துகின்றன. எப்படிப்பட்ட பெருங்கூட்டங்கள் அணிதிரண்டு நின்றாலும் சத்தியம்தான் வெல்லும் என்பதே அந்த உண்மை.

தவ்ஹீத் ஜமாஅத்தின் சத்தியப் பிரசாரத்திற்கு எதிராக எத்தனை, எத்தனை எதிர்ப்பாளர்கள்! தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்ப்பவர்கள் இரு பிரிவினராக உள்ளனர்.

ஒரு கூட்டம் அவர்களுடைய தவறான கொள்கையை நாம் விமர்சிப்பதால் நம்மை எதிர்க்கிறார்கள்.

ஆனால், இன்னும் ஒரு பிரிவினர் இருக்கின்றார்கள். இவர்கள் தான் மிகவும் ஆபத்தானவர்கள். இவர்கள் நம்மை எதிர்ப்பதெல்லாம் தங்கள் உள்ளங்களில் கொண்டுள்ள காழ்ப்புணர்வினால் மட்டும்தான். இவர்களில் பலர் மார்க்கப் பிரசாரம் செய்கிறோம் என்ற பெயரில் வெளிநாடுகளில் சல்லிக் காசுகளுக்காக தஞ்சமடைந்தவர்கள். அல்லது வெளிநாட்டுக் காசை நம்பி உள்நாட்டில் மார்க்க வியாபாரம் செய்பவர்கள். குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து கொண்டு, ஒன்றிரண்டு பயான்கள் செய்து கொண்டு, பிரசாரம் செய்வதாக சொல்லிக் கொள்பவர்கள்.

கூலிக்காக மட்டும் மார்க்கத்தைப் பிரசாரம் செய்யும் இந்த மேதாவிகள் (?) தங்களுடைய எஜமானிய விசுவாசத்தை அதிகம் வெளிப்படுத்துவார்கள். தங்களுக்குச் சம்பளம் கொடுக்கும் அரபிகள் என்ன சொன்னார்களோ, அது தான் இவர்களின் மார்க்கம். தங்களுடைய எஜமானர்களுக்கு எதிராக யார் எந்த உண்மையைச் சொன்னாலும் மார்க்கத்தின் பெயரால் அவர்களை எதிர்க்கத் தயங்க மாட்டார்கள். அதற்காக மார்க்கத்தின் பெயரால் எத்தகைய இருட்டடிப்பையும் செய்வதற்குத் தயாராவார்கள்.

சல்லிக் காசுகளுக்காக சத்திய மார்க்கத்தின் அடிப்படையைக் கூட மாற்றியவர்கள் தான் இவர்கள்! குர்ஆன், ஹதீஸ் மட்டும் தான் மார்க்கம் என்ற கொள்கையிலிருந்த இந்த மதனிகள், உமரிகள், இதே கருத்தை மிகவும் வலிமையாக இவர்களை விடவும் அழுத்தமாக ஆழமாக தவ்ஹீத் ஜமாஅத் பிரசாரம் செய்த காரணத்தால், இஸ்லாத்தின் அடிப்படைகள் (குர்ஆன், ஹதீஸ், ஸஹாபாக்களைப் பின்பற்றுவது ஆகிய) மூன்று என மாற்றிக் கொண்டுள்ளார்கள். கோவை ஜாக் பள்ளியில் உரையாற்றிய இக்பால் மதனீ அவர்கள் இதை மிகத் தெளிவாகவே உறுதிப்படுத்தியுள்ளார்கள். இவ்வாறு கூறுவதால் அனைத்து மதனிகளும், உமரிகளும் இப்படித்தான் என எண்ணி விடாதீர்கள். இவர்களில் மிகவும் நல்லவர்கள் பலர் உள்ளனர்.

இவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராகச் செய்த மாபாதகச் செயல்கள் அனைத்தையும் நாம் பட்டியலிட்டு விட முடியாது. இவற்றையெல்லாம் நாம் இங்கே கூறுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

ஜகாத் தொடர்பாக இறைச் செய்தியான குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் தெளிவான சட்டத்தை தவ்ஹீத் ஜமாஅத் எடுத்து வைத்த போது தவ்ஹீத் ஜமாஅத்தினர் மதம் மாறி விட்டனர் என்று எந்த வித ஞானமுமின்றி ஃபத்வா கொடுத்தவர்கள் தான் இந்தக் கருங்காலிகள். தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கு எதிராக இவர்கள் செய்த அவதூறுப் பிரசாரம் கொஞ்ச நஞ்சமல்ல! விவாதக் களத்தில் சந்திக்கத் துணிவில்லாமல் வெளிநாடுகளுக்கும், உள்நாட்டிலும் இவர்கள் ஓடிய ஓட்டம்தான் என்ன...?!

என்ன ஆனாலும் பரவாயில்லை! இவர்களை விவாதக் களத்தில் சந்தித்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் தான், இவர்களின் கருத்தைப் பிரதிபலிக்கக் கூடிய, இவர்களின் எழுத்துக்களுக்கு முகமூடியாகப் பயன்படுத்தப்பட்ட நூர் முஹம்மது அவர்களை தன்னுடைய சொந்தச் செலவில் தவ்ஹீத் ஜமாஅத் அழைத்தது. ஒரு சில செலவுகளைத் தவிர அனைத்து செலவுகளுக்கும் தவ்ஹீத் ஜமாஅத் பொறுப்பேற்றுக் கொண்டது.

தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொறுத்த வரை எந்த ஒரு விவாதமாக இருந்தாலும் உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும்; உண்மையை நிலைநாட்ட வேண்டும் என்ற இலட்சியங்களோடு தான் களம் இறங்குகிறோம். அதன் அடிப்படையில் தான் மதுரையில் பிப்ரவரி 10, 11 ஆகிய திகதிகளில் நடைபெற்ற ஜகாத் தொடர்பான விவாதமும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

ஒரு பொருளுக்கு ஒரு தடவை ஜகாத் கொடுத்து விட்டால் அதற்கு மீண்டும் மீண்டும், வருடா வருடம் ஜகாத் கொடுக்கத் தேவையில்லை என்பது தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடு.

ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும், வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பது மதுரையைச் சார்ந்த நூர் முஹம்மது பாகவி அவர்களின் நிலைப்பாடாகும்.

தான் எந்த இயக்கத்தையும் சார்ந்தவரல்ல என்று இவர் சொல்லிக் கொண்டாலும், தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்ப்பதை மட்டுமே இலட்சியமாகக் கொண்ட ஜாக் மற்றும் வெளிநாட்டு மார்க்க வியாபாரிகள் சிலரை பினாமியாகக் கொண்டவராவார்.

விவாதக் களம்

முதல் நாள் காலை 10 மணியளவில் விவாதம் துவங்கிய உடன் பி.ஜே. முதலில் பேசத் துவங்கினார். அவர் தனது முன்னுரையில், எந்த ஒரு மனிதனாக இருந்தாலும் அவனிடம் தவறுகள் ஏற்படத்தான் செய்யும். இறைவன் மட்டுமே தவறுகளுக்கு அப்பாற்பட்டவன் என்ற அடிப்படையில், ஜகாத் தொடர்பாகப் பொது மேடைகளில், தான் பேசும் போது எடுத்து வைத்த சில உதாரணங்கள் தவறானவை என்பதை முதலில் எடுத்துரைத்தார். பின்னர் பின்வரும் ஆதாரங்களை முன் வைத்தார்.

  1. ஒருவன் இஸ்லாத்தைத் தழுவும் போது, லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூற வேண்டும் என மார்க்கம் நமக்குக் கட்டளையிட்டுள்ளது.
  2. ஒருவனுக்குப் புதையல் கிடைத்தால், ஐந்தில் ஒன்றை அவன் ஜகாத்தாக வழங்க வேண்டும் என்று நபியவர்கள் நமக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்.
  3. போர்க்களங்களில் கைப்பற்றப்படும் கனீமத் பொருட்களில் ஐந்தில் ஒன்றை வழங்க வேண்டும் என்ற மார்க்கக் கட்டளை.
  4. ஒருவன் இறந்து விட்டால் அவனுடைய சொத்துக்களைப் பங்கிட வேண்டும் என்ற மார்க்கக் கட்டளை.
  5. விவசாயப் பயிர்களுக்கு அறுவடை காலத்தில் ஜகாத் வழங்க வேண்டும் என்ற மார்க்கக் கட்டளை.
  6. விபச்சாரம் செய்தவர்கள் திருமணமாகாதவர்களாக இருந்தால் அவர்கள் 100 கசையடிகள் அடிக்க வேண்டும் என்ற மார்க்கக் கட்டளை

இன்னும் பல மார்க்கக் கட்டளைகளை எடுத்து வைத்து இவையனைத்தும் எவ்விதக் காலமும், நிபந்தனைகளுமின்றி இடப்பட்ட கட்டளைகள். இவையனைத்தையும் ஒரு தடவை என்று தான் நாம் விளங்கிக் கொள்கிறோம். இவற்றை ஒரு தடவை நிறைவேற்றிய பின்பு மீண்டும் மீண்டும் நிறைவேற்ற வேண்டும் என்று ஒருவர் கூறினால், அவர் தான் அதற்கான ஆதாரத்தை எடுத்து வைக்க வேண்டும். இல்லையென்றால் அவருடைய கருத்து தவறானதாகும்.

அது போன்று தான் ஜகாத் தொடர்பான விஷயத்தையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் ஜகாத்தை நிறைவேற்றுங்கள் என்பது மட்டும் தான் மார்க்கக் கட்டளை. அதனை வருடா வருடம், ஒரே பொருளுக்கு மீண்டும் மீண்டும் நிறைவேற்ற வேண்டும் என்பதற்குக் குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் அடிப்படையில் எந்த ஆதாரமும் இல்லை. எனவே மற்ற கட்டளைகளை நாம் எப்படி விளங்கிக் கொள்கிறோமோ அது போன்றுதான் இதையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஒரே பொருளுக்கு மீண்டும் மீண்டும் வருடா வருடம் கொடுக்க வேண்டும் என்று யார் கூறுகிறார்களோ அவர்கள் தான் அதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பி.ஜே. தெளிவான முறையில் தன்னுடைய கருத்துக்களைப் பதிவு செய்தார்.

பலவீனமான செய்தியை ஆதாரமாகக் காட்டினார்கள்.

ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும், வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற கருத்தைத் தரும் ஒரு ஆதாரப்பூர்வமான ஹதீஸைக் காட்டுங்கள். விவாதத்தை முடித்துக் கொள்வோம் என்று பி.ஜே. கேட்டார்.

தனது ஒவ்வொரு வாய்ப்பின் போதும் பி.ஜே. இவ்வாறு கேட்டுக் கொண்டே இருந்தார். ஆனால், நூர் முஹம்மது பாகவி சம்பந்தமில்லாமல் சுய புராணம் பாடினார். பி.ஜே. அவர்கள் எடுத்து வைத்த மேற்கண்ட வாதங்களுக்குப் பதில் என்ற முறையில் சில கருத்துக்களைக் கூறினார். நான் ஆதாரத்தை எடுத்துக் காட்டுவேன் காட்டாமல் இந்த இடத்தை விட்டுப் போக மாட்டேன் என்று சொன்னாரே தவிர பாதி நாள் முடியும் வரை ஆதாரத்தை எடுத்துக் காட்டவில்லை. தனது பல வாய்ப்புக்களை பாழ் படுத்தினார்.

பாதி நாளை இவ்வாறு கடத்தி விட்டு நூர் முஹம்மது அவர்கள் தன்னுடைய முதல் ஆதாரமாகப் பின்வரும் பலவீனமான ஹதீஸை எடுத்து வைத்து வாதம் செய்தார்.

உனக்கு இரு நூறு திர்ஹங்கள் இருந்து, அதற்கு ஒரு வருடம் நிறைவடைந்து விட்டால், அதில் ஐந்து திர்ஹங்கள் (ஜகாத் கடமையாகும்). இருபது தீனார் ஆகும் வரை (தங்கத்தில் ஜகாத்) கடமையில்லை. இருபது தீனார் இருந்து, அதில் ஒரு வருடம் நிறைவடைந்து விட்டால், அரை தீனார் (ஜகாத்) ஆகும். இந்தக் கணக்கின் அடிப்படையில் இதற்கு அதிகமானவைகளுக்குக் கணக்கிட வேண்டும்.

அறிவிப்பவர்: அலீ (ரழி)

நூல் திர்மிதி 1342

கொடுத்த பொருளுக்கு மீண்டும் மீண்டும், வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற கருத்திற்கு இந்த ஹதீஸில் எந்த ஆதாரமும் இல்லை.

ஒரு பொருள் நம்முடைய கையில் கிடைத்தால், அதற்கு அன்றே ஜகாத் கொடுக்க வேண்டியதில்லை. அது கிடைத்ததிலிருந்து ஒரு வருடம் கழிந்த பிறகுதான் அதற்கு ஜகாத் கடமையாகும் என்ற கருத்தைத் தான் மேற்கண்ட செய்தி கூறுகிறது.

மேலும், இது பலவீனமானது என்பதை தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக விவாதம் செய்த பி.ஜே. பல வகைகளில் நிரூபித்தார்.

பலவீனம் என்பதற்கு முதல் சான்று

இந்த ஹதீஸ் பலவீனம் என்பதை நூர் முஹம்மது அவர்கள் தான் எழுதியதாகச் சொல்லிக் கொள்ளும் நூலில் ஒப்புக் கொண்டுள்ளார். இதோ அவர் தன்னுடைய வெளியீட்டில் கூறுவதைப் பாருங்கள்.

அனாதைகளின் சொத்தை வியாபாரத்தில் ஈடுபடுத்த வேண்டும் என்ற நபிமொழி.

இரண்டு ஆண்டிற்கான ஜகாத்தை முன் கூட்டியே அப்பாஸ் (ரலி) அவர்கள் வழங்கியதாகக் கூறப்பட்ட நபிமொழி.

ஒரு பொருளை ஒருவன் பெற்றுக் கொண்டால் ஒரு வருடம் நிறைவடையும் வரை ஜகாத் இல்லை என்ற நபிமொழி.

கால் நடைகளின் ஜகாத் பற்றிய நபிமொழி.

மேற்கூறப்பட்டவையில் முதல் மூன்று நபிமொழிகளும் பலவீனமானவை. கால்நடைகள் சம்பந்தப்பட்ட நபிமொழியில் விதண்டாவாதம் பேசி மக்களைத் திசை திருப்புவார்கள் என்பதை நாம் ஏற்கனவே அறிந்து வைத்திருந்ததால், அதனை நமது மறு ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டவில்லை என்பது மட்டுமல்ல, வெள்ளி மேடையிலும் இவற்றை உதாரணத்திற்குக் கூட நாம் எடுத்துக் காட்டவில்லை.

(ஜகாத் சட்டங்கள்: ஜனவரி 2006 ஏகத்துவம் மாத இதழில் மீண்டும் குழப்பங்கள் என்ற நூர் முஹம்மத் அவர்களின் வெளியீடு.)

அவர்களே பலவீனம் என்று ஒப்புக் கொண்ட செய்தியைத்தான் விவாதத்திற்காக மனமுரண்டாக ஸஹீஹ் என்று கூறி நூர் முஹம்மது வாதிட்டார்கள்.

இரண்டாவது சான்று

இந்த ஹதீஸில் இடம் பெறும் அறிவிப்பாளரான ஆஸிம் பின் லமுரா என்பவர் பலவீனமானவராவார்.

இவர் மனனத் தன்மையில் மிகவும் மோசமானவராவார். தெளிவாகத் தவறு செய்யக் கூடியவர். அலீ (ரலி) அவர்களின் சொந்தக் கூற்றில் அதிகமானவற்றை நபியவர்கள் கூறியதாக அறிவிப்பவராவார். (இவர் அறிவித்திருப்பது அலீயின் சொந்தக் கூற்றுப்தான் என்பது) அறியப்படும் போது, விடப்படுவதற்கு தகுதியானவராவார் என்று இமாம் இப்னு ஹிப்பான் அவர்கள் இவரைப் பற்றிக் குறை கூறியுள்ளார்கள்.

இவருடைய அறிவிப்பை வலுவூட்டக் கூடிய வகையில் உறுதியானவர்கள் எவரும் அறிவிக்காத, தவறான செய்திகளை அலீ அவர்களிடமிருந்து இவர் தனித்து அறிவிக்கிறார். குழப்பங்களே இவரிடமிருந்து தான் என இமாம் இப்னு அதீ அவர்களும் இவரைக் குறை கூறியுள்ளார்.

நூற்கள்: அல்லுஅஃபாஉ வல் மத்ரூகீன், பாகம் 2, பக்கம் 69

அல் மஜ்ரூஹீன் பாகம் 2, பக்கம் 125.

எனவே ஆஸிம் பின் லமுரா அறிவிக்கக் கூடிய அனைத்து அறிவிப்புகளும் பலவீனம் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.

மூன்றாவது சான்று

ஆஸிம் பின் லமுரா என்ற பலவீனமான அறிவிப்பாளர் இடம் பெறுவதாலேயே இது ஆதாரமற்ற செய்தியாகி விடுகின்றது. மேலும், இது அலீ அவர்களுடைய சொந்தக் கூற்று தான் என்பதைப் பல அறிஞர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

மேற்கண்ட செய்தியை நபியவர்கள் கூறியதாக ஹாரிஸ் என்பவர் அறிவித்துள்ளார். இவர் பெரும் பொய்யராவார். எனவே, இவருடைய அறிவிப்புகள் ஆதாரமாகக் கொள்ளப்படாது.

ஆஸிம் இதனை அலீயுடைய சொந்தக் கூற்றாகத் தான் அறிவித்துள்ளார். ஆனால், இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஜரீர் என்பவர் தான் ஆஸிம், ஹாரிஸ் ஆகிய இருவருடைய அறிவிப்புக்களையும் தெளிவுபடுத்தாமல் இருவருமே நபியிடமிருந்து அறிவிப்பதாக இணைத்துக் கூறி விட்டார்.

ஹதீஸ்களை அறிவிப்பதில் ஜரீர் என்பவரை விட மிக உறுதி வாய்ந்தவர்களான சுஃப்யான், ஷுஅபா, மஃமர் ஆகியோர் இதனை ஆஸிம் பின் லமுரா என்பவர் வழியாக அலீயடைய சொந்தக் கூற்றாக மட்டுமே அறிவித்துள்ளனர்.

எனவே மிக உறுதி வாய்ந்தவர்களுக்கு மாற்றமாக அறிவிக்கும் ஜரீர் என்பவருடைய அறிவிப்பு நிராகரிக்கத்தக்கதாகும்.

இந்தக் குறைகளை இமாம் அல்பானி அவர்களும் தன்னுடைய இர்வாவுல் கலீல் என்ற நூலில் தெளிவு படுத்தியுள்ளார்கள். எனவே இந்தச் செய்தி அலீயுடைய சொந்தக் கூற்று தான் என்பதில் எவ்விதச் சந்தேகமுமில்லை.

நான்காவது சான்று

இந்தச் செய்தியை அபூ இஸ்ஹாக் என்பவரிடமிருந்து ஜரீர் என்பவர் அறிவித்துள்ளதாக அபூதாவூதில் இடம் பெற்றுள்ளது. ஆனால் ஜரீர் என்பவர் அபூ இஸ்ஹாகிடமிருந்து இதனைச் செவியேற்கவில்லை. இருவருக்கும் மத்தியில் ஹஸன் பின் உமாரா என்பவர் விடுபட்டுள்ளார். இவர் பலவீனமானவராவார்.

இந்தச் செய்தியை அபூதாவூதிற்கு அறிவித்த சுலைமான் அவர்களை விட மிக உறுதியானவர்களான ஸஹ்னூன், ஹர்மலா, யூனுஸ், பஹ்ர் பின் நஸ்ர் இன்னும் பலர் அபூ இஸ்ஹாக்கிடமிருந்து ஹஸன் பின் உமரா வழியாகத்தான் அறிவித்துள்ளார்கள்.

இப்னுல் மவ்வாக் என்ற அறிஞர் இந்தக் குறைகளைத் தெளிவுபடுத்தியுள்ளார். இதனை இமாம் இப்னு ஹஜர் அவர்களும் தன்னுடைய தல்கீஸ் (பாகம் 2, பக்கம் 174) என்ற நூலிலே உறுதிபடுத்தியுள்ளார்கள்.

எனவே மேற்கண்ட செய்தி அறிவிப்பாளர் தொடர் முறிவடைந்த பலவீனமான செய்தியாகும். இந்த அடிப்படையிலும் இது ஆதாரத்திற்கு ஏற்க முடியாததாகிறது.

இப்படிப்பட்ட பல பலவீனங்கள் இந்தச் செய்தியில் இருப்பதை எடுத்துரைத்து இது ஒரு போதும் ஆதாரத்திற்குத் தகுந்ததல்ல என்பதை தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக மவ்லவி பி.ஜே. அவர்கள் ஆணித்தரமாக பாமரனுக்கும் விளங்கும் வகையில் எடுத்துரைத்தார்கள்.

இவற்றிற்கெல்லாம் சரியான எந்த ஒரு பதிலையும் எடுத்துரைக்காத நூர் முஹம்மது அவர்கள் ஆஸிம், ஆஸிம் என்றே முதல் நாளின் கடைசி அமர்வு வரை சொல்லிக் கொண்டிருந்தார்.

முறை தவறிய விவாதம்

தன்னிடம் பலமான ஆதாரம் இருப்பதாகப் பூச்சாண்டி காட்டிய நூர் முஹம்மது அவர்கள் மேற்கண்ட பலவீனமான செய்தியைத் தான் மிகப் பெரும் ஆதாரமாக எடுத்து வைத்தார்.

மற்ற சான்றுகளை எடுத்து உரைக்குமாறு பல முறை கூறிய போதும் அவற்றைக் கூறாமல் முதல் நாளின் ஆகக் கடைசியில் அது வரை கூறாத செய்திகளை எடுத்து வைத்தார். இது பார்வையாளர்களுக்கு மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

ஏனென்றால் மறு நாள் கேள்வி பதில் தான். அவற்றில் கேட்கப்படக் கூடிய கேள்விகளுக்குத் தான் பதிலளிக்கப்படுமே தவிர விவாதம் செய்வதைப் போன்று தவறுகளை விளக்கிக் கூற முடியாது.

எனினும் நூர் முஹம்மது அவர்கள் ஆகக் கடைசியில் எடுத்து வைத்து ஸஹீஹ் என்று வாதிட்ட செய்திகள் பலவீனமானவை தான் என்பதற்கான சான்றுகளை வாய் திறக்க முடியாத அளவிற்கு ஆணித்தரமாக மறு நாள் நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில் பி.ஜே. அவர்கள் எடுத்துரைத்தார்கள்.

கடைசி வாய்ப்பில் எடுத்து வைக்கப்பட்ட சான்றுகள்

நூர் முஹம்மது முதல் நாள் முழுவதும் அவருக்குரிய சான்றுகளை எடுத்து வைக்காமல் அவரோடு முடியவிருந்த கடைசி வாய்ப்பில் பின்வரும் செய்திகளை எடுத்து வைத்தார்.

  1. அபூதாவூதில் வந்துள்ள முஆவியா அல் காளிரி அவர்கள் அறிவிப்பதாக இடம் பெற்ற செய்தி.
  2. ஒரு பொருளுக்கு ஒரு வருடம் நிறைவடையாத வரை ஜகாத் இல்லை என்ற இப்னு உமர் (ரழி) அவர்களின் சொந்தக் கூற்று.
  3. இப்னு ஸிஹாப் என்பவர் அறிவிக்கும் வரலாற்றுச் செய்தி.
  4. ஆட்டுடைய ஜகாத் பற்றி வரக்கூடிய செய்தி

இது போன்ற செய்திகளை எடுத்துக் கூறி மீண்டும் மீண்டும் வருடா வருடம், கொடுத்த பொருளுக்கே ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற இல்லாத கருத்தை வலியுறுத்திக் கூறினார். இவை அனைத்திற்கும் மறு நாள் நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில் தெளிவாக பி.ஜே. அவர்களால் பதிலளிக்கப்பட்டது.

இரண்டாம் நாள் நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சி

இரண்டாம் நாள் நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில் இங்கு எழுதப்படவேண்டிய அளவிற்கு எந்த ஒரு கருத்தும் நூர் முஹம்மது அவர்கள் அளித்த பதிலுரையில் இடம் பெறவில்லை.

ஆனால் பி.ஜே. அவர்கள் முதல் நாள் கடைசியில் நூர் முஹம்மது அவர்களால் ஸஹீஹானது என்று எடுத்து வைக்கப்பட்ட ஆதாரங்களின் தரத்தினை தெளிவாக எடுத்துரைத்தார்.

அபூதாவூதில் இடம் பெற்ற செய்தி என்பதற்கான ஆதாரங்கள்

முதலில் நாம் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும். அபூதாவூதில் இடம் பெற்ற இந்தச் செய்தி இதே கருத்தில் இன்ன பிற நூல்களிலும் இடம் பெற்றுள்ளது. ஆனால் இவையனைத்தும் பலவீனம் என்பதை நூர் முஹம்மது அவர்களே ஏகத்தவத்திற்கு எதிராக அவர் எழுதியதாகக் கூறும் நூலில் ஒத்துக் கொண்டுள்ளார்.

அபூதாவூதில் இடம் பெறும் ஹதீஸ் மட்டும் சரியானது என்று நூர் முஹம்மது வாதிட்டார்.

ஆனால் அபூதாவூதில் இடம் பெற்ற முஆவியா அல் காளிரி அவர்கள் அறிவிக்கும் செய்தியும் பல வகைகளில் பலவீனமாகும்.

முதலாவது இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்களான ஜுபைர் பின் நுஃபைர் என்பவருக்கும் யஹ்யா என்பவருக்கும் மத்தியில் ஒரு அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார்.

ஜுபைர் என்பவரிடம் யஹ்யா என்பவர் செவியேற்கவில்லை என்பதை தஹ்தீப் மற்றும் துஹ்ஃபதுத் தஹ்ஸீல் போன்ற நூலாசிரியர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

எனவே இருவரும் ஒரே காலத்தில் வாழ்ந்துள்ளனர். எனவே சந்திக்க வாய்ப்பிருக்கலாம் என்ற அடிப்படையில் நூர் முஹம்மது அவர்கள் எடுத்து வைத்த வாதமும் தவிடு பொடியாகிவிட்டது.

இருவருக்கும் இடையே சந்திப்பு இல்லை என்பதை ஒப்புக் கொண்ட நூர் முஹம்மது வேறொரு வகையில் இதைத் தூக்கி நிறுத்த முயன்றார். அதாவது ஜுபைர் என்பவரிடம் யஹ்யா என்பவர் செவியேற்காவிட்டாலும் இருவருக்கும் இடையே விடுபட்டவர் அப்துர் ரஹ்மான் என்பது வேறு நூல்களில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அவர் நம்பகமானவர் என்பதால் இதில் உள்ள குறைபாடு அதன் மூலம் நிவர்த்தியாகும் என்று வாதிட்டார்.

எந்த ஹதீஸை பலவீனமானது என்று அவரே ஒப்புக் கொண்டாரோ அந்த அறிவிப்புகளையே மேற்கண்ட ஹதீஸை வலுப்படுத்தும் ஆதாரமாக, வேறு நூல்களில் தெளிவுபடுத்தப்படுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

ஒரு பலவீனமான ஹதீஸைத் தூக்கி நிறுத்த இன்னொரு பலவீனமான ஹதீஸைக் கொண்டு முட்டுக் கொடுத்தார்.

தப்ரானியில் உள்ள அந்த பலவீனமான அறிவிப்பு துணைச் சான்றாக கூட எடுக்க முடியாத அளவிற்குப் பலவீனமானதாகும்.

அதனுடைய அறிவிப்பாளரான அபூ தகீ என்பவர் துணைச் சான்றாக எடுக்க முடியாத நிலையில் உள்ளவராவார். இதனை ஹதீஸ் கலை அறிஞர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். முட்டுக் கொடுப்பதற்கு முருங்கைக் கட்டையைக் கொண்டு வரக் கூடாது என்பார்கள். தப்ரானியுடைய அறிவிப்பு முருங்கைக் கட்டையைப் போன்று மிகப் பலவீனமானவர் இடம் பெற்ற அறிவிப்பு என்பதை பி.ஜே. அவர்கள் தெளிவாக விளக்கினார்கள்.

நூர் முஹம்மத் கூறிய புருடா கதை

நம்முடைய கைகளில் உள்ள அபூதாவூது பிரதியில் தான் இவர் விடுபட்டுள்ளார். ஆனால் இமாம் இப்னு ஹஜர் அவர்களிடம் இருந்த அபூதாவூத் பிரதியில் அவர் விடுபடவில்லை. இந்தக் கருத்தை அவர் இஸாபாவில் தெளிவுபடுத்தியுள்ளார் என்று நூர் முஹம்மது அவர்கள் ஒரு புருடாவை அவிழ்த்து விட்டார். இதே கருத்தை அவர் ஏகத்துவத்திற்கு எதிராக தான் எழுதியதாகச் சொல்லிக் கொள்ளும் நூலில் கூறியுள்ளார்.

இமாம் இப்னு ஹஜர் அவர்கள் தன்னிடம் அபூதாவூத் பிரதி இருந்தது எனக் கூறியதாக இஸாபாவில் இல்லையே! என்று பி.ஜே. அவர்கள் எடுத்துக் காட்டினார். இப்போது தான் நூர் முஹம்மதின் புருடா மக்களுக்குத் தெளிவானது.

இமாம் இப்னு ஹஜர் அவர்களிடம் தனியாக அபூதாவூதின் எந்த ஒரு பிரதியும் இருக்கவில்லை என்பதை இப்னு ஹஜரின் கூற்றைக் கொண்டே பி.ஜே. நிரூபித்துக் காட்டினார்.

எனவே இப்னு ஹஜர் அவர்களிடம் தனியாக ஒரு அபூதாவூத் பிரதி இருந்தது. அதில் அறிவிப்பாளர் விடுபடாமல் இருந்தது என நூர் முஹம்மது கூறியது பொய்யான தகவலாகும் என்பதை பி.ஜே. தெளிவுபடுத்தினார்.

அம்ரு பின் ஹாரிஸ் என்ற அறிவிப்பாளரைப் பற்றிய விளக்கம்

மேலும் மேற்கண்ட செய்தியை இமாம் அபூதாவூத் அவர்கள் அம்ர் பின் ஹாரிஸ் என்பவரின் குடும்பத்தாரிடம் இருந்த புத்தகத்தில் படித்ததாகக் கூறியுள்ளார்கள்.

அம்ரு பின் ஹாரிஸ் என்பவர் நம்பகத் தன்மை நிரூபிக்கப்படாதவராவார் என்பதை இமாம் தஹபீ அவர்களின் மீஸானுல் இஃதிதால் மற்றும் இமாம் இப்னு ஹஜர் அவர்களின் தஹ்தீப் மற்றும் இப்னு அபீ ஆஸிம் அவர்களின் அஸ்ஸுன்னா என்ற நூலிலும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இது போன்ற யாரென்றே அறியப்படாதவர்களைக் கூட இமாம் இப்னு ஹிப்பான் அவர்கள் தன்னுடைய ஸிகாத் என்ற நூலில் நம்பகமானவர்கள் பட்டியலில் கூறி விடுவார். எனவே இப்னு ஹிப்பானுடைய விமர்சனத்தை மட்டும் வைத்து ஒருவரை நம்பகமானவர் என்று தீர்மானித்து விட முடியாது மேலும் இப்னு ஹிப்பான் மட்டும் யாரை நம்பகமானவர்கள் என்று கூறியுள்ளாரோ அவர்களுக்குத் தான் இமாம் தஹபீ அவர்கள் தன்னுடைய காஷிஃப் என்ற நூலில் உஸ்ஸிக (நம்பகமானவர் எனக் கருதப்பட்டுள்ளார்) என்ற வாசகத்தைப் பயன்படுத்துவார் என்பதை பி.ஜே. அவர்கள் சிறு குழந்தைக்கும் விளங்கும் வண்ணம் தெளிவாக எடுத்துக் கூறி இந்த ஹதீஸ் மிகவும் பலவீனமானது இதை ஒரு போதும் ஆதாரமாகக் கொள்ள முடியாது என்பதைத் தெளிவாக விளக்கினார்கள்.

ஆடுகளின் ஜகாத் பற்றிய ஹதீஸ்

தக்க ஆதாரம் இல்லாமல் ஒரு முடிவை எடுத்து விட்டு அதை நியாயப்படுத்துவதற்காக சம்பந்தமில்லாத ஹதீஸ்களையெல்லாம் நூர் முஹம்மது அவர்கள் ஆதாரம் காட்டினார்கள்.

இந்த வகையில் அவர் வைத்த மற்றொரு ஆதாரம் ஆடுகளின் ஜகாத் பற்றிய ஹதீஸை தன்னுடைய இஷ்டத்திற்கு வளைத்ததாகும்.

ஒரு மனிதனிடம் நாற்பது முதல் 120 வரை ஆடுகள் இருந்தால் அதற்கான ஜகாத் ஒரு ஆடு ஆகும். 121 முதல் 200 வரை இரண்டு ஆடுகளாகும். 201 முதல் 300 வரை மூன்று ஆடுகளாகும். 300க்கு மேல் ஒவ்வொரு நூறு ஆடுகளுக்கும் ஒரு ஆடு வீதம் ஜகாத் ஆகும்.

இந்த கருத்தில் அமைந்த ஹதீஸை தனது கருத்தை நிரூபிக்கும் ஆதாரமாக எடுத்து வைத்தார்.

இந்த ஆடுகளின் ஜகாத் பற்றிய ஹதீஸில் வருடா வருடம் கொடுக்க வேண்டும் என்றோ, மீண்டும் மீண்டும் கொடுக்க வேண்டும் என்றோ மறைமுகமாகவோ, அல்லது வெளிப்படையாகவோ எங்கும் கூறப்படவில்லை.

ஆனால் ஒரு பொருளுக்கு ஒரு வருடம் நிறைவடையாத வரை ஜகாத் இல்லை என்ற பலவீனமான செய்தியைச் சம்பந்தமில்லாத ஆட்டோடு இணைத்து தேவையில்லாத வியாக்கினம் கொடுத்து நூர் முஹம்மது அவர்கள் தானும் விளங்காமல் மக்களையும் குழப்பினார்.

இதை அவர்களின் தரப்பில் வந்தவர்களே தெளிவாக விளங்கிக் கொண்டனர். இது விவாத சிடிக்களை பார்ப்பவர்களுக்குத் தெளிவாக விளங்கும்.

இப்னு உமர் கூற்றை ஆதாரமாகக் கொள்ளலாமா?

கொடுத்த பொருளுக்கு மீண்டும் மீண்டும், வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதற்கு நூர் முஹம்மது அவர்கள் எடுத்து வைத்த ஆதாரங்கள் மிகப் பலவீனமானவை என்பதை அவர்கள் அணியின் சார்பாக வந்தவர்களே தெளிவாக விளங்கிக் கொண்டனர்.

எனவே அவர்களுடைய அணியைச் சார்ந்த ஒருவர், நபிகள் நாயகம் அவர்கள் சொன்னதாக வரக்கூடிய செய்திகள் பலவீனமானவையாக இருந்தாலும் ஸஹாபாக்களின் சொந்தக் கூற்றை ஏற்றுக் கொள்ளலாமல்லவா? குறிப்பாக இப்னு உமர் அவர்களின் கருத்தை ஏற்றுக் கொள்ளலாம் அல்லவா? என்ற கருத்தில் ஒரு கேள்வியைத் தொடுத்தார்.

இதற்குப் பதிலளித்த பி.ஜே. அவர்கள், நாம் இறைச் செய்தியாகிய குர்ஆன், ஹதீஸை மட்டும்தான் பின்பற்ற வேண்டும் இந்த இரண்டின் அடிப்படையில்லாமல் யாருடைய கூற்றும் மார்க்கமாகாது என்பதைத் தெளிவாக விளக்கினார்கள். மேலும் நீங்கள் எந்த இப்னு உமரின் செய்தியை ஆதாரமாகக் காட்டுகிறீர்களோ அதே இப்னு உமர் தான் நகைகளுக்கு ஜகாத் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ளார். இதே கருத்தை இன்னும் பல பெரும் பெரும் ஸஹாபாக்கள் கூறியுள்ளனர். எனவே இப்னு உமரின் கருத்தை ஒருவர் ஏற்று தன்னுடைய சொத்து முழுவதையும் நகையாக மாற்றி வைத்துக் கொண்டு அதற்கு அவர் ஜகாத் கொடுக்காமல் இருந்தால் அவர் செய்தது சரியென்று நீங்கள் ஒத்துக் கொள்வீர்களா?

எனவே குர்ஆன் ஹதீஸ் தான் மார்க்கச் சட்டமாக ஆகுமே தவிர ஸஹாபாக்களின் சொந்தக் கருத்து ஒரு போதும் இறைச் செய்தியாக முடியாது என்பதைத் தெளிவாக விளக்கினார்கள்.

மேலும் இப்னு ஸிஹாப் என்பவர் அறிவித்ததாக நூர் முஹம்மது அவர்கள் எடுத்து வைத்த செய்தியும் ஒரு போதும் மார்க்க ஆதாரமாகாது. இப்னு ஸிஹாப் என்பவர் நபியுடைய காலத்தில் பிறந்தவரில்லை. அபூபக்கர் (ரழி) அவர்களிடமோ, உமர் (ரழி) அவர்களிடமோ எந்தச் செய்தியையும் இவர் செவியேற்கவில்லை. எனவே இவர்கள் செய்ததாக இப்னு ஸிஹாப் என்பவர் ஒரு செய்தியை அறிவித்தால் அது ஒரு போதும் மார்க்க ஆதாரம் ஆகாது என்பதையும் பி.ஜே. அவர்கள் தெளிவுபடுத்தினார்கள்.

கலகலப்பாக முடிந்த விவாதம்

விவாதத்தில் நடைபெற்ற ஒவ்வொரு விஷயத்தையும் நாம் வரிக்கு வரி கூறவில்லை. சில முக்கியமான கருத்துக்களைத் தான் இங்கு நாம் கூறியுள்ளோம்.

இரண்டாவது நாளின் கடைசி அமர்வில் பி.ஜே. அவர்களின் வலிமையான வாதங்களுக்குப் பதில் கூற முடியாமல் திணறிய நூர் முஹம்மது அவர்கள் தன்னுடைய அப்பாவித் தனமான பேச்சின் மூலம் அந்த அவையைக் கலகலப்பாக்கினார்.

வாதங்களுக்குப் பதில் கூற முடியாமல் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும், சிடியை மீண்டும் மீண்டும் போட்டுக் பாருங்கள். நான் சரியாகப் பேசியிருப்பேன் என்று தனக்குத் தானே சமாதானம் கூறி பயான் செய்ய ஆரம்பித்தார்.

விவாதத்தின் ஒரு கட்டத்தில் பி.ஜே. அவர்கள் இரு அறிவிப்பாளர்களைப் பற்றி பேசும் போது அவர்களுடைய பெயரை மாற்றிக் கூறி விட்டார்கள். பிறகு சரியாக திருத்திக் கூறினார்கள். உடனே நூர் முஹம்மது அவர்கள் பார்த்தீர்களா? பி.ஜே. தடுமாறி விட்டார். எனவே நான் விவாதத்தில் ஜெயித்து விட்டேன் என்று கூறினார். ஆனால் இதில் அதிசயம் என்னவென்றால் அவர் இவ்வாறு பேசிய பின்பு அடுத்த கணமே அவரிடம் பல தடுமாற்றங்களை அல்லாஹ் ஏற்படுத்தினான்.

இதைச் சுட்டிக் காட்டிய பி.ஜே. அவர்கள் ஒரு மனிதன் பேசும் போது ஏற்படுகின்ற நாக்குளறல்களை ஒரு போதும் சத்தியத்திற்கு அளவு கோலாகக் கொள்ளக் கூடாது. மூஸா நபி அவர்கள் கூட தன்னுடைய நாக்கின் முடிச்சுகளை அவிழ்க்குமாறு இறைவனிடம் பிரார்த்தனை செய்துள்ளார்கள். எனவே மூஸா நாக்குளறல் உடையவராக இருந்தால் அவர் சத்தியத்தில் இல்லை என்று கூற முடியுமா? என்பதை விளக்கி, நூர் முஹம்மதிடம் ஏற்பட்ட இன்னும் பல தடுமாற்றங்களை எடுத்துக் கூறினார்கள்.

இறுதியில், இருவரும் விவாதத்தில் மனம் புண்படும்படி ஏதாவது வார்த்தை பேசியிருந்தால் அதனைப் பொருட்படுத்தாமல் விட வேண்டும் என கேட்டுக் கொண்டனர். மேலும், விவாதத்திற்கான செலவு முழுவதையும் தவ்ஹீத் ஜமாஅத் ஏற்றிருந்ததால் அதில் ஏற்பட்ட குறைபாடுகளையும் பொருட்படுத்தாமல் விடுமாறு பி.ஜே. அவர்கள் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாகக் கேட்டுக் கொண்டார்கள்.

ஆடிய ஆட்டம் என்ன? ஓடிய ஓட்டம் என்ன? என்பார்கள். அது போன்று தான் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் ஆய்வு செய்து ஜகாத் விஷயத்தில் ஒரு சட்டத்தைத் தெளிவாகக் கூறியதற்காக இவர்கள் ஆடிய ஆட்டத்தை மக்கள் கண்டிருப்பார்கள். விவாதத்திலும், விவாதத்திற்குப் பிறகும் இவர்கள் ஓடும் ஓட்டத்தையும் மக்கள் காண்கிறார்கள் இனியும் காண்பார்கள்.

பின்வரும் இறைவனின் வார்த்தைகள் ஒரு போதும் பொய்யாகாது என்பதை மதுரையில் நடைபெற்ற ஜகாத் தொடர்பான விவாதம் மீண்டும் நிரூபித்தது.

உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது. நீங்கள் (தவறாக) வர்ணிப்பதால் உங்களுக்குக் கேடுதான்.

(அல்குர்ஆன் 21:18)

உண்மை வந்து விட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழியக் கூடியதாகவே உள்ளது.

(அல்குர்ஆன் 17:84)

பண்டமில்லை! அதனால் பதிலுமில்லை!

ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும், வருடா வருடம் ஜகாத் கொடுக்கத் தேவையில்லை. அதற்கான ஆதாரம் திருக்குர்ஆனிலும், ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலும் இல்லை என்பது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைபாடு!

குர்ஆன், ஹதீஸை ஆராயாமல் ஒரு சிலரின் கூற்றைக் கேட்டு, நுனிப்புல் மேய்ந்து விட்டு, இந்த நிலைபாட்டை மக்கள் மத்தியில் நாம் எடுத்து வைக்கவில்லை.

தவ்ஹீத் ஜமாஅத் ஆலிம்களின் பல்வேறு அமர்வுகளுக்குப் பிறகு, தனி மனிதப் பாதிப்புகளுக்கும், தாக்கங்களுக்கும் ஆட்படாமல், அனல் பறக்கும் வாதப் பிரதிவாதங்களுக்குப் பின்னர் தான், மக்கள் மன்றத்தில் இந்தக் கருத்தை நாம் முன் வைத்தோம்.

ஏடுகள், ஒலி ஒளி நாடாக்கள் மூலமாக இந்தக் கருத்தை மக்கள் மன்றத்தில் வைக்கும் போது, அதன் எதிர் விளைவுகள் எப்படியிருக்கும் என்பதை நாம் மதிப்பீடு செய்யத் தவறவில்லை.

எதிர்பார்த்தபடியே மாற்றுக் கருத்துடையவர்கள் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையிலான ஆதாரங்களைச் சமர்ப்பிப்பதற்குப் பதிலாக, தனி மனித வழிபாடு, வழிகேடு என்ற விமர்சனங்களுடன் நின்று விடாமல், இறை மறுப்பு என்ற மார்க்கத் தீர்ப்புகளும் வெளியிட்டனர்.

இவற்றைப் பொருட்படுத்தாது, திறந்த மனதுடன், திறந்த விவாதத்திற்கு நாம் அழைப்பு விடுத்து வந்தோம். நம்மை நேரடியாகக் களத்தில் சந்திக்கத் தயங்கியவர்கள், ஒரு மாத இதழில், நூர் முஹம்மத் பாக்கவி மீது சவாரி செய்து நமக்கு ஜவாப் (?) சொல்லியிருந்தார்கள்.

அதற்கும் வரிக்கு வரி ஏகத்துவம் இதழில் பதில் அளித்தோம். அத்துடன் நின்று விடாமல் நம்முடைய விவாத அழைப்பைத் தொடர்ந்து விடுத்துக் கொண்டே இருந்தோம். அதனுடைய ஓர் இறுதி வடிவம்தான் 10.02.07 மற்றும் 11.02.07 ஆகிய இரு திகதிகளில் மதுரையில் நூர் முஹம்மது பாக்கவியுடன் நடைபெற்ற விவாதம்.

ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும் கொடுக்க வேண்டும் என்ற கருத்துக்கு நூர் முஹம்மத் பாக்கவி சரியான ஒரு சான்றை இந்த விவாதத்தில் எடுத்து வைப்பார் என்று காத்திருந்தோம்.

ஆனால், ஒரு ஆதாரத்தைக் கூட எடுத்து வைக்காதது மட்டுமல்ல! தன்னுடைய நூலில் பலவீனமான ஹதீஸ் என்று ஒப்புக் கொண்ட ஹதீஸை விவாதத்தின் போது, பலமான ஹதீஸ் என்று அந்தர் பல்டி அடித்தார்.

முதல் நாள் நடைபெற்ற விவாதத்திலும் சரியான சான்றுகளை எடுத்து வைக்கவில்லை. அடுத்த நாள் நடைபெற்ற பார்வையாளர்கள் கேள்வியின் போதாவது, ஏதேனும் சான்றை எடுத்துக் கூறுவார் என்று இரு தரப்பில் உள்ளவர்களும் எதிர்பார்த்தனர்.

நூர் முஹம்மது பாக்கவி தரப்பில் பார்வையாளர்களாக அழைத்து வரப்பட்டவர்கள் கூட, சர்ச்சைக்குரிய இந்த ஹதீஸை விட்டு விட்டு, வேறு வலுவான ஒரு சான்றைத் தூக்கிப் போடுங்கள் பிரச்சினை முடிந்து விடும் என்று கேள்வி நேரத்தில் கேட்டனர். அதற்கும் அவர், இந்த ஹதீஸ்தான் என்று பழைய பாட்டையே பாடினார்.

இவர்களிடம் விஷயம் எதுவும் இல்லை என்பது இவர்களுடைய ஆதரவாளர்களுக்கே பளிச்சென்று தெரிந்தது.

இது தான் மதுரை விவாதத்தின் போது, நிரூபணமான உண்மை!

இன்னும் சொல்லப் போனால், ஜகாத் குறித்த நமது நிலைப்பாட்டை வெளியிடுவதற்கு முன்னால், அது குறித்த ஆய்வு செய்வதற்காக தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்கள் நடத்திய பல்வேறு அமர்வுகளில் எழுப்பப்பட்ட வாதங்கள், கேள்விகள் கூட இந்த மதுரை விவாதத்தின் போது எழுப்பப்படவில்லை.

இதன் மூலம் ஜகாத் விஷயத்தில் நமது நிலைபாடு மிகச் சரியானது என்பது நன்கு உறுதியாகி உள்ளது.

இந்த நிலைப்பாட்டிற்கு எதிராகப் பிரசாரம் செய்தவர்களிடம் பண்டமில்லை அதனால், பதிலும் இல்லை. இதை நாம் கற்பனையாகச் சொல்லவில்லை. இந்த அளவுகோலை எல்லாம் வல்ல அல்லாஹ் தன் திருமறையிலேயே குறிப்பிடுகின்றான்.

அவர்கள் உமக்குப் பதிலளிக்காவிட்டால், அவர்கள் தமது மனோ இச்சைகளையே பின்பற்றுகின்றனர் என்பதை அறிந்து கொள்வீராக! அல்லாஹ்விடமிருந்து கிடைத்த நேர் வழியின்றி, தனது மனோ இச்சையைப் பின்பற்றியவனை விட வழி கெட்டவன் யார்? அல்லாஹ் அநீதி இழைக்கும் கூட்டத்திற்கு நேர் வழி காட்டமாட்டான்.

(அல்குர்ஆன் 28:48-50)

மனோ இச்சைகளைப் பின்பற்றும் இவர்களிடம் என்ன பதிலை எதிர்பார்க்க முடியும்? இருப்பினும், இவர்களிடம் இன்னும் தெளிவாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எங்கள் நிலைப்பாட்டிற்கு மாற்றமாக ஒரேயொரு ஆதாரப்பூர்வமான நபிமொழியை எடுத்து வைத்து விட்டால், அதற்குப் பிறகும் முயலுக்கு மூன்று கால் என்று நிற்க மாட்டோம்.

சுய கவுரவத்தைச் சுருட்டி எறிந்து விட்டு, சத்தியக் கருத்தைப் பின்பற்றக் கடுகளவும் தயங்க மாட்டோம் என்று மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறோம்.

05.08.2009. 4:31 AM

உமரலியுடன் விவாதம்1993

மயக்கம் தெளிந்தது

கடந்த சில ஆண்டுகளாக எமது நாட்டில் தவ்ஹீத் பிரச்சாரத்தில் தேக்கம் ஏற்படும் அளவுக்கு எம்மிடையே சில கருத்து வேறுபாடுகள் காணப்பட்டன. எம்மிடையே ஒரு தாயியாக இருந்த உமரலியாரும் சிலரும் நாங்கள் சிலருமாகப் பிரிந்து இயங்கும் நிலை ஏற்பட்டது. எங்களுக்கு மத்தியில் நல்லுறவு ஏற்பட குர்ஆன் - ஹதீஸ் அடிப்படையில் முயற்சிகள் செய்யப்பட்டதும் உண்டு. அதன் தொடர்பாகப் பலமுறை இருதரப்பும் சந்தித்துக் கதைத்துக் கொண்டதும் உண்டு.

உமர் அலியார் சில ஆண்டுகளுக்கு முன் ஜமாஅத்துல் முஸ்லிமீன் என்று ஒரு ஜமாஅத்தை ஸ்தாபிதம் செய்து கொண்டு, அதற்குத் தம்மையே அமீராகவும் அறிவித்துக் கொண்டார். தம்மிடம் பைஅத் செய்து முஸ்லிம் ஜமாஅத்தில் இணையாதவர்கள் காஃபிர்கள் என்று சொன்னார்.

யார் பைஅத் இல்லாமல் மரணிக்கிறாரோ அவர் அறியாமைக் கால மரணத்தைத் தழுவுகிறார் என்ற ஒரு ஹதீஸை வைத்துக் கொண்டு, தமது ஜமாஅத்தைச் சேராதவர்கள் அனைவரையும் - மொத்த உலக முஸ்லிம்களையுமே - காபிர்கள் என்றார். ஜமாஅத்துல் முஸ்லிமீனையும் பற்றிப் பிடித்துக் கொள் என்று வருகின்ற ஹதீஸையும் உமரலியார் தமக்கு வாய்ப்பாகப் பயன்படுத்தத் தொடங்கினார்.

முஸ்லிமில் வரும் ஹதீஸில் பைஅத் என்று கூறப்படுவது தம்மிடம் பைஅத் செய்வது தான் எனவும், ஜாஹிலியத்தில் மரணிப்பது என்பது காஃபிர்களாக மரணிப்பது எனவும் உமரலியார் விளக்கம் அளித்துத் தமது நாவன்மையால் சிலரை நம்பச் செய்தார். அவரது பேச்சை நம்பி எம்முடனிருந்த சகோதரர்களில் சில நூறு பேர், அவருடன் இணைந்தனர். எங்களில் சிலர் சிந்தனையை முற்றாக அவரிடம் அடகு வைத்த பரிதாப நிலையை நாங்கள் காண நேர்ந்தது.

காபிர்களின் சட்டங்களுக்கு கட்டுப்படக் கூடாது என்பதால், பாஸ்போர்ட், அடையாள அட்டை போன்றவைகளை வைத்துக் கொள்ளக் கூடாது என்று உமரலி சொன்னதும் அதை வேத வாக்காகக் கொண்டவர்கள் அவற்றைக் கிழித்ததும், எமது அரசாங்கத்துக்குத் தெரியாமல் அயல் நாடு செல்ல முயன்று பிடிபட்டு அடி உதைகளுக்கு ஆளானதும் கொடுமையாகும். ஆனால் காஃபிர்களின் அரசாங்கம் வெளியிட்ட ரூபாயைப் பயன்படுத்த உமரலியார் தடைவிதிக்காதது அவரது குழம்பிய மனநிலையையே காட்டியது.

அரசாங்கம் வகுத்தளித்த சட்டத்தின் படி எமது வாகனங்களுக்கு கட்டாயம் இன்ஷுரன்ஸ் எடுக்க வேண்டும். ஆனால் உமரலி அவ்விதம் இன்ஷுரன்ஸ் எடுக்கக் கூடாது என்று சொல்லிவிட்டதால், அவரிடம் பைஅத் செய்த ஜமாஅத்தினர் தம்மிடம் இருந்த வாகனங்கள் அனைத்தையும் விற்று விட்டனர். தமது வாழ்க்கைத் தேவைக்கு அளவுக்கு மிச்சமாக விவசாயம் செய்யக் கூடாது என்றெல்லாம் உமரலியாரின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு பாரிய நஷ்டங்களைச் சந்தித்தனர். அவருக்கு கட்டுப்பட வேண்டும் என்று எச்சரித்து மக்களைத் தவறான பாதைக்கு கொண்டு சென்றார் உமரலியார்.

தம்மிடம் பைஅத் செய்த ஜமாஅத்தினர் தவிர அனைவரும் காஃபிர்கள் ஆனதால், காஃபிர்களின் வசமுள்ள கஅபாவுக்கு ஹஜ் செய்யக் செல்லக் கூடாது என்று சென்னது மிகப் பெரிய கொடுமை.

ஒரு குடும்பத்தில் கணவன் பைஅத் செய்து மனைவி அவ்விதம் செய்யா விட்டாலோ, அல்லது மனைவி பைஅத் செய்து கணவன் செய்யாவிட்டாலோ அவர்களது கலியாணம் ரத்தாகி விட்டது என்றார். பல கணவன் மனைவியர் பிரிந்த பரிதாபங்கள் நடந்தன. அமீருக்குக் கட்டுப்பட வேண்டும் என்று மிரட்டி, அவரும் நெருங்கிய சகாக்களும் பல திருமணங்கள் செய்தனர். தலாக்கும், நிக்காஹும் விளையாட்டுக்களாகவே நடந்தேறின.

எமது மக்களின் மத்தியில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு தீர்வு காண வேண்டியதொரு முக்கியமாதொரு கடப்பாடு எமக்குண்டு என்பதால், உமரலியின் கூற்றுக்குத் தக்க பதில்களை ஆதாரப்பூர்வமாக எமது அறிஞர்கள் அளித்தனர். முஸ்லிம் அறிவிப்பில் வரும் பைஅத் என்பது ஆட்சியாளரிடம் செய்யும் பைஅத் தான் என்றும், ஆட்சியாளரிடம் பைஅத் செய்யாவிட்டால் கூட ஒருவர் காஃபிராகி விடமாட்டார் என்றும் எமது அறிஞர்கள் விளக்கினார்கள்.

சுவர்க்கத்திற்குரியவர்கள் என்று எமது நபியால் கூறப்பட்ட தல்ஹா (ரழி) ஆகியோர் அமீருல் முஃமினீன் அலி (ரழி) அவர்களிடம் பைஅத் செய்யவில்லை என்பதை எடுத்து வைத்தனர். இன்னும் சொன்னால் அலி (ரழி) அவர்களை எதிர்த்து அன்னை ஆயிஷா (ரழி) தலைமையில் நடைபெற்ற ஜமல் யுத்தத்தில் கலந்து போரிட்டு அவ்விருவரும் ஷஹீதானார்கள் என்று கூறி, அலி (ரழி) அவர்களிடம் பைஅத் செய்யாத அந்த இரண்டு ஸஹாபிகளும் காஃபிர்களா? அப்படியாயின் அவ்விரண்டு பேரைக் குறித்தும் நாயகம் (ஸல்) அவர்கள் சுவர்க்கவாதிகள் என்று முன்னறிவிப்புச் செய்திருப்பார்களா? என்ற வாதத்தை எமது அறிஞர்கள் முன் வைத்தனர்.

அலி (ரழி) அவர்களுக்கு எதிராக முஆவியா (ரழி) அவர்கள் தலைமையில் பல ஸஹாபாக்கள் போரிட்டு பலர் கொல்லப்பட்டனர். சிஃப்பீன் யுத்தம் பற்றியும் எடுத்துக் காட்டப்பட்டு அந்த நபித்தோழர்கள் காஃபிர்களா என்றும் கேட்கப்பட்டது. யஸீதுக்கு பல நபித்தோழர்கள் பைஅத் செய்தும்  ஹுஸைன் (ரழி) அவர்கள், தான் மட்டும் பைஅத் செய்ய மறுத்துப் போரில் கொல்லப்பட்டார்களே! அவர்களை சுவர்க்கத்து இளைஞர்களின் தலைவர் என்று நாயகமவர்களே நவின்றுள்ள போது அவர்கள் எப்படிக் காஃபிராவார்கள் என்று கேள்விகளைத் தொடுத்தனர்.

அபூபக்கர் (ரழி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது முதல் ஃபாத்திமா நாயகி (ரழி) அவர்கள், அபூபக்கர் (ரழி) அவர்களிடம் பைஅத்தும் செய்யவில்லை; பேசவும் இல்லையே; அவர்களிடம் பேசா நிலையிலேயே மரணித்தும் விட்டார்களே! அவர்கள் காஃபிர்களா? அப்படியானால் சுவனத்துப் பெண்களின் தலைவி என்று நபிகள் (ஸல்) அவர்கள் முன்னறிவித்தார்களே! என்றெல்லாம் கேட்கப்பட்டது.

இதன் பின்னர், சிந்தித்துத் தெளிவுபெற்ற சிலர் உமரலியின் பிடியில் இருந்து மீண்டனர். ஆனால் உமரலியாரோ எமது அறிஞர்கள் முன் வைத்த அத்தனை வாதங்களுக்கும் கேள்விகளுக்கும் தந்த ஒரே பதில், இவை சரித்திரம் - தாரீக் - இதை ஏற்பது ஷிர்க் - ஏற்பவன் காஃபிர் என்பது தான். நாயகம் அவர்களின் முன் அறிவிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களையும் கூட சரித்திரம் என்று கூறி நிராகரித்தனர். இவரது திசை திருப்பலைப் புரிந்து கொள்ள முடியாத சிலர் நம்பி அவருடனேயே இருந்தனர்.

நிலைமை இப்படியிருக்க ஜம்யிய்யது அன்ஸாரிஸ் ஸுன்னதில் முஹம்மதிய்யாவின் அழைப்பின் பேரில் முஅஸ்கருக்கு (மாநாட்டிற்கு) இந்தியாவிலிருந்து எமது நாட்டிற்கு வருகை தந்த உலமாக்களை தஃவத் என்ற முறையில் கடிதம் மூலமும், நோட்டீஸ் மூலமும் உமரலியார் அழைத்தார். 1992-11-10 ஆம் திகதி தமது ஊரான ஏத்தாளையில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசவந்த இந்திய உலமாக்களைத் தம்முடன் கதைக்க வருமாறு கடிதம் மூலமும் ஒலிபெருக்கி மூலமும் அழைப்பு விடுத்தார். அல்ஜன்னத் ஆசிரியர் பி. ஜைனுல் ஆப்தீன், உமரலியாரின் அழைப்புக்கு பதிலளித்தார்.

நாங்கள் ஒரு ஜமாஅத்தின் அழைப்பில் வந்துள்ளோம்; அவர்களால் எங்கள் நிகழ்ச்சிகள் முன்னரே ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. நாங்கள் இந்தியா சென்றதும் எங்களுக்கு உமரலியார் அழைப்பு அனுப்பினால் எங்கள் செலவில் வந்து பகிரங்கமாக விவாதிக்கத் தயார் என்று அந்தக் கூட்டத்திலேயே பி. ஜைனுல் ஆப்தீன் பதிலளித்தார்.

இந்தத் தொடரில் மவ்லவி ஜைனுல் ஆப்தீனுக்கும், உமரலிக்கும் இடையே பல கடிதப் போக்குவரத்துக்களுக்குப் பிறகு 1993-07-08 ஆம் திகதி ஜைனுல் ஆப்தீன் தமது சகாக்களான மவ்லவி ஸைபுல்லாஹ், ஸுலைமான், தமிழ்நாடு ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸின் பொருளாளர் முஹம்மது உஸ்மான் கான் ஆகியோருடன் இலங்கை வந்தார்.

ஜுலை 12ம் திகதி உமரலியுடனும், அவரது சகாக்களுடனும் விவாத ஒப்பந்த விதிகள் பற்றிப் பேசி 13ஆம் திகதி ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திட்டனர். தீர்ப்பு வழங்குவதற்காக இன்றி நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்துவதற்காக ஒரு நடுவரை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டபடி அனஸ் மாஸ்டர் அவர்கள் இரு தரப்பினராலும் நடுவராக ஏற்படுத்தப்பட்டார்.

1993-07-14 புதன்கிழமை புத்தளம் நகர சபை மண்டபத்தில் அவரது தலைமையில் விவாதம் நடைபெற்றது. உமரலி தம் விவாதத்தில் யார் பைஅத் இன்றி மரணிக்கின்றாரோ அவர் அறியாமைக்கால மரணத்தைத் தழுவுகிறார் என்று முஸ்லிமில் வரும் ஹதீஸையும், அஹ்மதில் வரும் இதே கருத்துள்ள இன்னொரு ஹதீஸையும் முன் வைத்து, பைஅத் அவசியம்; எமது ஜமாஅத்தில் பைஅத் செய்யாத ஜைனுல் ஆப்தீன் உட்பட அனைவரும் காஃபிர்கள் என்று தனது வாதத்தை எடுத்துரைத்தார்.

இதற்குப் பதிலளிக்கும் போது ஜைனுல் ஆப்தீன் பல கேள்விகளை எழுப்பினார். அவற்றில் ஒரு கேள்விக்கும் உமரலியார் பதில் கூறவில்லை. அவரது கேள்வியின் சாரம் பின்வருமாறு அமைந்திருந்தது.

நபியவர்கள் இவ்வாறு உமரலியிடம் நேரடியாகக் கூறவில்லை. இப்னு உமர் (ரழி) அவர்களிடம் இதைக் கூறினார்கள். அவர் நாஃபிவு என்பவரிடம் கூறினார். அவர் ஸைத் பின் முஹம்மதிடம் கூறினார். அவர் ஆஸிம் என்பாரிடம் கூறினார். அவர் முஆத் என்பாரிடம் கூறினார். அவர் உபைத் என்பாரிடம் கூறினார். அவர் முஸ்லிம் என்பாரிடம் கூறினார் என்ற வரிசையிலேயே இந்தச் செய்தி முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.

இவர்களெல்லாம் யார்? உண்மையிலேயே உலகத்தில் வாழ்ந்தவர்களா? கற்பனைப் பாத்திரங்களா? உண்மையிலேயே உலகத்தில் வாழ்ந்தவர்கள் என்றால் அதை எப்படி அறிந்து கொண்டீர்கள்? பைஅத் செய்யாதவர்கள் ஜாஹிலிய்யத்தான - அதாவது காஃபிரான - மரணத்தைத் தழுவுவார்கள் என்பதை அறிவிக்கும் இவர்கள் பைஅத் செய்தவர்கள் தானா? பைஅத் செய்யாத சிலரும் இவர்களில் உள்ளனர். பைஅத் செய்யாதவர் காஃபிர் என்ற உங்கள் வாதப்படி இவர்களும் காஃபிராகி விட்டனர். காஃபிர்கள் வழியாக இது அறிவிக்கப்படுகிறது - (உங்கள் கருத்துப்படி)

இதைக் கூறியவர்களே காஃபிர்கள் எனும் போது அவர்கள் கூறிய இந்தச் செய்தியை நீங்கள் எப்படி நம்பினீர்கள்? பைஅத் செய்யாத அவர்கள் காஃபிர்கள் அல்ல என்பது உங்கள் பதிலானால் பைஅத் செய்யாவிட்டால் காஃபிராக மாட்டார்கள் என்பதை நீங்களே ஒப்புக் கொண்டவராவீர்கள்.

அல்லது இந்தச் செய்தியை நபியவர்களிடம் நீங்கள் நேரடியாகக் கேட்டீர்களா? நீங்கள் நேரடியாகக் கேட்கவில்லையானால் சரித்திரத்தின் துணை கொண்டே நபிமொழி என்று நீங்கள் அறிந்ததாகச் சொன்னால் நீங்களே சரித்திரத்தை ஏற்றுவிட்டீர்கள். சரித்திரத்தை ஏற்பவன் காஃபிர் என்ற உங்கள் வாதப்படி உங்களுக்கே அந்தப் பட்டத்தைச் சூட்டிக் கொண்டீர்கள். ஹிஜ்ரி 40க்குள் நடந்த சம்பவங்களை - நபியின் முன்னறிவிப்புடன் சம்பந்தப்பட்ட சம்பவங்களை - கூறினால் அது சரித்திரம் என்று நிராகரித்த நீங்கள் 200 ஆம் ஆண்டில் வாழ்ந்த முஸ்லிம் என்பவரை - அவர் நல்லவர் என்பதை - எப்படி ஏற்றீர்கள்?

இந்தக் கேள்விக்கு விடை கூறாமல் அடுத்த விஷயத்திற்குச் செல்ல முடியாது என்பதில் ஜைனுல் ஆப்தீன் உறுதியாக இருந்தார். இவற்றுக்குப் பதில் சொல்வதில்லை என்பதில் உமரலியும் உறுதியாக இருந்தார்.

இவற்றுக்குரிய நேரடியான பதிலில் அவரது சாயம் வெளுத்து விடும் என்ற அச்சத்தில் அல்லாஹ்வின் மீது ஆணையாக இது நபிமொழி தான் என்று மட்டும் கடைசி வரை கூறினாரே தவிர பதில் கூறவில்லை. ஒரு கட்டத்தில் இவற்றுக்குப் பதில் சொன்னால் நான் மாட்டிக் கொள்வேன் என்று கூறியதும் சபையே கொல்லென்று சிரித்தது.

உமரலியார் பதில் சொல்லாமல் மீண்டும் மீண்டும் சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தார். இந்த ஜமாஅத்தில் பைஅத் செய்யாதவர்கள் காஃபிர்கள். எனவே, பைஅத் செய்து கொண்டு முஸ்லிம் ஜமாஅத்தில் நுழையுங்கள். குர்ஆன் - ஸுன்னாவை ஆதாரம் என்று ஏற்றுக் கொண்டு, இப்போது இந்த ஹதீஸைச் சொன்னவர் காஃபிரா முஸ்லிமா என்கிறார். எங்களது தலையங்கம் நீங்கள் காஃபிரா இல்லையா என்பது தான். இவர் வரலாற்றை எடுக்கிறார். நான் இதற்குப் பதில் சொன்னால் பிடித்துக் கொள்வார் என்றார்.

ஜைனுல் ஆப்தீன் தமது அடுத்த உரையில், வராலாற்றைச் சொல்வது ஷிர்க் என்று உமரலி கூறியதன் அடிப்படையில், வரலாற்று ரீதியாக உள்ள தொடரில் ஹதீஸைச் சொன்னதால் தாங்கள் முஷ்ரிக்குகள் என்பதை ஒப்புக் கொண்டார் என்றார்.

உமரலி மீண்டும் பேசும் போது நபி (ஸல்) காலத்தில் ஒருவர் இஸ்லாத்தை ஏற்பதாக இருந்தால் நாயகம் அவர்களிடம் நேரில் வந்து நீங்கள் அல்லாஹ்வின் தூதர் என்று முன்னிலையாகத்வ்தான் கூற வேண்டும். அது போல் ஒருவர் இஸ்லாத்தை ஏற்க வேண்டுமானால் அமீராகிய என்னிடம் நேரில் வந்து கூற வேண்டும் இல்லாவிட்டால் அவர் முஸ்லிமே இல்லை என்பதாகக் கூறினார்.

அப்படியானால் உமரலியாகிய உங்களிடம் நேரில் வந்து நீங்கள் அல்லாஹ்வின் தூதர் என்று கூற வேண்டுமா? உங்களை இறைத் தூதராக பிரகடனம் செய்கிறீர்களா? என்று ஜைனுல் ஆப்தீன் கேட்டதற்கு - திரும்பத் திரும்பக் கேட்டதற்கு - உமரலி பதிலும் கூறவில்லை மறுக்கவும் இல்லை.

ஃபாத்திமா (ரழி) பைஅத் செய்யாத சம்பவம் பற்றிய ஹதீஸ் புகாரியில் இடம் பெற்றதாக ஜைனுல் ஆப்தீன் கூறியதற்கு அது பொய்யான செய்தி என்றார் உமரலி.

உடனே ஜைனுல் ஆப்தீன் பொய்யும், மெய்யும் கலந்துள்ள புகாரி முஸ்லிமிலிருந்து மெய்யானவற்றை எப்படி கண்டறிந்தீர்கள். அறிவிப்பாளர்களின் சரித்திரத்தை வைத்தா? அல்லது உங்களுக்கு தனியாக வஹி வந்ததா? வரலாற்றின் துணையால் இவற்றை நபி மொழி என்றால் உங்கள் வாதப்படி நீங்கள் காஃபிராகி விடுவீர்கள். வரலாறு தேவையில்லை என்றால் நபிமொழி என்று எதைச் சொன்னாலும் நம்புவீர்களா?

கைத்தடி வைத்துக் கொள்வது மூஃமினுக்கு அடையாளம் என்றும் ஹதீஸ் உள்ளது. அதன்படி உங்களிடம் கைத்தடி இல்லாததால் உங்களை காஃபிர் என்று சொல்லலாமா? இந்த ஹதீஸ் சரியானது இல்லை என்று நீங்கள் சொல்வதாக இருந்தால் எப்படி இந்த முடிவுக்கு வந்தீர்கள் என்று ஜைனுல் ஆப்தீன் கேட்டதற்கு உமரலியிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

காலை 8 மணி முதல் 9 மணி வரை விவாதம் நடக்குமென ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் பகல் 11 மணிக்கே பதில் இல்லாமல் முழித்த உமரலியார் முபாஹலாவுக்கு அழைத்தார். தொடர்ந்து ஜைனுல் ஆப்தீன் தொடுத்த ஒவ்வொரு கேள்விக்கும் முபாஹலாவுக்குத் தயாரா என்று கேட்டு விவாதத்தை முடிப்பதிலேயே உமரலி குறியாக இருந்தார்.

விவாதத்தின் போதே மக்கள் உண்மையை விளங்கிக் கொண்டனர் என்றாலும், முபாஹலாவைக் காரணம் காட்டி அவர் மக்களை ஏமாற்றக்கூடாது என்பதற்காக ஜைனுல் ஆப்தீன் அதையும் ஏற்றார்.

முபாஹாவுக்கு அழைப்பதற்கு சத்தியத்தில் இருக்கும் தங்களுக்கே உரிமை இருப்பதாக் கூறி இந்தியாவிற்கு அழைத்தார். உமரலி அழைப்பை ஏற்று நாம் இலங்கை வந்தது போல் தமது அழைப்பை ஏற்று அவர் இந்தியா வர வேண்டும் என்று கூறியபோது உமரலி பல காரணங்களைக் கூறித் தட்டிக் கழிக்கப் பார்த்தார். அவற்றுக்கு விளக்கம் கூறிய பின் தம்மிடம் பணம் இல்லை என்றார். கொழும்பு தவ்ஹீத் ஜமாஅத் உமரலிக்கு அவரது குடும்பத்துக்குமாக போக்கு வரத்துச் செலவை ஏற்றனர். இந்தியாவிற்கு உமரலி எப்போதும் தயாராக இருப்பதாக பி. ஜைனுல் ஆப்தீன் அறிவித்த உடன் ஐந்து மணிக்கே விவாதம் முடிவுக்கு வந்தது.

ஜைனுல் ஆப்தீன் தரப்பில் மவ்லவி அப்துல் வதூத் ஜிப்ரி, அன்ஸார் மவ்லவி, ஸைபுல்லாஹ் ஹாஜா, சுலைமான் ஆகியோரும் உமரலி தரப்பில் நதீர் மவ்லவி, அஸ்லம், நைரோஸ், ரஃபீக் ஆகிய மவ்லவிகளும் கலந்து கொண்டனர். மொத்தத்தில் உமரலியின் பிடியில் சிக்கியிருந்த பலர் மயக்கம் தெளிந்தனர். பலர் அவரிடம் செய்த பைஅத்தை முறித்துக் கொண்டதாகவும் எம்மிடம் தெரிவித்தனர். அல்ஹம்துலில்லாஹ்!

இந்த விவாதம் முழுமையாக வீடியோவிலும், ஓடியோவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கெசட் பீஸ் தேவைப்படுவோர் தவ்ஹீத் ஜமாஅத்தின் கொழும்பு கிளையில் பெற்றுக் கொள்ளலாம்.

உமர் அலியே வருக!

கடந்த ஜுலை மாதம் இலங்கையில் உமரலியுடன் விவாதம் நடந்ததும் விவாதத்தின் இடையிலேயே முபாஹலாவுக்கு அவர் அறைகூவல் விடுத்ததும் அதை நான் ஏற்றதும் அனைவரும் அறிந்ததே.

நான் இலங்கையை விட்டுப் புறப்படும் முன் இந்தியாவில் எந்த இடத்திலும், எந்த நாளிலும் முபாஹலாவுக்காக நீங்கள் வரலாம் பதினைந்து நாட்களுக்கு முன் எனக்குத் தெரிவித்து விட வேண்டும் என்று கடிதம் எழுதி அவரிடம் சேர்ப்பித்து விட்டு அவரும் அவரது குடும்பத்தாரும் இந்தியா வந்து செல்லும் செலவுக்கு பொறுப்பாளர்களை நியமனம் செயது விட்டு வந்தேன்.

மாதங்கள் பல உருண்டோடியும் உமரலி வந்த பாடில்லை. வரும் எண்ணமும் அவருக்கு இருப்பதாகத் தெரியவில்லை. இடம், நாள் உட்பட எல்லா லிஷயத்திலும் முடிவு செய்யும் அதிகாரத்தை அவரிடமே வழங்கி எழுதிக் கொடுத்திருந்தும் ஒப்பந்தம் செய்யாததால் வர இயலவில்லை என்று மழுப்பல் கடிதம் அனுப்பியிருக்கிறார். நாம் கையெழுத்திட்டு ஆட்கள் வழியாக நேரில் சமர்ப்பித்த கடிதத்தையே ஒப்பந்தமாக எடுத்துக் கொண்டு அவர் வந்திருக்க வேண்டும்.

அவரது வழியில் அவருக்கே நம்பிக்கையில்லாத நிலையில் முபாஹலாவைச் சந்திக்க அவர் தயங்குகிறார் என்பது இதன் மூலம் நிரூபணமாகின்றது. அவரை நம்பிய அவரது சகாக்கள் யாரேனும் இருந்தால் அவரை நிர்பந்தம் செய்து இந்தியாவுக்கு அனுப்பி வைக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள். அவர் மறுத்தால் அவர் தமது கொள்கை தவறு என்பதை ஒப்புக் கொள்ளுமாறு அவரது சகாக்கள் நிர்பந்திக்க வேண்டும். அதற்கும் மறுத்தால் அவரை இனம் கண்டு கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அவரை வரவழைக்கும் வகையில் கடிதப் போக்குவரத்துக்களையும் தொடர்ந்து நடத்தி வருகிறோம் என்பதை இலங்கைச் சகோதரர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். முபாஹலா அழைப்பை நான் ஏற்றுக் கொண்டதால் இவ்விளக்கம் அவசியமாகிறது.

அன்புடன்,

பி. ஜைனுல் ஆப்தீன்.

05.08.2009. 4:38 AM

விவாதம் முடிந்து விபத்துக்குள்ளான தவ்ஹீத் உலமாக்கள்

ஒரு மனிதன் சத்தியத்திற்கு வருவதற்கு எத்தனையோ தடைக் கற்கள் உள்ளன. ஒருவன் சத்தியத்திற்கு வர வேண்டும் என்று எண்ணும் போது சமுதாயத்தில் அவனுக்குக் கிடைக்கும் சமூக அந்தஸ்து, மரியாதை குறுக்கே வந்து நிற்கும். அதை வைத்து அவனிடம் ஷைத்தான் பல குறுக்குக் கேள்விகள் கேட்பான்.

மாற்று மதத்தைச் சேர்ந்த ஒருவர் கிராமத் தலைவராக இருப்பார். அல்லது சட்டமன்ற உறுப்பினராக அல்லது நாடாளுமன்ற உறுப்பினராக ஏன்? முதலமைச்சராகக் கூட இருப்பார். நீ இஸ்லாத்திற்குப் போனால் இந்த மரியாதை கிடைக்குமா? என்று ஷைத்தான் அவரிடம் கணக்குப் போட வைப்பான். அவரும் கூட்டிக் கழித்துப் பார்த்து விட்டு, இந்த மரியாதை அங்கு போனால் நமக்குக் கிடைக்காது என்று அவர் அசத்தியத்திலேயே இருந்து விடுகின்றார்.

இது மாற்று மதத்தைச் சேர்ந்த ஒருவரிடம் ஷைத்தான் போடும் தடைக் கல்லாகும். இஸ்லாத்தின் பெயரிலேயே அசத்தியத்தில் இருக்கும் ஒருவர் ஏகத்துவத்தின் பக்கம் இணைய வரக் கூடிய கட்டத்திலும் இது போன்று ஷைத்தான் அவரிடம் விஷ வித்துக்களை விதைக்கின்றான். அதனால் அவர் சத்தியத்திற்கு வராமலேயே இருந்து விடுகின்றார்.

இன்று சமுதாயத்தில் பல செல்வந்தர்கள், நீங்கள் சொல்வது எல்லாம் சரி தான். உங்கள் பள்ளிக்குத் தொழ வந்தால் எங்களுக்கும் நஜாத் என்ற முத்திரை குத்தி விடுகின்றார்கள். இது தான் நாங்கள் பகிரங்கமாக வர முடியாததற்குக் காரணம் என்று கூறுகின்றார்கள்.

இப்படிச் சொல்பவர்கள் இதுவரை இந்தப் பக்கம் வருவதை நாம் பார்க்க முடியவில்லை. அந்தப் பக்கத்தில், அதாவது அசத்தியத்தின் பக்கத்தில் தான் இருக்கின்றார்கள். இப்போது இவர்களுக்குக் குறுக்கே சமூக அந்தஸ்து, மரியாதை தடைக் கல்லாக இருக்கின்றது.

அடுத்து, ஒரு மனிதன் சத்தியத்திற்கு வருவதற்குத் தடைக் கல்லாக நிற்பது நோய் நொடிகள், பொருளாதார நஷ்டம் போன்றவை.

ஒருவன் தவ்ஹீதிற்கு வந்திருப்பான். வந்தவுடன் பொருளாதார நஷ்டம் ஏற்பட்டு விடும். அவ்வளவு தான்! அவன் சத்தியத்தை விட்டு வெளியே போய் விடுவான்.

அது போல் ஒருவன் தவ்ஹீதுக்கு வந்திருப்பான். அவனைத் தவிர அவனது குடும்பமே விபத்தில் பலியாகி விடுவர். இது அவனுடைய உள்ளத்தில் ஒருவித மன உறுத்தலையும் உடலில் ஓர் உதறலையும் ஏற்படுத்தி விடும்.

அதற்குத் தக்கவாறு மக்களும்,பாருங்கள்! இவன் அவ்லியாக்களைத் திட்டினான். இந்தச் சாபம் தான் இவனை இப்படி ஆட்டி அலைக்கின்றது என்று விமர்சனம் செய்வார்கள். அவ்வளவு தான். தடுமாறி தடமும் மாறி விடுவான். வீட்டில், வீதியில் நாம் ஏகத்துவப் பிரச்சாரத்தைச் செய்ய முனைகின்ற போது, அடுத்த வீட்டு அப்துல் காதிரைப் பார்! அவனுடைய குடும்பமே விபத்தில் காலி! எதிர் வீட்டு இப்ராஹீமைப் பார்! அவனுடைய பொருளாதாரம் நஷ்டமடைந்து விட்டது என்று முன்னுதாரணமாக்கி தவ்ஹீதுக்கு வர விடாமல் தடுக்கின்ற பணிகளில் ஈடுபடுவர்.

இன்றைக்கும் பலர் தவ்ஹீதுக்கு வராமல் இருப்பதற்கு இந்தத் தடைக்கல் தான் காரணமாக இருக்கின்றது. தமிழகத்தில் ஆரம்பத்தில் இந்தத் தடைக்கல் தான் மிகப் பெரிய அளவில் குறுக்கே வந்து நின்றது. இதைத் தான் அல்லாஹ் உடைத்தெறிகின்றான்.

தனது அடியாருக்கு அல்லாஹ் போதுமானவன் இல்லையா? அவனல்லாதோரைப் பற்றி அவர்கள் உம்மை அச்சுறுத்துகின்றனர். அல்லாஹ் யாரை வழிகேட்டில் விட்டானோ அவருக்கு நேர்வழி காட்டுபவன் இல்லை.

திருக்குர்ஆன் 39:36

ஒருவர் சத்தியத்தை ஏற்றுக் கொள்ளும் போது இப்படித் தான் அசத்தியவாதிகள் எச்சரிக்கை விடுப்பார்கள். அப்படிப்பட்ட எச்சரிக்கையை எதிர்கொள்வதற்கு ஒரேயொரு ஆயுதம் இந்த வசனம் தான். அல்லாஹ் போதும் என்று நம்புங்கள். என் கொள்கைக்கு வந்த நீங்கள் என்னைத் தான் பயப்பட வேண்டும். என் அல்லாதவர்களை நீங்கள் பயப்படக் கூடாது என்று நமக்குப் பாடம் புகட்டுகின்றான்.

அதாவது இந்த விஷயத்தில் நாம் இப்ராஹீம் (அலை) அவர்களைப் போன்று நடக்க வேண்டும் என்று சொல்கின்றான். இதோ இப்ராஹீம் (அலை) அவர்களின் முழக்கத்தைப் பாருங்கள்.

எதையும் எதிர்கொண்ட இப்ராஹீம் நபி

அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சான்றையும் வழங்காதவற்றை அவனுக்கு இணையாக்குவதற்கு நீங்கள் அஞ்சாத போது நீங்கள் இணை கற்பித்தவைகளுக்கு எவ்வாறு நான் அஞ்சுவேன்? நீங்கள் அறிந்தால் இரு கூட்டத்தினரில் அச்சமற்றிருக்க அதிகத் தகுதி படைத்தவர் யார்? (என்று அவர் கூறினார்)

திருக்குர்ஆன் 6:81

இணை கற்பித்தால் அல்லாஹ் தண்டிப்பான் என்று நான் ஆதாரப்பூர்வமாக, அல்லாஹ்வின் வார்த்தைகளைக் கொண்டு பயமுறுத்துகின்றேன். அதற்கு நீங்கள் பயப்படவில்லை. ஆனால் ஆதாரம் இல்லாமல், அல்லாஹ் அல்லாத தெய்வங்கள், அவ்லியாக்கள் தண்டித்து விடுவார்கள் என்று என்னைப் பயமுறுத்துகிறீர்கள். நான் எப்படிப் பயப்படுவேன் என்று இப்ராஹீம் (அலை) அவர்கள் முழங்குகின்றார்கள்.

இப்படித் தான் ஓர் ஏகத்துவவாதி இருப்பான். இப்படித் தான் இருக்க வேண்டும். இப்படித் தான் ஏகத்துவ வாதிகள் இருக்கின்றார்கள். ஏதாவது ஒரு சோதனை ஏற்பட்டதும் கொள்கையை விட்டு ஓடுவது என்பது மக்கத்து காஃபிர்கள், முஷ்ரிக்குகள் வேலையாகும்.

விளிம்பில் இருந்து கொண்டு அல்லாஹ்வை வணங்குபவனும் மனிதர்களில் இருக்கிறான். அவனுக்கு நன்மை ஏற்பட்டால் அதில் நிம்மதியடைகிறான். அவனுக்குச் சோதனை ஏற்பட்டால் தலைகீழாக மாறி விடுகிறான். இவ்வுலகிலும், மறுமையிலும் அவன் நஷ்டமடைந்து விட்டான். இதுவே தெளிவான நஷ்டம்.

திருக்குர்ஆன் 22:11

இந்து மதத்தின் பாதுகாவலன் என்று சொல்லிக் கொள்ளும் சிவசேனா தலைவன் தன் மனைவி இறந்ததும் சிலைகளைப் போட்டு உடைத்தான். இது போன்று சுன்னத் ஜமாஅத்தினர் நோய் என்றால் நாகூர் தர்ஹாவுக்குச் செல்வார்கள். அங்கு நிவாரணம் கிடைக்கும் என்று காத்திருப்பார்கள். கிடைக்கவில்லை என்றால் ஏர்வாடிக்கு மாறி விடுவார்கள். இதே போல் தரீக்காவை விட்டு தரீக்காவும் மாறுவார்கள்.

இது போன்று ஒரு ஏகத்துவவாதி இருக்க மாட்டான். அதற்கு எடுத்துக் காட்டு தான் அண்மையில் நடந்த விபத்து! எம்.ஐ. சுலைமான், ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் விவாதத்தில் பங்கேற்று விட்டு காரில் சென்று கொண்டிருந்த போது கார் ஒரு மரத்தில் மோதி விட்டது. கார் சிதைந்து, சின்னாபின்னமாகி, சிதிலமாகி விட்டது. எம்.ஐ.சுலைமான் அவர்களுக்குக் காலில் பலத்த காயம். ரஹ்மத்துல்லாஹ், கார் டிரைவர் சில்மி ஆகியோருக்கும் காயம்.

அவ்வளவு தான்! இது அவ்லியாக்களின் வேலை தான் என்று இந்த அசத்தியவாதிகள் கதை கட்டி விட்டனர்.

மரத்தில் மோதிய காரைப் பார்ப்பவர்கள், அந்தக் காரில் இருந்தவர்கள் உயிர் பிழைப்பதற்குச் சாத்தியமேயில்லை என்ற முடிவுக்குத் தான் வருவார்கள். ஆனால் அல்லாஹ் அந்த மூவரையும் காப்பாற்றி விட்டான். இவர்களின் எதிர்பார்ப்பு பொய்க்கும் வண்ணம் மூன்று பேருமே பிழைத்து விட்டார்கள்.

விவாதத்தில் கலந்து கொண்டு திரும்பிய எம்.ஐ. சுலைமானும், ரஹ்மத்துல்லாஹ்வும் ஒருக்கால் இறந்து விட்டாலும் நாங்கள் கொண்டிருக்கும் கொள்கை சத்தியம்; நாங்கள் சொன்னது சத்தியம்; நாங்கள் வாதிட்டது சத்தியம்; அல்லாஹ் ஒருவன் தான் நிரந்தரமாக உயிரோடு இருப்பவன்; இவர்கள் கூறும் அவ்லியாக்கள் இறந்து விட்டவர்கள் தான்; உயிரில்லாதவர்கள் தான்.

இந்த நிலைப்பாட்டில் எங்களுக்கு எள்ளளவும் மாற்றம் கிடையாது.

அதனால் இந்த அசத்திய வாதிகளுக்குச் சொல்லிக் கொள்கிறோம்.

விபத்து நேரிட்டாலும் 22:11 வசனத்தில் அல்லாஹ் கூறுவது போன்று விளிம்பிற்கு வந்து விட மாட்டோம். சத்தியத்தை விட்டு வெளியேறி விட மாட்டோம். இந்தக் கொள்கையில் இறுதி வரை நிற்போம். அதிலேயே உயிர் துறப்போம்.

05.08.2009. 7:04 AM

பரேலவிகள் ஒரு வரலாற்றுப் பார்வை!

இந்தியாவின் பல பகுதிகளில் பரேலவிஸம் வேரூன்றியது போலவே தமிழகத்திலும் அது வேரூன்றி விஷ விருட்சமாக விரிந்து கிடந்தது. அதனுடைய விஷக் கனிகள் தான் விண்ணைத் தொட்டு நிற்கும் மனாராக்களைக் கொண்ட தர்ஹாக்கள்! அவற்றைப் போற்றிப் புகழ்கின்ற தரீக்காக்கள்! சூபிஸ தத்துவங்கள்! மவ்லிதுகள்! இருட்டு திக்ருகள்! வலிமார்கள் இறந்த பின்னும் உயிருடன் இருக்கிறார்கள்; எனவே அவர்களிடம் பிரார்த்திக்கலாம் என்ற நம்பிக்கைகள்!

இவையெல்லாம் குர்ஆன், ஹதீஸுக்கு மாற்றமானவை என்ற சிந்தனை ஓட்டம் இறையருளால் நம்முடைய உள்ளங்களில் தோன்றியது.

நாங்கள் சங்கரன்பந்தல் மதரஸாவில் பணியாற்றிக் கொண்டிருக்கையில், தீன் விளக்கக் குழு என்ற பெயரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இரவு பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. அதில் தமிழகத்தில் உள்ள மதரஸாக்களிலிருந்து ஆலிம்களை உரையாற்ற அழைப்போம்.

கூட்டம் முடிந்த பின் விடிய விடிய அவர்களிடம், இந்தச் சிந்தனை ஓட்டத்தைப் பிரதிபலித்தோம். இவற்றுக்கெல்லாம் ஆதாரம் உண்டா? என்று கேட்டோம்.

சிலரிடத்தில் தெளிவான பதில் இருக்கும்; சிலரிடம் மழுப்பல் இருக்கும்.

சில அறிஞர்களிடம் நேரடியாகப் போய்க் கேட்டிருக்கிறோம். போன இடத்திலும் அதே நிலை தான்.

இருப்பினும் இம்முயற்சியைத் தொடர்ந்ததற்குக் காரணம் இவர்களையும் ஒன்றாகச் சேர்த்துக் கொண்டு பரேலவிஸத்திற்கு எதிரான போர்க்களத்தில் இறங்கலாம் என்ற நோக்கத்தில் தான்.

ஆனால் இம்முயற்சிக்கு, தஞ்சையில் நடைபெற்ற வலிமார்கள் மாநாடு ஒரு முற்றுப் புள்ளி வைத்தது.

(அந்த வரலாறு தனிக் கட்டுரையாக கூறப்பட்டுள்ளது)

அதனால் தனித்துக் களம் இறங்கினோம். பரேலவிஸத்தை எதிர்த்து காயல்பட்டிணத்தில் முபாஹலாவைச் சந்தித்தோம். அல்லாஹ்வின் அருளால் தவ்ஹீதில் நாள் தோறும் மக்கள் இணைந்த வண்ணம் உள்ளனர்.

இவ்வாறு களம் இறங்கும் முன் யாராவது இதைச் சொல்ல மாட்டார்களா? என்று ஏங்கினோம். அதிலும் குறிப்பாக தேவ்பந்தி ஆலிம்கள் இதற்குக் கை கொடுக்க மாட்டார்களா? என்றெல்லாம் எதிர்பார்த்தோம். ஏனென்றால் தேவ்பந்த் தாருல் உலூமின் அடிப்படையே பரேலவிஸத்திற்கு எதிராக அமைந்தது தான்.

ஆனால் அவர்களும் இதைப் பகிரங்கமாகச் சொல்ல முன்வரவில்லை. இதற்குக் காரணம், தங்களை வஹ்ஹாபிகள் என்று மக்கள் சொல்லி விடுவார்களோ என்ற பயம் தான்.

இவ்வாறு பரேலவிஸத்தைப் பற்றி அவர்கள் பகிரங்கமாகச் சொல்லாததால் தேவ்பந்தில் ஓதி வந்த ஆலிம்களே இந்த பரேலவிஸத்திற்குப் பலியாகி விட்டனர். அதைப் பரப்பும் பிரச்சாரகர்களாகவும், இருட்டில் உட்கார்ந்து யாமுஹய்யித்தீன் என்று அழைக்கும் முஷ்ரிக்குகளாகவும் மாறி விட்டனர்.

இதில் வேதனைக்குரிய விஷயம், பரேலவிஸத்திற்கு எதிரான சிந்தனை கொண்ட ஆலிம்கள் நமக்கு எதிராகச் செய்த பிரச்சாரத்தில் ஒரு சதவிகிதம் கூட பரேலவிஸத்திற்கு எதிராகச் செய்யவில்லை.

நான்கு மத்ஹபுகள் என்ற சுவர்களுக்குள் இவர்களும் சங்கமிக்கிறார்கள் என்ற காரணத்தால் அவர்களை விட்டு வைத்தார்கள். ஆனால் இன்று அந்த பரேலவிகளை எதிர்த்துக் களமிறங்கியிருக்கின்றார்கள்.

சென்னையிலுள்ள காஷிஃபுல் ஹுதா அரபிக் கல்லூரி சார்பில் வெளியிடப்படும் மனாருல் ஹுதா என்ற மாத இதழில் பரேலவிகள் ஒரு வரலாற்றுப் பார்வை என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளனர். அதிலும் எங்கே தங்களை வஹ்ஹாபிகள் என்று மக்கள் சொல்லி விடுவார்களோ என்ற பயம் இவர்களை ஆட்கொள்ளாமல் இல்லை. அதனால் ஆங்காங்கே வஹ்ஹாபிகளைப் பற்றிக் குறை சொல்லி இருந்தாலும், பரேலவிஸத்தைக் கடுமையாக லெப்ட் அன்ட் ரைட் வாங்கியிருக்கின்றார்கள்.

இப்படி காலம் கடந்தேனும் இந்த உண்மையைப் போட்டு உடைத்தமைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதே வேளையில் பரேலவிஸம் வாழ்வதற்கும், ஆள்வதற்கும் அடிப்படைக் காரணம், குர்ஆன், ஹதீஸ் என்ற இரண்டு அடிப்படைகளை விட்டு வெளியே சென்று, மத்ஹபுகளை இஸ்லாத்தின் அடிப்படையாக்கியது தான் என்பதையும் மறந்து விடக் கூடாது. இன்ஷா அல்லாஹ் அதையும் இவர்கள் உணரும் காலம் வெகு தூரம் இல்லை.

மனாருல் ஹுதா இதழில் வெளியான, பரேலவிகள் ஒரு வரலாற்றுப் பார்வை என்ற கட்டுரையின் சில பகுதிகளை இங்கே தருகின்றோம்.

பரேலவிகள் - ரிளாகானிகள்

பித்அத்தை அங்கீகரிப்பவர்கள், நவீன அனுஷ்டானங்களை இஸ்லாமிய வணக்க வழிபாடுகளைப் போன்று பாவித்துச் செய்யும் அனாச்சாரமான கொள்கைக்கு ஹிஜ்ரீ 14ஆம் நூற்றாண்டில் புத்துயிரூட்டியவர் அஹ்மது ரிளாகான் என்பவராவார்.

உ.பி.யின் பரேலி எனும் ஊரில் ஹிஜ்ரீ 1272 ஷவ்வால் (கி.பி. 1856 ஜூன் 14) அன்று பிறந்தார். தகப்பனார் பெயர் நகீஅலீ. இவருக்குத் தாயார் வைத்த பெயர் அம்மன் மியான். தந்தை வைத்த பெயர் அஹ்மது மியான். பாட்டனார் தான் அஹ்மது ரிளா என்று பெயர் வைத்தார். இந்தப் பெயரே பிரபலமானது. இதனால் இக்கொள்கைக்கு ரிளாகானிய்யத் என்று கூறுவர். ஊரின்பால் தொடர்பு படுத்தி பரேலவிய்யத் என்றும் கூறுவர்.

காதியானியிடம் ஆரம்பக் கல்வி

இவர் தனது ஆரம்பக் கல்வியை, தன்னை நபி என வாதிட்ட பொய்யன் மிர்ஸா குலாம் காதியானியின் சகோதரர் மிர்ஸா குலாம் காதிர் பேக்கிடமே கற்றார். இவர் பொய்யர், இஸ்லாமிய உண்மைக் கோட்பாடுகளுக்கு எதிரானவர் என்பதற்கு இதுவே போதுமான சான்றாகும்.

ஐயமும் தெளிவும்

ஐயம்: ரிளாகான் பரேலவிக்கு முன்பே இந்தியாவில் பித்அத், அனாச்சாரங்கள் தோன்றி விட்ட போது, தேவ்பந்த் உலமாக்கள் பரேலவிகளை மட்டும் சாடுவதற்கு, மறுப்பு கொடுப்பதற்குக் காரணம் என்ன?

தெளிவு: நியாயமான கேள்வி தான். இதற்கான விடையை சரியாக அறிய வேண்டுமெனில், பரேலவிகளுக்கு முன், பரேலவிகளுக்குப் பின் இருந்த இந்திய முஸ்லிம்களின் நிலையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இரண்டு வித்தியாசங்கள்

பரேலவிகள் தோன்றுவதற்கு முன்பே பித்அத், அனாச்சாரங்கள் இருந்து வந்த போதிலும் பரேலவிகளுக்கும் அதற்கு முந்தைய பித்அத்வாதிகளுக்கும் இரண்டு வித்தியாசங்கள் உள்ளன.

முதல் வித்தியாசம்

பரேலவிகளுக்கு முன் எந்த ஆலிமும் பித்அத்தை இஸ்லாத்தின் போதனையாகவோ, மார்க்கத்தின் ஓர் அங்கமாகவோ கூறியதில்லை. இந்த பரேலவிகள் தான் முதன் முதலில் பித்அத்திற்கு இஸ்லாமிய வடிவம் கொடுத்து, இஸ்லாத்தின் ஓர் அங்கம் போல் ஒரு மாயையை ஏற்படுத்தினார்கள்.

இரண்டாவது வித்தியாசம்

பித்அத்தைக் கண்டித்து சுன்னத்தை நிலைநாட்டும் உண்மையான உலமாக்களை முதன் முதலில் காஃபிர்கள் என்று முத்திரை குத்தியது பரேலவிகள் தான்.

இதன் விளைவு

தயக்கத்துடன், வெட்கத்துடன் செய்யப்பட்டு வந்த பித்அத்கள் புண்ணியமானதாகவும், நன்மைக்கு உரியதாகவும் கருதப்பட்டு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து பகிரங்கமாக அரங்கேற்றம் பெறத் துவங்கின.

முன்பு, கவலையுள்ள ஆலிம்கள் பித்அத்தின் தீய விளைவுகளை எடுத்துக் கூறினால் தவ்பாச் செய்து சுன்னத்தைக் கடைப்பிடிக்கும் நிலை மக்களிடம் இருந்தது. ஆனால் பரேலவிகள் தலையெடுத்த பின், பித்அத்தை எதிர்த்து நபிகளாரின் சுன்னத்தைப் பேணும் உண்மையான நல்லடியார்களை காஃபிர்கள் என எண்ணும் நிலை உருவானது. இதனால் ஷிர்க்கிற்கு நெருக்கமான பித்அத் என்ற இப்பெரும்பாவத்திலிருந்து பெரும்பாலோருக்கு தவ்பாச் செய்யும் வாய்ப்பே இல்லாமல் போய் விட்டது.

ஆங்கிலேயர்களாவது அந்த உண்மையான தியாகசீலர்களை வஹ்ஹாபிகளாகத் தான் ஆக்கினார்கள். ஆனால் பித்அத்தை மார்க்கமாக்கிய தீய ஆலிம்களோ அவர்களை காஃபிர்களாகவே ஆக்கி விட்டார்கள்.

எந்த உண்மையான உலமாக்கள் வந்திருக்காவிட்டால் இந்தியாவில் இஸ்லாமே அழிந்திருக்குமோ அந்தப் புண்ணியவான்களை, இஸ்லாத்திற்காக இன்னுயிரை நீத்த தியாகச் செம்மல்களை காஃபிர் என்றால் வேறு யார் தான் முஸ்லிமாக இருக்க முடியும்?

இப்போது புரிகிறதா பித்அத்தும், பரேலவியிஸமும் எவ்வளவு கொடூரமானவை என்று?

ரிளாகான் பரேலவியின் காஃபிர் ஃபத்வாவால் இந்திய முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் என்ன?

தினமும் ஏதேனும் ஓர் உண்மையான ஆலிமையோ, ஒரு குழுவையோ காஃபிர் என்று மொத்தமாகவும் சில்லரையாகவும் ஃபத்வா கொடுக்காவிட்டால் ரிளாகான் பரேலவிக்கு அன்றைய பொழுது கழியாது.

இஸ்லாமிய வரலாற்றில் அல்லாஹ்வின் உண்மையான நல்லடியார்களை, தீனுக்காகத் தமது வாழ்நாளை மனத் தூய்மையோடு அர்ப்பணித்த தியாக சீலர்களை அசிங்கமான, கொச்சையான வார்த்தைகளால் வசை பாடியது மட்டுமின்றி, காஃபிர் என்று கூறிய முதல் மனிதர் ரிளாகான் பரேலவி தான்.

ரிளாகான் பரேலவியின் காஃபிர் ஃபத்வா ஒரு வரலாற்றுப் பார்வை

இந்தியாவில் முன்பிருந்தே ஆலிம்களுக்குப் பஞ்சமில்லை. ஆனால் பல பாகங்களில் பிரிந்து வட்டார அளவில் மட்டும் தம் பணிகளைச் செய்து வந்தார்கள். கி.பி. 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நாளுக்கு நாள் ஆங்கிலேயரின் எழுச்சி ஒரு புறம், மறுபுறம் அரசியல், ஆன்மீகம், பொருளாதாரம், கல்வி, ஒழுக்கம் எல்லா மட்டத்திலும் முஸ்லிம்களின் வீழ்ச்சி. இதைக் கவனத்தில் கொண்டு நாட்டின் பல பாகங்களில் பிரிந்து கிடக்கின்ற பல்வேறு சிந்தனை கொண்ட அனைத்து உலமாக்களும் ஒரு பொதுத் திட்டத்தின் அடிப்படையில் ஒன்றிணைந்து கூட்டமைப்பாக செயல்படலாம் என்று முடிவானது.

நத்வத்துல் உலமா

இதனடிப்படையில் மௌலானா முஹம்மது அலீ மூங்கீரி (ரஹ்) அவர்களின் பெரும் முயற்சியால் (கி.பி. 18ம் நூற்றாண்டு பிற்பகுதி) ஹிஜ்ரீ 1311ல் கான்பூரில், நாட்டின் அனைத்துப் பகுதியிலிருந்தும் பல்வேறு சிந்தனை கொண்ட முக்கிய உலமாக்கள் கூடினார்கள். இந்த அமைப்பிற்கு நத்வத்துல் உலமா (உலமாக்கள் சங்கம்) என்றும் பெயரிடப்பட்டது. அநேகமாக இந்திய வரலாற்றில் அதற்கு முன்பு இவ்வாறு அனைத்து உலமாக்களும் கூடிய சரித்திரம் இல்லை.

வெளிநடப்பு

அனைத்து உலமாக்களும் ஓரணியில் திரண்ட பின் இனி இந்திய முஸ்லிம்களுக்குப் பிரகாசமான எதிர்காலம் தான் என்று உறுதியாக நம்பப்பட்டது. ஆனால் அந்த முதல் கூட்டத்திலேயே ஒரே ஒரு நபர் மட்டும் ஏதோ காரணம் கூறி வெளிநடப்புச் செய்து, கூட்டத்தைப் புறக்கணித்தார். அவர் தான் அஹ்மது ரிளாகான் பரேலவி.

புறக்கணித்தது மட்டுமன்றி நத்வத்துல் உலமாவின் அனைத்து ஆலிம்களையும் காஃபிர் ஃபத்வா கொடுத்து, சொல்ல முடியாத அசிங்கமான வார்த்தைகளால் வசை பாடி நூலுக்கு மேல் நூல் எழுதினார். கிட்டத்தட்ட நூறு நூல்கள் எழுதி பல்லாயிரக்கணக்கான பிரதிகள் அச்சிட்டு விநியோகித்தார்.

இவ்வளவுக்கும் அவர் சொன்ன காரணம் இது தான். அதாவது, 70 காரணங்களால் காஃபிராகி விட்ட ஷாஹ் இஸ்மாயீலை ஏற்ற வஹ்ஹாபிகளையும் நத்வாவில் இணைத்ததால் எல்லா ஆலிம்களும் காஃபிராகி விட்டனர் .

ஆங்கிலேயரின் மனசாட்சி

இங்கு நன்கு கவனிக்க வேண்டும். ஷாஹ் இஸ்மாயீல் தெஹ்லவீ அவர்களுக்கும், அவர்களது படைக்கும் வஹ்ஹாபிகள் என்று பொய்ப் பிரச்சாரம் செய்தது ஆங்கிலேயர்கள் தான். அதே பெயரை ரிளாகானும் பயன்படுத்துகின்றார்.

மேலும் இந்தியாவின் அனைத்து உலமாக்களும் சேர்ந்து ஆரம்பித்த நத்வத்துல் உலமா அமைப்பை ரிளாகான் என்ற ஒரு தனிநபர் மட்டும் எதிர்த்து நூல் எழுதவும், அந்த அமைப்பையே இல்லாமல் செய்யவும் முடிந்தது என்றால் ஆங்கிலேயருடன் அஹ்மது ரிளாகான் பரேலவிக்கு ஆங்கிலேயரின் மனசாட்சியாகச் செயல்படும் அளவுக்குத் தொடர்பு இருந்தது என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

நத்வத்துல் உலமா அமைப்பு மட்டும் துவங்கிய வீரியத்தோடு செயல்பட்டு இருந்தால், இந்தியாவின் சரித்திரமே மாறி முஸ்லிம்கள் அசைக்க முடியாத சக்தியாக மாறி இருப்பார்கள்.

ஒட்டுமொத்த இந்திய முஸ்லிம்களுக்கும் காலம் காலம் நஷ்டத்தை ஏற்படுத்திய இந்த அஹ்மது ரிளாகான் பரேலவி முஸ்லிம்களின் எதிரி என்பதில் என்ன சந்தேகம் இருக்க முடியும்?....

...இதே ரிளாகான் பரேலவி தான் ஆங்கிலேயர்களுக்கு எதிராக உலமாக்களும் முஸ்லிம்களும் போரிட்டு வீர மரணம் அடைந்து கொண்டிருந்த வேளையில், இந்தியா தாருஸ்ஸலாம் - இஸ்லாமிய நாடு தான்; முஸ்லிம்கள் ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் செய்யக் கூடாது என வலியுறுத்தினார். அதற்காக ஆங்கிலே யரைப் புகழ்ந்தும், ஆங்கிலேயருக்கு எதிரான போரைக் கண்டித்தும் பல நூல்களை எழுதி ஆயிரக்கணக்கில் அச்சடித்து விநியோகித்தார்.

ஆங்கிலேயர்களுடன் போரிடுவது நம் கடமை என்று மார்க்கத் தீர்ப்பு கொடுத்த மௌலானா அப்துல் அஜீஸ் அவர்களையும் அன்னாரின் சீடர்களையும் இவர் காஃபிர் - இறை மறுப்பாளர் என்று ஃபத்வா கொடுத்தார்.

இப்போது சொல்லுங்கள். பரேலவிய்யத் ஆங்கிலப் பிள்ளையா? இல்லையா?

தனது ரிளாகான் என்ற பெயரை அப்துல் முஸ்தபா என்று மாற்றிக் கொண்டார்.

இத்தகைய தவறான கோட்பாடுகளையும், சிந்தனையும் கொண்ட இவராலும் இவரது சீட கோடிகளாலும் பரப்பப்பட்டதே பரேலவிய்யத் ரிளாகானிய்யத்.

இவர்களின் கொள்கைகளில் சில...

அல்லாஹ்விடம் தேவைகளைக் கேட்பதைப் போல் அவ்லியாக் களிடமும் கேட்கலாம்.
இறைநேசர்களின் அடக்கத் தலங்களில் ஸஜ்தா (சிர வணக்கம்) செய்யலாம்.

நபி (ஸல்) அவர்கள் எல்லா இடங்களிலும் ஆஜராகின்றார்கள். அனைத்தையும் பார்க்கிறார்கள். (இறைவனுடன் பொருத்திப் பார்க்கும் அபாயகரமான நம்பிக்கை இது)

சில இறைநேசர்களுக்கும் கூட இவ்வாறு ஆஜராகும் தன்மைகள் உள்ளன.
மறைவான ஞானம் (இல்முல்கைப்) நபியவர்களுக்கும் வலிமார்களுக்கும் உண்டு.
தர்ஹாக்களில் சந்தனக்கூடு, கொடியேற்றுதல், விளக்கேற்றுதல் போன்றவை நன்மை தரும் செயல்களாகும்.

ஷைக் - ஞான குருவின் காலில் விழலாம். ஷைக் பெண்களின் கை பிடித்து பைஅத் - ஒப்பந்தம் செய்யலாம்.

குர்ஆன், ஹதீஸ், இஜ்மா, கியாஸ் அனைத்திற்கும் புறம்பான இது போன்ற பல தவறான கொள்கைகளைப் பரப்பி இந்திய முஸ்லிம்களுக்கு மத்தியில் இன்றளவும் பல பிளவு ஏற்படக் காரணமானவர் தான் அஹ்மது ரிளாகான் பரேலவி என்பதைப் புரிந்து கொள்வோம்.

ரிளாகான் பரேலவியின் இது போன்ற தீய கொள்கைகளைத் தாங்கி தற்போது தமிழகத்திலும் புதிய அமைப்பு திட்டமிட்டு உருவாக்கப் பட்டுள்ளது. நாம் எச்சரிக்கையாக இருப்போம்.

நன்றி: மனாருல் ஹுதா

அக்டோபர் & நவம்பர் 2006

இது போன்று பரேலவிஸத்திற்கு எதிராக அனைத்துத் தரப்பினரும் களமிறங்க வேண்டும். அவ்வாறு களமிறங்கிப் பிரச்சாரம் செய்தால், இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்க்கும் இந்த பரேலவிகளை மக்களே அடையாளம் கண்டு விரட்டியடித்து விடுவார்கள். இவர்களின் கொள்கைகளில் சில... என்று தலைப்பிட்டு மனாருல் ஹுதா வெளியிட்டிருக்கும் விஷயங்களைப் பாருங்கள்.

இந்த விஷக் கருத்துகளுக்கு எதிராகத் தான் இறையருளால் கால் நூற்றாண்டாக நாம் போராடி வருகின்றோம். மற்றவர்களைப் போல் இலை மறை காயாக, பட்டும் படாமலும் சொல்லாமல், தயவு தாட்சண்யமின்றி எடுத்துச் சொல்லுங்கள் என்ற இறைக் கட்டளையின் அடிப்படையில் போட்டு உடைத்து வருகின்றோம்.

பரேலவியின் தீய கொள்கைகளைத் தாங்கி தற்போது தமிழகத்திலும் புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்று மனாருல் ஹுதா எச்சரிக்கின்றது. ஆனால் அது யார்? என்று தெளிவாக அடையாளம் காட்ட அவர்கள் தயாராக இல்லை. இந்த மென்மையான போக்கு தான் பரேலவிகளின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்துள்ளது. ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி வகையறாக்கள் தான் அது என்று தெளிவாகச் சொல்வதற்கு மனாருல் ஹுதாவிற்குத் தயக்கம் ஏன்?

பரேலவியின் கொள்கையை சுன்னத் வல் ஜமாஅத் என்ற போர்வையில் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி வகையறாக்கள் தைரியமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றார்கள்; அதற்கு ஆதரவாக தவ்ஹீது ஜமாஅத்துடன் விவாதக் களத்திற்கும் வருகின்றார்கள் என்றால் அதற்குக் காரணம் அவர்களைப் பற்றி மக்களிடம் தெளிவாக அடையாளம் காட்டி பிரச்சாரம் செய்யாதது தான். எனவே பரேலவிஸத்தைப் பற்றி கவலைப்படுவதோடு நின்று விடாமல் அதில் மக்கள் வீழ்ந்து நரகத்திற்குச் சென்று விடாமல் காக்கும் பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உள்ளது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!

காயல்பட்டிணம் முபாஹலா வரலாறு

சந்ததியற்றுப் போன சந்ததியற்றுப் போன ஜலீல் முஹைதீன்கள்

ஷம்ஸுல்லுஹா

1974 வாக்கில் தமிழகத்தில் நூரி ஷாஹ் என்ற தரீக்கா தோன்றியது. இது பரேலவிஸம் என்ற விஷத்தின் ஒரு கிளையாகும்.

இந்தத் தரீக்கா, ஹைதராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்டு தமிழகத்தில் காலூன்றியது. லால்பேட்டை போன்ற பெரிய பெரிய மதரஸாக்கள் உள்ள ஊரிலும் இந்தத் தரீக்கா தோன்றியது.

தோன்றிய சிறிது காலத்திலேயே நாகப்பட்டிணத்திற்கு அருகிலுள்ள பொரவாச்சேரியில் ஒரு மதரஸாவையே தனது கேந்திரமாக ஏற்படுத்தியது.

இந்தத் தரீக்காவினர் புகைப்படம் எடுத்து அதற்கு மரியாதை செய்வதை அனுமதித்தனர்; இசையில் மூழ்கினர். எல்லாவற்றிற்கும் மேலாக சித்தம் கலங்கிப் போன பக்த பித்தர்களைத் தங்கள் கால்களில் விழுந்து சாஷ்டாங்கம் செய்ய வைத்தனர். இவர்களது அநியாயம் இத்துடன் நின்று விடவில்லை. யா முஹம்மது என்ற திக்ரை அறிமுகம் செய்து அதை அரங்கேற்றவும் செய்தனர்.

இதைக் கண்டு மனம் வெறுத்த ஆலிம்கள் கூத்தாநல்லூரில் ஷரீஅத் மாநாட்டை நடத்தி, இந்தத் தரீக்காவாதிகளை வெளுத்துக் கட்டினர்.

தமிழகத்தின் அனைத்து மதரஸாக்களில் உள்ள ஆலிம் பெருமக்கள் வந்து மாநாட்டில் கலந்து கொண்டு, இந்தத் தீமைக்கு எதிராக வெகுண்டு எழுந்தனர். யா முஹம்மது என்று திக்ரு செய்வது இறை மறுப்பு, இணை வைப்பு என்றெல்லாம் தீர்ப்பு வழங்கினர்.

ஆக மொத்தம், கூத்தாநல்லூர் ஷரீஅத் மாநாட்டில் நூரி ஷாஹ் தரீக்காவைப் பொரிந்து தள்ளி விட்டனர். யா முஹம்மது என்ற திக்ரை எதிர்த்துப் போர் தொடுத்தனர்.

அதன் ஒரு கட்டமாக மவ்லவி நிஜாமுத்தீன் மன்பஈ, தமிழகத்தில் ஒவ்வொரு மத்ரஸாவாக ஏறி இதற்கு எதிரான ஃபத்வாவை, மார்க்கத் தீர்ப்பைப் பெற்றார். அத்தனை மத்ரஸாக்களின் மார்க்கத் தீர்ப்பையும் திரட்டி இர்ஃபானுல் ஹக் - உண்மை விளக்கம் என்று நூல் வடிவிலும் வெளியிட்டார். அப்போது இந்த நூல் ஓரளவுக்கு மக்களிடம் வரவேற்பையும் பெற்றது.

முஹம்மது திக்ரும், முஹ்யித்தீன் திக்ரும்

யா முஹம்மது திக்ருக்கு எதிராகக் கிளம்பிய இந்த ஆலிம்களிடம் அப்போது தான் பி.ஜே. ஒரு கேள்வியை எழுப்பினார்.

யா முஹம்மது என்று திக்ரு செய்வது கூடாது எனும் போது யா முஹய்யித்தீன் என்று திக்ரு செய்வது எப்படிக் கூடும்?

யாகுத்பா என்ற மவ்லிதுப் பாடலில், ஆயிரம் தடவை என்னை அழைத்தால் நான் ஓடோடி வந்து பதிலளிக்கிறேன் என அப்துல்காதிர் ஜீலானி கூறியதாக ஒரு கவிதை வரி வருகின்றதே! அதை வீடு வீடாகப் போய் பாடுகின்றீர்களே! இது எப்படி நியாயமாகும்? என்ற கேள்வியை எழுப்பினார்.

இதற்கு அந்த ஆலிம்களிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை.

யாகுத்பாவை எதிர்த்து அப்போதே தனது யுத்தத்தை பி.ஜே. தொடங்கி விட்டிருந்தார். இந்த யுத்தத்தைத் தொடங்குவதற்கு சவூதிய அல்லது மதனியப் பின்னணி எதுவுமில்லை.

இந்தப் போராட்டத்தின் உச்சக்கட்டம் தான் ஜமாஅத்துல் உலமா சபையிலிருந்து பி.ஜே., பி.எஸ் போன்றோரை வெளியே தள்ளியதாகும். அதற்குப் பிறகும் மதனிகளின் பின்புலம் எதுவும் கிடைக்கவில்லை.

இதன் பின்னர் தான் இஸ்லாமிய எழுச்சி மையத்தின் தொடர்பு கிடைத்தது. அதன் பிறகு மதனிகள் தொடர்பு என அதன் வட்டம் விரிந்தது.

சத்தியப் பிரச்சாரமும் சவூதிய சம்பளமும்

இந்தக் காலகட்டத்தில் கமாலுத்தீன் மதனி, தமிழகத்தின் தென்கோடியில் குமரி முனையில் பிரச்சாரம் செய்கிறார் என்று அறிய முடிந்தது. அவருடைய பிரச்சாரம் குமரி மாவட்டத்தை மட்டும் மையமாகக் கொண்டிருந்தது. தமிழகத்தில் திருச்சியில் மதனிகள் சேர்ந்து மண்டபங்களில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தனர். அது தமிழகத்தில் எங்கும் எதிரொலிக்கவில்லை.

மதனிகளின் பிரச்சாரம் தமிழக முஸ்லிம்களைக் கவராததற்குக் காரணம், அவர்கள் மதீனாவில் பெற்ற ஊதியம் தான். பொதுவாக மக்களிடம், அவர்கள் கொண்ட கருத்துக்கு நேர் எதிரான கருத்தைப் பிரச்சாரம் செய்கின்ற போது அதற்கு உள்நோக்கம் கற்பிப்பார்கள். இதை நாம் இறைத்தூதர்களின் வாழ்க்கையிலேயே காணலாம்.

நூஹ் (அலை) அவர்கள் பிரச்சாரம் செய்த போது இது போன்ற உள்நோக்கத்தைக் கற்பித்தார்கள்.

அவரது சமுதாயத்தில் (ஏக இறைவனை) மறுத்த பிரமுகர்கள் இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரைத் தவிர வேறில்லை. உங்களை விட சிறப்படைய இவர் விரும்புகிறார். அல்லாஹ் நினைத்திருந்தால் வானவர்களை அனுப்பியிருப்பான். முந்தைய நமது முன்னோர்களிடமிருந்து இதை நாம் கேள்விப்பட்டதுமில்லை என்றனர்.

அல்குர்ஆன் 23:24

மூஸா, ஹாரூன் ஆகிய இருவரின் தூய பிரச்சாரத்திற்கும் ஃபிர்அவ்னின் கூட்டத்தினர் இது போன்ற உள்நோக்கத்தைக் கற்பித்தனர்.

இவ்விருவரும் சூனியக்காரர்கள். தமது சூனியத்தின் மூலம் உங்களை உங்களது பூமியிலிருந்து வெளியேற்ற எண்ணுகின்றனர். சிறந்த உங்கள் வழி முறையை அழிக்கவும் நினைக்கின்றனர் எனக் கூறினர்.

அல்குர்ஆன் 20:63

இவ்வாறு உள்நோக்கம் கற்பித்தல் என்பது ஏகத்துவப் பிரச்சாரப் பாதையில் கண்டிப்பாக நடந்தே தீரும்.

இந்தச் சந்தர்ப்பத்தில், பிரச்சாரம் செய்பவர் அந்தக் குற்றச்சாட்டுக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும். இறைத் தூதர்கள் அப்படித் தான் இருந்தனர்.

குமரி மாவட்டத்தில் கமாலுத்தீன் மதனி பிரச்சாரம் செய்யும் போது இந்தக் குற்றச்சாட்டு குறுக்கே வந்து நின்றது. கமாலுத்தீன் சொன்னது உண்மையான கருத்து எனினும் மக்கள் கற்பிக்கும் உள்நோக்கத்திற்கு அப்பாற்பட்டவர் என்று நெஞ்சு நிமிர்த்திச் சொல்ல முடியாத நிலையில் இருந்தார். அதற்குக் காரணம் அரபு நாட்டுச் சம்பளம்!

அரபு நாட்டில் சம்பளம் வாங்காமல் பிரச்சாரம் செய்பவர்களை நோக்கி இன்றளவும் இந்தக் குற்றச்சாட்டு கூறப்படுவதற்கும் இது தான் அடிப்படைக் காரணமாக அமைந்தது. கமாலுத்தீன் மதனியின் பிரச்சாரம் தமிழக அளவில் எட்டாமல் ஆனதற்கு இது முதல் காரணம்!

பொதுவாக சத்தியப் பிரச்சாரம் செய்யும் போது அதை எதிர்த்து வலுவான வாதங்கள் வைக்கப்படும். அந்த வாதங்களுக்கு முறையான பதிலை அளிக்க வேண்டும். அசத்தியவாதிகளின் அந்த வாதங்களுக்கு சாமர்த்தியமாகவும், எளிமையான நடையிலும் சொற்பொழிவு மேடைகளிலேயே பதில் சொல்ல வேண்டும். அல்லது அசத்தியவாதிகளை விவாதக் களங்களுக்கு அழைக்க வேண்டும்.

இந்த அணுகுமுறை நமது சொந்தக் கற்பனை அல்ல. திருக்குர்ஆன் வசனத்தின் அடிப்படையில் அமைந்ததாகும்.

விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன்; நேர் வழி பெற்றோரையும் அவன் அறிந்தவன்.

அல்குர்ஆன் 16:125

இந்த அணுகுமுறையைக் கமாலுத்தீன் மதனி கையாளவில்லை. அவரது பிரச்சாரம் தமிழக அளவில் சென்றடையாமல் போனதற்கு இது மற்றொரு காரணமாகும்.

பி.ஜே.வை நோக்கி, அரபு நாட்டுப் பணம் என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்ட போது அதை அவர் மிக எளிதாக எதிர் கொண்டார். இது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு அப்பாற்பட்டவராக இருந்ததால் அவரது பிரச்சாரத்திற்கு உள்நோக்கம் கற்பிக்கப்பட்ட போது அதை அவர் உளப்பூர்வமாக மறுப்பதற்கு இது உதவியாக அமைந்தது.

அடுத்து, பி.ஜே.யின் பேச்சில் எளிமை இருந்தது. எதிரிகள் வைக்கும் வாதங்களை ஒவ்வொன்றாக எடுத்துக்காட்டி, அவற்றுக்கு அழகிய முறையில் அதே சமயம் ஆணித்தரமான பதில்களைச் சமர்ப்பித்தார். எதிரிகளை விவாதக் களத்திற்கு அழைத்து, அவர்களைக் களத்தில் சந்திப்பதற்கும் முழு வேகத்தில் தயாரானார்.

பி.ஜே. அழைப்புப் பணிக்கு வந்த பின்பு தான் கோட்டாறு விவாதத்தைச் சந்திக்க நேரிட்டது. இதில் கமாலுத்தீன் மதனியும் கலந்து கொண்டார். இந்த விவாதம் தொடர்பாக, பி.ஜே. மலை போல் நினைத்திருந்த ஒரு மதனியிடம் பேசிய போது, ஆடை மடிப்பு கலையாத அந்த மதனி, இவர்களிடம் எல்லாம் நாம் விவாதம் செய்வதா? என்ற கருத்தில் பதிலளித்தார். இந்தப் பதிலால் அவர் மீதிருந்த மதிப்பு மரியாதை எல்லாம் நொறுங்கிப் போனது.

இதை இங்கே குறிப்பிடுவதற்குக் காரணம், அழைப்புப் பணிக்கு அவசியமான, இன்றியமையாத இந்த அணுகுமுறையைக் கூட மதனி வட்டாரங்கள் கடைப்பிடிக்கத் தயாரில்லை என்பதை எடுத்துக் காட்டுவதற்காகத் தான்.

மதனிகள் அனைவரும் சேர்ந்து, ஜம்யிய்யத் தஃவத்துல் இஸ்லாமிய்யா என்ற சங்கத்தைத் தங்களுக்குள் ஏற்படுத்தி வைத்திருந்தனர். இந்தச் சங்கத்திலுள்ள ஒரு மதனி, மதரஸாவுக்கு வரும் பிள்ளைகளுக்குக் குர்ஆன் ஓதிக் கொடுத்துக் கொண்டு காலத்தைத் தள்ளிய வரலாறும் உண்டு.

சம்பளம் வழங்கும் சவூதிய தூதரகத்திற்கு மட்டும், அழைப்புப் பணி செய்வதாக இவர்களது சங்கத்திலிருந்து அறிக்கை அவ்வப்போது தாக்கலாகிக் கொண்டிருக்கும்.

இவர்களுடைய சம்பள அடிப்படையிலான சம்பிரதாயப் பணி எவ்வாறு தமிழக மக்களைத் தட்டியெழுப்பும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

முபாஹலா

குமரி முனையில் கமாலுத்தீன் மதனி பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது, காயல்பட்டிணத்தில் ஜலீல் முஹைதீன் என்பவர் ஒரு சவால் விட்டிருந்தார்.

குத்பியத் கூடும் என்பது அவரது வாதம். குத்பியத் என்றால் இரவில் விளக்கை அணைத்து விட்டு, யாமுஹ்யித்தீன், யாமுஹ்யித்தீன் என்று திக்ர் செய்வதாகும்.

இதைக் கூடாது என்பவர் என்னிடத்தில் வந்து முபாஹலா செய்யலாம் என்று அறைகூவல் விடுத்திருந்தார்.

இந்த அறைகூவலை தப்லீக் இயக்கம் கண்டுகொள்ளவில்லை.

எஸ்.ஐ.எம். இயக்கம் கண்டு கொள்ளவில்லை.

எஸ்.ஐ.எம். இயக்கத்தின் தாய் ஜமாஅத்தே இஸ்லாமியும் கண்டு கொள்ளவில்லை.

ஜம்யிய்யத்து தஃவத்துல் இஸ்லாம் என்ற சவூதிய சம்பள சங்கமும் கண்டு கொள்ளவில்லை.

ஓர் அசத்தியவாதி, அல்லாஹ் அல்லாதவர்களை அழைத்துப் பிரார்த்தனை செய்யக்கூடிய ஒருவர், சத்தியத்திற்கு எதிராகச் சவால் விடுகிறார்.

இதைச் சந்திப்பதற்கு எந்தவொரு சத்தியவாதியும் முன்வரவில்லை.

அவருடைய சவாலுக்குப் பதில் அளிக்கப்படாமலேயே காலம் நகர்ந்து கொண்டிருக்கின்றது.

அல்லாஹ்வை மட்டும் அழைக்க வேண்டும்; முஹ்யித்தீனை அழைக்கக் கூடாது என்று சொல்லக் கூடிய கொள்கைவாதி எவன் வருகிறான் என்று பார்ப்போம் என ஜலீல் முஹைதீன் காத்திருக்கின்றார். யாரும் வரவில்லை என்றதும் அவருக்குத் திமிர் ஏறுகின்றது.

அல்லாஹ்வையன்றி பல கடவுள்களைக் கற்பனை செய்து, அல்லாஹ்வை விரும்புவது போல் அவர்களை விரும்புவோரும் மனிதர்களில் உள்ளனர். நம்பிக்கை கொண்டோர் (அவர்களை விட) அல்லாஹ்வை அதிகமாக நேசிப்பவர்கள்.

அல்குர்ஆன் 2:165

அவ்லியாக்களை நேசிப்பவர்களுக்கு முபாஹலா செய்யுமளவுக்கு அழுத்தம் இருக்கும் போது மேற்கண்ட வசனத்தின்படி, அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு இதை விட அழுத்தமும் ஆழ்ந்த அன்பும் இருக்க வேண்டும் அல்லவா? ஆனால் இல்லை.

காயல்பட்டிணத்திற்கு பிஜே. ஒரு பொதுக்கூட்டத்திற்காக வருகிறார். அடிதடி வரும் என்று எதிர்பார்த்த எங்களுக்கு பாரூக் ஹாஜியார் வீட்டில் விருந்து கிடைத்தது ஓர் இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

அன்று இரவு பி.ஜே. பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது துண்டுச் சீட்டு ஒன்று அவரது கைக்கு வருகிறது.

இவ்வளவு பேசுகிறீர்களே! என்னுடன் முபாஹலா செய்யத் தயாரா? என்று ஜலீல் முஹைதீன் அதில் குறிப்பிட்டிருந்தார்.

இதைப் பார்த்த பி.ஜே. அங்கேயே மக்களைக் கண்டிக்கிறார்.

ஒரு அசத்தியவாதி ஆட்டம் போடுகிறார். முபாஹலாவுக்கு வா என்று அழைக்கிறார் அதற்கு இதுவரை யாரும் பதில் சொல்லவில்லை என்றால் அது மிகப் பெரும் வெட்கக்கேடும், வேதனையும் ஆகும் என்று மக்களைச் சாடுகிறார். அதற்குப் பின் அந்தச் சவாலை ஏற்றுக் கொள்கிறார்.

முதலில் முஜாதலா

இந்தச் சவாலை ஏற்பதற்கு முன், முபாஹலா என்பது கடைசி ஆயுதம்; அதற்கு முன்பு முஜாதலா உள்ளது. அதாவது விவாதக் களம் உள்ளது. அதை முதலில் முடிப்போம். அதில் முடிவு கிடைக்கவில்லை என்றால் முபாஹலாவுக்குச் செல்வோம் என்று பி.ஜே. தன் உரையின் போது குறிப்பிடுகின்றார்.

கூட்டம் முடிந்ததும் அது போல் விவாதத்திற்குரிய முயற்சிகள் நடக்கின்றன. பொதுவாக எந்த விவாதக் களமாக இருந்தாலும், விவாதப் பொருள், ஆதாரங்கள், விவாத முறை, நாள், இடம், நேரம் இவையனைத்தும் குறித்து ஓர் ஒப்பந்தம் செய்யாமல் விவாதிக்க முடியாது. அது போன்று ஜலீல் முஹைதீனிடம் ஒப்பந்தம் தொடர்பாகப் பேசப்பட்டது.

இஜ்மாஃ, கியாஸ்

இவ்வாறு பேசுகையில் ஆதார நூற்கள் தொடர்பாகக் கருத்து வேறுபாடுகள் எழுந்தன.

குர்ஆன், ஹதீஸ், இஜ்மா, கியாஸ், நான்கு இமாம்கள், இன்னபிற இமாம்கள் என்று ஜலீல் முஹைதீனின் ஆதாரப் பட்டியல் நீண்டு கொண்டே சென்றது. பி.ஜே. தரப்பில் குர்ஆன், ஹதீஸ் என்ற இரண்டே இரண்டு ஆதாரங்களின் அடிப்படையில் தான் விவாதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதன் பிறகு, ஜலீல் முஹைதீன் தப்பிவிடக் கூடாது என்பதற்காக பி.ஜே. சில நிபந்தனைகளைத் தளர்த்தியும் பார்த்தார். ஆனால் அது பயனளிக்கவில்லை.

முஜாதலாவுக்கு வாய்ப்பில்லாமல் முபாஹலாவே உறுதியானது; இறுதியானது.

26.09.1985 என்று முபாஹலாவுக்கு நாள் குறிக்கப்பட்டது.

முபாஹலா செய்வதற்கான இடம் காயல்பட்டிணம் அப்பா பள்ளி தெருவிலுள்ள ரெட் ஸ்டார் சங்கம் என்றும் முடிவானது.

முபாஹலா நடப்பதற்கு முன்பு, நிகழ்ச்சி நடப்பது உறுதி தான் என்பதைத் தெரிவிப்பதற்காக பி.ஜே.வுக்கு ஒரு தந்தி கொடுக்க வேண்டும் என்றும், அந்தத் தந்தியின் வாசகங்கள் சங்கேத மொழியில் இருக்க வேண்டும் என்றும் பேசிக் கொண்டோம். அந்த சங்கேத வார்த்தை, புக் ரெடி என்பதாகும்.

வேண்டாதவர்கள், விரோதிகள் சதியில் ஈடுபட்டு அதன் மூலம், பாருங்கள்! முபாஹலா செய்ய வரும் போது பி.ஜே.யின் குடும்பம் ஆபத்தில் மாட்டிக் கொண்டு விட்டது; அசம்பாவிதத்தில் சிக்கிக் கொண்டது. அவ்லியாக்களுக்கு எதிராகக் கிளம்பியவர்களின் கதி இது தான் என்று பிரச்சாரம் செய்ய வழிவகுத்து விடக் கூடாது அல்லவா? அத்துடன் இது போன்ற சந்தர்ப்பத்தைத் தான் ஜலீல் முஹைதீன் வகையறாக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். யாரும் வரமாட்டார்கள் என்ற தைரியத்தில் முபாஹலாவுக்கு அழைப்பு விடுத்த ஜலீல் முஹைதீனுக்கு இத்தகைய சந்தர்ப்பம் சாதகமாகி விடக் கூடாதல்லவா?

பாதையில் விபத்து ஏற்படுவதெல்லாம் இறைவனின் நாட்டப்படி உள்ளது. எனினும் மனித சக்திக்கு உட்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்பதால் அன்றைய காயல் சகோதரர்கள் இந்த ஏற்பாடுகளை நுணுக்கமாகச் செய்திருந்தனர்.

பேசிக் கொண்டபடி சங்கேத வார்த்தைகளைத் தாங்கி தந்தி வந்தது.

நான்கு நாள் கைக்குழந்தையுடன்..

உமக்கு விளக்கம் வந்த பின் இது குறித்து உம்மிடம் யாரேனும் விதண்டாவாதம் செய்தால் வாருங்கள்! எங்கள் பிள்ளைகளையும், உங்கள் பிள்ளைகளையும், எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும் அழைப்போம். நாங்களும் வருகிறோம். நீங்களும் வாருங்கள்! பின்னர் இறைவனிடம் இறைஞ்சி பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபத்தைக் கேட்போம் எனக் கூறுவீராக!

அல்குர்ஆன் 3:61

இந்த வசனத்தின் அடிப்படையில் குடும்பத்துடன் முபாஹலாவுக்குச் செல்ல வேண்டும். அப்படித் தான் ஒப்பந்தமும் அதற்குரிய ஏற்பாடும் ஆகியிருந்தது. தந்தி வந்த நேரத்தில் பி.ஜே.யின் மனைவி ஓர் ஆண் குழந்தையைப் பெற்றிருந்தார்.

பிரசவத்தைக் காரணம் காட்டி அவகாசம் கேட்டால், அதைச் சாக்காகக் கூறி ஜலீல் முஹைதீன் தப்பி விடக் கூடாது. அத்துடன், பி.ஜே. வர மறுத்து விட்டார் என்று விஷமப் பிரச்சாரமும் பரப்பப்பட்டு விடக் கூடாது. எனவே வேறு வழியில்லாமல், முஹம்மது என்ற 4 வயது மகனுடனும், யாஸிர் என்ற 4 நாள் கைக்குழந்தையுடனும் பிரசவமான பச்சை உடலுடன் தன் துணைவியாரை அழைத்துக் கொண்டு காயல்பட்டிணத்திற்கு பி.ஜே. வந்து சேர்கின்றார். ஜலீல் முஹைதீனும் தனது குடும்பத்தாருடன் வந்திருந்தார்.

காயல்பட்டிணத்திலுள்ள ரெட் ஸ்டார் சங்கத்தில், அஸர் தொழுகைக்குப் பிறகு, வரலாற்றில் மிக முக்கியமான அந்த நிகழ்வு நடைபெறுகின்றது.

(முபாஹலா நடந்து முடிந்த பின் ரெட் ஸ்டார் சங்கத்தினர் வெளியிட்ட பிரசுரம் தனிக் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது.)

இஸ்லாமிய வரலாற்றிலேயே நடந்த முபாஹலாக்கள் விரல் விட்டு எண்ணக் கூடியவை தான்.

அப்படி மிக முக்கியத்துவம் வாயந்த இந்த முபாஹலா, தமிழக வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒன்றாகும்.

இன்று கடை வீதிகளில் சீரழியும் வீடியோக்கள் அன்று கையில் கிடைக்காத காலம் அது! அதனால் அந்த நிகழ்ச்சியை வீடியோவில் பதிவு செய்ய முடியாமல் போனது. ஆடியோ கேஸட்டில் தான் பதிவானது. அந்த ஆடியோ கேஸட்டுகளும் அன்றைய தினம் ஒளி, ஒலி நாடாக்களைத் தங்கள் வசம் வைத்திருந்தவர்களிடம் தான் இருந்தன. அவர்கள் ஜமாஅத்தை விட்டுச் சென்றதும் இந்த முபாஹலா, இன்னும் இது போன்ற முக்கிய ஒளி, ஒலிப் பதிவுகள் அவர்களுடன் சென்று விட்டன.

எனவே இதற்கென்று இனி வரலாற்றில் இடம் பெறப் போவது எழுத்து ஆவணம் தான். அதனால் அதை இப்போது எழுத்தில் தந்திருக்கிறோம்.

அதுவும் எப்போது?

தமிழகத்தில் தவ்ஹீது எழுச்சி என்ற பெயரில், ஜாக் அமைப்பு ஒரு நூல் வெளியிட்டுள்ளது. அந்த நூலில், தமிழகத்தில் தவ்ஹீது வளர்ச்சிக்கு கமாலுத்தீன் மதனியும், அவரது சங்கமும் தான் காரணம் என்று குறிப்பிட்டு, இந்த வரலாற்று நிகழ்வை இருட்டடிப்பு செய்த பிறகு, இந்த முபாஹலாவை தமிழக முஸ்லிம்களின் பார்வைக்குத் தருகிறோம்.

முறையாக ஜலீல் முஹைதீனின் இந்தச் சவாலை, முபாஹலா அழைப்பை, தமிழகத்தில் தவ்ஹீது எழுச்சியை நாங்கள் தான் ஏற்படுத்தினோம் என இன்று மார் தட்டும் இவர்கள் ஏற்றிருக்க வேண்டும். ஏற்றார்களா? அதை ஏறெடுத்தும் பார்த்தார்களா? இல்லை.

சம்பளம் வாங்கும் இந்தச் சங்கத்தினருக்கு, 2:165 வசனம் கூறுவது போன்று அல்லாஹ்வின் மீது அதிக நம்பிக்கை இருந்திருந்தால் ஜலீல் முஹைதீனின் சவாலைச் சந்தித்திருப்பார்கள்.

மதீனாவில் பி.ஏ. படித்தவர்கள், எம்.ஏ. படித்தவர்கள் என்று தம்பட்டம் அடிக்கும் இந்தப் பல்கலைக்கழகப் பட்டதாரிகள் ஜலீல் முஹைதீனின் இந்தச் சவாலின் பரிமாணத்தை, அதன் பாதிப்பைப் புரிந்து கொள்ளாமல் இருந்தார்கள். இங்குள்ள சாதாரண மதரஸாவில் படித்த பி.ஜே. அந்தச் சவாலை ஏற்றுக் கொண்டு அதைக் களத்தில் சந்திக்கவும் செய்தார்.

முபாஹலாவின் பலன் என்ன?

இதன் மூலம் அசத்தியத்தின் உச்சிக் கொடுமுடியிலிருந்து கொக்கரித்துக் கொண்டிருந்த ஒரு குராபியின், குத்பியத் தலைவனின் கொக்கரிப்புக்குப் பதில் கொடுக்கப்பட்டது. அவரது ஆணவம், அகங்காரம் இதன் மூலம் அடக்கப்பட்டது. அதுவரை படமெடுத்து ஆடிய அந்த விஷப் பாம்பின் பல் பிடுங்கப்பட்டது.

சத்தியம் இது தான் என்று தெரிந்த பின்பும் என் போன்றவர்களுக்குக் களமிறங்குவதற்குத் தயக்கம் இருந்தது. அதைப் போக்கி, இந்த சத்தியக் களத்தில் இறக்கி விட்டவர் பேராசிரியர் இ.எம். அப்துர்ரஹ்மான் அவர்கள் தான். அத்தகைய அறிஞரிடம் இந்த முபாஹலா பற்றிக் கேட்டதற்கு அவர் தெரிவித்த பதில் இது தான்.

உலக ரீதியிலான விபத்துக்கள், மரணங்கள் இதன் விளைவுகள் ஆகாது. இதன் விளைவு, சத்தியம் வளரும்.

இந்தப் பதிலை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான். அதன் பின்னர் அல்லாஹ் இந்தச் சத்தியத்திற்கு ஏறுமுகத்தைத் தான் கொடுத்துக் கொண்டிருக்கிறான். சத்தியம் இதுவரை எழுச்சி கண்டு கொண்டிருக்கின்றது.

அதற்கு இந்த முபாஹலா ஓர் அடிக்கல்! ஆட்டம் காணாத அஸ்திவாரம்!

இந்த முபாஹலாவைச் சந்தித்ததன் மூலம் குராபிகளுக்கு ஒரு விஷயம் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டது. அசத்தியவாதிகள் மார்க்கத்திற்கு உட்பட்ட எந்த அறைகூவலை விடுத்தாலும் அதைச் சந்திக்க ஒரு கூட்டம் தயாராகி விட்டது என்பது தான் அந்த விஷயமாகும். அது தான் வளர்ச்சிக்கு வித்திட்டது.

இந்த வரலாற்று உண்மையை தவ்ஹீது எழுச்சி என்ற நூலில் வசதியாகவே மறைத்து விட்டார்கள் என்பதால் இந்த நிகழ்வை உங்களுக்குப் பதிவு செய்து கொள்கிறோம்.

இந்தக் கட்டுரைக்கு, சந்ததியற்றுப் போன ஜலீல் முஹைதீன்கள் என்று தலைப்பிட்டுள்ளேன். ஏகத்துவத்தை எதிர்த்தவர்கள் இஸ்லாமிய வரலாற்றில் நின்றதில்லை.

இதைத் திருக்குர்ஆனின் 108வது அத்தியாயமான இன்னா அஃதைனா கல்கவ்ஸர்... என்ற அத்தியாயத்தில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

இப்ராஹீம் (அலை) அவர்கள் வரலாற்றில் நிற்கிறார்கள். அவரது எதிரிகள் நிற்கவில்லை.

முஹம்மது (ஸல்) அவர்கள் வரலாற்றில் நிற்கிறார்கள். அவர்களது எதிரிகள் தான் சந்ததியற்றுப் போனார்கள். அதற்கு இந்தச் சிறிய அத்தியாயமே சாட்சி!

இது போன்றே உலகத்தில் சத்தியத்திற்கு எதிராக நிற்பவர்கள் சந்ததியற்றுப் போய் விடுகிறார்கள். ஆனால் சத்தியத்திற்காக நின்றவர்கள் சத்திய சந்ததியுடன் தனியொரு சமுதாயமாக உருவாகி நிற்கின்றார்கள்.

அன்று ஜலீல் முஹைதீன் அசத்தியத்திற்கு ஆதாரமாக நின்றார். ஆனால் அவர் யாரென்றே தமிழகத்திற்குத் தெரியாமல் ஆகி விட்டார். அவரது பரேலவிஸக் கொள்கை பல முனைகளிலும் சாவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

பி.ஜே. சத்தியத்திற்காக நின்றார்; இப்போதும் நிற்கின்றார். அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே! நாளை பி.ஜே. இறந்தாலும் சத்தியத்தை, ஏகத்துவத்தைப் பின்பற்றும் ஒரு சந்ததி, சமுதாயம், ஜமாஅத் இறைவனின் அருளால் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

13.08.2009. 4:21 AM

இலங்கை உமர் அலி விவாதத்தின் விளைவு

இலங்கை உமர் அலி என்பவருடன் பீஜே நடத்திய விவாதத்தின் போது இருந்த சூழ்நிலைகளை நினைவுபடுத்தும் வகையில் இலங்கை அல்தாஃப் எனும் சகோதரர் சில விபரங்களை தெரிவித்துள்ளார். அது பதிவு செய்யப்பட வேண்டிய கருத்து என்பதால் வெளியிடுகிறோம்.

இலங்கை ஜமாத்துல் முஸ்லிமீனின் வளர்ச்சிக்கு முடிவு கட்டப்பட்டு வைக்கப்பட்ட முத்திரை , 1993.ஆண்டு என்று நினைக்கிறேன்.

புத்தளத்தை நோக்கி தவ்ஹீத்வாதிகள் படையடுத்தனர். அதில் நானும் ஒருவன். உமரளிக்கும், பி.ஜெக்கும் இடையில் பகிரங்க விவாதம். விவாதத்தின் தலைப்பு பி.ஜெ மற்றும் அவரைச் சார்ந்தவர்களும் காஃபிர்கள்; ஏன் என்றால் அவர்கள் ஜமாத்துல் முஸ்லிமீன் அமீராகிய உமரளியிடம் பைய்யத் செய்யவில்லை.

இந்த விவாதத்திற்கு முன் இலங்கை தவ்கீத்வாதிகள் யார் சொல்வது சரி என்ற தடுமாற்றத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தனர்.

பல தடவைகள் உமர் அலி எல்லோரையும் விவாதத்துக்கு அழைத்து விட்டார். யாரும் போகத் தயார் இல்லை. போனவர்கள் மூக்கை உடைத்துக் கொண்டு அவரின் ஜமாத்தை வளர்ச்ச்சியின் பாதைக்கு தள்ளி விட்டனர் .

அந்த இக்கட்டான கட்டத்தில் தௌஹீத்வாதிகள் சாரைசாரையாக ஜமாத்துல் முஸ்லிமீனில் சேர்ந்த வண்ணம் இருந்தனர்.

அப்போது இலங்கைக்கு வந்த பி.ஜெ முஸ்லிமை காஃபிர் என்று சொல்லலாமா என்ற உரை நிகழ்த்தினார்.

அப்போது கலந்துரையாட அழைத்த உமரளியை மேடையில் சந்திப்போம் என்று ஒப்பந்தத்தையும் போட்டுவிட்டுச் சென்றார் . விவாதத்திற்காக இலங்கை வந்தார் பி.ஜெ. அப்போது அவருக்கு வயது நாற்பத்தி மூன்று .

விவாதத்திற்கு முந்திய இரவு நான் புத்தளத்திற்கு நான் வந்து விட்டேன். புத்தளம் காசிமியாவில் அனைவரும் அன்று வந்து சேர்ந்தனர். பி.ஜெ அவர்களும் அங்கு தான் வந்தார். அன்று இலங்கை தௌஹீத் ஜமாஅத் எந்த பிரிவுமில்லாமல் ஒரே ஜமாத்தாகத் தான் இருந்தது.

அனைவரினதும் கவனம் நாளை நடக்கவிருக்கும் விவாதம் பற்றியது தான். ஏன் மக்களை விட தௌஹீத் உலமாக்களின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. நாளை விவாதத்தில் தான் தௌஹீத் ஜமாத்துடைய எதிர்காலமே தங்கி இருக்கிறது. நாளை விவாதத்தின் முடிவில் தான் தெரியும் தௌஹீத் சரியா? இல்லை ஜமாத்துல் முஸ்லிமீன் சரியா? என்ற குழப்பத்தில் இருந்தனர்.

அன்று காசிமியாவில் தங்கி இருந்தவர்கள் நாளை விவாதத்தில் பி.ஜெ தோல்வி அடைந்து விட்டால் என்ன செய்வது? எங்கள் குடும்பங்களில் உள்ளவர்களைக் காஃபிர் என்று சொல்ல வேண்டி வருமே? அனைவரையும் விட்டு பிரியும் இக்கட்டான நிலை நமக்கு ஏற்பட்டு விடுமே என்ற மாதிரியான புலம்பல். நிம்மதி இன்மை நிலவியது.

இன்று நினைப்பது போல் இல்லை அன்று. பைய்யத் பற்றிய தெளிவு அறவே இல்லாத காலம். ஏன் உமரளிக்கும் கூட இன்று உள்ள தெளிவு அன்று கிடையாது.

அப்பேற்பட்ட அந்தச் சூழ்நிலை அன்று இருந்தவர்களுக்கு நன்றாகப் புரியும். யாரைப் பார்த்தாலும் எது சத்தியம் என்பதை விவாதத்தின் பின் தான் பார்க்க வேண்டும் என்ற ஒரே நோக்குடன் காணப்பட்டனர்.

நாளை விவாதம்! இன்று இரவு தூங்குவதற்கு ஆயத்தமாகிறோம். அப்போது மௌலவி அன்சார் இவர் காசிமியாவின் உஸ்தாத் ஆக இருந்தாரா என்பது எனக்குத் தெரியவில்லை. அவர் அன்று இரவு தூங்கவிருந்த அனைவரையும் பார்த்துச் சொல்கிறார். அன்புச் சகோதரர்களே நாளை ஓர் முக்கியமான நாள். எல்லோரும் தஹஜ்ஜத் தொழுகைக்கு எழும்புங்கள். அல்லாஹ்விடம் அழுது பிரார்த்தனை செய்யுங்கள். நாளைக்கு நடக்கவிருப்பது சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் உள்ள போராட்டம். சத்தியம் நம்ம பக்கம் இருந்தாலும் நாளை விவாதத்தில் பி.ஜெ தோல்வி அடைந்து விட்டால் ஒட்டு மொத்த தௌஹீத்வாதிகளும், மௌலவிகளும் ஜமாத்துல் முஸ்லிமீன் பக்கம் போய் விடுவார்கள் என்பதில் அணுவளவும் சந்தேகமில்லை அதனால் நாளை விவாதத்தில் அல்லாஹ் நமக்கு வெற்றியைத் தர வேண்டும் என்று அல்லாஹ்விடம் மன்றாடுங்கள் என்று கூறி கண்ணீர் விட்டார்.

எப்படிப்பட்ட கொடுமையான காலம் அது? நினைத்துப் பார்க்கவே பயங்கரமாய் இருக்கு. அந்த நேரம் நெருங்கியது. புத்தளம் நகர மண்டபத்தில் கூட்டம் கூட்டமாய் மக்கள் வெள்ளம் ஜன்னல்களும், கதவுகளும் திறந்த நிலையில் அந்த விவாதம் நடந்தது.

ஜமாத்துல் முஸ்லிமீன் சார்பாக உமர் அலியும், நதீர் மதனியும், தௌஹீத் ஜமாஅத் சார்பாக பி.ஜ மற்றும் m.i. சுலைமான் ஆகியோர் கலந்து கொண்டனர். விவாதம் ஆரம்பிக்கும் வரை தவ்ஹீத் ஜமாத்தினர் குழப்பத்தில் மூழ்கி இருந்தனர். நம்முடைய எதிர்கால கொள்கை எது என்ற கேள்விக்குறியுடன் மேடையை நோக்கி பார்த்துக் கொண்டிருந்தோம்.

விவாதம் ஆரம்பமானது. முதல் நாற்பத்தைந்து நிமிடம் உமரலிக்கு தன்னுடைய கொள்கையை விளக்கச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. அவரும் விளக்கினார். அடுத்து பி.ஜெ.

இப்படி விவாதம் காரசாரமாக நடந்து கொண்டு போனது.

பி.ஜெ கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் உமரலி மேடையில் தடுமாறத் தொடங்கினார். மக்களுக்கு உமரலியின் அறியாமை புரிந்தது. உமர் அலியின் நிலையைப் பார்த்த பார்வையாளர்கள் சிரிக்குமளவுக்கு மாறியது.

விவாதத்தின் நடுவில் பி,ஜெ கேட்ட கேள்விக்கு உமர் அலி, இதற்குப் பதில் சொன்னால் நான் மாட்டிக் கொள்வேன் என்று தன் வாயால் தான் பிழையான கொள்கையில் இருப்பதை ஒப்புக் கொண்டு பதில் சொன்னால் நான் மாட்டிக் கொள்வேனென்று மேடையிலேயே வாக்குமூலம் கொடுத்தார்.

விவாதம் நடந்து கொண்டு இருக்கும் போதே பி.ஜெயின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் போனவுடன் முபாஹலாவுக்குத் தயாரா முபஹலா செய்வோம் என்று உமரலி திருப்பி திருப்பி அதையே சொல்லிக் கொண்டிருந்தார்.

அப்போது பி.ஜெ முதலாவது முனாலராவை முடிப்போம். பிறகு முபாஹலா செய்வோம். எல்லாத்திற்கும் தயாராகத் தான் வந்திருக்கிறோம் என்றார்.

இல்லை முனாலரா (விவாதம்) வேண்டாம். முபாஹளா தான் என்ற பிடிவாதத்தில் நின்றார் உமர் அலி.

பி.ஜெ சொன்னார் சரி வாங்க இந்தியாவுக்கு. விவாதத்திற்கு நான் இங்கு வந்திருக்கிறேன். முபாஹலாவுக்கு நீங்கள் இந்தியாவுக்கு வாங்கள் என்று பீஜே அதையும் ஏற்றுக் கொண்டார்.

இந்தியாவுக்கு உமரலியும், நதீரும் போவதற்கு ஒப்புக் கொண்டனர். ஆனால் இது வரைக்கும் பதினாறு ஆண்டுகள் ஓடிவிட்டன. அசத்தியவாதிகள் இன்னும் முபாஹலாவுக்கு இந்தியாவுக்குப் போனதாக இல்லை.

அதில் நதீர் மதனி தன்னைத் திருத்திக் கொண்டார் அந்தக் காலத்திலேயே ஜமாத்துல் முஸ்லிமீனிலிருந்து விலகிக் கொண்டார். அந்த விவாதத்தில் ஜமாத்துல் முஸ்லிமீனுக்கு பி.ஜெ முடிவு கட்டினார்.

ஜமாத்துல் முஸ்லிமீனிலிருந்து அப்போது இருந்தவர்கள் கொஞ்ச கொஞ்சமாகக் களன்றனர். உமர் அலி இடம் அவர்களின் சகாக்கள் கேள்விக்கு மேல் கேள்வி கேட்கத் தொடங்கினர். ஜமாத்தின் நிலைபாடுகள் அடிக்கடி மாறத் தொடங்கியது. நிலை இல்லாமல் தடுமாறத் தொடங்கினார்.

எங்கு பார்த்தாலும் விவாத கேசட்டுக்கள். தனிநபர் விவாதங்கள். அன்றே என்னுடன் நடந்த கலந்துரையாடல்கள் மூலம் எத்தனையோ பேர் பையத்தை முறித்துக் கொண்டனர்.

குறிப்பிட்டுச் சொல்வதானால் அவர்களின் பிரச்சாரகர்களில் ஒருவரான கொழும்பு சென்றல் ரோடைச் சேர்ந்த சகோதரர் ஹலீமைக் குறிப்பிடலாம். இவரின் சகோதரர் ஜமாத்துல் முஸ்லிமீனின் ஒரு ஆலிமாவார் .

இன்று இவர்களின் கொள்கையை உடைத்து பிரச்சாரம் சரியாகச் செய்யப்படவில்லை அப்படிச் செய்திருப்போமானால் அவர்களுக்கு இன்றிருக்கும் கூடாரம் கூட தற்போது இருந்திருக்காது .

ஏதோ அன்று நடந்த விவாதத்தின் தாக்கம் இன்று வரை அவர்களின் ஜமாத்துக்கு முத்திரையாக இருக்கின்றது.

இன்ஷா அல்லாஹ் பி.ஜெ அவர்கள் மீண்டும் ஓர் முயற்சி இது குறித்து எடுத்தால் இவர்களின் பிழையான கொள்கை இன்னமும் தெளிவாக்கப்படும். இவர்களின் ஜமாத்தில் ஆட்களைச் சேர்க்க வேண்டும் என்ற நோக்கில் அடிப்படை அறிவு கூட இல்லாதவர்களாக அமீரைக் கண் மூடிப் பின்பற்றுகிற கூட்டம் மாத்திரமே எஞ்சியுள்ளதைக் காண முடிகிறது.

தெளிவுள்ளவர்கள் தெளிவான பாதைக்கு வந்து சேருகிறார்கள். இன்னும் துரதிஷ்டமான நிலை என்னவென்றால் அந்த விவாதத்தின் வீடியோ கேசட்டுக்கள் என்ன ஆனதென்றே தெரியாமல் போனது. அதுவும் இருந்திருந்தால் அந்த ஜாமத்துக்கு ஆதரவாகப் பேச சகோதரர் முஹம்மது போன்றவர்களும் இருந்திருக்க மாட்டார்கள் .எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மனைவரையும் தக்லீத் எனும் கண்மூடி பின்பற்றுவதிலிருந்து காப்பாற்றுவானாக என்று பிரார்த்தனையோடு முடிக்கின்றேன் .

அல்தாப் எழுதிய இரண்டாவது கடிதம்

அஸ்ஸலாமு அலைக்கும் .

சகோதரர் முஹம்மது அவர்கள் ஜமாத்துல் முஸ்லிமீன் கூடாரங்கள் காலியாகின்றன என்ற பி.ஜெயின் கருத்து தவறானதாகக் குறிப்பிட்டுள்ளார். மாற்றமாக இலங்கையில் வேகமாக ஜமாத்துல் முஸ்லிமீன் கொள்கை பரவுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சகோதரர் முஹம்மத் குறிப்பிடுகிற மாதிரிப் பார்த்தால் உலகத்தில் நாம் அறியாத இன்னுமொரு இலங்கை இருக்கின்றது போலும் தெரிகிறது,

ஏனென்றால் நாம் வாழும் இந்த இலங்கைத் தீவில் இப்படி ஜமாத்துல் முஸ்லிமீன் கொள்கை வளர்வதாகத் தெரியவில்லை.

மாற்றமாக இதைப் பதிவு செய்யும் இன்றைய தினத்திற்கு சில நாள் முன்னாள் ஒரு நண்பன் ஜமாத்துல் முஸ்லிமீனைச் சார்ந்தவர் அவரின் பெயர் அஸ்ரஃப். இவர் புத்தளத்தைச் சேர்ந்தவர். இவருடன் உரையாடும் போது நான் அவரிடம் குறிப்பிட்டேன். என்ன உங்களுடைய ஜமாத்தில் இப்போதெல்லாம் அமீரை மிகவும் முன்பை விட அதிகமாக கண்மூடிப் பின்பற்றுகிறீர் போலும். துறைமுகத்தில் வேலை பார்க்கும் உங்கள் ஜமாத்தைச் சேர்ந்த சகோதரன் உங்கள் கொள்கையில் இருந்து கொஞ்சம் வெளியே வந்து தெளிவு பெற்றிருக்கிறார். எங்களைப் பார்த்து சலாம் சொல்கிறார் என்று அவரிடம் கூறினேன்.

அப்போது அந்த நண்பன் கூறினார்; இல்லை அவர் ஜமாத்திலிருந்து முற்றாக வெளியேறி விட்டார் என்று பதிலளித்தார் . ஏன் உறுதி இல்லாத கொள்கையில் நீங்கள் இருக்கின்றீர் என்று அவரிடமே நான் கேட்டேன் . இது போன்று பலர் தடுமாற்றத்தில் மூழ்கி இருக்கின்றனர் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் காலங்களில் கூடாரத்துக்கே வேலை இல்லாமல்; போய்விடும் அளவுக்கு அவர்களின் ஜமாத்தைச் சேர்ந்த எஞ்சி இருக்கும் சகோதரர்கள் கூட தெளிவு பெற்று வெளியே வந்து விடுவார்கள் என்ற சாயல் தெரிகிறது.

மண்டியிட வைத்த தொண்டி விவாதம்

கே.எம். அப்துந் நாசிர், கடையநல்லூர்

விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன்; அவன் நேர் வழி பெற்றோரையும் அறிந்தவன்.

அல்குர்ஆன் 16:125

நூஹே! எங்களுடன் தர்க்கம் செய்து விட்டீர்! அதிகமாகவே தர்க்கம் செய்து விட்டீர்! உண்மையாளராக இருந்தால் நீர் எங்களுக்கு எச்சரிப்பதை எங்களிடம் கொண்டு வாரும்! என்று அவர்கள் கூறினர்.

அல்குர்ஆன் 11:32

சத்தியத்தையும் அசத்தியத்தையும் தெளிவாகப் பிரித்துப் பார்ப்பதற்கு விவாதக் களம் காண்பதும் அவசியம் என்பதை மேற்கண்ட வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.

சத்தியத்தை நிரூபிப்பதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஒரு போதும் பின்வாங்கியதில்லை. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சத்தியப் பிரச்சாரப் பணியில் ஒரு மைல் கல் தான் மார்ச் 29 அன்று தொண்டியில் நடைபெற்ற விவாதமாகும்.

விவாத அரங்கில் நடைபெற்ற வாதப் பிரதிவாதங்களை இங்கே விரிவாக அலச வேண்டிய அவசியமில்லை. விவாதத்தின் நேரடிக் காட்சிகளும், அதற்கு முன்பாக ஜனவரி 20 அன்று நடைபெற்ற விவாத ஒப்பந்த காட்சிகளும் சிடிக்களாக மாற்றப்பட்டு ஆங்காங்கே மக்களைச் சென்றடைந்து கொண்டிருக்கின்றன. அசத்தியவாதிகளின் ஆணிவேர் அடியோடு பிடுங்கி எறியப்பட்டுள்ளது.

பிஜே அவர்களின் திருக்குர்ஆன் தர்ஜமா தொடர்பாக தொண்டியில் நடைபெற்ற விவாதம் இவர்கள் தூய மார்க்கத்தை நிலைநாட்டுவதற்காக மனத்தூய்மையோடு விவாதம் செய்தார்கள் என்று கருதுவதற்கு இடமில்லை. பிஜே அவர்களின் தர்ஜமா தொடர்பாக முஜீப் செய்த விமர்சனத்தை அறிந்த சகோதரர்களுக்கு இது தெள்ளத் தெளிவானதாகும்.

பிஜேயைக் கொல்ல வேண்டும், ஹதீஸ்களை மறுப்பதற்குரிய வழிகளை பிஜே திறந்து வைத்து விட்டார் என்றெல்லாம் மிகக் கடுமையான பல வார்த்தைப் பிரயோகங்களை வைத்து, பிஜே அவர்களின் தர்ஜமாவை கைகளில் உயர்த்தி உயர்த்திக் காட்டி ஜித்தா, பஹ்ரைன், மேலப்பாளையம், மதுரை ஜாக் தாயிகள் மீட்டிங், தமுமுக தலைமையகம் போன்ற பல இடங்களில் இவர் திரும்பத் திரும்ப என்னென்ன வாதங்களை எடுத்து வைத்தாரோ, எதை பிரம்மாண்டப்படுத்திக் காட்டினாரோ அதில் எந்த ஒன்றையும் விவாதக் களத்தில் பிஜேயின் முன்னிலையில் அவர் வாழ்கின்ற காலத்திலேயே எடுத்து வைப்பதற்கு இவரால் இயலவில்லை.

முஜீப் அவர்கள் பல இடங்களில் உரையாற்றும் போது சில குறிப்பிட்ட விஷயங்களைத் தான் எடுத்து வைத்தார்.

1.பால் குடி தொடர்பான ஹதீஸ்

2. தாவூத் நபி தொடர்பான விஷயம்

3. சுலைமான் நபி 99 மனைவிமார்களோடு ஒரே இரவில் உறவு கொண்டதாக வரக்கூடிய செய்தி

4. சொர்க்கம் நரகம் அழிக்கப்பட்டு மீண்டும் உருவாக்கப்படும்

என்பது போன்ற செய்திகளைத் தான் தர்ஜமாவில் உள்ள மாபெரும் தவறுகளாக ஊருக்கு ஊர் பேசினார். இவையல்லாமல் திருக்குர்ஆன் தொகுப்பு வரலாறு தொடர்பாக மேலோட்டமாகவும், இன்ன என்ற வார்த்தைக்குப் பொருள் செய்யாதது தொடர்பாகவும் சூனியம் தொடர்பாகவும், முதஷாபிஹாத் வசனங்கள் தொடர்பாகவும், ஷஃபாஅத் தொடர்பாக தன்னுடைய கருத்து எதையும் கூறாமல் ஹாமித் பக்ரி அவர்களின் கிளிப்பிங்கைப் போட்டுக் காட்டியும் ஒரு சில இடங்களில் விமர்சனம் செய்திருந்தார்.

நீங்கள் இதுவரை இந்த மொழிபெயர்ப்பிற்கு எதிராகப் பல மேடைகளில் எந்தெந்த கருத்துகளை எடுத்துரைத்தீர்களோ அதைப் பற்றித் தானே விவாதம் என்று விவாத ஒப்பந்தத்தில் நாம் கேட்டோம். அதில் பதிலளித்த முஜீப் அவர்கள்,இல்லை இல்லை இது வரை நான் கூறாத புதிய விஷயங்களையும் விவாதத்தின் போது எடுத்துரைப்பேன் என்றார்.

விவாதம் என்பது போட்டியல்ல. திடீரென்று புதிதாக ஒரு கேள்வியைக் கேட்டு எதிரியை வாயடைக்கச் செய்வதற்கு! மாறாக நீங்களும் நாங்களும் உண்மையை உணர்ந்து அதை மக்களுக்குப் போதிப்பதற்குரிய ஒரு களம் என்று தவ்ஹீத் ஜமாஅத் உணர்த்திய பிறகு நான் வாதிக்கும் விஷயங்களுக்குரிய விவரங்களை விவாதத்திற்கு முன்கூட்டியே விபரமாகத் தருகிறேன் என்று வாக்குறுதியளித்தார். ஆனால் வாக்குறுதிக்கு மாற்றமாக பொத்தாம் பொதுவில் ஒரு பட்டியலை அளித்தார்.

அந்தப் பட்டியலில் கூட முஜீப் அவர்கள் நமக்கெதிராக மிகப் பயங்கரமாக எந்தெந்த கருத்துகளை விமர்சனம் செய்திருந்தாரோ அந்தக் கருத்துக்கள் இருக்கத் தான் செய்தன. இதை அவர் ஒரு போதும் மறுக்க முடியாது. அப்படியிருந்தும் வெளியில் பிதற்றிய அந்த விஷயங்களை பிஜேயின் முன்னிலையில் எடுத்து வைப்பதற்கு அவர் தயங்கினார். பிஜே அவர்களே அதை எடுத்துரைத்து வாதித்த போதும் அவற்றைப் பற்றி விவாதிக்க அவர் தயாராகவில்லை. எவற்றை ஈமானைப் பாதிக்கக் கூடிய விஷயங்கள் என்று கூறுமளவிற்கு வெளியில் கர்ஜித்தார்களோ அவற்றை நாமே எடுத்து வைத்த போதும் விவாதிக்கத் தயங்கியது தான், இவர்களிடம் சத்தியத்தை அறிய வேண்டும் என்ற உண்மையான நோக்கம் இல்லை என்பதை நமக்கு உணர்த்துகிறது.

விவாத ஒப்பந்ததின் போது மற்றொன்றையும் தவ்ஹீத் ஜமாஅத் தெளிவாகப் பதிவு செய்தது. அதாவது முஜீப் அவர்கள் பிஜே அவர்களின் தர்ஜமாவிற்கு எதிராக எடுத்து வைக்கின்ற எல்லா வாதங்களையும் விவாதிப்பதற்கு ஒரு நாள் போதாது. அனைத்தையும் விவாதித்து முடிப்பதற்கு எத்தனை நாட்கள் ஆகுமோ அத்தனை நாட்கள் விவாதிப்போம். அல்லது குறைந்தது இரண்டு நாட்களாவது விவாதிப்போம் என்று கெஞ்சாத குறையாக மன்றாடியது.

சத்தியத்தை எப்படியாவது மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்பது தான் நம் நோக்கம். ஏனென்றால் சமுதாயப் பணிகளையும் சத்தியப் பிரச்சாரத்தையும் எவ்வித இலாப நோக்கமும் இல்லாமல் செய்து வருகின்ற தவ்ஹீத் ஜமாஅத்தினர் நேரங்களையும் காலங்களையும் ஒதுக்கி ஒரு விவாதக் களத்தைச் சந்திப்பது என்பது மிகப் பெரும் சிரமமான ஒரு விஷயமாகும். பல சிரமங்களுக்கு மத்தியில் ஒரு விவாதத்தை ஏற்பாடு செய்த பிறகு அனைத்தும் தெளிவு படுத்த வேண்டும் என்பது தான் நமது நோக்கம்.

ஏனென்றால் சிலர், நான் கொடுத்த அனைத்து விஷயங்களையும் விவாதிக்கவில்லை என்ற முடிந்த பிறகும் பிதற்றிக் கொண்டு திரிவார்கள். இதற்காகத் தான் அனைத்து விஷயங்களையும் விவாதிக்கின்ற வரை விவாதம் நடைபெற வேண்டும் என்று நாம் பலமுறை கேட்டும் ஒரு நாளே போதுமானது என முஜீப் அவர்கள் பிடிவாதம் பிடித்ததும் சத்தியத்தை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்கின்ற நோக்கம் இவர்களிடம் இல்லை என்பதற்குத் தெளிவான சான்றாகும்.

இப்போது விவாதக் களத்தில் முஜீப் எடுத்து வைத்து விஷயங்களுக்கு வருவோம்.

குர்ஆனில் சில இடங்களில் எழுத்துப் பிழைகள் இடம் பெற்றுள்ளன என்ற நம்முடைய கருத்தை மறுத்து குர்ஆனில் எந்த ஒரு இடத்திலும் எழுத்துப் பிழைகள் ஏற்படவேயில்லை என வாதித்தார். அதற்கு ஒரு சான்றாக பஸத, யப்சுது, பஸ்ததன் என்பது போன்ற வார்த்தைகளை எடுத்து வைத்து வாதித்தார். இவற்றிற்கு மிகத் தெளிவான முறையில் ஆயிஷா (ரலி) அவர்கள், குர்ஆனில் எழுத்துப் பிழைகள் இருப்பதாகக் கூறியது, அல்இத்கான் போன்ற குர்ஆன் கலை தொடர்பான நூற்களில் கூறப்பட்ட கருத்துகள், மேலும் சவூதியிலிருந்தே வெளியிடப்பட்ட இக்பால் மதனீ தர்ஜமாவிற்கும் சவூதி வெளியீடு குர்ஆனிலும் உள்ள வித்தியாசங்கள் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டு ஆணியடித்தாற்போல் தெளிவாகப் பதிலளிக்கப்பட்டது.

மேலும் பஸத என்பது தொடர்பாக 2:245 வது வசனத்தில் ஸீன் என்ற எழுத்தை எழுதுவதற்குப் பதிலாக ஸாத் என்ற எழுத்தை எழுதியுள்ளனர். ஸாத் இடம் பெற்றால் அதற்கு அர்த்தம் வராது. எனவே அந்தத் தவறை அப்படியே எழுதி ஸாத் என்ற எழுத்தின் மீது ஒரு சிறிய அளவில் ஸீனை எழுதி அடையாளம் காட்டியுள்ளனர்.

அதே போல 7வது அத்தியாயத்தின் 69வது வசனத்தில் ஸீன் எழுதுவதற்கு பதிலாக ஸாத் எழுதி விட்டார்கள். இரண்டும் ஏறக்குறைய நெருக்கமான உச்சரிப்பைக் கொண்ட எழுத்துக்களாக இருப்பதால் இந்தத் தவறு நேர்ந்திருக்கலாம் என்று பல உதாரணங்களைக் காட்டி விளக்கமாகப் பதிலளிக்கப்பட்டது.

மேலும் இத்கான் என்ற நூலிலிருந்து ஆதாரங்களைக் காட்டும் போது முஜீப் அவர்கள் முதல் வரியை மறைத்து விட்டுப் படித்தது போன்ற விஷயங்களும் எடுத்துரைக்கப்பட்டன. மேலும் குர்ஆனில் சில இடங்களில் எழுத்துப் பிழைகள் ஏற்பட்டதாகக் கூறுவதால் குர்ஆனின் பாதுகாப்பிற்கு எவ்வித சந்தேகமும் ஏற்படாது என்பதும் தெளிவாக விளக்கப்பட்டது. விவாத சிடிக்களைப் பார்வையிடுபவர்கள் இதைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

  1. ஆதம் (அலை) அவர்கள் சொர்க்கத்தில் ஒரு மரத்தைச் சாப்பிட்டதால் அவர்களுக்குப் பாலுணர்வு ஏற்பட்டது. எனவே அந்த மரம் பாலுணர்வை ஏற்படுத்தும் மரம் என்று பிஜே அவர்கள் குறிப்பிட்ட விரிவுரை தொடர்பாகவும் விவாதம் நடைபெற்றது. இதற்கும் பல ஆதாரங்களைச் சுட்டிக்காட்டி தெளிவாக பதிலளிக்கப்பட்டது.
  1. பிஜே அவர்களின் தர்ஜமாவில் ஒரு சில இடங்களில் சில வார்த்தைகளுக்கு மொழிபெயர்ப்பு விடுபட்டுள்ளதாக முஜீப் சுட்டிக்காட்டினார். அவற்றில் பல இடங்களில் சரியாகத் தான் மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. மாறாக முஜீப் அதைத் தவறு என்று விளங்கிக் கொண்டார். உதாரணமாக விவாத சிடிக்களை பார்ப்பவர்கள் ஸாமிரி என்பவன் கூறிய வாசகம் தொடர்பாக உள்ள கருத்துக்களைப் பார்வையிட்டால் இதனைத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

மேலும் முஜீப் கூறியது போல் இரண்டு இடங்களில் ஒரு இடத்தில் ஆண்பாலாக மொழிபெயர்க்க வேண்டிய இடத்தில் பெண்பாலாகவும் மற்றொரு இடத்தில் ஒரே பொருளுடைய இரு வார்த்தைகளில் ஒன்றிற்கு மொழி பெயர்ப்பு விடுபட்டுள்ளது.

ஆனால் உண்மையில் இவை விவாதத்திற்குரிய ஒரு விஷயம் இல்லை. முஜீப் அவர்கள் இதனை ஒரு போஸ்ட் கார்டில் எழுதி தெரியப்படுத்தியிருந்தால் அடுத்த பதிப்புகளில் அவை திருத்திக் கொள்ளப்படக்கூடியவையே! இப்படி சில இடங்களில் சிலர் சுட்டிக் காட்டிய பின் அவை அடுத்த பதிப்புகளில் மாற்றப்பட்டுள்ளன.

  1. குர்ஆன் வசனங்களுக்கு எண்கள் இட்டது தொடர்பாகவும் விரிவான விவாதம் நடைபெற்றது. திருக்குர்ஆனின் மூலப்பிரதி இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்த மூலப்பிரதியில் குர்ஆன் வசனங்களுக்கு எண்கள் போடப்படவில்லை. பின்னால் வந்தவர்கள் தான் குர்ஆன் வசனங்களுக்கு எண்களை இட்டார்கள். இதன் காரணமாகத் தான் வசனங்களின் எண்கள், குர்ஆனில் எத்தனை வசனங்கள் இருக்கின்றன என்பது குறித்து அறிஞர்கள் பலவிதமான எண்ணிக்கையைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

அலீ (ரலி) அவர்கள் 6218 என்கிறார்கள், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் 6616 என்கிறார்கள், ஹுமைத் என்பார் 6212என்கிறார்கள், அதா என்பார் 6177 என்றும், இன்னொரு சந்தர்ப்பத்தில் 6204 என்றும் குறிப்பிடுகிறார்.

மக்கள் பொதுவாக 6666 வசனங்கள் என்று பரவலாகக் குறிப்பிடுகிறார்கள். இப்போது உலகம் முழுவதும் அச்சிடப்படும் குர்ஆன் பிரதிகளில் 6236 வசனங்கள் உள்ளன.

வசனங்கள் எத்தனை என்று அல்லாஹ்வோ, அவனுடைய தூதரோ கூறவில்லை. மேலும், உஸ்மான் (ரலி) அவர்களுடைய மூலப் பிரதியிலும் குர்ஆனுடைய மொத்த வசனங்கள் குறித்து எந்தவொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் குறிப்பிடப்படவில்லை.

உஸ்மான் (ரலி) அவர்கள் தொகுத்த மூலப் பிரதியில் ஒவ்வொரு வசனம் முடிவுறும் போது அதன் இறுதியில் வசனத்தின் எண் குறிப்பிடப்படவில்லை. எந்தவொரு வசனத்தின் முடிவும் மூலப் பிரதியில் அடையாளமிடப்படவில்லை.

எனவே தான் வசனங்களை எண்ணும் போது ஒவ்வொருவரும் பல விதமான எண்ணிக்கையைக் கூறுகிறார்கள். எண்ணிக்கை எத்தனை என்பதில் கருத்து வேறுபாடு இருந்தாலும் எந்த எண்ணிக்கையைக் கூறினாலும் குர்ஆனில் எதுவும் அதிகரிப்பதோ, குறைவதோ இல்லை.

ஒருவர் இரண்டு வசனங்களை ஒரு வசனமாகக் கருதுவார்; இன்னொருவர் ஒரு வசனத்தை இரண்டு வசனங்களாகக் கருதுவார்; எங்கே வசனத்தை முடிப்பது என்பதில் தான் கருத்து வேறுபாடு உள்ளது.

உலகம் முழுவதும் மக்கள் பயன்படுத்தி வருகின்ற, குர்ஆனில் இப்போது போடப்பட்டிருக்கின்ற, எண்களை நாம் ஆய்வு செய்தால் எண்களிடுவதில் அறிஞர்களால் போதுமான கவனம் செலுத்தப்படவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

சில இடங்களில் எழுவாயை ஒரு வசனமாகவும், பயனிலையை இன்னொரு வசனமாகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இரண்டையும் சேர்த்து ஒரு வசனமாகக் கூறும் போது தான் அதனுடைய பொருள் முழுமை பெறும்.

ஆனால் வசனங்களுக்கு எண்கள் இட்டவர்கள் கருத்து முழுமை பெறுவதை கவனத்தில் கொள்ளவில்லை என்பதை இப்போது போடப் பட்டிருக்கின்ற எண்களை ஆய்வு செய்தால் நாம் தெரிந்து கொள்ளலாம்.

சில இடங்களிலே விதி ஒரு வசனமாகவும், அந்த விதியிலிருந்து விலக்கு இன்னொரு வசனமாகவும் அமைந்திருக்கும். அந்த இரண்டையும் சேர்த்து ஒரு எண்ணாக அவர்கள் அமைத்திருந்தால் அதைப் புரிந்து கொள்வதற்கு எளிதாக இருந்திருக்கும். உதாரணத்திற்காக சில வசனங்களை நாம் காண்போம். நான்காவது அத்தியாயத்தில் 168, 169 ஆகிய இரு வசனங்களை எடுத்துக் கொள்வோம். இதில் அவர்களுக்கு வழி காட்ட மாட்டான் என்பது 168வது வசனத்திலும், நரகத்தின் வழியைத் தவிர என்பது 169வது வசனத்திலும் உள்ளது. இரண்டும் சேர்ந்து தான் ஒரு வாக்கியம் என்பதை யாரும் விளங்க முடியும். ஆனாலும் இதை இரண்டு வசனங்களாகப் பிரித்திருக்கிறார்கள்.

7வது அத்தியாயத்தின் 121, 122 ஆகிய வசனங்களை எடுத்துக் கொண்டால், 121-ல் நாங்கள் அகிலத்தின் இறைவனை நம்பினோம் எனக் கூறினார்கள் என்றும் 122-ல் மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனாகிய என்றும் உள்ளது.

மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனாகிய என்பதில் எந்தவொரு கருத்தும் முழுமை பெறவே இல்லை. மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனாகிய அகிலத்தின் இறைவனை நாங்கள் நம்பினோம் என்று சொன்னால் தான் வாக்கியம் முழுமை பெறுகிறது.

இதே போல் 11வது அத்தியாயத்தில் 96, 97 வசனங்களை எடுத்துக் கொண்டால் 96வது வசனத்தில் மூஸாவை தகுந்த சான்றுகளோடு அனுப்பினோம் என்று இருக்கிறது. 97வது வசனத்திலே ஃபிர்அவ்னிடம் என்று இருக்கிறது.

ஃபிர்அவ்னிடம் என்பது இந்த 96 வசனத்துடன் இணைய வேண்டிய சொல். ஆனாலும் ஃபிர்அவ்னிடமும், அவனது கூட்டத்தினரிடமும் என்பதை தனியாகப் பிரித்ததால் அதற்கு பொருள் இல்லாமல் போய் விடுகிறது.

இப்படி ஏராளமான வாக்கியங்களை, கருத்து முழுமை பெறாத வகையில் வசனங்களாகப் பிரித்திருப்பதை நாம் பார்க்கிறோம். சில இடங்களில் ஒரு வாக்கியத்தை நான்கு, ஐந்து வசனங்களாகக் கூட பிரித்து வைத்திருக்கிறார்கள். ஒரே ஒரு சொல்லைக் கூட ஒரு வசனம் என்று சில இடங்களில் கணக்கிட்டிருக்கிறார்கள்.

இதில் இரண்டு விஷயங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். குர்ஆன் என்பது அதனுடைய ஆழமான கருத்துக்களுக்காகவும், அதன் அழகான நடைக்காகவும் தனிச் சிறப்பு பெற்றிருக்கிறது.

வசனங்களைப் பிரிப்பதென்றால் அதற்கு இரண்டு அளவு கோல்கள் இருக்க வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓதும் போது எந்த இடத்தில் நிறுத்தினார்களோ அந்த இடத்தை ஒரு வசனம் என்று கணக்கிட்டிருந்தால் அது ஏற்கத்தக்கதாக இருக்கும். அல்லது ஒரு கருத்து எந்த இடத்தில் முழுமை பெறுகிறதோ அதை ஒரு வசனம் என்று கணக்கிட்டிருந்தாலும் அறிவுப்பூர்வமானதாக இருந்திருக்கும். ஆனால் இந்த இரண்டு அளவுகோலின் அடிப்படையில் வசனங்களுக்கு எண்கள் இடப்படவில்லை.

மாறாக ஒவ்வொரு வசனத்தையும் குறிப்பிட்ட ஒரு எழுத்தைக் கொண்டு முடிக்க வேண்டும் என்பதைத் தான் வசனங்களைப் பிரிப்பதற்கு அளவு கோலாகக் கொண்டுள்ளனர்.

உதாரணமாக யஃலமூன், தஃல மூன், யஃப்அலூன் இப்படி வருகிறதா என்பதைப் பார்த்து அந்த இடங்களில் வசனங்களை முடித்தார்கள்.

ஆனால் உண்மையிலேயே அவர்கள் கருத்தைத் தான் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும். காரணம், வசனம் என்று நாம் தமிழில் குறிப்பிட்டாலும் அல்லாஹ் ஆயத் என்ற சொல்லைத் தான் இதற்குப் பயன்படுத்துகிறான்.

ஒரு கருத்து முழுமை பெறாத இடத்தில் துண்டாக்கினால் அதை அத்தாட்சி என்று கூற மாட்டோம். ஆனாலும் இப்போது நடைமுறையில் எண்களைக் குறிப்பிடுவது ஆதாரங்களை எடுத்துக் காட்டுவற்கும், விவாதங்கள் புரிவதற்கும்,சொற்பொழிவுகள் புரிவதற்கும், குறிப்பிட்ட ஒரு வசனத்தைத் தேடி எடுப்பதற்கும் உதவியாக இருக்கின்றன.

இப்போது இதில் ஒவ்வொருவரும் மாற்றம் செய்யப் புகுந்தால் தேவையற்ற குழப்பங்கள் தான் ஏற்படும். எனவே எந்த எண்களை சில நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தி வருகிறோமோ அதில் நாம் எந்த மாறுதலும் செய்யவில்லை.

அதே சமயத்தில் முழுமை பெறாத அந்த வசனங்களை எல்லாம் சேர்த்து தமிழாக்கம் செய்து தேவையற்ற அடைப்புக் குறிகள் வருவதைத் தவிர்த்திருக்கிறோம்.

வசனங்களுக்கு எண்கள் போட்டவர்கள் அவர்களாகத் தான் போட்டனர் என்பதற்கு இரண்டு தமிழ் மொழிபெயர்ப்புகளை உதாரணமாகக் கூறலாம்.

ஆ.கா. அப்துல்ஹமீத் பாகவி அவர்களின் மொழிபெயர்ப்பில் 6வது அத்தியாயம் 73வது வசனத்தை ஒரு வசனமாகக் குறிப்பிட்டுள்ளார். இதையே நிஜாமுத்தீன் மன்பஈ அவர்கள் 73, 74 என இரண்டு வசனங்களாக எண்ணியுள்ளார். இதனால் இந்த அத்தியாயம் முழுவதும் இரண்டு மொழிபெயர்ப்புகளுக்கிடையே ஒரு எண் வித்தியாசத்தில் அமைந்திருப்பதைக் காணலாம்.

இந்தச் செய்திகளெல்லாம் சில சகோதரர்களுக்கு இது வரை கேள்விப்பட்டிராத செய்திகளைப் போல் தோன்றலாம். ஆனால் ஒவ்வொரு கால கட்டத்திலும் இதை அந்தந்த காலத்தவருக்கு நினைவூட்டப்பட்டுக் கொண்டே வந்திருக்கிறது.

எனவே குர்ஆனில் நமது வசதிக்காக நாம் ஏற்படுத்திக் கொண்டவை எவை? குர்ஆனிலே அல்லாஹ் அமைத்துத் தந்தவை எவை? என்ற வேறுபாட்டை நாம் விளங்கி வைத்திருந்தால் ஒவ்வொருவரும் இதைப் புரிந்து வைத்திருந்தால் குர்ஆன் என்ற பெயரால் யாரும் மக்களை வழி கெடுத்துவிட முடியாது.

சுருக்கமாக சொல்வதென்றால் ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் என்பதைத் தவிர வசன எண்களோ அத்தியாயத்தின் பெயர்களோ இடையிடையே எழுதப்படுகின்ற விஷயங்களோ மூலப் பிரதியில் இல்லை. மூலப்பிரதியில் உள்ள செய்திகள் மாத்திரம் தான் இறைவன் புறத்திலிருந்து வந்தவை என்பதை நாம் கவனத்தில் வைத்திருக்க வேண்டும்.

என்பது போன்ற விளக்கங்களை தெளிவாக எடுத்துரைத்து முஜீப் அவர்களின் வாதங்களுக்கு ஆணித்தரமாகப் பதிலளிக்கப்பட்டது.

மொத்தத்தில் விவாதத்தில் நடந்த அனைத்தையும் வரிக்கு வரி நாம் இங்கே குறிப்பிட முடியாது. முக்கியமான சில குறிப்புகளை மட்டும் தான் இங்கே தந்துள்ளோம். ஆனால் தொண்டியில் நடைபெற்ற விவாதம் சத்தியத்தின் முன்னால் அதற்கெதிரான அனைவரையும் மண்டியிட வைத்தது என்பதே யாவரும் தெரிந்து கொண்ட உண்மையாகும்.

More Articles …

Subcategories