Sidebar

17
Wed, Jun
சமீபத்திய செய்திகள்

இமாம்களை விட நாம் நன்றாக அறிய முடியுமா?

இமாம்கள் சிறந்த காலத்தில் வாழ்ந்தவர்கள். நபியின் காலத்துக்கு நெருக்கமானவர்கள். அவர்களைப் போல் நம்மால் திருக்குர்ஆனையும், ஹதீஸ்களையும் விளங்க முடியாது என்பதால் மத்ஹபுகளைத் தான் பின்பற்ற வேண்டும் என்றும் வாதிடுகின்றனர்.

صحيح البخاري 2651 - حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا أَبُو جَمْرَةَ، قَالَ: سَمِعْتُ زَهْدَمَ بْنَ مُضَرِّبٍ، قَالَ: سَمِعْتُ عِمْرَانَ بْنَ حُصَيْنٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خَيْرُكُمْ قَرْنِي، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ» - قَالَ عِمْرَانُ: لاَ أَدْرِي أَذَكَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدُ قَرْنَيْنِ أَوْ ثَلاَثَةً - قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ بَعْدَكُمْ قَوْمًا يَخُونُونَ وَلاَ يُؤْتَمَنُونَ، وَيَشْهَدُونَ وَلاَ يُسْتَشْهَدُونَ، وَيَنْذِرُونَ وَلاَ يَفُونَ، وَيَظْهَرُ فِيهِمُ السِّمَنُ»

உங்களில் சிறந்தவர்கள் என் காலத்தவர்கள். பின்னர் அவர்களை அடுத்து வரக் கூடியவர்கள். அதன் பின்னர் அவர்களை அடுத்து வரக் கூடியவர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும் தொடர்ந்து உங்களுக்குப் பின் நாணயமாக நடக்காமல் மோசடி செய்பவர்களும், சாட்சியம் அளிக்க அழைக்கப்படாமலே சாட்சி கூறுபவர்களும், நேர்ச்சை செய்து அதை நிறைவேற்றாதவர்களும் தோன்றுவார்கள். அவர்களிடம் பகட்டு வெளிப்படும் எனவும் கூறினார்கள்.

நூல் : புகாரி 2651, 3650, 6428, 6695

தமது காலத்தவரையும், அதற்கு அடுத்த காலத்தவரையும் மிகச் சிறந்த சமுதாயம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் நபித்தோழர்களை நாம் பின்பற்றலாம் என்று அவர்கள் வாதிடுகின்றனர்.

இந்த நபிமொழி ஆதாரப்பூர்வமானது என்பதில் சந்தேகம் இல்லை. இதன் பொருள் என்ன என்பதை இதன் இறுதியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள்.

அதாவது அந்தச் சமுதாயத்தில் நாணயம், நேர்மை, வாக்கை நிறைவேற்றுதல், வலியச் சென்று எதிலும் தலையிடாமல் இருப்பது போன்ற நற்பண்புகள் அதிக அளவில் இருக்கும். பிந்தைய சமுதாயத்தில் அது குறைந்து விடும் என்பது தான் அந்த விளக்கம்.

நபித்தோழர்கள் மற்றும் அதற்கடுத்த காலத்து மக்களின் சிந்தனையிலும், தீர்ப்புகளிலும், முடிவுகளிலும், ஆய்வுகளிலும் எந்தத் தவறும் ஏற்படாது என்பதால் அவர்கள் சிறந்தவர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை.

அவர்களின் நாணயம், நேர்மை காரணமாக சிறந்தவர்கள் என்று தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். நாணயமாகவும், நேர்மையாகவும் இருப்பதால் அவர்களின் சிந்தனையில் தவறே ஏற்படாது என்று அறிவுடையோர் கூற மாட்டார்கள்.

மேலும் வஹீயை மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என்று நாம் எடுத்துக் காட்டிய ஏராளமான ஆதாரங்களுக்கு முரணில்லாத வகையில் தான் இதை விளங்க வேண்டும்.

இமாம்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு காலத்தால் நெருக்கமானவர்களாக இருந்தாலும் மார்க்கத்தை அறிந்து கொள்ளவும், ஆராய்ச்சி செய்யவும் அவர்களை விட பிற்காலத்தவர்களுக்குத் தான் அல்லாஹ் அதிக வாய்ப்புக்களை வழங்கியுள்ளான்.

மார்க்கத்தைச் சரியான முறையில் அறிந்து கொள்வதற்கு மார்க்க ஆதாரங்கள் பரவலாக்கப்பட்டும், எளிதில் கிடைக்கும் வகையிலும் முழுமையாகத் திரட்டப்பட்டும் இருக்க வேண்டும்.

ஆதாரங்கள் முழுமையாகத் திரட்டப்படாமலும், எளிதில் கிடைக்காமலும் இருந்தால் ஒவ்வொருவரும் தமக்குக் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் தான் முடிவு செய்வார். ஆதாரம் கிடைக்காத போது சுயமாக முடிவு எடுப்பது தவிர அவருக்கு வேறு வழி இல்லை.

ஆனால் ஆதாரங்கள் திரட்டப்படுவதால் கிடைக்கும் வாய்ப்பு மிகச் சிறந்த காலத்தவர்களுக்கு இருக்கவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் மக்களுக்குக் கூறிய அறிவுரைகள் அனைத்தையும் எந்த நபித்தோழரும் அறிந்திருக்கவில்லை. ஒரு நபித்தோழருக்குத் தெரிந்த ஹதீஸ் ஏராளமான நபித்தோழர்களுக்குத் தெரியாமல் இருந்துள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) காலத்துக்குப் பின்னர் நபித்தோழர்கள் பல பகுதிகளுக்கும் சென்றார்கள். தாம் தெரிந்து வைத்திருந்த ஹதீஸ்களை அந்தப் பகுதி மக்களுக்கு தேவைக்கேற்ப அறிவித்தார்கள்.

இமாம்கள் காலத்திலும் ஹதீஸ்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு இருக்கவில்லை.

நபித்தோழர்களும், அதற்கடுத்த தலைமுறையினரும் தாம் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் அனைத்து ஹதீஸ்களையும் ஆய்வு செய்து தேடிப் பார்த்து தீர்ப்பளிக்கும் வாய்ப்பைப் பெறவே இல்லை. எனவே தான் அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழியாக எதை அறிந்தார்களோ அதைப் பின்பற்றினார்கள். மற்ற விஷயங்களில் தாமாக முடிவு செய்வது மட்டுமே அவர்கள் முன் இருந்த ஒரே வழி என்பதால் அதைத் தான் அவர்கள் செயல்படுத்த முடிந்தது.

ஆனால் இன்றைக்கு ஒவ்வொரு வீடுகளிலும் ஒவ்வொரு நபரும் திருக்குர்ஆன் பிரதிகளை வைத்துள்ளோம்.

ஹதீஸ்கள் அனைத்தும் பாடம் வாரியாகத் தொகுக்கப்பட்டு நூல்களாக உள்ளன. அனைவரிடமும் அனைத்து நூல்களும் இல்லாவிட்டாலும் நூலகங்களிலும், மதரஸாக்களிலும் அவை உள்ளன.

சாப்ட்வேர்களாகவும் அனைத்தும் வந்துள்ளன.

எந்தக் கடினமான கேள்விக்கும் அரை மணி நேரம் செலவிட்டு அதற்கான ஆதாரங்களைக் கண்டுபிடிக்கும் அளவுக்குத் தொழில் நுட்பம் வளர்ந்துள்ளது.

இந்தக் காலத்தில் நபித்தோழர்கள் வாழ்ந்தால் நம்மை விடச் சிறப்பாக இந்த வசதியைப் பயன்படுத்தி சரியான ஃபத்வாக்களை வழங்கி இருப்பார்கள். அவர்கள் காலத்தில் நாம் இருந்தால் அவர்களிடம் ஏற்பட்ட தவறுகளை விட அதிகத் தவறு செய்பவர்களாக நாம் இருப்போம் என்பது தனி விஷயம்.

இந்த நிலை ஏற்படும் என்பதால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இறுதிப் பேருரையில்

صحيح البخاري فَلْيُبَلِّغِ الشَّاهِدُ الغَائِبَ، فَرُبَّ مُبَلَّغٍ أَوْعَى مِنْ سَامِعٍ، فَلَا تَرْجِعُوا بَعْدِي  كُفَّارًا، يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ»

வந்தவர்கள் வராதவருக்கு எனது செய்திகளை எடுத்துச் சொல்லுங்கள். எடுத்துச் சொல்பவரை விட யாரிடம் எடுத்துச் சொல்லப்படுகிறதோ அவர்கள் அதனை நன்கு பேணிப் பாதுகாப்பவர்களாக இருப்பார்கள் என்று முன்னறிவிப்பு செய்தனர்.

நூல் : புகாரி : 1741, 7074

உலகம் அழியும் வரை என்ன நடக்கும் என்பதை அறிந்து வைத்துள்ள இறைவனால் தரப்பட்டதே இஸ்லாம். உலகம் அழியும் வரை தோன்றும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு சொல்லக் கூடிய வகையில் குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

அந்தந்த காலத்தை அடைபவர்களால் தான் அதன் சரியான பொருளை அறிந்து கொள்ள முடியும்.

எனவே இது போன்ற விஷயங்களில் நபித்தோழர்கள் புரிந்து கொள்ளாத பல விஷயங்களை இன்று நாம் ஆய்வு செய்து புரிந்து கொள்ள முடியும்.

சந்திர மண்டலத்தில் கிப்லாவை எவ்வாறு நோக்குவது? செயற்கை முறையில் கருத்தரிப்பது கூடுமா? குடும்பக் கட்டுப்பாடு செய்யலாமா? என்பன போன்ற கேள்விகளை அன்றைக்கு அவர்களிடம் கேட்டால் இதெல்லாம் நடக்குமா என்ன? என்பது தான் அவர்களின் பதிலாக இருக்கும்.

இன்று நாம் பல நவீன பிரச்சனைகளை நேரடியாகவே சந்திப்பதால் இதற்கெல்லாம் தீர்வு தரும் வகையில் நிச்சயம் குர்ஆனிலும், நபிவழியிலும் வாசகம் இடம் பெற்றிருக்கும் என்ற நம்பிக்கையுடன் ஆய்வு செய்தால் அதற்கான விடை கூறக் கூடிய ஆதாரங்களைப் பார்க்க முடிகின்றது.

ஆழ்கடலில் அலைகள் உள்ளன. வானத்தைக் கூரையாக ஆக்கியுள்ளோம். மலைகளை முலைகளாக ஆக்கியுள்ளோம். ஜுதி மலையில் நூஹ் நபியின் கப்பல் அத்தாட்சியாக உள்ளது.

இது போல் எண்ணற்ற வசனங்கள் குர்ஆனில் உள்ளன. இவற்றை நாம் விளங்கியது போல நபித்தோழர்களால் விளங்கி இருக்க முடியாது. ஆய்வு செய்து இதற்கான விளக்கம் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் நாம் வாழ்வதால் நமக்கு இது சாத்தியமாகிறது.

ஒவ்வொரு செய்திக்கும் நிகழ்விடம், நிகழும் நேரம் உள்ளது என்று அல்லாஹ் கூறுகிறான்.

ஒவ்வொரு செய்திக்கும் நிகழ்வதற்கான நேரம் உள்ளது. பின்னர் அறிந்து கொள்வீர்கள்!

திருக்குர்ஆன் 6:67

எனவே திருக்குர்ஆனும் நபிவழியும் மட்டுமே மார்க்க ஆதாரங்களாகும். இவ்விரண்டைத் தவிர நபித்தோழர்கள் உள்ளிட்ட எவரது சொல்லும் மார்க்க ஆதாரங்களாகாது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

இக்கருத்தை இதற்கு முன் யாரும் சொன்னதுண்டா என்ற வாதம்

ஒரு செல்வத்துக்கு உரிய ஜகாத்தை ஒருவர் கொடுத்து விட்டால் அதன் பின்னர் அதே செல்வத்துக்காக மீண்டும் மீண்டும் ஜகாத் கொடுப்பது கடமையில்லை. ஒரு தடவை ஜகாத் கொடுக்கப்பட்டவுடன் அப்பொருளுக்கான ஜகாத் கடமை நீங்கி விடுகிறது என்ற கருத்தை நாம் முன் வைக்கிறோம்.

ஒரு பொருளுக்கு ஒரு தடவை ஜகாத் கொடுத்தாலும் அதே பொருளுக்கு மீண்டும் மீண்டும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற கருத்தில் மிக மிக அதிகமான அறிஞர்களும் மக்களும் உள்ளனர்.

நமது கருத்தை அதிகமான மக்கள் எதிர்க்கிறார்கள் என்றாலும் அவர்களின் எதிர்ப்பில் ஏற்கத்தக்க ஆதாரங்கள் இல்லை. நியாயமான வாதங்கள் இல்லை.

இதைப் பற்றி நாம் விரிவாக அறிந்து கொள்வோம்.

நமது இக்கருத்தை எதிர்ப்பவர்கள் முக்கியமான வைக்கும் வாதம் என்னவென்றால் ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் கொடுக்கத் தேவை இல்லை என்ற கருத்து இதற்கு முன் யாராலும் சொல்லப்படாத புது கருத்தாக உள்ளது. உலகில் ஒருவரும் சொல்லாத கருத்தாக உள்ளதால் இது தவறான கருத்தாகும் என்ற வாதத்தை வைக்கிறார்கள்.

இந்தக் கருத்தை இதற்கு முன் ஒருவரும் சொன்னதில்லை; இப்போது தான் முதன் முதலாகச் சொல்லப்படுகிறது என்று மக்கள் கருதுவதால் இதைப் பாரதூரமான விஷயமாகக் கருதுகிறார்கள்.

இதற்கு முன்னால் யாராவது சொன்னதுண்டா என்ற கேள்விக்கு இஸ்லாத்தில் எந்த முக்கியத்துவமும் இல்லை.

கடந்த காலத்தில் யாராவது சொன்னார்களா என்பதை வைத்தோ, சொல்லவில்லை என்பதை வைத்தோ இஸ்லாத்தின் சட்டங்களை முடிவு செய்ய முடியாது.

அல்லாஹ் கூறியுள்ளானா? அல்லாஹ்வின் தூதர் கூறியுள்ளார்களா? என்பதை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.

ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மறுபடியும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று குர்ஆனிலோ, ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலோ கூறப்படவில்லை. இதுவே நமக்குப் போதுமாகும். - இதை ஆதாரங்களுடன் பின்னர் எடுத்துக் காட்டவுள்ளோம்-

யாராவது கூறியுள்ளார்களா என்பதைக் கவனிக்கத் தேவை இல்லை என்பதை முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இருந்தாலும் ஒருவருமே இப்படிச் சொல்லவில்லை என்ற வாதம் பலவீனமான நம்பிக்கை உள்ளவர்களுக்கு தடுமாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால் இதை முக்கிய ஆதாரம் போல் முன்வைக்கிறார்கள்.

ஆனால் இந்தக் கேள்விக்குள் ஏராளமான அபத்தங்கள் அடங்கியுள்ளன,

எந்த ஒரு விஷயத்தைக் குறித்தும் முந்தைய காலத்தில் இக்கருத்தை யாரும் சொல்லவில்லை என்று யாராலும் கூறவே முடியாது.

முந்தைய காலத்தில் வாழ்ந்த ஒவ்வொருவரின் வரலாறையும் அவர்களின் ஒவ்வொரு கருத்துக்களையும் தேடிப்பார்த்து அவர் சொன்னாரா இல்லையா என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது..

அப்படி தேடிப்பார்க்கும் போது சில அறிஞர்கள் அவர் அப்படிச் சொல்லி இருந்தது தெரிய வந்தால் அந்த அறிஞர்  சொன்னார் என்று உறுதிபடக் கூறலாம்.

எந்த அறிஞரும் இக்கருத்தைக் கூறியதாக ஆதாரம் கிடைக்காவிட்டால் அப்போது கூட எந்த அறிஞரும் இக்கருத்தைக் கூறவில்லை என்று சொல்ல முடியாது. இதற்கு ஆதாரம் கிடைக்கவில்லை என்று தான் கூறலாம்.

ஏனெனில் சில அறிஞர்கள் அக்கருத்தைக் கூறி இருந்து அது எழுத்து வடிவில் பாதுகாக்கப்படாததால் அது நமக்குக் கிடைக்காமல் போயிருக்கலாம். அல்லது காலத்தால் அழிந்து போனதால் நமக்குக் கிடைக்காமல் போகலாம். எனவே ஒருவரும் குறிப்பிட்ட கருத்தைச் சொல்லவில்லை என்று கூறுவது அறிவீனமான வாதமாகும்.

உலகில் வாழ்ந்த அனைத்து அறிஞர்களின் அனைத்து கருத்துக்களையும் திரட்ட முடியுமா? எத்தனையோ அறிஞர்கள் தமது கருத்துக்களை எழுத்து வடிவமாக்காமல் சென்றுள்ளனர். எத்தனையோ அறிஞர்களின் எழுத்துக்கள் பாதுகாக்கப்படாமல அழிந்துள்ளன.

எனவே யாருமே கூறவில்லை என்ற வாதம் பொய்யை அடிப்படையாகக் கொண்டதாகும்.

யாராவது இப்படிக் கூறினார்கள் என்று ஆதாரம் கிடைக்காவிட்டால் இந்தக் கருத்தை யாரும் கூறியுள்ளார்களா என்ற தகவல் கிடைக்கவில்லை என்று தான் கூறமுடியும். இக்கருத்தை யாரேனும் கூறியும் இருக்கலாம்; கூறாமலும் இருக்கலாம் என்று தான் சொல்ல முடியும்.

ஒருவரும் கூறவே இல்லை என்று அல்லாஹ்வால் மட்டுமே சொல்ல முடியும். அவன் தான் ஒவ்வொருவரின் அனைத்துக் கருத்துக்களையும் அறிந்தவன். அல்லாஹ் மட்டுமே அறிந்துள்ள விஷயத்துக்கு உரிமை கொண்டாடும் ஆபத்தான வாதமாக இது அமைந்துள்ளது.

மேலும் இக்கேள்வியைக் கேட்பவர்கள் இதில் உண்மையாளர்களாக இல்லை. முன்னர் சொல்லப்படாத பல கருத்துக்களை பல அறிஞர்கள் பல்வேறு கால கட்டங்களில் கூறியுள்ளனர். அந்த அறிஞர்களை இவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அவர்களின் கருத்தையும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

பல அறிஞர்கள் தமக்கு முன்னர் சொல்லப்பட்ட பல கருத்துக்களை மறுத்துள்ளனர். மறுக்கப்பட்ட அந்தக் கருத்துக்களும் காலப்போக்கில் அங்கீகாரம் பெற்றுவிட்டன.

ஆனால் முன்பு இருந்த கருத்துக்கு மாற்றுக் கருத்துச் சொன்ன அறிஞர் மாற்றுக் கருத்து கூறும் காலத்தில் நாம் இருந்து கவனித்தால் அதற்கு முன் யாரும் சொல்லாத கருத்தைச் சொல்கிறார் என்று தான் அறிந்து கொள்வோம்.

மாற்றுக் கருத்து சொன்ன ஒவ்வொரு அறிஞரும் அதற்கு முன் யாரும் சொல்லாத ஒன்றைத் தான் சொல்கிறார் என்பதற்காக அறிவுடைய மக்கள் அதனைப் புறக்கணிக்கவில்லை. இதை ஏற்கத்தக்க வழிமுறையாகவும் மக்கள் கருதியதில்லை. மற்ற பல விஷயங்களில் இக்கேள்வியைக் கேட்காமல் ஏற்றுக் கொண்டு இருக்கும் மக்கள் ஜகாத் விஷயத்தில் மட்டும் தான் இக்கேள்வியைப் பெரிய ஆதாரமாகக் காண்கிறார்கள்.

ஹதீஸ் கலை விதி என்று ஒவ்வொரு ஹதீஸ் கலை மேதையும் சொன்ன எல்லா விதிகளும் அதற்கு முன் சென்ற நபித்தோழர்களால் சொல்லப்பட்டதாக இருக்கவில்லை. ஆனாலும் அது சரியானதாக இருந்ததால் சமுதாயம் ஏற்றுக் கொண்டது. ஒருவரும் சொல்லாத கருத்து என்று புறம் தள்ளவில்லை.

சொல்லும் கருத்து குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தான் அமைந்துள்ளது என்று நமது நேர்மையான பார்வைக்குத் தெரியுமானால் அதை ஏற்றுக் கொள்ளும் கடமை நமக்கு வந்து விடும்.

ஆலிம்கள் தான் மார்க்கத்தீர்ப்பு கொடுக்க வேண்டுமா. சாமானியர்கள் மார்க்கம் பேச கூடாதா?

More Articles …