Sidebar

17
Wed, Jun
சமீபத்திய செய்திகள்

அனைத்து நதிகளும் கடலில் தான் சேருகிறது எனவே அனைத்து கடவுள்களும் அனைத்து மதங்களும் சொல்வது ஒன்று தான் என்று சொல்வது சரியா?

நம் சமுதாயத்தில் பிறரை அழைக்கும் போது சீதேவி என்றும் திட்டும்போது மூதேவி என்றும் பிறமத கடவுள்களின் பெயரை சொல்லி அழைப்பது தவறில்லையா?

பேரழிவுகளின் போது நல்லவர்களும் அழிக்கப்படுவது ஏன்?

சுனாமி போன்ற பேரழிவுகளில் முஸ்லிம்களும் மூழ்கி இறந்துவிட்டார்களே? முஸ்லிம்களுக்கு இத்தகைய கொடூரமான மரணத்தை இறைவன் தருவதேன்?

முஹம்மது அனஸ்

பதில்:

மக்களுக்கு அல்லாஹ் இரு வகைகளில் அழிவை ஏற்படுத்துகிறான்.

ஒன்று நல்லவர் கெட்டவர் என்ற வேறுபாடு இல்லாமல் அழித்தல்.

மற்றொன்று கெட்டவர்களைத் தனியாகப் பிரித்தெடுத்து அவர்களை மட்டும் அழித்தல்.

இறைத்தூதர்களை அனுப்பி அந்தத் தூதரை மக்கள் ஏற்காவிட்டால் அப்போது அல்லாஹ் பேரழிவுகளை ஏற்படுத்துவான். அவ்வாறு அழிக்கும் போது இறைத்தூதரையும், அவருடன் இருந்த நல்லோரையும் தனியாகப் பிரித்து கெட்டவர்களை மட்டும் அழிப்பான்.

இறைத்தூதர்கள் இல்லாத காலங்களில் ஏற்படும் வேதனைகள் நல்லவர்கள், கெட்டவர்கள் என்ற அடிப்படையில் ஏற்படாது.

புயல், மழை, வெள்ளம், பூகம்பம் போன்ற துன்பங்கள் நேரும் போது, அந்தத் துன்பங்களில் தீயவர்கள் மாத்திரமின்றி நல்லவர்களும் கூட பாதிக்கப்படுகிறார்கள். இதற்குக் காரணம் அந்த நல்லவர்களை துன்புறுத்த வேண்டும் என்பதல்ல.

இதில் சில நல்லவர்களும் சேர்ந்து தான் அழிக்கப்படுவார்கள். இது தான் இறைவனின் ஏற்பாடாகும். பிறகு நல்லவர்கள் மறுமை நாளில் அவரவர்களது எண்ணத்திற்கேற்ப எழுப்பப்படுவார்கள். யாரும் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.

صحيح البخاري

2118 – حدثنا محمد بن الصباح، حدثنا إسماعيل بن زكرياء، عن محمد بن سوقة، عن نافع بن جبير بن مطعم، قال: حدثتني عائشة رضي الله عنها، قالت: قال رسول الله صلى الله عليه وسلم: «يغزو جيش الكعبة، فإذا كانوا ببيداء من الأرض، يخسف بأولهم وآخرهم» قالت: قلت: يا رسول الله، كيف يخسف بأولهم وآخرهم، وفيهم أسواقهم، ومن ليس منهم؟ قال: «يخسف بأولهم وآخرهم، ثم يبعثون على نياتهم»

ஒரு படையினர் கஅபாவின் மீது படையெடுப்பார்கள்; வெட்டவெளியான ஒரு பூமியில் அவர்கள் இருக்கும்போது அவர்களில் முதலாமவர் முதல், கடைசி நபர் வரை உயிருடன் பூமிக்குள் புதையுண்டு போவார்கள்! என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் முதலாமவர் முதல், கடைசி நபர் வரை எவ்வாறு புதையுண்டு போவார்கள்? அங்கே அவர்களைச் சேராதவர்களும் இருப்பார்களே; கடைவீதிகளும் இருக்குமே! என நான் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவர்களில் முதலாமவர் முதல், கடைசி நபர் வரை புதையுண்டு போகத்தான் செய்வார்கள்; எனினும் (அதற்குப்) பின்னர் அவரவரது எண்ணத்திற்கேற்ப எழுப்பப்படுவார்கள் என்றார்கள்.

அறிவிப்பவா் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி 2118

இஸ்லாமிய நம்பிக்கைப் படி இந்த உலகம் ஒரு நாள் அழிக்கப்பட்டு வேறொரு உலகம் அமைக்கப்படும். அந்த உலகம் தான் நிரந்தரமான நிலையான கூலி வழங்கப்படக்கூடிய உலகம். நல்லவர்கள், தீயவர்கள் அனைவரும் அவரவர்களின் செயல்களுக்குரிய பலனை அந்த நிலையான மறு உலகில் தான் அனுபவிப்பார்கள். நல்லவர்கள் சொர்க்கத்திலும் தீயவர்கள் நரகத்திலும் நுழையும் உலகம் அந்த நிலையான மறு உலகமேயாகும்.

இந்த உலகைப் பற்றி இஸ்லாம் சோதனை உலகம் என்று குறிப்பிடுகிறது. மனிதர்கள் சோதிக்கப்படுவது தான் இந்த உலகின் நோக்கம்.

உங்களில் அழகிய செயலுக்குரியவர் யார் என்பதைச் சோதிப்பதற்காக மரணத்தையும், வாழ்வையும் அவன் படைத்தான். அவன் மிகைத்தவன்; மன்னிப்பவன்.

திருக்குர்ஆன் 67:2

மனிதனுக்கு இவ்வுலகில் ஏற்படக்கூடிய நோய் நொடிகள், வறுமை, வேலையின்மை, துர்மரணம் போன்ற அனைத்தும் இறைவனின் புறத்திலிருந்து வரும் சோதனைகளாகும். சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவுகள் ஏற்படுவதும் இறைவனின் சோதனையாகும்.

ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள் என்று அவர்கள் கூறுவார்கள்.

திருக்குர்ஆன் 2:155,156

அவ்வாறு மக்களுக்குப் படிப்பினையாக இறைவன் நிகழ்த்திய சோதனைகளில் நல்லவர்கள் அழிக்கப்படும் போது மறு உலகில் அவர்கள் இந்த உலகத்தில் நடந்து கொண்டதற்கேற்ப இறைவனால் நடத்தப்படுவார்கள். அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.

24.05.2013. 5:45 AM

உலகைப் படைப்பதற்கு முன் இறைவன் என்ன செய்து கொண்டிருந்தான்?

கிதுர் ஒலி

இந்தக் கேள்விக்கு விடை சொல்லாவிட்டால் அதன் மூலம் இறைவன் இல்லை என்று வாதிடுவதற்காக இக்கேள்வியை அவர் கேட்டிருந்தால் அது பொருத்தமற்றதாகும்.

முதலில் இறைவன் இருக்கிறானா? இல்லையா என்று பகுத்தறிவைப் பயன்படுத்தி சிந்தித்து முடிவுக்கு வர வேண்டும். இறைவன் இருக்கிறான் என்று முடிவுக்கு வந்துவிட்டால் மாபெரும் சூப்பர் பவராக இருப்பவனிடம் அவனது நடவடிக்கை பற்றிக் கேட்க முடியாது.

நமக்குச் சமமானவர்களின் நடவடிக்கைளையும், நமக்குக் கீழே உள்ளவர்களின் நடவடிக்கைகளையும் கேள்விக்கு உட்படுத்த முடியும். நம்மைப் படைத்த சர்வ ஆற்றலும் உடையவனைக் கேள்விக்கு உட்படுத்த முடியாது.

தான் என்ன செய்கிறான் என்பதை மனிதனுக்குச் சொல்லக் கடமைப்பட்டவன் அல்லன் இறைவன். கடமைப்பட்டவனாக இருந்தால் அவன் இறைவன் அல்ல.

இறைவன் இருப்பதையே அவர் நம்பவில்லை என்றால் இறைவன் இருக்கிறானா என்பதைப் பற்றித் தான் கேள்வி கேட்க வேண்டும். அப்படிக் கேட்டால் அதற்கான விடை நாத்திகர்களுடன் நடந்த விவாதத்தின் போது அளிக்கப்பட்டுள்ளது.

மன்மோகன் சிங் பிரதமராவதற்கு முன் என்ன செய்து கொண்டிருந்தார் என்பது நமக்குத் தெரியாவிட்டால், அல்லது அவர் தனது வீட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது நமக்குத் தெரியாவிட்டால் மன்மோகன் சிங் என்று ஒருவர் இல்லை என்று ஆகாது.

அது போல் இறைவன் என்ன செய்து கொண்டிருந்தான் என்ற கேள்விக்கு நமக்கு விடை தெரியாததால், அல்லது இனி என்ன செய்வான் என்பதற்கு விடை தெரியாது என்பதால் இறைவன் இல்லை என்று ஆகாது.

அது பற்றி நமக்குத் தெரியவில்லை என்று தான் ஆகும்.

நம்மோடு வாழும் மனிதர்களின் நடவடிக்கையையே நாம் முழுமையாக அறிந்து கொள்ள முடிவதில்லை எனும்போது இறைவனின் செயல்பாடுகள் பற்றி கேட்பது அறிவுடமை அல்ல என்று அவருக்குப் பதில் கூறுங்கள்!

கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை?

கேள்வி:

உங்கள் மார்க்கத்தில் கடவுள் ஏன் மனிதனாக வந்து நல்லவைகளை மக்களிடம் விளக்கவில்லை என்று முஸ்லிமல்லாத என் நண்பர்கள் கேட்கின்றனர்?

முஹம்மது கனி, சித்தார்கோட்டை.

பதில்:

கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை என்று கேட்பதே அடிப்படையில் தவறானதாகும்.

நீங்கள் ஒரு ஆட்டுப் பண்ணையோ, கோழிப்பண்ணையோ வைத்திருக்கிறீர்கள். அவற்றை நீங்கள் வழிநடத்திச் செல்வதற்காக நீங்கள் ஆடாக, அல்லது கோழியாக மாறத் தேவையில்லை. நீங்கள் நீங்களாக இருந்து கொண்டே ஆடுகளை நீங்கள் விரும்பியவாறு வழிநடத்த முடியும். இன்னும் சொல்வதானால் உங்களால் ஆடாக மாற இயலும் என்று வைத்துக் கொண்டால் கூட மாற மாட்டீர்கள்! மனிதனாக இருப்பதில் உள்ள பல வசதிகளை இதனால் இழக்க நேரிடும் என்று நினைப்பீர்கள்! மேலும் உங்களை விட பல விதத்திலும் தாழ்ந்த நிலையில் உள்ள ஜீவனாக நீங்கள் மாறத் தேவையில்லை. மாறவும் மாட்டீர்கள்!

உங்களுக்கும், ஆடுகளுக்கும் உள்ள வேறுபாடுகளை விட பல்லாயிரம் வேறுபாடுகள் கடவுளுக்கும், மனிதர்களுக்குமிடையே இருக்கின்றன.

எந்த விதமான பலவீனமும் இல்லாத கடவுளை, மலஜலத்தைச் சுமந்து கொண்டு எண்ணற்ற பலவீனங்களையும் உள்ளடக்கியுள்ள மனிதனாக மாறச் சொல்வதை விட கடவுளுக்குக் கண்ணியக் குறைவு வேறு இருக்க முடியாது.

முதலமைச்சராக இருக்கும் ஒருவர் முதல்வராக இருந்து கொண்டு தான் நாட்டை ஆள வேண்டும். அவரைச் சாக்கடையைச் சுத்தப்படுத்தும் வேலைக்குப் போகச் சொல்லக் கூடாது.

இருக்கின்ற தகுதியை விட இறக்கம் செய்வதை மனிதர்களே ஏற்க மாட்டார்கள் என்னும் போது கடவுள் எப்படித் தன்னை இழிவுபடுத்திக் கொள்வான்?

இழிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று விரும்புவது எந்த வகையில் நியாயமானது?

இப்படிச் சிந்தித்தால் கடவுள் கடவுளாக இருப்பது தான் பொருத்தமானது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

கடவுள் மனிதனாக வருவான் என்ற கதவுகளைத் திறந்து வைத்து விட்டால் என்ன ஏற்படும் என்பதை நாட்டு நடப்புகளிலிருந்தே அறிந்து கொள்ளலாம்.

'நான் தான் கடவுள்; அல்லது கடவுளின் அவதாரம்' எனக் கூறி யாரேனும் ஏமாற்ற நினைத்தால் கடவுள் மனிதனாக வருவான் என்று நம்பாத முஸ்லிம்களைத் தவிர மற்ற அனைவரையும் எளிதில் ஏமாற்றி விட முடியும். அவர்களைச் சுரண்ட முடியும்.

போலிச் சாமியார்கள் பற்றி நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோமே இதற்கெல்லாம் கூட கடவுள் மனிதனாக வருவான் என்ற நம்பிக்கை தான் அடிப்படை.

கடவுள் மனிதனாக வரவே மாட்டான் என்று உறுதியாக நம்பினால் மதத்தின் பெயரால் நடக்கும் ஏராளமான சுரண்டல்களைத் தவிர்க்கலாம். இன்னொரு கோணத்திலும் இது பற்றி ஆராயலாம்.

கடவுள் மனிதனாக வருகிறான் என்று வைத்துக் கொள்வோம்.

மனிதனாக வந்த காரணத்தினால் மனிதனைப் போலவே கடவுள் செயல்பட வேண்டும். உண்ண வேண்டும்; பருக வேண்டும்; மலஜலம் கழிக்க வேண்டும்; மனிதனைப் போலவே குடும்ப வாழ்க்கையிலும் ஈடுபட வேண்டும்.

சந்ததிகளைப் பெற்றெடுக்க வேண்டும். கடவுளால் பெற்றெடுக்கப்பட்டவனும் கடவுளாகவே இருப்பான்; கடவுளின் பிள்ளைகளான கடவுள்கள் கணக்கின்றி இப்பூமியில் வாழும் நிலை ஏற்படும்.

ஏதோ ஒரு காலத்தில் ஒரே ஒரு தடவை கடவுள் இப்பூமிக்கு வந்திருந்தால் கூட அவரது வழித்தோன்றல்கள் பல கோடிப் பேர் இன்றைக்கு பூமியில் இருக்க வேண்டும். ஆனால் கடவுளின் ஒரே ஒரு பிள்ளையைக் கூட நாம் பூமியில் காண முடியவில்லை. இதிலிருந்து கடவுள் மனிதனாக வரவே இல்லை என்று அறிந்து கொள்ளலாம்.

எனவே கடவுள் ஒரு காலத்திலும் மனித வடிவில் வந்ததுமில்லை. வருவது அவருக்குத் தகுதியானதும் அல்ல.

(பீஜே எழுதிய அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் எனும் நூலில் இருந்து)

More Articles …