Sidebar

17
Wed, Jun
சமீபத்திய செய்திகள்

ஸலாம் முஸ்லிம்களுக்கு மட்டுமா?

முஸ்லிம்களுக்கு மட்டுமே ஸலாம் கூற வேண்டும் என்று பெரும்பாலான முஸ்லிம்கள் கருதுகின்றனர். இதன் காரணமாக முஸ்லிமல்லாத மக்களைச் சந்திக்கும் போது ஸலாம் கூறத் தயங்கி வணக்கம், வந்தனம், நமஸ்காரம் போன்ற சுயமரியாதைக்குப் பங்கம் விளைவிக்கும் சொற்களைக் கூறும் நிர்பந்தந்தத்தை தமக்குத் தாமே ஏற்படுத்திக் கொள்கின்றனர்.

முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் கூறக் கூடாது என்று கட்டளையிருந்தால் அதைக் கண்டிப்பாக நடைப்புறப்படுத்த வேண்டும் என்பதில் இரு வேறு கருத்து இல்லை. ஆனால் அல்லாஹ்வும், அவனது தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் நமக்கு இவ்வாறு கட்டளையிடவில்லை. மாறாக முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் கூறுவதைத் தெளிவாக அனுமதித்துள்ளனர் என்பதை இவர்கள் அறியாமல் உள்ளனர்.

இதற்கான ஆதாரங்களைப் பார்ப்போம்.

திருக்குர்ஆனில் பல்வேறு வசனங்களில் இப்றாஹீம் நபியவர்களின் வழிமுறையை முஸ்லிம்களும் பின்பற்ற வேண்டும் என்று அல்லாஹ் வலியுறுத்திகின்றான்.

பார்க்க : திருக்குர்ஆன் 2:130, 2:135, 3:95, 4:125, 6:161, 16:123, 22:78

இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத தமது தந்தைக்காக இப்றாஹீம் நபியவர்கள் ஒரு தடவை பாவமன்னிப்புத் தேடினார்கள். அது தவறு என்று தெரிந்ததும் அதிலிருந்து விலகிக் கொண்டார்கள். அவர்கள் தமது தந்தைக்கு பாவமன்னிப்பு கோரிய அந்த வியத்தைத் தவிர அவர்களின் மற்ற அனைத்து நடவடிக்கைகளிலும் முஸ்லிம்களுக்கு முன்மாதிரி உளளது என்று அல்லாஹ் பின்வரும் வசனத்தில் தெளிவாகக் கூறுகிறான்.

உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது  என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. உங்களுக்காக பாவ மன்னிப்புத் தேடுவேன். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு எதையும் செய்ய நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்று இப்ராஹீம் தம் தந்தையிடம் கூறியதைத் தவிர. (இதில் அவரிடம் முன் மாதிரி இல்லை) எங்கள் இறைவா! உன்னையே சார்ந்திருக்கிறோம். உன்னிடமே திரும்பினோம். மீளுதல் உன்னிடமே உள்ளது.

திருக்குர்ஆன் 60:4

உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்! உங்களுக்காக என் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுவேன். அவன் என்னிடம் அன்பு மிக்கவனாக இருக்கிறான்  என்று (இப்ராஹீம்) கூறினார்.

திருக்குர்ஆன் 19:47

அல்லாஹ்வுக்கு இணை கற்பித்த தந்தைக்காக இப்றாஹீம் நபி பாவமன்னிப்பு கோரியதை யாரும் முன் மாதிரியாக எடுத்துக் கொண்டு இணை கற்பிப்போருக்கு பாவமன்னிப்பு கோரக் கூடாது. அதே சமயம் இறைவனுக்கு இணை கற்பித்த தந்தைக்கு இப்றாஹீம் நபியவர்கள் ஸலாம் கூறியதை முன் மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்பதை மேற்கண்ட இரண்டு வசனங்களையும் ஒருங்கிணைத்துப் பார்ப்பவர்கள் அறிந்து கொள்ள முடியும். எனவே முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் கூறுவது இப்றாஹீம் நபியின் வழிமுறையில் உள்ளது என்பதில் மறுப்பேதும் இல்லை.

முஸ்லிமல்லாதவருக்கு ஸலாம் உண்டாகுமாறு எப்படிப் பிரார்த்திக்க முடியும் என்று சிலர் கேள்வியெழுப்புவர். இக்கேள்வி தவறாகும்.

அஸ்ஸலாமு அலை(க்)கும் என்பதன் பொருள்  உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும் . இஸ்லாம் எனும் வாழ்க்கை நெறியை முஸ்லிமல்லாதவர் ஏற்றுக் கொள்வதன் மூலம் அவருக்கு சாந்தி கிடைக்கட்டும் என்ற பொருளும் இதற்குள் உண்டு. முஸ்லிமல்லாதவர் இவ்வுலக வாழ்க்கையின் நன்மைகளைப் பெற்று சாந்தியடையட்டும் என்ற பொருளும் இதற்குள் உண்டு. இவ்வுலக நன்மைகள் முஸ்லிமல்லாதவருக்கு கிடைக்க நாம் துஆ செய்யலாம் இதற்குத் தடை ஏதும் இல்லை. எனவே முஸ்லிமல்லாதவருக்கு ஸலாம் கூறுவதை மறுக்க எந்த நியாயமும் இல்லை.

صحيح البخاري

12 – حَدَّثَنَا عَمْرُو بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ، عَنْ أَبِي الخَيْرِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّ الإِسْلاَمِ خَيْرٌ؟ قَالَ: «تُطْعِمُ الطَّعَامَ، وَتَقْرَأُ السَّلاَمَ عَلَى مَنْ عَرَفْتَ وَمَنْ لَمْ تَعْرِفْ»

இஸ்லாத்தில் மிகச் சிறந்த நல்லறம் எது?  என்று ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  உணவளிப்பதும், உனக்குத் தெரிந்தவருக்கும் தெரியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்  என விடையளித்தார்கள்.

நூல் : புகாரி 12, 28, 6236

 

முஸ்லிமுக்கு மட்டும் தான் ஸலாம் கூற வேண்டும் என்றால் முஸ்லிம் என்று தெரிந்தவருக்கு ஸலாம் கூறு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருப்பார்கள். அவ்வாறு கூறாமல் தெரிந்தவருக்கும் தெரியாதவருக்கும் ஸலாம் கூறு என்று கூறியுள்ளனர்.

ஒருவரைப் பற்றிய விபரம் நமக்குத் தெரியாது என்றால் அவர் முஸ்லிமா அல்லவா என்பதும் கூட நமக்குத் தெரியாது. அது பற்றிக் கவலைப்படாமல் தெரிந்தவர் தெரியாதவர் என்ற பாகுபாடு இன்றி அனைவருக்கும் ஸலாம் கூறு என நபிகன் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதன் மூலமும் முஸ்லிமல்லாதவருக்கும் ஸலாம் கூறலாம் என்பதை அறியலாம்.

மேலும் பின்வரும் வசனங்கத்தில் மூடர்கள் உரையாடினால் ஸலாம் என்று கூறிவிடுமாறு அல்லாஹ் வழி காட்டுகிறான். இங்கே மூடர்கள் என்று குறிப்பிடுவதில் இஸ்லாத்தை ஏற்காதவர்களும் தீயவர்களும் அடங்குவார்கள்.

அளவற்ற அருளாளனின் அடியார்கள் பூமியில் பணிவாக நடப்பார்கள். அறிவீனர்கள் அவர்களுடன் உரையாடும் போது  ஸலாம்  எனக் கூறுவார்கள்.

திருக்குர்ஆன் 25:63

வீணானவற்றை அவர்கள் செவியுறும் போது அதை அலட்சியம் செய்கின்றனர்.  எங்கள் செயல்கள் எங்களுக்கு. உங்கள் செயல்கள் உங்களுக்கு. உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். அறிவீனர்களை விரும்ப மாட்டோம்  எனவும் கூறுகின்றனர்.

திருக்குர்ஆன் 28:55

என் இறைவா! அவர்கள் நம்பிக்கை கொள்ளாத கூட்டமாகவுள்ளனர்  என்று அவர் (முஹம்மத்) கூறுவதை (அறிவோம்.) அவர்களை அலட்சியப்படுத்துவீராக! ஸலாம் எனக் கூறுவீராக! பின்னர் அவர்கள் அறிந்து கொள்வார்கள்

திருக்குர்ஆன் 43:88,89

மேற்கண்ட வசனங்களை மேலோட்டமாகப் பார்த்தாலே முஸ்லிமல்லாதவர்களுக்கும் ஸலாம் கூறலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும்.

முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் கூறலாம் என்பதற்கு திருக்குர்ஆன் வசனங்களும் நபிவழியும் சான்றுகளாகத் திகழ்ந்த போதும் இதைக் கண்டு கொள்ளாத சிலர் ஹதீஸ்களைத் தவறாக விளங்கிக் கொண்டு முஸ்லிமல்லாதவருக்கு ஸலாம் கூறக் கூடாது என்று வாதிடுகின்றனர்.

 

صحيح البخاري

6258 – حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرِ بْنِ أَنَسٍ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِذَا سَلَّمَ عَلَيْكُمْ أَهْلُ الكِتَابِ فَقُولُوا: وَعَلَيْكُمْ "

வேதமுடையோர் உங்கள் மீது ஸலாம் கூறினால் வஅலை(க்)கும் (உங்கள் மீதும்) எனக் கூறுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி 6258

வேதமுடையோர் ஸலாம் கூறினால் நாம் ஸலாம் கூறாமல் வஅலை(க்)கும் (உங்கள் மீதும்) என்று கூறுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டதிலிருந்தே அவர்களுக்கு ஸலாம் கூறக் கூடாது என்று வாதிடுகின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தக் காரணமும் கூறாமல் பொதுவாக ஒரு கட்டளையிட்டால் அதை நாம் அப்படியே முழுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதும் ஒரு காரணத்தைக் கூறி அதற்காக ஒன்றை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்திருந்தால் அதைப் பொதுவான தடை என்று கருதக் கூடாது என்பதும் அனைவரும் ஏற்றுக் கொண்ட விதியாகும்.

வேதமுடையோரின் ஸலாமுக்கு பதில் கூறுவதைப் பொருத்த வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வஅலை(க்)கும் என்று கூறச் சொன்னதற்கான காரணத்தைத் தெளிவுபடுத்தி விட்டனர்.

صحيح البخاري

6257 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " إِذَا سَلَّمَ عَلَيْكُمُ اليَهُودُ، فَإِنَّمَا يَقُولُ أَحَدُهُمْ: السَّامُ عَلَيْكَ، فَقُلْ: وَعَلَيْكَ "

யஹதிகள் உங்களுக்கு ஸலாம் கூறினால் அவர்கள் (அஸ்ஸலாமு அலைக்க எனக் கூறாமல்) அஸ்ஸாமு அலைக்க என்று தான் கூறுகின்றனர். (உம்மீது மரணம் உண்டாகட்டும் என்பது இதன் பொருள்) எனவே வஅலைக்க (உன் மீதும் அவ்வாறு உண்டாகட்டும்) என்று கூறுங்கள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி 6257, 2935, 6256, 6024, 6030, 6395, 9401, 6927

யஹூதிகள் அஸ்ஸலாமு எனக் கூறாமல் அஸ்ஸாமு என்று கூறும் காரணத்தினாலேயே அவர்களுக்கு ஸலாம் என்ற வார்த்தையைக் கூற வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர்கள் முறையாக மறுமொழி கூறினால் நாமும் அவர்களுக்கு முறையாக மறுமொழி கூறலாம் என்பதைத் தான் இதிலிருந்து அறிந்து கொள்ள முடியும். மேலும் இது தான் ஏற்கனவே நாம் எடுத்துக் காட்டிய ஆதாரங்களுடன் முரண்படாத வகையில் ஹதீஸ்களை அணுகும் சரியான முறையாகும்.

அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மதுல்லாஹி தஆலா வ பரக்காத்துஹூ என்று (தஆலா) சேர்த்து சலாம் சொல்லலாமா?

ஸலாமுக்கு முழுமையாக பதில் சொல்ல வேண்டுமா?

ஒருவர் சலாம் முழுமையாகச் சொன்னால் பதிலும் முழுமையாகச் சொல்ல வேண்டுமா?

பதில் :

ஒருவர் நமக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு என்று பூரணமாக ஸலாம் கூறும் போது நாமும் அவருக்கு வஅலைக்குமுஸ் ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு என்று பூரணமாக பதில் தர வேண்டும்.

ஏனென்றால் நமக்கு கூறப்பட்ட முகமனையோ அல்லது அதை விட சிறந்த முகமனையோ கூறும் படி அல்லாஹ் கட்டளையிடுகிறான். பதிலளிப்பவரின் ஸலாம் முதலில் ஸலாம் கூறியவரின் ஸலாத்தைப் போன்று இருக்க வேண்டும். அல்லது அதை விடச் சிறப்பானதாக இருக்க வேண்டும்.

உங்களுக்கு வாழ்த்துக் கூறப்பட்டால் அதை விட அழகிய முறையிலோ, அல்லது அதையோ திருப்பிக் கூறுங்கள்! அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான்.

திருக்குர்ஆன் 4:86

ஆதம் (அலை) அவர்கள் வானவர்களுக்கு ஸலாம் சொன்னார்கள். வானவர்கள் ஆதம் (அலை) அவர்கள் கூறிய ஸலாத்தை விட சிறந்த ஸலாத்தைக் கூறினார்கள். அந்த வானவர்கள் கூறிய ஸலாமே முஹம்மது நபியின் சமுதாயமாகிய நாம் கூற வேண்டிய ஸலாமாகும்.

صحيح البخاري

6227 - حَدَّثَنَا يَحْيَى بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ هَمَّامٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " خَلَقَ اللَّهُ آدَمَ عَلَى صُورَتِهِ، طُولُهُ سِتُّونَ ذِرَاعًا، فَلَمَّا خَلَقَهُ قَالَ: اذْهَبْ فَسَلِّمْ عَلَى أُولَئِكَ، النَّفَرِ مِنَ المَلاَئِكَةِ، جُلُوسٌ، فَاسْتَمِعْ مَا يُحَيُّونَكَ، فَإِنَّهَا تَحِيَّتُكَ وَتَحِيَّةُ ذُرِّيَّتِكَ، فَقَالَ: السَّلاَمُ عَلَيْكُمْ، فَقَالُوا: السَّلاَمُ عَلَيْكَ وَرَحْمَةُ اللَّهِ، فَزَادُوهُ: وَرَحْمَةُ اللَّهِ، فَكُلُّ مَنْ يَدْخُلُ الجَنَّةَ عَلَى صُورَةِ آدَمَ، فَلَمْ يَزَلِ الخَلْقُ يَنْقُصُ بَعْدُ حَتَّى الآنَ "

அல்லாஹ் ஆதமைத் தன்னுடைய உருவில் படைத்தான். அப்போது அவரது உயரம் அறுபது முழங்களாக இருந்தது. அவர்களைப் படைத்த போது நீங்கள் சென்று அங்கு அமர்ந்து கொண்டிருக்கும் வானவர்களுக்கு ஸலாம் (முகமன்) கூறுங்கள். அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக் கொள்ளுங்கள்; ஏனெனில் அது தான் உங்களது முகமனும் உங்களது சந்ததிகளின் முகமனும் ஆகும் என்று இறைவன் சொன்னான். அவ்வாறே ஆதம் (அலை) அவர்கள் (வானவர்களிடம் சென்று) அஸ்ஸலாமு அலைக்கும் என்று முகமன் சொன்னார்கள். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் (சாந்தியும் இறைவனின் கருணையும் உங்கள் மீது நிலவட்டும்) என்று வானவர்கள் பதில் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 6227

மேலும் பதில் ஸலாம் கூறுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடமை என்று கூறியுள்ளார்கள். ஸலாம் கூறியவர் பூரணமாக ஸலாம் கூறி நாம் குறைவாக பதில் ஸலாம் கூறினால் நாம் அவருக்கு செய்ய வேண்டிய கடமையில் குறைவு ஏற்பட்டதாக ஆகி விடுகின்றது.

صحيح البخاري

1240 - حَدَّثَنَا مُحَمَّدٌ، حَدَّثَنَا عَمْرُو بْنُ أَبِي سَلَمَةَ، عَنِ الأَوْزَاعِيِّ، قَالَ: أَخْبَرَنِي ابْنُ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي سَعِيدُ بْنُ المُسَيِّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " حَقُّ المُسْلِمِ عَلَى المُسْلِمِ خَمْسٌ: رَدُّ السَّلاَمِ، وَعِيَادَةُ المَرِيضِ، وَاتِّبَاعُ الجَنَائِزِ، وَإِجَابَةُ الدَّعْوَةِ، وَتَشْمِيتُ العَاطِسِ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஓரு முஸ்லிம் (இன்னொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து.

  1. ஸலாமிற்குப் பதில் சொல்லுதல்.
  2. நோயாளியை நலம் விசாரித்தல்.
  3. ஜனாசாவைப் பின்தொடர்ந்து செல்லுதல்.
  4. அழைப்பை ஏற்றுக் கொள்ளுதல்.
  5. தும்மியவருக்கு எர்ஹமுக்கல்லாஹ் என்று கூறுதல்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 1240

سنن أبي داود

928 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي مَالِكٍ الْأَشْجَعِيِّ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا غِرَارَ فِي صَلَاةٍ، وَلَا تَسْلِيمٍ»، قَالَ أَحْمَدُ: «يَعْنِي فِيمَا أَرَى أَنْ لَا تُسَلِّمَ، وَلَا يُسَلَّمَ عَلَيْكَ، وَيُغَرِّرُ الرَّجُلُ بِصَلَاتِهِ فَيَنْصَرِفُ وَهُوَ فِيهَا شَاكٌّ»

ஸலாம் கூறுவதிலும், தொழுவதிலும் குறைவு வைக்கக் கூடாது.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : அபூதாவூத்

سنن أبي داود

5195 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ عَوْفٍ، عَنْ أَبِي رَجَاءٍ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: السَّلَامُ عَلَيْكُمْ، فَرَدَّ عَلَيْهِ السَّلَامَ، ثُمَّ جَلَسَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَشْرٌ» ثُمَّ جَاءَ آخَرُ فَقَالَ: السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ، فَرَدَّ عَلَيْهِ، فَجَلَسَ، فَقَالَ: «عِشْرُونَ» ثُمَّ جَاءَ آخَرُ فَقَالَ: السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، فَرَدَّ عَلَيْهِ، فَجَلَسَ، فَقَالَ: «ثَلَاثُونَ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறினார். நபியவர்கள் அவருக்குப் பதில் ஸலாம் கூறினார்கள். பின்னர் அவர் உட்கார்ந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (இவருக்கு) பத்து (நன்மைகள்) என்று கூறினார்கள். பிறகு மற்றொருவர் வந்தார். அவர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் என்று கூறினார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவருக்குப் பதில் கூறியவுடன் அவர் அமர்ந்தார். நபியவர்கள் (இவருக்கு) இருபது (நன்மைகள்) என்று கூறினார்கள். பிறகு மற்றொருவர் வந்தார். அவர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு என்று கூறினார். அவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள். பிறகு அவர் உட்கார்ந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (இவருக்கு) முப்பது (நன்மைகள்) என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : இம்ரான் பின் ஹுசைன் (ரலி)

நூல் : அபூ தாவூத்

06.11.2010. 15:48 PM

இரண்டு கைகளால் முஸாபஹா செய்யலாமா?

? மத்ஹபை ஆதரிக்கும் சகோதரர்கள் இரண்டு கைகளால் முஸாபஹா செய்கின்றார்கள். ஆனால் குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுபவர்கள் ஒரு கையால் முஸாபஹா செய்கின்றார்கள். இரண்டில் எது சரி என்பதை ஆதாரத்துடன் விளக்கவும்.

எஸ். முஹம்மத் ஸலீம், ஈரோடு

இரண்டு பேர் சந்தித்துக் கொள்ளும் போது, ஒருவருடைய கையை மற்றவர் பிடித்து பரஸ்பரம் நட்பைப் பரிமாறிக் கொள்வதற்கு முஸாபஹா என்று பெயர்.

ஸாஃபஹ என்ற சொல்லில் இருந்து தான் முஸாஃபஹா என்ற சொல் பிறந்துள்ளது.

இச்சொல்லுக்கு ஒரு கையால் மற்றவரின் ஒரு கையைப் பிடித்தல் என்பதே பொருளாகும்.

صافح فلانا: حياه يدأ بيد. – القاموس الفقهي

والمُصافَحَةُ: الأَخْذُ باليَدِ، كالتَّصافُحِ. القاموس المحيط

 والمُصافَحَةُ : الأَخْذُ باليَدِ القاموس المحيط

முஸாஃபஹா என்ற சொல்லுக்கு ஒரு கையால் மற்றவரின் ஒரு கையைப் பிடித்தல் என்பதே பொருள் என்பதால் இரு கைகளால் செய்வது முஸாஃபஹாவில் சேராது.

இரு கைகளல் முஸாஃபஹா செய்ய வேண்டும் என்ற கருத்துடையோர் புகாரியில் பதிவு செய்யப்பட்ட பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

صحيح البخاري

6265 – حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سَيْفٌ، قَالَ: سَمِعْتُ مُجَاهِدًا يَقُولُ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ سَخْبَرَةَ أَبُو مَعْمَرٍ قَالَ: سَمِعْتُ ابْنَ مَسْعُودٍ، يَقُولُ: عَلَّمَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَفِّي بَيْنَ كَفَّيْهِ، التَّشَهُّدَ، كَمَا يُعَلِّمُنِي السُّورَةَ مِنَ القُرْآنِ: «التَّحِيَّاتُ لِلَّهِ، وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلاَمُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ» وَهُوَ بَيْنَ ظَهْرَانَيْنَا، فَلَمَّا قُبِضَ قُلْنَا: السَّلاَمُ – يَعْنِي – عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இரு கைகளுக்கிடையில் என் கை இருந்த நிலையில் குர்ஆனின் அத்தியாயத்தைக் கற்றுத் தருவது போன்று தஷஹ்ஹுத் (எனும் அத்தஹிய்யாத்)-ஐ எனக்கு அவர்கள் கற்றுத் தந்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)

நூல்: புகாரி 6265

இந்த ஹதீஸில் இரண்டு கைகள் என்று வருவதால் இரண்டு கைகளால் முஸாபஹா செய்யலாம் என்று வாதிடுகின்றனர்.

ஆனால் இரண்டு பேர் சந்திக்கும் போது செய்யப்படும் முஸாஃபஹா குறித்து இந்த ஹதீஸில் கூறப்படவில்லை. மாறாக, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அத்தஹியாத்தைக் கற்றுக் கொடுப்பதற்காக இரண்டு கைகளால் பிடித்து சொல்லிக் கொடுக்கின்றார்கள்.

பொதுவாக ஒரு விஷயத்தைக் கற்றுக் கொடுப்பதற்காக இவ்வாறு செய்வது நடைமுறையில் உள்ளது தான். இதை முஸாஃபஹாவுக்கு ஆதாரமாகக் காட்ட முடியாது.

மேலும் இந்த ஹதீஸில் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களது ஒரு கையை, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரு கைகளால் பிடித்திருந்தார்கள் என்று தான் கூறப்பட்டுள்ளது.

ஒருவர் ஒரு கையாலும் மற்றவர் இரு கைகளாலும் யாரும் முஸாஃபஹா செய்வதில்லை. எனவே இது இரு கைகளால் முஸாஃபஹா செய்பவர்களுக்கு ஆதாரமாக ஆகாது.

இரு கைளால் முஸாஃபஹா செய்வதற்கு இந்த ஹதீஸை ஆதாரமாகக் காட்டுவதற்குக் காரணம் புகாரி அவர்கள்இந்த ஹதீஸை, இரண்டு கைகளால் முஸாஃபஹா செய்வது என்ற தலைப்பில் பதிவு செய்திருப்பது தான்.

புகாரி அவர்கள் இதை முஸாஃபஹா தலைப்பில் பதிவு செய்தாலும் இந்த ஹதீஸ் முஸாஃபஹா பற்றியது அல்ல என்பது பளிச்சென்று தெரிகிறது. அவர் தலைப்பிட்டவாறு ஹதீஸின் கருத்து இல்லாததால் அவர் தலைப்பிட்டதை ஆதராமாகக் கொள்ள முடியாது.

ஒரு கையால் முஸாஃபஹா செய்வது மேற்கத்திய கலாச்சாரத்தில் கை குலுக்குவதைப் போல் உள்ளது; இதற்கு மாறு செய்ய வேண்டும் எனவே இரண்டு கைகளால் தான் முஸாஃபஹா செய்ய வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர்.

முஸாஃபஹா தொடர்பான ஹதீஸ்களில் ஒரு கை என்றே இடம் பெறுவதால் இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த இஸ்லாமிய கலாச்சாரம் தான். இதைத் தான் மேற்கத்தியர்கள் எடுத்துக் கொண்டார்களே தவிர நாம் அவர்களைப் பின்பற்றவில்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

பெண்கள் ஆண்களிடம் முஸாஃபஹா செய்யலாமா?

கேள்வி

பெண்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றி விட்டு தாயகம் திரும்பும் போது அவர்களிடம் ஆண்களும் முஸாஃபஹா (கை கொடுத்தல்) செய்கின்றார்கள். ஆண்கள் பெண்களிடம் முஸாஃபஹா செய்யலாமா? பெண்களிடம் எந்தெந்த ஆண்கள் முஸாஃபஹா செய்யலாம்?

பி.எம். அப்துல் கரீம், அம்மாபேட்டை

பதில்:

பெண்கள், அந்நிய ஆண்களைத் தொடுவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

صحيح البخاري

4891 – حَدَّثَنَا إِسْحَاقُ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، حَدَّثَنَا ابْنُ أَخِي ابْنِ شِهَابٍ، عَنْ عَمِّهِ، أَخْبَرَنِي عُرْوَةُ، أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبَرَتْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَمْتَحِنُ مَنْ هَاجَرَ إِلَيْهِ مِنَ المُؤْمِنَاتِ بِهَذِهِ الآيَةِ بِقَوْلِ اللَّهِ: {يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا جَاءَكَ المُؤْمِنَاتُ يُبَايِعْنَكَ} [الممتحنة: 12] إِلَى قَوْلِهِ {غَفُورٌ رَحِيمٌ} [البقرة: 173]، قَالَ عُرْوَةُ: قَالَتْ عَائِشَةُ: فَمَنْ أَقَرَّ بِهَذَا الشَّرْطِ مِنَ المُؤْمِنَاتِ، قَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قَدْ بَايَعْتُكِ» كَلاَمًا، وَلاَ وَاللَّهِ مَا مَسَّتْ يَدُهُ يَدَ امْرَأَةٍ قَطُّ فِي المُبَايَعَةِ، مَا يُبَايِعُهُنَّ إِلَّا بِقَوْلِهِ: «قَدْ بَايَعْتُكِ عَلَى ذَلِكِ»

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(திருக்குர்ஆனின் 60:10 முதல் 12 வரையிலான) இந்த வசனங்களின் கட்டளைக்கேற்ப அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்காவிலிருந்து) நாடு துறந்து தம்மிடம் வந்த இறைநம்பிக்கை கொண்ட பெண்களை சோதனை செய்து வந்தார்கள். இந்த (வசனத்திலுள்ள) நிபந்தனையை இறை நம்பிக்கை கொண்ட பெண்களில் எவர் ஏற்றுக் கொண்டாரோ அவரிடம், உன் விசுவாசப் பிரமாணத்தை நான் ஏற்றுக் கொண்டேன் என்று பேச்சால் மட்டுமே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது கரம், விசுவாசப் பிரமாணம் வழங்கும் போது எந்தப் பெண்ணின் கரத்தையும் தொட்டதில்லை. நான் உன் விசுவாசப் பிரமாணத்தை ஏற்றுக் கொண்டேன் என்று அவர்கள் வாய் மொழியாகவே தவிர வேறு எந்த முறையிலும் பெண்களிடம்,  விசுவாசப் பிரமாணம் வாங்கியதில்லை.

நூல்: புகாரி 4891, 2713

நபித்தோழியரிடம் விசுவாசப் பிரமாணம் எடுக்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.

கையைப் பிடித்து எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழி தான் விசுவாசப் பிரமாணம்! இதை திருக்குர்ஆன் 48:10 வசனத்தில் காணலாம். அத்தகைய விசுவாசப் பிரமாணத்தைக் கூட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண்களின் கையைப் பிடித்து எடுத்ததில்லை என்பதை மேற்கண்ட ஹதீஸ் தெளிவாக விளக்குகின்றது.

ஆனால் முஸ்லிம் சமுதாயத்தில், இஸ்லாத்தின் பெயரால் முரீது வியாபாரம் செய்யும் ஷைகுகள் பைஅத் என்ற பெயரிலும், ஹஜ்ஜுக்குச் சென்று வரும் ஹாஜிகள் முஸாஃபஹா என்ற பெயரிலும் பெண்களின் கையைப் பிடித்து வருகின்றனர். இது முற்றிலும் கண்டிக்கப்பட வேண்டிய ஒரு செயலாகும்.

திருமணம் செய்து கொள்வதற்குத் தடுக்கப்பட்ட உறவுமுறைகளான தந்தை, சகோதரன், மகன், தாய் தந்தையின் சகோதரர்கள், சகோதர சகோதரியின் மகன்கள் போன்றவர்களையும், கணவனையும் தவிர வேறு எவரிடமும் பெண்கள் முஸாஃபஹா செய்யக் கூடாது.

More Articles …

Page 1 of 2