Sidebar

17
Wed, Jun
சமீபத்திய செய்திகள்

இலங்கை முஸ்லிம்கள் ஏன் விடுதலைப் புலிகளை ஆதரிக்கவில்லை?
 
 

அது யாழ்ப்பாண நகரம். அக்டோபர் 30 - 1990 காலை மணி 10.30. LTTE விடுதலைப் புலிகளின் வாகனத்தில் பொருத்தப்பட்ட ஒலிபெருக்கி அலறியது. நகரில் முஸ்லிம்கள் வசிக்கும் மூலை முடுக்குகள் எல்லாம் சென்ற அது, குடும்பத்தில் ஒருவராவது கட்டாயமாக - கண்டிப்பாக பகல் 12.00 மணிக்கு உஸ்மானியா கல்லூரியில் உள்ள ஜின்னா ஸ்டேடியத்திற்கு வருமாறு கட்டளையிட்டது. திரும்பத் திரும்ப - வாகனம் திரும்பிய பகுதியெல்லாம் பலத்த குரலில் அந்த ‘அரச கட்டளை’யை அது அறிவித்தவாறு சென்றது.

துப்பாக்கிகளை ஏந்திய போராளிகள் அதிகமாக தெருக்களில் குவியத் துவங்கினர். சிலர் கால்நடையாக வீடு வீடாகச் சென்று அச்செய்தியை அறிவித்தனர். ஏன், எதற்கு என்று எதுவுமறியாத மக்கள் தங்கள் கைகளில் இருந்த வேலைகளையெல்லாம் அப்படி அப்படியே போட்டுவிட்டு, ஜின்னா ஸ்டேடியம் நோக்கி நடக்கலாயினர். 12.30 மணியளவில் ஆஞ்சநேயர் என்றும், இளம்பரிதி என்றும் அழைக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் அம் மக்களின் வாழ்க்கையை சீரழிக்கும் வார்த்தையைப் பேசலானார்.

“பாதுகாப்பு காரணங்களுக்காக யாழ்ப்பாண முஸ்லிம்கள் இரண்டு மணி நேர அவகாசத்தில் நகரைக் காலி பண்ண வேண்டும் - அதாவது நகரை விட்டுச் செல்ல வேண்டும் என்று உயர் பீடம் முடிவு செய்து அறிவிக்கிறது. செய்யத் தவறுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள்”. அவ்வளவுதான். விளக்கம் ஏதும் தரப்படவில்லை. இவர்களுக்கு விளக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று நினைத்தார்கள் போலும்.

ஏன், எதற்கு என்று ஒன்றும் புரியாத சிலர் காரணங்களைக் கேட்டபோது, ஆஞ்சநேயர் கோபத்தின் உச்சிக்குச் சென்றார். (மரத்திற்கு அல்ல!) “முஸ்லிம்கள் கட்டளைக்குப் பணிய வேண்டும்... இல்லாவிடில் பயங்கர விளைவுகளை எதிர்நோக்க வேண்டி வரும்” என்றதோடு அவர், தனது கையிலிருந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கி பலமுறை சுட்டார். இதுதான் உங்களுக்குக் கிடைக்கும் என்று சொன்னாரோ இல்லை துப்பாக்கியே தங்களுக்கு துணை என்று காட்டினாரோ தெரியாது. அவரது மெய்பாதுகாவலர்கள் சிலரும் தங்கள் தலைவர் செய்ததைப் போலவே செய்து, தங்களின் Fire Power-ஐக் காட்டினர்.

உண்மைச் செய்தி “பட்டாசு வெடிகளோடு” மக்களுக்கு சொல்லப்பட்டுவிட்டது. ஆனால் அந்த அப்பாவி மக்கள் வித்தியாசமாகவே நினைத்தனர். அதாவது, அரசுப் படைகள் யாழ்ப்பாணத்தை நோக்கி நகரத் துவங்கிவிட்டார்கள். ஆகவே, எல்லா மக்களையும் வெளியேறும்படி விடுதலைப் புலிகள் கேட்கிறார்கள் என்றுதான் அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர்.

அந்த அளவிற்கு அவர்கள், “தம்பிமார்”களை தங்களுக்குத் தீங்கு செய்யாதவர்களாகவே நினைத்தனர். புலி தங்கள் மீது நகத்தை வைத்து பிறாண்ட ஆரம்பித்து விட்டது என்பதை அவர்கள் உணரவேயில்லை. தாங்கள் மட்டும்தான் துரத்தப்பட்டோம் என்பதை அவர்கள் அறிய வெகு காலம் பிடித்தது. அப்படியான சூழலில்தான் அவர்கள் வாழ்ந்தார்கள்.

புலிப் போராளிகள் மேலும் மேலும் அதிகமாகத் தெருக்களில் குவிய ஆரம்பித்ததைப் பார்த்த முஸ்லிம்கள் பெரிதும் குழம்பினர். இரண்டு மணி நேரத்தில் இடத்தைக் காலி பண்ண வேண்டும். துப்பாக்கி ஏந்தியவர்கள் தெருக்களில் ‘பொத்’ ‘பொத்’ என்று வாகனங்களிலிருந்து இறங்கத் துவங்கிவிட்டனர்.

பெரிய சமர் ஒன்றிற்கு யாழ்ப்பாணம் தயாராகிறது போலும் என்று நினைத்த அவர்கள் அவசர அவசரமாக தங்கள் உடமைகளைப் பொதிகளாக்கத் துவங்கினர். துணிமணிகள், நகைகள், பணம் என்று எது எதுவெல்லாம் அவசியமென்று தெரிகிறதோ அவற்றையெல்லாம் எடுத்தனர். விடுதலைப் புலிகள் பஸ், வேன் என்று போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்தனர். சில முஸ்லிம்கள் தங்கள் சொந்தப் போக்குவரத்து ஏற்பாடுகளையும் செய்தனர்.

தங்கள் வசிப்பிடங்களை விட்டும் மக்கள் வெளியேறத் துவங்கியதும், அடுத்த ஆணை வந்தது. “ஐந்து முனைச் சந்தி”யில், வெளியேறும் முஸ்லிம்கள் அனைவரும், “q"வரிசையில் நிற்கும்படி அறிவிப்புச் செய்யப்பட்டது. வரிசையில் நின்ற மக்களின் வயிற்றில் அங்குதான் அடிக்கப்பட்டது.

எடுத்துச் செல்லும் பொருட்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் முன்பு அறிவிக்கப்படாததால் மக்கள் தங்கள் விருப்பப்படி பொருட்களை எடுத்திருந்தனர். இப்போது ஆண் புலி, பெண் புலி எல்லோரும் முஸ்லிம்கள் அவர்களிடம் இருக்கும் பணம், நகைகள் மற்றும் பொருட்களையெல்லாம் தங்களிடம் தந்து விட வேண்டும் என்று கண்டிப்பாகக் கூறி, ஒருவருக்கு ரூ.150 தொகையும், ஒரு ஜோடி உடுப்பும் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றனர்.

மக்கள் குமுறத் தொடங்கினர். பெண்கள் அழ ஆரம்பித்தனர். ஆனால் புலிகளின் உறுமலும், அவர்களின் கைகளிலிருந்த - அவர்களை விட பயங்கரமான ஆயுதங்களும் அம் மக்களை மவுனியாக்கின. மக்கள் கைகளிலிருந்த பொதிகள் எல்லாம் இப்போது கை மாறின – கைப்பற்றப்பட்டன. சூட்கேசுகள் திறக்கப்பட்டன. ஓர் உடுப்பு மட்டும் எடுக்க அனுமதிக்கப்பட்டது.

கைலி உடுத்தி இருந்தவர்க்கு இன்னொரு கைலி தரப்பட்டது. கால் சட்டை போட்டிருந்தவருக்கு இன்னொரு கால் சட்டை, புடவை கட்டியிருந்தவர்க்கு இன்னொரு புடவை, பாவாடை தாவணியில் இருந்தவர்களுக்கு இன்னொரு செட். என்னே தாராள மனம்...? பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் போராடியவர்கள் என்று வர்ணிக்கப்பட்டவர்களால், பணம், அடையாள அட்டை, சொத்துகளுக்குரிய ஆவணங்கள், வாகனங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டன.

இது பகற்கொள்ளை. சுதந்திர போராட்ட வீரர்கள் மக்கள் உடைமைகளைத் தொடுவதில்லை. சுபாஷ் சந்திர போஸை முன்மாதிரியாகக் காட்டிய விடுதலைப் புலிகளின் தலைவருக்கு, சுபாஷின் போராட்ட வாழ்வில் இதுபோன்ற நிகழ்வைக் காட்ட முடியாது.

பெண் போராளிகள் பெண்களின் நகைகளைப் பறித்தனர். சில பெண் புலிகள் - பெண்களின் காதுகளில் இருந்த ஆபரணங்களை முரட்டுத் தனமாக இழுத்துப் பறித்ததில், இரத்தம் வழிந்தது. ‘ஆ’வெனக் கத்திய பெண்கள் வாயை மூடுமாறு, பெண் புலிகளின் கனல் கக்கும் கண்களால் சொல்லப்பட்டனர். சில ஆண் புலிகள் பலமாக உறுமவும் தவறவில்லை. குழந்தைகளின் நகைகளும் தப்பவில்லை. அதற்கெல்லாம் மேலாக, ஒரு கைக்கடிகாரம் கூட கொடுக்கப்படவில்லை. Yes, their time was bad. ஆனால், யாருடைய time bad என்பதை அறிய 19 வருடங்கள் பிடித்தன.

35 பணக்கார முஸ்லிம்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர். சில முஸ்லிம் நகை வியாபாரிகள், தங்கம் எங்கு ஒளித்து வைக்கப்பட்டுள்ளது என்று கேட்டு பலவந்தப்படுத்தப்பட்டனர். ஒரு நகை வியாபாரி மற்றவர்கள் முன்பாக அடித்துக் கொல்லப்பட்டார். அவர்களை விடுவிக்க பெரும்பணம் கேட்டனர் இந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள். 30 லட்சம் வரை சிலர் கொடுத்தனர். இருந்தும், கடத்தப்பட்ட வர்த்தகர்கள் படிப்படியாகவே விடுவிக்கப்பட்டனர். சிலர் வெளியே வர சில வருடங்கள் ஆயின. அவர்களில் 13 பேர் திரும்பவேயில்லை. ஆம், திரும்பி வர இயலாத இடத்திற்கு அவர்கள் சென்றுவிட்டனர்.

யாழ்பாண முஸ்லிம்களைப் பொருத்த வரையில், விடுதலைப் புலிகள் அவர்களிடம் மிகவும் கடுமையாக - கொடுமையாக நடந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். முஸ்லிம்களுக்கும், அங்குள்ள ஹிந்து சமூகத்திற்கும் இடையே மிகவும் சுமுகமான உறவு இருந்தது. அவர்கள், குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய இரண்டு மூன்று இடங்களில்தான் செறிந்து வாழ்ந்தார்கள். சோனக தெரு, ஒட்டு மடம், பொம்மை வெளி பகுதிகளில்.

வர்த்தகத் துறையில் மிகவும் செல்வாக்கு பெற்றவர்களாக அவர்கள் இருந்தார்கள். இரும்பு வியாபாரம், லாரி போக்குவரத்து, நகை வியாபாரம், இறைச்சிக் கடை என்பன அவர்களின் தனிச் சொத்து போல் இருந்தன. அந்நாளில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த L.K.S. மற்றும் A.K.S. நகை வியாபாரிகள் அங்கு பிரபல்யமாக இருந்ததையும் குறிப்பிடலாம்.

1975 அளவில் மேயர் ஆல்பிரட் துரையப்பாவால் திறந்து வைக்கப்பட்ட புதிய நகரசபை அங்காடியில் யாழ்பாண முஸ்லிம்களே ஆதிக்கம் செலுத்தினர். அதிலிருந்த மூன்று பகுதிகளில் இரண்டு பகுதி இவர்கள் வசமே இருந்தன. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் முதன்முதலாக நேருக்கு நேர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது மேயர் துரையப்பாவைத்தான் என்பதைக் குறிப்பிட வேண்டும்.

யாழ்ப்பாண முஸ்லிம்கள் மத்தியில் பல கல்விமான்கள், அறிஞர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்களும் இருந்தனர். தமிழ் மொழியில் அங்குள்ள ஹிந்துக்களுக்கு இணையாகப் பாண்டித்தியம் பெற்றவர்கள் பலர் இருந்தனர். கொழும்பு சாகிரா கல்லூரியின் அதிபர் மர்ஹூம் A.M.A.அசீஸ் (இவரிடம் அன்றைய காயலர்கள் - எனது மைத்துனர் மர்ஹூம் டாக்டர் சுலைமான், லண்டன் டாக்டர் செய்யிது அகமது போன்ற பலர் மாணவர்களாக இருந்தனர்) உயர் நீதிமன்ற நீதிபதி அப்துல் காதர், மேல் நீதிமன்ற நீதிபதி M.M.ஜமீல், கல்வித் துறை இயக்குநர் மன்சூர் போன்ற எண்ணற்றவர்களைக் குறிப்பிடலாம். அரசியலில் பலர் இருந்தனர். யாழ்ப்பாண துணை மேயர்களாக பஷீர் அவர்களும், சுல்தான் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

இப்படியெல்லாம் இருந்தும் முஸ்லிம்கள் துரத்தியடிக்கப்பட்டனர். இதற்குக் காரணம் என்ன?

வடபகுதியில் முஸ்லிம்கள் சிறுபான்மையாகவே இருந்த வேளையில், கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் அங்குள்ள ஹிந்துக்களுக்கு சமமான எண்ணிக்கையில் இருந்தனர். இங்கு இரு சாராரின் உறவு வடபகுதியில் இருந்தது போல் சுமுகமாக இருக்கவில்லை. அடிக்கடி பலப்பரீட்சையில் அது சிக்கியது. சிறு சிறு உரசல்கள் பின்பு மோதல்களாக உருவெடுத்து உறவைக் குலைத்தன.

இதற்கு பல காரணங்கள் உண்டு. ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் கிழக்கு மாகாண முஸ்லிம் இளைஞர்கள் சிலரும் இருந்தனர். பின்பு, சில சில கசப்புகளின் காரணமாக அவர்கள் வெளியேறத் துவங்கினர். ஒதுங்கியவர்கள் சிலர், பிற இயக்கங்களில் சேர்ந்தவர்கள் சிலர், அரசு பக்கம்சாய்ந்தவர்கள் சிலர். இது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டை மீறிய செயல். ஆகவே அவர்கள் ஆத்திரம் அடைந்தனர். தங்கள் வசம் இருந்த சில முஸ்லிம் இளைஞர்களை அவர்களே சுட்டுக்கொன்றனர்.

விடுதலைப் புலிகளின் சார்பில் கிழக்கு மாகாணத்திற்கு அன்று கருணா என்ற விநாயகமூர்த்தியும், கரிகாலனும் பொறுப்பாக இருந்தனர். இன்றைய அரசில் கருணா ஒரு துணை அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களால் கிழக்கு மாகாண புலிகள் முகாமில் ஒரு முஸ்லிம் எதிர்ப்பு - வெறுப்பு உணர்வு தூண்டப்பட்டது.

இதே வேளை, அன்றைய அரசால் உருவாக்கப்பட்ட துணை ஊர் காவல்படையில் இருந்த முஸ்லிம்கள் ஹிந்து தமிழர்கள்பால் கட்டவிழ்த்துவிட்ட அட்டூழியங்கள் - கருணா, கரிகாலன் ஆகியோரை முஸ்லிம்கள் மீது பாரிய அளவில் பழிவாங்க வேண்டும் என்ற உணர்வைத் தூண்டியது. அதற்காக அவர்கள் வடக்கு சென்று பிரபாகரனைச் சந்தித்து, பேசலாயினர்.

இதன் விளைவாக, கிழக்கில் சில முஸ்லிம் கிராமங்கள் தாக்கப்பட்டன. வீடுகள், கடைகள் எரியூட்டப்பட்டன. ஆண் - பெண் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். பள்ளிவாயில்களும் தாக்குதலுக்கு இரையாயின. மட்டக்களப்பு, சம்மாந்துறை மஸ்ஜிதுகளில் தொழுகையில் இருந்தவர்கள் கொல்லப்பட்டார்கள்.

உச்சகட்டமாக, ஆகஸ்டு 1990இல், காத்தான்குடி முஸ்லிம்களை நகரை விட்டும் வெளியேறும்படி துண்டுப் பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன. இல்லாவிடில் பயங்கர விளைவுகளை எதிர்நோக்க வேண்டி வரும் என அது அச்சுறுத்தியது.

ஆகஸ்டு 03ஆம் திகதி இரவு, ஆயுதம் தாங்கிய 30 விடுதலைப் புலிகள் முஸ்லிம்கள் போல் வேடம் தரித்து, சுமார் 08.10 மணியளவில், காத்தான்குடியில் மீரானியா ஜும்ஆ மஸ்ஜித், ஹுஸைனிய்யா மஸ்ஜித், மஸ்ஜிதுல் நூர், பவ்சி மஸ்ஜித் ஆகிய இடங்களில் - இஷா தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக் கொன்றனர். இறந்தவர்கள் 147 பேர். அதில் - வயதில் மூத்தவர்கள், இளைஞர்கள், சிறுவர்களும் அடங்குவர்.

இந்த அனர்த்தத்தை - மனிதப் படுகொலையை நேரில் கண்ட 40 வயது முஹம்மது இப்றாஹீம் என்ற வர்த்தகர், சர்வதேச ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தார். நியுயோர்க் டைம்ஸ் பத்திரிக்கையில் அவர் கூறியதாவது:- “நான் குனிந்து தொழுதுகொண்டிருந்தேன்... பயங்கரவாதிகள் சுடத் துவங்கினர்... அது 15 நிமிடங்கள் நீடித்தது. நான் இறந்தவர்களோடு படுத்துக்கொண்டதால் தப்பினேன்...” என்றார்.

முஹம்மது ஆரிஃப் என்ற 17 வயது இளைஞன், “நான் பக்கத்திலிருந்த கதவு வழியாகத் தப்பி, சுவர் ஏறிப் பாயும்போது, ஒரு விடுதலைப் புலி பயங்கரவாதி, சிறுவன் ஒருவனின் வாயில் துப்பாக்கியைத் திணித்து, பின்பு வெடிக்க வைத்ததைக் கண்ணால் கண்டேன்...” என்று நியுயோர்க் டைம்ஸ் பேட்டியில் குறிப்பிட்டு இருந்தான்.

இந்த பள்ளிவாயில் படுகொலையில் ஐந்து வயது, பத்து வயது சிறுவர்கள் பலர் இருந்ததையும், பலியானதையும் நாம் குறிப்பிட வேண்டும். ஒரு பாலச்சந்திரனுக்காக, பாலகனைக் கொல்லலாமா என்று துடிதுடிக்கும் தமிழகத்து தமிழீழ ஆர்வலர்கள், இதையும் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

என்ன பாவம் செய்தான் 12 வயது பாலகன் என்று நீங்கள் கேட்கும்போது, என்ன பாவம் செய்தார்கள் பள்ளியில் தொழுத இம் மக்கள் - இந்த பாலகர்கள்? பாலச்சந்திரன் பாவம் செய்தவன்தான். அப்பாவிகளை - பாலகர்களைக் கொன்ற கொலைகாரத் தந்தை ஒருவனுக்கு மகனாகப் பிறந்தது பாவமில்லையா?

இந்நிலையில், சாவகச் சேரியில் நடந்த ஒரு சம்பவம், அதனை விடுதலைப் புலிகள் எடுத்துக் கொண்ட முறை, அதனை அவர்கள் கையாண்ட விதம், வடக்கு முஸ்லிம சமூகத்தின் எதிர்காலத்தையும், விடுதலைப் புலிகளின் வரலாற்றையும் இருட்டாக்கியது.

செப்டம்பர் 04ஆம் திகதி, விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களான சில தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் ஏற்பட்ட பிரச்சினை மோதலை உருவாக்கியது. இதில் சில தமிழர்கள் பள்ளிவாயிலைத் தாக்க முற்படவே, முஸ்லிம் இளைஞர்கள் அதனைத் தடுத்து, அவர்களை விடுதலைப் புலிகளின் காவல் படையில் ஒப்படைத்தனர். (அக்காலத்தில் அப்பகுதி புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது.) ஆனால் விடுதலைப் புலிகள் அவர்களை விடுவித்ததோடு, சிறுபான்மை முஸ்லிம்கள் பெரும்பான்மை தமிழர்களோடு மோதக்கூடாது என எச்சரித்தது. அடுத்து, செப்டம்பர் 25ஆம் திகதி, சாவகச்சேரி பகுதியை விட்டு வெளியேற, ‘அனுமதி பாஸ்’ கேட்டு, மறுக்கப்பட்டு, தகராறு செய்த முஸ்லிம் இளைஞன் “காணாமல் போனான்”.

இந்நிலையில் ஒரு முஸ்லிம் கடையில் வாள் 75 எண்ணிக்கையில் இருப்பதாகச் சொன்ன விடுதலைப் புலிகள் அவற்றைக் கைப்பற்றியதோடு, முஸ்லிம்களின் வீடுகள் - கடைகள் அனைத்தையும் சோதனை செய்ய ஆரம்பித்தனர். இது சலிப்பை உண்டாக்கியது. அக்டோபர் 15ஆம் திகதி, சாவகச்சேரியின் 1000 முஸ்லிம்களும் தங்கள் வசிப்பிடத்தை விட்டு வவுனியா பகுதிக்கு வெளியேறிச் செல்லுமாறு கட்டளையிடப்படவே, அவர்கள் வெளியேறினர்.

அதனைத் தொடர்ந்து, மன்னார் பகுதியிலிருந்துதம், ஏனைய வடபகுதியிலிருந்தும் முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக வெளியேற்றப்பட்டனர் - துடைத்து எறியப்பட்டனர். கடைசியாக அக்டோபர் 30இல் வெளியேற்றப்பட்டவர்கள்தான் யாழ்ப்பாணத்து முஸ்லிம்கள்.

தமிழகத்தின் தமிழீழ ஆர்வலர்களைக் கேட்க விரும்புகிறேன் - இது நியாயம்தானா? எந்த அடிப்படையில் நீங்கள் இந்த மனித வெளியேற்றத்தை நியாயப்படுத்த முடியும்? பள்ளிவாயிலில் தொழுகையில் ஈடுபட்டவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? இலங்கை முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளை ஆதரிக்கவில்லை என்று ஆத்திரப்படும் உங்களிடம் இதற்கு என்ன பதில் உள்ளது?

ஆகஸ்டு 13ஆம் திகதி 2009ஆம் வருடம் நான் மருத்துவ சோதனைக்காக சென்னை வந்திருந்தபோது, ஒரு பிற பல தொலை காட்சியில் பணியாற்றும் எனது நண்பர் ஒருவர், இலங்கை முஸ்லிம்கள் ஏன் விடுதலைப் புலிகளை ஆதரிக்கவில்லை என்பதை விளக்கும் வகையில் பேசுமாறு என்னைக் கேட்டார். சம்மதித்தேன்.

அதன்படி, தி.நகரின் பாடசாலை மண்டபத்தில் முக்கிய பிரமுகர்கள் சிலரை அழைத்து நடந்த கூட்டத்தில் நான் விளக்கினேன். இந்த இணையதளத்திற்கு அறிமுகமான ஒரு சிலரும் வந்திருந்தனர். கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சிலர், உண்மை நிலை வெளியே வரக்கூடாது என்ற அடிப்படையில் அர்த்தமற்ற கேள்விகளைக் கேட்டு குழப்பியதால் கூட்டம் ஒரு கட்டத்தில் நிறுத்தப்பட்டது. மூன் டிவி ஒளிப்பதிவு செய்து வெளியிட்டது.

விடுதலைப் புலிகள் தங்களுக்கே உரிய மமதையில், அடுத்த சிறுபான்மையினரான முஸ்லிம்களை மதிக்கவில்லை. பெரும்பான்மை சிறுபான்மையை மிதிக்கிறது என்று ஆர்ப்பரித்த அவர்கள், சிறுபான்மை மற்றொரு சிறுபான்மையை மிதிக்கலாம் என்ற கொள்கையைக் கடைப்பிடித்ததால்தான் அவர்களின் நிலை இன்று இந்தளவிற்கு அருகிப் போய்விட்டது.

சுதந்திரப் போராட்ட வீரர்கள் பொதுமக்களைக் கொல்வதில்லை. அவர்களின் உடமைகளைப் பறிப்பதில்லை. அப்படி செய்பவர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்கள் இல்லை. இப்போது சொல்லுங்கள் இலங்கை முஸ்லிம்கள் எப்படி LTTE விடுதலைப் புலிகளை ஆதரிப்பார்கள்?

இரத்தத்தாலும் கண்ணீராலும் எழுதப்பட்ட சோக வரலாற்று நிகழ்வு இது. 1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வடக்கில் வாழ்ந்து வந்த சுமார் 78ஆயிரம் முஸ்லிம் மக்கள் வடக்குக்கு வெளியே புலிகளால் விரட்டப்பட்டனர். யாழ்ப்பாணத்துக்கு வெளியே ஏனைய மாவட்டங்களில் வாழ்ந்த முஸ்லிம் மக்கள் தமது வாழ்விடங்களைவிட்டு வெளியேற 48 மணிநேர அவகாசம் வழங்கப்பட்டது. யாழ் நகர முஸ்லிம்களுக்கு இரண்டே இரண்டு மணிநேரமே கால அவகாசம் வழங்கப்பட்டது.
 
1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முப்பதாம் திகதி யாழ் நகரப் பகுதிகளில் உறுமிக் கொண்டிருந்த புலிகளின் வாகனங்களிலிருந்த ஒலிபெருக்கிகள் அலறிக்கொண்டிருந்தன.
 
'யாழ் நகரத்தில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் வட மாகாணத்துக்கு வெளியே செல்ல வேண்டும். உடுத்த உடுப்புடனும் ஐந்நூறு ரூபாவுக்கு மேற்படாத பணத்துடனும் அனைத்து முஸ்லிம்களையும் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரிக்கு வருமாறு இத்தால் அறிவுறுத்தல் விடுக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறி நடப்பவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும்' இதுதான் புலிகளின் அந்த அறிவுறுத்தல்.
 
ஒஸ்மானியாக் கல்லூரியில் கூடிய அனைத்து முஸ்லிம்களும் லொறிகளில் ஏற்றப்பட்டு வட மாகாணத்துக்கு வெளியே கொண்டு சென்று விடுவிக்கப்பட்டனர். 1981ஆம் ஆண்டின் குடிசன மதிப்பீட்டின்படி யாழ் நகரத்தில் மட்டும் வாழ்ந்த முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை 14,844.
 
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி ஆகிய வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் சுமார் 78ஆயிரம் முஸ்லிம் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். யாழ் நகர முஸ்லிம் மக்களை இரண்டு மணித்தியால கால அவகாசத்தில் வெளியேற்றிய புலிகள், முப்பதாம் திகதிக்கு முன்னதாகவே வடக்கின் ஏனைய மாவட்டங்களில் வாழ்ந்த முஸ்லிம்களை வெளியேற்றினார்கள்.
 
முதன் முதலாக யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 12 மைல்கள் அப்பாலுள்ள சாவகச்சேரியில் வாழ்ந்து வந்த சுமார் 1500 முஸ்லிம்கள் விரட்டப்பட்டனர். இது அக்டோபர் மாதம் 28ஆம் திகதி இடம்பெற்றது. இதன் பின்னர் கிளிநொச்சி, மன்னார் என்று அனைத்து வடபுல மாவட்டங்களிலிருந்தும் விரட்டப்பட்டனர்.
வடக்கிலிருந்து முஸ்லிம் மக்களை விரட்டுவதற்கு முன்னதாகவே கிழக்கில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்செயல்களைப் புலிகள் கட்டவிழ்த்து விட்டிருந்தனர். 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூன்றாம் திகதி கிழக்கில் காத்தான்குடியிலுள்ள இரண்டு பள்ளிவாசல்களுக்குள் வைத்து 140 முஸ்லிம்களைப் புலிகள் சுட்டுக்கொன்றனர்.
 
அன்று ஒரு வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹுசைனியா பள்ளிவாசலுக்குள்ளும் மீரா ஜும்மாப் பள்ளிவாசலுக்குள்ளும் ஆயுதபாணிகளாகப் புகுந்த புலிகள் தொழுதுகொண்டிருந்த அப்பாவி முஸ்லிம்களைச் சுட்டுக் கொன்றனர். இத் தாக்குதலின்போது சுமார் 70 முஸ்லிம்கள் காயங்களுக்கு இலக்கானார்கள்.
 
இக் கொடூரம் இடம்பெற்றுச் சரியாக ஒன்பது நாட்களுக்குப் பின்னர் மற்றொரு இரத்த வேட்டையைப் புலிகள் நடத்தினார்கள். ஏறாவூர், பிச்சிநகர் என்ற முஸ்லிம் கிராமத்துக்குள் ஆயுததாரிகளாகப் புகுந்த புலிகள் 118 முஸ்லிம் மக்களைச் சுட்டும் வெட்டியும் கொன்றனர். இந்த ஈனத்தனமான நடவடிக்கையின்போது கொல்லப்பட்டவர்களில் 51 பேர் ஆண்கள், 36 பேர் பெண்கள், 31 பேர் பிள்ளைகள். நகைகளையும் பெறுமதி வாய்ந்த பொருட்களையும் கூடப் புலிகள் கொள்ளையடித்துச் சென்றனர். மட்டக்களப்பு – பொலநறுவை வீதியில் ஏறாவூர் அமைந்துள்ளது. மட்டக்களப்பிலிருந்து ஒன்பது மைல்கள் அப்பால் ஏறாவூர் உள்ளது. பிச்சிநகர்ப் படுகொலை ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி நடைபெற்றது.
 
1990ஆம் ஆண்டு கிழக்கில் சுமார் ஐநூறுக்கு மேற்பட்ட முஸ்லிம்களைப் புலிகள் சுட்டுக் கொன்றனர். அந்த வருடம் ஜூலை மாதம் முப்பதாம் திகதி அக்கரைப்பற்றில் 14 முஸ்லிம்கள் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி அம்பாறை, முள்ளியன்காடு என்ற கிராமத்தில் வயல்வெளியில் வேலை செய்துகொண்டிருந்த 17 முஸ்லிம் விவசாயிகளைப் புலிகள் சுட்டுக் கொன்றனர். மறுநாள் ஆறாம் திகதி அம்பாறையில் மேலும் 33 முஸ்லிம் விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 15ஆம் திகதி அம்பாறை, அரந்தலாவைக்கு அருகேயுள்ள முஸ்லிம் கிராமமொன்றுக்குள் புகுந்த புலிகள் ஒன்பது முஸ்லிம்களைச் சுட்டுக் கொன்றனர். இவற்றை விடவும் மேலும் பல படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
 
வடக்கிலிருந்து முஸ்லிம் மககள் விரட்டப்படுவதற்குச் சில மாதங்கள் முன்னதாக 35 முஸ்லிம் வர்த்தகர்களைப் புலிகள் கடத்திச் சென்றனர். கப்பம் கோரியே இந்த வடபகுதி முஸ்லிம் வர்த்தகர்கள் கடத்தப்பட்டனர்.
 
இவர்களில் 18 பேர் கடத்தப்பட்டுச் சில மாதங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டனர். ஏனைய 17 வர்த்தகர்களுக்கும் என்ன நடந்ததென்ற மர்மம் இன்றுவரை மூடுமந்திரமாகவே இருக்கிறது. புலிகளுக்குக் கப்பம் வழங்கிய வர்த்தகர்கள் மட்டுமே விடுவிக்கப்பட்டனர்.
 
வடக்கிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம் மக்கள் புத்தளம், அநுராதபுரம், குருநாகல் உட்படப் பல தென்னிலங்கைப் பகுதிகளில் 150இற்கு மேற்பட்ட அகதி முகாம்களில் தஞ்சமடைந்திருந்தனர். இருபது வருடங்கள் கழிந்துவிட்ட இன்றைய நிலையில் அந்த மக்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகியுள்ளது. இன்னமும் அந்த மக்கள் தமது சொந்த வாழ்விடங்களில் முற்றுமுழுதாக மீள்குடியேற்றப்படவில்லை என்ற நிலைமை தொடரத்தான் செய்கிறது.

மட்டக்களப்பு ஏறாவூர் சதாம் ஹுசைன் கிராமத்தில் 12 ஆம் திகதி, ஆகஸ்ட் மாதம் 1990 ஆம் கொலை வெறியுடன் பாய்ந்த புலி பயங்கரவாதிகள் 116 முஸ்லிம்களை சுட்டும், வெட்டியும் திட்டமிட்டு படுகொலை செய்தனர். புலிகளின் இந்த கொலைவெறி பிடித்த தாக்குதலில் 60 முஸ்லிம் குழந்தைகள் மரணத்தை சுவாசித்தனர்.  மானிட குலத்திற்கு எதிராக புலிப் பயங்கரவாதிகள் புரிந்த போர்க்குற்றத்திற்கு இதனையும்விட ஆதாரங்கள் வேண்டுமா..?? இதோ புலிகளின் கொலைவெறிக்கு பலியான குழந்தைகளின் பெயர் வயது மற்றும் விபரங்கள்

muslims genocide in sri lanka0013muslims-genocide-in-sri-lanka004.jpgmuslims genocide in sri lanka007muslims-genocide-in-sri-lanka008.jpg

 
 1- ஏ. அப்துல் மஜீத் -(1 வாரம்)-ஆண்
 
2- ஏ. எல். அன்சாரா -(1 மாதம்)- பெண்
 
3- எம். ஐ. எம். சானாஸ்- (05 மாதம்)- பெண்

4- ஏ. எஸ். பைரூஸ் -(8 மாதம்)- ஆண்

5- எம். ஐ. பர்சான் -(01 வயது)- ஆண்

6- எஸ். சனூஸியா- (01 வயது)-பெண்

7- ஏ. றிபாகா -(01 வயது) -பெண்

8- எச். எம். பஸ்மி -(03 வயது) -ஆண்

9- எம். வை. எம். பசீர் -(03 வயது)- ஆண்

10- யூ. லாபிர் -(03 வயது)- ஆண்

11- எம். ஐ. பர்சானா -(02 வயது)- பெண்

12- ஆர். எப். றம்சியா -(06 வயது)- பெண்

13- எம். எஸ். றம்சுலா- (07 வயது)- பெண்

14- எம். எஸ். சஹீலா- (04 வயது)- பெண்

15- எஸ். எல் நஜீபா -(04 வயது) பெண்

16- எஸ். எல். நஸ்ரின்- (06 வயது) பெண்

17- எம். ஐ. சபீரா -(06 வயது)- பெண்

18- எம். ஐ. எம். தாஹிர்-(06 வயது)- ஆண்

19- எம். எல். எப். றிஸ்னா-(05 வயது)- பெண்

20- எச். எம். ஹிதாயா- (08 வயது)- பெண்

21- எம். எஸ். எம்.அக்ரம்-(6 வயது )

22- எம். எஸ். எம். தல்ஹான்- (08 வயது)

23- எஸ். ஏ. எம். இம்தியாஸ்- (09 வயது)

24- ஆர். எம். சித்தீக் -(8 வயது)- ஆண்

25- ஆர். எப். றம்சியா -(6 வயது)- பெண்

26- எம். சீ. எம். றிஸ்வான் -(10 வயது)

27- எம். ஐ. ஜரூன் -(10 வயது)

28- எஸ். செய்யது அஜ்மல் -(10 வயது)

29- எம். ஐ. அஸ்றப் -(11 வயது)

30- எம். ஐ. எம். ஆரிப் -(12 வயது)
 
31- எம். கமர்தீன் -(12 வயது)

32- எம். ஐ. எம். அஜ்மல்- (12 வயது)

33- ஏ. எல். மக்கீன்-(12 வயது)
 
34- எம். எஸ். எம். பௌசர் -(12 வயது)

35- ஏ. எல். அபுல்ஹசன்- (12 வயது)

36- வை. எல். எம். ஹரீஸ்- (12 வயது)

37- எம். எஸ். எம். ஜவாத்- (13 வயது)

38- எம். எஸ். பைசல்-(13 வயது)

39- எம். பீ ஜவாத்- (13 வயது)

40- யூ. எல். எம். அனஸ்- (13 வயது)

41- ஏ. எல் அப்துல் சமத்-(14 வயது)

42- எச். எம். பௌசர்-(14 வயது)

43- ஏ. ஜௌபர்- (14 வயது)

44- எம். எஸ். எம் சகூர் -(14 வயது)

45- ஏ. சமீம்- (14 வயது)

46- எம். இஸ்ஸதீன்- (15 வயது)

47- எம். எம். எம். பைசல் -(15 வயது)

48- எம். எஸ். ஜிப்ரியா -(12 வயது) பெண்

49- எம். எஸ். றமீஸா-(10 வயது)-பெண்

50- எம். பீ. சரீனா-(14 வயது)- பெண்

51- எம். பீ. ஹபீபா- (12 வயது)- பெண்

52- எஸ். எம். அஸ்மி -(11 வயது)-ஆண்

53- எம். எல். சமீமா-(10 வயது)- பெண்

54- எம். எஸ். ஐதுரூஸ் -(11 வயது) ஆண்

55- எல். நயிமுதீன் -(12 வயது)- ஆண்

56- ஏ. எல். பாத்தும்மா-(10 வயது)-பெண்

57- ஜே. எம். நௌபர்-(11 வயது ) -ஆண்

58- யூ. எல். ஏ. சதார்- (13 வயது)- ஆண்

59- ஆர். ஹிதாயா-(10 வயது)- பெண்

60- ஏ. எல் சமீர்-(10 வயது) -ஆண்

அரசியல்தனி ஈழம் சாத்தியமா?

(திமுக மத்திய அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவிப்பதற்கு முன் இந்த பதில் உணர்வில் வெளியானது என்பதைக் கவனத்தில் கொள்க)

இலங்கைப் பிரச்சினைக்காக தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இவர்கள் எதிர்பார்க்கும் பலன் ஏற்படுமா?

மசூது, கடையநல்லூர்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் தங்களின் முதல் கோரிக்கையாக தனி ஈழம் என்பதை முன்வைக்கின்றனர். அதாவது இலங்கையின் வடக்கு மாகாணத்தை இலங்கையிலிருந்து பிரித்து அதைத் தமிழர்களின் தனிநாடாக ஆக்கவேண்டும் என்பது முதல்கோரிக்கை.

அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்பது இரண்டாவது கோரிக்கையாகும்.

இதில் முதலாவது கோரிக்கை எள்முனையளவும் நடப்பதற்கு வாய்ப்பே இல்லை. எந்த நாடும் தனது நிலப்பரப்பைப் பிரித்து இன்னொரு நாட்டை ஏற்படுத்திவிட்டு ஒதுங்கிக் கொள்ள ஒப்புக் கொள்ளாது.

தனிநாடு கோருவோரின் கடுமையான பதிலடி காரணமாக, ராணுவமும், காவல்துறையும் சோர்வடைந்து இனிமேல் அவர்களை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது என்ற அளவுக்கு பலவீனம் அடையும்போது மட்டுமே வேறு வழி இல்லாமல் தொலைந்து போகட்டும் என இதற்கு ஒப்புக் கொள்வார்கள்.

அல்லது உலகநாடுகள் அனைத்தும் அல்லது வல்லரசுநாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து கடும் விளைவு ஏற்படும் என்று எச்சரிக்கும் அளவுக்கு ஒரு நாடு தனிமைப்படுத்தப்பட்டால் அப்போது வேறு வழியில்லாமலும், எஞ்சிய பகுதியையாவது தக்க வைத்துக் கொள்வதற்காகவும் தனிநாடு கோரிக்கையை அந்தநாடு ஏற்றுக்கொள்ளும்.

இலங்கையில் பிரபாகரன் உயிருடன் இருந்து இலங்கை அரசுக்கு எதிராகக் கடுமையான பதிலடி கொடுத்துவந்த போதும், வடக்குப்பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்து இலங்கை ராணுவம் நுழையவிடாமல் தடுத்துக்கொண்டு இருந்தபோதும், வடக்குப் பகுதியைக் கடந்து கொழும்பு நகருக்குள் ஊடுருவி இலங்கைத் தலைவர்கள் மற்றும் இராணுவத் தளங்களைத் தாக்கிய போதும், வேறு நாடாக இருந்தால் தொலைந்து போகட்டும் என்று தனிநாடாக ஆக்கி இருப்பார்கள்.

ஆனால் விடுதலைப்புலிகளின் கடுமையான அனைத்து தாக்குதல்களுக்குப் பின்னரும், இலங்கையானது தனிநாடு கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டது. சில ராணுவ வீரர்கள் ராணுவத்தை விட்டு ஓட்டம் பிடிக்கும் அளவிற்கு நிலைமை இருந்தும், அந்தநாடு தனிநாடு கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது.

இன்று அங்கு விடுதலைப் புலிகள் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளனர். சரணடைந்த புலிகள் கூட பெரும்பாலும் கொன்று குவிக்கப்பட்டனர். விடுதலைப் புலிகளின் குடும்பத்தில் இருந்த பெண்களும் சிறுவர்களும் கூட அழிக்கப்பட்டு விட்டனர். தனிநாடு என்ற வார்த்தையைப் பயன்படுத்த ஒருவர் கூட இல்லாத அளவுக்கு துடைத்து எறியப்பட்ட பின்னர், தமிழகத்தில் உண்ணாவிரதம் இருப்பது இலங்கை அரசால் கோமாளித்தனமாகத்தான் பார்க்கப்படும். வேறு எந்தப் பயனையும் ஏற்படுத்தப் போவதில்லை.

விடுதலைப்புலிகளின் கடுமையான போராட்டத்தின் போது இலங்கைக்கு உலக நாடுகள் நெருக்கடி கொடுத்து இருந்தால், தனிஈழம் கிடைத்துவிடும் என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது. அப்போது இந்தியாவில் இருந்த ஐந்து கோடிக்கும் மேலான தமிழர்கள் மொழி உணர்வின் காரணமாக ஒட்டுமொத்தமாக விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்தனர். அரசியல் கட்சியினர் பெருமளவில் அவர்களுக்கு நிதியுதவி அளித்தனர்.

தமிழக ஆட்சியாளர்கள் விடுதலைப்புலிகள் தங்கிட இங்கு அடைக்கலம் கொடுத்தனர். ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்று திரண்டு ஆதரிக்கிறது என்ற நிலைமை காரணமாக, மத்திய அரசும் இலங்கை விவகாரத்தில் தலையிட்டது. அமைதிப் படையை அனுப்பி விடுதலைப்புலிகள் முற்றிலும் அழிக்கப்படாமல் காப்பாற்றியது. இலங்கையின் மீது அத்துமீறிப் பறந்து தமிழர்கள் வாழும் பகுதிகளில் உணவுப் பொட்டலங்கள் போட்டு, இலங்கை அரசுக்கும் கடுமையான எச்சரிக்கையும் விட்டது.

அந்தநிலை நீடித்து இருந்தால், உலகநாடுகளின் ஆதரவுடன் தனிநாடு அமைய இந்திய அரசும் உதவுவதற்கான வாய்ப்புகள் இருந்தன. ஆனால் அவற்றையெல்லாம் விடுதலைப் புலிகள் தங்களது செயல்களால் நாசமாக்கி விட்டனர்.

இந்தியாவிற்குள்ளேயே தங்களது பயங்கரவாதச் செயல்களை விடுதலைப்புலிகள் அரங்கேற்றினார்கள். முன்னாள் பிரதமராக இருந்த ராஜிவ்காந்தியை இந்திய மண்ணில் அதுவும் இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து வந்த தமிழகத்தில் வைத்தே சமாதி கட்டினார்கள். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக இவர்கள் நடத்திய போர் ஆறாத வடுவாக அதிகாரிகள் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது.

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக யாரும் வாய்திறக்க முடியாத நிலை அப்போது தமிழகத்தில் ஏற்பட்டது. ஜெயலலிதா போன்ற சில தலைவர்கள் விடுதலைப்புலிகளின் செயல்களைத் துணிவுடன் கண்டித்தனர். விடுதலைப் புலிகளின் கொலைப்பட்டியலில் ஜெயலலிதாவும் உள்ளார் என்ற உளவுத்துறையின் தகவலால், அவருக்கு இசட்பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது.

தமிழகத்தில் மன்னிக்க முடியாத பாதகத்தைச் செய்த புலிகளை ஒழித்துக் கட்ட மத்திய அரசு முழுவீச்சில் களமிறங்கியது.

ராஜிவ்காந்தியின் மனைவியிடமும், அவரது மகனிடமும் முழு அதிகாரமும் குவிந்துள்ள நிலையில் விடுதலைப்புலிகளின் கணக்கைத் தீர்க்க அவர்கள் நினைப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. எனவே புலிகளை ஒழித்துக்கட்ட அனைத்து விதமான உதவிகளையும் இலங்கை அரசுக்கு மத்திய அரசு செய்து கொடுத்ததிலும் ஆச்சரியம் இல்லை.

ஆயுத சப்ளை வழங்கி இந்திய ராணுவத்தின் உதவியுடன் இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி அளித்தும், தேவையான வியூகங்களை வகுத்துக் கொடுத்தும், புலிகளை முற்றிலுமாக ஒழிக்க எல்லா உதவிகளையும் மத்திய அரசு செய்து கொடுத்ததால் தான் இலங்கை ராணுவம் புலிகளை வேறோடு அழிக்கமுடிந்தது.

விடுதலைப்புலிகள் தங்களுக்கு பக்கபலமாக இருந்த மாபெரும் நாட்டை தங்களது கொடும் செயலால் எதிரியாக ஆக்கிக் கொண்டு இருக்காவிட்டால், தனி ஈழம் இன்னேரம் அமைந்திருக்கலாம்.

அல்லது அதிகாரப் பகிர்வுடன் கூடிய தனி மாகாணம் இந்துத் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டு இருக்கலாம். அதைக் கெடுத்து விடுதலைப்புலிகள் நாசமாக்கிக் கொண்டனர்.

மதத்தால் வேறுபட்டாலும், மொழியால் ஒன்றுபட்ட தமிழ்கூறும் முஸ்லிம்களைத் தங்களின் முதல் எதிரியாக இவர்கள் ஆக்கிக் கொண்டதாலும், முஸ்லிம்களை வேறோடு கிள்ளி எறிய அவர்கள் செய்த கொடுமைகளாலும், அவர்களின் பலம் குன்றியது. இந்துத்துவாவிற்கு நிகரான விடுதலைப் புலிகளை விட சிங்களபௌத்த வெறியர்கள் பரவாயில்லை என்ற நிலைமை இதனால் ஏற்பட்டது.

இவர்கள் போராளிகள் அல்ல பிறநாடுகளிலும் புகுந்து வன்முறையில் ஈடுபடும் பயங்கரவாதிகள் என்ற எண்ணம் (வல்லரசு நாடுகள் உட்பட) எல்லா நாடுகளுக்கும் ராஜிவ் கொலையால் ஏற்பட்டது. பல நாடுகளும் இவர்களைப் பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்கும் நிலை ஏற்பட்டது.

இதை நன்கு பயன்படுத்திக் கொண்ட சிங்கள அரசு அனைத்து நாடுகளின் ஆதரவுடன் செயல்பட்டு புலிகளை முற்றாக ஒழித்தே கட்டிவிட்டது.

புலிகளின் கொடூரமான ஆட்சிமுறையால் சொல்லொனாத் துன்பங்களை அனுபவித்து வந்த வடமாகாணத் தமிழர்கள் தற்போது நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர். எப்போது என்ன நடக்குமோ என்று அஞ்சி வாழ்ந்த நிலை மாறியுள்ளது. எனவே விடுதலைப் புலிகளின் பாதையில் செல்லக் கூடாது என்று இலங்கைத் தமிழர்கள் உறுதியுடன் உள்ளனர்.

இவர்களின் விருப்பத்திற்கு நேர்மாறாகத் தான் இங்குள்ளவர்கள் தனி நாடு கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தி தங்களைத் தாங்களே ஏமாற்றி வருகிறார்கள்.

இங்கே இந்தக் கோரிக்கை வைப்பதால் அங்குள்ள இலங்கைத் தமிழர்கள் மீது அடக்குமுறை அதிகரிக்கத் தான் செய்யும். சிங்களர்களின் கோபம் தமிழர்களுக்கு எதிராகத் திரும்பும் பட்சத்தில் ராஜபக்சேஅரசு அதை வேடிக்கை பார்க்குமே தவிர, தமிழர்களைப் பாதுகாக்காது.

திராவிடநாடு கேட்டு அண்ணாதுரை போராடினார். வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்றெல்லாம் வாதங்களை எடுத்து வைத்தார். இந்திய அரசு இரும்புக் கரம் கொண்டு அதை அடக்கி விட்டது.

திராவிடநாடு கோரிக்கையை நாங்கள் கைவிடுகிறோம், ஆனால் அதற்கான காரணங்கள் அப்படியே தான் உள்ளன என்று அண்ணா அந்தர்பல்டி அடித்ததை நாம் மறந்துவிட முடியாது. காரணங்கள் இருந்தாலும் அதைக் கேட்டுப்பெற முடியாத அளவிற்கு அடக்குமுறைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் அது கைவிடப்பட்டது. தனிநாடு கோரிக்கைக்கு இதுதான் முடிவாகும்.

ஆந்திராவை இரு மாநிலங்களாகப் பிரிப்பதற்கே பல உயிர்களைப் பலி கொடுத்து போராட வேண்டியிருக்கிறது. இன்னும் தெலுங்கானா உருவானபாடில்லை.

பாகிஸ்தான் பிரிவினையின் போது இரு நாடுகளையும் வெள்ளையர்களே பிரித்துத் தந்துவிட்டு சென்றதால் பாகிஸ்தான் சாத்தியமானது. அவ்வாறு செய்யாமல் அவர்கள் சென்றிருந்தால் இந்த இரு நாடுகளும் ஒரே நாடாகத்தான் இன்று வரை இருந்திருக்கும்.

பங்களாதேஷ் நாடானது முஜிபுர்ரஹ்மானின் அவாமிலீக் கட்சியின் போராட்டங்களாலும், கடும் பதிலடிகளாலும் மட்டுமே உருவானதல்ல. அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி இந்திய ராணுவத்தை அனுப்பியதால் தான் கிழக்கு பாகிஸ்தான் பங்களாதேஷாக மாறியது.

பாலஸ்தீனம் நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு இன்று சுதந்திரநாடாக ஐநாவில் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது என்றால், அவர்கள் தங்கள் மண்ணுக்கு வெளியே வேறு நாடுகளில் எந்தத் தாக்குதலிலும் ஈடுபடவில்லை என்பதும், முழு இஸ்ரேலும் பாலஸ்தீனியர்களிடத்திலிருந்து பிடுங்கப்பட்டது என்பதால் ஏற்பட்ட அனுதாபமும் காரணமாக இருந்தது.

இது போன்ற எந்தச் சாதகமான அம்சமும் இலங்கையில் இல்லாத போது, இங்கிருந்து தனி நாடு கேட்பதற்கு நிகரான அறியாமை வேறு எதுவும் இருக்க முடியாது.

அடுத்து அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அபத்தமான ஒன்றே. அமெரிக்கா தீர்மான நகலை வெளியிட்டு, அதன் நகலை வாசித்துப் பார்த்துவிட்டு இப்படியான கோரிக்கையை தமிழீழ ஆதரவாளர்களும் மாணவர்களும் வைக்கவில்லை.

மனித உரிமை மீறல்களிலும், போர்க்குற்றங்களிலும் முதல் இடத்தில் உள்ள அமெரிக்காவைப் பற்றி இங்குள்ள அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எந்த அறிவும் இல்லை என்று தான் நமக்குத் தோன்றுகிறது.

தனது ஆதாயத்திற்காக உலக நாடுகளை மிரட்டுவதும், காரியம் சாதித்துக் கொள்வதும் அமெரிக்கவிற்கு கைவந்த கலையாகும். தீர்மானம் கொண்டு வரப் போகிறோம் என்று பயம்காட்டி புரோக்கர் சுப்பிரமணியசாமி மூலம் அமெரிக்காவுக்குச் சாதகமாகப் பேச வேண்டியதைப் பேசி முடிக்கத்தான் அமெரிக்கா இந்த நாடகத்தை நடத்தியது.

இலங்கை அரசுடன் அரசியல் புரோக்கர் மூலம் பேச்சுவார்த்தை முடிந்து விட்டதால், உப்புசப்பு இல்லாத தீர்மானத்தைக் கொண்டு வந்து தமிழகப் போராளிகள் அனைவர் மீதும் கரியைப்பூசி விட்டது. ராஜபக்சே அரசு தமிழர்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் இந்தத் தீர்மானம் உள்ளது.

ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக்கி அவரைத் தூக்கில் போடப் போகிறோம் என்ற தமிழகத் தலைவர்களின் கனவு முற்றிலும் கலைந்து விட்டது. இப்போது அனைவரும் அந்தர் பல்டி அடித்து, அமெரிக்கத் தீர்மானத்தில் இந்திய அரசு திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று புரண்டு பேசுகிறார்கள்.

ஒரு தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று மக்கள் மத்தியில் கூறுவதற்கு முன் அந்தத் தீர்மானத்தைப் பற்றி அறிந்திருக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச பொறுப்புணர்வு கூட இவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது.

அறிவுஜீவிகளுக்கும், ஊடகங்களுக்கும் கூட இந்த அறிவு இல்லாமல் போய்விட்டது.

அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் ஒன்றே தனி ஈழத்தைப் பெற்றுத்தரும், ராஜபக்சேயைத் தண்டிக்கும் என்று சிறுபிள்ளைத்தனமாக ஊடகங்களில் முகம் காட்டியவர்கள் வெட்கமின்றி பல்டி அடிக்கின்றனர்.

எமது கணிப்புப் பிரகாரம், தமிழகமே கொந்தளித்தாலும், மத்திய அரசு இலங்கைக்கும் ராஜபக்சேவுக்கும் எதிராக ஒன்றுமே செய்யாது. ராஜிவ்காந்தி படுகொலைக்கு கணக்கு தீர்ப்பதற்காக எந்த விலையையும் காங்கிரஸ் தமிழகத்தில் கொடுக்கும். ராஜபக்சேவுக்கு வலிக்காத வகையில் தடவிக் கொடுக்கும் மத்திய அரசின் நிலையில் எந்தமாற்றமும் இருக்காது.

19.03.2013. 13:37 PM

பிரபாகரனை பிஜெ கடுமையாக விமர்சிப்பது ஏன்?

உரை: பி.ஜைனுல் ஆபிதீன்
சமகால நிகழ்வுகள் மற்றும் வாட்ஸ் அப் கேள்வி பதில்கள்

07/11/2021

More Articles …

Page 1 of 2