Sidebar

18
Thu, Jun
சமீபத்திய செய்திகள்

திருட்டு சாஃப்ட்வேர் பயன்படுத்தலாமா?

இது கம்ப்யூட்டர் உலகம். அதிகமான பேர் தங்கள் வீட்டிலும், அலுவலகத்திலும் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் கம்ப்யூட்டரை இயக்கப் பயன்படுத்தும் OS (ஆபரேட்டிங் சிஸ்டம்) மற்றும் இன்னபிற சாஃப்ட்வேர்கள் எதையும் கம்ப்யூட்டர் பயன்படுத்தும் யாருமே ஒரிஜினலைப் பணம் கொடுத்து வாங்குவது இல்லை. ஆனால் பைரடேடாக (திருடப்பட்ட பொருளாக) பயன்படுத்துகிறார்கள். இது இஸ்லாத்திற்கு எதிரானதல்லவா? இதே நிலையில் மரணித்தால் மறுமையில் திவாலானவராக ஆகிவிடுவோமே விளக்கம் தரவும்.

GM .பாஷா R .புதுப்பட்டினம்

பதில்

திருட்டு சாஃப்ட்வேரைப் பயன்படுத்துவது குற்றமாகும். எல்லா வகையான திருட்டுக்களும் மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளன. ஆனால் விலை கொடுத்து வாங்கிய ஒருவரிடமிருந்து அவரது சம்மதத்துடன் காப்பி எடுத்து பயன்படுத்தினால் அது குற்றமாகாது. உரிமையாளரின் சம்மதத்துடன் எடுத்துக் கொள்வது திருட்டில் சேராது.

இது குறித்து நாம் முன்னரே விரிவாக எழுதியுள்ளோம். அது வருமாறு:

ஒரிஜினல் சாஃப்ட்வேர்களைக் காப்பி எடுக்கலாமா?

இஸ்லாத்தின் பார்வையில் ஒரிஜினல் சாஃப்ட்வேர்களைப் பயன்படுத்தாமல் காப்பி எடுத்து பயன்படுத்தலாமா? தவறு என்றால் பழைய நூல்களை வாங்கினாலும் வெளியிடுபவர் நட்டமடைவாரே? அது சரியா?

முஹம்மத் யூனுஸ்

இது நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் சந்திக்காத பிரச்சனை என்பதால் நேரடியான ஆதாரம் இதற்குக் கிடைக்காது. ஆனால் இது சரியா தவறா என்று முடிவு செய்வதற்கேற்ற அடிப்படை நிச்சயம் இஸ்லாத்தில் இருக்கும்.

இஸ்லாத்தில் வியாபாரத்தின் விதிகள் ஒழுங்காக வகுக்கப்பட்டுள்ளன. ஒருவன் ஒரு பொருளை விற்று விட்டால் அதில் விற்றவனுக்கு எந்த உரிமையும் இல்லை. வாங்கியவன் தன் இஷ்டம் போல் அதைப் பயன்படுத்தலாம். இது தான் வியாபாரம்.

நாம் ஒரு சாப்ட்வேரை வங்கினால் அது நமக்குச் சொந்தமாகி விடுகிறது. நமக்குச் சொந்தமான ஒரு பொருளை மற்றவர்களுக்குக் கொடுக்கும் உரிமையைத் தடுத்தால் அது நம் உரிமையைப் பறிக்கிறது என்ற பார்வையும் இதில் உள்ளது.

சாஃப்ட்வேர்களைக் காப்பி எடுத்து பயன்படுத்துவதால் தயாரிப்பவருக்கு பெரிய நட்டம் ஏற்படுகிறது. ஒருவருக்கு பாதிப்பு ஏற்படுத்துவது தவறு என்ற மற்றொரு பார்வையும் இதில் இருக்கிறது.

விற்பனையாளருக்கு நட்டம் ஏற்படுத்துதல் என்பது போலியான காரணமாகும். அவருக்குச் சொந்தமானதை எடுத்து அடுத்தவருக்குக் கொடுத்தால் தான் அவருக்கு நட்டம் ஏற்படுத்தியதாக அமையும். நமக்குச் சொந்தமானதை நாம் இலவசமாகக் கொடுப்பதில் அவருக்கு நட்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

இது போல் விற்பனையாளருக்கு சிறு நட்டம் ஏற்படும் பல காரியங்களை குற்றம் என்று ஃப்தவா கொடுத்ததில்லை. தொகை பெரிது என்பதால் இந்த வாதத்தை இப்போது கூறுகிறார்கள்.

மற்றவருக்கு அதிக நட்டம் ஏற்படுத்துவதும், குறைந்த நட்டம் ஏற்படுத்துவதும் இஸ்லாத்தில் சமமான குற்றங்கள் தான்.

குறைவான நட்டம் ஏற்படுத்தும் காரியங்கள் நடந்த போது அது யாருக்கும் குற்றமாகப் படாமல் இருந்தது என்பதை இந்த இடத்தில் நாம் கவனத்தில் கொண்டால் இது குறித்து தெளிவான முடிவுக்கு வர முடியும்.

ஒரு நூல் வெளியிடப்படுகிறது. அந்த நூலை நீங்கள் வாங்குகிறீர்கள். உங்கள் சம்மதத்துடன் ஒருவர் ஜெராக்ஸ் எடுத்தால் அதனால் வெளியீட்டாளர்கள் நிச்சயம் பாதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு நட்டம் ஏற்படும். ஆனாலும் ஜெராக்ஸ் எடுப்பது ஹராம் என்று யாரும் கூறவில்லை.

அது போல் நீங்கள் விலை கொடுத்து வாங்கிய ஒரு நூலை ஒருவர் இரவல் கேட்கிறார். அவருக்கு நீங்கள் படிக்கக் கொடுத்தால் வியாபாரிக்கு விற்பனை பாதிக்கப்படும். இதன் காரணமாகவும் . வெளியீட்டாளர் நட்டமடைவார். ஆனாலும் இது தவறு என்று ஒருவருக்கும் தோன்றவே இல்லை. யாருடைய மனசாட்சியும் உறுத்தவில்லை.

ஏன் உறுத்தவில்லை? வெளியீட்டாளருக்குப் பாதிப்பு என்று ஏன் தெரியவில்லை?

எப்போது நாம் விலை கொடுத்து வாங்கி விட்டோமே அது நமது உடமையாகி விட்டது. அதை நாம் யாருக்கும் கொடுக்கலாம். ஜெராக்ஸ் எடுக்கலாம். வெளியீட்டாளருக்கு இதில் எந்த உரிமையும் இல்லை என்று இவர்கள் விளங்கி வைத்துள்ளதே காரணம்.

அதே நூலை நீங்கள் அச்சிட்டு விற்பனை செய்தால் அது உங்களை உறுத்துகிறது. விற்பனை செய்யும் உரிமை வெளியீட்டாளருக்கு உரியது என்பது நமது மனசாட்சிக்குத் தெரிகிறது.

அது போல் ஒரு சாப்ட்வேரை நாம் விலை கொடுத்து வாங்கினால் அதை நாம் பயன்படுத்துவதும், மற்றவருக்குப் பிரதி எடுத்துக் கொடுப்பதும் சமமானது தான்.

விலைக்கு விற்ற பிறகும் விற்றவருக்கு அதில் உரிமை இருக்க முடியாது.

சாப்ட்வேர் தயாரிப்பவர்கள் இது போல் நடக்கக் கூடாது என்று கருதினால் அதைக் காப்பி எடுக்க முடியாமல் செய்து காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

அல்லது காப்பி எடுக்க முயற்சிக்காத வகையில் நியாயமான விலையில் அவர்கள் விற்பனை செய்தால் யாரும் காப்பி எடுக்க மாட்டார்கள். பத்து ரூபாய் பெறுமானமில்லாத சீடியில் சாஃப்ட்வேரைப் பதிவு செய்து ஐந்தாயிரம் ரூபாய்க்கு விற்கும் போது தான் விலை கொடுத்து வாங்கியவர்கள் காப்பி எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

நூறு ரூபாய்க்கு அதை விற்றால் கூட தயாரிப்புச் செலவை விட பன்மடங்கு லாபம் கிடைக்கும். ஆனால் உலகப் பணக்காரராக முடியாது.

மேலும் ஒரு சாப்ட்வேரை பத்துப் பேர் பணம் போட்டு கூட்டாக வாங்கினால் பத்து காப்பி எடுப்பார்கள். அல்லது பத்து சிஸ்டகளில் அதை நிறுவுவார்கள். இதை எப்படி குற்றம் என்று சொல்ல முடியும்?

இந்த அளவுக்குக் கொள்ளை அடிப்பதால்தான் காப்பி எடுக்கிறார்கள் என்று உணர்ந்து குறைந்த விலைக்கு விற்க அவர்கள் முன் வரவேண்டும். இதன் மூலம் காப்பி எடுப்பதை அவர்கள் தடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர காசு கொடுத்து வாங்கிய பிறகும் வாங்கியவனுக்கு உனக்கு உரிமை இல்லை என்று கூற முடியாது.

காசு கொடுத்து வாங்காமல் திருடி காப்பி எடுப்பதுதான் திருட்டாக ஆகும். ஒரு சாப்ட்வேரை விலை கொடுத்து வாங்கி அதைக் காப்பி எடுத்து பலரும் பகிர்ந்து கொள்வது எந்த வகையிலும் தவறாகாது.

ஒரு சட்டையை விற்கும் போது நீ ஒரு தடவை தான் அணிய வேண்டும் என்றோ, யாருக்கும் கொடுக்கக் கூடாது என்றோ நிபந்தனை விதித்தால் அது செல்லாது. அது போல் தான் இதுவும் அமைந்துள்ளது.

இது நேரடி ஆதாரத்தின் மூலம் இல்லாமல் சிந்தித்துக் கூறப்படும் கருத்தாக உள்ளதால் இது சரி என்று படக்கூடியவர்கள் ஏற்றுக் கொள்ளலாம். இவ்வாறு புரிந்து கொள்ள இடமில்லை என்று கருதுவோர், தாம் தவறு என்று கருதுவதைச் செய்ய வேண்டாம்,.

மார்க்கத்தில் தடுக்கப்படாத காரியத்தை உலக நாடுகளின் சட்டம் தடுக்குமானால் அதனால் சங்கடங்கள் ஏற்படுமானால் அப்போதும் அதைக் கவனத்தில் கொள்வது தவறல்ல.

09.01.2010. 2:12 AM

அரவாணிகள் குறித்து இஸ்லாம் கூறுவது என்ன?

பஷீர்

பதில் :

இறைவன் படைப்பில் ஆண் பெண் என்ற இரு இனங்கள் உள்ளன. ஆண் இனத்துக்கும், பெண் இனத்துக்கும் உடல் தோற்றத்தில் மட்டுமின்றி குணம் நடத்தை ஆகிய விஷயங்களிலும் வேறுபாடு உள்ளது.

ஆனால் அரவாணிகள் என்போர் இதிலிருந்து மாறுபட்டவர்களாகக் காட்டிக் கொள்கின்றனர். உண்மையில் இவர்கள் குறைபாடு உள்ள ஆண்களேயாவர்.

இது இவர்களின் உடலில் ஏற்பட்ட பாதிப்பாகும். மனிதனின் சுய முயற்சி இல்லாமல் இறைவனுடைய சோதனையாக சில நேரங்களில் இது போன்ற பாதிப்புகள் ஏற்படுவதுண்டு.

இதைப் பொறுத்துக் கொண்டால் அதற்குரிய கூலியை இறைவன் நிச்சயம் கொடுப்பான். மேலும் மருத்துவம் செய்து இந்தக் குறையைச் சீர் செய்ய முயற்சிக்கலாம். சிகிச்சைக்குப் பின் ஆண்களுக்குரிய அனைத்து அம்சங்களும் இவர்களுக்குக் கிடைத்துவிடும் என்று மருத்துவர் கூறினால் இந்த மருத்துவத்தை மேற்கொள்ள வேண்டும்.

ஆண்மைக் குறைபாடு காரணமாக அரவாணிகள் என்ற பேர் பெற்ற இவர்கள் அதைத் தக்க முறையில் எதிர் கொள்வதில்லை. ஆண்களாகவே நாம் காட்சி அளித்தால் நமக்குத் திருமணம் செய்ய பெற்றோர் முயற்சிப்பார்கள்; இதைத் தவிர்ப்பதற்காக தம்மை மூன்றாம் பாலினம் போல் காட்டுகிறார்கள்.

அதிகமான அரவாணிகள் இப்படி தம்மைத் தாமே இழிவுபடுத்தினாலும் சில அரவாணிகள் இதை வேறு விதமாக எதிர் கொண்டு உயர் நிலையை அடைகின்றனர்.

நாட்டுக்குச் சேவை செய்வதற்காக திருமணம் செய்யாமல் இருக்கப் போகிறேன் எனக் கூறி திருமண வாழ்வைத் தவிர்க்கின்றனர். முற்றிலும் ஆணாகக் காட்டிக் கொண்டு ஆண்களைப் போலவே அவர்கள் நடத்தைகளை அமைத்துக் கொண்டு ஜனாதிபதிகளாகவும், பிரதமர்களாகவும், இன்னும் பல பதவிகளைப் பெற்றவர்களாகவும் ஆகி விடுகிறார்கள்.

இன்னும் பலர் ஆண்களாகவே தம்மை காட்டிக் கொண்டு குடும்பச் சூழ்நிலைகளைக் காரணம் காட்டி திருமணம் செய்யாமல் உயர் பதவிகளிலும், வேலைகளிலும் இருந்து சாதனை படைக்கின்றனர்.

பெண்களைப் போல் நடித்து ஒழுக்கக் கேட்டைப் பரப்புபவர்களை விட இவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

இஸ்லாம் இவர்களை ஆண்களாகவே கருத வேண்டும் என்று வழிகாட்டுகிறது.

இவர்கள் ஆண்களைப் போன்றே ஆடைகளையும், நடத்தைகளையும் அமைத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் இன்றைக்கு அரவாணிகள் நவீன கருவிகளையும், மருந்துகளையும் பயன்படுத்தி தங்களைப் பெண்களாக மாற்றிக் கொள்கின்றனர். செயற்கையாக பெண் போன்ற உடலமைப்பை உருவாக்கிக் கொள்கின்றனர். இதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை. இறைவனுடைய படைப்பில் மாற்றம் செய்வதை அல்லாஹ் தடை செய்துள்ளான்.

அவர்களை வழிகெடுப்பேன்; அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்; அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள் (எனவும் ஷைத்தான் அல்லாஹ்விடம் கூறினான்). அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நஷ்டத்தை அடைந்து விட்டான்.

திருக்குர்ஆன் 4:119

உருவத்தில் ஆணாக இருந்து கொண்டு பெண்களைப் போன்று உடை அணிவதையும் அலங்காரம் செய்து கொள்வதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.

صحيح البخاري

5885 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: «لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ المُتَشَبِّهِينَ مِنَ الرِّجَالِ بِالنِّسَاءِ، وَالمُتَشَبِّهَاتِ مِنَ النِّسَاءِ بِالرِّجَالِ»

பெண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் ஆண்களையும், ஆண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் பெண்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 5885

5886حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ حَدَّثَنَا هِشَامٌ عَنْ يَحْيَى عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ لَعَنَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُخَنَّثِينَ مِنْ الرِّجَالِ وَالْمُتَرَجِّلَاتِ مِنْ النِّسَاءِ وَقَالَ أَخْرِجُوهُمْ مِنْ بُيُوتِكُمْ قَالَ فَأَخْرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فُلَانًا وَأَخْرَجَ عُمَرُ فُلَانًا رواه البخاري

பெண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் ஆண்களையும், ஆண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் பெண்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள். மேலும், அவர்களை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றுங்கள் என்று சொன்னார்கள். அவ்வாறே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒருவரை வெளியேற்றினார்கள். உமர் (ரலி) அவர்கள் ஒருவரை வெளியேற்றினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி 5886

அரவாணிகள் என்போர் ஆண்களாகவே கருதப்பட வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளனர்.

صحيح البخاري

4324 – حَدَّثَنَا الحُمَيْدِيُّ، سَمِعَ سُفْيَانَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ زَيْنَبَ بِنْتِ أَبِي سَلَمَةَ، عَنْ أُمِّهَا أُمِّ سَلَمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، دَخَلَ عَلَيَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَعِنْدِي مُخَنَّثٌ، فَسَمِعْتُهُ يَقُولُ لِعَبْدِ اللَّهِ بْنِ أَبِي أُمَيَّةَ: يَا عَبْدَ اللَّهِ، أَرَأَيْتَ إِنْ فَتَحَ اللَّهُ عَلَيْكُمُ الطَّائِفَ غَدًا، فَعَلَيْكَ بِابْنَةِ غَيْلاَنَ، فَإِنَّهَا تُقْبِلُ بِأَرْبَعٍ، وَتُدْبِرُ بِثَمَانٍ، وَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ يَدْخُلَنَّ هَؤُلاَءِ عَلَيْكُنَّ»

என்னிடம் அரவாணி ஒருவர் அமர்ந்திருந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அந்த அரவாணி, (என் சகோதரர்) அப்துல்லாஹ் பின் அபீ உமய்யாவிடம், அப்துல்லாஹ்வே! நாளை தாயிஃப் நகர் மீது உங்களுக்கு அல்லாஹ் வெற்றியளித்தால் நீ ஃகய்லானின் மகளை மணமுடித்துக் கொள். ஏனென்றால், அவள் முன்பக்கம் நாலு(சதை மடிப்புகளு)டனும், பின்பக்கம் எட்டு(சதை மடிப்புகளு)டனும் வருவாள் என்று சொல்வதை நான் செவியுற்றேன். (இதைக் கேட்ட) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இந்த அரவாணிகள் (பெண்களாகிய) உங்களிடம் ஒரு போதும் வர (அனுமதிக்க)க் கூடாது என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : உம்மு சலமா (ரலி)

நூல் : புகாரி 4324

ஆண்கள் எவ்வாறு பெண்களுடன் தனித்து இருக்கக் கூடாதோ அதுபோல் அரவாணிகளும் எந்தப் பெண்ணுடனும் தனித்திருக்க்க் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளனர்.   எனவே அரவாணிகளாக இருப்பவர்கள் ஆண்களுக்குரிய சட்டத்தின் அடிப்படையில் வாழ வேண்டும் என்பதை இதன் மூலம் அறியலாம்.

மேலும் இன்றைக்கு உள்ள அரவாணிகள் சமுதாயத்திற்கு நிறைய தீங்குகளை ஏற்படுத்துகின்றனர். ஒழுக்கமான ஆண்களைக் கவர்ந்து விபச்சாரத்திற்கு அழைக்கின்றனர். இதன் மூலம் உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸைப் பரப்புவதில் இவர்களே பெரும்பங்கு வகிக்கின்றனர்.

பேருந்து நிலையம், இரயில் நிலையம் போன்ற பொது இடங்களில் மிகவும் துணிச்சலாக பிச்சை எடுக்கின்றனர். கை கால் நன்றாக இருந்தும் உழைத்து உண்பதற்கு உடலில் வலு இருந்தும் மானங்கெட்டு பிச்சை எடுக்கின்றனர். பிச்சை போடாவிட்டால் அசிங்கமான வார்த்தைகளால் திட்டுகின்றனர்.

பலர் இவர்களின் கேடுகெட்ட நடத்தைக்கு அஞ்சி காசைத் தூக்கி எறிந்து விடுகின்றனர். இது ஒரு வகையான கொள்ளைத் தொழிலாகும்.

صحيح البخاري

6054 – حَدَّثَنَا صَدَقَةُ بْنُ الفَضْلِ، أَخْبَرَنَا ابْنُ عُيَيْنَةَ، سَمِعْتُ ابْنَ المُنْكَدِرِ، سَمِعَ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ: أَنَّ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا أَخْبَرَتْهُ قَالَتْ: اسْتَأْذَنَ رَجُلٌ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «ائْذَنُوا لَهُ، بِئْسَ أَخُو العَشِيرَةِ، أَوِ ابْنُ العَشِيرَةِ» فَلَمَّا دَخَلَ أَلاَنَ لَهُ الكَلاَمَ، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، قُلْتَ الَّذِي قُلْتَ، ثُمَّ أَلَنْتَ لَهُ الكَلاَمَ؟ قَالَ: «أَيْ عَائِشَةُ، إِنَّ شَرَّ النَّاسِ مَنْ تَرَكَهُ النَّاسُ، أَوْ وَدَعَهُ النَّاسُ، اتِّقَاءَ فُحْشِهِ»

ஆயிஷா! எவரது அவருவருப்பான பேச்சுகளிலிருந்து (தங்களைத்) தற்காத்துக் கொள்ள அவரை விட்டு மக்கள் ஒதுங்குகிறார்களோ அவரே மக்களில் தீயவர் ஆவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி 6054

இஸ்லாத்தின் பார்வையில் மூன்றாம் பாலினம் என்ற ஒன்று இல்லை. அரவாணிகளும் ஆண்கள் தான். குறைபாடுள்ள ஆண்கள் அவ்வளவுதான். திருமணம் செய்வதைத் தவிர்த்துக் கொண்டு எல்லா வகையிலும் ஆண்களைப் போலவே அவர்கள் நடந்து கொள்வது கடமையாகும்.

11.04.2011. 12:41 PM

ஆங்கில மருத்துவத்தை இஸ்லாம் அனுமதிக்கிறதா?

அலோபதி எனும் ஆங்கில மருத்துவத்தால் கேடுகள் ஏற்படுவதால் அந்த மருத்துவம் செய்வது இஸ்லாத்துக்கு எதிரானது என்று சிலர் பிரச்சாரம் செய்கிறார்கள். கேடு தரும் அனைத்தும் மார்க்கத்தில் ஹராம் என்ற நபிமொழியை எடுத்துக் காட்டுகிறார்கள்.

சில நோய்கள் வாராமல் இருக்க தடுப்பூசி போடுவதும், போலியோ சொட்டு மருந்து போடுவதும், காய்ச்சல், சர்க்கரை நோய்க்கு ஆங்கில மருத்துவம் பார்ப்பதும் கூடாது எனவும் பிரச்சாரம் செய்கிறார்கள்.

நோய்கள் அனைத்தும் நமது உடலைச் சரி செய்வதற்காகவே வருகிறது. எனவே எந்த மருத்துவமும் பார்க்கக் கூடாது. அந்த நோய்கள் தானாகக் குணமாகும் வரை பொருத்து இருந்தால் உடலில் உள்ள குறைபாடுகள் நீங்கி விடும் என்று சிலர் கூறுகின்றனர்.

மற்றும் சிலர் ஹோமியோபதி, ஆயுர்வேதிக், யூனானி, சித்தா, அக்கூ பஞ்சர், ஆகிய மருத்துவம் பார்க்கலாம். அல்லோபதி மருத்துவம் மட்டும் கூடாது என்று கூறுகிறார்கள்.

மருந்துகளை விற்பதற்காகவே நோயாக இல்லாத ஒன்றை நோய் என்று சொல்லி அல்லோபதி மருத்துவர்கள் பொய் சொல்கிறார்கள் என்றும் கூறுகின்றனர்.

இஸ்லாமிய அடிப்படையில் இது குறித்து என்ன முடிவு எடுப்பது?

அப்துர்ரஹ்மான்

பதில்:

இன்னின்ன ஆங்கில மருந்துகள் இன்னின்ன பாதிப்புகளை ஏற்படுத்தும்; பாரதூரமான பக்க விளைவுகளை ஏற்படுத்தும்; இது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே கேடு தரும் அனைத்தும் ஹராம் என்ற நபிமொழியின் அடிப்படையில் ஆங்கில மருத்துவம் கூடாது என்பதுதான் மார்க்க அடிப்படையில் வைக்கப்படும் வாதமாகும்.

இது குறித்து முதலில் நாம் ஆய்வு செய்வோம்.

கேடு தரும் அனைத்தும் ஹராம் என்பது இஸ்லாத்தின் அடிப்படைச் சட்டங்களில் ஒன்றாக இருக்கிறது உண்மை தான்.

கேடு தரும் வழியைத் தவிர்த்தால் அதைவிட அதிகக் கேடு ஏற்படும் என்றால் அதிகக் கேட்டிலிருந்து விடுபடுவதற்காக சிறிய கேட்டைச் சகித்துக் கொள்ளலாம் என்பதும் இஸ்லாத்தின் அடிப்படைச் சட்டங்களில் ஒன்றாகும்.

மதுபானத்தையும், சூதாட்டத்தையும் அல்லாஹ் தடை செய்தபோது அதில் மனிதர்களுக்குச் சில பயன்கள் உள்ளன. அதன் பயனை விட அதன் கேடு அதிகமாக உள்ளது என்று கூறுகிறான்

மது மற்றும் சூதாட்டம் பற்றி உம்மிடம் கேட்கின்றனர். "அவ்விரண்டிலும் பெரும் கேடும், மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு இவ்வுலகிலும், மறுமையிலும்1 மிகப் பெரியது'' எனக் கூறுவீராக!

திருக்குர்ஆன் 2:219

பயன்களையும், கேடுகளையும் எடை போட்டு, கேடுகள் தான் அதிகம் என்பதால் மதுவையும், சூதையும் அல்லாஹ் தடை செய்ததாக இவ்வசனம் கூறுகிறது.

ஆங்கில மருந்துகள் பெரும்பாலும் ரசாயண முறையில் தயாரிக்கப்படுவதால் அதனால் பக்க விளைவுகளும், சில பாதிப்புகளும் ஏற்படும் என்பது உண்மை தான். ஆனால் அதனால் ஏற்படும் குணமடைதல் என்ற நன்மைக்காக அந்தப் பக்க விளைவுகளைச் சகித்துக் கொள்வது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட அம்சம் தான்.

ஒருவன் தனது மனைவியை விவாகரத்து செய்தால் அது அவளுக்குக் கேடுதான். ஆனால் விவாகரத்துச் செய்வதில் கணவன் உறுதியாக இருக்கும் போது அதை அனுமதிக்காவிட்டால் அவளது உயிருக்கே ஆபத்து ஏற்படக்கூடும் என்பதை எண்ணிப் பார்க்கும் போது பெரிய தீமை ஏற்படாமல் தடுக்க விவாகரத்து எனும் சின்ன தீமை அனுமதிக்கப்படுகிறது என்று புரிந்து கொள்கிறோம்.

ஆண்கள் பலதார மணம் செய்வது முதல் மனைவியருக்குப் பாதிப்பு என்ற போதும், ஆண்கள் விபச்சாரத்தில் தான் விழுவார்கள் என்ற நிலை ஏற்படும் போது அந்தப் பெரிய தீமையில் விழாமல் இருக்க பெண்களுக்கு சிறிய பாதிப்பாக உள்ள பலதார மணம் அனுமதிக்கப்பட்டது என்று புரிந்து கொள்கிறோம்.

இஸ்லாத்தில் இப்படி ஏராளமான சட்டங்கள் உள்ளன.

இந்த அடிப்படையை ஆங்கில மருத்துவம் தவிர மற்ற விஷயங்களில் அனைவரும் சரியாகவே புரிந்து நடந்து கொள்கிறோம்.

உதாரணமாக ஏர் கண்டிஷன், பிரிட்ஜ் ஆகிய சொகுசான சாதனங்களை நாம் பயன்படுத்துகிறோம். இவற்றில் இருந்து வெளிப்படும் கதிர்களால் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுகிறது. சூரியனில் இருந்து வெளிப்படும் புற ஊதாக் கதிர்களைத் தடுக்கும் ஓசோன் படலம் பாதிக்கப்பட்டால் புற ஊதாக் கதிர்கள் வடிகட்டப்படாமல் பூமிக்கு வரும். இதனால் பல வித நோய்கள் ஏற்படும் என்று கண்டறிந்துள்ளனர்.

ஆனாலும் இந்த சாதனங்களால் நமக்குக் கிடைக்கும் உடல் சுகத்துக்காக அதை நாம் சகித்துக் கொள்கிறோம். ஓசோன் படல பாதிப்பை விட உடல் சுகம் நமக்குப் பெரிதாகத் தெரிவதால் அதை நாம் எந்த உறுத்தலும் இல்லாமல் பயன்படுத்துகிறோம்.

ஆங்கில மருத்துவத்துக்கு எதிராக வைக்கப்படும் வாதம் இதற்கும் பொருந்தும் என்றாலும் யாரும் பொருத்திப் பார்ப்பதாகத் தெரியவில்லை.

புவி வெப்பம் அதிகமாவதால் பனிமலைகள் விரைவாக உருகி கடலில் கலக்கும். இதனால் கடல் நீர் மட்டம் அதிகமாகி நிலப்பரப்பை விழுங்கி விடும். கடலை ஒட்டிய ஊர்கள் காணாமல் போய்விடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். ஆனாலும் கார், பேருந்து, லாரி, ரயில் என எரி பொருளில் இயங்கும் வாகனங்களைப் பயன்படுத்தி பூமியின் வெப்பத்தை நாம் அதிகமாக்குகிறோம். வீடுகளில் மிக்ஸி, கிரைண்டர், வாஷின் மிசின், ஓவன், டிவி இன்னும் பல நவீன சாதனங்களைப் பயன்படுத்தி பூமியின் வெப்பத்தை அதிகப்படுத்துகிறோம். இதனால் பாரதூரமான பாதிப்புகள் ஏற்படும் என்று தெரிந்தும் இதனால் நமக்குக் கிடைக்கும் நன்மைகள் அதிகம் என்று நாம் கருதுவதால் பூமி வெப்பமாவது பற்றி கவலைப்படாமல் இருக்கிறோம்.

காற்று மாசுபடுவதால் தான் அதிகமான கேடுகள் மனிதனுக்கு ஏற்படுகின்றன. பயனற்ற பட்டாசு போன்றவற்றால் காற்றை மாசுபடுத்துவதை நாம் தவறு என்கிறோம். ஆனால் நமது வாகனங்களில் இருந்து வெளிப்படும் நச்சுப்புகையால் காற்று மாசுபட்டாலும் அவற்றை நாம் பயன்படுத்தவே செய்கிறோம். ஏனெனில் அதனால் நமக்கு ஏற்படும் நேரம் மிச்சமாவது, சிரமம் குறைவது, அதிக வேலைகள் செய்ய முடிவது போன்ற நன்மைகள் இருப்பதால் வாகனங்களைப் பயன்படுத்துகிறோம். வசதி இல்லாவிட்டாலும் வாடகை வாகனத்திலும், பேருந்துகளிலும் பயணம் செய்கிறோம்.

இதனால் நாம் ஏற்படுத்தும் பக்க விளைவுகளை நாம் பொருட்படுத்துவதில்லை.

இப்படி ஆயிரமாயிரம் உதாரணங்களை நாம் கூறலாம்.

ஆங்கில மருத்துவத்தால் பக்க விளைவுகள் உண்டு என்றாலும் அதனால் கிடைக்கும் நன்மை அதிகம் என்றால் தாராளமாகப் பயன்படுத்தலாம்.

தலவலி வந்தால், காய்ச்சல் வந்தால், ஜல தோசம் வந்தால் மருத்துவம் செய்ய வேண்டாம்; தானாக குணமாகி விடும் என்ற வாதமும் மடமையான வாதமாகும்.

மேற்கண்ட வியாதிகள் தானாக குணமாகும் என்பது பெரும்பாலும் உண்மைதான். ஆனால் ஒரு நிறுவனத்தை நடத்துபவன் தானாக குணமாகட்டும் என்று பத்து நாட்கள் படுத்துக் கிடந்தால் சோற்றுக்கு என்ன செய்வது? நிறுவனத்தின் நிர்வாகம் என்னாவது?

ஒரு நிறுவனத்தின் ஊழியர் காய்ச்சலுக்காக ஒரு நாள், இரு நாட்கள் விடுமுறை எடுத்தால் முதலாளி சலுகை கொடுப்பார். அடிக்கடி பத்து நாட்கள், இருபது நாட்கள் விடுமுறை எடுத்தால் வேலை காலியாகி விடும். யாரும் அவரை வேலைக்கு வைத்துக் கொள்ள மாட்டார்கள். எனவே ஒரு மாத்திரையைப் போட்டுகொண்டு காய்ச்சல் குறைந்த பின் பணிகளில் ஈடுபட்டால் அதனால் கிடைக்கும் நன்மைகள் அதிகம். இதுதான் நடைமுறைக்கு ஏற்றது.

தானாக குணமாகும் என்று படுத்துக் கிடப்பவன் உழையாத் தடியனாக, சோம்பேறியாக இருப்பான். குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பை உணராதவனாக இருப்பான். அல்லது பரம்பரைச் சொத்து அதிகம் இருந்து படுத்துக் கொண்டே சாப்பிடுபவனாக இருப்பான்.

இந்தத் தத்துவத்தை ஒரு வீட்டுக்கு வாழ்க்கைப்பட்டுப் போன பெண் கடைப்பிடித்தால் என்னவாகும்? காய்ச்சல் வந்தவுடன் மாத்திரை ஊசி போட்டுக் கொண்டு ஓரிரு நாட்களில் எழுந்து விட்டால் பிரச்சனை இல்லை. தானாகக் குணமாகும் என்று ஜலதோசத்துக்கு பத்து நாட்கள், காய்ச்சலுக்கு பத்து நாட்கள் படுத்துக் கிடந்தால் விவாகரத்தில் தான் முடியும்.

எந்தக் கருத்தைக் கூறுவதாக இருந்தாலும் அது பிராக்டிகலாக சரிப்படுமா என்று கவனிக்க வேண்டும். வரட்டுத் தத்துவத்தைப் பரப்பினால் மருத்துவம் செய்வதால் ஏற்படும் கேடுகளை விட பெருங்கேடு வாழ்க்கையில் ஏற்பட்டு விடும்.

மேலும் இந்த நோய்கள் தானாக்க் குணமாகும் என்று கூறுவோர் தலைவலி காய்ச்சலைத்தான் உதாரணம் காட்டுகின்றனர். ஒருவனுக்கு கேன்சர் வந்து விட்டால் அது தானாகக் குணமாவதில்லை. மருத்துவத்தினலும் சரிபாதி பேருக்குக் குணமாவதில்லை. ஒவ்வொரு நாளும் அது வளர்ந்து வருவதை ஸ்கேன் செய்து பார்க்க முடியும். கேன்சர் வந்த ஒருவன் எந்த மருத்துவமும் செய்யாமல் குணமானான் என்பதற்கு ஒரே ஒரு உதாரணம் கூட இல்லை.

என்னை ஒரு ஊரில் உரை நிகழ்த்த அழைத்துள்ளனர் என்று வைத்துக் கொள்வோம். எட்டு மணிக்கு நான் உரை நிகழ்த்த வேண்டும். ஏழு மணிக்கு எனக்குத் தலைவலி வந்து விட்டால் என்னால் உரை நிகழ்த்த முடியாது. இது தானாகக் குணமாகும் நோய் என்றாலும் ஒரு மாத்திரையைப் போட்டால் தலைவலி அரை மணி நேரத்தில் போய்விடுகிறது. இப்போது என்னால் உரை நிகழ்த்த முடியும். இதற்காக செய்த ஏற்பாடுகளும், செலவுகளும் வீணாகாமல் தவிர்க்கப்படும். அந்த மாத்திரையால் சிறு பக்க விளைவு ஏற்பட்டாலும் பரவாயில்லை என்பதுதான் பிராக்டிகலான முடிவாகும்.

அடுத்து ஆங்கில மருத்துவம் வேண்டாம்; மற்ற மருத்துவம் சரி என்று வாதிட்டால் அதுவும் முழுமையாக சரியான வாதம் அல்ல.

ஆங்கில மருத்துவம் மட்டுமே ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டதாகும். மற்ற மருத்துவ முறைகள் ஆய்வு ஏதுமின்றி பாரம்பர்ய அடிப்படையில் சொல்லப்பட்டதாகும். அவற்றில் பெரும்பாலும் வாயில் வந்தவாறு விட்டு அடிப்பவர்கள் அதிகமாகும்.

ஒருவருக்கு இரத்தத்தில் சர்க்கரை அதிகமாக இருந்தால் நீங்காத நாக்கு வரட்சி ஏற்படும். பாதங்களில் வலி ஏற்படும். அடிக்கடி சிறு நீர் போகும். மலச் சிக்கல் ஏற்படும். உடல் அதிகமாக மெலியும். இப்படி பல அறிகுறிகள் உள்ளன. இவற்றைப் பார்க்கும் ஆங்கில மருத்துவர்கள் இரத்தத்தில் சர்க்கரை அதிகமாக இருக்கலாம்; டெஸ்ட் எடுங்கள் என்று கூறுகிறார்கள். டெஸ்ட் எடுத்துப் பார்த்தால் சக்கரையின் அளவு அதிகமாக இருப்பது தெரிகிறது. இதற்கு மாத்திரை உட்கொண்ட பின்னர் சர்க்கரை கட்டுக்குள் வருகிறது. அதன் பின்னர் அதையே தொடராமல் உணவுக்கட்டுப்பாடு, வாக்கிங், உடலுழைப்பு என்று வாழ்க்கையை அமைத்துக் கொள்வது நல்லது என்று தான் அதிகமான மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இந்த நிலை எனக்கு ஏற்பட்டு சர்க்கரையைக் குறைக்கும் மாத்திரைகளை சில நாட்கள் எடுத்து அதன் பின்னர் டாக்டர்களின் ஆலோசனைப்படி மாத்திரை இல்லாமல் கட்டுப்பாட்டில் வைத்துள்ளேன்.

ஆனால் நாக்கைக் கட்டுப்படுத்த நாம் தயாராக இல்லாததாலும், உடலுழைப்புக்குத் தயாராக இல்லாததாலும் மாத்திரை தான் வாழ்க்கை என்று நாம் ஆக்கிக் கொள்கிறோம்.

இரத்தத்தில் சர்க்கரை ஆரம்ப நிலையில் இருக்கும் போது மாற்று மருத்துவம் சிறிய அளவில் பயன் தரலாம். ஆனால் சர்க்கரை முற்றிய பிறகு மாற்று மருத்துவம் என்று போனவர்கள் சீக்கிரமே போய் சேர்ந்து விட்டனர் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன.

மருந்தை விற்பதற்காக சர்க்கரை நோய் என்கின்றனர் என்றும் வாதிடுகின்றனர்.

மருந்தை விற்பதில் என்ன தவறு உள்ளது? இரத்தத்தைச் சோதிக்காமல் ஒவ்வொருவருக்கும் சர்க்கரைக்கான மாத்திரையைத் தருவதில்லை. டெஸ்ட் செய்து பார்த்து இவருக்கு இவ்வளவு கொடுக்கலாம் என்று முடிவு செய்த பின் மாத்திரை கொடுக்கின்றனர். மாத்திரை தான் கொடுக்க வேண்டும் என்ற நிலையில் மாத்திரை கொடுத்தால் காசுக்காக எழுதித் தருகின்றனர் என்ற வாதம் அறிவுடைய வாதமா? எல்லாமே காசுக்காகத் தான் செய்கின்றனர்.

எந்த ஆய்வும் இல்லாமல் வாயில் வந்ததை உளறுவோரின் கூற்றை நம்பும் இவர்கள் ஆய்வு அடிப்படையில் இரத்தத்தை எடுத்து சோதித்துப் பார்த்து சர்க்கரையில் அளவு கூடியதையும், குறைந்து இருப்பதையும் சொல்லி மாத்திரை எழுதித் தந்தால் மாத்திரையை விற்கத் தான் இப்படி கூறுவதாகப் பிரச்சாரம் செய்கின்றனர்.

அப்படியானால் மற்ற மருந்துகள் எல்லாம் இலவசமாகத் தருகிறார்களா? லேகியம், சூரணம், தைலம், அரிஷ்டம் என்று தருகிறார்களே அவை ஆங்கில மருந்துகளை விட அதிக விலை கொண்டவை. ஆங்கில மாத்திரை நாலணாவுக்குக் கிடைக்கும். உடனே குணம் ஏற்படும். லேகியம், சூரணம் இரண்டாயிரம், மூன்றாயிரம் என்று பிடுங்கி விடுகின்றனர். ஒன்றும் ரிசல்ட் இல்லையே என்று கேட்டால் இன்னும் மூன்று மாதம் சாப்பிடுங்கள்; மெதுவாகத் தான் குணமாகும் என்கிறார்கள்.

அறிவாளிகளுக்கு இதுவல்லவா மோசடியாகத் தெரிய வேண்டும்?

எனக்கு கேன்சர் வந்தது. ஆபரேசன் செய்வதற்குப் பயந்து கொண்டு ஹோமியோபதிக்குப் போனேன். ஆனால் மூன்று மாதம் அந்த மருந்தை எடுத்ததில் கட்டி மேலும் பெரிதாகியது. ஹோமியோபதியில் இதற்கு நிவாரணம் இல்லை என்று உணர்ந்து ஆப்ரேசன் செய்தேன். ஆரம்ப ஸ்டேஜில் அறுவை சிகிச்சை செய்த்தால் அந்த அறிகுறி சிறிதும் இல்லாமல் ஐந்து ஆண்டுகளாக இருந்து வருகிறேன்.

அடிக்கடி மூச்சு இளைப்பு ஏற்பட்டதால் ஸ்கேன் செய்து பார்த்து இரத்தக் குழாயில் அடைப்பு இருப்பது தெரிய வந்தது. நான் லேகியம் சாப்பிட்டுக் கொண்டு இருந்தால் சரிப்படாது என்று கருதி ஆஞ்சயோ பிளாஸ்ட் செய்து கொண்டேன். அதன் பின்னர் நான் முன் போல் நிகழ்ச்சிகளில் பங்கு பெறும் அளவுக்கு நன்றாக உள்ளேன்.

அம்மை, காலார என்று ஊரையே வாரிச் சுருட்டிய கொள்ளை நோய்களை அறுபது வயதைக் கடந்தவர்கள் அறிவார்கள். இன்று அம்மை, காலரா அறவே இல்லை. அதற்கான தடுப்பு ஊசி மூலம் அவை ஒழிக்கப்பட்டு விட்டன.

உயிர்க் கொல்லி நோய்கள் விஷயத்தில் அலோபதி தவிர வேறு மருத்துவ முறைகளை மேற்கொண்டவர்கள் குணமடைய முடியவில்லை.

சாதாரண நோய்களாக இருந்தால் பாட்டி வைத்தியம் கூட செய்து கொள்ளலாம்.

ஆங்கில மருத்துவத்தை வைத்து பிழைப்பு நடத்துவோர் பலர் செய்யும் அநியாயம் காரணமாக மருத்துவ முறையைக் குறை காண்பது நியாயமல்ல. எதற்கெடுத்தாலும் ஸ்கேன் செய்யச் சொல்வதும்,  தமக்கு கிடைக்கும் கமிஷனுக்காக தேவையற்ற சோதனைகளை எழுதிக் கொடுப்பதும், கமிஷனுக்காக அதிக விலையுள்ள மாத்திரைகளை எழுதிக் கொடுப்பதும், பிணத்துக்கு வைத்தியம் பார்த்து பணம் பிடுங்குவதும் உண்மை.

ஆனால் நல்ல மருத்துவர்களைக் கண்டறிந்து விட்டால் ஆங்கில மருத்துவத்துக்கு நிகரான மருத்துவம் ஏதும் இல்லை. பக்க விளைவுகள் இருந்தாலும் காரண காரியங்களை ஆய்வு செய்து கருவிகள் மூலம் உறுதி செய்து அந்தக் காரணத்துக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கும் முறையாக அது மட்டும் தான் உள்ளது என்பது தான் உண்மை.

பொது சிவில் சட்டம் சாத்தியமா?

கேள்வி – 1

இந்தியா மதச்சார்பற்ற நாடு எனும் போது முஸ்லிம்களுக்கு மட்டும் தனியாக சிவில் சட்டம் இருப்பது நியாயமா என்று அறிவுஜீவிகளும், வழக்கறிஞர்களும் கேட்பது நியாயமாகத்தானே உள்ளது?

தமிழ்ச் செல்வன், திருச்சி

கேள்வி – 2

அரசியல் சாசனத்தில் பொதுசிவில் சட்டம் கொண்டு வருமாறு சொல்லப்பட்டுள்ளதால், அதை நிறைவேற்றுவோம் என்று பாஜக தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. அரசியல் சாசனத்தில் அவ்வாறு கூறப்பட்டுள்ளதா?

சலீம் கான், தாம்பரம்

கேள்வி – 3

முஸ்லிம்களுக்குத் தனிசிவில் சட்டம் கேட்கும் முஸ்லிம்கள் தனி கிரிமினல் சட்டத்தையும் கேட்கத் தயாரா? இஸ்லாமியக் கிரிமினல் சட்டம் கடுமையாக உள்ளதால் அதற்குப் பயந்து கொண்டு இஸ்லாமியக் கிரிமினல் சட்டத்தை முஸ்லிம்கள் கோருவதில்லை என்று எங்கள் பகுதியைச் சேர்ந்த தி.க.வைச் சேர்ந்த பெரியவர் கேட்கிறார். இதற்கு நாம் எவ்வாறு பதில் சொல்வது?

டிஎன்டிஜே கிளை, தர்மபுரி

கேள்வி – 4

ஒரு வேளை பாஜக ஆட்சிக்கு வந்து பொதுசிவில் சட்டம் கொண்டு வந்தால் நாம் என்ன செய்வது? அதை எப்படி எதிர்கொள்வது?

அஸ்மா மைந்தன், திருவாரூர்

கேள்வி – 5

பொது சிவில் சட்டம் சாத்தியமா?

இப்ராஹீம், கல்லிடைக் குறிச்சி

பதில்:

நமது நாட்டில் எல்லா மக்களுக்கும் ஒரே சிவில் சட்டம்தான் உள்ளது. இதை முதலில் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

சிவில் எனும் உரிமை சம்மந்தப்பட்ட விவகாரங்களில் முஸ்லிம்கள் நீதிமன்றத்தை அணுகினால் அல்லது முஸ்லிமுக்கு எதிராக மற்றவர் நீதிமன்றத்தை அணுகினால் அப்போது இஸ்லாமியச் சட்டப்படி தீர்ப்பு அளிக்கப்படாது. அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டப்படிதான் தீர்ப்பு அளிக்கப்படும்.

உதாரணமாக ஒரு 15 வயது சிறுவன் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்பதாக வைத்துக் கொள்வோம். ஒருவன் விரும்பும் மதத்தைத் தழுவுவது சிவில் – உரிமை சம்மந்தப்பட்ட விஷயமாகும்.

இது குறித்து யாராவது நீதிமன்றத்தை அணுகினால் இஸ்லாமியச் சட்டப்படி 15 வயதில் ஒருவன் மேஜர் ஆகிறான் என்பதால் அந்தச் சட்டப்படி நீதிமன்றம் தீர்ப்பளிக்காது. பொதுவான சிவில் சட்டப்படி 18 வயதில்தான் மேஜர் ஆக முடியும் என்பதால் சிறுவன் இஸ்லாத்தை ஏற்றது செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளிக்கும். அத்துடன் அந்தச் சிறுவனை இஸ்லாத்தில் இணைக்க துணை நின்றவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்கும்.

இஸ்லாத்தில் இதற்கு சிவில் சட்டம் இருந்தும் அதற்கு மாற்றமான பொதுசிவில் சட்டத்தின்படிதான் நமது நாட்டில் தீர்ப்பு அளிக்கப்படும்.

ஒருவர் தனது இடத்தை வாடகைக்கு விடுகிறார்; இன்னொருவர் வாடகைக்குப் பெறுகிறார்; இது சிவில் பிரச்சனை.

இதற்கு இஸ்லாத்தில் தனிச் சட்டம் உள்ளது. இந்தியாவில் வேறு சட்டம் உள்ளது. வீட்டின் உரிமையாளருக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் இந்தியச் சட்டப்படி தான் தீர்ப்பு அளிக்கப்படுமே தவிர, இஸ்லாமியச் சட்டப்படி தீர்ப்பு அளிக்கப்படாது.

இரண்டு முஸ்லிம்கள் மத்தியில் இப்பிரச்சனை ஏற்பட்டாலும் இஸ்லாமியச் சட்டப்படி தீர்ப்பு அளிக்கப்படுவதில்லை. அனைவருக்கும் பொதுவான சட்டப்படி தான் இதில் தீர்ப்பளிக்கப்படும்.

ஒருவர் ஒரு பொருளை வாங்குகிறார். அல்லது விற்கிறார். இது சிவில் (உரிமை) சம்மந்தப்பட்ட விஷயம். இஸ்லாத்தில் வியாபாரத்துக்கு தனியாக சிவில் சட்டம் உள்ளது. ஆனால் அந்தச் சட்டப்படி தீர்ப்பு அளிக்காமல் இந்தியச் சட்டப்படிதான் முஸ்லிமுக்கும் தீர்ப்பு அளிக்கப்படுகிறது.

கடன் வாங்குதல், கொடுத்தல் ஆகியன சிவில் பிரச்சனையாகும். எந்தக் கடனுக்கும் வட்டி இல்லை என்பது இஸ்லாமியச் சிவில் சட்டம். ஆனால் முஸ்லிம்கள் சம்மந்தப்பட்ட கொடுக்கல் வாங்கல் வழக்கு, நீதிமன்றத்துக்குப் போனால் இஸ்லாத்துக்கு எதிரான இந்தியச் சட்டப்படிதான் தீர்ப்பு அளிக்க முடியும். அப்படித்தான் தீர்ப்பு அளிக்கப்படுகிறது.

இப்படி ஆயிரமாயிரம் சிவில் (உரிமை) சம்மந்தப்பட வழக்குகளில் இந்துக்கள், முஸ்லிம்கள் என்ற பேதமில்லாமல் அனைவருக்கும் பொதுவான சட்டம்தான் உள்ளது.

ஆனால் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எல்லா விஷயத்திலும் தனியாகச் சட்டம் உள்ளதாக சங்பரிவாரத்தினர் திட்டமிட்டு பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

திருமணம், ஆண்களின் விவாகரத்து, பெண்களின் விவாகரத்து, இறந்தவரின் சொத்துக்களை அவரது உறவினர்கள் பிரித்துக் கொள்ளுதல், வஃக்பு சொத்துக்களை நிர்வகித்தல் ஆகிய விஷயங்கள் தவிர மற்ற அனைத்திலும் பொதுவான சட்டம்தான் முஸ்லிம்களுக்கும் உள்ளது.

மேற்கண்ட விஷயங்கள் முஸ்லிம்களுக்கு மத்தியில் மட்டும் நடக்கக் கூடியதாகும். இதில் முஸ்லிம்கள் தமது மதச் சட்டப்படி நடந்து கொண்டால், பிற சமுதாய மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. நாட்டுக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை.

ஒரு முஸ்லிம் தனது அக்காவின் மகளைத் திருமணம் செய்தால் அது செல்லாது என்று இஸ்லாம் கூறுகிறது. இந்த விஷயத்தில் இந்தியாவின் நீதிமன்றமும் இப்படித்தான் கூறும்.

இதுபோல் திருமண விஷயத்தில் எல்லா மதத்துக்கும் தனியான சட்டங்கள் உள்ளன.

ஒரு இந்து, உடன் பிறந்த சகோதரியைத் திருமணம் செய்தால் அதை இந்து மதம் திருமணமாக ஏற்காது என்பதால் நீதிமன்றமும் ஏற்காது.

ஒருவர் இறந்துவிட்டால் அவரது சொத்தை அவரது உறவினர்கள் எந்த விகிதாச்சாரத்தில் பிரித்துக் கொள்வது என்பதிலும் மற்ற சமுதாயத்துக்குச் சம்மந்தம் இல்லை. இது முஸ்லிம்களுக்கு இடையில் மட்டும் உள்ள சட்டமாகும். வஃக்பு சொத்தை இஸ்லாம் கூறும் முறைப்படிதான் செலவிட வேண்டும் என்பதிலும் மற்ற மதத்துக்கோ, சமுதாயத்துக்கோ எந்தப் பாதிப்பும் இல்லை.

இந்த நான்கு விஷயங்களில் மட்டும் முஸ்லிம்கள் தமக்கிடையே தமது மதச் சட்டப்படி நடக்க அனுமதிக்கப்பட்டதைத் தான் அனைத்திலும் முஸ்லிம்களுக்கு தனிச்சட்டம் உள்ளது போல் சித்தரிக்கின்றனர்.

முஸ்லிம்களுக்கு தனியாக சில சிவில் சட்டங்கள் இருப்பது போல் இந்துக்களுக்கும் தனியாக சில சிவில் சட்டங்கள் இந்தியாவில் உள்ளன.

இந்துக்கள் கூட்டுக் குடும்பமாக இருந்தால் அவர்களுக்கு வருமான விலக்கு உண்டு. இது முஸ்லிம்களுக்கு இல்லை. முஸ்லிமுக்கு அதிக வரியும், இந்துக்களுக்கு குறைந்த வரியும் என்ற நிலை இருந்தும் இது போல் இந்துக்களுக்கு மட்டும் சலுகை உள்ளது.

தத்தெடுக்கும் குழந்தை சொந்தப் பிள்ளையாகக் கருதப்படுவான் என்று இந்துக்களுக்கு மட்டும் தனிச்சட்டம் உள்ளது.

நிர்வாணமாகக் காட்சி தருவது சட்டப்படி குற்றம். ஆனாலும் இந்து மதத்திலும், ஜைன மதத்திலும் நிர்வாணச் சாமியார்களுக்கு அனுமதியிருப்பதால் நிர்வாணச் சாமியார்கள் போலீஸ் பாதுகாப்புடன் நடமாடி வருகின்றனர்.

குருவாள் என்ற பெயரில் கத்தியை எப்போதும் வைத்துக் கொள்ள சீக்கியர்களுக்கு நம் நாட்டுச் சட்டம் அனுமதி வழங்குகிறது. இதை மற்றவர்கள் செய்தால் சட்டப்படி குற்றமாகக் கருதப்படுகிறது.

இப்படி எல்லா மதத்தவர்களுக்கும் ஐந்தாறு விஷயங்களில் அவரவர் மதப்படி நடக்க அனுமதி அளிக்கப்பட்டதைக் கண்டு கொள்ளாமல் முஸ்லிம்களுக்கு தனி சிவில் சட்டம் இருப்பதாகக் கூறுவது உண்மைக்கு மாறானதாகும் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

இந்து முறைப்படி எல்லோரும் தாலி கட்டி திருமணம் செய்ய வேண்டும் என்று சொன்னால், வஃக்பு சொத்தை ஆடல் பாடலுக்கும், கோவில் திருவிழாக்களுக்கும் செலவிட வேண்டும் என்று சொன்னால் அதை ஏற்க முடியுமா? அது நியாயமாகுமா?

இன்னும் ஆழமாகச் சிந்தித்தால் சிவில் சட்டங்கள் அனைவருக்கும் சமமாகத்தான் உள்ளன. ஆனால் கிரிமினல் சட்டங்கள்தான் ஆளுக்கு ஆள் மாறுபடுகின்றன. அனைவருக்கும் ஒரே மாதிரியான கிரிமினல் சட்டம் வேண்டும் என்று கூறுவதுதான் நியாயமாகும். அதுதான் இந்த நாட்டுக்கு மிக அவசியம்.

ஒரு மாநிலத்தில் மது அருந்துவது தண்டனைக்குரிய குற்றம். இன்னொரு மாநிலத்தில் அரசாங்கமே மதுக் கடைகளை நடத்தும். இதனால் கட்டுக்கோப்பு குலைந்து விடாதா? மதுவைத் தடை செய்த மாநிலத்திலும் பெர்மிட் உள்ளவர்கள் மது குடிக்கத் தடை இல்லை. இது பாரபட்சம் இல்லையா?

விபச்சாரமும், சூதாட்டமும், நைட் கிளப்புகளும், ஆடை அவிழ்ப்பு நடனங்களும் ஒரு மாநிலத்தில் தண்டனைக்குரிய குற்றம். இன்னொரு மாநிலத்தில் அரசால் அனுமதிக்கப்பட்ட நடைமுறைகள். தடை செய்யப்பட்ட மாநிலங்களில் கூட, நட்சத்திர ஹோட்டல்களில் இவற்றுக்கு அனுமதியும், பிற இடங்களில் தடையும் உள்ளன.

சைக்கிளில் இருவர் செல்வது, இரு சக்கர வாகனங்களை ஹெல்மெட் அணியாமல் ஓட்டுதல் போன்ற சிறிய விஷயங்களிலிருந்து பெரிய விஷயங்கள் வரை மாநிலத்துக்கு மாநிலம் வித்தியாசமான சட்டங்கள்; வித்தியாசமான நடைமுறைகள் உள்ளன.

ஒரே செயலை இருவர் செய்கின்றனர். ஆனால் ஒருவன் செய்தது குற்றம். மற்றவன் செய்தது குற்றம் இல்லை. இப்படி மாறுபட்ட கிரிமினல் சட்டம் இருப்பதற்குத் தான் வெட்கப்பட வேண்டும். ஒரே நாடு என்று சொல்லிக் கொண்டு நாட்டு மக்களைப் பாரபட்சமாக நடத்துவத மாற்றியமைப்பது பற்றித்தான் சிந்திக்க வேண்டும்.

மாநிலத்துக்கு மாநிலம் வரி விதிப்பில் வித்தியாசங்கள் உள்ளதா இல்லையா?

தமிழ்நாட்டுக்காரன் ஒரு கார் வாங்கினால் அவன் அரசுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரி கட்டுகிறான். ஆனால் அருகில் உள்ள பாண்டிச்சேரிக்காரன் அதே காரை வாங்கினால் அவன் பத்தாயிரம்தான் வரி கட்டுகிறான். ஒரே பொருளுக்கு குடிமக்களிடம் பாரபட்சமாக வரி விதிப்பதற்குத்தான் வெட்கப்பட வேண்டும். இதை மாற்றுவதற்குத்தான் துடிக்க வேண்டும்.

பெட்ரோல், டீசல் வாங்கும் போது ஒவ்வொரு மாநிலத்திலும் வித்தியாசமாக வரி போடப்படுகிறதே, இது நாட்டு மக்கள் அனைவரையும் சமமாக நடத்தவில்லை என்பதற்கு ஆதாரமாக இல்லையா?

ஒரு மாநிலத்தின் உணவுப் பொருட்களை இன்னொரு மாநிலத்திற்குக் கொண்டு செல்லத் தடை!

நாட்டில் ஓடும் நதிகளின் நீரைப் பங்கிட்டுக் கொள்வதில் தகராறு!

இவற்றால் எல்லாம் கட்டுக்கோப்பு குலையாதாம். இப்படி வித்தியாசமான சட்டங்கள் இருப்பது அறிவுக்குப் பொருத்தமாக உள்ளதாம். நான்கே நான்கு விஷயங்களில் முஸ்லிம்கள் தங்கள் மதத்தின் கட்டளைப்படி நடந்தால் மட்டும் கட்டுக்கோப்பு குலைந்து விடுமாம். இப்படிக் கூறக் கூடியவர்கள்தான் அறிவுஜீவிகளாம்.

முஸ்லிம்கள் நான்கே நான்கு விஷயங்களில் தமது மார்க்கப்படி நடந்து கொண்டதால் நாட்டில் ஏற்பட்ட கலவரங்கள் எத்தனை? இதன் காரணமாகப் பிரிந்து போன மாநிலங்கள் எத்தனை? கூறுவார்களா?

மொகலாய மன்னர்கள் இந்த நாட்டை ஆண்டபோது இந்துக்கள் தமது மதத்தின் அடிப்படையில் சிவில் சட்டங்களை நடைமுறைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதனால் நாடு சிதறிப் போகவில்லை. ஆயிரம் நாடுகளாக இருந்த பகுதிகள் ஒரு நாடாகத்தான் மாறின. இதுதான் உண்மை.

வெள்ளையர்கள் இந்த நாட்டை ஆண்டபோது முஸ்லிம்களும், இந்துக்களும் தத்தமது மதத்தின்படி சில சிவில் சட்டங்களை நடைமுறைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதனால் நாடு சிதறவில்லை. இத்தகைய அணுகுமுறையினால் தான் பரந்த இந்தியாவே உருவானது. மொகலாயர்களும், வெள்ளையர்களும் மதச் சுதந்திரத்தில் தலையிட்டிருந்தால் இன்றைய இந்தியாவை நாம் பார்க்க முடியாது. இதையும் அறிவுஜீவிகள் உணர வேண்டும்.

வெள்ளையர்களும், மொகலாய முஸ்லிம் மன்னர்களும் வழங்கிய தனிசிவில் சட்ட உரிமையால் ஒன்றுபட்ட இந்தியா, இவர்கள் கொண்டு வர எண்ணுகின்ற பொது சிவில் சட்டத்தினால் சிதறுண்டு போகும் நிலைக்குத் தள்ளப்படும். நாட்டில் குழப்பங்களும், கொந்தளிப்பும் ஏற்படும். இதைத்தான் சில விஷம சக்திகள் விரும்புகின்றன. இதற்காகவே பொது சிவில் சட்டம் பற்றிப் பேசுகின்றன.

புத்த மதத்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள தாய்லாந்து நாட்டில் முஸ்லிம் தனியார் சட்டம் உள்ளது.

புத்தமத நாடு என்று பிரகடனம் செய்து கொண்ட இலங்கையிலும் கூட முஸ்லிம் தனியார் சட்டம் அமலில் உள்ளது.

கிரீஸ், எத்தியோப்பியா, உகாண்டா ஆகிய நாடுகளிலும் முஸ்லிம் நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலும் இத்தகைய சட்டங்கள் உள்ளன. இதன் காரணமாக இந்த நாடுகள் சிதறிப் போகவில்லை.

அறிவுஜீவிகளுக்கு இந்த உண்மை நன்றாகத் தெரிந்திருந்தும் இஸ்லாத்தின் மேல் அவர்களுக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே பொது சிவில் சட்டம் எனக் கூப்பாடு போடுகின்றனர்.

அடுத்து அரசியல் சாசனத்தில் பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளதை ஆதாரமாகக் கொண்டு பாஜக இதை தேர்தல் அறிக்கையில் சேர்த்துள்ளது என்றால் பாஜகவுக்கு சட்ட அறிவு இல்லை என்று தான் பொருள்.

குடிமக்கள் அனைவருக்கும் ஒரே சீரான உரிமையியல் சட்டத்தை இந்தியா முழுவதிலும் அமல் செய்யப்படுவதற்கான முயற்சிகளை அரசு எடுக்க வேண்டும் என்று அரசியல் சாசனத்தின் 44வது பிரிவு கூறுவதைத் தான் இவர்கள் எடுத்துக் காட்டுகின்றனர்.

அரசியல் சாசனத்தில் 44வது பிரிவு இவ்வாறு கூறுவது உண்மை தான். ஆனால் இது எந்தத் தலைப்பின் கீழ் இடம் பெற்றுள்ளது? அந்தத் தலைப்பின் நிலை என்ன? என்பது இவர்களுக்குத் தெரியவில்லை.

இந்தியாவின் எல்லைகள்

குடியுரிமை

பொதுவானவை

கொள்கை விளக்கம்

அடிப்படைக் கடமைகள்

உள்ளிட்ட பல தலைப்புகள் அரசியல் சாசனத்தில் உள்ளன.

கொள்கை விளக்கம் என்ற தலைப்பின் கீழ் 36 முதல் 51 முடிய 17 விதிகள் கூறப்பட்டுள்ளன. பொது சிவில் சட்டம் பற்றி பேசும் 44 வது விதியும் கொள்கை விளக்கம் என்ற பகுதிக்கு உட்பட்டதாகும்.

கொள்கை விளக்கம் என்ற இந்தத் தலைப்பு ஏனைய தலைப்புகளிலிருந்து மாறுபட்டது. ஏனைய தலைப்புக்களில் கூறப்பட்டவைகளை அமல் செய்யாவிட்டால் அதில் நீதிமன்றம் தலையிடலாம். அமல் செய்யாதவர்கள் அரசியல் சாசனத்தை அவமதித்தவர்களாகக் கருதப்படலாம். ஆனால் கொள்கை விளக்கம் என்ற தலைப்பில் கூறப்படுபவற்றை அரசு கட்டாயம் செயல்படுத்த வேண்டும் என்பதில்லை. செயல்படுத்துமாறு நீதிமன்றமும் கட்டளை ஏதும் வழங்க முடியாது. இது அரசுக்குச் சொல்லப்பட்ட ஆலோசனைகள்தான்.

இது கொள்கை விளக்கம் என்ற தலைப்பில் 37வது விதியில் கூறப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியில் விதிக்கப்பட்டவற்றை எந்த நீதிமன்றத்தின் மூலமாகவும் வலியுறுத்த முடியாது.

என்று கொள்கை விளக்கத்தின் 37வது பிரிவு கூறுகின்றது.

அரசியல் சாசனத்தில் கூறப்படும் கொள்கை விளக்கம் எனும் தலைப்பில் பல சட்டங்கள் உள்ளன. அவற்றைச் செயல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. நீதிமன்றம் மூலம் அவற்றை வற்புறுத்தக் கூடாது. கட்டாயச் சட்டமாக அவற்றை ஆக்கி விடக் கூடாது என்பது தான் மேற்கண்ட் வாசகத்தின் கருத்தாகும்.

36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51 ஆகிய சட்டங்கள் ஆலோசனையாகவே கூறப்பட்டுள்ளது. மேற்கண்ட இத்தனை சட்டங்களில் ஒன்றையும் சட்டமாக்காமல் 44வது பிரிவை மட்டும் சட்டமாக்க வேண்டும் என்பதும், நீதிமன்றங்கள் தலையிடுவதும் அரசியல் சாசனத்துக்கே எதிரானதாகும்.

உதாரணமாக 45 வது சட்டத்தைப் பாருங்கள்!

இந்த அரசியல் சாசனம் துவக்கப்பட்டு பத்து ஆண்டுகளுக்குள், குழந்தைகள் அனைவருக்கும் 14வயது முடிவடையும் வரையில் இலவசமாகவும், கட்டாயமாகவும் கல்வி பெறுவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும்.

அரசியல் சாசனம் 45வது பிரிவு

14 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் பத்து ஆண்டுகளுக்குள் கட்டாயக் கல்வி இலவசமாக வழங்க வேண்டும் என்று இந்தப் பிரிவு கூறுகின்றது. இன்று வரை கட்டாயக் கல்வி கொடுக்கவில்லை. ஏன் என்று கேட்டால் இது கொள்கை விளக்கம் தலைப்பில் உள்ள விஷயங்கள். இதைச் செய்வது கட்டாயம் இல்லை என்று பதில் கூறுகிறார்கள்.

அதே தலைப்பில் தானே பொதுசிவில் சட்டம் பற்றிய ஆலோசனையும் உள்ளது?

கொள்கை விளக்கம் 47வது சட்டத்தைப் பாருங்கள்!

உணவுச் சத்துக்களை மேம்படுத்தவும், அடிப்படை வாழ்க்கை வசதிகளைப் பெருக்கவும், நல்வாழ்வினை உயர்த்தவும் தேவையானவற்றைத் தமது தலையாய கடமையாக அரசு கருத வேண்டும். அதிலும் குறிப்பாக, போதையூட்டும் மது வகைகளையும் உடலுக்குத் தீங்கு பயக்கும் நச்சுப் பொருட்களையும் மருந்துக்காக அன்றி வேறு விதமாகப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்காக மது விலக்கை அமல்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.

அரசியல் சாசனம் 47வது பிரிவு

இன்றுவரை இந்தக் கொள்கை பின்பற்றப்படவில்லை.

மக்களுக்குக் கேடு தரும் நச்சுப் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது என்றால் மதுவையும் தடுக்க வேண்டும். நச்சுப்புகை உள்ளதால் பட்டாசுகளையும் தடை செய்ய வேண்டும். ஆனால் நாடு முழுவதும் அரசே மதுபானத்தை விற்பனை செய்கிறது. அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்ட இச்சட்டத்தை ஏன் நடைமுறைப்படுத்தவில்லை? தீபாவளியின் போது பட்டாசு வெடிப்பவர்களையும், விற்பவர்களையும் ஏன் கைது செய்யவில்லை என்று கேட்டால் இது கொள்கை விளக்கம் தலைப்பில் உள்ளதால் இது கட்டாயம் இல்லை என்கிறார்கள்.

இந்தக் கொள்கையின் அடிப்படையில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால் நாட்டில் கொந்தளிப்பு ஏற்படாது. பெரும்பாலான மக்கள், குறிப்பாகப் பெண்கள் முழுமையாக இதை வரவேற்பார்கள். இதைப் பற்றிப் பேசத் துப்பில்லாத பாஜக பொதுசிவில் சட்டம் பற்றி மட்டும் ஊளையிடுவது ஏன்?

அரசியல் சாசனம் 41 வது சட்டம் கூறுவதைப் பாருங்கள்!

தனது பொருளாதார சக்திக்கும், வளர்ச்சிக்கும் ஏற்ற வகையில் வேலை வாய்ப்பு கிடைப்பதற்கும், கல்வி பெறுவதற்கும், வேலை இல்லாத போதும் வயது முதிர்ந்தோருக்கும் ஊனமுற்றோருக்கும் மற்றும் தேவையற்ற வறுமையில் வாடுவோருக்கும் பொது நிதியிலிருந்து உதவி பெறுவதற்கு உற்ற துணை புரிவதற்கேற்ற வழிவகைகள் காணப்பட வேண்டும்.

அரசியல் சாசனம் 41வது பிரிவு

அனைவருக்கும் வேலை வாய்ப்பு தரப்பட வேண்டும்; சக்திக்கு மீறிய வேலையாக அது இருக்கக்கூடாது வேலையில்லாதோருக்கும், முதியோருக்கும், நோயாளிக்கும், பொது நிதியிலிருந்து உதவ வேண்டும் என்று இந்தப் பிரிவு கூறுகின்றது.

இவற்றை இவர்கள் செய்யத் தயாராக இல்லை. இது கொள்கை விளக்கம் என்ற தலைப்பில் உள்ளவை என்று கூறி தப்பித்துக் கொள்கின்றனர். பொதுசிவில் சட்டமும் அதே தலைப்பில் உள்ளதை இருட்டடிப்பு செய்கின்றனர்.

இஸ்லாமிய சிவில் சட்டம் கோருபவர்கள், இஸ்லாமியக் கிரிமினல் சட்டம் கோர மறுப்பதேன்?என்ற கேள்விக்கு வருவோம்.

திருமணம் உள்ளிட்ட அந்த ஐந்து விஷயங்கள் முஸ்லிம்கள் தமக்குள் செயல்படுத்தக் கூடியவை. அதில் அரசுக்கு எந்த வேலையும் இல்லை.

கிரிமினல் சட்டங்கள் ஆட்சியாளர்களால் நடைமுறைப் படுத்தப்படுபவை. சிவில் சட்டங்களிலும் பெரும்பாலானவை ஆட்சியாளர்களால் அமல்படுத்தப்படுபவை. மக்கள் இதைத் தாங்களாகவே அமல்படுத்த முடியாது. மக்கள் தமக்கிடையே நடைமுறைப்படுத்திக் கொள்ளக் கூடிய, மதம் சம்பந்தப்பட்ட, மிகச் சில விஷயங்களில் மட்டுமே தனியார் சிவில் சட்டம் உள்ளது.

இஸ்லாமிய ஆட்சி முறையில் கூட கிரிமினல் சட்டத்தை ஆட்சியாளர்கள்தாம் அமல்படுத்த முடியும். இந்தச் சாதாரண உண்மை கூட அறிவுஜீவிகளான இவர்களுக்கு விளங்கவில்லை.

கிரிமினல் குற்றங்களுக்கு இஸ்லாம் கூறக்கூடிய கடுமையான தண்டனைகளை உங்களுக்குள் நீங்களே அமல்படுத்திக் கொள்ளுங்கள் என்று அரசு, முஸ்லிம்களை நச்சரித்து வருவது போலவும், அச்சட்டத்தின் கொடுமைக்கு அஞ்சி முஸ்லிம்கள் தயங்குவது போலவும் இத்தகைய கேள்விகளால் ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

இஸ்லாமியக் கிரிமினல் சட்டங்களை, கிரிமினல் விவகாரங்களில் முஸ்லிம்கள் அமல்படுத்திக் கொள்ள அரசு அனுமதித்தால் முஸ்லிம்கள் அதை மனப்பூர்வமாக ஏற்கத் தயாராக உள்ளனர். இஸ்லாமியக் கிரிமினல் சட்டங்களால்தான் குற்றங்களைக் குறைக்க முடியும் என்பதில் முஸ்லிம்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு.

ஆனால் தண்டனை வழங்கும் அதிகாரத்தை உலகில் எந்த நாடும் குறிப்பிட்ட சமுதாயத்தின் கைகளில் கொடுக்காது. ஒருவன் கொலை செய்து விட்டால் அவனை ஜமாஅத்தில் இழுத்து வந்து தூக்கில் போட்டுக் கொள்ளுங்கள் என்று ஒரு நாடு கூறினால் அந்த ஜமாஅத் மீது அந்த நாட்டுக்கு ஆளுமை இல்லை என்று ஆகிவிடும். இதனால்தான் இந்தக் கிறுக்குத்தனமான சட்ட விரோதமான இக்கோரிக்கையை முஸ்லிம்கள் வைக்கவில்லை.

ஆனால் முஸ்லிம்கள் செய்யும் கிரிமினல் குற்றங்களுக்கு இஸ்லாமிய அடிப்படையில் தீர்ப்பு அளிப்போம் என்று அரசு முடிவு செய்தால், இஸ்லாம் கூறுகின்ற அடிப்படையில் முஸ்லிம்களைக் கொண்ட தனி நீதிமன்றம் அமைத்தால் இந்திய முஸ்லிம்கள் அதை மறுக்க மாட்டார்கள்.

இந்தத் தண்டனைகளால் முஸ்லிம்களில் கொலையாளிகளும், திருடர்களும் இல்லாமல் போனால் அல்லது பெருமளவில் குறைந்தால் அது முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் என்பதை உறுதிபடக் கூறிக் கொள்கிறோம்.

அறிவுஜீவிகள் என்போர், இஸ்லாமிய நாடான சவூதி அரேபியாவில் சிறுபான்மையினருக்குத் தனி சிவில் சட்டம் உண்டா? எனவும் கேட்கின்றனர்.

சவூதி அரேபியா முழுக்க முழுக்க முஸ்லிம்களை மட்டுமே குடிமக்களாகக் கொண்ட நாடு. இங்கு பிற சமய மக்கள் குடிமக்களாக இல்லை. இந்தியாவில் ஏறத்தாழ எட்டு சமயத்தவர்கள் குடிமக்களாகவும், மண்ணின் மைந்தர்களாகவும் வாழ்கின்றனர்.

நாட்டில் குடிமக்களாக உள்ளவர்கள் மத அடிப்படையிலான தனி சிவில் சட்டத்தின்படி வாழ்வதற்கும், பிழைப்புக்காக அயல்நாடு சென்று அந்நாட்டுக் குடிமக்களாக ஆக முடியாதவர்கள் தனி சிவில் சட்டம் கோருவதற்கும் பெருத்த வித்தியாசம் உள்ளது.

பாகிஸ்தான், பங்களா தேஷ் போன்ற நாடுகள் முஸ்லிம் நாடுகளாக இருந்தாலும் அந்த நாடுகளில் உள்ள இந்துக்களும், கிறித்தவர்களும் அந்த நாடுகளின் குடிமக்கள் என்பதால் இந்துக்களுக்கும், கிறித்தவர்களுக்கும் சில விஷயங்களில் தனிச்சட்டங்கள் உள்ளன.

ஆனால் சவூதி உள்ளிட்ட பல அரபு நாடுகளில் முஸ்லிம்களைத் தவிர வேறு குடிமக்கள் இல்லை. பிழைப்புக்காக அங்கே சென்றவர்கள் தான். அவர்களில் யாரும் குடிமக்கள் அல்லர் என்பதால் பிற சமய மக்களுக்கு தனி சிவில் சட்டம் என்ற பேச்சே அங்கு எழவில்லை.

முஸ்லிம் தனியார் சட்டத்தினால் பெண்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். எனவே அதை மாற்ற வேண்டும் என்பது இவர்களின் கடைசி அஸ்திரம்.

முஸ்லிம் தனியார் சட்டத்தினால் முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற கூற்றில் உண்மை இருக்கின்றதா? என்றால் அதுவும் இல்லை.

ஒரு மனைவி இருக்கும்போது இன்னொரு மனைவியைத் திருமணம் செய்வதால் முதல் மனைவி பாதிக்கப்படுகிறாள்; இது கொடுமை என்கின்றனர்.

முஸ்லிம்களுக்கு இன்னொரு திருமணம் செய்ய அனுமதி! முஸ்லிம் அல்லாதவர்கள் எத்தனை வைப்பாட்டிகள் வைத்துக் கொண்டாலும் அது குற்றமில்லை. இது பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமை இல்லையா?

விபச்சாரம் செய்யலாம்; சிவப்பு விளக்குப் பகுதியில் சல்லாபம் செய்யலாம்; எத்தனை பெண்களையும் வைப்பாட்டிகளாக வைத்துக் கொள்ளலாம். இதற்கெல்லாம் எந்தத் தண்டனையும் கிடையாது. இதனாலெல்லாம் முதல் மனைவி பாதிக்கப்பட மாட்டாள் என்கிறார்களா?

மனைவியைத் தவிர வேறு பெண்களுடன் உடலுறவு வைப்பது குற்றச் செயல் என்று சட்டம் இயற்ற இவர்களுக்குத் துணிவு உள்ளதா?

முதல் மனைவி இருக்கும்போது, இன்னொருத்தியை மனைவி என்று பிரகடனம் செய்வதுதான் தவறு! மற்றபடி மனைவியிடம் அனுபவிப்பது போன்ற இன்பத்தை மனைவி அல்லாத பெண்களிடம் அனுபவிக்கலாம். அது தவறில்லை என்பது தான் இங்குள்ள பொது சிவில் சட்டம்.

வைப்பாட்டிகளின் குழந்தைகளுக்கு சொத்துரிமை உள்ளதாக நீதிமன்றமே தீர்ப்பு வழங்கியுள்ளது.

எதற்காக இன்னொருத்தியைத் திருமணம் செய்கிறானோ அவை அனைத்தையும் இன்னொரு பெண்ணிடம் அனுபவிக்கலாம். வசதிகள் செய்து கொடுக்கலாம். மனைவி என்று மட்டும் சொல்லக் கூடாது. இதுதான் பொது சிவில் சட்டம்.

இதற்கும், பலதார மணத்திற்கும் அடிப்படையில் ஏதாவது வித்தியாசம் உள்ளதா? பொதுசிவில் சட்டமும் (மனைவி என்று பிரகடனம் செய்யாமல்) வைப்பாட்டி வைத்துக் கொள்ளவும், விரும்பி விபச்சாரம் செய்யவும் அனுமதித்து முதல் மனைவியைத் துன்புறுத்தத்தான் செய்கிறது.

ஒரு பெண்ணுடைய அழகை, இளமையை அனுபவிக்கக் கூடியவன், அவளுக்கு மனைவி என்ற அந்தஸ்தை அளித்துவிட்டு அனுபவிக்கட்டும் என்று இஸ்லாமியச் சட்டம் கூறுவது இவர்கள் ஆதரிக்கும் சட்டத்தை விட எந்த விதத்தில் குறைவானது? விளக்குவார்களா?

ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணப்பது இஸ்லாத்தில் ஒரு அனுமதிதான். அதுவும் கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையில் வழங்கப்பட்ட அனுமதியே! வைப்பாட்டிகளை வைத்துள்ள மற்ற சமுதாயத்தவரைவிட இரண்டு மனைவியரை மணந்த முஸ்லிம்களின் சதவிகிதம் மிகவும் குறைவானது என்பதையும் இவர்கள் உணர வேண்டும்.

கண்ட பெண்களுடன் கூடி விட்டுப் பெருநோய்க்கு ஆளாகி, மனைவிக்கு அந்த நோயைப் பரிசாகக் கொடுப்பதை விட, இன்னொருத்திக்குச் சட்டப் பூர்வமான மதிப்பு அளித்து, மணந்து கொள்வது எல்லா வகையிலும் சிறந்தது என்பதில் ஐயமில்லை.

நீதிமன்றத்தை அணுகாமல் முஸ்லிம் கணவன், தனது மனைவியை விவாகரத்துச் செய்யலாம் என்ற முஸ்லிம் தனியார் சட்டம் பெண்களுக்குக் கொடுமையில்லையா? இதனால் பெண்களுக்குப் பாதிப்பில்லையா? என்ற கேள்வியும் தவறாகும்.

நிச்சயமாக இதில் கொடுமை இல்லை. பெண்களுக்கு இதை விடப் பாதுகாப்பான சட்டம் வேறு இருக்க முடியாது என்பதுதான் உண்மை.

நீதிமன்றத்தை அணுகித்தான் விவாகரத்துப் பெற முடியும் என்ற சட்டம் யாருக்கெல்லாம் உள்ளதோ அந்தச் சமுதாயத்தில்தான் பெண்கள் கொடுமைப்படுத்தப்படுகின்றனர்.

நீதிமன்றத்தில்தான் விவாகரத்துப் பெற வேண்டும் என்றால் விவாகரத்துப் பெறுவதற்காக மனைவியின் மேல் கணவன் பகிரங்கமாக அவதூறு கூறுகின்றான். அல்லது தீயிட்டுக் கொளுத்திவிட்டு, ஸ்டவ் வெடித்து விட்டது என்று கூறுகின்றான். இதற்குக் காரணம் விவாகரத்துச் சட்டத்தில் உள்ள கடுமைதான்.

எந்த முஸ்லிம் கணவனும், தன் மனைவியை தீயிட்டுக் கொளுத்தியதாக வரலாறு இல்லை. காரணம், மனைவியைப் பிடிக்காவிட்டால் எளிதாக அவன் விவாகரத்துச் செய்ய முடியும் என்பதுதான்.

மேலும் மனைவிக்குக் கணவனைப் பிடிக்காவிட்டால் அவளும் கணவனை விவாகரத்துச் செய்ய இஸ்லாம் அனுமதிக்கின்றது. அறிவுஜீவிகள் எதிர்க்கக் கூடிய முஸ்லிம் தனியார் சட்டத்திலேயே இது கூறப்பட்டுள்ளது.

விவாகரத்துச் செய்யும் உரிமையை ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமமாக இஸ்லாம் வழங்கி இருப்பதாலும், விவாகரத்துச் செய்த பின் பெண்கள் மறுமணம் செய்து கொள்ள இஸ்லாம் அனுமதித்து ஆர்வமூட்டுவதாலும், விவாகரத்துச் சட்டம் கடுமையாக இருந்தால் ஏற்படும் தீய விளைவுகள், இஸ்லாமிய சட்டத்தில் இல்லாததாலும் இதில் பெண்களுக்கு எந்தக் கொடுமையும் இல்லை. மாறாக அவர்களுக்கு இதில் பாதுகாப்பே இருக்கின்றது என்பதுதான் உண்மை.

விவாகரத்துச் செய்தபின் பெண்ணுக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டியதில்லை என்பது கொடுமையில்லையா? என்றும் கேட்கின்றனர்.

விவாகரத்துச் செய்யப்பட்டவள் மறுமணம் செய்யும்வரை அல்லது மரணிக்கும்வரை ஜீவனாம்சம் வழங்கப்பட வேண்டும் என்று இஸ்லாமியச் சட்டத்தில் திருத்தம் கோருகிறார்கள்.

இப்படி ஒரு சட்டம் இருந்தால் எந்தப் பெண்ணும் பெரும்பாலும் மறுமணம் செய்ய மாட்டாள். மாறாகக் கணவனிடமிருந்து ஜீவனாம்சம் பெற்றுக் கொண்டு, மற்ற ஆண்களுடன் சல்லாபம் நடத்தத் துணிவாள். ஜீவனாம்சம் இல்லை என்றால்தான் தனது வாழ்க்கையின் பாதுகாப்புக்காகப் பொருத்தமான துணையைத் தேடிக் கொள்வாள். இரண்டில் எது சரியானது என்று சிந்திக்க வேண்டாமா?

பொதுசிவில் சட்டத்தைக் கொண்டு வந்தால் முஸ்லிம்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற கேள்விக்கு வருவோம்.

பொதுவாக சிவில் விஷயங்களில் அரசு நேரடியாகத் தலையிட முடியாது. ஒருவர் வாங்கிய கடனைக் கொடுக்கவில்லை என்றால் நீதிமன்றமோ, அரசோ அதில் தலையிட முடியாது. கடன் கொடுத்தவன் வழக்கு தொடுத்தால் மட்டுமே தலையிட முடியும்.

இவர்கள் பொதுசிவில் சட்டம் என்ற பெயரில் எதைக் கொண்டு வந்தாலும் முஸ்லிம்கள் இஸ்லாமியச் சட்டத்தின்படி நடப்போம்; நீதிமன்றத்தை நாட மாட்டோம் என்று முடிவு செய்தால் அந்தச் சட்டத்தால் ஒன்றும் செய்ய முடியாது. அதைப் படித்துப் படித்து சந்தோசப்பட்டுக் கொள்ளலாமே தவிர, நம்மை அது ஒன்றும் செய்யாது என்பது தான் இதற்கான பதில்.

இஸ்லாமியச் சட்டம் எவ்வளவு சிறந்தது என்பதை முஸ்லிம் சமுதாயத்துக்கு விளக்கி நீதிமன்றத்தை அணுகாத நிலையை ஏற்படுத்துவோம். முஸ்லிம் சமுதாயம் அதிகத் தெளிவுடனும், மார்க்கப் பற்றுடனும் திகழ்ந்து அதை முறியடிக்கும். (இறைவன் நாடினால்)

பொதுசிவில் சட்டம் என்ற பெயரில், முஸ்லிம்களாக வாழும் உரிமை பறிக்கப்பட்டால், முஸ்லிம்கள் அதைப் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். பொங்கி எழுவார்கள். உலகத்துச் சலுகைகள் எதையும் அவர்கள் இழப்பார்கள்.

ஆனால் முஸ்லிம்களாக வாழ்வதற்கே தடை என்றால் இஸ்லாத்தை விட உயிர் பெரிதில்லை என்பதை நிரூபித்துக் காட்டுவார்கள். அத்தகைய நிலை ஏற்பட்டால் எந்தச் சக்தியாலும் அவர்களைத் தடுக்க முடியாது என்று ஆட்சியாளர்களை எச்சரித்து வைக்கிறோம்.

பொது சிவில் சட்டம் ஓர் ஆய்வு!

1995ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம், பொதுசிவில் சட்டத்தை ஓராண்டிற்குள் நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் அல்ஜன்னத் 1995ஜூலை இதழில் பீஜே எழுதிய கட்டுரை வெளியிடப்பட்டது.

ஏகத்துவ அழைப்பாளர்கள், பொதுசிவில் சட்டத்தின் பாதகங்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கிலும், சமுதாயப் பிரச்சனையில் நமது பங்களிப்பு எத்தகையது என்பதை இளைய சமுதாயத்திற்கு எடுத்துக் காட்டும் வகையிலும் அந்தக் கட்டுரை இங்கு மறுபிரசுரம் செய்யப்படுகின்றது.

இக்கட்டுரையில் எடுத்துக் காட்டப்படும் அரசியல் சாசனத்தின் மேற்கோள்கள், அ.ச. நடராஜன் அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டு, பாலாஜி பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ள, இந்திய அரசியல் சாசனம்' (மூன்றாம் பதிப்பு) எனும் நூலிலிருந்து எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.

நாட்டின் உயர்ந்த அதிகார பீடமான உச்சநீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய உத்தரவு சிறுபான்மை மக்களுக்கு அச்ச உணர்வையும் நாட்டில் கொந்தளிப்பான சூழ்நிலையையும் தோற்றுவித்துள்ளது.

பின் விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காமலும், அரசியல் சாசனத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளைக் கண்டு கொள்ளாமலும் தமது அதிகார வரம்புக்கு அப்பாற்பட்ட நிலையிலும் மேலோட்டமான பார்வையில் கூறப்பட்டதாகவும் உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அமைந்துள்ளது.

வரம்பு ஏதுமில்லாத அதிகாரம் நீதிமன்றங்களுக்குக் கிடையாது. அரசியல் சாசனம் வழங்கிய வரம்புகளுக்கு உட்பட்டுத் தான் நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்க வேண்டும். வரம்புகளைத் தாண்டி வழங்கப்படும் தீர்ப்புகளை விமர்சிக்கும் உரிமை குடிமக்களுக்கு உண்டு.

இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்கிறார். பிறகு மற்றொரு திருமணம் செய்வதற்காக முஸ்லிமாக மாறி, திருமணமும் செய்து கொள்கிறார். முதல் மனைவி இதை எதிர்த்துத் தாக்கல் செய்த வழக்கில், முஸ்லிம் தனியார் சட்டத்தை அந்தக் கணவர் தவறாகப் பயன்படுத்தியுள்ளார்' என்று முடிவு செய்து அவருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியது. நீதிமன்றம் அத்துடன் நிறுத்திக் கொண்டால் நாம் விமர்சிக்கப் போவதில்லை. ஆனால் இவ்வழக்கில் வாதியாகவோ, பிரதிவாதியாகவோ இல்லாத மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஓர் உத்தரவையும் பிறப்பித்துள்ளது.

'அனைத்து மதத்தவர்களுக்கும் பொதுவான சிவில்சட்டம் ஒன்றை ஒரு வருடத்துக்குள் மத்திய அரசு அமல்படுத்த வேண்டும்' என்பதே அந்த உத்தரவு. இதைத் தான் நாம் விமர்சிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

'குடிமக்கள் அனைவருக்கும் ஒரே சீரான உரிமையியல் சட்டத்தை இந்தியா முழுவதிலும் அமல் செய்யப்படுவதற்கான முயற்சிகளை அரசு எடுக்க வேண்டும்' என்று அரசியல் சாசனத்தின் 44வது பிரிவு கூறுவது தான் இந்தத் தீர்ப்புக்கு அடிப்படை.

நீதிபதிகளின் நோக்கத்தைச் சந்தேகப்படுவதா? அரசியல் சாசனம் பற்றிய சரியான விளக்கம் அவர்களுக்கு இல்லை என்பதா? என்ற ஐயத்தை ஏற்படுத்தக் கூடியதாகவே இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது.

இஸ்லாத்தில் தீண்டாமை இல்லை என்பதற்காக ஒரு தாழ்த்தப்பட்ட இந்து, முஸ்லிமாக மாறினால், அது பற்றிய வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தால், 'இனி மேல் இஸ்லாத்திலும் தீண்டாமையைக் கடைப்பிடிக்க வேண்டும்' என்று தீர்ப்பு வழங்குவது எவ்வளவு கேலிக்குரியதோ அந்த அளவு கேலிக்குரியதாகவே உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு அமைந்துள்ளது.

அரசியல் சாசனத்தில் 44வது பிரிவு இவ்வாறு கூறுவது உண்மை தான். ஆனால் இது எந்தத் தலைப்பின் கீழ் இடம் பெற்றுள்ளது? அந்தத் தலைப்பின் நிலை என்ன? என்பதையெல்லாம் நீதிமன்றம் கண்டு கொள்ளவில்லை.

  1. இந்தியாவின் எல்லைகள்
  2. குடியுரிமை
  3. பொதுவானவை
  4. கொள்கை விளக்கம்
  5. அடிப்படைக் கடமைகள்

உள்ளிட்ட பல தலைப்புகள் அரசியல் சாசனத்தில் உள்ளன.

இந்தத் தலைப்புகளில் கொள்கை விளக்கம் என்ற தலைப்பு மற்ற தலைப்புகளில் இருந்து மாறுபட்டதாகும். இந்தத் தலைப்பின் கீழ் உள்ள விஷயங்களில் எந்த நீதிமன்றமும் தலையிட முடியாது என்பதை முதலில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

கொள்கை விளக்கம் என்ற தலைப்பின் கீழ் 36முதல் 51முடிய உள்ள பிரிவுகள் கூறப்பட்டுள்ளன. பொதுசிவில் சட்டம் பற்றி கூறுகின்ற 44வது பிரிவும் இந்தத் தலைப்பின் கீழ் தான் வருகின்றது.

கொள்கை விளக்கம் என்ற இந்தத் தலைப்பு ஏனைய தலைப்புகளிலிருந்து மாறுபட்டது. ஏனைய தலைப்புக்களில் கூறப்பட்டவைகளை அமல் செய்யாவிட்டால் அதில் நீதிமன்றம் தலையிடலாம். அமல் செய்யாதவர்கள் அரசியல் சாசனத்தை அவமதித்தவர்களாகக் கருதப்படலாம். ஆனால் கொள்கை விளக்கம்' என்ற தலைப்பில் கூறப்படுபவற்றை அரசு கட்டாயம் செயல்படுத்த வேண்டும் என்பதில்லை. செயல்படுத்துமாறு நீதிமன்றமும் கட்டளை ஏதும் வழங்க முடியாது.

ஏறக்குறைய இந்த வகையில் இது அரசுக்குச் சொல்லப்பட்ட ஆலோசனைகள் எனலாம். இதை நாம் சுயமாகச் சொல்லவில்லை. கொள்கை விளக்கம் என்ற தலைப்பிலேயே இது குறித்து தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

‘இந்தப் பகுதியில் விதிக்கப்பட்டவற்றை எந்த நீதிமன்றத்தின் மூலமாகவும் வலியுறுத்த முடியாது’

என்று கொள்கை விளக்கத்தின் 37வது பிரிவு கூறுகின்றது.

கொள்கை விளக்கத்தில் கூறப்பட்டவற்றை உச்சநீதிமன்றம் உட்பட எந்த நீதிமன்றமும் வலியுறுத்த முடியாது; அதற்கான அதிகாரமும் எந்த நீதிமன்றத்துக்கும் கிடையாது என்று தெளிவாகக் கூறப்பட்ட பின்பு அந்தப் பகுதியில் கூறப்பட்ட 44வது பிரிவை மட்டும் அமல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் ஆணையிட்டிருப்பது அதன் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டதாகும்.

பொதுவாகவே கொள்கை விளக்கம் என்ற தலைப்பில் கூறப்பட்டவற்றை நீதிமன்றங்கள் வலியுறுத்த முடியாது. இந்த 44வது பிரிவு, அரசியல் சாசனம் வழங்கிய அடிப்படை உரிமைக்கு – கட்டாயம் வழங்க வேண்டிய உரிமைக்கு – முரணாகவும் இருக்கும் போது இதை எப்படி வலியுறுத்த முடியும்?

கட்டாயம் அமல்படுத்த வேண்டியவைகளுக்கு ஏற்ப, கொள்கை விளக்கத்தில் உள்ள ஆலோசனைகளை எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, கட்டாயம் அமல்படுத்த வேண்டியவைகளுக்கு முரணாகக் கொள்கை விளக்கம் இருந்தால் அதை எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எடுத்துக் கொள்ளக் கூடாது.

பொது ஒழுங்கு, ஒழுக்கம் மற்றும் நலவாழ்வு ஆகியவற்றுக்கும் இந்தப் பகுதியில் கூறப்பட்டுள்ள மற்றவற்றுக்கும் ஆட்பட்டும், எல்லோரும் தம் மனசாட்சிப்படி செயல்படுவதற்குரிய சுதந்திரம் உடையவர்கள் ஆவார்கள். தத்தம் மதத்தைத் தழுவ, மேற்கொள்ள, மற்றும் பரப்புவதற்கு உரிமை உடையவர்கள் ஆவர்.

அரசியல் சாசனம் 25 (1)வது பிரிவு

விருப்பமான மதத்தில் குடிமக்கள் நம்பிக்கை கொள்ளலாம்; ஏற்கலாம்; பின்பற்றலாம்; பிரச்சாரம் செய்யலாம் என்று 25 (1) பிரிவு உரிமை வழங்கியுள்ளது.

எப்படித் திருமணம் செய்யலாம்? யாரைத் திருமணம் செய்யலாம்? என்பன போன்ற விஷயங்களும், விவாகரத்து, பாகப்பிரிவினை போன்ற சட்டங்களும் முஸ்லிம்களுக்கு அவர்களின் மார்க்கம் சம்பந்தப்பட்டவை ஆகும். தொழுகை மற்றும் வணக்க வழிபாடுகள் எவ்வாறு மார்க்கம் சம்பந்தப்பட்டதாக உள்ளனவோ அவ்வாறே இந்தக் காரியங்களும் மார்க்கம் சம்பந்தப்பட்டவையாகும். இதற்கான கட்டளையும் வழிகாட்டுதல்களும் முஸ்லிம்களின் வேதமான திருக்குர்ஆனிலேயே கூறப்பட்டுள்ளன.

இஸ்லாமிய மார்க்கம் சம்பந்தப்பட்ட இந்தக் காரியங்களை இஸ்லாம் கூறக்கூடிய முறையில் நடைமுறைப்படுத்துவதற்குத் தடுக்கப்பட்டால், அவர்களின் மதச் சுதந்திரமும், வழிபாட்டுச் சுதந்திரமும் பறிக்கப்படுகின்றது என்பதே பொருள்.

அரசியல் சாசனம் வழங்கியுள்ள இந்த உரிமையை – அவசியம் வழங்கியே தீர வேண்டிய இந்த உரிமையை – மறுப்பதற்கு எவருக்கும் அதிகாரம் இல்லை. இதற்கு முரணாக அமைந்துள்ள கொள்கை விளக்கத்தைத் தான் விட்டு விட வேண்டுமே தவிர அடிப்படை உரிமையை மறுக்க முடியாது.

அரசியல் சாசனத்தில் கூறப்படும் கொள்கை விளக்கம் எனும் தலைப்பில் பல பிரிவுகள் உள்ளன. அவற்றைச் செயல்படுத்தாததால் நாடு சீரழிந்து வருகின்றது. அந்தப் பிரிவுகள் பற்றியெல்லாம் எந்த உத்தரவும் வழங்காத நீதிமன்றம், இஸ்லாமிய மார்க்கம் சம்பந்தமான விஷயத்தில் மட்டும் கொள்கை விளக்கத்தை மேற்கோள் காட்டி அரசுக்கு உத்தரவிடுவது நமக்கு வியப்பாக உள்ளது.

அரசியல் சாசனத்தின் கொள்கை விளக்கப் பிரிவில் கூறப்பட்டுள்ள பல பிரிவுகள் இந்த நாட்டில் எந்த லட்சணத்தில் பின்பற்றப்படுகின்றன என்பதையும், அவை சம்பந்தமாக நீதிமன்றங்களின் போக்கையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

இந்த அரசியல் சாசனம் துவக்கப்பட்டு பத்து ஆண்டுகளுக்குள், குழந்தைகள் அனைவருக்கும் 14வயது முடிவடையும் வரையில் இலவசமாகவும், கட்டாயமாகவும் கல்வி பெறுவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும்.

அரசியல் சாசனம் 45வது பிரிவு

14 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் பத்து ஆண்டுகளுக்குள் கட்டாயக் கல்வி இலவசமாக வழங்க வேண்டும் என்று இந்தப் பிரிவு கூறுகின்றது.

கல்வியறிவு இல்லாத காரணத்தால் ஏமாற்றப்பட்டவர்களும், சுரண்டப்பட்டவர்களும் நீதிமன்றங்களில் எத்தனையோ வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர். இந்தச் சந்தர்ப்பங்களில் திட்டவட்டமான எந்தக் கட்டளையையும் நீதிமன்றங்கள் அரசுக்குப் பிறப்பிக்கவில்லை.

இவ்வாறு கட்டளை பிறப்பிப்பது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானதும் இல்லை. இவ்வாறு கட்டளை பிறப்பிப்பதால் நாட்டில் கொந்தளிப்பு ஏற்படப் போவதுமில்லை. இதை நிறைவேற்றுவதற்கு எந்த முயற்சிகளும் மேற்கொள்ளப்படாமல் 44வது பிரிவை மட்டும் நிறைவேற்றத் துடிப்பது நமக்குச் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

உணவுச் சத்துக்களை மேம்படுத்தவும், அடிப்படை வாழ்க்கை வசதிகளைப் பெருக்கவும், நல்வாழ்வினை உயர்த்தவும் தேவையானவற்றைத் தமது தலையாய கடமையாக அரசு கருத வேண்டும். அதிலும் குறிப்பாக, போதையூட்டும் மது வகைகளையும், உடலுக்குத் தீங்கு பயக்கும் நச்சுப் பொருட்களையும் மருந்துக்காக அன்றி வேறு விதமாகப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்காக மதுவிலக்கை அமல்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.

கொள்கை விளக்கம், 47வது பிரிவு

பொதுசிவில் சட்டம் சம்பந்தமான கொள்கை விளக்கம் 44வது பிரிவு, அடிப்படை மத சுதந்திரத்துடன் முரண்படுகின்றது. மது விலக்கு சம்பந்தமான இந்தக் கொள்கை, அரசியல் சாசனத்தின் அடிப்படையுடன் எந்த வகையிலும் முரண்படவில்லை.

இன்று வரை இந்தக் கொள்கை பின்பற்றப்படவில்லை. இந்தக் கொள்கையை, மது விலக்கை இவ்வளவு நாட்களுக்குள் பின்பற்றியாக வேண்டும் என நீதிமன்றம் அரசுக்கு உத்தரவும் இட்டதில்லை.

இந்தக் கொள்கையின் அடிப்படையில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால் நாட்டில் கொந்தளிப்பு ஏற்படாது. பெரும்பாலான மக்கள், குறிப்பாகப் பெண்கள் முழுமையாக இதை வரவேற்பார்கள். இதை உடனே செயல்படுத்துமாறு கட்டளையிடாத நீதிமன்றம் பொதுசிவில் சட்டம் பற்றி மட்டும் கட்டளையிடுவது ஏன்?

நீதிமன்றத்துக்கு ஒரு வழக்கு வந்து விட்டதால், அந்த வழக்கில் பொதுசிவில் சட்டம் பற்றிக் கட்டளையிட வேண்டிய அவசியம் நீதிமன்றத்துக்கு ஏற்பட்டு விட்டது' என்று கூறப்படும் சமாதானம் ஏற்க முடியாததாகும். ஏனெனில் மது விலக்கை உடனே அமல் செய்ய வேண்டும் என்று கட்டளையிடுவதற்குரிய ஆயிரக் கணக்கான வழக்குகளை நீதிமன்றம் சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறது. மேலும் விஷச் சாராயம் அருந்தி நூற்றுக்கணக்கானோர் அடிக்கடி மரணிப்பது தொடர்பான வழக்குகளையும் நீதிமன்றம் விசாரித்துள்ளது.

கொலை, கற்பழிப்பு, வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபடும் பலர் மது அருந்தி விட்டுப் போதையில் தான் அதைச் செய்துள்ளனர். மது அருந்தியது தான் அதற்குக் காரணம் என்று தெளிவாகத் தெரிந்த பின்பும், கொள்கை விளக்கம் 47வது பிரிவு மதுவிலக்கை அமல்படுத்தக் கூறிய பின்பும், அவ்வாறு அமல்படுத்தக் கட்டளையிடுவது நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கக் கூடியது என்று தெரிந்த பின்பும் அது தொடர்பாகத் தெளிவான கட்டளை பிறப்பிக்காத நீதிமன்றம் 44வது பிரிவில் மட்டும் அக்கறை செலுத்துவது ஏன்?

குடிமக்கள் தமது வயதுக்கும், சக்திக்கும் தகுதியற்ற ஒரு வேலைக்கு, பொருளாதார நெருக்கடியின் காரணமாகத் தள்ளப்படக் கூடாது என்று அரசியல் சாசனம் கூறுகிறது.

இதுபற்றி நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.

குழந்தைத் தொழிலாளர்கள் பற்றி, குறிப்பிட்ட நாட்களுக்குள் அமல்படுத்தும் உத்தரவு எதையும் நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை. மனித உரிமைக் கமிஷன் கண்டுபிடித்துச் சொன்ன பிறகும், மனிதாபிமானத்துக்கு எதிராக, குழந்தைத் தொழிலாளர்களைச் சுரண்டுவதை நிறுத்த எந்தக் கால வரம்பையும் நீதிமன்றம் கூறவில்லை.

அரசியல் சாசனம் 41வது பிரிவில் சொல்லப்பட்ட எந்த ஒன்றைக் குறித்தும் நீதிமன்றம் இதுவரை வாய் திறந்ததில்லை.

தனது பொருளாதார சக்திக்கும், வளர்ச்சிக்கும் ஏற்ற வகையில் வேலை வாய்ப்பு கிடைப்பதற்கும், கல்வி பெறுவதற்கும், வேலை இல்லாத போதும் வயது முதிர்ந்தோருக்கும் ஊனமுற்றோருக்கும் மற்றும் தேவையற்ற வறுமையில் வாடுவோருக்கும் பொது நிதியிலிருந்து உதவி பெறுவதற்கு உற்ற துணை புரிவதற்கேற்ற வழிவகைகள் காணப்பட வேண்டும்.

அரசியல் சாசனம் 41வது பிரிவு

அனைவருக்கும் வேலை வாய்ப்பு தரப்பட வேண்டும்; சக்திக்கு மீறிய வேலையாக அது இருக்கக் கூடாது வேலையில்லாதோருக்கும் முதியோருக்கும், நோயாளிக்கும், பொதுநிதியிலிருந்து உதவ வேண்டும் என்றெல்லாம் இந்தப் பிரிவு கூறுகின்றது.

வேலை வாய்ப்பு இல்லாததால் தான் கொள்ளையடித்தோம்; திருடினோம்; கொலை செய்தோம் என்று எத்தனையோ வழக்குகளில் குற்றவாளிகள் நீதிமன்றத்தில் வாக்குமூலம் தந்துள்ளனர். அப்படியிருந்தும், இவ்வளவு நாட்களுக்குள் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும்; வேலை இல்லாதோருக்கு நிதி உதவி செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டால் அதை ஆட்சியாளர்கள் செயல்படுத்தினால் நாட்டு மக்கள் கொந்தளித்துப் போக மாட்டார்கள். மாறாக மகிழ்ச்சி அடைவார்கள். இவ்வாறு உத்தரவிடுவது யாருடைய அடிப்படை உரிமையையும் பறித்து விடாது.

தேவையான, அவசியமான இந்தக் கொள்கைகள் யாவும் இன்று வரை அமல்படுத்தப்படவில்லை. அதனால் ஏற்பட்டுள்ள தீய விளைவுகளைக் கண்ட பின்பும் காலக்கெடு நிர்ணயித்து அதை அமல்படுத்துமாறு நீதிமன்றங்கள் கட்டளையிடவில்லை.

கொள்கை விளக்கம் பகுதியில் உள்ளவற்றைச் செயல்படுத்துமாறு அரசுக்கு நீதிமன்றங்கள் கட்டளையிட முடியாது என்றே அதற்குப் பதில் கூறுவார்கள்.

மக்களுக்கு நன்மை பயக்கக் கூடிய இந்தப் பிரிவுகளைச் செயல்படுத்துமாறு கட்டளையிடும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு இல்லை என்றால் மக்களுக்குப் பயன் தராத, நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தக் கூடிய, தாங்கள் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்படுகிறோமோ என்ற சந்தேகத்தை சிறுபான்மை மக்களுக்கு ஏற்படுத்தக் கூடிய, இனிமேல் இந்த நாட்டில் முஸ்லிம்களாக வாழ முடியாதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தக் கூடிய, அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையான மதச் சுதந்திரத்துக்கு எதிராக அமைந்துள்ள 44வது பிரிவை அமல்படுத்துமாறு கட்டளையிடும் அதிகாரம் மட்டும் எங்கிருந்து முளைத்தது?

அரசியல் சாசனம் வழங்கிய அடிப்படை உரிமைகளையே பறிக்கக் கூடிய வகையில் பல மாநில அரசுகள் சட்டம் இயற்றியுள்ளன. இவர்கள் கொண்டு வர விரும்புகின்ற பொதுசிவில் சட்டம் எந்த லட்சணத்தில் இருக்கும் என்பதை இதிலிருந்து நாம் அறிந்து கொள்ள முடியும்.

ஒரு குடிமகன், தான் விரும்பிய மதத்தைப் பின்பற்ற அரசியல் சாசனம் உரிமை வழங்கியிருப்பதை முன்னர் குறிப்பிட்டோம். இந்த உரிமையை அப்பட்டமாகப் பறிக்கக் கூடிய வகையில் பல மாநில அரசுகள் மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வந்துள்ளன.

சிந்தித்து, விரும்பிய வழியைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பறிக்கப்பட்ட பின் ஜனநாயகம் என்பதற்கும், மனித உரிமைக்கும், சுதந்திரத்துக்கும் எந்த அர்த்தமும் இருக்காது. இத்தகைய காட்டுமிராண்டிச் சட்டத்துக்கு எதிராக அறிவுஜீவிகளும், மத்திய ஆட்சியாளர்களும், நீதிமன்றங்களும் என்ன செய்தனர்? அரசியல் சாசனம் வழங்கிய உரிமையைப் பறிக்கும் இத்தகைய கருப்புச் சட்டங்களை அமல்படுத்தும் மாநில அரசுகள் எந்த அடிப்படையில் பதவியில் நீடிக்கின்றன? இத்தகைய அரசுகளை உடனே பதவி இழக்கச் செய்யும் நடவடிக்கைகள் ஏதும் உண்டா?  இல்லை.

ஒரு குடிமகன் தனக்குச் சொந்தமான பொருளை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இந்த உரிமையைப் பறிக்கும் வகையில் பசுவை இறைச்சிக்காகக் கொல்லக் கூடாது என்று பல மாநில அரசுகள் சட்டம் இயற்றியுள்ளன. ஒருவனுக்குச் சொந்தமான, உணவாகப் பயன்படும் பொருளை அவன் சாப்பிடக் கூடாது என்று சட்டம் இருக்கும் நாட்டில் சுதந்திரம் எங்கே இருக்கிறது? ஜனநாயகம் எங்கே இருக்கிறது?

அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமைகளாகக் கூறப்பட்ட உரிமைகளுக்கே இந்தக் கதி! இந்த அக்கிரமத்துக்கு எதிராகக் கடுமையான எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்காத நீதிமன்றம், கொள்கை விளக்கத்தில் கூறப்படும் 44வது பிரிவை மட்டும் நிறைவேற்றத் துடிப்பது ஏன்? என்பது தான் நமது கேள்வி.

பொதுசிவில் சட்டத்தை யார் உருவாக்குவார்கள்? பெரும்பான்மை மக்கள் தாம். பெரும்பான்மையான மக்கள் இந்து மதத்தவர்கள். அவர்கள் உருவாக்கும் சட்டம் இந்து மத நம்பிக்கைகளுக்கு ஆதரவாகவே உருவாக்கப்படும். அதற்கு இந்தக் காட்டுமிராண்டித்தனமான மதமாற்றத் தடைச் சட்டமும், பசுவதைத் தடைச் சட்டமும் சிறந்த எடுத்துக் காட்டுகளாகும்.

இந்து மதச் சட்டங்களை முஸ்லிம்கள் மேல் திணித்த பிறகு இந்து மத வழிபாட்டு முறைகள், பொதுவழிபாட்டு முறை' என்ற பெயரில் நாளை அறிமுகமாகும். அதற்கு முன்னோடியாகத் தான் பொதுசிவில் சட்டம் பற்றிப் பேசப்படுகின்றது என்பதில் சந்தேகமில்லை.

மொத்தத்தில் ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள், நீதித்துறையினரில் பலர் ஆகிய அனைவரும் இந்த நாட்டை இந்து ராஜ்ஜியமாக மாற்றுவதற்குக் காய்களை நகர்த்தி வருகின்றனர் என்பது இதிலிருந்து தெரிய வரும்.

இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 44வது பிரிவை நினைவூட்டிப் பொதுசிவில் சட்டம் ஒன்றை ஒரு வருடத்துக்குள் அமல்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது இன்னொரு வகையிலும் தவறாகும்.

ஒரு வாதத்துக்காக, 44வது பிரிவு அவசியம் நடைமுறைப்படுத்த வேண்டிய ஒன்று என்று வைத்துக் கொண்டால் கூட, ஒரு வருடத்துக்குள்' என்று நீதிமன்றம் எந்த அடிப்படையில் முடிவு செய்தது? அரசியல் சாசனத்தை உருவாக்கியோர் எந்தக் கால வரம்பையும் கூறாதிருக்கும் போது, ஒரு வருடத்துக்குள்' என்று வரம்பு கட்டிக் கூறியிருப்பதும் நாட்டு மக்களுக்கு, முஸ்லிம்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

கொள்கை விளக்கம் பகுதியில் சேர்க்கப்படாமல் கட்டாயமான சட்டமாக சேர்க்கப்பட்டுள்ள பல பிரிவுகள் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. நீதிமன்றம் இதில் தலையிட அதிகாரம் உண்டு என்ற போதும் அதைப் பற்றி நீதிமன்றங்கள் இது போல் உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லையே அது ஏன்?

தேவநாகரி வடிவத்தில் (லிபி) உள்ள ஹிந்தி, இந்தியாவில் அதிகாரப்பூர்வமான மொழியாக இருக்க வேண்டும்.

அரசியல் சாசனம் 343 (1)

அரசியல் சாசனத்தில், மத்திய அரசின் ஆட்சி மொழியாக இந்தி தான் இருக்க வேண்டும் என்று திட்டவட்டமாகக் கூறப்படுகின்றது.

மத்திய அரசு, இனி மேல் மாநில அரசுகளுடன் இந்தியிலேயே தொடர்பு கொள்ள வேண்டும். மாநில அரசுகளும் இந்தி மொழியில் தான் மத்திய அரசுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்பது இதிலிருந்து தெரிகிறது.

இதை உடனே அமல்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிடுமா? உத்தரவிட்டால் அதை மத்திய அரசு செயல்படுத்துமா? செயல்படுத்தினால் ஏற்படக் கூடிய விளைவுகளை நாம் கூறித்தான் தெரிய வேண்டுமா?

சட்டத்தை அமல்படுத்துவதை விட நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்பதே முக்கியமாகும். இதை உணர்ந்த காரணத்தினால் தான், இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமே ஆட்சி மொழியாக இருக்கும் என்று நேரு உறுதியளித்தார். இந்த உறுதிமொழி அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றாலும் மொழிவழிச் சிறுபான்மை மக்களின் கொந்தளிப்பைக் கவனத்தில் கொண்டு, நாடு பிளவுபட்டு விடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் இந்தி திணிக்கப்படாமல் உள்ளது.

சிறுபான்மை மொழியினரால் ஏற்படும் பிரச்சனைகளைக் கருதி, வேண்டாத விபரீதங்களைத் தடுக்க எண்ணி, நாடு முழுவதும் இந்தி மொழியை ஆட்சி மொழியாக்க முடியவில்லை எனும் போது, சிறுபான்மை மதத்தவர்களிடம் அச்ச உணர்வை ஏற்படுத்தக் கூடிய விஷயத்தில் மட்டும் தேவையற்ற உத்தரவை, நீதிமன்றம் தமது அதிகார வரம்பின் கீழ் வராத விஷயத்தில் ஏன் வழங்க வேண்டும்?

இந்தியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று இனிமேல் உத்தரவு பிறப்பிக்க இந்தத் தீர்ப்பு வெள்ளோட்டமாகக் கூட அமையலாம். மொழிப் பற்றாளர்களும், மொழிக்காகப் போராடுபவர்களும், பொதுசிவில் சட்டத்திற்குத் தங்கள் எதிர்ப்பைக் காட்டத் தவறினால், நாளை மொழியைக் காக்க அவர்கள் போராட வேண்டியிருக்கும். அப்போது போராடுவதில் பயனில்லாமல் போகலாம்.

குடிமக்கள் அனைவரும் சமமான உரிமை பெற்றவர்கள் என்று அரசியல் சாசனம் கூறுவதால், இனிமேல் தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கல்வி, வேலை வாய்ப்பு, தேர்தல் தொகுதி ஆகியவற்றில் தனி இட ஒதுக்கீடு அறவே கூடாது என்று நாளை தீர்ப்பு வழங்கப்படலாம். எல்லோரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதே அரசியல் சாசனத்தின் நோக்கம் என்று அப்போதும் நியாயம் கூறப்படலாம். அதற்கான வெள்ளோட்டமாகவும் இத்தீர்ப்பு அமையக் கூடும். எனவே பொதுசிவில் சட்டத்துக்கு எதிராக அவர்களும் சேர்ந்து போராடக் கடமைப்பட்டுள்ளனர்.

தனியார் சிவில் சட்டம், சிறுபான்மை மொழிப் பாதுகாப்பு, இட ஒதுக்கீடு ஆகிய விஷயங்கள் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் சேர்க்கப்படுவதற்குப் போராட வேண்டிய நேரம் இது! இது போன்ற தீர்ப்புக்கள் வழங்கப்படுவதற்கு ஆதாரமாகக் காட்டப்படும் 44வது பிரிவு போன்றவை நீக்கப்படுவதற்கு அவர்களும் போராடியாக வேண்டும்.

அறிவு ஜீவிகள் என்று தங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்போர், பொதுசிவில் சட்டத்துக்கு ஆதரவு கொடுப்பது தான் அறிவின் வெளிப்பாடு' என்பதைப் போல் நடந்து கொள்கின்றனர். இதையொட்டி அரிய தத்துவங்களை எல்லாம் அள்ளித் தெளித்து வருகின்றனர். அவர்களின் உளறல்களையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இஸ்லாமிய சிவில் சட்டம் கோருபவர்கள், இஸ்லாமியக் கிரிமினல் சட்டம் கோர மறுப்பதேன்? அறிவு ஜீவி(?)களின், ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் கேள்வி இது!

இந்தக் கேள்வியிலேயே அவர்களது மேதாவிலாசம் நமக்குத் தெரிந்து விடுகின்றது. இந்த அபத்தமான கேள்விக்கு விடையளிப்பதற்கு முன்னால் ஒரு முக்கியமான விஷயத்தை நாம் விளக்கியாக வேண்டும்.

முஸ்லிம்களுக்கு, கிரிமினல் சட்டங்கள் அனைத்தும் இ.பி.கோ. பிரகாரமும், சிவில் சட்டங்கள் அனைத்தும் இஸ்லாமிய சட்டப் பிரகாரமும் அமைந்திருப்பது போல் கருதி இந்த எதிர்க் கேள்வி கேட்கப்படுகின்றது. இது முற்றிலும் தவறாகும்.

கிரிமினல் விவகாரங்கள் எவ்வாறு இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் அனைவருக்கும் பொதுவாக உள்ளனவோ அதுபோல் தான் சிவில் விவகாரங்களும் இந்திய உரிமையியல் சட்டத்தின் பிரகாரம் அனைவருக்கும் பொதுவாகவே உள்ளன. இதை ஒரு உதாரணத்தின் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்.

ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதன் கடன் கொடுக்கிறான். இது சிவில் விவகாரம். கொடுத்த கடன் திரும்பி வரவில்லை. பலமுறை கேட்டுப் பார்த்தும் கடன் வாங்கியவன் திருப்பித் தர மறுக்கிறான்; இழுத்தடிக்கிறான். கடன் கொடுத்தவன் நீதிமன்றத்தை அணுகுகின்றான். இவ்வாறு அணுகும் போது மூன்று ஆண்டுகள் கடந்து விட்டால் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்க முடியாது. மூன்று வருடம் முடியாவிட்டால் தான் கொடுத்த கடனைத் திருப்பித் தருமாறு நீதிமன்றம் உத்தரவிடும்.

இந்தியாவில் முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் இப்படித் தான் தீர்ப்பு வழங்கப்படும்.

இஸ்லாமியச் சட்டப்படி வாங்கிய கடனை எவ்வளவு நாட்கள் சென்றாலும் கொடுத்துத் தான் தீர வேண்டும். சிவில் சட்டங்கள் முஸ்லிம்களுக்குத் தனியாக உள்ளன என்றால் முஸ்லிம்களுக்கு இந்தச் சட்டத்தின்படித்தானே தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். அப்படி வழங்கப்படாது.

எந்தக் கடன் கொடுக்கல் வாங்கலுக்கும் வட்டியுடன் சேர்த்து திருப்பிச் செலுத்த வேண்டும் என்று இங்கே சட்டம் உள்ளது. முஸ்லிம்களுக்கும், முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் இவ்வாறு தான் தீர்ப்பு வழங்கப்படும்.

முஸ்லிம்களுக்கு எல்லா விஷயத்திலும் தனி சிவில் சட்டங்கள் உள்ளன என்றால் முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட கடன் கொடுக்கல் வாங்கலுக்கு வட்டி கொடுக்குமாறு நீதிமன்றம் தீர்ப்பளிக்கக் கூடாது. ஏனெனில் இஸ்லாத்தில் வட்டி முழுமையாகத் தடுக்கப்பட்டதாகும்.

உதாரணத்திற்குத் தான் இந்த இரண்டை மட்டும் இங்கே எடுத்துக் காட்டியுள்ளோம். சிவில் சட்டங்கள் அனைத்துமே இப்படிப் பொதுவாகத் தான் உள்ளன.

திருமணம், தலாக் (கணவன், மனைவியை விவாகரத்துச் செய்வது), குல்ஆ (மனைவி, கணவனை விவாகரத்துச் செய்வது), பஸக் (முஸ்லிம் தலைவர் ஒருவர் ஒரு திருமணத்தைச் செல்லாது என்று அறிவித்தல்), வாரிசுரிமை, வக்ஃபுச் சட்டங்கள் ஆகியவற்றில் மட்டுமே முஸ்லிம்கள் தம் மார்க்கத்தின்படி நடந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாமறிந்த வரையில் இவற்றைத் தவிர மற்ற சிவில் விவகாரங்களில் பொதுசிவில் சட்டமே முஸ்லிம்களுக்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது.

பார்ப்பன ஏடுகளும், அறிவுஜீவிகள் என்று கூறிக் கொள்ளும் மேல் ஜாதியினரும் எல்லா விஷயங்களிலும் முஸ்லிம்களுக்கு இஸ்லாமிய சிவில் சட்டம் வழங்கப்பட்டுள்ளது போலப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இப்பிரச்சாரம் விஷமத்தனமானது; பொய்யானது என்பதைச் சுட்டிக் காட்டவே இதை இங்கே குறிப்பிடுகிறோம்.

நாம் சுட்டிக் காட்டிய திருமணம் முதலான விவகாரங்கள், முஸ்லிம்கள் தங்களுக்கிடையே அமல்படுத்திக் கொள்ளக் கூடியவை. மற்ற சமுதாயத்திற்கோ, நாட்டுக்கோ இதனால் எந்தப் பாதிப்பும் கேடும் ஏற்படப் போவதில்லை. இந்தச் சட்டங்களை அமல் செய்வதால் முஸ்லிம்களில் சிலருக்குச் சிரமம் ஏற்பட்டால் கூட அதை சிரமப்படுபவன் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறான். அறிவுஜீவிகள் இதை உணர வேண்டும்.

இஸ்லாமியக் கிரிமினல் சட்டத்தை முஸ்லிம்கள் கோருவார்களா? என்ற அவர்களின் கேள்விக்கு வருவோம்.

கிரிமினல் சட்டங்கள் ஆட்சியாளர்களால் நடைமுறைப்படுத்தப்படுபவை. சிவில் சட்டங்களிலும் பெரும்பாலானவை ஆட்சியாளர்களால் அமல்படுத்தப்படுபவை. மக்கள் இதைத் தாங்களாகவே அமல்படுத்த முடியாது. மக்கள் தமக்கிடையே நடைமுறைப்படுத்திக் கொள்ளக் கூடிய – மதம் சம்பந்தப்பட்ட – மிகச் சில விஷயங்களில் மட்டுமே தனியார் சிவில் சட்டம் உள்ளது.

இஸ்லாமிய ஆட்சி முறையில் கூட கிரிமினல் சட்டத்தை ஆட்சியாளர்கள் தாம் அமல்படுத்த முடியும். இந்தச் சாதாரண உண்மை கூட அறிவுஜீவிகளான இவர்களுக்கு விளங்கவில்லை.

கிரிமினல் குற்றங்களுக்கு இஸ்லாம் கூறக்கூடிய கடுமையான தண்டனைகளை உங்களுக்குள் நீங்களே அமல்படுத்திக் கொள்ளுங்கள் என்று அரசு, முஸ்லிம்களை நச்சரித்து வருவது போலவும், அச்சட்டத்தின் கொடுமைக்கு அஞ்சி முஸ்லிம்கள் தயங்குவது போலவும் இத்தகைய கேள்விகளால் ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

இஸ்லாமியக் கிரிமினல் சட்டங்களை, முஸ்லிம்கள் தங்களுக்கு ஏற்படும் கிரிமினல் விவகாரங்களில் அமல்படுத்திக் கொள்ள அரசு அனுமதித்தால் முஸ்லிம்கள் அதை மனப்பூர்வமாக ஏற்கத் தயாராக உள்ளனர். இஸ்லாமிய கிரிமினல் சட்டங்களால் தான் குற்றங்களைக் குறைக்க முடியும் என்பதில் முஸ்லிம்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு என்பதை அறிவுஜீவிகள் உணரட்டும்.

இன்னொன்றையும் அறிவுஜீவிகள் கவனிக்க வேண்டும். ஓரிரண்டு விஷயங்களில் முஸ்லிம்கள் தமது மார்க்கத்தின்படி நடந்து கொள்ள அனுமதிக்கப்பட்டது போலவே மற்ற மதத்தவர்களுக்கும் சில தனிச் சட்டங்கள் உள்ளன.

ஆயுதங்களின்றி அமைதியாகக் கூடுவதற்குக் குடிமக்களுக்கு உரிமை இருக்கின்றது.

(அரசியல் சாசனம் 19வது பிரிவு (1) ஆ)

ஆயுதங்களின்றி கூடுவதற்குத் தான் குடிமக்களுக்கு உரிமை உண்டு என்று அரசியல் சாசனம் கூறுகின்றது. கிர்பான் (குறுவாள்) வைத்திருப்பதும், அணிந்திருப்பதும் சீக்கிய மதத்தின் ஓர் அங்கமாகக் கருதப்படும்.

(அரசியல் சாசனம் 25வது பிரிவு, விளக்கம் 1)

குறுவாள்களை வைத்துக் கொண்டு சீக்கியர்கள் மட்டும் நடமாடலாம்; கூடலாம் என்று இந்தப் பிரிவு கூறுகின்றது.

முஸ்லிம்கள் தமக்கிடையே செய்து கொள்ளும் திருமணம், பாகப்பிரிவினை போன்றவை பிற சமுதாயத்தினருக்கு அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்துவதில்லை. குறுவாள்களுடன் ஒருவர் நடமாடுவதும், அவ்வாறு பலர் ஒன்று கூடுவதும் ஏனைய மக்களுக்குப் பீதியை ஏற்படுத்தும். அப்படி இருந்தும் அது சீக்கிய மதத்தின் ஓர் அம்சமாக இருப்பதால் அரசியல் சாசனம் அவர்களுக்கு விதிவிலக்கு அளித்துள்ளது.

பஞ்சாப் இந்தியாவில் இருக்க வேண்டும் என்றால் அந்தப் பகுதியினரின் மத வழிபாட்டில் குறுக்கிடக் கூடாது என்பதே இதன் காரணம்.

அது போல் ராணுவம், காவல்துறைகளுக்குச் சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன. அந்தச் சீருடைகள் தான் அவர்கள் அணிய வேண்டும். ஆனால் சீக்கியர்கள் தலைப்பாகையுடனும், தாடியுடனும் ராணுவம் மற்றும் காவல்துறையில் பணி புரியலாம் என்று தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

நாட்டில் நிர்வாணச் சாமியார்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. நிர்வாணமாகக் காட்சி தருவது சட்டப்படி குற்றம். ஆனாலும் இந்து மதத்திலும், ஜைன மதத்திலும் நிர்வாணச் சாமியார்களுக்கு அனுமதியிருப்பதால் நிர்வாணச் சாமியார்கள் போலீஸ் பாதுகாப்புடன் நடமாடி வருகின்றனர்.

அது போன்று இந்துக் கூட்டுக் குடும்பங்களுக்கு வரி விலக்கு, தத்து எடுத்தல், திருமண விதிகள் போன்றவற்றில் இந்துக்களுக்கு தனிச் சிவில் சட்டம் உள்ளது. அது போன்றே கிறித்தவர்கள், பார்ஸிகள் போன்றோருக்கும் மற்றும் பல சிறுபான்மை மதப் பிரிவுகளுக்கும் தனிச் சிவில் சட்டங்கள் உள்ளன.

நாட்டு ஒற்றுமையில் அக்கறை உள்ளவர்கள், மக்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டியது தான் முக்கியமே தவிர சட்டத்தை அமல் செய்கிறேன் என்ற பெயரில் நாட்டில் இரத்தக் களரி ஏற்படுத்துவதை அரசியல் சாசனமே விரும்பவில்லை என்பதற்கு இவை ஆதாரங்களாகும்.

'நாடு ஒற்றுமையாகவும், கட்டுக்கோப்பாகவும் இருக்க வேண்டுமானால் நாடு முழுமைக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டம் இருப்பதே பொருத்தமானது' இதுவும் அறிவுஜீவிகளின் வாதமாகும்.

சிவில் சட்டங்கள் ஒரு புறமிருக்கட்டும்! முதலில் கிரிமினல் சட்டங்களில் கட்டுக் கோப்பைக் குலைக்கக் கூடிய பிரச்சனைகளில் ஒரே மாதிரியான சட்டங்களை அமல்படுத்திக் காட்டட்டும் என்று அறிவுஜீவிகளை நாம் கேட்கிறோம்.

ஒரு மாநிலத்தில் மது அருந்துவது தண்டனைக்குரிய குற்றம். இன்னொரு மாநிலத்தில் அரசாங்கமே மதுக் கடைகளை நடத்தும். இதனால் கட்டுக்கோப்பு குலைந்து விடாது போலும். மதுவைத் தடை செய்த மாநிலத்திலும் பெர்மிட் உள்ளவர்கள் மது குடிக்கத் தடை இல்லை. இது பாரபட்சம் இல்லை போலும்.

விபச்சாரமும், சூதாட்டமும், நைட் கிளப்புகளும், ஆடை அவிழ்ப்பு நடனங்களும் ஒரு மாநிலத்தில் தண்டனைக்குரிய குற்றம். இன்னொரு மாநிலத்தில் அரசால் அனுமதிக்கப்பட்ட நடைமுறைகள். தடை செய்யப்பட்ட மாநிலங்களில் கூட, நட்சத்திர ஹோட்டல்களில் இவற்றுக்கு அனுமதியும் பிற இடங்களில் தடையும் உள்ளது.

சைக்கிளில் இருவர் செல்வது, இரு சக்கர வாகனங்களை ஹெல்மெட் அணியாமல் ஓட்டுதல் போன்ற சிறிய விஷயங்களிலிருந்து பெரிய விஷயங்கள் வரை மாநிலத்துக்கு மாநிலம் வித்தியாசமான சட்டங்கள்; வித்தியாசமான நடைமுறைகள்.

மாநிலத்துக்கு மாநிலம் வரி விதிப்பில் வித்தியாசங்கள். ஒரு மாநிலத்தின் உணவுப் பொருட்களை இன்னொரு மாநிலத்திற்குக் கொண்டு செல்லத் தடை! நாட்டில் ஓடும் நதிகளின் நீரைப் பங்கிட்டுக் கொள்வதில் தகராறு! இவற்றால் எல்லாம் கட்டுக்கோப்பு குலையாதாம். இப்படி வித்தியாசமான சட்டங்கள் இருப்பது அறிவுக்குப் பொருத்தமாக உள்ளதாம். நான்கே நான்கு விஷயங்களில் முஸ்லிம்கள் தங்கள் மதத்தின் கட்டளைப்படி நடந்தால் மட்டும் கட்டுக்கோப்பு குலைந்து விடுமாம். இப்படிக் கூறக்கூடியவர்கள் தான் அறிவுஜீவிகளாம்.

முஸ்லிம்கள் நான்கே நான்கு விஷயங்களில் தமது மார்க்கப்படி நடந்து கொண்டதால் நாட்டில் ஏற்பட்ட கலவரங்கள் எத்தனை? இதன் காரணமாகப் பிரிந்து போன நாடுகள் எத்தனை? கூறுவார்களா?

மொகலாய மன்னர்கள் இந்த நாட்டை ஆண்ட போது இந்துக்கள் தமது மதத்தின் அடிப்படையில் சிவில் சட்டங்களை நடைமுறைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதனால் நாடு சிதறிப் போகவில்லை. ஆயிரம் நாடுகளாக இருந்த பகுதிகள் ஒரு நாடாகத் தான் மாறின. இது தான் உண்மை.

வெள்ளையர்கள் இந்த நாட்டை ஆண்ட போதும் முஸ்லிம்களும், இந்துக்களும் தத்தம் மதத்தின்படி சில சிவில் சட்டங்களை நடைமுறைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதனால் நாடு சிதறவில்லை. இத்தகைய அணுகுமுறையினால் தான் பரந்த இந்தியாவே உருவானது. மொகலாயர்களும், வெள்ளையர்களும் மதச் சுதந்திரத்தில் தலையிட்டிருந்தால் இன்றைய இந்தியாவை நாம் பார்க்க முடியாது. இதையும் அறிவுஜீவிகள் உணர வேண்டும்.

வெள்ளையர்களும், மொகலாய (முஸ்லிம்) மன்னர்களும் வழங்கிய தனி சிவில் சட்ட உரிமையால் ஒன்றுபட்ட இந்தியா, இவர்கள் கொண்டு வர எண்ணுகின்ற பொதுசிவில் சட்டத்தினால் சிதறுண்டு போகும் நிலைக்குத் தள்ளப்படும். நாட்டில் குழப்பங்களும் கொந்தளிப்பும் ஏற்படும். இதைத் தான் சில விஷம சக்திகள் விரும்புகின்றன. இதற்காகவே பொதுசிவில் சட்டம் பற்றிப் பேசுகின்றன.

புத்த மதத்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள தாய்லாந்து நாட்டில் முஸ்லிம் தனியார் சட்டம் உள்ளது. புத்த மத நாடு என்று பிரகடனம் செய்து கொண்ட இலங்கையிலும் கூட முஸ்லிம் தனியார் சட்டம் அமலில் உள்ளது. கிரீஸ், எத்தியோப்பியா, உகாண்டா ஆகிய நாடுகளிலும் முஸ்லிம் நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலும் இத்தகைய சட்டங்கள் உள்ளன. இதன் காரணமாக இந்த நாடுகள் சிதறிப் போகவில்லை.

அறிவுஜீவிகளுக்கு இந்த உண்மை நன்றாகத் தெரிந்திருந்தும் இஸ்லாத்தின் மேல் அவர்களுக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே பொதுசிவில் சட்டம் எனக் கூப்பாடு போடுகின்றனர்.

அறிவுஜீவிகள் என்போர், இஸ்லாமிய நாடான சவூதி அரேபியாவில் சிறுபான்மையினருக்குத் தனி சிவில் சட்டம் உண்டா?' என சிறுபிள்ளைத் தனமான கேள்வி கேட்கின்றனர்.

சவூதி அரேபியா முழுக்க முழுக்க முஸ்லிம்களை மட்டுமே குடிமக்களாகக் கொண்ட நாடு. இங்கு பிற சமய மக்கள் குடிமக்களாக இல்லை. இந்தியாவில் ஏறத்தாழ எட்டு சமயத்தவர்கள் குடிமக்களாகவும், மண்ணின் மைந்தர்களாகவும் வாழ்கின்றனர்.

நாட்டில் குடிமக்களாக உள்ளவர்கள் மத அடிப்படையிலான தனி சிவில் சட்டத்தின்படி வாழ்வதற்கும், பிழைப்புக்காக அயல்நாடு சென்று அந்நாட்டுக் குடிமக்களாக ஆக முடியாதவர்கள் தனி சிவில் சட்டம் கோருவதற்கும் பெருத்த வித்தியாசம் உள்ளது.

முஸ்லிம் தனியார் சட்டத்தினால் பெண்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். எனவே அதை மாற்ற வேண்டும் என்பது அறிவுஜீவிகளின் கடைசி அஸ்திரம்.

சிந்திக்கும் திறன் சிறிதுமற்ற இவர்களின் வாதம் உண்மை என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும், இந்தச் சட்டம் இறைவன் வழங்கிய சட்டமாகும் என்று நம்பி, அதனால் ஏற்படும் சிரமங்களை மனப்பூர்வமாக விரும்பியே முஸ்லிம்கள் ஏற்றிருக்கின்றனர். இதையாவது இந்த அறிவுஜீவிகள் உணர வேண்டும்.

பெண்களுக்குக் கொடுமை இழைக்கப்படுகிறது என்ற கூற்றில் உண்மை இருக்கின்றதா? என்றால் அதுவும் இல்லை.

ஒரு மனைவி இருக்கும் போது இன்னொரு மனைவியைத் திருமணம் செய்வதால் முதல் மனைவி பாதிக்கப்படுகிறாள்; இது கொடுமை என்கின்றனர்.

இன்னொருத்தியை மணந்து கொள்வது கொடுமை! ஆனால் வைப்பாட்டியாக வைத்துக் கொள்வது கொடுமை இல்லை. என்னே அறிவுஜீவித்தனம் இது!

திருமணம் செய்து மனைவியுடன் வாழ்பவர் விபச்சாரம் செய்யலாம்; சிவப்பு விளக்குப் பகுதியில் சல்லாபம் செய்யலாம்; எத்தனை பெண்களையும் வைப்பாட்டியாக வைத்துக் கொள்ளலாம். இதற்கெல்லாம் எந்தத் தண்டனையும் கிடையாது. இதனால் எல்லாம் முதல் மனைவி பாதிக்கப்பட மாட்டாள். இவர்களின் அறிவு எவ்வளவு விசாலமானது என்பது தெரிகின்றதல்லவா?

முதல் மனைவி இருக்கும் போது இன்னொருத்தியை மனைவி என்று பிரகடனம் செய்வது தான் தவறு! மற்றபடி மனைவியிடம் அனுபவிப்பது போன்ற இன்பத்தை அனுபவிக்கலாம். அது தவறில்லை என்பது பொது சிவில் சட்டம்.

வைப்பாட்டிகளின் குழந்தைகளுக்கு சொத்துரிமை உள்ளதாக நீதிமன்றமே தீர்ப்பு வழங்கியுள்ளது.

இப்போது நாம் கேட்கிறோம்.

எதற்காக இன்னொருத்தியைத் திருமணம் செய்கிறானோ அவை அனைத்தையும் இன்னொரு பெண்ணிடம் அனுபவிக்கலாம். வசதிகள் செய்து கொடுக்கலாம். மனைவி என்று மட்டும் சொல்லக் கூடாது. இது தான் பொது சிவில் சட்டம்.

இதற்கும் பலதார மணத்திற்கும் அடிப்படையில் ஏதாவது வித்தியாசம் உள்ளதா? பொதுசிவில் சட்டமும் (மனைவி என்று பிரகடனம் செய்யாமல்) வைப்பாட்டி வைத்துக் கொள்ளவும், விரும்பி விபச்சாரம் செய்யவும் அனுமதித்து முதல் மனைவியைத் துன்புறுத்தத் தான் செய்கிறது.

ஒரு பெண்ணுடைய அழகை, இளமையை அனுபவிக்கக்கூடியவன், அவளுக்கு மனைவி என்ற அந்தஸ்தை அளித்து விட்டு அனுபவிக்கட்டும் என்று இஸ்லாமியச் சட்டம் கூறுவது இவர்கள் ஆதரிக்கும் சட்டத்தை விட எந்த விதத்தில் குறைவானது? விளக்குவார்களா?

ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணப்பது இஸ்லாத்தில் ஒரு அனுமதி தான். அதுவும் கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையில் வழங்கப்பட்ட அனுமதியே! வைப்பாட்டிகளை வைத்துள்ள மற்ற சமுதாயத்தவரை விட இரண்டு மனைவியரை மணந்த முஸ்லிம்களின் சதவிகிதம் மிகவும் குறைவானது என்பதையும் இவர்கள் உணர வேண்டும்.

கண்ட பெண்களுடன் கூடி விட்டுப் பெருநோய்க்கு ஆளாகி, மனைவிக்கு அந்த நோயைப் பரிசாகக் கொடுப்பதை விட, இன்னொருத்திக்குச் சட்டப்பூர்வமான மதிப்பு அளித்து, மணந்து கொள்வது எல்லா வகையிலும் சிறந்தது என்பதில் ஐயமில்லை.

நீதிமன்றத்தை அணுகாமல் முஸ்லிம் கணவன் தனது முதல் மனைவியை விவாகரத்துச் செய்யலாம் என்பது கொடுமையில்லையா? இதனால் பெண்களுக்குப் பாதிப்பில்லையா? என்பதும் அறிவுஜீவிகளின் மற்றொரு அபத்தக் கேள்வி!

நிச்சயமாகக் கொடுமை இல்லை. பெண்களுக்கு இதை விடப் பாதுகாப்பான சட்டம் வேறு இருக்க முடியாது என்பது தான் உண்மை.

நீதிமன்றத்தை அணுகித் தான் விவாகரத்துப் பெற முடியும் என்ற சட்டத்திற்கு உட்பட்ட பிற சமுதாயத்தில் தான் பெண்கள் கொடுமைப்படுத்தப்படுகின்றனர்.

நீதிமன்றத்தில் தான் விவாகரத்துப் பெற வேண்டும் என்றால் விவாகரத்துப் பெறுவதற்காக மனைவியின் மேல் கணவன் பகிரங்கமாக அவதூறு கூறுகின்றான். அல்லது தீயிட்டுக் கொளுத்தி விட்டு, ஸ்டவ் வெடித்து விட்டது என்று கூறுகின்றான். இதற்குக் காரணம் விவாகரத்துச் சட்டத்தில் உள்ள கடுமை தான்.

எந்த முஸ்லிம் கணவனும் தன் மனைவியை தீயிட்டுக் கொளுத்தியதாக வரலாறு இல்லை. காரணம், மனைவியைப் பிடிக்காவிட்டால் எளிதாக அவன் விவாகரத்துச் செய்ய முடியும் என்பது தான்.

மேலும் மனைவிக்குக் கணவனைப் பிடிக்காவிட்டால் அவளும் கணவனை விவாகரத்துச் செய்ய இஸ்லாம் அனுமதிக்கின்றது. இந்த அறிவுஜீவிகள் எதிர்க்கக் கூடிய முஸ்லிம் தனியார் சட்டத்திலேயே இது கூறப்பட்டுள்ளது.

விவாகரத்துச் செய்யும் உரிமையை ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமமாக இஸ்லாம் வழங்கி இருப்பதாலும், விவாகரத்துச் செய்த பின் பெண்கள் மறுமணம் செய்து கொள்ள இஸ்லாம் அனுமதித்து ஆர்வமூட்டுவதாலும், விவாகரத்துச் சட்டம் கடுமையாக இருந்தால் ஏற்படும் தீய விளைவுகள் இஸ்லாமிய சட்டத்தில் இல்லாததாலும் இதில் பெண்களுக்கு எந்தக் கொடுமையும் இல்லை. மாறாக அவர்களுக்கு இதில் பாதுகாப்பே இருக்கின்றது என்பது தான் உண்மை.

விவாகரத்துச் செய்த பின் பெண்ணுக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டியதில்லை என்பது கொடுமையில்லையா? என்பதும் அறிவுஜீவிகளின் கேள்வி!

ஆணும் பெண்ணும் எல்லா வகையிலும் சமமானவர்கள் எனக் கூறுவோர் ஆண் மட்டும் பெண்ணுக்கு ஜீவனாம்சம் தர வேண்டும் என்று கோருவது குழப்பத்தின் உச்சக்கட்டமாகும்.

விவாகரத்துச் செய்யப்பட்டவள் மறுமணம் செய்யும் வரை அல்லது மரணிக்கும் வரை ஜீவனாம்சம் வழங்கப்பட வேண்டும் என்று இஸ்லாமிய சட்டத்தில் திருத்தம் கோருகிறார்கள்.

இப்படி ஒரு சட்டம் இருந்தால் எந்தப் பெண்ணும் பெரும்பாலும் மறுமணம் செய்ய மாட்டாள். மாறாகக் கணவனிடமிருந்து ஜீவனாம்சம் பெற்றுக் கொண்டு, மற்ற ஆண்களுடன் சல்லாபம் நடத்தத் துணிவாள். ஜீவனாம்சம் இல்லை என்றால் தான் தனது வாழ்க்கையின் பாதுகாப்புக்காகப் பொருத்தமான துணையைத் தேடிக் கொள்வாள். இரண்டில் எது சரியானது என்று அறிவுஜீவிகள் சிந்திக்கட்டும்.

பொது சிவில் சட்டம் என்ற பெயரில் முஸ்லிம்களாக வாழும் உரிமையும் பறிக்கப்பட்டால், முஸ்லிம்கள் அதைப் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். பொங்கி எழுவார்கள். உலகத்துச் சலுகைகள் எதையும் அவர்கள் இழப்பார்கள். முஸ்லிம்களாக வாழ்வதற்கே தடை என்றால் இஸ்லாத்தை விட உயிர் பெரிதில்லை என்பதை நிரூபித்துக் காட்டுவார்கள். அத்தகைய நிலை ஏற்பட்டால் எந்தச் சக்தியாலும் அவர்களைத் தடுக்க முடியாது என்று ஆட்சியாளர்களை எச்சரித்து வைக்கிறோம்.

கொள்ளிக் கட்டையால் முதுகைச் சொறிந்து கொள்ளும் வேண்டாத வேலையில் ஈடுபட்டு, நாட்டின் அமைதியை ஆட்சியாளர்கள் குலைக்க மாட்டார்கள் என்று நம்புகிறோம்.

அல்ஜன்னத், ஜூலை 1995இதழில் பி.ஜே. எழுதிய தலையங்கம்

பதிவுத் திருமணம் கூடுமா?

இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்வதற்கு முன்பு பதிவுத்திருமணம் செய்வது வைப்பது இஸ்லாத்தில் கூடுமா?

அஹ்மத்

பதில் :

இது குறித்து பல ஆண்டுகளுக்கு முன்னர் நாம் எழுதிய நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும் எனும் நூலில் இதைப் பற்றி விளக்கியுள்ளோம். அதையே பதிலாகத் தருகிறோம்.

இந்தியாவில் நடைமுறையிலுள்ள பதிவுத் திருமணச் சட்டத்தின் அடிப்படையில் முஸ்லிம்கள் பதிவுத் திருமணம் செய்யலாகாது.

முஸ்லிம் தனியார் சட்டப்படி முஸ்லிம்களுக்குத் தனித் திருமணச் சட்டங்கள் இந்த நாட்டில் உள்ளன. தலாக், மஹர், வாரிசுரிமை, பலதாரமணம் போன்ற பல விஷயங்கள் இவற்றில் அடங்கும். இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்தால் மட்டுமே இந்த உரிமைகளை முஸ்லிம்கள் பெற முடியும்.

முஸ்லிம்களேயானாலும் அவர்கள் பதிவுத் திருமணம் செய்து கொண்டால் இந்த விஷயத்தில் பொதுசிவில் சட்டத்தின் கீழ் அவர்கள் வந்து விடுவார்கள். மேற்கண்ட உரிமைகளை அவர்கள் பெற முடியாது.

அதாவது பதிவுத் திருமணம் செய்பவர் தனக்கு முஸ்லிம் தனியார் சட்டம் தேவையில்லை என்று வாக்குமூலம் தருகிறார் என்று பொருள். நேரடியாக இப்படி அவர் கூறாவிட்டாலும் அதன் விளைவு இதுதான். எனவே பதிவுத் திருமணம் என்ற மாயவலையில் முஸ்லிம்கள் சிக்கிக் கொள்ளக் கூடாது.

முஸ்லிம் தனியார் சட்டத்திற்கெதிராக கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இது மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய விஷயமாகிறது.

மேலும் இஸ்லாமியத் திருமணம் பெண்ணின் பரிபூரண சம்மதத்துடன் அவளது பொறுப்பாளர் செய்து வைக்க வேண்டும். பொறுப்பாளர் இன்றி தானாக ஒரு பெண் திருமணம் செய்து கொள்ள முடியாது.

பதிவுத் திருமணம் என்பது ஒரு பெண் தானாகவே திருமணம் செய்து கெள்வதை நிபந்தனையாக்குகின்றது. அவளது தந்தையே அந்த இடத்தில் இருந்தாலும் அவர் சாட்சியாக மட்டும் தான் கருதப்படுவாரேயன்றி திருமணத்தை நடத்தி வைப்பவராக ஆக முடியாது. இதுவும் பதிவுத் திருமணம் கூடாது என்பதற்கான மற்றொரு காரணம்.

இறந்தவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய இஸ்லாம் அனுமதிக்கிறதா?

கேள்வி : இறந்தவரின் உறுப்புகளைக் கொண்டே தவிர வேறு எந்த சிகிச்சையாலும் மனித உயிரைக் காப்பாற்ற முடியாது என்ற இக்கட்டான நிலை வரும் போது இறந்தவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய இஸ்லாமிய ஷரீஅத் அனுமதிக்கிறதா? கூடுமா?

ஏனெனில், அல்லாஹ் ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுடைய உடல் உறுப்புகளை அமானிதமாக வழங்கியுள்ளான். அந்த அமானிதத்தை முழுமையாக அவனிடத்தில் சேர்ப்பது மனிதனின் கடமையாகும்.

மறுமையில் அல்லாஹ்வுடைய சந்நிதானத்தில் நாம் முழுமையான உடலுறுப்புகளுடன் நிறுத்தப்பட்டு கேள்வி கணக்கு கேட்கப்படுவோம் என்பதற்கு குர்ஆனுடைய வசனங்கள் சான்று பகர்கின்றன.

ஹாமீம் ஸஜ்தா என்ற அத்தியாயத்தில் 20, 21, 22 வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான்.

இறுதியாக நரகமாகிய அதன் பால் அவர்கள் வந்தடைந்து விடுவார்கள். பாவம் செய்த அவர்களுக்கு விரோதமாக அவர்களுடைய செவியும், அவர்களுடைய பார்வையும், அவர்களுடைய தோல்களும் அவர்கள் செய்து கொண்டிருந்ததைப் பற்றி சாட்சி கூறும்…

மேலும், தாஹா என்ற அத்தியாயத்தில் 125, 126 ஆயத்துக்களில் அல்லாஹ் கூறுகிறான்.

அந்த மனிதன் என் ரட்சகனே! ஏன் என்னை குருடனாக நீ எழுப்பினாய்? நான் திட்டமாக (உலகத்தில்) பார்வையுடையவனாக இருந்தேனே என்று கேட்பான். (அதற்கு) அவ்வாறே! நம் வசனங்கள் உன்னிடம் வந்தன. நீ அவைகளை மறந்து விட்டாய். (நீ மறந்த) அவ்வாறே இன்றைய தினம் நீயும் (நம் அருளிலிருந்து) மறக்கப்படுகிறாய் என்று (அல்லாஹ்) கூறுவான்.

மேலும், மார்க்கச் சட்ட மேதைகள் ஒருவன் குளிப்புக் கடமையாக இருக்கும் போது குளிப்பதற்கு முன்னால் அவனுடைய நகங்களையோ, மீசை போன்ற முடிகளையோ அகற்றக் கூடாது. அவ்வாறு செய்தால் மறுமையில் அந்த நகங்களும், முடிகளும் தீட்டுடன் அவன் முன் கொண்டு வந்து வைக்கப்படும் என்று கூறியுள்ளார்கள்.

உடல் உறுப்புகள் பற்றி மறுமையில் அவற்றின் நிலை பற்றி தெளிவாகக் கூறியிருக்கும் போது, அதை உலகிலே எப்படி தானம் செய்யலாம்?

– மவ்லவி ஹாபிழ் எஸ். அபூபக்கர் சித்தீக் பாகவி, மண்டபம்.

பதில்:

நீங்கள் சுட்டிக்காட்டியுள்ள திருக்குர்ஆன் வசனங்கள் எடுத்துக் கொண்ட தலைப்புடன் சம்பந்தப்பட்டவை அல்ல.

மறுமையில் இறைவன் நம்மை எழுப்புவது குறித்துக் கூறும் வசனங்களாகும்.

நமது உடல் உறுப்புகளைத் தானம் செய்யக் கூடாது என்றோ, அவ்வாறு செய்தால் அவ்வுறுப்புகள் இல்லாமல் எழுப்பப்படுவார்கள் என்றோ அவ்வசனங்கள் கூறவில்லை. மறைமுகமாகவும் அந்தக் கருத்து அவ்வசனத்திற்குள் அடங்கியிருக்கவில்லை.

நீங்கள் சுட்டிக்காட்டிய தாஹா 125, 126 வசனங்களை எடுத்துக் கொண்டால் அது உங்களது வாதத்துக்கு எதிராக அமைந்துள்ளதைக் காணலாம்.

கண் பார்வையுடன் இவ்வுலகில் வாழ்ந்தவன் இறைவனின் போதனையை மறுத்தால் குருடனாக எழுப்பப்படுவான் என அவ்வசனம் கூறுகிறது. குருடனாக எழுப்பப்படுவதற்குக் காரணம் அவன் நல்லவனாக வாழவில்லை என்பது தானே தவிர இவ்வுலகில் கண்ணை இழந்திருந்தான் என்பது அல்ல.

கண் இருந்தவனைக் குருடனாக எழுப்பிட அவனது நடத்தை தான் காரணம். அது போல் கண்ணற்றவன் இவ்வுலகில் நல்லவனாக வாழ்ந்தால் அவன் குருடனாக எழுப்பப்பட மாட்டான். அவனும் மற்ற நல்ல முஸ்லிம்களைப் போல இறைவனைக் காண்பான்.

எனவே நல்லவர் கெட்டவர் என்ற அடிப்படையில் இறைவன் செய்யும் ஏற்பாட்டை அதற்குத் தொடர்பு இல்லாத காரியத்துடன் பொருத்தக் கூடாது.

மேலும் மறுமையில் நாம் எழுப்பப்படும் போது அனைத்து ஆண்களும் சுன்னத் செய்யப்படாதவர்களாகவே எழுப்பப்படுவோம் – புகாரி 3349, 3447, 4635, 4740, 6524

சுன்னத் மூலம் நம்மிடமிருந்து அப்புறப்படுத்திய பகுதிகளையும் சேர்த்து இறைவன் எழுப்புவான் என்பது எதை உணர்த்துகிறது?

இவ்வுலகில் எந்த உறுப்புக்களை இழந்தான் என்பதற்கும் மறுமையில் எழுப்பப்படும் கோலத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை இது உணர்த்தவில்லையா?

சில முகங்கள் மறுமையில் கறுப்பாக இருக்கும். சில முகங்கள் வெண்மையாக இருக்கும் எனவும் திருக்குர்ஆன் கூறுகிறது.

அமெரிக்கர்களின் முகம் வெண்மையாகவும், ஆப்பிரிக்கர்களின் முகம் கறுப்பாகவும் இருக்கும் என்று இதற்கு அர்த்தமில்லை.

மாறாக நல்லடியாராக வாழ்ந்த ஆப்ரிக்கர் வெண்மையான முகத்துடன் வருவார். ஜார்ஜ் புஷ் இப்படியே மரணித்தால் கறுத்த முகமுடையவராக வருவார் என்பதே இதன் கருத்தாகும்.

இவ்வுலகின் தோற்றத்துக்கும், மறுமைக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.

நவீனமான காரியங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளைப் பொருத்த வரை நேரடியாக திருக்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் கூறப்பட்டிருக்காது. ஆயினும், மறைமுகமாக ஏதேனும் தடை இருக்கிறதா? எனப் பார்க்க வேண்டும். தடை காணப்பட்டால் அதைக் கூடாது என அறியலாம்.

கண்தானம், இரத்ததானம், கிட்னி தானம் போன்ற காரியங்கள் கூடாது என்பதை மறைமுகமாகக் கூறும் எந்த ஒரு ஆதாரமும் நாமறிந்த வரை கிடைக்கவில்லை.

சுட்டிக் காட்டப்படும் ஆதாரமும் ஏற்புடையதாக இல்லை.

மார்க்கம் தடை செய்யாத ஒன்றை தடை செய்ய நமக்கு எந்த அதிகாரமும் இல்லை.

அடுத்தது நமது உறுப்புகள் அமானிதம் என்று கூறுகிறீர்கள். அமானிதம் தான். ஆனால், இந்த அமானிதத்தின் பொருள் வேறாகும்.

நான் உங்களிடம் ஒரு பொருளை அமானிதமாகத் தந்தால் அதை நீங்கள் உபயோகிக்கக் கூடாது. அதை அப்படியே திருப்பித் தர வேண்டும்.

ஆனால், அல்லாஹ் அமானிதமாகத் தந்த கண்களால் நாம் பார்க்கிறோம். காதுகளால் கேட்கிறோம். இன்னும் மற்ற உறுப்புகளையும் பயன்படுத்துகிறோம். அமானிதம் என்பதற்கு மற்ற அமானிதம் போன்று பொருள் கொண்டால் இவையெல்லாம் கூடாது எனக் கூற வேண்டும்.

இறைவன் தடை செய்த காரியங்களில் பயன்படுத்தக் கூடாது என்ற ஒரு நிபந்தனையுடன் அதைப் பயன்படுத்தலாம். இந்த அடிப்படையில் தான் அது அமானிதமாகிறது.

நம்மிடம் அல்லாஹ் காசு பணத்தைத் தருகிறான் என்றால் அதுவும் அமானிதம் தான். அதாவது அதை நாமும் பயன்படுத்தலாம். மற்றவர்களுக்கும் கொடுக்கலாம். தவறான வழியில் மட்டும் செலவிடக் கூடாது.

அது போல் தான் நமது உறுப்புகளை நாமும் பயன்படுத்தலாம். நமக்கு எந்தக் கேடும் வராது என்றால் பிறருக்கும் கொடுக்கலாம். தப்பான காரியங்களில் அவற்றைப் பயன்படுத்தக் கூடாது. இது தான் அமானிதத்தின் பொருள்.

குர்ஆனினும், ஹதீஸிலும் தடை செய்யப்படாதவற்றைத் தவறா? சரியா? எனக் கண்டுபிடிக்க நமது மனசாட்சியையே அளவுகோலாகக் கொள்ள நபி(ஸல்) அனுமதியளித்துள்ளனர். (அஹ்மத் 17320)

உங்களுக்கு மிக விருப்பமான ஒருவர் ஆபத்தான நிலையில் இருக்கிறார். அவருக்கு இன்னொருவரின் இரத்தமோ, கிட்னியோ வைக்கப்பட்டால் தான் பிழைப்பார். இந்த நிலையில் உங்களுக்கு நெருக்கமானவர் என்றால் உங்கள் மனசாட்சி அதைச் சரி காணும்.

பெற்றுக் கொள்வதை மட்டும் சரி கண்டு விட்டு கொடுப்பதைச் சரி காணாமல் இருந்தால் அது நேர்மையான பார்வை இல்லை.

மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட காரியத்துக்கு இந்த அளவுகோலைப் பயன்படுத்துமாறு நாம் கூறுவதாக நினைக்க வேண்டாம். மார்க்கத்தில் தடுக்கப்பட்ட ஒன்றை நமது மனசாட்சி சரி கண்டாலும் அது தவறு தான்.

மார்க்கத்தில் தடுக்கப்படாத ஒன்றை நமது மனசாட்சி சரி கண்டால் அது சரியான அளவுகோல் தான் என்பதே அந்த நபிமொழியின் கருத்தாகும்.

குளிப்புக் கடமையானவர்கள் முடியையோ, நகங்களையோ வெட்டக்கூடாது என்று சில அறிஞர்கள் கூறினாலும் அதற்கு குர்ஆனிலோ, ஹதீஸ்களிலோ எந்த ஆதாரமும் இல்லை. எனவே தான் வேறு சில அறிஞர்கள் ஆதாரமற்ற இக்கருத்தை நிராகரித்துள்ளனர்.

எனவே உறுப்புகள் தானம் பற்றி தடை செய்யும் ஏற்கத்தக்க ஆதாரங்கள் வேறு இருந்தால் தெரிவியுங்கள். நாம் பரிசீலிக்கத் தயாராகவுள்ளோம்.

அர்த்தமுள்ள கேள்விகள் முழு நூலை வாசிக்க

அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள்

செல்போனில் குர்ஆன் வசனங்களை ரிங்டோனாக வைத்துக் கொள்ளலாமா?

ஹிதாயதுல்லாஹ்

பதில் :

சவூதி உலமாக்கள் சிலர் இது கூடாது என்று ஃபத்வா கொடுத்துள்ளனர். ஆனால் கூடாது என்பதற்கு இவர்கள் கூறும் காரணம் ஏற்கத் தக்கதல்ல.

ரிங்டோனாக குர்ஆன் வசனம் இருந்தால் போன் அழைப்பை ஏற்கும் போது குர்ஆனை இடையில் நிறுத்தும் நிலை ஏற்படும் என்பதைத் தான் இதற்குக் காரணமாகக் கூறுகின்றனர். இது குர்ஆனை அவமதிப்பதாகும் என்றும் கூறுகின்றனர்.

குர்ஆன் ஓதிக் கொண்டிருப்பவர் தேவை ஏற்படும் போது இடையில் நிறுத்தக் கூடாது என்று ஏதாவது ஆதாரம் இருந்தால் இவர்களின் வாதத்தை ஏற்கலாம். தொழுகையை இடையில் நிறுத்தக் கூடாது என்று தடை உள்ளது போல் குர்ஆன் ஓதுவதை இடையில் நிறுத்தக் கூடாது என்று தடையேதும் இல்லாத போது இவர்கள் கூறும் காரணம் ஏற்கத்தக்கதல்ல.

நாம் குர்ஆனை ஓதிக் கொண்டிருக்கும் போது ஒருவர் கதவைத் தட்டுகிறார் என்றால் குர்ஆன் ஓதுவதை நிறுத்தி விட்டு கதவைத் திறக்கலாமா என்றால் திறக்கலாம் என்று தான் இவர்களே கூறுவார்கள். இதனால் குர்ஆனை அவமதித்து விட்டார் என்று ஆகாது. ஒருவர் ஒரு தேவைக்காக நம்மைத் தொடர்பு கொள்ளும் போது அதற்குப் பதிலளிப்பது என்பது குர்ஆன் கற்றுத் தரும் பண்பாட்டுக்கு ஏற்றது தான்.

நாம் குர்ஆன் ஓதும்போது ஒருவர் நமக்கு ஸலாம் கூறினால் ஓதுவதை நிறுத்தி விட்டு பதில் சொல்ல வேண்டும். இது குர்ஆனை அவமதித்ததாக ஆகாது.

ஒரு முஸ்லிமிடம் இருக்க வேண்டிய நற்பண்புகளைக் கடைப்பிடிப்பதற்காக குர்ஆனை இடையில் நிறுத்துவது எந்த வகையிலும் குர்ஆனை அவமதித்ததாக ஆகாது. குர்ஆன் வழிகாட்டுதலை மதித்தததாகத் தான் ஆகும். இடையில் நிறுத்தக் கூடாது என்று கட்டளை இருந்தால் மட்டுமே அது குர்ஆனை அவமதித்ததாக ஆகும்.

தொலை பேசியில் வரும் ரிங்டோனும் ஒரு அழைப்பு தான். அந்த அழைப்புக்குப் பதில் சொல்வதற்காக நாம் ரிங்டோனை நிறுத்துகிறோமே தவிர குர்ஆனை அவமதிப்பதற்காக அல்ல.

இசை மார்க்கத்தில் தடை செய்யப்பட்டிருக்கும் போது அதைத் தவிர்க்க வேண்டுமே என்ற இறையச்சத்தின் காரணமாகவே அதிகமானோர் குர்ஆனை ரிங்டோனாக வைத்துக் கொள்கின்றர். இந்த ஃப்தவாவினால் மீண்டும் பாடல்களை ரிங் டோனாக மாற்றும் நிலைக்குத் தள்ளுகின்றனர்.

செல்போனை கழிவறைக்குள் கொண்டு செல்லும் நிலை ஏற்படும். அப்போது குர்ஆன் ரிங்டோன் ஒலிக்குமே இது சரியா என்றும் சிலர் கேட்கின்றனர்.

இப்போது அதிகமான மக்கள் பயன்படுத்தக் கூடிய செல்போன்களில் குர்ஆன் டெக்ஸ்ட், குர்ஆன் அரபி மூலம், மார்க்க நூல்கள், பயான்கள் ஆகியவற்றைப் பதிவு செய்யக்கூடிய வகையில் தான் உள்ளன. மார்க்க ஆர்வமுள்ளவர்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

இவர்கள் கழிவறை சென்றால் என்ன செய்ய வேண்டும்? இவர்களின் செல்போனுக்குள் குர்ஆன் உள்ளதால் அதைக் கழிவறைக்குள் கொண்டு செல்லாமல் இருக்க வேண்டும் என்று இவர்கள் கூறுவதில்லை.

கழிவறை செல்லும் போது குர்ஆன் ஒலிக்கும் என்பதால் குர்ஆனை ரிங்டோனாக வைக்கக் கூடாது என்றால் குர்ஆன் சாப்ட்வேர் பதிவிறக்கம் செய்யப்பட்ட செல்போனையும் பயன்படுத்தக் கூடாது என்று கூற வேண்டும். ஆனால் குர்ஆனை ரிங்டோனாக வைக்கக் கூடாது எனக் கூறுவோர் குர்ஆன் சாப்ட்வேர் விஷயத்தில் இப்படி கூறுவதில்லை.

கழிவறை செல்லும் அவசியம் உள்ளதால் குர்ஆன் சாப்ட்வேர் உள்ள போனை பயன்படுத்தக் கூடாது என்று இவர்கள் கூறுவதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பேணுதலாக நடக்க வேண்டும் என்று விரும்புவோர் கழிவறைக்குள் நவீன செல்போன்களைக் கொண்டு செல்லாமல் தவிர்த்துக் கொள்ளலாமே தவிர குர்ஆனை ரிங்டோனாக வைக்கலாகாது என்று கூறுவதை ஏற்க முடியாது.

28.03.2011. 22:50 PM

More Articles …