Sidebar

18
Thu, Jun
சமீபத்திய செய்திகள்

அடகு வைத்தல்

அடைமானம் வைப்பதும், வாங்குவதும் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்று தான். இதில் சந்தேகம் எதுவுமில்லை. ஒருவருக்குக் கடன் கொடுக்கும் போது நம்மை அவர் ஏமாற்றி விடாமலிருக்க நம்பிக்கைக்காக ஒரு பொருளைப் பெற்றுக் கொள்ளலாம்.

கொடுத்த கடனுக்கு உத்திரவாதமாகத் தான் அடைமானம். இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவரிடம் ஒரு நகையை அடைமானமாகப் பெற்றுக் கொண்டு கடன் கொடுத்தால், அந்த நகையை நாம் பயன்படுத்தாமல் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். வீட்டை அடைமானமாகப் பெற்றாலும் இது தான் நிலை.

வீட்டை அடைமானமாகப் பெற்றுக் கொண்டு கடன் கொடுத்து விட்டு அந்த வீட்டில் நாம் குடியிருந்தால் - அதாவது வாடகை கொடுக்காமல் குடியிருந்தால் - கொடுத்த கடனுக்கு வட்டியாகவே அது கருதப்படும்.

வீட்டை அடமானமாகப் பெற்ற பிறகு அதில் நாம் குடியிருக்கக் கூடாது. குடியிருந்தால் அதற்கான வாடகையைக் கொடுத்து விட வேண்டும்.

கால்நடைகளை அடமானமாகப் பெற்றால் அதற்கு தீனி போட்டு வளர்ப்பதால் அதில் சவாரி செய்யலாம். பால் கறந்து எடுத்துக் கொள்ளலாம். இதற்கு ஹதீஸ்களில் ஆதாரங்கள் உள்ளன.

(புகாரி 2511, 2512)

இந்த விதிமுறையை மீறாமல் அடைமானம் வைக்கலாம்; வாங்கலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கவசத்தை யூதரிடம் அடைமானம் வைத்து, அதை மீட்காமலேயே மரணம் அடைந்தார்கள்.

புகாரி 2916, 4467

எம்மதமும் சம்மதம் என்பது சரியா?

எல்லா மதங்களும் நல்லதைத் தான் போதிக்கின்றன. எல்லா நதிகளும் கடலில் தான் போய்ச் சேர்கின்றன. ஒரு ஊருக்குப் பல வழிகள் உள்ளன. எந்த வழியில் வேண்டுமானாலும் போகலாம் என்ற வாதம் சிலரால் எடுத்து வைக்கப்படுகின்றன.

எல்லா மதங்களும் நல்லதைத் தான் போதிக்கின்றன என்ற வாதம் பலவீனமான வாதமாகும்.

எல்லா மனிதர்களும் பிறப்பால் சமமானவர்கள். ஒருவரை விட மற்றொருவர் பிறப்பால் உயரவே முடியாது என்று ஒரு மதம் கூறுகிறது.

குறிப்பிட்ட குலத்தில் பிறந்தவன் உயர்ந்தவன் என்றும், மற்றொரு குலத்தில் பிறந்தவன் தாழ்ந்தவன் என்றும் இன்னொரு மதம் கூறுகிறது. இரண்டுமே நல்லது என்று எப்படிக் கூற முடியும்?

வேதத்தை அனைவரும் கற்க வேண்டும் என ஒரு மதம் கூறுகிறது! இன்னொரு மதம் ஒரு சாரார் மட்டுமே கற்க வேண்டும்; மற்றவர்கள் கற்றால் அவர்களின் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்கிறது? முரண்பட்ட இந்த இரண்டும் எப்படி நல்லவையாக இருக்க முடியும்?

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என ஒரு மதம் சொல்கிறது. குலத்தால் உயர்ந்தவர் ஒரு தவறு செய்தால் இலேசான தண்டனையும், அதே குற்றத்தைக் குலத்தால் தாழ்ந்தவர் செய்தால் கடும் தண்டனையும் வழங்க வேண்டுமென மற்றொரு மதம் கூறுகிறது. இவ்விரண்டுமே நல்லவை தாமா?

கல்யாணம், கருமாதி, பேய், பிசாசு என்றெல்லாம் மத குருமார்களுக்குத் தட்சிணை வழங்க வேண்டுமென ஒரு மதம் போதிக்கிறது. இன்னொரு மதம் எல்லா விதமான புரோகிதத்தையும் அடியோடு ஒழிக்கச் சொல்கிறது. இந்த இரண்டும் எப்படி நல்லவையாக இருக்க முடியும்?

கடவுளை வழிபடுவதில் நெருங்குவதில் ஒரு மதம் மனிதர்களிடையே பாரபட்சம் காட்டுவதில்லை. இன்னொரு மதம் கடவுளின் சன்னிதியைத் தாழ்ந்த குலத்தோர் நெருங்கக் கூடாது என்று கூறுகிறது.

உண்ணுதல், பருகுதல், மலம், ஜலம் கழித்தல், ஆசை, கோபம் போன்ற பலவீனங்களைக் கொண்ட மனிதன் ஒரு காலத்திலும் கடவுளாகவோ, கடவுளின் தன்மை பெற்றவராகவோ ஆக முடியாது என்று ஒரு மதம் கூறுகிறது. மனிதனைத் தெய்வமாக்கி அவன் காலில் சக மனிதனை விழச் சொல்கிறது மற்றொரு மதம்.

* விதவைக்கு விவாகமில்லை;

* பெண்களுக்குச் சொத்துரிமை இல்லை;

* கணவனே கண்கண்ட தெய்வம்; கணவனை இழந்தவள் உடன்கட்டை ஏற வேண்டும்;

* பெண்ணுடைய விருப்பமின்றிக் கல்யாணம் செய்யலாம் என்றெல்லாம் ஒரு மதம் கூறுகிறது.

* இவை அனைத்திலும் எதிரான கருத்தை இன்னொரு மதம் கூறுகிறது.

கடவுள் ஒருவனே; அவன் தேவையற்றவன்; அவனுக்குத் தாய் தந்தை இல்லை; மனைவி மக்களில்லை; உறக்கமில்லை; ஓய்வு இல்லை என்று ஒரு மதம் கூறுகிறது. இவை அனைத்திலும் மாற்றுக் கருத்தை இன்னொரு மதம் கூறுகிறது.

விபச்சாரம், ஓரினப்புணர்ச்சி, சூது, திருட்டு போதைப் பொருட்களை உட்கொள்ளுதல், லஞ்சம் போன்ற சமூகத்தைப் பாதிக்கும் எல்லாத் தீமைகளையும் ஒரு மதம் கடுமையாக எதிர்க்கின்றது. இன்னொரு மதம் இந்தத் தீமைகளைக் கடவுள்களே செய்துள்ளதாகக் கூறி அவற்றை நியாயப்படுத்த முயல்கிறது.

ஒருவர் பாவத்தை மற்றவர் சுமக்க முடியாது. அவரவர் செய்ததே அவரவர்க்கு என்று ஒரு மதம் கூறுகிறது. மற்றொரு மதமோ அனைவரின் பாவத்தையும் ஒருவரே சுமக்க முடியும் என்று கூறுகிறது.

கடவுள் ஒருவனே என்று ஒரு மதம் கூறுகிறது. கடவுள் மூவர் என்றும் கடவுள்கள் பலர் என்றும் மற்றொரு மதம் கூறுகிறது.

இப்படி ஆயிரமாயிரம் முரண்பாடுகள்! முரண்பட்ட இவை அனைத்தும் நல்லவை தாம் என்பதை அறிவுடையோர் எப்படி ஏற்க இயலும்?

எல்லா நதிகளும் கடலில் கலப்பது உண்மை தான். நதிகளுக்கு பகுத்தறிவு இல்லை. அவை சங்கமிக்கும் கடலுக்கும் பகுத்தறிவு இல்லை. சாக்கடைக்கும் கடலில் கலப்பதில் வெட்கமில்லை. கடலுக்கும் அதை உணரும் அறிவு இல்லை.

அறிவும், சிந்திக்கும் திறனுமில்லாத நதிகள் போன்றவர்களா மனிதர்கள்?

மனிதர்களாகிய நமக்கு அறிவு இருக்கிறது. நாம் யாரிடம் சேரப் போகிறோமோ அந்த இறைவனுக்கு நம்மை விட அதிகமாக அறிவு இருக்கிறது.

சாக்கடைகளைக் கடல் ஏற்றுக் கொள்வது போல் சாக்கடை மனிதர்களைக் கடவுள் ஏற்க மாட்டான்.

எதை உண்பது? எதைக் குடிப்பது? எதை அணிவது? எதில் குளிப்பது என்ற விஷயத்திலெல்லாம் அறிவைப் பயன்படுத்தும் மனிதன் எந்தக் கொள்கையைத் தேர்வு செய்வது என்பதில் அறிவைச் செலுத்த வேண்டாமா? அறிவும் உணர்வுமற்ற நதிகளுடன் தன்னை ஒப்பிட்டுக் கொண்டு தன்னைத் தானே தாழ்த்துவது என்ன நியாயம்?

ஒரு ஊருக்குப் பல வழிகள் இருக்கலாம். இதை அறிவு படைத்த யாரும் மறுக்க முடியாது. இங்கே எந்த வழியைத் தேர்வு செய்வது என்பது மட்டும் பிரச்சினையில்லை. எந்த ஊருக்குச் செல்வது என்பதும் முக்கியமான பிரச்சினை. வடக்கே உள்ள ஊரை நினைத்துக் கொண்டு தெற்கில் உள்ள ஊரை நோக்கிச் சென்றால் நினைத்துச் சென்ற ஊரை அடைய முடியாது.

சமத்துவம், பகுத்தறிவு, நேர்மை, ஒழுக்கம், சாந்தி ஆகிய ஊர்களுக்குச் செல்ல விரும்பும் மனிதன், தீண்டாமை, மூட நம்பிக்கை, அநீதி, ஒழுக்கக் கேடு, குழப்பம் ஆகிய ஊர்களை நோக்கிப் பயணம் செய்ய முடியுமா? பயணம் செய்தால் விரும்பிய ஊர்களை அடைய முடியுமா?

எல்லா மதங்களும் ஒரே சட்டத்தை, ஒரே அடிப்படைக் கொள்கையை வேறு வேறு வார்த்தையால் போதித்தால் ஒரு ஊருக்குப் பல வழிகள் என்று கூற முடியும். கொள்கை, சட்டம், அடிப்படை ஆகியவை வெவ்வேறாக இருக்கும் போது ஒரே ஊர் என்று எப்படிக் கூற முடியும்?

எழுதப்பட்ட ஸலாமுக்கு பதில் கூற வேண்டுமா?

எழுதப்பட்ட ஸலாம் இரு வகைகளில் உள்ளன. ஒருவர் மற்றவருக்கு எழுதும் கடிதங்களில் அஸ்ஸலாமு அலைக்கும் என்று எழுதுவது ஒரு வகை.

யாரும், யாருக்காகவும் எழுதாமல் அஸ்ஸலாமு அலைக்கும் என்பதைச் சுவர் போன்றவற்றில் எழுதி வைப்பது இன்னொரு வகை.

முதல் வகையிலான எழுதப்பட்ட ஸலாமுக்கு அவசியம் பதில் சொல்ல வேண்டும். அதாவது பதில் எழுதி அனுப்ப வேண்டும். ஏனெனில் பேசுவதன் இன்னொரு வடிவமே எழுத்தாகும்.

அறிவு கெட்டவனே என்று ஒருவன் மற்றவனை நேரில் திட்டினாலும், கடிதத்தில் எழுதி அனுப்பினாலும் இரண்டும் சமமாகவே எடுத்துக் கொள்ளப்படும். எழுதி அனுப்பியதால் அவர் திட்டவில்லை என யாரும் எடுத்துக் கொள்ள மாட்டோம்.

இந்த அடிப்படையில் உங்களுக்கு ஸலாம் கூறி ஒருவர் கடிதம் எழுதினால் அவருக்கு இரு வழிகளில் பதில் கூறலாம். அவர் எழுதியது போலவே நீங்களும் பதில் ஸலாம் எழுதி அனுப்பலாம். அல்லது அதைப் படித்ததும் வஅலைஹிஸ்ஸலாம் (அவர் மீது ஸலாம் உண்டாகட்டும்) என்று வாயால் கூறலாம்.

ஆயிஷா (ரலி) அவர்களுக்கு ஜிப்ரீல் ஸலாம் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய போது, வஅலைஹிஸ்ஸலாம் என்று ஆயிஷா (ரலி) பதில் கூறினார்கள்.

புகாரி : 3217, 3768, 6201, 6249, 6253

ஆயிஷா (ரலி) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களை நேரில் காணாததால் அவர் மீது ஸலாம் உண்டாகட்டும் என்றார்கள். கடிதம் மூலம் பதில் எழுத வாய்ப்பில்லாதவர்கள் இவ்வாறு கூறிக் கொள்ளலாம்.

சுவற்றில் எழுதி தொங்கவிடப்பட்ட ஸலாமுக்கு பதில் கூற வேண்டியதில்லை. ஏனெனில் அங்கே ஸலாம் கூறியவரும் இல்லை. கூறப்பட்டவரும் இல்லை.

அஸ்ஸலாமு அலைக்கும் என்று ஒலிப்பதிவு நாடாவில் பதிவு செய்யப்பட்டதைக் கேட்டால் அதற்கும் பதில் ஸலாம் கூற வேண்டியதில்லை. ஏனெனில் அங்கே கூறியவரும் இல்லை. கூறப்பட்டவரும் இல்லை.

ஒரு நண்பர் உங்களுக்காகப் பேசி அனுப்பும் கேஸட்டில் ஸலாம் கூறியிருந்தால் அதற்குப் பதில் கூற வேண்டும்.

இஸ்லாமிய நிகழ்ச்சி ஒன்றை வானொலி, தொலைக் காட்சியில் நேரடி, ஒலி, ஒளிபரப்பு செய்யும் போது அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறினால் அனைவருக்காகவும் ஒரு முஸ்லிம் ஸலாம் கூறுகிறார் என்பது தெரிவதால் அதைக் கேட்பவர் பதில் கூற வேண்டும்.

தண்ணீர் வியாபாரம்

தண்ணீர் அல்லாஹ்வின் அருட்கொடையாகும்.

காற்று எவ்வாறு அனைவருக்கும் பொதுவானதாக உள்ளதோ அது போல் தண்ணீரும் பொதுவானதாகும்.

நமக்குச் சொந்தமான நிலத்தில் தேங்கியுள்ள தண்ணீராக இருந்தாலும், நமக்குச் சொந்தமான இடத்தில் தோண்டப்பட்ட கிணறாக இருந்தாலும் நம் தேவைக்கு முன்னுரிமை கொடுக்கலாமே தவிர தேவைக்கு மேல் உபரியாக உள்ள தண்ணீரை மற்றவர்களுக்குத் தடுக்கக் கூடாது. விற்பனையும் செய்யக் கூடாது.

இது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளனர்.

மதீனாவில் ரூமா எனும் இடத்தில் யூதர் ஒருவருக்குச் சொந்தமான கிணறு இருந்தது. அந்த யூதர் அந்தக் கிணற்று நீரை விலைக்கு விற்று வந்தார். இதைக் கண்ட நபிகல் நாயகம் (ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றை யாராவது விலைக்கு வாங்கி முஸ்லிம்களின் பொதுப் பயன்பாட்டுக்கு வழங்குமாறு கோரிக்கை வைத்தார்கள். அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மருமகன் உஸ்மான் (ரலி) அவர்கள் விலைக்கு வாங்கி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்கினார்கள்.

صحيح البخاري

2778 - وَقَالَ عَبْدَانُ: أَخْبَرَنِي أَبِي، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ عُثْمَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ حِينَ حُوصِرَ أَشْرَفَ عَلَيْهِمْ، وَقَالَ: أَنْشُدُكُمُ اللَّهَ، وَلاَ أَنْشُدُ إِلَّا أَصْحَابَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَلَسْتُمْ تَعْلَمُونَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ حَفَرَ رُومَةَ فَلَهُ الجَنَّةُ»؟ فَحَفَرْتُهَا، أَلَسْتُمْ تَعْلَمُونَ أَنَّهُ قَالَ: «مَنْ جَهَّزَ جَيْشَ العُسْرَةِ فَلَهُ الجَنَّةُ»؟ فَجَهَّزْتُهُمْ، قَالَ: فَصَدَّقُوهُ بِمَا قَالَ

2778 அபூ அப்திர் ரஹ்மான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(கலீஃபா) உஸ்மான் (ரலி) அவர்கள் (கலகக்காரர்களால்) முற்றுகையிடப்பட்ட போது அல்லாஹ்வின் பெயரால் உங்களைக் கேட்கிறேன். நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்களைத் தான் கேட்கிறேன். யார் ரூமா' என்னும் கிணற்றை (விலைக்கு வாங்கி) தூர்வாரி (பொது மக்கள் நலனுக்காக வக்ஃப் செய்து) விடுகிறாரோ அவருக்கு சொர்க்கம் கிடைக்கும்' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற, நான் அதை (விலைக்கு வாங்கித்) தூர் வாரி(வக்ஃபாக ஆக்கி)யது உங்களுக்குத் தெரியாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவர் பொருளாதார நெருக்கடியிலிருக்கும் (தபூக் போருக் கான) படையை (பொருளுதவி செய்து) தயார்படுத்துகின்றாரோ அவருக்கு சொர்க்கம் கிடைக்கும்' என்று கூற, நான் அதைத் தயார்படுத்தியது உங்களுக்குத் தெரியாதா? என்று கூறினார்கள். நபித்தோழர்கள் அவர்கள் கூறியதை உண்மையென ஏற்றுக் கொண்டனர்.

صحيح البخاري

2353 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لاَ يُمْنَعُ فَضْلُ المَاءِ لِيُمْنَعَ بِهِ الكَلَأُ»

2353 தேவைக்கு மேல் எஞ்சியுள்ள தண்ணீரைத் தடுக்கலாகாது. (அவ்வாறு) தடுத்தால், அதைச் சுற்றியுள்ள) புல் பூண்டுகளை (மேய விடாமல் கால் நடைகளைத்) தடுத்ததாகி விடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 2353, 2354, 6962

நமக்குச் சொந்தமான நிலத்தில் தண்ணீர் பாய்ந்த பின் வரண்ட நிலத்துக்கு தண்ணீர் செல்ல விடாமல் தடுக்கக் கூடாது. அப்படித் தடுத்தால் கால்நடைகளுக்கு புல் பூண்டுகள் கிடைக்காமல் தடுத்த குற்றமாகி விடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கிறார்கள்.

கால்நடைகளுக்கான தண்ணீரைத் தடுக்கக் கூடாது என்றால் மனிதர்கள் குடிப்பதற்கும், பயிர் செய்வதற்கும் பயன்படும் தண்ணீரை மற்றவர்களுக்கு வழங்க மறுப்பது கடுமையான விஷயம் என்று அறிய முடிகிறது.

மேலும் தண்ணீர் விற்பனை செய்வதை நபிகள் நாயகம் (ஸல்) நேரடியாகவும் தடுத்துள்ளார்கள்.

صحيح مسلم 

34 - (1565) وحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، أَخْبَرَنَا وَكِيعٌ، ح وحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، جَمِيعًا عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، قَالَ: «نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ بَيْعِ فَضْلِ الْمَاءِ»

தேவைக்கு மிஞ்சிய தண்ணீரை விற்பது கூடாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)

நூல் : முஸ்லிம்

தண்ணீரை வியாபாரம் செய்யக் கூடாது என்றால் இன்றைய சூழலில் இதில் பல கேள்விகள் எழுகின்றன.

லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகத்திற்கு விலை நிர்ணயித்தல், தண்ணீரின் நிறம் மற்றும் சுவையை மேம்படுத்தி கிருமிகளை அழித்துத் தயாரிக்கப்படும் மினரல் வாட்டர் விற்பனை செய்தல் போன்றவை தண்ணீரை விற்பனை செய்த குற்றத்தில் சேருமா? என்பது தான் அந்தக் கேள்விகள்.

மேலோட்டமாகப் பார்க்கும் போது இது தண்ணீரை விலைக்கு விற்பது போல் தோன்றினாலும் உண்மையில் இது தண்ணீர் வியாபாரமாகாது.

ஏனெனில் லாரியில் சுமந்து செல்லுதல், அதில் முதலீடு செய்தல் போன்ற காரணங்களுக்காகவே கட்டணம் வாங்கப்படுகின்றது. அது போல் சாதாரண தண்ணீரைச் சுத்தப்படுத்துவதற்கும், மேம்படுத்துவதற்கும் தான் மினரல் வாட்டருக்கு விலை நிர்ணயம் செய்யப்படுகின்றது. எனவே இது தண்ணீரை விற்ற குற்றத்தில் அடங்காது.

நம்மிடம் ஒரு கிணறு உள்ளது. அதில் நம் தேவைக்கு மேல் தண்ணீர் இருக்கின்றது. இதில் நாங்களும் இறைத்துக் கொள்கிறோம் என்று ஒருவர் கேட்கும் போது, அவரிடம் கட்டணம் கேட்டால் அது தண்ணீரை விற்பதில் அடங்கும்.

நம்மிடம் தண்ணீர் இறைத்துத் தருமாறு அவர் கேட்கும் போது, அதற்கு நாம் கட்டணம் கேட்டால் அது குற்றமாகாது. இறைத்துத் தருவதற்காகவே கட்டணம் கேட்கிறோம்.

இந்த வேறுபாட்டைப் புரிந்து கொண்டால் இதில் குழப்பம் ஏற்படாது.

பால் மாற்றம்

கணவன் மனைவி இருவரில் எவராவது பால் மாறிவிட்டால் அதன் சட்டம் என்ன?

பால் மாற்றம் இயற்கையாக நடக்குமா? என்று தெரியவில்லை. நாம் அறிந்தவரை அறுவை சிகிச்சை மூலம் செயற்கையாகவே மாற்றப்படுகின்றது. இவ்வாறு செயற்கையாக மாற்றிக் கொள்ள இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

பெண்களுக்கு ஒப்ப நடக்கும் ஆண்களையும், ஆண்களுக்கு ஒப்ப நடக்கும் பெண்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்துள்ளனர்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 5885, 6834

எந்த வகையிலும் ஒரு பாலினம் இன்னொரு பாலினத்துக்கு ஒப்பாகக் கூடாது என்று இந்த ஹதீஸ் தடுப்பதால் முற்றாகவே மாற முயல்வது கடுமையான குற்றம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அப்படி மாறி விட்டால் அதன் பின்னர் ஏற்படும் நிலை என்ன? என்பதற்கு இஸ்லாத்தில் தீர்வு உள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் யாரும் பால் மாறவில்லை என்பதால் அது பற்றிய சட்ட விளக்கம் நேரடியாக ஹதீஸ்களில் கிடைக்காது. இதனை ஒத்திருக்கின்ற ஏனைய சட்டங்களிலிருந்து இதற்கான விளக்கத்தை நாம் பெற வேண்டும்.

கணவன் என்பவன் ஆணாகத் தான் இருக்க வேண்டும். மனைவி என்பவள் பெண்ணாகத் தான் இருக்க வேண்டும். இதற்கு ஆதாரம் காட்டத் தேவையில்லை.

ஒரு கணவன் எப்போது பெண்ணாக மாறி விடுகின்றானோ அந்த நிமிடமே அவன் கணவனாக இருக்க முடியாது.

* மனைவியைப் பொருத்த வரை அவன் இறந்து விட்டதாகக் கருதப்பட வேண்டும்.

* அல்லது அவனால் விவாகரத்துச் செய்யப் பட்டவளாகக் கருதப்பட வேண்டும்.

இந்த இரண்டு நிலைகளில் இரண்டாவது நிலையே இவளைப் பொருத்த வரை பொருத்தமாக உள்ளது.

கணவன் இறந்து விட்டால் சோகத்தைக் காட்டுவதற்காகவும், கர்ப்ப அறையில் அவனது சிசு வளர்கின்றதா என்பதைக் கண்டறிவதற்காகவும் அவள் இத்தா இருக்க வேண்டும். இவன் உயிருடனேயே உள்ளதால் விவாகரத்துச் செய்யப்பட்ட நிலையிலேயே அவள் இருக்கிறாள். எனவே மூன்று மாதவிடாயிலிருந்து தூய்மையாகும் காலம் வரை அவள் இத்தா இருந்து விட்டு அதன் பிறகு அவள் ஒரு ஆணைத் திருமணம் செய்யலாம்.

பாடல்கள் பாடுவது

பாடல்களைப் பொருத்த வரை இரண்டு அம்சங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பாடல்களுடன் இசைக் கருவிகள் பயன்படுத்தப்படாமல் இருக்க வேண்டும்.

பாடுகின்ற பாடல் இஸ்லாமியப் போதனைகளுக்கு முரணில்லாமல் இருக்க வேண்டும்.

அவ்வாறு இருந்தால் அந்தப் பாடல்களைப் பாடலாம். கேட்கலாம்.

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் என்ற பாடல் சினிமாப் பாடலாக இருந்தாலும் அதன் கருத்து இஸ்லாத்திற்கு முரணில்லாமல் இருப்பதால் இசைக் கருவிகளின்றி பாடலாம்.

* நமனை விரட்ட மருந்தொன்று விக்குது நாகூர் தர்காவிலே

* தமிழகத்தின் தர்காக்களை பார்த்து வருவோம்

* கேரளக் கரையோரம் வாழும் கருணை மிகும் பீமா

என்பது போன்ற பாடல்கள் இஸ்லாத்திற்கு முரணாக உள்ளதால் இதை இசைக் கருவி இல்லாமல் கூடப் பாடக் கூடாது.

நீங்கள் பாடும் பாடல்களில் மார்க்கத்திற்கு முரணில்லாத பாடல் என்றால் எவ்விதக் குற்ற உணர்வுமின்றிப் பாடலாம்.

கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் என்பது போன்ற பைத்தியக்காரத் தனமான உளறலையோ

அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்பது போன்ற இணை வைக்கும் பாடல்களையோ

பாடக் கூடாது. அவற்றில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

ஆயினும் நம்மை அறியாமல் இது போன்ற பாடல்கள் வாயில் வந்து விட்டால் அதற்காக இறைவன் குற்றம் பிடிக்க மாட்டான்.

எங்கள் இறைவா! நாங்கள் மறந்து விட்டாலோ தவறுதலாக செய்து விட்டாலோ எங்களைப் பிடிக்காதே என்று துஆச் செய்யுமாறு இறைவன் நமக்குக் கற்றுத் தருகிறான்.

(பார்க்க அல்குர்ஆன் 2:286)

நீங்கள் தவறாகச் செய்பவற்றில் உங்கள் மீது குற்றமில்லை. எனினும் நீங்கள் வேண்டுமென்று செய்தவையே குற்றமாகும் எனவும் அல்லாஹ் கூறுகிறான்.

(பார்க்க அல்குர்ஆன் 33:5)

இந்த நிலையில் நீங்கள் பாடினால் உங்கள் அமல்கள் அழிக்கப்படாது.