Sidebar

19
Fri, Jun
சமீபத்திய செய்திகள்

புனித மாதங்கள் எவை?

போர் செய்வது தடை செய்யப்பட்ட மாதங்கள் குறித்து இவ்வசனங்கள் (2:194, 2:217, 5:2, 5:97, 9:5, 9:36) பேசுகின்றன.

9:36 வசனத்தில் அல்லாஹ்வின் ஏற்பாட்டின்படி மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு என்று கூறப்படுகிறது. இந்தப் பன்னிரண்டு மாதங்களில் நான்கு மாதங்கள் புனிதமானவை என்றும் கூறப்படுகிறது.

ஆனால் புனிதமான அந்த நான்கு மாதங்கள் எவை என்று திருக்குர்ஆனில் கூறப்படவில்லை. ஆனாலும் இந்த நான்கு மாதங்கள் யாவை என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வானங்களும், பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பி விட்டது. வருடம் என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வருபவை. அவை துல்கஅதா, துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜமாதுல் ஆகிர், ஷஅபான் ஆகிய மாதங்களுக்கு இடையிலுள்ள ரஜப் மாதமாகும்.

நூல்: புகாரீ: 3197, 4406, 4662, 5550, 7447

இந்த நபிமொழி புனிதமான மாதங்கள் யாவை என்பதை விளக்குகிறது.

பொதுவாக திருக்குர்ஆனில் அடிப்படையான சட்டங்கள் மட்டுமே கூறப்படும். அதற்கான விளக்கத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூலம் தான் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று திருக்குர்ஆன் 16:44, 16:64 ஆகிய வசனங்கள் கூறுவதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கத்தை அல்லாஹ் மூலம் கிடைக்கப் பெற்ற விளக்கம் போலவே எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதுபோல் அமைந்த வசனங்களின் விளக்கத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழியாகத் தான் அறிந்து கொள்ள முடியும் என்பதால் திருக்குர்ஆனுடன் நபியவர்களின் விளக்கமும் அவசியம் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.

திருக்குர்ஆன் மட்டும் போதும் என யாராவது வாதிட்டால் அந்த நான்கு மாதங்களைத் திருக்குர்ஆனிலிருந்து அவர்கள் எடுத்துக்காட்ட வேண்டும். அவ்வாறு காட்ட முடியாது எனும் போது திருக்குர்ஆனுடன் நபிவழியும் அவசியம் என்பது நிரூபணமாகி விடும்

60. இரண்டு நாட்களில் புறப்படுதல் என்பதன் பொருள்

"குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வை நினையுங்கள்'' என்று இவ்வசனத்தில் (2:203) அல்லாஹ் கூறுகிறான்.

அல்லாஹ்வை எப்போதும் நினைக்க வேண்டும். ஆனால் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் அவனை நினைத்து விட்டு மற்ற நாட்களில் நினைக்காமல் இருக்கலாம் என்ற கருத்து இதில் அடங்கியுள்ளது.

பொதுவாக அல்லாஹ்வை நினைப்பது பற்றி இங்கே கூறப்படவில்லை. குறிப்பிட்ட ஒரு வணக்கத்தை குறிப்பிட்ட நாட்களில் செய்ய வேண்டும் என்பது பற்றித் தான் கூறப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட நாட்களில் செய்ய வேண்டிய அந்தக் குறிப்பிட்ட வணக்கம் என்ன என்பது திருக்குர்ஆனில் கூறப்படாவிட்டாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இது குறித்து விளக்கியுள்ளனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரஃபாவில் இருந்த போது நான் அவர்களை அடைந்தேன். நஜ்து பகுதியில் இருந்து வந்திருந்த ஒரு கூட்டத்தினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஹஜ் பற்றி ஒருவரைக் கேட்கச் செய்தனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "ஹஜ் என்பது அரஃபா தான். யார் முஸ்தலிபாவுக்கு பஜ்ரு தொழுகைக்கு முன் வந்து விட்டாரோ அவர் ஹஜ்ஜை அடைந்து விட்டார். மினாவின் நாட்கள் மூன்றாகும். யார் இரண்டு நாட்களில் அவசரமாகச் செல்கிறாரோ அவர் மீது குற்றம் இல்லை. யார் தாமதமாகச் செல்கிறாரோ அவர் மீதும் குற்றம் இல்லை'' என்று கூறி விட்டு இதை மக்களுக்கு அறிவிப்பதற்காக ஒருவரை அனுப்பினார்கள்.

நூல் : நஸாயீ 2994

"மினாவில் கல் எறிதல்'' என்ற வணக்கத்தைத்தான் இந்த வசனம் குறிக்கிறது என்று இந்த ஹதீஸ் அடிப்படையில் நாம் விளங்கிக் கொள்ள முடியும்.

கல் எறிதல் என்ற வணக்கத்தை மூன்று நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். அவ்வாறு செய்ய இயலாமல் அவசர வேலை உள்ளவர்கள் இரண்டு நாட்கள் மட்டும் கல் எறிந்து விட்டு புறப்பட்டால் அது குற்றம் இல்லை என்று இந்த ஹதீஸ் விளக்குகின்றது.

இரண்டு நாட்களில் புறப்படுதல் என்பது எதைக் குறிக்கிறது என்பதைக் திருக்குர்ஆனிலிருந்து விளங்க முடியாவிட்டாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதை விளக்கி விட்டதால் அதுவே போதுமானதாகும். திருக்குர்ஆனைப் போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அளித்த விளக்கமும் மார்க்கச் சான்றாகும்.

வேதத்துடன் ஞானமும் வழங்கப்பட்ட நபிகள் நாயகம்

இவ்வசனங்கள் (2:129, 2:151, 2:231, 3:164, 4:113, 33:34, 62:2) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வேதம் வழங்கப்பட்டதைப் பற்றி கூறும்போது வேதத்தை வழங்கினோம் என்று மட்டும் கூறாமல் வேதத்தையும், ஞானத்தையும் வழங்கியதாகக் கூறுகின்றன.

தக்க காரணங்களுடன் தான் இவ்வாறு கூறுகின்றன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும், மற்ற இறைத்தூதர்களுக்கும் வேதத்துடன் ஞானமும் வழங்கப்பட்டதாக 3:48, 3:81, 4:54, 5:110 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

வேதத்தை மட்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைவன் அருளவில்லை; வேதத்துடன் ஹிக்மத் எனும் ஞானத்தையும் சேர்த்து அருளி இருக்கிறான் என்பதை இவ்வசனங்களில் இருந்து புரிந்து கொள்ளலாம்.

வேதத்துக்கு எவ்வாறு விளக்கம் அளிக்க வேண்டும் என்ற ஞானத்துடன் தான் இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டார்கள். அவர்கள் அளித்த விளக்கங்கள் அவர்கள் தாமாகக் கண்டுபிடித்துக் கூறியதல்ல. இறைவன் புறத்திலிருந்து அவர்களுக்கு வழங்கப்பட்டதாகும் என்பதை இவ்வசனங்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

இறைத்தூதர்கள் அளித்த விளக்கமும் இறைவன் புறத்திலிருந்து கிடைத்தவை என்பதற்கு இந்த வசனங்கள் சான்றுகளாக உள்ளன. எனவே திருக்குர்ஆன் கூறும் வழிகாட்டுதலைப் பின்பற்றுவது எவ்வாறு அவசியமோ அது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான சொற்களையும், வழிகாட்டுதலையும் பின்பற்றுவதும் அவசியம் என்பதற்கு இவ்வசனங்கள் சான்றாக அமைந்துள்ளன.

"வேதத்தையும் ஞானத்தையும்'' என்ற சொற்றொடர் "ஞானமுடைய வேதம்'' என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று ஹதீஸை மறுக்கும் கூட்டத்தினர் உளறுகின்றனர்.

ஞானமுடைய வேதம் என்பதை வேதத்தையும் ஞானத்தையும் போன்ற வார்த்தைகளால் அறிவுடைய எவரும் கூற மாட்டார். ஞானமிக்க வேதம், ஞானம் நிரம்பிய வேதம் என்பது போன்ற வார்த்தைகளால் தான் இக்கருத்தைத் தெரிவிப்பார். வேதமும், ஞானமும் என்பது இரண்டு பொருட்களைத் தான் குறிக்கும் என்பது இவர்களுக்கு விளங்கவில்லை.

மேலும் மேற்கண்ட வசனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள சில சொற்களும் இவர்களின் அறியாமையை எடுத்துக் காட்டும் வகையில் அமைந்துள்ளன.

திருக்குர்ஆனைப் பற்றிக் கூறும் போது குர்ஆனை இறக்கினோம் என்று கூறுவது போல் 4:113 வசனத்தில் குர்ஆனையும் இறக்கினோம்; ஞானத்தையும் இறக்கினோம் என்று அல்லாஹ் கூறுகிறான். அப்படியானால் குர்ஆன் போலவே ஞானமும் இறைவனிடமிருந்து இறக்கியருளப்பட்டது என்பது தெளிவாகிறது.

திருக்குர்ஆனுடன் நபிவழியும் அவசியம் என்பதை மேலும் அறிய 18, 363950, 5556, 576072, 105125127128132164184244255256258286318350352358430 ஆகிய குறிப்புகளைக் காண்க!

வேதத்துடன் ஏடுகளும் வழங்கப்பட்ட இறைத் தூதர்கள்

இறைத்தூதர்கள் மூன்று விஷயங்களைக் கொண்டு வந்ததாக இவ்வசனங்கள் (3:184, 16:44, 35:25) கூறுகின்றன.

* தம்மை இறைத்தூதர் என நிரூபிக்கத் தேவையான தெளிவான சான்றுகள்! (அதாவது அற்புதங்கள்)

* ஏடுகள்!

* ஒளி வீசும் வேதம்!

ஆகிய மூன்றையும் இறைத் தூதர்கள் கொண்டு வந்துள்ளனர்.

இறைத்தூதர்கள் வேதத்தை மட்டுமின்றி ஏடுகளையும் கொண்டு வந்தனர் என்று கூறப்படுவது ஏன் என்பது சிந்திக்க வேண்டிய ஒன்றாகும்.

வேதத்தை மட்டுமின்றி வேதத்துக்கு விளக்கமான ஏடுகளையும் அவர்கள் கொண்டு வந்தனர் என்பதைத் தவிர இதற்கு வேறு கருத்து இருக்க முடியாது. திருக்குர்ஆன் மட்டுமின்றி அதற்கான விளக்கமும் இறைவனால் வழங்கப்பட்டதே என்பதற்கான சான்றுகளில் இவ்வசனமும் ஒன்றாகும்.

இறைத் தூதர்களுக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரம் என்ன?

இவ்வசனங்களில் (3:79, 6:89, 19:12, 21:74, 28:14, 45:16) நபிமார்களைப் பற்றிக் கூறும் போது அவர்களுக்கு வேதத்தையும் ஹுக்மையும் வழங்கியதாக அல்லாஹ் கூறுகிறான்.

ஹுக்ம் என்றால் அதிகாரம் என்று பொருள். திருக்குர்ஆனில் கூறப்பட்டிருக்கின்ற நபிமார்களை நாம் எடுத்துக் கொண்டால் அந்த நபிமார்களில் பெரும்பாலானவர்களுக்கு ஆட்சி அதிகாரம் வழங்கப்படவில்லை.

அப்படியானால் அதிகாரத்தை வழங்கியதாக அல்லாஹ் கூறுவது எந்த வகை அதிகாரம் என்று நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

குழந்தைப் பருவத்திலேயே யஹ்யாவுக்கு ஹுக்மை (அதிகாரத்தை) வழங்கியதாக 19:12 வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

நபிமார்களுக்கு வேதம் வழங்கப்பட்டதாக அல்லாஹ் கூறுவதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அவர்களுக்கு ஆட்சியதிகாரம் கொடுக்காமல் இருந்தும் அவர்களுக்கு அதிகாரத்தைக் கொடுத்ததாக அல்லாஹ் கூறுவது ஏன் என்பதை எப்படிப் புரிந்து கொள்வது?

இது ஆட்சி அதிகாரத்தைக் குறிக்க முடியாது. மாறாக வேதத்திற்கு விளக்கமாகச் சட்டமியற்றி மார்க்கத் தலைவர் என்ற முறையில் மக்களுக்கு ஆணையிடுகின்ற அதிகாரத்தைத் தான் அல்லாஹ் இங்கே குறிப்பிடுகிறான்.

இவ்வாறு பொருள் கொள்ளாவிட்டால் அல்லாஹ் அதிகாரம் வழங்கியதாகக் குறிப்பிடுவதற்கு அர்த்தம் இல்லாமல் போய் விடும்.

ஆட்சியதிகாரம் என்று நாம் அர்த்தம் கொடுத்தால் அனுப்பப்பட்ட அனைத்து நபிமார்களும் ஆட்சியதிகாரம் பெற்றவர்களாக இருந்திருக்க வேண்டும்.

ஏராளமான நபிமார்களை அவர்களின் எதிரிகள் கொலை செய்து விட்டார்கள் என்று திருக்குர்ஆனே சொல்கிறது. எல்லா நபிமார்களும் வெற்றி பெற்று பின்னாளில் ஆட்சி அமைக்கவில்லை.

நபிமார்களில் ஒரு சாராரை மறுத்தீர்கள்; பெரும்பாலானவர்களைக் கொன்று விட்டீர்கள் என்று 2:87 வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

அதனால் இந்த வசனங்களில் சொல்லப்படும் அதிகாரம் என்பது சட்டம் இயற்றும் அதிகாரத்தையே குறிக்கிறது. வேறு விதமான வஹீயின் மூலம் இந்தச் சட்டம் அவர்களுக்கு வந்து சேரும்.

அதனால் தான் வேதத்தைக் கொடுத்தோம் என்று மட்டும் சொல்லாமல் வேதத்தையும், அதிகாரத்தையும் கொடுத்தோம் என்று அல்லாஹ் கூறுகிறான்.

அவர்களுக்கு வேதத்தையும், அதிகாரத்தையும், நபி எனும் தகுதியையும் அளித்தோம். அவர்கள் இதனை மறுத்தால் இதனை மறுக்காத ஒரு சமுதாயத்தை இதற்குப் பொறுப்பாளிகளாக்குவோம் என்று 6:89 வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

வேதம் தவிர வேறு எதுவும் நபிமார்களுக்கு வழங்கப்படவில்லை என்றிருந்தால் வேதத்தையும், நுபுவ்வத்தையும், ஹுக்மையும் வழங்கியதாக அல்லாஹ் கூறியிருக்க மாட்டான்.

இறுதியாக இவ்வசனத்தில் அல்லாஹ் கூறும் செய்தி முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியதாகும். "இந்த நபிமார்கள் இம்மூன்றையும் மறுப்பார்களானால் மறுக்காத ஒரு கூட்டத்தாரிடம் இவற்றை ஒப்படைப்போம்'' என்பது தான் அந்தப் பகுதி.

வேதம் மட்டும் தான் நமக்கு அருளப்பட்டது. ஹுக்மு என்ற அதிகாரமோ, நபி எனும் தகுதியோ நமக்குத் தேவையில்லை என்று அந்த நபிமார்கள் கருதுவார்களானால் இம்மூன்றையும் ஏற்கும் மற்றவர்களுக்கு அதைக் கொடுத்து அனுப்புவேன் என்று அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான்.

இம்மூன்றையும் மறுப்பவர்கள் இறைமறுப்பாளர்கள் என்றும் இவ்வசனத்தில் தெளிவுபடுத்தப்படுகிறது.

இந்த வசனங்கள், "வேதத்தோடு நபிமார்களின் விளக்கமும் அவசியம்" என்று உறுதி செய்கின்ற வசனங்கள் ஆகும்.

பயணத்தில் தொழுகையைச் சுருக்குதல்

இவ்வசனத்தில் (4:101) பயணத்தின் போது தொழுகையைச் சுருக்கித் தொழலாம் எனக் கூறப்படுகிறது.

இதற்கு ஒரு நிபந்தனையும் விதிக்கப்படுகிறது. எதிரிகளால் ஆபத்து ஏற்படும் என அஞ்சினால் நீங்கள் தொழுகையைச் சுருக்கிக் கொள்ளலாம் என்பது தான் அந்த நிபந்தனை.

இன்றைக்கு அச்சமில்லாத சூழ்நிலையிலும் பயணங்களில் நாம் தொழுகையைச் சுருக்குகிறோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அச்சமில்லாத சூழ்நிலையில் பயணங்களில் தொழுகையைச் சுருக்கியுள்ளனர்.

இது இவ்வசனத்திற்கு முரணானது என்று சிலருக்குத் தோன்றலாம். ஏனெனில் அச்சமான சூழ்நிலையில் தொழுகையைச் சுருக்கலாம் என்று தான் இவ்வசனம் கூறுகிறது. அச்சமில்லாத நிலையிலும் தொழுகையைச் சுருக்கலாம் எனக் கூறுவது திருக்குர்ஆனுக்கு எதிரானதாகத் தோன்றலாம்.

ஆனால் உண்மையில் முரண் ஏதும் இல்லை. தொழுகையைச் சுருக்குதல் என்பது இரு வகைப்படும்.

ஏ ஒன்று அச்சமான நிலையிலும், போர்க்களத்திலும் சுருக்குதல்

ஏ மற்றொன்று அச்சமில்லாத போது சாதாரணப் பயணங்களில் சுருக்குதல்

இவ்விரு சுருக்குதலும் வெவ்வேறு வகையானவை.

அச்சமான நேரத்திலும், போர்க் களத்திலும் தொழுகையைச் சுருக்குவது என்றால் எல்லாத் தொழுகையையும் ஒரே ஒரு ரக்அத்துடன் முடித்தல் என்பது பொருள்.

நான்கு ரக்அத் தொழுகையானாலும், மூன்று ரக்அத் தொழுகையானாலும், இரண்டு ரக்அத் தொழுகையானாலும் அவற்றுக்குப் பதிலாக ஒரு ரக்அத் தொழுதால் போதும்.

இதை அடுத்த வசனத்திலிருந்து (4:102) அறிந்து கொள்ளலாம்.

எனவே ஒரு ரக்அத்தாகச் சுருக்குதல் என்பது அச்சமான சூழ்நிலையில் மட்டுமே. அச்சமில்லாத நேரத்தில் ஒரு ரக்அத் ஆகச் சுருக்கினால் அது இவ்வசனத்திற்கு எதிரானதாகும்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாதாரணப் பயணத்தில் ஒரு ரக்அத்துடன் சுருக்கவில்லை. மாறாக நான்கு ரக்அத் தொழுகைகளை மட்டும் இரண்டாகச் சுருக்கினார்கள். மற்ற தொழுகைகளைச் சுருக்கவில்லை.

இந்தச் சுருக்குதல் இவ்வசனத்துக்கு எதிரானதல்ல. இவ்வசனம் கூறாத இன்னொரு வகையான சுருக்குதலாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு திருக்குர்ஆன் அல்லாத வேறு வஹீயும் வந்துள்ளது. அந்த அடிப்படையில் அவர்கள் சாதாரணப் பயணங்களின் போது தொழுகையைச் சுருக்கினார்கள்.

சாதாரணப் பயணங்களில் சுருக்குதல் வேறு! அச்சமான நிலையில் சுருக்குதல் வேறு என்பதை விளங்கிக் கொண்டால் குழப்பம் வராது.

போர்க்களத் தொழுகை இரண்டு ரக்அத் என்று சில ஹதீஸ்களிலும், ஒரு ரக்அத் என்று சில ஹதீஸ்களிலும் காணப்படுகிறது. ஒரு ரக்அத் என்ற அறிவிப்பு தான் திருக்குர்ஆனுக்கு இணக்கமாக உள்ளது. இரண்டு ரக்அத்கள் என்ற அறிவிப்புகள் மேற்கண்ட வசனங்களுக்கு முரணாக உள்ளதால் அவற்றை ஆதாரமாக கொள்ளக் கூடாது.

போர்க்களத் தொழுகை குறித்து விரிவாக அறிய 126வது குறிப்பைப் பார்க்கவும்.

127. அச்சமற்ற நிலையில் தொழும் முறை

போர்க்களத் தொழுகையைப் பற்றிக் கூறிவிட்டு அச்சமற்ற நிலையை அடைந்தால் தொழுகையை நிலை நாட்டுங்கள் என்று அல்லாஹ் இவ்வசனத்தில் (4:103) கூறுகிறான்.

ஆனால் அச்சமான நேரத்தில் எவ்வாறு தொழ வேண்டும் என்பது தான் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. அச்சமற்ற நிலையில் எவ்வாறு தொழுவது என்று கூறப்படவில்லை.

அச்சமற்ற நிலையில் எவ்வாறு தொழுவது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வாழ்நாள் முழுவதும் செயல்படுத்திக் காட்டியுள்ளனர். அதைத் தான் அல்லாஹ் இங்கே சுட்டிக் காட்டுகிறான்.

திருக்குர்ஆன் கூறும் சில சட்டங்களை விளங்கிட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கம் அவசியம் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

அல்லாஹ்வுக்கும் தூதர்களுக்குமிடையே வேற்றுமை

திருக்குர்ஆன் மட்டுமே போதும்; திருத்தூதர்களின் வழிகாட்டுதல் ஏதும் தேவையில்லை என்று வாதிடுவோருக்கும் இஸ்லாத்திற்கும் எள்ளளவும் தொடர்பு இல்லை என்று இந்த வசனங்கள் (4:150, 151, 152) கூறுகின்றன.

"அல்லாஹ்வுக்கும், அவனது தூதர்களுக்கும் இடையே வித்தியாசப்படுத்தி சிலதை ஏற்போம். வேறு சிலதை நிராகரிப்போம் என்று கூறுபவர்கள் மெய்யாகவே முஸ்லிமல்லாதவர்கள்'' என்று இவ்வசனம் கூறுகிறது.

இவ்வசனம் தெளிவாகக் கூறும் இவ்வுண்மையை மறுத்திட இவ்வசனத்திற்குச் சிலர் தவறான பொருள் கொடுத்து வருகின்றனர். திருக்குர்ஆனின் சில தமிழாக்கங்களில் இவ்வசனம் தவறாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளதைத் தங்கள் கூற்றுக்கு சான்றாகக் காட்டுகின்றனர்.

இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்கள் அனைவரும் சமமானவர்களே. அவர்களுக்கிடையே வேற்றுமை காட்டக் கூடாது. அவர்களில் சிலரை ஏற்று வேறு சிலரை மறுக்கக் கூடாது என்பது தான் இவ்வசனத்தின் பொருள் என்று இவர்கள் கூறுகின்றனர்.

இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்களுக்கிடையில் வேற்றுமை காட்டக் கூடாது. எல்லாத் தூதர்களையும் நம்ப வேண்டும் என்பது சரி தான். இதைத் திருக்குர்ஆன் சில இடங்களில் குறிப்பிட்டிருக்கிறது. அத்தகைய வசனங்களுக்குத் தான் இவ்விளக்கம் பொருந்துமே தவிர இவ்வசனத்திற்கு அவ்விளக்கம் அறவே பொருந்தாது.

ஏனெனில் இவ்வசனம் இறைத்தூதர்களுக்கிடையே வேற்றுமை காட்டக் கூடாது என்று பொருள் கொள்ளும் வகையில் அமையவே இல்லை.

"வயுரீதூன அன் யுஃபர்ரிகூ பைன ருஸுலிஹி'' என்று கூறப்பட்டால் "இறைத் தூதர்களுக்கிடையே வேற்றுமை காட்ட எண்ணுகிறார்கள்'' என்று பொருள் வரும்.

ஆனால் இவ்வசனத்தில் "பைன ருஸுலிஹி'' (தூதர்களுக்கு இடையில்) என்று கூறாமல் "பைனல்லாஹி வருஸுலிஹி'' (அல்லாஹ்வுக்கும், அவனது தூதர்களுக்கும் இடையில்) என்று கூறப்பட்டுள்ளது.

அல்லாஹ்வுக்கும், அவன் தூதர்களுக்கும் இடையே வேற்றுமை காட்டாதீர்கள் என்ற சொற்றொடருக்கு தூதர்களிடையே வேற்றுமை காட்டாதீர்கள் என்று பொருள் கொள்வதை விட அறியாமை ஏதும் இருக்க முடியாது.

எனவே இவ்வசனம் அல்லாஹ்வுக்கும், அவன் தூதர்களுக்கும் இடையே வேற்றுமை காட்டக் கூடாது என்பதைத் தான் கூறுகிறது. நேரடியான வாசகமே அப்படித் தான் அமைந்திருக்கின்றது.

அல்லாஹ்வுக்கும், அவனது தூதர்களுக்குமிடையே வேற்றுமை காட்டக் கூடாது என்பதன் பொருளையும் சரியான முறையில் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வுக்கும், அவனது தூதர்களுக்கும் இடையே நிச்சயமாக வேற்றுமை உள்ளது. அல்லாஹ்வைப் போல் அவன் தூதர்களைக் கருதக் கூடாது என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம்.

அல்லாஹ்வுக்குச் செய்யும் வணக்கத்தை அல்லாஹ்வின் தூதருக்குச் செய்ய வேண்டும் என்று இவ்வசனத்தைப் புரிந்து கொள்ளக் கூடாது. அப்படியானால் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்குமிடையே வேற்றுமை காட்டக் கூடாது என்பதன் பொருள் என்ன?

இதற்காக நாம் அதிகம் சிரமப்படத் தேவையில்லை. ஏனெனில் எந்த வகையில் வேற்றுமை காட்டக் கூடாது என்பதையும் இவ்வசனத்திலேயே அல்லாஹ் தெளிவாகக் கூறி விடுகின்றான். "சிலவற்றை ஏற்போம். சிலவற்றை மறுப்போம்'' என்று கூறுவதையே வேற்றுமை காட்டுதல் என்று அல்லாஹ் இங்கே குறிப்பிடுகிறான்.

அல்லாஹ் சொன்னதை நாங்கள் ஏற்போம். அவன் தூதர்கள் கூறியதை நாங்கள் ஏற்க மாட்டோம் என்று யாராவது கூறினால் அவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனது தூதர்களுக்கும் இடையில் வேற்றுமை காட்டுகிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் கூறும் செய்திகள் அல்லாஹ்வின் செய்திகள் என்று நம்ப வேண்டும். தூதர் கூறும் செய்திகளை ஒருவர் மறுத்தால் அவர் உண்மையில் அவரை அனுப்பிய அல்லாஹ்வைத் தான் மறுக்கிறார். இதைத் தான் அல்லாஹ் இங்கே சுட்டிக் காட்டுகிறான்.

இவ்வாறு வேறுபாடு காட்டுபவர்களின் நிலை என்ன என்பதையும் இவ்வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான். இவர்கள் பாதியை ஏற்று மீதியை மறுத்து, புது வழியை உருவாக்கியதால் "இவர்களே உண்மையான இறைமறுப்பாளர்கள். இவர்களுக்கு இழிவு தரும் வேதனை இருக்கிறது'' என்று பிரகடனம் செய்கின்றான்.

திருக்குர்ஆன் மட்டும் போதும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கம் தேவையில்லை எனக் கூறுவோர் இவ்வசனத்தின் தெளிவான தீர்ப்பின்படி முஸ்லிம்கள் அல்லர். சந்தேகத்திற்கிடமின்றி இவர்கள் இறைமறுப்பாளர்களே!

மேலே நாம் எடுத்துக் காட்டிய 150, 151, 152 ஆகிய வசனங்களில் மூன்றாவது வசனத்தை இவர்கள் தங்களின் கருத்துக்கு ஆதரவாக வளைக்க நினைக்கின்றனர்.

"யார் அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்புகிறார்களோ - மேலும் அவர்களில் எவருக்குமிடையே வேற்றுமை காட்டாமல் உள்ளனரோ அவர்களின் பரிசுகளை அவர்களுக்கு அவன் வழங்குவான்'' என்பது தான் 152வது வசனம்.

இவ்வசனத்தில் இறைத்தூதர்களுக்கு இடையே வேற்றுமை காட்டக் கூடாது என்று கூறப்படுவதால் 150வது வசனத்திற்கும் அவ்வாறு தான் பொருள் கொள்ள வேண்டும் என்பது இவர்களின் வாதம்.

முதலில் ஒரு அடிப்படையை இவர்கள் அறியவில்லை. இரண்டு விதமான கருத்துக்கள் கொள்ள எந்த வசனம் இடம் தருகின்றதோ அது போன்ற வசனங்களுக்கு எந்த விளக்கம் கொடுக்கலாம் என்பதற்காக வேறு வசனங்களைத் துணைக்கு அழைக்க வேண்டும்.

எந்த வசனம் இரண்டு கருத்துக்கள் கொள்ள இடம் தரவில்லையோ அது போன்ற வசனங்களுக்கு இன்னொரு வசனத்தின் துணையுடன் விளக்கம் கூறுவதாகக் கருதிக் கொண்டு நேரடியான பொருளை நிராகரிக்கக் கூடாது.

150வது வசனத்தில் "அல்லாஹ்வுக்கும் அவனது தூதர்களுக்கும் இடையே வேற்றுமை காட்டுகிறார்களோ'' என்று கூறப்படுகின்றது. இதற்கு இரண்டு கருத்துக்கள் கிடையாது. அல்லாஹ்வுக்கும், அவன் தூதர்களுக்குமிடையே வேற்றுமை காட்டக் கூடாது என்ற ஒரு கருத்து தான் இதற்கு இருக்கிறது.

"தூதர்களுக்கிடையில் வேற்றுமை காட்டக் கூடாது'' என்பது தான் இதன் கருத்து என்றால் அல்லாஹ்வுக்கும்' என்ற வாசகம் தேவையில்லாமல் வீணாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று ஆகி விடும். இறைவேதத்தில் இத்தகைய வீணான சொற்கள் இருப்பதாகக் கூறுவதை விட்டும் அல்லாஹ் நம்மைக் காப்பானாக!

எனவே அல்லாஹ்வுக்கும், அவனது தூதர்களுக்கும் இடையே வேற்றுமை காட்டக் கூடாது என்ற 150வது வசனத்திற்கு அதற்குரிய பொருளையும், தூதர்களுக்கிடையே வேற்றுமை காட்டக் கூடாது என்ற 152வது வசனத்திற்கு அதற்குரிய பொருளையும் கொடுக்க வேண்டுமே தவிர இல்லாத ஒன்றை வலிந்து திணிக்கக் கூடாது.

"அல்லாஹ் சொன்னதை அதாவது திருக்குர்ஆனை மட்டும் தான் ஏற்பேன்; தூதர் சொன்னதை அதாவது ஹதீஸ்களை ஏற்க மாட்டேன்'' என்று கூறுவது அப்பட்டமான இறைமறுப்பாகும் என்பது தான் இவ்வசனம் சொல்லும் செய்தியாகும்.

More Articles …

Page 2 of 4