Sidebar

18
Sat, May
26 New Articles

37. நபிமார்களிடையே பாகுபாடு காட்டக் கூடாது

விளக்கங்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

37. நபிமார்களிடையே பாகுபாடு காட்டக் கூடாது

இவ்வசனங்கள் (2:136, 2:253, 2:285, 3:84, 17:55) இறைத்தூதர்களிடையே பாகுபாடு காட்டக் கூடாது என்று கூறுகின்றன.

இந்தத் தூதர் தான் பணியைச் சிறப்பாகச் செய்தார். அந்தத் தூதர் சிறப்பாகச் செய்யவில்லை என்று கூறினால் அது பாகுபாடு காட்டும் குற்றமாக அமையும். அல்லாஹ் தகுதியானவர்களையே தேர்வு செய்வான் என்ற அடிப்படையையே இது தகர்த்து விடும். எனவே ஒவ்வொரு நபியும் தமக்கு வழங்கப்பட்ட பணியைச் சிறப்பாகச் செய்தார்கள் என்று நாம் நம்ப வேண்டும்.

மூஸா நபியின் இடத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருந்திருந்தால் இதை விடச் சிறப்பாகச் செய்திருப்பார்கள் என்று கூறினால் அது பாகுபாடு காட்டியதுடன் இறைவனின் தேர்வைக் குறை கூறிய குற்றமாகவும் அமையும்.

இது போன்ற பாகுபாடுகள் காட்டுவது மாபெரும் குற்றமாகும் என்பதே இதன் கருத்து.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை வேறு நபியிடம் அல்லாஹ் ஒப்படைத்திருந்தால் அதை அவரும் சிறப்பாகச் செய்திருப்பார் என்பது தான் முஸ்லிம்களின் நம்பிக்கையாக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு நபியும் தமக்கு வழங்கப்பட்ட பணியில் எள் முனையளவும் குறை வைக்கவில்லை; விலை போகவில்லை; மனிதர்களுக்கு அஞ்சவில்லை; மறுமையை விட இவ்வுலகைப் பெரிதாக நினைக்கவில்லை. இப்படி எல்லாத் தூதர்களுமே சிறந்து விளங்கினார்கள் என்று நம்ப வேண்டும் என்பது தான் இதன் கருத்து.

ஒரு இறைத்தூதருக்கு வழங்காத சிறப்பை மற்றொரு தூதருக்கு அல்லாஹ் வழங்கியிருந்தால் அதைச் சுட்டிக்காட்டுவது பாகுபாடு காட்டியதாக ஆகாது.

எல்லா இறைத்தூதர்களையும் சமமான தகுதிகளுடன் அல்லாஹ் அனுப்பவில்லை. ஒருவருக்கு வழங்காத தகுதிகளை மற்றவருக்கு அல்லாஹ் வழங்கியுள்ளான். அல்லாஹ் வழங்கிய அந்தச் சிறப்புக்களை நாமும் எடுத்துக் கூறுவது பாகுபாடு காட்டுவதாக ஆகாது.

ஈஸா நபி தந்தையின்றி பிறந்தார்கள் என்பதை 3:45, 3:47, 3:59, 4:171, 19:19-21, 21:91, 66:12 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

ஈஸா நபி இன்று வரை உயிருடன் இருக்கிறார்கள் என்பதை 4:157-159, 5:75, 43:61 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

இந்தச் சிறப்புகள் யாருக்கும் இல்லை எனக் கூறுவது பாகுபாடு காட்டுவதாகாது. ஏனெனில் இந்தச் சிறப்பை அல்லாஹ் தான் அவருக்கு வழங்கினான்.

சில தூதர்களை சிலரை விட நாம் சிறப்பித்துள்ளோம் என்று 2:253, 17:55 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

அது போல் இப்ராஹீம் நபியின் குடும்பத்தாருக்கு வழங்கியது போன்ற பாக்கியங்களை வேறு எவருக்கும் அல்லாஹ் வழங்கவில்லை எனக் கூறுவதும் பாகுபாடு காட்டுவதாகாது. ஏனெனில் அல்லாஹ்வே இப்படி சிறப்பித்துக் கூறியுள்ளதை 2:124, 2:125, 4:125, 11:73, 16:120 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

ஸுலைமான் நபிக்கு வழங்கப்பட்ட ஆட்சி அதிகாரம், உலகில் எந்த நபிக்கும் வழங்கப்படவில்லை என 21:81, 21:82, 27:16-18, 27:40, 34:12, 38:35 ஆகிய வசனங்கள் கூறுகின்றன. நாமும் இவ்வாறு கூறுவது பாகுபாடு காட்டுவதாகாது.

அது போல் இறுதி நபியாகவும், அகில உலக நபியாகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் அனுப்பினான். இது யாருக்கும் வழங்காத சிறப்பாகும். இதை 4:79, 6:19, 7:158, 9:33, 21:107 33:40, 34:28, 48:28, 61:9 ஆகிய வசனங்கள் கூறுகின்றன

மறுமையில் மகாமு மஹ்மூத் எனும் புகழத்தக்க மதிப்பை அல்லாஹ் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வழங்குவான் என 17:79 வசனம் கூறுகிறது.

ஹவ்லுல் கவ்ஸர் எனும் நீர்த் தடாகம் அவர்கள் பொறுப்பில் விடப்படும் என 108:1 வசனம் கூறுகிறது.

மறுமையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதலில் பரிந்துரை செய்வார்கள் என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன. (பார்க்க: புகாரீ: 99, 335, 438, 3340, 4476, 4712, 6304, 6305, 6565, 6566, 6570, 7410, 7440, 7474, 7509, 7510)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய சிறப்பை எடுத்துக் கூறி புகழ்வது இறைத்தூதர்களிடையே பாகுபாடு காட்டியதாக ஆகாது.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account