Sidebar

01
Wed, Jul
சமீபத்திய செய்திகள்

தேசியக்கொடிக்கு எழுந்து நின்று மரியாதை செய்யலாமா?

கேள்வி: நாம் வந்தேமாதரம் பாடல், இணைவைத்தல் என்பதால் புறக்கணிக்கிறோம், ஆனால், தேசிய கீதம் பாடும் போது எழுந்து நிற்கிறோம். தேசிய கொடிக்கு மரியாதை செலுத்துகிறோம். இது சரியா? இப்படிச் செய்வது சுயமரியாதைக்கும், யாருக்கும் எழுந்து நிற்க கூடாது எனும் நபி மொழிக்கும் மாற்றமாக அமையுமா?

- ஆரிப் ராஜா, மங்களம் பேட்டை.

அல்லாஹ்வின் படைப்பில் சிறந்து விளங்கும் மனிதன் அவனை விட மதிப்பில் குறைந்த எதற்கும் மரியாதை செய்ய இஸ்லாத்தில் இடமில்லை.

பாட்டுக்கும், கொடிக்கும் மரியாதை செய்வதில் தேசபக்தி இல்லை. தேசத்தின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடப்பதும், தேசத்துக்கு ஆபத்து வரும் போது தேசத்தைக் காக்க போராடுவதும் தான் உண்மையான தேசபக்தியாகும். இது தான் இஸ்லாத்தின் பொதுவான சட்டமாகும்.

ஆனாலும் எந்த நாட்டிலாவது இது போன்ற காரியங்களைச் செய்யாமல் இருப்பது குற்றம் என்று அறிவிக்கப்பட்டு அதை மீறினால் நமக்குத் துன்பம் நேரும் என்ற நிலை இருந்தால் அதை நமக்குத் தாங்கிக் கொள்ள இயலாத நிலை இருந்தால் அப்போது அதைச் செய்வது இறைவனால் மன்னிக்கப்படும். சக்திக்கு உட்பட்டு நடக்குமாறு தான் இஸ்லாம் நமக்கு கட்டளையிட்டுள்ளது.

29.12.2011. 4:38 AM

முஸ்லிம் நாடுகளில் புரட்சிகள் நடப்பது ஏன்?

கேள்வி: உலக இஸ்லாமிய நாடுகளில் அடுத்தடுத்த அதிபர்கள் அரசுகள் மாற்றப்பட்டு உள்நாட்டுப் புரட்சிகள் ஏற்பட என்ன காரணம்?

- அபூஜஸீம் ஸார்ஜா

பொதுவாக மனிதர்கள் சுதந்திரத்தை விரும்பக் கூடியவர்களாக உள்ளனர். அரசாங்கம் எவ்வளவு நல்லதாக இருந்தாலும் அதன் தவறுகளைச் சுட்டிக்காட்டவும், தேவைப்பட்டால் அந்த ஆட்சியை மாற்றவும் நமக்கு உரிமை வேண்டும் என விரும்புகிறார்கள். கருத்துச் சுதந்திரமும், ஆட்சியாளர்களை மாற்றும் அதிகாரமும் மக்களிடம் வழங்கப்பட்டுள்ள நாடுகளில் இதுபோல் புரட்சி நடப்பதில்லை.

எழுத்தாலும், பேச்சாலும் அரசின் தவறுகளைச் சுட்டிக் காட்டும் வாய்ப்பு இருந்தால் அவர்களின் கோபத்துக்கு அது வடிகாலாக ஆவதால் புரட்சிக்கு வேலை இல்லை.

மேலும் ஜனநாயக நாடுகளில் ஆட்சியாளர்கள் மோசமானவர்கள் என்றால், அடுத்த தேர்தலில் ஆட்சியை மாற்ற முடியும் என்பதால் பொறுமையுடன் காத்திருக்கிறார்கள்.

ஆனால் முஸ்லிம் நாடுகளில் கருத்து சுதந்திரம் இல்லை. ஆட்சியாளர்களை மாற்றும் அதிகாரமும் மக்களுக்கு இல்லை எனும் போது அடக்கி வைக்கப்பட்ட கோபம் ஒரு நேரத்தில் பொங்கி விடுகிறது.

இந்தியாவில் இந்திரா காந்தி அவசர நிலைப் பிரகடனம் செய்த போது லஞ்சம், கலப்படம், ஊழல் அனைத்தும் கட்டுக்குள் வந்தன. அரசு அலுவலர்கள் விரைவாக தங்கள் கடமையைச் செய்தனர். விலைவாசியும் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. ஆனால் கருத்துச் சுதந்திரம் மட்டும் இல்லை. இதன் காரணமாக இந்திரா காந்தி படுதோல்வியைச் சந்தித்தார். மக்கள் சுதந்திர உணர்வைத்தான் பிரதானமாகக் கருதுகிறார்கள் என்பதை இதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

உணர்வு 16:14

29.12.2011. 4:17 AM

பால் விலை, பஸ்கட்டண உயர்வு சரியா?

கேள்வி: சென்ற சட்டமன்றத் தேர்தலில் AIADMK விலைவாசி உயர்வை முக்கிய காரணம் காட்டி ஓட்டு கேட்டது. இப்போதைய அரசு பால் மற்றும் பேருந்து கட்டணத்தை உயர்த்தி உள்ளது, இதன் பின்னணி என்ன?

- அஹ்மத் ஷமீம், கூத்தாநல்லூர்

தற்போது தமிழக அரசின் பஸ் கட்டணம் மற்றும் பால் விலை ஏற்றம் பற்றி தாங்கள் அறிந்ததே! இதைப் பற்றி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கருத்து என்ன? மக்கள் நலனுக்காக போராடும் நீங்கள் ஏன் இதற்காகப் போராடக் கூடாது?

- நா.ரஹ்மத்துல்லாஹ், மணலி

விலைவாசி உயர்வை மக்கள் சுமக்க வேண்டும் என்று காரணம் கூறி ஜெயலலிதா அதிரடியான விலை உயர்வை அறிவித்துள்ளார். அதை அவர் நியாயப்படுத்தி இருப்பதை யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது.

நான் மக்கள் மீது சுமத்தாமல் வேறு யார் மீது சுமத்த முடியும் என்று வாதமும் செய்துள்ளார்.

இப்படி வாதம் செய்வதற்கு ஒரு முதல்வர் தேவையா? நஷ்டம் வரும்போது விலையை உயர்த்தும் செயலை ஒரு டாட்டா, ஒரு அம்பானி செய்து விடுவாரே?

நஷ்டம் வருகிறது என்றால் மக்களைப் பாதிக்காத வகையில் எப்படி நிர்வாகம் நடத்துவது என்பதற்குத் தான் ஒரு முதல்வர் தேவைப்படுகிறார். எனவே ஜெயலலிதா விலையைக் கண்டமேனிக்கு உயர்த்திவிட்டு அதை நியாயப்படுத்துவது மக்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகமாகும்.

ஆவின் நிறுவனமும், போக்குவரத்துக் கழகங்களும் நஷ்டத்தில் இயங்குகின்றன என்றால் அதற்கான காரணத்தைக் கண்டுபிடித்து சரி செய்வதை விடுத்து மக்களைப் பற்றி கவலைப்படாத அதிகாரிகளின் பேச்சைக் கேட்டு, தானும் ஏமாந்து நாட்டு மக்களையும் ஜெயலலிதா ஏமாற்ற முயன்றுள்ளார்.

போக்குவரத்துக் கழகம் நஷ்டத்தில் இயங்குகிறது என்பதால் பஸ் கட்டண உயர்வு என்கிறார். கட்டண உயர்வினால் போக்குவரத்துக் கழகம் நஷ்டத்தில் இருந்து விடுபடும் என்று ஜெயலலிதா நினைத்தால் அவரை விட ஏமாளி யாரும் இருக்க முடியாது.

இப்போது உயர்த்தப்பட்டதை விட இன்னும் ஒரு மடங்கு கட்டணத்தை அதிகரித்தால் கூட போக்குவரத்துக் கழகத்தை லாபத்தில் நடத்த முடியாது.

கொள்ளை அடிக்கும் அதிகாரிகளும், திமிர் பிடித்த அரசு ஊழியர்களின் போக்கும், பராமரிப்பில்லாத சேவையும் தான் நஷ்டத்துக்குக் காரணம். ஓட்டை உடைசல்களாகவும், மழை பெய்தால் ஒழுகக் கூடியதாகவும், கிழிந்த சீட்டுகளைக் கொண்டதாகவும் எப்போது வேண்டுமானாலும் படுத்து(?) விடும் என்ற நிலையிலும் தான் அரசு பேருந்துகள் உள்ளன. இதனால் தான் 60 பயணிகள் ஏற வேண்டிய பேருந்துகளில் 20 பயணிகள் மட்டுமே பயணிக்கும் நிலை உள்ளது. இதுவே நஷ்டத்துக்கு முக்கிய காரணம்.

அரசு பேருந்தில் 200 ரூபாய் கட்டணம் இருந்தாலும், அதே தொலைவுக்கு தனியார் பேருந்துகள் 300 ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றன. இருந்த போதிலும் பயணிகள் கூட்டம் தனியார் பேருந்துகளில் நிரம்பி வழிகின்றது. காசுக்கு கணக்கு பார்க்கும் மிகச் சிலர் தவிர மற்றவர்கள் தூய்மைக்காகவும், பாதுகாப்பான பயணத்துக்காகவும் தனியார் பேருந்துகளில் அதிகக் கட்டணம் கொடுத்துப் பயணிக்கின்றனர்.

தனியாரை விட அரசு போக்கு வரத்துக் கழகத்துக்கு டீசல் நான்கு ரூபாய் குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. அப்படி இருந்தும் நஷ்டம் ஏற்பட இவர்கள் நிர்வாகம் செய்யும் லட்சனம்தான் காரணம்.

இப்போது கட்டணத்தை உயர்த்தி விட்டார்கள். மூளையற்ற அதிகாரிகளின் கணக்குப்படி ஏட்டில்தான் அதிக லாபம் கிடைக்கும். ஆனால் ஏற்கனவே 20 பேர் பயணித்தது போய் இனி அது பத்து பேராகக் குறைந்து மேலும் நஷ்டத்தைத்தான் அதிகரிக்கும்.

பெருநகரங்களில் டவுன் பஸ்களை இயக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி இல்லாத காரணத்தாலேயே அரசுப் பேருந்துகள் நிரம்பி வழிகின்றன. அதுவும் இனிமேல் சென்னையில் குறைந்து விடும். அனைவரும் மின்சார ரயிலில் பயணம் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

தொலைதூரம் செல்பவர்களில் காசுக்கு கணக்கு பார்ப்பவர்கள் ரயில் பயணத்தைத் தேர்வு செய்ய ஆரம்பித்து விட்டார்கள். காசைப் பற்றி கவலைப்படாதவர்கள் வழக்கம்போல் தனியார் பஸ்களில் தான் பயணம் செய்வார்கள். இனி பயணிகளே இல்லாத வெறும் பஸ்களைத் தான் அரசாங்கம் இயக்க வேண்டும். இது ஏற்கனவே இருந்த நஷ்டத்தை மேலும் அதிகமாக்குமே தவிர போக்குவரத்துக் கழகத்தை தூக்கி நிறுத்தாது.

அடுத்து பால் வளத்துறையும் இப்படித்தான். ஊழல் பெருச்சாளிகளாலேயே நஷ்டம் ஏற்படுகிறது. வாங்கிய விலையை விட அதிக விலைக்கே பால் விற்கப்பட்டு வருகின்றது. இதில் லாபம்தான் ஏற்பட வேண்டும். ஆனாலும் தொடர்ந்து நஷ்டம் ஏற்படுகிறது என்றால் அதற்குக் காரணம் சில திருட்டு அதிகாரிகளே!

மின்சாரம் மட்டுமே உற்பத்தி விலையை விடக் குறைந்த விலையில் மக்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் மட்டும் நஷ்டம் ஏற்படலாம். ஆனாலும் மக்களுக்கு மிகவும் அத்தியாவசியம் என்பதால் அரசாங்கம் அந்த நஷ்டத்தைச் சுமந்து கொள்கிறது. மேலும் மின் கட்டணத்தை அதிகரித்தால் மற்ற பொருள்களின் விலை உயர்ந்து விடும் என்பதால் அரசாங்கம் அதைச் சுமக்கத்தான் வேண்டும். இது காலாகாலம் கடைப்பிடிக்கப்படும் நடைமுறையாகும்.

ஆனாலும் இந்த நஷ்டம் கூட பாதியளவு தான் மக்களுக்கு வழங்கும் சலுகையால் ஏற்படுகிறது. இன்னொரு பாதி அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் ஆட்சியாளர்களின் பொறுப்பற்ற தன்மையால் ஏற்படுவதாகும்.

சென்னையில் பகல் பன்னிரெண்டு மணிக்குப் பார்த்தால் தெரு விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும். ஏனெனில் குறித்த நேரத்தில் போட்டு குறித்த நேரத்தில் அணைப்பதில்லை. அதுபோல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து பெரிய பெரிய நிறுவனங்கள் பத்தாயிரம் யூனிட்டைச் செலவிட்டு ஆயிரம் யூனிட்டுக்கு பணம் செலுத்துவதும் தொடர்ந்து நடக்கிறது. அது மட்டுமில்லாமல் ஆளும் கட்சியினர் நடத்தும் விழாக்களுக்கும் மாநாடுகளுக்கும் கொக்கி போட்டு பல்லாயிரம் யூனிட்டுகள் திருடப்படுகின்றன.

இப்படிப்பட்ட ஊதாரித்தனத்தைக் குறைத்தால் விலை ஏற்றாமலே பாதி நஷ்டத்தைக் குறைக்க முடியும். மற்றொரு பாதி நஷ்டத்தை அரசாங்கம் சுமக்கத்தான் வேண்டும். வேறு வகையில் அதற்கான நிதிகளைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.

வர்த்தக நோக்கத்தில் நடப்பதற்கு ஒரு அரசாங்கம் தேவையில்லை வியாபாரிகள் போதும். அரசாங்கம் இலவச மருத்துவமனை நடத்துகிறது. இதை நடத்த கஷ்டமாக உள்ளதால் இனிமேல் கட்டணம் வசூலிப்போம் என்று சொல்லலாமா?

காவல் துறையினருக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை, இனி மேல் புகார் கொடுக்க இவ்வளவு கட்டணம், எப்.ஐ.ஆர் போட இவ்வளவு கட்டணம் என்று கேட்க முடியுமா?

மக்களாகிய நீங்கள்தான் சுமக்க வேண்டும் என்று திமிர் வாதம் பேசமுடியுமா? மக்கள் ஏன் சுமக்க வேண்டும்? மக்கள் தான் சுமக்க வேண்டும் என்றால் ஆட்சி எதற்காக?

உணர்வு 16:13

29.12.2011. 4:11 AM

தடையில்லா மின்சாரம் சாத்தியமே

எட்டு மணிநேர மின்வெட்டு தமிழக மக்களுக்குக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலைக்கு கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்த அனைத்து கட்சிகளுமே கூட்டுப் பொறுப்பாளிகளாவார்கள்.

மின்சாரம் தமிழகத்தில் பயன்பாட்டுக்கு வந்தபோது விளக்குகள் எரிவதற்கும், மின் விசிறி சுழல்வதற்கும் மற்றும் நிலத்தடி நீரை மேலேற்றுவதற்குமே பயன்படுத்தப்பட்டு வந்தது. உபரியான மின்சாரம் இருந்தது. தனியார்களால் மின்உற்பத்தி செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்ட அந்தக்கால கட்டத்தில் வீடு வீடாக வந்து மின்சாரம் வேண்டுமா என்று மின்துறை ஊழியர்கள் கெஞ்சிக் கேட்டு மின் இணைப்புக் கொடுத்தனர்.

மேலும் மின்சாரக் கட்டணத்தைக் கூட தவணை முறை வியாபாரிகளைப் போல் வீடுகளுக்கு வந்து அலைந்து வசூலித்துச் சென்றனர். மின் உற்பத்தியை விட மின் உபயோகம் குறைவாக இருந்ததால் இந்த நிலை இருந்தது.

ஆனால் அடுத்தடுத்த காலகட்டங்களில் மின்சாரத்தில் இயங்கும் நவீன சாதனங்களும், சொகுசான சாதனங்களும் பயன்பாட்டுக்கு வந்தன. விளக்குகளும், விசிறிகளும் சாப்பிடும் மின்சாரத்தை விட நூறு மடங்கு ஐநூறு மடங்கு என மின்சாரத்தை அதிகம் சாப்பிடக் கூடியவைகளாக இவை இருந்தன.

ஏசி, ஹீட்டர், ஃபிரிட்ஜ், ஃபிரீஸர், வாஷிங் மெஷின், மிக்ஸி, கிரைண்டர், மைக்ரோ ஓவன், டீவி, கம்ப்யூட்டர், மின் அடுப்பு, எலக்ட்ரிக் குக்கர், வேக்கம் கிளீனர், ஹேர் டிரையர், அயர்ன் பாக்ஸ், ஸ்டிரியோ சிஸ்டம், டோஸ்டர், டீ மேக்கர், காப்பி மேக்கர் மற்றும் அதிக சக்தி வாய்ந்த மோட்டார் பம்புகள் போன்ற அனைத்துமே மிக அதிக அளவில் மின்சாரத்தைச் சாப்பிடக்கூடியவையாகும். பயன்பாடுகளுக்கு ஏற்ப அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்தி வந்த ஆள்வோர் மின்சாரத்தை மட்டும் பயன்பாட்டுக்கு ஏற்ப உற்பத்தி செய்வதில் மிக மிக மந்தமாக செயல்பட்டதன் விளைவைத் தான் கடந்த சிலஆண்டுகளாக நாம் அனுபவித்து வருகிறோம்.

இதுவரையில்லாத அளவுக்கு திடீரென்று அதிகப் பற்றாக்குறை ஏற்பட்டதற்கு மற்றொரு சிறப்பான காரணமும் உள்ளது. தொலைக்காட்சிப் பெட்டிக்கு விளக்கை விட அதிக மின்சாரம் தேவை. அதிகமான வீடுகளில் விளக்குகளுடனும், மின் விசிறியுடனும், வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருந்தனர். மின் உற்பத்தி போதுமானதாக இல்லாத நம் மாநிலத்தில் அனைவருக்கும் இலவசகலர் டிவி கொடுக்கும் திட்டத்தினால் தான் பற்றாக்குறை தாறுமாறாக ஏறியது. கேபிள் தொழிலில் ஏகபோக உரிமையாளராக இருந்த மாறன் வகையறாக்கள் கேபிள் மூலம் சம்பாதிப்பதற்காக இத்திட்டத்தைக் கொண்டு வந்தனர்.

ஒரு கோடி குடும்ப அட்டைகளில் 80 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்காவது தொலைக்காட்சிப் பெட்டிகள் கொடுக்கப்பட்டன. தொலைக்காட்சிப் பெட்டி இல்லாதவர்கள் தினமும் 16 மணிநேரம் புதிதாக பெற்ற தொலைக்காட்சிப் பெட்டியை இயக்கினால், எவ்வளவு பற்றாக்குறை ஏற்படும் என்பதைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். ஒரு டிவி வைத்திருந்த குடும்பம் ஒன்றுக்கு மேற்பட்ட டிவியை இயக்கும் போதும் கூடுதல் மின்சாரம் செலவாகும். இதன் பின்னர் தான் தட்டுப்பாடு தாறுமாறாக ஏறியது.

தற்போது ஜெயலலிதாவும் ஏதோ ஆடுமாடுகளையோ, வீடுகளையோ கொடுக்காமல் மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் என்று கொடுத்து வருகிறார். இதன் மூலமும் மின் பயன்பாடு அதிகரிப்பதால் மின் வெட்டு எட்டு மணி நேரமாகும் நிலை ஏற்பட்டது.

மேற்கண்ட சாதனங்களைப் பயன்படுத்தாமல் இருந்த மக்கள் மீது இவைகள் திணிக்கப்படுவதால் போகப்போக மின் தட்டுப்பாடு அதிகமாகிக் கொண்டுதான் வரும்.

பெருகி வரும் வாகனங்களுக்கு ஏற்ப சாலைகளை விசாலமாகவும், தரமாகவும் போடுவதற்கு அரசாங்கத்துக்கு திட்டமிடத் தெரிகிறது.

மித மிஞ்சி சேமிக்கும் அளவுக்கு அரிசி உற்பத்தியைப் பெருக்கும் திட்டங்கள் மூலம் வெற்றி காணத் தெரிகிறது.

ஆனால் நவீன சாதனங்களால் தாறுமாறாக உறிஞ்சப்படும் மின்சாரத்தை மட்டும் தேவைக்கு ஏற்ப அதிகரிக்க அரசாங்கத்துக்கு மனமில்லை.

இதற்கு அரசியல் ரீதியான காரணங்களும் உள்ளன. சாலை போடுவது என்றால் ஓரிரு வருடங்களில் போட்டு முடித்து விடலாம். அதைச் சொல்லி ஓட்டுப் பொறுக்க முடியும். ஆனால் மின் உற்பத்தி நிலையங்களை ஓரிரு வருடங்களில் முடிக்க இயலாது.

ராஜிவ் காந்தி காலத்தில் கட்டப்பட்ட கூடங்குளம் அணுமின் நிலையமே இப்போதுதான் முடிவுக்கு வரும் நிலையில் உள்ளது. இப்போது நாம் மின் உற்பத்தித் திட்டங்களுக்குச் செலவிட்டால் உடனடிப் பலன் கிடைக்காது. நாம் தோற்றுவிட்டால் அடுத்து ஆட்சிக்கு வருபவர்களுக்குப் பெயர் கிடைத்துவிடும். நமக்கு இதில் அரசியல் ஆதாயம் அடைய முடியாது என்று ஆட்சியில் இருந்தவர்கள் நினைக்கின்றனர்.

இதனால் தான் எத்தனையோ திட்டங்களைத் தீட்டி அதில் முன்னேற்றம் கண்டவர்கள் மின்சாரத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல் விட்டுவிட்டனர்.

இப்போதைய ஆட்சி எவ்வளவு தான் நினைத்தாலும் ஓரிரு வருடங்களில் மின்சாரம் கிடைக்கும் வகையில் மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க முடியாது.

கருணாநிதி ஆரம்பித்து வைத்த சில திட்டங்கள் முழுமையடைந்தால் ஜெயலலிதா அறுவடை செய்வார். இப்போது ஜெயலலிதா ஏதேனும் திட்டத்தைத் துவக்கி வைத்தால், அடுத்து ஆட்சிக்கு வருபவர்களுக்கு நற்பெயரை எடுத்துத் தர அது உதவும். நினைத்தவுடன் சரிசெய்யும் அளவிற்கு மின்சார நிலைமை இல்லை என்பது தான் யதார்த்தமான நிலையாகும். தமிழகம் எந்த அளவுக்கு மின் பற்றாக்குறையில் உள்ளது என்பதை அறிந்து கொண்டால் தான் இது உடனடியாக சரி செய்யக் கூடியதல்ல என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.

மின்சாரத்தை வாட் கணக்கில் அளவிடுகிறார்கள். தமிழகத்தில் அனைவருக்கும் அனைத்துத் தேவைகளுக்கும் தங்கு தடையின்றி 24 மணி நேரமும் மின்சாரம் வழங்க வேண்டுமானால், இப்போதைய நிலையில் 11 ஆயிரம் மெகாவாட் தேவைப்படும். (இந்த நிலையை நாம் எட்டும்போது மேலும் பல புதிய சாதனங்கள் வந்து கூடுதலாக 1000 மெகாவாட் தேவைப்படும் என்ற நிலை ஏற்பட்டுவிடும் என்பது தனி விஷயம்)

ஆனால் தமிழகத்திற்கு தற்போது கிடைக்கும் மின்சாரத்தின் அளவு சுமார் 8000 மெகா வாட் மட்டுமே. அதாவது அவசியம் ரூ100 தேவையுள்ளவனுக்கு ரூ 65 மட்டுமே கிடைப்பது போல் மின்சாரம் மூன்றில் ஒருபங்கு பற்றாக்குறையாக உள்ளது.

அதனால்தான் 24 மணி நேரத்தில் மூன்றில் ஒரு பங்கு என்ற அடிப்படையில் எட்டு மணி நேரம் மின் வெட்டு செய்கிறார்கள். இப்போதைய நிலையில் என்ன தான் தலைகீழாக நின்றாலும் 11 ஆயிரம் மெகாவாட் என்ற நிலையை எட்ட முடியாது. கூடங்குளம் மின் உலை செயல்பாட்டுக்கு வந்தால் 1000 மெகாவாட் தமிழகத்திற்குக் கிடைக்கும். இதனால் இரண்டு அல்லது மூன்று மணிநேர மின்வெட்டை சமாளிக்கலாம்.

இப்போது கிடைத்து வரும் எட்டாயிரம் மெகாவாட் இப்படியே தொடர்ந்து கிடைக்கும் என்று சொல்ல முடியாது. மழை குறைந்து நீர் வீழ்ச்சி நின்று விட்டாலோ அணைகளில் தண்ணீர் குறைந்து விட்டாலோ நீர் மின்சாரம் மூலம் இப்போது கிடைத்து வரும் மின்சாரமும் குறைந்து போக வாய்ப்புள்ளது.

நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டால் அதன் காரணமாகவும் அனல் மின்நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரமும் குறைந்து போகலாம். காற்றாலை மின்சாரத்தையும் நம்ப முடியாது. இது அடிக்கடி காலை வாரிவிடக்கூடியதாகும்.

புதிய புதிய திட்டங்களை இப்போதே தீட்டினால் தான் எதிர்காலத் தமிழகத்தை இருளில் இருந்து காப்பாற்ற முடியும். எவ்விதத் தட்டுப்பாடும் இல்லாமல் சூரிய ஒளியிலும் மின்சாரம் தயாரிக்கலாம். பரவலாக இதற்கான தகடுகளை அதிகமாகப் பொருத்த வேண்டும். பெரிய அளவில் இது போன்ற மின்சாரத்தை உற்பத்தி செய்ய பல்லாயிரம் ஏக்கர் என்ற அளவில் பிரம்மாண்டமான தகடுகளை அமைத்தால் பகல் முழுவதும் மின் உற்பத்தி செய்ய முடியும்.

நிலக்கரிக்கும், நீருக்கும் அண்டை மாநிலங்களை நம்பி இருப்பது போல் சூரிய ஒளிக்காக யாரையும் சார்ந்து இருக்கத் தேவையில்லை. ஆரம்பத்தில் இதற்கு அதிகபட்சமான செலவு பிடித்தாலும், அத்தியாவசியத் தேவைகளில் செலவு கணக்கைப் பார்க்க முடியாது.

இதைப்பற்றி அரசிடம் எந்தத் திட்டமும் இருப்பதாகத் தெரியவில்லை.

மேலும் இரவு பகல் என எல்லா நேரத்திலும் குறைந்த செலவில் கடல் அலைகளினால் கரையில் ஏற்படும் அழுத்தம் மூலமும் மின் உற்பத்தி செய்யலாம். தொடர்ந்து நிரந்தரமாக இதை உற்பத்தி செய்ய இயலும். இதுபோன்ற ஒரு கண்டுபிடிப்பை செய்முறை விளக்கத்துடன் செய்து காட்டும் விஞ்ஞானி ஒருவரை அன்றைய மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி அவர்களிடம் நாம் அழைத்துச் சென்று இத்திட்டத்தை விளக்கச் சொன்னோம். அவரோ அந்த அதிகாரிகளைப் பாருங்கள்'' என்று வேறொரு அதிகாரியைக் கைகாட்டி விட்டார். அந்த அதிகாரிக்கு மின்சாரம் பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாததால் அவர்களால் அதைப் புரிந்து கொள்ளக்கூட முடியவில்லை. இதெல்லாம் எங்களுக்கு முன்னரே தெரியும் எனவும் கூறிவிட்டார்.

நிலக்கரியில் கமிஷன் அடிப்பது போல சூரிய ஒளியிலும் கடல் அலையிலும் கமிஷன் அடிக்க முடியாது என்பதால் அதிகாரிகள் இதுபோன்ற திட்டங்களை அரசுக்குத் தெரிவிக்க மாட்டார்கள்.

மின் உற்பத்தியைப் பெருக்க இன்னும் எத்தனையோ திட்டங்கள் உள்ளன. அவற்றில் எல்லாம் அரசாங்கம் தன் கவனத்தைத் திருப்பினாலும் உடனடியாக மின்சாரம் கிடைக்கப்போவது இல்லை.

போராட்டம் நடத்தினாலும் புரட்சியே வெடித்தாலும் இல்லாத ஒன்றை எந்த அரசாலும் தர முடியாது என்பதுதான் யதார்த்தமான நிலை.

இப்போதைய உற்பத்தியை வைத்துக் கொண்டு தடையில்லா மின்சாரம் வழங்க முடியுமா என்றால் நிச்சயமாக முடியும்.

மின் பற்றாக்குறையைச் சமாளிக்க இப்போது அரசு எடுத்து வரும் நடவடிக்கை முழுமையாகப் பயன்தராது. எட்டு மணிநேரம் மின்வெட்டு செய்வதால் மூன்றில் ஒரு பங்கு மின்சாரம் மீதமாகும் என்று அரசாங்கம் தப்புக் கணக்கு போடுகிறது. இவர்கள் விடாக்கண்டர்களாக இருந்தால் மக்கள் கொடாக்கண்டர்களாக இருப்பார்கள் என்பதை அரசு கவனிக்கத் தவறிவிட்டது.

எட்டு மணிநேரம் மின்வெட்டால் விளக்கு, விசிறி, ஏசி ஆகிய மூன்றுதான் செயல்படாது. வாஷிங் மெஷின், ஓவன், கிரைண்டர், மோட்டார் பம்ப் உள்ளிட்ட எல்லா மின் சாதனங்களையும் மின்சாரம் வந்தபின் பயன்படுத்துவார்கள். ஓரளவு வசதி இருந்தால் ஒரு இன்வெர்ட்டர் மூலம் மின்சாரத்தை உறிஞ்சி மின்வெட்டின் போது விளக்கையும் விசிறியையும் இயக்கிக் கொள்வார்கள். எட்டு மணி நேர மின்வெட்டால் ஒரு மணி நேர மின்வெட்டின் பயன்தான் அரசுக்குக் கிடைக்கும்.

மண்டையைப் பிய்த்துக் கொண்டு பின்னர் பத்து மணி 12 மணி என்று நீடித்துக் கொண்டே போவார்கள். இது பயனற்றதாகும். மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தக்கூடியதாகும்.

நாம் முன்னரே சொன்னபடி அவசியத் தேவைக்கான மின்சாரம், சொகுசுத் தேவைக்கான மின்சாரம் எனற இரு வகைகளில் நமக்கு மின்சாரம் தேவைப்படுகிறது. இதை மட்டும் அதிகார வர்க்கம் சரியாகப் புரிந்து கொண்டால் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்க இயலும்.

விளக்கோ விசிறியோ இல்லாமல் மனிதனால் வாழ முடியாது. ஏசியோ ஃபிரிட்ஜோ இல்லாமல் வாழ முடியும். இந்த அடிப்படையைக் கவனத்தில் கொண்டு பின் வரும் யோசனைகளை அரசு செயல்படுத்தலாம்.

சில மணிநேர மின் வெட்டு இருந்த காலத்தில் அல்லது மின்வெட்டே இல்லாத காலங்களில் ஒரு வீட்டில் எவ்வளவு யூனிட் செலவானதோ அதில் முப்பது முதல் நாற்பது யூனிட் வரை குறைத்து இதுதான் உங்களுக்கான அளவு என்று ரேஷன் முறையைக் கொண்டு வரவேண்டும். அதாவது மின் வெட்டு இல்லாத நேரங்களில் 200 யூனிட் பயன்படுத்தி இருந்தால், அவர்களின் மின்சார ரேஷன் 140 யூனிட்டுகள்தான் என்று நிர்ணயிக்க வேண்டும்.

மின் ஊழியர்கள் 10 நாள்களுக்கு ஓரு முறை வீடு வீடாகச் சென்று உங்கள் ரேஷனில் இவ்வளவு தான் மீதம் உள்ளது என்று சொல்ல வேண்டும். அவர்கள் உபயோகிக்க வேண்டிய அளவை அடைந்துவிட்டால் அந்த மாதத்தில் எஞ்சிய நாட்களுக்கு அவர்களுக்கு மட்டும் மின்சாரத்தை நிறுத்தலாம். ஊருக்கே நிறுத்த வேண்டியதில்லை.

இதை கம்ப்யூட்டர் புராக்ராம் மூலமும் செய்ய முடியும். அல்லது ஊழியர்களின் கண்காணிப்பு மூலமும் செய்யலாம். இப்படி ரேஷன் முறையை அமுல்படுத்தினால் குடும்பத்தவர்கள் இரவில் நிம்மதியாகத் தூங்கவும், பிள்ளைகள் படிக்கவும் தேவையான அளவுக்கு மட்டுமே மின்சாரத்தைப் பயன்படுத்தி சொகுசு சாதனங்களை தாங்களாகவே இயக்காமல் நிறுத்திக் கொள்வார்கள், அல்லது குறைத்துக் கொள்வார்கள்.

சொகுசு வாழ்க்கைக்கு மின்சாரம் இல்லை என்பதால் யாரும் புரட்சி செய்ய மாட்டார்கள். அடிப்படைத் தேவைக்கே இல்லாவிட்டால் தான் புரட்சி வெடிக்கும்.

எனவே மின்சாரம் 24 மணி நேரமும் வந்து கொண்டே இருக்கும். பயன்படுத்துவோர் சுயக்கட்டுப்பாடு செய்து கொள்வார்கள். இதன் மூலம் இருக்கும் மின்சாரத்தை வைத்தே மின்வெட்டு இல்லாமல் சமாளிக்கலாம்.

வர்த்தக நிறுவனங்கள் பொருள்களைக் கவர்ச்சியாகக் காட்டவும், விளம்பரத்துக்காகவும், தாறுமாறாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்கள். அவர்களையும் இந்த ரேஷனில் கொண்டு வர வேண்டும். அப்படிக் கொண்டுவந்தால், அதிக மின்சாரத்தை இழுத்துக் கொள்ளும் நியான், மெர்குரி போன்ற விளக்குகளைத் தவிர்த்துக் கொண்டு தங்களுக்கான ரேஷன் அளவுக்குள் அவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள்.

தொழிற்சாலைகள், உற்பத்தி சார்ந்தவை மற்றும் மேலதிகச் செலவுவகை என இரு வகைகளில் மின்சாரத்தைச் செலவிடுகின்றன. தொழிற்சாலைகள் இயங்காவிட்டால் பலரது வேலைவாய்ப்பு பறிபோகும் என்பதால் தொழிற்சாலைகளுக்கு 20 சதவிகிதம் அளவுக்கு குறைத்து ரேஷன் நிர்ணயிக்கலாம். இதனால் உற்பத்திக்கு மட்டும் மின்சாரத்தைப் பயன்படுத்துவார்கள். தொழிலாளிகள் வேலை இழக்கும் நிலை இதனால் ஏற்படாது.

விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இது அவசியமானது தான். ஆனால் இரண்டு மணி நேரம் மோட்டார் இயங்கினால் போதும் என்ற நிலையில் 24 மணிநேரமும் மின் மோட்டார் இயங்கி தண்ணீரும், மின்சாரமும் வீணாவதை யாரும் மறுக்க முடியாது.

ஒரு ஏக்கருக்கு எத்தனை யூனிட் என்று நிபுணர்களைக் கொண்டு மதிப்பிட்டு ஒவ்வொரு இணைப்பிற்கும் எத்தனை யூனிட்டுகள் என்பதை நிர்ணயித்துக் கொள்ளலாம். அதற்கு மேல் பயன்படுத்த முடியாத நிலையை ஏற்படுத்தலாம்.

அதுபோல் அரிசி கோதுமை போன்ற அத்தியாவசியப் பொருள்களின் உற்பத்திக்கு மட்டும் இலவச மின்சாரத்தை வழங்கிவிட்டு மற்ற பணப் பயிர்களுக்கு கட்டணத்தை நிர்ணயிப்பதுடன் அவற்றிற்கும் உரிய ரேஷனை நிர்ணயிக்கலாம்.

பொதுக்கூட்டமோ மாநாடுகளோ எந்தக் கட்சி நடத்தினாலும், கொக்கி போட்டோ அல்லது இணைப்புப் பெற்றவரிடம் அனுமதி பெற்றோ மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றனர். ஜெனரேட்டர் வழியாகத் தவிர வேறு வகையில் மின்சாரம் பயன்படுத்தக்கூடாது என்று கடுமையான உத்தரவு பிறப்பிக்க வேண்டும். கட் அவுட்டுகள் மற்றும் சீரியல் விளக்குகளுக்கும் இதையே சட்டமாக்க வேண்டும். ஏனென்றால் இது பலரிடம் வசூல் செய்யப்படுவதால் இதற்கு ஆகும் அதிக செலவு பொதுமக்களைப் பாதிக்காது.

மின் நிலைமை சீராகும்வரை, திருமண மண்டபங்களுக்கு ஜெனரேட்டர் மூலம் மட்டுமே மின்சாரம் பயன்படுத்த உத்தரவிடலாம். கல்யாண மண்டபத்துக்கு லட்சக்கணக்கில் செலவு செய்வோர், மின்சாரத்துக்காக சில ஆயிரங்களைச் செலவு செய்ய தயங்க மாட்டார்கள்.

சாப்பிடவும், படிக்கவும், தூங்கவும் தடையில்லாத மின்சாரம் 24 மணி நேரமும் கிடைப்பதை உறுதி செய்தால் மக்கள் நிலைமையைப் புரிந்து கொள்வார்கள்.

முட்டை பல்பு எரிக்க வேண்டாம் என்றும், எல்.இ.டி. விளக்குகளையும் எல்.இ.டி. டிவிக்களையும் பயன்படுத்துங்கள் என்றும் நாம் பிரச்சாரம் செய்யத் தேவையில்லை. ரேஷன் முறையைக் கொண்டுவந்தால் பொதுமக்களே தாமாக முன் வந்து குறைந்த மின்சாரம் செலவாகும் சாதனங்களை வாங்கும் நிலை ஏற்படும்.

இதன் மூலம் அவர்களின் பொருளாதாரத்தில் சேமிப்பு ஏற்படுவதால் சிலர் வாழ்த்தினாலும் ஆச்சரியமில்லை. தமிழக அரசும் மின்வாரியமும் இதைக் கவனத்தில் கொள்ளுமா?

உறவினருக்கும் ஏழைக்கும் நாடோடிக்கும் அவரவரின் உரிமையை வழங்குவீராக! ஒரேயடியாக வீண் விரயம் செய்து விடாதீர்! விரயம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்க நன்றி கெட்டவனாக இருக்கிறான்.

திருக்குர்ஆன் 17:26,27

22.02.2012. 13:18 PM

RSS மதமாற்றத் திட்டம் பற்றி

ஆர்.எஸ்.எஸ்.ஸின் மதமாற்றம் எப்படிப்பட்ட மாற்றத்தை உண்டாக்கும்?

கேள்வி

இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் இந்து மதத்தைத் தழுவினால் முஸ்லிம்களுக்கு 5 இலட்சம் என்றும், கிறிஸ்தவர்களுக்கு 2 இலட்சம் என்றும் ஆர்.எஸ்.எஸ். அறிவித்துள்ள இந்த அறிவிப்பு சிறுபான்மையின மக்கள் மத்தியில் எடுபடுமா? இதனால் எப்படிப்பட்ட மாற்றத்தை உருவாக்க வாய்ப்பிருக்கும்?

-ஜைனப் அஸ்மத், வண்ணாங்குண்டு, இராமநாதபுரம் மாவட்டம்.

பதில் :

இந்த அறிவிப்பு சங்பரிவாரத்துக்குத் தான் அவமானம். எங்கள் மதத்தில் உருப்படியான ஒரு கொள்கையும் இல்லை. மற்ற மதத்தவர்களின் கொள்கைகளைவிட மேலான கொள்கை ஒன்றும் எங்களிடம் இல்லை என்பதுதான் இதற்குரிய ஒரே அர்த்தம்.

ஐந்து லட்சம் தருகிறோம் என்று வேசித்தொழிலுக்கு நிகரான அறிவிப்பு செய்து நாம் மதித்து பின்பற்றும் மதத்தை இழிவுபடுத்தி விட்டார்களே என்று இந்துப் பொதுமக்கள் இதற்கு எதிராகக் கொந்தளிக்க வேண்டும்.

மேலும் இவர்கள் பிற மதத்தவர்களை மதமாற்ற எப்போது இறங்கினார்களோ அப்போதே இவர்கள் இந்து மதத்தில் இருந்து விலகி விட்டனர்.

ஏனெனில் ஒருவர் இந்துவாகப் பிறக்க முடியுமே தவிர, இந்துவாக மாற முடியாது என்பதுதான் இந்து மதத்தின் கொள்கை. பிறப்பால் மட்டுமே இந்துவாக முடியும் எனும் போது இந்துவாகப் பிறக்காத ஒருவரை இந்து மதத்தில் சேர்க்க முடியாது.

அதாவது இந்து அல்லாதவரை இந்துவாக்கும் போதே இந்து மதம் செத்து விடுகிறது. அடுத்தவனை இந்துவாக்கும் அதே நேரத்தில் இவர்கள் இந்து மதத்தை விட்டு விலகி விடுகிறார்கள்.

மேலும் இந்து மதம் மனிதர்கள் நான்கு வர்ணங்களாக உள்ளனர் என்ற வர்னாசிரமம் எனும் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது.

 (1)பிராமணர்கள்

 (2)சத்திரியர்கள்

 (3)வைசியர்கள்

 (4)சூத்திரர்கள்

 இதில் சேராதவர்கள் தீண்டத்தகாதவர்கள் எனும் தலித்துகள்.

இந்த ஐந்து பிரிவுகளில் ஒன்றாகத் தான் இந்துக்கள் இருக்க முடியும்.

இவர்கள் மதமாற்றம் செய்யும் போது மதம் மாற விரும்புவோரை எந்த வர்ணத்தில் சேர்ப்பார்கள்? இதைத் தெளிவாகச் சொல்ல இவர்களுக்குத் திராணி இல்லை. சொல்ல முடியாது.

நான் இந்துவாக மாறுகிறேன் என்னை பிராமணனாக ஆக்குங்கள் என்று ஒருவன் முன்வந்தால் அதைச் செய்யத் தயாராக இருக்கிறார்களா?

தலித் தவிர மதம் மாறியவனை வேறு எந்தச் சாதியில் இவர்கள் சேர்த்தாலும் அந்த வர்ணத்தைச் சேர்ந்த இந்து சமுகம் கடுமையாக எதிர்க்கும். அவனைத் தமது இனத்தவன் என்று ஒப்புக் கொள்ள மாட்டார்கள். பெண் கொடுக்கவோ எடுக்கவோ மாட்டார்கள்.

ஆக இவர்கள் ஒருவரையும் இந்துவாக்க முடியாது. இது ஒரு நாள் விளம்பரத்துடன் முடிந்து விடும்.

இந்தத் திட்டம் அவர்களுக்குக் கை கொடுக்குமா? மிகச் சிறிய அளவில் கை கொடுக்கலாம். ஆனால் அவர்களுக்குக் கை கொடுப்பதை விட முஸ்லிம்களுக்கு அதிகம் கை கொடுக்கும் என்பதுதான் உண்மை.

இந்திய முஸ்லிம் சமுதாயத்தில் கொள்கைப் பிடிப்பு உள்ளவர்கள் இந்த நாட்டையே விலையாகக் கொடுத்தாலும் இஸ்லாத்தை விட்டு விலக மாட்டார்கள். பீரங்கிகளுக்கு முன்னால் நிறுத்தப்பட்டாலும் அவர்கள் அஞ்ச மாட்டார்கள். தமது மார்க்கத்தை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். இத்தகைய முஸ்லிம்களில் ஒருவரைக் கூட இவர்களால் வென்றெடுக்க முடியாது.

உறுதியான கொள்கைப் பிடிப்பு இல்லாமல் மேலோட்டமாக இஸ்லாத்தைக் கடைப்பிடித்து ஒழுகும் மக்களையும் இவர்களால் வென்றெடுக்க முடியாது.

உறுதியான கொள்கைப் பிடிப்பு இல்லாமல், இஸ்லாத்தைக் கடைப்பிடித்து ஒழுகாமல் முஸ்லிம் என்ற இனப்பற்று உள்ள பெயர் தாங்கி முஸ்லிம்களைக் கூட இவர்கள் விலைக்கு வாங்க முடியாது.

இஸ்லாம் என்றால் என்னவென்று தெரியாமல், முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளால் கூட எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகாமல் முஸ்லிமல்லாதவர்களுடன் அவர்களைப் போலவே பழகி வரும் சிலர் உள்ளனர். இவர்கள் ஏற்கனவே இஸ்லாத்தை விட்டு விலகியவர்கள்தான்.

பள்ளிவாசலுக்கு வராமல் கோவிலுக்குப் போவார்கள். சாமியார்களிடம் போய் குறி கேட்பார்கள். முஸ்லிமல்லாதவர்களைப் போலவே வாழும் இவர்கள் ஏற்கனவே இஸ்லாத்தை விட்டு போனவர்கள் தான். அதிகாரப்பூர்வமாக அறிவிக்காதது மட்டுமே குறை.

இது போன்றவர்களைத் தான் இந்து மதத்தில் சேர்ப்பதாக நாடகம் நடத்துவார்கள்.

இது போன்றவர்கள் அதிகாரப்பூர்வமாக தம்மை இஸ்லாத்தை விட்டு வெளியேற்றிக் கொண்டால், இஸ்லாத்துக்கு நன்மைதான். இவர்களைப் பார்த்து இஸ்லாம் மார்க்கத்துக்கும் இந்து மதத்துக்கும் வேறுபாடு இல்லை என்று கருதி இஸ்லாத்துக்கு வரத் தயங்கியவர்களின் கவனம் இஸ்லாத்தின் பால் அதிகம் திரும்பும்.

ஆனால் இவர்களும் இந்து மதத்தின் நான்கு வர்ணங்களில் ஒன்றாகச் சேர்க்கப்படாமல் விடப்படும்போது திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களின் போது வேறு மதங்களுக்கு மீண்டும் போய்விடுவார்கள்.

மேலும் இதுபோல் சங்பரிவாரம் செய்யும் இழிசெயலால் இஸ்லாம் குறித்தும், இந்து மதம் குறித்தும் வாதப்பிரதிவாதங்கள் அதிகரிக்கும். ஏனோதானோ என்று இந்து மதத்தில் இருக்கும் மக்கள் இரு மதங்களும் சொல்வது என்ன என்று சிந்திப்பார்கள். இஸ்லாத்தின் கருத்துக்களுக்கு காது கொடுப்பார்கள். எப்போதெல்லாம் இஸ்லாம் விவாதப் பொருளாகிறதோ அப்போதெல்லாம் இஸ்லாம் படுவேகமாகப் பரவும் என்பதுதான் வரலாறு.

அமெரிக்காவின் உலக வர்த்தக மையத்தைத் தாக்கிய செயல் இஸ்லாத்துக்கு எதிரான செயல் என்ற போதும், இதன் காரணமாக இஸ்லாம் என்றால் என்ன? அதன் கொள்கை என்ன? அதற்கும் கிறித்தவத்துக்கும் வேறுபாடு என்ன என்ற வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டன. இதனால் அமெரிக்காவிலும், பிரிட்டனிலும், பிரான்சிலும், ஜெர்மனியிலும் மற்றும் பல நாடுகளிலும் இஸ்லாம் தாறுமாறாகப் பரவியது. எப்போது இஸ்லாம் விவாதப் பொருளாக ஆக்கப்பட்டாலும் அப்போதெல்லாம் இஸ்லாம் வளர்ச்சியையே அடைந்துள்ளது என்பதற்கு இது சமீபத்திய உதாரணம்.

ஏற்கனவே முஸ்லிம்களாக இல்லாதவர்களை இந்து மதத்தில் சேர்க்கும் நாடகம் அதிகமாகும் போது இஸ்லாத்தின் பெயரைக் கெடுத்த கழிவுகள் வெளியேறியதால் முஸ்லிம் சமுதாயம் இன்னும் தூய்மையாகக் காட்சி தரும். இஸ்லாத்தின் வளர்ச்சி பன்மடங்காக அதிகரிக்கும். இதற்காக நாம் கலங்கிடத் தேவை இல்லை.

சுதந்திரப் போராட்ட காலத்தில் இதுபோல்தான் ஆரிய சமாஜம் என்ற இயக்கத்தினர் இந்து மதத்தில் முஸ்லிம்களைச் சேர்க்கும் திட்டத்தில் இறங்கினார்கள்.

இந்து மதத்தில் சேர்க்க முயற்சித்ததால் இஸ்லாம் குறித்து விமர்சனங்களைச் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். குர்ஆன் குறித்தும் அல்லாஹ்வைக் குறித்தும், நபிகள் நாயகம் குறித்தும், மறுமை வாழ்வு குறித்தும் கேள்விகள் எழுப்பினார்கள். இதுபோல் கேள்விகள் அடங்கிய சத்யப் பிரகாஷ் (உண்மை ஒளி) எனும் நூலையும் வெளியிட்டனர்.

ஆனால் முஸ்லிம்கள் தரப்பில் ஏகத்துவவாதியான மிகச்சிறந்த அறிஞர் சனாவுல்லா அமிர்தரஸீ அவர்கள் இந்த நூலுக்கு வரிக்கு வரி மறுப்பளித்து ஹக் பிரகாஷ் (உண்மை ஒளி என்பதுதான் இதற்கும் பொருள்) என்ற நூலை வெளியிட்டார்.

ஆரிய சமாஜம் கேட்ட கேள்விகள் அனைத்தையும் அறிவுப்பூர்வமான வாதங்களால் முறியடித்து இந்து மதத்தின் கொள்கைகள் குறித்தும் எதிர்வாதங்களையும் எடுத்து வைத்தார். ஆரிய சமாஜம் ஒரு முஸ்லிமை இந்துவாக்குவதற்குள் நூறு இந்துக்கள் முஸ்லிம்களாகும் அதிசயம் நிகழ்ந்தது.

ஏற்கனவே இந்துவாக மாற்றப்பட்டவர்கள் எந்தச் சாதியிலும் சேர்க்கப்படாமல் மீண்டும் பழைய மதத்துக்கு திரும்பினார்கள்.

இதனால் கதிகலங்கிப் போன ஆரிய சமாஜம் இந்த முயற்சியைக் கைவிட்டது. பெயரளவுக்கு மட்டும் அவ்வப்போது இந்துவாக்கும் நாடகத்தை நடத்தி வருகிறது.

ஆரிய சமாஜத்தின் அந்த வழியைத் தான் சங்பரிவாரம் கையில் எடுத்துள்ளார்கள். அப்போது ஏற்பட்ட அதே விளைவுதான் இப்போதும் ஏற்படும். இன்ஷா அல்லாஹ்

(உருது மொழி பாண்டித்தியம் பெற்ற தமிழறிந்தவர்கள் ஹக் பிரகாஷ் நூலை தமிழில் மொழி பெயர்த்துத் தர முன்வந்தால் நாம் அதை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்வோம்)

26.12.2014. 23:50 PM

தாலிபான்களை கண்டித்து போஸ்டர் அடித்தது சரியா?

கேள்வி - 1

பாகிஸ்தானில் பள்ளிக் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தியது தாலிபான்கள்தான் என்று மீடியாகள் சொன்னதை அப்படியே நம்பி தவ்ஹீத் ஜமாத்தும் தாலிபான்களைக் கண்டித்து அறிக்கையும், போஸ்டரும் அடித்து இருப்பது எந்த அடிப்படையில் என்று கேட்கிறார்கள்? அதைப் பற்றி உங்கள் பதில் என்ன?

செல்லதுரை, செங்கோட்டை

கேள்வி - 2

தாலிபானுக்குக் கண்டன அறிக்கை போஸ்டர் அடிக்கும் நேரத்தில், இது தாலிபான்கள்தான் செய்தார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் நம்மிடையே உள்ளது? கீஜிசி விமானத் தாக்குதலைக் கூட தாலிபான்கள் செய்திருக்க மாட்டார்கள் எனப் பிரச்சாரம் செய்த நமது ஜமாஅத் இந்த விசயத்தில் வெறும் தொலைக்காட்சி செய்திகளை மட்டும் வைத்து எப்படி நம்புகிறது?ஒருவேளை ஊடகங்கள் சொல்வது போல பாகிஸ்தான்தான் தாலிபான்களுக்கு ஆதரவு அளிக்கும் நாடு என வைத்துக் கொண்டால் தனக்கு ஆதரவு தரும் நாட்டிற்கெதிரான நாச வேலைகளில் ஈடுபடும் அவசியம் என்ன?

மன்சூர் அஹ்மத், மதுரை

பதில் :

பொதுவாக நம் சமுதாயத்தில் ஒரு நோய் நீண்ட காலமாக இருந்து வருகிறது. இஸ்லாத்தின் பெயரைக் கெடுக்கும் காரியங்கள் எது நடந்தாலும் எங்கே நடந்தாலும் இது யூதர்களின் சதி என்றும், அமெரிக்காவின் சதி என்றும் சொல்வது தான் அந்த நோய்.

இந்தச் சம்பவம் கூட யூதர்கள் செய்தது தான் என்று முகநூல்களில் மூடத்தனமாகப் பரப்பப்பட்டதை நாம் பார்த்தோம்.

எவ்வித ஆதாரமும் இல்லாமல் முஸ்லிம்கள் மீது பழி சுமத்தப்பட்டால் இதுபோல் சொல்வதில் நியாயம் உள்ளது.

உலக வர்த்தக மையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தாலிபான்கள் செய்தார்கள் என்பதற்கு இன்று வரை அமெரிக்கா எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை. அதனால் இதை முஸ்லிம்கள் செய்தார்கள் என்று கூறுவதில் நாம் சந்தேகம் கொள்ளலாம்.

இந்தியாவில் நடந்த எத்தனையோ குண்டு வெடிப்புகள் முஸ்லிம்கள் மீது போடப்பட்டன. அதற்கு எந்த ஆதாரமும் இருக்கவில்லை. இதை முஸ்லிம்கள் செய்யவில்லை; இந்துத்துவா கும்பல்தான் செய்திருப்பார்கள் என்று நாம் சந்தேகப்படலாம்.

(நாம் சந்தேகப்பட்டது போலவே பல குண்டு வெடிப்புகளையும் சங்பரிவாரத்தின் உத்தரவுப்படி சுவாமி அசிமானந்தாவும், பெண் சாமியார் பிரக்யா சிங் உள்ளிட்ட இந்து பயங்கரவாதிகளும் தான் செய்தனர் என்பது பின்னர் நிரூபணமானது.)

கோவை குண்டு வெடிப்பைப் பற்றியும் முஸ்லிம்கள் செய்யவில்லை என்று சொல்ல முடியுமா? இதை முஸ்லிம்களில் சிலர் தான் செய்தனர் என்பது கோவையில் உள்ள ஒவ்வொரு முஸ்லிமுக்கும் தெரியும்.

கோவை குண்டு வெடிப்பு குறித்தும் இவ்வாறு நாம் கூறினால் ஒட்டு மொத்த சமுதாயமும் கூட்டுக் கள்ளன்கள் என்ற கருத்து தான் மக்கள் மத்தியில் பதிவாகும்.

இவ்வாறு செய்த முஸ்லிம்களை நாம் கடுமையாகக் கண்டித்தால் மட்டும்தான் இஸ்லாமும் இதை ஆதரிக்கவில்லை. முஸ்லிம்களும் ஆதரிக்கவில்லை என்ற உண்மையைப் பதிவு செய்ய முடியும்.

பாகிஸ்தானில் உள்ள தாலிபான்களை பாகிஸ்தான் அரசு ஆதரிக்கவில்லை. மாறாக பாகிஸ்தான் எல்லைப் புறத்தில் செயல்பட்டு வரும் தாலிபான்களுக்கு எதிராகப் பல மாதங்களாக பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. விமான தாக்குதல் நடத்தி தாலிபான் தலைவர்களைக் கொன்று வருகிறது என்பதை நாம் அன்றாடம் கண்டு வருகிறோம். அவ்வாறு கொல்லப்படும் போது பொதுமக்களும் சிறுவர்களும் கொல்லப்படுகிறார்கள் என்பதையும் அறியலாம்.

இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தினரின் பிள்ளைகள் கல்வி கற்பதற்காக அரசால் நடத்தப்பட்டு வரும் பள்ளிக் கூடத்தில் படிக்கும் பருமவமடையாத சிறுவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.

தாக்குதல் நடந்தவுடன் பாகிஸ்தான் ராணுவம் எங்கள் மீது தாக்குதல் நடத்தி, எங்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொன்றதால் அந்த வலியை உணர வைக்க நாங்கள் தான் நடத்தினோம் என்று தஹ்ரீகே தாலிபான் அறிவிக்கிறது.

அதுமட்டுமின்றி, தாக்குதல் நடத்திய ஆறுபேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் யூதர்களோ, கிறித்தவர்களோ, இந்துக்களோ அல்ல. ஆறு பேறும் முஸ்லிம்கள்.

ஆறுபேரும் முஸ்லிம்கள் என்பதும், ஆயுதப் பயிற்சி பெற்றவர்கள் என்பதும் தெளிவாகத் தெரியும் போது இதை தாலிபான்கள் செய்யவில்லை என்றால் பாகிஸ்தான் தப்லீக் ஜமாஅத் செய்ததா? பொது மக்கள் செய்தார்களா?

இவர்களைத் தவிர வேறு எவரும் இதைச் செய்திருக்க முடியாது என்ற நிலையிலும் தாலிபான்கள் செய்யவில்லை என்று முட்டுக் கொடுத்தால் முஸ்லிம்கள் செய்யவில்லை என்று ஆகாது.

தாலிபான்களைக் காப்பாற்றுவதாக எண்ணிக் கொண்டு தாலிபான் அல்லாத முஸ்லிம்கள் செய்தார்கள் என்ற கருத்தைச் சொல்லாமல் இவர்கள் சொல்கிறார்கள்.

தாலிபான்களாக இல்லாத சாதாரண முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் தான் என்ற கருத்து பரவுவதில் இவர்கள் சந்தோசப்படுகிறார்கள்.

இடையில் சிலர் புகுந்து கொண்டு ஆப்கான் தாலிபான்கள் வேறு! பாகிஸ்தான் தாலிபான்கள் வேறு என்று கூறி தங்கள் மேதாவிலாசத்தைக் காட்டிக் கொள்கிறார்கள். தாலிபான்கள் இரு வகையினராக உள்ளனர் என்ற தங்கள் புலமையைக் காட்டுவதுதான் இவர்களின் நோக்கமாக இருக்க முடியும்.

ஒரு கொடூரச் சம்பவம் நடக்கிறது. இதனால் இஸ்லாம் குறித்து தவறான கருத்து மிக வேகமாகப் பரவுகிறது. இந்த நேரத்தில் அதை நீக்குவது மட்டுமே ஒரே குறிக்கோளாக இருக்க வேண்டும்.

இந்த நேரத்தில் இதை ஆப்கான் தாலிபான்கள் செய்யவில்லை; பாகிஸ்தான் தாலிபான்கள்தான் செய்தார்கள் என்று சுவரொட்டி ஒட்டினால் அதைக் கண்டனமாக மக்கள் கருத மாட்டார்கள். அயோக்கியத் தனமாகவே கருதுவார்கள். ஒரு கொடூர சம்பவம் நடக்கும் நேரத்தில்கூட கண்டிப்பது போன்ற தோற்றத்தில் தாலிபான்களை முஸ்லிம்கள் ஆதரிக்கிறார்கள் என்று தான் கருதுவார்கள்.

கொந்தளிப்பான நேரத்தில் தனது புலமையை வெளிப்படுத்துபவன் உண்மையில் முட்டாளாகத்தான் கருதப்படுவான்.

மேலும் இந்தத் தாக்குதலில் ஆப்கான் தாலிபான்களுக்குச் சம்மந்தமில்லை என்றாலும் அவர்களுக்கு முட்டுக் கொடுக்கும் அவசியம் நமக்கு இல்லை. இவர்களும் இஸ்லாத்தின் எதிரிகள் தான். ஏனெனில் ஆப்கான் தாலிபான்களும் ஆப்கானில் அப்பாவிகளையும் பொது மக்களையும் கொன்று குவித்து வருகின்றனர். இஸ்லாத்தின் வரம்புகளை மீறி இஸ்லாத்தின் பெயரைக் கெடுக்கும் இந்தக் கும்பலைக் காப்பாற்றும் அவசியம் என்ன வந்தது?

இந்த நோய் எந்த அளவுக்கு முற்றிப் போயுள்ளது என்றால் ஊரறிய உலகறிய அன்னிய நாட்டு தனி நபரைப் பிடித்து கை கால்களைக் கட்டி கத்தியால் கழுத்தை அறுக்கும் கொடூரக் காட்சிகளை வீடியோவில் பதிவு செய்து ஐஎஸ் என்ற இஸ்லாத்தின் எதிரிகள் வெளியிடுகிறார்கள்.

இதைப் பார்க்கும் முஸ்லிம்கள் இந்த அயோக்கியர்களைக் கடுமையாக கண்டிக்க வேண்டும். இதை விடுத்து பலர் மவுனம் காக்கின்றனர். சிலர் நியாயப்படுத்துகின்றனர். மற்றும் சிலர் ஐஎஸ் செய்யவில்லை என்று முட்டுக் கொடுக்கின்றனர்.

இது ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கும் களங்கத்தை ஏற்படுத்தும்.

சம்மந்தப்பட்டவர்கள் நாங்கள் செய்யவில்லை என்று மறுக்காத போதும் இப்படிச் சொல்பவர்கள் தாலிபான்களை விட பயங்கரவாதிகள் என்பதுதான் நமது கருத்து.

26.12.2014. 22:20 PM

டாலர் ஏன் உலக கரன்சியாக உள்ளது?

சில வளைகுடா நாடுகளில் பணமதிப்பு அமெரிக்காவின் டாலரை விட அதிகமாக இருந்தும் டாலரைத் தான் அனைத்துக்கும் பொதுவானதாகக் காட்டுகிறார்கள். இது ஏன்?

- லியாகத் அலி, மேலக்கோட்டை.

பண மதிப்பின் அடிப்படையில் டாலருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. பயங்கரவாத அமெரிக்காவுக்குப் பயந்து உலக நாடுகள் அனைத்தும் டாலர் அடிப்படையில் மற்ற நாடுகளுடன் கொடுக்கல் வாங்கல் செய்கின்றன.

இதற்கு எதிராக வாய் திறந்தால் அந்த நாடு பயங்கர உயிர்க்கொல்லி ஆயுதங்கள் வைத்துள்ளதாகக் கூறி அமெரிக்கா குண்டு மழை பொழியும். அயோக்கிய நாடுகள் சபையும் அதற்கு உடந்தையாக இருக்கும். அமெரிக்கா வறுமையின் பிடியில் சிக்கி வல்லரசு என்ற நிலையில் இருந்து கீழே இறங்கினால் தான் இந்த நிலை மாறும்.

 உணர்வு 16:11

16.12.2011. 9:22 AM

More Articles …