▶️அரசாங்க இடஒதுக்கீட்டு முறையில் உள்ள முறைகேடுகள்
அரசாங்க இடஒதுக்கீட்டு முறையில் உள்ள முறைகேடுகள்
28/07/19 வாட்ஸ் அப் கேள்வி பதில்
அரசாங்க இடஒதுக்கீட்டு முறையில் உள்ள முறைகேடுகள்
28/07/19 வாட்ஸ் அப் கேள்வி பதில்
குஷ்பு விவகாரம்
இந்தியா டுடே'யைப் பாதுகாத்த சிகரம் 15'' விருது
குஷ்பு விவகாரம் : இந்தியா டுடே'யைப் பாதுகாத்த சிகரம் 15'' விருது
அறிவியல்பூர்வமான (!) சர்வே என்ற பெயரில் சமூக அவலங்களுக்கு வித்திடும் வேலையை சென்ற செப்டம்பர் 22-28-ந் தேதிய தனது இதழில் "இந்தியா டுடே' செய்தது. "இந்தியா டுடே'யின் வக்கிர புத்திக்கு சினிமா நடிகை குஷ்பு பலி'யாகி இருக்கிறார்.
அந்த இதழுக்கு அவர் அளித்த பேட்டி இந்தியப் பண்பாட்டிற்கும், தமிழ்க் கலாச்சாரத்திற்கும் சாவு மணி அடிக்கக் கூடியது என்பதில் நமக்கு மாற்றுக் கருத்தில்லை.
பெண் விடுதலை என்ற பெயரில் பெண்ணியத்திற்கே எதிராக அவர் தெரிவித்த கருத்து பூமராங்காக அவரையே திருப்பித் தாக்கி, தமிழகம் முழுவதும் அவருக்கு எதிராகப் போராட்டங்களும், கருத்துக் கணைகளும், வழக்குகளும் வெடித்து வருகின்றன.
பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் போன்ற அமைப்பினரும், சன் டிவியும் நடிகை குஷ்புவுக்கு எதிராகக் களமிறங்கியுள்ள வேளையில், தங்களைப் பெண்ணுரிமைப் போராளிகள், மனித உரிமைக் காவலர்கள் என்று சொல்லிக் கொள்ளக்கூடிய அறிவு ஜீவிகளான (?) ஜனநாயக மாதர் சங்கத் தலைவி வாசுகி, வாஸந்தி போன்றவர்கள் குஷ்புவுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியுள்ளனர்.
இதே வட்டத்தைச் சேர்ந்த சிந்தனையாளர் என்ற பெயர் பெற்ற பேராசிரியர் அ. மார்க்ஸ் ஒரு படி மேலே போய், குஷ்பு இந்தியா டுடே இதழுக்குத் தெரிவித்த கருத்தின் ஒவ்வொரு வரியிலும் எனக்கு உடன்பாடு உண்டு; தேர்ந்த சமூகவியலாளரைப் போன்று அவர் கருத்துக் கூறியிருக்கிறார்'' என்று சிலாகித்துப் பேசியுள்ளார். அத்துடன் குஷ்புவின் கருத்துக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கில் துண்டுப் பிரசுரம் அச்சடித்தும் வெளியிட்டுள்ளார். மேலும் 1970-ல் சேலத்தில் நடந்த திராவிடர் கழக மாநாட்டில் பெரியார் நிறைவேற்றிய ஆணாதிக்கத்திற்கு எதிரான தீர்மானத்தையும் அவர் தனது குஷ்பு ஆதரவுப் போக்கிற்கு மேற்கோள் காட்டியிருக்கிறார்.
மதுரையைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலரான பெண் வழக்கறிஞர் ரஜினி இன்னும் ஒருபடி மேலே போய், குஷ்புவுக்கு எதிராக வழக்குப் போடத் தூண்டிய அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர ஒத்தக் கருத்துள்ள பெண் வழக்கறிஞர்களை அணி திரட்டி வருகிறார்.
இவ்வாறாக குஷ்புவுக்கு எதிராகவும், ஆதரவாகவும் இரு வேறு அணிகள் களமிறங்கி இருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில், சமூக அக்கறையும், நியாயமும் யார் பக்கம் உள்ளது? என்ற குழப்பம் உண்மையான சிந்தனையாளர்களுக்கும் கூட இப்போது ஏற்பட்டுள்ளது. இது பற்றி நாம் முழுமையாக அலசினால் அனைவருமே குற்றவாளிகளாகத் தான் தோன்றுவார்கள்.
இவை அனைத்திற்கும் அடிப்படைக் காரணம் ஒன்று உள்ளது. அது என்னவெனில் ஆணாதிக்கச் சிந்தனை.
ஆணாதிக்கத்தின் எதிர்விளைவாகத் தான் பெண்ணுரிமை இயக்கங்கள் தோன்றின. அடிப்படையில் இந்த இரண்டு சித்தாந்தங்களும் தவறானவை.
பெண்களை வெறும் போகப் பொருளாகக் கருதுவதும், அவர்களுக்கும் ஆன்மா' உண்டு; அபிலாஷைகள் உண்டு; உரிமைகள் உண்டு என்பதை ஏற்க மறுப்பதும் ஆணாதிக்கச் சிந்தனையாகும். இந்தச் சிந்தனையின் வெளிப்பாடு தான் கற்பை'யும் தனி உடமை ஆக்கியது. கற்பு' என்றால் அது பெண்கள் மட்டுமே பேணக்கூடிய கட்டாயக் கடமை. ஆண்களுக்கு அது கட்டாயமில்லை என்ற நம்பிக்கை. அதனால் தான் காப்பியங்கள் எல்லாமே கற்பையும், பெண்ணையும் மட்டுமே ஒரு சேரப் பார்க்கின்றன. கற்புக்கு இலக்கணமாக பெண்ணினம் மட்டுமே போற்றப்படுகிறது.
பெண் என்றால் அவள் கற்பைப் பேணிக் கொள்ள வேண்டும். ஆண் எப்படிப் போனாலும் பரவாயில்லை என்று கற்பு விஷயத்தில் பெண்ணுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் சமூகம், ஆண்களை அறவே கண்டு கொள்வதில்லை.
சினிமாவிலும் கூட ஆணும் பெண்ணும் சேர்ந்து படுக்கையறைக் காட்சிகளில் அல்லது நீச்சல் குளக் காட்சிகளில் அரை நிர்வாணமாகப் பின்னிப் பிணையும் போது, ஆணை விட, பெண் (நடிகை) தான் கேவலமாகப் பார்க்கப்படுகிறாள். ஒரு பெண் இப்படி மோசமாக நடிக்கும் போது (லட்சக்கணக்கானோர் பார்க்கும் வகையில்) அவள் எப்படி உத்தமியாக இருப்பாள்? அவள் நிச்சயம் விபச்சாரியாகத் தான் இருக்க முடியும்'' என்று நல்ல குடும்பத்துப் பெண்கள் கூட விமர்சிக்கிறார்கள்.
அதே சமயம் அவளுடன் நெருங்கி அவளை விடக் குறைவான (ஒரே ஒரு ஒட்டு ஜட்டியுடன்) ஆடையுடன் நடிக்கும் நடிகன் இப்படி விமர்சிக்கப்படுவதில்லை. அதற்குக் காரணம் கற்பு, மானம் இவையெல்லாம் பெண்ணிற்கு மட்டுமே சொந்தம் என்ற தவறான புரிதலே. இது ஆணாதிக்கச் சிந்தனையின் வெளிப்பாடே!
ஆனால், உண்மையில் கற்பு, மானம் என்பதெல்லாம் இரு பாலருக்கும் இருக்க வேண்டிய பொதுவான அம்சம். இது சமூகத்தில் மறக்கடிக்கப்பட்டு வருகிறது. தனக்கு வரவேண்டிய மனைவி கன்னித்தன்மையுடன் - கற்பு நெறியுடையவளாக இருக்க வேண்டும் என்று தான் ஒரு ஆண் விரும்புவான். இதே விருப்பம் பெண்ணுக்கும் இருக்கும். அவளது இந்த விருப்பம் தவறு என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.
அதே போல் மணமுடித்த பிறகும் இரு பாலருக்கும் இந்த எண்ணம் இருக்கும். இதற்கு மாற்றமாக இருவரோ அல்லது ஒருவரோ தவறான பாதையைத் தேர்ந்தெடுக்கும் போது பிரச்சனைகள் வெடிக்கின்றன. இந்த விஷயத்தில் பெண் மட்டும் தவறிழைக்கும் போது ஆண் வர்க்கம் கொதித்தெழுகிறது. இது தான் ஆணாதிக்கம்.
ஆக, கற்பு என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவான ஒன்று என்ற கருத்து ஏற்கப்படாமல் போவதால் தான் இத்தகைய ஆணாதிக்கப் போக்கிற்கு எதிராகப் பெண்ணுரிமை இயக்கங்கள் போர்க்கொடி தூக்குகின்றன.
ஒரு தவறான போக்கிற்கு எதிராகத் தோன்றுகின்ற பெண்ணுரிமை சிந்தனை சரியான கோணத்தில் இருக்கின்றதா? என்றால், நிச்சயமாக இல்லை! என்று தான் சொல்ல வேண்டும்.
அதற்கு உதாரணம் தான் குஷ்பு போன்றவர்களின் குருட்டுத் தனமான கருத்துக்களும் அதை ஆதரிக்கும் பெண்ணுரிமைப் போராளி(?)களின் நடவடிக்கைகளும். ஒரு தவறுக்கு மற்றொரு தவறு ஒரு போதும் பரிகாரமாக முடியாது.
ஆண்கள் தங்களின் கற்பைப் பற்றி கவலைப்படுவதில்லை என்பதற்காக - அவர்கள் ஒழுக்கச் சீர்கேட்டில் வீழ்ந்து கிடக்கிறார்கள் என்பதற்காக பெண்களும் அதே வழியில் பயணிக்க வேண்டும் என்று சொல்வதும், அதை ஆதரிப்பதும் கொள்ளிக் கட்டையை எடுத்து தலையில் சொரிவது போன்றதாகும்.
இன்றைய சமூக அமைப்பில் ஒழுக்கச் சீர்கேட்டில் மூழ்கிக் கிடக்கும் ஒருவனுக்கு, ஒழுக்கம் மிக்க மனைவி அமைந்து விடுகிறாள். ஆனால், ஒழுக்கம் மிக்க ஒரு பெண்ணுக்கு, ஒழுக்கங்கெட்ட கணவன் கூட கிடைப்பது சிரமமாக உள்ளது.
இந்த நிலையில் ஒழுக்கங்கெட்டுப் போன ஒரு பெண்ணுக்கு - ஒழுக்கங்கெட்ட ஒரு ஆண் கூட கணவனாக அமைய மாட்டான். குஷ்புவுக்கு வேண்டுமானால் சுந்தர். சி. கணவனாகக் கிடைத்திருக்கலாம். அல்லது சினிமா என்னும் வானில் நட்சத்திரங்களாக (போலியாக) ஜொலிக்கக் கூடியவர்களுக்கு சில தறுதலைகள் கிடைத்து விடலாம். ஆனால் சராசரி வாழ்க்கையில் இது சாத்தியமா? என்பதைச் சிந்தனையாளர்களான(?) வாசுகியும், வாஸந்தியும், ரஜினி (வழக்கறிஞர்)யும், அ. மார்க்சும் இன்னும் இவர்களைப் போன்று இந்தக் கருத்தை ஆமோதிப்பவர்களும் சிந்திக்க வேண்டும்.
இவர்கள் தங்கள் மகள்களைக் குஷ்பு சொன்ன ஆலோசனையின் படி வாழ அனுமதிப்பார்களா? அல்லது இவர்களின் மகன்களுக்கு இத்தகைய ஒழுக்கங்கெட்டவர்களை மனைவியாக்க சம்மதிப்பார்களா? என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.
ஆக, இந்தப் பிரச்சனையின் அடிப்படை ஆணாதிக்கச் சிந்தனையிலிருந்து தோன்றுகிறது. இது முதல் தவறு. ஆணாதிக்கத்தின் தவறான சிந்தனைக்கு எதிராக அதே பாணியில் பெண்கள் தவறிழைப்பது என்பது இரண்டாவது தவறு. மூன்றாவதாக இப்போது இந்த ஒழுக்கம் பற்றிய சர்ச்சை கிளம்புவதற்கு முக்கியக் காரணமான இந்தியா டுடேயின் வக்கிரம்.
பத்திரிகைத் துறை என்பது ஒரு புனிதமானது. இந்திய ஜனநாயகத்தின் முக்கியத் தூண்களில் அது ஒன்று. சமூகப் பொறுப்புமிக்க துறையும் கூட அது. வாளின் முனையை விட பேனாவின் முனை வலிமையானது'' என்றெல்லாம் பத்திரிகைத் துறையைப் பற்றி சிலாகித்துச் சொல்லப்படுகிறது. அத்தகைய பத்திரிகைகளில் இந்தியா டுடே' தனது சர்வேக்கு எடுத்துக் கொண்ட தலைப்பு கொஞ்சமும் சமூக அக்கறை கொண்டதல்ல.
எதிர்காலத் தலைமுறையினருக்கும், நிகழ்கால இளைய சமுதாயத்திற்கும் அறிவு, ஆற்றல், சமூகப் பொறுப்பு, வாழ்க்கையில் முன்னேற்றம் போன்ற ஆக்கப்பூர்வமான வழிகாட்டல்களுக்கு தனது ஆற்றலை வெளிப்படுத்தக் கடமைப்பட்டுள்ள பத்திரிகை - அதற்கு நேர்மாற்றமாக நிகழ்கால இளைய சமுதாயத்தையும், எதிர்கால சந்ததிகளையும் ஒழுக்கச் சீர்கேட்டில் வீழச் செய்வதற்கான கருப்பொருளைக் கொண்டு தனது சர்வேயைத் துவக்கி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. குஷ்பு சம்பந்தமான தற்போதைய சர்ச்சைக்கு மூல காரணம் "இந்தியா டுடே' தான்.
இந்தியப் பண்பாடு, நாகரீகம், ஒழுக்க மாண்புகள் இவற்றை அழிப்பதற்காக இந்தியா டுடே' வைத்த நெருப்புக்கு குஷ்பு எண்ணெய் ஊற்றி இருக்கிறார். அவரை ஆதரிப்போர் அந்தத் தீயை விசிறி விட்டு பரவச் செய்கின்றனர்.
அடுத்து நான்காவதாக மற்றொரு சாராரின் தவறையும் நாம் இங்கு சுட்டிக்காட்டியாக வேண்டும். அவர்கள் யாரென்றால் குஷ்புவுக்கு எதிராகக் களம் இறங்கி இருப்பவர்கள்.
குஷ்பு தெரிவித்த கருத்துக்கள் தமிழ்ப் பெண்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த பெண்ணினத்திற்குமே! ஏன்? மனித குலத்திற்கே எதிரான கருத்து என்பதில் நமக்கு மாற்றுக் கருத்தில்லை.
குஷ்புவுக்கு எதிராகத் துடைப்பம், செருப்பு சகிதமாகப் போராட்டத்தில் இறங்கியதும், அவருக்கு எதிராக வழக்குத் தொடர நீதிமன்றப் படிகளில் ஏறியதும் சரியான நடவடிக்கை தான். ஆனால், நம்முடைய கேள்வி என்னவென்றால், இந்த அசிங்கத்தில் அங்கம் வகிப்பவர்களில் முக்கியமானவர்களை விட்டுவிட்டு அதில் ஒரு அங்கமான குஷ்புவை மட்டும் குறி வைப்பது சரியான நடவடிக்கை தானா?
உண்மையிலேயே கலாச்சாரச் சீரழிவுக்கு எதிராக இவர்கள் களமிறங்கி இருக்கிறார்கள் என்றால் அந்தச் சீரழிவிற்கு மூல காரணமான - முக்கிய கர்த்தாவான இந்தியா டுடே'யை ஏன் இவர்கள் கண்டு கொள்ளாமல் விட்டார்கள்? இவர்களின் துடைப்பக் கட்டைகள், காலணிகள், கையிலேந்தப்பட்ட ஊர்வலமும், வழக்குகளும் இந்தியா டுடே' அலுவலகத்தை நோக்காமல் போனதற்கு என்ன காரணம்? குறைந்த பட்சம் தங்களது கண்டனத்தைக் கூட தெரிவிக்காமல் போனதற்கு என்ன காரணம்? ஒரேயொரு காரணம் தான். அது சிகரம் 15'' தான்.
போராட்டத்தில் முன்னணி வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் சின்ன ஐயா அன்புமணியும், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளரான திருமாவளவனும், சன் டிவியின் தயாநிதி மாறனும் இந்தியா டுடே'யை கண்டுகொள்ளாமல் பாதுகாத்தது சிகரம் 15' என்னும் விருது கேடயம் தான் தடுத்து வருகிறது என்ற நடுநிலையாளர்களின் கூற்றைப் புறக்கணிக்க முடியாது.
எனவே, இது போன்ற சர்ச்சைகள் மீண்டும் தொடராமல் இருக்க வேண்டுமென்றால் நாம் மேலே சுட்டிக்காட்டிய தவறுகளுக்கு சமூக அக்கறையுடையவர்கள் பரிகாரம் காண வேண்டும். இல்லையென்றால் கலாச்சாரச் சீரழிவை யாராலும் தடுக்க முடியாது.
தமது கற்பைக் காத்துக்கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் ஆகிய அவர்களுக்கு மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான்.''
(அல்குர்ஆன் 33 : 35)
குறிப்பு: இந்தியா டுடே பத்திரிகை சில பிரமுகர்களைத் தேர்வு செய்து சிகரம் 15 என்ற பெயரில் விருது வழங்கி கவுரவித்தது. அதுதான் சிகரம் 16 என்று தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த விருது பெற்றவர்கள் தான் குஷ்பூவை எதிர்த்து இந்தியாடுடேயைக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர்.
உணர்வு 10:5
27.02.2012. 12:45 PM
முஸ்லிம்களின் இட ஒதுக்கீடுக்கு நீதிமன்ற வழக்கு தடையாகுமா?
தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் மசோதாவை நிறைவேற்றி அதை இந்திய அரசியல் சாசனத்தில் 9வது அட்டவணையிலும் சேர்க்கக் காரணமாக இருந்தது அதிமுக அரசு. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதன் மீதான தீர்ப்பு வந்த பிறகு முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதற்கான வாய்ப்புகள் பரிசீலிக்கப்படும். என முதல்வர் ஜெயலலிதா கூறியிருக்கிறார். முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்கும், அவர் கூறியிருப்பதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. இதற்கு விளக்கம் தேவை.
உ. முகமது அபுதாஹீர், கம்பம்
முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு தருவது கூடாது என்று ஏற்கனவே வெளிப்படையாக அவர் கருத்துத் தெரிவித்தார். இதற்காக நமது ஜமாத் சார்பில் முதல்வரைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் செய்து முஸ்லிம்களின் உணர்வை வெளிப்படுத்தினோம்.
அதன் பிறகு இந்த விஷயத்தில் அவரது கருத்தில் மாற்றம் ஏற்பட்டதாக அதிமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் மூலம் நமக்கு தகவல்கள் கிடைத்தன.
வருகின்ற பொதுத்தேர்தலுக்கு முன்னால் நிச்சயம் இடஒதுக்கீடு வழங்குவார் என்ற நம்பிக்கை இதனால் நமக்கு ஏற்பட்டது.
ஜனவரி-29 பேரணி அநேகமாக ஜெயலலிதா இடஒதுக்கீடு அளித்ததற்கு நன்றி தெரிவிக்கும் பேரணியாக ஆகலாம் என்ற அளவுக்கு நமக்கு நம்பிக்கை ஊட்டினார்கள்.
ஆனால் சென்ற வாரம் ஜெயலலிதா செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி அவரது கருத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதைச் சந்தேகத்திற்கு இடமின்றி புரிய வைத்துவிட்டது.
முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க மாட்டேன் என்பதை நேரடியாகச் சொல்லாமல் அதை மறைமுகமாகச் சொல்லியிருக்கிறார் என்பதைத் தவிர அவரது கருத்தில் எந்த மாற்றமும் தெரியவில்லை.
உச்சநீதிமன்றத்தில் 69 சதவிகித இடஒதுக்கீடு சம்பந்தமான வழக்கு இருப்பதால் அது குறித்த தீர்ப்பு வந்ததும் பரிசீலிப்பதாக அவர் அந்தப் பேட்டியில் குறிப்பிடுகிறார்.
இதற்கும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. 69 சதவிகிதத்துக்கு அதிகமாக மேலும் இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்காக அதிகப்படுத்தினால் அது உச்சநீதிமன்றத்தை அவமதித்ததாக ஆகும்.
முஸ்லிம் சமுதாயத்தின் கோரிக்கை அதுவல்ல. ஏற்கனவே உள்ள 69 சதவிகித இடஒதுக்கீட்டில் பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிற்பட்டோருக்கு என்று இடஒதுக்கீடு உள்ளது. இதில் சுமார் 200-க்கும் அதிகமான சாதிகளைச் சேர்த்து முஸ்லிம்களையும் அதில் ஒரு சாதியாக்கியுள்ளனர். இதனால் பிற்பட்டோர் மற்றும்மிகவும் பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டின் பலன் முஸ்லிம்களுக்குக் கிடைக்கவில்லை.
எனவே பிற்பட்டோருக்காக உள்ள பட்டியலில் முஸ்லிம்களுக்கு உரிய பங்கை தனியாகப் பிரித்து வழங்குங்கள் என்பது தான் சமுதாயத்தின் கோரிக்கை. இடஒதுக்கீட்டின் மொத்த அளவு 69 சதவிகிதத்தை விட இதனால் அதிகரிக்காது. நீதிமன்றத்தில் உள்ள வழக்கை எந்த வகையிலும் இது பாதிக்காது.
அவ்வாறு இருந்தும் அவர் இதைக் காரணமாகக் காட்டியிருப்பது முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு தர முடியாது என்ற கருத்தில் சொன்னதாகவே எடுத்துக் கொள்ள முடியும்.
ஒருவேளை 69 சதவிகித்துக்கு மேல் நாம் அதிகம் கேட்டதாக அவர் நினைத்துக் கொண்டு இவ்வாறு கூறியிருக்கலாமோ என்றும் நினைக்க முடியாது. ஏனெனில், ஏற்கனவே இதை சமுதாயத் தலைவர்களிடமும் அவர் கூறினார். நாங்கள் கேட்பது அதுவல்ல என்பது அவருக்கு மிகத் தெளிவாக விளக்கப்பட்டது. எனவே, சமுதாயத்தின் கோரிக்கை என்னவென்பது அவருக்கு நன்றாகத் தெரியும். தெரிந்து கொண்டே தான் அவர் இவ்வாறு சம்பந்தமில்லாத காரணத்தைக் கூறுகிறார்.
நீதிமன்றத்தில் அந்த வழக்கு பத்து வருடங்களாவது நடக்கும். அதைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு அளிக்காமலேயே, அளிக்க எனக்கு விருப்பம் உள்ளது என்று சொல்லி அப்பாவி முஸ்லிம்களை ஏமாற்றலாம் என்று அவர் நினைக்கிறாரா? அல்லது அப்படி யாராவது அவருக்கு ஆலோசனை சொல்லியிருக்கிறார்களா என்பது தெரியவில்லை.
முஸ்லிம்களே! உங்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க எனக்கு ஆசைதான்! என்ன செய்ய நீதிமன்றம் குறுக்கே நிற்கிறதே?'' என்று கூறி முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுவிட முடியும் என்று அவர் நினைத்தால் அவர் நிச்சயம் ஏமாந்து போவார். எம்.ஜி.ஆர் காலத்தில் வாழ்ந்த முஸ்லிம்களைப் போல் இன்றைய முஸ்லிம்கள் இல்லை. இப்போது முஸ்லிம்கள் விழிப்புணர்வுடன் உள்ளனர்.
தாங்கள் கேட்கும் இடஒதுக்கீடு என்ன என்பதன் பொருள் முஸ்லிம்களுக்கு நன்றாகவே தெரியும். மேலும், அவர் கூறுவது பொருந்தாத- ஏற்க முடியாத காரணம் என்பதை தவ்ஹீத் ஜமாஅத் போன்ற இயக்கங்கள் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தும்.
எனவே, இடஒதுக்கீடு அளிக்காமல் முஸ்லிம்கள் ஓட்டை அள்ளலாம் என்று அவர் நினைத்தால், அல்லது முஸ்லிம் தலைவர்கள் சிலரைச் சரிக்கட்டிவிட்டால் முஸ்லிம்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் நினைத்தால் - அவரையும், அந்தத் தலைவர்களையும் முஸ்லிம்கள் அறவே நிராகரிப்பார்கள் என்பதை ஜெயலலிதாவுக்குச் சொல்லி வைக்கிறோம்.
முஸ்லிம்கள் ஓட்டு எனக்குத் தேவையில்லை என்று அவர் நினைத்தால் இதுபோல் பொருந்தாத காரணத்தைக் கூறிக் கொள்ளட்டும்.
முஸ்லிம்கள் ஓட்டு வேண்டும் என்றால் இடஒதுக்கீடு அளிப்பதைத் தவிர வேறு எதன் மூலமும் அதைப் பெற முடியாது என்பதையும் அவருக்கு நினைவூட்டுகிறோம்.
இந்த நேரத்தில் இன்னொன்றையும் நாம் நினைவுபடுத்துகிறோம். ஜனவரி-29 பேரணியை இன்னும் வீரியத்துடன் முழுமூச்சாக வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற நிர்ப்பந்தம் சமுதாயத்துக்கு ஏற்பட்டுள்ளது.
இது ஒட்டுமொத்த முஸ்லிம்களின் கருத்து என்பதைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்தால் தான் இந்தக் கோரிக்கையை வென்றெடுக்க முடியும். அதன் மூலம் தான் முஸ்லிம்கள் விழிப்போடு இருப்பதை ஆள்வோருக்கும் அனைத்துக் கட்சிகளுக்கும் உணர்த்த முடியும்.
27.02.2012. 13:27 PM
முஸ்லிமல்லாத அரசாங்கத்தில் உரிமை கேட்கலாமா?
எதன் அடிப்படையில், உரிமை மீட்புப் பேரணி போராட்டம் நடத்துகிறீர்கள். காஃபிர் அரசாங்கத்திடம் பிச்சை கேட்பது நபிகள் வழியா? இதற்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா? என்று கேட்கிறார்.
எஸ். அப்துல் சுபான், சேலம்.
தான் கூறுவதில் உண்மையாகவே நம்பிக்கை கொண்டு அந்த நண்பர் அப்படிக் கேட்கிறாரா? அல்லது நம்மை எதிர்ப்பதற்காக விதண்டாவாதத்துக்காகக் கேட்கிறரா? என்பதை முதலில் உறுதி செய்து கொள்ளுங்கள்!
அந்த நண்பர் மீது காவல்துறை வழக்குப் போட்டால் காஃபிர் அரசாங்க நீதிபதியிடம் நியாயம் கேட்டு வழக்கைச் சந்திப்பாரா? அல்லது காஃபிர் அரசாங்காத்திடம் நீதி கேட்கக் கூடாது என்பதற்காக சிறையிலேயே கிடப்பாரா?
அவரை யாராவது கடுமையாகத் தாக்கினால் அல்லது அவரது குடும்பத்தினரைச் சேர்ந்த ஒருவரைக் கொன்று விட்டால் காஃபிர் அரசாங்கத்திடம் நீதி கேட்கக் கூடாது என்பதற்காக புகார் கொடுக்காமல் இருந்து விடுவாரா? புகார் கொடுப்பாரா?
அவர் சம்பாதித்த பணத்தில் ஒரு சொத்தை வாங்கும் போது அதை அரசாங்க முத்திரைத் தாளில் எழுதி பத்திரப் பதிவு அலுவலகம் சென்று அதற்கான கட்டணத்தைச் செலுத்தி அதைப் பதிவு செய்வாரா? அல்லது காஃபிர் அரசாங்கத்திடம் நான் ஏன் சொத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்று கருதி பதிவு செய்யாமல் விட்டு விடுவாரா?
அல்லது வீட்டில் திருட்டுப் போய் விட்டால் காஃபிர் அரசாங்கத்திடம் நான் ஏன் முறையிட வேண்டும் என்று கருதி புகார் கொடுக்காமல் இருப்பாரா?
ரேஷன் அட்டை வழங்கும் போது காஃபிர் அரசாங்கம் வழங்கும் பிச்சை எனக்கு வேண்டாம் என்று கூறி ரேஷன் அட்டை வாங்காமல் இருப்பாரா?
ரூபாய் நோட்டுக்கள் வெறும் பேப்பர் தான். காஃபிர் அரசாங்கம் அதற்கு உத்தரவாதம் தருவதால்தான் அதற்கு என மதிப்பு உள்ளது. அந்த நோட்டு செல்லாது என்று அரசாங்கம் அறிவித்தால் அந்தக் காகிதம், காகிதக் கப்பல் செய்வதற்குத் தான் உதவும் என்று கருதி ரூபாய்களைப் பயன்படுத்தாமல் இருப்பாரா? பண்டமாற்று முறையில்தான் தனது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வாரா?
பத்திரிகைகளுக்கோ, குடும்ப உறுப்பினர்களுக்கோ தகவல் தெரிவிக்க விரும்பினால் காஃபிர் அரசாங்க முத்திரையுடன் வெளியிடப்படும் தபால் தலையை ஒட்டி தகவல் தெரிவிப்பாரா? சவூதி அரசாங்கம் வெளியிட்ட தபால் தலைகளை ஒட்டுவாரா?
வெளிநாடுகளுக்குச் செல்ல நேர்ந்தால் காஃபிர் அரசாங்கத்தின் அனுமதியை நான் ஏன் பெற வேண்டும் என்று கருதி கள்ளத்தனமாக வெளி நாட்டுக்குச் செல்வாரா? விசா வாங்கிச் செல்வாரா?
அரிசி, பருப்பு உள்ளிட்ட எண்ணற்ற பொருட்களை வாங்கும் போது அதற்கான வரியையும் காஃபிர் அரசாங்கத்துக்குச் செலுத்தியாக வேண்டும். எனவே, காஃபிர் அரசாங்கத்துக்கு வரியைச் செலுத்தக் கூடாது என்பதற்காக இலை தழைகளை உண்டு வாழ்வாரா?
காஃபிர் அரசாங்கம் சலுகை விலையில் வழங்கும் கேஸ், எண்ணெய், மின்சாரம் போன்றவற்றைப் பயன்படுத்தாமல் தனது வாழ்நாளைக் கழிப்பாரா?
இப்படி பல்லாயிரம் பட்டியல்களை வெளியிடலாம். இதையெல்லாம் செய்யாதவராக அவர் இருந்தால் அந்த அதிசயப் படைப்பை வைத்து கண்காட்சியே நடத்தலாம்.
இதையெல்லாம் அவர் செய்வார் என்றால் அவர் கேட்கும் கேள்வி விதண்டாவாதமாகும்.
மேற்கண்ட பல்லாயிரம் செயல்களைச் செய்வதற்கு எது ஆதாரமாக உள்ளதோ அதுவே தான் நமது உரிமைகளைக் கேட்பதற்கும் ஆதாரமாக உள்ளது என்பதை அவருக்குத் தெரிவியுங்கள்.
காஃபிர் ஆட்சியில் உரிமையைக் கேட்கக் கூடாது என்று சொன்ன ஒரு இயக்கம் கூட அந்த நிலையில் உறுதியாக நின்றதில்லை. எதையாவது சொல்லி ஆள் பிடிப்பதற்காக இவ்வாறு கூறுவதுண்டு. அதன் பின்னர் தங்கள் நிலைபாட்டை அறவே மாற்றிக் கொண்டு விட்டதை நாம் கண்ணாரக் கண்டு விட்டோம்.
28.02.2012. 11:51 AM
அரசியல்tஹீர்வுமரண தண்டனையை ரத்து செய்யக் கூடாது ஏன்?
ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் உணர்வு 10:10 இத்ழில் எழுதப்பட்ட தலையங்கம் இங்கே பதியப்படுகிறது.
தூக்குத் தண்டனையை ரத்துச் செய்ய வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகள் போராடிவரும் வேளையில், தூக்குத் தண்டனையை ரத்துச் செய்யக் கூடாது என்று தற்போது ஓய்வு பெற்றுள்ள உச்சநீதிமன்ற நீதிபதி லகோதி சொல்லியுள்ளார். இதை ஒரு கருத்தாக மட்டும் சொல்லாமல் அதற்குத் தேவையான வாதங்களையும் அடுக்கடுக்காய் வைத்துள்ளார் லகோதி.
தீவிரவாதிகள் வைத்த வெடிகுண்டுகளில் எத்தனையோ அப்பாவிகள் உயிரிழந்து இருக்கின்றனர். அந்த அப்பாவி மக்களுக்கு இந்தத் தீவிரவாதிகளால் உயிர் கொடுக்க முடியுமா? கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களை மறந்து விட்டு தண்டனை பெறப்போகும் ஒரு நபரைப் பற்றி மட்டுமே நாம் சிந்திக்கும் நிலை உள்ளது'' என்று கூறி தூக்குத் தண்டனையை ரத்துச் செய்யக்கோரும் மனித உரிமை அமைப்புகளுக்கு விடையளிக்க முடியாத வினாவை எழுப்பியுள்ளார் லகோதி.
ஒரு குற்றவாளியைத் தூக்கில் போட்டு விடலாம். ஆனால் அவனுக்கு வாழ்க்கை கொடுக்க முடியுமா?'' என்று சிலர் கேட்கிறார்கள். இந்தக் கேள்வியை அவனை தீவிரவாதச் செயலுக்குத் தூண்டிவிடும் நபரைப் பார்த்து கேட்க வேண்டும் என்றார் லகோதி. தூக்குத் தண்டனைக் கைதிக்கு ஆதரவாக கருணை மனுபோடும் கண்ணியவான்கள் இந்தக் கேள்வியில் உள்ள அர்த்தத்தை சீர் தூக்கிப் பார்க்க வேண்டும்.
ஒருவன் பத்துப் பேரைக் கொலை செய்து தூக்குத் தண்டனை பெறுகிறான். அவனது தண்டனையை கருணை மனுவின் அடிப்படையில் ரத்துச் செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது உலகின் பல நாடுகளிலும் பரவலாகக் காணப்படுகிறது.
கொல்லப்பட்டவர்களுக்கு குடியரசுத் தலைவர் மாமனோ, மச்சானோ அல்ல என்றாலும் அந்த அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு அளிக்கப்பட்டிருப்பதிலிருந்து பாதிக்கப்பட்டவனின் நிலையை சட்டம் கடுகளவும் கவனத்தில் கொள்ளவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.
இஸ்லாமியச் சட்டம் என்ன கூறுகிறது? ஒருவன் மற்றொருவனின் கண்ணைக் குருடாக்கி விட்டால், அதற்கான தண்டனை குற்றவாளியின் கண்ணையும் குருடாக்கி விட வேண்டும். கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்பது இஸ்லாத்தின் குற்றவியல் சட்டம்.
அதே நேரத்தில் கண்ணை இழந்தவன் குற்றவாளியை மன்னித்து விட்டால் குற்றாவளி தண்டிக்கப்பட மாட்டார். அல்லது குற்றவாளியிடம் நஷ்ட ஈட்டைக் கோரி பெற்றுக் கொண்டாலும் குற்றவாளி தண்டிக்கப்பட மாட்டார்.
அது போலவே கொல்லப்பட்டவரின் வாரிசுகளில் யாரேனும் ஒருவர் குற்றவாளியின் உயிரை எடுக்க வேண்டாம் என்று கூறினால் கூட குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படாது. இது இஸ்லாமியச் சட்டம்.
அதாவது உலக நாடுகள் குடியரசுத் தலைவருக்கு வழங்கிய அதிகாரத்தை பாதிக்கப்பட்டவனுக்கு இஸ்லாம் அளிக்கிறது.
சட்டங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை நியாயமான சிந்தனையுடைய யாரும் மறுக்க முடியாது. பாதிக்கப்பட்டவன் மனநிறைவு பெறும் வகையில் தண்டனை அளிக்கப்படாவிட்டால் பாதிக்கப்பட்டவனே குற்றவாளியாகும் நிலைமையும் உருவாகும்.
கொலைக் குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டவன் ஜாமீனில் விடப்படும் போதும், சிறைச் சாலையிலிருந்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படும் போதும் கொல்லப்பட்டவனின் உறவினர்கள் அவனைக் கொன்று விடுவது அன்றாட நிகழ்ச்சியாகி வருகிறது.
இந்த நிலைமைக்கு என்ன காரணம்? கொலையாளியை இந்தச் சட்டங்கள் தண்டிக்காது. தண்டித்தாலும் அது போதுமானதாக இருக்காது என்ற எண்ணத்தின் காரணமாகவே கொலை செய்யப்பட்டவனின் உறவினர்களும் கொலையாளிகளாகி விடுகின்றனர். குற்றங்கள் அதிகரிப்பதற்கு இதுவும் முக்கிய காரணமாக உள்ளது எனலாம்.
ராஜிவ் காந்தி கொலைவழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு கருணை காட்டச் சொல்லி சிலர் வேண்டியுள்ளனர். அதுபோல் பாகிஸ்தானில் பயங்கரவாதச் செயல் புரிந்து மாட்டிக் கொண்ட ஒரு இந்தியரைத் தூக்கில் போட வேண்டாம் என்று இந்திய அரசே கருணை மனு போட்டுள்ளது. குறிப்பாக பி.ஜே.பி தலைவர் அத்வானி போன்றவர்கள் இதற்காக படுபிரயத்தனம் எடுத்துக் கொண்டார்கள்.
பாராளுமன்றத் தாக்குதலுக்கு உதவி புரிந்ததாக பேராசிரியர் ஜீலானி கைது செய்யப்பட்டவுடன், அப்படிப்பட்டவர்களைத் தூக்கில் போட வேண்டும் என்று கர்ஜித்த இந்தப் புண்ணியவான்கள்(!) பாகிஸ்தான் நீதி மன்றத்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ராஜேந்தர் சிங்குக்கு தூக்கு கூடாது என்கிறார்கள்.
இவ்வாறு நாட்டுக்கு நாடு ஒரு நீதி. இனத்துக்கு ஒரு நியாயம் பேசும் அத்வானி வகையறா - லகோதியின் கருத்தைக் கேட்டாவது திருந்த வேண்டும்.
தேர்ச்சக்கரத்தில் சிக்கி இறந்த கன்றுக்காக தனது மகனையே பலி கொடுத்த மன்னனை மனுநீதிச் சோழன் என்று போற்றுகிறார்கள். ஆனால், இறந்து போன பசுவின் தோலை உரித்தெடுத்த தலித் மக்களை ஹரியானாவில் கொன்று குவித்த சண்டாளர்களைக் கண்டு கொள்ளாமல் இருக்கிறோம். ஆனால் ஒரு மனிதனைக் கொன்ற கொலையாளிக்கு தூக்குத் தண்டனை கொடுப்பதை கடுமையாக எதிர்க்கிறோம்.
கொலையாளியை மட்டும் கவனத்தில் எடுத்துக் கொண்டு தூக்குத்தண்டனை கூடாது என்று சொல்பவர்கள் கொலை செய்யப்பட்டவரையும், அவரது குடும்பத்தாரையும் கவனத்தில் கொள்ளட்டும். கொலையாளியைக் கொல்வதன் மூலம் அப்பாவி மக்களின் உயிர் பாதுகாக்கப்படுகிறது என்கிறது இஸ்லாம். இந்தக் கருத்தை தனது பாணியில் உரக்கச் சொன்ன லகோதி உண்மையில் பாராட்டுக்குரியவர் என்பதில் சந்தேகமில்லை.
பாதிக்கப்பட்டவனின் நிலையிலிருந்து பார்க்காமல் - பாதிக்கப்படாத இடத்தில் அமர்ந்து கொண்டு சட்டங்கள் இயற்றப்படுவதால் தான் பாதிக்கப்பட்டவனின் உணர்வுகள் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. இஸ்லாமோ - இதைக் கவனத்தில் கொள்கிறது.
அறிவுடையோரே! பழிக்குப்பழி வாங்கும் சட்டத்தில் உங்களுக்கு வாழ்வு உள்ளது. (இச்சட்டத்தினால் கொலை செய்வதிலிருந்து) விலகிக் கொள்வீராக!
அல்குர்ஆன் 2:179
28.02.2012. 12:01 PM
அனைத்து முஸ்லிம்களையும் போராட்டத்துக்கு அழைப்பது ஏன்?
கலிமாச் சொன்ன அனைத்து முஸ்லிம்களும் எங்களுக்குத் தேவையில்லை. தவ்ஹீத்வாதிகள் மட்டும்தான் வேண்டும் என்று தனியாக இயக்கம் ஆரம்பித்த நீங்கள் இடஒதுக்கீட்டு பேரணிக்கு அனைத்துப் பிரிவு முஸ்லிம்களையும் அழைப்பது உங்களுக்கு முரண்பாடாக தோன்றவில்லையா? என்று சிலர் கேட்கிறார்களே?
எம். செய்யது இக்பால், சென்னை-13
பதில்
தவ்ஹீத்வாதிகளைத் தவிர ஏனைய முஸ்லிம்கள் எங்களுக்குத் தேவையில்லை என்று நாங்கள் ஒரு காலத்திலும் சொன்னது கிடையாது. அவ்வாறு கருதியதும் இல்லை. அவ்வாறு நாம் கருதி இருந்தால் தான் அது முரண்பாடாகும்.
பிரச்சனை என்னவென்றால், தவ்ஹீத் கொள்கையை விட்டுவிடாமல் அனைத்து முஸ்லிம்களுக்காவும் போராட முடியுமா? முடியாதா? என்பது தான். இதில் முடியும் என்பதே நமது நிலைபாடு.
இந்த நிலைபாடு இன்று நேற்று அல்ல. 90-களிலேயே நாம் எடுத்தது. அதனால் தான் சமுதாயப் பிரச்சனைகளைக் கையிலெடுத்துப் போராடுவதற்காக நாம் 1995ல் இயக்கத்தை (தமுமுக) உருவாக்கினோம்.
அதற்கு முன்பும் கூட தவ்ஹீத் பிரச்சாரம் மட்டும் செய்து வந்த காலத்திலேயே தடா' போன்ற கொடிய சட்டங்களை எதிர்த்து அனைவருக்காகவும் எழுத்துப் போர் செய்திருக்கிறோம். மக்களைத் திரட்டி வீதிகளில் போராடி இருக்கிறோம். அவைகளெல்லாம் தவ்ஹீத்வாதிகளுக்காக செய்தது அல்ல. ஒட்டு மொத்த முஸ்லிம்களுக்காகவும் செய்தது.
அதன் பின்னர் நாம் கட்டிய சமுதாயப் பேரியக்கத்தின் மூலமாக அனைத்துப் பிரிவு முஸ்லிம்களுக்காகவும் நாம் பல்வேறு போராட்டங்களை நடத்தி இருக்கிறோம். நூற்றுக்கணக்கான கூட்டங்களை நடத்தி அனைத்து மக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறோம். அப்பொதெல்லாம் தவ்ஹீத் பிரச்சாரத்தை விட்டு விட்டு இதையெல்லாம் செய்யவில்லை. நம்முடைய முன்னாள் சகாக்களும் அவ்வாறு கோரிக்கை வைக்கவில்லை.
1995ல் இயக்கம் கண்டதிலிருந்து பிரிவினைக்குச் சற்று முன் வரை தவ்ஹீத் பிரச்சாரம் செய்து கொண்டே அனைத்து முஸ்லிம்களின் பிரச்சனைகளுக்காகவும் போராடலாம் என்பது தான் நம் அனைவரின் நிலையாக இருந்தது. அந்த நிலையில் தான் இப்போதும் நாம் நீடிக்கிறோம்.
நம்மைப் பொறுத்தவரை அழைப்பு விடுக்கும் அமைப்பின் பெயர் தான் மாறியுள்ளதே தவிர, தவ்ஹீதை சொல்லிக் கொண்டே அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும் போராடலாம் என்ற நிலைபாட்டில் நம்மிடம் எந்த மாற்றமும் இல்லை.
அதனடிப்படையில் தான் தவ்ஹீதை சொல்லிக் கொண்டே அனைத்து முஸ்லிம்களையும் அழைக்கிறோம்.
தவ்ஹீதையும் நாம் சொல்லிக் கொண்டு சமுதாயப் பணியிலும் அக்கறை செலுத்திய போது தான் நாம் ஒன்றிணைந்து செயல்பட்ட இயக்கம் மிகப்பெரும் வளர்ச்சியடைந்தது. ஆனால் தவ்ஹீத் பிரச்சாரத்தை விட்டால் தான் அனைத்து முஸ்லிம்களையும் ஒருங்கிணைக்க முடியும் என்று அவர்கள் தான் நிலைமாறினார்கள்.
அவர்களைப் பொறுத்தவரை அமைப்பின் பெயர்தான் மிஞ்சி இருக்கிறதே தவிர, நிலைபாடு மாறிவிட்டது.
இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். இடஒதுக்கீடு என்பது தவ்ஹீத்வாதிகளுக்கு மட்டும் சொந்தமான பிரச்சனை அல்ல. அனைத்து முஸ்லிம்களுக்கும் சொந்தமான பிரச்சனை. எல்லோருக்கும் பொதுவான ஒரு பிரச்சனைக்காக போராடும் போது எல்லோரையும் தான் அழைக்க வேண்டும்.
சிலரின் விதண்டாவாதத்திற்காக இதையும் சொல்லிக் கொள்கிறோம். தவ்ஹீத்வாதிகளுக்கு மட்டும் சொந்தமான பிரச்சனைக்காக போராட வேண்டிய நிலை ஏற்பட்டால் அப்போது தவ்ஹீத்வாதிகளை மட்டும் தான் நாம் அழைப்போம்.
28.02.2012. 12:26 PM
முஸ்லிம் நாடுகள் அமெரிக்காவுக்கு அஞ்சுவது ஏன்?
கேள்வி: உலக மகா ரவுடி, கொள்ளைக்கார நாடான அமெரிக்கா தீவிரவாதத்தை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற முஸ்லிம் நாடுகளில் மக்களை கொன்று குவித்துக் கொண்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக ஈரானையும் ருசி பார்க்க துடிக்கிறதே? இதை மற்ற முஸ்லிம் நாடுகள் கண்டிக்காதது ஏன்? அமெரிக்காவை எதிர்த்துப் போராடி வெற்றி பெற ஈரானுக்குத் திறமை உள்ளதா?
- முகம்மது அபுபக்கர் சித்தீக், ஷிமோகா, கர்நாடகா.
உலகின் வலிமையான ஒரே நாடாக இன்று அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவைப் பகைத்துக் கொண்டால், ஏதாவது புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டு அந்த நாட்டைச் சூறையாடும் கொள்ளைக்கார நாடாக அமெரிக்கா இருப்பதாலும், கொள்ளை அடிப்பதில் வீசப்படும் எலும்புத் துண்டுக்காக பிரிட்டன் உள்ளிட்ட நேசநாடுகள் துணை நிற்பதாலும் முஸ்லிம் நாடுகள் மட்டுமின்றி உலகின் அனைத்து நாடுகளும் அமெரிக்காவுக்கு அஞ்சுகின்றன.
உலகில் எந்த நாடும் அமெரிக்காவுடன் மோதி வெல்ல முடியாது என்பது தான் இன்றைய நிலைமை.
ஈரான் என்ன? சீனாவாக இருந்தாலும், ரஷ்யாவாக இருந்தாலும் அமெரிக்காவைப் போரில் வெல்ல முடியாது என்பதுதான் எதார்த்தம்.
எந்த நாட்டுடன் அமெரிக்கா சண்டை நடத்துவதாக இருந்தாலும் அந்த நாட்டை மிகப்பெரிய சக்தியாக முதலில் சித்தரித்துக் காட்டும். ஒன்றுமில்லாத பலவீனமான நாட்டுடன் போர் செய்வதை உலகம் கேவலமாகக் கருதக் கூடாது என்பதற்காக அமெரிக்காவுக்கு நிகரான சக்தியாக பலவீனமான நாட்டை பிரம்மாண்டமாக்கிக் காட்டும்.
அமெரிக்காவே நம்மைப் பார்த்துப் பயப்படுகின்றது என்ற இறுமாப்பை அந்த நாட்டுக்கு ஏற்படுத்திவிட்டு தனக்குச் சமமான எதிரியுடன் போரிடுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி அந்த நாட்டை வெற்றி கொள்ளும்.
சதாம் உசேனை இப்படித்தான் அமெரிக்காவுக்கு சரியான போட்டியாளராகச் சித்தரித்துக் காட்டிய பிறகே இராக்கை அழித்தது. உண்மையில் அன்றைய இராக்கை இலங்கை கூட வென்று விடும் அளவுக்கு பலவீனமாக இருந்தது. துருப்பிடித்த ராணுவ விமானம் கூட இல்லாத இராக்கை மிகப்பெரும் நாசகார ஆயுதங்கள் வைத்துள்ளதாகக் காட்டி அதை ஒழித்து விட்டதாக பெருமைப்பட்டுக் கொண்டது அமெரிக்கா.
ஆனால் வியட்நாம், ஆப்கான், ஈராக் என அமெரிக்கா நடத்திய ஒவ்வொரு போருக்குப் பிறகும் அதன் பொருளாதார பலம் குறைந்து வருகிறது. ஈரானுடன் இன்னொரு போர் நடந்தால் மேலும் பொருளாதாரப் பாதிப்பு ஏற்படும் என்பதால் தான் அமெரிக்கா வெற்று எச்சரிக்கை விடுகிறதே தவிர போரில் தோல்வி ஏற்படும் என்ற அச்சத்தினால் அல்ல!
அமெரிக்கா மேலும் மேலும் பலவீனப்படும் வரை அல்லது அமெரிக்காவுக்கு நிகராக அதை மிஞ்சக்கூடிய இன்னொரு வல்லரசு உருவாகும் வரை இது தான் நிலைமை. எனவே முஸ்லிம் நாடுகள் இதை உணர்ந்து மவுனம் சாதிப்பதைக் குறை கூறக்கூடாது.
தங்கள் நாட்டைப் பாதுகாப்பதற்காக பல சந்தர்ப்பங்களில் அமெரிக்காவைக் கண்டிக்க இயலாத நிலை முஸ்லிம் நாடுகளுக்கு ஏற்படுவதுண்டு. உணர்ச்சி வசப்படும் சிலரது விருப்பத்துக்காக தங்கள் நாட்டை இன்னொரு இராக்காக ஆக்கக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு தான் இதற்குக் காரணம். அந்த இடத்தில் நீங்களோ நாமோ இருந்தாலும் அந்த முடிவைத்தான் எடுக்க முடியும்.
தனிப்பட்ட வாழ்க்கையிலும் எதிரியின் பலத்தைக் கருத்தில் கொண்டு இது போன்ற முடிவுகளை நாமும் எடுக்கத் தான் செய்கிறோம்.
சதாம் உசேன் போல் நிஜாதியும் ஏமாந்து விடக்கூடாது என்பதே நமது விருப்பம்.
உணர்வு 16:14
மதப்பிரச்சாரம் செய்யும் தனியார் பள்ளிகளை எதிர் கொள்வது எப்படி?
நான் 7 ஆம் வகுப்பு படிக்கிறேன். முதலில் கிருஸ்துவப் பள்ளியில் படித்தேன். அங்கே பைபிள் சொல்லித் தருகிறார்கள் என்று வேறு பள்ளியில் சேர்த்து விட்டார்கள். இப்போது வேறு ஒரு ஹிந்து மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறேன். காலை பிரேயரில் கோவிலில் சொல்லும் மந்திரத்தைச் சொல்லித் தருகிறார்கள். அது எனக்கு மணப்பாடம் ஆகிவிடுகிறது. இதனால் என்னை என் அம்மா திட்டுகிறார்கள் நான் என்ன செய்ய வேண்டும்?
ஏ.பிலால் முகமது, சிதம்பரம்
தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக பிற மதத்தினர் நடத்தும் கல்விக்கூடங்களைத் தேர்வு செய்கிறோம். தரமான கல்வி முக்கியம் தான். அதை விட நமது மறுமை வாழ்க்கை முக்கியமானது. மார்க்கத்தை விட்டுவிடாமல் தரமான கல்வி கிடைக்கும் என்றால் நாம் அதைத் தேர்வு செய்யலாம். மார்க்கத்தை விட்டுக் கொடுத்து இன்னொரு மதத்தின் நம்பிக்கையை மனதில் ஏற்றினால் தான் தரமான கல்வி கிடைக்கும் என்றால், அரசுப் பள்ளிகளைத் தான் நாம் தேர்வு செய்ய வேண்டும். அங்கே மதப்பிரச்சாரம் செய்ய முடியாது. அப்படி செய்தால் அதை எதிர்த்து நிற்க முடியும்.
அரசுப் பள்ளிகளில் சேர்த்து விட்டு தனியாக டியூஷன் வகுப்புக்கு ஏற்பாடு செய்து கல்வித் தரத்தை நாம் உயர்த்திக் கொள்ளலாம். மேலும் தற்போது சமச்சீர் கல்வித் திட்டம் நடைமுறையில் உள்ளதால் தனியார் பள்ளியிலும், அரசுப் பள்ளியிலும் ஒரே பாட நூல் என்பதால் கொஞ்சம் முயற்சித்தால் தரமான கல்வி கொடுக்க முடியும்.
புதிதாக நாம் பள்ளிக்கூடம் தொடங்குவதும் அதை நட்டமில்லாமல் நடத்துவதும் இப்போது சாத்தியக் குறைவாகி வருகின்றது. ஒவ்வொரு ஊரிலும் உள்ள நம்முடைய கிளைகளும் உள்ளூர் ஜமாஅத்துகளும் கொஞ்சம் முயற்சி செய்தால் அனைவருக்கும் தரமான கல்வியைக் கொடுக்க முடியும்.
ஒவ்வொரு முஸ்லிம் ஊர்களிலும் இலவச டியூஷன் சென்டர்களை உருவாக்க வேண்டும். அரசுப் பள்ளியில் படிப்பவர்களுக்கு இலவசமாக டியூஷன் சொல்லித் தர ஏற்பாடு செய்ய வேண்டும். இது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்ய வேண்டும். தனியார் பள்ளிகளில் சேர்ப்பதால் நம் குழந்தைகளின் மார்க்க நம்பிக்கை கேள்விக் குறியாவதையும் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அனைத்துக்கும் எளிதான ஒரே தீர்வாக இது அமையும்.
துவக்கத்தில் மக்களிடம் சற்று தயக்கம் இருந்தாலும் மிக விரைவில் நமது செயல்பாடு மூலம் அதை மாற்றி விடலாம்., ஆரம்பத்தில் பொருளாதாரச் சுமை ஏற்பட்டாலும் இதன் நன்மையைக் காணும் மக்கள் இதற்காக வாரி வழங்குவார்கள்.
14.02.2012. 21:28 PM