Sidebar

01
Wed, Jul
சமீபத்திய செய்திகள்

பால்தாக்கரேயின் மரணமும், ஊடகங்களின் குருட்டுப்பார்வையும்

மதவெறி மற்றும் ஊர்வெறியை மும்பை மக்கள் மத்தியில் தூண்டிவிட்டு, நாட்டைத் துண்டாடி அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்த இந்திய நாட்டில் இரத்த ஆறு ஓட்டி பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது உயிர்களையும், உடைமைகளையும் இழக்கக் காரணமாக இருந்தவர் மதவெறி பிடித்த சிவசேனா கட்சியின் தலைவர் பால்தாக்கரே.

இவர் கடந்த 17.11.12 அன்று மாரடைப்பால் மரணமடைந்தார். இவர் மரணமடைந்ததுதான் தாமதம் இவரை ஒரு மிகப்பெரிய தேசத் தியாகியைப் போலவும், இவரைப்போல நாட்டின் மீதும், நாட்டு மக்கள் மீதும் அளவுக்கதிகமான அக்கரை கொண்ட தன்னிகரில்லாத தலைவர் யாருமில்லை என்பது போலவும் ஊடகங்கள் படம் காட்டி பில்டப் கொடுத்தனர்.

பால்தாக்கரே என்ற இவர் தலைமையேற்று நடத்திய கலவரங்கள் கொஞ்ச நஞ்சமா? அதையெல்லாம் இந்த ஊடகங்கள் மறந்து விட்டனவா?

மண்ணின் மைந்தர்கள் கோசத்தை முன்வைத்து, மும்பையில் பிறந்தவர்களுக்குத்தான் மும்பை சொந்தம் என்ற ஊர் வெறி கோசத்தை முன்வைத்து, மும்பையில் வாழ்ந்த பிற மாநில மக்கள் மீது தாக்குதல் நடத்தி சிவசேனா பால்தாக்கரே நடத்திய கலவரங்களையும், அந்த கட்சியின் தீவிரவாதத் தொண்டர்கள் தமிழர்களுடைய சொத்துக்களை சூறையாடியதையும், அதனால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் மும்பையை விட்டு உயிர் பிழைத்தால் போதும் என்று தமிழ்நாட்டிற்கு ஓடி வந்ததும் இந்த ஊடகங்களுக்குத் தெரியாதா?

1993ஆம் ஆண்டு இவர் தூண்டிவிட்டதன் அடிப்படையில் மும்பையில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்பட்டார்களே! அந்த கோர சம்பவங்கள்தான் இவர் செய்த தேசத் தியாகமா? அதனால்தான் இவருக்கு தேசியக்கொடி போர்த்தி மரியாதையா?

பாபர் மஸ்ஜித் இடிப்பை தொடந்து நடைபெற்ற மும்பை கலவரத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். முஸ்லிம்களின் நிறுவனங்களும் சொத்துக்களும் சூறையாடப்பட்டன . மும்பை கலவரம் குறித்து விசாரணை நடத்திய கிருஷ்ணா கமிஷன், கலவரத்திற்கு காரணம் பால்தாக்கரே என்றும் கூறி அவரை கைது செய்ய வேண்டும் என்று தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார். ஆனால் தன்னை கைது செய்தால் மும்பை நகரம் பற்றி எரியும் என்று இவர் மிரட்டினாரே! இப்படி காவல்துறைக்கும் நீதிமன்றத்திற்கும் சவால் விட்டதால்தான் இவருக்கு குண்டுகள் முழங்க அரசு மரியாதையா?

பத்திரிக்கையாளர்களை தாக்கி தீவிரவாதத்தை வெளிக்காட்டிய பால்தாக்கரேயின் தீவிரவாத முகம் அதற்குள்ளாகவா ஊடகங்களுக்கு மறந்துவிட்டது?

மும்பைக்கு பிழைப்புக்காக வந்த பீகார்காரர்களையும், வட மாநிலத்தவர்களையும் உங்கள் நாட்டுக்கு ஓடுங்கள் என்று கூறி விரட்டிவிரட்டி அடித்தார்களே சிவசேனா தீவிரவாதிகள். ஒரு ஆட்டோ டிரைவர் கூட பிற மாநிலத்தவராக இருந்தால் இங்கு இருக்கக்கூடாது என்று இந்திய அரசியல் அமைப்பு சாசனச்சட்டத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய இவர்தான் ஊடகங்களின் பார்வையில் தேசத்தியாகியா?

மும்பையின் முதலாளிகளை அன்ன தாதாக்கள் என்றும், தென்னிந்தியர்களை லுங்கிவாலாக்கள், கிரிமினல்கள், குண்டர்கள், சூதாடிகள் என்றும் கூறி மும்பை நகரத்தில் கூட்டம், கூட்டமாக நகரை விட்டு தென்னிந்தியர்களை கருவறுத்ததால்தான் தமிழகத்து ஊடகங்கள் இவருக்கு பாராட்டு மழை பொழிகின்றனவா?

இப்படி நூற்றுக்கணக்கான கேள்விகள் ஊடகங்களைப் பார்த்து நாம் கேட்க வேண்டியுள்ளது.

இந்த லட்சணத்தில் ஊடகங்களுக்கு இவர் செய்த அநியாயங்களை பட்டியல் போடுவதற்குத்தான் திராணி இல்லை; வாய்மூடி மௌனமாகவாவது இருந்துவிட்டுப் போகலாமல்லவா? அதைவிட்டு விட்டு இவர் செய்த அனைத்து அநியாயங்களையும், அக்கிரமங்களையும் அனைத்து ஊடகங்களும் பாராட்டி புகழ்ந்து தள்ளியுள்ளன.

எந்த அளவிற்கென்றால், முதன் முதலில் முஸ்லிம்களுக்கு எதிராக தற்கொலைப்படையை 2002 ஆம் ஆண்டு உருவாக்கி அதிர்ச்சி வைத்தியம் அளித்தவர்தான் இந்த பால்தாக்கரே என்றும், மண்ணின் மைந்தர்கள் கோசத்தை முதன்முதலில் முன்வைத்தவர் இந்த பால்தாக்கரேதான் என்றும், இந்த ஊடகம் நடத்துபவர்கள் புகழ்ந்து தள்ளுகின்றார்கள் என்றால் இவர்களை என்னவென்பது?

அதுமட்டுமல்லாமல், இதுவரைக்கும் சுதந்திர இந்தியாவில் பொது இடத்தில் வைத்து எவரது உடலும் தகனம் செய்யப்பட்டதில்லையாம். இந்த தியாகி(?) உடைய உடல் மட்டும்தான் சுதந்திர இந்தியாவில் பொது இடத்தில் வைத்து தகனம் செய்யப்பட்டுள்ளது என்றும் புகழாரம் சூட்டியுள்ளன.

அதுமட்டுமல்லாமல், பால்தாக்கரே எந்த அரசாங்கப் பொறுப்பிலும் இருக்கவில்லை. மாறாக அரசாங்கத்திற்கு எதிராகவும், நாட்டின் இறையாண்மைக்கு எதிராகவும் போர் தொடுத்தார். அப்படிப்பட்டவருக்கு நாட்டின் தேசியக் கொடியை போர்த்தி அழகு பார்த்ததை கண்டிக்க எந்த ஒரு ஊடகங்களுக்கும் துப்பில்லை.

அதிலும் இவருக்கு அரசு மரியாதையுடன் குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலியாம். இதுவரைக்கும் எந்த அரசு பொறுப்பிலும் இல்லாத ஒரு நபருக்கு அரசு மரியாதையோடு உடல் தகனம் செய்வது இதுவே முதல் முறை என்றும் அதையும் புகழ்ந்து எழுதியுள்ளன நம் நாட்டு காவி கரை படிந்த ஊடகங்கள்.

விட்டால் இவருக்கு தேசத்தியாகி என்ற பட்டம் கொடுத்து இவரது வாழ்க்கையை பாடப் புத்தகங்களில் தனியொரு பாடமாக்கி விடுவார்கள் போலத் தெரிகின்றது.

அதுமட்டுமல்லாமல், குறிப்பாக நமது தமிழகத்து ஊடகங்களுக்கு கொஞ்சம் மொழிப்பற்று(?) அதிகம்.

பால்தாக்கரேயின் மரணமும், ஊடகங்களின் குருட்டுப்பார்வையும்

தமிழன் என்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லடா! என்றெல்லாம் வெட்டி பந்தா காட்டுவார்கள்.

பால்தாக்கரே தமிழர்களை கருவறுத்த செய்திகளையாவது குறைந்தபட்சம் இவர்கள் சுட்டிக்காட்டுவார்களா என்று பார்த்தால், அவர்களிடத்திலுள்ள மதவெறி அவர்களது மொழிவெறியை மறைத்துவிட்டது என்று சொல்லக்கூடிய அளவிற்கு தமிழர்கள் குறித்தும் எந்த ஊடகமும் வாய்திறக்கவில்லை.

தமிழனத் தலைவர்(?) என்று பீற்றிக்கொள்ளும் கருணாநிதியும் இவருக்கு இரங்கல் தெரிவித்து புகழாரம் சூட்டி தான் ஒரு மிகச்சிறந்த அரசியல்வாதி என்பதை நிரூபித்துள்ளார்.

இப்படி ஊடகத்துறையே ஒன்று சேர்ந்து தேசத்தின் இறையாண்மைக்கு எதிராக களம் கண்ட ஒருவருக்கு ஆதரவாக, அவரைத் தேசத்தியாகியாக சித்தரித்து செய்திகள் வெளிவந்த நிலையில் ஒரே ஒரு விஷயம் மட்டும் நமக்கு ஆறுதல் தந்தது.

ஆம்! இந்திய பிரஸ் கவுன்சிலின் தலைவராக உள்ள முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு விடுத்த அறிக்கைதான் அந்த ஆறுதலான விஷயம்.

மண்ணின் மைந்தர்கள் கோசத்தை முன்வைத்து இந்திய நாட்டினரை துண்டாட முயன்று தேசத்துரோகத்தைச் செய்த பால்தாக்கரேக்கு இரங்கல் தெரிவிக்க இயலாது என்றும், இறந்துவிட்டார் என்பதால் அவரைப்பற்றி நல்ல வார்த்தை கூற தன்னால் இயலாது என்றும் மார்க்கண்டேய கட்ஜு துணிச்சலாக அறிவித்துள்ளார்.

மார்க்கண்டேய கட்ஜுவைப் போல துணிச்சலாக உண்மையைப் போட்டு உடைக்கும் தன்மை அனைத்து ஊடகங்களுக்கும் வரவேண்டும். இல்லையென்றால் காலப்போக்கில் கோட்சே கூட தேசத்தியாகியாக மாறினால் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

இன்னும் திருந்தாத கூட்டம் :

சிவசேனா தலைவர் பால் தாக்கரேவின் இறுதிச் சடங்கு நடக்கையில் மும்பையில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. மேலும் அவர் கவலைக்கிடமாக இருந்த நாட்களிலும் பதற்றம் காணப்பட்டு மும்பையில் கடைகள் அடைக்கப்பட்டே இருந்தன. இது குறித்து ஃபேஸ்புக்கில் கேள்வி எழுப்பிய இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது உறவினரின் மருத்துவமனையை சிவசேனா தொண்டர்கள் அடித்து நொறுக்கினர்.

பால்தாக்கரே மரணமடைந்ததையடுத்து மும்பையில் உள்ள அனைத்து கடைகளும், வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டன. இந்நிலையில் 21 வயது பெண் ஒருவர் இந்த முழு அடைப்பை எதிர்த்து ஃபேஸ்புக்கில் கமெண்ட் கொடுத்துள்ளார்.

ஃபேஸ்புக்கில் அவர் கூறியிருந்ததாவது,

தினமும் ஒரு தாக்கரே பிறந்து, இறக்கிறார். அதற்காக எல்லாம் பந்த் நடத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு ஃபேஸ்புக்கில் ஒரு பெண் லைக் கொடுத்திருந்தார்.

இந்த கருத்து வெளியான 'பேஸ் புக்' கணக்கின் முகவரி ஒரு மூட்டு சிகிச்சை மையத்தின் பெயரில் இருந்தது. இதை மோப்பம் பிடித்த சிவசேனா குண்டர்கள் அந்த மருத்துவமனைக்குத் திரண்டு சென்றனர்.

யார் ஃபேஸ் புக்கில் இந்தக் கருத்தை எழுதியது என்று கேட்டு மிரட்டவே, 21 வயது பெண் ஒருவர் வந்து, 'என் மனதில் பட்டதை தவறுதலாக பேஸ் புக்கில் வெளியிட்டேன். அந்த கருத்தை நீக்கி விடுகிறேன்'. என்று கூறி வந்தவர்களிடம் மன்னிப்பு கேட்டார்.

இருந்தாலும் அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். இந்தக் கருத்தை ஆமோதித்து 'லைக்' கொடுத்த இன்னொரு பெண்ணும் கைது செய்யப்பட்டார். 2 பெண்கள் மீதும், மத உணர்வுகளை காயப்படுத்துதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கமெண்ட் போட்ட பெண் அதை வாபஸ் பெற்றதுடன் மன்னிப்பும் கேட்டபோதிலும் பால்கர் பகுதியில் உள்ள அவரது உறவினரின் மருத்துவமனையை சுமார் 2,000 சிவசேனா தொண்டர்கள் சேர்ந்து அடித்து, நொறுக்கியுள்ளனர்.

பால்தாக்கரே செய்த தேச விரோதச் செயல்களை அந்தப் பெண் பட்டியல் போடவில்லை. இவர் இறந்ததற்கு எதற்கு கடையடைப்பு நடத்த வேண்டும் என்று கேள்வி கேட்ட பெண்ணையும், அதை லைக் என்று கிளிக் செய்த பெண்ணையும் மாநில அரசாங்கம் கைது செய்துள்ளது.

அந்த அப்பாவிப் பெண்கள் மீது எந்தப் பிரிவுகளில் வழக்குப்பதிந்துள்ளனர் என்பதைக் கேட்டால் உலகமே காரித்துப்பும். அதாவது மத உணர்வுகளை காயப்படுத்துதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் அந்த அப்பாவிப் பெண்கள் மீது காவல்துறையினர் வழக்குப்போட்டுள்ளார்களாம்.

சிவசேனா கட்சித் தலைவர் பால்தாக்கரேயும், அவர்களது காட்டுமிராண்டி தொண்டர்களும் எத்தனை பேருடைய மத உணர்வுகளை புண்படுத்தியிருப்பார்கள்? அது இந்த மாநில அரசுக்குத் தெரியவில்லை. மாறாக அந்தப் பெண் கேட்ட நியாயமான கேள்வி இவர்களது மனதை புண்படுத்திவிட்டதாம்.

இவ்வளவுக்கு அந்தப் பெண் தான் எழுதியதற்காக மன்னிப்புக் கேட்ட பிறகும் அந்தப் பெண்ணின் உறவினரது மருத்துவமனையை சூறையாடியுள்ளனர் இந்த குண்டர்கள்.

அதே நேரத்தில் மருத்துவமனையை அடித்து நொறுக்கிய சண்டாளர்களை காவல்துறை ஒன்றும் செய்யவில்லை. இத்தகைய மிகக்கேவலமான நிலைதான் இந்நாட்டில் நிலவுகின்றது எனும்போது இன்னும் பல கோட்சேக்கள் தேசத்தியாகிகளாக ஆவதற்கு இந்நாட்டில் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

கோட்சேக்களுக்கு கொண்டாட்டம்தான்.

அறிந்து கொண்டே சரியானதைத் தவறானதுடன் கலக்காதீர்கள்! உண்மையை மறைக்காதீர்கள்!

அல்குர்ஆன் 2 : 42

21.11.2012. 6:39 AM

போராட்டங்களை முறைப்படுத்துவோம்

அரசின் கவனத்தை ஈர்த்து தங்கள் கோரிக்கைகளை வென்றெடுக்கவும் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவும் போராட்டங்கள் நடத்த ஜனநாயக நாடுகளில் அனுமதி அளிக்கப்படுகிறது. அதிகமான போராட்டங்கள் அமைதியாக நடந்து முடிந்தபோதும், சில போராட்டங்கள் வன்முறையிலும் தடியடியிலும் முடிந்து வருவதை நாம் காண்கிறோம்.

சமீப காலமாக முஸ்லிம்கள் நடத்தும் போராட்டங்களிலும் இது போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் நிகழ்ந்து போராட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லிம்களுக்கே பாதகமாக அமைந்து விடுகின்றது. மேலும் முஸ்லிம் சமுதாயத்தைப் பற்றியும் இஸ்லாம் பற்றியும் மற்றவர்கள் தவறாக எண்ணும் நிலை ஏற்பட்டு வருகிறது. எந்தக் கோரிக்கைக்காக போராட்டங்கள் நடத்தப்பட்டனவோ அந்தக் கோரிக்கையும் பின்னுக்கு தள்ளப்பட்டு விடுகிறது.

போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கும் தலைவர்களும், இயக்கங்களும் தூரநோக்கு இல்லாமல் செயல்படுவதால் தான் இதுபோன்ற நிலைமைகள் ஏற்படுகின்றன என்று நாம் கருதுகிறோம்.

1.ஒருலட்சம் பேர் திரண்டு நடத்தும் போராட்டம் என்றாலும், எவ்வளவு முக்கியமான கோரிக்கைக்காக நடத்தப்படும் போராட்டம் என்றாலும், அனைத்து ஊடகங்களும் முஸ்லிம் சமுதாயத்தின் போராட்டங்களை இருட்டடிப்பு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளன. அதே நேரம் கல்வீச்சு, பேருந்துகள் மீது தாக்குதல், தீ வைத்தல், சாலை மறியல் மற்றும் போலீசுடன் மோதல் போன்ற காரியங்களில் இறங்கினால் அது பத்துப் பேர் கலந்து கொண்ட போராட்டமாக இருந்தாலும் மீடியாக்களில் தொடர்ந்து விளம்பரம் கிடைக்கிறது.

நம்முடைய செய்தி மீடியாக்களில் எப்படியாவது வரவேண்டும் என்றால் இது போல் செய்தால் தான் அது சாத்தியமாகும் என்ற எண்ணம் இயக்கங்களின் தலைவர்களுக்கு ஏற்படுவதே இது போன்ற சம்பவங்கள் நடக்கக் காரணமாகி விடுகின்றன. மீடியாக்கள் விரும்புவது போல் போராட்டம் நடத்துவதைத் தவிர்த்து போராட்டத்துக்கு வந்த மக்களின் நலனை நாட கற்றுக்கொள்ள வேண்டும்.

2.பொதுச் சொத்துக்களுக்கும் தனிநபர் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படுத்துவது இஸ்லாத்தில் கடுமையாகத் தடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பாவத்திற்காக இறைவன் மறுமையில் விசாரணை செய்வான். உலக அரங்கிலும் இஸ்லாத்திற்குக் கெட்ட பெயர் ஏற்பட்டு இஸ்லாத்தின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்பதை உணர்ந்து தலைவர்கள் நடக்க வேண்டும். தங்களின் அழைப்பை ஏற்று வந்த மக்கள் இது போன்ற பாவச் செயலில் ஈடுபட்டுவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாகச் செயல்படவேண்டும்.

3.அனுமதி பெற்று நடத்தப்படும் போராட்டங்களில் பெரும்பாலும் பிரச்சினைகள் ஏற்படுவதில்லை. அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தடையை மீறி நடக்கும் போராட்டங்களில் தான் அசம்பாவிதங்கள் நடந்து வருகின்றன. தடையை மீறி நடக்கும் போராட்டம் என்பதன் பொருளை தலைவர்கள் அறியாமல் இருந்தாலோ, அல்லது போராட்டத்தில் பங்கு பெறுவோர் அறியாமல் இருந்தாலோ அதுவும் அசம்பாவிதத்திற்கு முக்கியமான காரணமாகிவிடுகிறது.

உதாரணமாக நாடாளுமன்றம், அல்லது சட்டமன்றம் முற்றுகை என்று ஒரு இயக்கம் அறிவித்தால் நாடாளுமன்றத்தை, அல்லது சட்டமன்றத்தை முற்றுகையிடுவது என அர்த்தம் இல்லை. வலிமைமிக்க அரசை மீறி சாதாரண மக்கள் நிச்சயம் முற்றுகையிட முடியாது. நாங்கள் முற்றுகையிடுவதற்காக இந்த இடத்தில் கூடுகிறோம். நீங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுத்துக் கொள்ளுங்கள் என்பதே இதன் கருத்தாகும்.

சட்டமன்றம் அல்லது பாராளுமன்றம் உள்ள இடத்திற்கு வெகு தொலைவில் கூடுவதற்கு காவல்துறை வாய்வழியாக ஒப்புதல் தருவார்கள். அந்த இடத்தில் கூடி நம் உணர்வுகளை வெளிப்படுத்த சிறிது அவகாசம் தருவார்கள். அதன் பின்னர் சட்டத்துக்கு விரோதமாக கூடியதற்காக உங்களைக் கைது செய்கிறோம் என்று கூறி கைது செய்வார்கள்.

இதற்குக் கட்டுப்படுவதாக வாய் மொழியாக ஒப்புக் கொண்டு தான் தலைவர்கள் மக்களை அழைக்கிறார்கள். எந்த இடத்தில் காவல்துறை தடுக்கிறதோ அந்த இடத்தில் கைதாவதற்குத் தயாராகி ஒத்துழைக்க வேண்டும். அதை மீறிச் செல்லக்கூடாது. இப்படிக் கைதாவதன் மூலம் நமது கோபம் உரிய முறையில் அரசின் கவனத்திற்குச் சென்றடையும்.

தடுக்கப்படும்போது மீறிச் செல்ல முயன்றால் சட்டமன்றத்தை அல்லது பாராளுமன்றத்தைப் பாதுகாப்பதற்காக காவல்துறையினர் தேவைப்படும் பட்சத்தில் பலப்பிரயோகம் செய்வார்கள். இதன் பின்னரும் கட்டுக்கடங்காமல் சென்றால் அதற்கும் மேலான நடவடிக்கை எடுப்பார்கள்.

இது காவல்துறையினர் நம்மீது கொண்ட வெறுப்பினால் செய்வது அல்ல. அவர்களின் கடமை அது தான். அதற்குத் தான் அவர்களுக்கு அதிகாரமும், சம்பளமும் கொடுக்கப்படுகிறது.

சட்டப்படி கடமையாற்றும் காவலர்களுடன் சட்டத்தை மீறும் வழிகளில் மோதுவதால் எந்த நன்மையும் ஏற்படாது.

முறையாகக் கைதாவதால் என்ன கேடு வந்துவிடும்? தடுக்கப்பட்ட இடத்திலிருந்து பத்தடி தூரம் அதிகம் செல்வதால் என்ன பயன் ஏற்பட்டுவிடும்? என்னதான் முயன்றாலும் நாம் முற்றுகையிடுவதாகச் சொன்ன இடத்தை நெருங்க முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

இதை மறந்து காவல்துறையினருடன் சட்டவிரோதமாக மோதுவதால், நம் சகோதரர்கள் மருத்துவ மனைகளில் சேர்க்கப்படும் நிலையும், அதைத் தொடர்ந்து பல ஆண்டுகள் வழக்குக்காக அலையும் நிலையும் ஏற்படும். நம்மை நம்பி வந்த மக்களுக்கு இத்தகைய நிலையை ஏற்படுத்துவது நியாயம்தானா?

கைதிகளை விடுவிப்பதற்காக ஒரு போராட்டம் நடத்தினால் விடுவிக்காவிட்டால் நாங்களே சிறையை உடைத்து வெளியே கொண்டு வருவோம் என்று சில தலைவர்கள் அப்பாவி மக்களை உசுப்பேற்றுகின்றனர். உடனே பலத்த தக்பீர் முழக்கம் வருகிறது. இட ஒதுக்கீடு தராவிட்டால் நாங்களே எடுத்துக் கொள்வோம் என்று கூறி மக்களை உசுப்பி விடுகின்றனர். இதற்கும் தக்பீர் முழக்கம்தான். இது நடக்குமா? இப்படி பேசும் தலைவரால் இப்படி செய்து காட்ட இயலுமா?

இவர்கள் கைதட்டல் பெறுவதற்காக இப்படிப் பேசினாலும் மக்களை ஏமாற்றவே நாம் இப்படி பேசுகிறோம் என்று அந்தத் தலைவர்களுக்குத் தெரிந்தாலும் உணர்ச்சிக்கு இடம் கொடுக்கும் மக்கள் இதை உண்மை என்று நம்புகின்றனர். நிஜமாகவே சட்டமன்றத்துக்குள் நாம் நுழைந்து விட முடியும் என்று அப்பாவித்தனமாக நம்புகிறார்கள்.

4.வரக்கூடிய மக்கள் அனைவரையும் கட்டுப்பாட்டில் வைக்க யாருக்கு இயலுமோ, இதற்காக பயிற்சியளிக்கப்பட்ட தொண்டர்கள் எந்த இயக்கத்திற்கு இருக்கிறார்களோ அவர்கள் தான் உணர்ச்சிகரமான போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் போராட்டம் நடத்தினால், அது நன்மைக்குப் பதிலாக கேடாய்த்தான் முடியும்.

மக்களின் உணர்வுகள் எப்படி இருக்கும் என்பதைக் கவனத்தில் கொண்டு அவர்களின் உணர்வுகளை மழுங்கடிக்காமலும், அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமலும் பேலன்ஸ் செய்யும் திறமையை பயன்படுத்த வேண்டும். அதே நேரத்தில் நமது வீரியத்தையும் இழந்துவிடக்கூடாது.

ஆனால் பெரும்பாலான தலைவர்கள் இப்படி நடப்பதில்லை. போராட்டத்தில் மக்கள் எவ்வளவு பேர் வந்துள்ளார்கள் என்று விசாரித்து, கூட்டம் சேர்ந்தபின் கடைசியாக தலைவர்கள் வந்தால், அந்தப் போராட்டம் அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்காது. இதையும் சமுதாயத் தலைவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

களத்தில் ஒரேயடியாகப் பணிந்தும் போகக்கூடாது, எகிறியும் போகக்கூடாது என்பதை உணர்ந்து அதிகாரிகளை அணுகி காரியத்தை சாதித்துக் கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும்.

சாதாரணமான பிரச்சினையில் விரும்பினால் பல இயக்கங்கள் கூட்டுப் போராட்டம் நடத்தலாம். உணர்ச்சிகரமான விஷயங்களிலும், தடையை மீறி நடக்கும் போராட்டங்களிலும் பல இயக்கங்கள் கூட்டாகப் போராட்டம் நடத்துவதை அறவே தவிர்க்க வேண்டும்.

கொந்தளிப்பாக மக்கள் வரும்போது பல இயக்கத்தவரும், இயக்கம் சாராதவர்களும் வருவதால், யாருக்கும் அவர்கள் கட்டுப்பட மாட்டார்கள். மேலும் எந்த ஒருங்கிணைப்பும் இருக்காது. அவர்கள் என்ன செய்தாலும் அவர்களைக் கட்டுப்படுத்துவதில் அனைவரும் தோல்வியைத்தான் தழுவுவார்கள். இதணை உணராமல் தலைவர்களும் உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் முடிவுகளால் விபரீதங்கள்தான் ஏற்படும்.

போராட்டக்களத்திற்கு தலைவர்கள் முதல் ஆளாக வந்து விட வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ அது போல் எவ்வளவு நேரமானாலும் எல்லா மக்களும் கலைந்து சென்ற பின்னர் தான் தலைவர்கள் அந்த இடத்தைவிட்டு நகர வேண்டும்.

கண்டன உரை முந்தவுடன் தலைவர்களின் வேலை முடிந்து விடுவதில்லை. அதன் பின்னர் தான் வேலை அதிகமாக உள்ளது. வந்த மக்கள் அனைவரும் பத்திரமாக இடத்தை விட்டு அகன்று விட்டார்கள் என்பதை உறுதி செய்த பின்னர் தான் தலைவர்கள் அங்கிருந்து நகர வேண்டும். இதைக் கவனிக்கத் தவறுவதால் பல விதமான இன்னல்கள் ஏற்படக் காரணமாகி விடுகிறது.

அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் இதில் கவனம் செலுத்தினால், எதிர் காலத்தில் இது போன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் தவிர்க்கலாம்.

நாடு சுதந்திரம் பெற்ற போது ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக ஐம்பது ஆண்டுகளாக முஸ்லிம்கள் போராட்டம் என்பதை மறந்து இருந்தனர். ஏன் அடிக்கிறாய்? ஏன் எங்கள் உரிமையைப் பறிக்கிறாய்? ஏன் எங்களை இரண்டாந்தர குடிமக்களாக நடத்துகிறாய் என்று கேள்வி கேட்கவே அஞ்சும் நிலையில் இந்தச் சமுதாயம் இருந்தது. இப்போது தான் போராட்டக் களத்துக்கு ஆண்களும் பெண்களும் வந்து இழந்த உரிமைகளை கொஞ்சம் கொஞ்சமாக பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் போராட்டங்களில் தடியடிகளும், வழக்குகளும் கெட்ட பெயர்களும் வர ஆரம்பித்தால் எதற்காகப் போராட்டம் நடத்தினாலும் மக்கள் வர மாட்டார்கள் என்ற நிலை ஏற்பட்டுவிடும் என்பதைத் தலைவர்கள் உணர வேண்டும்.

அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்தபோது கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

புகாரி 2448

தமக்குத் தாமே துரோகம் செய்வோருக்காக நீர் வாதிடாதீர்! துரோகம் செய்யும் பாவியை அல்லாஹ் விரும்ப மாட்டான்.

அல்குர்-ஆன் 4 : 107

25.09.2012. 11:18 AM

முஸ்லிம் தத்தெடுக்க நீதிமன்றத் தடை சரியா?

24.01.12 அன்று வெளியான தினமலர் நாளிதழ் பக்கம் 12ல் (இந்து குழந்தையை முஸ்லிம் தத்தெடுக்க முடியாது - ஐகோர்ட் கிளை உத்தரவு ) என்ற தலைப்பில் இந்துவுக்கு பிறந்த குழந்தையை முஸ்லிம் தத்தெடுப்பதை சட்டம் ஏற்றுக் கொள்ளவில்லை. குரானும் தத்தெடுப்பதை ஏற்றுக் கொள்ளவில்லை என்று வந்திருக்கின்றது. குர்-ஆன் மாற்று மதத்திலுள்ள குழந்தைகளைத் தத்தெடுக்க அனுமதி வழங்குகின்றதா? இல்லையா? வழங்கப்பட்ட தீர்ப்பின் மூலம் முஸ்லிம்கள் குழந்தைகளை தத்தெடுக்கும் வாய்ப்பு மறுக்கப்படுகின்றதே! விளக்கம் தரவும்

- மரியா

திருத்துறைபூண்டி, திருவாரூர்

 இது குறித்து திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் நாம் தெளிவுபடுத்தியதையே இதற்குப் பதிலாக தருகிறோம்.

எந்த மனிதருக்குள்ளும் இரண்டு உள்ளங்களை அல்லாஹ் ஏற்படுத்த வில்லை. உங்களின் மனைவியரில் யாரைத் தாயுடன் ஒப்பிட்டீர்களோ அவர்களை உங்கள் தாயார்களாக அவன் ஆக்கவில்லை. உங்களால் வளர்க்கப்படும் பிள்ளைகளை உங்கள் பிள்ளைகளாக அல்லாஹ் ஆக்கவில்லை. இது உங்கள் வாய்களால் கூறும் வார்த்தை. அல்லாஹ் உண்மையே கூறுகிறான். அவனே நேர் வழி காட்டுகிறான். அவர்களை அவர்களின் தந்தையருடனே சேர்த்து அழையுங்கள்! அதுவே அல்லாஹ்விடம் நீதியானது. அவர்களின் தந்தையரை நீங்கள் அறியாவிட்டால் அவர்கள் உங்களின் கொள்கைச் சகோதரர்களும், உங்கள் நண்பர்களுமாவர். தவறுதலாக நீங்கள் கூறி விடுவதில் உங்கள் மீது குற்றம் இல்லை. மாறாக உங்கள் உள்ளங்களால் தீர்மானித்துக் கூறுவதே(குற்றமாகும்). அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

(அல்குர்-ஆன் 33 : 4,5)

இஸ்லாம் போலித்தனமான எல்லாவிதமான உறவுகளையும் நிராகரிக்கிறது. தனது தந்தை இன்னார் என்று தெரிந்திருந்தும் வேறொருவரைத் தனது தந்தை எனக் கூறும் பிள்ளைகள் இருக்கின்றார்கள். யாருக்கோ பிறந்த பிள்ளையைத் தனது பிள்ளை என்று கூறிச் சொந்தம் கொண்டாடுகின்ற தந்தைமார்களும் இருக்கிறார்கள்.

இது வாய் வார்த்தைகளால் மனிதர்கள் செய்து கொள்கின்ற கற்பனை தானே தவிர, ஒருவரது பிள்ளை எந்தக் காரணத்தைக் கொண்டும் இன்னொருவனுக்குப் பிள்ளையாக முடியாது.

ஒரு மனிதன் தனக்குப் பிறக்காத குழந்தைக்கு எக்காரணம் கொண்டும் தந்தையாக முடியாது. இதெல்லாம் மனிதர்களாகச் சொல்லிக் கொள்கின்ற வார்த்தை என்று கூறி போலித்தனமான எல்லா உறவுகளையும் இஸ்லாம் அடியோடு நிராகரிக்கின்றது.

இரத்த சம்பந்தமான உறவுகள் ஏற்பட வேண்டுமானால் உண்மையிலேயே இரத்த சம்பந்தம் இருக்க வேண்டும். அதுதான் நேர்மையானது; நீதியானது எனவும் இவ்வசனம் (33:4,5) அறிவுரை கூறுகின்றது.

எனவே இந்த தீர்ப்பு முஸ்லிம்களைப் பாதிக்காது.

உணர்வு 16:24

21.02.2012. 12:44 PM

நாமே ஒரு கட்சி ஆரம்பித்தால் என்ன?

மற்ற அரசியல் இயக்கங்களை குறை கூறி கொண்டு இருக்கும் நீங்கள், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் போல ஒரு முன்னுதாரணமான அரசியல் இயக்கத்தை தோற்றுவிக்க முடியவில்லையே?

உங்கள் கேள்வியே முரண்பாடாக உள்ளது. தமிழ் நாடு தவ்ஹீத் போல் என்று நீங்கள் பாராட்டும் வகையில் உதாரணம் காட்டுகிறீர்களே அதற்குக் காரணம் தேர்தலில் போட்டியிடாமல் சமுதாயத்துக்கு உழைப்பதால் தான். எப்போது தேர்தலில் போட்டியிடும் முடிவை எடுக்கின்றோமோ அப்போதே சாக்கடையாக மாறி விடுவோம்.

உதாரணத்துக்கு தமுமுகவை நாம் துவக்கிய போது அப்துஸ் ஸமது, காதர் மைதீன், அப்துல்லதீப் ஆகியோரை எப்படி விமர்சனம் செய்தோம்?

இவர்கள் ஓட்டுப் பொறுக்குவதற்காக ஐந்து சீட்டு வாங்கிக் கொண்டு சமுதாயத்தின் மானத்தைக் கப்பலேற்றுகிறார்கள் என்று கேவலமாகப் பேசினோம். ஆனால் மாற்றி யோசிக்கப் புகுந்த தமுமுக மூனு சீட்டு வாங்கி விட்டு கொஞ்சமும் வெட்கமில்லாமல் அதில் பெருமை அடிக்கிறதைப் பார்க்கிறோம். இவர்கள் எதைக் குறை சொன்னார்களோ அதையே செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

தேர்தலில் போட்டியிட்டு பதவியைப் பெற முடிவு எடுத்து விட்டால் கூட்டணி வைத்துள்ள பெரிய கட்சிக்கு ஜால்ரா போடுகின்றனர். பெரிய கட்சிகள் துரோகம் செய்தாலும் கண்டும் காணாமலும் உள்ளனர் என்று தமுமுகவினர் அன்றைக்கு முஸ்லிம் லீக்கை விமர்சனம் செய்தனர்.

ஆனால் மோடியை அழைத்து பதவி ஏற்பு விழா நடத்திய ஜெயலலிதாவை தமுமுகவால் கண்டிக்க முடிகிறதா? முஸ்லிம்களைக் கருவறுத்த மோடி போன்றவர்களின் கைகளைக் கட்டிப் போடும் வகையில் மதக் கலவரத் தடுப்பு மசோதாவை மத்திய அரசு கொண்டு வரவுள்ளது. இதைக் கொண்டு வர வேண்டும் என்று தமுமுக உள்பட அனைத்து முஸ்லிம் இயக்கங்களும் வலியுறுத்தி வந்தன. ஆனால் அதை ஜெயலலிதா எதிர்த்து முஸ்லிம்களுக்கு பச்சைத் துரோகம் செய்த போதும் தமுமுக வாய் திறக்கவில்ல. திமுகவில் கூட்டணியாக இருந்த போதும் திமுகவின் ஒரு துரோகத்தையும் தமுமுக கண்டித்ததில்லை. ஆம் மற்ற இயக்கங்களை இந்தக் காரணத்தைச் சொல்லித் தான் தமுமுக விமர்சனம் செய்து தன்னை வித்தியாசமான இயக்கமாக காட்டிக் கொண்டது. ஆனால் அதையே செய்யும் கேவலம் தேர்தல் ஆசையால் தான் வந்தது.

காதர் மைதீன் சாமியார் காலில் விழுந்தார், சாமியாரிடம் ஆசி வாங்கினார் என்றெல்லாம் திட்டி திட்டித்தான் தமுமுக தன்னை தனித்துக் காட்டியது.

ஆனால் தேர்தல் போதை வந்த பின்னர் தமுமுக தலைவர் சாமியாரிடம் ஆசி வாங்குகிறார். இயேசுவைக் கடவுளின் மகனாகச் சித்தரிக்கும் பாடலை வெளியிடுகிறார். கிறித்தவர்கள் நடத்திய சப்பரத் திருவிழாவில் கலந்து கொள்கிறார். வடம் பிடித்தாரா என்று தெரியவில்லை. முகஸ்துதி சிறிய இணைவைத்தல் என்ற நூலை மொழி பெயர்த்தவருக்கு இன்று பெரிய இணைவைப்பு சாதாரணமாகி விட்டது.

காரணம் ஓட்டுப் பொறுக்குவது என்றால் இதையெல்லாம் செய்து தான் ஆக வேண்டும். இணை கற்பித்தலை எதிர்த்தவர்களே இன்று இணை கற்பித்து நிரந்தர நரகத்துக்கு ஆளாவது பற்றி கவலைப்படவில்லை என்றால் அதையே நாம் எப்படி செய்ய முடியும்.

இது போன்ற உசுப்பேற்றும் சகோதரர்களால் தான் தமுமுக தொலைந்து போனது போல் தவ்ஹீத் ஜமாஅத் செல்லாது. எவ்வளவு தான் ஆசை வார்த்தை காட்டினாலும் ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயம் தவ்ஹீத் ஜமாஅத்தின் கீழ் திரண்டாலும் தேர்தலில் போட்டியிடும் முடிவை எடுக்க மாட்டோம். இன்ஷா அல்லாஹ்

உணர்வு 15:49

23.10.2011. 5:48 AM]

தமிழக மீனவர் பிரச்சனைக்கு தீர்வு என்ன?

தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் அடிக்கடி கைது செய்யப்படுவதைக் கண்டித்து தவ்ஹீத் ஜமாஅத் களம் இறங்காதது ஏன்?

அபூ ராஜியா, இராமேஸ்வரம்

ஓட்டுப் பொறுக்கும் அரசியல்வாதிகளுக்குத் தான் மக்களின் உணர்ச்சிகளுக்கு ஏற்ப போலிப் போராட்டம் நடத்தும் அவசியம் இருக்கிறது. தவ்ஹீத் ஜமாஅத் ஓட்டுப் பொறுக்கும் அரசியல் நடத்தாத காரணத்தால் போலிப் போராட்டங்களை நடத்துவதில்லை. இது தான் காரணம்.

இந்தியாவுடன் ஒப்பிடும் போது இலங்கை ஒரு குட்டி நாடு. இந்தியாவுடன் மோதிப் பார்க்க அந்த நாட்டுக்குப் பலமோ துணிவோ கிடையாது. இந்திய மீனவர்களைச் சட்ட விரோதமாகப் புகுந்து பிடித்துச் செல்லும் வலிமையும் இலங்கை அரசுக்குக் கிடையாது. இதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இதற்கான அடிப்படைக் காரணத்தை விளங்கிக் கொண்டால் தான் தமிழ் மொழியைச் சொல்லி மக்களை ஏமாற்றுவோரின் போலித்தனம் புரியும்.

ஒவ்வொரு நாட்டுக்கும் தரை வழியில் எல்லைகள் உள்ளது போல் கடலிலும் எல்லைகள் உள்ளன.

இந்தக் கடல் எல்லைகள் இரு வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

ஒரு நாடு தன்னை ஒட்டியுள்ள கடலில் 22.2 கிமீ தூரத்தை தனது எல்லையாக வைத்துக் கொள்ளலாம். அந்த எல்லை அந்த நாட்டுக்குச் சொந்தமானது என்பது சர்வதேச அளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட விதியாகும். இந்த எல்லைக்குள் அந்நிய நாட்டவர் நுழைந்தால் அது சட்ட விரோத அத்துமீறலாகும். அந்தக் கடல் எல்லைக்குள் அந்த நாட்டின் அனுமதி பெற்றே யாரும் பிரவேசிக்க முடியும். 22.2 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள கடல் பரப்பு யாருக்கும் சொந்தமானதல்ல. அனைவருக்கும் பொதுவானது. யார் வேண்டுமானாலும் அனுமதி இல்லாமல் அந்த வழியாகக் கடந்து செல்லலாம். இது முதல் வகையான எல்லை.

ஒரு நாட்டை ஒட்டியுள்ள கடலில் 393 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வளங்கள் அனைத்தும் அந்த நாட்டுக்கே சொந்தமானதாகும். அந்நிய நாட்டவர்கள் அங்கே எண்னெய்க் கிணறுகள் தோண்டுவதோ அங்கு தளம் அமைப்பதோ கூடாது. கடந்து செல்லும் வழியாக மட்டுமே அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இது இரண்டாவது வகை எல்லையாகும். இரு நாடுகளிடையே பிரச்சினை ஏற்படாதிருக்க இது போன்ற விதிகள் அவசியமானவை என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனால் பரந்து விரிந்த கடல் பரப்பில் தான் 22.2 கிமீட்டர் தூரத்தையும், 393 கிமீட்டர் தூரத்தையும் ஒரு நாடு தனதாக்கிக் கொள்ள முடியும். இரு நாடுகளிடையே உள்ள கடல் பரப்பு குறைவாக இருந்தால் அப்போது இந்த சர்வதேச விதியைச் செயல்படுத்த முடியாது. இதற்கு உதாரணமாக இந்திய இலங்கை கடல் எல்லையை எடுத்துக் கொள்ளலாம்.

தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையே மொத்த கடல் எல்லையே 30 கிமீட்டர் தான். இந்தியாவோ இலங்கையோ 22.2 கிமீட்டர் தூரத்தை தனது எல்லையாக எடுத்துக் கொள்ள முடியாது. இது போன்ற நாடுகள் தமக்கிடையே பேச்சு வார்த்தை நடத்தி தங்கள் எல்லையைப் பேசி நிர்ணயித்து ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். இணக்கமான நிலை ஏற்படாவிட்டால் சர்வதேச நாடுகளின் துணயுடன் அல்லது ஐநா சபை மூலம் எல்லைகளை நிர்ணயித்துக் கொள்ளலாம்.

புலிகளின் பிரச்சினை இல்லாத காலகட்டத்தில் இந்தியாவும், இலங்கையும் தமது கடல் எல்லை குறித்து அலட்டிக் கொள்ளவில்லை. இந்தியர்கள் இலங்கையின் நிலப் பகுதி வரை சாதாரணமாகச் சென்று வந்தனர். எண்ணற்ற தமிழர்கள் கள்ளத்தோணி வழியாக இலங்கை சென்று அங்கே பல காலம் இருந்து விட்டு கள்ளத்தோணி வழியாகவே இந்தியாவுக்கும் வருவார்கள்.அது ஒரு காலம். இரு நாடுகளும் கண்டு கொள்ளாததால் இது பிரச்சனையாக ஆகவில்லை.

ஆனால் புலிகளின் பிரச்சனை ஏற்பட்ட பின்னர் தமிழகம் வழியாக புலிகள் ஊடுருவினால் தனது நாட்டுக்கு ஆபத்து என்று அஞ்சிய இலங்கை அரசாங்கம் கடல் எல்லையை நிர்ணயிக்க வேண்டும் என்று இந்தியாவை வலியுறுத்தி வந்தது. இதன்படி 1976 ஆம் ஆண்டு இந்திரா காந்தி அவர்கள் பிரதமராக இருந்த போது இரு நாடுகளும் பேசி இவை தான் தங்களின் கடல் எல்லை என்று முடிவு செய்து ஒப்பந்தம் செய்து கொண்டன. இந்த ஒப்பந்தத்தின் பின்னர் தான் இது போன்ற பிரச்சினைகள் வர ஆரம்பித்தன.

தமிழக மீனவர்கள் வழக்கம் போல் இலங்கை வரை சென்று மீன் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அடிக்கடி இலங்கை எல்லக்குள் இந்திய மீனவர்கள் செல்வதும் இலங்கை மீனவர்கள் இந்திய எல்லைக்குள் செல்வதும் நடக்க ஆரம்பித்தன.

இரு நாட்டுக் கடற்படையும் ரோந்துப் பணியில் இருப்பதால் தங்கள் எல்லக்குள் வரும் அந்நிய நாட்டவரை ரோந்துப்படையினட் கைது செய்வதை சட்டப்படி யாரும் குறை கூற முடியாது. இந்திய மீனவர்களை இலங்கை அரசு கைது செய்கிறது என்பதற்காக இந்திய அரசு இலங்கை மீது நடவடிக்கை எடுக்கப் புகுந்தால் சர்வதேச சமுதாயம் வேடிக்கை பார்த்துக் கொண்டிராது. அமெரிக்கா அத்து மீறினால் மட்டுமே சர்வதேச சமுதாயம் வேடிக்கை பார்க்கும். அமெரிக்கா செய்வதை மற்ற நாடுகள் செய்ய முடியாது என்பது தான் எழுதப்படாத விதியாகும். இலங்கையின் செயல் சர்வதேச சட்டப்படியானது என்பதால் தான் இந்தியாவால் இலங்கையை எதுவும் செய்ய இயலவில்லை.

இலங்கை அரசு இந்திய எல்லைக்குள் புகுந்து கைது செய்தால் அந்த நாட்டுக்கு எதிராகப் போர் செய்ய முடியும். தனது எல்லைக்குள் நுழைபவரைக் கைது செய்ததற்காக அந்த நாட்டை இந்திய அரசு ஒன்றும் செய்ய முடியாது.

இந்த விஷயத்தில் அறிவுப்பூர்வமாகச் சிந்தித்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு இந்தியாவுக்குத் தான் உள்ளது.

நமது நாட்டு கடல் எல்லையைக் கடக்கும் போது மீனவர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் கருவிகளைக் கொடுக்கலாம்.

அல்லது நமது இலங்கையை ஒட்டியுள்ள கடலில் நங்கூரம் பாய்ச்சிய மிதவைகளை மிதக்க விடலாம்.

அல்லது இந்திய கடல் எல்லையில் ரோந்துப் பணியில் ஈடுபடும் படையினரை அதிகமாக்கி நமது மீனவர்கள் எல்லை மீறிச் செல்லாமல் தடுக்கலாம்.

அல்லது இரு நாடுகளும் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தி ஒவ்வொரு நாடும் ஐந்து கிமீட்டர் தூரத்தை மட்டும் தனது எல்லையாக வைத்துக் கொண்டு மீதி 20 கிமீட்டர் எல்லையை இரு நாட்டுக்கும் பொதுவானதாக வைத்துக் கொள்ளலாம். அப்போது யாரும் வரம்பு மீறிச் செல்லும் நிலை ஏற்படாது. மீனவர்கள் அதிக தூரம் சென்று அதிக மீன்களைப் பிடிக்க இது வாய்ப்பை ஏற்படுத்தும்.

அல்லது எல்லை மீறும் மீனவர்களைப் பிடித்து ரோந்துப் பணியில் உள்ள இந்தியக் கடற்படையிடம் ஒப்படைக்கலாம். அது போல் அத்துமீறும் இலங்கை மீனவர்களை இந்தியக் கடற்படை பிடித்து இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கலாம்.

அல்லது ஒட்டு மொத்த கடல் எல்லையைப் பொதுவாக ஆக்கிக் கொண்டு தரைவழியாக அந்நிய நாட்டவர் ஊடுருவுவதை மட்டும் கண்காணிக்கலாம்.

இது போல் ஆக்கப்பூர்வமான வழிகளில் சிந்திப்பதை விடுத்து போலிப் போராட்டம் நடத்துவதால் எந்த நன்மையும் மீனவர்களுக்கு ஏற்படப் போவதில்லை.

இது தமிழக மீனவர்கள் மட்டும் சந்திக்கும் பிரச்சினை அல்ல. பல நாட்டவர்களும் சந்திக்கும் பிரச்சினை தான். இந்திய மீனவர்கள் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு சிறையில் வாடி விட்டு தாயகம் அனுப்பப்படுகின்றனர். பங்களாதேசிலும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுகின்றனர். பாகிஸ்தான், பங்களாதேஷ் மீனவர்கள் இந்தியக் கடற்படையால் கைது செய்யப்படுகின்றனர். இவை அனைத்துக்கும் இது போன்ற கடல் எல்லை மீறல் தான் காரணம்.

எனவே இந்த விதியை மீறாமல் இருக்க நம்முடைய மீனவர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். அல்லது பேச்சு வார்த்தை மூலம் இரண்டு அரசுகளும் தீர்வு காண வேண்டும்.

இதை விடுத்து வெற்றுக் கூச்சல் போடுவதால் விளம்பரம் கிடைக்குமே தவிர ஒருக்காலும் மீனவர்கள் கைது செய்யப்படுவதை இது தடுக்காது, ஏனெனில் நாமே ஒப்புக் கொண்ட சட்டத்தின்படி தான் இந்தக் கைது நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

உணர்வு 15:46

20.10.2011. 8:35 AM

சமுதாய இயக்கங்களுக்கும் அரசியல் ஆசை ஏன்

சமுதாய இயக்கமாக தங்களின் பணியைத் துவக்குபவர்கள் இறுதியில் அரசியலில் போட்டியிடுவது என்ற இறுதிக் கட்டத்தை அடைவதற்கு என்ன காரணம்? உதாரணமாக பாமக, விடுதலை சிறுத்தைகள், யாதவ மஹா சபை, நாம் தமிழர், தமுமுக போன்றவை. அரசியலை நோக்கி அவர்களைத் தூண்டுவது எது?

- ஷி. அப்துல்சமது, பட்டுக்கோட்டை, தஞ்சை

தங்களின் நேரத்தையும், உழைப்பையும் செலவிட்டு இயக்கம் நடத்துபவர்கள் தங்களுக்கு எந்தப் பலனும் இல்லா விட்டால் அவர்களால் தொடர்ந்து இயக்கம் நடத்த இயலாது என்பது இயற்கையானதுதான். ஆர்வத்துடன் நல்ல நோக்கத்தில் களம் இறங்கிய இவர்கள் தங்களுக்குப் பின்னால் மக்கள் திரண்டதைக் கண்டபின் நாம் ஏன் எவ்விதப் பலனும் இல்லாமல் உழைக்க வேண்டும். இந்த மக்களை வைத்து நமது இயக்கத்துக்கும் நமக்கும் ஆதாயம் அடைந்தால் என்ன என்ற சிந்தனை ஏற்படுகிறது.

கூட்டத்தைக் காட்டி ஆதாயம் அடையும் ஒரே வழி அரசியல்தான் என்று இவர்கள் கணக்குப் போடுகிறார்கள்.

ஆனால் நாம் செய்யும் உழைப்புக்கான கூலி மறுமையில் கிடைத்தால் போதும்; இவ்வுலகில் ஒன்றும் கிடைக்க வேண்டியதில்லை என்ற எண்ணம் ஆழமாக வேரூன்றியவர்கள் மட்டும்தான் எவ்வளவு கூட்டத்தைக் கண்டாலும். எத்தகைய வாய்ப்புகளைப் பெற்றாலும் அதை தமது ஆதாயத்துக்காகப் பயன்படுத்த மாட்டார்கள்.

உணர்வு 16:12

24.12.2011. 20:33 PM

கூடங்குளம் அணுமின் திட்டம் தேவையா?

கூடங்குளம் அணுமின் நிலையத்தை நிறுத்தச் சொல்லி உள்ளூர் மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைகிறது. சில அரசியல் கட்சிகள் ஆதரவு தருகிறார்கள்., அணுமின் நிலையத்தால் மக்களுக்கு நன்மையா தீமையா விளக்கவும் ?

- அபுதாஹிர், தாராபுரம் திருப்பூர்

கூடங்குளம் அணுமின் நிலையம் பற்றி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடு என்ன?

- கடையநல்லூர் மசூது

நவீன வசதிகள் எதை எடுத்தாலும் அதற்கு அதிகமான விலையை நாம் கொடுத்துத்தான் ஆக வேண்டும். நவீன வாகனங்கள் மூலம் நாம் சொகுசான பயணத்தை மேற்கொள்ள முடிகிறது. ஆனால் வாகனங்களில் இருந்து வெளிப்படும் நச்சுக்களால் காற்று மாசுபடுகிறது. கெட்ட காற்றை சுவாசித்து நமக்கு நாமே கேடு விளைவித்துக் கொள்கிறோம்.

அது போல் குளிர் சாதனங்களால் நாம் சொகுசாக வாழ முடிகிறது என்றாலும் இதன் காரணமாக ஓஸோன் படலத்தில் ஓட்டை விழுந்து பெரிதாகி வருகின்றது. சூரியனில் இருந்து பூமிக்கு வரும் கெட்ட கதிர்களை ஓஸோன் படலம்தான் வடிகட்டி பூமியை சூரியனின் கேட்டில் இருந்து பாதுகாக்கிறது. அந்தப் பாதுகாப்பை நாம் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறோம்.

மேற்கண்ட சாதனங்களுடன் டிவி, கம்ப்யூட்டர் இன்னும் எண்ணற்ற இயந்திரங்கள் காரணமாக பூமி அதிகமாக வெப்பம் அடைந்து வருகிறது. பனிப்பாறைகள் உருகி கடலில் கலந்து கடல் மட்டம் உயர்ந்து கொண்டே வருகின்றது. நாளடைவில் பல ஊர்கள் கடலுக்கு இரையாகி விடும் என்று அஞ்சும் நிலை உருவாகியுள்ளது.

இந்தியாவில் ஐம்பது கோடி மக்கள் இருந்த போது அரிசி கிடைக்கவில்லை. ரேஷன் மூலம்தான் வாராந்தோறும் புளுத்த அரிசியை வாங்கும் நிலை இருந்தது. விவசாயத்தைப் பெருக்குவதற்காக நவீன ரசாயன உரங்கள் பயன்படுத்துவதால் தான் உணவு உற்பத்தி அதிகமாக உள்ளது. ரசாயன உரங்களால் தான் உணவுப் பொருள் அனைவருக்கும் கிடைத்து வருகிறது. ஆனால் இந்த உணவுப் பொருள்கள் நமது உடல் நலனைக் கெடுத்து வருவதை இன்னொரு பக்கம் நாம் உணர்கிறோம்.

சில நோய்களுக்காக நாம் உட்கொள்ளும் மாத்திரைகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தினாலும் அந்த நோயில் இருந்து விடுபட்டால் போதும் எனக் கருதி அதையும் சகித்துக் கொள்கிறோம்.

 செல்போன் பேசுவதால் அதில் இருந்து வெளிப்படும் கதிர்கள் மூளையைச் சிறிய அளவில் பாதிக்கும் என்ற போதும் காதின் கேட்கும் திறன் பாதிக்கும் என்ற போதும் நாம் அதைச் சகித்துக் கொள்கிறோம்.

அதிகப்படியான வெளிச்சம் கூட கண்களைப் பாதிக்கும் என்ற போதும் நாம் அதிக வெளிச்சம் தரும் விளக்குகளைப் பயன்படுத்துகிறோம். எந்த நவீன முன்னேற்றமாக இருந்தாலும் அதனால் நமக்குப் பல கேடுகளும் சேர்ந்தே ஏற்படுகின்றன.

இன்றைக்கு நமக்கு மின்சாரம் என்பது மிக அவசியமான ஒன்றாக ஆகி விட்டது. மின்சாரம் சரியாக வழங்கப்படவில்லை என்பதற்காக ஆட்சியையே மாற்றும் அளவுக்கு அது முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.

நிலக்கரி மூலமும் தண்ணீர் வீழ்ச்சியின் மூலமும் காற்றாலை மூலமும் நமக்குத் தேவையான மின்சாரம் உற்பத்தி செய்ய முடியவில்லை. எனவே தான் குறைந்த செலவில் அதிக மின்சாரம் பெறும் நோக்கத்தில் அணு மின்சாரம் தயாரிக்க மத்திய அரசாங்கம் திட்டமிட்டது.

எந்த வகை மின்சாரத்தையும் விட அணு மின்சாரம் அதிக லாபமானது என்பது உண்மைதான்.

ஆனால் இதில் ஆபத்தும் அதிகம்தான். அணு உலை வெடித்தால் பல உயிர்கள் பலியாகும், பலருக்கு உடல் நிலை கடுமையாகப் பாதிக்கப்படும், பயிர் பச்சைகளும் கூட பாதிக்கப்படும், அந்தப் பகுதி வறண்ட பாலைவனமாக மாறிவிடும் என்றெல்லாம் இதன் ஆபத்துகளைப் பட்டியலிடுகிறார்கள். மேலும் அணுக்கழிவுகளை அழிப்பதும் அதிக காலம் பிடிக்கக் கூடியது. இப்படி இன்னும் பல கேடுகளை அடுக்கிக் கொண்டே போகிறார்கள்.

அணு உலை வெடித்தால் ஆபத்து அதிகம் என்பது உண்மைதான். ஆனால் வெடிப்பதற்கான வாய்ப்பு இல்லாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அணு விஞ்ஞானிகளும் மத்திய அரசும் சொல்கின்றனர்.

இதுதான் இப்போதுள்ள பிரச்சினை. மக்கள் அஞ்சும் போது அந்த அச்சம் விலகும் வரை அணு உலையின் செயல்பாட்டை நிறுத்தி வைப்பதுதான் நல்லது. ஏனெனில் அந்தப் பகுதி மக்கள்தான் அணு உலை வெடித்தால் பாதிக்கப்படக் கூடியவர்கள்.

ஆனாலும் அவர்களை விட அணு உலையில் பணியாற்றும் விஞ்ஞானிகளும், பல்லாயிரம் பணியாளர்களும் தான் முதலில் பாதிக்கப்படுவார்கள். அப்படி இருந்தும் விஞ்ஞானிகளும் வல்லுனர்களும் அங்கே பணிபுரிகிறார்கள் என்றால் அந்த அளவுக்கு அதன் பாதுகாப்பு அம்சத்தில் அவர்களுக்கு நம்பிக்கை உள்ளது. இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆனால் இந்த திட்டத்தைத் துவக்கும் போதே இதற்கு எதிராக இவ்வளவு கடும் எதிர்ப்பைக் காட்டி இருந்தால் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டு இறுதிக் கட்டம் வரை மத்திய அரசு வந்திருக்காது.

நம்முடைய பணம் 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டு நாளைக்கு மின்சாரம் தயாரிக்கும் நிலையில் மக்களை அமெரிக்காவின் கைக்கூலி என்று விமர்சிக்கப்படும் உதயகுமார் வகையறாக்கள் தூண்டி விடுகின்றனர், பீதியைக் கிளப்பி விடுகின்றனர். இந்த அணு உலை ரஷ்யாவின் ஒத்துழைப்போடு முடிக்கப்பட்டுள்ளது. இதுவே அமெரிக்காவின் உதவியுடன் நிறுவப்படிருந்தால் நிச்சயம் பாதிரிகளும், உதயகுமார்களும் இவ்வளவு எதிர்ப்பு காட்டியிருக்க மாட்டார்கள் என்ற பிரச்சாரத்தில் அர்த்தம் உள்ளதையும் நாம் மறந்து விட முடியாது.

உணர்வு 16:12

16.12.2011. 9:51 AM

தங்கம் விலை உயர்ந்து வருவது குறித்து

தங்கம் விலை உயர்ந்து வருவது குறித்து மக்களுக்கு சொல்லும் அறிவுரை என்ன?

கேள்வி: தங்க விலை கிடுகிடு என உயர்ந்து வரும் இந்த நேரத்தில் மக்களுக்கு நீங்கள் சொல்லும் அறிவுரை என்ன?

- அபூ ஜஸீம் ஜாபர் அலி, சார்ஜா

பல விஷயங்களில் நல்ல ஆலோசனைகளை மக்கள் கேட்கக் கூடியவர்களாக இருந்தாலும் சில விஷயங்களில் அவர்கள் யாருடைய ஆலோசனையையும் கேட்க மாட்டார்கள். அதில் முதலிடத்தில் தங்க நகை மீதுள்ள மோகம் உள்ளது. உலக நாடுகளில் இந்தியர்களை விட வசதியானவர்கள் அதிகம் உள்ளனர். அவர்களில் யாரும் இந்தியப் பெண்கள் போல் நகை மோகம் கொண்டு அலைவதில்லை. நமது பெண்களின் இந்த மோகத்தை அடிப்படையாகக் கொண்டு தான் ஆன்லைன் மூலம் தங்கத்தை வாங்கி வைத்துக் கொண்டு நாளுக்கு நாள் நிமிடத்துக்கு நிமிடம் விலையை ஏற்றிக் கொண்டு உள்ளனர். இந்த மோகம் குறைய வேண்டும் என்பது தான் நாம் சொல்லும் ஒரே அறிவுரை. நகைகள் அணிவது தான் பெண்களுக்கு ஒரே இலக்கணம் என்ற நிலை மாறித்தான் ஆக வேண்டும். ஆனால் யாரும் இதைக் கேட்க மாட்டார்கள். உணர்வு 16:16 29.12.2011. 5:01 AM

More Articles …