Sidebar

19
Fri, Jun
சமீபத்திய செய்திகள்

காது குத்துதல், பிளாஸ்டிக் சர்ஜரி கூடுமா?

காது குத்துவதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா?

பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ளலாமா?

கேள்வி :

திருக்குர்ஆனின் 4:11 வசனத்தில் அவர்கள் அல்லாஹ்வின் படைப்புகளை மாற்றுவார்கள் என்று ஷைத்தான் கூறியதாக அல்லாஹ் கூறுகின்றான். எனவே காது குத்துவதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா? பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ளலாமா?

இஸ்லாமிய பொது நூலகம், வடகரை.

பதில் :

காதுகளைக் குத்தி ஓட்டை போடுவது அல்லாஹ்வின் படைப்பில் மாறு செய்வதில் அடங்கும். பெண்களைப் படைக்கும் போது காதுகளில் ஓட்டை போட அல்லாஹ் மறந்து விட்டது போன்ற ஒரு நிலையை இது ஏற்படுத்தி விடுகின்றது. எனவே இதை அல்லாஹ் கடுமையாகக் கண்டிக்கின்றான்.

அவர்களை வழிகெடுப்பேன்; அவர்களுக்கு (தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்; அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள் (எனவும் ஷைத்தான் கூறினான்). அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நஷ்டத்தை அடைந்து விட்டான்.

திருக்குர்ஆன் 4 : 119

படைப்பினங்களின் கோலத்தை மாற்றுவது ஷைத்தானுடைய முக்கிய இலக்காக அமைந்துள்ளது என்று அல்லாஹ் இவ்வசனத்தில் கூறுகின்றான். எனவே காது குத்துவதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை.

பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதில் இரண்டு வகைகள் உள்ளன. ஒருவர் தன்னுடைய தோற்றத்தை மாற்றிக் கொள்வதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டால் அது மேற்கண்ட வசனத்தின் அடிப்படையில் தடுக்கப்பட்ட செயலாகும். ஆனால் பொதுவான மனிதத் தோற்றத்திற்கு மாற்றமாக அமைந்த, உடலியல் ரீதியான குறைபாடுகளைச் சரி செய்வதற்காக சர்ஜரி செய்து கொள்வதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது. இதற்கான ஆதாரம் வருமாறு.

سنن أبي داود

4232 – حدَّثنا موسى بنُ إسماعيلَ ومحمدُ بنُ عبد الله الخُزاعيُّ -المعنى- قالا: حدَّثنا أبو الأشْهبِ، عن عبدِ الرحمن بن طرَفَةَ أن جده عَرْفَجَةَ بن أسعدٍ قُطِعَ أنفُه يوم الكُلاب فاتخذ أنفاً من وَرِقٍ، فأنتنَ عليه، فأمرَهُ النبي – صلَّى الله عليه وسلم – فاتخذ أنفاً من ذهب

அறியாமைக் காலத்தில் நடந்த கிலாப் போரின் போது என்னுடைய மூக்கு உடைபட்டு விட்டது. எனவே நான் வெள்ளியினால் மூக்கு செய்து பொருத்திக் கொண்டேன். அதில் எனக்குக் கெட்ட வாடை ஏற்பட்டது. அதனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்குத் தங்கத்தால் ஆன மூக்கு பொருத்தும் படி உத்தரவிட்டார்கள்.

அறிவிப்பவர் : அர்ஃபஜா பின் அஸ்அத் (ரலி)

நூல்கள் : திர்மிதீ, அபூதாவூத்

24.12.2014. 21:11 PM

முத்தலாக் மூலம் பெண்களின் உரிமைகளை இஸ்லாம் பறிப்பது ஏன்?

கேள்வி : முத்தலாக் போன்ற விவகாரங்களின் மூலம் இஸ்லாம் பெண்களின் உரிமைகளைப் பறிக்கின்றதே? என்று முஸ்லிமல்லாத நண்பர்கள் கேட்கிறார்களே?

சாஜிதா ஹுஸைன், சென்னை.

பதில்: விவாகரத்துச் செய்த பின் அதனால் பெண்களே அதிகம் பாதிக்கப்படுவதால் பெண்களின் உரிமை பாதிக்கப்படுவது போல் தோற்றமளிக்கிறது. ஆனால் ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால் தலாக் என்னும் விவாகரத்து முறையினால் பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன என்ற உண்மையை அறியலாம்.

விவாகரத்து செய்யும் உரிமை கணவனுக்கு இல்லாவிட்டால் அந்த உரிமையைப் பெறுவதற்காக நீதிமன்றத்தை நாடுகிறான். நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து பல வருடங்கள் கழித்து விவாகரத்து தீர்ப்பைப் பெறுகிறான்.

இத்தகைய தாமதத்தைத் தவிர்க்க விரும்புகின்ற கணவன் உடனே மனைவியை விட்டுப் பிரிவதற்குக் கொடூரமான வழியைக் கையாள்கிறான். அவளை உயிரோடு கொளுத்திவிட்டு ஸ்டவ் வெடித்துச் செத்ததாக உலகை நம்ப வைக்கிறான்.

விவாகரத்துச் செய்யும் உரிமை கணவனுக்கு இருந்தால் பெண்கள் உயிருடன் கொல்லப்படுவதிலிருந்து காப்பாற்றப்படுவார்கள்.

இன்னும் சில கணவன்மார்கள் மனைவியைக் கொல்லும் அளவிற்கு கொடியவர்களாக இல்லாவிட்டாலும் வேறொரு கொடுமையை பெண்களுக்கு இழைக்கிறார்கள். கற்பொழுக்கம் உள்ள மனைவியை ஒழுக்கம் கெட்டவள் எனக் கூறுகின்றனர். இப்படிக் கூறினால் தான் நீதிமன்றத்தில் விவாகரத்துப் பெற முடியும் என்று நினைத்து இவ்வாறு செய்கின்றனர்.

இதன் பின்னர் ஒழுக்கம் உள்ள அப்பெண்மணி களங்கத்தைச் சுமந்து கொண்டு காலமெல்லாம் கண்ணீர் விடும் நிலைமை ஏற்படுகிறது. அவளை வேறொருவன் மணந்து கொள்வதும் இந்தப் பழிச் சொல்லால் தடைப்படுகிறது. எளிதாக விவாகரத்துச் செய்யும் வழியிருந்தால் இந்த அவல நிலை பெண்களுக்கு ஏற்படாது.

வேறு சில கயவர்கள் விவாகரத்துப் பெறுவதற்காக ஏன் நீதிமன்றத்தை அணுகி தேவையில்லாத சிரமங்களைச் சுமக்க வேண்டும்? என்று நினைத்து பெயரளவிற்கு அவளை மனைவியாக வைத்துக் கொண்டு சின்ன வீடு வைத்துக் கொள்கின்றனர். மனைவியை அடித்து உதைத்து சித்திரவதையும் செய்கின்றனர். இஸ்லாம் கூறும் விவாகரத்து முறையால் இந்தக் கொடுமைகள் அனைத்திலிருந்தும் பெண்கள் பாதுகாக்கப்படுகிறார்கள்.

ஆண்களுக்கு விவாகரத்து செய்யும் உரிமை உள்ளது போல பெண்களுக்கு இவ்வுரிமை வழங்கப்பட வேண்டும் என்று கேட்டால் அதில் நியாயம் இருக்கிறது. ஏனெனில் பெண்களுக்கு கணவனைப் பிடிக்காதபோது கணவனிடமிருந்து விவாகரத்துப் பெறுவது சிரமமாக இருந்தால் அவள் கணவனைக் கொலை செய்கிறாள். உணவில் விஷம் கலந்தோ, அல்லது கள்ளக் காதலனுடன் சேர்ந்தோ கணவனைத் தீர்த்துக் கட்டுகிறாள்.

அல்லது கணவனுக்கு ஆண்மையில்லை என்று பழி சுமத்தி கணவனுக்கு மறுவாழ்க்கை கிடைக்காமல் செய்து விடுகிறாள். அல்லது கணவனையும், பிள்ளைகளையும் விட்டுவிட்டு விரும்பியவனுடன் ஓடுகிறாள். எனவே ஆண்களுக்கு விவாகரத்து செய்யும் உரிமை வழங்கப்பட்டுள்ளது போல பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பது முற்றிலும் சரியான வாதமே.

அந்த உரிமையை இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு வழங்கியுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியிலிருந்து இதை அறிந்து கொள்ளலாம்.

صحيح البخاري

5273 – حَدَّثَنَا أَزْهَرُ بْنُ جَمِيلٍ، حَدَّثَنَا عَبْدُ الوَهَّابِ الثَّقَفِيُّ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ امْرَأَةَ ثَابِتِ بْنِ قَيْسٍ أَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، ثَابِتُ بْنُ قَيْسٍ، مَا أَعْتِبُ عَلَيْهِ فِي خُلُقٍ وَلاَ دِينٍ، وَلَكِنِّي أَكْرَهُ الكُفْرَ فِي الإِسْلاَمِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَتَرُدِّينَ عَلَيْهِ حَدِيقَتَهُ؟» قَالَتْ: نَعَمْ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْبَلِ الحَدِيقَةَ وَطَلِّقْهَا تَطْلِيقَةً» قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: «لاَ يُتَابَعُ فِيهِ عَنْ ابْنِ عَبَّاسٍ»

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் ஸாபித் பின் கைஸ் (ரலி) என்ற நபித் தோழரின் மனைவி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! எனது கணவரின் நன்னடத்தையையோ, நற்குணத்தையோ நான் குறை கூற மாட்டேன். ஆனாலும் இஸ்லாத்தில் இருந்து கொண்டே (இறைவனுக்கு) மாறு செய்வதை நான் வெறுக்கிறேன் என்றார். (அதாவது கணவர் நல்லவராக இருந்தாலும் அவருடன் இணைந்து வாழத் தனக்கு விருப்பமில்லை என்கிறார்) உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்படியானால் (அவர் உனக்கு மஹராக வழங்கிய) அவரது தோட்டத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறாயா? என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி சரி என்றார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரது கணவரிடம் தோட்டத்தைப் பெற்றுக் கொண்டு அவளை ஒரேயடியாக விடுத்து விடு என்று கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி 5273, 5275, 5277

மேற்கண்ட செய்தியிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலிருந்த நடைமுறையை அறியலாம்.

ஒரு பெண்ணுக்கு கணவனைப் பிடிக்காவிட்டால் அவள் சமுதாயத் தலைவரிடம் முறையிட வேண்டும். அந்தத் தலைவர், அவள் கணவனிடமிருந்து பெற்றிருந்த மஹர் தொகையைத் திரும்பக் கொடுக்குமாறும் அந்த மஹர் தொகையைப் பெற்றுக் கொண்டு கணவன் அவளை விட்டு விலகுமாறும் கட்டளையிட வேண்டும்; திருமணத்தையும் ரத்துச் செய்ய வேண்டும் என்பதை இந்தச் செய்தியிலிருந்து அறியலாம்.

பெண்கள் தாமாகவே விவாக ஒப்பந்தத்தை முறித்து விடாமல் தலைவர் முன்னிலையில் முறையிடுவதற்கு நியாயம் இருக்கிறது. ஏனெனில் பெண்கள் கணவர்களிடமிருந்து ஊரறிய மஹர் தொகை பெற்றிருப்பதாலும், அதைத் திரும்பவும் கணவனிடம் ஊரறிய ஒப்படைக்க வேண்டும் என்பதாலும் இந்த நிபந்தனை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் விவாகரத்துப் பெற்ற பின்னால் அதிக சிரமத்துக்கு அவர்களே ஆளாக நேர்வதால் அத்தகைய முடிவுக்கு அவர்கள் அவசரப்பட்டு வந்து விடக் கூடாது என்பதற்காகவும் இந்த ஏற்பாடு அவசியமாகின்றது. சமுதாயத் தலைவர் அவளுக்கு நற்போதனை செய்ய வழி ஏற்படுகின்றது. இதனால் சமுதாயத் தலைவரிடம் தெரிவித்து விட்டு அவர் மூலமாகப் பிரிந்து கொள்வதே அவளுக்குச் சிறந்ததாகும்.

பெண்கள் விவாக ரத்துப் பெற இதை விட எளிமையான வழி உலகில் எங்குமே காண முடியாததாகும். இந்த இருபதாம் நூற்றாண்டில் கூட வழங்கப்படாத உரிமையை இஸ்லாம் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே வழங்கி விட்டது.

இவ்வாறு பெண்கள் விவாக விடுதலை பெற மிகப்பெரிய காரணம் ஏதும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலே கண்ட செய்தியில் அப்பெண்மணி கணவர் மீது எந்தக் குறையையும் கூறவில்லை. தனக்குப் பிடிக்கவில்லை என்றே கூறுகிறார்.

அதற்கு என்ன காரணம் என்று கூட நபியவர்கள் கேட்கவில்லை. காரணம் கூறுவது முக்கியம் என்றிருந்தால் நபியவர்கள் கட்டாயம் அதைப் பற்றி விசாரித்திருப்பார்கள். அவர்கள் ஏதும் விசாரிக்காமலேயே விவாகரத்து வழங்கியதிலிருந்து இதை உணரலாம்.

இஸ்லாம் திருமணத்தைப் பிரிக்க முடியாத பந்தமாகக் கருதவில்லை. மாறாக வாழ்க்கை ஒப்பந்தமாகவே அதைக் கருதுகிறது.

உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை அவர்கள் எடுத்து, நீங்கள் ஒருவர் மற்றவருடன் இரண்டறக் கலந்திருக்கும் நிலையில் எப்படி நீங்கள் அதைப் பிடுங்கிக் கொள்ள முடியும்?

திருக்குர்ஆன் 4:21

பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன.

திருக்குர்ஆன் 2:228

ஆண்களுக்கு வழங்கப்பட்ட உரிமைக்குச் சற்றும் குறைவில்லாத வகையில் இஸ்லாம் பெண்களுக்கும் உரிமை வழங்கியுள்ளது என்பதற்கு இவ்வசனங்களும் சான்றாகின்றன.

விவாகரத்து என்பதை முஸ்லிம்களின் பிரச்சனையாகப் பார்க்கிறார்கள். ஆனால் எல்லாச் சமுதாயங்களிலும் விவாகரத்து உள்ளது. எல்லா நாடுகளிலும் சட்டப்படி விவாக ரத்து வழங்கப்படுகிறது. அப்படியானால் அந்தச் சட்டங்களின் படி விவாரத்து செய்யப்பட்ட பெண்கள் பதிக்கப்பட மாட்டார்களா? இனிமேல் இந்தியாவில் விவாகரத்து கிடையாது என்று சட்டம் இயற்றிவிட்டு முஸ்லிம்கள் விவாகரத்துச் செய்யலாமா என்று கேட்க வேண்டும். அப்படி ஒரு சட்டத்தை எந்தக் காலத்திலும் எந்த நாட்டிலும் இயற்ற முடியாது.

மற்ற சமுதாயத்தினர் நீதிமன்றத்தில் முறையிட்டு விவாகரத்து பெறுகின்றனர். முஸ்லிம்கள் தம்பதிகள் நலனில் அக்கரை உள்ள ஜமாஅத்தில் முறையிட்டு தலாக் கொடுக்கிறார்கள். இதுதான் வித்தியாசம்.

நீதிமன்றப் படியேறி பல ஆண்டுகள் அலைந்து வழக்கறிஞருக்காக பணத்தைக் கொட்டிக் கொடுத்து அல்லல் படுவதை விட அந்த ஆணையும் பெண்ணையும் நன்றாக அறிந்து வைத்துள்ள, அவர்களுடன் எந்த வகையிலாவது உறவினராக உள்ள ஜமாஅத்தார்களை நாடுவதே மேலானது என்பதை உணர வேண்டும்.

இனி முத்தலாக் விஷயத்துக்கு வருவோம்.

ஆண்களுக்கு தலாக் கூறும் மூன்று வாய்ப்புகள் உள்ளன.

ஒரு முறை விவாகரத்து செய்து விட்டு பின்னர் சேர்ந்து வாழலாம். பின்னர் மீண்டும் விவாகரத்துச் செய்து மீண்டும் சேர்ந்து வாழலாம். மூன்றாம் முறை விவாகரத்து செய்தால் தான் மீண்டும் சேர முடியாது.

மூன்றாம் முறை விவாகரத்து செய்த பின் இன்னொருவனுக்கு அவள் வாழ்க்கைப்பட்டு அவனும் விவாகரத்து செய்தால் மட்டுமே முதல் கணவன் அவளை மணக்க முடியும்.

அவசரப்பட்டு விவாகரத்து செய்தவர்கள் பின்னர் திருந்தி சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காகவே இவ்வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சில முஸ்லிம்கள் அறியாமை காரணமாக ஒரே சமயத்தில் மூன்று தலாக் என்று கூறி மனைவியை நிரந்தரமாகப் பிரிந்து விடுகின்றனர். இதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை. ஒரே சமயத்தில் மூன்று தலாக் எனக் கூறினால் ஒரு தலாக் ஆகவே அது கருதப்படும் என்பது தான் சரியான கருத்தாகும்.

1472 ( 16 ) حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ ، أَخْبَرَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ ح، وَحَدَّثَنَا ابْنُ رَافِعٍ ، وَاللَّفْظُ لَهُ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ ، أَخْبَرَنِي ابْنُ طَاوُسٍ ، عَنْ أَبِيهِ ، أَنَّ أَبَا الصَّهْبَاءِ قَالَ لِابْنِ عَبَّاسٍ : أَتَعْلَمُ أَنَّمَا كَانَتِ الثَّلَاثُ تُجْعَلُ وَاحِدَةً عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبِي بَكْرٍ ، وَثَلَاثًا مِنْ إِمَارَةِ عُمَرَ ، فَقَالَ ابْنُ عَبَّاسٍ : نَعَمْ.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலும், அபூபக்ர் (ரலி) ஆட்சிக் காலத்திலும், உமர் (ரல்) ஆட்சியின் மூன்று ஆண்டுகளிலும் முன்று தலாக் என்பது ஒரு தலாக்காகவே கருதப்பட்டது என்பதை நீங்கள் அறிவீர்களா? என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் நான் கேட்டேன். அதற்கவர்கள் ஆம் என்றார்கள்.

இதை அபுஸ்ஸஹ்பா அறிவிக்கிறார். நூல் : முஸ்லிம்

1472 ( 17 ) وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ ، أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ ، عَنْ حَمَّادِ بْنِ زَيْدٍ ، عَنْ أَيُّوبَ السَّخْتِيَانِيِّ ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مَيْسَرَةَ ، عَنْ طَاوُسٍ ، أَنَّ أَبَا الصَّهْبَاءِ قَالَلِابْنِ عَبَّاسٍ : هَاتِ مِنْ هَنَاتِكَ ، أَلَمْ يَكُنِ الطَّلَاقُ الثَّلَاثُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبِي بَكْرٍ وَاحِدَةً ؟ فَقَالَ : قَدْ كَانَ ذَلِكَ، فَلَمَّا كَانَ فِي عَهْدِ عُمَرَ، تَتَايَعَ النَّاسُ فِي الطَّلَاقِ، فَأَجَازَهُ عَلَيْهِمْ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலும், அபூ பக்ர் (ரலி) காலத்திலும் மூன்று தலாக் என்பது ஒரு தலாக்காகத் தான் கருதப்பட்டதா என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் அப்படித்தான் இருந்தது. உமர் (ரலி) ஆட்சியில் மக்கள் தொடர்ந்து தலாக் விட ஆரம்பித்ததால் அதை சட்டமாக்கினார்கள் என்று பதிலளித்தார்கள்.

இதை அபுஸ்ஸஹ்பா அறிவிக்கிறார். நூல் : முஸ்லிம்

மனைவிக்கு மூன்று தலாக் கொடுப்பது பிறகு மீட்டிக் கொண்டு மீண்டும் தலாக் கொடுப்பது, பிறகு மீட்டிக் கொண்டு மீண்டும் தலாக் கொடுப்பது என்று மக்கள் நடக்க ஆரம்பித்ததால் அதாவது மீண்டும் தலாக் கொடுப்பதற்காகவே மீண்டும் மீட்டிக் கொண்டு இருப்பதால் இப்படிச் சட்டமாக்கினார்கள். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த சட்டத்தை மாற்றும் உரிமை யாருக்கும் இல்லை. உமர் (ரலி) அவர்களின் சொல்லை விட அல்லாஹ்வின் தூதருடைய சொல்லே பின்பற்றத் தக்கதாகும். அதுதான் இஸ்லாத்தின் சட்டமாகும்.

எனவே, ஒரே சமயத்தில் முத்தலாக் கூறுவது என்பது இஸ்லாத்தில் இல்லை. முஸ்லிம்களில் சிலரது அறியாமை காரணமாக இது போன்ற கேள்விகளை நாம் எதிர்கொள்ளும் நிலை ஏற்படுகின்றது.

ஒரு நிறுவனத்தில் பணி செய்யும் ஊழியரை அந்த நிறுவனத்திண் உரிமையாளர் பணி நீக்கம் செய்யும் போது

உன்னை நீக்கி விட்டேன்

உன்னை நீக்கி விட்டேன்

உன்னை நீக்கி விட்டேன்

என்று சொன்னால் மூன்று முறை நீக்கினார் என்று நாம் சொல்வோமா?

மீண்டும் அந்த ஊழியரைப் பணியில் அமர்த்திய பிறகு நீக்கினேன் என்று சொன்னால் இரண்டாம் முறை நீக்கியதாகச் சொல்வோம்.

மீண்டும் அவரைப் பணியில் அமர்த்தி விட்டு மீண்டும் நீக்கியதாகக் கூறினால் அப்போது தான் மூன்றாம் முறை நீக்கியதாகச் சொல்வோம்.

விவாகரத்தும் இது போல் நீக்குதல் தான்.

மூன்று தடவை தலாக் என்று சொன்னாலும் அவளை மீண்டும் சேர்த்துக் கொள்ளாமல் இரண்டாவது, மூன்றாவது தலாக் கூற முடியாது.

போராட்டங்களில் பெண்கள் கலந்து கொள்ளலாமா?

பேரணி, ஆர்ப்பாட்டங்களில் முஸ்லிம் பெண்கள் ஈடுபட இஸ்லாம் அனுமதிக்கிறதா? அந்நியர்களின் பார்வையில் மழையிலும் கூட மார்க்கச் சகோதரிகளைக் காட்சிக்கு வைப்பது மார்க்கத்தில் ஆகுமான காரியமா?

பதில் :

முஸ்லிம் பெண்கள் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்த கேள்வி அனைத்து இயக்கங்களுக்கான கேள்வியாகும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து இயக்கங்களும் (ஒரு இயக்கம் தவிர) தாங்கள் நடத்தும் போராட்டங்களில் பெண்களைப் பங்கேற்கச் செய்து வருகின்றனர். எல்லா இயக்கங்களும் போராட்டத்தில் பெண்களைப் பங்கெடுக்கச் செய்கின்றன.

இது போல் பெண்கள் கலந்து கொண்ட சில இயக்கங்களின் போராட்டங்களை ஜமாஅதுல் உலமா சபையும் ஆதரித்து பங்கு கொண்டுள்ளது.

கப்ரு வணங்கிக் கூட்டமான ஜமாலி குரூப் மட்டுமே பெண்களைப் போராட்டத்தில் பயன்படுத்துவது கூடாது என்று கூறுகிறது. ஆனால் தர்காக்களில் ஆண்களும், பெண்களும் ஒட்டி உரசிக் கொள்வதை இவர்கள் கண்டிப்பதில்லை.

பெண்கள் அன்னிய ஆண்கள் முன்னால் முகம், கை தவிர மற்ற அங்கங்களை மறைத்துக் கொண்டு வரலாம் என்பது பொதுவான அனுமதி. இதற்கு நபி வழியில் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. அந்த அனுமதியே போராட்டங்களுக்கும் பொருந்தும்.

பெருநாள் தொழுகையில் ஆண்கள் கலந்து கொள்வது போல் பெண்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று மார்க்கம் கட்டளை இடுகிறது.

صحيح البخاري

351 - حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أُمِّ عَطِيَّةَ، قَالَتْ: أُمِرْنَا أَنْ نُخْرِجَ الحُيَّضَ يَوْمَ العِيدَيْنِ، وَذَوَاتِ الخُدُورِ فَيَشْهَدْنَ جَمَاعَةَ المُسْلِمِينَ، وَدَعْوَتَهُمْ وَيَعْتَزِلُ الحُيَّضُ عَنْ مُصَلَّاهُنَّ، قَالَتِ امْرَأَةٌ: يَا رَسُولَ اللَّهِ إِحْدَانَا لَيْسَ لَهَا جِلْبَابٌ؟ قَالَ: «لِتُلْبِسْهَا صَاحِبَتُهَا مِنْ جِلْبَابِهَا

உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

இரு பெருநாட்களில் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் திரைக்குள்ளிருக்கும் (பருவமடைந்த) பெண்களையும் (தொழுகைத் திடலுக்கு) அனுப்பி வைக்குமாறு நாங்கள் (இறைத்தூதரால்) பணிக்கப்பட்டோம். பெண்கள் அனைவரும் முஸ்லிம்களின் கூட்டுத் தொழுகையில் பங்குகொள்ள வேண்டும்; முஸ்லிம்களின் பிரச்சாரத்திலும் கலந்து கொள்ள வேண்டும். மாதவிடாயுள்ள பெண்கள் தொழும் இடத்திலிருந்து விலகியிருக்க வேண்டும் (என்று நபி (ஸல்) அவர்கள் கூற, இதைக் கேட்டுக் கொண்டிருந்த) ஒரு பெண், அல்லாஹ்வின் தூதரே! எங்களில் சிலரிடம் அணிந்து கொள்ள மேலங்கி இல்லையே (அவள் என்ன செய்வாள்?)! என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (ஒரு பெண்ணிடம் மேலங்கி இல்லாவிட்டால்) அவளுடைய தோழி தனது மேலங்கிகளில் ஒன்றை அவளுக்கு (இரவலாக) அணியக் கொடுக்கட்டும்! என்றார்கள்.

நூல் : புகாரி 351

ஐந்து வேளைத் தொழுகைகளிலும் பெண்கள் கலந்து கொண்டுள்ளனர். ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையில் எந்தத் தடுப்பும் போடப்படவில்லை.

பார்க்க பெண்கள் பள்ளிக்கு வரலாமா?

மேலும் பார்க்க பெண்கள் பள்ளிக்கு வரலாமா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் ஆண்களும் பெண்களும் ஒன்றாக உளூச் செய்துள்ளனர். இதனால் கைகளை மனிக்கட்டு வரை வெளிப்படுத்தும் நிலையும், தலையைத் திறக்கும் நிலையும் ஏற்பட்டு இருக்கும்.

صحيح البخاري

193 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّهُ قَالَ: «كَانَ الرِّجَالُ وَالنِّسَاءُ يَتَوَضَّئُونَ فِي زَمَانِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَمِيعًا»

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய காலத்தில் ஆண்களும், பெண்களும் சேர்ந்தே (ஓரிடத்தில்) உளூச் செய்வார்கள்.

நூல் : புகாரி 193

போர்க்களத்திலும் பெண்கள் கலந்து கொண்டு காயமடைந்த ஆண்களுக்கு மருத்துவம் செய்யவும், தண்ணீர் விநியோகிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளனர். ஆண்களைத் தொட்டு தூக்கும் நிலையும் இதனால் ஏற்பட்டு இருக்கும்.

صحيح البخاري

324 - حَدَّثَنَا مُحَمَّدٌ هُوَ ابْنُ سَلاَمٍ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الوَهَّابِ، عَنْ أَيُّوبَ، عَنْ حَفْصَةَ، قَالَتْ: كُنَّا نَمْنَعُ عَوَاتِقَنَا أَنْ يَخْرُجْنَ فِي العِيدَيْنِ، فَقَدِمَتِ امْرَأَةٌ، فَنَزَلَتْ قَصْرَ بَنِي خَلَفٍ، فَحَدَّثَتْ عَنْ أُخْتِهَا، وَكَانَ زَوْجُ أُخْتِهَا غَزَا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثِنْتَيْ عَشْرَةَ غَزْوَةً، وَكَانَتْ أُخْتِي مَعَهُ فِي سِتٍّ، قَالَتْ: كُنَّا نُدَاوِي الكَلْمَى، وَنَقُومُ عَلَى المَرْضَى، فَسَأَلَتْ أُخْتِي النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَعَلَى إِحْدَانَا بَأْسٌ إِذَا لَمْ يَكُنْ لَهَا جِلْبَابٌ أَنْ لاَ تَخْرُجَ؟ قَالَ: «لِتُلْبِسْهَا صَاحِبَتُهَا مِنْ جِلْبَابِهَا وَلْتَشْهَدِ الخَيْرَ وَدَعْوَةَ المُسْلِمِينَ»، فَلَمَّا قَدِمَتْ أُمُّ عَطِيَّةَ، سَأَلْتُهَا أَسَمِعْتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَتْ: بِأَبِي، نَعَمْ، وَكَانَتْ لاَ تَذْكُرُهُ إِلَّا قَالَتْ: بِأَبِي، سَمِعْتُهُ يَقُولُ: «يَخْرُجُ العَوَاتِقُ وَذَوَاتُ الخُدُورِ، أَوِ العَوَاتِقُ ذَوَاتُ الخُدُورِ، وَالحُيَّضُ، وَلْيَشْهَدْنَ الخَيْرَ، وَدَعْوَةَ المُؤْمِنِينَ، وَيَعْتَزِلُ الحُيَّضُ المُصَلَّى»، قَالَتْ حَفْصَةُ: فَقُلْتُ الحُيَّضُ، فَقَالَتْ: أَلَيْسَ تَشْهَدُ عَرَفَةَ، وَكَذَا وَكَذَا

324 ஹஃப்ஸா பின்த் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் இரு பெருநாள்களிலும் (தொழுமிடத்திற்கு) புறப்பட்டு வருவதை விட்டும் எங்கள் குமரிப் பெண்களைத் தடுத்துக் கொண்டிருந்தோம். இந்நிலையில் ஒரு பெண்மணி வந்து பனூ கலஃப் குலத்தாரின் மாளிகையில் தங்கியிருந்தார். அவர் தம் சகோதரி (உம்மு அத்தியா- ரலி) வழியாக வந்த செய்தியை அறிவித்தார்.

-என்னுடைய சகோதரி (உம்மு அத்திய்யா -ரலி) அவர்களின் கணவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோடு பன்னிரண்டு போர்களில் கலந்து கொண்டார். இதில் என் சகோதரி ஆறு போர்களில் தம் கணவரோடு இருந்தார்.-

என் சகோதரி (உம்மு அத்திய்யா) கூறினார்:

(பெண்களாகிய) நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் நடந்த போர்களில் காயமுற்றவர்களுக்கு மருந்திடுவோம்; நோயாளிகளைக் கவனிப்போம். எங்களில் ஒரு பெண்ணுக்கு மேலங்கி இல்லாவிட்டால் (பெருநாள் தொழுகைக்குச்) செல்லாமல் (வீட்டிலேயே இருப்பது) குற்றமா? என்று நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவளுடைய தோழி தனது மேலங்கிகளில் ஒன்றை அவளுக்கு அணியக் கொடுக்கட்டும்! அவள் நன்மையான காரியங்களிலும் இறைநம்பிக்கையாளர்களின் பிரச்சாரங்களிலும் கலந்து கொள்ளட்டும்! என்று சொன்னார்கள்.

ஹஃப்ஸா பின்த் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் (என்னிடம்) வந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூற நீங்கள் செவியுற்றீர்களா? என்று நான் கேட்டேன் அதற்கு உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் என் தந்தை நபியவர்களுக்கு அர்ப்பணமாகட்டும்! ஆம். நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன் என்று சொன்னார்கள் -உம்மு அத்திய்யா, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரைக் கூறும் போதேல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு என் தந்தை அர்ப்பணமாகட்டும் என்பதையும் சேர்த்தே கூறுவார்.

வயது வந்த பெண்களும், திரைக்குள்ளிருக்கும் (பருவமடைந்த) பெண்களும், மாதவிடாயுள்ள பெண்களும் (பெருநாள் தினத்தன்று) வெளியே சென்று நன்மையான செயல்களிலும் இறை நம்பிக்கையாளர்களின் காரியங்களிலும் இறை நம்பிக்கையாளர்களின் பிரச்சாரத்திலும் கலந்து கொள்ளட்டும்! மாதவிடாயுள்ள பெண்கள் தொழும் இடத்தை விட்டு ஒதுங்கி இருப்பார்கள் என்று கூறினார்கள் என்றார் உம்மு அத்திய்யா.

(இதை அறிவித்த உம்மு அத்திய்யா அவர்களிடம்) நான், மாதவிடாயுள்ள பெண்களுமா? என்று கேட்டேன். அதற்கு உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள், மாதவிடாயுள்ள பெண் அரஃபாவுக்கும் (மினா, முஸ்தலிஃபா, போன்ற) இன்ன இன்ன இடங்களுக்கும் செல்வதில்லையா? என்று (திருப்பிக்) கேட்டார்கள்.

நூல் : புகாரி 324

சபைகளில் கேள்வி கேட்பதற்காக பெண்கள் வந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேள்வியும் கேட்டுள்ளனர். அதைப் பல ஆண்களும் பார்த்துள்ளனர்.

பார்க்க புகாரி 351, 979, 1250, 1953

ஹஜ் பயணத்தின் போது ஆண்களும், பெண்களும் ஒன்றாகவே பயணித்துள்ளனர். அப்போது பெண்கள் ஆண்களின் பார்வையில் பட்டுள்ளனர்.

صحيح البخاري

6228 - حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي سُلَيْمَانُ بْنُ يَسَارٍ، أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: أَرْدَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الفَضْلَ بْنَ عَبَّاسٍ يَوْمَ النَّحْرِ خَلْفَهُ عَلَى عَجُزِ رَاحِلَتِهِ، وَكَانَ الفَضْلُ رَجُلًا وَضِيئًا، فَوَقَفَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلنَّاسِ يُفْتِيهِمْ، وَأَقْبَلَتِ امْرَأَةٌ مِنْ خَثْعَمَ وَضِيئَةٌ تَسْتَفْتِي رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَطَفِقَ الفَضْلُ يَنْظُرُ إِلَيْهَا، وَأَعْجَبَهُ حُسْنُهَا، فَالْتَفَتَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالفَضْلُ يَنْظُرُ إِلَيْهَا، فَأَخْلَفَ بِيَدِهِ فَأَخَذَ بِذَقَنِ الفَضْلِ، فَعَدَلَ وَجْهَهُ عَنِ النَّظَرِ إِلَيْهَا، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ فَرِيضَةَ اللَّهِ فِي الحَجِّ عَلَى عِبَادِهِ، أَدْرَكَتْ أَبِي شَيْخًا كَبِيرًا، لاَ يَسْتَطِيعُ أَنْ يَسْتَوِيَ عَلَى الرَّاحِلَةِ، فَهَلْ يَقْضِي عَنْهُ أَنْ أَحُجَّ عَنْهُ؟ قَالَ: «نَعَمْ»

6228 அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(விடைபெறும் ஹஜ்ஜின் போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என் சகோதரர்) ஃபள்ல் பின் அப்பாஸைத் தமக்குப் பின்னால் வாகனத்தில் அமர்த்திக் கொண்டார்கள். ஃபள்ல் மிகவும் அழகானவராயிருந்தார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களுக்கு மார்க்க விளக்கம் அளிப்பதற்காகத் தமது வாகனத்தை நிறுத்தியிருந்தார்கள். (அப்போது) கஸ்அம் குலத்தைச் சேர்ந்த அழகான பெண்ணொருத்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் மார்க்க விளக்கம் கேட்டு வந்தார். அப்போது ஃபள்ல் அப்பெண்ணைக் கூர்ந்து நோக்கலானார். அந்தப் பெண்ணின் அழகு அவரைக் கவர்ந்தது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திரும்பிப் பார்த்த போது ஃபள்ல் அப்பெண்ணைக் கூர்ந்து பார்ப்பதைக் கண்டார்கள். உடனே ஃபள்லின் முகவாயைத் தமது கரத்தால் பிடித்து அப்பெண்ணைப் பார்க்கவிடாமல் அவரது முகத்தைத் திருப்பி விட்டார்கள்.

அப்போது அப்பெண், அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் தன் அடியார்கள் மீது விதித்துள்ள ஹஜ், என் தந்தையின் மீது கடமையாயிற்று. அவரோ வயது முதிந்தவர்; வாகனத்தில் அவரால் சரியாக அமர இயலாது. ஆகவே, நான் அவர் சார்பாக ஹஜ் செய்தால் அது நிறைவேறுமா? என்று கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஆம் (நிறைவேறும்) என்று பதிலளித்தார்கள்.

நூல் : புகாரி 6228

இன்னும் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. அறிவுடையோருக்கு இது போதுமானதாகும்.

இப்படி கேள்வி கேட்கும் பலர் தமது மனைவியரை அழைத்துக் கொண்டு கடைத் தெருவுக்கோ சுற்றுலாத் தலங்களுக்கோ செல்கிறார்கள்.

தனது மனைவியர் மற்றும் குடும்பப் பெண்கள் கடைத்தெருவுக்குச் சென்று பொருட்களை வாங்க அனுமதிக்கின்றனர்.

முறையாக ஆடை அணிந்து இவர்களின் குடும்பத்துப் பெண்கள் பள்ளிக் கூடம் அல்லது கல்லூரிக்குச் செல்கிறார்கள்.

சமுதாய நன்மைக்காகக் குரல் எழுப்பும் போது மட்டுமே இந்த வாதங்களை எழுப்புகிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

05.05.2010. 14:19 PM

வெளியில் செல்லும் பெண்கள் நறுமணம் போட்டுக் கொள்ளலாமா?

வெளியில் செல்லும் போது பெண்கள் வாசனை திரவியங்கள் போட்டுக் கொள்ளலாமா?

பதில்

நறுமணப் பொருட்கள் இரு வகைகளில் உள்ளன.

தனது உடலில் துர்வாடை இருக்கக் கூடாது என்பதற்காக பயன்படுத்தும் மென்மையான நறுமணமும் உண்டு.

பிறரைத் தன் பக்கம் இழுக்கும் வகையிலான நறுமணமும் உண்டு.

முதல் வகையான நறுமணத்தை அருகில் நெருங்கி வருவோர் மட்டுமே உணர முடியும். இரண்டாம் வகை நறுமணம் தூரத்தில் போகும் நபரையும் சுண்டி இழுத்து திரும்பிப் பார்க்க வைக்கும்.

பெண்கள் வீட்டுக்குள் இருக்கும் போது இரண்டு வகையான நறுமணங்களையும் பூசிக் கொள்ளலாம். ஆனால் வெளியே செல்லும் போது முதல் வகையான நறுமணப் பொருட்களை மட்டுமே பயன்படுத்தலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இரண்டு வகையான நறுமணப் பொருட்கள் இருந்துள்ளன.

و حدثنا عمرو بن سواد العامري حدثنا عبد الله بن وهب أخبرنا عمرو بن الحارث أن سعيد بن أبي هلال وبكير بن الأشج حدثاه عن أبي بكر بن المنكدر عن عمرو بن سليم عن عبد الرحمن بن أبي سعيد الخدري عن أبيه أن رسول الله صلى الله عليه وسلم قال غسل يوم الجمعة على كل محتلم وسواك ويمس من الطيب ما قدر عليه إلا أن بكيرا لم يذكر عبد الرحمن وقال في الطيب ولو من طيب المرأة

வெள்ளிக்கிழமை குளிப்பதும், பல் துலக்குவதும் பருவமடைந்த அனைவர் மீதும் கடமையாகும். மேலும் தன்னால் இயன்ற நறுமணத்தையும் பூசிக் கொள்ள வேண்டும். (நறுமணப் பொருள் இல்லாத பட்சத்தில்) பெண்களுக்கான நறுமணப் பொருளையாவது பூசிக் கொள்ள வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் முஸ்லிம்

ஆண்களின் நறுமணமும், பெண்களின் நறுமணமும் அன்று தனித்தனியாக இருந்துள்ளன என்பதையும், அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள் என்பதையும் இதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

حدثنا محمد بن بشار حدثنا يحيى بن سعيد القطان عن ثابت بن عمارة الحنفي عن غنيم بن قيس عن أبي موسى عن النبي صلى الله عليه وسلم قال كل عين زانية والمرأة إذا استعطرت فمرت بالمجلس فهي كذا وكذا يعني زانية وفي الباب عن أبي هريرة قال أبو عيسى هذا حديث حسن صحيح

ஒவ்வொரு கண்ணும் விபச்சாரம் செய்கிறது. ஒரு பெண் நறுமணம் பூசிக் கொண்டு (ஆண்களின்) சபைக்குச் சென்றால் அவள் விபச்சாரம் செய்பவள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : திர்மிதி

ஆண்கள் சபைக்குச் சென்று அவர்கள் அப்பெண்ணை ஏறெடுத்துப் பார்க்கும் நிலையை ஏற்படுத்துவதால் அவளும் விபச்சாரி எனக் கூறியுள்ளனர்.

மற்றொரு ஹதீஸில்

أخبرنا إسمعيل بن مسعود قال حدثنا خالد قال حدثنا ثابت وهو ابن عمارة عن غنيم بن قيس عن الأشعري قال قال رسول الله صلى الله عليه وسلم أيما امرأة استعطرت فمرت على قوم ليجدوا من ريحها فهي زانية

தனது நறுமணத்தை மற்றவர்கள் நுகர வேண்டும் என்ற நோக்கத்துக்காக ஒரு பெண் நறுமணம் பூசிக் கொண்டு சென்றால் அவள் விபச்சாரி என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றனர்.

நூல் : நஸாயீ

அன்னிய ஆண்களைக் கவரும் நோக்கத்தில் நறுமணம் பூசி செல்வதையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள் என்பதையும் அவ்வாறு இல்லாமல் நறுமணம் பூசிக் கொண்டு செல்ல தடை இல்லை என்பதையும் இதில் இருந்து ஊகம் செய்யலாம்.

இன்னும் சொல்லப் போனால் தெளிவாக அனுமதிக்கும் ஹதீஸ்களும் உள்ளன.

 حدثنا أبو بكر بن أبي شيبة حدثنا يحيى بن سعيد القطان عن محمد بن عجلان حدثني بكير بن عبد الله بن الأشج عن بسر بن سعيد عن زينب امرأة عبد الله قالت قال لنا رسول الله صلى الله عليه وسلم إذا شهدت إحداكن المسجد فلا تمس طيبا

உங்களில் ஒருத்தி பள்ளிவாசலுக்கு வருவதாக இருந்தால் அவர் நறுமணம் பூச வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : முஸ்லிம்

பள்ளிவாசலுக்கு வரும் போது நறுமணம் பூசக்கூடாது என்று இந்த ஹதீஸ் சொன்னாலும் இது பொதுவானதல்ல என்பதைப் பின்வரும் ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன.

حدثنا هارون بن سعيد الأيلي حدثنا ابن وهب أخبرني مخرمة عن أبيه عن بسر بن سعيد أن زينب الثقفية كانت تحدث عن رسول الله صلى الله عليه وسلم أنه قال إذا شهدت إحداكن العشاء فلا تطيب تلك الليلة

உங்களில் ஒருத்தி இஷாவுக்கு வருவதாக இருந்தால் அவர் நறுமணம் பூச வேண்டாம் என்று நபிகள் நாயகம் ஸல் கூறினார்கள்.

நூல்: முஸ்லிம்

இந்த ஹதீஸையும், முந்திய ஹதீஸையும் ஸைனப் என்ற சஹாபி தான் அறிவிக்கிறார். எனவே அவர் பொதுவாக அறிவிப்பதை விட குறிப்பாக அறிவிப்பதைத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் இந்த அறிவிப்பை அபூஹுரைரா அவர்களின் அறிவிப்பும் உறுதி செய்கின்றது. அது வருமாறு:

حدثنا يحيى بن يحيى وإسحق بن إبراهيم قال يحيى أخبرنا عبد الله بن محمد بن عبد الله بن أبي فروة عن يزيد بن خصيفة عن بسر بن سعيد عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم أيما امرأة أصابت بخورا فلا تشهد معنا العشاء الآخرة

எந்தப் பெண்ணாவது நறு மணப் புகை பூசிக் கொண்டால் அவள் நம்மோடு இஷா தொழுகைக்கு வர வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)

நூல் : முஸ்லிம்

எனவே இஷா தொழுகைக்குப் போகும் போது நறுமணம் பூசிக் கொண்டு செல்லக் கூடாது.

இது இஷாத் தொழுகைக்குச் செல்வதைக் குறித்து சொல்லப்பட்டாலும் இரவு நேரத்தில் வெளியே செல்வதையும் குறிக்கும்.

நறுமணம் பூசிக் கொண்டு பகலில் வெளியே செல்ல அனுமதி அளித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகைக்குத் தடை செய்கிறார்கள் என்றால் இரவு என்பதற்காகத் தான் இருக்க முடியும்.

பள்ளிவாசலுக்கு நறுமணம் பூசிக் கொண்டு செல்வதால் ஏற்படும் விபரீத்த்தை விட வேறு இடங்களுக்குச் செல்லும் போது அதிக விபரீதம் ஏற்படும்.

மற்ற நேரங்களில் பெண்கள் ஆண்களைச் சுண்டி இழுக்கும் வகையிலான நறுமணமாக இல்லாமல் சாதாரண நறுமணம் பூசி வெளியே செல்ல அனுமதி உண்டு என்பதை இந்த ஹதீஸ்கள் உணர்த்துகின்றன.

பெண்கள் தலைக்கு மேல் கூந்தலை உயர்த்திக் கட்டக் கூடாதா?

? மறுமை நாள் நெருங்கும் போது பெண்கள் மெல்லிய ஆடையணிவர்; ஒட்டகத் திமில் போல் கூந்தல் போடுவர் என ஹதீஸில் உள்ளது. இதன் அடிப்படையில் தலைக்கு மேல் கூந்தலை உயர்த்திக் கட்டக் கூடாது என்று கூறுகின்றனர். இது சரியா?

பதில்

நீங்கள் குறிப்பிடுவது போல் முஸ்லிம் உள்ளிட்ட நூல்களில் ஹதீஸ்கள் உள்ளன.

صحيح مسلم 

125 - (2128) حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صِنْفَانِ مِنْ أَهْلِ النَّارِ لَمْ أَرَهُمَا، قَوْمٌ مَعَهُمْ سِيَاطٌ كَأَذْنَابِ الْبَقَرِ يَضْرِبُونَ بِهَا النَّاسَ، وَنِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلَاتٌ مَائِلَاتٌ، رُءُوسُهُنَّ كَأَسْنِمَةِ الْبُخْتِ الْمَائِلَةِ، لَا يَدْخُلْنَ الْجَنَّةَ، وَلَا يَجِدْنَ رِيحَهَا، وَإِنَّ رِيحَهَا لَيُوجَدُ مِنْ مَسِيرَةِ كَذَا وَكَذَا»

இரு பிரிவினர் நரகவாசிகளில் அடங்குவர். அந்த இரு பிரிவினரையும் நான் பார்த்ததில்லை. (முதலாவது பிரிவினர் யாரெனில்,) பசு மாட்டின் வாலைப் போன்ற (நீண்ட) சாட்டைகளைத் தம்மிடம் வைத்துக்கொண்டு, மக்களை அடிக்கும் கூட்டத்தினர் ஆவார்கள். (இரண்டாவது பிரிவினர் யாரெனில்,) ஆடை அணிந்தும் நிர்வாணமாக (பிற ஆண்களை) ஈர்த்து (பிறரால் ஈர்க்கப்பட்டும் நடக்கும் பெண்களாவர். அவர்களின் தலைகள் ஒட்டகங்களின் திமில்களைப் போன்றிருக்கும். அவர்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள்; சொர்க்கத்தின் வாடையைக் கூட நுகர மாட்டார்கள். சொர்க்கத்தின் நறுமணமோ இவ்வளவு இவ்வளவு பயணத் தொலைவிலிருந்தே வீசிக் கொண்டிருக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்: முஸ்லிம்

திமில்கள் செங்குத்தாக வானை நோக்கி இருக்கும். அது போல் செங்குத்தாகக் கொண்டை போடுவதைத் தான் இது குறிக்கிறது. இதற்கு சிலர் இஷ்டத்துக்கு பல விளக்கங்கள் கொடுத்தாலும் நேரடி அர்த்தமே தெளிவாக உள்ளதால் அந்த விளக்கங்களை நாம் கணக்கில் எடுக்க வேண்டியதில்லை.

வானத்தை நோக்கி இருக்கும் வண்ணம் பெண்கள் கொண்டை போடக் கூடாது என்பதற்கு இந்த ஹதீஸ் தெளிவான ஆதாரமாக உள்ளது.

11.04.2014. 3:20 AM

More Articles …