Sidebar

18
Thu, Jun
சமீபத்திய செய்திகள்

இறந்தவருக்காக வாரிசுகள் செய்ய வேண்டியவை

இறந்தவருக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்தல்

இறந்தவர்களுக்காக உயிருடன் உள்ளவர்கள் செய்யும் மற்றொரு நன்மை அவருக்காக அதிகமதிகம் அல்லாஹ்விடம் துஆச் செய்வதாகும்.

அவர்களுக்குப் பின் வந்தோர்  எங்கள் இறைவா! எங்களையும், நம்பிக்கையுடன் எங்களை முந்தி விட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக! எங்கள் உள்ளங்களில் நம்பிக்கை கொண்டோர் மீது வெறுப்பை ஏற்படுத்தி விடாதே! நீ இரக்கமுடையோன்; நிகரற்ற அன்புடையோன்  என்று கூறுகின்றனர். 

திருக்குர்ஆன் 59:10

குறிப்பாக இறந்தவரின் பிள்ளைகள் துஆச் செய்வது இறந்தவருக்குப் பெரிதும் பயன் தரும்.

صحيح مسلم 4310 - حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ وَقُتَيْبَةُ - يَعْنِى ابْنَ سَعِيدٍ - وَابْنُ حُجْرٍ قَالُوا حَدَّثَنَا إِسْمَاعِيلُ - هُوَ ابْنُ جَعْفَرٍ - عَنِ الْعَلاَءِ عَنْ أَبِيهِ عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « إِذَا مَاتَ الإِنْسَانُ انْقَطَعَ عَنْهُ عَمَلُهُ إِلاَّ مِنْ ثَلاَثَةٍ إِلاَّ مِنْ صَدَقَةٍ جَارِيَةٍ أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ ».

ஒரு மனிதன் மரணித்து விட்டால் மூன்று காரியங்கள் தவிர மற்ற செயல்பாடுகள் முடிந்து விடும். அவை நிலையான தர்மம், பிறர் பயன் பெறும் கல்வி, தனக்காகப் பிரார்த்தனை செய்யும் நல்லொழுக்கமுள்ள சந்ததி  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி 

நூல்: முஸ்லிம் 3084

மனிதன் மரணித்த பின் பயன் தரும் மூன்று காரியங்களில் பெற்றோருக்காகப் பிள்ளைகள் செய்யும் பிரார்த்தனையையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே பிள்ளைகள் தமது பெற்றோருக்காக அதிகமதிகம் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து கொண்டே வர வேண்டும். இதனால் பெற்றோர் நன்மைகளை அடைவார்கள்.

இறந்தவரின் நன்மைக்காக தர்மம் செய்தல்

இறந்தவரின் நன்மைக்காக அவரது வாரிசுகள் சாதாரண அல்லது நிலையான தர்மத்தைச் செய்தால் அதன் நன்மை இறந்தவரைச் சேரும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழி காட்டியுள்ளார்கள்.

صحيح البخاري 1388 - حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ: أَخْبَرَنِي هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: أَنَّ رَجُلًا قَالَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ أُمِّي افْتُلِتَتْ نَفْسُهَا، وَأَظُنُّهَا لَوْ تَكَلَّمَتْ تَصَدَّقَتْ، فَهَلْ لَهَا أَجْرٌ إِنْ تَصَدَّقْتُ عَنْهَا؟ قَالَ: «نَعَمْ»

ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து  என் தாய் திடீரென இறந்து விட்டார்; அவர் பேசியிருந்தால் தர்மம் செய்யச் சொல்லியிருப்பார் என்று நான் நினைக்கிறேன்; எனவே அவர் சார்பாக நான் தர்மம் செய்தால் அதன் நன்மை அவருக்குக் கிடைக்குமா?  என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம் என்றனர். 

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) 

நூல்: புகாரி 1388, 2760

صحيح البخاري 2756 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، أَخْبَرَنَا مَخْلَدُ بْنُ يَزِيدَ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي يَعْلَى، أَنَّهُ سَمِعَ عِكْرِمَةَ، يَقُولُ: أَنْبَأَنَا ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ سَعْدَ بْنَ عُبَادَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ تُوُفِّيَتْ أُمُّهُ وَهُوَ غَائِبٌ عَنْهَا، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمِّي تُوُفِّيَتْ وَأَنَا غَائِبٌ عَنْهَا، أَيَنْفَعُهَا شَيْءٌ إِنْ تَصَدَّقْتُ بِهِ عَنْهَا؟ قَالَ: «نَعَمْ»، قَالَ: فَإِنِّي أُشْهِدُكَ أَنَّ حَائِطِيَ المِخْرَافَ صَدَقَةٌ عَلَيْهَا

ஸஅது பின் உபாதா (ரலி) அவர்கள் வெளியூர் சென்றிருந்த போது அவரது தாயார் இறந்து விட்டார். அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! நான் வெளியே சென்றிருந்த போது என் தாய் இறந்து விட்டார். அவருக்காக நான் ஏதேனும் தர்மம் செய்தால் அவருக்கு ஏதும் பயன் இருக்குமா? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம் என்றனர்.  எனது மிக்ராஃப் எனும் தோட்டத்தை அவர் சார்பில் நான் தர்மம் செய்கிறேன் என்பதற்கு உங்களையே சாட்சியாக்குகிறேன் என அவர் கூறினார். 

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) 

நூல்: புகாரி 2756, 2762, 2770

صحيح مسلم 4306 - حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ وَعَلِىُّ بْنُ حُجْرٍ قَالُوا حَدَّثَنَا إِسْمَاعِيلُ - وَهُوَ ابْنُ جَعْفَرٍ - عَنِ الْعَلاَءِ عَنْ أَبِيهِ عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَجُلاً قَالَ لِلنَّبِىِّ -صلى الله عليه وسلم- إِنَّ أَبِى مَاتَ وَتَرَكَ مَالاً وَلَمْ يُوصِ فَهَلْ يُكَفِّرُ عَنْهُ أَنْ أَتَصَدَّقَ عَنْهُ قَالَ « نَعَمْ ».

என் தந்தை வஸிய்யத் ஏதும் செய்யாமல் சொத்தை விட்டுச் சென்று விட்டார். அவர் சார்பில் நான் தர்மம் செய்தால் அது வஸிய்யத்துக்குப் பகரமாக அமையுமா?  என்று ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம் என்றனர். 

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி 

நூல்: முஸ்லிம் 3081

سنن النسائي 3664 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ هِشَامٍ، عَنْ قَتَادَةَ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ سَعْدِ بْنِ عُبَادَةَ، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ أُمِّي مَاتَتْ أَفَأَتَصَدَّقُ عَنْهَا؟ قَالَ: «نَعَمْ»، قُلْتُ: فَأَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ؟ قَالَ: «سَقْيُ الْمَاءِ»

அல்லாஹ்வின் தூதரே! என் தாய் இறந்து விட்டார். அவர் சார்பில் நான் தர்மம் செய்யட்டுமா?  என்று நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம் என்றனர். எது சிறந்த தர்மம்? என்று கேட்டேன்.  தண்ணீர் வழங்குதல்  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர்: ஸஅது பின் உபாதா (ரலி) 

நூல்: நஸாயீ 3604, 3606

பள்ளிவாசல் கட்டுதல், தண்ணீர்ப் பந்தல் மற்றும் நிழற்குடை அமைத்தல், கிணறு குளம் வெட்டுதல் போன்ற நிலையான தர்மங்களை இறந்தவர்களின் நன்மைக்காகச் செய்தால் அந்த நன்மை அவர்களைச் சேரும் என்பதற்கு இந்த ஹதீஸ்கள் ஆதாரமாக அமைந்துள்ளன.

இறந்தவர் சார்பில் ஹஜ் செய்தல்

இறந்தவர் மீது ஹஜ் கடமையாகி இருந்து அதைச் செய்யாமல் அவர் மரணித்தால் அவர் சார்பில் அவரது வாரிசுகள் ஹஜ்ஜை நிறைவேற்றலாம்.

அது போல் இறந்தவர் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்திருந்தால் அது கடமையாகி விடுகிறது. எனவே இறந்தவர் நேர்ச்சை செய்திருந்த ஹஜ்ஜை அவரது வாரிசுகள் நிறைவேற்றலாம். இதனால் இறந்தவர் மீது இருந்த ஹஜ் கடமை நீங்கி விடும்.

صحيح البخاري 1852 - حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّ امْرَأَةً مِنْ جُهَيْنَةَ، جَاءَتْ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: إِنَّ أُمِّي نَذَرَتْ أَنْ تَحُجَّ فَلَمْ تَحُجَّ حَتَّى مَاتَتْ، أَفَأَحُجُّ عَنْهَا؟ قَالَ: «نَعَمْ حُجِّي عَنْهَا، أَرَأَيْتِ لَوْ كَانَ عَلَى أُمِّكِ دَيْنٌ أَكُنْتِ قَاضِيَةً؟ اقْضُوا اللَّهَ فَاللَّهُ أَحَقُّ بِالوَفَاءِ»

ஜுஹைனா கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து  என் தாய் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்திருந்தார். அதைச் செய்யாமலே மரணித்து விட்டார். அவர் சார்பில் நான் ஹஜ் செய்யலாமா?  என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  ஆம் அவர் சார்பில் நீ ஹஜ் செய். உன் தாய் மீது கடன் இருந்தால் அதை நீ தானே நிறைவேற்றுவாய். எனவே அல்லாஹ்வின் கடனை நிறைவேற்றுங்கள். நிறைவேற்றப்படுவதற்கு அது தான் அதிகத் தகுதி படைத்தது  எனக் கூறினார்கள். 

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) 

நூல்: புகாரி 1852, 7315

صحيح البخاري 6699 - حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي بِشْرٍ، قَالَ: سَمِعْتُ سَعِيدَ بْنَ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: أَتَى رَجُلٌ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لَهُ: إِنَّ أُخْتِي قَدْ نَذَرَتْ أَنْ تَحُجَّ، وَإِنَّهَا مَاتَتْ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ كَانَ عَلَيْهَا دَيْنٌ أَكُنْتَ قَاضِيَهُ» قَالَ: نَعَمْ، قَالَ: «فَاقْضِ اللَّهَ، فَهُوَ أَحَقُّ بِالقَضَاءِ»

ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து  என் சகோதரி ஹஜ் செய்ய நேர்ச்சை செய்திருந்தார். ஆனால் இறந்து விட்டார்  எனக் கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர் மீது கடன் இருந்தால் நீ தானே நிறைவேற்றுவாய்?  என்று கேட்டார்கள். அவர் ஆம் என்றார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  அல்லாஹ்வின் கடனே நிறைவேற்றப்படுவதற்கு அதிகத் தகுதி படைத்தது  என்றார்கள். 

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) 

நூல்: புகாரி 6699

இறந்தவருக்காக மற்றவர்கள் ஹஜ் செய்வதில் பல விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.

இறந்தவரின் கடன்களை அடைப்பது யார் மீது கடமையோ அவர்கள் தான் இறந்தவருக்காக ஹஜ் செய்ய வேண்டும். அவர் கடன்பட்டால் நீ தானே அதை அடைப்பாய்? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதிலிருந்து இதை அறியலாம்.

இறந்தவரின் தந்தை, மகன், அண்ணன், தம்பி போன்ற உறவினர்கள் தான் இறந்தவருக்காக ஹஜ் செய்ய வேண்டும்

இறந்தவருடன் இரத்த சம்பந்தம் இல்லாத ஒருவரைப் பிடித்து ஹஜ் செய்ய வைக்கின்றனர். அதற்குக் கூலியும் கொடுக்கின்றனர். இவ்வாறு செய்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

இறந்தவருக்காக ஹஜ் செய்யலாம் என்றால் அவர் இறக்கும் போது அவர் மீது ஹஜ் கடமையாகி இருக்க வேண்டும். ஒருவர் மரணிக்கும் போது ஏழையாக இருந்தார். அவர் மரணித்த பின் அவரது பிள்ளைகள் வசதி படைத்தவர்களாகி விட்டனர். இவர்களிடம் ஹஜ் செய்யும் வசதி இருந்தாலும் இவர்களின் தந்தை ஏழையாக மரணித்து விட்டதால் அவர் மீது ஹஜ் கடமையாக இருக்கவில்லை என்பதால் அவருக்காக ஹஜ் செய்யலாகாது.

அல்லாஹ்வின் கடன் என்பது கட்டாயக் கடமையைத் தான் குறிக்கும். நாமாக விரும்பிச் செய்வது கடனாக ஆகாது.

இறந்தவருக்காக நோன்பு நோற்றல்

இறந்தவர் மீது கடமையான அல்லது நேர்ச்சை செய்த நோன்பு ஏதும் நிறைவேற்றப்படாமல் இருந்தால் அதை அவரது வாரிசுகள் நோற்கலாம். அவ்வாறு நோற்றால் இறந்தவர் மீது இருந்த சுமை விலகி விடும்.

صحيح البخاري 1952 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُوسَى بْنِ أَعْيَنَ، حَدَّثَنَا أَبِي، عَنْ عَمْرِو بْنِ الحَارِثِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي جَعْفَرٍ، أَنَّ مُحَمَّدَ بْنَ جَعْفَرٍ، حَدَّثَهُ عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ مَاتَ وَعَلَيْهِ صِيَامٌ صَامَ عَنْهُ وَلِيُّهُ»،

தன் மீது நோன்புகள் கடமையாகி இருந்த நிலையில் ஒருவர் மரணித்து விட்டால் அவர் சார்பில் அவரது பொறுப்பிலுள்ள வாரிசு நோன்பு நோற்க வேண்டும்  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) 

நூல்: புகாரி 1952

صحيح البخاري 1953 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا زَائِدَةُ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُسْلِمٍ البَطِينِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمِّي مَاتَتْ وَعَلَيْهَا صَوْمُ شَهْرٍ، أَفَأَقْضِيهِ عَنْهَا؟ قَالَ: " نَعَمْ، قَالَ: فَدَيْنُ اللَّهِ أَحَقُّ أَنْ يُقْضَى "،

ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! என் தாய் மீது ஒரு மாத நோன்பு கடமையாக இருந்த நிலையில் மரணித்து விட்டார். அவர் சார்பில் அதை நான் நிறைவேற்றட்டுமா? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம்! அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றப்படுவதற்கு அதிகத் தகுதி படைத்ததாகும்  என்று கூறினார்கள். 

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 1953

இறந்தவர் சார்பில் தொழுகையை நிறைவேற்ற முடியாது

ஒருவர் சில தொழுகைகளை விட்டு இறந்திருந்தால் அதை அவர் சார்பில் மற்றவர் நிறைவேற்றலாம் என்பதற்கு ஒரு ஆதாரமும் இல்லை.

நோன்பைப் பொறுத்த வரை நோய், பயணம் போன்ற காரணங்களால் பிரிதொரு நாளில் நோற்க அனுமதி உள்ளதால் நோன்பை ஒருவர் விடுவதற்கும், வேறு நாட்களில் நோற்பதற்கும் நியாயம் உள்ளது. இத்தனை நாட்களுக்குள் நோற்று விட வேண்டும் என்று கால நிர்ணயம் ஏதும் இல்லை.

ஹஜ்ஜைப் பொறுத்த வரை இந்த ஆண்டு தான் செய்ய வேண்டும் என்பது இல்லை. மரணிப்பதற்குள் ஒரு தடவை செய்ய வேண்டும் என்பதால் கடமையான பின்பும் அதைத் தள்ளி வைக்க முகாந்திரம் உள்ளது.

ஆனால் தொழுகையைப் பொறுத்த வரை அது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக உள்ளது.

நோயாளிகளுக்கும், பயணிகளுக்கும் தொழும் முறையில் சில சலுகைகள் உள்ளன. அதிகபட்சம் இரண்டு தொழுகைகளை ஒரு நேரத்தில் ஜம்வு செய்து தொழ சலுகை உண்டு. அதற்கு மேல் தாமதப்படுத்திட எந்த அனுமதியும், ஆதாரமும் இல்லை.

மாதவிடாய் நேரத்தில் விட்ட நோன்பை பின்னர் வைக்க வேண்டும் எனக் கூறும் இஸ்லாம், மாதவிடாய் நேரத்தில் விட்ட தொழுகைகளைப் பின்னர் நிறைவேற்ற வேண்டும் என்று கூறவில்லை.

தொழுகையைத் தவறவிட்டால் தவற விட்டது தான். அதற்காக பாவமன்னிப்புக் கேட்டுத் திருந்தி இனி மேல் உரிய நேரத்தில் தொழுவது தான் அவசியம்.

அவர்களுக்குப் பின்னர் வழித் தோன்றல்கள் வந்தனர். அவர்கள் தொழுகையைப் பாழாக்கினர். மனோ இச்சைகளைப் பின்பற்றினர். அவர்கள் நஷ்டத்தைச் சந்திப்பார்கள். திருந்தி நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தவரைத் தவிர. அவர்கள் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள். 

திருக்குர்ஆன் 19:59,60

தொழுகையைத் தவற விட்டவர்கள் அதற்காகப் பாவமன்னிப்புக் கேட்டுத் திருந்துவதைத் தான் திருக்குர்ஆன் பரிகாரமாகக் கூறுகிறது. விட்ட தொழுகைகளைத் திரும்பத் தொழுமாறு கூறவில்லை.

தான் விட்ட தொழுகைகளையே மறு நாள் நிறைவேற்ற முடியாது எனும் போது மற்றவர்கள் நிறைவேற்றலாம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

இறந்தவருக்காக பாத்திஹா, யாசீன் ஓதலாமா?

இறந்தவருக்காக யாஸீன் ஓதுதல்

திருக்குர்ஆனின் 36வது அத்தியாயமான யாஸீன் அத்தியாயத்தை ஒருவர் இறந்தவுடன் அவரது உடலுக்கு அருகில் அமர்ந்து சிலர் ஓதி வருகின்றனர். இதன் பின்னர் குறிப்பிட்ட நாட்களிலும் யாஸீன் அத்தியாயத்தை ஓதுகின்றனர்.

இவ்வாறு செய்வதற்கு ஆதாரமாக சில ஹதீஸ்களை எடுத்துக் காட்டுகின்றனர்.

سنن أبي داود ت 3121 - حدَّثنا محمدُ بن العلاءِ ومحمد بن مكيٍّ المروزيُّ -المعنى- قالا: حدَّثنا ابنُ المبارَك، عن سليمانَ التيمىِّ، عن أبي عثمانَ -وليس بالنَّهْديِّ- عن أبيهِ عن مَعْقِلِ بن يَسارٍ، قال: قال رسول -صلَّى الله عليه وسلم-: "اقرؤوا {يس} على موتاكُم"

உங்களில் இறந்தவர் மீது யாஸீன் ஓதுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு ஹதீஸ் உள்ளது. 

அறிவிப்பவர்: மஃகில் பின் யஸார் (ரலி) 

நூல்கள்: அபூ தாவூத் 2714, இப்னு மாஜா 1438, அஹ்மத் 19416, 19427 ஹாகிம் 1/753

மேற்கண்ட ஹதீஸ்களில் அபூ உஸ்மான் என்பவர் தமது தந்தை கூறியதாக அறிவிக்கிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அபூ உஸ்மான் என்பவரும், அவரது தந்தையும் யார் என்று அறியப்படாதவர்கள் என்று ஹதீஸ் துறை வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படும் எந்த ஹதீஸாக இருந்தாலும் அதை அறிவிப்பவருக்கு வரலாறு இருக்க வேண்டும். அவரது நினைவாற்றல், நாணயம் நிரூபிக்கப்பட்டிருக்க வேண்டும். மேற்கண்ட இருவரும் யார் என்றே தெரியாததால் இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.

அபூ உஸ்மான் என்பவர் தனது தனது தந்தை பெயரைப் பயன்படுத்தாமல் மஃகில் பின் யஸார் வழியாக நேரடியாக அறிவிக்கும் சில ஹதீஸ்கள் உள்ளன.

صحيح بن حبان 3002 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ السَّخْتِيَانِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ خَلَّادٍ الْبَاهِلِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ، قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو عُثْمَانَ، عَنْ مَعْقِلِ بْنِ يَسَارٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْرَءُوا عَلَى مَوْتَاكُمْ يس».

இப்னு ஹிப்பான் மற்றும் சில நூல்களில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது

அபூ உஸ்மான் என்பவர் யார் என்று அறியப்படாதவர் என்பதால் இதையும் ஆதாரமாகக் கொள்ள முடியாது.

இவை அனைத்துமே பலவீனமாக உள்ளதால் இறந்தவர்களுக்கு அருகில் அல்லது இறந்தவரின் நன்மைக்காக யாஸீன் ஓதுவதற்கு ஆதாரம் இல்லை.

யாஸீன் என்பது 114 அத்தியாயங்களில் ஒரு அத்தியாயம். மற்ற அத்தியாயங்களை நமது நன்மைக்காக நாம் ஓதுவது போல யாஸீனையும் நமது நன்மைக்காக ஓதலாம். இறந்தவரின் நன்மைக்காக இதை ஓதக் கூடாது.

பா(த்)திஹா, பகரா அத்தியாயம் ஓதுதல்

المعجم الكبير للطبراني 13438 - حَدَّثَنَا أَبُو شُعَيْبٍ الْحَرَّانِيُّ , حَدَّثَنَا يَحْيَى بن عَبْدِ اللَّهِ الْبَابْلُتِّيُّ , حَدَّثَنَا أَيُّوبُ بن نَهِيكٍ , قَالَ: سَمِعْتُ عَطَاءَ بن أَبِي رَبَاحٍ , يَقُولُ: سَمِعْتُ ابْنَ عُمَرَ , يَقُولُ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , يَقُولُ:إِذَا مَاتَ أَحَدُكُمْ فَلا تَحْبِسُوهُ , وَأَسْرِعُوا بِهِ إِلَى قَبْرِهِ , وَلْيُقْرَأْ عِنْدَ رَأْسِهِ بِفَاتِحَةِ الْكِتَابِ , وَعِنْدَ رِجْلَيْهِ بِخَاتِمَةِ الْبَقَرَةِ فِي قَبْرِهِ.

இறந்தவரின் தலைமாட்டில் அல்ஹம்து சூராவையும், கால்மாட்டில் பகரா அத்தியாயத்தின் கடைசி வசனங்களையும் ஓதுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு ஹதீஸ் உள்ளது. 

நூல் : தப்ரானியின் அல்கபீர்

இதை அறிவிக்கும் அய்யூப் பின் நஹீக் என்பவரும், யஹ்யா பின் அப்துல்லாஹ் என்பவரும் பலவீனமானவர்கள் என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் உறுதி செய்துள்ளனர்.

மரணித்தவரின் மறுமை நன்மைக்காக நாம் செய்ய வேண்டிய அனைத்தையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு நிறைவாக சொல்லித் தந்து விட்டார்கள். அவர்கள் ஒரு குறையும் வைக்கவில்லை என்பதை நாம் முழுமையாக நம்ப வேண்டும்.

இறந்தவருக்காக மூன்றாம் ஃபாத்திஹா, ஏழாம் ஃபாத்திஹா, நாற்பதாம் ஃபாத்திஹா, கத்தம், வருட ஃபாத்திஹாக்கள், இறந்தவருக்காக ஹல்கா, திக்ருகள், ராத்திபுகள் என்று பலவிதமான சடங்குகளையும் தமிழக முஸ்லிம்களில் பலர் செய்து வருகின்றனர்.

இவை அனைத்தும் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்.

மார்க்கம் என்ற பெயரில் நாம் எதைச் செய்வதாக இருந்தாலும் அதை அல்லாஹ் சொல்லியிருக்க வேண்டும். அல்லது அல்லாஹ்வின் தூதர் சொல்லியிருக்க வேண்டும்.

அல்லாஹ்வும், அவனது தூதரும் கூறாமல் நம்மைப் போன்ற மனிதர்கள் தங்களின் சுயநலனுக்காகவோ, அல்லது அறியாமை காரணமாகவோ உருவாக்கியவை இஸ்லாமாக ஆகாது.

صحيح مسلم 4590 - وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ وَعَبْدُ بْنُ حُمَيْدٍ جَمِيعًا عَنْ أَبِى عَامِرٍ قَالَ عَبْدٌ حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ عَمْرٍو حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ الزُّهْرِىُّ عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ قَالَ سَأَلْتُ الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ عَنْ رَجُلٍ لَهُ ثَلاَثَةُ مَسَاكِنَ فَأَوْصَى بِثُلُثِ كُلِّ مَسْكَنٍ مِنْهَا قَالَ يُجْمَعُ ذَلِكَ كُلُّهُ فِى مَسْكَنٍ وَاحِدٍ ثُمَّ قَالَ أَخْبَرَتْنِى عَائِشَةُ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « مَنْ عَمِلَ عَمَلاً لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا فَهُوَ رَدٌّ ».

நமது கட்டளையில்லாமல் யாரேனும் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும்  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) 

நூல்: முஸ்லிம் 3243

صحيح البخاري 2697 - حَدَّثَنَا يَعْقُوبُ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنِ القَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ فِيهِ، فَهُوَ رَدٌّ»

நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால் அது நிராகரிக்கப்படும்  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) 

நூல்கள்: புகாரி 2697, முஸ்லிம் 3242

سنن النسائي 1578 - أَخْبَرَنَا عُتْبَةُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: أَنْبَأَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ سُفْيَانَ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي خُطْبَتِهِ: يَحْمَدُ اللَّهَ وَيُثْنِي عَلَيْهِ بِمَا هُوَ أَهْلُهُ، ثُمَّ يَقُولُ: «مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ، إِنَّ أَصْدَقَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ، وَأَحْسَنَ الْهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ مُحْدَثَةٍ بِدْعَةٌ وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ، وَكُلُّ ضَلَالَةٍ فِي النَّارِ»،

(மார்க்கத்தில்) புதிதாக உருவாக்கப்பட்டவைகளை விட்டும் உங்களை நான் எச்சரிக்கிறேன். புதிதாக உருவாக்கப்பட்டவை அனைத்தும் பித்அத் (எனும் அனாச்சாரம்) ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் சேர்க்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள். 

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) 

நூல்: நஸாயீ 1560

அல்லாஹ்வும், அவனது தூதரும் சொல்லித் தராததைச் செய்தால் அது நன்மையின் வடிவத்தில் இருந்தாலும் அதன் விளைவு நரகமாகும்.

இரண்டு ரக்அத் தொழுகையில் மற்றொரு ரக்அத்தை அதிகமாக்குவது நன்மையின் தோற்றத்தில் இருந்தாலும் அதை நாம் சரி காண மாட்டோம்.

இச்சடங்குகள் மார்க்கத்தில் உள்ளதாக இருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவற்றை முதலில் செய்பவர்களாக இருந்திருப்பார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் போதே மூன்று மகள்களையும், ஒரு மகனையும் இழந்தார்கள். மனைவி கதீஜாவையும் இழந்தார்கள்.

இறந்தவர்களுக்காக மேற்கண்ட காரியங்களைச் செய்வது நன்மை என்றிருந்தால் தமது குடும்பத்தினருக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைச் செய்திருப்பார்கள். ஆனால் இது போன்ற ஃபாத்திஹாக்களை அவர்கள் செய்ததில்லை. அவர்களுக்குப் பின் பலநூறு ஆண்டுகளாக முஸ்லிம் சமுதாயம் இவற்றைச் செய்ததில்லை.

பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட போலிச் சடங்குகளை விட்டொழித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்தவற்றை மட்டும் செய்து இறந்தவர்களுக்கு உதவுவோம்.

இறந்தவர் வீட்டில் விருந்து அளித்தல்

ஒருவர் மரணித்து விட்டால் அவரது குடும்பத்தினர் சோகத்திலும், கவலையிலும் இருப்பார்கள். அவர்களின் கவலையை மேலும் அதிகரிக்கும் வகையில் இறந்த அன்றோ, மறு நாளோ தடபுடலான விருந்துக்கு ஏற்பாடு செய்கின்றனர். அந்தக் குடும்பத்தினரின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் மனிதாபிமானமில்லாமல் அக்குடும்பத்தினரின் செலவில் விருந்துக்கு ஏற்பாடு செய்கின்றனர். இதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை.

இறந்தவரின் வீட்டுக்கு நாம் சென்றால் அவர்களுக்குத் தேவையான உணவுகளைத் தயார் செய்து எடுத்துச் சென்று நாம் தான் அவர்களுக்கு வழங்க வேண்டும். அவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளதால் தமக்காக அவர்கள் உணவு சமைக்கும் மனநிலையில் இருக்க மாட்டார்கள்.

سنن أبي داود 3132 - حدَّثنا مُسدَّدٌ، حدَّثنا سفيانُ، حدَّثنا جعفرُ بن خالد، عن أبيه عن عبد الله بن جعفر، قال: قال رسولُ الله -صلَّى الله عليه وسلم-: "اصنعوا لألِ جَعْفَرٍ طعاماً، فإنه قد أتاهم أمرٌ يَشغَلُهم"

ஜஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் மரணித்த செய்தியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களுக்கு அறிவித்துவிட்டு ஜஃபரின் குடும்பத்தினருக்காக நீங்கள் உணவு தயாரியுங்கள், அவர்களைப் பாதிக்கும் செய்தி வந்துள்ளது என்று கூறினார்கள். 

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஜஃபர் (ரலி) 

நூல்கள்: அபூதாவூத் 2725, அஹ்மத் 1660, திர்மிதி 919, இப்னுமாஜா 1599

இதன் அடிப்படையில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு மற்றவர்கள் தான் உணவு அளிக்க வேண்டுமே தவிர அவர்கள் வீட்டில் சாப்பிடக் கூடாது என்று அறியலாம்.

மறுமை நன்மையை நம்பி சகித்துக் கொள்ளுதல்

ஒருவர் மரணித்து விட்டால் மறுமையின் நன்மையைக் கவனத்தில் கொண்டு அதனைப் பொறுமையுடன் சகித்துக் கொண்டால் மறுமையில் சொர்க்கத்தை நாம் அடைய அதுவே காரணமாக அமைந்து விடும். அந்த அளவுக்கு உயர்ந்த செயலாக இதை இறைவன் மதிப்பிடுகிறான்.

ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது  நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள் என்று அவர்கள் கூறுவார்கள். அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும், அன்பும் உள்ளன. அவர்களே நேர் வழி பெற்றோர். 

திருக்குர்ஆன் 2.155, 156, 157

பருவ வயதை அடையாத மூன்று குழந்தைகளை ஒரு முஸ்லிம் இழந்து விட்டால் அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் நுழைக்காமல் இருப்பதில்லை  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர்: அனஸ் (ரலி) 

நூல்: புகாரி 1248, 1381

صحيح البخاري 101 - حَدَّثَنَا آدَمُ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: حَدَّثَنِي ابْنُ الأَصْبَهَانِيِّ، قَالَ: سَمِعْتُ أَبَا صَالِحٍ ذَكْوَانَ، يُحَدِّثُ عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ قَالَتِ النِّسَاءُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: غَلَبَنَا عَلَيْكَ الرِّجَالُ، فَاجْعَلْ لَنَا يَوْمًا مِنْ نَفْسِكَ، فَوَعَدَهُنَّ يَوْمًا لَقِيَهُنَّ فِيهِ، فَوَعَظَهُنَّ وَأَمَرَهُنَّ، فَكَانَ فِيمَا قَالَ لَهُنَّ: «مَا مِنْكُنَّ امْرَأَةٌ تُقَدِّمُ ثَلاَثَةً مِنْ وَلَدِهَا، إِلَّا كَانَ لَهَا حِجَابًا مِنَ النَّارِ» فَقَالَتِ امْرَأَةٌ: وَاثْنَتَيْنِ؟ فَقَالَ: «وَاثْنَتَيْنِ»

எந்தப் பெண்ணுக்காவது மூன்று குழந்தைகள் மரணித்து விட்டால் அக்குழந்தைகள் அவளை நரகம் செல்லாமல் தடுப்பவர்களாகத் திகழ்வார்கள்  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒரு பெண்மணி இரண்டு குழந்தைகள்?  எனக் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  இரண்டு குழந்தைகளும் தான்  என்று விடையளித்தார்கள். 

அறிவிப்பவர்: அபூ ஸயீத் (ரலி) 

நூல்: புகாரி 101, 1250, 7310

صحيح مسلم 7692 - حَدَّثَنَا هَدَّابُ بْنُ خَالِدٍ الأَزْدِىُّ وَشَيْبَانُ بْنُ فَرُّوخَ جَمِيعًا عَنْ سُلَيْمَانَ بْنِ الْمُغِيرَةِ - وَاللَّفْظُ لِشَيْبَانَ - حَدَّثَنَا سُلَيْمَانُ حَدَّثَنَا ثَابِتٌ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِى لَيْلَى عَنْ صُهَيْبٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « عَجَبًا لأَمْرِ الْمُؤْمِنِ إِنَّ أَمْرَهُ كُلَّهُ خَيْرٌ وَلَيْسَ ذَاكَ لأَحَدٍ إِلاَّ لِلْمُؤْمِنِ إِنْ أَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ فَكَانَ خَيْرًا لَهُ وَإِنْ أَصَابَتْهُ ضَرَّاءُ صَبَرَ فَكَانَ خَيْرًا لَهُ ».

மூமின்களின் காரியங்கள் வியப்பாக உள்ளன. அவரது அனைத்துக் காரியங்களும் அவருக்கு நன்மையாகவே அமைந்து விடுகின்றன. மூமினைத் தவிர மற்றவர்களுக்கு இந்த நிலை இல்லை. அவருக்கு மகிழ்ச்சி ஏற்படால் நன்றி செலுத்துகிறார். எனவே அது அவருக்கு நன்மையாக அமைகிறது. அவருக்குத் துன்பம் ஏற்பட்டால் பொறுத்துக் கொள்கிறார். எனவே அதுவும் அவருக்கு நன்மையாகி விடுகிறது  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர்: ஸுஹைப் (ரலி) 

நூல்: முஸ்லிம் 5318

கண்ணீர் விட்டு அழலாம்

ஒருவர் மரணித்து விட்டால் கண்ணீர் விட்டு அழுவது தவறல்ல. அழுவதால் பொறுமையை மேற்கொள்ளவில்லை என்று ஆகிவிடாது. ஏனெனில் பொறுமைக்கு இலக்கணமாகத் திகழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு துன்பங்களின் போது கண்ணீர் விட்டு அழுதுள்ளனர்.

صحيح البخاري 1303 - حَدَّثَنَا الحَسَنُ بْنُ عَبْدِ العَزِيزِ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَسَّانَ، حَدَّثَنَا قُرَيْشٌ هُوَ ابْنُ حَيَّانَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: دَخَلْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أَبِي سَيْفٍ القَيْنِ، وَكَانَ ظِئْرًا لِإِبْرَاهِيمَ عَلَيْهِ السَّلاَمُ، فَأَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِبْرَاهِيمَ، فَقَبَّلَهُ، وَشَمَّهُ، ثُمَّ دَخَلْنَا عَلَيْهِ بَعْدَ ذَلِكَ وَإِبْرَاهِيمُ يَجُودُ بِنَفْسِهِ، فَجَعَلَتْ عَيْنَا رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَذْرِفَانِ، فَقَالَ لَهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: وَأَنْتَ يَا رَسُولَ اللَّهِ؟ فَقَالَ: «يَا ابْنَ عَوْفٍ إِنَّهَا رَحْمَةٌ»، ثُمَّ أَتْبَعَهَا بِأُخْرَى، فَقَالَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ العَيْنَ تَدْمَعُ، وَالقَلْبَ يَحْزَنُ، وَلاَ نَقُولُ إِلَّا مَا يَرْضَى رَبُّنَا، وَإِنَّا بِفِرَاقِكَ يَا إِبْرَاهِيمُ لَمَحْزُونُونَ» رَوَاهُ مُوسَى، عَنْ سُلَيْمَانَ بْنِ المُغِيرَةِ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ [ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம் மரணத்தை நெருங்கிய போது நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் அவரைப் பார்க்கச் சென்றோம். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது. அப்போது அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! நீங்களுமா?  என்று கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவ்ஃபின் மகனே! இது இரக்க உணர்வு  என்று கூறி விட்டு வேறு வார்த்தையில் பின் வருமாறு விளக்கினார்கள்.  கண்கள் கண்ணீர் வடிக்கின்றன; உள்ளம் கவலைப்படுகிறது; நமது இறைவன் பொருந்திக் கொள்ளாத எதையும் நாம் கூற மாட்டோம். இப்ராஹீமே! உமது பிரிவுக்காக நாம் கவலைப்படுகிறோம்  என்று கூறினார்கள். 

அறிவிப்பவர்: அனஸ் (ரலி) 

நூல்: புகாரி 1303

صحيح البخاري 1304 - حَدَّثَنَا أَصْبَغُ، عَنِ ابْنِ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرٌو، عَنْ سَعِيدِ بْنِ الحَارِثِ الأَنْصَارِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: اشْتَكَى سَعْدُ بْنُ عُبَادَةَ شَكْوَى لَهُ، فَأَتَاهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُودُهُ مَعَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، وَسَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، وَعَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ، فَلَمَّا دَخَلَ عَلَيْهِ فَوَجَدَهُ فِي غَاشِيَةِ أَهْلِهِ، فَقَالَ: «قَدْ قَضَى» قَالُوا: لاَ يَا رَسُولَ اللَّهِ، فَبَكَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا رَأَى القَوْمُ بُكَاءَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَكَوْا، فَقَالَ: «أَلاَ تَسْمَعُونَ إِنَّ اللَّهَ لاَ يُعَذِّبُ بِدَمْعِ العَيْنِ، وَلاَ بِحُزْنِ القَلْبِ، وَلَكِنْ يُعَذِّبُ بِهَذَا - وَأَشَارَ إِلَى لِسَانِهِ - أَوْ يَرْحَمُ، وَإِنَّ المَيِّتَ يُعَذَّبُ بِبُكَاءِ أَهْلِهِ عَلَيْهِ» وَكَانَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ: «يَضْرِبُ فِيهِ بِالعَصَا، وَيَرْمِي بِالحِجَارَةِ، وَيَحْثِي بِالتُّرَابِ»

ஸஅது பின் உபாதா (ரலி) அவர்கள் நோய்வாய்ப்பட்டார்கள். அவரை நோய் விசாரிப்பதற்காக அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி), ஸஅது பின் அபீ வக்காஸ் (ரலி), அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) ஆகியோருடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சென்றனர். அவரது குடும்பத்தினர் அவரைச் சுற்றி இருப்பதைக் கண்டனர். முடிந்து விட்டதா?  என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! இல்லை  என்று (வீட்டில் உள்ளவர்கள்) கூறினார்கள். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழலானார்கள். அவர்கள் அழுவதைக் கண்டவுடன் மக்களும் அழுதார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  கண்ணீர் வடித்ததற்காகவோ, உள்ளத்தால் கவலைப்பட்டதற்காகவோ அல்லாஹ் தண்டிக்க மாட்டான். என்றாலும் இதன் காரணமாகவே தண்டிப்பான் அல்லது அருள் புரிவான்  என்று கூறி விட்டு தமது நாவைச் சுட்டிக் காட்டினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 1304

صحيح البخاري 1284 - حَدَّثَنَا عَبْدَانُ، وَمُحَمَّدٌ، قَالاَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا عَاصِمُ بْنُ سُلَيْمَانَ، عَنْ أَبِي عُثْمَانَ، قَالَ: حَدَّثَنِي أُسَامَةُ بْنُ زَيْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: أَرْسَلَتِ ابْنَةُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَيْهِ إِنَّ ابْنًا لِي قُبِضَ، فَأْتِنَا، فَأَرْسَلَ يُقْرِئُ السَّلاَمَ، وَيَقُولُ: «إِنَّ لِلَّهِ مَا أَخَذَ، وَلَهُ مَا أَعْطَى، وَكُلٌّ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى، فَلْتَصْبِرْ، وَلْتَحْتَسِبْ»، فَأَرْسَلَتْ إِلَيْهِ تُقْسِمُ عَلَيْهِ لَيَأْتِيَنَّهَا، فَقَامَ وَمَعَهُ سَعْدُ بْنُ عُبَادَةَ، وَمَعَاذُ بْنُ جَبَلٍ، وَأُبَيُّ بْنُ كَعْبٍ، وَزَيْدُ بْنُ ثَابِتٍ وَرِجَالٌ، فَرُفِعَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّبِيُّ وَنَفْسُهُ تَتَقَعْقَعُ - قَالَ: حَسِبْتُهُ أَنَّهُ قَالَ كَأَنَّهَا شَنٌّ - فَفَاضَتْ عَيْنَاهُ، فَقَالَ سَعْدٌ: يَا رَسُولَ اللَّهِ، مَا هَذَا؟ فَقَالَ: «هَذِهِ رَحْمَةٌ جَعَلَهَا اللَّهُ فِي قُلُوبِ عِبَادِهِ، وَإِنَّمَا يَرْحَمُ اللَّهُ مِنْ عِبَادِهِ الرُّحَمَاءَ»

தன் மகன் மரணத்தை நெருங்கி விட்டான் என்ற செய்தியை நபிகள் நாயகத்தின் மகள் (ஸைனப்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சொல்லி அனுப்பி  உடனே வர வேண்டும்  என்றார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மகளுக்கு ஸலாம் கூறச் சொல்லிவிட்டு  அல்லாஹ் எடுத்துக் கொண்டது அவனுக்குரியது. அவன் கொடுத்ததும் அவனுக்குரியது. அவனிடத்தில் ஒவ்வொன்றும் நேரம் நிர்ணயிக்கப்பட்டதாக உள்ளது. எனவே அவர் பொறுமையைக் கடைப்பிடித்து நன்மையை எதிர்பார்க்கட்டும்  என்று செய்தி சொல்லி அனுப்பினார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகள் சத்தியம் செய்து கட்டாயம் வந்தே ஆக வேண்டும் என்று மறு செய்தி அனுப்பினார்கள். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுந்தார்கள். அவர்களுடன் ஸஅது பின் உபாதா (ரலி), முஆத் பின் ஜபல் (ரலி), உபை பின் கஅப் (ரலி), ஸைத் பின் ஸாபித் (ரலி) மற்றும் பலர் புறப்பட்டனர். சிறுவர் (பேரன்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொடுக்கப்பட்டார். அவருக்கு மூச்சு வாங்கிக் கொண்டிருந்தது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது.  அல்லாஹ்வின் தூதரே! இது என்ன? என்று ஸஅது பின் உபாதா (ரலி) கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  இந்த இரக்க உணர்வை அல்லாஹ் மனித உள்ளங்களில் அமைத்திருக்கிறான். தனது அடியார்களிடம் இரக்கம் காட்டுபவருக்கே அல்லாஹ்வும் இரக்கம் காட்டுவான்  என்று விடையளித்தார்கள். 

அறிவிப்பவர்: உஸாமா பின் ஸைத் (ரலி) 

நூல்: புகாரி 1284, 5655, 6655, 7377

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழுததற்கும் மற்றவர்கள் அழுத போது அதைத் தடுக்காமல் இருந்ததற்கும் ஏராளமான சான்றுகள் உள்ளன. 

(பார்க்க புகாரி 3063, 1288, 1244, 1293)

அழுகையும் துக்கமும் மூன்று நாட்களே!

அழுவதற்கும், துக்கத்தில் ஆழ்ந்து போவதற்கும் துக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் சரியாக உண்ணாமல் பருகாமல் தொழிலுக்குச் செல்லாமல் இருப்பதற்கும் அனுமதி உண்டு. அனுமதி இருந்தாலும் மூன்று நாட்களுக்குப் பின் அழுவதற்கு அனுமதி இல்லை.

நான்காவது நாளில் வழக்கமான நடவடிக்கைகளில் இறங்கிவிட வேண்டும். அதன் பின்னரும் அழுதால், துக்கத்தை வெளிப்படுத்தினால் அவர்கள் பொறுமையைக் கடைப்பிடிக்கவில்லை என்ற நிலையை அடைவார்கள்.

صحيح البخاري 313 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الوَهَّابِ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ حَفْصَةَ، قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: أَوْ هِشَامِ بْنِ حَسَّانَ، عَنْ حَفْصَةَ، عَنْ أُمِّ عَطِيَّةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ: «كُنَّا نُنْهَى أَنْ نُحِدَّ عَلَى مَيِّتٍ فَوْقَ ثَلاَثٍ، إِلَّا عَلَى زَوْجٍ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا،

இறந்தவருக்காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கத்தை வெளிப்படுத்தக் கூடாது  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் நாங்கள் தடுக்கப்பட்டிருந்தோம். கணவரைத் தவிர. கணவர் இறந்தால் நான்கு மாதம் பத்து நாட்கள் துக்கத்தை வெளிப்படுத்தலாம். 

அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி) 

நூல்: புகாரி 313, 5341, 5343

صحيح البخاري 1280 - حَدَّثَنَا الحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا أَيُّوبُ بْنُ مُوسَى، قَالَ: أَخْبَرَنِي حُمَيْدُ بْنُ نَافِعٍ، عَنْ زَيْنَبَ بِنْتِ أَبِي سَلَمَةَ، قَالَتْ: لَمَّا جَاءَ نَعْيُ أَبِي سُفْيَانَ مِنَ الشَّأْمِ، دَعَتْ أُمُّ حَبِيبَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا بِصُفْرَةٍ فِي اليَوْمِ الثَّالِثِ، فَمَسَحَتْ عَارِضَيْهَا، وَذِرَاعَيْهَا، وَقَالَتْ: إِنِّي كُنْتُ عَنْ هَذَا لَغَنِيَّةً، لَوْلاَ أَنِّي سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لاَ يَحِلُّ لِامْرَأَةٍ تُؤْمِنُ بِاللَّهِ وَاليَوْمِ الآخِرِ، أَنْ تُحِدَّ عَلَى مَيِّتٍ فَوْقَ ثَلاَثٍ، إِلَّا عَلَى زَوْجٍ، فَإِنَّهَا تُحِدُّ عَلَيْهِ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا»

அபூ ஸுஃப்யான் மரணித்த செய்தி கிடைத்ததும் அவரது மகள் உம்மு ஹபீபா (நபிகள் நாயகத்தின் மனைவி) அவர்கள் மூன்றாம் நாள் அன்று மஞ்சள் நிற நறுமணத்தைக் கொண்டு வரச் சொல்லி தமது விலாவிலும், கையிலும் தடவிக் கொண்டார்கள். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பும் பெண்கள், கணவர் தவிர மற்றவருக்காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கத்தைக் காட்டக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றிருக்கா விட்டால் இந்த நறுமணம் எனக்குத் தேவையற்றது  என்று கூறினார்கள். 

அறிவிப்பவர்: ஸைனப் (ரலி) 

நூல்: புகாரி 1280, 1282

سنن النسائي 5227 - أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ مَنْصُورٍ، قَالَ: أَنْبَأَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي قَالَ: سَمِعْتُ مُحَمَّدَ بْنَ أَبِي يَعْقُوبَ، عَنْ الْحَسَنِ بْنِ سَعْدٍ يُحَدِّثُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ قَالَ: أَمْهَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ آلَ جَعْفَرٍ ثَلَاثَةً أَنْ يَأْتِيَهُمْ ثُمَّ أَتَاهُمْ، فَقَالَ: «لَا تَبْكُوا عَلَى أَخِي بَعْدَ الْيَوْمِ» ثُمَّ قَالَ: «ادْعُوا إِلَيَّ بَنِي أَخِي»، فَجِيءَ بِنَا كَأَنَّا أَفْرُخٌ فَقَالَ: «ادْعُوا إِلَيَّ الْحَلَّاقَ» فَأَمَرَ بِحَلْقِ رُءُوسِنَا مُخْتَصَرٌ

அபூ தாலிபின் மகன் ஜஃபர் (ரலி) மரணித்த பின் மூன்று நாட்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவகாசம் எடுத்துக் கொண்டார்கள். பின்னர் ஜஃபரின் குடும்பத்தாரிடம் வந்தார்கள். இன்றைய தினத்துக்குப் பின் என் சகோதரருக்காக அழக் கூடாது எனக் கூறினார்கள். என் சகோதரரின் புதல்வர்களை என்னிடம் அழைத்து வாருங்கள் என்றார்கள். நாங்கள் பறவைக் குஞ்சுகள் போல (தலைமுடி சீர் செய்யப்படாமல்) கொண்டு வரப்பட்டோம். உடனே நாவிதரை அழைத்து வரச் செய்து எங்கள் தலையை மழிக்குமாறு கட்டளையிட்டனர். 

அறிவிப்பவர்: ஜஃபரின் மகன் அப்துல்லாஹ் 

நூல்கள்: நஸாயீ 5132, அபூ தாவூத் 3660, அஹ்மத் 1659

தந்தை இறந்து விட்டால் மகனுக்கு மொட்டை அடிக்க வேண்டும் என்று இந்த ஹதீஸைப் புரிந்து கொள்ளக் கூடாது. கவலையின் காரணமாக ஜஃபரின் குடும்பத்தினர் குழந்தைகளைப் பராமரிக்கவில்லை. முட்டையிலிருந்து வெளி வந்த குஞ்சுகள் எவ்வாறு மயிர்களைச் சிலிப்பிக் கொண்டிருக்குமோ அது போன்ற நிலையில் அக்குழந்தைகள் இருந்ததால் மொட்டை அடிக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இந்த ஹதீஸின் வாசகத்திலிருந்தே இதை அறியலாம்.

ஒப்பாரி வைக்கக் கூடாது

கண்ணீர் விட்டு அழுவதற்கு மட்டும் தான் இஸ்லாத்தில் அனுமதி உள்ளது. ஒப்பாரி வைப்பதற்கு அறவே அனுமதி இல்லை. ஒப்பாரி வைத்தல் இறை மறுப்புக்கு நிகரான குற்றம் என்ற அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையான எச்சரிக்கை செய்துள்ளனர்.

صحيح مسلم 236 - وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ ح وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ - وَاللَّفْظُ لَهُ - حَدَّثَنَا أَبِى وَمُحَمَّدُ بْنُ عُبَيْدٍ كُلُّهُمْ عَنِ الأَعْمَشِ عَنْ أَبِى صَالِحٍ عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « اثْنَتَانِ فِى النَّاسِ هُمَا بِهِمْ كُفْرٌ الطَّعْنُ فِى النَّسَبِ وَالنِّيَاحَةُ عَلَى الْمَيِّتِ ».

இரண்டு காரியங்கள் மக்களிடம் உள்ளன. அவை இரண்டும் அவர்களை இறை மறுப்பில் தள்ளி விடும். பிறரது பாரம்பரியத்தைப் பழித்தல், இறந்தவர்களுக்காக ஒப்பாரி வைத்தல்  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள.  

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) 

நூல்: முஸ்லிம் 100

மூடத்தனமான காரியங்களைச் செய்யக்கூடாது

سنن أبي داود 3131 - حدَّثنا مُسدَّدٌ، حدَّثنا حميدُ بن الأسودِ، حدَّثنا حجاجٌ عاملُ عُمرَ ابن عبد العزيز على الرَّبَذَةِ، قال: حدَّثني أَسيد بن أبي أَسيد عن امرأةٍ من المبايعات، قالتْ: كان فيما أخذَ علينا رسولُ الله - صلى الله عليه وسلم - في المعروفِ الذي أخذ علينا أن لا نعصيَه فيه: أن لا نَخْمِشَ وجهاً، ولا ندعوَ ويْلاً، ولا نَشُقَّ جَيباً، ولا نَنشُرَ شعراً

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண்களிடம் உடன்படிக்கை எடுத்த போது, இவ்வுடன்படிக்கையை மீறக் கூடாது; துன்பத்தின் போது முகத்தில் கீறக் கூடாது; தீமையை வேண்டக் கூடாது; சட்டையைக் கிழிக்கக் கூடாது; தலை முடியை விரித்துப் போட்டுக் கொள்ளக் கூடாது  என்று உறுதிமொழி எடுத்தனர். 

நூல்: அபூ தாவூத் 2724

صحيح البخاري 1294 - حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا زُبَيْدٌ اليَامِيُّ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَ مِنَّا مَنْ لَطَمَ الخُدُودَ، وَشَقَّ الجُيُوبَ، وَدَعَا بِدَعْوَى الجَاهِلِيَّةِ»

கன்னத்தில் அறைந்து கொள்பவனும், சட்டைகளைக் கிழித்துக் கொள்பவனும், மூடத்தனமான வார்த்தைகளைப் பேசுபவனும் நம்மைச் சேர்ந்தவன் அல்லன்  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி)

நூல்: புகாரி 1294, 1297, 1298, 3519

மொட்டையடிக்கக் கூடாது

பொதுவாக ஒருவர் மொட்டை அடிப்பதற்கும், முடி வளர்ப்பதற்கும் மார்க்கத்தில் அனுமதி உள்ளது. ஆயினும் மரணத்திற்கு அடையாளமாக மொட்டை அடிப்பதற்கு அனுமதி இல்லை. கணவன் இறந்ததற்காக மனைவியும் தந்தை இறந்ததற்காக மகனும் மொட்டை அடிக்கும் வழக்கம் பலரிடம் காணப்படுகிறது. இதை முஸ்லிம்கள் தவிர்க்க வேண்டும்.

صحيح مسلم 299 - حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ وَإِسْحَاقُ بْنُ مَنْصُورٍ قَالاَ أَخْبَرَنَا جَعْفَرُ بْنُ عَوْنٍ أَخْبَرَنَا أَبُو عُمَيْسٍ قَالَ سَمِعْتُ أَبَا صَخْرَةَ يَذْكُرُ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ وَأَبِى بُرْدَةَ بْنِ أَبِى مُوسَى قَالاَ أُغْمِىَ عَلَى أَبِى مُوسَى وَأَقْبَلَتِ امْرَأَتُهُ أُمُّ عَبْدِ اللَّهِ تَصِيحُ بِرَنَّةٍ. قَالاَ ثُمَّ أَفَاقَ قَالَ أَلَمْ تَعْلَمِى - وَكَانَ يُحَدِّثُهَا - أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « أَنَا بَرِىءٌ مِمَّنْ حَلَقَ وَسَلَقَ وَخَرَقَ ».

அபூ மூஸா (ரலி) அவர்கள் கடுமையான வேதனைக்கு உள்ளாகி மூர்ச்சயைகி விட்டார். அவரது தலை அவரது மனைவியின் மடி மீது இருந்தது. அப்போது அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் அலறினார். அவருக்கு அபூ மூஸா அவர்களால் பதில் அளிக்க முடியவில்லை. மயக்கம் தெளிந்ததும்  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யாரை விட்டு நீங்கிக் கொண்டார்களோ அவர்களை விட்டு நானும் நீங்கிக் கொள்கிறேன். அலறுபவள், மொட்டை அடிப்பவள், ஆடைகளைக் கிழித்துக் கொள்பவள் ஆகியோரை விட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீங்கிக் கொண்டார்கள்  என்று கூறினார்கள். 

அறிவிப்பவர்: அபூ புர்தா (ரலி) 

நூல்: முஸ்லிம் 149

கவனிக்க ஆள் இல்லாத போது சிறுவர்களின் முடிகளைச் சரியாகப் பராமரிக்க முடியாது என்றால் அதற்காக மொட்டை அடிப்பது தவறல்ல என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளோம்.

சிரைத்தும் சிரைக்காமலும்

தலை முடியை மழிப்பது என்றால் தலை முழுவதும் மழிக்க வேண்டும். ஒரு பகுதியை மட்டும் மழித்துவிட்டு மற்ற பகுதியை மழிக்காமல் விடுவதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை.

தமிழகத்தின் சில பகுதிகளில் இரண்டு பக்கம் இரண்டு குடுமிகளை விட்டுவிட்டு மற்ற பகுதியைச் சிரைக்கும் வழக்கம் இருக்கிறது. அது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதாகும்.

سنن النسائي 5048 - أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، أَنْبَأَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَنْبَأَنَا مَعْمَرٌ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى صَبِيًّا حَلَقَ بَعْضَ رَأْسِهِ وَتَرَكَ بَعْضًا، فَنَهَى عَنْ ذَلِكَ، وَقَالَ: «احْلِقُوهُ كُلَّهُ أَوِ اتْرُكُوهُ كُلَّهُ»

ஒரு சிறுவரின் தலை ஒரு பகுதி சிரைக்கப்பட்டும் இன்னொரு பகுதி சிரைக்கப்படாமலும் இருந்ததை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். உடனே அதற்குத் தடை விதித்தார்கள். முழுமையாகச் சிரையுங்கள்; அல்லது முழுமையாக விட்டு விடுங்கள்  என்றும் கூறினார்கள். 

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) 

நூல்: நஸாயீ 4962, அஹ்மத் 5358

ஜனாஸாவை வாகனத்தில் சுமந்து செல்லலாமா?

ஜனாஸாவைப் பற்றிக் குறிப்பிடும் ஹதீஸ்களில் ஆண்கள் அதைத் தமது தோள்களில் சுமந்து சென்றால் என்பன போன்ற சொற்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

صحيح البخاري 1314 - حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ سَعِيدٍ المَقْبُرِيِّ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ أَبَا سَعِيدٍ الخُدْرِيَّ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " إِذَا وُضِعَتِ الجِنَازَةُ ، وَاحْتَمَلَهَا الرِّجَالُ عَلَى أَعْنَاقِهِمْ، فَإِنْ كَانَتْ صَالِحَةً، قَالَتْ: قَدِّمُونِي، وَإِنْ كَانَتْ غَيْرَ صَالِحَةٍ، قَالَتْ: يَا وَيْلَهَا أَيْنَ يَذْهَبُونَ بِهَا؟ يَسْمَعُ صَوْتَهَا كُلُّ شَيْءٍ إِلَّا الإِنْسَانَ، وَلَوْ سَمِعَهُ صَعِقَ "

1314 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உடல் (கட்டிலில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும் போது, அந்தப் பிரேதம் நல்லறங்கள் புரிந்ததாக இருக்குமானால் என்னை விரைந்து கொண்டு செல்லுங்கள் என்று கூறும். அது நல்லறங்கள் புரியாததாக இருக்குமானால் கைசேதமே! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள் என்று கூறும். இவ்வாறு கூறும் சப்தத்தை மனிதனைத் தவிர அனைத்தும் செவியுறும். மனிதன் அதைச் செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான். 
அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி)

நூல் : புகாரி 1314

எனவே தள்ளுவண்டியில் வைத்துத் தள்ளிச் செல்வதை விட தோளில் சுமந்து செல்வதே சிறப்பானதாகும்.

ஆயினும் சில சந்தர்ப்பங்களில் வாகனத்தில் தான் கொண்டு செல்ல வேண்டும் என்ற நிலை ஏற்படலாம். வெளியூரில் மரணித்தவரை சொந்த ஊருக்குக் கொண்டு செல்வதாக இருந்தால் தோளில் சுமந்து செல்வது சாத்தியமாகாது.

ஊரை விட்டு வெகு தொலைவில் அடக்கத்தலம் அமைந்திருந்தால் அவ்வளவு தூரம் தூக்கிச் செல்வது சிரமமாக அமையும்.

மேலும் தோளில் தூக்கிச் செல்லுங்கள் என்று கூறும் மேற்கண்ட ஹதீஸ் விரைவாகக் கொண்டு செல்ல வேண்டும் என்பதையும் சேர்த்து வலியுறுத்துகிறது.

நல்லடியார்களின் ஜனாஸாவாக இருந்தால் என்னைச் சீக்கிரம் கொண்டு செல்லுங்கள் என்று கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

எனவே அடக்கத்தலம் தூரமாக இருந்தால் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்களில் ஜனாசாவை எடுத்துச் சென்றால் தான் ஜனாஸாவின் விருப்பம் நிறைவேறும்.

மேலும் உடலைத் தூக்கி விட்டால் சீக்கிரம் கொண்டு போய் இறக்குங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளனர்.

கிலோ மீட்டர் கணக்கான தொலைவில் அடக்கத்தலம் இருந்தால் தோளில் தூக்கிச் செல்வது அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளும். ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்களில் எடுத்துச் சென்றால் சீக்கிரம் வந்துவிடலாம்.

மேலும் ஜனாஸாவைப் பின் தொடர்வதற்குச் சிறந்த நன்மைகள் உள்ளன. நீண்ட நேரம் நடக்கும் நிலை ஏற்பட்டால் பெரும்பாலானவர்களால் பின் தொடர்ந்து வர முடியாத நிலை ஏற்படலாம்.

இது போன்ற சந்தர்ப்பங்களில் அடக்கத்தலத்துக்கு நெருக்கமான தூரம் வரை ஜனாஸாவைக் கொண்டு சென்று அங்கிருந்து தோளில் சுமந்து சென்றால் அங்கிருந்து ஜனாஸாவை மக்கள் பின் தொடர்ந்து சென்று அந்த நன்மைகளையும் மக்கள் அடைந்து கொள்ள முடியும்.

மேலும் எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மேல் அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான் என்று அல்லாஹ் பல்வேறு வசனங்களில் அறிவுறுத்துவதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஜனாஸாவை வாகனத்தில் கொண்டுபோகும் போது நாம் எப்படி செயல்படுவது?

27/10/19 வாட்ஸ் அப் கேள்வி பதில்

இதை டவுன்லோடு செய்ய

ஜனாசாவை ஐஸ் பெட்டியில் வைக்கலாமா?
07/07/19 வாட்ஸ் அப் கேள்வி பதில்
இதனை டவுன்லோட் செய்ய

ஜனாஸாவை குளிர் சாதன பெட்டியில் வைத்தால் வேதனை அனுபவிக்கும் என்பது சரியா?

28/04/2020 ரமலான் மாத வாட்ஸ் அப் கேள்வி பதில்
இதனை டவுன்லோட் செய்ய

More Articles …