▶️பிறை பார்த்தல் முடிவை அறிவிக்கும் அதிகாரம் யாருக்கு?
பிறையை பார்த்தால் யார் அறிவிக்க வேண்டும்?
24/05/2021 சமகால நிகழ்வுகள்
பிறையை பார்த்தால் யார் அறிவிக்க வேண்டும்?
24/05/2021 சமகால நிகழ்வுகள்
அரஃபா நோன்பும் அரஃபா தினமும்
சமகால நிகழ்வுகள் மற்றும் வாட்ஸ் அப் கேள்வி பதில் 18/07/2021
பல வருடங்களுக்கான பிறையை முன்கூட்டியே கணித்து விடலாம் என்று சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
முன்கூட்டியே தலைப்பிறையைத் தீர்மானித்து விட்டால் எல்லோரும் ஒரே நாளில் பெருநாளை ஒன்றாகவும், அமைதியாகவும் கொண்டாடலாம் என்கிறார்கள்.
அதே போல் நபிகள் நாயகத்திற்கு இப்போதுள்ள அறிவியல் ஞானம் இல்லாததால் தான் பிறையைப் பார்த்து நாட்களை முடிவு செய்தார்கள் என்றும் கூறுகிறார்கள்.
நார்வே போன்ற நாட்டை உதாரணம் காட்டுகின்றனர். அங்கு வருடத்தில் ஆறு மாதங்கள் தொடர்ந்து பகலாக இருப்பதால் எப்படி பிறையைப் பார்த்து முடிவு செய்வார்கள்? என்றும் கேட்கின்றனர்.
ரஃபீக், நாகர்கோவில்.
பதில் :
மேற்கண்ட தவறான வாதங்களுக்கு ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் பதில் அளிக்கப்பட்டிருக்கின்றது. இவர்கள் தங்களுடைய கருத்தில் உண்மையாளர்களாக இருந்தால் நாம் எழுப்பிய கேள்விகளுக்கும் நாம் சுட்டிக்காட்டிய ஆதாரங்களுக்கும் தக்க பதிலை அளித்திருக்க வேண்டும். ஆனால் இவர்கள் அவ்வாறு செய்யவில்லை.
இனி இவர்கள் கூறியதாக மேலே நீங்கள் சுட்டிக்காட்டிய வாதங்கள் சரியா என்று ஆராய்வோம்.
பிறையைக் கணிப்பது ஏன் கூடாது?
நோன்பு என்பது ஒரு வணக்கம் ஆகும். வணக்க வழிபாடுகள் அனைத்தையும் அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் எந்த அடிப்படையில் காட்டித் தந்தார்களோ அந்த அடிப்டையிலேயே நாம் செயல்படுத்த வேண்டும். இதில் நம்முடைய மனோஇச்சையைப் பின்பற்றுதல் என்பது மார்க்கத்திற்கு மாற்றமான நடைமுறை ஆகும். இந்த அடிப்படையை முதலில் மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.
நபியவர்கள் பிறையைக் கண்களால் பார்த்து நோன்பை முடிவு செய்ய வேண்டும் என்றே கூறியுள்ளார்கள்.
صحيح البخاري
1900 – حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِذَا رَأَيْتُمُوهُ فَصُومُوا، وَإِذَا رَأَيْتُمُوهُ فَأَفْطِرُوا، فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَاقْدُرُوا لَهُ»
"அதை (பிறையை) நீங்கள் காணும் போது நோன்பு பிடியுங்கள். அதை காணும் போது நீங்கள் நோன்பை விட்டு விடுங்கள். உங்களுக்கு மேகமூட்டம் ஏற்பட்டால் (முப்பது நாட்களாக) எண்ணிக் கொள்ளுங்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : புகாரி 1900
صحيح البخاري
1909 – حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَوْ قَالَ: قَالَ أَبُو القَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صُومُوا لِرُؤْيَتِهِ وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ، فَإِنْ غُبِّيَ عَلَيْكُمْ فَأَكْمِلُوا عِدَّةَ شَعْبَانَ ثَلاَثِينَ»
"அதை (பிறையை) நீங்கள் காணும் போது நோன்பு பிடியுங்கள். அதைக் காணும் போது நீங்கள் நோன்பை விட்டு விடுங்கள். உங்களுக்கு மேகமூட்டம் ஏற்பட்டால் ஷஃபான் மாதத்தின் எண்ணிக்கையை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)
நூல் : புகாரி 1909
صحيح مسلم
2566 – حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ أَبِى هُرَيْرَةَ – رضى الله عنه – قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « إِذَا رَأَيْتُمُ الْهِلاَلَ فَصُومُوا وَإِذَا رَأَيْتُمُوهُ فَأَفْطِرُوا فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَصُومُوا ثَلاَثِينَ يَوْمًا »
"நீங்கள் பிறையைப் பார்த்து நோன்பு பிடியுங்கள்! பிறையைக் காணும் போது நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் முப்பது நாட்கள் நோன்பு பிடியுங்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம்
மேற்கண்ட ஹதீஸ்கள் பிறையைக் கண்களால் கண்டே நோன்பை முடிவு செய்ய வேண்டும் என்று கட்டளையிடுகின்றன.
பின்வரும் ஹதீஸ் பிறையைப் பார்க்காமல் முடிவு செய்யக் கூடாது என்று கட்டளையிடுகிறது. எனவே கண்களால் பிறை பார்க்க வேண்டும் என்பது மேலும் உறுதியாகிறது
صحيح البخاري
1906 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَكَرَ رَمَضَانَ فَقَالَ: «لاَ تَصُومُوا حَتَّى تَرَوُا الْهِلَالَ، وَلاَ تُفْطِرُوا حَتَّى تَرَوْهُ، فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَاقْدُرُوا لَهُ»
"பிறையைப் பார்க்காமல் நோன்பு பிடிக்காதீர்கள். பிறையைப் பார்க்காமல் நோன்பை விடாதீர்கள். உங்களுக்கு மேகமூட்டம் ஏற்பட்டால் (முப்பது நாட்களாக) எண்ணிக் கொள்ளுங்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : புகாரி 1906
பிறையைப் பார்க்காமல் நோன்பு நோற்கக் கூடாது என்று இந்த ஹதீஸ் மிகத் தெளிவாகக் கட்டளையிடுகிறது. எனவே தான் நபியின் கட்டளைப்படி (நம் விருப்பப்படி அல்ல) பிறையைப் பார்த்துத் தான் நோன்பு வைக்க வேண்டும்; பெருநாள் கொண்டாட வேண்டும். பிறையைக் கணிக்கக் கூடாது என்று கூறுகிறோம்.
மேலும் விபரத்துக்கு பிறை ஒரு ஆய்வு எனும் நமது நூலை வாசிக்கவும்.
ஒற்றுமை கோஷம்
பிறையை முன்கூட்டியே கணித்தால் எல்லோரும் ஒன்றாகவும், அமைதியாகவும் பெருநாள் கொண்டாட முடியும் என்ற வாதம் தவறானது. பிறையைக் கணிப்பது கூடாது என்று நபிமொழி தடை செய்கின்றது. எனவே பாவமான ஒரு காரியத்தில் சமுதாயத்தை ஒன்றுபடச் சொல்வதை ஏற்க முடியாது.
நமது பகுதியில் வேறுபட்ட நாட்களில் பெருநாள் கொண்டாடப்படுவதற்கு அவரவர் மனோ இச்சையின் அடிப்படையில் செயல்படுவதே காரணமாகும். நமது பகுதியில் பிறையைக் கண்ணால் பார்த்து முடிவு செய்ய வேண்டும் என்ற சரியான நிலைபாட்டிற்கு நாம் அனைவரும் வந்துவிட்டால் நமது பகுதியில் ஒரே நாளில் பெருநாள் நடைபெறும்.
இதற்கு மாற்றமாக சிலர் சவுதிப் பிறையையும் சிலர் சர்வதேச பிறையையும் சிலர் கணிப்பு அடிப்படையில் செயல்படுவாதாலே குழப்பமும் வேறுபாடும் ஏற்படுகின்றது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அறிவியல் அறிவு இல்லாத காரணத்தால் பிறையைக் கண்ணால் பார்த்தார்கள் என்று கூறி கணிப்பு முறையைத் திணிக்கப்பார்க்கிறார்கள்.
பிறையைக் கண்ணால் பார்க்க வேண்டும் என்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்ணால் பார்த்துத் தான் செயல்பட்டார்கள் என்ற வாதத்தை நாம் வைக்கவில்லை.
பிறையைக் கண்ணால் பார்த்தே முடிவு செய்ய வேண்டும். அதைக் கண்ணால் பார்க்காமல் முடிவு செய்யக் கூடாது என்ற உத்தரவை அவர்கள் கியாமத் நாள் வரைக்கும் வரும் உலக மக்களுக்கு இட்டுள்ளார்கள் என்பதே நமது வாதம்.
கண்ணால் பார்க்க வேண்டும் என்று நபியவர்கள் உத்தரவிட்ட பிறகு இங்கே கணிப்பைக் கொண்டு வந்தால் இறைத்தூதரின் உத்தரவு புறக்கணிக்கப்படும் நிலை ஏற்படுகிறது.
நபியவர்களுக்கு அறிவியல் அறிவு இல்லாத காரணத்தினால் தான் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்கள் என்று இவர்கள் கூறப் போகின்றார்களா? அப்படி இவர்கள் கூறினால் நிச்சயமாக இவர்கள் இறைவனையும் இறைத்தூதரையும் இழிவுபடுத்தியவர்களே.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மார்க்க அடிப்படையில் எந்த ஒரு கட்டளையை இட்டாலும் அது அவர்களின் சுயக்கருத்தல்ல. மாறாக அதுவும் இறைவனிடமிருந்து அவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டதே. நபியவர்களுக்கு அறிவியல் அறிவு இன்றி இவ்வாறு கூறிவிட்டார்கள் என்றால் அதன் பொருள் அல்லாஹ் அறிவியல் அறிவின்றி இவ்வாறு கூறிவிட்டான் என்பதாகும்.
நாம் வணங்குவதற்கு அல்லாஹ் ஒரு வழியைக் காட்டுகிறான். அவன் காட்டிய வழியில் தான் அவனை வணங்க வேண்டுமே தவிர நமது மனோ இச்சைப்படி வேறு வழிகளைத் தேர்வு செய்வது வழிகேடாகும். அப்படி இறைவன் காட்டிய வழியைப் புறக்கணித்து வேறு வழியைத் தேடினால் அந்த வணக்கத்தை இறைவன் ஏற்றுக்கொள்ளவே மாட்டான்.
மொத்தத்தில் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நடப்பதை விட்டுவிட்டு அவனுடைய அறிவில் குறைகண்டு அல்லாஹ்வுக்கே அறிவியலை கற்றுக் கொடுக்கும் நிலைக்கு வந்து விட்டார்கள். அல்லாஹ் பாதுகாப்பானாக,
நார்வே பிரச்சனை
பிறையைக் கணிக்கலாம் என்பதற்கு நார்வே போன்ற நாட்டை இவர்கள் குறிப்பிடுவதாகக் கூறினீர்கள். அந்நாட்டில் ஆறு மாத காலம் இரவு இன்றி பகலாக மட்டும் இருப்பதால் இங்கு இவர்களால் பிறையைக் கண்ணால் பார்க்க முடியாதே. கணிக்கத் தான் வேண்டும். எனவே நமது நாட்டிலும் பிறையைக் கணித்துக் கொள்ளலாம் என்பது இவர்களின் வாதம்.
அடிப்படையான அறிவு இல்லாத காரணத்தால் இந்த வாதத்தை முன்வைத்துள்ளனர்.
மார்க்க சட்டதிட்டங்கள் யாவும் அதைச் செயல்படுத்துவதற்குரிய சூழல் இருந்தால் மட்டுமே கடமையாகும். செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டால் அப்போது அதற்கேற்றவாறு வேறோரு வழிகாட்டலை மார்க்கம் கூறும். இந்த அடிப்படையை இவர்கள் விளங்கியிருந்தால் தங்களது தவறான கொள்கைக்கு நார்வேவை ஆதாரமாகக் காட்டியிருக்கமாட்டார்கள்.
உதாரணமாக பன்றி இறைச்சி உண்ணக்கூடாது என்று மார்க்கம் கூறுகின்றது. பன்றி இறைச்சியைத் தவிர வேறு எந்த உணவும் ஒருவருக்குக் கிடைக்காவிட்டால் அதை உண்ண அவருக்கு மார்க்கம் அனுமதிக்கின்றது. இப்போது அறிவிலியான இந்தக் கூட்டத்தினர் உணவு கிடைக்காதவர்கள் பன்றி இறைச்சியைத் தானே உண்ண முடியும். எனவே எல்லோரும் பன்றி இறைச்சியை உண்ணலாம் என்று கூறினால் அது எவ்வளவு பெரிய மடமைத்தனமோ அது போன்றே இவர்களின் இவ்வாதம் அமைந்திருக்கின்றது.
நம் நாடு உட்பட பெரும்பாலான நாடுகளில் பிறையைக் கண்ணால் பார்க்கும் சூழல் இருக்கின்றது. நார்வே மட்டும் ஆறுமாத காலம் இதற்கு விதிவிலக்காக இருக்கின்றது.
பிறை கண்ணுக்குத் தென்படும் சூழல் இருந்தாலே பிறையைக் கண்ணால் பார்க்க வேண்டும் என்ற சட்டம் வரும். பிறை கண்ணுக்குத் தெரியாவிட்டால் அப்போது என்ன செய்ய வேண்டும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே நமக்கு கூறிவிட்டார்கள்.
صحيح البخاري 1906 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَكَرَ رَمَضَانَ فَقَالَ: «لاَ تَصُومُوا حَتَّى تَرَوُا الْهِلَالَ، وَلاَ تُفْطِرُوا حَتَّى تَرَوْهُ، فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَاقْدُرُوا لَهُ»
"பிறையைப் பார்க்காமல் நோன்பு பிடிக்காதீர்கள். பிறையைப் பார்க்காமல் நோன்பை விடாதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் (முப்பது நாட்களாக) எண்ணிக் கொள்ளுங்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1906
பிறையைக் கண்ணால் பார்ப்பதற்கு மேகமூட்டம் குறுக்கிட்டால் முப்பது நாட்களாக எண்ணிக் கொள்ள வேண்டும் என்று இந்தச் செய்தியில் நபியவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.
நாளின் ஆரம்பம் பஜ்ருதான் என்பதை பீஜேயே ஒப்புக் கொண்டு விட்டார் என்று ஹிஜ்ரா கமிட்டி என்ற குழப்பவாதிகள் பரப்பி வருகின்றனர். அவர்கள் பரப்பும் செய்தி இது தான்.
துல்ஹஜ் மாதம் எட்டாம் நாள் அன்று மினா எனுமிடத்திற்குச் செல்ல வேண்டும். அன்றைய தினம் லுஹர், அஸர், மக்ரிப், இஷா ஆகிய தொழுகைகளையும், ஒன்பதாம் நாளின் பஜ்ரு தொழுகையையும் மினாவிலேயே நிறைவேற்ற வேண்டும்.
நூல்: முஸ்லிம் 2137 //நபி வழியில் ஹஜ் பக்கம்: 44
எட்டாம் நாளின் தொழுகை என "லுஹர், அசர், மக்ரிப், இஷா" என இந்த இடத்தில் பீஜே குறிப்பிட்டுள்ளார். மேலும் பஜ்ர் தொழுகைஅயிக் குறிப்பிடும் போது ஒன்பதாம் நாளின் "பஜ்ர்" எனக் குறிப்பிட்டு நாளின் ஆரம்பம் "பஜ்ர்" என்பதை அவரே ஒப்புக்கொள்கின்றார்.
இவ்வளவு தெளிவாக நேரடியாக முஸ்லிம் நூலின் 2137 எண் ஹதீஸை ஆதாரம் காட்டி எழுதியுள்ள பீ.ஜை. அவர்கள், தான் எழுதியுள்ளதற்கு நேர்முரணாக நாளின் ஆரம்பம் மக்ரிப் தான் என பக்கம் பக்கமா விளக்கம் கொடுத்து மக்களைக் குழப்புவது ஏன் எனப் புரியவில்லை.
இது தான் அவர்கள் எழுதிய விமர்சனம். இதன் உண்மைத் தன்மை என்ன?
ரஸ்மின் இலங்கை
பதில்:
ஹிஜ்ரா கமிட்டி என்ற பெயரில் செயல்படும் மூளை வரண்ட கூட்டத்தினருக்கு மார்க்கமும் தெரியவில்லை. விஞ்ஞானமும் தெரியவில்லை. அபத்தங்களின் தொகுப்பாக அவர்களின் வாதங்கள் அமைந்துள்ளன. இது குறித்து விவாதம் செய்ய அழைத்தால் பின்னங்கால் பிடரியில் பட ஓட்டம் எடுக்கின்றனர். பரேலவிகளும், பல ஆண்டுகள் போக்கு காட்டிய சைபுத்தீன் ரஷாதியும் கூட பகிரங்க விவாதத்துக்குத் தயாராக இருக்கும் போது இவர்கள் ஓட்டம் பிடிப்பதில் இருந்து இவர்களின் அறிவுத்திறனை அறிந்து கொள்ளலாம்.
இவர்கள் எந்த ஆதாரத்தைக் காட்டினாலும் அவை அனைத்துமே இவர்களுக்கு எதிராகவும், இவர்களின் அறியாமையைப் பறைசாற்றக் கூடியதாகவும் உள்ளன. இந்த விஷயமும் அந்தப் பட்டியலில் சேர்கின்றது.
மார்க்கத்தில் ஆதாரம் குர்ஆனும், ஹதீஸும் தான். பீஜே சொல்வது மார்க்க ஆதாரமாக ஆகாது. ஆனால் இந்தக் கும்பல் பீஜே சொல்லி விட்டார் என்று கூறி தங்கள் வாதத்தை நிறுவப் பார்க்கிறது.
பீஜே முஸ்லிம் நூலை மேற்கோள் காட்டி ஒரு கருத்தைக் கூறினால் அதை விமர்சிப்பவர்கள் என்ன செய்ய வேண்டும். முஸ்லிம் நூலை எடுத்துப் பார்த்து பீஜே சொன்ன கருத்தில் அது உள்ளதா என்று உறுதி செய்து கொண்டு வாதிட வேண்டும்.
நாளின் ஆரம்பம் பஜ்ரு என்று புகாரியில் ஒரு ஹதீஸ் உள்ளதாக பீஜே குறிப்பிட்ட்டார் என்று வைத்துக் கொள்வோம். அப்படி புகாரியில் இருந்தால் தான் நாளின் துவக்கம் பஜ்ரு என்பதற்கு பிஜேயே ஆதாரத்தை எடுத்து தந்து விட்டார் என்று வாதிடலாம்.
பீஜே சொன்னபடி புகாரியில் இல்லாவிட்டால் பிஜே தவறாகச் சொல்லி விட்டார் என்று தான் அதை எடுத்துக் கொள்ள வேண்டும். புகாரியில் உள்ளதாக பீஜே கூறிவிட்டதால் நாளின் துவக்கம் பஜ்ரு என்பது நிரூபணமாகி விட்டது என்று அறிவிலியைத் தவிர யாரும் சொல்ல மாட்டார்கள்.
இதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு இவர்களின் விமர்சனத்தை நாம் ஆய்வு செய்வோம்.
பீஜே முஸ்லிம் நூலை ஆதாரம் காட்டி எழுதியதால் தான் சரி காண்கிறோம் என்று இந்தக் கும்பல் கூற முடியாது. இந்தக் கும்பல் முஸ்லிம் நூலை எடுத்து வாசித்து ஒன்பதாம் நாள் பஜ்ரு என்று அந்த நூலில் உள்ளதா என்று பார்த்து உறுதி செய்து விட்டு இப்படி விமர்சிக்கவில்லை.
முதலில் முஸ்லிம் நூலில் உள்ளது என்ன என்பதையும், பீஜே மேற்கண்டவாறு கூறியது ஏன் என்பதையும் நாம் விரிவாக விளக்குவோம்.
صحيح مسلم
فَلَمَّا كَانَ يَوْمُ التَّرْوِيَةِ تَوَجَّهُوا إِلَى مِنًى فَأَهَلُّوا بِالْحَجِّ وَرَكِبَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- فَصَلَّى بِهَا الظُّهْرَ وَالْعَصْرَ وَالْمَغْرِبَ وَالْعِشَاءَ وَالْفَجْرَ
இது தான் முஸ்லிமில் உள்ள வாசகம். ஆலமியா இலக்கப்படி 2137 வது ஹதீஸாகவும், தமிழாக்கத்தில் உள்ள இலக்கப்படி 3009 வது ஹதீஸாகவும் இடம் பெறும் மிக நீண்ட ஹதீஸில் விவாதத்துக்கு உரிய அந்தப் பகுதி இது தான்.
எட்டாம் நாள் ஆன போது மினாவுக்குச் சென்றனர். லுஹர், அஸர், மக்ரிப், இஷா, பஜ்ர் ஆகிய தொழுகைகளைத் தொழுதனர்
என்று தான் மூலத்தில் உள்ளது.
அதாவது இந்த ஹதீஸில் ஒன்பதாம் நாளின் பஜ்ரு என்று கூறப்படவில்லை. நான்கு தொழுகைகளைக் கூறி விட்டு பஜ்ரைக் கூறும் போது ஒன்பதாம் நாள் பஜ்ர் என்றோ அடுத்த நாள் பஜ்ரு என்றோ கூறினால் தான் நாளின் ஆரம்பம் பஜ்ரு என்ற கருத்து வரும். அவ்வாறு கூறப்படாததால் இவர்கள் வாதிடும் கருத்து இந்த ஹதீஸில் இல்லவே இல்லை.
இன்னும் சொல்லப் போனால் நாளின் ஆரம்பம் எது என்று முடிவு செய்ய இதில் ஒன்றுமே இல்லை.
இந்த ஹதீஸில் பயன்படுத்தப்பட்டுள்ள வாசகத்தை வைத்து முடிவு செய்வதாக இருந்தால் லுஹர் தான் நாளின் ஆரம்பம் என்று கூற வேண்டும். ஏனெனில் எட்டாம் நாள் லுஹர் என்று துவங்கி பஜ்ர் வரை சொல்லப்படுகிறது. அதாவது லுஹரும் எட்டாவது நாள் தான். அசரும் எட்டாவது நாள் தான். மக்ரிபும் எட்டாவது நாள் தான். இஷாவும் எட்டாவது நாள் தான். பஜ்ரும் எட்டாவது நாள் தான் என்ற கருத்து தான் இந்த வாசகத்தில் உள்ளது. அடுத்த லுஹர் வந்தால் தான் மறு நாள் ஆரம்பமாகும் என்று தான் வாசக அமைப்பில் இருந்து தெரிய வருகிறது. எனவே லுஹர் தான் நாளின் ஆரம்பம் என்று இவர்கள் வாதிட்டால் இந்த ஹதீஸை ஏற்கும் விஷயத்தில் இவர்களை நேர்மையாளர்கள் எனலாம்.
இதை ஆதாரமாகக் காட்டும் வரட்டுக் கும்பல் இனிமேல் லுஹரில் இருந்து நோன்பை ஆரம்பிப்ப்பார்களா? அவ்வாறு ஆரம்பிக்க மாட்டார்கள் என்றால் இவர்கள் மேற்கண்ட ஹதீஸை மறுக்கிறார்கள் என்பது உறுதி.
நம்முடைய கருத்துப்படியும், உலக முஸ்லிம்கள் கருத்துப்படியும் பார்த்தால் லுஹர், அஸர் ஒரு நாளாகவும், மக்ரிப், இஷா, பஜ்ர் மறு நாளாகவும் உள்ளது. ஹிஜ்ரா கும்பலின் கருத்துப்படி லுஹர், அஸர், மக்ரிப், இஷா ஆகியவை ஒரு நாளாகவும், பஜ்ரு மறு நாளாகவும் உள்ளது. இரண்டு நாட்களுக்கு உரிய தொழுகைகளைக் குறிப்பிடும் போது எட்டாம் நாள் என்ற வார்த்தையால் ஜாபிர் (ரலி) குறிப்பிட்டுள்ளார்.
வரட்டு ஹிஜ்ரா கும்பலின் வாதப்படி பார்த்தாலும் அப்போதும் இதில் இரண்டு நாட்கள் உள்ளன. இரண்டு நாட்கள் தான் ஒரு நாளாக சொல்லப்பட்டுள்ளது. இந்தக் கும்பலின் வாதப்படி லுஹர், அஸர், மக்ரிப், இஷா ஆகியன எட்டாம் நாளுக்கு உரியதாகவும், பஜ்ர் ஒன்பதாம் நாளுக்கு உரியதாகவும் உள்ளன. ஆனால் அனைத்தும் எட்டாம் நாள் என்ற சொல்லுக்குள் அடக்கப்பட்டுள்ளன.
நம்முடைய வாதப்படியும், வரட்டு கும்பலின் வாதப்படியும் இரண்டு நாட்களைக் கொண்ட கால அளவு எட்டாம் நாள் என்ற ஒரு நாளின் பெயரால் சொல்லப்பட்டுள்ளது என்று ஆகின்றது. இது நாளின் துவக்கம் பஜ்ர் என்பதற்கோ, மக்ரிப் என்பதற்கோ ஆதாரமாக ஆகாது.
பிறகு ஏன் அறிவிப்பாளர் இப்படிச் சொல்ல வேண்டும்? இதன் விடை மிக எளிதானது.
மனிதர்களின் பேச்சு வழக்கில் ஒரு நாளில் ஆரம்பித்து மறு நாள் வரை தொடரும் செயல்களை முதல் நாளுக்குரியது போல் பேசுவது வழக்கத்தில் உள்ளது.
எட்டாம் தேதி பகலிலும், பின்னர் இரவிலும், பின்னர் காலையிலும் சாப்பிட்டேன் என்று ஒருவர் கூறினால் மறுநாள் காலையை முதல் நாளில் சேர்த்து விட்டார் எனக் கூற மாட்டோம்.
வெள்ளிக்கிழமை ஜும்மாவையும், அஸரையும், மக்ரிபையும், இஷாவையும், பஜரையும் தொழுதேன் என்று கூறினாலும் அதுவும் இதே போன்றது தான்.
பேச்சு வழக்கில் ஜாபிர் அவர்கள் இப்படிக் கூறியதால் தான் இரண்டு நாட்களில் நடக்கும் செயலை ஒரு நாளுக்குரியது போல் சொல்கிறார்.
எனவே இதை வைத்து உளறி மாட்டிக் கொள்ளாமல் நாளின் ஆரம்பம் மஃரிப் தான் என்பதற்கு பீஜே நேரடியாக எடுத்துக்காட்டிய ஆதாரங்களை விமர்சிப்பவர்கள் பார்க்கட்டும்.
பொதுவாக நடைமுறையில் நள்ளிரவுக்குப் பின் மறுநாள் என்று குறிப்பிடுவது தான் தமிழகத்தில் வழக்கமாக உள்ளது. ஆங்கிலேயர்களின் இந்த வழிமுறையில் தான் நம்முடைய பேச்சுக்கள் அமைந்துள்ளன. பீஜே ஒன்பதாம் நாள் என்று குறிப்பிட்டதும் இதே பேச்சு வழக்கில் தான். வரட்டு ஹிஜ்ரா கூட்டத்தின் உளறல்கள் இல்லாத காலத்தில் இது சரியாகப் புரிந்து கொள்ளப்பட்டது.
இப்போது கூறுகெட்ட குழப்பவாதிகள் நாளின் ஆரம்பம் பஜ்ரு என்று கண்டுபிடித்துள்ளதால் இவர்களுக்கு இடம் தரக் கூடாது என்பதற்காக ஒன்பதாம் நாள் என்று பேச்சு வழக்கில் சேர்த்ததை நீக்கி விட்டோம்.
நாம் எழுதியது எதுவாக இருந்தாலும் இந்தக் கும்பல் பீஜே சொல்லைத் தான் ஆதாரமாக்க் காட்ட நினைக்கிறதே தவிர ஹதீஸில் அப்படி உள்ளதா என்று பார்க்கும் அளவுக்கு கூட மூல மொழியில் தேடும் அறிவு இல்லை.
صحيح البخاري
1907 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ لَيْلَةً، فَلاَ تَصُومُوا حَتَّى تَرَوْهُ، فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَأَكْمِلُوا العِدَّةَ ثَلاَثِينَ»
மாதத்திற்கு இருபத்தி ஒன்பது நாட்களாகும். எனவே பிறையைக் காணாமல் நோன்பு பிடிக்காதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் எண்ணிக்கையை முப்பதாக முழுமைப்படுத்துங்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 1907
இந்த நபிமொழியும் தலைப்பிறையைத் தீர்மானிப்பதற்குரிய ஆதாரங்களில் முக்கியமானதாகத் திகழ்கிறது.
இந்த நபிமொழியின் கருத்துப்படி எந்த மாதத்துக்கும் 28 நாட்களோ அல்லது 31 நாட்களோ இருக்க முடியாது. மாதத்தின் குறைந்த பட்ச அளவு 29 நாட்கள்; அதிகபட்ச அளவு 30 நாட்கள்; இதைத் தவிர வேறில்லை.
நோன்பின் எண்ணிக்கை 29ஐ விடக் குறைவாகவோ, 30ஐ விட அதிகமாகவோ இருக்கக் கூடாது என்பதை மேற்கண்ட நபிமொழி கூறுகிறது.
ரமளான் மாதம் 28 நோன்பு என்று யாரும் கூறுவது கிடையாதே என்று சிலர் கேட்கலாம். நேரடியாக இவ்வாறு யாருமே கூறுவதில்லை. ஆனால் சிலர் எடுக்கும் முடிவு 28 நோன்பு என்ற நிலையை உருவாக்குகிறது. ஒருவர் எடுக்கும் ஒரு முடிவின் காரணமாக ரமளான் மாதத்துக்கு 28 நோன்பு என்ற நிலை வருமானால் அல்லது 31 நோன்பு என்ற நிலை ஏற்படுமானால் நிச்சயமாக அந்த முடிவு தவறான முடிவாகத் தான் இருக்க முடியும்.
மாதத்துக்கு 28 நோன்பு என்ற நிலையை ஏற்படுத்தும் ஒரு முடிவை யாரேனும் நியாயப்படுத்தினால் அவர் மேற்கண்ட ஆதரப்பூர்வமான நபிமொழியை மறுத்தவராவார்.
உலகமெல்லாம் ஒரே நாளில் ஒரே நேரத்தில் தான் மாதம் பிறக்கிறது என்று சிலர் வாதிடுவதை முன்னர் குறிப்பிட்டுள்ளோம். இவர்களது வாதப்படி சில பகுதிகளுக்கு 28 நோன்பு என்ற நிலை ஏற்படும்.
உதாரணமாக சவூதியில் ஜனவரி முதல் தேதியன்று மாலை 7 மணிக்கு தலைப்பிறையைப் பார்க்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். உலகம் முழுவதற்கும் அது தான் தலைப்பிறை என்ற வாதத்தின் படி ஏற்படும் விளைவைப் பார்ப்போம்.
சவூதியில் 7 மணியாக இருக்கும் போது லண்டனில் மாலை நான்கு மணியாக இருக்கும். அதாவது லண்டனில் மாலை நான்கு மணிக்கு ரமளான் துவங்குகிறது.
இவர்களின் வாதப்படி ரமளான் மாதத்தின் பகல் நேரத்தை லண்டன் மக்கள் அடைந்து விட்டதால் நான்கு மணி முதல் சூரியன் மறையும் வரை நோன்பு நோற்க வேண்டும் என்று தான் கூறியாக வேண்டும். ஆனால் உலகமெல்லாம் ஒரே நேரத்தில் தலைப்பிறை ஆரம்பமாகும் என்று வாதிடக் கூடியவர்கள் கூட இவ்வாறு கூற மாட்டார்கள்.
மேலும் அவ்வாறு கூறுவதற்கு ஹதீஸ்களிலும் தடை உள்ளது.
سنن النسائي
2331 – أَخْبَرَنِي الْقَاسِمُ بْنُ زَكَرِيَّا بْنِ دِينَارٍ، قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ شُرَحْبِيلَ، قَالَ: أَنْبَأَنَا اللَّيْثُ، عَنْ يَحْيَى بْنِ أَيُّوبَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ حَفْصَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ لَمْ يُبَيِّتِ الصِّيَامَ قَبْلَ الْفَجْرِ، فَلَا صِيَامَ لَهُ»
நோன்பு பிடிக்கும் முடிவை யார் இரவிலேயே எடுக்கவில்லையோ அவருக்கு நோன்பு இல்லை'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஹஃப்ஸா (ரலி) நூல்: நஸயீ
எனவே லண்டனில் நான்கு மணியை அடைந்தவர் பிறை தோன்றுமா தோன்றாதா என்பது தெரியாத நிலையில் கடந்த இரவே நோன்பு நோற்பதாகத் தீர்மானம் செய்திருக்க முடியாது.
இவர்களின் வாதப்படி நான்கு மணிக்கு லண்டன்வாசி ரமளானை அடைந்து விட்டார். ஆனாலும் இந்த நோன்பை அவர் நோற்கத் தேவையில்லை என்ற முடிவைத் தான் கூற வேண்டி வரும். அதாவது ரமளானை அவர் அடைந்தும் நோன்பு நோற்காத நிலை அவருக்கு ஏற்படுகிறது. இதனால் யார் ரமளானை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்கட்டும் என்ற திருக்குர்ஆன் வசனம் மீறப்படுகிறது.
இப்படியே 29 நாட்கள் கழிகின்றன. 29ல் மாதம் முடிந்து அன்று இரவு சவூதியில் ஷவ்வால் பிறை தோன்றி விட்டது. இந்த நேரத்தில் லண்டன் மக்கள் மாலை நான்கு மணியை அடைந்திருப்பார்கள்.
இவர்கள் வாதப்படி மாலை நான்கு மணிக்கு ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறையை லண்டன் மக்கள் அடைந்து விட்டார்கள். அதாவது நோன்புப் பெருநாள் தினத்தை அவர்கள் அடைந்து விட்டார்கள். நோன்புப் பெருநாளில் நோன்பு நோற்பது ஹராம் என்பதை அனைவரும் அறிவோம்.
எனவே அவர்கள் நான்கு மணிக்கு நோன்பை முறித்து விட வேண்டும். அதாவது 29வது நோன்பை முறித்து விட வேண்டும். இந்தக் கணக்குப்படி 28 நோன்பு தான் இவர்கள் நோற்றுள்ளனர்.
லண்டனை உதாரணம் காட்டுவதை விட சவூதியில் மாலை ஏழு மணியாக இருக்கும் போது காலை ஏழு மணியாக உள்ள ஊரை உதாரணத்துக்கு எடுத்துக் கொண்டால் இதன் விபரீதம் இன்னும் தெளிவாக இருக்கும்.
மாலை 7 மணிக்கு சவூதியில் ரமளான் பிறை பார்த்து அறிவித்து விட்டார்கள். இவர்களின் வாதப்படி அந்த நேரத்தில் முழு உலகுக்கும் ரமளான் பிறந்து விட்டது.
சவூதியில் மாலை 7 மணியாக இருக்கும் போது அங்காரா (அமெரிக்கா) பிரதேசத்தார் காலை ஏழு மணியை அடைந்திருப்பார்கள். அதாவது இவர்கள் ரமளானின் முதல் நாள் பகலை அடைந்து விட்டனர். மேலே நாம் குறிப்பிட்ட சுப்ஹுக்கு முன்னர் நிய்யத் அவசியம் என்ற ஹதீஸின் படி இவர்கள் அன்று நோன்பு நோற்க முடியாது. சுப்ஹுக்குப் பின்னர் தான் அவர்கள் ரமளானை அடைகிறார்கள்.
இவர்களின் வாதப்படி, ரமளான் பிறந்திருந்தும் உண்டு, பருகி இவர்கள் மகிழ்வார்கள். யார் ரமளானை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்கட்டும் என்ற வசனத்தை அப்பட்டமாக மீறிக் கொண்டிருக்கும் மாபெரும் குற்றத்தைச் செய்து கொண்டிருப்பார்கள்.
இப்படியே 29ஆம் நாள் முடிந்து 30ஆம் இரவு வருகிறது. அந்த இரவு ஏழு மணிக்கு தலைப்பிறை சவூதியில் தெரிந்து விடுகிறது. சவூதிக்காரர்களுக்கு பிரச்சனை இல்லை. அமெரிக்காவின் நிலை என்ன? அவர்கள் இந்த நேரத்தில் 29ஆம் நாள் நோன்பைப் பிடித்து சுப்ஹு தொழுதுவிட்டு வெளியே வருவார்கள். இப்போது அரை மணி நேரத்துடன் நோன்பை விட்டு விட்டு பெருநாள் தொழுகைக்குச் சென்றுவிட வேண்டும். 28 நோன்பை முடித்தவுடன் இவர்களுக்குப் பெருநாள் வந்து விட்டது.
குறைந்த பட்சம் 29 நோன்புகள் நோற்க வேண்டும் என்ற நபிமொழிக்கு மாற்றமான நிலை இங்கே ஏற்படுகிறது நாம் பார்த்த பிறை முழு உலகையும் கட்டுப்படுத்தும் என்று கூறினால் உலகின் பல பகுதியினர் 28 நோன்பு தான் பிடிக்க முடியும். ஏதோ தவறுதலாக எப்போதோ 28 நோன்பு பிடிப்பது போன்றதாக இதை எடுத்துக் கொள்ள முடியாது. எந்த மாதம் 29 நாட்களுடன் முடிகின்றதோ அந்த மாதங்களில் காலமெல்லாம் இந்தத் தவறை உலகில் பாதிப்பேர் செய்து கொண்டிருப்பார்கள்.
உலகமெங்கும் ஒரே நாளில் தான் நோன்பு எனவும், ஓர் ஊரிலிருந்து பிறை பார்த்த தகவல் கிடைத்தால் எல்லா ஊர்களுக்கும் பிறை பிறந்து விட்டதாகப் பொருள் எனவும் வாதம் புரிவோர் தங்கள் வாதத்தின் காரணமாக 28 நோன்பு என்ற நிலையை ஏற்படுத்துகிறார்கள்.
இவர்கள் செய்திருக்கும் இந்த முடிவு நாம் எடுத்துக் காட்டிய நபிமொழிக்கு மட்டும் தானா முரணாக இருக்கிறது? வேறு பல சட்டச் சிக்கல்களையும் இவர்களது முடிவு ஏற்படுத்தி விடுகின்றது.
அங்காராவில் காலை ஏழு மணியை அடையும் மக்கள் சவூதியில் ரமளான் பிறை தென்பட்டதால் ஏழு மணி முதல் நோன்பைத் துவக்குவதா?
சுபுஹுக்கு முன்பே ரமளானைத் தீர்மானிக்காதவருக்கு நோன்பு இல்லை என்பதால் நோன்பை விட்டுவிடுவதா?
இது விடுபட்ட நோன்பா? அல்லவா?
அப்படியானால் அதைக் களாச் செய்ய வேண்டுமா?
களாச் செய்ய வேண்டும் என்றால் அவர்கள் தான் சுபுஹ் நேரத்தில் ரமளானை அடையவில்லையே? அவர்கள் ஏன் களாச் செய்ய வேண்டும்?
என்றெல்லாம் குழப்பத்துக்கு மேல் குழப்பம்.
அதே போல் ரமளான் இறுதி நாள் என்று நினைத்துக் கொண்டு அங்காராவில் வாழ்பவர் நோன்பு நோற்கிறார். காலை ஏழு மணியை இவர் அடையும் போது பெருநாள் பிறை பிறந்து விட்டது என்று சவூதியில் அறிவிக்கப்பட்டால் இப்போதும் அதே குழப்பம்.
எனவே ஒரு பகுதியில் பிறை பார்த்தால் அந்த நிமிடமே உலகம் முழுவதும் ரமலான் ஆரம்பமாகி விடும் என்ற கருத்து மேற்கண்ட நபிமொழியின் கருத்துக்கு எதிரானதாகும்.
இன்னொரு அடிப்படையான விஷயத்தையும் நாம் சுட்டிக் காட்ட வேண்டும்.
ஒரு நாள் என்று சொன்னால் அதற்கு ஆரம்ப நேரம் ஒன்று இருக்க வேண்டும்; முடிவு நேரம் ஒன்று இருக்க வேண்டும்.
உதாரணமாக, ஆங்கில நாள் என்பது நள்ளிரவு 12 மணியைத் தாண்டியவுடன் ஆரம்பமாகிறது. நமது ஊரில் நள்ளிரவு 12 மணியைத் தாண்டியவுடன் உலக மக்கள் அனைவரும் மறு நாளில் நுழைந்து விட்டார்கள் என்று கூற முடியாது. அப்படிக் கூறினால் ஒவ்வொருவருக்கும் நாளின் துவக்கம் வெவ்வேறாக அமைந்து விடும்.
ஒரு நாளுக்கு 24 மணி நேரம் என்பதும் இல்லாமல் போய் விடும்.
எனவே சவூதியில் பிறை பார்த்தவுடன் அவர்களுக்கு நாள் மாறி விட்டது என்பது உண்மை! இதன் காரணமாக அமெரிக்காவிலும் நாள் மாறி விட்டது என்று கூறினால் அவர்களுக்குக் காலையிலிருந்து நாள் ஆரம்பமாகும் நிலை ஏற்படும். மேலும் முதல் நாளில் அவர்களுக்கு 12 மணி நேரம் தான் கிடைக்கும்.
எனவே எந்த ஊரில் பிறை பார்க்கப்பட்டதோ அவர்களுக்குத் தான் நாள் துவங்குகிறது என்று கூறினால் இந்தக் குழப்பம் ஏற்படாது.
தலைப்பிறையைத் தீர்மானிப்பது குறித்த ஆதாரங்களில் கீழ்க்கண்ட ஹதீஸும் முக்கியமான பங்கு வகிக்கின்றது.
صحيح مسلم
2580 – حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى وَيَحْيَى بْنُ أَيُّوبَ وَقُتَيْبَةُ وَابْنُ حُجْرٍ قَالَ يَحْيَى بْنُ يَحْيَى أَخْبَرَنَا وَقَالَ الآخَرُونَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ – وَهُوَ ابْنُ جَعْفَرٍ – عَنْ مُحَمَّدٍ – وَهُوَ ابْنُ أَبِى حَرْمَلَةَ – عَنْ كُرَيْبٍ أَنَّ أُمَّ الْفَضْلِ بِنْتَ الْحَارِثِ بَعَثَتْهُ إِلَى مُعَاوِيَةَ بِالشَّامِ قَالَ فَقَدِمْتُ الشَّامَ فَقَضَيْتُ حَاجَتَهَا وَاسْتُهِلَّ عَلَىَّ رَمَضَانُ وَأَنَا بِالشَّامِ فَرَأَيْتُ الْهِلاَلَ لَيْلَةَ الْجُمُعَةِ ثُمَّ قَدِمْتُ الْمَدِينَةَ فِى آخِرِ الشَّهْرِ فَسَأَلَنِى عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ – رضى الله عنهما – ثُمَّ ذَكَرَ الْهِلاَلَ فَقَالَ مَتَى رَأَيْتُمُ الْهِلاَلَ فَقُلْتُ رَأَيْنَاهُ لَيْلَةَ الْجُمُعَةِ. فَقَالَ أَنْتَ رَأَيْتَهُ فَقُلْتُ نَعَمْ وَرَآهُ النَّاسُ وَصَامُوا وَصَامَ مُعَاوِيَةُ. فَقَالَ لَكِنَّا رَأَيْنَاهُ لَيْلَةَ السَّبْتِ فَلاَ نَزَالُ نَصُومُ حَتَّى نُكْمِلَ ثَلاَثِينَ أَوْ نَرَاهُ. فَقُلْتُ أَوَلاَ تَكْتَفِى بِرُؤْيَةِ مُعَاوِيَةَ وَصِيَامِهِ فَقَالَ لاَ هَكَذَا أَمَرَنَا رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم–
உம்முல் ஃபழ்ல் (ரலி) அவர்கள் என்னை சிரியாவிலிருந்த முஆவியா (ரலி) அவர்களிடம் அனுப்பி வைத்தனர். நான் சிரியாவுக்குச் சென்று அவரது வேலையை முடித்தேன். நான் சிரியாவில் இருக்கும் போது ரமளானின் தலைப்பிறை தென்பட்டது. வெள்ளிக்கிழமை இரவு நான் பிறையைப் பார்த்தேன். பின்னர் அம்மாதத்தின் கடைசியில் மதீனாவுக்கு வந்தேன். இப்னு அப்பாஸ் (ரலி) என்னிடம் (பயணம் குறித்து) விசாரித்தார்கள். பின்னர் பிறையைப் பற்றி பேச்சை எடுத்தார்கள். நீங்கள் எப்போது பிறையைப் பார்த்தீர்கள்?'' என்று (என்னிடம்) கேட்டார்கள். நாங்கள் வெள்ளிக்கிழமை இரவில் பிறையைப் பார்த்தோம்'' என்று கூறினேன். நீயே பிறையைப் பார்த்தாயா?'' என்று கேட்டார்கள். ஆம், (நான் மட்டுமல்ல) மக்களும் பார்த்தார்கள். நோன்பு பிடித்தார்கள். முஆவியா (ரலி) அவர்களும் நோன்பு பிடித்தார்கள்'' என்று கூறினேன். அதற்கவர்கள் ஆனால் நாங்கள் சனிக்கிழமை இரவில் தான் பிறையைப் பார்த்தோம். எனவே நாங்கள் (மறு) பிறையைப் பார்க்கும் வரை அல்லது முப்பது நாட்களை முழுமையாக்கும் வரை நோன்பு பிடித்துக் கொண்டிருப்போம்'' என்றார்கள். முஆவியா (ரலி) அவர்கள் பிறை பார்த்ததும் அவர்கள் நோன்பு பிடித்ததும் உங்களுக்குப் போதாதா?'' என்று கேட்டேன். அதற்கவர்கள், போதாது! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படித் தான் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்'' என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: குரைப் நூல்: முஸ்லிம்
இது வரை எடுத்துக் காட்டிய ஆதாரங்களுடன் தொடர்புடையதாக உள்ளதால் இங்கே இந்த ஹதீஸை இடம் பெறச் செய்துள்ளோம்.
தானும் பிறை பார்த்து முஆவியாவும் பார்த்து மக்களும் பார்த்த விபரத்தை குரைப் கூறுகிறார். இதற்குப் பிறகும் இப்னு அப்பாஸ் (ரலி) ஏற்க மறுக்கிறார்கள். எங்கள் பகுதியில் பிறையை நாங்கள் காண வேண்டும். இல்லாவிட்டால் முப்பது நாட்கள் என்று முடிவு செய்து கொள்வோம் என்று விடையளிக்கிறார்கள்.
இவ்வளவு பேர் பார்த்திருக்கிறோமே அது போதாதா என்று கேட்டதற்கு போதாது என்று விடையளித்து விட்டு இப்படித் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டனர் எனக் காரணத்தைக் கூறுகிறார்கள்.
சிரியாவை விட அருகில் உள்ள ஊரிலிருந்து வந்த பயணக் கூட்டத்தின் தகவலையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்கவில்லை என்பதை முன்னர் கண்டோம். அதை ஒட்டியே இந்த ஹதீஸ் அமைந்துள்ளது.
அத்துடன் இது வரை நாம் எடுத்துக் காட்டிய அனைத்து ஆதாரங்களுடனும் இது ஒத்துப் போகும் வகையில் அமைந்துள்ளது.
சவூதி பிறைக்கு வக்காலத்து வாங்குபவர்களுக்கு இந்த ஹதீஸ் தெளிவான மறுப்பாக அமைந்துள்ளது. இதையும் எப்படியாவது மறுத்தாக வேண்டும் என்று மல்லுக்கட்டிக் கொண்டு மறுக்கின்றார்கள். இந்த ஹதீஸுக்கு அவர்கள் கூறும் விளக்கத்தைப் பார்க்கும் போது இவர்கள் உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தான் உள்ளார்களா என்ற சந்தேகம் ஏற்படுகின்றது.
இந்த ஹதீஸுக்கு இவர்கள் கூறும் விளக்கத்தைப் பாருங்கள்.
* இந்தச் செய்தியில் குரைப் (ரலி) அவர்கள் பிறை கண்டதாக சாட்சி கூறவில்லை. மாறாகத் தம்மிடம் பிறை பற்றித் துருவித் துருவிக் கேட்ட இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்குத் தாம் சிரியாவில் என்றைக்கு முதல் பிறை கண்டோம் என்பதைத் தெரிவிக்கிறார்கள். இது அவ்விருவருக்கும் இடையில் நடந்த உரையாடல்கள் தானே தவிர பிறை கண்ட சாட்சியுரை அல்ல.
குரைப் வந்து சாட்சி சொல்லவில்லை. அதனால் தான் இப்னு அப்பாஸ் (ரலி) ஏற்றுக் கொள்ளவில்லை. அதுவும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் துருவித் துருவிக் கேட்டதால் தான் குரைப் இதைக் கூறினார் என்கிறார்கள். இவர்கள் என்ன சொல்ல வருகின்றார்கள்?
பிறை தெளிவாகத் தெரிந்தாலும் சாட்சி என்ற வார்த்தையைப் பயன்படுத்தினால் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார்களா? இது உரையாடல் என்பதால் சிரியாவில் பிறை பார்த்தது பொய் என்று சொல்கின்றார்களா?
இவர்களது இந்த விளக்கத்தின் அடிப்படையில் யாராவது வந்து சாட்சி சொன்னால் தான் ஏற்க வேண்டும்.
ஆனால் இவர்கள் ஆண்டு தோறும் சவூதிப் பிறையை அறிவிக்கிறார்களே சவூதி மன்னர் வந்து, நானே பார்த்தேன்' என இவர்களிடம் சாட்சி சொன்ன பிறகு தான் அறிவிக்கின்றார்களா?
இப்னு அப்பாஸ் (ரலி) துருவித் துருவிக் கேட்டார் என்று கிண்டலாகக் கூறியுள்ளார்கள். எதற்காக துருவித் துருவிக் கேட்கிறார்? நேரம் போகாமலா? வெளியூர் தகவல் குறித்த ஒரு சட்டத்தைக் கூறுவதற்காகத் தான் இப்னு அப்பாஸ் (ரலி) கேட்கிறார்கள். இவர்கள் மட்டும் சவூதிக்கு போனுக்கு மேல் போனைப் போட்டு துருவித் துருவித் தானே கேட்கிறார்கள். அதை ஏன் ஏற்க வேண்டும்?
மேலும் இந்த ஹதீஸுக்கு மூளையுள்ள யாரும் ஏற்றுக் கொள்ளாத விளக்கம் தந்து புல்லரிக்க வைக்கிறார்கள்.
* முதல் நாள் இரவிலேயே தகவல் கிடைத்திருந்தால் இப்னு அப்பாஸ் (ரலி) அதைச் செயல்படுத்தியிருப்பார்கள். தற்போது 20 நாட்களுக்கு மேல் கடந்து விட்ட நிலையில் எதுவும் செய்ய இயலாது. எனவே அதைப் பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்ற அடிப்படையில் தான் நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றுப்படி பிறை கண்டு நோன்பை விடுவோம் என்று கூறுகின்றார்கள். தொலை தூர நாடுகளிலிருந்து தகவல் பெறுவதற்கேற்ற தொலைத் தொடர்பு சாதனங்கள் இல்லாத காரணத்தால் அந்தச் சூழ்நிலையில் அப்படிச் சொல்ல நேரிட்டது.
ஒரு ஹதீஸை இவர்கள் எப்படியெல்லாம் தங்கள் இஷ்டத்திற்கு வளைக்கிறார்கள். என்னவெல்லாம் சுய விளக்கம் கொடுக்கிறார்கள் என்பதற்கு இந்த உதாரணம் ஒன்றே போதும்.
அந்த ஹதீஸை நன்றாகப் படித்துப் பாருங்கள்!
மதீனாவை விட சிரியாவில் ஒரு நாள் முன்னதாக பிறை பார்த்திருக்கிறார்கள். சிரியாவில் முப்பது நாட்களைப் பூர்த்தி செய்யும் போது மதீனவில் 29 நாட்கள் தான் பூர்த்தியாகியுள்ளது. சிரியாவில் பெருநாள் என்று உறுதியாகத் தெரிந்த பின்னரும் இப்னு அப்பாஸ் (ரலி) அதை ஏற்றுக் கொள்ளாமல், எங்களுக்கு 29 நாட்கள் தான் ஆகிறது. எனவே நாங்கள் பிறையைப் பார்க்கும் வரை அல்லது முப்பது நாட்கள் பூர்த்தியாகும் வரை நோன்பு நோற்போம்' என்று கூறுகின்றார்கள்.
சிரியாவில் முஆவியா (ரலி) பிறை பார்த்ததன் அடிப்படையில் முப்பது நாட்கள் பூர்த்தியாகி விட்டதே! அதை ஏன் நீங்கள் ஏற்கக் கூடாது?' என்று குரைப் கேட்கிறார்.
சிரியாவில் பிறை பார்த்தது எங்களுக்குப் போதாது. இப்படித் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்' என்று கூறுகிறார்கள்.
இந்த ஹதீஸை சாதாரணமாகப் படிப்பவர்களுக்குக் கூட இந்த விளக்கம் புரியும். ஆனால் தங்கள் முடிவுக்கு வேட்டு வைக்கக்கூடிய ஹதீஸ் என்பதால் சிலர் புரியாதது போல் நடிக்கிறார்கள். அல்லது தெளிவாகத் தெரிந்தும் வேண்டுமென்றே மக்களைக் குழப்புகின்றார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அந்தத் தகவலை ஏற்காதது மட்டுமின்றி அதற்கான காரணத்தையும் கூறுகின்றார்கள். நாங்களே பார்க்க வேண்டும் அல்லது முப்பது நாட்களாகப் பூர்த்தி செய்வோம் என்பதே அந்தக் காரணம்! முதல் நாள் இரவில் இத்தகவல் வந்திருந்தாலும் இப்னு அப்பாஸ் (ரலி) ஏற்க மாட்டார் என்பது தெளிவாகவே தெரிகிறது.
20 நாட்கள் கடந்து விட்டதால் எதுவுமே செய்ய இயலாது எனவும் கூறியுள்ளனர். ஏன் எதுவுமே செய்ய முடியாது? 20 நாட்கள் கடந்து விட்டாலும் குரைப் கூறிய தகவலின் அடிப்படையில் பெருநாள் எப்போது என்று தீர்மானிக்கலாமே? விட்ட நோன்பைக் களாச் செய்திருக்கலாமே? எதுவுமே செய்ய இயலாது என்பது வேடிக்கையாக இருக்கிறது. எதுவுமே செய்ய இயலாது என்பதற்காக அவர் குரைபுடைய தகவலை மறுக்கவில்லை. எங்கள் பகுதியில் பார்க்கவில்லை என்பதற்காகவே மறுக்கிறோம் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களே கூறிவிட்ட பின் இந்த உளறல் தேவையா?
குரைபுடைய கேள்வியே பெருநாளைப் பற்றியது தான். முஆவியா (ரலி) பிறை பார்த்த அடிப்படையில் முப்பது நாட்கள் பூர்த்தியாகின்றதே! அது உங்களுக்குப் போதாதா? என்ற கருத்தில் தான் குரைப் கேட்கிறார். அதற்குத் தான் இப்னு அப்பாஸ் (ரலி) போதாது. இப்படித் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள் என்று கூறுகின்றார்கள்.
சிரியாவில் முப்பது நாட்கள் முழுமையாகி விட்டது என்று குரைப் வந்து நேரடியாகக் கூறுவது தொலைத் தொடர்பு சாதனங்களில் கேட்பதை விட உறுதியான விஷயம். அதை இப்னு அப்பாஸ் (ரலி) மறுக்கின்றார் என்றால் தெலை தூரத்தில் பிறை பார்க்கப்பட்டால் அதை ஏற்கக் கூடாது என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரியவில்லையா?
வாகனக் கூட்டத்தினர் வந்து தாங்கள் பிறை பார்த்த செய்தியை அறிவித்த போது அதை ஏற்று உள்ளுர் மக்கள் நோன்பை விடுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லை என்பதன் அடிப்படையிலும், குரைப் அறிவிக்கும் ஹதீஸின் அடிப்படையிலும் ஓர் ஊரில் காணப்பட்ட பிறை மற்றொரு ஊரின் நோன்பைத் தீர்மானிக்காது என்பதை அறிந்தோம்.
இந்தக் கருத்துக்கு எதிரானது போல் தோன்றக் கூடிய ஒரு ஹதீஸும் இருக்கிறது. அதை இப்போது ஆராய்வோம்.
سنن أبي داود
2339 – حدَّثنا مُسَدَدٌ وخلفُ بنُ هشام المُقرئ، قالا: حدَّثنا أبو عَوانةَ، عن منصورٍ، عن ربْعى بن حِراش عن رجلٍ من أصحاب النبيَّ -صلَّى الله عليه وسلم-، قال: اختلف الناسُ في آخر يومٍ من رمضانَ، فقدم أعرابيانِ فشهدا عندَ النبيَّ -صلَّى الله عليه وسلم- بالله لأهلاَّ الهِلال أمسِ عشيةً، فأمرَ رسولُ الله -صلَّى الله عليه وسلم- الناسَ أن يُفْطِرُوا، زاد خلف في حديثه: وأن يَغْدُوا إلى مُصَلاَّهُم
ரமளானின் கடைசி நாள் பற்றி மக்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இரு கிராமவாசிகள் வந்து நேற்று மாலை பிறை பார்த்தோம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சாட்சி கூறினார்கள். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பை விடுமாறு மக்களுக்குக் கட்டளையிட்டனர். பெருநாள் தொழுகை தொழும் திடலுக்குச் செல்லுமாறும் கட்டளையிட்டனர். அறிவிப்பவர்: ரிப்யீ பின் கிராஷ் நூல்: அபூதாவூத்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமளான் மாதம் முப்பதாம் நாள் சுப்ஹ் வேளையை அடைந்தார்கள். அப்போது இரு கிராமவாசிகள் வந்து வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்று உறுதி கூறி நேற்று நாங்கள் பிறை பார்த்தோம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சாட்சி கூறினார்கள். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பை விடுமாறு மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர்: ரிப்யீ பின் கிராஷ் நூல்: தாரகுத்னீ
பிறை பார்த்த செய்தி இங்கேயும் மறு நாள் தான் கிடைக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்திலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் நோன்பு வைத்திருந்தனர். இரண்டு கிராமவாசிகள் வந்து அதிகாலையில் தகவல் கூறியவுடன் நோன்பை விடுமாறு மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். அன்றே பெருநாள் தொழுகையும் நடத்தினார்கள்.
ஒரே மாதிரியான இரண்டு நிகழ்ச்சிகளில் ஒரு நிகழ்ச்சியில் தகவல் தந்தவர்களுக்குக் கட்டளையிட்டதும் மற்றொரு நிகழ்ச்சியில் மக்கள் அனைவருக்கும் கட்டளையிட்டதும் ஒன்றுக்கொன்று முரண்படுவது போன்று தோன்றலாம். சிந்தித்துப் பார்த்தால் இவ்விரண்டுக்கும் முரண்பாடு இல்லை என்பது விளங்கும்.
இங்கே கிராமவாசிகள் (அஃராபிகள்) வந்து சாட்சி கூறியதாகக் கூறப்பட்டுள்ளது. அஃராபிகள் என்றால் யார்?
ஒரு நகரத்தைச் சுற்றி வாழ்பவர்கள், எல்லா முக்கியத் தேவைகளுக்கும் அந்த நகரத்தையே சார்ந்திருப்பவர்கள் ஆகியோரே அஃராபிகளாவர். கிராமப்புறத்தார்கள் என்று தமிழ்ப்படுத்தலாம்.
இவர்கள் அதிகாலையிலேயே வந்து தகவல் கூறி விட்டதால் தொலைவிலிருந்து வரவில்லை. அருகிலிருந்து தான் வந்தனர் என்பது தெரிகிறது.
மதீனாவுக்கு மூன்று மைல் தொலைவிலுள்ள அவாலி என்ற கிராமப் பகுதியிலிருந்தெல்லாம் மக்கள் ஜும்ஆவுக்காக மதீனாவுக்கு வருவார்கள் என்பதற்கு ஆதாரம் உள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மிம்பர் தயாரிக்கப்பட்ட காபா எனும் கிராமமும் இந்த அவாலி பகுதியில் அடங்கியது தான்.
புறநகர் என்று சொல்லத்தக்க அளவுக்குப் பல கிராமங்கள் மதீனாவைச் சுற்றியிருந்தன. அங்கெல்லாம் அஃராபுகள் வசித்தனர்.
பயணக் கூட்டம் சம்பந்தமான ஹதீஸில் உள்ளது போல் இவர்கள் தொலைவிலிருந்து வரவில்லை.
* வாகனத்தில் வரவில்லை
* பகலின் கடைசி நேரத்திலும் வரவில்லை.
ஒரு வேளை மதீனாவில் ஜும்ஆ தொழும் இவர்கள் பெருநாள் தொழுவதற்காக மதீனா வந்திருக்கவும் அங்கே நோன்பு வைத்திருப்பதைக் கண்டதும் பிறை பார்த்த செய்தியைச் சொல்லி இருக்கவும் சாத்தியமுள்ளது.
இந்தச் சாத்தியத்தை ஏற்காவிட்டாலும் அஃராபுகள் என்போர் மதீனா நகரைச் சுற்றி வாழ்ந்த கிராமத்தார்கள் தான் என்பதை மறுக்க முடியாது.
இவ்வாறு ஒவ்வொரு நகரத்தைச் சுற்றியும் அஃராபுகள் வாழ்ந்தாலும் மதீனாவுக்கு வந்தவர்கள் மதீனாவைச் சுற்றி வாழ்ந்தவர்களே.
இந்த விபரங்களைக் கவனத்தில் கொண்டு ஆராய்ந்தால் இரண்டு நிகழ்ச்சிகளும் முரண்பட்டவையல்ல என்று பிரித்தறியலாம்.
கிராமப்புறங்கள் அந்தந்த நகர்ப்புறங்களின் ஒரு பகுதியாகும். எனவே நகரத்தில் காணப்படும் பிறை சுற்றியுள்ள கிராமங்களையும், சுற்றியுள்ள கிராமங்களில் காணப்படும் பிறை நகரத்தையும் கட்டுப்படுத்தும்.
இவ்வாறு பொருள் கொண்டால் இரண்டுக்கும் எந்த முரண்பாடும் இல்லை.
முந்தைய நிகழ்ச்சி தூரத்தில் உள்ள வெளியூரிலிருந்து வந்த தகவலை ஏற்கலாகாது எனக் கூறுகிறது. பிந்தைய நிகழ்ச்சி ஓர் ஊரை ஒட்டிய கிராமத்தார் பிறை பார்ப்பது அந்த ஊரையும் கட்டுப்படுத்தும் என்பதைக் கூறுகிறது.
ஓர் ஊரைச் சுற்றியுள்ள கிராமங்கள் என்றால் எத்தனை கிலோமீட்டர் தொலைவு என்று கேட்கலாம். கிலோ மீட்டரில் அளந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. அதை நாமே தீர்மானம் செய்யும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இதைப் பின்னர் விளக்கியுள்ளோம்.
பிறை பார்த்தல் குறித்த அடிப்படையான ஆதாரங்களாக சில ஹதீஸ்கள் உள்ளன. அந்த ஹதீஸ்கள் ஏறத்தாழ ஒரே மாதிரியான கருத்தில் அமைந்தவை என்றாலும் சின்னச் சின்ன வேறுபாடுகள் அவற்றுக்கிடையே உள்ளதால் அவற்றை இங்கே தனித்தனியாகத் தருகிறோம்.
صحيح البخاري
1909 – حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَوْ قَالَ: قَالَ أَبُو القَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صُومُوا لِرُؤْيَتِهِ وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ، فَإِنْ غُبِّيَ عَلَيْكُمْ فَأَكْمِلُوا عِدَّةَ شَعْبَانَ ثَلاَثِينَ»
அதை (பிறையை) நீங்கள் காணும் போது நோன்பு பிடியுங்கள். அதை (மறு பிறையைக்) காணும் போது நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1909
صحيح البخاري
1906 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَكَرَ رَمَضَانَ فَقَالَ: «لاَ تَصُومُوا حَتَّى تَرَوُا الْهِلَالَ، وَلاَ تُفْطِرُوا حَتَّى تَرَوْهُ، فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَاقْدُرُوا لَهُ»
பிறையைப் பார்க்காமல் நோன்பு பிடிக்காதீர்கள். பிறையைப் பார்க்காமல் நோன்பை விடாதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் (முப்பது நாட்களாக) எண்ணிக் கொள்ளுங்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 1906
صحيح البخاري
1907 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ لَيْلَةً، فَلاَ تَصُومُوا حَتَّى تَرَوْهُ، فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَأَكْمِلُوا العِدَّةَ ثَلاَثِينَ»
மாதத்திற்கு இருபத்தி ஒன்பது நாட்களாகும். எனவே பிறையைக் காணாமல் நோன்பு பிடிக்காதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் எண்ணிக்கையை முப்பதாக முழுமைப்படுத்துங்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 1907
صحيح مسلم
2566 – حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ أَبِى هُرَيْرَةَ – رضى الله عنه – قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « إِذَا رَأَيْتُمُ الْهِلاَلَ فَصُومُوا وَإِذَا رَأَيْتُمُوهُ فَأَفْطِرُوا فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَصُومُوا ثَلاَثِينَ يَوْمًا
நீங்கள் பிறையைக் காணும் போது நோன்பு பிடியுங்கள். பிறையைக் காணும் போது நோன்பு விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் முப்பது நாட்கள் நோன்பு பிடியுங்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்
நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள் என்பதற்கு ஒவ்வொரு தனித்தனி நபரும் பிறை பார்க்க வேண்டும். ஓர் ஊரில் ஒருவர் பார்த்து மற்றவர் பார்க்காவிட்டால் பார்த்தவர் நோன்பு வைக்க வேண்டும். பார்க்காதவர் நோன்பு நோற்கக் கூடாது என்று பொருள் கொள்ளக் கூடாது.
வார்த்தை அமைப்பு இவ்வாறு பொருள் கொள்ள இடமளித்தாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்து நடைமுறை இவ்வாறு பொருள் கொள்ளத் தடையாக நிற்கிறது.
கிராமவாசிகள் பற்றிய ஹதீஸில் அவர்களது சாட்சியத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்று மக்களுக்கு அறிவித்துள்ளனர்.
ஒவ்வொரு தனி நபரும் பார்க்கத் தேவையில்லை. ஒரு பகுதியில் யாராவது ஓரிருவர் பார்த்து சாட்சியம் அளித்தால் அப்பகுதியிலுள்ள அனைவரும் பார்த்ததாகத் தான் பொருள். எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்று எந்தப் பொருளில் அமைந்திருக்கிறது என்பது தெரிகிறது.
தனித்தனி நபர்கள் பார்க்க வேண்டியதில்லை என்றால் உலகத்துக்கே ஒருவர் பார்த்து அறிவிப்பது போதுமா?
ஊருக்கு ஊர் யாராவது பார்த்தால் போதுமா?
எவ்வாறு பொருள் கொள்வது? இவ்வாறு இரண்டு கருத்துக்கள் கொள்ளவும் இந்த வாசக அமைப்பு இடம் தருகிறது.
ஆனாலும் முதலாவது கருத்தைக் கொள்வதற்கு நமக்குத் தடை உள்ளது. உலகில் யாராவது பார்த்தால் போதும் என்றால் உலகமெங்கும் ஒரே நாளில் நோன்பு என்ற கருத்து வரும். அதனால் மாதம் 28 நோன்பு வரக்கூடும். மேலும் நாம் இது வரை எடுத்துக் காட்டிய சான்றுகள் அனைத்தையும் ஒட்டு மொத்தமாக நிராகரிக்கும் நிலை ஏற்படும்.
ஆகவே ஒவ்வொரு பகுதியிலும் யாராவது பார்க்க வேண்டும் என்பதே இதன் பொருளாக இருக்க முடியும்.
மேலும் உலகில் எங்காவது பார்த்தால் போதும் என்று பொருள் கொள்ள இந்த ஹதீஸின் பிற்பகுதியே தடையாக நிற்கிறது.
உங்களுக்கு மேகம் ஏற்பட்டால் முப்பது நாட்களாக எண்ணிக் கொள்ளுங்கள் என்ற வாசகமே அது.
உலகில் எங்காவது பார்த்தால் போதும் என்றால் இந்த பிற்பகுதி தேவையில்லை. ஏனெனில் உலகம் முழுவதும் எப்போதும் மேகமாக இருக்காது. எங்காவது மேகமில்லாத பகுதி இருக்கும். அங்கே பார்த்து உலகுக்கு அறிவிக்கலாம். உங்களுக்கு மேகம் ஏற்பட்டால் என்ற வாசகம் ஒவ்வொரு பகுதியிலும் பிறை பார்க்க வேண்டும் என்ற கருத்தை உள்ளடக்கியே நிற்கிறது.
எனவே மேற்கண்ட ஹதீஸின் பொருள் இது தான். ஒவ்வொரு பகுதியினரும் தத்தமது பகுதியில் பிறை பார்த்து நோன்பு வைக்க வேண்டும். பிறை பார்த்து நோன்பை விட வேண்டும். மேகமூட்டம் ஏற்பட்டால் முப்பது நாட்களாக எண்ணிக் கொள்ள வேண்டும்.
மதீனாவைச் சுற்றிலும் உஹது போன்ற பெரும் மலைகள் இருந்தன. அம்மலைகளின் உச்சியிலிருந்து எதிரிகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டும் வந்தது. அப்படியிருந்தும் மேகமூட்டம் ஏற்படும் நாட்களில் பிறை தென்படுகிறதா என்று மலையின் மீது ஏறித் தேடிப் பார்க்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த ஏற்பாடும் செய்யவில்லை. கட்டளையும் இடவில்லை ஆர்வமூட்டவுமில்லை.
மேக மூட்டமாக இருந்தால் அந்த நாளை முப்பதாவது நாளாகக் கருதிக் கொள்ளுங்கள் என்று எளிமையான தீர்வை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி விட்டார்கள்.
பிறை வானில் இருக்கிறதா இல்லையா என்று அலட்டிக் கொள்ள வேண்டாம். உண்மையில் வானில் பிறை இருந்து அதை மேகம் மறைத்திருந்தால் கூட அம்மாதத்தை முப்பது நாட்களாகக் கருதிக் கொள்ளுங்கள் என்று கூறி பிறை பார்க்க வேண்டியதன் அவசியத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்தி விட்டார்கள்.
சுற்றி வளைத்து ஏதேதோ விளக்கம் கூறுவதை விட இந்த ஹதீஸ் கூறுகின்ற தெளிவான கட்டளையை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதற்கு எந்த வியாக்கியானமும் கூற முடியாது.
ஒவ்வொரு பகுதியிலும் பிறை காணப்பட வேண்டும். காணப்பட்டால் அடுத்த மாதம் ஆரம்பமாகி விட்டது. காணப்படா விட்டால் அம்மாதத்திற்கு முப்பது நாட்களாகும் என்பது எவ்வளவு தெளிவான சட்டம்.
மேக மூட்டம் போன்ற காரணங்களால் பிறை தென்படாமல் போகலாம். அப்போது அலட்டிக் கொள்ளக் கூடாது. அடுத்த மாதம் பிறக்கவில்லை என்று முடிவு செய்து கொள்ள வேண்டும்.
தத்தமது பகுதியில் பிறை பார்க்காமல் எங்கோ பிறை பார்த்த செய்தியை ஏற்று நோன்பு நோற்பவர்களுக்கு இந்த ஹதீஸ்கள் மறுப்பாக அமைந்துள்ளன.
பிறை பார்க்கத் தேவையில்லை. நாம் வானியல் அறிவின் துணை கொண்டு கணித்து விடலாம் என்று வாதிடக் கூடியவர்களுக்கும் இந்த ஹதீஸ் மறுப்பாக அமைந்துள்ளது. (இவ்வாறு வாதிடக்கூடியவர்களின் வாதங்களைத் தனியாக நாம் அலசியுள்ளோம்.)