Sidebar

17
Wed, Jun
சமீபத்திய செய்திகள்

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது. இதன் மூலம் உலகம் முழுவதும் ஒரே சந்திரன் தான் என்பது தெளிவாகிறது. ஏன் நாட்டுக்கு நாடு பிறை வேறுபட வேண்டும்?

பிறையைத் தீர்மானிப்பதற்கு அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய வழிமுறைகள் என்ன என்பதை விட்டுவிட்டு இது போன்ற அபத்தமான வாதங்களையெல்லாம் ஆதாரமாகக் காட்டும் அளவுக்கு வந்து விட்டனர். அல்லாஹ்வும், அவனது தூதரும் சேரமான் பெருமாளை ஆதாரமாக ஏற்குமாறு கூறவில்லை என்பது மட்டுமே இதற்குரிய மறுப்பாகி விடும். ஆயினும் இதிலுள்ள அபத்தங்களையும் இவ்வாறு கேள்வியெழுப்வோரின் அறியாமையையும் சுட்டிக்காட்டித் தான் ஆக வேண்டும்.

சேரமான் பெருமாள் சந்திரன் பிளந்ததைப் பார்த்ததாக எந்த அரசுப் பதிவேட்டில் உள்ளது. இதை இவர்கள் பார்த்தார்களா? அரசுப் பதிவேட்டில் இருப்பதெல்லாம் உண்மையாகி விடுமா?

பௌர்ணமி நிலவு பிளந்ததை உலகின் பல பாகங்களில் காண முடியும். காரணம் பௌர்ணமி நிலவு வானில் நீண்ட நேரம் காட்சி தரும். ஆனால் தலைப்பிறை சில நிமிடங்களில் மட்டுமே தெரியும். அதுவும் சூரியன் மறைந்த உடன் தான் அதைக் காண முடியும். எனவே சேரமான் பெருமாள் பார்த்தாலும் அது தலைப்பிறையைத் தீர்மானிக்கப் போதிய ஆதாரமாகாது.

சில சந்தேகங்களும் விளக்கங்களும்

பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி பதில் வடிவில் பதில் அளித்துள்ளோம்.

உலகமெல்லாம் ஒரே கிழமை

உலகம் முழுவதும் ஒரே கிழமை தான் வருகின்றது. சவூதியில் வெள்ளிக்கிழமை என்றால் உலகம் முழுவதும் வெள்ளிக்கிழமையாகத் தான் உள்ளது. அங்கே வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழும் போது இங்கேயும் ஜும்ஆ தொழுகின்றோம். பெருநாளை மட்டும் அங்கே வெள்ளிக்கிழமை என்றால் இங்கே சனிக்கிழமை எப்படி கொண்டாட முடியும்?

உலகம் முழுவதும் ஒரே பிறை என்று வாதிடக் கூடியவர்கள் இதையே பெரிய ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

உலகம் சுருங்கி விட்டது விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. தகவல் தொடர்பு சாதனங்கள் பெருகி விட்டன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் போல் நாம் உம்மியல்ல. நாங்கள் அறிவியல் மேதைகள் என்று கூறுபவர்களின் விஞ்ஞான அறிவு எந்த அளவுக்கு உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள அவர்களின் இந்தக் கேள்வி போதுமானது.

உலகம் முழுவதும் ஒரே கிழமையாகத் தான் உள்ளது என்ற அவர்களது வாதம் எவ்வளவு அபத்தமானது என்பதை முடிவு செய்யப் பெரிய அறிவியல் ஞானம் ஒன்றும் தேவையில்லை. சாதாரணமாகச் சிந்தித்தாலே போதும்.

இஸ்லாமிய அடிப்படையில் ஒரு நாள் என்பது மக்ரிபிலிருந்து துவங்குகிறது. உதாரணமாக வெள்ளிக்கிழமை மாலையில் சூரியன் மறைந்ததும் சனிக்கிழமை உதயமாகி விடுகின்றது. இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான்.

இப்போது சென்னையில் வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு சூரியன் மறைந்து விட்டால் சனிக்கிழமை உதயமாகி விடுகின்றது. அந்த நேரத்தில் சவூதியில் வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணியாக இருக்கும்.

சென்னையில் சனிக்கிழமையாக இருக்கும் அதே நேரத்தில் சவூதியில் வெள்ளிக்கிழமையாக இருக்கிறது. (சூரியக் கணக்கு அடிப்படையில் பார்த்தால் நள்ளிரவு பன்னிரண்டு மணியை உதாரணமாகக் கொள்ள வேண்டும்.)

இதைப் புரிந்து கொள்வதற்கு சில விஞ்ஞான விளக்கங்களைப் பார்ப்போம்.

உருண்டை வடிவிலுள்ள பூமி தன்னைத் தானே சுற்றுவதால் இரவு பகல் ஏற்படுகின்றது. பூமி சுற்றிக் கொண்டேயிருப்பதால் இந்தியாவில் சூரியன் உதயமாகும். அதே நேரத்தில் இந்தியாவிற்கு எதிர் கோடியிலுள்ள மற்றொரு நாட்டில் சூரியன் அஸ்தமனமாகிக் கொண்டிருக்கும்.

இப்படி ஒவ்வொரு நாட்டிலும் இரவு பகல் மாறி மாறி வந்து கொண்டிருக்கும் போது ஒரு நாள் என்பதை எதிலிருந்து துவக்குவது என்பதில் தடுமாற்றம் ஏற்பட்டது.

இதனால் ஒரு சீரான நிலையை ஏற்படுத்துவதற்காக பூமியின் ஓர் இடத்தை மையமாக வைத்து அதிலிருந்து தேதியைக் கணக்கிட வேண்டும் என்ற முடிவுக்கு புவியியல் விஞ்ஞானிகள் வந்தனர். அந்த அடிப்படையில் ஒரு கடல் பகுதியைத் தேர்ந்தெடுத்து அங்கே சர்வதேச தேதிக்கோடு (உஹற்ங் கண்ய்ங்) என்ற மையத்தை உருவாக்கி அந்த இடத்தை தேதி கிழமை மாறும் இடமாக உலகம் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தார்கள்.

1884ஆம் ஆண்டு இந்த முடிவு எட்டப்பட்டது. இதன்படி சர்வதேச தேதிக் கோட்டில் நள்ளிரவு 12 மணியைக் கடக்கும் நேரத்தில் ஒரு நாள் பிறப்பதாகக் கணக்கிடப்படுகிறது.

சர்வதேச தேதிக் கோட்டினை பூமி கடக்கின்ற அந்த ஒரு மைக்ரோ வினாடி மட்டுமே உலகம் முழுவதும் ஒரே கிழமையாக இருக்கும். அதாவது அந்த வினாடியில் தேதிக் கோட்டின் கிழக்குப் புறத்தில் உள்ள நாடு வெள்ளிக்கிழமையின் ஆரம்பத்திலும், மேற்குப்புறம் உள்ள நாடு வெள்ளிக்கிழமையின் இறுதியைக் கடந்து சனிக்கிழமையைச் சந்தித்துக் கொண்டிருக்கும்.

சவூதிக்கும் இந்தியாவிற்கும் இரண்டரை மணி நேரம் வித்தியாசப்படுவது போல் தேதிக் கோட்டின் கிழக்கு மற்றும் மேற்குப் புறத்தில் உள்ள இரண்டு நாடுகளுக்கும் இடையில் 24 மணி நேரம் வித்தியாசப்படுகிறது. இதனால் பக்கத்து பக்கத்து இரு நாடுகளுக்கிடையில் ஒரு நாள் வித்தியாசம் ஏற்படுகின்றது.

இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால் இங்கிருந்து சவூதி சென்றவுடன் 2.30 மணி நேரத்தை உங்கள் கடிகாரத்தில் குறைத்துக் கொள்ளுங்கள் என்று விமானத்தில் அறிவிப்புச் செய்வார்கள். அதே போல் விமானத்தில் சர்வதேச தேதிக் கோட்டைக் கடந்து செல்லும் போது நேரத்தை மாற்றச் சொல்வதில்லை. மாறாக ஒரு தேதியை ஒரு கிழமையை மாற்றிக் கொள்ளச் சொல்வார்கள்.

உதாரணமாக சர்வதேச தேதிக் கோட்டிற்கு அருகிலிருக்கும் நியூசிலாந்து ஹானலுலு ஆகிய இரு தீவுகளை எடுத்துக் கொள்வோம். நியூசிலாந்தில் காலை எட்டு மணியாக இருக்கும் போது ஹானலுலுவில் காலை நேரம் 10 மணியாக இருக்கும். ஆனால் நியூசிலாந்தில் வெள்ளிக்கிழமையாகவும் ஹானலுலுவில் வியாழக்கிழமையாகவும் இருக்கும். இரண்டு நாடுகளிலும் ஒரே இரவில் முதல் பிறை தென்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறு தென்பட்டால் நியூசிலாந்து ஹானலுலு ஆகிய இரு நாடுகளிலும் ஒரே நாளில் தான் நோன்பு வைக்க வேண்டும். ஆனால் நியூசிலாந்தில் வெள்ளிக்கிழமையாகவும் ஹானலுலுவில் வியாழக்கிழமையாகவும் இருக்கும். நியூசிலாந்தில் பிறை பார்த்து, ஹானலுலுவில் பிறை பார்க்காவிட்டால் அப்போது இரண்டு நாட்கள் வித்தியாசம் ஏற்படும் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

உலகம் முழுவதும் ஒரே நாள் தான் என்று வாதம் செய்பவர்களிடம் நாம் கீழ்க்கண்ட கேள்விகளை எழுப்புகிறோம்.

ஹானலுலு நாட்டில் வியாழக்கிழமை அன்று சுப்ஹு தொழுதுவிட்டு அன்றைய லுஹருக்கு நியூசிலாந்த் நாட்டிற்குச் சென்று விடுகின்றோம். ஆனால் அங்கே வெள்ளிக்கிழமை. இப்போது நாம் ஜும்ஆ தொழ வேண்டுமா? வியாழக்கிழமையின் லுஹர் அஸர் மக்ரிப் இஷா மறுநாள் சுப்ஹு ஆகிய தொழுகைகளைக் களாச் செய்ய வேண்டுமா?

நியூசிலாந்து நாட்டில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுது விட்டு அன்றே ஹானலுலு செல்கிறோம். அங்கே மறு நாள் ஜும்ஆ அதனால் அது வரையிலான தொழுகைகளை நிறைவேற்றாமல் விட்டுவிட்டு மறுநாள் அஸர் தொழுகையிலிருந்து தொழுதால் போதுமா? அல்லது அடுத்தடுத்த நாளில் இரண்டு ஜும்ஆக்கள் தொழ வேண்டுமா?

நியூசிலாந்து நாட்டில் வியாழக்கிழமை காலை பத்து மணிக்கு ஒளிபரப்பும் கிரிக்கெட்டை ஹானலுலுவில் புதன்கிழமையே பார்க்கிறோம். வியாழனில் நடப்பதை புதனில் (அதாவது விளையாட்டு நடப்பதற்கு முன்பே) எப்படிப் பார்க்க முடிகிறது.

ஹானலுலு நாட்டில் கிரிக்கெட் போட்டி அக்டோபர் 22ந் தேதி காலை பத்து மணிக்குத் துவங்குகிறது. அதே நாளில் காலை எட்டு மணிக்கு நியூசிலாந்து தொலைக்காட்சியில் அதன் நேரடி ஒளிபரப்பைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது 23ம் தேதியின் காலை எட்டு மணி. இது எப்படி சாத்தியம்?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் உலகம் முழுவதும் ஒரே நாள் என்று வாதிடுபவர்கள் பதில் சொல்ல வேண்டும். சம்பந்தமில்லாத நான்கு குர்ஆன் வசனங்களைப் போட்டுவிட்டு ஒரே சூரியன் ஒரே சந்திரன் என்று வியாக்கியானம் செய்பவர்களும் அது தங்களுடைய கருத்துக்கு ஆதரவாக இருக்கிறது என்ற ஒரே காரணத்தால் அதற்கு அணிந்துரை மதிப்புரை எழுதுபவர்களும் மேலே நாம் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

இதில் வேடிக்கை என்னவென்றால் சர்வதேச தேதிக்கோடு மனிதர்களால் வரையப்பட்ட கற்பனையான கோடு தான். இந்தக் கோடு ஏதேனும் ஒரு நாடு வழியாகச் சென்றால் ஒரே நாட்டில் ஒரே நாளில் வெவ்வேறு தேதி வெவ்வேறு கிழமை ஏற்பட்டு அதனால் குழப்பங்கள் தோன்றும் இதைத் தவிர்ப்பதற்காக சர்வதேச தேதிக் கோடு எந்த நாடு வழியாகவும் செல்லாத வண்ணம் ஒரு கடல் பகுதியைத் தேர்ந்தெடுத்து வரையப்பட்டது. இந்த தேதிக் கோடு இந்தியாவிற்கும் சவூதிக்கும் மத்தியில் வரையப்பட்டிருந்தால் இரண்டரை மணி நேர வித்தியாசத்திலேயே வெவ்வேறு கிழமைகளை வெவ்வேறு தேதிகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதையும் மறந்து விடக் கூடாது.

உலகம் எப்போது அழியும்?

உலகம் ஒரு நாளில் அழிக்கப்படும் என்று 83:5, 69:15 வசனங்களில் கூறப்படுகிறது பிறை 1ல் உலகம் அழிக்கப்படும் என்று வைத்துக் கொண்டால் சவூதி பிறை ஒன்றிலா? அல்லது இந்தியா பிறை ஒன்றிலா?

உலகம் வெள்ளிக்கிழமை தான் அழிக்கப்படும் என்று ஹதீஸ்களில் உள்ளது. இது ஒரே கிழமையில் தான் நிகழும் எனும் போது உலகம் முழுவதும் ஒரே கிழமை தான் என்பதில் என்ன சந்தேகம்? என்றும் கேட்கின்றனர்.

உலகம் முடிவு நாள் வெள்ளிக்கிழமை நடக்கும் என்று ஹதீஸ் உள்ளது. ஆனால் பிறைக் கணக்கில் 1ல் தான் அழிக்கப்படும் என்றோ 2ல்தான் அழிக்கப்படும் என்றோ ஹதீஸ் இல்லை.

குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் விஞ்ஞானத்தை உரிய முறையில் விளங்கினால் நிச்சயமாக இந்தக் கேள்விகளுக்குப் பதில் கூற முடியும்.

ஒவ்வொரு நாளும் தேதிக் கோட்டை பூமி கடக்கும் அந்த மைக்ரோ வினாடியில் உலகம் முழுவதும் ஒரே கிழமை. தேதியில் இருக்கும் என்பதை முன்னர் கூறியுள்ளோம். அதாவது இந்த நிலையை அடையும் போது தேதிக் கோட்டின் கிழக்குப் புறம் உள்ள பகுதி கிழமையின் துவக்கத்திலும் தேதிக் கோட்டின் மேற்குப்புறம் உள்ள பகுதி அதே கிழமையின் இறுதியிலும் இருக்கும்.

இந்த விநாடியில் மட்டுமே உலகம் முழுவதும் வெள்ளிக்கிழமையாக இருக்கும். இது மனிதன் வரைந்த கற்பனையான கோட்டின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்ட வெள்ளிக்கிழமை.

அல்லாஹ் பூமியைப் படைத்து நாள் கணக்கைத் துவக்கிய அந்த நேரத்தை அவன் தான் அறிவான். அல்லாஹ் அமைத்த உண்மையான அந்தத் தேதிக் கோட்டின் அடிப்படையில் ஒரு வினாடியில் உலகம் முழுவதும் வெள்ளிக்கிழமையாக இருக்கும் போது உலகத்தை அழிப்பது அவனுக்குச் சிரமமான காரியமில்லை.

ஆதம் (அலை) அவர்கள் குறித்த ஹதீஸுக்கும் இதே விளக்கத்தைக் கொடுக்க முடியும். அல்லாஹ் மிக அறிந்தவன்.

இரண்டு நாள் வித்தியாசம் ஏன்?

சவூதிக்கும் நமக்கும் இரண்டரை மணி நேரம் வித்தியாசம் ஆனால் சவூதி பிறைக்கும் நமது பிறைக்கும் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் வித்தியாசம் வருகின்றதே அது எப்படி? உதாரணமாக சவூதியில் 8ந் தேதி பெருநாள் என்றால் நமக்கு 9 அல்லது 10ந் தேதியில் தான் பெருநாள் வருகிறது. அது எப்படி?

முதலில் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். சவூதிக்கும் நமக்கும் இரண்டரை மணி நேரம் வித்தியாசம் என்பது சூரியனுடைய கணக்கின் அடிப்படையில் ஏற்படுவதாகும். சூரியனின் உதயம் அஸ்தமனம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து நேரத்தைத் தீர்மானிக்கிறோம். அதாவது சென்னையில் சூரியன் மறைந்து கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் கழித்து சவூதியில் சூரியன் மறையும். இது சூரியக் கணக்கு இதை பிறை தென்படுவதற்கு அளவு கோலாக எடுக்க முடியாது.

உதாரணமாக சவூதியில் 8ந் தேதி மாலை 6.30 மணிக்கு முதல் பிறை பிறக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த நேரத்தில் நமது நாட்டில் இரவு 9.00 மணி. அதாவது சவூதியில் பிறை பார்த்த நேரத்தை விட இரண்டரை மணி நேரத்தைக் கடந்திருப்போம். தலைப்பிறையை ஒன்பது மணிக்கெல்லாம் பார்க்க முடியாது. சவூதியில் பார்த்த பிறையை நாம் பார்க்க வேண்டுமானால் நமது நாட்டில் மறுநாள் (9ந் தேதி) மாலை 6.30 அல்லது ஏழு மணிக்குத் தான் பார்க்க முடியும்.

சூரிய உதயத்தை நாம் சவூதியை விட இரண்டரை மணி நேரம் முன்னதாக அடைகிறோம். அதே சமயத்தில் சந்திரன் தென்படும் நிலையை அவர்களை விட சுமார் 21.30 மணி நேரம் பிந்தி அடைகிறோம். இதனால் நமது நாட்டில் பிறை தென்படும் நாளில் சவூதியில் பிறை 2 ஆக இருக்கும் வாய்ப்பிருக்கிறது. (ஒரே நாளிலும் தெரியலாம்) எனவே சந்திரன் அடிப்படையில் மாதத்தைத் தீர்மானிக்கும் போது சூரியக் கணக்கில் உள்ள நேர வித்தியாசத்தைப் பொருத்திப் பார்க்கக் கூடாது.

சவூதிக்கும் நமக்கும் ஒரு நாள் வித்தியாசம் ஏற்படுவது இயற்கையானது தான். அல்லாஹ்வும் அதனால் தான் அம்மாதத்தை யார் அடைகிறாரோ என்று கூறுகின்றான். இதை ஏற்கனவே கூறியுள்ளோம்.

இரண்டு நான் வித்தியாசம் வருகின்றதே இது எப்படி?

எப்படிப் பார்த்தாலும் ஒரு நாளுக்கு மேல் வித்தியாசம் ஏற்பட சாத்தியமில்லை என்பது உண்மை தான். இரண்டு நாள் வித்தியாசம் ஏற்படுவதற்கு ஒரு தரப்பில் ஏற்படும் தவறுகள் தான் காரணம்.

பொதுவாக அமாவாசை முடிந்து 20 மணி நேரம் ஆவதற்கு முன்னால் உலகில் எந்தப் பகுதியிலும் பிறை தென்படுவதற்கு வாய்ப்பில்லை. 20 மணி நேரத்திற்குப் பின் ஏதேனும் ஒரு நாட்டில் பிறை தெரிய ஆரம்பித்து எல்லா நாட்டிற்கும் தெரிவதற்கு சுமார் 20 மணி நேரம் ஆகும். அதாவது அமாவாசை முடிந்த பின்னர் பிறை தென்படுவதற்கு சுமார் 20 மணி நேரத்திலிருந்து நாற்பது மணி நேரம் வரை ஆகும். இந்த காலவரையறைக்கு முன்னதாக யாராவது பிறை பார்த்ததாகக் கூறினால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது.

சவூதி அரேபியாவைப் பொறுத்தவரை இது வரை பிறை பார்த்ததாக அறிவித்த பல ஆண்டுகளில் பிறை தென்படுவதற்கே வாய்ப்பில்லாத நேரத்தில் பிறை பார்க்கப்பட்டதாகத் தான் அறிவித்துள்ளார்கள். இதை நாம் சுயமாகச் சொல்லவில்லை. லண்டனிலிருந்து வெளியாகும் என்ற ஈழ்ங்ள்ஸ்ரீங்ய்ற் என்ற பத்திரிகையும் மலேசியாவிலுள்ள சர்வதேச இஸ்லாமிய தேதி கவுன்சில் என்ற அமைப்பும் மற்றும் நமது நாட்டிலுள்ள வானியல் ஆராய்ச்சி நிறுவனங்களும் உறுதி செய்துள்ளன.

சவூதி எந்த அடிப்படையில் இவ்வாறு அறிவிக்கின்றது என்பது நமக்குத் தெரியவில்லை.

சந்திர சுழற்சியின் அடிப்படையில் சவூதிக்கும் நமக்கும் இடையில் ஒரு நாள் வித்தியாசம் ஏற்படுகின்றது. சவூதியின் தவறான நிலைபாட்டினாலும் ஒரு நாள் வித்தியாசம் ஏற்படுகின்றது. இதனால் தான் சவூதி அரசாங்கம் பிறை பார்த்ததாக அறிவித்த நாளுக்கும் நாம் பிறை பார்க்கும் நாளுக்கும் இரண்டு நாட்கள் வித்தியாசம் ஏற்படுகின்றது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பிறை பார்த்து அல்லது குறிப்பிட்ட பகுதிகளிலிருந்து தகவல் வந்தால் அதை ஏற்று மக்கள் செயல்பட்டுக் கொண்டிருந்த போது ஒரு பகுதிக்கும் மற்றோர் பகுதிக்குமிடையில் ஒரு நாள் மட்டுமே வித்தியாசம் இருந்து வந்தது.

புதிதாக சவூதியிலிருந்து நோன்பு, பொருநாள் ஆகியவற்றை இறக்குமதி செய்ததால் தான் தமிழ்நாட்டிற்குள்ளேயே இரண்டு நாட்கள் வித்தியாசம் ஏற்பட ஆரம்பித்தது.

உலகம் முழுவதும் ஒரே நாளில் பெருநாளைக் கொண்டு வர வேண்டும் என்று கூறி அறிமுகப்படுத்தப்பட்டது தான் சவூதி பெருநாள் கொள்கை. இதன் மூலம் இரண்டு நாட்களில் பெருநாளைச் சந்தித்துக் கொண்டிருந்த தமிழகத்தில் மூன்று நாட்கள் பெருநாள் ஏற்படுவதற்கு வழி வகுத்ததைத் தவிர வேறு எந்தச் சாதனையையும் இந்தக் கொள்கை ஏற்படுத்தவில்லை என்பது நிதர்சனமாக உண்மையாகும்.

பிறையை ஒவ்வொரு பகுதியிலும் பார்த்தே தீர்மானிக்க வேண்டும். பிறை தென்படாத பகுதிகள் முந்தைய மாதத்தை முப்பதாகப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் கூறியுள்ளோம். மார்க்கம் நமக்குக் கற்றுத் தந்த இந்த எளிமையான நடைமுறையை ஒவ்வொரு பகுதியினரும் கடைப்பிடிக்க ஆரம்பித்து விட்டால் உலகம் முழுவதும் ஒரு நாளுக்கு மேல் வித்தியாசம் ஏற்பட வாய்ப்பில்லை. அந்த நிலை விரைவில் ஏற்பட்டுவிடும் என்று நம்புவோம். இன்ஷாஅல்லாஹ்.

எத்தனை லைலத்துல் கத்ர்?

லைலத்துல் கத்ர் என்ற பாக்கியமிக்க இரவு ஒற்றைப்படை இரவுகளில் தான் அமையும் என்பது நபிமொழி. ஆளுக்கு ஒரு தலைப்பிறை இருந்தால் பாதிப் பேருக்கு லைலத்துல் கத்ர் கிடைக்காதே? எனவே உலகம் முழுவதும் ஒரே நாளில் தான் நோன்பைத் துவக்க வேண்டும். இன்றிரவு இங்கே பிறை பார்க்கிறோம். இந்த நேரத்தில் அமெரிக்காவில் பகலாக இருக்கும். பகல் எப்படி லைலத்துல் கத்ராக, அதாவது கத்ருடைய இரவாக ஆகும்?

அடுத்து வரும் இரவில் தான் பிறை என்று கூறினால் இங்கே லைலத்துல் கத்ர் ஏற்பட்டு 24 மணி நேரம் கழித்துத் தானே அமெரிக்காவில் ஏற்படுகிறது.?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் மதீனாவில் ஒரு நாளும் மற்ற ஊர்களில் ஒரு நாள் முன்னதாகவும் பிறை காணப்பட்டுள்ளது. வாகனக் கூட்டம் பற்றிய ஹதீஸ் இதற்குப் போதிய ஆதாரமாகும்.

முதலில் பிறை பார்த்தவர்கள் கணக்குப் படி ஒற்றைப்படை நாட்களில் லைலத்துல் கத்ர் வந்து விடுகிறது. இவர்களுக்கு ஒற்றைப்படையாக அமையும் நாட்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இரட்டைப்படை நாட்களாக அமையுமே? அப்படியானால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு லைலத்துல் கத்ர் பாக்கியம் கிட்டாதா?

அல்லாஹ் ஒரு பாக்கியத்தை வழங்கினால் அனைவரும் அடைந்து கொள்ள ஏற்ற வகையில் தான் அருளுவான். முஸ்லிம்கள் பரந்து விரிந்த அந்தக் காலத்தில் ஒரு பகுதியில் காணப்பட்ட பிறை மறு பகுதிக்குத் தெரியாது. இருவேறு நாட்களில் தான் நோன்பு ஆரம்பமாகியிருக்கும். அப்படியானால் யாருடைய கணக்கு ஒற்றைப்படை? ஒரு சாரார் அதை அடைந்து மறு சாரார் அடைய மாட்டார்கள் என்பது தான் பொருளா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் அவர்களும் மக்களும் எப்படி லைலதுல் கத்ரை அடைந்தார்களோ அவ்வாறே நாமும் அடைய முடியும். குர்ஆன் இறங்கிய அந்த இரவு தான் லைலதுல் கத்ர். அந்த இரவே நிச்சயமாக திரும்பாது. அந்த இரவே திரும்பினால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்போது வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும். எனவே சென்று போன அந்த இரவே திரும்பி வரும் என்று கருதக் கூடாது. அந்த இரவை மதிக்கும் வகையில் நாம் வணக்க வழிபாடுகளில் ஈடுபடும் போது அல்லாஹ் 1000 மாதங்களுக்கு நிகரான நன்மையைத் தருகிறான் என்பது தான் இதன் கருத்தாகும்.

அந்த நாள் திரும்பாது. அந்த இரவை மதிக்கும் வகையில் நாம் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதே இதன் நோக்கம் என்று ஆகும் போது நாம் எதை ஒற்றைப்படை என்று கருதுகிறோமோ அந்த இரவில் அந்த நன்மைகளை இறைவன் வாரி வழங்கி விடுவான். இப்படிக் கருதும் போது இறைவனது அருளில் எந்தப் பாரபட்சமும் இல்லை.

யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்ற வசனம் மாதத்தை அடைவதில் முன்பின்னாக இருக்கும் என்று ஒத்துக் கொள்கிறது. ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனி முதல் பிறை என்றால் தனித்தனி ஒற்றைப்படையும் வரத் தான் செய்யும். இதை உணர்ந்தால் குழப்பம் இருக்காது.

எந்தக் கணக்கின் அடிப்படையிலும் உலகம் முழுவதும் ஒரே நாளில் தலைப்பிறை என்பது சாத்தியமில்லை என்பதை பலமுறை விளக்கியுள்ளோம்.

இவர்கள் முழுக்க முழுக்க ஆராய்ந்து எந்தச் சிக்கலும் வராது என்று நினைத்துக் கூறிய ஒரு தீர்வு தான் சுபுஹக்கு முன் தகவல் வந்தால் ஏற்க வேண்டும் என்ற கண்டுபிடிப்பு. இந்தக் கண்டுபிடிப்பு அடிப்படையிலும் கன்னியாகுமரியில் பிறை 1 ஆக இருக்கும் அதே நாளில் கோட்டாறில் பிறை 2 ஆக இருக்கும்.

இந்த இரு ஊர்களில் ஒரே நேரத்தில் ஒரே நாளில் வெவ்வேறு பிறையாக உள்ளது. இப்படியே ரமளானின் பிந்திய பத்தை இந்த இரு ஊர்களும் அடையும் போது கன்னியாகுமரியில் பிறை 20 ஆகவும். கோட்டாறில் பிறை 21 ஆகவும் இருக்கும். ஒற்றைப்படை இரவில் தான் லைலத்துல் கத்ரு என்று ஹதீஸ்களில் உள்ளது. யாருடைய ஒற்றைப்படை இரவில்? கன்னியாகுமரியின் ஒற்றைப்படை இரவிலா? அல்லது கோட்டாறின் ஒற்றைப்படை இரவிலா?

மக்காவைப் புறக்கணிக்கலாமா?

மக்காவைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில் உம்முல் குரா கிராமங்களின் தாய் என்று வர்ணித்துக் கூறுகின்றான். அந்த மக்காவில் தான் இறை வணக்கத்திற்காக முதன் முதலில் கட்டப்பட்ட கஃபா அமைந்துள்ளது. ஹஜ் செய்வதற்காக உலகம் முழுவதிலிருந்தும் அங்கு தான் மக்கள் செல்ல வேண்டும். உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் கஃபாவை நோக்கியே தொழ வேண்டியிருக்கிறது.

இப்படி எல்லா வகையிலும் மக்காவிற்கு அல்லாஹ் ஒரு மகத்துவத்தை வழங்கியிருக்கிறான். பூகோள ரீதியாகவும் மக்கா நடு நாயகமாக அமைந்துள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு மக்காவில் காணப்பட்ட பிறையை உலகம் முழுவதும் ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது?

மக்கா என்பது உம்முல் குரா என்பதிலும் கஃபா தான் உலகம் முழுவதற்கும் கிப்லா என்பதிலும் ஹஜ் செய்வதற்கு அங்கு தான் செல்ல வேண்டும் என்பதிலும் யாருக்கும் எந்தச் சந்தேகமும் இல்லை. ஏன் கஃபாவை கிப்லாவாக ஏற்றுக் கொண்டுள்ளோம்? ஏன் ஹஜ் செய்வதற்கு கஃபாவிற்குச் செல்கிறோம்? அல்லாஹ் அவ்வாறு கட்டளையிட்டுள்ளான். அதனால் அதை ஏற்று நாம் செயல்படுத்துகிறோம்.

இதையெல்லாம் கூறிய அல்லாஹ் இவர்கள் கேட்பது போல் மக்காவில் பார்க்கப்பட்ட பிறையை உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலை இருந்தால் அதையும் கூறியிருப்பான். உம்முடைய இறைவன் எதையும் மறப்பவன் அல்ல என்று குர்ஆன் கூறுகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் வாழ்ந்த போதெல்லாம் மக்காவில் பிறை பார்த்து விட்டார்களா என்று பார்த்து தங்களுடைய நோன்பு மற்றும் பெருநாளைத் தீர்மானிக்கவில்லை.

அல்லாஹ்வோ அவனது தூதரோ கட்டளையிடாத ஒரு விஷயத்தை நாமாக ஏற்படுத்துவது அல்லாஹ்வையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் குறை கூறுவதாகும்.

இவர்கள் கூறிய சிறப்பெல்லாம் மக்காவிற்கு இருக்கிறது என்பதால் மக்காவில் கஃபாவில் அஸர் தொழும் போது தான் நாமும் அஸர் தொழ வேண்டும் என்று யாரும் கூற மாட்டார்கள். நமது ஊரில் எப்போது அஸர் தொழுகையின் நேரம் வருகின்றதோ அப்போது தான் தொழ வேண்டும். இதே அளவுகோல் தான் பிறைக்கும்.

மக்காவில் பிறை தென்படும் நாள் வேறு. நமது ஊரில் பிறை தென்படும் நான் வேறு. கஃபாவை எதற்குப் பயன்படுத்த வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றானோ அதற்குத்தான் பயன்படுத்த வேண்டும். மக்காவில் என்றைக்குப் பிறை பார்க்கின்றார்களோ அதை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்ற வசனத்திற்கும் நாம் எடுத்துக்காட்டிய நபிமொழிகளுக்கும் மாற்றமானதாகும்.

மக்கா உலகின் மையமாக இருக்கிறது என்று கூறுவது அறிவியலுக்கு முரணானது; அடிப்படையில்லாதது. உருண்டையான பூமியில் எது மையப்பகுதி என்று யாராலும் கூற முடியாது. அப்படியே மையப்பகுதி என்று கூறுவதாக இருந்தால் பூமத்திய ரேகைப் பகுதியைச் சொல்லலாம். பூமத்திய ரேகை ஓடும் பகுதியில் ஒரு குறிப்பிட்ட ஊர் மட்டும் இல்லை. பல நாடுகள் உள்ளன. இந்த பூமத்திய ரேகை ஓடும் நாடுகளை எடுத்துப் பார்த்தால் அதிலும் மக்கா இல்லை. அப்படியே மக்கா அதில் அமைந்திருந்தாலும் அதன் காரணமாக மக்காவைப் பின்பற்ற வேண்டும் என்று கூறுவது ஆதாரமற்ற வாதமாகும்.

காலத்திற்கேற்ப மார்க்கம் மாறுமா?

பிறை பார்த்து நோன்பு வையுங்கள் என்பதெல்லாம் அந்தக் கால மக்களைக் கருத்தில் கொண்டு சொல்லப்பட்டதாகும். அறிவியல் வளர்ச்சி கண்ட இந்தக் காலத்திற்குப் பொருந்தாது அல்லவா?

அது மிகவும் ஆபத்தான வாதமாகும். இபாதத் சம்பந்தமான மார்க்கக் கட்டளையை காலத்துக்குத் தக்கவாறு மாற்றுவது என்று சொன்னால் மோசமான விளைவுகளை இது ஏற்படுத்திவிடும்.

ஜகாத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தோடு முடிந்து விட்டது என்று வியாக்கியானம் கொடுத்த கூட்டத்துடன் அபூபக்கர் (ரலி) போர் நடத்திய வரலாறு அறிவோம்.

அந்தக் காலத்தில் உள்ள அரபியருக்குக் கொழுப்பு அதிகம். அதைக் குறைக்கத் தான் நோன்பு வைக்கச் சொன்னார்கள். இப்போது அது தேவையில்லை என்று வாதிட்டால் நாம் ஏற்க மாட்டோம். பிறை விஷயத்திலும் இப்படித் தான் முடிவெடுக்க வேண்டும்.

அறிவியல் முடிவை பிறை விஷயத்தில் ஏன் ஏற்கக்கூடாது என்பதை முன்னர் விளக்கியுள்ளோம்.

பூதக்கண்ணாடியும் மூக்குக்கண்ணாடியும்

பூதக் கண்ணாடிகளால் பிறையைப் பார்த்து முடிவு செய்யலாமா?

பிறை தோன்றி விட்டாலும் நம் கண்களுக்குத் தெரியும் அளவுக்கு வளர்ந்த பிறையையே நாம் தலைப்பிறை என்கிறோம். பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது இந்தப் பிறையைத் தான். கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு இருப்பதைப் பார்க்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருக்க மாட்டார்கள்.

பூதக் கண்ணாடியைப் பொறுத்தவரை சாதாரண கண்ணுக்குத் தெரிவதையும் அது காட்டும். சாதாரண கண்ணுக்குத் தெரியாததையும் அது காட்டும். சாதாரணக் கண்ணுக்குத் தெரியாத சிறிய அளவிலான பிறையையும் காட்டும்.

கண்ணுக்குத் தெரியாத அளவில் உள்ள பிறையைப் பூதக் கண்ணாடியால் பார்த்து முடிவு செய்யக் கூடாது. கண்ணுக்குத் தெரியாத பிறை தலைப்பிறையைத் தீர்மானிக்க உதாவது.

சாதாரணக் கண்களால் பார்க்கும் அளவுக்கு வளர்ந்த பிறையைப் பூதக்கண்ணாடியால் பார்க்கலாமா? என்றால் பார்ப்பதில் தவறு இல்லை.

ஆனால் பூதக் கண்ணாடியிலிருந்து கண்களை விலக்கி நேரடியாகப் பார்த்து நிருபிக்க வேண்டும். பூதக் கண்ணாடியால் தெரிந்தது சாதாரணக் கண்களுக்குத் தெரியாவிட்டால் பார்க்கும் அளவுக்குப் பிறை வளரவில்லை என்று பொருள்.

பூதக் கண்ணாடியால் பிறை இருப்பதை எளிதில் கண்டுபிடிக்க முடியும். அவ்வாறு கண்டுபிடித்த பின் அதே இடத்தில் சாதாரணக் கண்களால் பார்க்கலாம். இதற்கு மட்டும் தான் பூதக் கண்ணாடி உதவும். கண்ணாடி அணிந்து பிறை பார்த்தவரின் சாட்சியத்தை ஏற்கலாமா? என்று குதர்க்கமாகக் கேட்கிறார்கள்.

ஏற்கனவே எழுதப்பட்டவற்றிலேயே இதற்கான விளக்கமும் அடங்கியுள்ளது.

ஒரு பொருளை சாதாரணக் கண்களால் பார்க்கும் போது எப்படி இருக்குமோ அப்படிப் பார்ப்பதற்குத் தான் கண்ணாடி அணிகிறோம். சிறியதைப் பெரியதாகக் காட்டவோ தொலைவில் உள்ளதை அருகில் பார்க்கவோ யாரும் கண்ணாடி அணிவதில்லை. இயல்பான பார்வையைப் பெறுவது தான் கண்ணாடியின் தன்மை. பார்வைக் குறைவு ஏற்பட்டவர் கண்ணாடி அணிந்து பார்ப்பதும் பார்வைக் குறைவு அற்றவர் கண்ணாடியில்லாமல் பார்ப்பதும் சமமானவை தான் இரண்டுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. இயல்பான பார்வையின் தன்மையை அடைவதற்காக இல்லாமல் சிறியதைப் பெரிதாகக் காட்டும் கண்ணாடியையோ தூரத்தில் உள்ளதை அருகில் காட்டும் கண்ணாடியையோ அணிந்து பிறை பார்த்தால் அதை ஏற்க முடியாது.

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல்

பிறையை அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. யாராவது பார்த்து சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினால் அதை நேரில் பார்த்த நான்கு சாட்சிகள் மூலம் நிரூபிக்க வேண்டும்.

திருக்குர்ஆன் 4:15, 24:4, 24:11-17 ஆகிய வசனங்களில் இதைக் காணலாம்.

கொடுக்கல் வாங்கல் மற்றும் மனிதர்களுக்கிடையே உள்ள பிரச்சனைகளில் இரு ஆண்கள் அல்லது ஒரு ஆண் இரு பெண்கள் சாட்சியத்தை ஏற்க வேண்டும் என்று அல்லாஹ் வழிகாட்டுகிறார்ன். பார்க்க : திருக்குர்ஆன் 2:283

மனிதர்களுக்கிடையிலான பிரச்சனையாக இல்லாமல் மார்க்க சம்மந்தமான பிரச்சனையாக இருந்தால் ஒரே ஒருவர் சாட்சி கூறினால் ஏற்க வேண்டும்.

ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் நான் பாலூட்டினேன் என்று ஒரு பெண் சட்சியம் கூறியதை ஏற்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தீர்ப்பு அளித்துள்ளார்கள். (பார்க்க : புகாரி 88)

பிறை பார்த்ததாக ஒருவர் சாட்சி சொன்னதை ஏற்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாமும் நோன்பு நோற்று மற்றவர்களையும் நோன்பு நோற்க கட்டளையிட்டார்கள்.

*سنن الدارمي

1733 - حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُحَمَّدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ وَهْبٍ، عَنْ يَحْيَى بْنِ سَالِمٍ، عَنْ أَبِي بَكْرِ بْنِ نَافِعٍ، عَنْ أَبِيهِ، عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «تَرَاءَى النَّاسُ الْهِلَالَ، فَأَخْبَرْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنِّي رَأَيْتُهُ، فَصَامَ وَأَمَرَ النَّاسَ بِالصِّيَامِ»

*மக்களெல்லாம் பிறை பார்க்க முயன்றனர். நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து நான் பிறை பார்த்தேன் என்று தெரிவித்தேன். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாமும் நோன்பு நோற்று மக்களுக்கும் நோன்பு நோற்க கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல்கள் : தாரிமி, பைஹகீ, ஹாகிம், இப்னு ஹிப்பான், தப்ரானி கபீர், தப்ரானி அவ்ஸத்

இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் ஆகும்.

பிறை குறித்து இரு சாட்சிகள் சாட்சி சொன்னால் ஏற்றுக் கொள்ளூங்கள் என்றும் ஒரு ஹதீஸ் உள்ளது.

سنن النسائي

2116 - أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ، قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ شَبِيبٍ أَبُو عُثْمَانَ، وَكَانَ شَيْخًا صَالِحًا بِطَرَسُوسَ، قَالَ: أَنْبَأَنَا ابْنُ أَبِي زَائِدَةَ، عَنْ حُسَيْنِ بْنِ الْحَارِثِ الْجَدَلِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ زَيْدِ بْنِ الْخَطَّابِ، أَنَّهُ خَطَبَ النَّاسَ فِي الْيَوْمِ الَّذِي يُشَكُّ فِيهِ، فَقَالَ: أَلَا إِنِّي جَالَسْتُ أَصْحَابَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَسَاءَلْتُهُمْ، وَإِنَّهُمْ حَدَّثُونِي أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «صُومُوا لِرُؤْيَتِهِ، وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ، وَانْسُكُوا لَهَا فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَأَكْمِلُوا ثَلَاثِينَ، فَإِنْ شَهِدَ شَاهِدَانِ فَصُومُوا، وَأَفْطِرُوا»"*

பிறை பார்த்து நோன்பு வைத்து, பிறை பார்த்து நோன்பை விடுங்கள். அதன் படி மார்க்கக் கிரியைகளை அமைத்துக் கொள்ளுங்கள். இரண்டு சாட்சிகள் சாட்சி கூறினால் நோன்பு வையுஙகள். நோன்பை விடுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் :நஸாயீ

இரண்டு சாட்சிகள் சாட்சி கூறினால் ஏற்றுக் கொள்ளுங்கள் என்பதும், ஒரு சாட்சியின் சாட்சியத்தை ஏற்று முடிவு செய்தார்கள் என்பதும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் தான்.

ஒன்றை ஏற்று மற்றொன்றை மறுக்கக் கூடாது.

இரண்டு சாட்சிகள் சிறப்பு; ஒரு சாட்சி போதுமானது என்று தான் இது போல் அமைந்த எல்லா ஹதீஸ்களையும் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே மார்க்க விஷயத்தில் ஒரே ஒரு சாட்சி இருந்தாலே போதுமாகும்.

பிறை சாட்சியத்துக்கு அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டவில்லை. சாட்சி சொல்பவர் முஸ்லிமாக இருந்தால் போதும்.

ஆனால் அவர்கள் எந்த நேரத்தில் பார்த்ததாகக் கூறினாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பொருள் கொள்ளக் கூடாது.

இரவு பத்து மணிக்கு தலைப்பிறையைப் பார்த்ததாக ஒருவர் கூறினால் அதை ஏற்க முடியாது. ஏனெனில் அந்த நேரத்தில் தலைப்பிறையைப் பார்க்க முடியாது.

நண்பகலில் தலைப்பிறையைப் பார்த்ததாக ஒருவர் கூறினாலும் அதையும் ஏற்க முடியாது. ஏனெனில் நண்பகலில் தலைப் பிறையைப் பார்க்க முடியாது.

பிறை 25ல் தலைப் பிறையைப் பார்த்ததாக ஒருவர் கூறினாலும் அதை ஏற்க முடியாது. ஏனெனில் அது தலைப்பிறை பார்ப்பதற்குரிய நாள் அல்ல.

இது போல் தான் அமாவாசையில் பிறை பார்த்ததாகக் கூறுவதையும் ஏற்க முடியாது. அமாவாசையன்று எந்தக் கண்ணுக்கும் பிறை தென்படாது.

வேண்டுமென்று பொய் கூறாத சாட்சிகளாக இருந்தாலும் கண்கள் தவறு செய்வதுண்டு சிறிய மேகத்துண்டு கூட பிறையாகத் தோற்றமளிக்க வாய்ப்பு உள்ளது. நாம் வானத்தில் ஓரிடத்தை உற்று நோக்கும் போது அந்த இடத்தில் ஒரு நட்சத்திரம் இருப்பது போல் தெரியும் உடனே மறைந்து விடும். ஆனால் உண்மையில் அந்த இடத்தில் நட்சத்திரம் எதுவும் இருக்காது. இந்தத் தவறு பிறை விஷயத்திலும் நடக்க வாய்ப்புள்ளது.

ஒருவரை விஷம் வைத்துக் கொடுத்து கொன்றதாக நம்பகமானவர்கள் சாட்சியம் கூறுகிறார்கள். ஆனால் பிரேதப் பரிசோதனையில் விஷம் கொடுக்கப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டால் சாட்சிகள் கூறியதை யாரும் ஏற்க மாட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாட்சியத்தை ஏற்றுள்ளார்களே என்று கேட்கலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாதத்தின் முப்பதாம் இரவில் பிறை பார்த்ததாகக் கூறப்பட்ட சாட்சியத்தைத் தான் ஏற்றார்கள். 27, 28 இரவுகளில் பிறை பார்த்தோம் என்று கூறிய எந்த சாட்சியத்தையும் ஏற்றதாக எந்த ஆதாரமும் இல்லை.

எனவே நமது ஊரில் பிறை பார்த்த கணக்குப்படி முப்பதாம் இரவில் யாராவது பிறை பார்த்ததாக சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

பிறை பார்க்கச் சாத்தியமற்ற நாளில் பிறை பார்த்ததாகக் கூறுவதை ஏற்கக் கூடாது. சாட்சிகள் கூறி விட்டதால் இதை ஏற்கத் தான் செய்வோம் என்று யாரேனும் பிடிவாதம் பிடித்தால் எந்தப் பகுதியில் அந்த சாட்சிகள் பார்த்தார்களோ அந்தப் பகுதிக்கு மட்டும் அது பொருந்தும். எல்லாப் பகுதிக்கும் பொருந்தாது என்பதை ஏற்கனவே தக்க காரணங்களுடன் நிரூபித்துள்ளோம்.

வானியல் கணிப்பு பொய்யா?

வானியல் ஆய்வாளர்களால் பிறையைக் கணிக்க முடியுமா? முடியாதா? என்பது கேள்வியல்ல! வானியல் கணிப்பை ஏற்று முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். வானியல் நிபுணர்களால் கணிக்கவே முடியாது என்று நாம் வாதிடுவதாகக் கருதக் கூடாது.

பல நூறு வருடங்களுக்குப் பின்னால் சென்னையில் தோன்றக் கூடிய சந்திர கிரகணத்தை இன்றைக்கே அவர்களால் கணித்துச் சொல்ல முடியும். எத்தனை மணி, எத்தனை நிமிடத்தில் தோன்றும் என்று கணிக்கிறார்களோ அதில் எந்த மாற்றமுமின்றி அது நடந்தேறும். அந்த அளவுக்கு வானியல் வளர்ந்துள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்வோம்.

இன்று இந்தப் பகுதியில் பிறை தென்படும் வகையில் இருக்கும் என்று கணித்துக் கூறினால் அந்தப் பகுதியினர் காணும் வகையில் ஆகாயத்தில் நிச்சயம் இருக்கும். ஏனெனில் அந்த அளவுக்குத் துல்லியமாக கணிக்க இயலும். மேகம் மற்றும் சில புறக் காரணங்களால் நமது பார்வைக்குத் தெரியாமல் போகவும் கூடும்.

அவர்களது கணிப்பு சரியானது தான் என்பதை ஏற்றுக் கொள்ளும் அதே சமயத்தில் தலைப் பிறையைத் தீர்மானிக்க அதை அளவுகோலாக கொள்ளக் கூடாது என்பது தான் நமது வாதம். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் மாதத்தின் முதல் தினத்தைத் தீர்மானிப்பதற்கு கண்களால் பார்க்க வேண்டும் என்று வரையறுத்து விட்டனர்.

வானியல் கணிப்பின் படி எங்கே எப்போது பார்க்க முடியும் என்று கூறுகிறார்களோ அதை நம்பி அங்கே அப்போது பார்க்க முயற்சிக்கலாமே தவிர பார்க்காமல் தலைப்பிறை என்ற தீர்மானத்திற்கு வரக் கூடாது. நபி (ஸல்) அவர்கள் வானியல் வளர்ச்சியடையாத காலத்துக்குத் தான் அவ்வாறு கூறினார்கள் என்று ஹதீஸுக்கு விளக்கம் கூறித் தான் இவர்கள் இதை நியாயப்படுத்தினார்கள். அந்த விளக்கம் சரியில்லை எனும் போது நிலையை மாற்றிக் கொள்வது தான் இறையச்சமுடையோரின் செயலாக இருக்கும்.

வானியல் கணிப்பின் படி முடிவு செய்யலாம் என்ற கருத்தை ஏற்கக் கூடியவர்களுக்கு மற்றொரு விஷயத்தையும் நாம் நினைவுபடுத்த விரும்புகிறோம்.

வானியல் வாதம் புரிவோரின் கருத்துப்படி பிறையைப் பார்த்து நோன்பைத் தீர்மானிப்பது பாவமான காரியம் அல்ல. பிறை பார்த்து நோன்பு நோற்பது குற்றம் என்று அவர்களால் கூற முடியாது. அதற்கு ஆதாரம் காட்டவும் முடியாது.

பிறையைப் பார்த்து நோன்பு நோற்க வேண்டும் என்ற கருத்துக் கொண்டவர்களின் பார்வையில் பிறை பார்க்காமல் கணித்து முடிவு செய்வது குற்றமாகும். ஏராளமான நபிமொழிகளுக்கு எதிரானதாகும்.

அதாவது இரண்டு சாராரின் கருத்துப்படியும் பிறை பார்த்து நோன்பைத் தீர்மானிப்பது குற்றச் செயல் அல்ல. ஆனால் பிறை பார்க்காமல் கணித்து நோன்பு நோற்பது ஒரு சாரார் பார்வையில் குற்றச் செயலாகும். மறுமையில் வெற்றி பெற வேண்டும் என்பதைக் கொள்கையாகக் கொண்ட ஒரு முஸ்லிம், இரு சாராரின் கருத்துப்படியும் எது குற்றமற்றதோ எவரது கருத்துப் படியும் எது குற்றமில்லையோ அதைத் தான் செய்வார். செய்ய வேண்டும்.

எனவே பிறை பார்த்து நோன்பு நோற்று நபி (ஸல்) அவர்களின் போதனையை உலகம் உள்ளளவும் கடைப்பிடித்தவர்களாவோம்

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா?

...அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ஒரு வருடம் போன்றும், மற்றொரு நாள் ஒரு மாதம் போன்றும், அடுத்த நாள் ஒரு வாரம் போன்றும், ஏனைய நாட்கள் இன்றைய நாட்களைப் போன்றும் இருக்கும்'' என்றார்கள். அல்லாஹ்வின் தூதரே! ஒரு வருடத்தைப் போன்ற அந்த நாளில் ஒரு நாள் தொழுகை எங்களுக்குப் போதுமா?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், போதாது; அதற்குரிய அளவை அதற்காக (தொழுகைக்காக) கணித்துக் கொள்ளுங்கள்'' என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி)

நூல்: முஸ்லிம்

நாட்களைக் கணித்துக் கொள்ளலாம் என்று இந்த ஹதீஸிலிருந்து தெரிகிறது.

மேலும் சந்திர மண்டலத்தில் வசிக்கும் நிலை ஏற்பட்டால் அப்போது சந்திரனைப் பார்த்து மாதம் மற்றும் நாட்களைத் தீர்மானிப்பது சாத்தியமற்றதாகி விடும். எனவே கணிப்புகள் அடிப்படையில் முடிவு செய்வது தான். நவீன யுகத்திற்கு ஏற்றதாகும் என்ற அடிப்படையில் பிறையை நாம் கணித்துக் கொள்வதில் என்ன தவறு என்று சிலர் வாதிடுகின்றனர்.

இந்த ஹதீஸில் கணித்துக் கொள்ளுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியது உண்மை தான்.

எப்போது கணிக்கச் சொன்னார்கள்? ஒரு நாள் ஒரு வருடம் போன்று நீண்டதாக (அதாவது ஆறு மாத அளவு பகலாகவும் ஆறு மாத அளவு இரவாகவும்) இருக்கும் போது தான் கணிக்கச் சொன்னார்கள். இந்த இடத்தில் கணிப்பதைத் தவிர வேறு வழி இருக்காது. இதே அடிப்படையில் துருவப் பிரதேசத்தில் ஆறு மாதம் பகலாகவும் ஆறு மாதம் இரவாகவும் இருக்கும். அங்கே மக்கள் வாழ்ந்தால் அவர்களும் கூட ஒரு வருடம் முழுவதற்கும் ஐந்து வேளை மட்டுமே தொழ வேண்டும் என்று கூற முடியாது. அவர்கள் கணித்துக் தான் தொழுகை, நோன்பு போன்ற வணக்க வழிபாடுகளை நிறைவேற்ற முடியும்.

இவர்கள் குறிப்பிடுவது போல சந்திரனில் வாழ்கின்ற சூழ்நிலை இல்லை. ஒருவேளை அப்படி ஒரு நிலை ஏற்பட்டாலும் அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி கணிப்பது தான். தினந்தோறும் சூரியன் உதித்து மறையக் கூடிய பகுதிகளில் வாழக் கூடிய நமக்கு இந்தச் சலுகை உண்டா? என்று கேட்கக் கூடாது.

முடவர், நொண்டி, குருடர் ஆகியோருக்கு வழங்கப்பட்ட சலுகைகளை கை, கால்கள் சுகமாக உள்ளவர், நல்ல கண் பார்வையுள்ளவர் கேட்பது போல் தான் இது ஆகும். சந்திர மண்டலத்தில் வசிக்கும் நிலை ஏற்பட்டால் அங்கிருந்து கொண்டு கஃபாவை நோக்கித் தொழும் வாய்ப்பில்லை. அதனால் அங்கே வசிப்பவர் எந்தத் திசையை நோக்கியும் தொழலாம் என்று தான் கூறியாக வேண்டும். நானும் அது போல் தொழுவேன் என்று பூமியில் இருந்து கொண்டு கஃபாவை நோக்கும் வாய்ப்புள்ளவர் கூறக் கூடாது. நிர்பந்தத்தில் மாட்டிக் கொண்டவருக்கு வழங்கப்பட்ட சலுகைகளை சாதாரண நிலையில் உள்ளவர் சட்டமாக எடுத்துக் கொள்வது அறிவீனமாகும்.

துருவப் பிரதேசத்தில் வாழ்பவன் ஒரு நிர்பந்தத்திற்கு உள்ளாகியிருக்கின்றான். அவன் கை, கால் ஊனமுற்ற முடவனைப் போன்றவன். பிறை பார்க்கக் கூடிய வாய்ப்பு அவனுக்கு அறவே கிடையாது என்பதால் அவனுக்கு இந்த ஹதீஸ் கணித்தல் என்ற சலுகையை வழங்கியிருக்கின்றது. பிறை பார்க்கும் வசதியுள்ள நமக்கு இந்த கணிப்பு என்ற சலுகை ஒரு போதும் பொருந்தாது.

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்?

பிறை விஷயத்தில் முன் கூட்டியே கணித்துச் செயல்படக் கூடாது என்று கூறும் நீங்கள், தொழுகை நேரங்களைக் கணிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்? என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

சூரியன் விஷயத்தில் கணிப்பை ஏற்றுக் கொள்ளும் நாம் சந்திரன் விஷயத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று வேறுபடுத்திக் கூறுவது சரி தான். ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறையைப் பார்த்துத் தான் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்று கூறி விட்டார்கள்.

சூரியன் மறைந்தவுடன் மக்ரிப் தொழ வேண்டும் என்பது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளையாகும். சூரியன் மறைந்தது என்பதை எப்படித் தீர்மானிக்க வேண்டும் என்பது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த உத்தரவையும் இடவில்லை.

மேக மூட்டமான நாட்களில் சூரியன் தென்படாத பல சந்தர்ப்பங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வந்ததுண்டு. அது போன்ற நாட்களில் சூரியன் மறைவதைக் கண்டால் மக்ரிப் தொழுங்கள். இல்லாவிட்டால் அஸர் நேரம் என்றே அதைக் கருதிக் கொள்ளுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. அது போல் சூரியன் மறைவதைக் கண்ணால் கண்ட பின் தான் நோன்பு துறக்க வேண்டும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் அவர்கள் துஆச் செய்தவுடன் மழை பெய்ய ஆரம்பித்து ஆறு நாட்கள் நாங்கள் சூரியனையே பார்க்கவில்லை என்று புகாரியில் ஹதீஸ் உள்ளது.

(பார்க்க: புகாரி 1013, 1014)

ஆறு நாட்களும் சூரியனையோ அது உதிப்பதையோ மறைவதையோ பார்க்க முடியவில்லை. இந்த ஆறு நாட்களும் கணித்துத் தான் தொழுதிருக்க முடியும். அனேகமாக சூரியன் மறைந்திருக்கும் என்று கருதும் நேரத்தில் தான் மக்ரிப் தொழதிருக்க முடியும்.

மேகம் சூரியனை மறைத்தது போல் சந்திரனையும் மறைக்கிறது. சந்திரன் மறைக்கப்படும் போது எப்படியாவது கணித்துக் கொள்ளுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறவில்லை. பிறை தெரியாததால் மேகத்தின் உள்ளே பிறை இருந்தாலும் அது முப்பதாம் நாள் தான். முதல் நாள் அல்ல என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி விட்டனர்.

சூரியனை மேகம் மறைத்த போது கணித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சந்திரனை மேகம் மறைத்த போது கணிக்கக் கூடாது. அது முப்பதாம் நாள் தான் என்று தெளிவாகப் பிரகடனம் செய்து விட்டனர். எனவே தொழுகைக்கும் நோன்புக்கும் ஒரே மாதிரியான அளவு கோல் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

வானியல் கணிப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுபவர்கள் சுபுஹ் வரை தகவலை எதிர்பார்க்க வேண்டும் என்று கூறுவது ஏன்? கணிப்பை ஏற்றுச் செயல்பட வேண்டியது தானே? வானியல் மூலம் 1000 வருடங்களுக்குப் பிறகுள்ள பிறையையும் கணித்து விடலாம் அல்லவா?

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள்

அடுத்ததாக, வானியல் கணிப்பை ஏற்று பிறையை முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் புரிவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் மற்றும் சில இருக்கின்றன. அவையெல்லாம் நேரடி ஆதாரமாக இல்லாவிட்டாலும் அவற்றையும் பரிசீலிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

அவனே காலைப் பொழுதை ஏற்படுத்துபவன். இரவை அமைதிக் களமாகவும், சூரியனையும் சந்திரனையும் காலம் காட்டியாகவும் அமைத்தான். இது மிகைத்தவனாகிய அறிந்தவனின் எற்பாடு.

திருக்குர்ஆன் 6:96

ஆண்டுகளின் எண்ணிக்கையையும், (காலக்) கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அவனே சூரியனை வெளிச்சமாகவும், சந்திரனை ஒளியாகவும் அமைத்தான். சந்திரனுக்குப் பல நிலைகளை ஏற்படுத்தினான். தக்க காரணத்துடன் அல்லாஹ் இதைப் படைத்துள்ளான். அறிகின்ற சமுதாயத்திற்கு வசனங்களை அவன் தெளிவாக்குகிறான்.

திருக்குர்ஆன் 10:5

தொடர்ந்து இயங்கும் நிலையில் சூரியனையும், சந்திரனையும் உங்களுக்குப் பயன்படச் செய்தான். இரவையும், பகலையும் உங்களுக்காகப் பயன்படச் செய்தான்.

திருக்குர்ஆன் 14:33

அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் படைத்தான். ஒவ்வொன்றும் வான்வெளியில் நீந்துகின்றன.

திருக்குர்ஆன் 21:33

இரவும் அவர்களுக்கு ஓரு சான்று. அதிலிருந்து பகலை உரித்தெடுக்கிறோம். உடனே அவர்கள் இருளில் ஆழ்ந்து விடுகிறார்கள். சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இது அறிந்தவனாகிய மிகைத்தவனுடைய ஏற்பாடாகும். சந்திரனுக்குப் பல நிலைகளை ஏற்படுத்தியுள்ளோம். முடிவில் அது காய்ந்த பேரீச்சம் பாளை போல் ஆகிறது. சூரியனால் சந்திரனை அடைய முடியாது. இரவு, பகலை முந்தாது. ஒவ்வொன்றும் ஆகாயத்தில் நீந்துகின்றன.

திருக்குர்ஆன் 36:36, 37, 38, 39, 40

சூரியனும், சந்திரனும் கணக்கின் படி இயங்குகின்றன.

திருக்குர்ஆன் 55:5

பிறைகளைப் பற்றி (முஹம்மதே!) உம்மிடம் கேட்கின்றனர். அவை மக்களுக்கும், (குறிப்பாக) ஹஜ்ஜுக்கும் காலம் காட்டிகள்'' எனக் கூறுவீராக!

திருக்குர்ஆன் 2:189

வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. இதுவே நேரான வழி. (புனிதமான) அம்மாதங்களில் உங்களுக்கு நீங்கள் தீங்கு இழைத்து விடாதீர்கள்!

திருக்குர்ஆன் 9.36

இரவையும், பகலையும் இரண்டு சான்றுகளாக்கினோம். உங்கள் இறைவனிடமிருந்து அருளைத் தேடவும், ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக் கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காகவும் இரவின் சான்றை ஒளியிழக்கச் செய்து பகலின் சான்றை வெளிச்சமாக்கினோம். ஒவ்வொரு பொருளையும் நன்கு தெளிவுபடுத்தினோம்.

திருக்குர்ஆன் 17:12

வானத்தில் நட்சத்திரங்களை ஏற்படுத்தி, அதில் விளக்கையும், ஒளி சிந்தும் சந்திரனையும் ஏற்படுத்தியவன் பாக்கியமானவன்.

திருக்குர்ஆன் 25:61

என்பன போன்ற வசனங்களை ஆதாரமாகக் காட்டுகின்றனர். அல்லாஹ் சந்திரனுக்குப் பல படித்தரங்களை ஏற்படுத்தியுள்ளான். அந்தப் படித்தரங்கள் நாட்களை அறிந்து கொள்வதற்குத் தானே? வானியல் முடிவுப்படி நாட்களைக் கணித்தால் தானே அது காலம் காட்டியாக இருக்க முடியும்? சந்திரன் காலம் காட்டி என்று அல்லாஹ் கூறுவது உண்மை தான். இதில் யாருக்கும் இரண்டாவது கருத்து இல்லை.

2007 முதல் தான் சந்திரன் காலத்தைக் காட்ட ஆரம்பித்துள்ளதா? அல்லது சந்திரனை அல்லாஹ் படைத்தது முதல் காலம் காட்டுகிறதா? என்று சிந்தித்தாலே இந்த வாதத்தின் பலவீனத்தை உணர முடியும்.

அல்லாஹ் சந்திரனை எப்போது படைத்தானோ அப்போது முதல் அது காலம் காட்டியாகத் தான் இருக்கிறது. அந்த காலம் முதல் அதைப் பார்த்துத் தான் மக்கள் நாட்களைத் தீர்மானித்துக் கொண்டனர். ஹஜ் எப்போது கடமையாக்கப்பட்டதோ அப்போது முதல் ஹஜ்ஜின் காலத்தைக் காட்டக் கூடியதாகவும் பிறை அமைந்துள்ளது.

என்னவோ இவ்வளவு நூற்றாண்டுகளாக பிறை காலம் காட்டாமல் இருந்தது போலவும் 2007ல் வானியல் அறிவு வளர்ந்த பின் தான் அது காலத்தைக் காட்டக் கூடியதாக ஆகி விட்டது போலவும் இவர்கள் நினைக்கிறார்கள் போலும்.

வருங்காலத்தில் காலம் காட்டியாக இருந்தால் மட்டும் போதாது எந்தக் காலத்தில் இது கூறப்பட்டதோ அந்தக் காலத்தில் நிச்சயம் காலம் காட்டியாக அமைந்திருப்பது அவசியம். இல்லையென்றால் அன்றைக்கு இந்த வசனம் அருளப்பட்ட போது உண்மையில்லாத செய்தியை அது கூறியதாக ஆகி விடும்.

பிறை எவ்வாறு காலம் காட்டியாக இருக்கிறது என்பதை மிகத் தெளிவாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கி விட்டனர். (இதை முன்னர் நாம் விளக்கியுள்ளோம்) அவர்கள் காலத்தில் அது எப்படி காலம் காட்டியாக இருந்ததோ அப்படியே இன்றளவும் இனி சந்திரன் உள்ளளவும் அது காலம் காட்டியாக இருக்கும்.

இன்னும் சொல்வதானால் அன்றைக்கு எப்படி சந்திரன் சிறிதாகத் தோன்றி பின்னர் படிப்படியாக வளர்ந்து பின்னர் தேய ஆரம்பித்ததைக் கண்ணால் பார்த்து காலத்தைக் கணித்துக் கொண்டார்களோ அதே போல் இன்றைக்கும் கண்களால் பார்த்துத் தான் காலத்தை அறிந்து கொள்ள வேண்டும். மேற்கண்ட வசனங்கள்அனைத்தும் இதைத் தான் கூறுகின்றன.

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?

விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள்.

நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை பார்த்து நோன்பு விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டமாக இருந்தால் கணித்துக் கொள்ளுங்கள் என்பதே அந்த நபிமொழி.

இந்த நபிமொழியில் மேகமூட்டமாக இருக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே கணித்துக் கொள்ளச் சொல்லி விட்டதால் வானியல் கணிப்பை ஏற்கலாம் என்று வாதிடுகிறார்கள்.

இவ்வாறு கூறுவது அவர்களுடைய வாதத்திற்கே முரண்பாடானது என்பதைப் பற்றி இவர்கள் சிந்திப்பதில்லை.

நாம் உம்மி சமுதாயம். நமக்கு வானியல் தெரியாது என்று முந்தைய வாதத்தில் கூறினார்கள். வானியல் தெரியாத அந்த சமுதாயம் மேகமூட்டம் ஏற்படும் போது கணித்துக் கொள்ள வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள் என்றும் கூறினார்கள். இவர்களது வாதப்படி வானியல் தெரியாத சமுதாயத்திடம் கணித்துக் கொள்ளுங்கள் என்று எப்படிக் கூற முடியும்?

இவர்கள் ஆதாரமாக எடுத்துக் காட்டும் ஹதீஸில் நீங்கள் கணித்துக் கொள்ளுங்கள் என்று பொருள் செய்த இடத்தில் ஃபக்துரூ என்ற வாசகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாசகத்துக்கு எண்ணிக்கையை எண்ணுதல், மதிப்பிடுதல் என்றெல்லாம் பொருள் உண்டு.

எண்ணிக்கை கூட தெரியாதவர்கள் வாழ்ந்த ஒரு சமுதாயத்திடம் மதிப்பிட்டுக் கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்க மாட்டார்கள். மற்ற அறிவிப்புகளில் மேகமூட்டமாக இருந்தால் முப்பதாக எண்ணிக் கொள்ளுங்கள். ஷஃபானை முப்பது நாட்கள் என்று முழுமையாக்குங்கள் என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது. அவற்றை முன்னரே நாம் எடுத்து எழுதியுள்ளோம்.

அந்த அறிவிப்புகளையும் கவனத்தில் கொண்டு, எந்தச் சமுதாயத்திடம் இது முதலில் கூறப்பட்டதோ அந்தச் சமுதாயம் கணித்து முடிவு செய்யும் நிலையில் இருந்ததா என்பதையும் கவனத்தில் கொண்டு இந்த ஹதீஸை ஆராய்ந்திருந்தால் ஃபக்துரூ என்பதற்கு மேகமாக இருக்கும் போது முப்பது நாட்களாக எண்ணிக் கொள்ளுங்கள் என்று பொருள் செய்திருக்க வேண்டும். இன்னும் சொல்வதானால் மற்றொரு அறிவிப்பில் ஃபக்துரூ என்பதுடன் ஸலாஸீன என்ற வாசகமும் சேர்ந்து இடம் பெற்றுள்ளது. ஸலாஸீன என்றால் முப்பதாக என்று பொருள். முப்பதாக எண்ணிக் கொள்ளுங்கள் என்று பொருள் செய்தால் அது பொருத்தமாக உள்ளது. முப்பது நாட்களாகக் கணியுங்கள் என்றால் அதற்கு அர்த்தமே இல்லாமல் போய் விடுகிறது. எண்ணிக்கையைத் திட்டவட்டமாகக் கூறிய பிறகு அங்கே கணிப்புக்கு என்ன வேலை இருக்கும்?

லா நஹ்ஸிபு என்பதற்கு வானியலை அறிய மாட்டோம் என்று ஒரு வாதத்துக்காக பொருள் கொண்டாலும் இவர்களுக்கு எதிராகத் தான் இந்த ஹதீஸ் அமைந்துள்ளது.

நாம் உம்மி சமுதாயம் என்று இந்த ஹதீஸ் துவங்குகிறது. நாம் எழுதுவதை அறிய மாட்டோம். ஹிஸாபையும் அறிய மாட்டோம் என்று ஒரே தொடராகக் கூறப்பட்டுள்ளது. எழுதுவதை அறிய மாட்டோம் என்பதற்கு எப்படிப் பொருள் கொள்கிறோமோ அதே போன்று தான் ஹிஸாபை அறிய மாட்டோம் என்ற வாசகத்திற்கும் பொருள் கொள்ள வேண்டும்.

எழுதுவதை அறிய மாட்டோம் என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் யாருக்குமே எழுதத் தெரியாது என்ற பொருள் அல்ல. ஏனென்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் எழுதத் தெரிந்தவர்களும் இருந்தார்கள். குர்ஆன் எழுதப்பட்டது எழுதத் தெரிந்த நபித்தோழர்களால் தான்.

அதே போல் ஹிஸாபையும் அறிய மாட்டோம் என்பதற்கு வானியல் அறிய மாட்டோம் என்ற பொருளைக் கொடுத்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய சமுதாயத்தில் வானியல் தெரிந்தவர்களும் இருந்தார்கள் என்று தான் அர்த்தமாகிறது. எண்ணிக்கையில் குறைவாக இருந்தார்கள் என்று வேண்டுமானால் கூறலாம்.

ஹிஸாபையும் அறிய மாட்டோம் என்பதற்கு வானியல் அறிய மாட்டோம் என்ற பொருளின் படி வானியல் கணிப்பு தெரிந்த சிலர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலத்தில் இருந்த போதிலும் அவர்களிடம் கேட்டு பிறையைத் தீர்மானிக்காமல் பிறையைப் பார்க்க வேண்டும்; அல்லது மாதத்தை முப்பதாகப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

எனவே கணிப்பு தெரிந்தவர்களாக சிலர் இருந்தாலும் அதன் அடிப்படையில் செயல்படக் கூடாது ஓட்டு மொத்த சமுதாயமும் என்றைக்கு வானியல் மேலோங்கி இருக்கிறதோ அப்போது தான் வானியல் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்று தான் இவர்கள் வாதப்படி கூற வேண்டும். இது எந்தக் காலத்திலும் சாத்தியமில்லை

More Articles …