Sidebar

19
Fri, Jun
சமீபத்திய செய்திகள்

குர்ஆனுக்கு முரணில்லாமல் இருப்பது தான் சரியான ஹதீஸ் என ஷாஃபி இமாம் சொன்னாரா?

சலஃபுகளின் அறியாமை வாதங்களுக்கு மறுப்பு

குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்க்க் கூடாது என்று பீஜே சொல்லும் கருத்தை இதற்கு முன்னர் எந்த அறிஞராவது சொல்லியுள்ளார்களா என்ற வாதங்களுக்கு பீஜே பதில் அளிக்கும் போது பல அறிஞர்கள் இப்படி கூறியதை ரமலான் உரையில் எடுத்துக் காட்டினார். ஷாபி இமாம் கூறியதையும் குறிப்பிட்டார்.

இமாம் ஷாஃபியின் கூற்று:

المسألة الخامسة خبر الواحد إذا تكاملت شروط صحته هل يجب عرضه على الكتاب قال الشافعي رضي الله عنه لا يجب لأنه لا تتكامل شروطه إلا وهو غير مخالف للكتاب

ஒரு அறிவிப்பளார் அறிவிக்கும் செய்தி சரியாவதற்கான நிபந்தனைகள் முழுமை பெற்றுவிட்டால் அதனை அல் குரானுடன் ஒப்பிட்டுபார்ப்பது அவசியமா? என இமாம் ஷாஃபியிடம் கேட்கப்பட்டது. அதற்கு இமாம் ஷாஃபி அவர்கள் அவசியம் இல்லை; ஏனனில் அந்தச் செய்தி குர்ஆனுக்கு முரண்படாமல் இருந்தால் தான் சரியான ஹதீஸுக்கான நிபந்தனைகள் முழுமையாகும் என்றார்கள்.

(அல் மஹ்சூல்)

இந்தச் செய்திக்கு சலஃபுகல் கீழ்க்கண்டவாறு மறுப்பு தெரிவிக்கின்றனர்

இமாம் ஷாஃபி அவர்கள் கூறியதாக வரும் இந்தச் செய்தியை பக்ருத்தின் அர் ராஷிக்கு முன்பு வேறு எவரும் இமாம் ஷாஃபியி (ரஹ்) கூறியதாக கூறவில்லை. அர்ராஷி அவர்கள் இதற்கு அறிவிப்பாளர் தொடரையும் கூறவில்லை. இமாம் ஷாஃபியி (ரஹ்) இடம் கேட்கப்பட்ட போது பக்ருதீன் அர் ராஷி பக்கத்தில் இருந்தார்களா என்றால்? அதற்கு வாய்ப்பு அறவேயில்லை. இமாம் ஷாஃபியி (ரஹ்) (ஹிஜ்ரி 204லில்) மரணித்தவர். மேலும் அர் ராஷி (ஹிஜ்ரி 606இல்) மரணித்தவர். இந்த இடைப்பட்ட காலத்துக்கு அறிவிப்பாளர் தொடர் இல்லை. ஆகையால் இதை இமாம் ஷாஃபியி (ரஹ்) அறிவித்து இருப்பாரா என்பது சந்தேகம் தான். அறிவிப்பாளர் இல்லாத ஒரு செய்தியை ஆதாரத்துக்கு எடுத்து கொள்ள முடியாது. பலவீனமான ஒரு அறிவிப்பைக் கொண்டு தனது பலவீனமான கொள்கையை நிறுவ பீஜே நினைக்கிறார்.

இது ஸஹிஹ் ஹதிஸ் பற்றி பேசுகின்றதா?

ஒரு வேலை இது ஆதரமாக எடுத்தாலும் இது ஸஹிஹ் ஹதீதைப் பற்றி பேசவில்லை. பொதுவாக ஒரு ஹதிஸை பற்றித் தான் பேசுகின்றார் இமாம் ஷாஃபியி (ரஹ்).

இது தான் சலஃபுகளின் மறுப்பு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய செய்திகளுக்கு மட்டும் தான் அறிவிப்பாளர் வரிசையை உற்று நோக்குவார்கள். அதற்கு அடுத்ததாக குறிப்பிட்டுச் சொல்வதாக இருந்தால் சஹாபாக்கள் சொன்னதாக அறிவிக்கப்பட்ட செய்திகளுக்கு அறிவிப்பாளர் வரிசையைச் சரிபார்ப்பார்கள். அதிலும் பெரும்பாலும் பார்ப்பதில்லை.

ஆனால் இமாம்கள் சொன்னதாக வரக்கூடிய செய்திகளுக்கு அறிவிப்பாளர் வரிசையை யாரும் சரி பார்ப்பதில்லை. அப்படி அறிவிப்பாளர் வரிசை இருந்தால் தான் இமாம்கள் கூற்று ஏற்றுக் கொள்ளப்படும் என்ற விதியை  இவர்கள் ஏற்றால் அஹ்மது இமாம் அவர்களின் முஸ்னது அஹ்மது, மற்றும் மாலிக் இமாமின் முஅத்தா ஆகிய நூல்களைத் தவிர மற்ற நூல்களில் இமாம்கள்  பெயராலும், இன்னபிற அறிஞர்களின் பெயர்களாலும் சொல்லப்பட்ட செய்திகளில் சதவீதம் செய்திகள் பொய்யானவையாக தள்ளப்பட்டு விடும்.

இமாம்கள் சொன்னதாக அறிவிப்பாளர் தொடர் இல்லாத நிலையில் வரும் செய்திகளை நம்மை விமர்சிப்பவர்களும் ஏற்றுக் கொள்வார்கள் என்ற அடிப்படையில் தான் இமாம் ஷாஃபி உள்ளிட்ட பல அறிஞர்களின் கூற்றுக்கள் அறிவிப்பாளர் வரிசையில்லாமல் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் இதற்கு இந்த அளவுகோல் தேவையில்லை என்ற அடிப்படையிலும், இவர்களே அறிவிப்பாளர் வரிசையில்லாமல் அது பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அந்தச் செய்திகளை ஏற்றுக் கொள்ளலாம் என்பதை கொள்கையாக வைத்திருப்பதாலும் இத்தகைய செய்தியை நாம் மேற்கோள் காட்டினோம்.

ஆனால் இப்போது இந்த சலஃபுகள் சொல்ல வருவது என்ன?  நபிகளாரது சொல்லை எப்படி அறிவிப்பாளர் வரிசை சரிபார்த்து ஏற்றுக் கொள்கின்றோமோ அதுபோல எந்த அறிஞரது சொல்லாக இருந்தாலும் அறிவிப்பாளர் வரிசை சரியாக இருந்தால் தான் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்; இல்லாவிட்டால் அது குப்பைதான் என்று சொல்லி விட்டனர். இந்தக் கருத்தை நாம் வரவேற்கின்றோம்.

இமாம்களின் கூற்றுக்கும் அறிவிப்பாளர் வரிசை வேண்டும் என்று இவர்கள் சொன்னது நூறு சதம் நாம் ஏற்றுக் கொள்கிறோம்.

ஹனபி மத்ஹப் நூல்கள், ஷாபி மத்ஹப் நூல்கள் ஆகியவற்றில் அந்த இமாம் சொன்னதாக எழுதிய எந்தச் சட்டத்துக்கும் அந்த இமாம்கள் வரை செல்லும் அறிவிப்பாளர் தொடர் கிடையாது என்பதால் அவை குப்பைகள் என்று இவர்களே ஒப்புக் கொண்டு விட்டார்கள்.

இப்னு தைமிய்யா, இப்னுல் கையும், இப்னு கஸீர் உள்ளிட்ட பல அறிஞர்கள் தமக்கு முந்தைய அறிஞர்கள் கூறியதாக எடுத்துக் காட்டும் அதிகமான தகவலுக்கு எந்த அறிவிப்பாளர் தொடரும் கிடையாது.

700 களில் வாழ்ந்த இந்த இமாம்கள் அதற்கு முன் வாழ்ந்தவர்களின் கூற்றை எடுத்துக் காட்டுகிறார்களே அப்போது இவர்கள் உடனிருந்து கேட்டார்களா? என்று கேட்காமல் அதை இவர்கள் ஏற்றுக் கொள்ளும் மர்ம்ம் என்ன?

இமாம்கள் என்ன சொன்னார்கள் என்பதற்கே அறிவிப்பாளர் தொடர் கிடையாது; அப்படி இருந்தால் தானே குர்ஆனுக்கு முரணா என்ற கேள்வி வரும்? என்ற தோரணையில் பதிலளித்துள்ளனர்.

இப்போது இந்த சலஃபுகள் நமக்கு மறுப்பு சொல்வதாக நினைத்துக் கொண்டு நமது அடிப்படை விதிக்கு வந்துவிட்டார்கள்.

சஹாபாக்கள் சொன்னதாகவும், இமாம்கள் சொன்னதாகவும் தப்ஸீர்களிலும் இன்னும் இன்னபிற நூல்களிலும் எழுதப்பட்டுள்ள சதவீத செய்திகள் ஆதாரப்பூர்வமானவை அல்ல என்பதையும், அவைகள் குப்பைகள் தான் என்பதையும் அவர்களாகவே அவர்களது வாயாலேயே ஒப்புக் கொண்டுவிட்டனர். அல்ஹம்துலில்லாஹ்...

இமாம் ஷாஃபியின் கூற்று என்று பதிவு செய்யப்பட்ட கூற்றை நாம் எடுத்துக்காட்டியது கூட துணை ஆதாரமாகவும், இவர்கள் கேட்கும் குதர்க்க கேள்விகளுக்கு பதிலளிக்கும் முகமாகத் தானே தவிர அதையே நாம் பிரதானமான ஆதாரமாக எடுத்து வைக்கவில்லை.

ஷாஃபி இமாம் மட்டுமல்ல; வேறு எந்த எந்த எந்த  இமாம்களெல்லாம் நாம் கூறிய கருத்துக்களை கூறியுள்ளார்கள் என்று நாம் கூறினோமோ அவர்கள் அனைவரும் சொன்னது பொய் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும் கூட நாம் வைத்த வாதம் பொய்யாகிவிடாது. அந்த அடிப்படை வாதம் குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் அடிப்படையில் வைக்கப்பட்ட வாதங்கள் நூற்றுக்கு நூறு சதவீதம் சரியானது என்பது உறுதியாகிவிடும்.

அடுத்ததாக ஷாஃபி இமாம் சொன்னதாக நாம் மேற்கோள் காட்டிய செய்திக்கு இவர்கள் சொல்லும் வியாக்கியானத்தை நாம் காண்போம்

அதாவது ஷாஃபி இமாம் கூறியது குர்ஆனுக்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் முரண்படுவது குறித்த செய்தி இல்லையாம். அது ஒரு  ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா இல்லையா என்பது குறித்ததுத் தானாம். அதைத்தான் ஷாஃபி இமாம் விளக்கியுள்ளதாகச் சொல்லி தங்களது அறியாமையை அம்பலப்படுத்தியுள்ளனர்.

ஒரு ஹதீஸ் சரியாவதற்கான நிபந்தனைகள் முழுமையாகி விட்டால் அதைக் குர்ஆனுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது கட்டாயமா? என்ற கேள்விக்கு, இது குறித்து இமாம் ஷாஃபி அவர்கள், கட்டாயமில்லை. ஏனென்றால் அந்த ஹதீஸ் குர்ஆனிற்கு முரண்படாமல் இருந்தால் தான் அதன் நிபந்தனைகள் முழுமையடையும் என்று கூறியுள்ளார்கள்.

ஷாஃபி இமாம் அவர்களிடம் கேட்கப்படும் கேள்வியை நன்றாகக் கவனியுங்கள்.

ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானதா என்பதை முடிவு செய்வதற்கான நிபந்தனைகள் எல்லாம் பூர்த்தியாகிவிட்டால் அது திருக்குர்ஆனோடு மோதுகின்றதா என ஒப்பிட்டு ஆய்வு செய்ய வேண்டுமா என்று கேள்வியெழுப்புகின்றனர். அதற்கு ஷாஃபி அவர்கள் திருக்குர்ஆனோடு மோதாமல் இருந்தால் தான் அதன் நிபந்தனைகளே முழுமையடையும் என்று தெளிவுபடுத்துகின்றார்கள்.

அப்படியானால் திருக்குர்ஆனோடு அந்தச் செய்தி மோதுமேயானால் அது ஹதீஸே அல்ல  மற்ற நிபந்தனைகள் சரியாக இருந்தாலும் அதை ஏற்கக்கூடாது; அது ஹதீஸே அல்ல என்பது தான் ஷாஃபி இமாமின் கருத்தாகச் சொல்லப்பட்டுள்ளது.

கார் ஓட்டுபவனுக்கு கண் உள்ளது கைகள் உள்ளது லைசென்சும் உள்ளது. இப்போது அவனுக்கு உயிர் இருக்கிறதா என்று பார்ப்பது அவசியமா? என்று கேட்டால் உயிர் இல்லாவிட்டால் மற்ற எந்த பார்க்க அவசியம் இல்லை என்று பதில் சொல்வோம். அந்த வகையில் தான் ஷாபி இமாமின் பதில் அமைந்துள்ளது.

குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்கக் கூடாது என்று இப்னுல் கையூம் சொன்னாரா?

திருக்குர்ஆனுக்கு முரணான ஹதீஸ்களை ஏற்கக் கூடாது என்று அறிஞர் இப்னுல் கையூம் சொன்னதை ரமலான் உரையில் பீஜே எடுத்துக் காட்டினார்.

இந்த விஷயத்தில் பீஜே இருட்டடிப்புச் செய்து விட்டார் என்று சலபுகள் எனப்படுவோர்  பரப்பி வருகின்றனர்.

அவர்கள் கூறுவது இதுதான்:

இமாம் இப்னுல் கய்யுமின் கூற்று

ومنها مخالفة الحديث صريح القرآن

இட்டுக்கட்டப்பட்ட செய்தியை அறிந்து கொள்வதற்கான அடையாளங்களில் ஒன்று ஹதீஸ் குர்ஆனுடைய தெளிவான கருத்திற்கு முரண்படுவதாகும்.

நூல் : அல்மனாருல் முனீஃப் பக்கம் : 80

பத்வாவை முழுமையாகக் குறிப்பிடாமல் இருட்டடிப்பு செய்வது பீஜேயின் வழக்கம்.

இமாம் இப்னுல் கைய்யிம் (ரஹ்) அவர்களிடம் அறிவிப்பாளர் வரிசையில் கவனம் செலுத்தாமல் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸை அறிவதற்கு ஏதாவது அளவு கோல் உண்டா எனக் கேட்கப்படுகின்றது.

அதற்கு இமாம் அவர்கள்:

இது ரொம்ப முக்கியமான விடயம். நபிகளார் காலத்தில் நபித்தோழர்கள் மத்தியில் வாழ்ந்தது போல் நபியவர்களது ஆதாரப்பூர்வமான வழிகாட்டல்கள் தொடர்பில் நன்கு பரிச்சயம் உள்ள ஒருவரால், தனது இரத்தத்திலும், சதையிலும் ஸுன்னா கலந்து விடும் அளவுக்கு நபியவர்களது சகல வழிகாட்டல்கள் விடயத்திலும் ஆழ்ந்த புலமை உள்ள ஒருவரால் தான் இது முடியும்.

எனக் கூறி இதற்கான தகமையை நிர்ணயம் செய்கின்றார்கள்.

பிறகு ஒரு செய்தி இட்டுக் கட்டப்பட்டது என்பதை குறித்த தகமை உள்ளவர்கள் அறிந்து சொல்ல முடியுமான சில அளவு கோல்களைக் கூறுகிறார்கள்.

அவைகளில்:

1) புலன் பொய்ப்படுத்தும் செய்தி:

உதாரணமாக: கத்தரிக்காய் ஏந்த நோக்கத்திற்காக சாப்பிட்டாலும் அது நடக்கும்!

பேசும் போது தும்மல் ஏற்பட்டால் அந்தப் பேச்சு உன்மை என்பதற்கான அடையாளம்.!

2) அல்குர்ஆன் கூறும் தெளிவான கருத்துக்கு முரண்பாடான செய்தி

உதாரணமாக: உலகின் ஆயுள் ஏழாயிரம் வருடங்களே என இடம் பெறும் செய்தி.

நமது வாதம் :

இமாம் இமாம் இப்ன் கைய்யிம் (ரஹ்) அவர்கள் இங்கு இட்டுக்கட்டப்பட்ட செய்தியை அறிந்து கொள்ளுவதற்கான அளவு கோல்களைக் கூறுகிறார்கள். ஆனால் பீஜேயோ ஸஹிஹ் ஹதீஸ்கள் அல்குரானுக்கு முரண்பட்டால் ஏற்றுக்கொள்ளக் கூடாது; அதை மறுக்க வேண்டும் என்பது ஹதீஸ் கலை விதியாகும் என்று கூறுகின்றார். இதற்கும் பீஜே கூறுவதற்கும் என்ன சம்மந்தம்? பீஜேயின் கோட்பாடு வேறு இப்ன் கைய்யிம் (ரஹ்) அவர்கள் குறிப்பிடும் கோட்பாடு வேறு அல்லவோ.

சரி, இது உங்களுடைய கொள்கையைத் தான் சொல்கின்றது என்று நீங்கள் விதண்டாவாதம் செய்தால் கீழ்க்காணும் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்.

1) இமாம் இப்ன் கைய்யிம் (ரஹ்) இந்த விதியைக் கையாளும் நபருக்கு குறிப்பிட்ட தன்மை இருக்க வேண்டும் என்று கூறி இருக்கின்றார்கள், குறிப்பாக  நபிகளார் காலத்தில் நபித் தோழர்கள் மத்தியில் வாழ்ந்தது போல் நபியவர்களது ஆதாரப்பூர்வமான வழிகாட்டல்கள் தொடர்பில் நன்கு பரிச்சயம் உள்ள ஒருவரால், தனது இரத்தத்திலும், சதையிலும் ஸுன்னா கலந்து விடும் அளவுக்கு நபியவர்களது சகல வழிகாட்டல்கள் விடயத்திலும் ஆழ்ந்த புலமை உள்ள ஒருவரால் தான் இது முடியும் இந்த புலமை உங்களிடம் இருக்கின்றதா ?

2) இருக்கின்றது என்றால் உங்களால் இது வரைக்கும் பீஜே மறுத்துள்ள ஹதீஸ்களின் அறிவிப்பாளர் தொடர் உட்பட அதன் இலக்க என்னையும் அது எந்த, எந்த, கித்தாபுகளில் பதிவாகியுள்ளது என்பதையும், புறச்சாதன உதவி இல்லாமல் குறிப்பிட முடியுமா ?

நிச்சயம் உங்களால் இயலாது. ஏன் என்றால் இந்த விதியைப் பயன்படுத்தி, ஹதீஸ்களை இட்டுக் கட்டப்பட்டது என முடிவு செய்த இமாம்களை) இமாம் இப்னுல் கைய்யிம் அவர்கள் உட்டபட) எம்மால் காண முடியாதுள்ளது.

ஆக இந்த விதியை நீங்கள் கையில் எடுக்க ஒரு காலமும் இயலாது, அதை உங்களுடைய கொள்கைக்கு ஆதாரமாகவும் காட்ட இயலவே இயலாது.

இது தான் சலஃபுகள் வைத்த குற்றச்சாட்டு.

இப்னுல் கைய்யும் என்ற அறிஞரிடம் கேட்கப்பட்ட கேள்வியையும், அதற்கான பதிலையும் வெளியிட்டு பீஜே வைத்த வாதம் நூற்றுக் நூறு உண்மை என்பதை அவர்கள் நிரூபித்ததற்கு முதலில் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அறிவிப்பாளர் வரிசையைப் பார்க்காமலேயே, அதை ஆய்வு செய்யாமலேயே ஒரு செய்தி இட்டுக்கப்பட்ட செய்தி தான் என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது என்பதுதான் இப்னுல் கைய்யும் என்ற அறிஞரிடத்தில் வைக்கப்பட்ட கேள்வி.

அதற்கு அவர் பதிலளிக்கும் விதமாகத்தான், குர்ஆனின் தெளிவான கருத்துக்கு முரண்பட்டால் அது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்று தெளிவுபடுத்துகின்றார்.

இதைத்தானே பீஜே குறிப்பிட்டார். இதில் என்ன பீஜே இருட்டடிப்புச் செய்தார் என்பதை அவர்கள் விளக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

ஒரு கேள்வி கேட்கும் போது விளக்கினாலும் கேள்வி கேட்காமலே விளக்கினாலும் இரண்டும் ஒன்று தான். கேள்வி கேட்ட போது விளக்கியதால் இப்னுல் கையிம் அப்படி சொல்லவில்லை என்று அறிவுடையவர்கள் வாதிட மாட்டார்கள்.

இன்ன இடத்தில் இன்ன நபரை நான் கொலை செய்தேன் என்று அப்துல் காதிர் கூறியதாக பீஜே எடுத்துக் காட்டுகிறார்.

இல்லை; அப்துல் காதர் சொன்ன விஷயத்தில் நீங்கள் இருட்டடிப்புச் செய்து விட்டீர்கள். அப்துல் காதர் அவ்வாறு சொல்லவே இல்லை. அவர் என்ன சொன்னார் தெரியுமா?

நீ யாரையும் கொலை செய்தாயா? என்று அப்துல் காதிரிடம் சிலர் கேள்வி கேட்டார்கள். அதற்குப் பதிலளிக்கும் விதமாகத் தான் அப்துல்காதர் இன்ன இடத்தில் இன்ன நபரை கொலை செய்தேன் என்று சொன்னார்.

இதுபோல் தான் சலபுகளின் இந்த வாதம் உள்ளது.

அப்துல் காதிர் கொலை செய்த்தை ஒப்புக் கொண்டார் என்பது தான் இரு செய்தியிலும் உள்ளது.

அடுத்து அவர்கள் சொல்வது என்ன?

குர்ஆன் வசனத்தோடு முரண்படும் ஹதீஸ்களை அறிந்து கொள்வதற்கு உரிய ஷரத்துகளை இப்னுல் கைய்யும் சொல்லியுள்ளாராம். அந்தப் பண்புகள் உங்களிடம் உள்ளதா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

இப்னுல் கைய்யும் அவர்கள் குர்ஆனுடைய தெளிவான கருத்துக்கு முரண்பட்டதாக ஹதீஸ் என்ற பெயரில் அறிவிக்கப்படுமேயானால் அது இட்டுக்கட்டப்பட்ட செய்தி ஆகும் என்று சொல்லிவிட்டு அதை அறிய இரத்தத்தில் பல விஷயங்கள் ஊறி இருக்க வேண்டும் என்று கூறுகின்றார்.

இரத்தத்தில் எது ஊறியதோ, அல்லது ஊறவில்லையோ அது நமக்குத் தேவையில்லாதது; இங்கு இதை நாம் சொல்ல வந்ததன் நோக்கம் என்ன?

குர்ஆனுடைய தெளிவான கருத்துக்கு முரண்பட்டதாக ஹதீஸ் என்ற பெயரில் அறிவிக்கப்படுமேயானால் அது இட்டுக்கட்டப்பட்ட செய்தி ஆகும் என்ற கருத்தில் அவர் இருந்தது உண்மையா இல்லையா? இதுதானே இங்கு பீஜே சுட்டிக்காட்டியது. இதில் பீஜே என்ன இருட்டடிப்புச் செய்தார்.

அடுத்தபடியாக இப்னுல் கைய்யும் சொல்லும் அனைத்தையும் அப்படியே ஏற்றுக் கொள்வோம் என்று பீஜே சொன்னாரா?

ரூஹ் என்ற பெயரில் புத்தகம் எழுதி இப்னுல் கையும் விட்டுள்ள கப்சாக்கள் கொஞ்ச நஞ்சமல்ல; இதையெல்லாம் நாமும் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டுமா?

ஆதாரப்பூர்வமான செய்தியாக பதிவு செய்யப்பட்ட செய்தி குர்ஆனுக்கு முரண்பட்டால் அதை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று இதற்கு முன்பு யாரேனும் சொல்லியுள்ளார்களா என்று சலஃபுகள் வைத்த வாதத்திற்குத் தான் பீஜே பதில் அளித்தார்.

இப்னுல் கையும் எழுதியுள்ள அனைத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஒரு போதும் நாம் சொல்ல மாட்டோம்.

இப்னுல் கைய்யும் இது குறித்து கூறிய தவறான கருத்தை நாங்கள் ஏற்கமாட்டோம். மெய்யையும் பொய்யையும் பிரித்தரியும் வசதிகள் குறைவாக உள்ள காலத்தில் இது சாத்தியக் குறைவு என்று நினைத்து அவர் இதை கண்டுபிடிக்க பல ஷரத்துகளை சொல்லி இருக்கலாம்.

நம்மைப் பொருத்தவரை இது சாத்தியமானது. அனைத்து ஹதீஸ்களும் தொகுக்கப்பட்டு நூல் வடிவத்தில் வந்துவிட்ட நிலையிலும், அனைவரது கையிலும் திருக்குர்ஆன் தவழும் நிலையிலும், அனைத்து நூல்களுமே சாஃப்ட்வேர்களாக வந்துவிட்ட நிலையிலும் நவீன புறச்சாதனங்கள் வந்த பின் இது இன்னும் எளிதானதே!.

எனவே தொப்பி போடுவது சுன்னத் என்று எந்த ஆதாரமும் இல்லாமல் இப்னுல் கைய்யும் சொன்னதை நாம் எப்படி ஏற்கவில்லையோ, அது போல் ஏற்கத்தகாத அவரது இந்தக் கருத்தையும் நாங்கள் ஏற்கவில்லை.

புறச்சாதனம் இல்லாமல் உங்களால் இதைக் கண்டுபிடிக்க முடியுமா என்ற கேள்வியும் அறியாமையாகும்.

புறச்சாதனம் இல்லாமல் வஹீ மூலம் நாங்கள் கண்டுபிடிப்போம் என்று சொல்லியிருந்தால் தான் இந்த அதிமேதாவிகள் கேட்கும் கேள்வி சரியானதாகும். நாம் வஹீ மூலம் இதைக் கண்டுபிடிப்போம் என்றோ, நமக்கு ஞானக்கண் உள்ளது; அதை வைத்து கண்டுபிடிப்போம் என்றோ நாம் சொல்லவில்லை. அப்படி நாங்கள் கூறினால் தான் இவர்கள் இப்படி கேட்க முடியும்.

அனைத்தையும் புறச்சாதனம் வழியாகத் தான் அறிய முடியும். குர்ஆனையும் கூட புறச்சாதனம் (பேப்பர், கம்ப்யூட்டர், செல்ஃபோன் உள்ளிட்ட இன்னபிற புறச் சாதனங்கள் இருந்தால் தான் அறிய முடியும்.

More Articles …