Sidebar

28
Fri, Aug

ஷைத்தான்  நபித்தோழருக்கு  ஆயதுல்  குர்ஸியைக்  கற்றுக்  கொடுத்தானா?

பதில் அபூஹுரைரா (ரலி) அவர்களுக்கு ஷைத்தான் ஆயத்துல் குர்ஸியைக் கற்றுக் கொடுத்தான் என்று கூறும் ஹதீஸ்கள் உள்ளன. இது குறித்து விபரமாகப் பேசும் ஹதீஸைக் காண்போம்.

صحيح البخاري

2311 - وَقَالَ عُثْمَانُ بْنُ الهَيْثَمِ أَبُو عَمْرٍو، حَدَّثَنَا عَوْفٌ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: وَكَّلَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِحِفْظِ زَكَاةِ رَمَضَانَ، فَأَتَانِي آتٍ فَجَعَلَ يَحْثُو مِنَ الطَّعَامِ فَأَخَذْتُهُ، وَقُلْتُ: وَاللَّهِ لَأَرْفَعَنَّكَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: إِنِّي مُحْتَاجٌ، وَعَلَيَّ عِيَالٌ وَلِي حَاجَةٌ شَدِيدَةٌ، قَالَ: فَخَلَّيْتُ عَنْهُ، فَأَصْبَحْتُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا أَبَا هُرَيْرَةَ، مَا فَعَلَ أَسِيرُكَ البَارِحَةَ»، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، شَكَا حَاجَةً شَدِيدَةً، وَعِيَالًا، فَرَحِمْتُهُ، فَخَلَّيْتُ سَبِيلَهُ، قَالَ: «أَمَا إِنَّهُ قَدْ كَذَبَكَ، وَسَيَعُودُ»، فَعَرَفْتُ أَنَّهُ سَيَعُودُ، لِقَوْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّهُ سَيَعُودُ، فَرَصَدْتُهُ، فَجَاءَ يَحْثُو مِنَ الطَّعَامِ، فَأَخَذْتُهُ، فَقُلْتُ: لَأَرْفَعَنَّكَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: دَعْنِي فَإِنِّي مُحْتَاجٌ وَعَلَيَّ عِيَالٌ، لاَ أَعُودُ، فَرَحِمْتُهُ، فَخَلَّيْتُ سَبِيلَهُ، فَأَصْبَحْتُ، فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا أَبَا هُرَيْرَةَ، مَا فَعَلَ أَسِيرُكَ»، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ شَكَا حَاجَةً شَدِيدَةً، وَعِيَالًا، فَرَحِمْتُهُ، فَخَلَّيْتُ سَبِيلَهُ، قَالَ: «أَمَا إِنَّهُ قَدْ كَذَبَكَ وَسَيَعُودُ»، فَرَصَدْتُهُ الثَّالِثَةَ، فَجَاءَ يَحْثُو مِنَ الطَّعَامِ، فَأَخَذْتُهُ، فَقُلْتُ: لَأَرْفَعَنَّكَ إِلَى رَسُولِ اللَّهِ، وَهَذَا آخِرُ ثَلاَثِ مَرَّاتٍ، أَنَّكَ تَزْعُمُ لاَ تَعُودُ، ثُمَّ تَعُودُ قَالَ: دَعْنِي أُعَلِّمْكَ كَلِمَاتٍ يَنْفَعُكَ اللَّهُ بِهَا، قُلْتُ: مَا هُوَ؟ قَالَ: إِذَا أَوَيْتَ إِلَى فِرَاشِكَ، فَاقْرَأْ آيَةَ الكُرْسِيِّ: {اللَّهُ لاَ إِلَهَ إِلَّا هُوَ الحَيُّ القَيُّومُ} [البقرة: 255]، حَتَّى تَخْتِمَ الآيَةَ، فَإِنَّكَ لَنْ يَزَالَ عَلَيْكَ مِنَ اللَّهِ حَافِظٌ، وَلاَ يَقْرَبَنَّكَ شَيْطَانٌ حَتَّى تُصْبِحَ، فَخَلَّيْتُ سَبِيلَهُ، فَأَصْبَحْتُ فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا فَعَلَ أَسِيرُكَ البَارِحَةَ»، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، زَعَمَ أَنَّهُ يُعَلِّمُنِي كَلِمَاتٍ يَنْفَعُنِي اللَّهُ بِهَا، فَخَلَّيْتُ سَبِيلَهُ، قَالَ: «مَا هِيَ»، قُلْتُ: قَالَ لِي: إِذَا أَوَيْتَ إِلَى فِرَاشِكَ فَاقْرَأْ آيَةَ الكُرْسِيِّ مِنْ أَوَّلِهَا حَتَّى تَخْتِمَ الآيَةَ: {اللَّهُ لاَ إِلَهَ إِلَّا هُوَ الحَيُّ القَيُّومُ} [البقرة: 255]، وَقَالَ لِي: لَنْ يَزَالَ عَلَيْكَ مِنَ اللَّهِ حَافِظٌ، وَلاَ يَقْرَبَكَ شَيْطَانٌ حَتَّى تُصْبِحَ - وَكَانُوا أَحْرَصَ شَيْءٍ عَلَى الخَيْرِ - فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمَا إِنَّهُ قَدْ صَدَقَكَ وَهُوَ كَذُوبٌ، تَعْلَمُ مَنْ تُخَاطِبُ مُنْذُ ثَلاَثِ لَيَالٍ يَا أَبَا هُرَيْرَةَ»، قَالَ: لاَ، قَالَ: «ذَاكَ شَيْطَانٌ»

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமளானுடைய (ஃபித்ரா) ஜகாத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை என்னிடம் கொடுத்தார்கள். அப்போது ஒருவன் இரவில் வந்து உணவுப் பொருட்களை அள்ளலானான். அவனை நான் பிடித்து, உன்னை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன்! என்று கூறினேன். அதற்கவன், நான் ஒரு ஏழை! எனக்குக் குடும்பம் இருக்கிறது; கடும் தேவையும் இருக்கிறது! என்று கூறினான். அவனை நான் விட்டுவிட்டேன். விடிந்ததும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அபூஹுரைராவே! நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்? என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! கடுமையான வறுமையில் இருப்பதாகவும் தனக்குக் குடும்பம் இருப்பதாகவும் அவன் முறையிட்டான்; ஆகவே, இரக்கப்பட்டு அவனை விட்டுவிட்டேன்! என்றேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிச்சயமாக அவன் பொய் சொல்லியிருக்கிறான்! மீண்டும் அவன் வருவான்! என்றனர். மீண்டும் வருவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதால் அவன் மீண்டும் வருவான் என்று நம்பி அவனுக்காக (அவனைப் பிடிப்பதற்காகக்) காத்திருந்தேன். அவன் வந்து உணவுப் பொருட்களை அள்ளத் தொடங்கிய போது அவனைப் பிடித்தேன். உன்னை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன்! என்று கூறினேன். அதற்கவன், என்னை விட்டுவிடு! நான் ஒரு ஏழை! எனக்கு குடும்பமிருக்கிறது; இனி நான் வரமாட்டேன்! என்றான். அவன் மேல் இரக்கப்பட்டு அவனை விட்டுவிட்டேன். விடிந்ததும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அபூஹுரைராவே! உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்? என்று கேட்டார்கள். நான், அல்லாஹ்வின் தூதரே! அவன் (தனக்குக்) கடும் தேவையும் குடும்பமும் இருப்பதாக முறையிட்டான்; ஆகவே, அவன் மேல் இரக்கப்பட்டு அவனை விட்டுவிட்டேன்! என்றேன். நிச்சயமாக அவன் உம்மிடம் பொய் சொல்லியிருக்கிறான்; திரும்பவும் உம்மிடம் வருவான்! என்றனர். மூன்றாம் தடவை அவனுக்காகக் காத்திருந்த போது, அவன் வந்து உணவுப் பொருட்களை அள்ளத் தொடங்கினான். அவனைப் பிடித்து, உன்னை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன்( (ஒவ்வொரு முறையும்) இனிமேல் வரமாட்டேன்! என்று சொல்லிவிட்டு, மூன்றாம் முறையாக நீ மீண்டும் வந்திருக்கிறாய்! என்று கூறினேன்.

அதற்கவன், என்னை விட்டுவிடும்! அல்லாஹ் உமக்குப் பயளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருகிறேன்! என்றான். அதற்கு நான், அந்த வார்த்தைகள் என்ன? என்று கேட்டேன். நீர் படுக்கைக்குச் செல்லும் போது ஆயத்துல் குர்ஸியை ஆரம்பத்திலிருந்து கடைசி வரை ஓது! அவ்வாறு செய்தால், விடியும் வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உம்மைப் பாதுகாக்கின்ற (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார்; ஷைத்தானும் உம்மை நெருங்க மாட்டான்! என்றான். அவனை நான் விட்டுவிட்டேன். விடிந்ததும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்? என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே அல்லாஹ் எனக்குப் பயனளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருவதாக அவன் கூறினான்; அதனால் அவனை விட்டுவிட்டேன்! என்றேன். அந்த வார்த்தைகள் என்ன? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நீர் படுக்கைக்குச் செல்லும் போது ஆயத்துல் குர்ஸியை ஆரம்பம் முதல் கடைசிவரை ஓதும்! அவ்வாறு ஓதினால், விடியும் வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உம்மைப் பாதுகாக்கின்ற(வானவர்) ஒருவர் இருந்த கொண்டேயிருப்பார்; ஷைத்தானும் உம்மை நெருங்க மாட்டான்! என்று என்னிடம் அவன் கூறினான் எனத் தெரிவித்தேன். -நபித் தோழர்கள் நன்மையான(தைக் கற்றுக் கொண்டு செயல்படுத்துவ)தில் அதிக ஆர்வமுடையவர்களாக இருந்தனர்- அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவன் பெரும் பொய்யனாக இருந்தாலும் உம்மிடம் உண்மையைத் தான் அவன் சொல்லியிருக்கின்றான்! மூன்று இரவுகளாக நீர் யாரிடம் பேசி வருகிறீர் என்று உமக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். தெரியாது! என்றேன். அவன்தான் ஷைத்தான்! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இந்த ஹதீஸில் சொல்லப்பட்ட ஷைத்தான் என்பவன், மனித சமுதாயத்தை வழிகெடுக்கும் உண்மையான ஷைத்தானா? அல்லது தீய மனிதனைக் குறிக்கிறதா என்பதை நாம் ஆராய வேண்டும்.

திருக்குர்ஆனிலோ, ஹதீஸ்களிலோ ஷைத்தான் என்ற சொல் பயன்படுத்தப்பட்டால் அதை நேரடிப் பொருளில் தான் புரிந்து கொள்ள வேண்டும்.

நேரடிப் பொருளில் புரிந்து கொள்வது திருக்குர்ஆனின் மற்ற வசனங்களுக்கோ, ஹதீஸ்களுக்கோ, இஸ்லாத்தின் அடிப்படைக்கோ முரணாக இருந்தால் அப்போது ஷைத்தான் என்ற சொல் கெட்ட மனிதன் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று புரிந்து கொள்ள வேண்டும்.

மேற்கண்ட ஹதீஸில் அபூஹுரைரா (ரலி) அவர்கள் ஷைத்தானைப் பார்த்துள்ளார்கள் என்றும், அவனுடன் உரையாடியுள்ளார்கள் என்றும், அவனைப் பிடித்துள்ளார்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

ஷைத்தானைப் பார்க்க முடியுமா என்பது குறித்து குர்ஆன் பின்வருமாறு சொல்கிறது.

يَابَنِي آدَمَ لَا يَفْتِنَنَّكُمُ الشَّيْطَانُ كَمَا أَخْرَجَ أَبَوَيْكُمْ مِنَ الْجَنَّةِ يَنْزِعُ عَنْهُمَا لِبَاسَهُمَا لِيُرِيَهُمَا سَوْآتِهِمَا إِنَّهُ يَرَاكُمْ هُوَ وَقَبِيلُهُ مِنْ حَيْثُ لَا تَرَوْنَهُمْ إِنَّا جَعَلْنَا الشَّيَاطِينَ أَوْلِيَاءَ لِلَّذِينَ لَا يُؤْمِنُونَ (27)7

ஆதமுடைய மக்களே! உங்கள் பெற்றோர் இருவரையும் ஷைத்தான் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றியது போல் உங்களையும் அவன் குழப்பிவிட வேண்டாம். அவர்களின் வெட்கத்தலங்களை அவர்களுக்குக் காட்ட ஆடைகளை அவர்களை விட்டும் அவன் கழற்றினான். நீங்கள் அவர்களைக் காணாத வகையில் அவனும், அவனது கூட்டத்தாரும் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நம்பிக்கை கொள்ளாதோருக்கு ஷைத்தான்களை உற்ற நண்பர்களாக நாம் ஆக்கி விட்டோம்.

திருக்குர்ஆன் 7:27

ஷைத்தான் நம்மைப் பார்க்க முடியும்; நம்மால் ஷைத்தானைப் பார்க்க முடியாது என்று இவ்வசனம் சொல்கிறது.

அப்படியானால் இரண்டையும் முரண்பாடில்லாமல் எப்படி புரிந்து கொள்வது?

இந்த ஹதீஸில் ஷைத்தான் என்று கூறப்படுவது திருடனாக உள்ள கெட்ட மனிதன் என்று புரிந்து கொண்டால் மேற்கண்ட வசனத்துக்கு இந்த ஹதீஸ் முரண்படாது.

இது மனித ஷைத்தானைத் தான் குறிப்பிடுகிறது என்று புரிந்து கொள்ள இந்த ஹதீஸ் இடம் தருகிறது.

வந்தவன் உணவுப் பொருளை திருட்டுத் தனமாக அள்ளி இருக்கிறான். மேலும் எனக்கும் எனது பிள்ளை குட்டிகளுக்கும் தேவை உள்ளது என்ற காரணத்துக்காக திருடியதாக அவன் கூறியுள்ளான்.

ஷைத்தான்களின் உணவு முறையும், மனிதர்களின் உணவு முறையும் முற்றிலும் வேறுபட்டதாகும். கால்நடைகளின் சாணங்களும், எலும்புகளும், கரிக்கட்டைகளும் தான் ஜின்களின் உணவு என்று ஹதீஸ்களில் சொல்லப்பட்டுள்ளது.

அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் வந்தவன் மனிதர்களின் உணவாக இருக்கக்கூடிய பொருட்களைத் திருடுவதற்காகவே வந்துள்ளான்.

மேலும் அப்படியே திருட வந்தாலும் அபூஹுரைராவின் பார்வையில் படாமல் ஷைத்தானால் வர முடியும். ஆனால் அபூ ஹுரைரா அவர்கள் பார்க்கும் வகையில் திருடியுள்ளதும், அவனை அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் பிடித்துக் கொண்டார்கள் என்பதும், திருட வந்தவன் அபூஹுரைராவிடம் மாட்டிக் கொண்டு கெஞ்சியுள்ளான் என்பதும் இது மனிதனைத் தான் குறிக்கிறது என்ற கருத்து கொள்ள இடமளிக்கிறது.

கெட்ட செயலைச் செய்பவர்களையும், கெட்ட குணமுள்ளவர்களையும் ஷைத்தான்கள் என்று குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் குறிப்பிடப்பட்டு உள்ளன.

நம்பிக்கை கொண்டோரை அவர்கள் சந்திக்கும் போது "நம்பிக்கை கொண்டுள்ளோம்'' எனக் கூறுகின்றனர். தமது ஷைத்தான்களுடன் தனித்திருக்கும் போது "நாங்கள் உங்களைச் சேர்ந்தவர்களே. நாங்கள் (அவர்களை) கேலி செய்வோரே'' எனக் கூறுகின்றனர்.

திருக்குர்ஆன் 2:14

கெட்ட மனிதர்களை ஷைத்தான்கள் என்று அல்லாஹ் மேற்கண்ட வசனத்தில் குறிப்பிட்டுள்ளான்.

صحيح البخاري

3274   حدثنا  أبو معمر ، حدثنا  عبد الوارث ، حدثنا  يونس ، عن  حميد بن هلال ، عن  أبي صالح ، عن  أبي هريرة  قال : قال النبي صلى الله عليه وسلم :  " إذا مر بين يدي أحدكم شيء وهو يصلي فليمنعه، فإن أبى فليمنعه، فإن أبى فليقاتله ؛ فإنما هو شيطان ".

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நீங்கள் தொழுது கொண்டிருக்கும் போது உங்கள் முன்னால் எவராவது நடந்து செல்ல முனைந்தால் அவரைத் தடுங்கள். அவர் (விலகிக் கொள்ள) மறுத்தால் அப்போதும் அவரைத் தடுங்கள். அவர் (மீண்டும் விலக) மறுத்தால் அப்போது அவருடன் சண்டையி(ட்டுத் த)டுங்கள். ஏனெனில், அவன் தான் ஷைத்தான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 3275

தொழுது கொண்டிருக்கும் போது குறுக்கே செல்லும் மனிதர்களை ஷைத்தான்கள் என்று நபிகளார் குறிப்பிடுகிறார்கள்.

இது போல் மனித ஷைத்தான் தான் திருட வந்துள்ளான் என்று புரிந்து கொண்டால் ஷைத்தானை அபூ ஹுரைரா (ரலி) பார்த்தார்கள் என்று ஆகாது. மேற்கண்ட வசனத்துக்கு முரணாகவும் அமையாது.

கெட்ட மனிதன் அபூ ஹுரைராவுக்கு தெரியாத ஆயதுல் குர்ஸியின் சிறப்பை எப்படி அறிய முடியும்? எப்படி கற்றுக் கொடுக்க முடியும்? என்ற கேள்வி எழலாம்.

வந்தவன் முஸ்லிம் சமுதாயத்தில் ஒருவனாக காட்டிக் கொண்ட ஒருவன் என்றால் அவன் நபிகள் நயகம் (ஸல்) அவர்களின் சபைகளில் பங்கேற்று இது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதைக் கேட்டு மனதில் பதிய வைத்து தேவைப்படும் போது அதைப் பயன்படுத்தியுள்ளான் என்று புரிந்து கொள்ள இடமுண்டு.

வந்தவன் உண்மையான ஷைத்தான் என்று கருதவும் இந்த ஹதீஸில் இடமுள்ளது.

அபூ ஹுரைரா அவர்கள் இது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் தாமாகக் கூறவில்லை. உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன ஆனான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாமாகவே விசாரிக்கிறார்கள். இது குறித்த விபரம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வஹீ மூலம் தெரிந்துள்ளது. மேலும் அவன் பொய்யன் என்றும் கூறுகிறார்கள். அவன் மனிதனாக இருந்தால் வறுமைக்காக திருடினேன் என்று அவன் முதல் நாள் சொன்னது பொய்யாக ஆகாது.

அவன் ஷைத்தானாக இருந்தால் தான் அவன் சொன்ன காரணம் பொய்யாக இருக்க முடியும். எனக்கு வறுமை உள்ளது என அவன் சொன்னது பொய் என்று சொல்ல முடியும்.

மீண்டும் நாளையும் அவன் வருவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்கிறார்கள். அப்படியே நடக்கவும் செய்கிறது. அல்லாஹ் இது குறித்து அவர்களுக்கு வஹீ மூலம் அறிவித்துக் கொடுத்துள்ளான். உண்மையான ஷைத்தான் மூலம் ஒரு உண்மையைக் கற்றுக் கொடுக்க அல்லாஹ் செய்த ஏற்பாடு என்பதால் தான் மறு நாள் வருவான் என்று கூறியுள்ளார்கள்.

மேலும் இந்த ஹதீஸின் இறுதி வாசகம் கூடுதல் கவனத்துக்கு உரியதாகும். அபூ ஹுரைரா அவன் மனிதன் என்ற கருத்தில் தான் இருந்துள்ளார். கெட்ட திருடன் என்று அவர் கருதியுள்ளார். இதை மாற்றும் வகையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்று அமைந்துள்ளது.

மூன்று இரவுகளாக நீர் யாரிடம் பேசி வருகிறீர் என்று உமக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். தெரியாது என்றேன். அவன்தான் ஷைத்தான்! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

வந்தவன் மனித ஷைத்தான் என்று அபூ ஹுரைராவுக்குத் தெரியும். திருட வருபவன் கெட்ட மனிதனாகத் தான் இருக்க முடியும். எனவே மனித ஷைத்தான் தான் வந்தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அபூ ஹுரைரா அவர்கள் மனித ஷைத்தான் என்று கருதியது தவறு என்பதை உணர்த்தவே அவன் ஷைத்தான் என்று நபிகள் கூறியுள்ளார்கள்.

ஷைத்தானாகவே இருந்தாலும் அவனிடமிருந்து கிடைக்கும் நற்செய்திகளை உண்மைகளை எடுத்துக் கொள்ளலாம் என்ற பாடத்தை கற்றுத்தர அல்லாஹ் இந்த ஏற்பாட்டைச் செய்திருக்க முடியும்.

வந்தவன் ஒரிஜினல் ஷைத்தான் என்று பொருள் கொண்டால் ஷைத்தானைப் பார்க்க முடியாது என்ற வசனத்துக்கு முரணாக அமையுமா? என்றால் அமையாது.

ஷைத்தானை சாதாரணமாக மனிதனால் காண முடியாது. மனிதக் கண்களில் தென்படுவதற்கான உடலமைப்பு ஷைத்தானுக்கு இல்லை என்பது தான் இதன் கருத்தாகும்.

நபிமார்கள் வாழும் காலத்தில் கண்களுக்குப் புலப்படும் வகையில் ஷைத்தான்களைக் காட்ட அல்லாஹ் நாடினால் மனித வடிவில் வரவைத்து அல்லாஹ் காட்டுவான். இது மேற்கண்ட வசனத்துக்கு முரணாக ஆகாது.

ஆனால் விதிவிலக்காக ஷைத்தானை மனித உருவம் எடுக்க வைத்தால் அப்போது பார்க்க முடியும். ஆனால் மனித வடிவில் வந்தவன் ஒரிஜினல் ஷைத்தான் என்று நபிமார்கள் வாழும் போதுதான் உறுதிப்படுத்த முடியும்.

உதாரணமாக மலக்குகள் விஷயத்தை எடுத்துக் கொள்ளலாம். ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபிகளை பல முறை சந்தித்துள்ளார்கள். அந்த சந்திப்புகளின் போது அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டும் தான் தென்பட்டுள்ளார். அந்த சபையில் உள்ள மற்றவர்களுக்குத் தென்படவில்லை. ஆனால் மனித வடிவில் ஜிப்ரீலை வரவைத்து மக்களுக்கு ஏதேனும் சொல்ல அல்லாஹ் நாடும் போது மனித வடிவில் வருவார். அவர் மனிதர் என்றே சஹாபாக்கள் நினைத்துக் கொள்வார்கள். பின்னர் அவர் தான் ஜிப்ரீல் என்று நபிகள் விளக்குவார்கள்.

இதற்கான ஆதாரங்கள்

صحيح البخاري

3768 - حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَبُو سَلَمَةَ: إِنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا: «يَا عَائِشَ، هَذَا جِبْرِيلُ يُقْرِئُكِ السَّلاَمَ» فَقُلْتُ: وَعَلَيْهِ السَّلاَمُ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، تَرَى مَا لاَ أَرَى «تُرِيدُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»

3768 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நாள், ஆயிஷே! இதோ (வானவர்) ஜிப்ரீல் உனக்கு ஸலாம் உரைக்கிறார் என்று சொன்னார்கள். நான், சலாமுக்கு பதில் கூறும் முகமாக வஅலைஹிஸ்ஸலாம் வரஹ்மத்துல் லாஹி வபரக்காத்துஹு' - அவர் மீதும் ஸலாம் பொழியட்டும். மேலும், அல்லாஹ்வின் கருணையும் அவனுடைய அருள் வளங்களும் பொழியட்டும் என்று பதில் முகமன் சொல்லி விட்டு, நான் பார்க்க முடியாதவற்றை நீங்கள் பார்க்கிறீர்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறினேன்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி 3768

ஆயிஷா (ரலி) அவர்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இருந்த போது ஜிப்ரீல் வருகிறார். ஆனால் அவரை ஆயிஷா (ரலி) அவர்களால் பார்க்க முடியவில்லை. நபியின் வழியாக ஒருவருக்கொருவர் ஸலாமைப் பரிமாரிக் கொள்கிறார்கள். சாதாரணமாக வானவர்களை மனிதர்கள் பார்க்க முடியாது என்பதை இதிலிருந்து அறியலாம்.

صحيح البخاري

50 - حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا أَبُو حَيَّانَ التَّيْمِيُّ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَارِزًا يَوْمًا لِلنَّاسِ، فَأَتَاهُ جِبْرِيلُ فَقَالَ: مَا الإِيمَانُ؟ قَالَ: «الإِيمَانُ أَنْ تُؤْمِنَ بِاللَّهِ وَمَلاَئِكَتِهِ، وَكُتُبِهِ، وَبِلِقَائِهِ، وَرُسُلِهِ وَتُؤْمِنَ بِالْبَعْثِ». قَالَ: مَا الإِسْلاَمُ؟ قَالَ: " الإِسْلاَمُ: أَنْ تَعْبُدَ اللَّهَ، وَلاَ تُشْرِكَ بِهِ شَيْئًا، وَتُقِيمَ الصَّلاَةَ، وَتُؤَدِّيَ الزَّكَاةَ المَفْرُوضَةَ، وَتَصُومَ رَمَضَانَ ". قَالَ: مَا الإِحْسَانُ؟ قَالَ: «أَنْ تَعْبُدَ اللَّهَ كَأَنَّكَ تَرَاهُ، فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ»، قَالَ: مَتَى السَّاعَةُ؟ قَالَ: " مَا المَسْئُولُ عَنْهَا بِأَعْلَمَ مِنَ السَّائِلِ، وَسَأُخْبِرُكَ عَنْ أَشْرَاطِهَا: إِذَا وَلَدَتِ الأَمَةُ رَبَّهَا، وَإِذَا تَطَاوَلَ رُعَاةُ الإِبِلِ البُهْمُ فِي البُنْيَانِ، فِي خَمْسٍ لاَ يَعْلَمُهُنَّ إِلَّا اللَّهُ " ثُمَّ تَلاَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: {إِنَّ اللَّهَ عِنْدَهُ عِلْمُ السَّاعَةِ} [لقمان: 34] الآيَةَ، ثُمَّ أَدْبَرَ فَقَالَ: «رُدُّوهُ» فَلَمْ يَرَوْا شَيْئًا، فَقَالَ: «هَذَا جِبْرِيلُ جَاءَ يُعَلِّمُ النَّاسَ دِينَهُمْ» قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: جَعَلَ ذَلِكَ كُلَّهُ مِنَ الإِيمَانِ

50 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நாள் மக்களுக்குத் தென்படும் விதத்தில் (அமர்ந்து) இருந்த போது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து ஈமான் என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஈமான் என்பது, அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய சந்திப்பையும் அவனுடைய தூதர்களையும் நீர் நம்புவதும், (மறுமையில்) உயிர்ப்பித்து எழுப்பப்படுவதை நீர் நம்புவதுமாகும் என்று பதிலளித்தார்கள். அடுத்து அவர், இஸ்லாம் என்றால் என்ன? என்று கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இஸ்லாம் என்பது அல்லாஹ்வை நீர் வணங்குவதும், அவனுக்கு (எதனையும் எவரையும்) இணையாக்காமலிருப்பதும், தொழுகையை நிலை நிறுத்துவதும், கடமையாக்கப்பட்ட (வறியோர் உரிமையான) ஜகாத்தைக் கொடுத்து வருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதுமாகும் என்றனர்.

அடுத்து இஹ்ஸான் (அழகுறசெய்தல்) என்றால் என்ன? என்று அவர் கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (இஹ்ஸான் என்பது) அல்லாஹ்வை (நேரில்) காண்பதைப் போன்று நீர் வணங்குவதாகும். நீர் அவனைப் பார்க்காவிட்டாலும் அவன் உம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்றனர்.

அடுத்து அவர் மறுமை நாள் எப்போது? என்று கேட்க, அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைப் பற்றிக் கேட்கப்பட்டவர் (நான்), (அதைப் பற்றிக்) கேட்கின்றவரை (-உம்மை விட) மிக அறிந்தவரல்லர். (அது பற்றி எனக்கும் தெரியாது; உமக்கும் தெரியாது. வேண்டுமானால்,) அதன் (சில) அடையாளங்களைப் பற்றி உமக்குச் சொல்கிறேன். (அவை:) ஓர் அடிமைப் பெண் தன் எஜமானைப் பெற்றெடுத்தல்; மேலும் கறுப்பு நிற (அடிமட்ட) ஒட்டகங்களை மேய்ப்பவர்கள் உயரமான கட்டடங்கள் கட்டித் தமக்குள் பெருமையடித்துக் கொள்ளல். (மறுமை நாள் எபபோது வரவிருக்கிறது எனும் அறிவு) அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியாத ஐந்து விஷயங்களில் அடங்கும் என்று கூறிவிட்டு, உலக இறுதி பற்றிய அறிவு அல்லாஹ்விடம் மட்டுமே இருக்கின்றது... எனும் (31:34ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள்.

பிறகு அந்த மனிதர் திரும்பிச் சென்று விட்டார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரை (என்னிடம்) திரும்ப அழைத்து வாருங்கள் என்றனர். (அவரைத் தேடிச் சென்றவர்கள்) அவரை எங்கேயும் காணவில்லை. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இவர் தாம் ஜிப்ரீல். மக்களுக்கு அவர்களது மார்க்கத்தைக் கற்றுத்தர வந்திருந்தார் என்றனர்.

நூல் : புகாரி 50

வானவர்களை மனிதர்கள் பார்க்க முடியாது என்றாலும் இறைத்தூதர்கள் வாழும் காலத்தில் மனித வடிவில் அல்லாஹ் அனுப்பினால் பார்க்க முடியும் என்பதற்கு இது ஆதாரமாக உள்ளது.

மேலும் இப்ராஹீம் நபியின் மனைவிக்கு வானவர்கள் மனித வடிவில் வந்து நற்செய்தி சொன்னார்கள் என்று 11:71,72 மற்றும் 51:30 வசனங்களிலும் கூறப்படுகிறது. மனித வடிவில் வரும் போது மலக்குகளைப் பார்க்கலாம் என்பதை பொதுவாக பார்க்கலாம் என்று புரிந்து கொள்ள முடியாது.

இதே அடிப்படையில் ஆயதுல் குர்ஸியை ஷைத்தானே கற்றுக் கொடுத்தான் என்று புரிந்து கொண்டாலும் மனித ஷைத்தான் என்று புரிந்து கொண்டாலும் எந்தக் குழப்பமும் இல்லை.

புகாரியில் பலவீனமான செய்திகள் உள்ளனவா? கேள்வி:

ஆதாரப்பூர்வமான ஆறு நூல்கள் – ஸிஹாஹுஸ் ஸித்தா எனப்படும் (புஹாரி, முஸ்லிம், திர்மிதி, நஸாயி, இப்னுமாஜா, அபூதாவூத்) நூல்களில் இருக்கும் அனைத்து ஹதீஸ்களும் சரியானவையா? பலவீனமான ஹதீஸ்களும் கலந்து இருக்குமா? பலவீனமான ஹதீஸ்கள் கலந்து இருக்கும் என்றும், அதற்குக் கீழ் பலவீனமானவை என எழுதப்பட்டிருக்கும் என்றும் கூறுகிறார்களே இது சரியா? விளக்கம் தரவும்.

– ஆர்.மிஹ்ராஜ் நிஷா பதில் :

இந்தக் கேள்வி இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்கே எதிரானதாகும். நீங்கள் குறிப்பிடும் ஆறு நூல்களும் அல்லாஹ்விடமிருந்து அருளப்பட்ட வேதங்கள் அல்ல. அல்லாஹ்வின் வேதமாகிய திருக்குர்ஆனுக்கு மட்டுமே அல்லாஹ் முழுமையான பாதுகாப்பை வழங்கியுள்ளான். அதில் பலவீனமான தவறான செய்திகள் எதுவும் இருக்காது.

நபியவர்கள் வாழும் காலத்திலேயே ஒவ்வொரு வசனமும் அருளப்பட்டவுடன் அது பல நபித்தோழர்களால் மனனம் செய்யப்பட்டது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மேற்பார்வையில் எழுத்து வடிவிலும் பாதுகாக்கப்பட்டது. எந்த மனிதரும் அதில் ஒரு சொல்லைக்கூட சேர்க்கவோ நீக்கவோ மாற்றவோ இயலாத அளவுக்கு முழுமையான பாதுகாப்பு செய்யப்பட்டது.

ஆனால் ஹதீஸ்களின் நிலை இதுவல்ல. நபிகள் சொன்ன ஒவ்வொரு செய்தியும் நபித்தோழர்களால் மனனம் செய்யப்படவில்லை. ஓரிரு செய்திகளை ஓரிரு தோழர்கள் எழுதிக் கொண்டதைத் தவிர அனைத்து செய்திகளும் எழுத்து வடிவமாக்கப்படவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்து எண்பது ஆண்டுகளுக்குப் பின்னர் தான் செவி வழியாக தமக்கு கிடைத்த அனைத்து செய்திகளையும் சிலர் பதிவு செய்தார்கள்.

இன்னும் சிலர் சந்தேகத்துக்கு இடமானவர்களால் அறிவிக்கப்படும் செய்திகளை மட்டும் தொகுத்து அளித்தனர்.

மற்றும் சிலர் அந்தச் செய்தி யார் வழியாக கிடைத்தது என்று ஆய்வு செய்து நம்பகமானவர்கள் என்று அவர்களுக்கு யார் விஷயத்தில் நம்பிக்கை வந்ததோ அவர்களின் அறிவிப்புக்களை மட்டும் சிலர் பதிவு செய்தார்கள்.

இந்த மூன்றாவது வகையில் தான் புகாரி, முஸ்லிம் போன்ற சில நூல்கள் அமைந்துள்ளன.

இந்த அறிஞர்கள் யாரை நம்பகமானவர்கள் என்று கருதினார்களோ அவர்கள் மெய்யாகவே நம்பகமானவர்களாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. வெளிப்படையாக அவர்கள் அறிந்த தகவல்களை வைத்து அந்த அறிஞர்கள் எடுத்த முடிவு தான் நம்பகமான அறிவிப்பாளர் என்பது.

அப்படியானால் அவர்கள் யாரை நம்பகமானவர்கள் என்று கருத்தினார்களோ அவர்கள் மெய்யாகவே நம்பகமானவர்கள் தான் என்று சொன்னால் அது அப்பட்டமான இணைவைப்பாக ஆகிவிடும்.

இந்தப் பின்னணியில் தான் இமாம் ஷாஃபீ அவர்கள், திருக்குர்ஆனைத் தவிர வேறு எந்த நூலுக்கும் அல்லாஹ் முழுமையளிக்கவில்லை என்று கூறியிருக்கின்றார்கள். இது விவாதித்து ஏற்க வேண்டிய அவசியமில்லாத ஓர் அடிப்படையான உண்மையாகும்.

ஆனால் புகாரி, முஸ்லிம் ஆகியோர் கேட்டதை எல்லாம் பதிவு செய்யாமல் தங்கள் சக்திக்கு உட்பட்டு ஆட்களை எடை போட்டுள்ளார்கள். கூடுதல் கவனம் செலுத்தியுள்ளார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. எவ்வளவுதான் கூடுதல் கவனம் செலுத்தினாலும் மனிதர்களின் மதிப்பீடு முற்றிலும் சரியாக இருக்காது; அதில் தவறானவையும் இருக்கும் என்பது அதைவிட பேருண்மையாகும்.

26.10.2015. 10:48 AM

குர்ஆனுக்கு முரணில்லாமல் இருப்பது தான் சரியான ஹதீஸ் என ஷாஃபி இமாம் சொன்னாரா?

சலஃபுகளின் அறியாமை வாதங்களுக்கு மறுப்பு

குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்க்க் கூடாது என்று பீஜே சொல்லும் கருத்தை இதற்கு முன்னர் எந்த அறிஞராவது சொல்லியுள்ளார்களா என்ற வாதங்களுக்கு பீஜே பதில் அளிக்கும் போது பல அறிஞர்கள் இப்படி கூறியதை ரமலான் உரையில் எடுத்துக் காட்டினார். ஷாபி இமாம் கூறியதையும் குறிப்பிட்டார்.

இமாம் ஷாஃபியின் கூற்று:

المسألة الخامسة خبر الواحد إذا تكاملت شروط صحته هل يجب عرضه على الكتاب قال الشافعي رضي الله عنه لا يجب لأنه لا تتكامل شروطه إلا وهو غير مخالف للكتاب

ஒரு அறிவிப்பளார் அறிவிக்கும் செய்தி சரியாவதற்கான நிபந்தனைகள் முழுமை பெற்றுவிட்டால் அதனை அல் குரானுடன் ஒப்பிட்டுபார்ப்பது அவசியமா? என இமாம் ஷாஃபியிடம் கேட்கப்பட்டது. அதற்கு இமாம் ஷாஃபி அவர்கள் அவசியம் இல்லை; ஏனனில் அந்தச் செய்தி குர்ஆனுக்கு முரண்படாமல் இருந்தால் தான் சரியான ஹதீஸுக்கான நிபந்தனைகள் முழுமையாகும் என்றார்கள்.

(அல் மஹ்சூல்)

இந்தச் செய்திக்கு சலஃபுகல் கீழ்க்கண்டவாறு மறுப்பு தெரிவிக்கின்றனர்

இமாம் ஷாஃபி அவர்கள் கூறியதாக வரும் இந்தச் செய்தியை பக்ருத்தின் அர் ராஷிக்கு முன்பு வேறு எவரும் இமாம் ஷாஃபியி (ரஹ்) கூறியதாக கூறவில்லை. அர்ராஷி அவர்கள் இதற்கு அறிவிப்பாளர் தொடரையும் கூறவில்லை. இமாம் ஷாஃபியி (ரஹ்) இடம் கேட்கப்பட்ட போது பக்ருதீன் அர் ராஷி பக்கத்தில் இருந்தார்களா என்றால்? அதற்கு வாய்ப்பு அறவேயில்லை. இமாம் ஷாஃபியி (ரஹ்) (ஹிஜ்ரி 204லில்) மரணித்தவர். மேலும் அர் ராஷி (ஹிஜ்ரி 606இல்) மரணித்தவர். இந்த இடைப்பட்ட காலத்துக்கு அறிவிப்பாளர் தொடர் இல்லை. ஆகையால் இதை இமாம் ஷாஃபியி (ரஹ்) அறிவித்து இருப்பாரா என்பது சந்தேகம் தான். அறிவிப்பாளர் இல்லாத ஒரு செய்தியை ஆதாரத்துக்கு எடுத்து கொள்ள முடியாது. பலவீனமான ஒரு அறிவிப்பைக் கொண்டு தனது பலவீனமான கொள்கையை நிறுவ பீஜே நினைக்கிறார்.

இது ஸஹிஹ் ஹதிஸ் பற்றி பேசுகின்றதா?

ஒரு வேலை இது ஆதரமாக எடுத்தாலும் இது ஸஹிஹ் ஹதீதைப் பற்றி பேசவில்லை. பொதுவாக ஒரு ஹதிஸை பற்றித் தான் பேசுகின்றார் இமாம் ஷாஃபியி (ரஹ்).

இது தான் சலஃபுகளின் மறுப்பு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய செய்திகளுக்கு மட்டும் தான் அறிவிப்பாளர் வரிசையை உற்று நோக்குவார்கள். அதற்கு அடுத்ததாக குறிப்பிட்டுச் சொல்வதாக இருந்தால் சஹாபாக்கள் சொன்னதாக அறிவிக்கப்பட்ட செய்திகளுக்கு அறிவிப்பாளர் வரிசையைச் சரிபார்ப்பார்கள். அதிலும் பெரும்பாலும் பார்ப்பதில்லை.

ஆனால் இமாம்கள் சொன்னதாக வரக்கூடிய செய்திகளுக்கு அறிவிப்பாளர் வரிசையை யாரும் சரி பார்ப்பதில்லை. அப்படி அறிவிப்பாளர் வரிசை இருந்தால் தான் இமாம்கள் கூற்று ஏற்றுக் கொள்ளப்படும் என்ற விதியை  இவர்கள் ஏற்றால் அஹ்மது இமாம் அவர்களின் முஸ்னது அஹ்மது, மற்றும் மாலிக் இமாமின் முஅத்தா ஆகிய நூல்களைத் தவிர மற்ற நூல்களில் இமாம்கள்  பெயராலும், இன்னபிற அறிஞர்களின் பெயர்களாலும் சொல்லப்பட்ட செய்திகளில் சதவீதம் செய்திகள் பொய்யானவையாக தள்ளப்பட்டு விடும்.

இமாம்கள் சொன்னதாக அறிவிப்பாளர் தொடர் இல்லாத நிலையில் வரும் செய்திகளை நம்மை விமர்சிப்பவர்களும் ஏற்றுக் கொள்வார்கள் என்ற அடிப்படையில் தான் இமாம் ஷாஃபி உள்ளிட்ட பல அறிஞர்களின் கூற்றுக்கள் அறிவிப்பாளர் வரிசையில்லாமல் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் இதற்கு இந்த அளவுகோல் தேவையில்லை என்ற அடிப்படையிலும், இவர்களே அறிவிப்பாளர் வரிசையில்லாமல் அது பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அந்தச் செய்திகளை ஏற்றுக் கொள்ளலாம் என்பதை கொள்கையாக வைத்திருப்பதாலும் இத்தகைய செய்தியை நாம் மேற்கோள் காட்டினோம்.

ஆனால் இப்போது இந்த சலஃபுகள் சொல்ல வருவது என்ன?  நபிகளாரது சொல்லை எப்படி அறிவிப்பாளர் வரிசை சரிபார்த்து ஏற்றுக் கொள்கின்றோமோ அதுபோல எந்த அறிஞரது சொல்லாக இருந்தாலும் அறிவிப்பாளர் வரிசை சரியாக இருந்தால் தான் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்; இல்லாவிட்டால் அது குப்பைதான் என்று சொல்லி விட்டனர். இந்தக் கருத்தை நாம் வரவேற்கின்றோம்.

இமாம்களின் கூற்றுக்கும் அறிவிப்பாளர் வரிசை வேண்டும் என்று இவர்கள் சொன்னது நூறு சதம் நாம் ஏற்றுக் கொள்கிறோம்.

ஹனபி மத்ஹப் நூல்கள், ஷாபி மத்ஹப் நூல்கள் ஆகியவற்றில் அந்த இமாம் சொன்னதாக எழுதிய எந்தச் சட்டத்துக்கும் அந்த இமாம்கள் வரை செல்லும் அறிவிப்பாளர் தொடர் கிடையாது என்பதால் அவை குப்பைகள் என்று இவர்களே ஒப்புக் கொண்டு விட்டார்கள்.

இப்னு தைமிய்யா, இப்னுல் கையும், இப்னு கஸீர் உள்ளிட்ட பல அறிஞர்கள் தமக்கு முந்தைய அறிஞர்கள் கூறியதாக எடுத்துக் காட்டும் அதிகமான தகவலுக்கு எந்த அறிவிப்பாளர் தொடரும் கிடையாது.

700 களில் வாழ்ந்த இந்த இமாம்கள் அதற்கு முன் வாழ்ந்தவர்களின் கூற்றை எடுத்துக் காட்டுகிறார்களே அப்போது இவர்கள் உடனிருந்து கேட்டார்களா? என்று கேட்காமல் அதை இவர்கள் ஏற்றுக் கொள்ளும் மர்ம்ம் என்ன?

இமாம்கள் என்ன சொன்னார்கள் என்பதற்கே அறிவிப்பாளர் தொடர் கிடையாது; அப்படி இருந்தால் தானே குர்ஆனுக்கு முரணா என்ற கேள்வி வரும்? என்ற தோரணையில் பதிலளித்துள்ளனர்.

இப்போது இந்த சலஃபுகள் நமக்கு மறுப்பு சொல்வதாக நினைத்துக் கொண்டு நமது அடிப்படை விதிக்கு வந்துவிட்டார்கள்.

சஹாபாக்கள் சொன்னதாகவும், இமாம்கள் சொன்னதாகவும் தப்ஸீர்களிலும் இன்னும் இன்னபிற நூல்களிலும் எழுதப்பட்டுள்ள சதவீத செய்திகள் ஆதாரப்பூர்வமானவை அல்ல என்பதையும், அவைகள் குப்பைகள் தான் என்பதையும் அவர்களாகவே அவர்களது வாயாலேயே ஒப்புக் கொண்டுவிட்டனர். அல்ஹம்துலில்லாஹ்...

இமாம் ஷாஃபியின் கூற்று என்று பதிவு செய்யப்பட்ட கூற்றை நாம் எடுத்துக்காட்டியது கூட துணை ஆதாரமாகவும், இவர்கள் கேட்கும் குதர்க்க கேள்விகளுக்கு பதிலளிக்கும் முகமாகத் தானே தவிர அதையே நாம் பிரதானமான ஆதாரமாக எடுத்து வைக்கவில்லை.

ஷாஃபி இமாம் மட்டுமல்ல; வேறு எந்த எந்த எந்த  இமாம்களெல்லாம் நாம் கூறிய கருத்துக்களை கூறியுள்ளார்கள் என்று நாம் கூறினோமோ அவர்கள் அனைவரும் சொன்னது பொய் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும் கூட நாம் வைத்த வாதம் பொய்யாகிவிடாது. அந்த அடிப்படை வாதம் குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் அடிப்படையில் வைக்கப்பட்ட வாதங்கள் நூற்றுக்கு நூறு சதவீதம் சரியானது என்பது உறுதியாகிவிடும்.

அடுத்ததாக ஷாஃபி இமாம் சொன்னதாக நாம் மேற்கோள் காட்டிய செய்திக்கு இவர்கள் சொல்லும் வியாக்கியானத்தை நாம் காண்போம்

அதாவது ஷாஃபி இமாம் கூறியது குர்ஆனுக்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் முரண்படுவது குறித்த செய்தி இல்லையாம். அது ஒரு  ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா இல்லையா என்பது குறித்ததுத் தானாம். அதைத்தான் ஷாஃபி இமாம் விளக்கியுள்ளதாகச் சொல்லி தங்களது அறியாமையை அம்பலப்படுத்தியுள்ளனர்.

ஒரு ஹதீஸ் சரியாவதற்கான நிபந்தனைகள் முழுமையாகி விட்டால் அதைக் குர்ஆனுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது கட்டாயமா? என்ற கேள்விக்கு, இது குறித்து இமாம் ஷாஃபி அவர்கள், கட்டாயமில்லை. ஏனென்றால் அந்த ஹதீஸ் குர்ஆனிற்கு முரண்படாமல் இருந்தால் தான் அதன் நிபந்தனைகள் முழுமையடையும் என்று கூறியுள்ளார்கள்.

ஷாஃபி இமாம் அவர்களிடம் கேட்கப்படும் கேள்வியை நன்றாகக் கவனியுங்கள்.

ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானதா என்பதை முடிவு செய்வதற்கான நிபந்தனைகள் எல்லாம் பூர்த்தியாகிவிட்டால் அது திருக்குர்ஆனோடு மோதுகின்றதா என ஒப்பிட்டு ஆய்வு செய்ய வேண்டுமா என்று கேள்வியெழுப்புகின்றனர். அதற்கு ஷாஃபி அவர்கள் திருக்குர்ஆனோடு மோதாமல் இருந்தால் தான் அதன் நிபந்தனைகளே முழுமையடையும் என்று தெளிவுபடுத்துகின்றார்கள்.

அப்படியானால் திருக்குர்ஆனோடு அந்தச் செய்தி மோதுமேயானால் அது ஹதீஸே அல்ல  மற்ற நிபந்தனைகள் சரியாக இருந்தாலும் அதை ஏற்கக்கூடாது; அது ஹதீஸே அல்ல என்பது தான் ஷாஃபி இமாமின் கருத்தாகச் சொல்லப்பட்டுள்ளது.

கார் ஓட்டுபவனுக்கு கண் உள்ளது கைகள் உள்ளது லைசென்சும் உள்ளது. இப்போது அவனுக்கு உயிர் இருக்கிறதா என்று பார்ப்பது அவசியமா? என்று கேட்டால் உயிர் இல்லாவிட்டால் மற்ற எந்த பார்க்க அவசியம் இல்லை என்று பதில் சொல்வோம். அந்த வகையில் தான் ஷாபி இமாமின் பதில் அமைந்துள்ளது.

குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்கக் கூடாது என்று இப்னுல் கையூம் சொன்னாரா?

திருக்குர்ஆனுக்கு முரணான ஹதீஸ்களை ஏற்கக் கூடாது என்று அறிஞர் இப்னுல் கையூம் சொன்னதை ரமலான் உரையில் பீஜே எடுத்துக் காட்டினார்.

இந்த விஷயத்தில் பீஜே இருட்டடிப்புச் செய்து விட்டார் என்று சலபுகள் எனப்படுவோர்  பரப்பி வருகின்றனர்.

அவர்கள் கூறுவது இதுதான்:

இமாம் இப்னுல் கய்யுமின் கூற்று

ومنها مخالفة الحديث صريح القرآن

இட்டுக்கட்டப்பட்ட செய்தியை அறிந்து கொள்வதற்கான அடையாளங்களில் ஒன்று ஹதீஸ் குர்ஆனுடைய தெளிவான கருத்திற்கு முரண்படுவதாகும்.

நூல் : அல்மனாருல் முனீஃப் பக்கம் : 80

பத்வாவை முழுமையாகக் குறிப்பிடாமல் இருட்டடிப்பு செய்வது பீஜேயின் வழக்கம்.

இமாம் இப்னுல் கைய்யிம் (ரஹ்) அவர்களிடம் அறிவிப்பாளர் வரிசையில் கவனம் செலுத்தாமல் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸை அறிவதற்கு ஏதாவது அளவு கோல் உண்டா எனக் கேட்கப்படுகின்றது.

அதற்கு இமாம் அவர்கள்:

இது ரொம்ப முக்கியமான விடயம். நபிகளார் காலத்தில் நபித்தோழர்கள் மத்தியில் வாழ்ந்தது போல் நபியவர்களது ஆதாரப்பூர்வமான வழிகாட்டல்கள் தொடர்பில் நன்கு பரிச்சயம் உள்ள ஒருவரால், தனது இரத்தத்திலும், சதையிலும் ஸுன்னா கலந்து விடும் அளவுக்கு நபியவர்களது சகல வழிகாட்டல்கள் விடயத்திலும் ஆழ்ந்த புலமை உள்ள ஒருவரால் தான் இது முடியும்.

எனக் கூறி இதற்கான தகமையை நிர்ணயம் செய்கின்றார்கள்.

பிறகு ஒரு செய்தி இட்டுக் கட்டப்பட்டது என்பதை குறித்த தகமை உள்ளவர்கள் அறிந்து சொல்ல முடியுமான சில அளவு கோல்களைக் கூறுகிறார்கள்.

அவைகளில்:

1) புலன் பொய்ப்படுத்தும் செய்தி:

உதாரணமாக: கத்தரிக்காய் ஏந்த நோக்கத்திற்காக சாப்பிட்டாலும் அது நடக்கும்!

பேசும் போது தும்மல் ஏற்பட்டால் அந்தப் பேச்சு உன்மை என்பதற்கான அடையாளம்.!

2) அல்குர்ஆன் கூறும் தெளிவான கருத்துக்கு முரண்பாடான செய்தி

உதாரணமாக: உலகின் ஆயுள் ஏழாயிரம் வருடங்களே என இடம் பெறும் செய்தி.

நமது வாதம் :

இமாம் இமாம் இப்ன் கைய்யிம் (ரஹ்) அவர்கள் இங்கு இட்டுக்கட்டப்பட்ட செய்தியை அறிந்து கொள்ளுவதற்கான அளவு கோல்களைக் கூறுகிறார்கள். ஆனால் பீஜேயோ ஸஹிஹ் ஹதீஸ்கள் அல்குரானுக்கு முரண்பட்டால் ஏற்றுக்கொள்ளக் கூடாது; அதை மறுக்க வேண்டும் என்பது ஹதீஸ் கலை விதியாகும் என்று கூறுகின்றார். இதற்கும் பீஜே கூறுவதற்கும் என்ன சம்மந்தம்? பீஜேயின் கோட்பாடு வேறு இப்ன் கைய்யிம் (ரஹ்) அவர்கள் குறிப்பிடும் கோட்பாடு வேறு அல்லவோ.

சரி, இது உங்களுடைய கொள்கையைத் தான் சொல்கின்றது என்று நீங்கள் விதண்டாவாதம் செய்தால் கீழ்க்காணும் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்.

1) இமாம் இப்ன் கைய்யிம் (ரஹ்) இந்த விதியைக் கையாளும் நபருக்கு குறிப்பிட்ட தன்மை இருக்க வேண்டும் என்று கூறி இருக்கின்றார்கள், குறிப்பாக  நபிகளார் காலத்தில் நபித் தோழர்கள் மத்தியில் வாழ்ந்தது போல் நபியவர்களது ஆதாரப்பூர்வமான வழிகாட்டல்கள் தொடர்பில் நன்கு பரிச்சயம் உள்ள ஒருவரால், தனது இரத்தத்திலும், சதையிலும் ஸுன்னா கலந்து விடும் அளவுக்கு நபியவர்களது சகல வழிகாட்டல்கள் விடயத்திலும் ஆழ்ந்த புலமை உள்ள ஒருவரால் தான் இது முடியும் இந்த புலமை உங்களிடம் இருக்கின்றதா ?

2) இருக்கின்றது என்றால் உங்களால் இது வரைக்கும் பீஜே மறுத்துள்ள ஹதீஸ்களின் அறிவிப்பாளர் தொடர் உட்பட அதன் இலக்க என்னையும் அது எந்த, எந்த, கித்தாபுகளில் பதிவாகியுள்ளது என்பதையும், புறச்சாதன உதவி இல்லாமல் குறிப்பிட முடியுமா ?

நிச்சயம் உங்களால் இயலாது. ஏன் என்றால் இந்த விதியைப் பயன்படுத்தி, ஹதீஸ்களை இட்டுக் கட்டப்பட்டது என முடிவு செய்த இமாம்களை) இமாம் இப்னுல் கைய்யிம் அவர்கள் உட்டபட) எம்மால் காண முடியாதுள்ளது.

ஆக இந்த விதியை நீங்கள் கையில் எடுக்க ஒரு காலமும் இயலாது, அதை உங்களுடைய கொள்கைக்கு ஆதாரமாகவும் காட்ட இயலவே இயலாது.

இது தான் சலஃபுகள் வைத்த குற்றச்சாட்டு.

இப்னுல் கைய்யும் என்ற அறிஞரிடம் கேட்கப்பட்ட கேள்வியையும், அதற்கான பதிலையும் வெளியிட்டு பீஜே வைத்த வாதம் நூற்றுக் நூறு உண்மை என்பதை அவர்கள் நிரூபித்ததற்கு முதலில் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அறிவிப்பாளர் வரிசையைப் பார்க்காமலேயே, அதை ஆய்வு செய்யாமலேயே ஒரு செய்தி இட்டுக்கப்பட்ட செய்தி தான் என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது என்பதுதான் இப்னுல் கைய்யும் என்ற அறிஞரிடத்தில் வைக்கப்பட்ட கேள்வி.

அதற்கு அவர் பதிலளிக்கும் விதமாகத்தான், குர்ஆனின் தெளிவான கருத்துக்கு முரண்பட்டால் அது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்று தெளிவுபடுத்துகின்றார்.

இதைத்தானே பீஜே குறிப்பிட்டார். இதில் என்ன பீஜே இருட்டடிப்புச் செய்தார் என்பதை அவர்கள் விளக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

ஒரு கேள்வி கேட்கும் போது விளக்கினாலும் கேள்வி கேட்காமலே விளக்கினாலும் இரண்டும் ஒன்று தான். கேள்வி கேட்ட போது விளக்கியதால் இப்னுல் கையிம் அப்படி சொல்லவில்லை என்று அறிவுடையவர்கள் வாதிட மாட்டார்கள்.

இன்ன இடத்தில் இன்ன நபரை நான் கொலை செய்தேன் என்று அப்துல் காதிர் கூறியதாக பீஜே எடுத்துக் காட்டுகிறார்.

இல்லை; அப்துல் காதர் சொன்ன விஷயத்தில் நீங்கள் இருட்டடிப்புச் செய்து விட்டீர்கள். அப்துல் காதர் அவ்வாறு சொல்லவே இல்லை. அவர் என்ன சொன்னார் தெரியுமா?

நீ யாரையும் கொலை செய்தாயா? என்று அப்துல் காதிரிடம் சிலர் கேள்வி கேட்டார்கள். அதற்குப் பதிலளிக்கும் விதமாகத் தான் அப்துல்காதர் இன்ன இடத்தில் இன்ன நபரை கொலை செய்தேன் என்று சொன்னார்.

இதுபோல் தான் சலபுகளின் இந்த வாதம் உள்ளது.

அப்துல் காதிர் கொலை செய்த்தை ஒப்புக் கொண்டார் என்பது தான் இரு செய்தியிலும் உள்ளது.

அடுத்து அவர்கள் சொல்வது என்ன?

குர்ஆன் வசனத்தோடு முரண்படும் ஹதீஸ்களை அறிந்து கொள்வதற்கு உரிய ஷரத்துகளை இப்னுல் கைய்யும் சொல்லியுள்ளாராம். அந்தப் பண்புகள் உங்களிடம் உள்ளதா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

இப்னுல் கைய்யும் அவர்கள் குர்ஆனுடைய தெளிவான கருத்துக்கு முரண்பட்டதாக ஹதீஸ் என்ற பெயரில் அறிவிக்கப்படுமேயானால் அது இட்டுக்கட்டப்பட்ட செய்தி ஆகும் என்று சொல்லிவிட்டு அதை அறிய இரத்தத்தில் பல விஷயங்கள் ஊறி இருக்க வேண்டும் என்று கூறுகின்றார்.

இரத்தத்தில் எது ஊறியதோ, அல்லது ஊறவில்லையோ அது நமக்குத் தேவையில்லாதது; இங்கு இதை நாம் சொல்ல வந்ததன் நோக்கம் என்ன?

குர்ஆனுடைய தெளிவான கருத்துக்கு முரண்பட்டதாக ஹதீஸ் என்ற பெயரில் அறிவிக்கப்படுமேயானால் அது இட்டுக்கட்டப்பட்ட செய்தி ஆகும் என்ற கருத்தில் அவர் இருந்தது உண்மையா இல்லையா? இதுதானே இங்கு பீஜே சுட்டிக்காட்டியது. இதில் பீஜே என்ன இருட்டடிப்புச் செய்தார்.

அடுத்தபடியாக இப்னுல் கைய்யும் சொல்லும் அனைத்தையும் அப்படியே ஏற்றுக் கொள்வோம் என்று பீஜே சொன்னாரா?

ரூஹ் என்ற பெயரில் புத்தகம் எழுதி இப்னுல் கையும் விட்டுள்ள கப்சாக்கள் கொஞ்ச நஞ்சமல்ல; இதையெல்லாம் நாமும் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டுமா?

ஆதாரப்பூர்வமான செய்தியாக பதிவு செய்யப்பட்ட செய்தி குர்ஆனுக்கு முரண்பட்டால் அதை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று இதற்கு முன்பு யாரேனும் சொல்லியுள்ளார்களா என்று சலஃபுகள் வைத்த வாதத்திற்குத் தான் பீஜே பதில் அளித்தார்.

இப்னுல் கையும் எழுதியுள்ள அனைத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஒரு போதும் நாம் சொல்ல மாட்டோம்.

இப்னுல் கைய்யும் இது குறித்து கூறிய தவறான கருத்தை நாங்கள் ஏற்கமாட்டோம். மெய்யையும் பொய்யையும் பிரித்தரியும் வசதிகள் குறைவாக உள்ள காலத்தில் இது சாத்தியக் குறைவு என்று நினைத்து அவர் இதை கண்டுபிடிக்க பல ஷரத்துகளை சொல்லி இருக்கலாம்.

நம்மைப் பொருத்தவரை இது சாத்தியமானது. அனைத்து ஹதீஸ்களும் தொகுக்கப்பட்டு நூல் வடிவத்தில் வந்துவிட்ட நிலையிலும், அனைவரது கையிலும் திருக்குர்ஆன் தவழும் நிலையிலும், அனைத்து நூல்களுமே சாஃப்ட்வேர்களாக வந்துவிட்ட நிலையிலும் நவீன புறச்சாதனங்கள் வந்த பின் இது இன்னும் எளிதானதே!.

எனவே தொப்பி போடுவது சுன்னத் என்று எந்த ஆதாரமும் இல்லாமல் இப்னுல் கைய்யும் சொன்னதை நாம் எப்படி ஏற்கவில்லையோ, அது போல் ஏற்கத்தகாத அவரது இந்தக் கருத்தையும் நாங்கள் ஏற்கவில்லை.

புறச்சாதனம் இல்லாமல் உங்களால் இதைக் கண்டுபிடிக்க முடியுமா என்ற கேள்வியும் அறியாமையாகும்.

புறச்சாதனம் இல்லாமல் வஹீ மூலம் நாங்கள் கண்டுபிடிப்போம் என்று சொல்லியிருந்தால் தான் இந்த அதிமேதாவிகள் கேட்கும் கேள்வி சரியானதாகும். நாம் வஹீ மூலம் இதைக் கண்டுபிடிப்போம் என்றோ, நமக்கு ஞானக்கண் உள்ளது; அதை வைத்து கண்டுபிடிப்போம் என்றோ நாம் சொல்லவில்லை. அப்படி நாங்கள் கூறினால் தான் இவர்கள் இப்படி கேட்க முடியும்.

அனைத்தையும் புறச்சாதனம் வழியாகத் தான் அறிய முடியும். குர்ஆனையும் கூட புறச்சாதனம் (பேப்பர், கம்ப்யூட்டர், செல்ஃபோன் உள்ளிட்ட இன்னபிற புறச் சாதனங்கள் இருந்தால் தான் அறிய முடியும்.

More Articles …