Sidebar

17
Wed, Jun
சமீபத்திய செய்திகள்

மண் கேட்ட படலம்

ஆதம் (அலை) அவர்களைப் படைக்க அல்லாஹ் எண்ணிய போது, ஜிப்ரீல் (அலை) அவர்களைப் பூமிக்கு அனுப்பி மண் எடுத்து வருமாறு பணித்தானாம். ஜிப்ரீல் (அலை) அவர்கள் பூமிக்கு வந்து மண் எடுக்க முற்பட்ட போது, பூமி மண் தர மறுத்ததாம். தோல்வியோடு ஜிப்ரீல் (அலை) திரும்பி விடுகிறார்களாம். அடுத்து மீகாயில் (அலை) அவர்களை அல்லாஹ் அனுப்ப, மீகாயிலும் தோல்வியுடன் திரும்பிச் சென்றார்களாம். மூன்றாவதாக இஸ்ராஃபீலை அனுப்பிய போது, அவர்களும் வெறுங்கையுடன் திரும்பி விட்டார்களாம். இறுதியாக மலக்குல் மவ்தை அல்லாஹ் அனுப்ப, பூமியின் மறுப்பைப் பொருட்படுத்தாமல் அவர் மண் எடுத்துச் சென்றாராம். அதனால் தான் மனித உயிர்களைப் பறிக்கின்ற பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டதாம்.

சில ஏடுகளில் இந்தக் கதை எழுதி வைக்கப்பட்டுள்ளது. சில பேச்சாளர்களால் பல மேடைகளில் பேசப்பட்டும் வருகிறது. இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கே இந்தக் கதை முரணாக அமைந்துள்ளதை நாம் விரிவாகப் பார்ப்போம்.

வானங்கள், பூமி அவற்றில் உள்ளவை அனைத்தும் அல்லாஹ்வின் ஆணைக்கு அப்படியே கட்டுப்பட்டு நடக்கின்றன என்பது இஸ்லாத்தின் மிக முக்கியமான அடிப்படையாகும். பகுத்தறிவு கொடுக்கப்பட்டுள்ள மனித ஜின் இனங்கள் மட்டுமே அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்கக்கூடியவர்களாகவும், மறுக்கக் கூடியவர்களாகவும் உள்ளனர். மற்ற படைப்பினங்கள் அனைத்தும் அவனது கட்டளைக்கும், விருப்பத்திற்கும் எதிராகச் செயல்படுவதே இல்லை என்பதை அனைத்து முஸ்லிம்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும். திருக்குர்ஆன் இதைத் தெளிவாகவே விளக்குகின்றது.

அல்லாஹ்வின் மார்க்கத்தை விடுத்து வேறு ஒன்றையா தேடுகின்றனர்? வானங்களிலும், பூமியிலும் உள்ளவை விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே அடிபணிகின்றன. அவனிடமே அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள்.

திருக்குர்ஆன் 3:83

வானங்களிலும், பூமியிலும் உள்ளவை விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே பணிகின்றன. அவற்றின் நிழல்களும் காலையிலும், மாலையிலும் பணிகின்றன.

திருக்குர்ஆன் 13:15

வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ள உயிரினங்களும், வானவர்களும் அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்கின்றனர்.

திருக்குர்ஆன் 16:49

"வானங்களில் உள்ளோரும், பூமியில் உள்ளோரும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், உயிரினங்களும், மற்றும் மனிதர்களில் அதிகமானோரும் அல்லாஹ்வுக்குப் பணிகின்றனர்'' என்பதை நீர் அறியவில்லையா?

திருக்குர்ஆன் 22:18

வானங்களிலும், பூமியிலும் உள்ளவையும், அணிவகுத்த நிலையில் பறவைகளும் அல்லாஹ்வைத் துதிப்பதை நீர் அறியவில்லையா? ஒவ்வொன்றும் தனது வணக்கத்தையும், துதித்தலையும் அறிந்துள்ளன. அவர்கள் செய்வதை அல்லாஹ் அறிந்தவன்.

திருக்குர்ஆன் 24:41

ஏழு வானங்களும், பூமியும், அவற்றில் உள்ளவைகளும் அவனைத் துதிக்கின்றன. அவனைப் போற்றிப் புகழாத எதுவுமே இல்லை. ஆயினும் அவை துதிப்பதைப் புரிந்து கொள்ள மாட்டீர்கள்! அவன் சகிப்புத் தன்மையுடையவன்; மன்னிப்பவன்.

திருக்குர்ஆன் 17:44

என்று தனது திருமறையில் வல்ல அல்லாஹ் கூறுகிறான்.

அல்லாஹ்வின் கட்டளைக்கு பூமி அடிபணிய மறுத்து விட்டதாக இந்தக் கதை அமைந்துள்ளது. வானங்களையும், பூமியையும் படைத்த பின் அவற்றை நோக்கி ஒரு உடன்படிக்கை எடுத்ததைப் பின்வரும் வசனத்தில் அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.

பின்னர் வானம் புகையாக இருந்த போது அதை நாடினான். "விரும்பியோ, விரும்பாமலோ நீங்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்'' என்று அதற்கும், பூமிக்கும் கூறினான். "விரும்பியே கட்டுப்பட்டோம்'' என்று அவை கூறின.

திருக்குர்ஆன் 41:11

"அல்லாஹ் பூமிக்கோ வானத்திற்கோ ஒரு கட்டளையிட்டு விட்டால், அதை அப்படியே பூமியும், வானமும் ஏற்று நடக்கும்; அதில் எள்ளளவும் மாற்றம் செய்யாது'' என்று மேற்குறிப்பிட்ட குர்ஆன் வசனங்கள் ஐயத்திற்கிடமின்றி தெளிவுபடுத்துகின்றன. அல்லாஹ் மண் எடுத்து வருமாறு ஆணையிட்டிருக்கும் போது அதற்கு பூமி எப்படி மறுப்புச் சொல்லி இருக்கும்? இந்தக் கதையை நம்பினால் திருக்குர்ஆனின் வசனங்களை மறுக்கும் நிலை ஏற்படும்.

எனவே பூமி அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிய மறுத்திருக்கும் என்று எந்த ஒரு முஸ்லிமும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.

மலக்குகளைப் பற்றி திருக்குர்ஆன் கூறும் இலக்கணத்திற்கும் இந்தக் கதை முரணாக அமைந்துள்ளது.

மலக்குகளில் மிக உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ள ஜிப்ரீல், மீகாயில், இஸ்ராஃபீல் ஆகிய மூவரும் அல்லாஹ்வின் உத்தரவை விட பூமியின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு தோல்வியோடு திரும்பினார்கள் என்றால் இதை நம்ப முடிகின்றதா?

"மலக்குகள் அல்லாஹ்வின் உத்தரவுக்கு எதிராக ஒரு போதும் செயல்பட மாட்டார்கள். மாறு செய்வது அவர்களின் இயல்புக்கே அப்பாற்பட்டது'' என்றெல்லாம் திருக்குர்ஆனின் வசனங்கள் தெளிவாகக் கூறுகின்றன.

வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ள உயிரினங்களும், வானவர்களும் அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்கின்றனர். வானவர்கள் பெருமையடிக்க மாட்டார்கள். தமக்கு மேலே இருக்கும் தமது இறைவனை அவர்கள் அஞ்சுகின்றனர். கட்டளையிடப்பட்டதைச் செய்கின்றனர்.

திருக்குர்ஆன் 16:49, 50

"'அளவற்ற அருளாளன் சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான்'' எனக் கூறுகின்றனர். அவன் தூயவன். மாறாக அவர்கள் (வானவர்கள்) மரியாதைக்குரிய அடியார்கள். அவர்கள் அவனை முந்திப் பேச மாட்டார்கள். அவனது கட்டளைப்படியே செயல்படுவார்கள்.

திருக்குர்ஆன் 21:26, 27

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள்.

திருக்குர்ஆன் 66:6

சிறப்புக்குரிய வானவர்கள் அல்லாஹ்வின் கட்டளையைச் செயல்படுத்தாமல் எப்படித் திரும்பிச் சென்றிருக்க இயலும்? இறை உத்தரவுக்கு முரணாக உள்ள பூமியின் உத்தரவுக்கு எப்படி அடிபணிந்திருக்க முடியும்?

"இறை உத்தரவுக்கு மலக்குகள் மாறு செய்ய மாட்டார்கள்'' என்று தெளிவாக்கும் திருக்குர்ஆன் வசனங்களுக்கு இந்தக் கதை முரண்படுகிறது.

மேலும் மலக்குல் மவ்த் என்ற வானவர் மட்டும் பூமியின் ஆட்சபணையைப் பொருட்படுத்தாமல் மண் அள்ளிச் சென்றதாகவும், அதன் காரணமாகவே உயிர் வாங்கும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் இந்தக் கதையில் கூறப்பட்டுள்ளது.

மனிதர்கள் அனைவரின் உயிர்களையும் ஒரே ஒரு வானவர் தான் கைப்பற்றுகிறார் என்ற தவறான நம்பிக்கையில் இந்தக் கதை புனையப்பட்டுள்ளது.

உண்மையில் அனைத்து மனிதர்களின் உயிர்களையும் ஒரே ஒரு வானவர் தான் கைப்பற்றுகிறார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை; அந்த வானவரின் பெயர் இஸ்ராயீல் என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை. இஸ்ராயீல் என்ற பெயரில் எந்த வானவரும் கிடையாது.

திருக்குர்ஆனை நாம் ஆராய்ந்தால் மனித உயிர்களைக் கைப்பற்றும் வானவர்கள் ஏராளமாக உள்ளனர் என்பதை அறியலாம்.

மனித உயிர்களைக் கைப்பற்றும் வானவர்கள் பற்றி திருக்குர்ஆன் குறிப்பிடும் போது, "வானவர்'' என்று ஒருமையாகக் கூறாமல் "வானவர்கள்'' என்று பன்மையாகக் கூறுகின்றது.

தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டோரின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும் போது, "நீங்கள் எந்த நிலையில் இருந்தீர்கள்?'' என்று கேட்பார்கள்.

திருக்குர்ஆன் 4:97

அவனே தனது அடியார்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவன். உங்களுக்குப் பாதுகாவலர்களை அவன் அனுப்புகிறான். எனவே உங்களில் ஒருவருக்கு மரணம் ஏற்படும் போது நமது தூதர்கள் அவரைக் கைப்பற்றுகிறார்கள். அவர்கள் (அப்பணியில்) குறை வைக்க மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 6:61

நமது தூதர்கள் அவர்களைக் கைப்பற்ற அவர்களிடம் வரும் போது "அல்லாஹ்வை விட்டு விட்டு நீங்கள் யாரை அழைத்துக் கொண்டிருந்தீர்களோ அவர்கள் எங்கே?'' என்று கேட்பார்கள்.

திருக்குர்ஆன் 7:37

(ஏக இறைவனை) மறுப்போரின் முகங்களிலும், முதுகுகளிலும் வானவர்கள் அடித்து அவர்களைக் கைப்பற்றும் போது, "சுட்டெரிக்கும் வேதனையை அனுபவியுங்கள்!'' என்று கூறுவதை நீர் பார்க்க வேண்டுமே!

திருக்குர்ஆன் 8:50

தமக்குத் தாமே தீங்கு இழைத்தோரை வானவர்கள் கைப்பற்றும் போது, "நாங்கள் எந்தக் கேடும் செய்யவில்லை'' என்று அவர்கள் சமாதானம் பேசுவார்கள்.

திருக்குர்ஆன் 16:28

நல்லோராக இருக்கும் நிலையில் அவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றி, "உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்! நீங்கள் செய்தவற்றின் காரணமாக சொர்க்கத்தில் நுழையுங்கள்!'' என்று கூறுவார்கள்.

திருக்குர்ஆன் 16:32

அவர்களின் முகங்களிலும், பின்புறத்திலும் அடித்து வானவர்கள் அவர்களைக் கைப்பற்றும் போது எப்படி இருக்கும்?

திருக்குர்ஆன் 47:27

அநீதி இழைத்தோர் மரணத்தின் வேதனைகளில் இருக்கும் போது நீர் பார்ப்பீராயின் வானவர்கள் அவர்களை நோக்கித் தமது கைகளை விரிப்பார்கள். "உங்கள் உயிர்களை நீங்களே வெளியேற்றுங்கள்! அல்லாஹ்வின் பெயரால் உண்மையல்லாதவற்றை நீங்கள் கூறியதாலும், அவனது வசனங்களை நீங்கள் நிராகரித்ததாலும் இன்றைய தினம் இழிவு தரும் வேதனைக்கு உட்படுத்தப் படுகின்றீர்கள்!' (எனக் கூறுவார்கள்).

திருக்குர்ஆன் 6:93

உயிர்களைக் கைப்பற்றும் வானவர் ஒருவர் அல்ல; ஏராளமாக உள்ளனர் என்பதை இந்த வசனங்கள் அனைத்தும் மிகத் தெளிவாகக் கூறுகின்றன.

ஒவ்வொரு மனிதனின் உயிரையும் கைப்பற்ற ஒரு வானவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தான் அந்த மனிதனின் உயிரைக் கைப்பற்றுகிறார் என்பதைப் பின்வரும் வசனம் கூறுகின்றது.

"உங்களுக்கென நியமிக்கப்பட்ட மரணத்திற்குரிய வானவர் உங்களைக் கைப்பற்றுவார். பின்னர் உங்கள் இறைவனிடம் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்'' என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 32:11

மேற்கண்ட வசனங்களின் கருத்துக்கு முரணாகவும் இந்தக் கதை அமைந்துள்ளது.

மண் எடுத்து வரச் சொன்னவன் சர்வ உலகத்தையும் படைத்து அதிகாரம் செய்யும் வல்ல அல்லாஹ். இந்தக் கதையில் அவனது உத்தரவு மதிப்பற்றதாக ஆக்கப்படுகின்றது.

அந்தப் பணியைச் செய்து முடிக்க அனுப்பப்பட்டவர்களும் சாதாரணமானவர்கள் அல்லர். இறைவனின் உத்தரவை அப்படியே செய்து முடிக்கும் இயல்பும், அதற்குரிய திறனும் கொடுக்கப்பட்ட மிகச் சிறந்த வானவர்கள். இந்தக் கதையில் வானவர்கள் இறை உத்தரவை மீறி விட்டார்கள் என்று காட்டப்படுகின்றது.

அற்பமான காரியத்தைச் செய்து முடிக்க அல்லாஹ் மண் எடுத்து வரச் சொல்லவில்லை. மிக உயர்ந்த சிறந்த நோக்கத்திற்காக மண் எடுத்து வரச் சொல்லி இருந்தும் அது பூமியால் மறுக்கப்படுவதாக இந்தக் கதை குறிப்பிடுகிறது.

எந்த வகையில் பார்த்தாலும், இந்தக் கதை சரியானதல்ல என்பது தெளிவாகவே தெரிகின்றது. இது போன்ற கதைகளை நம்பினால் இறைவனைப் பற்றியும், அவனது மலக்குகளைப் பற்றியும் தவறாக நம்பிக்கை கொண்டவர்களாவோம். மேலே நாம் எடுத்துக் காட்டிய இறை வசனங்களை நிராகரித்தவர்களாகவும் நாம் ஆக நேரிடும்.

இந்தக் கதை முழுக்க பொய் என்பதைப் பின்வரும் நபி மொழி இன்னும் தெளிவாக்குகின்றது.

"பூமியின் எல்லாப் பாகங்களிலிருந்தும் அல்லாஹ்வே கைப்பிடி மண் எடுத்து ஆதமைப் படைத்தான்'' (நபிமொழி)

அறிவிப்பவர்: அபூமூஸா அல் அஷ்அரி (ரலி)

நூல்கள்: அபூதாவூத் 4073, திர்மிதீ 2879, அஹ்மத் 18761, 18813

"மண் எடுத்து வரும்படி மலக்குகளுக்கு அல்லாஹ் உத்தரவிடவில்லை. மாறாக அவனே கைப்பிடி மண் எடுத்து ஆதம் (அலை) அவர்களை உருவாக்கினான்'' என்று அல்லாஹ்வின் தூதர் சொல்லியிருக்கும் போது இந்தக் கதை பச்சைப் பொய் என்பது தெளிவாகின்றது. இது போன்ற கதைகளை நம்பி வானவர்களை நிராகரித்து இறைவனின் கோபத்திற்குள்ளாகாமல் இறைவன் நம்மைக் காப்பானாக!

  1. ஆதம் (அலை) தவறு செய்த போது?

முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் தவறு செய்த பின்னர், "என் இறைவா! நான் செய்த தவறை முஹம்மதின் பொருட்டால் நீ மன்னித்து விடு!'' என்று பிரார்த்தனை செய்தனர். அதைக் கேட்ட அல்லாஹ், "ஆதமே! நான் இன்னும் முஹம்மதைப் படைக்கவே இல்லையே! அவரைப் பற்றி நீ எப்படி அறிந்து கொண்டாய்?'' என்று கேட்டான். அதற்கு ஆதம் (அலை) அவர்கள், "என்னை நீ படைத்த உடனே என் தலையை உயர்த்தி உனது அர்ஷைக் கண்டேன். அதில் "லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ்'' என்று எழுதப்பட்டிருந்தது. உன் பெயருடன் இணைத்து முஹம்மதின் பெயரையும் நீ எழுதியுள்ளதால் அவர் உனக்கு நெருக்கமானவராக இருக்க வேண்டும் என்று நான் முடிவு செய்து கொண்டேன்'' என்று பதில் கூறினார்கள். உடனே அல்லாஹ், "முஹம்மதின் பொருட்டால் மன்னிப்புக் கேட்டதால் உன்னை நான் மன்னிக்கிறேன்'' என்று கூறினான்.

அடிக்கடி நாம் கேள்விப்படுகின்ற, மார்க்க அறிஞர்களால் அடிக்கடி கூறப்படுகின்ற, எழுதப்படுகின்ற ஒரு நிகழ்ச்சியைத் தான் நாம் மேலே எழுதி இருக்கிறோம்.

ஹாகிம், பைஹகீ, தப்ரானி ஆகியோர் இதனைத் தங்களின் ஹதீஸ் நூல்களில் பதிவு செய்து உள்ளனர்.

இது சரியானது தானா? என்று கடந்த காலத்தில் வாழ்ந்த ஹதீஸ் கலை வல்லுனர்கள் ஆராய்ந்து "இது திட்டமிட்டு இட்டுக்கட்டப்பட்ட ஒரு கற்பனை நிகழ்ச்சி'' என்று முடிவு செய்திருக்கின்றனர். அதனை நாம் விரிவாகப் பார்ப்போம்.

ஒரு ஹதீஸை அறிவிக்கக் கூடியவர் பொய் சொல்வராகவோ, தீய செயல்கள் புரிபவராகவோ, அல்லது நினைவாற்றல் குறைந்தவராகவோ இருந்தால் அதனை ஹதீஸ் என்று ஹதீஸ் கலை வல்லுனர்கள் ஏற்பதில்லை.

அறிவிப்பாளரின் தகுதியை வைத்தே ஒரு ஹதீஸ் ஏற்கத் தக்கது என்றோ, ஏற்கத் தகாதது என்றோ முடிவுக்கு வருகின்றனர். இது நபிமொழி ஆய்வாளர்கள் அனைவரும் ஒருமித்து ஏற்றுக் கொண்ட அளவு கோளாகும்.

இந்த அளவுகோலை அடிப்படையாக வைத்து இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தகுதி எத்தகையது என்பதை நாம் பார்ப்போம்.

"முஸ்தத்ரக்'' என்று நூலில் ஹாகீம் அவர்களும்,

தலாயிலுன்னுபுவ்வத்'' என்ற நூலில் பைஹகீ அவர்களும்,

"முஃஜமுஸ் ஸகீர்' என்ற நூலில் தப்ரானி அவர்களும்

இதனைப் பதிவு செய்துள்ளனர். மேற்கூறிய மூவருமே அப்துர் ரஹ்மான் பின் ஸைது பின் அஸ்லம் என்பவர் மூலமாகவே இதனை அறிவிக்கின்றனர்.

இதனைத் தனது நூலில் பதிவு செய்துள்ள பைஹகீ அவர்கள், "இந்த ஹதீஸ் அப்துர் ரஹ்மான் மூலமாக மட்டுமே அறிவிக்கப்படுகின்றது. அவர் பலவீனமானவர்; ஏற்கத்தக்கவர் அல்லர்'' என்று குறிப்பிட்டிருக்கின்றார்கள். இந்த ஹதீஸைத் தமது நூலில் பதிவு செய்து விட்டு அதன் தரத்தையும் அவர்களே நமக்குச் சொல்லி விடுகிறார்கள்.

இந்தச் சம்பவத்தைப் பதிவு செய்துள்ள இன்னொரு நூலாசிரியர் ஹாகிம் அவர்கள் தமது "மஃரிபதுஸ் ஸஹீஹ் மினஸ் ஸகீம்'' என்ற நூலில் "அப்துர் ரஹ்மான் தன் தந்தை கூறியதாக ஏராளமாக இட்டுக் கட்டியவர்'' என்று  அடையாளம் காட்டி இருக்கிறார்கள்.

இந்தச் சம்பவத்தைப் பரிசீலனை செய்த தஹபீ அவர்களும், இப்னு ஹஜர் அவர்களும், முறையே தங்களின், "மீஸானுல் இஃதிதால்'' "அல்லிஸான்'' என்ற நூல்களில் "இந்த அப்துர் ரஹ்மான் ஏற்கத்தக்கவர் அல்லர். இந்த நிகழ்ச்சி இட்டுக்கட்டப்பட்டது'' என்று குறிப்பிடுகிறார்கள். இப்னு கஸீர் அவர்கள் தமது சரித்திர நூலில் அப்துர் ரஹ்மானைப் பற்றி இப்படியே கருத்துத் தெரிவித்துள்ளனர்.

"அப்துர் ரஹ்மான் பலவீனமானவர்'' என்று ஹதீஸ் கலை வல்லுநர்கள் அனைவரும் ஏகோபித்துக் கூறியதாக இப்னுல் ஜவ்ஸீ அவர்கள் குறிப்பிடுகிறார்கள். அலி இப்னுல் மதனீ, இப்னு ஸஃது, தஹாவீ போன்ற அறிஞர்கள் "அப்துர் ரஹ்மான் மிக மிகப் பலவீனமானவர்'' என்று குறிப்பிடுகிறார்கள்.

"இவர் செய்திகளைத் தலை கீழாக மாற்றக் கூடியவர்'' என்று இப்னு ஹிப்பான் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இப்னு தைமிய்யா அவர்களும் அப்துர் ரஹ்மானைப் பற்றி இதே கருத்தையே தெரிவிக்கின்றனர்.

ஒரு மனிதன் சொல்வதை ஏற்பதென்றால், அந்த மனிதனை, அவனது தகுதிகளை எடை போட்டுப் பார்த்தே ஏற்றுக் கொள்கிறோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒன்றை அறிவிப்பவரின் தகுதி எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

"நான் சொல்லாததை நான் சொன்னதாக எவன் கூறுகின்றானோ அவன் தனது தங்குமிடமாக நரகத்தைப் பெறுவான்'' என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எச்சரிக்கை.

நூல்: புகாரி 106, 107, 1291,

இந்த எச்சரிக்கைக்குப் பின் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பது தெளிவாகின்றது.

"கேட்டதை எல்லாம் (ஆராயாமல் அப்படியே) அறிவிப்பது, ஒரு மனிதன் பொய்யன் என்பதற்குப் போதிய சான்றாகும்''

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),  நூல்: முஸ்லிம் 6

என்ற நபிமொழியும் நாம் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகின்றது.

இந்தச் செய்தியை அறிவிக்கும் அப்துர்ரஹ்மானைப் பற்றி எல்லா அறிஞர்களும் பொய்யெரென்றும், இட்டுக்கட்டக் கூடியவர் என்றும், பலவீனமானவர் என்றும் ஒருமித்து கருத்துக் கூறி இருக்கும் போது அவர் வழியாக அறிவிக்கப்படுவதை எப்படி ஏற்க இயலும்?

(பாவ மன்னிப்புக்குரிய) சில வார்த்தைகளை இறைவனிடமிருந்து ஆதம் பெற்றுக் கொண்டார். எனவே அவரை இறைவன் மன்னித்தான்; அவன் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன் 2:37

இறைவனிடமிருந்து ஆதம் (அலை) அவர்கள், சில சொற்களைக் கற்றுக் கொண்டதாக இந்த வசனத்தில் இறைவன் குறிப்பிடுகிறான். ஆதம் (அலை) அவர்கள் இறைவனிடமிருந்து கற்றுக் கொண்ட அந்தச் சொற்கள் எவை? என்பதை நாம் ஆராய வேண்டும்.

திருக்குர்ஆனின் ஒரு இடத்தில், கூறப்பட்ட வசனத்திற்கு இன்னொரு வசனம் விளக்கமாக அமைந்திருக்கும் என்ற அடிப்படையில் திருக்குர்ஆனை நாம் புரட்டிக்கொண்டே வரும் போது ஒரு இடத்தில்

"எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கு இழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்து, அருள் புரியவில்லையானால் நஷ்டமடைந்தோராவோம்'' என்று அவ்விருவரும் (ஆதம், ஹவ்வா) கூறினர்.

திருக்குர்ஆன் 7:23

என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

இறைவனிடமிருந்து ஆதம் (அலை) அவர்கள் கற்றுக் கொண்ட சொற்கள் இது தான். இதைக் கூறியே அவர்கள் மன்னிப்புக் கேட்டிருக்கிறார்கள் என்பதை இந்த வசனத்திலிருந்து நாம் அறியலாம்.

"முஹம்மதின் பொருட்டால் மன்னிப்பாயாக'' என்று ஆதம் (அலை) அவர்கள் கூறியதாக இந்த வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடவில்லை. மாறாகத் தங்களின் தவறை உணர்ந்து, தங்களின் இயலாமையை எடுத்துக்காட்டி இறைவனின் வல்லமையைப் பறை சாற்றி அவனிடம் மன்னிப்புக் கேட்டதாகத் தான் இந்த வசனத்திலிருந்து விளங்க முடிகின்றது. இந்த அடிப்படையிலும் அந்த நிகழ்ச்சி சரியானதல்ல என்ற முடிவுக்கு வர முடியும்.

மேலும் அதே வசனத்தில் (2:37) இறைவனிடமிருந்து சில சொற்களைக் கற்றுக் கொண்டு அதனடிப்படையில் ஆதம் (அலை) அவர்கள் மன்னிப்புக் கேட்டதாக அல்லாஹ் கூறுகிறான். ஆனால் இந்த ஆதாரமற்ற ஹதீஸில் ஆதம் (அலை) அவர்கள் தாமாகவே மன்னிப்புக் கேட்கும் முறையை அறிந்து கொண்டார்கள் என்றும் அதனால் தான் அல்லாஹ் மன்னித்தான் என்றும் கூறப்படுகிறது. இது திருக்குர்ஆனுடன் நேரடியாகவே மோதுகின்றது அல்லவா?

எனவே இந்த அடிப்படையில் நாம் ஆராய்ந்து பார்க்கையில் ஆதம் (அலை) அவர்கள் தமது மன்னிப்புக்காக 7:23 வசனத்தில் உள்ள சொற்களையே பயன்படுத்தினார்கள் என்றும், இந்தக் கதையில் கூறப்பட்டது போல் அல்ல என்றும் தெரிந்து கொள்கிறோம்.

  1. மலக்குகளை ஏமாற்றிய இத்ரீஸ் (அலை)

இத்ரீஸ் (அலை) அவர்கள் "மலக்குல் மவ்த்'துக்கு நண்பராக இருந்தார்களாம்! மரணத்தை அனுபவ ரீதியில் உணர, தாம் விரும்புவதாக மலக்குல் மவ்த்திடம் கேட்டுக் கொண்டார்களாம்! அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மலக்குல் மவ்த், இத்ரீஸ் நபியை மரணமடையச் செய்து, பின்பு உயிர்ப்பித்தாராம். "நான் நரகத்தைக் கண்கூடாகக் காண வேண்டும்'' என்று இரண்டாவது கோரிக்கையை மலக்குல் மவ்த்திடம் இத்ரீஸ் நபி சமர்ப்பித்தார்களாம்! மலக்குல் மவ்த் தமது இறக்கையில் அவரைச் சுமந்து நரகத்தைச் சுற்றிக் காண்பித்தாராம்! "நான் சொர்க்கத்தைக் கண்கூடாகக் காண வேண்டும்'' என்று மூன்றாவது கோரிக்கையை மலக்குல் மவ்த் முன்னே வைக்க அதையும் மலக்குல் மவ்த் நிறைவேற்றினாராம். சொர்க்கத்தைச் சுற்றிப் பார்த்த பின் சொர்க்கத்திலிருந்து வெளியே வர மறுத்து விட்டு இன்று வரை சொர்க்கத்திலேயே இத்ரீஸ் நபி இருக்கிறார்களாம்!

இப்படி ஒரு கதை பரவலாகச் சொல்லப்படுகின்றது. இந்தக் கதை உண்மையானது தானா? என்று நாம் ஆராய்வோம்.

இந்தக் கதையில் மலக்குல் மவ்த், சொர்க்கம், நரகம் போன்றவை சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளன. இது போன்ற நிகழ்ச்சி நடந்திருக்குமானால் அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் தான் நமக்குச் சொல்லித் தர முடியும். நம்முடைய அறிவு, அனுமானம் கொண்டோ, சரித்திர நூல்களின் ஆதாரம் கொண்டோ இவைகளை நாம் அறிய முடியாது. இது போல் நடந்ததாக அல்லாஹ் திருக்குர்ஆனில் எந்த இடத்திலும் சொல்லவில்லை. அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களும் சொல்லவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதாக இப்ராஹீம் பின் அப்துல்லாஹ் பின் காலித் என்பவர் மூலமாக தப்ரானி அவர்கள் பதிவு செய்துள்ளனர்.

இது சரியான ஹதீஸ் அல்ல. இட்டுக்கட்டப்பட்ட ஒரு கற்பனையாகும்.

ஏனெனில் "இப்ராஹீம் பின் அப்துல்லாஹ் பின் காலித் பெரும் பொய்யன்; இவரது எல்லா ஹதீஸ்களும் இட்டுக்கட்டப்பட்டவை'' என்று ஹாபிழ் ஹைஸமீ கூறுகிறார்கள்.

மேலும் திருக்குர்ஆன் வசனங்களுக்கும் இந்தக் கதை முரண்படுகின்றது.

"இத்ரீஸ் நபியவர்கள் திட்டமிட்டு மலக்குல் மவ்த்தை ஏமாற்றினார்கள்'' என்ற கருத்தை இந்தக் கதை வெளிப்படுத்துகின்றது. "சுற்றிப் பார்த்து விட்டு வருவதாகக் கூறிவிட்டு, சொர்க்கத்திலிருந்து வெளியேற மறுத்ததன் மூலம் ஒரு மலக்கையே ஏமாற்றினார்கள் என்பது நபிமார்களின் பண்பாக இருக்க முடியுமா?

வல்ல இறைவன் தனது திருமறையில்

இவ்வேதத்தில் இத்ரீஸையும் நினைவூட்டுவீராக! அவர் மிக்க உண்மையாளராகவும், நபியாகவும் இருந்தார்.

திருக்குர்ஆன் 19:56

என்று கூறுகிறான்.

"அவர் மிக்க உண்மையாளராக இருந்தார்'' என்று இத்ரீஸ் நபியைப் பற்றி அல்லாஹ் புகழ்ந்து கூறி இருக்கும் போது, உண்மைக்கு மாற்றமாக அவர்கள் எப்படிப் பேசி இருக்க முடியும்? அதுவும் அல்லாஹ்வினால் நியமிக்கப்பட்ட மலக்கிடம் பொய் சொன்னது அல்லாஹ்விடமே பொய் சொன்னதாக ஆகாதா? நபிமார்களின் பண்புகளையும், மலக்குகளின் பண்புகளையும் உணர்ந்தவர்கள் இதை எப்படி உண்மை என்று நம்ப முடியும்?

தமது இறைவனை அஞ்சியோர் சொர்க்கத்திற்குக் கூட்டம் கூட்டமாக ஓட்டிச் செல்லப்படுவார்கள். முடிவில் அதன் வாசல்கள் திறக்கப்பட்டு அவர்கள் அங்கே வந்ததும்  "உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள்! நிரந்தரமாக இருக்கும் நிலையில் இதில் நுழையுங்கள்!'' என அதன் காவலர்கள் அவர்களிடம் கூறுவார்கள்.

திருக்குர்ஆன் 19:73

குர்ஆனின் இந்தக் கருத்துக்கு மாற்றமாக தனி நபராக இத்ரீஸ் நபியவர்கள் எப்படி சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பார்கள்? அவர்களுக்கு மட்டும் இந்தப் பொது விதியிலிருந்து விலக்களிக்கப்பட்டிருந்தால் அல்லாஹ்வோ, அவனது தூதரோ அல்லவா அதைச் சொல்ல முடியும்?

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள்.

திருக்குர்ஆன் 66:6

"நரகத்திற்கென்று தனியாக அல்லாஹ் சில மலக்குகளை நியமனம் செய்திருக்கிறான். அவர்கள் கடின சித்தமுடையவர்கள். எவருக்காகவும் பரிதாபப்பட மாட்டார்கள். அல்லாஹ் அவர்களுக்கு உத்தரவிட்டதில் ஒரு சிறிதும் மாறு செய்ய மாட்டார்கள் தங்களுக்கு இடப்பட்ட கட்டளைகளையே செய்வார்கள்'' என்ற கருத்தைத் திருக்குர்ஆனின் 66:6 வசனம் நமக்குச் சொல்கிறது.

நரகத்தின் காவலர்களின் கட்டுப்பாட்டை மீறி இத்ரீஸ் நபியை மலக்குல் மவ்த் எப்படி நரகத்திற்கு அழைத்துச் சென்றிருக்க இயலும்?

மேலும் உயிரை நீக்குவது தான் மலக்குல் மவ்துக்கு வழங்கப்பட்ட அதிகாரம். எடுத்த உயிரைத் திருப்பிக் கொடுப்பது அவரது அதிகாரத்திற்கு உட்பட்டதன்று. இந்தக் கதை மலக்குல் மவ்த்துக்கு அந்த அதிகாரத்தை வழங்குகின்றது.

மேலும் மரணித்தவர்கள் எப்போது எழுப்பப்படுவார்கள் என்பதைத் திருக்குர்ஆன் தெளிவாகக் கூறுகிறது. அதை மறுக்கும் வகையிலும் இந்தக் கதை அமைந்துள்ளதுŒ

அது, உண்மையாகவே பெரும் சப்தத்தை அவர்கள் கேட்கும் நாளாகும். அதுவே வெளிப்படும் நாள்.

திருக்குர்ஆன் 50:42

அவர்களை ஒருவரோடு ஒருவராக மோத விடுவோம். ஸூர் ஊதப்படும். அவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டுவோம்.

திருக்குர்ஆன் 18:99

அது ஒரே ஒரு சப்தம் தான்! உடனே அவர்கள் வெட்ட வெளியில் நிற்பார்கள்.

திருக்குர்ஆன் 79:13,14

ஸூர் ஊதப்படும் நாளில் பல கூட்டங்களாக வருவீர்கள்.

திருக்குர்ஆன் 78:18

ஸூர் ஊதப்படும். இதுவே எச்சரிக்கப்பட்ட நாள்! ஒவ்வொருவரும் இழுத்துச் செல்பவருடனும், சாட்சியுடனும் வருவர்.

திருக்குர்ஆன் 50:20

சூர் ஊதப்பட்ட பின்பே மரணித்தவர்கள் எழுப்பப்படுவார்கள். என்று திருக்குர்ஆன் தெளிவாகக் கூறுகிறது. சூர் ஊதப்படாமல் இத்ரீஸ் நபி உயிர்ப்பிக்கப்பட்டதாக இந்தக் கதை கூறுகின்றது.

மேலும் மலக்குல் மவ்த் என்பவர் தன் இஷ்டப்படி எவரது உயிரையும் வாங்க முடியாது. இறைவனது கட்டளைப்படியே அதைச் செய்ய முடியும். இத்ரீஸ் நபியின் கோரிக்கையை ஏற்று அவர் இஷ்டத்திற்கு உயிர் வாங்கியதாக இந்தக் கதை கூறுகிறது.

மேலும் பின்வரும் குர்ஆன் வசனத்துடன் இந்தக் கதை நேரடியாகவே மோதுகின்றது.

இதிலிருந்தே உங்களைப் படைத்தோம். இதிலேயே உங்களை மீளச் செய்வோம். மற்றொரு தடவை இதிலிருந்தே உங்களை வெளிப்படுத்துவோம்.

திருக்குர்ஆன் 20:55

எந்த மனிதரும் மரணித்து விட்டால் அவர் பூமியில் சேர்க்கப்பட்டாக வேண்டும். ஆனால் இத்ரீஸ் (அலை) மரணித்த பிறகும் பூமியில் அடக்கம் செய்யப்படவில்லை என்று இந்தக் கதை கூறுவதன் மூலம் மேற்கண்ட வசனத்தைப் பொய்யாக்குகின்றது.

சொர்க்கத்தை அடைய இப்படி ஒரு குறுக்கு வழியை அல்லாஹ் ஏற்படுத்தித் தரவில்லை. ஒரு முஸ்லிம் நல் அமல்கள் செய்து வல்ல ரஹ்மானிடம் சொர்க்கத்தைத் தரும்படி பிரார்த்தனை தான் செய்ய வேண்டும். நபிமார்கள் இப்படித் தான் செய்துள்ளார்கள்.

 குர்ஆனின் 26:85 வசனம் இதை நமக்கு நன்றாகத் தெளிவுபடுத்துகின்றது.

குறுக்கு வழிகள் இருப்பதாக நம்பி ஏமாந்து விடாமல் அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் காட்டிய வழியில் நாம் நடப்போமாக! அல்லாஹ் அதற்கு துணை செய்வானாக!

  1. நெருப்புக் குண்டத்தில் எறியப்பட்ட போது....?

இறையச்சமும், தியாகமும், வீரமும் நிறைந்த இப்ராஹீம் (அலை) அவர்களின் வரலாற்றை நாம் அறிவோம். "நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன் சென்ற நபிமார்களில் இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு முதலிடம் உண்டு'' என்பதையும் நாம் தெரிந்திருக்கிறோம்.

மிகப்பெரும் கொடுங்கோல் மன்னன் முன்னிலையில் கொஞ்சமும் அஞ்சாமல் ஓரிறைக் கொள்கையை துணிவுடன் எடுத்துச் சொன்னார்கள். அதற்காக எண்ணற்ற கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டார்கள். அந்தக் கொடுமைகளுக்கெல்லாம் சிகரமாக மிகப்பெரும் நெருப்புக் குண்டத்தை வளர்த்து அதில் இப்ராஹீம் (அலை) அவர்கள் தூக்கி எறியப்பட்டார்கள். அல்லாஹ் தன் பேராற்றலால், அந்த மாபெரும் நெருப்பைக் குளிரச் செய்து அவர்களைக் காப்பாற்றினான். இந்த அற்புத வரலாற்றை திருக்குர்ஆன் மிகவும் அழகாக நமக்கு எடுத்துரைக்கின்றது.

இந்த உண்மை வரலாற்றுடன் பொய்யான கதை ஒன்றையும் சிலர் கலந்து விட்டிருக்கிறார்கள். அந்தக் கற்பனைக் கதை மக்கள் மன்றங்களில் அடிக்கடி சொல்லப்பட்டும் வருகின்றது. குர்ஆனும், நபிமொழியும் போதிக்கின்ற தத்துவத்திற்கு இந்தக் கதை முரண்படுவதாலும் அந்தக் கதையை வைத்து சிலர் தவறான வழியை நேர் வழிபோல் காட்ட முயற்சிப்பதாலும் அதனைத் தெளிவு படுத்த வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. முதலில் அந்தத் தவறான கதை என்னவென்று பார்ப்போம். பிறகு அது எப்படித் தவறாக உள்ளது என்பதை விளக்குவோம்!

இப்ராஹீம் (அலை) அவர்கள் நெருப்புக் குண்டத்தில் எறியப்படுவதற்குச் சற்று முன் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து இப்ராஹீம் (அலை) அவர்களுடன் பின்வருமாறு உரையாடினார்களாம்.

ஜிப்ரீல் (அலை) : இப்ராஹீமே! இந்த இக்கட்டான நேரத்தில் உமக்கு எதுவும் தேவையா?

இப்ராஹீம் (அலை) : உம்மிடம் எனக்கு எந்தத் தேவையும் இல்லை.

ஜிப்ரீல் (அலை): என்னிடம் உமக்குத் தேவை எதுவும் இல்லையானால் உம்மைப் படைத்த இறைவனிடம் இந்தத் துன்பத்திலிருந்து விடுவிக்கும்படிக் கேளும்!

இப்ராஹீம் (அலை) : இறைவனிடம் நான் என் துன்பத்திலிருந்து விடுவிக்கும் படி கேட்க வேண்டியதில்லை. நான் மிகப்பெரும் ஆபத்தில் சிக்கிக் கொண்டிருப்பது அந்த இறைவனுக்குத் தெரியாதா என்ன? நான் எதற்காக அவனிடம் கேட்க வேண்டும்?

இப்படி ஒரு உரையாடல் நடந்ததாகச் சிலர் கற்பனை செய்துள்ளனர். இதனை அல்லாஹ் திருக்குர்ஆனில் சொல்லவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் சொல்லவில்லை. சிலர் தங்களின் சொந்தக் கற்பனையால் உருவாக்கியது தான் இந்தக் கதை.

அல்லாஹ் எல்லாவற்றையும் அறிந்தவன் என்பதில் ஐயமில்லை.

"அல்லாஹ்வுக்கு எல்லாம் தெரியும்'' என்பதற்காக நாம் நமது தேவைகளை அல்லாஹ்விடம் கேட்காமலிருக்க அனுமதி உண்டா? மிகச் சிறந்த நபியாகிய இப்ராஹீம் (அலை) அவர்கள் இப்படிச் சொல்லி இருப்பார்களா? என்று ஆராயும் போது நிச்சயம் அப்படிச் சொல்லி இருக்க முடியாது என்ற முடிவுக்குத் தான் வர முடியும்.

ஏனெனில், இப்ராஹீம் (அலை) அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் தங்கள் தேவைகளை அல்லாஹ்விடம் முறையிட்டிருக்கிறார்கள். "எனது தேவைகள் அல்லாஹ்வுக்குத் தெரியும்'' என்று பிரார்த்தனையை அவர்கள் விடவில்லை. "பிரார்த்தனை நம்முடைய அடிமைத் தனத்தையும், அல்லாஹ்வின் மகத்துவத்தையும் ஒரே நேரத்தில் வெளிப்படுத்தும் மிகப்பெரும் வணக்கம்'' என்பதை இப்ராஹீம் (அலை) அவர்கள் நன்றாகவே தெரிந்திருந்தார்கள் அவர்கள் அல்லாஹ்விடம் கேட்ட பல துஆக்களை அல்லாஹ் திருக்குர்ஆனில் குறிப்பிடுகிறான். அவற்றில் சிலவற்றைக் கீழே காண்போம்.

"இறைவா! இவ்வூரைப் பாதுகாப்பு மையமாக ஆக்குவாயாக! இவ்வூராரில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பியோருக்குக் கனிகளை வழங்குவாயாக!'' என்று இப்ராஹீம் கூறிய போது, "(என்னை) மறுப்போருக்கும் சிறிது காலம் வசதிகள் அளிப்பேன்; பின்னர் அவர்களை நரக வேதனையில் தள்ளுவேன்; சேருமிடத்தில் அது மிகவும் கெட்டது'' என்று அவன் கூறினான்.

திருக்குர்ஆன் 2:126

அந்த ஆலயத்தின் அடித்தளத்தை இப்ராஹீமும், இஸ்மாயீலும் உயர்த்திய போது "எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியுறுபவன்; அறிந்தவன்'' (என்றனர்.)

திருக்குர்ஆன் 2:127

எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும், எங்கள் வழித் தோன்றல்களை உனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக! எங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டித் தருவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன் 2:128

எங்கள் இறைவா! அவர்களிலிருந்து அவர்களுக்காக ஒரு தூதரை அனுப்புவாயாக! அவர், உனது வசனங்களை அவர்களுக்குக் கூறுவார். அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார். அவர்களைத் தூய்மைப் படுத்துவார். நீயே மிகைத்தவன்; ஞானமிக்கவன் (என்றனர்.)

திருக்குர்ஆன் 2:129

என் இறைவா! எனக்கு அதிகாரத்தை அளிப்பாயாக! என்னை நல்லோருடன் சேர்ப்பாயாக! பின்வரும் மக்களிடம் எனக்கு நற்பெயரை ஏற்படுத்துவாயாக! இன்பமான சொர்க்கத்தின் வாரிசுகளில் என்னையும் ஆக்குவாயாக! என் தந்தையை மன்னிப்பாயாக! அவர் வழி தவறியவராக இருக்கிறார். (மக்கள்) மீண்டும் உயிர்ப்பிக்கப்படும் நாளில் என்னை இழிவுபடுத்தி விடாதே!

திருக்குர்ஆன் 26:83, 84, 85, 86, 87

என் இறைவா! எனக்கு நல்லொழுக்கம் உடையவரை (வாரிசாகத்) தருவாயாக! (என்று கேட்டார்.)

திருக்குர்ஆன் 37: 100

"எங்கள் இறைவா! (உன்னை) மறுப்போருக்குச் சோதனையாக எங்களை ஆக்கி விடாதே! எங்களை மன்னிப்பாயாக! எங்கள் இறைவா! நீயே மிகைத்தவன்; ஞானமிக்கவன்'' (என்றும் பிரார்த்தித்தார்.)

திருக்குர்ஆன் 60:5

"இறைவா! இவ்வூரை அபயமளிக்கக் கூடியதாக ஆக்குவாயாக! என்னையும், என் பிள்ளைகளையும் சிலைகளை வணங்குவதை விட்டும் காப்பாயாக!'' என்று இப்ராஹீம் கூறியதை நினைவூட்டுவீராக!

திருக்குர்ஆன் 14:35

இறைவா! இவை மனிதர்களில் அதிகமானோரை வழி கெடுத்து விட்டன. என்னைப் பின்பற்றுபவர் என்னைச் சேர்ந்தவர். எனக்கு யாரேனும் மாறு செய்தால் நீ மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன் 14:36

எங்கள் இறைவா! எனது சந்ததிகளை உனது புனித ஆலயத்திற்கருகில், விவசாயத்துக்குத் தகுதி இல்லாத பள்ளத்தாக்கில், இவர்கள் தொழுகையை நிறைவேற்றுவதற்காகக் குடியமர்த்தி விட்டேன். எனவே எங்கள் இறைவா! மனிதர்களில் சிலரது உள்ளங்களை இவர்களை நோக்கி விருப்பம் கொள்ள வைப்பாயாக! இவர்கள் நன்றி செலுத்திட இவர்களுக்குக் கனிகளை உணவாக வழங்குவாயாக!

திருக்குர்ஆன் 14:37

எங்கள் இறைவா! நாங்கள் மறைப்பவற்றையும், வெளிப்படுத்தியவற்றையும் நீ அறிவாய். பூமியிலோ, வானத்திலோ அல்லாஹ்வுக்கு எதுவுமே மறையாது.

திருக்குர்ஆன் 14:38

இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும் முதுமையில் எனக்கு வழங்கிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். என் இறைவன் பிரார்த்தனையை ஏற்பவன்.

திருக்குர்ஆன் 14:39

என் இறைவா! என்னையும், என் சந்ததிகளிலும் தொழுகையை நிலை நாட்டுவோராக ஆக்குவாயாக! எங்கள் இறைவா! எனது பிரார்த்தனையை ஏற்பாயாக!

திருக்குர்ஆன் 14:40

எங்கள் இறைவா! என்னையும், எனது பெற்றோரையும், நம்பிக்கை கொண்டோரையும் விசாரணை நடைபெறும் நாளில் மன்னிப்பாயாக! (எனவும் இப்ராஹீம் கூறினார்)

திருக்குர்ஆன் 14:41

மேலே கூறப்பட்ட அனைத்தும் இப்ராஹீம் (அலை) அவர்களின் பிரார்த்தனைகள். அல்லாஹ்வுக்கு எல்லாம் தெரியும் என்று அவர்கள் மேற்கூறிய சந்தர்ப்பங்களில் பிரார்த்தனை செய்யாமல் இருக்கவில்லை. மாறாகத் தம்முடைய இயலாமையையும், பலவீனத்தையும் வெளிப்படுத்திக் காட்டுவதற்காகத் தம்முடைய பல தேவைகளை அல்லாஹ்விடம் கேட்டிருக்கிறார்கள். தம்முடைய தேவைகளை அல்லாஹ்விடம் கேட்டு விட்டு பின்வருமாறு அவர்கள் கூறவும் செய்கிறார்கள்.

எங்கள் இறைவா! நாங்கள் மறைப்பவற்றையும், வெளிப்படுத்தியவற்றையும் நீ அறிவாய். பூமியிலோ, வானத்திலோ அல்லாஹ்வுக்கு எதுவுமே மறையாது.

திருக்குர்ஆன் 14:38

தன்னுடைய தேவைகள் இறைவனுக்குத் தெரியும் என்பதை ஒப்புக் கொள்ளும் அதே நேரத்தில் துஆக் கேட்க அவர்கள் மறுக்கவில்லை என்பது தெளிவாகின்றது.

அப்படிப்பட்ட இப்ராஹீம் (அலை) அவர்கள் மிகப் பெரும் இக்கட்டில் மாட்டிக் கொண்ட நேரத்தில் எப்படி துஆச் செய்ய மறுத்திருப்பார்கள். அதுவும் மிகப் பெரும் மலக்கு ஒருவர் நினைவூட்டிய பின்னர் எப்படி மறுத்திருப்பார்கள்? இதிலிருந்தே அந்த உரையாடல் கற்பனையானது என்பதை அறியலாம்.

இப்ராஹீம் (அலை) அவர்கள் மட்டுமல்ல இன்னும் பல நபிமார்கள் தங்களுக்குக் கஷ்டங்கள் ஏற்பட்ட போது "இறைவனுக்குத் தெரியும்'' என்று அல்லாஹ்விடம் முறையிடாமல் இருந்ததில்லை. தங்கள் தேவைகளை அல்லாஹ்விடம் கேட்காமல் இருந்ததில்லை.

ஆதம் (அலை) அவர்கள் தவறு செய்த பின் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ததை திருக்குர்ஆன் 7:23 வசனத்திலும்

அய்யூப் (அலை) அவர்கள் தமக்குத் துன்பம் ஏற்பட்ட போது அல்லாஹ்விடம் முறையிட்டதை திருக்குர்ஆன் 21:83 வசனத்திலும்

யூனுஸ் (அலை) அவர்கள் தாம் செய்த தவறுக்கு மன்னிப்புக் கோரியதை திருக்குர்ஆன் 21:87 வசனத்திலும்

ஈஸா (அலை) அவர்கள் தம்முடைய தேவையை அல்லாஹ்விடம் கேட்டதை திருக்குர்ஆன் 5:114 வசனத்திலும்

ஜக்கரியா (அலை) அவர்கள் தனக்கு ஒரு வாரிசு வேண்டும் என்று துஆ செய்ததை திருக்குர்ஆன் 3:38 வசனத்திலும்

நூஹ் (அலை) அவர்கள் தன் சமுதாயத்திற்கு எதிராக துஆச் செய்ததை திருக்குர்ஆன் 21:76 வசனத்திலும்

யாஃகூப் (அலை) அவர்கள் தம் மகனைப் பிரிந்த வேதனையை அல்லாஹ்விடம் முறையிட்டதாக திருக்குர்ஆன் 12: 86 வசனத்திலும்

தனக்கு மிகப் பெரும் ஆட்சி வேண்டும் என்று சுலைமான் (அலை) அவர்கள் துஆச் செய்ததாக திருக்குர்ஆன் 38:35 வசனத்திலும்

தன் சமுதாயத்தினரின் தீய செயல்களிலிருந்து தன்னையும் தன் குடும்பத்தையும் காக்கும்படி லூத் (அலை) அவர்கள் துஆ செய்ததை திருக்குர்ஆன் 26:169 வசனத்திலும்

தன் சமுதாயத்திற்கு எதிராக ஷுஐபு (அலை) அவர்கள் செய்த பிரார்த்தனையை திருக்குர்ஆன் 7:89 வசனத்திலும்

தமக்கு விரிவான ஞானத்தையும் இன்னும் பல தேவைகளையும் மூஸா (அலை) அவர்கள் கேட்டதாக திருக்குர்ஆன் 20:25-32 வசனங்களிலும்

அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.

மேற்கூறிய நபிமார்களில் எவரும் "தங்கள் தேவைகள் இறைவனுக்குத் தெரியும்'' என்பதை உணராதவர்களில்லை! தன்னிடம் கேட்பதை அல்லாஹ் விரும்புகிறான் என்பதற்காக அவர்கள் அல்லாஹ்விடம் கேட்டுள்ளார்கள்.

ஷரீஅத், தரீகத், ஹகீகத், மஃரிஃபத் என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் கூட்டத்தினர் இந்தக் கற்பனையை ஆதாரமாக வைத்து "அல்லாஹ்விடம் கேட்காமலிருப்பது தான் உயர்ந்த நிலை! அல்லாஹ்விடம் துஆச் செய்வது அல்லாஹ்வையே சந்தேகிப்பது ஆகும்'' என்று மக்களை வழி கெடுத்து வருகின்றனர்.

"நபிமார்கள் அடைய முடியாத உயர்ந்த நிலை இருப்பதாக நம்புவது எவ்வளவு பெரும் பாவம்'' என்று அவர்களுக்குப் புரியவில்லை.

அல்லாஹ் தனது திருமறையில் பல இடங்களில் துஆச் செய்யும் படியும், தேவைகளைக் கேட்கும்படியும், மன்னிப்புக் கேட்கும் படியும் நமக்கு ஆணையிடுகிறான். ஒரு இடத்தில் கூட என்னிடம் கேட்காமலிருங்கள் என்று சொல்லவில்லை என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

"என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள்'' என்று உங்கள் இறைவன் கூறுகிறான்.

திருக்குர்ஆன் 40:60

"எனது இறைவன் நீதியைக் கட்டளையிட்டுள்ளான்'' எனக் கூறுவீராக! ஒவ்வொரு தொழுமிடத்திலும் உங்களின் கவனங்களை ஒருமுகப்படுத்திக் கொள்ளுங்கள்! வணக்கத்தை அவனுக்கே உளத்தூய்மையுடன் செய்து, அவனிடமே பிரார்த்தியுங்கள்! உங்களை அவன் முதலில் படைத்தவாறே மீள்வீர்கள்!

திருக்குர்ஆன் 7:29

உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான்.

திருக்குர்ஆன் 7:55

இந்த வசனங்கள் எல்லாம் பிரார்த்தனை செய்ய வேண்டியதன் அவசியத்தை நமக்கு உணர்த்துகின்றன.

தமது இறைவனின் திருமுகத்தை நாடி காலையிலும், மாலையிலும் தமது இறைவனைப் பிரார்த்திக்கும் மக்களுடன் உம்மைக் கட்டுப்படுத்திக் கொள்வீராக! இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியை நாடி அவர்களை விட்டும் உமது கண்களைத் திருப்பி விடாதீர்! நம்மை நினைப்பதை விட்டும் எவனது சிந்தனையை நாம் மறக்கடிக்கச் செய்து விட்டோமோ, அவனுக்குக் கட்டுப்படாதீர்! அவன் தனது மனோ இச்சையைப் பின்பற்றுகிறான். அவனது காரியம் வரம்பு மீறுவதாக உள்ளது.

திருக்குர்ஆன் 18:28

தமது இறைவனின் திருப்தியை நாடி காலையிலும், மாலையிலும் அவனிடம் பிரார்த்திப்போரை நீர் விரட்டாதீர்! அவர்களைப் பற்றிய விசாரணையில் உமக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. உம்மைப் பற்றிய விசாரணையில் அவர்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. எனவே அவர்களை நீர் விரட்டினால் அநீதி இழைத்தவராவீர்!

திருக்குர்ஆன் 6:52

"துஆச் செய்வதை அல்லாஹ் விரும்புகிறான்; வரவேற்கிறான்; தன் நபியையும் அத்தகைய மக்களுடன் சேர்ந்திருக்கும்படி கட்டளையிடுகிறான்'' என்பதை இவ்வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன. தாங்கள் அதிக ஞானம் பெற்று விட்டதாகக் கருதிக் கொண்டு அல்லாஹ்விடம் துஆச் செய்யாமலிருக்க எவருக்கும் அனுமதி இல்லை என்பதை நாம் புரிந்து கொண்டோம்.

"துஆ என்பதே ஒரு வணக்கமாகும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, "இந்த இடத்தில் நீங்கள் விரும்பினால் பின்வரும் குர்ஆன் வசனத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். "என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள்'' என்று உங்கள் இறைவன் கூறுகிறான் (திருக்குர்ஆன் 40:60) என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்கள்: அபூதாவூத் 3170, திர்மிதீ 2895, 3170 இப்னுமாஜா 3818

மேற்கண்ட நபிமொழி "துஆ ஒரு வணக்கம்' என்பதையும், அந்த வணக்கத்தைப் புறக்கணிப்பவர்கள் நரகில் இழிந்த நிலையில் நுழைவார்கள் என்பதையும் நமக்கு எச்சரிக்கின்றது.

இந்த எச்சரிக்கைக்கு முரணாக மிகச் சிறந்த நபி ஒருவர் இருந்திருக்க முடியுமா? நரகில் சேர்க்கக் கூடிய இந்த வார்த்தையை ஒரு நபி சொல்லி இருக்க முடியுமா? என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்!

மேலும் இப்ராஹீம் (அலை) அவர்கள் நெருப்புக் குண்டத்தில் எறியப்பட்ட வேளையில்! "யா அல்லாஹ் வணங்கப்படத் தகுதியானவன் நீ ஒருவனே! இந்தப் பூமியில் உன்னை வணங்கக் கூடியவன் (இன்றைய நிலையில்) நான் ஒருவனே! (எனவே என்னைக் காப்பாற்றுவாயாக) என்று பிரார்த்தித்தார்கள்'' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

ஆதாரம்: முஸ்னத் ஆபூயஃலா

இப்ராஹம் (அலை) நெருப்பில் எறியப்பட்ட போது "எனக்கு அல்லாஹ்வே போதுமானவன், அவனே என்னுடைய மிகச் சிறந்த பொருப்பாளனாகவும் இருக்கிறான்'' எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

ஆதாரம் : புகாரி

இப்ராஹீம் (அலை) அவர்கள் நெருப்பில் எறியப்பட்ட போது துஆச் செய்துள்ளதை மிகத் தெளிவாகவே மேற்கூறிய இரு ஹதீஸ்களும் தெரிவிக்கின்றன.

எனவே இப்ராஹீம் (அலை) அவர்கள் துஆச் செய்ய மறுத்தார்கள் என்பது முற்றிலும் ஆதாரமற்ற, குர்ஆன் போதனைக்கு முரண்பட்ட கற்பனை தான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

இந்தக் கதை இஸ்லாத்திற்கு முற்றிலும் அப்பாற்பட்டது என்பதைப் பின்வரும் நபிமொழியும் சொல்கிறது.

எவன் அல்லாஹ்விடம் தன் தேவைகளைக் கேட்கவில்லையோ, அவன் மீது அல்லாஹ் கோபப்படுகிறான் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய பொன் மொழியாகும்.  (ஆதாரம் : ஹாகிம்)

இது ஆதாரப்பூர்வமானது என்று ஹதீஸ் கலை வல்லுனர்கள் கூறியுள்ளனர்.

இந்த நபிமொழியிலிருந்து இப்ராஹீம் (அலை) அவர்கள் தம்முடைய தேவையைக் கேட்க மறுத்திருக்க மாட்டார்கள் என்பது தெளிவு.

துஆ கேட்காமலிருப்பதற்கு இஸ்லாத்தில் அனுமதி கிடையாது. அத்தகையவர்களை அல்லாஹ் கோபிக்கிறான் என்பதால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு எண்ணற்ற துஆக்களைக் கற்றுத் தந்துள்ளனர்.

இது போன்ற கதைகளும், அது போதிக்கின்ற தவறான வழிகாட்டுதல்களும் தவிர்க்கப்பட்டாக வேண்டும்.

அல்லாஹ் உண்மை மார்க்கத்தை அறிந்து அதன்படி செயல்பட அருள் புரிவானாக!

  1. சாகாவரம் பெற்றவர்

"ஐனுல் ஹயாத்'' என்று ஒரு நீருற்று உண்டு. அதில் சிறிதளவு நீர் அருந்தியவர் கியாமத் நாள் வரை உயிருடன் இருப்பார். அதை ஹில்று (அலை) அவர்கள் அருந்தும் பேறு பெற்றார்கள். அதனால் இன்றளவும் உயிருடன் உள்ளார்கள்.

ஆண்டு தோறும் ஹில்று (அலை) அவர்கள் ஹஜ்ஜுச் செய்ய வருகின்றார்கள். எவருடைய ஹஜ்ஜு அங்கீகரிக்கப்படுமோ அவருடன் முஸாபஹா (கைலாகு) கொடுக்கிறார்கள்.

ஹில்று (அலை) அவர்கள் கடற்கரையில் சுற்றிக் கொண்டிருப்பார்கள். கடலில் ஏற்படுகின்ற துன்பங்களிலிருந்து மக்களைக் காப்பாற்றும் பொறுப்பு அவரிடம் விடப்பட்டுள்ளது.

வலி என்ற பட்டத்தை அல்லாஹ் ஒருவருக்கு வழங்க நாடினால், ஹில்ரு (அலை) அவர்கள் மூலமாகவே அதனை அளிக்கின்றான்.

மேற்கூறிய கதைகள் உலமாக்களில் பலரால் கூறப்படுபவை. மக்களிடம் மிகவும் ஆழமாக வேரூன்றியவை. இது போல் இன்னும் ஏராளமான கதைகளும் ஹில்று (அலை) அவர்கள் பெயரால் உலா வரலாம். இப்படிக் கூறப்படும் எல்லாக் கதைகளும், "ஹில்று (அலை) அவர்கள் இன்றளவும் உயிருடன் உள்ளனர்'' என்ற நம்பிக்கையில் தோற்றுவிக்கப்பட்டவைகளாகும்.

ஹில்று (அலை) அவர்கள் இன்றளவும் உயிருடன் இருக்கின்றார்களா? என்று குர்ஆன் ஹதீஸ் ஒளியில் நாம் ஆராய முற்படும் போது குர்ஆனிலோ, ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலோ எவ்வித ஆதாரமும் கிடையாது. அவர்கள் இன்றளவும் உயிருடனிருக்க முடியாது என்பதற்கு எண்ணற்ற ஆதாரங்கள் உள்ளன. அவற்றைப் பார்ப்போம்.

உமக்கு முன் எந்த மனிதருக்கும் நாம் நிரந்தரத்தை ஏற்படுத்தவில்லை. நீர் மரணித்து விட்டால் அவர்கள் நிலையாக இருக்கக் கூடியவர்களா?

திருக்குர்ஆன் 21:34

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன் வாழ்ந்த எவருக்கும் நிரந்தரமாக இந்த உலகில் வாழ்கின்ற உரிமையைத் தரவில்லை என்று மனிதனைப் படைத்த அல்லாஹ் கூறுகிறான். இந்த வசனத்திலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்னால் வாழ்ந்த எவரும் நிரந்தரமாக இருக்க முடியாது என்று தெளிவாகின்றது.

இந்தப் பொது விதியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமென்றால் அல்லாஹ்வோ, அவனது தூதரோ அது பற்றிக் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

"ஹில்று (அலை) இன்னும் உயிருடனே வாழ்ந்து வருகின்றனர்'' என்பது மேற்கூறிய குர்ஆன் வசனத்துக்கு முரணானது.

 ஈஸா (அலை) மட்டுமே குர்ஆன், ஹதீஸ் மூலம் இந்த விதியில் இருந்து தற்காலிகமாக விலக்குப் பெறுகின்றார்கள்.

"உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் நான் தந்த பின் உங்களிடம் இருப்பதை உண்மைப்படுத்தும் தூதர் உங்களிடம் வந்தால் அவரை நம்புவீர்களா? அவருக்கு உதவுவீர்களா?'' என்று நபிமார்களிடம் அல்லாஹ் உறுதி மொழி எடுத்து "இதை ஒப்புக் கொண்டீர்களா? எனது பலமான உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டீர்களா?'' என்று கேட்ட போது, "ஒப்புக் கொண்டோம்'' என்று அவர்கள் கூறினர். "நீங்களே இதற்குச் சாட்சியாக இருங்கள்! உங்களுடன் நானும் சாட்சியாக இருக்கிறேன்'' என்று அவன் கூறினான்.

திருக்குர்ஆன் 3:81

"ஹில்று' நபி உயிருடன் இருக்கும் போது முஹம்மது நபியவர்கள் அல்லாஹ்வின் தூதராக அனுப்பப்படுகிறார்கள் என்றால் நபிமார்களிடம் எடுக்கப்பட்ட உறுதி மொழியின் படி அவர் என்ன செய்திருக்க வேண்டும்?

நபிகள் நாயகத்தைத் தேடி அவர் ஓடி வந்திருக்க வேண்டும். அவர்கள் கஷ்டப்பட்ட நேரத்தில் உதவிகள் புரிந்திருக்க வேண்டும். பத்ரு, உஹதுப் போர்களில் பங்கெடுத்திருக்க வேண்டும்.

அவ்வாறு ஏதும் நடக்கவில்லை. நடந்ததாக எந்தச் சான்றும் இல்லை. உயிருடன் அவர் இருந்திருந்தால் அவர் இந்த உடன்படிக்கையை நிறைவேற்றியிருக்க வேண்டும்.

இவ்வசனத்திலிருந்தும் "ஹில்று' நபி உயிருடன் இல்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஹில்று (அலை) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் உயிருடன் இருந்திருந்தால், கட்டாயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்தித்து ஈமான் கொண்டிருக்க வேண்டும்.

இஸ்லாமியப் பிரச்சாரத்துக்கு எண்ணற்ற சோதனைகள் வந்த போதும், பல போர்க்களங்களில் உயிரைப் பணயம் வைத்து சஹாபக்கள் போராடிய போதும், ஹில்று (அலை) அவர்கள் அந்தப் போராட்டங்களில் பங்கெடுத்திருக்க வேண்டும்.

இந்தச் சோதனையான காலங்களில் அவர் ஏன் சத்தியத்திற்குத் துணை செய்யவில்லை? உயிருடன் வாழ்ந்தும் அவர் இதனைச் செய்யத் தவறி இருந்தால் அவர் கடமை தவறியவராக ஆகின்றார். (அல்லாஹ் அப்படி நினைப்பதை விட்டும் காப்பானாக!)

எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் ஹில்று (அலை) அவர்கள் உயிருடன் இருந்திருக்கவில்லை என்பது தெளிவு. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலேயே "ஹில்று (அலை) அவர்கள் உயிருடன் இருந்திருக்கவில்லை'' என்றால் "நமது காலத்தில் நிச்சயம் உயிருடன் இருக்க முடியாது'' என்ற முடிவுக்கு நாம் உறுதியாக வர முடிகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் இஸ்லாமியச் சமூகத்தில் உட்பூசல்கள், கருத்து மோதல்கள் தோன்ற ஆரம்பித்தன. இன்றளவும் அந்த நிலை தொடர்கின்றது. உண்மையான இஸ்லாம் பெரும்பாலும் மறைக்கப்பட்டு உள்ளது.

ஹில்று (அலை) அவர்கள் உயிருடன் இன்றளவும் இருந்தால், இந்த நிலையை மாற்ற அவர்கள் ஏன் முயற்சிக்கவில்லை? சரியான நபி வழியை மக்களுக்கு அறிமுகப்படுத்தி ஏன் ஓரணியில் மக்களைத் திரட்டவில்லை? எல்லா உலமாக்களையும் சந்தித்து அவர்களிடம் உண்மையைக் கூறி ஏன் ஒன்று படுத்தவில்லை? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நேரடியாக அவர்களுக்கு அவர் பக்க பலமாக இல்லாவிட்டாலும் அவர்களின் தீனுக்காவது துணை நின்றிருக்க வேண்டாமா?

தன்னை ஒரு நபி என்று வாதாடிக் கொண்டு "குலாம் அஹ்மத்'' தோன்றி பல முஸ்லிம்களை வழி கெடுத்த போது ஏன் அவனிடம் வந்து வாதாடவில்லை?

இதில் எதனையும் ஹில்று (அலை) அவர்கள் செய்யவில்லை. உயிருடன் அவர் இந்த மண்ணுலகில் இருந்தால் இத்தனை காரியங்களையும் அவர் செய்வது அவர் மீது கட்டாயக் கடமை அல்லவா?

ஈஸா நபி அவர்கள் என்று இந்த மண்ணுக்கு வருவார்களோ அன்றே நபிகள் நாயகத்தின் உம்மத்தாகச் செயல்பட்டு எல்லாத் தீமைகளையும் களைவார்கள். ஒரு கொடியின் கீழ் அத்தனை மக்களையும் ஒன்று திரட்டுவார்கள் என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலிருந்து விளங்கும் போது, இந்த மண்ணில் வாழ்ந்து வரும் ஹில்று (அலை) அவர்கள் இவற்றில் எந்த ஒன்றையும் செய்யவில்லையே! ஏன்? எனவே அவர்கள் நபிகள் நாயகம் காலத்திலேயே உயிருடன் இல்லை என்று தெரிகின்றது.

ஒரு நாள் இஷாத் தொழுகைக்குப் பின் சஹாபாக்களை நோக்கி "இன்று உயிருடன் உள்ள எவரும் இந்த பூமியில் நூறு ஆண்டுகளுக்குப் பின் உயிருடன் இருக்க மாட்டார்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி),  நூல்: புகாரி 116, 564, 601

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் ஹில்று (அலை) உயிருடன் இருந்ததாக வைத்துக் கொண்டாலும் "100 ஆண்டுகளுக்குப் பின் இன்றைக்கு இந்த மண்ணுலகில் வாழும் எவரும் இருக்க மாட்டார்கள்'' என்ற நபி மொழி மூலம் நூறு ஆண்டுகளுக்குப் பின் ஹில்று (அலை) நிச்சயம் மரணித்தே இருக்க வேண்டும். இன்றளவும் நிச்சயம் அவர் உயிருடன் இருக்க முடியாது. ஏனெனில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கூற்று ஒரு போதும் பொய்யாகாது. ஹில்று (அலை) உயிருடன் இருப்பதாகக் கூறுவது முழுக்க முழுக்க கற்பனையேயன்றி வேறில்லை.

பல பெரியவர்களை ஹில்று (அலை) அவர்கள் சந்தித்துள்ளதாகக் கூறப்படுவதும், பல கப்ருகளை ஜியாரத் செய்ய வருவதாகக் கூறப்படுவதும் மேற்கூறிய அல்லாஹ்வின் திருவசனங்களுக்கும், நபிகள் நாயகத்தின் அமுத மொழிகளுக்கும் முரண்படுவதால், அவை யாவும் பச்சைப் பொய்களே.

எவன் இது போன்ற கதைகளைச் சொல்கிறானோ, அதனை நம்புகின்றானோ, அல்லாஹ்வின் திருவேதத்தையும், அவன் தூதரின் பொன் மொழிகளையும் நம்ப மறுத்தவனாகவே கருதப்படுவான்.

இமாம் புகாரி, இப்ராஹீம் அல்ஹர்பி, இப்னு ஜவ்ஸீ, காழீ முகம்மது பின் ஹுஸைன், அபூதாஹிர், இப்னு கஸீர் போன்ற பேரறிஞர்களும் ஹில்று (அலை) அவர்கள் மரணமடைந்து விட்டதாகவே கூறியுள்ளார்கள்.

இது போன்ற கற்பனைக் கதைகளை நம்புவதை விட்டு அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவானாக.

  1. ஒளியிலிருந்து

எல்லாம் வல்ல அல்லாஹ் தன் அடியார்களில் முஹம்மது (ஸல்) அவர்களை மிகச் சிறந்தவர்களாக ஆக்கியுள்ளான்; அவர்களை இறுதி நபியாகவும், மறுமையில் "ஷபாஅத்' எனும் பரிந்துரை செய்பவர்களாகவும், "மகாமுன் மஹ்மூத்' என்ற உயர் பதவிக்கு உரியவர்களாகவும் அல்லாஹ் தேர்ந்தெடுத்துள்ளான் என்பதில் இஸ்லாமியரிடையே கருத்து வேறுபாடு இல்லை.

அல்லாஹ் அவர்களுக்கு எந்தச் சிறப்புகளை வழங்கி இருப்பதாகக் கூறி இருக்கிறானோ, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தச் சிறப்புகள் தமக்கு இருப்பதாகக் கூறியுள்ளார்களோ, அவற்றைத் தவிர நாமாகப் புகழ்கிறோம் என்ற பெயரில் கற்பனைக் கதைகளைக் கட்டி விடுவது மிகப் பெரும் குற்றமாகும்.

இவ்வாறு வரம்பு மீறிப் புகழ்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிக வன்மையாகக் கண்டித்துள்ளனர்.

"ஷைத்தான் உங்களைக் கெடுத்து விட வேண்டாம். நான் அப்துல்லாவின் மகன் முஹம்மத் ஆவேன்; மேலும் அல்லாஹ்வின் தூதருமாவேன். அல்லாஹ் எனக்கு வழங்கியுள்ள தகுதிக்கு மேல் என்னை நீங்கள் உயர்த்துவதை நான் விரும்ப மாட்டேன்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றனர்.

நூல்: அஹ்மத் 12093, 13041

"கிறிஸ்தவர்கள் மர்யமுடைய மகன் ஈஸாவை வரம்பு மீறிப் புகழ்ந்தது போல், என்னை நீங்கள் வரம்பு மீறிப் புகழாதீர்கள்!

நூல்: புகாரி 3445

நபிகள் நாயகத்தின் உத்தரவுக்கு மாற்றமாக, வரம்பு மீறுவது உண்மையில் புகழ்வதாகாது. மாறாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உத்தரவை அலட்சியம் செய்த மாபெரும் குற்றமாகி விடும். இந்த அடிப்படையை நாம் தெரிந்து கொண்ட பின், பிரச்சனைக்குள் இப்போது நேரடியாகவே நுழைவோம்.

"முதலில் அல்லாஹ், முஹம்மது (ஸல்) அவர்களின் ஒளியைப் படைத்தான். அந்த ஒளியிலிருந்து எல்லாப் படைப்புகளையும் படைக்கத் துவங்கினான்.'' என்றும் ஆதம் (அலை) படைக்கப்படுவதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் அந்த ஒளியைப் படைத்தான் என்றும் உலமாக்கள் மீலாது மேடைகளில் முழங்கி வருகின்றனர்.

இந்தக் கதை திருக்குர்ஆனின் வசங்களுடன் நேரடியாகவே மோதுவதாகும்.

முதல் மனிதராக ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் மண்ணிலிருந்து படைத்தான் என்பதைத் திருக்குர்ஆன் பல இடங்களில் சொல்லிக் காட்டுகின்றது. ஆதம் (அலை) அவர்களின் சந்ததிகளின் சங்கிலித் தொடரில் அப்துல்லாவுக்கும், ஆமீனாவுக்கும் மகனாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்தார்கள். ஈஸா நபி தவிர மற்ற மனிதர்கள் எந்த முறையில் பிறந்தார்களோ, அப்படித்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் பிறந்தார்கள். எல்லா மனிதர்களுக்கும் எது மூலமாக இருந்ததோ அதுவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் மூலமாக இருந்தது. இது தான் குர்ஆன் ஹதீஸ் மூலம் பெறப்படும் உண்மையாகும்.

முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் களிமண்ணால் படைக்கப்பட்டார்கள் என்பதைப் பல வசனங்கள் நமக்குத் தெளிவு படுத்துகின்றன.

அவனே உங்களைக் களிமண்ணால் படைத்தான். பின்னர் (மரணத்திற்கான) காலக் கெடுவை நிர்ணயித்தான். (திரும்ப உயிர்ப்பிக்கப்படுவதற்கு) குறிப்பிட்ட மற்றொரு காலக் கெடுவும் அவனிடத்தில் உள்ளது. பின்னரும் நீங்கள் சந்தேகப்படுகின்றீர்கள்!

திருக்குர்ஆன் 6:2

களிமண்ணின் சத்திலிருந்து மனிதனைப் படைத்தோம்.

திருக்குர்ஆன் 23:12

"களிமண்ணிலிருந்து மனிதப் படைப்பை (அவன்) துவக்கினான்''

திருக்குர்ஆன் 32:7

"அல்லாஹ் உங்களை மண்ணிலிருந்து, பின்னர் விந்திலிருந்து படைத்தான்''

திருக்குர்ஆன் 35:11

இது போன்ற ஏராளமான வசனங்கள் மனிதத் தோற்றம் மண்ணிலிருந்து துவங்கி, பின்னர் விந்திலிருந்து தொடர்கின்றது என்பதைத் தெளிவாகக் குறிப்பிடுகின்றன.

"களிமண்ணிலிருந்து மனிதப் படைப்பை (அவன்) துவக்கினான்''

திருக்குர்ஆன் 32:7

இந்த வசனத்தைக் கொஞ்சம் ஆராய்ந்து பாருங்கள்! மனிதப் படைப்பின் துவக்கமே "களிமண் தான்'' என்று எவ்வளவு தெளிவாகக் கூறுகின்றது! களிமண் தான் மனிதப் படைப்பின் துவக்கம், ஆரம்பம் என்று அல்லாஹ் கூறிக் கொண்டிருக்க, "இல்லை! முஹம்மது (ஸல்) அவர்களின் ஒளி  தான் ஆரம்பம்'' என்று கூறுவது அல்லாஹ்வுக்கு நாம் சொல்லிக் கொடுப்பது போலவும், அதிகப் பிரசங்கித் தனமாகவும் தோன்றவில்லையா?

அவனே தண்ணீரால் மனிதனைப் படைத்தான்.

திருக்குர்ஆன் 25:54

மனிதனை விந்துத் துளியால் அவன் படைத்தான். அவனோ பகிரங்கமாகத் தர்க்கம் செய்பவனாக இருக்கிறான்.

திருக்குர்ஆன் 16:4

மனிதனை விந்திலிருந்து படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவனோ பகிரங்கமாக எதிர் வாதம் புரிகிறான்.

திருக்குர்ஆன் 36:77

மனிதனைச் சோதிப்பதற்காக கலப்பு விந்துத்துளியிலிருந்து அவனை நாம் படைத்தோம். அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்.

திருக்குர்ஆன் 76:2

எந்தப் பொருளிலிருந்து அவனை (இறைவன்) படைத்தான்? விந்துத் துளியிலிருந்து அவனைப் படைத்து அவனுக்கு நிர்ணயித்தான்.

திருக்குர்ஆன் 80:19,20

இன்னும் பல வசனங்கள் மனித இனத்தின் மூலப்பொருளாக விந்துத் துளியையே குறிப்பிட்டுகின்றன.

அல்லாஹ் திருக்குர்ஆனின் எந்த வசனத்திலும் "நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒளியால் படைக்கப்பட்டார்கள்'' என்று கூறவே இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், "தன்னை அல்லாஹ் ஒளியிலிருந்து படைத்தான்'' என்று கூறவே இல்லை.

"இறைவா! என் உள்ளத்தில் எனக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக! என் பார்வையிலும் எனக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக! எனது செவியிலும் எனக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக! என் வலது புறத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக! என் இடது புறத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக! என் மேல் புறத்திலும், கீழ்ப்புறத்திலும் எனக்கு முன்பும், பின்னும் ஒளியை ஏற்படுத்துவாயாக! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அடிக்கடி துஆச் செய்பவர்களாக இருந்துள்ளார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 6316

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒளியால் உருவாக்கப்பட்டிருந்தாலோ, அவர்களே ஒளியால் இருந்திருந்தாலோ இந்தப் பிரார்த்தனையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்திருக்க வேண்டியதில்லை.

"ஒளியால் படைக்கப்பட்டார்கள் என்று கூறுவது எந்த ஹதீஸ் நூலிலும் காணப்படாத போது, இதைச் சொல்பவர்களின் நிலை என்ன? "நூரே முஹம்மதியா'' என்று கூறித் திரிபவர்களின் நிலை என்ன? அதையும் அல்லாஹ்வில் தூதரே தெளிவுபடுத்துகிறார்கள்.

"எவன் என் மீது திட்டமிட்டு ஒரு பொய்யைச் சொல்கிறானோ, அவன் தனது தங்குமிடத்தை நரகமாக ஆக்கிக் கொள்ளட்டும்.''

நூல்: புகாரி 107, 108, 109, 110, 1291, 3461, 6197

இந்த எச்சரிக்கையை மீறி துணிந்து இப்படிப் பொய்யைப் பிரச்சாரம் செய்பவர்கள் எங்கே செல்ல விரும்புகின்றனர் என்பதை உணர வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உண்மையான தனிச் சிறப்புகளைச் சொல்லவே நேரம் போதவில்லை.

அவர்களின் ஒழுக்கம்

தூய்மையான அரசியல்

சிறந்த இல்லறம்

வணக்க வழிபாடு

அவர்களின் அருங்குணங்கள்

அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாமை

அவர்களின் வீரம், தியாகம்

போன்ற எண்ணற்ற சிறப்புகளை அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியுள்ளான். பொய்யானவைகள் மூலம் அவர்களைப் புகழும் நிலையில் அல்லாஹ் அவர்களை வைத்திருக்கவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அன்பு மகன் இப்ராஹீம் (ரலி) இறந்த போது ஏற்பட்ட கிரஹணத்திற்கு, ஸஹாபாக்கள் இப்ராஹீமின் மரணத்தைக் காரணமாகக் காட்டினர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்தப் பொய்யான புகழைக் கண்டித்துள்ளனர்.

நூல்: புகாரி 1040, 1041, 1042, 1043, 1044, 1046, 1047, 1048, 1053, 1057, 1058, 1059, 1060, 1061, 1063, 3201, 3202, 3203,

இந்தக் கதையை அடிப்படையாக வைத்து, "நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெயிலில் நடந்தால் நிழல் விழாது'' என்ற துணைக் கதை வேறு. இதற்கும் எவ்வித ஆதாரமும் கிடையாது. இது போன்ற பொய்களைக் கூறி நரகத்திற்கும் ஆளாவதை விட்டும் அல்லாஹ் நம்மைக் காக்கட்டும்! அவர்களின் உண்மை வரலாற்றைக் கூறி அவர்களை உண்மையாகப் புகழ்ந்தவர்களில் அல்லாஹ் நம்மை ஆக்கட்டும்!

  1. நரகம் தீண்டாத அபூலஹபின் விரல்!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த செய்தியை அவர்களின் பெரிய தந்தை அபூலஹபிடம் கூறுவதற்காக அவனது அடிமைப் பெண் ஓடி வரும் போது மகிழ்ச்சி மிகுதியால் தன் சுட்டுவிரல் நீட்டி அந்தப் பெண்ணை அபூலஹப் விடுதலை செய்தான். இதன் காரணமாக அவன் நரகில் வேதனை அனுபவித்துக் கொண்டிருக்கும் போது, அந்த விரலை மட்டும் நரகம் தீண்டாது. மாறாக அந்த விரலிலிருந்து நீர் சுரந்து கொண்டிருக்கும். அதைச் சுவைத்து அவன் தாகம் தீருவான்.

இப்படி ஒரு கதையை பல்வேறு நூல்களிலும் மீலாது மேடைகளிலும் நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறோம். புகாரியிலே இந்தக் கதை இடம் பெற்றுள்ளது எனக் கூறுகின்றனர்.

இதை நாம் விரிவாக ஆராய்வோம்.

இவர்கள் கூறுவது போல் ஒரு செய்தி புகாரியில் இடம் பெற்றுள்ளது உண்மை தான். ஆனால் அந்தச் செய்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றாக இடம் பெறவில்லை. மாறாக உர்வா என்பவரின் கூற்றாகவே அது பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தச் செய்தி இது தான்.

சுவைபா என்பவர் அபூலஹபின் அடிமையாக இருந்தார். அபூலஹப் அவரை விடுதலை செய்திருந்தான். சுவைபா நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் பாலூட்டியிருக்கிறார். அபூலஹப் மரணித்த பின் அவனது குடும்பத்தில் ஒருவரின் கனவில் மோசமான நிலையில் அவன் காட்டப்பட்டான். "நீ சந்தித்தது என்ன'' என்று அவர் அவனிடம் கேட்டார். அதற்கு அவன் "சுவைபாவை நான் விடுதலை செய்ததால் இதில் நீர் புகட்டப்படுகிறேன் என்பதைத் தவிர வேறு எதையும் நான் சந்திக்கவில்லை'' என்று கூறினான்.

நூல் : புகாரி 5101

இந்தச் செய்தி. பல காரணங்களால் ஏற்க முடியாகதாகும்.

  1. கனவு என்பது மார்க்கமாகாது. கனவில் காட்டப்படுவது போல் நடக்கும் என்று கூற எந்த ஆதாரமும் இல்லை.
  2. அபூலஹபின் குடும்பத்தினரில் முஸ்லிம்களும் இருந்தனர் முஸ்லிம் அல்லாதவரும் இருந்தனர். கனவில் கண்டவர் யார் என்பது தெரியவில்லை. கனவு கண்டவர் யார் என்பது கூறப்படவில்லை.
  3. இதைக் கூறுபவர் உர்வா என்பவர். இவர் அந்தக் காலகட்டத்தில் பிறக்காதவர்; நபித்தோழர் அல்லர்.
  4. கனவு என்பது காண்பவருக்கு மட்டுமே தெரிந்ததாகும். அவர் சொல்லாமல் யாரும் அறிய முடியாது. அவ்வாறிருக்க உர்வாவுக்கு இது எப்படி தெரிந்தது.
  5. எல்லாவற்றுக்கும் மேலாக இந்தக் கனவு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டு அவர்களின் அங்கீகாரம் பெறவில்லை.

இந்தக் காரணங்களால் இந்தக் கனவை அடிப்படையாகக் கொண்டு கதை விட முடியாது.

புகாரியில் இடம் பெற்றாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சம்மந்தப்படாததால் இது மார்க்க ஆதாரமாகாது. மேலும் குர்ஆனின் தெளிவான கருத்துக்களுக்கும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அருளுரைக்கும் முரண்பட்டதாகவும் இந்தக் கதை அமைந்துள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எத்தனையோ எதிரிகள் இருந்திருந்தும் அல்லாஹ்வினால் குர்ஆனில் இவனைத் தவிர வேறு எவரும் (தனிப்பட்ட முறையில்) சபிக்கப்படவில்லை. இவனைச் சபிப்பதற்கு என்றே தனியாக அல்லாஹ் ஒரு அத்தியாயத்தை அருளி இருக்கிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது உறவினரை எல்லாம் ஒரு மலை அடிவாரத்தில் கூட்டி தூய இஸ்லாத்தை எடுத்துரைக்கும் போது எல்லோரும் மௌனமாகக் கலைந்து செல்ல அபூலஹபுடைய கரங்கள் மட்டும் மண்ணை வாரி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது இறைத்ததோடு மட்டுமின்றி, "இதற்காகவா எங்களை ஒன்று கூட்டினாய்? நீ அழிந்து போ! என்று சொன்னான்.

நூல் : புகாரி 4770, 4801, 4971, 4972, 4801, 4971, 4972

இந்தச் சந்தர்ப்பத்தில் தான் அவனைக் கண்டித்து 111 வது அத்தியாயம் அருளப்பட்டது.

அபூலஹபுடைய இரு கைகளும் அழிந்தன. அவனும் அழிந்தான். அவனது செல்வமும், அவன் செய்தவையும் அவனைக் காக்கவில்லை. கொளுந்து விட்டெரியும் நெருப்பில் அவனும், விறகு சுமக்கும் அவனது மனைவியும் கருகுவார்கள். அவள் கழுத்தில் முறுக்கேறிய ஈச்சமரக் கயிறு உள்ளது.

திருக்குர்ஆன் 111 வது அத்தியாயம்

 "அவனது கைகளும் அவனும் நாசமாகட்டும் என்று திருக்குர்ஆன் கூறும் போது அந்தக் கையில் ஒரு பகுதியாகத் திகழும் ஒரு விரல் மட்டும் நாசமாகாது என்பது அல்லாஹ்வின் கருத்துடன் மோதும் நிலை அல்லவா? அல்லாஹ்வின் சொல்லைப் பொய்யாக்குகின்ற இந்தக் கற்பனைக் கதையை உண்மை என்று எப்படி ஏற்றுக் கொள்வது?

"காபிர்களாக இறந்துவிட்ட யாருக்கும் தண்டனையிலிருந்து சலுகையோ, அல்லது தண்டனைக் குறைப்போ அறவே கிடையாது'' என்பதைச் சந்தேகத்திற்கு இடமின்றி திருக்குர்ஆன் குறிப்பிடுகின்றது.

(ஏக இறைவனை) மறுத்து, மறுத்த நிலையிலேயே மரணித்தோர் மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் அனைத்து (நல்ல) மனிதர்களின் சாபமும் உள்ளது. அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களுக்கு வேதனை இலேசாக்கப்படாது. அவர்கள் அவகாசம் அளிக்கப்படவும் மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 2:161,162

அவர்கள் தாம், மறுமையை விற்று இவ்வுலக வாழ்வை வாங்கியவர்கள். எனவே அவர்களுக்கு வேதனை இலேசாக்கப்படாது; உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 2:86

அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். இதன் பின்னர் திருந்தி சீர்திருத்திக் கொண்டோரைத் தவிர (மற்றவர்களுக்கு) வேதனை இலேசாக்கப்படாது. அவகாசமும் அளிக்கப்பட மாட்டார்கள். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன் 3:88, 89

சாதாரண காபிர்களுக்கே இந்த நிலை என்றால் மிகவும் கொடியவனாகத் திகழ்ந்த அபூலஹபுக்கு மட்டும் எப்படி தண்டனையை இலேசாக்க முடியும்? திருக்குர்ஆனின் கருத்துக்கு முற்றிலும் முரண்பட்ட இந்த நிகழ்ச்சியை உண்மை என்று எப்படி ஏற்றுக் கொள்வது?

"செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றது'' என்பது நபிமொழி.

நூல் : புகாரி 1, 54, 2529, 3898, 5070, 6689, 6953,

அபூலஹப் தன் விரல் அசைத்து அடிமைப் பெண்ணை விடுதலை செய்யும் போது அவனது எண்ணம் என்ன?

அகில உலகிற்கும் வழிகாட்டியாகத் திகழும் அல்லாஹ்வின் தூதர் உலகில் பிறந்து விட்டார்கள் என்பதற்காக அவன் அவ்வாறு செய்யவில்லை. மாறாக தனது தம்பி அப்துல்லாஹ்வுக்கு குழந்தை பிறந்து விட்டது என்ற செய்திக்காகவே உரிமை விட்டான். அல்லாஹ்வின் தூதர் என்று உணர்ந்து செய்த செயலல்ல.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குழந்தைப் பருவத்திலிருக்கும் போது எத்தனை காபிர்களின் கரங்கள் தொட்டுத் தூக்கி இருக்கின்றன! அந்தக் கரங்களுக்கும் நீர் சுரக்க வேண்டாமா? எத்தனை நெஞ்சங்கள் அவர்களைத் தழுவியுள்ளன! எத்தனை உதடுகள் அவர்களை முத்தமிட்டுள்ளன! அவர்களைக் கொஞ்சிய நாவுகள் தான் எத்தனை! அவர்களைச் சுமந்து திரிந்த தோள்கள் எத்தனை!

அவர்கள் நரகில் வீழ்ந்து கிடக்கையில் அவர்களின் கைகளிலிருந்தும், இதழ்களிலிருந்தும், மார்புகளிலிருந்தும் தேன் சுரக்க வேண்டாமா?

மொத்தத்தில் மக்கத்துக் காபிர்கள் அனைவரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சிறு பிராயத்தில் கொஞ்சி மகிழ்ந்தவர்கள் தானே? அவர்களுக்கு இது போன்ற சலுகை உண்டு என்ற விபரீத முடிவுக்கு இந்தக் கற்பனைக் கதை இட்டுச் செல்லாதா?

எனவே இந்தக் கட்டுக் கதையை நாம் அடியாடு நிராகரிக்க வேண்டும்

  1. கஃபா இடம் பெயர்ந்ததா?

ஹஸன் பஸரீ அவர்கள் ஹஜ்ஜுச் செய்யச் சென்ற போது கஃபதுல்லாஹ்வை அதன் இடத்தில் காணவில்லையாம்! "கஃபா எங்கே?'' என்று விசாரித்த போது ராபியா பஸரிய்யா அவர்களை வரவேற்கச் சென்று விட்டதாகத் தெரிந்ததாம்.

இந்தக் கதை பல வகைகளில் விரிவுபடுத்தப்பட்டு பலவிதமாகச் சொல்லப்படுகின்றது. "இந்தக் கதை சரியானது தானா? என்று நாம் ஆராய்வோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுச் செய்வதற்காக ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு மக்காவுக்குத் தம் தோழர்களுடன் புறப்பட்டனர். ஹுதைபிய்யா என்ற இடத்தில் வைத்து அவர்கள் தடுக்கப்படுகிறார்கள். கஃபதுல்லாவைச் சந்திக்க வேண்டும் என்ற பேராசையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் வந்திருந்தனர். அந்த நேரத்தில் மக்கத்துக் காபிர்கள் தடுத்து விட்டனர்.

பார்க்க புகாரி 4191, 4252, 4251, 1844, 2698, 2700, 3184,

 கஃபத்துல்லா எவருக்காகவும் நடந்து வரக்கூடியதாக இருந்தால் இந்த இக்கட்டான நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுக்கப்பட்ட போது அவர்களை நோக்கி வந்திருக்க வேண்டும். அல்லாஹ்வின் திருத்தூதருக்காக நடந்து வராத கஃபத்துல்லா ராபிஆ பஸரியாவுக்காக, அதுவும் எவ்வித அவசியம் இல்லாமல் அவர்களை வரவேற்பதற்காகச் சென்றதென்றால் இதை எவராவது ஏற்க இயலுமா?

அதன் பின் இறுதி ஹஜ்ஜின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அவர்களின் ஆருயிர்த் தோழர்களும் மக்காவுக்குச் சென்ற போது மக்காவின் எல்லையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் அவர்களின் தோழர்களையும் வரவேற்க கஃபதுல்லா மக்காவின் எல்லைக்கு இடம் பெயர்ந்து வரவில்லை! ஒருவரை வரவேற்பதற்காக கஃபதுல்லா இடம் பெயர்ந்து வருமென்றால் அல்லாஹ்வின் தூதர் அல்லவா வரவேற்கப்பட மிகவும் தகுதி வாய்ந்தவர்கள்!

இதன் பின் நாற்பெரும் கலீபாக்கள் ஸஹாபாக்கள், தாபியீன்கள் பெரும் இமாம்களெல்லாம் ஹஜ்ஜுச் செய்ய வந்திருக்கின்றார்கள்! அவர்களை எல்லாம் வரவேற்க கஃபதுல்லா இடம் பெயர்ந்து வரவில்லையே! ராபிஆ பஸரியா அவர்களை வரவேற்பதற்காகச் சென்றதென்றால் இதை எப்படி ஏற்க இயலும்?

திருக்குர்ஆன் வசனங்களும் இந்தக் கதை பொய்யானது என்பதை மிகவும் தெளிவாக உணர்த்திக் கொண்டிருக்கின்றன.

புனித ஆலயமான கஅபாவையும், புனித மாதத்தையும், குர்பானிப் பிராணியையும், (அதற்கு அணிவிக்கப்படும்) மாலைகளையும் மனிதர்களுக்கு நிலையானதாக அல்லாஹ் ஆக்கி விட்டான்.

திருக்குர்ஆன் 5:97

கஅபாவை மனிதர்களுக்கு நிலையானதாக அல்லாஹ் ஆணி அடித்தாற்போல் இந்த வசனத்தில் சொல்லி விடுகிறான். மனிதர்களுக்காக அது ஒரு இடத்தில் நிலையாகவே இருக்கும். இடையில் இடம் பெயர்ந்து செல்லாது என்பதை மிகவும் தெளிவாகவே அல்லாஹ் சொல்லி விடுகிறான். "ராபிஆ பஸரியா அவர்களை வரவேற்க கஃபதுல்லா இடம் பெயர்ந்ததாகக் கூறுவதை ஒரு முஸ்லிம் நம்பக் கூடாது'' என்பதற்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும்.

(ஏக இறைவனை) மறுத்தோருக்கும், அல்லாஹ்வின் பாதையை விட்டும், மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் தடுத்தோருக்கும், மற்றும் அங்கே அநீதியின் மூலம் குற்றம் புய நாடுவோருக்கும் துன்புறுத்தும் வேதனையைச் சுவைக்கச் செய்வோம். மஸ்ஜிதுல் ஹராமை (அதன்) அருகில் வசிப்போருக்கும் தூரத்தில் வசிப்போருக்கும் சமமாக ஆக்கினோம்.

திருக்குர்ஆன் 22:25

 கஃபா மக்கள் அனைவருக்கும் பொதுவானது; எந்தத் தனி நபருக்கும் விசேஷ மரியாதை செய்ய நடந்து வராது என்பதை இந்த வசனம் உணர்த்துகின்றது.

கஅபாவை அனைவருக்கும் சமமாக ஆக்கியதாக அல்லாஹ் இந்த வசனத்தில் கூறுகிறான். ராபிஆ பஸரியா அவர்களை வரவேற்க கஃபதுல்லா இடம் பெயர்ந்ததாகக் கூறுவது இதற்கும் முரணானதாகும்.

அந்த ஆலயத்தை மக்களின் ஒன்று கூடுமிடமாகவும், பாதுகாப்பு மையமாகவும் நாம் அமைத்ததை நினைவூட்டுவீராக! மகாமே இப்ராஹீமில் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! "தவாஃப் செய்வோருக்காகவும், இஃதிகாஃப் இருப்போருக்காகவும், ருகூவு, ஸஜ்தா செய்வோருக்காகவும் இருவரும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துங்கள்!'' என்று இப்ராஹீமிடமும், இஸ்மாயீலிடமும் உறுதி மொழி வாங்கினோம்.

(திருக்குர்ஆன் 2: 125)

தவாபு செய்பவர்கள் அங்கே தொழ வருபவர்கள், தியானிப்பவர்கள் ஆகியோருக்காகவே கஃபதுல்லா நிர்மாணிக்கப்பட்டது என்று அதன் நோக்கத்தையும் அல்லாஹ் இந்த வசனத்தில் கூறுகிறான்.

ஆனால் இந்தக் கதையின்படி திக்ரு செய்வதற்காகவும், தவாபு செய்வதற்காகவும், தொழுவதற்காகவும் அங்கே சென்ற ஹஸன் பஸரீ அவர்களுக்காகவும், அவர்களைப் போன்ற பல்லாயிரம் மக்களுக்காகவும் கஃபதுல்லா அங்கே இருக்கவில்லை.

எந்த நோக்கத்திற்காக கஃபாவை அல்லாஹ் நிர்மாணிக்கச் செய்தானோ அந்த நோக்கத்திற்காக "கஃபா' அங்கே இல்லை என்று இந்தக் கதை உணர்த்துகின்றதே! இது எப்படி உண்மையாக இருக்க முடியும்?

அகிலத்தின் நேர் வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும்.

(திருக்குர்ஆன் 3:96)

மனிதர்கள் இறைவனை வணங்குவதற்கென ஒரு இடத்தில் கஃபதுல்லா வைக்கப்பட்டிருப்பதை இந்த வசனம் உணர்த்துகின்றது.

மக்கள் அனைவருக்கும் நேர்வழியாகவும், மக்கள் அனைவருக்கும் பரக்கத்து நிறைந்ததாகவும் இருக்கின்ற கஃபதுல்லாவைத் தான் மக்கள் தேடிச் செல்ல வேண்டும் என்பதையும் இந்த வசனம் நமக்கு விளக்குகின்றது.

இந்தக் கதையின்படி, பரக்கத்தைப் பெருவதற்காக அதைத் தேடிச் சென்றுள்ள மக்களுக்காக காட்சி தரவில்லை என்றால் குர்ஆனின் உத்திரவாதம் இங்கே பொய்யாக்கப்படுகின்றது.

அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. யாரேனும் (ஏக இறைவனை) மறுத்தால் அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன்.

திருக்குர்ஆன் 3: 97

பயணம் செய்யச் சக்தி பெற்றிருக்கின்ற மக்கள் அவ்வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்பதை அல்லாஹ் கடமையாக ஆக்கிவிட்டு, அந்தக் கடமையை நிறைவேற்ற அவ்வீட்டைத் தேடி வருகின்ற மக்களுக்காக அந்த இடத்தில் கஃபாவை அல்லாஹ் வைக்காமலிருப்பானா? என்பதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். அவ்வீடு எவரையும் தேடி வராது என்பதையும் இந்தத் திருவசனம் உணர்த்துவதை நாம் காணலாம்.

இந்தக் கதை திருக்குர்ஆனின் வசனங்களுடன் நேரடியாகவே மோதுகின்றது. அல்லாஹ்வின் நோக்கத்தையும் அவனது உத்தரவாதத்தையும் பொய்ப்படுத்துகின்றது.

அல்லாஹ்வின் கூற்றுக்கு முரணாக இருக்கும் இந்தக் கதை எப்படி உண்மையாக இருக்க முடியும்?

எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக பின்வரும் இறைவசனம் மிகவும் தெளிவாகவே இந்தக் கதையைப் பொய்யாக்கி விடுகின்றது.

மனிதர்களை உயர்த்துவதற்காக அவர்களின் மரணத்திற்குப் பின் பல கதைகளைக் கட்டி விடுவது வாடிக்கையாகவே நடந்து வருவதாகும். ஆனால் ராபிஆ பஸரிய்யா (ரஹ்) அவர்களைப் பொருத்த வரை அவர்கள் வாழ்ந்திருந்த காலத்திலேயே இது போன்று கதைகள் கட்டி விடப்பட்டன. இதைச் செவியுற்ற ராபிஆ பஸரிய்யா (ரஹ்) அவர்கள் இதைத் திட்டவட்டமாக மறுத்து விட்டனர்.

ஷைத்தான் மக்களுடன் விளையாடுவதன் விளைவே இது என்று கூறி விட்டார்கள். இந்தக் கதையின் நாயகியாகிய அவர்களே மறுத்துள்ளது இந்த கதை பொய் என்பதற்கு போதுமான சான்றாகத் திகழ்கின்றது.

ராபிஆ பஸரிய்யா (ரஹ்) அவர்கள் இப்படி மறுத்துள்ளதை இப்னுல் ஜவ்ஸீ (ரஹ்) அவர்கள் தனது "தல்பீஸு இப்லீஸ்' என்ற நூலில் 383 ஆம் பக்கத்தில் பதிவு செய்துள்ளனர்.

திருக்குர்ஆனுடன் மோதும் இது போன்ற கதைகளை நம்புவதும், பேசுவதும் குர்ஆனையே மறுப்பதாகும். இது போன்ற பொய்களை நம்புவதை விட்டும் அல்லாஹ் நம்மைக் காத்தருள்வானாக! ஆமீன்!

நேர்ச்சையும் சத்தியமும்

நூலின் பெயர் : நேர்ச்சையும் சத்தியமும்

ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன்

மார்க்கத்தின் எச்சரிக்கை!

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும். இந்த இணைய தளத்தில் உள்ளவைகளைப் பிரச்சாரம் செய்வதற்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் சில சகோதரர்கள் நமது ஆக்கங்களை அப்படியே பயன்படுத்தி தமது ஆக்கம் போல் காட்டுகின்றனர்.

இன்னாருடைய கட்டுரையில் இருந்து, அல்லது புத்தகத்தில் இருந்து இது எடுக்கப்பபட்டது என்று குறிப்பிடாமல் புகழடைவதற்காக  இவ்வாறு செய்கின்றனர்.

சில இணைய தளங்களும் என்னுடைய ஆக்கங்களை அப்படியே வெளியிட்டு தம்முடைய ஆக்கம் போல் காட்டுகின்றன.மேலும் சில புத்தக வியாபாரிகளும் எனது நூல் உட்பட மற்றவர்களின் நூல்களைச் சிறிது மாற்றியமைத்து அனாமதேயங்களின் பெயர்களில் வெளியிட்டுச் சம்பாதிக்கின்றனர். உலகைப் பற்றியும் இவர்களுக்கு வெட்கம் இல்லை. மறுமையைப் பற்றியும் பயம் இல்லை.

இஸ்லாத்தில் இவ்வாறு செய்ய அனுமதி இல்லை. இவர்கள் நல்லது செய்யப் போய் மறுமையின் தண்டனைக்கு தம்மைத் தாமே உட்படுத்திக் கொள்கின்றனர்.

பிறரது ஆக்கங்களைப் பயன்படுத்துவோர் இது இன்னாருடைய ஆக்கம் என்று குறிப்பிடாமல் தன்னுடைய ஆக்கம் போல் காட்டுவது மார்க்க அடிப்படையில் குற்றமாகும்.

இவர்களுக்கு அல்லாஹ் விடுக்கும் எச்சரிக்கையை இங்கே சுட்டிக் காட்டுகிறோம்.

தாங்கள் செய்தவற்றுக்காக மகிழ்ச்சியடைந்து, தாம் செய்யாதவற்றுக்காகப் புகழப்பட வேண்டுமென விரும்புவோர் வேதனையிலிருந்து தப்பித்து விட்டார்கள் என்று நீர் நினைக்காதீர்! அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.

திருக்குர்ஆன் 3:188

முன்னுரை

முஸ்லிம்கள் தமது அனைத்து வணக்க வழிபாடுகளையும் திருமறைக் குர்ஆன் மற்றும் நபிவழியின் அடிப்படையிலேயே அமைத்துக் கொள்ளக் கட்டளையிடப்பட்டுள்ளனர்.

எந்த வணக்கத்தையாவது அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தராத முறையில் ஒருவர் செய்தால் அந்த வணக்கம் இறைவனால் நிராகரிக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளனர். திருக்குர்ஆனையும் நபிவழியையும் ஆதாரமாகக் கொண்டு செயல்படும் முஸ்லிம்கள் தொழுகை, நோன்பு போன்ற வணக்கங்களை தக்க முறையில் நிறைவேற்றினாலும் நேர்ச்சை, சத்தியம் செய்தல் போன்ற வணக்கங்களைப் பற்றி அறியாமையில் உள்ளனர்.

மற்றும் சில முஸ்லிம்கள் நேர்ச்சை, சத்தியம் செய்தல் ஆகியவற்றை ஒரு வணக்கம் என்று அறியாததால் அல்லாஹ் அல்லாதவர்களுக்காக நேர்ச்சை செய்கின்றனர். அல்லாஹ் அல்லாதவர்களின் பெயரில் சத்தியமும் செய்கின்றனர்.

தங்களுக்கு இயலாத ஒன்றை நேர்ச்சை செய்து விட்டு அதை நிறைவேற்ற முடியாமல் தங்களுக்குத் தாங்களே சிரமத்தை ஏற்படுத்திக் கொள்பவர்களும் உள்ளனர்.

நேர்ச்சை மற்றும் சத்தியம் செய்யும் முறை யாது என்பது பற்றியோ அது குறித்த உட்பிரிவுச் சட்டங்கள் குறித்தோ முழுமையான நூல் எதுவும் தமிழ் மொழியில் இல்லாததே இந்த நிலமைக்குக் காரணம்.

நேர்ச்சை, சத்தியம் செய்தல் பற்றி ஓரிரண்டு நூல்கள் வெளியிடப் பட்டிருந்தாலும் அவை மேலோட்டமாகவே எழுதப்பட்டுள்ளதால் போதிய பயன் ஏற்படவில்லை.

எனவே இக்குறையை நிவர்த்தி செய்வதற்காக நேர்ச்சை மற்றும் சத்தியம் செய்தல் குறித்த அனைத்துச் சட்டங்களையும் தக்க ஆதாரத்துடன் திரட்டி உங்கள் கைகளில் தவழ விடுகிறோம்.

இவ்விரு வணக்கங்களையும் அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய வழியில் நிறைவேற்றிட வல்ல இறைவனிடம் இறைஞ்சுகிறோம்.

அன்புடன்,

நபீலா பதிப்பகம்.

பொருள் அட்டவணை

நேர்ச்சையின் சட்டங்கள்

நேர்ச்சையைத் தவிர்ப்பது நல்லது

பிரார்த்தனை தான் சிறந்த வழி

நேர்ச்சையை நிறைவேற்றுவது அவசியம்

நேர்ச்சைகள் யாவும் அல்லாஹ்வுக்கே

அறியாமல் செய்த நேர்ச்சைகள்

எவற்றை நேர்ச்சை செய்யலாம்

மௌன விரதம்

தன்னைத் தானே வேதனைப்படுத்திக் கொள்ளுதல்

தன் கைவசம் இல்லாததை நேர்ச்சை செய்தல்

செருப்பணியாமல் நடப்பதாக நேர்ச்சை செய்தல்

பாவமான காரியங்களைச் செய்வதாக நேர்ச்சை செய்தல்

வணக்கமாக இல்லாததை நேர்ச்சை செய்தல்

சொத்துக்கள் முழுவதையும் நேர்ச்சை செய்தல்

நேர்ச்சையை முறிப்பதன் பரிகாரம்

நேர்ச்சை செய்ததை விட சிறந்ததை நிறைவேற்றலாம்

சிறந்ததைக் கண்டால் நேர்ச்சையை முறிக்கலாம்

தீர்மானமில்லாத நேர்ச்சை

ஒருவரின் நேர்ச்சையை மற்றவர் நிறைவேற்றுதல்

சத்தியம் செய்தல்

அல்லாஹ்வின் மீது மட்டுமே சத்தியம் செய்ய வேண்டும்

அல்லாஹ் அல்லாதவர் மீது சத்தியம்

செய்ததற்கான பரிகாரம்

சத்தியத்தை நிறைவேற்றுவது அவசியம்

தவறான சத்தியங்களை நிறைவேற்றக் கூடாது

பொய்ச் சத்தியம் செய்தல்

தீர்மானமின்றி சத்தியம் செய்தல்

பிறருக்காகச் சத்தியம் செய்தல்

குடும்பத்தினருக்குக் கேடு செய்யும் சத்தியம்

தனது நற்பண்புகள் மீது சத்தியம் செய்தல்

பிறருக்கு உதவுவதில்லை என்று சத்தியம் செய்தல்

மற்றவர் செய்த சத்தியத்தை நிறைவேற்ற உதவுதல்

வியாபாரத்தில் சத்தியம் செய்தல்

சத்தியத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்குதல்

நம்பாதவர்களிடம் சத்தியம் செய்யக் கூடாது

சத்தியங்களைக் கேடயமாக ஆக்கக் கூடாது

சத்தியங்களை நிறைவேற்ற வேண்டும்

இல்லறத்தில் சந்தேகம்

சிறந்ததைக் கண்டால் சத்தியத்தைமுறிக்கலாம்

சத்தியத்தை முறிப்பதன் பரிகாரம்

நேர்ச்சையின் சட்டங்கள்!

நேர்ச்சை செய்வது, சத்தியம் செய்வது குறித்த சட்டங்கள் பற்றி முஸ்ம் சமுதாயத்தில் அதிக அளவில் அறியாமை நிலவுகின்றது.

இஸ்லாத்தில் நேர்ச்சை செய்வதும், சத்தியம் செய்வதும் ஏறக் குறைய ஒரே விதமான சட்டங்களைக் கொண்டுள்ளன. ஆயினும் சில விஷயங்களில் இவ்விரண்டின் சட்டங்களும் வேறுபடுகின்றன.

நேர்ச்சையைத் தவிர்ப்பது நல்லது

இறைவா! எனக்கு ஏற்பட்டுள்ள இந்தத் துன்பம் விலகினால், அல்லது இது வரை கிடைக்காமல் இருக்கின்ற பாக்கியம் எனக்குக் கிடைத்தால் உனக்காக நான் தொழுகிறேன்; நோன்பு நோற்கிறேன்; ஏழைகளுக்கு உதவுகிறேன் என்றெல்லாம் மனிதர்கள் நேர்ச்சை செய்கின்றனர்.

இவ்வாறு நேர்ச்சை செய்வதை இஸ்லாம் அனுமதித்தாலும் நேர்ச்சை செய்யாமல் இருப்பதே உயர்ந்த நிலை என்று அறிவிக்கிறது.

இறைவா! நீ எனக்காக இதைச் செய்தால் நான் உனக்காக இதைச் செய்வேன் என்று கூறுவது இறைவனிடம் பேரம் பேசுவது போல் அமைந்துள்ளது. நாம் இறைவனுக்காக எதைச் செய்வதாக நேர்ச்சை செய்கிறோமோ அது இறைவனுக்குத் தேவை என்ற கருத்தும் இதனுள் அடங்கியுள்ளது.

உனக்காக நான் இதைச் செய்கிறேன் என்று இறைவனிடம் நாம் கூறும் போது அதற்கு ஆசைப்பட்டு நமது கோரிக்கையை இறைவன் நிறைவேற்றுவான் என்ற மனப்பான்மையின் வெளிப்பாடாகவும் இது தோற்றமளிக்கின்றது.

எனவே தான் நேர்ச்சை செய்வதைத் தவிர்க்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு அறிவுரை கூறியுள்ளனர்.

صحيح البخاري 6608 - حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُرَّةَ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ [ص:125] عَنِ النَّذْرِ، وَقَالَ: «إِنَّهُ لاَ يَرُدُّ شَيْئًا، وَإِنَّمَا يُسْتَخْرَجُ بِهِ مِنَ البَخِيلِ»

நேர்ச்சை செய்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். (இறைவன் விதித்த) எதனையும் நேர்ச்சை மாற்றியமைத்து விடப் போவதில்லை. இதனால் கஞ்சர்களிடமிருந்து (செல்வம்) வெளியே கொண்டு வரப்படும் (என்பதைத் தவிர வேறு பயன் இல்லை) என்றும் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 6608, 6693

صحيح البخاري 6692 - حَدَّثَنَا يَحْيَى بْنُ صَالِحٍ، حَدَّثَنَا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ الحَارِثِ، أَنَّهُ سَمِعَ ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، يَقُولُ: أَوَلَمْ يُنْهَوْا عَنِ النَّذْرِ، إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ النَّذْرَ لاَ يُقَدِّمُ شَيْئًا وَلاَ يُؤَخِّرُ، وَإِنَّمَا يُسْتَخْرَجُ بِالنَّذْرِ مِنَ البَخِيلِ»

நேர்ச்சை எந்த ஒன்றையும் முற்படுத்தவோ, பிற்படுத்தவோ செய்யாது எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 6692

நாம் செய்யும் நேர்ச்சையில் மயங்கி இறைவன் நமது கோரிக்கையை நிறைவேற்ற மாட்டான். அவன் ஏற்கனவே எடுத்திருக்கும் முடிவை நாம் செய்த நேர்ச்சையின் காரணமாக மாற்றவும் மாட்டான் என்பதை மேற்கண்ட நபிமொழிகள் தெளிவுபடுத்துகின்றன.

நேர்ச்சையினால் ஏற்படும் ஒரே நன்மை கஞ்சர்களின் பொருளாதாரம் நல்வழியில் செலவிடப்படுவது தான். இறைவனுக்காக தமது பொருளாதாரத்தை வாரி வழங்கும் வழக்கமில்லாத கஞ்சர்கள், நேர்ச்சை செய்து விட்டதால் விபரீதம் ஏதும் ஏற்படக் கூடாது என்ற அச்சத்தினால் பணத்தைச் செலவிட முன் வருவார்கள். இது தான் நேர்ச்சையினால் கிடைக்கும் ஒரே பயன் என்பதையும் மேற்கண்ட நபிமொழிகள் விளக்குகின்றன.

நேர்ச்சை செய்வதைத் தவிர்க்குமாறு இன்னும் ஏராளமான நபிமொழிகள் உள்ளன.

பிரார்த்தனை தான் சிறந்த வழி

அப்படியானால் நமக்கு நேர்ந்துள்ள துன்பங்கள் விலகவும், நமக்குக் கிடைக்காத பேறுகள் கிடைக்கவும் நாம் என்ன தான் செய்ய வேண்டும்?

இது போன்ற சந்தர்ப்பங்களில் இறைவனிடம் பிரார்த்தனை செய்வது தான் சிறந்த வழியாகும்.

இறைவா! எனக்கு ஏற்பட்ட இந்தத் துன்பத்தை நீ தான் நீக்க வேண்டும். உன்னைத் தவிர நான் வேறு யாரிடம் முறையிடுவேன்? என்று கோரிக்கை வைப்பதில் தான் பணிவு இருக்கிறது. இறைவனைப் பற்றிய அச்சமும் இதில் தான் வெளிப்படுகின்றது.

உதாரணமாக இரண்டு ரக்அத்கள் தொழுது, அல்லது நோன்பு நோற்று, அல்லது எழைகளுக்கு உதவி செய்து விட்டு இறைவா! உனக்காக நான் செய்த இந்த வணக்கத்தை ஏற்றுக் கொண்டு எனது துன்பத்தை நீக்குவாயாக என்பது போல் இறைவனிடம் பிரார்த்தனை செய்வது நேர்ச்சை செய்வதை விடச் சிறந்ததாகும்.

வணக்க வழிபாடுகள் மூலம் தன்னிடம் உதவி தேடுமாறு இறைவன் நமக்கு வழி காட்டுகிறான்.

பொறுமை, மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! பணிவுடையோரைத் தவிர (மற்றவர்களுக்கு) இது பாரமாகவே இருக்கும்.

திருக்குர்ஆன் 2:45

நம்பிக்கை கொண்டோரே! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.

திருக்குர்ஆன் 2:153

நேர்ச்சையை நிறைவேற்றுவது அவசியம்

நேர்ச்சை செய்வதால் எந்த நன்மையும் ஏற்படாது என்றும் நேர்ச்சை செய்யாதீர்கள் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருப்பதால் நேர்ச்சை செய்வது அறவே கூடாது என்று புரிந்து கொள்ளக் கூடாது. அது சிறந்ததல்ல என்றே புரிந்து கொள்ள வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்ததாக வரும் அறிவிப்புகளை இரண்டு வகையாக நாம் பிரிக்கலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒன்றைத் தடை செய்து விட்டு அதை அனுமதிப்பது போன்ற சொற்கள் எதனையும் பயன்படுத்தாமல் இருந்தால் அந்தத் தடை கண்டிப்பான தடை என்று புரிந்து கொள்ள வேண்டும்.

அவர்கள் ஒன்றைத் தடை செய்து விட்டு அதை அனுமதிப்பது போன்ற சொற்களைப் பயன்படுத்தியிருந்தால் அந்தத் தடை கண்டிப்பானது அல்ல; அதைச் செய்யாமல் இருப்பது சிறந்தது என்று அதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நேர்ச்சையைப் பொருத்த வரை அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்திருந்தாலும் அதை அனுமதித்ததற்கும் சான்றுகள் கிடைக்கின்றன. எனவே நேர்ச்சை செய்வது அறவே தடை செய்யப்பட்டது அல்ல என்று தான் முடிவு செய்ய வேண்டும்.

மேலும் நேர்ச்சை செய்து விட்டால் அதைக் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும்.

நீங்கள் எதையேனும் (நல் வழியில்) செலவிட்டாலோ, நேர்ச்சை செய்தாலோ அல்லாஹ் அதை அறிகிறான். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளரும் இல்லை.

திருக்குர்ஆன் 2:270

அவர்கள் நேர்ச்சையை நிறைவேற்றுவார்கள். தீமை பரவிய நாளைப் பற்றி அஞ்சுவார்கள்.

திருக்குர்ஆன் 76:7

பின்னர் அவர்கள் தம்மிடம் உள்ள அழுக்குகளை நீக்கட்டும்! தமது நேர்ச்சைகளை நிறைவேற்றட்டும்! பழமையான அந்த ஆலயத்தை தவாஃப் செய்யட்டும்.

திருக்குர்ஆன் 22:29

உங்களுக்குப் பின்னர் ஒரு சமுதாயத்தினர் தோன்றுவார்கள். அவர்கள் மோசடி செய்வார்கள். நாணயமாக நடக்க மாட்டார்கள். சாட்சி கூற அழைக்கப்படாமலே சாட்சி கூறுவார்கள். நேர்ச்சை செய்து விட்டு அதை நிறைவேற்றாமல் இருப்பார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)

நூல்: புகாரி 2651, 3650, 6428, 6695

மேற்கண்ட வசனங்களும் நபிமொழியும் நேர்ச்சையை அனுமதிக்கும் வகையில் அமைந்துள்ளன. மேலும் நேர்ச்சை செய்தால் அதைக் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும் என்பதையும் மேற்கண்ட வணக்கங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

நேர்ச்சைகள் யாவும் அல்லாஹ்வுக்கே!

நேர்ச்சை என்பது இஸ்லாத்தில் ஓர் வணக்கமாகும்.

மேலே நாம் எடுத்துக் காட்டிய வசனங்களில் நேர்ச்சையை நிறைவேற்றுமாறு இறைவன் வலியுறுத்துவதாலும், மறுமையை நம்புவோர் நேர்ச்சையை நிறைவேற்றுவார்கள் என்று கூறுவதாலும், கஅபாவைத் தவாஃப் செய்வதுடன் இணைத்து நேர்ச்சை குறிப்பிடப்படுவதாலும் நேர்ச்சை ஓர் வணக்கம் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

எல்லாவிதமான வணக்கங்களையும் இறைவனுக்கு மட்டுமே செய்ய வேண்டும். இறைவனைத் தவிர எவரையும், எதனையும் வணங்கக் கூடாது என்பது தான் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.

தமிழக முஸ்லிம்களில் பலர் நேர்ச்சையை இறை வணக்கம் என்று விளங்காத காரணத்தால் இறந்து போன மனிதர்களுக்கு நேர்ச்சை செய்து வருகின்றனர்.

இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையான எச்சரிக்கை செய்துள்ளனர்.

سنن أبي داود 3313 - حَدَّثَنَا دَاوُدُ بْنُ رُشَيْدٍ، حَدَّثَنَا شُعَيْبُ بْنُ إِسْحَاقَ، عَنِ الْأَوْزَاعِيِّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ قَالَ: حَدَّثَنِي أَبُو قِلَابَةَ، قَالَ: حَدَّثَنِي ثَابِتُ بْنُ الضَّحَّاكِ، قَالَ: نَذَرَ رَجُلٌ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَنْحَرَ إِبِلًا بِبُوَانَةَ فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: إِنِّي نَذَرْتُ أَنْ أَنْحَرَ إِبِلًا بِبُوَانَةَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلْ كَانَ فِيهَا وَثَنٌ مِنْ أَوْثَانِ الْجَاهِلِيَّةِ يُعْبَدُ؟» قَالُوا: لَا، قَالَ: «هَلْ كَانَ فِيهَا عِيدٌ مِنْ أَعْيَادِهِمْ؟»، قَالُوا: لَا، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَوْفِ بِنَذْرِكَ، فَإِنَّهُ لَا وَفَاءَ لِنَذْرٍ فِي مَعْصِيَةِ اللَّهِ، وَلَا فِيمَا لَا يَمْلِكُ ابْنُ آدَمَ»

புவானா என்ற இடத்தில் ஓர் ஒட்டகத்தை அறுத்துப் பலியிடு வதாக நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் ஒரு மனிதர் நேர்ச்சை செய்தார். அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! நான் புவானா எனும் இடத்தில் ஓர் ஒட்டகத்தை அறுத்துப் பலியிடுவதாக நேர்ச்சை செய்துள்ளேன் என்று தெரிவித்தார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறியாமைக் காலத்தில் வழிபாடு நடத்தப்படும் சிலைகள் ஏதும் அங்கே உள்ளனவா? எனக் கேட்டார்கள். இல்லை என்று நபித்தோழர்கள் விடையளித்தனர். அறியாமைக் கால திருவிழாக்கள் ஏதும் அங்கே நடக்குமா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டனர். நபித்தோழர்கள் இல்லை என்று விடையளித்தனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்படியானால் உமது நேர்ச்சையை நிறைவேற்றுவீராக! ஏனெனில் அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் விஷயத்திலும், தன் கைவசத்தில் இல்லாத விஷயத்திலும் நேர்ச்சை இல்லை என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸாபித் பின் ளஹ்ஹாக் (ரலி)

நூல்: அபூதாவூத் 2881

இந்த நிகழ்ச்சியில் சம்மந்தப்பட்ட மனிதர் அல்லாஹ்வுக்காகத் தான் நேர்ச்சை செய்தார். ஆனால் குறிப்பிட்ட இடத்தில் அந்த வணக்கத்தை நிறைவேற்றுவதாக நேர்ச்சை செய்தார். அப்படி இருந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எடுத்த எடுப்பிலேயே இதை அனுமதிக்கவில்லை. அல்லாஹ்வுக்குச் செய்த நேர்ச்சையானாலும் மற்றவர்களுக்காகச் செய்யப்படுகிறதோ என்ற சந்தேகம் கூட ஏற்படக் கூடாது என்பதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கவனம் செலுத்துகிறார்கள்.

நாகூரில் அடக்கம் செய்யப்பட்டுள்ள பெரியாருக்காக நேர்ச்சை செய்வது கூடாது என்பதைப் போலவே அல்லாஹ்வுக்காகச் செய்யப்பட்ட நேர்ச்சையைக் கூட நாகூரில் வைத்து நிறைவேற்றக் கூடாது என்பதை இந்த நபிமொழியிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம். ஏனெனில் நாகூர் எனும் ஊர் அறியாமைக் கால வழிபாடு நடக்கும் இடமாக அமைந்துள்ளது.

அங்கே போய் அல்லாஹ்வுக்காக அறுத்துப் பலியிட்டாலும் அது நாகூரில் அடக்கம் செய்யப்பட்டவருக்கு பலியிடப்படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி விடும்.

مسند أحمد 16607 - حَدَّثَنَا أَبُو بَكْرٍ الْحَنَفِيُّ، قَالَ: حَدَّثَنَا ابْنُ جَعْفَرٍ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنِ ابْنَةِ كَرْدَمَةَ، عَنْ أَبِيهَا، أَنَّهُ سَأَلَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: إِنِّي نَذَرْتُ أَنْ أَنْحَرَ ثَلَاثَةً مِنْ إِبِلِي فَقَالَ: " إِنْ كَانَ عَلَى جَمْعٍ مِنْ جَمْعِ الْجَاهِلِيَّةِ، أَوْ عَلَى عِيدٍ مِنْ أَعْيَادِ الْجَاهِلِيَّةِ، أَوْ عَلَى وَثَنٍ فَلَا، وَإِنْ كَانَ عَلَى غَيْرِ ذَلِكَ فَاقْضِ نَذْرَكَ "، قَالَ: يَا رَسُولَ اللهِ، إِنَّ عَلَى أُمِّ هَذِهِ الْجَارِيَةِ مَشْيًا أَفَأَمْشِي عَنْهَا؟ قَالَ: " نَعَمْ " (1)

நான் எனது மூன்று ஒட்டகங்களை அறுத்துப் பலியிடுவதாக நேர்ச்சை செய்துள்ளேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் கூறினேன். அதற்கவர்கள் அறியாமைக் காலத்தவர் ஒன்று கூடும் இடமாக அது இருந்தால், அல்லது அறியாமைக் காலத்தவர் பண்டிகை கொண்டாடும் இடமாக இருந்தால், அல்லது வழிபாடு செய்யப்படுபவை அமைந்துள்ள இடமாக இருந்தால் அந்த இடத்தில் உன் நேர்ச்சையை நிறைவேற்றாதே! அவ்வாறு இல்லாதிருந்தால் உனது நேர்ச்சையை நிறைவேற்று என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: கர்தமா (ரலி)

நூல்: அஹ்மத் 16012, 22112

அல்லாஹ்வுக்காக மட்டும் தான் நேர்ச்சை செய்ய வேண்டும் என்பதையும் அல்லாஹ் அல்லாதவருக்குச் செய்யப்படுகிறதோ என்ற சந்தேகம் ஏற்படுத்தும் இடத்தில் அதை நிறைவேற்றக் கூடாது என்பதையும் இந்த நிகழ்ச்சி நமக்குத் தெளிவுபடுத்துகிறது.

அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய நேர்ச்சையை மற்றவர்களுக்குச் செய்தால் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்ற உறுதிமொழியை மீறுவதாகும். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதுமாகும்.

அந்தக் குற்றத்தைச் செய்தவர்கள் மறுமையில் அறவே வெற்றி பெற முடியாது என்பதை மனதில் வைக்க வேண்டும்.

தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.

திருக்குர்ஆன் 4:48

தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். இதற்குக் கீழ் நிலையில் உள்ளதை, தான் நாடியோருக்கு அவன் மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் (உண்மையை விட்டும்) தூரமான வழி கேட்டில் விழுந்து விட்டார்.

திருக்குர்ஆன் 4:116

மர்யமின் மகன் மஸீஹ் தான் அல்லாஹ் எனக் கூறியவர்கள் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர். இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை என்றே மஸீஹ் கூறினார்.

திருக்குர்ஆன் 5:72

இதுவே அல்லாஹ்வின் வழி. தனது அடியார்களில் தான் நாடியோரை இதன் மூலம் நேர் வழியில் செலுத்துகிறான். அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த (நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.

திருக்குர்ஆன் 6:88

நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் நஷ்டமடைந்தவராவீர். மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக! என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது.

திருக்குர்ஆன் 39:65, 66

அறியாமல் செய்த நேர்ச்சைகள்

மார்க்கத்தைச் சரியாக அறிந்து கொள்ளாத நிலையில் ஒருவர் அல்லாஹ் அல்லாதவர்களுக்கு நேர்ச்சை செய்திருந்தால் என்ன செய்ய வேண்டும்? என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படலாம்.

இதற்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக நமக்கு வழி காட்டியுள்ளனர்.

صحيح البخاري 6696 - حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ طَلْحَةَ بْنِ عَبْدِ المَلِكِ، عَنِ القَاسِمِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ نَذَرَ أَنْ يُطِيعَ اللَّهَ فَلْيُطِعْهُ، وَمَنْ نَذَرَ أَنْ يَعْصِيَهُ فَلاَ يَعْصِهِ»

அல்லாஹ்வுக்கு வழிப்படுவதாக ஒருவர் நேர்ச்சை செய்தால் அவனுக்கு வழிப்படட்டும். அல்லாஹ்வுக்கு மாறு செய்தாக நேர்ச்சை செய்தால் அவனுக்கு மாறு செய்ய வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 6696, 6700

அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களுக்கு ஒருவர் நேர்ச்சை செய்தால் அதை விடப் பெரிய பாவம் ஏதும் இருக்க முடியாது. எனவே இவ்வாறு நேர்ச்சை செய்தவர்கள் அதை நிறைவேற்றக் கூடாது.

எவற்றை நேர்ச்சை செய்யலாம்?

நாம் எந்த நேர்ச்சை செய்வதாக இருந்தாலும் அல்லாஹ்வுக்காக மட்டுமே செய்ய வேண்டும் என்பதைச் சரியான முறையில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் நினைக்கின்ற எந்தக் காரியத்தை வேண்டுமானாலும் நேர்ச்சை செய்ய இஸ்லாத்தில் அனுமதியில்லை.

இறைவனுக்காக நாம் செய்யும் நேர்ச்சைகள் இரண்டு தன்மைகளில் அமைந்திருக்க வேண்டும்.

  1. இறைவன் நமக்குக் கற்றுத் தந்திருக்கின்ற வணக்கங்களில் ஒன்றாக அது அமைந்திருக்க வேண்டும்.
  1. அல்லது மனித சமுதாயத்துக்கு உதவும் வகையில் அமைந்திருக்க வேண்டும்.

இந்த இரண்டு தன்மைகளில் இல்லாத எந்தக் காரியத்தையும் நாம் நேர்ச்சை செய்ய முடியாது.

உதாரணமாக இரண்டு ரக்அத் தொழுதல், ஐந்து நாட்கள் நோன்பு நோற்றல் போன்ற காரியங்களை நேர்ச்சையாகச் செய்யலாம். ஏனெனில் இவை மார்க்கத்தில் வணக்கம் என்று கூறப்பட்டுள்ளன.

அது போல் ஏழைக்கு உணவு அளித்தல், மக்களின் குடிநீர்ப் பஞ்சத்தை நீக்க கிணறு வெட்டுதல் போன்ற காரியங்களையும் நேர்ச்சை செய்யலாம். ஏனெனில் இவை மனித குலத்துக்கு நன்மை தரக் கூடியவையாகும்.

இவ்வாறு இல்லாத எந்த ஒன்றையும் நேர்ச்சை செய்யக் கூடாது. இவ்விரு அம்சங்களில் அடங்காத பல நேர்ச்சைகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.

மௌன விரதம்

எனக்கு இந்தக் காரியம் நிறைவேறினால் நான் இரண்டு நாட்களுக்கு எதையும் பேச மாட்டேன் என்று மௌன விரதம் இருக்கும் வழக்கம் சிலரிடம் காணப்படுகிறது.

ஒருவர் மௌனமாக இருப்பது வணக்க முறையில் ஒன்றாக அமைந்திருக்கவில்லை. மேலும் இதனால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை.

முந்தைய சமுதாய மக்களுக்கு மௌன விரதம் என்பது ஒரு வணக்கமாக ஆக்கப்பட்டிருந்தது. மர்யம் (அலை) அவர்கள் மௌன விரதம் இருந்ததாகப் பின் வரும் வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

நீர், உண்டு பருகி மன நிறைவடைவீராக! மனிதர்களில் எவரையேனும் நீர் கண்டால் நான் அளவற்ற அருளாளனுக்கு நோன்பு நோற்பதாக நேர்ச்சை செய்து விட்டேன். எந்த மனிதனுடனும் பேச மாட்டேன் என்று கூறுவாயாக!

திருக்குர்ஆன் 19:26

இவ்வாறு மௌன விரதம் இருப்பது நமக்குத் தடை செய்யப்பட்டு விட்டது.

صحيح البخاري 6704 - حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: بَيْنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ، إِذَا هُوَ بِرَجُلٍ قَائِمٍ، فَسَأَلَ عَنْهُ فَقَالُوا: أَبُو إِسْرَائِيلَ، نَذَرَ أَنْ يَقُومَ وَلاَ يَقْعُدَ، وَلاَ يَسْتَظِلَّ، وَلاَ يَتَكَلَّمَ، وَيَصُومَ. فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مُرْهُ فَلْيَتَكَلَّمْ وَلْيَسْتَظِلَّ وَلْيَقْعُدْ، وَلْيُتِمَّ صَوْمَهُ» قَالَ عَبْدُ الوَهَّابِ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عِكْرِمَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்கள் மத்தியில் ஒரு நாள் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு மனிதர் நின்று கொண்டிருந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரைப் பற்றி விசாரித்தனர். அவர் பெயர் அபூ இஸ்ராயீல். அவர் உட்காராமல் நின்று கொண்டிருப்பதாகவும், வெயிலில் நிற்பதாகவும், பேசுவதில்லை எனவும், நோன்பு நோற்பதாகவும் நேர்ச்சை செய்துள்ளார் என்று மக்கள் கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரைப் பேசுமாறும், நிழலுக்கு வருமாறும், உட்காருமாறும் நோன்பை (மட்டும்) முழுமைப்படுத்துமாறும் அவருக்குக் கூறுங்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 6704

பேசாமல் இருப்பது ஓர் வணக்கமல்ல. அவ்வாறு நேர்ச்சை செய்யக் கூடாது என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

தன்னைத் தானே வேதனைப்படுத்திக் கொள்ளுதல்

இன்ன காரியம் எனக்கு நிறைவேறினால் நான் ஒற்றைக் காலில் நிற்பேன்; தரையில் புரளுவேன்; செருப்பணியாமல் கொளுத்தும் வெயிலில் நடப்பேன் என்றெல்லாம் சிலர் நேர்ச்சை செய்கின்றனர்.

இப்படி தன்னைத் தானே வேதனைப்படுத்திக் கொள்ளும் எந்தக் காரியத்தையும் நேர்ச்சை செய்யக் கூடாது. இதை மேற்கண்ட ஹதீஸிலிருந்தும் அறியலாம். மேலும் பல சான்றுகளும் உள்ளன.

صحيح البخاري 1865 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، أَخْبَرَنَا الفَزَارِيُّ، عَنْ حُمَيْدٍ [ص:20] الطَّوِيلِ، قَالَ: حَدَّثَنِي ثَابِتٌ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى شَيْخًا يُهَادَى بَيْنَ ابْنَيْهِ، قَالَ: «مَا بَالُ هَذَا؟»، قَالُوا: نَذَرَ أَنْ يَمْشِيَ، قَالَ: «إِنَّ اللَّهَ عَنْ تَعْذِيبِ هَذَا نَفْسَهُ لَغَنِيٌّ»، وَأَمَرَهُ أَنْ يَرْكَبَ

ஒரு முதியவர் தனது இரு மகன்கள் தாங்கிக் கொள்ள நடந்து செல்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்தனர். இவருக்கு என்ன நேர்ந்தது? என்று விசாரித்தனர். நடந்தே செல்வதாக இவர் நேர்ச்சை செய்து விட்டார் என்று நபித்தோழர்கள் கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த மனிதர் தன்னைத் தானே வேதனைப்படுத்திக் கொள்வது அல்லாஹ்வுக்குத் தேவையற்றது என்று கூறிவிட்டு வாகனத்தில் ஏறிச் செல்லுமாறு அவருக்குக் கட்டளையிட்டனர்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 1865, 6701

صحيح البخاري 1865 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، أَخْبَرَنَا الفَزَارِيُّ، عَنْ حُمَيْدٍ [ص:20] الطَّوِيلِ، قَالَ: حَدَّثَنِي ثَابِتٌ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى شَيْخًا يُهَادَى بَيْنَ ابْنَيْهِ، قَالَ: «مَا بَالُ هَذَا؟»، قَالُوا: نَذَرَ أَنْ يَمْشِيَ، قَالَ: «إِنَّ اللَّهَ عَنْ تَعْذِيبِ هَذَا نَفْسَهُ لَغَنِيٌّ»، وَأَمَرَهُ أَنْ يَرْكَبَ

ஒரு முதியவர் தனது இரண்டு புதல்வர்கள் மீது சாய்ந்து கொண்டு நடந்து செல்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்தனர். இவரது நிலைக்கு என்ன காரணம்? என்று விசாரித்தனர். இவர் (இவ்வாறு) நேர்ச்சை செய்து விட்டார் என்று அவரது இரண்டு மகன்கள் கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெரியவரே வாகனத்தில் ஏறுவீராக! நீரும், உமது நேர்ச்சையும் அல்லாஹ்வுக்குத் தேவையில்லை என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 3101

எனவே நேர்ச்சையின் பெயரால் தன்னைத் தானே வேதனைப்படுத்திக் கொள்ளக் கூடாது.

வெறுமனே நடப்பதை நேர்ச்சை செய்யாமல் ஒரு வணக்கத்தை நடந்து சென்று நிறைவேற்றுவதாக ஒருவர் நேர்ச்சை செய்தால், நடந்து செல்ல அவருக்குச் சக்தியும் இருந்தால் அவர் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பின்வரும் நபிவழியிலிருந்து நாம் அறியலாம்.

صحيح البخاري 1866 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، أَنَّ ابْنَ جُرَيْجٍ، أَخْبَرَهُمْ قَالَ: أَخْبَرَنِي سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ، أَنَّ يَزِيدَ بْنَ أَبِي حَبِيبٍ، أَخْبَرَهُ أَنَّ أَبَا الخَيْرِ، حَدَّثَهُ عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، قَالَ: نَذَرَتْ أُخْتِي أَنْ تَمْشِيَ، إِلَى بَيْتِ اللَّهِ، وَأَمَرَتْنِي أَنْ أَسْتَفْتِيَ لَهَا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاسْتَفْتَيْتُهُ، فَقَالَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لِتَمْشِ، وَلْتَرْكَبْ»،

என் சகோதரி கஅபா ஆலயத்துக்கு நடந்து செல்வதாக நேர்ச்சை செய்தார். அது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்குமாறு என்னிடம் கேட்டுக் கொண்டார். நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இது பற்றி விளக்கம் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர் (சிறிது தூரம்) நடந்து விட்டு வாகனத்தில் ஏறிக் கொள்ளட்டும் என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)

நூல்: புகாரி 1866

صحيح البخاري 1189 - حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " لاَ تُشَدُّ الرِّحَالُ إِلَّا إِلَى ثَلاَثَةِ مَسَاجِدَ: المَسْجِدِ الحَرَامِ، وَمَسْجِدِ الرَّسُولِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَمَسْجِدِ الأَقْصَى "

அதிக நன்மையை நாடி மூன்று பள்ளிவாசலுக்கு மட்டும் பயணம் செய்வது சிறப்புக்குரியது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். கஅபா, மஸ்ஜிதுன்னபவி, பைத்துல் முகத்தஸ் ஆகியவையே அந்த மூன்று பள்ளிவாசல்கள்.

(புகாரி 1189, 1197, 1864, 1996)

கஅபா ஆலயம் அந்த மூன்று ஆலயங்களில் ஒன்றாக இருப்பதால் அதற்காகப் பயணம் மேற்கொள்வது மார்க்கத்தில் புனிதமானதாகும்.

ஆயினும் மதீனாவிலிருந்து நடந்தே கஅபா ஆலயம் செல்வது சாதாரணமாக இயலக் கூடிய காரியமல்ல.

எனவே தான் சிறிது தூரம் நடந்து விட்டு பின்னர் வாகனத்தில் ஏறிச் செல்லுமாறு கட்டளையிடுகிறார்கள்.

கஅபா ஆலயத்திற்கு நடந்து செல்வதாகச் செய்த நேர்ச்சையைக் கூட அப்படியே நிறைவேற்ற வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) வழிகாட்டுகின்றனர். ஒரு அடையாளத்திற் காகச் சிறிது தூரம் நடப்பதே போதுமானது எனக் கூறி மக்களின் சிரமத்தைக் குறைத்து விட்டனர்.

ஒரு வணக்கத்தை நடந்து சென்று நிறைவேற்றுவதாக நேர்ச்சை செய்தால் சிறிது நடந்து விட்டு பின்னர் வாகனத்தில் ஏறிச் செல்லலாம்.

தன் கைவசம் இல்லாததை நேர்ச்சை செய்தல்

ஒருவர் நேர்ச்சை செய்வதாக இருந்தால் தனக்கு உடமையான பொருட்களிலும், தன் வைகசம் உள்ள பொருட்களிலும் தான் நேர்ச்சை செய்ய வேண்டும். தன் வைகசம் இல்லாத விஷயங்களில் நேர்ச்சை செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால் அது நேர்ச்சையாகாது.

صحيح البخاري 6047 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ المُبَارَكِ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي قِلاَبَةَ: أَنَّ ثَابِتَ بْنَ الضَّحَّاكِ، وَكَانَ مِنْ أَصْحَابِ الشَّجَرَةِ حَدَّثَهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ حَلَفَ عَلَى مِلَّةٍ غَيْرِ الإِسْلاَمِ فَهُوَ كَمَا قَالَ، وَلَيْسَ عَلَى ابْنِ آدَمَ نَذْرٌ فِيمَا لاَ يَمْلِكُ، وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِشَيْءٍ فِي الدُّنْيَا عُذِّبَ بِهِ يَوْمَ القِيَامَةِ، وَمَنْ لَعَنَ مُؤْمِنًا فَهُوَ كَقَتْلِهِ، وَمَنْ قَذَفَ مُؤْمِنًا بِكُفْرٍ فَهُوَ كَقَتْلِهِ»

தன் கைவசம் இல்லாதவற்றில் ஆதமுடைய மகன் மீது நேர்ச்சை இல்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸாபித் பின் ளஹ்ஹாக் (ரலி)

நூல்: புகாரி 6047

ஒருவன் அன்றாடம் தனது உணவுக்கே சிரமப்படுகிறான் என்றால் நான் நூறு ஏழைகளுக்கு உணவளிப்பேன் என்று நேர்ச்சை செய்யக் கூடாது. இவ்வாறு அவன் நேர்ச்சை செய்யும் போது நூறு ஏழைகளுக்கு உணவளிப்பதற்குத் தேவையான உணவோ, பணமோ கைவசம் இருந்தால் மட்டுமே இவ்வாறு நேர்ச்சை செய்ய வேண்டும்.

ஒருவன் இவ்வாறு நேர்ச்சை செய்யும் போது அவனிடம் நூறு ஏழைகளுக்கு உணவளிக்கும் வசதி இல்லாவிட்டால் அது நேர்ச்சையாகாது. அதை நிறைவேற்றும் அவசியம் இல்லை.

எனக்கு இந்தக் காரியம் நிறைவேறினால் நூறு ஏழைகளுக்கு உணவளிக்கிறேன் என்று ஒருவர் நேர்ச்சை செய்கிறார். இவர் நேர்ச்சை செய்யும் போது அதற்கான வசதிகளுடன் இருக்கிறார். ஆனால் அவர் நினைத்த காரியம் நிறைவேறும் போது வசதியை இழந்து விட்டார் என்றால் இவர் மீது நேர்ச்சையை நிறைவேற்றும் கடமை உண்டு. அதைச் செய்ய இயலாத போது அதற்கான பரிகாரத்தை அவர் செய்ய வேண்டும்.

செருப்பணியாமல் நடப்பதாக நேர்ச்சை செய்தல்

இறைவனைத் திருப்திபடுத்துவதாக எண்ணிக் கொண்டு தம்மைத் தாமே வேதனைப்படுத்திக் கொள்வோர் செருப்பணியாமல் இருப்பதையும் நேர்ச்சையாகச் செய்து வருகின்றனர். இதுவும் மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதாகும்.

صحيح البخاري 1866 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، أَنَّ ابْنَ جُرَيْجٍ، أَخْبَرَهُمْ قَالَ: أَخْبَرَنِي سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ، أَنَّ يَزِيدَ بْنَ أَبِي حَبِيبٍ، أَخْبَرَهُ أَنَّ أَبَا الخَيْرِ، حَدَّثَهُ عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، قَالَ: نَذَرَتْ أُخْتِي أَنْ تَمْشِيَ، إِلَى بَيْتِ اللَّهِ، وَأَمَرَتْنِي أَنْ أَسْتَفْتِيَ لَهَا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاسْتَفْتَيْتُهُ، فَقَالَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لِتَمْشِ، وَلْتَرْكَبْ»،

கஅபா ஆலயத்துக்கு செருப்பு அணியாமல் நடந்து செல்வதாக நேர்ச்சை செய்தார். இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் மார்க்க விளக்கம் கேட்குமாறு என்னிடம் கூறினார். நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் மார்க்க விளக்கம் கேட்டேன். அதற்கவர்கள் (சிறிது நேரம்) நடந்தும் (சிறிது நேரம்) வாகனத்தில் ஏறியும் செல்லட்டும் என்றார்கள்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 3102

பாவமான காரியங்களைச் செய்வதாக நேர்ச்சை செய்தல்

மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட காரியங்களை ஒருவர் நேர்ச்சை செய்தால் அந்த நேர்ச்சையை நிறைவேற்றக் கூடாது. அது நேர்ச்சையாகவும் ஆகாது.

6696 - حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ طَلْحَةَ بْنِ عَبْدِ المَلِكِ، عَنِ القَاسِمِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ نَذَرَ أَنْ يُطِيعَ اللَّهَ فَلْيُطِعْهُ، وَمَنْ نَذَرَ أَنْ يَعْصِيَهُ فَلاَ يَعْصِهِ

அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் விஷயமாக ஒருவர் நேர்ச்சை செய்தால் அவனுக்குக் கட்டுப்படட்டும். அல்லாஹ்வுக்கு மாறு செய்வதாக ஒருவர் நேர்ச்சை செய்தால் அவனுக்கு மாறு செய்யக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 6696, 6700

அல்லாஹ்வுக்காக திருடுவேன்; கொள்ளையடிப்பேன்; விபச்சாரம் செய்வேன் என்றெல்லாம் யாரும் நேர்ச்சை செய்ய மாட்டார்கள்.

ஆனாலும் நன்மை போன்ற தோற்றத்தில் அமைந்துள்ள பல தீமைகள் சமுதாயத்தில் நிலவுகின்றன. இவற்றைச் செய்வ தாக நேர்ச்சை செய்வோர் சமுதாயத்தில் உள்ளனர். இவ்வாறு ஒருவர் நேர்ச்சை செய்தால் அதை நிறைவேற்றக் கூடாது.

மவ்லூது, ஹல்கா, மீலாது, இருட்டு திக்ரு, கத்தம் பாத்திஹாக்கள், கந்தூரி விழாக்கள், கூடு, கொடிமரம் போன்ற காரியங்கள் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டதாகும். நபிகள் நாயகம் (ஸல்) காட்டித் தராமல் அவர்களின் காலத்துக்குப் பின் இந்தச் சமுதாயத்தில் நுழைந்து விட்ட அனாச்சாரங்களாகும்.

மேற்கண்ட காரியங்களை அல்லாஹ்வுக்காகச் செய்வதாக ஒருவர் நேர்ச்சை செய்திருந்தால் இக்காரியங்களைச் செய்யக் கூடாது. பாவமான காரியங்களில் நேர்ச்சை கிடையாது என்ற நபிமொழியிலிருந்து இதை அறிந்து கொள்ளலாம்.

வணக்கமாக இல்லாததை நேர்ச்சை செய்தல்

வணக்க வழிபாடுகளையும், மனிதர்களுக்கு நன்மை பயக்கும் காரியங்களையும் தான் நேர்ச்சை செய்ய வேண்டும் என்பதை முன்னர் விளக்கியுள்ளோம்.

வணக்கமாக இல்லாத காரியங்களையும் நேர்ச்சை செய்யலாம் என்று சிலர் வாதிடுகின்றனர். அதற்கு ஆதாரமாக பின்வரும் ஹதீஸ்களை எடுத்துக் காட்டுகின்றனர்.

سنن الترمذي 3690 - حَدَّثَنَا الحُسَيْنُ بْنُ حُرَيْثٍ قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الحُسَيْنِ بْنِ وَاقِدٍ قَالَ: حَدَّثَنِي أَبِي قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ، قَالَ: سَمِعْتُ أَبِي بُرَيْدَةَ، يَقُولُ: خَرَجَ  رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ مَغَازِيهِ، فَلَمَّا انْصَرَفَ جَاءَتْ جَارِيَةٌ سَوْدَاءُ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي كُنْتُ نَذَرْتُ إِنْ رَدَّكَ اللَّهُ سَالِمًا أَنْ أَضْرِبَ بَيْنَ يَدَيْكَ بِالدُّفِّ وَأَتَغَنَّى، فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنْ كُنْتِ نَذَرْتِ فَاضْرِبِي وَإِلَّا فَلَا». فَجَعَلَتْ تَضْرِبُ، فَدَخَلَ أَبُو بَكْرٍ وَهِيَ تَضْرِبُ، ثُمَّ دَخَلَ عَلِيٌّ وَهِيَ تَضْرِبُ، ثُمَّ دَخَلَ عُثْمَانُ وَهِيَ تَضْرِبُ، ثُمَّ دَخَلَ عُمَرُ فَأَلْقَتِ الدُّفَّ تَحْتَ اسْتِهَا، ثُمَّ قَعَدَتْ عَلَيْهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الشَّيْطَانَ لَيَخَافُ مِنْكَ يَا عُمَرُ، إِنِّي كُنْتُ جَالِسًا وَهِيَ تَضْرِبُ فَدَخَلَ أَبُو بَكْرٍ وَهِيَ تَضْرِبُ، ثُمَّ دَخَلَ عَلِيٌّ وَهِيَ تَضْرِبُ، ثُمَّ دَخَلَ عُثْمَانُ وَهِيَ تَضْرِبُ، فَلَمَّا دَخَلْتَ أَنْتَ يَا عُمَرُ أَلْقَتِ الدُّفَّ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு போரிலிருந்து திரும்பி வந்தனர். அப்போது கறுப்பு நிறமுடைய பெண் வந்து அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உங்களை நல்லபடியாகத் திருப்பிக் கொண்டு வந்து சேர்த்தால் உங்கள் முன்னால் கொட்டு அடித்து பாட்டுப் பாடுவதாக நேர்ச்சை செய்துள்ளேன் எனக் கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீ நேர்ச்சை செய்திருந்தால் அவ்வாறு செய்! இல்லாவிட்டால் செய்ய வேண்டாம் எனக் கூறினார்கள். உடனே அப்பெண் கொட்டு அடிக்கலானார். அபூபக்ர் (ரலி) வந்தார்கள். அப்போதும் அடித்துக் கொண்டிருந்தார். பின்னர் அலீ (ரலி) வந்தார்கள். அப்போதும் அவர் அடித்துக் கொண்டிருந்தார். பின்னர் உஸ்மான் (ரலி) வந்தார் கள். அப்போதும் அவர் அடித்துக் கொண்டிருந்தார். பின்னர் உமர் (ரலி) வந்தார்கள். உடனே அவர் கொட்டை கீழே போட்டார்.

அறிவிப்பவர்: புரைதா (ரலி)

நூல்: திர்மிதீ 3623

இதே கருத்து அபூதாவூத் 2880, அஹ்மத் 21911, 21933 ஆகிய நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொட்டு அடிப்பது வணக்க வழிபாடுகளில் ஒன்றல்ல. இதனால் மனிதர்களுக்கு எந்த நன்மையும் இல்லை. அப்படி இருந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை அனுமதித்துள்ளதால் இது போன்ற காரியங்களையும் நேர்ச்சை செய்யலாம் என்று சிலர் வாதிடுகின்றனர்.

இதைச் சரியான முறையில் புரிந்து கொள்ளாததால் இவ்வாறு வாதிடுகின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போருக்குச் சென்றனர். போருக்குச் சென்ற நபியவர்கள் உயிருடனும், காயமின்றியும் திரும்ப வேண்டும் என்பதற்காக அந்தப் பெண் நேர்ச்சை செய்கிறார். அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடுவதற்காகவும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மகிழ்விப்பதற்காகவும் இவ்வாறு நேர்ச்சை செய்கிறார்.

நபிகள் நாயகம் (ஸல்) உலகில் வாழும் போது அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவதும் வணக்கமாகும். அந்த அடிப்படையில் தான் இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதித்தார்கள்.

இது நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்த மக்களால் மட்டும் நிறைவேற்ற இயன்ற வணக்கமாகும். மற்றவர்களுக்காக கொட்டு அடிப்பதோ, பாட்டுப் பாடுவதோ வணக்க வழிபாட்டில் சேராது.

எனவே வணக்க வழிபாடுகள் அல்லாத காரியங்களை நேர்ச்சை செய்யக் கூடாது என்பதற்கு எதிரானதாக இதைக் கருதக் கூடாது.

சொத்துக்கள் முழுவதையும் நேர்ச்சை செய்தல்

நான் நினைக்கின்ற காரியம் நிறைவேறினால் எனது சொத்துக்கள் முழுவதையும் அல்லாஹ்விற்காக வழங்குவேன் என்று ஒருவர் நேர்ச்சை செய்தால் அதை அவர் அப்படியே நிறைவேற்ற வேண்டிய அவசியம் இல்லை.

ஏனெனில் எந்த மனிதருக்கும் தனது சொத்துக்கள் முழுவ தையும் தர்மம் செய்யும் அதிகாரம் அளிக்கப்படவில்லை. தனது சொத்துக்களில் மூன்றில் ஒரு பகுதி அளவுக்கோ, அதை விட குறைந்த அளவுக்கோ தான் தர்மம் செய்யும் அதிகாரம் உண்டு.

தனது முழுச் சொத்தையும் தர்மம் செய்வதாக ஒருவர் முடிவு செய்தால் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே தர்மம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் தனது நேர்ச்சையை அவர் முழுமையாக நிறைவேற்றியவராக ஆவார்.

கஅபு பின் மாலிக் (ரலி) அவர்கள் தபூக் போரில் கலந்து கொள்ளவில்லை. இதனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரை சமூகப் புறக்கணிப்புச் செய்தனர். பின்னர் அவர்களை அல்லாஹ் மன்னித்தான் என்பது பிரபலமான வரலாற்று நிகழ்ச்சியாகும்.

புகாரி 4418, 4676, 4677, 4678, 6690, 2758, 6255, 7225 ஆகிய ஹதீஸ்களில் இந்த வரலாற்றைக் காணலாம்.

مسند أحمد 15750 - حَدَّثَنَا رَوْحٌ، قَالَ: حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ: أَخْبَرَنِي ابْنُ شِهَابٍ، أَنَّ الْحُسَيْنَ بْنَ السَّائِبِ بْنِ أَبِي لُبَابَةَ، أَخْبَرَ أَنَّ أَبَا لُبَابَةَ بْنَ عَبْدِ الْمُنْذِرِ، لَمَّا تَابَ اللهُ عَلَيْهِ، قَالَ: يَا رَسُولَ اللهِ، إِنَّ مِنْ تَوْبَتِي أَنْ أَهْجُرَ دَارَ قَوْمِي وَأُسَاكِنَكَ، وَإِنِّي أَنْخَلِعُ مِنْ مَالِي صَدَقَةً لِلَّهِ وَلِرَسُولِهِ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " يُجْزِئُ عَنْكَ الثُّلُثُ "

அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் என்னை மன்னித்ததற்காக என் செல்வம் அல்லாஹ்விற்காக நான் செய்யும் தர்மமாகும் என்று கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூன்றில் ஒரு பங்கு (தர்மம் செய்வது) உமக்குப் போதுமானதாகும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல் முன்திர்

நூல்: அஹ்மத் 15190, 15000

நேர்ச்சையை முறிப்பதன் பரிகாரம்

மார்க்கம் அனுமதிக்கின்ற வகையில் ஒருவர் நேர்ச்சை செய்து அவரால் அதை நிறைவேற்ற இயலாது போனால் அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளனர்.

صحيح مسلم 13 - (1645) وحَدَّثَنِي هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ، وَيُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى، وَأَحْمَدُ بْنُ عِيسَى، قَالَ يُونُسُ: أَخْبَرَنَا، وقَالَ الْآخَرَانِ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ كَعْبِ بْنِ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ شِمَاسَةَ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «كَفَّارَةُ النَّذْرِ كَفَّارَةُ الْيَمِينِ»

சத்தியம் செய்து விட்டு அதை நிறைவேற்றத் தவறினால் என்ன பரிகாரம் செய்ய வேண்டுமோ அதுவே நேர்ச்சைக்கும் பரிகாரமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 3103

நேர்ச்சையை முறிப்பதற்கான பரிகாரம் சத்தியத்தை முறிப்பதற்கான பரிகாரமே என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். சத்தியத்தை முறிப்பதற்கு என்ன பரிகாரம் என்பதைப் பின்வரும் வசனத்தில் அல்லாஹ் விளக்குகிறான்.

உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். மாறாக திட்டமிட்டுச் செய்யும் சத்தியங்களுக்காகவே உங்களைத் தண்டிப்பான். அதற்கான பரிகாரம், உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் உணவாக அளிக்கும் நடுத்தரமான உணவில் பத்து ஏழைகளுக்கு உணவளிப்பது, அல்லது அவர்களுக்கு உடையளிப்பது, அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்வது ஆகியவையே. (இவற்றில் எதையும்) பெறாதோர் மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும். நீங்கள் சத்தியம் செய்(து முறித்)தால், சத்தியத்திற்குரிய பரிகாரம் இவையே. உங்கள் சத்தியங்களைப் பேணிக் கொள்ளுங்கள்! நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ் இவ்வாறே தனது வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான்.

திருக்குர்ஆன் 5:89

நேர்ச்சை செய்ததை விடச் சிறந்ததை நிறைவேற்றலாம்

நாம் ஒரு நல்லறம் செய்வதாக நேர்ச்சை செய்தால் அதையே நிறைவேற்ற வேண்டும் என்றாலும் நாம் விரும்பினால் அதை விடச் சிறந்ததை நிறைவேற்றலாம்.

مسند أحمد 23169 - حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي يُوسُفُ بْنُ  الْحَكَمِ بْنِ أَبِي سُفْيَانَ  ، أَنَّ حَفْصَ بْنَ عُمَرَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، وَعَمْرَو بْنَ حَيَّةَ أَخْبَرَاهُ، عَنْ عُمَرَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، عَنْ رِجَالٍ مِنَ الْأَنْصَارِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّ رَجُلًا مِنَ الْأَنْصَارِ جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْفَتْحِ وَالنَّبِيُّ فِي مَجْلِسٍ قَرِيبٍ مِنَ الْمَقَامِ، فَسَلَّمَ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ قَالَ: يَا نَبِيَّ اللهِ، إِنِّي نَذَرْتُ لَئِنْ فَتَحَ اللهُ لِلنَّبِيِّ وَالْمُؤْمِنِينَ مَكَّةَ لَأُصَلِّيَنَّ فِي بَيْتِ الْمَقْدِسِ، وَإِنِّي وَجَدْتُ رَجُلًا مِنْ أَهْلِ الشَّامِ هَاهُنَا فِي قُرَيْشٍ مُقْبِلًا مَعِي وَمُدْبِرًا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " هَاهُنَا فَصَلِّ "، فَقَالَ الرَّجُلُ قَوْلَهُ هَذَا ثَلَاثَ مَرَّاتٍ، كُلُّ ذَلِكَ يَقُولُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " هَاهُنَا فَصَلِّ "، ثُمَّ قَالَ الرَّابِعَةَ مَقَالَتَهُ هَذِهِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " اذْهَبْ فَصَلِّ فِيهِ، فَوَالَّذِي بَعَثَ مُحَمَّدًا بِالْحَقِّ، لَوْ صَلَّيْتَ هَاهُنَا لَقَضَى عَنْكَ ذَلِكَ كُلَّ صَلَاةٍ فِي بَيْتِ الْمَقْدِسِ "،

மக்காவை வெற்றி கொள்ளும் வாய்ப்பை அல்லாஹ் உங்களுக்கு வழங்கினால் பைத்துல் முகத்தஸில் இரண்டு ரக்அத் தொழுவதாக நான் நேர்ச்சை செய்திருந்தேன் என்று ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இங்கே தொழு என்றார்கள். அந்த மனிதர் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டார். இங்கேயே தொழு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீண்டும் கூறினார்கள். அவர் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்படியானால் உன் விருப்பப்படி செய்து கொள் என்றார்கள்.

நூல்: அபூதாவூத் 2875, அஹ்மத் 14390

صحيح مسلم 510 - 0 (1396) وحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَمُحَمَّدُ بْنُ رُمْح، جَمِيعًا عَنِ اللَّيْثِ بْنِ سَعْدٍ، قَالَ قُتَيْبَةُ: حَدَّثَنَا لَيْثٌ، عَنْ نَافِعٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ اللهِ بْنِ مَعْبَدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ قَالَ: إِنَّ امْرَأَةً اشْتَكَتْ شَكْوَى، فَقَالَتْ: إِنْ شَفَانِي اللهُ لَأَخْرُجَنَّ فَلَأُصَلِّيَنَّ فِي بَيْتِ الْمَقْدِسِ، فَبَرَأَتْ، ثُمَّ تَجَهَّزَتْ تُرِيدُ الْخُرُوجَ، فَجَاءَتْ مَيْمُونَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تُسَلِّمُ عَلَيْهَا، فَأَخْبَرَتْهَا ذَلِكَ، فَقَالَتْ: اجْلِسِي فَكُلِي مَا صَنَعْتِ، وَصَلِّي فِي مَسْجِدِ الرَّسُولِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «صَلَاةٌ فِيهِ أَفْضَلُ مِنْ أَلْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ مِنَ الْمَسَاجِدِ، إِلَّا مَسْجِدَ الْكَعْبَةِ»

ஒரு பெண் நோய்வாய்ப்பட்டார். அல்லாஹ் எனது நோயை நீக்கினால் நான் பைத்துல் முகத்தஸ் சென்று தொழுவேன் என்று அவர் நேர்ச்சை செய்தார். நோய் குணமானதும் பயணத்திற்கான ஏற்பாடுகள் செய்து புறப்பட ஆயத்தமானார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி மைமூனா (ரலி) அவர்கள் அப்பெண்ணிடம் வந்தார்கள். அப்பெண் தனது நேர்ச்சை பற்றி அவர்களிடம் தெரிவித்தார். அதற்கு மைமூனா (ரலி) அவர்கள் பயணத்திற்காகத் தயார் செய்த உணவைச் சாப்பிட்டு முடி! நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பள்ளிவாசலில் தொழு! ஏனெனில் அங்கே ஒரு தடவை தொழுவது கஃபாவைத் தவிர மற்ற பள்ளி வாசல்களில் ஆயிரம் தடவை தொழுவதை விடச் சிறந்தது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூற நான் செவியுற்றுள்ளேன் என்றார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 2474

பைத்துல் முகத்தஸ் ஆலயத்தில் தொழுவதாக நேர்ச்சை செய்தவர் அதை விடச் சிறந்த பள்ளியான மஸ்ஜிதே நபவியில் அத்தொழுகையை நிறைவேற்றலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளனர்.

நாம் செய்த நேர்ச்சையை விடச் சிறந்ததை நிறைவேற்றினால் நேர்ச்சை நிறைவேறும் என்பதை இதிலிருந்து அறியலாம்.

ஒரு கோழியைத் தர்மம் செய்வதாக நேர்ச்சை செய்தவர் ஒரு ஆட்டைத் தர்மம் செய்யலாம். பத்து ஏழைகளுக்கு உணவளிப்பதாக நேர்ச்சை செய்தவர் இருபது ஏழைகளுக்கு உணவளிக்கலாம்.

சாதாரண சோறு வழங்குவதாக நேர்ச்சை செய்தவர் பிரியாணியை வழங்கலாம்.

சிறந்ததைக் கண்டால் நேர்ச்சையை முறிக்கலாம்

நாம் ஒரு காரியத்தைச் செய்வதாக நேர்ச்சை செய்த பின் அந்த நேர்ச்சையைச் செய்யாமல் இருப்பது தான் நல்லது என்று நமக்குத் தெரிய வந்தால் நேர்ச்சையை முறித்து விடுவது நல்லது. நேர்ச்சையை நிறைவேற்றாததற்காகப் பரிகாரம் செய்து விட வேண்டும்.

صحيح البخاري 6622 - حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ مُحَمَّدُ بْنُ الفَضْلِ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، حَدَّثَنَا الحَسَنُ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَمُرَةَ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا عَبْدَ الرَّحْمَنِ بْنَ سَمُرَةَ، لاَ تَسْأَلِ الإِمَارَةَ، فَإِنَّكَ إِنْ أُوتِيتَهَا عَنْ مَسْأَلَةٍ وُكِلْتَ إِلَيْهَا، وَإِنْ أُوتِيتَهَا مِنْ غَيْرِ مَسْأَلَةٍ أُعِنْتَ عَلَيْهَا [ص:128]، وَإِذَا حَلَفْتَ عَلَى يَمِينٍ، فَرَأَيْتَ غَيْرَهَا خَيْرًا مِنْهَا، فَكَفِّرْ عَنْ يَمِينِكَ وَأْتِ الَّذِي هُوَ خَيْرٌ»

ஒரு காரியத்தைச் செய்வதாக நீ சத்தியம் செய்த பின் அது அல்லாத காரியத்தைச் சிறந்ததாக நீ கண்டால் உன் சத்தியத்தை முறித்து, அதற்கான பரிகாரத்தைச் செய்து விட்டு, அந்தச் சிறந்த காரியத்தைச் செய்து விடு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் சமூரா (ரலி)

நூல்: புகாரி 6622

صحيح البخاري 6623 - حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ غَيْلاَنَ بْنِ جَرِيرٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي رَهْطٍ مِنَ الأَشْعَرِيِّينَ أَسْتَحْمِلُهُ، فَقَالَ: «وَاللَّهِ لاَ أَحْمِلُكُمْ، وَمَا عِنْدِي مَا أَحْمِلُكُمْ عَلَيْهِ» قَالَ: ثُمَّ لَبِثْنَا مَا شَاءَ اللَّهُ أَنْ نَلْبَثَ، ثُمَّ أُتِيَ بِثَلاَثِ ذَوْدٍ غُرِّ الذُّرَى، فَحَمَلَنَا عَلَيْهَا، فَلَمَّا انْطَلَقْنَا قُلْنَا، أَوْ قَالَ بَعْضُنَا: وَاللَّهِ لاَ يُبَارَكُ لَنَا، أَتَيْنَا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَسْتَحْمِلُهُ فَحَلَفَ أَنْ لاَ يَحْمِلَنَا، ثُمَّ حَمَلَنَا، فَارْجِعُوا بِنَا إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنُذَكِّرُهُ، فَأَتَيْنَاهُ فَقَالَ: " مَا أَنَا حَمَلْتُكُمْ، بَلِ اللَّهُ حَمَلَكُمْ، وَإِنِّي وَاللَّهِ - إِنْ شَاءَ اللَّهُ - لاَ أَحْلِفُ عَلَى يَمِينٍ، فَأَرَى غَيْرَهَا خَيْرًا مِنْهَا، إِلَّا كَفَّرْتُ عَنْ يَمِينِي وَأَتَيْتُ الَّذِي هُوَ خَيْرٌ - أَوْ: أَتَيْتُ الَّذِي هُوَ خَيْرٌ وَكَفَّرْتُ عَنْ يَمِينِي

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து எங்க ளுக்கு வாகனம் (ஒட்டகம்) வேண்டும் எனக் கேட்டோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மறுத்து விட்டனர். மீண்டும் கேட்டோம். அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து மறுத்து விட்டனர். பின்னர் சில ஒட்டகங்கள் (மூன்று அல்லது ஐந்து) வந்து சேர்ந்தன. அதை எங்களுக்குத் தருமாறு கட்டளையிட்டனர். அல்லாஹ்வின் தூதரே எங்களுக்கு வாகனம் தருவதில்லை என்று சத்தியம் செய்தீர்களே என்று கூறினோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நான் ஏதாவது சத்தியம் செய்து விட்டு அது அல்லாததைச் சிறந்ததாக நான் கருதினால் அந்தச் சிறந்ததை செய்து விட்டு, சத்தியத்திற்குப் பரிகாரமும் செய்து விடுவேன் எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி)

நூல்: புகாரி 6623

தீர்மானமில்லாத நேர்ச்சை

எனக்கு இது நிறைவேறினால் நான் இதைச் செய்வேன் என்று தீர்மானமாக முடிவு செய்வது தான் நேர்ச்சையாகும்.

தீர்மானம் இல்லாமலும், செய்வதா வேண்டாமா என்ற குழப்பத்திலும் இருந்தால் அது நேர்ச்சையாகாது. அதை நிறைவேற்ற வேண்டிய அவசியம் கிடையாது.

உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். உங்கள் உள்ளங்கள் உறுதி செய்தவற்றின் காரணமாகவே உங்களைத் தண்டிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத் தன்மை மிக்கவன்.

திருக்குர்ஆன் 2:225

உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். மாறாக திட்டமிட்டுச் செய்யும் சத்தியங்களுக்காகவே உங்களைத் தண்டிப்பான்.

திருக்குர்ஆன் 5:89

صحيح البخاري 2528 - حَدَّثَنَا الحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا مِسْعَرٌ، عَنْ قَتَادَةَ، عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ تَجَاوَزَ لِي عَنْ أُمَّتِي مَا وَسْوَسَتْ بِهِ صُدُورُهَا، مَا لَمْ تَعْمَلْ أَوْ تَكَلَّمْ»

எனது சமுதாயத்தினரின் உள்ளங்களில் தோன்றும் ஊசலாட்டங்களுக்குச் செயல் வடிவம் கொடுக்காத வரை அல்லது வாயால் அதை மொழியாத வரை அல்லாஹ் மன்னித்து விட்டான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 2528, 5269

நேர்ச்சை செய்யும் போது இதைச் செய்வேன் என்று நிச்சயித்துக் கூறினால் தான் அதை நிறைவேற்றுவது அவசியமாகும். எனது இந்தத் தேவை நிறைவேறினால் இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) நான் இதைச் செய்வேன் என்று ஒருவர் கூறினால் அவர் அதை நிறைவேற்ற வேண்டியது அவசியம் இல்லை. நிறைவேற்றத் தவறியதற்காகப் பரிகாரமும் செய்யத் தேவையில்லை.

سنن الترمذي 1531 - حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الوَارِثِ قَالَ: حَدَّثَنِي أَبِي، وَحَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ، فَقَالَ: إِنْ شَاءَ اللَّهُ فَقَدِ اسْتَثْنَى، فَلَا حِنْثَ عَلَيْهِ "

ஒருவர் சத்தியம் செய்யும் போது இன்ஷா அல்லாஹ் என்பதையும் சேர்த்துக் கூறினால் அவர் மீது எந்தப் பரிகாரமும் அவசியம் இல்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: திர்மிதீ 1451

இதே கருத்துடைய ஹதீஸ்கள் நஸாயீ 3768, 3769, 3770, 3795 வது இலக்கத்திலும், அபூதாவூத் 2838, அஹ்மத் 7742 இலக்கத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மற்றொரு அறிவிப்பில்

مسند أحمد 5362 - حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " إِذَا حَلَفَ الرَّجُلُ فَقَالَ: إِنْ شَاءَ اللهُ، فَهُوَ بِالْخِيَارِ: إِنْ  شَاءَ فَلْيَمْضِ، وَإِنْ شَاءَ فَلْيَتْرُكْ "

உங்களில் ஒருவர் சத்தியம் செய்யும் போது இன்ஷா அல்லாஹ் எனக் கூறினால் அவர் விரும்பினால் அதை நிறைவேற்றலாம். அவர் விரும்பினால் நிறைவேற்றாது விட்டு விடலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

(அஹ்மத் 5108, 5814, 5830)

ஒருவரின் நேர்ச்சையை மற்றவர் நிறைவேற்றுதல்

ஒருவர் ஒரு நேர்ச்சை செய்து விட்டு அதை நிறைவேற்றாமல் மரணித்து விட்டால் அவரது நெருங்கிய இரத்த சம்மந்தமுள்ள வாரிசுகள் அவர் சார்பில் அதை நிறைவேற்றலாம். அவ்வாறு நிறைவேற்றினால் நேர்ச்சை செய்தவர் மீது இருந்த அந்தக் கடமை நீங்கி விடும்.

ஆனால் அவர் செய்த நேர்ச்சை மார்க்கத்தின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டதாக இருப்பது அவசியம் என்பதை மறந்து விடக் கூடாது.

صحيح البخاري 1852 - حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّ امْرَأَةً مِنْ جُهَيْنَةَ، جَاءَتْ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: إِنَّ أُمِّي نَذَرَتْ أَنْ تَحُجَّ فَلَمْ تَحُجَّ حَتَّى مَاتَتْ، أَفَأَحُجُّ عَنْهَا؟ قَالَ: «نَعَمْ حُجِّي عَنْهَا، أَرَأَيْتِ لَوْ كَانَ عَلَى أُمِّكِ دَيْنٌ أَكُنْتِ قَاضِيَةً؟ اقْضُوا اللَّهَ فَاللَّهُ أَحَقُّ بِالوَفَاءِ»

என் தாயார் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்து விட்டு அதைச் செய்யாமலேயே மரணித்து விட்டார். அவர் சார்பில் நான் ஹஜ் செய்யலாமா என்று ஜுஹைனா குலத்துப் பெண் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம். அவர் சார்பில் நீ ஹஜ் செய்யலாம். உன் தாய் மீது கடன் இருந்தால் நீ தானே அதை நிறைவேற்றுவாய். எனவே அல்லாஹ்வின் கடனை நிறைவேற்று. நிறைவேற்றப்படுவதற்கு அல்லாஹ்வின் கடனே அதிகத் தகுதியுடையது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)

நூல்: புகாரி 1852, 6699, 7315

صحيح البخاري 2761 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ سَعْدَ بْنَ عُبَادَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ اسْتَفْتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: إِنَّ أُمِّي مَاتَتْ وَعَلَيْهَا نَذْرٌ، فَقَالَ: «اقْضِهِ عَنْهَا»

ஸஃது பின் உபாதா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து என் தாயார் ஒரு நேர்ச்சை செய்திருந்த நிலையில் மரணித்து விட்டார் என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர் சார்பில் அதை நிறைவேற்று என்றார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 2761, 6698

صحيح البخاري 1953 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا زَائِدَةُ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُسْلِمٍ البَطِينِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمِّي مَاتَتْ وَعَلَيْهَا صَوْمُ شَهْرٍ، أَفَأَقْضِيهِ عَنْهَا؟ قَالَ: " نَعَمْ، قَالَ: فَدَيْنُ اللَّهِ أَحَقُّ أَنْ يُقْضَى

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்தார். அல்லாஹ்வின் தூதரே! என் தாயார் மீது ஒரு மாத நோன்பு கடமையாகியிருந்த நிலையில் மரணித்து விட்டார். அவர் சார்பில் அதை நான் நிறைவேற்றலாமா? எனக் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம், அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றப்படுவதற்கு அதிகத் தகுதி படைத்தது என்றார்கள். மற்றொரு அறிவிப்பில் பதினைந்து நோன்பு எனக் கூறப்பட்டுள்ளது.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 1953

சத்தியம் செய்தல்

தனக்கு ஏற்பட்ட துன்பங்களை நீக்குவதற்காகவோ, தனக்குத் தேவையானதைக் கோருவதற்காகவோ இறைவனிடம் அளிக்கும் வாக்குறுதியே நேர்ச்சை என்பதை அறிந்தோம்.

எவ்விதக் கோரிக்கையின் அடிப்படையில் இல்லாமல் அல்லாஹ் வைச் சாட்சியாக்கி அளிக்கும் உறுதி மொழியே சத்தியம் எனப்படும்.

அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் சொல்வது உண்மை!

அல்லாஹ்வின் மீது சத்தியமாக வாங்கிய கடனை அடுத்த வாரம் திருப்பித் தருவேன்.

அல்லாஹ்வின் மீது ஆணையாக இந்தப் பொருள் மிகவும் தரமானது.

என்றெல்லாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் நாம் சத்தியம் செய்கிறோம்.

சத்தியம் செய்வதற்கும் இஸ்லாத்தில் கட்டுப்பாடுகளும், சட்ட திட்டங்களும் உள்ளன.

அல்லாஹ்வின் மீது மட்டுமே சத்தியம் செய்ய வேண்டும்

நாம் நமது கூற்றில் உண்மையாளர்களாக இருக்கிறோம் என் பதை நிரூபிப்பதற்காகத் தான் நாம் சத்தியம் செய்து கூறுகிறோம்.

நான் கூறுவது முற்றிலும் உண்மையே! நான் பொய் கூறினால் அல்லாஹ்வுக்கு அது தெரியும். இதற்கு அல்லாஹ்வையே சாட்சி யாக்குகிறேன் என்ற கருத்திலேயே நாம் சத்தியம் செய்கிறோம். நான் பொய் சொன்னால் அல்லாஹ் எனக்குத் தண்டனை வழங்கட்டும் என்ற கருத்தும் இதனுள் அடக்கமாகியுள்ளது.

எனவே நாம் எந்தச் சத்தியம் செய்வதாக இருந்தாலும் அல்லாஹ்வின் மீது மட்டுமே சத்தியம் செய்ய வேண்டும். அல்லாஹ்வைத் தவிர எதன் மீதும், எவர் மீதும் சத்தியம் செய்வது கடுமையான குற்றமாகும்.

என் தாய் மேல் ஆணையாக நான் கூறுவது உண்மை என்று ஒருவன் கூறுகிறான் என்று வைத்துக் கொள்வோம். அவன் கூறுவது உண்மையா? பொய்யா? என்பது அவனது தாய்க்குத் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஒருவன் கூறுவது உண்மையா? பொய்யா? என்பது அவனுக்கும் இறைவனுக்கும் மட்டுமே தெரிந்ததாகும். எனவே தான் அல்லாஹ்வைத் தவிர எவர் மீதும் எதன் மீதும் சத்தியம் செய்யக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு எச்சரிக்கைகள் விட்டுள்ளனர்.

صحيح البخاري 2679 - حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا جُوَيْرِيَةُ، قَالَ: ذَكَرَ نَافِعٌ عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ كَانَ حَالِفًا، فَلْيَحْلِفْ بِاللَّهِ أَوْ لِيَصْمُتْ»

யாரேனும் சத்தியம் செய்வதாக இருந்தால் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யட்டும். அல்லது மௌனமாக இருக்கட்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் (ரலி)

நூல்: புகாரி 2679

صحيح البخاري 3836 - حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «أَلاَ مَنْ كَانَ حَالِفًا فَلاَ يَحْلِفْ إِلَّا بِاللَّهِ»، فَكَانَتْ قُرَيْشٌ تَحْلِفُ بِآبَائِهَا، فَقَالَ: «لاَ تَحْلِفُوا بِآبَائِكُمْ»

எச்சரிக்கை! யாரேனும் சத்தியம் செய்வதாக இருந்தால் அல்லாஹ்வைத் தவிர எவர் மீதும் சத்தியம் செய்ய வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். குரைஷிகள் தங்கள் தந்தையர் மீது சத்தியம் செய்து வந்தனர். இதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) உங்கள் தந்தையர் மீது சத்தியம் செய்யாதீர்கள் எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 3836

سنن الترمذي 1535 - حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ، عَنْ الحَسَنِ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ، أَنَّ ابْنَ عُمَرَ سَمِعَ رَجُلًا يَقُولُ: لَا وَالكَعْبَةِ، فَقَالَ ابْنُ عُمَرَ: لَا يُحْلَفُ بِغَيْرِ اللَّهِ، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ حَلَفَ بِغَيْرِ اللَّهِ فَقَدْ كَفَرَ أَوْ أَشْرَكَ»

ஒரு மனிதர் கஃபாவின் மேல் ஆணையாக என்று கூறி சத்தியம் செய்ததை இப்னு உமர் (ரலி) செவியுற்றார்கள். இதைக் கண்டவுடன் அல்லாஹ் அல்லாதவர் மீது சத்தியம் செய்யக் கூடாது என்று கூறினார்கள். மேலும் யார் அல்லாஹ் அல்லாதவர் மீது சத்தியம் செய்கிறாரோ அவர் இணை கற்பித்து விட்டார் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூற நான் செவியுற்றுள்ளேன் எனவும் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஅத் பின் உபைதா

நூல்: திர்மிதீ 1455

سنن النسائي 3773 - أَخْبَرَنَا يُوسُفُ بْنُ عِيسَى، قَالَ: حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، قَالَ: حَدَّثَنَا مِسْعَرٌ، عَنْ مَعْبَدِ بْنِ خَالِدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَسَارٍ، عَنْ قُتَيْلَةَ، امْرَأَةٍ مِنْ جُهَيْنَةَ: أَنَّ يَهُودِيًّا أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: إِنَّكُمْ تُنَدِّدُونَ، وَإِنَّكُمْ تُشْرِكُونَ تَقُولُونَ: مَا شَاءَ اللَّهُ وَشِئْتَ، وَتَقُولُونَ: وَالْكَعْبَةِ، " فَأَمَرَهُمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادُوا أَنْ يَحْلِفُوا أَنْ يَقُولُوا: وَرَبِّ الْكَعْبَةِ، وَيَقُولُونَ: مَا شَاءَ اللَّهُ، ثُمَّ شِئْتَ "

ஒரு யூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து (முஸ்லிம்களாகிய) நீங்களும் இணை கற்பிக்கிறீர்கள்; கஅபாவின் மீது ஆணையாக என்று கூறுகிறீர்கள் எனக் கேட்டார். இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்லிம்கள் இனி மேல் சத்தியம் செய்வதாக இருந்தால் (கஅபாவின் மீது ஆணையாக எனக் கூறாமல்) கஅபாவின் இறைவன் மீது ஆணையாக எனக் கூற வேண்டும் என்று கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர்: கு(த்)தைலா (ரலி)

நூல்கள்: நஸாயீ 3713, அஹ்மத் 25845

தாய் தந்தையர் மீதோ, கஅபாவின் மீதோ, குர்ஆன் மீதோ வேறு எதன் மீதோ சத்தியம் செய்யக் கூடாது. அவ்வாறு செய்வது அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் மாபெரும் குற்றத்தில் அடங்கும்.

அல்லாஹ் அல்லாதவர் மீது சத்தியம் செய்ததற்கான பரிகாரம்

அல்லாஹ்வைத் தவிர எவர் மீதும் எதன் மீதும் ஒருவர் சத்தியம் செய்து விட்டால் உடனடியாக அதற்குப் பரிகாரம் செய்து விட வேண்டும்.

صحيح البخاري 4860 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " مَنْ حَلَفَ فَقَالَ فِي حَلِفِهِ: وَاللَّاتِ وَالعُزَّى، فَلْيَقُلْ: لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَمَنْ قَالَ لِصَاحِبِهِ: تَعَالَ أُقَامِرْكَ، فَلْيَتَصَدَّقْ "

யாரேனும் சத்தியம் செய்யும் போது லாத், உஸ்ஸா மீது சத்தியமாக எனக் கூறினால் உடனே லாயிலாஹ இல்லல்லாஹ் எனக் கூற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 4860, 6107, 6310, 6650

சத்தியத்தை நிறைவேற்றுவது அவசியம்

மனிதன் செய்யும் சத்தியங்கள் இரண்டு வகைகளில் உள்ளன.

சில சத்தியங்கள் வாக்குறுதியும், உறுதிமொழியும் அடங்கியதாக இருக்கும்.

சில சத்தியங்கள் தகவல் தெரிவிப்பதாக அமைந்திருக்கும்.

முதல் வகையான சத்தியம் செய்தவர்கள் தமது வாக்குறுதி யையும், உறுதிமொழியையும் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும்.

உதாரணமாக அல்லாஹ்வின் மீது சத்தியமாக உனக்கு நான் இதைத் தருவேன்.

அல்லாஹ்வின் மீது ஆணையாக நாளை வருவேன்.

அல்லாஹ்வின் மீது ஆணையாக உன்னை மணந்து கொள்கிறேன்.

என்பன போன்ற சொற்களில் வாக்குறுதியும், உறுதிமொழியும் அடங்கியுள்ளது.

உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். உங்கள் உள்ளங்கள் உறுதி செய்தவற்றின் காரணமாகவே உங்களைத் தண்டிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத் தன்மை மிக்கவன்.

திருக்குர்ஆன் 2:225

உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். மாறாக திட்டமிட்டுச் செய்யும் சத்தியங்களுக்காகவே உங்களைத் தண்டிப்பான்.

திருக்குர்ஆன் 5:89

அல்லாஹ்வை முன்னிறுத்தி வாக்களித்ததால் அதை நிறைவேற்ற வேண்டும். நிறைவேற்றத் தவறினால் சத்தியத்தை முறித்ததற்கான பரிகாரத்தைச் செய்ய வேண்டும்.

அல்லாஹ்வின் மீது சத்தியமாக இன்னார் இறந்து விட்டார்.

அல்லாஹ்வின் மீது சத்தியமாக இவர் திருடியதை நான் பார்த்தேன்.

என்பன போன்ற சத்தியங்களில் வாக்குறுதியோ, உறுதிமொழியோ இல்லை. இது போன்ற சத்தியங்கள் செய்யும் போது நாம் உண்மையாளர்களாக இருக்க வேண்டும்.

தவறான சத்தியங்களை நிறைவேற்றக் கூடாது

ஆன்மீகத் தலைவர்கள் என்ற பெயரில் உலாவரும் சிலர் மக்களைத் தம் கைவசத்தில் அடிமைகளாக வைத்துக் கொள்வதற்காக அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து உறுதி மொழி வாங்குவார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக நீங்கள் இடுகின்ற கட்டளைகளுக்குக் கட்டுப்படுவேன் என்று உறுதி மொழி வாங்கி விடுகின்றனர்.

இது போல் சில இயக்கங்களின் தலைவர்கள் தமது தொண்டர்களிடம் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து உறுதி மொழி வாங்குவார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக நீங்கள் எந்தக் கட்டளையிட்டாலும் அதைச் செய்து முடிப்பேன் என்று உறுதி மொழி கொடுத்தவர்கள் பின்னர் இதைத் தவறு என்று உணர்வார்கள். ஆனாலும் சத்தியம் செய்து கொடுத்துள்ளதால் அதிலிருந்து மீளவே முடியாது என்று நினைத்து தொடர்ந்து அடிமைகளாக நீடித்து விடுவார்கள்.

அல்லாஹ்விடம் அளித்து உறுதிமொழியையே முறித்து விட்டு பரிகாரம் செய்யலாம் என்று இஸ்லாம் கூறுவதை இவர்கள் மறந்து விட்டனர்.

இதுபோல் சத்தியம் செய்து கொடுத்தால் அதை முறித்து விட வேண்டும். நீங்கள் என்ன சொன்னாலும் கட்டுப்படுகிறேன் என்ற உறுதி மொழி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டும் சொந்தமானதாகும்.

உம்மிடத்தில் உறுதி மொழி எடுத்தோர் அல்லாஹ்விடமே உறுதி மொழி எடுக்கின்றனர். அவர்களின் கைகள் மீது அல்லாஹ்வின் கை உள்ளது. யாரேனும் முறித்தால் அவர் தனக்கெதிராகவே முறிக்கிறார். யார் தம்மிடம் அல்லாஹ் எடுத்த உறுதி மொழியை நிறைவேற்றுகிறாரோ அவருக்கு மகத்தான கூலியை அவன் வழங்குவான்.

திருக்குர்ஆன் 48:10

அந்த மரத்தினடியில் உம்மிடம் உறுதி மொழி எடுத்த போது நம்பிக்கையாளர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களின் உள்ளங்களில் இருப்பதை அவன் அறிவான். அவர்களுக்கு நிம்மதியை அருளினான். அவர்களுக்குச் சமீபத்தில் இருக்கும் வெற்றியையும் வழங்கினான்.

திருக்குர்ஆன் 48:18

இந்த வசனங்கள் நபிகள் நாயகம் அவர்களிடம் நபித்தோழர்கள் செய்து கொண்ட பைஅத் எனும் உடன்படிக்கை பற்றிப் பேசுகிறது.

போ ஆன்மீகவாதிகளும், ஏமாற்றுப் பேர்வழிகளும், தங்களின் சீடர்களை அடிமைப்படுத்தி வைப்பதற்காகவும், எந்தக் கேள்வியும் கேட்காமல் கண்ணை மூடிக் கொண்டு தங்களைப் பின்பற்றச் செய்வதற்காகவும் இந்த வசனங்களைப் பயன்படுத்துகின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நபித்தோழர்கள் பைஅத் செய்திருப்பதால் எங்களிடமும் பைஅத் செய்யுங்கள் என்று கூறுகின்றனர். இவ்வாறு பைஅத் எனும் உறுதி மொழி எடுத்த பிறகு, யாரிடத்தில் அந்த உறுதி மொழி எடுக்கிறார்களோ அவரைக் கண்ணை மூடிக் கொண்டு பின்பற்ற வேண்டும் எனவும் மூளைச் சலவை செய்கின்றனர்.

ஆனால் இவ்வசனத்தில் இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டும் உள்ள சிறப்புத் தகுதி என்று தெளிவாகவே கூறப்பட்டிருக்கிறது. உம்மிடத்தில் உறுதி மொழி எடுத்தவர்கள் அல்லாஹ்விடம் உறுதி மொழி எடுக்கிறார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் எடுக்கும் உறுதி மொழி அல்லாஹ்விடம் எடுக்கும் உறுதி மொழியாகும் என்று கூறுவதிருந்து இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டும் உள்ள சிறப்புத் தகுதி என்பதை விளங்கலாம்.

இது போல் பல்வேறு சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நபித் தோழர்கள் பைஅத் எனும் உறுதி மொழி எடுத்திருக்கிறார் கள். நாங்கள் தொழுவோம்; நோன்பு வைப்போம்; தப்புச் செய்ய மாட்டோம் என்றெல்லாம் பல்வேறு கட்டங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நபித் தோழர்கள் உறுதி மொழி எடுத்திருக்கிறார்கள். நபியே! (முஹம்மதே!) நம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் வந்து அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டோம்; திருட மாட்டோம்; விபச்சாரம் செய்ய மாட்டோம்; எங்கள் குழந்தைகளைக் கொல்ல மாட்டோம்; நாங்களாக இட்டுக் கட்டி எந்த அவதூறையும் கூற மாட்டோம்; நல்ல விஷயத்தில் உமக்கு மாறு செய்ய மாட்டோம் என்று உம்மிடம் உறுதி மொழி கொடுத்தால் அவர்களிடம் உறுதி மொழி எடுப்பீராக! அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுவீராக! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன் 60:12

இவை யாவும் நபிகள் நாயகம் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறார்கள் என்ற அடிப்படையில் எடுக்கப்பட்டவை. தூதரிடத்தில் எடுக்கும் உறுதி மொழிகள் பொதுவாகவே அந்தத் தூதரை அனுப்பியவரிடத்தில் எடுக்கின்ற உறுதி மொழி தான்.

இத்தகைய உறுதி மொழிகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு தலை சிறந்து விளங்கிய பெரிய பெரிய நபித் தோழர்களிடம் மற்றவர்கள் வந்து எடுக்கவே இல்லை. அபூபக்கர் (ர), உமர் (ர), உஸ்மான் (ர), அ (ர) ஆகியோரிடம் வந்து நாங்கள் ஒழுங்காகத் தொழுவோம்; நோன்பு நோற்போம் என்றெல்லாம் எந்த நபித் தோழரும் பைஅத் எடுக்கவில்லை.

இறைவனிடம் செய்கின்ற உறுதி மொழியை இறைத் தூதரிடம் செய்யலாம் என்ற அடிப்படையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பைஅத் செய்தார்கள்.

எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தவிர எந்த மனிதரிடமும் நான் மார்க்க விஷயத்தில் சரியாக நடந்து கொள்வேன் என்று உறுதி மொழி எடுப்பது இஸ்லாத்தில் இல்லாத, இஸ்லாத்திற்கு எதிரான, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுபடுத்துகிற, தங்களையும் இறைத் தூதர்களாக கருதிக் கொள்கின்ற வழிகேடர்களின் வழி முறையாகும்.

நபிகள் நாயகம் தவிர மற்றவர்களிடம் உறுதிமொழி எடுப்ப தென்று சொன்னால் அது இரண்டு விஷயங்களில் எடுக்கலாம்.

ஒருவர் ஆட்சித் தலைவராகப் பொறுப்பேற்கும் போது உங்களை ஆட்சித் தலைவராக ஏற்றுக் கொள்கிறோம் என்று மக்கள் உறுதி மொழி கொடுக்கின்ற பைஅத். இது மார்க்கத்தில் உண்டு.

இந்த உறுதி மொழியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு அபூபக்கரிடம் மக்கள் செய்தார்கள். அவர்களின் மரணத்திற்குப் பிறகு உமரிடம் செய்தார்கள்.

இப்படி முழு அதிகாரம் படைத்த ஆட்சியாளரிடம் மட்டும் இவ்வாறு பைஅத் எடுப்பதற்கு அனுமதி இருக்கிறது. இது மார்க்கக் காயங்களை நிறைவேற்றுவதாகக் கூறுகின்ற பைஅத் அல்ல.

இவ்வுலகில் நடக்கும் கொடுக்கல் வாங்கலின் போது சம்மந்தப்பட்டவர்களிடம் செய்து கொள்ளும் உறுதிமொழி அனுமதிக்கப்பட்ட மற்றொரு பைஅத் ஆகும்.

எனக்குச் சொந்தமான இந்த வீட்டை உமக்கு நான் விற்கிறேன் என்று விற்பவரும், வாங்குபவரும் ஒருவருக்கொருவர் உறுதிமொழி - பைஅத் - எடுக்கலாம். தனக்குச் சொந்தமான ஒரு உடமை விஷயத் தில் ஒருவர் உறுதிமொழி எடுப்பது அனுமதிக்கப்பட்டதாகும்.

வணக்க வழிபாடுகள் யாவும் இறைவனுக்கே சொந்தமானது. இதற்கு இறைவனிடமோ, இறைவனால் அனுப்பப்பட்ட தூதடரிமோ மட்டும் தான் உறுதிமொழி எடுக்க முடியும். நம்மைப் போலவே வணக்க வழிபாடுகள் செய்யக் கடமைப்பட்டுள்ள நம்மைப் போன்ற அடிமைகளிடம் இந்த உறுதிமொழியை எடுக்கலாகாது. அவ்வாறு எடுத்திருந்தால் அதை உடனடியாக அவர்கள் முறித்து விட வேண்டும்.

صحيح البخاري 6700 - حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ مَالِكٍ، عَنْ طَلْحَةَ بْنِ عَبْدِ المَلِكِ، عَنِ القَاسِمِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ نَذَرَ أَنْ يُطِيعَ اللَّهَ فَلْيُطِعْهُ، وَمَنْ نَذَرَ أَنْ يَعْصِيَهُ فَلاَ يَعْصِهِ»

அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் விஷயமாக ஒருவர் நேர்ச்சை செய்தால் அவனுக்குக் கட்டுப்படட்டும். அல்லாஹ்வுக்கு மாறு செய்வதாக ஒருவர் நேர்ச்சை செய்தால் அவனுக்கு மாறு செய்யக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 6696, 6700

அல்லாஹ்வுக்குச் சொந்தமானதை மனிதனுக்கு வழங்கிய குற்றத்துக்காகவும், அல்லாஹ்வின் தூதருடைய தகுதியைச் சாதாரண மனிதருக்கு வழங்கிய குற்றத்துக்காகவும் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பும் தேடிக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வின் தூதரிடத்தில் உறுதி மொழி எடுப்பவர்கள் அல்லாஹ்விடமே உறுதி மொழி எடுக்கிறார்கள் என்று இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள இந்தச் சொற்றொடர் முக்கியமாகக் கவனிக்கத்தது.

பொய்ச் சத்தியம் செய்தல்

வாக்குறுதி அளிக்கும் வகையில் இல்லாத சத்தியங்களில் பொய் கூறுவது கடுமையான குற்றமாகும்.

அல்லாஹ்விடம் செய்த உறுதி மொழியையும், தமது சத்தியங்களையும் அற்பமான விலைக்கு விற்றோருக்கு மறுமையில் எந்தப் பாக்கியமும் இல்லை. கியாமத் நாளில் அவர்களுடன் அல்லாஹ் பேசவும் மாட்டான். அவர்களைப் பார்க்கவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.

திருக்குர்ஆன் 3:77

அல்லாஹ்வின் உடன்படிக்கையை அற்ப விலைக்கு விற்று விடாதீர்கள்! நீங்கள் அறிந்தால் அல்லாஹ்விடம் உள்ளதே உங்களுக்குச் சிறந்தது.

திருக்குர்ஆன் 16:95

அல்லாஹ் யார் மீது கோபம் கொண்டுள்ளானோ அந்தச் சமுதாயத்தை உற்ற நண்பர்களாக்கிக் கொண்டோரை நீர் அறியவில்லையா? அவர்கள் உங்களைச் சேர்ந்தோரும் அல்லர். அவர்களைச் சேர்ந்தோரும் அல்லர். அறிந்து கொண்டே பொய்ச் சத்தியம் செய்கின்றனர்.

திருக்குர்ஆன் 58:14

صحيح البخاري 6675 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا النَّضْرُ، أَخْبَرَنَا شُعْبَةُ، حَدَّثَنَا فِرَاسٌ، قَالَ: سَمِعْتُ الشَّعْبِيَّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " الكَبَائِرُ: الإِشْرَاكُ بِاللَّهِ، وَعُقُوقُ الوَالِدَيْنِ، وَقَتْلُ النَّفْسِ، وَاليَمِينُ الغَمُوسُ "

அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தல், பெற்றோரைத் துன்புறுத்துதல், கொலை செய்தல், பொய்ச் சத்தியம் செய்தல் ஆகியவை பெரும் பாவங்களாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல்: புகாரி 6675, 6870, 6920

صحيح البخاري 2356 - حَدَّثَنَا عَبْدَانُ، عَنْ أَبِي حَمْزَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ شَقِيقٍ، عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ يَقْتَطِعُ بِهَا مَالَ امْرِئٍ مُسْلِمٍ، هُوَ عَلَيْهَا فَاجِرٌ، لَقِيَ اللَّهَ وَهُوَ عَلَيْهِ غَضْبَانُ»

தவறான முறையில் இன்னொரு முஸ்லிமின் செல்வத்தை அபகரிப்பதற்காக யாரேனும் சத்தியம் செய்தால் (மறுமையில்) அல்லாஹ் அவன் மீது கடுமையாக கோபம் கொண்ட நிலையில் தான் சந்திப்பான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)

நூல்: புகாரி 2357, 2417, 2516, 2667, 2670, 2673, 2677, 4550, 6659, 6676, 7183, 7445

இத்துடன் 3:77 வசனத்தையும் நபிகள் நாயகம் (ஸல்) ஓதிக் காட்டினார்கள் என்று சில அறிவிப்புகளில் கூறப்பட்டுள்ளது.

صحيح البخاري 2672 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ عَبْدِ الحَمِيدِ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " ثَلاَثَةٌ لاَ يُكَلِّمُهُمُ اللَّهُ، وَلاَ يَنْظُرُ إِلَيْهِمْ وَلاَ يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ: رَجُلٌ عَلَى فَضْلِ مَاءٍ بِطَرِيقٍ، يَمْنَعُ مِنْهُ ابْنَ السَّبِيلِ، وَرَجُلٌ بَايَعَ رَجُلًا لاَ يُبَايِعُهُ إِلَّا لِلدُّنْيَا، فَإِنْ أَعْطَاهُ مَا يُرِيدُ وَفَى لَهُ وَإِلَّا لَمْ يَفِ لَهُ، وَرَجُلٌ سَاوَمَ رَجُلًا بِسِلْعَةٍ بَعْدَ العَصْرِ، فَحَلَفَ بِاللَّهِ لَقَدْ أَعْطَى بِهَا كَذَا وَكَذَا فَأَخَذَهَا "

பாதையில் உபரியான நீர் தனக்குச் சொந்தமாக இருந்து வழிப்போக்கனுக்கு அதைத் தடுத்தவன், ஒரு ஜனாதிபதியிடம் உலக ஆதாயத்துக்காக பைஅத் எனும் உறுதிமொழி எடுத்தவன், தனது வியாபாரப் பொருளில் இல்லாததை இருப்பதாகக் கூறி சத்தியம் செய்தவன் ஆகிய மூன்று நபர்களை மறுமை நாளில் அல்லாஹ் பார்க்க மாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்த மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 2672, 7212

தீர்மானம் இன்றி சத்தியம் செய்தல்

அல்லாஹ்வின் மீது சத்தியமாக என்ற சொல்லை வாய் தவறி ஒருவர் பயன்படுத்தினால் அது சத்தியத்தில் சேராது. மனதால் உறுதி செய்து அதைக் கூறினால் மட்டுமே சத்தியமாக ஆகும்.

வாய் தவறி கூறி விட்டால் அந்தச் சத்தியத்தை நிறைவேற்ற வேண்டியதில்லை. அதற்காக எந்தப் பரிகாரமும் செய்யத் தேவையில்லை.

உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். உங்கள் உள்ளங்கள் உறுதி செய்தவற்றின் காரணமாகவே உங்களைத் தண்டிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத் தன்மை மிக்கவன்.

திருக்குர்ஆன் 2:225

உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். மாறாக திட்டமிட்டுச் செய்யும் சத்தியங்களுக்காகவே உங்களைத் தண்டிப்பான்.

திருக்குர்ஆன் 5:89

صحيح البخاري 2528 - حَدَّثَنَا الحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا مِسْعَرٌ، عَنْ قَتَادَةَ، عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ تَجَاوَزَ لِي عَنْ أُمَّتِي مَا وَسْوَسَتْ بِهِ صُدُورُهَا، مَا لَمْ تَعْمَلْ أَوْ تَكَلَّمْ»

எனது சமுதாயத்தினரின் உள்ளங்களில் தோன்றும் ஊசலாட் டங்களுக்குச் செயல் வடிவம் கொடுக்காத வரை அல்லது வாயால் அதை மொழியாத வரை அல்லாஹ் மன்னித்து விட்டான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 2528, 5269

சத்தியம் செய்யும் போது நிச்சயமாக இதைச் செய்வேன் என்று கூறினால் தான் அதை நிறைவேற்றுவது அவசியமாகும். அல்லாஹ் நாடினால் நான் இதைச் செய்வேன் என்று ஒருவர் கூறினால் அவர் அதை நிறைவேற்ற வேண்டியது அவசியம் இல்லை. நிறைவேற்றத் தவறியதற்காக பரிகாரமும் செய்யத் தேவையில்லை.

سنن الترمذي 1531 - حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الوَارِثِ قَالَ: حَدَّثَنِي أَبِي، وَحَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ، فَقَالَ: إِنْ شَاءَ اللَّهُ فَقَدِ اسْتَثْنَى، فَلَا حِنْثَ عَلَيْهِ "

ஒருவர் சத்தியம் செய்யும் போது இன்ஷா அல்லாஹ் என்பதையும் சேர்த்துக் கூறினால் அவர் மீது எந்தப் பரிகாரமும் அவசியம் இல்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: திர்மிதீ 1451

இதே கருத்துடைய ஹதீஸ்கள் நஸாயீ 3768, 3769, 3770, 3795 வது இலக்கத்திலும் அபூதாவூத் 2838, அஹ்மத் 7742 இலக்கத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மற்றொரு அறிவிப்பில்

உங்களில் ஒருவர் சத்தியம் செய்யும் போது இன்ஷா அல்லாஹ் எனக் கூறினால் அவர் விரும்பினால் அதை நிறை வேற்றலாம். அவர் விரும்பினால் நிறைவேற்றாது விட்டு விடலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

(அஹ்மத் 5108, 5814, 5830)

பிறருக்காகச் சத்தியம் செய்தல்

தனது வாக்குறுதியை வலியுறுத்துவதற்குத் தான் ஒருவர் சத்தியம் செய்ய வேண்டும். இன்னொருவரை வலியுறுத்துவதற்குச் சத்தியம் செய்ய முடியாது.

 அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் உனக்கு இதைத் தருவேன் என்று கூறினால் அதற்கு அர்த்தம் இருக்கிறது.

 அல்லாஹ்வின் மீது ஆணையாக நீ எனக்கு இதைத் தர வேண்டும் எனக் கூறினால் அதற்கு அர்த்தம் இல்லை.

ஆனாலும் இரத்த சம்மந்தம் உள்ளவர்கள் தமக்கிடையே இவ்வாறு பயன்படுத்துவதற்கு அனுமதி உண்டு.

صحيح البخاري 1284 - حَدَّثَنَا عَبْدَانُ، وَمُحَمَّدٌ، قَالاَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا عَاصِمُ بْنُ سُلَيْمَانَ، عَنْ أَبِي عُثْمَانَ، قَالَ: حَدَّثَنِي أُسَامَةُ بْنُ زَيْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: أَرْسَلَتِ ابْنَةُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَيْهِ إِنَّ ابْنًا لِي قُبِضَ، فَأْتِنَا، فَأَرْسَلَ يُقْرِئُ السَّلاَمَ، وَيَقُولُ: «إِنَّ لِلَّهِ مَا أَخَذَ، وَلَهُ مَا أَعْطَى، وَكُلٌّ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى، فَلْتَصْبِرْ، وَلْتَحْتَسِبْ»، فَأَرْسَلَتْ إِلَيْهِ تُقْسِمُ عَلَيْهِ لَيَأْتِيَنَّهَا، فَقَامَ وَمَعَهُ سَعْدُ بْنُ عُبَادَةَ، وَمَعَاذُ بْنُ جَبَلٍ، وَأُبَيُّ بْنُ كَعْبٍ، وَزَيْدُ بْنُ ثَابِتٍ وَرِجَالٌ، فَرُفِعَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّبِيُّ وَنَفْسُهُ تَتَقَعْقَعُ - قَالَ: حَسِبْتُهُ أَنَّهُ قَالَ كَأَنَّهَا شَنٌّ - فَفَاضَتْ عَيْنَاهُ، فَقَالَ سَعْدٌ: يَا رَسُولَ اللَّهِ، مَا هَذَا؟ فَقَالَ: «هَذِهِ رَحْمَةٌ جَعَلَهَا اللَّهُ فِي قُلُوبِ عِبَادِهِ، وَإِنَّمَا يَرْحَمُ اللَّهُ مِنْ عِبَادِهِ الرُّحَمَاءَ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஒரு மகள் (ஸைனப்) தனது குழந்தை மரணத்தை நெருங்கி விட்டதைச் சொல்லி அனுப்பி உடனே நபிகள் நாயகம் (ஸல்) வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ் எடுத்துக் கொண்டதும் அவனுக்குரியதே; அவன் கொடுத்ததும் அவனுக்குரியதே; ஒவ்வொன்றுக்கும் அவனிடம் குறிப்பிட்ட காலக்கெடு உண்டு. எனவே அவர் பொறுமையைக் கடைப்பிடிக்கட்டும் என்று சொல்லி அனுப்பினார்கள். மீண்டும் அந்த மகள் அல்லாஹ்வின் மீது சத்தியமாக நீங்கள் வர வேண்டும் என்று சொல்லி அனுப்பினார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் புறப்பட்டார்கள். குழந்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மடியில் வைக்கப்பட்டது. உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. இதைக் கண்ட ஸஅது அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! இது என்ன? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இது இரக்க உணர்வாகும். தான் நாடிய அடியார்களின் உள்ளங்களில் அல்லாஹ் இதை வைக்கிறான். தனது அடியார்களில் இரக்கம் உள்ளவர்களுக்குத் தான் அல்லாஹ் இரக்கம் காட்டுவான் எனக் கூறினார்கள்.

நூல்: புகாரி 1284, 6655, 7377, 7448, 5655

குடும்பத்தினருக்குக் கேடு செய்யும் சத்தியம்

ஒரு மனிதன் தனது குடும்ப உறுப்பினர்களுக்குச் சிரமம் அளிக்கும் காரியத்தைச் சத்தியம் செய்தால் அதை நிறைவேற்றுவதில் பிடிவாதம் காட்டக் கூடாது. அவ்வாறு செய்தால் பெரும் பாவமாகும். மாறாக அந்தச் சத்தியத்தை முறித்து விட்டு அதற்கான பரிகாரத்தைச் செய்து விட வேண்டும்.

உதாரணமாக அல்லாஹ்வின் மீது சத்தியமாக வீட்டில் உள்ள மாவறைக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்த மாட்டோம் என்று ஒருவன் சத்தியம் செய்தால் இதனால் குடும்பத்தினர் கஷ்டம் அடைவார்கள். இது போன்ற சத்தியம் செய்தால் அந்தச் சத்தியத்தை முறித்து விட வேண்டும். சத்தியத்திற்கான பரிகாரத்தையும் செய்து விட வேண்டும்.

صحيح البخاري 6625 - وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَاللَّهِ، لَأَنْ يَلِجَّ أَحَدُكُمْ بِيَمِينِهِ فِي أَهْلِهِ، آثَمُ لَهُ عِنْدَ اللَّهِ مِنْ أَنْ يُعْطِيَ كَفَّارَتَهُ الَّتِي افْتَرَضَ اللَّهُ عَلَيْهِ»

ஒரு மனிதன் தனது குடும்பத்தினருக்குச் சிரமம் அளிப்பதைச் சத்தியம் செய்வது, அதை முறித்து விட்டு பரிகாரம் செய்வதை விட அல்லாஹ்விடம் பெரிய பாவமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6625, 6626

தனது நற்பண்புகள் மீது சத்தியம் செய்தல்

எனது நாணயத்தின் மீது சத்தியமாக! எனது ஒழுக்கத்தின் மீது சத்தியமாக! எனது நற்பண்புகள் மீது சத்தியமாக என்றெல்லாம் சிலர் சத்தியம் செய்வதுண்டு.

அல்லாஹ்வைத் தவிர எவர் மீதும் எதன் மீதும் சத்தியம் செய்யக் கூடாது என்பதிலிருந்தே இது கூடாது என்று அறிந்து கொள்ளலாம்; என்றாலும் இது பற்றி நேரடியாகவே தடைகளும் வந்துள்ளன.

سنن أبي داود 3253 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ ثَعْلَبَةَ الطَّائِيُّ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ حَلَفَ بِالْأَمَانَةِ فَلَيْسَ مِنَّا»

நாணயத்தின் மீது யார் சத்தியம் செய்கிறாரோ அவர் நம்மைச் சேர்ந்தவர் அல்லர் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: புரைதா (ரலி)

நூல்: அபூதாவூத் 2831, அஹ்மத் 21902

பிறருக்கு உதவுவதில்லை என்று சத்தியம் செய்தல்

தனது குடும்ப உறுப்பினருக்கோ, நண்பருக்கோ உதவிகள் செய்து வந்தவர்கள் சண்டை சச்சரவுகள் ஏற்படும் போது இனிமேல் உதவ மாட்டேன் என்று சத்தியம் செய்து விடுவார்கள். இவ்வாறு செய்யக் கூடாது என்றும் இஸ்லாம் வழிகாட்டுகிறது.

صحيح البخاري 6679 - حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، ح وَحَدَّثَنَا الحَجَّاجُ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ النُّمَيْرِيُّ، حَدَّثَنَا يُونُسُ بْنُ يَزِيدَ الأَيْلِيُّ، قَالَ: سَمِعْتُ الزُّهْرِيَّ، قَالَ: سَمِعْتُ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ، وَسَعِيدَ بْنَ المُسَيِّبِ، وَعَلْقَمَةَ بْنَ وَقَّاصٍ، وَعُبَيْدَ اللَّهِ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ حَدِيثِ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، حِينَ قَالَ لَهَا أَهْلُ الإِفْكِ مَا قَالُوا، فَبَرَّأَهَا اللَّهُ مِمَّا قَالُوا، كُلٌّ حَدَّثَنِي طَائِفَةً مِنَ الحَدِيثِ فَأَنْزَلَ اللَّهُ: {إِنَّ الَّذِينَ جَاءُوا بِالإِفْكِ} العَشْرَ الآيَاتِ كُلَّهَا فِي بَرَاءَتِي، فَقَالَ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ، وَكَانَ يُنْفِقُ عَلَى مِسْطَحٍ لِقَرَابَتِهِ مِنْهُ: وَاللَّهِ لاَ أُنْفِقُ عَلَى مِسْطَحٍ شَيْئًا أَبَدًا، بَعْدَ الَّذِي قَالَ لِعَائِشَةَ. فَأَنْزَلَ اللَّهُ: {وَلاَ يَأْتَلِ أُولُو الفَضْلِ مِنْكُمْ وَالسَّعَةِ، أَنْ يُؤْتُوا أُولِي القُرْبَى} الآيَةَ قَالَ أَبُو بَكْرٍ: " بَلَى وَاللَّهِ إِنِّي لَأُحِبُّ أَنْ يَغْفِرَ اللَّهُ لِي، فَرَجَعَ إِلَى مِسْطَحٍ النَّفَقَةَ الَّتِي كَانَ يُنْفِقُ عَلَيْهِ، وَقَالَ: وَاللَّهِ لاَ أَنْزِعُهَا عَنْهُ أَبَدًا "

ஆயிஷா (ரலி) அவர்கள் மீது அவதூறு கூறியவர்களில் மிஸ்தஹ் என்பாரும் ஒருவர். இவருக்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் உதவி செய்து வந்தனர். தன் மகள் மீது அவர் அவதூறு கூறியதால் இனிமேல் மிஸ்தஹுக்கு உதவ மாட்டேன் என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து முடிவெடுத்தார்கள். இதைக் கண்டித்து பின்வரும் 24:22 வசனத்தை அல்லாஹ் அருளினான்.

நூல்: புகாரி 2661, 4141, 4750, 6679

உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தோருக்கும் உதவ மாட்டோம் என்று செல்வமும், வசதியும் உடையோர் சத்தியம் செய்ய வேண்டாம். மன்னித்து அலட்சியம் செய்யட்டும். அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன் 24:22

இதே கருத்தைப் பின்வரும் வசனத்திலும் அல்லாஹ் கூறுகிறான்.

நன்மை செய்வதற்கும், (இறைவனை) அஞ்சுவதற்கும், மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் உங்கள் சத்தியங்கள் மூலம் அல்லாஹ்வை ஒரு தடையாக ஆக்காதீர்கள்! அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.

திருக்குர்ஆன் 2:224

மற்றவர் செய்த சத்தியத்தை நிறைவேற்ற உதவுதல்

இஸ்லாம் அனுமதிக்கின்ற வகையில் ஒருவர் சத்தியம் செய்கிறார். அதை அவர் நிறைவேற்ற முடியாது சிரமப்படுகிறார். நாம் அவருக்கு உதவினால் அவர் செய்த சத்தியத்தில் உண்மையாளராக ஆவார். இது போன்ற சந்தர்ப்பங்களில் அவரது சத்தியத்தை நிறைவேற்ற உதவுவது அவசியமாகும்.

صحيح البخاري 1239 - حَدَّثَنَا أَبُو الوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَشْعَثِ، قَالَ: سَمِعْتُ مُعَاوِيَةَ بْنَ سُوَيْدِ بْنِ مُقَرِّنٍ، عَنِ البَرَاءِ بْنِ عَازِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: " أَمَرَنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِسَبْعٍ، وَنَهَانَا عَنْ سَبْعٍ: أَمَرَنَا بِاتِّبَاعِ الجَنَائِزِ، وَعِيَادَةِ المَرِيضِ، وَإِجَابَةِ الدَّاعِي، وَنَصْرِ المَظْلُومِ، وَإِبْرَارِ القَسَمِ، وَرَدِّ السَّلاَمِ، وَتَشْمِيتِ العَاطِسِ، وَنَهَانَا عَنْ: آنِيَةِ الفِضَّةِ، وَخَاتَمِ الذَّهَبِ، وَالحَرِيرِ، وَالدِّيبَاجِ، وَالقَسِّيِّ، وَالإِسْتَبْرَقِ "

ஜனாஸாவைப் பின் தொடர்தல், நோயாளியை விசாரித்தல், விருந்தை ஏற்றுக் கொள்ளுதல், அநீதி இழைக்கப்பட்டவனுக்கு உதவுதல்,(பிறரது) சத்தியத்தை நிறைவேற்ற உதவுதல், தும்மியவருக்காக மறுமொழி கூறுதல், ஸலாமுக்குப் பதில் ஸலாம் கூறுதல் ஆகிய ஏழு விஷயங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டனர்.

அறிவிப்பவர்: பரா பின் ஆஸிப் (ரலி)

நூல்: புகாரி 1239, 2445, 5175, 5635, 5863, 6222, 6235

வியாபாரத்தில் சத்தியம் செய்தல்

வியாபாரிகள் தான் மனிதர்களிலேயே அதிகம் சத்தியம் செய்பவர்களாக உள்ளனர். தாங்கள் கூறுவது உண்மையாக இருந்தால் கூட சத்தியம் செய்வதைத் தவிர்ப்பதே நல்லது.

صحيح البخاري 2087 - حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ ابْنُ المُسَيِّبِ: إِنَّ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «الحَلِفُ مُنَفِّقَةٌ لِلسِّلْعَةِ، مُمْحِقَةٌ لِلْبَرَكَةِ»

சத்தியம் செய்தல் சரக்குகளை விற்க உதவும். ஆனால் பர(க்)கத்தை அழித்து விடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 2087

சத்தியத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்குதல்

ஒருவன் கையில், அல்லது கட்டுப்பாட்டில் ஒரு பொருள் உள்ளது. அப்பொருளை இன்னொருவன் உரிமை கொண்டாடி வழக்குக் கொண்டு வருகிறான்.

இது போன்ற சந்தர்ப்பத்தில் யார் வழக்கு கொண்டு வருகிறானோ அவன் தான் அப்பொருள் தன்னுடையது என்பதற்கான ஆதாரங் களைக் கொண்டு வர வேண்டும். பொருளைக் கைவசம் வைத்துள் ளவன் ஆதாரம் கொண்டு வரத் தேவையில்லை. அப்பொருள் அவனது கைவசம் உள்ளதே அவனுக்குரிய ஆதாரமாக உள்ளது.

வழக்குத் தொடுத்தவன் ஆதாரத்தைக் கொண்டு வந்தால் அவனுக்குச் சாதகமாக தீர்ப்பு அளிக்கப்படும். அவனால் எந்த ஆதாரத்தையும் கொண்டு வந்து நிரூபிக்க இயலவில்லை என்றால் யாருடைய கையில் அப்பொருள் உள்ளதோ அவன் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து தன்னுடையது எனக் கூற வேண்டும். அவ்வாறு செய்து விட்டால் அப்பொருள் அவனுடையது என்று தீர்ப்பளிக்கப்படும்.

பொருளைக் கைவசம் வைத்திருப்பவன் சத்தியம் செய்ய மறுத்தால் அப்பொருள் வழக்குத் தொடுத்தவனைச் சேரும்.

என்னால் ஆதாரம் காட்ட இயலாது; வேண்டுமானால் சத்தியம் செய்கிறேன் என்று வழக்குத் தொடுத்தவன் கூற முடியாது. பொருளைக் கைவசம் வைத்திருப்பவனுக்கு மட்டுமே சத்தியம் செய்தல் உரியதாகும். வழக்குத் தொடுத்தவன் ஆதாரம் காட்டி விட்டால் அதன் பின்னர் பொருளை வைத்திருப்பவன் சத்தியம் செய்வதாகக் கூற முடியாது.

صحيح البخاري 2416 - حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ ، عَنِ الأَعْمَشِ، عَنْ شَقِيقٍ، عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ، وَهُوَ فِيهَا فَاجِرٌ، لِيَقْتَطِعَ بِهَا مَالَ امْرِئٍ مُسْلِمٍ، لَقِيَ اللَّهَ وَهُوَ عَلَيْهِ غَضْبَانُ» قَالَ: فَقَالَ الأَشْعَثُ: فِيَّ وَاللَّهِ كَانَ ذَلِكَ، كَانَ بَيْنِي وَبَيْنَ رَجُلٍ مِنَ اليَهُودِ أَرْضٌ فَجَحَدَنِي، فَقَدَّمْتُهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَكَ بَيِّنَةٌ»، قُلْتُ: لاَ، قَالَ: فَقَالَ لِلْيَهُودِيِّ: «احْلِفْ»، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِذًا يَحْلِفَ وَيَذْهَبَ بِمَالِي، فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى: {إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلًا} [آل عمران: 77] إِلَى آخِرِ الآيَةِ

எனக்கும் ஒரு யூதருக்கும் இடையே நிலத் தகராறு இருந்தது. அந்த நிலத்தை என்னிடம் தர அவர் மறுத்தார். அவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் கொண்டு வந்தேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உன்னிடம் ஆதாரம் ஏதும் இருக்கிறதா என்று என்னிடம் கேட்டார்கள். நான் இல்லை என்று கூறினேன். அப்படியானால் நீ சத்தியம் செய் என்று யூதரிடம் கூறினார்கள். அப்போது நான் இவன் பொய்ச் சத்தியம் செய்து எனது சொத்தை எடுத்துக் கொள்வான் என்று கூறினேன். அப்போது பின்வரும் வசனத்தை அல்லாஹ் அருளினான். அல்லாஹ்விடம் செய்த உறுதி மொழியையும், தமது சத்தியங் களையும் அற்பமான விலைக்கு விற்றோருக்கு மறுமையில் எந்தப் பாக்கியமும் இல்லை. கியாமத் நாளில் அவர்களுடன் அல்லாஹ் பேசவும் மாட்டான். அவர்களைப் பார்க்கவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. (திருக்குர்ஆன் 3:77)

அறிவிப்பவர்: அஷ்அத் (ரலி)

நூல்: புகாரி 2417, 2667, 2516, 2670

ஒரு பொருள் இருவரின் கைவசத்திலும் இருந்தால், அல்லது இருவரில் யாருடைய கைவசத்திலும் இல்லாமல் இருந்தால், இருவரிடமும் எந்த ஆதாரமும் இல்லாவிட்டால் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டவர் சத்தியம் செய்ய வேண்டும்.

சத்தியம் செய்து விட்டால் அப்பொருள் அவரைச் சேரும். சத்தியம் செய்ய மறுத்தால் மற்றவர் சத்தியம் செய்து அப்பொருளை எடுத்துக் கொள்ளலாம்.

صحيح البخاري 2674 - حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ نَصْرٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَرَضَ عَلَى قَوْمٍ اليَمِينَ، فَأَسْرَعُوا فَأَمَرَ أَنْ يُسْهَمَ بَيْنَهُمْ فِي اليَمِينِ أَيُّهُمْ يَحْلِفُ»

ஒரு கூட்டத்தினர் தொடுத்த வழக்கின் போது சத்தியம் செய்யுமாறு நபிகள் நாயகம் கேட்டனர். அவர்கள் ஒவ்வொரு வரும் சத்தியம் செய்ய விரைந்து வந்தனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யார் சத்தியம் செய்ய வேண்டும் என்பதற்கு சீட்டுக் குலுக்கித் தேர்வு செய்யுமாறு கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 2674

ஒரு பொருளுக்கு இருவர் உரிமை கொண்டாடி, இருவரிடமும் எந்த ஆதாரமும் இல்லாவிட்டால் சத்தியம் செய்யாமல் இருவரும் சமமாகப் பிரித்துக் கொள்ளலாம்.

கீழே உள்ள ஹதீஸ் பலவீனமனது. 

سنن أبي داود 3613 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمِنْهَالِ الضَّرِيرُ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ: «أَنَّ رَجُلَيْنِ ادَّعَيَا بَعِيرًا أَوْ دَابَّةً إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْسَتْ لِوَاحِدٍ مِنْهُمَا بَيِّنَةٌ فَجَعَلَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَهُمَا»،

ஒரு ஒட்டகம் தனக்குச் சொந்தமானது என்று இருவர் உரிமை கொண்டாடினார்கள். இருவரில் எவரிடமும் ஆதாரம் இல்லை. அதை இருவருக்கும் சமமாக நபிகள் நாயகம் (ஸல்) ஆக்கினார்கள்.

அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி)

நூல்: அபூதாவூத் 3134

நம்பாதவர்களிடம் சத்தியம் செய்யக் கூடாது

நாம் கூறுவது உண்மையா? பொய்யா? என்ற சந்தேகம் மற்றவருக்கு வரும் போது சத்தியம் செய்து கூறுவோம். இதனால் நாம் கூறுவது உண்மை என்று அவர் நம்புவார்.

நாம் அளிக்கும் வாக்குறுதியை நிறைவேற்ற மாட்டோம் என்று மற்றவர்கள் சந்தேகப்படும் போதும் சத்தியம் செய்து கூறுவோம்.

இறை நம்பிக்கையில்லாதவர்களிடமும் அல்லாஹ்வைப் பற்றி அறியாதவர்களிடமும் நாம் சத்தியம் செய்து கூறினால் அவர்கள் நம்ப மாட்டார்கள். நாம் சத்தியம் செய்வதும், செய்யாமல் கூறுவதும் அவர்களைப் பொருத்த வரை சமமானதே.

இது போன்றவர்களிடம் நாம் சத்தியம் செய்து கூறக் கூடாது.

صحيح مسلم 20 - (1653) حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَعَمْرٌو النَّاقِدُ، قَالَ يَحْيَى: أَخْبَرَنَا هُشَيْمُ بْنُ بَشِيرٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِي صَالِحٍ، وقَالَ عَمْرٌو: حَدَّثَنَا هُشَيْمُ بْنُ بَشِيرٍ، أَخْبَرَنَا عَبْدُ اللهِ بْنُ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَمِينُكَ عَلَى مَا يُصَدِّقُكَ عَلَيْهِ صَاحِبُكَ»، وقَالَ عَمْرٌو: يُصَدِّقُكَ بِهِ صَاحِبُكَ

உன் சகா உன்னை உண்மைப்படுத்துவான் எனும் போது தான் சத்தியம் செய்ய வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 3121

சத்தியங்களைக் கேடயமாக ஆக்கக் கூடாது

சிலர் தங்களைக் காத்துக் கொள்வதற்காக அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்வார்கள். சத்தியத்தைத் தங்களின் கேடய மாக ஆக்கிக் கொள்வார்கள். இது கடுமையான குற்றமாகும்.

அவர்கள் தமது சத்தியங்களைக் கேடயமாக்கிக் கொண்டனர். அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்தார்கள். இழிவு தரும் வேதனை அவர்களுக்கு உண்டு.

திருக்குர்ஆன் 16:58

அவர்கள் தமது சத்தியங்களைக் கேடயமாக்கி அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுக்கின்றனர். அவர்கள் செய்து கொண்டிருப்பது கெட்டது.

திருக்குர்ஆன் 63:2

சத்தியங்களை நிறைவேற்ற வேண்டும்

உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். உங்கள் உள்ளங்கள் உறுதி செய்தவற்றின் காரணமாகவே உங்களைத் தண்டிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத் தன்மை மிக்கவன்.

திருக்குர்ஆன் 2:225

உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். மாறாக திட்டமிட்டுச் செய்யும் சத்தியங்களுக்காகவே உங்களைத் தண்டிப்பான்.

திருக்குர்ஆன் 5:89

நீங்கள் ஒப்பந்தம் செய்தால் அல்லாஹ்வின் ஒப்பந்தத்தை நிறைவேற்றுங்கள்! உங்கள் மீது அல்லாஹ்வைப் பொறுப்பாள னாக்கி, சத்தியங்களை உறுதிப்படுத்திய பின் அதை முறித்து விடாதீர்கள்! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான்.

திருக்குர்ஆன் 16:91

உறுதியாக நூற்று, பின்னர் நூற்றதைத் துண்டு துண்டாக ஆக்கியவளைப் போல் ஆகாதீர்கள்! ஒரு சமுதாயத்தை விட இன்னொரு சமுதாயம் அதிக எண்ணிக்கையில் உள்ளது என்பதற்காக உங்கள் சத்தியங்களை மோசடியாகப் பயன்படுத்தாதீர்கள்! இதன் மூலம் அல்லாஹ் உங்களைச் சோதிக்கிறான். நீங்கள் முரண்பட்டது பற்றி கியாமத் நாளில் அவன் உங்களுக்குத் தெளிவுபடுத்துவான்.

திருக்குர்அன் 16:92

இல்லறத்தில் சந்தேகம்

ஒருவன் ஒரு பெண்ணுடைய ஒழுக்கத்திற்கு எதிராகக் குற்றம் சாட்டினால் அதற்கு நான்கு சாட்சிகளைக் கொண்டு வர வேண்டும். அவ்வாறு கொண்டு வராவிட்டால் அவனுக்கு எண்பது கசையடிகள் வழங்கப்பட வேண்டும்.

ஒழுக்கமுள்ள பெண்கள் மீது பழி சுமத்தி, பின்னர் நான்கு சாட்சிகளைக் கொண்டு வராதவர்களை எண்பது கசையடி அடியுங்கள்! அவர்களின் சாட்சியத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்! அவர்களே குற்றம் புரிபவர்கள்.

திருக்குர்அன் 24:4

ஆனால் கணவன் தன் மனைவியின் மீது குற்றம் சாட்டினால் அவன் ஐந்து தடவை சத்தியம் செய்ய வேண்டும். ஐந்தாவது தடவை சத்தியம் செய்யும் போது நான் பொய் சொன்னால் என் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் எனக் கூற வேண்டும். இவ்வாறு கூறினால் அவன் அவதூறு கூறியவனாக ஆக மாட்டான்.

இதே போல் அவனது மனைவியும் ஐந்து தடவை சத்தியம் செய்ய வேண்டும். ஐந்தாவது தடவை சத்தியம் செய்யும் போது நான் கூறுவது பொய் என்றால் என் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் எனக் கூற வேண்டும்.

இவ்வாறு இருவரும் கூறிவிட்டால் அவ்விருவருக்கும் இடையே உள்ள உறவு அடியோடு நீங்கி விடும். அதன் பின்னர் சேர்ந்து வாழ முடியாது.

தங்களைத் தவிர வேறு சாட்சிகள் இல்லாத நிலையில் தமது மனைவியர் மீது பழி சுமத்துவோர், தாங்கள் உண்மையாளர்கள் என்று அல்லாஹ்வின் மீது நான்கு தடவை (சத்தியம் செய்து) சாட்சியமளிக்க வேண்டும். தான் பொய்யனாக இருந்தால் தன் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படட்டும் என்று ஐந்தாவதாக (கூற வேண்டும்). அவனே பொய்யன் என்று அல்லாஹ்வின் மீது நான்கு தடவை (சத்தியம் செய்து) அப்பெண் சாட்சிய மளிப்பது தண்டனையிலிருந்து அவளைக் காக்கும். அவன் உண்மையாளனாக இருந்தால் தன் மீது அல்லாஹ்வின் கோபம் ஏற்படட்டும் என்று ஐந்தாவதாக (கூறுவாள்).

திருக்குர்ஆன் 24:6-9

சிறந்ததைக் கண்டால் சத்தியத்தை முறிக்கலாம்

صحيح البخاري 6622 - حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ مُحَمَّدُ بْنُ الفَضْلِ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، حَدَّثَنَا الحَسَنُ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَمُرَةَ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا عَبْدَ الرَّحْمَنِ بْنَ سَمُرَةَ، لاَ تَسْأَلِ الإِمَارَةَ، فَإِنَّكَ إِنْ أُوتِيتَهَا عَنْ مَسْأَلَةٍ وُكِلْتَ إِلَيْهَا، وَإِنْ أُوتِيتَهَا مِنْ غَيْرِ مَسْأَلَةٍ أُعِنْتَ عَلَيْهَا، وَإِذَا حَلَفْتَ عَلَى يَمِينٍ، فَرَأَيْتَ غَيْرَهَا خَيْرًا مِنْهَا، فَكَفِّرْ عَنْ يَمِينِكَ وَأْتِ الَّذِي هُوَ خَيْرٌ»

ஒரு காரியத்தைச் செய்வதாக நீ சத்தியம் செய்த பின் அது அல்லாத காரியத்தைச் சிறந்ததாக நீ கண்டால் உன் சத்தியத்தை முறித்து அதற்கான பரிகாரத்தைச் செய்து விட்டு அந்தச் சிறந்த காரியத்தைச் செய்து விடு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் சமூரா (ரலி)

நூல்: புகாரி 6622

صحيح البخاري 6623 - حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ غَيْلاَنَ بْنِ جَرِيرٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي رَهْطٍ مِنَ الأَشْعَرِيِّينَ أَسْتَحْمِلُهُ، فَقَالَ: «وَاللَّهِ لاَ أَحْمِلُكُمْ، وَمَا عِنْدِي مَا أَحْمِلُكُمْ عَلَيْهِ» قَالَ: ثُمَّ لَبِثْنَا مَا شَاءَ اللَّهُ أَنْ نَلْبَثَ، ثُمَّ أُتِيَ بِثَلاَثِ ذَوْدٍ غُرِّ الذُّرَى، فَحَمَلَنَا عَلَيْهَا، فَلَمَّا انْطَلَقْنَا قُلْنَا، أَوْ قَالَ بَعْضُنَا: وَاللَّهِ لاَ يُبَارَكُ لَنَا، أَتَيْنَا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَسْتَحْمِلُهُ فَحَلَفَ أَنْ لاَ يَحْمِلَنَا، ثُمَّ حَمَلَنَا، فَارْجِعُوا بِنَا إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنُذَكِّرُهُ، فَأَتَيْنَاهُ فَقَالَ: " مَا أَنَا حَمَلْتُكُمْ، بَلِ اللَّهُ حَمَلَكُمْ، وَإِنِّي وَاللَّهِ - إِنْ شَاءَ اللَّهُ - لاَ أَحْلِفُ عَلَى يَمِينٍ، فَأَرَى غَيْرَهَا خَيْرًا مِنْهَا، إِلَّا كَفَّرْتُ عَنْ يَمِينِي وَأَتَيْتُ الَّذِي هُوَ خَيْرٌ - أَوْ: أَتَيْتُ الَّذِي هُوَ خَيْرٌ وَكَفَّرْتُ عَنْ يَمِينِي - "

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து எங்களுக்கு வாகனம் (ஒட்டகம்) வேண்டும் எனக் கேட்டோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மறுத்து விட்டனர். மீண்டும் கேட்டோம். அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து மறுத்து விட்டனர். பின்னர் சில ஒட்டகங்கள் (மூன்று அல்லது ஐந்து) வந்து சேர்ந்தன. அதை எங்களுக்குத் தருமாறு கட்டளை யிட்டனர். அல்லாஹ்வின் தூதரே எங்களுக்கு வாகனம் தருவதில்லை என்று சத்தியம் செய்தீர்களே என்று கூறினோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நான் ஏதாவது சத்தியம் செய்த பின் அது அல்லாததைச் சிறந்ததாக நான் கருதினால் அந்தச் சிறந்ததை செய்து விட்டு சத்தியத்திற்குப் பரிகாரமும் செய்து விடுவேன் எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி)

நூல்: புகாரி 6623

சத்தியத்தை முறிப்பதன் பரிகாரம்

சத்தியத்தை முறிப்பதற்கு என்ன பரிகாரம் என்பதைப் பின்வரும் வசனத்தில் அல்லாஹ் விளக்குகிறான்.

உங்கள் சத்தியங்களுக்குரிய பரிகாரத்தை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். அல்லாஹ்வே உங்கள் அதிபதி. அவன் அறிந்தவன்; ஞானமுடையோன்.

திருக்குர்ஆன் 66:2

உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். மாறாக திட்டமிட்டுச் செய்யும் சத்தியங்களுக்காகவே உங்களைத் தண்டிப்பான். அதற்கான பரிகாரம், உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் உணவாக அளிக்கும் நடுத்தரமான உணவில் பத்து ஏழைகளுக்கு உணவளிப்பது, அல்லது அவர்களுக்கு உடையளிப்பது, அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்வது ஆகியவையே. (இவற்றில் எதையும்) பெறாதோர் மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும். நீங்கள் சத்தியம் செய்(து முறித்)தால், சத்தியத்திற்குரிய பரிகாரம் இவையே. உங்கள் சத்தியங்களைப் பேணிக் கொள்ளுங்கள்! நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ் இவ்வாறே தனது வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான்.

திருக்குர்ஆன் 5:89

நமது சத்தியங்களையும் நேர்ச்சைகளையும் சரியான முறையில் புரிந்து நடைமுறைப் படுத்தும் நன்மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்கியருள்வானாக!

16.07.2009. 21:56 PM

இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு

பொருளடக்கம்

குழந்தை பாக்கியத்தைக் கேட்க வேண்டும்.

​பெண்குழந்தைகளை வெறுக்கக் கூடாது.

குழந்தைகளைக் கொல்வது மாபெரும் குற்றம்.

குடும்பக்கட்டுப்பாடு செய்யலாமா?

குழந்தையின் காதில் பாங்கு சொல்ல வேண்டுமா?

தஹ்னீக்

பெயர் சூட்டுதல்

அகீகா

முடியின் எடைக்கு நிகரான வெள்ளியைக் கொடுக்க வேண்டுமா?

பால் புகட்டுதல்

கத்னா செய்தல்

பிள்ளைகளைக் கொஞ்ச வேண்டும்

குழந்தைப் பாசம் பெற்றோர்களை வழிகெடுத்து விடக் கூடாது

நீதமாக நடக்க வேண்டும்

குழந்தைகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்

வீரர்களாக வளர்க்க வேண்டும்

சிறியவர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும்

குழந்தைகளுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும்

செலவு செய்வது கடமை

வீண்விரயம் செய்வது கூடாது

தன்னிறைவு பெற்றவர்களாக விட்டுச் செல்ல வேண்டும்

சிறுவர்களுக்கு சலாம் கூறுதல்

விளையாட அனுமதிக்க வேண்டும்

விளையாட்டுப் பொருட்களை வாங்கித் தர வேண்டும்

அனுமதி கேட்டு உள்ளே வர வேண்டும்

தவறு செய்யும் போது கண்டிக்க வேண்டும்

பிள்ளைகளைச் சபிக்கக்கூடாது

கல்வி கற்றுத்தர வேண்டும்

உபதேசம் செய்ய வேண்டும்

ஒழுங்கு முறைகளைக் கற்றுத்தர வேண்டும்

மார்க்க அறிஞர்களாக ஆக்க பயிற்சி அளிக்க வேண்டும்

காது மூக்கு குத்தலாமா?

தாயத்து தொங்க விடக்கூடாது

ஓதிப் பார்க்கலாம்

பிள்ளைகள் திருந்தாவிட்டால்...

முன்னுரை

பிறக்கும் போது எல்லாக் குழந்தைகளும் நல்ல குழந்தைகளாகவே பிறக்கின்றார்கள். அவர்கள் தீயவர்களாக ஆவது பெற்றோர்கள் வளர்க்கும் முறையில் தான் உள்ளது.

பெற்றோர்கள் உண்மையான முஸ்லிம்களாக இருந்தால் பிள்ளைகளும் அவர்களைப் போன்றே தூய இஸ்லாமியச் சிந்தனையில் வளர்கிறார்கள். பெயரளவில் முஸ்லிம்களாக இருந்தால் குழந்தைகளும்  பெயரளவில் முஸ்லிம்களாக வளர்கிறார்கள். பெற்றோரின் கொள்கை கோட்பாடு குணநலன்கள் குழந்தைகளிடத்தில் பிரதிபலிப்பதைக் கண்கூடாகப் பார்த்து வருகிறோம்.

இதற்கு மாற்றமாக நல்லவர்களுக்குக் கெட்ட குழந்தைகளும் கெட்டவர்களுக்கு நல்ல குழந்தைகளும் பிறப்பதுண்டு. ஆனால் இது குறைவாகும்.

ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப்போல, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)தில்தான் பிறக்கின்றன. விலங்குகள் காதுகள் அறுக்கப்பட்டு பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? பெற்றோர்கள் தாம் குழந்தைகளை யூதர்களாகவோ கிறித்தவர்களாகவோ நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கிவிடுகின்றனர்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி (1359)

எனவே நம் குழந்தை ஒழுக்கத்திலும், மார்க்கத்திலும் நன்னடத்தையிலும் நற்குணத்திலும் சிறந்து விளங்க வேண்டும் என்று நினைத்தால் முதலில் நம்மிடத்தில் இவையெல்லாம் ஏற்பட வேண்டும். நமது நடவடிக்கைள் ஒவ்வொன்றும் இஸ்லாத்திற்கு உட்பட்டு அமைய வேண்டும்.

குழந்தைகளைப் பெற்றெடுப்பது பெரிய விஷயமல்ல. ஏனென்றால் ஆடு மாடு கோழி குதிரை இன்னும் கோடிக்கணக்கான உயிரினங்களும் குட்டியிடத்தான் செய்கின்றன. பெற்றெடுத்த குழந்தைகளைச் சரியான அடிப்படையில் நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் வளர்ப்பதில் தான் பெற்றோரின் திறமையுள்ளது.

பல பெற்றோர்கள் நல்லவர்களாக இருந்தாலும் குழந்தையை வளர்க்கும் முறையில் அவர்கள் தவறு செய்து விடுவதால் பிள்ளைகள் வழிகேட்டுக்குச் சென்றுவிடுகிறார்கள்.

மனிதன் சந்திக்கும் எல்லாப் பிரச்சனைகளுக்கும் அழகான தீர்வுகளை இஸ்லாம் கற்றுத்தருகிறது. இது இஸ்லாத்திற்கு மட்டும் உள்ள தனிச்சிறப்பாகும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எவ்வாறு வளர்க்க வேண்டும் என்பதையும் இஸ்லாம் கற்றுத் தருகிறது.

திருக்குர்ஆன் மற்றும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் போதனையின் அடிப்படையில் குழந்தைகளை வளர்க்கும் முறையை இந்நூல் விவரிக்கிறது. பெற்றோர்கள் கட்டாயம் இதைப் படித்துணர்ந்து இதனடிப்படையில் தங்கள் குழந்தைகளை வளர்க்க வேண்டும்.

எல்லாப் பெற்றோர்களும் இஸ்லாம் கூறும் குழந்தை வளர்ப்பு முறையைக் கையாண்டால் வளரும் குழந்தைகள் முழுக்க முழுக்க இறைவனுக்கு கட்டுப்பட்டு நடப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. பெற்றோர்களையும் மதித்து நடப்பார்கள்.

இப்ராஹீம் (அலை) தனது மகன் இஸ்மாயீலை முறையான அடிப்படையில் வளர்த்த காரணத்தினால் தான் பெரும் தியாகத்தை இறைவனுக்காக செய்வதற்கு இஸ்மாயீல் (அலை) அவர்கள் தயாரானார்கள்.

அவருடன் உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல்) அடைந்த போது  என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பது போல் கனவில் கண்டேன். நீ என்ன கருதுகிறாய் என்பதைச் சிந்தித்துக் கூறு   என்று கேட்டார்.  என் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்! அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள்   என்று பதிலளித்தார். இருவரும் கீழ்ப்படிந்து (தமது) மகனை அவர் முகம் குப்புறக் கிடத்திய போது, இப்ராஹீமே! அக்கனவை நீர் உண்மைப்படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம்   என்று அவரை அழைத்துக் கூறினோம்.

திருக்குர்ஆன் 37 : 102

குழந்தை பாக்கியத்தைக் கேட்க வேண்டும்

வயோதிகத்தை அடையும் போது பிள்ளைகள் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தனக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்று எல்லா தம்பதியினரும் ஆசைப்படுகிறார்கள். எனவே தான் குழந்தை பாக்கியம் கிட்டாதவர்கள் பல்வேறு மருத்துவமனைகளுக்குச் சென்று இதற்காக பல ஆயிரங்களை செலவு செய்துகொண்டிருக்கிறார்கள்.

குழந்தைகளைப் பெற்றெடுப்பதினால் இந்த உலகத்தில் இன்னும் ஏராளமான நன்மைகள் ஏற்படுகிறது. மறுமையிலும் பெற்றோர்கள் நன்றாக வாழ்வதற்கும் இன்பத்தை அனுபவிப்பதற்கும் நல்ல குழந்தைகள் காரணமாக அமைகின்றன, எனவே இந்த பாக்கியத்தை நாம் அனைவரும் கேட்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் நல்ல அடியானுக்கு சொர்க்கத்தில் அந்தஸ்தை உயர்த்துவான். அப்போது அந்த அடியான் என் இறைவா இது எனக்கு எப்படிக் கிடைத்தது என்று கேட்பான். அதற்கு அல்லாஹ் உனக்காக உன் குழந்தை பாவமன்னிப்புக் கேட்டதால் (உனக்குக் இந்த அந்தஸ்து கிடைத்தது.) என்று கூறுவான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : அஹ்மத் (10202)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்றுவிடுகின்றன; 1. நிலையான அறக்கொடை 2. பயன்பெறப்படும் கல்வி. 3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : முஸ்லிம் (3358)

ஈருலகத்திலும் பலனை அடைய வேண்டும் என்றால் பிறக்கும் குழந்தைகள் நல்ல குழந்தைகளாக வளர்க்கப்பட வேண்டும். பிள்ளையின் குணமும் நடத்தையும் கெட்டுவிட்டால் இவர்களே பெற்றோர்களுக்கு பெரும் சுமையாகவும் வேதனையாகவும் மாறிவிடுகிறார்கள்.

எனவே தான் இறைத்தூதர்கள் தங்களுக்குக் குழந்தை பாக்கியத்தை வேண்டும் போது நல்ல குழந்தைகளைத் தருமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள்.

எனக்குப் பின் உறவினர்கள் குறித்து நான் அஞ்சுகிறேன். என் மனைவியும் பிள்ளைப்பேறு அற்றவளாக இருக்கிறார். எனவே ஒரு பொறுப்பாளரை நீ எனக்கு வழங்குவாயாக! அவர் எனக்கும், யஃகூபின் குடும்பத்தாருக்கும் வாரிசாவார். என் இறைவா! அவரை (உன்னால்) பொருந்திக் கொள்ளப்பட்டவராக ஆக்குவாயாக!   என்று (ஸக்கரிய்யா) கூறினார்.

திருக்குர்ஆன் 19 : 6

இறைவா! உன்னிடமிருந்து எனக்கொரு தூய குழந்தையைத் தருவாயாக! நீ வேண்டுதலைச் செவியுறுபவன்   என்று தம் இறைவனிடம் ஸக்கரிய்யா வேண்டினார்.

திருக்குர்ஆன் 3 : 38

எங்கள் இறைவா! எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும், மக்களிலிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக! (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்குவாயாக!   என்று (நல்லடியார்கள்) கூறுகின்றனர்.

திருக்குர்ஆன் 25 : 74

நம்பிக்கை இழந்து விடக்கூடாது

தர்ஹாக்களுக்குச் சென்று அங்கு அடக்கம் செய்யப்பட்டவர்களிடம் பிரார்த்தனை செய்தால் குழந்தை கிடைக்கும் என்று பலர் கருதிக்கொண்டு தர்ஹாக்களுக்குச் சென்று வருகிறார்கள்.

குழந்தையைத் தருகின்ற சக்தி அல்லாஹ் ஒருவனிடத்தில் மட்டும் தான் உள்ளது. அவனே தான் விரும்புகின்றதை மனிதர்களுக்குத் தருகின்றான்.

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண்(குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண்(குழந்தை)களை வழங்குகிறான். அல்லது ஆண்களையும், பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன்; ஆற்றலுடையவன்.

திருக்குர்ஆன் 42 : 49

இறைவனிடம் பல வருடங்களாக பிரார்த்தனை செய்து குழந்தை பிறக்காவிட்டாலும் அல்லாஹ்வின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை இழந்துவிடக்கூடாது. தொடர்ந்து வேண்டிக்கொண்டே இருக்க வேண்டும். அவன் நாடினால் முதிய வயதில் கூட குழந்தை பாக்கியத்தை கொடுத்துவிடுவான்.

ஸக்கரிய்யா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆழமான நம்பிக்கையை வைத்திருந்தார்கள். முதிய வயதை அடைந்த போதும் அல்லாஹ்விடத்திலே குழந்தை பாக்கியத்தை கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

என் இறைவா! என் எலும்பு பலவீனமடைந்து விட்டது. தலையும் நரையால் மின்னுகிறது. என் இறைவா! உன்னிடம் பிரார்த்தித்ததில் நான் துர்ப்பாக்கியசாலியாக இருந்ததில்லை. எனக்குப் பின் உறவினர்கள் குறித்து நான் அஞ்சுகிறேன். என் மனைவியும் பிள்ளைப்பேறு அற்றவளாக இருக்கிறார். எனவே ஒரு பொறுப்பாளரை நீ எனக்கு வழங்குவாயாக!

திருக்குர்ஆன் 19 : 4

பெண்குழந்தைகளை வெறுக்கக்கூடாது.

பொதுவாக பெண் குழந்தை பிறப்பதை அதிகமானவர்கள் வெறுக்கிறார்கள். சில ஊர்களில் பெண் குழந்தைகளை பிறந்த உடனே கொலை செய்துவிடுகிறார்கள். இறைவன் கொடுத்தது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வது தான் இறைநம்பிக்கையாளரின் பண்பு. இறை நிராகரிப்பாளர்கள் தான் பெண் குழந்தைகளை இழிவாகக் கருதிவந்தார்கள்.

அவர்களில் ஒருவனுக்குப் பெண் குழந்தை பற்றி நற்செய்தி கூறப்பட்டால் அவனது முகம் கருத்து, கவலைப்பட்டவனாக ஆகிவிடுகிறான். அவனுக்குக் கூறப்பட்ட கெட்ட(தெனக் கருதிய) செய்தியினால் சமுதாயத்திலிருந்து மறைந்து கொள்கிறான். இழிவுடன் இதை வைத்துக் கொள்வதா? அல்லது மண்ணில் இதை (உயிருடன்) புதைப்பதா? (என்று எண்ணுகிறான்) கவனத்தில் கொள்க! அவர்கள் தீர்ப்பளிப்பது மிகவும் கெட்டது.

திருக்குர்ஆன் 16 : 58

பெண் குழந்தைகளைக் கொலை செய்தவர்களுக்கு எதிரான சாட்சியாக மறுமை நாளில் அக்குழந்தைகள் இறைவனிடம் முறையிடும்.

என்ன பாவத்துக்காக கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்டவள் விசாரிக்கப்படும் போது,

திருக்குர்ஆன் 81 : 8

பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள் பின்வரும் ஹதீஸ்களை மனதில் நிறுத்திக்கொண்டால் பெண் குழந்தையைப் பெற்றதற்காக ஒருபோதும் கவலைப்பட மாட்டார்கள்.

யார் இரு பெண்குழந்தைகளை, அவர்கள் பருவ வயதடையும்வரை பொறுப்பேற்று கருத்தாக வளர்க்கிறாரோ அவரும் நானும் மறுமை நாளில் இப்படி வருவோம்   என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கூறிவிட்டு, தம் விரல்களை இணைத்துக் காட்டினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல் : முஸ்லிம் 5127

ஒரு பெண்மணி தனது இரு பெண் குழந்தைகளுடன் யாசித்த வண்ணம் வந்தார். என்னிடம் அப்போது ஒரு பேரீச்சம் பழத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. எனவே அதை அவரிடம் கொடுத்தேன். அவர் அதை இரண்டாகப் பங்கிட்டு இரு குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்டார். அவர் அதிலிருந்து சாப்பிடவில்லை. பிறகு அவர் எழுந்து சென்று விட்டார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். நான் அவர்களிடம் இச்செய்தியைக் கூறியதும் அவர்கள்,   இவ்வாறு பல பெண் குழந்தைகளால் யார் சோதிக்கப்படுகின்றாரோ அவருக்கு அக்குழந்தைகள் நரகத்திலிருந்து அவரைக் காக்கும் திரையாக ஆவார்கள்   எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி 1418

யார் பெண் குழந்தைகளில் ஒன்றுக்குப் பொறுப்பேற்று நன்மை புரிவாரோ அவருக்கு அந்தக் குழந்தைகள் நரகத்திலிருந்து தடுக்கும் திரையாக இருப்பார்கள்   என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி 5995

குழந்தைகளைக் கொல்வது மாபெரும் குற்றம்

பெற்றெடுத்த குழந்தையைக் கொலை செய்வது இறை நிராகரிப்பாளர்களின் பண்பாகும். அல்லாஹ்வும் இறைத்தூதர் (ஸல்) அவர்களும் இதைத் தடைசெய்துள்ளார்கள். மேலும் இது பெரும்பாவங்களில் ஒரு பாவமாகும்.

இவ்வாறே இணை கற்பிப்போரில் அதிகமானோர் தமது குழந்தைகளைக் கொல்வதை அவர்களின் தெய்வங்கள் அழகாக்கிக் காட்டி, அவர்களை அழித்து, அவர்களது மார்க்கத்தையும் அவர்களுக்குக் குழப்பிவிட்டன.

திருக்குர்ஆன் 6 : 137

அறிவில்லாமல் மடமையின் காரணமாகத் தமது குழந்தைகளைக் கொன்றவர்களும், அல்லாஹ்வின் பெயரால் இட்டுக்கட்டி, அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியதைத் தடுக்கப்பட்டதாக ஆக்கிக் கொண்டோரும் நஷ்டம் அடைந்தனர்; வழி கெட்டனர்; நேர் வழி பெறவில்லை.

திருக்குர்ஆன் 6 : 140

வாருங்கள்! உங்கள் இறைவன் உங்களுக்குத் தடை செய்ததைக் கூறுகிறேன்   என்று (முஹம்மதே!) கூறுவீராக! அது,  நீங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்கக் கூடாது   என்பதே. பெற்றோருக்கு  உதவுங்கள்! வறுமையின் காரணமாக உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். வெட்கக்கேடான காரியங்களில் வெளிப்படையானதையும், இரகசியமானதையும் நெருங்காதீர்கள்! அல்லாஹ் தடை செய்துள்ளதால் எவரையும் (அதற்கான) உரிமை இருந்தால் தவிர கொல்லாதீர்கள்! நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான்.

திருக்குர்ஆன் 6 : 151

வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும்.

திருக்குர்ஆன் 17 : 31

நபியே! (முஹம்மதே!) நம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் வந்து  அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டோம்; திருட மாட்டோம்; விபச்சாரம் செய்ய மாட்டோம்; எங்கள் குழந்தைகளைக் கொல்ல மாட்டோம்; நாங்களாக இட்டுக் கட்டி எந்த அவதூறையும் கூற மாட்டோம்; நல்ல விஷயத்தில் உமக்கு மாறு செய்ய மாட்டோம்   என்று உம்மிடம் உறுதி மொழி கொடுத்தால் அவர்களிடம் உறுதி மொழி எடுப்பீராக! அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுவீராக! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன் 60 : 12

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அன்னையரைப் புண்படுத்துவது, (அடுத்தவருக்குத் தரவேண்டியதைத்) தர மறுப்பது, (அடுத்தவருக்கு உரியதைத்) தருமாறு கேட்பது, பெண் சிசுக்களை உயிருடன் புதைப்பது ஆகியவற்றை அல்லாஹ் தடை செய்துள்ளான்.

அறிவிப்பவர் : முஃகீரா பின் ஷுஅபா (ரலி)

நூல் : புகாரி 5975

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்,  பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பெரும் பாவங்களைத் தவிர்த்துவிடுங்கள்   என்று கூறினார்கள். மக்கள்,  அல்லாஹ்வின் தூதரே! அவை யாவை?   என்று கேட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்,  அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது, சூனியம் செய்வது, முறையின்றி கொல்லக் கூடாதென அல்லாஹ் புனிதப்படுத்திய உயிரைக் கொல்வது, வட்டியைப் புசிப்பது, அநாதைகளின் செல்வத்தை உண்பது, போரின்போது புறமுதுகிட்டு ஓடுவது, இறைநம்பிக்கை கொண்ட  அப்பாவிகளான பத்தினிப் பெண்கள் மீது அவதூறு கூறுவது ஆகியவையே (அந்தப் பெரும் பாவங்கள்)   என்று  கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 6857

குடும்பக்கட்டுப்பாடு செய்யலாமா?

கருவில் குழந்தை உருவாகுவதைத் தடுப்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் அஸ்ல் என்ற ஒரு முறை இருந்தது.

இல்லற வாழ்வின் போது ஆண் உச்சகட்ட நிலையை அடையும் போது தன் விந்தை மனைவியின் கற்ப அறைக்குள் செலுத்தாமல் வெளியே விட்டுவிடுவான். இம்முறைக்குத் தான் அஸ்ல் என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு செய்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதித்துள்ளார்கள் என்பதற்கு பல சான்றுகள் உள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலத்தில் குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் நாங்கள்  அஸ்ல்  செய்துகொண்டிருந்தோம்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)

நூல் : புகாரி 5209

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து (அல்லாஹ்வின் தூதரே) எனக்கு ஒரு அடிமைப் பெண் இருக்கிறாள்... அவள் எங்களுக்கு பணிவிடை செய்கிறாள். நான் அவளிடத்தில் உடலுறவு கொள்கிறேன். அவள் கற்பமாகிவிடுவாளோ என்று நான் அஞ்சுகிறேன் என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீ விரும்பினால் அஸ்ல் செய்துகொள். அவளுக்கென்று விதிக்கப்பட்டது அவளை வந்தடையும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)

நூல் : முஸ்லிம் 2606

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் நாங்கள் அஸ்ல் செய்து கொண்டிருந்தோம். இச்செய்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை எட்டியது. ஆனால் அவர்கள் எங்களைத் தடுக்கவில்லை.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)

நூல் : முஸ்லிம் 2610

மேலுள்ள செய்திகளைக் கவனிக்கும் போது அஸ்ல் செய்வது தடைசெய்யப்பட்ட ஒன்றல்ல என்பதை விளங்கிக்கொள்ளலாம். என்றாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்வது சிறந்தது என்றோ நன்மையான காரியம் என்றோ கூறவில்லை. மாறாக இதை தவிர்த்துக்கொள்வது நல்லது என்ற அளவில் தான் கூறியுள்ளார்கள். பின்வரும் செய்திகளை கவனிக்கும் போது இந்த முடிவுக்கு வரலாம்.

நாங்கள் அஸ்ல் செய்ய விரும்பினோம். எனவே அது பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டோம். அதற்கு அவர்கள் அதை நீங்கள் செய்யாமல் இருந்தால் தவறேதுமில்லையே. மறுமை நாள் வரை உருவாக வேண்டிய எந்த உயிரும் கட்டாயம் உருவாகியே தீரும் என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூ சயீத் அல்குத்ரீ (ரலி)

நூல் : புகாரி 2542

தற்காலிகமாக குழந்தை உருவாவதைத் தடுத்துக் கொள்வதற்கான வழி தான் அஸ்ல் என்பது. அவ்வாறு செய்வது சிறந்தது கிடையாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கருதியிருக்கும் போது நிரந்தரமாக குழந்தை உருவாகாதவாறு குடும்பக்கட்டுப்பாடு செய்வது முற்றிலும் தவறாகும்.

தற்காலிக குடும்பக் கட்டுப்பாடான அஸ்ல் செய்வதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதியளித்துள்ளதால் ஆணுறை, காப்பர்டி போன்ற நவீன சாதனங்களைப் பயன்படுத்தி தற்காலிகமாக குழந்தை பிறப்பதை தவிர்த்துக்கொள்வதற்கு மட்டும் அனுமதியுள்ளது.

குழந்தை பாக்கியம் என்பது அல்லாஹ் கொடுத்த ஒரு மாபெரும் பாக்கியம். போதுமான அளவு குழந்தைகளைப் பெற்றெடுத்த பின் நிரந்தர குடும்பக்கட்டுப்பாட்டை செய்யலாம் என்று பலர் நினைக்கிறார்கள். நிரந்தரக் குடும்பக்கட்டுப்பாட்டைச் செய்த பின் பெற்றெடுத்த குழந்தைகள் விபத்தில் சிக்கி இறந்துவிட்டால் மீண்டும் இவர்கள் குழந்தை பாக்கியத்தை எப்படி பெறமுடியும்?. இதை சிந்தித்துப் பார்த்தாலே யாரும் நிரந்தர குடும்பக்கட்டுப்பாட்டை செய்ய மாட்டார்கள்.

குழந்தையின் காதில் பாங்கு சொல்ல வேண்டுமா?

குழந்தை பிறந்த உடன் குழந்தையின் வலது காதில் பாங்கும், இடது காதில் இகாமத்தும் சொல்ல வேண்டும் என்று பலர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இவ்வாறு செய்வது நபிவழி என்றும் நம்புகிறார்கள். இந்தக் கருத்தில் சில ஹதீஸ்கள் இருப்பதால் அவற்றை அடிப்படையாகக்கொண்டு இதைச் செய்து வருகிறார்கள். ஆனால் அந்த ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவையாக உள்ளன.

ஃபாத்திமா (ரலி) அவர்கள் ஹஸன் (ரலி) அவர்களைப் பெற்றெடுத்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஸன் (ரலி) அவர்களின் காதில் பாங்கு சொன்னார்கள்

என்று ஒரு ஹதீஸ் திர்மிதியில் 1436 வது இலக்கத்தில் இடம்பெற்றுள்ளது.

இது ஆஸிம் பின் உபைதுல்லாஹ் என்பவர் வழியாக வருகிறது. இவர் பலவீனமானவர் என்று இப்னு முயீன் என்ற அறிஞரும், எதற்கும் தகுதியில்லாதவர் என்று அஹ்மத் அவர்களும், இவரது தகவல் மறுக்கப்பட வேண்டியது என்று புகாரி அவர்களும்,  இவரை ஆதாரமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று இப்னு சஅத் அவர்களும் கூறியுள்ளார்கள்.

மேலும் இதே செய்தி பைஹகீ எழுதிய ஷுஅபுல் ஈமான் என்ற நூலிலும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதை காசிம் பின் முதய்யப் என்பவரும், முஹம்மத் பின் யூனுஸ் என்பவரும் அறிவிக்கிறார்கள். இவ்விருவரும் பலவீனமானவர்கள் என்று இமாம்கள் கூறியுள்ளார்கள். எனவே இதை ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது என்பதால் குழந்தையின் காதில் பாங்கும் இகாமத் சொல்வதென்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தராத அனாச்சாரமாகும்.

தஹ்னீக்

குழந்தை பிறந்த உடன் பேரீச்சம்பழத்தை மென்று அதன் வாயில் தடவும் வழமை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்தது. இதற்கு தஹ்னீக் என்று அரபு மொழியில் சொல்லப்படுகிறது.

(முஹாஜிர்களிலேயே) இஸ்லாத்தில் பிறந்த முதல் குழந்தை அப்துல்லாஹ் பின் ஸுபைர் ஆவார். (அவர் பிறந்தவுடன்) அவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டுவந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓரு பேரிச்சம் பழத்தை எடுத்து அதை மென்று அவரது வாய்க்குள் நுழைத்தார்கள். அவரது வயிற்றினுள் முதலாவதாக நுழைந்தது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது உமிழ் நீரே ஆகும்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி 3910

எனக்கு ஓர் ஆண்குழந்தை பிறந்தவுடன் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டுவந்தேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதற்கு இப்ராஹீம் என்று பெயர் வைத்துவிட்டு பேரீச்சம்பழத்தை மென்று அதன் வாயில் தடவினார்கள். அதற்காக பிரார்த்தனை செய்துவிட்டு என்னிடம் ஒப்படைத்தார்கள். (இப்ராஹீம்) அபூமூஸாவின் மக்களில் மூத்தவராக இருந்தார்.

அறிவிப்பவர் : அபூமூஸா (ரலி)

நூல் : புகாரி 5467

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்பதால் அவர்களுக்கான சிறப்புத் தகுதியாகத் தான் இதை கருத முடியும். அவர்களின் உமிழ் நீர் பரகத் என்று சொல்ல முடியும். மற்ற மனிதர்களுக்கு இந்தத் தகுதி இல்லை.

உமிழ் நீர் மூலம் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் என்று கண்டறியப்பட்டுள்ளதால் பெரியவர்கள் மென்று குழந்தைக்கு கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உரிய சிறப்பை மற்றவர்களுக்கு கொடுக்கக் கூடாது.

பெயர் சூட்டுதல்

குழந்தை பிறந்தவுடன் நல்ல பெயர் சூட்ட வேண்டும் என்று  நாம் ஆசைப்படுகின்றோம். அந்தப் பெயருக்கு ஏற்றார் போல் அக்குழந்தை திகழ வேண்டும் என்ற எண்ணத்தில் அதற்குப் பெயர் சூட்டுகிறோம். பலர் தங்களுடைய குழந்தைகளுக்கு அழகிய பெயர்களை வைத்தாலும் சிலர் மோசமான பெயர்ளை சூட்டிவிடுகிறார்கள்.

இதனால் எந்தப் பாதிப்பும் பிற்காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படாது என்று நினைக்கின்றார்கள். உதாரணமாக மைதீன் பிச்சை, சீனி,  பக்கீர், நாகூரா, ஆத்தங்கரையா, காட்டுபாவா போன்ற விகாரமான பெயர்களை வைக்கின்றார்கள். இன்னும் பொருள் தெரியாத பல பெயர்களையும் சூட்டுகிறார்கள்.

இது போன்ற பெயர்கள் சூட்டப்பட்டவர்கள் பள்ளிக் கல்வியைக் கற்கும் போது சக நண்பர்களால் கேலி செய்யப்படுகிறார்கள். பிறரிடத்தில் தன்னை அறிமுகம் செய்யும் நேரத்தில் தன் பெயரைக் கூற வெட்கப்படுகிறார்கள். தன் பெயரைக் கூறி யாராவது அழைத்தால் அவர்களுக்குள்ளே ஒரு கூச்சம் தோன்றுகிறது.

அப்பெயரை மாற்றுவதற்கான முழு முயற்சியில் ஈடுபடுகின்றார்கள்.

இன்னும் பலர் தங்கள் பகுதியில் அல்லது தான் அறிந்த வகையில் யாரும் வைக்காத பெயரை குழந்தைக்கு வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு பெயரின் ஓசைக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். ஆனால் அதன் பொருளை கவனிக்கத் தவறிவிடுகிறார்கள். இது விரும்பத்தக்கது அல்ல.

சிறந்த பெயர்களை வைப்போம்

பொதுவாக எல்லா விஷயங்களையும் அழகுறச் செய்ய வேண்டும். இந்த விதியை அவசியம் பெயர் சூட்டும் போது கவனிக்க வேண்டும். ஏனென்றால் அழகானதையே அல்லாஹ் விரும்புகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நிச்சயமாக அல்லாஹ் அழகானவன். அவன் அழகையே விரும்புகிறான்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல் : முஸ்லிம் 147

அல்லாஹ்வின் பெயருடன் அப்து (அடிமை) என்ற வார்த்தையைச் சேர்த்து பெயர் வைப்பது அல்லாஹ்விற்கு மிக விருப்பமானதாகும்.

உங்கள் பெயர்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது, அப்துல்லாஹ் (அல்லாஹ்வின் அடிமை) மற்றும் அப்துர் ரஹ்மான் (அருளாளனின் அடிமை) ஆகியவையாகும்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : முஸ்லிம் 4320

மறுமை நாளில் உங்களுடைய தந்தையின் பெயருடன் உங்ளது பெயரால்  நீங்கள் அழைக்கப்படுவீர்கள். ஆகையால் உங்களது பெயர்களை அழகுபடுத்திக் கொள்ளுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ தர்தா (ரலி)

நூல் : அஹ்மத் 20704

மேற்கண்ட ஹதீஸ்கள் அனைத்தும் நல்ல பெயர்களை வைக்க வேண்டும் என்று கூறுகின்றது.

நபிமார்களின் பெயர்களை வைக்கலாம்

எனக்கு ஆண் குழந்தையொன்று பிறந்தது. அக்குழந்தையை நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அக்குழந்தைக்கு  இப்ராஹீம்  எனப் பெயர் சூட்டிப் பேரீச்சம்பழத்தை மென்று குழந்தையின் வாயில் அதைத் தடவினார்கள்.

அறிவிப்பவர் : அபூ மூஸா (ரலி)

நூல் முஸ்லிம் : 4342

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்கு யூசுஃப் என்று பெயர் வைத்துவிட்டு எனது தலையை தடவிக்கொடுத்தார்கள்.

அறிவிப்பவர் : யூசுஃப் (ரலி)

நூல் : அஹ்மத் 15809

பெயரில் இணைவைப்பு இருக்கக்கூடாது

அல்லாஹ்வுடைய தன்மையைக் குறிக்கும் பெயர்களைச் சூட்டுவது கூடாது. இன்று வழக்கில் ஷா ஆலம் (பிரபஞ்சத்தின் அரசன்) ஜஹாங்கீர் (உலகை வெற்றி கொண்டவன்) ஷாஜஹான் (உலகின் அரசன்) ஷாகுல் ஹமீது புகழுக்குரியவனின் அரசன் ஆகிய பெயர்கள் சூட்டப்டுகின்றன. இவற்றில் இணைவைப்பு கலந்திருப்பதால் இப்பெயர்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

பெயர் சூட்டும் போது அதன் பொருளில் இணைவைப்பு தென்படுகிறதா என்று கவனித்து சூட்ட வேண்டும். இதைப் பின்வரும் ஹதீஸ்களிலிருந்து விளங்கிக்கொள்ளலாம்.

மறுமை நாளில் அல்லாஹ்விடத்தில் மிக வெறுப்பிற்குரிய பெயரைக் கொண்டவன் மலிகுல் அம்லாக் (அரசர்களுக்கெல்லாம் அரசன்) என்ற பெயருடையவனாவான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 6205

அல்லாஹ்வின் பெயரை மனிதர்களுக்கு பெயராக வைக்கக் கூடாது என்றாலும் சில பெயர்கள் அல்லாஹ்வுக்கும், மனிதர்களுக்கும் குர்ஆன் ஹதீஸ்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் அல்லாஹ்வுக்கு பயன்படுத்தும் போது அவனது தகுதிக்கு ஏற்ற பொருளும். மனிதர்களுக்குப் பயன்படுத்தும் போது அவனது பலவீனத்துக்கு ஏற்ற பொருளும் கொடுக்க வேண்டும்.

மனிதனை ஸமீவுன் எனக் கூறும் போது அனைத்தையும் செவியுறுபவன்  என்று கூற முடியாது. ஒரு நேரத்தில் இரண்டு பேரின் குரலைக் கூட அவனால் கேட்க முடியாது.

இது போலவே பார்ப்பவன், சக்தியுள்ளவன், அன்பு செலுத்துபவன், உயர்ந்தவன் போன்ற பண்புகள் மனிதர்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அனைத்தையும் பார்ப்பவன், அனைத்தின் மீதும் சக்தி உள்ளவன், நிகரற்ற அன்புடையவன், அனைத்தையும் விட உயர்ந்தவன் என அல்லாஹ்வைப் பற்றி பேசும் போது புரிந்து கொள்ள வேண்டும். மனிதர்களுக்குப் பயன்படுத்தும் போது சாதாரணமான பொருளில் புரிந்து கொள்ள வேண்டும்.

ஸமீவுன் பஸீருன் (பார்ப்பவன், கேட்பவன்) என்ற தனது பண்புகளை மனிதர்களுக்கும் அல்லாஹ் பயன்படுத்தியதை அல்குர்ஆன் 76:2 வசனத்தில் காணலாம்.

ஜப்பார் என்ற தனது பண்பை மனிதர்களுக்கும் அல்லாஹ் பயன்படுத்தியுள்ளதை 11:59, 14:15, 40:35 ஆகிய வசனங்களில் காணலாம்.

ஹஸீப் என்ற தனது பண்பை மனிதனுக்கும் அல்லாஹ் பயன்படுத்தியிருப்பதை 17:14 வசனத்தில் காணலாம்.

ஃகபீர் என்ற தனது பண்பை 25:59 வசனத்தில் மனிதர்களுக்கும் அல்லாஹ் பயன்படுத்தி இருக்கிறான்.

ரப்பு என்ற தனது பண்பை அல்லாஹ் மனிதர்களுக்கும் பயன்படுத்தியிருப்பதை 12:42, 12:50, 12:23 ஆகிய வசனங்களில் காணலாம்.

அஸீஸ் என்ற தனது பண்பை மனிதர்களுக்கும் அல்லாஹ் பயன்படுத்தியிருப்பதை 12:30, 12:51, 12:78, 12:88 ஆகிய வசனங்களில் காணலாம்.

அலீம் என்ற தனது பண்பை மனிதர்களுக்கும் அல்லாஹ் பயன்படுத்தியிருப்பதை 7:109-112, 10:79, 12:76, 15:53, 26:34, 26:37, 51:28 ஆகிய வசனங்களில் காணலாம்.

அலீ  என்ற அல்லாஹ்வின் பெயர் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மருமகன் அலீ (ரலி) அவர்களுக்கும் சூட்டப்பட்டது. அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாற்றவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் ரஹீம் எனக் குறிப்பிட்டுள்ளான். எனவே அல்லாஹ்வும் நபியும் ஒன்று தான். அல்லாஹ்விடம் கேட்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கலாம் என்றெல்லாம் சில அறிவீனர்கள் கூறி வருகின்றனர். அவர்களுக்காகவே இந்த விபரங்களை நாம் குறிப்பிடுகிறோம்.

அல்லாஹ்வின் பல பண்புகள் மனிதர்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்த இடங்களில் நாம் எப்படிப் புரிந்து கொள்கிறோம். அல்லாஹ்வைக் குறிக்கும் போது அவனது தகுதிக்கேற்பவும் மனிதர்களைக் குறிக்கும் போது அவர்களின் நிலைமைக் கேற்பவும் தான் புரிந்து கொள்கிறோம்.

அது போலவே தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் ரஹீம் என்று குறிப்பிட்டுள்ளதையும் புரிந்து கொள்ள வேண்டும். அது போலவே தான் மற்ற மனிதர்களை ரஹீம் எனக் கூறப்படும் போதும் புரிந்து கொள்ள வேண்டும்.

கெட்டவர்களின் பெயரைச் சூட்டக்கூடாது

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியான உம்முசலமாவின் சகோதரனுக்கு ஒரு ஆண்குழந்தைப் பிறந்தது. அவர்கள் (உம்முசலமாவின் குடும்பத்தார்கள்) அக்குழந்தைக்கு வலீத் என்று பெயர் வைத்தார்கள். (இதை அறிந்தவுடன்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எகிப்து நாட்டு மன்னர்களின் பெயர்களையா அதற்கு வைத்தீர்கள்? இந்தச் சமுதாயத்தில் ஒரு மனிதன் தோன்றுவான். அவனுக்கு வலீத் என்று சொல்லப்படும். ஃபிர்அவன் அவனது சமுதாயத்திற்கு தீங்கிழைத்ததை விட அவன் இந்த சமுதாயத்திற்கு அதிகம் தீங்கிழைப்பான் என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : உமர் பின் ஹத்தாப் (ரலி)

நூல் : அஹ்மத் 104

தீயவர்களின் பெயர்களைச் சூட்டுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெறுத்துள்ளார்கள் என்பதை மேலுள்ள ஹதீஸின் மூலம் விளங்கிக்கொள்ள முடிகிறது.

குறிப்பிட்ட சில பெயர்களை சூட்டக்கூடாது

சில பெயர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுக் கூறி அவற்றை சூட்டக்கூடாது என்று கூறியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் அடிமைகளுக்கு அஃப்லஹ் (வெற்றியாளன்), ரபாஹ் (இலாபம்), யசார் (சுலபம்), மற்றும் நாஃபிஉ (பயனளிப்பவன்) ஆகிய நான்கு பெயர்களைச் சூட்ட வேண்டாமென எங்களுக்குத் தடை விதித்தார்கள்.

அறிவிப்பவர் : சமுரா பின் ஜுன்தப் (ரலி)

நூல் : முஸ்லிம் 4328

பெயர் மாற்றம் செய்யலாம்

மோசமான அர்த்தங்களைக் கொண்ட பெயர்களைச் சூட்டக்கூடாது. பெற்றோர்கள் அறியாமையினால் சூட்டிவிட்டால் அப்பெயர்களை மாற்றிவிட்டு நல்ல அர்த்தங்களைக் கொண்ட பெயர்களை வைத்துக் கொள்ளலாம்.

முஸய்யப் (ரலி) அவர்களின் தந்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடத்தில் வந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உங்களது பெயர் என்ன என்று வினவினார்கள். அதற்கு அவர் ஹஸ்ன் (முரடு) என்று சொன்னார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (இனிமேல் உமது பெயர்) சஹ்ல் (இலகு) ஆகும் என்று கூறினார்கள். அதற்கு அவர் எனது தந்தை எனக்கு இட்ட பெயரை நான் மாற்ற மாட்டேன் என்று கூறிவிட்டார். (இந்த ஹதீஸை அறிவிக்கும் முஸைய்யப் அவர்கள் கூறுகிறார்கள்.) இதன் பின்னர் எங்களிடம்  (குணநலன்களில்) முரட்டுத்தன்மை தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது.

அறிவிப்பவர் : முஸைய்யப் (ரலி)

நூல் : புகாரி 6190

ஸைனப் (ரலி) அவர்களுக்கு (முதலில்)  பர்ரா (நல்லவள்) என்ற பெயர் இருந்தது. அப்போது  அவர் தம்மைத் தாமே பரிசுத்தப் படுத்திக் கொள்கிறார்   என்று (மக்களால்) சொல்லப்பட்டது. ஆகவே, அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்  ஸைனப்  என்று பெயர் சூட்டினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 6192

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆசியாவின் (மாறுசெய்பவள்) பெயரை மாற்றி (அவரிடம்) நீ ஜமீலாவாகும் (அழகானவள்) என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூல் : அபூதாவூத் 4301

ஆஸியா (عَاصِيَة) என்பதின் பொருள் மாறுசெய்பவள் என்பதாகும். இதில் முதலாவது எழுத்தாக அய்னும் இரண்டாவது எழுத்தாக ஸாதும் இடம்பெற்றுள்ளது. இந்தப் பெயரை வைப்பது கூடாது.

ஆசியா (آسٍيَة)  என்பதின் பொருள் பின்பற்றுபவள் என்பதாகும். இதில் முதலாவதாக அலிஃபும் இரண்டாவதாக சீனும் இடம்பெற்றுள்ளது. இப்பெயரை வைப்பதற்குத் தடையில்லை.

அஸ்ரம் என்று சொல்லப்பட்ட ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வருகை தந்த நபர்களில் ஒருவராக இருந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரிடம் உம் பெயர் என்ன என்று வினவினார்கள். (அதற்கு) அவர் என் பெயர் அஸ்ரமாகும் (காய்ந்த செடிக் கொத்து) என்று கூறினார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாறாக உன் பெயர் சுர்ஆவாகும் (மணிகள் கொண்ட பசுமையான செடிக்கொத்து)  என்று (பெயர்மாற்றிக்) கூறினார்கள்.

அறிவிப்பவர் : உஸாமா பின் அஹ்தரீ (ரலி)

நூல் : அபூதாவூத் 4303

பெயர்வைக்கும் காலம்

மர்யமே அல்லாஹ் தன் வார்த்தை பற்றி உமக்கு நற்செய்தி கூறுகின்றான். மர்யமின் மகனான ஈஸா என்னும் மஸீஹ் என்பது அவரது பெயர். இவ்வுலகிலும், மறுமையிலும் தகுதிமிக்கவராகவும் (இறைவனுக்கு) நெருக்கமானவராகவும் இருப்பார் என்று வானவர்கள் கூறியதை நினைவூட்டுவீராக.

திருக்குர்ஆன் 3 : 45

ஸகரிய்யாவே ஓரு புதல்வன் பற்றி உமக்கு நாம் நற்செய்தி கூறுகிறோம். அவரது பெயர் யஹ்யா இப்பெயரிடப்பட்டவரை இவருக்கு முன் நாம் ஏற்படுத்தியதில்லை. (என இறைவன் கூறினான்.)

திருக்குர்ஆன் 19 : 7

முதல் வசனத்தில் ஈஸா (அலை) அவர்கள் பிறக்கப் போவதை மர்யம் (அலை) அவர்களிடம் மலக்குமார்கள் கூறுகிறார்கள். அப்படி கூறும் போது ஈஸா என்ற பெயரையும் சேர்த்துக் கூறுகிறார்கள். இரண்டாம் வசனத்தில் ஸகரிய்யா (அலை) அவர்களிடம் குழந்தை பிறக்கப் போவதாக அல்லாஹ் சுபச்செய்தி கூறுகின்றான். பிறக்கப் போகும் குழந்தைக்கு அல்லாஹ் யஹ்யா என்று பெயரும் சூட்டுகின்றான். குழந்தை பிறக்கும் முன்பே பெயர் சூட்டலாம் என்பதை இதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.

அவர் ஈன்றெடுத்த போது  என் இறைவா பெண் குழந்தையாக ஈன்றெடுத்து விட்டேன் எனக் கூறினார். அவர் எதை ஈன்றெடுத்தார் என்பதை அல்லாஹ் நன்கு அறிவான்.  ஆண் பெண்ணைப் போன்றவன் அல்ல. நான் இவளுக்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன். விரட்டப்பட்ட ஷைய்தானை விட்டும் இவளுக்கும் இவளுடைய வழிதோன்றல்களுக்கும் உன் பாதுகாப்பை வேண்டுகிறேன் எனவும் அவர் கூறினார்.

திருக்குர்ஆன் 3 : 36

குழந்தை பிறந்த பிறகும் பெயர் சூட்டலாம் என்பதை மேலுள்ள வசனத்திலிருந்து புரிந்துகொள்ளலாம்.

ஓவ்வொரு குழந்தையும் அகீகாவுடன் பிணைக்கப்பட்டுள்ளது. அது பிறந்த ஏழாம் நாளில் அதற்காக (ஆடு) அறுக்கப்படும். அதை விட்டு நோவினை (தலை முடி) அகற்றப்படும். அதற்கு பெயரும் வைக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : சமுரா (ரலி)

நூல் : அஹ்மத் 19327

இந்த ஹதீஸில் ஏழாவது நாள் குழந்தைக்குப் பெயர் வைக்கப்படும் என்று வந்துள்ளது. இதனடிப்படையில் குழந்தை பிறந்து ஏழாவது நாளும் பெயர் சூட்டலாம்.

ஆலிம்கள் தான் பெயர் வைக்க வேண்டுமா?

ஆலீம்கள்தான் குழந்தைக்குப் பெயர் வைக்க வேண்டும் என்று பலர் கருதுகிறார்கள். பெற்றோர்களே குழந்தைக்கு பெயர்வைக்க அதிக தகுதியானவர்கள்.

மர்யம் (அலை) அவர்களுக்கு அவர்களின் தாயார் தான் பெயர் வைத்தார்கள். ஆலிம்கள் தான் பெயர்சூட்ட வேண்டும் என்றிருந்தால் மர்யம் (அலை) அவர்களின் தாயார் அன்று பெரும் ஆலிமாகவும் நபியாகவும் விளங்கிய ஸகரிய்யா (அலை) அவர்களிடம் சென்று பெயர்வைக்கச் சொல்லியிருப்பார்கள். ஆனால் அவர்கள் சுயமாகவே தன் விருப்பப்படியே பெயர்வைத்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பிறந்த அனைத்துக் குழந்தைக்கும் பெருமானா ர் (ஸல்) அவர்கள் பெயரிடவில்லை. சஹாபாக்கள் தாங்களாகவே பெயர் சூட்டினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைத் தடுக்கவில்லை.

அகீகா

குழந்தை பிறந்த ஏழாம் நாளில் ஆண்குழந்தையாக இருந்தால் அதற்காக இரண்டு ஆடுகளையும், பெண்குழந்தையாக இருந்தால் அதற்காக ஓரு ஆட்டையும் அறுத்து ஏழை எளியவர்களுக்கும் உறவினர்களுக்கும் உணவளிப்பதற்கு அகீகா என்று சொல்லப்படுகின்றது.

இவ்வாறு செய்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளார்கள். ஆனால் கடமையாக்கவில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பையன் (பிறந்த) உடன் அகீகா (கொடுக்கப்படல்) உண்டு. ஆகவே அவனுக்காக (ஆடு அறுத்து) குர்பானி கொடுங்கள். அவன் (தலை முடி களைந்து) பாரத்தை இறக்கிவிடுங்கள் என்று அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கின்றேன்.

அறிவிப்பவர் : சல்மான் பின் ஆமிர் (ரலி)

நூல் : புகாரி 5472

எத்தனை ஆடுகள் அறுக்க வேண்டும்?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அகீகாவைப் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் மாறுசெய்வதை நான் விரும்ப மாட்டேன். யாருக்கேனும் குழந்தை பிறந்து அதற்காக அவர் (ஆட்டை) அறுத்து வணக்கம் புரிய விரும்பினால் அவர் ஒரே மாதிரியான இரண்டு ஆடுகளை ஆண் குழந்தைக்காகவும் ஒரு ஆட்டை பெண் குழந்தைக்காகவும் கொடுக்கட்டும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல் : அஹ்மத் 6530

விரும்புபவர் அகீகா கொடுக்கட்டும் என்று மேலுள்ள ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் அகீகா கொடுப்பது கடமையில்லை. கொடுப்பது சிறந்தது என்பது அறிந்து கொள்ளலாம்.

ஆண்குழந்தைக்காக ஓரு ஆட்டை அறுத்துப் பலியிடுவதற்கும் ஆதாரம் உள்ளது. இதை பின்வரும் ஹதீஸ் கூறுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஸனுக்கும், ஹுஸைனுக்கும் ஒரு ஆட்டை அகீகாவாக தந்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : அபூதாவூத் 2458

பெற்றோருக்கு பதிலாக மற்றவர்கள் கொடுக்கலாமா?

பெற்றோருக்குப் பதிலாக குழந்தையின் உறவினர்கள் அகீகாவை நிறைவேற்றுவதற்கு அனுமதி உள்ளது. பெற்றோர்கள் தான் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனை எதுவும் இல்லை.

குழந்தைக்காக ஆடு அறுக்கப்படும் என்று தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். பெற்றோர்கள் தான் அகீகா கொடுக்க வேண்டுமென்றால் குழந்தையின் பெற்றோர்கள் அறுக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருப்பார்கள்.

ஓவ்வொரு குழந்தையும் அதற்கான அகீகாவுடன் பிணையாக்கப்பட்டுள்ளது. அது (பிறந்த) ஏழாவது நாளில் (ஆட்டை) அதற்காக அறுக்கப்படும். அதன் முடி களையப்பட்டு அதற்கு பெயர் சூட்டப்படும்.

அறிவிப்பவர் : சமுரா பின் ஜுன்துப் (ரலி)

நூல் : அபூதாவூத் 2455

மேலும் அலி (ரலி) ஃபாத்திமா (ரலி) ஆகிய இருவருக்கும் பிறந்த ஹஸன் மற்றும் ஹுஸைன் (ரலி) அவர்களுக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அகீகா கொடுத்துள்ளார்கள். குழந்தையின் உறவினர்கள் யார் வேண்டுமானலும் அகீகா கொடுக்கலாம் என்பதை இதன் மூலம் அறியலாம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஸன் மற்றும் ஹுஸைன் (ஆகிய இருவருக்காக) அகீகா கொடுத்தார்கள்.

அறிவிப்பவர் : புரைதா (ரலி)

நூல் : நஸயீ 4142

அகீகா கொடுப்பவர் இறைச்சியை உண்ணலாமா?

அகீகா கொடுப்பவர்கள் அறுக்கப்பட்ட பிராணியின் இறைச்சியை உண்பதற்கு எந்தத் தடையும் இல்லை. ஹஜ்ஜுப் பெருநாளன்று அறுக்கப்படும் குர்பானிப் பிராணியின் இறைச்சியை குர்பானி கொடுப்பவர் உண்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடைவிதிக்கவில்லை. குர்பானியும், அகீகாவும் இறைவனுக்குச் செலுத்தப்படுகின்ற வணக்கமாக இருப்பதால் இவை இரண்டுக்கும் ஒரே வகையான சட்டம்தான்.

ஹஜ்ஜின் போது அறுக்கப்படுகின்ற பிராணியை அறுப்பவர்கள் தானும் உண்டு ஏழை எளியவர்களுக்கும் உண்ணக் கொடுக்க வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகின்றான் இவ்வாறே அகீகா விஷயத்திலும் நடந்துகொள்ள வேண்டும்.

அதை நீங்களும் உண்ணுங்கள்! கஷ்டப்படும் ஏழைகளுக்கும் கொடுங்கள்!

திருக்குர்ஆன் 22 : 28

ஏழாவது நாளுக்குப் பிறகு அகீகா கொடுக்கலாமா?

அகீகா என்பது குழந்தை பிறந்த ஏழாவது நாள் கொடுக்கப்பட வேண்டும் என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் கூறுகின்றன. ஆனால் சில பலவீனமான ஹதீஸ்களில் பதினான்காம் நாளும் இருபத்து ஒன்றாம் நாளும் கொடுக்கலாம் என்று வந்துள்ளது.

அகீகா(வாக கொடுக்கப்படும் பிராணி) ஏழாவது நாளும் பதினான்காம் நாளும் இருபத்து ஓன்றாம் நாளும் அறுக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : புரைதா (ரலி)

நூல் : பைஹகீ (பாகம் 9 பக்கம் 303)

இந்த ஹதீஸ் அல்முஃஜமுல் அவ்ஸத் மற்றும் அல்முஃஜமுஸ்ஸஹீர் போன்ற நூல்களிலும் இடம் பெற்றுள்ளது. இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் இஸ்மாயீல் பின் முஸ்லிம் என்ற பலகீனமானவர் இடம்பெறுகிறார்.

பெற்றோர்கள் தனக்கு அகீகா கொடுக்காததால் பெரியவராக ஆன பின்பு தனக்குத் தானே அகீகா கொடுக்கலாமா? என்று சிலருக்குச் சந்தேகம் ஏற்படுகிறது. இவ்வாறு செய்வதற்கு நபிமொழிகளில் ஆதாரம் எதுவும் இல்லை.

அகீகா என்ற வணக்கம் குழந்தை பிறந்து ஏழாவது நாள் செய்யப்பட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் அன்று தான் இவ்வணக்கத்தைச் செய்ய வேண்டும். இந்த நாளைக் கடந்த பிறகு கொடுத்தால் அது சாதாரண தர்மமாக ஆகும். அகீகா கொடுப்பதற்குரிய நன்மை கிடைக்காது.

அகீகா கடமையில்லாத காரணத்தினால் கடமையானவைகளை பின்பு நிறைவேற்றுவதைப் போன்று இதை நிறைவேற்ற வேண்டியதில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்லாத்திற்கு வந்த பின் தனக்காகவோ அல்லது அவர்களது தோழர்களுக்காகவோ அகீகா கொடுக்கவில்லை. நபித்தோழர்களும் அவ்வாறு செய்யவில்லை. எனவே இந்தப் புதிய வழிமுறையை நாம் ஏற்படுத்க்கூடாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நபியாக அனுப்பப்பட்ட பிறகு தனக்காக அகீகா கொடுத்தார்கள் என்று சில ஹதீஸ்கள் வருகின்றது. இவையனைத்தும் பலவீனமான செய்திகளாகும்.

பிராணியின் எலும்பை உடைக்கலாமா?

அகீகா கொடுக்கப்படும் பிராணியின் எலும்பை உடைக்கக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு ஹதீஸ் உள்ளது. ஆனால் இது பலவீனமான செய்தியாகும். எனவே பிராணியின் எலும்பை உடைப்பதற்கு தடையேதும் இல்லை.

ஹஸன் ஹுஸைன் ஆகிய இருவருக்காக ஃபாத்திமா (ரலி) அவர்கள் அகீகா கொடுத்த போது நீங்களும் (இதிலிருந்து) உண்ணுங்கள். (பிறருக்கும்) உண்ணக்கொடுங்கள். இதன் எழும்பை உடைத்துவிடாதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இந்தச் செய்தி இமாம் அபூதாவூத் அவர்கள் எழுதிய அல்மராசீல் என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் செய்தியை முஹம்மத் பின் அலீ என்பவர் அறிவிக்கிறார். இவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்திக்கவில்லை. இவருக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் மத்தியில் சில அறிவிப்பாளர்கள் விடுபட்டுள்ளார்கள். எனவே இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.

பெயர் வைத்தலும் முடியைக் களைதலும்

அகீகா கொடுக்கும் போதே குழந்தைக்குப் பெயர் வைத்து அதன் முடியைக் களைவது நபிவழியாகும்.

ஒவ்வொரு குழந்தையும் அதற்கான அகீகாவுடன் பிணையாக்கப்பட்டுள்ளது. அது (பிறந்த) ஏழாவது நாளில் (ஆடு) அதற்காக அறுக்கப்படும். அதன் முடி களையப்பட்டு அதற்கு பெயர் சூட்டப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : சமுரா பின் ஜ ன்துப் (ரலி)

நூல் : அபூதாவூத் 2455

தலைமுடி முழுவதையும் களைய வேண்டும்

குழந்தையின் முடியைக் களையும் போது பாதியை மழித்து பாதியை விட்டுவிடக்கூடாது. அறைகுறையாக மழிப்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.

தலையின் ஒரு பகுதி சிரைக்கப்பட்டு மறுபகுதி சிரைக்கப்படாமலிருந்த ஒரு சிறுவனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். அப்போது இவ்வாறு செய்வதை அவர்கள் தடைசெய்தார்கள். (சிரைத்தால்) முழுமையாக சிரைத்துவிடுங்கள். (முடியை வைக்க நினைத்தால்) முழுமையாக விட்டுவிடுங்கள் என்று கூறினார்கள்

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : நஸயீ 4962

முடியின் எடைக்கு நிகராக வெள்ளியைத் தர்மம் செய்ய வேண்டுமா?

பிறந்த குழந்தையின் முடியை எடுத்து அதன் எடைக்கு நிகரான வெள்ளியைத் தர்மம் செய்வது நபிவழி என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு சில ஹதீஸ்களையும் ஆதாரமாகக் காட்டுகிறார்கள். ஆனால் அவை அனைத்தும் பலவீனமான செய்திகளாக உள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஸன் (ரலி) அவர்களுக்கு ஓரு ஆட்டை அகீகாவாக கொடுத்தார்கள். (தனது மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களை நோக்கி) ஃபாத்திமாவே அவருடைய (ஹஸன்) தலையை மழித்து அவரது முடியின் எடைக்கு நிகராக வெள்ளியைத் தர்மம் செய்வீராக என்று கூறினார்கள். எனவே நான் அதை நிறுத்துப் பார்த்தேன். அதனுடைய எடை ஒரு திர்ஹம் அல்லது சில திர்ஹம்களின் எடையாக இருந்தது.

அறிவிப்பவர் : அலீ (ரலி)

நூல் : திர்மிதி 1439

இந்த ஹதீஸைப் பதிவுசெய்த திர்மிதி அவர்களே இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் அறுந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். ஏனெனில் இதனுடைய அறிவிப்பாளர்களில் ஒருவரான முஹம்மத் பின் அலீ என்பவர் அலீ (ரலி) அவர்களைச் சந்திக்கவில்லை. இந்த வகையில் இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இதே கருத்தில் 25930 வது ஹதீஸாக அஹ்மதில் ஒரு அறிவிப்பு உள்ளது. இதில் இடம்பெறுகின்ற அப்துல்லாஹ் பின் முஹம்மத் பலகீனமானவர் ஆவார்.

மேலும் இக்கருத்தில் ஹாகிம் தொகுத்த முஸ்தத்ரக் என்ற நூலில் ஒரு ஹதீஸ் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இது நம்பத்தகுந்த நபிமொழி இல்லை என்று தஹபி அவர்கள் கூறியுள்ளார்கள்.

அதுமட்டுமின்றி இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களின் ஒருவரான அலீ பின் ஹுஸைன் அவர்கள் அலீ (ரலி) அவர்களிடமிருந்து இந்த ஹதீஸை அறிவிக்கிறார்.. ஆனால் அலி பின் ஹுஸைன் பிறந்த இரண்டு வருடத்தில் அலீ (ரலி) அவர்கள் மரணித்துவிட்டார்கள். எனவே இது தொடர்பு அறுந்து காணப்படுகிறது.

இது தொடர்பாக வரும் அனைத்துச் செய்திகளும் ஆதாரமற்றவையாக இருப்பதால் இதைச் செயல்படுத்த வேண்டியதில்லை.

பாலூட்டுதல்

பிறக்கும் குழந்தைகளுக்காக அல்லாஹ் ஏற்படுத்திய அற்புதம் தாய்ப்பாலாகும். முறையாக தாய்ப்பால் ஊட்டப்பட்ட குழந்தைகள் பிற்காலத்தில் அதிக நோய் எதிப்புச் சக்தியைப் பெற்றவர்களாகவும் திடகார்த்தம் உள்ளவர்களாகவும் திகழ்கிறார்கள். தாய்ப்பால் கொடுக்கப்படாத குழந்தைகள் நோஞ்சான்களாகவும் நோய்களின் பிறப்பிடமாகவும் மாறுகிறார்கள்.

இதைப் புரிந்து கொள்ளாமல் தாய்ப்பால் கொடுத்தால் தன் அழகு கெட்டுவிடும் என்று நினைத்து சில பெண்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் தருவதில்லை. அழகு என்பது இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்றைக்காவது அழியத்தான் போகிறது. குழந்தையின் நலனில் அக்கரையுள்ள தாய்மார்களாக இருந்தால் கண்டிப்பாக தாய்ப்பால் தராமல் இருக்கமாட்டார்கள்.

குழந்தையின் ஆரோக்கியத்திற்கு தாய்ப்பால் அவசியம் என்பதால் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு இரண்டு வருடம் முழுமையாக பால்புகட்ட வேண்டும் என்று அல்லாஹ் வலியுறுத்திக் கூறுகிறான்.

பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாக ரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும்.

திருக்குர்ஆன் 2 : 233

மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள்.

திருக்குர்ஆன் 31 : 14

கத்னா செய்தல்

ஆண்களின் பாலுறுப்பில் இருக்கும் தேவையற்ற தோல்பகுதியை அகற்றுவதற்குப் பெயர் தான் கத்னா என்பது. இவ்வாறு செய்வதால் பாலுறுப்பினுள் விந்தோ, சிறுநீரோ தங்கும் நிலை ஏற்படாது. இதன் மூலம் பாலுறுப்பு சுத்தமாக வைத்துக் கொள்ளப்படுவதால் ஏராளமான நோய்கள் அண்டுவதில்லை.

இல்லற வாழ்வின் போது கணவன் தன் மனைவியைத் திருப்தியடையச் செய்வதற்கு கத்னா காரணமாக உள்ளது. அறிவுப்பூர்வமான இந்த வழிமுறையக் கடைபிடிக்குமாறு இஸ்லாம் ஆண்களுக்குக் கூறுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : விருத்தசேதனம் செய்வது, மர்ம உறுப்பின் முடியைக் களைந்திட சவரக் கத்தியை உபயோகிப்பது, அக்குள் முடிகளை அகற்றுவது, நகங்களை வெட்டிக் கொள்வது, மீசையைக் கத்தரித்துக் கொள்வது ஆகிய இந்த ஐந்து விஷயங்களும் இயற்கை மரபுகளில் அடங்கும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 5889

பெண்களுக்கு கத்னா செய்யலாமா?

சிலர் அறிவின்மையினால் பெண்களுக்கும் கத்னாவைச் செய்துவிடுகிறார்கள். அதாவது பெண்களின் இல்லற இன்பத்தைக் குறைப்பதற்காக அவர்களின் பாலுறுப்பில் இன்பத்தை உணரும் பகுதியின் முனையை வெட்டிவிடுவார்கள்.

இறைவன் அளித்த பாக்கியமான இல்லற இன்பத்தை முழுமையாக பெண்கள் அடையமுடியாத துர்பாக்கியமான நிலை இதனால் ஏற்படுகிறது. இவ்வாறு செய்யுமாறு இஸ்லாம் கூறவில்லை.

பெண்களுக்கும் கத்னா செய்ய வேண்டும் என்றக் கருத்தில் சில ஹதீஸ்கள் வருகின்றன். அவற்றை அறிவிப்பவர்கள் பலவீனமானவர்களாக இருப்பதால் அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது.

கத்னா செய்தல் ஆண்களுக்கு சுன்னத்தாகும். பெண்களுக்கு சிறந்ததாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : சத்தாத் பின் அவ்ஸ் (ரலி)

நூல் : அஹ்மத் 19794

இந்த ஹதீஸில் வரும் ஹஜ்ஜாஜ் பின் அர்தாத் என்பவர் பலவீனமானவர். இவர் அதிகமாக தவறிழைப்பவர் என்று இப்னு ஹஜர் அவர்களும் இவர் வலிமையானவர் இல்லை என்று யஹ்யா பின் முயீன் அவர்களும் கூறியுள்ளார்கள்.

பைஹகீ அவர்கள் தொகுத்த அஸ்ஸ னனுல் குப்ரா என்ற நூலில் இதே ஹதீஸ் இப்னு சவ்பான் என்பவர் வழியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்னு சவ்பான் பலவீனமானவர். மேலும் இச்செய்தயில் அல்வலீத் பின் வலீத் என்வரும் இடம்பெறுகிறார். இவரும் பலவீனமானவர். இந்த ஹதீஸை பைஹகீ அவர்கள் பதிவு செய்துவிட்டு இது பலவீனம் என்பதை அவர்களே தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

ஏழாவது நாள் அன்று கத்னா செய்வது நபிவழியா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஸன், ஹுஸைன் ஆகிய இருவருக்கும் ஏழாவது நாள் அன்று கத்னா செய்தார்கள் என்று ஒரு ஹதீஸை பைஹகீ அவர்கள் அஸ்ஸுனனுல் குப்ரா என்ற தனது நூலில் பதிவு செய்துள்ளார்கள்.

இச்செய்தியில் முஹம்மத் பின் அல்முதவக்கில் என்பவர் இடம்பெறுகிறார். இவர் அதிகமாகத் தவறிழைப்பவர் என்று பல அறிஞர்கள் குறை கூறியுள்ளார்கள். இச்செய்தியை வலீத் பின் முஸ்லிம் என்ற அறிவிப்பாளரிடமிருந்து இவரைத் தவிர வேறு யாரும் அறிவிக்கவில்லை. எனவே இது பலவீனமான செய்தியாகும்.

எப்போது கத்னா செய்ய வேண்டும்?

ஏழாம் நாளில் தான் செய்ய வேண்டும் என்று கட்டாயம் இல்லை. பருவமடைந்தவுடன் (சுமார் பதினைந்து வயதில்) கத்னா செய்யலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பருவ வயது அடைந்தவுடன் கத்னா செய்யும் வழக்கமிருந்தது. அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆட்சேபிக்காமல் அங்கீகாரம் வழங்கியுள்ளனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலமான போது நான் கத்னா செய்யப்பட்டவனாக இருந்தேன். ஆண்கள் பருவ வயது அடையும் வரை மக்கள் கத்னா செய்ய மாட்டார்கள்  என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் புகாரியில் இடம் பெற்றுள்ளது.

6299 சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (உயிர்) கைப்பற்றப்பட்ட போது தாங்கள் எவ்வாறிருந்தீர்கள்? என்று வினவப்பட்டது. அதற்கு அவர்கள், நான் அப்போது விருத்தசேதனம் செய்தவனாயிருந்தேன் என்று பதிலளித்தார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகின்றார்:

பருவ வயதை நெருங்கிய பிறகே (அன்றைய) மக்கள் விருத்தசேதனம் செய்வது வழக்கம். எனவே இத்தனை நாட்களுக்குள் கத்னா செய்ய வேண்டும் என்ற கெடு எதுவும் கிடையாது என அறியலாம்.

கத்னா செய்தால் விழா எடுக்க வேண்டுமா?

கத்னா செய்வதற்காக பெரும் பொருட்செலவில் விருந்துகளை ஏற்பாடு செய்து கத்னா செய்யப்பட்டவர்களை பூமாலைகளால் அலங்கரித்து தெருக்களில் அழைத்து வரும் வழக்கம் தமிழகத்தில் இருக்கிறது. இதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை.

ஒரு நபிவழியைச் செய்வதற்கு இவ்வளவு ஆடம்பரங்களைச் செய்து பகிரங்கப்படுத்துவது குற்றமாகும். நகத்தை வெட்டுவதும் அக்குள் முடிகளைக் களைவதும் கத்னாவைப் போன்று ஒரு சாதாரண சுன்னத்தாகும். ஆனால் யாரும் நகத்தை வெட்டுவதற்கு விழாக் கொண்டாடுவதில்லை. முடிகளைக் களையும் போது அதை ஊருக்கெல்லாம் பகிரங்கப்படுத்துவதும் இல்லை.

பெண் பருவ வயதை அடைந்து விட்டால் அதையும் ஊர் முழுவதும் பரப்புகிறார்கள். சடங்கு மஞ்சள் தண்ணீர் ஊற்றுதல் என்று பலவிதமான மாற்றார்களின் வழிமுறைகளையும் கடைப்பிடிக்கிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தராத விஷயங்களில் இதுவும் ஒன்றாகும். இதைச் செய்பவர்கள் நரகத்திற்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். எனவே இதை விட்டும் நாம் அனைவரும் விலக வேண்டும்.

பிள்ளைகளைக் கொஞ்ச வேண்டும்

பெற்றொரின் பாசம் கிடைக்காத குழந்தைகள் சந்தோஷமில்லாமல் அமைதியற்ற நிலைக்கு ஆளாகுகிறார்கள். எனவே குழந்தைகளின் மீது பெற்றோர்கள் கட்டாயம் பாசத்தைப் பொழிய வேண்டும். குழந்தைகளைத் தூக்கிக் கொஞ்சுதல், கட்டியணைத்தல் முத்தமிடுதல் போன்றவைகள் மூலம் பாசத்தை வெளிப்படுத்தலாம்.

ஒரு கிராமவாசி  நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, நீங்கள் சிறு குழந்தைகளை முத்தமிடுகின்றீர்களா? நாங்களெல்லாம் அவர்களை முத்தமிடுவதில்லை   என்றார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்,  அல்லாஹ் உமது இதயத்திலிருந்து அன்பைக் கழற்றி விட்ட பின்னர்  உமக்காக நான் என்ன செய்ய முடியும்?   என்று கேட்டார்கள்.

அறிவிப்பவர் ; ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி 5998

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் பேரரான) ஹஸன் பின் அலீயை முத்தமிட்டார்கள். அப்போது அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டிருந்த அக்ரஉ பின் ஹாபிஸ் அத்தமீமீ (ரலி) அவர்கள்,  எனக்குப் பத்துக் குழந்தைகள் இருக்கின்றார்கள். அவர்களில் ஒருவரைக் கூட நான் முத்தமிட்டதில்லை   என்றார். அவரை ஏறெடுத்துப் பார்த்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்பு காட்டாதவர் அன்பு காட்டப்பட மாட்டார்   என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 5997

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சிறுவனாக இருந்த) என்னைப் பிடித்துத் தமது ஒரு தொடையின் மீதும் (தம் சொந்தப் பேரரான) ஹஸன் பின் அலீ (ரலி) அவர்களைப் பிடித்து தமது இன்னொரு தொடையின் மீதும் அமர்த்திக் கொண்டு பிறகு எங்கள் இருவரையும் கட்டியணைத்தவாறு,  இறைவா! இவர்கள் இருவர் மீதும் நான் அன்பு செலுத்துகிறேன். நீயும் இவர்கள் மீது அன்பு செலுத்துவாயாக!   என்றார்கள்.

அறிவிப்பவர் : உஸாமா பின் ஸைத் (ரலி)

நூல் : புகாரி 6003

குழந்தை பாசம் பெற்றோர்களை வழிகெடுத்து விடக்கூடாது

சில பெற்றோர்கள் குழந்தைகளின் தவறான விருப்பதிற்குக் கட்டுப்பட்டு மார்க்கம் தடுத்த காரியங்களை செய்துவிடுகிறார்கள். குழந்தைகள் பெற்றோர்களுக்குச் சோதனையாகவும் அல்லாஹ்வின்  நினைப்பை விட்டும் திருப்பக்கூடியவர்களாகவும் இருக்கிறார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.

உங்களின் மக்கட்செல்வமும், பொருட்செல்வமும் சோதனை என்பதையும், அல்லாஹ்விடம் மகத்தான கூலி உண்டு என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்!

திருக்குர்ஆன் 8 : 28

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் மனைவியரிலும், உங்கள் மக்களிலும் உங்களுக்கு எதிரிகள் உள்ளனர். அவர்களிடம் கவனமாக இருந்து கொள்ளுங்கள்! நீங்கள் பொருட்படுத்தாது அலட்சியம் செய்து மன்னித்தால் அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன் 64 : 14

நம்பிக்கை கொண்டோரே! உங்களின் பொருட் செல்வமும், மக்கட் செல்வமும்  அல்லாஹ்வின் நினைவை விட்டு உங்களைத் திசை திருப்பி விட வேண்டாம். இதைச் செய்வோரே நஷ்டமடைந்தவர்கள்.

அல்குர்ஆன் 63 : 9

குழந்தைகளுக்கு மத்தியில் நீதமாக நடக்க வேண்டும்

குழந்தைகளுக்கிடையில் நீதமாக நடப்பது பெற்றோரின் மீது கடமை. பல குழந்தைகள் இருக்கும் போது ஒருவருரை மட்டும் நன்கு கவனிப்பதும், கேட்பதையெல்லாம் ஒருவருக்கு மட்டும் வாங்கித் தருவதும் ஒருவரிடத்தில் மட்டும் பாசத்தை வெளிப்படுத்துவதும் குற்றமாகும். இதனால் பிஞ்சு மனம் கடுமையான நோவினைக்குள்ளாகும்.

நீ தான் எனக்குப் பிடித்தவன். நீ தான் அறிவாளி. அவன் முட்டாள் என்பதைப் போன்ற ஏற்றத் தாழ்வுகளை காட்டும் வார்த்தைகளைக் குழந்தைகளிடத்தில் விதைப்பது அநியாயம். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளார்கள்.

நுஃமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் மிம்பரின் மீது நின்று கொண்டு, என் தந்தை அன்பளிப்பு ஒன்றை எனக்குக் கொடுத்தார்.  என் தாயார் அம்ரா பின்த்து ரவாஹா (ரலி) அவர்கள் என் தந்தையிடம்,  நீங்கள் இதற்கு அல்லாஹ்வின் தூதரை சாட்சியாக ஆக்காதவரை நான் இதை ஒப்புக் கொள்ள மாட்டேன்   என்று கூறினார்கள். என் தந்தை அல்லாஹ்வின் தூதரிடம் சென்று,  அல்லாஹ்வின் தூதரே!  நான் அம்ரா பின்த்து ரவாஹாவின் வாயிலாக, எனக்குப் பிறந்த என் மகனுக்கு அன்பளிப்பு ஒன்றைக் கொடுத்தேன்; அவள் (என் மனைவி) தங்களை சாட்சியாக ஆக்கும் படி எனக்குக் கட்டளையிட்டாள்   என்று கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உங்கள் மற்ற பிள்ளைகளுக்கும் இதே போன்று கொடுத்துள்ளீர்களா?   என்று கேட்டார்கள். அதற்கு என் தந்தை, இல்லை   என்று பதிலளித்தார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவ்வாறெனில் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். உங்கள் பிள்ளைகளிடையே நீதி செலுத்துங்கள்   என்று கூறினார்கள். இதைக் கேட்ட என் தந்தை உடனே திரும்பி வந்து, தனது அன்பளிப்பை ரத்து செய்தார்.

அறிவிப்பவர் : ஆமிர் பின் ஷர்ஹபீல்  (ரஹ்)

நூல் ; புகாரி 2587

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்,  என்னை அக்கிரமத்துக்கு சாட்சியாக்காதீர்கள்   என்று கூறினார்கள் என்று புகாரி (2650) வது செய்தியில் உள்ளது.

குழந்தைகளை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்

குழந்தைகள் விஷயத்தில் அக்கரை காட்டாமல் அழுக்கான ஆடையில் அசிங்கமான தோற்றத்தில் தெருக்களில் திரிய விடும் தாய்மார்கள் சிலர் இருக்கிறார்கள். பின்வரும் ஹதீஸ்களைக் கவனத்தில் வைத்து தங்கள் குழந்தைகளைப் பார்ப்பதற்கு அழகானவர்களாகவும், தூய்மையானவர்களாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு மனிதர்,  தமது ஆடை அழகாக இருக்க வேண்டும்; தமது காலணி அழகாக இருக்க வேண்டும் என ஒருவர் விரும்புகிறார். (இதுவும் தற்பெருமையில் சேருமா?)   என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்,  அல்லாஹ் அழகானவன்; அழகையே அவன் விரும்புகின்றான். தற்பெருமை என்பது (ஆணவத்தோடு) உண்மையை மறுப்பதும், மக்களைக் கேவலமாக மதிப்பதும்தான்   என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல் : முஸ்லிம் 147

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை மோசமான ஆடையில் கண்டார்கள். உன்னிடத்தில் செல்வம் இருக்கிறதா? என்று (என்னிடம்) கேட்டார்கள். அதற்கு நான் எல்லாச் செல்வங்களும் உள்ளது. அல்லாஹ் எனக்கு ஒட்டகத்தையும், ஆட்டையும் தந்துள்ளான் என்று கூறினேன். (நல்ல ஆடைகளை நீ அணிவதின் மூலம் உனக்கு இறைவன் அளித்த பாக்கியம்) உம்மிடத்தில் பார்க்கப்படட்டும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : மாலிக் பின் நள்லா (ரலி)

நூல் : திர்மிதி 1929

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது தலைவிரி கோலமாய் இருந்த ஒரு மனிதரைக் கண்டார்கள். அவரது முடி (சீவப்படாமல்) பிரிந்திருந்தது. தனது முடியை படிய வைக்கும் பொருளை இவர் பெற்றுக் கொள்ளவில்லையா? (என்று கண்டித்துக்) கூறினார்கள். அழுக்குப் படிந்த ஆடையில் இன்னொரு மனிதரைக் கண்டார்கள். தன் ஆடையைக் துவைத்துக் கொள்வதற்கு இவருக்குத் தண்ணீர் கிடைக்கவில்லையா? என்று (கடிந்து) கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

நூல் : அபூதாவுத் 3540

வீரர்களாக வளர்க்க வேண்டும்

பேய் வருகிறது. பூச்சாண்டி வருகிறான் என்றெல்லாம் கூறி சிறுவயதிலேயே குழந்தைகளுக்குப் பயத்தை ஏற்படுத்தி விடுகிறார்கள். இதனால் இவர்கள் பெரியவர்களாக ஆன பின்பும் பேய் பற்றிய பயம் அவர்களை விட்டும் அகலுவதில்லை. வீர தீர சாகசங்களைச் செய்ய விடாமல் பயம் அவர்களைத் தடுத்துவிடுகிறது.

வீரத்துடன் வளர்க்கப்பட்ட குழந்தைகள் யாருக்கும் அஞ்சாமல் நியாயத்திற்காகப் போராடுவார்கள். என்றைக்காவது ஒருநாள் தனது குடும்பத்துக்கு ஆபத்து ஏற்படும் போது துவண்டுவிடாமல் பெற்றோருக்குப் பக்கபலமாக இருந்து உதவியும் செய்வார்கள். நபித்தோழர்கள் தங்கள் குழந்தைகளை இவ்வாறு தான் வளர்த்தார்கள்.

நான் பதினான்கு வயதுடையவனாக இருக்கும்போது,  உஹுதுப் போர் நடந்த காலகட்டத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னைத் தமக்கு முன்பாக வரவழைத்தார்கள்; ஆனால், (போரில் கலந்து கொள்ள) எனக்கு அனுமதியளிக்கவில்லை. அகழ்ப் போரின் போதும் என்னைத் தமக்கு முன்பாக வரவழைத்தார்கள். அப்போது நான் பதினைந்து வயதுடையவனாயிருந்தேன். அப்போது, போரில் கலந்துகொள்ள எனக்கு அனுமதியளித்தார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூல் : புகாரி (2664)

சிறியவர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும்

சிறுவர்கள் பசியைப் பொறுக்க மாட்டார்கள். முதலில் தனக்குக் கிடைக்க வேண்டும் என்ற ஆவல் அவர்களிடத்தில் அதிகமாகவே இருக்கும். எனவே உணவு பரிமாறும் போது முதலில் சிறியவர்களுக்கே கொடுக்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முதலாவதாகப் பழுக்கும் கனி கொண்டுவரப்பட்டால்,  இறைவா! எங்கள் நகரத்தில் எங்களுக்கு வளத்தை ஏற்படுத்துவாயாக! எங்கள் கனிகளிலும் எங்கள் (அளவைகளான)  முத் து மற்றும்  ஸாஉ  ஆகியவற்றிலும் (தற்போதுள்ள) வளத்துடன் மற்றொரு மடங்கு வளத்தை வழங்குவாயாக   என்று பிரார்த்தித்து விட்டு, அங்கு வந்திருக்கும் குழந்தைகளில் மிகச் சிறிய குழந்தைக்கு அந்தக் கனியைக் கொடுப்பார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : முஸ்லிம் (2660)

குழந்தைகளுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும்

குழந்தைகளுக்காகப் பிரார்த்தனை செய்வது பெற்றோர்கள் செய்ய வேண்டிய முக்கியமான காரியமாகும். நாம் எவ்வளவு தான் திருத்துவதற்கு முயற்சி செய்தாலும் அல்லாஹ் நாடாவிட்டால் நம் குழந்தைகள் நல்லவர்களாக உருவெடுக்க முடியாது. எனவே இந்த விஷயத்தில் அல்லாஹ்வின் உதவியை அவசியம் கேட்க வேண்டும்.

இறைத்தூதரின் மகனாக இருந்தாலும் அல்லாஹ்வின் நாட்டம் இருந்தால் தான் அவன் நல்லவனாக முடியும். எனவே தான் நபிமார்கள் தங்கள் பிள்ளைகள் நல்லவர்களாகத் திகழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்துள்ளார்கள்.

எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும், எங்கள் வழித் தோன்றல்களை உனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக! எங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டித் தருவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ மன்னிப்பை ஏற்பவன் ; நிகரற்ற அன்புடையோன் (என்று இப்ராஹீமும் இஸ்மாயீலும் பிரார்த்தனை செய்தார்கள்).

திருக்குர்ஆன் 2 : 128

என் இறைவா! என்னையும், என் சந்ததிகளிலும் தொழுகையை நிலைநாட்டுவோராக ஆக்குவாயாக! எங்கள் இறைவா! எனது பிரார்த்தனையை ஏற்பாயாக! (என்று இப்ராஹீம் கூறினார்.)

திருக்குர்ஆன் 14 : 40

எங்கள் இறைவா! எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும், மக்களிலிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக! (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்குவாயாக!   என்று அவர்கள் கூறுகின்றனர்.

திருக்குர்ஆன் 25 : 74

இப்ராஹீமை அவரது இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்த போது அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார். உம்மை மனிதர்களுக்குத் தலைவராக்கப் போகிறேன்   என்று அவன் கூறினான்.  எனது வழித் தோன்றல்களிலும் (தலைவர்களை ஆக்குவாயாக!) என்று அவர் கேட்டார்.  என் வாக்குறுதி (உமது வழித் தோன்றல்களில்) அநீதி இழைத்தோரைச் சேராது   என்று அவன் கூறினான்.

திருக்குர்ஆன் 2 : 124

செலவு செய்வது கடமை

கஞ்சத்தனம் செய்யாமல் குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவது தந்தையின் மீது கடமை. சில பெற்றோர்கள் தேவையில்லாத செலவுகளை செய்கிறார்கள். வீண்விரயம் செய்வது கூடாது.

அவர்களுக்கு நல்ல முறையில் உணவும் உடையும் வழங்குவது குழந்தையின் தந்தைக்குக் கடமை.

திருக்குர்ஆன் 2 : 233

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவரது உணவு எவரது அதிகாரத்தில் உள்ளதோ அவர், அவருக்கு உணவளிக்க மறுப்பதே அவர் பாவி என்பதற்குப் போது(மான சான்றாகு)ம்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல் : முஸ்லிம் (1819)

ஒரு மனிதன் தன் குடும்பத்திற்காக செலவிடும் எந்தத் தொகையும் வீணாக போவதில்லை. அல்லாஹ்விடம் நன்மையை நாடி செலவு செய்தால் கண்டிப்பாக இறைவன் அதற்குக் கூலி தருகிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒரு மனிதர் (இறைவனிடம்) நன்மையை எதிர்பார்த்தவராகத் தம் குடும்பத்தினர்க்குச் செலவு செய்தால் அது அவருக்குத் தர்மமாகிவிடும்.

அறிவிப்பவர் : அபூமஸ்ஊத் (ரலி)

நூல் : புகாரி (55)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒரு மனிதர் தம் குடும்பத்தாருக்காகச் செலவிடுகின்ற ஒரு பொற்காசு (தீனார்) அவர் செலவிடுகின்ற பொற்காசுகளிலேயே சிறந்ததாகும்.

அறிவிப்பவர் : சஃத் பின் அபீவக்காஸ் (ரலி)

நூல் : புகாரி (3936)

நீங்கள் அல்லாஹ்வின் திருப்தியை நாடிச் செலவழிக்கின்ற எதுவாயினும் அதற்குரிய பிரதிபலனை அல்லாஹ் உங்களுக்கு அளித்தே தீருவான்; உங்கள் மனைவியின் வாயில் நீங்கள் ஊட்டும்  ஒரு கவளம் உணவாயினும் சரியே   என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

அறிவிப்பவர் : சஃத் பின் அபீவக்காஸ் (ரலி)

நூல் : புகாரி (3936)

வீண்விரயம் செய்வது கூடாது

வீண்விரயம் செய்வது கூடாது. வீண்விரயம் செய்வது மார்க்கத்தில் தடைசெய்யப்பட்ட ஒன்றாகும்.

விரையம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.

திருக்குர்ஆன் 17 : 27

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : வீண்விரயமும் பெருமையும் இல்லாமல் சாப்பிடுங்கள். தர்மம் செய்யுங்கள். (விரும்பிய ஆடையை) அணிந்துகொள்ளுங்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல் : நஸாயீ 2512

தனது வருமானத்திற்குத் தகுந்தவாறு பிள்ளைகளுக்கு செலவு செய்ய வேண்டும். கடன் வாங்கி தாரளமாக செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

வசதியுள்ளவர் தனது வசதிக்கேற்ப செலவிடட்டும். யாருக்கு செல்வம் அளவாகக் கொடுக்கப்பட்டதோ அவர் தனக்கு அல்லாஹ் வழங்கியதிலிருந்து செலவிடட்டும். அல்லாஹ் எதைக் கொடுத்துள்ளானோ அதற்கு மேல் எவரையும் சிரமப்படுத்த மாட்டான். சிரமத்திற்குப் பின் வசதியை அல்லாஹ் ஏற்படுத்துவான்.

திருக்குர்ஆன் 65 : 7

தன்னிறைவு பெற்றவர்களாக விட்டுச் செல்வது சிறந்தது

குழந்தைகளின் வருங்கால வாழ்க்கைக்காக செல்வங்களைச் சேமித்து வைப்பது சிறந்த செயலாகும். இவ்வாறு செய்ய வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள்.

நீங்கள் உங்கள் வாரிசுகளை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக விட்டுச் செல்வதை விடத் தன்னிறைவுடையவர்களாக விட்டுச் செல்வதே சிறந்ததாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : சஃத் பின் அபீவக்காஸ் (ரலி)

நூல் : புகாரி (3936)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : தம் சின்னஞ் சிறிய பிள்ளைகளுக்குச் செலவிடுகின்றவரைவிட அதிக நற்பலன் அடைந்துகொள்ளும் மனிதர் யார்? (ஏனெனில்) அவர் தம் பிள்ளைகளைச் சுய மரியாதையோடு வாழச் செய்கிறார். அல்லது அவர் மூலம் அல்லாஹ் அவர்களுக்கு உதவி, அவர்களைத் தன்னிறைவுடன் வாழச் செய்கிறான்   என்றும் கூறினார்கள்.

 அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி)

நூல் : முஸ்லிம் (1817)

சிறுவர்களுக்கு சலாம் கூறுதல்

சிறுவர்கள் பெரியவர்களுக்கு சலாம் சொல்ல வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். என்றாலும் சலாம் கூறும் முறையை சிறுவர்களுக்கு கற்றுத்தருவதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதலில் சிறுவர்களுக்கு சலாம் கூறினார்கள். இவ்வாறு நாம் செய்யும் போது குழந்தைகள் இதைப் பார்த்து மற்றவர்களை சந்திக்கும் போது முந்திக்கொண்டு சலாம் கூறுவார்கள்.

(ஒரு முறை) அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் சிறுவர்களைக் கடந்து சென்ற போது அவர்களுக்கு சலாம் சொன்னார்கள். மேலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு தான் செய்துவந்தார்கள்   என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸாபித் அல்புனானீ (ரஹ்)

நூல் : புகாரி (6247)

விளையாட அனுமதிக்க வேண்டும்

விளையாட்டு என்பது குழந்தைகளுக்கு அவசியமானது. விளையாடுவதால் குழந்தைகள் மகிழ்ச்சியுறுகிறார்கள். சுறுசுறுப்புடனும் ஆரோக்யத்துடனும் திகழ்கிறார்கள். சிறுவர்கள் விளையாடுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதித்துள்ளார்கள்.

நான் (சிறுமியாக இருந்தபோது) பொம்மைகள் வைத்து விளையாடுவேன். எனக்குச் சில தோழியர் இருந்தனர். அவர்கள் என்னுடன் விளையாடிக்கொண்டிருப்பார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அவர்களைக் கண்டதும் தோழியர் (பயந்துகொண்டு) திரைக்குள் ஒளிந்துகொள்வார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தோழியரை என்னிடம் அனுப்பிவைப்பார்கள். தோழிகள் என்னுடன் (சேர்ந்து) விளையாடுவார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி (6130)

(ஒரு முறை) நான் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். உடனே நான் (ஓடிச் சென்று) ஒரு கதவுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து (செல்லமாக) என் தோள்களுக்கிடையே ஒரு தட்டு தட்டிவிட்டு,  நீ போய் முஆவியா (பின் அபீசுஃப்யான்) அவர்களை என்னிடம் வரச்சொல்   என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : முஸ்லிம் (5074)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிலேயே மிக அழகிய நற்குணம் கொண்டவராகத் திகழ்ந்தார்கள். அவர்கள் ஒரு நாள் அலுவல் ஒன்றுக்காக என்னை அனுப்பினார்கள். அப்போது நான் அல்லாஹ்வின் மீதாணையாக! நான் போகமாட்டேன்  என்று சொன்னேன். ஆனால், என் மனத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிட்ட அந்த அலுவலுக்குச் செல்ல வேண்டும் என்றே இருந்தது. நான் புறப்பட்டுச் சென்றபோது, கடைத் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் சிலரைக் கடந்து சென்றேன். (அவர்களுடன் சேர்ந்து நானும் விளையாடலானேன்.) அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்குப் பின்பக்கம் (வந்து) எனது பிடரியைப் பிடித்தார்கள். அவர்களை நான் பார்த்தபோது அவர்கள் சிரித்துக்கொண்டிருந்தார்கள்.  அருமை அனஸே! நான் உத்தரவிட்ட இடத்திற்கு நீ சென்றாயா?   என்று கேட்டார்கள். நான், ஆம்; செல்கிறேன், அல்லாஹ்வின் தூதரே!   என்று சொன்னேன்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : முஸ்லிம் (4626)

இடைஞ்சல் தரும் விளையாட்டுகளை அனுமதிக்கக்கூடாது

விளையாட்டு என்ற பெயரில் மற்றவர்களுக்கு இடஞ்சல் தருவதை பெற்றோர்கள் சம்மதிக்கக்கூடாது. நமது குழந்தைகளால் யாரேனும் அவதியுற்றால் அப்போது அவர்களை கண்டிக்கத்தவறக்கூடாது. பிறருக்கு சிரமம் தருகின்ற அடிப்படையில் விளையாடுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளார்கள்.

நான் சிறு கற்களை எறிந்து (வேட்டையாடிக்) கொண்டிருந்த ஒரு மனிதரைக் கண்டேன். அவரிடம்,  சிறு கற்களை எறியாதே. ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்  சிறு கற்களை எறிய வேண்டாமென்று தடுத்தார்கள்  அல்லது  சிறுகற்களை எறிவதை வெறுத்துவந்தார்கள் . மேலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  அவ்வாறு சிறு கற்களை எறிவதால் எந்தப் பிராணியும் வேட்டையாடப்படாது ;எந்த எதிரியும் வீழ்த்தப்படமாட்டான். மாறாக, அது பல்லை உடைக்கலாம்; கண்ணைப் பறித்து விடலாம். (அவ்வளவுதான் அதனால் முடியும்)  என்று சொன்னார்கள்   எனக் கூறினேன். அதன் பிறகு ஒரு முறை அதே மனிதர் சிறு கற்களை எறிந்துகொண்டிருப்பதைக் கண்டேன். அவரிடம்,  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்  சிறு கற்கள் எறிவதைத் தடை செய்தார்கள் அல்லது  சிறு கற்கள் எறிவதை வெறுத்தார்கள்  என்று நான் உனக்குச் சொல்கிறேன். ஆனால், நீயோ (அதை அலட்சியம் செய்துவிட்டு) சிறு கற்களை எறிகிறாயே? நான் உன்னிடம் இவ்வளவு இவ்வளவு காலம் பேசமாட்டேன்   என்று சொன்னேன்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி)

நூல் : புகாரி (5479)

விளையாட்டுக் கருவிகளை வாங்கித்தர வேண்டும்

சிறுவர்கள் விளையாட்டில் ஆர்வமுள்ளவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு விளையாட்டுப் பொருட்களை வாங்கித்தரும் போது மகிழ்ச்சியடைவார்கள். இதனால் பெற்றோரின் மீதான பாசம் அவர்களுக்கு அதிகரிக்கும்.

கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை எங்கள் சிறுவர்களுக்காக நாங்கள் செய்வோம்; அவர்கள் (பசியால்) உணவு கேட்டு அழும்போது நோன்பு முடியும் நேரம் வரும்வரை (அவர்கள் பசியை மறந்திருப்பதற்காக) அவர்களிடம் அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுப்போம்.

அறிவிப்பவர் : ருபய்யிஉ பின்த் முஅவ்வித் (ரலி)

நூல் : புகாரி (1960)

அனுமதி கேட்டு உள்ளே வர வேண்டும்

அந்தரங்க உறுப்புக்களைச் சிறுவர்கள் பார்க்காதவாறு பெற்றோர்கள் நடந்து கொள்ள வேண்டும். சிறுவன் தானே என்று கருதி அலட்சியமாக இருப்பது தவறு. குறிப்பிட்ட நேரங்களில் வீட்டிற்குள் சிறுவர்கள் வரும் போது அனுமதி பெற்று வர வேண்டும் என்ற வழிமுறையை அவர்களுக்குக் கற்றுத்தர வேண்டும்.

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் அடிமைகளும், உங்களில் பருவ வயதை அடையாதோரும் ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நண்பகலில் (உபரியான) உங்கள் ஆடைகளைக் களைந்துள்ள நேரத்திலும், இஷா தொழுகைக்குப் பிறகும் ஆகிய முன்று நேரங்களில் (வீட்டுக்குள் நுழைவதற்கு) உங்களிடம் அனுமதி கேட்கட்டும். இம்மூன்றும் உங்களுக்குரிய அந்தரங்க(நேர)ங்கள். இதன் பின்னர் அவர்கள் மீதோ, உங்கள் மீதோ எந்தக் குற்றமும் இல்லை. அவர்கள் உங்களைச் சுற்றி வருபவர்கள். உங்களில் ஒருவர் மற்றவரிடம் வந்து செல்பவர்கள். இவ்வாறே அல்லாஹ் வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன். உங்களில் சிறுவர்கள் பருவ வயதை அடைந்து விட்டால் (வயதால்) அவர்களுக்கு முந்தியோர் அனுமதி கேட்பது போல் அவர்களும் அனுமதி கேட்க வேண்டும். இவ்வாறே அல்லாஹ் தனது வசனங்களை உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.

திருக்குர்ஆன் 24 : 58

தவறு செய்யும் போது கண்டிக்க வேண்டும்

பிள்ளைகள் மேல் வைத்துள்ள பாசத்தினால் அவர்கள் தவறு செய்யும் போது கண்டிக்காமல் இருந்துவிடக் கூடாது. பெரும்பாலான குழந்தைகள் கெட்டுச் சீரழிந்ததற்கு பெற்றோர்களின் அளவுகடந்த பாசம் தான் காரணம். பிள்ளைகளை கண்டிப்பதன் மூலம் அவர்களுக்கு நன்மைத் தான் செய்கிறோம் என்பதை பெற்றொர்கள் கவனத்தில் வைக்க வேண்டும்.

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும் கற்களுமாகும்.

திருக்குர்ஆன் 66 : 6

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். பெண் (மனைவி), தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : புகாரி (2409)

பெற்றோர்களின் அலட்சியப் போக்கினால் பிள்ளைகள் தவறான பாதைக்குச் சென்றால் மறுமையில் பெற்றோர்களுக்கு எதிராக பிள்ளைகளே அல்லாஹ்விடத்தில் வாதிடுவார்கள். இருமடங்கு அவர்களுக்குத் தண்டனை தருமாறு இறைவனிடம் கேட்பார்கள். இப்படிப்பட்ட மோசமான நிலைக்கு நாமும் நமது பிள்ளைகளும் சென்றுவிடக்கூடாது என்றால் பிள்ளைகளை இஸ்லாத்தின் அடிப்படையில் வளர்க்க வேண்டும்.

எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழிகெடுத்து விட்டனர்   எனவும் கூறுவார்கள்.  எங்கள் இறைவா! அவர்களுக்கு இருமடங்கு வேதனையை அளிப்பாயாக! அவர்களை மிகப் பெரிய அளவுக்குச் சபிப்பாயாக!   எனவும் கூறுவார்கள்.

திருக்குர்ஆன் 33 : 67

சிறுவர்கள் மார்க்கம் தடுத்தக் காரியங்களைச் செய்யும் போது சிறுவர்கள் தானே என்று பெற்றோர்கள் கண்டும் காணாமல் செல்கிறார்கள். இது தவறாகும். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்று சொல்வார்கள்.

ஆரம்பித்திலிருந்தே தூய இஸ்லாத்தின் அடிப்படையில் வளர்க்கும் போது இஸ்லாம் என்ற ஒளி அவர்களின் சொல் செயல்பாடு ஆகியவற்றில் கலந்துவிடுகிறது. இளைஞர்களாக மாறினாலும் சிறுவயதில் கற்றுக்கொடுக்கப்பட்ட நல்ல பழக்கவழக்கங்கள் அவர்களிடத்தில் தொடர்ந்து நீடித்திருக்கும்.

தன் பேரக்குழந்தைகளில் ஒருவர் தவறு செய்ய முற்பட்ட போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரரைத் தடுத்ததோடு அவருக்கு நல்லுபதேசமும் செய்தார்கள்.

மரத்தின் அறுவடையின் போதே பேரீச்சம் பழத்தின் ஸகாத், நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்படும். இவ்வாறு ஒவ்வொருவரும் தத்தமது பேரீச்சம் பழங்களைக் கொண்டு வந்ததும் அது பெரும் குவியலாக மாறிவிடும். (சிறுவர்களான) ஹஸன் (ரலி) ஹுஸன் (ரலி) இருவரும் அக்குவியலருகே விளையாடுவார்கள். ஒரு நாள் அவ்விருவரில் ஒருவர் ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்துத் தம் வாயில் போட்டார். இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் உடனே அதை வெளியே எடுத்துவிட்டு முஹம்மதின் குடும்பத்தார் ஸகாத்தின் பொருளை உண்ணக் கூடாது என்பதை நீ அறியவில்லையா?   எனக் கேட்டார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி (1485)

பிள்ளைகளை சபிக்கக் கூடாது

பிள்ளைகள் தவறு செய்யும் போது தாய்மார்கள் காதால் கேட்க முடியாத கெட்ட வார்த்தைகளால் பிள்ளைகளைத் திட்டுகிறார்கள். சபிக்கிறார்கள். இதனால் தான் பெண்கள் அதிகமாக நரகத்திற்குச் செல்கிறார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். கோபம் ஏற்படும் போது நிதானத்தைக் கடைப்பிடித்து குழந்தைகளைத் திருத்துவதற்கு முயற்சிக்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்  ஹஜ்ஜுப் பெருநாள் அல்லது  நோன்புப் பெருநாள்  தினத்தன்று முஸல்லா எனும் தொழுகைத்திடலுக்குப் புறப்பட்டு வந்தார்கள். (ஆண்களுக்கு உரை நிகழ்த்திய) பிறகு பெண்கள் பகுதிக்குச் சென்று,  பெண்கள் சமூகமே! தான தர்மங்கள் செய்யுங்கள். ஏனெனில் நரகவாசிகளில் நீங்களே அதிகமாக இருப்பதை எனக்குக் காட்டப்பட்டது   என்று குறிப்பிட்டார்கள்.  அல்லாஹ்வின் தூதரே! ஏன் (எங்களுக்கு இந்த நிலை)?   எனப் பெண்கள் கேட்டதும்.  நீங்கள் அதிகமாகச் சபிக்கிறீர்கள்; மனக் கட்டுப்பாடுமிக்க கூரிய அறிவுடைய ஆண்களின் புத்தியை, அறிவிலும் மார்க்க(த் தின் கடமையி)லும் குறையுடையவர்களான நீங்கள் போக்கி விடுவதையே நான் காண்கின்றேன்   என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

நூல் : புகாரி (304)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,  ஒரு வாய்மையாளர் அதிகமாகச் சாபமிடுபவராக இருப்பது தகாது   என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : முஸ்லிம் (5062)

அன்சாரிகளில் ஒருவர் தமது ஒட்டகத்தை மண்டியிடச் செய்து அதில் ஏறினார். பிறகு அதைக் கிளப்பினார். ஆனால், அது சிறிது (சண்டித்தனம் செய்து) நின்று விட்டது. அப்போது அவர்  ஷஃ  என அதை விரட்டிவிட்டு,  உனக்கு அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்!   என்று சபித்தார். இதைச் செவியுற்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,  தமது ஒட்டகத்தைச் சபித்த இந்த மனிதர் யார்?   என்று கேட்டார்கள்.  நான்தான், அல்லாஹ்வின் தூதரே!   என்று அந்த அன்சாரி பதிலளித்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,  அதிலிருந்து இறங்கிவிடு! சபிக்கப்பட்ட ஒரு பொருளோடு எங்களுடன் நீர் வர வேண்டாம். நீங்கள் உங்களுக்கெதிராகவோ உங்கள் குழந்தைகளுக் கெதிராகவோ உங்கள் செல்வங்களுக்கெதிராகவோ பிரார்த்திக்காதீர்கள். அல்லாஹ்விடம் கேட்டது கொடுக்கப்படும் நேரமாக அது தற்செயலாக அமைந்துவிட்டால், உங்கள் பிரார்த்தனையை அவன் ஏற்றுக்கொள்வான் (அது உங்களுக்குப் பாதகமாக அமைந்துவிடும்)   என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)

நூல் : முஸ்லிம் (5736)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மூன்று பேர்களைத் தவிர வேறெவரும் தொட்டிலில் (குழந்தையாக இருக்கும் போது) பேசியதில்லை. (ஒருவர்) ஈசா (அலை) அவர்கள். (மற்றொருவர்) பனூ இஸ்ராயீல்களால்  ஜுரைஜ்  என்றழைக்கப்பட்டு வந்த (இறைநேசரான) மனிதர் ஒருவர். (ஒரு முறை) அவர் தொழுது கொண்டிருந்தார். அப்போது அவருடைய தாயார் வந்து அவரை அழைத்தார். ஜுரைஜ் (தம் மனத்திற்குள்)  அவருக்கு நான் பதிலளிப்பதா? தொழுவதா?  என்று கூறிக் கொண்டார். (பதிலளிக்கவில்லை.) அதனால் கோபமடைந்த அவரின் தாய், இறைவா! இவனை விபசாரிகளின் முகங்களில்  விழிக்கச் செய்யாமல் மரணிக்கச்செய்யாதே!   என்று கூறி விட்டார். (ஒரு முறை) ஜுரைஜ் தமது ஆசிரமத்தில் இருந்தபோது அவரிடம் ஒரு பெண் வந்து (தன்னுடன் தகாத உறவு கொள்ளும்படி அழைத்துப்) பேசினாள். அதற்கு அவர் மறுத்து விட்டார். ஆகவே, (அவள் அவரைப் பழிவாங்குவதற்காக) ஓர் ஆட்டு இடையனிடம் சென்று அவனைத் தன் வசப்படுத்தி (அவனுடன் விபசாரம் புரிந்து) ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள். பிறகு  இது ஜுரைஜுக்குப் பிறந்தது  என்று (மக்களிடம்) சொன்னாள். உடனே மக்கள் ஜுரைஜிடம் சென்று அவரது ஆசிரமத்தை இடித்து அவரைக் கீழே இறங்கி வரச் செய்து அவரை ஏசினார்கள். உடனே, ஜுரைஜ் அவர்கள் உளூ செய்து தொழுதுவிட்டு, பின்னர் அந்தக் குழந்தையிடம் சென்று,  குழந்தையே! உன் தந்தை யார்?   என்று கேட்டார். அக்குழந்தை,  (இன்ன) இடையன்   என்று பேசியது. அதைக் கண்டு (உண்மையை) உணர்ந்து கொண்ட அந்த மக்கள், தங்கள் ஆசிரமத்தை நாங்கள் தங்கத்தால் கட்டித் தருகிறோம் என்று கூறினார்கள். அதற்கு அவர்,  இல்லை, களிமண்ணால் கட்டித் தந்தாலே தவிர நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்   என்று கூறிவிட்டார்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி (3436)

கோபத்தில் குழந்தைக்கு எதிராக தாய் கேட்கின்ற பிரார்த்தனையை அல்லாஹ் உடனே அங்கீகரித்துவிடுகின்றான். மேற்கண்ட செய்தியில் ஜ ரைஜ் என்வரின் தாய்  இறைவா! இவனை விபசாரிகளின் முகங்களில்  விழிக்கச் செய்யாமல் மரணிக்கச்செய்யாதே!   என்று கோபத்தில் பிரார்த்தித்துவிடுகிறார். இதை அல்லாஹ்வும் ஏற்றுக்கொண்டு விடுகிறான். மிக கவனமாக வார்த்தைகளை வெளியில் விட வேண்டும்.

கல்வி கற்றுத்தர வேண்டும்

குழந்தைகளுக்கு கல்வியறிவு கிடைக்கச் செய்வது குழந்தை வளர்ப்பில் மிக முக்கியமான அம்சம். மார்க்கக் கல்வி உலகக்கல்வி ஆகிய இரண்டையும் குழந்தைகள் பெறுவது அவசியம்.

கல்வியற்றக் குழந்தைகள் நாகரீகம் தெரியாமலும் நல்லவற்றிலிருந்து தீயதை பிரித்தரியாமலும் வளர்கின்றன. இவ்வுலகத்திலும் மறுஉலகத்திலும் மனிதன் சிறப்பாக வாழ்வதற்கு கல்வி உதவியாக இருக்கிறது.

கல்விக்கூடத்திற்கு செல்லமாட்டேன் என்று குழந்தை அடம்பிடித்தால் அடித்தாலாவது அவர்களைப் படிக்க வைக்க வேண்டும். இந்த விஷயத்தில் பெற்றோர்கள் கண்டிப்புடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும்.

மார்க்கக் கல்வியை அறிந்துகொள்வதற்கு காலை மாலை மத்ரஸாக்களுக்கு அனுப்பலாம். கல்வியைத் தவிர மற்ற எல்லா விஷயங்களிலும் இஸ்லாம் சமத்துவத்தை போதிக்கிறது. ஆனால் கல்வியைப் பெற்றவன் உயர்ந்தவன் என்றும் கல்வி அற்றவன் தாழ்ந்தவன் என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது.

அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? என்று கேட்பீராக! அறிவுடையோர் தான் நல்லறிவு பெறுவார்கள்.

திருக்குர்ஆன் 39 : 9

உங்களில் நம்பிக்கை கொண்டோருக்கும் கல்வி வழங்கப் பட்டோருக்கும் அல்லாஹ் பல தகுதிகளை உயர்த்துவான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

திருக்குர்ஆன் 58 : 11

உலகக்கல்வி மார்க்கல்வி என்று இஸ்லாம் தனித் தனியாகப் பிரிக்கவில்லை. மாறாக பலனுள்ளக் கல்வி பலனற்றக் கல்வி என்று இருவகையாகப் பிரிகிறது. உலகக்கல்வியை பலனுள்ள வகையில் பயன்படுத்தினால் அதன் மூலமும் இறைவனை நெருங்க முடியும்.

மனிதன் நேர்வழி பெறுவதற்கு உலக்கல்வி மட்டும் போதாது. இன்றைக்கு உலகக்கல்வியில் தேர்ச்சி பெற்று பட்டம் பெற்ற எத்தனையோபேர் அநியாயத்தையும் அக்கிரமத்தையும் செய்துகொண்டிருக்கிறார்கள். காரணம் என்னவென்றால் அவர்களிடத்தில் மார்க்கத்தைப் பற்றிய அறிவு இல்லை என்பது தான்.

எனவே உலகக் கல்வியுடன் மார்க்க அறிவை சேர்த்து கற்றுத்தரும் போது தான் பலனுள்ள கல்வி கிடைக்கிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்று விடுகின்றன; 1. நிலையான அறக்கொடை  2. பயன்பெறப்படும் கல்வி.  3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : முஸ்லிம் (3358)

உபதேசம் செய்ய வேண்டும்

பிஞ்சு உள்ளத்தில் முதன் முதலில் விதைக்கின்ற கருத்துக்கள் பெரும் மாற்றத்தை அவர்களிடம் ஏற்படுத்தும். ஒரு முஸ்லிம் அல்லாஹ்வைப் பற்றி அறிந்து வைத்திருக்க வேண்டிய விஷயங்களை நம் குழந்தைகளுக்கு அவர்களுக்குரிய பாணியிலே சொல்லிக்கொடுக்க வேண்டும்.

முக்கியமாக இணைவைப்பு என்றால் என்ன? அது எவ்வளவு பெரிய பாவம்? இணைவைப்பவர்களுக்கு கிடைக்கும் தண்டனை என்ன? அல்லாஹ்வின் வல்லமை எவ்வளவு பெரியது? அவனது கருணை எவ்வளவு மகத்தானது? நாம் யாரிடத்தில் கையேந்த வேண்டும்? யாரைப் பின்பற்ற வேண்டும்? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை எவ்வளவு உயர்வாக நேசிக்க வேண்டும்? என்பதையெல்லாம் குழந்தைகளுக்கு முதலில் விளக்கிச் சொல்ல வேண்டும்.

மனிதனிடத்தில் இருக்க வேண்டிய நற்குணங்களையும் இருக்கக்கூடாத தீய குணங்களையும் எடுத்துக்கூறி நல்லவர்களாக வாழ வேண்டும் என்று உபதேசம் செய்ய வேண்டும்.

நபிமார்கள் தங்கள் பிள்ளைகளுக்கு இவ்வாறு உபதேசம் செய்ததை அல்லாஹ் திருக்குர்ஆனில் விவரிக்கிறான்.

என் மக்களே! அல்லாஹ் உங்களுக்காக இம்மார்க்கத்தைத் தேர்வு செய்துள்ளான். முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் மரணிக்கக் கூடாது   என்று இப்ராஹீமும், யஃகூபும் தமது பிள்ளைகளுக்கு வலியுறுத்தினர்.

திருக்குர்ஆன் 2 : 132

யஃகூபுக்கு மரணம் நெருங்கிய போது, நீங்கள் சாட்சிகளாக இருந்தீர்களா?  எனக்குப் பின் எதை வணங்குவீர்கள்?  என்று தமது பிள்ளைகளிடம் கேட்ட போது  உங்கள் இறைவனும், உங்கள் தந்தையரான இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் இறைவனுமாகிய ஒரே இறைவனையே வணங்குவோம். நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டவர்கள்   என்றே (பிள்ளைகள்) கூறினர்.

திருக்குர்ஆன் 2 : 133

லுக்மான் தமது மகனுக்கு அறிவுரை கூறும் போது  என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதே! இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும்   என்று குறிப்பிட்டதை நினைவூட்டுவீராக!

திருக்குர்ஆன் 31 : 13

என் அருமை மகனே! கடுகு விதை அளவு (ஒரு பொருள்) இருந்து அது பாறைக்குள்ளேயோ, வானங்களிலோ, பூமியிலோ இருந்தாலும் அதை அல்லாஹ் கொண்டு வருவான். அல்லாஹ் நுட்பமானவன்; நன்கறிந்தவன். என் அருமை மகனே! தொழுகையை நிலை நாட்டு! நன்மையை ஏவு! தீமையைத் தடு! உனக்கு ஏற்படுவதைச் சகித்துக் கொள்! அது உறுதி மிக்க காரியமாகும். மனிதர்களை விட்டும் உனது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் கர்வமாக நடக்காதே! கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.  நீ நடக்கும் போது நடுத்தரத்தைக் கடைப்பிடி! உனது குரலைத் தாழ்த்திக் கொள்! குரல்களில் வெறுக்கத்தக்கது கழுதையின் குரலாகும்   (என்றும் அறிவுரை கூறினார்).

திருக்குர்ஆன் 31 : 16

முத்தான உபதேசங்கள்

சிறுவராக இருந்த இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அற்புதமான உபதேசங்களை செய்துள்ளார்கள. இந்த உபதேசத்தின் ஒவ்வொரு வார்த்தைகளும் பொன்னால் பொறிக்கப்பட வேண்டியவை. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மனதில் நிலைநிறுத்த வேண்டிய முத்தான அறிவுரைகளாகும்.

சிறுவனே உனக்கு நான் சில உபதேசங்களைக் கற்றுத்தருகிறேன். அதன் மூலம் அல்லாஹ் உனக்கு பலனைத் தருவான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்)  கூறினார்கள்.

நீ அல்லாஹ்வுடைய விஷயத்தில் பேணுதலாக நடந்துகொள். அல்லாஹ் உன்னை பாதுகாப்பான். அல்லாஹ்வுடைய விஷயத்தில் நீ பேணுதலாக நடந்துகொள். அவனை நீ உன்னுடன் காண்பாய். நீ சந்தோஷமாக இருக்கும் போது அல்லாஹ்வை நினைத்துப்பார். (உனக்கு) சிரமம் வரும் போது அல்லாஹ் உன்னை நினைப்பான். கேட்பதாக இருந்தால் அல்லாஹ்விடமே கேள். நீ உதவிதேடுவதாக இருந்தால் அல்லாஹ்விடமே உதவிதேடு. நிச்சயமாக (இந்த) சமுதாயம் உனக்கு நன்மை செய்வதற்காக ஒன்று சேர்ந்தாலும் அல்லாஹ் உனக்கு எதை விதியாக்கிவிட்டானோ அதைத் தவிர வேறெதனாலும் அவர்கள் உனக்கு நன்மை செய்துவிட முடியாது. அவர்கள் உனக்கு தீங்கு செய்வதற்காக ஒன்று சேர்ந்தாலும் அல்லாஹ் உனக்கு எந்தத் தீங்கை விதியாக்கிவிட்டானோ அதைத் தவிர வேறெதனாலும் அவர்கள் உனக்கு தீங்கு செய்துவிட முடியாது. எழுதுகோல்கள் உயர்த்தப்பட்டுவிட்டது. ஏடுகள் காய்ந்துவிட்டது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : திர்மிதி (2440)

பைஹகீ அவர்கள் எழுதிய அல்களாஉ வல்கத்ரு என்ற நூலில் இந்த ஹதீஸ் சரியான அறிவிப்பாளர் தொடரில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

அல்லாஹ்வின் விஷயத்தில் பேணுதலாக நடக்க வேண்டும் என்பதன் பொருள் அவனது கட்டளைகளை செயல்படுத்த வேண்டும் அவன் தடுத்தவைகளை தவிர்ந்துகொள்ள வேண்டும் என்பதாகும்.

சிறுவர்கள் இஸ்லாத்தின் கொள்கை கோட்பாடுகளை எளிதில் விளங்கிக்கொள்வதற்காக சுருக்கமாக கேள்வி பதில் கோணத்தில் புத்தகங்கள் உள்ளது. பெற்றோர்கள் அவற்றை வாங்கி குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கலாம்.

பெற்றோர்களை மதிக்க வேண்டும் என்று உபதேசம் செய்ய வேண்டும்

பெற்றோர்களை மதித்து நடக்குமாறு கூறும் குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் குழந்தைகளிடம் எடுத்துக்கூற வேண்டும்.

அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்.

திருக்குர்ஆன் 4 : 36

என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!   என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி  சீ  எனக் கூறாதே! அவ்விருவரையும் விரட்டாதே! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறு! அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக!  சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள்புரிவாயாக!   என்று கேட்பீராக!

திருக்குர்ஆன் 17 : 23

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பெரும் பாவங்கள் பற்றிக் கேட்கப்பட்டது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்,  அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, பெற்றோருக்குத் துன்பம் கொடுப்பதுமாகும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : புகாரி (2653)

ஒரு மனிதர் தம் தாய் தந்தையரை சபிப்பது பெரும் பாவங்களில் உள்ளதாகும்   என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல் : புகாரி (5973)

அன்னையரைப் புண்படுத்துவதை அல்லாஹ் தடைசெய்துள்ளான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : முஃகீரா பின்ஷ அபா (ரலி)

நூல் : புகாரி (5975)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, அல்லாஹ்வின் தூதரே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?   என்று கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்,  உன் தாய்   என்றார்கள். அவர்,  பிறகு யார்?  என்று கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்,  உன் தாய்   என்றார்கள். அவர், பிறகு யார்?   என்றார்.  உன் தாய்   என்றார்கள். அவர்,  பிறகு யார்?  என்றார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்,  பிறகு, உன் தந்தை   என்றார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி (5971)

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம்  கண்ணியமும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல் (அமல்) எது?   என்று கேட்டேன். அவர்கள், தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறை வேற்றுவது   என்றார்கள்.  பிறகு எது?  என்று கேட்டேன்.  தாய் தந்தையருக்கு நன்மை செய்வது  என்றார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல் : புகாரி (5970)

ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம்,  நான் (இந்த) அறப்போரில் கலந்து கொள்ளட்டுமா?   என்று கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உனக்குத் தாய் தந்தை இருக்கின்றனரா?  என்று கேட்டார்கள். அவர்,  ஆம் (இருக்கிறார்கள்)   என்று கூறினார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்,  (அவ்வாறாயின் திரும்பிச் சென்று) அவர்கள் இருவருக்காகவும் பாடுபடு   என்றார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல் : புகாரி (5972)

குகையில் மாட்டிக்கொண்ட மூவரில் ஒருவர் பெற்றோர்களிடத்தில் நல்லவிதமாக நடந்துகொண்டதால் அல்லாஹ் அவரது பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டான் என்று புகாரியில் 5974 வது ஹதீஸ் கூறுகிறது. இது போன்ற சம்பவங்களைக் கூறி உபதேசம் செய்யலாம்.

நபித்தோழர்களின் வாழ்க்கையில் நடந்த படிப்பினை தரும் சம்பவங்களை கதைகள் சொல்வது போல் கூற வேண்டும். நபிமார்களின் வரலாறுகளை குழந்தைகள் விரும்புகின்ற விதத்தில் சிறிது சிறிதாக எடுத்துரைக்க வேண்டும்.

ஒழுங்கு முறைகளை கற்றுக்கொடுக்க வேண்டும்

நேரம் கிடைக்கும் போது தூங்குவதின் ஒழுக்கங்கள் சாப்பிடுவதின் ஒழுக்கங்கள் இஸ்லாம் கற்றுத்தரும் ஒழுக்க நெறிகள் ஆகியவற்றை குழந்தைகளுக்கு சிறிது சிறிதாக கற்றுத்தர வேண்டும். அவர்கள் தவறுதலாக செய்யும் போது சரியான வழிமுறையை அவர்களுக்குக் கற்றுத் தர வேண்டும்.

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மடியில் வளர்ந்துவந்த சிறுவனாக இருந்தேன். (ஒரு முறை) என் கை உணவுத் தட்டில் (இங்கும் அங்குமாக) அலைந்து கொண்டிருந்தது. அப்போது அல்லாஹ்வின்  தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், சிறுவனே! அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன் வலக் கரத்தால் சாப்பிடு. உன(து கை)க்கு அருகிலிருக்கும் பகுதியிலிருந்து எடுத்துச் சாப்பிடு!   என்று சொன்னார்கள். அதன் பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது.

அறிவிப்பவர் : உமர் பின் அபீ சலமா (ரலி)

நூல் : புகாரி (5376)

நான் என் தந்தை (சஅத் பின் அபீவக்காஸ் ரலி) அருகில் நின்று தொழுதேன். அப்போது (ருகூவில்) என் இரு கைகளையும் கோத்து என் இரு தொடைகளின் இடுக்கில் வைத்துக்கொண்டேன். அவ்வாறு செய்ய வேண்டாமென என்னை அவர்கள் தடுத்துவிட்டு, நாங்கள் இவ்வாறு செய்து கொண்டிருந்தோம். பின்னர் அவ்வாறு செய்யக்கூடாதென நாங்கள் தடுக்கப்பட்டு, எங்கள் கைகளை முழங்கால்கள் மீது வைக்குமாறு உத்தரவிடப்பட்டோம்   என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : முஸ்அப் பின் சஃத் (ரஹ்)

நூல் : புகாரி (790)

மார்க்க அறிஞர்களாக மாற்றலாம்.

இஸ்லாமிய ஒழங்கு முறைகளை கற்றுக்கொடுத்து பிள்ளைகளை வளர்க்கும் போது காலப்போக்கில் அச்சிறுவர்கள் பெரியவர்களுக்கே ஒழுங்கு முறைகளை கற்றுத்தரும் ஆசானாக மாறிவிடுவார்கள். உமர் (ரலி) அவர்களுக்குத் தெரியாத ஒரு விஷயத்தை சிறுவராக இருந்த அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிந்து வைத்திருந்தார்கள்.

நான் அன்சாரிகளின் அவையொன்றில் அமர்ந்திருந்தேன். அப்போது பதற்றமடைந்தவரைப் போன்று அபூமூசா (ரலி) அவர்கள்  வந்து,  நான் உமர் (ரலி) அவர்களிடம் (அவர்களுடைய வீட்டினுள் நுழைய) மூன்று முறை அனுமதி கேட்டேன். ஆனால், எனக்கு அனுமதியளிக்கப்படவில்லை. ஆகவே, நான் திரும்பிவிட்டேன். பின்பு உமர் (ரலி) அவர்கள் (உங்களை நான் வரச்சொல்லி இருந்தேனே) ஏன் நீங்கள் வரவில்லை   என்று (என்னிடம்) கேட்டார்கள். அதற்கு நான்,  (தங்களிடம்) மூன்று முறை அனுமதி கேட்டேன். ஆனால் எனக்கு அனுமதியளிக்கப்படவில்லை. ஆகவே, நான் திரும்பி வந்துவிட்டேன். (ஏனெனில்,) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்  உங்களில் ஒருவர் மூன்று முறை அனுமதி கேட்டும் அவருக்கு அனுமதி வழங்கப்படாவிட்டால் அவர் திரும்பிவிடட்டும்  என்று கூறியுள்ளார்கள்   என்றேன். அதற்கு உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! இ(வ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்ப)தற்கு நீங்கள் சாட்சியைக் கொண்டு வரவேண்டும்  என்று சொன்னார்கள். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்றவர் யாரேனும் உங்களில் உள்ளாரா?   என்று கேட்டார்கள். அதற்கு (அங்கிருந்த) உபை பின் கஅப் (ரலி) அவர்கள்,  அல்லாஹ்வின் மீதாணையாக! மக்களில் மிகச் சிறியவரே உங்களுடன் (இப்போது சாட்சியம் சொல்ல) வருவார்   என்று சொன்னார்கள். அங்கு நான்தான் மக்களில் சிறியவனாக இருந்தேன். எனவே, நான் அபூமூசா (ரலி) அவர்களுடன் சென்று  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவ்வாறு சொன்னார்கள்   என்று உமர் (ரலி) அவர்களிடம் தெரிவித்தேன்.

அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

நூல் : புகாரி (6245)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வாலிபராக இருந்த போது அவர்களை விட வயதில் மூத்தவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைப் பார்த்து கல்வியில் பொறாமைப்படும் அளவிற்கு இளம் வயதிலே நிறைவான மார்க்க அறிவை இப்னு அப்பாஸ் (ரலி) பெற்றிருந்தார்கள்.

உமர் (ரலி) அவர்கள் பத்ருப் போரில் கலந்து கொண்ட புண்ணியவான்களுடன் எனக்கும் (தம் அவையில்) இடமளித்து வந்தார்கள். ஆகவே, அவர்களில் சிலர்,  எங்களுக்கும் இவரைப் போன்ற (வயது ஒத்த) பிள்ளைகள் இருக்க, (அவர்களையெல்லாம் விட்டு விட்டு) இந்த இளைஞரை மட்டும் எதற்காக எங்களுடன் அமரச் செய்கிறீர்கள்?   என்று கேட்டார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள்,  அவர் நீங்கள் அறிந்துவைத்துள்ள (கல்வித் தகுதி படைத்த)வர்களில் ஒருவர்  என்று பதிலளித்தார்கள். பிறகு, ஒரு நாள் அவர்களையெல்லாம் அழைத்தார்கள்; அவர்களுடன் என்னையும் அழைத்தார்கள். அவர்களுக்கு என் (தகுதியி)னைப் பற்றி உணர்த்திக் காட்டுவதற்காகவே என்னை அவர்கள் அழைத்ததாகக் கருதுகிறேன். (அவர்களெல்லாம் வந்தவுடன் அவர்களிடம்) உமர் (ரலி) அவர்கள்,  இதா ஜாஅ நஸ்ருல்லாஹி..... (நபியே!) இறைவனின் உதவியும் வெற்றியும் வந்து, மக்கள் கூட்டம்  கூட்டமாக இறைமார்க்கத்தில் இணைவதை நீங்கள் பார்க்கும் போது உங்கள் இறைவனைப் புகழ்ந்து அவனது தூய்மையை எடுத்துரையுங்கள்; மேலும், அவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள்)   என்னும் (திருக்குர்ஆனின் 110-வது அந் நஸ்ர் ) அத்தியாயத்தை இறுதி வரை ஓதிக்காட்டி,  இதற்கு நீங்கள் என்ன (விளக்கம்) கூறுகிறீர்கள்?   என்று கேட்டார்கள். அவர்களில் சிலர்,  நமக்கு உதவியும் வெற்றியும் அளிக்கப்படும் போது அல்லாஹ்வைப் புகழும்படியும் அவனிடம் பாவமன்னிப்புக் கோரும்படியும் நாம் கட்டளையிடப்பட்டுள்ளோம்   என்று (விளக்கம்) கூறினர். சிலர்,  எங்களுக்குத் தெரியாது   என்றனர். அல்லது அவர்களில் சிலர் எந்தக் கருத்தும் கூறவில்லை. பிறகு உமர் (ரலி) அவர்கள் என்னிடம்,  இப்னு அப்பாஸே! நீங்களும் இப்படித் தான் கூறுகிறீர்களா?   என்று கேட்டார்கள். நான்,  இல்லை  என்றேன். அவர்கள்,  அப்படியென்றால் நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?   என்று கேட்டார்கள். நான்,  அது, அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு அவர்களின் ஆயுட்காலம் முடிந்து (இறப்பு நெருங்கி) விட்டதை அறிவிப்பதாகும். ஆகவே, அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வந்து  என்பதில் உள்ள வெற்றி  என்பது மக்கா வெற்றியைக் குறிக்கும். மக்கா வெற்றி தான், (நபியே!) உங்கள் ஆயுட்காலம் முடியவிருப்பதற்கான அடையாளம். ஆகவே, நீங்கள் உங்கள் அதிபதியைப் புகழ்ந்து அவனது தூய்மையை எடுத்துரைத்து, அவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள். அவன் (நீங்கள் மன்னிப்புக் கோருவதை ஏற்று) உங்களுக்கு மன்னிப்பளிப்பவன் ஆவான்  என்பதே இதன் கருத்தாகும்   என்று சொன்னேன். உமர் (ரலி) அவர்கள்,  நீங்கள் இந்த அத்தியாயத்திலிருந்து என்ன (கருத்தை) அறிகின்றீர்களோ அதையே நானும் அறிகின்றேன்   என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி (4294)

திருக்குர்ஆனை மனனம் செய்ய வைத்தல்

அல்லாஹ்வுடைய வசனத்தை மனனம் செய்யாத உள்ளம் பாலடைந்த வீட்டைப் போன்றது. பாலடைந்த வீட்டிலே விஷ ஜந்துக்கள் தான் குடியிருக்கும். அது போன்று நமது குழந்தைகளின் உள்ளம் ஆகிவிடக்கூடாது.

சிறுவயதிலேயே குர்ஆன் ஓதக்கற்றுக்கொடுக்க வேண்டும். பள்ளிப் பாடங்களுக்கு முக்கியத்துவம் தந்து மனப்பாடம் செய்ய வைப்பதைப் போல் குர்ஆனில் உள்ள சூராக்களையும் இயன்ற அளவு மனனம் செய்வதற்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் சிறுவர்கள் குர்ஆனில் அதிகமானதை மனனம் செய்து வைத்திருந்தார்கள்.

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வாழ்ந்த) காலத்திலேயே  அல் முஹ்கம்  அத்தியாயங்களை மனனம் செய்திருந்தேன்   என்று  இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். நான் அவர்களிடம்,    அல்முஹ்கம்  என்றால் என்ன?  என்று கேட்டேன். அவர்கள்    அல்முஃபஸ்ஸல் தான் (அல்முஹ்கம் )   என்று (பதில்) சொன்னார்கள்.

அறிவிப்பவர் : சயீத் பின் ஜுபைர் (ரஹ்)

நூல் : புகாரி (5036)

மக்கள் (குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார் எனத்) துருவிப் பார்த்த போது நான் பயணிகளிடம் கேட்டு அறிந்துகொண்ட காரணத்தால் என்னை விட அதிகமாகக் குர்ஆனை அறிந்தவர்கள் எவரும் (எங்களிடையே) இருக்கவில்லை. ஆகவே, (தொழுவிப்பதற்காக) என்னை அவர்கள் முன்னால் நிறுத்தினார்கள். நான் அப்போது ஆறு அல்லது ஏழு வயதுடைய(சிறு)வனாக இருந்தேன். நான் ஒரு சால்வையைப் போர்த்தியிருந்தேன். நான் சஜ்தா செய்யும் போது அது என் முதுகை (விட்டு நழுவிப் பின் புறத்தைக்) காட்டிவந்தது. ஆகவே, அந்தப் பகுதிப் பெண்மணியொருவர்,  உங்கள் ஓதுவாரின் பின்புறத்தை எங்களிடமிருந்து மறைக்க மாட்டீர்களா?   என்று கேட்டார். ஆகவே, அவர்கள் (துணியொன்றை) வாங்கி வந்து எனக்குச் சட்டையொன்றை வெட்டித் தந்தார்கள். நான் அந்தச் சட்டையின் காரணத்தால் அடைந்த மகிழ்ச்சியைப் போல வேறெதனாலும் மகிழ்ச்சியடைந்ததில்லை.

அறிவிப்பவர் : அமர் பின் சலிமா (ரலி)

நூல் : புகாரி (4302)

துஆக்களைக் கற்றுத் தர வேண்டும்

இறைவனிடம் எவ்வாறு பிரார்த்தனை செய்ய வேண்டும். எந்த எந்த நேரங்களில் பிரார்த்திக்க வேண்டும். எதைக் கேட்க வேண்டும் என்பதையெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள். இவற்றை நம் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

சிறுவராக இருந்த ஹஸன் (ரலி) அவர்களுக்கு குனூத்தில் ஓத வேண்டிய துஆவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்தார்கள். அதை அவர்கள் மறந்துவிடாமல் மற்றவர்களுக்கு கூறியதால் இன்றைக்கு அந்த துஆவை ஓதும் பாக்கியம் நமக்குக் கிடைத்திருக்கிறது.

வித்ரில் நான் ஓத வேண்டிய வார்த்தைகளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்குக் கற்றுக்கொடுத்தார்கள். அல்லாஹும்மஹ்தினீ ஃபீ மன் ஹதய்த. வஆஃபினீ ஃபீ மன் ஆஃபய்த. வதவல்லனீ ஃபீமன் தவல்லைத. வபாரிக் லீ ஃபீமா அஃதய்த. வகினீ ஷர்ர மா களைத. ஃப இன்னக தக்ளீ வலா யுக்ளா அலைக்க. வ இன்னஹு லா யதுல்லு மவ் வாலைத்த. தபாரக்த ரப்பனா வதஆலைத்த (என்பதே அந்த வார்த்தைகளாகும்).

பொருள் : இறைவா நீ நேர்வழி காட்டியவர்களுடன் எனக்கும் நேர்வழி காட்டுவாயாக. நீ யாருக்கு ஆரோக்கியத்தை வழங்கினாயோ அவர்களுடன் எனக்கும் ஆரோக்கியத்தை வழங்குவாயாக. யாருக்கு நீ பொறுப்பேற்றுக்கொண்டாயோ அவர்களுடன் எனக்கும் பொறுப்பேற்றுக்கொள். நீ எனக்குக் கொடுத்தவற்றில் அருள் புரி. நீ தீர்ப்பாக்கிய விஷயங்களில் கெட்டதை விட்டு என்னைக் காப்பாற்று. ஏனென்றால் நீயே முடிவு செய்வாய். உனக்கு எதிராக முடிவு செய்யப்படமாட்டாது. நீ யாருக்கு பொறுப்பேற்றாயயோ அவர்கள் இழிவடைய மாட்டார்கள். எங்களின் இறைவா நீயே பாக்கியசாளி. நீயே உயர்ந்தவன்.

அறிவிப்பவர் : ஹஸன் (ரலி)

நூல் : திர்மிதி (426)

குழந்தைகளுக்கு கல்வியைப் போதிக்கின்ற நேரத்தில் பெற்றோர்கள் ஆசிரியர்களைப் போன்று மாறிவிட வேண்டும்.

ஆசிரியர் சிறுவர்களுக்குப் பாடம் போதிப்பதைப் போல, சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் தம் மக்களுக்குப் பின்வரும் (பிரார்த்தனை) வாசகங்களைக் கற்றுக் கொடுத்தார்கள்: அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் ஜுப்னி, வஅஊது பிக்க அன் உரத்த இலா அர்தலில் உமுரி, வ அஊது பிக்க மின் ஃபித்னத்தித் துன்யா, வ அஊது பிக்க மின் அதாபில் கப்ரி.

பொருள் :  இறைவா! நான் கோழைத்தனத்திலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்;  மூப்பின் மோசமான நிலையை அடைவதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்; உலகின் சோதனைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்; புதை குழியின் வேதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்   என்று கூறிவிட்டு,  இந்த விஷயங்களிலிருந்தெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகைக்குப் பின்பு பாதுகாப்புக் கோரி வந்தார்கள்   என்றும் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அம்ர் பின் மய்மூன் (ரஹ்)

நூல் : புகாரி (2822)

சிந்திக்கத் தூண்ட வேண்டும்

ஏன் எதற்கு எப்படி என்று கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருந்தால் அறிவு வளரும் என்று சொல்வார்கள். குழந்தைகளிடத்தில் கேள்விகளைக் கேட்டு பதிலை வரவழைக்கும் போது அவர்கள் அறிவாளியாகிறார்கள். இவ்வாறு செய்வதால் மூளைக்கு வேலை கொடுக்கப்பட்டு சிந்திக்க ஆரம்பிக்கிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இத்தகைய வழிமுறையை கையாண்டு கற்றுக்கொடுப்பவர்களாக இருந்தார்கள்.

மரங்களில் (இப்படியும்) ஒருவகை மரம் உண்டு; அதன் இலை உதிர்வதில்லை. அது முஸ்லிமுக்கு உவமையாகும். அது என்ன மரம் என்று சொல்லுங்கள்!   என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நாட்டு மரங்களை நோக்கி மக்களின் கவனம் போயிற்று. அது பேரீச்ச மரம்தான் என்று எனக்குத் தோன்றியது. (மூத்தவர்கள் மௌனமாய் இருக்கும் அவையில் நான் எப்படிச் சொல்வது என்று) வெட்கப்பட்டுக்கொண்டு (அமைதியாக) இருந்துவிட்டேன். பிறகு மக்கள்  அது என்ன மரம் என்று தாங்களே சொல்லுங்கள், அல்லாஹ்வின் தூதரே?   என்று கேட்க,  அது பேரீச்ச மரம்   என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூல் : புகாரி (131)

குழந்தைகளுக்கு சந்தேகம் ஏற்பட்டு அதை நிவர்த்தி செய்வதற்காக பெற்றோர்களிடம் வருவார்கள். அப்போது பெற்றோர்கள் அதை ஊதாசீனப்படுத்திவிடாமல் சந்தோஷத்துடன் அதற்கு முறையான அடிப்படையில் பதில் சொல்ல வேண்டும்.

நான் என் தந்தையிடம் என் தந்தையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அபூபக்ர் (ரலி) உமர் (ரலி) உஸ்மான் (ரலி) ஆகியோருக்கும் பின்னாலும் கூஃபாவாகிய இங்கே அபூதாலிபின் மகன் அலீ (ரலி) அவர்களுக்குப் பின்னாலும் ஏறத்தாழ ஐந்து வருடங்கள் நீங்கள் தொழுதுள்ளீர்கள். இவர்கள் (தொழுகையில்) கூனூத் ஓதினார்களா? என்று கேட்டேன். அதற்கு என் தந்தை எனது அருமை மகனே (இத) புதிதாக உருவாக்கப்பட்டதாகும் என்று கூறினார்.

அறிவிப்பவர் : அபூ மாலிக் (ரஹ்)

நூல் : திர்மிதி (368)

பயிற்சி அளிக்க வேண்டும்

பருவ வயதை அடையும் போது தான் தொழுகை நோன்பு போன்ற வணக்கங்கள் கடமையாகும். என்றாலும் அதற்கு முன்பே வணக்க வழிபாடுகளில் குழந்தைகளை ஈடுபடுத்தி பயிற்சி கொடுக்க வேண்டும். இவ்வாறு பயிற்சி கொடுக்கும் போது மார்க்க சட்டத்திட்டங்கள் அவர்களுக்கு எளிதாகவும் விருப்பமானதாகவும் மாறிவிடும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் தொழுகை நோன்பு ஹஜ் போன்ற  வணக்கங்களில் குழந்தைகளை ஈடுபடுத்தும் வழக்கம் இருந்துள்ளது.

(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பாதி இரவு வரை) இஷாத் தொழுகையைப் பிற்படுத்தினார்கள். உமர் (ரலி) அவர்கள் அவர்களை அழைத்து,  (தொழுகைக்கு வந்திருந்த) பெண்களும் சிறுவர்களும் உறங்கிவிட்டனர்   என்று கூறியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது அறையிலிருந்து) புறப்பட்டு வந்து,  பூமியில் வசிப்போரில் உங்களைத் தவிர வேறுயாரும் இந்தத் தொழுகையைத் தொழவில்லை   என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி (862)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஹர்ரம் பத்தாம்நாள் (ஆஷூரா தினத்தன்று) காலையில் அன்ஸாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி,  யார் நோன்பு நோற்காதவராகக் காலைப் பொழுதை அடைந்துவிட்டாரோ அவர் இன்றைய தினத்தின் எஞ்சிய நேரத்தை (நோன்பாக) நிறைவு செய்யட்டும்! யார் நோன்பாளியாகக் காலைப் பொழுதை அடைந்தாரோ அவர் நோன்பைத் தொடரட்டும்!   என்று அறிவிக்கச் செய்தார்கள். நாங்கள் அதன் பின்னர் அந்நாளில் நோன்பு நோற்கலானோம்; எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்க வைப்போம். கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காக நாங்கள் செய்வோம்; அவர்கள் (பசியால்) உணவு கேட்டு அழும்போது நோன்பு முடியும் நேரம் வரும்வரை (அவர்கள் பசியை மறந்திருப்பதற்காக) அவர்களிடம் அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுப்போம்.

அறிவிப்பவர் : ருபய்யிஉ பின்த் முஅவ்வித் (ரலி)

நூல் : புகாரி (1960)

நான் ஏழுவயதுச் சிறுவனாக இருந்தபோது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கடன் ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்!

அறிவிப்பவர் : ஸாயிப் பின் யஸீத் (ரலி)

நூல் : புகாரி (1858)

ஒரு பெண், தன் குழந்தையைத் தூக்கி,  இவனுக்கும் ஹஜ் உண்டா?   என்று கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்,  ஆம்; (அதற்காக) உனக்கும் நற்பலன் உண்டு   என விடையளித்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : முஸ்லிம் (2596)

காது மூக்கு குத்தலாமா?

காது மூக்கு குத்தக்கூடாது என்று தெளிவாக எந்த ஒரு தடையும் வரவில்லை. மாறாக அல்லாஹ் படைத்த படைப்பில் மாற்றம் செய்யக்கூடாது என்று மார்க்கத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. காதுகளை கிழிப்பதும் அல்லாஹ்வின் படைப்பில் மாற்றம் செய்வதும் ஷைத்தானுடைய செயல் என்று குர்ஆன் கூறுகிறது.

அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்; அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள் (எனவும் கூறினான்). அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நஷ்டத்தை அடைந்து விட்டான்.

திருக்குர்ஆன் 4 : 119

இயற்கையாக அல்லாஹ் படைத்த உறுப்புக்களில் மாற்றம் செய்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் தடைசெய்துள்ளார்கள்.

பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றக் கேட்டுக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்துப் பல்வரிசையைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (மொத்தத்தில்) இறைவன் அளித்த உருவத்தை மாற்றிக்கொள்ள முயலும் பெண்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல் : புகாரி (5931)

காதுகளிலும் மூக்கிலும் துளையிடும் போது அழகான தோற்றம் வரும் என்று நாம் நினைப்பதால் தான் காது மூக்கு குத்திக்கொள்கிறோம். இவற்றில் துளையில்லாமல் பிறக்கும் மனிதன் அழகான தோற்றமுள்ளவன் என்று அல்லாஹ் கூறுகிறான்.

மனிதனை அழகிய வடிவில் படைத்தோம்.

திருக்குர்ஆன் 95 : 4

மிக அழகாக படைப்பது தன்னுடைய தன்மை என்று அல்லாஹ் கூறுகிறான்.

பின்னர் விந்துத் துளியை கருவுற்ற சினை முட்டையாக்கினோம். பின்னர் கருவுற்ற சினை முட்டையை சதைத் துண்டாக ஆக்கினோம். சதைத் துண்டை எலும்பாக ஆக்கி எலும்புக்கு இறைச்சியையும் அணிவித்தோம். பின்னர் அதை வேறு படைப்பாக ஆக்கினோம். அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியசாலியாவான்.

திருக்குர்ஆன் 23 : 14

அஞ்ச மாட்டீர்களா? அழகிய படைப்பாளனும், உங்கள் இறைவனும், உங்கள் முன்னோரின் இறைவனுமாகிய அல்லாஹ்வை விட்டு விட்டு  பஅல்  எனும் சிலையைப் பிரார்த்திக் கிறீர்களா?

திருக்குர்ஆன் 37 : 125

காது மற்றும் மூக்கில் துளையிடுவது இறைவனுடைய படைப்பில் குறைகாணுவதைப் பிரதிபலிப்பதால் இதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

இந்தச் சட்டம் தெரியாத நேரத்தில் குத்திக்கொண்டவர்கள் துளையை அடைக்க வேண்டியதில்லை. அதில் ஆபரணங்களை இட்டுக்கொள்ளலாம். ஏனென்றால் சஹாபிய பெண்கள் காதுகளில் தோடுகளை அணிந்திருந்ததார்கள். காது குத்துவதால் ஏற்பட்ட துளையை அடைக்க வேண்டுமென்றோ அத்துளையில் ஆபரணங்களை அணியக்கூடாது என்றோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்பெண்களுக்குக் கூறவில்லை. மாறாக ஒப்புதல் வழங்கினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு பெருநாள் தினத்தில் உரையாற்றிவிட்டு) பெண்கள் செவியேற்கும் விதத்தில் தாம் பேசவில்லை என்று எண்ணியவர்களாக (பெண்களிருக்கும் பகுதிக்கு) பிலால் (ரலி) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றார்கள். அங்கு பெண்களுக்கு அறிவுரை கூறிவிட்டு தர்மம் செய்யும்படி வலியுறுத்தினார்கள்.  அங்கிருந்த பெண்கள் தங்கள் காதணிகளையும், மோதிரங்களையும் (கழற்றிப்) போடலானார்கள்.     

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி (98)

தாயத்தை தொங்க விடக்கூடாது.

குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லாமல் போகும் போது பெற்றோர்கள் அவர்களை தர்ஹாக்களுக்கு அழைத்துச் சென்று தாயத்து என்றக் கருப்புக் கயிறை வாங்கி குழந்தைகளின் மேல் மாட்டிவிடுகிறார்கள். அல்லாஹ்வின் மீது வைக்கவேண்டிய நம்பிக்கையை அற்பக் கயிற்றின் மீதும் இறந்தவர்கள் மீதும் வைத்துவிடுகிறார்கள். இவ்வாறு செய்வது மார்க்கத்தில் தடுக்கப்பட்டிருக்கிறது.

கயிறுக்கோ இரும்பு வளையத்திற்கோ நோயை அகற்றும் சக்தி இருக்கிறது என்று ஒருவன் நம்பினால் அவன் அல்லாஹ்விற்கு இணை கற்பித்தவனாகிவிடுகிறான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடத்தில் (பத்து பேரைக் கொண்ட) சிறிய குழு ஒன்று வந்தது. ஒன்பது பேர்களிடத்தில் உறுதிப்பிரமானம் வாங்கினார்கள். ஒருவரிடத்தில் மாத்திரம் (பைஅத்) செய்யவில்லை. அப்போது மக்கள் அல்லாஹ்வின் தூதரே ஒன்பது நபர்களிடத்தில் (பைஅத்) உறுதிப்பிரமானம் வாங்கினீர்கள். இவரை விட்டுவிட்டீர்களே என்று கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர் மீது தாயத்து உள்ளது என்று கூறினார்கள். உடனே (தாயத்து அணிந்திருந்தவர்) தன் கையை (ஆடைக்குள்) விட்டு தாயத்தை அகற்றினார். பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரிடத்தில் பைஅத் செய்துவிட்டு எவன் தாயத்தை தொங்கவிடுகிறானோ அவன் இணைவைத்துவிட்டான் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி)

நூல் : அஹ்மத் (16781)

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய பிரயாணம் ஒன்றில் அவர்களுடன்  இருந்தேன்.  அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள்  தூதுவர் ஒருவரை அனுப்பி, எந்த  ஒட்டகத்தின் கழுத்திலும்   கயிற்று மாலையோ அல்லது வேறெந்த மாலையோ இருக்கக் கூடாது. அப்படியிருந்தால் கட்டாயம் அதைத் துண்டித்து விட  வேண்டும்   என்று (பொது மக்களிடையே) அறிவிக்கச் செய்தார்கள்.

அறிவிப்பவர் : அபூ பஷீர் (ரலி)

நூல் : புகாரி (3005)

நோய்க்காக ஓதிப்பார்க்கலாம்

நோயிலிருந்து நிவாரணம் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒதிப்பார்ப்பதற்கு அனுமதியுள்ளது.

ஆயிஷா (ரலி) அவர்களிடம், விஷக்கடிக்கு ஓதிப்பார்ப்பது குறித்துக் கேட்டேன். அவர்கள்,  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓவ்வொரு விஷ உயிரினத்தின் கடியிலிருந்தும் (நிவாரணம் பெற்றிட) ஓதிப்பார்ப்பதற்கு அனுமதியளித்தார்கள்    என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : அஸ்வத் பின் யஸீத் அந்நகஈ (ரஹ்)

நூல் : புகாரி (5741)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டுவிட்டால்  பாதுகாப்புக் கோரும் வசனங்களை(க் கொண்ட குர்ஆனின் கடைசி மூன்று அத்தியாயங்களை)  ஓதித் தம் மீது ஊதி, தமது கையை (தம் உடல் மீது) தடவிக்கொள்வார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்துபோனார்களோ அந்த நோயின்போது, அவர்கள் (ஓதி) ஊதிக் கொள்ளும் பாதுகாப்பு வசனங்களை நான் அவர்கள் மீது (ஓதி) ஊதலானேன். அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் (கையில் ஊதி அந்தக்) கையாலேயே அவர்களின் (உடல்) மீது தடவலானேன்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி (4439)

ஓதிப்பார்க்கும் முறை

திருக்குர்ஆனுடைய குறிப்பிட்ட சில சூராக்களை ஓதி குழந்தைகளின் உடம்பில் ஊதுவதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத்தந்தவாறு மட்டுமே ஓதிப்பார்க்க வேண்டும். அவர்கள் செய்யாத எந்த ஒரு காரியத்தையும் சேர்த்துவிடக்கூடாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது படுக்கைக்கு (உறங்கச்) சென்றால் ஒவ்வோர் இரவிலும் தமது உள்ளங்கைகளை இணைத்து, அதில் குல் ஹுவல்லாஹு அஹத் ,  குல் அஊது பிரப்பில் ஃபலக் ,  குல் அஊது பிரப்பின் னாஸ்   ஆகிய (112, 113, 114) அத்தியாயங்களை ஓதி ஊதிக்கொள்வார்கள். பிறகு தம் இரு கைகளால் (அவை எட்டும் அளவிற்கு) தமது உடலில் இயன்ற வரையில் தடவிக் கொள்வார்கள். முதலில் தலையில் ஆரம்பித்து, பிறகு முகம், பிறகு தம் உடலின் முற்பகுதியில் கைகளால் தடவிக்கொள்வார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி (5017)

நோயாளி குணமாவதற்காக செய்ய வேண்டிய பிரார்த்தனையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத்தந்துள்ளார்கள். குழந்தைகள் நோயுறும் போது அவற்றை நாம் ஓதிக்கொள்ள வேண்டும்.

நானும் ஸாபித் பின் அஸ்லம் அல்புனானீ (ரஹ்) அவர்களும் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் சென்றோம். ஸாபித் (ரஹ்) அவர்கள்  அபூஹம்ஸாவே! நான் நோய் வாய்ப்பட்டுள்ளேன் என்று சொல்ல, அனஸ் (ரலி) அவர்கள்,  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எதனால் ஓதிப்பார்த்தார்களோ அதனால் உங்களுக்கும் நான் ஓதிப் பார்க்கட்டுமா?   என்று கேட்டார்கள். ஸாபித் (ரஹ்),  சரி (அவ்வாறே ஓதிப்பாருங்கள்)   என்று சொல்ல, அனஸ் (ரலி) அவர்கள்,  அல்லாஹும்ம ரப்பன்னாஸ்! முத்ஹிபல் பஃஸி, இஷ்ஃபி அன்த்தஷ் ஷாஃபீ, லா ஷாஃபிய இல்லா அன்த்த, ஷிஃபாஅன் லா யுஃகாதிரு சகமன்  என்று கூறி ஓதிப் பார்த்தார்கள். (பொருள்: இறைவா! மக்களை இரட்சிப்பவனே! துன்பத்தைப் போக்குபவனே! குணமளிப்பாயாக! நீயே குணமளிப்பவன். உன்னைத் தவிர குணமளிப்பவர் வேறு எவருமில்லை. அறவே நோய் இல்லாதவாறு குணமளிப்பாயாக.)

அறிவிப்பவர் : அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்)

நூல் : புகாரி (5742)

சூரத்துல் பாத்திஹாவை வைத்தும் ஓதிப்பார்க்கலாம்.

புகாரி (5736)

இணைவைப்பு இருக்கக்கூடாது

நாங்கள் அறியாமைக் காலத்தில் ஓதிப் பார்த்துவந்தோம். எனவே (நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம்),  அல்லாஹ்வின் தூதரே! இது குறித்து தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?   என்று கேட்டோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), நீங்கள் ஓதிப்பார்ப்பதை என்னிடம் சொல்லிக்காட்டுங்கள். (இறைவனுக்கு) இணை கற்பித்தல் இல்லையானால் ஓதிப்பார்த்தலில் எந்தக் குற்றமும் இல்லை   என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அவ்ஃப் பின் மாலிக்

நூல் : முஸ்லிம் (4427)

மகன் திருந்தாவிட்டால்...

எல்லா மனிதர்களும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. நாம் எவ்வளவு தான் அறிவுரைகளையும் உபதேசங்களையும் கூறினாலும் சிலர் அதைக் கேட்காமல் தன் இஷ்டம் போல் தடம்புரண்டுச் செல்வார்கள். பெற்றோர்களின் சொல்லுக்கு கட்டுப்படமாட்டார்கள்.

இத்தகைய பிள்ளைகள் நமக்கு இருந்தால் அவர்களைத் திருத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். எவ்வளவு முயற்சி செய்தும் திருந்தாவிட்டால் அல்லாஹ் நாடியவர்களுக்குத் தான் நேர்வழி கிடைக்கும் என்பதை கவனத்தில் வைத்து பொறுமை காக்க வேண்டும். அவனுக்கு நேர்வழியை தருமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

நூஹ் (அலை) அவர்களின் மகன் கெட்டவனாக இருந்தான். நூஹ் (அலை) அவர்களுக்கு அவன் கட்டுப்பட மறுத்தான். இறைநிராகிப்பாளனாக மரணித்தான். இந்த வரலாற்றை அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறியுள்ளான்.

மலைகளைப் போன்ற அலை மீது அது அவர்களைக் கொண்டு சென்றது. விலகி இருந்த தன் மகனை நோக்கி  அருமை மகனே! எங்களுடன் ஏறிக்கொள்! (ஏக இறைவனை) மறுப்போருடன் ஆகி விடாதே!   என்று நூஹ் கூறினார்.

ஒரு மலையில் ஏறிக் கொள்வேன்; அது என்னைத் தண்ணீரிலிருந்து காப்பாற்றும் என்று அவன் கூறினான். அல்லாஹ் அருள் புரிந்தோரைத் தவிர அல்லாஹ்வின் கட்டளையிலிருந்து காப்பாற்றுபவன் எவனும் இன்று இல்லை என்று அவர் கூறினார். அவ்விருவருக்கிடையே அலை குறுக்கிட்டது. அவன் மூழ்கடிக்கப்பட்டோரில் ஆகிவிட்டான்.

அல்குர்ஆன் (11 : 42)

நூஹ், தம் இறைவனை அழைத்தார்.  என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவன். உனது வாக்குறுதியும் உண்மையே. நீயே தீர்ப்பு வழங்குவோரில் மேலானவன்   என்றார்.

நூஹே! அவன் உன் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன். இது நல்ல செயல் அல்ல. உமக்கு அறிவு இல்லதாது பற்றி என்னிடம் கேட்காதீர்! அறியாதவராக நீர் இருக்கக் கூடாது என உமக்கு அறிவுரை கூறுகிறேன்   என்று அவன் கூறினான்.

இறைவா! எனக்கு அறிவு இல்லாதது பற்றி உன்னிடம் கேட்பதை விட்டும் உன்னிடமே நான் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ என்னை மன்னித்து அருள்புரியா விட்டால் நஷ்டமடைந்தவனாக ஆகி விடுவேன்   என்று அவர் கூறினார்.

அல்குர்ஆன் (11 : 45)

நம்மையும் நமது குழந்தைகளையும் அல்லாஹ் நேரான வழியில் செலுத்துவானாக.

15.10.2011. 15:09 PM

நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும்

நூலின் பெயர் : நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும்

ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன்

 மார்க்கத்தின் எச்சரிக்கை!

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும். இந்த இணைய தளத்தில் உள்ளவைகளைப் பிரச்சாரம் செய்வதற்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் சில சகோதரர்கள் நமது ஆக்கங்களை அப்படியே பயன்படுத்தி தமது ஆக்கம் போல் காட்டுகின்றனர்.

இன்னாருடைய கட்டுரையில் இருந்து, அல்லது புத்தகத்தில் இருந்து இது எடுக்கப்பபட்டது என்று குறிப்பிடாமல் புகழடைவதற்காக இவ்வாறு செய்கின்றனர்.

சில இணைய தளங்களும் என்னுடைய ஆக்கங்களை அப்படியே வெளியிட்டு தம்முடைய ஆக்கம் போல் காட்டுகின்றன.மேலும் சில புத்தக வியாபாரிகளும் எனது நூல் உட்பட மற்றவர்களின் நூல்களைச் சிறிது மாற்றியமைத்து அனாமதேயங்களின் பெயர்களில் வெளியிட்டுச் சம்பாதிக்கின்றனர். உலகைப் பற்றியும் இவர்களுக்கு வெட்கம் இல்லை. மறுமையைப் பற்றியும் பயம் இல்லை.

இஸ்லாத்தில் இவ்வாறு செய்ய அனுமதி இல்லை. இவர்கள் நல்லது செய்யப் போய் மறுமையின் தண்டனைக்கு தம்மைத் தாமே உட்படுத்திக் கொள்கின்றனர்.

பிறரது ஆக்கங்களைப் பயன்படுத்துவோர் இது இன்னாருடைய ஆக்கம் என்று குறிப்பிடாமல் தன்னுடைய ஆக்கம் போல் காட்டுவது மார்க்க அடிப்படையில் குற்றமாகும்.

இவர்களுக்கு அல்லாஹ் விடுக்கும் எச்சரிக்கையை இங்கே சுட்டிக் காட்டுகிறோம்.

தாங்கள் செய்தவற்றுக்காக மகிழ்ச்சியடைந்து, தாம் செய்யாதவற்றுக்காகப் புகழப்பட வேண்டுமென விரும்புவோர் வேதனையிலிருந்து தப்பித்து விட்டார்கள் என்று நீர் நினைக்காதீர்! அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.

திருக்குர்ஆன் 3:188

நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும்

முன்னுரை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் இஸ்லாம் மறு அறிமுகம் செய்யப்பட்டு 14 நூற்றாண்டுகளுக்கு மேல் சென்று விட்டது. ஆனாலும் அன்று அவர்கள் கூறிய தெளிவான சட்டங்கள் இன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்தால் எப்படி இன்றைய பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்வார்களோ அவ்வளவு தெளிவாக அமைந்துள்ளது. இஸ்லாம் இறைவனின் மார்க்கம் என்பதற்கு இது தெளிவான சான்றாக அமைந்துள்ளது.

மனிதன் எவ்வளவு அறிவாளியாக இருந்தாலும், அவன் தனக்கு பக்க பலமாக ஒரு அறிஞர் பட்டாளத்தையே வைத்து ஆராய்ச்சி செய்து முடிவு கூறினாலும், அந்த முடிவு ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் தாக்குப் பிடிப்பதில்லை. பொருந்தாமல் போய் விடுகின்றது. பல மாற்றங்கள் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டு விடுகின்றது.

ஆனால் எழுதப் படிக்கத் தெரியாத நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கம் மட்டுமே காலத்தை வென்று நிற்கின்றது. காரணம் இது இறைவன் அளித்த மார்க்கம்.

நபிகள் நாயகம் காலத்துக்குப் பிறகு தோன்றிய பல நவீன பிரச்சனைகளுக்கு அவர்கள் கொண்டு வந்த மார்க்கம் எவ்வாறு தீர்வு சொல்கிறது என்பதை விளக்கவே இந்த நூலை வெளியிடுகிறோம்.

பி. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன் பல்வேறு இதழ்களில் வாசகர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில்களின் சிறு தொகுப்பே இந்த நூல்.

மார்க்கத்தை அறிந்து கொள்ள விரும்புவோருக்கு இந்த நூல் பெரிதும் பயன் தரும் என நம்புகிறோம்.

அன்புடன்

நபீலா பதிப்பகம்

உள்ளே உள்ளவை

கருணைக் கொலை கூடுமா?

கில்லட் கருவியால் அறுக்கப்பட்ட பிராணிகளை உண்ணலாமா?

அரைஞான் கயிறு கட்டலாமா?

குடும்பக் கட்டுப்பாடு

தொலைக்காட்சி, புகைப்படம்

விளையாட்டும், உடற்பயிற்சியும்

நகச் சாயம் இடலாமா?

கவரிங் நகைகளை விற்பதும்.

விண்வெளிப் பயணத்தில்

துருவப் பிரதேசத்தில் தொழுகை

உண்டியல்

செயற்கை முறையில் கருத்தரித்தல்

செல்லப் பிராணிகளை வளர்க்கலாமா?

செஸ் விளையாடுதல்

வங்கி - வட்டி - லாபம்

பதிவுத் திருமணம்

அடகு வைத்தல்

எம்மதமும் சம்மதம்?

எழுதப்பட்ட ஸலாம்

தண்ணீர் வியாபாரம்

பால் மாற்றம்

பாடல்கள் பாடுவது

கருணைக் கொலை கூடுமா?

போரில் கொல்லுதல், ஒரு சில குற்றவாளிகளை அரசு கொல்லுதல் தவிர வேறு எந்தவிதமான கொலைக்கும் இஸ்லாத்தில் அனுமதி இல்லை.

நம்பிக்கை கொண்டவனை வேண்டுமென்று கொலை செய்பவனது கூலி நரகம். அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவன் மீது அல்லாஹ் கோபம் கொள்கிறான். அவனைச் சபிக்கிறான். அவனுக்குக் கடுமையான வேதனையைத் தயாரித்துள்ளான்.

திருக்குர்ஆன் 4:93

கொலையில் கருணை என்பது பைத்தியக்காரத்தனமாகும்.

ஒருவன் எவ்வளவு தான் துன்பத்தை அனுபவித்தாலும் அவற்றையும் தாங்கிக் கொண்டு வாழவே விரும்புகிறான். ஒருவன் படும் துன்பத்துக்கு இரங்குகிறோம் எனக் கூறி அவனைக் கொல்ல எவருக்கும் உரிமையில்லை.

வறுமையின் பிடியில் சிக்கியவர்கள், பார்வையிழந்தோர், உறுப்புக்களை இழந்தோர் செத்து விட்டால் நல்லது என்று சில சமயம் கூறி விடுவார்கள். அவர்களைச் சாகடிக்க வேண்டும் என்பது அதன் பொருளன்று. தனது துன்பம் சாவுக்கு நிகரானது என்று அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். மற்றபடி அவர்களும் வாழவே விரும்புகிறார்கள்.

முதியோர்களைக் கவனிக்க விரும்பாதவர்கள், நோயாளிகளைக் கண்டு விலகுபவர்கள் தங்களின் இந்தக் கொடூரமான மனப்பான்மையை கருணைக் கொலை என்ற போர்வையைப் போர்த்தி மறைக்கிறார்கள். உண்மையில் கொலையில் எந்தக் கருணையும் கிடையாது. முற்றிலும் இது காட்டுமிராண்டித் தனமாகும்.

உங்களில் யாரும் மரணத்தைக் கோரிப் பிரார்த்திக்கக் கூடாது. அப்படிக் கேட்க வேண்டிய நிலையை அடைந்தால், இறைவா! வாழ்வது எனக்கு நல்லதென்றால் வாழச் செய்! மரணிப்பது நல்லதென்றால் என்னை மரணிக்கச் செய் என்று கேட்கட்டும் என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : புகாரி 5671, 6351

ஒரு முஸ்லிம் இவ்வுலகில் எவ்வளவு வேதனையை அனுபவிக்கிறானோ அந்த அளவு மறுமையில் அவனது துன்பங்கள் குறையும் என்பது இஸ்லாம் கூறும் சித்தாந்தம்.

பார்க்க : புகாரி 5640, 5642, 5648, 7684

எனவே ஒருவன் என்ன தான் கஷ்டப்பட்டாலும் அதனால் அவனுக்கு மறுமையில் நன்மைகள் தான் ஏற்படப் போகின்றன. அவனுக்கு மறுமையில் கிடைக்கும் பேறுகளை கருணைக் கொலை என்ற பெயரில் பறிக்க யாருக்கும் உரிமை இல்லை.

கில்லட் கருவியால் அறுக்கப்பட்ட பிராணிகளை உண்ணலாமா?

கத்தி எவ்வாறு அறுக்கும் ஆயுதமாக அமைந்துள்ளதோ அது போலவே கில்லட் கருவிகளும் அறுக்கும் ஆயுதங்கள் தான்.

அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டு, எந்த ஆயுதம் இரத்தத்தை ஓட்டச் செய்யுமோ அதன் மூலம் அறுக்கப்பட்டதைப் புசியுங்கள். பல்லாகவோ, நகமாகவோ அந்த ஆயுதம் இருக்கக் கூடாது என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர் : ராஃபிவு பின் கதீஜ் (ரலி)

நூல் : புகாரி 2488, 2507, 3075, 5498, 5503, 5506, 5509, 5543, 5544

பல், நகம் தவிர கருவி எதுவானாலும் பிரச்சினையில்லை. இரத்தத்தை ஓட்டச் செய்ய வேண்டும் என்பது தான் பிரச்சினை.

மேலும் அம்பு எய்து வேட்டையாடும் போது அம்பு பிராணியைக் கொன்றால் அந்த அம்பு பிஸ்மில்லாஹ் கூறி விடப்பட்டிருக்குமானால் அதை உண்ணலாம் என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

நூல் : புகாரி 5478, 5488, 5496

கருவியை இயக்கும் பொழுதே பிஸ்மில்லாஹ் கூறி விட்டால் அக்கருவியின் மூலம் அறுக்கப்பட்டதை உண்ணலாம்.

அரைஞான் கயிறு கட்டலாமா?

யார் பிற சமுதாயத்திற்கு ஒப்பாக நடக்கின்றாரோ அவர் அந்தச் சமுதாயத்தையே சேர்ந்தவராவார் என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : அபூதாவூத் 3512

தீய சக்திகளிடமிருந்து காப்பாற்றும் என்ற நம்பிக்கையிலும், மதச் சடங்காகவும் தான் மற்ற சமுதாயத்தினர் அரைஞான் கயிறு (இடுப்புக் கயிறு) கட்டுகின்றனர்.

தாலி எவ்வாறு பிற மதத்துக் கலாச்சாரமாக உள்ளதோ அது போலவே அரைஞான் கயிறு என்பதும் பிற மதத்தின் கலாச்சாரமாக உள்ளது. இது போன்ற மத விஷயங்களில் பிறருக்கு ஒப்பாகி விடக் கூடாது என்பதால் அரைஞான் கயிற்றைத் தவிர்க்க வேண்டும்.

இது போன்ற நம்பிக்கைகளின்றி, அவசியத் தேவைகளின் நிமித்தம், சாதாரணக் கயிறு என்ற நிலையில் கட்டிக் கொள்வது தவறல்ல. சாவிக் கொத்துக்கள் தொங்க விடுவதற்கும், பெண்களின் மாத விலக்கு சமயங்களில் பயன்படுத்துவதற்கும், இன்ன பிற நோக்கங்களுக்காகவும் சாதாரணக் கயிறு என்ற நிலையில் அதைக் கட்டிக் கொள்வது தவறல்ல.

குடும்பக் கட்டுப்பாடு

உலகில் பெரும்பாலான நாடுகள் மனித உற்பத்தியைக் குறைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அதிக சந்ததிகள் பெறுவதால் ஏற்படும் அசௌகரியங்களையும் பிரச்சாரம் செய்து வருகின்றன. கரு வளராமலிருக்கவும், வளர்ந்த கருவைச் சிதைக்கவும் விஞ்ஞான அறிவைப் பயன்படுத்தி பல சாதனங்களையும் உருவாக்கியுள்ளன.

குடும்பக் கட்டுப்பாடு என அறிமுகப்படுத்தப்படும் இந்தத் திட்டத்துக்கு முஸ்லிம்கள் எந்த அளவு ஒத்துழைக்கலாம்? இதனைக் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் நாம் அறிந்து கொள்வது அவசியமாகும்.

குடும்பத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளவும், குழந்தைகள் உருவாவதைத் தற்காலிகமாக நிறுத்திக் கொள்ளவும் இன்று கண்டு பிடிக்கப்பட்டிருக்கும் நவீன முறைகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்ததில்லை.

அன்றைய மக்கள் குழந்தைகள் உருவாகாமலிருக்கவும், குடும்பத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளவும் ஒரு முறையைக் கையாண்டு வந்தனர்.

அதாவது இல்லறத்தில் உச்ச நிலைக்கு வரும் போது ஆண்கள் தங்கள் விந்துவை வெளியே விட்டு விடுவார்கள். இது தான் அன்றைய மக்களிடம் அறிமுகமான முறை. அரபு மொழியில் இந்தச் செயல் அஸ்ல் எனக் கூறப்படுகிறது. இந்த அஸ்ல் என்ற காரியத்திற்கு மார்க்கம் எந்த அளவு அனுமதி வழங்குகிறது என்பதை நாம் அறிந்து கொண்டால் குடும்பக் கட்டுப்பாடு பற்றி ஒரு முடிவுக்கு வர முடியும்.

குர்ஆன் இறங்கிக் கொண்டிருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நாங்கள் அஸ்ல் செய்து வந்தோம்

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)

நூல் : புகாரி 5209

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் நபித் தோழர்கள் அஸ்ல் செய்துள்ளனர். அதை அல்லாஹ்வும், அவனது திருத் தூதரும் தடை செய்யாமல் இருந்திருக்கிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இது நடந்தாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தெரியாமல் அவர்களின் கவனத்திற்கு வராமல் இது நிகழ்ந்திருக்கக் கூடும் என்று எண்ணுவதற்கு இடமில்லை. ஏனெனில்

நாங்கள் அஸ்ல் செய்து கொண்டிருந்தோம். இந்தச் செய்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எட்டியது. அப்படியிருந்தும் எங்களை அவர்கள் தடுக்கவில்லை. என்று ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்லிம் 2847

எனக்கு ஒரு அடிமைப் பெண் இருக்கிறாள். அவள் கர்ப்பமடைந்து விடுவாளோ என நான் அஞ்சுகிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீ விரும்பினால் அஸ்ல் செய்து கொள். (ஆனால்) அவளுக்கென்று விதிக்கப்பட்டது அவளை அடைந்தே தீரும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)

நூல் : முஸ்லிம் 2844

இந்த ஹதீஸில் அந்த மனிதர் அஸ்ல் செய்ய அனுமதி கேட்கவில்லை. குழந்தை பெறாமலிருக்க தான் என்ன செய்ய வேண்டும் என்றே கேட்கிறார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாங்களே முன் வந்து அஸ்ல் செய்து கொள் என்று அவருக்குச் சொல்லித் தருகிறார்கள். அதே நேரத்தில் இறைவனின் விதி ஒன்று உண்டு. அதை மாற்ற இயலாது என்ற அடிப்படை உண்மையையும் போதிக்கிறார்கள்.

விதியை மாற்ற இயலாது என்பதால் அஸ்ல் கூடாது என்று புரிந்து கொள்ளக் கூடாது. ஏனெனில் விதியை நம்புவது என்பது அஸ்ல் என்ற பிரச்சினைக்கு மட்டும் உரியதன்று. விதியை நம்புதல் எல்லாப் பிரச்சினைக்கும் பொதுவாக அவசியம் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. நோய் நீங்க வேண்டும் என்பதற்காக மருந்து உட்கொள்கிறோம். இறைவனின் விதி வேறு விதமாக இருந்தால் அதையும் இந்த மருந்து மாற்றி விடும் என்று நம்பக் கூடாது. விதியை நம்புகிறோம் என்பதால் மருந்து உட்கொள்ளக் கூடாது என்ற முடிவுக்கு நாம் வருவதில்லை. இது போல் தான் இந்தப் பிரச்சினையும்.

பால் கொடுக்கும் பெண்களைக் கர்ப்பிணியாக்குவதைத் தடுக்கலாம் என்று நான் கருதினேன். பின்னர் ரூம், பாரசீக மக்களைக் கண்டேன். இதனால் அவர்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்பட்டதாக இல்லை. எனவே தடை செய்யவில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்னர் மக்கள் அஸ்ல் பற்றிக் கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அஸ்ல் என்பது குழந்தைகளை மறைமுகமாக உயிருடன் புதைப்பது போன்றதாகும் என்று கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் 2850

இந்த ஒரு ஹதீஸ் மட்டும் அஸ்ல் செய்வதைக் கண்டிக்கும் விதமாக அமைந்துள்ளது. ஏனைய ஹதீஸ்கள் அனைத்தும் அஸ்ல் செய்வதை அனுமதிக்கும் விதமாக அமைந்துள்ளன.

முரண்பாடு போல் தோன்றக் கூடிய இரண்டு செய்திகளும் ஆதாரப்பூர்வமாக உள்ளதால் ஒன்றை ஏற்று மற்றொன்றை மறுக்கக் கூடாது. இரண்டையும் ஏற்பதற்குத் தக்கவாறு பொதுவான கருத்துக்கு நாம் வர வேண்டும்.

அனுமதிக்கும் வகையிலமைந்த ஹதீஸ்களின் அடிப்படையில் அஸ்ல் செய்ய அனுமதி உண்டு என்ற முடிவை நாம் பெறலாம். கண்டனம் செய்து வருகின்ற ஹதீஸ் அஸ்ல் அவ்வளவு நல்லதல்ல என்ற பொருளிலேயே கூறியிருக்க வேண்டும். அறவே கூடாது என்றிருந்தால் பல சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதை அனுமதித்திருக்க மாட்டார்கள்.

அஸ்ல் போன்ற குடும்பக் கட்டுப்பாடுகள் கூடும் என்றே மேற்கூறிய ஆதாரங்கள் அடிப்படையில் நாம் முடிவு செய்ய வேண்டும்.

இப்போதைய குடும்பக் கட்டுப்பாட்டில் இரண்டு முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஒன்று தற்காலிகமாக குழந்தை பெறுவதை நிறுத்திக் கொண்டு தேவைப்படும் போது அதற்காக முயற்சித்தல்.

மற்றொன்று குழந்தை பெறும் தன்மையை நிரந்தரமாக நீக்கிக் கொள்வது.

இந்த இரண்டில் முதல் வகையான கட்டுப்பாடு முறை மட்டுமே அனுமதிக்கப்பட முடியும். அஸ்ல் என்பது இந்த வகையில் தான் அமைந்துள்ளது தெளிவாகின்றது. மற்றொரு முறை அஸ்ல் என்ற முறையோடு ஒட்டி வராததால் அதை அனுமதிக்க எவ்வித அடிப்படையுமில்லை.

இறைவன் வழங்கிய அருட்கொடையை நிரந்தரமாக அழித்துக் கொள்ள மனிதனுக்கு உரிமையில்லை.

ஒரு நபித் தோழர் ஆண்மை நீக்கம் செய்து கொள்ள அனுமதி கோரிய போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மறுத்து விட்டனர்.

நூல் : புகாரி 5074

ஆணுறை, காப்பர் டி போன்ற சாதனங்களைப் பயன்படுத்திட தடை ஏதும் இல்லை. தடுப்பதற்கான அடிப்படைகளும் இல்லை.

குடும்பக் கட்டுப்பாடு எனும் பெயரில் கரு உருவான பின் அதைக் கலைத்து விடும் கொடுமை நாட்டிலே நிலவுகின்றது இந்தக் கொடுமைக்கு இஸ்லாத்தில் அறவே அனுமதி இல்லை.

என்ன பாவத்துக்காக கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்டவள் விசாரிக்கப்படும் போது

திருக்குர்ஆன் 81:8,9

வறுமையின் காரணமாக உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம்.

திருக்குர்ஆன் 6:151

உருவான குழந்தைகளை அழிப்பதற்கு இது போன்ற வசனங்கள் தடையாக உள்ளன. இது அல்லாத விதமாக தற்காலிகமான முறையில் குடும்பத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளத் தடையேதும் இல்லை.

தொலைக்காட்சி, புகைப்படம்

உருவப்படங்கள், உருவச் சிலைகள் ஆகியவற்றை இஸ்லாம் தடை செய்துள்ளதைப் பெரும்பாலோர் அறிந்து வைத்துள்ளனர். ஆனால் நவீனமான கருவிகளைப் பயன்படுத்தி தயார் செய்யப்படும் உருவப் படங்கள் பற்றிய இஸ்லாத்தின் தீர்ப்பைப் பலரும் அறியாமல் உள்ளனர்.

உருவச் சிலைகள், உருவப் படங்கள், புகைப் படங்கள், நிழற்படங்கள், எலக்ட்ரான் கதிர் அலைகளால் தெரியும் படங்கள் என பல்வேறு வகைகள் உள்ளன. இவைகளை விரிவாக நாம் ஆராய்ந்தாலே உண்மை விளங்கும்.

எந்த வீட்டில் உருவச் சிலைகளும், நாய்களும் உள்ளனவோ அங்கே மலக்குகள் (வானவர்கள்) நுழைய மாட்டார்கள் என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ தல்ஹா (ரலி)

நூல் : புகாரி 3224, 5957

உருவச் சிலைகள் என்று நாம் மொழிபெயர்த்த இடத்தில் திம்ஸால் தமாஸீல் ஸுரத் ஆகிய சொற்கள் இடம் பெற்றுள்ளன.

இந்தச் சொற்கள் உருவச் சிலைகளையும், உருவப் படங்களையும் குறிக்கும் பொதுவான சொற்களாகும்.

இந்தச் சொற்கள் மூன்று பரிமாணம் உள்ள உருவச் சிலைகளையே குறிக்கும். இரண்டு பரிமாணமுள்ள படங்களைக் குறிக்காது; எனவே இரண்டு பரிமாணமுள்ள எந்தப் படங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சிலர் விளக்கம் தருகின்றனர்.

ஹதீஸ்களை ஆராயும் போது இந்த விளக்கம் முற்றிலும் தவறானது என்பதை அறியலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து திரும்பி வந்த போது உருவங்கள் (திம்ஸால்) உள்ள திரைச் சீலையைத் தொங்க விட்டிருந்தேன். அதைக் கண்டதும் அவர்களின் முகம் மாற்றமடைந்தது. அதைக் கிழித்து எறிந்து விட்டு ஆயிஷாவே! அல்லாஹ்வின் படைப்பைப் போல் படைக்க முற்படுபவர்களே கியாமத் நாளில் கடுமையான தண்டனைக்குரியவர்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி 3224, 5954

திரைச் சீலையில் இருந்த உருவங்கள் நிச்சயம் முப்பரிமாணம் உள்ளதன்று. அவ்வாறு இருக்கவும் முடியாது. மாறாக படங்கள் தான் வரையப்பட்டிருக்கும். அல்லது பின்னப்பட்டிருக்கும். படங்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள் என்பதற்கு இது தெளிவான சான்றாகும்.

உருவச் சிலைகளும், உருவப் படங்களும் இஸ்லாத்தின் பார்வையில் ஒன்று தான் என்பதை இந்நிகழ்ச்சி உறுதி செய்கின்றது.

நல்லடியார்கள் என்று கருதப்படுபவர்களின் உருவங்களென்றால் அவற்றையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது கஃபாவுக்குள் இருந்த இப்றாஹீம் (அலை), இஸ்மாயில் (அலை) ஆகியோரின் உருவச் சிலைகள் உட்பட எல்லா உருவச் சிலைகளையும் அகற்றுமாறு கட்டளையிட்டு, அவற்றை அகற்றிய பின்பே உள்ளே நுழைந்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி 1601,

மற்றொரு அறிவிப்பில் (புகாரி 3351)

இப்றாஹீம் (அலை), மர்யம் (அலை) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நல்லடியார்களுக்கு இதில் விதி விலக்கு எதுவும் இல்லை. நல்லடியார்களுக்கு சிலை வடிப்பதிலும், வரைவதிலும் தான் ஈமானுக்கு ஆபத்து அதிகம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

உருவப் படங்கள் முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டதா? அதில் ஏதேனும் விதி விலக்கு உண்டா? என்பதை இனி காண்போம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து வந்த போது உருவப்படம் வரையப்பட்ட திரைச் சீலைகளைக் கண்டதும். அதை அகற்றினார்கள். நான் அதை இரண்டு தலையணைகளாக ஆக்கினேன். அதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்கார்ந்து கொள்வார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி 2479

நான் அதை இரண்டு தலையணைகளாக ஆக்கினேன். உருவப் படங்கள் இருக்கும் நிலையிலேயே அதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாய்ந்திருந்ததை நான் பார்த்திருக்கிறேன்

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : அஹ்மத் 24908

தலையணைகளாக ஆக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே கட்டளையிட்டதாக மற்றொரு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

(அஹ்மத் 23668)

ஜிப்ரீல் (அலை) என்னிடம் வந்து சென்ற இரவு உங்கள் வீட்டுக்கு நான் வருவதற்குத் தடையாக இருந்தவை என்னவென்றால், உங்கள் வீட்டில் ஒரு மனிதனது உருவச் சிலையும், உருவம் பொறித்த திரைச் சீலை ஒன்றும், நாய் ஒன்றும் இருந்தது தான் என்று என்னிடம் கூறினார்கள். உருவச் சிலையின் தலையை அகற்றுமாறும், உருவப் படங்கள் உள்ள திரைச் சீலையைக் கிழித்து மதிப்பில்லாமல் மிதிபடும் இரண்டு தலையணைகளாக்கிக் கொள்ளுமாறும், நாயை வெளியேற்றுமாறும் உங்கள் (குடும்பத்துக்கு) கட்டளையிடுங்கள் என்றும் என்னிடம் கூறினார்கள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)

நூல்கள் : அஹ்மத் 7701, திர்மிதீ 2730, அபூதாவூத் 3627

தன்னிடம் இறக்கைகள் உடைய குதிரைகளின் படம் பொறிக்கப்பட்ட திரைச் சீலை இருந்ததாகவும், அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கிழித்ததும், அதில் இரண்டு தலையணைகள் செய்ததாகவும் அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்லிம் 3935

இந்த ஹதீஸ்களைக் கவனமாகப் பார்க்கும் போது மதிப்பு மிக்கவையாகக் கருதப்படும் உருவப் படங்களே தடுக்கப்படுகின்றன; மதிப்பில்லாமல் மிதிபடும் உருவப் படங்கள் தடுக்கப்படவில்லை என்பதை எவரும் அறிய முடியும்.

உருவப் படங்கள் உள்ள திரைச் சீலையைக் கிழித்து மதிப்பில்லாமல் மிதிபடும் இரண்டு தலையணைகளாக்கிக் கொள்ளுமாறு ஜிப்ரீல் (அலை) கூறிய வார்த்தை இதைத் தெளிவாக விளக்கும்.

எந்த உருவம் திரைச் சீலையாக தொங்கிக் கொண்டிருக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் தடை செய்யப்பட்டதோ அதே உருவம் தலையணையாகத் தரையில் போடக் கூடியதாக ஆகும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் தடுக்கப்படவில்லை. மாறாக அதை அவர்களே பயன்படுத்தியிருக்கிறார்கள்.

அந்தத் திரைச் சீலையை இரண்டாகக் கிழித்த போது உருவமும், பாதி, பாதியாகச் சிதறுண்டு போயிருக்கலாம். அதனால் அவர்கள் பயன்படுத்தியிருக்கலாம் என்று சிலருக்குத் தோன்றக் கூடும்.

அது சரியான அனுமானம் அல்ல. ஏனெனில் ஆயிஷா (ரலி) அவர்கள் உருவம் இருக்கும் நிலையிலேயே அதில் நபிகள் நாயகம் (ஸல்) சாய்ந்து கொண்டிருந்ததை நான் பார்த்தேன் என்கிறார்கள்.

சின்னஞ்சிறு வித்தியாசத்தையும் நுணுக்கமாகக் கவனிக்கும் அன்னை ஆயிஷா அவர்கள், உருவம் சிதைந்து போயிருந்தால் அதை உருவம் என்று குறிப்பிட்டிருக்க மாட்டார்கள்.

மேலும் ஜிப்ரீல் (அலை) சம்மந்தப்பட்ட ஹதீஸில் உருவச் சிலையின் தலையை அகற்றுமாறு கூறிய ஜிப்ரீல் (அலை) அவர்கள், உருவப் படங்கள் உள்ள சீலையை உருவம் தெரியாதவாறு நீள வடிவில் பாதியாகக் கிழிக்குமாறு கூறவில்லை. உருவம் தெரியாத அளவுக்கு மாற்றினால் தான் தலையணையாகப் பயன்படுத்தலாம் என்றிருந்தால் மதிப்பில்லாமல் மிதிபடும் வகையில் என்று கூறியிருக்கத் தேவையில்லை.

இன்னும் சொல்வதென்றால் தலையணையாக ஆக்குமாறு கூட அவர்கள் கூறத் தேவையில்லை. உருவம் தெரியாத வகையில் கிழிக்கப்பட்டு விட்டால் அதைத் திரைச் சீலையாகவே மீண்டும் பயன்படுத்தலாம்.

ஆக மதிப்பற்ற விதத்தில் பொறிக்கப்பட்டுள்ள படங்களைப் பயன்படுத்தத் தடை ஏதும் இல்லை என்பதே சரியாகும்.

தொங்க விடப்படும் உருவப் படங்கள் பொறித்த திரைச் சீலைகள், பிரேம் செய்து மாட்டப்படும் உருவப் படங்கள், ஆல்பத்தில் வைத்து அழகு பார்க்கும் போட்டோக்கள், பெட்டியில் பூட்டி வைத்துப் பாதுகாக்கும் உருவப் படங்கள் இவையெல்லாம் தடுக்கப்படுகின்றன. அதைப் பற்றி மதிப்பிருக்கின்ற காரணத்தினால் தான் பெட்டிக்குள் வைத்துப் பாதுகாக்கிறார்கள். ஆல்பத்தில் வைத்து அழகு பார்க்கிறார்கள். உயர்ந்த இடத்தில் வைத்துப் பேணுகிறார்கள். இது போன்ற வழிகளில் பயன்படுத்த இஸ்லாம் தடுக்கின்றது.

செய்தித் தாள்களில் காணப்படும் உருவப் படங்களுக்கும், பொட்டலாம் கட்டிக் கொடுக்கப் பயன்படும் காகிதங்களில் பொறிக்கப்பட்ட ,உருவப் படங்களுக்கும், பயன்படுத்தி விட்டு தூக்கி எறியப்படும் பெட்டிகளில் பொறிக்கப்பட்ட உருவப் படங்களுக்கும் (உதாரணம்: தீப்பெட்டி) எவ்வித மதிப்பும் அளிக்கப்படுவதில்லை. இவைகளை வைத்திருக்கத் தடையும் இல்லை. ஒரு செய்திப் பத்திரிகை நம் வீட்டில் இருந்தால் மலக்குகள் நுழைய மாட்டார்கள் என்பதில்லை.

மதிப்பற்ற வகையிலும் கூட உருவப் படங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று கூறி கீழ்க்கண்ட ஹதீஸை ஒரு சாரார் சான்றாகக் காட்டக்கூடும்.

ஆயிஷா (ரலி) அவர்கள் உருவப் படங்கள் பொறித்த திரைச் சீலை ஒன்றை வாங்கியிருந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்து உள்ளே நுழையவில்லை. இதைக் கண்டதும், ஆயிஷா (ரலி) அவர்கள், நான் செய்த தவறு (எதுவாயினும்) அதற்காக அல்லாஹ்விடத்தில் மன்னிப்புத் தேடுகிறேன் என்றார்கள். இது என்ன திரைச் சீலை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நீங்கள் அதன் மேல் அமர்வதற்கும், சாய்ந்து கொள்வதற்காகவும் வாங்கினேன் என்று ஆயிஷா (ரலி) கூறினார்கள். இந்த உருவத்தை வரைந்தவர்கள் கியாமத் நாளில் வேதனை செய்யப்படுவார்கள். நீங்கள் படைத்ததை உயிர்ப்பியுங்கள் என்று அவர்களிடம் கூறப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி 3224

சாய்ந்து கொண்டார்கள் என்று வருகின்ற ஹதீஸை இந்த ஹதீஸ் மாற்றி விட்டது என்று அவர்கள் வாதிடுகிறார்கள்.

இந்த வாதம் இரண்டு காரணங்களால் சரியானதல்ல. வரைந்தவர்களைத் தான் இந்த ஹதீஸில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டனம் செய்கிறார்கள். அதை வைத்திருந்த ஆயிஷா (ரலி) அவர்களைக் கண்டிக்கவில்லை.

உருவப் படம் உள்ள தலையணையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாய்ந்து கொண்டிருந்ததை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பின்பே ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.

மற்றொரு விதிவிலக்கு

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடனிருக்கும் போது பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டிருப்பேன். என்னுடன் விளையாடுவதற்கு சில தோழிகளும் இருந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (வீட்டுக்குள்) நுழையும் போது அவர்கள் ஓடி ஒளிந்து கொள்வர். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (என்னுடன் விளையாட) அவர்களைத் திருப்பி அனுப்புவார்கள். அதன் பின் அவர்கள் என்னோடு விளையாடுவார்கள் என்று அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல் : புகாரி 6130

இந்த ஹதீஸிலிருந்து பொம்மைகள் வைத்து விளையாட அனுமதி உள்ளது என்று அறியலாம்.

உருவச் சிலைகளுக்கு பொதுவான தடை வந்துள்ளதால், இங்கே குறிப்பிடப்படும் பொம்மைகள் உயிரற்ற மரம், செடி, கப்பல் போன்ற பொம்மைகளாகத் தான் இருக்க முடியும் என்று கூற இடமுண்டு. இதை மற்றொரு ஹதீஸ், மறுத்து உயிருள்ளவைகளின் பொம்மைகளையே வைத்து விளையாடி இருக்கிறார்கள் என்பதைத் தெளிவாக அறிவிக்கின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தபூக்கோ, அல்லது ஹுனைனோ இரண்டில் ஏதோ ஒரு போர்க் களத்திலிருந்து திரும்பி வந்தனர். அப்போது காற்று வீசி ஆயிஷா (ரலி) அவர்களின் விளையாட்டுப் பொம்மைக்குப் போடப்பட்டிருந்த திரையை விலக்கியது. அதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆயிஷாவே என்ன இது? என்றார்கள். என் பொம்மைகள் என்று ஆயிஷா (ரலி) கூறினார்கள். அவற்றுக்கிடையே இரண்டு இறக்கைகளைக் கொண்ட குதிரை பொம்மை ஒன்றையும் கண்டு, அதோ நடுவில் உள்ள அந்தப் பொம்மை என்ன? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். குதிரை என்று ஆயிஷா (ரலி) பதில் கூறினார்கள். குதிரையின் மேல் என்ன? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். இறக்கைகள் என்று ஆயிஷா (ரலி) பதில் கூறினார்கள். குதிரைக்கும் இரண்டு இறக்கைகளா? என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்க,ஏன் சுலைமான் நபியிடம் இறக்கைகள் உள்ள குதிரை இருந்ததாக நீங்கள் கேள்விப்பட்டதில்லையோ? என்று ஆயிஷா (ரலி) கேட்டார்கள். இதைக் கேட்டதும், கடவாய்ப் பற்களை நான் காணும் அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள் என்று அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல் : அபூதாவூத் 4284

உயிருள்ள குதிரையின் உருவச் சிலையைக் கண்ட பின்பும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டிக்காதது மட்டுமல்ல; தமது சிரிப்பின் மூலம் இதற்கு அங்கீகாரமும் அளிக்கிறார்கள்.

உயிரற்றவைகள் மட்டுமல்ல; உயிருள்ளவைகளின் பொம்மைகளைக் கூட சிறுவர்கள் விளையாடலாம்; அதை வீட்டில் வைத்திருக்கலாம் என்பது இதிலிருந்து தெளிவாகின்றது.

உருவச் சிலைகள் உள்ள இடங்களில் மலக்குகள் நுழைய மாட்டார்கள் என்பது, சிறுவர்களின் விளையாட்டுக்காக இல்லாமல் ஏனைய நோக்கங்களுக்காக உள்ள உருவச் சிலைகளுக்கே என்று உணரலாம்.

இன்னொரு விதிவிலக்கு

மதிக்கப்படாத வகையிலும், சிறுவர் சிறுமியர்களின் விளையாட்டுப் பொருளாகவும் உருவப் படங்களுக்கும் பொம்மைகளுக்கும் அனுமதி இருப்பது போல் சிறிய அளவிலான உருவப் படங்களுக்கும் அனுமதி உண்டு.

புஹாரியில் பதிவு செய்யப்பட்டுள்ள 5958 வது ஹதீஸில் இருந்து இதை அறியலாம்.

حدثنا قتيبة حدثنا الليث عن بكير عن بسر بن سعيد عن زيد بن خالد عن أبي طلحة صاحب رسول الله صلى الله عليه وسلم قال إن رسول الله صلى الله عليه وسلم قال إن الملائكة لا تدخل بيتا فيه الصورة قال بسر ثم اشتكى زيد فعدناه فإذا على بابه ستر فيه صورة فقلت لعبيدالله ربيب ميمونة زوج النبي صلى الله عليه وسلم ألم يخبرنا زيد عن الصور يوم الأول فقال عبيد الله ألم تسمعه حين قال إلا رقما في ثوب وقال ابن وهب أخبرنا عمرو هو ابن الحارث حدثه بكير حدثه بسر حدثه زيد حدثه أبو طلحة عن النبي صلى الله عليه وسلم

5958 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(உயிரினங்களின்) உருவப் படம் உள்ள வீட்டில் (இறைக் கருணையைக் கொண்டு வரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள்.

இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர் அபூதல்ஹா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(அறிவிப்பாளர்களில் ஒருவரான) புஸ்ர் பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) ஸைத் பின் காலித் (ரலி) அவர்கள் பின்னர் நோய்வாய்ப்பட்ட போது நாங்கள் அவர்களை உடல் நலம் விசாரிக்கச் சென்றோம். அப்போது அவர்களுடைய வீட்டுக் கதவில் உருவப்படம் உள்ள திரையொன்று தொங்கிக் கொண்டிருந்தது. நான் (உடனிருந்த) நபி (ஸல்) அவர்களின் துணைவியரான மைமூனா (ரலி) அவர்களுடைய வளர்ப்பு மகன் உபைதுல்லாஹ் பின் அஸ்வத் அல்கவ்லானீ (ரஹ்) அவர்களிடம் உருவப் படங்களைப் பற்றி முன்பு ஒரு நாள் ஸைத் (ரலி) அவர்கள் நமக்கு (ஒரு ஹதீஸ்) அறிவிக்கவில்லையா? என்று கேட்டேன். உடனே உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்கள் துணியில் வரையப்பட்டதைத் தவிர என்று அவர்கள் சொன்னதை நீங்கள் கேட்கவில்லையா? என்று கேட்டார்கள்.

இந்த ஹதீஸ் அபூதல்ஹா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

மேலும் புஹாரி 3226 ஹதீஸையும் பார்க்க

மேற்கண்ட ஹதீஸில் ரஹ்மத் டர்ஸ்ட் தமிழாக்கத்தில் துணியில் வரையப்பட்ட (உயிரற்றவையின் படத்)தைத் தவிர என்று மொழிபெயர்த்துள்ளனர். மொழி பெயர்ப்பு சரியானது என்றாலும் அடைப்புக்குறிக்குள் அவர்கள் போட்டுள்ள சொற்கள் மொழி பெயர்த்தவர்கள் சுயமாக சேர்த்ததாகும். மூலத்தில் இல்லை. அதை நீக்கி விட்டுத்தான் இந்த ஹதீஸின் கருத்தை சிந்திக்க வேண்டும்.

ஆடைகளில் அழகுக்காக சிறு சிறு உருவங்களை பதிப்பதை நாம் காண்கிறோம். அருகில் சென்று பார்த்தால் தான் அந்த உருவம் இன்னது எனத் தெரியும். தூரத்தில் இருந்து பார்த்தால் அது ஒரு வேலைப்பாடாகத் தான் தெரியும். இது தான் ரக்கம் என்று கூறப்பட்டும்.

அந்தச் சொல் தான் மூலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தூரத்தில் இருந்து பார்த்தாலும் அது என்ன உருவம் என்பது தெரியுமானால் அந்த உருவம் முக்கியப்படுத்தப்பட்டு பொரிக்கப்பட்டுள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. உருவத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சின்ன சின்னதாக வேலைப்பாடு என்ற அடிப்படையில் வரையப்பட்ட அல்லது அச்சிடப்பட்ட உருவமாக் இருந்தால் அதற்குத் தடை இல்லை என்பதை இந்த ஹதீஸில் இருந்து அறியலாம்.

எனவே உருவத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் வேறு காரணத்துக்காக சிறிய அளவில் வரையப்பட்ட உருவங்களைப் பயன்படுத்துவது தவறல்ல என்பதை இந்த ஹதீஸில் இருந்து அறியலாம்.

மேலும் நஸயி, திர்மிதி ஆகிய நூல்களில் இடம் பெற்ற பின்வரும் ஹதீஸையும் காணக!

حَدَّثَنَا إِسْحَقُ بْنُ مُوسَى الْأَنْصَارِيُّ حَدَّثَنَا مَعْنٌ حَدَّثَنَا مَالِكٌ عَنْ أَبِي النَّضْرِ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ أَنَّهُ دَخَلَ عَلَى أَبِي طَلْحَةَ الْأَنْصَارِيِّ يَعُودُهُ قَالَ فَوَجَدْتُ عِنْدَهُ سَهْلَ بْنَ حُنَيْفٍ قَالَ فَدَعَا أَبُو طَلْحَةَ إِنْسَانًا يَنْزِعُ نَمَطًا تَحْتَهُ فَقَالَ لَهُ سَهْلٌ لِمَ تَنْزِعُهُ فَقَالَ لِأَنَّ فِيهِ تَصَاوِيرَ وَقَدْ قَالَ فِيهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا قَدْ عَلِمْتَ قَالَ سَهْلٌ أَوَلَمْ يَقُلْ إِلَّا مَا كَانَ رَقْمًا فِي ثَوْبٍ فَقَالَ بَلَى وَلَكِنَّهُ أَطْيَبُ لِنَفْسِي قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ

அபூ தல்ஹா (ரலி) அவர்கள் நோய்வாய்ப்பட்ட போது அவரை நான் நோய் விசரிக்கச் சென்றேன். அவருடன் ஸஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்களும் இருந்தார்கள். அபூதல்ஹா அவர்கள் ஒரு மனிதரை அழைத்து தனக்குக் கீழே உள்ள விரிப்பை நீக்குமாறு கூறினார்கள். இதைக் கண்ட ஸஹ்ல் (ரலி) அவர்கள் ஏன் இதை நீக்குகிறீர் என்று கேட்டார்கள். அதற்கு அபூதல்ஹா (ரலி) அவர்கள் அதில் உருவப்படங்கள் உள்ளன; உருவப்படங்கள் குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது தான் உமக்குத் தெரியுமே என்று கூறினார்கள். அதற்கு ஸஹ்ல் (ரலி) அவர்கள் ஆடையில் வேலைப்பாடு செய்யப்பட்ட உருவங்களைத் தவிர என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லையா என்று அபூ தல்ஹாவிடம் கேட்டார்கள். அதற்கு அபூ தல்ஹா அவர்கள் ஆம் ஆனாலும் என் மன திருப்திக்காக (அதாவது பேணுதலுக்காக) அகற்றச் சொன்னேன் என்று கூறினார்கள்.

மேற்கண்ட விதிவிலக்கை இந்த ஹதீஸும் உறுதிப்படுத்துகிறது.

சிறிய அளவு, பெரிய அளவு என்பதை எவ்வாறு தீர்மானிப்பது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குக் கூறவில்லை.

இது போன்ற விஷயங்களில் நடை முறையைக் கவனத்தில் கொண்டு நேர்மையான சிந்தனையுடன் நாம் தான் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

சிறிய அளவிலான உருவப்படம் என்று நமக்குப் படுகின்ற உருவப் படங்களை வைத்துக் கொள்வதில் குற்றம் இல்லை.

குழந்தைகளுக்குக் கல்வி கற்றுக் கொடுத்தல் போன்ற காரணத்துக்காக உருவங்கள் வரைந்து கற்றுக் கொடுப்பதையும் தடை செய்ய முடியாது. சிங்கம், புலி போன்ற விலங்குகளைப் படம் வரைந்து தான் கற்றுக் கொடுக்க முடியும்.

அது போல் சாட்சியங்களாகப் பயன்படக் கூடிய வகையிலும் படங்களைப் பயன்படுத்தலாம்.

ஒரு ஊரில் ஒரு சமுதாயத்தினர் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளை அம்பலப்படுத்திட புகைப்படங்கள் சிறந்த சாட்சியமாகப் பயன்படும். சிலரது சந்திப்புகளை நிரூபிக்கும் அவசியம் ஏற்படும் என்றால் அப்போதும் புகைப்படங்களைத் தடுக்க முடியாது.

இது உருவப் படங்களின் நிலை! புகைப் படங்களுக்கும் இதுவே தான் சட்டம். கையால் வரைந்தால் தான் உருவப்படம். கருவியால் வரைந்தால் அது உருவப் படம் அல்ல என்ற வாதம் தவறான வாதமாகும்.

ஒரு காலத்தில் எழுத்தாணியால் எழுதினார்கள். அது வளர்ந்து பேனாக்களால் எழுதப்பட்டு, இன்று அச்சிடப்படுகிறது. எழுத்துக் கலையின் விஞ்ஞான முன்னேற்றமே அச்சுக் கலை. அச்சிடப்பட்டதையும், கையால் எழுதியதையும் எழுத்துக்கள் என்றே கூறுவோம்.

அது போல் ஓவியக் கலையின் விஞ்ஞான முன்னேற்றமே போட்டோ (புகைப்படக் கலை) இது உருவப்படம் அல்ல என்று எவரும் கூற முடியாது. அதை விட தத்ரூபமாக படங்கள் போட்டோவில் அமைகின்றன. உருவப்படங்களுக்குச் சொன்ன எல்லா விதிகளும், விலக்குகளும் போட்டோவுக்கும் பொருந்தும்.

எல்லாவற்றையும் நமக்காக இறைவன் படைத்துள்ளான் என்பதால் உருவப்படங்கள் கூடும் என்று சிலர் கூறுகின்றனர். பன்றி, நாய்களையும் இதே அடிப்படையில் உண்ண முடியுமா? நமக்காக எல்லாவற்றையும் படைத்த இறைவன் தான் ஒரு சிலவற்றை நமக்குத் தடுத்திருக்கிறான் என்று புரிந்து கொண்டால் இந்தக் கேள்வி எழ வழியில்லை.

மற்றொரு விதிவிலக்கு

உயிரற்ற பொருட்களாகிய மரம், செடி, கப்பல், வீடு, கார் போன்ற உருவங்களுக்குத் தடை ஏதுமில்லை.

நான் ஓவியங்கள் வரைகிறேன். அது பற்றி எனக்குத் தீர்ப்பளியுங்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ஒருவர் கேட்டார். எல்லா ஓவியர்களும் நரகில் தான். ஓவியங்களுக்கு உயிரளிக்கப்பட்டு அவை அவனை நரகில் வேதனைப்படுத்தும். நீ அவசியம் செய்தாக வேண்டும் என்றால் மரம் மற்றும் உயிரற்றவைகளைச் செய்து கொள்! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி 2225

உயிரற்ற பொருட்களைச் செய்து கொள்ள ஒரு தடையுமில்லை என்பதை இந்த ஹதீஸ் அறிவிக்கின்றது.

ஆனால் இந்த அனுமதியிலும் விதி விலக்கு இருக்கின்றது. உயிரற்ற சில பொருட்களை வைத்துக் கொள்ள நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதி மறுக்கிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வீட்டில் சிலுவைகளைப் பொறித்த எந்தப் பொருளையும் அழிக்காமல் விட மாட்டார்கள் என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : புகாரி 5952

ஏனைய மக்களால் புனிதமாகக் கருதப்படும் பொருட்களின் சிலைகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதித்ததில்லை என்பதை இந்த ஹதீஸ் விளக்குகின்றது.

டி.வி., வீடியோ

டி.வி, வீடியோக்கள் உருவப் படங்களில் சேராது என்பதே சரியாகும். உருவப் படங்களுக்கும், டி.வி., வீடியோவுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.

காணப்படுவது, பிரதிபலிப்பது எல்லாம் படங்கள் அல்ல. பதிவதும், நிலைத்திருப்பதுமே படங்கள்.

நமது முகத்தைக் கண்ணாடியில் பார்க்கிறோம். நமது உருவம் கண்ணாடியில் தெரிவதால் காண்ணாடியை யாரும் உருவப் படம் என்று சொல்வதில்லை. கண்ணாடி பார்த்தால் மலக்குகள் வருவதில்லை என்றும் கூறுவதில்லை.

கண்ணாடியில் தெரிவதைப் படம் என்று சொல்லாமலிருக்க என்ன காரணம் கூறுவோம்?

நம் உருவம் கண்ணாடியில் பதியவும் இல்லை. நிலைத்திருக்கவும் இல்லை. நாம் முன்னால் நின்றால் அது நம்மைக் காட்டும். வேறு யாராவது நின்றால் அவர்களைக் காட்டும். யாருமே நிற்காவிட்டால் எதையும் காட்டாது.

டி.வி.யும் இது போன்றது தான். நாம் எதை ஒளி பரப்புகிறோமோ அது தெரியும். என்னை ஒளி பரப்பினால் நான் தெரிவேன். உங்களை ஒளி பரப்பினால் நீங்கள் தெரிவீர்கள். எதையும் ஒளி பரப்பாவிட்டால் எதுவுமே தெரியாது. டி.வி.யில் எதுவுமே பதியவுமில்லை. நிலைக்கவுமில்லை. உருவப் படம் என்று காரணம் காட்டி இதைத் தடுக்க முடியாது.

மேலும் உருவப் படம் என்பதில் இயக்கமோ, அசைவோ, ஓசையோ இருக்காது. டி.வி., வீடியோக்களில் இவையெல்லாம் இருக்கின்றன. உருவப் படங்களிலிருந்து இந்த வகையிலும் தொலைக் காட்சி என்பது வித்தியாசப்படுகின்றது. சுருங்கச் சொல்வதென்றால் நேரடியாகக் காண்பது போன்ற தன்மையே டி.வி., வீடியோக்களில் காணப்படுகிறது.

அன்னியப் பெண் ஒருத்தி போய்க் கொண்டிருக்கிறாள். முகம் பார்க்கும் கண்ணாடி வழியாக அவளது பிம்பத்தை ரசிப்பது கூடுமா? கூடாது என்போம். உருவம் என்பதற்காக அல்ல. அன்னியப் பெண்ணை ரசிக்கக் கூடாது என்பதற்காக. நேரில் எதையெல்லாம் பார்க்கக் கூடாதோ அதையெல்லாம் கண்ணாடி வழியாகவும் பார்க்கக் கூடாது.

ஒரு விளையாட்டு நடக்கிறது. அதை நேரிலும் பார்க்கலாம். கண்ணாடி வழியாகவும் பார்க்கலாம். டி.வி.,யின் நிலையும் இது தான். கல்வி, விவசாயம், மருத்துவம், தொழிற்பயிற்சி, சமையல் கலை, நாட்டு நடப்பு, அனுமதிக்கப்பட்ட விளையாட்டுக்கள், செய்முறைப் பயிற்சி, மார்க்க விளக்க நிகழ்ச்சி போன்ற நிகழ்ச்சிகளை நேரிலும் பார்க்கலாம். டி.வி.யிலும் பார்க்கலாம். திரைப் படமாகவும் பார்க்கலாம்.

ஆபாசம், பச்சை வசனங்கள், ஆண் பெண் கட்டிப் புரளுதல், படுக்கையறைக் காட்சிகள் போன்றவைகளை நேரிலும் பார்க்கக் கூடாது. டி.வியிலும் பார்க்கக் கூடாது. இசையை நேரிலும் கேட்கக் கூடாது. டி.வி., வழியாகவும் கேட்கக் கூடாது. இது தான் அதன் அடிப்படை.

வீடியோவுக்கு அனுமதி உண்டு என்று கருதிக் கொண்டு திருமணம் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளை எடுத்து வைத்துக் கொள்ளலாம் என்று கருதக் கூடாது. மற்றவர்களுக்கோ, தனக்கோ ஒரு பயனும் இல்லாத இது போன்ற நிகழ்ச்சிகளுக்காகப் பெரும் பணம் செலவு செய்வதால், வீண் விரயம் என்ற அடிப்படையில் தடுக்கப்பட்டதாகும்.

கல்வி மற்றும் பிறருக்குப் பயன் தருகின்ற நிகழ்ச்சிகளை வீடியோ கேஸட்டுகளாக எடுத்து வைப்பதால் அதைப் பிறர் பார்த்து கற்றுக் கொள்ள உதவுகிறது என்பதால் அதற்குத் தடை இல்லை. கடைசியாக ஒரு போதனை.

பயனுள்ள பல காரியங்களுக்காக பயன்படத்தக்க இத்தகைய நவீன கருவிகள், மாபெரும் புரட்சியை ஏற்படுத்தவல்ல இத்தகைய சாதனங்கள் தகுதியற்றவர்களின் கையில் சிக்கிக் கொண்டுள்ளது. இதனால் மனிதனை வழிகெடுக்கும் நிகழ்ச்சிகளும், உருப்படாத சங்கதிகளுமே அதிகமதிகம் காட்டப்படுகின்றன. ஒரு சில பயனுள்ள நிகழ்ச்சிகளைக் காட்டினாலும் அதை மட்டும் மக்கள் பார்ப்பதில்லை. உருப்படாத நிகழ்ச்சிகளுக்காகக் காத்திருந்து அதைப் பார்க்கிறார்கள்.

இத்தகைய ஆளும் வர்க்கமும், இப்படிப்பட்ட மக்களும் உள்ள நாடுகளில் இது போன்ற சாதனங்களை வீடுகளில் வாங்கி வைப்பவர்கள் ரொம்பவும் யோசிக்க வேண்டும்.

மார்க்கம் அனுமதிக்கின்ற வழிகளில் மட்டும் அதைத் தன்னால் பயன்படுத்த முடியுமா? மனதைக் கெடுக்கும் சமாச்சாரங்கள் காட்டப்படும் போது சபலப்படாமல் தன்னை வெல்ல முடியுமா? என்று பலமுறை யோசிக்க வேண்டும்.

நாம் வேலையின் நிமித்தம் வெளியிலோ, வெளி ஊருக்கோ, வெளி நாட்டுக்கோ சென்ற பின் நம் குடும்பத்தினர் அதை மார்க்கம் அனுமதிக்கின்ற நிகழ்ச்சிகளுக்கு மட்டும் பயன்படுத்துவார்களா? இதையும் யோசிக்க வேண்டும்.

நம்முடைய பிள்ளைகள் இதில் மூழ்கி உள்ளம் கெட்டுப் போவதுடன், கல்வி கற்பதில் அக்கறையின்மை கொள்ளாமலிருப்பார்களா? இதையும் யோசிக்க வேண்டும். இவ்வளவு உறுதியும், கட்டுப்பாடும் உள்ளவர்கள் டி.வி.யைத் தங்கள் வீடுகளில் வைத்துக் கொள்வதில் தவறேதும் இல்லை.

ஒரு காலத்தில் வானொலிப் பெட்டி அறிமுகமான போது உலக நடப்புக்களையும், செய்திகளையும் அறிய உதவுவதால் வானொலிப் பெட்டியை அனுமதித்தார்கள். ஆனால் நடந்தது என்ன? செய்தி வாசிக்கும் போது மட்டும் வானொலிப் பெட்டியை நிறுத்தி விடுகிறார்கள். தகுதியில்லாதவர்களிடம் இது போன்ற சாதனங்கள் இருப்பது வம்பை விலை கொடுத்து வாங்கியதாகவே அமையும்.

விளையாட்டும், உடற்பயிற்சியும்

விளையாட்டு, உடற்பயிற்சி ஆகியவற்றை இஸ்லாம் அனுமதிக்கவே செய்கின்றது. சில சமயங்களில் வலியுறுத்தவும் செய்கின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குதிரைகளுக்கிடையே போட்டி நடத்திய செய்தியை இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல் : புகாரி 421, 2868, 2869, 2870, 7336

கடை வீதியில் அம்பு எறியும் போட்டியை அஸ்லம் கூட்டத்தினர் நடத்திக் கொண்டிருந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கே வந்தனர். இஸ்மாயீல் நபியின் சந்ததிகளே! நீங்கள் அம்பு எறியுங்கள்! உங்கள் தந்தை இஸ்மாயீல் அவர்கள் அம்பு எறிபவராக இருந்தார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி விட்டு, இரு அணிகளாக இருந்தவர்களில் ஒரு அணியைக் குறிப்பிட்டு,நான் இந்த அணியில் சேர்ந்து கொள்கிறேன் என்று கூறி அந்த அணியில் சேர்ந்து கொண்டார்கள். எதிரணியில் இருந்தவர்கள் அம்பு எறிவதை நிறுத்தி விட்டார்கள். ஏன் நிறுத்தி விட்டீர்கள்? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்ட போது, நீங்கள் இந்த அணியில் ஒருவராகச் சேர்ந்திருக்கும் போது உங்களுக்கெதிராக நாங்கள் எப்படி அம்பு எறிவோம்? என்று அவர்கள் விடையளித்தனர். அப்படியானால் நான் இரண்டு அணிக்கும் பொதுவானவனாக இருந்து கொள்கிறேன். இப்போது எறியுங்கள்! என்றார்கள்.

அறிவிப்பவர் : ஸலமா பின் அக்வஃ (ரலி)

நூல் : புகாரி 2899, 3373, 3516

நானும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் ஓட்டப் பந்தயம் நடத்திய போது நான் அவர்களை முந்தி விட்டேன். சில காலம் கழித்து எனக்கு சதை போட்டு நான் கனத்து விட்ட போது மீண்டும் ஓடினோம். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னை முந்தி விட்டு, அதற்கு இது சரியாகி விட்டது என்றார்கள் என ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல் : அஹ்மத் 22989, 25075, அபூதாவூத் 2214

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது முன்னிலையில் பள்ளி வாசலில் அபீஸீனியர்கள் தங்களின் ஆயுதங்களை ஏந்திக் கொண்டு விளையாடினார்கள் என்று அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல் : புகாரி 455, 950, 988, 2907, 3530, 5190

இது போன்ற வீர விளையாட்டுக்களையும், பயனுள்ள பயிற்சிகளையும் இஸ்லாம் அனுமதிக்கின்றது. சூதாட்டம், உடலுக்கோ, அறிவுக்கோ பயன்தராத வீண் விளையாட்டுக்கள், ஆடல், பாடல், கச்சேரிகள் போன்ற விளையாட்டுக்களைத் தவிர்க்க வேண்டும்.

நகச் சாயம் இடலாமா?

சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, நகச் சாயம் (நைல் பாலிஸ்) இடலாம்.

தொழுகைக்காக உளூச் செய்யும் போது கை, கால், முகம் ஆகியவை நனைய வேண்டியது அவசியமாகும். அது போல் கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது மேனி நனைய வேண்டும். நைல் பாலிஸ் என்பது நகத்தில் தண்ணீர் படுவதைத் தடுக்கும் திரவமாகவே விற்பனை செய்யப்படுகின்றது. நைல் பாலிஸ் இட்டவர்கள், உளூ செய்யும் போதெல்லாம் அதை நீக்கி விட வேண்டும். அது போல் கடமையான குளிப்பை நிறைவேற்றும் போதும் நீக்கிட வேண்டும்.

தண்ணீர் ஊடுருவுவதைத் தடுக்காத முறையில் (மருதாணி சாயம் போல்) நைல் பாலிஸ் கண்டுபிடிக்கப்படுமானால் எல்லா நேரங்களிலும் அதை இடலாம். தொழுகையும், குளிப்பும் கடமையாகாத சிறுவர், சிறுமியருக்கு இடுவதையும் தடுக்க எந்த முகாந்திரமும் இல்லை. எனினும் பெரியவர்களான பிறகும் எல்லா நேரங்களிலும் அவர்கள் இதை விரும்பி விடாதவாறு போதனை செய்து விடுவது அவசியமாகும்.

நைல் பாலிஸ் என்பது பொதுவாகவே தடுக்கப்பட்ட ஒன்று அல்ல. இன்றைய சந்தையில் கிடைக்கும் தன்மையைப் பொருத்தே இந்த நிபந்தனைகள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கவரிங் நகைகளை விற்பதும்.

தங்க நகைகள் விற்பது போலவே கவரிங் நகைகளையும் விற்கலாம். மார்க்கத்தில் கவரிங் நகைகளை விற்கலாகாது என்று எந்தத் தடையும் இல்லை.

(வாங்குவோரை) ஏமாற்றும் வியாபாரத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : முஸ்லிம் 2783

கவரிங் நகைகளைத் தங்க நகை என்று சொல்லியோ, அல்லது அதில் கலந்துள்ள தங்கத்தின் அளவை விட அதிக அளவு தங்கம் உள்ளதாகச் சொல்லியோ விற்றால் அது கூடாது. உண்மையில் அதன் தரம் என்னவோ அதைச் சொல்லி விற்பதில் தவறில்லை.

பட்டாடை, தங்கம் அணிய ஆண்கள் தடுக்கப்பட்டுள்ளனர். ஆயினும் அவற்றில் விதி விலக்குகளும் உள்ளன.

தங்கத்தில் சிறிய அளவைத் தவிர நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தனர்.

அறிவிப்பவர் : முஆவியா (ரலி)

நூல் : அஹ்மத் 16230, 16241, 16261, 16297, 16304 அபூதாவூத் 3701, நஸயீ 5060, 5061, 5068, 5069

இந்த அடிப்படையில் கவரிங், ஐம்பொன் போன்றவற்றை ஆண்கள் அணியலாம். ஏனெனில் இவற்றில் அடங்கியுள்ள தங்கம் இவற்றில் அடங்கியுள்ள மற்ற உலோகங்களுடன் ஒப்பிடும் போது சிறிதளவே உள்ளது.

பாதி தங்கமும், பாதி செம்பும் கலந்திருந்தால் அதில் உள்ள தங்கத்தை சிறிதளவு என்று யாரும் கூறுவதில்லை. அதனால் அதையும் ஆண்கள் அணியலாகாது.

விலை உயர்வைக் காரணம் காட்டி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்கத்தைத் தடுக்கவில்லை. தங்கம் இலவசமாகக் கிடைக்கும் காலம் வந்தாலும் அப்போதும் இந்தத் தடை நீடிக்கும். தங்கத்திற்குத் தடை விதித்தால் அதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். பிளாட்டினம், வைரம் மற்றும் அதை விட மதிப்புள்ள பொருட்கள் எதுவானாலும் அணியலாம். இதையெல்லாம் கூடாது என்றால் அதை அல்லாஹ் சொல்லியிருப்பான்.

உமது இறைவன் எதையும் மறப்பவனல்லன்

(அல்குர்ஆன் 19:64)

விண்வெளிப் பயணத்தில்

கிப்லாவை முன்னோக்குவது தொழுகையின் முக்கியமான நிபந்தனைகளில் ஒன்று என்றாலும் அதில் விதி விலக்குகளும் உள்ளன.

கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே. நீங்கள் எங்கே திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் உள்ளது. அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.

(அல்குர்ஆன் 2:115)

கிப்லாவை நோக்க இயலாத சந்தர்ப்பங்கள் ஏற்படும் என்பது யாவற்றையும் அறிந்த இறைவனுக்கு நிச்சயமாகத் தெரியும். இது போன்ற சந்தர்ப்பங்களைக் கருத்தில் கொண்டே எங்கே திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் உண்டு என்ற வசனம் அருளப்பட்டது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவை நோக்கி வரும் போது வாகனத்தின் மீதமர்ந்து அது எந்தப் பக்கம் செல்கிறதோ அந்தத் திசையில் (அதாவது கஃபாவுக்கு எதிர்த் திசையில்) தொழுதார்கள். அப்போது மேற்கண்ட 2:115 வசனம் இறங்கியது என்று இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்லிம் 1251

எதிரிகளின் அச்சம் மிகவும் கடுமையாக இருந்தால் நின்று கொண்டோ, நடந்து கொண்டோ, வாகனத்தின் மீதோ, கிப்லாவை முன்னோக்கியோ, அதை முன்னோக்காமலோ தொழலாம் என்று இப்னு உமர் (ரலி) கூறியதாக ராபிவு அவர்கள் அறிவித்து விட்டு இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழியாகவே இப்னு உமர் (ரலி) அறிவித்ததாக நான் கருதுகிறேன் எனவும் குறிப்பிட்டார்கள்.

நூல் : புகாரி 4535

எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்.

அல்குர்ஆன் 2:286

6:152, 6:42, 23:62, 65:7, 2:233, 4:84 வசனங்களையும் பார்க்க!

எனவே விண்வெளிப் பயணத்திலோ, அல்லது வேறு சந்தர்ப்பங்களிலோ கிப்லாவை முன்னோக்க இயலாவிட்டால் எந்தத் திசையையும் நோக்கித் தொழலாம்.

துருவப் பிரதேசத்தில் தொழுகை

துருவப் பிரதேசங்களில் ஆறு மாதம் பகலாகவும், ஆறு மாதம் இரவாகவும் இருப்பதால் ஒரு வருடத்திற்கு ஐந்து நேரத் தொழுகை போதுமல்லவா? ஏனைய பகுதிகளில் முப்பது வருடங்கள், அங்கே முப்பது நாட்களாகும். ஏறத்தாழ 300 வருடங்களுக்கு ஒருமுறை அவர்கள் நோன்பு நோற்றால் போதுமல்லவா? என்று சிலர் சந்தேகங்களை எழுப்புகின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தஜ்ஜால் பற்றிக் கூறும் போது அவன் பூமியில் எவ்வளவு காலம் தங்கியிருப்பான்? என்று நபித் தோழர்கள் கேட்டனர். நாற்பது நாட்கள் அவன் தங்கியிருப்பான். அதில் ஒரு நாள் ஒரு வருடம் போன்றும், இன்னொரு நாள் ஒரு மாதம் போன்றும், மற்றும் ஒரு நாள் ஒரு வாரம் போன்றும் இருக்கும். ஏனைய நாட்கள் சாதாரண நாட்களைப் போலவே இருக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித் தோழர்கள் ஒரு ஆண்டு போல இருக்கக் கூடிய அந்த ஒரு நாளுக்கு ஒரு நாள் தொழுகை எங்களுக்குப் போதுமா? என்று கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், கூடாது! அதற்குரிய அளவை நீங்கள் கணித்துக் கொள்ளுங்கள்! என்றார்கள்.

அறிவிப்பவர் : நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி)

நூல் : முஸ்லிம் 5228

தஜ்ஜால் வருகையின் போது ஒரு வருடத்தில் ஒரு பகலும் ஒரு இரவும் ஏற்படும். அதாவது ஆறு மாதம் பகலாகவும், ஆறு மாதம் இரவாகவும் இருக்கும்.

இப்படி இருப்பதால் இதை ஒரு நாள் என்று கருதி மொத்தம் ஐந்து வேளை மட்டும் தொழுதால் போதுமா? அல்லது வழக்கமான நாட்களின் அளவுக்கேற்ப ஒவ்வொரு 24 மணி நேரத்தையும் ஒரு நாள் என்று கணக்கிட்டு அதற்குள்ளே ஐந்து வேளை தொழுகைக்கான நேரங்களையும் கனித்துக் கொள்ள வேண்டுமா?

இந்த கேள்விக்குத் தான் கணித்துக் கொள்ளுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) விடையளிக்கிறார்கள்.

துருவப் பிரதேசங்களில் வாழ்பவர்கள் ஏறக்குறைய இந்த நிலையில் தான் உள்ளனர்.

எனவே துருவப் பிரதேசங்களில் வாழ்வோர் நேரங்களைக் கணித்து மற்றப் பகுதிகளைப் போல் தொழுகைகளை நிறைவேற்ற வேண்டும்.

மஃரிபைத் தொழுது விட்டு மஃரிபுக்கும், இஷாவுக்கும் இடையே ஏனைய பகுதிகளில் எவ்வளவு நேரம் இருக்குமோ அவ்வளவு நேரம் கழிந்ததும் இஷா தொழ வேண்டும்.

இஷாவுக்கும், பஜ்ருக்கும் இடையில் எவ்வளவு நேரம் ஏனைய பகுதிகளில் இருக்குமோ அவ்வளவு நேரம் ஆனதும் பஜ்ரைத் தொழ வேண்டும்.

பஜ்ரிலிருந்து எவ்வளவு நேரம் கழித்து ஏனைய பகுதிகளில் லுஹர் நேரம் வருமோ அவ்வளவு நேரம் கழித்து லுஹரைத் தொழ வேண்டும்.

ஆறு மாதம், பகலாகவும், ஆறு மாதம் இரவாகவும் இருப்பதால் அதை ஒரு நாள் என்று கூற முடியாது. 360 வருடங்களுக்கு ஒரு முறை நோன்பு வைக்க வேண்டுமென்றால் என்ன ஏற்படும் தெரியுமா?

360 வருடங்களுக்குப் பிறகு ஆறு மாதம் பகலாக இருக்குமல்லவா? ஆறு மாதம் பகலாக இருக்கும் சமயங்களில் உண்ணாமல் பருகாமல் இருக்க வேண்டும். அந்த ஆறு மாதத்துக்கும் பச்சைத் தண்ணீரும் குடிக்கலாகாது. தப்பித் தவறி பிழைத்தாலும், அவர் இந்த ஆறுமாத பட்டினி கிடந்தது ஒரு நாள் நோன்பு தான். இது போல் 30 வருடங்கள் வைத்தால் தான் 30 நாட்களாகும். இது சரிப்படுமா?

ஆறு மாதம் பகல், ஆறு மாதம் இரவு என்பதால் அது ஒரு நாள் என்று வாதிட்டால் இந்த ஒரு வருட காலத்தில் ஒரு நாளைக்குரிய மூன்று வேளை உணவு தான் அங்கு வாழ்வோர் உட்கொள்கிறார்களா? இரவாக இருந்தால் ஆறு மாதங்களில் அங்குள்ளோர் தூங்கிக் கொண்டு இருக்கிறார்களா? எந்தப் பெண்ணாவது கர்ப்பமடைந்தால் 300 வருடங்கள் கழித்துத் தான் பிரசவிப்பாளா? இதெல்லாம் எப்படி அட்ஜஸ்ட் செய்கிறார்களோ, கணித்துக் கொள்கிறார்களோ அப்படியே வணக்க வழிபாடுகள் விஷயத்திலும் கணித்துக் கொள்ள வேண்டும்.

உண்டியல் மூலம் பணம் அனுப்பலாமா?

இஸ்லாமியப் பொருளாதாரத்தில் பொருட்களின் விலையை ஆட்சியாளர்கள் நிர்ணயிக்கவோ, ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குக் கொண்டு செல்லக் கட்டுப்பாடுகள் விதிக்கவோ அனுமதி இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் விலையேற்றம் ஏற்பட்ட போது அல்லாஹ்வின் தூதரே! விலைக் கட்டுப்பாடு செய்யக் கூடாதா? என்று நபித் தோழர்கள் கேட்டனர். அல்லாஹ் தான் உணவளிப்பவன்; கூடுதலாக அளிப்பவன்; குறைவாக அளிப்பவன்; விலையைக் கட்டுப்படுத்துபவன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும் தொடர்ந்து எவருடைய உயிருக்கும், உடமைக்கும் எந்த விதமான அநீதியும் செய்யாதவனாக இறைவனைச் சந்திக்க நான் விரும்புகின்றேன் என்றும் குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல்கள்: திர்மிதீ 1235, அபூதாவூத் 2994, இப்னுமாஜா 2191, அஹ்மத் 12131

தேவையற்ற கட்டுப்பாடுகளை விதிப்பது வணிகர்களுக்குச் செய்யப்படும் அநீதி என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

இந்த ஹதீஸிலிருந்து ஆட்சியாளர்களுக்குரிய அதிகாரம் உணரப்படுகிறது. இஸ்லாமிய ஆட்சியில் உண்டியல் வழியாக பணம் அனுப்பத் தடை விதிக்கக் கூடாது.

ஒருவர் அயல் நாட்டில் திரட்டிய செல்வத்தை தான் விரும்புகின்ற வழிகளில் தனது தாயகம் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். இது தான் நியாயமானது. இஸ்லாமிய ஆட்சியில் இப்படித் தான் நடக்க வேண்டும். ஏனைய ஆட்சி முறைகளில் அதற்குத் தடை இருந்தால் அதை நீக்குவதற்காகப் போராடலாம்.

செயற்கை முறையில் கருத்தரித்தல்

உங்கள் மனைவியர் உங்களின் விளை நிலங்கள். உங்கள் விளை நிலங்களுக்கு விரும்பியவாறு செல்லுங்கள்! உங்களுக்காக (நல்லறங்களை) முற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அவனைச் சந்திக்கவுள்ளீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! நம்பிக்கை கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!

(அல்குர்ஆன் 2:223)

இந்த வசனத்தில் பெண்களை இறைவன் விளை நிலங்களுக்கு ஒப்பிட்டுக் கூறுகிறான். விளை நிலங்களில் விதைக்கப்படும் விதைகளை அந்த நிலங்கள் முளைக்கச் செய்வது போல் பெண்களும், ஆண்களிடமிருந்து செலுத்தப்படும் விந்துத் துளியை குழந்தைகளாக வளரச் செய்கின்றனர்.

இந்தப் பொதுத் தன்மை கருதியே இறைவன் விளை நிலங்களுக்குப் பெண்களை ஒப்பிட்டிருக்க முடியும்.

நீங்கள் விரும்பிய விதமாக உங்கள் நிலங்களில் விதைத்துக் கொள்ளலாம் என்று இறைவன் அனுமதிப்பதால் செயற்கை முறையில் கருத்தரிக்கச் செய்வதை தடுக்க முடியாது.

ஆனால் கணவனுடைய விந்தை மாத்திரம் தான் ஒரு பெண்ணுடைய கருவறையில் செலுத்தலாமே தவிர மற்ற எந்த ஆடவனுடைய விந்தையும் செலுத்தக் கூடாது.

உங்கள் மனைவியர் உங்களுக்கு விளை நிலங்கள் என்று இறைவன் கூறுவதிலிருந்து ஒருவன் தனது மனைவியைத் தவிர மற்ற எவரது கருவறையிலும் எந்த முறையிலும் விதைக்கலாகாது என்பதையும், அது போலவே ஒரு பெண் தன் கணவனது விந்தைத் தவிர மற்ற எந்த ஆடவனுடைய விந்தையும் தனக்குள் விதைத்துக் கொள்ளலாகாது என்பதையும் தெளிவாக அறிகிறோம்.

செல்லப் பிராணிகளை வளர்க்கலாமா?

செல்லப் பிராணிகளை வீட்டில் வளர்க்க இஸ்லாத்தில் எந்தத் தடையும் இல்லை. சில பிராணிகளை வீட்டில் வளர்க்கலாகாது என்பது பிற மதத்தவர்களிடமிருந்து நம்மவர்கள் படித்துக் கொண்ட மூடக் கொள்கைகள்.

ஆயினும், உயிரினங்களை வளர்ப்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில ஒழுங்குகள் உள்ளன. அவற்றை அவசியம் பேண வேண்டும்.

உயிருள்ள எதனையும் (அம்பு எய்து பழகுவதற்கான) இலக்காக ஆக்குவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : முஸ்லிம் 3617

உயிர்ப் பிராணிகள் வதைக்கப்படுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : புகாரி 5513

உயிரினங்களின் முகத்தில் வடு ஏற்படுத்துவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளனர்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)

நூல் : முஸ்லிம் 2953

முந்தைய சமுதாயத்தில் ஒரு பெண்மணி பூனையைக் கட்டி வைத்து தீனி போடாததால் நரகம் சென்றதாக நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : புகாரி 2365, 3318, 3842

இது போன்ற ஒழுங்குகளைக் கவனித்து பிராணிகளை வளர்க்க வேண்டும்.

செஸ் விளையாடுதல்

சூதாட்டத்திற்கும், விளையாட்டுக்கும் நேரடியாக எந்தச் சம்பந்தமும் இல்லை. எந்த விளையாட்டையும் சூதாட்டமாகவும் ஆக்க முடியும். சூது கலக்காமலும் விளையாட முடியும்.

இப்போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களுக்கு இன்ன தொகை தரப்படும் என்று போட்டியில் பங்கேற்காதவர்கள் அறிவித்தால் அது பரிசு எனப்படும். இதற்கு மார்க்கத்தில் தடை இல்லை. இவ்வாறு எந்த விளையாட்டையும் விளையாடலாம். அது சூதாட்டமாகாது.

போட்டியில் பங்கு பெறுபவர்கள் ஒவ்வொருவரும் ஒரு தொகையைச் செலுத்தி, யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் மொத்த தொகையையும் எடுத்துக் கொள்ளலாம் என்ற அடிப்படையில் விளையாடினால் அது சூதாட்டமாகி விடும்.

சாதாரண கபடிப் போட்டியைக் கூட இந்த முறையில் நடத்தும் போது அது சூதாட்டமாகி விடுகின்றது.

செஸ் போட்டியானாலும், மல் யுத்தமானாலும் வேறு எந்த விளையாட்டானாலும் இந்த அடிப்படையில் நடத்தும் போது அது சூதாட்டமாகும்.

அந்த விளையாட்டில் சம்பந்தப்படாத மூன்றாம் நபர் வெற்றி பெறுபவர்களுக்கு வழங்குவது பரிசு எனப்படும்.

செஸ் விளையாட்டு சூதாட்டம் அல்ல. ஆனால் அதை சூதாட்டமாகவும் ஆட முடியும்.

பயனற்ற முறையில் நேரம் பாழாவதால் அதைக் கூடாது என்று தான் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். சூது எனும் காரணத்தை அவர்களும் கூறவில்லை. ஆனாலும் மார்க்கம் தடுக்காததால் அதைத் தடுக்க யாருக்கும் அதிகாரமில்லை.

வங்கி - வட்டி - லாபம்

வங்கிகளில் தரக்கூடிய கூடுதல் பணம், போனஸ் போன்ற பெயர்களில் வழங்கப்பட்டாலும் நிச்சயமாக அது வட்டி தான்.

வியாபாரத்தில் கிடைக்கும் லாபத்திற்கும், வட்டிக்கும் பல வித்தியாசங்கள் உண்டு.

* வட்டி என்பது முன்னரே இவ்வளவு தான் என்று தீர்மானிக்கப்படுகிறது.

வியாபாரத்தில் லாபம் என்பது இவ்வளவு தான் என்று முன்னரே உறுதி செய்ய முடியாது.

* வட்டி என்பதில் நஷ்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை. வியாபாரத்தில் நஷ்டமும் ஏற்படலாம்.

வங்கியில் நாம் செலுத்தும் பணத்திற்கு வட்டி இவ்வளவு என்று செலுத்தும் போதே தெரிந்து விடுகிறது. வங்கி நஷ்டமடைந்தாலும் அந்தக் கூடுதல் பணம் வழங்கப்படுகிறது. கோடிக்கணக்கில் லாபம் அடைந்தாலும் நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகமாக வழங்குவதில்லை.

சுருங்கச் சொன்னால் லாப நஷ்டங்களைப் பொறுத்து முடிவு செய்தால் அது வியாபாரம். லாப நட்டம் பற்றியே சிந்திக்காமல் எந்த நிலையிலும் குறிப்பிட்ட அளவு வழங்கப்பட்டால் அது வட்டி. அது ஹராம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

ஹராம் என்று ஆகி விடும் போது, அது நம்முடைய பணம் இல்லை என்று ஆகி விடுகிறது. நம்முடைய பணம் இல்லை எனும் போது அதை வாங்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை.

நாம் அந்தப் பணத்தை வாங்காவிட்டால் அந்தப் பணம் நமக்கு எதிராக நம்மை அழிப்போருக்கு உதவுவதற்காகப் பயன்படுத்தலாம். இந்த நிர்பந்தத்திற்காக அதை வாங்கி யாரிடமாவது கொடுத்து விடலாம் என்று சிலர் கூறுகின்றனர்.

நிர்பந்தமான நிலையில் தடை செய்யப்பட்டவை அனுமதிக்கப்படும் என்பது உண்மையே. அது நிர்ப்பந்தம் தானா என்பதை அவரவர் மனசாட்சியிடம் கேட்கட்டும். இது நிர்பந்தம் தான் என்று அவருக்குத் தோன்றினால் அவர் அவ்வாறு செய்வதை யாரும் தடுக்க முடியாது.

பதிவுத் திருமணம்

இந்தியாவில் நடைமுறையிலுள்ள பதிவுத் திருமணச் சட்டத்தின் அடிப்படையில் முஸ்லிம்கள் பதிவுத் திருமணம் செய்யலாகாது.

முஸ்லிம் தனியார் சட்ட ப்படி முஸ்லிம்களுக்குத் தனித் திருமணச் சட்டங்கள் இந்த நாட்டில் உள்ளன. தலாக், மஹர், வாரிசுரிமை, பலதார மணம் போன்ற பல விஷயங்கள் இவற்றில் அடங்கும். இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்தால் மட்டுமே இந்த உரிமைகளை முஸ்லிம்கள் பெற முடியும்.

முஸ்லிம்களேயானாலும் அவர்கள் பதிவுத் திருமணம் செய்து கொண்டால் இந்த விஷயத்தில் பொது சிவில் சட்டத்தின் கீழ் அவர்கள் வந்து விடுவார்கள். மேற்கண்ட உரிமைகளைப் பெற முடியாது.

அதாவது பதிவுத் திருமணம் செய்பவர் தனக்கு முஸ்லிம் தனியார் சட்டம் தேவையில்லை என்று வாக்கு மூலம் தருகிறார். நேரடியாக இப்படி அவர் கூறாவிட்டாலும் அதன் விளைவு இது தான். எனவே பதிவுத் திருமணம் என்ற மாய வலையில் முஸ்லிம்கள் சிக்கிக் கொள்ளக் கூடாது.

முஸ்லிம் தனியார் சட்டத்திற்கெதிராக கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இது மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய விஷயமாகிறது.

மேலும் இஸ்லாமியத் திருமணம் பெண்ணின் பரிபூரண சம்மதத்துடன் அவளது பொறுப்பாளர் செய்து வைக்க வேண்டும். பொறுப்பாளர் இன்றி தானாக ஒரு பெண் திருமணம் செய்து கொள்ள முடியாது.

பதிவுத் திருமணம் என்பது ஒரு பெண் தானாகவே திருமணம் செய்து கெள்வதை நிபந்தனையாக்குகின்றது. அவளது தந்தையே அந்த இடத்தில் இருந்தாலும் அவர் சாட்சியாக மட்டும் தான் கருதப்படுவாரேயன்றி திருமணத்தை நடத்தி வைப்பராக ஆக முடியாது. இதுவும் பதிவுத் திருமணம் கூடாது என்பதற்கான மற்றொரு காரணம்.

அடகு வைத்தல்

அடைமானம் வைப்பதும், வாங்குவதும் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்று தான். இதில் சந்தேகம் எதுவுமில்லை. ஒருவருக்குக் கடன் கொடுக்கும் போது நம்மை அவர் ஏமாற்றி விடாமலிருக்க நம்பிக்கைக்காக ஒரு பொருளைப் பெற்றுக் கொள்ளலாம்.

கொடுத்த கடனுக்கு உத்திரவாதமாகத் தான் அடைமானம். இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவரிடம் ஒரு நகையை அடைமானமாகப் பெற்றுக் கொண்டு கடன் கொடுத்தால், அந்த நகையை நாம் பயன்படுத்தாமல் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். வீட்டை அடைமானமாகப் பெற்றாலும் இது தான் நிலை.

வீட்டை அடைமானமாகப் பெற்றுக் கொண்டு கடன் கொடுத்து விட்டு அந்த வீட்டில் நாம் குடியிருந்தால் - அதாவது வாடகை கொடுக்காமல் குடியிருந்தால் - கொடுத்த கடனுக்கு வட்டியாகவே அது கருதப்படும்.

வீட்டை அடமானமாகப் பெற்ற பிறகு அதில் நாம் குடியிருக்கக் கூடாது. குடியிருந்தால் அதற்கான வாடகையைக் கொடுத்து விட வேண்டும்.

கால்நடைகளை அடமானமாகப் பெற்றால் அதற்கு தீனி போட்டு வளர்ப்பதால் அதில் சவாரி செய்யலாம். பால் கறந்து எடுத்துக் கொள்ளலாம். இதற்கு ஹதீஸ்களில் ஆதாரங்கள் உள்ளன.

(புகாரி 2511, 2512)

இந்த விதிமுறையை மீறாமல் அடைமானம் வைக்கலாம்; வாங்கலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கவசத்தை யூதரிடம் அடைமானம் வைத்து, அதை மீட்காமலேயே மரணம் அடைந்தார்கள்.

புகாரி 2916, 4467

எம்மதமும் சம்மதம்?

எல்லா மதங்களும் நல்லதைத் தான் போதிக்கின்றன. எல்லா நதிகளும் கடலில் தான் போய்ச் சேர்கின்றன. ஒரு ஊருக்குப் பல வழிகள் உள்ளன. எந்த வழியில் வேண்டுமானாலும் போகலாம் என்ற வாதம் சிலரால் எடுத்து வைக்கப்படுகின்றன.

எல்லா மதங்களும் நல்லதைத் தான் போதிக்கின்றன என்ற வாதம் பலவீனமான வாதமாகும்.

எல்லா மனிதர்களும் பிறப்பால் சமமானவர்கள். ஒருவரை விட மற்றொருவர் பிறப்பால் உயரவே முடியாது என்று ஒரு மதம் கூறுகிறது.

குறிப்பிட்ட குலத்தில் பிறந்தவன் உயர்ந்தவன் என்றும், மற்றொரு குலத்தில் பிறந்தவன் தாழ்ந்தவன் என்றும் இன்னொரு மதம் கூறுகிறது. இரண்டுமே நல்லது என்று எப்படிக் கூற முடியும்?

வேதத்தை அனைவரும் கற்க வேண்டும் என ஒரு மதம் கூறுகிறது! இன்னொரு மதம் ஒரு சாரார் மட்டுமே கற்க வேண்டும்; மற்றவர்கள் கற்றால் அவர்களின் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்கிறது? முரண்பட்ட இந்த இரண்டும் எப்படி நல்லவையாக இருக்க முடியும்?

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என ஒரு மதம் சொல்கிறது. குலத்தால் உயர்ந்தவர் ஒரு தவறு செய்தால் இலேசான தண்டனையும், அதே குற்றத்தைக் குலத்தால் தாழ்ந்தவர் செய்தால் கடும் தண்டனையும் வழங்க வேண்டுமென மற்றொரு மதம் கூறுகிறது. இவ்விரண்டுமே நல்லவை தாமா?

கல்யாணம், கருமாதி, பேய், பிசாசு என்றெல்லாம் மத குருமார்களுக்குத் தட்சிணை வழங்க வேண்டுமென ஒரு மதம் போதிக்கிறது. இன்னொரு மதம் எல்லா விதமான புரோகிதத்தையும் அடியோடு ஒழிக்கச் சொல்கிறது. இந்த இரண்டும் எப்படி நல்லவையாக இருக்க முடியும்?

கடவுளை வழிபடுவதில் நெருங்குவதில் ஒரு மதம் மனிதர்களிடையே பாரபட்சம் காட்டுவதில்லை. இன்னொரு மதம் கடவுளின் சன்னிதியைத் தாழ்ந்த குலத்தோர் நெருங்கக் கூடாது என்று கூறுகிறது.

உண்ணுதல், பருகுதல், மலம், ஜலம் கழித்தல், ஆசை, கோபம் போன்ற பலவீனங்களைக் கொண்ட மனிதன் ஒரு காலத்திலும் கடவுளாகவோ, கடவுளின் தன்மை பெற்றவராகவோ ஆக முடியாது என்று ஒரு மதம் கூறுகிறது. மனிதனைத் தெய்வமாக்கி அவன் காலில் சக மனிதனை விழச் சொல்கிறது மற்றொரு மதம்.

* விதவைக்கு விவாகமில்லை;

* பெண்களுக்குச் சொத்துரிமை இல்லை;

* கணவனே கண்கண்ட தெய்வம்; கணவனை இழந்தவள் உடன்கட்டை ஏற வேண்டும்;

* பெண்ணுடைய விருப்பமின்றிக் கல்யாணம் செய்யலாம் என்றெல்லாம் ஒரு மதம் கூறுகிறது.

* இவை அனைத்திலும் எதிரான கருத்தை இன்னொரு மதம் கூறுகிறது.

கடவுள் ஒருவனே; அவன் தேவையற்றவன்; அவனுக்குத் தாய் தந்தை இல்லை; மனைவி மக்களில்லை; உறக்கமில்லை; ஓய்வு இல்லை என்று ஒரு மதம் கூறுகிறது. இவை அனைத்திலும் மாற்றுக் கருத்தை இன்னொரு மதம் கூறுகிறது.

விபச்சாரம், ஓரினப்புணர்ச்சி, சூது, திருட்டு போதைப் பொருட்களை உட்கொள்ளுதல், லஞ்சம் போன்ற சமூகத்தைப் பாதிக்கும் எல்லாத் தீமைகளையும் ஒரு மதம் கடுமையாக எதிர்க்கின்றது. இன்னொரு மதம் இந்தத் தீமைகளைக் கடவுள்களே செய்துள்ளதாகக் கூறி அவற்றை நியாயப்படுத்த முயல்கிறது.

ஒருவர் பாவத்தை மற்றவர் சுமக்க முடியாது. அவரவர் செய்ததே அவரவர்க்கு என்று ஒரு மதம் கூறுகிறது. மற்றொரு மதமோ அனைவரின் பாவத்தையும் ஒருவரே சுமக்க முடியும் என்று கூறுகிறது.

கடவுள் ஒருவனே என்று ஒரு மதம் கூறுகிறது. கடவுள் மூவர் என்றும் கடவுள்கள் பலர் என்றும் மற்றொரு மதம் கூறுகிறது.

இப்படி ஆயிரமாயிரம் முரண்பாடுகள்! முரண்பட்ட இவை அனைத்தும் நல்லவை தாம் என்பதை அறிவுடையோர் எப்படி ஏற்க இயலும்?

எல்லா நதிகளும் கடலில் கலப்பது உண்மை தான். நதிகளுக்கு பகுத்தறிவு இல்லை. அவை சங்கமிக்கும் கடலுக்கும் பகுத்தறிவு இல்லை. சாக்கடைக்கும் கடலில் கலப்பதில் வெட்கமில்லை. கடலுக்கும் அதை உணரும் அறிவு இல்லை.

அறிவும், சிந்திக்கும் திறனுமில்லாத நதிகள் போன்றவர்களா மனிதர்கள்?

மனிதர்களாகிய நமக்கு அறிவு இருக்கிறது. நாம் யாரிடம் சேரப் போகிறோமோ அந்த இறைவனுக்கு நம்மை விட அதிகமாக அறிவு இருக்கிறது.

சாக்கடைகளைக் கடல் ஏற்றுக் கொள்வது போல் சாக்கடை மனிதர்களைக் கடவுள் ஏற்க மாட்டான்.

எதை உண்பது? எதைக் குடிப்பது? எதை அணிவது? எதில் குளிப்பது என்ற விஷயத்திலெல்லாம் அறிவைப் பயன்படுத்தும் மனிதன் எந்தக் கொள்கையைத் தேர்வு செய்வது என்பதில் அறிவைச் செலுத்த வேண்டாமா? அறிவும் உணர்வுமற்ற நதிகளுடன் தன்னை ஒப்பிட்டுக் கொண்டு தன்னைத் தானே தாழ்த்துவது என்ன நியாயம்?

ஒரு ஊருக்குப் பல வழிகள் இருக்கலாம். இதை அறிவு படைத்த யாரும் மறுக்க முடியாது. இங்கே எந்த வழியைத் தேர்வு செய்வது என்பது மட்டும் பிரச்சினையில்லை. எந்த ஊருக்குச் செல்வது என்பதும் முக்கியமான பிரச்சினை. வடக்கே உள்ள ஊரை நினைத்துக் கொண்டு தெற்கில் உள்ள ஊரை நோக்கிச் சென்றால் நினைத்துச் சென்ற ஊரை அடைய முடியாது.

சமத்துவம், பகுத்தறிவு, நேர்மை, ஒழுக்கம், சாந்தி ஆகிய ஊர்களுக்குச் செல்ல விரும்பும் மனிதன், தீண்டாமை, மூட நம்பிக்கை, அநீதி, ஒழுக்கக் கேடு, குழப்பம் ஆகிய ஊர்களை நோக்கிப் பயணம் செய்ய முடியுமா? பயணம் செய்தால் விரும்பிய ஊர்களை அடைய முடியுமா?

எல்லா மதங்களும் ஒரே சட்டத்தை, ஒரே அடிப்படைக் கொள்கையை வேறு வேறு வார்த்தையால் போதித்தால் ஒரு ஊருக்குப் பல வழிகள் என்று கூற முடியும். கொள்கை, சட்டம், அடிப்படை ஆகியவை வெவ்வேறாக இருக்கும் போது ஒரே ஊர் என்று எப்படிக் கூற முடியும்?

எழுதப்பட்ட ஸலாமுக்கு பதில் கூற வேண்டுமா?

எழுதப்பட்ட ஸலாம் இரு வகைகளில் உள்ளன. ஒருவர் மற்றவருக்கு எழுதும் கடிதங்களில் அஸ்ஸலாமு அலைக்கும் என்று எழுதுவது ஒரு வகை.

யாரும், யாருக்காகவும் எழுதாமல் அஸ்ஸலாமு அலைக்கும் என்பதைச் சுவர் போன்றவற்றில் எழுதி வைப்பது இன்னொரு வகை.

முதல் வகையிலான எழுதப்பட்ட ஸலாமுக்கு அவசியம் பதில் சொல்ல வேண்டும். அதாவது பதில் எழுதி அனுப்ப வேண்டும். ஏனெனில் பேசுவதன் இன்னொரு வடிவமே எழுத்தாகும்.

அறிவு கெட்டவனே என்று ஒருவன் மற்றவனை நேரில் திட்டினாலும், கடிதத்தில் எழுதி அனுப்பினாலும் இரண்டும் சமமாகவே எடுத்துக் கொள்ளப்படும். எழுதி அனுப்பியதால் அவர் திட்டவில்லை என யாரும் எடுத்துக் கொள்ள மாட்டோம்.

இந்த அடிப்படையில் உங்களுக்கு ஸலாம் கூறி ஒருவர் கடிதம் எழுதினால் அவருக்கு இரு வழிகளில் பதில் கூறலாம். அவர் எழுதியது போலவே நீங்களும் பதில் ஸலாம் எழுதி அனுப்பலாம். அல்லது அதைப் படித்ததும் வஅலைஹிஸ்ஸலாம் (அவர் மீது ஸலாம் உண்டாகட்டும்) என்று வாயால் கூறலாம்.

ஆயிஷா (ரலி) அவர்களுக்கு ஜிப்ரீல் ஸலாம் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய போது, வஅலைஹிஸ்ஸலாம் என்று ஆயிஷா (ரலி) பதில் கூறினார்கள்.

புகாரி : 3217, 3768, 6201, 6249, 6253

ஆயிஷா (ரலி) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களை நேரில் காணாததால் அவர் மீது ஸலாம் உண்டாகட்டும் என்றார்கள். கடிதம் மூலம் பதில் எழுத வாய்ப்பில்லாதவர்கள் இவ்வாறு கூறிக் கொள்ளலாம்.

சுவற்றில் எழுதி தொங்கவிடப்பட்ட ஸலாமுக்கு பதில் கூற வேண்டியதில்லை. ஏனெனில் அங்கே ஸலாம் கூறியவரும் இல்லை. கூறப்பட்டவரும் இல்லை.

அஸ்ஸலாமு அலைக்கும் என்று ஒலிப்பதிவு நாடாவில் பதிவு செய்யப்பட்டதைக் கேட்டால் அதற்கும் பதில் ஸலாம் கூற வேண்டியதில்லை. ஏனெனில் அங்கே கூறியவரும் இல்லை. கூறப்பட்டவரும் இல்லை.

ஒரு நண்பர் உங்களுக்காகப் பேசி அனுப்பும் கேஸட்டில் ஸலாம் கூறியிருந்தால் அதற்குப் பதில் கூற வேண்டும்.

இஸ்லாமிய நிகழ்ச்சி ஒன்றை வானொலி, தொலைக் காட்சியில் நேரடி, ஒலி, ஒளிபரப்பு செய்யும் போது அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறினால் அனைவருக்காகவும் ஒரு முஸ்லிம் ஸலாம் கூறுகிறார் என்பது தெரிவதால் அதைக் கேட்பவர் பதில் கூற வேண்டும்.

தண்ணீர் வியாபாரம்

தேவைக்கு மிஞ்சிய தண்ணீரை விற்பது கூடாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)

நூல் : முஸ்லிம் 2925

தேவைக்கு மிஞ்சிய தண்ணீரைப் பிறர் பயன் படுத்துவதைத் தடுக்க வேண்டாம் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 2353, 2354, 6962

தண்ணீரை வியாபாரம் செய்யக் கூடாது என்றால் இன்றைய சூழலில் இதில் பல கேள்விகள் எழுகின்றன.

லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகத்திற்கு விலை நிர்ணயித்தல், தண்ணீரின் நிறம் மற்றும் சுவையை மேம்படுத்தி கிருமிகளை அழித்துத் தயாரிக்கப்படும் மினரல் வாட்டர் விற்பனை செய்தல் போன்றவை தண்ணீரை விற்பனை செய்த குற்றத்தில் சேருமா? என்பது தான் அந்தக் கேள்விகள்.

மேலோட்டமாகப் பார்க்கும் போது இது தண்ணீரை விலைக்கு விற்பது போல் தோன்றினாலும் உண்மையில் இது தண்ணீர் வியாபாரமாகாது.

ஏனெனில் லாரியில் சுமந்து செல்லுதல், அதில் முதலீடு செய்தல் போன்ற காரணங்களுக்காகவே கட்டணம் வாங்கப்படுகின்றது. அது போல் சாதாரண தண்ணீரைச் சுத்தப்படுத்துவதற்கும், மேம்படுத்துவதற்கும் தான் மினரல் வாட்டருக்கு விலை நிர்ணயம் செய்யப்படுகின்றது. எனவே இது தண்ணீரை விற்ற குற்றத்தில் அடங்காது.

நம்மிடம் ஒரு கிணறு உள்ளது. அதில் நம் தேவைக்கு மேல் தண்ணீர் இருக்கின்றது. இதில் நாங்களும் இறைத்துக் கொள்கிறோம் என்று ஒருவர் கேட்கும் போது, அவரிடம் கட்டணம் கேட்டால் அது தண்ணீரை விற்பதில் அடங்கும். நம்மிடம் தண்ணீர் இறைத்துத் தருமாறு அவர் கேட்கும் போது, அதற்கு நாம் கட்டணம் கேட்டால் அது குற்றமாகாது. இறைத்துத் தருவதற்காகவே கட்டணம் கேட்கிறோம்.

இந்த வேறுபாட்டைப் புரிந்து கொண்டால் இதில் குழப்பம் ஏற்படாது.

பால் மாற்றம்

கணவன் மனைவி இருவரில் எவராவது பால் மாறிவிட்டால் அதன் சட்டம் என்ன?

பால் மாற்றம் இயற்கையாக நடக்குமா? என்று தெரியவில்லை. நாம் அறிந்தவரை அறுவை சிகிச்சை மூலம் செயற்கையாகவே மாற்றப்படுகின்றது. இவ்வாறு செயற்கையாக மாற்றிக் கொள்ள இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

பெண்களுக்கு ஒப்ப நடக்கும் ஆண்களையும், ஆண்களுக்கு ஒப்ப நடக்கும் பெண்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்துள்ளனர்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 5885, 6834

எந்த வகையிலும் ஒரு பாலினம் இன்னொரு பாலினத்துக்கு ஒப்பாகக் கூடாது என்று இந்த ஹதீஸ் தடுப்பதால் முற்றாகவே மாற முயல்வது கடுமையான குற்றம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அப்படி மாறி விட்டால் அதன் பின்னர் ஏற்படும் நிலை என்ன? என்பதற்கு இஸ்லாத்தில் தீர்வு உள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் யாரும் பால் மாறவில்லை என்பதால் அது பற்றிய சட்ட விளக்கம் நேரடியாக ஹதீஸ்களில் கிடைக்காது. இதனை ஒத்திருக்கின்ற ஏனைய சட்டங்களிலிருந்து இதற்கான விளக்கத்தை நாம் பெற வேண்டும்.

கணவன் என்பவன் ஆணாகத் தான் இருக்க வேண்டும். மனைவி என்பவள் பெண்ணாகத் தான் இருக்க வேண்டும். இதற்கு ஆதாரம் காட்டத் தேவையில்லை.

ஒரு கணவன் எப்போது பெண்ணாக மாறி விடுகின்றானோ அந்த நிமிடமே அவன் கணவனாக இருக்க முடியாது.

* மனைவியைப் பொருத்த வரை அவன் இறந்து விட்டதாகக் கருதப்பட வேண்டும்.

* அல்லது அவனால் விவாகரத்துச் செய்யப் பட்டவளாகக் கருதப்பட வேண்டும்.

இந்த இரண்டு நிலைகளில் இரண்டாவது நிலையே இவளைப் பொருத்த வரை பொருத்தமாக உள்ளது.

கணவன் இறந்து விட்டால் சோகத்தைக் காட்டுவதற்காகவும், கர்ப்ப அறையில் அவனது சிசு வளர்கின்றதா என்பதைக் கண்டறிவதற்காகவும் அவள் இத்தா இருக்க வேண்டும். இவன் உயிருடனேயே உள்ளதால் விவாகரத்துச் செய்யப்பட்ட நிலையிலேயே அவள் இருக்கிறாள். எனவே மூன்று மாதவிடாயிலிருந்து தூய்மையாகும் காலம் வரை அவள் இத்தா இருந்து விட்டு அதன் பிறகு அவள் ஒரு ஆணைத் திருமணம் செய்யலாம்.

பாடல்கள் பாடுவது

பாடல்களைப் பொருத்த வரை இரண்டு அம்சங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பாடல்களுடன் இசைக் கருவிகள் பயன்படுத்தப்படாமல் இருக்க வேண்டும்.

பாடுகின்ற பாடல் இஸ்லாமியப் போதனைகளுக்கு முரணில்லாமல் இருக்க வேண்டும்.

அவ்வாறு இருந்தால் அந்தப் பாடல்களைப் பாடலாம். கேட்கலாம்.

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் என்ற பாடல் சினிமாப் பாடலாக இருந்தாலும் அதன் கருத்து இஸ்லாத்திற்கு முரணில்லாமல் இருப்பதால் இசைக் கருவிகளின்றி பாடலாம்.

* நமனை விரட்ட மருந்தொன்று விக்குது நாகூர் தர்காவிலே

* தமிழகத்தின் தர்காக்களை பார்த்து வருவோம்

* கேரளக் கரையோரம் வாழும் கருணை மிகும் பீமா

என்பது போன்ற பாடல்கள் இஸ்லாத்திற்கு முரணாக உள்ளதால் இதை இசைக் கருவி இல்லாமல் கூடப் பாடக் கூடாது.

நீங்கள் பாடும் பாடல்களில் மார்க்கத்திற்கு முரணில்லாத பாடல் என்றால் எவ்விதக் குற்ற உணர்வுமின்றிப் பாடலாம்.

கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் என்பது போன்ற பைத்தியக்காரத் தனமான உளறலையோ

அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்பது போன்ற இணை வைக்கும் பாடல்களையோ

பாடக் கூடாது. அவற்றில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

ஆயினும் நம்மை அறியாமல் இது போன்ற பாடல்கள் வாயில் வந்து விட்டால் அதற்காக இறைவன் குற்றம் பிடிக்க மாட்டான்.

எங்கள் இறைவா! நாங்கள் மறந்து விட்டாலோ தவறுதலாக செய்து விட்டாலோ எங்களைப் பிடிக்காதே என்று துஆச் செய்யுமாறு இறைவன் நமக்குக் கற்றுத் தருகிறான்.

(பார்க்க அல்குர்ஆன் 2:286)

நீங்கள் தவறாகச் செய்பவற்றில் உங்கள் மீது குற்றமில்லை. எனினும் நீங்கள் வேண்டுமென்று செய்தவையே குற்றமாகும் எனவும் அல்லாஹ் கூறுகிறான்.

(பார்க்க அல்குர்ஆன் 33:5)

இந்த நிலையில் நீங்கள் பாடினால் உங்கள் அமல்கள் அழிக்கப்படாது.

05.11.2009. 18:57 PM

சந்திக்கும் வேளையில்

நூலின் பெயர்: சந்திக்கும் வேளையில்

 ஆசிரியர்: பீ.ஜைனுல் ஆபிதீன்

மார்க்கத்தின் எச்சரிக்கை!

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும். இந்த இணைய தளத்தில் உள்ளவைகளைப் பிரச்சாரம் செய்வதற்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் சில சகோதரர்கள் நமது ஆக்கங்களை அப்படியே பயன்படுத்தி தமது ஆக்கம் போல் காட்டுகின்றனர்.

இன்னாருடைய கட்டுரையில் இருந்து, அல்லது புத்தகத்தில் இருந்து இது எடுக்கப்பபட்டது என்று குறிப்பிடாமல் புகழடைவதற்காக இவ்வாறு செய்கின்றனர்.

சில இணைய தளங்களும் என்னுடைய ஆக்கங்களை அப்படியே வெளியிட்டு தம்முடைய ஆக்கம் போல் காட்டுகின்றன.  மேலும் சில புத்தக வியாபாரிகளும் எனது நூல் உட்பட மற்றவர்களின் நூல்களைச் சிறிது மாற்றியமைத்து அனாமதேயங்களின் பெயர்களில் வெளியிட்டுச் சம்பாதிக்கின்றனர். உலகைப் பற்றியும் இவர்களுக்கு வெட்கம் இல்லை. மறுமையைப் பற்றியும் பயம் இல்லை.

இஸ்லாத்தில் இவ்வாறு செய்ய அனுமதி இல்லை. இவர்கள் நல்லது செய்யப் போய் மறுமையின் தண்டனைக்கு தம்மைத் தாமே உட்படுத்திக் கொள்கின்றனர்.

பிறரது ஆக்கங்களைப் பயன்படுத்துவோர் இது இன்னாருடைய ஆக்கம் என்று குறிப்பிடாமல் தன்னுடைய ஆக்கம் போல் காட்டுவது மார்க்க அடிப்படையில் குற்றமாகும்.

இவர்களுக்கு அல்லாஹ் விடுக்கும் எச்சரிக்கையை இங்கே சுட்டிக் காட்டுகிறோம்.

தாங்கள் செய்தவற்றுக்காக மகிழ்ச்சியடைந்து, தாம் செய்யாதவற்றுக்காகப் புகழப்பட வேண்டுமென விரும்புவோர் வேதனையிலிருந்து தப்பித்து விட்டார்கள் என்று நீர் நினைக்காதீர்! அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.

திருக்குர்ஆன் 3:188

சந்திக்கும் வேளையில்

ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது பல்வேறு சொற்கள் மூலம் முகம கூறுகின்றனர். சந்திக்கப்படுபவர் முக்கியமான நபர் என்றால் அவரது காலில் விழுதும், கூனிக் குறுகுவதும் சிலருக்கு வழக்கமாக உள்ளது. ஆனால் இஸ்லாம் கற்றுத் தரும் முகமன் மனிதனின் சுயமரியாதைக்கு பங்கம் ஏற்படாதவகையிலும், சம நிலையில் அன்பு செலுத்துவதற்கும் ஏற்ற வகையில் அமைந்துள்ளது என்பதையும், ஸலாம் கூறும் ஒழுங்குகளையும் கீழ்க்காணும் தலைப்புக்களில் தெளிவாக விளக்கும் நூல்.

இஸ்லாத்தின் முகமன் ஸலாம்

ஸலாம் கூறுவதால் கிடைக்கும் பயன்கள்

பல வகைச் சொற்கள்

ஸலாம்

ஸலாமுன் அலை(க்)க

அஸ்ஸலாமு அலை(க்)க

ஒருவருக்கு ஒருமை, பலருக்கு பன்மை

ஸலாமுக்குப் பதிலுரைத்தல்

சிறந்த முறையில் மறுமொழி கூற வேண்டும்

ஸலாம் சொல்லி அனுப்புதல்

ஸலாம் முஸ்லிம்களுக்கு மட்டுமா?

ஸலாமின் ஒழுங்குகள்

மலஜலம் கழிக்கும் போது ஸலாம் கூறக் கூடாது

ஆண்கள் பெண்களுக்கும் பெண்கள் ஆண்களுக்கும் ஸலாம் கூறலாம்.

முஸாஃபஹா  கைகுலுக்குதல்

கட்டியணைத்தல்

கைகளை முத்தமிடுதல்

காலில் விழுதல்

வழிகேடர்களின் ஆதாரங்கள்

எழுந்து நின்று மரியாதை

இஸ்லாத்தின் முகமன் ஸலாம்

மனிதர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது பல்வேறு வகையில் முகமன் கூறிக் கொள்கின்றனர். இந்த முகமன்களில் இஸ்லாம் கூறும் முகமன் பல வகையில் சிறந்து விளங்குவதைப் பிற மதத்து நடுநிலையாளர்களும் ஏற்றுக் கொள்கின்றனர்.

ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது வணக்கம் என்றும் நமஸ்தே என்றும் மற்றும் இந்தப் பொருளில் அமைந்த வார்த்தைகளைப் பயன்படுத்தியும் முகமன் கூறுகின்றனர். நாம் சிந்திக்கும் போது இதில் பல குறைபாடுகள் உள்ளதைக் காணலாம்.

வணக்கம் என்றால் வணங்குதல், அல்லது மரியாதை செய்தல் எனப் பொருள். ஒருவர் வணங்குகிறார் என்றால் மற்றவர் வணங்கப்படுகின்றார். இருவரும் வணக்கம் என்று சொல்லும் போது அது பொருளற்றதாகி விடுகிறது. இருவரும் சம நிலையில் இருக்கும் போதாவது ஏதாவது கூறிச் சமாளிக்க முடியும்.

ஒருவர் மிகவும் மரியாதைக்குரியவராகவும் மற்றவர் தாழ்த்தப்பட்ட நிலையிலும் இருந்தால் உயர்ந்தவர் கூறும் வணக்கம் பொய்யாகி விடுகிறது. உயர்ந்த நிலையில் உள்ளவர், தாழ்ந்தவரை வணங்கவும் மாட்டார். தன்னை விட மேம்பட்டவராக நினைக்கவும் மாட்டார்.

அது போல் ஆங்கிலக் கலாச்சார ஊடுறுவல் காரணமாக நல்ல காலை. நல்ல பகல், நல்ல மாலை, நல்ல இரவு என்றெல்லாம் கூறும் வழக்கம் பரவிவிட்டது.

இது எல்லா நேரத்திலும் சொல்ல முடியாத முகமனாகவுள்ளது.

மனிதர்கள் நல்ல நிலையில் இருப்பது பாதி என்றால் கவலை துன்பம் போன்ற கெட்ட நிலை பாதியாக உள்ளது. மரண வீட்டிலோ நோயாளியிடமோ, பெரும் நட்டமடைந்தவரிடமோ பரீட்சையில் ஃபெயிலானவனிடமோ நல்ல காலை, நல்ல மாலை என்று கூற முடியாது. அது பொருத்தமாக இருக்காது.

ஆனால் இஸ்லாம் கூறும் முகமன் பொய் கலப்பில்லாததாகவும் எல்லா நேரத்துக்கும் ஏற்றதாகவும் அமைந்துள்ளது.

அஸ்ஸலாமு அலை(க்)கும் என்றால்  உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்  என்று பொருள். திருமண வீட்டுக்கும் சாந்தி தேவை. மரண வீட்டுக்கும் சாந்தி தேவை. இலாபம் அடைந்தவனுக்கும் சாந்தி தேவை. நட்டம் அடைந்தவனுக்கும் சாந்தி தேவை. மனித வாழ்வின் அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் அனைவரிடமும் பயன்படுத்தத் தக்க ஒரே முகமன் ஸலாம் கூறுதல் மட்டுமே.

ஸலாம் கூறுவதால் கிடைக்கும் பயன்கள்

ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது ஸலாம் கூறுவது சொர்க்கத்தில் கொண்டு சேர்க்கும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை சொர்க்கத்தில் நுழைய முடியாது. ஒருவரை ஒருவர் நேசிக்காமல் நம்பிக்கை கொண்டவர்களாக முடியாது. ஒரு செயலைச் செய்தால் நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிப்பீர்கள். அச்செயலை நான் உங்களுக்குக் கூறட்டுமா?  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டு விட்டு  உங்களிடையே ஸலாமைப் பரப்புங்கள்  என்றனர்.

நூல் : முஸ்லிம் 81

இஸ்லாத்தில் மிகச் சிறந்த நல்லறம் எது?  என்று ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  உணவளிப்பதும், உனக்குத் தெரிந்தவருக்கும் தெரியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்  என விடையளித்தார்கள்.

நூல் : புகாரி 12, 28, 6236

சுய நலம், கோபதாபம் போன்ற தீய குணங்களின் காரணமாக மனிதர்களிடையே சண்டை சச்சரவுகள் நிகழ்வது சகஜம். இத்தகைய சண்டைகள் காலா காலத்துக்கும் நீடிக்கக் கூடாது. கோப உணர்வு அடங்கிய உடன் சமாதானமாகி விட வேண்டும் என்று இஸ்லாம் வழிகாட்டுகிறது.

இதனால் தான்  எந்த முஸ்லிமும் இன்னொரு முஸ்லிமுடன் மூன்று நாட்களுக்கு மேல் பகைமையாக இருக்கக் கூடாது  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழி காட்டினார்கள். பகைமையாக இருக்கக் கூடாது என்றால் முன்பு போலவே இருவரும் உடனடியாக நட்புறவாக ஆக வேண்டும் என்பது இதன் பொருளல்ல. பெரும்பாலான உள்ளங்களுக்கு உடனடியாக இது சாத்தியப்படாது. பகைமையைப் படிப்படியாகத் தான் குறைக்க முடியும். அதற்கு முதல் படியாக அமைவது ஸலாம் தான்.

பகைமை கொண்டவராக இருந்தாலும் மூன்று நாட்கள் கடந்து விட்டால் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது முகம் பார்த்து ஸலாம் கூறினால் சமாதானத்தின் முதல் படியில் நாம் ஏறி விடுகிறோம். இது தொடரும் போது நாளடைவில் முழுமையான நல்லிணக்கம் ஏற்பட்டு விடும். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரத்தினச் சுருக்கமாகப் பின் வருமாறு கூறுகிறார்கள்.

ஒரு மனிதன் தனது சகோதரனை மூன்று நாட்களுக்கு மேல் பகைக்கக் கூடாது. இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது இவர் இந்தப் பக்கமும் அவர் அந்தப் பக்கமும் திரும்பிக் கொள்ளக் கூடாது. யார் ஸலாமைக் கொண்டு ஆரம்பிக்கிறாரோ அவரே அவர்களில் சிறந்தவர்  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி 6077, 6237

பல வகைச் சொற்கள்

அஸ்ஸலாமு அலை(க்)கும் என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம். அஸ்ஸலாமு அலை(க்)கும் என்பது முகமன் கூறுவதற்கான சொல்லாக இருப்பது போல் இன்னும் பல வார்த்தைகளும் உள்ளன.

அவற்றில் எதை வேண்டுமானாலும் நாம் முகமன் கூறுவதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஸலாமுன் அலை(க்)கும்

அஸ்ஸலாமு அலை(க்)கும் என்பதற்கு பதிலாக ஸலாமுன் அலை(க்)கும் என்றும் முகமன் கூறலாம்.

(முஹம்மதே!) நமது வசனங்களை நம்புவோர் உம்மிடம் வந்தால்  உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். அருள் புரிவதைத் தன் மீது உங்கள் இறைவன் கடமையாக்கிக் கொண்டான். உங்களில் எவரேனும் அறியாமையின் காரணமாக தீமையைச் செய்து விட்டு, அதன் பின்னர் மன்னிப்புக் கேட்டு திருந்திக் கொண்டால் அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்  எனக் கூறுவீராக!

திருக்குர்ஆன் 6:54

அவ்விரண்டுக்கும் இடையே தடுப்பு (சுவர்) இருக்கும். அந்தத் தடுப்புச்சுவர் மேல் சில மனிதர்கள் இருப்பார்கள். ஒவ் வொருவரையும் அவர்களின் அடையாளத்தைக் கொண்டு அவர்கள் அறிந்து கொள்வார்கள். சொர்க்கவாசிகளை அழைத்து  உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்  என்பார்கள். அவர்கள் ஆசைப்பட்டாலும் அங்கே (இது வரை) நுழையாமல் உள்ளனர்.

திருக்குர்ஆன் 7:46

நீங்கள் பொறுமையாக இருந்ததால் உங்களுக்கு ஸலாம் உண்டாகட்டும். இவ்வுலகின் தீர்ப்பு (உங்களுக்கு) நல்லதாக உள்ளது (என்று வானவர்கள் கூறுவார்கள்).

திருக்குர்ஆன் 13:24

நல்லோராக இருக்கும் நிலையில் அவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றி, உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்! நீங்கள் செய்தவற்றின் காரணமாக சொர்க்கத்தில் நுழையுங்கள்!  என்று கூறுவார்கள்.

திருக்குர்ஆன் 16:32

வீணானவற்றை அவர்கள் செவியுறும் போது அதை அலட்சியம் செய்கின்றனர்.  எங்கள் செயல்கள் எங்களுக்கு. உங்கள் செயல்கள் உங்களுக்கு. உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். அறிவீனர்களை விரும்ப மாட்டோம்  எனவும் கூறுகின்றனர்.

திருக்குர்ஆன் 28:55

தமது இறைவனை அஞ்சியோர் சொர்க்கத்திற்கு கூட்டம் கூட்டமாக ஓட்டிச் செல்லப்படுவார்கள். முடிவில் அதன் வாசல்கள் திறக்கப்பட்டு அவர்கள் அங்கே வந்ததும்  உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள்! நிரந்தரமாக இருக்கும் நிலையில் இதில் நுழையுங்கள்!  என அதன் காவலர்கள் அவர்களிடம் கூறுவார்கள்.

திருக்குர்ஆன் 39:73

ஸலாம்

ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது ஸலாம் என்று மட்டும் கூறினால் அதுவும் அங்கீகரிக்கப்பட்டது தான்.

அல்லாஹ்வே! நீ தூயவன்  என்பதே அங்கே அவர்களின் பிரார்த்தனை. ஸலாம் தான் அங்கே அவர்களின் வாழ்த்து.  அகிலத்தாரின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்  என்பதே அவர்களது பிரார்த்தனையின் முடிவாகும்.

திருக்குர்ஆன் 10:10

நமது தூதர்கள் இப்ராஹீமிடம் நற்செய்தி கொண்டு வந்தனர். ஸலாம் என்று அவர்கள் கூறினர். அவரும் ஸலாம் என்றார். பொரிக்கப்பட்ட கன்றுக் குட்டியைத் தாமதமின்றி கொண்டு வந்தார்.

திருக்குர்ஆன் 11:69

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோர் சொர்க்கச் சோலைகளுக்கு அனுப்பப்படுவார்கள். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் தமது இறைவனின் விருப்பப்படி நிரந்தரமாக இருப்பார்கள். ஸலாம் என்பதே அதில் அவர்களின் வாழ்த்தாக இருக்கும்.

திருக்குர்ஆன் 14:23

அவர்கள், அவரிடம் சென்று ஸலாம் கூறினர். அதற்கு அவர்  நாம் உங்களைப் (பார்த்துப்) பயப்படுகிறோம்  என்றார்.

திருக்குர்ஆன் 15:52

அவனை அவர்கள் சந்திக்கும் நாளில் அவர்களின் காணிக்கை ஸலாம் என்பதாகும். அவர்களுக்காக மரியாதைக்குரிய கூலியையும் அவன் தயாரித்துள்ளான்.

திருக்குர்ஆன், 33:44

அவர்களை அலட்சியப்படுத்துவீராக! ஸலாம் எனக் கூறுவீராக! பின்னர் அவர்கள் அறிந்து கொள்வார்கள்!

திருக்குர்ஆன், 43:89

அவரிடம் அவர்கள் வந்து ஸலாம் கூறிய போது அவரும் ஸலாம் கூறினார். அவர்கள் அறிமுகமில்லாத சமுதாயம்!

திருக்குர்ஆன்,, 51:25

ஸலாமுன் அலை(க்)க

ஆணுக்கு முகமன் கூறுவதாக இருந்தால் ஸலாமுன் அலை(க்)க என்றும் பெண்ணுக்கு முகமன் கூறுவதாக இருந்தால் ஸலாமுன் அலை(க்)கி என்றும் கூறலாம்.

உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்! உங்களுக்காக என் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுவேன். அவன் என்னிடம் அன்பு மிக்கவனாக இருக்கிறான்  என்று (இப்றாஹீம்) கூறினார்.

திருக்குர்ஆன் 19:47

இப்றாஹீம் நபியவர்கள் தமது தந்தைக்கு ஸலாம் கூறிய போது ஸலாமுன் அலைக்க எனக் கூறியதாக மேற்கண்ட வசனம் கூறுகிறது.

அஸ்ஸலாமு அலை(க்)க

அஸ்ஸலாமு அலைக்க என்றும் சலாம் கூறலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த தஷஹ்ஹுத் என்ற அத்தஹிய்யாதில் அஸ்ஸலாமு அலைக்க என்று கூறுமாறு கற்றுத் தந்துள்ளார்கள்.

பார்க்க புகாரி 831, 835, 1202, 6230, 6265, 7381,

ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் படைத்து வானவர்களுக்கு ஸலாம் கூறச் சொன்னான். அப்போது ஆதம் (அலை) அவர்கள் அஸ்ஸலாமு அலைக்கும் என்று வானவர்களுக்குக் கூறினார்கள். அதற்கு வானவர்கள் பதில் சொன்ன போது அஸ்ஸலாமு அலைக்க என்று கூறினார்கள் என்ற செய்தி புகாரி உள்ளிட்ட பல நூல்களில் இடம் பெற்றுள்ளது.

பார்க்க : புகாரி 3326, 6227

அலை(க்)க என்பது ஆண் பால் சொல்லாகும். பெண்ணுக்கு ஸலாம் கூறும் போது அலை(க்)கி என்று கூறிக் கொள்ளலாம்.

ஆயிஷா (ரலி) அவர்களுக்கு மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அப்துர் ரஹ்மான் பின் அஸ்வத் (ரலி) ஆகியோர் ஸலாம் கூறிய போது அஸ்ஸலாமு அலை(க்)கி என்று இதனடிப்படையில் தான் கூறியுள்ளனர்.

பார்க்க : புகாரி 6075

ஒருவருக்கு ஒருமை, பலருக்கு பன்மை

அலை(க்)கும் (உங்கள் மீது) என்பது பன்மையாக இருந்தாலும் ஒருவருக்கு ஸலாம் கூறும் போது நாம் இதைப் பயன்படுத்தி வருகிறோம். இப்படிப் பயன்படுத்தாமல் ஒருமை, இருமை (அரபியில் இருமை என்று ஒரு வகை உண்டு) பன்மைக்கேற்றவாறு சொல்லை மாற்றிக் கொள்ளலாம்.

ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் படைத்த போது நீ சென்று அங்கே அமர்ந்துள்ள வானவர்களுக்கு ஸலாம் கூறு! அவர்கள் என்ன மறுமொழி கூறுகிறார்கள் என்பதைச் செவிமடு. ஏனெனில் அது உமக்கும் உமது வழித் தோன்றலுக்கும் உரிய முகமன் ஆகும் என்று அல்லாஹ் கூறினான். ஆதம் (அலை) அவர்கள் (வானவர்களுக்கு) அஸ்ஸலாமு அலை(க்)கும் என்று (பன்மையாக) கூறினார். வானவர்கள் பதிலளிக்கும் போது அஸ்ஸலாமு அலைக்க வரஹ்மதுல்லாஹி என்று கூறினார்கள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி 6227, 3326

ஸலாமுக்குப் பதிலுரைத்தல்

ஒருவர் ஸலாம் கூறினால் அதற்கு மற்றவர் மறுமொழி கூறுவது கட்டாயக் கடமையாகும்.

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து 1) ஸலாமுக்குப் பதிலுரைத்தல் 2) நோயாளியை நலம் விசாரித்தல் 3) ஜனாஸாவை (இறந்தவரின் உடலை) பின் தொடர்ந்து செல்லுதல் 4) விருந்தை ஏற்றுக் கொள்ளுதல் 5) தும்மல் போட்டவருக்காகப் பிரார்த்தனை செய்தல் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி 1240

சிறந்த முறையில் மறுமொழி கூற வேண்டும்

முகமன் கூறுபவர் பயன்படுத்தும் சொற்களை விடச் சிறந்த முறையில் அல்லது அதற்குச் சமமான முறையில் மறுமொழி கூற வேண்டும்.

உங்களுக்கு வாழ்த்துக் கூறப்பட்டால் அதை விட அழகிய முறையிலோ, அல்லது அதையோ திருப்பிக் கூறுங்கள்! அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான்.

திருக்குர்ஆன் 4:86

ஆதம் (அலை) அவர்கள் வானவர்களுக்கு ஸலாம் கூறிய போது அஸ்ஸலாமு அலை(க்)கும் என்று மட்டும் கூறினார்கள். வானவர்கள் மறுமொழி கூறிய போது வரஹ்மதுல்லாஹி என்று மேலதிகமாகக் கூறினார்கள் என்று முன்னரே நாம் குறிப்பிட்ட ஹதீஸ் இதற்கு ஆதாரமாகும்.

இப்றாஹீம் நபியவர்களுக்கு வானவர்கள் ஸலாம் கூறிய போது இப்றாஹீம் நபியும் ஸலாம் என்று மறுமொழி கூறியதை முன்னரே குறிப்பிட்டுள்ளோம். அதுவும் இதற்கான ஆழ்ரமாகும்.

ஸலாம் சொல்லி அனுப்புதல்

ஒருவரை நேரடியாக நாம் சந்திக்கும் போது ஸலாம் கூறுவது போல் நம் முன்னே இல்லாதவருக்காக இன்னொருவரிடம் ஸலாம் கூறி அனுப்பலாம். யாரிடம் ஸலாம் சொல்லி அனுப்பப்படுகிறதோ அவர் சம்பந்தப்பட்டவருக்கு இதைத் தெரிவிக்க வேண்டும். யாருக்கு ஸலாம் கூறி அனுப்பபட்டதோ அவரும் மறுமொழி கூற வேண்டும். அதற்காக ஆதாரங்கள் வருமாறு.

என் மகன் மரணத்தை நெருங்கி விட்டான் உடனே வரவும் என்ற செய்தியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சொல்லி அனுப்பினார். மேலும் ஸலாமும் சொல்லி அனுப்பினார்.

நூல் : புகாரி 1284, 5655, 6655

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் காணாமல் அவர்களின் குடும்பத்தினர் அஞ்சிய போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிழலில் பகல் தூக்கம் தூங்கியதைக் கண்ட அபூகதாதா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே உங்கள் குடும்பத்தார் உங்களுக்கு ஸலாமையும் அல்லாஹ்வின் ரஹ்மத்தையும் (அருளையும்) சொல்லி அனுப்பியுள்ளனர் எனக் கூறினார் (ஹதீஸ் சுருக்கம்)

நூல் : புகாரி 1821, 1822

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு மனைவியை மணமுடித்து வீட்டுக்குள் சென்றனர். எனது தயார் உம்மு சுலைம் இனிப்பான உணவைத் தயார் செய்தார். அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் கொண்டு சென்றேன். என் தாயார் உங்களுக்கு ஸலாம் கூறினார் என்று தெரிவித்தேன்.......... என்று அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்.

நூல் : நஸயீ 2572

ஆயிஷாவே இதோ ஜிப்ரீல் உனக்கு ஸலாம் கூறுகிறார்  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் வ அலைஹிஸ் ஸலாம் வரஹ்ம(த்)துல்லாஹி வபரகா(த்)துஹ என்று மறுமொழி கூறினார்கள். (வஅலைஹி என்றால் அவர் மீது என்று பொருள்)

நூல் : புகாரி 3217, 3768, 6201, 6249, 6253

ஸலாம் முஸ்லிம்களுக்கு மட்டுமா?

முஸ்லிம்களுக்கு மட்டுமே ஸலாம் கூற வேண்டும் என்று பெரும்பாலான முஸ்லிம்கள் கருதுகின்றனர். இதன் காரணமாக முஸ்லிமல்லாத மக்களைச் சந்திக்கும் போது ஸலாம் கூறத் தயங்கி வணக்கம், வந்தனம், நமஸ்காரம் போன்ற சுயமரியாதைக்குப் பங்கம் விளைவிக்கும் சொற்களைக் கூறும் நிர்பந்தந்தத்தை தமக்குத் தாமே ஏற்படுத்திக் கொள்கின்றனர்.

முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் கூறக் கூடாது என்று கட்டளையிருந்தால் அதைக் கண்டிப்பாக நடைப்புறப்படுத்த வேண்டும் என்பதில் இரு வேறு கருத்து இல்லை. ஆனால் அல்லாஹ்வும், அவனது தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் நமக்கு இவ்வாறு கட்டளையிடவில்லை. மாறாக முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் கூறுவதைத் தெளிவாக அனுமதித்துள்ளனர் என்பதை இவர்கள் அறியாமல் உள்ளனர்.

இதற்கான ஆதாரங்களைப் பார்ப்போம்.

திருக்குர்ஆனில் பல்வேறு வசனங்களில் இப்றாஹீம் நபியவர்களின் வழிமுறையை முஸ்லிம்களும் பின்பற்ற வேண்டும் என்று அல்லாஹ் வலியுறுத்திகின்றான்.

பார்க்க : திருக்குர்ஆன் 2:130, 2:135, 3:95, 4:125, 6:161, 16:123, 22:78

இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத தமது தந்தைக்காக இப்றாஹீம் நபியவர்கள் ஒரு தடவை பாவமன்னிப்புத் தேடினார்கள். அது தவறு என்று தெரிந்ததும் அதிலிருந்து விலகிக் கொண்டார்கள். அவர்கள் தமது தந்தைக்கு பாவமன்னிப்பு கோரிய அந்த வியத்தைத் தவிர அவர்களின் மற்ற அனைத்து நடவடிக்கைகளிலும் முஸ்லிம்களுக்கு முன்மாதிரி உளளது என்று அல்லாஹ் பின்வரும் வசனத்தில் தெளிவாகக் கூறுகிறான்.

உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது  என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது.  உங்களுக்காக பாவ மன்னிப்புத் தேடுவேன். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு எதையும் செய்ய நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை  என்று இப்ராஹீம் தம் தந்தையிடம் கூறியதைத் தவிர. (இதில் அவரிடம் முன் மாதிரி இல்லை) எங்கள் இறைவா! உன்னையே சார்ந்திருக்கிறோம். உன்னிடமே திரும்பினோம். மீளுதல் உன்னிடமே உள்ளது.

திருக்குர்ஆன் 60:4

உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்! உங்களுக்காக என் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுவேன். அவன் என்னிடம் அன்பு மிக்கவனாக இருக்கிறான்  என்று (இப்ராஹீம்) கூறினார்.

திருக்குர்ஆன் 19:47

அல்லாஹ்வுக்கு இணை கற்பித்த தந்தைக்காக இப்றாஹீம் நபி பாவமன்னிப்பு கோரியதை யாரும் முன் மாதிரியாக எடுத்துக் கொண்டு இணை கற்பிப்போருக்கு பாவமன்னிப்பு கோரக் கூடாது. அதே சமயம் இறைவனுக்கு இணை கற்பித்த தந்தைக்கு இப்றாஹீம் நபியவர்கள் ஸலாம் கூறியதை முன் மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்பதை மேற்கண்ட இரண்டு வசனங்களையும் ஒருங்கிணைத்துப் பார்ப்பவர்கள் அறிந்து கொள்ள முடியும். எனவே முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் கூறுவது இப்றாஹீம் நபியின் வழிமுறையில் உள்ளது என்பதில் மறுப்பேதும் இல்லை.

முஸ்லிமல்லாதவருக்கு ஸலாம் உண்டாகுமாறு எப்படிப் பிரார்த்திக்க முடியும் என்று சிலர் கேள்வியெழுப்புவர். இக்கேள்வி தவறாகும்.

அஸ்ஸலாமு அலை(க்)கும் என்பதன் பொருள்  உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும் . இஸ்லாம் எனும் வாழ்க்கை நெறியை முஸ்லிமல்லாதவர் ஏற்றுக் கொள்வதன் மூலம் அவருக்கு சாந்தி கிடைக்கட்டும் என்ற பொருளும் இதற்குள் உண்டு. முஸ்லிமல்லாதவர் இவ்வுலக வாழ்க்கையின் நன்மைகளைப் பெற்று சாந்தியடையட்டும் என்ற பொருளும் இதற்குள் உண்டு. இவ்வுலக நன்மைகள் முஸ்லிமல்லாதவருக்கு கிடைக்க நாம் துஆ செய்யலாம் இதற்குத் தடை ஏதும் இல்லை. எனவே முஸ்லிமல்லாதவருக்கு ஸலாம் கூறுவதை மறுக்க எந்த நியாயமும் இல்லை.

உனக்குத் தெரிந்தவருக்கும், தெரியாதவருக்கும் ஸலாமைப் பரப்பு  என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழியை முன்னரே நாம் குறிப்பிட்டுள்ளோம்.

முஸ்லிமுக்கு மட்டும் தான் ஸலாம் கூற வேண்டும் என்றால் முஸ்லிம் என்று தெரிந்தவருக்கு ஸலாம் கூறு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருப்பார்கள். அவ்வாறு கூறாமல் தெரிந்தவருக்கும் தெரியாதவருக்கும் ஸலாம் கூறு என்று கூறியுள்ளனர்.

ஒருவரைப் பற்றிய விபரம் நமக்குத் தெரியாது என்றால் அவர் முஸ்லிமா அல்லவா என்பதும் கூட நமக்குத் தெரியாது. அது பற்றிக் கவலைப்படாமல் தெரிந்தவர் தெரியாதவர் என்ற பாகுபாடு இன்றி அனைவருக்கும் ஸலாம் கூறு என நபிகன் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதன் மூலமும் முஸ்லிமல்லாதவருக்கும் ஸலாம் கூறலாம் என்பதை அறியலாம்.

மேலும் பின்வரும் வசனங்கத்தில் மூடர்கள் உரையாடினால் ஸலாம் என்று கூறிவிடுமாறு அல்லாஹ் வழி காட்டுகிறான். இங்கே மூடர்கள் என்று குறிப்பிடுவதில் இஸ்லாத்தை ஏற்காதவர்களும் தீயவர்களும் அடங்குவார்கள்.

அளவற்ற அருளாளனின் அடியார்கள் பூமியில் பணிவாக நடப்பார்கள். அறிவீனர்கள் அவர்களுடன் உரையாடும் போது  ஸலாம்  எனக் கூறுவார்கள்.

திருக்குர்ஆன் 25:63

வீணானவற்றை அவர்கள் செவியுறும் போது அதை அலட்சியம் செய்கின்றனர்.  எங்கள் செயல்கள் எங்களுக்கு. உங்கள் செயல்கள் உங்களுக்கு. உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். அறிவீனர்களை விரும்ப மாட்டோம்  எனவும் கூறுகின்றனர்.

திருக்குர்ஆன் 28:55

என் இறைவா! அவர்கள் நம்பிக்கை கொள்ளாத கூட்டமாகவுள்ளனர்  என்று அவர் (முஹம்மத்) கூறுவதை (அறிவோம்.) அவர்களை அலட்சியப்படுத்துவீராக! ஸலாம் எனக் கூறுவீராக! பின்னர் அவர்கள் அறிந்து கொள்வார்கள்

திருக்குர்ஆன் 43:88,89

மேற்கண்ட வசனங்களை மேலோட்டமாகப் பார்த்தாலே முஸ்லிமல்லாதவர்களுக்கும் ஸலாம் கூறலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும்.

முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் கூறலாம் என்பதற்கு திருக்குர்ஆன் வசனங்களும் நபிவழியும் சான்றுகளாகத் திகழ்ந்த போதும் இதைக் கண்டு கொள்ளாத சிலர் ஹதீஸ்களைத் தவறாக விளங்கிக் கொண்டு முஸ்லிமல்லாதவருக்கு ஸலாம் கூறக் கூடாது என்று வாதிடுகின்றனர்.

வேதமுடையோர் உங்கள் மீது ஸலாம் கூறினால் வஅலை(க்)கும் (உங்கள் மீதும்) எனக் கூறுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி 6258

வேதமுடையோர் ஸலாம் கூறினால் நாம் ஸலாம் கூறாமல் வஅலை(க்)கும் (உங்கள் மீதும்) என்று கூறுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டதிலிருந்தே அவர்களுக்கு ஸலாம் கூறக் கூடாது என்று வாதிடுகின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தக் காரணமும் கூறாமல் பொதுவாக ஒரு கட்டளையிட்டால் அதை நாம் அப்படியே முழுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதும் ஒரு காரணத்தைக் கூறி அதற்காக ஒன்றை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்திருந்தால் அதைப் பொதுவான தடை என்று கருதக் கூடாது என்பதும் அனைவரும் ஏற்றுக் கொண்ட விதியாகும்.

வேதமுடையோரின் ஸலாமுக்கு பதில் கூறுவதைப் பொருத்த வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வஅலை(க்)கும் என்று கூறச் சொன்னதற்கான காரணத்தைத் தெளிவுபடுத்தி விட்டனர்.

யஹதிகள் உங்களுக்கு ஸலாம் கூறினால் அவர்கள் (அஸ்ஸலாமு அலைக்க எனக் கூறாமல்) அஸ்ஸாமு அலைக்க என்று தான் கூறுகின்றனர். (உம்மீது மரணம் உண்டாகட்டும் என்பது இதன் பொருள்) எனவே வஅலைக்க (உன் மீதும் அவ்வாறு உண்டாகட்டும்) என்று கூறுங்கள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி 6257, 2935, 6256, 6024, 6030, 6395, 9401, 6927

யஹூதிகள் அஸ்ஸலாமு எனக் கூறாமல் அஸ்ஸாமு என்று கூறும் காரணத்தினாலேயே அவர்களுக்கு ஸலாம் என்ற வார்த்தையைக் கூற வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர்கள் முறையாக மறுமொழி கூறினால் நாமும் அவர்களுக்கு முறையாக மறுமொழி கூறலாம் என்பதைத் தான் இதிலிருந்து அறிந்து கொள்ள முடியும். மேலும் இது தான் ஏற்கனவே நாம் எடுத்துக் காட்டிய ஆதாரங்களுடன் முரண்படாத வகையில் ஹதீஸ்களை அணுகும் சரியான முறையாகும்.

ஸலாமின் ஒழுங்குகள்

ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது யார் வேண்டுமானாலும் ஸலாம் சொல்வதற்கு முந்தலாம் என்றாலும் யார் முந்திக் கொள்வது சரியான முறை என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

வாகனத்தில் செல்பவர் நடந்து செல்பவருக்கு ஸலாம் கூற வேண்டும். நடந்து செல்பவர் அமர்ந்து இருப்பவருக்கு ஸலாம் வற வேண்டும். குறைவான எண்ணிக்கையில் இருப்போர் அதிக எண்ணிக்கையில் உள்ளவர்கள் மீது ஸலாம் கூற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி 6232, 6234

மற்றொரு அறிவிப்பில் வயதில் சிறியவர் பெரியவருக்கு ஸலாம் கூற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நூல் புகாரி 6231

வயதில் சிறியவர்கள் பெரியவர்களுக்கு ஸலாம் கூறுவதே சிறந்தது என்றாலும் சிறுவர்களுக்கு பெரியவர்கள் ஸலாம் கூறுவதும் நல்ல முன்மாதிரியாகும்.

அனஸ் (ரலி) அவர்கள் சிறுவர்களைக் கடந்து சென்ற போது அவர்களுக்கு ஸலாம் கூறினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ததாகவும் குறிப்பிட்டார்கள்.

நூல் : புகாரி 6247

மலஜலம் கழிக்கும் போது ஸலாம் கூறக் கூடாது

உண்ணும் போதும், பருகும் போதும், இன்ன பிற காரியங்களில் ஈடுபட்டிருக்கும் போதும் ஒருவருக்கு நாம் ஸலாம் கூறலாம். அவரும் பதில் ஸலாம் கூறலாம் ஆயினும் மலஜலம் கழிப்பவருக்கு ஸலாம் கூறக் கூடாது. அந்த நிலையில் பதிலும் கூறக் கூடாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறுநீர் கழிக்கும் போது அவர்களைக் கடந்து சென்ற ஒரு மனிதர் அவர்களுக்கு ஸலாம் கூறினார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவருக்கு மறுமொழி கூறவில்லை.

நூல் : முஸ்லிம் 555

ஆண்கள் பெண்களுக்கும் பெண்கள் ஆண்களுக்கும் ஸலாம் கூறலாம்.

ஆண்கள் பெண்களுக்கு ஸலாம் கூறுவதற்கும் பெண்கள் ஆண்களுக்கு ஸலாம் கூறுவதற்கும் மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை. பெண்களின் குரலை ஆண்கள் கேட்கக் கூடாது என்று சிலர் கூறுவது ஆதாரமற்ற கூற்றாகும்.

வெள்ளிக்கிழமை தோறும் ஒரு பெண்மணி விருந்தளிப்பார். அவரிடம் விருந்து உண்ணச் செல்லும் நாங்கள் அவருக்கு ஸலாம் கூறுவோம் என்று ஸஹ்ல் பின் ஸஅது (ரலி) அறிவிக்கிறார்.

நூல் : புகாரி 938, 6248

முஸாஃபஹா கைகுலுக்குதல்

ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது கை குலுக்குவதும் நபிவழியாகும்.

ஏமன் வாசிகள் வந்துள்ளனர். முஸாஃபஹா மூலம் முதன் முதலில் நமக்கு முகமன் கூறியவர்கள் அவர்களே  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : அபூதாவூத் 4537

ஏமன் மக்களின் முஸாஃபஹா செய்யும் வழக்கத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதன் மூலம் அங்கீகாரம் செய்கின்றனர்.

கஅபு பின் மாலிக் (ரலி) அவர்கள் உள்ளிட்ட மூன்று தோழர்கள் தபூக் போரில் பங்கெடுக்கத் தவறியதால் அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சில நாட்கள் சமூகப் புறக்கணிப்பு செய்திருந்தனர். பின்னர் அம்மூவரும் மன்னிக்கப்பட்டதாக அல்லாஹ் ஒரு வசனத்தை அருளிய பின் கஅபு பின் மாலிக் (ரலி) அவர்கள் பள்ளிக்குச் சென்றனர்.

அது பற்றி அவர்கள் குறிப்பிடும் போது நான் பள்ளிவாசலில் நுழைந்தேன். அங்கே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருந்தனர். தல்ஹா (ரலி) அவர்கள் உடனே என்னை நோக்கி வந்து என்னிடம் முஸாஃபஹா செய்து நல்வாழ்த்து தெரிவித்தார் என்று குறிப்பிடுகிறார்கள்.

நூல் : புகாரி 4418,

நான் சில பெண்களுடன் சேர்ந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பைஅத் (உறுதிமொழி) எடுக்கச் சென்றேன். அப்போது அவர்கள்  உங்களுக்கு இயன்றவரை சக்திக்கு ஏற்றவரை நிறைவேற்றுங்கள்  என்று குறிப்பிட்டார்கள்.  பெண்களிடம் நான் முஸாஃபஹா செய்ய மாட்டேன்  எனவும் கூறினார்கள்.

நூல் : இப்னுமாஜா 2865

பெண்களிடம் நான் முஸாஃபஹா செய்ய மாட்டேன்  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதிலிருந்து ஆண்களிடம் முஸாஃபஹா செய்பவர்களாக இருந்தனர் என்பதை விளங்க முடியும்.

ஆண்கள், ஆண்களுக்கும் பெண்கள் பெண்களுக்கும் முஸாஃபஹா செய்வது நபிவழியில் உள்ளதாகும்.

முஸாஃபஹா செய்யும் சரியான முறையையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். தமிழக முஸ்லிம்கள் பலர் முஸாஃபஹாச் செய்யும் போது தமது இரு கைகளால் மற்றவரின் இரு கைகளைப் பிடிக்கின்றனர். வேறு சிலர் இவ்வாறு முஸாஃபஹாச் செய்யும் போது மற்றவரின் இடது கை கட்டை விரலை அழுத்திப் பார்க்கின்றனர்.

கில்று என்பவர் இன்னும் உயிரோடு உள்ளார், அவருக்கு இடது கை கட்டை விரலில் எலும்பு இருக்காது. அவர் எந்த எந்த மனிதரின் தோற்றத்திலும் வருவார். அவரை முஸாஃபஹா செய்து விட்டால் நாம் அவ்லியா ஆகலாம் என்று மார்க்க அறிவு இல்லாத மூடர்கள் கட்டிய கட்டுக் கதை தவிர இதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

வலது கையால் மற்றவரின் வலது கையைப் பிடிப்பதே முஸாஃபஹா செய்யும் சரியான முறையாகும்.

ஒரு உள்ளங்கையை மறு உள்ளங்கையில் சேர்த்தல் என்பது தான் முஸாஃபஹா என்ற சொல்லின் நேரடி அர்த்தமாகும்.

இருவருமே ஒரு கையால் முஸாஃபஹா செய்யும் போது தான் இந்த நிலை ஏற்படும். இரண்டு கைகளால் செய்யும் போது இடது உள்ளங்கை மற்றவரின் வலது புறங்கையில் தான் படும். இரு பக்கமும் உள்ளங்கைகள் சந்திக்காது. எனவே முஸாஃபஹா என்ற சொல்லின் நேரடிப் பொருளே ஒரு கையால் தான் செய்ய வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

அகராதியை மேற்கோள் காட்டி இப்னு ஹஜர், இப்னுல் கய்யிம் போன்ற பல அறிஞர்கள் ஒரு கையால் முஸாஃபஹாச் செய்வது தான் சரியான முறை என்கின்றனர்.

இரண்டு கைகளால் முஸாஃபஹாச் செய்ய வேண்டும். அல்லது செய்யலாம் என்ற கருத்துடையவர்கள் புகாரியில் இடம் பெற்ற ஹதீஸை எடுத்துக் காட்டுகின்றனர்.

முஸாஃபஹா என்ற பாடத்தில் இந்த ஹதீஸை புகாரி இமாம் பதிவு செய்திருந்தாலும் அந்த ஹதீஸக்கும் முஸாஃபஹாவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்கு அத்தஹிய்யாத் கற்றுத் தந்தனர். அப்போது எனது ஒரு கை அவர்களின் இரண்டு கைகளுக்கிடையே இருந்தது என்பது தான் அந்த ஹதீஸ்.

நூல் : புகாரி 6265

ஒருவருக்குக் கற்றுக் கொடுக்கும் போது ஆசிரியர் தமது இரு கைகளால் மாணவரின் ஒரு கையைப் பிடித்துக் கொண்டு சொல்லிக் கொடுக்கலாம் என்பது தான் இதிலிருந்து தெரிகிறது. ஒருவரைச் சந்திக்கும் போது செய்யும் முஸாஃபஹா பற்றி இது குறிப்பிடவில்லை.

மேலும் இதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரு கைகளையும் இப்னு மஸ்வூத் (ரலி) ஒரு கையையும் பயன்படுத்தியுள்ளனர். முஸாஃபஹாவுக்கு இதை ஆதாரமாகக் காட்டுவோர்  ஒருவர் ஒரு கையையும் மற்றவர் இரு கைகளையும் பயன்படுத்த வேண்டும்  என்று கூறுவதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கட்டியணைத்தல்

ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது கட்டியணைக்கும் வழக்கமும் மக்களிடம் பரவலாகக் காணப்படுகிறது. இந்தச் செயல் நபிவழி என்று சொல்லும் அளவுக்கு ஏற்கத் தக்க ஆதாரம் ஏதும் இல்லை. இது பற்றி சில ஹதீஸ்கள் இருந்தாலும் அவை அனைத்துமே பலவீனமானவையாக உள்ளன.

ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்கள் மதீனாவுக்கு வந்தார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) என் வீட்டில் இருந்தனர். வீட்டுக்கு ஸைத் பின் ஹாரிஸா (ரலி) வந்து கதவைத் தட்டினார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஆடை இழுபட நிர்வாணமாக அவரை நோக்கிச் சென்றார்கள். அதற்கு முன்போ பின்போ அவர்களை நான் நிர்வாணமாகப் பார்த்ததில்லை. உடனே அவரைக் கட்டிய முத்தமிட்டார்கள்  என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல் : திர்மிதி 2656

ஆயிஷா (ரலி) கூறியதாக உர்வா அவர் அறிவிக்கிறார்.

உர்வா கூறியதாக ஸஹ்ரி அறிவிக்கிறார்.

ஸஹ்ரி கூறியதாக முஹம்மத் பின் இஸ்ஹாக் அறிவிக்கிறார்.

முஹம்மத் பின் இஸ்ஹாக் கூறியதாக யஹ்யா பின் முஹம்மத் அறிவிக்கிறார்.

யஹ்யா பின் முஹம்மத் கூறியதாக அவரது மகன் இப்றாஹீம் அறிவிக்கிறார்.

இப்றாஹீம் கூறியதாக புகாரி இமாம் அறிவிக்கிறார்.

புகாரி இமாம் கூறியதாக திர்மிதி இமாம் பதிவு செய்கிறார்.

இந்த அறிவிப்பாளர்களில் யஹ்யா பின் முஹம்மத் என்பவரும் பலவீனமானவர். அவர் வழியாக அறிவிக்கும் அவரது மகன் இப்றாஹீமும் பலவீனமானவர்.

பலவீனமான இருவர் வழியாக இச்செய்தி அறிவிக்கப்படுவதால் இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்வாணமாக கதவைத் திறக்கச் சென்றார்கள் என்பது இச்செய்தியின் பலவீனத்தை மேலும் அதிகரிக்கிறது.

நபியின் மனைவியாக இருந்தும் ஆயிஷா (ரலி)  நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அதற்கு முன்பும் பின்பும் நிர்வாணமாகப் பார்த்ததில்லை  எனக் கூறியதாக அறிவிப்பதும் இச்செய்தியின் பலவீனத்தை இன்னும் அதிகரிக்கிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உங்களைச் சந்திக்கும் போது உங்களை முஸாஃபஹா செய்வார்களா? என்று அபூதர் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் என்னை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்போது சந்தித்தாலும் என்னிடம் முஸாஃபஹா செய்யாமல் இருந்ததில்லை. ஒரு நாள் என்னைத் தேடி ஆளனுப்பினார்கள். நான் வீட்டில் இருக்கவில்லை. வீட்டுக்கு வந்ததும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆளனுப்பியது எனக்குச் சொல்லப்பட்டது. உடனே நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அவர்கள் தமது கட்டிலில் இருந்தனர். அப்போது என்னைக் கட்டியணைத்தனர். இது (முஸாஃபஹாவை விட) சிறந்ததாக இருந்தது என்று அபூதர் (ரலி) விடையளித்தார்கள் என்று ஒரு மனிதர் கூறினார்.

நூல்கள் : அபூதாவூத் 4538, அஹ்மத் 20470, 20502

அபூதர் (ரலி)யிடம் கேட்டு அறிவிக்கும் அறிவிப்பாளரின் பெயர் குறிப்பிடாமல் ஒரு மனிதர் அறிவித்தார் என்று அய்யூப் பின் புஹைர் என்பார் அறிவிக்கிறார்.

அந்த மனிதரின் பெயர் என்ன? அவர் நல்லவரா? கெட்டவரா? நினைவாற்றல் உள்ளவரா? இல்லாதவரா? என்பது போன்ற எந்த விபரமும் கூறப்படாததால் இது ஆதாரமாகக் கொள்ள முடியாத செய்தியாகும்.

நபித் தோழர்கள் சந்தித்துக் கொள்ளும் போது முஸாஃபஹா செய்வார்கள். பயணத்திலிருந்து ஊர் வந்தால் கட்டியணைப்பார்கள் என்ற அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : தப்ரானியின் அவ்ஸத்

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாக கதாதா அறிவிக்கிறார்.

கதாதா கூறியதாக ஷுஃபா அறிவிக்கிறார்.

ஷுஃபா கூறியதாக அப்துஸ் ஸலாம் பின் ஹர்ப் அறிவிக்கிறார்.

அப்துஸ் ஸலாம் பின் ஹர்ப் கூறியதாக அஹ்மத் பின் எஹ்யா கூறுகிறார்.

அஹ்மத் பின் யஹ்யா கூறியதாக நூலாசிரியர் தப்ரானி பதிவு செய்துள்ளார்.

ஹதீஸின் இறுதியில்  ஷுஃபா வழியாக அப்துஸ் ஸலாம் பின் ஹர்ப் என்பவரைத் தவிர வேறு எவரும் இந்த ஹதீஸை அறிவிக்கவில்லை. அவர் கூறியதாக யஹ்யா மட்டுமே தனித்து அறிவிக்கிறார்  என்று தப்ரானி குறிப்பிடுகிறார்.

அப்துஸ் ஸலாம் பின் ஹர்ப், யஹ்யா பின் சுலைமான் அல்ஜஅபி ஆகிய இருவரும் தனித்து அறிவித்தால் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதாலேயே தப்ரானி இவ்வாறு கூறுகிறார்.

அப்துஸ் ஸலாம் பின் ஹர்ப் என்பாரை அஹ்மத் பின் ஹம்பல், அப்துல்லாஹ் பின் முபாரக் ஆகியோர் குறை கூறியுள்ளனர். இவரது ஹதீஸில் சிறிதளவு பலவீனம் உள்ளது என்று யஃகூப் பின் பா, இப்னு ஸஅத் ஆகியோர் கூறுகின்றனர். மற்றும் பலர் இவரை நம்பகமானவர் எனக் கூறுகின்றனர். இவர் தனித்து அறிவிப்பதை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பது தான் இவரைப் பற்றிய முடிவாகும்.

யஹ்யா பின் சுலைமான் அல் ஜஅபி என்பவரைப் பற்றியும் அறிஞர்கள் இவ்வாறே முடிவு செய்துள்ளனர். எனவே இந்த ஹதீஸும் ஆதாரத்துக்கு ஏற்றதல்ல.

மேலும் இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தொடர்பு படுத்திக் கூறப்படவில்லை. நபித்தோழர்களின் நடைமுறையாகவே கூறப்பட்டுள்ளது என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

கட்டியணைத்தல் தொடர்பாக ஆதாரப்பூர்வமான எந்த ஹதீஸம் இல்லை.

மேலும் சில சமயங்களில் கட்டியணைத்தல் வெறுப்பை ஏற்படுத்துவதாகவும் அமையும். முக்கியமான ஒரு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக சலவை ஆடையுடன் ஒருவர் செல்வார். வியர்வை நாற்றத்துடன் அழுக்கான ஆடை அணிந்தவர் அவரைக் கட்டியணைத்தால் அவர் வெறுப்படைவார். அவரது சட்டை கசங்கியதால் கோபம் கொள்வார். ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது அன்பைப் பரிமாறிக் கொள்ள வேண்டும். இது வெறுப்பை விதைப்பதைக் காண்கிறோம்.

எனவே கை குலுக்குவதோடு நிறுத்திக் கொள்வது தான் நபிவழியாகும்.

கைகளை முத்தமிடுதல்

நாம் யாரைப் பெரியவர்கள் என்று எண்ணுகிறோமோ அவர்களின் கைகளை முத்தமிடும் முட நம்பிக்கையும் சிலரிடம் காணப்படுகிறது.

மிகச் சில நபித்தோழர்கள் மிகச் சில சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கைகளை முத்தமிட்டுள்ளதற்கு சில ஹதீஸ்கள் உள்ளன. அதன் நம்பகத் தன்மையில் கருத்து வேறுபாடு உள்ளது.

அவற்றை நம்பகமானது என்று வைத்துக் கொண்டாலும் அது இச்செயலுக்கு ஆதாரமாகாது.

பெரியவர்கள், மகான்கள் என்று எண்ணிக் கொண்டு அவர்களின் கைகளை முத்தமிட்டால் அதனால் பரகத் எனும் பாக்கியம் கிடைக்கும் என்ற எண்ணத்திலேயே இவ்வாறு செய்கின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்க ளை மகான் என்று நம்புவது மார்க்கத்தின் கடமையாக ஆகி விடுகிறது. அல்லாஹ்வும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் யாரை மகான்கன் என்று குறிப்பிட்டுச் சொன்னார்களோ அவர்களையும் மகான்கள் என்று நாம் நம்பலாம்.

மற்ற எவரையும் மகான் என்றோ இறைவனுக்கு நெருக்கமானவர் என்றோ முடிவு செய்யும் அதிகாரம் நமக்கு இல்லை. நாம் மகான் என்று நினைப்பவர் இறைவனிடம் த்தானாக இருப்பதற்கும் வாய்ப்பு உள்ளது.

எனவே மகான் என்று இறைவனாலும் இறைத் தூதராலும் அறிவிக்கப்படாத அனைவரும் சமமான நிலையில் உள்ளவர்களே. இறைவனுக்கு இவர் நெருக்கமானவர் என்று யாரைப் பற்றியும் முடிவு செய்ய முடியாது எனும் போது வெறும் தாடியையும், ஜிப்பாவையும் பேச்சாற்ற லையும், அரபு மொழி அறிவையும் வைத்துக் கொண்டு மகான் என்று முடிவு செய்வது இறைவனது அதிகாரத்தைக் கையில் எடுக்கும் குற்றமாகும்.  மகானா அல்லவா என்பதை நானல்லவா தீர்மானிக்க வேண்டும். இதைத் தீர்மானிக்க நீ யார்  என்று அல்லாஹ் கேட்டால் அதற்கு நம்மிடம் ஏற்கத்தக்க பதில் இல்லை.

எனவே எந்த மனிதரையும் முத்தமிட நமக்கு அனுமதி இல்லை. ஸலாம் கூறுவதும் முஸாஃபஹா செய்வதும் தவிர வேறு எதுவும் இஸ்லாத்தில் இல்லை.

காலில் விழுதல்

சிலர் இந்த எல்லையையும் கடந்து மகான்கன் என்று இவர்களாகத் கற்பனை செய்து கொண்டவர்களின் கால்களில் விழுகின்றனர். இது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதாகும் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

திருக்குர்ஆன் இதைத் தெளிவாக அறிவிக்கின்றது.

உமது இறைவனிடம் இருப்போர் (வானவர்கள்) அவனுக்கு அடிமைத்தனம் செய்வதைப் புறக்கணிக்க மாட்டார்கள். அவனைத் துதிக்கின்றனர். அவனுக்கே ஸஜ்தாச் செய்கின்றனர்.

திருக்குர்ஆன் : 7:206

இரவு, பகல், சூரியன், சந்திரன் ஆகியவை அவனது சான்றுகளில் உள்ளவை. சூரியனுக்கோ, சந்திரனுக்கோ ஸஜ்தாச் செய்யாதீர்கள்! அவனையே நீங்கள் வணங்குவோராக இருந்தால் அவற்றைப் படைத்த அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்யுங்கள்!

திருக்குர்ஆன் : 41:37

அல்லாஹ்வுக்கே ஸஜ்தா செய்து வணங்குங்கள்.

திருக்குர்ஆன் : 53:62

படைக்கப்பட்டவற்றுக்கு ஸஜ்தாச் செய்யக் கூடாது. படைத்தவனுக்குத் தான் ஸஜ்தாச் செய்ய வேண்டும் என்பது தான் நமக்கு இடப்பட்ட கட்டளை.

ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு ஸஜ்தாச் செய்வதை நான் அனுமதிப்பதாக இருந்தால் மனைவியை கணவனுக்கு ஸஜ்தா செய்ய அனுமதித்திருப்பேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹரைரா (ரலி)

நூல் : திர்மிதி 1079

நான் ஹீரா எனும் ஊருக்குச் சென்றேன். அங்குள்ள தலைவருக்கு அவ்வூர் மக்கள் ஸஜ்தா செய்ததை நான் பார்த்தேன். ஸஜ்தா செய்யப்படுவதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவரை விட அதிக தகுதி படைத்தவர்களாயிற்றே என்று (எனக்குள்) நான் கூறிக் கொண்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து  ஹீரா ஊர் மக்கள் தமது தலைவருக்கு ஸஜ்தாச் செய்ததை நான் பார்த்தேன். அல்லாஹ்வின் தூதரே நீங்கள் இதற்கு அதிகத் தகுதி உடையவர்கள்  என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  எனது சமாதியை நீ கடந்து சென்றால் அதற்கு ஸஜ்தாச் செய்வாயா?  எனக் கேட்டார்கள். மாட்டேன் என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  அவ்வாறு செய்யாதீர்கள். ஒரு மனிதனை இன்னொரு மனிதனுக்கு ஸஜ்தாச் செய்ய நான் அனுமதிப்பதாக இருந்தால் மனைவியை கணவனுக்கு ஸஜ்தாச் செய்ய அனுமதித்திருப்பேன். ஏனெனில் அவர்கள் கணவருக்கு அதிகம் கடன்பட்டுள்ளனர்  என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : கைஸ் பின் சஅத் (ரலி)

நூல் : அபூதாவூத் 1828

முஆத் (ரலி) ஷாம் அல்லது ஏமன் நாட்டுக்கு வந்தார். அங்கே கிறித்தவர்கள் தங்கள் பாதிரிமார்களுக்கும், தலைவர்களுக்கும் ஸஜ்தாச் செய்ததைக் கண்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதற்கு அதிகத் தகுதி படைத்தவர்கள்  என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டனர். (மதீனா வந்தததும்)  அல்லாஹ்வின் தூதரே கிறித்தவர்கள் தமது மத குருக்களுக்கும், தலைவர்களுக்கும் ஸஜ்தாச் செய்ததை நான் கண்டேன். (இவ்வாறு) கண்ணியம் செய்வதற்கு நீங்கள் அதிகத் தகுதி படைத்தவர்கள் என்று என் மனதில் எண்ணினேன். ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என்று கேட்டேன். இது தான் எங்களுக்கு முந்தைய நபிமார்களின் முகமன் அவர்கள் கூறினார்கள். இதை எங்கள் நபிக்கு செய்திட நாங்கள் அதிக உரிமை படைத்தவர்கள்  என்று கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்கள் தங்கள் வேதத்தை மாற்றியது போல் தங்கள் நபிமார்கள் மீது பொய் கூறுகின்றனர். இதை விடச் சிறந்ததை அல்லாஹ் நமக்குத் தந்துள்ளான். அது தான் ஸலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அபீஅவ்பா (ரலி)

நூல் : அஹ்மத் 18591

சமுதாயத்தில் எவ்வளவு மதிப்புமிக்கவர் என்றாலும் அவர் காலில் விழுவதற்கு இஸ்லாத்தில் அறவே அனுமதியில்லை.

வழிகேடர்களின் ஆதாரங்கள்

முதல் மனிதராகிய ஆதமை இறைவன் படைத்தவுடன் அவரது திறமையை வெளிப்படுத்திக் காட்டி அவருக்கு ஸஜ்தாச் செய்யுமாறு வானவர்களுக்குக் கட்டளையிட்டான் என திருக்குர்ஆனின் 2:34, 7:11, 15:29,30,31, 17:61, 18:50, 20:116, 38:72 ஆகிய வசனங்களில் கூறப்பட்டுள்ளது.

இவ்வசனங்களைச் சான்றாகக் கொண்டு பெரியார்களுக்கும், மகான்களுக்கும் ஸஜ்தா (சிரம் பணிதல்) செய்யலாம் என்று சிலர் வாதிட்டு வருகின்றனர். இது முற்றிலும் தவறாகும்.

நமக்குத் தெளிவான தடை இருக்கும் போது வானவர்களுக்கு இடப்பட்ட கட்டளையை நாம் செயல்படுத்த முடியாது. பெரியவர்களிடம் பணிவாகவும், அடக்கமாகவும் நடந்து கொள்ளலாம். ஆனால் அவர்களின் கால்களில் விழுவதையும், அவர்களுக்கு ஸஜ்தாச் செய்வதையும் இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்கவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உருவாக்கிய சமுதாயத்தில் இத்தகைய வழக்கம் அறவே இருந்ததில்லை. இது குறித்துத் தெளிவாக அறிய, முக்கியமான விவரத்தை நாம் அறிந்து கொள்வது அவசியமாகும்.

(ஸலாத்) தொழுகை, (ஸவ்ம்) நோன்பு, ஸகாத் போன்ற சொற்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்பே அரபுகளால் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆயினும், இப்போது நாம் பயன்படுத்துகின்ற பொருளில் இவ்வார்த்தைகள் பயன்படுத்தப்படவில்லை.

தொழுகையைக் குறிப்பிட ஸலாத் என்னும் வார்த்தையை இப்போது பயன்படுத்துகிறோம். ஆனால், இவ்வார்த்தையின் நேரடிப் பொருள் பிரார்த்தனையாகும். இப்பொருளில் தான் அரபுகள் இவ்வார்த்தையைப் பயன்படுத்தி வந்தனர்.

குறிப்பிட்ட சில காரியங்கள் அடங்கிய குறிப்பிட்ட வணக்கத்திற்கு ஸலாத் என்ற வார்த்தையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்தினார்கள்.

ஸவ்ம் என்ற வார்த்தை நோன்பைக் குறிப்பிடுவதற்கு இன்று பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்னர்  கட்டுப்படுத்திக் கொள்ளுதல்  என்ற பொருளில் இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டது.

இஸ்லாம் புதிய வார்த்தைகளைக் கண்டுபிடித்து வணக்கங்களுக்குப் பெயர் சூட்டவில்லை. மாறாக நடை முறையில் இருந்த வார்த்தைகளில் பொருத்தமானதைத் தேர்வு செய்து வணக்கங்களுக்குப் பெயர் சூட்டியது.

இது போலவே ஸஜ்தா என்ற வார்த்தையும் அரபு மொழியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்பே பயன்படுத்தப்பட்டு வந்தது.

நெற்றி, மூக்கு, இரண்டு உள்ளங்கைகள், இரண்டு முட்டுக் கால்கள், இரு கால்களின் விரல்கள் ஆகியவை தரையில் படும் வகையில் பணிவது ஸஜ்தா என்று நாம் விளங்கி வைத்துள்ளோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்விளக்கம் அளிப்பதற்கு முன்னால் இவ்வார்த்தைக்கு இவ்வாறு பொருள் இல்லை. நன்றாகப் பணியுதல் என்பதே இவ்வார்த்தையின் பொருளாக இருந்தது. பணிவைக் காட்டும் எல்லாக் காரியங்களையும் ஸஜ்தா எனக் குறிப்பிடப்பட்டது.

அகராதியில் மட்டுமின்றி திருக்குர்ஆனிலும் நன்றாகப் பணியுதல் என்ற பொருளில் இவ்வார்த்தை, பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நீங்கள் இவ்வூரில் ஸஜ்தாச் செய்தவர்களாக வாசல் வழியாக நுழையுங்கள்!

(திருக்குர்ஆன்: 2:58, 4:154, 7:161)

இவ்வசனங்களில் அகராதியில் உள்ள பணிவு என்ற பொருளைத் தான் ஸஜ்தா என்ற சொல்லுக்குக் கொள்ள முடியும். இஸ்லாமிய வழக்கில் உள்ள ஸஜ்தாவுக்குரிய பொருளை இங்கே கொள்ள முடியாது. ஏனெனில் இந்த ஸஜ்தாவைச் செய்து கொண்டு வாசல் வழியாக நுழைய இயலாது.

மனிதர்கள் மட்டுமின்றி சூரியன், சந்திரன், நட்சத்திரம், மரம், ஊர்வன, மலை உள்ளிட்ட அனைத்தும் அல்லாஹ்வுக்கு ஸஜ்தாச் செய்கின்றன என்று திருக்குர்ஆன் 22:18 வசனம் கூறுகிறது.

இவற்றுக்கு முகமோ, மூக்கோ, கைகளோ, மூட்டுக் கால்களோ கிடையாது. குனிந்து மரியாதை செய்வதற்கான முதுகும் கிடையாது. மலைகளோ, மரங்களோ இருக்கின்ற இடத்தை விட்டு நகர்வது கூட இல்லை. ஆனாலும், இவை தனக்கு ஸஜ்தாச் செய்கின்றன என்று அல்லாஹ் கூறுகிறான்.

சூரியன், சந்திரன், நட்சத்திரம் ஆகியவை ஓய்வின்றி இறைவன் வகுத்தளித்த திட்டப்படி சுற்றிச் சுழன்று வருகின்றன. இது தான் அவற்றுக்கான ஸஜ்தா. மரங்கள் பூத்துக் காய்த்துக் குலுங்குவது அவற்றுக்குரிய ஸஜ்தாவாகும்.

மலைகள், இப்பூமி தடம் புரளாமல் தடுத்து நிறுத்தும் பணியை அல்லாஹ்வின் கட்டளைப் படி செய்து வருகின்றன. இது அவற்றுக்குரிய ஸஜ்தாவாகும்.

மொத்தத்தில் அனைத்தும் இறைவனது உயர்வையும், தங்களது தாழ்வையும் ஒப்புக் கொண்டு பணிந்து வருகின்றன. பணிந்து நடப்பது தான் இங்கே ஸஜ்தா எனப்படுகிறது.

திருக்குர்ஆன் 12:4, 13:15, 16:48,49 ஆகிய வசனங்களிலும் பணியுதல் என்ற பொருளிலேயே ஸஜ்தா என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதை தெளிவாக அறியலாம்.

வானவர்கள் ஆதமுக்கு ஸஜ்தாச் செய்ததாகக் கூறும் மேற்கண்ட வசனங்களையும் இப்படித் தான் புரிந்து கொள்ள வேண்டும். இதை வலுப்படுத்தும் இன்னும் பல காரணங்களும் உள்ளன.

வானவர்கள் மனிதனைப் போன்றவர்கள் அல்லர். அவர்களுக்கு என திட்டவட்டமான உருவம் ஏதும் இல்லை. அவர்களுக்கு நம்மைப் போல் ஸஜ்தாவின் உறுப்புகள் இருக்கின்றன என்பதற்கும் சான்று இல்லை. சில நேரங்களில் நபிகள் நாயகத்திடம் ஜிப்ரீல் என்னும் வானவர் மனித வடிவத்தில் வந்துள்ளார். அதுவே அவரது வடிவம் என்று கூற முடியாது. ஏனெனில், வானத்தையும், பூமியையும் வியாபித்த வடிவத்திலும் அவர் நபிகள் நாயகத்துக்குக் காட்சி தந்துள்ளார். அவர்களுக்குச் சிறகுகளும் உள்ளன. எனவே, நம்மைப் போல் வானவர்களைக் கருத முடியாது. எவ்வாறு அவர்கள் பணிவை வெளிப்படுத்த முடியுமோ அவ்வாறு பணிவை வெளிப்படுத்தினார்கள் என்று தான் கருத முடியும்.

நாம் இப்போது செய்வது போலவே அவர்கள் ஸஜ்தாச் செய்தார்கள் என்று ஒரு வாதத்திற்காக வைத்துக் கொண்டால் கூட அதை நாம் பின்பற்ற முடியாது. காரணம் அல்லாஹ் கட்டளையிட்டதால் தான் வானவர்கள் ஆதமுக்கு ஸஜ்தாச் செய்தனர்.

பெரியவர்களுக்குச் ஸஜ்தா செய்யுங்கள்  என்று அல்லாஹ்வோ, அல்லாஹ்வின் தூதரோ நமக்குக் கட்டளையிடவில்லை. மாறாகத் தடை விதித்துள்ளனர்.

மேலும் யூஸுஃப் நபி தொடர்பான பின் வரும் வசனங்களயும் சான்றாகக் காட்டுகின்றனர்.

 என் தந்தையே! பதினோரு நட்சத்திரங்களையும், சூரியனையும், சந்திரனையும் நான் (கனவில்) கண்டேன். அவை எனக்குப் பணியக் கண்டேன்  என்று யூஸுஃப் தமது தந்தையிடம் கூறியதை நினைவூட்டுவீராக!

திருக்குர்ஆன் 12:4

மனிதர்களுக்கு இருப்பது போன்ற ஸஜ்தாவின் உறுப்புக்கள் நட்சத்திரங்களுக்கும், சூரியனுக்கும் சந்திரனுக்கும் இல்லை என்பதால் இங்கே பணிவு என்று தான் பொருள் கொள்ள முடியும். எனவே இது அவர்களுக்கு ஆதாரமாகாது.

தமது பெற்றோரைச் சிம்மாசனத்தின் மீது அமரச் செய்தார். அவர்கள் அனைவரும் அவருக்குப் பணிந்தனர்.  என் தந்தையே! முன்னர் நான் கண்ட கனவுக்கு விளக்கம் இதுவே. அதை என் இறைவன் உண்மையாக்கி விட்டான். சிறையிலிருந்து வெளிவரச் செய்த போது, அவன் எனக்குப் பேருதவி செய்தான். எனக்கும், என் சகோதரர்களுக்கும் இடையே ஷைத்தான் பிரிவினை ஏற்படுத்திய பின் உங்களைக் கிராமத்திலிருந்து கொண்டு வந்து சேர்த்து விட்டான். என் இறைவனோ நாடியதை நுணுக்கமாகச் செய்பவன்; அவன் அறிந்தவன்; ஞானமிக்கவன்  என்று அவர் கூறினார்.

திருக்குர்ஆன் 12:100

திருக்குர்ஆன் 12:100 வசனத்தின் பொருளை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். 12:4 வசனத்தின் விளக்கமே இப்போது. நிறைவேறுகிறது.

நட்சத்திரங்கள் சகோதரர்களையும், சூரியன் தந்தையையும், சந்திரன் தாயையும் குறிக்கின்றது.

கனவில் கண்டது அப்படியே நிறைவேற வேண்டுமானால்  அனைவரும் அவருக்கு ஸஜ்தாச் செய்தனர் என்பதில் யூசுப் நபியின் பெற்றோரும் அடங்க வேண்டும். யாருக்கு ஸஜ்தாச் செய்யப்படுகிறதோ அவர் சிம்மாசனத்தில் அமர்ந்தால் மற்றவர்கள் ஸஜ்தாச் செய்ய ஏதுவாக இருக்கும். ஆனால் யார் ஸஜ்தா செய்யப் போகிறார்களோ அவர்கள் சிம்மானத்தில் அமர வைக்கப்பட்டார்கள் என்று தான் இவ்வசனம் கூறுகிகிறது. இதனால் ஸஜ்தாச் செய்யவில்லை என்பது தெளிவாகிறது. அப்படியானால் கனவு நிறைவில்லை என்று ஆகி விடுகிறது.

ஆனால் ஸஜ்தாச் செய்தனர் என்று பொருள் கொள்ளாமல் பணிந்தனர் என்று பொருள் கொண்டால் இரண்டு வசனங்களும் ஒன்றை ஒன்று மெய்ப்பிக்கிறது. சிம்மாசனத்தில் அமர்ந்தாலும் யூசுப் நபியின் மன்னர் என்ற தகுதியை ஒப்புக் கொள்வதன் மூலம் பணிவைக் காட்ட முடியும். அனைவரும் பணிந்தனர் என்பது அப்படியே பொருந்திப் போகின்றது. யூசுப் எவ்வாறு நபியாக இருந்தார்களோ அவ்வாறு அவர்களின் தந்தை யஃகூப் அவர்களும் நபியாக இருந்தனர். அத்துடன் தந்தை என்ற தகுதியும் அவர்களுக்கு இருந்தது. அவ்வாறிருக்க யஃகூப் நபி எவ்வாறு ஸஜ்தாச் செய்திருப்பார்கள்? என்பதையும் சிந்தித்தால் இதில் அவர்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதை உணரலாம்.

எழுந்து நின்று மரியாதை

சந்திக்கும் மனிதர் பெரியவர் அல்லது தலைவர் அல்லது முக்கியத்துவம் வாய்ந்தவர் என்றால் அவருக்காக எழுந்து நிற்கும் பழக்கமும் சமுதாயத்தில் உள்ளது.

ஒருவரை வரவேற்கவும் வழி அனுப்பவும் எழுந்து நிற்பதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது. மரியாதைக்காக எழுந்து நிற்பதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை.

இரண்டையும் நாம் வேறுபடுத்திப் புரிந்து கொள்வது அவசியம்.

நாம் ஒருவரைச் சந்திக்கச் செல்கிறோம். நம்மைக் கண்டவுடன் அவர் எழவில்லை என்றும். ஆனால் அவரை விட முக்கிய தலைவர் சந்திக்கச் சென்றால் எழுகிறார் என்றும் வைத்துக் கொள்வோம் அவர் மரியாதை செய்வதற்காகவே எழுந்துள்ளார் என்பது தெளிவாகிறது. பெரியவரோ சிறியவரோ யார் வந்தாலும் எழுந்து வரவேற்பார் என்றால் அவர் மரியாதைக்காக இவ்வாறு செய்யவில்லை என்று புரிந்து கொள்ள முடியும்.

மேலும் மதிப்பு மிக்க ஒருவரும் மதிப்பு குறைந்த ஒருவரும் சந்திக்கிறார்கள். இரண்டாமவர் முதலாமவருக்காக எழுகிறார். ஆனால் முதலாமவர் இரண்டாம் நபருக்காக எழுவதில்லை என்றால் இது மாரியாதை செய்வதற்காக எழுந்து நிற்பதாகக் கருதப்படும். இப்படி கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.

இது பற்றி பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸ்கள் சிலவற்றைத் தருகிறோம். அதிலிருந்து இந்த உண்மைகளை நாம் விளங்கிக் கொள்ள முடியும்.

அரபி 50

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டார்கள். அவர்கள் உட்கார்ந்த நிலையில் தொழுவிக்க அவர்கள் பின்னே நாங்கள் தொழுதோம். அபூபக்கர் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தக்பீர் கூறுவதை எதிரொலித்துக் கொண்டிருந்தனர். தீடீரென நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்கள் பக்கம் திரும்பிப் பார்த்தார்கள். நாங்கள் நின்று கொண்டிருப்பதைக் கண்டு உட்காருமாறு சைகை செய்தனர். நாங்கள் உட்கார்ந்தோம். உட்கார்ந்த நிலையில் அவர்களைப் பின்பற்றித் தொழுதோம். ஸலாம் கொடுத்த பின்னர்  நீங்கள் பாரசீக, ரோமபுரி மக்கள் தங்கள் மன்னர்கள் அமர்ந்திருக்க நின்று கொண்டிருப்பது போல் செய்யப் பார்த்தீர்களே? இனி மேல் அவ்வாறு செய்யாதீர்கள்! உங்கள் இமாம்களை நீங்கள் பின்பற்றித் தொழுங்கள்! அவர் நின்று தொழுதால் நீங்களும் நின்று தொழுங்கள்! அவர் உட்கார்ந்து தொழுதால் நீங்களும் உட்கார்ந்து தொழுங்கள்  என்று கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் 624

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை விட நபித்தோழர்களுக்கு விருப்பமானவர் ஒருவரும் இருந்ததில்லை. அப்படி இருந்தும் நபிகள் நாயகத்துக்குப் பிடிக்காது என்பதை அவர்கள் அறிந்திருந்த காரணத்தால் நபிகள் நாயகத்தை அவர்கள் கண்டால் அவர்களுக்காக எழ மாட்டார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல்கள் : திர்மிதி 2678, அஹ்மத் 11895, 12068, 13132

தனக்காக மற்றவர்கள் எழ வேண்டும் என்று யார் விரும்புகிறாரோ அவர் தனது இருப்பிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக் கொள்கிறார் என்று நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் கூறியதாக முஆவியா (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல்கள் : அபூதாவூத் 4552, திர்மிதி 2679,

ஸஅது பின் முஆத் (ரலி) அவர்கள் வந்த போது உங்கள் தலைவரை நோக்கி எழுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி 3043, 3804, 4121, 6262

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஅதுக்கு மரியாதை செலுத்துவதற்கு எழுவில்லை. வரவேற்கவே எழுந்தார்கள்.

ஃபாத்திமா (ரலி) அவர்கள் வரும் போது அவரை நோக்கி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுந்து செல்வார்கள்.

நூல் : அபூதாவூத், 4540, திர்மிதி 3807

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மகளுக்கு மரியாதை செலுத்த எழவில்லை. வரவேற்கவே எழுந்தார்கள்.

மதிப்பில் பெரியவர்கள் சிறியவர்களுக்காக எழுவது வரவேற்பதற்காகத் தான் இருக்கும். ஆனால் மதிப்பில் சிறியவர்கள் எழுவது இரண்டு வகையாக இருக்கும்.

எனவே ஒருவரை மற்றவர் சந்திக்கும் போது ஸலாம் கூறுதலும், முஸாஃபஹா செய்தலும் தவிர வேறு எந்த விதமான மரியாதையும் இஸ்லாத்தில் இல்லை என்பதை உணர்ந்து நடக்கும் நன் மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்கியருள்வானாக.

14.07.2009. 1:52 AM

துஆக்களின் தொகுப்பு

நூலின் பெயர் : துஆக்களின் தொகுப்பு

ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன்

மார்க்கத்தின் எச்சரிக்கை!

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும். இந்த இணைய தளத்தில் உள்ளவைகளைப் பிரச்சாரம் செய்வதற்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் சில சகோதரர்கள் நமது ஆக்கங்களை அப்படியே பயன்படுத்தி தமது ஆக்கம் போல் காட்டுகின்றனர்.

இன்னாருடைய கட்டுரையில் இருந்து, அல்லது புத்தகத்தில் இருந்து இது எடுக்கப்பட்டது என்று குறிப்பிடாமல் புகழடைவதற்காக இவ்வாறு செய்கின்றனர்

சில இணைய தளங்களும் என்னுடைய ஆக்கங்களை அப்படியே வெளியிட்டு தம்முடைய ஆக்கம் போல் காட்டுகின்றன.மேலும் சில புத்தக வியாபாரிகளும் எனது நூல் உட்பட மற்றவர்களின் நூல்களைச் சிறிது மாற்றியமைத்து அனாமதேயங்களின் பெயர்களில் வெளியிட்டுச் சம்பாதிக்கின்றனர். உலகைப் பற்றியும் இவர்களுக்கு வெட்கம் இல்லை. மறுமையைப் பற்றியும் பயம் இல்லை

இஸ்லாத்தில் இவ்வாறு செய்ய அனுமதி இல்லை. இவர்கள் நல்லது செய்யப் போய் மறுமையின் தண்டனைக்கு தம்மைத் தாமே உட்படுத்திக் கொள்கின்றனர்

பிறரது ஆக்கங்களைப் பயன்படுத்துவோர் இது இன்னாருடைய ஆக்கம் என்று குறிப்பிடாமல் தன்னுடைய ஆக்கம் போல் காட்டுவது மார்க்க அடிப்படையில் குற்றமாகும்

இவர்களுக்கு அல்லாஹ் விடுக்கும் எச்சரிக்கையை இங்கே சுட்டிக் காட்டுகிறோம்

தாங்கள் செய்தவற்றுக்காக மகிழ்ச்சியடைந்து, தாம் செய்யாதவற்றுக்காகப் புகழப்பட வேண்டுமென விரும்புவோர் வேதனையிலிருந்து தப்பித்து விட்டார்கள் என்று நீர் நினைக்காதீர்! அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.

திருக்குர்ஆன் 3:188

துஆக்களின் தொகுப்பு

இறைவனுக்காகச் செய்யும் வணக்கங்கள் மூலம் மட்டுமின்றி தனது வாழ்வில் மனிதன் செய்யும் அனைத்துக் காரியங்கள் மூலமும் இறைவனின் அன்பைப் பெற முடியும் என்பது இஸ்லாத்தின் போதனை.

எந்தக் காரியத்தைச் செய்வதாக இருந்தாலும் அந்தக் காரியத்தில் ஈடுபடும் போது இறைவனின் நினைவுடன் ஈடுபட்டால் அதுவும் ஒரு வணக்கமாக அமைந்து விடும்.

எந்தக் காரியத்தைச் செய்தாலும் அதில் இறைவனை எவ்வாறு நினைவு கூர்வது? ஒவ்வொருவரும் தத்தமது விருப்பப்படி நினைவு கூர்ந்தால் அது வணக்கமாக அமையாது.

அல்லாஹ்வின் தூதராக அனுப்பப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வாழ்க்கையில் ஒவ்வொரு காரியத்தைச் செய்யும் போது எவ்வாறு இறைவனை நினைவு கூர்ந்தார்களோ, எவ்வாறு இறைவனை வேண்டினார்களோ அந்த முறையில் நினைவு கூர்ந்தால் தான் அது வணக்கமாக அமையும்.

துஆக்கள், அவ்ராதுகள், திக்ருகள் என்ற தலைப்புக்களில் பல நூல்கள் வெளியிடப்பட்டுள்ள போதும் அவை பெரும்பாலும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளின் அடிப்படையில் அமையவில்லை. சில நூல்கள் கற்பனையாக உருவாக்கப்பட்ட துஆக்களாக உள்ளன. எனவே இந்தக் குறையை நிவர்த்தி செய்யும் வகையில் ஆதாரப்பூர்வமான துஆக்களின் தொகுப்புக்களை வழங்குவதில் மன நிறைவு கொள்கிறோம்.

ஹிஸ்பு என்றும் கன்ஜுல் அர்ஷ் என்றும் இன்ன பிற பெயர்களிலும் மனிதக் கற்பனையில் உருவாக்கப்பட்டதைத் தவிர்த்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வாயால் மொழிந்த துஆக்களின் தொகுப்பே இந்த நூல்.

தூங்கும் போது

தூங்கும் முன் ஓத வேண்டிய துஆ

தூங்கி எழுந்தவுடன் ஓதும் துஆ

காலையிலும், மாலையிலும் ஓத வேண்டிய துஆ

மாலையில் ஓதும் துஆ

காலையில் ஓதும் துஆ

தஹஜ்ஜுத் தொழுகைக்காக எழுந்ததும் ஓத வேண்டிய துஆ

இரவில் விழிப்பு வந்தால் ஓத வேண்டியவை

தினமும் ஓத வேண்டிய துஆ

கழிவறையில் நுழையும் போது

கழிவறையிலிருந்து வெளியேறும் போது

வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது

சபையை முடிக்கும் போது

பள்ளிவாசலுக்குள் நுழையும் போது

பள்ளிவாசலை விட்டு வெளியேறும் போது

சாப்பிடும் போதும், பருகும் போதும்

பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால்

சாப்பிட்ட பின்பும் பருகிய பின்பும்

உணவளித்தவருக்காக

தாம்பத்தியத்தில் ஈடுபடும் முன்

எல்லா நிலையிலும் கூற வேண்டியவை

கோபம் ஏற்படும் போது

தீய எண்ணங்கள் ஏற்படும் போதும், மனக்

குழப்பத்தின் போதும்

கழுதை கணைக்கும் போது

கெட்ட கனவு கண்டால்

நோயாளியை விசாரிக்கச் சென்றால்

மரணத்திற்கு நிகரான துன்பத்தின் போது

இழப்புகள் ஏற்படும் போது

கணவனை இழந்தவர்கள் கூற வேண்டியது

மழை வேண்டும் போது

அளவுக்கு மேல் மழை பெய்தால்

மழை பொழியும் போது

போர்கள் மற்றும் கலவரத்தின் போது

புயல் வீசும் போது

பயணத்தின் போது

பயணத்திலிருந்து திரும்பும் போது

வெளியூரில் தங்கும் போது

பிராணிகளை அறுக்கும் போது

மகிழ்ச்சியான செய்தியைக் கேட்கும் போதும்

மகிழ்ச்சியை அனுபவிக்கும் போதும்

மேட்டில் ஏறும் போது

கீழே இறங்கும் போது

ஈடுபடப் போகும் காரியம் நல்லதா கெட்டதா என்பதை அறிய

தும்மல் வந்தால்

இறந்தவருக்காகச் செய்யும் துஆ

ஜனாஸா தொழுகையில் இறந்தவருக்காக ஓதும் துஆ

கப்ருகளை ஸியாரத் செய்யும் போது

இஸ்லாத்தை ஏற்றவுடன் கூற வேண்டியது

மணமக்களை வாழ்த்த

நோன்பு துறந்தவுடன்

உளூச் செய்யத் துவங்கும் போது

உளூச் செய்து முடித்த பின்61

பாங்கு சப்தம் கேட்டால்

பாங்கு முடிந்தவுடன்

தொழுகையைத் துவக்கிய உடன்

ருகூவில் ஓத வேண்டியது

ருகூவில் மற்றொரு துஆ

ருகூவில் மற்றொரு துஆ

ருகூவிலிருந்து எழுந்த பின்

ருகூவிலிருந்து எழுந்த பின் மற்றொரு துஆ

ஸஜ்தாவில் ஓத வேண்டியது

ஸஜ்தாவில் ஓத வேண்டிய மற்றொரு துஆ

ஸஜ்தாவில் ஓத வேண்டிய மற்றொரு துஆ

ஸஜ்தாவில் ஓத வேண்டிய மற்றொரு துஆ

ஸஜ்தாவில் ஓத வேண்டிய மற்றொரு துஆ

இரண்டு ஸஜ்தாக்களுக்கிடையில்

இரண்டு ஸஜ்தாக்களுக்கிடையே ஓத வேண்டிய மற்றொரு துஆ

தொழுகை இருப்பில் ஓத வேண்டியது

இருப்பில் ஓதும் மற்றொரு துஆ

தொழுகையில் ஓதும் ஸலவாத்

இருப்பில் ஓதும் கடைசி துஆ

கடமையான தொழுகை முடிந்த பின்

பல்வேறு சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் (ஸல்) செய்த துஆக்கள்

பாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆ

திருக்குர்ஆனில் இடம் பெற்ற துஆக்கள்

 தூங்கும் போது

بِاسْمِكَ أَمُوْتُ وَأَحْيَا

பி((B]ஸ்மி(க்)க அமூ(த்)து வஅஹ்யா

ஆதாரம்: புகாரி 6312

அல்லது

اَللّهُمَّ بِاسْمِكَ أَمُوْتُ وَأَحْيَا

அல்லாஹும்ம பி(B]ஸ்மி(க்)க அமூ(த்)து வஅஹ்யா

ஆதாரம்: புகாரி 6325, 6324, 6314

அல்லது

بِاسْمِكَ اَللّهُمَّ أَمُوْتُ وَأَحْيَا

பி(B]ஸ்மி(க்)கல்லாஹும்ம அமூ(த்)து வஅஹ்யா

ஆதாரம்: புகாரி 6324

அல்லது

اَللّهُمَّ بِاسْمِكَ أَحْيَا وَأَمُوْتُ

அல்லாஹும்ம பிஸ்மி(க்)க அஹ்யா வஅமூ(த்)து

ஆதாரம்: புகாரி 7394

அல்லது

اَللّهُمَّ بِاسْمِكَ أَحْيَا وَبِاسْمِكَ أَمُوْتُ

அல்லாஹும்ம பி(B]ஸ்மி(க்)க அஹ்யா வபி(B]ஸ்மி(க்)க அமூ(த்)து

ஆதாரம்: முஸ்லிம் 4886

அல்லது

بِاسْمِكَ نَمُوْتُ وَنَحْيَا

பி(B]ஸ்மி(க்)க நமூ(த்)து வனஹ்யா

ஆதாரம்: புகாரி 7395

என்றோ கூற வேண்டும்.

இதன் பொருள்:

இறைவா! உன் பெயரால் நான் மரணிக்கிறேன்; (தூங்குகிறேன்) உன் பெயரால் உயிர் பெறுகிறேன். (விழிக்கிறேன்)

தூங்கும் முன் ஓத வேண்டிய துஆ

1, வலது புறமாகச் சாய்ந்து படுத்த பின்

اَللّهُمَّ خَلَقْتَ نَفْسِيْ وَأَنْتَ تَوَفَّاهَا لَكَ مَمَاتُهَا وَمَحْيَاهَا إِنْ أَحْيَيْتَهَا فَاحْفَظْهَا وَإِنْ أَمَتَّهَا فَاغْفِرْ لَهَا اَللّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ الْعَافِيَةَ

அல்லாஹும்ம ஃகலக்(த்)த நப்[F]ஸீ, வஅந்(த்)த தவப்பா[F]ஹா, ல(க்)க மமா(த்)துஹா வமஹ்யாஹா, இன் அஹ்யை(த்)தஹா ப[F]ஹ்ப[F]ள்ஹா, வஇன் அமத்தஹா ப[F]ஃக்பி[F]ர் லஹா, அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)கல் ஆபி[F]யா

என்று ஓத வேண்டும்.

இதன் பொருள் :

இறைவா! நீயே என் ஆத்மாவைப் படைத்தாய். நீயே அதனைக் கைப்பற்றுகிறாய். அதன் மரணமும், வாழ்வும் உனக்குரியது. நீ அதை உயிர் வாழச் செய்தால் அதனைக் காத்தருள். அதை நீ மரணிக்கச் செய்தால் அதை மன்னித்து விடு! இறைவா! உன்னிடம் மன்னிப்பை வேண்டுகிறேன்.

ஆதாரம்: முஸ்லிம் 4887

2, வலது புறமாகச் சாய்ந்து படுத்துக் கொண்டு கீழ்க்காணும் துஆவையும் ஓதலாம்.

اَللّهُمَّ رَبَّ السَّمَاوَاتِ وَرَبَّ الأَرْضِ وَرَبَّ الْعَرْشِ الْعَظِيْمِ رَبَّنَا وَرَبَّ كُلِّ شَيْءٍ فَالِقَ الْحَبِّ وَالنَّوَى وَمُنْزِلَ التَّوْرَاةِ وَالاِنْجِيْلِ وَالْفُرْقَانِ أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ كُلِّ شَيْءٍ أَنْتَ آخِذٌ بِنَاصِيَتِهِ اَللّهُمَّ أَنْتَ الأَوَّلُ فَلَيْسَ قَبْلَكَ شَيْءٌ وَأَنْتَ الآخِرُ فَلَيْسَ بَعْدَكَ شَيْءٌ وَأَنْتَ الظَّاهِرُ فَلَيْسَ فَوْقَكَ شَيْءٌ وَأَنْتَ الْبَاطِنُ فَلَيْسَ دُونَكَ شَيْءٌ اِقْضِ عَنَّا الدَّيْنَ وَأَغْنِنَا مِنَ الْفَقْرِ

அல்லாஹும்ம ரப்ப(B]ஸ் ஸமாவா(த்)தி வரப்ப(B]ல் அர்ளி, வரப்ப(B]ல் அர்ஷில் அளீம், ரப்ப(B]னா வரப்ப(B] குல்லி ஷையின், பா[F]லி(க்)கல் ஹப்பி(B] வன்னவா, வமுன்ஸிலத் தவ்ரா(த்)தி வல் இஞ்சீலி வல் பு[F]ர்கான், அவூது பி(B](க்)க மின் ஷர்ரி குல்லி ஷையின் அன்(த்)த ஆஃகிதுன் பி(B]னாஸிய(த்)திஹி, அல்லாஹும்ம அன்(த்)தல் அவ்வலு ப[F]லைஸ கப்ல(க்)க ஷைவுன், வஅன்(த்)தல் ஆஃகிரு ப[F]லைஸ ப(B]ஃத(க்)க ஷைவுன், வஅன்(த்)தள் ளாஹிரு ப[F]லைஸ ப[F]வ்க(க்)க ஷைவுன், வஅன்(த்)தல் பா(B]த்தினு ப[F]லைஸ தூன(க்)க ஷைவுன், இக்ளி அன்னத்தைன, வஅஃக்னினா மினல் ப[F]க்ரி

இதன் பொருள்: இறைவா! வானங்களின் அதிபதியே! பூமியின் அதிபதியே! மகத்தான அர்ஷின் அதிபதியே! எங்கள் இறைவனே! ஒவ்வொரு பொருளுக்கும் அதிபதியே! தானியத்தையும், விதைகளையும் பிளந்து முளைக்கச் செய்பவனே! தவ்ராத்தையும் இஞ்சீலையும் குர்ஆனையும் அருளியவனே! ஒவ்வொரு பொருளின் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். அவற்றின் குடுமி உன் கையில் தான் உள்ளது. இறைவா! நீயே முதல்வன். உனக்கு முன் எதுவும் இருக்கவில்லை. நீயே முடிவானவன். உனக்குப் பின் ஏதும் இல்லை. நீயே பகிரங்கமானவன். (உன்னைப் போல் பகிரங்கமானது) எதுவும் உனக்கு மேல் இல்லை. நீயே அந்தரங்கமானவன். (உன்னை விட அந்தரங்கமானது) எதுவும் உனக்குக் கீழே இல்லை. எங்கள் கடனைத் தீர்ப்பாயாக! வறுமையை அகற்றி எங்களைச் செல்வந்தர்களாக்குவாயாக.

ஆதாரம்: முஸ்லிம் 4888

3, படுக்கையை உதறி விட்டு கீழ்க்காணும் துஆவையும் ஓதலாம்.

بِاسْمِكَ رَبّ وَضَعْتُ جَنْبِيْ وَبِكَ أَرْفَعُهُ إِنْ أَمْسَكْتَ نَفْسِيْ فَارْحَمْهَا وَإِنْ أَرْسَلْتَهَا فَاحْفَظْهَا بِمَا تَحْفَظُ بِهِ عِبَادَكَ الصَّالِحِيْنَ

பி(B]ஸ்மி(க்)க ரப்பீ[B], வளஃது ஜன்பீ(B] வபி(B](க்)க அர்ப[F]வுஹு, இன் அம்ஸக்(த்)த நப்[F]ஸீ ப[F]ர்ஹம்ஹாவஇன் அர்ஸல்(த்)தஹா ப[F]ஹ்ப[F]ள்ஹா பி(B]மா தஹ்ப[F]ளு பி(B]ஹி இபா(B]த(க்)கஸ் ஸாலிஹீன்.

இதன் பொருள்:

என் இறைவனே! உன் பெயரால் எனது உடலைச் சாய்க்கிறேன். (படுக்கிறேன்) உன் பெயரால் தான் அதை உயர்த்துகிறேன். (எழுகிறேன்) என் உயிரை நீ கைப்பற்றிக் கொண்டால் அதற்கு அருள் புரிவாயாக! கைப்பற்றாது அதை நீ விட்டு வைத்தால் உனது நல்லடியார்களைப் பாதுகாப்பது போல் அதையும் பாதுகாப்பாயாக!

ஆதாரம்: புகாரி5845

4, பி(B]ஸ்மில்லாஹ் எனக் கூறி படுக்கையை உதறி விட்டு வலது புறமாகச் சாய்ந்து படுத்துக் கொண்டு பின் வரும் துஆவை ஓதலாம்.

سُبْحَانَكَ اللّهُمَّ رَبّيْ بِكَ وَضَعْتُ جَنْبِيْ وَبِكَ أَرْفَعُهُ إِنْ أَمْسَكْتَ نَفْسِيْ فَاغْفِرْ لَهَا وَإِنْ أَرْسَلْتَهَا فَاحْفَظْهَا بِمَا تَحْفَظُ بِهِ عِبَادَكَ الصَّالِحِيْنَ

ஸுப்(B]ஹான(க்)கல்லாஹும்ம ரப்பீ[B], பி(B](க்)க வளஃது ஜன்பீ[B], வபி(B](க்)க அர்ப[F]வுஹு, இன் அம்ஸக்(த்)த நப்[F]ஸீ ப[F]ஃக்பி[F]ர் லஹா, வஇன் அர்ஸல்(த்)தஹா ப[F]ஹ்ப[F]ள்ஹா பி(B]மா தஹ்ப[F]ளு பி(B]ஹி இபாத(க்)கஸ் ஸாலிஹீன்.

இதன் பொருள்:

என் இறைவனே! அல்லாஹ்வே நீ தூயவன். உன்னால் தான் எனது உடலைச் சாய்க்கிறேன். (படுக்கிறேன்) உன்னால் தான் அதை உயர்த்துகிறேன். (எழுகிறேன்) என் உயிரை நீ கைப்பற்றிக் கொண்டால் அதை மன்னிப்பாயாக. கைப்பற்றாது அதை நீ விட்டு வைத்தால் உனது நல்லடியார்களைப் பாதுகாப்பது போல் அதையும் பாதுகாப்பாயாக!

ஆதாரம்: முஸ்லிம் 4889

5, தூங்குவதற்கு முன் ஆய(த்)துல் குர்ஸீ எனப்படும் 2:255 வசனத்தை ஓதிக் கொண்டால் விடியும் வரை அல்லாஹ்விடமிருந்து ஒரு பாதுகாவல் ஏற்படும். ஷைத்தான் நெருங்க மாட்டான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

ஆதாரம்: புகாரி 3275

ஆய(த்)துல் குர்ஸீ வருமாறு:

اَللهُ لاَ إِلهَ إِلاَّ هُوَ الْحَيُّ الْقَيُّوْمُ لاَ تَأْخُذُهُ سِنَةٌ وَلاَ نَوْمٌ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الأَرْضِ مَنْ ذَا الَّذِيْ يَشْفَعُ عِنْدَهُ إِلاَّ بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْ وَلاَ يُحِيْطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلاَّ بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالأَرْضَ وَلاَ يَئُوْدُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيْمُ()

அல்லாஹு லாயிலாஹ இல்லா ஹுவல் ஹய்யுல் கய்யூம். லா தஃகுதுஹு ஸின(த்)துன் வலா நவ்முன், லஹு மா பி[F]ஸ்ஸமாவா(த்)தி வமா பி[F]ல் அர்ளி, மன் தல்லதீ யஷ்ப[F]வு இந்தஹு இல்லா பி(B] இத்னிஹி, யஃலமு மாபை(B]ன ஐதீஹிம் வமா ஃகல்ப[F]ஹும் வலாயுஹீ(த்)தூன பி(B]ஷையின் மின் இல்மிஹி இல்லா பி(B]மா ஷாஅ, வஸிஅ குர்ஸிய்யுஹுஸ் ஸமாவாத்தி வல்அர்ள வலா யவூதுஹு ஹிப்[F]ளுஹுமா வஹுவல் அளிய்யுல் அளீம்.

இதன் பொருள்:

அல்லாஹ்வைத் தவிர வணக்கத் திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்குச் சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்? அவர்களுக்கு முன்னேயும், பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான். அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாது. அவன் நாடியதைத் தவிர. அவனது ஆசனம் வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும். அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமமானதன்று. அவன் உயர்ந்தவன்; மகத்துவமிக்கவன்.

(திருக்குர்ஆன் 2:255)

6, பகரா அத்தியாயத்தின் கடைசி இரு வசனங்களை இரவில் ஓதினால் அது ஒருவருக்குப் போதுமானதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

ஆதாரம்: புகாரி 4008, 5010, 5040, 5051

இரவில் ஓதினால் போதும் என்று கூறப்பட்டுள்ளதால் மஃரிப் முதல் சுப்ஹ் வரை இதை ஓதிக் கொள்ளலாம்.

அந்த வசனங்கள் வருமாறு:

آمَنَ الرَّسُوْلُ بِمَا أُنْزِلَ إِلَيْهِ مِنْ رَبِّهِ وَالْمُؤْمِنُوْنَ كُلٌّ آمَنَ بِااللهِ وَمَلاَئِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لاَ نُفَرّقُ بَيْنَ أَحَدٍ مِنْ رُسُلِهِ وَقَالُوْا سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيْرُ(285)لاَ يُكَلِّفُ اللهُ نَفْسًا إِلاَّ وُسْعَهَا لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ رَبَّنَا لاَ تُؤَاخِذْنَا إِنْ نَسِيْنَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلاَ تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِنَا رَبَّنَا وَلاَ تُحَمِّلْنَا مَا لاَ طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلاَنَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِيْنَ

ஆமனர் ரஸுலு பி(B]மா உன்ஸில இலைஹி மின் ரப்பி(B]ஹி வல் மூமினூன். குல்லுன் ஆமன பி(B]ல்லாஹி, வமலாயி(க்)கத்திஹி வகு(த்)துபி(B]ஹி, வருஸுலிஹி, லாநுப[F]ர்ரி(க்)கு பை(B]ன அஹதிம் மின் ருஸுலிஹி, வகாலூ ஸமிஃனா வஅதஃனா ஃகுப்[F]ரான(க்)க ரப்ப(B]னா வஇலை(க்)கல் மஸீர். லாயு(க்)கல்லிபு[F]ல்லாஹு நப்[F]ஸன் இல்லா உஸ்அஹா, லஹா மா கஸப(B]த். வஅலைஹா மக்தஸப(B]த். ரப்ப(B]னா லாதுஆகித்னா இன் நஸீனா அவ் அக்தஃனா, ரப்ப(B]னா வலா தஹ்மில் அலைனா இஸ்ரன் கமா ஹமல்(த்)தஹு அலல்லதீன மின் கப்(B]லினா, ரப்ப(B]னா வலா துஹம்மில்னா மாலா தாக்க(த்)த லனா பி(B]ஹி, வஃபு[F] அன்னா வஃக்பி[F]ர் லனா வர்ஹம்னா அன்(த்)த மவ்லானா ப[F]ன்ஸுர்னா அலல் கவ்மில் காபி[F]ரீன்.

இதன் பொருள்:

இத்தூதர் தமது இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பட்டதை நம்பினார். நம்பிக்கை கொண்டோரும் (இதை நம்பினார்கள்). அல்லாஹ்வையும், வானவர்களையும், அவனது வேதங்களையும், அவனது தூதர்களையும் அனைவரும் நம்பினார்கள். அவனது தூதர்களில் எவருக்கிடையேயும் பாரபட்சம் காட்ட மாட்டோம். செவியுற்றோம்; கட்டுப்பட்டோம். எங்கள் இறைவா! உனது மன்னிப்பை (வேண்டுகிறோம்.) உன்னிடமே (எங்கள்) திரும்புதல் உண்டு எனக் கூறுகின்றனர். எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான். அவர் செய்த நன்மை அவருக்குரியது. அவர் செய்த தீமையும் அவருக்குரியதே.  எங்கள் இறைவா! நாங்கள் மறந்து விட்டாலோ, தவறு செய்து விட்டாலோ எங்களைத் தண்டித்து விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சிரமத்தைச் சுமத்தியது போல் எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு வமையில்லாததை எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் பிழைகளைப் பொறுத்து எங்களை மன்னிப்பாயாக! அருள் புரிவாயாக! நீயே எங்கள் அதிபதி. (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு நீ உதவுவாயாக! (எனவும் கூறுகின்றனர்).

(திருக்குர்ஆன் 2:285,286)

7, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு இரவிலும் படுக்கைக்குச் செல்லும் போது தமது இரு கைகளை ஒன்று சேர்த்து 112, 113, 114 ஆகிய அத்தியாயங்களை ஓதி கையில் ஊதி தம்மால் இயன்ற அளவுக்கு உடல் முழுவதும் மூன்று தடவை தடவிக் கொள்வார்கள். ஆதாரம்: புகாரி 5018, 5748, 6319

அந்த அத்தியாயங்கள் வருமாறு:

بِسْمِ اللهِ الرَّحْمَانِ الرَّحِيْمِ() قُلْ هُوَ اللهُ أَحَدٌ (1)اَللهُ الصَّمَدُ(2)لَمْ يَلِدْ وَلَمْ يُوْلَدْ (3) وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ(4)

பி(B]ஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம், குல்ஹுவல்லாஹு அஹத். அல்லாஹுஸ் ஸமத். லம் யலித், வலம் யூலத். வலம் யகுன் லஹு குபு[F]வன் அஹத்.

இதன் பொருள்:

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். அல்லாஹ் ஒருவன் எனக் கூறுவீராக! அல்லாஹ் தேவையற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை.

112 வது அத்தியாயம்

بِسْمِ اللهِ الرَّحْمَانِ الرَّحِيْمِ() قُلْ أَعُوْذُ بِرَبّ الْفَلَقِ (1)مِنْ شَرّ مَا خَلَقَ(2)وَمِنْ شَرّ غَاسِقٍ إِذَا وَقَبَ(3)وَمِنْ شَرّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ(4)وَمِنْ شَرّ حَاسِدٍ إِذَا حَسَدَ(5)

பி(B]ஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம், குல் அவூது பி(B] ரப்பி(B]ல் ப[F]லக். மின் ஷர்ரி மா ஃகலக். வமின் ஷர்ரி ஃகாஸி(க்)கின் இதா வ(க்)கப்(B]. வமின் ஷர்ரின் னப்ப[F]ஸாத்தி பி[F]ல் உ(க்)கத். வமின் ஷர்ரி ஹாஸிதின் இதா ஹஸத்.

இதன் பொருள்:

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். அதிகாலையின் இறைவனிடம் அவன் படைத்தவற்றின் தீங்கிருந்தும், பரவும் இருளின் தீங்கை விட்டும், முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும், பொறாமை கொள்ளும் போது பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக!

113 வது அத்தியாயம்

بِسْمِ اللهِ الرَّحْمَانِ الرَّحِيْمِ() قُلْ أَعُوْذُ بِرَبّ النَّاسِ(1)مَلِكِ النَّاسِ(2)إِلهِ النَّاسِ (3)مِنْ شَرّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ (4)الَّذِيْ يُوَسْوِسُ فِيْ صُدُوْرِ النَّاسِ(5)مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ(6)

பி(B]ஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம், குல்அவூது பிரப்பி(B]ன் னாஸ். மலி(க்)கின் னாஸ். இலாஹின் னாஸ். மின் ஷர்ரில் வஸ்வாஸில் கன்னாஸ். அல்லதீ யுவஸ்விஸு பீ[F] ஸுதூரின் னாஸ். மினல் ஜின்னத்தி வன்னாஸ்.

இதன் பொருள்:

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். மறைந்து கொண்டு தீய எண்ணங்களைப் போடுபவனின் தீங்கை விட்டும் மனிதர்களின் அரசனும், மனிதர்களின் கடவுளுமான மனிதர்களின் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக! அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான். ஜின்களிலும், மனிதர்களிலும்இத்தகையோர் உள்ளனர்.

114வது அத்தியாயம்

8, நீ படுக்கைக்குச் செல்லும் போது தொழுகைக்குச் செய்வது போல் உளூச் செய்து விட்டு பின்னர் வலது புறமாக சாய்ந்து படுத்துக் கொண்டு கீழ்க்காணும் துஆவை ஓது! நீ ஓதுவதில் கடைசியாக இது இருக்கட்டும். இதை ஓதி விட்டும் படுத்து அன்று இரவே நீ மரணித்து விட்டால் ஈமானுடன் மரணித்தவனாவாய் என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

ஆதாரம்: புகாரி 247, 6313, 6315, 7488, 6311, 7488

அந்த துஆ இது தான்.

 اَللّهُمَّ أَسْلَمْتُ وَجْهِيْ إِلَيْكَ وَفَوَّضْتُ أَمْرِيْ إِلَيْكَ وَأَلْجَأْتُ ظَهْرِيْ إِلَيْكَ رَغْبَةً وَرَهْبَةً إِلَيْكَ لاَ مَلْجَأَ وَلاَ مَنْجَا مِنْكَ إِلاَّ إِلَيْكَ اَللّهُمَّ آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ وَبِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ

அல்லாஹும்ம அஸ்லம்(த்)து வஜ்ஹீ இலை(க்)க, வப[F]வ்வள்(த்)து அம்ரீ இலை(க்)க, வஅல்ஜஃ(த்)து ளஹ்ரீ இலை(க்)க, ரஃக்ப(B](த்)தன் வரஹ்ப(B](த்)தன் இலை(க்)க லா மல்ஜஅ வலா மன்ஜஅ மின்(க்)க இல்லா இலை(க்)க அல்லாஹும்ம ஆமன்(த்)து பிகிதாபி(B](க்)கல்லதீ அன்ஸல்(த்)த வபி(B]நபி(B]ய்யிகல்லதீ அர்ஸல்(த்)த

இதன் பொருள்:

இறைவா! என் முகத்தை உனக்குக் கட்டுப்படச் செய்து விட்டேன். என் காரியத்தை உன்னிடம் ஒப்படைத்து விட்டேன். என் முதுகை உன் பக்கம் சாய்த்து விட்டேன். (உனது அருளில்) நம்பிக்கை வைத்து விட்டேன். (உனது தண்டனைக்கு) அஞ்சி விட்டேன். உன்னை விட்டும் தப்பிக்க உன்னை விட்டால் வேறு போக்கிடம் ஏதும் இல்லை. இறைவா! நீ அருளிய வேதத்தையும், நீ அனுப்பிய நபியையும் நம்பினேன்.

தூங்கி எழுந்தவுடன் ஓதும் துஆ

اَلْحَمْدُ للهِ الَّذِيْ أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُوْرُ

அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா ப(B]ஃத மா அமா(த்)தனா வ இலைஹின் னுஷுர்

இதை தூங்கி எழுந்தவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவார்கள்.

ஆதாரம்: புகாரி 6312, 6314, 6324, 6325, 7395

இதன் பொருள்:

எங்களை மரணிக்கச் செய்த பின் உயிர்ப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். மேலும் அவனிடமே (நமது) திரும்பிச் செல்லுதல் உள்ளது.

காலையிலும், மாலையிலும் ஓத வேண்டிய துஆ

1, காலையிலும், மாலையிலும், படுக்கைக்குச் செல்லும் போதும் நான் என்ன கூற வேண்டும் என அபூபக்ர் (ரலி) கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின் வரும் துஆவைக் கற்றுக் கொடுத்தார்கள்.

ஆதாரம்: அஹ்மத் 49, 60, 77

اَللّهُمَّ فَاطِرَ السَّمَاوَاتِ وَالأَرْضِ عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ رَبَّ كُلّ شَيْءٍ وَمَلِيْكَهُ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ أَعُوْذُ بِكَ مِنْ شَرّ نَفْسِيْ وَشَرّ الشَّيْطَانِ وَشِرْكِهِ

அல்லாஹும்ம பா[F](த்)திரஸ் ஸமாவாத்தி வல் அர்ளி, ஆலிமல் ஃகைபி(B] வஷ்ஷஹாத(த்)தி, ரப்ப(B] குல்லி ஷையின் வமலீ(க்)கஹு, அஷ்ஹது அன் லாயிலாஹ இல்லா அன்(த்)த, அவூது பி(B](க்)க மின் ஷர்ரி நப்[F]ஸீ வஷர்ரிஷ் ஷைத்தானி வஷிர்கிஹி

இதன் பொருள்:

இறைவா! வானங்களையும், பூமியையும் படைத்தவனே! மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிபவனே! அனைத்துப் பொருட்களின் அதிபதியே! அரசனே! வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர யாருமில்லை. எனது மனோ இச்சையின் தீங்கை விட்டும் ஷைத்தானின் தீங்கை விட்டும் உன்னிடமே பாதுகாப்புத் தேடுகிறேன்.

2, காலையிலும், மாலையிலும் 112, 113, 114 ஆகிய அத்தியாயங்களை மூன்று தடவை ஓதினால் அதுவே அனைத்துக் காரியங்களுக்காகவும் ஒருவருக்குப் போதுமானது என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

ஆதாரம்: நஸயீ 5333

அந்த அத்தியாயங்கள் வருமாறு:

بِسْمِ اللهِ الرَّحْمَانِ الرَّحِيْمِ() قُلْ هُوَ اللهُ أَحَدٌ (1)اَللهُ الصَّمَدُ(2)لَمْ يَلِدْ وَلَمْ يُوْلَدْ (3) وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ(4)

பி(B]ஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம், குல்ஹுவல்லாஹு அஹத். அல்லாஹுஸ் ஸமத். லம் யலித், வலம் யூலத். வலம் யகுன் லஹு குபு[F]வன் அஹத்.

இதன் பொருள்:

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். அல்லாஹ் ஒருவன் எனக் கூறுவீராக! அல்லாஹ் தேவையற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை.

112 வது அத்தியாயம்

بِسْمِ اللهِ الرَّحْمَانِ الرَّحِيْمِ() قُلْ أَعُوْذُ بِرَبّ الْفَلَقِ(1)مِنْ شَرّ مَا خَلَقَ(2)وَمِنْ شَرّ غَاسِقٍ إِذَا وَقَبَ(3)وَمِنْ شَرّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ(4)وَمِنْ شَرّ حَاسِدٍ إِذَا حَسَدَ(5)

பி(B]ஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம், குல் அவூது பி(B] ரப்பி(B]ல் ப[F]லக். மின் ஷர்ரி மா ஃகலக். வமின் ஷர்ரி ஃகாஸி(க்)கின் இதா வ(க்)கப்(B]. வமின் ஷர்ரின் னப்பா[F]ஸாத்தி பி[F]ல் உ(க்)கத். வமின் ஷர்ரி ஹாஸிதின் இதா ஹஸத்.

இதன் பொருள்:

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். அதிகாலையின் இறைவனிடம் அவன் படைத்தவற்றின் தீங்கிருந்தும், பரவும் இருளின் தீங்கை விட்டும், முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும், பொறாமை கொள்ளும் போது பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக!

113 வது அத்தியாயம்

بِسْمِ اللهِ الرَّحْمَانِ الرَّحِيْمِ() قُلْ أَعُوْذُ بِرَبّ النَّاسِ(1)مَلِكِ النَّاسِ(2)إِلهِ النَّاسِ (3) مِنْ شَرّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ(4)الَّذِيْ يُوَسْوِسُ فِيْ صُدُوْرِ النَّاسِ(5)مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ(6)

பி(B]ஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம், குல்அவூது பி(B]ரப்பி(B]ன் னாஸ். மலி(க்)கின் னாஸ். இலாஹின் னாஸ். மின் ஷர்ரில் வஸ்வாஸில் கன்னாஸ். அல்லதீ யுவஸ்விஸு பீ[F] ஸுதூரின் னாஸ். மினல் ஜின்னத்தி வன்னாஸ்.

இதன் பொருள்:

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். மறைந்து கொண்டு தீய எண்ணங்களைப் போடுபவனின் தீங்கை விட்டும் மனிதர்களின் அரசனும், மனிதர்களின் கடவுளுமான மனிதர்களின் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக! அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான். ஜின்களிலும், மனிதர்களிலும்இத்தகையோர் உள்ளனர். 114வது அத்தியாயம்

மாலையில் ஓதும் துஆ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாலைப் பொழுதை அடைந்தவுடன் கீழ்க்கண்ட துஆவை ஓதுவார்கள்.

ஆதாரம்: முஸ்லிம் 4901

أَمْسَيْنَا وَأَمْسَى الْمُلْكُ للهِ وَالْحَمْدُ للهِ لاَ إِلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلّ شَيْءٍ قَدِيْرٌ رَبّ أَسْأَلُكَ خَيْرَ مَا فِي هَذِهِ اللَّيْلَةِ وَخَيْرَ مَا بَعْدَهَا وَأَعُوْذُ بِكَ مِنْ شَرّ مَا فِيْ هَذِهِ اللَّيْلَةِ وَشَرِّ مَا بَعْدَهَا رَبّ أَعُوْذُ بِكَ مِنَ الْكَسَلِ وَسُوْءِ الْكِبَرِ رَبّ أَعُوْذُ بِكَ مِنْ عَذَابٍ فِي النَّارِ وَعَذَابٍ فِي الْقَبْرِ

அம்ஸைனா வஅம்ஸல் முல்(க்)கு லில்லாஹி, வல்ஹம்து லில்லாஹி, லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீ(க்)க லஹு, லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். ரப்பி(B] அஸ்அலு(க்)க கைர மாபீ[F] ஹாதிஹில் லைலத்தி வ கைர மா ப(B]ஃதஹா, வஅவூது பி(B](க்)க மின் ஷர்ரி மாபீ[F] ஹாதிஹில் லைலத்தி வ ஷர்ரிமா ப(B]ஃதஹா, ரப்பி(B] அவூது பி(க்)க மினல் கஸ்லி வஸுயில் கிப(B]ரி, ரப்பி(B] அவூது பி(B](க்)க மின் அதாபி(B]ன் பி[F]ன்னாரி, வஅதாபி(B]ன் பி[F]ல் கப்(B]ரி

இதன் பொருள்:

நாங்கள் மாலைப் பொழுதை அடைந்து விட்டோம். மாலை நேரத்து ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் யாருமில்லை. அவனுக்கே ஆட்சி. புகழும் அவனுக்கே. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். இறைவா! இந்த இரவின் நன்மையையும், அதன் பின்னர் வரும் நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இந்த இரவின் தீங்கை விட்டும் அதன் பின்னர் வரும் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். சோம்பலை விட்டும், மோசமான முதுமையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். என் இறைவா! நரகின் வேதனையை விட்டும், மண்ணறையின் வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

காலையில் ஓதும் துஆ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலைப் பொழுதை அடைந்தவுடன் கீழ்க்கண்ட துஆவை ஓதுவார்கள்.

ஆதாரம்: முஸ்லிம் 4901

أَصْبَحْنَا وَأَصْبَحَ الْمُلْكُ للهِ  وَالْحَمْدُ للهِ لاَ إِلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ رَبّ أَسْأَلُكَ خَيْرَ مَا فِي هَذِهِ اللَّيْلَةِ وَخَيْرَ مَا بَعْدَهَا وَأَعُوْذُ بِكَ مِنْ شَرّ مَا فِيْ هَذِهِ اللَّيْلَةِ وَشَرِّ مَا بَعْدَهَا رَبِّ أَعُوْذُ بِكَ مِنَ الْكَسَلِ وَسُوْءِ الْكِبَرِ رَبِّ أَعُوْذُ بِكَ مِنْ عَذَابٍ فِي النَّارِ وَعَذَابٍ فِي الْقَبْرِ

அஸ்ப(B]ஹ்னா வஅஸ்ப(B]ஹல் முல்(க்)கு லில்லாஹி, வல்ஹம்து லில்லாஹி, லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீ(க்)க லஹு, லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். ரப்பி(B] அஸ்அலு(க்)க கைர மாபீ[F] ஹாதிஹில் லைலத்தி வ கைர மா ப(B]ஃதஹா, வஅவூது பி(B](க்)க மின் ஷர்ரி மாபீ[F] ஹாதிஹில் லைலத்தி வ ஷர்ரிமா ப(B]ஃதஹா, ரப்பி(B] அவூது பி(B](க்)க மினல் கஸ்லி வஸுயில் கிப(B]ரி, ரப்பி(B] அவூது பி(B](க்)க மின் அதாபி(B]ன் பி[F]ன்னாரி, வஅதாபி(B]ன் பி[F]ல் கப்(B]ரி

இதன் பொருள்:

நாங்கள் காலைப் பொழுதை அடைந்து விட்டோம். காலை நேரத்து ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வுக்கே புகழ னைத்தும். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் யாருமில்லை. அவனுக்கே ஆட்சி. புகழும் அவனுக்கே. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். இறைவா! இந்த இரவின் நன்மையையும், அதன் பின்னர் வரும் நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இந்த இரவின் தீங்கை விட்டும் அதன் பின்னர் வரும் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். சோம்பலை விட்டும், மோசமான முதுமையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடு கிறேன். என் இறைவா! நரகின் வேதனையை விட்டும், மண்ணறை யின் வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

தஹஜ்ஜுத் தொழுகைக்காக எழுந்ததும் ஓத வேண்டிய துஆ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவில் தஹஜ்ஜுத் தொழுகைக்கு எழுந்தவுடன் கீழ்க்காணும் துஆவை ஓதுவார்கள்.

ஆதாரம்: புகாரி 6317, 7429, 7442, 7499

اَللّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ نُوْرُ السَّمَاوَاتِ وَالأَرْضِ وَمَنْ فِيْهِنَّ وَلَكَ الْحَمْدُ أَنْتَ قَيِّمُ السَّمَاوَاتِ وَالأَرْضِ وَمَنْ فِيهِنَّ وَلَكَ الْحَمْدُ أَنْتَ الْحَقُّ وَوَعْدُكَ حَقٌّ وَقَوْلُكَ حَقٌّ وَلِقَاؤُكَ حَقٌّ وَالْجَنَّةُ حَقٌّ وَالنَّارُ حَقٌّ وَالسَّاعَةُ حَقٌّ وَالنَّبِيُّوْنَ حَقٌّ وَمُحَمَّدٌ حَقٌّ اَللّهُمَّ لَكَ أَسْلَمْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُ وَبِكَ آمَنْتُ وَإِلَيْكَ أَنَبْتُ وَبِكَ خَاصَمْتُ وَإِلَيْكَ حَاكَمْتُ فَاغْفِرْ لِيْ مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ أَنْتَ الْمُقَدّمُ وَأَنْتَ الْمُؤَخّرُ لاَ إِلهَ إِلاَّ أَنْتَ

அல்லாஹும்ம ல(க்)கல் ஹம்து அன்(த்)த நூருஸ் ஸமாவா(த்)தி வல் அர்ளி வமன் பீ[F]ஹின்ன, வல(க்)கல் ஹம்து அன்(த்)த கையிமுஸ் ஸமாவா(த்)தி வல் அர்ளி, வல(க்)கல் ஹம்து அன்தல் ஹக்கு, வ வஃது(க்)க ஹக்குன், வ கவ்லு(க்)க ஹக்குன், வ லி(க்)காவு(க்)க ஹக்குன், வல் ஜன்ன(த்)து ஹக்குன், வன்னாரு ஹக்குன், வஸ்ஸாஅ(த்)து ஹக்குன், வன்னபி(B]ய்யூன ஹக்குன், வ முஹம்மதுன் ஹக்குன், அல்லாஹும்ம ல(க்)க அஸ்லம்(த்)து, வ அலை(க்)க தவக்கல்(த்)து, வபி(B](க்)க ஆமன்(த்)து, வஇலை(க்)க அனப்(B](த்)து, வபி(B](க்)க காஸம்(த்)து, வஇலை(க்)க ஹாகம்(த்)து ப[F]க்பி[F]ர் லீ மா கத்தம்(த்)து வமா அக்கர்(த்)து வமா அஸ்ரர்(த்)து வமா அஃலன்(த்)து அன்(த்)தல் முகத்திமு வஅன்(த்)தல் முஅக்கிரு லாயிலாஹ இல்லா அன்(த்)த வலா ஹவ்ல வலா குவ்வ(த்)த இல்லா பி(B]ல்லாஹி

இதன் பொருள்:

இறைவா! உனக்கே புகழனைத்தும். வானங்களுக்கும், பூமிக்கும், அவற்றுக்கு இடைப்பட்டவைகளுக்கும் நீயே ஒளியாவாய். உனக்கே புகழனைத்தும். வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப் பட்டவைகளையும் நிர்வகிப்பவன் நீயே. உனக்கே புகழனைத்தும். நீயே மெய்யானவன். உனது வாக்குறுதி மெய்யானது. உன் சொல் மெய்யானது. உன்னை (நாங்கள்) சந்திப்பது மெய்யானது. சொர்க்கம் மெய்யானது. நரகமும் மெய்யானது. யுக முடிவு நாளும் மெய்யானது. நபிமார்கள் மெய்யானவர்கள். முஹம்மதும் மெய்யானவர். இறைவா! உனக்கே கட்டுப்பட்டேன். உன் மீது நம்பிக்கை வைத்தேன். உன்னையே நம்பினேன். உன்னிடமே மீள்கிறேன். உன்னைக் கொண்டே வழக்குரைக்கிறேன். உன்னிடமே தீர்ப்புக் கோருகிறேன். எனவே நான் முன் செய்தவைகளையும், பின்னால் செய்யவிருப்பதையும், நான் இரகசிய மாகச் செய்ததையும், நான் வெளிப்படையாகச் செய்ததையும் மன்னிப்பாயாக. நீயே முற்படுத்துபவன். நீயே பிற்படுத்துபவன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை.

இரவில் விழிப்பு வந்தால் ஓத வேண்டியவை

ஒருவருக்கு இரவில் விழிப்பு வந்து கீழ்க்காணும் துஆவை ஓதி மன்னிப்புக் கேட்டால் அதை இறைவன் ஏற்காமல் இருப்பதில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

ஆதாரம்: புகாரி 1154

لاَ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ الْحَمْدُ للهِ وَسُبْحَانَ اللهِ وَلاَ إِلهَ إِلاَّ اللهُ وَاللهُ أَكْبَرُ وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللهِ  اَللّهُمَّ اغْفِرْ لِيْ

லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு, லஹுல் முல்(க்)கு, வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். அல்ஹம்து லில்லாஹி வஸுப்(B]ஹானல்லாஹி வலாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்ப(B]ர். வலா ஹவ்ல வலா குவ்வ(த்)த இல்லா பி(B]ல்லாஹி, அல்லாஹும்மஃக்பி[F]ர்லீ.

இதன் பொருள்:

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் இல்லை. ஆட்சி அவனுக்கே. புகழும் அவனுக்கே. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். அல்லாஹ் தூயவன். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அல்லாஹ் மிகப் பெரியவன். நன்மைகள் செய்வதும், தீமைகளிலிருந்து விலகுவதும் அல்லாஹ்வின் உதவியால் தான். இறைவா என்னை மன்னித்து விடு.

தினமும் ஓத வேண்டிய துஆ

பின் வரும் துஆவை யார் தினமும் நூறு தடவை ஓதி வருகிறாரோ அவருக்கு பத்து அடிமைகளை விடுதலை செய்த நன்மைகள் கிடைக்கும். மேலும் அவருக்கு நூறு நன்மைகள் பதிவு செய்யப்படும். அவரது நூறு தீமைகள் அழிக்கப்படும். அன்று மாலை வரை ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பும் கிடைக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

 ஆதாரம்: புகாரி 3293

لاَ إِلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ

லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு, லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து, வஹு அலா குல்லி ஷையின் கதீர்.

இதன் பொருள்:

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் இல்லை. ஆட்சி அவனுக்குரியதே. புகழும் அவனுக்குரியதே. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.

கழிவறையில் நுழையும் போது

اَللّهُمَّ إِنّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِث

அல்லாஹும்ம இன்னீ அவூது பி(B](க்)க மினல் குபு(B]ஸி வல் கபா(B]யிஸி.

ஆதாரம்: புகாரி 6322

இதன் பொருள் :

இறைவா! ஆண், பெண் ஷைத்தான்களிடமிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

கழிவறையிலிருந்து வெளியேறும் போது

غُفْرَانَكَ

ஃகுப்[F]ரான(க்)க

ஆதாரம்: திர்மிதீ 7

உன்னிடம் மன்னிப்புத் தேடுகிறேன்.

வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கீழ்க்காணும் துஆவைக் கூறுவார்கள்.

ஆதாரம்: நஸயீ 5391, 5444

بِسْمِ اللهِ رَبّ أَعُوْذُ بِكَ مِنْ أَنْ أَزِلَّ أَوْ أَضِلَّ أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيَّ

பி(B]ஸ்மில்லாஹி ரப்பி(B] அவூது பி(B](க்)க மின் அன் அஸில்ல அவ் அளில்ல அவ் அள்ளம அவ் உள்லம அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலய்ய

இதன் பொருள்:

அல்லாஹ்வின் பெயரால் (வெளியேறுகிறேன்.) என் இறைவா! நான் சறுகி விடாமலும், வழி தவறி விடாமலும், அநீதி இழைக்காமலும், அநீதி இழைக்கப்படாமலும், மூடனாகாமலும், (பிறரை) மூடராக்காமலும் இருக்க உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

சபையை முடிக்கும் போது

ஒரு சபையை முடிக்கும் போது கீழ்க்காணும் துஆவைக் கூறினால் அந்தச் சபையில் நடந்த தவறுகள் மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

ஆதாரம்: திர்மிதீ 3355

سُبْحَانَكَ اللّهُمَّ وَبِحَمْدِكَ أَشْهَدُ أَنْ لاَ إِلهَ إِلاَّ أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوْبُ إِلَيْكَ

ஸுப்ஹான(க்)கல்லாஹும்ம வபி(B] ஹம்தி(க்)க அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லா அன்(த்)த அஸ்தக்பி[F]ரு(க்)க வஅதூபு(B] இலை(க்)க.

இதன் பொருள் :

இறைவா! நீ தூயவன். உன்னைப் புகழ்கிறேன். வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர யாருமில்லை. உன்னிடமே பாவ மன்னிப்புத் தேடுகிறேன். உன்னிடமே மீள்கிறேன்.

அல்லது கீழ்க்கண்ட துஆவையும் ஓதலாம்.

سُبْحَانَكَ اللّهُمَّ وَبِحَمْدِكَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ

ஸுப்(B]ஹான(க்)கல்லாஹும்ம வபி(B]ஹம்தி(க்)க அஸ்தக்பி[F]ரு(க்)க வ அதூபு(B] இலை(க்)க.

இதன் பொருள் வருமாறு:

இறைவா! நீ தூயவன். உன்னைப் புகழ்கிறேன். உன்னிடம் பாவ மன்னிப்புத் தேடுகிறேன். உன்னிடமே மீள்கிறேன்.

ஆதாரம்: நஸயீ 1327

பள்ளிவாசலுக்குள் நுழையும் போது

اَللّهُمَّ افْتَحْ لِيْ أَبْوَابَ رَحْمَتِكَ

அல்லாஹும்மப்[F]தஹ் லீ அப்(B]வாப(B] ரஹ்ம(த்)தி(க்)க

இதன் பொருள் :

இறைவா! உனது அருள் வாசல்களை எனக்காகத் திறப்பாயாக. ஆதாரம்: முஸ்லிம் 1165

பள்ளிவாசலை விட்டு வெளியேறும் போது

اَللّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ

அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க மின் ப[F]ழ்ளி(க்)க

இதன் பொருள் :

இறைவா! உனது அருளை வேண்டுகிறேன்.

ஆதாரம்: முஸ்லிம் 1165

சாப்பிடும் போதும், பருகும் போதும்

بِسْمِ اللهِ

பி(B]ஸ்மில்லாஹ்

அல்லாஹ்வின் பெயரால் எனக் கூற வேண்டும்.

ஆதாரம்: புகாரி 5376, 5378

பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால்

சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால்

بِسْمِ اللهِ فِيْ أَوَّلِهِ وَآخِرِهِ

பிஸ்மில்லாஹி பீ[F] அவ்வலிஹி வ ஆகிரிஹி

எனக் கூற வேண்டும்.

ஆதாரம்: திர்மிதீ 1781

சாப்பிட்ட பின்பும் பருகிய பின்பும்

اَلْحَمْدُ للهِ كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيْهِ غَيْرَ مَكْفِيّ وَلاَ مُوَدَّعٍ وَلاَ مُسْتَغْنًى عَنْهُ رَبَّنَا

அல்ஹம்து லில்லாஹி கஸீரன் தய்யிப(B]ன் முபா(B]ர(க்)கன் பீ[F]ஹி ஃகைர மக்பி[F]ய்யின் வலா முவத்தஇன் வலா முஸ்தக்னன் அன்ஹு ரப்ப(B]னா

இதன் பொருள் :

தூய்மையான, பாக்கியம் நிறைந்த அதிக அளவிலான புகழ் அல்லாஹ்வுக்கே. அவனது அருட்கொடை மறுக்கப்படத்தக்கதல்ல. நன்றி மறக்கப்படுவதுமன்று. அது தேவையற்றதுமல்ல.

ஆதாரம்: புகாரி 5858

அல்லது

اَلْحَمْدُ للهِ الَّذِيْ كَفَانَا وَأَرْوَانَا غَيْرَ مَكْفِيٍّ وَلاَ مَكْفُورٍ

அல்ஹம்து லில்லாஹில்லதீ கபா[F]னா வ அர்வானா ஃகைர மக்பி[F]ய்யின் வலா மக்பூ[F]ர்

இதன் பொருள் :

உணவளித்து தாகம் தீர்த்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். அவனது அருள் மறுக்கப்படத்தக்கதல்ல. நன்றி மறக்கப்படுவதுமல்ல. ஆதாரம்: புகாரி 5459

அல்லது

اَلْحَمْدُ للهِ

அல்ஹம்து லில்லாஹ்

என்று கூறலாம்.

ஆதாரம்: முஸ்லிம் 4915

உணவளித்தவருக்காக

اَللّهُمَّ بَارِكْ لَهُمْ فِيْ مَا رَزَقْتَهُمْ وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ

அல்லாஹும்ம பா(B]ரிக் லஹும் பீ[F]மா ரஸக்தஹும் வஃக்பி[F]ர் லஹும் வர்ஹம்ஹும்.

இதன் பொருள் :

இறைவா! இவர்களுக்கு நீ வழங்கியதில் பரகத் (மறைமுகமான பேரருள்) செய்வாயாக. இவர்களை மன்னிப்பாயாக! இவர்களுக்கு கருணை காட்டுவாயாக.

ஆதாரம்: முஸ்லிம் 3805

தாம்பத்தியத்தில் ஈடுபடும் முன்

بِاسْمِ اللهِ اَللّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا

பி(B]ஸ்மில்லாஹி அல்லாஹும்ம ஜன்னிப்(B]னா வஜன்னிபி(B]ஷ் ஷைத்தான மா ரஸக்தனா

இதன் பொருள் :

அல்லாஹ்வின் பெயரால். இறைவா! ஷைத்தானிடமிருந்து எங்களைக் காப்பாயாக! எங்களுக்கு நீ வழங்கும் சந்ததிகளையும் ஷைத்தானிடமிருந்து காப்பாயாக.

ஆதாரம்: புகாரி 141, 3271, 6388, 7396

அல்லது

بِاسْمِ اللهِ اَللّهُمَّ جَنِّبْنِيَ الشَّيْطَانَ وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا

பி(B]ஸ்மில்லாஹி அல்லாஹும்ம ஜன்னிப்(B]னியஷ் ஷை(த்)தான வஜன்னிபிஷ் ஷை(த்)தான மாரஸக்(த்)தனா

இதன் பொருள் :

அல்லாஹ்வின் பெயரால். இறைவா! ஷைத்தானிடமிருந்து என்னைக் காப்பாயாக. எனக்கு நீ வழங்கும் சந்ததிகளையும் ஷைத்தானிடமிருந்து காப்பாயாக.

ஆதாரம்: புகாரி 5165, 3283

எல்லா நிலையிலும் கூற வேண்டியவை

பாத்திரங்களை மூடும் போதும், கதவைச் சாத்தும் போதும், விளக்கை அணைக்கும் போதும், ஒவ்வொரு காரியத்தைச் செய்யும் போதும்

بِسْمِ اللهِ

பி(B]ஸ்மில்லாஹ்

எனக் கூற வேண்டும்.

ஆதாரம்: புகாரி 3280, 5623

கோபம் ஏற்படும் போது

أَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ

அவூது பி(B]ல்லாஹி மினஷ் ஷைத்தான்

இதன் பொருள் :

ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

ஆதாரம்: புகாரி 3282

அல்லது

أَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ

அவூது பி(B]ல்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்.

என்று கூறலாம்.

ஆதாரம்: புகாரி 6115

தீய எண்ணங்கள் ஏற்படும் போதும், மனக் குழப்பத்தின் போதும்

أَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ

அவூது பி(B]ல்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்.

எனக் கூற வேண்டும்.

ஆதாரம்: புகாரி 3276

கழுதை கணைக்கும் போது

أَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ

அவூது பி(B]ல்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்.

எனக் கூற வேண்டும்.

ஆதாரம்: புகாரி 3303

கெட்ட கனவு கண்டால்

மனதுக்குக் கவலை தரும் கனவுகளைக் கண்டால் இடது புறம் மூன்று தடவை துப்பிவிட்டு

أَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ

அவூது பி(B]ல்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்

எனக் கூற வேண்டும்.

ஆதாரம்: புகாரி 6995

நோயாளியை விசாரிக்கச் சென்றால்

اَللّهُمَّ رَبَّ النَّاسِ مُذْهِبَ الْبَأْسِ اِشْفِ أَنْتَ الشَّافِيْ لاَ شَافِيَ إِلاَّ أَنْتَ شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا

அல்லாஹும்ம ரப்ப(B]ன்னாஸி முத்ஹிபல் ப(B]ஃஸி இஷ்பி[F] அன்தஷ் ஷாபீ[F] லா ஷாபி[F]ய இல்லா அன்(த்)த ஷிபா[F]அன் லா யுகாதிரு ஸகமா.

இதன் பொருள் :

இறைவா! மனிதர்களின் எஜமானே! துன்பத்தை நீக்குபவனே! நீ குணப்படுத்து. நீயே குணப்படுத்துபவன். உன்னைத் தவிர குணப்படுத்துபவன் யாருமில்லை. நோயை அறவே மீதம் வைக்காமல் முழுமையாகக் குணப்படுத்து!

எனக் கூற வேண்டும்.

ஆதாரம்: புகாரி 5742

அல்லது

اَللّهُمَّ رَبَّ النَّاسِ أَذْهِبِ الْبَأْسَ اِشْفِهِ وَأَنْتَ الشَّافِيْ لاَ شِفَاءَ إِلاَّ شِفَاؤُكَ شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا

அல்லாஹும்ம ரப்ப(B]ன்னாஸி அத்ஹிபில் ப(B]ஃஸ இஷ்பி[F]ஹி வஅன்தஷ் ஷாபீ[F] லாஷிபா[F]அ இல்லா ஷிபா[F]வு(க்)க ஷிபா[F]அன் லா யுகாதிரு ஸகமா.

இறைவா! மனிதர்களின் எஜமானே! துன்பத்தை நீக்கி குணப்படுத்து. நீயே குணப்படுத்துபவன். உனது குணப்படுத்துதலைத் தவிர வேறு குணப்படுத்துதல் இல்லை. நோயை மீதம் வைக்காத வகையில் முழுமையாகக் குணப்படுத்து!

ஆதாரம்: புகாரி 6743

அல்லது நோயாளியின் உடலில் கையை வைத்து

بِاسْمِ اللهِ

பி(B]ஸ்மில்லாஹ்

என்று மூன்று தடவை கூறி விட்டு

 أَعُوذُ بِاللهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ

அவூது பி(B]ல்லாஹி வகுத்ர(த்)திஹி மின் ஷர்ரி மாஅஜிது வஉஹாதிரு

என்று ஏழு தடவையும் கூற வேண்டும்.

இதன் பொருள் :

நான் அஞ்சுகின்ற, நான் அடைந்திருக்கின்ற துன்பத்திலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

ஆதாரம்: முஸ்லிம் 4082

அல்லது

لاَ بَأْسَ طَهُورٌ إِنْ شَاءَ اللهُ

லா ப(B]ஃஸ தஹுர் இன்ஷா அல்லாஹ்

இதன் பொருள் :

கவலை வேண்டாம். அல்லாஹ் நாடினால் குணமாகி விடும்

எனக் கூறலாம்.

ஆதாரம்: புகாரி 3616

மரணத்திற்கு நிகரான துன்பத்தின் போது

اَللّهُمَّ أَحْيِنِيْ مَا كَانَتِ الْحَيَاةُ خَيْرًا لِيْ وَتَوَفَّنِيْ إِذَا كَانَتِ الْوَفَاةُ خَيْرًا لِيْ

அல்லாஹும்ம அஹ்யினீ மா கான(த்)தில் ஹயா(த்)து கைரன்லீ வதவப்ப[F]னீ இதா கான(த்)தில் வபா[F](த்)து கைரன் லீ

இதன் பொருள் :

இறைவா! வாழ்வது எனக்கு நல்லதாக இருந்தால் என்னை வாழச் செய்! மரணம் எனக்கு நல்லதாக இருந்தால் மரணிக்கச் செய்!

எனக் கூற வேண்டும்.

ஆதாரம்: புகாரி 5671, 6351

இழப்புகள் ஏற்படும் போது

இழப்புகள் ஏற்படும் போது கீழ்க்காணும் துஆவை ஓதினால் அதை விடச் சிறந்ததை அல்லாஹ் மாற்றாகத் தருவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

ஆதாரம்: முஸ்லிம் 1525

إِنَّا للهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُوْنَ اَللّهُمَّ أْجُرْنِيْ فِيْ مُصِيْبَتِيْ وَأَخْلِفْ لِيْ خَيْرًا مِنْهَا

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன், அல்லாஹும்ம அஃஜுர்னீ பீ[F] முஸீப(B](த்)தி வ அக்லிப்[F] லீ கைரன் மின்ஹா

இதன் பொருள் :

நாங்கள் அல்லாஹ்வுக்கு உரியவர்கள். மேலும் நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எனது துன்பத்திற்காக நீ கூலி தருவாயாக. மேலும் இதை விடச் சிறந்ததை பகரமாகத் தருவாயாக.

ஆதாரம்: முஸ்லிம் 1525

கணவனை இழந்தவர்கள் கூற வேண்டியது

اَللّهُمَّ اغْفِرْ لِيْ وَلَهُ وَأَعْقِبْنِيْ مِنْهُ عُقْبَى حَسَنَةً

அல்லாஹும்மக்பி[F]ர்லீ வலஹு வ அஃகிப்னீ மின்ஹு உக்ப(B]ன் ஹஸனதன்

இதன் பொருள் :

இறைவா! என்னையும், அவரையும் மன்னிப்பாயாக! அவரை விடச் சிறந்தவரை எனக்கு அளிப்பாயாக!

ஆதாரம்: முஸ்லிம் 1527

மழை வேண்டும் போது

இரு கைகளையும் உயர்த்தி

اَللّهُمَّ اسْقِنَا اَللّهُمَّ اسْقِنَا اَللّهُمَّ اسْقِنَا

அல்லாஹும்மஸ்கினா

அல்லாஹும்மஸ்கினா

அல்லாஹும்மஸ்கினா

எனக் கூற வேண்டும்.

இதன் பொருள் :

இறைவா! எங்களுக்கு மழையைத் தா.

ஆதாரம்: புகாரி 1013

அல்லது

اَللّهُمَّ أَغِثْنَا اَللّهُمَّ أَغِثْنَا اَللّهُمَّ أَغِثْنَا

அல்லாஹும்ம அகிஸ்னா

அல்லாஹும்ம அகிஸ்னா

அல்லாஹும்ம அகிஸ்னா

எனக் கூற வேண்டும்.

பொருள்:

இறைவா! எங்களுக்கு மழையை இறக்கு!

ஆதாரம்: புகாரி 1014

அளவுக்கு மேல் மழை பெய்தால்

اَللّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا

அல்லாஹும்ம ஹவாலைனா வலா அலைனா

என்று இரு கைகளையும் உயர்த்தி கூற வேண்டும்.

இதன் பொருள் :

இறைவா! எங்களின் சுற்றுப்புறங்களுக்கு இதை அனுப்பு! எங்களுக்குக் கேடு தருவதாக இதை ஆக்காதே!

ஆதாரம்: புகாரி 933, 1015, 1020, 1021, 1033, 6093, 6342

அல்லது

اَللّهُمَّ عَلَى الآكَامِ وَالْجِبَالِ وَالآجَامِ وَالظّرَابِ وَالأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ

அல்லாஹும்ம அலல் ஆகாமி வல் ஜிபா(B]லி வல் ஆஜாமி வள்ளிராபி(B] வல் அவ்திய(த்)தி வ மனாபி(B]திஷ் ஷஜரி

இதன் பொருள் :

இறைவா! மேடுகளிலும், மலைகளிலும், குன்றுகளிலும், ஓடைகளிலும், கோட்டைகளிலும், மரங்கள் முளைக்கும் இடங்களிலும் இந்த மழையை பொழியச் செய்வாயாக.

ஆதாரம்: புகாரி 1013, 1016

அல்லது

اَللّهُمَّ عَلَى رُءُوْسِ الْجِبَالِ وَالآكَامِ وَبُطُونِ الأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ

அல்லாஹும்ம அலா ருவூஸில் ஜிபா(B]லி வல் ஆகாமி வபு(B]தூனில் அவ்திய(த்)தி வ மனாபி(B]திஷ் ஷஜரி

ஆதாரம்: புகாரி 1017

மழை பொழியும் போது

اَللّهُمَّ صَيِّبًا نَافِعًا

அல்லாஹும்ம ஸய்யிப(B]ன் நாபி[F]அன்

இதன் பொருள் :

இறைவா! பயனுள்ள மழையாக இதை ஆக்கு!

ஆதாரம்: புகாரி 1032

போர்கள் மற்றும் கலவரத்தின் போது

اَللّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ سَرِيعَ الْحِسَابِ اَللّهُمَّ اهْزِمْ الأَحْزَابَ اَللّهُمَّ اهْزِمْهُمْ وَزَلْزِلْهُمْ

அல்லாஹும்ம முன்ஸிலல் கிதாபி[B], ஸரீஅல் ஹிஸாபி[B], அல்லாஹும்மஹ்ஸிமில் அஹ்ஸாப்(B], அல்லாஹும்மஹ்ஸிம்ஹும் வஸல்ஸில்ஹும்.

இதன் பொருள் :

இறைவா! வேதத்தை அருளியவனே! விரைந்து விசாரிப்பவனே! எதிரிகளின் கூட்டணியைத் தோல்வியுறச் செய்வாயாக! அவர்களைத் தடுமாறச் செய்வாயாக!

ஆதாரம்: புகாரி 2933, 4115

அல்லது

اَللّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ وَمُجْرِيَ السَّحَابِ وَهَازِمَ الأَحْزَابِ اهْزِمْهُمْ وَانْصُرْنَا عَلَيْهِمْ

அல்லாஹும்ம முன்ஸிலல் கிதாபி(B] வமுஜ்ரியஸ் ஸஹாபி(B] வஹாஸிமல் அஹ்ஸாபி(B] இஹ்ஸிம்ஹும் வன்ஸுர்னா அலைஹிம்.

இதன் பொருள் :

இறைவா! வேதத்தை அருளியவனே! மேகத்தை நடத்திச் செல்பவனே! எதிரிகளைத் தோல்வியுறச் செய்பவனே! இவர்களைத் தோல்வியுறச் செய்! எங்களுக்கு உதவி செய்!

ஆதாரம்: புகாரி 2966, 3024

புயல் வீசும் போது

اَللّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا فِيهَا وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا فِيهَا وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ

அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க கைரஹா வகைர மாபீ[F]ஹா வகைர மா உர்ஸிலத் பி(B]ஹி. வஅவூது பி(B](க்)க மின் ஷர்ரிஹா வஷர்ரி மா பீ[F]ஹா வஷர்ரி மா உர்ஸிலத் பி(B]ஹி

இதன் பொருள் :

இறைவா! இதில் உள்ள நன்மையையும், எந்த நன்மைக்காக இது அனுப்பப்பட்டதோ அந்த நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இதன் தீங்கை விட்டும், எந்தத் தீங்கைக் கொண்டு வருவதற்காக இது அனுப்பப்பட்டதோ அந்தத் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

ஆதாரம்: முஸ்லிம் 1496

பயணத்தின் போது

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயணத்திற்காக தமது வாகனத்தில் எறி அமர்ந்ததும் மூன்று தடவை

اَللهُ أَكْبَرُ اَللهُ أَكْبَرُ اَللهُ أَكْبَرُ

அல்லாஹு அக்ப(B]ர் - அல்லாஹு அக்ப(B]ர் -

அல்லாஹு அக்ப(B]ர்

எனக் கூறுவார்கள். பின்னர்

سُبْحَانَ الَّذِيْ سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِيْنَ وَإِنَّا إِلَى رَبّنَا لَمُنْقَلِبُوْنَ اَللّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِي سَفَرِنَا هَذَا اَلْبِرَّ وَالتَّقْوَى وَمِنَ الْعَمَلِ مَا تَرْضَى اَللّهُمَّ هَوّنْ عَلَيْنَا سَفَرَنَا هَذَا وَاطْوِ عَنَّا بُعْدَهُ اَللّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيْفَةُ فِي الأَهْلِ اَللّهُمَّ إِنّيْ أَعُوْذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَآبَةِ الْمَنْظَرِ وَسُوءِ الْمُنْقَلَبِ فِي الْمَالِ وَالأَهْلِ

ஸுப்(B]ஹானல்லதீ ஸக்கர லனா ஹாதா வமா குன்னா லஹு முக்ரினீன். வஇன்னா இலா ரப்பி(B]னா லமுன்கலிபூன். அல்லா ஹும்ம இன்னா நஸ்அலு(க்)க பீ[F] ஸப[F]ரினா ஹாதா அல்பி(B]ர்ர வத்தக்வா வமினல் அமலி மா(த்)தர்ளா. அல்லாஹும்ம ஹவ்வின் அலைனா ஸப[F]ரனா ஹாதா வத்வி அன்னா பு(B]ஃதஹு, அல்லாஹும்ம அன்(த்)தஸ் ஸாஹிபு(B] பி[F]ஸ்ஸப[F]ரி வல் கலீப[F](த்)து பி[F]ல் அஹ்லி அல்லா ஹும்ம இன்னீ அவூது பி(க்)க மின் வஃஸாயிஸ் ஸப[F]ரி வகாப (B]தில் மன்ளரி வஸுயில் முன்கலபி(B] பி[F]ல் மாலி வல் அஹ்லி

எனக் கூறுவார்கள்.

இதன் பொருள் :

அல்லாஹ் மிகப் பெரியவன். எங்களுக்கு இதை வசப்படுத்தித் தந்தவன் தூயவன். நாங்கள் இதன் மேல் சக்தி பெற்றவர்களாக இருக்கவில்லை. மேலும் நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ பொருந்திக் கொள்கின்ற நல்லறத்தையும் உன்னிடம் வேண்டுகிறோம். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தை எங்களுக்கு எளிதாக்கு! இதன் தொலைவை எங்களுக்குச் குறைத்து விடு! இறைவா! நீயே பயணத்தில் தோழனாக இருக்கிறாய். எங்கள் குடும்பத்தை நீயே காக்கிறாய். இறைவா! இப்பயணத்தின் சிரமத்திலிருந்தும், மோசமான தோற்றத்திலிருந்தும் செல்வத்திலும் குடும்பத்திலும் தீய விளைவுகள் ஏற்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

ஆதாரம்: முஸ்லிம் 2392

பயணத்திலிருந்து திரும்பும் போது

மேற்கண்ட அதே துஆவை ஓத வேண்டும். அதைத் தொடர்ந்து

آيِبُوْنَ تَائِبُوْنَ عَابِدُوْنَ لِرَبّنَا حَامِدُوْنَ

ஆயிபூ(B]ன தாயிபூ(B]ன ஆபி(B]தூன லிரப்பி(B]னா ஹாமிதூன்.

இதன் பொருள் :

எங்கள் இறைவனை வணங்கியவர்களாகவும், புகழ்ந்தவர் களாகவும் மன்னிப்புக் கேட்பவர்களாகவும் திரும்புகிறோம்.

ஆதாரம்: முஸ்லிம் 2392

வெளியூரில் தங்கும் போது

أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ

அவூது பி(B] (க்)கலிமாதில்லாஹித் தம்மாத்தி மின் ஷர்ரி மா கலக்

இதன் பொருள் :

முழுமையான அல்லாஹ்வின் வார்த்தைகளைக் கொண்டு அவன் படைத்த அனைத்தின் தீங்கை விட்டும் அவனிடமே பாதுகாப்புத் தேடுகிறேன்.

ஆதாரம்: முஸ்லிம் 4881, 4882

பிராணிகளை அறுக்கும் போது

உண்பதற்கு அனுமதிக்கப்பட்ட பிராணிகளை அறுக்கும் போது

بِسْمِ اللهِ اَللهُ أَكْبَرُ

பி(B]ஸ்மில்லாஹி அல்லாஹு அக்ப(B]ர்

இதன் பொருள் :

அல்லாஹ்வின் பெயரால். அல்லாஹ் மிகப் பெரியவன்.

என்று கூற வேண்டும்.

ஆதாரம்: புகாரி 5565, 7399

மகிழ்ச்சியான செய்தியைக் கேட்கும் போதும் மகிழ்ச்சியை அனுபவிக்கும் போதும்

மகிழ்ச்சியான அனுபவம் நமக்குக் கிடைத்தால் அல்லது மகிழ்ச்சியான செய்தியைக் கேள்விப்பட்டால்

اَللهُ أَكْبَرُ

அல்லாஹு அக்ப(B]ர்

அல்லாஹ் மிகப் பெரியவன் எனக் கூற வேண்டும்.

ஆதாரம்: புகாரி 3348, 4741

மேட்டில் ஏறும் போது

உயரமான இடத்தில் ஏறும் போது

اَللهُ أَكْبَرُ

அல்லாஹு அக்ப(B]ர்

அல்லாஹ் மிகப் பெரியவன் எனக் கூற வேண்டும்.

ஆதாரம்: புகாரி 2993, 2994

கீழே இறங்கும் போது

உயரமான இடத்திலிருந்து, மாடியிலிருந்து கீழே இறங்கும் போது

سُبْحَانَ اللهِ

ஸுப்(B]ஹானல்லாஹ்

அல்லாஹ் தூயவன்.

எனக் கூற வேண்டும்.

ஆதாரம்: புகாரி 2993, 2994

ஈடுபடப் போகும் காரியம் நல்லதா கெட்டதா என்பதை அறிய

ஒரு காரியத்தைச் செய்யலாமா வேண்டாமா என்ற குழப்பம் ஏற்பட்டால் கடமையில்லாத இரண்டு ரக்அத்கள் நபில் தொழுது விட்டு பின்வரும் துஆவை ஓத வேண்டும். அவ்வாறு ஓதினால் அக்காரியம் நல்லதாக இருந்தால் அதில் அல்லாஹ் நம்மை ஈடுபடுத்துவான். அது கெட்டதாக இருந்தால் அதிலிருந்து நம்மைக் காப்பாற்றி விடுவான்.

ஆதாரம்: புகாரி 1166, 6382, 7390

اَللّهُمَّ إِنّيْ أَسْتَخِيْرُكَ بِعِلْمِكَ وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيْمِ فَإِنَّكَ تَقْدِرُ وَلاَ أَقْدِرُ وَتَعْلَمُ وَلاَ أَعْلَمُ وَأَنْتَ عَلاَّمُ الْغُيُوْبِ اَللّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الأَمْرَ خَيْرٌ لِيْ فِيْ دِينِيْ وَمَعَاشِيْ وَعَاقِبَةِ أَمْرِيْ وَآجِلِهِ فَاقْدُرْهُ لِيْ وَيَسِّرْهُ لِيْ ثُمَّ بَارِكْ لِيْ فِيْهِ وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الأَمْرَ شَرٌّ لِيْ فِيْ دِينِيْ وَمَعَاشِيْ وَعَاقِبَةِ أَمْرِيْ وَآجِلِهِ فَاصْرِفْهُ عَنِّيْ وَاصْرِفْنِيْ عَنْهُ وَاقْدُرْ لِيَ الْخَيْرَ حَيْثُ كَانَ ثُمَّ أَرْضِنِيْ

அல்லாஹும்ம இன்னீ அஸ்தகீரு(க்)க பி(B]இல்மி(க்)க, வ அஸ்தக்திக்ரு(க்)க பி(B]குத்ரதி(க்)க வ அஸ்அலு(க்)க மின் ப[F]ள்லி(க்)கல் அளீம். ப[F]இன்ன(க்)க தக்திரு வலா அக்திரு வ தஃலமு வலா அஃலமு வ அன்த அல்லாமுல் குயூப்(B] அல்லாஹும்ம இன் குன்(த்)த தஃலமு அன்ன ஹாதல் அம்ர கைருன் லீ பீ[F] தீனீ வ மஆஷீ வ ஆ(க்)கிப(B](த்)தி அம்ரீ வ ஆஜிலிஹி ப[F]க்துர்ஹு லீ வயஸ்ஸிர் ஹு லீ, ஸும்ம பா(B]ரிக் லீ பீ[F]ஹி வஇன் குன்(த்)த தஃலமு அன்ன ஹாதல் அம்ர ஷர்ருன் லீ பீ[F] தீனீ, வமஆஷீ வஆ(க்)கிப(B](த்)தி அம் ரீ வ ஆஜிலிஹி ப[F]ஸ்ரிப்[F]ஹு அன்னீ வஸ்ரிப்[F]னீ அன்ஹு வக்துர் லியல் கைர ஹைஸு கான ஸும்ம அர்ளினீ

இதன் பொருள் :

இறைவா! நீ அறிந்திருப்பதால் எது நல்லதோ அதை உன்னிடம் தேடுகிறேன். உனக்கு ஆற்றல் உள்ளதால் எனக்கு சக்தியைக் கேட்கிறேன். உனது மகத்தான அருளை உன்னிடம் வேண்டுகிறேன். நீ தான் சக்தி பெற்றிருக்கிறாய். நான் சக்தி பெறவில்லை. நீ தான் அறிந்திருக்கிறாய். நான் அறிய மாட்டேன். நீ தான் மறைவானவற்றையும் அறிபவன்.

இறைவா! இந்தக் காரியம் எனது மார்க்கத்திற்கும், எனது வாழ்க்கைக்கும், எனது இம்மைக்கும், மறுமைக்கும் நல்லது என்று நீ கருதினால் இதைச் செய்ய எனக்கு வலிமையைத் தா! மேலும் இதை எனக்கு எளிதாக்கு! பின்னர் இதில் பரகத் (புலனுக்கு எட்டாத பேரருள்) செய்!

இந்தக் காரியம் எனது மார்க்கத்திற்கும், எனது வாழ்க்கைக்கும், எனது இம்மைக்கும், எனது மறுமைக்கும் கெட்டது என்று நீ கருதினால் என்னை விட்டு இந்தக் காரியத்தைத் திருப்பி விடு வாயாக! இந்தக் காரியத்தை விட்டும் என்னைத் திருப்பி விடுவாயாக. எங்கே இருந்தாலும் எனக்கு நன்மை செய்யும் ஆற்றலைத் தருவாயாக! பின்னர் என்னைத் திருப்தியடையச் செய்வாயாக.

ஆதாரம்: புகாரி 1166, 6382, 7390

தும்மல் வந்தால்

தும்மல் வந்தால் தும்மிய பின்

اَلْحَمْدُ للهِ

அல்ஹம்து லில்லாஹ்

எனக் கூற வேண்டும்.

இதன் பொருள் :

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.

அல்ஹம்துலில்லாஹ் என தும்மியவர்கூறுவதைக் கேட்டவர்

يَرْحَمُكَ اللهُ

யர்ஹமு(க்)கல்லாஹ்

எனக் கூற வேண்டும். இதன் பொருள் :

அல்லாஹ் உனக்கு அருள் புரிவானாக!

இதைக் கேட்டதும் தும்மியவர்

يَهْدِيْكُمُ اللهُ وَيُصْلِحُ بَالَكُمْ

யஹ்தீ(க்)குமுல்லாஹு வயுஸ்லிஹு பா(B]ல(க்)கும்

எனக் கூற வேண்டும்.

இதன் பொருள் :

அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! உங்கள் காரியத்தைச் சீராக்குவானாக!

ஆதாரம்: புகாரி 6224

இறந்தவருக்காகச் செய்யும் துஆ

இறந்தவரின் இல்லம் சென்றால் பின்வரும் துஆவை செய்ய வேண்டும்................. இட்ட இடத்தில் இறந்தவரின் பெயரைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

اَللّهُمَّ اغْفِرْ لِ ...........وَارْفَعْ دَرَجَتَهُ فِي الْمَهْدِيّيْنَ وَاخْلُفْهُ فِيْ عَقِبِهِ فِي الْغَابِرِيْنَ وَاغْفِرْ لَنَا وَلَهُ يَا رَبَّ الْعَالَمِيْنَ وَافْسَحْ لَهُ فِيْ قَبْرِهِ وَنَوِّرْ لَهُ فِيْهِ

அல்லாஹும்மக்பி[F]ர் லி ................... வர்ப[F]ஃ தரஜ(த்)தஹு பி[F]ல் மஹ்திய்யீன வஃக்லுப்[F] ஹு பீ[F] அகிபி(B]ஹி பி[F]ல் காபிரீன் வக்பி[F]ர் லனா வலஹு யாரப்ப(B]ல் ஆலமீன் வப்[F]ஸஹ் லஹு பீ[F] கப்(B]ரிஹி வநவ்விர் லஹு பீ[F]ஹி.

இதன் பொருள் :

இறைவா! ..................... மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

ஆதாரம்: முஸ்லிம் 1528

ஜனாஸா தொழுகையில் இறந்தவருக்காக ஓதும் துஆ

اَللّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنْ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ

அல்லாஹும்மபி[F]ர் லஹு வர்ஹம்ஹு வஆபி[F]ஹி வபு[F] அன்ஹு வஅக்ரிம் நுஸுலஹு வவஸ்ஸிஃ முத்கலஹு வக்ஸில்ஹு பி(B]ல்மாயி வஸ்ஸல்ஜி வல்ப(B]ரதி வநக்கிஹி மினல் கதாயா கமா நக்கைத்தஸ் ஸவ்ப(B]ல் அப்(B]யள மினத் தனஸி வ அப்(B]தில்ஹு தாரன் கைரன் மின் தாரிஹி வஅஹ்லன் கைரன் மின் அஹ்லிஹி வஸவ்ஜன் கைரன் மின் ஸவ்ஜிஹி வ அத்ஹில்ஹுல் ஜன்ன(த்)த வஅயித்ஹு மின் அதாபி(B]ல் கப்(B]ரி

இதன் பொருள் :

இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள் புரிவாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவர் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! இவர் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக! இவரைத் தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக! வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம் செய்வதைப் போல் இவரை குற்றத்திலிருந்து சுத்தம் செய்வாயாக! இங்கிருக்கும் வீட்டை விடச் சிறந்த வீட்டையும், இங்கிருக்கும் குடும்பத்தை விடச் சிறந்த குடும்பத்தையும், இங்கிருந்த வாழ்க்கைத் துணையை விட சிறந்த துணையையும் இவருக்கு வழங்குவாயாக! இவரை கப்ரின் வேதனையிலிருந்து காப்பாயாக!

ஆதாரம்: முஸ்லிம் 1600

கப்ருகளை ஸியாரத் செய்யும் போது

اَلسَّلاَمُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِيْنَ وَإِنَّا إِنْ شَاءَ اللهُ بِكُمْ لاَحِقُوْنَ

அஸ்ஸலாமு அலை(க்)கும் தாரகவ்மின் மூமினீன் வஇன்னா இன்ஷா அல்லாஹு பி(B]கும் லாஹி(க்)கூன்.

இதன் பொருள் :

இறை நம்பிக்கையுள்ள சமுதாயமே! உங்கள் மீது சாந்தி நிலவட்டும். அல்லாஹ் நாடினால் நாங்களும் உங்களுடன் சேரக் கூடியவர்களே. ஆதாரம்: முஸ்லிம் 367

அல்லது

اَلسَّلاَمُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِيْنَ وَأَتَاكُمْ مَا تُوعَدُوْنَ غَدًا مُؤَجَّلُوْنَ وَإِنَّا إِنْ شَاءَ اللهُ بِكُمْ لاَحِقُوْنَ

அஸ்ஸலாமு அலை(க்)கும் தார கவ்மின் மூமினீன் வஅதா(க்)கும் மா தூஅதூன கதன் முஅஜ்ஜலூன வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(B]கும் லாஹி(க்)கூன். ஆதாரம்: முஸ்லிம் 1618

அல்லது

اَلسَّلاَمُ عَلَى أَهْلِ الدّيَارِ مِنَ الْمُؤْمِنِيْنَ وَالْمُسْلِمِيْنَ وَيَرْحَمُ اللّهُ الْمُسْتَقْدِمِيْنَ مِنَّا وَالْمُسْتَأْخِرِيْنَ وَإِنَّا إِنْ شَاءَ اللهُ بِكُمْ لَلاَحِقُوْنَ

அஸ்ஸலாமு அலா அஹ்லித் தியாரி மினல் மூமினீன் வல் முஸ்லிமீன் வ யர்ஹமுல்லாஹுல் முஸ்தக்திமீன மின்னா வல்முஸ்தஃகிரீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(B](க்)கும் லலாஹி(க்)கூன்.

இதன் பொருள் :

முஸ்லிம்களான மூமின்களான உங்கள் மீது சாந்தி நிலவட்டும். நம்மில் முந்திச் சென்றவர்களுக்கும், பிந்தி வருவோருக்கும் அல்லாஹ் அருள் புரியட்டும். அல்லாஹ் நாடினால் நாங்களும் உங்களுடன் சேரக் கூடியவர்களே.

ஆதாரம்: முஸ்லிம் 1619

அல்லது

اَلسَّلاَمُ عَلَيْكُمْ أَهْلَ الدّيَارِ مِنَ الْمُؤْمِنِيْنَ وَالْمُسْلِمِينَْ وَإِنَّا إِنْ شَاءَ اللهُ لَلاَحِقُوْنَ أَسْأَلُ اللهَ لَنَا وَلَكُمُ الْعَافِيَةَ

அஸ்ஸலாமு அலை(க்)கும் அஹ்லத் தியாரி மினல் மூமினீன வல் முஸ்லிமீன வ இன்னா இன்ஷா அல்லாஹு லலாஹி(க்)கூன். அஸ்அலுல்லாஹ லனா வல(க்)குமுல் ஆபி[F]ய(த்)த

இதன் பொருள் :

முஸ்லிம்களான, மூமின்களான உங்கள் மீது சாந்தி நிலவட்டும். அல்லாஹ் நாடினால் நாங்களும் உங்களுடன் சேரக் கூடியவர்களே. எங்களுக்கும் உங்களுக்கும் நல்லதை அல்லாஹ்விடம் வேண்டுகிறேன்.

ஆதாரம்: முஸ்லிம் 1620

இஸ்லாத்தை ஏற்றவுடன் கூற வேண்டியது

اَللّهُمَّ اغْفِرْ لِيْ وَارْحَمْنِيْ وَاهْدِنِيْ وَارْزُقْنِيْ

அல்லாஹும்மபி[F]ர் லீ, வர்ஹம்னீ வஹ்தினீ, வர்ஸுக்னீ

இதன் பொருள் :

இறைவா! என்னை மன்னிப்பாயாக! எனக்கு அருள் புரிவாயாக! எனக்கு நேர்வழி காட்டுவாயாக! எனக்குச் செல்வத்தை வழங்குவாயாக!

ஆதாரம்: முஸ்லிம் 4863, 4864

மணமக்களை வாழ்த்த

بَارَكَ اللهُ لَكَ

பா(B]ர(க்)கல்லாஹு ல(க்)க

ஆதாரம்: புகாரி 5367, 5155, 6386

அல்லது

بَارَكَ اللهُ عَلَيْكَ

பா(B]ர(க்)கல்லாஹு அலை(க்)க

ஆதாரம்: புகாரி 6387

அல்லது

بَارَكَ اللهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ وَجَمَعَ بَيْنَكُمَا فىِ الْخَيْرِ

பா(B]ர(க்)கல்லாஹு ல(க்)க வபா(B]ர(க்)க அலை(க்)க வஜமஅ பை(B]ன(க்)குமா பி[F]ல் கைர்

ஆதாரம்: திர்மிதீ 1011

அல்லது

بَارَكَ اللهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ وَجَمَعَ بَيْنَكُمَا فىِ خَيْرٍ

பா(B]ர(க்)கல்லாஹு ல(க்)க வபா(B]ர(க்)க அலை(க்)க வஜமஅ பை(B]ன(க்)குமா பீ[F] கைரின்

ஆதாரம்: அபூதாவூத் 1819

என்று மணமக்களை வாழ்த்தலாம்.

உளூச் செய்யத் துவங்கும் போது

بِسْمِ اللهِ

பி(B]ஸ்மில்லாஹி

என்று கூறிவிட்டு உளூச் செய்ய வேண்டும்.

ஆதாரம்: நஸயீ 77

உளூச் செய்து முடித்த பின்

أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُ اللهِ وَرَسُوْلُهُ

அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅன்ன முஹம்மதன் அப்(B]துல்லாஹி வரஸுலுஹு

இதன் பொருள் :

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியார் என்றும் அவனது தூதர் என்றும் உறுதியாக நம்புகிறேன்.

ஆதாரம்: முஸ்லிம் 345

பாங்கு சப்தம் கேட்டால்

பாங்கு சொல்லும் சப்தம் கேட்டால் முஅத்தின் கூறுவதை நாமும் திருப்பிக் கூற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஆதாரம்: புகாரி 611

பாங்கு முடிந்தவுடன்

பாங்கு ஓதி முடிந்தவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் ஓதி விட்டு பின்னர் கீழ்க்காணும் துஆவை ஓத வேண்டும். (பக்கம் : 74-76-ல் ஸலவாத் இடம் பெற்றுள்ளது.)

اَللّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلاَةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدًا اَلْوَسِيْلَةَ وَالْفَضِيْلَةَ وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِيْ وَعَدْتَهُ

அல்லாஹும்ம ரப்ப(B] ஹாதிஹித் தஃவ(த்)தித் தாம்ம(த்)தி வஸ்ஸலா(த்)தில் காயிம(த்)தி ஆ(த்)தி முஹம்மதன் அல்வஸீல(த்)த வல் ப[F]ளீல(த்)த வப்(B]அஸ்ஹு மகாமன் மஹ்மூதன் அல்லதீ வஅத்தஹு

இதன் பொருள் :

இறைவா! இந்த முழுமையான அழைப்பிற்கும், நிலையான தொழுகைக்கும் சொந்தக்காரனே! முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு (சொர்க்கத்தின் மிக உயர்ந்த பதவியான) வஸீலா எனும் பதவியினையும், சிறப்பையும் வழங்குவாயாக! நீ அவர்களுக்காக வாக்களித்த புகழப்பட்ட இடத்தில் அவர்களை எழுப்புவாயாக!

ஆதாரம்: புகாரி 614, 4719

தொழுகையைத் துவக்கிய உடன்

அல்லாஹு அக்பர் என்று கூறி தொழுகையில் நுழைந்த உடன் அல்ஹம்து அத்தியாயம் ஓதுவதற்கு முன் கீழ்க் காணும் துஆவை ஓத வேண்டும்.

اَللّهُمَّ بَاعِدْ بَيْنِيْ وَبَيْنَ خَطَايَايَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ اَللّهُمَّ نَقِّنِيْ مِنَ الْخَطَايَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الأَبْيَضُ مِنَ الدَّنَسِ اَللّهُمَّ اغْسِلْ خَطَايَايَ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ

அல்லாஹும்ம பா(B]யித் பைனீ வபைன கதாயாய கமா பா(B]அத்த பை(B]னல் மஷ்ரி(க்)கி வல் மக்ரிபி[B], அல்லாஹும்ம நக்கினீ மினல் கதாயா கமா யுனக்கஸ் ஸவ்பு[B]ல் அப்[B]யளு மினத் தனஸி அல்லாஹும்மஃக்ஸில் ஃகதாயாய பி[B]ல்மாயி வஸ்ஸல்ஜி வல் ப[B]ரதி

இதன் பொருள் :

இறைவா! கிழக்கிற்கும், மேற்கிற்கும் இடையே உள்ள இடைவெளியைப் போல் எனக்கும் என் பாவங்களுக்கும் இடையே இடைவெளியை ஏற்படுத்துவாயாக! வெண்மையான ஆடை அழுக்கிலிருந்து சுத்தம் செய்யப்படுவது போல் என்னைப் பாவங்களிலிருந்து சுத்தம் செய்வாயாக! இறைவா! தண்ணீராலும், பனிக்கட்டியாலும், ஆலங்கட்டியாலும் என் பாவங்களைக் கழுவுவாயாக.

ஆதாரம்: புகாரி 744

அல்லது

وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِيْ فَطَرَ السَّمَاوَاتِ وَالأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنْ الْمُشْرِكِيْنَ إِنَّ صَلاَتِيْ وَنُسُكِيْ وَمَحْيَايَ وَمَمَاتِيْ للهِ رَبِّ الْعَالَمِيْنَ لاَ شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا مِنَ الْمُسْلِمِيْنَ اَللّهُمَّ أَنْتَ الْمَلِكُ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ أَنْتَ رَبّيْ وَأَنَا عَبْدُكَ ظَلَمْتُ نَفْسِيْ وَاعْتَرَفْتُ بِذَنْبِيْ فَاغْفِرْ لِيْ ذُنُوبِيْ جَمِيعًا إِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ وَاهْدِنِيْ لأَحْسَنِ الأَخْلاَقِ لاَ يَهْدِيْ لأَحْسَنِهَا إِلاَّ أَنْتَ وَاصْرِفْ عَنّيْ سَيّئَهَا لاَ يَصْرِفُ عَنِّيْ سَيّئَهَا إِلاَّ أَنْتَ لَبَّيْكَ وَسَعْدَيْكَ وَالْخَيْرُ كُلُّهُ فِيْ يَدَيْكَ وَالشَّرُّ لَيْسَ إِلَيْكَ أَنَا بِكَ وَإِلَيْكَ تَبَارَكْتَ وَتَعَالَيْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوْبُ إِلَيْكَ

வஜ்ஜஹ்(த்)து வஜ்ஹிய லில்லதீ ப[F](த்)தரஸ் ஸமாவாத்தி வல் அர்ள ஹனீப[F]ன் வமா அன மினல் முஷ்ரிகீன். இன்ன ஸலா(த்)தீ, வநுஸு(க்)கீ வமஹ்யாய வமமா(த்)தீ லில்லாஹி ரப்பி[B]ல் ஆலமீன். லாஷ்ரீ(க்)க லஹு வபி[B]தாலி(க்)க உமிர்(த்)து வஅன மினல் முஸ்லிமீன். அல்லாஹும்ம அன்(த்)தல் மலி(க்)கு லாயிலாஹ இல்லா அன்(த்)த அன்(த்)த ரப்பீ[B] வஅன அப்[B]து(க்)க ளலம்து நப்[F]ஸீ வஃதரப்[F](த்)து பிதன்பீ[B] ப[F]க்பி[F]ர்லீ துனூபீ[B] ஜமீஅன், இன்னஹு லா யஃக்பி[F]ருத் துனூப[B] இல்லா அன்(த்)த வஹ்தினீ லி அஹ்ஸனில் அக்லா(க்)கி லாயஹ்தீ லி அஹ்ஸனிஹா இல்லா அன்(த்)த வஸ்ரிஃப் அன்னீ ஸைய்யிஅஹா லா யஸ்ரிப்[F] அன்னீ ஸைய்யிஅஹா இல்லா அன்(த்)த லப்பை[B](க்)க வஸஃதை(க்)க வல் கைரு குல்லுஹு பீ[F] யதை(க்)க வஷ்ஷர்ரு லைஸ இலை(க்)க அன பி[B](க்)க வஇலை(க்)க தபா[B]ரக்த வதஆலை(த்)த அஸ்தஃக்பி[F]ரு(க்)க வஅதூபு[B] இலை(க்)க.

இதன் பொருள் :

வானங்களையும், பூமியையும் படைத்தவனை நோக்கி என் முகத்தைத் திருப்பி விட்டேன். கொள்கையில் உறுதி கொண்டவனாகவும், இணை கற்பிக்காதவனாகவும் இருக்கிறேன். எனது தொழுகை, எனது வணக்கங்கள், எனது வாழ்வு, எனது மரணம் அனைத்தும் அகிலத்தின் அதிபதியாகிய அல்லாஹ்வுக்கே. அவனுக்கு நிகரானவன் இல்லை. இவ்வாறே நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். நான் கட்டுப்பட்டு நடப்பவர்களில் ஒருவன். இறைவா! நீயே அரசன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. நீயே என் அதிபதி. நான் உனது அடிமை. எனக்கே நான் அநீதி இழைத்து விட்டேன். என் குற்றத்தை ஒப்புக் கொண்டேன். எனவே என் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து விடு! உன்னைத் தவிர யாரும் பாவங்களை மன்னிக்கவோ, அழகிய குணங்களின் பால் வழிகாட்டவோ முடியாது. கெட்ட குணங்களை என்னை விட்டும் அகற்றி விடு! உன்னைத் தவிர யாரும் அதனை அகற்ற முடியாது. இதோ வந்து விட்டேன். நன்மைகள் அனைத்தும் உன் கைவசமே உள்ளது. தீமைகள் உன்னைச் சேராது. நான் உன்னைக் கொண்டே உதவி தேடுகிறேன். உன்னளவில் திரும்புகிறேன். நீ பாக்கியம் மிக்கவன். உயர்ந்தவன். உன்னிடம் மன்னிப்புக் கேட்டு உன்னளவில் திரும்புகிறேன். ஆதாரம்: முஸ்லிம் 1290

ருகூவில் ஓத வேண்டியது

اَللّهُمَّ لَكَ رَكَعْتُ وَبِكَ آمَنْتُ وَلَكَ أَسْلَمْتُ خَشَعَ لَكَ سَمْعِيْ وَبَصَرِيْ وَمُخِّيْ وَعَظْمِيْ وَعَصَبِيْ

அல்லாஹும்ம ல(க்)க ர(க்)கஃ(த்)து வபி[B](க்)க ஆமன்(த்)து வல(க்)க அஸ்லம்(த்)து கஷஅ ல(க்)க ஸம்யீ வ ப[B]ஸரீ, வ முக்கீ வ அள்மீ வ அஸபீ[B]

இதன் பொருள் :

இறைவா! உனக்காக நான் ருகூவு செய்கிறேன். உன்னை நம்பினேன். உனக்குக் கட்டுப்பட்டேன். எனது செவியும், பார்வையும், மஜ்ஜையும், என் எலும்பும், என் நரம்பும் உனக்கே பணிந்தன.

ஆதாரம்: முஸ்லிம் 1290

ருகூவில் மற்றொரு துஆ

سُبْحَانَكَ اللّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ اَللّهُمَّ اغْفِرْ لِيْ

ஸுப்[B]ஹான(க்)கல்லாஹும்ம ரப்ப[B]னா வபி[B]ஹம்தி(க்)க அல்லாஹும்மபி[F]ர்லீ

இதன் பொருள் :

இறைவா! என் எஜமானே நீ தூயவன். உன்னைப் புகழ்கிறேன். இறைவா என்னை மன்னித்து விடு.

ஆதாரம்: புகாரி 794, 817, 4293, 4698, 4697

ருகூவில் மற்றொரு துஆ

سُبْحَانَ رَبّيَ الْعَظِيْمِ

ஸுப்[B]ஹான ரப்பி[B]யல் அளீம்.

இதன் பொருள் :

மகத்தான என் இறைவன் தூயவன்.

ஆதாரம்: அஹ்மத் 3334

ருகூவிலிருந்து எழுந்த பின்

اَللّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ مِلْءَ السَّمَاوَاتِ وَمِلْءَ الأَرْضِ وَمِلْءَ مَا بَيْنَهُمَا وَمِلْءَ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ

அல்லாஹும்ம ரப்ப[B]னா ல(க்)கல் ஹம்து மில்அஸ் ஸமாவா(த்)தி வமில்அல் அர்ளி வமில்அ மாபை[B]னஹுமா வமில்அ மாஷிஃ(த்)த மின் ஷையின் ப[B]ஃது

இதன் பொருள் :

இறைவா! எங்கள் அதிபதியே! வானங்களும் பூமியும் அவ்விரண்டுக்கும் இடைப்பட்டவைகளும், மேலும் நீ எதை நாடுகிறாயோ அது நிரம்பும் அளவுக்கு உனக்கே புகழனைத்தும்.

ருகூவிலிருந்து எழுந்த பின் மற்றொரு துஆ

اَللّهُمَّ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ

அல்லாஹும்ம ரப்ப[B]னா வல(க்)கல் ஹம்து

இதன் பொருள் :

இறைவா! எங்கள் அதிபதியே! உனக்கே புகழனைத்தும்.

ஆதாரம்: புகாரி 795, 7346

அல்லது

رَبَّنَا وَلَكَ الْحَمْد

ரப்ப[B]னா வல(க்)கல் ஹம்து

இதன் பொருள் :

எங்கள் அதிபதியே உனக்கே புகழனைத்தும்.

ஆதாரம்: புகாரி 689, 732, 734, 735, 738, 803, 804, 805, 1046, 1066, 1114, 4559

அல்லது

رَبَّنَا لَكَ الْحَمْدُ

ரப்ப[B]னா ல(க்)கல் ஹம்து

இதன் பொருள் :

எங்கள் அதிபதியே! உனக்கே புகழனைத்தும்.

ஆதாரம்: புகாரி 722, 733, 789

அல்லது

اَللّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ

அல்லாஹும்ம ரப்ப[B]னா ல(க்)கல் ஹம்து

இதன் பொருள் :

இறைவா! எங்கள் அதிபதியே உனக்கே புகழனைத்தும்.

ஆதாரம்: புகாரி 796, 3228, 4560

ஸஜ்தாவில் ஓத வேண்டியது

سُبْحَانَ رَبّيَ الأَعْلَى

சுப்[B]ஹான ரப்பி[B]யல் அஃலா ஆதாரம்: அஹ்மத் 3334

ஸஜ்தாவில் ஓத வேண்டிய மற்றொரு துஆ

اَللّهُمَّ اغْفِرْ لِيْ ذَنْبِيْ كُلَّهُ دِقَّهُ وَجِلَّهُ وَأَوَّلَهُ وَآخِرَهُ وَعَلاَنِيَتَهُ وَسِرَّهُ

அல்லாஹும்மஃபிர்லீ தன்பீ[B] குல்லாஹு திக்கஹு வஜில்லஹு வஅவ்வலஹு வஆகிரஹு வஅலானிய(த்)தஹு வஸிர்ரஹு

இதன் பொருள் :

இறைவா! என் பாவத்தில் சிறியதையும், பெரியதையும், முதலாவதையும், கடைசியானதையும், பகிரங்கமானதையும், இரகசியமானதையும் மன்னிப்பாயாக.

ஆதாரம்: முஸ்லிம் 745

ஸஜ்தாவில் ஓத வேண்டிய மற்றொரு துஆ

اَللّهُمَّ لَكَ سَجَدْتُ وَبِكَ آمَنْتُ وَلَكَ أَسْلَمْتُ سَجَدَ وَجْهِيْ لِلَّذِيْ خَلَقَهُ وَصَوَّرَهُ وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ تَبَارَكَ اللهُ أَحْسَنُ الْخَالِقِيْنَ

அல்லாஹும்ம ல(க்)க ஸஜத்து வபி[B](க்)க ஆமன்(த்)து வல(க்)க அஸ்லம்(த்)து ஸஜத வஜ்ஹீ லில்லதீ கல(க்)கஹு வஸவ்வரஹு வஷக்க ஸம்அஹு வப[B]ஸரஹு தபா[B]ர(க்)கல்லாஹு அஹ்ஸனுல் காலி(க்)கீன்

இதன் பொருள் :

இறைவா! உனக்காக ஸஜ்தா செய்தேன். உன்னையே நம்பினேன். உனக்கே கட்டுப்பட்டேன். என் முகத்தைப் படைத்து, வடிவமைத்து, செவிப்புலனையும் பார்வைப்புலனையும் அதில் அமைத்த இறைவனுக்கே என் முகம் பணிந்து விட்டது. அழகிய முறையில் படைக்கும் அல்லாஹ் பாக்கியம் மிக்கவன்.

ஆதாரம்: முஸ்லிம் 1290

ஸஜ்தாவில் ஓத வேண்டிய மற்றொரு துஆ

اَللّهُمَّ أَعُوْذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ وَبِمُعَافَاتِكَ مِنْ عُقُوْبَتِكَ وَأَعُوْذُ بِكَ مِنْكَ لاَ أُحْصِيْ ثَنَاءً عَلَيْكَ أَنْتَ كَمَا أَثْنَيْتَ عَلَى نَفْسِكَ

அல்லாஹும்ம அவூது பி[B]ரிளா(க்)க மின் ஸகதி(க்)க வ பி[B]முஆபா[F](த்)தி(க்)க மின் உகூப[B](த்)தி(க்)க வஅவூது பி[B](க்)க மின்(க்)க லா உஹ்ஸீ ஸனாஅன் அலை(க்)க அன்(த்)த கமா அஸ்னை(த்)த அலா நப்[F]ஸி(க்)க

இதன் பொருள் :

இறைவா! உன் திருப்தியின் மூலம் உன் அதிருப்தியை விட்டு பாதுகாப்புத் தேடுகிறேன். உனது மன்னிப்பின் மூலம் உனது தண்டனையை விட்டு பாதுகாப்புத் தேடுகிறேன். உன்னை என்னால் முழுமையாகப் புகழ இயலாது. நீ உன்னை எவ்வாறு புகழ்ந்து கொண்டாயோ அவ்வாறு இருக்கிறாய்.

ஆதாரம்: முஸ்லிம் 751

ஸஜ்தாவில் ஓத வேண்டிய மற்றொரு துஆ

سُبْحَانَكَ اللّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ اَللّهُمَّ اغْفِرْ لِيْ

ஸுப்[B]ஹான(க்)கல்லாஹும்ம ரப்ப[B]னா வபி[B]ஹம்தி(க்)க அல்லாஹும்மபி[F]ர்லீ

இதன் பொருள் :

அல்லாஹ்வே எங்கள் இறைவா! உன்னைப் புகழ்கிறேன். இறைவா! என்னை மன்னித்து விடு.

ஆதாரம்: புகாரி 794, 817, 4293, 4968, 4967

இரண்டு ஸஜ்தாக்களுக்கிடையில்

رَبِّ اغْفِرْ لِيْ رَبِّ اغْفِرْ لِيْ

ரப்பிஃக்பி[F]ர்லீ ரப்பிஃக்பி[F]ர்லீ

இதன் பொருள் :

இறைவா என்னை மன்னித்து விடு! இறைவா என்னை மன்னித்து விடு!

ஆதாரம்: இப்னுமாஜா 887

இரண்டு ஸஜ்தாக்களுக்கிடையே ஓத வேண்டிய மற்றொரு துஆ

رَبِّ اغْفِرْ لِيْ وَارْحَمْنِيْ وَاجْبُرْنِيْ وَارْزُقْنِيْ وَارْفَعْنِيْ

ரப்பிஃக்பி[F]ர்லீ வர்ஹம்னீ வஜ்பு[B]ர்னீ வர்ஸுக்னீ, வர்ப[F]ஃனீ

இதன் பொருள் :

இறைவா! என்னை மன்னிப்பாயாக! எனக்கு அருள் புரிவாயாக! எனது குறைகளை நிவர்த்தி செய்வாயாக! எனக்கு உணவளிப்பாயாக! என்னை உயர்த்துவாயாக!

ஆதாரம்: இப்னுமாஜா 888

தொழுகை இருப்பில் ஓத வேண்டியது

اَلتَّحِيَّاتُ للهِ وَالصَّلَوَاتُ وَالطَّيّبَاتُ السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ السَّلاَمُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللهِ الصَّالِحِيْنَ أَشْهَدُ أَنْ لاَ إِلهَ إِلاَّ اللهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُوْلُهُ

அத்தஹியா(த்)து லில்லாஹி வஸ்ஸலவாத்து வத்தய்யிபா[B](த்)து அஸ்ஸலாமு அலை(க்)க அய்யுஹன் னபி[B]ய்யு வரஹ்ம(த்)துல்லாஹி வப[B]ரகா(த்)துஹு அஸ்ஸலாமு அலைனா வஅலா இபா[B]தில்லாஹிஸ் ஸாலிஹீன் அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்[B]துஹு வரஸுலுஹு

இதன் பொருள் :

எல்லாவிதமான கன்னியங்களும், தொழுகைகளும், நல்லறங்களும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே உங்கள் மீது சாந்தியும், அல்லாஹ்வின் அருளும், பாக்கியங்களும் உண்டாகட்டும். எங்கள் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் மீதும் சாந்தி உண்டாகட்டும். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.

இருப்பில் ஓதும் மற்றொரு துஆ

மேற்கண்ட அத்தஹியாத்தில்  அஸ்ஸலாமு அலைக அய்யுஹன் னபிய்யு  (நபியே உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்) என்பதற்கு பதிலாக

அஸ்ஸலாமு அலன்னபி[B]ய்யி

நபியின் மீது சாந்தி உண்டாகட்டும்  என்று படர்க்கையாக மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறும் ஓதலாம்.

اَلتَّحِيَّاتُ للهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ السَّلاَمُ عَلَى النَّبِيِّ  وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ السَّلاَمُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللهِ الصَّالِحِيْنَ أَشْهَدُ أَنْ لاَ إِلهَ إِلاَّ اللهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ

ஆதாரம்: புகாரி 6365

தொழுகையில் ஓதும் ஸலவாத்

மேற்கண்ட அத்தஹியாத் ஓதிய பின் கீழ்க்காணும் ஸலவாத்களில் ஏதேனும் ஒன்றை ஓதலாம்.

اَللّهُمَّ صَلّ عَلَى مُحَمَّدٍ وَأَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيْمَ وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَأَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدٌ

  1. அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅஸ்வாஜிஹி வதுர்ரிய்ய(த்)திஹி கமா ஸல்லை(த்)த அலா ஆலி இப்[B]ராஹீம, வபா[B]ரிக் அலா முஹம்மதின் வஅஸ்வாஜிஹி வதுர்ரிய்ய(த்)திஹி கமா பா[B]ரக்த அலா ஆலி இப்[B]ராஹீம இன்ன(க்)க ஹமீதுன் மஜீத்

ஆதாரம்: புகாரி 3369

اَللّهُمَّ صَلّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيْمَ وَعَلَى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدٌ اَللّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيْمَ وَعَلَى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدٌ

  1. அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லை(த்)த அலா இப்[B]ராஹீம, வஅலா ஆலி இப்[B]ராஹீம இன்ன(க்)க ஹமீதுன் மஜீத். அல்லாஹும்ம பா[B]ரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பா[B]ரக்த அலா இப்[B]ராஹீம வஅலா ஆலி இப்[B]ராஹீம இன்ன(க்)க ஹமீதுன் மஜீத்.

ஆதாரம்: புகாரி 3370

اَللّهُمَّ صَلّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدٌ اَللّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدٌ

  1. அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லை(த்)த அலா ஆலி இப்[B]ராஹீம இன்ன(க்)க ஹமீதுன் மஜீத். அல்லாஹும்ம பா[B]ரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பா[B]ரக்த அலா ஆலி இப்[B]ராஹீம இன்ன(க்)க ஹமீதுன் மஜீத்.

ஆதாரம்: புகாரி 4797

اَللّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ عَبْدِكَ وَرَسُولِكَ كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ

  1. அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் அப்[B]தி(க்)க வரஸுலி(க்)க கமா ஸல்லை(த்)த அலா ஆலி இப்[B]ராஹீம வபா[B]ரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பா[B]ரக்த அலா இப்[B]ராஹீம்.

ஆதாரம்: புகாரி 4798, 6358

மேற்கண்ட ஸலவாத்களின் பொருள்:

இறைவா! இப்ராஹீம் நபியின் மீதும், அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிந்தது போல் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் அருள் புரிவாயாக. நீ புகழுக்குரியவன். மகத்துவமிக்கவன். இறைவா இப்ராஹீம் நபிக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் நீ பாக்கியம் செய்தது போல் முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் பாக்கியம் செய்வாயாக. நீ புகழுக்குரியவன். மகத்துவமிக்கவன்.

இருப்பில் ஓதும் கடைசி துஆ

அத்தஹியாத், ஸலவாத் ஓதிய பின் இறுதியாக ஓதுவதற்கு பல துஆக்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளனர். அவற்றில் எதை வேண்டுமானாலும் ஓதலாம்.

اَللّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَأَعُوْذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيْحِ الدَّجَّالِ وَأَعُوْذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَفِتْنَةِ الْمَمَاتِ اَللّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ الْمَأْثَمِ وَالْمَغْرَمِ

  1. அல்லாஹும்ம இன்னீ அவூது பி[B](க்)க மின் அதாபி[B]ல் கப்[B]ரி வஅவூது பி[B](க்)க மின் பி[F]த்ன(த்)தில் மஸீஹித் தஜ்ஜால் வஅவூது பி[B](க்)க மின் பி[F]த்ன(த்)தில் மஹ்யா வபி[F]த்ன(த்)தில் மமாத். அல்லாஹும்ம இன்னீ அவூது பி[B](க்)க மினல் மஃஸமி வல் மஃக்ரமி

இதன் பொருள் :

இறைவா! கப்ரின் வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். தஜ்ஜாலின் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். வாழும் போதும், மரணத்தின் போதும் ஏற்படும் சோதனையிலிருந்து பாதுகாப்புத் தேடுகிறேன். இறைவா! பாவத்தை விட்டும் கடனை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

ஆதாரம்: புகாரி 833

اَللّهُمَّ إِنِّيْ ظَلَمْتُ نَفْسِيْ ظُلْمًا كَثِيْرًا وَلاَ يَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ فَاغْفِرْ لِيْ مَغْفِرَةً مِنْ عِنْدِكَ وَارْحَمْنِيْ إِنَّك أَنْتَ الْغَفُوْرُ الرَّحِيْمُ

  1. அல்லாஹும்ம இன்னீ ளலம்(த்)து நப்[F]ஸீ ளுல்மன் கஸீரன் வலா யஃக்பி[F]ருத் துனூப[B] இல்லா அன்(த்)த, ப[F]க்பி[F]ர்லீ மஃக்பி[F]ரதன் மின் இன்தி(க்)க வர்ஹம்னீ இன்ன(க்)க அன்(த்)தல் கபூ[F]ருர் ரஹீம்.

இதன் பொருள் :

இறைவா! எனக்கே நான் அதிகமான அநீதிகளைச் செய்து விட்டேன். உன்னைத் தவிர யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது. எனவே உன் புறத்திலிருந்து எனக்கு மன்னிப்பு வழங்கு. எனக்கு அருள் புரிவாயாக. நீயே மன்னிப்பவன். நிகரற்ற அன்புடையவன்.

ஆதாரம்: புகாரி 834, 6326, 7388

اَللّهُمَّ اغْفِرْ لِيْ مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ وَمَا أَسْرَفْتُ وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّيْ أَنْتَ الْمُقَدِّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ

  1. அல்லாஹும்மஃக்பி[F]ர்லீ மா கத்தம்(த்)து வமா அக்கர்(த்)து வமா அஸ்ரர்(த்)து வமா அஃலன்(த்)து வமா அஸ்ரப்[F](த்)து அன்(த்)த அஃலமு பி[B]ஹி மின்னீ அன்(த்)தல் முகத்திமு வ அன்(த்)தல் முஅக்கிரு லாயிலாஹ இல்லா அன்(த்)த

இதன் பொருள் :

நான் முந்திச் செய்ததையும், பிந்திச் செய்வதையும், நான் இரகசியமாகச் செய்ததையும், வெளிப்படையாகச் செய்ததையும், நான் வரம்பு மீறி நடந்து கொண்டதையும், என்னிடமிருந்து எதை நீ அறிந்து வைத்துள்ளாயோ அதையும் மன்னிப்பாயாக. நீயே முற்படுத்துபவன். நீயே பிற்படுத்துபவன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை.

ஆதாரம்: திர்மிதீ 3343

கடமையான தொழுகை முடிந்த பின்

لاَ إِلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ اَللّهُمَّ لاَ مَانِعَ لِمَا أَعْطَيْتَ وَلاَ مُعْطِيَ لِمَا مَنَعْتَ وَلاَ يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ

லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து வஹவ அலா குல்லி ஷையின் கதீர். அல்லாஹும்ம லாமானிஅ லிமா அஃதை(த்)த வலாமுஃதிய லிமா மனஃ(த்)த வலா யன்ப[F]வு தல்ஜத்தி மின்(க்)கல் ஜத்

இதன் பொருள் :

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் இல்லை. அவனுக்கே அதிகாரம். புகழும் அவனுக்கே. அவன் அனைத்துப் பொருட் களின் மீதும் ஆற்றல் உடையவன். இறைவா! நீ கொடுத்ததைத் தடுப்பவன் இல்லை. நீ தடுத்ததைக் கொடுப்பவன் இல்லை. செல்வமுடைய எவரது செல்வமும் உன்னிடம் பயனளிக்காது.

ஆதாரம்: புகாரி 844, 6330

தொழுது முடித்தவுடன்

أَسْتَغْفِرُ اللهَ

அஸ்தஃக்பி[F]ருல்லாஹ்

(அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுகிறேன்) என்று மூன்று தடவை கூற வேண்டும். பின்னர்

اَللّهُمَّ أَنْتَ السَّلاَمُ وَمِنْكَ السَّلاَمُ تَبَارَكْتَ ذَا الْجَلاَلِ وَالاِكْرَامِ

அல்லாஹும்ம அன்(த்)தஸ் ஸலாம் வமின்கஸ் ஸலாம் தபா[B]ரக்(த்)த தல் ஜலாலி வல் இக்ராம்

எனக் கூற வேண்டும்.

இதன் பொருள் :

இறைவா! நீயே சாந்தியளிப்பவன். உன்னிடமிருந்தே சாந்தி ஏற்படும். மகத்துவமும், கண்ணியமும் உடையவனே நீ பாக்கியமிக்கவன்.

ஆதாரம்: முஸ்லிம் 931

اَللّهُمَّ إِنّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْجُبْنِ وَأَعُوْذُ بِكَ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ وَأَعُوْذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا وَأَعُوْذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ

அல்லாஹும்ம இன்னீ அவூது பி[B](க்)க மினல் ஜுபு[B]னி வஅவூது பி[B](க்)க அன் உரத்த இலா அர்தலில் உமுரி வஅவூது பி[B](க்)க மின் பி[F]த்னதித் துன்யா வஅவூது பி[B](க்)க மின் அதாபி[B]ல் கப்[B]ரி

இதன் பொருள் :

இறைவா! கோழைத்தனத்தை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன். தள்ளாத வயது வரை நான் வாழ்வதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். இவ்வுலகின் சோதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். மண்ண றையின் வேதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

ஆதாரம்: புகாரி 2822

رَبّ قِنِيْ عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ عِبَادَكَ

ரப்பி[B] கினீ அதாப[B](க்)க யவ்ம தப்[B]அஸு இபா[B]த(க்)க

இதன் பொருள் :

என் இறைவா! உனது அடியார்களை நீ எழுப்பும் நாளில் உனது வேதனையிலிருந்து என்னைக் காப்பாயாக!

ஆதாரம்: முஸ்லிம் 1290

பல்வேறு சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் (ஸல்) செய்த துஆக்கள்

நாம் சந்திக்கின்ற எல்லாப் பிரச்சினைகளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் சந்தித்துள்ளனர். அவற்றைச் சந்திக்கும் போது அல்லாஹ்விடம் அவர்கள் பிரார்த்தனை செய்துள்ளனர். அது போன்ற பிரச்சினைகளை நாம் சந்திக்கும் போது அந்தப் பிரார்த்தனைகளில் தகுதியானதைத் தேர்வு செய்யலாம்.

அந்தப் பிரார்த்தனைகளின் தமிழாக்கத்தைக் கவனித்து இதை நாமே முடிவு செய்து கொள்ளலாம்.

اَللّهُمَّ اجْعَلْ فِيْ قَلْبِيْ نُوْرًا وَفِيْ بَصَرِيْ نُوْرًا وَفِيْ سَمْعِيْ نُوْرًا وَعَنْ يَمِينِيْ نُوْرًا وَعَنْ يَسَارِيْ نُوْرًا وَفَوْقِيْ نُوْرًا وَتَحْتِيْ نُوْرًا وَأَمَامِيْ نُوْرًا وَخَلْفِيْ نُوْرًا وَاجْعَلْ لِيْ نُوْرًا

  1. அல்லாஹும்மஜ்அல் பீ[F] கல்பீ[B] நூரன், வபீ[F] ப[B]ஸரீ நூரன், வபீ[F] ஸம்யீ நூரன், வஅன் யமீனீ நூரன், வஅன் யஸாரீ நூரன் வப[F]வ்கீ நூரன் வ(த்)தஹ்(த்)தீ நூரன் வஅமாமீ நூரன் வகல்பீ[F] நூரன் வஜ்அல் லீ நூரன்.

இதன் பொருள் :

இறைவா! என் உள்ளத்தில் ஒளியை ஏற்படுத்து! எனது பார்வையிலும், எனது செவியிலும், என் வலது புறமும், இடது புறமும், எனக்கு மேலேயும், எனக்குக் கீழேயும், எனக்கு முன் புறமும், எனக்குப் பின்புறமும் ஒளியை ஏற்படுத்து! எனக்கு முழுமையாக ஒளியை ஏற்படுத்து!

ஆதாரம்: புகாரி 6316

اَللّهُمَّ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

  1. அல்லாஹும்ம ரப்ப[B]னா ஆ(த்)தினா பி[F]த்துன்யா ஹஸன(த்)தன் வபி[F]ல் ஆகிர(த்)தி ஹஸன(த்)தன் வ(க்)கினா அதாப[B]ன்னார்.

இதன் பொருள் :

இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக. நரகின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!

ஆதாரம்: புகாரி 4522, 6389

اَللّهُمَّ إِنّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ وَالْعَجْزِ وَالْكَسَلِ وَالْبُخْلِ وَالْجُبْنِ وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ

  1. அல்லாஹும்ம இன்னீ அவூது பி[B](க்)க மினல் ஹம்மி வல் ஹஸனி வல் அஜ்ஸி வல் கஸலி வல் பு[B]க்லி வல் ஜுபு[B]னி வளளஇத் தைனி வகலப[B](த்)திர் ரிஜால்

இதன் பொருள் :

இறைவா! துக்கம், கவலை, பலவீனம், சோம்பல், கஞ்சத்தனம், கோழைத்தனம், கடன் சுமை, மற்றவர்களின் அடக்குமுறை ஆகிய அனைத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

ஆதாரம்: புகாரி 5425, 6369

رَبّ اغْفِرْ لِيْ خَطِيْئَتِيْ وَجَهْلِيْ وَإِسْرَافِيْ فِيْ أَمْرِيْ كُلِّهِ وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّيْ اَللّهُمَّ اغْفِرْ لِيْ خَطَايَايَ وَعَمْدِيْ وَجَهْلِيْ وَهَزْلِيْ وَكُلُّ ذَلِكَ عِنْدِيْ اَللّهُمَّ اغْفِرْ لِيْ مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ أَنْتَ الْمُقَدِّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ وَأَنْتَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ

  1. ரப்பிஃக்பி[F]ர்லீ கதீஅ(த்)தீ வஜஹ்லீ வஇஸ்ராபீ[F] பீ[F] அம்ரீ குல்லிஹி வமா அன்(த்)த அஃலமு பி[B]ஹி மின்னீ அல்லாஹும்மஃக்பி[F]ர் லீ கதாயாய வஅம்தீ வஜஹ்லீ வஹஸ்லீ வகுல்லு தாலி(க்)க இன்தீ அல்லாஹும்மஃக்பி[F]ர்லீ மா கத்தம்(த்)து வமா அக்கர்(த்)து வமா அஸ்ரர்(த்)து வமா அஃலன்(த்)து அன்(த்)தல் முகத்திமு வ அன்(த்)தல் முஅக்கிரு வஅன்(த்)த அலா குல்லி ஷையின் கதீர்.

இதன் பொருள் :

என் இறைவா! என் தவறையும், என் அறியாமையையும், எனது காரியங்கள் அனைத்தையும், நான் வரம்பு மீறியதையும், என்னிடமிருந்து ஏற்பட்டதாக நீ அறிந்த அனைத்தையும் மன்னிப்பாயாக. இறைவா! எனது தவறுகளையும், வேண்டுமென்று செய்ததையும், அறியாமையால் செய்ததையும், விளையாட்டாக செய்ததையும் மன்னிப்பாயாக. இறைவா! நான் முந்திச் செய்ததையும், பிந்திச் செய்வதையும், இரகசியமாகச் செய்ததையும், வெளிப்படையாகச் செய்ததையும் மன்னிப்பாயாக. நீயே முற்படுத்துபவன். நீயே பிற்படுத்துப வன். நீயே அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றல் உள்ளவன்.

ஆதாரம்: புகாரி 6398

اَللّهُمَّ مُصَرّفَ الْقُلُوْبِ صَرّفْ قُلُوْبَنَا عَلَى طَاعَتِكَ

  1. அல்லாஹும்ம முஸர்ரிப[F]ல் குலூபி[B] ஸர்ரிப்[F] குலூப[B]னா அலா தாஅ(த்)தி(க்)க

இதன் பொருள் :

இறைவா! உள்ளங்களைத் திருப்புபவனே! எங்கள் உள்ளங்களை உனது வழிபாட்டின் பால் திருப்புவாயாக.

ஆதாரம்: முஸ்லிம் 4798

اَللّهُمَّ لَكَ أَسْلَمْتُ وَبِكَ آمَنْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُ وَإِلَيْكَ أَنَبْتُ وَبِكَ خَاصَمْتُ اَللّهُمَّ إِنّي أَعُوْذُ بِعِزَّتِكَ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ أَنْ تُضِلَّنِيْ أَنْتَ الْحَيُّ الَّذِي لاَ يَمُوْتُ وَالْجِنُّ وَالاِنْسُ يَمُوْتُوْنَ

  1. அல்லாஹும்ம லக அஸ்லம்(த்)து வபி[B](க்)க ஆமன்(த்)து வஅலை(க்)க தவக்கல்(த்)து வஇலை(க்)க அனப்[B](த்)து வபி[B](க்)க காஸம்(த்)து அல்லாஹும்ம இன்னீ அவூது பி[B]இஸ்ஸ(த்)தி(க்)க லாயிலாஹ இல்லா அன்(த்)த அன்துளில்லனீ அன்(த்)தல் ஹய்யுல்லதீ லாயமூ(த்)து, வல்ஜின்னு வல் இன்ஸு யமூ(த்)தூன.

இதன் பொருள் :

இறைவா! உனக்குக் கட்டுப்பட்டேன். உன்னையே நம்பினேன். உன் மீதே நம்பிக்கை வைத்தேன். உன்னிடமே திரும்பினேன். உன்னிடமே வழக்குரைக்கிறேன். இறைவா என்னை நீ வழி தவறச் செய்யாதிருக்க உனது கன்னியத்தைக் கொண்டு பாதுகாப்புத் தேடுகிறேன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. நீ தான் மர ணிக்காது உயிருடன் இருப்பவன். மனிதரும், ஜின்களும் மரணிப்பவர்கள்.

ஆதாரம்: முஸ்லிம் 4894

اَللّهُمَّ أَصْلِحْ لِيْ دِينِيَ الَّذِيْ هُوَ عِصْمَةُ أَمْرِيْ وَأَصْلِحْ لِيْ دُنْيَايَ الَّتِيْ فِيْهَا مَعَاشِيْ وَأَصْلِحْ لِيْ آخِرَتِيَ الَّتِيْ فِيْهَا مَعَادِيْ وَاجْعَلِ الْحَيَاةَ زِيَادَةً لِيْ فِيْ كُلّ خَيْرٍ وَاجْعَلِ الْمَوْتَ رَاحَةً لِيْ مِنْ كُلّ شَرّ

  1. அல்லாஹும்ம அஸ்லிஹ் லீ தீனியல்லதீ ஹுவ இஸ்ம(த்)து அம்ரீ, வஅஸ்லிஹ் லீ துன்யாயல்ல(த்)தீ பீ[F]ஹா மஆஷீ, வஅஸ்லிஹ் லீ ஆகிர(த்)தியல்ல(த்)தீ பீ[F]ஹா மஆதீ வஜ்அலில் ஹயா(த்)த ஸியாத(த்)தன் லீ பீ[F] குல்லி கைரின் வஜ்அலில் மவ்(த்)த ராஹ(த்)தன் லீ மின் குல்லி ஷர்ரின்.

இதன் பொருள் :

இறைவா! எனது காரியங்களின் கவசமாக உள்ள எனது நடத்தையைச் சீர் படுத்துவாயாக. நான் வாழ்கின்ற இவ்வுலகையும் எனக்குச் சீர்படுத்துவாயாக. நான் திரும்பிச் செல்ல இருக்கிற எனது மறுமையையும் சீர்படுத்துவாயாக. எனது வாழ் நாளை ஒவ்வொரு நன்மையையும் அதிகப்படுத்தக் கூடியதாக ஆக்கு. எல்லா தீமையி லிருந்தும் எனக்கு விடுதலையளிப்பதாக எனது மரணத்தை ஆக்கு!

ஆதாரம்: முஸ்லிம் 4897

اَللّهُمَّ إِنّيْ أَسْأَلُكَ الْهُدَى وَالتُّقَى وَالْعَفَافَ وَالْغِنَى

  1. அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)கல் ஹுதா வத்து(க்)கா வல் அபா[F]ப[F] வல்கினா

இதன் பொருள் :

இறைவா! உன்னிடம் நேர்வழியையும், இறையச்சத்தையும், சுயமரியாதையையும், செல்வத்தையும் வேண்டுகிறேன்.

ஆதாரம்: முஸ்லிம் 4898

اَللّهُمَّ إِنّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَالْجُبْنِ وَالْبُخْلِ وَالْهَرَمِ وَعَذَابِ الْقَبْرِ اَللّهُمَّ آتِ نَفْسِيْ تَقْوَاهَا وَزَكِّهَا أَنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا أَنْتَ وَلِيُّهَا وَمَوْلاَهَا اَللّهُمَّ إِنّيْ أَعُوْذُ بِكَ مِنْ عِلْمٍ لاَ يَنْفَعُ وَمِنْ قَلْبٍ لاَ يَخْشَعُ وَمِنْ نَفْسٍ لاَ تَشْبَعُ وَمِنْ دَعْوَةٍ لاَ يُسْتَجَابُ لَهَا

  1. அல்லாஹும்ம இன்னீ அவூது பி[B](க்)க மினல் அஜ்ஸி வல்கஸலி வல்ஜுபு[B]னி வல்பு[B]க்லி வல்ஹரமி வஅதாபி[B]ல் கப்[B]ரி. அல்லாஹும்ம ஆ(த்)தி நப்[F]ஸீ தக்வாஹா வஸக்கிஹா அன்(த்)த கைரு மன் ஸக்காஹா அன்(த்)த வலிய்யுஹா வமவ் லாஹா, அல்லாஹும்ம இன்னீ அவூது பி[B](க்)க மின் இல்மின் லாயன்ப[F]வு வமின் கல்பி[B]ன் லாயக்ஷவு வமின் நப்[F]ஸின் லா தஷ்ப[B]வு வமின் தஃவ(த்)தின் லா யுஸ்(த்)தஜாபு[B] லஹா

இதன் பொருள் :

இறைவா! பலவீனம், சோம்பல், கோழைத்தனம், கஞ்சத்தனம், முதுமை, மண்ணறையின் வேதனை ஆகியவற்றிலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். இறைவா! எனது உள்ளத்துக்கு இறையச்சத்தை வழங்கி விடு! அதைத் தூய்மைப்படுத்து! தூய்மைப்படுத்துவோரில் நீயே சிறந்தவன். நீ தான் அதன் பொறுப்பாளன். அதன் எஜமானன். இறைவா! பயனற்ற கல்வியை விட்டும், அடக்கமில்லாத உள்ளத்தை விட்டும், நிறைவடையாத ஆத்மாவை விட்டும், அங்கீகரிக்கப்படாத துஆவை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

ஆதாரம்: முஸ்லிம் 4899

اَللّهُمَّ إِنّيْ أَعُوْذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ وَتَحَوُّلِ عَافِيَتِكَ وَفُجَائَةِ نِقْمَتِكَ وَجَمِيعِ سَخَطِكَ

  1. அல்லாஹும்ம இன்னீ அவூது பி[B](க்)க மின் ஸவாலி நிஃமதி(க்)க வதஹவ்வுலி ஆபி[F]ய(த்)தி(க்)க வபு[F]ஜாஅதி நிக்ம(த்)தி(க்)க வஜமீஇ ஸகதி(க்)க

இதன் பொருள் :

இறைவா! உனது அருள் நீங்குவதை விட்டும், உனது நன்மை மாறி விடுவதை விட்டும், உனது தண்டனை திடீரென வருவதை விட்டும், உனது அனைத்து கோபத்திலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

ஆதாரம்: முஸ்லிம் 4922

பாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆ

கீழ்க்காணும் துஆவை ஒருவன் பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான். இரவில் ஓதி விட்டு இரவிலேயே மரணித்து விட்டால் அவனும் சொர்க்கவாசியாவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

اَللّهُمَّ أَنْتَ رَبّي لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ خَلَقْتَنِيْ وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوْءُ لَكَ بِذَنْبِيْ فَاغْفِرْ لِيْ فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ

அல்லாஹும்ம அன்(த்)த ரப்பீ[B] லாயிலாஹ இல்லா அன்(த்)த கலக்(த்)தனீ வஅன அப்[B]து(க்)க வஅன அலா அஹ்தி(க்)க வவஃதி(க்)க மஸ்ததஃ(த்)து அவூது பி[B](க்)க மின்ஷர்ரி மாஸனஃ(த்)து அபூ[B]வு ல(க்)க பி[B]னிஃமதி(க்)க அலய்ய, வஅபூ[B]வு ல(க்)க பி[B]தன்பீ[B] ப[F]க்பி[F]ர்லீப[F]இன்னஹு லா யஃக்பி[F]ருத் துனூப[B] இல்லா அன்(த்)த

இதன் பொருள் :

இறைவா! நீயே என் எஜமான். உன்னைத் தவிர வணக்கத்திற்குரி யவன் யாருமில்லை. என்னை நீயே படைத்தாய். நான் உனது அடிமை. உனது உடன்படிக்கையின்படியும் வாக்குறுதியின் படியும் என்னால் இயன்ற வரை நடப்பேன். நான் செய்த தீமையை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ எனக்குச் செய்த அருளோடும் நான் செய்த பாவத்தோடும் உன்னிடம் மீள்கிறேன். எனவே என்னை மன்னிப்பாயாக! உன்னைத் தவிர யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது.

ஆதாரம்: புகாரி 6309

அனைத்து துன்பங்களின் போதும் ஓத வேண்டியவை

அனைத்து வகையான துன்பங்களின் போதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கீழ்க்காணும் துஆவை ஓதியுள்ளனர். (புகாரி 6345)

لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ الْعَظِيْمُ الْحَلِيْمُ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ السَّمَوَاتِ وَالأَرْضِ وَرَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ

லாயிலாஹ இல்லல்லாஹூல் அளீமுல் ஹலீம் லாயிலாஹ இல்லல்லாஹூ ரப்பு[B]ஸ் ஸமாவா(த்)தி வல் அர்ளி வரப்பு[B]ல் அர்ஷில் அளீம்.

அல்லது கீழ்க்காணும் துஆவை ஓதலாம்.

(புகாரி 6346)

لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ الْعَظِيْمُ الْحَلِيْمُ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ السَّمَوَاتِ وَرَبُّ الأَرْضِ وَرَبُّ  الْعَرْشِ الْكَرِيْمِ

லாயிலாஹ இல்லல்லாஹூல் அளீமுல் ஹலீம் லாயிலாஹ இல்லல்லாஹூ ரப்பு[B]ல் அர்ஷில் அளீம். லாயிலாஹ இல்லாஹூ ரப்பு[B]ஸ் ஸமாவா(த்)தி வரப்பு[B]ல் அர்ளி வரப்பு[B]ல் அர்ஷில் கரீம்.

பொருள் : வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் சகிப்புத் தன்மையும், மகத்துவமும் மிக்கவன். வானங்கள், பூமி, மகத்தான அர்ஷு ஆகியவற்றின் அதிபதியான அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை.

திருக்குர்ஆனில் இடம் பெற்ற துஆக்கள்

நபிமார்கள், நல்லடியார்கள் செய்த பல்வேறு துஆக்களை திருக்குர்ஆனில் அல்லாஹ் எடுத்துக் கூறுகிறான். அந்த துஆக்களை எந்தச் சந்தர்ப்பத்தில் ஓத வேண்டும் என்பதை அதன் பொருளை வைத்தே அறிந்து கொள்ளலாம். அந்த துஆ இடம் பெற்ற வசனத்தின் முன் பின் பகுதிகளைப் பார்த்தும் அறிந்து கொள்ளலாம்.

إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ(5) اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ(6) صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلاَ الضَّالِّيْنَ(7)

உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம். எங்களை நேர் வழியில் செலுத்துவாயாக! அது நீ யாருக்கு அருள் புரிந்தாயோ அவர்கள் வழி. அவர்கள் (உன்னால்) கோபிக்கப் படாதவர்கள், மற்றும் பாதை மாறிச் செல்லாதவர்கள்.

திருக்குர்ஆன் 1:57

رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً لَكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ(128)2

எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும், எங்கள் வழித் தோன்றல்களை உனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக! எங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டித் தருவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன் 2:128

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ(201)2

எங்கள் இறைவா! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் நன்மையை (வழங்குவாயாக!) நரக வேதனையிருந்து எங்களைக் காப்பாயாக!

திருக் குர்ஆன் 2:201

رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ(250)2

எங்கள் இறைவா! எங்கள் மீது சகிப்புத் தன்மையை ஊற்றுவாயாக! எங்கள் பாதங்களை நிலைப்படுத்துவாயாக! (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக!

திருக் குர்ஆன் 2:250

رَبَّنَا لاَ تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلاَ تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِنَا رَبَّنَا وَلاَ تُحَمِّلْنَا مَا لاَ طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلاَنَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ (286)2

எங்கள் இறைவா! நாங்கள் மறந்து விட்டாலோ, தவறு செய்து விட்டாலோ எங்களைத் தண்டித்து விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சிரமத்தைச் சுமத்தியது போல் எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு வமையில்லாததை எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் பிழைகளைப் பொறுத்து எங்களை மன்னிப்பாயாக! அருள் புரிவாயாக! நீயே எங்கள் அதிபதி. (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு நீ உதவுவாயாக!

திருக் குர்ஆன் 2:286

رَبَّنَا لاَ تُزِغْ قُلُوْبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ (8)3

எங்கள் இறைவா! எங்களுக்கு நேர் வழி காட்டிய பின் எங்கள் உள்ளங்களைத் தடம் புரளச் செய்து விடாதே! எங்களுக்கு உன் அருளை வழங்குவாயாக! நீ மாபெரும் வள்ளல்.

திருக் குர்ஆன் 3:8

رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ(16)3

எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! நரக வேதனையிருந்து எங்களைக் காப்பாயாக!

திருக் குர்ஆன் 3:16

اَللّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشَاءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ(26)3

அல்லாஹ்வே! ஆட்சியின் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொள்கிறாய். நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய். நாடியோரை இழிவு படுத்துகிறாய். நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.

திருக் குர்ஆன் 3:26

رَبّ هَبْ لِيْ مِنْ لَدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيْعُ الدُّعَاءِ(38)3

இறைவா! உன்னிடமிருந்து எனக்கொரு தூய குழந்தையைத் தருவாயாக! நீ வேண்டுதலைச் செவியுறுபவன்.

திருக் குர்ஆன் 3:38

رَبَّنَا آمَنَّا بِمَا أَنْزَلْتَ وَاتَّبَعْنَا الرَّسُوْلَ فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِيْنَ(53)3

எங்கள் இறைவா! நீ அருளியதை நம்பினோம். இத்தூதரைப் பின்பற்றினோம். எங்களை இதற்கு சாட்சிகளாகப் பதிவு செய்து கொள்!

திருக் குர்ஆன் 3:53

رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِيْ أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِيْنَ (147)3

எங்கள் இறைவா! எங்கள் பாவங்களையும், எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறியதையும் மன்னிப்பாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக!

திருக் குர்ஆன் 3:147

رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلاً سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ(191)رَبَّنَا إِنَّكَ مَنْ تُدْخِلِ النَّارَ فَقَدْ أَخْزَيْتَهُ وَمَا لِلظَّالِمِيْنَ مِنْ أَنْصَارٍ (192)رَبَّنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِيْ لِلاِيمَانِ أَنْ آمِنُوا بِرَبِّكُمْ فَآمَنَّا رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الأَبْرَارِ(193)رَبَّنَا وَآتِنَا مَا وَعَدْتَنَا عَلَى رُسُلِكَ وَلاَ تُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ إِنَّكَ لاَ تُخْلِفُ الْمِيْعَادَ(194)3

எங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லை; நீ தூயவன்; எனவே நரக வேதனையிருந்து எங்களைக் காப்பா யாக! எங்கள் இறைவா! நீ நரகத்திற்கு அனுப்புபவனை இழிவு படுத்தி விட்டாய். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளரும் இல்லை. உங்கள் இறைவனை நம்புங்கள்! என்ற நம்பிக்கையை நோக்கி அழைத்தவரின் அழைப்பைச் செவியுற்றோம். எங்கள் இறைவா! உடனே நம்பிக்கை கொண்டோம். எங்கள் இறைவா! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங் களை விட்டு அழிப்பாயாக! நல்லோருடன் எங்களைக் கைப்பற்று வாயாக! எங்கள் இறைவா! உன் தூதர்கள் வழியாக நீ எங்களுக்கு வாக்களித்ததை எங்களுக்கு வழங்குவாயாக! கியாமத் நாளில்1 எங்களை இழிவு படுத்தாதே! நீ வாக்கு மீற மாட்டாய்.

திருக் குர்ஆன் 3:191, 192 193 194

رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَل لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَل لَنَا مِنْ لَدُنْكَ نَصِيْرًا(75)4

எங்கள் இறைவா! அநீதி இழைத்தோர் உள்ள இவ்வூரிருந்து எங்களை வெளியேற்றுவாயாக! உன்னிடமிருந்து பொறுப்பாளரை எங்களுக்கு ஏற்படுத்து வாயாக! உன்னிடமிருந்து உதவியாளரையும் எங்களுக்கு ஏற்படுத்துவாயாக!

திருக் குர்ஆன் 4:75

رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِيْنَ(83)5

எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே எங்களை சான்று கூறுவோருடன் பதிவு செய்வாயாக!

திருக் குர்ஆன் 5:83

رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُوْنَنَّ مِنَ الْخَاسِرِيْنَ(23)7

எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கு இழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்து, அருள் புரியவில்லையானால் நஷ்டமடைந்தோராவோம்.

திருக் குர்ஆன் 7:23

رَبَّنَا افْتَحْ بَيْنَنَا وَبَيْنَ قَوْمِنَا بِالْحَقّ وَأَنْتَ خَيْرُ الْفَاتِحِيْنَ(89)7

எங்கள் இறைவா! எங்களுக்கும், எங்கள் சமுதாயத்திற்குமிடையில் நியாயமான தீர்ப்பை வழங்குவாயாக! நீயே தீர்ப்பளிப்போரில் சிறந்தவன்.

திருக் குர்ஆன் 7:89

رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِيْنَ (126)7

எங்கள் இறைவா! எங்களுக்கு பொறுமையைத் தருவாயாக! எங்களை முஸ்ம்களாக மரணிக்கச் செய்வாயாக!

திருக் குர்ஆன் 7: 126

لَئِنْ لَمْ يَرْحَمْنَا رَبُّنَا وَيَغْفِرْ لَنَا لَنَكُونَنَّ مِنْ الْخَاسِرِينَ(149)7

எங்கள் இறைவன் எங்களுக்கு அருள் புரிந்து, எங்களை மன்னிக்கா விட்டால் நஷ்டமடைந்தோராவோம்.

திருக் குர்ஆன் 7:149

وَاكْتُبْ لَنَا فِي هَذِهِ الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ (156)7

எங்களுக்கு இவ்வுலகிலும், மறுமையிலும் நன்மையைப் பதிவு செய்வாயாக! நாங்கள் உன்னிடம் திரும்பி விட்டோம்.

திருக் குர்ஆன் 7:156

حَسْبِي اللهُ لاَ إِلَهَ إِلاَّ هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ(129)9

எனக்கு அல்லாஹ் போதுமானவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை; அவனையே சார்ந்துள்ளேன்; அவனே மகத்தான அர்ஷின் இறைவன்.

திருக் குர்ஆன் 9:129

عَلَى اللهِ تَوَكَّلْنَا رَبَّنَا لاَ تَجْعَلْنَا فِتْنَةً لِلْقَوْمِ الظَّالِمِيْنَ وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنْ الْقَوْمِ الْكَافِرِينَ (85,86)10

அல்லாஹ்வையே சார்ந்து விட்டோம். எங்கள் இறைவா! அநீதி இழைத்த கூட்டத் தின் கொடுமைக்கு எங்களை ஆளாக்கி விடாதே! உனது அருளால் (உன்னை) மறுக்கும் கூட்டத்திடமிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக!.

திருக் குர்ஆன் 10:85, 86

بِاِسْمِ اللهِ مَجْرَاهَا وَمُرْسَاهَا إِنَّ رَبِّي لَغَفُورٌ رَحِيمٌ(41)11

அல்லாஹ்வின் பெயராலேயே இது ஓடுவதும், நிற்பதும் உள்ளது. என் இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக் குர்ஆன் 11:41

فَاطِرَ السَّمَاوَاتِ وَالأَرْضِ أَنْتَ وَلِيّيْ فِي الدُّنْيَا وَالآخِرَةِ تَوَفَّنِيْ مُسْلِمًا وَأَلْحِقْنِيْ بِالصَّالِحِينَ (101)12

வானங்களையும், பூமியையும் படைத்தவனே! நீயே இவ் வுலகிலும், மறுமையிலும் எனது பாதுகாவலன். என்னை முஸ்மாகக் கைப்பற்றுவாயாக! நல்லோர்களில் என்னைச் சேர்ப்பாயாக!

திருக் குர்ஆன் 12:101

رَبِّ اجْعَلْنِيْ مُقِيْمَ الصَّلاَةِ وَمِنْ ذُرِّيَّتِيْ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ(40)14

رَبَّنَا اغْفِرْ لِيْ وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِيْنَ يَوْمَ يَقُوْمُ الْحِسَابُ(41)14

என் இறைவா! என்னையும், என் சந்ததிகளிலும் தொழுகையை நிலை நாட்டுவோராக ஆக்குவாயாக! எங்கள் இறைவா! எனது பிரார்த்தனையை ஏற்பாயாக! எங்கள் இறைவா! என்னையும், எனது பெற்றோரையும், நம்பிக்கை கொண்டோரையும் விசாரணை நடைபெறும் நாளில் மன்னிப்பாயாக!

திருக் குர்ஆன் 14:40,41

رَبّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِيْ صَغِيْرًا (24)17

சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள்புரிவாயாக!

திருக் குர்ஆன் 17:24

رَبَّنَا آتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا(10)18

எங்கள் இறைவா! உன் அருளை எங்களுக்கு வழங்குவாயாக! எங்கள் பணியை எங்களுக்குச் சீராக்குவாயாக!

திருக் குர்ஆன் 18:10

رَبّ إِنِّيْ وَهَنَ الْعَظْمُ مِنِّيْ وَاشْتَعَلَ الرَّأْسُ شَيْبًا وَلَمْ أَكُنْ بِدُعَائِكَ رَبّ شَقِيًّا(4) وَإِنِّيْ خِفْتُ الْمَوَالِيَ مِنْ وَرَائِيْ وَكَانَتْ امْرَأَتِيْ عَاقِرًا فَهَبْ لِيْ مِنْ لَدُنْكَ وَلِيًّا(5)19

என் இறைவா! என் எலும்பு பலவீனமடைந்து விட்டது. தலையும் நரையால் மின்னுகிறது. என் இறைவா! உன்னிடம் பிரார்த்தித்ததில் நான் துர்ப்பாக்கியசாயாக இருந்ததில்லை. எனக்குப் பின் உறவினர்கள் குறித்து நான் அஞ்சுகிறேன். என் மனைவியும் பிள்ளைப்பேறு அற்றவளாக இருக்கிறார். எனவே ஒரு பொறுப்பாளரை நீ எனக்கு வழங்குவாயாக!

திருக் குர்ஆன்19:4,5

رَبّ اشْرَحْ لِيْ صَدْرِيْ(25) وَيَسّرْ لِيْ أَمْرِيْ (26) وَاحْلُلْ عُقْدَةً مِنْ لِسَانِيْ (27) يَفْقَهُوْا قَوْلِيْ(28)20

என் இறைவா! எனது உள்ளத்தை எனக்கு விரிவுபடுத்து! எனது பணியை எனக்கு எளிதாக்கு! எனது நாவில் உள்ள முடிச்சை அவிழ்த்து விடு! (அப்போது தான்) எனது சொல்லை அவர்கள் புரிந்து கொள்வார்கள்.

திருக் குர்ஆன் 20:25,26,27,28

رَبّ زِدْنِيْ عِلْمًا(114)20

என் இறைவா! எனக்குக் கல்வியை அதிகப்படுத்து!

திருக் குர்ஆன் 20:114

أَنّيْ مَسَّنِيَ الضُّرُّ وَأَنْتَ أَرْحَمُ الرَّاحِمِيْنَ (83)21

எனக்குத் துன்பம் நேர்ந்து விட்டது. நீ கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன்.

திருக் குர்ஆன் 21:83

لاَ إِلهَ إِلاَّ أَنْتَ سُبْحَانَكَ إِنِّيْ كُنتُ مِنْ الظَّالِمِيْنَ (87)21

உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன்.

திருக் குர்ஆன் 21:87

رَبّ لاَ تَذَرْنِيْ فَرْدًا وَأَنْتَ خَيْرُ الْوَارِثِيْنَ (89)21

என் இறைவா! என்னைத் தனியாளாக விட்டு விடாதே! நீ மிகச் சிறந்த உரிமையாளன்.

திருக் குர்ஆன் 21:89

رَبّ انصُرْنِيْ بِمَا كَذَّبُوْنِ(26)23

என் இறைவா! அவர்கள் என்னைப் பொய்யரெனக் கருதியதால் எனக்கு உதவுவாயாக!

திருக் குர்ஆன் 23:26

اَلْحَمْدُ للهِ الَّذِي نَجَّانَا مِنَ الْقَوْمِ الظَّالِمِيْنَ (28)23

அநீதி இழைத்த கூட்டத்தை விட்டும் நம்மைக் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.

திருக் குர்ஆன் 23:28

رَبّ أَنزِلْنِيْ مُنْزَلاً مُبَارَكًا وَأَنْتَ خَيْرُ الْمُنزِلِيْنَ (29)23

என் இறைவா! பாக்கியம் பெற்ற இடத்தில் என்னைத் தங்க வைப்பாயாக! தங்க வைப்போரில் நீ மிகச் சிறந்தவன்.

திருக் குர்ஆன் 23:29

رَبّ انصُرْنِيْ بِمَا كَذَّبُوْنِ(39)23

என் இறைவா! அவர்கள் என்னைப் பொய்யரெனக் கருதியதால் எனக்கு உதவுவாயாக!

திருக் குர்ஆன் 23:39

رَبّ فَلاَ تَجْعَلْنِيْ فِي الْقَوْمِ الظَّالِمِيْنَ (94)23

என் இறைவா! என்னை அநீதி இழைத்த கூட்டத்தில் ஆக்கி விடாதே!

திருக் குர்ஆன்23:94

رَبّ أَعُوْذُ بِكَ مِنْ هَمَزَات الشَّيَاطِيْنِ (97) وَأَعُوْذُ بِكَ رَبّ أَنْ يَحْضُرُوْنِ (98)23

என் இறைவா! ஷைத்தான்களின் தூண்டுதல்களை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். என் இறைவா! என்னிடம் அவர்கள் வருவதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

திருக் குர்ஆன் 23:97,98

رَبَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنْتَ خَيْرُ الرَّاحِمِيْنَ(109)23

எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எங்களை மன்னித்து அருள் புரிவாயாக! நீ கருணையாளர்களில் சிறந்தவன்.

திருக் குர்ஆன் 23:109

رَبّ اغْفِرْ وَارْحَمْ وَأَنْتَ خَيْرُ الرَّاحِمِيْنَ (118)23

என் இறைவா! மன்னித்து அருள்புரிவாயாக! நீ அருள்புரிவோரில் சிறந்தவன்.

திருக் குர்ஆன் 23:118

رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا(65)25

எங்கள் இறைவா! எங்களை விட்டும் நரகத்தின் வேதனை யைத் தடுப்பாயாக! அதன் வேதனை நிலையானதாக இருக்கிறது. அது மோசமான ஓய்விடமாகவும், தங்குமிடமாகவும் இருக்கிறது.

திருக் குர்ஆன் 25:65

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ إِمَامًا(74)25

எங்கள் இறைவா! எங்கள் வாழ்க்கைத் துணைகளிருந்தும், மக்களிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக! (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்கு வாயாக!

திருக் குர்ஆன் 25:74

إِنَّا نَطْمَعُ أَنْ يَغْفِرَ لَنَا رَبُّنَا خَطَايَانَا أَنْ كُنَّا أَوَّلَ الْمُؤْمِنِينَ(51)26

நம்பிக்கை கொண்டோரில் முதன்மையானோராக நாங்கள் ஆனதற்காக எங்கள் தவறுகளை எங்கள் இறைவன் எங்களுக்கு மன்னிக்க வேண்டும் என்று நாங்கள் ஆசைப்படுகிறோம்.

திருக் குர்ஆன் 26:51

اَلَّذِيْ خَلَقَنِيْ فَهُوَ يَهْدِيْنِ(78)وَالَّذِيْ هُوَ يُطْعِمُنِيْ وَيَسْقِيْنِ(79)وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِيْنِ (80) وَالَّذِيْ يُمِيتُنِيْ ثُمَّ يُحْيِيْنِ (81)وَالَّذِيْ أَطْمَعُ أَنْ يَغْفِرَ لِيْ خَطِيئَتِيْ يَوْمَ الدّيْنِ(82)رَبّ هَبْ لِيْ حُكْمًا وَأَلْحِقْنِيْ بِالصَّالِحِيْنَ(83) وَاجْعَلْ لِيْ لِسَانَ صِدْقٍ فِي الآخِرِيْنَ(84)وَاجْعَلْنِيْ مِنْ وَرَثَةِ جَنَّةِ النَّعِيْمِ(85)وَاغْفِرْ لأَبِيْ إِنَّهُ كَانَ مِنَ الضَّالّيْنَ(86)وَلاَ تُخْزِنِيْ يَوْمَ يُبْعَثُوْنَ(87)26

அவனே என்னைப் படைத்தான். அவனே எனக்கு நேர் வழி காட்டுகிறான். அவனே எனக்கு உணவளித்து (தண்ணீர்) பருகச் செய்கிறான். நான் நோயுறும் போது அவனே எனக்கு நிவாரணம் தருகிறான். அவனே என்னை மரணிக்கச் செய்கிறான். பின்னர் எனக்கு உயிர் கொடுப்பான். தீர்ப்பு நாளில் என் தவறை அவன் மன்னிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். என் இறைவா! எனக்கு அதிகாரத்தை அளிப்பாயாக! என்னை நல்லோருடன் சேர்ப்பாயாக! பின்வரும் மக்களிடம் எனக்கு நற்பெயரை ஏற்படுத்துவாயாக! இன்பமான சொர்க்கத்தின் வாரிசு களில் என்னையும் ஆக்குவாயாக! என் தந்தையை மன்னிப்பாயாக! அவர் வழி தவறியவராக இருக்கிறார். (மக்கள்) மீண்டும் உயிர்ப்பிக்கப்படும் நாளில்1 என்னை இழிவு படுத்தி விடாதே!

திருக் குர்ஆன் 26:78, 26:87

فَافْتَحْ بَيْنِيْ وَبَيْنَهُمْ فَتْحًا وَنَجِّنِيْ وَمَنْ مَعِيَ مِنَ الْمُؤْمِنِيْنَ(118)26

எனக்கும் அவர்களுக்கும் இடையே தெளிவான தீர்ப்புக் கூறுவாயாக! என்னையும் என்னுடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் காப்பாற்றுவாயாக!

திருக் குர்ஆன் 26:118

رَبّ نَجّنِيْ وَأَهْلِيْ مِمَّا يَعْمَلُوْنَ (169)26

என் இறைவா! என்னையும், என் குடும்பத்தினரையும் அவர்கள் செய்து கொண்டிருப்பவற்றை விட்டு காப்பாற்றுவாயாக!

திருக் குர்ஆன் 26:169

اَلْحَمْدُ للهِ الَّذِيْ فَضَّلَنَا عَلَى كَثِيرٍ مِنْ عِبَادِهِ الْمُؤْمِنِيْنَ(15)27

நம்பிக்கை கொண்ட தனது ஏராளமான அடியார்களை விட எங்களைச் சிறப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.

திருக் குர்ஆன் 27:15

رَبّ أَوْزِعْنِيْ أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِيْ أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَدْخِلْنِيْ بِرَحْمَتِكَ فِي عِبَادِكَ الصَّالِحِيْنَ(19)27

என் இறைவா! என் மீதும், எனது பெற்றோர் மீதும் நீ செய்த அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்தவும், நீ திருப்தி யடையும் நல்லறத்தைச் செய்யவும் எனக்கு உதவுவாயாக! உனது நல்லடியார்களில் என்னையும் உனது அருளால் சேர்ப்பாயாக!

திருக் குர்ஆன் 27:19

رَبّ إِنّيْ ظَلَمْتُ نَفْسِيْ فَاغْفِرْ لِيْ (16)28

என் இறைவா! எனக்கே நான் தீங்கு இழைத்து விட்டேன். எனவே என்னை மன்னிப்பாயாக!

திருக் குர்ஆன் 28:16

رَبّ نَجّنِيْ مِنَ الْقَوْمِ الظَّالِمِيْنَ(21)28

என் இறைவா! அநீதி இழைக்கும் கூட்டத்தை விட்டும் என்னைக் காப்பாற்றுவாயாக!

திருக் குர்ஆன் 28:21

رَبّ إِنّيْ لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيْرٌ (24)28

என் இறைவா! எனக்கு நீ வழங்கும் நன்மையில் தேவையுள்ள வனாக இருக்கிறேன்.

திருக் குர்ஆன் 28:24

رَبّ انصُرْنِيْ عَلَى الْقَوْمِ الْمُفْسِدِيْنَ (30)29

என் இறைவா! சீரழிக்கும் இந்தச் சமுதாயத்துக்கு எதிராக எனக்கு உதவுவாயாக!

திருக் குர்ஆன் 29:30

رَبّ هَبْ لِيْ مِنَ الصَّالِحِينَ(100)37

என் இறைவா! எனக்கு நல்லொழுக்கம் உடையவரை (வாரிசாகத்) தருவாயாக!

திருக் குர்ஆன் 37:100

رَبَّنَا اغْفِرْ لَنَا وَلإِ خْوَانِنَا الَّذِيْنَ سَبَقُوْنَا بِالاِيمَانِ وَلاَ تَجْعَلْ فِيْ قُلُوْبِنَا غِلاً لِلَّذِيْنَ آمَنُوْا رَبَّنَا إِنَّكَ رَءُوْفٌ رَحِيْمٌ(10)59

எங்கள் இறைவா! எங்களையும், நம்பிக்கையுடன் எங்களை முந்தி விட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக! எங்கள் உள்ளங்களில் நம்பிக்கை கொண்டோர் மீது வெறுப்பை ஏற்படுத்தி விடாதே! நீ இரக்கமுடையோன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக் குர்ஆன் 59:10

15.07.2009. 0:31 AM

இஸ்லாமியத் திருமணம்

நூலின் பெயர் : இஸ்லாமியத் திருமணம்

ஆசிரியர்: பீ.ஜைனுல் ஆபிதீன்

மார்க்கத்தின் எச்சரிக்கை!

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும். இந்த இணைய தளத்தில் உள்ளவைகளைப் பிரச்சாரம் செய்வதற்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் சில சகோதரர்கள் நமது ஆக்கங்களை அப்படியே பயன்படுத்தி தமது ஆக்கம் போல் காட்டுகின்றனர்.

இன்னாருடைய கட்டுரையில் இருந்து, அல்லது புத்தகத்தில் இருந்து இது எடுக்கப்பபட்டது என்று குறிப்பிடாமல் புகழடைவதற்காக இவ்வாறு செய்கின்றனர்.

சில இணைய தளங்களும் என்னுடைய ஆக்கங்களை அப்படியே வெளியிட்டு தம்முடைய ஆக்கம் போல் காட்டுகின்றன. மேலும் சில புத்தக வியாபாரிகளும் எனது நூல் உட்பட மற்றவர்களின் நூல்களைச் சிறிது மாற்றியமைத்து அனாமதேயங்களின் பெயர்களில் வெளியிட்டுச் சம்பாதிக்கின்றனர். உலகைப் பற்றியும் இவர்களுக்கு வெட்கம் இல்லை. மறுமையைப் பற்றியும் பயம் இல்லை.

இஸ்லாத்தில் இவ்வாறு செய்ய அனுமதி இல்லை. இவர்கள் நல்லது செய்யப் போய் மறுமையின் தண்டனைக்கு தம்மைத் தாமே உட்படுத்திக் கொள்கின்றனர்.

பிறரது ஆக்கங்களைப் பயன்படுத்துவோர் இது இன்னாருடைய ஆக்கம் என்று குறிப்பிடாமல் தன்னுடைய ஆக்கம் போல் காட்டுவது மார்க்க அடிப்படையில் குற்றமாகும்.

இவர்களுக்கு அல்லாஹ் விடுக்கும் எச்சரிக்கையை இங்கே சுட்டிக் காட்டுகிறோம்.

தாங்கள் செய்தவற்றுக்காக மகிழ்ச்சியடைந்து, தாம் செய்யாதவற்றுக்காகப் புகழப்பட வேண்டுமென விரும்புவோர் வேதனையிலிருந்து தப்பித்து விட்டார்கள் என்று நீர் நினைக்காதீர்! அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.

திருக்குர்ஆன் 3:188

இஸ்லாமியத் திருமணம்

திருமணம் குறித்த முக்கியச் சட்டங்களை கீழ்க்காணும் தலைப்புகளில் சுருக்கமாகச் சொல்லும் நூல்:

மண வாழ்வின் அவசியம்

திருமணத்தின் நோக்கம்

திருமண ஒழுங்குகள்

மணப் பெண்ணைத் தேர்வு செய்தல்

பெண் பார்த்தல்

பெண்ணின் சம்மதம்

பெண்ணின் பொறுப்பாளர்

கட்டாயக் கல்யாணம்

மஹரும், ஜீவனாம்சமும்

வரதட்சணை ஓர் வன் கொடுமை

வரதட்சணையால் ஏற்படும் கேடுகள்

திருமண ஒப்பந்தம்

(குத்பா) திருமண உரை

சாட்சிகள்

எளிமையான திருமணம்

திருமண விருந்து

நாள் நட்சத்திரம் இல்லை

திருமண துஆ

தவிர்க்கப்பட வேண்டியவை

அன்பளிப்பு மொய்

தம்பதியரின் கடமைகள்

மணமுடிக்கத் தகாதவர்கள்

மணக்கக் கூடாத உறவுகள்

பால்குடிப் பருவமும் அளவும்

தாம்பத்திய உறவு

மாதவிடாயின் போது தாம்பத்திய உறவு

மண வாழ்வின் அவசியம்

மனித வாழ்வில் தவிர்க்க முடியாத நிகழ்ச்சிகளில் திருமணம் முக்கியமான இடத்தை வகிக்கின்றது. திருமணத்தை மறுப்பவர்கள் மிகவும் அரிதாகவே காணப்படுவதிலிருந்து மணவாழ்க்கையின் அவசியத்தை உணரலாம்.

மணவாழ்வு, ஆன்மீகப் பாட்டைக்கு எதிரானது என்று சில மதங்கள் கூறுவதை இஸ்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக, திருமணத்தை அதிகமதிகம் வலியுறுத்துகிறது.

صحيح البخاري
5073 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، سَمِعَ سَعِيدَ بْنَ المُسَيِّبِ، يَقُولُ: سَمِعْتُ سَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ، يَقُولُ: «رَدَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى عُثْمَانَ بْنِ مَظْعُونٍ التَّبَتُّلَ، وَلَوْ أَذِنَ لَهُ لاَخْتَصَيْنَا»

உஸ்மான் பின் மழ்வூன் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் துறவறம் மேற்கொள்ள அனுமதி கேட்ட போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரது கோரிக்கையை நிராகரித்து விட்டனர். அவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதி தந்திருந்தால் நாங்கள் ஆண்மை நீக்கம் செய்திருப்போம் என்று ஸஃது பின் அபீவக்காஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல்கள்: புகாரி 5073, முஸ்லிம் 2488

صحيح البخاري 
5063 - حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، أَخْبَرَنَا حُمَيْدُ بْنُ أَبِي حُمَيْدٍ الطَّوِيلُ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ: جَاءَ ثَلاَثَةُ رَهْطٍ إِلَى بُيُوتِ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَسْأَلُونَ عَنْ عِبَادَةِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا أُخْبِرُوا كَأَنَّهُمْ تَقَالُّوهَا، فَقَالُوا: وَأَيْنَ نَحْنُ مِنَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَدْ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَا تَأَخَّرَ، قَالَ أَحَدُهُمْ: أَمَّا أَنَا فَإِنِّي أُصَلِّي اللَّيْلَ أَبَدًا، وَقَالَ آخَرُ: أَنَا أَصُومُ الدَّهْرَ وَلاَ أُفْطِرُ، وَقَالَ آخَرُ: أَنَا أَعْتَزِلُ النِّسَاءَ فَلاَ أَتَزَوَّجُ أَبَدًا، فَجَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَيْهِمْ، فَقَالَ: «أَنْتُمُ الَّذِينَ قُلْتُمْ كَذَا وَكَذَا، أَمَا وَاللَّهِ إِنِّي لَأَخْشَاكُمْ لِلَّهِ وَأَتْقَاكُمْ لَهُ، لَكِنِّي أَصُومُ وَأُفْطِرُ، وَأُصَلِّي وَأَرْقُدُ، وَأَتَزَوَّجُ النِّسَاءَ، فَمَنْ رَغِبَ عَنْ سُنَّتِي فَلَيْسَ مِنِّي»

நபித்தோழர்களில் சிலர் நான் மணமுடிக்க மாட்டேன் என்றும், வேறு சிலர் நான் உறங்காமல் தொழுது கொண்டிருப்பேன் என்றும், மற்றும் சிலர் நான் விடாமல் நோன்பு நோற்பேன் என்றும் பேசிக் கொண்டனர். இந்தச் செய்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தெரிந்த போது, இப்படியெல்லாம் கூறியவர்களின் நிலை என்னவாகும்? என்று கூறிவிட்டு, நான் நோன்பும் வைக்கிறேன்; அதை விட்டு விடவும் செய்கிறேன். நான் தொழவும் செய்கிறேன்; உறங்கவும் செய்கிறேன். பெண்களை மணமுடிக்கவும் செய்கிறேன். யார் எனது வழிமுறையைப் புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சேர்ந்தவரவல்லர் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 5063

மேற்கண்ட நபிமொழியிலிருந்து முஸ்லிம்களுக்கு திருமணம் எவ்வளவு அவசியமானது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

திருமணத்தின் நோக்கம்

திருமணத்தின் அவசியம் குறித்து இஸ்லாம் இரண்டு காரணங்களைக் குறிப்பிடுகின்றது.

மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான்.

அல்குர்ஆன் 4:1

சந்ததிகள் பெற்றெடுப்பது திருமணத்தின் நோக்கங்களில் ஒன்று என இதன் மூலம் அறியலாம்.

صحيح البخاري
1905 - حَدَّثَنَا عَبْدَانُ، عَنْ أَبِي حَمْزَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، قَالَ: بَيْنَا أَنَا أَمْشِي، مَعَ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَقَالَ: كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «مَنِ اسْتَطَاعَ البَاءَةَ فَلْيَتَزَوَّجْ، فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ، وَأَحْصَنُ لِلْفَرْجِ، وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ، فَإِنَّهُ لَهُ وِجَاءٌ»

உங்களில் யார் பராமரிப்புச் செலவுக்குச் சக்தி பெற்றுள்ளாரோ அவர் திருமணம் செய்து கொள்ள வேண்டும். ஏனெனில் திருமணம் என்பது (பிறன்மனை நோக்குவதை விட்டும்) பார்வையைத் தடுக்கக் கூடியதாகவும் கற்பைக் காக்கக் கூடியதாகவும் அமைந்துள்ளது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊது (ரலி)

நூல்: புகாரி 1905, 5065, 5066

தகாத நடத்தையிலிருந்து ஒவ்வொருவரும் தன்னைக் காத்துக் கொள்வது திருமணத்தின் மற்றொரு நோக்கமாகும் என்பதை இந்த ஹதீஸிலிருந்து அறியலாம்.

திருமண ஒழுங்குகள்

திருமணத்தை இப்படித் தான் செய்ய வேண்டும் என்ற ஒழுங்குகளையும் இஸ்லாம் கற்றுத் தருகின்றது. இஸ்லாம் கூறும் அந்தத் திருமண முறை மற்றவர்களின் திருமண முறையிலிருந்து வித்தியாசமானதாகவும், புரட்சிகரமானதாகவும், நடைமுறைப்படுத்த எளிதானதாகவும், சிக்கனமானதாகவும் அமைந்துள்ளது. அந்த ஒழுங்குகளைப் பேணி நடத்தும் போது தான் அது இஸ்லாமியத் திருமணமாக அமையும். அந்த ஒழுங்குகளைக் காண்போம்.

மணப் பெண் தேர்வு செய்தல்

மணப் பெண்ணைத் தேர்வு செய்யும் போது அவள் ஒழுக்கமுடையவளாகவும், நல்ல குணமுடையவளாகவும், இருக்கிறாளா என்பதையே கவனிக்க வேண்டும். பொருளாதாரத்தையோ, குலப்பெருமையையோ, உடல் அழகையோ பிரதானமாகக் கருதக் கூடாது என்று இஸ்லாம் கூறுகின்றது.

மணமகனைத் தேர்வு செய்யும் போது பெண்களும் ஆண்களின் நன்னடத்தையையே பிரதானமாகக் கொள்ள வேண்டும்.

صحيح البخاري
5090 - حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنِي سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " تُنْكَحُ المَرْأَةُ  لِأَرْبَعٍ: لِمَالِهَا وَلِحَسَبِهَا وَجَمَالِهَا وَلِدِينِهَا، فَاظْفَرْ بِذَاتِ الدِّينِ، تَرِبَتْ يَدَاكَ "

பெண்கள் அவர்களின் செல்வத்திற்காகவும், அவர்களின் அழகுக்காகவும், அவர்களின் பாரம்பரியத்திற்காகவும், அவர்களின் நன்னடத்தைக்காகவும் மணந்து கொள்ளப்படுகின்றனர். நீ நன்னடத்தை உடையவளைத் தேர்வு செய்து வெற்றியடைந்து கொள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 5090

பெண் பார்த்தல்

ஒருவரை ஒருவர் திருமணத்திற்கு முன்பே பார்த்துக் கொள்வதும் மிகவும் அவசியமாகும். ஒவ்வொருவரும் தமக்குரிய வாழ்க்கைத் துணை பற்றி பல எதிர்பார்ப்புகளை மனதில் வைத்திருப்பார்கள். அந்த எதிர்பார்ப்புகளுக்கேற்ற வகையில் தமது வாழ்க்கைத் துணை அமையாததை திருமணத்திற்குப் பிறகு அவர்கள் அறிய நேர்ந்தால் தம்பதியரிடையே நல்லுறவு பாதிக்கப்படலாம். அதனால் முன்பே ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள வேண்டும்.

صحيح مسلم 
74 - (1424) حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ يَزِيدَ بْنِ كَيْسَانَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: كُنْتُ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَتَاهُ رَجُلٌ فَأَخْبَرَهُ أَنَّهُ تَزَوَّجَ امْرَأَةً مِنَ الْأَنْصَارِ، فَقَالَ لَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَظَرْتَ إِلَيْهَا؟»، قَالَ: لَا، قَالَ: «فَاذْهَبْ فَانْظُرْ إِلَيْهَا، فَإِنَّ فِي أَعْيُنِ الْأَنْصَارِ شَيْئًا»

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது ஒரு மனிதர் வந்து அன்ஸாரிகளைச் சேர்ந்த ஒரு பெண்ணை, தான் மணமுடிக்கவிருப்பதைக் கூறினார். அதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவளைப் பார்த்து விட்டாயா? எனக் கேட்டார்கள். அவர் இல்லை என்றார். நீ சென்று அவளைப் பார்த்துக் கொள்! அவர்களின் கண்களில் ஒரு பிரச்சினை உள்ளது என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 2552

அன்ஸாரிப் பெண்களின் கண்கள் மற்றவர்களின் கண்களிலிருந்து வித்தியாசமாக இருப்பதைக் காரணம் காட்டி மனைவியை நிராகரித்து விடக் கூடாது என்பதற்காக முன்னரே மணப் பெண்ணைப் பார்க்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டுகிறார்கள்.

سنن النسائي 
3235 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ بْنِ أَبِي رِزْمَةَ، قَالَ: حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، قَالَ: حَدَّثَنَا عَاصِمٌ، عَنْ بَكْرِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُزَنِيِّ، عَنْ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ: خَطَبْتُ امْرَأَةً عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَظَرْتَ إِلَيْهَا؟» قُلْتُ: لَا، قَالَ: «فَانْظُرْ إِلَيْهَا، فَإِنَّهُ أَجْدَرُ أَنْ يُؤْدَمَ بَيْنَكُمَا»

முகீரா பின் ஷுஃபா (ரலி) அவர்கள் ஒரு பெண்ணை மனம் பேசினார். அவரிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவளைப் பார்த்துக் கொள்! ஏனெனில் அவ்வாறு பார்ப்பது உங்கள் இருவருக்குமிடையே அன்பை ஏற்படுத்த ஏற்றதாகும் என்று கூறியதாக முகீரா (ரலி) அவர்களே அறிவிக்கிறார்கள்.

நூல்கள்: திர்மிதீ 1007, நஸாயீ 3183, இப்னுமாஜா 1855

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்த வழிகாட்டுதலை தமிழக முஸ்லிம்கள் முற்றிலுமாகப் புறக்கணிக்கின்றனர். திருமணத்துக்கு முன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வது பாவச் செயல் எனவும் கருதுகின்றனர். இதைத் தவிர்க்க வேண்டும்.

பெண் பார்க்கும் நிகழ்ச்சி என்ற பெயரில் மணமகனின் தாயும், சகோதரிகளும் தான் பெண் பார்க்கின்றனர். இணைந்து வாழ வேண்டிய இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்கும் உரிமையை இதன் மூலம் மறுக்கின்றனர்.

பெண் பார்ப்பதை வலியுறுத்தி இன்னும் ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன.

பெண்ணின் சம்மதம்

பெண்ணின் சம்மதம் பெறாமல் திருமணம் செய்விக்க இஸ்லாத்தில் அனுமதி இல்லை. அவர்களின் சம்மதம் பெறுவது மிகவும் அவசியமாகும்.

صحيح البخاري 
6971 - حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ ذَكْوَانَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «البِكْرُ تُسْتَأْذَنُ» قُلْتُ: إِنَّ البِكْرَ تَسْتَحْيِي؟ قَالَ: «إِذْنُهَا صُمَاتُهَا»

கன்னிப் பெண்ணாயினும், விதவையாயினும் சம்மதம் பெற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறிய போது கன்னிப் பெண் (சம்மதம் தெரிவிக்க) வெட்கப்படுவாளே என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவளது மௌனமே அவளது சம்மதமாகும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 6971, 6964, 5137

صحيح البخاري 
5138 - حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ القَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، وَمُجَمِّعٍ، ابْنَيْ يَزِيدَ بْنِ جَارِيَةَ، عَنْ خَنْسَاءَ بِنْتِ خِذَامٍ الأَنْصَارِيَّةِ، أَنَّ أَبَاهَا زَوَّجَهَا وَهْيَ ثَيِّبٌ فَكَرِهَتْ ذَلِكَ، فَأَتَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «فَرَدَّ نِكَاحَهُ»،

என் தந்தை எனது சம்மதம் பெறாமல் விதவையான என்னை மணமுடித்து வைத்தார். அதனை விரும்பாத நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இதைக் கூறிய போது, அத்திருமணத்தை ரத்து செய்தார்கள்.

அறிவிப்பவர்: கன்ஸா பின்த் கிதாம் (ரலி)

நூல்: புகாரி 5138, 6945, 6969

பெண்ணின் பொறுப்பாளர்

மணப் பெண்ணின் சம்மதம் அவசியம் என்றாலும் ஒரு பெண் தானாக தன் திருமணத்தை நடத்திக் கொள்ள இஸ்லாம் அனுமதிக்கவில்லை. மாறாக அவளது பூரண சம்மதத்துடன் அவளது பொறுப்பாளர் தான் நடத்தி வைக்க வேண்டும். மண மகன் சார்பில் இத்தகைய பொறுப்பாளர் எவரும் தேவையில்லை.

பொறுப்புள்ள நபரின் முன்னிலையில் திருமணம் நடக்கும் போது பெண்களை வஞ்சகமாக ஏமாற்றும் ஆண்களிடமிருந்து பெண்களுக்குப் பாதுகாப்புக் கிடைக்கிறது. பெண்களுக்குச் சேர வேண்டிய மஹர் தொகை போன்றவற்றைப் பெற்றுத் தருவதற்கும் பெண்கள் சார்பில் வலி என்னும் பொறுப்பாளர் அவசியமாகும்.

இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களை மணக்காதீர்கள் என்று 2:221 வசனத்தில் ஆண்களுக்குக் கட்டளையிடும் இறைவன் இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மணமுடித்துக் கொடுக்காதீர்கள் என்று அதே வசனத்தில் கூறுகிறான்.

ஆண்கள் தாமாகவே திருமணம் செய்யலாம் என்பதையும், பெண்களுக்கு அவர்களின் பொறுப்பாளர்கள், பொறுப்பாளர்கள் இல்லாவிட்டால் சமுதாயத் தலைவர்கள் முன்னின்று திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்பதையும் இவ்வசனத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.

سنن أبي داود 
2085 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ قُدَامَةَ بْنِ أَعْيَنَ، حَدَّثَنَا أَبُو عُبَيْدَةَ الْحَدَّادُ، عَنْ يُونُسَ، وَإِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا نِكَاحَ إِلَّا بِوَلِيٍّ».

பொறுப்பாளர் இன்றி திருமணம் கிடையாது. என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி)

நூல்கள்: திர்மிதீ 1020, அபூதாவூத் 1785

கட்டாயக் கல்யாணம்

முஸ்லிம் பெண் ஒரு முஸ்லிமான ஆணை மணமுடிக்க விரும்பினால் அவளது விருப்பத்தை நிறைவேற்றி வைப்பது பெற்றோரின் கடமையாகும். பணம், பதவி, குலம், அந்தஸ்து போன்ற எந்தக் காரணத்தையும் கூறி பெண்களின் விருப்பத்தை நிராகரிப்பது மறுமையில் கடுமையான குற்றமாகும்.

பெண்களை விவாகரத்துச் செய்த பின் அவர்கள் தமது காலக் கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் (தமக்குப் பிடித்த) கணவர்களை விருப்பப்பட்டு நல்ல முறையில் மணந்து கொள்வதைத் தடுக்காதீர்கள்! உங்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறு அறிவுரை கூறப்படுகிறது. இதுவே உங்களுக்குத் தூய்மையானது; பரிசுத்தமானது. அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.

திருக்குர்ஆன் 2:232

அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்புவோர் இப்படித் தான் நடக்க வேண்டும் என்று கடுமையான வார்த்தையை இறைவன் பயன்படுத்தியுள்ளான். பெண்களின் இந்த உரிமையைப் பறிப்பவர்கள் மறுமை நாளில் அல்லாஹ்வால் விசாரிக்கப்படுவார்கள்  என்பதற்காகவே இவ்வாறு கூறுகிறான்.

பெண்கள் தமது விருப்பத்தைத் தெரிவிப்பதைக் கூட பாவச் செயலாகக் கருதும் நிலை சமுதாயத்தில் நிலவுகிறது. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் பெண்கள் இது போன்ற தமது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

صحيح البخاري 
5029 - حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ: أَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ امْرَأَةٌ، فَقَالَتْ: إِنَّهَا قَدْ وَهَبَتْ نَفْسَهَا لِلَّهِ وَلِرَسُولِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «مَا لِي فِي النِّسَاءِ مِنْ حَاجَةٍ»، فَقَالَ رَجُلٌ: زَوِّجْنِيهَا، قَالَ: «أَعْطِهَا ثَوْبًا»، قَالَ: لاَ أَجِدُ، قَالَ: «أَعْطِهَا وَلَوْ خَاتَمًا مِنْ حَدِيدٍ»، فَاعْتَلَّ لَهُ، فَقَالَ: «مَا مَعَكَ مِنَ القُرْآنِ؟» قَالَ: كَذَا وَكَذَا، قَالَ: «فَقَدْ زَوَّجْتُكَهَا بِمَا مَعَكَ مِنَ القُرْآنِ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு பெண் வந்து அல்லாஹ்வின் தூதரே என்னை மணமுடித்துக் கொள்கிறீர்களா? என்று கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்பெண்ணை மணமுடிக்க விரும்பாததால் மற்றொருவருக்கு மணமுடித்துக் கொடுத்தார்கள்.

நூல்: புகாரி  5029, 5120.

வெட்கமில்லாமல் இப்படிக் கேட்கலாமா? என்று அவரை நபிகள் நாயகம் (ஸல்) கண்டிக்கவில்லை. விபச்சாரம் செய்வதற்குத் தான் வெட்கப்பட வேண்டுமே தவிர திருமணம் செய்யுமாறு கேட்க எந்த வெட்கமும் தேவையில்லை.

سنن النسائي 
3340 - أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُوسَى، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسٍ، قَالَ: " تَزَوَّجَ أَبُو طَلْحَةَ أُمَّ سُلَيْمٍ، فَكَانَ صِدَاقُ مَا بَيْنَهُمَا الْإِسْلَامَ، أَسْلَمَتْ أُمُّ سُلَيْمٍ قَبْلَ أَبِي طَلْحَةَ، فَخَطَبَهَا، فَقَالَتْ: إِنِّي قَدْ أَسْلَمْتُ، فَإِنْ أَسْلَمْتَ نَكَحْتُكَ، فَأَسْلَمَ فَكَانَ صِدَاقَ مَا بَيْنَهُمَا "

உம்மு சுலைம் (ரலி) அவர்கள் முன்னரே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். அவரை அபூதல்ஹா மணந்து கொள்ள விரும்பினார். அதற்கு உம்மு சுலைம் (ரலி) அவர்கள் நான் இஸ்லாத்தை ஏற்றவள். நீரும் இஸ்லாத்தை எற்றுக் கொண்டால் உம்மை மணந்து கொள்கிறேன் என்றார்கள். அவரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.

நூல்: நஸாயீ 3288

பெண்கள் தமது வாழ்க்கைத் துணைவரைத் தேர்வு செய்யும் உரிமை பெற்றுள்ளார்கள் என்பதற்கு இவை சான்றுகள்.

ஆனாலும் அவர்கள் பொறுப்பாளர்கள் வழியாகத் தான் திருமணத்தை நடத்திட வேண்டும். பொறுப்பாளர்கள் அவர்களின் உரிமையை மறுக்கக் கூடாது என்று இஸ்லாம் வழிகாட்டுகிறது.

மஹரும் ஜீவனாம்சமும்

திருமண முறிவு ஏற்படும் போது பெண்களுக்கு ஜீவனாம்சம் என்ற தொகை வழங்கப்பட்டு வருவது பல சமுதாயங்களில் பரவலாக உள்ளது. இஸ்லாம் இத்தகைய ஜீவனாம்சத்தை வழங்கச் சொல்லவில்லை. மாறாக திருமணத்திற்கு முன்பே பெண்களுக்குக் கணிசமான ஒரு தொகையை வழங்கி விடுமாறு இஸ்லாம் கூறுகிறது.

இல்லற வாழ்க்கையில் அதிகமான இழப்புக்கு ஆளாவது பெண்கள் தான். தங்களின் அழகையும், இளமையையும் இழந்த பின் அவர்கள் விவாகரத்துச் செய்யப்படக் கூடும். அந்த நிலையை எல்லாம் எண்ணிப் பார்த்து மஹர் தொகையைத் தீர்மானிக்கும் உரிமையைப் பெண்களுக்கு இஸ்லாம் வழங்குகின்றது.

இன்றைய நடைமுறையில் உள்ள ஜீவனாம்சத்தை விட இஸ்லாம் வழங்குகின்ற முன் ஜீவனாம்சம் என்ற மஹர் பாதுகாப்பானது; உத்திரவாதமானது.

பெண்களுக்கு அவர்களின் மஹர் தொகையை மனமுவந்து வழங்கி விடுங்கள்!

அல்குர்ஆன் 4:4

மஹர் தொகையை எவ்வளவு வேண்டுமானாலும் பெண்கள் கேட்கலாம். இவ்வளவு தான் கேட்க வேண்டும் என்று வரையறை செய்யும் உரிமை எவருக்கும் இல்லை.

ஒரு குவியலையே மஹராக நீங்கள் அவர்களுக்குக் கொடுத்தாலும் அதனைத் திரும்பப் பெறலாகாது!

அல்குர்ஆன் 4:20

மஹர் தொகையைத் தீர்மானிக்கும் உரிமை பெண்களிடம் விடப்பட்டுள்ளதால் அவர்கள் விரும்பினால் அதை விட்டுத் தரலாம்; அல்லது தவணை முறையில் பெற்றுக் கொள்ளலாம்.

(பார்க்க.. அல்குர்ஆன் 2:237)

இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள இந்த உரிமையைப் பெண்கள் பயன்படுத்தத் தவறிவிட்டதால் அவர்களின் நிலைமை மிகவும் மோசமாகி விட்டது. இவர்கள் மஹர் கேட்காததால் ஆண்கள் வரதட்சனை கேட்கும் கொடுமை அதிகமாகி விட்டது.

கொடுக்கக் கடமைப்பட்ட ஆண்கள் கேட்டுப் பெறக் கூடிய அளவுக்கு மானமிழந்து விட்டனர். வரதட்சணை வாங்காதீர்கள் என்பதை விட நீங்கள் கொடுங்கள் என்பது கடுமையான கட்டளையாகும். உண்மையான எந்த முஸ்லிமும் வரதட்சணை கேட்கத் துணிய மாட்டான்.

வரதட்சணை ஓர் வன் கொடுமை

ஆண்கள் தான் பெண்களுக்கு மஹர் கொடுக்க வேண்டும்; பெண்களிடம் வரதட்சணை கேட்கக் கூடாது என்று இஸ்லாம் மார்க்கம் வழிகாட்டுகிறது.

இது தான் அறிவுப்பூர்வமானதும், நேர்மையானதுமான தீர்ப்பாகும்.

இல்லற வாழ்வில் ஆணும், பெண்ணும் இன்பம் அனுபவிக்கிறார்கள். இருவருமே ஒருவரிடமிருந்து மற்றவர் இன்பத்தை அனுபவிப்பதால் யாரும் யாருக்கும் எதனையும் கொடுக்கத் தேவையில்லை தான்.

ஆனாலும் இந்த இன்பத்தை அடைவதற்காக பெண்கள் தாம் அதிகமான தியாகத்தைச் செய்கின்றனர். அதிகமான சிரமங்களையும் சுமக்கின்றனர். எனவே பெண்களுக்கு ஆண்கள் கொடுப்பது தான் நீதியாகும்.

# ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமணம் நடந்த பின் ஆண் தனது வீட்டிலேயே இருக்கிறான். தனது தாய், தந்தையர் மற்றும் உறவினருடன் இருக்கிறான். ஆனால் அவனை விட வயதில் குறைந்த பெண் தனது பெற்றோரையும், சொந்தங்களையும் துறந்து விட்டு கணவன் வீட்டுக்கு வந்து விடுகிறாள். இந்தத் தியாகத்திற்காக பெண்களுக்குத் தான் ஆண்கள் வழங்க வேண்டும்.

# திருமணத்திற்குப் பின் மனைவிக்காக கணவன் எந்தச் சேவையும் செய்வதில்லை. அதிகபட்சமாக அவளது வாழ்க்கைச் செலவினங்களுக்குப் பொறுப்பேற்றுக் கொள்கிறான். ஆனால் பெண்கள் கணவனுக்காகச் சமைத்தல், உடைகளைத் துவைத்தல், வீட்டைப் பராமரித்தல், கணவனுக்கு மட்டுமின்றி கணவனின் உறவினர்களுக்கும் சேர்த்து பணிவிடை செய்தல் என்று ஏராளமான சுமைகளைத் தம் தலையில் சுமந்து கொள்கின்றனர். மாமியார் கொடுமைகளையும் சில பெண்கள் கூடுதலாக தாங்கிக் கொள்ள வேண்டியுள்ளது. இந்தக் காரணத்துக்காகவும் ஆண்கள் தாம் பெண்களுக்குக் கொடுக்க வேண்டும்.

# இல்லறத்தில் ஈடுபட்டு ஒரு பெண் கருவுற்றால் ஆணுக்கு இதனால் எந்தச் சிரமமும், சுமையும் இல்லை. பெண் தான் சிரமப்படுகிறாள். அவள் எதையும் உண்ண முடியாத மசக்கை நிலையை அடைகிறாள். இயல்பாக நடக்கவும், படுக்கவும் முடியாத சிரமத்தைத் தாங்கிக் கொள்கிறாள். அத்துடன் மரணத்தின் வாசல் கதவைத் தட்டி விட்டு பிரசவித்து மீள்கிறாள். இந்த ஒரு காரணத்துக்காகவே அவளுக்கு கோடி கொடுத்தாலும் போதாது.

# பிரசவித்த பின் குழந்தைக்காக தந்தை எதையும் செய்வதில்லை. பாலூட்டுவதும், சீராட்டுவதும், கண் தூங்காது கவனிப்பதும் என ஏராளமான சுமைகளும் அவள் மீது தான் சுமத்தப்பட்டுள்ளன. இந்தக் காரணத்திற்காகவும் ஆண்கள் பெண்களுக்கு மஹர் கொடுப்பது தான் நேர்மையானது.

# அடுத்தடுத்து குழந்தைகள் பிறந்து விட்டால் பெண் தனது எல்லா வசந்தங்களையும் துறந்து விடும் நிலையை அடைகிறாள்.

பெண்களுக்கு ஆண்கள் தான் கொடுக்க வேண்டும் என்பதை மனிதாபிமானம் உள்ள எந்த மனிதனும் மறுக்க முடியாது.

வரதட்சணையால் ஏற்படும் கேடுகள்

வரதட்சணை கேட்கும் கொடிய வழக்கம் காரணமாக ஏராளமான தீய விளைவுகள் ஏற்படுகின்றன. வரதட்சணை கேட்போரும், அதை ஆதரிப்போரும் அத்தனை தீய விளைவுகளிலும் பங்காளிகளாகின்றனர்.

# வரதட்சணை காரணமாக 15 வயதிலிருந்தே வாழ்க்கைக்கு ஏங்கும் பெண்கள் முப்பது வயது வரை கூட மண வாழ்வு கிடைக்காத நிலையில் உள்ளனர்.

# இதன் காரணமாக பெண்களில் சிலர் வீட்டை விட்டே வெளியேறி ஓடி விடுகின்றனர். ஏமாற்றப்படுகின்றனர். விபச்சார விடுதியில் கூட அவர்களில் பலர் தள்ளப்படுகின்றனர். இந்தப் பாவங்கள் அனைத்திலும் வரதட்சணை வாங்கியவர்களுக்கும் ஒரு பங்கு நிச்சயமாக உள்ளது.

# மணவாழ்வு கிடைக்காது என்ற நிலையில் தம் உயிரை தாமே மாய்த்துக் கொள்ளும் பெண்களும் அதிகரித்து வருகின்றனர். பெண்ணைப் பெற்றவர்களும் கூண்டோடு தற்கொலை செய்கின்றனர். இந்தப் பாவத்திலும் வரதட்சணை கேட்போர் பங்காளிகளாகின்றனர்.

# மணவாழ்வு கிடைக்காது என்பதால் கண்டவனுடன் ஒருத்தி ஓடி விட்டால் அவளது குடும்பத்தில் எஞ்சியுள்ள பெண்களுக்கும் வாழ்வு கிடைக்காத நிலை ஏற்படும். இதிலும் வரதட்சணை கேட்பவர்களுக்குப் பங்கு இருக்கிறது.

# வரதட்சணை வழக்கத்தையும், அதனால் ஏற்படும் கேடுகளையும் முன் கூட்டியே உணர்பவர்கள் பெண் குழந்தை பிறந்ததும் தாமே தமது குழந்தைகளைக் கொன்று விடுகின்றனர். வேறு சிலர் ஸ்கேன் மூலம் கருவில் உள்ள குழந்தை பெண் என்பதை அறிந்து கருவில் சமாதி கட்டுகின்றனர். இந்த மாபாதகச் செயலிலும் வரதட்சணை கேட்பவர்கள் பங்காளிகளாகின்றனர்.

# மானத்துடன் வாழ்ந்த ஒருவனை பெண்ணைப் பெற்ற காரணத்துக்காக ஊர் ஊராகச் சென்று பிச்சை எடுக்க வைக்கின்றனர். இந்தப் பாவமும் இவர்களைச் சும்மா விடாது.

# பருவத்தில் எழுகின்ற உணர்வுகளுக்கு வடிகால் இல்லாத நிலையில் பெண்களில் பலர் மனநோயாளிகளாகி விடுகின்றனர். இந்தக் கொடுமையிலும் இவர்கள் பங்கு பெற்றுக் கொள்கின்றனர்.

இப்படி ஏராளமான தீமைகளின் மொத்த வடிவமாகத் திகழும் வரதட்சனையை வாங்குவோர் இவ்வளவு பாவங்களுக்கான தண்டனைக்காக தம்மை முன்பதிவு செய்கிறார்கள். நியாயத் தீர்ப்பு வழங்கக் கூடிய இறைவன் முன்னால் நாம் நிறுத்தப்படுவோம் என்ற அச்சம் கடுகளவாவது இருந்தால் கூட எவரும் வரதட்சணை கேட்கவே மாட்டார்.

திருமண ஒப்பந்தம்

இஸ்லாம் திருமணத்தை வாழ்க்கை ஒப்பந்தமாகக் கருதுகின்றது.

அப்பெண்கள் உங்களிடமிருந்து கடுமையான உடன்படிக்கை செய்துள்ளனர்.

அல்குர்ஆன் 4:21

திருமணம் என்பது சடங்குகளின் தொகுப்பன்று; அது வாழ்க்கை ஒப்பந்தம் என்று இந்த வசனம் தெளிவாக்குகின்றது.

ஒப்பந்தம் என்பது அதில் சம்மந்தப்பட்ட இரு சாராருக்கும் புரியக் கூடிய மொழியில் அமைந்திருக்க வேண்டும். புரியாத பாஷையில் எவரும் ஒப்பந்தம் செய்ய மாட்டார்கள்.

நான் என் மகளை இவ்வளவு மஹருக்கு அவரது பரிபூரண சம்மதத்துடன் உங்களுக்கு மணமுடித்து தருகின்றேன் என்று பெண்ணின் தந்தை (அல்லது அவளது மற்ற பொறுப்பாளர்) கூற, மணமகன் அதை ஏற்றுக் கொள்வதாகக் கூறியவுடன் ஒப்பந்தம் முடிந்து விடும்.

அல்லது உங்கள் மகளை அவளது பூரண சம்மதத்துடன் இவ்வளவு மஹருக்கு மணமுடித்துத் தருகிறீர்களா? என்று மணமகன் கேட்க, பெண்ணின் பொறுப்பாளர் ஏற்றுக் கொண்டாலும் ஒப்பந்தம் முடிந்து விடும்.

இதற்கென்று குறிப்பிட்ட எந்த வாசகமும் கிடையாது. அரபு மொழியில் தான் அந்த வாசகம் அமைய வேண்டும் என்பதும் கிடையாது.

(குத்பா) திருமண உரை

திருமணத்தின் போது குத்பா எனும் உரை நிகழ்த்தும் வழக்கம் பரவலாக உள்ளது. ஆனால் திருமணத்தின் போது குத்பா எனும் உரை நிகழ்த்த வேண்டிய அவசியம் ஏதும் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்துவதற்காக எந்தத் திருமணத்திற்கும் சென்றது கிடையாது. அழைக்கப்பட்டதும் கிடையாது.

தமது மகளின் திருமணத்தின் போது கூட அவர்கள் உரை நிகழ்த்தியதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

ஆயினும் மக்கள் கூடும் இடங்களில் தேவை எனக் கருதினால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தியுள்ளனர். இந்தப் பொதுவான அனுமதியின் அடிப்படையில் திருமண உரையினால் மக்கள் பயன் பெறுவார்கள் என்று கருதினால் அதைத் தடுக்க முடியாது. ஆனால் குத்பா எனும் உரை ஏதும் நிகழ்த்தப்படாவிட்டால் திருமணத்திற்கு எந்தப் பங்கமும் ஏற்படாது.

சாட்சிகள்

திருமணத்தின் போது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற கருத்தில் பல ஹதீஸ்கள் உள்ளன. எனினும் அவையனைத்தும் பலவீனமானவையாக உள்ளன. ஆயினும் கொடுக்கல் வாங்கலின் போது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுமாறு குர்ஆன் கூறுகிறது.

கடன் கொடுக்கும் போது இரண்டு சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்று திருக்குர்ஆன் 2:282 வது வசனம் கூறுகிறது.

அனாதைகளின் சொத்துக்களை அவர்களிடம் ஒப்படைக்கும் போது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்று திருக்குர்ஆன் 4:6 வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

மரண சாசனம் செய்யும் போதும் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுமாறு இறைவன் கூறுகிறான்.

(திருக்குர்ஆன் 5:106)

இதை அடிப்படையாகக் கொண்டு திருமணத்திற்கும் சாட்சிகள் அவசியம் என்பதை அறியலாம்.

திருமணம் செய்த பின் ஒரு தரப்பினர் பிறகு மறுத்து விடக் கூடும் என்பதாலும், விபச்சாரத்தில் ஈடுபடுவோர் மாட்டிக் கொள்ளும் போது தாங்கள் கணவன் மனைவியர் என்று கூறித் தப்பித்து விடாமல் இருப்பதற்காகவும் ஏனைய கொடுக்கல் வாங்கலின் போது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்வது போலவே திருமணத்திலும் குறைந்தது இரு சாட்சிகள் ஏற்படுத்தப் பட வேண்டும்.

நாளை விவகாரம் ஏற்பட்டால் உள்ளதை உள்ளபடி சொல்வதற்கே சாட்சிகள் தேவைப்படுகின்றனர். சடங்குக்காக சாட்சிகள் ஏற்படுத்தப் படவில்லை.

உள்ளதை உள்ளபடி சொல்ல வேண்டுமானால் திருமணத்தின் முக்கியமான பேச்சுவார்த்தைகள், கொடுக்கல் வாங்கல் அனைத்தும் அவர் பார்வையில் நடக்க வேண்டும். அவர் தான் சாட்சியாக இருக்கத் தக்கவர்.

மணப் பெண்ணின் சம்மதம் பெறப்பட்டதும், மஹர் கொடுக்கப்பட்டதும், எவ்வளவு மஹர் என்பதும் அவருக்குத் தெரிய வேண்டும். இந்த விபரங்கள் எதுவும் தெரியாத நிலையில் திருமணத்திற்கு வந்திருக்கும் இரண்டு நபர்களை சாட்சிகளாக ஆக்குவது அர்த்தமற்றதாகும்.

எளிமையான திருமணம்

திருமணங்கள் மிகவும் குறைந்த செலவில் நடத்தப்பட வேண்டுமென இஸ்லாம் கூறுகிறது. பிறர் மெச்ச வேண்டுமென்பதற்காகவும், தம்முடைய செல்வச் செழிப்பு உலகுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகவும் திருமணங்கள் நடத்தப்படக் கூடாது.

வீண் விரயத்தையும், பிறர் மெச்ச வேண்டும் என்று காரியங்கள் செய்வதையும் திருக்குர்ஆன் கடுமையாகக் கண்டிக்கின்றது.

வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் நேசிக்க மாட்டான்.

திருக்குர்ஆன் 6:141

உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான்.

திருக்குர்ஆன் 7:31

உறவினருக்கும், ஏழைக்கும், நாடோடிக்கும் அவரவரின் உரிமையை வழங்குவீராக! ஒரேயடியாக வீண் விரையம் செய்து விடாதீர்! விரையம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.

திருக்குர்ஆன் 17:26, 27

குறிப்பாக திருமணங்கள் குறைந்த செலவில் நடத்தப்பட வேண்டுமென நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

مسند أحمد 
24529 - حَدَّثَنَا عَفَّانُ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، قَالَ: أَخْبَرَنِي ابْنُ الطُّفَيْلِ بْنِ سَخْبَرَةَ، عَنْ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " إِنَّ أَعْظَمَ النِّكَاحِ بَرَكَةً أَيْسَرُهُ مَؤُونَةً " 

குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிகம் பரகத் நிறைந்ததாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: அஹ்மத் 23388

திருமண விருந்து

திருமணத்திற்குப் பின் மணமகன் வழங்கும் விருந்து வலீமா எனப்படுகின்றது. இந்த விருந்து நபிவழியாகும்.

பெண் வீட்டார் விருந்தளிப்பதும் அவர்களிடம் விருந்து கேட்டுப் பெறுவதும் மறைமுகமான வரதட்சணையாகும். நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் பெண் வீட்டார் விருந்து கொடுக்கும் பழக்கம் இருந்ததில்லை.

மணமகன் கட்டாயம் விருந்தளிக்க வேண்டுமென்பதோ, கடன் வாங்கியேனும் விருந்தளிக்க வேண்டுமென்பதோ இல்லை. தன் வசதிக்கேற்ப சாதாரண உணவை மிகச் சிலருக்கு வழங்கினாலும் இந்த சுன்னத் நிறைவேறிவிடும்.

 صحيح البخاري
فَأَصْبَحَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَرُوسًا، فَقَالَ: «مَنْ كَانَ عِنْدَهُ شَيْءٌ فَلْيَجِئْ بِهِ» وَبَسَطَ نِطَعًا، فَجَعَلَ الرَّجُلُ يَجِيءُ بِالتَّمْرِ، وَجَعَلَ الرَّجُلُ يَجِيءُ بِالسَّمْنِ، قَالَ: وَأَحْسِبُهُ قَدْ ذَكَرَ السَّوِيقَ، قَالَ: فَحَاسُوا حَيْسًا، فَكَانَتْ وَلِيمَةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபிய்யாவை மணமுடித்த போது சிறிது மாவு, சிறிது பேரீச்சம் பழம் ஆகியவற்றையே வலீமா விருந்தாக வழங்கினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 371, 2893

صحيح البخاري
5172 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورِ بْنِ صَفِيَّةَ، عَنْ أُمِّهِ صَفِيَّةَ بِنْتِ شَيْبَةَ، قَالَتْ: «أَوْلَمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى بَعْضِ نِسَائِهِ بِمُدَّيْنِ مِنْ شَعِيرٍ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு மனைவியைத் திருமணம் செய்த போது இரண்டு முத்து (சுமார் 1 லிட்டர்) கோதுமையையே வலீமா விருந்தாக அளித்தார்கள்.

அறிவிப்பவர்: சபிய்யா (ரலி)

நூல்: புகாரி 5172

صحيح البخاري 
5168 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ: «مَا أَوْلَمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى شَيْءٍ مِنْ نِسَائِهِ مَا أَوْلَمَ عَلَى زَيْنَبَ، أَوْلَمَ بِشَاةٍ»

ஸைனபைத் திருமணம் செய்த போது விருந்தளித்த அளவுக்கு வேறு எவரைத் திருமணம் செய்த போதும் நபிகள் நாயகம் (ஸல்) விருந்தளித்ததில்லை. ஸைனபை மணந்த போது ஒரு ஆட்டை திருமண விருந்தாக அளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 5168, 5171, 7421

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொடுத்த பெரிய வலீமா விருந்தில் ஒரு ஆட்டை வலீமாவாகக் கொடுத்தார்கள். இதுதான் அவர்கள் வழங்கிய பெரிய விருந்தாகும். எனவே விருந்தின் பெயரால் செய்யப்படும் ஆடம்பரங்களையும் தவிர்க்க வேண்டும்.

வலீமா விருந்துக்கு அழைக்கும் போது ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு காட்டக் கூடாது.

صحيح البخاري 
5177 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّهُ كَانَ يَقُولُ: «شَرُّ الطَّعَامِ طَعَامُ الوَلِيمَةِ، يُدْعَى لَهَا الأَغْنِيَاءُ وَيُتْرَكُ الفُقَرَاءُ، وَمَنْ تَرَكَ الدَّعْوَةَ فَقَدْ عَصَى اللَّهَ وَرَسُولَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»

செல்வந்தர்கள் மட்டும் அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கணிக்கப்படும் வலீமா உணவு, உணவுகளில் மிகவும் கெட்டதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 5177

வலீமா விருந்துக்கு ஒருவர் அழைக்கப்பட்டால் அதை மறுக்கக் கூடாது. மேற்கண்ட ஹதீஸின் தொடரில் யார் வலீமா விருந்தை ஏற்கவில்லையோ அவர் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் மாறு செய்து விட்டார் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக இடம் பெற்றுள்ளது.

விருந்தை ஏற்பது அவசியமென்றாலும் விருந்து நடக்கும் இடத்தில் மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் நடந்தால், அல்லது தீய நடத்தை உடையவரால் விருந்து வழங்கப்பட்டால் அதைத் தவிர்க்கலாம். தவிர்க்க வேண்டும்.

 

سنن النسائي 
5351 - حَدَّثَنَا مَسْعُودُ بْنُ جُوَيْرِيَةَ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ هِشَامٍ، عَنْ قَتَادَةَ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ عَلِيٍّ قَالَ: صَنَعْتُ طَعَامًا، فَدَعَوْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَاءَ، فَدَخَلَ فَرَأَى سِتْرًا فِيهِ تَصَاوِيرُ فَخَرَجَ وَقَالَ: «إِنَّ الْمَلَائِكَةَ لَا تَدْخُلُ بَيْتًا فِيهِ تَصَاوِيرُ»

நான் ஒரு விருந்தைத் தயார் செய்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைத்தேன். அவர்கள் வந்து என் வீட்டில் உருவப் படத்தைக் கண்ட போது திரும்பி சென்று விட்டார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)

நூல்: நஸாயீ 5256

அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் அல்லாஹ் நரகில் ஒன்று சேர்ப்பான்.

திருக்குர்ஆன் 4:140

ஒரு சபையில் அல்லாஹ்வின் கட்டளை மீறப்படுகிறது. அதன் மூலம் அல்லாஹ்வின் வசனங்கள் கேலி செய்யப்படுகிறது என்றால் அந்தச் சபைகளில் நாம் அமரவே கூடாது. அவ்வாறு அமர்ந்தால் நாம் அவர்களைப் போல் இறைவனால் கருதப்படுவோம் என்ற எச்சரிக்கை காரணமாகவே சில நிகழ்ச்சிகளைப் புறக்கணிக்கச் சொல்கிறோம். 

صحيح البخاري

2613 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ أَبُو جَعْفَرٍ، حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: أَتَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْتَ فَاطِمَةَ، فَلَمْ يَدْخُلْ عَلَيْهَا، وَجَاءَ عَلِيٌّ، فَذَكَرَتْ لَهُ ذَلِكَ، فَذَكَرَهُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنِّي رَأَيْتُ عَلَى بَابِهَا سِتْرًا مَوْشِيًّا»، فَقَالَ: «مَا لِي وَلِلدُّنْيَا» فَأَتَاهَا عَلِيٌّ، فَذَكَرَ ذَلِكَ لَهَا، فَقَالَتْ: لِيَأْمُرْنِي فِيهِ بِمَا شَاءَ، قَالَ: «تُرْسِلُ بِهِ إِلَى فُلاَنٍ، أَهْلِ بَيْتٍ بِهِمْ حَاجَةٌ»

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபிகள் நயகம் (ஸல்) அவர்கள், (தமது மகள்) ஃபாத்திமா (ரலி) அவர்களின் வீட்டுக்கு வந்தார்கள். ஆனால், அவர்களிடம் செல்லவில்லை. (திரும்பிப் போய் விட்டார்கள்.) (இதற்கிடையில் அங்கே) அலீ (ரலி) அவர்கள் வந்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் விஷயத்தைச் சொன்னார்கள். அலீ (ரலி) அவர்கள் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சொல்ல,  நான் ஃபாத்திமாவின் வீட்டு வாசலில் பல வண்ணச் சித்திரங்கள் வரையப்பட்ட திரைச் சீலை ஒன்றைக் கண்டேன். எனக்கும் இந்த (ஆடம்பரமான) உலகத்திற்கும் என்ன தொடர்பு? (அதனால் தான் திரும்பி வந்து விட்டேன்) என்று கூறினார்கள். அலீ (ரலி) அவர்கள், ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் சென்று, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதைச் சொன்னார்கள். அதற்கு ஃபாத்திமா (ரலி) அவர்கள், அந்தத் திரைச் சீலையின் விஷயத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தாம் விரும்புவதை எனக்குக் கட்டளையிடட்டும். (அதன்படியே நான் நடந்து கொள்கிறேன்) என்று கூறினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அதை இன்னாரின் வீட்டாரிடம் அனுப்பி விடு. அவர்களுக்குத் தேவையுள்ளது   என்று கூறினார்கள்.

நூல் : புகாரி 2613

மிகச் சாதாரணமாக நாம் கருதுகின்ற இந்தக் காரணத்திற்கே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் விருந்தைப் புறக்கணித்துள்ளனர்.

இதை விட பல நூறு மடங்கு ஆடம்பரங்களும், அனாச்சாரங்களும், வீண் விரயங்களும் மலிந்து காணப்படும் விருந்துகளில் எவ்வித உறுத்தலும் இல்லாமல் நாம் கலந்து கொள்கிறோம். இது சரி தானா என்று சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

صحيح مسلم

186 – حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ سُفْيَانَ ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ كِلاَهُمَا عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ – وَهَذَا حَدِيثُ أَبِى بَكْرٍ – قَالَ أَوَّلُ مَنْ بَدَأَ بِالْخُطْبَةِ يَوْمَ الْعِيدِ قَبْلَ الصَّلاَةِ مَرْوَانُ فَقَامَ إِلَيْهِ رَجُلٌ فَقَالَ الصَّلاَةُ قَبْلَ الْخُطْبَةِ. فَقَالَ قَدْ تُرِكَ مَا هُنَالِكَ. فَقَالَ أَبُو سَعِيدٍ أَمَّا هَذَا فَقَدْ قَضَى مَا عَلَيْهِ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ « مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ وَذَلِكَ أَضْعَفُ الإِيمَانِ ».

உங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அதைக் கையால் தடுக்கட்டும். அதற்கு இயலாவிட்டால் தனது நாவால் தடுக்கட்டும். அதற்கும் இயலாவிட்டால் தனது உள்ளத்தால் தடுக்கட்டும். (அதாவது அதை உள்ளத்தால் வெறுக்கட்டும்.) இது தான் ஈமானில் கடைசி நிலையாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

நூல் : முஸ்லிம்

மனதால் வெறுப்பது அந்தச் சபையைப் புறக்கணிப்பதன் மூலம் தான் உறுதியாகும். அதில் கலந்து கொண்டாலோ, அங்கு போய்ச் சாப்பிட்டாலோ தீய காரியம் நடக்கும் போது செய்ய வேண்டிய குறந்தபட்ச எதிர்ப்பைக் கூட தெரிவிக்கவில்லை என்பதே பொருளாகும். சிறிதளவும் அவருக்கு ஈமான் இல்லை என்பது தான் இதன் அர்த்தமாகும்.

நாள் நட்சத்திரம் இல்லை

திருமணத்தை நடத்துவதற்கு நல்ல நாள், கெட்ட நாள் என்று எதுவும் இல்லை. அவரவரின் விதிப்படி நடக்க வேண்டியவை யாவும் நடக்கும் என்ற நம்பிக்கையுடையவர்கள் குறிப்பிட்ட ஒரு நாளில் நல்லது ஏற்படும் என்றோ, குறிப்பிட்ட இன்னொரு நாளில் கெட்டது ஏற்படும் என்றோ நம்ப முடியாது.

வளர்பிறையில் திருமணம் நடத்தினால் அது சிறப்பாக இருக்கும் என்றோ, தேய் பிறையில் நடத்தினால் தேய்ந்து விடும் என்றோ கிடையாது. இப்படியெல்லாம் நம்புவதற்கு எந்த ஆதாரமும் கிடையாது.

வளர்பிறை பார்த்து, நல்ல நாள் பார்த்து செய்யப்பட்ட எத்தனையோ திருமணங்கள் முறிந்து விடுவதை நாம் கண்கூடாகக் காண்கின்றோம். இது மூட நம்பிக்கை என்பதை இதிலிருந்தும் உணரலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்த அரபியர் ஷவ்வால் மாதத்தை பீடை மாதம் என நம்பி அந்த மாதத்தில் நல்ல நிகழ்ச்சிகளை நடத்த மாட்டார்கள்.

صحيح مسلم 
3467- حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ, وَزُهَيْرُ بْنُ حَرْبٍ, وَاللَّفْظُ لِزُهَيْرٍ, قَالاَ: حَدَّثَنَا وَكِيعٌ, حَدَّثَنَا سُفْيَانُ, عَنْ إِسْمَاعِيلَ بْنِ أُمَيَّةَ, عَنْ عَبْدِ اللهِ بْنِ عُرْوَةَ, عَنْ عُرْوَةَ, عَنْ عَائِشَةَ, قَالَتْ: تَزَوَّجَنِي رَسُولُ اللهِ صَلى الله عَليه وسَلم فِي شَوَّالٍ, وَبَنَى بِي فِي شَوَّالٍ, فَأَيُّ نِسَاءِ رَسُولِ اللهِ صَلى الله عَليه وسَلم كَانَ أَحْظَى عِنْدَهُ مِنِّي؟.

இது பற்றி ஆயிஷா (ரலி) குறிப்பிடும் போது

என்னை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஷவ்வால் மாதத்திலேயே திருமணம் செய்தார்கள். ஷவ்வால் மாதத்திலேயே உறவும் கொண்டார்கள். அவர்களின் மனைவியரில் என்னை விட அவர்களுக்கு விருப்பமானவர் எவர் இருந்தார்? என்று குறிப்பிட்டார்கள்.

நூல்: முஸ்லிம் 2551, நஸாயீ 3184

எனவே திருமணத்தை எந்த மாதத்திலும் நடத்தலாம். எந்த நாளிலும் நடத்திலாம். எந்த நேரத்திலும் நடத்தலாம். குறிப்பிட்ட நாளையோ, நேரத்தையோ கெட்டது என்று ஒதுக்குவது கடுமையான குற்றமாகும்.

صحيح البخاري 
4826 - حَدَّثَنَا الحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ سَعِيدِ بْنِ المُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ: " يُؤْذِينِي ابْنُ آدَمَ يَسُبُّ الدَّهْرَ وَأَنَا الدَّهْرُ، بِيَدِي الأَمْرُ أُقَلِّبُ اللَّيْلَ وَالنَّهَارَ

ஆதமுடைய மகன் காலத்தைக் குறை கூறுகிறான். காலத்தைக் குறை கூறுபவன் என்னையே குறை கூறுகிறான். நான் தான் காலமாக இருக்கிறேன். என் கையில் தான் அதிகாரம் இருக்கிறது. இரவு பகலை நான் தான் மாறி மாறி வரச் செய்கிறேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 4826, 6181, 7491

எனவே ஒரு நாளை கெட்ட நாள் என்று கூறினால், நம்பினால் அல்லாஹ்வையே கெட்டவன் எனக் கூறிய, நம்பிய குற்றம் நம்மைச் சேரும்.

திருமண துஆ

நமது நாட்டில் வழக்கமாக திருமணத்தின் போது ஒரு துஆ ஓதி வருகின்றனர். அல்லாஹும்ம அல்லிப் பைனஹுமா..... என்று ஓதப்படும் அந்த துஆ நபிகள் நாயகம் (ஸல்) காலத்திலோ, ஸஹாபாக்கள் காலத்திலோ, தாபியீன்கள் காலத்திலோ, நான்கு இமாம்களின் காலத்திலோ நடைமுறையில் இருந்ததில்லை. தமிழகத்தைச் சேர்ந்த சிலரது கண்டுபிடிப்பாகும் இது.

ஆதம்-ஹவ்வா போல் வாழ்க! அய்யூப்-ரஹிமா போல் வாழ்க! என்ற கருத்தில் பல நபிமார்களின் இல்லறம் போல் வாழுமாறு பிரார்த்திக்கும் விதமாக இந்த துஆ அமைந்துள்ளது.

அந்த நபிமார்களும் அவர்களின் மனைவியரும் எப்படி இல்லறம் நடத்தினார்கள் என்ற விபரமோ, அவர்களின் மனைவியர் அவர்களுக்கு எந்த அளவு கட்டுப்பட்டு நடந்தனர் என்ற விபரமோ நமக்குத் தெரியாது. அவர்களின் இல்லறம் எப்படி இருந்தது என்பது தெரியாமல் அது போன்ற வாழ்க்கையைக் கேட்பது அர்த்தமற்றதாகும்.

உனக்கு அறிவில்லாத விஷயங்களை நீ பின்பற்ற வேண்டாம்

அல்குர்ஆன் 7:38

எனவே இது போன்ற துஆக்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் கூட்டாக வேறு துஆக்களை ஓதுவதற்கும் ஆதாரம் இல்லை.

மக்களுக்கு நபிகள் நயாகம் (ஸல்) அவர்கள் பல துஆக்களைச் செய்துள்ளனர்.

صحيح البخاري
5155 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادٌ هُوَ ابْنُ زَيْدٍ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى عَلَى عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ أَثَرَ صُفْرَةٍ، قَالَ: «مَا هَذَا؟» قَالَ: إِنِّي تَزَوَّجْتُ امْرَأَةً عَلَى وَزْنِ نَوَاةٍ مِنْ ذَهَبٍ، قَالَ: «بَارَكَ اللَّهُ لَكَ، أَوْلِمْ وَلَوْ بِشَاةٍ»

அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) தமக்குத் திருமணம் நடந்த செய்தியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறிய போது பாரகல்லாஹு லக (அல்லாஹ் உனக்கு பரகத் - புலனுக்கு எட்டாத பேரருள் - செய்வானாக) எனக் கூறினார்கள்.

நூல் : புகாரி 5155, 6386

இதை ஆதாரமாகக் கொண்டு பாரகல்லாஹு லக என்று கூறி வாழ்த்தலாம்.

பாரகல்லாஹு லகும், வபாரக அலைகும் என்று கூறுமாறு நபிகள் நாயகம் (ஸல்) கற்றுத் தந்ததாகவும் ஹதீஸ் உள்ளது. (அஹ்மத் 15181)

سنن الترمذي
1091 - حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَفَّأَ الإِنْسَانَ إِذَا تَزَوَّجَ، قَالَ: «بَارَكَ اللَّهُ لَكَ، وَبَارَكَ عَلَيْكَ، وَجَمَعَ بَيْنَكُمَا فِي الخَيْرِ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணத்தில் மணமக்களை வாழ்த்தும் போது பாரக்கல்லாஹு லக வபாரக்க அலைக வஜமஅ பைனகுமா ஃபீ கைர் என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்கள்: திர்மிதீ 1011, அபூதாவூத் 1819, அஹ்மத் 8599

அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக. நல்ல விஷயங்களில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக என்பது இதன் பொருள். ஒவ்வொருவரும் இந்த துஆவை வாழ்த்தைக் கூற வேண்டும்.

தவிர்க்கப்பட வேண்டியவை

திருமணத்தின் போது பல்வேறு சடங்குகள் முஸ்லிம் சமுதாயத்தில் பரவலாகக் காணப்படுகின்றன. இஸ்லாத்திற்கும் அந்த சடங்குகளுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை. எனவே அது போன்ற சடங்குகளைத் தவிர்க்க வேண்டும்.

தாலி கட்டுதல் - கருகமணி கட்டுதல்

ஆரத்தி எடுத்தல்

குலவையிடுதல்

திருமணம் முடிந்ததும் மாப்பிள்ளையைக் கட்டியணைத்து வாழ்த்துதல்

ஆண்களும் பெண்களுமாக மணமக்களைக் கேலி செய்தல்

வாழை மரம் நடுதல்

மாப்பிள்ளை ஊர்வலம்

ஆடல், பாடல், கச்சேரிகள் நடத்துதல்

பெண் வீட்டாரிடம் திருமணத்திற்குப் பின் பல சந்தர்ப்பங்களில் சீர் வரிசை என்ற பெயரில் கேட்டு வாங்குவது.

முதல் குழந்தைக்கு நகை செய்து போடுமாறு பெண் வீட்டாரைக் கட்டாயப்படுத்துதல்.

தலைப் பிரசவச் செலவை பெண் வீட்டார் தலையில் சுமத்துவது.

பல்வேறு காரணங்களை காட்டி பல்வேறு சந்தர்ப்பங்களில் பெண் வீட்டாரிடம் விருந்துகளைக் கேட்பது.

பிற மதத்தவர்களிடமிருந்து காப்பியடிக்கப்பட்ட இந்தக் கொடுமைகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும்.

سنن أبي داود 
4031 - حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو النَّضْرِ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ ثَابِتٍ، حَدَّثَنَا حَسَّانُ بْنُ عَطِيَّةَ، عَنْ أَبِي مُنِيبٍ الْجُرَشِيِّ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ»

யார் பிற சமயக் கலாச்சாரத்தை பின்பற்றி நடக்கின்றாரோ அவரும் அவர்களைச் சேர்ந்தவர் என்பது நபிமொழி.

நூல்: அபூதாவூத் 3512

அன்பளிப்பு மொய்

திருமணத்தின் போதும், மற்ற சமயங்களிலும் உற்றாரிடமிருந்தும், நண்பர்களிடமிருந்தும் அன்பளிப்புப் பெறுவது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதாகும்.

المستدرك على الصحيحين للحاكم
2363 - أَخْبَرَنَا أَبُو مُحَمَّدٍ عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ الْخُزَاعِيُّ بِمَكَّةَ، ثنا أَبُو يَحْيَى بْنُ أَبِي مَسَرَّةَ، ثنا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ الْمُقْرِئُ، حَدَّثَنِي سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ، حَدَّثَنِي أَبُو الْأَسْوَدِ، عَنْ بُكَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْأَشَجِّ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، عَنْ خَالِدِ بْنِ عَدِيٍّ الْجُهَنِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ بَلَغَهُ مَعْرُوفٌ عَنْ أَخِيهِ مِنْ غَيْرِ مَسْأَلَةٍ، وَلَا إِشْرَافِ نَفْسٍ، فَلْيَقْبَلْهُ وَلَا يَرُدَّهُ، فَإِنَّمَا هُوَ رِزْقٌ سَاقَهُ اللَّهُ إِلَيْهِ» هَذَا حَدِيثٌ صَحِيحُ الْإِسْنَادِ وَلَمْ يُخَرِّجَاهُ "

ஒருவருக்கு அவரது சகோதரர்களிடமிருந்து நல்ல பொருள் ஏதேனும் அவர் கேட்காமலும், எதிர்பார்க்காமலும் கிடைக்குமேயானால் அதை மறுக்காமல் ஏற்றுக் கொள்ளவும். ஏனெனில் அது அல்லாஹ் அவருக்கு வழங்கிய பாக்கியமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: காலித் பின் அதீ (ரலி)

நூல்: ஹாகிம்

அன்பளிப்புகளை மறுக்கலாகாது என்பதை இந்த ஹதீஸ் கூறுகிறது.

மொய் என்றும் ஸலாமீ என்றும் கூறப்படும் போலித்தனமான அன்பளிப்புகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும். ஒரு பொருளைக் கொடுத்து விட்டு தங்களுக்கு அது திரும்பக் கிடைக்கும் என்ற எண்ணத்திலேயே மொய் என்பது அமைந்துள்ளது.

கொடுத்து விட்டு திரும்பிப் பெற எண்ணும் போது அது அன்பளிப்பாகாது.

صحيح البخاري
1490 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، قَالَ: سَمِعْتُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ: حَمَلْتُ عَلَى فَرَسٍ فِي سَبِيلِ اللَّهِ، فَأَضَاعَهُ الَّذِي كَانَ عِنْدَهُ، فَأَرَدْتُ أَنْ أَشْتَرِيَهُ وَظَنَنْتُ أَنَّهُ يَبِيعُهُ بِرُخْصٍ، فَسَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «لاَ تَشْتَرِي، وَلاَ تَعُدْ فِي صَدَقَتِكَ، وَإِنْ أَعْطَاكَهُ بِدِرْهَمٍ، فَإِنَّ العَائِدَ فِي صَدَقَتهِ كَالعَائِدِ فِي قَيْئِهِ»

அன்பளிப்புச் செய்து விட்டு அதைத் திரும்ப எதிர்பார்ப்பவன் வாந்தி எடுத்துவிட்டு அதையே திரும்ப சாப்பிடுபவனைப் போன்றவன் என்பது நபிமொழி.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 1490, 2589, 2621, 2623, 3003, 6975

இந்த வெறுக்கத் தக்க போலி அன்பளிப்புகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

தம்பதியரின் கடமைகள்

صحيح البخاري 
3331 - حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، وَمُوسَى بْنُ حِزَامٍ، قَالاَ: حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَلِيٍّ، عَنْ زَائِدَةَ، عَنْ مَيْسَرَةَ الأَشْجَعِيِّ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اسْتَوْصُوا بِالنِّسَاءِ، فَإِنَّ المَرْأَةَ خُلِقَتْ مِنْ ضِلَعٍ، وَإِنَّ أَعْوَجَ شَيْءٍ فِي الضِّلَعِ أَعْلاَهُ، فَإِنْ ذَهَبْتَ تُقِيمُهُ كَسَرْتَهُ، وَإِنْ تَرَكْتَهُ لَمْ يَزَلْ أَعْوَجَ، فَاسْتَوْصُوا بِالنِّسَاءِ»

பெண்கள் வளைந்த எலும்பு போன்றவர்கள். அதனை நிமிர்த்த முயன்றால் அதனை உடைத்து விடுவாய். அந்த வளைவு இருக்கும் நிலையிலேயே அவளை விட்டு விட்டால் அவளிடம் இன்பம் பெறுவாய் என்று நபிகள் நாயகம் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 3331, 5184, 5186

صحيح مسلم 
3639- وحَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ مُوسَى الرَّازِيُّ, حَدَّثَنَا عِيسَى, يَعْنِي ابْنَ يُونُسَ , حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ جَعْفَرٍ , عَنْ عِمْرَانَ بْنِ أَبِي أَنَسٍ, عَنْ عُمَرَ بْنِ الْحَكَمِ, عَنْ أَبِي هُرَيْرَةَ, قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلى الله عَليه وسَلم: لاَ يَفْرَكْ مُؤْمِنٌ مُؤْمِنَةً, إِنْ كَرِهَ مِنْهَا خُلُقًا رَضِيَ مِنْهَا آخَرَ, أَوْ قَالَ: غَيْرَهُ.

இறை நம்பிக்கையுள்ள ஒரு ஆண், இறை நம்பிக்கையுள்ள தன் மனைவியை வெறுத்து விட வேண்டாம். அவளது ஒரு குணத்தை அவன் வெறுத்தால் அவன் விரும்பக் கூடிய வேறொரு குணத்தை அவளிடம் அவன் காணலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 2672

مسند أحمد 
7402 - حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ، قَالَ: سَمِعْتُ مُحَمَّدَ بْنَ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَكْمَلُ الْمُؤْمِنِينَ إِيمَانًا، أَحْسَنُهُمْ خُلُقًا، وَخِيَارُهُمْ خِيَارُهُمْ لِنِسَائِهِمْ»

நல்ல குணம் கொண்டவர்களே இறை நம்பிக்கையில் முழுமை பெற்றவர்களாவர். உங்களில் சிறந்தவர்கள் தங்கள் மனைவியரிடம் நல்லபடி நடந்து கொள்பவர்களே என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்கள்: அஹ்மத் 7095, திர்மிதீ 1082

سنن الترمذي
1163 - حَدَّثَنَا الحَسَنُ بْنُ عَلِيٍّ الخَلاَّلُ، قَالَ: حَدَّثَنَا الحُسَيْنُ بْنُ عَلِيٍّ الجُعْفِيُّ، عَنْ زَائِدَةَ، عَنْ شَبِيبِ بْنِ غَرْقَدَةَ، عَنْ سُلَيْمَانَ بْنِ عَمْرِو بْنِ الأَحْوَصِ قَالَ: حَدَّثَنِي أَبِي، أَنَّهُ شَهِدَ حَجَّةَ الوَدَاعِ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَحَمِدَ اللَّهَ، وَأَثْنَى عَلَيْهِ، وَذَكَّرَ، وَوَعَظَ، فَذَكَرَ فِي الحَدِيثِ قِصَّةً، فَقَالَ: أَلاَ وَاسْتَوْصُوا بِالنِّسَاءِ خَيْرًا، فَإِنَّمَا هُنَّ عَوَانٌ عِنْدَكُمْ، لَيْسَ تَمْلِكُونَ مِنْهُنَّ شَيْئًا غَيْرَ ذَلِكَ، إِلاَّ أَنْ يَأْتِينَ بِفَاحِشَةٍ مُبَيِّنَةٍ، فَإِنْ فَعَلْنَ فَاهْجُرُوهُنَّ فِي الْمَضَاجِعِ، وَاضْرِبُوهُنَّ ضَرْبًا غَيْرَ مُبَرِّحٍ، فَإِنْ أَطَعْنَكُمْ فَلاَ تَبْغُوا عَلَيْهِنَّ سَبِيلاً، أَلاَ إِنَّ لَكُمْ عَلَى نِسَائِكُمْ حَقًّا، وَلِنِسَائِكُمْ عَلَيْكُمْ حَقًّا، فَأَمَّا حَقُّكُمْ عَلَى نِسَائِكُمْ فَلاَ يُوطِئْنَ فُرُشَكُمْ مَنْ تَكْرَهُونَ، وَلاَ يَأْذَنَّ فِي بُيُوتِكُمْ لِمَنْ تَكْرَهُونَ، أَلاَ وَحَقُّهُنَّ عَلَيْكُمْ أَنْ تُحْسِنُوا إِلَيْهِنَّ فِي كِسْوَتِهِنَّ وَطَعَامِهِنَّ.
هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ.

பெண்களை நல்ல முறையில் நடத்துங்கள். அவர்கள் உங்களிடம் அடைக்கலமாக உள்ளவர்கள். அதைத் தவிர அவர்களிடம் உங்களுக்கு வேறு எந்த உரிமையும் இல்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அம்ரு பின் அஹ்வஸ் (ரலி),

நூல்: திர்மிதீ 1083

سنن أبي داود 
2142 - حدَّثنا موسى بنُ إسماعيلَ، حدَّثنا حماد، أخبرنا أبو قزَعَةَ الباهليُّ، عن حكيم بن معاوية القُشيريِّ  عن  أبيه،  قال: قلت: يا رسولَ الله، ما حق زوجة أحدِنا عليه؟ قال: " أن تُطعمَها إذا طَعِمتَ، وتكسُوَها إذا اكتَسَيْتَ  - أو اكتسبْتَ - ولا تضربَ الوجهَ، ولا تُقبِّحَ، ولا تَهْجُرَ إلا في البيت" 

ஒரு முறை நான், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், எங்களின் மனைவிமார்களுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகள் யாவை? எனக் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீ எதை உண்கிறாயோ, அதையே அவளுக்கும் உண்ணக் கொடுப்பாயாக! நீ எதை அணிகிறாயோ அது போன்றதையோ அவளுக்கும் அணிவிக்கக் கொடுப்பாயாக! மேலும், அவளின் முகத்தில் அடிக்காதே! அவளை இழிவுபடுத்தாதே! வீட்டிலில்லாமல் வெளியிடங்களில் வைத்து அவளைக் கண்டிக்காதே! என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: முஆவியா பின் ஹைதா (ரலி)

நூல்: அபூதாவூத் 1830

மணமுடிக்கத் தகாதவர்கள்

  1. இணை கற்பிப்போரை மணக்கக் கூடாது.

இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் எவ்வளவு தான் உங்களைக் கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண் சிறந்தவள். இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மணமுடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக் கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறை வன்) தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.

திருக்குர்ஆன் 2:221

நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்ட பெண்கள் ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தால் அவர்களைச் சோதித்துப் பாருங்கள்! அவர்களது நம்பிக்கையை அல்லாஹ் நன்கு அறிந்தவன். அவர்கள் நம்பிக்கை கொண்டோர் என்று நீங்கள் அறிந்தால் அவர்களை (ஏக இறைவனை) மறுப்போரிடம் திருப்பி அனுப்பி விடாதீர்கள்! இவர்கள் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோர் அல்லர். அவர்கள் இவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோரும் அல்லர். அவர்கள் (இப்பெண்களுக்காக) செலவிட்டதை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்! அவர்களுக்குரிய (மணக்) கொடைகளை நீங்கள் வழங்கினால் அவர்களை நீங்கள் மணந்து கொள்வது உங்கள் மீது குற்றமில்லை. ஏக இறைவனை மறுக்கும் பெண்களுடன் (முன்னர் செய்த) திருமண ஒப்பந்தங்களைத் தொடராதீர்கள். நீங்கள் செலவிட்டதை நீங்கள் கேளுங்கள்! அவர்கள் செலவிட்டதை அவர்கள் கேட்கட்டும். இதுவே அல்லாஹ்வின் கட்டளை. உங்களுக்கிடையே அவன் தீர்ப்பளிக்கிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.

திருக்குர்ஆன் 60:10

  1. இத்தா முடியும் வரை திருமணம் கூடாது.

கணவனை இழந்த பெண்கள் தமக்குரிய இத்தா காலம் முடியும் வரை திருமணமோ திருமண ஒப்பந்தமோ செய்யக் கூடாது.

(காத்திருக்கும் காலகட்டத்தில்) அவர்களை மணம் செய்ய எண்ணுவதோ, சாடை மாடையாக மணம் பேசுவதோ உங்கள் மீது குற்றம் இல்லை. அவர்களை நீங்கள் (மனதால்) விரும்புவதை அல்லாஹ் அறிவான். நல்ல சொற்கள் சொல்வதைத் தவிர இரகசியமாக அவர்களுக்கு வாக்குறுதி அளித்து விடாதீர்கள்! உரிய காலம் முடியும் வரை திருமணம் செய்யும் முடிவுக்கு வராதீர்கள்! உங்களுக்குள்ளே இருப்பதை அல்லாஹ் அறிவான் என்பதை அறிந்து அவனுக்கு அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத்தன்மை மிக்கவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்!

திருக்குர்ஆன் 2:235

  1. தந்தையின் மனைவியை மணக்கக் கூடாது.

உங்கள் தந்தையர் மணமுடித்த பெண்களை மணக்காதீர்கள்! ஏற்கனவே நடந்து முடிந்ததைத் தவிர. இது வெட்கக்கேடானதும், வெறுப்புக்குரியதும், கெட்ட வழியுமாகும்.

திருக்குர்ஆன் 4:22

மணக்கக் கூடாத உறவுகள்

ஆண்கள் கீழ்க்காணும் உறவினர்களை மணக்க அனுமதியில்லை.

தாய்

மகள்

சகோதரி

தாயின் சகோதரி

தந்தையின் சகோதரி

சகோதரனின் புதல்விகள்

சகோதரியின் புதல்விகள்

பாலூட்டிய அன்னையர்

பாலூட்டிய அன்னையின் புதல்விகள்

மனைவியின் தாய்

மனைவியின் புதல்வி

மகனின் மனைவி

இரு சகோதரிகளை ஒரே காலத்தில் மனைவியராக்குதல்

பெண்கள் மணமுடிக்கக் கூடாத உறவுகள்

தந்தை

மகன்

சகோதரன்

தாயின் சகோதரன்

தந்தையின் சகோதரன்

சகோதரனின் மகன்

சகோதரியின் மகன்

பாலூட்டிய அன்னையின் கணவன்

பாலூட்டிய அன்னையின் மகன்

கணவனின் தந்தை

கணவனின் புதல்வன்

புதல்வியின் கணவன்

சகோதரியின் கணவனை சகோதரியுடன் கணவன் வாழும் போது மணப்பது

ஆகியவை தடுக்கப்பட்டுள்ளன.

திருக்குர்ஆன் 4:23 வசனத்திலிருந்து இதை அறியலாம்.

உங்கள் அன்னையர், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரிகள், உங்கள் தந்தையரின் சகோதரிகள், உங்கள் அன்னையின் சகோதரிகள், சகோதரனின் புதல்விகள், சகோதரியின் புதல்விகள், உங்களுக்குப் பாலூட்டிய அன்னையர், பால்குடிச் சகோதரிகள், உங்கள் மனைவியரின் அன்னையர், நீங்கள் தாம்பத்தியம் நடத்திய மனைவிக்குப் பிறந்த உங்கள் பொறுப்பில் உள்ள மனைவியின் புதல்விகள், ஆகியோர் (மணமுடிக்க) விலக்கப்பட்டுள்ளனர். நீங்கள் உங்கள் மனைவியருடன் உடலுறவு கொள்ளா(த நிலையில் விவாக ரத்துச் செய்து) விட்டால் (அவர்களின் புதல்விகளை மணப்பது) உங்களுக்குக் குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த புதல்வர்களின் மனைவியரும், (விலக்கப்பட்டுள்ளனர்.) இரு சகோதரிகளை ஒரே நேரத்தில் மணந்து கொள்வதும் (விலக்கப்பட்டுள்ளது). நடந்து முடிந்ததைத் தவிர. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான.

திருக்குர்ஆன் 4:23

இரத்த சம்பந்தத்தால் யாரைத் திருமணம் செய்யக் கூடாது என்று மேலே நாம் குறிப்பிட்டோம். அன்னியப் பெண்ணிடம் பால் குடித்ததால் மேற்கண்ட உறவு முறை ஏற்படுமானால் அவர்களையும் மணக்கக் கூடாது.

அதாவது ஒரு பெண்ணிடம் ஒருவன் பாலருந்தி விட்டால் அவள் தாயாகி விடுகிறாள். இதன் காரணமாக அவளது சகோதரி சின்னம்மா அல்லது பெரியம்மா ஆகி விடுவார்கள். எனவே அவரையும் மணக்கக் கூடாது.

அவளது சகோதரன் அல்லது சகோதரியின் மகளையும் மணக்கக் கூடாது. பாலூட்டிய அன்னையை பெற்ற தாய் இடத்தில் வைத்துப் பார்த்தால் அவளது உறவினர்கள் நமக்கு மேற்கண்ட உறவு முறையுடையவர்களாக ஆனால் அவர்களை மணக்கக் கூடாது.

صحيح البخاري
2645 - حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ جَابِرِ بْنِ زَيْدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بِنْتِ حَمْزَةَ: «لاَ تَحِلُّ لِي، يَحْرُمُ مِنَ الرَّضَاعِ مَا يَحْرُمُ مِنَ النَّسَبِ، هِيَ بِنْتُ أَخِي مِنَ الرَّضَاعَةِ»

இரத்த சம்பந்தத்தால் தடுக்கப்பட்ட உறவுமுறைகள், பால் அருந்திய உறவு முறையிலும் தடுக்கப்பட்டதாகும் என்பது நபிமொழி.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 2645

صحيح البخاري 
5108 - حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا عَاصِمٌ، عَنِ الشَّعْبِيِّ، سَمِعَ جَابِرًا رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تُنْكَحَ المَرْأَةُ عَلَى عَمَّتِهَا أَوْ خَالَتِهَا»

இது தவிர ஒரு பெண்ணை மணந்து அவளுடன் வாழும் போது அவளது தாயின் சகோதரியையும் சேர்த்து மணக்கக் கூடாது. அது போல் மனைவியின் தந்தையின் சகோதரியையும் சேர்த்து மணக்கக் கூடாது.

நூல் : புகாரி 5108

மனைவி மரணித்து விட்டாலோ, விவாகரத்து ஆகிவிட்டாலோ மனைவியின் தாயுடைய சகோதரியை, மனைவியின் தந்தையுடைய சகோதரியை மணக்கத் தடையில்லை.

பால்குடிப் பருவமும் அளவும்

எந்த வயதில் பால் குடித்தாலும் ஒரு பெண் தாயாகி விடுவாள் என்று பலரும் எண்ணுகின்றனர்.

இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைப் பருவத்தில் பால் கொடுத்தால் தான் தாய் பிள்ளை என்ற உறவு ஏற்படும்.

பாலூட்டும் பருவம் இரண்டு ஆண்டுகள் தான் என்று திருக்குர்ஆன் 2:233 கூறுகிறது.

மேலும் பசியை அடக்கும் அளவுக்கும், நான்கு தடவைகளுக்கு அதிகமாகவும் பாலூட்டினால் தான் தாய் - பிள்ளை என்ற உறவு ஏற்படும்.

صحيح البخاري
5102 - حَدَّثَنَا أَبُو الوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَشْعَثِ، عَنْ أَبِيهِ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ عَلَيْهَا وَعِنْدَهَا رَجُلٌ، فَكَأَنَّهُ تَغَيَّرَ وَجْهُهُ، كَأَنَّهُ كَرِهَ ذَلِكَ، فَقَالَتْ: إِنَّهُ أَخِي، فَقَالَ: «انْظُرْنَ مَنْ إِخْوَانُكُنَّ، فَإِنَّمَا الرَّضَاعَةُ مِنَ المَجَاعَةِ»

பசியைப் போக்குவதே பாலூட்டலாகும் என்பது நபிமொழி.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 5102

صحيح مسلم 
20 - (1451) حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الْخَلِيلِ، عَنْ عَبْدِ اللهِ بْنِ الْحَارِثِ، أَنَّ أُمَّ الْفَضْلِ، حَدَّثَتْ، أَنَّ نَبِيَّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تُحَرِّمُ الرَّضْعَةُ أَوِ الرَّضْعَتَانِ، أَوِ الْمَصَّةُ أَوِ الْمَصَّتَانِ»،

ஒரு தடவை அல்லது இரண்டு தடவைகள் பால் அருந்துவதால் திருமணத் தடை ஏதும் ஏற்படாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)

நூல்: முஸ்லிம் 2628

ஆயிஷா (ரலி) அவர்களின் மற்றொரு அறிவிப்பில் ஐந்து தடவை பாலருந்தினால் தான் திருமணத் தடை ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தாம்பத்திய உறவு

தாம்பத்திய உறவு கொள்வதற்கு என்று ஏராளமான கட்டுக் கதைகளை முஸ்லிம்கள் உண்டாக்கி அதை நம்பி வருகின்றனர். ஆனால் இஸ்லாத்தில் இந்த விஷயத்தில் மிகவும் குறைந்த அளவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மாதவிடாயின் போது

மாதவிடாய்க் காலத்தில் தாம்பத்திய உறவு கொள்ளக் கூடாது.

மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். அது ஓர் தொல்லை. எனவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்! அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள்! அவர்கள் தூய்மையாகி விட்டால் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளை யிட்டவாறு அவர்களிடம் செல்லுங்கள்! திருந்திக் கொள்வோரை அல்லாஹ் விரும்புகிறான். தூய்மையாக இருப்போரையும் விரும்புகிறான் எனக் கூறுவீராக!

திருக்குர்ஆன் 2:222

மலப்பாதையில் உறவு கொள்வதும் கடுமையாகத் தடுக்கப்பட்டுள்ளது.

مسند أحمد 
9733 - حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنِ الْحَارِثِ بْنِ مَخْلَدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " مَلْعُونٌ مَنْ أَتَى امْرَأَتَهُ  فِي دُبُرِهَا "

தனது மனைவியில் மலப்பாதையில் உறவு கொள்பவன் சபிக்கப்பட்டவன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: அபூதாவூத் 1847

இதைத் தவிர தாம்பத்திய உறவில் எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. குறிப்பிட்ட நாட்களில் அல்லது குறிப்பிட்ட நேரத்தில் உறவு கொள்ளக் கூடாது என்று அலீ (ரலி) அவர்களின் பெயரால் கூறப்படும் அனைத்தும் கட்டுக் கதையாகும்.

குறிப்பிட்ட முறையில் தான் உறவு கொள்ள வேண்டும். ஒருவரது அந்தரங்கத்தை மற்றவர் பார்க்கக் கூடாது என்றெல்லாம் கூறப்படும் அனைத்தும் கற்பனை செய்யப்பட்ட பொய்களாகும்.

அல்லாஹ் எதையும் மறைப்பவன் இல்லை. மறப்பவனும் அல்ல. தாம்பத்தியத்தில் தடுக்கப்பட வேண்டியவை ஏதும் இருந்தால் அதை அவனே கூறியிருப்பான்.

மேற்கண்ட போதனைகளைத் தம்பதியர் கவனத்தில் கொள்ள வேண்டும். வல்ல இறைவன் இஸ்லாத்தின் இந்தப் போதனைகளைச் செயல்படுத்தி வெற்றியடையக் கூடியவர்களாக நம்மை ஆக்கியருள்வானாக.

12.07.2009. 9:00 AM

இறைவனைக் காண முடியுமா?

 பதிப்புரை

இறைவனை நேரில் கண்டதாக கூறுவர் பலர். இறைவன் என்னுள் ஐக்கியமாகி விட்டான் என்று கூறுவர் பலர்.

இறைவன் உருவமற்றவன் என்றும், அவன் ஒரு ஒளி என்றும் கூறி அவனை காணவே முடியாது என்று கூறுபவர் பலர்.

இறைவனைக் காண முடியுமா? முடியாதா? முடியும் என்றால் எப்போது காண்பது? யார் காண்பது? என்பன போன்ற விசயங்களுக்கு விளக்கமளிக்கிறது இந்நுால்.

பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களால் அல்ஜன்னத் இதழில் எழுதப்பட்டு தற்போது இதனை நுாலாகத் தந்துள்ளோம்.

எங்களின் இரண்டாவது வெளியீடான இந்நுாலுக்கு முழு ஒத்துழைப்பு நல்கும்படி கேட்டுக் கொள்கின்றோம்.

சன் பப்ளிகேசன்ஸ்

மதுரை 7-8-94

 இறைவனைக் காண முடியுமா?

மூஸாவே! நாங்கள் அல்லாஹ்வை நேரடியாகக் காணும் வரை உம்மை நம்பவே மாட்டோம் என்று (மூஸாவை நோக்கி) நீங்கள் கூறினீர்கள். உடனேயே நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே இடி உங்களைப் பிடித்துக் கொண்டது. பிறகு நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களை மரணிக்கச் செய்தபின் உங்களை நாம் எழுப்பினோம்.

(அல்குர்ஆன் 2:55, 56)

மூஸா (அலை) அவர்களது காலத்து இஸ்ரவேலர்களின் விபரீதமான கோரிக்கையையும் அதனால் ஏற்பட்ட விளைவையும் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்த இஸ்ரவேலர்களுக்கு இறைவன் இங்கே நினைவுபடுத்துகின்றான். இதை 4:153 வசனத்திலும் இறைவன் சொல்லிக் காட்டுகிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்து இஸ்ரவேலர்களுக்கு இஸ்லாமிய அழைப்பு விடுப்பதற்காக இவ்வசனங்கள் அருளப்பட்டிருந்தாலும் இதனுள்ளே அடங்கி இருக்கின்ற மற்றொரு பிரச்சனையைப் பற்றி நாம் விரிவாக விளக்க வேண்டியுள்ளது.  இறைவனைக் காண முடியுமா?  என்பதே அந்தப் பிரச்சனையாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனை நேரடியாகப் பார்த்தார்கள் என்றும் சில பெரியார்கள், மகான்கள் இறைவனைப் பார்த்தார்கள் என்றும் பலர் நம்பிக் கொண்டிருப்பதால் இந்தப் பிரச்சனையை விளக்கும் அவசியம் ஏற்படுகின்றது.

திருக்குர்ஆனையும், நபிமொழிகளையும் நாம் ஆராயும் போது இம்மையில் எவருமே இறைவனைக் கண்டதில்லை, காணவும் முடியாது. மறுமையில் நல்லடியார்கள் மட்டும் இறைவனைக் காண்பார்கள் என்ற முடிவுக்கே நாம் வர முடிகின்றது. அதற்குரிய சான்றுகளில் ஒன்றாக இவ்வசனமும் திகழ்கிறது.

இறைவனைக் காண முடியாது  என்பதை இவ்வசனங்கள் நேரடியாகக் கூறவில்லை என்று சில பேர் வாதம் புரியக்கூடும். குறிப்பிட்ட சிலர் காண முடியாமல் இருந்துள்ளனர் என்பதையே இவ்வசனங்கள் கூறுகின்றன.

அவர்கள் கேட்ட விதம் சரியில்லாமலிருந்தால் கூட அவர்கள் இறைவனின் கோபத்திற்கு ஆளாகி அழிக்கப்பட்டிருக்கலாம் என்று அவர்கள் வாதிடக் கூடும்.

இந்த வசனங்களிலிருந்து இவ்வாறு கருதுவதற்கு இடம் இருந்தாலும் இறைவனைக் காணமுடியாது என்பதை வேறு பல வசனங்கள் அறிவிக்கின்றன.

நாம் குறித்த காலத்தில் மூஸா (அலை) அவர்கள் வந்த போது அவருடைய இறைவன் அவருடன் பேசினான். அப்போது மூஸா, இறைவனே! நான் உன்னைப் பார்க்க வேண்டும். எனக்கு உன்னைக் காட்டுவாயாக! என்று வேண்டினார். அதற்கு அவன் மூஸாவே! நீர் ஒருக்காலும் என்னைப் பார்க்க முடியாது. எனினும் நீர் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிரு. அது தன் இடத்தில் நிலைத்திருந்தால் அப்போது நீர் என்னைப் பார்க்கலாம். என்று கூறினான். அவருடைய இறைவன் (மூஸாவுக்கு தெரியாமல்) மலைக்குத் தன்னைக் காட்டிய போது அதை நொருக்கி துாளாக்கி விட்டான். (இதைக் கண்ட அதிர்ச்சியில்) மூஸா மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்டார். மூர்ச்சை தெளிந்ததும் நீ பரிசுத்தமானவன் உன்னிடம் நான் மன்னிப்புக் கோருகின்றேன் விசுவாசம் கொண்டவர்களில் நான் முதன்மையானவனாக இருக்கிறேன் என்று கூறினார்.

(அல்குர்ஆன் 7:143)

இறைவனை எவரும் காண முடியாது என்பதை இந்த வசனம் ஐயத்திற்கிடமின்றி அறிவிக்கிறது. மிகச் சிறந்த நபிமார்களில் ஒருவரான மூஸா (அலை) அவர்கள் இறைவனின் பேச்சைத் தம் காதுகளால் கேட்ட மூஸா (அலை) அவர்கள் இறைவனைப் பார்க்க முடியவில்லை என்றால் பெரியார்கள், மகான்கள் பார்த்திருக்கிறார்கள் என்பது எவ்வளவு பெரிய பொய் என்பதை உணரலாம்.

பார்க்க முடியாமல் போவதன் காரணமும் இங்கே இறைவனால் கூறப்படுகின்றது. இறைவனைக் காணுகின்ற வல்லமை, அவனது காட்சியைத் தாங்கும் வலிமை எவருக்கும் இல்லை என்பதே அந்தக் காரணம்.

உறுதி மிக்க மலைக்கு தன்னை இறைவன் காண்பித்து, அவனது காட்சி மலையில் பட்டதும் துாள்துாளாக நொறுங்கியதையும் காண்பித்து இதனையே இறைவன் விளக்குகின்றான். இறைவனது எந்தப் படைப்பும் அவனது காட்சியைத் தாங்கிக் கொள்ளவே முடியாது என்பதற்கு இந்த வசனம் சான்றாக உள்ளது.

பார்வைகள் அவனை அடைய முடியாது. அவனோ எல்லோருடைய பார்வைகளையும் அடைகிறான்.

(அல்குர்ஆன் 6:103)

அல்லாஹ் எந்த மனிதருடனும் உள்ளத்து உதிப்பின் மூலமோ, திரைக்கப்பாலிருந்தோ அல்லது தான் விரும்பியதை தன் அனுமதிபெற்று அறிவிக்கும் (வானவர்களாகிய) துாதரை அனுப்பியோ தவிர (நேரிடையாகப்) பேசுவதில்லை.

(அல்குர்ஆன் 42:51)

இந்த வசனங்களும் எவருமே இறைவனை நேரில் கண்டது கிடையாது. காணவும் முடியாது என்பதை ஐயத்திற்கிடமின்றி அறிவித்து விடுகின்றன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விண்ணுலகப் பயணம் மேற்கொண்ட செய்தியை அனைத்து முஸ்லிம்களும் அறிந்துள்ளனர். ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் இதைக் கூறுகின்றன. ஆனால் மிஃராஜில் நடந்தது என்னவென்பதை தவறாகவே பலரும் விளங்கியுள்ளனர்.

அங்கே இறைவனுடன் உரையாடல் மட்டும் தான் நடந்தது. நபிகள் நாயகம் (ஸல்) இறைவனைக் கண்டார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

உங்கள் இறைவனை நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா?  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள் அவனோ ஒளியானவன். எப்படி அவனைக் நான் காணமுடியும்?  என விடையளித்தார்கள் என்று அபுதர் (ரலி) அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) இறைவனைக் கண்டதில்லை என்பதையும், அவர்கள் இறைவனைக் கண்டார்கள் என்ற கருத்துடையோரின் ஆதாரங்கள் தவறானவை என்பதையும் பின்வரும் ஹதீஸும் விளக்குகிறது.

நான் ஆயிஷா (ரலி) அவர்களின் அருகே சாய்ந்தவனாக அதமர்ந்திருந்தேன். அவர்கள்  அபூ ஆயிஷாவே! மூன்று கருத்துக்களை யார் தெரிவிக்கிறாரோ அவர் அல்லாஹ்வின் மீது மிகப்பெரும் பொய்யை இட்டுக்கட்டியவராவார் என்றார்கள். அவை யாவை?  என்று நான் கேட்டேன். முஹம்மது (ஸல்) அவர்கள் தமது இறைவனைப் பார்த்தார்கள் என யார் கூறிகிறாரோ அவர் அல்லாஹ்வின் மீது பெரும் பொய்யை இட்டுக்கட்டியவராவார் என்று (முதல் விசயத்தைக்) கூறினார்கள்.

சாய்ந்திருந்த நான் (நிமிர்ந்து) உட்கார்ந்து கொண்டு (மூமின்களின் அன்னையே! அவசரப்படாதீர்கள்! நிதானமாகக் கூறுங்கள்! தெளிவான அடிவானத்தில் நிச்சயமாக அவர் (முஹம்மது (ஸல்) அவர்கள்) அவனைக் கண்டார். (81:23) என்றும் மற்றுமொரு தடவையும் அவனை அவர் கண்டார் (53:13) என்றும் அல்லாஹ் கூறவில்லையா?  எனக் கேட்டேன்.

அதைக்கேட்ட ஆயிஷா (ரலி) அவர்கள்  இதுபற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் முதல் முதலில் கேட்டவள் நான் தான்.  அப்படிக் கேட்ட போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  அது ஜிப்ரீல் (அலை) அவர்களைப் பற்றியதாகும். அவர்கள் எந்த வடிவில் படைக்கப்பட்டார்களோ அதே வடிவில் வானம் பூமிக்கு இடைப்பட்ட இடங்களை நிரப்பியவராக அந்த இரண்டு தடவைகள் தான் நான் அவர்களைப் பார்த்திருக்கிறேன் என்று கூறினார்கள். 

மேலும் தொடர்ந்து  பார்வைகள் அவனை அடைய முடியாது. அவனே பார்வைகளை அடைகிறான். (6:103) என்று இறைவன் கூறுவதையும் அல்லாஹ் எந்த மனிதருடனும் உள்ளத்து உதிப்பின் மூலமோ, திரைக்கப்பாலிருந்தோ, அல்லது தான் விரும்பியதை தன் அனுமதி பெற்று அறிவிக்கும் (வானவர்களான) துாதரை அனுப்பியோ தவிர (நேரிடையாகப்) பேசுவதில்லை (42:51) என்று இறைவன் கூறுவதையும் நீ கேள்விப்பட்டதில்லையா? எனவும் ஆயிஷா (ரலி) குறிப்பிட்டார்கள்.,

அல்லாஹ்வின் வேதத்தில் எதையேனும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மறைத்து விட்டார்கள் என்று எவராவது கருதினால் அவரும் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டியவராவார். துாதரே! உமக்கு உம் இறைவனிடமிருந்து அருளப்பட்டதை எடுத்துச் சொல்லிவிடுவீராக! நீ அவ்வாறு செய்யாவிட்டால் உமது தூதை எடுத்துச் சொன்னவராக மாட்டீர்! (5:67) என்று அல்லாஹ் கூறுகிறான் என்றார்கள்.

நாளை நடப்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவார்கள் என்று எவரேனும் கருதினால் அவரும் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவராவார். அல்லாஹ்வைத் தவிர வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்கள் எவரும் மறைவானதை அறிய மாட்டார்கள் (27.65) என்று அல்லாஹ் கூறுகிறான். என்று மூன்று விசயங்களையும் விளக்கினார்கள்.

நூல் முஸ்லிம்

இந்த ஆதாரங்களிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனை நேருக்கு நேர் கண்டதில்லை என்பதையும், எவராலும் காணமுடியாது என்பதையும் அறியலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் இறைவனை இரண்டு தடவை பார்த்துள்ளார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறுவதாக திர்மிதீயில் இடம் பெறும் செய்தியினடிப்படையில் அவர்கள் இறைவனைப் பார்த்ததாகச் சிலர் கூறுவர். பல காரணங்களால் இது ஏற்கமுடியாத வாதமாகும்.

இறைவனை எவரும் காண முடியாது என்று வந்துள்ள வசனங்களுக்கும், நபியவர்களே தான் இறைவனைப் பார்த்தது கிடையாது என்று கூறுவதற்கும் இது முரணாக அமைந்துள்ளது. இதன் காரணமாக இந்தச் செய்தி ஏற்க முடியாததாகும்.

இந்தச் செய்தி முஸ்லிமில் இடம் பெறும் போது இறைவனை உள்ளத்தால் (கண்களால் அல்ல) இரண்டு தடவை பார்த்தார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறுவதாக இடம் பெற்றுள்ளது. இதையே முதல் ஹதீஸுக்கும் விளக்கமாக நாம் கொள்ள வேண்டும், இவ்வாறு பொருள் கொள்ளும் போது மேற்கண்ட வசனங்களுக்கு முரண்படாத வகையில் அமைந்து விடுகின்றது.

இறைவனை எவரும் பார்த்ததில்லை; பார்க்க முடியாது; அந்த வல்லமை எந்தப் பார்வைக்கும் கிடையாது என்றாலும் மரணத்திற்குப் பின்னுள்ள மறுமை வாழ்வில் இறைவனைக் காண முடியும் என்பதற்குச் சான்றுகள் பல உள்ளன. அவனது காட்சியைத் தாங்கும் வல்லமையை இறைவன் அப்போது அளிப்பான் என்பதையும் நாம் அறிய முடிகின்றது.

அன்றைய தினத்தில் (மறுமையில்) சில முகங்கள் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும். தம் இறைவனைப் பார்த்து கொண்டிருக்கும்.

(அல்குர்ஆன் 75:23)

முழு நிலவை நீங்கள் காண்பது போல் உங்கள் இறைவனை நீங்கள் மறுமையில் காண்பீர்கள்  என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக ஏராளமான ஹதீஸ்கள் முஸ்லிம், திர்மிதீ மற்றும் பல நுால்களில் இடம் பெற்றுள்ளன.

மறுமையில் மாத்திரம் இறைவனைக் காணமுடியும் என்பதற்கு இவை சான்றுகளாக உள்ளன. இந்த மறுமைத் தரிசனம் கூட அனைவருக்கும் கிடைப்பதில்லை. ஒரு சிலர் இறைவனை மறுமையில் கூட சந்திக்கின்ற பாக்கியத்தை அடைய மாட்டார்கள். நல்லடியார்கள் மட்டுமே இந்தப் பேரின்பத்தை அடைவார்கள்.

அந்நாளில் அவர்கள் (இறை வசனங்களைப் பொய்யென மறுத்தவர்கள்) தம் இறைவனை விட்டும் திரையிடப்படுவார்கள்.

(அல்குர்ஆன் 83:15)

யார் அல்லாஹ்விடத்தில் செய்த வாக்குறுதியையும், தம் சத்தியப் பிரமாணத்தையும் அற்ப விலைக்கு விற்கிறார்களோ அவர்களும் நிச்சயமாக மறுமையில் யாதொரு நற்பாக்கியமும் இல்லை. அன்றியும் அல்லாஹ் அவர்களுடன் பேசமாட்டான். இன்னும் மறுமைநாளில் அவர்களைப் பார்க்கவும் மாட்டான்.

(அல்குர்ஆன் 3:77)

இது போன்றவர்களைத் தவிர மற்ற நல்லடியார்கள் மறுமையில் இறைவனைக் காணுகின்ற பெரும் பேற்றினை அடைவார்கள். இறைவனைத் தரிசிக்கும் பாக்கியம் பெற்றவர்களாக நம்மவர்களை இறைவன் ஆக்கியருளட்டும்.

23.04.2012. 13:18 PM

More Articles …