Sidebar

17
Wed, Jun
சமீபத்திய செய்திகள்

இஸ்லாமியக் கொள்கை

நூலின் பெயர் : இஸ்லாமியக் கொள்கை

 மார்க்கத்தின் எச்சரிக்கை!

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும். இந்த இணைய தளத்தில் உள்ளவைகளைப் பிரச்சாரம் செய்வதற்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் சில சகோதரர்கள் நமது ஆக்கங்களை அப்படியே பயன்படுத்தி தமது ஆக்கம் போல் காட்டுகின்றனர்.

இன்னாருடைய கட்டுரையில் இருந்து, அல்லது புத்தகத்தில் இருந்து இது எடுக்கப்பபட்டது என்று குறிப்பிடாமல் புகழடைவதற்காக இவ்வாறு செய்கின்றனர்.

சில இணைய தளங்களும் என்னுடைய ஆக்கங்களை அப்படியே வெளியிட்டு தம்முடைய ஆக்கம் போல் காட்டுகின்றன.மேலும் சில புத்தக வியாபாரிகளும் எனது நூல் உட்பட மற்றவர்களின் நூல்களைச் சிறிது மாற்றியமைத்து அனாமதேயங்களின் பெயர்களில் வெளியிட்டுச் சம்பாதிக்கின்றனர். உலகைப் பற்றியும் இவர்களுக்கு வெட்கம் இல்லை. மறுமையைப் பற்றியும் பயம் இல்லை.

இஸ்லாத்தில் இவ்வாறு செய்ய அனுமதி இல்லை. இவர்கள் நல்லது செய்யப் போய் மறுமையின் தண்டனைக்கு தம்மைத் தாமே உட்படுத்திக் கொள்கின்றனர்.

பிறரது ஆக்கங்களைப் பயன்படுத்துவோர் இது இன்னாருடைய ஆக்கம் என்று குறிப்பிடாமல் தன்னுடைய ஆக்கம் போல் காட்டுவது மார்க்க அடிப்படையில் குற்றமாகும்.

இவர்களுக்கு அல்லாஹ் விடுக்கும் எச்சரிக்கையை இங்கே சுட்டிக் காட்டுகிறோம்.

தாங்கள் செய்தவற்றுக்காக மகிழ்ச்சியடைந்து, தாம் செய்யாதவற்றுக்காகப் புகழப்பட வேண்டுமென விரும்புவோர் வேதனையிலிருந்து தப்பித்து விட்டார்கள் என்று நீர் நினைக்காதீர்! அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.

திருக்குர்ஆன் 3:188

சிறுவர்கள் இஸ்லாத்தின் கொள்கைகளை அறிந்து கொள்ள சவூதி அரேபியாவைச் சேர்ந்த மார்க்க அறிஞர் ஜமீல் ஜைனூ அவர்கள் எழுதிய நூலின் தமிழாக்கம்.

மொழிபெயர்ப்பு : பீ.எஸ். அலாவுத்தீன்

கேள்வி பதில் வடிவில் அமைந்துள்ள இந்நூல் மக்தப்களிலும், பள்ளிக் கூடங்களிலும் பாடநூலாக வைக்க ஏற்ற நூலாகும்.

பாடம் 1 அடியார்கள் அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமை

பாடம் 2 ஏகத்துவத்தின் வகைகளும் அதன் பயன்களும்

பாடம் 3 இறைவனிடம் நமது நல்லறங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான நிபந்தனைகள்

பாடம் 4 அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தலின் இரண்டு வடிவங்களில் மிகப் பெரும் வடிவம்

பாடம் 5 பெரிய இணை வைத்தலின் வகைகள்

அ. உதவிக்கு அழைத்தல்

ஆ.நேர்ச்சை செய்தல்

இ. பலியிடுதல்

ஈ. வலம் வருதல்

உ.சூனியம் செய்தல்

ஊ. ஜோதிடம், குறிபார்த்தல்

எ.மறைவானவை பற்றிய அறிவு

ஏ. அணியக்கூடாதவை எவை?

ஐ. செயல்பாடும் தீர்ப்பும்

ஓ. சாத்தானின் ஊசலாட்டம்

பாடம் 6 இணை வைத்தலின் கேடுகள்

பாடம் 7 அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தலின் சிறிய வடிவம்

பாடம் 8 இறைவனை இறைஞ்சிட துணைச் சாதனம் தேவையா?

பாடம் 9 நபிகளாரின் பரிந்துரை

பாடம் 10 மறைவழியில், நபிவழியில் தீர்ப்பளித்தல்

பாடம் 11 ஒருவருக்கொருவர் உதவியாளர்களாகவும், நேசர்களாகவும் திகழ்தல்

பாடம் 12 திருமறையிலும் நபிமொழி நெறியிலும் வாழுதல்

அ.திருக்குர்ஆன், ஹதீஸ்

ஆ. இறைநேசமும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது அன்பும்

இ.விதியும், முயற்சியும்

பாடம் 13 நபிகளாரின் வாழ்வும், வாக்கும், அதன்பின் தோன்றிய புதுமைப் பழக்க வழக்கங்களும்

பாடம் 14 ஏற்றுக் கொள்ளப்படும் பிரார்த்தனை

பாடம் 1 அடியார்கள் அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமை

கேள்வி 1 : அல்லாஹ் நம்மை எதற்காகப் படைத்திருக்கிறான்?

பதில் : அல்லாஹ்வுக்கு எதனையும் இணை கற்பிக்காமல் அவனையே வணங்க வேண்டுமென்பதற்காக அவன் நம்மைப் படைத்தான்.

என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) ஜின்னையும், மனிதனையும் நான் படைக்கவில்லை. அல்குர்ஆன் 51:56

அடியார்கள் அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமை, அவனுக்கு எதனையும் இணை கற்பிக்காமல் அவனையே அவர்கள் வணங்குவதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்

நூல் : புகாரி 2856, 5967, 6267, 6500, 7373

கேள்வி 2: வணக்கம் என்றால் என்ன?

பதில் : பிரார்த்தனை செய்தல், தொழுதல், பிராணிகளைப் பலியிடுதல் போன்ற இறைவனுக்கு விருப்பமான சொற்களுக்கும், செயல்களுக்கும் பொதுவான பெயரே வணக்கம் என்பதாகும்.

எனது தொழுகை, எனது வணக்க முறை, எனது வாழ்வு, எனது மரணம் யாவும் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியன; அவனுக்கு நிகரானவன் இல்லை; இவ்வாறே கட்டளையிடப்பட்டுள்ளேன்; முஸ்லிம்களில் நான் முதலாமவன் என்று கூறுவீராக!

என்று இறைவன் குறிப்பிடுகிறான்.

அல்குர்ஆன் 6:162, 163

எனது அடியான் மீது நான் கடமையாக்கியிருப்பவற்றைச் செய்து என்னை நெருங்குவதை விட எனக்கு மிக விருப்பமான வேறொன்றைச் செய்து அவன் என்னை நெருங்கி விட முடியாது என்று இறைவன் கூறியதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.

நூல் : புகாரி 6502

கேள்வி 3 : அல்லாஹ்வை நாம் எவ்விதம் வணங்க வேண்டும்?

பதில் : அல்லாஹ்வும், அவனது திருத்தூதரும் நமக்குக் கட்டளையிட்டிருப்பது போன்றே அவனை நாம் வணங்க வேண்டும்.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! உங்கள் செயல்களைப் பாழாக்கி விடாதீர்கள்! என்று அல்லாஹ் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறான்.

அல்குர்ஆன் 47:33

நமது உத்தரவின்றி எவன் ஒரு செயலைச் செய்கிறானோ அது தள்ளப்பட வேண்டியதே என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் 3243

கேள்வி 4 : அல்லாஹ்வின் தண்டனைக்கு அஞ்சியும், அல்லாஹ்வின் சன்மானத்திற்கு ஆசைப்பட்டும் அல்லாஹ்வை நாம் வணங்கலாமா?

பதில் : ஆம் அப்படித் தான் அவனை நாம் வணங்க வேண்டும். ஏனெனில்

அச்சத்துடனும், எதிர்பார்ப்புடனும் தமது இறைவனைப் பிரார்த்திக்க அவர்களின் விலாப்புறங்கள் படுக்கைகளிலிருந்து விலகும். நாம் வழங்கியவற்றிலிருந்து (நல் வழியில்) செலவிடுவார்கள். என்று ஏகத்துவ நம்பிக்கையாளர்களை அல்லாஹ் வர்ணிக்கிறான்.

அல்குர்ஆன் 32:16

நான் அல்லாஹ்விடம் சுவனத்தை வேண்டுகிறேன். நரகத்தை விட்டு அவனிடம் காவல் தேடுகிறேன். என்று நபிகள் நாயகம் (ஸல்) பிரார்த்தித்திருக்கிறார்கள்.

நூல் : அபூதாவூத் 672

கேள்வி 5 : வணக்கத்தில் சிறந்த முறை எது?

பதில் : வணக்கத்தில் சிறந்த முறை அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் எனும் எண்ணத்துடன் அவனை வணங்குவதாகும்.

நீர் நிற்கும் நேரத்திலும், ஸஜ்தாச் செய்வோருடன் நீர் இயங்கும் போதும் அவன் உம்மைப் பார்க்கிறான். என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

அல்குர்ஆன் 26:218,219

வணக்கத்தில் சிறந்த முறை அல்லாஹ்வை நீர் (நேரில்) பார்ப்பதைப் போன்று வணங்குவதாகும். அவனை நீர் பாக்கவில்லை என்றாலும் நிச்சயம் அவன் உம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி 50, 4777

பாடம் 2 ஏகத்துவத்தின் வகைகளும் அதன் பயன்களும்

கேள்வி 1 : அல்லாஹ் திருத்தூதர்களை எதற்காக அனுப்பினான்?

பதில் : தன்னை வணங்கும்படி மக்களை அழைப்பதற்காகவும் தனக்கு இணை கற்பிக்கும் பாவத்திலிருந்து அவர்களைத் தடுப்பதற்காகவுமே அல்லாஹ் திருத்தூதர்களை அனுப்பினான்.

அல்லாஹ்வை வணங்குங்கள்! தீய சக்திகளை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! என்று ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒரு தூதரை அனுப்பினோம்.

என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

அல்குர்ஆன் 16:36

கேள்வி 2 : படைத்துப் பரிபாலனம் செய்வதில் இறைவனை ஏகத்துவப்படுத்துவது என்றால் என்ன?

பதில் : படைத்துப் பரிபாலிப்பது, நிர்வகிப்பது போன்ற அல்லாஹ்வின் செயல்களில் யாரையும் அவனுக்கு இணையாக்கிவிடாமல் அவனை ஏகத்துவப்படுத்துவதே படைத்துப் பரிபாலிப்பதில் ஏகத்துவம் எனப்படும்.

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. (அவன்) அகிலத்தைப் (படைத்துப்) பராமரிப்பவன்.

அல்குர்ஆன் 1:1

இறைவா நீயே வானங்கள், பூமி ஆகியவற்றைப் படைத்துப் பரிபாலனம் செய்பவன் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதனையே குறிப்பிடுகிறார்கள்.

நூல் : புகாரி 1120, 6317, 7385, 7442, 7499

கேள்வி 3 : வணக்கத்தில் இறைவனின் ஏகத்துவத்தை ஏற்றுச் செயல்படுத்துவது என்றால் என்ன?

பதில் : பிரார்த்தனை செய்வது, பிராணிகளைப் பலியிடுவது, நேர்ச்சை செய்வது போன்ற அனைத்து வணக்கங்களையும் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே செய்வது வணக்கத்தில் ஏகத்துவம் எனப்படும்.

உங்கள் வணக்கத்திற்குரியவன் ஒரே ஒரு இறைவனே. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. (அவன்) அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன்.

என்று இறைவன் கூறுகின்றான்.

அல்குர்ஆன் 2:163

வணங்கப்படுவதற்குரிய தகுதி படைத்தவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு எவனுமில்லை என்பதை ஏற்க அவர்களை நீங்கள் அழைப்பது உங்கள் முதல் வேலையாக இருக்கட்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி 1458, 7372

கேள்வி 4 : அல்லாஹ்வின் திருநாமங்களிலும் அவனது பண்புகளிலும் அவனை ஏகத்துவப்படுத்துவது என்றால் என்ன?

பதில் : அர்ஷின் (இறை அரியணை) மீது அமர்தல், இறங்கி வருதல், கைகளிருப்பதாகச் சொல்லுதல் போன்ற திருக்குர்ஆனில் தன்னைப் பற்றி இறைவன் குறிப்பிடும் பண்புகளையும் நம்பத் தகுந்த ஆதாரங்களையுடைய நபிமொழிகளில் நபிகளாரால் இறைவனுக்கிருப்பதாகச் சொல்லப்படும் பண்புகளையும் மாற்றியோ, கூட்டிக் குறைத்தோ பொருள் கொள்ளக் கூடாது. உருவகப்படுத்தக் கூடாது. மனிதக் கற்பனைகளுக்கேற்ப பொருள் கொள்ளக் கூடாது. அவை இல்லையென்று மறுத்துரைக்கக் கூடாது. அவனது நிறைவான தகுதிக்கேற்ப அவற்றில் கூறப்பட்டுள்ளபடி அப்படியே உண்மையாகவே நம்ப வேண்டும். இதற்குத் தான் இறைவனை அவனது திருநாமங்களிலும், பண்புகளிலும் ஏகத்துவப்படுத்துதல் என்று கூறப்படும்.

அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.

என்று அல்லாஹ் தன்னைப் பற்றிக் குறிப்பிடுகிறான்.

அல்குர்ஆன் 42:11

அதாவது தனது படைப்புகளில் எவருக்கும் ஒப்புவமையாகாத விதத்திலும், அவனது கண்ணியத்திற்குத் தகுந்த விதத்திலும் அவன் இறங்கி வருகிறான் என்றே இதற்கு நாம் பொருள் கொள்ள வேண்டும்.

கேள்வி 5 : அல்லாஹ் எங்கே இருக்கிறான்?

பதில் : அல்லாஹ் வானத்தின் மீதுள்ள அர்ஷின் மீதிருக்கிறான்.

அளவற்ற அருளாளன் அர்ஷின் மீது அமர்ந்தான்.

அல்குர்ஆன் 20:5

நிச்சயமாக இறைவன் (படைப்புகளின் விதிப் பயன்களைப் பற்றி) ஒரு நூல் எழுதினான்,அது அவனிடமே அர்ஷின் மீதிருக்கிறது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி 3194, 7404, 7553, 7555 

கேள்வி 6 : அல்லாஹ் நம்முடனிருக்கிறான் அல்லவா?

பதில் : ஆம், நம்மைப் பார்த்துக் கொண்ருப்பதன் மூலமும், நமது சொற்களைச் செவியுறுவதன் மூலமும் நம்மைப் பற்றி அறிந்து வைத்திருப்பதன் மூலமும் அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்.

அஞ்சாதீர்கள்! நான் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் உங்களுடன் இருக்கிறேன் என்று அவன் கூறினான்.

என்று இறைவன் கூறுகின்றான்.

அல்குர்ஆன் 20:46

அவன் நம்முடனிருக்கிறான் என்பதற்கு என்ன பொருள் என அவனே விளக்கமளித்திருக்கிறான்.

நிச்சயமாக நீங்கள் (யாவற்றையும்) செவியேற்பவனை (உங்களுக்கு) அருகில் உங்களுடனேயே இருப்பவனை அழைக்கிறீர்கள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி 2992, 4305, 6384, 6409, 6610, 7386

அதாவது உங்களைப் பற்றி அவன் அறிந்து வைத்திருப்பதன் மூலம் அவன் உங்களுக்கு அருகிலேயே இருக்கிறான்

கேள்வி 7 : ஏகத்துவத்தால் விளையும் பயன் என்ன?

பதில் : மறுமையின் தண்டனையிலிருந்து பாதுகாப்புப் பெறுதலும், இம்மையில் நேர்வழி நடக்கும் பெரும்பேறும், குற்றங்கள் மன்னிக்கப்படுதலும் ஏகத்துவத்தின் பயன்களாகும்.

நம்பிக்கை கொண்டு, தமது நம்பிக்கையுடன் அநீதியைக் கலந்து விடாமல் இருப்போர்க்கே அச்சமற்ற நிலை உள்ளது. அவர்களே நேர் வழி பெற்றோர்.

என ஏகத்துவத்தின் பயன்களைப் பற்றி இறைவன் குறிப்பிடுகிறான்

அல்குர்ஆன் 6:82

அல்லாஹ்வின் அடியார்களில் யார் எதனையும் அவனுக்கு இணையாக்கவில்லையோ அவரைத் தண்டிக்காமலிருப்பதை இறைவன் தனது அடியார்களுக்குச் செய்யும் கடமையாக்கிக் கொண்டான்.

நூல் : புகாரி 2856, 5967, 6267, 6500, 7373

என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏகத்துவத்தின் பயனை விளக்கியுள்ளார்கள்.

பாடம் 3 இறைவனிடம் நமது நல்லறங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான நிபந்தனைகள்

கேள்வி 1 : நமது நல்லறங்கள் ஒப்புக் கொள்ளப்படுவதற்கு நிபந்தனைகள் யாவை?

பதில் : அல்லாஹ்விடம் நமது நல்லறங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு மூன்று நிபந்தனைகள் இருக்கின்றன.

முதலாவது : அல்லாஹ்வை நம்புவதும், அவன் ஒருவனை மட்டுமே நம்பி அவனை ஏகத்துவப்படுத்துவதாகும்.

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு ஃபிர்தவ்ஸ் எனும் சொர்க்கச் சோலைகள் தங்குமிடங்களாக உள்ளன.

என்று அல்லாஹ் குறிப்பிடகிறான்.

அல்குர்ஆன் 18:107

நான் அல்லாஹ்வை நம்பினேன் என்று கூறிய பின்னர் (அந்த நம்பிக்கையில்) நிலைத்து நிற்பீராக என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் 55

இரண்டாவது : பிறர் மெச்ச வேண்டும்: பார்க்க வேண்டும் என்பதற்காக இல்லாமல் அல்லாஹ் ஒருவனுக்காகவே எந்த நல்லறத்தையும் செய்யும் உள்ளத் தூய்மை

வணக்கத்தை அல்லாஹ்வுக்கே கலப்பற்றதாக்கி வணங்குமாறும், உறுதியாக நிற்குமாறும்,தொழுகையை நிலை நாட்டுமாறும், ஸகாத்தைக் கொடுக்குமாறும் தவிர அவர்களுக்கு வேறு கட்டளை பிறப்பிக்கப்படவில்லை. இதுவே நேரான மார்க்கம்.

என்று இறைவன் இதைத் தான் குறிப்பிடுகிறான்.

அல்குர்ஆன் 98:5

மூன்றாவது : நமது நல்லறங்கள் யாவும் அல்லாஹ்வின் திருத்தூதருடைய வழிகாட்டுதலுக்கு ஏற்ப அமைவது.

இத்தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை வாங்கிக் கொள்ளுங்கள்! எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ (அதிலிருந்து) விலகிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.

என்று அல்லாஹ் நமக்கு இதைத் தான் கட்டளையிடுகின்றான்.

அல்குர்ஆன் 59:7

நமது உத்தரவின்றி எவன் ஒரு செயலைச் செய்கின்றானோ அது தள்ளப்படக்கூடியதே. (அதாவது அது ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதன்று) என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பாடம் 4 அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தலின் இரண்டு வடிவங்களில் மிகப் பெரும் வடிவம்

கேள்வி 1 : அல்லாஹ்விடம் மிகப்பெரும் பாவமாகக் கருதப்படுவது எது?

பதில் : அல்லாஹ்விடம் மிகப் பெரும் பாவமாகக் கருதப்படுவது அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் பாவமாகும்.

என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதே! இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும் என்று குறிப்பிட்டதை நினைவூட்டுவீராக!

அல்குர்ஆன் 31:13

என்று லுக்மான் அவர்கள் தமது மகனுக்கு அறவுரை கூறியதாக இறைவன் குறிப்பிட்டிருப்பது இதற்கு மிகப் பெரும் சான்றாகும்.

பாவங்களில் மிகப் பெரியது எது? என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வினவப்பட்ட போது அல்லாஹ் உம்மைப் படைத்திருக்க அந்த அல்லாஹ்வுக்கு நிகராக வேறொன்றை நீர் இணையாக்குவதாகும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்

நூல் : புகாரி 4477, 4761, 6001 6811

கேள்வி 2 : அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தலின் மிகப் பெரும் வகை யாது?

பதில் : நமது வணக்கங்களை அல்லாஹ் அல்லாதவற்றுக்காகச் செய்வதே இணை கற்பித்தலின் மிகப்பெரும் வகையாகும். அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களிடம் பிரார்த்தித்தல், இறந்தவர்களிடமோ உயிருடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்களில் நமக்கு எதிரில் இல்லாதவர்களிடமோ பாதுகாவல் தேடுதல் போன்றவற்றை இதற்கு உதாரணங்களாகச் சொல்லலாம்.

அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்!

என்று அல்லாஹ் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறான். அல்குர்ஆன் 4:36

அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தல் பெரும் பாவங்களுக்கெல்லாம் பெரும்பாவத்தைச் சார்ந்ததாகும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைப் பற்றியே எச்சரித்திருக்கிறார்கள்.

நூல் : புகாரி 2653, 7654, 5976, 5977, 6273, 6675, 6870, 6871, 6919, 6920

கேள்வி 3 : நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சமுதாயத்தவர்களிடையே இணை கற்பித்தல் எனும் பெரும்பாவம் காணப்படுகிறதா?

பதில் : ஆம் காணப்படுகிறது.

அவர்களில் பெரும்பாலோர் இணை கற்பிப்போராகவே தவிர அல்லாஹ்வை நம்புவதில்லை. என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

அல்குர்ஆன் 12:106

எனது சமுதாயத்தவர்களில் சில பிரிவினர் இறைவனுக்கு இணை கற்பிப்பவர்களுடன் சேர்ந்து கொண்டு சிலைகளை வணங்கும் அளவுக்குப் போகும் வரை இறுதித் தீர்ப்பு நாள் வராது என்று என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.

நூல் : திர்மிதி 2145

இவையிரண்டும் இதற்கு மிகப்பெரும் ஆதாரங்களாகும்.

கேள்வி 4 : இறந்தவர்களிடமும், நம் எதிரில் இல்லாதவர்களிடமும் பிரார்த்திப்பதைப் பற்றி இஸ்லாத்தின் விதி என்ன?

பதில் : இறந்தவர்களிடமும், நம் எதிரில் இல்லாதவர்களிடமும் பிரார்த்திப்பது இணை வைத்தலின் மிகப் பெரும் வகையைச் சார்ந்த பெரும் பாவமாகும்.

அல்லாஹ்வையன்றி உமக்குப் பயனும், தீங்கும் தராதவற்றைப் பிரார்த்திக்காதீர்! (அவ்வாறு) செய்தால் நீர் அநீதி இழைத்தவராவீர்!

என்று அல்லாஹ் கூறுகின்றான்.

அல்குர்ஆன் 10:106

அல்லாஹ் அல்லாதவற்றை அவனுக்கு நிகராகக் கருதி அவற்றிடம் பிரார்த்தித்த நிலையில் எவன் மரணிக்கின்றானோ அவன் நரகத்திற்கே போவான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகக் கடுமையாக அது பற்றி எச்சரித்துள்ளார்கள்.

நூல் : புகாரி 6683

கேள்வி 5: பிரார்த்தனை புரிவதே ஒரு வணக்கமா?

பதில் : ஆம் பிரார்த்தனையே ஒரு வணக்கம் தான்.

என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள் என்று உங்கள் இறைவன் கூறுகிறான். என்று அல்லாஹ் கூறுகின்றான்.

அல்குர்ஆன் 40:60

பிரார்த்தனை தான் வணக்கம்.

நூல் : திர்மிதி 2895

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரார்த்தனையை வணக்கம் என்றே குறிப்பிட்டுள்ளார்கள்.

கேள்வி 6 : பிரார்த்தனைகளைச் செவிமடுக்கும் ஆற்றல் இறந்தவர்களுக்கு உண்டா?

பதில் : இல்லை. பிரார்த்தனைகளைச் செவிமடுக்கும் ஆற்றல் அவர்களுக்குக் கிடையாது.

நீர் இறந்தோரைச் செவியேற்கச் செய்ய முடியாது! அழைப்பைப் புறக்கணித்து ஓடும் செவிடர்களைக் கேட்கச் செய்ய உம்மால் முடியாது.

அல்குர்ஆன் 27:80

உயிருடன் உள்ளோரும், இறந்தோரும் சமமாக மாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச் செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச் செய்பவராக இல்லை.

அல்குர்ஆன் 35:22

அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர். நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள்.

என்று இறைவன் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளான்.

அல்குர்ஆன் 35:13,14

பாடம் 5 பெரிய இணை வைத்தலின் வகைகள்

அ. உதவிக்கு அழைத்தல்

கேள்வி 1 : இறந்தவர்களையும், நம் எதிரில் இல்லாதவர்களையும் நம்மைக் காப்பாற்றும் படி அழைக்கலாமா?

பதில் : இறந்தவர்களையும், நம் எதிரில் இல்லாதவர்களையும் நம்மைக் காப்பாற்றும் படி அழைக்கக் கூடாது.

அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர். அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.

அல்குர்ஆன்16:20,21

நீங்கள் உங்கள் இறைவனிடம் உதவி தேடிய போது உங்களுக்குப் பின்னால் அணிவகுக்கும் ஆயிரம் வானவர்களின் மூலம் நான் உங்களுக்கு உதவுபவன் என்று உங்களுக்குப் பதிலளித்தான்.

அல்குர்ஆன் 8:9

தன்னைத் தவிர மற்றவர்களிடம் நம்மைக் காப்பாற்றும்படிக் கோரக் கூடாது என்று இறைவன் தெளிவுபடுத்துகிறான்.

நித்திய ஜீவனே நிரந்தரமானவனே உனது பேரருளால் என்னைக் காப்பாற்றும்படி வேண்டுகிறேன் என்று என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனிடமே வேண்டுபவர்களாக இருந்திருக்கிறார்கள்.

நூல் : திர்மிதி 3446

கேள்வி 2 : அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களிடம் உதவி கேட்கலாமா?

பதில் : கூடாது, ஏனெனில்

(எனவே) உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம்.

என்றே பிரார்த்திக்கும்படி இறைவன் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறான்.

அல்குர்ஆன் 1:4

நீ ஏதாவதொன்றைக் கேட்டால் அல்லாஹ்விடமே கேள். உதவி கேட்டாலும் அல்லாஹ்விடமே உதவி கேள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறார்கள்.

நூல் : திர்மிதி 2440

கேள்வி 3 : உயிர் வாழ்பவர்களிடம் நாம் ஏதேனும் உதவி கேட்கலாமா?

பதில் : அவர்களால் முடிந்தவற்றில் தாராளமாக உதவி கேட்கலாம். ஏனெனில்

நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! என்று இறைவன் கட்டளையிடுகிறான்.

அல்குர்ஆன் 5:2

ஒரு அடியான் தன் சகோதரனுக்கு உதவியாயிருக்கும் வரை அல்லாஹ் அந்த அடியானுக்கு உதவியாயிருக்கிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதனைத் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.

நூல் : முஸ்லிம் 4867

ஆ.நேர்ச்சை செய்தல்

கேள்வி 4: அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களுக்கு நேர்ச்சை செய்யலாமா?

பதில் : அல்லாஹ் ஒருவனுக்கே தவிர மற்றவர்களுக்கு நேர்ச்சை செய்வது அறவே கூடாது. ஏனெனில்

இறைவா! என் வயிற்றில் உள்ளதை (குழந்தையை) உனக்காக நேர்ச்சை செய்து விட்டேன்.

அல்குர்ஆன் 3:35

என்று இம்ரான் என்பவரது மனைவி நேர்ச்சை செய்து கொண்டதாக இறைவன் கூறுகிறான்.

எவர் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு நடக்கும் காரியங்களில் நேர்ச்சை செய்கின்றாரோ அவர் (அவ்வாறே அவனுக்கு வழிப்பட்டு நடக்கவும். மேலும் எவர் அவனுக்கு மாறு செய்யும் காரியங்களில் நேர்ச்சை செய்கிறாரோ அவர் (அவ்வாறு) அவனுக்கு மாறு செய்திட வேண்டாம்.

நூல் : புகாரி 6696, 6700

என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நேர்ச்சை இறைவனுக்கே செய்யப்பட வேண்டும் என்று தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.

இ. பலியிடுதல்

கேள்வி 5 : அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களுக்காகப் பிராணிகளைப் பலியிடுதல் கூடுமா?

பதில் : அறவே கூடாது. ஏனெனில்

எனவே உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக!

என்று இறைவன் கட்டளையிடுகிறான்.

அல்குர்ஆன் 108:2

அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களுக்காக (பிராணிகளை) அறுத்துப் பலியிடுபவர்களை அல்லாஹ் தன் அருளிலிருந்து விலக்கி விடட்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதனை வலியுறுத்துகிறார்கள்.

நூல் : முஸ்லிம் 3657

ஈ. வலம் வருதல்

கேள்வி 1 : வணக்கம் என்று கருதி நாம் சமாதிகளை வலம் வரலாமா?

பதில் : கஅபா ஆலயத்தைத் தவிர வேறு எதனையும் நாம் வலம் வரக் கூடாது. ஏனெனில்

பழமையான அந்த ஆலயத்தை தவாஃப் செய்யட்டும்.

என்று அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.

அல்குர்ஆன் 22:29

எவரொருவர் கஅபா ஆலயத்தை ஏழு முறை வலம் வந்து இரண்டு ரக்அத்களும் தொழுகின்றாரோ அவர் ஓர் அடிமையை விடுதலை செய்தவரைப் போன்ற (நன்மையை அடைப)வராவார்.

என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதனை வலியுறுத்தியிருக்கிறார்கள்.

நூல் : இப்னுமாஜா 2947

உ.சூனியம் செய்தல்

கேள்வி 7 : சூனியம் செய்வதைப் பற்றி இஸ்லாத்தின் தீர்ப்பு என்ன?

பதில் : சூனியம் செய்தல் இறை மறுப்பான செயலாகும். ஏனெனில்

சூனியக் கலையை மக்களுக்குக் கற்பித்த ஹாரூத், மாரூத் என்ற த்தான்களே மறுத்தனர். என்று இறைவன் கூறுகிறான்.

அல்குர்ஆன் 2:102

நாசப்படுத்தக்கூடிய ஏழு காரியங்களை விட்டு விலகிக் கொள்ளுங்கள். (அவை) இறைவனுக்கு இணை கற்பித்தல், சூனியம் செய்தல் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதனை இறை நிராகரிப்பான செயல்களில் ஒன்றாகவே எச்சரித்துள்ளார்கள்.

நூல் : புகாரி 2767, 6857

ஊ. ஜோதிடம், குறிபார்த்தல்

கேள்வி 8 : தமக்கு மறைவானவற்றைப் பற்றித் தெரியும் என்று கூறும் ஜோதிடர்களையும்,குறிகாரர்களையும் நாம் நம்பலாமா?

பதில் : அவ்விருவரையும் அறவே நம்பக் கூடாது.

வானங்களிலும் பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். என்று இறைவன் கூறியுள்ளான்.

அல்குர்ஆன் 27:65

ஒருவன் குறி கூறுபவனிடமோ, ஜோதிடனிடமோ சென்று அவன் கூறுபவற்றை நம்பினால் அவன் நிச்சயமாக முஹம்மதாகிய எனக்கு அருளப்பட்ட இம்மார்க்கத்தை நிராகரித்தவனே ஆவான்.

என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைப் பற்றி மிக வன்மையாகக் கண்டித்திருக்கிறார்கள்.

நூல் : அஹ்மத் 9171

எ.மறைவானவை பற்றிய அறிவு

கேள்வி 9 : மறைவானவற்றை வேறு யாராவது அறிய முடியுமா?

பதில் : அல்லாஹ்வே தன் திருத்தூதர்களில் யாருக்காவது அறிவித்தாலே தவிர தமது ஆற்றலால் யாராலும் மறைவானவற்றை அறியவே முடியாது.

அவன் மறைவானதை அறிபவன். தனது மறைவான வியங்களை அவன் பொருந்திக் கொண்ட தூதரைத் தவிர யாருக்கும் வெளிப்படுத்த மாட்டான்

என்று அல்லாஹ்வும் கூறுகின்றான்.

அல்குர்ஆன் 72:26,27

அல்லாஹ்வையன்றி யாராலும் மறைவானவற்றை அறிய முடியாது.

என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆணித்தரமாக அதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்கள்.

நூல் : தப்ரபானி 6245

ஏ. அணியக்கூடாதவை எவை?

கேள்வி 10 : முடிகயிறு, வளையம், மாலை போன்றவற்றை நோய் நிவாரணத்திற்காக நாம் அணிந்து கொள்ளலாமா?

பதில் : நாம் அவற்றை அறவே அணிந்து கொள்ளக் கூடாது. ஏனெனில்

அல்லாஹ் உமக்குத் துன்பத்தை ஏற்படுத்தினால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. என்று அல்லாஹ் கூறுகின்றான்.

அல்குர்ஆன் 6:17

அறிந்து கொள் இவை உனக்கு மேலும் நலிவையே ஏற்படுத்தும். இவற்றைத் தூக்கி எறிந்து விடு. ஏனெனில் (இவைகளுக்கும் நிவாரணமளிக்கும் ஆற்றல் உண்டு என்ற இதே நம்பிக்கையில்) நீ இறந்து விடுவாயானால் ஒருக்காலும் மறுமையில் வெற்றி பெறவே முடியாது.

என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவற்றை அணியக் கூடாது என்று வலியுறுத்திக் கூறியிருக்கிறார்கள்.

நூல் : ஹாக்கிம் 7502

கேள்வி 11 :ஜெபமணி மாலைகள், சோழி, சிப்பி ஆகியவற்றை கண்ணேறு போன்றவற்றிற்காக அணிதல் கூடுமா?

பதில் : கண்ணேறு போன்றவற்றிற்காக இவற்றையெல்லாம் அணிதல் கூடாது. ஏனெனில்

அல்லாஹ் உமக்கு துன்பத்தை ஏற்படுத்தினால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. என்று அல்லாஹ் கூறுகின்றான்.

அல்குர்ஆன் 6:17

எவனொருவன் தாயத்துகளை மாட்டிக் கொண்டிருக்கிறானோ அவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்து விட்டவனே ஆவான்.

என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இது பற்றி திட்டவட்ட்டமாக எச்சரித்திருக்கிறார்கள்.

நூல் ; அஹ்மத் 16781

ஐ. செயல்பாடும் தீர்ப்பும்

கேள்வி 12 : இஸ்லாத்திற்கு முரணான விதிமுறைகளின் படி செயல்படுவது பற்றி இஸ்லாத்தின் தீர்ப்பு என்ன?

பதில் ; இஸ்லாத்திற்கு எதிரான விதிமுறைகளின் படிச் செயல்படுவது ஆகுமானது என்று நினைத்தாலோ அது சரி தான் என்று நம்பினாலோ அது இறை மறுப்பாகவே (குப்ர்) கருதப்படும். ஏனெனில்

அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் (ஏக இறைவனை) மறுப்பவர்கள். என்று அல்லாஹ் கூறுகின்றான்.

அல்குர்ஆன் 5:44

ஓ. சாத்தானின் ஊசலாட்டம்

கேள்வி 13 : அல்லாஹ் தான் அனைத்தையும் படைத்தான். அவனை யார் படைத்தது?என:று சாத்தான் நமக்குள் மனக் குழப்பத்தை ஏற்படுத்தினால் அதை எவ்வாறு தவிர்ப்பது?

பதில் : இது போன்ற கேள்விகளால் சாத்தான் உங்களில் ஒருவரைக் குழப்ப நினைத்தால் அவா உடனே நான் சாத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன் என்று கூற வேண்டும்

ஷைத்தானிடமிருந்து உமக்கு ஏதும் தீண்டுதல் ஏற்பட்டால் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! அவன் செவியுறுபவன்; அறிந்தவன்

என்று அல்லாஹ் நமக்கு அறிவுறுத்துகிறான்.

அல்குர்ஆன் .41:36

மேலும் சாத்தானின் சூழ்ச்சிகளிலிருந்து நாம் எவ்வாறு தப்புவது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத் தந்திருக்கிறார்கள். நமக்குள் இது போன்ற குழப்பங்களை அவன் ஏற்படுத்த முயலும் போது நான் அல்லாஹ்வையும்ணூ அவனது தூதர்களையும் நம்புகிறேன். அல்லாஹ் எந்தத் தேவையும் அற்றவன். அவன் (யாரையும்) பெறவுமில்லை. அவன் (யாராலும்) பெறப்படவுமில்லை. அவனுக்கு நிகராக எவருமில்லை என்று கூறிவிட்டு பின்னர் நமது இடது புறத்தில் மூன்று தடவை துப்பும்படியும் பின்னர் சாத்தானின் குழப்பத்தை விட்டு நான் பாதுகாவல் தேடுகிறேன் என்று கூறும்படியும் அதன் பின்னர் அந்த இடத்தில் இருந்து அகன்று விடும்படியும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு அறிவுறுத்தி விட்டு இவ்வாறு செய்தால் சாத்தான் நம்மை விட்டுப் போய் விடுவான் என்று உறுதியளித்திருக்கிறார்கள்.

நூல் : அபூதாவூத் 4099

பாடம் 6 இணை வைத்தலின் கேடுகள்

கேள்வி 1 : இணை வைத்தலின் பெரிய வகையினால் விளையும் கேடு என்ன?

பதில் : இணை வைத்தலின் பெரிய வகையினால் நிரந்தரமாக நரகத்தில் கிடந்து வேக நேரிடும்.

அல்லாஹ்வுக்கு *இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை என அல்லாஹ் எச்சரிக்கிறான்.

அல்குர்ஆன் 5:72

அல்லாஹ்வுக்கு ஏதாவதொன்றை இணை கற்பித்தவனாக எவன் அவனைச் சந்திக்கிறானோ அவன் நரகத்திற்குத் தான் போவான்.

என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைப் பற்றி மிக வன்மையாக எச்சரித்திருக்கிறார்கள்.

நூல் : முஸ்லிம் 136

கேள்வி 2 : அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் பாவத்துடன் செய்யும் எந்த நல்லறங்களாலும் பயன் உண்டா?

பதில் : அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் பாவத்துடன் செய்யும் எந்த நல்லறங்களாலும் புண்ணியமில்லை. ஏனெனில்

அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த (நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.

அல்குர்ஆன் 6:88

என்று தனது நபிமார்களைப் பற்றியே இவ்வாறு எச்சரித்திருக்கும் போது மற்றவர்கள் இணை கற்பித்தால் அவர்கள் நிலை என்னவாகும் என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம் மேலும்,

எனக்கு இணையானவர்கள் என இவர்களால் கருதப்படுபவர்கள் அனைவரையும் விட நான் எவன் தயவும் தேவையும் அற்றவன். இணை கற்பிக்கும் பாவத்துடன் இவர்கள் புரியும் நல்லறங்கள் எனக்கு அனாவசியமானவை. என்னுடன் மற்றவரையும் இணைத்துக் கொண்டு எவன் ஒரு நல்லறம் புரிவானோ (அது எனக்குத் தேவையில்லை) அவனை அவனது இணை கற்பிக்கும் பாவத்துடன் (எப்படியோ தொலைந்து போகட்டும் என்று) விட்டு விடுவேன்.

என இறைவன் எச்சரித்திருப்பதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

நூல் : முஸ்லிம் 5300

பாடம் 7 அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தலின் சிறிய வடிவம்

கேள்வி 1 : இணை கற்பிக்கும் பாவத்தில் சிறய வகை என்பது யாது?

பதில் : ஒரு நல்லறத்தைப் பிறர் பார்க்க வேண்டும் என்பதற்காகச் செய்வது தான் இணை கற்பிக்கும் பாவத்தின் சிறிய வகையாகக் கருதப்படுகிறது.

தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணை கற்பிக்காது இருக்கட்டும் என்று (முஹம்மதே!) கூறுவீராக!

அல்குர்ஆன் 18:110

என்று இணை வைத்தலின் சிறிய வடிவம் பற்றி இறைவன் குறிப்பிடுகிறான்.

ஒரு நல்லறத்தைப் பிறருக்கு காட்ட வேண்டுமென்பதற்காகச் செய்யும் இணை வைத்தலின் சிறிய வகையையே நான் உங்கள் வியத்தில் மிக அதிகமாக அஞ்சுகிறேன்.

என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைத் தான் எச்சரிக்கிறார்கள்.

நூல் : அஹ்மத் 22523

ஒரு மனிதனின் காரியம் யாராவது ஒருவரின் உதவியால் நிறைவேறும் போது அல்லாஹ்வும் இன்னாரும் இல்லை என்றால் இது நடந்திருக்காது என்றோ அல்லது இது இறைவன் நாடியதும் நீங்கள் நாடியதுமாகும் என்றோ கூறுவதும் இணை வைத்தலின் சிறிய வகையைச் சார்ந்தது தான் ஏனெனில் இது அல்லாஹ் நாடியதும் இன்னார் நாடியதும் என்று கூறாதீர்கள். ஆனால் இது அல்லாஹ் நாடியது தான். பிறகு தான் இன்னார் நாடினார் என்று வேண்டுமானால் கூறிக் கொள்ளுங்கள்.

என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு நல்லுரை புகன்றிருக்கிறார்கள்.

நூல் : அபூதாவூத்

கேள்வி 2 : அல்லாஹ்வைத் தவிர மற்றவற்றைக் கொண்டு சத்தியம் செய்வது ஆகுமா?

பதில் : அல்லாஹ்வைத் தவிர வேறு எதனையும் யாரையும் கொண்டு சத்தியம் செய்தல் ஆகாது. ஏனெனில்

அவ்வாறில்லை! என் இறைவன் மேல் ஆணையாக! நீங்கள் உயிர்ப்பிக்கப்படுவீர்கள். நீங்கள் செய்தது பற்றி உங்களுக்கு அறிவிக்கப்படும். இது அல்லாஹ்வுக்கு எளிதானது என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 64:7

அவன் மீது தான் சத்தியம் செய்ய வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருக்கிறார்கள்.

எவன் அல்லாஹ்வைத் தவிர ஏனையவற்றைக் கொண்டு சத்தியம் செய்கின்றானோ அவன் இறைவனுக்கு இணை கற்பித்தவனே ஆவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கிறார்கள்.

நூல் : அஹ்மத் 311

யாருக்காவது சத்தியம் செய்ய வேண்டிய கட்டாயம் நேர்ந்தால் அவர் அல்லாஹ்வைக் கொண்டே சத்தியம் செய்யட்டும் இல்லையானால் மவுனமாக இருந்து விடட்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறார்கள்.

நூல் : புகாரி, 2679, 6108, 6646,

பாடம் 8 இறைவனை இறைஞ்சிட துணைச் சாதனம் தேவையா?

கேள்வி 1 : இறைவனை இறைஞ்சிட துணைச் சாதனம் தேவையா?

பதில் இறைவனிடம் இறைஞ்சிட அனுமதிக்கப்பட்ட துணைச் சாதனம், அனுமதிக்கப்படாத துணைச் சாதனம் என இரண்டு வகைகள் உண்டு.

அல்லாஹ்வின் திருநாமங்கள் அவனது பண்புகள் நாம் செய்யும் நல்லறங்கள் ஆகியவற்றை நமது பிரார்த்தனைகளில் துணைச் சாதனங்களாக்கி இறைஞ்சுதல் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில்

அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றின் மூலமே அவனிடம் பிரார்த்தியுங்கள்!

அல்குர்ஆன் 7:180

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அவனை நோக்கி ஒரு வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள்.

அல்குர்ஆன் 5:35

என்று இறைவன் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறான்.

அந்தத் துணைச் சாதனம் அல்லாஹ்வின் வழிபாடும் அவனுக்குப் பிடித்த நல்லறங்களுமாகும் இறைவா உனக்குரிய அனைத்துத் திருநாமங்களின் பொருட்டாலும் உன்னிடம் நான் கேட்கிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.

நூல் : அஹ்மத் 3528

சுவனத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடனிருக்கும் பெரும்பேற்றை வேண்டிய தன் அன்புத் தோழர் ஒருவரிடம், இறைவனிடம் உமது கோரிக்கை ஏற்கப்பட வேண்டுமாயின் அதிகமாகத் தொழுது எனக்கு உதவுவீராக என்று என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அருளுரை பகர்ந்ததாக நபிமொழிப் பேழை முஸ்லிமில் (754) காணப்படுகிறது.

குகையில் மாட்டிக் கொண்ட மூவர் தமது வாழ்நாளில் செய்திருந்த நல்லறங்களைத் துணைச் சாதனமாக்கி இறைவனிடம் இறைஞ்சியதும் அதன் பொருட்டால் இறைவன் அவர்களின் சிரமத்தை அகற்றிக் காப்பாற்றியதும் நம்பத் தகுந்த ஆதாரங்களையுடைய நபிமொழி மூலம் தெரிய வரும் சம்பவமாகும்.

(நூல் : புகாரி 2272, 2215, 2333, 3465, 5974,

இன்று முஸ்லிம்களிடையே சர்வ சாதாரணமாக நிலவி வரும் இறந்தவர்களை அழைக்கும் பழக்கமும் அவர்களிடம் தேவைகளை நிறைவேற்றக் கோருவதும் இணை வைக்கும் பாவத்தின் பெரிய வகையாகும்.

மேலும் இது இறைவனிடம் இறைஞ்சிட இஸ்லாத்தில் அனுமதிக்கப்படாத துணைச் சாதனமாகும். ஏனெனில்

அல்லாஹ்வையன்றி உமக்குப் பயனும், தீங்கும் தராதவற்றைப் பிரார்த்திக்காதீர்! (அவ்வாறு) செய்தால் நீர் அநீதி இழைத்தவராவீர்!

அல்குர்ஆன் 10:106

என்று இறைவன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையே இது பற்றி எச்சரித்திருக்கிறான்.

இறைவா முஹம்மத் (ஸல்) அவர்களின் கண்ணியத்தின் பொருட்டால் எனது நோயைக் குணப்படுத்து என்பது போன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கண்ணியத்தைத் துணைச் சாதனமாக்கி இறைவனிடம் பிரார்த்தனை செய்வது (பித்அத்) புதுமைப் பழக்கமாகும்.

மேலும் இறந்தவர்களைத் துணைச் சாதனமாக்கிப் பிரார்த்தனை செய்வது சில வேளைகளில் இறைவனுக்கு இணை கற்பிக்கும் பெரும் பாவத்திற்கு நம்மை இட்டுச் சென்று விடுகின்றது. அதாவது மன்னர்களிடமும் அதிகாரிகளிடமும் நமக்கு ஒரு காரியம் ஆக வேண்டுமானால் அவருக்கு மிக நெருக்கமான ஒருவரைத் துணைச் சாதனமாக்கி அவர் மூலம் நமது கோரிக்கையைச் சமர்ப்பிப்பது போன்று இறைவனுக்கும் ஒரு மனிதர் இடைத் தரகராகத் தேவைப்படுகிறார் என்று எண்ணும் போது படைப்பாளனாகிய அவனது படைப்புகளுக்கு ஒப்பிட்டு விடும் இணை வைத்தல் என்று பெரும் பாவம் நிகழ்ந்து விடுகின்றது.

கேள்வி 2 : அல்லாஹ்விடம் ஒன்றை வேண்டுவதற்கு யாராவது ஒரு மனிதரின் இடைத் தரகு (துணை) தேவையா?

பதில் : இறைவனிடம் கையேந்துவதற்கு யாரையும் துணைச் சாதனமாகவோ இடைத் தரகராகவோ ஆக்கவோ அவசியம் இல்லை. ஏனெனில்

என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரர்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள் (என்பதைக் கூறுவீராக!)

அல்குர்ஆன் 2:186

என இறைவன் கூறுகின்றான்.

(நண்பர்களே) நீங்கள் பிரார்த்தனை செய்யும் போது (யாவற்றையும்) செவியுறுபவனையும் (உங்களுக்கு) மிக நெருக்கமானவனையுமே நிச்சயம் அழைக்கின்றீர்கள். அவன் (தனது பேரறிவால் எப்பொழுதும்) உங்களுடனையே இருக்கின்றான்.

நூல் : புகாரி 4605, 6384, 6610, 7386

என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குப் பிரார்த்தனையின் ஒழுக்கங்களைக் கற்றுத் தந்திருக்கிறார்கள்.

கேள்வி 3 : உயிருடனிருப்பவர்களிடம் நமக்குப் பிரார்த்தனை செய்யும்படிக் கேட்கலாமா?

பதில் : தாரளமாகக் கேட்கலாம், ஏனெனில் இறைவன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நோக்கி

(முஹம்மதே!) அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என்பதை அறிந்து கொள்வீராக! உமது பாவத்திற்காகவும், நம்பிக்கை கொண்ட ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் நீர் மன்னிப்புக் கேட்பீராக! நீங்கள் இயங்குவதையும், தங்குவதையும் அல்லாஹ் அறிவான்.

அல்குர்ஆன் 47:19

என்று அல்லாஹ் கட்டளையிட்டிருக்கிறான்.

கேள்வி 4 : நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கும் இறைவனுக்குமிடையே எந்த வகையில் துணைச் சாதனமாக நடுவில் இருப்பவராகிறார்கள்?

பதில் : இறைவனின் தூதுத்துவத்தை நம்மிடம் சமர்ப்பிக்கும் வகையில் தான் அவர்கள் நமக்கும் இறைவனுக்கும் இடையில் ஒரு துணைச் சாதனமாகப் பயன்பட்டிருக்கிறார்கள். அல்லாஹ்வும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நோக்கி

தூதரே! உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டதை எடுத்துச் சொல்வீராக!

அல்குர்ஆன் 5:67

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இறுதி ஹஜ்ஜின் போது குழுமியிருந்த பல்லாயிரக்கணக்கான தோழர்களை நோக்கி நண்பர்களே நான் எனக்கு இறைவனால் அருளப் பெற்றதை உங்களிடம் அப்படியே அறிவித்து விட்டேனா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நபிகளே நீங்கள் நிச்சயம் அப்படியே அறிவித்து விட்டீர்கள் என்பதற்கு நாங்கள் சாட்சிகளாக இருக்கிறோம் என்று தோழர்கள் பதிலளித்தனர். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என் இறைவா நீயும் இதற்கு சாட்சியாக இரு என்று கூறினார்கள்.

நூல் : புகாரி 105, 1739, 1741, 2597, 4403, 4406, 5550, 6785, 6979, 7087, 7174, 7197, 7447

இதுவும் நபிகளாரின் மேற்கூறப்பட்ட நிலைக்குச் சான்றாகத் திகழ்கிறது.

பாடம் 9 நபிகளாரின் பரிந்துரை

கேள்வி 1 : நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நமக்குப் பரிந்துரை செய்ய அனுமதிக்கும்படி நாம் யாரிடம் கேட்க வேண்டும்?

பதில் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நமக்காகப் பரிந்துரை செய்ய அனுமதியளிக்கும்படி அல்லாஹ்விடம் தான் நாம் கேட்க வேண்டும்.

பரிந்துரைகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 39:44

என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டிருக்கிறான்.

ஒவ்வொரு திருத்தூதருக்கும் நிச்சயம் அங்கீகரிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்ட பிரார்த்தனை செய்ய அனுமதி உண்டு. அந்தப் பிரார்த்தனையை எல்லா இறைத் தூதர்களும் இம்மையிலேயே பயன்படுத்திக் கொண்டு விட்டார்கள். நானோ எனது சமுதாயத்தவரில் எவர்கள் அல்லாஹ்வுக்கு எதனையும் இணை கற்பிக்காதவர்களாக இறந்திருக்கிறார்களோ அவர்களுக்காக மறுமையில் பரிந்துரை செய்வதற்காக அந்தப் பிரார்த்தனையைப் பத்திரப்படுத்தியிருக்கிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

நூல் : புகாரி 6304, 7474

.கேள்வி 2 : உயிர் வாழ்ந்து கொண்டிருப்பவர்களிடம் எதற்காவது பரிந்துரை செய்யும்படிக் கேட்கலாமா?

பதில் : உலக விவகாரங்களில் பரிந்துரை செய்யும்படி உயிருடனிருப்பவர்களிடம் கேட்கலாம். ஏனெனில்

அழகிய பரிந்துரை செய்பவருக்கு அதில் பங்கு உள்ளது. தீய பரிந்துரை செய்பவருக்கு அதில் பங்கு உள்ளது. அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவனாக இருக்கிறான்.

அல்குர்ஆன் 4:85

என்று அல்லாஹ் அனுமதியளித்துள்ளான்.

தோழர்களே பரிந்துரை செய்யுங்கள். அதற்கான நன்மை அளிக்கப்படுவீர்கள்.

நூல் : புகாரி 1432, 6027, 6028, 7476

என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதற்கு அனுமதியளித்திருக்கிறார்கள்.

கேள்வி 3 : நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் புகழ்வதில் நாம் வரம்பு மீறலாமா?

பதில் : நபிகள் நாயகம் (ஸல) அவர்களைப் புகழ்வதில் நாம் எல்லை மீறவே கூடாது. ஏனெனில்

நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணை கற்பிக்காது இருக்கட்டும் என்று (முஹம்மதே!) கூறுவீராக!

அல்குர்ஆன் 18:110

என்றே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டிருக்கிறான்.

மேலும் கிறித்தவர்கள் மர்யமின் மகன் ஈசா (அலை) அவர்களைப் புகழ்வதில் வரம்பு மீறி விட்டதைப் போல என்னையும் நீங்கள் வரம்பு மீறிப் புகழ்ந்து விடாதீர்கள். நான் ஓர் அடியான் தான். எனவே என்னைப் பற்றி அவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என்றே கூறுங்கள். என்று தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்.

நூல் :புகாரி 3445

பாடம் 10 மறைவழியில், நபிவழியில் தீர்ப்பளித்தல்

கேள்வி : முஸ்லிம்கள் தமக்கிடையே எழுகின்ற பிரச்சினைகளில் எதன்படி தீர்ப்புக் கூற வேண்டும்?

பதில் : இறைமறை வழியிலும் நம்மபத் தகுந்த ஆதாரங்களையுடைய நபிமொழிகள் வழியிலும் தான் முஸ்லிம்கள் தமது பிரச்சினைகளுக்குத் தீர்ப்பு காண வேண்டும் ஏனெனில்

அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் அவர்களிடையே தீர்ப்பளிப்பீராக!

அல்குர்ஆன் 5:49

என்று அல்லாஹ் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கட்டளையிடுகின்றான்.

இறைவா நீயே மறைவானவற்றையும் பகிரங்கமானவற்றையும் அறிபவன். உனது அடியார்களுக்கிடையில் அவர்கள் கருத்து வேறுபாடு கொண்ட வியங்களில் நீயே தீர்ப்புச் செய்பவனாகவும் இருக்கிறாய்.

நூல் : முஸ்லிம் 1289

என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைத் தான் வலியுறுத்துகிறார்கள்.

பாடம் 11 ஒருவருக்கொருவர் உதவியாளர்களாகவும், நேசர்களாகவும் திகழ்தல்

கேள்வி 1 : ஒருவருக்கொருவர் நேசம் கொள்ளுதல், உதவிக் கொள்ளுதல் பற்றி இஸ்லாத்தின் முடிவு என்ன?

நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள்.

அல்குர்ஆன் 9:71

என்று இறைவன் கூறுகின்றான்.

ஏகத்துவ நம்பிக்கையாளர்கள் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலுவூட்டும் ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள்.

என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் நேசத்துடனும் உறவுடனும் ஒத்துழைப்புடனும் இருக்க வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறார்கள்.

நூல் :புகாரி 481, 2446, 6027, கேள்வி 2 : வலியுல்லாஹ் (அல்லாஹ்வின் நேசர்) என்பவர் யார்?

பதில் : அல்லாஹ்வை மட்டும் நம்பி அவன் மீது அச்சம் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் அவனது நேசர் தான்.

கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். அவர்கள் (இறைவனை) நம்புவார்கள். (அவனை) அஞ்சுவோராக இருப்பார்கள்.

அல்குர்ஆன் 10:62,63

என்று அல்லாஹ் கூறுகின்றான்.

பாடம் 12 திருமறையிலும் நபிமொழி நெறியிலும் வாழுதல்

அ.திருக்குர்ஆன், ஹதீஸ்

கேள்வி 1 : அல்லாஹ் எதற்காக நமக்குத் திருக்குர்ஆனை அருளினான்.

பதில் : அதன் வழியில் நடப்பதற்கே அல்லாஹ் திருக்குர்ஆனை அருளினான்.

உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்!

அல்குர்ஆன்7:3

என்று இறைவன் கட்டளையிடுகின்றான்.

திருக்குர்ஆனைப் படியுங்கள். அதன்படி நடங்கள். அதைக் கொண்டு (பிழைப்பு நடத்திச்) சாப்பிடாதீர்கள்.

நூல் : அஹ்மத் 14981, 14986, 15110, 15115, 15117

என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைப் பற்றித்தான் குறிப்பிடுகிறார்கள்.

கேள்வி 2 : நம்பத் தகுந்த ஆதாரங்களையுடைய நபிமொழிகளின் படி நடப்பதைப் பற்றி இஸ்லாத்தின் முடிவு என்ன?

பதில் : அந்த நபிமொழிகளின் படிச் செயல்படுதல் நம் மீது கடமையாகும். ஏனெனில்

இத்தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை வாங்கிக் கொள்ளுங்கள்! எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ (அதிலிருந்து) விலகிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.

அல்குர்ஆன் 59:7

என்று இறைவன் கட்டளையிடுகின்றான்.

கேள்வி 3 : திருக்குர்ஆனை மட்டுமே நமது வழிகாட்டியாக எடுத்துக் கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வு வாக்குகளைப் புறக்கணிக்கலாமா?

பதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வு வாக்குகளைப் புறக்கணிப்பது அறவே கூடாது. ஏனெனில் திருக்குர்ஆனுக்கு விளக்கம் தர வேண்டிய பொறுப்பு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடையதே என இறைவன் குறிப்பிடுகிறான்.

மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.

அல்குர்ஆன் 16:44

அறிந்து கொள்ளுங்கள். நான் நிச்சயமாகத் திருக்குர்ஆனையும் அதனுடன் அதுபோன்றதையும் வழங்கப்பட்டிருக்கிறேன்.

நூல் : அஹ்மத் 14546

என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதனைத் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.

கேள்வி 4 : அல்லாஹ்வின் சொல்லையும், அவனுடைய திருத்தூதரின் சொல்லையும் விட மற்றவர்களின் சொல்லுக்கு நாம் முதலிடம் தரலாமா?

பதில் : அல்லாஹ்வின் சொல்லையும், அவனுடைய திருத்தூதரின் சொல்லையும் விட யாருடைய சொல்லுக்கும் நாம் முதலிடம் அளிக்கவே கூடாது. ஏனெனில்

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் முந்தாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.

அல்குர்ஆன் 49:1

என்று அல்லாஹ் ஆணையிடுகின்றான்.

படைத்தவனுக்கு மாறாக எந்தப் படைப்புக்கும் கீழ்படிதல் கிடையாது.

நூல் : தப்ரானி 15091

என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதனை ஆணித்தரமாகத் தெளிவுபடுத்தி விட்டார்கள்.

கேள்வி 5 : நமக்குள் கருத்து வேறுபாடுகள் தோன்றினால் அதனை எப்படித் தீர்த்துக் கொள்ள வேண்டும்?

பதில் : அவ்வாறான சமயங்களில் அல்லாஹ் என்ன சொல்லியிருக்கிறான் என்று அவனது திருவேதத்தையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்தப் பிரச்சினைக்கு எப்படித் தீர்வு கண்டிருக்கிறார்கள் என்று அவர்களின் பொன்மொழிகளையுமே நாம் பார்க்க வேண்டும். ஏனெனில் பின்வரும் திருவசனத்தில் மூலம் அல்லாஹ் நமக்கு அப்படித் தான் கட்டளையிட்டிருக்கிறான்.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு வியத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத் தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும்.

அல்குர்ஆன் 4:59

ஆ. இறைநேசமும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது அன்பும் கேள்வி 6 :அல்லாஹ்வையும், அவனது திருத்தூதரையும் நாம் எவ்வாறு நேசிக்க வேண்டும்.

பதில் : அவர்களுக்குப் கீழ்ப்படிதல், அவர்களின் கட்டளைகளைப் பின்பற்றுதல் ஆகியவையே அவர்கள் மீது நாம் அன்பு வைத்திருக்கிறோம் என்பதற்குச் சான்றாகும். ஏனெனில்

நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 3:31

என்று அல்லாஹ் கூறுகின்றான்.

உங்களில் ஒருவருக்கு அவரது பெற்றோர் மக்கள் ஏனைய மனிதர்கள் அனைவரையும் விட நான் மிகவும் அன்புக்குரியவனாகும் வரை அவர் நம்பிக்கை கொண்டவராக மாட்டார்.

என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை வலியுறுத்திருக்கிறார்கள்.

நூல் : புகாரி 14, 15, 6633

இ.விதியும், முயற்சியும்

கேள்வி 7 : விதியன் மீது நம்பிக்கை வைத்துக் கொண்டு நமது முயற்சிகளைக் கைவிடலாமா?

பதில் : விதியை நம்ப வேண்டும். ஆனால் நமது முயற்சிகளை ஒரு போதும் கைவிட்டு விடவே கூடாது. ஏனெனில்

உங்கள் முயற்சி பலதரப்பட்டதாக உள்ளது. யார் (பிறருக்கு) வழங்கி (இறைவனை) அஞ்சி,நல்லவற்றை உண்மைப்படுத்துகிறாரோ அவருக்கு வசதியானதற்கு வழியை எளிதாக்குவோம்.

அல்குர்ஆன் 92:4,5,6,7

என்று நமது முயற்சிகள் சிறந்தவையாயிருந்தால் சுவனத்திற்கான வழி இலகுவாக்கப்படுகிறது என்று இறைவன் தெளிவுபடுத்துகிறான்.

விதியை நம்பிச் (சோம்பியாருக்காதீர்கள்) செயல்படுங்கள், ஏனெனில் நீங்கள் ஒவ்வொருவருக்கும் அவரவர் எதற்காகப் படைக்கப்பட்டீர்களோ அதற்கான வழிகள் எளிதாக்கித் தரப்படும்.

நூல் : புகாரி 4945, 4946, 4947, 4949, 6217, 6605, 7551, 7552

என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செயல்படும்படி வலியுறுத்தியிருக்கிறார்கள்.

பாடம் 13 நபிகளாரின் வாழ்வும், வாக்கும், அதன்பின் தோன்றிய புதுமைப் பழக்க வழக்கங்களும்

கேள்வி 1 : மார்க்கத்தில் புகுந்துள்ள அனாச்சாரங்களில் நல்லவை, அழகானவை என்று ஏதேனும் உண்டா?

பதில் : மார்க்கத்தில் புகுந்துவிட்டுள்ள அனாச்சாரங்கள் அனைத்துமே வழிகேடானவை தான். அவற்றில் அழகானவை நல்லவை என்று எதுவுமே கிடையாது. ஏனெனில்

இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்.

அல்குர்ஆன் 5:3

என்ற திருவசனத்தில் மார்க்கம் முழுமைப் படுத்தப்பட்டு விட்டதாக இறைவன் பிரகடனப் படுத்தி விட்டான்.

எனவே அதில் புதுமைகளை (பித்அத்களைப்) புகுத்துவதற்கு எவருக்கும் அதிகாரமில்லை. மேலும் மார்க்கத்தில் அவ்வாறு புதுமையாகப் புகுத்தப்படும் அனாச்சாரங்களைப் பற்றி ஒவ்வொரு புதுமைப் பழக்கமும் (பித்அத்தும்) வழிகேடு தான். வழிகேடுகள் அனைத்தும் நரகத்திற்குத்திற்குரியவை தான்.

என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.

நூல் : நஸயீ 1560

கேள்வி 2 : மார்க்கத்தில் புதுமைப் பழக்க வழக்கங்களைப் புகுத்துதல் என்றால் என்ன?

பதில் : மார்க்கத்தில் இல்லாததை மார்க்கத்தினுள் புகுத்தி அதைக் கூட்ட முயலுவதும் அல்லது இருக்கின்றவற்றை அதிலிருந்து அகற்றி அதைக் குறைக்க முயலுவதும் மார்க்கத்தில் புதுமைகளைப் புகுத்துதல் (பித்அத்) எனப்படுகின்றது. அவ்வாறு புதுமைப் பழக்க வழக்கங்களைப மார்க்கத்தில் புகுத்திப் புகுத்தி நாளடைவில் இறைவனுக்கு இணை கற்பிப்பவர்களாக மாறிப் போனவர்களைப் பற்றி பின்வருமாறு அல்லாஹ் கேட்கிறான்.

அல்லாஹ் அனுமதியளிக்காததை மார்க்கமாக ஆக்கும் தெய்வங்கள் அவர்களுக்கு உள்ளனரா? தீர்ப்பு பற்றிய கட்டளை இல்லாதிருந்தால் அவர்களுக்கிடையே முடிவு செய்யப்பட்டிருக்கும்.

அல்குர்ஆன் 42:21

நமது மார்க்கத்தில் இல்லாதவற்றை அதில் எவன் புதுமையாகப் புகுத்துகின்றானோ அவை ஏற்கத்தக்கவை அல்ல.

என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதனைக் கண்டித்திருக்கிறார்கள்.

நூல் : புகாரி 2697

கேள்வி 3 : முஸ்லிம்கள் அல்லாஹ்வின் உதவியைப் பெற எப்போது தகுதி உடையவர்களாவார்கள்?

பதில் : முஸ்லிம்கள் தமதிறைவனின் திருவேதத்திற்கும் தங்கள் திருநபியின் நெறிமுறைகளுக்கும் ஏற்ப வாழ வேண்டும். ஏகத்துவத்தைப் பரப்பும் திருப்பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இறைவனுக்கு இணை கற்பிக்கும் பாவத்தின் பல்வேறு வகைகளிலிருந்தும் முற்றாக தாமும் விலகி மக்களையும் விலக்க வேண்டும். தமது பகைவர்களை முறியடிப்பதற்கான முன்னேற்பாடுகளில் தங்களால் முடிந்தவரை முழுமூச்சுடன் முனைந்து செயல்பட வேண்டும். இப்படிச் செய்வார்களானால் அவர்கள் தங்கள் இறைவனுடைய உதவியைப் பெறத் தகுதி படைத்தவர்களாகி விடுவார்கள்.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவினால் அவன் உங்களுக்கு உதவுவான். உங்கள் பாதங்களை அவன் உறுதிப்படுத்துவான்.

அல்குர்ஆன் 47:7

என்று இறைவன் கூறுகின்றான்.

அவர்களுக்கு முன் சென்றோருக்கு அதிகாரம் வழங்கியதைப் போல் அவர்களுக்கும் பூமியில் அதிகாரம் வழங்குவதாகவும், அவர்களுக்காக அவன் பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை உறுதிப்படுத்தி வைப்பதாகவும், அவர்களின் அச்சத்திற்குப் பின்னர் அச்சமின்மையை ஏற்படுத்துவதாகவும் உங்களில் நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு அல்லாஹ் வாக்களித்துள்ளான்.

அல்குர்ஆன் 24:55

அவர்கள் என்னையே வணங்குவார்கள். எனக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டார்கள். இதன் பிறகு (ஏக இறைவனை) மறுத்தோரே குற்றம் புரிபவர்கள்.

அல்குர்ஆன் 24:55

என்றும் இறைவன் மேற்கண்ட இரு வசனங்களிலும் இதைத் தான் வலியுறுத்துகிறான்.

பாடம் 14 ஏற்றுக் கொள்ளப்படும் பிரார்த்தனை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்.

இறைவா நான் உனது அடியான். உனது அடியானின் மகன். எனது நெற்றிமுடி உன் கைவசமிருக்கிறது. என்னில் உனது உத்தரவுகளே நடைமுறையாகின்றன. உனது விதியில் நேர்மையே உள்ளது. உனக்கு நீயே சூட்டிக் கொண்ட அல்லது உனது திருவேதத்தில் நீ அருளிய அல்லது உன் படைப்புகளில் யாருக்கேனும் நீ கற்றுத் தந்த அல்லது உன்னிடமிருக்கின்ற மறைவானவற்றைப் பற்றிய ஞானத்தில் நீ தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கின்ற உனக்குரிய திருநாமங்கள் ஒவ்வொன்றின் மூலமும் திருக்குர்ஆனை என் இதயத்தின் வசந்தமாகவும், என் நெஞ்சத்தின் பேரொளியாகவும், எனது கவலைகளை அகற்றும் மாமருந்ததாகவும் எனது பிரச்சினைகள் தீர்வதற்கான வழியாகவும் ஆக்கியருளும்படி உன்னிடம் நான் வேண்டுகின்றேன் என கவலைகளோ பிரச்சினைகளோ நேரும் போது கூறுவானேயானால் அல்லாஹ் அவற்றை அகற்றிவிடுவான்.

நூல் : அஹ்மத் 3528

முற்றும்

15.07.2009. 11:51 AM

இறைவனிடம் கையேந்துங்கள்

நூலின் பெயர் : இறைவனிடம் கையேந்துங்கள்

ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன்

மார்க்கத்தின் எச்சரிக்கை!

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும். இந்த இணைய தளத்தில் உள்ளவைகளைப் பிரச்சாரம் செய்வதற்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் சில சகோதரர்கள் நமது ஆக்கங்களை அப்படியே பயன்படுத்தி தமது ஆக்கம் போல் காட்டுகின்றனர்.

இன்னாருடைய கட்டுரையில் இருந்து, அல்லது புத்தகத்தில் இருந்து இது எடுக்கப்பபட்டது என்று குறிப்பிடாமல் புகழடைவதற்காக இவ்வாறு செய்கின்றனர்.

சில இணைய தளங்களும் என்னுடைய ஆக்கங்களை அப்படியே வெளியிட்டு தம்முடைய ஆக்கம் போல் காட்டுகின்றன. மேலும் சில புத்தக வியாபாரிகளும் எனது நூல் உட்பட மற்றவர்களின் நூல்களைச் சிறிது மாற்றியமைத்து அனாமதேயங்களின் பெயர்களில் வெளியிட்டுச் சம்பாதிக்கின்றனர். உலகைப் பற்றியும் இவர்களுக்கு வெட்கம் இல்லை. மறுமையைப் பற்றியும் பயம் இல்லை.

இஸ்லாத்தில் இவ்வாறு செய்ய அனுமதி இல்லை. இவர்கள் நல்லது செய்யப் போய் மறுமையின் தண்டனைக்கு தம்மைத் தாமே உட்படுத்திக் கொள்கின்றனர்.

பிறரது ஆக்கங்களைப் பயன்படுத்துவோர் இது இன்னாருடைய ஆக்கம் என்று குறிப்பிடாமல் தன்னுடைய ஆக்கம் போல் காட்டுவது மார்க்க அடிப்படையில் குற்றமாகும்.

இவர்களுக்கு அல்லாஹ் விடுக்கும் எச்சரிக்கையை இங்கே சுட்டிக் காட்டுகிறோம்.

தாங்கள் செய்தவற்றுக்காக மகிழ்ச்சியடைந்து, தாம் செய்யாதவற்றுக்காகப் புகழப்பட வேண்டுமென விரும்புவோர் வேதனையிலிருந்து தப்பித்து விட்டார்கள் என்று நீர் நினைக்காதீர்! அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.

திருக்குர்ஆன் 3:188

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நம்புவது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.

நம்மைப் படைத்த ஓர் இறைவனை மட்டும் தான் வணங்க வேண்டும் எனும் போது, அவனிடம் தான் நமது தேவைகளைக் கேட்க வேண்டும். ஏனெனில், பிரார்த்தனை தான் வணக்கமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். எனவே பிரார்த்தனை என்ற இந்த வணக்கத்தை, அல்லாஹ்வைத் தவிர வேறு யாரிடமும் செய்து விடக் கூடாது.

இயல்பாகவே மனிதன் தேவையுள்ளவனாகப் படைக்கப்பட்டிருக்கிறான். எந்தத் தேவையுமற்ற இறைவனிடம் நமது தேவைகளை முறையிடுவது தான் பிரார்த்தனை என்ற அடிப்படையைக் கூட அதிகமான மக்கள் விளங்காமல் உள்ளனர்.

தாங்களாகவே செய்து கொண்ட கற்சிலைகளிடமும், இறந்து விட்ட பெரியார்களின் சமாதிகளிலும் போய் பிரார்த்திக்கின்றனர். இதற்குக் காரணம், இறைவனின் பண்புகளைப் பற்றியும், அவனது வல்லமை பற்றியும் அறியாமல் இருப்பது தான்.

எனவே இறைவனின் பண்புகளை எடுத்துக் காட்டி, அவனிடம் மட்டுமே பிரார்த்திக்க வேண்டும் என்பதை விளக்குவதுடன், இறைவனிடம் நமது பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமானால் அதற்கான நிபந்தனைகள் என்ன? அதற்கு இடைத்தரகர்கள் தேவையா? என்பன போன்ற அம்சங்களையும் இந்நூலில் கீழ்க்காணும் தலைப்புக்களில் விளக்கியுள்ளோம்.

பிரார்த்தனை தான் வணக்கம்

இறைவனிடம் தான் பிரார்த்திக்க வேண்டும்

இறைவன் அருகில் இருக்கிறான்

பிரார்த்தனையின் ஒழுங்குகள்

ஹராமானவற்றைத் தவிர்க்க வேண்டும்

அவசரப்படக் கூடாது

பாவமானதைக் கேட்கக் கூடாது

மரணத்தைக் கேட்கக் கூடாது

இறந்தவருக்காகப் பிரார்த்தனை செய்தல்

மகான்கள் பொருட்டால் கேட்கக் கூடாது

வலியுறுத்திக் கேட்க வேண்டும்

அனைத்தையும் கேட்க வேண்டும்

இரகசியமாகவும், பணிவாகவும்

இரவின் கடைசி நேரம்

ஸஜ்தாவின் போது

மறைமுகமாகச் செய்யும் பிரார்த்தனை

தந்தை மகனுக்காகச் செய்யும் துஆ

பிரார்த்தனைக்குப் பலன் தெரியாவிட்டால்

இறைவனிடம் கையேந்துங்கள்!

பிரார்த்தனை தான் வணக்கம்

இவ்வுலகில் வாழும் மனிதர்களில் எவரும் அனைத்து நலன்களையும் பெற்றவர்களாக இல்லை. தான் விரும்பிய, ஆசைப்பட்ட அனைத்தையும் பெற்ற ஒரே ஒரு மனிதரைக் கூட உலகில் காண முடியாது.

மிக உயர்ந்த பதவியைப் பெற்றவர் அனைத்து இன்பங்களையும் பெற்று மன நிறைவான வாழ்க்கை வாழ்கிறார் என்று மற்றவர்கள் நினைக்கலாம். ஆனால் அவரது வாழ்க்கையில் நுழைந்து பார்க்கும் போது அவருக்கு வாரிசு இல்லை என்ற மனக்குறையோ,  அல்லது பெயரைக் கெடுப்பவனாக வாரிசு பிறந்து விட்டானே என்ற மனக்குறையோ, மனைவியால் மகிழ்ச்சி இல்லையே என்ற மனக்குறையோ,  விரும்பியதை உண்ண முடியவில்லையே என்ற மனக்குறையோ, இன்னும் இது போன்ற நூற்றுக் கணக்காண குறைகள் அவருக்கு இருப்பதை அறிய இயலும்.

அளவின்றி பெருஞ்செல்வத்தைப் பெற்றவர், உடல் வலிமை பெற்றவர், மழலைச் செல்வங்களைப் பெற்றவர், இன்னும் எத்தனையோ பாக்கியங்கள் பெற்றவர்கள் மகிழ்வோடு வாழ்கிறார்கள் என்று மற்றவர்கள் கருதலாம். ஆனால் அவர்கள் அனைவருமே தங்களுக்குக் கிடைக்காத பாக்கியங்களைப் பட்டியல் போட்டுக் கவலையில் ஆழ்ந்திருப்பார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் நிறைவேறாத ஆசைகள் இருக்கும். நினைத்தது கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் இருக்கும்.

இவர்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் பிரார்த்தனை தான். சர்வ வல்லமையுடைய இறைவனிடம் அந்தக் குறைகளை முறையிடும் போது கோரிக்கைகள் நிறைவேற வாய்ப்பிருக்கிறது. அப்படி நிறைவேறாவிட்டால் கூட, பெரிய இடத்தில் பிரச்சனையை ஒப்படைத்து விட்டோம்; அவன் பார்த்துக் கொள்வான் என்ற எண்ணம் மன அமைதியை ஏற்படுத்துகிறது.

இதனால் தான் இஸ்லாம் பிரார்த்தனைக்கு மிகுந்த முக்கியத்துவம் தருகிறது.

பிரார்த்தனை தான் வணக்கமாகும்என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)

நூல்கள்: அஹ்மத் 17629, 17660, 17665 திர்மிதீ 2895, 3170, 3294 அபூதாவூத் 1364

பிரார்த்தனை ஒரு வணக்கம் என்று சொல்லாமல் வணக்கங்களிலேயே தலை சிறந்த வணக்கம் பிரார்த்தனை என்ற பொருள் பட நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

ஒரு அடியான் தனது அடிமைத்தனத்தைப் பரிபூரணமாக உணர்வதும், தன்னைப் படைத்தவனை எஜமானனாக ஏற்பதும் தான் வணக்கத்தின் முக்கியமான அம்சமாகும். இந்த அம்சம் பிரார்த்தனையில் கூடுதலாகவே உள்ளது எனலாம்.

இறைவனிடம் தான் பிரார்த்திக்க வேண்டும்

நம்முடைய இயலாமையை உணர்ந்து நம்மை விட வலிமை மிக்க இறைவனிடம் முறையிடுவது தான் பிரார்த்தனை என்ற அடிப்படையைக் கூட விளங்காதவர்கள் மனிதர்களில் அதிகம் உள்ளனர்.

தாங்களாகக் கற்பனையாகச் செதுக்கிக் கொண்ட கற்சிலைகளிடம் முறையிடுவோர் உள்ளனர். நம்மை விட கோடானு கோடி மடங்கு தாழ்ந்த நிலையில் தான் அந்தக் கற்சிலைகள் உள்ளன என்பதை அவர்களின் பகுத்தறிவு சொன்னாலும் அதை அலட்சியப்படுத்துகின்றனர்.

இறந்தவர்களைப் புதைத்து விட்டு, அங்கே அடக்கம் செய்யப்பட்டவரிடம் பிரார்த்திப்பவர்களும் உள்ளனர். அவரால் எதுவும் செய்ய முடியாது என்பதற்கு அவர் இறந்ததே அசைக்க முடியாத சான்றாக இருந்தும் அதைக் கண்டு கொள்ள மறுக்கிறார்கள்.

உயிருடன் வாழும் மகான்கள் எனப்படுவோர் நம்மைப் போலவே உண்பவர்களாக, மலத்தை வயிற்றுக்குள் சுமந்தவராக, நோய், கவலை, முதுமை உள்ளிட்ட எல்லா பலவீனமும் கொண்டவராக இருப்பது பளிச்செனத் தெரிந்தும் அதைக் கவனத்தில் கொள்ளாமல் அவர்களிடமே பிரார்த்தனை செய்பவர்களையும் நாம் பரவலாகக் காண்கிறோம்.

இன்னும் மிருகங்கள், பறவைகள் மற்றும் அற்பத்திலும் அற்பமான படைப்புகளிடம் பிரார்த்தனை செய்வோரும் மனிதர்களில் உள்ளனர்.

இவை அத்தையும் இஸ்லாம் வன்மையாக மறுக்கிறது.

க நம்மைப் படைத்தவன்

க என்றென்றும் உயிரோடிருப்பவன்

க எந்தத் தேவைகளும் இல்லாதவன்

க நினைத்ததைச் செய்ய வல்லவன்

க எந்தப் பலவீனமும் அற்றவன்

ஆகிய தகுதிகள் ஒருங்கே அமையப் பெற்ற இறைவனிடம் மட்டுமே பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று தெள்ளத் தெளிவாக இஸ்லாம் அறிவுறுத்துகிறது.

இறைவனல்லாதவர்களைப் பிரார்த்தனை செய்வதற்கு எந்த நியாயமுமில்லை. அவர்களால் எதுவும் செய்ய இயலாது என்பதையெல்லாம் பின்வரும் வசனங்களில் அல்லாஹ் தெளிவுபடக் கூறுகிறான். எதையும் படைக்காதவற்றையா அவர்கள் (இறைவனுக்கு) இணை கற்பிக்கின்றனர்? அவர்களே படைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு உதவிட அவர்களுக்கு இயலாது. தமக்கே கூட அவர்கள் உதவிக் கொள்ள மாட்டார்கள். (எதையும்) தெரிவிக்க அவர்களை நீங்கள் அழைத்தால் அவர்கள் உங்களைப் பின்பற்ற மாட்டார்கள். நீங்கள் அவர்களை அழைப்பதும், மௌனமாக இருப்பதும் உங்களைப் பொறுத்த வரை சமமானது.

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்! அவர்களுக்கு நடக்கின்ற கால்கள் உள்ளனவா? அல்லது பிடிக்கின்ற கைகள் உள்ளனவா? அல்லது பார்க்கின்ற கண்கள் உள்ளனவா? அல்லது கேட்கின்ற காதுகள் உள்ளனவா? உங்கள் தெய்வங்களை அழைத்து எனக்கெதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்! எனக்கு எந்த அவகாசமும் தராதீர்கள்! என்று கூறுவீராக!

(அல்குர்ஆன் 7:191-195)

அவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவிட இயலாது. தமக்கே அவர்கள் உதவ முடியாது. (எதையும்) தெரிவிக்க நீங்கள் அவர்களை அழைத்தால் அவர்கள் செவியுற மாட்டார்கள். அவர்கள் உம்மைப் பார்ப்பது போல் நீர் காண்பீர்! (ஆனால்) அவர்கள் பார்க்க மாட்டார்கள்.

(அல்குர்ஆன் 7:197, 198)

அல்லாஹ்வையன்றி உமக்குப் பயனும், தீங்கும் தராதவற்றைப் பிரார்த்திக்காதீர்! (அவ்வாறு) செய்தால் நீர் அநீதி இழைத்தவராவீர்! அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன் 10:106)

அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர். அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள்என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.

(அல்குர்ஆன் 16:20, 21)

மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைச் செவிதாழ்த்திக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.

(அல்குர்ஆன் 22:73)

அல்லாஹ்வையன்றி நீங்கள் கற்பனை செய்தவற்றை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் வானங்களிலும், பூமியிலும் அணுவளவுக்கும் அதிகாரம் பெற மாட்டார்கள். இவ்விரண்டிலும் அவர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. அவர்களில் அவனுக்கு எந்த உதவியாளரும் இல்லை என்று கூறுவீராக!

(அல்குர்ஆன் 34:22)

அவன் இரவைப் பகலில் நுழைக்கிறான். பகலை இரவில் நுழைக்கிறான். சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலக்கெடு வரை செல்கின்றன. அவனே அல்லாஹ்; உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம். அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர். நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.

(அல்குர்ஆன் 35:13, 14)

அல்லாஹ்வையன்றி நீங்கள் அழைக்கின்ற, உங்கள் தெய்வங்கள் பூமியில் எதனைப் படைத்தன? என்று எனக்குக் காட்டுங்கள்! அல்லது வானங்களிலாவது அவர்களுக்குப் பங்கு உண்டா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்! என்று கேட்பீராக! அல்லது அவர்களுக்கு நாம் ஒரு வேதத்தை அளித்து அதனால் (கிடைத்த) தெளிவில் அவர்கள் இருக்கிறார்களா? இல்லை. இந்த அநியாயக்காரர்களில் ஒருவருக்கொருவர் மோசடியையே வாக்களிக்கின்றனர்.

(அல்குர்ஆன் 35:40)

என்னை எதை நோக்கி அழைக்கிறீர்களோ அதற்கு இவ்வுலகிலும், மறுமையிலும் பிரார்த்திக்கப்படும் தகுதி இல்லை என்பதிலும், நாம் திரும்புவது அல்லாஹ்விடமே என்பதிலும், வரம்பு மீறுவோர் தான் நரகவாசிகள் என்பதிலும் எந்தச் சந்தேகமும் இல்லை.

(அல்குர்ஆன் 40:43)

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் பூமியில் எதைப் படைத்தனர் என்று எனக்குக் காட்டுங்கள்! அல்லது வானங்களில் அவர்களுக்குப் பங்கு உண்டா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதற்கு முன் சென்ற வேதத்தையோ, அறிவுச் சான்றையோ என்னிடம் கொண்டு வாருங்கள்!என்று (முஹம்மதே!) கேட்பீராக! கியாமத் நாள் வரை தமக்குப் பதில் தராத, அல்லாஹ் அல்லாதோரை அழைப்பவரை விட மிகவும் வழி கெட்டவர் யார்? அவர்களோ தம்மை அழைப்பது பற்றி அறியாது உள்ளனர். மக்கள் ஒன்று திரட்டப்படும் போது அவர்கள் இவர்களுக்குப் பகைவர்களாக ஆவார்கள். இவர்கள் தம்மை வணங்கியதையும் மறுப்பார்கள்.

(அல்குர்ஆன் 46:6)

இந்த வசனங்கள் யாவும் இறைவனல்லாத எவரையும் பிரார்த்திக்கக் கூடாது என்பதையும், அதனால் பயனில்லை என்பதையும், அது இணை வைக்கும் பெரும்பாவம் என்பதையும் அறிவிக்கின்றன. இறைவன் அருகில் இருக்கிறான்

சர்வ வல்லமையுடைய இறைவனிடம் தான் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதைக் கொள்கையளவில் ஏற்றுக் கொண்டவர்கள் கூட தாமாக உருவாக்கிக் கொண்ட இடைத் தரகர்களிடம் பிரார்த்திப்பதைக் காண்கிறோம்.

இறைவன் நம்மை விட்டும் தொலைவில் இருக்கிறான்; நம்மால் நேரடியாக அவனைத் தொடர்பு கொள்ள முடியாது என்று அவர்கள் நம்புவதே இதற்குக் காரணம்.

கடவுள் மனிதனை விட்டும் வெகு தொலைவில் இருப்பதாக நம்புவது தான் பல தெய்வ வழிபாட்டுக்கும், இறை வழிபாடு புறக்கணிக்கப்படுவதற்கும் அடிப்படைக் காரணம். அந்தக் காரணத்தை களையெடுப்பதற்காகத் தான் நான் அருகிலிருக்கிறேன் என்று இறைவன் கூறுகிறான்.

என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர் வழி பெறுவார்கள் (என்பதைக் கூறுவீராக!)

(அல்குர்ஆன் 2:186)

எந்த அளவுக்கு அருகில் இருக்கிறான்? பத்தடி தூரத்தில் இருக்கிறானா? பார்க்கும் தூரத்தில் இருக்கிறானா? எட்டிப் பிடிக்கும் தூரத்தில் இருக்கிறானா? இதைப் பின்வரும் வசனத்தில் இறைவன் கூறுகிறான்.

மனிதனைப் படைத்தோம். அவனது மனம் எதை எண்ணுகிறது என்பதையும் அறிவோம். நாம் அவனுக்குப் பிடரி நரம்பை விட மிகவும் நெருக்கமாக இருக்கிறோம்.

(அல்குர்ஆன் 50:16)

ஒருவனது (உயிர்) தொண்டைக் குழியை அடையும் போது, அந்நேரத்தில் (அவனை) நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பீர்கள். உங்களை விட நாமே அவனுக்கு மிகவும் அருகில் இருக்கிறோம். எனினும் நீங்கள் பார்க்க மாட்டீர்கள்.

(அல்குர்ஆன் 56:83, 84, 85)

கடவுள் தொலைவில் இருப்பதாக எண்ணிக் கொண்டு சிலைகளின் முன்னே நிற்பவர்கள், சமாதிகளுக்கு முன்னே மண்டியிடுபவர்கள், சாமியார்களின் கால்களில் விழுபவர்கள் இதை நெருக்கம் என்று நினைக்கிறார்கள். ஆனால் ஏக இறைவனோ ஒரு மனிதனின் பிடறி நரம்பை விட நெருக்கத்தில் இருக்கிறான்.

ஒரு மகானின் முன்னே ஒருவன் நிற்கிறான். அவர் தனக்கு மிக மிக அருகில் இருப்பதாகவும், கடவுள் அவரை விட தொலைவில் இருப்பதாகவும் எண்ணுகிறான். ஆனால் கண் முன்னே நிற்கும் மகானை விட அந்த மனிதனுக்கு கடவுள், நெருக்கமாக இருக்கிறான். இடைவெளியைக் கற்பனை செய்ய முடியாத நெருக்கத்தில் இருக்கிறான் என்று இவ்வசனத்தின் மூலம் இறைவன் தெளிவுபடுத்துகிறான்.

கடவுள் நெருக்கமாக இருப்பது உண்மை தான். ஆயினும் நாங்கள் அவனிடம் நேரடியாகத் தொடர்பு கொள்ளும் வகையில் நடந்து கொள்ளவில்லையே? அவனது கட்டளைகள் பலவற்றை மீறியுள்ளோமே? நாங்கள் நேரடியாகக் கேட்டால் எங்களை அவன் கோபித்துக் கொள்வானே? அவனது கோபத்தைக் குளிரச் செய்வதற்குத் தான் இடைத் தரகர்களை, சாமியார்களை, ஷைகுமார்களை நாங்கள் நாட வேண்டியுள்ளது என்று சிலர் கூறுகின்றனர்.

இந்த வாதம் தவறானது என்பதைத் தெளிவுபடுத்துவதற்குத் தான் நான் அருகில் இருக்கிறேன், அழைப்பவனின் அழைப்புக்குப் பதிலளிக்கிறேன் எனவும் சேர்த்துச் சொல்கிறான். அழைப்பவன் எவனாயினும் அவனுக்குப் பதிலளிக்கிறேன் என்று பொது அழைப்பு விடுக்கிறான். மகான்கள் மட்டும் நெருங்கும் வகையில் நான் இருக்கவில்லை. சாதாரண மனிதனும் நெருங்கும் வகையில் தான் இருக்கிறேன் என்று கூறுகிறான்.

தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக!

(அல்குர்ஆன் 39:53)

அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்! (ஏக இறைவனை) மறுக்கும் கூட்டத்தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்க மாட்டார்கள்.

(அல்குர்ஆன் 12:87)

இறைவனுக்கு ஆத்திரமூட்டும் வகையில் எவ்வளவு பயங்கரமான குற்றங்களில் ஈடுபட்டவனாயினும் அதற்காக இறைவனை விட்டு விலக வேண்டாம்; இறைவன் தர மாட்டான் என்று அவநம்பிக்கை கொள்ள வேண்டாம்; எவ்வளவு பயங்கரமான பாவங்களில் ஈடுபட்டாலும் அவற்றையும் அல்லாஹ் மன்னிக்கிறான்; அவர்களும் அவனிடத்தில் நேரடியாகக் கேட்கலாம் என்று மிகத் தெளிவாக இங்கே சுட்டிக் காட்டுகிறான்.

தனக்குத் தகுதியில்லை என்று எண்ணி இறைவனை விடுத்து மற்றவர்களை நாடக் கூடாது எனவும் உணர்த்துகிறான்.

கடவுள் என் மேல் கோபமாக இருக்கிறான்; அதனால் கடவுளுக்கு நெருக்கமானவர்களைத் தேடி ஓடுகிறேன் என்று கூறுவது அறிவுக்கும் ஏற்புடையதாக இல்லை.

கடவுள் கோபமாக இருக்கிறான் என்பதால் கடவுளுக்கு நெருக்கமானவர்களைத் தேடுவதாகக் கூறினால் அவர்கள் கடவுளுக்கு நெருக்கமானவர்கள் என்பதற்கு என்ன ஆதாரம்? இன்னின்ன மனிதர்கள் எனக்கு நெருக்கமானவர்கள் என்று இறைவன் கூறினானா? இதை அவர்கள் சிந்திக்க வேண்டும்.

மனிதர்களைக் குளிரச் செய்வதற்காக அவர்களின் கோபத்தைத் தணிப்பதற்காக அவர்களுக்கு நெருக்கமானவர்களைத் தேடுவதில் அர்த்தமிருக்கிறது. அவர்கள் பக்குவமாக அவரிடம் கூறி, கோபத்தைத் தணிக்க முயலக் கூடும். மனிதனின் உள்ளத்தில் ஓடும் எண்ணங்களைக் கூட அறிந்து வைத்திருக்கும் இறைவனுக்கு இத்தகைய இடைத்தரகர்களின் தேவை என்ன? இதைச் சிந்தித்தாலும் இந்தப் போக்கை மக்கள் மாற்றிக் கொள்வார்கள்.

நான் அருகில் இருக்கிறேன் என்று மட்டும் கூறி விட்டு இறைவன் நிறுத்தவில்லை. எந்த வகையில் அருகில் இருக்கிறேன் என்பதையும் விளக்குகிறான். அழைப்பவரின் அழைப்பை ஏற்பதில் அருகில் இருக்கிறேன்என்று தெளிவுபடுத்துகிறான். பிடரி நரம்பை விட அருகில் இருப்பவனுக்கு நமது குரல் எவ்வளவு தெளிவாகச் சென்றடையுமோ அதை விடத் தெளிவாக நமது பிரார்த்தனைகள் அவனைச் சென்றடையும் என்பதே இதன் விளக்கமாகும்.

மூஸா (அலை), ஹாரூன் (அலை) இருவரையும் பிர்அவ்னிடம் இறைவன் அனுப்பும் போது,

அஞ்சாதீர்கள்! நான் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் உங்களுடன் இருக்கிறேன் என்று அவன் கூறினான்.

(அல்குர்ஆன் 20:46)

என்று சொல்லியனுப்புகிறான். உங்களுடன் இருக்கிறேன் என்பதன் பொருள், உங்களுக்கு நடப்பதை நான் பார்த்துக் கொண்டும், கேட்டுக் கொண்டும் இருக்கிறேன் என்பது தான்.

நான் அருகில் இருக்கிறேன்; அழைப்பவர்களின் அழைப்புக்குப் பதிலளிக்கிறேன் என்று கூறிய பிறகும் அடக்கத்தலங்களில் போய் தங்கள் தேவைகளைக் கேட்கும் முஸ்லிம்களுக்கு, உண்மையை விளக்கும் போதனைகளைப் பல இடங்களில் இறைவன் கூறுகிறான்.

இறந்தோரைச் செவியுறச் செய்ய உம்மால் முடியாது! செவிடர்கள் பின்வாங்கி ஓடினால் அழைப்பை அவர்களுக்குச் செவியேற்கச் செய்ய உம்மால் முடியாது.

(அல்குர்ஆன் 30:52)

உயிருடன் உள்ளோரும், இறந்தோரும் சமமாக மாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச் செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச் செய்பவராக இல்லை.

(அல்குர்ஆன் 35:22)

இறந்தவர்களும், கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவர்களும் நமக்கு அருகில் இருப்பதாக நாம் நினைத்தாலும் அவர்கள் நாம் கூறுவதைச் செவியுற முடியாது என்பதை இவ்வசனங்களிலிருந்து அறியலாம். செவியுறவே முடியாதவர்கள் எப்படி பிரார்த்தனைக்குப் பதிலளிப்பார்கள் என்பதை, சமாதிகளை வழிபடும் முஸ்லிம்கள் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!

(அல்குர்ஆன் 7:194)

மிக அருகில் இருந்து கொண்டு அனைவரின் பிரார்த்தனைகளைச் செவியுறுகின்ற வல்ல இறைவனிடம் பிரார்த்திப்பதை விட்டு விட்டு மற்றவர்களைப் பிரார்த்திப்பவர்களுக்கு இந்த வசனங்களில் போதுமான எச்சரிக்கை இருக்கிறது.

இறைவன் அருகில் உள்ளதும், அவன் மாத்திரமே பிரார்த்தனைக்குத் தகுதியானவன் என்பதும் தான் இயற்கையான கடவுள் கொள்கையாகும்.

பல்வேறு தெய்வங்களை - பெரியார்களை வழிபடக் கூடியவன் கடுமையான, தாங்க முடியாத ஆபத்தைச் சந்திக்கும் போது அவனது வாய்,கடவுளே! அல்லாஹ்வே! என்று தான் உச்சரிக்கின்றது. சின்னச் சின்ன தேவைகள் விஷயத்தில் தான், கடவுள் தூரத்தில் இருப்பதாக மனிதன் எண்ணுகிறான். கழுத்துக்குச் சுருக்கு வரும் நேரத்தில் எந்த அவுலியாவையும் எந்தச் சிலைகளையும் மனிதன் அழைப்பதில்லை. அல்லாஹ், கடவுள் என்ற வார்த்தை தான் அவனிடமிருந்து புறப்படுகின்றது. திருமறைக் குர்ஆனிலும் அல்லாஹ் இதை அழகாக விளக்குகிறான்.

கடலில் உங்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டால் அவனைத் தவிர யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் மறைந்து விடுகின்றனர். அவன் உங்களைக் காப்பாற்றிக் கரை சேர்த்தவுடன் புறக்கணிக்கிறீர்கள்! மனிதன் நன்றி கெட்டவனாகவே இருக்கிறான்.

(அல்குர்ஆன் 17:67)

உங்களிடம் அல்லாஹ்வின் வேதனை வந்தால் அல்லது அந்த நேரம் வந்து விட்டால் அல்லாஹ் அல்லாதவர்களையா அழைக்கிறீர்கள்? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் பதில் சொல்லுங்கள்! என்று கேட்பீராக! மாறாக அவனையே அழைக்கிறீர்கள். நீங்கள் இணை கற்பித்தவர்களை மறந்து விடுகிறீர்கள். அவன் நாடினால் அவனை எதற்காக அழைத்தீர்களோ அதை நீக்கி விடுகிறான்.

(அல்குர்ஆன் 6:40, 41)

மனிதனுக்குத் தீங்கு ஏற்படுமானால் படுத்தவனாகவோ,  அமர்ந்தவனாகவோ,  நின்றவனாகவோ நம்மிடம் பிரார்த்திக்கிறான். அவனது துன்பத்தை அவனை விட்டு நாம் நீக்கும் போது அவனுக்கு ஏற்பட்ட துன்பத்திற்காக நம்மை அழைக்காதவனைப் போல் நடக்கிறான். இவ்வாறே வரம்பு மீறியோருக்கு அவர்கள் செய்து வந்தவை அழகாக்கப்பட்டுள்ளன.

(அல்குர்ஆன் 10:12)

அவர்கள் கப்பலில் ஏறிச் செல்லும் போது பிரார்த்தனையை அவனுக்கே உளத்தூய்மையுடன் உரித்தாக்கி அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களைக் காப்பாற்றி தரையில் சேர்த்ததும் அவர்கள் இணை கற்பிக்கின்றனர்.

(அல்குர்ஆன் 29:65)

மனிதர்களுக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது தமது இறைவனிடம் திரும்பி அவனிடம் பிரார்த்திக்கின்றனர். பின்னர் அவர்களுக்குத் தன் அருளை அவன் சுவைக்கச் செய்தால் நாம் அவர்களுக்கு வழங்கியதற்கு நன்றி மறந்து தமது இறைவனுக்கு அவர்களில் ஒரு பகுதியினர் இணை கற்பிக்கின்றனர். அனுபவியுங்கள்! அறிந்து கொள்வீர்கள்.

(அல்குர்ஆன் 30:33, 34)

மனிதனுக்கு ஒரு தீங்கு ஏற்படுமானால் தனது இறைவனிடம் சரணடைந்தவனாக அவனை அழைக்கிறான். பின்னர் இறைவன் தனது அருட்கொடையை வழங்கும் போது முன்னர் எதற்காகப் பிரார்த்தித்தானோ அதை அவன் மறந்து விடுகிறான். அல்லாஹ்வின் பாதையை விட்டு வழி கெடுப்பதற்காக அவனுக்கு இணை கற்பிக்கிறான். உனது (இறை) மறுப்பில் சிறிது காலம் சுகம் அனுபவித்துக் கொள்! நீ நரகவாசிகளைச் சேர்ந்தவன் எனக் கூறுவீராக!

(அல்குர்ஆன் 39:08)

இறைவன் மிக அருகில் இருப்பதை மனிதனின் உள் மனது ஒப்புக் கொள்கிறது. அவனாக உருவாக்கிக் கொண்ட போலியான காரணங்களால் தான் இறைவனை விட்டு மனிதன் மற்றவர்களை நாடுகிறான் என்பதற்கு இவ்வசனம் சரியான சான்றாக அமைந்துள்ளது.

இறைவன் எல்லா மனிதர்களும் நெருங்கக் கூடிய இடத்தில் இருக்கிறான் என்று நம்பக் கூடியவர்கள் எவர் முன்னிலையிலும் தமது சுய மரியாதையை இழக்க மாட்டார்கள்

க எவர் காலிலும் விழ மாட்டார்கள்.

க காணிக்கை செலுத்தி எவரிடத்திலும் ஏமாற மாட்டார்கள்.

க மலஜலத்தைச் சுமந்திருக்கின்ற எவரையும் புனிதர்களாகக் கருத மாட்டார்கள்.

க மதத்தின் பெயராலும், பிள்ளை வரம் என்ற பெயராலும் பெண்கள் கற்பிழக்க மாட்டார்கள்.

க இறைவன் அருகில் இருக்கிறான் என்று நம்பக் கூடியவர்கள் எவருக்கும் துரோகம் செய்ய மாட்டார்கள்.

க எவர் பொருளையும் முறைகேடாகப் பெற முயற்சிக்க மாட்டார்கள்.

க யாருக்கும் அநீதி இழைக்க மாட்டார்கள்.

க திருட மாட்டார்கள்.

க கொலை செய்ய மாட்டார்கள்.

க பொய் பித்தலாட்டங்களில் ஈடுபட மாட்டார்கள்.

க லஞ்ச ஊழலில் ஈடுபட மாட்டார்கள்.

இறைவன் மிக அருகில் இருக்கிறான் என்று நம்புவதால் மனிதன் பெறும் நன்மைகள் ஏராளம்! ஏராளம்!!

பிரார்த்தனையின் ஒழுங்குகள்

இறைவன் மிக அருகில் இருந்து, அனைவரின் கோரிக்கைகளையும் அவன் நிறைவேற்றுகிறான் என்றால் நாங்கள் கேட்கும் எத்தனையோ பிரார்த்தனைகளுக்கு எந்தப் பலனும் ஏற்படவில்லையே என்று அரை குறை நம்பிக்கையுள்ளவன் நினைக்கிறான். இதனால் இறைவனிடம் பிரார்த்தனை செய்வதையே விட்டு விடக் கூடியவர்களும் உள்ளனர். பிரார்த்தனை செய்வதற்குரிய ஒழுங்குகளை அவர்கள் கடைப்பிடிக்காததும், பிரார்த்தனை ஏற்கப்படுவதற்குரிய நிபந்தனைகளை அவர்கள் பேணாததும் தான் இதற்குக் காரணம்.

ஒரு அடியான் அல்லாஹ்விடம் கையேந்திக் கேட்கும் போது வெறுங்கையாக திருப்பியனுப்ப இறைவன் வெட்கப்படுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்

அறிவிப்பவர்: ஸல்மான் பார்ஸீ (ரலி)

நூற்கள்: அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா, ஹாகிம்

எந்தப் பிரார்த்தனையும் நிராகரிக்கப்படுவதில்லை என்ற உத்தரவாதத்தை இந்த நபிமொழி வழங்குகின்றது. அப்படியானால் சிலரது பிரார்த்தனைகள் மறுக்கப்பட காரணங்கள் என்ன?

ஹராமானவற்றைத் தவிர்க்க வேண்டும்

நீண்ட பயணத்தில் ஒருவன் புறப்பட்டு, ஆடைகளும் உடம்பும் புழுதி படிந்த நிலையில், இறைவா! இறைவா! என்று பிரார்த்திக்கிறான். அவனது உடை, உணவு, பானம் ஆகியவை ஹராமானதாக இருக்கும் போது அவனது பிரார்த்தனை எவ்வாறு அங்கீகரிக்கப்படும்? என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 1686

மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட முறையில் பொருளீட்டி உண்பதால் ஒருவனது துஆ அங்கீகரிக்கப்படுவதில்லை என்பதை இந்த ஹதீஸ் விளக்குகின்றது. தங்களின் பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட வேண்டுமென்று விரும்பக் கூடியவர்கள் அனுமதிக்கப்பட்ட முறையில் பொருளீட்டுவதில் கவனம் செலுத்த வேண்டும்.

அவசரப்படக் கூடாது

அல்லாஹ்விடம் பிரார்த்திக்கும் போது அவசரப்படக் கூடாது. ஒன்றுக்குப் பலமுறை திரும்பத் திரும்பக் கேட்க வேண்டும். ஒரு தடவை பிரார்த்தனை செய்து விட்டு நான் கேட்டேன்; கிடைக்கவில்லை என்ற முடிவுக்கு வந்து விடக் கூடாது. இத்தகைய எண்ணத்துடன் கேட்பவர்களின் துஆக்கள் அங்கீகரிக்கப்படுவதில்லை. நாம் கேட்டவுடன் தருவதற்கு அல்லாஹ் நமது வேலையாள் அல்ல! அவன் நமது எஜமானன். எஜமானனிடம் கெஞ்சிக் கேட்பதே முறையாகும்.

நான் பிரார்த்தனை செய்தேன்; அங்கீகரிக்கப்படவில்லைஎன்று கூறி அவசரப்படாத வரை உங்கள் துஆக்கள் அங்கீகரிக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6340

பாவமானதைக் கேட்கக் கூடாது

பிரார்த்திக்கும் போது இறைவன் எதைத் தடை செய்துள்ளானோ, அதைக் கேட்கக் கூடாது.இறைவா! லாட்டரிச் சீட்டில் என்னைப் பணக்காரனாக்கு! என்பது போன்ற பிரார்த்தனைகள் இறைவனால் அங்கீகரிக்கப்படுவதில்லை.

பாவமானவற்றையும், உறவினரைப் பகைப்பதாகவும், பிரார்த்திக்காத வரை அடியானின் பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 4918

மரணத்தைக் கேட்கக் கூடாது

முதுமையின் காரணமாக மற்றவர்களுக்குப் பாரமாகி, சொந்த பந்தங்கள் கூட அலட்சியப்படுத்துவதைக் காணும் போது ஏன் இவ்வுலகில் நாம் வாழ வேண்டும்? என்று எண்ணுவார்கள். இறைவா! சீக்கிரம் என்னை மரணிக்கச் செய்து விடு!என்று பிரார்த்தனை செய்து விடுவார்கள்.

எந்த நிலையிலும் யாரும் மரணத்தை இறைவனிடம் கேட்கவும் கூடாது; மனதால் அதற்கு ஆசைப்படவும் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.

தனக்கு ஏற்பட்ட துன்பத்தின் காரணமாக உங்களில் யாரும் மரணிக்க ஆசைப்படக் கூடாது. அப்படிச் செய்ய வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டால் இறைவா! நான் வாழ்வது எனக்குச் சிறந்ததாக இருக்கும் வரை என்னை வாழ வை! நான் மரணிப்பது எனக்கு நல்லதாக இருந்தால் என்னை மரணிக்கச் செய் என்று கூறட்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: புகாரி 5671, 6351

இறந்தவருக்காகப் பிரார்த்தனை செய்தல்

இறந்தவர்களுக்காக, உயிருடன் உள்ளவர்கள் செய்யும் மற்றொரு நன்மை அவருக்காக அதிகமதிகம் அல்லாஹ்விடம் துஆச் செய்வதாகும்.

அவர்களுக்குப் பின் வந்தோர் எங்கள் இறைவா! எங்களையும், நம்பிக்கையுடன் எங்களை முந்தி விட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக! எங்கள் உள்ளங்களில் நம்பிக்கை கொண்டோர் மீது வெறுப்பை ஏற்படுத்தி விடாதே! நீ இரக்கமுடையோன்; நிகரற்ற அன்புடையோன்என்று கூறுகின்றனர்.

அல்குர்ஆன் 59:10

குறிப்பாக இறந்தவரின் பிள்ளைகள் துஆச் செய்வது இறந்தவருக்குப் பெரிதும் பயன் தரும்.

ஒரு மனிதன் மரணித்து விட்டால் மூன்று காரியங்கள் தவிர மற்ற செயல்பாடுகள் முடிந்து விடும். அவை: நிலையான தர்மம், பிறர் பயன்பெறும் கல்வி, தனக்காகப் பிரார்த்தனை செய்யும் நல்லொழுக்கமுள்ள சந்ததி என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி

நூல்: முஸ்லிம் 3084

மனிதன் மரணித்த பின் பயன் தரும் மூன்று காரியங்களில் பெற்றோருக்காகப் பிள்ளைகள் செய்யும் பிரார்த்தனையையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே பிள்ளைகள் தமது பெற்றோருக்காக அதிகமதிகம் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து கொண்டே வர வேண்டும். இதனால் பெற்றோர் நன்மைகளை அடைவார்கள்.

மகான்கள் பொருட்டால் கேட்கக் கூடாது

பிரார்த்தனை செய்து முடிக்கும் போது, இறைவா! இந்தப் பெரியாரின் பொருட்டால் இப்பிரார்த்தனையை ஏற்றுக் கொள் என்று சிலர் கூறுகின்றனர். இது முற்றிலும் தவறாகும்.

தனது அடிமைத் தனத்தையும், இறைவனின் பேராற்றலையும் உணர்ந்து உருகிக் கேட்கும் வகையில் அமைந்த பிரார்த்தனையைத் தான் இறைவன் ஏற்றுக் கொள்வான். மற்றவர் பெயரைச் சொல்லி இறைவனை மிரட்டுவது போல் அமைந்த இது போன்ற திமிரான வார்த்தைகள் இறைவனுக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தும். எந்த மகானுக்காகவும் இறைவன் எதையும் தரவேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. ஆதம் (அலை) அவர்கள் நபிகள் நாயகத்தின் பொருட்டால் மன்னிப்புக் கேட்டதால் மன்னிக்கப்பட்டனர் என்ற கட்டுக் கதையை இதற்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

திர்மிதீ, ஹாகிம் ஆகிய நூல்களிலும், இன்ன பிற நூல்களிலும் பதிவு செய்யப்பட்ட இச்செய்தியை இட்டுக்கட்டப்பட்டது என அறிஞர்கள் கூறியுள்ளனர்.

அப்துர் ரஹ்மான் பின் ஸைத் பின் அஸ்லம் என்பவர் வழியாகவே இது அறிவிக்கப்படுகிறது. அவர் இட்டுக் கட்டிக் கூறுவதில் பிரசித்தி பெற்றவர். ஆதம் (அலை) எவ்வாறு மன்னிப்புக் கேட்டார் என்று திருக்குர்ஆனின் 2:37, 7:23 வசனங்கள் விளக்குவதற்கு எதிராகவும் இந்தக் கதை அமைந்துள்ளது.

(பாவ மன்னிப்புக்குரிய) சில வார்த்தைகளை இறைவனிடமிருந்து ஆதம் பெற்றுக் கொண்டார். எனவே அவரை இறைவன் மன்னித்தான்; அவன் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன் 2:37)

இறைவன் புறத்திருந்து சில வார்த்தைகளை ஆதம் (அலை) கற்றுக் கொண்டார் என்று திருக்குர்ஆனின் 2:37 வசனத்தில் கூறப்படுகிறது. அந்த வார்த்தைகள் யாவை என்பது இங்கே கூறப்படாவிட்டாலும் திருக்குர்ஆனின் 7:23 வசனத்தில் அந்த வார்த்தைகள் யாவை எனக் கூறப்பட்டுள்ளது. எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கு இழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்து, அருள் புரியவில்லையானால் நஷ்டமடைந்தோராவோம் என்று அவ்விருவரும் கூறினர்.

(அல்குர்ஆன் 7:23)

இதைக் கூறித் தான் இருவரும் மன்னிப்புக் கேட்டனர்; அல்லாஹ் அவர்களை மன்னித்தான் என்பதையும், தமது தவறை உணர்ந்து வருந்திக் கேட்கும் போது தான் இறைவன் மன்னிப்பான் என்பதையும் 7:23 வசனத்திருந்து அறியலாம்.

எனவே அந்தக் கதையை நம்புவது குர்ஆனுக்கு எதிரானதாகும்.

இறைவன் பால் வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள் என்ற வசனத்துக்கு தவறான பொருள் கொடுத்து, அதனடிப்படையில் இவ்வாறு பிரார்த்திக்கின்றனர்.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அவனை நோக்கி ஒரு வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள்! அவன் பாதையில் அறப்போர் செய்யுங்கள்! வெற்றி பெறுவீர்கள்.

(அல்குர்ஆன் 5:35)

வஸீலா என்பதன் பொருள் சாதனம்.

கடல் பயணம் செய்ய கப்பல் வஸீலாவாகசாதனமாக உள்ளது என்பர்.

நாம் நல்வழியில் நடக்கத் தேவையில்லை; எந்த நல்லறமும் செய்யத் தேவையில்லை; எந்தத் தீமையிருந்தும் விலகத் தேவையில்லை; ஏதாவது ஒரு மகானைப் பிடித்துக் கொண்டால் போதும்; கடவுளை நெருங்கிடலாம்என்ற நம்பிக்கை உலகில் உள்ள பல மதங்களிலும் இருக்கிறது. இஸ்லாம் இந்த நம்பிக்கையை நிராகரிக்கின்றது. இறைவனை நெருங்க நினைப்பவர்கள் நல்லறங்கள் எனும் வஸீலாவைசாதனத்தைத் தேடிக் கொள்ள வேண்டும் என்று இங்கே கட்டளையிடப்படுகின்றது.

இறைவனை நெருங்க வேண்டுமானால் ஒவ்வொருவரும் நல்லறங்கள் செய்து அதன் மூலமே நெருங்க வேண்டும். அவ்வாறின்றி மகான்களை இடைத் தரகர்களாகப் பயன்படுத்தி வெற்றி பெற முடியாது என்பதே வஸீலா தேடுங்கள்!என்பதன் கருத்தாகும்.

இடைத் தரகர்களை அறவே ஒழித்துக் கட்டும் வகையில் அமைந்த இவ்வசனத்தை இடைத் தரகர்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்று நேர் மாறாக விளங்கிக் கொள்கிறார்கள்.

வஸீலாவுக்கு மகான்கள், இடைத் தரகர்கள் என்ற அர்த்தம் கிடையாது. இவ்வசனத்தின் (5:35) துவக்கத்தில் நம்பிக்கையாளர்களே என்று அழைக்கப்படுகிறது. இந்த அழைப்பில் மகான்கள் என்று கருதப்படுவோரும் அடங்குவார்கள். மகான்களும் வஸீலா தேட வேண்டும் என்பது தான் இவ்வசனத்தின் பொருள்.

நம்பிக்கையாளர்களே என்ற அழைப்பில் முதல் அடங்கக் கூடியவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம். அவர்களுக்கும் வஸீலா தேடும் கட்டளை உள்ளது. அவர்கள் எந்த மகானைப் பிடிப்பார்கள்? என்று சிந்தித்தால் இப்படி விளங்க மாட்டார்கள்.

இவ்வசனத்தில் மூன்று கட்டளைகள் உள்ளன. மற்ற இரண்டு கட்டளைகள் எவ்வாறு மகான்கள் உள்ளிட்ட அனைவரையும் கட்டுப்படுத்துமோ, அது போல் தான் வஸீலா தேடும் கட்டளையும் அனைவரையும் கட்டுப்படுத்தும்.

மகான்கள் கூட வஸீலா தேடுகிறார்கள் என்று மற்றொரு வசனம் (17:57) தெளிவாகவே கூறுகிறது.

எனவே நல்லறங்கள் எனும் வஸீலா - சாதனம் மூலம் இறைவனை நெருங்குங்கள் என்று பொருள் கொண்டால் தான் நபிகள் நாயகம் (ஸல்) உள்ளிட்ட அனைத்து முஃமின்களும் வஸீலா தேட வேண்டும் என்பது பொருந்தும். மகான்களைப் பிடித்துக் கொள்ளுங்கள் என்று பொருள் கொண்டால் இவ்வசனம் பொருளற்றதாகி விடும்.

வலியுறுத்திக் கேட்க வேண்டும்

இறைவனிடம் கேட்கும் போது, கேட்கப்படும் கோரிக்கை தனக்கு அவசியம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்க வேண்டும். உனக்கு விருப்பமிருந்தால் தா! இல்லாவிட்டால் தராதே!என்பது போல் கேட்கப்படும் துஆக்களும் அங்கீகரிக்கப்படுவதில்லை. எப்படிக் கேட்டாலும் அவன் விரும்பினால் தான் தருவான். விரும்பினால் தா! என்று கேட்கும் போது அவன் விரும்பாவிட்டால் கூட நிர்பந்தப்படுத்தி வாங்க முடியும் என்ற கருத்து இதில் உள்ளது.

உங்களில் எவரேனும் துஆச் செய்தால் வலியுறுத்திக் கேட்கட்டும்! நீ விரும்பினால் தா! என்று எவரும் கேட்க வேண்டாம். ஏனெனில் அவனை நிர்பந்தம் செய்பவன் எவனுமில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 6338, 6339, 7464, 7477

அனைத்தையும் கேட்க வேண்டும்

சாதாரண சின்னச் சின்ன விஷயங்களை அல்லாஹ்விடம் கேட்காமல் நானே அடைந்து கொள்ள முடியும். பெரிய விஷயங்களை மட்டும் தான் அவனிடம் கேட்பேன் என்று மக்கள் நடந்து கொள்கிறார்கள்..

தங்களுக்கு எவை சாத்தியமென நம்புகிறார்களோ அதைத் தான் இறைவனிடம் கேட்கின்றனர். தங்களுக்குச் சாத்தியமற்றவையாகத் தோன்றக் கூடியதை அவர்கள் இறைவனிடம் கேட்பதில்லை. இதவும் தவறாகும்.

திருமணம் ஆகி பத்து வருடங்கள் வரை குழந்தையில்லா விட்டால் அல்லாஹ்விடம் குழந்தையைக் கேட்கின்றனர். ஆனால் தள்ளாத வயதையடைந்தும் குழந்தை இல்லாவிட்டால் இறைவனிடம் கேட்பதில்லை.

தள்ளாத வயதுடையவர்களுக்குக் குழந்தை பிறப்பதில்லை என்பதால் இவ்வாறு நடந்து கொள்கின்றனர். இறைவனால் எதுவும் முடியும் என்ற நம்பிக்கையிருந்தால் இந்தக் கட்டத்திலும் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்பதைத் தவிர்க்க மாட்டார்கள்.

ஜக்கரியா நபியவர்கள் உடல் தளர்ந்து, எலும்புகள் பலவீனமடைந்து மயிர்கள் நரைத்து விட்ட நிலையில் தமக்கொரு சந்ததியைக் கேட்டார்கள். இறைவனும் சந்ததியை வழங்கினான். இதைத் திருக்குர்ஆன் தெளிவாகக் கூறுகிறது.

(இது) உமது இறைவன் தனது அடியார் ஸக்கரிய்யாவுக்குச் செய்த அருளைக் கூறுதல்! அவர் தமது இறைவனை இரகசியமாக அழைத்துப் பிரார்த்தித்தார். என் இறைவா! என் எலும்பு பலவீனமடைந்து விட்டது. தலையும் நரையால் மின்னுகிறது. என் இறைவா! உன்னிடம் பிரார்த்தித்ததில் நான் துர்பாக்கியசாலியாக இருந்ததில்லை.

(அல்குர்ஆன் 19:2, 3, 4)

சிறிய தொழில் செய்பவன் தன்னைக் கோடீஸ்வரனாக்குமாறு இறைவனிடம் கேட்பதில்லை. சிறிய தொழிலில் கோடிக் கணக்கான ரூபாய்கள் எப்படிக் கிடைக்க முடியும் என்று எண்ணுகிறானே தவிர வல்ல அல்லாஹ்வுக்கு எதுவும் சாத்தியம் தான் என்று எண்ணுவதில்லை.

தன்னைப் போன்ற பலவீனனாக இறைவனையும் அவனது உள் மனது நினைக்கிறது. அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன் என்பதை நம்பவில்லை. இது தான் இந்தப் போக்குக்குக் காரணம்.

எனவே கேட்பதில் கஞ்சத்தனம் காட்ட வேண்டியதில்லை.

இரகசியமாகவும், பணிவாகவும் பிரார்த்தித்தல்

உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான்.

(அல்குர்ஆன் 7:55)

உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்

(அல்குர்ஆன் 7:205)

இறைவனிடம் எவ்வாறு பிரார்த்தனை செய்வது என்ற வழி முறையை இவ்வசனங்கள் கற்றுத் தருகின்றன.

ஒரு அதிகாரியிடம், அமைச்சரிடம் நமது கோரிக்கைகளை எழுப்புவது என்றால் அதற்கென சில ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம்.

நமது கோரிக்கையைக் கேட்கும் போது அடுக்கு மொழியில் வசனம் பேசினால் அல்லது ராகம் போட்டு கோரிக்கையை எழுப்பினால் கோரிக்கை எவ்வளவு நியாயம் என்றாலும் அந்த அதிகாரி ஏற்க மாட்டார். அல்லது கடுமையான சப்தத்தில் கோரிக்கையை எழுப்பினாலும் கோரிக்கை நிராகரிக்கப்படும்.

மனிதனிடம் கோரிக்கை வைக்கும் போது காட்டப்படும் பணிவை விட அல்லாஹ்விடம் ஆயிரமாயிரம் மடங்கு அதிகமாக பணிவைக் காட்ட வேண்டும். அதைத் தான் அல்லாஹ் இங்கே கூறுகிறான்.

பணிவுடன் உங்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்பது முதலாவது ஒழுங்கு. அல்லாஹ்விடம் கேட்கும் போது ராகம் போட்டோ, அடுக்கு மொழியிலோ கேட்டால் அங்கே பணிவு எடுபட்டுப் போய் விடும்.

பெரும்பாலான பள்ளிவாசல்களில் இப்படித் தான் பணிவு இல்லாமல், யாரிடம் கேட்கிறோம் என்ற உணர்வு இல்லாமல் சடங்காகப் பிரார்த்தனை செய்கின்றனர்.

மேலும் இரகசியமாகப் பிரார்த்திப்பது பிரார்த்தனையின் ஒழுங்காக இங்கே குறிப்பிடப்படுகிறது.

இதிலிருந்து கூட்டாக சப்தமிட்டுக் கேட்பது முறையான பிரார்த்தனை இல்லை என்பது தெரிய வரும்.

ஒவ்வொருவருக்கும் தனித் தனித் தேவைகள் உள்ளன. அவரவர் தத்தமது தேவையை தமது மொழியில் பணிவுடனும், ரகசியமாகவும் கேட்பதே பிரார்த்தனையின் முக்கிய ஒழுங்காகும்.

இறைவன் எவ்வாறு பிரார்த்திக்குமாறு நமக்குக் கட்டளையிடுகிறானோ, அவ்வாறு செய்யப்படும் பிரார்த்தனையைத் தான் ஏற்றுக் கொள்வான் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இரவின் கடைசி நேரம்

இரவை மூன்றாகப் பிரித்து அதில் கடைசிப் பகுதியில் கேட்கப்படும் துஆக்கள் அதிகம் பலனளிப்பவை. அந்த நேரத்தைத் தேர்வு செய்து பிரார்த்திக்க வேண்டும்.

இரவை மூன்றாகப் பிரித்து கடைசிப் பகுதியில் இறைவன் முதல் வானத்துக்குத் தினமும் இறங்குகிறான். என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை ஏற்கிறேன். என்னிடம் கேட்டால் கொடுக்கிறேன். என்னிடம் மன்னிப்புக் கேட்டால் மன்னிக்கிறேன் என்று கூறுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூற்கள்: புகாரி 1145, 6321, 7494

ஸஜ்தாவின் போது..

அடியான் அல்லாஹ்விடம் அதிகம் நெருங்குவது ஸஜ்தாவின் போது தான். எனவே இந்தச் சந்தர்ப்பத்தையும் துஆவுக்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அடியான், அவனது இறைவனுடன் மிகவும் நெருக்கமாக இருப்பது ஸஜ்தாவின் போது தான். எனவே அதில் துஆவை அதிகப்படுத்துங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 744

மறைமுகமாகச் செய்யும் பிரார்த்தனை

நமக்கு வேண்டியவருக்காக அவர் முன்னிலையில் துஆச் செய்வதை விட, அவருக்குத் தெரியாமல் அவருக்காகச் செய்யும் துஆக்கள் நிச்சயம் அங்கீகரிக்கப்படும்.

ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்காக மறைவாக துஆச் செய்தால் அது அங்கீகரிக்கப்படும். அவனது தலைமாட்டில் ஒரு வானவர் இருப்பார். இவர் துஆச் செய்யும் போதெல்லாம் அந்த வானவர் ஆமீன் எனக் கூறிவிட்டு, உனக்கும் அது போல் கிடைக்கும் எனக் கூறுவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி)

நூல்: முஸ்லிம் 4912

தந்தை மகனுக்காகச் செய்யும் துஆ

தந்தை தன் மகனுக்காகச் செய்யும் துஆக்களும் அதிகம் ஏற்கப்படத் தக்கவை. பிள்ளைகள், தந்தையரை சிறந்த முறையில் கவனித்து அவர்களின் துஆவைப் பெற வேண்டும். தந்தையரும் தமது பிள்ளைகளுக்காக இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மூன்று துஆக்கள் ஏற்கப்படுவதில் எந்தச் சந்தேகமும் இல்லை. பாதிக்கப்பட்டவனின் துஆ, பிரயாணத்தில் செல்பவனின் துஆ, தந்தை மகனுக்காகச் செய்யும் துஆ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: திர்மிதீ 1828

இது போல் நேர்மையான ஆட்சியாளன், நோன்பாளி ஆகியோரின் துஆக்கள் பற்றியும் ஹதீஸ்கள் உள்ளன.

பிரார்த்தனைக்குப் பலன் தெரியாவிட்டால்...

நீங்கள் கேளுங்கள், தருகிறேன் என்ற இறைவனின் உறுதிமொழியில் எந்தச் சந்தேகமும் இல்லை. கேட்பதற்கான ஒழுங்குகளைப் பேணிக் கொண்டால் எந்தப் பிரார்த்தனையும் வீண் போவதில்லை.

இந்த ஒழுங்குகளை எல்லாம் பூரணமாகப் பேணிய பிறகும் துஆக்கள் அங்கீகரிக்கப்படாமல் போனால் அதனால் நம்பிக்கையிழந்து விடக் கூடாது. நமது துஆவை இறைவன் அங்கீகரிக்கவில்லை என்று எண்ணி விடக் கூடாது.

நாம் கேட்பது நமக்கே தீங்கு விளைவிக்கக் கூடியதாக இருக்கலாம். அது நமக்குத் தெரியாவிட்டாலும் இறைவனுக்குத் தெரியும். எனவே கேட்டதைத் தராமல் அதை விடச் சிறந்ததை அல்லாஹ் தருவான்.

விபரமறியாத குழந்தைகள் தாயிடம் ஆபத்தான கத்தியை வாங்கிக் கேட்டால் தாய் அதை வாங்கிக் கொடுக்க மாட்டாள். மாறாக அதை விட அதிக விலையில் உள்ள வேறு பொருளை வாங்கிக் கொடுப்பாள். தாயை விட அதிகக் கருணையுடையவன் இறைவன். அடியான் அறியாமையினால் அவனுக்குத் தீங்கிழைக்கக் கூடியதைக் கேட்டால் அதைத் தராமல் அதை விடச் சிறந்ததை வழங்குவான்.

ஒரு அடியான் பெருஞ் செல்வத்தைக் கேட்கலாம். அந்தச் செல்வம் அந்த அடியானைத் தவறான வழியிலும், இறை நிராகரிப்பிலும் செலுத்தி விடும் என்று இருந்தால் அதைக் கொடுக்காமல் அதை விடச் சிறந்ததைக் கொடுப்பான்.

அது இல்லையெனில் அவனுக்கு வரவிருக்கின்ற ஆபத்தைத் தடுப்பான். நம்மிடம் ஒரு மனிதன் ஒரு உதவியைக் கேட்கிறான். அந்த நேரத்தில் அந்த மனிதனின் பின்னால் ஒரு பாம்பு தீண்டத் தயாராக இருப்பதை நாம் பார்த்து விடுகிறோம். இந்த நேரத்தில் அவன் கேட்ட உதவியை நாம் செய்ய மாட்டோம். மாறாக பாம்பை அடிப்போம். அல்லது அவனைப் பாம்பு தீண்டாமல் வேறு புறம் இழுப்போம்.

அடியான் தனக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை உணராமல் வேறு தேவையைக் கேட்டால், அளவற்ற அருளாளனாகிய அல்லாஹ் அதைக் கொடுப்பதற்குப் பகரமாக அந்த ஆபத்தை நீக்குகிறான்.

அவ்வாறு இல்லையெனில் அவன் கேட்டதைக் கொடுக்காமல் அதற்காக மறுமையில் அவனது நிலையை இறைவன் உயர்த்துகிறான். ஆகவே கேட்டது கிடைக்காவிட்டாலும் ஏதோ நன்மைக்காக இறைவன் மறுமைப் பயனாக அதை மாற்றி விடுவான் என நம்ப வேண்டும்.

பாவமற்ற விஷயங்களிலும், உறவினரைப் பகைக்காத விஷயத்திலும் யாரேனும் அல்லாஹ்விடம் கேட்டால் மூன்று வழிகளில் ஏதேனும் ஒரு வழியில் அதை இறைவன் அங்கீகரிக்கிறான். அவன் கேட்டதையே கொடுப்பான் அல்லது அதை மறுமையின் சேமிப்பாக மாற்றுவான் அல்லது அவனுக்கு ஏற்படும் தீங்கை நீக்குவான்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள் அப்படியானால் நாங்கள் அதிகமாகக் கேட்போமே! என்றனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்கள் அல்லாஹ் அதை விட அதிகம் கொடுப்பவன்என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)

நூல்: அஹ்மத் 10709

எனவே துஆக்கள் அனைத்தையும் இறைவன் அங்கீகரிக்கிறான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கொள்ளக் கூடாது.

இந்த ஒழுங்குகளைப் பேணி, இந்த வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொண்டால் பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படுவதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்பட்ட மக்களாக நம் அனைவரையும் இறைவன் ஆக்கியருள் புரிவானாக!

 16.07.2009. 2:10 AM

சுப்ஹான மவ்லித் ஓர் ஆய்வு

நூலின் பெயர் : ஸுப்ஹான மவ்லிது

ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன்

 மார்க்கத்தின் எச்சரிக்கை!

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும். இந்த இணைய தளத்தில் உள்ளவைகளைப் பிரச்சாரம் செய்வதற்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் சில சகோதரர்கள் நமது ஆக்கங்களை அப்படியே பயன்படுத்தி தமது ஆக்கம் போல் காட்டுகின்றனர்.

இன்னாருடைய கட்டுரையில் இருந்து, அல்லது புத்தகத்தில் இருந்து இது எடுக்கப்பபட்டது என்று குறிப்பிடாமல் புகழடைவதற்காக இவ்வாறு செய்கின்றனர்.

சில இணைய தளங்களும் என்னுடைய ஆக்கங்களை அப்படியே வெளியிட்டு தம்முடைய ஆக்கம் போல் காட்டுகின்றன.மேலும் சில புத்தக வியாபாரிகளும் எனது நூல் உட்பட மற்றவர்களின் நூல்களைச் சிறிது மாற்றியமைத்து அனாமதேயங்களின் பெயர்களில் வெளியிட்டுச் சம்பாதிக்கின்றனர். உலகைப் பற்றியும் இவர்களுக்கு வெட்கம் இல்லை. மறுமையைப் பற்றியும் பயம் இல்லை.

இஸ்லாத்தில் இவ்வாறு செய்ய அனுமதி இல்லை. இவர்கள் நல்லது செய்யப் போய் மறுமையின் தண்டனைக்கு தம்மைத் தாமே உட்படுத்திக் கொள்கின்றனர்.

பிறரது ஆக்கங்களைப் பயன்படுத்துவோர் இது இன்னாருடைய ஆக்கம் என்று குறிப்பிடாமல் தன்னுடைய ஆக்கம் போல் காட்டுவது மார்க்க அடிப்படையில் குற்றமாகும்.

இவர்களுக்கு அல்லாஹ் விடுக்கும் எச்சரிக்கையை இங்கே சுட்டிக் காட்டுகிறோம்.

தாங்கள் செய்தவற்றுக்காக மகிழ்ச்சியடைந்து, தாம் செய்யாதவற்றுக்காகப் புகழப்பட வேண்டுமென விரும்புவோர் வேதனையிலிருந்து தப்பித்து விட்டார்கள் என்று நீர் நினைக்காதீர்! அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.

திருக்குர்ஆன் 3:188

ஸுப்ஹான மவ்லிது

தமிழக முஸ்லிம்களில் பெரும்பாலோர் மவ்லிதுகள் எனும் பாடல்களைப் புனிதமான வணக்கமாக எண்ணி ஓதி வருகின்றனர். இஸ்லாத்தின் மிக முக்கியக் கடமைகளான தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் ஆகிய கடமைகளை நிறைவேற்றாதவர்கள் கூட இந்த மவ்லிதுகளைப் பாடுவதை மட்டும் விடாப்பிடியாக நிறைவேற்றி வருவதிலிருந்து மவ்லிதுகளுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது என்பதை நாம் அறியலாம்.

நபிகள் நாயகம் ஸல் அவர்களின் பெயரால் ஸுப்ஹான மவ்லிது, பர்ஸஞ்சி மவ்லிது, புர்தா போன்ற பாடல்கள், நபிகள் நாயகம் ஸல் அவர்களின் பேரர்கள் ஹஸன், ஹுஸைன் ஆகியோர் பெயரால் மவ்லிதுகள், அப்துல் காதிர் ஜிலானி என்பவரின் பெயரால் முஹ்யித்தீன் மவ்லிது, யாகுத்பா, நாகூர் ஷாகுல் ஹமீது என்பவரின் பெயராலும், அந்தந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டவர்களின் பெயராலும் வகை வகையான மவ்லிதுகள் உலா வருகின்றன.

எல்லா மவ்லிதுகளுமே பொய்யும் புரட்டும் நிறைந்ததாகவும், இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்க்கக் கூடியதாகவும் உள்ளன. அவற்றுள் முதலிடத்தைப் பெற்றுள்ள ஸுப்ஹான மவ்லிது எவ்வாறு அபத்தக் களஞ்சியமாக அமைந்துள்ளது என்பதையும், திருக்குர்ஆனுக்கும், நபிமொழிகளுக்கும் எந்த அளவு முரணாக அமைந்துள்ளது என்பதையும் கீழ்க்காணும் தலைப்புகளில் இந்நூல் விரிவாக அலசுகிறது

ஸுப்ஹான மவ்லிது

மவ்லிதின் தோற்றம்

மவ்லிதின் பிறப்பிடம்

எழுதியவர் யார்?

நபியைப் புகழுதல்

மவ்லிது ஏற்படுத்திய தீய விளைவுகள்

அ. குர்ஆனை இழிவுபடுத்தும் போக்கு

ஆ. தொழுகையை விட மவ்லிதை மேலானதாகக் கருதும் நிலை.

இ. பள்ளிவாசலின் புனிதம் கெடுதல்

ஈ. பிறமதக் கலாச்சார ஊடுருவல்

உ. பிறருக்கு இடையூறு செய்தல்

ஊ. ஒழுக்கக் கேடுகளை ஏற்படுத்துவது

எ. பெருமையும், ஆடம்பரமும்

நோய் நிவாரணம் தருவது நபிகள் நாயகமா?

உணவளிக்கும் அதிகாரம் நபிகள் நாயகத்துக்கு உண்டா?

வானவர்கள் மீது அவதூறு பொய்யும் புரட்டும்

அபத்தங்கள்

மவ்லிதின் தோற்றம்

எந்த ஒரு காரியமும் வணக்கமாகக் கருதப்பட வேண்டுமானால் - அதைச் செய்வதால் மறுமையில் ஏதேனும் நன்மை கிடைக்கும் என்று நம்ப வேண்டுமானால் - அந்தக் காரியம் நபிகள் நாயகம் ஸல் அவர்களால் கற்றுத்தரப்பட்டிருக்க வேண்டும். அல்லது அவர்கள் முன்னிலையில் அக்காரியம் நிகழ்ந்து அதை அவர்கள் அங்கீகரித்திருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத எந்தக் காரியமும் ஒரு வணக்கமாக - மறுமையில் நன்மையளிப்பதாக ஆக முடியாது. இது இஸ்லாத்தின் அடிப்படை விதி.

இந்த விதியைப் புரிந்து கொள்வதற்கு மிகப் பெரிய ஆராய்ச்சி ஏதும் தேவையில்லை நபிகள் நாயகம் ஸல் அவர்களைத் தனது இறுதித் தூதராக அல்லாஹ் அனுப்பி வைத்தான். அவர்கள் வழியாக முஸ்லிம்கள் செய்ய வேண்டிய அனைத்து வணக்கங்களையும் கற்றுத் தந்தான். அவர்களுக்குப் பின் எவருக்கும் வஹீ - இறைச் செய்தி - வர முடியாது என்ற அடிப்படைக் கொள்கையை விளங்கியிருந்தால் போதும். இந்த விதியைப் புரிந்து கொள்ள முடியும்.

நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்குப் பின் ஒரு வணக்கத்தை மற்றவர்களும் உருவாக்கலாம் என்று யாரேனும் கருதினால் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் வணக்கங்களை முழுமையாகக் கற்றுத் தரவில்லை என்று அவர் கருதுகிறார். நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்குப் பின் மற்றவர்களுக்கும் வஹீ வரக்கூடும் என்றும் அவர் கருதியவராகிறார்.

இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாகப் பொருந்திக் கொண்டேன்.

அல்குர்ஆன் 5:3

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் இவ்வுலகில் வாழும் போதே இம்மார்க்கத்தை முழுமைப்படுத்தி விட்டதாக அல்லாஹ் மேற்கண்ட வசனத்தில் கூறுகின்றான்.

மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டு விட்டது என்றால் என்ன பொருள்? அல்லாஹ்வே முழுமைப்படுத்தி விட்டான் என்று கூறினால் அதற்கு என்ன பொருள்?

 மார்க்கத்தில் எவையெல்லாம் உள்ளனவோ அவை ஒவ்வொன்றையும் நான் கூறி விட்டேன்; புதிதாக எதையும் உருவாக்கிட அவசியமில்லை; அது கூடாது என்பதைத் தவிர இதற்கு வேறு பொருள் இருக்க முடியாது.

நபிகள் நாயகம் ஸல் காலத்தில் இந்த மவ்லிதுகள் இருக்கவில்லை; அல்லாஹ்வால் நேரடியாக முழுமைப்படுத்தப்பட்ட மார்க்கத்தில் மவ்லிதுகள் இருக்கவில்லை என்பதே மவ்லிதுகளை நிராகரிக்கப் போதுமான காரணமாகவுள்ளது.

நமது உத்தரவின்றி யாரேனும் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும் என நபிகள் நாயகம் ஸல் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா ரலி),

நூல்: முஸ்லிம் 3243

நமது இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால் அது நிராகரிக்கப்படும் எனவும் நபிகள் நாயகம் ஸல் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷாரலி),

நூல்கள்: புகாரி 2697, முஸ்லிம் 3242.

மேற்கண்ட இரண்டு நபிமொழிகளும் கூறுவது என்ன?

நாம் எந்த ஒரு அமலை நல்லறத்தைச் செய்வதாக இருந்தாலும் அது பற்றி நபிகள் நாயகம் ஸல் அவர்கள் ஏதும் கட்டளை பிறப்பித் திருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும். அவர்களது கட்டளையில்லாமல் எந்த ஒரு அமலைச் செய்தாலும் அது அல்லாஹ்வால் நிராகரிக்கப்படும் என்பதைத் தான் மேற்கண்ட நபிமொழிகள் கூறுகின்றன.

மவ்லிது ஓதுமாறு நபிகள் நாயகம் ஸல் அவர்கள் எந்தக் கட்டளையும் பிறப்பிக்காதது மவ்லிதை நிராகரிக்க மற்றொரு காரணமாக அமைகின்றது.

செய்திகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிகளில் சிறந்தது முஹம்மதுடைய வழியாகும். மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவை காரியங்களில் மிகவும் கெட்டதாகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும் என்று நபிகள் நாயகம் ஸல் கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி),

நூல்: முஸ்லிம் 1435

செய்திகளில் உண்மையானது அல்லாஹ்வின் வேதமாகும். வழிகளில் அழகியது முஹம்மதின் வழியாகும். மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவை காரியங்களில் மிகவும் கெட்டதாகும். புதிதாக உருவாக்கப்பட்ட ஒவ்வொன்றும் பித்அத் அனாச்சாரம் ஆகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் சேர்க்கும் எனவும் நபிகள் நாயகம் ஸல் கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரலி),

நூல்: நஸயீ 1560

இவ்விரண்டு நபிமொழிகளும் கூறுவது என்னவென்பதை முஸ்லிம்கள் கவனமாகச் சிந்திக்க வேண்டும்.

நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்குப் பின்னால் புதிதாக உருவாக்கப்பட்டவை

மிகவும் மிகவும் கெட்ட காரியம். வழிகேடு. நரகத்தில் சேர்க்கும்

என்றெல்லாம் கடும் எச்சரிக்கை இதில் உள்ளது. நபிகள் நாயகம் ஸல் காலத்துக்கு ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு உருவாக்கப்பட்ட இந்த மவ்லிதுகளால் நன்மை ஏதும் விளையாது என்பது ஒருபுறமிருக்க இதனால் நரகத்திற்குச் செல்லும் நிலை தான் ஏற்படும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

அல்லாஹ்வும், நபிகள் நாயகம் ஸல் அவர்களும் மவ்லிது ஓதுமாறு கூறவில்லையென்றால் பிறகு எப்படி மவ்லிது என்பது ஒரு வணக்கமாக முஸ்லிம் சமுதாயத்தில் நிலைபெற்றது?

மவ்லிதின் பிறப்பிடம்

உலகத்தில் முஸ்லிம்கள் இல்லாத நாடுகளே இல்லை என்ற அளவுக்கு இஸ்லாம் இன்று வளர்ந்துள்ளது. மவ்லிதுகள் மார்க்கத்தில் உள்ளதாக இருந்தால் உலக முஸ்லிம்கள் அனைவரிடமும் மவ்லிது ஓதும் வழக்கம் இருக்க வேண்டும்.

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் பிறந்த சவூதி அரபியாவிலும் மவ்லிதைப் பாடும் போதே அதன் பொருளை விளங்கிடக் கூடிய மக்கள் வாழும் மற்ற அரபு நாடுகளிலும் மவ்லிதுகள் எதுவுமே இல்லை. இல்லை என்பது மட்டுமல்ல. மவ்லிது நூலுடன் யாரேனும் அரபு நாட்டுக்குள் நுழைந்தால் மவ்லிது நூலைப் பிடுங்கி அங்குள்ள அரசாங்கம் குப்பையில் வீசி விடுகிறது. அதில் அமைந்துள்ள மோசமான கொள்கைகளும், உளறல்களுமே இதற்குக் காரணம்.

அரபு நாடுகளை விட்டு விடுவோம். உலகில் உள்ள வேறு எந்த நாட்டு முஸ்லிம்களாவது இந்த மவ்லிதை ஓதுகிறார்களா? நிச்சயமாக இல்லை. இல்லை என்பது மட்டுமல்ல. மவ்லிதைப் பற்றி நாம் அவர்களிடம் கேட்டால் மவ்லிது என்றால் என்ன? என்று நம்மிடமே அவர்கள் திருப்பிக் கேட்கிறார்கள்.

நமது நாட்டில் கூட கேரளாவிலும் தமிழகத்திலும் வாழும் முஸ்லிம் கள் தான் இந்த மவ்லிதுகளை அறிந்துள்ளனர். வேறு மாநில மக்களுக்கு ஸுப்ஹான மவ்லிது என்றால் என்ன என்பதே தெரியாது.

நமது தமிழக முஸ்லிம்கள் பிழைப்புத் தேடிச் சென்ற இலங்கை, மலேசியா போன்ற நாடுகளிலும் இதை அரங்கேற்றி வருகின்றனர்.

இதிலிருந்து தெரிய வருவது என்ன?

இது மார்க்கத்தில் உள்ளதாக இருந்திருந்தால் உலகின் பல பகுதி களில் வாழும் முஸ்லிம்கள் இதைக் கடைப்பிடித்து ஒழுகியிருப்பார்கள்.

யாரோ சில மார்க்க அறிவு இல்லாதவர்கள் நமது பகுதிகளில் தோன்றி இதைப் பரப்பி விட்டனர். இதற்கும், மார்க்கத்திற்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.

எழுதியவர் யார்?

மவ்லிதின் முகப்பு அட்டையில் இது கஸ்ஸாலி எழுதியது. கதீப் அவர்கள் எழுதியதாகவும் கூறப்பட்டுள்ளது என்று எழுதி வைத்துள்ளனர்.

இவர் தான் எழுதினார் என்று கூட குறிப்பிட எந்தக் குறிப்பும் இல்லை. கஸ்ஸாலியோ,கதீபோ எழுதியிருந்தால் உலகம் முழுவதும் உள்ள அவர்களின் அபிமானிகள் இதை அறிந்திருக்க வேண்டும்.

தாங்களாகவே இதை எழுதிக் கொண்ட சில வழிகேடர்கள் தங்கள் பெயரில் இதைப் பரப்பினால் மக்களிடம் எடுபடாது என்று கருதினார்கள். மக்களிடம் யாருக்கு நல்ல அறிமுகம் உள்ளதோ அவர்கள் பெயரைப் பயன்படுத்துவோம் என்ற திட்டத்துடன் தான் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

மேற்கண்ட இருவரது நூல்களின் பட்டியலில் ஸுப்ஹான மவ்லிது என்பது இடம் பெறவே இல்லை. அவர்களே எழுதியிருந்தாலும் அதனால் அது மார்க்கமாக ஆகாது என்பது தனி விஷயம்.

மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டு 14 நூற்றாண்டுகள் சென்று விட்டன. இந்த மவ்லிதுகள் சுமார் முன்னூறு ஆண்டுகளாகத்தான் தமிழகம் மற்றும் கேரளாவில் நடைமுறையில் உள்ளது.

நபிகள் நாயகம் ஸல் அவர்களின் காலம் முதல் ஆயிரம் வருடங்கள் வரை வாழ்ந்த நபித்தோழர்கள், தாபியீன்கள், நாற்பெரும் இமாம்கள் உள்ளிட்ட எண்ணற்ற மார்க்க அறிஞர்கள் எவருமே இந்த மவ்லிதுகளைப் பாடியதில்லை. கேள்விப்பட்டதுமில்லை.

சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட எந்த நூலிலும் இதுபற்றி எந்தக் குறிப்பும் இல்லை. எனவே இது பிற்காலத்தில் கற்பனை செய்து புணையப்பட்டவை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

இந்தக் காரணத்துக்காகவே மவ்லிதைத் தூக்கி எறிந்து விட வேண்டும் என்றாலும் இன்னும் ஏராளமான நியாயமான காரணங்கள் உள்ளன. அவற்றையும் அறிந்து கொண்டால் இந்த மவ்லிதுகளின் பக்கம் எந்த முஸ்லிமும் தலைவைத்துப் படுக்க மாட்டார்.

மவ்லிது அபிமானிகள் மவ்லிதை நியாயப்படுத்திட சில ஆதாரங்களைக் காட்டுவார்கள். அவற்றை அறிந்துவிட்டு மவ்லிதைத் தூக்கி எறிவதற்குரிய காரணங்களை நாம் பார்ப்போம்.

நபியைப் புகழுதல்

ஸுப்ஹான மவ்லிது என்பது நபிகள் நாயகம் ஸல் அவர்களைப் புகழ்ந்து பாராட்டுவதற்காகத் தான் இயற்றப்பட்டது. அந்த நோக்கத்தில் தான் நாங்களும் பாடுகிறோம். சில நபித்தோழர்கள் புகழ்ந்து கவி பாடியதை நபிகள் நாயகம் ஸல் அவர்களே அங்கீகரித்துள்ளனர். உண்மையான எந்த முஸ்லிமும் நபிகள் நாயகம் ஸல் அவர்களைப் புகழ்வதற்குத் தடை சொல்ல மாட்டான்.

மவ்லிது அபிமானிகள் மவ்லிதை நியாயப்படுத்திடக் கூறும் ஆதாரங்கள் இவை.

நபிகள் நாயகம் ஸல் அவர்களைப் புகழ்வது அல்ல பிரச்சனை.

நமது முழு வாழ்நாளையும் அவர்களைப் புகழ்வதற்காகப் பயன்படுத்தலாம். நல்லொழுக்கம்,வீரம், நேர்மை போன்ற எத்தனையோ நற்குணங்களை நபிகள் நாயகம் ஸல் அவர்கள் பெற்றிருந்தனர். அவற்றையெல்லாம் உலகறிய உரைப்பதில் எந்தத் தவறும் இல்லை.

ஆனால் மவ்லிது இந்தப் பணியைத் தான் செய்கிறதா?

நபிகள் நாயகம் ஸல் அவர்களைப் புகழ்கிறோம் என்று கூறும் இவர்களிடம் போய் என்ன சொல்லிப் புகழ்ந்தீர்கள்? நபிகள் நாயகத்தின் எந்தப் பண்பைப் புகழ்ந்தீர்கள்? என்று கேட்டுப் பாருங்கள்! கூலிக்குப் பாடியவர்களில் பலருக்கும் தெரியாது. அவர்களை அழைத்துப் பாடச் செய்தவர்களுக்கும் தெரியாது.

மவ்லிதைச் செவிமடுத்த மக்கள் நபிகள் நாயகம் ஸல் அவர்களின் எந்தச் சிறப்பை அறிந்து கொண்டனர்? எதுவுமே இல்லை.

புகழுதல் என்ற போர்வையில் ஒரு வணக்கம் தான் நடக்கின்றது.

அல்லாஹ்வின் வேதத்தை அர்த்தம் தெரியாமல் ஒதினாலும் ஒரு எழுத்துக்கு பத்து நன்மைகள் கிடைக்கும் என்று மார்க்கம் கூறுகிறது.

மவ்லிதையும் இது போன்ற நம்பிக்கையில் தான் பாடியும் கேட்டும் வருகின்றனர். யாரோ ஒரு மனிதனின் கற்பனையில் உதித்த சொற்களைப் பொருள் தெரியாமல் வாசித்தாலும் நன்மை உண்டு என நினைப்பது தான் நபிகள் நாயகம் ஸல் அவர்களைப் புகழுதலா?

சாதாரண மனிதனின் சொற்களை வாசிப்பதால் - கேட்பதால் அங்கே அல்லாஹ்வின் அருள் மாரி இறங்கும் என்று நம்புவதற்குப் பெயர் தான் நபிகள் நாயகம் ஸல் அவர்களைப் புகழுதலா?

இந்தப் பாடலைப் பாடியவுடன் அங்கே வைக்கப்பட்டிருந்த உணவுப் பதார்த்தங்களுக்குத் தனி மகத்துவம் வந்துவிட்டதாக நம்பப்படுகிறதே இதற்குப் பெயர் தான் நபிகள் நாயகம் ஸல் அவர்களைப் புகழுதலா?

புகழுதல் என்பது போர்வை தான். உள்ளே நடப்பது யாவும் புதிதாக உருவாக்கப்பட்ட வணக்கம் தான்.

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் வாழும் போது அவர்களை பல நபித்தோழர்கள் புகழ்ந்து பாடியுள்ளனர். இதற்கு ஹதீஸ் நூல்களில் ஆதாரம் உள்ளது.

ஆனால் இந்தப் பாடல்களை நபித்தோழர்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கு ஒரு பிரதி வாங்கி வைத்துக் கொண்டு வீட்டில் ஓதிக் கொண்டிருந்தார்களா?

இப்போதும் கூட ஒருவர் விரும்பினால் நபிகள் நாயகம் ஸல் அவர்களைப் புகழ்ந்து

* மேடையில் பேசலாம்!

* கட்டுரை எழுதலாம்.

* கவிதையும் இயற்றலாம்.

மார்க்கம் வகுத்துள்ள வரம்புக்குள் நின்று இவற்றைச் செய்யலாம். அது போல் மவ்லிது பாடக்கூடியவர்கள் தாங்களாக தினம் ஒரு கவிதையை இயற்றி அதன் பொருளை உணர்ந்து நபிகள் நாயகம் ஸல் அவர்களைப் புகழட்டும்! இதை யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள்.

எவரோ புகழ்ந்து பேசியதை, பாடியதை அச்சிட்டு வைத்துக் கொண்டு அதை உருப்போடும் போது தான் அது ஒரு போலி வணக்கமாகவும், மோசடியாகவும் ஆகிவிடுன்றது.

மேலும் நபிகள் நாயகம் ஸல் அவர்களைப் புகழவே இந்த மவ்லிதுகள் என்று இனியும் வாதிட்டார்கள் என்றால் அவர்கள் கூறுவது பொய் என்பதை அவர்களின் நடவடிக்கைகள் நிரூபிக்கின்றன.

நபிகள் நாயகம் ஸல் அவர்களைப் புகழ்வது நோக்கம் என்றால் வீடு வீடாகச் சென்று கூலி பெறுவது ஏன்?

நபிகள் நாயகம் ஸல் அவர்களைப் புகழ்வதற்கான கூலியை மறுமையில் தானே எதிர்பார்க்க வேண்டும்?

விடி மவ்லிது, நடை மவ்லிது என்று கொடுக்கப்படும் தட்சணைகளுக்கு ஏற்ப மவ்லிது விரிவதும், சுருங்குவதும் ஏன்?

பணம் படைத்தவர்களுக்கும், ஏழைகளுக்கும் பாரபட்சம் காட்டுவது தான் நபிகள் நாயகம் ஸல் அவர்களைப் புகழும் இலட்சணமா?

மார்க்க அறிஞர்களுக்கு எந்த வருமானமும் இல்லாத காலத்தில் அன்றைக்கு வாழ்ந்த அறிஞர்கள் இதை வருமானத்திற்காக உருவாக்கினார்கள்.

இதை இன்றைக்கும் நியாயப்படுத்துவது சரிதானா? என்பதை மார்க்க அறிஞர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இல்லாத ஒரு வணக்கத்தை உருவாக்கிய குற்றத்தை மறுமையில் சுமக்க வேண்டுமா என்று எண்ணிப் பார்க்க வேண்டும். புரோகிதர்கள் என்ற இழிவு மார்க்க அறிஞர்களுக்கு ஏற்பட இது தான் காரணம் என்பதை மார்க்க அறிஞர்கள் உணர்ந்தால் அவர்களின் மரியாதையும் உயரும்.

மேலும் நபிகள் நாயகம் ஸல் அவர்களைப் புகழலாம் என்றாலும் அதற்கு ஒரு வரம்பு உள்ளது.

கிறித்தவர்கள் மர்யமுடைய மகன் ஈஸாவை வரம்பு மீறிப் புகழ்ந்தது போல் என்னை வரம்பு மீறிப் புகழாதீர்கள்! அல்லாஹ்வின் தூதர் என்றும் அடியார் என்றும் கூறுங்கள் என்பது நபிமொழி.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரலி

நூல்: புகாரி 3445, 6830

நபிகள் நாயகம் ஸல் அவர்களைப் புகழவே இந்த மவ்லிதுகள் என்பதை ஒரு வாதத்துக்கு ஏற்றுக் கொண்டாலும் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் காட்டிய இந்த வரம்பை மீறியே புகழ்கிறார்கள். ஸுப்ஹான மவ்லிதில் நபிகள் நாயகம் ஸல் அவர்களை அல்லாஹ்வின் நிலையில் நிறுத்தக் கூடிய பாடல்கள் பல உள்ளன.

அவை பின்னர் விளக்கப்படவுள்ளது

எனவே இந்த வாதத்தின் மூலம் மவ்லிதைத் தூக்கிப் பிடிக்க முடியாது.

மவ்லிதினால் ஏற்பட்ட விளைவுகளின் காரணமாகவும் மவ்லிதை நாம் நிராகரித்தே ஆக வேண்டும்.

மவ்லிது ஏற்படுத்திய தீய விளைவுகள்

இனி மவ்லிது ஏற்படுத்திய தீய விளைவுகள் சிலவற்றைக் காண்போம்.

  • குர்ஆனை இழிவுபடுத்தும் போக்கு

மவ்லிதுகள் வணக்கமாக மாறிவிட்ட பின் ஏற்பட்ட தீய விளைவுகளில் முக்கியமானது அதைக் குர்ஆனுக்குச் சமமாக சில சமயம் குர்ஆனுக்கும் மேலாகக் கருதும் நிலை ஏற்பட்டதாகும்.

அல்லாஹ்வுடைய வேதம் அல்குர்ஆன் வீடுகள் தோறும் இவ்வளவு முக்கியத்துவத்துடன் ஓதப்படுவதில்லை.

மங்கலமான நிகழ்ச்சிகளுக்கு மவ்லிது என்றும் அமங்கலமான நிகழ்ச்சிகளுக்கு குர்ஆன் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

பொருள் தெரியாமல் ஓதினாலும் ஒவ்வொரு எழுத்துக்கும் நன்மை கிடைக்கும் என்ற குர்ஆனுக்குரிய தனித்தகுதி முகவரியற்ற யாரோ ஒரு கவிஞனால் இயற்றப்பட்ட பாட்டுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

குர்ஆன் எப்படி நோய் நிவாரணம் நாடி ஓதப்படுகிறதோ அவ்வாறே மார்க்க அறிவற்ற மனிதனால் இயற்றப்பட்ட அரபி பாடலைப் பாடி நோய் நிவாரணம் வேண்டப்படுகின்றது.

அல்லாஹ்வின் வார்த்தைக்குச் சமமாகவும், அதற்கு மேலாகவும் மனிதனின் வார்த்தைகள் மதிக்கப்படுவது மவ்லிதினால் ஏற்பட்ட மிக மோசமான விளைவாகும்.

  • தொழுகையை விட மவ்லிதை மேலானதாகக் கருதும் நிலை.

இஸ்லாத்தின் மிக முக்கியமான கடமை தொழுகை. மவ்லிதுக்காக இந்தத் தொழுகை இழிவுபடுத்தப்படுவதும் மவ்லிது ஏற்படுத்திய தீய விளைவுகளில் ஒன்றாகும்.

பள்ளிவாசலில் இமாமாகப் பணிபுரியும் சிலர் தொழுகைகளுக்குக் கூட சரியாக வருகை தர மாட்டார்கள். அதற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத பள்ளிவாசல் நிர்வாகிகள் மவ்லிது சபைக்கு வரவில்லையானால் நடவடிக்கை எடுப்பதைக் காண்கிறோம்.

பள்ளிவாசலில் பாங்கு சொல்லப்படும் போது அதன் அருகில் உள்ள வீட்டில் மவ்லிது ஓதப்பட்டுக் கொண்டிருக்கும். மவ்லிது நிறுத்தப்பட மாட்டாது. அதன் பின்னர் பள்ளியில் தொழுகை நடைபெறும். அந்த நேரத்திலும் மவ்லிதுக் கச்சேரி நடந்து கொண்டிருக்கும். மவ்லிது எனும் மிகச் சிறந்த வணக்கத்தை (? நிறைவேற்றிக் கொண்டிருக்கும் போது தொழுகை எல்லாம் பெரிய விஷயமா என்ன?

இப்படி தொழுகையை அலட்சியம் செய்யுமளவுக்கு மவ்லிது வெறி வேரூன்றியுள்ளது.

  • பள்ளிவாசலின் புனிதம் கெடுதல்

பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்!

(அல்குர்ஆன் 72:18)

என்று இறைவன் கட்டளையிடுகிறான்.

இந்தக் கட்டளைக்கு மாற்றமாக பள்ளிவாயிலில் நபியே! ரஸுலே! முஹ்யித்தீனே! நாகூராரே! என்றெல்லாம் அழைக்கின்றனர். அவர்களிடம் பிரார்த்திக்கின்றனர். அல்லாஹ்வை அழைத்து உதவி தேடுவதற்காகக் கட்டப்பட்ட அவனுக்குச் சொந்தமான ஆலயத்தில் அவனது கட்டளை அப்பட்டமாக மீறப்படுகின்றது. இதனால் பள்ளிவாயிலின் புனிதம் கெடுகின்றது.

  • பிறமதக் கலாச்சார ஊடுருவல்

பூஜையோ, புனஸ்காரமோ செய்த பின் சாதாரணப் பொருட்களும் புனிதப் பொருட்களாக மாறிவிடும் என்பது பிற சமயத்து நம்பிக்கை!

பூஜை நடத்தப்படுவதற்கு முன் சாதாரண சர்க்கரையாக இருந்தது பூஜைக்குப் பின் பிரசாதமாக மாறி விடுகிறது. துளியளவாவது கிடைக்காதா என்று பெரும் செல்வந்தர்களும் போட்டியிடும் அளவுக்கு அதில் என்னவோ இறங்கி விட்டதாக நம்புவது பிற சமயத்து நம்பிக்கை.

மவ்லிது ஓதப்படுவதற்கு முன் சாதாரண பேரீச்சம் பழம் மவ்லிது முடிந்தவுடன் தபர்ருக் (பிரசாதம் என்னும் நிலைக்கு உயர்கிறது. ஒரே ஒரு பேரீச்சம் பழத்தைப் பெறுவதற்காக கோடீஸ்வரர்களும் கியூவில் நிற்கும் நிலை! சாதாரண ஒரு மனிதனின் கவிதையைப் படித்தவுடன் சாதாரணப் பொருளும் பிரசாதமாக மாறிவிடும் என்று நம்புவது ஏகத்துவத்துக்கு எதிரானது அல்லவா? பிறமதத்தவர்களிடமிருந்து காப்பியடிக்கப்பட்டது அல்லவா?

  • பிறருக்கு இடையூறு செய்தல்

இஸ்லாமிய வணக்க வழிபாடுகள் அமைதியாகவும், அடுத்தவருக்கு இடையூறு இராத வகையிலும் நிறைவேற்றப்பட்ட வேண்டியவை. இதை மற்றவர்களும் கூட அறிந்து வைத்துள்ளனர்.

மவ்லிது சீசனில் வீடுகளில் ஒலிபெருக்கியை அலறவிட்டு இந்த மவ்லிதுக் கச்சேரியை நடத்துகின்றனர். நபியைப் புகழ்கிறோம் என்ற பெயரில் பரீட்சைக்குப் படிக்கும் மாணவன்,அமைதியைத் தேடும் இதய நோயாளி, உழைத்துக் களைத்து உறங்கும் சராசரி மனிதன் இன்னும் அமைதியை விரும்பும் மக்கள் ஆகியோரின் உறக்கத்தையும், அமைதியையும் கெடுத்து வருவதை நாம் பார்க்கிறோம்.

பிறர் நலம் பற்றி அக்கறைப்படாத மதத்தவர்கள் சில மாதங்களில் இவ்வாறு நடக்கிறார்கள் என்றால் தனது நாவாலும் கையாலும் பிறருக்கு இடையூறு அளிக்காதவனே முஸ்லிம்

புகாரி 10,11,6448 முஸ்லிம் 57,58,59

என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றைப் பேண வேண்டியவர்கள் இப்படி நடக்கலாமா? இவ்வாறு நடக்கச் செய்தது இந்த மவ்லிதுகள் தாம்.

ஒழுக்கக் கேடுகளை ஏற்படுத்துவது

பெண்கள் மாத்திரம் இருக்கும் இடங்களுக்கு அன்னிய ஆண்கள் செல்லக்கூடாது என்பது இஸ்லாத்தின் கட்டளை. எந்த ஒரு ஆணும் அந்நியப் பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 3006, 5233.

மவ்லிதைக் காரணம் காட்டி பெண்கள் மட்டும் இருக்கும் வீடுகளுக்கு ஆண்கள் செல்ல முடிகிறது. இப்படிச் செல்வதால் எழுதக் கூசும் சமாச்சாரங்கள் நடப்பதை அடிக்கடி நாம் கேள்விப்படுகிறோம். இதற்காகவே அடித்து உதைத்து ஊரை விட்டு விரட்டப்பட்ட பேஷ் இமாம்களையும் நாம் அறிவோம்.

ஒழுக்கக் கேட்டுக்கு வழி வகுக்கும் இந்த வாசலைத் திறந்து வைத்தால் கெடாதவனும் கெட்டுவிடத் தான் செய்வான்.

  • பெருமையும், ஆடம்பரமும்

உன் வீட்டு மவ்லிதை விட என் வீட்டு மவ்லிது பெரியது என்று பெருமையடிக்கும் வகையில் அலங்காரங்கள், மேற்கட்டுகள், மலர் ஜோடனைகள், வண்ண வண்ண விளக்குகள்,காகித வேலைப்பாடுகள் ஆகியவற்றை நாம் காண்கிறோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் தடை செய்யப்பட்ட இந்த ஆடம்பரங்களையும் வீண் விரயங்களையும் செய்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் புகழ்கிறார்கள் என்பது அறிவுக்குச் சிறிதளவாவது பொருந்துகிறதா? சிந்தியுங்கள்!

வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் நேசிக்க மாட்டான்.

அல்குர்ஆன் 6:141, 7:31.

விரையம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.

அல்குர்ஆன் 17:27

அவர்கள் செலவிடும் போது விரையம் செய்ய மாட்டார்கள். கஞ்சத்தனமும் செய்ய மாட்டார்கள். அதற்கு இடைப்பட்ட நிலையாகவே அது இருக்கும்.

அல்குர்ஆன் 25:67

இவ்வளவு மோசமான விளைவுகளை இந்த மவ்லிதுகள் சமுதாயத்தில் ஏற்படுத்தி இருப்பதுடன் திருக்குர்ஆனுடனும் நபிவழியுடனும் நேரடியாக மோதக் கூடியதாகவும் அமைந்துள்ளன. ஸுப்ஹான மவ்லிதில் உள்ள சில வரிகளை நாம் ஆராய்ந்தால் இதை உணரலாம்.

பாவங்களை நபிகள் நாயகம் மன்னிக்க முடியுமா?

كَفِّرُوْا عَنِّيْ ذُنُوْبِيْ  وَاعْفُ لِيْ عَنْ سَيِّئَاتِ

என் பாவங்களை நன்மைகளாக மாற்றுங்கள்!

என் தீமைகளை அலட்சியம் செய்யுங்கள்!

யா நபி (நபியே!) என்று அழைத்துப் பாடப்படும் முதல் பாடலின் சில வரிகள் இவை.

يَا مَنْ تَمَادَى وَاجْتَرَمْ

تُبْ وَاعْتَرِفْ وَارْجُ الْكَرَمْ

وَلُذْ بِمَنْ حَلَّ الْحَرَمْ

குற்றமும் பாவமும் செய்து விட்டவனே!

மன்னிப்புக் கேள்! குற்றத்தை ஒப்புக்கொள். அருளை எதிர்பார்.

சரணடைந்து விடு! (இத்தனையையும் ஹரமில் (மதீனாவில் தங்கியுள்ளவர்களிடம் கேள்!

சல்லூ அலாகைரில் இபாத் என்ற பாடலின் சில வரிகள் இல்லை.

وَاعْطِفْ عَلَيَّ بِعَفْوٍ مِنْكَ يَشْمَلُنِيْ

உங்களின் மன்னிப்பை என் மீது சொரிந்து என் மீது அருள் புரியுங்கள்.

யாஸையிதீ என்ற பாடலின் வரி இது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் நிலைக்கு உயர்த்தும் இந்த வரிகளை உண்மை முஸ்லிம்கள் ஏற்க முடியுமா? குர்ஆனையும் நபிவழியையும் மதிக்கக் கூடியவர்கள் இந்த நச்சுக் கருத்தை ஆதரிக்க முடியுமா? பாவங்கள் செய்தோர் அதற்கான மன்னிப்பை இறைவனிடம் தான் பெற வேண்டும். இது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாகும்.

அவர்கள் வெட்கக்கேடானதைச் செய்தாலோ, தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே அவர்கள் நிலைத்திருக்க மாட்டார்கள்.

(அல்குர்ஆன் 3:135)

தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத் தெரிவிப்பீராக!

(அல்குர்ஆன் 39:53)

தன்னைத் தவிர வேறு எவரும் பாவங்களை மன்னிக்க முடியாது எனவும் அனைத்துப் பாவங்களையும் மன்னிக்கும் அதிகாரம் தன்னிடம் மட்டுமே உள்ளது எனவும் அவற்றில் வேறு யாருக்கும் பங்கில்லை எனவும் இந்த வசனங்கள் மூலம் இறைவன் அறிவிக்கிறான்.

இதனால் தான் எத்தனையோ நபிமார்கள் சில நேரங்களில் இறைவனின் கட்டளைக்கு மாறு செய்த போது, சிறிய தவறுகள் அவர்களிடம் நிகழ்ந்து விட்ட போது அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டுள்ளனர். அல்லாஹ் தங்களை மன்னிக்காவிட்டால் தாங்கள் பெரு நஷ்டம் அடைய நேரும் எனவும் கூறியுள்ளனர்.

ஆதம் (அலை அவர்களும் அவர்களின் மனைவியும் இறைக்கட்டளைக்கு மாறு செய்த பின்

எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கு இழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்து, அருள் புரியவில்லையானால் நஷ்டமடைந்தோராவோம் என்று அவ்விருவரும் கூறினர்.

(அல்குர்ஆன் 7:23)

இறைவன் தம்மை மன்னிக்காவிட்டால் தாம் பெரு நஷ்டம் அடைய நேரும் என்று இருவருமே ஒரே குரலில் கூறியுள்ளனர்.

நூஹ் (அலை அவர்கள் தமக்கு ஞானமில்லாத விஷயம் பற்றிப் பிரார்த்தனை செய்த போது இறைவன் அவர்களைக் கடிந்து கொள்கிறான். அவர்களும் கூட ஆதம் (அலை அவர்களைப் போலவே அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடியுள்ளனர்.

நூஹ், தம் இறைவனை அழைத்தார். என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவன். உனது வாக்குறுதியும் உண்மையே. நீயே தீர்ப்பு வழங்குவோரில் மேலானவன் என்றார். நூஹே! அவன் உன் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன். இது நல்ல செயல் அல்ல. உமக்கு அறிவு இல்லதாது பற்றி என்னிடம் கேட்காதீர்! அறியாதவராக நீர் இருக்கக் கூடாது என உமக்கு அறிவுரை கூறுகிறேன் என்று அவன் கூறினான். இறைவா! எனக்கு அறிவு இல்லாதது பற்றி உன்னிடம் கேட்பதை விட்டும் உன்னிடமே நான் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ என்னை மன்னித்து அருள் புரியா விட்டால் நஷ்டமடைந்தவனாக ஆகி விடுவேன் என்று அவர் கூறினார்.

(அல்குர்ஆன் 11:45, 46, 47)

மூஸா (அலை அவர்கள் ஒருவரைக் கொலை செய்து விட்டு வருந்தும் போது அதற்காகவும் அல்லாஹ்விடமே பாவமன்னிப்புத் தேடினார்கள்.

அவ்வூரார் கவனமற்று இருந்த நேரத்தில் அவர் அங்கே சென்றார். அங்கே இரண்டு மனிதர்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்ததைக் கண்டார். ஒருவர் இவரது சமுதாயத்தைச் சேர்ந்தவர். இன்னொருவர் இவரது எதிரியின் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவரது சமுதாயத்தைச் சேர்ந்தவர் எதிரிச் சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு எதிராக இவரிடம் உதவி தேடி னார். உடனே மூஸா ஒரு குத்து விட்டார். உடனே அவன் கதை முடிந்து விட்டது. இது ஷைத்தானின் வேலை. அவன் வழி கெடுக்கும் தெளிவான எதிரி என்றார். என் இறைவா! எனக்கே நான் தீங்கு இழைத்து விட்டேன். எனவே என்னை மன்னிப்பாயாக! என்றார். அவன் அவரை மன்னித்தான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். என் இறைவா! நீ எனக்கு அருள் புரிந்ததால் குற்றவாளிகளுக்கு உதவுபவனாக இனிமேல் இருக்க மாட்டேன் என்றார்

(அல்குர்ஆன் 28:15, 16, 17.

மூஸா (அலை அவர்களின் சமுதாயத்தவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைத்துப் பின்னர் தங்கள் தவறை உணர்ந்த போது மூஸா (அலை அவர்களிடம் பாவ மன்னிப்புக் கோராமல் அல்லாஹ்விடமே மன்னிப்புக் கேட்டுள்ளனர். தாங்கள் வழி தவறி விட்டதை உணர்ந்து அவர்கள் கைசேதப்பட்ட போது எங்கள் இறைவன் எங்களுக்கு அருள் புரிந்து, எங்களை மன்னிக்கா விட்டால் நஷ்ட மடைந்தோராவோம் என்றனர்.

(அல்குர்ஆன் 7:149)

நபிமார்களில் எவருக்கும் வழங்கப்படாத ஆற்றலும் அதிகாரமும் வழங்கப்பட்ட சுலைமான் (அலை அவர்களும் கூட தமது தவறுக்காக அல்லாஹ்விடமே மன்னிப்புக் கோரியுள்ளனர். ஸுலைமானை நாம் சோதித்தோம். அவரது சிம்மாசனத்தில் (அவரை ஒரு சடலமாகப் போட்டோம். பின்னர் அவர் திருந்தினார். என் இறைவா! என்னை மன்னித்து விடு! எனக்குப் பின் யாருக்கும் கிடைக்காத ஆட்சியை எனக்கு வழங்கு! நீயே வள்ளல் எனக் கூறினார்.

(அல்குர்ஆன் 38:34, 35)

திருக்குர்ஆனில் மிகவும் உயர்வாக இறைவனால் பாராட்டப்பட்ட இப்ராஹீம் (அலை அவர்களும் அல்லாஹ் தான் தமது தவறுகளை மன்னிக்க முடியும் என்று கூறியுள்ளனர்.

அவனே என்னைப் படைத்தான். அவனே எனக்கு நேர் வழி காட்டுகிறான். அவனே எனக்கு உணவளித்து (தண்ணீர் பருகச் செய்கிறான். நான் நோயுறும் போது அவனே எனக்கு நிவாரணம் தருகிறான். அவனே என்னை மரணிக்கச் செய்கிறான். பின்னர் எனக்கு உயிர் கொடுப்பான். தீர்ப்பு நாளில் என் தவறை அவன் மன்னிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

(அல்குர்ஆன் 26:78, 79, 80, 81, 82)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நியாயமான காரண மின்றிப் போருக்குச் செல்லாமல் பின்தங்கி விட்ட மூன்று நபித்தோழர் களின் குற்றத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மன்னிக்கவில்லை. இறைவன் மன்னித்து விட்டதாக அறிவிக்கும் வரை அம்மூவரையும் விலக்கி வைத்தனர். இறைவன் அவர்களை மன்னித்துவிட்டதாக அறிவித்த பின்பே அவர்களை இணைத்துக் கொண்டார்கள்.

தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்ட அந்த மூவரையும் (இறைவன் மன்னித்தான். பூமி விசாலமானதாக இருந்தும் அவர்களைப் பொறுத்த வரை அது சுருங்கி விட்டது. அவர்களது உள்ளங்களும் சுருங்கி விட்டன. அல்லாஹ்வை விட்டு (தப்பிக்க அவனிடமே தவிர வேறு போக்கிடம் இல்லை என்று அவர்கள் நம்பினார்கள். பின்னர் அவர்கள் திருந்துவதற்காக அவர்களை மன்னித்தான். அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன் 9:118

(புகாரி 4418, 4677 ஆகிய ஹதீஸ்களில் முழு விபரம் காணலாம்.)

மன்னிக்கும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது என்ப தால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு நடந்துள்ளனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன் பின் பாவங்களைத் தான் மன்னித்து விட்டதாக (அல்குர்ஆன் 48:2 இறைவன் கூறுவதும்,

 இறைவா! என்னை மன்னித்து அருள்புரி என்று கூறுவீராக!

(அல்குர்ஆன் 23:118)

என்று இறைவன் கட்டளையிடுவதும் மன்னிக்கும் அதிகாரம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் கூட இல்லை என்பதை ஐயத்திற்கிடமின்றி விளக்குகின்றன.

அல்லாஹ்விடம் நான் தினமும் நூறு தடவை பாவமன்னிப்புக் கேட்கிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்

அறிவிப்பவர்: அல் அகர் (ரலி)

நூல்: முஸ்லிம் 4870

பாவமன்னிப்பு வழங்குவது அல்லாஹ்வின் தனி அதிகாரம் என்பதற்கு இவை உறுதியான சான்றுகள்! இத்தனை சான்றுகளுடனும் மேற்கண்ட மவ்லிது வரிகள் நேரடியாக மோதுவதால் மவ்லிது ஓதுவது பாவம் என்பதை அறியலாம்.

நோய் நிவாரணம் தருவது நபிகள் நாயகமா?

اَلسَّلاَمُ عَلَيْكَ يَا مُبْرِى السَّقَامِ

 நோய் நீக்குபவரே! உங்களுக்கு ஸலாம் உண்டாகட்டும்

وَلَوْ تَكُوْنُ سَقِيْمًا

لَدَيْهِ بُرْءُ السَّقَامِ

நீ நோயாளியாக இருந்தால் அதற்கான நிவாரணம் அவரிடமே (நபியிடமே உள்ளது

وَمَرِيْضًا اَنْتَ عَائِدُهُ

قَدْ اَتَاهُ اللّهُ بِالْفَرَجِ

(நபியே நீங்கள் எந்த நோயாளியை விசாரிக்கச் சென்றாலும் அல்லாஹ் அவருக்கு நிவாரணம் வழங்கி விடுவான்!

என்றெல்லாம் ஸுப்ஹான மவ்லிதில் கூறப்பட்டுள்ளது.

மனிதனுக்கு நோய்களை ஏற்படுத்துபவனும், அதை நீக்குபவனும் அல்லாஹ் தான். இதில் நபிமார்கள் உட்பட யாருக்கும் அதிகாரம் இல்லை என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை.

திருக்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் இதற்கான சான்றுகளை ஏராளமாக நாம் காணலாம்.

இப்ராஹீம் (அலை அவர்கள் மிகச் சிறந்த இறைத்தூதராவார்கள். திருக்குர்ஆனில் அவர்களைப் பல இடங்களில் இறைவன் புகழ்ந்து பேசுகிறான். அவர்களின் மார்க்கத்தைப் பின்பற்றுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைவன் கட்டளையிடுவதிலிருந்து அவர்களின் மதிப்பு எத்தகையது என்று நாம் உணர முடியும்.

இப்ராஹீம் (அலை அவர்கள் ஏகத்துவப் பிரச்சாரம் செய்த போது இறைவனின் இலக்கணத்தைப் பின்வருமாறு விளக்கினார்கள்.

நான் நோயுறும் போது அவனே எனக்கு நிவாரணம் தருகிறான்.

(அல்குர்ஆன் 26 :80)

நோய்களை நீக்கும் அதிகாரம் இறைவனுக்குரியது என இப்ராஹீம் (அலை அவர்கள் மிகத் தெளிவாக விளக்கியுள்ளனர்.

அய்யூப் நபியவர்கள் நீண்ட காலம் நோய்வாய்ப்பட்ட போது தமது நோயை தாமே நீக்கிக் கொள்ளவில்லை. மாறாக இறைவனிடம் தான் அவர்கள் முறையிட்டனர். இறைவன் விரும்பிய போது அவர்களின் நோயைக் குணமாக்கினான்.

எனக்குத் துன்பம் நேர்ந்து விட்டது. நீ கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன் என அய்யூப் தமது இறைவனை அழைத்த போது, அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். அவருக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கினோம். அவரது குடும்பத்தாரையும் அவர்களுடன் அவர்களைப் போன்றோரையும் நம் அருளாக அவருக்கு வழங்கினோம். வணங்குவோருக்கு இது அறிவுரை.

(அல்குர்ஆன் 21:83)

துன்பங்களையும், நோய்களையும் நீக்கும் அதிகாரம் நபிகள் நாயகத்துக்கும் இல்லை. அது இறைவனின் தனிப்பட்ட அதிகாரத்தில் உள்ளது என்று திருக்குர்ஆன் பல வசனங்களில் குறிப்பிடுகிறது.

அல்லாஹ் உமக்குத் துன்பத்தை ஏற்படுத்தினால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. அவன் உமக்கு நன்மையை ஏற்படுத்தி விட்டால் அவன் அனைத்துப் பொருட்களின் மீது ஆற்றலுடையவன்.

(அல்குர்ஆன் 6:17)

அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கே தீங்கு செய்யவோ நன்மை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்று (முஹம்மதே! கூறுவீராக! ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு காலக் கெடு உள்ளது. அவர்களின் காலக்கெடு வரும் போது சிறிது நேரம் அவர்கள் முந்தவும் மாட்டார்கள். பிந்தவும் மாட்டார்கள்

(அல்குர்ஆன் 10:49)

அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன் 10:107)

வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று அவர்களிடம் நீர் கேட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள். அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றைப் பற்றிக் கூறுங்கள்! என்று கேட்பீராக! அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கை நாடி விட்டால் அவனது தீங்கை அவர்கள் நீக்கி விடுவார்களா? அல்லது அவன் எனக்கு அருளை நாடினால் அவர்கள் அவனது அருளைத் தடுக்கக் கூடியவர்களா? அல்லாஹ் எனக்குப் போதும். சார்ந்திருப்போர் அவனையே சார்ந்திருப்பார்கள் என்று கூறுவீராக!

(அல்குர்ஆன் 39:38)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல போர்களைச் சந்தித்தார்கள். எதிரிகளைச் சந்திக்க வேண்டிய இந்த இக்கட்டான நேரத்தில் பல நபித்தோழர்கள் நோய்வாய்ப்பட்டுப் போரில் பங்கெடுக்க முடியாத நிலையில் இருந்தார்கள். நபியவர்களுக்கு நோய் தீர்க்கும் ஆற்றல் இருந்திருந்தால் இந்த நெருக்கடியான நேரத்தில் நோயுற்ற நபித்தோழர்களுக்கு நிவாரணம் அளித்திருப்பார்கள். அவர்களையும் போரில் பங்கெடுக்கச் செய்திருப்பார்கள். படை வீரர்கள் பற்றாக்குறையாக இருந்த இந்தக் கட்டத்தில் கூட அவ்வாறு செய்யவில்லை என்பதைப் பல ஹதீஸ்களிலிருந்து நாம் அறியலாம்.

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஒரு போரில் பங்கெடுத்தோம். அப்போது அவர்கள், நிச்சயமாக மதீனாவில் சில மக்கள் உள்ளனர். நீங்கள் சம தரையையோ,பள்ளத்தாக்கையோ கடந்து சென்றால் அவர்களும் (கூலி பெறுவதில் உங்களுடன் உள்ளனர். ஏனெனில் நோய் அவர்களைத் தடுத்து விட்டது என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி

நூல்: புகாரி 2839, 4423

சில சமயங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே நோய்களுக்கு ஆளானதுண்டு. நோயிலிருந்து தாமே அவர்கள் நிவாரணம் பெற்றதில்லை. நோய் நீக்கும் ஆற்றலை அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியிருந்தால் அவர்களே நோய்க்கு ஆளாகியிருக்க மாட்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் காய்ச்சல் ஏற்பட்டிருந்த போது அவர்களிடம் சென்றேன். அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் கடுமையான காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளீர்களா என்று கூறினேன். அதற்கவர்கள் ஆம் உங்களில் இருவருக்கு ஏற்படும் காய்ச்சல் அளவுக்கு எனக்கு ஏற்பட்டுள்ளது என்றார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூது (ரலி)

நூல்: புகாரி 5648, 5660, 5667

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பத்தினரும் நோய் வாய்ப்பட்டனர். அவர்களில் யாரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நோய் நிவாரணம் தேடவில்லை. நான் குணப்படுத்துகிறேன் என்று அவர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறவில்லை. இறைவன் மட்டுமே நோய் தீர்க்கும் அதிகாரம் படைத்தவன் என்பதை அவர்கள் அப்போது கூறிய வார்த்தை ஐயமற விளக்குகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது குடும்பத்தில் ஒருவரை நோய் விசாரிக்கச் சென்றனர். தமது வலது கரத்தால் தடவிவிட்டு (அல்லாஹும்ம ரப்பன்னாஸ் அத்ஹிபில் பஃஸ இஷ்ஃபி அன்தஷ்ஷாஃபி, லாஷிஃபாஅ இல்லா ஷிஃபாவுக ஷிஃபா அன் லா யுகாதிரு ஸகமன் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 5675, 5742, 5743, 5750

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதன் பொருள்:

இறைவா! மனிதர்களின் இரட்சகனே! இந்நோயை நீக்குவாயாக! நீ நிவாரணம் அளிப்பாயாக! நீயே நிவாரணம் அளிப்பவன்! உனது நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் ஏதுமில்லை. நோயை விட்டு வைக்காத வகையில் நிவாரணம் வழங்கு!

நோய் தீர்ப்பவன் அல்லாஹ் மட்டுமே என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழுத்தம் திருத்தமாக இதன் மூலம் அறிவித்து விட்டனர்.

ஸஃது பின் அபீ வக்காஸ் (ரலி அவர்களை நோய் விசாரிக்கச் சென்ற போது இறைவா! ஸஃதுக்கு நோய் நிவாரணம் வழங்கு என்றே மும்முறை பிரார்த்தனை செய்தார்கள். இதை ஸஃது அவர்களே தெரிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 5659

அல்லாஹ் ஒருவன் மட்டுமே நோய்களை நீக்கக் கூடியவன் என்பதையே அவர்கள் மக்களுக்குப் போதனை செய்தார்கள். அல்லாஹ் அனுமதிக்கும் போது மிக மிகக் குறைந்த சந்தர்ப்பங்களில் அற்புதம் என்ற அடிப்படையில் அல்லாஹ்விடமே கோரி நிவாரணம் பெற்றுத் தந்துள்ளனர்.

அல்லாஹ் அனுமதிக்காத பல நூறு சந்தர்ப்பங்களில் அல்லாஹ்விடம் முறையிட்டார்கள். தாமே நோய் தீர்க்க வல்லவர் என்று சொன்னதே இல்லை.

அவர்கள் உயிருடன் வாழ்ந்த காலத்தில் அவர்களை நேரில் சந்தித்து நோய் விலகிட இறைவனிடம் துஆச் செய்யுமாறு பல நபித்தோழர்கள் கேட்டதுண்டு. ஆனால் நீங்களே குணப்படுத்துங்கள் என்று கேட்டதில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஒரு மகள், தமது மகன் மரணத்தை நெருங்கிவிட்டதாகவும் உடனே வரவேண்டும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சொல்லியனுப்பினார்... நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அக்குழந்தை கொடுக்கப்பட்டது. அக்குழந்தையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மடியில் கிடத்தினார்கள். அதன் உயிர் மூச்சு தடுமாறியது. இதைக் கண்டு அவர்களின் கண்கள் கண்ணீர் சொரிந்தன.

நூல்: புகாரி 1248

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது குடும்பத்தில் ஒருவருக்கு நோய் ஏற்பட்ட போது கண்ணீர் தான் விட முடிந்தது. நோயைத் நீக்க முடியவில்லை என்பதை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.

திருக்குர்ஆனுக்கும், நபிவழிக்கும் முரணாக அமைந்த இந்த மவ்லிதைப் பாடுவது நன்மை தருமா? பாவத்தில் தள்ளுமா? என்று சிந்தித்துப் பாருங்கள்!

உணவளிக்கும் அதிகாரம் நபிகள் நாயகத்துக்கு உண்டா?

بَسَطْتُّ كَفَّ فَاقَتِيْ وَالنَّدَمِ

اَرْجُوْ جَزِيْلَ فَضْلِكُمْ وَالْكَرَمِ

مُسْتَشْفِعًا نَزِيْلَ هَذَالْحَرَمِ

فَلاَحِظُوْنِيْ بِدَوَامِ الْمَدَدِ

فَاَنْجِدُوالْمِسْكِيْنَ قَبْلَ الْغَرَقِ

وَاَطْفِئُوْا بِالْبَسْطِ وَهْجَ الْحُرَقِ

وَاَبْرِدُوْا بِاللُّطْفِ حَرَّ الْكَبِدِ

எனது வறுமை, கவலை காரணமாகக் கையேந்துகிறேன்.

உங்களின் அளப்பரிய அருளையும், வள்ளல் தன்மையையும் நான் நம்பியுள்ளேன்.

இந்த ஹரமில் (மதீனாவில் தங்கியிருக்கும் உங்களின் பரிந்துரையை வேண்டுகிறேன்.

என்னை நிரந்தரமான உதவி கொண்டு கவனித்து விடுங்கள்!

மூழ்குவதற்கு முன் இந்த ஏழையைக் காப்பாற்றி விடுங்கள்!

உங்கள் தாராளத் தன்மையால் எரியும் வெப்பத்தை அணைத்து விடுங்கள்!

உங்கள் இரக்கத்தால் ஈரலின் வெப்பத்தைக் குளிரச்செய்யுங்கள்!

اِنَّا بِهِ نَسْتَجِيْر

فِيْ دَفْعِ كُلِّ انْتِقَامِ

எல்லாத் துன்பங்களையும் நீக்கிட அவரிடம் நாம் அடைக்கலம் தேடுகிறோம்.

இவை யாவும் ஸுப்ஹான மவ்லிதில் காணப்படும் நச்சுக் கருத்துக்கள்!

மனிதர்களுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் உணவளிப்பவன் அல்லாஹ் தான் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை. திருக்குர்ஆன் நெடுகிலும் இந்தக் கொள்கை பரவலாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெற்றோருக்கு உதவுங்கள்! வறுமையின் காரணமாக உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம்.

(அல்குர்ஆன்6:151)

மக்கள் உங்களை வாரிச் சென்று விடுவார்களோ என அஞ்சி, குறைந்த எண்ணிக்கையில் இப்பூமியில் நீங்கள் இருந்ததை எண்ணிப் பாருங்கள்! அவன் உங்களை அரவணைத்தான். தனது உதவியால் உங்களைப் பலப்படுத்தினான். நீங்கள் நன்றி செலுத்திட தூய்மையானவற்றை உங்களுக்கு உணவாக அளித்தான்.

(அல்குர்ஆன் 8:26)

பூமியில் உள்ள உயிரினம் எதுவாக இருந்தாலும் அவற்றுக்கு உணவளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகும். அவற்றின் வசிப்பிடத்தையும், அவை சென்றடையும் இடத்தையும் அவன் அறிவான். ஒவ்வொன்றும் தெளிவான பதிவேட்டில் உள்ளது.

(அல்குர்ஆன் 11:6)

தான் நாடியோருக்கு அல்லாஹ் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான்.

(அல்குர்ஆன் 13:26)

அல்லாஹ் தான், வானங்களையும், பூமியையும் படைத்தான். வானிலிருந்து தண்ணீரை இறக்கினான். அதன் மூலம் உங்களுக்கு உணவாகக் கனிகளை வெளிப் படுத்தினான். அவனது கட்டளைப்படி கடலில் செல்வதற்காக கப்பலையும் உங்களுக்குப் பயன்படச் செய்தான். ஆறுகளையும் உங்களுக்குப் பயன்படச் செய்தான்.

(அல்குர்ஆன் 14:32)

உங்களுக்கும், நீங்கள் யாருக்கு உணவளிப்போராக இல்லையோ அவர்களுக்கும் அதில் வாழ்வதற்குத் தேவையானவற்றை அமைத்தோம்.

(அல்குர்ஆன் 15:20)

உங்களில் ஒருவரை விட மற்றவரை செல்வத்தில் அல்லாஹ் சிறப்பித்திருக்கிறான். (செல்வத்தால் சிறப்பிக்கப் பட்டோர் தமது செல்வத்தைத் தமது அடிமைகளிடம் கொடுத்து,தங்களுக்குச் சமமாக அவர்களை ஆக்குவதில்லை. அல்லாஹ்வின் அருட்கொடையையா நிராகரிக்கிறார்கள்?

(அல்குர்ஆன் 16:71)

தான் நாடியோருக்கு உமது இறைவன் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அவன் தனது அடியார்களை நன்கறிந்தவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான். வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும்.

(அல்குர்ஆன் 17:30, 31)

(முஹம்மதே! உமது குடும்பத்தினரைத் தொழுமாறு ஏவுவீராக! அதில் (ஏற்படும் சிரமங்களை சகித்துக் கொள்வீராக! உம்மிடம் நாம் செல்வத்தைக் கேட்கவில்லை. நாமே உமக்கு செல்வத்தை அளிக்கிறோம். (இறைஅச்சத்திற்கே (நல்ல முடிவு உண்டு.

(அல்குர்ஆன் 20:132)

(நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது படைப்பினங்களை முதலில் படைத்து பின்னர் மறுபடியும் படைப்பவனா? வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் சான்றைக் கொண்டு வாருங்கள்!என்று கேட்பீராக!

(அல்குர்ஆன் 27:64)

அல்லாஹ்வையன்றி நீங்கள் கற்பனையாகப் படைத்த சிலைகளையே வணங்குகிறீர்கள். அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை வணங்குகிறீர்களோ அவர்கள் உங்களுக்குச் செல்வம் வழங்க இயலாது. எனவே அல்லாஹ்விடமே செல்வத்தைத் தேடுங்கள்! அவனையே வணங்குங்கள்! அவனுக்கு நன்றி செலுத்துங்கள்! அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!

(அல்குர்ஆன் 29:17)

எத்தனையோ உயிரினங்கள் தமது உணவைச் சுமந்து செல்வதில்லை. அல்லாஹ்வே அவற்றுக்கும், உங்களுக்கும் உணவளிக்கிறான். அவன் செவியுறுபவன்; அறிந்தவன்.

(அல்குர்ஆன் 29:60)

அல்லாஹ் தனது அடியார்களில், தான் நாடியோருக்கு செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். தான் நாடியோருக்கு அளவுடனும் வழங்குகிறான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்

(அல்குர்ஆன் 29:62)

தான் நாடியோருக்குச் செல்வத்தை அல்லாஹ் தாராளமாகவும், குறைத்தும் வழங்குகிறான் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்துக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

(அல்குர்ஆன் 30:37)

வானங்களிலும், பூமியிலும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? என்று (முஹம்மதே! கேட்டு,அல்லாஹ் என்று கூறுவீராக! நாமோ அல்லது நீங்களோ நேர் வழியிலோ பகிரங்கமான வழி கேட்டிலோ இருக்கிறோம்.

(அல்குர்ஆன் 34:24)

என் இறைவன், தான் நாடியோருக்கு செல்வத்தைத் தாராள மாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். எனினும் மனிதர் களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள் என்று கூறுவீராக!

(அல்குர்ஆன் 39:36)

எனது இறைவன் தனது அடியார்களில் தான் நாடியோருக்குச் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். தான் நாடியோருக்கு அதை குறைத்தும் கொடுக்கிறான். நீங்கள் எப்பொருளை (நல் வழியில் செலவிட்டாலும் அவன் அதற்கான பிரதி பலனை அளிப்பான். அவன் வழங்குவோரில் சிறந்தவன் என்று கூறுவீராக!

(அல்குர்ஆன் 39:39)

மனிதர்களே! உங்களுக்கு அல்லாஹ் செய்துள்ள அருளை எண்ணிப் பாருங்கள்! வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிக்கிறான். அல்லாஹ்வைத் தவிர படைப்பவன் உண்டா? அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. எவ்வாறு திசை திருப்பப்படுகிறீர்கள்?

(அல்குர்ஆன் 35:3)

தான் நாடியோருக்கு செல்வத்தைத் தாராளமாகவும், குறைத்தும் அல்லாஹ் வழங்குகிறான் என்பதை அவர்கள் அறியவில்லையா? நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

(அல்குர்ஆன் 39:52)

வானங்கள் மற்றும் பூமியின் திறவு கோல்கள் அவனுக்கே உரியன. தான் நாடியோருக்குச் செல்வத்தை அவன் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அவன் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.

(அல்குர்ஆன் 42:12)

அவன் தனது உணவை நிறுத்தி விட்டால் உங்களுக்கு உணவளிப்பவன் உண்டா? மாறாக வரம்பு மீறுவதிலும் வெறுப்பிலுமே அவர்கள் மூழ்கி விட்டனர்.

(அல்குர்ஆன் 67:21)

மனிதன் படைக்கப்படுவதற்கு முன்பே அவனது உணவு மற்றும் வசதிகள் இறைவனால் முடிவு செய்யப்பட்டு விடுகின்றன என்று கூறும் நபிமொழிகள் ஏராளமாக உள்ளன.

நூல்: புகாரி 318, 3333, 6595

உணவளிக்கும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உள்ள தனிப்பட்ட அதிகாரம். அதில் நபிமார்கள் உள்ளிட்ட எவருக்கும் எந்தப் பங்கும் இல்லை என்று இந்த வசனங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி அறிவிக்கின்றன. அல்லாஹ்வின் இந்தப் பிரகடனத்துக்கு எதிராக ஸுப்ஹான மவ்லிதின் இந்த வரிகள் அமைந்துள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஏகத்துவப் பிரச்சாரத்தை எதிர்த்து வந்த காபிர்கள், பல தெய்வங்களை வழிபட்டு வந்த முஷ்ரிக்குகள் கூட உணவளிக்கும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது என்று நம்பி வந்ததாகத் திருக்குர்ஆன் கூறுகின்றது.

வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? செவிப் புலனையும்,பார்வைகளையும் தன் கைவசம் வைத்திருப்பவன் யார்? உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் வெளிப்படுத்துபவன் யார்?காரியங்களை நிர்வகிப்பவன் யார்? என்று கேட்பீராக! அல்லாஹ் என்று கூறுவார்கள். அஞ்ச மாட்டீர்களா? என்று நீர் கேட்பீராக!

(அல்குர்ஆன் 10:31)

மக்கத்துக் காபிர்கள் கூட உணவளிக்கும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான தனியுரிமை என்று நம்பியிருந்தார்கள் என்பதற்கு இவ்வசனம் சான்றாக உள்ளது. உணவளிக்கும் அதிகாரம் தனக்கு மட்டுமே உரியது என்பதை அல்லாஹ் பல இடங்களில் தெளிவாகக் குறிப்பிடுகிறான்.

அல்லாஹ்வே உங்களைப் படைத்தான். பின்னர் உங்களுக்கு உணவளித்தான். பின்னர் உங்களை மரணிக்கச் செய்வான். பிறகு உங்களை உயிர்ப்பிப்பான். உங்கள் தெய்வங்களில் இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்வோர் உள்ளனரா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்.

(அல்குர்ஆன் 30:40)

படைத்தல், மரணிக்கச் செய்தல், மீண்டும் உயிர்ப்பித்தல் ஆகியவை எப்படி இறைவனின் தனிப்பட்ட உரிமையோ அது போன்று உணவளிப்பதும் அவனது தனிப்பட்ட உரிமையாகும். இந்த நான்கில் எந்த ஒன்றையும் எவரும் செய்ய முடியாது என்று தெளிவான பிரகடனம் இது.

இந்த உரிமை இறைவனுக்கு மாத்திரம் சொந்தமானது என்பதால் தான் எத்தனையோ நபிமார்களை இறைவன் வறுமையில் வைத்திருந்தான். நபித்தோழர்கள் பசியால் துடித்திருக்கின்றனர்.

நபியவர்களுக்கு வறுமையை விரட்டும் அதிகாரம் இருந்திருந்தால் அவர்களே வறுமையில் வாடியிருக்க மாட்டார்கள்.

பல நாட்கள் பட்டினி கிடந்த நபித்தோழர்கள்,

வயிற்றில் கற்களைக் கட்டிக் கொண்டவர்கள்,

ஒரேயொரு பேரீச்சம் பழத்தைச் சாப்பிட்டு உயிரைத் தக்க வைத்துக் கொண்டவர்கள்,

தங்குவதற்குக் கூட சொந்த இடமில்லாமல் பள்ளிவாசலில் தங்கியவர்கள்,

இறந்த பின் போர்த்துவதற்குக் கூடப் போதிய ஆடையில்லாமல் புல் பூண்டுகளால் மறைக்கப்பட்டவர்கள்,

ஒட்டுப்போட்ட ஆடைகளை அணிந்தவர்கள்,

வீட்டில் விளக்கெரிக்கக் கூட வழியில்லாதவர்கள்,

வெறும் தண்ணீரைக் கொடுத்து குழந்தைகளை உறங்க வைத்தவர்கள்

என்று பல்வேறு வகைகளில் வறுமை அவர்களை ஆட்டிப் படைத்தது.

அவர்களில் எவரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் தங்கள் வறுமையை நீக்குமாறு வேண்டவில்லை. அல்லாஹ்விடமே வேண்டினார்கள். அவனிடமே வேண்டுமாறு தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் போதித்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் இருந்தும் அவர்களை நேரில் கண்டிருந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வறுமையை நீக்குமாறு கோரவில்லை.

ஆனால் ஸுப்ஹான மவ்லூதில் வறுமையை நீக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பிரார்த்திக்கப்படுகின்றது. அவர்கள் தான் வறுமையை நீக்க முடியும் என்று கூறப்படுகின்றது.

ஸுப்ஹான மவ்லூது திருக்குர்ஆன் வசனங்களுடன் நேரடியாக மோதுகின்றதா?இல்லையா? சிந்தியுங்கள்!

வானவர்கள் மீது அவதூறு

இந்த மவ்லூதின் கடைசிப் பாடலாக யாஸையதீ.. என்ற பாடல் இடம் பெற்றுள்ளது. இப்பாடலின் தலைப்பில் இது ஜிப்ரீல் (அலை அவர்களால் பாடப்பட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மார்க்க அறிவு சிறிதும் இல்லாதவர்களால் தான் மவ்லூது இயற்றப்பட்டது என்பதற்கு இந்தத் தலைப்பு ஒன்றே போதிய சான்றாக அமைந்திருக்கிறது. ஜிப்ரீல் (அலை பாடிய(? பாடலைக் கேளுங்கள்!

اِنِّيْ اِذَا مَسَّنِيْ ضَيْمٌ يُرَوِّعُنِيْ

اَقُوْلُ يَا سَيِّدَ السَّادَاتِ يَا سَنَدِيْ

كُنْ لِيْ شَفِيْعًا اِلَى

الرَّحْمَانِ مِنْ زَلَلِيْ

وَامْنُنْ عَلَيَّ بِمَا

لاكَانَ فِيْ خَلَدِيْ

وَانْظُرْ بِعَيْنِ الرِّضَا

لِيْ دَائِمًا اَبَدًا

وَسْتُرْ بِطَوْلِكَ

تَقْصِيْرِيْ مَدَى الاَمَدِ

என்னை அச்சுறுத்தும் அளவு எனக்கு அநீதி இழைக்கப்பட்டால்

தலைவர்களுக்கெல்லாம் தலைவா! என் ஊன்றுகோலே! என்று உங்களை நான் அழைப்பேன்.

என் குற்றங்களுக்காக ரஹ்மானிடம் பரிந்துரைப்பவராக நீங்கள் ஆகி விடுங்கள்!

என் கற்பனையிலும் தோன்றாத உதவிகளை எனக்குச் செய்யுங்கள்!

என்றென்றும் நிரந்தரமாக திருப்தியான பார்வையுடன் என்னைக் கவனித்துக் கொள்ளுங்கள்.

உங்கள் அருளால் எனது குறைகளைக் காலாகாலம் மறைத்து விடுங்கள்!

ஜிப்ரீல் (அலை அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைத்து இவ்வாறு பிரார்த்தனை செய்தததாகக் கூறப்படுவது சரிதானா?

ஜிப்ரீல் (அலை அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இவ்வாறு பாடியிருந்தால் இது திருக்குர்ஆனில் இடம்பெற்றிருக்க வேண்டும் அல்லது நபித்தோழர்கள் வாயிலாக அறிவிக்கப்படும் ஹதீஸ்களில் இடம் பெற்றிருக்க வேண்டும். இரண்டிலுமே இவ்வாறு கூறப்படவில்லை.

திருக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் காணப்படாத இந்த விபரத்தை இன்றைக்கு முன்நூறு ஆண்டுகளுக்கு முந்தையவர்கள் எப்படி அறிந்து கொள்ள முடிந்தது? இந்தப் பாடல் வரிகளின் பொருளைக் கவனித்தால் கூட இது எவ்வளவு அபத்தம் என்பதை உணர முடியும்.

ஜிப்ரீல் (அலை அவர்களுக்கு அச்சுறுத்தும் அளவு அநீதி இழைக்கப்படும் என்றும் அவர்கள் தவறுகள் செய்ய முடியும் என்றும், அவர்களிடம் மறைக்கத் தக்க குறைபாடுகள் பல உள்ளன என்றும் இப்பாடல் வரிகள் கூறுகின்றன. ஆனால் மலக்குகளைப் பற்றி பொதுவாகவும் ஜிப்ரீல் (அலை அவர்களைப் பற்றிக் குறிப்பாகவும் அல்லாஹ் கூறுவது இந்தப் பாடல் வரிகளுக்கு சம்மட்டி அடி கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும் கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப் பட்டதைச் செய்வார்கள்.

(அல்குர்ஆன் 66:6

அளவற்ற அருளாளன் சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான் எனக் கூறுகின்றனர். அவன் தூயவன். மாறாக அவர்கள் (வானவர்கள் மரியாதைக்குரிய அடியார்கள். அவர்கள் அவனை முந்திப் பேச மாட்டார்கள். அவனது கட்டளைப்படியே செயல்படுவார்கள்.

(அல்குர்ஆன் 21:27, 28

என்று மலக்குகளின் இயல்புகளைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்ய முடியாத இயல்பில் படைக்கப்பட்ட மலக்குகள்,இந்தப் பாடலில் கூறப்படும் தவறுகளை எப்படிச் செய்திருக்க முடியும்?

பரிசுத்தமான உயிர் (அல்குர்ஆன் 2:87,2:253,5:110,16:102 என்றும்,

நம்பிக்கைக்குரிய உயிர் (26:193 என்றும்,

வல்லமை மிக்கவர் (53:5 என்றும்

ஜிப்ரீல் (அலை அவர்கள் சிறப்பித்துக் கூறப்படுகின்றனர்.

இத்தகைய சிறப்பு கொண்ட ஜிப்ரீல் (அலை அவர்கள் தவறு செய்வார்கள் என்றும், அவர்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாவார்கள் என்றும் கூறும் இந்த மவ்லூதுப் பாடலை எப்படி நம்ப முடியும்?

ஜிப்ரீல் (அலை அவர்கள் தவறு செய்வார்கள் என்று நம்பினால், அவர்கள் கொண்டு வந்த வஹியிலும் அவர்கள் தவறு செய்யக் கூடும் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தாதா? இது குர்ஆனிலும் சந்தேகத்தை ஏற்படுத்தாதா? ஜிப்ரீல் (அலை அவர்கள் இத்தகைய தவறுகளைச் செய்ய மாட்டார்கள் என்பது ஒரு புறமிருக்கட்டும். அப்படியே இந்தத் தவறுகளைச் செய்தால் கூட அதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஏன் அவர்கள் உதவி தேட வேண்டும்? அல்லாஹ்வின் தூதருடைய கோரிக்கைகளைக் கூட அல்லாஹ்விடம் எடுத்துச் சொல்லக் கூடிய ஜிப்ரீல் (அலை அவர்கள் நேரடியாகவே அல்லாஹ்விடம் தமது கோரிக்கைகளை எடுத்து வைக்க முடியாதா? என்பதை மவ்லூது அபிமானிகள் சிந்தித்தால் மவ்லூதுகளை நியாயப்படுத்த மாட்டார்கள்.

ஏனெனில் துன்பம் ஏற்படும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைத்து உதவி தேடுமாறு அல்லாஹ் நமக்குப் போதிக்கவில்லை. மாறாகத் தன்னிடம் உதவி தேடுமாறு தான் கட்டளையிடுகிறான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அவ்வாறே நமக்கு வழிகாட்டிச் சென்றுள்ளனர்.

அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கே தீங்கு செய்யவோ நன்மை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்று (முஹம்மதே! கூறுவீராக!

(அல்குர்ஆன் 10:49)

நான் எனது இறைவனையே பிரார்த்திக்கிறேன். அவனுக்கு யாரையும் இணையாக்க மாட்டேன் என (முஹம்மதே! கூறு வீராக! நான் உங்களுக்கு தீங்கு செய்யவும், நன்மை செய்யவும் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்றும் கூறுவீராக! அல்லாஹ் விடமிருந்து என்னை எவரும் காப்பாற்ற மாட்டார். அவனன்றி ஒதுங்குமிடத்தையும் காணமாட்டேன் என்றும் கூறுவீராக!

(அல்குர்ஆன் 72:20, 21, 22)

(முஹம்மதே! அதிகாரத்தில் உமக்கு ஏதுமில்லை. அவன் அவர்களை மன்னிக்கலாம். அல்லது அவர்களைத் தண்டிக்கலாம். ஏனெனில் அவர்கள் அநீதி இழைத்தவர்கள்.

(அல்குர்ஆன் 3:128)

தூதர்களில் நான் புதியவன் அல்லன். எனக்கோ, உங்களுக்கோ என்ன செய்யப்படும் என்பதை அறிய மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்றவில்லை. நான் தெளிவாக எச்சரிக்கை செய்பவனே தவிர வேறில்லை எனக் கூறுவீராக!

(அல்குர்ஆன் 46:9)

அல்லாஹ்வே! ஆட்சியின் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொள்கிறாய். நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய். நாடியோரை இழிவு படுத்துகிறாய். நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன் என்று கூறுவீராக! இரவைப் பகலில் நுழைக்கிறாய்! பகலை இரவில் நுழைக்கிறாய்! உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகிறாய். உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துகிறாய். நீ நாடியோருக்குக் கணக்கின்றி வழங்குகிறாய் (என்றும் கூறுவீராக!)

(அல்குர்ஆன் 3:26)

என்றெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கூறச் செய்து எல்லா அதிகாரமும் தனக்குரியதே எனத் திட்டவட்டமாக இறைவன் அறிவிக்கின்றான்.

இந்த அறிவிப்புக்கு முரணாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்வின் அதிகாரத்தைப் பங்கிட்டுக் கொடுக்கும் வகையில் இந்தக் கவிதை வரிகள் அமைந்துள்ளன.

பொய்யும் புரட்டும்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்தவுடன் அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிப் பேரக் குழந்தையை அணைத்துக் கொண்டு அந்தக் குழந்தையின் முகத்தைப் பார்த்து புன்னகை புரிந்து விட்டுப் பாடியதாக ஒரு கவிதை ஸுப்ஹான மவ்லூதில் இடம் பெற்றுள்ளது. அப்பாடலில்,

اَنْتَ الَّذِيْ سُمِّيْتَ فِى الْقُرْآنِ

اَحْمَدَ مَكْتُوْبًا عَلَى الْجِنَانِ

என்று கூறப்படுகிறது. குர்ஆனிலேயே உங்களைப் பற்றி அஹ்மத் என்று கூறப்பட்டுள்ளது. சொர்க்கங்களிலும் இது எழுதப்பட்டுள்ளது

என்பது இதன் பொருள்.

கைக்குழந்தையாக இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நோக்கி அவர்களின் பாட்டனார் இவ்வாறு கூறியிருக்க முடியுமா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கைக்குழந்தையாக இருந்த போதே குர்ஆன் இருந்ததா? அந்தக் குர்ஆனை அப்துல் முத்தலிப் படித்தாரா என்ற சாதாரண உண்மையைக் கூட அறியாமல் உளறிக் கொட்டியுள்ளனர்.

குர்ஆன் என்பது முந்தைய வேதங்களைக் குறிக்கும் என்று சமாளிக்கவும் முடியாது.

முந்தைய வேதங்கள் என்று வைத்துக் கொண்டாலும் அந்த முந்தைய வேதங்களைக் கற்றறிந்த கிறித்தவராக அப்துல் முத்தலிப் இருந்தாரா? அப்படியே இருந்தாலும் முந்தைய வேதங்களில் அஹ்மத் என்று கூறப்பட்டிருப்பது தமது பேரக் குழந்தை தான் என்று எப்படி கண்டு கொண்டார்?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கே நாற்பது வயதுக்கு முன், தாம் ஒரு நபி என்பது தெரியவில்லையே?

இவ்வாறே நமது கட்டளையில் உயிரோட்டமானதை உமக்கு அறிவித்தோம். வேதம் என்றால் என்ன? நம்பிக்கை என்பது என்ன என்பதை (முஹம்மதே! நீர் அறிந்தவராக இருக்கவில்லை. மாறாக நமது அடியார்களில் நாம் நாடியோருக்கு நேர் வழி காட்டும் ஒளியாக இதை ஆக்கினோம். நீர் நேரான பாதைக்கு அழைக்கிறீர்.

(அல்குர்ஆன் 42:52)

இக்ரஃ என்று முதல் பகுதி அருளப்பட்டவுடன் கூட தமக்கு ஏதோ நேர்ந்து விட்டதாக எண்ணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அஞ்சினார்கள். நடுங்கினார்கள்! போர்வையைப் போர்த்துங்கள் என்றார்கள். வரகா பின் நவ்பல் (ரலி அவர்கள் உறுதி செய்த பிறகு தான்,தாம் ஒரு நபி என்பது அவர்களுக்கே உறுதியானது

(நூல்: புகாரி 4.)

ஆனால் அப்துல் முத்தலிபுக்கோ கைக்குழந்தையாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பார்த்தவுடன் இந்த விஷயம் தெரிந்து விட்டது என்று கூறினால் அது அறியாமை இல்லையா?

சொர்க்கத்தில் வேறு இது எழுதப்பட்டிருந்ததாம். நரகத்திற்குச் செல்லக்கூடிய அப்துல் முத்தலிப் சொர்க்கத்தில் எழுதப்பட்டதைப் பார்த்தது எப்படி? இது அதை விட அறியாமை இல்லையா?

குர்ஆனைப் பற்றியும் ஹதீஸ்களைப் பற்றியும் கடுகளவாவது ஞானமிருந்தால் இப்படி எழுதியிருக்க முடியுமா? அரபுமொழியில் எழுதப்பட்ட அனைத்தையும் வேதவாக்காக நம்பிய மக்களிடம் இது எடுபட்டிருக்கலாம். குர்ஆன் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட இன்றைய காலகட்டத்தில் நபிமொழிகள் தமிழில் வெளிவரத் துவங்கிவிட்ட காலகட்டத்தில் இதை யாரேனும் ஏற்க முடியுமா?

مَازَالَ نُوْرُ مُحَمَّدٍ مُتَنَقِّلاً

فِى الطَّيِّبِيْنَ الطَّاهِرِيْنَ ذَوِى الْعُلاَ

حَتَّى لِعَبْدِ اللّهِ جَاءَ مُطَهَّرًا

وَبِوَجْهِ آمِنَةٍ بَدَا مُتَهَلِّلاً

ஸுப்ஹான மவ்லூதில் இடம்பெறும் கொசுறுக் கவிதை இது. முஹம்மது(ஸல்) அவர்களின் ஜோதி உள்ளும் புறமும் தூயவர்களான உயர்ந்தவர்களிடையே மாறிமாறி இடம்பெற்று வந்து முடிவில் அப்துல்லாஹ்விடம் வந்து சேர்ந்தது. அதன் பின் ஆமினாவின் முகத்தில் பிரகாசமாய் வந்தடைந்தது.

என்பது இதன் பொருள்.

உள்ளும் புறமும் தூய்மையானவர்கள் என்றால் நேர்வழி சென்ற மக்கள் என்று பொருள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்ராஹீம் நபியின் பரம்பரையில் தோன்றியவர்கள். இது அனைவரும் ஏற்றுக் கொண்டதும், ஆதாரப்பூர்வமானதுமாகும்.  இப்ராஹீம் (அலை அவர்களின் தந்தை ஆஸர் ஆவார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இப்ராஹீம் (அலை மூதாதை என்றால் ஆஸரும் அவர்களின் மூதாதையே.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஜோதி ஆஸரிடமிருந்து தான் இப்ராஹீம் நபிக்கும் இடம் பெயர்ந்திருக்க முடியும். அந்த ஆஸர் பற்றி அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்!

சிலைகளைக் கடவுள்களாக நீர் கற்பனை செய்கிறீரா? உம்மையும், உமது சமூகத்தையும் தெளிவான வழி கேட்டில் இருப்பதாகவே நான் கருதுகிறேன் என்று இப்ராஹீம் தம் தந்தை ஆஸரிடம் கூறியதை நினைவூட்டுவீராக!

(அல்குர்ஆன் 6:74)

இப்ராஹீம் தம் தந்தைக்காக பாவ மன்னிப்புத் தேடியது, தந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவே. அவர் அல்லாஹ்வின் எதிரி என்பது அவருக்குத் தெரிந்த பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் பணிவுள்ளவர்; சகிப்புத் தன்மை உள்ளவர்.

(அல்குர்ஆன் 9:114)

ஆஸர் சிலை வணக்கத்தில் ஊறிப்போனவர். பல தெய்வங்களை நம்பியவர். அல்லாஹ்வின் எதிரி என்றெல்லாம் இறைவன் தெளிவாகக் கூறுகிறான். இந்த மவ்லூது வரி அவர் உள்ளும் புறமும் தூய்மையான நல்லவர் என்று சான்று அளிக்கின்றது. குர்ஆனை நம்பக் கூடியவர்கள் இந்த மவ்லூதை நம்ப முடியுமா?

ஒரு நபித்தோழர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து என் தந்தை எங்கே இருக்கிறார் என்று கேட்டார். நரகத்தில் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். இதைக் கேட்டு அழுது கொண்டே அவர் திரும்பிச் சென்றார். அவரைத் திரும்பவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழைத்து என் தந்தையும் உன் தந்தையும் நரகத்தில் தான் உள்ளனர் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 302

என் தாயாருக்காக பாவமன்னிப்புக் கேட்க என் இறைவனிடம் நான் அனுமதி கேட்டேன். இறைவன் மறுத்து விட்டான். அவர்களின் ஜியாரத்துக்கு அனுமதி கேட்டேன். அனுமதி வழங்கினான் என்பதும் நபிமொழி.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 1622,1621

இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காக பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும், இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும் தகாது.

(அல்குர்ஆன் 9:113)

இந்த ஆதாரப்பூர்வமான சான்றுகளுடன் இந்தக் கவிதை வரிகள் மோதவில்லையா? இந்தக் கவிதை வரியின் மீது நீங்கள் ஈமான் கொண்டால் இந்த ஹதீஸ்களையும், இந்த வசனங்களையும் என்ன செய்யப் போகிறீர்கள்?

முரண்பட்ட இரண்டு விஷயங்களில் ஏதாவது ஒன்றைத் தான் நம்ப முடியும். மவ்லூதை நம்பினால் குர்ஆனை மறுப்பதாகவே அர்த்தம்.

அபத்தங்கள்

اَقْسَمْتُ فِى نَصْرِيْ بِكُمْ عَلَيْكُمُ

இந்த வரி ஸுப்ஹான மவ்லூதில் யாமுஸ்தபா என்று துவங்கும் பாடலில் இடம் பெற்றுள்ளது.

நீங்கள் எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று உங்கள் மீதே நான் சத்தியம் செய்கிறேன்

என்பது இந்த வரியின் பொருள்.

இது அறிவுக்குப் பொருந்தாத உளறலாக அமைந்திருப்பதுடன் இஸ்லாமியக் கொள்கைக்கு முரணாகவும் அமைந்துள்ளது.

ஒருவர், தாம் ஒரு காரியத்தைச் செய்வதாகவோ, அல்லது செய்வதில்லை என்றோ உறுதியாகக் கூறுவதற்குத் தான் சத்தியம் செய்யப்படுகின்றது.

 நான் உனக்கு நூறு ரூபாய்கள் தருவேன் என்று சத்தியம் செய்கிறேன் என்று ஒருவர் கூறினால் அதை நமது அறிவு ஒப்புக் கொள்கிறது.

நீ எனக்கு நூறு ரூபாய்கள் தர வேண்டும் என்று நான் சத்தியம் செய்கிறேன் என்று ஒருவர் கூறினால் அதற்கு எந்த அர்த்தமும் இல்லை.

ஏனெனில் ஒருவர், இன்னொருவர் செய்யும் காரியத்துக்காக சத்தியம் செய்ய முடியாது.

நபியே! நீங்கள் எனக்கு உதவ வேண்டும் என்று நான் சத்தியம் செய்கிறேன் என்று கூறும் இந்தப் பாடல் வரியும் இது போன்ற உளறலாகத் தான் அமைந்துள்ளது. நீங்கள் எனக்கு உதவி செய்ய வேண்டும் என நான் சத்தியம் செய்கிறேன் என்று ஒருவர் கூறினால் நபிகள் நாயகம் (ஸல்) விஷயமாக முடிவெடுக்கும் அதிகாரத்தைத் தன் கையில் எடுத்துக் கொள்கிறார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுயமாக முடிவெடுக்க இயலாதவர்கள் என்பது போன்றும் அவர்களை மற்றவர்கள் வற்புறுத்திக் கட்டாயப்படுத்தி முடிவெடுக்கச் செய்ய முடியும் என்பது போன்றும் அவர் கருதியவராவார்.

தாய் மகன், தந்தை மகள் போன்ற நெருக்கமான உறவு இருந்தால் இவ்வாறு சத்தியம் செய்வதை ஏற்கலாம்.

அல்லாஹ்வின் மீது சத்தியமாக நீங்கள் வர வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகள் சத்தியம் செய்ததை முன்னர் குறிப்பிட்டுள்ளோம். நபிகள் நாயகத்துக்கும் நமக்கும் இத்தகைய உறவுகள் ஏதும் இல்லை; மாறாக அவர்கள் நம் அனை வருக்கும் வழிகாட்டியாகவும், தலைவராகவும் உள்ளனர். எனக்காக நீங்கள் உதவ வேண்டும் என சத்தியம் செய்கிறேன் எனக் கூறுவது அந்தத் தலைமைத்துவத்தைக் கேலி செய்தாக உள்ளது.

முஸ்லிம்கள் மார்க்கம் அனுமதிக்கின்ற எந்த விஷயத்திற்குச் சத்தியம் செய்வதாக இருந்தாலும் அல்லாஹ்வின் மீது மட்டுமே சத்தியம் செய்ய வேண்டும். அல்லாஹ்வைத் தவிர எவர் மீதும் எதன் மீதும் சத்தியம் செய்வதை விட்டும் தடுக்கப்பட்டுள்ளனர்.

யாரேனும் சத்தியம் செய்வதாக இருந்தால் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யட்டும். அல்லது வாய்முடி இருக்கட்டும் என்பது நபிமொழி.

நூல்: புகாரி 2679, 3836, 6108, 6646, 7401..

யாரேனும் அல்லாஹ் அல்லாதவர்கள் மீது சத்தியம் செய்தால் அவர் அல்லாஹ்வுக்கு இணை வைத்துவிட்டார் என்பது நபிமொழி.

அறிவிப்பவர்: உமர் (ரலி), நூல்: திர்மிதீ 1455

ஒரு யூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து நீங்கள் கஃபாவின் மீது சத்தியமாக எனக் கூறுகிறீர்கள். இதன் மூலம் இணை வைக்கிறீர்கள் என்று கூறினார். அதன் பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கஃபாவின் இறைவன் மீது ஆணையாக என்று கூறுமாறு நபித்தோழர்களுக்குக் கட்டளையிட்டனர்.

அறிவிப்பவர்: ஹுதைலா (ரலி)

நூல்: நஸயீ 3713

அல்லாஹ்வைத் தவிர எவர் மீதும் எதன் மீதும் சத்தியம் செய்யக் கூடாது. அவ்வாறு செய்வது அல்லாஹ்வுக்கு இணைவைப்பதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதற்கு மாற்றமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதே மவ்லூதைப் பாடியவர் சத்தியம் செய்கிறார். இது இந்த வரியில் உள்ள மற்றொரு தவறாகும்.

ضَاقَتْ بِيَ الاَسْبَابُ

فَجِئْتُ هَذَا الْبَابَ

اُقَبِّلُ الاَعْتَابَ

اَبْغِيْ رِضاَ الاَحْبَابَ

وَالسَّادَةِ الاَخْيَارِ

அல்லாஹு ஃகாலிகுனா என்று துவங்கும் பாடல் வரிகள் இவை!

இதன் பொருள் வருமாறு:

வாழ்க்கைச் சாதனங்கள் எனக்குச் சுருங்கிவிட்டன. எனவே இந்த வாசலுக்கு வந்துவிட்டேன். (உங்கள் அருகில் அடங்கியுள்ள அபூபக்ர் (ரலி), உமர் (ரலி ஆகிய தலைவர்கள் திருப்தியை எதிர்பார்த்து நிலைப்படிகளை முத்தமிடுகிறேன்.

வாழ்க்கை வசதிகள் குறைந்து விட்டால் அல்லாஹ்விடம் பிரார்த் தனை செய்யுமாறு அல்லாஹ்வும் அவனது தூதரும் கற்றுத் தந்ததற்கு மாற்றமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி ஆகியோர் அடக்கப்பட்ட இடத்துக்குச் சென்று அவர்களின் திருப்தியைப் பெறுவதற்காக படிகளை முத்தமிடும் இந்தக் கலாச்சாரத்திற்கு இஸ்லாத்தில் அனுமதி உண்டா? நிச்சயமாக இல்லை.

நாங்கள் குஃப்ரிலிருந்து விடுபட்டுப் புதிதாக இஸ்லாத்தை ஏற்ற நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஹுனைனை நோக்கிச் சென்று கொண்டிருந்தோம். (வழியில் முஷ்ரிகீன்கள் தங்கி, தங்கள் ஆயுதங்களைத் தொங்கவிடும் இலந்தை மரம் ஒன்று இருந்தது. தாது அன்வாத் என அது குறிப்பிடப்பட்டது. நாங்கள் ஒரு இலந்தை மரத்தைக் கடந்த போது அல்லாஹ்வின் தூதரே! அவர்களுக்கு தாது அன்வாத் இருப்பது போல் எங்களுக்கும் ஏற்படுத்துங்கள் என்று நாங்கள் கூறினோம். இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹு அக்பர்! நிச்சயமாக இது அந்த வழி முறைகளில் உள்ளவையே. அவர்களுக்குப் பல தெய்வங்கள் இருப்பது போல் எங்களுக்கும் பல தெய்வங்களை ஏற்படுத்துங்கள் என்று மூஸா (அலை அவர்களிடம் அவர்களின் சமுதாயத்தவர் கேட்டது போல் கேட்கிறீர்கள். நிச்சயமாக நீங்கள் உங்களுக்கு முந்திய சமுதாயத்தின் வழியிலேயே செல்கிறீர்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூவாகித் அல்லைஸீ (ரலி)

நூல்: திர்மிதீ 2106

மரம், செடிகளை, மற்றுமுள்ள பொருட்களைப் புனிதமாகக் கருதுவது அவற்றைக் கடவுளாக்குவதற்குச் சமமானது எனவும் இது வழி கெட்ட முந்தைய சமுதாயத்தவரின் வழிமுறைகள் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்திருக்க, அந்தப் போதனைக்கு மாற்றமாக நிலைப்படியை முத்தமிடும் கலாச்சாரத்தை மவ்லூதின் இந்த வரிகள் ஆதரிக்கின்றன.

வறுமையை விரட்டுவதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலத்தையும்,அங்குள்ள நிலைப்படிகளையும் முத்தமிடச் சொல்வதன் மூலம் இஸ்லாத்தில் பல தெய்வ வழிபாட்டு முறையைத் திணிக்க இந்த மவ்லூது முயல்வதை அறியலாம்.

وَاَنْتَ حَقًّا غِيَاثُ الْخَلْقِ اَجْمَعِهِمْ

உண்மையாகவே நீங்கள் அனைத்துப் படைப்பினங்களுக்கும் இரட்சகராக இருக்கிறீர்கள் என்ற வரியும்,

لَهُ جَزِيْلُ الْهِبَاتِ مِنْهَا نَعِيْمُ الدَّوَامِ

அவர்களுக்கு ஏராளமான அருட்கொடை வழங்குதல் உள்ளது. நிரந்தரமான அருட்கொடையும் அவற்றில் ஒன்றாகும் என்ற வரியும்

فَرَوِّحُوْا رُوْحِيْ بِكَشْفِ الْكُرَبِ

சிரமங்களை நீக்குவதன் மூலம் என் உயிருக்கு நீங்கள் சுகமளியுங்கள் என்ற வரியும்.

مَا لِيْ سِوَى حُبِّيْ لَدَيْكَ وَسِيْلَةٌ

فَامْنُنْ عَلَيَّ بِفَضْلِ جُوْدِكَ اَسْعِدِ

உங்கள் நேசத்தைத் தவிர என்னிடம் எந்தச் சமாதானமும் இல்லை. எனவே உங்கள் அதிகப்படியான வள்ளல் தன்மையில் எனக்கு வழங்குங்கள் என்னைப் பாக்கியவானாக ஆக்குங்கள் என்ற வரியும்.

இது போல் அமைந்துள்ள இன்னும் ஏராளமான வரிகளும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறை நிலைக்கு உயர்த்தும் வகையில் அமைந்துள்ளன. இஸ்லாத்தை ஓரளவு விளங்கிய முஸ்லிம் கூட ஆதரிக்க முடியாத இந்தப் பாடல்களைத் தான் வணக்கம் என்று நாம் செய்து வருகிறோம்.

وَضَعَتْهُ آمِنَةٌ وَلَمْ يَشْعُرْ بِهَا

اَحَدٌ عَنْ عُيُوْنِ الْحُسَّدِ

பொறாமைக்காரர்களின் கண்களை விட்டும் மறைப்பதற்காக ஆமினா அவர்கள் யாருமே அறியாத வகையில் நபியவர் களைப் பெற்றெடுத்தார்கள் என்பது இந்த வரியின் பொருள்.

இதில் எத்தனை தவறுகள் உள்ளன என்று எண்ணிப் பார்ப்போம். இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்திருந்தால் இதை ஆமினா அவர்களோ, அல்லது அந்தக் காலத்தில் மக்காவில் வாழ்ந்தவர்களோ தான் அறிந்திருக்க முடியும். அவர்கள் வழியாகத் தான் அடுத்தடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ள முடியும்.

இந்த நிகழ்ச்சியை அறிவிப்பவர் யார்? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் சம்பந்தப்பட்ட அனைத்துச் செய்திகளும் பதிவு செய்யப்பட்டுள்ள எந்த ஹதீஸ் நூலில் இடம் பெற்றுள்ளது? மவ்லூது அபிமானிகள் கூறுவார்களா? நிச்சயமாக கூற முடியாது. ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலம் முதல் ஆயிரம் ஆண்டுகள் வரை எழுதப்பட்ட எந்த ஆதாரப்பூர்வமான நூலிலும் இது பதிவு செய்யப்படவில்லை. முன்னூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட இந்த மவ்லூதுப் பாடலில் தான் இது இடம் பெற்றுள் ளது. ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த எந்த மனிதரும் அறியாத வரலாற்று நிகழ்ச்சி ஒன்றை ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் வந்தவர் அறிய முடியும் என்பதை நமது அறிவு ஏற்றுக் கொள்ளுமா?

எந்தவித வரலாற்றுக் குறிப்பும் இல்லாமல் நபியவர்களைப் பற்றி எவர் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் கூறுவதை இது ஊக்கப்படுத்தாதா? என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும். இதற்கு எந்த ஆதாரமும் கிடையாது என்பதே இதை மறுப்பதற்கு போதுமான காரணம் என்றாலும் வேறு சில காரணங்களும் கூட உள்ளன.

பொறாமைக்காரர்களின் கண்களை விட்டும் மறைப்பதற்காக எவருக்கும் தெரியாமல் ஆமினா பிரசவித்தார்கள் என்பது சாத்தியமானது அல்ல.

சமூகத்துடன் கலந்து வாழும் எந்தப் பெண்ணும் பிறரது உதவியின்றி பிரசவிக்க முடியாது. அவர்களுக்குத் துணையாகப் பலர் இருக்க வேண்டியது அவசியம். மேலும் பிரசவ வேதனை யினால் அலறும் போது மற்றவர்களுக்குத் தெரியாமலிருக்க முடியாது. நிறை மாதக் கர்ப்பிணியைக் குடும்பத்திலுள்ளவர்கள் ஒவ்வொரு நேரமும் கண்காணித்துக் கொண்டே இருப்பார்கள். இந்த நிலையில் எவரும் அறியாதவாறு பிரசவித்தார்கள் என்பது ஏற்க முடியாததாகும்.

பொறாமைக்காரர்களின் கண்களை விட்டும் மறைப்பதற்காக இரகசியமாகப் பிரசவித்தார்கள் என்றால் பிரசவிக்கும் போது மட்டும் தான் பொறாமைக்காரர்களின் கண் படுமா? பிரசவித்து முடிந்த பின் குழந்தை தவழும் போதும், மழலை மொழி பேசும் போதும், குறும்புகள் செய்யும் போதும், இன்னும் பல கட்டங்களிலும் கூட பொறாமைக்காரர்களின் கண் படுமே! பொறாமைக்காரர்களின் கண் படக் கூடாது என்பதற்காக யாருமில்லாத காட்டுக்குக் குழந்தையுடன் சென்று அங்கேயே வசித்தார்கள் என்று கதை எழுதப் போகிறார்களா?

இது உண்மை என வைத்துக் கொண்டால் கூட இதில் சிறப்பு என்ன இருக்கிறது?யாருடைய கண்ணும் படக் கூடாது என்று கருதி ஒரு பெண் காட்டுக்குச் சென்று பிரசவித்தால் அந்தக் குழந்தை சிறந்த குழந்தை என்று ஆகிவிடுமா? எத்தனையோ காட்டுவாசிகள் யாருடைய துணையுமின்றி பிரசவிக்கும் நிலைமையைச் சந்திக்கிறார்கள். இதனால் அந்தக் குழந்தைகள் பிறப்பால் சிறந்தவர்கள் என்று ஆகிவிட முடியுமா?

இது பொய்யாக இருப்பதுடன் புகழ் சேர்ப்பதாகவும் இல்லை என்பதை மவ்லூது அபிமானிகள் உணர வேண்டும்.

وَاَتَتْ مَلاَئِكَةُ السَّمَاءِ تَزُوْرُهُ

وَتَنَالُ مِنْ رُؤْيَاهُ اَشْرَفَ مَقْصَدِ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்தவுடன் வானுலக மலக்குகள் அவர்களைச் சந்திக்க வந்தனர். அவர்களைப் பார்த்து தங்களின் உயர்ந்த இலட்சியத்தை அடைந்தனர் என்பது இதன் பொருள்.

جَاؤُوْ بِاِبْرِيْقٍ وَطَشْتٍ رُصِّعَتْ

جَنَبَاتُهُ مِنْ لُؤْلُؤٍ وَزَبَرْجَدِ

ஓரங்களில் முத்தும் மரகதமும் பதிக்கப்பட்ட கூஜாவையும், கோப்பையையும் அந்த மலக்குகள் கொண்டு வந்தனர்.

غَسَلُوْا جِلاَهُ وَخَتَّمُوْهُ بِخَاتَمٍ

تَمَّتْ بِرُؤْيَتِهِ نُبُوَّةُ اَحْمَدِ

அவர்களது மேனியைக் கழுவி அவர்கள் மீது முத்திரையிட்டார்கள். அதைக் காண்பதன் மூலம் அஹ்மதின் நபித்துவம் முழுமை பெற்றது.

இந்த மூன்று வரிகளிலும் மலக்குகள் சம்பந்தப்பட்ட விஷயங் கள் கூறப்படுகின்றன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த போது எல்லா மலக்குகளும் வந்தார்கள் என்பது சரி தானா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த போது மலக்குகள் வந்திருந்தால் அவர்களை அம்மக்கள் பார்த்திருக்க முடியாது. எனவே மலக்குகள் அனைவரும் நபியவர்களைத் தரிசிக்க வந்தனர் என்பது உண்மையானால் அதை அல்லாஹ் கூறியிருக்க வேண்டும். அல்லது அவனது தூதர் கூறியிருக்க வேண்டும். இவ்விரண்டைத் தவிர வேறு எந்த வழியிலும் இதை அறிய முடியாது.

இதை அல்லாஹ்வோ, அவனது தூதரோ கூறியிருந்தால் அதற்கான ஆதாரங்களை மவ்லூது அபிமானிகள் எடுத்துக் காட்டுவார்களா? ஒருக்காலும் காட்ட முடியாது.

ஒரு கவிஞனின் கற்பனையைத் தவிர இதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. இன்னும் வேடிக்கையைக் கேளுங்கள்.

نَادَاهُمُ الرَّحْمَانُ اَنْ طُوْفُوْا بِهِ

بِالْعَرْشِ مَعَ دَارِ النَّعِيْمِ الاَرْغَدِ

ثُمَّ اعْرِضُوْهُ عَلَى الْخَلاَئِقِ كُلِّهَا

مِنْ كُلِّ رُوْحَانٍ وَكُلِّ مُجَسَّدِ

இறைவன் மலக்குகளை அழைத்து இந்தக் குழந்தைக்கு அர்ஷையும் சொர்க்கத்தையும் சுற்றிக் காண்பியுங்கள்! உயிருள்ள, உடலுள்ள எல்லாப் படைப்பினங்களுக்கும் இந்தக் குழந்தையைக் காட்டி வாருங்கள்! என்று கூறினான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த உடன் அவர்கள் சொர்க்கத்துக்கும், அர்ஷுக்கும் கொண்டு செல்லப்பட்டார்கள். அகில உலகுக்கும் கொண்டு செல்லப்பட்டு காட்டப்பட்டார்கள். இறைவனே இவ்வாறு கட்டளையிட்டான் என்று இங்கே கூறப்படுகிறது.

சிறு குழந்தையாக இருந்த நபியவர்களுக்கு இது காட்டப்படுவதில் என்ன பயன்? அவர்கள் பிறக்கும் போதே அனைத்தையும் அறிந்து கொண்டார்கள் என்று நிலைநாட்டுவது தான் இவர்களின் நோக்கம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நபியாக ஆக்கப்பட்ட உடன் தாம் நபியாக ஆக்கப்பட்டதை அவர்கள் உணரவில்லை. அஞ்சி நடுங்கினார்கள். தமக்கு ஏதோ நேர்ந்து விட்டதாக எண்ணிக் கலங்கினார்கள். அன்னை கதீஜா (ரலி அவர்கள் ஆறுதல் கூறித் தேற்றினார்கள். வரகா பின் நவ்பல் (ரலி அவர்கள் நீங்கள் இறைத்தூதர் ஆகிவிட்டீர்கள் என்று நம்பிக்கையூட்டினார்கள்.

மிஃராஜ் பயணம் சென்ற போது அங்கே எடுத்துக்காட்டப்பட்ட சொர்க்கம் உள்ளிட்ட அனைத்தைப் பற்றியும் ஜிப்ரீலிடம் விசாரித்துத் தெரிந்தார்கள் என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் கூறுகின்றன.

பிறந்த உடன் அவற்றையெல்லாம் அறிந்திருந்தால் பிறரிடம் கேட்டு அறியும் நிலை ஏற்பட்டிருக்காது. எவ்வித ஆதாரமுமின்றிக் கற்பனை செய்தவைகளை அல்லாஹ் கூறியதாக இட்டுக் கட்டியவர்களுக்கும், இதை ஆதரிக்கும் மவ்லவி மார்களுக்கும் இதைப் புனிதமாகக் கருதும் ஏமாந்த சமுதாயத்திற்கும் பின்வரும் வசனங்களை எச்சரிக்கையாக முன்வைக்கிறோம்.

இதன் பிறகும் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோர் தாம் அநீதி இழைத்தவர்கள்.

(அல்குர்ஆன் 3:94)

அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுபவனை விட அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதுபவனை விட அநீதி இழைத்தவன் யார்? அநீதி இழைத்தோர் வெற்றி பெற மாட்டார்கள்.

(அல்குர்ஆன் 6:21)

அல்லாஹ்வின் பெயரால் பொய்யை இட்டுக் கட்டுபவன், எதுவுமே அவனுக்கு (இறைவனிடமிருந்து அறிவிக்கப்படாதிருந்தும் எனக்கு அறிவிக்கப்படுகிறது எனக் கூறுபவன், மற்றும் அல்லாஹ் அருளியதைப் போல் நானும் இறக்குவேன் என்று கூறுபவன் ஆகியோரை விட மிகவும் அநீதி இழைத்தவன் யார்? அநீதி இழைத்தோர் மரணத்தின் வேதனைகளில் இருக்கும் போது நீர் பார்ப்பீராயின் வானவர்கள் அவர்களை நோக்கித் தமது கை களை விரிப்பார்கள். உங்கள் உயிர்களை நீங்களே வெளியேற்றுங் கள்! அல்லாஹ்வின் பெயரால் உண்மையல்லாதவற்றை நீங்கள் கூறியதாலும், அவனது வசனங்களை நீங்கள் நிராகரித்ததாலும் இன்றைய தினம் இழிவு தரும் வேதனைக்கு உட்படுத்தப் படுகிறீர்கள்! (எனக் கூறுவார்கள்.

(அல்குர்ஆன் 6:93 )

அறிவின்றி மக்களை வழி கெடுப்பதற்காக அல்லாஹ்வின் பெயரால் பொய்யை இட்டுக்கட்டுவோரை விட மிகப் பெரிய அநீதி இழைத்தோர் யார்? அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.

(அல்குர்ஆன் 6:144)

அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுபவனை விட அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதுபவனை விட அநீதி இழைத்தவன் யார்? அநீதி இழைத்தோர் வெற்றி பெற மாட்டார்கள்.

(அல்குர்ஆன் 6:21 )

அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டியவனை விட அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதியவனை விட மிகப் பெரிய அநீதி இழைத்தவன் யார்?குற்றவாளிகள் வெற்றி பெற மாட்டார்கள்.

(அல்குர்ஆன் 10:17)

இதோ எங்கள் சமுதாயத்தினர் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டனர். அவற்றைப் பற்றி அவர்கள் தெளிவான சான்றைக் கொண்டு வர வேண்டாமா?அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவனை விட மிகப் பெரும் அநீதி இழைத்தவன் யார்?

(அல்குர்ஆன் 18:15)

அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுபவன் அல்லது அவனிடம் வந்த உண்மையை பொய்யெனக் கருதிய வன் ஆகியோரை விட அநீதி இழைத்தவன் யார்? (ஏக இறைவனை மறுப்போருக்கு நரகத்தில் தங்குமிடம் இல்லையா?

(அல்குர்ஆன் 29:68)

இஸ்லாத்திற்கு அழைக்கப்படும் நிலையில் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுபவனை விட மிகப் பெரிய அநீதி இழைப்பவன் யார்? அநீதி இழைக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.

(அல்குர்ஆன் 61:7)

ஆகிய வசனங்களும் அல்லாஹ்வின் பெயரால் இட்டுக்கட்டுபவர்களுக்குக் கடும் எச்சரிக்கையாக அமைந்துள்ளன.

அது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சம்பந்தப்படுத்தி இட்டுக்கட்டுபவர்கள் நரகத்தில் தங்கள் இடத்தை முன்பதிவு செய்யட்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக பல நபிமொழிகள் உள்ளன.

புகாரி 106, 107, 110, 1291, 3461, 6197

அல்லாஹ்வையும், அவனது தூதரையும், வானவர்களையும் சம்பந்தப்படுத்தி இட்டுக்கட்டப்பட்ட இந்தக் கதையைப் படிப்பது பாவமா? புண்ணியமா? என்பதை மவ்லூது பக்தர்கள் சிந்திக்கட்டும்!

நன்மை என்று எண்ணிக் கொண்டு நரகத்திற்கு இழுத்துச் செல்லும் இந்த மவ்லூதுப் பாடலை உண்மை முஸ்லிம்கள் ஆதரிக்கலாமா?

ஸுப்ஹான மவ்லூதில் குர்ஆன், ஹதீஸுக்கு முரண்பட்ட போதனைகளும், பொய்களும் கூறப்பட்டுள்ளதால் தான் இந்த மவ்லூதை நாம் மறுக்கிறோம்.

இன்னொரு முக்கியமான விஷயத்தை சமுதாயத்திற்கு நினைவூட்ட நாம் கடமைப்பட்டுள்ளோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் புகழ்வதற்காகத் தான் ஸுப்ஹான மவ்லூது இயற்றப்பட்டது என்று மவ்லூது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

நபியவர்களின் நேர்மை, நாணயத்தைப் புகழலாம்! அவர்களின் கூரிய அறிவைப் புகழலாம்.

அவர்களின் வீரத்தைப் புகழலாம், தன்னலமற்ற அவர்களின் தியாகத்தையும் சேவையையும் புகழலாம்.

அவர்களின் எளிமையான வாழ்வையும் அடக்கத்தையும் பணிவையும் புகழலாம். பொறுமையைப் புகழலாம்.

மவ்லூதுப் பாடல்களில் இத்தகைய புகழ்ச்சி எதனையும் காண முடியாது. பிறர் பின்பற்றத்தக்க இந்த நற்பண்புகளைக் கூறிப் புகழ்ந்தால் அதைக் கேட்கும் மக்கள் புகழ்பவரிடம் அந்தப் பண்புகள் சிறிதளவாவது இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். நபியவர்களின் வாழ்வை ஓரளவாவது பின்பற்றக் கூடியவர்கள் மட்டுமே இது போன்ற பண்புகளைக் கூறிப் புகழத் தகுதி படைத்தவர்கள்.

இந்தத் தகுதிகள் சிறிதளவும் இல்லாத வீணர்கள், பின்பற்ற முடியாத விஷயங்களைப் புகழ் என்று அறிமுகம் செய்தனர். இதனால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறக்கும் போது கத்னா செய்யப்பட்டிருந்தார்கள்;  அவர்கள், வயிற்றைக் கிழித்துப் பிறந்தார்கள்;அவர்களின் பாதம் தரையில் படாது; அவர்கள் மீது வெயில் படாது; அவர்களின் மலஜலம் பரிசுத்தமானது என்றெல்லாம் பொய்களைக் கூறிப் புகழலானார்கள். இதைக் கூறுவதால் கூறக்கூடியவரிடமே இவை இருக்க வேண்டும் என எவரும் எதிர்பார்க்க மாட்டார்கள் அல்லவா?

அது போல் அல்லாஹ்வுக்குரிய தகுதிகள் நபியவர்களுக்கு இருப்பதாக இட்டுக்கட்டியதும் இதே காரணத்துக்காகத் தான். மலைப்பை ஏற்படுத்துவதும் அதன் மூலம் ஆதாயம் பெறுவதுமே இவர்களின் நோக்கமாக இருந்ததால் தான் இந்த இரண்டு வகைகளில் புகழ்ந்தார்கள். எந்த மவ்லூதுப் பாடலிலும் இந்த இரண்டு வகையான புகழ்ச்சி மட்டுமே இருப்பதை நாம் காணலாம். பிறர் பின்பற்றத்தக்க அவர்களின் தூய வாழ்க்கையைப் பற்றி எந்தப் புகழ்ச்சியையும் மவ்லூதில் காண முடியாது. இதிலிருந்து மவ்லூது பாடியவர்களின் உள்நோக்கத்தை நாம் அறியலாம்.

திருக்குர்ஆனுக்கும், நபிவழிக்கும் முரண்பட்டுள்ள மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ள இந்த மவ்லிதிலிருந்து விடுபடுவோம். உண்மை இஸ்லாத்தை நிலைநாட்டுவோம்.

www.onlinepj.in

முஹ்யித்தீன் மவ்லித் ஓர் ஆய்வு

 

 நூலின் பெயர் : முஹ்யித்தீன் மவ்லித் ஓர் ஆய்வு

ஆசிரியர் :பீ.ஜைனுல் ஆபிதீன்

மார்க்கத்தின் எச்சரிக்கை!

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும். இந்த இணைய தளத்தில் உள்ளவைகளைப் பிரச்சாரம் செய்வதற்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் சில சகோதரர்கள் நமது ஆக்கங்களை அப்படியே பயன்படுத்தி தமது ஆக்கம் போல் காட்டுகின்றனர்.

இன்னாருடைய கட்டுரையில் இருந்து, அல்லது புத்தகத்தில் இருந்து இது எடுக்கப்பபட்டது என்று குறிப்பிடாமல் புகழடைவதற்காக இவ்வாறு செய்கின்றனர்.

சில இணைய தளங்களும் என்னுடைய ஆக்கங்களை அப்படியே வெளியிட்டு தம்முடைய ஆக்கம் போல் காட்டுகின்றன.மேலும் சில புத்தக வியாபாரிகளும் எனது நூல் உட்பட மற்றவர்களின் நூல்களைச் சிறிது மாற்றியமைத்து அனாமதேயங்களின் பெயர்களில் வெளியிட்டுச் சம்பாதிக்கின்றனர். உலகைப் பற்றியும் இவர்களுக்கு வெட்கம் இல்லை. மறுமையைப் பற்றியும் பயம் இல்லை.

இஸ்லாத்தில் இவ்வாறு செய்ய அனுமதி இல்லை. இவர்கள் நல்லது செய்யப் போய் மறுமையின் தண்டனைக்கு தம்மைத் தாமே உட்படுத்திக் கொள்கின்றனர்.

பிறரது ஆக்கங்களைப் பயன்படுத்துவோர் இது இன்னாருடைய ஆக்கம் என்று குறிப்பிடாமல் தன்னுடைய ஆக்கம் போல் காட்டுவது மார்க்க அடிப்படையில் குற்றமாகும்.

இவர்களுக்கு அல்லாஹ் விடுக்கும் எச்சரிக்கையை இங்கே சுட்டிக் காட்டுகிறோம்.

தாங்கள் செய்தவற்றுக்காக மகிழ்ச்சியடைந்து, தாம் செய்யாதவற்றுக்காகப் புகழப்பட வேண்டுமென விரும்புவோர் வேதனையிலிருந்து தப்பித்து விட்டார்கள் என்று நீர் நினைக்காதீர்! அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.

திருக்குர்ஆன் 3:188

முஹ்யித்தீன் மவ்லித் ஓர் ஆய்வு

அற்புதங்களா? அபத்தங்களா?

காயல்பட்டிணத்தைச் சோர்ந்த மஹ்மூத் என்பவரால் சில ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டதே முஹ்யித்தீன் மவ்லிது.

அப்துல் காதிர் ஜீலானி அவர்களை அல்லாஹ்வின் தூதருக்கு நிகராகவும், அல்லாஹ்வின் தூதரை விடச் சிறந்தவராகவும் காட்டும் வகையில் இந்த மவ்லிது அமைந்திருக்கிறது.

அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் சிறந்த மார்க்க மேதை. உயிர் பிரியும் வரை ஏகத்துவத்தை நிலைநாட்டப் போராடிய பெரியவர், இஸ்லாத்தின் மேன்மைக்காக உழைத்த மார்க்க சீலர் என்று நாம் அவரை மதிக்கிறோம். அவரது சேவையை மெச்சுகிறோம். ஆயினும் முஹ்யித்தீன் மவ்லிதின் சில வரிகள் அவரை அல்லாஹ்வுக்கு நிகராகக் காட்டும் வகையில் அமைந்திருக்கின்றன. அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் நிகழ்த்தியதாக இந்த மவ்லிதில் கூறப்படும் அற்புதங்கள் குர்ஆன், ஹதீசுடன் நேரடியாக மோதும் வகையில் அமைந்திருக்கின்றன.

இந்த மவ்லிதில் கூறப்படும் அற்புதங்களை ஒவ்வொன்றாக நாம் அலசுவோம்.

1 இடம் பிடித்துக் கொடுத்த வானவர்கள்

وهو سراج المصطفى * قال افسحوا أهل الصبا

له متى جا مكتبا * أملاك حفظ للعباد

இந்த மவ்லிதின் நான்காவது பாடலில் காணப்படும் வரிகள் இவை.

பொருள் வருமாறு:

இவர் நபி (ஸல்) அவர்களின் விளக்காவார். இவர் ஆரம்பப் பாடசாலைக்கு வந்த போது சிறுவர்களே இவருக்கு இடமளியுங்கள் என்று பாதுகாக்கும் வானவர்கள் இவரது சக மாணவர்களிடம் கூறினார்கள்.

இந்த மவ்லிதின் பாடல்களுக்கு விளக்கவுரையாக ஹிகாயத் எனும் உரை நடைப் பகுதி உள்ளது. அதில் இன்னும் விரிவாகப் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

நான் பத்து வயதுச் சிறுவனாக இருந்த போது அல்லாஹ்வின் நேசருக்கு இடமளியுங்கள் என்று என்னைச் சூழ இருந்த மாணவர்களிடம் அல்லாஹ்வின் அனுமதியுடன் வானவர்கள் கூறியதை நான் கேட்டேன் என்று அப்துல் காதிர் ஜீலானி கூறினார்.

இவ்வாறு உரை நடைப் பகுதியில் கூறப்படுகிறது.

அப்துல் காதிர் ஜீலானி அவர்களே இதைக் கூறினார்கள் என்றால் அவரது காலத்தில் எழுதப்பட்ட எந்த நூலில் இந்த நிகழ்ச்சி கூறப்பட்டிருக்கிறது? எந்த நூலிலும் கூறப்படவில்லை. அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் மரணித்த பின்னரே அவர்கள் பெயரால் இந்தக் கதை புனையப்பட்டது. இது ஒன்றே இது பொய்க் கதை என்பதற்குப் போதுமான சான்றாகும். இந்தக் கதையில் மறைந்து கிடக்கும் மற்றும் சில அபத்தங்களாலும் இது பொய் என்பது மேலும் உறுதியாகின்றது.

மலக்குகளை மனிதர்கள் காண முடியுமா?

மலக்குகள் மக்களுக்குத் தென்படும் வகையில் சர்வ சாதாரணமாக நடமாடிக் கொண்டிருக்க மாட்டார்கள். நபிமார்களின் காலத்தில் மலக்குகள் சில வேளை மனித வடிவில் வந்துள்ளனர். வந்தவர்கள் மலக்குகள் தாம் என்பதைத் தெளிவுபடுத்த நபிமார்கள் இருந்தனர்.

ஒரு முறை ஜிப்ரீல் (அலை) அவர்கள் மனித வடிவில் வந்தனர். வந்தவர் ஜீப்ரீல் தாம் என்று நபி (ஸல்) அவர்கள் விளக்குவதற்கு முன்னர் நபித்தோழர்கள் யாரும் அவர் ஜிப்ரீல் என அறிய முடியவில்லை என்பதை ஹதீஸ் நூல்கள் கூறுகின்றன.

பார்க்க: புகாரி 50, 4777

இந்தச் சமுதாயத்திலேயே மிகச் சிறந்தவர்களான நபித்தோழர்களுக்கே ஒரு வானவர் வந்ததை அறிய முடியவில்லை என்றால் அப்துல் காதிர் ஜீலானி எப்படி அறிந்து கொண்டார்? அவருக்கு இறைவனிடமிருந்து இது பற்றி வஹீ (இறைச் செய்தி) ஏதும் வந்ததா?

* நபிமார்கள் அல்லாதவர்கள் ஏதேனும் பிரமையில் மலக்கு நடமாடுவதாகக் கருதி விடலாம்.

* அல்லது ஷைத்தான்களின் நடமாட்டத்தைக் கண்டு மலக்குகள் என்று முடிவு செய்து விடக்கூடும்.

* அல்லது தனக்கு மதிப்பை அதிகப்படுத்திக் கொள்ள இவ்வாறு ஒருவர் பொய் கூறவும் கூடும்.

* அல்லது தமது தவறுகளை நியாயப்படுத்திட மலக்குகள் இவ்வாறு தம்மிடம் கூறியதாக ஒருவர் கதையளக்கவும் கூடும்.

வஹீயின் தொடர்பு இருப்பவர்கள் மட்டுமே, வந்தது மலக்குகள் தாம் என்பதை உறுதிப்படுத்திட முடியும். வஹீ (இறைச் செய்தி) என்னும் தொடர்பு இல்லாதவர் இவ்வாறு கூறும் போது அதை நம்பக் கூடாது.

உமக்கு அறிவு இல்லாததை நீ பின்பற்றாதே! செவி, பார்வை, உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப்படுபவை. (அல்குர்ஆன் 17.36) என்று அல்லாஹ் கூறுகிறான்.

மலக்குகளின் பணிகள்

வஹீயைக் கொண்டு வரவும், அல்லாஹ்வின் தண்டனையை நிறைவேற்றவும், நன்மை தீமைகளைப் பதிவு செய்யவும் மற்றும் பல பணிகளுக்காகவும் மலக்குகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்தந்த மலக்குகள் இறைவனால் நியமிக்கப்பட்ட பணிகளை மட்டுமே செய்வார்கள். எந்தப் பணிக்காக அவர்கள் நியமிக்கப்படவில்லையோ அதைச் செய்ய மாட்டார்கள்.

அவர்கள் அவனை முந்திப் பேச மாட்டார்கள். அவனது கட்டளைப்படியே செயல்படுவார்கள்.

(அல்குர்ஆன் 21.27)

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள்.

(அல்குர்ஆன் 66.6)

வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ள உயினங்களும், வானவர்களும் அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்கின்றனர். வானவர்கள் பெருமையடிக்க மாட்டார்கள். தமக்கு மேலே இருக்கும் தமது இறைவனை அவர்கள் அஞ்சுகின்றனர். கட்டளையிடப்பட்டதைச் செய்கின்றனர்.

(அல்குர்ஆன் 16.49, 50)

கண்காணிப்புப் பணியில் உள்ள மலக்குகள் அப்துல் காதிர் ஜீலானிக்காக பராக் கூறியதாக இந்தக் கதை கூறுகிறது. கண்காணிப்புப் பணியில் உள்ள மலக்குகளுக்கு இப்படி ஒரு பணி ஒதுக்கப்படவில்லை.

மனிதனுக்கு முன்னரும், பின்னரும் தொடர்ந்து வருவோர் (வானவர்) உள்ளனர். அல்லாஹ்வின் கட்டளைப்படி அவனைக் காப்பாற்றுகின்றனர். தம்மிடம் உள்ளதை ஒரு சமுதாயம் மாற்றிக் கொள்ளாத வரை அச்சமுதாயத்தில் உள்ளதை அல்லாஹ் மாற்ற மாட்டான். ஒரு சமுதாயத்திற்கு அல்லாஹ் தீங்கை நாடும் போது அதைத் தடுப்போர் இல்லை. அவர்களுக்கு அவனன்றி உதவி செய்பவரும் இல்லை.

(அல்குர்ஆன் 13.11)

அவனே தனது அடியார்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவன். உங்களுக்குப் பாதுகாவலர்களை அவன் அனுப்புகிறான். எனவே உங்களில் ஒருவருக்கு மரணம் ஏற்படும் போது நமது தூதர்கள் அவரைக் கைப்பற்றுகிறார்கள். அவர்கள் (அப்பணியில்) குறை வைக்க மாட்டார்கள்.

(அல்குர்ஆன் 6:61)

ஒவ்வொரு ஆத்மாவுக்கும் ஒரு பாதுகாவலர் இல்லாமலில்லை.

(அல்குர்ஆன் 86.4)

நிச்சயமாக உங்கள் மீது பாதுகாவலர்கள் உள்ளனர். அவர்கள் கண்ணியமிக்க எழுத்தர்கள். நீங்கள் செய்பவற்றை அவர்கள் அறிகிறார்கள்.

(அல்குர்ஆன் 82.10)

மனிதர்கள் செய்யும் நன்மை தீமைகளைப் பதிவு செய்வதும், அல்லாஹ்வின் கட்டளைப்படி மனிதர்களைப் பாதுகாப்பதும் ஆகிய இரண்டு பணிகள் மட்டுமே பாதுகாப்புப் பணியிலுள்ள மலக்குகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. அப்துல் காதிர் ஜீலானிக்கு மட்டுமின்றி ஒவ்வொரு மனிதருக்கும் இத்தகைய மலக்குகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதை இவ்வசனங்களிலிருந்து அறியலாம்.

அப்துல் காதிர் ஜீலானியைக் கண்காணித்து அவரது நன்மை தீமைகளைப் பதிவு செய்யக் கடமைப்பட்ட மலக்குகள் அவருக்கு பராக் சொல்லிக் கொண்டிருந்தார்கள் என்றும், பள்ளிக்கூடத்தில் இடம் பிடித்துக் கொடுத்தார்கள் என்றும் கூறும் இந்தக் கதை மேற்கண்ட வசனங்களுடன் நேரடியாக மோதுகின்றது. இந்தக் கதை பொய் என்பதற்கு இதுவும் சான்றாக அமைந்துள்ளது.

அல்லாஹ்வின் நேசர் யார்?

அல்லாஹ்வின் நேசருக்கு இடம் கொடுங்கள் என்று மலக்குகள் கூறியதாக இந்தக் கதையில் கூறப்படுகின்றது.

கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். அவர்கள் (இறைவனை) நம்புவார்கள். (அவனை) அஞ்சுவோராக இருப்பார்கள்.

(அல்குர்ஆன் 10.62,63)

இறையச்சத்தின் மூலமே ஒருவர் இறை நேசராக முடியும். இறையச்சம் என்பது பருவ வயதை அடைந்த பின் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி, அவனது விலக்கல்களிலிருந்து விலகி நடப்பதால் தான் ஏற்படும். பருவ வயதை அடையாத சிறுவர்கள் குறித்து இறை நேசர்கள் என்றோ இறை நேசர்கள் இல்லை என்றோ கூற முடியாது.

பத்து வயதுப் பாலகரான அப்துல் காதிர் ஜீலானியை இறை நேசர் என்று மலக்குகள் நிச்சயம் கூறியிருக்க முடியாது. ஒருவர் விபரமறிந்து தமது நடத்தையின் மூலமாகத் தான் இறை நேசராக ஆக முடியும் என்பதற்கு மாறாக, பிறப்பால் இறை நேசராகி விட்டதாக இந்தக் கூற்று தெவிக்கின்றது. இந்தக் காரணத்தினாலும் இது பொய் என்பது மேலும் உறுதியாகின்றது.

அப்துல் காதிர் ஜீலானியை உயர்த்துவதற்காக மலக்குகளின் பெயரைப் பயன்படுத்திக் கதையளந்துள்ளனர் என்பதே உண்மை. இது போல் இன்னும் பல கதைகள் உள்ளன.

2 கைக்குழந்தை நோற்ற நோன்பு

முஹ்யித்தின் மவ்லிதில் இடம் பெற்றுள்ள மற்றொரு அற்புதக் கதையைப் (?) பார்ப்போம்.

اذ غم غرة الصيام *قالت لهم ذات الفطام

لم يلقم اليوم الغلام * ثديا لها اهل المراد

அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் கைக்குழந்தையாக இருந்த போது மேகம் பிறையை மறைத்து, ஷஃபான் மாதத்தின் கடைசி நாளா? ரமளான் மாதத்தின் முதல் நாளா? என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டது. உடனே மக்கள் அப்துல் காதிர் ஜீலானியின் தாயாடம் சென்று விளக்கம் கேட்டனர். அதற்கவர் எனது மகன் இன்று எனது மார்பகத்தைச் சுவைக்கவில்லை என்று கூறினாராம்.

அதாவது ரமளானின் முதல் நாள் என்பதால் தாய்ப்பால் அருந்தாமல் அந்தக் குழந்தை நோன்பிருந்ததாம். மக்களும் இதை ஆதாரமாகக் கொண்டு அந்த நாள் ரமளானின் முதல் நாள் தான் என்று முடிவு செய்தார்களாம்.

நோன்பின் தலைப் பிறை மேகத்தில் மறைந்த போது அப்துல் காதிர் ஜீலானியின் தாயார் மக்களை நோக்கி எனது மகன் எனது மார்பகத்தைச் சுவைக்கவில்லை என்று கூறினார்.

மவ்லிதின் இந்த வரிகளுக்கு ஹிகாயத் என்னும் பகுதி பின்வருமாறு விளக்கம் தருகின்றது.

என் மகன் ரமளான் மாதம் முழுவதும் ரமளானின் தலைப்பிறை மேகத்தில் மறைந்தது. இது குறித்து மக்கள் என்னிடம் கேட்டனர். நான் அவர்களிடம் என் மகன் இன்று எனது மார்பகத்தைச் சுவைக்கவில்லை எனக் கூறினேன். பின்னர் அது ரமளானின் முதல் நாள் என்பது தெளிவாயிற்று என்று அப்துல் காதிர் ஜீலானியின் தாயார் ஃபாத்திமா கூறினார்.

இந்தக் கதையில் ஏராளமான அபத்தங்களும், மார்க்க முரண்களும் மலிந்துள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக நாம் அலசுவோம்.

இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்திருந்தால் இந்த ஆச்சர்யமான(?) நிகழ்ச்சியை அன்றைய மக்கள் அனைவரும் அறிந்திருப்பார்கள். அப்துல் காதிர் ஜீலானியின் காலத்திலோ, அதற்கடுத்த காலத்திலோ எழுதப்பட்ட நூல்களில் இது குறிப்பிடப்பட்டிருக்கும். அவர்கள் மரணித்து பல ஆண்டுகளுக்குப் பின் எழுதப்பட்ட மவ்லிது போன்ற ஆதாரமற்ற நூற்களில் மட்டுமே இந்த விபரம் குறிப்பிடப்படுகின்றது.

நோன்பு உள்ளிட்ட சட்டங்கள் பருவ வயது வந்தவருக்குரியவை. அந்த வயதுக்கு முன் எவ்விதமான கடமையும் கிடையாது. நோன்பைப் பொறுத்தவரை, பருவ வயதை அடைந்தவர்களிலும் சிலருக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது. முதியவர்கள், நோயாளிகள், பயணிகள், பாலுட்டும் அன்னையர், கர்ப்பிணிகள் போன்றோர் நோன்பைப் பின்னர் நோற்கலாம் எனச் சலுகை வழங்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கைக்குழந்தைக்கு நோன்பு என்பது கற்பனை செய்ய முடியாததாகும்.

அப்துல் காதிர் ஜீலானி பிறவியிலேயே இறை நேசராகத் திகழ்ந்தார் என்று வாதத்துக்காக ஏற்றுக் கொண்டாலும் இந்தக் கதையை ஏற்க முடியாது. இறை நேசர் என்பவர் இறைவனின் மார்க்கத்தை நன்றாக அறிந்திருக்க வேண்டும். குழந்தைகளுக்கு நோன்பு இல்லை என்ற சட்டத்தைக் கூட அறியாதவர் எப்படி இறை நேசராக இருக்க முடியும்? இவ்வாறு சிந்திக்கும் போதும் இது இட்டுக்கட்டப்பட்ட பொய் என்பதை அறியலாம்.

முதல் பிறையை மேகம் மறைத்தால் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளனர்.

நீங்கள் பிறை கண்டு நோன்பு இருங்கள். (அடுத்த) பிறை கண்டு நோன்பை விடுங்கள். மேகம் மூடிக் கொள்ளுமானால் (முதல் மாதத்தை) முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள் என்பது நபி (ஸல்) காட்டிய வழிமுறை.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : புகாரி 1909

மேக மூட்டம் காரணமாகப் பிறை தென்படாவிட்டால் அந்த நாளை முதல் மாதத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்; ரமளான் என்று முடிவு செய்யக் கூடாது என்பதை இந்த ஹதீஸ் தெளிவாகக் கூறுகின்றது.

மவ்லிது அபிமானிகளாகிய மத்ஹப்வாதிகள் உட்பட அனைவரும் அறிந்த, ஏற்றுக் கொண்ட உண்மை இது. மார்க்கத்தில் ஈடுபாடும் மற்றும் மார்க்க அறிவும் குறைந்து காணப்படும் இந்தக் காலத்து மவ்லவிகள் கூட அறிந்து வைத்திருக்கின்ற சட்டம் இது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த இந்தச் சட்டம் மார்க்க அறிவு நிறைந்திருந்த அந்தக் காலத்து மக்களுக்குத் தெரியவில்லையாம்! பிறவியிலேயே(?) இறை நேசராகத் திகழ்ந்த அப்துல் காதிர் ஜீலானிக்கும் இந்தச் சட்டம் தெரியவில்லையாம்!.

மேகத்திற்குள் மறைந்திருந்த பிறையைக் கண்டுபிடித்த அப்துல் காதிர் ஜீலானிக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறை தெரியவில்லை என்பது அப்துல் காதிர் ஜீலானிக்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை.

இந்தக் கதையை நம்பினால் ஏற்படும் விளைவுகளை மவ்லிது அபிமானிகள் சிந்திப்பார்களா?

க்ஷி  அப்துல் காதிர் ஜீலானி காலத்தில் வாழ்ந்த மக்கள் மார்க்க அறிவற்ற மூடர்களாக இருந்துள்ளனர். (இத்தகைய மூடர்களிடம் தான் பிற்காலத்தில் அப்துல் காதிர் ஜீலானி கல்வி கற்றதாகவும் கதை உள்ளது)

க்ஷி  அப்துல் காதிர் ஜீலானிக்கு நபிவழி தெயவில்லை;

க்ஷி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறைக்கு நேர் முரணான வழியை மக்களுக்குக் காட்டி மக்களை அவர் வழிகெடுத்தார்

க்ஷி  அவரது தாயாரும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளார்.

இவ்வாறு நம்பத் தயாராக இல்லாவிட்டால் இந்தக் கதையையும் அதைக் கூறுகின்ற முஹ்யித்தீன் மவ்லிதையும் தூக்கி எறிய வேண்டும்.

மவ்லிது அபிமானிகளே! இந்த மவ்லிதைத் தூக்கி எறிந்து விட்டு அப்துல் காதிர் ஜீலானிக்குப் பெருமை சேர்க்கப் போகிறீர்களா? அல்லது இந்த மவ்லிதைத் தூக்கிப் பிடித்து அப்துல் காதிர் ஜீலானி அவர்களை இழிவுபடுத்தப் போகிறீர்களா?

3 அப்துல் காதிர் ஜீலானியிடம் முறையிட்ட ஷரீஅத்

முஹ்யித்தின் மவ்லிதில் இடம் பெற்றுள்ள மற்றொரு அபத்தமான கதையைப் பார்ப்போம்.

قال اخرجن لابن الحمام *من ضلع بغداد المقام

لما شكا الدين القوام *مع سلب حاله السداد

 وكلما رام الدخول *خر فمن له حمول

يا طالب اسمع ما يقول *فيه ثقات باستناد

அப்துல் காதிர் ஜீலானி அவர்களிடம் இப்னுல் ஹமாம் என்பாரைப் பற்றி தீன் (மார்க்கம்) முறையிட்ட போது அவரை பாக்தாதை விட்டும் வெளியேறச் சொன்னார்கள். அவர் பாக்தாதில் நுழைய நாடும் போதெல்லாம் குப்புற விழுந்து விடுவார். அவரைச் சுமந்து வருபவர்களும் விழுந்து விடுவார்கள். (நல்லதைத்) தேடுபவனே நம்பகமானவர்கள் சான்றுடன் கூறுவதைச் செவிதாழ்த்திக் கேள் என்பது இந்தக் கவிதை வரிகளின் பொருள்.

கதை என்னவென்று விளங்கவில்லையா? கவலையை விடுங்கள்! மவ்லிதின் விளக்கவுரையாக உள்ள ஹிகாயத் பகுதி கவலையை நீக்குகின்றது. இந்தக் கதையை விளக்கமாக ஹிகாயத் எடுத்துரைக்கிறது.

عن أبى الحسن بن علي أن ابا بكر الحمامي كان من ذوى الاحوال الرضية والافعال المرضية وقال له الشيخ رضي الله عنه الشريعة تشكو منك بما اعتديت منها فنهاه عن امور فلم ينته عنها فامر على صدره كفه وما احتفه

فسلبت حاله وخرج الى العراق سريعا وكلما هم بدخول بغداد سقط لوجهه صريعا وان حمله احد ليدخله به سقطا جميعا وكان بينه وبين الشيخ المظفر رابطة المحبة فرأى ربه يوما فى واقعة الجذبة فقال الله تعالى له تمن علي يا ابا مظفر فقال يارب اتمنى رد حال ابي بكر المقصر فقال الله تعالى له ذلك عند وليي فى الدارين عبد القادر

அபூபக்கர் அல்ஹமாம் என்பவர் இறைவனால் திருப்தி கொள்ளப்பட்ட நிலையுடையவராகவும் இறைவனால் திருப்தி கொள்ளப்பட்ட செயல்கள் உடையவராகவும் இருந்தார். அவரிடம் அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் நீ வரம்பு மீறியதால் உன்னைப் பற்றி ஷரீஅத் என்னிடம் முறையிடுகிறது என்று கூறினார்கள். மேலும் சில காரியங்களை விட்டும் அவரைத் தடுத்தார்கள். அவர் தவிர்த்துக் கொள்ளவில்லை. அவரது நெஞ்சில் கையை வைத்து அபூபக்கரே பாக்தாத்தை விட்டும், அதன் சுற்றுப்புறத்தை விட்டும் வெளியேறு என்றும் கூறினார்கள்.

உடனே அவரது (விலாயத்) நிலை நீக்கப்பட்டது. அவர் இராக்கை நோக்கி விரைந்தார். அவர் பாக்தாதில் நுழைய முயன்றபோதெல்லாம் முகம் குப்புற வீழ்ந்தார். அவரைப் பாக்தாதுக்குள் கொண்டு வர யாரேனும் அவரைச் சுமந்து வந்தால் இருவரும் சேர்ந்து விழுவார்கள்.

அபூபக்கர் அல்ஹமாம் என்பவர் இறைவனால் திருப்தி கொள்ளப்பட்ட நிலையுடையவராகவும் இறைவனால் திருப்தி கொள்ளப்பட்ட செயல்கள் உடையவராகவும் இருந்தார் என்று மேற்கண்ட கதையில் கூறப்படுகிறது. ஒருவர் இறைவனால் பொருந்திக் கொள்ளப்பட்டவரா? இல்லையா? என்பது இறைவனுக்கு மட்டுமே தெரிந்த, இறைவனைத் தவிர எவராலும் அறிந்து கொள்ள முடியாத இரகசியமாகும்.

தூதர்களில் நான் புதியவன் அல்லன். எனக்கோ, உங்களுக்கோ என்ன செய்யப்படும் என்பதை அறிய மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்றவில்லை. நான் தெளிவாக எச்சரிக்கை செய்பவனே தவிர வேறில்லை  எனக் கூறுவீராக!

(அல்குர்ஆன் 46:9)

நபிகள் நாயகத்தை மேற்கண்டவாறு இறைவன் கூறச் சொல்கிறான் என்றால் அபூபக்கர் அல்ஹம்மாம் என்பவர் இறைவனால் திருப்தி கொள்ளப்பட்ட நிலையுடையவர் என்பது எப்படித் தெரிந்தது?

இறைவனால் திருப்தி கொள்ளப்பட்ட நிலையுடையவரைப் பற்றி ஷரீஅத் எப்படி முறையிடும்?

ஷரீஅத் என்பது பகுத்தறிவுள்ள மனிதனா? அப்படியே முறையிடுவதாக இருந்தாலும் ஷரீஅத்துக்குச் சொந்தக்காரனாகிய அல்லாஹ்விடம் முறையிடாமல் இவரிடம் ஏன் முறையிட்டது?

 இம்மார்க்கம் முழுமையாக அல்லாஹ்வுக்கே உரியது  என்று கூறுவீராக!

(அல்குர்ஆன் 3:154)

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது.

(அல்குர்ஆன் 39:3)

ஷரீஅத்துக்கு முரணான செயலைச் செய்பவர் பாக்தாதை விட்டும் வெளியேற வேண்டும் என்றால் பக்தாதில் ஷரீஅத்துக்கு மாற்றமாக எவருமே நடக்கவில்லையா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஷரீஅத்துக்கு மாற்றமான காரியங்களைச் செய்பவர்கள் மதீனாவில் இருந்தனர்; முனாபிக்குகள் இருந்தனர்; யூதர்களும் இருந்தனர். அவர்களை எல்லாம் மதீனாவை விட்டு வெளியேறுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிடாத போது இவருக்கு என்ன அதிகாரம் உள்ளது? பக்தாத் நகரம் மக்கா, மதீனா போன்ற புனித நகரமா? இப்னுல் ஹம்மாம் தஜ்ஜாலா?

பொய் தன்னைத் தானே அடையாளம் காட்டிப் பல்லிளிப்பதைப் பாருங்கள்!

4 அல்லாஹ்வைக் கண்ட முளப்பர்

وكان بينه وبين الشيخ المظفر رابطة المحبة فرأى ربه يوما فى واقعة الجذبة فقال الله تعالى له تمن علي يا ابا مظفر فقال يارب اتمنى رد حال ابي بكر المقصر فقال الله تعالى له ذلك عند وليي فى الدارين عبد القادر

முளப்பர் எனும் பெரியாருக்கும் மேற்கண்ட அபூபக்ர் என்பாருக்கும் இடையே நட்பு இருந்தது. ஜத்பு (தன்னை மறந்த நிலை) ஏற்பட்ட போது முளஃப்பர் அவர்கள் அல்லாஹ்வைக் கண்டார்கள். அப்போது அவரிடம் முளஃப்பரே நீ விரும்பியதைக் கேள் என்று அல்லாஹ் கூறினான். குற்றம் செய்த அபூபக்ரை அவருடைய பழைய நிலைக்கு நீ மாற்ற வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன் என்று முளஃப்பர் கூறினார். அதற்கு இறைவன் அந்த அதிகாரம் இரு உலகிலும் எனது நேசரான அப்துல் காதிரிடம் தான் அந்த அதிகாரம் உள்ளது என்று கூறினான்.

பக்தி முற்றிப் போய் தன்னிலை மறப்பதை ஜத்பு என்று கூறுகிறார்கள். இத்தகைய நிலை இஸ்லாத்தில் உண்டா? நிச்சயமாக இல்லை.

அல்லாஹ்வின் நினைவில் அதிகமாக ஊறிய நபிமார்கள் ஜத்பு நிலையை அடைந்ததில்லை. நபித்தோழர்களும் ஜத்பு நிலையை அடைந்ததில்லை.

அல்லாஹ்வின் நினைவு பைத்தியத்தைத் தெளிவிக்குமே தவிர பைத்தியம் பிடிக்குமளவுக்கு யாரையும் கொண்டு செல்லாது.

இவருக்கோ ஜத்பு எனும் பைத்தியம் ஏற்பட்டதாம். அந்த ஜத்பு நிலையில் அவர் அல்லாஹ்வைப் பார்த்தாராம். எந்த மனிதனும் இவ்வுலகில் அல்லாஹ்வைக் காண முடியாது என்று திருக்குர்ஆனும் நபிமொழிகளும் திட்டவட்டமாகக் குறிப்பிடுகின்றன.

எந்தப் பார்வைகளும் அவனை அடைய முடியாது.

(அல்குர்ஆன் 6.103) என்று அல்லாஹ் கூறுகிறான்.

மூஸா நபியால் அல்லாஹ்வைப் பார்க்க இயலவில்லை என்பதை அல்குர்ஆன் 7.143 வசனம் கூறுகிறது.

அவனோ ஒளிமயமானவன், அவனை எப்படி நான் காண முடியும்? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

(முஸ்லிம் 261)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் பார்த்ததாக எவன் சொல்கிறானோ அவன் பொய் கூறி விட்டான் என ஆயிஷா (ரலி) கூறியுள்ளனர்.

(புகாரி 4855)

யாரும் இறைவனை இவ்வுலகில் காண முடியாது என்பதற்கு இவை சான்றுகள். இந்தச் சான்றுகளுக்கு மாற்றமாக இந்தப் பெயார் அல்லாஹ்வைப் பார்த்ததாக மவ்லிது எழுதியவர் கதை விடுகிறார்.

மனிதர்களுடன் எவற்றைப் பேச அல்லாஹ் விரும்பினானோ அவற்றையெல்லாம் குர்ஆனாக வழங்கி விட்டான். எவரிடமும் இறைவன் பேச வேண்டிய எந்தத் தேவையும் கிடையாது என்ற சாதாரண அறிவு கூட மவ்லிதை எழுதியவருக்கு இல்லை.

நபியவர்களோ அல்லாஹ்வை நேரடியாகக் காணவில்லை. முளப்பர் என்பாரிடம் அல்லாஹ்வே நேரடியாகப் பேசினான் என்றால் நபியவர்களை விடவும் இவர் சிறந்தவராகி விடுகிறார். நபியவர்களை விடவும் இறைத் தொடர்பு அதிகமுடையவராக இருக்கிறார் என்று ஆகின்றது. நபிகள் நாயகத்தை விட ஒருவனுடைய ஆன்மீகச் சிறப்பை உயர்த்திச் சொல்கின்ற, குர்ஆனுடனும் நபிமொழிகளுடனும் நேரடியாக மோதுகின்ற இந்த மவ்லிதை வாசிப்பதால் பாவம் தான் ஏற்படும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

அல்லாஹ்விடம் முளப்பர் ஒரு கோரிக்கையை எடுத்து வைக்கிறார். அந்த அதிகாரம் எனக்கு இல்லை. அப்துல் காதிருக்கே உரியது என்று அல்லாஹ் கூறிவிட்டான் என்று இந்தக் கட்டுக்கதை கூறுகிறது என்றால் இவர்களின் சூழ்ச்சி நமக்குத் தெளிவாகத் தெரிந்து விடுகின்றது.

மன்னிக்கும் அதிகாரம் தனக்கேயுரியது என்று இறைவன் உரிமை கொண்டாடுவதைத் திருக்குர்ஆனில் காண்கிறோம்.

அவர்கள் வெட்கக்கேடானதைச் செய்தாலோ, தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே அவர்கள் நிலைத்திருக்க மாட்டார்கள்.

(அல்குர்ஆன் 3:135)

அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுவீராக! அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

(அல்குர்ஆன் 4:106)

இந்த அதிகாரத்தை அவன் எவருக்கும் பங்கிட்டு கொடுக்கவில்லை. நபியவர்கள் கூட அல்லாஹ்விடம் தான் பாவமன்னிப்புத் தேடியுள்ளனர்.

இந்தக் கதையோ மன்னிக்கும் அதிகாரம் அப்துல் காதிர் ஜீலானிக்கு உரியது எனக் கூறுகிறது. அல்லாஹ்வுக்கும் மேல் அப்துல் காதிரை சூப்பர் பவர் உடையவராக இக்கதை காட்டுகிறது. ஆம் இந்த மவ்லிதை எழுதியவர்களின் திட்டம் அது தான்.

அல்லாஹ்வை ஒன்றுமற்றவனாக்கி அவனது நபிமார்களையும் தாழ்த்தி, அவர்களை விட அப்துல் காதிர் ஜீலானி உயர்ந்தவர், ஆற்றலுள்ளவர் என்று காட்டுவது தான் அவர்களின் திட்டம். அதற்குத் தான் அல்லாஹ்வின் பெயரைப் பயன்படுத்தி அவன் மீது இட்டுக்கட்டியுள்ளனர்.

அல்லாஹ்வின் பெயரால் இட்டுக்கட்டப்படுபவனை விட அநியாயக்காரன் யாருக்க முடியும்?

(அல்குர்ஆன் 6.21)

இந்த வசனத்தின் படி மிகப்பெரிய அக்கிரமக்காரன் ஒருவனே இந்த மவ்லிதை எழுதியிருக்க வேண்டும் என்று கூறலாம்.

இதன் பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் முளஃஃபரிடம் வந்து பின் வருமாறு கூறியதாகவும் கதை விட்டுள்ளனர்.

இதன் பின்னர் முளப்பரிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முளப்பரே எனது பிரதிநிதி அப்துல் காதிரிடம் செல்வீராக. எனது துய மார்க்கத்திற்காகவே அபூபக்கரை வெறுக்கிறீர். இப்போது அவரை நான் மன்னித்து விட்டேன். எனவே அவரிடமிருந்து பிடுங்கிக் கொண்ட நல்ல நிலையைத் திரும்பக் கொடுத்து விடுவீராக என்று உமது பாட்டனார் கூறினார் என்று தெரிவிப்பீராக என்றனர்

என்று இந்த மவ்லிதை எழுதியவர் கதை விடுகிறார்.

அபூபக்கர் என்பாரின் நல்ல நிலையைப் பிடுங்கியதே அப்துல் காதிர் தானாம். அல்லாஹ்வின் ராஜ்ஜியத்திற்குள் இவர் தனியொரு ராஜ்ஜியமே நடத்தியிருக்கிறார் என்றும் இந்தக் கதை கூறுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை யார் நேரடியாகப் பார்த்தார்களோ அவர்கள் மட்டுமே கனவிலும் பார்க்க முடியும். யார் என்னைக் கனவில் காண்கிறாரோ விழிப்பிலும் என்னைக் காண்பார் என்ற நபிமொழியிலிருந்து இதை அறியலாம்.

(புகாரி 6993)

நபியவர்கள் காலத்தில் வாழாத ஒருவர், அவர்களை நேரில் பார்த்திராத ஒருவர், அவர்களுக்கு ஐநூறு வருடங்களுக்குப் பின்னர் வாழ்ந்த ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பார்த்ததாகக் கூறினால் அது வடிகட்டிய பொய் என்பதில் ஐயமில்லை. மேலும் அல்லாஹ் மன்னிக்காத ஒருவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மன்னித்ததாகக் கூறி, குர்ஆனையும் ஹதீஸையும் அவமதிக்கிறார்கள்.

அப்துல் காதிர் ஜீலானியைக் கடவுளாகவும், கடவுளின் அவதாரமாகவும் சித்தரித்திருப்பது இதிலிருந்து தெளிவாக விளங்குகிறது. நபியவர்களை விடவும் அவரை உயர்த்த எவ்வளவு கீழ்த்தரமான கற்பனையில் இறங்கியுள்ளனர்? எத்தனை குர்ஆன் வசனங்களை நிராகரித்துள்ளனர்? எத்தனை நபிமொழிகளை அலட்சியப்படுத்தியுள்ளனர்?

இவ்வளவு அபத்தங்கள் நிறைந்த மவ்லிதைப் படிப்பதால் நன்மை கிட்டுமா? பாவம் சேருமா சிந்தியுங்கள்.

முஹ்யித்தின் மவ்லிதில் கூறப்படும் மற்றொரு அதியற்புதக் கதையைக் கேளுங்கள்.

5 மார்க்கம் மரணப் படுக்கையில்

رأى بفج سقيما *منه ابتغى أن يقيما

لما غدا مستقيما *ناداه أن يا قوامي

إني لدين الرشاد *أحييتني كي ينادي

لكم به كل نادي *يا محيي الدين حامي

முஹ்யித்தின் மவ்லிதில் உள்ள ஐந்தாம் பாடலின் சில வரிகள் இவை. இதன் பொருள் வருமாறு.

அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் ஒரு நோயாளியைக் கண்டார்கள். அந்த நோயாளி தம்மை எழுப்பி விடுமாறு அப்துல் காதிர் ஜீலானியைக் கேட்டுக் கொண்டார். எழுந்து நின்றதும், என்னை நிலை நிறுத்தியவரே நான் தான் நேரான மார்க்கம் என்னை உயிர்ப்பித்து விட்டீரே! முஹ்யித்தீனே (இம்மார்க்கத்தை உயிர்ப்பித்தவரே) என்று அந்த நோயாளி கூறினாராம்.

இந்தப் பாடல் வரிகளில் கூறப்பட்ட இந்தக் கற்பனைக் கதை ஹிகாயத் என்ற பகுதியில் மிகவும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அதையும் பார்த்து விட்டு இதன் அபத்தங்களை அலசுவோம்.

முஹ்யித்தீன் (இம்மார்க்கத்தை உயிர்ப்பித்தவர்) என்று உங்களுக்குப் பட்டம் கிடைக்கக் காரணம் என்ன? என்று அப்துல் காதிர் ஜீலானியிடம் கேட்கப்பட்டது. நாங்கள் பாக்தாத்துக்குச் செருப்பணியாமல் திரும்பி வந்த போது வழியில் நிறம் மாறிய நோயாளி ஒருவரைக் கண்டேன். அவர் எனக்கு ஸலாம் கூறினார். நானும் அவருக்கு ஸலாம் கூறினேன். என்னை உட்காரச் செய்யுங்கள் என்று அவர் கூறினார். நான் உட்கார வைத்தேன். அவரது உடல் வளர்ந்து நல்ல நிறத்துக்கு வந்தது. நான் யாரெனத் தெயுமா? என்று அவர் கேட்டார். நான் தெரியாது என்றேன். அதற்கவர் நான் தான் இஸ்லாமிய மார்க்கம். நான் பலவீனப்பட்டிருந்தேன். உம் மூலம் அல்லாஹ் எனக்கு உயிரூட்டினான். எனவே நீர் தாம் முஹ்யித்தீன் (இம்மார்க்கத்தை உயிர்ப்பித்தவர்) என்று கூறினார்.

உடனே நான் பள்ளிக்கு வந்தேன். அங்கே ஒருவர் எனக்காகச் செருப்பை எடுத்து வைத்து என் தலைவரே! முஹ்யித்தீனே! எனக் கூறினார். தொழுது முடிந்ததும் மக்களெல்லாம் என்னை நோக்கி விரைந்து வந்து என் கையை முத்தமிட்டு முஹ்யித்தீனே என்று கூறினார்கள். வலப்புறம், இடப்புறம் மற்றும் எல்லாத் திசைகளிலிருந்தும் மக்கள் வந்து இவ்வாறு என்னை அழைத்தார்கள். அந்த நேரத்துக்கு முன்பு வரை என்னை யாரும் இந்தப் பெயரில் அழைத்ததில்லை என்று அப்துல் காதிர் ஜீலானி கூறினார்கள்.

அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் வாழ்க்கையில் இத்தகைய நிகழ்ச்சி நடந்திருந்தால் இது மிகவும் முக்கியமான நிகழ்ச்சியாகும். இதை அவர்கள் தமது நூலில் குறிப்பிடாமல் இருந்திருக்க மாட்டார்கள். தமது உரைகளிலும் இதைத் தெரிவிக்கத் தவறியிருக்க மாட்டார்கள். அவர்களின் குன்யதுத் தாலிபீன் நூலிலோ, புதுகுல் கைப், அல்ஃபத்குர் ரப்பானி ஆகிய அவர்களின் உரைத் தொகுப்புக்களிலோ இந்த அற்புத நிகழ்ச்சி(?) கூறப்படவில்லை. அவர்களின் காலத்தில் மற்றவர்கள் எழுதிய நூற்களிலும் இந்த விபரம் கூறப்படவில்லை. அப்துல் காதிர் ஜீலானிக்குப் புகழ் சேர்க்கும் எண்ணத்தில் பிற்காலத்தவர்கள் திட்டமிட்டு இட்டுக்கட்டிக் கூறியுள்ளனர் என்பதை இதிலிருந்து சந்தேகமின்றி அறியலாம்.

மறுமையில் ஒருவனது நல்லறங்கள் மனித உருவில் வரும் என்று பல ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் இவ்வுலகிலேயே அவ்வாறு மனித வடிவில் வரும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமோ, நபித்தோழர்களிடமோ இஸ்லாமிய மார்க்கம் மனித வடிவில் வந்து உரையாடியதில்லை. அப்துல் காதிர் ஜீலானியிடம் மட்டும் தான் இந்த மார்க்கம் மனித வடிவில் வந்திருக்கிறது என்று கூறப்படுவது இக்கதை இட்டுக்கட்டப்பட்டது என்பதை உறுதி செய்கின்றது.

அப்துல் காதிர் ஜீலானி காலத்தில் மார்க்கம் மரணப் படுக்கையில் கிடக்கவில்லை. மார்க்கத்தைப் பேணும் மக்கள் ஏராளமாக இருந்தனர். மார்க்க அறிஞர்கள் நிறைந்திருந்தனர். இஸ்லாமியக் கல்விக் கூடங்கள் பல இருந்தன. மக்களிடம் ஒரு சில தவறுகள் காணப்பட்ட போது அப்துல் காதிர் ஜீலானியைப் போல் இன்னும் ஆயிரமாயிரம் அறிஞர்கள் அவற்றைத் திருத்தும் பணியில் ஈடுபட்டார்கள். தீனை உயிர்ப்பிக்கும் நிலையும் இருக்கவில்லை. அப்படியே இருந்தாலும் இவர் மட்டும் இந்த மார்க்கத்தை உயிர்ப்பித்தார் என்பது சரியில்லை.

இம்மார்க்கத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை இறைவன் ஏற்றுள்ளான். மார்க்கத்தை மனித வடிவில் நடமாடவிட்டால் என்ன ஆகும்? இந்த மார்க்கம் பாதுகாக்கப்பட இயலாத நிலை ஏற்பட்டுவிடும். ஒவ்வொருவனும் எதையாவது சொல்லி விட்டு, அல்லது செய்து விட்டு மார்க்கம் மனித வடிவில் வந்து இதை எனக்குக் கூறியது என்று நியாயம் கற்பிப்பான்.

எந்தத் தவறையும் இதைக் கூறி நியாயப்படுத்தலாம். இதனால் மார்க்கம் பாதுகாக்கப்படும் நிலைக்குக் குந்தகம் ஏற்படும். இதனால் தான் மார்க்கத்தை மனித வடிவிலெல்லாம் இறைவன் நடமாட விடவில்லை. இந்தக் கதையை நம்புவது சமுதாயத்தை ஏமாற்றத் தான் உதவும்.

அப்துல் காதிர் ஜீலானி காலத்தை விட மோசமான நிலையில் இன்று மார்க்கம் உள்ளது. அவரது காலத்தில் காணப்பட்டது போன்ற பேணுதல் இன்று இல்லை.

இதைப் பயன்படுத்திக் கொண்டு எவனாவது. நான் பலவீனப்பட்டிருந்தேன். உம் மூலம் அல்லாஹ் எனக்கு உயிரூட்டினான். எனவே நீர் தாம் முஹ்யித்தீன் (இம்மார்க்கத்தை உயிர்ப்பித்தவர்) என்று இஸ்லாமிய மார்க்கம் என்னிடம் கூறியது என்று உளறினால் மவ்லிது பக்தர்கள் நம்புவார்களா? அதை நம்புவதை விட இதை நம்புவதற்கு அதிகத் தகுதி இருக்கிறது என்றாலும் இவர்கள் நம்ப மாட்டார்கள். அப்படியானால் இந்தக் கதையை மட்டும் எப்படி நம்பலாம்? மவ்லிது அபிமானிகள் சிந்திக்கட்டும்.

முஹ்யித்தீன் மவ்லிதில் அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் கடவுளாகச் சித்தக்கப்பட்டுள்ளார் என்பதைப் பின்வரும் வரிகளிலும் காணலாம்.

6 காய்ச்சலுக்கு இடமாற்றம்

رأى بفج سقيما *منه ابتغى أن يقيما

لما غدا مستقيما *ناداه أن يا قوامي

إني لدين الرشاد *أحييتني كي ينادي

لكم به كل نادي *يا محيي الدين حامي

தமது மகனுக்குக் காய்ச்சல் வந்திருப்பதாக ஒருவர் அப்துல் காதிர் ஜீலானியிடம் முறையிட்டார். அதற்கு அப்துல் காதிர் ஜீலானி உன் மகனின் காதில் நீ எப்போது இவனிடம் வந்தாய்? காய்ச்சலே நீ ஹில்லா என்னும் ஊருக்குச் சென்று விடு! தீங்கிழைக்காதே! இலட்சியத்தை நீ அடைந்து கொள்வாய். (காய்ச்சலுக்கு என்ன இலட்சியம் இருக்கிறதோ?) என்று அப்துல் காதிர் ஜீலானி கூறியதாகக் கூறு என்றார்கள்.

இந்தக் கவிதை வரிகளுக்கு விளக்கவுரையாக ஹிகாயத் எனும் பகுதியில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

وحكي ان ابا المعالى اتى الشيخ رضي الله عنه وقال ان ابني لم تفارقه الحمى منذ خمسة عشر شهرا فقال قل في اذنه متى اصرعته يا ام ملدم يقول لك الشيخ ارتحلي الى الحلة كرها وقسرا ففعل ما امر به فلم تعد اليه بعد ثم جاء الخبر ان اهل الحلة وهم الروافض يحمون كثيرا سرا وجهرا

அபுல் மஆலி என்பார் அப்துல் காதிர் ஜீலானியிடம் வந்து என் மகனுக்குப் பதினைந்து மாத காலம் காய்ச்சல் விலகாமல் உள்ளது என்றார். அதற்கு அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் காய்ச்சலே நீ எப்போது இவனைப் பிடித்தாய்? நீ ஹில்லா எனும் ஊருக்குச் சென்று விடு என்று உன் மகனுடைய காதில் கூறு என்றார்கள். அவர் கட்டளையிடப்பட்டவாறு செய்தார். அதன் பின் அவனுக்குக் காய்ச்சல் ஒரு சிறிதும் மீண்டும் வரவில்லை. பிறகு ஹில்லா எனும் ஊரில் உள்ள ராபிளிய்யா கூட்டத்தினர் அனேகர் காய்ச்சலால் பீடிக்கப்பட்டதாகச் செய்தி வந்தது.

காய்ச்சல் பதினைந்து மாத காலம் நீடிக்குமா? என்ற கேள்வியை விட்டு விடுவோம். மார்க்க அடிப்படையில் இந்தக் கதை நம்பத்தக்கது தானா?

இந்தக் கதையில் அப்துல் காதிர் ஜீலானி நோய் தீர்க்கும் அதிகாரம் பெற்றிருப்பதாகவும், நோயை வழங்கும் அதிகாரம் பெற்றிருப்பதாகவும், காய்ச்சல் என்ற நோயுடன் அப்துல் காதிர் ஜீலானி பேசியதாகவும் கூறப்படுகிறது.

நோய்களை வழங்குபவனும், அதை நீக்குபவனும் அல்லாஹ் தான். இந்த அதிகாரத்தில் எவருக்கும் அல்லாஹ் எந்த உரிமையையும் வழங்கவில்லை. இது இஸ்லாத்தின் அடிப்படையான கொள்கை. இதைத் திருக்குர்ஆனிலிருந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கையிலிருந்தும் அறியலாம்.

நான் நோயுற்றால் எனக்கு நோய் நிவாரணம் வழங்குபவன் இறைவன் என்று இப்றாஹீம் (அலை) கூறியதாக அல்லாஹ் கூறுகிறான்.

(அல்குர்ஆன் 26.80)

இந்த அப்துல் காதிர் ஜீலானியை விடப் பல கோடி மடங்கு சிறந்தவர்களான இப்றாஹீம் நபியவர்கள் அந்த அதிகாரம் இறைவனுக்கு மட்டுமே உரியது என்கிறார்கள். இவரோ நோய் தீர்க்கும் அதிகாரம் தமக்குரியது என்கிறார்.

இந்தப் பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது.

(அல்குர்ஆன் 57.22)

அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன் 10:107)

இந்த வசனங்களை நிராகரிக்கும் வகையில் இந்தக் கதை அமைந்துள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் எத்தனையோ நபித்தோழர்கள் நோய்வாய்ப்பட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பத்தினரில் பலர் நோய்வாய்ப்பட்டனர். அந்தச் சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த நோயைப் பார்த்துப் பேசி வேறு ஊருக்குப் அனுப்பவில்லை.

ஏன்? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே கூட நோய்வாய்ப்பட்டார்கள்.

மனிதர்களின் இறைவா! இந்தத் துன்பத்தை நீக்கு! இறைவா நீ நிவாரணம் அளிப்பாயாக! உனது நிவாரணம் தவிர வேறு நிவாரணம் இல்லை என்று துஆச் செய்யுமாறு தான் அந்தச் சந்தர்ப்பங்களில் தம் தோழர்களுக்குக் கட்டளையிட்டனர்.

(புகாரி 5675, 5742, 5743, 5744, 5750)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கூட இல்லாத அதிகாரம் அப்துல் காதிருக்கு வழங்கப்பட்டதாக இந்தக் கதை கூறுகிறது.

அந்தச் சிறுவனிடம் இருந்த காய்ச்சலை நீக்கியதோடு இவர் நிற்கவில்லை. ஹில்லா என்று ஊருக்கு அந்தக் காய்ச்சலைத் திருப்பி விட்டாராம். கடுகளவு இஸ்லாமிய அறிவு உள்ளவன் கூட இதை நம்ப முடியாது.

உஹத் போர்க்களத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பற்கள் உடைக்கப்பட்ட போது அவர்கள் கோபமுற்று, நபியின் முகத்தில் இரத்தச் சாயம் பூசிய கூட்டத்தினர் எப்படி வெற்றி பெறுவர் என்று கூறினார்கள். உமக்கு அதிகாரத்தில் எந்தப் பங்கும் இல்லை (அல்குர்ஆன் 3.128) என்ற வசனம் இறங்கியது.

(முஸ்லிம் 3346)

எப்படி இவர்கள் வெற்றியடைய முடியும்? என்று தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். இவ்வாறு கூறுகின்ற அதிகாரம் கூட நபியவர்களுக்கு இல்லை என்று இறைவன் பிரகடனம் செய்கிறான். அப்துல் காதிர் ஜீலானியோ ஹில்லா என்ற ஊர்வாசிகளை நோக்கிக் காய்ச்சலை அனுப்பி வைத்தாராம்.

அப்துல் காதிர் ஜீலானியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை விடவும் மேலானவராக அல்லாஹ்வுக்குச் சமமானவராகக் காட்டும் இந்தக் கதையை உண்மையான முஸ்லிம் எழுதியிருப்பானா? அல்லது அன்னியர்களின் சதித் திட்டத்தில் இந்தக் கதை உருவாக்கப்பட்டதா? என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.

திருக்குர்ஆனுடன் நேரடியாக மோதும் இந்தக் கதையை மவ்லிது என்ற பெயரால் ஓதி வருவது நன்மையைப் பெற்றுத் தருமா? அல்லாஹ்வின் கோபத்தைப் பெற்றுத் தருமா? என்றும் சிந்தித்துப் பாருங்கள்.

6 மறைவான செய்திகளை அறிந்த முஹ்யித்தீன்

وعاش خضر سلاما

 *بضعا وتسعين عاما

مع ما حباه الغلاما

 *حفاظ خير الكلام

لسن سبع كميل

*سبع شهور قليل

கிள்று என்பார் தொண்ணுறு ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தார். அவருக்குப் பிறந்த குழந்தைகள் ஏழு ஆண்டுகள் ஏழு மாதங்களை அடைந்த போது குர்ஆனை மனனம் செய்தவரானார்.

முஹ்யித்தீன் மவ்லிதில் இடம் பெற்ற இந்த மூன்று வரிகளின் பொருள் இது. இதில் விபரீதமாகவோ, மார்க்கத்திற்கு முரணாகவோ ஏதும் இல்லையே என்று தோன்றலாம். இந்த வரிகளுக்கு விளக்கமான ஹிகாயத் எனும் பகுதியை வாசித்தால் இதில் உள்ள விபரீதங்கள் தெய வரும்.

وروي انه قال رضي الله عنه لخادمه خضر اذهب الى الموصل وفي ظهرك ذرية اولهم ذكر اسمه محمد يعلمه القران رجل اعجمي اسمه علي بغدادي في سبعة اشهر ويستكمل حفظه وهو ابن سبع سنين بلا نظر وتعيش انت اربع وتسعين سنة وشهرا وسبعة ايام بلا خطر وتموت بارض بابل فكان جميع ذلك بلا تفاوت

அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் தமது ஊழியர்களிடம் கூறியதாவது. நீ மூஸில் என்ற ஊருக்குச் செல்! உன் முதுகில் பல சந்ததிகள் உள்ளனர். அவர்களில் முதல் குழந்தை ஆண் குழந்தை. அக்குழந்தையின் பெயர் முஹம்மத். கண் தெரியாதவரும் பாக்தாத்தைச் சேர்ந்தவரும் அரபு மொழியைத் தாய்மொழியாகக் கொள்ளாதவருமான அலி என்பார் ஏழு மாதங்களில் அக்குழந்தைக்கு குர்ஆனைக் கற்றுக் கொடுப்பார். ஏழு வயதில் பாராமல் குர்ஆனை மனனம் செய்வார். நீ தொண்ணுற்று நான்கு வருடங்கள். ஒரு மாதம் ஏழு நாட்கள் சந்தேகமின்றி உயிர் வாழ்வாய். பாபிலோன் என்னும் ஊரில் நீ மரணிப்பாய். அப்துல் காதிர் ஜீலானி கூறியது ஒன்று கூட விடாமல் அப்படியே நடந்தேறியது.

* கிள்று என்பவருக்குப் பல குழந்தைகள் பிறக்கும் என்பதும்

* அவரது முதல் குழந்தை ஆண் குழந்தையாக இருக்கும் என்பதும்

* அக்குழந்தையின் பெயர் முஹம்மத் என்பதும்

* அக்குழந்தைக்கு குர்ஆனைக் கற்றுக் கொடுப்பவர் யார் என்பதும்

* எத்தனை வயதில் அக்குழந்தை குர்ஆனை கற்றுக் கொள்ளும்? எத்தனை வயதில் மனனம் செய்யும் என்பதும்

* கிள்று என்பார் இவ்வுலகில் வாழக்கூடிய நாட்கள் எவ்வளவு என்பதும்

* அவருக்கு மரணம் எப்போது? எங்கே? ஏற்படும் என்பதும்

அப்துல் காதிர் ஜீலானிக்கு முன்னமே தெரிந்திருந்ததாக இந்தக் கதை கூறுகின்றது.

இந்த மறைவான செய்திகளை அப்துல் காதிர் ஜீலானியால் அறிந்திருக்க இயலுமா? இஸ்லாமிய அடிப்படையில் இதற்கு ஆதாரம் ஏதும் உள்ளதா? நிச்சயமாக இல்லை. மாறாக இந்தக் கதையை மறுக்கக் கூடிய வகையில் ஏராளமான சான்றுகள் திருக்குர்ஆனிலும், நபிமொழியிலும் கிடைக்கின்றன.

மறைவான செய்திகளை அல்லாஹ்வைத் தவிர மற்றவர்கள் அறிய முடியும் என்றால் மனிதனை விட இறைவனுடன் மிக நெருக்கமாக உள்ள மலக்குகள், மனிதனை விட அதிக ஆற்றல் வழங்கப்பட்ட ஜின்கள், மனிதர்களில் சிறந்தவர்களான நபிமார்கள், அவர்களிலும் மிகச் சிறந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆகியோர் மறைவான செய்திகளை அறிந்திருக்க முடியும். இவர்களெல்லாம் மறைவானவற்றை அறிய மாட்டார்கள் என்று திருக்குர்ஆன் மிகத் தெளிவாக அறிவிக்கின்றது.

மலக்குகளால் அறிய முடியாது

ஆதம் (அலை) அவர்களை இறைவன் படைக்க நாடிய போது மலக்குகள் அதில் தங்களின் அதிருப்தியைத் தெரிவித்தார்கள். இறைவன் ஆதம் (அலை) அவர்களின் அறிவுத் திறனை நிரூபித்த பின் மலக்குகள் பின்வருமாறு பதிலளித்தார்கள்.

அனைத்துப் பெயர்களையும் (இறைவன்) ஆதமுக்குக் கற்றுக் கொடுத்தான். பின்னர் அவற்றை வானவர்களுக்கு எடுத்துக் காட்டி நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இவற்றின் பெயர்களை என்னிடம் கூறுங்கள்!  என்று கேட்டான். நீ தூயவன். நீ எங்களுக்குக் கற்றுத் தந்ததைத் தவிர எங்களுக்கு வேறு அறிவு இல்லை. நீயே அறிந்தவன்; ஞானமிக்கவன்  என்று அவர்கள் கூறினர்.

(திருக்குர்ஆன் 2:31, 32)

மலக்குகளால் மறைவானவற்றை அறிய முடியவில்லை. அறிய முடியாது என்பதை இந்த வசனம் தெளிவாக அறிவிக்கின்றது.

ஜின்களால் அறிய முடியாது

ஜின்கள் என்றொரு படைப்பு உள்ளதாக நம்புகிறோம். நம்ப வேண்டும். ஜின்கள் எனும் படைப்பினர் மனிதனைப் போலவே பகுத்தறிவு வழங்கப்பட்டவர்கள். அதனால் தான் ஜின்களும், மனிதர்களும் தன்னை வணங்க வேண்டும் என்று இறைவன் கட்டளையிடுகிறான்.

பகுத்தறிவில் ஜின்கள் மனிதர்களைப் போன்றவர்கள் என்றாலும் மனிதர்களைப் விடப் பன்மடங்கு ஆற்றல் வழங்கப்பட்டவர்கள் என்பதைத் திருக்குர்ஆனிலிருந்து நாம் அறிகிறோம். கண் இமைக்கும் நேரத்தில் அண்டை நாட்டு ராணியின் சிம்மாசத்தைக் கொண்டு வரும் அளவுக்கு ஜின்கள் ஆற்றல் பெற்றிருந்தனர். மேலும் சுலைமான் நபிக்கு மிகப் பெரும் காரியங்களை அவர்கள் செய்து கொடுத்தனர் என்பதையும் திருக்குர்ஆனிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.

உங்கள் இடத்திலிருந்து நீங்கள் எழுவதற்கு முன்னால் அதை உங்களிடம் நான் கொண்டு வருகிறேன். நான் நம்பிக்கைக்குரியவன்; வலிமையுள்ளவன்  என்று இப்ரீத் என்ற ஜின் கூறியது.

(திருக்குர்ஆன் 27:39)

அவர் விரும்பிய போர்க்கருவிகளையும், சிற்பங்களையும், தடாகங்களைப் போன்ற கொப்பரைகளையும், நகர்த்த முடியாத பாத்திரங்களையும், அவருக்காக அவை செய்தன. தாவூதின் குடும்பத்தாரே! நன்றியுடன் செயல்படுங்கள்! எனது அடியார்களில் நன்றியுடையோர் குறைவாகவே உள்ளனர்  என்று கூறினோம்.

(திருக்குர்ஆன் 34:13

மனிதனை விட ஜின்களின் ஆற்றல் அதிகம் என்றாலும் மறைவானவற்றை அறிய முடியவில்லை என்பதை திருக்குர்ஆன் தெளிவுபடுத்துகிறது.

அவருக்கு நாம் மரணத்தை ஏற்படுத்திய போது பூமியில் ஊர்ந்து செல்லும் உயினம் (கரையான்) தான் அவரது மரணத்தைக் காட்டிக் கொடுத்தது. அது அவரது கைத்தடியைச் சாப்பிட்டது. அவர் கீழே விழுந்ததும் நமக்கு மறைவானவை தெரிந்திருந்தால் இழிவு தரும் இத்துன்பத்தில் இருந்திருக்க மாட்டோமே  என்பதை ஜின்கள் விளங்கிக் கொண்டன.

(திருக்குர்ஆன் 34:14)

ஜின்களிடம் வேலை வாங்கிய சுலைமான் நபி கைத்தடியில் சாய்ந்த நிலையில் மரணித்து விடுகிறார்கள். சுலைமான் நபி உயிருடன் தங்களை கவனித்துக் கொண்டிருப்பதாக ஜின்கள் எண்ணி, தொடர்ந்து வேலை செய்து வந்தனர். கைத்தடியைக் கரையான்கள் அத்து, அதனால் சுலைமான் நபியின் உடல் கீழே விழும் வரை சுலைமான் நபி மரணித்ததை ஜின்கள் அறிய முடியவில்லை. தங்களுக்கு மறைவான செய்திகளை அறியும் திறன் கிடையாது என்பதையும் ஜின்கள் உணர்ந்து கொண்டனர் என்ற விபரங்களை இந்த வசனங்களிலிருந்து நாம் அறியலாம்.

மனிதனை விட அதிக ஆற்றல் பெற்ற ஜின்கள் தம் கண் முன்னே நடந்த அதே நேரம் வெளிப்படையாகத் தெரியாத ஒரு நிகழ்வை அறிய முடியவில்லை எனும் போது அப்துல் காதிர் ஜீலானிக்கு இத்தனை மறைவான விஷயங்கள் எப்படி தெரிந்திருக்க முடியும்?

நபிமார்களால் அறிய முடியாது

நபிமார்கள் மறைவான விஷயங்களை அறிவார்களா? என்றால் இறைவனால் அறிவிக்கப்பட்டவைகளைத் தவிர மறைவான எந்த விஷயத்தையும் அறிய மாட்டார்கள் என்று திருக்குர்ஆன் தெளிவாக அறிவிக்கின்றது.

நபிமார்களில் அதிகமான வசதிகளும் ஆற்றலும் வழங்கப்பட்டவர் சுலைமான் (அலை). பறவைகளின் மொழிகள் அவர்களுக்குத் தெரிந்திருந்தன. ஜின்கள் அவர்களுக்குக் கட்டுப்பட்டிருந்தனர். உலகில் எவருக்குமே வழங்கப்படாத வல்லமை மிக்க ஆட்சி அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. இத்தனை வல்லமைகள் வழங்கப்பட்டிருந்தும் மறைவான செய்திகளை அவர்களால் அறிய முடியவில்லை.

பறவைகளை அவர் ஆய்வு செய்தார். ஹுத்ஹுத் பறவையை நான் காணவில்லையே! அது ஓடி ஒளிந்து விட்டதா? என்றார். அதைக் கடுமையான முறையில் தண்டிப்பேன்; அல்லது அதை அறுத்து விடுவேன். அல்லது அது என்னிடம் தெளிவான சான்றைக் கொண்டு வர வேண்டும்  (என்றும் கூறினார்). (அப்பறவை) சிறிது நேரமே தாமதித்தது. உமக்குத் தெரியாத ஒன்றைத் தெரிந்துள்ளேன். ஸபா எனும் ஊலிருந்து உறுதியான ஒரு செய்தியை உம்மிடம் கொண்டு வந்துள்ளேன்  என்று கூறியது.

(அல்குர்ஆன் 27:20,21,22)

அப்பறவை எங்கே சென்றது என்பதும் சுலைமான் நபிக்குத் தெயவில்லை. அது கொண்டு வந்த செய்தியும் சுலைமான் நபிக்குத் தெரியவில்லை. நிகழ்காலத்தில் நடந்து கொண்டிருந்த ஒன்றை தம் கண்களுக்கு எட்டாத காரணத்தால் சுலைமான் நபி அறிய முடியவில்லை என்றால் வருங்காலத்தில் நடக்கவுள்ள ஏராளமான செய்திகளை அப்துல் காதிர் ஜீலானி எப்படி அறிந்திருக்க முடியும்?

ஈஸா (அலை) அவர்கள் ஏராளமான அற்புதங்கள் வழங்கப்பட்டவர். அற்புதமான முறையில் பிறந்து அற்புதமான முறையில் இன்று வரை உயிருடன் இப்பவர். உங்கள் வீட்டில் நீங்கள் சேமித்து வைத்தவற்றை நான் உங்களுக்குத் தெவிப்பேன் என்று அவர்கள் கூறியதிலிருந்து

(அல்குர்ஆன் 3.49)

சில மறைவான செய்திகள் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தன என்பதை அறியலாம்.

இத்தகைய சிறப்புகள் வழங்கப்பட்ட ஈஸா (அலை) அவர்களை இறைவன் மறுமையில் விசாரிப்பான். உன் சமுதாயத்தினர் உன்னையும் உன் அன்னையையும் வணங்க வேண்டுமென நீர் தான் கூறினாரா? என்று வினவுவான். எனக்குள் உள்ளதை நீ அறிவாய்! உனக்குள் உள்ளதை நான் அறிய மாட்டேன். நீயே மறைவானவற்றை அறிபவன்  என்று அவர் பதிலளிப்பார்.

(அல்குர்ஆன் 5.116)

நாம் உயிருடன் இருந்தாலும் இந்த மக்கள் செய்தவை எனக்கு மறைவாக இருந்தன. அதனால் அதை நான் அறிய மாட்டேன். நீயே அறிவாய் என்று ஈஸா (அலை) அவர்கள் வாக்கு மூலம் தருகிறார்கள்.

அப்துல் காதிர் ஜீலானியோ பல ஆண்டுகளுக்குப் பின் நடக்கவுள்ளதை அறிந்து கொண்டதாக இந்தக் கதை கூறுகிறது. குர்ஆனை நம்பக்கூடிய முஸ்லிம் இந்தக் கதையை எவ்வாறு நம்ப இயலும்?

மறைவானவை யாருக்கேனும் தெரியும் என்றால் எல்லா வகையிலும் சிறந்து விளங்கிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவற்றை அறிந்திருக்க வேண்டும். அவர்கள் அறிந்திருந்தார்களா? என்றால் இல்லை என்று திருக்குர்ஆன் விடையளிக்கின்றது.

பல்வேறு நபிமார்களின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளை இறைவன் கூறிவிட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நோக்கிப் பின்வருமாறு கூறுகிறான்.

(முஹம்மதே!) இவை மறைவான செய்திகள். இவற்றை உமக்கு நாம் அறிவிக்கிறோம். இதற்கு முன் நீரும், உமது சமுதாயத்தினரும் இதை அறிந்திருக்கவில்லை. எனவே பொறுமையைக் கடைப்பிடிப்பீராக! (நம்மை) அஞ்சுவோர்க்கே (நல்ல) முடிவு உண்டு.

அல்குர்ஆன் 11:49

இது மறைவான செய்திகளில் ஒன்றாகும். (முஹம்மதே!) இதை நாமே உமக்கு அறிவிக்கிறோம். மர்யமை யார் பொறுப்பேற்றுக் கொள்வது என்று (முடிவு செய்ய) தமது எழுது கோல்களை அவர்கள் போட்ட போதும் அவர்களுடன் நீர் இருக்கவில்லை. அவர்கள் இது குறித்து சர்ச்சை செய்த போதும் அவர்களுடன் நீர் இருக்கவில்லை.

அல்குர்ஆன் 3:44

(முஹம்மதே!) இவை, மறைவான செய்திகள். இதை உமக்கு அறிவிக்கிறோம். அவர்கள் அனைவரும் (யூஸுஃபுக்கு எதிராக) ஒரு மனதாக சூழ்ச்சி செய்த போது அவர்களுடன் நீர் இருக்கவில்லை.

அல்குர்ஆன் 12:102

மறைவானவற்றை நபிகள் நாயகம் (ஸல் அவர்கள் அறியக் கூடுமோ என்று மக்கள் எண்ணிவிடக் கூடாது என்பதற்காக எனக்கு மறைவானவை தெரியாது என்று நபியவர்களைத் தெளிவாகவே இறைவன் கூறச் சொல்கிறான்.

அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் உள்ளன; மறைவானதை அறிவேன்; என்று உங்களிடம் கூற மாட்டேன். நான் வானவர் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர (வேறெதனையும்) நான் பின்பற்றுவதில்லை என்று (முஹம்மதே!) கூறுவீராக! குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா?  சிந்திக்க மாட்டீர்களா?  என்று கேட்பீராக!

(அல்குர்ஆன் 6:50)

என்னிடம் அல்லாஹ்வின் கருவூலங்கள் உள்ளன என்று உங்களிடம் கூற மாட்டேன். மறைவானவற்றையும் அறிய மாட்டேன். நான் வானவர் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். உங்கள் கண்கள் இழிவாகக் காண்போருக்கு அல்லாஹ் எந்த நன்மையும் அளிக்கவே மாட்டான் எனவும் கூற மாட்டேன். அவர்களின் உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் மிக அறிபவன். (அவ்வாறு கூறினால்) நான் அநீதி இழைத்தவனாகி விடுவேன்  (எனவும் கூறினார்.)

(அல்குர்ஆன் 11:31)

அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்  என்று (முஹம்மதே!) கூறுவீராக!

(அல்குர்ஆன் 7.188)

இவரது இறைவனிடமிருந்து இவருக்குச் சான்று அருளப்பட்டிருக்க வேண்டாமா?  என்று அவர்கள் கேட்கின்றனர். மறைவானவை அல்லாஹ்வுக்கே உயன. நீங்களும் எதிர்பாருங்கள்! நானும் உங்களுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்  என்று (முஹம்மதே!) கூறுவீராக!

(அல்குர்ஆன் 10:20)

வானங்களிலும், பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். தாங்கள் எப்போது உயிர்ப்பிக்கப்படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்  என்று கூறுவீராக!

(அல்குர்ஆன் 27:65)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையே இவ்வாறு அல்லாஹ் கூறச் செய்கின்றான் என்றால் மற்றவர்கள் மறைவானவற்றை அறிவார்கள் என்பதை எப்படி நம்ப முடியும்?

மனிதர்களே! நீங்கள் செருப்பணியாதவர்களாகவும், நிர்வாணமாகவும், விருத்த சேதனம் (சுன்னத்) செய்யப் படாதவர்களாகவும் அல்லாஹ்வின் முன்னால் ஒன்று திரட்டப்படுவீர்கள். முதலில் எவ்வாறு படைத்தோமோ அவ்வாறே மீண்டும் உருவாக்குவோம்  என்று இதைத் தான் அல்லாஹ் கூறுகிறான். முதலில் இப்ராஹீம் நபியவர்களுக்கு ஆடை அணிவிக்கப்படும். அறிந்து கொள்க! எனது சமுதாயத்தில் சிலர் கொண்டு வரப்பட்டு இடப்பக்கமாக (நரகத்தின் பக்கமாக) இழுத்துச் செல்லப்படுவார்கள். அப்போது நான் என் இறைவா! அவர்கள் என் தோழர்கள்  என்று கூறுவேன். உமக்குப் பின் அவர்கள் செய்ததை நீர் அறியமாட்டீர்  என்று என்னிடம் கூறப்படும். நான் அவர்களுடன் இருந்த போது அவர்களைக் கண்காணித்துக் கொண்டிருந்தேன். என்னை நீர் கைப்பற்றியதும் நீயே அவர்களின் கண்காணிப்பாளனாய் நீதான் இருந்தாய். நீதான் ஒவ்வொரு பொருளையும் பார்ப்பவன்  என்று நல்லடியார் (ஈஸா) கூறியது போல் நானும் கூறி விடுவேன். இவர்களை விட்டு நீர் பிந்தது முதல் வந்த வழியே திரும்பிச் சென்று கொண்டே இருந்தனர்  என்று என்னிடம் கூறப்படும், என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

புகாரி 3349, 3447, 4625, 4740, 6526

என் கணவருடன் முதலிரவு நடந்த பின் காலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். நீ என்னருகில் எவ்வாறு அமர்ந்துள்ளாயோ அது போல் என் விரிப்பில் அமர்ந்தார்கள். அப்போது சிறுமிகள் தஃப் (சலங்கையில்லாத கொட்டு) அடித்துக் கொண்டு பத்ருப் போரில் கொல்லப்பட்ட தமது தந்தையைப் பற்றி பாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு சிறுமி நாளை நடப்பதை அறியும் நபி நம்மிடம் இருக்கிறார்கள் என்று பாடினார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) இவ்வாறு கூறாதே! ஏற்கனவே கூறிக்கொண்டிருந்ததைக் கூறு  என்றார்கள்.

புகாரி 4001, 5147)

ஆயிஷா (ரலி) அவர்களின் மீது களங்களம் சுமத்தப்பட்டு உண்மை நிலை தெரியாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல நாட்கள் மனைவியைப் பிந்திருந்து இறைவன் ஆயிஷா (ரலி) அவர்களின் துய்மையைப் பற்றி அறிவித்த பின்பே உண்மை நிலவரம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தெரிந்தது என்ற வரலாற்று உண்மையும்,

(புகாரி 2661)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கே மறைவானவை தெரியாது என்பதற்குத் தெளிவான சான்றுகள்.

இவ்வளவு சான்றுகளையும் தூர எறிந்துவிட்டு நபியவர்களுடன் ஒப்பிடும் போது ஒன்றுமற்றவரான அப்துல் காதிர் ஜீலானிக்கு மறைவான செய்திகள் தெரியும் என்று நம்பலாமா? அப்படி ஒருவர் நம்பினால் அவரிடம் கடுகளகாவது ஈமான் இருக்குமா? என்பதை மவ்லிது பக்தர்கள் சிந்திக்க வேண்டும்.

எவனோ முகவரியற்றவன் எழுதிய இந்தப் பாடல்களுக்காக மார்க்கத்தைப் பிழைப்புக்கு வழியாக்கிக் கொண்டவர்களின் பேச்சை நம்பினால் திருக்குர்ஆனையும் நபிகளாரின் போதனைகளையும் மறுத்த குற்றம் ஏற்படாதா? என்பதைச் சிந்தியுங்கள். குர்ஆனையும், நபியையும் மறுத்த பின் முஸ்லிமாக இருக்க முடியுமா? என்பதையும் சிந்தியுங்கள்.

யூதர்களின் சூழ்ச்சியால் உருவாக்கப்பட்ட இந்த மவ்லிதுக் குப்பையைத் தூக்கி எறிந்துவிட்டு அல்லாஹ்வின் வேதத்தின் பால் வாருங்கள்.

7 அவ்லியாக்களின் பிடரிகளை மிதித்தவர்

முஹ்யித்தின் மவ்லிதில் இடம் பெறும் மற்றொரு நச்சுக் கருத்து இது. இதன் பொருள் பின் வருமாறு.

اذ قال يوما مخبرا بالنعم *عن وارد من ربه ذي الكرم

 على رقاب الاولياء قدمي * فسلموا لذاك كل السلم

قد قلت بالاذن من مولاك مؤتمرا *قدمي على رقبات الاولياء طرا

فكلهم قد رضوا وضعا لها بشرا

அருள் நிறைந்த தம் இறைவனின் அனுமதியுடன் தமக்கு வழங்கப்பட்ட அருட்கொடைகளை ஒரு நாள் (முஹ்யித்தீன்) கூறினார். அதில் என் பாதங்கள் அவ்லியாக்களின் பிடரிகள் மீது உள்ளன என்றார். அனைத்து அவ்லியாக்களும் இதைப் பூரணமாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இந்த நச்சுக்கருத்துக்கு விளக்கவுரையாக ஹிகாயத்தில் கூறப்படுவதையும் பார்த்துவிட்டு இதில் உள்ள தவறுகளை ஆராய்வோம்.

அப்துல் காதிர் ஜீலானி பிறப்பதற்கு சுமார் நூறு வருடங்களுக்கு முன் அப்துல் காதிர் ஜீலானி அல்லாஹ்வுடைய அவ்லியாக்கள் ஒவ்வொருவரின் கழுத்திலும் தமது பாதம் உள்ளது என்று கூறுமாறு கட்டளையிடப்படுவார் என்று ஒரு பெரியார் இல்ஹாமில் தெரிந்து கூறினார். அவர் கூறியது போலவே அப்துல் காதிர் ஜீலானி இவ்வுலகில் அதிகாரம் செலுத்திய காலத்தில் ஐம்பத்திரண்டு அவ்லியாக்கள் அடங்கிய அவையில் அப்துல் காதிர் ஜீலானி பிரகடனம் செய்தார். அங்கே இருந்த அவ்லியாக்கள் அவ்விடத்தில் இல்லாத அவ்லியாக்கள் அனைவரும் இதற்குக் கட்டுப்பட்டுத் தம் கழுத்துக்களைத் தாழ்த்தினார்கள். ஆனால் இஸ்பஹான் ஊரைச் சேர்ந்த ஒரே ஒருவர் மட்டும் மறுத்தார். இதனால் இவரது விலாயத் பறிக்கப்பட்டது.

ஏகத்துவக் கொள்கையைக் கால்களால் மிதித்துத் தள்ளக்கூடிய இந்தக் கதையில் உள்ள நச்சுக் கருத்துக்களைப் பார்ப்போம்.

ஒருவர் இறைநேசராக அவ்லியாக்களில் ஒருவராக எப்போது ஆக முடியும்? அல்லாஹ்வின் அனைத்துக் கட்டளைகளையும் பின்பற்றி நடந்து, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை முன் மாதிரியாகக் கொண்டு வாழ்வதன் மூலம் தான் ஒருவர் இறைநேசராக முடியும்.

ஆணவம், பெருமை, மக்களைத் துச்சமாக மதித்தல் போன்ற பண்புகள் ஷைத்தானின் பண்புகள் என்று திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்.

பூமியில் கர்வத்துடன் நடக்காதே! நீ பூமியைப் பிளந்து, மலைகளின் உயரத்தின் அளவை அடையவே மாட்டாய்! இவை அனைத்தின் கேடும் உமது இறைவனிடம் வெறுக்கப்பட்டதாகும்.

(அல்குர்ஆன் 17:37,38)

மனிதர்களை விட்டும் உனது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் கர்வமாக நடக்காதே! கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.

(அல்குர்ஆன் 31:18)

நரகத்தின் வாசல்கள் வழியாக நுழையுங்கள்! அதில் நிரந்தரமாகத் தங்குவீர்கள்.  (என்று கூறப்படும்) பெருமையடித்தோரின் தங்குமிடம் மிகவும் கெட்டது.

(அல்குர்ஆன் 16:29)

வானங்களிலும், பூமியிலும் பெருமை அவனுக்கே உரியது. அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

(அல்குர்ஆன் 45:37)

பூமியில் ஆணவத்தையும், குழப்பத்தையும் விரும்பாதவர்களுக்காக அந்த மறுமை வாழ்வை ஏற்படுத்தியுள்ளோம். நல்ல முடிவு (இறைவனை) அஞ்சுவோர்க்கே.

(அல்குர்ஆன் 28:83)

அவர்களில் பல்வேறு கூட்டத்தினர் அனுபவிப்பதற்காக நாம் வழங்கியுள்ளதை நோக்கி உமது கண்களை நீட்டாதீர்! அவர்களுக்காகக் கவலைப்படாதீர்! நம்பிக்கை கொண்டோரிடம் உமது சிறகைத் தாழ்த்துவீராக!

(அல்குர்ஆன் 15:88)

அளவற்ற அருளாளனின் அடியார்கள் பூமியில் பணிவாக நடப்பார்கள். அறிவீனர்கள் அவர்களுடன் உரையாடும் போது ஸலாம்  எனக் கூறுவார்கள்.

(அல்குர்ஆன் 25:63)

பெருமையடிப்பதும் ஆணவம் கொள்வதும் இறைவனுக்குப் பிடிக்காது. இவை நரகத்திற்குக் கொண்டு செல்லும் என்பதை இவ்வசனங்கள் விளக்குகின்றன.

என் காலை இன்னொருவனின் தலையில் வைக்கிறேன் என்று கூறுவதை விட ஆணவம் வேறெதிலும் இருக்க முடியாது. சாதாரண மனிதனின் தலையில் வைப்பதே இந்த நிலை என்றால் இறைவனின் நேசர்கள் தலையில் காலை வைப்பேன் எனக் கூறுவது ஆணவத்தின் உச்சகட்டமல்லவா?

ஒருவர் தம் சகோதர முஸ்லிமை மட்டமாகக் கருதுவது அவர் தீயவர் என்பதற்குப் போதிய சான்றாகும் என்பது நபிமொழி.

அறிவிப்பபவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்:: முஸ்லிம்

நீங்கள் பணிவுடன் நடங்கள். ஒருவர் மற்றவரிடம் வரம்பு மீற வேண்டாம். ஒருவர் மற்றவரிடம் பெருமையடிக்க வேண்டாம் என்று அல்லாஹ் எனக்கு அறிவித்துள்ளான் என்பதும் நபிமொழி.

அறிவிப்பவர்: இயாள் பின் ஹிமார் (ரலி)

நூல்: முஸ்லிம் 4650,

யாருடைய உள்ளத்தில் கடுகளவு பெருமை உள்ளதோ அவர் சொர்க்கத்தில் நுழைய முடியாது என்பதும் நபிமொழி.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூது,

நூல்: முஸ்லிம் 131, 133

பெருமை எனது மேலாடை. கண்ணியம் எனது கீழாடை. இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றுக்கு யாராவது என்னிடம் போட்டியிட்டால் அவனை நரகில் நுழைப்பேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்: முஸ்லிம் 4752

இறைவனுக்கு மாத்திரமே சொந்தமான இந்தத் தன்மைக்குத் தான் அப்துல் காதிர் ஜீலானி போட்டியிடுவதாக இந்தக் கதை கூறுகிறது.

அல்லாஹ்வின் அனுமதியுடன் தானே இதை அவர் கூறியதாகக் கதையில் உள்ளது என்று சிலர் சமாளிக்கலாம். அல்லாஹ் எவற்றையெல்லாம் நாடினானோ அவை அனைத்தையும் தன்னுடைய வேதத்தின் மூலமும் தனது தூதரின் மூலமும் அனுமதித்து விட்டான். எவற்றையெல்லாம் தடை செய்ய நாடினானோ அவற்றையெல்லாம் தன் வேதத்தின் மூலமாகவும், தூதர் மூலமாகவும் தடுத்து விட்டான்.

திருக்குர்ஆனில் அவன் தடை செய்த ஆணவத்தை வேறு எவருக்காகவும் அனுமதிக்க மாட்டான். நபிகள் நாயகத்துக்கே இறைவன் தடை செய்தவைகளை அப்துல் காதிருக்கு அனுமதித்தான் என்பது இன்னொரு மார்க்கத்தை உருவாக்குவதாகும். அப்துல் காதிரை நபியாக ஆக்குவதாகும். இந்த உண்மை கூட இவர்களுக்குத் தெரியவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பாதம் எல்லா நபிமார்களின் தலை மேல் உள்ளது என்றோ நபித்தோழர்களின் கழுத்துக்களில் என் பாதம் உள்ளது என்றோ கூறவில்லை. தம் தோழர்களிடம் நல்ல நண்பராகவே அவர்கள் நடந்து கொண்டார்கள்.

இஸ்லாத்தின் உண்மை வடிவத்தைச் சிதைக்கும் எண்ணத்தில் தான் யூதர்களால் யூதக் கைக்கூலிகளால் இந்த மவ்லிதும் இந்தக் கதையும் புனையப்பட்டிருக்க வேண்டும்.

அல்லாஹ்வின் நிலைக்கு அப்துல் காதிரை உயர்த்தி நபியவர்களை விட அவர்களைச் சிறந்தவராகக் காட்டும் இந்தக் குப்பையைத் தான் பக்திப் பரவசத்துடன் மார்க்கம் அறியாத முஸ்லிம்கள் ஓதி வருகின்றனர்.

அப்துல் காதிர் ஜீலானி இப்படிச் சொன்னார் என்று நாம் நம்பவில்லை. இப்படி அவர் சொல்லியிருந்தால் அவரது காலத்திலோ, அவருக்கு அடுத்த காலத்திலோ எழுதப்பட்ட நூல்களில் இந்த விபரம் இடம் பெற்றிருக்க வேண்டும். அப்படி எந்த ஆதாரமும் இல்லை..

மார்க்க அறிவும் மார்க்கத்தில் பேணுதலும் உள்ள மக்கள் வாழ்ந்த காலத்தில் அப்துல் காதிர் இவ்வாறு கூறியிருந்தால் அவரை அன்றைய நன்மக்கள் விட்டு வைத்திருக்க மாட்டார்கள். மனிதனைக் கடவுளாக்கும் சித்தாந்தத்துக்கு இன்றைய முஸ்லிம்கள் பழக்கப்பட்டுப் போயிருக்கலாம். அன்றைய முஸ்லிம்கள் இதை ஜீரணித்திருக்க மாட்டார்கள்.

எல்லா அவ்லியாக்களும் அப்துல் காதிரின் கால்களில் மதி வாங்கத் தலையைக் கொடுத்தார்களாம். ஒருவர் மட்டும் மறுத்தாராம். இதனால் அவரது விலாயத் (வலிப்பட்டம்) பறிக்கப்பட்டது என்றும் மேற்கண்ட கதையில் கூறப்படுகிறது

வலிப்பட்டம் என்பது ஏதோ மதராஸாக்களில் வழங்கப்படும் ஸனது என்று நினைத்துக் கொண்டார்கள். யாரெல்லாம் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நடக்கிறார்களோ அவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் நேசர்கள் தாம். தனிப்பட்ட முறையில் யார் யார் இறைநேசர் என்பது மறுமையில் இறைவன் தீர்ப்பு வழங்கும் போது தான் தெரிய வரும்.

இறையச்சம் உள்ளத்தின்பால் பட்டதாகும். எவரது உள்ளத்தில் இறையச்சம் உள்ளது என்பதை இறைவன் மட்டுமே அறிவான். அப்துல் காதிர் அவர்களின் புறச் செயல்களைப் பார்த்து அவர்கள் நல்லடியாராக இருந்திருக்கலாம் என்று நம்புகிறோம். அவரது நோக்கம் தவறாக இருந்தால் அது மறுமையில் தான் தெரியவரும்.

இறை நேசர்கள் என்று மக்களால் முடிவு செய்யப்பட்ட எத்தனையோ பேர் ஷைத்தானின் நேசர்கள் வரிசையில் நிற்பார்கள். இறைவனின் எதிரிகள் என்று மக்களால் முடிவு செய்யப்பட்ட எத்தனையோ பேர் இறை நேசர்கள் வரிசையில் நிற்பார்கள்.

உலகில் எத்தனை அவ்லியாக்கள் இருந்தார்கள். அவர்கள் யார்? என்ற பட்டியலே அப்துல் காதிரின் கையில் இருந்தது என்ற கருத்தையும் அந்தக் கதை கூறுகிறது. அப்துல் காதிரை அல்லாஹ்வாக்கும் சதித் திட்டத்தின் ஒரு பகுதியே மவ்லிது என்பதற்கு இந்தக் கதை ஒன்றே போதிய சான்றாகும்.

அப்துல் காதிருக்கு முன் அவ்லியாக்களே வாழவில்லையா? அப்படி வாழ்ந்திருந்த அவ்லியாக்களை மிதித்தது யார்? அவர்களையும் இவரே மிதித்ததாகச் சொன்னால் உத்தம ஸஹாபாக்களையும் கண்ணியத்திற்குரிய நான்கு இமாம்களையும் இவர் மிதித்தார் என்று சொல்கிறார்களா? இவர் காலத்திற்குப் பின் கியாம நாள் வரை அவ்லியாக்கள் வர மாட்டார்களா? வருவார்கள் என்றால் அவர்களை மிதிப்பவர் யார்? அவர்களையும் இவரே மிதிப்பார் என்றால் இவர் சாகாவரம் பெற்றவரா? அப்படியானால் சாகாவரம் பெற்றவருக்கு பாக்தாதில் கப்ரு ஏன்? இத்தனைக் கேள்விகளையும் சிந்தித்தால் முஹ்யித்தீன் மவ்லிது கூறும் இக்கதை பச்சைப் பொய்யாகும் என்பதில் யாருக்கும் சந்தேகம் வராது.

8 சூம்பிய ஹம்மாதின் கை

القاه حماد بيوم حصر *اذ ما مشى لجمعة فى نهر

فقال شلت كفه فى قبره *فقام يدعو الله مولى النعم

مع ما يؤمن خمسة من قبرا *فى الالف حتى صححت فابتدرا

اصحابه اذ اخبروا ذالخبرا *فطالبوا تحقيقه بالحشم

فاشهد المولى بذاكم يوسفا *وعبد رحمان به قد كشفا

فاستعفروا مما جنوه اسفا *وذاك فضل المصطفى ذى العلم

ஜ?ம்ஆவுக்காக அப்துல் காதிர் நடந்து சென்ற போது அவரது ஆசியர் ஹம்மாத் அவரை நதியில் தள்ளினார். இதனால் மண்ணறையில் ஹம்மாதின் கை சூம்பிவிட்டது. இதைக் கண்ட அப்துல் காதிர் அல்லாஹ்விடம் துஆச் செய்தார்கள். கப்ரில் உள்ள ஐயாயிரம் பேர் இதற்கு ஆமீன் கூறினார்கள். இதை அப்துல் காதிர் மக்களிடம் கூறியவுடன் ஹம்மாதின் சீடர்கள், இதை நிரூபிக்க வேண்டும் என்று அப்துல் காதிரிடம் கேட்டனர். அல்லாஹ் யூசுஃபுக்கும், அப்துர் ரஹ்மானுக்கும் இந்தக் காட்சியைக் காட்டினான். தங்கள் தவறுக்காக ஹம்மாதின் சீடர்கள் பாவமன்னிப்புத் தேடினார்கள்.

இது முஹ்யித்தீன் மவ்லிதில் காணப்படும் இந்த வரிகளின் கருத்து. இந்த வரிகளுக்கு விளக்கவுரையாக மவ்லித் புத்தகத்தில் இடம் பெறும ஹிகாயத் என்னும் பகுதியையும் பார்த்துவிட்டு இந்தக் கதையில் வரும் அபத்தங்களை ஆராய்வோம்.

ஒரு நாள் நீண்ட நேரம் அப்துல் காதிர் வெயிலில் நின்றார். அவருக்குப் பின் ஏராளமான வணக்கசாலிகள் நின்றனர். நீண்ட நேரம் நின்றுவிட்டுப் பின்னர் சந்தோஷத்துடன் அவர் திரும்பியதைப் பற்றி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கவர் ஒரு நாள் நான் ஹம்மாதுடன் ஜும்ஆத் தொழச் சென்றேன். நதியோரத்தை நாங்கள் அடைந்த போது என்னை அவர் நதியில் தள்ளினார். அப்போது நான் அல்லாஹ்வின் பெயரால் ஜும்ஆவின் குளிப்பை நிறைவேற்றுகிறேன் என்றேன். நதியிலிருந்து வெளியேறி அவர்களைத் தொடர்ந்தேன். அவரது சீடர்கள் என்னைப் பழித்தனர். அவர் அதைத் தடுத்தார். இன்று கப்ரில் ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டவராக அவரை நான் கண்டேன். எனினும் அவரது வலது கை சூம்பியிருந்தது. ஏன் இப்படி என்று நான் கேட்டேன். அதற்கவர் இந்தக் கையால் தான் உம்மைத் தள்ளினேன். இதை நீர் மன்னிக்கக் கூடாதா? இதை நல்லபடியாக மாற்றுமாறு அல்லாஹ்விடம் துஆச் செய்யக் கூடாதா? என்று கேட்டார். நான் அல்லாஹ்விடம் கேட்டேன். ஐந்தாயிரம் வலிமார்கள் தங்கள் கப்ருகளிலிருந்து எழுந்து ஆமீன் கூறினார்கள். உடனடியாக அல்லாஹ் அந்தக் கையை நல்லபடியாக மாற்றி விட்டான். அந்தக் கையால் அவர் என்னிடம் முஸாபஹாச் செய்தார் எனக் கூறினார். இந்தச் செய்தி பரவியதும் ஹம்மாதின் சீடர்கள் இதை நிரூபிக்குமாறு வற்புறுத்தத் திரண்டனர். பெரும் கூட்டமாக அவரிடம் வந்தனர். அவர்களில் எவருக்குமே பேச இயலவில்லை. அவர்கள் வந்த நோக்கத்தை அப்துல் காதிரே கூறலானார். சிறந்த இருவரைத் தேர்வு செய்யுங்கள். அவர்கள் வாயிலாக இந்த உண்மை நிரூபணமாகும் என்றும் கூறினார். அவர்கள் யூசுஃப், அப்துர் ரஹ்மான் ஆகிய இரு பெரியார்களைத் தேர்வு செய்தனர். இதை ஒரு வாரத்தில் நீங்கள் நிரூபிக்க வேண்டும் என்று அப்துல் காதிரிடம் கூறினார்கள். அதற்கு அவர் நீங்கள் இவ்விடத்தை விட்டு எழுவதற்கு முன் இது நிரூபணமாகும் என்றார். சற்று நேரம் சென்றதும் யூசுஃப் எனும் பெரியார் ஓடோடி வந்தார். ஹம்மாதை அல்லாஹ் எனக்குத் தெளிவாகக் காட்டினான். யூசுஃபே நீ அப்துல் காதரின் மதரஸாவுக்கு உடனே செல். அங்குள்ளவர்களிடம் கூறு என்று ஹம்மாத் என்னிடம் கூறினார் என்றார். பிறகு அப்துர் ரஹ்மான் கைசேதப்பட்டவராக வந்து யூசுஃப் கூறியது போலவே கூறினார். அனைவரும் பாவமன்னிப்புக் கேட்டனர்.

இந்தக் கதையில் உள்ள அபத்தங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

அபத்தம் 1

ஜூம்ஆ தினத்தில் குளிப்பது வலியுறுத்தப்பட்ட ஒரு சுன்னத். இறை நேசர்கள் இது போன்ற சுன்னத்துக்களை விட்டுவிட மாட்டார்கள். ஆனால் அப்துல் காதிர் குளிக்காமலே ஜூம்ஆவுக்குச் சென்றிருக்கிறார். ஹம்மாத் அவரைப் பிடித்துத் தள்ளிய போது தான் ஜூம்ஆவின் குளிப்பை நிறைவேற்றுவதாகக் கூறியுள்ளார். பிடித்துத் தள்ளாவிட்டால் குளிக்காமலே சென்றிருப்பார். இதிலிருந்து அப்துல் காதிர் சுன்னத்தைப் பேணாதவர் என்று தெரிகின்றது.

ஒரு வணக்கத்தைச் செய்ய வேண்டுமானால் ஈடுபாட்டுடனும், விருப்பத்துடனும் செய்ய வேண்டும். வலுக்கட்டாயமாகத் தள்ளப்பட்டு செய்தால் அது வணக்கத்தை நிறைவேற்றியதாக ஆகாது. இந்த அடிப்படை விஷயம் கூட அப்துல் காதிருக்குத் தெரியவில்லை என்று இந்தக் கதை கூறுகின்றது.

அபத்தம் 2

கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவரை அப்துல் காதிர் சந்தித்து உரையாடியதாக இந்தக் கதை கூறுகின்றது. இந்தச் சந்திப்பு கனவு போன்ற நிலையில் நடக்கவில்லை. மாறாக நேருக்கு நேர் இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. அப்துல் காதிரும் ஹம்மாதும் ஒருவரை மற்றவர் முஸாபஹா செய்தார்கள் என்றும் இந்தக் கதை கூறுகின்றது. உயிருடன் இவ்வுலகில் இருப்பவர் இறந்தவருடன் நேருக்கு நேராகச் சந்திப்பது நடக்க முடியாதது என்று இஸ்லாம் கூறுகின்றது.

உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

(அல்குர்ஆன் 39.45)

முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!  என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.

(அல்குர்ஆன் 23.99, 100)

இறந்தவர்களுக்கும் இவ்வுலகில் வாழ்வோருக்குமிடையே எவ்விதத் தொடர்பும் கிடையாது என்பதை இவ்வசனங்கள் அறிவித்துள்ளன. கப்ரில் உள்ளவரை அப்துல் காதிர் ஜீலானி நேருக்கு நேராகச் சந்தித்ததும், அவருடன் உரையாடியதும், முஸாபஹா செய்ததும் பச்சைப் பொய் என்பதை இவ்வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.

இந்தக் கதையில் ஹம்மாத் என்பவரின் கை சூம்பியிருந்ததைத் தவிர மற்றபடி அவர் நல்ல நிலையில் உயர்ந்த அந்தஸ்துடன் இருந்ததாகக் கூறப்படுகின்றது. நல்ல மனிதர்கள் கப்ரில் எந்த நிலையில் இருப்பார்கள் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளனர். அந்த விளக்கத்துக்கு மாற்றமாக இந்தக் கதை அமைந்திருக்கின்றது.

பின்னர் நல்லடியாரின் மண்ணறை விரிவுபடுத்தப்படும். ஒளிமயமாக்கப்படும். பின்பு அவரை நோக்கி உறங்குவீராக எனக் கூறப்படும். நான் எனது குடும்பத்தினரிடம் சென்று இந்த விபரங்களைக் கூறிவிட்டுத் திரும்பி வருகிறேன் என்று அம்மனிதர் கூறுவார். அதற்கு அவ்வானவர்கள் நெருக்கமானவரைத் தவிர வேறு எவரும் எழுப்ப முடியாதவாறு புது மணமகன் உறங்குவது போல் நீர் உறங்குவீராக! இந்த இடத்திலிருந்து உம்மை இறைவன் எழுப்பும் வரை உறங்குவீராக என்று கூறுவார்கள். இது நபியவர்கள் தந்த விளக்கம்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : திர்மிதி

நல்லடியார்கள் உறக்க நிலையில் உள்ளனர். யாராலும் அவர்களை எழுப்ப முடியாது. மறுமை நாளில் இறைவனால் அவர்கள் எழுப்பப்படும் வரையிலும் அவர்கள் உறங்கிக் கொண்டே இருப்பார்கள் என்பதை இந்த ஹதீஸ்கள் அறிவிக்கின்றன. அப்துல் காதிர், ஹம்மாத் என்பவரை நேருக்கு நேர் சந்தித்தாகக் கூறுவது பொய் என்பதற்கு இந்த ஹதீஸ் சான்றாகும்.

அபத்தம் 3

ஐயாயிரம் அவ்லியாக்கள் அப்துல் காதிரின் துஆவுக்கு ஆமீன் கூறியதாகவும் இந்தக் கதை கூறுகின்றது. அவ்லியாக்கள் உறக்கத்தில் இருப்பார்கள் என்ற மேற்கண்ட ஹதீஸுக்கு இது முராணாக உள்ளது.

இறந்தோரைச் செவியுறச் செய்ய உம்மால் முடியாது! செவிடர்கள் பின்வாங்கி ஓடினால் அழைப்பை அவர்களுக்குச் செவியேற்கச் செய்ய உம்மால் முடியாது.

(அல்குர்ஆன் 30:52)

உயிருடன் உள்ளோரும், இறந்தோரும் சமமாக மாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச் செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச் செய்பவராக இல்லை.

(அல்குர்ஆன் 35:22)

இறந்தவரைக் கேட்கச் செய்ய நபியாலும் முடியாது என்ற குர்ஆனின் மேற்கண்ட வசனங்களுக்கு முரணாக உள்ளது.

அபத்தம் 4

இந்தச் செய்தியை நம்ப மறுத்த ஹம்மாதின் சீடர்களுக்கு அப்துல் காதிர் இதை நிரூபித்த விதமும் ஏற்கத்தக்கதாக இல்லை.

இந்த இடத்தை விட்டு நீங்கள் எழுவதற்கு முன் நிரூபிக்கிறேன் என்று கூறியது மறைவான ஞானம் அவருக்கு உள்ளது என்று கூறுகின்றது. மறைவான ஞானம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது என்பதை முன்னர் நாம் நிரூபித்தோம்.

ஹம்மாத் என்பவர் யூசுஃபுக்கும் அப்துர் ரஹ்மானுக்கும் காட்சி தந்ததாகக் கூறுவதும் முன்னர் நாம் எடுத்துக் காட்டிய சான்றுகளுக்கு முரணாக உள்ளது.

இவை அனைத்துக்கும் மேலாக ஒரு விஷயத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அப்துல் காதிர் இவ்வாறு கூறியிருந்தால் அவரது காலத்தில் எழுதப்பட்ட நூல்களில் இது பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

அப்துல் காதிர் ஜீலானி அவர்களைக் கடவுள் நிலைக்கு உயர்த்தும் வகையில் இட்டுக்கட்டப்பட்ட கதைகளின் தொகுப்பே முஹ்யித்தீன் மவ்லிது. இது போல் புனையப்பட்ட மற்றொரு கதையைப் பார்ப்போம்.

9 பருந்தின் தலையைத் துண்டித்து உயிர்ப்பித்தவர்

وقال اذما شوشت للفقرا *حديئة تصيح صوتا نكرا

يل ريح اخذا راسها فانكسرا *من بعد احياها ببدء الكلم

அப்துல் காதிர் ஜீலானியுடனிருந்த ஃபக்கீர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒரு பருந்துக் குஞ்சு கூச்சல் போட்டுக் கொண்டிருந்தது. அப்போது அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் காற்றே இதன் தலையைப் பிடி எனக் கட்டளையிட்டார்கள். உடனே அதன் தலை துண்டானது. பின்னர் இறை நாமம் கூறி அதை உயிர்ப்பித்தார்கள்.

இந்த வரிகளுக்கு விளக்கமாக அமைந்த ஹிகாயத் எனும் பகுதியையும் அறிந்து விட்டு இதில் உள்ள அபத்தங்களை அலசுவோம்.

அப்துல் காதிர் ஜீலானியின் அவையில் குழுமியிருந்த மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒரு பருந்து சப்தமிட்டுக் கடந்து சென்றது. அப்போது அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் காற்றே இதன் தலையைப் பிடி என்றார்கள். உடனே அதன் தலை ஒரு திசையிலும் உடல் மறு திசையிலும் விழுந்தன. உடனே அவர்கள் தமது ஆசனத்திலிருந்து இறங்கி பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று கூறினார்கள். உடனே அது உயிர் பெற்றுப் பறந்து சென்றது. மக்கிய எலும்புகளை உயிர்ப்பிக்கும் இறைவனின் அனுமதியுடன் மக்கள் முன்னிலையில் இது நடந்தேறியது.

இந்தக் கதையில் எத்தனை அபத்தங்கள் என்று பார்ப்போம்.

பருந்துகள் மக்களுடன் அண்டி வாழும் உயிரினம் அல்ல. மக்களை விட்டும் விலகியிருந்து கூச்சல் எதுவும் போடாமலே தம் ஹிகாயத்தைப் பருந்துகள் சாதித்துக் கொள்ளும். மக்களெல்லாம் குழுமியிருக்கும் இடத்திற்கு வந்து பருந்து கூச்சல் போட்டுக் கொண்டிருந்தது என்று கூறப்படுவதே இது பொய் என்பதற்குப் போதுமான சான்றாக உள்ளது.

இது உண்மை என்று வைத்துக் கொண்டால் கூட இன்னும் பல அபத்தங்கள் இதில் உள்ளன.

மனிதர்கள் தொழும் போது, உபதேசம் செய்யும் போது உயினங்கள் இடையூறு செய்வதில் ஆச்சரியம் இல்லை. நல்லது கெட்டதை வித்தியாசப்படுத்தி அறிந்து கொள்ளும் ஆற்றல் அவற்றுக்கு வழங்கப்படவில்லை. அவற்றின் சப்தம் நமக்குக் கூச்சலாகத் தோன்றினாலும் உண்மையில் அவை கூச்சல் போடவில்லை. தமக்கிடையே அவை பேசிக் கொள்வது தான் நமக்குக் கூச்சலாகத் தோன்றுகிறது.

தாவூதுக்கு ஸுலைமான் வாரிசானார். மக்களே! பறவையின் மொழி எங்களுக்குக் கற்றுத் தரப்பட்டுள்ளது. அனைத்துப் பொருட்களும் எங்களுக்குத் தரப்பட்டுள்ளது. இதுவே தெளிவான அருட் கொடையாகும்  என்று அவர் கூறினார்.

(அல்குர்ஆன் 27.16)

பறவையின் மொழிகள் சுலைமான் நபிக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டதாகக் குர்ஆன் கூறுவதிலிருந்து இதை விளங்கலாம். சிந்தனையாளர்களும், மார்க்க அறிவுடையோரும் பறவைகளின் சப்தத்திற்காக ஆத்திரம் கொள்ள மாட்டார்கள். அவற்றின் கூச்சல் சகிக்க முடியாத அளவுக்கு அதிகமானால் கூட தலையைத் துண்டாக்கும் அளவுக்குப் போக மாட்டார்கள். விரட்ட வேண்டிய வகையில் விரட்டினால் அவை ஓடி விடும்.

இந்தக் கதை உண்மை என்று வைத்துக் கொண்டால் இது அப்துல் காதிர் ஜீலானி அவர்களுக்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை. உண்பதற்காகவும் நம்மைத் தாக்க வரும் போதும் தற்காத்துக் கொள்வதற்காகவும் சில உயிரினங்களைக் கொல்ல இஸ்லாம் அனுமதிக்கிறது. அதற்காகவே பருந்தை அவர்கள் கொன்றார்கள் என்றும் கருத முடியாது. அதற்காகக் கொன்றிருந்தால் அடுத்த வினாடியே அதை உயிர்ப்பித்திருக்க வேண்டியதில்லை. பாம்பைக் கண்டால் அதை நாம் கொல்லலாம். கொல்ல வேண்டும். இதற்கு நன்மையும் உண்டு. கொன்ற பாம்பை உடனே உயிர்ப்பித்தால் அதைக் கொல்ல வேண்டும் என்று மார்க்கம் கூறுவதற்காகக் கொல்லவில்லை. தம்முடைய வல்லமையைக் காட்டவே கொன்றிருக்கிறார் என்பது தான் பொருள்.

அடுத்து அந்த பருந்தைக் கொல்வதற்காக அவர் தேர்ந்தெடுத்த முறையும் ஏற்கும் படியாக இல்லை. எல்லா உயினங்களையும் மனிதர்களுக்காக இறைவன் வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான். மனிதனின் விருப்பப்படி நடப்பவற்றில் காற்றை இறைவன் கூறவில்லை. 7.57, 25.48, 30.46, 30.48, 35.09 ஆகிய வசனங்களில் காற்று இறைவனின் கட்டளைப்படி மட்டும் இயங்கக்கூடியது என்று இறைவன் கூறுகிறான். இந்தப் பொதுவான விதியிலிருந்து சுலைமான் நபி விஷயத்தில் மட்டும் இறைவன் விலக்களித்ததாகக் கூறுகிறான். 21.81, 34.12, 38.36 வசனங்களில் சுலைமானுக்கு காற்றை நாம் வசப்படுத்திக் கொடுத்தோம் என்று இறைவன் கூறுகிறான். இதிலிருந்து மற்ற எவருக்கும் காற்று கட்டுப்பட்டு நடக்காது என்பதை அறியலாம்.

இந்தக் கதையில் காற்று அப்துல் காதிர் ஜீலானியின் கட்டளைக்குக் காத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இவர் நினைத்ததை முடித்து விடுவார் என்று பயமுறுத்துவதற்காகவே இவ்வாறு கற்பனை செய்யப்பட்டுள்ளது என்பது இதிலிருந்து தெளிவாகும். காற்றின் அதிபதி அப்துல் காதிர் ஜிலானி தான் என்று நம்ப வைப்பதே இதன் நோக்கம் என்பதும் தெளிவாகிறது.

நபிமார்களுக்கு இறைவன் சில அற்புதங்களை வழங்கியதை நாம் அறிவோம். தமது தூதுத்துவத்தை மக்கள் நம்பி இஸ்லாத்தை ஏற்பதற்காகவும் இக்கட்டான நிலையிலிருந்து தப்புவதற்காகவும் தம் சமுதாயத்தவர் பயன் பெறுவதற்காகவும் இத்தகைய அற்புதங்களைச் சில சமயங்களில் இறைவன் அவர்கள் மூலம் நிகழ்த்திக் காட்டியுள்ளான்.

இங்கே அப்படிப்பட்ட உயர்ந்த நோக்கம் ஏதுமில்லை. யாரையும் இஸ்லாத்தில் இணைப்பதும் நோக்கமில்லை. ஏனெனில் இது அவரது சீடர்கள் மட்டும் குழுமியிருந்த போது நடந்திருக்கிறது. பருந்தின் தொல்லையிலிருந்து தம் சீடர்களைக் காப்பதும் கூட நோக்கம் அன்று. அது தான் நோக்கம் என்றால் உடனே அதை உயிர்ப்பித்திருக்க மாட்டார்.

அவர் இறைவனின் தூதராகவும் இருக்கவில்லை. இதன் மூலம் தாம் ஒரு இறைத்தூதர் என்பதைக் காட்டினார் என்றும் கூற முடியாது. அல்லாஹ் எப்படி அழிப்பானே அதே போல் அப்துல் காதிராலும் அழிக்க முடியும். அவன் எப்படி இறந்தவர்களை உயிர்ப்பிக்கிறானோ அவ்வாறு அவராலும் உயிர்ப்பிக்க முடியும் என்று மக்களை நம்பச் செய்து அவரைத் தெய்வமாக்குவதே இந்தக் கதையின் நோக்கம்.

நபியவர்கள் இது போல் இடையூறு செய்த உயினங்களைக் காற்றுக்குக் கட்டளையிட்டு அழித்ததுமில்லை. உடனேயே உயிர்ப்பித்ததும் இல்லை. அப்துல் காதிர் நபியவர்களை விட அதிக ஆற்றல் பெற்றவர். இறைவனுக்கு நிகரானவர் என்பதைத் தான் இந்தக் கதை கூறுகிறது. அபத்தங்கள் நிறைந்த இந்தக் கதையைத் தான் மவ்லிது என்று அப்பாவி முஸ்லிம்கள் பக்தியுடன் பாடி வருகின்றனர். இதற்கு இறைவனிடம் நன்மை கிடைக்குமா? தண்டனை கிடைக்குமா? என்று மவ்லிது அபிமானிகள் சிந்திக்கட்டும்.

10 கொள்ளையர்கள் மீது மிதியடிகளை வீசித் தாக்கியவர்

رمى بقبقابيه من قد نهبا *حتى ينال المال من قد سلبا

منهم فادوا ما عليهم وجبا *بالنذر معهما بايدى الخدم

முஹ்யித்தின் மவ்லிதில் காணப்படும் நச்சுக் கருத்து இது. இதன் பொருள் வருமாறு.

கொள்ளையடித்த பொருட்களை உரியவர்களிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பதற்காகக் கொள்ளையர்கள் மீது மரக்கட்டையலான தமது இரு மிதியடிகளை அப்துல் காதிர் ஜிலானி வீசினார்கள். அந்த மக்கள் அந்த மிதியடிகளுடன் நேர்ச்சை செய்த காணிக்கைகளையும் கொண்டு வந்து பணிவுடன் அப்துல் காதிர் ஜிலானியிடம் சமர்ப்பித்தார்கள்.

இந்த நச்சுக் கருத்துக்கு விளக்கவுரையாக ஹிகாயத் எனும் பகுதியில் கூறப்படுவதையும் பார்த்துவிட்டு இதிலுள்ள அபத்தங்களை ஆராய்வோம்.

நாங்கள் அப்துல் காதிர் ஜீலானியிடம் இருந்தோம். அவர்கள் மிதியடியணிந்து உளுச் செய்து இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். திடீரென்று இரு தடவை சப்தமிட்டுத் தமது இரு மிதியடிகளையும் வீசினார்கள். பிறகு மௌனமானார்கள். அவர்களிடம் (காரணம்) கேட்க மக்களுக்குத் துணிவில்லை. பின்னர் அரபியரல்லாத ஒரு கூட்டத்தினர் அப்துல் காதிர் ஜீலானிக்காக நேர்ச்சை செய்த தங்கம் மற்றும் ஆடைகளுடன் வந்தனர். அவர்களிடம் அந்த மிதியடியும் இருந்தது. அவர்களிடம் இந்த மிதியடி உங்களுக்கு எப்படிக் கிடைத்து? என்று நாங்கள் கேட்டோம். அதற்கவர்கள் நாங்கள் பயணம் செய்து கொண்டிருந்த போது கிராமப்புறத்திலுள்ள கொள்ளையர்கள் தங்களின் இரு தலைவர்களுடன் வந்து எங்களைத் தாக்கினார்கள். எங்களில் பலரைக் கொன்று விட்டு எங்களிடமிருந்த பொருட்களையும் கொள்ளையடித்தனர். அப்துல் காதிர் ஜீலானிக்காக நாம் நேர்ச்சை செய்யலாமே என்று இரண்டு வார்த்தைகளைத் தான் நாங்கள் கூறினோம். சொல்லி முடிப்பதற்குள் கடுமையான இரண்டு சப்தங்களைக் கேட்டோம். அவர்களில் ஒருவன் இங்கே வாருங்கள். நம் மீது இறங்கிய வேதனையைப் பாருங்கள் என்றான் நாங்கள் பார்த்த போது அவர்களின் இரு தலைவர்களும் பிணமாகக் கிடந்தனர். ஒவ்வொருவருக்கு அருகிலும் ஒரு மிதியடி கிடந்தது. என்று விளக்கினார்கள். இதை அப்துல் ஹக் என்பார் கூறுகிறார்.

இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையைக் கடுகளவு அறிந்தவன் கூட ஜீரணிக்க முடியாத இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்க்கக்கூடிய இந்தக் கதையைத் தான் மவ்லிது என்ற பெயரால் பக்தியுடன் முஸ்லிம்கள் என்று தங்களைக் கூறிக் கொள்வோர் ஓதி வருகின்றனர்.

(நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது) நெருக்கடியைச் சந்திப்பவன் பிரார்த்திக்கும் போது அதற்குப் பதிலளித்து துன்பத்தைப் போக்கி உங்களைப் பூமியில் வழித் தோன்றல்களாக ஆக்கியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? குறைவாகவே சிந்திக்கிறீர்கள்.

(அல்குர்ஆன் 27.62)

நெருக்கடியான நேரத்தில் உதவி செய்பவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமுண்டா என்று இறைவன் கேட்கிறான். இதோ நானிருக்கிறேன் என அப்துல் காதிர் ஜீலானி கூறியதாக இந்தக் கதை கூறுகிறது.

அவர்கள் நேர்ச்சையை நிறைவேற்றுவார்கள். தீமை பரவிய நாளைப் பற்றி அஞ்சுவார்கள்

(அல்குர்ஆன் 76.7)

அல்லாஹ்வுக்கு வழிபடும் வகையில் யாரேனும் நேர்ச்சை செய்தால் அதை நிறைவேற்றட்டும். அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் விதமாக நேர்ச்சை செய்தால் அதை நிறைவேற்றக் கூடாது என்பது நபிமொழி.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),

நூல்: புகாரி 6700, 6696

அல்லாஹ்வுக்கு மட்டுமே நேர்ச்சை செய்ய வேண்டும் என்பதை மேற்கண்ட வசனம் கூறுகிறது. இறைவன் தனக்காக எவற்றைச் செய்ய வேண்டும் என்று கூறுகிறானோ அவை அனைத்தும் வணக்கங்களாகும். வணக்கங்களை அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் செய்யக் கூடாது. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்ற அடிப்படைக் கொள்கைக்கு இது முரணானதாகும்.

இந்த வசனமும் இந்த நபிமொழியும் இஸ்லாத்தின் அடிப்படையும் அந்தக் கூட்டத்தினருக்கும் தெரியவில்லை. அப்துல் காதிருக்கும் தெரியவில்லை. ஈமானை இழந்த அந்த மக்களைக் கண்டித்துத் திருத்த வேண்டிய அப்துல் காதிர் அதை அங்கிகரிக்கிறார். தமக்கு இறைத் தன்மை இருப்பது போல் நடந்திருக்கிறார் என்று இந்தக் கதை கூறுகிறது.

காலமெல்லாம் ஏகத்துவக் கொள்கையைப் பிரச்சாரம் செய்த அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் நிச்சயம் இப்படி நடந்திருக்க மாட்டார்கள். அவர்கள் பெயரால் வயிறு வளர்க்க எண்ணியவர்களால் இட்டுக் கட்டப்பட்டதே இந்தக் கதை.

அப்துல் காதிர் ஜீலானியைப் புகழ்கிறோம் என்று நினைத்துக் கொண்டு நானே கடவுள் என்று வாதிட்ட பிர்அவ்னைப் போல் அப்துல் காதிரை இந்தக் கதை மூலம் சித்தரிக்கின்றனர்.

நபித்தோழர்கள் எத்தனையோ துன்பங்களுக்கு ஆளானார்கள். அவர்களில் யாரும் நபியவர்களுக்காக நேர்ச்சை செய்ததில்லை. தந்திரமாகப் பல நபித்தோழர்களை அழைத்துச் சென்று எதிரிகள் வெட்டிக் கொன்றனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மிதியடிகளை எறிந்து அவர்களைக் கொல்லவில்லை.

நபியவர்களையே எத்தனையோ சந்தர்ப்பங்களில் அடித்தனர், உதைத்தனர், இரத்தம் சிந்தச் செய்தனர். அப்போதெல்லாம் மிதியடியை ஏவிவிட்டு அந்தத் துன்பத்திலிருந்து அவர்கள் தம்மைக் காத்துக் கொண்டதில்லை. இந்தத் துன்பங்களைச் சகித்துக் கொண்டார்கள். அல்லது அல்லாஹ்விடம் முறையிட்டார்கள். ஆனால் அப்துல் காதிரோ எல்லா அதிகாரமும் தம் கையில் உள்ளது போல் நடந்திருக்கிறார் என்பதை நம்ப முடிகிறதா? சிந்தியுங்கள்.

அப்துல் காதிர் ஜீலானியை இன்று ஏராளமான முஸ்லிம்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் அகிலமெல்லாம் அவரை அறிந்து வைத்திருக்கவில்லை. அவரது ஊராரும் அவரைச் சுற்றியிருந்தவர்களும் மட்டுமே அவரை அறிந்திருந்தார்கள். அவரும் அவரது புகழும் அரபுப் பிரதேசத்தைத் தாண்டியதில்லை. உலகமெங்கும் ஒருவரது புகழ் பரவும் அளவுக்கு எந்த நவீன பிரச்சார சாதனங்களும் அன்று இருந்ததில்லை. அரபியரல்லாத கூட்டத்தினர் நேர்ச்சை செய்தார்கள் என்று இந்தக் கதையில் கூறப்படுவது பொய் என்பதை இதிலிருந்தும் அறியலாம்.

மேலும் கொள்ளையரைக் கொன்ற மிதியடி அப்துல் காதிருடையது தான் என்று அரபியரல்லாத அந்தக் கூட்டத்தினருக்கு எப்படித் தெரிந்தது?

இப்படி ஒரு நிகழ்ச்சி உண்மையிலேயே நடந்திருந்ததாக வைத்துக் கொள்வோம். அப்படி நடந்திருந்தால் அதுவே இந்த மவ்லிதைத் தீயிலிட்டுக் கொளுத்தப் போதுமான காரணமாகும். இஸ்லாத்துக்கும், குர்ஆனுக்கும் மாற்றமாக ஒருவர் நடந்தால் அவர் இறைநேசராக முடியாது. இறை நேசரல்லாத ஒருவரைப் புகழ்ந்து பாடுவது பெருங்குற்றமாகும்.

இந்தக் கதை உண்மையாக இருந்தால் அப்துல் காதிர் ஜீலானி தம்மைக் கடவுளாக எண்ணியதால் மவ்லிதை ஒழித்துக் கட்ட வேண்டும். இந்தக் கதை பொய்யாக இருந்தால் நல்லடியார் மீது அவதுறு சுமத்துவதால் மவ்லிதை ஒழித்தாக வேண்டும். எப்படிப் பார்த்தாலும் ஒழிக்கப்பட வேண்டிய இந்த அபத்தத்தைப் படிக்கலாமா? மவ்லிது அபிமானிகள் சிந்திக்கட்டும்.

அப்துல் காதிர் ஜீலானியை அல்லாஹ்வுக்குச் சமமாக காட்டும் கற்பனைக் கதைகளின் தொகுப்பே முஹ்யித்தீன் மவ்லிது என்பது. இது போன்ற மற்றொரு கதையைப் பார்ப்போம்.

11 பார்த்தாலே நேர்வழி?

فوز واقبال لمن هداه *ومن راى من اقتدى هداه

அவர் யாருக்கு நேர்வழி காட்டினாரோ அவருக்கும் அவரது நேர்வழியைப் பார்த்தவருக்கும் வெற்றியும், முன்னேற்றமும் உண்டு.

وروي ان الشيخ رضي الله عنه قال طوبى لمن راني فى حياتي او راى من راني او راى من راى من راني بعد وفاتي وان آخذبيد من عثر عن الاستقامة من مريدي ومحبي ليوم القيامة

என் வாழ்நாளில் யார் என்னைப் பார்த்தாரோ அவருக்கும், என் மரணத்திற்குப் பின் என்னைப் பார்த்தவர்களைப் பார்த்தவர்களுக்கும், என்னை யார் பார்த்தார்களோ அவர்களைப் பார்த்தவர்களைப் பார்த்தவருக்கும் நல் வாழ்க்கை உண்டு. எனது முரீதுகளிலும், எனது நேசர்களிலும் யாரேனும் நேர்வழியிலிருந்து விலகினால் அவரது கையை நான் பிடித்துக் கொள்வேன். இது கியாமத் நாள் வரையிலும் நடக்கக் கூடியதாகும் என்று அப்துல் காதிர் ஜீலானி கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் எவ்வளவு அபத்தங்கள் உள்ளன என்று ஆராய்வோம்.

அப்துல் காதிர் ஜீலானி இவ்வாறு கூறி இருந்தால் இது அவரது நூல்களிலோ, அவரது உரைத் தொகுப்புக்களிலோ நிச்சயம் இடம் பெற்றிருக்க வேண்டும். அல்லது அவர்கள் காலத்தில் வாழ்ந்த மக்கள் இதைப் பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால் இப்படி எந்த வரலாற்றுக் குறிப்பும் இந்தக் கூற்றுக்குக் கிடையாது.

அப்துல் காதிர் ஜீலானியைப் பார்த்தவர்களுக்கு நல்வாழ்க்கை உண்டு என்பது இஸ்லாத்தின் அடிப்படைக்கே முரணாகும். அப்துல் காதிர் ஒரு மனிதர். மனிதனை மனிதன் பார்ப்பதால் நல் வாழ்க்கை கிடைத்து விடாது. கடுகளவுக்கு அறிவுடையவனுக்குக் கூட தெரிந்த இந்த உண்மை மவ்லிதை இயற்றியவருக்குத் தெரியவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை எத்தனையோ காபிர்கள் பார்த்தனர். அபூஜஹ்ல் போன்ற கொடியவர்களும் பார்த்தனர். இவ்வாறு பார்த்தது அவர்களுக்கு இம்மையிலோ, மறுமையிலோ எந்த நல்வாழ்க்கையையும் அளிக்கவில்லை. நபிகள் நாயகத்தைப் பார்த்ததால் நல்வாழ்வை அடைய முடியவில்லை. ஆனால் அப்துல் காதிர் ஜீலானியைப் பார்த்துவிட்டால் நல்வாழ்வு நிச்சயம் என்ற நச்சுக் கருத்தை எந்த முஸ்லிமாவது ஏற்க முடியுமா?

ஒருவரைப் பார்ப்பதால் பாக்கியம் ஏற்படும் என்பது ஒரு புறமிருக்கட்டும். நல்லடியார் ஒருவருக்குச் சந்ததிகளாக இருப்பது கூட எந்தப் பயனுமளிக்காது என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

நூஹ் நபி, லூத் நபி ஆகியோரின் மனைவியர் அந்த நபிமார்களைப் பார்த்தது மட்டுமன்றி அவர்களுடன் இரண்டறக் கலந்தவர்கள். அவர்களும் கூட நரகை அடைவார்கள் என்று குர்ஆன் கூறுகிறது.

நூஹ் நபியின் மகன் நூஹ் நபியை ஏற்கவில்லை. நூஹ் நபியின் இரத்தம் அவன் உடலில் ஓடியும் கூட அவனும் அழிந்து போனதாகக் குர்ஆன் கூறுகிறது.

இப்ராஹீம் நபி அவர்களின் தந்தையின் நிலையும் இது தான். அவரும் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளானதாக திருக்குர்ஆன் கூறுகிறது.

இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் பெரிய தந்தையாக இருந்தும் அபூலஹப் அல்லாஹ்வின் கோபத்திற்குள்ளாளான்.

மிகப் பெரிய நபிமார்களை நேரடியாகப் பார்த்தது மட்டுமின்றி அவர்களுடன் இரத்த சம்பந்தமான உறவும் உள்ளவர்களின் நிலை இது. ஆனால் அப்துல் காதிரைப் பார்த்து விட்டாலே மோட்சம் கிடைத்து விடுமாம். அது மட்டுமின்றி அவரைப் பார்த்தவர்களை யார் பார்க்கின்றார்களோ அவர்களுக்கும் மோட்சம் கிடைத்து விடுமாம். அவரைப் பார்த்தவர்களை பார்த்தவர்களுக்கும் மோட்சம் உண்டாம். நபிமார்களை விட அப்துல் காதிருக்கு இருக்கும் மகிமை சிறந்தது என்று இந்தக் கதை கூறுகிறதே உண்மையான முஸ்லிம்கள் இதை நம்பலாமா?

இதைவிடப் பயங்கரமான மற்றொரு அபத்தத்தைக் கேளுங்கள்.

அப்துல் காதிர் தம் முரீதுகளின் கைகளைப் பிடித்துக் கொண்டிருக்கிறாராம். அவர்கள் தவறான வழியில் சென்றால் உடனே கையைப் பிடித்துத் தடுத்து நிறுத்தி விடுவாராம். அவர் வாழ்நாளில் மட்டுமின்றி கியாமத் நாள் வரை இதே வேலையாக இருப்பாராம்.

மவ்லிதை இயற்றியவர்கள் சுய சிந்தனையுடன் தான் இவ்வாறு எழுதியுள்ளார்களா? இந்த விபரீதத்தை விளங்காமல் தான் மவ்லவிமார்கள் இதை ஆதரிக்கிறார்களா?

உயிருடன் வாழும் போது கூட ஒருவர் தமது நேசர்களின் கையைப் பிடித்து அவர்களை நேர்வழியில் கொண்டு செல்ல முடியாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வுலகில் வாழும் போது அவர்கள் வாழ்ந்த ஊரிலேயே சில நபித்தோழர்கள் விபச்சாரம் செய்தனர், திருடினர், கனீமத் பொருட்களை மோசடி செய்தனர். அந்தச் சந்தர்ப்பங்களில் அவர்களது கைளைப் பிடித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுக்கவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின் நபித்தோழர்களுக்கிடையே மோதல்களும், பிரச்சனைகளும் உருவாயின. இன்றளவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உம்மத்தினர் பலர் பாவங்களில் மூழ்கியுள்ளனர். இவர்களின் கைகளைப் பிடித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுக்கவில்லை.

ஆனால் அப்துல் காதிர் ஜீலானி என்ற மனிதர் மரணித்த பின் கியாமத் நாள் வரை முரீதுகளின் கைகளைப் பிடித்துக் கரை சேர்ப்பாராம். இதை நம்ப முடிகின்றதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மட்டம் தட்டி அல்லாஹ்வுக்கு நிகராக அப்துல் காதிரை உயர்த்த வேண்டும் என்ற சதியின் ஒரு பகுதியே இந்த மவ்லிது என்பது இப்போதாவது புரிகின்றதா?

அப்துல் காதிரின் முரீதுகள் எனப்படுவோர் பலர் இன்று சினிமாத் தயாரிப்பில் ஈடுபடுவதையும் சினிமா விநியோகிஸ்தர்களாக உள்ளதையும் ஹராமான பல வழிகளில் பொருளீட்டுவதையும் காண்கிறோம். தொழுகையைக் கூட நிறைவேற்றாமல் அவர்களில் பலர் இருப்பதைக் காண்கிறோம். இவர்களின் கையைப் பிடித்து அப்துல் காதிர் தடுக்கவில்லை. தடுக்க முடியாது என்பதற்கு இதை விட வேறு சான்று தேவையில்லை.

அப்துல் காதிர் ஜீலானியை அல்லாஹ்வுக்குச் சமமாக்கும் கதைகளின் தொகுப்பே முஹ்யித்தீன் மவ்லிது என்பதற்கு மற்றொரு சான்றைப் பார்ப்போம்.

11 கனவில் கட்டளையிட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்?

كم من رجال بشر النبي *ان الزم الذي هو النقي

الشيخ عبد القادر الرضي *فى العالمين دافع الملامة

துன்பங்களை நீக்கக்கூடிய அகில உலகிலும் அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்ற தூயவரான பெரியார் அப்துல் காதிரைப் பற்றிப் பிடியுங்கள் என்று எத்தனையோ மனிதர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நற்செய்தி கூறியுள்ளனர்.

அப்துல் காதிர் ஜீலானியின் காலத்துக்கு ஐநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவரைப் பற்றிப் பிடிக்குமாறு எப்படிக் கூறியிருப்பார்கள்? அவர்கள் அவ்வாறு கூறியிருந்தால் அது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் நூல்களில் பதவு செய்யப்பட்டிருக்குமே? எந்த ஹதீஸ் நூல்களில் இந்த முன்னறிவிப்பு இடம் பெற்றுள்ளது? என்றெல்லாம் யாரும் விளக்கம் கேட்டுவிடக் கூடாது என்பதற்காக ஹிகாயத் பகுதி பின்வருமாறு விளக்கம் தருகின்றனர்.

நான் சிறுவனாக இருந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் கண்டேன். அல்லாஹ்வின் வேதம் உங்கள் வழிமுறை இரண்டினடிப்படையில் நான் மரணிக்க அல்லாஹ்விடம் துஆச் செய்யுங்கள் என்று நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீ பைஅத் செய்வதற்கு ஏற்ற பெரியார் அப்துல் காதிர் தாம் என்று கூறினார்கள். மூன்று தடவை இதை நான் கேட்டேன். மூன்று தடவையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதே பதிலையே கூறினார்கள். நான் விழித்தவுடன் என் தந்தையிடம் இதைக் கூறினேன். இஸ்லாமியப் பெரியார்களுக்கெல்லாம் பெரியாரைச் சந்திக்கப் புறப்பட்டோம். அவர்கள் உரை நிகழ்த்தத் தயாராக ஆசனத்தில் அமர்ந்திருந்தார்கள். மக்கள் நெருக்கத்தினால் அவர்களை நாங்கள் நெருங்க முடியவில்லை. எனவே தொலைவில் தங்கி விட்டோம். அவர்கள் தம் உரையை இடையில் நிறுத்தி அவ்விருவரையும் என்னிடம் கொண்டு வாருங்கள் என்று சைகை செய்தார்கள். சிலரது தோள்களில் சுமக்கப்பட்டு அவர்களது ஆசனத்தின் அருகில் கொண்டு செல்லப்பட்டோம். முன்னறிவிப்பின்றி நம்மிடம் வந்திருக்க மாட்டீர்கள் என்று எங்களிடம் கூறிவிட்டு தமது சட்டையை என் தந்தைக்கும் தமது கிரீடத்தை எனக்கும் அணிவித்ததார்கள். இஸ்னாத் (அறிவிப்பாளர் தொடர்) சீட்டை எங்களுக்கு எழுதித் தந்தார்கள் என்று அபுல் ஹஸன் கூறுகிறார்.

இந்த ஹிகாயத்தில் எவ்வளவு அபத்தங்கள் உள்ளன என்பதை ஆராய்வோம். அப்துல் காதிர் ஜீலானியிடம் பைஅத் செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கனவில் கட்டளையிட்டதாக இந்தக் கதை கூறுகிறது.

பித்அத்களை உருவாக்கியவர்களும், தமக்கு மக்கள் கூடுதலான மயாதை அளிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் கண்டதாகக் கூறி வருகின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் காண முடியுமா? இது பற்றி மார்க்கம் சொல்வது என்ன என்பது கூட இவர்களுக்குத் தெயவில்லை.

யார் என்னைக் கனவில் காண்கிறாரோ, அவர் விழிப்பிலும் என்னைக் காண்பார் என்பது நபிமொழி.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6993

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் காண்பவர் விழித்தவுடன் நேலும் அவர்களைக் காண்பார் என்பதன் பொருள் என்ன? விழித்தவுடன் நேரிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் காண்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிரோடு இவ்வுலகில் வாழ்ந்த காலத்துக்கு மட்டுமே பொருந்தும். நபித்தோழர்கள் தமது கனவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கண்டால் விழித்த பின் நேரடியாகவும் அவர்களைக் காண்பார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்துக்குப் பின்னால் வாழ்ந்து வரும் மக்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நிச்சயமாகக் கனவில் காண முடியாது. கனவில் கண்டால் விழிப்பிலும் காண்பார்கள் என்பது இந்த மக்களுக்குக் கடுகளவும் பொருந்தாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்தப் பொன்மொழியில் நம்பிக்கை உள்ள யாரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் கண்டதாக கூற மாட்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் கண்டதாகக் கூறும் யாரும் ஏமாற்றுப் பேர்வழிகள் என்பதை இந்த நபிமொழியிலிருந்து அறியலாம்.

ஒருவரைக் கனவில் கண்டு அவரைத் தான் கனவில் கண்டோம் என்று உறுதி செய்வதென்றால் அவரை நாம் முன்னரே நேரடியாகப் பார்த்திருப்பது அவசியமாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நேரடியாகப் பார்க்காதவர்கள் கனவில் வந்தது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் என்று எப்படி உறுதிப்படுத்திக் கொண்டார்கள்? இதையும் நாம் சிந்திக்க வேண்டும். மார்க்கத்தின் எல்லா அம்சத்தையும் முழுமையாக மக்களுக்கு அறிவித்துத் தரும் பணியைப் பூரணமாக நிறைவேற்றிவிட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சென்று விட்டனர். கனவில் வந்து எதையும் அவர்கள் சொல்லித் தரவேண்டிய அவசியம் ஏதுமில்லை என்பதையும் நாம் உணர்ந்தாக வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என் கனவில் இதைக் கூறினார்கள். அதைக் கூறினார்கள் என்றெல்லாம் பல பெரியார்கள்(?) கூறியுள்ளனர். அந்தக் காரியங்கள் உயிரோடு வாழ்ந்த காலத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்த காரியங்களாக உள்ளன. தாம் உயிரோடு வாழ்ந்த போது தடுத்த காரியங்களை தம் மரணத்திற்குப் பின் கனவில் வந்து அனுமதிப்பார்கள் என்பதை அறிவுள்ள எவரும் ஏற்க மாட்டார்கள். இதிலிருந்து கனவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்ததாகக் கூறுவது வடிகட்டிய பொய் என்பதை அறியலாம். மக்கள் தங்களைப் பெரியார் என்று நம்பி மதிக்க வேண்டும் என்பது தான் இதற்குக் காரணம்.

அப்துல் காதிர் ஜீலானியிடம் சென்று பைஅத் செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூன்று தடவை வலியுறுத்திக் கூறியதாக கூறப்படுவது மற்றொரு அபத்தமாகும்.

பைஅத் என்றால் உறுதிமொழி எடுத்தல் என்பது பொருள்

ஒருவருடன் மற்றொருவர் செய்து கொள்ளும் ஒப்பந்தம் (பைஅத்) செய்து கொள்ள இஸ்லாம் அனுமதிக்கின்றது.

ஒரு நிறுவனத்தின் பணிபுரியச் செல்பவர் அந்த நிறுவனத்தினருடன் நான் இந்த நிறுவனத்தின் விதிகளுக்குக் கட்டுப்பட்டு விசுவாசமாகப் பணியாற்றுவேன் என்று பைஅத் (உறுதிமொழி) எடுக்கலாம். ஒரு நிறுவனத்தில் பணியாற்றுவர் அந்த நிறுவனத்தின் பணிகள் குறித்து மற்றொரு நிறுவனத்தில் உறுதிமொழி எடுத்தால் அதை முட்டாள்தனம் என்போம்.

தொழுகை, நோன்பு போன்ற பல வணக்க வழிபாட்டு முறைகளை முறையாக நிறைவேற்றுவேன் என்று உறுதிமொழி எடுப்பதில் தவறில்லை. யாரிடம் எடுக்க வேண்டும் என்பது தான் பிரச்சினை. இந்த வணக்க வழிபாடுகள் யாவும் இறைவனுக்குச் சொந்தமானவை . அதை நிறைவேற்றுவதன் பயனையும் நிறைவேற்றாவிட்டால் ஏற்படும் தண்டனையையும் இறைவன் தான் வழங்குவான்.

நிச்சயமாக துய இந்த மார்க்கம் அல்லாஹ்வுக்கே சொந்தமானது.

(அல்குர்ஆன் 39:3)

மார்க்கம் அல்லாஹ்வுக்குச் சொந்தமானது என்பதால் மார்க்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களை ஒழுங்காக நிறைவேற்றுவேன் என்று இறைவனிடம் தான் பைஅத் செய்ய வேண்டும். இந்த வணக்கங்களை நம்மைப் போலவே நிறைவேற்றக் கடமைப்பட்ட ஒருவரிடம் இந்த வணக்கங்களுக்கான கூலியைத் தர முடியாத ஒருவரிடம் இவற்றை நிறைவேற்றாவிட்டால் தண்டிக்கும் உரிமையில்லாத ஒருவரிடம் இந்த வணக்கங்கள் பற்றி நம்மைப் போலவே இறைவனால் விசாரிக்கப்படும் நிலையிலுள்ள ஒருவரிடம் இது பற்றி உறுதி மொழி எடுப்பது அபத்தமானதாகும். அவரை அல்லாஹ்வுக்குச் சமமமாக கருதுவதுமாகும்

ஒருவர் சம்பந்தப்பட்ட . பைஅத் உறுதிமொழியை அவரால் நியமிக்கப்பட்ட அவரது தூதரிடம் எடுக்கலாம். இதை யாரும் அபத்தமாகக் கருத மாட்டார்கள். ஒரு நாட்டுடன் மற்றொரு நாடு செய்து கொள்ளும் ஒப்பந்தங்களில் அந்தந்த நாட்டு ஆட்சித் தலைவர்களால் நியமிக்கப்பட்ட தூதர்கள் கையொழுத்திடுவதை நாம் பார்க்கிறோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட தூதராக இருப்பதால் அல்லாஹ்வுக்குச் சொந்தமான விஷயத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் பைஅத் செய்யலாம். பைஅத் வியாபாரம் செய்யும் பெரியார்கள்(?) இறைவன் சம்பந்தப்பட்ட காரியங்களில் உறுதிமொழி பெற எந்த அதிகாரமும் பெற்றிருக்கவில்லை. அவர்களில் யாரும் அல்லாஹ்வின் தூதர்களுமல்லர். எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நபித் தோழர்கள் செய்த உடன்படிக்கையை ஆதாரமாகக் கொண்டு தங்களின் பைஅத் வியாபாரத்தை நியாயப்படுத்தினால் அவர்கள் தங்களை இறைவனின் தூதர்களாகவும் இறைவன் சார்பாக உறுதிமொழி பெற அதிகாரம் வழங்கப்பட்டவர்களாகவும் கருதுகின்றார்கள் என்பதே பொருள்.

உம்மிடத்தில் உறுதி மொழி எடுத்தோர் அல்லாஹ்விடமே உறுதி மொழி எடுக்கின்றனர். அவர்களின் கைகள் மீது அல்லாஹ்வின் கை உள்ளது. யாரேனும் முறித்தால் அவர் தனக்கெதிராகவே முறிக்கிறார். யார் தம்மிடம் அல்லாஹ் எடுத்த உறுதி மொழியை நிறைவேற்றுகிறாரோ அவருக்கு மகத்தான கூலியை அவன் வழங்குவான்.

(அல்குர்ஆன் 48:10)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் செய்த உறுதிமொழியைத் தன்னிடம் செய்து கொள்ளும் உறுதிமொழியாக இறைவன் அங்கீகரிப்பதற்கு இவ்வசனமே சான்று.

ஒருவர் கனவு கண்டால் அதை மற்ற எவராலும் அறிந்து கொள்ள முடியாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தினமும் காலையில் உங்களில் யாரேனும் நேற்றிரவு கனவு கண்டீர்களா? என்று விசாரிக்கும் பழக்கமுடையவர்களாக இருந்தனர்.

நீங்கள் இன்னின்ன கனவுகளைக் கண்டீர்கள் என்று கனவைக் கண்டுபிடித்துக் கூறாமல் மக்களிடமே கேட்டுத் தெரிந்துள்ளனர். ஆனால் அபுல் ஹஸன் கண்ட கனவை அப்துல் காதிர் ஜீலானி தாமே அறிந்து கொண்டதாக இந்தக் கதை கூறுகிறது. மறைவான ஞானம் அப்துல் காதிருக்கு இருப்பதாகக் காட்டி அவரை அல்லாஹ்வுக்குச் சமமமாக அல்லாஹ்வின் தூதருக்கும் மேலாக ஆக்குவது தான் இந்தக் கதையின் நோக்கம். இது போன்ற அபத்தங்கள் தாம் முஹ்யித்தீன் மவ்லிது.

அப்துல் காதிர் ஜீலானியைப் புகழ்கிறோம் எனப் பெயரால் புராணங்களைத் தோற்கடிக்கும் அளவுக்குக் கற்பனை செய்து எழுதப்பட்டது தான் முஹ்யித்தீன் மவ்லிது. இதை நிரூபிக்கும் மற்றொரு சான்றைப் பார்ப்போம்.

11 கனவில் நடந்த கொலை!

قد قال سافر لامرء ابيل *لمنعه الحماد عن رحيل

لما راى من قتله الوبيل *فانني لكم ذو زعامة

قصار ذاك القتل فى المنام *والنهب نسي ماله القوام

بما دعى الله على اهتمام *مقدار عين كاشف الندامة

ஒரு மனிதர் கொடூரமாகக் கொலை செய்யப்படுவார் என்பதை அறிந்த ஹம்மாம் அம்மனிதரைப் பயணம் செய்வதை விட்டும் தடுத்தார். அப்போது அப்துல் காதிர் ஜீலானி பொறுப்பாளர் என அம்மனிதர் கூறினார். இதன் பிறகு அப்துல் காதிர் ஜீலானி முக்கியத்துவம் கொடுத்து அல்லாஹ்விடம் துஆச் செய்ததால் அம்மனிதர் கொல்லப்படுதல் கனவு மூலமும், கொள்ளையடிக்கப்படுதல் அவர் பொருளை மறப்பதன் மூலமும் நிறைவேறியது.

முஹ்யித்தீன் மவ்லிதில் கூறப்படும் இந்த வரிகளுக்கு விளக்கவுரையாக ஹிகாயத் பகுதியில் கூறப்படுவதையும் அறிந்து விட்டு இதை அலசுவோம்.

எழுநூறு தங்கக் காசுகள் பொறுமானமுள்ள பொருட்களை சிரியா நாட்டிற்கு வியாபாரத்திற்காக கொண்டு செல்ல நாடுகிறேன் என்று அபுல் முளப்பர் என்பார் ஹம்மாத் எனும் பெரியாடம் கூறினார். அதற்கு ஹம்மாத் அவ்வாறு செய்யாதே. நீ பயணம் செய்தால் கொல்லப்படுவாய். உன் உடமைகள் பறிக்கப்படும் எனக் கூறினார். (இதைக் கேட்டு) மனம் உடைந்தவராக அபுல் முளப்பர் வெளியே வந்தார். அவரை அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் வழியில் கண்டார்கள். ஹம்மாத் கூறியதை அபுல் முளப்பர் விளக்கினார்கள். அப்போது அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் நீ பயணம் செய். எவ்வித இடையூறுமின்றி புறப்பட்டு இலாபத்துடன் திரும்பி வருவாய். உன் உயிரையும், உடமைகளையும் பாதுகாப்பது என் பொறுப்பு என்று கூறினார்கள். உடனே அபுல் முளப்பர் புறப்பட்டார். தமது பொருட்களை ஆயிரம் தங்கக் காசுகளுக்கு விற்றார். ஒரு நாள் மல ஜலம் கழிக்கச் சென்ற அவர் பணப்பையை மறதியாக வைத்து விட்டார். தமது கூடாரத்தை அடைந்ததும் அவருக்குத் தூக்கம் மேலிட்டது. வணிகக் கூட்டத்துடன் அவர் செல்லும் போது கொள்ளைக் கூட்டம் ஒன்று வழிமறித்து அவரையும், வணிகக் கூட்டத்தையும் தாக்கி வணிகக் கூட்டத்தினர் உடைமைகளையும் பறித்துக் கொண்டது போல் கனவு கண்டார். உடனே விழித்துப் பார்த்ததும் தமது கழுத்தில் இரத்தக் கறையைப் பார்த்தார். கடுமையான வேதனையையும் உணர்ந்தார். உடனே தங்கக் காசு நினைவுக்கு வந்தது. அதைத் தேடிய போது அவர் வைத்த இடத்தில் அப்படியே இருந்தது.பின்னர் பாக்தாத் வந்தார். பெரியவரான ஹம்மாதை முதலில் சந்திப்பதா? சொன்ன சொல்லைக் காப்பாற்றிய அப்துல் காதிர் ஜீலானியைச் சந்திப்பதா? என்று குழம்பினார். அப்போது வழியில் பெரியார் ஹம்மாதைக் கண்டார். அவரிடம் அபுல் முளப்பரே பெரியார் அப்துல் காதிரை முதலில் சந்திப்பீராக.! ஏனெனில் அவர் உனக்காகப் பதினேழு தடவை அல்லாஹ்விடம் துஆச் செய்தார். உமக்கு எழுதப்பட்ட விதியை மாற்ற எழுபது தடவைகள் துஆச் செய்தார். நீ கொல்லப்பட வேண்டும் என்ற விதி கனவில் கொல்லப்பட்டதன் மூலம் நடந்தேறியது. உமது உடமைகள் பறிக்கப்படுவது என்ற விதி உடமையை நீ மறந்து வைத்ததன் மூலம் நடந்தேறியது எனக் கூறினார். இதை அபூமஸ்வூத் அறிவிக்கிறார்.

அல்லாஹ்வை மறக்கடிக்கச் செய்து அல்லாஹ்வின் ஆற்றலைக் குறைத்து அப்துல் காதிரையும், ஹம்மாதையும் அல்லாஹ்வுக்கு நிகராக ஆக்குவதே இந்தக் கவிதையின் நோக்கம் என்பது இந்த ஹிகாயத்திலிருந்து புலனாகிறது.

அபுல் முளப்பர் என்பார் பிரயாணம் சென்றால் அவர் கொல்லப்படுவார்; அவரது உடமைகள் பறிக்கப்படும் என்ற விபரம் ஹம்மாதுக்கு எப்படித் தெரிந்தது?

எந்த ஆத்மாகவும் தன் மரணத்தையே அறிய முடியாது என்று அல்லாஹ் கூறும் போது

(அல்குர்ஆன் 31:34)

இன்னொருவன் மரணம் பற்றி ஹம்மாத் முன்கூட்டியே அறிய முடிந்தது எப்படி?

இது ஹம்மாத் என்பவரை அல்லாஹ்வாக ஆக்கும் விபரீதப் போக்கல்லவா? மவ்லிது அபிமானிகள் இதைச் சிந்திக்கட்டும்.

அபுல் முளப்பர் பிரயாணம் செய்வார் என்பதும், அதிலே கொல்லப்படுவார் என்பதும் அல்லாஹ்வின் விதியாக இருந்தால் அதை ஹம்மாத் ஒரு வாதத்துக்காக அறிந்திருந்தால் அந்த விதி நிறைவேறுமாறு விட்டிருக்க வேண்டுமே தவிர அந்த விதியை வெல்லும் வழியைக் கூறியிருக்கக் கூடாது. அபுல் முளப்பர் சாவார் என்ற அல்லாஹ்வின் விதியை ஹம்மாத் அறிந்து கொண்டது மட்டுமின்றி அல்லாஹ்வின் விதியை மாற்றியமைக்கவும் முயன்றுள்ளார். அல்லாஹ் பலவீனமானவனாகவும் ஹம்மாத் பலம் பொருந்தியவராகவும் சித்திக்கப்படுகின்றனர்.

அவர் கொல்லப்படுவார் என்பது மட்டும் விதியன்று அவர் பயணம் செய்வார் என்பதும் விதி தான். இந்த விதியை வெல்ல முயன்றிருக்கிறார்.

இந்த விதியை அப்துல் காதிர் ஜீலானியும் அறிந்திருக்கிறார். அல்லாஹ்வின் விதி இது தான் என்று தெரிந்திருந்தும் அபுல் முளப்பர் என்பாரிடம் வெற்றிகரமாகத் திரும்பி வருவீர் எனக் கூறி அனுப்புகிறார். இவையெல்லாம் அல்லாஹ்வின் மகத்துவத்தைக் குறைத்து மனிதர்களுக்கு மகத்துவத்தை அதிகப்படுத்துவதற்காகச் செய்யப்பட்ட திட்டமிட்ட சதி என்பதை நிரூபிக்கின்றது.

அல்லாஹ்விடம் துஆச் செய்து இந்த விதியை மாற்றியமைக்குமாறு அப்துல் காதிர் ஜீலானி துஆச் செய்து தானே விதியை மாற்றினார் என்று யாரும் கூற முடியாது. ஏனெனில் துஆச் செய்வதற்கு முன்பே விதியை மாற்றியமைக்கும் உத்திரவாதத்தை அப்துல் காதிர் ஜீலானி வழங்கி விட்டார். அல்லாஹ்விடம் துஆச் செய்து அதனால் அபுல் முளப்பர் என்பாரின் விதி மாற்றியமைக்கப்பட்ட விதத்தைக் கவனியுங்கள். கோமாளித்தனமாக நாடகம் ஒன்றை இதற்காக மவ்லுது எழுதியவர் கற்பனை செய்கிறார்.

கனவில் அவர் கொல்லப்பட்டதாகக் காண்கிறாராம். இதன் மூலம் அவர் கொல்லப்படுவார் என்ற விதி நிறைவேறியதாம். அவர் பணப்பையை மறதியாக ஓரிடத்தில் வைத்து விட்டாராம். இதன் மூலம் உடைமை பறிக்கப்படும் என்ற விதி நிறைவேறியதாம். கனவில் கொல்லப்பட்டதாகக் காண்பது உண்மையில் கொல்லப்பட வேண்டும் என்ற விதிக்கு நிகராகுமா?

ஒரு மனிதன் ஒரு தடவை தான் சாவான் என்பது விதி. கனவில் தாம் செத்ததாக கனவு காண்பவர்கள் பிறகு சாகவே மாட்டார்களா? அபுல் முளப்பர் கனவில் செத்து விட்டதால் இன்று வரை உயிருடன் இருக்கிறார் என்று கூறப் போகிறார்களா?

அபுல் முளப்பர் கொல்லப்படுவார் என்பது அல்லாஹ்வின் விதியானால் அதை அல்லாஹ் செயல்படுத்தியிருப்பான். அதை மாற்றியமைக்க அல்லாஹ் நாடினால் நேரடியாக அதை மாற்றியமைப்பான். இப்படி நாடகம் நடத்தி யாரையும் திருப்திப்படுத்த வேண்டிய அவசியம் இறைவனுக்கு இல்லை.

அபுல் முளப்பர் கொல்லப்படுவார் என்ற விதி என்னவயிற்று என்று யாரோ கேட்டது போலவும் அவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டுமே என்பதற்காக கனவில் அதை நிறைவேற்றியது போன்றும் அல்லாஹ் நடந்து கொண்டதாக கற்பனை செய்துள்ளனர்.

இஸ்லாத்தைப் பற்றிய அறிவு சிறிதுமற்ற முகவரியில்லாத யாரோ அறிவிலி எழுதிய இந்தப் பாட்டைப் படிப்பதால் நன்மை கிடைக்குமா? பாவம் சேருமா? அர்த்தம் தெரியாமல் மவ்லிது பக்தியில் கிடப்போர் சிந்திக்கட்டும்.

அப்துல் காதிர் ஜீலானியைப் புகழ்கிறோம் என்ற பெயரால் புராணங்களைத் தோற்கடிக்கும் அளவுக்குக் கற்பனைக் கதைகளை உருவாக்கி அதையே முஹ்யித்தீன் மவ்லிது என்று அறிமுகம் செய்தனர் என்பதை நிரூபிக்கும் மற்றொரு சான்றைப் பார்ப்போம்.

11 ஜின்னிடமிருந்து மீட்டவர்!

ادى لعبد الله ذي النبالة *بنتا له اذ بلغوا الرسالة

قدموس جن الكرخذو الضخامة *من قطبهم هادي اولى الضلالة

அப்துல்லாஹ் என்பாரின் மகனை கர்க் எனும் பகுதியில் இருந்த சக்தி வாய்ந்த ஜின்னிடமிருந்து அப்துல் காதிர் மீட்டுக் கொடுத்தார். வழிகேடர்களுக்கு வழிகாட்டக்கூடிய மக்களுக்கு அச்சாணியாகத் திகழ்ந்த அப்துல் காதிரிடம் அவர் முறையிட்ட போது இவ்வாறு நிகழ்த்திக் காட்டினார்.

இந்தக் கவிதை வரியில் என்ன கூறப்படுகின்றது என்பதை ஹிகாயத் பகுதியின் துணையுடன் விளங்குவோம். அதன் பிறகு இதிலுள்ள அபத்தங்களை அலசுவோம்.

அப்துல் ஹக் கூறுகிறார்.

என் மகள் மாடியின் மேற்பகுதியிலிருந்து அடையாளம் தெரியாமல் கடத்தப்பட்டாள். நான் அப்துல் காதிர் ஜீலானியிடம் வந்து விபரம் கூறினேன். அதற்கவர் கர்க் எனும் பகுதியில் உள்ள பாழடைந்த இடத்துக்குச் சென்று மன நிம்மதியுடன் அமர்வீராக. அல்லாஹ்வின் பெயரால் அப்துல் காதிரின் எண்ணப்படி எனக் கூறி உம்மைச் சுற்றி ஒரு வட்டம் போடுவீராக. இரவு சூழ்ந்தததும் ஜின் பயங்கரமான தோற்றத்தில் உம்மைக் கடந்து செல்லும். பின்னர் ஜின்களின் அரசர் புடை சூழ வருவார். அவர் உமது நோக்கத்தைப் பற்றிக் கேட்பார். என்னைப் பெரியார் அப்துல் காதிர் அனுப்பியதாகக் கூறிவிட்டு உன் மகள் காணாமல் போனதைக் கூறு என்றார். அவ்வாறே நான் சென்று அவர் கட்டளையிட்டவாறு செய்தேன். அவர் கூறியவாறு நடந்ததைக் கண்டேன். ஜின்களின் அரசர் குதிரையில் ஏறி வந்தார். அவரது படையினர் அவரைச் சுற்றிக் காவலுக்கு வந்தனர். அவர் நின்று மனித இனத்தைச் சேர்ந்தவனே! உனக்கு என்ன நேர்ந்தது எனக் கேட்டார். அப்துல் காதிர் உம்மிடம் என்னை அனுப்பினார் என்று நான் கூறினேன். உடனே அவர் கீழே இறங்கி மண்ணை முத்தமிட்டு வட்டத்தின் வெளியில் அமர்ந்தார். நான் மகள் விஷயத்தைத் தெரிவித்தேன். உடனே அவர் தம்மைச் சூழ நின்றவர்களை நோக்கி இவர் மகளைக் கடத்தியவர் யார்? எனக் கேட்டார். யாருக்கும் தெரியவில்லை. பின்னர் சீன நாட்டைச் சேர்ந்த முரட்டு ஜின் ஒன்று கொண்டு வரப்பட்டது. அதன் கழுத்தை அவர் வெட்டி விட்டு என் மகளை என்னிடம் ஒப்படைத்தார்.

முஹ்யித்தின் மவ்லிதின் ஹிகாயத்தில் கூறப்படும் விளக்கம் இது தான். இந்தக் கவிதையிலும், விளக்கத்திலும் கூறப்படும் அபத்தங்களை ஒவ்வொன்றாக நாம் ஆராய்வோம்.

இந்தக் கவிதையின் நாயகனாகக் கூறப்படும் அப்துல் ஹக் என்பார் யார்? இவரது வரலாறு என்ன? யாருக்கும் தெரியாது.

ஜின்கள் இவரது மகளைக் கடத்திச் சென்ற விபரமும் அதன் பிறகு நடந்த நிகழ்ச்சிகளும் முன் கூட்டியே அப்துல் காதிர் ஜீலானிக்கு எவ்வாறு தெரிந்தது? மறைவான விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய முடியாது என்பதைத் தக்க சான்றுகளுடன் முன்னர் நாம் விளக்கியுள்ளோம். இந்தச் சான்றுகளுக்கு முரணாக இந்தக் கதை அமைந்துள்ளது.

ஜின் என்றொரு படைப்பு இருப்பது உண்மை தான். ஆயினும் அவை மனிதர்களைக் கடத்திச் செல்லும் என்பதற்கு எந்த ஆதாரமும் குர்ஆனிலோ, ஹதீஸிலோ கிடையாது. கெட்ட ஜின்களாக இருந்தால் கூட அவை இறைவனது கட்டளைக்கு மாறு செய்யுமே தவிர மனிதர்களைக் கடத்திச் செல்லும் என்பதற்கு எந்தச் சான்றுமில்லை.

அப்துல் காதிர் ஜீலானி காலத்திற்கு முன்பிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலம் வரையிலுள்ள ஐநூறு வருடங்களில் எந்த ஆணும் பெண்ணும் ஜின்களால் கடத்திச் செல்லப்பட்டதாகவும் ஆதாரம் இல்லை.

ஜின்கள் மனிதர்களைக் கடத்திச் செல்லும் வழக்கமுடையவை என்றால் அறுநூறு கோடிக்கும் அதிகமான மக்கள் வாழும் இன்றைய உலகில் எந்த மனிதனும் ஜின்களால் கடத்தப்படாத மர்மம் என்ன?

இந்தக் கதையில் சீனாவைச் சேர்ந்த முரட்டு ஜின் கடத்தியதாகக் கூறப்படுகின்றது. ஒரு வேளை சீனாவில் தான் மனிதக் கடத்தலில் ஈடுபடும் ஜின்கள் இருக்க கூடுமோ? என்று கருத முடியவில்லை. ஏனெனில் சீனாவிலும் கூட ஜின்களால் எந்த மனிதனும் கடத்தப்படவில்லை. எவனோ கற்பனை செய்து உளறியிருக்கிறான் என்பதே உண்மை.

ஜின்கள் மனிதர்களைக் கடத்திச் சென்று விடும் என்பதை ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும் கூட ஜின்கள் அப்துல் காதிர் ஜீலானிக்குக் கட்டுப்பட்டு நடக்கும் என்பது குர்ஆனுடைய போதனைக்கு மாற்றமாகும்.

ஜின்கள் மனிதர்களை விட அதிகமான ஆற்றலுடையவை. மனிதர்களால் செய்ய முடியாத பல காரியங்களை அவை செய்து முடித்து விடும் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. சுலைமான் நபி காலத்தில் அண்டை நாட்டு அரசியின் சிம்மாசனத்தைக் கண் மூடி திறப்பதற்குள் கொண்டு வருவதாக ஒரு ஜின் கூறிய விபரம் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் 27:40)

மனிதனைப் போல் பகுத்தறிவும் ஜின்களுக்கு உள்ளது. என்னை வணங்குவதற்காகவே ஜின்களையும் மனிதர்களையும் படைத்துள்ளேன் என்று இறைவன் கூறுகிறான். (51.56)

பகுத்தறிவு வழங்கப்பட்டவர்களுக்குத் தான் இறைவன் சட்ட திட்டங்களை வழங்கியுள்ளான். மனிதனைப் போலவே ஜின்களும் இறைவனை வணங்கக் கடமைப்பட்டுள்ளன என்பதிலிருந்து ஜின்களுக்குப் பகுத்தறிவு உள்ளதை அறியலாம்.

மனிதனைப் போலவே பகுத்தறிவு வழங்கப்பட்டு, மனிதர்களை விடப் பல மடங்கு ஆற்றலும் வழங்கப்பட்ட ஜின்களை மனிதன் ஒருக்காலும் வசப்படுத்த முடியாது. யானை சிங்கம் போன்ற விலங்குகளை மனிதன் வசப்படுத்தலாம்; அவற்றின் வலிமை மனிதனை விட அதிகம் என்றாலும் பகுத்தறிவு அவற்றுக்கு இல்லாததால் அவற்றை மனிதன் வசப்படுத்திக் கொள்கிறான். ஜின்களுக்குப் பகுத்தறிவும் மனிதனை விட அதிகமான ஆற்றலும் இருப்பதால் அவற்றை மனிதனால் கட்டுப்படுத்த முடியாது என்பது தான் உண்மை.

சுலைமான் நபிக்கு அல்லாஹ் தனிச் சிறப்பாக ஜின்களை வசப்படுத்திக் கொடுத்திருந்தான். இது அவர்களுக்கு மட்டும் இறைவன் வழங்கிய தனிச் சிறப்பாகும்.

என் இறைவா! என்னை மன்னித்து விடு! எனக்குப் பின் யாருக்கும் கிடைக்காத ஆட்சியை எனக்கு வழங்கு! நீயே வள்ளல்  என (சுலைமான்) கூறினார்.

அல்குர்ஆன் 38:35)

சுலைமான் நபியவர்கள் தமக்கு வழங்கப்பட்ட அளவு அதிகாரம் யாருக்கும் வழங்க வேண்டாம் என துஆச் செய்துள்ளதில் ஜின்களை வசப்படுத்தும் அதிகாரமும் அடக்கம்.

நேற்றிரவு ஒரு ஜின் அட்டூழியம் செய்தது. அதைப் பிடித்து துணில் கட்டி வைத்து காலையில் உங்களுக்குக் காட்ட நினைத்தேன். என் சகோதரர் சுலைமானின் துஆ நினைவுக்கு வந்ததால் அதை விட்டு விட்டேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ள

சுலைமான் நபியின் பிரார்த்தனையில் ஜின்களை வசப்படுத்தியிருந்ததும் அடங்கும் என்பதை இந்த ஹதீஸிலிருந்து அறியலாம்.

இந்தக் கதையில் அப்துல் காதிருடைய பெயரால் போடப்பட்ட வட்டத்துக்குள் நுழைய ஜின்களின் அரசர் அஞ்சியுள்ளார். அப்துல் காதிருடைய பெயரைக் கேட்டதும் குதிரையிலிருந்து (ஜின்களுக்கு ஏன் குதிரை?) இறங்கி மண்ணை முத்தமிட்டுள்ளார். அப்துல் காதிருக்கு ஜின்களும், ஏனைய படைப்புக்களும் கட்டுப்பட்டன என்று பிரமையை ஏற்படுத்தி அவரால் ஆகாதது ஏதுமில்லை என்று நம்ப வைத்து அப்துல் காதிரை குட்டித் தெய்வமாக ஆக்குவதே இந்தக் கதையின் நோக்கம்.

இது போன்ற கப்ஸாக்களைப் படிப்பதால் பாவம் சேருமா? புண்ணியம் கூடுமா? மவ்லிது அபிமானிகள் சிந்திக்கட்டும். புராணங்களிலிருந்து காப்பியடிக்கப்பட்ட இது போன்ற கதைகளைக் கேள்விப்படும் மற்ற மதத்தவர்கள் இஸ்லாத்தின் பால் அபிமானம் கொள்வார்களா? ஓரிறைக் கொள்கையை ஐயமற வலியுறுத்துகின்ற மார்க்கத்திற்கு இந்தக் கதைகள் களங்கத்தை ஏற்படுத்துகின்றன. இஸ்லாத்தை நாடி வரும் மக்களைத் தயங்கி நிற்க வைக்கிறது. மவ்லிது அபிமானிகள் இதை உணர்ந்து மவ்லிது பக்தியிலிருந்து விடுபடுவார்கள் என்று நம்புகிறோம்.

அப்துல் காதிர் ஜீலானியைக் கடவுள் நிலைக்கு உயர்த்திக் காட்டக்கூடிய கதைகள் முஹ்யித்தீன் மவ்லிதில் மலிந்து கிடப்பதை இது வரை கண்டோம். இறைவனின் தன்மைகளை அவருக்கு வழங்கி அவரை நேரடியாக அழைத்துப் பிரார்த்தனை செய்யும் வகையிலும் பல வரிகள் முஹ்யித்தீன் மவ்லிதில் இடம் பெற்றுள்ளன. அவற்றை இங்கு காண்போம்.

11 எல்லா நேரமும் இரட்சகர்!

انت حقا محيى الدين *انت قطب باليقين

كنت غوثا كل حين *فادفعن عنا حينا

நிச்சயமாக நீங்கள் இம்மார்க்கத்தை உயிர்ப்பித்தவராவீர். உறுதியாக நீங்கள் அச்சாணியாகத் திகழ்கிறீர்கள். எல்லா நேரமும் நீங்கள் இரட்சகராக இருக்கிறீர்கள். எனவே நாங்கள் அழிவதை விட்டும் எங்களைக் காப்பாற்றுங்கள்.

ஏறத்தாழ தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன் மரணித்து விட்ட அப்துல் காதிர் ஜீலானியிடம் பிரார்த்தனை செய்ய இஸ்லாத்தில் அனுமதி உண்டா? எல்லா நேரத்திலும் இரட்சிக்கக் கூடியவர் என்ற அடைமொழியை அல்லாஹ்வைத் தவிர யாருக்கேனும் பயன்படுத்த அனுமதி உண்டா?

அவன் இரவைப் பகலில் நுழைக்கிறான். பகலை இரவில் நுழைக்கிறான். சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலக்கெடு வரை செல்கின்றன.241

(அல்குர்ஆன் 2:41)

அவனே அல்லாஹ்; உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம். அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர். அவன் இரவைப் பகலில் நுழைக்கிறான். பகலை இரவில் நுழைக்கிறான். சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலக்கெடு வரை செல்கின்றன. அவனே அல்லாஹ்; உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம். அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர். நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.

(அல்குர்ஆன் 35 :13,14)

எதையும் படைக்காதவற்றையா அவர்கள் (இறைவனுக்கு) இணை கற்பிக்கின்றனர்? அவர்களே படைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு உதவிட அவர்களுக்கு இயலாது. தமக்கே கூட அவர்கள் உதவிக் கொள்ள மாட்டார்கள். (எதையும்) தெரிவிக்க அவர்களை நீங்கள் அழைத்தால் அவர்கள் உங்களைப் பின்பற்ற மாட்டார்கள். நீங்கள் அவர்களை அழைப்பதும், மௌனமாக இருப்பதும் உங்களைப் பொறுத்த வரை சமமானது. அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!

(அல்குர்ஆன் 7 : 191, 192, 193, 194)

அவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவிட இயலாது. தமக்கே அவர்கள் உதவ முடியாது.

(அல்குர்ஆன் 7 : 197)

மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைச் செவிதாழ்த்திக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.

(அல்குர்ஆன் 22 : 73)

வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?  என்று அவர்களிடம் நீர் கேட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள். அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றைப் பற்றிக் கூறுங்கள்!  என்று கேட்பீராக! அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கை நாடி விட்டால் அவனது தீங்கை அவர்கள் நீக்கி விடுவார்களா? அல்லது அவன் எனக்கு அருளை நாடினால் அவர்கள் அவனது அருளைத் தடுக்கக் கூடியவர்களா? அல்லாஹ் எனக்குப் போதும். சார்ந்திருப்போர் அவனையே சார்ந்திருப்பார்கள்  என்று கூறுவீராக!

(அல்குர்ஆன் 39 :38)

அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர். அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.

(அல்குர்ஆன் 16 : 20,21)

மவ்லிது அபிமானிகள் நாம் கேட்க விரும்புவது இது தான். அல்லாஹ்வுடைய இந்த வசனங்களை நீங்கள் நம்பப் போகிறீர்களா? இதற்கு முரணாக அமைந்த மனிதக் கற்பனையில் உருவான மவ்லிதை நம்பப் போகிறீர்களா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்பட எவருக்கும் எந்த அதிகாரமும் இல்லை. அவர்களும் அல்லாஹ்வின் அடிமைகளே. இறந்தவர்கள். எதையும் அவர்களால் செய்ய முடியாது என்பதையெல்லாம் இந்த வசனங்கள் மிகத் தெளிவாக இரண்டாவது கருத்துக்கு இடமின்றி அறிவிக்கின்றன. இதற்கு நேர் எதிராக அமைந்த மவ்லிதை உண்மை முஸ்லிம்கள் எப்படி அங்கீகரிக்க முடியும்.

11 ஜின்களையும், மனிதர்களையும் இரட்சிக்கக் கூடியவர்!

انت غوث الثقلين *انت زين الحرمين

ومنير الملوين *اجعلنا مقبلينا

ஜின்கள், மனிதர்கள் ஆகிய இரு இனத்தவர்களையும் இரட்சிக்கக் கூடியவர் நீங்களே! மக்கா, மதீனா ஆகிய புனித நகரங்களுக்கு அலங்காரமாகத் திகழ்பவர் நீங்களே! வானம், பூமிகளைப் பிரகாசிக்கச் செய்பவர் நீங்களே! எங்களை வெற்றி பெற்றவர்களாக ஆக்கி விடுங்கள்!

முட்டாள்தனமான இந்த வரிகளைக் கண்ட பின்பும் யாரேனும் இதை ஆதரிக்க முடியுமா? மனித இனத்தை மட்டுமின்றி ஜின்களையும் இவர் தாம் இரட்சிப்பாராம்! வானம் பூமியை இவர் தாம் பிரகாசிக்கச் செய்கிறாராம்! இது நாம் மேலே எடுத்துக் காட்டிய குர்ஆன் வசனங்களுடன் நேரடியாக மோதுவதை எவரும் அறிந்து கொள்ளலாம்.

انت اتقى الاتقياء *انت اصفى الاصفياء

صرت تاج الاولياء *آتنا فتحا مبينا

இறையச்சமுடையவர்களிலெல்லாம் அதிக இறையச்சமுடையவர் நீங்களே! சிறந்தவர்களிலெல்லாம் மிகச் சிறந்தவர் நீங்களே! இறை நேசர்களின் கிரீடமாக நீங்கள் மாறி விட்டீர்கள். எங்களுக்குத் தெளிவான வெற்றியை வழங்குங்கள்!

இறையச்சம் என்பது உள்ளத்தின் பாற்பட்ட ஒன்று. யாருக்கு இறையச்சம் உள்ளது? எந்த அளவுக்கு இது உள்ளது? என்பதையெல்லாம் இறைவன் மட்டுமே அறிவான் என்ற சாதாரண உண்மைக்கு மாற்றமாக அப்துல் காதிர் ஜீலானியின் இறையச்சத்துக்கு நற்சான்று வழங்குகின்றது இந்தக் கவிதை.

நபிமார்களை விடவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை விடவும் அப்துல் காதிர் ஜீலானி அதிக இறையச்சமுடையவர் என்ற கருத்தையும் இந்தக் கதை தருகின்றது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மதிக்கின்ற எந்த முஸ்லிமாவது இதை ஒப்புக் கொள்ள முடியுமா? மவ்லிது அபிமானிகள் சிந்திக்கட்டும். தெளிவான வெற்றியை வழங்குமாறு அப்துல் காதிர் ஜீலானியிடம் பிரார்த்திக்கப்படுகின்றது. வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் அதிகாரத்தை இவருக்கு வழங்கியவன் யார்? நபிகள் நாயகம் (ஸல்) கூட பல சந்தர்ப்பங்களில் தோற்றுள்ளனர்.

என்று இறைவன் கூறுவதன் மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கூட இந்த அதிகாரத்தை தான் வழங்கவில்லை என்று இறைவன் கூறும் இந்த வசனத்துடனும், மேலே நாம் எடுத்துக் காட்டிய வசனங்களுடனும் இந்தக் கவிதை நேரடியாக மோதுகின்றது.

انت مبدع النوادر *مظهر ما فى الضمائر

 مخبر ما فى السرائر *رحمة دنيا ودينا

அரிதான அற்புதமான நிகழ்ச்சியை நிகழ்த்தக் கூடியவர் நீங்களே. பிறரது உள்ளங்களில் உள்ளவற்றை வெளிப்படையாக அறிவிக்கக் கூடியவர் நீங்களே.

மறைவான செய்திகளை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய முடியாது என்பதை தக்க சான்றுகளுடன் விளக்கியுள்ளோம். அதற்கு முரணாக இந்தக் கவிதை அமைந்துள்ளது.

كن لنا حرزا كنينا *كن لنا كهفا منيعا

عن بليات شفيعا *فى خطيات وسيعا

من عطيات تفينا

எங்களுக்குப் பாதுகாப்பு அரணாக ஆகி விடுங்கள். எங்களுக்கு துன்பங்களைத் தடுக்கும் குகையாக ஆகி விடுங்கள். தவறுகளுக்காகப் பரிந்துரை செய்யுங்கள். நீங்கள் எங்களுக்கு வழங்கக்கூடிய அருட்கொடைகளில் தாரளமாக நடந்து கொள்ளுங்கள்!

எல்லா அதிகாரங்களும் அப்துல் காதிர் ஜீலானியிடம் குவிந்து கிடப்பதாக முஹ்யித்தீன் மவ்லிதின் பாடல்கள் கூறுகின்றன. அல்லாஹ்விடம் எந்த அதிகாரமும் இல்லை. அல்லாஹ் என்று ஒருவன் தேவையில்லை என்ற அளவுக்கு அப்துல் காதிரே அல்லாஹ்வாக்கப்படுகின்றார்.

இத்தகைய நச்சுக் கருத்துக்களைத் தான் பொருள் தெரியாமல் வணக்கமாகக் கருதி இந்தச் சமுதாயம் பாடிக் கொண்டிருக்கின்றது. இதைப் படிப்பதால், இதை நம்புவதால் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாக நேருமா? அல்லாஹ் அருள் கிடைக்குமா? நடுநிலையுடன் மவ்லிது அபிமானிகள் சிந்திக்கட்டும்.

பொதுவாக மவ்லிதுகளும் குறிப்பாக முஹ்யித்தீன் மவ்லிதும் திருக்குர்ஆனுடனும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலுடனும் நேரடியாக மோதும் வகையில் அமைந்துள்ளன. அதைத் தெளிவான சான்றுகளுடன் நாம் அறிந்தோம். இது போன்ற நச்சுக் கருத்தைக் கொண்ட முஹ்யித்தீன் மவ்லிதின் மற்றொரு வரியைப் பாருங்கள்.

وهوالذي من كان نادى باسمه *فى شدة ينجو بغير تنجم

بل انه لم قط يفعل فعله *الا باذن الهه المتكلم

அவர் (அப்துல் காதிர் ஜீலானி) எத்தகையவர் என்றால் யாரேனும் கஷ்டத்தின் போது அவரை அழைத்தால் அவர் உடனடியாக ஈடேற்றம் பெறுவார்.

பல நூறு ஆண்டுகளுக்கு முன் மரணித்து விட்ட ஒருவரை அழைத்தால் அவர் ஈடேற்றம் அளிப்பார் என்பதும், அவரை அழைக்கலாம் என்பதும் இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளையே தகர்க்கக் கூடியவையாகும். இறைவன் அல்லாதவர்களை அழைப்பது பற்றி திருக்ககுர்ஆன் கூறுவதைக் கவனியுங்கள்.

எதையும் படைக்காதவற்றையா அவர்கள் (இறைவனுக்கு) இணை கற்பிக்கின்றனர்? அவர்களே படைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு உதவிட அவர்களுக்கு இயலாது. தமக்கே கூட அவர்கள் உதவிக் கொள்ள மாட்டார்கள். (எதையும்) தெவிக்க அவர்களை நீங்கள் அழைத்தால் அவர்கள் உங்களைப் பின்பற்ற மாட்டார்கள். நீங்கள் அவர்களை அழைப்பதும், மௌனமாக இருப்பதும் உங்களைப் பொறுத்த வரை சமமானது. அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!

(அல்குர்ஆன் 7:191, 194)

அல்லாஹ்வை விடுத்து நல்லடியார்களையும், மகான்களையும் அழைத்துப் பிரார்த்தித்து வந்த மக்களிடம் தான் அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே என்று இறைவன் கூறுகிறான்.

எத்தனைப் பெரிய மனிதர் என்றாலும் அவர்கள் இறைவனுக்கு அடிமைகள் தாம் என்பதையும அடிமைகளிடம் பிரார்த்திக்க முடியாது என்பதையும் இவ்வசனத்தில் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைச் செவிதாழ்த்திக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.

(அல்குர்ஆன் 22:73)

அழைத்துப் பிரார்த்தனை செய்யப்படுபவர் படைக்கக் கூடியவராக இருக்க வேண்டும். அப்துல் காதிர் ஜீலானி உட்பட யாராக இருந்தாலும் ஈயைக் கூட அவர்களால் படைக்க முடியாது என்று இவ்வசனத்தில் அல்லாஹ் சொல்லித் தருகிறான்.

அவனே அல்லாஹ்; உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம். அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர். நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது. மனிதர்களே! நீங்கள் அல்லாஹ்விடம் தேவையுடையவர்கள். அல்லாஹ்வே தேவையற்றவன்; புகழுக்குரியவன்.

(அல்குர்ஆன் 35:13,14,15)

அப்துல் காதிர் ஜீலானி உட்பட எந்த மனிதராக அல்லாஹ்விடம் தேவையாகக் கூடியவர்கள் தாம். தேவையாகக் கூடியவர்களிடம் பிரார்த்திக்க முடியாது என்பதற்காகவே இங்கே இதை இறைவன் கூறுகிறான். மேலும் இறந்தவர்கள் எந்தப் பிரார்த்தனையையும் செவியேற்கும் நிலையில் இல்லை எனவும் கூறுகிறான்.

கியாமத் நாள் வரை தமக்குப் பதில் தராத, அல்லாஹ் அல்லாதோரை அழைப்பவரை விட மிகவும் வழி கெட்டவர் யார்? அவர்களோ தம்மை அழைப்பது பற்றி அறியாது உள்ளனர்.

(அல்குர்ஆன் 46:5)

அல்லாஹ்வை விடுத்து எவரையும் அழைக்க முடியாது. அழைப்பதை அவர்கள் செவியுற முடியாது. அழைப்பதை அறியவும் முடியாது. அணுவளவு அதிகாரமும் அவர்களுக்குக் கிடையாது என்றெல்லாம் தெளிவாகப் பிரகடனம் செய்யும் இவ்வசனங்களுடன் இந்த மவ்லிது வரி நேரடியாக மோதுவதை மவ்லிது அபிமானிகள் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த காபிர்கள் சாதாரண நேரத்தில் அல்லாஹ் அல்லாதவர்களிடம் பிரார்த்தித்து வந்தனர். ஆனால் அவர்களுக்குத் தாங்க முடியாத பெருந்துன்பம் ஏற்பட்டால் அல்லாஹ்விடம் மட்டுமே பிரார்த்தனை செய்து வந்தனர். கஷ்டமான நேரத்தில் அவரை அழைத்தால் ஈடேற்றம் பெறுவார் என்ற வரிகள் மக்கத்துக் காபிர்களின் கொள்கையை விட மோசமான கொள்கைக்கு அழைப்பதை மவ்லிது அபிமானிகள் சிந்திக்க வேண்டும்.

இதோ மக்கத்துக்குக் காபிர்கள் குறித்து அல்லாஹ் கூறுகிறான்.

முகடுகளைப் போல் அலைகள் அவர்களை மூடும் போது உளத்தூய்மையுடன் வணக்கத்தை உரித்தாக்கி அவனைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களைக் காப்பாற்றித் தரையில் சேர்த்ததும் அவர்களில் நேர்மையாக நடப்பவரும் உள்ளனர். நன்றி கெட்ட சதிகாரர்களைத் தவிர வேறு எவரும் நமது சான்றுகளை நிராகரிப்பதில்லை.

(அல்குர்ஆன் 31:32)

உங்களிடம் அல்லாஹ்வின் வேதனை வந்தால் அல்லது அந்த நேரம் வந்து விட்டால் அல்லாஹ் அல்லாதவர்களையா அழைக்கிறீர்கள்? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் பதில் சொல்லுங்கள்! என்று கேட்பீராக! மாறாக அவனையே அழைக்கிறீர்கள். நீங்கள் இணை கற்பித்தவர்களை மறந்து விடுகிறீர்கள். அவன் நாடினால் அவனை எதற்காக அழைத்தீர்களோ அதை நீக்கி விடுகிறான்.

(அல்குர்ஆன் 6:40,41)

கடுமையான துன்பங்கள் ஏற்படும் போது மட்டுமாவது மக்கத்துக் காபிர்கள் ஏக இறைவனை மட்டும் நம்பி வந்துள்ளனர் என்பதற்கு இவ்வசனங்கள் தெளிவான சான்றுகளாகும். இதே கருத்தை 39.8, 10.12, 39.49, 27.62, 7.189, ஆகிய வசனங்களும் கூறுகின்றன.

மக்கத்துக் காபிர்களின் கொள்கையை விட மோசமான கொள்கையை முஸ்லிம்களிடம் திணிக்கக் கூடிய இந்த மவ்லிதை முஸ்லிம்கள் ஆதரிக்க முடியுமா? இதைப் படிப்பதால் அல்லாஹ்விடம் நன்மை கிடைக்குமா? இஸ்லாத்தைப் பற்றி சிறிதளவு கூட அறியாத மூடர்களால் எழுதப்பட்ட இந்த மவ்லிதுக்காக நமது ஈமானை இழந்து விடலாமா?

இந்த மவ்லிதில் உள்ள இன்னும் பல அபத்தமான பாடல்களைப் பாருங்கள்.

யார் தமது தேவைகளுக்காக அவரை (அப்துல் காதிர் ஜீலானியை) வஸீலாவாக ஆக்கிக் கொள்வார்களோ அவர்களின் தேவைகள் குல்சும் கடலளவு இருந்தாலும் நிறைவேற்றப்படும்.

இஸ்லாத்திற்குள் இணை வைக்கும் கொள்கையை உருவாக்கியவர்கள் அதை நியாயப்படுத்துவதற்காக வஸீலா எனும் ஆயுதத்தைக் கையில் எடுப்பது வழக்கம். வஸீலா தேடுமாறு அல்லாஹ்வே கட்டளையிட்டுள்ளான். நாங்கள் அவ்லியாக்களை வஸீலாவாகத் தான் பயன்படுத்துகிறோம். எனவே இது இணை வைத்தலில் சேராது என்று வாதிடுகின்றனர்.

இறந்து போனவர்களிடம் பிரார்த்திப்பதும் இன்னாரின் பொருட்டால் இதைத் தா என்று இறைவனிடம் கேட்பதும் தான் வஸீலா என்று மக்களை ஏமாற்றி வருகின்றனர். எனவே வஸீலா பற்றி அறிந்து கொண்டால் தான் இந்த வரிகளில் உள்ள அபத்தத்தைத் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

வஸீலா தேடுமாறு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளது உண்மை தான். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அல்லாஹ்விடம் கண்டிப்பாக வஸீலா தேட வேண்டும் என்பதிலும் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை. வஸீலாவை மறுப்பவன் அல்லாஹ்வின் வேதத்தையே மறுத்தவனாவான் என்பதிலும் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

வஸீலாவுக்கு இவர்கள் தரும் விளக்கத்தில் தான் நமக்கு ஆட்சேபனை உள்ளது.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அவனை நோக்கி ஒரு வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள்! அவன் பாதையில் அறப்போர் செய்யுங்கள்! வெற்றி பெறுவீர்கள். நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அவனை நோக்கி ஒரு வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள்! அவன் பாதையில் அறப்போர் செய்யுங்கள்! வெற்றி பெறுவீர்கள்.

(அல்குர்ஆன் 5.35)

இது தான் வஸீலா தேடுமாறு கட்டளையிடும் வசனம். இன்னாரின் பொருட்டால் இதைத் தா என்று பிரார்த்திப்பது தான் வஸீலாவாகும் என்ற கூற்று எவ்வளவு அபத்தமானது என்பதை அறிந்து வஸீலாவின் சரியான பொருள் என்ன என்பதை அறிவோம்.

இந்த வசனத்தில் நம்பிக்கை கொண்டவர்களே என்று இறைவன் அழைக்கிறான். இந்த அழைப்பில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலிருந்து இன்று வரை இனி உலகம் அழியும் வரை உள்ள அத்தனை மூஃமீன்களும் அடங்குவார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் இந்த அழைப்பில் முதலில் அடங்குவார்கள். இதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு இந்த வசனத்தை ஆராய்வோம்.

மூஃமீன்களே என்று இறைவன் அழைத்துவிட்டு அவர்கள் செய்ய வேண்டிய சில கடமைகளை இவ்வசனத்தில் கூறுகிறான். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் என்று ஆரம்பமாகக் கூறுகிறான். அல்லாஹ்வை அஞ்சுகின்ற இந்தக் கடமையை அனைத்து முஸலிம்களும் நிறைவேற்றியாக வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மற்றவர்களை விட அதிகம் அல்லாஹ்வுக்கு அஞ்ச வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அல்லாஹ்வை அவ்வாறே அதிகம் அஞ்சினார்கள்.

இந்தக் கட்டளையில் யாருக்கும் எந்த விதிவிலக்கும் இல்லை. எந்த மூஃமீனும் அல்லாஹ்வை அஞ்சாதிருப்பதற்கு அனுமதிக்கப்பட்டவரல்லர்.

அடுத்ததாக அல்லாஹ்விடம் வஸீலாவைத் தேடுங்கள் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். அல்லாஹ்விடம் வஸீலாத் தேடும் இந்தக் கடமையையும் அனைத்து மூஃமீன்களும் நிறைவேற்றியாக வேண்டும். மற்றவர்களை விட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் பால் அதிகமதிகம் வஸீலாத் தேடியாக வேண்டும். இன்னொருவரின் பொருட்டால் இதைத் தா என்று இறைவனிடம் கேட்பது தான் வஸீலா என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யார் பொருட்டால் தமது தேவைகளைக் கேட்டார்கள்? யார் பொருட்டாலும் அவர்கள் கேட்கவில்லை என்றால் வஸீலாத் தேடுங்கள் என்ற கட்டளையை அவர்கள் மீறி விட்டார்களா?

இந்தப் பெரியாரின் பொருட்டால் இதைத் தா என்று கேட்கின்றனர். இதன் மூலம் வஸீலாத் தேடுங்கள் என்ற கட்டளையை நிறைவேற்றி விட்டதாக நம்புகின்றனர். எந்தப் பெரியாரும் மூஃமீன்களில் ஒருவர் தாமே அவரும் கூட வஸீலாத் தேட வேண்டுமே? அவர் யார் பொருட்டால் தேடினார்? இதைச் சிந்தித்தால் வஸீலாவுக்கு இவர்கள் கூறும் விளக்கம் அபத்தமானது என்பதை அறியலாம்.

இவர்கள் யாரிடம் பிரார்த்திக்கிறார்களோ அவர்களில் (இறைவனுக்கு) மிகவும் நெருக்கமானவர்களே. தமது இறைவனை நோக்கி வஸீலாவைத் தேடுகின்றனர். அவனது அருளை எதிர்பார்க்கின்றனர். அவனது வேதனைக்கு அஞ்சுகின்றனர். உமது இறைவனின் வேதனை அச்சப்பட வேண்டியதாகும்.

(அல்குர்ஆன் 17:57)

சாதாரண மக்கள் அல்லாஹ்வின் பால் வஸீலாத் தேடுகிறார்களோ இல்லையோ அல்லாஹ்வுக்கு மிக நெருக்கமான அடியார்கள் நிச்சயமாக அல்லாஹ்வின் பால் வஸீலாத் தேடிக்கொண்டிருக்கின்றனர் என்பதை இவ்வசனம் கூறுகிறது.

எல்லா மூஃமீன்களும் குறிப்பாக நல்லடியார்களும் அதிலும் குறிப்பாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் தேடக்கூடிய வஸீலா என்பது எது? நிச்சயமாக இவர்கள் கூறக்கூடிய வஸீலா அன்று.

அப்படியானால் வஸீலாவின் விளக்கம் என்ன? வஸீலா எனும் வார்த்தைக்கு நெருக்கம். நெருங்குவதற்கான சாதனம். நெருங்குவதற்கான வழி என்று அரபு அகராதியில் பொருள் கூறப்படுகின்றது.

அல்லாஹ்வின் பால் வஸீலாவைத் தேடுங்கள் என்றால் அல்லாஹ்வின் பால் நெருங்குவதற்கான வழியைத் தேடுங்கள் என்பதாகும்.

இந்தப் பொருளில் மேற்கண்ட இரு வசனங்களுக்கும் பொருள் செய்து பாருங்கள். மூஃமீன்களே அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். அவன் பால் நெருங்குவதற்கான (வஸீலாவை) வழியைத் தேடிக் கொள்ளுங்கள். இப்படிப் பொருள் கொள்ளும் போது இந்தக் கட்டளை முழுமையாக அனைவராலும் நிறைவேற்றப்படத்தக்கதாக அமைகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அல்லாஹ்வை அஞ்சினார்கள். அவன் பால் நெருங்குவதற்கான வழியைத் தேடினார்கள். நல்லடியார்களும் தேடினார்கள்.

வஸீலா என்பதன் பொருள் இறைவனை நெருங்குவதற்காக இறைவன் நமக்குக் கற்றுத் தந்துள்ள தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ், மற்றுமுள்ள வணக்க வழிபாடுகளே. அந்த வணக்க வழிபாடுகள் மூலமாக இறைவனின் நெருக்கத்தைத் தேட வேண்டும். அதையே வஸீலா பற்றிக் கூறும் வசனங்கள் கூறுகின்றன. அகராதியில் கூறப்பட்ட பொருளுக்கு இது தான் பொருத்தமாக உள்ளது.

மேலும் இவ்வாறு பொருள் கொள்வது தான் அறிவுக்கு ஏற்றதாக உள்ளது. எப்படியென்று பார்ப்போம்.

ஒரு முதலாளியிடம் நாம் சம்பளத்திற்கு வேலை செய்கிறோம். அவரது கட்டளைகளைச் சரியாக சிறப்பாக நிறைவேற்றிவிட்டு அவரிடம் சென்று ஐயா நீங்கள் கூறிய வேலைகளைச் சிறப்பாகச் செய்து முடித்து விட்டேன். எனக்கு இதைத் தாருங்கள். அதைத் தாருங்கள் என்று கேட்கிறோம். அவர் மகிழ்ந்து நாம் கேட்டதைத் தருவார்.

அந்த முதலாளியிடம் நம்மைப் போல் மற்றும் சிலர் பணியாற்றுகின்றனர். அவர்கள் நம்மை விடச் சிறப்பாகவும் பணி புரிகின்றனர். நாம் அந்த முதலாளியிடம் சென்று ஐயா நீங்கள் கூறிய பணிகளை இவர்கள் சிறப்பாகச் செய்துள்ளனர். எனவே எனக்கு இதைத் தாருங்கள். அதைத் தாருங்கள் என்று கேட்கிறோம். இவ்வாறு நாம் கூறுவதைக் கேட்டால் நாம் சுய நினைவுடன் தான் கூறுகிறோமா என்ற ஐயம் கொள்வார். அவர்கள் சிறப்பாகப் பணியாற்றியதற்காக உனக்கேன் நான் எதையும் தர வேண்டும்? என்று கேட்பார். இந்த நிலையில் இன்னாரின் பொருட்டால் இதைத் தா என்று வஸீலாவுக்குப் பொருள் கொள்ளக்கூடிய நிலையும் உள்ளது.

இறைவா உனது கட்டளைகளைச் சரியாக நிறைவேற்றினேன். அதற்காக இதைத் தா என்று கேட்டால் அர்த்தமிருக்கிறது. இவ்வாறு கேட்பதை விடுத்து. இறைவா இந்த நல்லடியார் உனது கடமைகளைச் சரியாக நிறைவேற்றியதால் எனக்கு இதைத் தா என்று கேட்பதில் ஏதேனும் அர்த்தமள்ளதா? அவர்கள் எனது கடமைகளைச் செய்தால் அவர்களுக்கு நான் கொடுப்பேன். அவர்கள் எனது கடமைகளைச் செய்வதற்காக உனக்கு நான் ஏன் தர வேண்டும்? என்றெல்லாம் இறைவன் கேட்க மாட்டானா? சாதாரண மனிதர்களுக்கு விளங்கக்கூடிய நியாயம் இறைவனுக்கு விளங்காது என்று இவர்கள் நினைக்கிறார்களா? இந்த அர்த்தமற்ற உளறலில் உள்ள அபத்தத்தைப் புரிந்து கொள்ள முடியாத நிலையில் தான் இறைவன் இருக்கின்றானா? இதைச் சிந்திப்பவர்கள் வஸீலாவின் சரியான பொருள் என்னவென்பதை உணர்வார்கள்.

முஹம்மதின் பொருட்டால் எனது பாவத்தை மன்னிப்பாயாக என்று ஆதம் (அலை) அவர்கள் கூறியுள்ளார்களே என்று சிலர் கேட்கலாம். இந்தச் செய்தி ஆதாரமற்றதும், இட்டுக்கட்டப்பட்டதுமாகும். இந்தச் செய்தி பல்வேறு நூல்களிலும் இடம் பெற்றிருந்தாலும் அப்துர் ரஹ்மான் பின் ஸைத் பின் அஸ்லம் என்பார் வழியாகவே அனைத்து நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் தமது தந்தை வழியாக ஏராளமான இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை அறிவித்தவர் என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் கூறுகின்றனர். எனவே இந்தச் செய்தியை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது.

மேலும் ஆதம் (அலை) அவர்கள் எவ்வாறு எந்த வார்த்தைகளைக் கூறி பாவமன்னிப்புத் தேடினார்கள் என்று திருக்குர்ஆன் விளக்கமாகக் கூறுகின்றது.. அதற்கு முரணாகவும் இந்தச் செய்தி அமைந்துள்ளது. (பாவ மன்னிப்புக்குய) சில வார்த்தைகளை இறைவனிடமிருந்து ஆதம் பெற்றுக் கொண்டார். எனவே அவரை இறைவன் மன்னித்தான்; அவன் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன் 2:37)

பாவம் செய்த ஆதம் (அலை) அதற்காக எவ்வாறு மன்னிப்புக் கேட்பது என்ற வழியைச் சுயமாக அறிந்து கொள்ளவில்லை. அந்த வழியையும் அதற்குரிய வார்த்தைகளையும் இறைவனே கற்றுக் கொடுத்தான். அந்த வார்த்தைகளைக் கூறி அவர் மன்னிப்புக் கேட்டதால் அவர் மன்னிக்கப்பட்டார் என்று இவ்வசனம் கூறுகின்றது.

இறைவன் அவருக்கு கற்றுக் கொடுத்த வார்த்தைகள் என்ன, அதையும் திருக்குர்ஆன் வேறொரு இடத்தில் கூறுகிறது.

எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கு இழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்து, அருள் புரியவில்லையானால் நஷ்டமடைந்தோராவோம்  என்று அவ்விருவரும் கூறினர்.

(அல்குர்ஆன் 7:23)

தங்களது பாவத்தையும் இறைவனது கருணையையும், வல்லமையையும் ஒரே நேரத்தில் நினைவு கூர்ந்து, தங்கள் தவறைப் பகிரங்கமாக ஒப்புக் கொண்டு தங்களுக்கு வேறு நாதியில்லை என்பதையும் உணர்ந்து கொண்டு இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள். இப்படித்தான் அவர்கள் மன்னிப்புக் கேட்டார்கள். தவிர முஹம்மத் பொருட்டால் என்று கேட்கவில்லை. அவ்வாறு கேட்டிருந்தால் அவ்வாறு இறைவன் கற்றுக் கொடுத்திருந்தால் அதை நிச்சயமாக இறைவன் கூறியிருப்பான்.

இந்த பிரார்த்தனையில் கூட ஆதம் (அலை) வஸீலா தேடியுள்ளனர். இறைவனின் முன்னால் சரணடைவதும் அவனது வல்லமையைக் கூறிப் புகழ்வதும் தனது இயலாமையை ஒப்புக் கொள்வதும் வஸீலா தான். இறைவனை நெருங்குவதற்கான வழி தான்.

இதனால் தான் அபூஹனீபா இமாம் உள்ளிட்ட பல்வேறு அறிஞர்கள், எவர் பொருட்டாலும் அல்லாஹ்விடம் கேட்கக் கூடாது. எவருக்காகவும் அல்லாஹ் எதையும் தர வேண்டுமென கட்டாயம் ஏதுமில்லை என்று கூறியுள்ளனர்.

இப்போது மவ்லிதுக்கு வருவோம். யார் அப்துல் காதிர் ஜீலானி பொருட்டால் பிரார்த்திக்கிறாரோ அவரது தேவைகள் நிறைவேற்றப்படும் என்று கூறப்படும் வரிகள் திருக்குர்ஆனுக்கும், நபிவழிக்கும் எதிரானதாகும் என்பதை விளங்கலாம்.

அப்துல் காதிர் ஜீலானியின் பொருட்டால் கேட்டால் அல்லாஹ் அதை ஏற்பான் என்றால் அதை அல்லாஹ் தான் கூற வேண்டும். இவர் பொருட்டால் கேட்டால் அல்லாஹ் தருவான் என்பதை இந்தப் பாட்டை எழுதியவர் எப்படி அறிந்து கொண்டார்? அல்லாஹ்விடத்தில் மறுமையில் இந்தப் பெரியார் உண்மையில் நல்லடியாராகத் தான் இருப்பார் என்பதையாவது யாராலும் அறிய முடியுமா?

இது போன்ற அபத்தங்களை நம்பி வழிகேட்டில் செல்லாமல் இறைவன் தான் காப்பாற்ற வேண்டும்.

அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட பொய்களின் தொகுப்பே முஹ்யித்தீன் மவ்லிது என்பதை நிரூபிக்கும் மற்றொரு அபத்தத்தைப் பாருங்கள்.

بل انه لم قط يفعل فعله *الا باذن الهه المتكلم

عهدا له ات لا يموت مريده *الا غلى ما تاب من مستاثم

அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் தமது இறைவனின் அனுமதியின்றி ஒரு போதும் எந்தச் செயலையும் செய்ததில்லை. அவரது சீடராக இருப்பவர் தமது பாவத்துக்காக மன்னிப்புத் தேடாமல் மரணிக்க மாட்டார் என்பது (அல்லாஹ்) அவரிடம் செய்த உடன்படிக்கையாகும்.

மவ்லிதை உருவாக்கியவர்கள் அதை நியாயப்படுத்தக் கையாளும் மலிவான தந்திரத்தை இந்தக் கவிதை அம்பலப்படுத்துகின்றது.

அப்துல் காதிர் ஜீலானி அவர்களை அல்லாஹ்வுக்குச் சமமாக காட்டக்கூடிய கற்பனைக் கதைகளை உண்மையான மூஃமீன்கள் நம்ப மாட்டார்கள் என்பதை மவ்லிதை உருவாக்கியவர்கள் நன்றாக அறிவார்கள். ஏகத்துவத்தையே தகர்க்கக்கூடிய வகையில் மவ்லிதில் கூறப்படும் கதைகள் அமைந்துள்ளனவே என்று ஆட்சேபனை வரும் என்பதையும் நன்றாக அறிவார்கள். அத்தகைய ஆட்சேபனைகளைத் தவிர்ப்பதற்காகத் தான் அப்துல் காதிர் ஜீலானி செய்த யாவுமே அல்லாஹ்வின் அனுமதியோடு தான் செய்யப்பட்டன. அவனுக்குப் போட்டியாகச் செய்யப்படவில்லை என்ற கருத்தை மேற்கண்ட கவிதையில் வலியுறுத்தியுள்ளார்கள். இப்படிச் செய்வதால் ஏகத்துவத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்பது அவர்களின் வாதம்.

அப்துல் காதிர் ஜீலானி அல்லாஹ்வின் அனுமதியோடு தான் அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான காரியங்களைச் செய்தார்கள் என்றால் அதற்கான ஆதாரங்கள் என்ன?

எவற்றை அல்லாஹ் தனக்கு மட்டுமே உரித்தானது என்று திருக்குர்ஆனில் உரிமை கொண்டாடுகின்றானோ அவற்றைச் செய்ய மற்றவர்களுக்கு எப்படி அனுமதியளிப்பான்?

அப்படியே அனுமதிப்பது என்றால் இறைவனுடன் வஹீ என்னும் தொடர்புடைய நபிமார்களுக்குத் தான் அனுமதிப்பான். அப்துல் காதிர் ஜீலானி அவர்களிடம் நேரடியாக பேசி அனுமதி தந்தானா? அல்லது வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்களை அவரிடம் அனுப்பி அனுமதியளித்தானா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோடு மார்க்கம் முடிந்து விட்டது என்பதன் பொருள் என்ன? நானே இறுதி நபி எனக்குப் பின் எந்த நபியும் இல்லை என்ற நபிமொழியின் பொருள் என்ன? இப்படி ஆயிரமாயிரம் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டியிருக்குமே என்று அந்த அறிவீனர்கள் சிந்திக்கவில்லை.

அபத்தமான கருத்துக்களைக் கூறுவோர். அதை நியாயப்படுத்த முடியாத போது மதிப்பு மிக்க பெரியார் இவ்வாறு கூறினார் என்று கூறி அப்பாவிகளை வாயடைக்கச் செய்வதை நாம் பார்த்திருக்கிறோம். அல்லாஹ்வின் பெயரிலேயே இட்டுக்கட்டக் கூடியவரை ஜாஹிலிய்யாக் காலத்துக்குப் பின் இந்த மவ்லிதில் நாம் சந்திக்கிறோம்.

அவர்கள் வெட்கக்கேடான காரியத்தைச் செய்யும் போது எங்கள் முன்னோர்களை இப்படித் தான் கண்டோம். அல்லாஹ்வே இதை எங்களுக்குக் கட்டளையிட்டான் என்று கூறுகின்றனர். அல்லாஹ் வெட்கக் கேடானதை ஏவ மாட்டான். நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறுகிறீர்களா?  என்று கேட்பீராக!

(அல்குர்ஆன் 7.28)

மானக்கேடான காரியத்தைச் செய்துவிட்டு அல்லாஹ்வின் மீது பழி போட்டவர்களை அல்லாஹ் இங்கே எச்சரிக்கிறான். மானக்கேடுகளிலெல்லாம் மிகப் பெரிய மானக்கேடான ஷிர்க்கையே அல்லாஹ்வின் மீது பழிபோட்டு மவ்லிதை எழுதியவர் நியாயப்படுத்த முயல்கிறார். இந்த வசனம் இவருக்காகவே அருளப்பட்டது போல் இல்லையா? இதை மவ்லிது அபிமானிகள் சிந்திக்கட்டும்.

அதே வரியில் கூறப்படும் மற்றொரு அபத்தத்தைப் பாருங்கள். அப்துல் காதிர் ஜீலானியிடம் சீடராக இருந்தவர் பாவமன்னிப்புத் தேடாமல் மரணிக்க மாட்டார் என்று அல்லாஹ் உறுதிமொழி எடுத்தானாம்.

அகில உலகுக்கும் அருட்கொடையாக அனுப்பப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கூட இத்தகைய உறுதி மொழியை அல்லாஹ் வழங்கவில்லை. அவர்களிடம் சீடராக இருந்தவர்களில் பலர் மறுமையில் எந்த நிலையில் இருப்பார்கள் என்பதைப் பின்வரும் ஹதீஸ்கள் தெளிவாக விளக்குகின்றன.

எனது சமுதாயத்தில் சிலர் இடப்புறமாகக் பிடிக்கப்படுவார்கள். அப்போது நான் என் தோழர்கள் என் தோழர்கள் என்று கூறுவேன். அதற்கு இறைவன் நீ அவர்களைப் பிரிந்தது முதல் அவர்கள் வந்த வழியே திரும்பிக் கொண்டிருந்தார்கள் எனக் கூறுவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் புகாரி 3349, 3447

மற்றொரு அறிவிப்பில்

ஹவ்ல் அல் கவ்ஸர் தடாகத்திலிருந்து சில மக்கள் தடுக்கப்படுவார்கள். என் தோழர்கள் என் தோழர்கள் என்று நான் கூறுவேன். அப்போது முஹம்மதே உனக்குப் பின் இவர்கள் புதிதாக உருவாக்கியவைகளைப் பற்றி நீர் அறிய மாட்டீர் எனக் கூறப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

நூல்: புகாரி, 4625, 4740, 6526, 6576, 6582

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பைஅத் செய்த நல்லறத் தோழர்கள் கூட பாவமன்னிப்புப் பெற்றவர்களாக மரணிக்கவில்லை. அத்தகைய உத்தரவாதத்தைப் பெறவில்லை என்பதை இந்த ஹதீஸ்கள் தெளிவாக விளக்குகின்றன. பாவமன்னிப்புப் பெற்றிருந்தால் அவர்கள் இடப்புறமாகப் பிடிக்கப்பட மாட்டார்கள். அல்லாஹ்வின் தூதருடைய சீடர்களுக்கு வழங்காத உறுதிமொழியை அப்துல் காதிர் ஜீலானியுடைய சீடர்களுக்கு அல்லாஹ் வழங்கி விட்டான் என்று கூறும் இந்தக் கவிதையைப் படிக்கலாமா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவு படுத்தும் இத்தகைய கவிதைகளைத் தீயிலிட்டுப் பொசுக்க வேண்டாமா? நபிகள் நாயகத்தை உண்மையாகவே நேசிக்கக் கூடியவர்கள் சிந்திக்கட்டும்.

நானும் உங்களைப் போன்ற மனிதன் தான். நீங்கள் என்னிடம் வழக்குகளைக் கொண்டு வருகிறீர்கள். உங்களில் சிலர் மற்ற சிலரை விட தமது வாதத்தை அழகுற எடுத்து வைக்கக்கூடும். நான் கேட்கும் வாதத்தினடிப்டையில் அவருக்குச் சாதகமாக நான் தீர்ப்பளித்து விடுவேன். பிறரது உரிமையை ஒருவருக்குச் சாதகமாக நான் தீப்பளித்து விட்டால் அதைப் பெற்றுக் கொள்ளக் கூடாது. அவருக்காக நரகத்தின் ஒரு பகுதியை வழங்குகிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் உம்மு ஸலமா (ரலி)

நூல் புகாரி 2458, 2680, 6967, 7169, 7181, 7185

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்த மக்கள் மட்டுமே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வழக்குகளைக் கொண்டு வர முடியும். அவர்களைத் தமது வாதத் திறமையால் ஏமாற்றி தமக்குச் சாதகமான தீர்ப்பைப் பெற்று விட முடியும். ஆனால் மறுமையில் நரக நெருப்பை அடைவார் என்று இங்கே நபிகள் நாயகம் (ஸல்) எச்சரிக்கை செய்கிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்கள் என்ற காரணத்துக்காக செய்த பாவம் அனைத்துக்கும் மன்னிப்பை நபித் தோழர்கள் பெறவில்லை. பெறுவார்கள் என்ற உத்தரவாதமும் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தளவாடங்களைப் பாதுகாக்கும் பொறுப்பில் கிர்கிரா என்பார் இருந்தார். அவர் மரணிக்கும் போது இவர் நரகிலிருப்பார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள் சென்று தேடிப்பார்த்த போது அவர் மோசடி செய்த ஒரு ஆடையைக் கண்டனர்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல்: புகாரி 3074

கைபர் போல் ஒருவர் மரணித்தார். இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அவருக்கு நீங்கள் தொழுகை நடத்துங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் உடனே மக்களின் முகங்கள் மாறுதலடைந்தன. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உங்கள் தோழர் அல்லாஹ்வின் பாதையில் மோசடி செய்து விட்டார் என்றார்கள். அவரது பொருட்களை மக்கள் ஆராய்ந்தனர். அதில் யூதர்களுக்குச் சொந்தமான இரண்டு திர்ஹம் பெறுமதியில்லாத ஒரு மாலையைக் கண்டனர்.

அறிவிப்பவர்: யஸீத் பின் காலித் (ரலி)

நூல்கள்: அபூதாவூத் 2335 நஸயீ 1933,

ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நம்பிக்கைக்குriயவராக இருந்துள்ளார். மற்றொருவர் அல்லாஹ்வின் பாதையில் தம் உயிரை அர்ப்பணித்தவராக இருந்துள்ளார். ஆயினும் இவ்விருவரின் கடைசிச் செயல்களோ மோசடியாக இருந்துள்ளது. மன்னிப்புக் கேட்காமல் மரணிக்க மாட்டார் என்ற உத்தரவாதம் நபித்தோழர்களுக்கே கிடைக்கவில்லை. அதனால் தான் அவர் நரகில் இருப்பார் எனக் கூறினார்கள்.

இது போல் ஏராளமான ஹதீஸ்களை நாம் காணலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நேரில் பார்த்த நேரடியாக அவர்களிடம் பாடம் கற்ற தம் உயிரையும் அல்லாஹ்வின் பாதையில் அர்ப்பணிக்கத் தயாராக இருந்த நபித்தோழர்களே பாவ மன்னிப்புப் பெற்றவர்களாகத் தான் மரணிப்பார்கள் என்ற உத்தரவாதம் இல்லை என்றால் அப்துல் காதிர் ஜீலானியின் சீடர்களுக்கு இத்தகைய உத்தரவாதம் உண்டு என்பதை ஏற்க முடியுமா?

கேடுகட்ட இந்த மவ்லிதுகளை இனியும் ஓதலாமா? ஆதரிக்கலாமா?

ஏராளமான திருக்குர்ஆன் வசனங்கள் எண்ணற்ற நபிமொழிகள் மற்றும் தர்க்க ரீதியான அறிவிப்பூர்வமான வாதங்கள் ஆகியவற்றின் துணையுடன் முஹ்யித்தீன் மவ்லிதின் அபத்தங்களை வெளிச்சம் போட்டுக் காட்டினோம்.

அப்துல் காதிர் ஜீலானியை அல்லாஹ்வுக்குச் சமமாக ஆக்கும் மேலும் சில வரிகளைப் பாருங்கள். இவை இஸ்லாத்திற்கு முரணானவை என்பதற்கு நாம் இதுவரை எடுத்துக் காட்டிய சான்றுகளே போதுமானதாகும்.

يا قدوة الاخيار *اكشف لنا الاسرار

க்ஷி  நல்லோர்களால் பின்பற்றப்படுபவரே இரகசியங்களை எங்களுக்குத் திறந்து காட்டுங்கள்.

தெளிவான மார்க்கத்தில் என்ன இரகசியம் உள்ளது? பல நூறு ஆண்டுகளுக்கு முன் மரணித்தவர் இதை எப்படித் திறந்து காட்டுவார்? அறிவுடையோரே சிந்தியுங்கள்.

انتم غياث الناس *عن خطفة الخناس

بالحفظ للانفاس *فارفع لنا الاستار

க்ஷி  ஆத்மாக்களை காப்பதன் மூலம் ஷைத்தானின் தாக்குதலை விட்டும் மக்களை இரட்சிப்பவர் நீங்களே எனவே எங்களுக்குத் திரைகளை விலக்குங்கள்.

ஆத்மாக்கள் அல்லாஹ்வின் கைவசம் உள்ளன. மற்றவர்களின் ஆத்மாக்களைக் காப்பது கிடக்கட்டும். தமது ஆத்மாவையே ஒருவரால் காத்துக் கொள்ள முடியாது. இது தான் இஸ்லாத்தின் அடிப்படை. உள்ளங்களைப் புரட்டக் கூடியவனே எனது உள்ளத்தை உனது மார்க்கத்தில் நிலைப்படுத்தி வை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதிகமதிகம் துஆச் செய்ததிலிருந்து இதை அறியலாம்.

انا لك الغلمان *راجوك للاحسان

க்ஷி  நிச்சயமாக நாங்கள் உங்கள் அடிமைகள். பேருபகாரம் செய்ய உங்களை எதிர்பார்க்கிறோம்.

அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் யாரும் அடிமையாக இருக்க முடியாது என்ற இஸ்லாத்தின் அடிப்படை அப்பட்டமாகத் தகர்க்கப்படுகிறது. என்றோ மரணித்தவர் பேருபகாரம் செய்வார் என்று சித்தரிக்கப்படுகின்றது.

رزقا لنا الرضوان *رفقا بنا مختار

க்ஷி  தேர்ந்தெடுக்கப்படுபவரே உங்கள் திருப்தியை எங்களுக்கு வழங்கி விடுங்கள். எங்களிடம் மென்மையாக நடந்து கொள்ளுங்கள்.

மரணித்துவிட்ட அப்துல் காதிர் இந்தக் கேடுகட்ட கவிஞன் மேல் ஏன் திருப்தியுற வேண்டும்? இப்படி ஒருவன் பிதற்றுவான் என்பதை அறிய முடியாத நிலையில் உள்ள அப்துல் காதிர் ஜிலானி எப்படி இவர் மீது திருப்தியுற முடியும்? அவர் திருப்தியுற்றால் என்ன? திருப்பதியுறாவிட்டால் என்ன? அவரது திருப்தியைப் பெற்றால் தான் மறுமையில் வெற்றி பெற முடியுமா? அப்துல் காதிர் ஜீலானி இந்தக் கவிஞனிடம் மென்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்றால் அப்துல் காதிர் ஜீலானி தான் நியாயத் தீர்ப்பு நாளின் அதிபதியா? இவர் மென்மையாக நடக்காவிட்டால் என்ன நேர்ந்துவிடும்? இப்படி ஏராளமான கேள்விகளை எழுப்பக் கூடிய அளவுக்கு அபத்தங்கள்.

بل نحن كالاشجار *انتم لها الامطار

க்ஷி  நாங்கள் மரங்களைப் போன்றவர்கள். நீங்கள் மழை போன்றவர்.

மழையின்றி மரங்கள் வாழ முடியாதது போல் அப்துல் காதிர் ஜீலானியின்றி மக்கள் வாழ முடியாதாம். எல்லா அதிகாரமும் பெற்று இவர் விளங்கும் போது அல்லாஹ் என்று ஒருவன் எதற்காக?

ومسنا الحاجات *جئناك بالمزجات

فاوف كيل نجاة *لنا اولى الاعسار

க்ஷி  எங்களுக்குத் தேவைகள் ஏற்பட்டுள்ளன. பைகளுடன் உங்களிடம் வந்து விட்டோம். வெற்றியை நிறைவாக சிரமப்படும் எங்களுக்கு அளந்து போடுங்கள்.

இப்படி அல்லாஹ்விடம் கேட்க வேண்டிய அனைத்தையும் இறந்தவர்களிடம் கேட்கிறார். அல்லாஹ்வின் அதிகாரங்களனைத்தையும் அப்துல் காதிருக்கு வழங்குகிறார்.

بشرى لمن قد زار *روض الولي البار

بالحفظ للاخطار *بل عن عذاب النار

க்ஷி  இந்த நல்ல இறைநேசரை ஸியாரத் செய்தவர்கள் துன்பங்களை விட்டும் நரகத்தின் வேதனையை விட்டும பாதுகாப்புப் பெறுவதற்காக நல்வாழ்த்துக்கள்.

அவரது கப்ரை ஸியாரத் செய்தவர்கள் எந்தத் துன்பமும் அடைய மாட்டார்கள் என்று யார் உத்தரவாதமளித்தது? அவரது கப்ரை ஸியாரத் செய்த ஏராளமானோர் துன்பத்தில் வீழ்ந்து கிடக்கின்றனரே? இதையெல்லாம் அறியாமல் இந்தக் கவிஞன் உளயிருக்கிறான்.

لولاه لا افلاح *للجن والابشار

க்ஷி  இவர் இல்லை என்றால் மனிதர்களுக்கும் ஜின்களுக்கும் எந்த வெற்றியும் கிடையாது.

என்று பிதற்றியுள்ளான். இவர் பிறப்பதற்கு முன் எத்தனையோ நபிமார்கள், அவர்கள் வழி நின்ற மூஃமின்கள் வெற்றி பெற்றுள்ளனர். இவர் மரணித்த பின்பும் எத்தனையோ நன்மக்கள் உலகில் தோன்றியுள்ளனர். இவரைப் பற்றி அறிந்திராத இவரது போதனைகளைப் படித்திராத எத்தனையோ மக்கள் நல்வழியில் செல்கின்றனர். இந்த உண்மைகளை உணராமல் இவரால் தான் மனித இனமும் ஜின்கள் இனமும் வெற்றியடைய முடியும் என்கிறான்.

இதன் மூலம் எல்லா நபிமார்களையும் நபித்தோழர்களையும் குறிப்பாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் அவமானப்படுத்துகிறான்.

هذا ذميم الحال *محمود ذو الاثقال

يرجو نداك البال *خذه عن الاخطار

احفظه من عاهات *واحرسه عن آفات

تقضي له الحاجات *تمحو له الاوزار

ادخله فى الاحزاب *واعدده فى الاصحاب

واقبله من احباب *يا عالي المقدار

க்ஷி  இதோ இழிந்த நிலையில் உள்ள பாவச் சுமைகளைச் சுமந்துள்ள மஹ்மூத் (லெப்பை) இருக்கிறேன். உயர்ந்த அந்தஸ்துடையவரே என்னை துன்பங்களிலிருந்து ஆபத்துகளிலிருந்தும் காப்பாற்றுங்கள். எனது தேவைகளை நிறைவேற்றுங்கள். என் பாவங்களை அழித்து விடுங்கள். வெற்றி பெற்ற கூட்டத்தில் என்னைச் சேர்த்து விடுங்கள். தோழர்களில் ஒருவராக என்னைக் கணக்கிடுங்கள். நேசர்களில் ஒருவராக என்னை அங்கீகரித்துக் கொள்ளுங்கள்.

இதை எழுதிய மஹ்மூத் லெப்பை இதை எழுதிய ஒரே காரணத்துக்காக இழிந்த நிலையில் இருப்பதும் பாவ மூட்டைகளைச் சுமந்திருப்பதும் உண்மை. இந்த மவ்லிதில் உள்ள வரிகளில் இந்த வரி மட்டுமே நூறு சதவிகிதம் உண்மை. அதில் நமக்கு ஆட்சேபணை இல்லை.

அடுத்து தேவைகளை அப்துல் காதிர் ஜீலானி தான் நிறைவேற்ற வேண்டுமாம். பாவங்களை அவர் தான் அழிக்க வேண்டுமாம். நல்லோர் பட்டியலில் நபித்தோழர்கள் பட்டியலில் நேர்களின் பட்டியலில் அவர் தான் சேர்க்க வேண்டுமாம்.

இஸ்லாத்தின் அடிப்படையை ஓரளவுக்காவது அறிந்து வைத்திருக்கும் முஸ்லிம் சமுதாயமே! என்றோ மரணித்துவிட்ட ஒரு மனிதரை எல்லா வகையிலும் கடவுளாக்கி ஏகத்துவத்தைத் தரைமட்டமாக்கி நிரந்தர நரகத்திற்கு இட்டுச் செல்லும் இக்கவிதைகளைப் படிக்கலாமா? வீட்டில் வைத்திருக்கலாமா? சிந்தித்துப் பாருங்கள்.

பொருள் தெரியாத காலத்தில் ஏமாற்றப்பட்டவர்களை அல்லாஹ் நாடினால் மன்னித்துவிடக் கூடும். மவ்லிதின் பொருள் தெரிந்த பின் குர்ஆனுக்கும் நபிமொழிகளுக்கும் முரணாக அமைந்திருப்பது புரிந்த பின் இதை ஓதலாமா? அல்லாஹ் இந்தப் படுபாதகச் செயலை மன்னிப்பானா? இன்றே இப்போதே இதை விட்டொழிக்க வேண்டாமா?

இந்த மவ்லிதுகள் சிலரது வயிற்றுப் பிழைப்புக்காக முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டவை. கொடுக்கப்படும் கூலிக்காகவும், சுவையான உணவுக்காகவும் இவை ஓதப்படுகின்றன. இதைத் தவிர இதற்கு வேறு நோக்கம் இல்லை. முஹ்யித்தீன் மவ்லிதே இதை ஒப்புக் கொள்கிறது.

முஹ்யித்தீன் மவ்லிதின் பதினோறு பாடல்கள் உள்ளன, இவற்றில் பத்துப் பாடல்களின் இறுதியில் மறவாமல் உணவைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். இதிலிருந்து மவ்லிது என்பது வயிற்றுப் பிழைப்புக்காகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ள குறுக்கு வழி என்பதை அறியலாம்.

1وسماعه والحاضرين واهلهم *ومطعمهم حبا له كل لحظة

க்ஷி  இதைக் கேட்டவர்களுக்கும் வந்திருப்பவர்களுக்கும் அவர் தம் குடும்பத்தினருக்கும் அவர் மேல் கொண்ட அன்பால் இவர்களுக்கு உணவளித்தவர்களுக்கும் ஒவ்வொரு நிமிடத்திலும் மன்னிப்புக் கிடைக்கட்டுமாக.

2والسامعيه ومن للسمع قد حضروا *ومطعميهم على السم الغوث ذى العظم

க்ஷி  இதைக் கேட்டோரையும் கேட்பதற்காக வருகை புரிந்தோரையும் மகத்துவமிக்க இரட்சிகராகிய இவர் பெயரால் வந்தோருக்கு உணவளித்தோரையும் அல்லாஹ் மன்னித்து விட்டான்.

மூன்றாவது பாடலில்

3وعن حاضري ههنا والذى *يداريهم باسم غوث عظيم

க்ஷி  இங்கே வந்தோரையும் மகத்தான இரட்சகராகிய இவர் பெயரால் வாரி வழங்கியோரையும் அல்லாஹ் மன்னித்து விட்டான்.

நான்காவது பாடலில்

4والسامعين المطعمين *على البر الجواد

5والسمع المطعمينا *على اسمه بالغرام

க்ஷி  வள்ளலாகிய இந்த நல்லவரின் பெயரால் உணவளித்துக் கேட்டவர்களையும் மறுக்கப்படாத உணவை (அதவாது தரமான சுவையான உணவை) அனைவருக்கும் குருவான இவர் பெயரால் தயாரித்தவர்களையும் அல்லாஹ் மன்னிப்பானாக.

8واغفرن للحاضرين هنا *والمضيف باطيب النعم

க்ஷி  இங்கே வருகை தந்தவர்களையும் சுவையான உணவை விருந்தளித்தவர்களையும் மன்னித்துவிடு.

6عفوا عن الذكار والسموع *لمدحه الحضار واتلصنوع

مطعوماناللذ ليس بالمنوع *على اسم شيخ الكل ذى ال

9وعفى عن سامعينا *مدحكم والصانعينا

طعمهم والحاضرينا *ههنا والذاكرينا

க்ஷி  உங்கள் புகழைச் செவியுற்றவர்களையும் இவர்களுக்கு உணவு தயாரித்தவர்களையும் இங்கே வருகை புரிந்தோரையும் (இவரை) திக்ரு செய்தவர்களையும் அல்லாஹ் மன்னிப்பாயாக.

க்ஷி  இதைக் கேட்டோர், வருகை தந்தோர், சங்கைக்குரிய இந்த இரட்சகருக்காக இவர்களுக்கு உணவளித்தோர் அனைவரையும் அல்லாஹ் மன்னிப்பானாக.

பதினோராவது பாடலில்

10والسامعين له من هو حاضر *مع مطعميهم للغياث الاكرم

11في حلقة الاذكار *والمطعم المدرار

க்ஷி  இந்த திக்ரு சபைக்கு வந்தோரையும் தொய்வின்றி தொடராக உணவளித்தோரையும் அல்லாஹ் மன்னிக்கட்டும்.

என்றெல்லாம் மறவாமல் தீனியைக் குறிப்பிடுகிறார். இதை எழுதியவருக்கு அப்துல் காதிர் ஜீலானி மேல் உள்ள அன்பு காரணமன்று.

இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளைத் தகர்க்கக் கூடிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்துக்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் உருவாக்கப்பட்ட மவ்லிதுகளைப் புறக்கணிக்கவும் ஒழித்துக் கட்டவும் அல்லாஹ் அருள் புரிவானாக.

14.09.2011. 9:32 AM

குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை

நூலின் பெயர் : குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை

தொகுப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன்

மார்க்கத்தின் எச்சரிக்கை!

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும். இந்த இணைய தளத்தில் உள்ளவைகளைப் பிரச்சாரம் செய்வதற்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் சில சகோதரர்கள் நமது ஆக்கங்களை அப்படியே பயன்படுத்தி தமது ஆக்கம் போல் காட்டுகின்றனர்.

இன்னாருடைய கட்டுரையில் இருந்து, அல்லது புத்தகத்தில் இருந்து இது எடுக்கப்பபட்டது என்று குறிப்பிடாமல் புகழடைவதற்காக இவ்வாறு செய்கின்றனர்.

சில இணைய தளங்களும் என்னுடைய ஆக்கங்களை அப்படியே வெளியிட்டு தம்முடைய ஆக்கம் போல் காட்டுகின்றன.மேலும் சில புத்தக வியாபாரிகளும் எனது நூல் உட்பட மற்றவர்களின் நூல்களைச் சிறிது மாற்றியமைத்து அனாமதேயங்களின் பெயர்களில் வெளியிட்டுச் சம்பாதிக்கின்றனர். உலகைப் பற்றியும் இவர்களுக்கு வெட்கம் இல்லை. மறுமையைப் பற்றியும் பயம் இல்லை.

இஸ்லாத்தில் இவ்வாறு செய்ய அனுமதி இல்லை. இவர்கள் நல்லது செய்யப் போய் மறுமையின் தண்டனைக்கு தம்மைத் தாமே உட்படுத்திக் கொள்கின்றனர்.

பிறரது ஆக்கங்களைப் பயன்படுத்துவோர் இது இன்னாருடைய ஆக்கம் என்று குறிப்பிடாமல் தன்னுடைய ஆக்கம் போல் காட்டுவது மார்க்க அடிப்படையில் குற்றமாகும்.

இவர்களுக்கு அல்லாஹ் விடுக்கும் எச்சரிக்கையை இங்கே சுட்டிக் காட்டுகிறோம்.

தாங்கள் செய்தவற்றுக்காக மகிழ்ச்சியடைந்து, தாம் செய்யாதவற்றுக்காகப் புகழப்பட வேண்டுமென விரும்புவோர் வேதனையிலிருந்து தப்பித்து விட்டார்கள் என்று நீர் நினைக்காதீர்! அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.

திருக்குர்ஆன் 3:188

குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை

ஓரிறைக் கொள்கையை தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறும் ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் அனைத்து வழிகளையும் திருக்குஆன் அடைத்து விட்டாலும் குர்ஆனுடன் தொடபு இல்லாத முஸ்லிம்களில் பலர் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் மாபாதகத்தைச் செய்து வருகின்றனர்.

இதகையோர் ஓரிறைக் கொள்கை குறித்து அறிந்து கொள்வதற்காக இந்நூல் வெளியிடப்படுகிறது.

இதில் ஒவ்வொரு தலைப்பின் கீழ் குர்ஆன் வசனங்கள் தொகுத்து தரப்பட்டுள்ளன. யாருடைய சொந்தக கருத்தும் இதில் சேர்க்கப்படவில்லை. யாருடைய விளக்கமும் இல்லாமல் இவ்வசனங்களே ஏகத்துவக் கொள்கையை அழுத்தமாகவும் தெளிவாகவும் சொல்லி விடுகிறது.

இறைவனுக்கு இணைகற்பிப்போருக்கு அன்பளிப்பு செய்ய ஏற்ற நூலாக இது திகழ்கிறது.

கீழ்க்காணும் தலைப்புக்களில் குர்ஆன் வசனங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

ஒரே இறைவன் தான் இருக்கிறான்

ஒரே இறைவன் தான் இருக்க முடியும்

தொன்று தொட்டு வரும் ஓரிறைக் கொள்கை

இறைவனுக்கு இணையாக எவரும் இல்லை

ஆட்சியில் இறைவனுக்கு இணை இல்லை

படைத்தல் அல்லாஹ்வின் அதிகாரம்

காத்தல் அல்லாஹ்வின் அதிகாரம்

அழித்தல் அல்லாஹ்வின் அதிகாரம்

அறிவை வழங்குவது அல்லாஹ்வின் அதிகாரம்

குழந்தையைத் தருவது அல்லாஹ்வின் அதிகாரம்

ஆட்சி அல்லாஹ்வின் அதிகாரம்

செல்வம் அல்லாஹ்வின் அதிகாரம்

மழை அல்லாஹ்வின் அதிகாரம்

நோய் நிவாரணம் அல்லாஹ்வின் அதிகாரம்

காத்தல் அல்லாஹ்வின் அதிகாரம்

அழித்தல் அல்லாஹ்வின் அதிகாரம்

அறிவை வழங்குவது அல்லாஹ்வின் அதிகாரம்

குழந்தையைத் தருவது அல்லாஹ்வின் அதிகாரம்

ஆட்சி அல்லாஹ்வின் அதிகாரம்

செல்வம் அல்லாஹ்வின் அதிகாரம்

மழை அல்லாஹ்வின் அதிகாரம்

நோய் நிவாரணம் அல்லாஹ்வின் அதிகாரம்

கால் நடைகளைக் கடவுளாக்கக் கூடாது

வானவர்களை வணங்கக் கூடாது

சிலைகளை வணங்கக் கூடாது

மகான்களை வணங்கக் கூடாது

இறந்தவரைப் பிரார்த்திக்கக் கூடாது

மரணித்தவர்கள் எதையும் அறிய முடியாது

நபிமார்களும் மனிதர்கள் தாம்

நபிமார்கள் உணவு உட்கொண்டனர்

நபிமார்கள் மனைவியருடன் குடும்பம் நடத்தினர்

நபிமார்கள் பிள்ளைகள் பெற்றனர்

நபிமார்கள் மரணித்தனர்

நபிமார்கள் கவலைப்பட்டனர்

நபிமார்கள் கொல்லப்பட்டனர்

நபிமார்கள் நோய் நொடிக்கு ஆளானார்கள்

நபிமார்களும் மறுமையில் விசாரிக்கப்படுவார்கள்

நபிமார்கள் மறுமையில் கை விடுவார்கள்

தவறு செய்தால் நபிமார்களும் தப்ப முடியாது

நன்மையோ, தீமையோ செய்ய நபிமார்களுக்கு இயலாது

நபிமார்களையும் அல்லாஹ் தான் மன்னிக்க முடியும்

நபிமார்களும் இறைவனின் அடிமைகளே

நபிகள் நாயகம் அல்லாஹ்வின் அடிமை

அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் நபிகள் நாயகத்திடம் இல்லை

நேர் வழியில் சேர்ப்பது நபிகள் நாயகத்தின் அதிகாரத்தில் இல்லை

நபிகள் நாயகமும் மனிதரே

நபிமார்களின் அற்புதங்கள்

அற்புதங்கள் அல்லாஹ் நாடினால் மட்டுமே

கெட்டவர்க்கும் அற்புதம்

மறைவானவை அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும்

மறைவானவை நபிமார்களுக்குத் தெரியாது

மறைவானவை நபிகள் நாயகத்துக்குத் தெரியாது

நபிமார்களுக்கு சிலவற்றை மட்டும் அல்லாஹ் அறிவிப்பான்

அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கக் கூடாது

அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தல் பெரும் பாவம்

அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்க எந்த நியாயமும் இல்லை

இறைவனை யாரும் கண்டதில்லை; காண முடியாது

மறுமையில் இறைவனைக் காண முடியும்

இறைவனின் இலக்கணம்

 ஒரே இறைவன் தான் இருக்கிறான்

உங்கள் வணக்கத்திற்குரியவன் ஒரே ஒரு இறைவனே. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. (அவன்) அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன் 2:163

வேதமுடையோரே! உங்கள் மார்க்கத்தில் வரம்பு மீறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதனையும்) கூறாதீர்கள்! மர்யமின் மகன் ஈஸா எனும் மஸீஹ் அல்லாஹ்வின் தூதரும் அவனது கட்டளையா(ல் உருவானவருமா)வார். அக்கட்டளையை அவன் மர்யமிடம் போட்டான். அவனது உயிருமாவார். எனவே அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்புங்கள்! (கடவுள்) மூவர் எனக் கூறாதீர்கள்! விலகிக் கொள்ளுங்கள்! (அது) உங்களுக்குச் சிறந்தது. அல்லாஹ்வே ஒரே வணக்கத்திற்குரியவன். அவனுக்குப் பிள்ளை இருப்பதை விட்டும் அவன் தூயவன். வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அல்லாஹ் பொறுப்பேற்கப் போதுமானவன்.

திருக்குர்ஆன் 4:171

மூவரில் (மூன்று கடவுள்களில்) அல்லாஹ்வும் ஒருவன்  என்று கூறியோர் (ஏக இறைவனை) மறுப்பவர்களாகி விட்டனர். ஒரே இறைவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் (வேறு) யாருமில்லை. அவர்கள் தமது கூற்றிலிருந்து விலகிக் கொள்ளவில்லையானால் (ஏக இறைவனை) மறுப்போருக்குத் துன்புறுத்தும் வேதனை வந்தடையும்.

திருக்குர்ஆன் 5:73

அல்லாஹ்வுடன் வேறு கடவுள்கள் இருப்பதாக சாட்சி கூறுகிறீர்களா? நான் (அவ்வாறு) சாட்சி கூற மாட்டேன்  என்று நீர் கூறுவீராக!  வணக்கத்திற்குரியவன் அவன் ஒருவனே. நீங்கள் இணை கற்பிப்பவற்றை விட்டும் நான் விலகிக் கொண்டவன்  எனக் கூறுவீராக!

திருக்குர்ஆன் 6:19

வானங்களுக்கும், பூமிக்கும் இறைவன் யார்?  என்று கேட்டு, அல்லாஹ் என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 13:16

இது மனித குலத்துக்குச் சென்றடைய வேண்டியதாகும். இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப்படவும், வணக்கத்திற்குரியவன் ஒரே ஒருவனே இருக்கிறான் என்பதை அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும், அறிவுடையோர் சிந்திப்பதற்காகவும் (இது அருளப்பட்டுள்ளது.)

திருக்குர்ஆன் 14:52

உங்கள் இறைவன் ஒரே இறைவனே. மறுமையை நம்பாதோரின் உள்ளங்கள் (இதை) மறுக்கின்றன. அவர்கள் பெருமையடிப்பவர்கள்.

திருக்குர்ஆன் 16:22

இரண்டு கடவுள்களைக் கற்பனை செய்யாதீர்கள்! அவன் ஒரே ஒரு கடவுளே! எனவே எனக்கே பயப்படுங்கள்!  என்று அல்லாஹ் கூறுகிறான்.

திருக்குர்ஆன் 16:51

நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணை கற்பிக்காது இருக்கட்டும்  என்று (முஹம்மதே!) கூறுவீராக!

திருக்குர்ஆன் 18:110

 உங்கள் இறைவன் ஒரே இறைவனே என்பதே எனக்கு அறிவிக்கப்படுகிறது. நீங்கள் (இதை) ஏற்கிறீர்களா?  என்று கேட்பீராக!

திருக்குர்ஆன் 21:108

(அவன்) வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவற்றுக்கு இறைவன். கிழக்குகளுக்கும் இறைவன்.

திருக்குர்ஆன் 37:4,5

நான் எச்சரிக்கை செய்பவனே. அடக்கியாளும் ஒரே அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை  என்று (முஹம்மதே!) கூறுவீராக! (அவன்) வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவற்றின் இறைவன். மிகைத்தவன்; அதிகம் மன்னிப்பவன்.

திருக்குர்ஆன் 38:65,66

 நான் உங்களைப் போன்ற மனிதன் தான். உங்கள் இறைவன் ஒரே இறைவனே என்று எனக்கு தூதுச் செய்தி அறிவிக்கப்படுகிறது. எனவே அவனிடம் உறுதியாக இருங்கள்! அவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்! இணை கற்பிப்போருக்குக் கேடு தான் இருக்கிறது என்று (முஹம்மதே!) கூறுவீராக!

திருக்குர்ஆன் 41:6

அல்லாஹ் ஒருவன்  எனக் கூறுவீராக! அல்லாஹ் தேவையற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை.

திருக்குர்ஆன் 112:1-4

ஒரே இறைவன் தான் இருக்க முடியும்

என் சிறைத் தோழர்களே! ஏராளமான கடவுள்கள் (இருப்பது) சிறந்ததா? அடக்கியாளும்  ஒரே ஒருவனாகிய அல்லாஹ்வா?  (என்று யூசுஃப் நபி கூறினார்)

திருக்குர்ஆன் 12:39

அவர்கள் கூறுவது போல் அவனுடன் பல கடவுள்கள் இருந்திருந்தால் அவர்களும் அர்ஷுடைய (இறை)வனிடம் (சரணடைய) ஒரு வழியைத் தேடியிருப்பார்கள்  என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 17:42

அவ்விரண்டிலும் (வானங்களிலும், பூமியிலும்) அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள்கள் இருந்திருந்தால் இரண்டும் சீரழிந்திருக்கும். அவர்கள் கூறுவதை விட்டும் அர்ஷுக்கு அதிபதியாகிய அல்லாஹ் தூயவன்.

திருக்குர்ஆன் 21:22

அல்லாஹ் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அவனுடன் எந்தக் கடவுளும் இல்லை. அவ்வாறிருந்தால் தான் படைத்தவற்றுடன் ஒவ்வொரு கடவுளும் (தனியாகப்) போயிருப்பார்கள். ஒருவரையொருவர் மிகைத்திருப்பார்கள். அவர்கள் கூறுவதை விட்டும் அல்லாஹ் தூயவன்.

திருக்குர்ஆன் 23:91

கியாமத் நாள் வரை இரவை உங்களுக்கு அல்லாஹ் நிரந்தரமாக்கி விட்டால் அல்லாஹ்வையன்றி உங்களுக்கு ஒளியைக் கொண்டு வரும் இறைவன் யார் என்பதற்குப் பதில் சொல்லுங்கள்! செவியுற மாட்டீர்களா?  என்று கேட்பீராக!  கியாமத் நாள் வரை பகலை உங்களுக்கு அல்லாஹ் நிரந்தரமாக்கி விட்டால் அல்லாஹ்வையன்றி நீங்கள் அமைதி பெறும் இரவை உங்களுக்குக் கொண்டு வரும் இறைவன் யார் என்பதற்குப் பதில் சொல்லுங்கள்! சிந்திக்க மாட்டீர்களா?  என்று கேட்பீராக!

திருக்குர்ஆன் 28:71,72

உங்களிலிருந்தே அவன் உங்களுக்கு ஓர் உதாரணத்தைக் கூறுகிறான். உங்களுக்கு நாம் வழங்கியவற்றில் பங்காளிகளாக உங்களது அடிமைகளில் எவரும் உள்ளனரா? அதில் நீங்களும் (அவர்களும்) சமமாக இருப்பீர்களா? உங்களுக்கிடையே நீங்கள் அஞ்சுவது போல் அவர்களுக்கு அஞ்சுவீர்களா? விளங்கும் சமுதாயத்துக்கு இவ்வாறே வசனங்களைத் தெளிவுபடுத்துகிறோம்.

திருக்குர்ஆன் 30:28

ஒரு (அடிமை) மனிதனை அல்லாஹ் உதாரணமாகக் கூறுகிறான். அவனுக்கு உரிமையாளர்களாக மாறுபட்ட கருத்துடைய பல பங்காளிகள் உள்ளனர். இன்னொரு மனிதனையும் (இறைவன்) உதாரணமாகக் கூறுகிறான். அவன் ஒரு மனிதனுக்கு மட்டுமே உடையவன். இவ்விருவரும் உதாரணத்தால் சமமானவர்களா? எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 29:29

தொன்று தொட்டு வரும் ஓரிறைக் கொள்கை

என்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை; எனவே என்னையே வணங்குங்கள்!  என்பதை அறிவிக்காமல் உமக்கு முன் எந்தத் தூதரையும் நாம் அனுப்பியதில்லை.

திருக்குர்ஆன் 21: 25

நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் நஷ்டமடைந்தவராவீர். மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக! என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது.

திருக்குர்ஆன் 39:65,66

நூஹை, அவரது சமுதாயத்திடம் அனுப்பி வைத்தோம்.  என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை மகத்தான நாளின் வேதனையை உங்கள் மீது நான் அஞ்சுகிறேன்  என்று அவர் கூறினார்.

திருக்குர்ஆன் 7:59

ஆது சமுதாயத்திடம் அவர்களின் சகோதரர் ஹூதை அனுப்பினோம்.  என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?  என்று அவர் கேட்டார்.

திருக்குர்ஆன் 7:65

ஸமூது சமுதாயத்திடம் அவர்களின் சகோதரர் ஸாலிஹை அனுப்பி வைத்தோம்.  என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து சான்று வந்துள்ளது ..... என்று அவர் கூறினார்.

திருக்குர்ஆன் 7:73

மத்யன் நகருக்கு அவர்களின் சகோதரர் ஷுஐபை அனுப்பினோம்.  என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. உங்கள் இறைனிடமிருந்து உங்களிடம் சான்று வந்துள்ளது .... என்று அவர் கூறினார்.

திருக்குர்ஆன் 7:85

ஆது சமுதாயத்திடம், அவர்களது சகோதரர் ஹூதை (அனுப்பினோம்).  என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீங்கள் கற்பனை செய்வோராகவே இருக்கிறீர்கள்  என்று அவர் கூறினார்.

திருக்குர்ஆன் 11:50

ஸமூது சமுதாயத்திடம், அவர்களின் சகோதரர் ஸாலிஹை (அனுப்பினோம்).  என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனன்றி வணக்கத்திற்குரியவன் உங்களுக்கு வேறு யாருமில்லை. அவனே உங்களைப் பூமியிலிருந்து படைத்தான். அதில் உங்களை வசிக்கச் செய்தான். எனவே அவனிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்! பின்னர் அவனை நோக்கித் திரும்புங்கள்! என் இறைவன் அருகில் உள்ளவன்;  பதிலளிப்பவன்  என்றார்.

திருக்குர்ஆன் 11:61

மத்யன் நகருக்கு அவர்களின் சகோதரர் ஷுஐபை (அனுப்பினோம்)  என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அல்லாஹ்வையன்றி வணக்கத்திற் குரியவன் வேறு யாருமில்லை. அளவையிலும் நிறுவையிலும் குறைவு செய்யாதீர்கள்! நீங்கள் நல்ல நிலையில் இருப்பதாகவே நான் காண்கிறேன். சுற்றி வளைக்கும் நாளின் வேதனை குறித்து உங்கள் விஷயத்தில் நான் பயப்படுகிறேன்  என்றார்.

திருக்குர்ஆன் 11:84

நூஹை அவரது சமுதாயத்திடம் அனுப்பினோம்.  என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீங்கள் அஞ்ச வேண்டாமா?  என்று கேட்டார்.

திருக்குர்ஆன் 23:23

அளவற்ற அருளாளனைத் தவிர வணங்கப்படும் கடவுள்களை நாம் ஆக்கியுள்ளோமா?  என்று உமக்கு முன் நாம் அனுப்பிய தூதர்களிடம் கேட்பீராக!

திருக்குர்ஆன் 43:45

யஃகூபுக்கு மரணம் நெருங்கிய போது, நீங்கள் சாட்சிகளாக இருந்தீர்களா?  எனக்குப் பின் எதை வணங்குவீர்கள்?  என்று தமது பிள்ளைகளிடம் கேட்ட போது  உங்கள் இறைவனும், உங்கள் தந்தையரான இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் இறைவனுமாகிய ஒரே இறைவனையே வணங்குவோம். நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டவர்கள்  என்றே (பிள்ளைகள்) கூறினர்.

திருக்குர்ஆன் 2:133

அவர்கள் அல்லாஹ்வையன்றி தமது மத போதகர்களையும், பாதிரிகளையும்,மர்யமின் மகன் மஸீஹையும் கடவுள்களாக்கினர். ஒரே கடவுளை வணங்குமாறு தான் அவர்கள் கட்டளையிடப்பட்டனர். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவர்கள் இணை கற்பிப்பவற்றை விட்டும் அவன் தூயவன்.

திருக்குர்ஆன் 9:31

இறைவனுக்கு இணையாக எவரும் இல்லை

அவனே பூமியை உங்களுக்கு விரிப்பாகவும், வானத்தை முகடாகவும் அமைத்தான். வானிலிருந்து தண்ணீரையும் இறக்கினான். அதன் மூலம் கனிகளை உங்களுக்கு உணவாக (பூமியிலிருந்து) வெளிப்படுத்தினான். எனவே அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கு நிகராக எவரையும் கற்பனை செய்யாதீர்கள்!

திருக்குர்ஆன் 2:22

எனது தொழுகை, எனது வணக்க முறை, எனது வாழ்வு, எனது மரணம் யாவும் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியன; அவனுக்கு நிகரானவன் இல்லை; இவ்வாறே கட்டளையிடப்பட்டுள்ளேன்; முஸ்லிம்களில் நான் முதலாமவன்   என்றும் கூறுவீராக!

திருக்குர்ஆன் 6:163

அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழி கெடுப்பதற்காக அவனுக்கு இணை கற்பித்து விட்டனர்.  அனுபவியுங்கள்! நீங்கள் சென்றடையும் இடம் நரகமே  என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 14:30

சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை என்று (முஹம்மதே!) கூறுவீராக! அவனை அதிகம் பெருமைப்படுத்துவீராக!

திருக்குர்ஆன் 17:111

அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் உள்ளது. அவன் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அதிகாரத்தில் அவனுக்கு எந்தப் பங்காளியும் இல்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் படைத்தான். அதைத் திட்டமிட்டு அமைத்தான்.

திருக்குர்ஆன் 25:2

அவன் நமக்கு உதாரணம் கூறுகிறான். அவனை (நாம்) படைத்திருப்பதை அவன் மறந்து விட்டான்.  எலும்புகள் மக்கிய நிலையில் அதை உயிர்ப்பிப்பவன் யார்? என்று கேட்கிறான்.  முதல் தடவை இதை யார் படைத்தானோ அவன் இதை உயிர்ப்பிப்பான். அவன் ஒவ்வொரு படைப்பையும் அறிந்தவன்  என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 36:78, 79

பூமியை இரண்டு நாட்களில் படைத்தவனையா மறுக்கிறீர்கள்? மேலும் அவனுக்கு நிகராகக் கற்பனை செய்கிறீர்கள். அவனே அகிலத்தின் அதிபதியாவான் என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 41:9

(அவன்) வானங்களையும், பூமியையும் படைத்தவன். உங்களுக்கு உங்களிலிருந்தே ஜோடிகளையும், (கால்நடைகளுக்கு) கால் நடைகளில் ஜோடிகளையும் ஏற்படுத்தினான். அதில் (பூமியில்) உங்களைப் பரவச் செய்தான். அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.

திருக்குர்ஆன் 42:11

அவனுக்கு நிகராக யாருமில்லை

திருக்குர்ஆன் 112:4

வானங்களையும், பூமியையும் படைத்த அல்லாஹ்வையன்றி வேறு பொறுப்பாளனை ஏற்படுத்திக் கொள்வேனா? அவனே உணவளிக்கிறான். அவன் உணவளிக்கப்படுவதில்லை என்று கூறுவீராக! கட்டுப்பட்டு நடப்போரில் முதலாமவனாக இருக்குமாறு கட்டளையிடப்பட்டுள்ளேன் எனவும் கூறுவீராக! இணை கற்பித்தவராக ஒரு போதும் நீர் ஆகி விடாதீர்!

திருக்குர்ஆன் 6:14

எதையும் படைக்காதவற்றையா அவர்கள் (இறைவனுக்கு) இணை கற்பிக்கின்றனர்?அவர்களே படைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு உதவிட அவர்களுக்கு இயலாது. தமக்கே கூட அவர்கள் உதவிக் கொள்ள மாட்டார்கள். (எதையும்) தெரிவிக்க அவர்களை நீங்கள் அழைத்தால் அவர்கள் உங்களைப் பின்பற்ற மாட்டார்கள். நீங்கள் அவர்களை அழைப்பதும்,மௌனமாக இருப்பதும் உங்களைப் பொறுத்த வரை சமமானது.

திருக்குர்ஆன் 7:191,192,193

உங்கள் தெய்வங்களில் முதலில் படைப்பவனும், மீண்டும் அதைப் படைப்பவனும் உள்ளனரா? என்று கேட்பீராக! அல்லாஹ்வே முதலில் படைக்கிறான். பின்னர் மறுபடியும் படைக்கிறான்! எவ்வாறு திசை திருப்பப்படுகிறீர்கள்? என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 10:34

உங்கள் தெய்வங்களில் உண்மைக்கு வழி காட்டுபவர் உண்டா? என்று கேட்பீராக! அல்லாஹ்வே உண்மைக்கு வழி காட்டுகிறான் என்று கூறுவீராக! உண்மைக்கு வழி காட்டுபவன் பின்பற்றத்தக்கவனா? பிறர் வழி நடத்தினால் தவிர தானாகச் செல்ல இயலாதவை பின்பற்றத் தக்கவையா? உங்களுக்கு என்ன நேர்ந்தது? எவ்வாறு தீர்ப்பளிக்கிறீர்கள்?

திருக்குர்ஆன் 10:35

அல்லாஹ்வே உங்களைப் படைத்தான். பின்னர் உங்களுக்கு உணவளித்தான். பின்னர் உங்களை மரணிக்கச் செய்வான். பிறகு உங்களை உயிர்ப்பிப்பான். உங்கள் தெய்வங்களில் இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்வோர் உள்ளனரா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்.

திருக்குர்ஆன் 30:40

ஆட்சியில் இறைவனுக்கு இணை இல்லை

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது என்பதையும், அல்லாஹ்வையன்றி உங்களுக்குப் பாதுகாவலனோ, உதவுபவனோ இல்லை என்பதையும் நீர் அறியவில்லையா?

திருக்குர்ஆன் 2:107,

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.

திருக்குர்ஆன் 3:189

நாங்கள் அல்லாஹ்வின் பிள்ளைகளும், அவனது நேசர்களுமாவோம்  என்று யூதர்களும், கிறித்தவர்களும் கூறுகின்றனர்.  (அவ்வாறாயின்) உங்கள் பாவங்களின் காரணமாக உங்களை ஏன் அவன் தண்டிக்கிறான்?  என்று கேட்பீராக! மாறாக நீங்கள்,அவன் படைத்த மனிதர்களாவீர்கள். தான் நாடியோரை அவன் மன்னிப்பான். தான் நாடியோரைத் தண்டிப்பான். வானங்கள், பூமி, மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவைகளின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவனிடமே திரும்பிச் செல்லுதல் உள்ளது.

திருக்குர்ஆன் 5:18

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது என்பதை நீர் அறியவில்லையா? தான் நாடியோரை அவன் தண்டிப்பான். தான் நாடியோரை மன்னிப்பான். அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.

திருக்குர்ஆன் 5:40

வானங்கள், பூமி, மற்றும் அவற்றில் உள்ளவைகளின் அதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.

திருக்குர்ஆன் 5:120

மனிதர்களே! நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதர். அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி உரியது. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கச் செய்கிறான்  என்று (முஹம்மதே!) கூறுவீராக!

திருக்குர்ஆன் 7:158

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் உயிர்ப்பிக்கிறான். மரணிக்கச் செய்கிறான். அல்லாஹ்வையன்றி உங்களுக்கு பொறுப்பாளனோ, உதவுபவனோ இல்லை.

திருக்குர்ஆன் 9:116

சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை என்று (முஹம்மதே!) கூறுவீராக! அவனை அதிகம் பெருமைப்படுத்துவீராக!

திருக்குர்ஆன் 17:111

பூமியும், அதில் உள்ளோரும் யாருக்குச் சொந்தம்? நீங்கள் அறிந்தால் (பதிலளியுங்கள்!)  என்று (முஹம்மதே!) கேட்பீராக!  அல்லாஹ்வுக்கே  என்று அவர்கள் கூறுவார்கள்.  சிந்திக்க மாட்டீர்களா?  என்று கேட்பீராக!  ஏழு வானங்களுக்கும் அதிபதி, மகத்தான அர்ஷுக்கும் அதிபதி யார்?  எனக் கேட்பீராக! அல்லாஹ்வே  என்று கூறுவார்கள்.  அஞ்ச மாட்டீர்களா;?  என்று கேட்பீராக! பாதுகாப்பவனும், (பிறரால்) பாதுகாக்கப்படாதவனும், தன் கைவசம் ஒவ்வொரு பொருளின் அதிகாரத்தை வைத்திருப்பவனும் யார்? நீங்கள் அறிந்தால் (பதில் கூறுங்கள்!)  என்று கேட்பீராக!  அல்லாஹ்வே  என்று கூறுவார்கள். எவ்வாறு மதி மயக்கப்படுகிறீர்கள்?  என்று கேட்பீராக!

திருக்குர்ஆன் 23:84-89

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்விடமே திரும்பிச் செல்லுதல் உள்ளது.

திருக்குர்ஆன் 24:42

அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் உள்ளது. அவன் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அதிகாரத்தில் அவனுக்கு எந்தப் பங்காளியும் இல்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் படைத்தான். அதைத் திட்டமிட்டு அமைத்தான்.

திருக்குர்ஆன் 25:2

அவன் இரவைப் பகலில் நுழைக்கிறான். பகலை இரவில் நுழைக்கிறான். சூரியனையும்,சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலக்கெடு வரை செல்கின்றன. அவனே அல்லாஹ்; உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம். அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர். நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.

திருக்குர்ஆன் 35:13,14

மிகைத்தவனும், வள்ளலுமாகிய உமது இறைவனது அருட்கொடையின் கருவூலங்கள் அவர்களிடம் உள்ளனவா? அல்லது வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவற்றின் ஆட்சி அவர்களுக்கு உள்ளதா? ...

திருக்குர்ஆன் 38:9,10

உங்களை ஒரே ஒருவரிலிருந்து அவன் படைத்தான். பின்னர் அவரிலிருந்து அவரது ஜோடியைப் படைத்தான். கால்நடைகளில் (பலியிடத்தக்கதாக) எட்டு ஜோடிகளை உங்களுக்காக இறக்கினான். உங்கள் அன்னையரின் வயிறுகளில் ஒரு படைப்புக்குப் பின் இன்னொரு படைப்பாக மூன்று இருள்களில் உங்களைப் படைக்கிறான். அவனே அல்லாஹ். உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம் உள்ளது. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. எங்கே நீங்கள் திசை திருப்பப்படுகின்றீர்கள்?

திருக்குர்ஆன் 39:6

 பரிந்துரைகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே  என்று கூறுவீராக! வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் அவனுக்கே உரியது! பின்னர் அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!

திருக்குர்ஆன் 39:44

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண்(குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண்(குழந்தை)களை வழங்குகிறான்.

திருக்குர்ஆன் 42:49

வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவற்றின் அதிகாரத்துக்குரியவன் பாக்கியம் பொருந்தியவன். (உலகம் அழியும்) அந்த நேரம் பற்றிய அறிவு அவனிடமே உள்ளது. அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!

திருக்குர்ஆன் 43:85

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. தான் நாடியோரை அவன் மன்னிப்பான். தான் நாடியோரை அவன் தண்டிப்பான். அல்லாஹ் மன்னிப்பவனாகவும்,நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

திருக்குர்ஆன் 48:14

வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் அவனுக்கே உரியது. அவன் உயிர்ப்பிக்கிறான்;மரணிக்கச் செய்கிறான். அனைத்துப் பொருட்கள் மீதும் அவன் ஆற்றலுடையவன்.

திருக்குர்ஆன் 57:2

வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் அவனுக்கே உரியது. காரியங்கள் (யாவும்) அல்லாஹ்விடமே கொண்டு செல்லப்படும்.

திருக்குர்ஆன் 57:5,

வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வைத் துதிக்கின்றன. ஆட்சி அவனுக்கே உரியது. அவனுக்கே புகழ் உரியது. அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.

திருக்குர்ஆன் 64:1

எவனது கைவசம் அதிகாரம் இருக்கிறதோ அவன் பாக்கியமுடையோன். அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.

திருக்குர்ஆன் 67:1

வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் அவனுக்கே உரியது. அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் கண்காணிப்பவன்.

திருக்குர்ஆன் 85:9

பின்னர் அவர்களது உண்மையான அதிபதியாகிய அல்லாஹ்விடம் கொண்டு செல்லப்படுவார்கள். கவனத்தில் கொள்க! அவனுக்கே அதிகாரம் உள்ளது. அவன் விரைவாகக் கணக்கெடுப்பவன்.

திருக்குர்ஆன் 6:62

அவனே அல்லாஹ். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. இவ்வுலகிலும், மறுமையிலும் புகழ் அவனுக்கே உரியது. அதிகாரமும் அவனுக்கே. அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!

திருக்குர்ஆன் 28:70

அல்லாஹ் மட்டும் பிரார்த்திக்கப்பட்டால் மறுத்தீர்கள்; அவனுக்கு இணை கற்பிக்கப்பட்டால் அதை நம்பினீர்கள்  என்பதே இதற்குக் காரணம். உயர்ந்தவனும்,பெரியவனுமாகிய அல்லாஹ்வுக்கே அதிகாரம்.

திருக்குர்ஆன் 40:12

 நான் என் இறைவனிடமிருந்து வந்த சான்றுடன் இருக்கிறேன். அதைப் பொய்யெனக் கருதுகிறீர்கள். நீங்கள் அவசரப்படுவது என்னிடம் இல்லை. அதிகாரம் அல்லாஹ்வுக்கே தவிர (வேறு எவருக்கும்) இல்லை. அவன் உண்மையை உரைக்கிறான். தீர்ப்பளிப்போரில் அவன் மிகச் சிறந்தவன்  என்றும் கூறுவீராக!

திருக்குர்ஆன் 6:57

அவனன்றி நீங்கள் வணங்குபவை வெறும் பெயர்களே. நீங்களும், உங்களின் முன்னோர்களும் அவற்றுக்குப் பெயரிட்டீர்கள்! இது குறித்து அல்லாஹ் எந்தச் சான்றையும் அருளவில்லை. அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் இல்லை. அவனைத் தவிர எதையும் நீங்கள் வணங்கக் கூடாது  என்று அவன் கட்டளையிட்டுள்ளான். இதுவே நேரான மார்க்கம். எனினும் அதிகமான மனிதர்கள் விளங்குவதில்லை.

திருக்குர்ஆன் 12:40

என் மக்களே! ஒரே வாசல் வழியாக நுழையாதீர்கள்! பல்வேறு வாசல்கள் வழியாக நுழையுங்கள்! அல்லாஹ்விடமிருந்து சிறிதளவும் உங்களை நான் காப்பாற்ற முடியாது. அதிகாரம் அல்லாஹ்வுக்கே உள்ளது. அவனையே சார்ந்துள்ளேன். சார்ந்திருப்போர் அவனையே சார்ந்திருக்க வேண்டும்  என்றார்.

திருக்குர்ஆன் 12:67

அவர்கள் தங்கிய(காலத்)தைப் பற்றி அல்லாஹ்வே நன்கு அறிந்தவன். வானங்கள் மற்றும் பூமியில் மறைவானது அவனுக்கே உரியது. அவன் நன்றாகப் பார்ப்பவன்! நன்றாகக் கேட்பவன். அவனன்றி அவர்களுக்கு எந்தப் பொறுப்பாளரும் இல்லை. அவன் தனது அதிகாரத்தில் யாரையும் கூட்டாக்கிக் கொள்ள மாட்டான்  என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 18:26

அல்லாஹ்வுடன் வேறு கடவுளை நீர் பிரார்த்திக்காதீர்! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவனது முகத்தைத் தவிர ஒவ்வொரு பொருளும் அழியக் கூடியது. அவனுக்கே அதிகாரம் உள்ளது. அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!

திருக்குர்ஆன் 28:88

படைத்தல் அல்லாஹ்வின் அதிகாரம்

மனிதர்களே! உங்களையும், உங்களுக்கு முன் சென்றோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள்! இதனால் (தண்டனையிலிருந்து) தப்பித்துக் கொள்வீர்கள்.

திருக்குர்ஆன் 2:21

அவனே பூமியில் உள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். பின்னர் வானத்தை (படைக்க) நாடி அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்குபடுத்தினான். அவன் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.

திருக்குர்ஆன் 2:29

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அவனே வானங்களையும், பூமியையும் படைத்தான். இருள்களையும், ஒளியையும் ஏற்படுத்தினான். பின்னரும் (ஏக இறைவனை) மறுப்போர் தம் இறைவனுக்கு (மற்றவர்களை) சமமாக்குகின்றனர்.

திருக்குர்ஆன் 6:1

ஜின்களை அல்லாஹ்வே படைத்திருக்கும் போது அவர்களை அவனுக்கு இணையாக்கி விட்டனர். அவனுக்கு ஆண் மக்களையும், பெண் மக்களையும் அறிவில்லாமல் கற்பனை செய்து விட்டனர். அவனோ தூயவன். அவர்கள் வர்ணிப்பதை விட்டும் அவன் உயர்ந்து விட்டான்.

திருக்குர்ஆன் 6:100

உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். இரவைப் பகலால் அவன் மூடுகிறான். பகல், இரவை வேகமாகத் தொடர்கிறது. சூரியனையும்,  சந்திரனையும்,  நட்சத்திரங்களையும் தனது கட்டளையால் கட்டுப்படுத்தினான். கவனத்தில் கொள்க! படைத்தலும், கட்டளையும் அவனுக்கே உரியன. அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ் பாக்கியம் பொருந்தியவன்.

திருக்குர்ஆன் 7:54

எதையும் படைக்காதவற்றையா அவர்கள் (இறைவனுக்கு) இணை கற்பிக்கின்றனர்?அவர்களே படைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு உதவிட அவர்களுக்கு இயலாது. தமக்கே கூட அவர்கள் உதவிக் கொள்ள மாட்டார்கள்

திருக்குர்ஆன் 7:191,192

 உங்கள் தெய்வங்களில் முதலில் படைப்பவனும், மீண்டும் அதைப் படைப்பவனும் உள்ளனரா?  என்று கேட்பீராக!  அல்லாஹ்வே முதலில் படைக்கிறான். பின்னர் மறுபடியும்  படைக்கிறான்; எவ்வாறு திசை திருப்பப்படுகிறீர்கள்?  என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 10:34

வானங்களுக்கும், பூமிக்கும் இறைவன் யார்?  என்று (முஹம்மதே!) கேட்டு,அல்லாஹ் என்று கூறுவீராக!  அவனன்றி பாதுகாவலர்களைக் கற்பனை செய்து கொண்டீர்களா? அவர்கள் தமக்கே நன்மை செய்யவும், தீமை செய்யவும் ஆற்றல் பெற மாட்டார்கள்  என்று கூறுவீராக!  குருடனும், பார்வையுள்ளவனும் சமமாவார்களா?இருள்களும், ஒளியும் சமமாகுமா?  என்று கேட்பீராக! அல்லாஹ்வுக்கு நிகரானவர்களைக் கற்பனை செய்து விட்டார்களா? அவர்கள் அல்லாஹ் படைத்ததைப் போல் படைத்து, அதன் காரணமாக படைத்தது யார்? என்று இவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டு விட்டதா? ஒவ்வொரு பொருளையும் அல்லாஹ்வே படைத்தவன்; அவன் தனித்தவன்; அடக்கியாள்பவன்  என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 13:16

வானங்களையும், பூமியையும் அல்லாஹ் தக்க காரணத்துடன் படைத்தான் என்பதை நீர் அறியவில்லையா? அவன் நாடினால் உங்களை அழித்து, புதிய படைப்பைக் கொண்டு வருவான்.

திருக்குர்ஆன் 14:19

படைப்பவன் படைக்காதவனைப் போன்றவனா? சிந்திக்க மாட்டீர்களா?

திருக்குர்ஆன் 16:17

அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர். அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள்  என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 16:20

மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைச் செவிதாழ்த்திக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.

திருக்குர்ஆன்22:73

அல்லாஹ் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அவனுடன் எந்தக் கடவுளும் இல்லை. அவ்வாறிருந்தால் தான் படைத்தவற்றுடன் ஒவ்வொரு கடவுளும் (தனியாகப்) போயிருப்பார்கள். ஒருவரையொருவர் மிகைத்திருப்பார்கள். அவர்கள் கூறுவதை விட்டும் அல்லாஹ் தூயவன்.

திருக்குர்ஆன் 23:91

அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் உள்ளது. அவன் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அதிகாரத்தில் அவனுக்கு எந்தப் பங்காளியும் இல்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் படைத்தான். அதைத் திட்டமிட்டு அமைத்தான்.

திருக்குர்ஆன் 25:2

அவனையன்றி கடவுள்களை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டனர். அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர். தமக்கே தீங்கும், நன்மையும் செய்ய அவர்களுக்கு இயலாது. வாழ்வதற்கோ, மரணிப்பதற்கோ, (பின்னர்) எழுப்புவதற்கோ அவர்கள் அதிகாரம் படைத்தோராக இல்லை.

திருக்குர்ஆன் 25:3

தான் நாடியதை உமது இறைவன் படைப்பான்; தேர்வு செய்வான். அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. அல்லாஹ் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பவற்றை விட்டும் அவன் உயர்ந்தவன்.

திருக்குர்ஆன் 28:68

அல்லாஹ்வே உங்களைப் படைத்தான். பின்னர் உங்களுக்கு உணவளித்தான். பின்னர் உங்களை மரணிக்கச் செய்வான். பிறகு உங்களை உயிர்ப்பிப்பான். உங்கள் தெய்வங்களில் இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்வோர் உள்ளனரா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்.

திருக்குர்ஆன் 30:40

நீங்கள் பார்க்கக் கூடிய தூண் இன்றி வானங்களைப் படைத்தான். உங்களைச் சாய்த்து விடாதிருக்க பூமியில் முளைகளைப் போட்டான். அதில் ஒவ்வொரு உயிரினத்தையும் பரவச் செய்தான். வானிலிருந்து தண்ணீரை இறக்கினோம். அதில் மதிப்பு மிக்க ஒவ்வொரு வகையையும் முளைக்கச் செய்தோம். இது அல்லாஹ் படைத்தது! அவனன்றி மற்றவர்கள் படைத்தவற்றை எனக்குக் காட்டுங்கள்! எனினும் அநீதி இழைத்தோர் தெளிவான வழி கேட்டில் உள்ளனர்.

திருக்குர்ஆன் 31:10,11

மனிதர்களே! உங்களுக்கு அல்லாஹ் செய்துள்ள அருளை எண்ணிப் பாருங்கள்! வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிக்கிறான். அல்லாஹ்வைத் தவிர படைப்பவன் உண்டா? அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன்  வேறு யாருமில்லை. எவ்வாறு திசை திருப்பப்படுகிறீர்கள்?

திருக்குர்ஆன் 35:3

 அல்லாஹ்வையன்றி நீங்கள் அழைக்கின்ற உங்கள் தெய்வங்கள் பூமியில் எதனைப் படைத்தன? என்று எனக்குக் காட்டுங்கள்! அல்லது வானங்களிலாவது அவர்களுக்குப் பங்கு உண்டா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்!  என்று கேட்பீராக! அல்லது அவர்களுக்கு நாம் ஒரு வேதத்தை அளித்து அதனால் (கிடைத்த) தெளிவில் அவர்கள் இருக்கிறார்களா? இல்லை. இந்த அநியாயக்காரர்களில் ஒருவருக்கொருவர் மோசடியையே வாக்களிக்கின்றனர்.

திருக்குர்ஆன் 35:40

உங்களை ஒரே ஒருவரிலிருந்து அவன் படைத்தான். பின்னர் அவரிலிருந்து அவரது ஜோடியைப் படைத்தான். கால்நடைகளில் (பலியிடத்தக்கதாக) எட்டு ஜோடிகளை உங்களுக்காக இறக்கினான். உங்கள் அன்னையரின் வயிறுகளில் ஒரு படைப்புக்குப் பின் இன்னொரு படைப்பாக மூன்று இருள்களில் உங்களைப் படைக்கிறான். அவனே அல்லாஹ். உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம் உள்ளது. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. எங்கே நீங்கள் திசை திருப்பப்படுகின்றீர்கள்?

திருக்குர்ஆன் 39:6

அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் படைத்தவன். அவன் ஒவ்வொரு பொருளுக்கும் பொறுப்பாளன்.

திருக்குர்ஆன் 39:62

அவனே உங்கள் இறைவனாகிய அல்லாஹ். ஒவ்வொரு பொருளையும் படைத்தவன். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. எவ்வாறு திசை திருப்பப்படுகின்றீர்கள்?

திருக்குர்ஆன் 40:62

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் பூமியில் எதைப் படைத்தனர் என்று எனக்குக் காட்டுங்கள்! அல்லது வானங்களில் அவர்களுக்குப் பங்கு உண்டா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதற்கு முன் சென்ற வேதத்தையோ, அறிவுச் சான்றையோ என்னிடம் கொண்டு வாருங்கள்! என்று (முஹம்மதே!) கேட்பீராக!

திருக்குர்ஆன் 46:4

காத்தல் அல்லாஹ்வின் அதிகாரம் அவனே தனது அடியார்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவன். உங்களுக்குப் பாதுகாவலர்களை அவன் அனுப்புகிறான். எனவே உங்களில் ஒருவருக்கு மரணம் ஏற்படும் போது நமது தூதர்கள் அவரைக் கைப்பற்றுகிறார்கள். அவர்கள் (அப்பணியில்) குறை வைக்க மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 6:61

மனிதனுக்கு முன்னரும், பின்னரும் தொடர்ந்து வருவோர் (வானவர்) உள்ளனர். அல்லாஹ்வின் கட்டளைப்படி அவனைக் காப்பாற்றுகின்றனர். தம்மிடம் உள்ளதை ஒரு சமுதாயம் மாற்றிக் கொள்ளாத வரை அச்சமுதாயத்தில் உள்ளதை அல்லாஹ் மாற்ற மாட்டான். ஒரு சமுதாயத்திற்கு அல்லாஹ் தீங்கை நாடும் போது அதைத் தடுப்போர் இல்லை. அவர்களுக்கு அவனன்றி உதவி செய்பவரும் இல்லை.

திருக்குர்ஆன் 13:11

நீங்கள் தாழ்ந்த நிலையில் இருந்த போது அல்லாஹ் பத்ருக் களத்தில் உங்களுக்கு உதவி செய்தான். எனவே நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வை அஞ்சுங்கள்! (விண்ணிலிருந்து) இறக்கப்பட்ட மூவாயிரம் வானவர்கள் மூலம் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவியது உங்களுக்குப் போதாதா? என்று நம்பிக்கை கொண்டோருக்கு நீர் கூறியதை நினைவூட்டுவீராக! அவ்வாறில்லை! நீங்கள் சகித்துக் கொண்டு (இறைவனை) அஞ்சும் போது திடீரென்று அவர்கள் உங்களிடம் (போரிட) வந்தால் போர்க்கலை அறிந்த ஐயாயிரம் வானவர்கள் மூலம் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவுவான்.

திருக்குர்ஆன் 3:123,124,125

அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்தால் உங்களை வெல்வோர் எவருமில்லை. அவன் உங்களுக்கு உதவ மறுத்தால் அவனுக்குப் பின் உங்களுக்கு உதவி செய்பவன் யார்?நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்.

திருக்குர்ஆன் 3:160

நம்பிக்கை கொண்டோரே! ஒரு சமுதாயத்தினர் உங்களுக்கு எதிராகத் தம் கைகளை நீட்ட திட்டமிட்ட போது, அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப் பாருங்கள்! அவர்களின் கைகளை உங்களை விட்டும் அவன் தடுத்தான். அல்லாஹ்வை அஞ்சிக் கெள்ளுங்கள்! நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்.

திருக்குர்ஆன் 5:11

தூதரே! உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டதை எடுத்துச் சொல்வீராக! (இதைச்) செய்யவில்லையானால் அவனது தூதை நீர் எடுத்துச் சொன்னவராக மாட்டீர்! அல்லாஹ் உம்மை மனிதர்களிடமிருந்து காப்பாற்றுவான். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான்.

திருக்குர்ஆன் 5:67

ஆயினும் அவரை (நூஹை) பொய்யரெனக் கருதினர். எனவே அவரையும், அவருடன் கப்பலில் இருந்தவர்களையும் காப்பாற்றினோம். நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியோரை மூழ்கடித்தோம். அவர்கள் குருட்டுக் கூட்டமாகவே இருந்தனர்.

திருக்குர்ஆன் 7:64

நீங்கள் உங்கள் இறைவனிடம் உதவி தேடிய போது உங்களுக்குப் பின்னால் அணிவகுக்கும் ஆயிரம் வானவர்களின் மூலம் நான் உங்களுக்கு உதவுபவன் என்று உங்களுக்குப் பதிலளித்தான். நற்செய்தியாகவும், உங்கள் உள்ளங்கள் இதன் மூலம் அமைதி பெற வேண்டும் என்பதற்காகவுமே இதை இறைவன் ஏற்படுத்தினான். உதவி அல்லாஹ்விடமிருந்தே உள்ளது. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன். உங்களுக்குச் சிறு தூக்கத்தை அவன் ஏற்படுத்தியதை எண்ணிப் பாருங்கள்! அது அவனிடமிருந்து கிடைத்த நிம்மதியாக இருந்தது. தண்ணீர் மூலம் உங்களைத் தூய்மைப்படுத்திடவும்,உங்களை விட்டும் ஷைத்தானின் அசுத்தத்தைப் போக்கிடவும், உங்கள் உள்ளங்களைப் பலப்படுத்தவும், உங்கள் பாதங்களை அதன் மூலம் உறுதிப்படுத்தவுமே வானத்திலிருந்து தண்ணீரை உங்கள் மீது இறக்கினான்.

திருக்குர்ஆன் 8:9,10.11

மக்கள் உங்களை வாரிச் சென்று விடுவார்களோ என அஞ்சி, குறைந்த எண்ணிக்கையில் இப்பூமியில் நீங்கள் இருந்ததை எண்ணிப் பாருங்கள்! அவன் உங்களை அரவணைத்தான். தனது உதவியால் உங்களைப் பலப்படுத்தினான். நீங்கள் நன்றி செலுத்துவதற்காக தூய்மையானவற்றை உங்களுக்கு உணவாக அளித்தான்.

திருக்குர்ஆன் 8:26

(முஹம்மதே!) அவர்கள் உமக்குத் துரோகம் செய்ய நாடினால் அல்லாஹ்வே உமக்குப் போதுமானவன். அவனே தனது உதவியின் மூலமும், நம்பிக்கை கொண்டோர் மூலமும் உம்மைப் பலப்படுத்தினான்.

திருக்குர்ஆன் 8:62

நீங்கள் இவருக்கு (முஹம்மதுக்கு) உதவி செய்யாவிட்டால் (ஏக இறைவனை) மறுப்போர் இவரை இருவரில் ஒருவராக வெளியேற்றிய போதும், அவ்விருவரும் அக்குகையில் இருந்த போதும், நீர் கவலைப்படாதீர்! அல்லாஹ் நம்முடன் இருக்கிறான் என்று அவர் தமது தோழரிடம் கூறிய போதும் அவருக்கு அல்லாஹ் உதவியிருக்கிறான். தனது அமைதியை அவர் மீது இறக்கினான். நீங்கள் பார்க்காத படைகளின் மூலம் அவரைப் பலப்படுத்தினான். (தன்னை) மறுப்போரின் கொள்கையைத் தாழ்ந்ததாக அவன் ஆக்கினான். அல்லாஹ்வின் கொள்கையே உயர்ந்தது. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

திருக்குர்ஆன் 9:40

அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் ஏற்படாது. அவன் எங்கள் அதிபதி. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும் என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 9:51

பின்னர் நமது தூதர்களையும், நம்பிக்கை கொண்டோரையும் காப்பாற்றினோம். நம்பிக்கை கொண்டோரை இவ்வாறு காப்பாற்றுவது நமது கடமை.

திருக்குர்ஆன் 10:103

நமது கட்டளை வந்த போது ஹூதையும், அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் நமது அருளால் காப்பாற்றினோம். அவர்களைக் கடுமையான வேதனையிலிருந்து காப்பாற்றினோம்.

திருக்குர்ஆன் 11:58

நமது கட்டளை வந்த போது ஸாலிஹையும், அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் நமது அருளால் அன்றைய இழிவிலிருந்து காப்பாற்றினோம். உமது இறைவன் வலிமையுள்ளவன்; மிகைத்தவன்;

திருக்குர்ஆன் 11:66

நமது கட்டளை வந்த போது, ஷுஐபையும், அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் நமது அருளால் காப்பாற்றினோம். அநீதி இழைத்தவர்களைப் பெரும் சப்தம் தாக்கியது. காலையில் தமது வீடுகளில் வீழ்ந்து கிடந்தனர்.

திருக்குர்ஆன் 11:94

நீங்கள் (ஏதேனும்) செய்வதாக இருந்தால் இவரைத் தீயில் பொசுக்கி உங்கள் கடவுள்களுக்கு உதவுங்கள்! என்றனர். நெருப்பே! இப்ராஹீமின் மீது குளிராகவும்,பாதுகாப்பாகவும் ஆகி விடு என்று கூறினோம். அவருக்கு எதிராக அவர்கள் சூழ்ச்சி செய்தனர். அவர்களை நஷ்டமடைந்தோராக ஆக்கினோம். அவரையும், லூத்தையும் காப்பாற்றி நாம் அகிலத்தாருக்குப் பாக்கியமாக ஆக்கிய பூமியில் (சேர்த்தோம்).

திருக்குர்ஆன் 21:68,69,70,71

உமது கைத்தடியால் கடலில் அடிப்பீராக என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது பிளந்தது. ஒவ்வொரு பிளவும் பெரும் மலை போன்று ஆனது. அங்கே மற்றவர்களையும் நெருங்கச் செய்தோம். மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் காப்பாற்றினோம். பின்னர் மற்றவர்களை மூழ்கடித்தோம்.

திருக்குர்ஆன் 26:63,64,65,66

அழித்தல் அல்லாஹ்வின் அதிகாரம்

அல்லாஹ்வின் விருப்பமின்றி எவரும் மரணிக்க முடியாது. இது நேரம் நிர்ணயிக்கப்பட்ட விதி. இவ்வுலகக் கூலியை விரும்புவோருக்கு அதை வழங்குவோம். மறுமையின் கூலியை விரும்புவோருக்கு அதை வழங்குவோம். நன்றியுடன் நடப்போருக்கு கூலி வழங்குவோம்.

திருக்குர்ஆன் 3:145

நம்பிக்கை கொண்டோரே! பயணம் மேற்கொண்ட, அல்லது போருக்குச் சென்ற தம் சகோதரர்களைக் குறித்து  அவர்கள் நம்முடன் இருந்திருந்தால் இறந்திருக்க மாட்டார்கள். கொல்லப்பட்டிருக்கவும் மாட்டார்கள்  என்று கூறிய (ஏக இறைவனை) மறுத்தோரைப் போல் நீங்கள் ஆகி விடாதீர்கள்! அவர்களின் உள்ளங்களில் கவலையை ஏற்படுத்தவே அல்லாஹ் இதைச் செய்தான். அல்லாஹ்வே உயிர்ப்பிக்கிறான். மரணிக்கச் செய்கிறான். நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன்.

திருக்குர்ஆன் 3:156

நீங்கள் எங்கே இருந்த போதும் மரணம் உங்களை அடையும். உறுதியான கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே. அவர்களுக்கு ஏதேனும் நன்மை ஏற்பட்டால்  இது அல்லாஹ்விடமிருந்து வந்தது  என்று கூறுகின்றனர். அவர்களுக்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டால்  இது உம்மால் தான் ஏற்பட்டது  என்று கூறுகின்றனர்.  அனைத்தும் அல்லாஹ்விடமிருந்தே  என்று (முஹம்மதே!) கூறுவீராக! இந்தச் சமுதாயத்திற்கு என்ன நேர்ந்தது? எந்தச் செய்தியையும் புரிந்து கொள்ள முயற்சிக்காதிருக்கிறார்களே?

திருக்குர்ஆன் 4:78

 மர்யமுடைய மகன் மஸீஹ் தான் அல்லாஹ்  என்று கூறியோர் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர்.  மர்யமின் மகன் மஸீஹையும், அவரது தாயாரையும், பூமியில் உள்ள அனைவரையும் அல்லாஹ் அழிக்க நாடினால் அவனிடமிருந்து (அதைத் தடுக்க) சிறிதளவேனும் சக்தி பெற்றவர் யார்?  என்று நீர் கேட்பீராக! வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவைகளின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைப்பான். அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.

திருக்குர்ஆன் 5:17

அவனே தனது அடியார்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவன். உங்களுக்குப் பாதுகாவலர்களை அவன் அனுப்புகிறான். எனவே உங்களில் ஒருவருக்கு மரணம் ஏற்படும் போது நமது தூதர்கள் அவரைக் கைப்பற்றுகிறார்கள். அவர்கள் (அப்பணியில்) குறை வைக்க மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 6:61

 அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கே தீங்கு செய்யவோ நன்மை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை  என்று (முஹம்மதே!) கூறுவீராக! ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு காலக் கெடு உள்ளது. அவர்களின் காலக்கெடு வரும் போது சிறிது நேரம் அவர்கள் பிந்தவும் மாட்டார்கள். முந்தவும் மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 10:49

எந்த ஊரையும் அதற்கென்று உள்ள கால நிர்ணயத்தின் படியே அழித்துள்ளோம். எந்தச் சமுதாயமும் தனது காலக் கெடுவை முந்தாது; பிந்தாது.

திருக்குர்ஆன் 15:4,5

மனிதர்களுடைய அநீதியின் காரணமாக அவர்களை அல்லாஹ் தண்டிப்பதாக இருந்தால் பூமியில் எந்த உயிரினத்தையும் அவன் விட்டு வைக்க மாட்டான். மாறாக குறிப்பிட்ட காலக்கெடு வரை அவர்களைப் பிற்படுத்தியிருக்கிறான். அவர்களின் கெடு வந்ததும் சிறிது நேரம் பிந்தவும் மாட்டார்கள். முந்தவும் மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 16:61

அல்லாஹ்வே உங்களைப் படைத்தான். பின்னர் உங்களுக்கு உணவளித்தான். பின்னர் உங்களை மரணிக்கச் செய்வான். பிறகு உங்களை உயிர்ப்பிப்பான். உங்கள் தெய்வங்களில் இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்வோர் உள்ளனரா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்.

திருக்குர்ஆன் 30:40

உங்களுக்கென நியமிக்கப்பட்ட மரணத்திற்குரிய வானவர் உங்களைக் கைப்பற்றுவார். பின்னர் உங்கள் இறைவனிடம் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்  என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 32:11

நாமே உயிர்ப்பிக்கிறோம். மரணிக்கச் செய்கிறோம். நம்மிடமே மீளுதல் உண்டு.

திருக்குர்ஆன் 50:43

அவனே மரணிக்கச் செய்கிறான். உயிர்ப்பிக்கவும் செய்கிறான்.

திருக்குர்ஆன் 53:44

உங்களுக்கிடையே மரணத்தை நாமே நிர்ணயித்தோம். உங்களைப் போன்றோரை நாம் மாற்றியமைக்கவும், நீங்கள் அறியாத வகையில் உங்களைப் படைக்கவும் நாம் இயலாதோர் அல்லர்.

திருக்குர்ஆன் 56:60,61

அறிவை வழங்குவது அல்லாஹ்வின் அதிகாரம்

தான் நாடியோருக்கு ஞானத்தை வழங்குகிறான். ஞானம் வழங்கப்பட்டவர் ஏராளமான நன்மைகள் வழங்கப்பட்டு விட்டார். அறிவுடையோரைத் தவிர (யாரும்) சிந்திப்பதில்லை.

திருக்குர்ஆன் 2:269

(முஹம்மதே!) அல்லாஹ்வின் அருளும், அன்பும் உம் மீது இல்லாதிருந்தால் அவர்களில் ஒரு பகுதியினர் உம்மை வழி கெடுக்க முயன்றிருப்பார்கள். அவர்கள் தம்மையே வழி கெடுத்துக் கொள்கின்றனர். உமக்கு எந்தத் தீங்கும் அவர்களால் தர முடியாது. உமக்கு வேதத்தையும், ஞானத்தையும் அல்லாஹ் அருளினான். நீர் அறியாமல் இருந்ததை உமக்குக் கற்றுத் தந்தான். உம் மீது அல்லாஹ்வின் அருள் மகத்தானதாக உள்ளது.

திருக்குர்ஆன் 4:113

நீங்கள் எதையும் அறியாதிருந்த நிலையில் உங்கள் அன்னையரின் வயிறுகளிலிருந்து அல்லாஹ் உங்களை வெளியேற்றினான். நீங்கள் நன்றி செலுத்துவதற்காக செவியையும்,பார்வைகளையும், உள்ளங்களையும் உங்களுக்கு ஏற்படுத்தினான்.

திருக்குர்ஆன் 16:78

(முஹம்மதே!) உயிரைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்.  உயிர் என்பது எனது இறைவனின் கட்டளைப்படி உள்ளது. நீங்கள் குறைவாகவே கல்வி கொடுக்கப்பட்டுள்ளீர்கள்  என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 17:85

உண்மையான அரசனாகிய அல்லாஹ் உயர்ந்து விட்டான். (முஹம்மதே!) அவனது தூதுச் செய்தி உமக்கு முழுமையாகக் கூறப்படுவதற்கு முன் குர்ஆன் விஷயத்தில் அவசரப்படாதீர்!  என் இறைவா! எனக்குக் கல்வியை அதிகப்படுத்து  எனக் கூறுவீராக!

திருக்குர்ஆன் 20:114

(இது பற்றிய) ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது. நான் எதைக் கொடுத்து அனுப்பப்பட்டுள்ளேனோ அதை உங்களுக்கு எடுத்துச் சொல்கிறேன். எனினும் அறியாத கூட்டமாகவே உங்களை நான் கருதுகிறேன்  என்று அவர் (ஸாலிஹ்) கூறினார்.

திருக்குர்ஆன் 46:23

உங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்குக் கற்றுக் கொடுக்கிறீர்களா? வானங்களிலும்,பூமியிலும் உள்ளதை அல்லாஹ் அறிவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன் என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 49:16,

மனிதனைப் படைத்தான். விளக்கும் திறனை அவனுக்குக் கற்றுக் கொடுத்தான்.

திருக்குர்ஆன் 55:3,4

அவனே எழுது கோலால் கற்றுத் தந்தான். அறியாதவற்றை மனிதனுக்குக் கற்றுத் தந்தான்.

திருக்குர்ஆன் 96:4,5

குழந்தையைத் தருவது அல்லாஹ்வின் அதிகாரம்

தான் விரும்பியவாறு அவனே உங்களுக்குக் கருவறைகளில் வடிவம் தருகிறான். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் மிகைத்தவன்;ஞானமிக்கவன்.

திருக்குர்ஆன் 3:6

அவரது மனைவியும் நின்று கொண்டிருந்தார். அவர் சிரித்தார். அவருக்கு இஸ்ஹாக் பற்றியும், இஸ்ஹாக்குக்குப் பின் யஃகூப் பற்றியும் நற்செய்தி கூறினோம்.  இது என்ன அதிசயம்! நான் கிழவியாகவும், இதோ எனது கணவர் கிழவராகவும் இருக்கும் போது பிள்ளை பெறுவேனா? இது வியப்பான செய்தி தான்  என்று அவர் கூறினார். அல்லாஹ்வின் கட்டளை குறித்தா ஆச்சரியப்படுகிறீர்? அல்லாஹ்வின் அருளும்,பாக்கியங்களும் (இப்ராஹீமின்) இக்குடும்பத்தாராகிய உங்களுக்கு ஏற்படட்டும். அவன் புகழுக்குரியவன்; மகத்துவமிக்கவன்  என்று அவர்கள் (வானவர்கள்) கூறினர்.

திருக்குர்ஆன் 11:71,72,73

ஒவ்வொரு பெண்ணும் (கருவறையில்) சுமப்பதையும், கருவறைகள் சுருங்குவதையும்,விரிவடைவதையும் அல்லாஹ் அறிகிறான். ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் நிர்ணயிக்கப்பட்ட அளவு உள்ளது.

திருக்குர்ஆன் 13:8

இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும் முதுமையில் எனக்கு வழங்கிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். என் இறைவன் பிரார்த்தனையை ஏற்பவன் (என்று இப்ராஹீம் நபி கூறினார்.)

திருக்குர்ஆன் 14:39

உங்களிலிருந்தே அல்லாஹ் உங்களுக்கு மனைவியரை ஏற்படுத்தினான். உங்கள் மனைவியரிலிருந்து பிள்ளைகளையும், பேரக் குழந்தைகளையும் ஏற்படுத்தினான். தூய்மையானவற்றிலிருந்து உங்களுக்கு உணவளித்தான். பொய்யில் நம்பிக்கை கொண்டு அல்லாஹ்வின் அருட்கொடைக்கு நன்றி மறக்கின்றார்களா?

திருக்குர்ஆன் 16:72

நீங்கள் எதையும் அறியாதிருந்த நிலையில் உங்கள் அன்னையரின் வயிறுகளிலிருந்து அல்லாஹ் உங்களை வெளியேற்றினான். நீங்கள் நன்றி செலுத்துவதற்காக செவியையும்,பார்வைகளையும், உள்ளங்களையும் உங்களுக்கு ஏற்படுத்தினான்.

திருக்குர்ஆன் 16:78

அவர் (ஸகரிய்யா) தமது இறைவனை இரகசியமாக அழைத்துப் பிரார்த்தித்தார்.  என் இறைவா! என் எலும்பு பலவீனமடைந்து விட்டது. தலையும் நரையால் மின்னுகிறது. என் இறைவா! உன்னிடம் பிரார்த்தித்ததில் நான் துர்ப்பாக்கியசாலியாக இருந்ததில்லை. எனக்குப் பின் உறவினர்கள் குறித்து நான் அஞ்சுகிறேன். என் மனைவியும் பிள்ளைப்பேறு அற்றவளாக இருக்கிறார். எனவே ஒரு பொறுப்பாளரை நீ எனக்கு வழங்குவாயாக! அவர் எனக்கும், யஃகூபின் குடும்பத்தாருக்கும் வாரிசாவார். என் இறைவா! அவரை (உன்னால்) பொருந்திக் கொள்ளப்பட்டவராக ஆக்குவாயாக!  என்றார்.

திருக்குர்ஆன் 19:3-6

என் இறைவா! என்னைத் தனியாளாக விட்டு விடாதே! நீ மிகச் சிறந்த உரிமையாளன்  என்று ஸக்கரிய்யா தமது இறைவனை அழைத்த போது, அவருக்காக (அவரது பிரார்த்தனையை) ஏற்றோம். அவருக்கு யஹ்யாவை அன்பளிப்பாக அளித்தோம். அவரது மனைவியை அவருக்காக (குழந்தை பெறும்) தகுதியுடையவராக ஆக்கினோம். அவர்கள் நன்மைகளை நோக்கி விரைந்து செல்வோராகவும், ஆர்வத்துடனும் அச்சத்துடனும் நம்மிடம் பிரார்த்திப்போராகவும் இருந்தனர். நமக்குப் பணிவோராகவும் இருந்தனர்.

திருக்குர்ஆன் 21:89,90

மனிதர்களே! மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால் உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறோம். உங்களை மண்ணாலும், பின்னர் விந்தாலும், பின்னர் கருவுற்ற சினை முட்டையாலும், பின்னர் முழுமைப்படுத்தப்பட்டதும் முழுமைப்படுத்தப்படாததுமான தசைக்கட்டியாலும் படைத்தோம். நாம் நாடியதைக் கருவறைகளில் குறிப்பிட்ட காலம் வரை நிலை பெறச் செய்கிறோம். பின்னர் உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்னர் உங்கள் பருவத்தை அடைகின்றீர்கள். உங்களில் கைப்பற்றப்படுவோரும் உள்ளனர். அறிந்த பின் எதையும் அறியாமல் போவதற்காக தள்ளாத வயது வரை கொண்டு செல்லப்படுவோரும் உங்களில் உள்ளனர். பூமியை வறண்டதாகக் காண்கிறீர். அதன் மீது நாம் தண்ணீரை இறக்கும் போது அது செழித்து வளர்ந்து அழகான ஒவ்வொரு வகையையும் முளைக்கச் செய்கிறது.

திருக்குர்ஆன் 22:5

அல்லாஹ்வே இப்பூமியை உங்களுக்கு நிலையானதாகவும், வானத்தை முகடாகவும் அமைத்தான். உங்களுக்கு வடிவம் தந்தான். உங்கள் வடிவங்களை அழகுற அமைத்தான். தூய்மையானவற்றை உங்களுக்கு வழங்கினான். அவனே உங்கள் இறைவனாகிய அல்லாஹ். அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ் பாக்கியம் பொருந்தியவன்.

திருக்குர்ஆன் 40:64

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண்(குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண்(குழந்தை)களை வழங்குகிறான். அல்லது ஆண்களையும்,பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன்; ஆற்றலுடையவன்.

திருக்குர்ஆன் 42:49,50

வானங்களையும், பூமியையும் தக்க காரணத்துடன் அவன் படைத்தான். உங்களை வடிவமைத்து உங்கள் வடிவங்களை அவன் அழகுபடுத்தினான். அவனிடமே மீளுதல் உண்டு.

திருக்குர்ஆன் 64:3

மனிதனே! மரியாதைக்குரிய உனது இறைவன் விஷயத்தில் உன்னை ஏமாற்றியது எது?அவனே உன்னைப் படைத்து, உன்னைச் சீராக்கி, உன்னைச் செம்மைப்படுத்தினான். அவன் விரும்பிய வடிவத்தில் உன்னை அமைத்தான்.

திருக்குர்ஆன் 82:6,7,8

இப்ராஹீமின் விருந்தினர் பற்றியும் அவர்களுக்குக் கூறுவீராக! அவர்கள், அவரிடம் சென்று ஸலாம் கூறினர். அதற்கு அவர்  நாம் உங்களைப் (பார்த்துப்) பயப்படுகிறோம் என்றார்.  நீர் பயப்படாதீர்! அறிவுடைய ஆண் குழந்தை பற்றி உமக்கு நாங்கள் நற்செய்தி கூறுகிறோம்  என்று அவர்கள் கூறினர்.  எனக்கு முதுமை ஏற்பட்ட நிலையில் எனக்கு நற்செய்தி கூறுகிறீர்களா? எதனடிப்படையில் நற்செய்தி கூறுகிறீர்கள்?  என்று அவர் கேட்டார்.  உண்மையின் அடிப்படையிலேயே உமக்கு நற்செய்தி கூறுகிறோம். நம்பிக்கை இழந்தவராக நீர் ஆகி விடாதீர்!  என்று அவர்கள் கூறினர். வழி கெட்டவர்களைத் தவிர வேறு யார் தமது இறைவனின் அருளில் நம்பிக்கை இழக்க முடியும்?  என்று அவர் கேட்டார்.

திருக்குர்ஆன் 15:51-56

என் இறைவா! எனக்கு நல்லொழுக்கம் உடையவரை (வாரிசாகத்) தருவாயாக! (என்று இப்ராஹீம் கேட்டார்.) அவருக்கு சகிப்புத் தன்மைமிக்க ஆண் குழந்தை பற்றி நற்செய்தி கூறினோம்.

திருக்குர்ஆன் 37:100,101

அவர்களைப் பற்றிப் பயந்தார்.  பயப்படாதீர்!  என்று அவர்கள் கூறினர். அறிவாளியான ஆண் குழந்தை பற்றி அவருக்கு நற்செய்தி கூறினர். உடனே அவரது மனைவி சப்தமிட்டவராக வந்து முகத்தில் அடித்துக் கொண்டு,  நான் மலட்டுக் கிழவியாயிற்றே  என்றார். அதற்கவர்கள்  அப்படித் தான் உமது இறைவன் கூறினான். அவன் ஞானமிக்கவன். அறிந்தவன்  என்றனர்.

திருக்குர்ஆன் 51:28-30

ஆட்சி அல்லாஹ்வின் அதிகாரம்

 தாலூத் என்பவரை அல்லாஹ் உங்கள் ஆட்சியாளராக நியமித்துள்ளான்  என்று அவர்களின் நபி அவர்களிடம் கூறினார்.  எங்கள் மீது அவருக்கு எப்படி ஆட்சியதிகாரம் இருக்க முடியும்? அவரை விட ஆட்சிக்கு நாங்களே தகுதியானவர்கள். அவருக்குப் பொருள் வசதியும் வழங்கப்படவில்லை  என்று அவர்கள் கூறினர்.  உங்களை விட அவரை அல்லாஹ் தேர்வு செய்து விட்டான். அவருக்கு கல்வி மற்றும் உடலை (வலுவை) அதிகமாக வழங்கியிருக்கிறான். தான் நாடியோருக்கு அல்லாஹ் அதிகாரத்தை வழங்குவான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்  என்று அவர் கூறினார்.

திருக்குர்ஆன் 2:247

அல்லாஹ்வே! ஆட்சியின் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொள்கிறாய். நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய். நாடியோரை இழிவு படுத்துகிறாய். நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்  என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 3:26

என் இறைவா! நீ எனக்கு அதிகாரத்தில் (சிறிது) வழங்கியிருக்கிறாய். (பல் வேறு) செய்திகளின் விளக்கத்தை எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறாய்! வானங்களையும்,பூமியையும் படைத்தவனே! நீயே இவ்வுலகிலும், மறுமையிலும் எனது பாதுகாவலன். என்னை முஸ்லிமாகக் கைப்பற்றுவாயாக! நல்லோர்களில் என்னைச் சேர்ப்பாயாக!  (என்று யூஸுஃப் கூறினார்)

திருக்குர்ஆன் 12:101

என் இறைவா! என்னை மன்னித்து விடு! எனக்குப் பின் யாருக்கும் கிடைக்காத ஆட்சியை எனக்கு வழங்கு! நீயே வள்ளல்  என (ஸுலைமான்) கூறினார்.

திருக்குர்ஆன் 38:35

செல்வம் அல்லாஹ்வின் அதிகாரம்

ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!

திருக்குர்ஆன் 2:155

இரவைப் பகலில் நுழைக்கிறாய்! பகலை இரவில் நுழைக்கிறாய்! உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகிறாய். உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துகிறாய். நீ நாடியோருக்குக் கணக்கின்றி வழங்குகிறாய்  (என்றும் கூறுவீராக!)

திருக்குர்ஆன் 3:27

வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? செவிப் புலனையும், பார்வைகளையும் தன் கைவசம் வைத்திருப்பவன் யார்? உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் வெளிப்படுத்துபவன் யார்?காரியங்களை நிர்வகிப்பவன் யார்?  என்று கேட்பீராக!  அல்லாஹ்  என்று கூறுவார்கள்.  அஞ்ச மாட்டீர்களா  என்று நீர் கேட்பீராக!

திருக்குர்ஆன் 10:31

பூமியில் உள்ள உயிரினம் எதுவாக இருந்தாலும் அவற்றுக்கு உணவளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகும். அவற்றின் வசிப்பிடத்தையும், அவை சென்றடையும் இடத்தையும் அவன் அறிவான். ஒவ்வொன்றும் தெளிவான பதிவேட்டில் உள்ளது.

திருக்குர்ஆன் 11:6

தான் நாடியோருக்கு அல்லாஹ் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அவர்கள் இவ்வுலக வாழ்க்கையின் மூலம் மகிழ்ச்சியடைகின்றனர். மறுமையுடன் ஒப்பிடும் போது இவ்வுலக வாழ்க்கை அற்ப சுகம் தவிர வேறில்லை.

திருக்குர்ஆன் 13:26

பூமியை விரித்தோம். அதில் முளைகளை நட்டினோம். அதில் எடை வரையறுக்கப்பட்ட ஒவ்வொரு பொருளையும் முளைக்கச் செய்தோம். உங்களுக்கும், நீங்கள் யாருக்கு உணவளிப்போராக இல்லையோ அவர்களுக்கும் அதில் வாழ்வதற்குத் தேவையானவற்றை அமைத்தோம். எந்தப் பொருளாயினும் அதன் கருவூலங்கள் நம்மிடமே உள்ளன. நிர்ணயிக்கப்பட்ட அளவிலேயே அதை இறக்குகிறோம்.

திருக்குர்ஆன் 15:19-21

வானங்களிலும், பூமியிலும் இவர்களுக்கான உணவில் சிறிதளவும் கைவசம் வைத்திராதவர்களையும், சக்தியற்றோரையும் அவர்கள் அல்லாஹ்வையன்றி வணங்குகின்றனர்.

திருக்குர்ஆன் 16:73

தான் நாடியோருக்கு உமது இறைவன் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அவன் தனது அடியார்களை நன்கறிந்தவனாகவும்,பார்ப்பவனாகவும் இருக்கிறான். வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும்.

திருக்குர்ஆன் 17:30,31

(முஹம்மதே!) தொழுமாறு உமது குடும்பத்தினரை ஏவுவீராக! அதில் (ஏற்படும் சிரமங்களை) சகித்துக் கொள்வீராக! உம்மிடம் நாம் செல்வத்தைக் கேட்கவில்லை. நாமே உமக்குச் செல்வத்தை அளிக்கிறோம். (இறை) அச்சத்திற்கே (நல்ல) முடிவு உண்டு.

திருக்குர்ஆன் 20:132

அல்லாஹ்வையன்றி நீங்கள் கற்பனையாகப் படைத்த சிலைகளையே வணங்குகிறீர்கள். அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை வணங்குகிறீர்களோ அவர்கள் உங்களுக்குச் செல்வம் வழங்க இயலாது. எனவே அல்லாஹ்விடமே செல்வத்தைத் தேடுங்கள்! அவனையே வணங்குங்கள்! அவனுக்கு நன்றி செலுத்துங்கள்! அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!

திருக்குர்ஆன் 29:17

எத்தனையோ உயிரினங்கள் தமது உணவைச் சுமந்து செல்வதில்லை. அல்லாஹ்வே அவற்றுக்கும், உங்களுக்கும் உணவளிக்கிறான். அவன் செவியுறுபவன்; அறிந்தவன்.

திருக்குர்ஆன் 29:60

அல்லாஹ் தனது அடியார்களில், தான் நாடியோருக்குச் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். தான் நாடியோருக்கு அளவுடனும் வழங்குகிறான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.

திருக்குர்ஆன் 29:62

தான் நாடியோருக்குச் செல்வத்தை அல்லாஹ் தாராளமாகவும், குறைத்தும் வழங்குகிறான் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்துக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

திருக்குர்ஆன் 30:37

என் இறைவன், தான் நாடியோருக்குச் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள் என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 34:36

எனது இறைவன் தனது அடியார்களில் தான் நாடியோருக்குச் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். தான் நாடியோருக்கு அதைக் குறைத்தும் கொடுக்கிறான். நீங்கள் எப்பொருளை (நல் வழியில்) செலவிட்டாலும் அவன் அதற்கான பிரதிபலனை அளிப்பான். அவன் வழங்குவோரில் சிறந்தவன் என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 34:39

மனிதர்களே! உங்களுக்கு அல்லாஹ் செய்துள்ள அருளை எண்ணிப் பாருங்கள்! வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிக்கிறான். அல்லாஹ்வைத் தவிர படைப்பவன் உண்டா? அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. எவ்வாறு திசை திருப்பப்படுகிறீர்கள்?

திருக்குர்ஆன் 35:3

மனிதர்களே! நீங்கள் அல்லாஹ்விடம் தேவையுடையவர்கள். அல்லாஹ்வே தேவையற்றவன்; புகழுக்குரியவன்.

திருக்குர்ஆன் 35:15

தான் நாடியோருக்கு செல்வத்தைத் தாராளமாகவும், குறைத்தும் அல்லாஹ் வழங்குகிறான் என்பதை அவர்கள் அறியவில்லையா? நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

திருக்குர்ஆன் 39:52

வானங்கள் மற்றும் பூமியின் திறவு கோல்கள் அவனுக்கே உரியன. தான் நாடியோருக்குச் செல்வத்தை அவன் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அவன் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.

திருக்குர்ஆன் 42:12

அல்லாஹ் தனது அடியார்களிடம் மென்மையாக நடப்பவன். தான் நாடியோருக்குச் செல்வத்தை வழங்குகிறான். அவன் வலிமையானவன்; மிகைத்தவன்.

திருக்குர்ஆன் 42:19

அல்லாஹ் தனது அடியார்களுக்குச் செல்வத்தைத் தாராளமாக வழங்கினால் பூமியில் வரம்பு மீறுகின்றனர். எனினும் தான் நாடியதை அளவோடு அவன் இறக்குகிறான். அவன் தனது அடியார்களை நன்கறிந்தவன்; பார்ப்பவன்.

திருக்குர்ஆன் 42:27

நான் அவர்களிடம் செல்வத்தை நாடவில்லை. அவர்கள் எனக்கு உணவளிப்பதையும் நான் நாடவில்லை. அல்லாஹ்வே (நானே) செல்வம் அளிப்பவன்; உறுதியானவன்; ஆற்றல் உடையவன்.

திருக்குர்ஆன் 51:57,58

அவர் எண்ணிப் பார்த்திராத வகையில் அவருக்கு உணவளிப்பான். அல்லாஹ்வையே சார்ந்திருப்போருக்கு அவன் போதுமானவன். அல்லாஹ் தனது காரியத்தை அடைந்து கொள்பவன். ஒவ்வொரு பொருளுக்கும் அல்லாஹ் ஓர் அளவை நிர்ணயம் செய்துள்ளான்.

திருக்குர்ஆன் 65:3

அவன் தனது உணவை நிறுத்தி விட்டால் உங்களுக்கு உணவளிப்பவன் உண்டா? மாறாக வரம்பு மீறுவதிலும், வெறுப்பிலுமே அவர்கள் மூழ்கி விட்டனர்.

திருக்குர்ஆன் 67:21

மனிதனை அவனது இறைவன் மரியாதையுடன் வாழச் செய்து இன்பத்தையும் வழங்கிச் சோதிக்கும் போது  என் இறைவன் என்னைக் கண்ணியமாக நடத்தினான் என்று கூறுகிறான். அவனது செல்வத்தை அளவுடன் வழங்கி சோதிக்கும் போது  என் இறைவன் என்னை அவமானப்படுத்தி விட்டான்  எனக் கூறுகிறான்.

திருக்குர்ஆன் 89:15,16

மழை அல்லாஹ்வின் அதிகாரம்

அவனே பூமியை உங்களுக்கு விரிப்பாகவும், வானத்தை முகடாகவும் அமைத்தான். வானிலிருந்து தண்ணீரையும் இறக்கினான். அதன் மூலம் கனிகளை உங்களுக்கு உணவாக (பூமியிலிருந்து) வெளிப்படுத்தினான். எனவே அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கு நிகராக எவரையும் கற்பனை செய்யாதீர்கள்!

திருக்குர்ஆன் 2:22

வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? செவிப் புலனையும், பார்வைகளையும் தன் கைவசம் வைத்திருப்பவன் யார்? உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் வெளிப்படுத்துபவன் யார்?காரியங்களை நிர்வகிப்பவன் யார்?  என்று கேட்பீராக!  அல்லாஹ்  என்று கூறுவார்கள்.  அஞ்ச மாட்டீர்களா  என்று நீர் கேட்பீராக!

திருக்குர்ஆன் 10:31

என் சமுதாயமே! உங்கள் இறைவனிடம் பாவ மன்னிப்புத் தேடுங்கள்! அவனை நோக்கித் திரும்புங்கள்! அவன் வானத்தை உங்களுக்கு தொடர்ந்து பொழியச் செய்வான். வலிமைக்கு மேல் வலிமையை உங்களுக்கு அதிகமாக்குவான். குற்றவாளிகளாகி புறக்கணிக்காதீர்கள்!  (என ஹூத் கூறினார்)

திருக்குர்ஆன் 11:52

சூல் கொண்ட காற்றுகளை அனுப்புகிறோம். அப்போது வானிலிருந்து தண்ணீரை இறக்கி உங்களுக்கு அதைப் புகட்டுகிறோம். அதை (வானில்) நீங்கள் சேமித்து வைப்போராக இல்லை.

திருக்குர்ஆன் 15:22

வானத்திலிருந்து அளவோடு தண்ணீரை இறக்கினோம். அதைப் பூமியில் தங்க வைத்தோம். அதைப் போக்கி விடுவதற்கும் நாம் ஆற்றலுடையவர்கள்.

திருக்குர்ஆன் 23:18

அல்லாஹ் மேகங்களை இழுத்து அவற்றை ஒன்றாக்குவதையும், பின்னர் அதை அடுக்கடுக்காக அமைப்பதையும் நீர் அறியவில்லையா? அதன் மத்தியில் மழை வெளிப்படுவதைக் காண்கிறீர்! வானத்திலிருந்து அதில் உள்ள (பனி) மலைகளிலிருந்து ஆலங்கட்டியையும் இறக்குகிறான். தான் நாடியோருக்கு அதைப் பெறச் செய்கிறான். தான் நாடியோரை விட்டும் திருப்பி விடுகிறான். அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்கப் பார்க்கிறது.

திருக்குர்ஆன் 24:43

(நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது) வானங்களையும்,பூமியையும் படைத்து வானத்திலிருந்து தண்ணீரை உங்களுக்காக இறக்கி வைத்தவனா?அதன் மூலம் செழிப்பான தோட்டங்களை முளைக்கச் செய்கிறோம். அதில் ஒரு மரத்தைக் கூட உங்களால் முளைக்கச் செய்ய இயலாது. அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? இல்லை. அவர்கள் (இறைவனுக்கு மற்றவர்களை) சமமாக்கும் கூட்டமாகவே உள்ளனர்.

திருக்குர்ஆன் 27:60

வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி பூமி செத்த பின் அதன் மூலம் அதற்கு உயிரூட்டுபவன் யார்?  என்று அவர்களிடம் நீர் கேட்டால்  அல்லாஹ்  என்றே கூறுவார்கள்.  அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்  என்று கூறுவீராக! மாறாக அவர்களில் அதிகமானோர் விளங்கிக் கொள்வதில்லை.

திருக்குர்ஆன் 29:63

அல்லாஹ்வே காற்றை அனுப்புகிறான். அது மேகத்தைக் கலைக்கின்றது. அவன் விரும்பியவாறு அதை வானில் பரவச் செய்கிறான். அதைப் பல துண்டுகளாக ஆக்குகிறான். அதற்கிடையில் மழை வெளியேறுவதைக் காண்கிறீர். தனது அடியார்களில் தான் நாடியோருக்கு அதைச் சுவைக்கச் செய்யும் போது அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.

திருக்குர்ஆன் 30:48

வறண்ட பூமியை நோக்கித் தண்ணீரை நாமே ஓட்டிச் செல்கிறோம்  என்பதை அவர்கள் காணவில்லையா? அதன் மூலம் பயிர்களை வெளிப்படுத்துகிறோம். அதிலிருந்து அவர்களும், அவர்களது கால்நடைகளும் சாப்பிடுகின்றனர். அவர்கள் சிந்திக்க மாட்டார்களா?

திருக்குர்ஆன் 32:27

நீங்கள் அருந்தும் தண்ணீரைப் பற்றிச் சிந்தித்தீர்களா? மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்கினோமா? நாம் நினைத்திருந்தால் அதை உப்பு நீராக்கியிருப்போம். நன்றி செலுத்த மாட்டீர்களா?

திருக்குர்ஆன் 56:68-70

உங்கள் தண்ணீர் வற்றி விட்டால் ஊறி வரும் நீரை உங்களுக்குக் கொண்டு வருபவன் யார் என்பதற்குப் பதில் சொல்லுங்கள்!  எனக் கேட்பீராக!

திருக்குர்ஆன் 67:30

மனிதன் தனது உணவைக் கவனிக்கட்டும்! நாமே தண்ணீரை (வானிலிருந்து) ஊற்றினோம். பின்னர் பூமியை முறையாகப் பிளந்தோம். உங்களுக்கும், உங்கள் கால்நடைகளுக்கும் பயன்படுவதற்காக தானியத்தையும்,  திராட்சையையும், புற்பூண்டையும், ஒலிவ மரத்தையும், பேரீச்சை மரத்தையும், அடர்ந்த தோப்புகளையும்,  கனிகளையும், தீவனங்களையும் அதில் முளைக்கச் செய்தோம்.

திருக்குர்ஆன் 80:24-32

நோய் நிவாரணம் அல்லாஹ்வின் அதிகாரம்

 எனக்குத் துன்பம் நேர்ந்து விட்டது. நீ கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன்  என அய்யூப் தமது இறைவனை அழைத்த போது, அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். அவருக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கினோம். அவரது குடும்பத்தாரையும் அவர்களுடன் அவர்களைப் போன்றோரையும் நம் அருளாக அவருக்கு வழங்கினோம். வணங்குவோருக்கு இது அறிவுரை.

திருக்குர்ஆன் 21:83,84

அவனே என்னைப் படைத்தான். அவனே எனக்கு நேர் வழி காட்டுகிறான். அவனே எனக்கு உணவளித்து (தண்ணீர்) பருகச் செய்கிறான். நான் நோயுறும் போது அவனே எனக்கு நிவாரணம் தருகிறான். அவனே என்னை மரணிக்கச் செய்கிறான். பின்னர் எனக்கு உயிர் கொடுப்பான்.

திருக்குர்ஆன் 26:78-81

இந்தப் பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது.

திருக்குர்ஆன் 57:22

கால் நடைகளைக் கடவுளாக்கக் கூடாது

மூஸாவுக்கு நாற்பது இரவுகளை நாம் வாக்களித்ததையும் எண்ணிப் பாருங்கள்! அவருக்குப் பின் நீங்கள் அநீதி இழைத்துக் காளைக் கன்றை (கடவுளாக) கற்பனை செய்தீர்கள்.

திருக்குர்ஆன் 2:51

என் சமுதாயமே! காளைக் கன்றைக் (கடவுளாக) கற்பனை செய்ததன் மூலம் உங்களுக்கே தீங்கு இழைத்து விட்டீர்கள். எனவே உங்களைப் படைத்தவனிடம் மன்னிப்புக் கேளுங்கள்! உங்களையே கொன்று விடுங்கள்! இதுவே உங்களைப் படைத்தவனிடம் உங்களுக்கு நல்லது  என்று மூஸா தமது சமுதாயத்திற்குக் கூறியதை நினைவூட்டுவீராக! அவன் உங்களை மன்னித்தான். அவனே மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன் 2:54

மூஸா தெளிவான சான்றுகளுடன் உங்களிடம் வந்தார். அவருக்குப் பின் அநீதி இழைத்து காளைக் கன்றைக் (கடவுளாக) கற்பனை செய்தீர்கள்.

திருக்குர்ஆன் 2:92

மூஸாவுடைய சமூகத்தார் அவருக்குப் பின் அவர்களது நகைகளால் காளைக் கன்றின் வடிவத்தை (கடவுளாக) கற்பனை செய்து கொண்டனர். அதற்கு மாட்டின் சப்தமும் இருந்தது. அது அவர்களிடம் பேசாது என்பதையும் அவர்களுக்கு எந்த வழியையும் காட்டாது என்பதையும் அவர்கள் அறிய வேண்டாமா? அவர்கள் இதைக் கற்பனை செய்து அநீதி இழைத்தோரானார்கள்.

திருக்குர்ஆன் 7:148

காளைக் கன்றைக் கடவுளாகக் கருதியோருக்கு அவர்களின் இறைவனிடமிருந்து கோபமும்,இவ்வுலக வாழ்க்கையில் இழிவும் ஏற்படும். கற்பனை செய்வோரை இவ்வாறே வேதனைக்கு உட்படுத்துவோம்.

திருக்குர்ஆன் 7:152

வானவர்களை வணங்கக் கூடாது  வானவர்களையும், நபிமார்களையும் கடவுள்களாக்கிக் கொள்ளுங்கள்!  என்று அவர் (இறைத் தூதர்) உங்களுக்கு ஏவ மாட்டார். நீங்கள் முஸ்லிம்களாக ஆன பின் (ஏக இறைவனை) மறுக்குமாறு அவர் உங்களுக்கு ஏவுவாரா?

திருக்குர்ஆன் 3:80

(ஈஸா எனும்) மஸீஹும், நெருக்கமான வானவர்களும் அல்லாஹ்வுக்கு அடிமையாக இருப்பதிலிருந்து விலகிக் கொள்ள மாட்டார்கள். அவனுக்கு அடிமையாக இருப்பதிலிருந்து விலகிப் பெருமையடிப்போர் அனைவரையும் அவன் தன்னிடம் ஒன்று திரட்டுவான்.

திருக்குர்ஆன் 4:172

வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ள உயிரினங்களும், வானவர்களும் அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்கின்றனர். வானவர்கள் பெருமையடிக்க மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 16:49

அளவற்ற அருளாளன் சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான்  எனக் கூறுகின்றனர். அவன் தூயவன். மாறாக அவர்கள் (வானவர்கள்) மரியாதைக்குரிய அடியார்கள்.

திருக்குர்ஆன் 21:26

(அது) அவர்கள் அனைவரையும் அவன் ஒன்று திரட்டும் நாள்! பின்னர்  இவர்கள் உங்களைத் தான் வணங்குவோராக இருந்தார்களா?  என்று வானவர்களிடம் கேட்பான்.

திருக்குர்ஆன் 34:40

அவர்கள் பெருமையடித்தால் உமது இறைவனிடம் இருப்போர் (வானவர்கள்) இரவிலும்,பகலிலும் அவனைத் துதிக்கின்றனர். அவர்கள் சோர்வடைய மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 41:38

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள்.

திருக்குர்ஆன் 66:6

சிலைகளை வணங்கக் கூடாது

 சிலைகளைக் கடவுள்களாக நீர் கற்பனை செய்கிறீரா? உம்மையும், உமது சமூகத்தையும் தெளிவான வழி கேட்டில் இருப்பதாகவே நான் கருதுகிறேன்  என்று இப்ராஹீம் தம் தந்தை ஆஸரிடம் கூறியதை நினைவூட்டுவீராக!

திருக்குர்ஆன் 6:74

இஸ்ராயீலின் மக்களைக் கடல் கடந்து செல்ல வைத்தோம். அப்போது தமது சிலைகளுக்கு வழிபாடு நடத்திக் கொண்டிருந்த கூட்டத்திடம் அவர்கள் வந்தனர்.  மூஸாவே! அவர்களுக்கு இருக்கும் கடவுள்கள் போல் எங்களுக்கும் கடவுளை எற்படுத்தித் தருவீராக!  என்று கேட்டனர்.  நீங்கள் அறிவு கெட்ட கூட்டமாகவே இருக்கின்றீர்கள்  என்று அவர் கூறினார்.  அவர்கள் எதில் இருக்கிறார்களோ, அது அழியக் கூடியது. அவர்கள் செய்து வந்தவையும் வீணானது.   அல்லாஹ் அல்லாதவர்களையா உங்களுக்குக் கடவுளாகக் கற்பிப்பேன்? அவனே உங்களை அகிலத்தாரை விட சிறப்பித்திருக்கிறான்  என்று (மூஸா) கூறினார்.

திருக்குர்ஆன் 7:138

அவர்களுக்கு நடக்கின்ற கால்கள் உள்ளனவா? அல்லது பிடிக்கின்ற கைகள் உள்ளனவா? அல்லது பார்க்கின்ற கண்கள் உள்ளனவா? அல்லது கேட்கின்ற காதுகள் உள்ளனவா? உங்கள் தெய்வங்களை அழைத்து எனக்கெதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்! எனக்கு எந்த அவகாசமும் தராதீர்கள்!  என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 7:195

அவனன்றி நீங்கள் வணங்குபவை வெறும் பெயர்களே. நீங்களும், உங்களின் முன்னோர்களும் அவற்றுக்குப் பெயரிட்டீர்கள்! இது குறித்து அல்லாஹ் எந்தச் சான்றையும் அருளவில்லை. அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் இல்லை. அவனைத் தவிர எதையும் நீங்கள் வணங்கக் கூடாது  என்று அவன் கட்டளையிட்டுள்ளான். இதுவே நேரான மார்க்கம். எனினும் அதிகமான மனிதர்கள் விளங்குவதில்லை.

திருக்குர்ஆன் 12:40

இறைவா! இவ்வூரை அபயமளிக்கக் கூடியதாக ஆக்குவாயாக! என்னையும், என் பிள்ளைகளையும் சிலைகளை வணங்குவதை விட்டும் காப்பாயாக!  என்று இப்ராஹீம் கூறியதை நினைவூட்டுவீராக!

திருக்குர்ஆன் 14:35

நீங்கள் வணங்கும் இந்தச் சிலைகள் என்ன?  என்று அவர் (இப்ராஹீம்) தமது தந்தையிடமும், தமது சமுதாயத்திடமும் கேட்ட போது,  எங்கள் முன்னோர்கள் இவற்றை வணங்கக் கண்டோம்  என்று அவர்கள் கூறினர்.  நீங்களும், உங்களின் முன்னோர்களும் தெளிவான வழிகேட்டிலேயே இருக்கிறீர்கள்  என்று அவர் கூறினார். நீர் உண்மையைத் தான் கூறுகிறீரா? அல்லது விளையாடுகிறீரா?  என்று அவர்கள் கேட்டனர்.  அவ்வாறில்லை. வானங்களையும், பூமியையும் படைத்த இறைவனே உங்கள் இறைவனாவான். நான் இதற்குச் சாட்சி கூறுபவன்  என்று அவர் கூறினார்.

திருக்குர்ஆன் 21:52-56

மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைச் செவிதாழ்த்திக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.

திருக்குர்ஆன்22:73

 எதை வணங்குகிறீர்கள்?  என்று தமது தந்தையிடமும் தமது சமுதாயத்தினரிடமும் அவர் (இப்ராஹீம்) கேட்ட போது  நாங்கள் சிலைகளை வணங்குகிறோம். அவற்றை வணங்குவதில் உறுதியாக இருக்கிறோம்  என்றனர்.  நீங்கள் அழைக்கும் போது இவை செவியுறுகின்றனவா? அல்லது உங்களுக்கு நன்மையோ, தீமையோ செய்கின்றனவா?  என்று அவர் கேட்டார்.  எங்கள் முன்னோர்கள் இவ்வாறு செய்வதைக் கண்டோம்  என்று அவர்கள் கூறினர்.  அகிலத்தின் இறைவனைத் தவிர நீங்களும்,முந்திச் சென்ற உங்கள் முன்னோர்களும் எதை வணங்குவோராக இருக்கிறீர்கள்? என்பதைக் கவனித்தீர்களா? அவை எனது எதிரிகள். அவனே என்னைப் படைத்தான். அவனே எனக்கு நேர் வழி காட்டுகிறான். அவனே எனக்கு உணவளித்து (தண்ணீர்) பருகச் செய்கிறான். நான் நோயுறும் போது அவனே எனக்கு நிவாரணம் தருகிறான். அவனே என்னை மரணிக்கச் செய்கிறான். பின்னர் எனக்கு உயிர் கொடுப்பான்.  தீர்ப்பு நாளில் என் தவறை அவன் மன்னிக்க வேண்டும்  என ஆசைப்படுகிறேன் (என்று இப்ராஹீம் கூறினார்)

திருக்குர்ஆன் 26:70-82

நீங்கள் செதுக்கிக் கொண்டதை வணங்குகிறீர்களா? அல்லாஹ்வே உங்களையும்,  நீங்கள் செய்தவற்றையும் படைத்தான் என்று (இப்ராஹீம்) கூறினார்.

திருக்குர்ஆன் 37:95,96

அலங்காரம் செய்யப்பட்டும் வழக்கை தெளிவாக எடுத்துச் சொல்லத் தெரியாமலும் உள்ளவற்றையா? (வணங்குகின்றனர்?)

திருக்குர்ஆன் 43:18

அவை வெறும் பெயர்கள் தவிர வேறு இல்லை. நீங்களும், உங்கள் மூதாதையரும் தாம் அந்தப் பெயரைச் சூட்டினீர்கள். இது பற்றி அல்லாஹ் எந்த அத்தாட்சியையும் அருளவில்லை. ஊகத்தையும், மனோ இச்சைகளையும் தவிர வேறு எதையும் அவர்கள் பின்பற்றவில்லை. (இதோ) அவர்களுக்கு அவர்களின் இறைவனிடமிருந்து நேர் வழி வந்து விட்டது.

திருக்குர்ஆன் 53:23

மகான்களை வணங்கக் கூடாது

எந்த மனிதருக்காவது அல்லாஹ் வேதத்தையும், அதிகாரத்தையும், நபி எனும் தகுதியையும் வழங்கினால் (அதன்) பின்  அல்லாஹ்வையன்றி எனக்கு அடிமைகளாக ஆகி விடுங்கள்!  என்று கூறுகின்ற அதிகாரம் அவருக்கு இல்லை. மாறாக,  வேதத்தை நீங்கள் கற்றுக் கொடுப்போராக இருப்பதாலும், அதை வாசித்துக் கொண்டிருப்பதாலும் இறைவனுக்குரியோராக ஆகி விடுங்கள்!  (என்றே கூறினர்)

திருக்குர்ஆன் 3:79

(ஈஸா எனும்) மஸீஹும், நெருக்கமான வானவர்களும் அல்லாஹ்வுக்கு அடிமையாக இருப்பதிலிருந்து விலகிக் கொள்ள மாட்டார்கள். அவனுக்கு அடிமையாக இருப்பதிலிருந்து விலகிப் பெருமையடிப்போர் அனைவரையும் அவன் தன்னிடம் ஒன்று திரட்டுவான்.

திருக்குர்ஆன் 4:172

 மர்யமுடைய மகன் (ஈஸா எனும்) மஸீஹ் தான் அல்லாஹ்  என்று கூறியோர் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர்.  மர்யமின் மகன் மஸீஹையும், அவரது தாயாரையும், பூமியில் உள்ள அனைவரையும் அல்லாஹ் அழிக்க நாடினால் அவனிடமிருந்து (அதைத் தடுக்க) சிறிதளவேனும் சக்தி பெற்றவர் யார்?  என்று நீர் கேட்பீராக! வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவைகளின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைப்பான். அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.

திருக்குர்ஆன் 5:17

மர்யமின் மகன் (ஈஸா எனும்) மஸீஹ் தான் அல்லாஹ்  எனக் கூறியவர்கள் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர்.  இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை  என்றே மஸீஹ் கூறினார்.

திருக்குர்ஆன் 5:72

மர்யமின் மகன் ஈஸாவே! அல்லாஹ்வையன்றி என்னையும், என் தாயாரையும் கடவுள்களாக்கிக் கொள்ளுங்கள்!  என நீர் தான் மக்களுக்குக் கூறினீரா?  என்று அல்லாஹ் (மறுமையில்) கேட்கும் போது,  நீ தூயவன். எனக்குத் தகுதியில்லாத வார்த்தையை நான் கூற உரிமையில்லாதவன். நான் அவ்வாறு கூறியிருந்தால் அதை நீ அறிவாய். எனக்குள் உள்ளதை நீ அறிவாய்! உனக்குள் உள்ளதை நான் அறிய மாட்டேன். நீயே மறைவானவற்றை அறிபவன்  என்று அவர் பதிலளிப்பார்.

திருக்குர்ஆன் 5:116

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!

திருக்குர்ஆன் 7:194

உஸைர் அல்லாஹ்வின் மகன்  என்று யூதர்கள் கூறுகின்றனர்.  மஸீஹ் அல்லாஹ்வின் மகன்  என்று கிறித்தவர்கள் கூறுகின்றனர். இது வாய்களால் அவர்கள் கூறும் கூற்றாகும். இதற்கு முன் (ஏக இறைவனை) மறுத்தோரின் கூற்றுக்கு ஒத்துப் போகிறார்கள். அல்லாஹ் அவர்களை அழிப்பான். எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்?

திருக்குர்ஆன் 9:30

(என்னை) மறுப்போர் என்னையன்றி எனது அடியார்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ள நினைக்கிறார்களா? (நம்மை) மறுப்போருக்கு நரகத்தைத் தங்குமிடமாக நாம் தயாரித்துள்ளோம்.

திருக்குர்ஆன் 18:102

வானங்களிலும், பூமியிலும் உள்ள ஒவ்வொருவரும் அளவற்ற அருளாளனிடம் அடிமையாகவே வருவார்கள்.

திருக்குர்ஆன் 19:93

மர்யமின் மகன் உதாரணமாகக் கூறப்பட்ட போது அதைக் கேட்டு உமது சமுதாயத்தினர் கூச்சலிட்டனர்.  எங்கள் கடவுள்கள் சிறந்தவர்களா? அல்லது அவரா?  என்று கேட்டனர். விதண்டாவாதம் செய்வதற்காகவே தவிர அவரைப் பற்றி அவர்கள் கூறவில்லை. இல்லை! அவர்கள் வீண் தர்க்கம் செய்வோரே! நாம் அருள் புரிந்த அடியாரைத் தவிர அவர் வேறில்லை. இஸ்ராயீலின் மக்களுக்கு அவரை முன்னுதாரணமாக ஆக்கினோம்.

திருக்குர்ஆன் 43:57-59

அவர்கள் அல்லாஹ்வையன்றி தமது மத போதகர்களையும்,  பாதிரிகளையும், மர்யமின் மகன் மஸீஹையும் கடவுள்களாக்கினர். ஒரே கடவுளை வணங்குமாறு தான் அவர்கள் கட்டளையிடப்பட்டனர். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவர்கள் இணை கற்பிப்பவற்றை விட்டும் அவன் தூயவன்.

திருக்குர்ஆன் 9:31

இறந்தவரைப் பிரார்த்திக்கக் கூடாது

அல்லது ஒரு கிராமத்தைக் கடந்து சென்றவரைப் பற்றி (நீர் அறிவீரா?) அந்த ஊர் அடியோடு வீழ்ந்து கிடந்தது.  இவ்வூர் அழிந்த பிறகு அல்லாஹ் எவ்வாறு இதை உயிராக்குவான்?  என்று அவர் நினைத்தார். உடனே அவரை அல்லாஹ் நூறு ஆண்டுகள் மரணிக்கச் செய்தான். பின்னர் அவரை உயிர்ப்பித்து  எவ்வளவு நாளைக் கழித்திருப்பீர்?  என்று கேட்டான்.  ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிதளவு நேரம் கழித்திருப்பேன் என்று அவர் கூறினார்.  அவ்வாறில்லை! நூறு ஆண்டுகளைக் கழித்து விட்டீர்! உமது உணவும், பானமும் கெட்டுப் போகாமல் இருப்பதைக் காண்பீராக! (செத்து விட்ட) உமது கழுதையையும் கவனிப்பீராக! மக்களுக்கு உம்மை எடுத்துக் காட்டாக ஆக்குவதற்காக (இவ்வாறு செய்தோம். கழுதையின்) எலும்புகளை எவ்வாறு திரட்டுகிறோம் என்பதையும்,அதற்கு எவ்வாறு மாமிசத்தை அணிவிக்கிறோம் என்பதையும் கவனிப்பீராக!  என்று அவன் கூறினான். அவருக்குத் தெளிவு பிறந்த போது  அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன் என்பதை அறிகிறேன்  எனக் கூறினார்.

திருக்குர்ஆன் 2:259

செவியேற்பவர்களே பதிலளிக்க முடியும். இறந்தவர்களை அல்லாஹ் உயிர்ப்பிப்பான். பின்னர் அவனிடமே அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள்.

திருக்குர்ஆன் 6:36

நீர் இறந்தோரைச் செவியேற்கச் செய்ய முடியாது! அழைப்பைப் புறக்கணித்து ஓடும் செவிடர்களைக் கேட்கச் செய்ய உம்மால் முடியாது.

திருக்குர்ஆன் 27:80

இறந்தோரைச் செவியுறச் செய்ய உம்மால் முடியாது! செவிடர்கள் பின்வாங்கி ஓடினால் அழைப்பை அவர்களுக்குச் செவியேற்கச் செய்ய உம்மால் முடியாது.

திருக்குர்ஆன் 30:52

நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.

திருக்குர்ஆன் 35:14

உயிருடன் உள்ளோரும், இறந்தோரும் சமமாக மாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச் செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச் செய்பவராக இல்லை.

திருக்குர்ஆன் 35:22

கியாமத் நாள் வரை தமக்குப் பதில் தராத, அல்லாஹ் அல்லாதோரை அழைப்பவரை விட மிகவும் வழி கெட்டவர் யார்? அவர்களோ தம்மை அழைப்பது பற்றி அறியாது உள்ளனர். மக்கள் ஒன்று திரட்டப்படும் போது அவர்கள் இவர்களுக்குப் பகைவர்களாக ஆவார்கள். இவர்கள் தம்மை வணங்கியதையும் மறுப்பார்கள்.

திருக்குர்ஆன் 46:5,6

மரணித்தவர்கள் எதையும் அறிய முடியாது

தூதர்களை அல்லாஹ் ஒன்று திரட்டும் நாளில்  உங்களுக்கு என்ன பதில் அளிக்கப்பட்டது?  என்று கேட்பான்.  எங்களுக்கு (இது பற்றி) எந்த அறிவும் இல்லை. நீயே மறைவானவற்றை அறிபவன்  என்று அவர்கள் கூறுவார்கள்.

திருக்குர்ஆன் 5:109

அவர்கள் அனைவரையும் நாம் ஒன்று திரட்டும் நாளில் இணை கற்பித்தவர்களை நோக்கி நீங்களும், உங்கள் தெய்வங்களும் உங்கள் இடத்திலேயே நில்லுங்கள்! என்று கூறுவோம். அப்போது அவர்களிடையே பிளவை ஏற்படுத்துவோம்.  நீங்கள் எங்களை வணங்கவே இல்லை  என்று அவர்களின் தெய்வங்கள் கூறுவார்கள். எங்களுக்கும்,உங்களுக்குமிடையே அல்லாஹ்வே போதுமான சாட்சியாவான். நீங்கள் (எங்களை) வணங்கியதை அறியாதிருந்தோம்  என்றும் கூறுவார்கள்.

திருக்குர்ஆன் 10:29

அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர். அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள்  என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 16:21

முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது  என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!  என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.

திருக்குர்ஆன் 23:99,100

நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.

திருக்குர்ஆன் 35:14

கியாமத் நாள் வரை தமக்குப் பதில் தராத, அல்லாஹ் அல்லாதோரை அழைப்பவரை விட மிகவும் வழி கெட்டவர் யார்? அவர்களோ தம்மை அழைப்பது பற்றி அறியாது உள்ளனர். மக்கள் ஒன்று திரட்டப்படும் போது அவர்கள் இவர்களுக்குப் பகைவர்களாக ஆவார்கள். இவர்கள் தம்மை வணங்கியதையும் மறுப்பார்கள்

திருக்குர்ஆன் 46:5,6

நபிமார்களும் மனிதர்கள் தாம்

அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் உள்ளன; மறைவானதை அறிவேன்; என்று உங்களிடம் கூற மாட்டேன். நான் வானவர் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர (வேறெதனையும்) நான் பின்பற்றுவதில்லை என்று (முஹம்மதே!) கூறுவீராக!  குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா?  சிந்திக்க மாட்டீர்களா?  என்று கேட்பீராக!

திருக்குர்ஆன் 6:50

எந்த மனிதருக்காவது அல்லாஹ் வேதத்தையும், அதிகாரத்தையும், நபி எனும் தகுதியையும் வழங்கினால் (அதன்) பின்  அல்லாஹ்வையன்றி எனக்கு அடிமைகளாக ஆகி விடுங்கள்!  என்று கூறுகின்ற அதிகாரம் அவருக்கு இல்லை. மாறாக,  வேதத்தை நீங்கள் கற்றுக் கொடுப்போராக இருப்பதாலும், அதை வாசித்துக் கொண்டிருப்பதாலும் இறைவனுக்குரியோராக ஆகி விடுங்கள்!  (என்றே கூறினர்)

திருக்குர்ஆன் 3:79

மக்களை எச்சரிப்பீராக  என்றும்,  நம்பிக்கை கொண்டோருக்குத் தாம் செய்த நற்செயல் (அதற்கான கூலி) தம் இறைவனிடம் உண்டு என நற்செய்தி கூறுவீராக என்றும் மனிதர்களைச் சேர்ந்த ஒருவருக்கு நாம் அறிவிப்பது அவர்களுக்கு ஆச்சரியமாக உள்ளதா?  இவர் தேர்ந்த சூனியக்காரர்  என்று (நம்மை) மறுப்போர் கூறுகின்றனர்.

திருக்குர்ஆன் 10:2

வானங்களையும், பூமியையும் படைத்தவனாகிய அல்லாஹ்வைப் பற்றியா சந்தேகம்?உங்கள் பாவங்களை மன்னிக்கவும், குறிப்பிட்ட காலக்கெடு வரை உங்களுக்கு அவகாசம் அளிக்கவுமே உங்களை அவன் அழைக்கிறான்  என்று அவர்களின் தூதர்கள் கூறினர். நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்களே. எங்கள் முன்னோர் வணங்கிக் கொண்டிருந்தவைகளை விட்டும் எங்களைத் தடுக்க விரும்புகிறீர்கள். எனவே எங்களிடம் தெளிவான அற்புதத்தைக் கொண்டு வாருங்கள்!  என்று அவர்கள் கேட்டனர். நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்கள் தாம். ஆயினும் தனது அடியார்களில் தான் நாடியவர் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் உங்களிடம் எங்களால் கொண்டு வர இயலாது. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்  என்று அவர்களின் தூதர்கள் கூறினர்.

திருக்குர்ஆன் 14:10,11

(முஹம்மதே!) உமக்கு முன் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம். அவர்களுக்குத் தெளிவான சான்றுகளுடனும், ஏடுகளுடனும் நமது தூதுச் செய்தியை அறிவித்தோம். நீங்கள் அறியாதிருந்தால் அறிவுடையோரிடம் கேளுங்கள்! மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.

திருக்குர்ஆன் 16:43,44

அல்லது தங்கத்தால் உமக்கு ஒரு வீடு இருக்க வேண்டும். அல்லது வானத்தில் நீர் ஏற வேண்டும். நாங்கள் வாசிக்கும் விதமாக எங்களிடம் ஒரு புத்தகத்துடன் இறங்கினால் தவிர நீர் ஏறிச் சென்றதை நம்ப மாட்டோம் (எனவும் கூறுகின்றனர்)  என் இறைவன் தூயவன். நான் மனிதனாகவும், தூதராகவுமே இருக்கிறேன்  என்று (முஹம்மதே!) கூறுவீராக!

திருக்குர்ஆன் 17:93

மனிதரையா தூதராக அல்லாஹ் அனுப்பினான்?  என்று அவர்கள் கூறுவது தான்,மனிதர்களிடம் நேர்வழி வந்த போது அவர்கள் நம்புவதற்குத் தடையாக இருந்தது.

திருக்குர்ஆன் 17:94

நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணை கற்பிக்காது இருக்கட்டும்  என்று (முஹம்மதே!) கூறுவீராக!

திருக்குர்ஆன் 18:110

அவர்களின் உள்ளங்கள் அலட்சியம் செய்கின்றன.  இவர் உங்களைப் போன்ற மனிதர் தவிர வேறு யார்? பார்த்துக் கொண்டே இந்த சூனியத்திடம் செல்கிறீர்களா?  என்று அநீதி இழைத்தோர் மிகவும் இரகசியமாகப் பேசுகின்றனர்.

திருக்குர்ஆன் 21:3

(முஹம்மதே!) உமக்கு முன் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம். அவர்களுக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். நீங்கள் அறியாதிருந்தால் அறிவுடையோரிடம் கேளுங்கள்! உணவு உட்கொள்ளாத உடலைக் கொண்டவர்களாக அவர்களை நாம் ஆக்கவில்லை. அவர்கள் நிரந்தரமாகவும் இருக்கவில்லை.

திருக்குர்ஆன் 21:7

இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதர் தவிர வேறில்லை. நீங்கள் உண்பதையே இவரும் உண்ணுகிறார். நீங்கள் அருந்துவதையே இவரும் அருந்துகிறார்  என்று அவரது சமுதாயத்தில் யார் (ஏக இறைவனை) மறுத்து, மறுமையின் சந்திப்பைப் பொய்யெனக் கருதினார்களோ, இவ்வுலக வாழ்வில் யாருக்கு சொகுசான வாழ்வை வழங்கினோமோ அந்தப் பிரமுகர்கள் கூறினர்.

திருக்குர்ஆன் 23:33

பின்னர் ஃபிர்அவ்னிடமும், அவனது சமுதாயத்திடமும் மூஸாவையும் அவரது சகோதரர் ஹாரூனையும் நமது சான்றுகளுடனும், தெளிவான அத்தாட்சிகளுடனும் அனுப்பினோம். அவர்கள் பெருமையடித்தனர். அவர்கள் ஆதிக்கம் செலுத்தும் கூட்டமாக இருந்தனர். இவ்விருவரின் சமுதாயத்தினர் நமக்கு அடிமைகளாக இருக்கும் நிலையில் நம்மைப் போன்ற இரு மனிதர்களை நாம் நம்புவோமா?  என்றனர்.

திருக்குர்ஆன் 23:45,46,47

நீர் எங்களைப் போன்ற மனிதர் தவிர வேறு இல்லை. நீர் உண்மையாளராக இருந்தால் சான்றைக் கொண்டு வருவீராக!  (என்று ஸமூது கூட்டத்தினர் கூறினர்)

திருக்குர்ஆன் 26:154

நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதர் தவிர வேறில்லை. உம்மைப் பொய்யராகவே கருதுகிறோம்.  (என்று மத்யன் வாசிகள் கூறினர்)

திருக்குர்ஆன் 26:186

நீங்கள் எங்களைப் போன்ற மனிதர் தவிர வேறில்லை. அளவற்ற அருளாளன் எதையும் அருளவில்லை. நீங்கள் பொய் சொல்வோராகவே இருக்கிறீர்கள்  என்று (அவ்வூரார்) கூறினர்.

திருக்குர்ஆன் 36:15

 நான் உங்களைப் போன்ற மனிதன் தான். உங்கள் இறைவன் ஒரே இறைவனே என்று எனக்கு தூதுச் செய்தி அறிவிக்கப்படுகிறது. எனவே அவனிடம் உறுதியாக இருங்கள்! அவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்! இணை கற்பிப்போருக்குக் கேடு தான் இருக்கிறது என்று (முஹம்மதே!) கூறுவீராக!

திருக்குர்ஆன் 41:6

நம்மைச் சேர்ந்த ஒரு மனிதரையா நாம் பின்பற்றுவோம்? அப்படிச் செய்தால் வழி கேட்டிலும், சிரமத்திலும் நாம் ஆகி விடுவோம். நம்மிடையே இவருக்கு மட்டும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளதா? இல்லை. இவர் கர்வம் கொண்ட பெரும் பொய்யர் (என்று ஸமூது சமுதாயத்தினர் கூறினர்)

திருக்குர்ஆன் 54:24,25

அவர்களிடம் அவர்களது தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வருவோராக இருந்ததும், ஒரு மனிதர் எங்களுக்கு வழி காட்டுவதா? என்று அவர்கள் கூறி (ஏக இறைவனை) மறுத்துப் புறக்கணித்ததும் இதற்குக் காரணம். அவர்களைத் தேவையற்றோராக அல்லாஹ் கருதினான். அல்லாஹ் தேவையற்றவன்;  புகழுக்குரியவன்.

திருக்குர்ஆன் 64:6

எங்களைப் போன்ற ஒரு மனிதராகவே உம்மைக் காண்கிறோம். எங்களில் சிந்தனைக் குறைவுடைய தாழ்ந்தவர்களே உம்மைப் பின்பற்றுவதைக் காண்கிறோம். உங்களுக்கு எங்களை விட எந்தச் சிறப்பும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. மாறாக உங்களைப் பொய்யர்களாகவே கருதுகிறோம்  என்று அவரது சமுதாயத்தில் (ஏக இறைவனை) மறுத்த பிரமுகர்கள் கூறினர்.

திருக்குர்ஆன் 11:27

அவரது சமுதாயத்தில் (ஏக இறைவனை) மறுத்த பிரமுகர்கள்  இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரைத் தவிர வேறில்லை. உங்களை விட சிறப்படைய இவர் விரும்புகிறார். அல்லாஹ் நினைத்திருந்தால் வானவர்களை அனுப்பியிருப்பான். முந்தைய நமது முன்னோர்களிடமிருந்து இதை நாம் கேள்விப்பட்டதுமில்லை  என்றனர்.

திருக்குர்ஆன் 23:24

நபிமார்கள் உணவு உட்கொண்டனர்

தவ்ராத் அருளப்படுவதற்கு முன் இஸ்ராயீல் (யஃகூப்) தம் மீது தடை செய்து கொண்டதைத் தவிர எல்லா உணவுகளும் இஸ்ராயீலின் மக்களுக்கு அனுமதிக்கப்பட்டதாகவே இருந்தன. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் தவ்ராத்தைக் கொண்டு வந்து படித்துக் காட்டுங்கள்!  என்று (முஹம்மதே! யூதர்களிடம்) கேட்பீராக!

திருக்குர்ஆன் 3:93

மர்யமின் மகன் மஸீஹ் தூதரைத் தவிர வேறில்லை. அவருக்கு முன் பல தூதர்கள் சென்று விட்டனர். அவரது தாய் உண்மையாளர். அவ்விருவரும் உணவு உண்போராக இருந்தனர். இவர்களுக்குச் சான்றுகளை எவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளோம் என்பதைச் சிந்திப்பீராக! பின்னர் இவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர் என்பதையும் சிந்திப்பீராக!

திருக்குர்ஆன் 5:75

அவ்விருவரும் நடந்தனர். முடிவில் ஒரு கிராமத்தாரிடம் வந்து அவர்களிடம் உணவு கேட்டனர். அவ்விருவருக்கும் விருந்தளிக்க அவர்கள் மறுத்து விட்டனர். அங்கே விழுவதற்குத் தயாரான நிலையில் ஒரு சுவரைக் கண்டனர். உடனே (அந்த அடியார்) அதை (தூக்கி) நிறுத்தினார்.  நீர் நினைத்திருந்தால் இதற்குக் கூலியைப் பெற்றிருக்கலாமே  என்று (மூஸா) கூறினார்.

திருக்குர்ஆன் 18:77

(முஹம்மதே!) உமக்கு முன் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம். அவர்களுக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். நீங்கள் அறியாதிருந்தால் அறிவுடையோரிடம் கேளுங்கள்! உணவு உட்கொள்ளாத உடலாக அவர்களை நாம் ஆக்கவில்லை. அவர்கள் நிரந்தரமாகவும் இருக்கவில்லை.

திருக்குர்ஆன் 21:7,8

தூதர்களே! தூய்மையானவற்றை உண்ணுங்கள்! நல்லறம் செய்யுங்கள்! நீங்கள் செய்வதை நான் அறிந்தவன்.

திருக்குர்ஆன் 23:51

இத்தூதருக்கு என்ன நேர்ந்தது? இவர் உணவு உண்கிறார்; கடை வீதிகளில் நடமாடுகிறார்; இவரோடு ஒரு வானவர் இறக்கப்பட்டு இவருடன் (சேர்ந்து) அவர் எச்சரிப்பவராக இருக்கக் கூடாதா?  என்று கேட்கின்றனர்.

திருக்குர்ஆன் 25:7

(முஹம்மதே!) உமக்கு முன் நாம் அனுப்பிய தூதர்களை உணவு உண்போராகவும், கடை வீதிகளில் நடமாடுவோராகவுமே அனுப்பினோம். இன்னும் பொறுமையைக் கடைப்பிடிக்கிறீர்களா? (என்பதைச் சோதிக்க) உங்களில் சிலரை, மற்றும் சிலருக்குச் சோதனையாக ஆக்கினோம். உமது இறைவன் பார்ப்பவனாக இருக்கிறான்.

திருக்குர்ஆன் 25:20

அவனே என்னைப் படைத்தான். அவனே எனக்கு நேர் வழி காட்டுகிறான். அவனே எனக்கு உணவளித்து (தண்ணீர்) பருகச் செய்கிறான்.

திருக்குர்ஆன் 26:78,79

நம்பிக்கை கொண்டோரே! நபியின் வீடுகளில் அனுமதிக்கப்பட்டால் தவிர உண்பதற்கு நுழையாதீர்கள்! அவரது பாத்திரத்தைப் பார்த்துக் கொண்டிருக்காதீர்கள்! மாறாக அழைக்கப்பட்டால் செல்லுங்கள்! உணவு உட்கொண்டதும் சென்று விடுங்கள்! பேச்சில் லயித்து விடாதீர்கள்! இது நபிக்குத் தொந்தரவாக இருக்கும். உங்களிடம் (கூற) அவர் வெட்கப்படுவார். உண்மை(யைக் கூறும்) விஷயத்தில் அல்லாஹ் வெட்கப்பட மாட்டான்.

திருக்குர்ஆன் 33:53

நபிமார்கள் மனைவியருடன் குடும்பம் நடத்தினர்

 ஆதமே! நீயும், உன் மனைவியும் இந்தச் சொர்க்கத்தில் குடியிருங்கள்! இருவரும் விரும்பியவாறு தாராளமாக இதில் உண்ணுங்கள்! இந்த மரத்தை (மட்டும்) நெருங்காதீர்கள்! (நெருங்கினால்) அநீதி இழைத்தோராவீர்  என்று நாம் கூறினோம்.

திருக்குர்ஆன் 2:35

மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான்.

திருக்குர்ஆன் 4:1

ஆதமே! நீயும் உமது மனைவியும் இந்தச் சொர்க்கத்தில் தங்குங்கள்! விரும்பியவாறு இருவரும் உண்ணுங்கள்! இந்த மரத்தை நெருங்காதீர்கள்! (நெருங்கினால்) இருவரும் அநீதி இழைத்தவர்களாகி விடுவீர்கள்  (என்றும் கூறினான்)

திருக்குர்ஆன் 7:19

எனவே அவரது (லூத்) மனைவியைத் தவிர அவரது குடும்பத்தாரையும், அவரையும் காப்பாற்றினோம். அவள் அழிந்து போவோரில் ஒருத்தியாக இருந்தாள்.

திருக்குர்ஆன் 7:83

அவனே உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்தான். அவரிலிருந்து அவரது துணைவியை அவளிடம் அவர் மன அமைதி பெறுவதற்காகப் படைத்தான். அவன்,அவளுடன் இணைந்த போது அவள் இலேசான சுமையைச் சுமந்தாள். அதனுடன் அவள் நடமாடினாள். அவள் (வயிறு) கனத்த போது (அங்கத்தில்) குறைகளற்றவனை நீ எங்களுக்கு வழங்கினால் நன்றி செலுத்துவோராவோம் என்று அவ்விருவரும் தமது இறைவனாகிய அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தனர்.

திருக்குர்ஆன் 7:189

நமது கட்டளை வந்து, தண்ணீர் பொங்கிய போது  ஒவ்வொன்றிலும் ஒரு ஜோடியையும், உமது குடும்பத்தாரில் நமது விதி முந்தி விட்டவர்களைத் தவிர மற்றவர்களையும், நம்பிக்கை கொண்டோரையும் ஏற்றிக் கொள்வீராக!  என்று கூறினோம். அவருடன் மிகச் சிலரே நம்பிக்கை கொண்டனர்.

திருக்குர்ஆன் 11:40

லூத்தே! நாங்கள் உமது இறைவனின் தூதர்கள். அவர்கள் உம்மை நெருங்கவே முடியாது. உமது மனைவியைத் தவிர உமது குடும்பத்தாருடன் இரவின் ஒரு பகுதியில் புறப்படுவீராக! உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். அவர்களுக்கு ஏற்படக்கூடியது அவளுக்கும் ஏற்படும். அவர்களின் காலக்கெடு வைகறைப் பொழுது. வைகறைப் பொழுது சமீபத்தில் இல்லையா?  என்றனர்.

திருக்குர்ஆன் 11:81

உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும்,  மக்களையும் ஏற்படுத்தினோம். எந்த ஒரு தூதரும் அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் கொண்டு வர முடியாது. ஒவ்வொரு தவணையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருக்குர்ஆன் 13:38

(அதற்கவர்கள்)  அவ்வாறில்லை! அவர்கள் சந்தேகம் எழுப்பியதை உம்மிடம் கொண்டு வந்துள்ளோம்; உண்மையையே உம்மிடம் கொண்டு வந்தோம்; நாங்கள் உண்மை கூறுபவர்கள்; இரவின் ஒரு பகுதியில் உமது குடும்பத்தாருடன் செல்வீராக! அவர்களைப் பின் தொடர்ந்து (கடைசியில்) நீர் செல்வீராக! உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். கட்டளையிட்டவாறு செய்து முடியுங்கள்!  என்று கூறினார்கள்.

திருக்குர்ஆன் 15:63,64,65

அவர் தமது குடும்பத்தாருக்கு தொழுகையையும், ஸகாத்தையும் ஏவக் கூடியவராக இருந்தார். தமது இறைவனால் திருப்தி கொள்ளப்பட்டவராகவும் இருந்தார்.

திருக்குர்ஆன் 19:55

அவர் ஒரு நெருப்பைக் கண்ட போது தமது குடும்பத்தினரிடம்  இருங்கள்! நான் ஒரு நெருப்பைக் கண்டேன். அதில் உங்களுக்கு ஒரு தீப்பந்தத்தைக் கொண்டு வருவேன். அல்லது நெருப்புக்கு ஏதேனும் ஒரு வழியைக் கண்டு வருவேன்  என்றார்.

திருக்குர்ஆன் 20:10

ஆதமே! இவன் உமக்கும், உமது மனைவிக்கும் எதிரியாவான். அவன் உங்களைச் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றி விட வேண்டாம். அப்போது நீர் துர்பாக்கியசாலியாவீர்!

திருக்குர்ஆன் 20:117

(முஹம்மதே!) தொழுமாறு உமது குடும்பத்தினரை ஏவுவீராக! அதில் (ஏற்படும் சிரமங்களை) சகித்துக் கொள்வீராக! உம்மிடம் நாம் செல்வத்தைக் கேட்கவில்லை. நாமே உமக்குச் செல்வத்தை அளிக்கிறோம். (இறை)அச்சத்திற்கே (நல்ல) முடிவு உண்டு.

திருக்குர்ஆன் 20:132

நூஹ், இதற்கு முன் (நம்மிடம்) பிரார்த்தித்த போது, அவருக்காக (அதை) ஏற்றுக் கொண்டோம். அவரையும், அவரது குடும்பத்தினரையும் பெரும் கஷ்டத்திலிருந்து காப்பாற்றினோம்.

திருக்குர்ஆன் 21:76

எனக்குத் துன்பம் நேர்ந்து விட்டது. நீ கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன்  என அய்யூப் தமது இறைவனை அழைத்த போது, அவரது பிரார்த்தனையை  ஏற்றுக் கொண்டோம். அவருக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கினோம். அவரது குடும்பத்தாரையும் அவர்களுடன் அவர்களைப் போன்றோரையும் நம் அருளாக அவருக்கு வழங்கினோம். வணங்குவோருக்கு இது அறிவுரை.

திருக்குர்ஆன் 21:83,84

என் இறைவா! என்னைத் தனியாளாக விட்டு விடாதே! நீ மிகச் சிறந்த உரிமையாளன்  என்று ஸக்கரிய்யா தமது இறைவனை அழைத்த போது, அவருக்காக (அவரது பிரார்த்தனையை) ஏற்றோம். அவருக்கு யஹ்யாவை அன்பளிப்பாக அளித்தோம். அவரது மனைவியை அவருக்காக (குழந்தை பெறும்) தகுதியுடையவராக ஆக்கினோம். அவர்கள் நன்மைகளை நோக்கி விரைந்து செல்வோராகவும், ஆர்வத்துடனும் அச்சத்துடனும் நம்மிடம் பிரார்த்திப்போராகவும் இருந்தனர். நமக்குப் பணிவோராகவும் இருந்தனர்.

திருக்குர்ஆன் 21:89,90

என் இறைவா! என்னையும், என் குடும்பத்தினரையும் அவர்கள் செய்து கொண்டிருப்பவற்றை விட்டு காப்பாற்றுவாயாக!  (என்றும் கூறினார்)

திருக்குர்ஆன் 26:169

நான் ஒரு நெருப்பைக் காண்கிறேன். அங்கிருந்து உங்களுக்கு செய்தி கொண்டு வருகிறேன். அல்லது நீங்கள் குளிர் காய்வதற்கு ஒரு தீப்பந்தத்தை உங்களிடம் கொண்டு வருகிறேன்  என்று மூஸா தமது குடும்பத்தாரிடம் கூறியதை நினைவூட்டுவீராக!

திருக்குர்ஆன் 27:7

அவரையும், அவரது மனைவியைத் தவிர ஏனைய அவரது குடும்பத்தையும் காப்பாற்றினோம். அவளை (அழிவோருடன்) தங்கி விடுபவள் என நிர்ணயித்து விட்டோம்.

திருக்குர்ஆன் 27:57

 எட்டு ஆண்டுகள் நீர் எனக்குக் கூலி வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் எனது இந்த இரு புதல்விகளில் ஒருத்தியை உமக்கு மணமுடித்துத் தருகிறேன். பத்து ஆண்டுகளாக முழுமையாக்கினால் (அது) உம்மைச் சேர்ந்தது. நான் உமக்குச் சிரமம் தர விரும்பவில்லை. அல்லாஹ் நாடினால் என்னை நல்லவராகக் காண்பீர்  என்று அவர் கூறினார்.

திருக்குர்ஆன் 28:27

மூஸா அந்தக் காலக்கெடுவை முடித்து, தமது குடும்பத்தாருடன் இரவில் பயணம் மேற்கொண்ட போது தூர் மலையின் திசையில் ஒரு நெருப்பைக் கண்டார்.  இருங்கள்! நான் ஒரு நெருப்பைக் கண்டேன். அது பற்றிய செய்தியையோ, அல்லது நீங்கள் குளிர் காய்வதற்காக அதில் பந்தத்தையோ கொண்டு வருகிறேன்  என்று தமது குடும்பத்தாரிடம் கூறினார்.

திருக்குர்ஆன் 28:29

அங்கே லூத் இருக்கிறாரே  என்று அவர் கேட்டார்.  அங்குள்ளவர்களை நாங்கள் நன்றாக அறிவோம். அவரையும், அவரது மனைவியைத் தவிர அவரது குடும்பத்தாரையும் காப்பாற்றுவோம். அவள் (அழிவோருடன்) தங்கி விடுவாள்  என்றனர்.

திருக்குர்ஆன் 29:32

நமது தூதர்கள் லூத்திடம் வந்த போது அவர்களால் கவலைக்கும், மன நெருக்கடிக்கும் உள்ளானார். அதற்கவர்கள்  நீர் பயப்படாதீர்! கவலைப்படாதீர்! உம்மையும் உமது மனைவியைத் தவிர ஏனைய உமது குடும்பத்தினரையும்,  நாங்கள் காப்பாற்றுவோம். (அழிவோருடன்) அவள் தங்கி விடுவாள்  என்றனர்.

திருக்குர்ஆன் 29:33

நம்பிக்கை கொண்டோருக்கு தங்களை விட இந்த நபி (முஹம்மத்) தான் முன்னுரிமை பெற்றவர். அவரது மனைவியர் அவர்களுக்கு அன்னையர். நம்பிக்கை கொண்டோரையும்,ஹிஜ்ரத் செய்தோரையும் விட உறவினர்களே ஒருவருக்கு மற்றவர் முன்னுரிமை பெற்றவர். நீங்களாக உங்கள் நண்பர்களுக்கு உபகாரம் செய்தாலே தவிர. இது அல்லாஹ்வின் வேதத்தில் உள்ளது. இது பதிவேட்டில் எழுதப்பட்டதாக இருக்கிறது.

திருக்குர்ஆன் 33:6

இவ்வுலக வாழ்வையும், இதன் அலங்காரத்தையும் நீங்கள் விரும்பினால் வாருங்கள்! உங்களுக்கு வசதியளித்து அழகிய முறையில் உங்களை விடுவித்து விடுகிறேன்  என்று நபியே (முஹம்மதே!) உமது மனைவியரிடம் கூறுவீராக!

திருக்குர்ஆன் 33:28

ஸைத் என்பார் அவரிடம் தன் தேவையை முடித்துக் கொண்ட போது உமக்கு அவரை மணமுடித்துத் தந்தோம். வளர்ப்பு மகன்கள் தம் மனைவியரிடம் தமது தேவையை முடித்துக் கொண்டால் (விவாகரத்துச் செய்தால்) அவர்களை (வளர்ப்புத் தந்தையரான) நம்பிக்கை கொண்டோர் மணந்து கொள்வது குற்றமாக ஆகக் கூடாது என்பதற்காக (இவ்வாறு செய்தோம்). அல்லாஹ்வின் கட்டளை செய்து முடிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது.

திருக்குர்ஆன் 33:37

நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல்  இருக்கவும் இது ஏற்றது.  அல்லாஹ் மன்னிப்பவனாகவும்,  நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

திருக்குர்ஆன் 33:59

அவரையும், அவரது குடும்பத்தினரையும் பெரும் துன்பத்திலிருந்து காப்பாற்றினோம்.

திருக்குர்ஆன் 37:76

அவரையும் (அழிவோருடன்) தங்கி விட்ட கிழவியைத் தவிர, அவரது குடும்பத்தார் அனைவரையும் நாம் காப்பாற்றியதை நினைவூட்டுவீராக!

திருக்குர்ஆன் 37:134,135

அவருக்கு அவரது குடும்பத்தினரையும் அவர்களுடன் அவர்களைப் போன்றோரையும் வழங்கினோம். இது நம்மிடமிருந்து கிடைக்கப் பெறும் அருளும், அறிவுடையோருக்கு அறிவுரையுமாகும்.

திருக்குர்ஆன் 38:43

தமது குடும்பத்தாரிடம் விரைந்து சென்று பொரித்த காளைக் கன்றைக் கொண்டு வந்தார்.

திருக்குர்ஆன் 51:26

நபியே! (முஹம்மதே!) உமக்கு அல்லாஹ் அனுமதித்ததை உமது மனைவியரின் திருப்தியை நாடி ஏன் விலக்கிக் கொள்கிறீர்? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன் 66:1

இந்த நபி தமது மனைவியரில் ஒருவரிடம் ஒரு செய்தியை இரகசியமாகக் கூறிய போது,அம்மனைவி அச்செய்தியை (மற்றொருவரிடம்) கூற அதை அல்லாஹ் நபிக்கு வெளிப்படுத்திக் காட்டிய போது அதில் சிலவற்றை (அம் மனைவியிடம்) நபி எடுத்துக் காட்டி, சிலவற்றை எடுத்துக் காட்டாது விட்டார். அவர் அதை அறிவித்த போது  இதை உங்களுக்கு அறிவித்தவன் யார்  என மனைவி கேட்டார். அதற்கு அறிந்தவனும்,நன்கறிந்தவனும் (ஆகிய இறைவன்) என நபி விடையளித்தார்.

திருக்குர்ஆன் 66:3

நபிமார்கள் பிள்ளைகள் பெற்றனர்

 என் மக்களே! அல்லாஹ் உங்களுக்காக இம்மார்க்கத்தைத் தேர்வு செய்துள்ளான். முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் மரணிக்கக் கூடாது  என்று இப்ராஹீமும், யஃகூபும் தமது பிள்ளைகளுக்கு வலியுறுத்தினர்.

திருக்குர்ஆன் 2:132

யஃகூபுக்கு மரணம் நெருங்கிய போது, நீங்கள் சாட்சிகளாக இருந்தீர்களா?  எனக்குப் பின் எதை வணங்குவீர்கள்?  என்று தமது பிள்ளைகளிடம் கேட்ட போது  உங்கள் இறைவனும், உங்கள் தந்தையரான இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் இறைவனுமாகிய ஒரே இறைவனையே வணங்குவோம். நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டவர்கள்  என்றே (பிள்ளைகள்) கூறினர்.

திருக்குர்ஆன் 2:133

அவர் தொழுமிடத்தில் நின்று தொழுது கொண்டிருந்த போது  யஹ்யாவைப் பற்றி அல்லாஹ் உமக்கு நற்செய்தி கூறுகிறான். அல்லாஹ்வின் வார்த்தையை அவர் உண்மைப்படுத்துவார். தலைவராகவும், ஒழுக்கக் கட்டுப்பாடு மிக்கவராகவும், நபியாகவும்,நல்லவராகவும் இருப்பார்  என்று வானவர்கள் அவரை அழைத்துக் கூறினர்.

திருக்குர்ஆன் 3:39

உமக்கு விளக்கம் வந்த பின் இது குறித்து உம்மிடம் யாரேனும் விதண்டாவாதம் செய்தால் வாருங்கள்! எங்கள் பிள்ளைகளையும், உங்கள் பிள்ளைகளையும், எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும் அழைப்போம். நாங்களும் வருகிறோம். நீங்களும் வாருங்கள்! பின்னர் இறைவனிடம் இறைஞ்சி பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபத்தைக் கேட்போம்  எனக் கூறுவீராக!

திருக்குர்ஆன் 3:61

ஆதமுடைய இரு புதல்வர்களின் உண்மை வரலாற்றை அவர்களுக்குக் கூறுவீராக! அவ்விருவரும் ஒரு வணக்கத்தைப் புரிந்தனர். அவர்களில் ஒருவரிடம் அது ஏற்கப்பட்டது. மற்றொருவரிடம் ஏற்கப்படவில்லை.  நான் உன்னைக் கொல்வேன் என்று (ஏற்கப்படாதவர்) கூறினார்.  (தன்னை) அஞ்சுவோரிடமிருந்தே அல்லாஹ் ஏற்றுக் கொள்வான்  என்று (ஏற்கப்பட்டவர்) கூறினார்.

திருக்குர்ஆன் 5:27

மலைகளைப் போன்ற அலை மீது அது அவர்களைக் கொண்டு சென்றது. விலகி இருந்த தன் மகனை நோக்கி  அருமை மகனே! எங்களுடன் ஏறிக் கொள்! (ஏக இறைவனை) மறுப்போருடன் ஆகி விடாதே!  என்று நூஹ் கூறினார்.

திருக்குர்ஆன் 11:42

நூஹ், தம் இறைவனை அழைத்தார்.  என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவன். உனது வாக்குறுதியும் உண்மையே. நீயே தீர்ப்பு வழங்குவோரில் மேலானவன்  என்றார்.

திருக்குர்ஆன் 11:45

அவரது மனைவியும் நின்று கொண்டிருந்தார். அவர் சிரித்தார். அவருக்கு இஸ்ஹாக் பற்றியும், இஸ்ஹாக்குக்குப் பின் யஃகூப் பற்றியும் நற்செய்தி கூறினோம்.

திருக்குர்ஆன் 11:71

என் அருமை மகனே! உனது கனவை உனது சகோதரர்களிடம் கூறாதே! அவர்கள் உனக்கு எதிராகக் கடும் சூழ்ச்சி செய்வார்கள். ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்க எதிரி என்று அவர் கூறினார்.

திருக்குர்ஆன் 12:5

என் மக்களே! ஒரே வாசல் வழியாக நுழையாதீர்கள்! பல்வேறு வாசல்கள் வழியாக நுழையுங்கள்! அல்லாஹ்விடமிருந்து சிறிதளவும் உங்களை நான் காப்பாற்ற முடியாது. அதிகாரம் அல்லாஹ்வுக்கே உள்ளது. அவனையே சார்ந்துள்ளேன். சார்ந்திருப்போர் அவனையே சார்ந்திருக்க வேண்டும்  என்றார்.

திருக்குர்ஆன் 12:67

உங்கள் தந்தையிடம் சென்று  எங்கள் தந்தையே! உமது மகன் திருடி விட்டான். அறிந்ததையே சாட்சி கூறுகிறோம். நாங்கள் மறைவானவற்றை அறிவோராக இல்லை என்று கூறுங்கள்!

திருக்குர்ஆன் 12:81

என் மக்களே! நீங்கள் சென்று யூஸுஃபையும், அவரது சகோதரரையும் நன்றாகத் தேடுங்கள்! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்! (ஏக இறைவனை) மறுக்கும் கூட்டத்தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்க மாட்டார்கள்  என்றார்.

திருக்குர்ஆன் 12:87

உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும், மக்களையும் ஏற்படுத்தினோம். எந்த ஒரு தூதரும் அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் கொண்டு வர முடியாது. ஒவ்வொரு தவணையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருக்குர்ஆன் 13:38

இறைவா! இவ்வூரை அபயமளிக்கக் கூடியதாக ஆக்குவாயாக! என்னையும், என் பிள்ளைகளையும் சிலைகளை வணங்குவதை விட்டும் காப்பாயாக!  என்று இப்ராஹீம் கூறியதை நினைவூட்டுவீராக!

திருக்குர்ஆன் 14:35

இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும் முதுமையில் எனக்கு வழங்கிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். என் இறைவன் பிரார்த்தனையை ஏற்பவன்.

திருக்குர்ஆன் 14:39

நீர் பயப்படாதீர்! அறிவுடைய ஆண் குழந்தை பற்றி உமக்கு நாங்கள் நற்செய்தி கூறுகிறோம்  என்று அவர்கள் கூறினர்.

திருக்குர்ஆன் 15:53

 ஸக்கரிய்யாவே! ஒரு புதல்வன் பற்றி உமக்கு நாம் நற்செய்தி கூறுகிறோம். அவரது பெயர் யஹ்யா. இப்பெயரிடப்பட்டவரை இவருக்கு முன் நாம் ஏற்படுத்தியதில்லை  (என இறைவன் கூறினான்)

திருக்குர்ஆன் 19:7

நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது.  அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

திருக்குர்ஆன் 33:59

அவருக்கு சகிப்புத் தன்மைமிக்க ஆண் குழந்தை பற்றி நற்செய்தி கூறினோம்.

திருக்குர்ஆன் 37:101

அவருடன் உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல்) அடைந்த போது  என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பது போல் கனவில் கண்டேன். நீ என்ன கருதுகிறாய் என்பதைச் சிந்தித்துக் கூறு  என்று கேட்டார்.  என் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்! அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள்  என்று பதிலளித்தார்.

திருக்குர்ஆன் 37:102

நபியும் நல்லவருமான இஸ்ஹாக்கைப் பற்றி அவருக்கு நற்செய்தி கூறினோம்.

திருக்குர்ஆன் 37:112

அவர்களைப் பற்றிப் பயந்தார்.  பயப்படாதீர்!  என்று அவர்கள் கூறினர். அறிவாளியான ஆண் குழந்தை பற்றி அவருக்கு நற்செய்தி கூறினர்.

திருக்குர்ஆன் 51:28

நபிமார்கள் மரணித்தனர்

யஃகூபுக்கு மரணம் நெருங்கிய போது, நீங்கள் சாட்சிகளாக இருந்தீர்களா?  எனக்குப் பின் எதை வணங்குவீர்கள்?  என்று தமது பிள்ளைகளிடம் கேட்ட போது  உங்கள் இறைவனும், உங்கள் தந்தையரான இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் இறைவனுமாகிய ஒரே இறைவனையே வணங்குவோம். நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டவர்கள்  என்றே (பிள்ளைகள்) கூறினர்.

திருக்குர்ஆன் 2:133

முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா?வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான்.

திருக்குர்ஆன் 3:144

எனது தொழுகை, எனது வணக்க முறை, எனது வாழ்வு, எனது மரணம் யாவும் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியன; அவனுக்கு நிகரானவன் இல்லை;இவ்வாறே கட்டளையிடப்பட்டுள்ளேன்; முஸ்லிம்களில் நான் முதலாமவன்  என்றும் கூறுவீராக!

திருக்குர்ஆன் 6:162,163

அவர் பிறந்த நாளிலும், அவர் மரணிக்கும் நாளிலும், உயிருடன் அவர் எழுப்பப்படும் நாளிலும் அவர் மீது நிம்மதி உண்டு.

திருக்குர்ஆன் 19:15

உணவு உட்கொள்ளாத உடலாக அவர்களை நாம் ஆக்கவில்லை. அவர்கள் நிரந்தரமாகவும் இருக்கவில்லை.

திருக்குர்ஆன் 21:8

(முஹம்மதே!) உமக்கு முன் எந்த மனிதருக்கும் நாம் நிரந்தரத்தை ஏற்படுத்தவில்லை. நீர் மரணித்து விட்டால் அவர்கள் நிலையாக இருக்கக் கூடியவர்களா?

திருக்குர்ஆன் 21:34

அவனே என்னை மரணிக்கச் செய்கிறான். பின்னர் எனக்கு உயிர் கொடுப்பான்.

திருக்குர்ஆன் 26:81

அவருக்கு நாம் மரணத்தை ஏற்படுத்திய போது பூமியில் ஊர்ந்து செல்லும் உயிரினம் (கரையான்) தான் அவரது மரணத்தைக் காட்டிக் கொடுத்தது. அது அவரது கைத்தடியைச் சாப்பிட்டது. அவர் கீழே விழுந்ததும்  நமக்கு மறைவானவை தெரிந்திருந்தால் இழிவு தரும் இத்துன்பத்தில் இருந்திருக்க மாட்டோமே  என்பதை ஜின்கள் விளங்கிக் கொண்டன.

திருக்குர்ஆன் 34:14

(முஹம்மதே!) நீர் இறப்பவரே. அவர்களும் இறப்போரே.

திருக்குர்ஆன் 39:30

நபிமார்கள் கவலைப்பட்டனர்

(இறை) மறுப்பை நோக்கி விரைந்து செல்வோர் குறித்து நீர் கவலைப்படாதீர்! அவர்கள் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்ய முடியாது. மறுமையில் அவர்களுக்கு எந்தப் பாக்கியமும் இருக்கக் கூடாதென்று அல்லாஹ் நாடுகிறான். அவர்களுக்குக் கடும் வேதனை உண்டு.

திருக்குர்ஆன் 3:176

நம்பிக்கை கொண்டோம் என்று தம் வாய்களால் கூறி, உள்ளங்களால் நம்பிக்கை கொள்ளாமல் (இறை) மறுப்பை நோக்கி விரைந்து செல்வோர் குறித்தும்,  யூதர்களைக் குறித்தும் தூதரே கவலைப்படாதீர்

திருக்குர்ஆன் 5:41

(முஹம்மதே!) அவர்கள் கூறுவது உம்மைக் கவலையில் ஆழ்த்துவதை அறிவோம். அவர்கள் உம்மைப் பொய்யரெனக் கூறவில்லை. மாறாக அநீதி இழைத்தோர் அல்லாஹ்வின் வசனங்களையே மறுக்கின்றனர்.

திருக்குர்ஆன் 6:33

அவர்களின் கைகள் (உண்பதற்கு) அதை நோக்கிச் செல்லாததைக் கண்ட போது,அறிமுகமற்ற இனமாக அவர்களைக் கருதினார். அவர்களைப் பற்றி மனதுக்குள் பயந்தார். பயப்படாதீர்! நாங்கள் லூத் உடைய சமுதாயத்திற்காக அனுப்பப்பட்டுள்ளோம் என்று அவர்கள் கூறினர்.

திருக்குர்ஆன் 11:70

அவரை நீங்கள் கூட்டிச் செல்வது எனக்குக் கவலையளிக்கும். அவரை நீங்கள் கவனிக்காது இருக்கும் போது ஓநாய் அவரைத் தின்று விடுமோ என அஞ்சுகிறேன் என்று அவர் கூறினார்.

திருக்குர்ஆன் 12:13

அவர்களை விட்டும் அவர் ஒதுங்கிக் கொண்டார்! யூஸுஃபுக்கு ஏற்பட்ட துக்கமே என்றார். கவலையால் அவரது கண்கள் வெளுத்தன. அவர் (துக்கத்தை) அடக்கிக் கொள்பவராக இருந்தார்.

திருக்குர்ஆன் 12:84

எனது துக்கத்தையும், கவலையையும் அல்லாஹ்விடமே முறையிடுகிறேன். நீங்கள் அறியாததை அல்லாஹ்விடமிருந்து அறிகிறேன்  என்று அவர் கூறினார்.

திருக்குர்ஆன் 12:86

நபிமார்கள் கொல்லப்பட்டனர்

அவர்களுக்கு இழிவும், வறுமையும் விதிக்கப்பட்டன. அல்லாஹ்வின் கோபத்திற்கும் ஆளானார்கள். அல்லாஹ்வின் வசனங்களை மறுப்போராக அவர்கள் இருந்ததும்,நியாயமின்றி நபிமார்களைக் கொன்றதும் இதற்குக் காரணம். மேலும் பாவம் செய்து, வரம்பு மீறிக் கொண்டே இருந்ததும் இதற்குக் காரணம்.

திருக்குர்ஆன் 2:61

மூஸாவுக்கு வேதத்தை வழங்கினோம். அவருக்குப் பின் பல தூதர்களைத் தொடரச் செய்தோம். மர்யமுடைய மகன் ஈஸாவுக்குத் தெளிவான சான்றுகளை வழங்கினோம். ரூஹுல் குதுஸ் மூலம் அவரைப் பலப்படுத்தினோம். நீங்கள் விரும்பாததைத் தூதர்கள் கொண்டு வந்த போதெல்லாம் அகந்தை கொண்டீர்கள். சிலரைப் பொய்யரென்றீர்கள். சிலரைக் கொன்றீர்கள்.

திருக்குர்ஆன் 2:87

 அல்லாஹ் அருளியதை நம்புங்கள்!  என்று அவர்களிடம் கூறப்பட்டால் எங்களுக்கு அருளப்பட்டதையே நம்புவோம்  என்று கூறுகின்றனர். அதற்குப் பிறகு உள்ளதை (குர்ஆனை) மறுக்கின்றனர். அது உண்மையாகவும், அவர்களிடம் இருப்பதை உண்மைப்படுத்தக் கூடியதாகவும் இருக்கிறது.  நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதற்கு முன் அல்லாஹ்வின் நபிமார்களை ஏன் கொலை செய்தீர்கள்?  என்று (முஹம்மதே!) கேட்பீராக!

திருக்குர்ஆன் 2:91

அல்லாஹ்வின் வசனங்களை ஏற்க மறுத்து, நபிமார்களை நியாயமின்றி கொலை செய்து,நீதியை ஏவும் மக்களையும் கொலை செய்வோருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு என எச்சரிப்பீராக!

திருக்குர்ஆன் 3:21

அல்லாஹ்வின் உடன்படிக்கையும், மனிதர்களின் உடன்படிக்கையும் இருந்தால் தவிர அவர்கள் எங்கிருந்த போதும் அவர்களுக்கு இழிவு விதிக்கப்பட்டு விட்டது. அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளானார்கள். அவர்களுக்கு வறுமை விதிக்கப்பட்டு விட்டது. அல்லாஹ்வின் வசனங்களை அவர்கள் ஏற்க மறுத்ததும், நபிமார்களை அநியாயமாகக் கொலை செய்ததுமே இதற்குக் காரணம். மேலும் அவர்கள் பாவம் செய்ததும் வரம்பு மீறியதும் இதற்குக் காரணம்.

திருக்குர்ஆன் 3:112

அல்லாஹ் தேவையுள்ளவன்; நாங்களோ தேவையற்றோர்  என்று கூறியோரின் கூற்றை அல்லாஹ் செவியுற்று விட்டான். அவர்கள் கூறியதையும் நியாயமின்றி நபிமார்களை அவர்கள் கொலை செய்ததையும் பதிவு செய்வோம்.  சுட்டெரிக்கும் வேதனையைச் சுவையுங்கள்! இது நீங்கள் செய்த வினை. அடியார்களுக்கு அல்லாஹ் அநீதி இழைப்பவன் அல்லன்  எனவும் கூறுவோம்.

திருக்குர்ஆன் 3:181,182

எங்களிடம் ஒரு காணிக்கையைக் கொண்டு வந்து அதை நெருப்பு சாப்பிடாத வரை எந்தத் தூதரையும் நாங்கள் நம்பக் கூடாது என அல்லாஹ் எங்களிடம் உறுதிமொழி வாங்கியுள்ளான்  என்று அவர்கள் கூறினர். எனக்கு முன்னால் பல தூதர்கள் தெளிவான சான்றுகளையும், நீங்கள் கேட்டதையும் கொண்டு வந்தனர்.  நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் ஏன் அவர்களைக் கொலை செய்தீர்கள்?  என்று (முஹம்மதே!) கேட்பீராக!

திருக்குர்ஆன் 3:183

அவர்கள் தமது உடன்படிக்கையை முறித்ததாலும், அல்லாஹ்வின் வசனங்களை ஏற்க மறுத்ததாலும், நியாயமின்றி நபிமார்களைக் கொலை செய்ததாலும், எங்கள் உள்ளங்கள் மூடப்பட்டுள்ளன என்று கூறியதாலும், (இதற்கும்) மேலாக அவர்கள் (ஏக இறைவனை) மறுத்ததாலும் அவர்களின் உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிட்டான். அவர்கள் குறைவாகவே நம்பிக்கை கொள்கின்றனர்.

திருக்குர்ஆன் 4:155

இஸ்ராயீலின் மக்களிடம் உறுதி மொழி எடுத்தோம். அவர்களிடம் தூதர்களையும் அனுப்பினோம். அவர்கள் விரும்பாததைத் தூதர் அவர்களிடம் கொண்டு வந்த போதெல்லாம் சிலரைப் பொய்யர் என்றனர். மற்றும் சிலரைக் கொன்றனர்.

திருக்குர்ஆன் 5:70

நபிமார்கள் நோய் நொடிக்கு ஆளானார்கள்

உங்களுக்கு முன் சென்றோருக்கு ஏற்பட்டது போல் உங்களுக்கும் ஏற்படாமல் சொர்க்கத்தில் நுழையலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? அவர்களுக்கு வறுமையும், துன்பமும் ஏற்பட்டன.  அல்லாஹ்வின் உதவி எப்போது?  என்று (இறைத்) தூதரும் அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரும் கூறுமளவுக்கு அலைக்கழிக்கப்பட்டனர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் உதவி அருகிலேயே உள்ளது.

திருக்குர்ஆன் 2:214

(முஹம்மதே!) உமக்கு முன் சென்ற தூதர்கள் பொய்யரெனக் கருதப்பட்டுள்ளனர். அவர்கள் பொய்யரெனக் கருதப்பட்டதையும், தொல்லைப்படுத்தப்பட்டதையும் சகித்துக் கொண்டனர். முடிவில் அவர்களுக்கு நமது உதவி வந்தது. அல்லாஹ்வின் வார்த்தைகளை மாற்றுபவன் யாருமில்லை. தூதர்கள் பற்றிய செய்தி உமக்கு (ஏற்கனவே) வந்துள்ளது.

திருக்குர்ஆன் 6:34

முடிவில் தூதர்கள் நம்பிக்கை இழந்து, தாங்கள் நிராகரிக்கப்பட்டு விட்டோம் என்று எண்ணிய போது நமது உதவி அவர்களிடம் வந்தது. நாம் நாடியோர் காப்பாற்றப்பட்டனர். குற்றம் புரிந்த கூட்டத்தை விட்டும் நமது வேதனை நீக்கப்படாது.

திருக்குர்ஆன் 12:110

அல்லாஹ்வையே சாராதிருக்க எங்களுக்கு என்ன நேர்ந்தது? அவன் எங்களுக்கு எங்களின் பாதைகளைக் காட்டி விட்டான். நீங்கள் எங்களுக்கு அளிக்கும் துன்பங்களைச் சகித்துக் கொள்வோம். உறுதியான நம்பிக்கை வைப்போர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்  (என்று தூதர்கள் கூறினர்.)

திருக்குர்ஆன் 14:12

நான் நோயுறும் போது அவனே எனக்கு நிவாரணம் தருகிறான் (என்று இப்ராஹீம் கூறினார்.)

திருக்குர்ஆன் 26:80

நமது அடியார் அய்யூபை நினைவூட்டுவீராக!  ஷைத்தான் வேதனையாலும், துன்புறுத்தலாலும் என்னைத் தீண்டி விட்டான்  என்று தமது இறைவனிடம் அவர் பிரார்த்தித்த போது, உமது காலால் மிதிப்பீராக! இதோ குளிர்ந்த குளிக்குமிடம்! பானம்! (எனக் கூறினோம்).

திருக்குர்ஆன் 38:41,42

நபிமார்களும் மறுமையில் விசாரிக்கப்படுவார்கள்

தூதர்களை அல்லாஹ் ஒன்று திரட்டும் நாளில்  உங்களுக்கு என்ன பதில் அளிக்கப்பட்டது?  என்று கேட்பான்.  எங்களுக்கு (இது பற்றி) எந்த அறிவும் இல்லை. நீயே மறைவானவற்றை அறிபவன்  என்று அவர்கள் கூறுவார்கள்.

திருக்குர்ஆன் 5:109

மர்யமின் மகன் ஈஸாவே! அல்லாஹ்வையன்றி என்னையும், என் தாயாரையும் கடவுள்களாக்கிக் கொள்ளுங்கள்!  என நீர் தான் மக்களுக்குக் கூறினீரா?  என்று அல்லாஹ் (மறுமையில்) கேட்கும் போது,  நீ தூயவன். எனக்குத் தகுதியில்லாத வார்த்தையை நான் கூற உரிமையில்லாதவன். நான் அவ்வாறு கூறியிருந்தால் அதை நீ அறிவாய். எனக்குள் உள்ளதை நீ அறிவாய்! உனக்குள் உள்ளதை நான் அறிய மாட்டேன். நீயே மறைவானவற்றை அறிபவன்  என்று அவர் பதிலளிப்பார்.  நீ எனக்குக் கட்டளையிட்டபடி எனது இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்!  என்பதைத் தவிர வேறு எதையும் நான் அவர்களிடம் கூறவில்லை. நான் அவர்களுடன் இருக்கும் போது அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். என்னை நீ கைப்பற்றியதும் நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். நீ அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவன்.

திருக்குர்ஆன் 5:116,117

யாருக்குத் தூதர்கள் அனுப்பப்பட்டார்களோ அவர்களையும் விசாரிப்போம். தூதர்களையும் விசாரிப்போம்.

திருக்குர்ஆன் 7:6

பூமி தனது இறைவனின் ஒளியால் பிரகாசிக்கும். (பதிவுப்) புத்தகம் (முன்) வைக்கப்படும். நபிமார்கள் மற்றும் சாட்சிகள் கொண்டு வரப்படுவார்கள். அவர்களிடையே நியாயமாகத் தீர்ப்பு வழங்கப்படும். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 39:69

தூதர்களுக்கு நேரம் குறிக்கப்படும் போது (அது நடந்தேறும்)

திருக்குர்ஆன் 77:11

நபிமார்கள் மறுமையில் கை விடுவார்கள்

(முஹம்மதே!) ஒவ்வொரு சமுதாயத்திற்கும் சாட்சியை நாம் கொண்டு வந்து, இவர்களுக்கு எதிராக உம்மைச் சாட்சியாக நாம் கொண்டு வரும் போது (இவர்களின் நிலைமை) எப்படி இருக்கும்?

திருக்குர்ஆன் 4:41

மர்யமின் மகன் ஈஸாவே! அல்லாஹ்வையன்றி என்னையும், என் தாயாரையும் கடவுள்களாக்கிக் கொள்ளுங்கள்!  என நீர் தான் மக்களுக்குக் கூறினீரா?  என்று அல்லாஹ் (மறுமையில்) கேட்கும் போது,  நீ தூயவன். எனக்குத் தகுதியில்லாத வார்த்தையை நான் கூற உரிமையில்லாதவன். நான் அவ்வாறு கூறியிருந்தால் அதை நீ அறிவாய். எனக்குள் உள்ளதை நீ அறிவாய்! உனக்குள் உள்ளதை நான் அறிய மாட்டேன். நீயே மறைவானவற்றை அறிபவன்  என்று அவர் பதிலளிப்பார்.  நீ எனக்குக் கட்டளையிட்ட படி எனது இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்!  என்பதைத் தவிர வேறு எதையும் நான் அவர்களிடம் கூறவில்லை. நான் அவர்களுடன் இருக்கும் போது அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். என்னை நீ கைப்பற்றியதும் நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். நீ அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவன்.

திருக்குர்ஆன் 5:116,117

தவறு செய்தால் நபிமார்களும் தப்ப முடியாது

யூதர்களும், கிறித்தவர்களும் அவர்களின் மார்க்கத்தை நீர் பின்பற்றும் வரை உம்மை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள்.  அல்லாஹ்வின் வழியே (சரியான) வழியாகும் எனக் கூறுவீராக! உமக்கு விளக்கம் வந்த பின் அவர்களின் மனோ இச்சைகளை நீர் பின்பற்றினால், அல்லாஹ்விடமிருந்து காப்பாற்றுபவனோ, உதவுபவனோ உமக்கு இல்லை.

திருக்குர்ஆன் 2:120

என் இறைவனுக்கு நான் மாறு செய்தால் மகத்தான நாளின் வேதனையை அஞ்சுகிறேன்  எனக் கூறுவீராக!

திருக்குர்ஆன் 6:15

அவர்களுக்கு நமது தெளிவான வசனங்கள் கூறப்பட்டால்  இது அல்லாத வேறு குர்ஆனைக் கொண்டு வருவீராக! அல்லது இதை மாற்றியமைப்பீராக!  என நமது சந்திப்பை நம்பாதோர் கூறுகின்றனர். நானாக இதை மாற்றியமைத்திட எனக்கு அதிகாரம் இல்லை. எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்றுவதில்லை. என் இறைவனுக்கு நான் மாறு செய்து விட்டால் மகத்தான நாளின் வேதனையை அஞ்சுகிறேன்  என (முஹம்மதே!) கூறுவீராக!

திருக்குர்ஆன் 10:15

அல்லாஹ்வையன்றி உமக்குப் பயனும், தீங்கும் தராதவற்றைப் பிரார்த்திக்காதீர்! (அவ்வாறு) செய்தால் நீர் அநீதி இழைத்தவராவீர்!

திருக்குர்ஆன் 10:106

என் சமுதாயமே! நான் எனது இறைவனிடமிருந்து பெற்ற சான்றுடன் இருந்து, அவன் எனக்கு அருளும் செய்திருக்க, அவனுக்கு நான் மாறு செய்தால் அல்லாஹ்விடமிருந்து என்னைக் காப்பாற்றுபவன் யார்? என்பதற்கு எனக்குப் பதில் சொல்லுங்கள்! அப்போது நஷ்டத்தையே எனக்கு அதிகமாக்குவீர்கள்  என்று அவர் கேட்டார்.

திருக்குர்ஆன் 11:63

என் இறைவனுக்கு நான் மாறு செய்தால் மகத்தான நாளின் வேதனைக்கு அஞ்சுகிறேன்  என்றும் கூறுவீராக!

திருக்குர்ஆன் 39:13

நன்மையோ, தீமையோ செய்ய நபிமார்களுக்கு இயலாது

அல்லாஹ் உமக்குத் துன்பத்தை ஏற்படுத்தினால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. அவன் உமக்கு நன்மையை ஏற்படுத்தி விட்டால் அவன் அனைத்துப் பொருட்களின் மீது ஆற்றலுடையவன்.

திருக்குர்ஆன் 6:17

அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும் ,நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்  என்று (முஹம்மதே!)  கூறுவீராக!

திருக்குர்ஆன் 7:188

அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கே தீங்கு செய்யவோ நன்மை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை  என்று (முஹம்மதே!) கூறுவீராக! ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு காலக் கெடு உள்ளது. அவர்களின் காலக்கெடு வரும் போது சிறிது நேரம் அவர்கள் பிந்தவும் மாட்டார்கள். முந்தவும் மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 10:49

அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன் 10:107

அவனன்றி வேறு கடவுள்களை ஏற்படுத்திக் கொள்வேனா? அளவற்ற அருளாளன் எனக்கு ஒரு தீங்கை நாடி விட்டால் அவர்களின் பரிந்துரை எனக்கு எந்தப் பயனையும் அளிக்காது. அவர்கள் என்னைக் காப்பாற்றவும் மாட்டார்கள் (என்று தூதர்கள் கூறினர்.)

திருக்குர்ஆன் 36:23

வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?  என்று அவர்களிடம் நீர் கேட்டால்  அல்லாஹ்  என்று கூறுவார்கள்.  அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றைப் பற்றிக் கூறுங்கள்!  என்று கேட்பீராக!  அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கை நாடி விட்டால் அவனது தீங்கை அவர்கள் நீக்கி விடுவார்களா? அல்லது அவன் எனக்கு அருளை நாடினால் அவர்கள் அவனது அருளைத் தடுக்கக் கூடியவர்களா?அல்லாஹ் எனக்குப் போதும். சார்ந்திருப்போர் அவனையே சார்ந்திருப்பார்கள்  என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 39:38

நான் உங்களுக்குத் தீங்கு செய்யவும், நன்மை செய்யவும் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 72:21

நபிமார்களிடம் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் இல்லை

அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் உள்ளன; மறைவானதை அறிவேன்; என்று உங்களிடம் கூற மாட்டேன். நான் வானவர் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர (வேறெதனையும்) நான் பின்பற்றுவதில்லை என்று (முஹம்மதே!) கூறுவீராக!  குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? சிந்திக்க மாட்டீர்களா?  என்று கேட்பீராக!

திருக்குர்ஆன் 6:50

என்னிடம் அல்லாஹ்வின் கருவூலங்கள் உள்ளன என்று உங்களிடம் கூற மாட்டேன். மறைவானவற்றையும் அறிய மாட்டேன். நான் வானவர் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். உங்கள் கண்கள் இழிவாகக் காண்போருக்கு அல்லாஹ் எந்த நன்மையும் அளிக்கவே மாட்டான் எனவும் கூற மாட்டேன். அவர்களின் உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் மிக அறிபவன். (அவ்வாறு கூறினால்) நான் அநீதி இழைத்தவனாகி விடுவேன்  (என நூஹ் கூறினார்.)

திருக்குர்ஆன் 11:31

மகனையும், மனைவியையும் நூஹ் நபியால் காப்பாற்ற முடியவில்லை

மலைகளைப் போன்ற அலை மீது அது அவர்களைக் கொண்டு சென்றது. விலகி இருந்த தன் மகனை நோக்கி  அருமை மகனே! எங்களுடன் ஏறிக் கொள்! (ஏக இறைவனை) மறுப்போருடன் ஆகி விடாதே!  என்று நூஹ் கூறினார்.  ஒரு மலையில் ஏறிக் கொள்வேன்; அது என்னைத் தண்ணீரிலிருந்து காப்பாற்றும்  என்று அவன் கூறினான். அல்லாஹ் அருள் புரிந்தவர்களைத் தவிர அல்லாஹ்வின் கட்டளையிலிருந்து காப்பாற்றுபவன் எவனும் இன்று இல்லை  என்று அவர் கூறினார். அவ்விருவருக்கிடையே அலை குறுக்கிட்டது. அவன் மூழ்கடிக்கப்பட்டோரில்  ஆகி விட்டான்.

திருக்குர்ஆன் 11:42

நூஹுடைய மனைவியையும், லூத்துடைய மனைவியையும் (தன்னை) மறுப்போருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் காட்டுகிறான். அவ்விருவரும் நமது இரு நல்லடியார்களின் மனைவியராக இருந்தனர். அவர்களுக்குத் துரோகம் செய்தனர். எனவே அவ்விருவரையும் அல்லாஹ்விடமிருந்து அவர்கள் சிறிதளவும் காப்பாற்றவில்லை.  இருவரும் நரகில் நுழைவோருடன் சேர்ந்து நுழையுங்கள்!  என்று கூறப்பட்டது.

திருக்குர்ஆன் 66:10

தமது சந்ததிகளுக்கும், தந்தைக்கும் இப்ராஹீம் நபியால் உதவ முடியவில்லை

இப்ராஹீமை அவரது இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்த போது அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார்.  உம்மை மனிதர்களுக்குத் தலைவராக்கப் போகிறேன்  என்று அவன் கூறினான்.  எனது வழித் தோன்றல்களிலும்  (தலைவர்களை ஆக்குவாயாக!) என்று அவர் கேட்டார்.  என் வாக்குறுதி (உமது வழித் தோன்றல்களில்) அநீதி இழைத்தோரைச் சேராது  என்று அவன் கூறினான்.

திருக்குர்ஆன் 2:124

இப்ராஹீம் தம் தந்தைக்காகப் பாவ மன்னிப்புத் தேடியது, தந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவே. அவர் அல்லாஹ்வின் எதிரி என்பது அவருக்குத் தெரிந்த பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் பணிவுள்ளவர்; சகிப்புத் தன்மை உள்ளவர்.

திருக்குர்ஆன் 9:114

ஈஸா நபி தன்னைத் தானே காப்பாற்ற இயலாது

மர்யமுடைய மகன் மஸீஹ் தான் அல்லாஹ்  என்று கூறியோர் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர்.  மர்யமின் மகன் மஸீஹையும், அவரது தாயாரையும், பூமியில் உள்ள அனைவரையும் அல்லாஹ் அழிக்க நாடினால் அவனிடமிருந்து (அதைத் தடுக்க) சிறிதளவேனும் சக்தி பெற்றவர் யார்?  என்று நீர் கேட்பீராக! வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவைகளின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைப்பான். அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.

திருக்குர்ஆன் 5:17

மகன் காணாமல் போவதை யஃகூப் நபியால் தடுக்க முடியவில்லை.

அவர்களை விட்டும் அவர் ஒதுங்கிக் கொண்டார்! யூஸுஃபுக்கு ஏற்பட்ட துக்கமே என்றார். கவலையால் அவரது கண்கள் வெளுத்தன. அவர் (துக்கத்தை) அடக்கிக் கொள்பவராக இருந்தார்.  அல்லாஹ்வின் மீது ஆணையாக! உமது உடல் மெலியும் வரை, அல்லது இறக்கும் வரை நீர் யூஸுஃபை நினைத்துக் கொண்டேயிருப்பீர் (போலும்)  என்று அவர்கள் கூறினர்.  எனது துக்கத்தையும், கவலையையும் அல்லாஹ்விடமே முறையிடுகிறேன். நீங்கள் அறியாததை அல்லாஹ்விடமிருந்து அறிகிறேன்  என்று அவர் கூறினார்.

திருக்குர்ஆன் 12:84,85,86

சிறைக்குச் செல்லாமல் யூஸுஃப் நபியால் தம்மைக் காப்பாற்ற முடியவில்லை

(அவர் குற்றமற்றவர் என்பதற்கான) சான்றுகளைக் கண்ட பின்னரும்,  குறிப்பிட்ட காலம் வரை அவரை (யூஸுஃப) சிறையிலடைக்க வேண்டும்  என்று அவர்களுக்குத் தோன்றியது.

திருக்குர்ஆன் 12:35

அய்யூப் நபியால் தம்மைக் காப்பாற்ற முடியவில்லை

எனக்குத் துன்பம் நேர்ந்து விட்டது. நீ கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன்  என அய்யூப் தமது இறைவனை அழைத்த போது, அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். அவருக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கினோம். அவரது குடும்பத்தாரையும் அவர்களுடன் அவர்களைப் போன்றோரையும் நம் அருளாக அவருக்கு வழங்கினோம். வணங்குவோருக்கு இது அறிவுரை.

திருக்குர்ஆன் 21:83,84

நமது அடியார் அய்யூபை நினைவூட்டுவீராக! ஷைத்தான் வேதனையாலும், துன்புறுத்தலாலும் என்னைத் தீண்டி விட்டான் என்று தமது இறைவனிடம் அவர் பிரார்த்தித்த போது, உமது காலால் மிதிப்பீராக! இதோ குளிர்ந்த குளிக்குமிடம்! பானம்! (எனக் கூறினோம்).

திருக்குர்ஆன் 38:41,42

யூனுஸ் நபி நினைத்தது நடக்கவில்லை

மீனுடையவர் (யூனுஸ்) கோபித்துக் கொண்டு சென்றார்.  அவர் மீது நாம் சக்தி பெற மாட்டோம்  என்று நினைத்தார்.  உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன்  என்று இருள்களிலிருந்து அவர் அழைத்தார்.

திருக்குர்ஆன் 21:87

யூனுஸ் தூதர்களில் ஒருவர். நிரப்பப்பட்ட கப்பலை நோக்கி அவர் ஒளிந்தோடிய போது,அவர்கள் சீட்டுக் குலுக்கினர். தோற்றவர்களில் அவர் ஆகி விட்டார். இழிந்தவராக இருக்கும் நிலையில் அவரை மீன் விழுங்கியது. அவர் (நம்மை) துதிக்காது இருந்தால் அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அதன் வயிற்றிலேயே தங்கியிருப்பார்.

திருக்குர்ஆன் 37:139-144

உமது இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுத்திருப்பீராக! மீனுடையவர்(யூனுஸ்) போல் நீர் ஆகி விடாதீர்! அவர் துக்கம் நிறைந்தவராக (இறைவனை) அழைத்தார். அவரது இறைவனிடமிருந்து அவருக்கு அருள் கிடைத்திருக்காவிட்டால் அவர் இழிந்தவராக வெட்ட வெளியில் எறியப்பட்டிருப்பார். ஆயினும் அவரை அவரது இறைவன் தேர்வு செய்தான். அவரை நல்லவராக்கினான்.

திருக்குர்ஆன் 68:48-50

லூத் நபியால் தம் மனைவியைக் காப்பாற்ற முடியவில்லை

எனவே அவரது மனைவியைத் தவிர அவரது குடும்பத்தாரையும், அவரையும் காப்பாற்றினோம். அவள் அழிந்து போவோரில் ஒருத்தியாக இருந்தாள்.

திருக்குர்ஆன் 7:83

நூஹுடைய மனைவியையும், லூத்துடைய மனைவியையும் (தன்னை) மறுப்போருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் காட்டுகிறான். அவ்விருவரும் நமது இரு நல்லடியார்களின் மனைவியராக இருந்தனர். அவர்களுக்குத் துரோகம் செய்தனர். எனவே அவ்விருவரையும் அல்லாஹ்விடமிருந்து அவர்கள் சிறிதளவும் காப்பாற்றவில்லை.  இருவரும் நரகில் நுழைவோருடன் சேர்ந்து நுழையுங்கள்! என்று கூறப்பட்டது.

திருக்குர்ஆன் 66:10

லூத்துடைய குடும்பத்தாரில் அவரது மனைவியைத் தவிர அவர்கள் அனைவரையும் நாங்கள் காப்பாற்றுவோம். அவள் அழிபவள் என்று நிர்ணயித்து விட்டோம்  என்று (வானவர்கள்) கூறினர்.

திருக்குர்ஆன் 15:59,60

முதுமை வரை இப்ராஹீம் நபிக்கு பிள்ளை இல்லை

இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும் முதுமையில் எனக்கு வழங்கிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். என் இறைவன் பிரார்த்தனையை ஏற்பவன்.

திருக்குர்ஆன் 14:39

நீர் பயப்படாதீர்! அறிவுடைய ஆண் குழந்தை பற்றி உமக்கு நாங்கள் நற்செய்தி கூறுகிறோம்  என்று அவர்கள் கூறினர்.  எனக்கு முதுமை ஏற்பட்ட நிலையில் எனக்கு நற்செய்தி கூறுகிறீர்களா? எதனடிப்படையில் நற்செய்தி கூறுகிறீர்கள்?  என்று அவர் (இப்ராஹீம்) கேட்டார்.

திருக்குர்ஆன் 15:54

முதுமை வரை ஸக்கரியா நபிக்குப் பிள்ளை இல்லை

அப்போது தான் ஸக்கரிய்யா  இறைவா! உன்னிடமிருந்து எனக்கொரு தூய குழந்தையைத் தருவாயாக! நீ வேண்டுதலைச் செவியுறுபவன்  என்று தம் இறைவனிடம் வேண்டினார். அவர் தொழுமிடத்தில் நின்று தொழுது கொண்டிருந்த போது யஹ்யாவைப் பற்றி அல்லாஹ் உமக்கு நற்செய்தி கூறுகிறான். அல்லாஹ்வின்  வார்த்தையை அவர் உண்மைப்படுத்துவார். தலைவராகவும், ஒழுக்கக்  கட்டுப்பாடு மிக்கவராகவும், நபியாகவும், நல்லவராகவும் இருப்பார்  என்று வானவர்கள் அவரை அழைத்துக் கூறினர்.  என் இறைவா! எனக்கு முதுமை வந்து விட்ட நிலையிலும், என் மனைவி மலடியாகவுள்ள நிலையிலும் எனக்கு எவ்வாறு குழந்தை உருவாகும்?  என்று அவர் கேட்டார்.  தான் நாடியதை அல்லாஹ் இப்படித் தான் செய்வான்  என்று (இறைவன்) கூறினான்.

திருக்குர்ஆன் 3:38-40

(இது) உமது இறைவன் தனது அடியார் ஸக்கரிய்யாவுக்கு செய்த அருளைக் கூறுதல்! அவர் தமது இறைவனை இரகசியமாக அழைத்துப் பிரார்த்தித்தார். என் இறைவா! என் எலும்பு பலவீனமடைந்து விட்டது. தலையும் நரையால் மின்னுகிறது. என் இறைவா! உன்னிடம் பிரார்த்தித்ததில் நான் துர்ப்பாக்கியசாலியாக இருந்ததில்லை. எனக்குப் பின் உறவினர்கள் குறித்து நான் அஞ்சுகிறேன். என் மனைவியும் பிள்ளைப்பேறு அற்றவளாக இருக்கிறார். எனவே ஒரு பொறுப்பாளரை நீ எனக்கு வழங்குவாயாக!

திருக்குர்ஆன் 19:2-5

என் இறைவா! என்னைத் தனியாளாக விட்டு விடாதே! நீ மிகச் சிறந்த உரிமையாளன்  என்று ஸக்கரிய்யா தமது இறைவனை அழைத்த போது, அவருக்காக (அவரது பிரார்த்தனையை) ஏற்றோம். அவருக்கு யஹ்யாவை அன்பளிப்பாக அளித்தோம். அவரது மனைவியை அவருக்காக (குழந்தை பெறும்) தகுதியுடையவராக ஆக்கினோம். அவர்கள் நன்மைகளை நோக்கி விரைந்து செல்வோராகவும், ஆர்வத்துடனும் அச்சத்துடனும் நம்மிடம் பிரார்த்திப்போராகவும் இருந்தனர். நமக்குப் பணிவோராகவும் இருந்தனர்.

திருக்குர்ஆன் 21:89,90

நபிமார்களையும் அல்லாஹ் தான் மன்னிக்க முடியும்

அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுவீராக! அல்லாஹ் மன்னிப்பவனாகவும்,  நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

திருக்குர்ஆன் 4:106

எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கு இழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்து,அருள் புரியவில்லையானால் நஷ்டமடைந்தோராவோம்  என்று அவ்விருவரும் கூறினர்.

திருக்குர்ஆன் 7:23

 என் இறைவா! என்னையும், என் சகோதரரையும் மன்னிப்பாயாக! எங்களை உனது அருளில் நுழைப்பாயாக! நீ கருணையாளர்களில் மிகவும் கருணையாளன்  என்று (மூஸா) கூறினார்.

திருக்குர்ஆன் 7:151

இறைவா! எனக்கு அறிவு இல்லாதது பற்றி உன்னிடம் கேட்பதை விட்டும் உன்னிடமே நான் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ என்னை மன்னித்து அருள் புரியா விட்டால் நஷ்டமடைந்தவனாக ஆகி விடுவேன்  என்று அவர் (நூஹ்) கூறினார்.

திருக்குர்ஆன் 11:47

என் இறைவா! மன்னித்து அருள்புரிவாயாக! நீ அருள்புரிவோரில் சிறந்தவன்  எனக் கூறுவீராக!

திருக்குர்ஆன் 23:118

தீர்ப்பு நாளில் என் தவறை அவன் மன்னிக்க வேண்டும்  என ஆசைப்படுகிறேன் (என்று இப்ராஹீம் கூறினார்.)

திருக்குர்ஆன் 26:82

என் இறைவா! எனக்கே நான் தீங்கு இழைத்து விட்டேன். எனவே என்னை மன்னிப்பாயாக!  என்று (மூஸா) கூறினார். அவன் அவரை மன்னித்தான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன் 28:16

உமது ஆட்டைத் தனது ஆட்டுடன் சேர்க்க அவர் கேட்டதன் மூலம் உமக்கு அநீதி இழைத்து விட்டார். உங்களில் கூட்டுச் சேர்வோரில் அதிகமானோர் ஒருவர் மற்றவர் மீது அநீதி இழைக்கின்றனர். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரைத் தவிர. அவர்கள் மிகவும் குறைவு தான்  என்று தாவூத் கூறினார். அவரைச் சோதித்தோம் என்பதை தாவூத் விளங்கிக் கொண்டார். தமது இறைவனிடம் மன்னிப்புக் கேட்டார். பணிந்து விழுந்தார். திருந்தினார்.

திருக்குர்ஆன் 38:24

என் இறைவா! என்னை மன்னித்து விடு! எனக்குப் பின் யாருக்கும் கிடைக்காத ஆட்சியை எனக்கு வழங்கு! நீயே வள்ளல்  என (ஸுலைமான்) கூறினார்.

திருக்குர்ஆன் 38:35

(முஹம்மதே!) பொறுமையைக் கடைப்பிடிப்பீராக! அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மை. உமது பாவத்துக்கு மன்னிப்புக் கேட்பீராக! உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் போற்றிப் புகழ்வீராக!

திருக்குர்ஆன் 40:55

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை  என்பதை அறிந்து கொள்வீராக! உமது பாவத்திற்காகவும், நம்பிக்கை கொண்ட ஆண்களுக்காகவும்,பெண்களுக்காகவும் நீர் மன்னிப்புக் கேட்பீராக! நீங்கள் இயங்குவதையும், தங்குவதையும் அல்லாஹ் அறிவான்.

திருக்குர்ஆன் 47:19

(முஹம்மதே!) உமது பாவத்தில் முந்தியதையும், பிந்தியதையும் உமக்காக அல்லாஹ் மன்னிப்பதற்காகவும், தனது அருட்கொடையை உமக்கு முழுமைப்படுத்திடவும், உமக்கு நேரான பாதையைக் காட்டுவதற்காகவும், அல்லாஹ் மகத்தான உதவியை உமக்குச் செய்வதற்காகவும், தெளிவான ஒரு வெற்றியை உமக்கு நாம் அளித்தோம்.

திருக்குர்ஆன் 48:1,2,3

என் இறைவா! என்னையும், எனது பெற்றோரையும், நம்பிக்கை கொண்டு எனது வீட்டில் நுழைந்தவரையும் நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் மன்னிப்பாயாக! அநீதி இழைத்தோருக்கு அழிவைத் தவிர வேறு எதையும் அதிகமாக்காதே!  (என நூஹ் பிரார்த்தித்தார்)

திருக்குர்ஆன் 71:28

உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்.

திருக்குர்ஆன் 110:3

நபிமார்களும் இறைவனின் அடிமைகளே

எந்த மனிதருக்காவது அல்லாஹ் வேதத்தையும், அதிகாரத்தையும், நபி எனும் தகுதியையும் வழங்கினால் (அதன்) பின்  அல்லாஹ்வையன்றி எனக்கு அடிமைகளாக ஆகி விடுங்கள்!  என்று கூறுகின்ற அதிகாரம் அவருக்கு இல்லை. மாறாக,  வேதத்தை நீங்கள் கற்றுக் கொடுப்போராக இருப்பதாலும், அதை வாசித்துக் கொண்டிருப்பதாலும் இறைவனுக்குரியோராக ஆகி விடுங்கள்!  (என்றே கூறினர்)

திருக்குர்ஆன் 3:79

மறுமையில் அனைவரும் அடிமையாகவே வருவார்கள்

வானங்களிலும், பூமியிலும் உள்ள ஒவ்வொருவரும் அளவற்ற அருளாளனிடம் அடிமையாகவே வருவார்கள்.

திருக்குர்ஆன் 19:93

பிரார்த்திக்கப்படும் அனைவரும் அடிமைகளே

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!

திருக்குர்ஆன் 7:194

என்னையன்றி எனது அடியார்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ள (என்னை) மறுப்போர் நினைக்கிறார்களா? (நம்மை) மறுப்போருக்கு நரகத்தைத் தங்குமிடமாக நாம் தயாரித்துள்ளோம்.

திருக்குர்ஆன் 18:102

ஈஸா நபி அல்லாஹ்வின் அடிமை

(ஈஸா எனும்) மஸீஹும், நெருக்கமான வானவர்களும் அல்லாஹ்வுக்கு அடிமையாக இருப்பதிலிருந்து விலகிக் கொள்ள மாட்டார்கள். அவனுக்கு அடிமையாக  இருப்பதிலிருந்து விலகிப் பெருமையடிப்போர் அனைவரையும் அவன் தன்னிடம் ஒன்று திரட்டுவான்.

திருக்குர்ஆன் 4:172

அவர் குழந்தையைச் சுட்டிக் காட்டினார்!  தொட்டிலில் உள்ள குழந்தையிடம் எவ்வாறு பேசுவோம்?  என்று அவர்கள் கேட்டார்கள். உடனே அவர் (அக்குழந்தை),  நான் அல்லாஹ்வின் அடியான். எனக்கு அவன் வேதத்தை அளித்தான். என்னை நபியாக்கினான்(என்று கூறியது.)

திருக்குர்ஆன் 19:30

நாம் அருள் புரிந்த அடியாரைத் தவிர அவர் (ஈஸா) வேறில்லை. இஸ்ராயீலின் மக்களுக்கு அவரை முன்னுதாரணமாக ஆக்கினோம்.

திருக்குர்ஆன் 43:59

நூஹ் நபி அல்லாஹ்வின் அடிமை

நூஹுடன் (கப்பலில்) நாம் ஏற்றியோரின் சந்ததிகளே! அவர் நன்றி மிக்க அடியாராக இருந்தார்.

திருக்குர்ஆன் 17:3

அவர் (நூஹ்) நம்பிக்கை கொண்ட நமது அடியாராக இருந்தார்.

திருக்குர்ஆன் 37:81

அவர்களுக்கு முன் நூஹுடைய சமுதாயம் பொய்யெனக் கருதியது. அவர்கள் நமது அடியாரைப் பொய்யரென்றனர். பைத்தியக்காரர் என்றனர். அவர் விரட்டப்பட்டார்.

திருக்குர்ஆன் 54:9

நூஹுடைய மனைவியையும், லூத்துடைய மனைவியையும் (தன்னை) மறுப்போருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் காட்டுகிறான். அவ்விருவரும் நமது இரு நல்லடியார்களின் மனைவியராக இருந்தனர். அவர்களுக்குத் துரோகம் செய்தனர். எனவே அவ்விருவரையும் அல்லாஹ்விடமிருந்து அவர்கள் சிறிதளவும் காப்பாற்றவில்லை.  இருவரும் நரகில் நுழைவோருடன் சேர்ந்து நுழையுங்கள்!  என்று கூறப்பட்டது.

திருக்குர்ஆன் 66:10

ஸக்கரியா நபி அல்லாஹ்வின் அடிமை

(இது) உமது இறைவன் தனது அடியார் ஸக்கரிய்யாவுக்கு செய்த அருளைக் கூறுதல்!

திருக்குர்ஆன் 19:2

தாவூது நபி அல்லாஹ்வின் அடிமை (முஹம்மதே!) அவர்கள் கூறுவதைச் சகித்துக் கொள்வீராக! பலம் பொருந்திய நமது அடியார் தாவூதை நினைவூட்டுவீராக! அவர் (நம்மிடம்) திரும்புபவராக இருந்தார்.

திருக்குர்ஆன் 38:17

ஸுலைமான் நபி அல்லாஹ்வின் அடிமை

தாவூதுக்கு ஸுலைமானை அன்பளிப்பாக வழங்கினோம். அவர் நல்லடியார். (இறைவனிடம்) திரும்புபவர்.

திருக்குர்ஆன் 38:30

அய்யூப் நபி அல்லாஹ்வின் அடிமை நமது அடியார் அய்யூபை நினைவூட்டுவீராக! ஷைத்தான் வேதனையாலும், துன்புறுத்தலாலும் என்னைத் தீண்டி விட்டான் என்று தமது இறைவனிடம் அவர் பிரார்த்தித்த போது, உமது காலால் மிதிப்பீராக! இதோ குளிர்ந்த குளிக்குமிடம்! பானம்! (எனக் கூறினோம்).

திருக்குர்ஆன் 38:41,42

உமது கையால் புல்லில் ஒரு பிடியை எடுத்து அதன் மூலம் அடிப்பீராக! சத்தியத்தை முறிக்காதீர்! (என்றோம்.) நாம் அவரைப் பொறுமையாளராகக் கண்டோம். அவர் சிறந்த அடியார். அவர் (நம்மிடம்) திரும்புபவர்.

திருக்குர்ஆன் 38:44

லூத் நபி அல்லாஹ்வின் அடிமை

நூஹுடைய மனைவியையும், லூத்துடைய மனைவியையும் (தன்னை) மறுப்போருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் காட்டுகிறான். அவ்விருவரும் நமது இரு நல்லடியார்களின் மனைவியராக இருந்தனர். அவர்களுக்குத் துரோகம் செய்தனர். எனவே அவ்விருவரையும் அல்லாஹ்விடமிருந்து அவர்கள் சிறிதளவும் காப்பாற்றவில்லை.  இருவரும் நரகில் நுழைவோருடன் சேர்ந்து நுழையுங்கள்!  என்று கூறப்பட்டது.

திருக்குர்ஆன் 66:10

இப்ராஹீம் நபி அல்லாஹ்வின் அடிமை

அவர் நம்பிக்கை கொண்ட நமது அடியார்களில் ஒருவர்.

திருக்குர்ஆன் 37:111

வலிமையும், சிந்தனையும் உடைய இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகிய நமது அடியார்களை நினைவூட்டுவீராக!

திருக்குர்ஆன் 38:45

இஸ்ஹாக் நபி அல்லாஹ்வின் அடிமை

வலிமையும், சிந்தனையும் உடைய இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகிய நமது அடியார்களை நினைவூட்டுவீராக!

திருக்குர்ஆன் 38:45

யஃகூப் நபி அல்லாஹ்வின் அடிமை வலிமையும், சிந்தனையும் உடைய இப்ராஹீம்,இஸ்ஹாக், யஃகூப் ஆகிய நமது அடியார்களை நினைவூட்டுவீராக!

திருக்குர்ஆன் 38:45

மூஸா, ஹாரூன் நபி அல்லாஹ்வின் அடிமைகள்

அவ்விருவரும் நம்பிக்கை கொண்ட நமது அடியார்கள்.

திருக்குர்ஆன் 37:122

இல்யாஸ் நபி அல்லாஹ்வின் அடிமை அவர் நம்பிக்கை கொண்ட நமது அடியார்களில் ஒருவர்.

திருக்குர்ஆன் 37:132

நபிகள் நாயகம் அல்லாஹ்வின் அடிமை

நமது அடியாருக்கு (முஹம்மதுக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு, (அதில்) நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்!

திருக்குர்ஆன் 2:23

அல்லாஹ்வையும், இரு அணிகள் சந்தித்துக் கொண்ட நாளில், வேறுபடுத்திக் காட்டிய நாளில் நமது அடியார் மீது நாம் அருளியதையும், நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால், போர்க்களத்தில் எதிரிகளிடம் கைப்பற்றும் பொருட்களில் ஐந்தில் ஒரு பாகம் அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும், (அவரது) உறவினருக்கும், அனாதைகளுக்கும்,ஏழைகளுக்கும், நாடோடிகளுக்கும் உரியது என்பதை அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.

திருக்குர்ஆன் 8:41,

மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை (முஹம்மதை) அழைத்துச் சென்றவன் தூயவன். அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.

திருக்குர்ஆன் 17:1

அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். அவன் தான் தனது அடியார் மீது இவ்வேதத்தை நேரானதாகவும், தனது கடுமையான வேதனை பற்றி எச்சரிப்பதற்காகவும், நல்லறங்கள் செய்யும் நம்பிக்கை கொண்டோருக்கு அழகிய கூலி உண்டு; அதில் என்றென்றும் தங்குவார்கள்  என நற்செய்தி கூறுவதற்காகவும், அல்லாஹ் சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான்  என்று கூறுவோரை எச்சரிப்பதற்காகவும், (இவ்வேதத்தை) எவ்விதக் கோணலும் இன்றி அருளினான்.

திருக்குர்ஆன் 18:1,2,3,4

(பொய்யையும் உண்மையையும்) பிரித்துக் காட்டும் வழி முறையை அகிலத்தாருக்கு எச்சரிக்கை செய்யக் கூடியதாக தனது அடியார் மீது அருளியவன் பாக்கியமானவன்.

திருக்குர்ஆன் 25:1

தனது அடியாருக்கு அவன் அறிவிப்பதை அறிவித்தான்.

திருக்குர்ஆன் 53:10

இருள்களிலிருந்து ஒளிக்கு உங்களைக் கொண்டு செல்வதற்காக அவனே தனது அடியார் மீது தெளிவான சான்றுகளை இறக்குகிறான். அல்லாஹ் உங்கள் மீது இரக்கம் உள்ளவன்;நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன் 57:9

அல்லாஹ்வின் அடியார் (முஹம்மது) அவனிடம் பிரார்த்திக்க எழும் போது (மக்கள்) கூட்டம் கூட்டமாக அவரை நெருங்கி விடுகின்றனர்.

திருக்குர்ஆன் 72:19

தொழும் அடியாரைத் தடுப்பவனைப் பார்க்கவில்லையா?

திருக்குர்ஆன் 96:9,10

அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் நபிகள் நாயகத்திடம் இல்லை

அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் உள்ளன; மறைவானதை அறிவேன்; என்று உங்களிடம் கூற மாட்டேன். நான் வானவர் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர (வேறெதனையும்) நான் பின்பற்றுவதில்லை என்று (முஹம்மதே!) கூறுவீராக!  குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா?  சிந்திக்க மாட்டீர்களா?  என்று கேட்பீராக!

திருக்குர்ஆன் 6:50

அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்  என்று (முஹம்மதே!) கூறுவீராக!

திருக்குர்ஆன் 7:188

(முஹம்மதே!) அதிகாரத்தில் உமக்கு ஏதுமில்லை. அவன் அவர்களை மன்னிக்கலாம். அல்லது அவர்களைத் தண்டிக்கலாம். ஏனெனில் அவர்கள் அநீதி இழைத்தவர்கள். வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன. தான் நாடியோரை அவன் மன்னிக்கிறான். நாடியோரைத் தண்டிக்கிறான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன் 3:128

அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கே தீங்கு செய்யவோ நன்மை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை  என்று (முஹம்மதே!) கூறுவீராக! ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு காலக் கெடு உள்ளது. அவர்களின் காலக்கெடு வரும் போது சிறிது நேரம் அவர்கள் பிந்தவும் மாட்டார்கள். முந்தவும் மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 10:49

அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன் 10:107

அல்லாஹ் உமக்குத் துன்பத்தை ஏற்படுத்தினால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. அவன் உமக்கு நன்மையை ஏற்படுத்தி விட்டால் அவன் அனைத்துப் பொருட்களின் மீது ஆற்றலுடையவன்.

திருக்குர்ஆன் 6:17

எதிரிகளை அழிக்கும் அதிகாரம் நபிக்கு இல்லை

 நான் என் இறைவனிடமிருந்து வந்த சான்றுடன் இருக்கிறேன். அதைப் பொய்யெனக் கருதுகிறீர்கள். நீங்கள் அவசரப்படுவது என்னிடம் இல்லை. அதிகாரம் அல்லாஹ்வுக்கே தவிர (வேறு எவருக்கும்) இல்லை. அவன் உண்மையை உரைக்கிறான். தீர்ப்பளிப்போரில் அவன் மிகச் சிறந்தவன்  என்றும் கூறுவீராக!

திருக்குர்ஆன் 6:57

நபிகள் நாயகத்துக்கும் இறை மன்னிப்பு அவசியம்

அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுவீராக! அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

திருக்குர்ஆன் 4:106

(முஹம்மதே!) அல்லாஹ் உம்மை மன்னித்தான். உண்மை கூறுவோர் யார் என்பது உமக்குத் தெளிவாகி, பொய்யர்களை நீர் அறியும் முன் அவர்களுக்கு ஏன் அனுமதியளித்தீர்?

திருக்குர்ஆன் 9:43

என் இறைவா! மன்னித்து அருள்புரிவாயாக! நீ அருள்புரிவோரில் சிறந்தவன்  என கூறுவீராக!

திருக்குர்ஆன் 23:118

(முஹம்மதே!) உமது பாவத்தில் முந்தியதையும் பிந்தியதையும் உமக்காக அல்லாஹ் மன்னிப்பதற்காகவும், தனது அருட்கொடையை உமக்கு முழுமைப்படுத்திடவும், உமக்கு நேரான பாதையைக் காட்டுவதற்காகவும், அல்லாஹ் மகத்தான உதவியை உமக்குச் செய்வதற்காகவும், தெளிவான ஒரு வெற்றியை உமக்கு நாம் அளித்தோம்.

திருக்குர்ஆன் 48:1,2,3

நேர் வழியில் சேர்ப்பது நபிகள் நாயகத்தின் அதிகாரத்தில் இல்லை

அவர்களை நேர் வழியில் சேர்ப்பது உமது பொறுப்பில் இல்லை. மாறாக தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர் வழி காட்டுகிறான். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அது உங்களுக்கே. அல்லாஹ்வின் திருப்தியைப் பெறவே செலவிடுகிறீர்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் உங்களுக்கே அது முழுமையாக வழங்கப்படும். நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்.

திருக்குர்ஆன் 2:272

(முஹம்மதே!) அவர்களின் புறக்கணிப்பு உமக்குப் பெரிதாகத் தெரிந்தால் உமக்கு முடியுமானால் பூமியில் சுரங்கத்தை ஏற்படுத்தி, அல்லது வானத்தில் ஏணியை அமைத்து அவர்களிடம் அற்புதத்தைக் கொண்டு வாரும்! அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களை நேர் வழியில் ஒன்று சேர்த்திருப்பான். அறியாதவராக நீர் ஆகி விடாதீர்!

திருக்குர்ஆன் 6:35

தமது இறைவனின் திருப்தியை நாடி காலையிலும், மாலையிலும் அவனிடம் பிரார்த்திப்போரை நீர் விரட்டாதீர்! அவர்களைப் பற்றிய விசாரணையில் உமக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. உம்மைப் பற்றிய விசாரணையில் அவர்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. எனவே அவர்களை நீர் விரட்டினால் அநீதி இழைத்தவராவீர்!

திருக்குர்ஆன் 6:52

(முஹம்மதே!) உமது இறைவன் நாடியிருந்தால் பூமியில் உள்ள அனைவரும் ஒட்டு மொத்தமாக நம்பிக்கை கொண்டிருப்பார்கள். நம்பிக்கை கொண்டவர்களாக ஆவதற்காக மக்களை நீர் நிர்பந்திக்கிறீரா? திருக்குர்ஆன் 10:99 (முஹம்மதே!) நாம் உம்மை நிலைப்படுத்தியிருக்கா விட்டால் அவர்களை நோக்கிச் சிறிதேனும் நீர் சாய்ந்திருப்பீர்!

திருக்குர்ஆன் 17:74

(முஹம்மதே!) நீர் விரும்பியோரை உம்மால் நேர் வழியில் செலுத்த முடியாது! மாறாக,தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர் வழி காட்டுகிறான். அவன் நேர் வழி பெற்றோரை நன்கறிந்தவன்.

திருக்குர்ஆன் 28:56

இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) கட்டுப்பட்டவர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டார். யாரேனும் புறக்கணித்தால் உம்மை அவர்களின் காப்பாளராக நாம் அனுப்பவில்லை.

திருக்குர்ஆன் 4:80

நபிகள் நாயகத்தின் உள்ளமும் அல்லாஹ்வின் கையில்

(முஹம்மதே!) நாம் உம்மை நிலைப்படுத்தியிருக்கா விட்டால் அவர்களை நோக்கிச் சிறிதேனும் நீர் சாய்ந்திருப்பீர்!

திருக்குர்ஆன் 17:74

 என் இறைவா! ஷைத்தான்களின் தூண்டுதல்களை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்  என்றும் கூறுவீராக!

திருக்குர்ஆன் 23:97

நபிகள் நாயகமும் மனிதரே

முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான்.

திருக்குர்ஆன் 3:144

இவருக்கு ஒரு புதையல் அருளப்பட வேண்டாமா? அல்லது இவருடன் ஒரு வானவர் வர வேண்டாமா?  என்று அவர்கள் கூறுவதால் (முஹம்மதே!) உமக்கு அறிவிக்கப்படும் செய்தியில் சிலவற்றை நீர் விட்டு விடக் கூடும். உமது உள்ளம் சங்கடப்படக் கூடும். நீர் எச்சரிப்பவரே. அல்லாஹ்வே எல்லாப் பொருளுக்கும் பொறுப்பாளன்.

திருக்குர்ஆன் 11:12

நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணை கற்பிக்காது இருக்கட்டும்  என்று (முஹம்மதே!) கூறுவீராக!

திருக்குர்ஆன் 18:110

 நான் உங்களைப் போன்ற மனிதன் தான். உங்கள் இறைவன் ஒரே இறைவனே என்று எனக்கு தூதுச் செய்தி அறிவிக்கப்படுகிறது. எனவே அவனிடம் உறுதியாக இருங்கள்! அவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்! இணை கற்பிப்போருக்குக் கேடு தான் இருக்கிறது என்று (முஹம்மதே!) கூறுவீராக!

திருக்குர்ஆன் 41:6

நபிமார்களின் அற்புதங்கள் (முஹம்மதே!) அவர்களின் புறக்கணிப்பு உமக்குப் பெரிதாகத் தெரிந்தால் உமக்கு முடியுமானால் பூமியில் சுரங்கத்தை ஏற்படுத்தி, அல்லது வானத்தில் ஏணியை அமைத்து அவர்களிடம் அற்புதத்தைக் கொண்டு வாரும்! அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களை நேர் வழியில் ஒன்று சேர்த்திருப்பான். அறியாதவராக நீர் ஆகி விடாதீர்!

திருக்குர்ஆன் 6:35

இவரது இறைவனிடமிருந்து இவருக்குச் சான்று அருளப்பட்டிருக்க வேண்டாமா? என்று அவர்கள் கேட்கின்றனர்.  மறைவானவை அல்லாஹ்வுக்கே உரியன. நீங்களும் எதிர்பாருங்கள்! நானும் உங்களுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்  என்று (முஹம்மதே!) கூறுவீராக!

திருக்குர்ஆன் 10:20

இவரது இறைவனிடமிருந்து இவருக்கு ஏதேனும் சான்று அருளப்பட வேண்டாமா? என்று (ஏக இறைவனை) மறுப்போர் கேட்கின்றனர். நீர் எச்சரிப்பவரே. ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு வழி காட்டி உண்டு.

திருக்குர்ஆன் 13:7

இவருக்கு, இவரது இறைவனிடமிருந்து சான்று அருளப்பட வேண்டாமா?  என்று (ஏக இறைவனை) மறுப்போர் கேட்கின்றனர்.  தான் நாடியோரை அல்லாஹ் வழி கேட்டில் விட்டு விடுகிறான். திருந்தியோருக்கு, தன் பக்கம் வழி காட்டுகிறான்  என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 13:27

இப்பூமியில் நீரூற்றை எங்களுக்காக நீர் ஓடச் செய்யாத வரை உம்மை நாங்கள் நம்பவே மாட்டோம்  என்று கூறுகின்றனர். அல்லது உமக்கு பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டம் இருக்க வேண்டும். அவற்றுக்கு இடையே நதிகளை நீர் பெருக்கெடுத்து ஓடச் செய்ய வேண்டும். அல்லது நீர் நினைப்பது போல் வானத்தைத் துண்டு துண்டாக எங்கள் மீது விழச் செய்ய வேண்டும். அல்லது அல்லாஹ்வையும். வானவர்களையும் நேரில் நீர் கொண்டு வர வேண்டும். அல்லது தங்கத்தால் உமக்கு ஒரு வீடு இருக்க வேண்டும். அல்லது வானத்தில் நீர் ஏற வேண்டும். நாங்கள் வாசிக்கும் விதமாக எங்களிடம் ஒரு புத்தகத்துடன் இறங்கினால் தவிர நீர் ஏறிச் சென்றதை நம்ப மாட்டோம் (எனவும் கூறுகின்றனர்)  என் இறைவன் தூயவன். நான் மனிதனாகவும்,தூதராகவுமே இருக்கிறேன்  என்று (முஹம்மதே!) கூறுவீராக!

திருக்குர்ஆன் 17:90-93

சுயமாக அற்புதம் செய்ய நபிமார்களுக்கு இயலாது

இஸ்ராயீலின் மக்களுக்குத் தூதராகவும் (அவரை அனுப்பினான்.)  உங்கள் இறைவனிடமிருந்து சான்றை நான் கொண்டு வந்துள்ளேன். உங்களுக்காக களிமண்ணால் பறவையின் வடிவம் அமைத்து, அதில் ஊதுவேன்; அல்லாஹ்வின் விருப்பப்படி அது பறவையாக ஆகும். அல்லாஹ்வின் விருப்பப்படி பிறவிக் குருடையும், குஷ்டத்தையும் நீக்குவேன்; இறந்தோரை உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண்பதையும், உங்கள் வீடுகளில் நீங்கள் சேமித்து வைத்திருப்பதையும் உங்களுக்குக் கூறுவேன்; நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதில் உங்களுக்குச் சான்று உள்ளது  (என்றார்)

திருக்குர்ஆன் 3:49

மர்யமின் மகன் ஈஸாவே! உமக்கும், உமது தாயாருக்கும் நான் வழங்கிய அருட் கொடையையும், ரூஹுல் குதுஸ் மூலம் உம்மை வலுப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! தொட்டிலிலும், இளமைப் பருவத்திலும் மக்களிடம் நீர் பேசினீர்! உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் நான் கற்றுத் தந்ததையும் எண்ணிப் பார்ப்பீராக! என் விருப்பப்படி களிமண்ணால் பறவை வடிவத்தைப் படைத்து அதில் நீர் ஊதியதையும், என் விருப்பப்படி அது பறவையாக மாறியதையும், என் விருப்பப்படி பிறவிக் குருடரையும் வெண் குஷ்டமுடையவரையும் நீர் குணப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! இறந்தவர்களை என் விருப்பப்படி (உயிருடன்) வெளிப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! இஸ்ராயீலின் மக்களிடம் தெளிவான சான்றுகளை நீர் கொண்டு வந்தீர்! அப்போது  இது தெளிவான சூனியமேயன்றி வேறில்லை  என்று அவர்களில் (ஏக இறைவனை) மறுப்போர் கூறிய போது,அவர்களிடமிருந்து நான் உம்மைக் காப்பாற்றியதையும் எண்ணிப் பார்ப்பீராக!  என்று அல்லாஹ் (ஈஸாவிடம்) கூறியதை நினைவூட்டுவீராக!

திருக்குர்ஆன் 5:110

இவரது இறைவனிடமிருந்து இவருக்கு அற்புதம் அருளப்பட்டிருக்க வேண்டாமா? என்று அவர்கள் கேட்கின்றனர்.  அற்புதத்தை அருளிட அல்லாஹ்வே ஆற்றலுடையவன்  எனக் கூறுவீராக! எனினும் அவர்களில் அதிகமானோர் அறிந்து கொள்வதில்லை.

திருக்குர்ஆன் 6:37

எங்களிடம் அற்புதம் வந்தால் அதை நம்புவோம்  என்று அல்லாஹ்வின் மீது உறுதியாக சத்தியம் செய்து அவர்கள் கூறுகின்றனர். அற்புதங்கள் அல்லாஹ்விடமே  உள்ளன எனக் கூறுவீராக!  அது நிகழும் போது அவர்கள் நம்ப மாட்டார்கள்  என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?

திருக்குர்ஆன் 6:109

உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும், மக்களையும் ஏற்படுத்தினோம். எந்த ஒரு தூதரும் அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் கொண்டு வர முடியாது. ஒவ்வொரு தவணையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருக்குர்ஆன் 13:38

நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்கள் தாம். ஆயினும் தனது அடியார்களில் தான் நாடியவர் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் உங்களிடம் எங்களால் கொண்டு வர இயலாது. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்  என்று அவர்களின் தூதர்கள் கூறினர்.

திருக்குர்ஆன் 14:11

உமக்கு முன் பல தூதர்களை அனுப்பினோம். அவர்களில் சிலரைப் பற்றி உமக்குக் கூறியிருக்கிறோம். அவர்களில் சிலரைப் பற்றி நாம் உமக்குக் கூறவில்லை. அல்லாஹ்வின் விருப்பப்படியே தவிர எந்த அற்புதத்தையும் கொண்டு வருவது எந்தத் தூதருக்கும் இல்லை. எனவே அல்லாஹ்வின் கட்டளை வரும் போது நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும். அப்போது வீணர்கள் நஷ்டமடைவார்கள்.

திருக்குர்ஆன் 40:78

அற்புதங்கள் அல்லாஹ் நாடினால் மட்டுமே

இவரது இறைவனிடமிருந்து இவருக்கு அற்புதம் அருளப்பட்டிருக்க வேண்டாமா? என்று அவர்கள் கேட்கின்றனர்.  அற்புதத்தை அருளிட அல்லாஹ்வே ஆற்றலுடையவன்  எனக் கூறுவீராக! எனினும் அவர்களில் அதிகமானோர் அறிந்து கொள்வதில்லை.

திருக்குர்ஆன் 6:37

எங்களிடம் அற்புதம் வந்தால் அதை நம்புவோம்  என்று அல்லாஹ்வின் மீது உறுதியாக சத்தியம் செய்து அவர்கள் கூறுகின்றனர். அற்புதங்கள் அல்லாஹ்விடமே உள்ளன எனக் கூறுவீராக!  அது நிகழும் போது அவர்கள் நம்ப மாட்டார்கள்  என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?

திருக்குர்ஆன் 6:109

உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும்,  மக்களையும் ஏற்படுத்தினோம். எந்த ஒரு தூதரும் அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் கொண்டு வர முடியாது. ஒவ்வொரு தவணையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருக்குர்ஆன் 13:38

நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்கள் தாம். ஆயினும் தனது அடியார்களில் தான் நாடியவர் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் உங்களிடம் எங்களால் கொண்டு வர இயலாது. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்  என்று அவர்களின் தூதர்கள் கூறினர்.

திருக்குர்ஆன் 14:11

இவருக்கு இவரது இறைவனிடமிருந்து அற்புதங்கள் அருளப்படக் கூடாதா?  என்று கேட்கின்றனர்.  அற்புதங்கள் அல்லாஹ்விடமே உள்ளன. நான் தெளிவாக எச்சரிக்கை செய்பவன் மட்டுமே  என்று (முஹம்மதே!) கூறுவீராக!

திருக்குர்ஆன் 29:50

உமக்கு முன் பல தூதர்களை அனுப்பினோம். அவர்களில் சிலரைப் பற்றி உமக்குக் கூறியிருக்கிறோம். அவர்களில் சிலரைப் பற்றி நாம் உமக்குக் கூறவில்லை. அல்லாஹ்வின் விருப்பப்படியே தவிர எந்த அற்புதத்தையும் கொண்டு வருவது எந்தத் தூதருக்கும் இல்லை. எனவே அல்லாஹ்வின் கட்டளை வரும் போது நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும். அப்போது வீணர்கள் நஷ்டமடைவார்கள்.

திருக்குர்ஆன் 40:78

அல்லாஹ்வின் அனுமதி பெற்றே ஈஸா நபி அற்புதம் நிகழ்த்தினார்கள்

இஸ்ராயீலின் மக்களுக்குத் தூதராகவும் (அவரை அனுப்பினான்.)  உங்கள் இறைவனிடமிருந்து சான்றை நான் கொண்டு வந்துள்ளேன். உங்களுக்காக களிமண்ணால் பறவையின் வடிவம் அமைத்து, அதில் ஊதுவேன்; அல்லாஹ்வின் விருப்பப்படி அது பறவையாக ஆகும். அல்லாஹ்வின் விருப்பப்படி பிறவிக் குருடையும், குஷ்டத்தையும் நீக்குவேன்; இறந்தோரை உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண்பதையும், உங்கள் வீடுகளில் நீங்கள் சேமித்து வைத்திருப்பதையும் உங்களுக்குக் கூறுவேன்; நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதில் உங்களுக்குச் சான்று உள்ளது  (என்றார்)

திருக்குர்ஆன் 3:49

மர்யமின் மகன் ஈஸாவே! உமக்கும், உமது தாயாருக்கும் நான் வழங்கிய அருட் கொடையையும், ரூஹுல் குதுஸ் மூலம் உம்மை வலுப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! தொட்டிலிலும், இளமைப் பருவத்திலும் மக்களிடம் நீர் பேசினீர்! உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் நான் கற்றுத் தந்ததையும் எண்ணிப் பார்ப்பீராக! என் விருப்பப்படி களிமண்ணால் பறவை வடிவத்தைப் படைத்து அதில் நீர் ஊதியதையும், என் விருப்பப்படி அது பறவையாக மாறியதையும், என் விருப்பப்படி பிறவிக் குருடரையும் வெண் குஷ்டமுடையவரையும் நீர் குணப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! இறந்தவர்களை என் விருப்பப்படி (உயிருடன்) வெளிப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! இஸ்ராயீலின் மக்களிடம் தெளிவான சான்றுகளை நீர் கொண்டு வந்தீர்! அப்போது  இது தெளிவான சூனியமேயன்றி வேறில்லை  என்று அவர்களில் (ஏக இறைவனை) மறுப்போர் கூறிய போது,அவர்களிடமிருந்து நான் உம்மைக் காப்பாற்றியதையும் எண்ணிப் பார்ப்பீராக!  என்று அல்லாஹ் (ஈஸாவிடம்) கூறியதை நினைவூட்டுவீராக!

திருக்குர்ஆன் 5:110

அல்லாஹ்வின் கட்டளைக்குப் பிறகே மூஸா நபி அற்புதம் நிகழ்த்தினார்கள்

மூஸா, தமது சமுதாயத்திற்காக (நம்மிடம்) தண்ணீர் வேண்டிய போது  உமது கைத்தடியால் அந்தப் பாறையில் அடிப்பீராக!  என்று கூறினோம். உடனே அதில் பன்னிரண்டு ஊற்றுகள் பீறிட்டன. ஒவ்வொரு கூட்டத்தாரும் தத்தமது நீர்த் துறையை அறிந்து கொண்டனர்.  அல்லாஹ் வழங்கியதை உண்ணுங்கள்! பருகுங்கள்! பூமியில் குழப்பம் விளைவித்துத் திரியாதீர்கள்!  (என்று கூறினோம்)

திருக்குர்ஆன் 2:60

எனது அடியார்களை அழைத்துச் செல்வீராக! கடலில் அவர்களுக்காக ஈரமில்லாத ஒரு வழியை ஏற்படுத்திக் கொடுப்பீராக! பிடிக்கப்பட்டு விடுவதைப் பற்றிப் பயப்படாதீர்! (வேறெதற்கும்) அஞ்சாதீர்!  என்று மூஸாவுக்கு அறிவித்தோம்.

திருக்குர்ஆன் 20:77

உமது கைத்தடியால் கடலில் அடிப்பீராக  என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது பிளந்தது. ஒவ்வொரு பிளவும் பெரும் மலை போன்று ஆனது.

திருக்குர்ஆன் 26:63

எனது அடியார்களை இரவில் அழைத்துச் செல்வீராக! நீங்கள் எதிரிகளால் பின் தொடரப்படுவீர்கள். பிளக்கப்பட்ட நிலையில் கடலை விட்டு விடுவீராக! அவர்கள் மூழ்கடிக்கப்படும் படையினராவர்  (என்று இறைவன் கூறினான்.)

திருக்குர்ஆன் 44:23,24

உமது கைத்தடியைப் போடுவீராக!  என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது அவர்கள் செய்த வித்தையை விழுங்கியது.

திருக்குர்ஆன் 7:117

மூஸா தமக்குள் அச்சத்தை உணர்ந்தார்.  அஞ்சாதீர்! நீர் தான் வெற்றி பெறுவீர் என்று கூறினோம்.  உமது வலது கையில் உள்ளதைப் போடுவீராக! அவர்கள் செய்தவற்றை அது விழுங்கி விடும். அவர்கள் செய்திருப்பது சூனியக்காரனின் சூழ்ச்சி. (போட்டிக்கு) வரும் போது சூனியக்காரன் வெற்றி பெற மாட்டான்  (என்றும் கூறினோம்.)

திருக்குர்ஆன் 20:67,68,69

 கெட்டவர்க்கும் அற்புதம்

மூஸாவுடைய சமூகத்தார் அவருக்குப் பின் தமது நகைகளால் காளைக் கன்றின் வடிவத்தை (கடவுளாக) கற்பனை செய்து கொண்டனர். அதற்கு மாட்டின் சப்தமும் இருந்தது. அது அவர்களிடம் பேசாது என்பதையும் அவர்களுக்கு எந்த வழியையும் காட்டாது என்பதையும் அவர்கள் அறிய வேண்டாமா? அவர்கள் இதைக் கற்பனை செய்து அநீதி இழைத்தோரானார்கள்.

திருக்குர்ஆன் 7:148

உமக்குப் பின் உமது சமுதாயத்தை நாம் சோதித்தோம். அவர்களை ஸாமிரி வழி கெடுத்து விட்டான்  என்று (இறைவன்) கூறினான்.  உடனே மூஸா தமது சமுதாயத்திடம் கோபமாகவும், கவலைப்பட்டவராகவும் திரும்பினார்.  என் சமுதாயமே! உங்கள் இறைவன் உங்களுக்கு அழகான வாக்குறுதியை அளிக்கவில்லையா? அல்லது (நான் புறப்பட்டுப் போய்) அதிக காலம் ஆகி விட்டதா? அல்லது உங்கள் இறைவனிடமிருந்து உங்கள் மீது கோபம் இறங்க வேண்டும் என விரும்பி என்னிடம் கொடுத்த வாக்கை மீறினீர்களா?  என்று கேட்டார்.  நாங்கள் உம்மிடம் கொடுத்த வாக்குறுதிக்கு திட்டமிட்டு மாறு செய்யவில்லை. மாறாக அந்தச் சமுதாயத்தின் அணிகலன்கள் எங்கள் மீது சுமத்தப்பட்டன. அதை வீசினோம். இவ்வாறே ஸாமிரியும் வீசினான். அவர்களுக்காக உடலுடன் கூடிய காளைக் கன்றை (அவன்) வெளிப்படுத்தினான். அது சப்தமும் போட்டது. உடனே அவன்  இதுவே உங்கள் இறைவன். மூஸாவின் இறைவன். அவர் வழி மாறிச் சென்று விட்டார்  என்றான்.

திருக்குர்ஆன் 20:85-88

மறைவானவை அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும்

மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார். தரையிலும், கடலிலும் உள்ளவற்றை அவன் அறிவான். ஓர் இலை கீழே விழுந்தாலும் அதை அவன் அறியாமல் இருப்பதில்லை. பூமியின் இருள்களில் உள்ள விதையானாலும், ஈரமானதோ காய்ந்ததோ ஆனாலும் தெளிவான ஏட்டில் இல்லாமல் இல்லை.

திருக்குர்ஆன் 6:59

இவரது இறைவனிடமிருந்து இவருக்குச் சான்று அருளப்பட்டிருக்க வேண்டாமா? என்று அவர்கள் கேட்கின்றனர்.  மறைவானவை அல்லாஹ்வுக்கே உரியன. நீங்களும் எதிர்பாருங்கள்! நானும் உங்களுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்  என்று (முஹம்மதே!) கூறுவீராக!

திருக்குர்ஆன் 10:20

வானங்களிலும், பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். தாங்கள் எப்போது உயிர்ப்பிக்கப்படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்  என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 27:65

(உலகம் அழியும்) அந்த நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான், நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறிய மாட்டார். தாம், எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்;  நுட்பமானவன்.

திருக்குர்ஆன் 31:34

(உலகம் அழியும்) அந்த நேரம் எங்களிடம் வராது  என்று (ஏக இறைவனை) மறுப்போர் கூறுகின்றனர்.  அவ்வாறல்ல! என் இறைவன் மீது ஆணையாக! அது உங்களிடம் வரும். அவன் மறைவானதை அறிபவன். வானங்களிலோ, பூமியிலோ அணுவளவோ, அதை விடச் சிறியதோ, அதை விடப் பெரியதோ அவனுக்குத் தெரியாமல் போகாது. தெளிவான பதிவேட்டில் அவை இல்லாமல் இல்லை என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 34:3

மறைவானவை வானவருக்குத் தெரியாது

பூமியில் நான் ஒரு தலைமுறையைப் படைக்கப் போகிறேன்  என்று உமது இறைவன் வானவர்களிடம் கூறிய போது  அங்கே குழப்பம் விளைவித்து இரத்தம் சிந்துவோரையா அதில் படைக்கப் போகிறாய்? நாங்கள் உன்னைப் புகழ்ந்து போற்றுகிறோமே; குறைகளற்றவன் என உன்னை ஏற்றுக் கொண்டிருக்கிறோமே என்று கேட்டனர்.  நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன்  என்று (இறைவன்) கூறினான். அனைத்துப் பெயர்களையும் (இறைவன்) ஆதமுக்குக் கற்றுக் கொடுத்தான். பின்னர் அவற்றை வானவர்களுக்கு எடுத்துக் காட்டி  நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இவற்றின் பெயர்களை என்னிடம் கூறுங்கள்! என்று கேட்டான்.  நீ தூயவன். நீ எங்களுக்குக் கற்றுத் தந்ததைத் தவிர எங்களுக்கு வேறு அறிவு இல்லை. நீயே அறிந்தவன்;ஞானமிக்கவன்  என்று அவர்கள் கூறினர்.

திருக்குர்ஆன் 2:,30,31,32

வானங்களிலும், பூமியிலும் மறைவானவை அல்லாஹ்வுக்கே உரியன. (உலகம் அழியும்) அந்த நேரம் எனும் நிகழ்ச்சி கண்மூடித் திறப்பது போல் அல்லது அதை விடக் குறைவான நேரத்தில் நடந்து விடும். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.

திருக்குர்ஆன் 16:77

மறைவானவை ஜின்களுக்குத் தெரியாது

அவருக்கு நாம் மரணத்தை ஏற்படுத்திய போது பூமியில் ஊர்ந்து செல்லும் உயிரினம் (கரையான்) தான் அவரது மரணத்தைக் காட்டிக் கொடுத்தது. அது அவரது கைத்தடியைச் சாப்பிட்டது. அவர் கீழே விழுந்ததும்  நமக்கு மறைவானவை தெரிந்திருந்தால் இழிவு தரும் இத்துன்பத்தில் இருந்திருக்க மாட்டோமே  என்பதை ஜின்கள் விளங்கிக் கொண்டன.

திருக்குர்ஆன் 34:14

மறைவானவை நபிமார்களுக்குத் தெரியாது

தூதர்களை அல்லாஹ் ஒன்று திரட்டும் நாளில்  உங்களுக்கு என்ன பதில் அளிக்கப்பட்டது?  என்று கேட்பான்.  எங்களுக்கு (இது பற்றி) எந்த அறிவும் இல்லை. நீயே மறைவானவற்றை அறிபவன்  என்று அவர்கள் கூறுவார்கள்.

திருக்குர்ஆன் 5:109

மறைவானவை ஆதம் நபிக்குத் தெரியாது

அவ்விருவரையும் அங்கிருந்து ஷைத்தான் அப்புறப்படுத்தினான். அவர்கள் இருந்த (உயர்ந்த) நிலையிலிருந்து அவர்களை வெளியேற்றினான்.  இறங்குங்கள்! உங்களில் சிலர் மற்றும் சிலருக்கு எதிரிகள்! உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை வாழ்விடமும்,வசதியும் உள்ளன  என்றும் கூறினோம்.

திருக்குர்ஆன் 2:36

அவ்விருவரின் மறைக்கப்பட்ட வெட்கத்தலங்களை வெளிப்படுத்துவதற்காக ஷைத்தான் அவ்விருவருக்கும் தீய எண்ணத்தை ஏற்படுத்தினான்.  இருவரும் வானவர்களாக ஆகி விடுவீர்கள் என்பதற்காகவோ, நிரந்தரமாக இங்கேயே தங்கி விடுவீர்கள் என்பதற்காகவோ தவிர உங்கள் இறைவன் இம்மரத்தை உங்களுக்குத் தடை செய்யவில்லை  என்று கூறினான்.

திருக்குர்ஆன் 7:20

நான் உங்கள் இருவருக்கும் நலம் நாடுபவனே  என்று அவர்களிடம் சத்தியம் செய்தான். அவ்விருவரையும் ஏமாற்றி (தரம்) தாழ்த்தினான். அவ்விருவரும் அம்மரத்தைச் சுவைத்த போது அவர்களின் வெட்கத்தலங்கள் அவர்களுக்குத் தெரிந்தன. அவ்விருவரும் சொர்க்கத்தின் இலையினால் தம்மை மூடிக் கொள்ள முயன்றனர். அவர்களை அவர்களின் இறைவன் அழைத்து  இம்மரத்தை நான் உங்களுக்குத் தடுக்கவில்லையா? ஷைத்தான் உங்கள் இருவருக்கும் பகிரங்க எதிரி என்று உங்களிடம் நான் கூறியிருக்கவில்லையா எனக் கேட்டான்.

திருக்குர்ஆன் 7:21,22

ஆதமுடைய மக்களே! உங்கள் பெற்றோர் இருவரையும் ஷைத்தான் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றியது போல் உங்களையும் அவன் குழப்பி விட வேண்டாம். அவர்களின் வெட்கத்தலங்களை அவர்களுக்குக் காட்ட ஆடைகளை அவர்களை விட்டும் அவன் கழற்றினான். நீங்கள் அவர்களைக் காணாத வகையில் அவனும், அவனது கூட்டத்தாரும் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நம்பிக்கை கொள்ளாதோருக்கு ஷைத்தான்களை உற்ற நண்பர்களாக நாம் ஆக்கி விட்டோம்.

திருக்குர்ஆன் 7:27

இதற்கு முன் ஆதமிடம் உறுதி மொழி எடுத்தோம். அவர் மறந்து விட்டார். அவரிடம் உறுதியை நாம் காணவில்லை.

திருக்குர்ஆன் 20:115

அவரிடம் ஷைத்தான் தீய எண்ணத்தை ஏற்படுத்தினான். ஆதமே! நிலையான (வாழ்வளிக்கும்) மரத்தைப் பற்றியும், அழிவில்லா ஆட்சியைப் பற்றியும் நான் உமக்கு அறிவிக்கட்டுமா? (என்றான்.) அவ்விருவரும் அதிலிருந்து சாப்பிட்டனர். அவ்விருவருக்கும் தங்களது வெட்கத்தலங்கள் வெளிப்பட்டன. அவ்விருவரும் சொர்க்கத்தின் இலையால் தங்களை மறைத்துக் கொள்ள முற்பட்டனர். ஆதம் தமது இறைவனுக்கு மாறு செய்தார். எனவே அவர் வழி தவறினார்.

திருக்குர்ஆன் 20:120,121

மறைவானவை நூஹ் நபிக்குத் தெரியாது

என்னிடம் அல்லாஹ்வின் கருவூலங்கள் உள்ளன என்று உங்களிடம் கூற மாட்டேன். மறைவானவற்றையும் அறிய மாட்டேன். நான் வானவர் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். உங்கள் கண்கள் இழிவாகக் காண்போருக்கு அல்லாஹ் எந்த நன்மையும் அளிக்கவே மாட்டான் எனவும் கூற மாட்டேன். அவர்களின் உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் மிக அறிபவன். (அவ்வாறு கூறினால்) நான் அநீதி இழைத்தவனாகி விடுவேன்  (என நூஹ் கூறினார்.)

திருக்குர்ஆன் 11:31

மலைகளைப் போன்ற அலை மீது அது அவர்களைக் கொண்டு சென்றது. விலகி இருந்த தன் மகனை நோக்கி  அருமை மகனே! எங்களுடன் ஏறிக் கொள்! (ஏக இறைவனை) மறுப்போருடன் ஆகி விடாதே!  என்று நூஹ் கூறினார்.  ஒரு மலையில் ஏறிக் கொள்வேன்; அது என்னைத் தண்ணீரிலிருந்து காப்பாற்றும்  என்று அவன் கூறினான். அல்லாஹ் அருள் புரிந்தவர்களைத் தவிர அல்லாஹ்வின் கட்டளையிலிருந்து காப்பாற்றுபவன் எவனும் இன்று இல்லை  என்று அவர் கூறினார். அவ்விருவருக்கிடையே அலை குறுக்கிட்டது. அவன் மூழ்கடிக்கப்பட்டோரில் ஆகி விட்டான்.  பூமியே! உனது தண்ணீரை நீ உறிஞ்சிக் கொள்! வானமே நீ நிறுத்து! என்று (இறைவனால்) கூறப்பட்டது. தண்ணீர் வற்றியது. காரியம் முடிக்கப்பட்டது. அந்தக் கப்பல் ஜூதி மலை மீது அமர்ந்தது.  அநீதி இழைத்த கூட்டத்தினர் (இறையருளை விட்டும்) தூரமாயினர்  எனவும் கூறப்பட்டது. நூஹ், தம் இறைவனை அழைத்தார். என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவன். உனது வாக்குறுதியும் உண்மையே. நீயே தீர்ப்பு வழங்குவோரில் மேலானவன்  என்றார்.  நூஹே! அவன் உன் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன். இது நல்ல செயல் அல்ல. உமக்கு அறிவு இல்லதாது பற்றி என்னிடம் கேட்காதீர்! அறியாதவராக நீர் இருக்கக் கூடாது என உமக்கு அறிவுரை கூறுகிறேன்  என்று அவன் கூறினான்.  இறைவா! எனக்கு அறிவு இல்லாதது பற்றி உன்னிடம் கேட்பதை விட்டும் உன்னிடமே நான் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ என்னை மன்னித்து அருள் புரியா விட்டால் நஷ்டமடைந்தவனாக ஆகி விடுவேன்  என்று அவர் கூறினார்.

திருக்குர்ஆன் 11:42-47

மறைவானவை இப்ராஹீம் நபிக்குத் தெரியாது

இப்ராஹீம் தம் தந்தைக்காகப் பாவ மன்னிப்புத் தேடியது, தந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவே. அவர் அல்லாஹ்வின் எதிரி என்பது அவருக்குத் தெரிந்த பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் பணிவுள்ளவர்; சகிப்புத் தன்மை உள்ளவர்.

திருக்குர்ஆன் 9:114

நமது தூதர்கள் இப்ராஹீமிடம் நற்செய்தி கொண்டு வந்தனர். ஸலாம் என்று அவர்கள் கூறினர். அவரும் ஸலாம் என்றார். பொரிக்கப்பட்ட கன்றுக் குட்டியைத் தாமதமின்றி கொண்டு வந்தார். அவர்களின் கைகள் (உண்பதற்கு) அதை நோக்கிச் செல்லாததைக் கண்ட போது, அறிமுகமற்ற இனமாக அவர்களைக் கருதினார். அவர்களைப் பற்றி மனதுக்குள் பயந்தார்.  பயப்படாதீர்! நாங்கள் லூத் உடைய சமுதாயத்திற்காக அனுப்பப்பட்டுள்ளோம்  என்று அவர்கள் கூறினர்.

திருக்குர்ஆன் 11:69,70

நீர் பயப்படாதீர்! அறிவுடைய ஆண் குழந்தை பற்றி உமக்கு நாங்கள் நற்செய்தி கூறுகிறோம்  என்று அவர்கள் கூறினர்.  எனக்கு முதுமை ஏற்பட்ட நிலையில் எனக்கு நற்செய்தி கூறுகிறீர்களா? எதனடிப்படையில் நற்செய்தி கூறுகிறீர்கள்? என்று அவர் கேட்டார்.  உண்மையின் அடிப்படையிலேயே உமக்கு நற்செய்தி கூறுகிறோம். நம்பிக்கை இழந்தவராக நீர் ஆகி விடாதீர்!  என்று அவர்கள் கூறினர்.

திருக்குர்ஆன் 15:53-55

இருவரும் கீழ்ப்படிந்து (தமது) மகனை அவர் முகம் குப்புறக் கிடத்திய போது, இப்ராஹீமே! அக்கனவை நீர் உண்மைப்படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம்  என்று அவரை அழைத்துக் கூறினோம்.

திருக்குர்ஆன் 37:103-105

இப்ராஹீமின் மரியாதைக்குரிய விருந்தினர்கள் பற்றிய செய்தி உமக்குக் கிடைத்ததா?அவரிடம் அவர்கள் வந்து ஸலாம் கூறிய போது அவரும் ஸலாம் கூறினார். அவர்கள் அறிமுகமில்லாத சமுதாயம்! தமது குடும்பத்தாரிடம் விரைந்து சென்று பொரித்த காளைக் கன்றைக் கொண்டு வந்தார். அதை அவர்களின் அருகில் வைத்து  சாப்பிட மாட்டீர்களா?  என்றார். அவர்களைப் பற்றிப் பயந்தார்.  பயப்படாதீர்! என்று அவர்கள் கூறினர். அறிவாளியான ஆண் குழந்தை பற்றி அவருக்கு நற்செய்தி கூறினர். உடனே அவரது மனைவி சப்தமிட்டவராக வந்து முகத்தில் அடித்துக் கொண்டு,  நான் மலட்டுக் கிழவியாயிற்றே  என்றார். அதற்கவர்கள்  அப்படித் தான் உமது இறைவன் கூறினான். அவன் ஞானமிக்கவன். அறிந்தவன்  என்றனர். தூதர்களே! உங்கள் விஷயம் என்ன?  என்று கேட்டார்.  வரம்பு மீறி குற்றம் புரிந்த கூட்டத்தின் மீது உமது இறைவனால் அடையாளமிடப்பட்ட களிமண் கற்களை எறிவதற்காக நாங்கள் அவர்களிடம் அனுப்பப்பட்டுள்ளோம்  என்று அவர்கள் கூறினர்.

திருக்குர்ஆன் 51:24-34

மறைவானவை ஈஸா நபிக்குத் தெரியாது

 மர்யமின் மகன் ஈஸாவே! அல்லாஹ்வையன்றி என்னையும், என் தாயாரையும் கடவுள்களாக்கிக் கொள்ளுங்கள்!  என நீர் தான் மக்களுக்குக் கூறினீரா?  என்று அல்லாஹ் (மறுமையில்) கேட்கும் போது,  நீ தூயவன். எனக்குத் தகுதியில்லாத வார்த்தையை நான் கூற உரிமையில்லாதவன். நான் அவ்வாறு கூறியிருந்தால் அதை நீ அறிவாய். எனக்குள் உள்ளதை நீ அறிவாய்! உனக்குள் உள்ளதை நான் அறிய மாட்டேன். நீயே மறைவானவற்றை அறிபவன்  என்று அவர் பதிலளிப்பார்.  நீ எனக்குக் கட்டளையிட்ட படி எனது இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்!  என்பதைத் தவிர வேறு எதையும் நான் அவர்களிடம் கூறவில்லை. நான் அவர்களுடன் இருக்கும் போது அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். என்னை நீ கைப்பற்றியதும் நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். நீ அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவன்.  (என்றும் அவர் பதிலளிப்பார்.)

திருக்குர்ஆன் 5:117,117

மறைவானவை லூத் நபிக்குத் தெரியாது

நமது தூதர்கள் லூத்திடம் வந்த போது, அவர்கள் விஷயத்தில் அவர் கவலைப்பட்டார். அவர்களுக்காக மனம் வருந்தினார்.  இது மிகவும் கடினமான நாள் எனவும் கூறினார். அவரது சமுதாயத்தினர் அவரிடம் விரைந்து வந்தனர். இதற்கு முன் அவர்கள் தீமைகளைச் செய்து வந்தனர்.  என் சமுதாயமே! இதோ என் புதல்விகள் உள்ளனர். அவர்கள் உங்களுக்குத் தூய்மையானவர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! எனது விருந்தினர் விஷயத்தில் எனக்குக் கேவலத்தை ஏற்படுத்தி விடாதீர்கள்! உங்களில் நல்ல ஓர் ஆண் மகன் கூட இல்லையா?  என்று கேட்டார்.  உமது புதல்விகளிடம் எங்களுக்கு எந்தத் தேவையுமில்லை என்பதை நீர் உறுதியாக அறிவீர்! நாங்கள் விரும்புவதையும் நீர் அறிவீர்  என்றனர்.  உங்கள் விஷயத்தில் எனக்குச் சக்தி இருக்கக் கூடாதா? அல்லது பலமான ஆதரவை நான் பெற்றிருக்கக் கூடாதா?  என்று அவர் கூறினார்.  லூத்தே! நாங்கள் உமது இறைவனின் தூதர்கள். அவர்கள் உம்மை நெருங்கவே முடியாது. உமது மனைவியைத் தவிர உமது குடும்பத்தாருடன் இரவின் ஒரு பகுதியில் புறப்படுவீராக! உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். அவர்களுக்கு ஏற்படக்கூடியது அவளுக்கும் ஏற்படும். அவர்களின் காலக்கெடு வைகறைப் பொழுது. வைகறைப் பொழுது சமீபத்தில் இல்லையா?  என்றனர்

திருக்குர்ஆன் 11:77-81

அத்தூதர்கள் லூத்துடைய குடும்பத்தாரிடம் வந்த போது  நீங்கள் அறிமுகமற்ற சமுதாயமாக இருக்கிறீர்களே  என்று அவர் கூறினார். (அதற்கவர்கள்) அவ்வாறில்லை! அவர்கள் சந்தேகம் எழுப்பியதை உம்மிடம் கொண்டு வந்துள்ளோம்;உண்மையையே உம்மிடம் கொண்டு வந்தோம்; நாங்கள் உண்மை கூறுபவர்கள்; இரவின் ஒரு பகுதியில் உமது குடும்பத்தாருடன் செல்வீராக! அவர்களைப் பின் தொடர்ந்து (கடைசியில்) நீர் செல்வீராக! உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். கட்டளையிட்டவாறு செய்து முடியுங்கள்!  என்று கூறினார்கள்.

திருக்குர்ஆன் 15:61-65

மறைவானவை ஸுலைமான் நபிக்குத் தெரியாது

பறவைகளை அவர் ஆய்வு செய்தார். ஹுத்ஹுத்  பறவையை நான் காணவில்லையே!  அது ஓடி ஒளிந்து விட்டதா? என்றார்.  அதைக் கடுமையான முறையில் தண்டிப்பேன்; அல்லது அதை அறுத்து விடுவேன். அல்லது அது என்னிடம் தெளிவான சான்றைக் கொண்டு வர வேண்டும்  (என்றும் கூறினார்). (அப்பறவை) சிறிது நேரமே தாமதித்தது. உமக்குத் தெரியாத ஒன்றைத் தெரிந்துள்ளேன். ஸபா எனும் ஊரிலிருந்து உறுதியான ஒரு செய்தியை உம்மிடம் கொண்டு வந்துள்ளேன்  என்று கூறியது.

திருக்குர்ஆன் 27:20-22

மறைவானவை யஃகூப் நபிக்குத் தெரியாது

எங்கள் தந்தையே! நீங்கள் யூஸுஃப் விஷயத்தில் ஏன் எங்களை நம்புவதில்லை?நாங்கள் அவருக்கு நலம் நாடுபவர்கள்  என்று அவர்கள் கூறினர்.  நாளை எங்களுடன் அவரை அனுப்புங்கள்! அவர் நன்கு புசிப்பார்; விளையாடுவார்; நாங்கள் அவரைப் பாதுகாப்பவர்கள்  (எனவும் கூறினர்).  அவரை நீங்கள் கூட்டிச் செல்வது எனக்குக் கவலையளிக்கும். அவரை நீங்கள் கவனிக்காது இருக்கும் போது ஓநாய் அவரைத் தின்று விடுமோ என அஞ்சுகிறேன்  என்று அவர் கூறினார்.  நாங்கள் ஒரு கூட்டமாக இருக்கும் நிலையில் அவரை ஓநாய் தின்று விட்டால் நாங்கள் அப்போது நஷ்டமடைந்தோரே  என்று அவர்கள் கூறினர். அவரை அவர்கள் கூட்டிச் சென்ற போது,ஆழ் கிணற்றுக்குள் அவரைப் போடுவதென்று ஒரு மனதாக முடிவு செய்தனர்.  (பிற்காலத்தில்) அவர்களது இந்தக் காரியம் பற்றி அவர்களுக்கு நீர் கூறுவீர்  என்று அவர்கள் அறியாத வகையில் யூஸுஃபுக்கு அறிவித்தோம்.

திருக்குர்ஆன் 12:11-15

தமது தந்தையிடம் அவர்கள் சென்றதும்,  தந்தையே! (இனி மேல்) உணவுப் பொருள் எங்களுக்குத் தடுக்கப்பட்டு விட்டது. எனவே எங்களுடன் எங்கள் சகோதரரை அனுப்புங்கள்! உணவுப் பொருள் வாங்கி வருகிறோம்; அவரை நாங்கள் பாதுகாப்போம்  என்றனர். முன்னர் இவரது சகோதரர் விஷயத்தில் உங்களை நம்பியது போல் இவர் விஷயத்திலும் உங்களை நம்புவேனா? அல்லாஹ்வே சிறந்த பாதுகாவலன். அவன் கருணையாளர்களில் மிகப் பெரும் கருணையாளன்  (என்று அவர் கூறினார்)

திருக்குர்ஆன் 12:63,64

மறைவானவை தாவூத் நபிக்குத் தெரியாது

வழக்குரைக்க வந்தோரின் செய்தி உமக்குத் தெரியுமா? தொழுமிடத்தைத் தாண்டி,தாவூதிடம் அவர்கள் வந்த போது அவர்களைக் கண்டு திடுக்குற்றார். பயப்படாதீர்! நாங்கள் ஒருவர் மீது மற்றவர் வரம்பு மீறிய இரண்டு வழக்காளிகள். எங்களுக்கிடையே நியாயமான தீர்ப்பு வழங்குவீராக! தவறிழைத்து விடாதீர்! நேரான வழியில் எங்களை நடத்துவீராக!  என்று அவர்கள் கூறினர்.  இவர் எனது சகோதரர். இவருக்குத் தொன்னூற்று ஒன்பது ஆடுகள் உள்ளன. எனக்கோ ஒரே ஒரு ஆடு தான் உள்ளது. அதையும் என் பொறுப்பில் விடு என்று இவர் கூறுகிறார். வாதத்தில் என்னை மிகைத்து விட்டார்  என்று ஒருவர் கூறினார்.  உமது ஆட்டைத் தனது ஆட்டுடன் சேர்க்க அவர் கேட்டதன் மூலம் உமக்கு அநீதி இழைத்து விட்டார். உங்களில் கூட்டுச் சேர்வோரில் அதிகமானோர் ஒருவர் மற்றவர் மீது அநீதி இழைக்கின்றனர். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரைத் தவிர. அவர்கள் மிகவும் குறைவு தான்  என்று தாவூத் கூறினார். அவரைச் சோதித்தோம் என்பதை தாவூத் விளங்கிக் கொண்டார். தமது இறைவனிடம் மன்னிப்புக் கேட்டார். பணிந்து விழுந்தார். திருந்தினார்.

திருக்குர்ஆன் 38:21-24

மறைவானவை மூஸா நபிக்குத் தெரியாது

கவலையும், கோபமும் கொண்டு மூஸா தமது சமுதாயத்திடம் திரும்பிய போது எனக்குப் பின்னர் நீங்கள் செய்தது மிகவும் கெட்டது. உங்கள் இறைவனின் கட்டளைக்கு (தண்டனைக்கு) அவசரப்படுகிறீர்களா?  என்றார். பலகைகளைப் போட்டார். தமது சகோதரரின் தலையைப் பிடித்து தம்மை நோக்கி இழுத்தார். (அதற்கு அவரது சகோதரர்)  என் தாயின் மகனே! இந்தச் சமுதாயத்தினர் என்னைப் பலவீனனாகக் கருதி விட்டனர். என்னைக் கொல்லவும் முயன்றனர். எனவே எதிரிகள் என்னைப் பார்த்துச் சிரிக்கும் நிலையை ஏற்படுத்தி விடாதீர்! அநீதி இழைத்த சமுதாயத்தில் என்னையும் ஆக்கி விடாதீர்!  என்றார்.

திருக்குர்ஆன் 7:150

இல்லை! நீங்களே போடுங்கள்!  என்று அவர் கூறினார். உடனே அவர்களின் கயிறுகளும், கைத்தடிகளும் அவர்களது சூனியத்தினால் சீறுவதைப் போல் அவருக்குத் தோற்றமளித்தது. மூஸா தமக்குள் அச்சத்தை உணர்ந்தார்.  அஞ்சாதீர்! நீர் தான் வெற்றி பெறுவீர்  என்று கூறினோம்.

திருக்குர்ஆன் 20:66-68

மூஸாவே! உமது சமுதாயத்தை விட்டு விட்டு அவசரமாக வந்தது ஏன்?  (என்று இறைவன் கேட்டான்.)  அவர்கள் இதோ எனக்குப் பின்னால் வருகின்றனர். என் இறைவா! நீ திருப்திப்படுவதற்காக உன்னிடம் விரைந்து வந்தேன்  என்று அவர் கூறினார்.  உமக்குப் பின் உமது சமுதாயத்தை நாம் சோதித்தோம். அவர்களை ஸாமிரி வழி கெடுத்து விட்டான்  என்று (இறைவன்) கூறினான்.  உடனே மூஸா தமது சமுதாயத்திடம் கோபமாகவும், கவலைப்பட்டவராகவும் திரும்பினார்.  என் சமுதாயமே! உங்கள் இறைவன் உங்களுக்கு அழகான வாக்குறுதியை அளிக்கவில்லையா? அல்லது (நான் புறப்பட்டுப் போய்) அதிக காலம் ஆகி விட்டதா? அல்லது உங்கள் இறைவனிடமிருந்து உங்கள் மீது கோபம் இறங்க வேண்டும் என விரும்பி என்னிடம் கொடுத்த வாக்கை மீறினீர்களா?  என்று கேட்டார்.

திருக்குர்ஆன் 20:83-86

அவ்வூரார் கவனமற்று இருந்த நேரத்தில் அவர் அங்கே சென்றார். அங்கே இரண்டு மனிதர்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்ததைக் கண்டார். ஒருவர் இவரது சமுதாயத்தைச் சேர்ந்தவர். இன்னொருவர் இவரது எதிரியின் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவரது சமுதாயத்தைச் சேர்ந்தவர் எதிரிச் சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு எதிராக இவரிடம் உதவி தேடினார். உடனே மூஸா ஒரு குத்து விட்டார். உடனே அவன் கதை முடிந்து விட்டது. இது ஷைத்தானின் வேலை. அவன் வழி கெடுக்கும் தெளிவான எதிரி  என்றார். என் இறைவா! எனக்கே நான் தீங்கு இழைத்து விட்டேன். எனவே என்னை மன்னிப்பாயாக!  என்றார். அவன் அவரை மன்னித்தான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.  என் இறைவா! நீ எனக்கு அருள் புரிந்ததால் குற்றவாளிகளுக்கு உதவுபவனாக இனிமேல் இருக்க மாட்டேன்  என்றார்.

திருக்குர்ஆன் 28:15-17

மறைவானவை நபிகள் நாயகத்துக்குத் தெரியாது

இது மறைவான செய்திகளில் ஒன்றாகும். (முஹம்மதே!) இதை நாமே உமக்கு அறிவிக்கிறோம். மர்யமை யார் பொறுப்பேற்றுக் கொள்வது என்று (முடிவு செய்ய) தமது எழுது கோல்களை அவர்கள் போட்ட போதும் அவர்களுடன் நீர் இருக்கவில்லை. அவர்கள் இது குறித்து சர்ச்சை செய்த போதும் அவர்களுடன் நீர் இருக்கவில்லை.

திருக்குர்ஆன் 3:44

(முஹம்மதே!) இதற்கு முன் சில தூதர்களின் வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம். சில தூதர்களின் வரலாற்றை நாம் உமக்குக் கூறவில்லை. அல்லாஹ் மூஸாவுடன் உண்மையாகவே பேசினான்.

திருக்குர்ஆன் 4:164

அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் உள்ளன; மறைவானதை அறிவேன்; என்று உங்களிடம் கூற மாட்டேன். நான் வானவர் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர (வேறெதனையும்) நான் பின்பற்றுவதில்லை என்று (முஹம்மதே!) கூறுவீராக!  குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? சிந்திக்க மாட்டீர்களா?  என்று கேட்பீராக!

திருக்குர்ஆன் 6:50

நீங்கள் அவசரப்படுவது என்னிடம் இருந்திருந்தால் எனக்கும், உங்களுக்குமிடையே காரியம் முடிக்கப்பட்டிருக்கும். அநீதி இழைத்தவர்களை அல்லாஹ் அறிந்தவன் என்று கூறுவீராக! மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார். தரையிலும், கடலிலும் உள்ளவற்றை அவன் அறிவான். ஓர் இலை கீழே விழுந்தாலும் அதை அவன் அறியாமல் இருப்பதில்லை. பூமியின் இருள்களில் உள்ள விதையானாலும்,  ஈரமானதோ காய்ந்ததோ ஆனாலும் தெளிவான ஏட்டில் இல்லாமல் இல்லை.

திருக்குர்ஆன் 6:58,59

(உலகம் அழியும்) அந்த நேரம் எப்போது வரும்?  என்று (முஹம்மதே!) உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர்.  இது பற்றிய ஞானம் என் இறைவனிடமே உள்ளது. அதற்குரிய நேரத்தில் அவனைத் தவிர யாரும் அதை வெளிப்படுத்த முடியாது. வானங்களிலும், பூமியிலும் அது மகத்தானதாக அமையும். அது உங்களிடம் திடீரென்று தான் வரும்  என்று கூறுவீராக! இது பற்றி நீர் நன்கு அறிந்தவர் போல் அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்.  இது பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது  என்று கூறுவீராக! எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிந்து கொள்வதில்லை.

திருக்குர்ஆன் 7:187

அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும்,நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்  என்று (முஹம்மதே!) கூறுவீராக!

திருக்குர்ஆன் 7:188

(முஹம்மதே!) இவை மறைவான செய்திகள். இவற்றை உமக்கு நாம் அறிவிக்கிறோம். இதற்கு முன் நீரும், உமது சமுதாயத்தினரும் இதை அறிந்திருக்கவில்லை. எனவே பொறுமையைக் கடைப்பிடிப்பீராக! (நம்மை) அஞ்சுவோர்க்கே (நல்ல) முடிவு உண்டு.

திருக்குர்ஆன் 11:49

(முஹம்மதே!) இவை, மறைவான செய்திகள். இதை உமக்கு அறிவிக்கிறோம். அவர்கள் அனைவரும் (யூஸுஃபுக்கு எதிராக) ஒரு மனதாக சூழ்ச்சி செய்த போது அவர்களுடன் நீர் இருக்கவில்லை.

திருக்குர்ஆன் 12:102

(முஹம்மதே! உலகம் அழியும்) அந்த நேரம் பற்றி மக்கள் உம்மிடம் கேட்கின்றனர். அது பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது  எனக் கூறுவீராக! (உலகம் அழியும்) அந்த நேரம் சமீபத்தில் இருக்கக் கூடும் என்பது உமக்கு எப்படித் தெரியும்?

திருக்குர்ஆன் 33:63

அல்லாஹ்வே உண்மையை உள்ளடக்கிய வேதத்தையும், தராசையும் அருளினான். (உலகம் அழியும்) அந்த நேரம் அருகில் இருக்கக் கூடும் என்பது உமக்கு எப்படித் தெரியும்?

திருக்குர்ஆன் 42:17

(முஹம்மதே! உலகம் அழியும்) அந்த நேரம் பற்றி அது எப்போது ஏற்படும்? என உம்மிடம் கேட்கின்றனர். அது பற்றிய விளக்கம் உம்மிடம் எங்கே இருக்கிறது? அதன் முடிவு உமது இறைவனிடமே உள்ளது.

திருக்குர்ஆன் 79:42-44

நபிமார்களுக்கு சிலவற்றை மட்டும் அல்லாஹ் அறிவிப்பான்

நல்லவரிலிருந்து கெட்டவரை அவன் பிரித்துக் காட்டாமல் நீங்கள் எப்படி (கலந்து) இருக்கிறீர்களோ அப்படியே (கலந்திருக்குமாறு) நம்பிக்கை கொண்டோரை அல்லாஹ் விட்டு விட மாட்டான். மறைவானதை அல்லாஹ் உங்களுக்குக் காட்டித் தருபவனாக இல்லை. மாறாக அல்லாஹ் தனது தூதர்களில் தான் நாடியோரைத் தேர்வு செய்கிறான். எனவே அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்புங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்களுக்கு மகத்தான கூலி உண்டு.

திருக்குர்ஆன் 3:179

அவன் மறைவானதை அறிபவன். தனது மறைவான விஷயங்களை அவன் பொருந்திக் கொண்ட தூதரைத் தவிர யாருக்கும் வெளிப்படுத்த மாட்டான். அவர்கள் தமது இறைவனின் தூதுச் செய்திகளை எடுத்துச் சொன்னார்களா என்பதை அறிவிப்பதற்காக அவருக்கு முன்னும், அவருக்குப் பின்னும் கண்காணிப்பாளரை ஏற்படுத்துகிறான். அவர்களிடம் உள்ளதை அவன் முழுமையாக அறிவான். ஒவ்வொரு பொருளையும் அவன் எண்ணிக்கையால் அறிவான்.

திருக்குர்ஆன் 72:26-28

அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கக் கூடாது

அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும்,நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள்! பெருமையடித்து, கர்வம் கொள்ளும் எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான்.

திருக்குர்ஆன் 4:36

வானங்களையும், பூமியையும் படைத்த அல்லாஹ்வையன்றி வேறு பொறுப்பாளனை ஏற்படுத்திக் கொள்வேனா? அவனே உணவளிக்கிறான். அவன் உணவளிக்கப்படுவதில்லை  என்று கூறுவீராக!  கட்டுப்பட்டு நடப்போரில் முதலாமவனாக இருக்குமாறு கட்டளையிடப்பட்டுள்ளேன்  எனவும் கூறுவீராக! இணை கற்பித்தவராக ஒரு போதும் நீர் ஆகி விடாதீர்!

திருக்குர்ஆன் 6:14

 வாருங்கள்! உங்கள் இறைவன் உங்களுக்குத் தடை செய்ததைக் கூறுகிறேன் என்று (முஹம்மதே!) கூறுவீராக! அது,  நீங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்கக் கூடாது  என்பதே. பெற்றோருக்கு உதவுங்கள்! வறுமையின் காரணமாக உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். வெட்கக்கேடான காரியங்களில் வெளிப்படையானதையும்,ப் இரகசியமானதையும் நெருங்காதீர்கள்! அல்லாஹ் தடை செய்துள்ளதால் எவரையும் (அதற்கான) உரிமை இருந்தால் தவிர கொல்லாதீர்கள்! நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான்.

திருக்குர்ஆன் 6:151

மனிதர்களே! நீங்கள் என் மார்க்கத்தில் சந்தேகத்தில் இருந்தால் (எனக்குக் கவலையில்லை.) அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குவோரை வணங்க மாட்டேன். மாறாக உங்களைக் கைப்பற்றவுள்ள அல்லாஹ்வையே வணங்குவேன். நம்பிக்கை கொண்டவனாக இருக்கக் கட்டளையிடப்பட்டுள்ளேன்  என்று (முஹம்மதே!) கூறுவீராக! உண்மை வழியில் நின்று இம்மார்க்கத்தை நோக்கி உமது கவனத்தைத் திருப்புவீராக! இணை கற்பிப்பவராக ஆகி விடாதீர்! அல்லாஹ்வையன்றி உமக்குப் பயனும், தீங்கும் தராதவற்றைப் பிரார்த்திக்காதீர்! (அவ்வாறு) செய்தால் நீர் அநீதி இழைத்தவராவீர்!

திருக்குர்ஆன் 10:104-106

(முஹம்மதே!) நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள் உமக்கு அருளப்பட்டதில் மகிழ்ச்சியடைகின்றனர். அதில் சிலவற்றை மறுப்போரும் அக்கூட்டங்களில் உள்ளனர்.  அல்லாஹ்வை நான் வணங்க வேண்டும். அவனுக்கு இணை கற்பிக்கக் கூடாது என்று கட்டளையிடப்பட்டுள்ளேன். அவன் பக்கமே அழைக்கிறேன். மீளுதலும் அவனிடமே உள்ளது  என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 13:36

அல்லாஹ்வின் வசனங்கள் உமக்கு அருளப்பட்ட பின்னர் அதை விட்டும் உம்மை (எதுவும்) தடுத்திட வேண்டாம்! உமது இறைவனை நோக்கி அழைப்பீராக! இணை கற்பிப்பவராக நீர் ஆகாதீர்! அல்லாஹ்வுடன் வேறு கடவுளை நீர் பிரார்த்திக்காதீர்! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவனது முகத்தைத் தவிர ஒவ்வொரு பொருளும் அழியக் கூடியது. அவனுக்கே அதிகாரம் உள்ளது. அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.

திருக்குர்ஆன் 28:87,88

 நான் எனது இறைவனையே பிரார்த்திக்கிறேன். அவனுக்கு யாரையும் இணையாக்க மாட்டேன்  என (முஹம்மதே!) கூறுவீராக! நான் உங்களுக்குத் தீங்கு செய்யவும்,நன்மை செய்யவும் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்றும் கூறுவீராக!

திருக்குர்ஆன் 72:20

அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தல் பெரும் பாவம்

தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.

திருக்குர்ஆன் 4:48

தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். இதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு அவன் மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் (உண்மையை விட்டும்) தூரமான வழி கேட்டில் விழுந்து விட்டார்.

திருக்குர்ஆன் 4:116

லுக்மான் தமது மகனுக்கு அறிவுரை கூறும் போது  என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதே! இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும்  என்று குறிப்பிட்டதை நினைவூட்டுவீராக!

திருக்குர்ஆன் 31:13

இணை கற்பித்தலுக்கு மன்னிப்பே கிடையாது

தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.

திருக்குர்ஆன் 4:48

தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். இதற்குக் கீழ் நிலையில் உள்ளதை, தான் நாடியோருக்கு அவன் மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் (உண்மையை விட்டும்) தூரமான வழி கேட்டில் விழுந்து விட்டார்.

திருக்குர்ஆன் 4:116

மர்யமின் மகன் மஸீஹ் தான் அல்லாஹ்  எனக் கூறியவர்கள் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர்.  இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை  என்றே மஸீஹ் கூறினார்.

திருக்குர்ஆன் 5:72

இதுவே அல்லாஹ்வின் வழி. தனது அடியார்களில் தான் நாடியோரை இதன் மூலம் நேர் வழியில் செலுத்துகிறான். அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த (நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.

திருக்குர்ஆன் 6:88

நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் நஷ்டமடைந்தவராவீர். மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக! என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது.

திருக்குர்ஆன் 39:65,66

இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்.

திருக்குர்ஆன் 9:17

(ஏக இறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும் இணை கற்பிப்போரும் நரக நெருப்பில் இருப்பார்கள். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களே படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள்.

திருக்குர்ஆன் 98:6

இணை கற்பிக்கப்பட்டவர்கள் கற்பித்தவர்களைக் கை கழுவுவார்கள்

 உங்களுக்கு நாம் வழங்கியவற்றையெல்லாம் உங்கள் முதுகுக்குப் பின்னால் விட்டு விட்டு உங்களை ஆரம்பத்தில் நாம் படைத்தது போல் தன்னந்தனியாக நம்மிடம் வந்து விட்டீர்கள்! தெய்வங்கள் என்று நீங்கள் கருதிக் கொண்டிருந்த, உங்கள் பரிந்துரையாளர்களை நாம் உங்களுடன் காணவில்லையே? உங்களுக்கிடையே (உறவுகள்) முறிந்து விட்டன. நீங்கள் கற்பனை செய்தவை உங்களை விட்டும் மறைந்து விட்டன  (என்று கூறப்படும்.)

திருக்குர்ஆன் 6:94

அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவனை விட, அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதியவனை விட மிகப் பெரிய அநீதி இழைத்தவன் யார்? விதிக்கப்பட்ட அவர்களின் பங்கு அவர்களுக்குக் கிடைக்கும்.  அல்லாஹ்வை விட்டு விட்டு நீங்கள் யாரை அழைத்துக் கொண்டிருந்தீர்களோ அவர்கள் எங்கே? என்று நமது தூதர்கள் அவர்களைக் கைப்பற்ற அவர்களிடம் வரும் போது கேட்பார்கள்.  அவர்கள் எங்களை விட்டும் மறைந்து விட்டனர்  என அவர்கள் கூறுவார்கள்.  நாங்கள் (ஏக இறைவனை) மறுப்போராக இருந்தோம்  எனத் தமக்கு எதிராகச் சாட்சி கூறுவார்கள்.

திருக்குர்ஆன் 7:37

அவர்கள் அனைவரையும் நாம் ஒன்று திரட்டும் நாளில் இணை கற்பித்தவர்களை நோக்கி நீங்களும், உங்கள் தெய்வங்களும் உங்கள் இடத்திலேயே நில்லுங்கள்! என்று கூறுவோம். அப்போது அவர்களிடையே பிளவை ஏற்படுத்துவோம்.  நீங்கள் எங்களை வணங்கவே இல்லை  என்று அவர்களின் தெய்வங்கள் கூறுவார்கள்.

திருக்குர்ஆன் 10:28

பின்னர் கியாமத் நாளில் அவர்களை இழிவுபடுத்துவான்.  நீங்கள் எனக்கு இணையாகக் கருதி தர்க்கம் செய்து கொண்டிருந்தீர்களே அவர்கள் எங்கே?  என்று அவன் கேட்பான். இன்றைய தினம் இழிவும், கேடும் (ஏக இறைவனை) மறுப்போர்க்கே  என்று கல்வி வழங்கப்பட்டோர் கூறுவார்கள்.

திருக்குர்ஆன் 16:27

 எனக்கு இணையாகக் கருதப்பட்டோரை நீங்கள் அழையுங்கள்  என்று அவன் கூறும் நாளில் அவர்களை அழைப்பார்கள். ஆனால் அவர்கள் இவர்களுக்குப் பதிலேதும் கூற மாட்டார்கள். அவர்களுக்கிடையே அழிவிடத்தை ஏற்படுத்துவோம்.

திருக்குர்ஆன் 18:52

தங்களுக்கு உதவுவார்கள் என அல்லாஹ்வையன்றி பல கடவுள்களை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டனர். அவ்வாறு இல்லை. தங்களை இவர்கள் வணங்கியதை அவர்கள் மறுத்து இவர்களுக்கு எதிராவார்கள்.

திருக்குர்ஆன் 19:81,82

அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்கிக் கொண்டிருந்தவை எங்கே? அவர்கள் உங்களுக்கு உதவுவார்களா? அல்லது தமக்குத் தாமே உதவிக் கொள்வார்களா? என்று அவர்களிடம் கேட்கப்படும். அவர்களும், வழி கெட்டவர்களும், இப்லீஸின் படையினர் அனைவரும் அதில் முகம் குப்புற தள்ளப்படுவார்கள்.

திருக்குர்ஆன் 26:92-95

அவன், அவர்களை அழைக்கும் நாளில்  எனக்கு இணையாக நீங்கள் கருதியோர் எங்கே?  என்று கேட்பான்.  எங்கள் இறைவா! இவர்களையே வழி கெடுத்தோம். நாங்கள் வழி கெட்டது போலவே அவர்களையும் வழி கெடுத்தோம். அதிலிருந்து விலகி உன்னை நோக்கித் திரும்புகிறோம். அவர்கள் எங்களை வணங்கவில்லை என்று யாருக்கு எதிராக வாக்கு உறுதியாகி விட்டதோ அவர்கள் கூறுவார்கள்

திருக்குர்ஆன் 28:62-64

அவர்களை அவன் அழைக்கும் நாளில்  எனக்கு இணையாக நீங்கள் கருதியோர் எங்கே?  என்று கேட்பான்.

திருக்குர்ஆன் 28:74

இவ்வுலக வாழ்வில் உங்களுக்கிடையே உள்ள நேசத்தின் காரணமாகவே அல்லாஹ்வையன்றி நீங்கள் சிலைகளை ஏற்படுத்தி இருக்கிறீர்கள். பின்னர் கியாமத் நாளில் உங்களில் ஒருவர் மற்றவரை மறுப்பார். உங்களில் ஒருவர் மற்றவரைச் சபிப்பார். உங்கள் தங்குமிடம் நரகமாகும். உங்களுக்கு உதவி செய்வோர் இல்லை.

திருக்குர்ஆன் 29:25

அவர்களின் தெய்வங்களில் அவர்களுக்காகப் பரிந்து பேசுவோர் இருக்க மாட்டார்கள். அவர்கள் தம் தெய்வங்களையும் மறுப்பார்கள்.

திருக்குர்ஆன் 30:13

நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.

திருக்குர்ஆன் 35:14

அல்லாஹ்வையன்றி நீங்கள் இணை கற்பித்தவை எங்கே என்று பின்னர் அவர்களிடம் கேட்கப்படும்.  எங்களை விட்டும் மறைந்து விட்டன. இல்லை! இதற்கு முன் எதையும் நாங்கள் பிரார்த்தித்துக் கொண்டிருக்கவில்லை  என்று அவர்கள் கூறுவார்கள். இவ்வாறே (தன்னை) மறுப்போரை அல்லாஹ் வழி கேட்டில் விடுகிறான்.

திருக்குர்ஆன் 40:73,74

(உலகம் அழியும்) அந்த நேரம் பற்றிய அறிவு அவனிடமே திருப்பப்படும். அவனுக்குத் தெரியாமல் கிளைகளிலிருந்து கனிகள் வெளிப்படுவதோ, எந்தப் பெண்ணும் கர்ப்பமடைவதோ, பிரசவிப்பதோ இல்லை.  எனக்கு இணையாகக் கருதப்பட்டோர் எங்கே?  என்று அவர்களை அவன் அழைக்கும் நாளில்  எங்களில் சாட்சி கூறுவோர் யாரும் இல்லை என்பதை உன்னிடம் ஒப்புக் கொள்கிறோம்  என அவர்கள் கூறுவார்கள். இதற்கு முன் அவர்கள் பிரார்த்தனை செய்து வந்தவை அவர்களை விட்டு மறைந்து விடும். தமக்கு எந்தப் புகலிடமும் இல்லை என்று உறுதி கொள்வார்கள்.

திருக்குர்ஆன் 41:47,48

கியாமத் நாள் வரை தமக்குப் பதில் தராத, அல்லாஹ் அல்லாதோரை அழைப்பவரை விட மிகவும் வழி கெட்டவர் யார்? அவர்களோ தம்மை அழைப்பது பற்றி அறியாது உள்ளனர். மக்கள் ஒன்று திரட்டப்படும் போது அவர்கள் இவர்களுக்குப் பகைவர்களாக ஆவார்கள். இவர்கள் தம்மை வணங்கியதையும் மறுப்பார்கள்.

திருக்குர்ஆன் 46:6

அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்க எந்த நியாயமும் இல்லை

உங்கள் இறைவனிடமிருந்து வேதனையும், கோபமும் உங்கள் மீது ஏற்பட்டு விட்டன. நீங்களும், உங்கள் முன்னோர்களும் சூட்டிக் கொண்ட வெறும் பெயர்களைப் பற்றி (கற்பனைப் பாத்திரங்களைப் பற்றி) என்னிடம் தர்க்கம் செய்கிறீர்களா? அது பற்றி அல்லாஹ் எந்தச் சான்றையும் அருளவில்லை. எதிர் பாருங்கள்! உங்களுடன் சேர்ந்து நானும் எதிர்பார்க்கிறேன்  என்று அவர் (ஹூத்) கூறினார்.

திருக்குர்ஆன் 7:71

உங்கள் தெய்வங்களில் உண்மைக்கு வழி காட்டுபவர் உண்டா?  என்று கேட்பீராக! அல்லாஹ்வே உண்மைக்கு வழி காட்டுகிறான்  என்று கூறுவீராக! உண்மைக்கு வழி காட்டுபவன் பின்பற்றத்தக்கவனா? பிறர் வழி நடத்தினால் தவிர தானாகச் செல்ல இயலாதவை பின்பற்றத் தக்கவையா? உங்களுக்கு என்ன நேர்ந்தது? எவ்வாறு தீர்ப்பளிக்கிறீர்கள்?

திருக்குர்ஆன் 10:36

கவனத்தில் கொள்க! வானங்களிலும், பூமியிலும் இருப்போர் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். அல்லாஹ்வையன்றி தெய்வங்களை அழைப்போர் எதைப் பின்பற்றுகின்றனர்? அவர்கள் ஊகத்தையே பின்பற்றுகின்றனர். அவர்கள் கற்பனை செய்வோராகவே உள்ளனர்.

திருக்குர்ஆன் 10:66

அவனன்றி நீங்கள் வணங்குபவை வெறும் பெயர்களே. நீங்களும், உங்களின் முன்னோர்களும் அவற்றுக்குப் பெயரிட்டீர்கள்! இது குறித்து அல்லாஹ் எந்தச் சான்றையும் அருளவில்லை. அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் இல்லை. அவனைத் தவிர எதையும் நீங்கள் வணங்கக் கூடாது என்று அவன் கட்டளையிட்டுள்ளான். இதுவே நேரான மார்க்கம். எனினும் அதிகமான மனிதர்கள் விளங்குவதில்லை.

திருக்குர்ஆன் 12:40

ஒவ்வொருவரும் செய்பவற்றை அல்லாஹ் கண்காணிப்பவனாக இருக்க, அவர்கள் அவனுக்கு இணை கற்பிக்கிறார்களா?  அவர்களைப் பற்றி விளக்குங்கள்!  என்று கூறுவீராக! பூமியில் அவனுக்குத் தெரியாததை அவனுக்கு அறிவிக்கிறீர்களா? அல்லது வெறும் வார்த்தைகளா? (ஏக இறைவனை) மறுப்போரின் சூழ்ச்சி அவர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது. அவர்கள் (நல்) வழியிலிருந்து தடுக்கப்பட்டு விட்டனர். அல்லாஹ் யாரை வழி கேட்டில் விட்டு விடுகிறானோ அவருக்கு வழி காட்டுபவன் இல்லை.

திருக்குர்ஆன் 13:33

உங்களில் ஒருவரை விட மற்றவரை செல்வத்தில் அல்லாஹ் சிறப்பித்திருக்கிறான். (செல்வத்தால்) சிறப்பிக்கப்பட்டோர் தமது செல்வத்தைத் தமது அடிமைகளிடம் கொடுத்து,தங்களுக்குச் சமமாக அவர்களை ஆக்குவதில்லை. அல்லாஹ்வின் அருட்கொடையையா நிராகரிக்கிறார்கள்?

திருக்குர்ஆன் 16:71

அவை வெறும் பெயர்கள் தவிர வேறு இல்லை. நீங்களும், உங்கள் மூதாதையரும் தாம் அந்தப் பெயரைச் சூட்டினீர்கள். இது பற்றி அல்லாஹ் எந்த அத்தாட்சியையும் அருளவில்லை. ஊகத்தையும், மனோ இச்சைகளையும் தவிர வேறு எதையும் அவர்கள் பின்பற்றவில்லை. இதோ அவர்களுக்கு அவர்களின் இறைவனிடமிருந்து நேர்வழி வந்து விட்டது.

திருக்குர்ஆன் 53:23

பாவிகளுக்கும் அல்லாஹ் அருள் புரிவதால் இணை கற்பிக்க நியாயம் இல்லை

அவர்கள் வெட்கக்கேடானதைச் செய்தாலோ, தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே அவர்கள் நிலைத்திருக்க மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 3:135

யாரேனும் தீமையைச் செய்து, அல்லது தமக்குத் தாமே தீங்கிழைத்து பின்னர் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடினால் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும்,  நிகரற்ற அன்புடையோனாகவும் அவர் காண்பார்.

திருக்குர்ஆன் 4:110

(முஹம்மதே!) நமது வசனங்களை நம்புவோர் உம்மிடம் வந்தால் உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். அருள் புரிவதைத் தன் மீது உங்கள் இறைவன் கடமையாக்கிக் கொண்டான். உங்களில் எவரேனும் அறியாமையின் காரணமாக தீமையைச் செய்து விட்டு, அதன் பின்னர் மன்னிப்புக் கேட்டு திருந்திக் கொண்டால் அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்  எனக் கூறுவீராக!

திருக்குர்ஆன் 6:54

யார் தீமையான காரியங்களைச் செய்து, பின்னர் திருந்தி நம்பிக்கை கொள்கிறார்களோ (அவர்களை) உமது இறைவன் அதன் பிறகு மன்னிப்பவன்;  நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன் 7:153

அறியாமையின் காரணமாகத் தீமையைச் செய்து விட்டு, அதன் பின்னர் மன்னிப்புக் கோரி,திருந்திக் கொண்டோருக்கு உமது இறைவன் இருக்கிறான். அதன் பின்னர் உமது இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன் 16:119

எனினும் அநீதி இழைத்து தீமைக்குப் பின் நன்மையாக மாற்றிக் கொண்டவரை நான் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையவன்.

திருக்குர்ஆன் 27:11

தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையவன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக!

திருக்குர்ஆன் 39:53

அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழக்கக் கூடாது என்பதால் இணை கற்பிக்க நியாயம் இல்லை

என் மக்களே! நீங்கள் சென்று யூஸுஃபையும், அவரது சகோதரரையும் நன்றாகத் தேடுங்கள்! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்! (ஏக இறைவனை) மறுக்கும் கூட்டத்தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்க மாட்டார்கள்  என்றார்.

திருக்குர்ஆன் 12:87

வழி கெட்டவர்களைத் தவிர வேறு யார் தமது இறைவனின் அருளில் நம்பிக்கை இழக்க முடியும்?  என்று அவர் கேட்டார்.

திருக்குர்ஆன் 15:56

யாருக்கும் எந்த ஆற்றலும் கிடையாது என்பதால் இணை கற்பிக்க நியாயம் இல்லை

மர்யமுடைய மகன் மஸீஹ் தான் அல்லாஹ்  என்று கூறியோர் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர்.  மர்யமின் மகன் மஸீஹையும், அவரது தாயாரையும், பூமியில் உள்ள அனைவரையும் அல்லாஹ் அழிக்க நாடினால் அவனிடமிருந்து (அதைத் தடுக்க) சிறிதளவேனும் சக்தி பெற்றவர் யார்?  என்று நீர் கேட்பீராக! வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவைகளின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைப்பான். அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.

திருக்குர்ஆன் 5:17

அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்த நன்மையும், தீமையும் செய்யச் சக்தியற்றவற்றை வணங்குகிறீர்களா?  என்று கேட்பீராக! அல்லாஹ்வே செவியுறுபவன்;அறிந்தவன்.

திருக்குர்ஆன் 5:76

உங்கள் செவிப் புலனையும், பார்வைகளையும் அல்லாஹ் நீக்கி விட்டு, உங்கள் உள்ளங்கள் மீது முத்திரையிட்டால் அதைக் கொண்டு வருகின்ற அல்லாஹ் அல்லாத (வேறு) கடவுள் யாரேனும் உண்டா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்! எனக் கேட்பீராக! சான்றுகளை எவ்வாறு விளக்குகிறோம் என்பதையும், பின்னர் அவர்கள் எவ்வாறு புறக்கணிக்கின்றனர் என்பதையும் கவனிப்பீராக

திருக்குர்ஆன் 6:46

எங்களுக்கு நன்மையும், தீங்கும் செய்ய முடியாத அல்லாஹ் அல்லாதவர்களைப் பிரார்த்திப்போமா? அல்லாஹ் எங்களுக்கு நேர் வழி காட்டிய பின் வந்த வழியே திருப்பப்படுவோமா? (அவ்வாறு திரும்பினால்) எங்களிடம் வந்து விடு  என நேர் வழிக்கு அழைக்கும் நண்பர்கள் இருந்தும், பூமியில் ஷைத்தான்கள் வழி கெடுத்து குழப்பத்தில் தள்ளி விட்டவனைப் போல் ஆகி விடுவோம்  எனக் கூறுவீராக!  அல்லாஹ்வின் வழியே நேர் வழி. அகிலத்தின் இறைவனுக்கு கட்டுப்பட்டு நடக்குமாறு கட்டளையிடப்பட்டுள்ளோம்  என்றும் கூறுவீராக!

திருக்குர்ஆன் 6:71

அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்  என்று (முஹம்மதே!) கூறுவீராக!

திருக்குர்ஆன் 7:188

எதையும் படைக்காதவற்றையா அவர்கள் (இறைவனுக்கு) இணை கற்பிக்கின்றனர்?அவர்களே படைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு உதவிட அவர்களுக்கு இயலாது. தமக்கே கூட அவர்கள் உதவிக் கொள்ள மாட்டார்கள். (எதையும்) தெரிவிக்க அவர்களை நீங்கள் அழைத்தால் அவர்கள் உங்களைப் பின்பற்ற மாட்டார்கள். நீங்கள் அவர்களை அழைப்பதும்,மௌனமாக இருப்பதும் உங்களைப் பொறுத்த வரை சமமானது. அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்! அவர்களுக்கு நடக்கின்ற கால்கள் உள்ளனவா? அல்லது பிடிக்கின்ற கைகள் உள்ளனவா? அல்லது பார்க்கின்ற கண்கள் உள்ளனவா? அல்லது கேட்கின்ற காதுகள் உள்ளனவா? உங்கள் தெய்வங்களை அழைத்து எனக்கெதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்! எனக்கு எந்த அவகாசமும் தராதீர்கள்!  என்று கூறுவீராக!  இவ்வேதத்தை அருளிய அல்லாஹ்வே எனது பொறுப்பாளன். அவனே நல்லோருக்குப் பொறுப்பேற்றுக் கொள்கிறான்  (என்றும் கூறுவீராக!) அவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவிட இயலாது. தமக்கே அவர்கள் உதவ முடியாது. (எதையும்) தெரிவிக்க நீங்கள் அவர்களை அழைத்தால் அவர்கள் செவியுற மாட்டார்கள். அவர்கள் உம்மைப் பார்ப்பது போல் நீர் காண்பீர்! (ஆனால்) அவர்கள் பார்க்க மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 7:191-198

அல்லாஹ்வையன்றி அவர்களுக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர்.  அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்  என்றும் கூறுகின்றனர்.  வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்குத்  தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன்.  அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்  என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 10:18

 அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கே தீங்கு செய்யவோ நன்மை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை  என்று (முஹம்மதே!) கூறுவீராக! ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு காலக் கெடு உள்ளது. அவர்களின் காலக்கெடு வரும் போது சிறிது நேரம் அவர்கள் பிந்தவும் மாட்டார்கள். முந்தவும் மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 10:49

அல்லாஹ்வையன்றி உமக்குப் பயனும், தீங்கும் தராதவற்றைப் பிரார்த்திக்காதீர்! (அவ்வாறு) செய்தால் நீர் அநீதி இழைத்தவராவீர்! அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன் 10:106,107

உண்மையான பிரார்த்தனை அவனுக்கே உரியது. அவனன்றி இவர்கள் யாரைப் பிரார்த்திக்கிறார்களோ அவர்கள் சிறிதளவும் இவர்களுக்குப் பதிலளிக்க மாட்டார்கள். தண்ணீர் (தானாக) வாய்க்குள் செல்ல வேண்டும் என்பதற்காக இரு கைகளையும் அதை நோக்கி விரித்து வைத்துக் கொள்பவனைப் போலவே அவர்கள் உள்ளனர். அது (தானாக) அவனது வாய்க்குள் செல்லாது. (ஏக இறைவனை) மறுப்போரின் பிரார்த்தனை வீணாகவே இருக்கும்.

திருக்குர்ஆன் 13:14

வானங்களுக்கும், பூமிக்கும் இறைவன் யார்?  என்று (முஹம்மதே!) கேட்டு,அல்லாஹ் என்று கூறுவீராக!  அவனன்றி பாதுகாவலர்களைக் கற்பனை செய்து கொண்டீர்களா? அவர்கள் தமக்கே நன்மை செய்யவும், தீமை செய்யவும் ஆற்றல் பெற மாட்டார்கள்  என்று கூறுவீராக!  குருடனும், பார்வையுள்ளவனும் சமமாவார்களா?இருள்களும், ஒளியும் சமமாகுமா?  என்று கேட்பீராக! அல்லாஹ்வுக்கு நிகரானவர்களைக் கற்பனை செய்து விட்டார்களா? அவர்கள் அல்லாஹ் படைத்ததைப் போல் படைத்து, அதன் காரணமாக படைத்தது யார்? என்று இவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டு விட்டதா? ஒவ்வொரு பொருளையும் அல்லாஹ்வே படைத்தவன்; அவன் தனித்தவன்; அடக்கியாள்பவன்  என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 13:16

வானங்களிலும், பூமியிலும் இவர்களுக்கான உணவில் சிறிதளவும் கைவசம் வைத்திராதவர்களையும், சக்தியற்றோரையும் அவர்கள் அல்லாஹ்வையன்றி வணங்குகின்றனர்.

திருக்குர்ஆன் 16:73

அல்லாஹ்வையன்றி நீங்கள் கற்பனை செய்தோரைப் பிரார்த்தித்துப் பாருங்கள்! உங்களை விட்டும் கஷ்டத்தை நீக்கவோ, மாற்றவோ அவர்களுக்கு இயலாது  என்று கூறுவீராக! இவர்கள் யாரிடம் பிரார்த்திக்கிறார்களோ அவர்களில் (இறைவனுக்கு) மிகவும் நெருக்கமானவர்களே தமது இறைவனை நோக்கி வஸீலாவைத் தேடுகின்றனர். அவனது அருளை எதிர்பார்க்கின்றனர். அவனது வேதனைக்கு அஞ்சுகின்றனர். உமது இறைவனின் வேதனை அச்சப்பட வேண்டியதாகும்.

திருக்குர்ஆன் 17:56,57

இவ்வேதத்தில் இப்ராஹீமைப் பற்றியும் நினைவூட்டுவீராக! அவர் மிக்க உண்மையாளராகவும், நபியாகவும் இருந்தார்.  என் தந்தையே! செவியுறாத,  பார்க்காத,உமக்கு எந்தப் பயனும் அளிக்காததை ஏன் வணங்குகிறீர்?  என்று அவர் தமது தந்தையிடம் கூறியதை நினைவூட்டுவீராக!

திருக்குர்ஆன் 19:41,42

இரவிலும், பகலிலும் அளவற்ற அருளாளனிடமிருந்து உங்களைக் காப்பாற்றுபவன் யார்?  என்று கேட்பீராக! எனினும் அவர்கள் தமது இறைவனை நினைப்பதைப் புறக்கணிக்கின்றனர். நம்மை விட்டும் அவர்களைக் காப்பாற்றும் கடவுள்கள் அவர்களுக்கு உள்ளனரா? அவர்கள் தமக்கே உதவிட இயலாது. அவர்கள் நம்மிடமிருந்து காக்கப்படவும் மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 21:42,43

விளிம்பில் இருந்து கொண்டு அல்லாஹ்வை வணங்குபவனும் மனிதர்களில் இருக்கிறான். அவனுக்கு நன்மை ஏற்பட்டால் அதில் நிம்மதியடைகிறான். அவனுக்குச் சோதனை ஏற்பட்டால் தலை கீழாக மாறி விடுகிறான். இவ்வுலகிலும், மறுமையிலும் அவன் நஷ்டமடைந்து விட்டான். இதுவே தெளிவான நஷ்டம். அல்லாஹ்வையன்றி தனக்குத் தீங்கிழைக்காததையும், பயன் தராததையும் பிரார்த்திக்கிறான். இதுவே தூரமான வழி கேடாகும்

திருக்குர்ஆன் 22:11,12

அவனையன்றி கடவுள்களை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டனர். அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர். தமக்கே தீங்கும்,  நன்மையும் செய்ய அவர்களுக்கு இயலாது. வாழ்வதற்கோ, மரணிப்பதற்கோ, (பின்னர்) எழுப்புவதற்கோ அவர்கள் அதிகாரம் படைத்தோராக இல்லை.

திருக்குர்ஆன் 25:3

அல்லாஹ்வையன்றி அவர்களுக்குப் பயனும், தீங்கும் தராதவற்றை வணங்குகின்றனர். (ஏக இறைவனை) மறுப்பவன் தனது இறைவனுக்கு எதிராக உதவுபவனாக இருக்கிறான்.

திருக்குர்ஆன் 25:55

அவர்களிடம் இப்ராஹீமின் வரலாறைக் கூறுவீராக!  எதை வணங்குகிறீர்கள்? என்று தமது தந்தையிடமும், தமது சமுதாயத்தினரிடமும் அவர் கேட்ட போது நாங்கள் சிலைகளை வணங்குகிறோம். அவற்றை வணங்குவதில் உறுதியாக இருக்கிறோம் என்றனர்.  நீங்கள் அழைக்கும் போது இவை செவியுறுகின்றனவா? அல்லது உங்களுக்கு  நன்மையோ, தீமையோ செய்கின்றனவா?  என்று அவர் கேட்டார்.

திருக்குர்ஆன் 26:69-73

அல்லாஹ்வையன்றி நீங்கள் கற்பனையாகப் படைத்த சிலைகளையே வணங்குகிறீர்கள். அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை வணங்குகிறீர்களோ அவர்கள் உங்களுக்குச் செல்வம் வழங்க இயலாது. எனவே அல்லாஹ்விடமே செல்வத்தைத் தேடுங்கள்! அவனையே வணங்குங்கள்! அவனுக்கு நன்றி செலுத்துங்கள்! அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!

திருக்குர்ஆன் 29:17

அல்லாஹ்வையன்றி நீங்கள் கற்பனை செய்தவற்றை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் வானங்களிலும், பூமியிலும் அணுவளவுக்கும் அதிகாரம் பெற மாட்டார்கள். இவ்விரண்டிலும் அவர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. அவர்களில் அவனுக்கு எந்த உதவியாளரும் இல்லை  என்று கூறுவீராக! யாருக்கு அவன் அனுமதியளித்தானோ அவருக்கே தவிர அவனிடம் பரிந்துரை பயன் தராது. முடிவில் அவர்களின் உள்ளங்களிலிருந்து நடுக்கம் நீங்கியதும்  உங்கள் இறைவன் என்ன கூறினான்? எனக் கேட்டுக் கொள்வார்கள். உண்மையையே (கூறினான்.) அவன் உயர்ந்தவன்; பெரியவன்  என்று கூறுவார்கள்.

திருக்குர்ஆன் 34:22,23

அவன் இரவைப் பகலில் நுழைக்கிறான். பகலை இரவில் நுழைக்கிறான். சூரியனையும்,சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலக்கெடு வரை செல்கின்றன. அவனே அல்லாஹ்; உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம். அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர். நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.

திருக்குர்ஆன் 35:13,14

வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?  என்று அவர்களிடம் நீர் கேட்டால்  அல்லாஹ்  என்று கூறுவார்கள்.  அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றைப் பற்றிக் கூறுங்கள்!  என்று கேட்பீராக!  அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கை நாடி விட்டால் அவனது தீங்கை அவர்கள் நீக்கி விடுவார்களா? அல்லது அவன் எனக்கு அருளை நாடினால் அவர்கள் அவனது அருளைத் தடுக்கக் கூடியவர்களா? அல்லாஹ் எனக்குப் போதும். சார்ந்திருப்போர் அவனையே சார்ந்திருப்பார்கள்  என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 39:38

அல்லாஹ்வையன்றி பரிந்துரை செய்வோரை அவர்கள் கற்பனை செய்து கொண்டார்களா? அவர்கள் எந்தப் பொருளுக்கும் உடமையாளர்களாக இல்லாமலும்,விளங்காதும் இருந்தாலுமா?  என்று கேட்பீராக!  பரிந்துரைகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே  என்று கூறுவீராக! வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் அவனுக்கே உரியது! பின்னர் அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!

திருக்குர்ஆன் 39:43,44

நான் எனது இறைவனையே பிரார்த்திக்கிறேன். அவனுக்கு யாரையும் இணையாக்க மாட்டேன்  என (முஹம்மதே!) கூறுவீராக! நான் உங்களுக்குத் தீங்கு செய்யவும்,நன்மை செய்யவும் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்றும் கூறுவீராக! அல்லாஹ்விடமிருந்து என்னை எவரும் காப்பாற்ற மாட்டார். அவனன்றி ஒதுங்குமிடத்தையும் காணமாட்டேன்  என்றும் கூறுவீராக!

திருக்குர்ஆன் 72:20-22

படைக்கப்பட்டவை படைத்தவனுக்கு இணையாகாது என்பதால் இணை கற்பிக்க நியாயம் இல்லை

எதையும் படைக்காதவற்றையா அவர்கள் (இறைவனுக்கு) இணை கற்பிக்கின்றனர்?அவர்களே படைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு உதவிட அவர்களுக்கு இயலாது. தமக்கே கூட அவர்கள் உதவிக் கொள்ள மாட்டார்கள். (எதையும்) தெரிவிக்க அவர்களை நீங்கள் அழைத்தால் அவர்கள் உங்களைப் பின்பற்ற மாட்டார்கள். நீங்கள் அவர்களை அழைப்பதும்,மௌனமாக இருப்பதும் உங்களைப் பொறுத்த வரை சமமானது. அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்! அவர்களுக்கு நடக்கின்ற கால்கள் உள்ளனவா? அல்லது பிடிக்கின்ற கைகள் உள்ளனவா? அல்லது பார்க்கின்ற கண்கள் உள்ளனவா? அல்லது கேட்கின்ற காதுகள் உள்ளனவா? உங்கள் தெய்வங்களை அழைத்து எனக்கெதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்! எனக்கு எந்த அவகாசமும் தராதீர்கள்!  என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 7:191-195

உங்கள் தெய்வங்களில் முதலில் படைப்பவனும், மீண்டும் அதைப் படைப்பவனும் உள்ளனரா?  என்று கேட்பீராக!  அல்லாஹ்வே முதலில் படைக்கிறான். பின்னர் மறுபடியும் படைக்கிறான்! எவ்வாறு திசை திருப்பப்படுகிறீர்கள்?  என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 10:34

வானங்களுக்கும், பூமிக்கும் இறைவன் யார்?  என்று (முஹம்மதே!) கேட்டு,அல்லாஹ் என்று கூறுவீராக!  அவனன்றி பாதுகாவலர்களைக் கற்பனை செய்து கொண்டீர்களா? அவர்கள் தமக்கே நன்மை செய்யவும், தீமை செய்யவும் ஆற்றல் பெற மாட்டார்கள்  என்று கூறுவீராக!  குருடனும், பார்வையுள்ளவனும் சமமாவார்களா?இருள்களும், ஒளியும் சமமாகுமா?  என்று கேட்பீராக! அல்லாஹ்வுக்கு நிகரானவர்களைக் கற்பனை செய்து விட்டார்களா? அவர்கள் அல்லாஹ் படைத்ததைப் போல் படைத்து, அதன் காரணமாக படைத்தது யார்? என்று இவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டு விட்டதா? ஒவ்வொரு பொருளையும் அல்லாஹ்வே படைத்தவன்; அவன் தனித்தவன்; அடக்கியாள்பவன்  என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 13:16

படைப்பவன் படைக்காதவனைப் போன்றவனா? சிந்திக்க மாட்டீர்களா?

திருக்குர்ஆன் 16:17

அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர். அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள்  என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 16:20,21

அல்லாஹ்வே உங்களைப் படைத்தான். பின்னர் உங்களுக்கு உணவளித்தான். பின்னர் உங்களை மரணிக்கச் செய்வான். பிறகு உங்களை உயிர்ப்பிப்பான். உங்கள் தெய்வங்களில் இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்வோர் உள்ளனரா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்.

திருக்குர்ஆன் 30:40

அல்லாஹ்வையன்றி நீங்கள் அழைக்கின்ற, உங்கள் தெய்வங்கள் பூமியில் எதனைப் படைத்தன?  என்று எனக்குக் காட்டுங்கள்! அல்லது வானங்களிலாவது அவர்களுக்குப்  பங்கு உண்டா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்!  என்று கேட்பீராக! அல்லது அவர்களுக்கு நாம் ஒரு வேதத்தை அளித்து அதனால் (கிடைத்த) தெளிவில் அவர்கள் இருக்கிறார்களா? இல்லை. இந்த அநியாயக்காரர்களில் ஒருவருக்கொருவர்  மோசடியையே வாக்களிக்கின்றனர்.

திருக்குர்ஆன் 35:40

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் பூமியில் எதைப் படைத்தனர் என்று எனக்குக் காட்டுங்கள்! அல்லது வானங்களில் அவர்களுக்குப் பங்கு உண்டா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதற்கு முன் சென்ற வேதத்தையோ, அறிவுச் சான்றையோ என்னிடம் கொண்டு வாருங்கள்! என்று (முஹம்மதே!) கேட்பீராக!

திருக்குர்ஆன் 46:4

மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைச் செவிதாழ்த்திக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.

திருக்குர்ஆன்22:73

அவனையன்றி கடவுள்களை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டனர். அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர். தமக்கே தீங்கும்,  நன்மையும் செய்ய அவர்களுக்கு இயலாது. வாழ்வதற்கோ,  மரணிப்பதற்கோ,  (பின்னர்) எழுப்புவதற்கோ அவர்கள் அதிகாரம் படைத்தோராக இல்லை.

திருக்குர்ஆன் 25:3

இது அல்லாஹ் படைத்தது! அவனன்றி மற்றவர்கள் படைத்தவற்றை எனக்குக் காட்டுங்கள்! எனினும் அநீதி இழைத்தோர் தெளிவான வழி கேட்டில் உள்ளனர்.

திருக்குர்ஆன் 31:11

அல்லாஹ்வையன்றி நீங்கள் அழைக்கின்ற, உங்கள் தெய்வங்கள் பூமியில் எதனைப் படைத்தன?  என்று எனக்குக் காட்டுங்கள்! அல்லது வானங்களிலாவது அவர்களுக்குப் பங்கு உண்டா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்!  என்று கேட்பீராக! அல்லது அவர்களுக்கு நாம் ஒரு வேதத்தை அளித்து அதனால் (கிடைத்த) தெளிவில் அவர்கள் இருக்கிறார்களா? இல்லை. இந்த அநியாயக்காரர்களில் ஒருவருக்கொருவர் மோசடியையே வாக்களிக்கின்றனர்.

திருக்குர்ஆன் 35:40

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் பூமியில் எதைப் படைத்தனர் என்று எனக்குக் காட்டுங்கள்! அல்லது வானங்களில் அவர்களுக்குப் பங்கு உண்டா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதற்கு முன் சென்ற வேதத்தையோ, அறிவுச் சான்றையோ என்னிடம் கொண்டு வாருங்கள்! என்று (முஹம்மதே!) கேட்பீராக!

திருக்குர்ஆன் 46:4

அல்லாஹ்வையன்றி பிரார்த்திக்கப்படுவோர் செவியேற்க மாட்டார்கள் என்பதால் இணை கற்பிக்க நியாயம் இல்லை

அவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவிட இயலாது. தமக்கே அவர்கள் உதவ முடியாது. (எதையும்) தெரிவிக்க நீங்கள் அவர்களை அழைத்தால் அவர்கள் செவியுற மாட்டார்கள். அவர்கள் உம்மைப் பார்ப்பது போல் நீர் காண்பீர்! (ஆனால்) அவர்கள் பார்க்க மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 7:197,198

நீங்கள் அழைக்கும் போது இவை செவியுறுகின்றனவா? அல்லது உங்களுக்கு நன்மையோ, தீமையோ செய்கின்றனவா?  என்று அவர் கேட்டார்.

திருக்குர்ஆன் 26:72,73

நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.

திருக்குர்ஆன் 35:14

அல்லாஹ்வையன்றி பிரார்த்திக்கப்படுவோர் பதில் தர மாட்டார்கள் என்பதால் இணை கற்பிக்க நியாயம் இல்லை

செவியேற்பவர்களே பதிலளிக்க முடியும். இறந்தவர்களை அல்லாஹ் உயிர்ப்பிப்பான்.  பின்னர் அவனிடமே அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள்.

திருக்குர்ஆன் 6:36

(எதையும்) தெரிவிக்க அவர்களை நீங்கள் அழைத்தால் அவர்கள் உங்களைப் பின்பற்ற மாட்டார்கள். நீங்கள் அவர்களை அழைப்பதும், மௌனமாக இருப்பதும் உங்களைப் பொறுத்த வரை சமமானது. அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்! அவர்களுக்கு நடக்கின்ற கால்கள் உள்ளனவா? அல்லது பிடிக்கின்ற கைகள் உள்ளனவா? அல்லது பார்க்கின்ற கண்கள் உள்ளனவா? அல்லது கேட்கின்ற காதுகள் உள்ளனவா? உங்கள் தெய்வங்களை அழைத்து எனக்கெதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்! எனக்கு எந்த அவகாசமும் தராதீர்கள்!  என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 7:194-195

உண்மையான பிரார்த்தனை அவனுக்கே உரியது. அவனன்றி இவர்கள் யாரைப் பிரார்த்திக்கிறார்களோ அவர்கள் சிறிதளவும் இவர்களுக்குப் பதிலளிக்க மாட்டார்கள். தண்ணீர் (தானாக) வாய்க்குள் செல்ல வேண்டும் என்பதற்காக இரு கைகளையும் அதை நோக்கி விரித்து வைத்துக் கொள்பவனைப் போலவே அவர்கள் உள்ளனர். அது (தானாக) அவனது வாய்க்குள் செல்லாது. (ஏக இறைவனை) மறுப்போரின் பிரார்த்தனை வீணாகவே இருக்கும்.

திருக்குர்ஆன் 13:14

நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.

திருக்குர்ஆன் 35:14

கியாமத் நாள் வரை தமக்குப் பதில் தராத, அல்லாஹ் அல்லாதோரை அழைப்பவரை விட மிகவும் வழி கெட்டவர் யார்? அவர்களோ தம்மை அழைப்பது பற்றி அறியாது உள்ளனர்.

திருக்குர்ஆன் 46:5

இறைவன் அருகே இருக்க தொலைவில் உள்ளவர்களை அழைக்க நியாயம் இல்லை

என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால்  நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன்.  எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர் வழி பெறுவார்கள்  (என்பதைக் கூறுவீராக!)

திருக்குர்ஆன் 2:186

ஸமூது சமுதாயத்திடம், அவர்களின் சகோதரர் ஸாலிஹை (அனுப்பினோம்).  என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனன்றி வணக்கத்திற்குரியவன் உங்களுக்கு வேறு யாருமில்லை. அவனே உங்களைப் பூமியிலிருந்து படைத்தான். அதில் உங்களை வசிக்கச் செய்தான். எனவே அவனிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்! பின்னர் அவனை நோக்கித் திரும்புங்கள்! என் இறைவன் அருகில் உள்ளவன்;  பதிலளிப்பவன்  என்றார்.

திருக்குர்ஆன் 11:61

 நான் வழி கெட்டால் எனக்கு எதிராகவே வழி கெடுகிறேன். நான் நேர் வழி பெற்றால் அது எனது இறைவன் எனக்கு அறிவித்த தூதுச் செய்தியின் காரணமாகத் தான். அவன் செவியேற்பவன்; அருகில் உள்ளவன்  என்று (முஹம்மதே!) கூறுவீராக!

திருக்குர்ஆன் 34:50

மனிதனைப் படைத்தோம். அவனது மனம் எதை எண்ணுகிறது என்பதையும் அறிவோம். நாம் அவனுக்குப் பிடரி நரம்பை விட மிகவும் நெருக்கமாக இருக்கிறோம்.

திருக்குர்ஆன் 50:16

ஒருவனது (உயிர்) தொண்டைக் குழியை அடையும் போது, அந்நேரத்தில் (அவனை) நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பீர்கள். உங்களை விட நாமே அவனுக்கு மிகவும் அருகில் இருக்கிறோம். எனினும் நீங்கள் பார்க்க மாட்டீர்கள்.

திருக்குர்ஆன் 56:83,84,85

அல்லாஹ்வுக்கு இடைத் தரகர் கிடையாது என்பதால் இணை கற்பிக்க நியாயம் இல்லை

என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால்  நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர் வழி பெறுவார்கள்  (என்பதைக் கூறுவீராக!)

திருக்குர்ஆன் 2:186

உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான். பூமியில் சீர்திருத்தம் செய்யப்பட்ட பின் அதில் குழப்பம் விளைவிக்காதீர்கள்! அச்சத்துடனும், நம்பிக்கையுடனும் அவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்! அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு அருகில் உள்ளது.

திருக்குர்ஆன் 7:55,56

என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள்  என்று உங்கள் இறைவன் கூறுகிறான்.

திருக்குர்ஆன் 40:60

இணை கற்பிக்கச் சான்று இல்லாததால் இணை கற்பிக்க நியாயம் இல்லை (நம்மை) மறுத்தோரின் உள்ளங்களில் பீதியை ஏற்படுத்துவோம். அல்லாஹ் எந்த ஆதாரத்தையும் அருளாமலிருந்தும் அவனுக்கு இணை கற்பித்ததே இதற்குக் காரணம். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோர் சென்றடையும் இடம் மிகவும் கெட்டது.

திருக்குர்ஆன் 3:151

அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சான்றையும் வழங்காதவற்றை அவனுக்கு இணையாக்குவதற்கு நீங்கள் அஞ்சாத போது நீங்கள் இணை கற்பித்தவைகளுக்கு எவ்வாறு நான் அஞ்சுவேன்? நீங்கள் அறிந்தால் இரு கூட்டத்தினரில் அச்சமற்றிருக்க அதிகத் தகுதி படைத்தவர் யார்?  (என்றும் அவர் கூறினார்.)

திருக்குர்ஆன் 6:81

வெட்கக்கேடானவைகளில் வெளிப்படையானவற்றையும்,  இரகசியமானதையும், பாவத்தையும்,  நியாயமின்றி வரம்பு மீறுவதையும், எது பற்றி அல்லாஹ் எந்த ஆதாரத்தையும் இறக்கவில்லையோ அதை அல்லாஹ்வுக்கு இணையாகக் கருதுவதையும்,நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டிக் கூறுவதையுமே என் இறைவன் தடை செய்துள்ளான்  எனக் கூறுவீராக!

திருக்குர்ஆன் 7:33

உங்கள் இறைவனிடமிருந்து வேதனையும், கோபமும் உங்கள் மீது ஏற்பட்டு விட்டன. நீங்களும், உங்கள் முன்னோர்களும் சூட்டிக் கொண்ட வெறும் பெயர்களைப் பற்றி (கற்பனைப் பாத்திரங்களைப் பற்றி) என்னிடம் தர்க்கம் செய்கிறீர்களா? அது பற்றி அல்லாஹ் எந்தச் சான்றையும் அருளவில்லை. எதிர் பாருங்கள்! உங்களுடன் சேர்ந்து நானும் எதிர்பார்க்கிறேன்  என்று அவர் கூறினார்.

திருக்குர்ஆன் 7:71

அவனன்றி நீங்கள் வணங்குபவை வெறும் பெயர்களே. நீங்களும், உங்களின் முன்னோர்களும் அவற்றுக்குப் பெயரிட்டீர்கள்! இது குறித்து அல்லாஹ் எந்தச் சான்றையும் அருளவில்லை. அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் இல்லை. அவனைத் தவிர எதையும் நீங்கள் வணங்கக் கூடாது  என்று அவன் கட்டளையிட்டுள்ளான். இதுவே நேரான மார்க்கம். எனினும் அதிகமான மனிதர்கள் விளங்குவதில்லை.

திருக்குர்ஆன் 12:40

அவனையன்றி கடவுள்களை ஏற்படுத்திக் கொண்டார்களா?  உங்கள் சான்றுகளைக் கொண்டு வாருங்கள்! இதுவே என்னுடனிருப்போரின் அறிவுரையும், எனக்கு முன் சென்றோரின் அறிவுரையுமாகும்  என்று (முஹம்மதே!) கூறுவீராக! எனினும் அவர்களில் பெரும்பாலோர் உண்மையை அறிய மாட்டார்கள். அவர்கள் புறக்கணிப்பவர்கள்.

திருக்குர்ஆன் 21:24

அல்லாஹ்வே உண்மையானவன். அவனையன்றி அவர்கள் பிரார்த்திப்பவை பொய்யானவை. அல்லாஹ் உயர்ந்தவன்; பெரியவன் என்பதும் இதற்குக் காரணம்.

திருக்குர்ஆன் 22:62

அல்லாஹ்வை விட்டு விட்டு எதைக் குறித்து எந்தச் சான்றையும் அவன் அருளவில்லையோ அதையும், எதைப் பற்றிய அறிவு அவர்களுக்கு இல்லையோ அதையும் அவர்கள் வணங்குகின்றனர். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளனும் இல்லை.

திருக்குர்ஆன் 22:71

அல்லாஹ்வுடன் வேறு கடவுளை யாரேனும் அழைத்தால் அவனிடம் அது குறித்து எந்தச் சான்றும் இல்லை. அவனை விசாரிப்பது அவனது இறைவனிடமே உள்ளது. (ஏக இறைவனை) மறுப்போர் வெற்றி பெற மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 23:117

(நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது) படைப்பினங்களை முதலில் படைத்து பின்னர் மறுபடியும் படைப்பவனா? வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா?  நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் சான்றைக் கொண்டு வாருங்கள்!  என்று கேட்பீராக!

திருக்குர்ஆன் 27:64

அல்லாஹ்வையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோரின் உதாரணம் சிலந்திப் பூச்சியைப் போன்றது. அது ஒரு வீட்டை அமைத்துக் கொண்டது. வீடுகளிலேயே சிலந்தியின் வீடு தான் மிகவும் பலவீனமானது. (அதை) அவர்கள் அறியக் கூடாதா?

திருக்குர்ஆன் 29:41

அவர்கள் எதை இணை கற்பிக்கிறார்களோ அது குறித்துப் பேசுகின்ற சான்றை அவர்களுக்கு நாம் அருளியுள்ளோமா?

திருக்குர்ஆன் 30:35

அல்லாஹ்வைத் தவிர மற்றவர்கள் அடிமைகளே என்பதால் இணை கற்பிக்க நியாயம் இல்லை

எந்த மனிதருக்காவது அல்லாஹ் வேதத்தையும், அதிகாரத்தையும், நபி எனும் தகுதியையும் வழங்கினால் (அதன்) பின்  அல்லாஹ்வையன்றி எனக்கு அடிமைகளாக ஆகி விடுங்கள்!  என்று கூறுகின்ற அதிகாரம் அவருக்கு இல்லை. மாறாக,  வேதத்தை நீங்கள் கற்றுக் கொடுப்போராக இருப்பதாலும், அதை வாசித்துக் கொண்டிருப்பதாலும் இறைவனுக்குரியோராக ஆகி விடுங்கள்!  (என்றே கூறினர்)

திருக்குர்ஆன் 3:79

மஸீஹும், நெருக்கமான வானவர்களும் அல்லாஹ்வுக்கு அடிமையாக இருப்பதிலிருந்து விலகிக் கொள்ள மாட்டார்கள். அவனுக்கு அடிமையாக இருப்பதிலிருந்து விலகிப் பெருமையடிப்போர் அனைவரையும் அவன் தன்னிடம் ஒன்று திரட்டுவான்.

திருக்குர்ஆன் 4:172

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!

திருக்குர்ஆன் 7:194

என்னையன்றி எனது அடியார்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ள (என்னை) மறுப்போர் நினைக்கிறார்களா? (நம்மை) மறுப்போருக்கு நரகத்தைத் தங்குமிடமாக நாம் தயாரித்துள்ளோம்.

திருக்குர்ஆன் 18:102

வானங்களிலும், பூமியிலும் உள்ள ஒவ்வொருவரும் அளவற்ற அருளாளனிடம் அடிமையாகவே வருவார்கள்.

திருக்குர்ஆன் 19:93

அளவற்ற அருளாளன் சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான்  எனக் கூறுகின்றனர். அவன் தூயவன். மாறாக அவர்கள் (வானவர்கள்) மரியாதைக்குரிய அடியார்கள்.

திருக்குர்ஆன் 21:26

அவர்கள் அவனது அடியார்களில் சிலரை (அவனில்) ஒரு பகுதியாக ஆக்குகின்றனர். மனிதன் தெளிவான நன்றி கெட்டவன்.

திருக்குர்ஆன் 43:15

அளவற்ற அருளாளனின் அடியார்களான வானவர்களைப் பெண்களாக அவர்கள் கற்பனை செய்து விட்டனர். அவர்கள் படைக்கப்பட்டதை இவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்களா? இவர்களது கூற்று பதிவு செய்யப்பட்டு, விசாரிக்கப்படுவார்கள்.

திருக்குர்ஆன் 43:19

மகான்கள் தம்மை வணங்குமாறு கூறியிருக்க மாட்டார்கள் என்பதால் இணை கற்பிக்க நியாயம் இல்லை

எந்த மனிதருக்காவது அல்லாஹ் வேதத்தையும், அதிகாரத்தையும், நபி எனும் தகுதியையும் வழங்கினால் (அதன்) பின்  அல்லாஹ்வையன்றி எனக்கு அடிமைகளாக ஆகி விடுங்கள்!  என்று கூறுகின்ற அதிகாரம் அவருக்கு இல்லை. மாறாக,  வேதத்தை நீங்கள் கற்றுக் கொடுப்போராக இருப்பதாலும், அதை வாசித்துக் கொண்டிருப்பதாலும் இறைவனுக்குரியோராக ஆகி விடுங்கள்!  (என்றே கூறினர்)  வானவர்களையும்,நபிமார்களையும் கடவுள்களாக்கிக் கொள்ளுங்கள்!  என்று அவர் உங்களுக்கு ஏவ மாட்டார். நீங்கள் முஸ்லிம்களாக ஆன பின் (ஏக இறைவனை) மறுக்குமாறு அவர் உங்களுக்கு ஏவுவாரா?

திருக்குர்ஆன் 3:79,80

மஸீஹும், நெருக்கமான வானவர்களும் அல்லாஹ்வுக்கு அடிமையாக இருப்பதிலிருந்து விலகிக் கொள்ள மாட்டார்கள். அவனுக்கு அடிமையாக இருப்பதிலிருந்து விலகிப் பெருமையடிப்போர் அனைவரையும் அவன் தன்னிடம் ஒன்று திரட்டுவான்.

திருக்குர்ஆன் 4:172

மர்யமின் மகன் மஸீஹ் தான் அல்லாஹ்  எனக் கூறியவர்கள் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர்.  இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை  என்றே மஸீஹ் கூறினார்.

திருக்குர்ஆன் 5:72

மர்யமின் மகன் ஈஸாவே! அல்லாஹ்வையன்றி என்னையும், என் தாயாரையும் கடவுள்களாக்கிக் கொள்ளுங்கள்!  என நீர் தான் மக்களுக்குக் கூறினீரா?  என்று அல்லாஹ் (மறுமையில்) கேட்கும் போது,  நீ தூயவன். எனக்குத் தகுதியில்லாத வார்த்தையை நான் கூற உரிமையில்லாதவன். நான் அவ்வாறு கூறியிருந்தால் அதை நீ அறிவாய். எனக்குள் உள்ளதை நீ அறிவாய்! உனக்குள் உள்ளதை நான் அறிய மாட்டேன். நீயே மறைவானவற்றை அறிபவன்  என்று அவர் பதிலளிப்பார்.  நீ எனக்குக் கட்டளையிட்ட படி எனது இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்!  என்பதைத் தவிர வேறு எதையும் நான் அவர்களிடம் கூறவில்லை. நான் அவர்களுடன் இருக்கும் போது அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். என்னை நீ கைப்பற்றியதும் நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். நீ அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவன்.   அவர்களை நீ தண்டித்தால் அவர்கள் உனது அடியார்களே. அவர்களை நீ மன்னித்தால் நீ மிகைத்தவன்; ஞானமிக்கவன்  (எனவும் அவர் கூறுவார்)

திருக்குர்ஆன் 5:116-118

தங்களுக்கு உதவுவார்கள் என அல்லாஹ்வையன்றி பல கடவுள்களை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டனர். அவ்வாறு இல்லை. தங்களை இவர்கள் வணங்கியதை அவர்கள் மறுத்து இவர்களுக்கு எதிராவார்கள்.

திருக்குர்ஆன் 19:82

அவன் இரவைப் பகலில் நுழைக்கிறான். பகலை இரவில் நுழைக்கிறான். சூரியனையும்,சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலக்கெடு வரை செல்கின்றன. அவனே அல்லாஹ்; உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம். அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர். நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.

திருக்குர்ஆன் 35:13,14

அல்லாஹ்வையன்றி மற்றவர்களைப் பிரார்த்திப்பது பயனற்றது என்பதால் இணை கற்பிக்க நியாயம் இல்லை

வெறும் சப்தத்தையும், ஓசையையும் மட்டுமே கேட்கும் கால்நடைகளை அழைப்பதற்காக சப்தம் போடுபவனின் தன்மை போன்றே (ஏக இறைவனை) மறுப்போரின் தன்மை உள்ளது. (அவர்கள்) செவிடர்கள்; ஊமைகள்; குருடர்கள். எனவே அவர்கள் விளங்க மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 2:171

உண்மையான பிரார்த்தனை அவனுக்கே உரியது. அவனன்றி இவர்கள் யாரைப் பிரார்த்திக்கிறார்களோ அவர்கள் சிறிதளவும் இவர்களுக்குப் பதிலளிக்க மாட்டார்கள். தண்ணீர் (தானாக) வாய்க்குள் செல்ல வேண்டும் என்பதற்காக இரு கைகளையும் அதை நோக்கி விரித்து வைத்துக் கொள்பவனைப் போலவே அவர்கள் உள்ளனர். அது (தானாக) அவனது வாய்க்குள் செல்லாது. (ஏக இறைவனை) மறுப்போரின் பிரார்த்தனை வீணாகவே இருக்கும்.

திருக்குர்ஆன் 13:14

அல்லாஹ்வுக்கு அர்ப்பணித்து, அவனுக்கு இணை கற்பிக்காதோராக (ஆகுங்கள்!) அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவன் வானத்திலிருந்து விழுந்து பறவைகள் தூக்கிச் சென்றவனைப் போல், அல்லது காற்று தூரமான இடத்தில் கொண்டு போய்ப் போட்டவனைப் போல் ஆவான்.

திருக்குர்ஆன் 22:31

அல்லாஹ்வையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோரின் உதாரணம் சிலந்திப் பூச்சியைப் போன்றது. அது ஒரு வீட்டை அமைத்துக் கொண்டது. வீடுகளிலேயே சிலந்தியின் வீடு தான் மிகவும் பலவீனமானது. (அதை) அவர்கள் அறியக் கூடாதா?

திருக்குர்ஆன் 29:41

உங்களிலிருந்தே அவன் உங்களுக்கு ஓர் உதாரணத்தைக் கூறுகிறான். உங்களுக்கு நாம் வழங்கியவற்றில் பங்காளிகளாக உங்களது அடிமைகளில் எவரும் உள்ளனரா? அதில் நீங்களும் (அவர்களும்) சமமாக இருப்பீர்களா? உங்களுக்கிடையே நீங்கள் அஞ்சுவது போல் அவர்களுக்கு அஞ்சுவீர்களா? விளங்கும் சமுதாயத்துக்கு இவ்வாறே வசனங்களைத் தெளிவுபடுத்துகிறோம்.

திருக்குர்ஆன் 30:28

அல்லாஹ்வே உண்மையானவன். அவனன்றி அவர்கள் அழைப்பவை வீணானவை என்பதும் அல்லாஹ் உயர்ந்தவன்; பெரியவன் என்பதும் தான் இதற்குக் காரணம்.

திருக்குர்ஆன் 31:30

இறைவனை யாரும் கண்டதில்லை; காண முடியாது

மூஸாவே! அல்லாஹ்வை நேரில் பார்க்காத வரை உம்மை நம்பவே மாட்டோம் என்று நீங்கள் கூறிய போது, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே உங்களை இடி முழக்கம் தாக்கியது.

திருக்குர்ஆன் 2:55

(முஹம்மதே!)  வானத்திலிருந்து அவர்களுக்கு வேதத்தை நீர் இறக்க வேண்டும் என்று வேதமுடையோர் உம்மிடம் கேட்கின்றனர். இதை விடப் பெரியதை அவர்கள் மூஸாவிடம் கேட்டுள்ளனர்.  அல்லாஹ்வைக் கண்முன்னே எங்களுக்குக் காட்டு என்று அவர்கள் கேட்டனர். அவர்கள் அநீதி இழைத்ததால் இடி முழக்கம் அவர்களைத் தாக்கியது. பின்னர் தெளிவான சான்றுகள் அவர்களிடம் வந்த பின்பு, காளைக் கன்றை (கடவுளாக) கற்பனை செய்தார்கள். அதை மன்னித்தோம். மூஸாவுக்குத் தெளிவான சான்றை அளித்தோம்.

திருக்குர்ஆன் 4:153

அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன்;நன்கறிந்தவன்.

திருக்குர்ஆன் 6:103

நாம் வாக்களித்த இடத்துக்கு மூஸா வந்து, அவரிடம் அவரது இறைவன் பேசிய போது என் இறைவா! (உன்னை) எனக்குக் காட்டுவாயாக! நான் உன்னைப் பார்க்க வேண்டும்  எனக் கூறினார். அதற்கு (இறைவன்)  என்னை நீர் பார்க்கவே முடியாது. எனினும் அந்த மலையைப் பார்ப்பீராக! அது அதற்குரிய இடத்தில் நிலையாக இருந்தால் நீர் என்னைப் பார்க்கலாம்  என்று கூறினான். அவரது இறைவன் அந்த மலைக்குக் காட்சி தந்த போது அதைத் தூளாக்கினான். மூஸா மூர்ச்சித்து விழுந்தார். அவர் தெளிவடைந்த போது  நீ தூயவன். உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நம்பிக்கை கொண்டோரில் நான் முதலாமவனாக இருக்கிறேன்  எனக் கூறினார்.

திருக்குர்ஆன் 7:143

நம்மிடம் வானவர்கள் இறக்கப்பட வேண்டாமா? அல்லது நமது இறைவனை நாம் நேரில் பார்க்க வேண்டாமா?  என்று நமது சந்திப்பை நம்பாதோர் கூறுகின்றனர். அவர்கள் தங்களைப் பற்றி பெருமையடிக்கின்றனர். மிகப் பெரிய அளவில் வரம்பு மீறி விட்டனர்.

திருக்குர்ஆன் 25:21

மறுமையில் இறைவனைக் காண முடியும்

தமது இறைவனைச் சந்திக்கவுள்ளோம் என்றும், அவனிடம் திரும்பிச் செல்லவிருக்கிறோம் என்றும் அவர்கள் நம்புவார்கள்.

திருக்குர்ஆன் 2:46

உங்கள் மனைவியர் உங்களின் விளை நிலங்கள். உங்கள் விளை நிலங்களுக்கு விரும்பியவாறு செல்லுங்கள்! உங்களுக்காக (நல்லறங்களை) முற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அவனைச் சந்திக்கவுள்ளீர்கள்  என்பதை அறிந்து கொள்ளுங்கள்! நம்பிக்கை கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!

திருக்குர்ஆன் 2:223

படைகளுடன் தாலூத் புறப்பட்ட போது  அல்லாஹ் உங்களை ஒரு நதியின் மூலம் சோதிக்கவுள்ளான். அதில் அருந்துபவர் என்னைச் சேர்ந்தவர் அல்லர். அதை உட்கொள்ளாதவர் என்னைச் சேர்ந்தவர்; கை அளவு அருந்தியவர் தவிர  என்றார். அவர்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) அதில் அருந்தினார்கள். அவரும், அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரும் அதைக் கடந்த போது  ஜாலூத் மற்றும் அவனது படையினருடன் (போரிட) இன்று எங்களுக்கு எந்த வலிமையும் இல்லை  என்றனர். அல்லாஹ்வைச் சந்திக்கவுள்ளோம் என்று நம்பியோர், எத்தனையோ சிறு படைகள்,பெரும் படைகள் பலவற்றை அல்லாஹ்வின் விருப்பப்படி வென்றுள்ளன. சகித்துக் கொள்வோருடன் அல்லாஹ் இருக்கிறான்  என்றனர்.

திருக்குர்ஆன் 2:249

அல்லாஹ்விடம் செய்த உறுதி மொழியையும், தமது சத்தியங்களையும் அற்பமான விலைக்கு விற்றோருக்கு மறுமையில் எந்தப் பாக்கியமும் இல்லை. கியாமத் நாளில் அவர்களுடன் அல்லாஹ் பேசவும் மாட்டான். அவர்களைப் பார்க்கவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.

திருக்குர்ஆன் 3:77

அல்லாஹ்வின் சந்திப்பைப் பொய்யெனக் கருதியோர் நஷ்டமடைந்து விட்டனர். திடீரென (உலகம் அழியும்) அந்த நேரம் அவர்களிடம் வரும் போது  உலகில் வரம்பு மீறி நடந்து கொண்டதால் எங்களுக்குக் கேடு ஏற்பட்டு விட்டதே  என்று கூறுவார்கள். தமது முதுகுகளில் அவர்கள் பாவங்களைச் சுமப்பார்கள். கவனத்தில் கொள்க! அவர்கள் சுமப்பது மிகக் கெட்டது.

திருக்குர்ஆன் 6:31

பின்னர் தமது இறைவனின் சந்திப்பை அவர்கள் நம்புவதற்காக மூஸாவுக்கு வேதத்தை அருளினோம். அது, நன்மை செய்தோருக்கு (நன்மையை) நிறைவு செய்வதாகவும்,ஒவ்வொன்றையும் தெளிவுபடுத்துவதாகவும், நேர் வழியாகவும், அருளாகவும் இருந்தது.

திருக்குர்ஆன் 6:154

நமது சந்திப்பை நம்பாது, இவ்வுலக வாழ்வில் திருப்தியடைந்து அதிலேயே நிம்மதி அடைவோரும், நமது வசனங்களைப் புறக்கணிப்போரும், (தீமையை) செய்து கொண்டிருந்ததன் காரணமாக அவர்களின் தங்குமிடம் நரகமாகும்.

திருக்குர்ஆன் 10:7,8

மனிதர்கள் நல்லவற்றுக்கு அவசரப்படுவது போல் அவர்கள் விஷயத்தில் தீங்கு செய்வதற்கு அல்லாஹ் அவசரப்பட்டிருந்தால் அவர்களின் காலக்கெடு அவர்களுக்கு முடிக்கப்பட்டிருக்கும். நமது சந்திப்பை நம்பாதவர்களை அவர்களது அத்துமீறலில் தடுமாற விட்டு விடுவோம்.

திருக்குர்ஆன் 10:11

அவர்களுக்கு நமது தெளிவான வசனங்கள் கூறப்பட்டால்  இது அல்லாத வேறு குர்ஆனைக் கொண்டு வருவீராக! அல்லது இதை மாற்றியமைப்பீராக!  என நமது சந்திப்பை நம்பாதோர் கூறுகின்றனர். நானாக இதை மாற்றியமைத்திட எனக்கு அதிகாரம் இல்லை. எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்றுவதில்லை. என் இறைவனுக்கு நான் மாறு செய்து விட்டால் மகத்தான நாளின் வேதனையை அஞ்சுகிறேன்  என (முஹம்மதே!) கூறுவீராக!

திருக்குர்ஆன் 10:15

அவர்களை அவன் எழுப்பும் நாளில் பகலில் சிறிது நேரமே (பூமியில்) வசித்தது போல் ஒருவரையொருவர் அறிந்து கொள்வார்கள். அல்லாஹ்வின் சந்திப்பைப் பொய்யெனக் கருதியோர் நஷ்டம் அடைந்து விட்டனர். அவர்கள் நேர்வழி பெறவில்லை.

திருக்குர்ஆன் 10:45

என் சமுதாயமே! இதற்காக நான் உங்களிடம் எந்தச் செல்வத்தையும் கேட்கவில்லை. எனது கூலி அல்லாஹ்விடமே உள்ளது. நம்பிக்கை கொண்டோரை நான் விரட்டுபவனாகவும் இல்லை. அவர்கள் தமது இறைவனைச் சந்திப்பவர்கள். எனினும் உங்களை அறியாத கூட்டமாகவே நான் கருதுகிறேன்

திருக்குர்ஆன் 11:29

நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி வானங்களை அல்லாஹ்வே உயர்த்தினான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணை வரை ஓடுகின்றன. காரியத்தை அவனே நிர்வகிக்கிறான். உங்கள் இறைவனின் சந்திப்பை நீங்கள் உறுதியாக நம்புவதற்காக சான்றுகளை அவன் தெளிவுபடுத்துகிறான்.

திருக்குர்ஆன் 13:2

அவர்களே தமது இறைவனின் சான்றுகளையும், அவனது சந்திப்பையும் மறுத்தவர்கள். அவர்களின் நல்லறங்கள் அழிந்து விட்டன. எனவே கியாமத் நாளில் அவர்(களின் செயல்)களுக்கு எந்த எடையையும் ஏற்படுத்த மாட்டோம்.

திருக்குர்ஆன் 18:105

நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணை கற்பிக்காது இருக்கட்டும்  என்று (முஹம்மதே!) கூறுவீராக!

திருக்குர்ஆன் 18:110

யார் அல்லாஹ்வின் சந்திப்பை எதிர்பார்க்கிறாரோ (அதற்கான) அல்லாஹ்வின் காலக்கெடு வரக்கூடியதே. அவன் செவியுறுபவன்; அறிந்தவன்.

திருக்குர்ஆன் 29:5

அல்லாஹ்வின் வசனங்களையும், அவனது சந்திப்பையும் மறுப்போர் எனது அருளில் நம்பிக்கையிழந்து விட்டனர். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.

திருக்குர்ஆன் 29:23

அவர்கள் தங்களுக்குள்ளே சிந்தித்துப் பார்க்கவில்லையா?  வானங்களையும்,  பூமியையும்,அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் தக்க காரணத்துடனும், குறிப்பிட்ட காலக் கெடுவுடனும் அல்லாஹ் படைத்திருக்கிறான். மனிதர்களில் அதிகமானோர் தமது இறைவனின் சந்திப்பை மறுப்பவர்கள்.

திருக்குர்ஆன் 30:8

பூமிக்குள் மறைந்த பின் புதுப் படைப்பை நாங்கள் பெறுவோமா?  என்று அவர்கள் கேட்கின்றனர். அவ்வாறில்லை! அவர்கள் தமது இறைவனின் சந்திப்பை மறுக்கின்றனர்.

திருக்குர்ஆன் 32:10

அவனை அவர்கள் சந்திக்கும் நாளில் அவர்களின் காணிக்கை ஸலாம் என்பதாகும். அவர்களுக்காக மரியாதைக்குரிய கூலியையும் அவன் தயாரித்துள்ளான்.

திருக்குர்ஆன் 33:44

கவனத்தில் கொள்க! அவர்கள் தமது இறைவனைச் சந்திப்பதில் சந்தேகத்திலேயே உள்ளனர். கவனத்தில் கொள்க! அவன் ஒவ்வொரு பொருளையும் முழுமையாக அறிபவன்.

திருக்குர்ஆன் 41:54

அந்நாளில் சில முகங்கள் மலர்ந்து இருக்கும். தமது இறைவனைப் பார்த்துக் கொண்டிருக்கும்.

திருக்குர்ஆன் 75:22,23

இறைவனின் இலக்கணம்

இறைவனுக்குத் தூக்கம் இல்லை

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்குச் சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்? அவர்களுக்கு முன்னேயும், பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான். அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாது. அவன் நாடியதைத் தவிர. அவனது ஆசனம் வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும். அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமமானதன்று. அவன் உயர்ந்தவன்; மகத்துவமிக்கவன்.

திருக்குர்ஆன் 2:255

இறைவனுக்குச் சோர்வு இல்லை

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்குச் சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்? அவர்களுக்கு முன்னேயும், பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான். அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாது. அவன் நாடியதைத் தவிர. அவனது ஆசனம் வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும். அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமமானதன்று. அவன் உயர்ந்தவன்; மகத்துவமிக்கவன்.

திருக்குர்ஆன் 2:255

வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டதையும் ஆறு நாட்களில் படைத்தோம். நமக்கு எந்தக் களைப்பும் ஏற்படவில்லை.

திருக்குர்ஆன் 50:38

இறைவனுக்கு மரணமில்லை

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்குச் சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்? அவர்களுக்கு முன்னேயும், பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான். அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாது. அவன் நாடியதைத் தவிர. அவனது ஆசனம் வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும். அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமமானதன்று. அவன் உயர்ந்தவன்;  மகத்துவமிக்கவன்.

திருக்குர்ஆன் 2:255

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன்.

திருக்குர்ஆன் 3:2

என்றென்றும் உயிருடனிருப்பவன் முன்னே முகங்கள் கவிழ்ந்து விடும். அநியாயத்தைச் சுமந்தவன் நஷ்டமடைந்து விட்டான்.

திருக்குர்ஆன் 20:111

மரணிக்காது, உயிரோடு இருப்பவனையே சார்ந்திருப்பீராக! அவனைப் போற்றிப் புகழ்வீராக! தனது அடியார்களின் பாவங்களை நன்கு அறிந்திட அவன் போதுமானவன்.

திருக்குர்ஆன் 25:58

இறைவனுக்கு மறதி இல்லை

உமது இறைவன் மறப்பவனாக இல்லை.

திருக்குர்ஆன் 19:64

அது பற்றிய ஞானம் எனது இறைவனிடம் (உள்ள) பதிவேட்டில் இருக்கிறது. என் இறைவன் தவறிட மாட்டான். மறக்கவும் மாட்டான்  என்று அவர் கூறினார்.

திருக்குர்ஆன் 20:52

இறைவனுக்குப் பசி, தாகம் இல்லை

வானங்களையும், பூமியையும் படைத்த அல்லாஹ்வையன்றி வேறு பொறுப்பாளனை ஏற்படுத்திக் கொள்வேனா? அவனே உணவளிக்கிறான். அவன் உணவளிக்கப்படுவதில்லை  என்று கூறுவீராக!  கட்டுப்பட்டு நடப்போரில் முதலாமவனாக இருக்குமாறு கட்டளையிடப்பட்டுள்ளேன்  எனவும் கூறுவீராக! இணை கற்பித்தவராக ஒரு போதும் நீர் ஆகி விடாதீர்!

திருக்குர்ஆன் 6:14

அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை.  மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும். அல்லாஹ் உங்களுக்கு நேர் வழி காட்டியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்திட இவ்வாறே அதை அவன் உங்களுக்குப் பயன்படச் செய்தான். நன்மை செய்வோருக்கு நற்செய்தி கூறுவீராக!

திருக்குர்ஆன் 22:37

நான் அவர்களிடம் செல்வத்தை நாடவில்லை. அவர்கள் எனக்கு உணவளிப்பதையும்  நான் நாடவில்லை.

திருக்குர்ஆன் 51:57

இறைவனுக்கு உதவியாளன் இல்லை

சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை என்று (முஹம்மதே!) கூறுவீராக! அவனை அதிகம் பெருமைப்படுத்துவீராக!

திருக்குர்ஆன்17:111

இறைவனுக்கு வீண் விளையாட்டு இல்லை

அவர்கள் நின்றும், அமர்ந்தும், படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினைப்பார்கள். வானங்கள் மற்றும் பூமி படைக்கப்பட்டது குறித்துச் சிந்திப்பார்கள்.  எங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லை; நீ தூயவன்; எனவே நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!  (என்று அவர்கள் கூறுவார்கள்)

திருக்குர்ஆன் 3:191

வானத்தையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் விளையாட்டாக நாம் படைக்கவில்லை.

திருக்குர்ஆன் 21:16

வேடிக்கை (விளையாட்டை) ஏற்படுத்திக் கொள்வதாக இருந்தால் நம்மிடமிருந்தே அதை ஏற்படுத்தியிருப்போம். நாம் (எதையும்) செய்யக்கூடியவரே.

திருக்குர்ஆன் 21:17

உங்களை வீணாகப் படைத்துள்ளோம்  என்றும் நம்மிடம் திரும்பக் கொண்டு வரப்படமாட்டீர்கள்  என்றும் நினைத்து விட்டீர்களா?

திருக்குர்ஆன் 23:115

வானத்தையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டதையும் வீணுக்காக நாம் படைக்கவில்லை. இது (ஏக இறைவனை) மறுப்போரின் எண்ணம். மறுப்போருக்கு நரகம் எனும் கேடு உள்ளது.

திருக்குர்ஆன் 38:27

வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் விளையாட்டுக்காக நாம் படைக்கவில்லை.

திருக்குர்ஆன் 44:38

இறைவனுக்குத் தேவைகள் இல்லை

ஒருவன், இன்னொருவனுக்கு எந்தப் பயனும் அளிக்க முடியாத நாளை அஞ்சுங்கள்! (அந்நாளில்) எவரிடமிருந்தும் எந்தப் பரிந்துரையும் ஏற்கப்படாது. எவரிடமிருந்தும் எந்த ஈடும் பெற்றுக் கொள்ளப்படாது. அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள். திருக்குர்ஆன் 2:48

ஒருவன், இன்னொருவனுக்கு எந்தப் பயனும் அளிக்க முடியாத நாளை அஞ்சுங்கள்! (அந்நாளில்) எவரிடமிருந்தும் எந்த ஈடும் பெறப்படாது. எவருக்கும் எந்தப் பரிந்துரையும் பயன்படாது. அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 2:123

தர்மம் செய்து விட்டு அதைத் தொடர்ந்து, தொல்லை கொடுப்பதை விட அழகிய சொற்களைக் கூறுவதும், மன்னிப்பதும் சிறந்தது. அல்லாஹ் தேவையற்றவன்; சகிப்புத் தன்மை மிக்கவன்.

திருக்குர்ஆன் 2:263

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்ததில் தூய்மையானவற்றையும்,  பூமியிலிருந்து உங்களுக்கு நாம் வெளிப்படுத்தியதிலிருந்தும் (நல் வழியில்) செலவிடுங்கள்! கண்ணை மூடிக் கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ள மாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள்! அல்லாஹ் தேவையற்றவன்; புகழுக்குரியவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

திருக்குர்ஆன் 2:267

(ஏக இறைவனை) மறுத்து, மறுத்த நிலையில் மரணித்தோர், பூமி நிரம்பும் அளவுக்குத் தங்கத்தை ஈடாகக் கொடுத்தாலும் அது ஏற்கப்படாது. அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. அவர்களுக்கு உதவுவோர் யாருமில்லை.

திருக்குர்ஆன் 3:91

அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. யாரேனும் (ஏக இறைவனை) மறுத்தால் அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன்.

திருக்குர்ஆன் 3:97

வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்!  என்று உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரையும், உங்களையும் வலியுறுத்தியுள்ளோம். நீங்கள் (ஏக இறைவனை) மறுத்தால் வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ் தேவையற்றவனாகவும், புகழப்பட்டவனாகவும்  இருக்கிறான்.

திருக்குர்ஆன் 4:131

உமது இறைவன் தேவையற்றவன்; இரக்கமுள்ளவன். வேறு சமுதாயத்தின் வழித் தோன்றல்களிலிருந்து உங்களை உருவாக்கியது போல் அவன் நாடினால் உங்களைப் போக்கி விட்டு உங்களுக்குப் பின் அவன் நாடியதை உங்கள் இடத்துக்குக் கொண்டு வருவான்.

திருக்குர்ஆன் 6:133

அல்லாஹ் சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான்  என்று கூறுகின்றனர். இதற்கு உங்களிடம் ஆதாரம் இல்லை. அவன் தூயவன். அவன் தேவையற்றவன். வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அல்லாஹ்வின் மீது நீங்கள் அறியாததை இட்டுக்கட்டிக் கூறுகின்றீர்களா?

திருக்குர்ஆன் 10:68

நீங்களும், பூமியில் உள்ள அனைவரும் (ஏக இறைவனை) மறுத்தால் அல்லாஹ் தேவையற்றவன்; புகழுக்குரியவன்  என்று மூஸா கூறினார்.

திருக்குர்ஆன் 14:8

வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அல்லாஹ் புகழுக்குரியவன்; தேவையற்றவன்.

திருக்குர்ஆன் 22:64

கண் மூடித் திறப்பதற்குள் அதை நான் உம்மிடம் கொண்டு வருகிறேன் என்று வேதத்தைப் பற்றிய ஞானம் பெற்றது (ஜின்) கூறியது. தன் முன்னே அது வந்திருக்க அவர் கண்டதும் நான் நன்றி செலுத்துகிறேனா? அல்லது நன்றி மறக்கிறேனா?  என்று என்னைச் சோதிப்பதற்காக இது எனது இறைவனின் அருட்கொடை. நன்றி செலுத்துபவர் தமக்காகவே நன்றி செலுத்துகிறார். யார் நன்றி மறக்கிறாரோ என் இறைவன் தேவையற்றவன்;கண்ணியமிக்கவன்.

திருக்குர்ஆன் 27:40

உழைப்பவர் தமக்காகவே உழைக்கிறார். அகிலத்தாரை விட்டும் அல்லாஹ் தேவையற்றவன்.

திருக்குர்ஆன் 29:6

அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவீராக! நன்றி செலுத்துகிறவர் தமக்கே நன்றி செலுத்திக் கொள்கிறார். யார் (ஏக இறைவனை) மறுக்கிறாரோ அல்லாஹ் தேவையற்றவன்; புகழுக்குரியவன்  என்று (கூறி) லுக்மானுக்கு ஞானத்தை வழங்கினோம்.

திருக்குர்ஆன் 31:12

வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ் தேவையற்றவன்; புகழுக்குரியவன்.

திருக்குர்ஆன் 31:26

மனிதர்களே! நீங்கள் அல்லாஹ்விடம் தேவையுடையவர்கள். அல்லாஹ்வே தேவையற்றவன்; புகழுக்குரியவன்.

திருக்குர்ஆன் 35:15

நீங்கள் (ஏக இறைவனை) மறுத்தால் அல்லாஹ் உங்களை விட்டும் தேவையற்றவன். அவன் தனது அடியார்களிடம் மறுப்பைப் பொருந்திக் கொள்ள மாட்டான். நீங்கள் நன்றி செலுத்தினால் உங்களிடம் அதைப் பொருந்திக் கொள்வான். ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்க மாட்டார். பின்னர் உங்கள் மீளுதல் உங்கள் இறைவனிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்ததை அவன் உங்களுக்கு அறிவிப்பான். உள்ளங்களில் உள்ளதை அவன் அறிந்தவன்.

திருக்குர்ஆன் 39:7

அறிந்து கொள்க! அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் செலவிடுவதற்காக அழைக்கப்பட்டால் உங்களில் கஞ்சத்தனம் செய்வோரும் உள்ளனர். யாரேனும் கஞ்சத்தனம் செய்தால் அவர் தமக்கே கஞ்சத்தனம் செய்கிறார். அல்லாஹ் தேவையற்றவன். நீங்களே தேவைப்படுவோர். நீங்கள் புறக்கணித்தால் உங்களையன்றி வேறு ஒரு சமுதாயத்தை உங்களுக்குப் பகரமாக அவன் ஆக்குவான். பின்னர் அவர்கள் உங்களைப் போன்று இருக்க மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 47:38

அவர்கள் தாமும் கஞ்சத்தனம் செய்து மக்களுக்கும் கஞ்சத்தனத்தை ஏவுவார்கள். யார் புறக்கணிக்கிறாரோ அல்லாஹ் தேவையற்றவன்; புகழுக்குரியவன்.

திருக்குர்ஆன் 57:24

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு அவர்களிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது. யார் புறக்கணிக்கிறாரோ அல்லாஹ் தேவையற்றவன்;  புகழுக்குரியவன்.

திருக்குர்ஆன் 60:6

அவர்களிடம் அவர்களது தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வருவோராக இருந்ததும், ஒரு மனிதர் எங்களுக்கு வழி காட்டுவதா? என்று அவர்கள் கூறி (ஏக இறைவனை) மறுத்துப் புறக்கணித்ததும் இதற்குக் காரணம். அவர்களைத் தேவையற்றோராக அல்லாஹ் கருதினான். அல்லாஹ் தேவையற்றவன்;  புகழுக்குரியவன்.

திருக்குர்ஆன் 64:6

 அல்லாஹ் ஒருவன்  என (முஹம்மதே!) கூறுவீராக! அல்லாஹ் தேவையற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை.

திருக்குர்ஆன் 112:2

இறைவனுக்கு மனைவி இல்லை (அவன்) வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவன். அவனுக்கு மனைவி இல்லாத நிலையில் அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். அவன் அனைத்துப் பொருட்களையும் அறிந்தவன்.

திருக்குர்ஆன் 6:101

எங்கள் இறைவனின் மகத்துவம் உயர்ந்தது. அவன் மனைவியையோ,  பிள்ளைகளையோ ஏற்படுத்திக் கொள்ளவில்லை.

திருக்குர்ஆன் 72:3

இறைவனுக்கு மகன் இல்லை

 அல்லாஹ் மகனை ஏற்படுத்திக் கொண்டான்  எனக் கூறுகின்றனர். அவ்வாறில்லை! அவன் தூயவன். வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அவனுக்கே உரியன. அனைத்தும் அவனுக்கே அடிபணிகின்றன.

திருக்குர்ஆன் 2:116

வேதமுடையோரே! உங்கள் மார்க்கத்தில் வரம்பு மீறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதனையும்) கூறாதீர்கள்! மர்யமின் மகன் ஈஸா எனும் மஸீஹ் அல்லாஹ்வின் தூதரும் அவனது கட்டளையா(ல் உருவானவருமா)வார். அக்கட்டளையை அவன் மர்யமிடம் போட்டான். அவனது உயிருமாவார். எனவே அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்புங்கள்! (கடவுள்) மூவர் எனக் கூறாதீர்கள்! விலகிக் கொள்ளுங்கள்! (அது) உங்களுக்குச் சிறந்தது. அல்லாஹ்வே ஒரே வணக்கத்திற்குரியவன். அவனுக்குப் பிள்ளை இருப்பதை விட்டும் அவன் தூயவன். வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அல்லாஹ் பொறுப்பேற்கப் போதுமானவன்.

திருக்குர்ஆன் 4:171

ஜின்களை அல்லாஹ்வே படைத்திருக்கும் போது அவர்களை அவனுக்கு இணையாக்கி விட்டனர். அவனுக்கு ஆண் மக்களையும், பெண் மக்களையும் அறிவில்லாமல் கற்பனை செய்து விட்டனர். அவனோ தூயவன். அவர்கள் வர்ணிப்பதை விட்டும் அவன் உயர்ந்து விட்டான்.

திருக்குர்ஆன் 6:100

(அவன்) வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவன். அவனுக்கு மனைவி இல்லாத நிலையில் அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். அவன் அனைத்துப் பொருட்களையும் அறிந்தவன்.

திருக்குர்ஆன் 6:101

உஸைர் அல்லாஹ்வின் மகன்  என்று யூதர்கள் கூறுகின்றனர்.  மஸீஹ் அல்லாஹ்வின் மகன்  என்று கிறித்தவர்கள் கூறுகின்றனர். இது வாய்களால் அவர்கள் கூறும் கூற்றாகும். இதற்கு முன் (ஏக இறைவனை) மறுத்தோரின் கூற்றுக்கு ஒத்துப் போகிறார்கள். அல்லாஹ் அவர்களை அழிப்பான். எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்?

திருக்குர்ஆன் 9:30

அல்லாஹ் சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான்  என்று கூறுகின்றனர். இதற்கு உங்களிடம் ஆதாரம் இல்லை. அவன் தூயவன். அவன் தேவையற்றவன். வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அல்லாஹ்வின் மீது நீங்கள் அறியாததை இட்டுக்கட்டிக் கூறுகின்றீர்களா?

திருக்குர்ஆன் 10:68

சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை என்று (முஹம்மதே!) கூறுவீராக! அவனை அதிகம் பெருமைப்படுத்துவீராக!

திருக்குர்ஆன் 17:111

அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். அவன் தான் தனது அடியார் மீது இவ்வேதத்தை நேரானதாகவும், தனது கடுமையான வேதனை பற்றி எச்சரிப்பதற்காகவும், நல்லறங்கள் செய்யும் நம்பிக்கை கொண்டோருக்கு அழகிய கூலி உண்டு; அதில் என்றென்றும் தங்குவார்கள்  என நற்செய்தி கூறுவதற்காகவும், அல்லாஹ் சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான்  என்று கூறுவோரை எச்சரிப்பதற்காகவும், (இவ்வேதத்தை) எவ்விதக் கோணலும் இன்றி அருளினான்.

திருக்குர்ஆன் 18:1-4

எந்தப் பிள்ளையையும் ஏற்படுத்திக் கொள்வது அல்லாஹ்வுக்குத் தகுதியானதன்று. அவன் தூயவன். ஒரு காரியத்தைப் பற்றி அவன் முடிவெடுத்தால் ஆகு  என்று தான் அதற்குக் கூறுவான். உடனே அது ஆகி விடும்.

திருக்குர்ஆன் 19:35

அளவற்ற அருளாளன் பிள்ளையை ஏற்படுத்திக் கொண்டான்  என்று அவர்கள் கூறுகின்றனர். அபாண்டத்தையே கொண்டு வந்து விட்டீர்கள். அளவற்ற அருளாளனுக்குப் பிள்ளை இருப்பதாக அவர்கள் வாதிடுவதால் வானங்கள் வெடித்து, பூமி பிளந்து மலைகள் நொறுங்கி விடப் பார்க்கின்றன. பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளும் அவசியம் அளவற்ற அருளாளனுக்கு இல்லை. வானங்களிலும், பூமியிலும் உள்ள ஒவ்வொருவரும் அளவற்ற அருளாளனிடம் அடிமையாகவே வருவார்கள்.

திருக்குர்ஆன் 19:88-93

அளவற்ற அருளாளன் சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான்  எனக் கூறுகின்றனர். அவன் தூயவன். மாறாக அவர்கள் (வானவர்கள்) மரியாதைக்குரிய அடியார்கள்.

திருக்குர்ஆன் 21:26

அல்லாஹ் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அவனுடன் எந்தக் கடவுளும் இல்லை. அவ்வாறிருந்தால் தான் படைத்தவற்றுடன் ஒவ்வொரு கடவுளும் (தனியாகப்) போயிருப்பார்கள். ஒருவரையொருவர் மிகைத்திருப்பார்கள். அவர்கள் கூறுவதை விட்டும் அல்லாஹ் தூயவன்.

திருக்குர்ஆன் 23:91

அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் உள்ளது. அவன் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அதிகாரத்தில் அவனுக்கு எந்தப் பங்காளியும் இல்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் படைத்தான். அதைத் திட்டமிட்டு அமைத்தான்.

திருக்குர்ஆன் 25:2

உமது இறைவனுக்குப் பெண் குழந்தைகள்! இவர்களுக்கு ஆண் குழந்தைகளா? என்று இவர்களிடம் கேட்பீராக! வானவர்களை நாம் பெண்களாகப் படைக்கும் போது அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்களா? கவனத்தில் கொள்க! அல்லாஹ் (பிள்ளைகளைப்) பெற்றெடுத்தான் என்று அவர்கள் இட்டுக்கட்டியே கூறுகின்றனர். அவர்கள் பொய் கூறுபவர்கள். ஆண் மக்களை விட அவன் பெண் மக்களைத் தேர்வு செய்து விட்டானா? உங்களுக்கு என்ன நேர்ந்தது? எவ்வாறு தீர்ப்பளிக்கிறீர்கள்?  சிந்திக்க மாட்டீர்களா? அல்லது உங்களுக்குத் தெளிவான சான்று உள்ளதா? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் வேதத்தைக் கொண்டு வாருங்கள்!

திருக்குர்ஆன் 37:149-157

அல்லாஹ் மகனை ஏற்படுத்திக் கொள்ள நாடியியிருந்தால் தான் படைத்தவற்றில் தான் நாடியதை எடுத்துக் கொண்டிருப்பான். அவன் தூயவன். அவனே அடக்கியாளும் ஏகனாகிய அல்லாஹ்.

திருக்குர்ஆன் 39:4

அளவற்ற அருளாளனுக்குச் சந்ததி இருந்தால் அவரை நானே முதலில் வணங்குபவன் என (முஹம்மதே!) கூறுவீராக!

திருக்குர்ஆன் 43:81

எங்கள் இறைவனின் மகத்துவம் உயர்ந்தது. அவன் மனைவியையோ,  பிள்ளைகளையோ ஏற்படுத்திக் கொள்ளவில்லை.

திருக்குர்ஆன் 72:3

(யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.

திருக்குர்ஆன் 112:3

இறைவனுக்குப் பெண் மக்கள் இல்லை

ஜின்களை அல்லாஹ்வே படைத்திருக்கும் போது அவர்களை அவனுக்கு இணையாக்கி விட்டனர். அவனுக்கு ஆண் மக்களையும், பெண் மக்களையும் அறிவில்லாமல் கற்பனை செய்து விட்டனர். அவனோ தூயவன். அவர்கள் வர்ணிப்பதை விட்டும் அவன் உயர்ந்து விட்டான்.

திருக்குர்ஆன் 6:100

அல்லாஹ்வுக்குப் புதல்வியரைக் கற்பனை செய்கின்றனர். அவன் தூயவன். அவர்களுக்கோ அவர்கள் ஆசைப்படுவது (ஆண் குழந்தை) வேண்டுமாம்!

திருக்குர்ஆன் 16:57

உங்கள் இறைவன் உங்களுக்கு ஆண் குழந்தைகளை வழங்கி விட்டு, தனக்கு வானவர்களைப் புதல்வியராக ஆக்கிக் கொண்டானா? பயங்கரமான கூற்றையே கூறுகிறீர்கள்!

திருக்குர்ஆன் 17:40

உமது இறைவனுக்குப் பெண் குழந்தைகள்! இவர்களுக்கு ஆண் குழந்தைகளா? என்று இவர்களிடம் கேட்பீராக! வானவர்களை நாம் பெண்களாகப் படைக்கும் போது அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்களா? கவனத்தில் கொள்க! அல்லாஹ் (பிள்ளைகளைப்) பெற்றெடுத்தான் என்று அவர்கள் இட்டுக்கட்டியே கூறுகின்றனர். அவர்கள் பொய் கூறுபவர்கள். ஆண் மக்களை விட அவன் பெண் மக்களைத் தேர்வு செய்து விட்டானா? உங்களுக்கு என்ன நேர்ந்தது? எவ்வாறு தீர்ப்பளிக்கிறீர்கள்?  சிந்திக்க மாட்டீர்களா? அல்லது உங்களுக்குத் தெளிவான சான்று உள்ளதா? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் வேதத்தைக் கொண்டு வாருங்கள்!

திருக்குர்ஆன் 37:149-157

அவர்கள் அவனது அடியார்களில் சிலரை (அவனில்) ஒரு பகுதியாக ஆக்குகின்றனர். மனிதன் தெளிவான நன்றி கெட்டவன். அவன் படைத்தவற்றில் பெண் மக்களைத் தனக்கு அவன் ஏற்படுத்திக் கொண்டு உங்களுக்கு ஆண் மக்களைத் தேர்வு செய்து விட்டானா?அளவற்ற அருளாளனுக்கு எதனைக் கற்பனை செய்தார்களோ அது குறித்து (பெண் குழந்தை குறித்து) அவர்களில் ஒருவருக்கு நற்செய்தி கூறப்பட்டால் அவரது முகம் கறுத்து விடுகிறது. அவர் கோபம் கொண்டவராகி விடுகிறார்.. அளவற்ற அருளாளனின் அடியார்களான வானவர்களைப் பெண்களாக அவர்கள் கற்பனை செய்து விட்டனர். அவர்கள் படைக்கப்பட்டதை இவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்களா? இவர்களது கூற்று பதிவு செய்யப்பட்டு, விசாரிக்கப்படுவார்கள்.

திருக்குர்ஆன் 43:15-19

அவனுக்குப் பெண் குழந்தைகளும், உங்களுக்கு ஆண் குழந்தைகளுமா?

திருக்குர்ஆன் 52:39

உங்களுக்கு ஆண்! அவனுக்குப் பெண்ணா? அப்படியானால் இது அநியாயமான பங்கீடு தான். . அவை வெறும் பெயர்கள் தவிர வேறு இல்லை. நீங்களும், உங்கள் மூதாதையரும் தாம் அந்தப் பெயரைச் சூட்டினீர்கள். இது பற்றி அல்லாஹ் எந்த அத்தாட்சியையும் அருளவில்லை. ஊகத்தையும், மனோ இச்சைகளையும் தவிர வேறு எதையும் அவர்கள் பின்பற்றவில்லை. அவர்களுக்கு அவர்களின் இறைவனிடமிருந்து நேர் வழி வந்து விட்டது

திருக்குர்ஆன் 53:21-23

இறைவனுக்குப் பெற்றோர் இல்லை

அவனே முதலானவன்; முடிவானவன்; வெளிப்படையானவன்; அந்தரங்கமானவன். ஒவ்வொரு பொருளையும் அவன் அறிந்தவன்.

திருக்குர்ஆன் 57:3

(யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.

திருக்குர்ஆன் 112:3

இறைவன் தூணிலும் துரும்பிலும் இல்லை

உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். இரவைப் பகலால் அவன் மூடுகிறான். பகல், இரவை வேகமாகத் தொடர்கிறது. சூரியனையும்,  சந்திரனையும், நட்சத்திரங்களையும் தனது கட்டளையால் கட்டுப்படுத்தினான். கவனத்தில் கொள்க! படைத்தலும், கட்டளையும் அவனுக்கே உரியன.  அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ் பாக்கியம் பொருந்தியவன்.

திருக்குர்ஆன் 7:54

உங்கள் இறைவன் அல்லாஹ்வே. அவனே வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். காரியங்களை நிர்வகிக்கிறான். அவனது அனுமதியின்றி எந்தப் பரிந்துரைப்பவனும் இல்லை. அவனே அல்லாஹ். உங்கள் இறைவன். அவனை வணங்குங்கள்! படிப்பினை பெற மாட்டீர்களா?

திருக்குர்ஆன் 10:3

நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி வானங்களை அல்லாஹ்வே உயர்த்தினான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணை வரை ஓடுகின்றன. காரியத்தை அவனே நிர்வகிக்கிறான். உங்கள் இறைவனின் சந்திப்பை நீங்கள் உறுதியாக நம்புவதற்காக சான்றுகளை அவன் தெளிவுபடுத்துகிறான்.

திருக்குர்ஆன் 13:2

அளவற்ற அருளாளன் அர்ஷின் மீது அமர்ந்தான்.

திருக்குர்ஆன் 20:5

அவனே வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். அளவற்ற அருளாளனைப் பற்றி,அறிந்தவரிடம் கேட்பீராக!

திருக்குர்ஆன் 25:59

வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் அல்லாஹ்வே ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். உங்களுக்கு அவனன்றி பொறுப்பாளரோ, பரிந்துரைப்பவரோ இல்லை. நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?

திருக்குர்ஆன் 32:4

வானங்களையும், பூமியையும் அவனே ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். பூமியில் நுழைவதையும், அதிலிருந்து வெளிப்படுவதையும் வானிலிருந்து இறங்குவதையும் அதில் ஏறுவதையும் அவன் அறிவான். நீங்கள் எங்கே இருந்தாலும் அவன் உங்களுடன் இருக்கிறான். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன்.

திருக்குர்ஆன் 57:4

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்குச் சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்? அவர்களுக்கு முன்னேயும், பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான். அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாது. அவன் நாடியதைத் தவிர. அவனது ஆசனம் வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும். அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமமானதன்று. அவன் உயர்ந்தவன்; மகத்துவமிக்கவன்.

திருக்குர்ஆன் 2:255

இறைவனுக்குப் பல பெயர்கள்

அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றின் மூலமே அவனிடம் பிரார்த்தியுங்கள்! அவனது பெயர்களில் திரித்துக் கூறுவோரை விட்டு விடுங்கள்! அவர்கள் செய்து வந்ததற்காக அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

திருக்குர்ஆன் 7:180

அல்லாஹ் என்று அழையுங்கள்! அல்லது ரஹ்மான் என்று அழையுங்கள்! நீங்கள் எப்படி அழைத்த போதும் அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன  என்று கூறுவீராக! உமது பிரார்த்தனையைச் சப்தமிட்டும் செய்யாதீர்! மெதுவாகவும் செய்யாதீர்! இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட வழியைத் தேடுவீராக!

திருக்குர்ஆன் 17:110

05.11.2009. 18:05 PM

கொள்கை விளக்கம்

நூலின் பெயர் : கொள்கை விளக்கம்

ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன்

மார்க்கத்தின் எச்சரிக்கை!

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும். இந்த இணைய தளத்தில் உள்ளவைகளைப் பிரச்சாரம் செய்வதற்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் சில சகோதரர்கள் நமது ஆக்கங்களை அப்படியே பயன்படுத்தி தமது ஆக்கம் போல் காட்டுகின்றனர்.

இன்னாருடைய கட்டுரையில் இருந்து, அல்லது புத்தகத்தில் இருந்து இது எடுக்கப்பபட்டது என்று குறிப்பிடாமல் புகழடைவதற்காக இவ்வாறு செய்கின்றனர்.

சில இணைய தளங்களும் என்னுடைய ஆக்கங்களை அப்படியே வெளியிட்டு தம்முடைய ஆக்கம் போல் காட்டுகின்றன.மேலும் சில புத்தக வியாபாரிகளும் எனது நூல் உட்பட மற்றவர்களின் நூல்களைச் சிறிது மாற்றியமைத்து அனாமதேயங்களின் பெயர்களில் வெளியிட்டுச் சம்பாதிக்கின்றனர். உலகைப் பற்றியும் இவர்களுக்கு வெட்கம் இல்லை. மறுமையைப் பற்றியும் பயம் இல்லை.

இஸ்லாத்தில் இவ்வாறு செய்ய அனுமதி இல்லை. இவர்கள் நல்லது செய்யப் போய் மறுமையின் தண்டனைக்கு தம்மைத் தாமே உட்படுத்திக் கொள்கின்றனர்.

பிறரது ஆக்கங்களைப் பயன்படுத்துவோர் இது இன்னாருடைய ஆக்கம் என்று குறிப்பிடாமல் தன்னுடைய ஆக்கம் போல் காட்டுவது மார்க்க அடிப்படையில் குற்றமாகும்.

இவர்களுக்கு அல்லாஹ் விடுக்கும் எச்சரிக்கையை இங்கே சுட்டிக் காட்டுகிறோம்.

தாங்கள் செய்தவற்றுக்காக மகிழ்ச்சியடைந்து, தாம் செய்யாதவற்றுக்காகப் புகழப்பட வேண்டுமென விரும்புவோர் வேதனையிலிருந்து தப்பித்து விட்டார்கள் என்று நீர் நினைக்காதீர்! அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.

திருக்குர்ஆன் 3:188

கொள்கை விளக்கம்

பல்வேறு மாத இதழ்களில் வாசகர்களின் கேள்விகளுக்கு பீ.ஜைனுல் ஆபிதீன் அளித்த பதில்களில் கொள்கை சம்மந்தப்பட்ட பதில்கள் கீழ்க்காணும் தலைப்புக்களில் இந்நூலில் வெளியிடப்பட்டுள்ளது

  • பைஅத், முரீது (தீட்சை)
  • கால் விழலாமா?
  • எழுந்து நின்று மரியாதை செய்தல்
  • தரீக்காவின் திக்ருகள்
  • தஸ்பீஹ் மணி
  • தப்லீக் ஜமாஅத்
  • ஜின்களை வசப்படுத்த முடியுமா?
  • சகுனம் பார்த்தல்
  • கப்ரு வேதனை
  • கந்தூரி
  • 786என்பதைப் பயன்படுத்தலாமா?
  • தர்கா ஸியாரத்
  • ஒற்றைப்படையாகக் கொடுத்தல்
  • கறுப்பு நிறமும், தரித்திரமும்
  • கனவில் வரும் கட்டளை
  • ஜம்ஜம் தண்ணீர்
  • புர்தா படிக்கலாமா?
  • அரபி மொழி தான் தேவ மொழியா?

பைஅத், முரீது (தீட்சை)

மனிதனது அறிவை மழுங்கச் செய்யும் எந்தக் காரியத்திற்கும் இஸ்லாத்தில் அறவே அனுமதி இல்லை. பைஅத், முரீது என்பது தான் மனிதனின் அறிவை மழுங்கச் செய்வதில் முதடத்தில் உள்ளது எனலாம். இதை விரிவாகப் பார்ப்போம்.

ஷெய்கு எனப்படுபவர் தன்னிடம் பைஅத் (தீட்சை) வாங்கியவர்களுடன் உள்ளத்தால் தொடர்பு வைத்திருக்கிறார்; முரீதின் (சீடரின்) உள்ளத்தில் ஊடுருவி போதனைகளைப் பதியச் செய்கிறார்  என்றெல்லாம் நம்பப்படுகிறது. இந்த நம்பிக்கை இஸ்லாமிய அடிப்படையில் சரியானது தானா?  எந்த ஒரு மனிதனும் எந்த மனிதனின் உள்ளத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்த முடியாது  என்பது இஸ்லாத்தின் கோட்பாடு.

உள்ளங்களைப் புரட்டக் கூடியவனே! என் உள்ளத்தை உனது மார்க்கத்தில் உறுதியாக ஆக்கி வைப்பாயாக!  என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிரார்த்தனையாக இருந்தது.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : திர்மிதீ 3511

மனிதனின் உள்ளங்கள் அல்லாஹ்வின் இரண்டு விரல்களுக்கிடையே உள்ளன. அவன் விரும்பியவாறு அந்த உள்ளங்களைப் புரட்டுகிறான்  என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ் (ரலி)

நூல் : முஸ்லிம் 4798

உள்ளங்கள் இறைவனது கைவசத்திலேயே உள்ளன; அதில் எவருக்கும் எந்தப் பங்குமில்லை  என்பதற்கு இவை தெளிவான சான்றுகள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் மனைவியர் விஷயத்தில் மிகவும் நேர்மையுடன் நடந்து கொண்டார்கள். அவர்களுக்கிடையே எந்தப் பாரபட்சமும் காட்டியது இல்லை. ஆனாலும் தம் மனைவியரில் ஆயிஷா (ரலி)யை மட்டும் மற்றவர்களை விட அதிகம் நேசித்தார்கள். இவ்வாறு ஒருவர் மீது நேசம் வைப்பது மனிதனின் முயற்சியால் நடப்பது அல்ல. முயற்சியையும் மீறி நடப்பதாகும்.

இதைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது

இறைவா! எனது சக்திக்கு உட்பட்ட விஷயங்களில் நான் சரியாக நடந்து கொள்கிறேன். எனது சக்திக்கு மீறிய (சிலர் மீது அதிக அன்பு வைக்கும்) காரியங்களில் என்னைக் குற்றவாளியாக்காதே!  என்று குறிப்பிடுபவர்களாக இருந்தனர்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல்கள் : திர்மிதீ 1059, அபூதாவூத் 1822, நஸயீ 3883 இப்னுமாஜா 1961, அஹ்மத் 23959

தமது உள்ளத்தைக் கட்டுக்குள் கொண்டு வருவது அல்லாஹ்வின் தூதருக்கே இயலவில்லை என்றால், அடுத்தவர் உள்ளங்களில் ஷெய்கு (குரு) எப்படி ஆட்சி செலுத்த முடியும்?

மிகவும் அக்கறையுடனும், ஆர்வத்துடனும், கலப்பற்ற தூய எண்ணத்துடனும் தம் பெரிய தந்தை அபூதாலிபுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போதித்தும் அவர் இஸ்லாத்தை ஏற்கவில்லை. அவரது உள்ளத்தை ஊடுருவி போதனையைப் பதியச் செய்ய இயலவில்லை.

இது பற்றி இறைவன் கூறும் போது

(முஹம்மதே!) நீர் விரும்பியோரை உம்மால் நேர் வழியில் செலுத்த முடியாது! மாறாக,தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர் வழி காட்டுகிறான். அவன் நேர் வழி பெற்றோரை நன்கறிந்தவன்.

அல்குர்ஆன் 28:56

என்ற வசனத்தை அருளினான்.

எத்தனையோ நபிமார்கள் தங்கள் மனைவியருக்கும், மக்களுக்கும், பெற்றோருக்கும் செய்த போதனைகள் பயனளிக்கவில்லை.

மலைகளைப் போன்ற அலை மீது அது அவர்களைக் கொண்டு சென்றது. விலகி இருந்த தன் மகனை நோக்கி  அருமை மகனே! எங்களுடன் ஏறிக் கொள்! (ஏக இறைவனை) மறுப்போருடன் ஆகி விடாதே!  என்று நூஹ் கூறினார்.  ஒரு மலையில் ஏறிக் கொள்வேன்; அது என்னைத் தண்ணீரிருந்து காப்பாற்றும் என்று அவன் கூறினான். அல்லாஹ் அருள் புரிந்தோரைத் தவிர அல்லாஹ்வின் கட்டளையிருந்து காப்பாற்றுபவன் எவனும் இன்று இல்லை  என்று அவர் கூறினார். அவ்விருவருக்கிடையே அலை குறுக்கிட்டது. அவன் மூழ்கடிக்கப்பட்டோரில் ஆகி விட்டான்.  பூமியே! உனது தண்ணீரை நீ உறிஞ்சிக் கொள்! வானமே நீ நிறுத்து! என்று (இறைவனால்) கூறப்பட்டது. தண்ணீர் வற்றியது. காரியம் முடிக்கப்பட்டது. அந்தக் கப்பல் ஜூதி மலை மீது அமர்ந்தது.  அநீதி இழைத்த கூட்டத்தினர் (இறையருளை விட்டும்) தூரமானோர்  எனவும் கூறப்பட்டது. நூஹ், தம் இறைவனை அழைத்தார். என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவன்; உனது வாக்குறுதியும் உண்மையே; நீயே தீர்ப்பு வழங்குவோரில் மேலானவன்  என்றார்.  நூஹே! அவன் உன் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன்; இது நல்ல செயல் அல்ல; உமக்கு அறிவு இல்லதாது பற்றி என்னிடம் கேட்காதீர்; அறியாதவராக நீர் இருக்கக் கூடாது என உமக்கு அறிவுரை கூறுகிறேன் என்று அவன் கூறினான்.  இறைவா! எனக்கு அறிவு இல்லாதது பற்றி உன்னிடம் கேட்பதை விட்டும் உன்னிடமே நான் பாதுகாப்புத் தேடுகிறேன்; நீ என்னை மன்னித்து அருள் புரியா விட்டால் நஷ்டமடைந்தவனாக ஆகி விடுவேன்  என்று அவர் கூறினார்.

அல்குர்ஆன் 11: 42-48

நூஹுடைய மனைவியையும், லூத்துடைய மனைவியையும் (தன்னை) மறுப்போருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் காட்டுகிறான். அவ்விருவரும் நமது இரு நல்லடியார்களின் மனைவியராக இருந்தனர். அவர்களுக்குத் துரோகம் செய்தனர். எனவே அவ்விருவரையும் அல்லாஹ்விடமிருந்து அவர்கள் சிறிதளவும் காப்பாற்றவில்லை.  நரகில் நுழைவோருடன் சேர்ந்து இருவரும் நுழையுங்கள்!  என்று கூறப்பட்டது.

(அல்குர்ஆன் 66:10)

இவையெல்லாம் நமக்கு என்ன பாடம் கற்பிக்கின்றன?

ஒருவர் எவ்வளவு இறையச்சம் உடையவர் ஆனாலும், தூய்மையான எண்ணம் கொண்டவரானாலும், பழுத்த பழமாக இருந்தாலும் அவர் தனது போதனைகளை எந்த உள்ளங்களிலும் சேர்ப்பிக்க முடியாது  என்பது தான் இதிலிருந்து நாம் பெற வேண்டிய பாடம்.

இதற்கு மாற்றமாக பைஅத், முரீது என்பது அமைந்துள்ளது.

எடுத்துக் காட்டாக, முரீது வியாபாரத்தில் நேர்மையான வியாபாரிகள் என்று நம்பப்படும் சிஷ்திய்யா தரீக்காவை எடுத்துக் கொள்வோம். இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மவ்லவிகள் பலரும் இந்த தரீக்காவில் முரீது வாங்கியுள்ளனர்.

ஹுஸைன் அஹ்மத் மதனீ, ரஷீத் அஹ்மத் கங்கோஹி போன்ற பெரியார்களெல்லாம் இதன் கலீஃபாக்களாக இருந்ததாகச் சொல்கிறார்கள்.

தப்லீக் தஃலீம் புத்தகம் எழுதிய முஹம்மது ஜக்கரிய்யா அவர்கள் இந்த தரீக்காவின் வரலாறு பற்றி உருதுவில் எழுதிய நூலை ஆரணியைச் சேர்ந்த கமாலுத்தீன் அவர்கள் (இவர் தமிழகத்தில் இந்த தரீக்காவின் கலீஃபா அதாவது ஏஜெண்ட்)  சிஷ்திய்யா ஷைகு வரலாறு  என்ற பெயரில் தமிழாக்கம் செய்துள்ளார்.

இவருக்கு நிறைய மவ்லவிகள் இன்றளவும் முரீதுகளாக உள்ளனர். அந்த நூலில் இடம் பெறும் சில சம்பவங்களையே இங்கே நாம் எடுத்துக் காட்டாக கூறப் போகிறோம்.

மஷாயிகுமார்கள் (பெரியார்கள்) தங்களிடமுள்ள குணாதிசயங்களைப் பிறரில் பரவச் செய்கிறார்கள். அதற்கு நடைமுறையில் தவஜ்ஜுஹே இத்திஹாதீ என்று சொல்லப்படுகின்றது.

(மேற்படி நூல் பக்கம் 10)

இந்த தவஜ்ஜுஹே இத்திஹாதீ  சம்பந்தமாக ஹஜ்ரத் காஜா பாக்கிபில்லாஹ் கத்தஸல்லாஹு சிர்ரஹுல் அஸீஸ்  அவர்களின் சம்பவம் பிரபல்யமானதாகும். அதை ஷைகு அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள் எழுதியுள்ளார்கள். ஒரு முறை ஹஜ்ரத் அவர்களுடைய வீட்டிற்கு விருந்தனர் பலர் வந்து விட்டனர். விருந்தினரை உபசரிக்க வீட்டில் எதுவுமில்லை. கவலையுடன் ஹஜ்ரத் அவர்கள் வெளியே வந்தார்கள். அருகே ரொட்டிக் கடைக்காரர் ஒருவர் வந்தார். அவர் ஹஜ்ரத் வீட்டிற்கு விருந்தினர் வந்ததைப் பார்த்து விட்டு நல்ல உணவுப் பொருட்களைத் தட்டில் வைத்து எடுத்துக் கொண்டு ஹஜ்ரத்திடம் வந்தார். ஹஜ்ரத் அவர்கள் அம்மனிதரை நோக்கி மகிழ்ச்சி மேலீட்டால்,  உனக்கு என்ன வேண்டுமோ கேள்!  என்றார்கள். அதற்கு அம்மனிதர் உங்களைப் போன்றே என்னையும் ஆக்கி விடுங்கள்!  என்றார். ஹஜ்ரத் அவர்கள், நீ சமாளிக்க மாட்டாய் என்றார்கள். எனினும் அம்மனிதர் பல முறை கெஞ்சி வேண்டிக் கொள்ள ஆரம்பித்து விட்டார். பல தடவை மறுத்தும் அவர் கேட்காததால் வேறு வழியின்றி ஹஜ்ரத் அவர்கள் அவரை வேறு அறைக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே தவஜ்ஜுஹே இத்திஹாதீ  செய்தார்கள். அறையிலிருந்து வெளியே வந்த போது இருவரின் முகமும் ஒரே மாதிரித் தோற்றமளித்தது. ஹஜ்ரத் காஜா சாஹிப் உணர்வோடு இருந்தார்கள். அம்மனிதரோ உணர்வின்றி இருந்தார். இது தான் வித்தியாசம். அதே உணர்வற்ற நிலையில் மூன்று நாட்கள் இருந்து பின்னர் இறந்து விட்டார்.

(அதே நூல் பக்கம்: 11, 12)

இப்படியெல்லாம் மூளைச் சலவை செய்யும் மடமைக் கதைகளுக்கும் சுப்ஹானல்லாஹ்  சொல்லக் கூடியவர்கள் இருக்கிறார்கள்.

மனிதனை முட்டாளாக்கி, அல்லாஹ்வின் தூதரை விடவும் தன்னை உயர்த்திக் கொள்ள முற்படும் இந்தப் பித்தலாட்டக்காரர்கள் ஷெய்குகளாம்! பக்குவப்பட்டவர்களாம்!

மேலே நாம் காட்டிய சான்றுகளுடன் இதை ஒப்பிட்டுப் பாருங்கள்! இவர்கள் இஸ்லாத்திற்கு எவ்வளவு பகிரங்கமான எதிரிகளாக உள்ளனர் என்பதை அறிவீர்கள்.

கற்பனை உலகில் தங்கள் முரீதுகளை மிதக்க விடுவதற்காக இவர்கள் கட்டியுள்ள கதைகள் எண்ணிலடங்கா.

 அப்துல் வாஹித் சார்பாக நதியே நீ காய்ந்து விடு  என்று நதியிடம் அப்துல் வாஹித் தன் முரீதுகளை சொல்லச் சொன்னார்களாம். அப்படியே நடந்ததாம்.

(அதே நூல் பக்கம் : 143)

ஹஜ்ரத் அவர்களிடம் பக்கீர்கள் கூட்டம் ஒன்று வந்ததாம். ஹஜ்ரத் துஆ செய்தததும் காசு மழை பொழிந்ததாம். அதற்கு அல்வா வாங்கிச் சாப்பிட்டார்களாம்.

(அதே நூல் பக்கம் 143)

நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கொருமுறை நோன்பு திறப்பது இவர்களின் வழக்கமாக இருந்தது. அதுவும் புல் பூண்டுகளைக் கொண்டு நோன்பு திறப்பார்கள்.

(அதே நூல் பக்கம் 156)

இப்படியெல்லாம் இஸ்லாத்தைத் தகர்த்து தரை மட்டமாக்கும் சம்பவங்கள் ஏராளம்! தன்னைப் போன்ற ஒரு மனிதரை இந்த அளவுக்கு உயர்த்திட இவர்கள் எங்கே கற்றார்கள்?அல்லாஹ்விடமிருந்தா? அல்லாஹ்வின் தூதரிடமிருந்தா? நிச்சயமாக இல்லை.

பண்டாரங்கள், பரதேசிகள் ஆகியோரிடமிருந்து இதைக் கற்று இஸ்லாத்தில் திணித்து விட்டனர். பிறர், இஸ்லாத்திற்கு வருவதற்கு தடைக் கற்களை ஏற்படுத்தி விட்டனர். இவர்கள் கப்ரு வணக்கத்தை ஏற்படுத்தியவர்களை விட மோசமானவர்கள். அல்லது அதற்குச் சற்றும் குறையாதவர்கள்.

மிகவும் உயர்வானது என மதிக்கப்படும் தரீக்காவின் நிலை இது. இதே தரீக்காவில் இன்னும் நவீன கோட்பாடுகள் பல உள்ளன.

காலில் விழச் சொல்லும் ஷெய்குகள்

இசையில் மயங்கும் ஷெய்குகள்

தொழுகை போன்ற வணக்கங்கள் தேவையில்லை எனக் கூறும் ஷெய்குகள்

என்றெல்லாம் பல பித்தலாட்டக்காரர்கள் உள்ளனர்.

ஒழுங்கான இஸ்லாமிய ஆட்சி நடந்தால் இவர்களெல்லாம் மரண தண்டனைக்கு உரியவர்கள்.

திருக்குர்ஆன் விரிவுரையாளர்களில் அனைத்து தரப்பினாலும் ஏற்கப்பட்ட ஹிஜ்ரி 971ல் மரணமடைந்த இமாம் குர்துபீ (முஹம்மத் பின் அஹ்மத் அல் அன்ஸாரி) அவர்கள் தமது அல் ஜாமிவுல் அஹ்காமில் குர்ஆன்  எனும் திருமறை விரிவுரை நூலில் குறிப்பிடுவதை இங்கே எடுத்துக் காட்டுவது பொருத்தமாக இருக்கும்.

சூஃபியாக்களின் கொள்கை முட்டாள் தனமானதும், வழிகேடும் ஆகும். இஸ்லாம் என்பது அல்லாஹ்வின் வேதத்தையும், அவன் தூதருடைய நடைமுறையையும் தவிர வேறில்லை. நடனமாடுவது, இறைக் காதல் என்பதெல்லாம் ஸாமிரி என்பவன் உருவாக்கியதாகும். இஸ்லாமிய ஆட்சியாளர்கள், இவர்கள் பள்ளிவாசலுக்கு வருவதைத் தடுத்து நிறுத்துவது அவசியமாகும். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புகின்ற எவரும் இவர்களின் அவைக்கு வருகை தரக் கூடாது. இவர்களின் தவறுக்கு துணை நிற்கலாகாது. இது தான் இமாம் மாலிக், இமாம் அபூஹனீபா, இமாம் ஷாபீ, இமாம் அஹ்மத் பின் ஹம்பல் மற்றும் முஸ்லிம் அறிஞர்களின் முடிவாகும் என அபூபக்கர் தர்தூஷி அவர்கள் சூபியாக்கள் பற்றிய கேள்விக்கு விடையளித்தார்கள்.

(பார்க்க தாஹா அத்தியாயம் 92 வது வசனத்தின் விரிவுரை)

இந்த வழிகெட்ட சூபியாக்கள் நான்கு மத்ஹபுகளுக்கும் கூட அப்பாற்பட்டவர்கள் என்பதற்கு குர்துபி அவர்களின் இந்தக் குறிப்பு சான்றாக அமைந்துள்ளது.

காலில் விழலாமா?

ஆன்மீகத் தலைவர்களின் கால்களில் விழுந்து கும்பிடுவது, அவர்களின் கால்களைக் கழுவி,கழுவப்பட்ட தண்ணீரை பக்தியுடன் அருந்துவது என்றெல்லாம் ஆன்மீகத் தலைவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டு வருகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வாழ் நாளில் ஒருக்காலும் தமது கால்களில் விழுந்து மக்கள் கும்பிடுவதை விரும்பவில்லை. அறியாத சிலர் அவ்வாறு செய்ய முயன்ற போது கடுமையாக அதைத் தடுக்காமலும் இருந்ததில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியைப் பாருங்கள்!

நான் ஹியரா என்னும் நகருக்குச் சென்றேன். அங்குள்ளவர்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிந்து கும்பிடுவதைப் பார்த்தேன்.  இவ்வாறு சிரம் பணிவதற்கு நபிகள் நாயகமே அதிகத் தகுதியுடையவர்கள்  என்று (எனக்குள்) கூறிக் கொண்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து  நான் ஹியரா என்னும் ஊருக்குச் சென்றேன். மக்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிவதைக் கண்டேன். நாங்கள் சிரம் பணிந்திட நீங்களே அதிகம் தகுதியுடையவர்  என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  (எனது மரணத்திற்குப் பின்) எனது அடக்கத் தலத்தைக் கடந்து செல்ல நேர்ந்தால் அதற்கும் சிரம் பணிவீரோ?  எனக் கேட்டார்கள்.  மாட்டேன்  என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  ஆம்; அவ்வாறு செய்யக் கூடாது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் சிரம் பணியலாம் என்றிருந்தால் கணவனுக்காக மனைவியை அவ்வாறு செய்யச் சொல்யிருப்பேன்  என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: கைஸ் பின் ஸஅத் (ரலி)

நூல்: அபூதாவூத் 1828

தமது காலில் விழுவதற்கு அனுமதி கேட்கப்பட்ட போது  எந்த மனிதரும் எந்த மனிதரின் காலும் விழக் கூடாது  என்று பொதுவான விதியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காரணம் காட்டுகிறார்கள்.

காலில் விழுபவரும், விழப்படுபவரும் இருவருமே மனிதர்கள் தான் என்று கூறி சிரம் பணிதல் கடவுளுக்கு மட்டுமே உரியது எனக் கூறுகிறார்கள்.

உலகம் முழுவதும் கணவர் காலில் மனைவியர் விழுவது அன்றைக்கு வழக்கமாக இருந்தது. அதையே நான் அனுமதிக்காத போது என் காலில் எப்படி விழலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

உங்கள் கால்களில் நாங்கள் விழுகிறோமே  என்று மக்கள் கேட்கும் போது தமது மரணத்திற்குப் பிறகு தனது அடக்கத்தலத்தில் விழுந்து பணிவார்களோ என்று அஞ்சி அதையும் தடுக்கிறார்கள்.  எனது மரணத்திற்குப் பின் எனது அடக்கத்தலத்தில் கும்பிடாதீர்கள்  என்று வாழும் போதே எச்சரித்துச் சென்றனர். எனவே தமது கால் விழுமாறு மக்களுக்கு வழி காட்டுவோர் கயவர்களாவர்.

எழுந்து நின்று மரியாதை செய்தல்

வயதில் பெரியவர்,  ஆசிரியர்,  தலைவர்கள்,  முதலாளிகள்,  நிர்வாகிகள், மேலதிகாரிகள் போன்றோருக்காக மற்றவர்கள் எழுந்து நின்று மரியாதை செய்வதை உலகமெங்கும் காண்கிறோம்.

மேல் நிலையில் உள்ளவர்கள் இந்த மரியாதையை உளமாற விரும்புவதையும் நாம் காண்கிறோம். ஆனால் இஸ்லாத்தில் இதற்கு அனுமதி இல்லை.

எந்த மனிதரும் எந்த மனிதருக்காகவும் மரியாதை செய்யும் விதமாக எழுந்து நிற்கக் கூடாது என்று நபிகள் நாயகம் கட்டளை பிறப்பித்தார்கள்.

நபிகள் நாயகத்துக்குப் பின் முஸ்லிம் சாம்ராஜ்யத்தின் ஐந்தாவது அதிபராகத் திகழ்ந்தவர் முஆவியா (ரலி). அவர் வெளியே வந்த போது அவரைக் கண்ட அப்துல்லாஹ் பின் ஸுபைர் அவர்களும், இப்னு சஃப்வான் அவர்களும் எழுந்து நின்றனர். உடனே முஆவியா (ரலி) அவர்கள்  அமருங்கள்  என்றனர்.  தனக்காக மக்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று யார் விரும்புகிறாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக் கொள்கிறார்  என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன் என்றும் முஆவியா (ரலி) கூறினார்கள்.

நூல்கள்: திர்மிதீ 2769 அபூதாவூத் 4552

மன்னருக்காகக் கூட மக்கள் எழக் கூடாது. அவ்வாறு எழ வேண்டும் என்று எந்த முஸ்லிமும் எதிர்பார்க்கக் கூடாது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக அறிவித்துச் சென்றதை இந்த வரலாற்றிருந்து நாம் அறிகிறோம்.

உலகத்தில் நபிகள் நாயகத்தை விட எங்களுக்கு விருப்பமான ஒருவரும் இருந்ததில்லை. ஆயினும் அவர்கள் எங்களை நோக்கி வரும் போது நாங்கள் அவர்களுக்காக எழ மாட்டோம். இதை அவர்கள் கடுமையாக வெறுப்பார்கள் என்பதே இதற்குக் காரணம்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்கள்: அஹ்மத் 12068, 11895 திர்மிதீ 2678

தமக்காக மக்கள் எழக் கூடாது என்பதை எந்த அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) வெறுத்தார்கள் என்பதற்கு பின்வரும் நிகழ்ச்சி சான்றாகவுள்ளது.

ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) நோய் வாய்ப்பட்டார்கள். அப்போது அவர்கள் உட்கார்ந்த நிலையில் தொழுகை நடத்தினார்கள். நாங்கள் அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதோம். அவர்கள் திரும்பிப் பார்த்த போது நாங்கள் நின்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். சைகை மூலம் எங்களை உட்காரச் சொன்னார்கள். நாங்கள் உட்கார்ந்த நிலையில் அவர்களைப் பின்பற்றித் தொழுதோம். தொழுகையை முடித்தவுடன்  பாரசீக,ரோமாபுரி மன்னர்கள் அமர்ந்திருக்க மக்கள் நிற்பார்களே! அது போன்ற செயலைச் செய்ய முற்பட்டு விட்டீர்களே! இனி மேல் அவ்வாறு செய்யாதீர்கள். உங்கள் தலைவர்களைப் பின்பற்றித் தொழுங்கள்! அவர்கள் நின்று தொழுகை நடத்தினால் நீங்களும் நின்று தொழுங்கள்! அவர்கள் உட்கார்ந்து தொழுகை நடத்தினால் நீங்களும் உட்கார்ந்து தொழுங்கள்  என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 701

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுத போது மக்களும் உட்கார்ந்து தொழுததாக புகாரி 689, 732, 733, 805, 1114, 688 ஆகிய ஹதீஸ்களிலும் காணலாம். யாருக்கேனும் நிற்க இயலாத அளவுக்கு உடல் உபாதை ஏற்பட்டால் அவர் உட்கார்ந்து தொழ அனுமதி உண்டு.

அந்த அடிப்படையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுவித்தார்கள். ஆனால் பின்னால் தொழுதவர்களுக்கு எந்த உபாதையும் இல்லாததால் அவர்கள் நின்று தொழுதார்கள். அவர்கள் நபிகள் நாயகத்துக்கு மரியாதை செய்வதற்காக நிற்கவில்லை.

ஆனாலும் முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அமர்ந்திருக்க பின்னால் மற்றவர்கள் நிற்பதைப் பார்க்கும் போது நபிகள் நாயகத்தின் முன்னே யாரும் அமரக் கூடாது என்பதற்காக நிற்பது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. ஏனைய நாட்டு மன்னர்களுக்கு முன் மக்கள் நிற்பது போல் இது தோற்றமளிக்கின்றது. அந்த வாடை கூட தம் மீது வீசக் கூடாது என்பதற்காக அனைவரையும் அமர்ந்து தொழுமாறு நபிகள் நாயகம் ஆணையிடுகிறார்கள்.

இந்த இடத்தில் ஒரு விஷயத்தைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

வரவேற்பதற்காகவும், அன்பை வெளிப்படுத்துவதற்காகவும் ஒருவருக்காக மற்றவர் எழலாம். மரியாதைக்காகத் தான் எழக் கூடாது.

பெற்ற மகள் தம்மைத் தேடி வந்த போது வாசல் வரை சென்று நபிகள் நாயகம் (ஸல்) வரவேற்றுள்ளனர்.

(திர்மிதீ 3807)

நம் வீட்டுக்கு ஒருவர் வரும் போது நாம் எழலாம். அது போல் அவர் வீட்டுக்கு நாம் போகும் போது அவர் எழ வேண்டும். இதற்குப் பெயர் தான் வரவேற்பு.

ஒருவர் நம்மிடம் வரும் போது நாம் எழுந்து வரவேற்கிறோம். ஆனால் அவரிடம் நாம் சென்றால் அவர் எழுந்து வரவேற்பதில்லை என்றால் மரியாதை நிமித்தமாகவே அவருக்கு நாம் எழுந்துள்ளோம் என்பது பொருள். இது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. எழுந்து நிற்பது இரு தரப்புக்கும் பொதுவாக இருந்தால் மட்டுமே அது வரவேற்பில் அடங்கும்.

தரீக்காவின் திக்ருகள்

சபையில் வட்டமாக அமர்ந்து

லாயிலாஹ இல்லல்லாஹ் 100 தடவை

பின்னர் எழுந்து நின்று ஒருவருக்கொருவர் கைகளைக் கோர்த்துக் கொண்டு அல்லாஹ் என்று 100 தடவை

அஹ்  என்று 100 தடவை

கூறுகிறார்கள்.

ஒவ்வொரு கட்டத்திலும் வெவ்வேறு பாடல்கள் பாடுகிறார்கள். ஒவ்வொருவரும் ஆடுவதால் கழுத்து, வயிறு, தோள்பட்டை ஆகியவை சுருங்கி சுருங்கி விரிகின்றன. இதை நடத்தி வைக்க ஒருவர் தமது உள்ளங்கைகளைத் தரையை நோக்கி வைத்து கைகளை வேகமாக அசைத்து திக்ருக்கு வேகமூட்டுகிறார். திக்ரு முடிந்ததும் சபையில் இருந்த அனைவரும் அவருடைய கைகளை முத்தமிடுவதற்காக முண்டியடித்துக் கொண்டு வருகின்றனர். இதில் காணப்படும் நிகழ்ச்சிகள் அனைத்தும் நபிவழியா? இந்தக் கூத்துக்கள் திருக்குர்ஆனுக்கும், நபிவழிக்கும் முரணானவை. ஷாதுலியா தரீக்காவின் திக்ரு  என்று சில பகுதிகளில் நடத்தப்படும் இந்த திக்ரு பற்றி விரிவாக நாம் அலச வேண்டும்.

உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்ல் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்!

(அல்குர்ஆன் 7:205)

பணிவோடு தான் திக்ரு செய்ய வேண்டும் என்று இவ்வசனம் கட்டளையிடுகிறது. இந்தக் கட்டளைக்கு மாற்றமாக ஆடிக் கொண்டும், பாடிக் கொண்டும், கைகால்களை உதறிக் கொண்டும் டான்ஸ் ஆடுகின்றனர். இதில் கடுகளவாவது பணிவு இருக்கிறதா என்று யோசியுங்கள்.

மனதிற்குள்ளும், உரத்த சப்தமின்றியும் திக்ரு செய்யுமாறு இவ்வசனத்தில் இறைவன் கட்டளையிடுகிறான்.

இந்த திக்ரோ பகிரங்கமாகவும், பயங்கர சப்தத்துடனும் நடத்தப்படுகின்றது. அல்லாஹ்வின் பள்ளியில் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாற்றமாக அல்லாஹ்வை திக்ரு செய்கிறார்கள். இது இறைவனுக்கு ஆத்திரமூட்டுமா? அன்பை ஏற்படுத்துமா?  என்று சிந்தித்துப் பாருங்கள்!

இறைவனை திக்ரு செய்கிறோம் என்ற பெயரில் மனிதர்கள் இயற்றிய பாடல்களைப் பக்திப் பரவசத்துடன் மெய் மறந்து பாடுகின்றனர். மனிதனின் வார்த்தைகளை வணக்கமாகக் கருதுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

இறைவனுக்கென்று அழகிய திருநாமங்கள் உள்ளன. அந்தத் திருநாமங்களைக் கூறியே இறைவனை அழைக்க வேண்டும்; திக்ரு செய்ய வேண்டும்.

அல்லாஹ் என்று அழையுங்கள்! அல்லது ரஹ்மான் என்று அழையுங்கள்! நீங்கள் எப்படி அழைத்த போதும் அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன என்று கூறுவீராக! உமது பிரார்த்தனையைச் சப்தமிட்டும் செய்யாதீர்! மெதுவாகவும் செய்யாதீர்! இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட வழியைத் தேடுவீராக!

(அல்குர்ஆன் 17:110)

அல்லாஹ்வுக்குரிய அழகிய திருநாமங்களில் அஹ்  என்றொரு நாமம் இருக்கிறதா?நிச்சயமாக இல்லை. அஹ் என்பது அல்லாஹ்வின் திருநாமம் இல்லை என்றால் இவர்கள் யாரை திக்ரு செய்கிறார்கள்? சம்மந்தப் பட்டவர்களிடம் இது பற்றிக் கேட்டால் அவர்கள் கூறுகின்ற விளக்கம் என்ன தெரியுமா?

அல்லாஹ் என்ற திருநாமத்தில் முதல் எழுத்தையும், கடைசி எழுத்தையும் சேர்த்து சுருக்கமாக அஹ்  என்று கூறுகிறார்களாம். இப்படி அவர்கள் விளக்கம் தருகிறார்கள். அல்லாஹ்வின் பெயரை இவ்வாறு திரிக்க அனுமதி இருக்கிறதா?

அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றின் மூலமே அவனிடம் பிரார்த்தியுங்கள்! அவனது பெயர்களில் திரித்துக் கூறுவோரை விட்டு விடுங்கள்! அவர்கள் செய்து வந்ததற்காக அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

(அல்குர்ஆன் 7:180)

அல்லாஹ்  என்பதை அஹ்  என்று திரித்துக் கூறும் இவர்களைத் தன்னிடம் விட்டு விடுமாறும் அவர்கள் தண்டனை வழங்கப்படுவார்கள் என்றும் இங்கே இறைவன் எச்சரிக்கிறான்.

இந்தக் கடுமையான எச்சரிக்கையை அலட்சியம் செய்து விட்டு, இறைவனின் திருநாமத்தில் விளையாடுவது திக்ராகுமா? என்று சிந்தியுங்கள்!

அப்துல் காதிர் என்று பெயரிடப்பட்ட ஒருவர் அர்  என்று அழைக்கப்படுவதை ஏற்றுக் கொள்வதில்லை. இப்ராஹீம் என்று பெயரிட்டவர் இம்  என்று அழைக்கப்படும் போது ஆத்திரம் கொள்கிறார்.

சாதாரண மனிதர்களே இவ்வாறு இருக்கும் போது யாவற்றையும் படைத்த கண்ணியத்திற்குரிய அல்லாஹ் இதை எப்படி ஏற்றுக் கொள்வான்? இந்த திக்ரு கண்டிப்பாக ஒழிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இதற்கும், மார்க்கத்திற்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.

மேலும் அந்த ஹல்காவில் (சபையில்) பாடப்படும் பாடல்கள் இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்க்கும் வகையிலும், இறைவனைக் கேலி செய்யும் வகையிலும் அமைந்துள்ளன.

ஹா! ஹா! ஹா! என்று சினிமா வில்லன்கள் சிரிப்பது போன்று அர்த்தமில்லாத உளறல்களை திக்ரு என்று பாடுகின்றனர்.

 ஹாவா உலுவ்வன் வஹா ஹாஹா

ஹுபீஹி இலாஹ பாஹா பஹாஹுமன்

முதாஹுஸி ஹுதஹி ஹா ஹா ஹா.

எந்த அர்த்தமும் இல்லாது ஹாஹாஹீ ஹு ஹு என்று உளறுவது தான் இறைவனை திக்ரு செய்யும் முறையா?

என் தலைவா! இந்த ஹல்காவில் உள்ளவர்களின் பக்கம் உங்கள் பார்வையை வீசுங்கள்! அது கஷ்டத்தையும், சிரமத்தையும் அகற்றி விடும்.

என் தலைவா! உங்களுடன் எனக்குள்ள உறவு காரணமாக எனக்கு வாரி வழங்குங்கள்!

என்றெல்லாம் பாடப்படுகிறது.

மவ்லானா மவ்லானா என்ற பாடலிலும் பாஸி என்பவரைக் கடவுள் நிலையில் வைத்து அவரிடம் வேண்டுதல் செய்யப்படுகிறது.

அல்லாஹ்வை திக்ரு செய்கிறோம் என்ற பெயரில் பாஸி என்பவரை அல்லாஹ்வாக்கும் யூதர்களின் சதித் திட்டம் இதிலிருந்து தெரிகின்றது.

இந்த பாஸி என்பவரின் உளறல்களும் பாடப்படுகின்றன.

அர்ஷ், குர்ஸீ மற்றும் ஸுரைய்யா என்னும் விண்மீனுக்கு மேலே உள்ளவற்றையும் நான் கண்டேன். அவை எனது ஆணைக்கு அடிபணிகின்றன.

தாகத்துடன் வருபவனுக்கு நானே புகட்டுகிறேன். என்னை அழைப்பவை இரட்சிக்கிறேன். அனைத்து விஷயங்களிலும் பரிந்துரை செய்கிறேன்.

திக்கற்றவனே! நீ தாகத்துடனிருந்தால் என்னை பாஸி என்று அழை! விரைந்து வருகிறேன்.

இவை யாவும் பாஸி என்பவரின் உளறல்கள். இறைவனை திக்ரு செய்கிறோம் என்று எண்ணிக் கொண்டு இந்த உளறலைத் தான் பாடுகின்றனர்.

அல்லாஹ்வின் மார்க்கத்தைக் கிண்டல் செய்யும் பாடல்களும் இந்த ஹல்காவில் பாடப்படுகின்றன.

உன்னை அனைவரும் நரகத்தை அஞ்சி வணங்குகிறார்கள். மறுமை வெற்றியைப் பெரும் பாக்கியமாகக் கருதுகின்றனர். சொர்க்கத்தில் குடியிருக்கவும் ஸல்ஸபீல் எனும் பானத்தை அருந்தவும் விரும்புகின்றனர். எனக்கோ, சொர்க்கம், நரகம் பற்றி அக்கறையில்லை. என் நேசத்திற்கு எந்தப் பிரதிபலனையும் நான் வேண்ட மாட்டேன்.

சொர்க்கத்தை வேண்டுமாறும், நரகத்திற்கு அஞ்சுமாறும் அல்லாஹ் கட்டளையிட்டிருப்பதைக் கிண்டல் செய்யும் திமிர் பிடித்த இந்த வார்த்தைகளைத் தான் திக்ரு என்று பாடுகின்றனர்.

முஹம்மதை நேசிக்கும் எவரும் தூங்கக் கூடாது என்ற இந்த உளறலும் இந்தப் பாடல்களில் உள்ளது.

இந்தப் பாடல்களில் தமாஷுக்கும் பஞ்சமில்லை.

என் கையைப் பிடித்து என்னை விரும்பக் கூடியவர்களிடம் என்னை விற்று விடுங்கள்! என் கையைப் பிடித்து கடை வீதிக்குக் கொண்டு போய் காதலர்களிடம் என்னை விற்று விடுங்கள்

இந்த ஹல்காவில் இந்தப் பாடல் வரிகளைப் பாடும் போது அவர்களைக் கட்டாயமாக இழுத்துச் சென்று கடை வீதியில் விற்று விடுங்கள்!

இப்போது சொல்லுங்கள்! இந்த தமாஷும், வில்லன் சிரிப்பும், உளறல்களும் மனிதனைத் தெய்வமாக்கும் போக்கும் அதையொட்டி நடக்கும் கூத்தும் இறைவனை திக்ரு செய்வதாகுமா? பார்த்தாலே பளிச்சென்று தெரியக் கூடிய இந்தக் கோமாளித் தனங்கள் பள்ளிவாயிலில் அரங்கேற்றப்படுவது தான் கொடுமையிலும் கொடுமை.

தஸ்பீஹ் மணி

பிற மதத்தவர்கள் வைத்திருக்கும் ஜெபமாலையிலிருந்து காப்பியடிக்கப்பட்டதே தஸ்பீஹ் மணி.

அல்லாஹ்வின் தூதரும், அவர்களின் அன்புத் தோழர்களும் இந்த ஜெபமாலையை வைத்துக் கொண்டிருக்கவில்லை.

யார் பிற சமயக் கலாச்சாரத்திற்கேற்ப நடக்கின்றாரோ அவர் அவர்களைச் சேர்ந்தவரே  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல்கள் : அபூதாவூத் 3512, அஹ்மத் 4868

எனவே பிற சமயத்தவரிடமிருந்து காப்பியடிக்கப்பட்ட இந்த தஸ்பீஹ் மணி தவிர்க்கப்பட வேண்டியதாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கரத்தால் தஸ்பீஹ் எண்ணுவதை நான் பார்த்திருக்கிறேன்

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி)

நூல்கள் : திர்மிதீ 3332, 3408, நஸயி 1331,

உங்கள் விரல்களால் எண்ணுங்கள்! அந்த விரல்களும் (மறுமையில்) விசாரிக்கப்படும்  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : புஸ்ரா (ரலி)

நூல்கள் : திர்மிதீ 3507, அபூதாவூத் 1283

தஸ்பீஹ் மணியை நியாயப்படுத்துவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் வருமாறு:

நானும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் ஒரு பெண்ணிடம் சென்றோம். அவருக்கு முன்னால் சிறு கற்களோ, பேரீச்சங்கொட்டைகளோ இருந்தன. அவற்றைக் கொண்டு அப்பெண் தஸ்பீஹ் செய்து கொண்டிருந்தார்

அறிவிப்பவர் : ஸஃது பின் அபீ வக்காஸ் (ரலி)

நூல்கள் : திர்மிதீ 3491, அபூதாவூத் 1282

இந்த ஹதீஸின் அடிப்படையில் தஸ்பீஹ் மணி வைத்துக் கொள்ளலாம் என்கின்றனர்.

ஆனால் இந்த ஹதீஸ் நம்பகமானது அல்ல. ஏனெனில் இதன் மூன்றாவது அறிவிப்பாளர் குஸைமா என்பவர் யாரென்று அறியப்படாதவர். இதனை தஹபீ அவர்கள் மீஸானிலும்,இப்னு ஹஜர் அவர்கள் தக்ரீபிலும், குறிப்பிடுகிறார்கள்.

மேலும் இதன் நான்காவது அறிவிப்பாளர் ஸயீத் பின் அபீ ஹிலால் என்பவர் நம்பகமானவராக இருந்தவர். எனினும் கடைசிக் காலத்தில் நினைவுத் தடுமாற்றம் கொண்டவராகி விட்டார் என்று இமாம் அஹ்மத் பின் ஹம்பல் கூறுகின்றார். எனவே இந்த ஹதீஸ் ஏற்கப்பட முடியாததாகும்.

தஸ்பீஹ் மணியை நியாயப்படுத்துவோர் எடுத்து வைக்கும் மற்றொரு ஆதாரம்:

 நான் தஸ்பீஹ் செய்வதற்கு நான்காயிரம் பேரீச்சம் பழக் கொட்டைகளைக் குவித்து வைத்திருந்த போது என்னிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது அவர்கள்  நீ செய்து கொண்டிருக்கும் தஸ்பீஹை விடச் சிறந்ததை நான் உனக்குக் கூறட்டுமா?  கேட்டார்கள்.  எனக்குக் கூறுங்கள்  நான் கூறினேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  ஸுப்ஹானல்லாஹி அதத கல்கிஹி என்று கூறு!  என்றார்கள்.

அறிவிப்பவர் : சஃபிய்யா (ரலி)

நூல் : திர்மிதீ 3477

இந்த ஹதீஸும் நம்பகமானது அல்ல. ஏனெனில் இதன் மூன்றாவது அறிவிப்பாளராகிய ஹாஷிம் பின் ஸஃது என்பவர் நம்பகமானவர் அல்ல என்று தஹபீ அவர்கள் மீஸானி லும், இப்னு ஹஜர் அவர்கள் தக்ரீபிலும் கூறுகின்றனர்.

மேலும் இதன் இரண்டாம் அறிவிப்பாளர் கினானா  என்பவர் யாரென்றே தெரியாதவர்.

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த மார்க்கத்தில் எப்போது பார்த்தாலும் தஸ்பீஹ் செய்து கொண்டிருக்க வேண்டும் எனக் கூறப்படவில்லை. ஒரு முஸ்லிமுக்கு ஏராளமான கடமைகள் உள்ளன.

மனைவி, மக்களைக் காக்கும் கடமை, பிரச்சாரம் செய்யும் கடமை போன்ற கடமைகளைச் செய்ய வேண்டியவன் பல்லாயிரக் கணக்கில் தஸ்பீஹ் செய்து கொண்டிருந்தால் அந்தக் கடமைகளையெல்லாம் அவனால் செய்ய முடியாமல் போகும்.

நபிகள் நாயகம் அவர்கள் கற்றுத் தந்த திக்ருகளில் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் கூறப்படும் அதிக பட்ச எண்ணிக்கை 100 க்கு மேல் இல்லை. இதை எண்ணுவதற்கு கைவிரல்களே போதுமானதாகும்.

தஸ்பீஹ் மணி ஏற்படுத்திய விளைவுகளையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். தாம் எப்போதும் அல்லாஹ்வின் நினைவில் நிலைத்திருப்பதாக தம்பட்டம் அடிக்கும் போக்கை இது ஏற்படுத்தி விட்டது.

தஸ்பீஹ் மணியைக் கையால் உருட்டிக் கொண்டு மற்றவர்களிடம் பேசிக் கொண்டிருப்பவர்களையும் கூட நாம் காண முடிகின்றது.

இன்னும் சிலர் தஸ்பீஹ் மணியை உருட்டும் போது யாரேனும் ஸலாம் கூறினால் அதற்குக் கூட அவர்கள் பதில் சொல்வதில்லை. ஒரு தலை அசைப்புத் தான் ஸலாமுக்குப் பதிலாகக் கிடைக்கும். ஸலாமுக்குப் பதில் கூறுவது கடமை என்பதைக் கூட இவர்களால் உணர முடியவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் இல்லாத இந்த நவீன கண்டு பிடிப்பு அல்லது காப்பியடிப்பு புனிதம் நிறைந்த பொருளாகக் கூட மாறி விட்டது.

நபிகள் நாயகம் அவர்களின் காலத்தில் இது இல்லாததாலும் அது ஏற்படுத்தும் தீய விளைவின் காரணமாகவும், பிறரிடமிருந்து அது காப்பியடிக்கப்பட்டது என்பதாலும் இந்த ஜெபமாலை தவிர்க்கப்பட வேண்டும். இஸ்லாத்திற்கும், இதற்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.

தப்லீக் ஜமாஅத்

முஸ்லிம்களிடம் செல்வாக்குப் பெற்ற இயக்கங்களில் தப்லீக் ஜமாஅத் முதலிடம் வகிக்கின்றது. அந்த ஜமாஅத்தில் நம்மை இணைத்துக் கொள்ளலாமா? அந்த ஜமாஅத்தின் கொள்கை, கோட்பாடுகள் இஸ்லாமிய அடிப்படையில் அமைந்துள்ளனவா?

நாற்பது நாட்கள், ஒரு வருடம் என்று ஊர் ஊராக அழைத்துச் சென்று மக்களைத் தொழுகைக்கு அழைக்கின்றனர். இது சரியா? என்றெல்லாம் பல கேள்விகள் முஸ்லிம்களிடையே நிலவுகின்றன.

எனவே இது பற்றி நாம் விரிவாக ஆராய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

நாற்பது நாட்களுக்கோ, ஒரு வருடத்திற்கோ மார்க்க வேலைகளுக்காகவோ சொந்த வேலைக்காகவோ வெளியூர் செல்வது மார்க்கத்தில் குற்றமாகாது.

மார்க்கத்தை அறிந்து கொள்வதற்காகவும், பிறருக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவும், அறப்போர் செய்வதற்காகவும், ஹலாலான முறையில் பொருளீட்டுவதற்காகவும், இன்ன பிற தேவைகளுக்காகவும் பிரயாணம் மேற்கொள்வதை மார்க்கம் தடுக்கவில்லை;அனுமதிக்கின்றது.

மூஸா (அலை) அவர்கள் சில விஷயங்களை அறிந்து கொள்வதற்காக இறைவனது கட்டளைப்படி ஹில்று (அலை) அவர்களைச் சந்திக்க மேற்கொண்ட பயணம் பற்றி இறைவன் குறிப்பிடுகிறான்.

(திருக்குர்ஆன் 18:60 - 18:82)

ஒரே ஒரு மார்க்கச் சட்டத்தை அறிந்து கொள்வதற்காக மக்காவிலிருந்து மதீனாவுக்குப் பயணம் செய்து வந்த நபித் தோழர்களும் இருந்துள்ளனர்.

புகாரி : 88, 2640

நல்ல காரியங்களுக்காகப் பிரயாணம் மேற்கொள்ளலாம் என்பதற்கு இவை சான்றுகளாக உள்ளன. இது பற்றி இன்னும் ஏராளமான சான்றுகளும் உள்ளன.

எனவே பயணம் செய்வது சரியா? தவறா? என்ற அடிப்படையில் இதனை அணுகுவது சரியில்லை. இந்தப் பயணம் எதற்காக மேற்கொள்ளப்படுகின்றது என்ற அடிப்படையிலேயே இந்த ஜமாஅத் சரியான ஜமாஅத்தா? இல்லையா? என்ற முடிவுக்கு வர முடியும்.

எதற்காக மக்களை அழைக்கிறீர்கள்?  என்று கேட்டால்,  தொழுகையின் பால் மக்களை அழைப்பதற்காகத் தான் ஆள் சேர்க்கிறோம்  என்று கூறுகின்றனர்.

தொழுகை எனும் மிக முக்கியமான கடமையின் பால் மக்களை அவர்கள் அழைக்கின்றனர்; இதற்காக தங்கள் சொந்தப் பணத்தைச் செலவு செய்து பிரயாணம் மேற்கொள்கின்றனர்  என்பது உண்மை தான். * பெருமையும், கர்வமும் கொண்ட பலர்,தப்லீக் ஜமாஅத் மூலம் சாதுவானவர்களாக மாறியுள்ளதை மறுக்க முடியாது.

* பெரும் செல்வந்தர்கள் கூட இந்த ஜமாஅத்தில் செல்லும் போது சமையல் செய்வதற்கும் முன் வருகிறார்கள்.

* தஹஜ்ஜுத், லுஹா போன்ற வணக்கங்களைப் பேணுதலுடன் செய்து வருகின்றனர்.

* சினிமாக்களை விட்டு விடுகின்றனர்.

இவைகளெல்லாம் வரவேற்கத் தக்க மாற்றங்கள் என்பதில் ஐயம் இருக்க முடியாது. அந்த ஜமாஅத்தில் உள்ள இது போன்ற நல்ல அம்சங்களை மறுப்பவர்கள் உண்மையை விரும்பக் கூடியவர்களாக இருக்க முடியாது.

அதற்காக ஒட்டு மொத்தமாக தப்லீக் ஜமாஅத்தை ஆதரித்து விட முடியாது.

மார்க்கத்திற்கு விரோதமான போக்குகள் உள்ளனவா என்பதையும் நாம் ஆராயக் கடமைப்பட்டுள்ளோம்.

ஊர் ஊராக அழைத்துச் செல்லப்படும் மக்களுக்குப் போதிக்கப்படும் விஷயத்தை எடுத்துக் கொள்வோம். அவர்களின் தஃலீம் வகுப்புக்களில் திருக்குர்ஆன் விரிவுரையோ, அதன் தமிழாக்கமோ, நபிமொழிகளின் ஆதாரப்பூர்வமான தமிழாக்கமோ படிக்கப்படுவதில்லை.

படிக்கப்படுவது இல்லை என்பது மட்டுமில்லை. படிக்கப்படுவதற்கு பகிரங்கத் தடை விதிக்கப்படுகின்றது. திருக்குர்ஆனையும். நபிகள் நாயகம் (ஸல்) வழியையும் படிக்கத் தடை விதிக்கும் கூட்டத்தில் பயணம் செய்யலாமா?

அல்லாஹ்வுடைய வேதத்துக்கும், அவனது தூதருடைய போதனைக்கும் தடை விதித்து விட்டு, இந்த நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மனிதரின் நூல் மட்டுமே படிக்கப்பட வேண்டும் என்ற நடைமுறை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த நூலாசிரியருக்கும், ஹஜ்ரத்ஜீக்கும் உள்ள மாமனார் மருமகன்  உறவு தான் இந்தத் தீர்மானத்திற்குக் காரணம் என்று விபரமறிந்தவர்கள் விமர்சிப்பதில் நியாயம் இருப்பதாகவே நமக்குப் படுகின்றது.

அந்த நூல் தொகுப்பாவது இஸ்லாமிய அடிப்படையில் அமைந்துள்ளதா என்றால் அதுவும் இல்லை. திருக்குர்ஆனுக்கே வேட்டு வைக்கும் சங்கதிகள் அந்த நூல் ஏராளம்! இறைத் தூதரின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளுக்கும் பஞ்சமில்லை! பெரியார்கள் பெயரால் கட்டுக் கதைகள் ஏராளம்! இது போன்ற கதைகளை அறிந்து கொள்வதற்காக பிரயாணம் மேற்கொள்ளலாமா?

தனது வயிற்றுக்காகவும், தன் குடும்பத்தினருக்காகவும் உழைக்குமாறும், குடும்பத்திற்குரிய கடமைகள் ஆற்றுமாறும் இஸ்லாம் போதிக்கின்றது.

கட்டிய மனைவியைக் கவனிக்காமல் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவு முழுவதும் வணக்கத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அப்துல்லாஹ் பின் அம்ர் என்ற தோழரைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேள்விப்பட்டு அவரிடம் சென்றார்கள்.  இவ்வாறு செய்யாதே! நோன்பு வை! வைக்காமலும் இரு! தொழவும் செய்! தூங்கவும் செய்! ஏனெனில் உனது உடம்புக்கு நீ செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன. உனது கண்களுக்கு நீ செய்ய வேண்டிய கடமைகளும் உள்ளன. உன் விருந்தினருக்கு நீ செய்ய வேண்டிய கடமைகளும் உள்ளன  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவுரை கூறினார்கள்.

நூல்: புகாரி 1975, 6134

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸல்மான் (ரலி), அபுத்தர்தா (ரலி) இருவரையும் சகோதரர்களாக ஆக்கினார்கள். ஸல்மான் (ரலி), அபுத்தர்தாவைச் சந்திக்கச் சென்ற போது (அபுத்தர்தாவின் மனைவி) உம்முதர்தாவை அழுக்கடைந்த ஆடை அணிந்திருக்கக் கண்டார். உமக்கு என்ன நேர்ந்தது?  என்று அவரிடம் ஸல்மான் (ரலி) கேட்டார். அதற்கு உம்முதர்தா (ரலி),  உம் சகோதரர் அபுத்தர்தாவுக்கு இவ்வுலகில் எந்தத் தேவையும் இல்லை  என்று விடையளித்தார். (சற்று நேரத்தில்) அபுத்தர்தா வந்து ஸல்மானுக்காக உணவு தயாரித்தார். ஸல்மான் அபுத்தர்தாவிடம், உண்பீராக! என்று கூறினார். அதற்கு அபுத்தர்தா,  நான் நோன்பு வைத்திருக்கிறேன்  என்றார்.  நீர் உண்ணாமல் நான் உண்ண மாட்டேன்  என்று ஸல்மான் கூறியதும் அபுத்தர்தாவும் உண்டார். இரவானதும் அபுத்தர்தா (ரலி) நின்று வணங்கத் தயாரானார். அப்போது ஸல்மான் (ரலி)  உறங்குவீராக!  என்று கூறியதும் உறங்கினார். பின்னர் நின்று வணங்கத் தயாரானார். மீண்டும் ஸல்மான், உறங்குவீராக!  என்றார். இரவின் கடைசி நேரம் வந்ததும் ஸல்மான் (ரலி)  இப்போது எழுவீராக!  என்று கூறினார். இருவரும் தொழுதனர். பிறகு அபுத்தர்தாவிடம்  உம் இறைவனுக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன; உமக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன; உம் குடும்பத்தினருக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன; அவரவருக்குரிய கடமைகளை நிறைவேற்றுவீராக! என்று ஸல்மான் (ரலி) கூறினார். பின்பு அபுத்தர்தா (ரலி), நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இந்த விஷயத்தைக் கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்,  ஸல்மான் உண்மையையே கூறினார்! என்றார்கள்.

அறிவிப்பவர் : அபூஜுஹைபா (ரலி)

நூல் : புகாரி: 1968, 6139

சில்லாவுக்கு அழைக்கும் போது இந்தக் கடமைகள் பின் தள்ளப்படுகின்றன. அல்லாஹ் பார்த்துக் கொள்வான்  என்று கூறி எல்லாக் கடமைகளையும் புறக்கணிக்கச் செய்யும் அளவுக்கு இந்த சில்லா வின் மீது வெறியூட்டப்படுகின்றது. அல்லாஹ் பார்த்துக் கொள்வான்  என்பதற்கு இவர்கள் கொண்டது தான் பொருள் என்றால் குடும்பத்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகளை அவன் நம் மீது சுமத்தியிருப்பானா என்று இவர்கள் சிந்திப்பதில்லை. பல கடமைகளைப் புறக்கணிக்கத் தூண்டும் இந்தப் பிரயாணம் சரி தானா என்பதைச் சிந்தியுங்கள்!

அல்லாஹ் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையிலாவது இவர்கள் உண்மையாளர்களாக இருக்கிறார்களா? இவர்கள் தான் இந்த விஷயத்தில் மிகவும் குறைந்த நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கின்றனர். எந்த இயக்கமும் எந்த நபரும் பயணத்தின் போது பண்ட பாத்திரங்களையும், சட்டி பெட்டிகளையும் தூக்கிக் கொண்டு செல்வதில்லை. ஆனால் இவர்கள் அனைத்து சமையல் சாதனங்களையும் கூடவே எடுத்துச் செல்பவர்களாக உள்ளனர். அதாவது சோத்துக்கு மட்டும் அல்லாஹ் பார்த்துக் கொள்ள மாட்டான் என்பது போல் இவர்களின் நம்பிக்கை அமைந்துள்ளது.

மேலும் இந்த ஜமாஅத்தில் முஸ்லிம்களின் உணர்வுகளும், வீரமும் மழுங்க வைக்கப்படும் அளவுக்கு, மூளைச் சலவை செய்யப்படுகின்றது.

தங்கள் உயிரைத் தியாகம் செய்வதற்காக அறப்போருக்குச் சென்ற நபித் தோழர்களின் வீரமிக்க பயணமும், இது பற்றி ஆர்வமூட்டிய நபிமொழிகளும் சோற்றுப் பொட்டலத்தைத் தூக்கிக் கொண்டு இவர்கள் செல்கின்ற பயணத்தைப் பற்றியது என்று போதிக்கத் துணிந்து விட்டனர்.

தஸ்பீஹ் மணியை உருட்டிக் கொண்டு, முழங்காலுக்குக் கீழ் ஜுப்பாவை அணிந்து கொண்டு பள்ளியின் ஒரு மூலையில் அல்லது ஒரு தூணில் சாய்ந்து விடுவது தான் இஸ்லாம் என்று கற்பிக்கத் தலைப்பட்டு விட்டனர். இஸ்லாத்திற்கு தவறான வடிவத்தை ஏற்படுத்தி முஸ்லிம்களைக் கோழைகளாக ஆக்கும் இந்த ஜமாஅத் எப்படி சரியான ஜமாஅத்தாக இருக்க முடியும்?

ஒரு மனிதனுக்கு அதிகபட்சம் எந்த அளவுக்கு மரியாதை செய்யலாம் என்பதற்கு இஸ்லாம் வரம்பு கட்டியுள்ளது. இந்த வரம்பு மார்க்கத்தின் பெயரால் மீறப்படுகின்றது.

ஷியாக்களில் உள்ள மதத் தலைமை போல் தப்லீக் ஜமாஅத்திலும் ஹஜ்ரத்ஜீ  என்ற பெயரால் மதத் தலைமை உருவாக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் தூதருக்கு, அவர்களின் தோழர்கள் செய்யாத அளவுக்கு ஹஜ்ரத்ஜீ க்கு மரியாதை செய்யப்படுகின்றது.!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ் பயணம் மேற்கொண்ட போது குடி தண்ணீர் விநியோகிக்கப்படும் தண்ணீர்ப் பந்தலுக்கு வந்தார்கள். குடிக்க தண்ணீர் கேட்டார்கள். நபிகள் நாயகத்தின் பெரிய தந்தை அப்பாஸ், தண்ணீர்ப் பந்தன் பொறுப்பாளராக இருந்தார். அவர் தமது இளைய மகன் ஃபழ்லு என்பாரை அழைத்து, வீட்டிற்குச் சென்று உன் தாயாரிடம் நபிகள் நாயகத்துக்காக குடிதண்ணீர் வாங்கி வா என்று கூறினார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  இந்தத் தண்ணீரையே தாருங்கள்  எனக் கேட்டார்கள்.  அல்லாஹ்வின் தூதரே! இதில் மக்கள் தங்கள் கைகளைப் போட்டுள்ளனரே  என்று அப்பாஸ் கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பரவாயில்லை! இதனையே எனக்குக் குடிக்கத் தாருங்கள்  எனக் கேட்டு அந்தத் தண்ணீரைக் குடித்தார்கள். பின்னர் புனிதமான ஸம்ஸம் கிணற்றுக்கு வந்தார்கள். அங்கே சிலர் அந்தக் கிணற்று நீரை மக்களுக்கு வழங்கிக் கொண்டும், அது தொடர்பான பணிகளிலும் ஈடுபட்டிருந்தனர். அவர்களை நோக்கி  இந்தப் பணியைத் தொடர்ந்து செய்யுங்கள்! நீங்கள் சிறப்பான பணியையே செய்கிறீர்கள். நானும் இப்பணியைச் செய்வதால் நீங்கள் எனக்காக ஒதுங்கிக் கொள்வீர்கள் என்ற அச்சம் இல்லாவிட்டால் நானும் கிணற்றில் இறங்கி இந்தத் தோளில் தண்ணீர் சுமந்து மக்களுக்கு விநியோகம் செய்திருப்பேன்  என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 1636

மற்றவர்கள் அருந்துகிற அதே தண்ணீரைத் தமக்கும் தருமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்கின்றார்கள். தமது பெரிய தந்தையின் வீட்டிருந்து நல்ல தண்ணீர் பெற்றுக் குடிப்பது யாராலும் பாரபட்சமாக எடுத்துக் கொள்ளப்படாது என்ற நிலையிலும் மக்கள் எந்தத் தண்ணீரைப் பருகுகிறார்களோ அதையே பருகுவதில் பிடிவாதமாக இருக்கின்றார்கள். பலதரப்பட்டவர்களின் கைகள் இத்தண்ணீரில் பட்டுள்ளது என்று தக்க காரணத்தைக் கூறிய பிறகும் அந்தத் தண்ணீரையே கேட்டுப் பருகுகின்றார்கள்.

தப்லீக் ஜமாஅத்தின் இஜ்திமாக்களில் ஹஜ்ரத்ஜீக்கும் முக்கிய தலைவர்களுக்கும் சிறப்பு உணவு வழங்கப்டுகின்றது.

ஹஜ்ரத்ஜீ என்பவர் மற்றவர்களைப் போன்ற மனிதர் அல்ல என்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. தப்லீக் ஜமாஅத்தின் ஸ்தாபகரின் வாரிசுகள் தான் அந்தப் பதவிக்கு வர முடியும் என்ற நிலை உருவாக்கப்பட்டு விட்டது.

ஒரு முழம் உயரத்திற்கு ஒரு குஷன் மெத்தை

உயரமாக திண்டுகள்

உடலைப் பிடித்து விடுவதற்காக விடலைப் பையன்கள்

இப்படி ராஜ தர்பார் கொடிகட்டிப் பறக்கின்றது. பிற மதங்களின் அவதாரப் புருஷர்கள் போலவும், ஆச்சார்யர்கள் போலவும் இப்பதவியைப் பெற்றவர்கள் மதிக்கப்படும் நிலை உள்ளது.

அவர் வருவதற்கு முன் பராக் சொல்ல எத்தனை பேர்? அவரைத் தொட்டு விட்டாலே பாவங்கள் பறந்து போகும் என்போர் எத்தனை பேர்?

திண்டுக்கல்லில் (1990) நடந்த தப்லீக் ஜமாஅத் மாநாட்டுக்காக போஸ்ட் கார்டுகள்,பள்ளிவாசல் போர்டுகள், ஜும்ஆ பிரசங்கங்கள் மூலம் மக்கள் அழைக்கப்பட்ட போது ஹஜ்ரத்ஜீ யின் துஆவுக்கு வாருங்கள்  என்பதே பிரதானப்படுத்தப்பட்டது. அங்கு பேசப்படும் கருத்துக்களை விட இவரது நல்லாசியே முக்கிய குறிக்கோளாகிப் போனது. இந்த துஆ நடக்கும் நேரத்திற்கு மட்டுமே புறப்படுபவர்களும் உள்ளனர்.

உலகத்தில் வாழுகின்ற - அல்லது இந்தியாவில் வாழுகின்ற முஸ்லிம்களில் இவர் தான் இறைவனுக்கு மிகவும் உவப்பானவர் என்று இவர்களுக்குச் சொல்லித் தந்தவர் யார்?

இவர் துஆ செய்தால் ஏற்றுக் கொள்ளப்படும் என்ற உத்திரவாதத்தை இறைவனிடமிருந்து பெற்றுத் தந்தவர் யார்?

இவரது துஆவுக்கு இருக்கும் அற்புத சக்தியை இவர்கள் எவ்வாறு கண்டுபிடித்தனர்?

இன்னும் அனேகக் குறைபாடுகள்!

* சட்டங்களை ஆலிம்கள் தான் சொல்ல வேண்டும் என்று புரோகிதத்துக்கு வக்காலத்து!

* நன்மையை ஏவி தீமையைத் தடுக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே தீமையைக் கண்டு கொள்ளாத நிலை!

நன்மைகளிலும் ஒன்றிரண்டு நன்மைகளை மட்டுமே சொல்லிவிட்டு மற்ற நன்மைகளை பேசாமல் மவுனம் சாதித்தல்.

இப்படி தப்லீக் ஜமாஅத்தின் தீய செயல்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

குறிப்பு : இல்யாஸ் மவ்லானா அவர்களின் தப்லீக்குக்கும் இன்று மாறியுள்ள தப்லீக்குக்கும் எந்த சம்பந்தமுமில்லை.

ஜின்களை வசப்படுத்த முடியுமா?

ஜின் அத்தியாயத்தை 40 நாட்கள் தொடர்ந்து ஓதினால் ஜின்களை வசப்படுத்தலாம் என்று சில ஆலிம்கள் கூறுகின்றனர்.

ஜின் என்று அத்தியாயம் இருப்பது போல்,  யானை,  எறும்பு,  தேனீ,  சிலந்தி,  மாடு,  மனிதன், பெண்கள் என்றெல்லாம் குர்ஆனில் அத்தியாயங்கள் உள்ளன.

அந்த அத்தியாயங்களை ஓதினால் அவற்றை வசப்படுத்த முடியுமா? ஜின் பற்றிக் கூறப்படுவதால் தான் அந்த அத்தியாயத்திற்கு அப்பெயர் வந்தது. ஜின்னை வசப்படுத்தலாம் என்பதால் அல்ல.

ஜின் என்ற படைப்பு மனிதனைப் போல் அறிவு படைத்ததும், மனிதனை விட பலமிக்கதுமாகும். பகுத்தறிவும், பலமும் கொண்ட ஓர் இனத்தை அதை விட பலத்தில் குறைந்தவர்கள் எப்படி வசப்படுத்த முடியும்?

ஜின் என்ற படைப்பை சுலைமான் நபிக்கு அல்லாஹ் வசப்படுத்திக் கொடுத்திருந்தான். இதை ஓர் சிறப்புத் தகுதியாக அல்லாஹ் கூறுகிறான். இதிலிருந்து மற்ற எவரும் ஜின்களை வசப்படுத்த முடியாது என்பதை அறியலாம்.

ஸுலைமானுக்குக் காற்றை வசப்படுத்தினோம். அதன் புறப்பாடு ஒரு மாதமாகும். அதன் திரும்புதல் ஒரு மாதமாகும். அவருக்காக செம்பு ஊற்றை ஓடச் செய்தோம். தனது இறைவனின் விருப்பப்படி அவரிடம் பணியாற்றும் ஜின்களும் இருந்தனர். அவர்களில் நமது கட்டளையை யாரேனும் புறக்கணித்தால் நரகின் வேதனையை அவருக்கு சுவைக்கச் செய்வோம். அவர் விரும்பிய போர்க் கருவிகளையும், சிற்பங்களையும், தடாகங்களைப் போன்ற கொப்பரைகளையும், நகர்த்த முடியாத பாத்திரங்களையும், அவருக்காக அவை செய்தன.  தாவூதின் குடும்பத்தாரே! நன்றியுடன் செயல்படுங்கள்! எனது அடியார்களில் நன்றியுடையோர் குறைவாகவே உள்ளனர்  என்று கூறினோம்.

திருக்குர்ஆன் 34:12,13

சுலைமான் நபிக்குக் கட்டுப்படா விட்டால் நரகில் தள்ளுவேன் என்று பிரத்தியேகமாக இறைவன் கட்டளையிட்டதால் தான் ஜின்கள் சுலைமான் நபிக்குக் வசப்பட்டன. மற்றவர்களுக்குக் கட்டுப்படுமாறு இறைவன் கட்டளை எதுவும் ஜின்களுக்குப் பிறப்பிக்கவில்லை.

எனவே இது சுலைமான் நபிக்கு இறைவன் வழங்கிய சிறப்புத் தகுதியாகும். பொதுவாக எந்த மனிதனும் ஜின்களை ஒருக்காலும் வசப்படுத்த முடியாது.

ஜின்களை வசப்படுத்தி இருப்பதாக யாராவது உங்கள் காதுகளில் பூச்சுற்றினால் நம்பி ஏமாற வேண்டாம்.

ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்குச் செல்ல விமானத்தைப் பயன்படுத்தாமல் ஜின்களைப் பயன்படுத்தி இதை நிரூபித்துக் காட்டச் சொல்லுங்கள். ஜின்களை வசப்படுத்தி வைத்திருப்பவர்கள் ஜின்களைப் பயன்படுத்தி மாளிகை ஒன்றை எழுப்பிக் காட்டட்டும். இப்படியெல்லாம் ஜின்கள் செய்தததாக திருக்குர்ஆன் கூறுகிறது.

பிரமுகர்களே! அவர்கள் கட்டுப்பட்டு என்னிடம் வருவதற்கு முன்னால் அவளது சிம்மாசனத்தை என்னிடம் கொண்டு வருபவர் உங்களில் யார்? என்று (ஸுலைமான்) கேட்டார்.  உங்கள் இடத்திருந்து நீங்கள் எழுவதற்கு முன்னால் அதை உங்களிடம் நான் கொண்டு வருகிறேன். நான் நம்பிக்கைக்குரியவன்; வலிமையுள்ளவன்  என்று இப்ரீத் என்ற ஜின் கூறியது.

திருக்குர்ஆன் 27:38,39

வானத்தைத் தீண்டினோம். அது கடுமையான பாதுகாப்பாலும், தீப்பந்தங்களாலும் நிரப்பப்பட்டுள்ளதைக் கண்டோம். (ஒட்டுக்) கேட்பதற்காக அங்கே பல இடங்களில் அமர்வோராக இருந்தோம். இப்போது யார் (ஒட்டுக்) கேட்கிறாரோ அவர் காத்திருக்கும் தீப்பந்தத்தை தனக்கு (எதிராக) காண்பார்.

திருக்குர்ஆன் 72:8,9

எங்கோ இருக்கின்ற சிம்மாசனத்தை சில வினாடிகளில் கொண்டு வந்து சேர்க்கும் அளவுக்கு ஜின்களின் ஆற்றல் உள்ளது. எவ்வித சாதனங்களையும் பயன்படுத்தாமல் வானுலகத்தின் எல்லை வரை சென்று வரும் அளவுக்கு ஜின்களுக்கு ஆற்றல் உண்டு. இதை மேற்கூறப்பட்ட இரண்டு வசனங்களிலிருந்து அறியலாம்.

ஜின்களை வசப்படுத்தியுள்ளதாகக் கூறுவோர் உண்மையாளர்கள் என்றால் இது போன்ற சாகசங்களைச் செய்து காட்ட வேண்டும்.

கோலார் தங்க வயலில் நுழைந்து, பத்து கிலோ தங்கத்தை எடுத்து வா  என்று ஜின்களுக்குக் கட்டளையிட்டு, அதைச் செய்து காட்டட்டும்.

மனித குலத்தில் முதலில் ஒழித்துக் கட்டப்பட வேண்டிய ஜார்ஜ் புஷ்ஷைப் பிடித்துக் கொண்டு வருமாறு ஜின்களுக்குக் கட்டளையிட்டு உலகத்திற்கு நன்மை செய்து காட்டட்டும்.

ஜின்களை வசப்படுத்தியிருந்தால் இவற்றை மிகச் சாதாரணமாகச் செய்து காட்ட இயலும்.

இந்தப் பித்தலாட்டக்காரர்கள் இதில் எந்த ஒன்றையும் செய்ய முடியாது.

இவர்களை இழுத்துப் போட்டு உதைக்கும் போது அதைத் தங்களிடம் உள்ள ஜின்களை விட்டுத் தடுக்க முடியாது என்பது தான் உண்மை.

உங்களிடம் ஒரு வேளைச் சோற்றுக்கும், ஒண்ணே கால் ரூபாய்க்கும் கையேந்தி நிற்பவர்களிடம் ஜின்கள் வசப்பட்டிருப்பதாக நம்பி ஈமானையும், அறிவையும் இழந்து விட வேண்டாம்.

சகுனம் பார்த்தல்

நாள், நட்சத்திரம் பார்த்தல், சகுணம் பார்த்தல் ஆகியவற்றை இஸ்லாம் முழுமையாகத் தடை செய்கின்றது.

நாட்களிலோ, நேரங்களிலோ முற்றிலும் நன்மை பயக்கக் கூடியதும் கிடையாது. முற்றிலும் தீமை பயக்கக் கூடியதும் கிடையாது. எந்த நேரமானாலும் அதில் சிலர் நன்மையை அடைவார்கள். மற்றும் சிலர் கேடுகளை அடைவார்கள்.

ஒரு குறிப்பிட்ட நாள் நல்ல நாள் என்றால் அந்நாளில் யாரும் சாகக் கூடாது. யாருக்கும் நோய் ஏற்படக் கூடாது. அந்நாளில் கவலையோ, துக்கமோ நிம்மதியின்மையோ ஏற்படக் கூடாது. இப்படி ஒரு நாள் கிடையாது என்பது சாதாரண உண்மை.

எந்த நாள் கெட்ட நாள் என்று சிலரால் ஒதுக்கப்படுகின்றதோ அந்நாளில் குழந்தை பாக்கியம் பெற்றவர்கள், பொருள் வசதியடைந்தவர்கள் இருக்கிறார்கள்.

இஸ்லாமிய வரலாற்றிலிருந்து கூட இதற்கொரு உதாரணத்தைக் கூறலாம். முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் ஃபிர்அவ்ன் அழிக்கப்பட்டு, மூஸா (அலை) அவர்கள் காப்பாற்றப்பட்டனர்.

அதே முஹர்ரம் பத்தாம் நாளில் ஹுஸைன் (ரலி) படுகொலை செய்யப்பட்டார்கள்.

மூஸா நபி காப்பாற்றப்பட்டதால் அதை நல்ல நாள் என்பதா?

ஹுஸைன் (ரலி) கொல்லப்பட்டதால் அதைக் கெட்ட நாள் என்பதா?

நாட்களுக்கும், நல்லது கெட்டது ஏற்படுவதற்கும் எந்தச் சம்மந்தமுமில்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.

 இந்தக் காலங்களை மக்களிடையே நாம் சுழலச் செய்கிறோம் .

(அல்குர்ஆன் 3:140)

சுழலும் சக்கரத்தின் கீழ்ப்பகுதி மேலே வரும், மேல் பகுதி கீழே செல்லும். இவ்வாறே காலத்தைச் சுழலவிட்டு சிலரை மேலாகவும் சிலரைக் கீழாகவும் ஆக்கிக் கொண்டிருப்போம் என்று இங்கே அல்லாஹ் தெளிவு படுத்துகிறான்.

முஸ்லிம்கள் நம்பிக்கை கொள்ள வேண்டியவற்றில் விதியும் ஒன்றாகும்.

நன்மை தீமை யாவும் அல்லாஹ்விடமிருந்தே ஏற்படுகின்றன என்ற விதியையும் நான் நம்புகிறேன்  என்ற உறுதி மொழி எடுத்த முஸ்லிம் நாள் நட்சத்திரம் பார்ப்பது அந்த உறுதி மொழிக்கு முரணாகும்.

ஒரு நாள், நல்ல நாள் என்றோ கெட்ட நாள் என்றோ இருக்குமானால் அதை அல்லாஹ் தான் அறிவான். அவன் அறிவித்தால் தவிர எவராலும் அறிய முடியாது.

அல்லாஹ் திருக்குர்ஆனில் இன்னின்ன நாட்கள் நல்ல நாட்கள் என்று கூறவில்லை. அல்லாஹ்வின் தூதரும் கூறவில்லை. அல்லாஹ்வும், அவனது தூதரும் கூறாததை மற்றவர்களால் எப்படி அறிய முடியும்?

இன்னின்ன நாட்கள் இன்னின்ன நபர்களுக்கு நல்ல நாட்கள் என்று நம்மைப் போன்ற ஒரு மனிதன் தான் முடிவு செய்கிறான். அவனிடம் சென்று அல்லது அவன் எழுதியதைப் பார்த்து நல்ல நாட்களைத் தீர்மானிக்கிறோம்.

நம்மைப் போன்ற ஒரு மனிதன் எப்படி இது நல்ல நாள் தான் என்று அறிந்து கொண்டான்?இதைச் சிந்திக்க வேண்டாமா?

வருங்காலத்தில் நடப்பதை அறிவிப்பதாகக் கூறுவதும் சோதிடமும் ஒன்று தான். ஒரு மந்திரவாதியிடம்(?) ஹஜ்ரத்திடம் சென்று எனக்கு நல்ல நாள் ஒன்றைக் கூறுங்கள் என்று கேட்கின்றனர். அவரும் ஏதோ ஒரு நாளைக் கணித்துக் கூறுகிறார். அதை நம்பி தமது காரியங்களை நடத்துகின்றனர்.

யாரேனும் சோதிடனிடம் சென்று அவன் கூறுவதை நம்பினால் அவனது நாற்பது நாட்களின் தொழுகை ஏற்கப்படாது என்பது நபிமொழி.

நூல் : முஸ்லிம் 4137

யாரேனும் சோதிடனிடம் சென்று அவன் கூறுவதை நம்பினால் முஹம்மதுக்கு அருளப்பட்ட மார்க்கத்தை அவன் நிராகரித்து விட்டான் என்பதும் நபிமொழி.

நூல் : அஹ்மத் 9171

இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். உலகத்துக்கெல்லாம் நல்ல நாள் கணித்துக் கூறக் கூடிய பூசாரிகள், சாமியார்கள், ஜோதிடர்கள், ஹஸரத்துகளின் நிலைமையைப் பாருங்கள்! வறுமையிலும், தரித்திரத்திலும் வீழ்ந்து கிடப்பதையும், மக்களிடம் யாசித்து உண்பதையும் நாம் காணலாம்.

இவர்கள் தங்களுக்கு என்று விஷேசமான நல்ல நாளைத் தேர்வு செய்து தங்கள் வாழ்வை வளப்படுத்திக் கொள்ள முடிந்ததா? இது ஒரு பித்தலாட்டம் என்பது இதிருந்தே தெளிவாகவில்லையா?

முஸ்லிம்கள் எந்த நாளிலும் எந்த நேரத்திலும் எந்த நல்ல காரியங்களையும் செய்யலாம். நாள் நட்சத்திரம், சகுணம், ஜோதிடம் ஆகிய அனைத்திலிருந்தும் விலகிக் கொள்வது அவசியமாகும்.

சாம்பலாக்கப்பட்டவர்களுக்கு கப்ரு வேதனை எப்படி

கப்ரு வேதனை கடல் பயணத்தில் இறந்தவர்கள், உடலை எரித்துச் சாம்பலாக்கி பல பகுதிகளில் தூவி விடப்பட்டவர்கள், மிருகங்களால் அடித்துக் கொல்லப்பட்டு அவற்றுக்கு உணவாகிப் போனவர்கள், ஆகியோருக்கு கப்ரு வேதனை எவ்வாறு?  இவர்களுக்குக் கப்ரே கிடையாது எனும் போது கப்ரு வேதனை எவ்வாறு இருக்கும்?

என்ற சந்தேகம் பரவலாக இருக்கின்றது.

கப்ரு வேதனையைக் குறிப்பிடும் போது அடக்கம் செய்யப்பட்ட இடத்தைக் கூறுவது பெரும்பான்மையைக் கருத்தில் கொண்டே சொல்லப்படுகின்றது. மண்ணுக்குள்ளே தான் அந்த வேதனை நடக்கிறது என்று கருதிக் கொள்ளக் கூடாது. இவ்வாறு நாம் கூறுவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன.

முஸ்லிம்களானாலும், முஸ்லிமல்லாதவர்களானாலும் அவர்கள் அனைவரும் கப்ருடைய வாழ்வைச் சந்தித்தே தீருவார்கள். முஸ்லிமல்லாதவர்களும் கப்ரில் வேதனை செய்யப்படுவார்கள் என்பதைப் பல ஹதீஸ்கள் கூறுகின்றன.

(பார்க்க புகாரி: 1207, 1252)

மண்ணுக்குள் அடக்கம் செய்யப்பட்டவர்கள் மட்டுமே கப்ரில் வேதனை செய்யப்படுகிறார்கள் என்று நாம் கூறினால் பெரும்பாலான முஸ்லிமல்லாதவர்கள் அந்த வேதனையிலிருந்து விடுதலை பெறுகிறார்கள் என்ற நிலை ஏற்படும். ஏனெனில் அவர்களை மண்ணில் புதைக்காமல் எரித்துச் சாம்பலாக்கி விடுகின்றனர்.

பாவம் செய்த முஸ்லிம்களை கப்ரில் வேதனை செய்யும் இறைவன் முஸ்லிமல்லாதவர்களுக்கு அத்தகைய வேதனை வழங்க மாட்டான் என்பது இறைவனின் நியதிக்கும், அவனது நியாயத்திற்கும் ஏற்புடையதாக இல்லை.

முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது  என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!  என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.

அல்குர்ஆன் 23:100

கப்ருடைய வேதனை என்பது ஒரு திரை மறைவு வாழ்க்கை என்பது இந்த வசனத்திருந்து புரிகிறது. மண்ணுக்குள் தான் அது நடக்க வேண்டும் என்று அர்த்தமில்லை.

ஓரு நல்லடியார் அடக்கம் செய்யப்பட்ட அதே இடத்தில் சில ஆண்டுகளுக்குப் பின் ஓரு கெட்டவர் அடக்கம் செய்யப்படுகின்றார். அடக்கம் செய்த இடத்திற்குள்ளேயே வேதனை நடக்கிறது என்றால் இங்கே கருத்துக் குழப்பம் ஏற்படும்.

உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கிற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

(அல்குர்ஆன் 39:42)

அனைத்து உயிர்களையும் இறைவன் தன் கைவசம் வைத்துள்ளான் என்பது இந்த வசனத்திலிருந்து தெளிவு. நமது புலனுக்குத் தென்படாத மற்றொரு உலகத்தில் அந்த ஆத்மாக்களுக்கு அவன் வேதனையோ, சுகமோ வழங்குவான் என்று எடுத்துக் கொண்டால் எவருமே கப்ருடைய வாழ்விலிருந்து தப்பிக்க இயலாது  என்ற கருத்து நிலை பெறும்.

கப்ருகளுக்கு நாம் ஸலாம் கூறுவதும், ஸியாரத்துக்குச் செல்வதும், கப்ரில் வேதனை செய்யப்பட்ட இருவரின் அடக்கத்தலத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேரீச்சம் மட்டையைப் பிளந்து ஊன்றியதும் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே வேதனை செய்யப்படுகின்றது என்ற கருத்தைத் தருவது உண்மையே.

இதை அடிப்படையாக வைத்து மண்ணுக்குள் தான் வேதனை செய்யப்படுகிறது என்று நாம் முடிவு செய்தால் முஸ்லிமல்லாதவர்கள் அந்த வேதனையிலிருந்து தப்பித்து விடுவார்கள் என்ற நிலை ஏற்படுகின்றது.

அடக்கம் செய்யப்பட்டவர்களின் கப்ரு வாழ்க்கை அடக்கத்தலத்தில் அமையும். அடக்கம் செய்யப்படாதவர்களுக்கு வேறு விதமான கப்ரு வாழ்வை அமைப்பது இறைவனுக்குச் சிரமமல்ல.

அல்லது அனைவருக்குமே மண்ணுலகம் அல்லாத மற்றொரு உலகில் கப்ருடைய வாழ்வை இறைவன் அமைக்கலாம்.

அடக்கத்தலம் அடையாளமாக இருப்பதால் அடக்கத் தலத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேரீச்ச மட்டைகளை நட்டு வைத்திருக்கலாம். எப்படி வைத்துக் கொண்டாலும் கப்ருடைய வாழ்விலிருந்து எவரும் விதி விலக்கு பெற முடியாது என்பதில் சந்தேகமில்லை.

கந்தூரி

தமிழக முஸ்லிம்கள் எதையுமே விழாவாக்குவதில் கைதேர்ந்தவர்களாக உள்ளனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முக்கியத்துவம் பற்றி அவர்களுக்குக் கூறப்பட்டால் நபியைப் பின்பற்றுவதன் அவசியத்தை அதிலிருந்து உணர மாட்டார்கள். மாறாக அதை எப்படி விழாவாக்குவது என்பதிலேயே அவர்களின் கவனம் செல்கின்றது.

இறை நேசர்களில் சிலர் இந்த மார்க்கத்துக்காக ஆற்றிய சேவைகளைக் கூறினால் நாமும் அப்படிச் சேவை செய்ய வேண்டும்  என்று அதிலிருந்து உணர மாட்டார்கள். மாறாக அதை எப்படி விழாவாக ஆக்கலாம் என்பதில் தான் அவர்களுக்குக் கவனம்.

புகாரி இமாம் அவர்கள் நபிமொழிகளைத் திரட்டுவதற்காக செய்த தியாகத்தைக் கூறினால் அதிலிருந்து ஹதீஸ்களின் முக்கியத்துவத்தை உணர மாட்டார்கள். மாறாக அதையும் விழாவாக்குவது அவர்களின் நோக்கம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்கு முன்னர் எத்தனையோ நபிமார்கள் சென்று விட்டனர். அவர்களுக்கெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கந்தூரி நடத்திக் கொண்டிருக்கவில்லை. உணவுகள் வழங்கிக் கொண்டிருக்கவில்லை.

முஸ்லிம்கள் இஸ்லாத்தின் அடிப்படைகளை மறக்கச் செய்வதற்காக ஷைத்தான் விரிக்கும் மாய வலைகள் இவை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரால் மவ்லூது ஓதினால் போதும்; எல்லாக் கடமைகளையும் புறக்கணிக்கலாம் என்ற மனப்பான்மையை வளர்த்தது இந்த விழாக்கள் தான்.

புகாரி கந்தூரி நடத்துவது தான் ஹதீஸுக்குச் செய்யும் மரியாதை. ஹதீஸைப் பின்பற்ற வேண்டியதில்லை  என்ற எண்ணம் வளரவும் இந்த விழாக்கள் தான் காரணம்.

உண்மையான முஸ்லிம்கள் இது போன்ற விழாக்களை முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும்.

786 என்பதைப் பயன்படுத்தலாமா?

நியூமராலஜி என்ற கலையில் ஆங்கில எழுத்துக்களுக்கு எண்களைக் குறியீடாகப் பயன்படுத்துவர். அது போல் அரபு எழுத்துக்களுக்கும் சிலர் எண்கைளைக் குறியீடுகளாகப் பயன்படுத்தலாயினர். (உம். அலிப் 1, பே 2, ஜீம் 3, தால் 4)

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்  என்பதில் இடம் பெற்ற ஒவ்வொரு எழுத்தின் எண்களையும் மொத்தமாகக் கூட்டினால் 786 வரும். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதன் சுருக்கமாகக் கருதி இதைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இஸ்லாமிய அடிப்படையில் இது ஏற்க முடியாததாகும். எண்கள் எழுத்துக்களாக முடியாது. அஸ்ஸலாமு அலைக்கும் என்பதற்குப் பதிலாக 238 என்று சொன்னால் அதை எவரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

ஒருவர் 6666 வசனங்களைக் கொண்ட குர்ஆனை ஓதுவதற்குப் பதிலாக அதன் கூட்டுத் தொகை எண்ணைப் பயன்படுத்தினால் அவர் குர்ஆனை ஓதியவர் என்று கருதப்பட மாட்டார். (குர்ஆன் வசனங்களின் எண்ணிக்கை பற்றி பல கருத்துக்கள் உள்ளன)

அது போல் 786 என்று சொன்னால் அல்லது எழுதினால் அவர் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் சொன்னவராகவும், எழுதியவராகவும் ஆக மாட்டார்.

786 என்ற எண் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதற்கு மட்டும் தான் வரும் என்று கூற முடியாது. மோசமான அர்த்தங்கள் கொண்ட வார்த்தைகளுக்கும் கூட இதே எண் வரலாம். ஹரே கிருஷ்ணா என்பதை எண்கள் அடிப்படையில் கூட்டினால் அதன் தொகையும் 786 தான்.

அப்துல் கபூர் என்பதற்குப் பதிலாக 618 என்று அழைத்தால் அதை அப்பெயருடையவர் விரும்ப மாட்டார். அவ்வாறிருக்க அல்லாஹ்வின் திருப்பெயருக்கு இப்படி எண் குறிப்பது அல்லாஹ்வைக் கேலி செய்வதாகும்.

அவனது திருப் பெயர்களை அப்படியே எழுதுவது தான் உண்மை முஸ்லிமுக்கு அழகாகும். முஸ்லிமல்லாதவர்கள் கையில் கிடைத்தால் அதன் புனிதம் கெட்டு விடும் என்றெல்லாம் இதற்குச் சமாதானம் கூறுவது ஏற்க முடியாததாகும்.

ஏனெனில் காபிராக இருந்த ஒரு பெண்ணுக்கு சுலைமான் (அலை) அவர்கள் கடிதம் எழுதி இஸ்லாத்தின் பால் அழைக்கும் போது அதன் துவக்கத்தில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்  என்று அவர்கள் எழுதியுள்ளார்கள்.

பார்க்க : அல்குர்ஆன் 27:30

நபிகள் நாயகம் (ஸல்) பல நாட்டு மன்னர்களுக்கு எழுதச் செய்த கடிதத்தின் துவக்கத்திலும் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்  என்றே எழுதியுள்ளனர்.

பார்க்க : புகாரி 7, 2941, 4553

நாமும் அது போல் முழுமையாக பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்  என்றே எல்லா நேரத்திலும் எழுத வேண்டும்.

தர்கா ஸியாரத்

மரணத்தை நினைவுபடுத்தும் என்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கப்ரு ஜியாரத்தை அனுமதித்தனர். இந்த அடிப்படையில் கப்ருகளை ஸியாரத் செய்யலாம். (நூல்: முஸ்லிம் 1777)

அவ்லியாக்கள் எனப்படுவோரின் கப்ருகளை ஸியாரத் செய்யக் கூடாது.

புவானா என்ற இடத்தில் அறுத்துப் பலியிடுவதாக நான் அல்லாஹ்வுக்காக நேர்ச்சை செய்தேன்  என்று ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறினார்.  அந்த இடத்தில் இணை வைப்பவர்கள் வழிபடக்கூடியவை ஏதுமுள்ளதா?  என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்டார்கள். அம்மனிதர் இல்லை  என்றார்.  இணை வைப்பவர்கள் அங்கே விழா நடத்துவதுண்டா?  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்ட போது இல்லை  என்றார்.  அப்படியானால் உனது நேர்ச்சையை நிறைவேற்று  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஸாபித் பின் லஹ்ஹாக் (ரலி)

நூல்: அபூதாவூத் 2881

அல்லாஹ்வுக்காக நேர்ச்சை செய்தால் அதை நிறைவேற்றுவது கட்டாயக் கடமையாகி விடுகின்றது. அந்தக் கடமையை நிறைவேற்றுவதற்கே இணைவைப்பாளர்களின் வழிபாடு,திருவிழா போன்றவை இருக்கக் கூடாது  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழி காட்டியுள்ளனர்.

ஸியாரத் கட்டாயக் கடமை இல்லை. அது ஒரு சுன்னத் தான். இந்த சுன்னத்தை நிறைவேற்ற இணை வைப்பவர்களின் வழிபாடும், திருவிழாவும் நடக்கும் இடத்திற்கு எப்படிச் செல்ல முடியும்?

மரணத்தை நினைவுபடுத்தவே ஸியாரத் அனுமதிக்கப்பட்டதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். அவ்லியாக்கள் எனப்படுவோரின் அடக்கத்தலத்தில் பிரம்மாண்டமான கட்டிடம்

மனதை மயக்கும் நறுமணம்

கண்களைப் பறிக்கும் அலங்காரங்கள்

ஆண்களும், பெண்களும் கலப்பதால் ஏற்படும் கிளுகிளுப்பு

ஆடல், பாடல், கச்சேரிகள்

இவற்றுக்கிடையே மறுமையின் நினைவும், மரணத்தின் நினைவும் ஏற்படுமா? நிச்சயம் ஏற்படாது.

எந்தக் காரணத்திற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸியாரத்தை அனுமதித்தார்களோ அந்தக் காரணமே இல்லாத போது இதை எப்படி அனுமதிக்க முடியும்?

விழுந்து கும்பிடுவது

கையேந்திப் பிரார்த்திப்பது

பாத்தியா என்று மக்களை ஏமாற்றுதல்

தலையில் செருப்பைத் தூக்கி வைத்தல்

விபூதி, சாம்பல் கொடுத்தல்

மார்க்கம் தடை செய்த கட்டடம்

என்று ஏராளமான தீமைகளை தர்காக்கள் உள்ளடக்கியுள்ளன.

தீமையைக் கண்டால் கையால் தடுக்க வேண்டும். இயலாவிட்டால் நாவால் தடுக்க வேண்டும். இதற்கும் இயலாவிட்டால் மனதால் வெறுக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளனர்.

நூல்: முஸ்லிம் 78

அங்கே செல்பவர்கள் தமது கைகளால் அத்தீமைகளைத் தடுக்கக் கடமைப்பட்டுள்ளார்கள். இயலாவிட்டால் நாவால் தடுக்கக் கடமைப்பட்டுள்ளார்கள். இவ்வாறு நடக்கத் துணிவு உள்ளவர்கள் இந்த இரண்டு வழிகளிலும் அதைத் தடுக்கலாம். அதற்கும் இயலாதவர்கள் மனதால் வெறுத்து ஒதுங்குவதைத் தவிர வேறு வழியில்லை.

இந்தக் காரணங்களாலும் தர்காக்களுக்கு ஸியாரத் செய்வதற்காகச் செல்லக் கூடாது. பொது கப்ருஸ்தான்களுக்குச் சென்று மரணத்தையும், மறுமையும் நினைவுபடுத்திக் கொள்வதே சுன்னத்தாகும்.

மறுமையை நினைவுபடுத்திட, ஒவ்வொரு ஊரிலும் எளிமையான கபரஸ்தான் இருக்கும் போது, செலவும் சிரமமுமில்லாமல் இந்த சுன்னத்தை நிறைவேற்றி அதன் நன்மையை அடைய வழி இருக்கும் போது, தர்காக்களை நாடிச் செல்ல எந்த நியாயமும் இல்லை.

ஒற்றைப்படையாகக் கொடுத்தல்

எதையெடுத்தாலும் ஒற்றை எண்ணிக்கையில் தான் செய்ய வேண்டும் என்ற நம்பிக்கை தமிழக முஸ்லிம்களிடம் பரவலாகக் காணப்படுகின்றது.

இது சரியா?

இறைவன் ஒற்றையானவன், ஒற்றையை அவன் விரும்புகிறான்  என்பது நபிமொழி.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6410

ஜனாஸாவைக் குளிப்பாட்டும் போது மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு தடவை குளிப்பாட்ட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழி காட்டியுள்ளனர்.

நூல்: புகாரி 1253, 1254, 1257, 1259, 1261, 1263,

பெருநாளின் போது ஒற்றை எண்ணிக்கையில் பேரீச்சம் பழங்களை நபிகள் நாயகம் (ஸல்) சாப்பிடுவார்கள்

நூல்: புகாரி 953

ஒற்றை எண்ணிக்கையின் முக்கியத்துவத்தை இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன.

எதையெடுத்தாலும் ஒற்றை எண்ணிக்கையில் தான் செய்ய வேண்டும் என்று இதற்கு அர்த்தம் செய்து கொள்ளக் கூடாது.

ஏனெனில் 33 தடவை ஸுப்ஹானல்லாஹ், 33 தடவை அல்ஹம்துலில்லாஹ் கூறுமாறு போதித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹு அக்பர் என்று 34 தடவை கூறுமாறு கற்றுத் தந்துள்ளனர்.

ஒரு பிரச்சினைக்கு சாட்சி கூறுபவர்கள் இருவர் என்று குர்ஆன் கூறுகிறது.

அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் 100 என்று ஹதீஸ்கள் கூறுகின்றன.

எல்லாவற்றையும் ஜோடியாகப் படைத்ததாகக் குர்ஆன் கூறுகிறது.

மஃரிபைத் தவிர மற்ற தொழுகைகள் இரட்டை ரக்அத்களையே கொண்டுள்ளன.

இது போல் இன்னும் அனேகம் உள்ளன.

ஒற்றையாகவும், இரட்டையாகவும் பல காரியங்கள் குர்ஆன் ஹதீஸ்களில் கூறப்படுகின்றன.

எவற்றை ஒற்றையாகச் செய்ய வேண்டும் என்றோ, இரட்டையாகச் செய்ய வேண்டுமென்றோ ஆதாரம் கிடைக்கின்றதோ அவற்றை அவ்வாறு செய்ய வேண்டும். மற்ற விஷயங்களில் நம் வசதி போல் செய்து கொள்ளலாம் என்று விளங்க வேண்டும்.

ஒரு பொருளின் விலை இரண்டு ரூபாய் என்று வியாபாரி கூறினால் ஒற்றையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மூன்று ரூபாய் கொடுக்க முடியாது.

100 ரூபாய் என்று பேசிய பிறகு ஒரு ரூபாயை ஒட்டுவது ஏமாளித்தனமாகும்.

இது போன்ற மூட நம்பிக்கைகளுக்குச் சான்றாக அந்த ஹதீஸை எடுத்துக் கொள்ளக் கூடாது.

இரட்டையாகவும் பல காரியங்கள் மார்க்கத்தில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொண்டு மேற்கண்ட ஹதீஸை ஆராயும் போது அதன் பொருள் தெளிவாகும்.

இறைவன் (வித்ராக) ஒற்றையாக இருக்கிறான். ஒற்றையாக இருப்பதையே விரும்பவும் செய்கிறான்  என்று பொருள் கொள்வது உசிதமாகும்.

பொதுவாக மனிதர்கள் மற்றும் உயிரினங்கள் தனித்திருப்பதை விரும்புவதில்லை. துணையுடனிருப்பதையே விரும்புகின்றனர். தனிமை போரடிக்கக் கூடியதாகத் தான் பெரும்பாலும் அமையும்.

ஆனால் படைத்த இறைவன் தனித்தவனாக இருப்பதுடன் தனித்தவனாக இருப்பதை விரும்பவும் செய்கிறான். தனக்குப் போரடிக்காமலிருக்க வேண்டுமென்பதற்காக மனைவி,மக்கள், சுற்றம் எதுவும் வேண்டும் என்று விரும்புவதில்லை. தனிமை அவனுக்குப் போரடிப்பதில்லை. அவனுக்கே அது தான் விருப்பமானது.

இவ்வாறு பொருள் கொள்ள ஏற்றதாக அந்த ஹதீஸ் இருப்பதுடன் பொருத்தமானதாகவும் அமைகின்றது.

மற்றவர்களின் செயல்களும் ஒற்றையாக இருப்பதை அவன் விரும்புகிறான் என்று பொருள் கொண்டால் ஒற்றையில்லாத பல விஷயங்களை அவன் மார்க்கமாக ஆக்கியிருக்க மாட்டான்.

கண்கள், காதுகள், கால்கள் என்று எத்தனையோ இரட்டைகள் அவன் படைப்பில் உள்ளன. இரட்டையாக எத்தனையோ மார்க்க அனுஷ்டானங்கள் உள்ளன. அவற்றையெல்லாம் ஒற்றையாக இறைவன் ஆக்கவில்லை.

* அவன் ஒற்றையானவன் (தான்,) ஒற்றையாக இருப்பதையே விரும்புகிறான்.

* அவன் ஒற்றையானவன். (மற்றவர்களின் செயல்களும்) ஒற்றையாக இருப்பதையே விரும்புகிறான்.

இப்படி இரண்டு விதமான பொருளுக்கும் அந்த ஹதீஸ் இடம் தந்தாலும் முதலாவது பொருளே சரியானதாக நமக்குத் தோன்றுகிறது. அவ்வாறு பொருள் கொள்ளும் போது முரண்பாடு ஏற்படுவதில்லை.

கறுப்பு நிறமும், தரித்திரமும்

முஸ்லிம்களில் சிலர் கறுப்பு நிறத்தை தரித்திரம் என்று நம்புகின்றனர். கறுப்பு நிறப் பொருட்களைப் பயன்படுத்துவதால் தீங்குகள் ஏற்படுவதாகவும் கூறுகின்றனர். இந்த நம்பிக்கை சரியானதா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது கறுப்புத் தலைப்பாகை அணிந்து மக்காவில் பிரவேசித்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 2638

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கறுப்புத் தலைப்பாகை அணிந்து மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள்.

நூல்: முஸ்லிம் 2639

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கொடி கறுப்பு நிறமாக இருந்தது.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: திர்மிதீ 1604

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கறுப்பு மேலாடை அணிந்து மழை வேண்டி பிரார்த்தனை செய்தனர்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி)

நூல்: நஸயீ 1490

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கருப்புப் போர்வை அணிந்திருந்தார்கள். ஹஸன்,ஹுசைன், ஃபாத்திமா ஆகியோரை அதற்குள்ளே சேர்த்துக் கொண்டார்கள்.

நூல்: முஸ்லிம் 4450

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கறுப்பு மேலாடை ஒன்றைத் தயார் செய்து கொடுத்தேன். அதை அவர்கள் அணிந்து கொண்டார்கள். வியர்வை ஏற்பட்டதும் கம்பளி வாடையை உணர்ந்ததால் அதைக் கழற்றி விட்டார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: அபூதாவூத் 3552

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கறுப்புப் போர்வை, கறுப்புக் கம்பளி அணிந்ததாக ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன.

கறுப்பு நிறப் பொருட்கள் தரித்திரத்தை ஏற்படுத்தும் என்பது மூடநம்பிக்கை என்று இதிலிருந்து உணரலாம். காவி நிற ஆடையைத் தவிர மற்ற எல்லா நிறங்களும் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளன.

கனவில் வரும் கட்டளை

இறந்தவர்கள் கனவில் வந்து கூறும் கட்டளைகளை நிறைவேற்ற வேண்டுமா?

என்னை நீங்கள் கனவில் காண்பதாக வைத்துக் கொள்ளுங்கள்! உங்கள் கனவில் நான் வந்தது எனக்குத் தெரியுமா? நிச்சயமாகத் தெரியாது. கனவில் வந்தது உண்மையில் நான் தான் என்றால் வந்த எனக்கல்லவா அது முதலில் தெரிய வேண்டும்?

கனவில் ஒருவர் வருவது என்பது வருபவரின் விருப்பத்தின்பாற்பட்டதன்று. மாறாகக் காண்பவரின் எண்ணத்தைப் பொறுத்தது என்பதை இதிலிருந்து நாம் அறியலாம்.

இறந்தவரோ, உயிருடன் உள்ளவரோ உங்கள் கனவில் வந்தால் உண்மையில் அவர் வரவில்லை. அவர் வந்ததாக உங்களுக்குத் தோன்றுகிறது. அவ்வளவு தான். எனவே கனவில் ஒருவர் வந்து கட்டளையிடுவது என்பதற்கு இடமே இல்லை.

அல்லாஹ் இந்த மார்க்கத்தைத் தன் திருத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மூலம் நிறைவு செய்து விட்டான். மார்க்கத்தின் எந்த ஒரு அம்சத்தையும் அவன் சொல்லாமல் விட்டதில்லை. அவ்வாறிருக்க, கனவின் மூலம் எந்தக் கட்டளையையும் பிறப்பிக்க வேண்டியதில்லை. கனவுகளின் மூலமும் இறைவன் கட்டளைகளைப் பிறப்பிப்பான் என்றால் மார்க்கம் நபியவர்கள் மூலமாக முழுமைப்படுத்தப்படவில்லை என்று ஆகி விடும்.

கனவுகள் மூலமாகவே கட்டளைகளை இறைவன் பிறப்பிப்பான் என்றால் எந்த நபியையும் அவன் அனுப்பியிருக்கத் தேவையில்லை. நபிமார்கள் பல கொடுமைகளுக்கு ஆளாக வேண்டியதுமில்லை. ஒவ்வொருவருக்கும் கனவிலேயே அனைத்தையும் கட்டளையிட்டு விடலாம்.

நபிமார்கள் இறைவனுடன் நேரடித் தொடர்பு உடையவர்கள் என்பதால் அவர்களின் கனவுகள் மட்டுமே வஹீ என்று ஹதீஸ்களில் காண்கிறோம்.

கனவில் யாரும் உங்களுக்குக் கட்டளையிடுவதாக உங்களுக்குத் தெரிந்தால் அப்படி நீங்கள் கற்பனை செய்கிறீர்கள் என்று பொருளேயன்றி  அவரே வந்தார்; கட்டளையிட்டார்  என்பது அதன் பொருளன்று.

 இந்த இரவில் இத்தனை ரக்அத்கள் தொழு!  என்று ஒருவர் கூறுவது போல் ஒருவர் கனவில் காண்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இது நிச்சயம் இறைவன் புறத்திலிருந்து வந்த கனவல்ல.

ஏனெனில் இந்த நாளில் இவ்வளவு தொழ வேண்டும் என்பதையெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) வழியாக இறைவன் நமக்குக் காட்டித் தந்து விட்டான். கனவின் மூலம் காட்டித் தரும் வகையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறை ஏதும் வைக்கவில்லை.

மேலும் இது போன்ற செய்திகள் இறைவன் புறத்திலிருந்து வந்தவை என்றால் அனைத்து முஸ்லிம்களின் கனவிலும் இது போல் கூறப்பட வேண்டும். ஏனெனில் வணக்க வழிபாடுகளில் அனைவரும் சமமானவர்களே. மார்க்கத்தில் உள்ள நல்ல செயல் ஒன்றை ஒரே ஒருவருக்கு மட்டும் காட்டிவிட்டு மற்றவர்களுக்கு அதைக் காட்டாமல் இருப்பது இறைவனின் நீதிக்கு எதிரானதாகும்.

இந்த இடத்தில் ஒரு நல்லடியார் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்; அவருக்காக அந்த இடத்தில் ஒரு தர்ஹாவைக் கட்டு  என்று ஒருவரது கனவில் கூறப்பட்டால் அதுவும் ஷைத்தானிடமிருந்து வந்த கனவு தான்.

ஏனெனில் இறந்தவர்களின் அடக்கத்தலங்களில் கட்டடங்கள் கட்டுவதையும், வழிபாட்டுத் தலங்கள் எழுப்புவதையும், சமாதிகள் பூசப்படுவதையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்து விட்டனர்.

பார்க்க : புகாரி 417, 418, 827, 1244, 1301, 3195, 4087, 4089, 5368  பார்க்க : முஸ்லிம் 1763, 1765

எழுப்பப்பட்ட கட்டடங்களை இடித்துத் தகர்க்கும் படியும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூலம் இறைவன் ஏற்கனவே நமக்கு அறிவித்து விட்டான்.

பார்க்க : முஸ்லிம் 1764

அந்த அறிவிப்புக்கு எதிரான ஒரு செய்தியை இறைவன் கூற மாட்டான் என்பதால் இது ஷைத்தானின் வேலை தான் என்று கண்டு கொள்ளலாம்.

கனவுகள் என்ற நமது நூலில் ஹதீஸ்களின் ஆதாரங்களுடன் விரிவாக இதை விளக்கியுள்ளதால் அந்த ஆதாரங்களை இங்கே குறிப்பிடவில்லை. மேல் விபரங்களுக்கு அந்த நூலைப் பார்வையிடுக.

ஜம்ஜம் தண்ணீர்

ஹஜ் செய்து விட்டு வருபவர்கள் ஜம்ஜம் தண்ணீரைக் கொண்டு வருகிறார்களே இது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு எடுத்துச் சென்றார்களா? இந்தத் தண்ணீர் அருந்தினால் நோய் குணமாகும் என்பது சரியா?

ஆயிஷா (ரலி) அவர்கள் ஜம்ஜம் தண்ணீரை (மதீனாவுக்கு) எடுத்துச் செல்பவர்களாக இருந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு எடுத்துச் சென்றதாகவும் கூறினார்கள்.

நூல்: திர்மிதீ 886

ஜம்ஜம் தண்ணீரின் வரலாற்றிலிருந்தே அந்தத் தண்ணீரின் புனிதத்தை நாம் அறியலாம்.

இஸ்மாயீல் (அலை) அவர்கள் சிறு குழந்தையாக இருந்த போது தாகத்தால் துடித்தனர். அவர்களின் தாகம் தீர்ப்பதற்காக ஒரு வானவரை இறைவன் அனுப்பி, இப்போதுள்ள ஜம்ஜம் தண்ணீரை உற்பத்தி செய்தான்.

நூல்: புகாரி 3364

வானவர் மூலம் வெளிப்படுத்தப்பட்ட ஊற்று என்ற வகையில் அது புனிதம் பெறுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிஃராஜுக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது அவர்களின் இதயம் ஜம்ஜம் நீரால் கழுவப்பட்டதாக ஹதீஸ்கள் உள்ளன.

நூல்: புகாரி 349, 3207, 3342, 7517

ஆனால் இறந்த பின் ஹாஜிகளை அந்தத் தண்ணீரால் குளிப்பாட்ட வேண்டும் என்று கூறுவதற்கு ஆதாரம் இல்லை.

தலையைத் திறந்து கொண்டும், நின்று கொண்டும் தான் அதை அருந்த வேண்டும் என்பதற்கும் எந்தக் கட்டளையும் இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நின்று கொண்டு அருந்தியுள்ளதால் அவ்வாறு அருந்த அனுமதி உண்டு என்று மட்டுமே கூற முடியும்.

புர்தா படிக்கலாமா?

புர்தா என்பது ஒரு கவிஞன் எழுதிய பாடல் தொகுப்பு. மார்க்க அறிவு சிறிதுமற்ற பூசிரி என்னும் கவிஞனால் எழுதப்பட்டதே புர்தா எனும் நூல்.

இதை அல்லாஹ்வுடைய வேதத்தை விட மேலானதாகவும், அல்லது அதற்குச் சமமானதாகவும் விபரமறியாத முஸ்லிம்கள் நம்புகின்றனர்.

வாழ்க்கையில் வளம் பெற

மனநோய் விலக

காணாமல் போன பெருட்கள் கிடைக்க

மற்றும் இன்ன பிற நோக்கங்கள் நிறைவேற

வீடுகளில் இதைப் பாடி வருகின்றனர். அதுவும் கூலிக்கு ஆள் பிடித்துப் பாடச் செய்து வருகின்றனர்.

ஒரு மனிதனுடைய வார்த்தைகளைப் பாடுவதால் இத்தகைய பயன்கள் கிடைக்கும் என நம்புவது அந்த மனிதனுக்கு இறைத் தன்மை வழங்குவதாகும்.

நம்மைப் போன்ற ஒரு மனிதன் எழுதிய பாடலுக்கு இந்தச் சக்தி எப்படி வந்தது? அதை யார் வழங்கியது? அதற்கு ஆதாரம் என்ன? என்றெல்லாம் இந்தச் சமுதாயம் சிந்திக்க மறந்ததால் புர்தாவைப் புனிதமாகக் கருதி வருகின்றனர்.

புர்தா என்பது முழுக்க முழுக்க நல்ல கருத்துக்கள் நிறைந்த கவிதை என்று வைத்துக் கொண்டால் கூட அதை ரசிக்கலாமே தவிர அதற்கு தெய்வீகத் தன்மை இருப்பதாக ஒப்புக் கொள்ள முடியாது.

ஆனால் புர்தா என்பது இஸ்லாத்தின் அடிப்படைகளையே தகர்க்கக் கூடிய நச்சுக் கருத்துக் கொண்ட பாடலாக இருப்பதால் அதைப் பாடுவதே குற்றமாகும்.

லவ்ஹுல் மஹ்ஃபூல்  என்னும் ஏட்டைப் பற்றி நாம் அறிவோம். நடந்தவை,நடக்கவிருப்பவை அனைத்தும் ஒன்று விடாமல் அந்த ஏட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு இலை கீழே விழுந்தாலும் அந்த ஏட்டில் பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையிலேயே விழுகின்றன.

மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார். அவன் தரையிலும், கடலும் உள்ளவற்றை அறிவான். ஓர் இலை கீழே விழுந்தாலும் அவன் அதை அறியாமல் இருப்பதில்லை. பூமியின் இருள்களில் உள்ள விதையானாலும், ஈரமானதோ காய்ந்ததோ ஆனாலும் தெளிவான ஏட்டில் இல்லாமல் இல்லை.

அல்குர்ஆன் 6:59

லவ்ஹுல் மஹ்ஃபூல்  என்பது அனைத்து ஞானங்களின் மொத்தத் தொகுப்பு என்பதை இதிலிருந்து அறியலாம்.

ஆனால் புர்தா என்ன சொல்கின்றது தெரியுமா?

(நபியே!) இவ்வுலகமும் மறு உலகமும் உங்களின் அருட்கொடையாகும். லவ்ஹுல் மஹ்ஃபூலில் உள்ள ஞானம் உங்கள் ஞானத்தில் சிறு பகுதி தான்.

அல்லாஹ்வின் ஞானத்தை விட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஞானம் அதிகம் எனக் கூறும் இந்த நச்சுக் கருத்தைப் பாடியவனும், நம்புபவனும் முஸ்லிமாக இருக்க முடியுமா?

அல்லாஹ்வைத் தவிர எவர் மீதும், எதன் மீதும் சத்தியம் செய்யக் கூடாது என்பது இஸ்லாத்தின் கட்டளை.

கஃபாவின் மேல் ஆணையாக என ஒரு மனிதர் கூறுவதை இப்னு உமர் (ரலி) செவியுற்ற போது,  அல்லாஹ் அல்லாதவர்கள் மீது சத்தியம் செய்யாதே! ஏனெனில் யார் அல்லாஹ் அல்லாதவர்கள் மீது சத்தியம் செய்கிறாரோ அவர் இணை வைத்து விட்டார்  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்  எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஃது பின் உபைதா

நூல் : திர்மிதீ 1455

பிளவுண்ட சந்திரன் மேல் நான் சத்தியம் செய்கிறேன் என்று புர்தாவில் பூசிரி கூறுகிறார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதை இணை வைத்தல் என்று இனம் காட்டினார்களோ அதை நியாயப்படுத்தும் இந்தக் கவிதையை உண்மை முஸ்லிம்கள் நம்ப முடியுமா?

ஒருவர் இவ்வுலகில் எந்த அளவு நன்மையான காரியங்களைச் செய்கிறாரோ அதற்கேற்பவே மறுமை நாளில் இறைவனது அருளைப் பெறுவார். இது சாதாரண முஸ்லிமுக்கும் தெரிந்த உண்மையாகும். இந்தச் சாதாரண உண்மையையும் புர்தா மறுக்கின்றது. மனிதர்களைப் பாவம் செய்யத் தூண்டுகின்றது.

அல்லாஹ் தனது அருளைப் பங்கிடும் போது பாவங்களுக்குத் தக்கவாறு வழங்கக் கூடும் .

ஒருவர் எந்த அளவுக்குப் பாவம் செய்கிறாரோ அந்த அளவுக்கு அல்லாஹ்வின் அருள் கிடைக்கும் எனக் கூறும் இந்த உளறலை நம்ப முடியுமா?

ஒவ்வொரு மனிதனும் தத்தமது செயல்களுக்குத் தான் கூலி கொடுக்கப்படுவான் என்பது இஸ்லாத்தின் அடிப்படை. ஒருவன் சிறந்த பெயர் சூட்டப்படுகிறான். இதில் பெயர் சூட்டப்பட்டவனுக்கு எந்தச் சம்மந்தமும் இல்லை. எத்தனையோ கயவர்களுக்கு அழகான பெயர்கள் அமைந்திருப்பதை நாம் காண்கிறோம். ஆனால் புர்தா என்ன சொல்கிறது தெரியுமா?

என் பெயர் முஹம்மத் என்றிருப்பதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு என் மீது பொறுப்பு உண்டு. படைப்புக்களிலேயே அவர்கள் தாம் பொறுப்புக்களைச் சிறப்பாக நிறைவேற்றக் கூடியவர்கள்.

முஹம்மத் என்ற பெயருள்ளவருக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்களா?

முஹம்மத் என்று பூசிரிக்குப் பெயர் சூட்டியது அவரது குடும்பத்தினர் தாம். இந்தப் பெயருக்கும், பூசிரிக்கும் எந்த விதமான சம்மந்தமும் இல்லை. இவரது பெயர் முஹம்மத் என்று இருப்பதால் இவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காப்பாற்றி விடுவார்களாம். இது எவ்வளவு அபத்தம் என்று சிந்தியுங்கள்.

முஹம்மத் எனும் பெயர் பெற்ற ஒருவர் இவர்களின் பொருட்களை அபகரித்துக் கொண்டால் பொறுத்துக் கொள்வார்களா? நிச்சயமாக பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். அவர்களுக்கே நம்பிக்கை இல்லாத இந்த புர்தாவைப் புனிதமாகக் கருதுவதில் கடுகளவாவது நியாயம் உள்ளதா என்று சிந்தியுங்கள்.

இப்படி புர்தாவில் அனேகம் அபத்தங்கள்! சிந்தனையாளர்களுக்கு இந்த விபரங்களே போதுமாகும்.

அரபி மொழி தான் தேவமொழியா?

மொழிகள் கருத்துக்களை வெளிப்படுத்தும் ஒரு சாதனமே தவிர மொழிகளில் தேவ மொழி,தெய்வீக மொழி என்றெல்லாம் கிடையாது. இஸ்லாத்தன் பார்வையில் அனைத்து மொழிகளும் சமமானவையே.

எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம். தான் நாடியோரை அல்லாஹ் வழி கேட்டில் விட்டு விடுகிறான். தான் நாடியோருக்கு நேர் வழி காட்டுகிறான். அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

திருக்குர்ஆன் : 14:4

நபிகள் நாயகத்துக்கு முன்னர் ஏராளமான தூதர்கள் அனுப்பப்பட்டனர். தமது சமுதாயத்தின் மொழியிலேயே அவர்களுக்கு இறைவன் வேதங்களைக் கொடுத்து அனுப்பியதாக இவ்வசனம் கூறுகின்றது. எல்லா மொழிகளையும் இஸ்லாம் சமமாகவே பார்க்கின்றது என்பதற்கு இது சான்று.

இறுதித் தூதராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டார்கள். அவர்களின் தாய் மொழி அரபு என்பதால் அரபு மொழியில் குர்ஆன் அருளப்பட்டது. நபிகள் நாயகம் அகில உலகுக்கும் தூதர் என்பதால் அரபு மொழியில் அருளப்பட்ட அந்த வேதமே அகில உலகுக்கும் வேதமாக அமைந்து விட்டது.

அகில உலகத்தின் வேதத்தை அரபு மொழியில் ஏன் அருள வேண்டும் என்று சிலருக்குத் தோன்றலாம். தமிழ் மொழியிலோ, வேறு எந்த மொழியிலோ அருளப்பட்டிருந்தாலும் இதே கேள்வியைக் கேட்க முடியும். ஏதாவது ஒரு மொழியில் தான் அருள முடியும். நபிகள் நாயகத்தின் மொழி அரபு மொழியாக இருந்ததால் அரபு மொழியில் அருளப்பட்டது.

திருக்குர்ஆனை இறைவனின் வார்த்தையாக நாம் நம்புகிறோம். அல்லாஹ்வின் வார்த்தை என்று அதை நம்புவதால் அதை ஓத வேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட இடங்களில் அப்படியே ஓத வேண்டும். இவ்வாறு ஓதுவது அரபு மொழிக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம் என்று கருதக் கூடாது. அல்லாஹ்வின் வார்த்தைக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம் என்றே கருத வேண்டும்.

குர்ஆனை ஓத வேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் அரபு மொழியில் அதற்கு நிகரான வேறு வார்த்தைகளை ஓதுவதும் கூடாது என்பதிலிருந்து அரபு மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்பதை அறியலாம்.

குர்ஆனை ஓத வேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட தொழுகை போன்ற வணக்கங்களில் தவிர மற்ற சந்தர்ப்பங்களில் குர்ஆன் தமிழாக்கத்தைப் படிக்கலாம். படிக்க வேண்டும். ஏனெனில் குர்ஆன் விளங்குவதற்காகவும் சிந்திப்பதற்காகவும் வழங்கப்பட்டுள்ளது.

அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.

அல்குர்ஆன் 4:82

அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா?

அல்குர்ஆன் : 47:24

புரியாத மொழியில் ஓதுவதை விட புரிந்த மொழியில் ஓதுவது சிறந்ததல்லவா?  என்று சிலருக்குத் தோன்றலாம். இந்தக் கண்ணோட்டம் சரியானது தான்.

ஆயினும் இதை விட முக்கியமான நோக்கத்திற்காகப் புரியாத மொழியில் எத்தனையோ வார்த்தைகளை நாம் கூறி வருகிறோம். பல்வேறு மொழிகள் பேசக் கூடிய நாட்டில் ஒரே மொழியில் தேசிய கீதம் உருவாக்கப்பட்டுள்ளது.

அந்த மொழி தெரியாதவர்களும், தெரிந்தவர்களும் அதைத் தான் படிக்கின்றனர். நாட்டின் ஒருமைப்பாடு முக்கியம் என்று இதற்குக் காரணம் கூறப்படுகின்றது.

நாட்டின் ஒற்றுமைக்காக, நாட்டு மக்கள் அனைவரும் ஒன்று பட்டுள்ளோம் என்று காட்டுவதற்காக இதை நாம் ஏற்றுக் கொள்கிறோம்.

அகில உலகுக்கும் பொதுவான மார்க்கம் இஸ்லாம். அகில உலகும் ஒரே சீரான முறையில் வணங்கும் போது உலக ஒற்றுமை எடுத்துக் காட்டப்படுகின்றது. நாடு, இனம், மொழி ஆகிய அனைத்து வேறுபாடுகளையும் மறந்து உலக ஒருமைப்பாடு இதன் மூலம் நிலை நிறுத்தப்படுகின்றது.

ஒரு பள்ளிவாசலில் ஒரு இறைவனை ஒரே மாதிரியாக வணங்கும் போது ஏற்படும் உலக ஒற்றுமைக்காக - மொழி புரியவில்லை என்ற குறையை சிறிது நேரம் மறந்து விடுவதில் எந்த நஷ்டமும் ஏற்பட்டு விடாது.

எந்த இலட்சியமும் இல்லாமல் புரியாத மொழியில் உள்ள பாடல்களை மனிதன் ரசிக்கிறான். மிகப் பெரிய இலட்சியத்துக்காக அல்லாஹ்வின் வேதத்தை அருளப்பட்டவாறு  படிப்பதில் எந்தக் குறைவும் ஏற்பட்டு விடாது.

அல்லாஹ்வின் வேதத்தை, அருளப்பட்டவாறு தான் தொழுகையில் ஓத வேண்டும் என்றாலும்

எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மேல் அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்

என்று அல்குர்ஆன் (2:286) கூறுகின்றது.

அரபு மொழி தெரியவில்லையென்றால் அதைக் கற்றுக் கொள்ள வழியில்லையானால் அதற்காக முயன்றும் முடியவில்லையானால் அவர்கள் அரபு மொழியில் தான் ஓத வேண்டும் என்ற கட்டாயமில்லை என்பதை இந்த வசனத்திலிருந்து அறியலாம்.

15.07.2009. 23:13 PM

தொப்பி ஓர் ஆய்வு

அறிமுகம்

தொப்பி அணிவது இஸ்லாத்தின் மிக முக்கியமான அடையாளம் என இந்திய முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் கருதுகின்றனர்.

தொழுகை நோன்பு போன்ற வணக்கம் ஒருவரிடம் இல்லாவிட்டாலோ தாடி போன்ற வலியுறுத்தப்பட்ட சுன்னத் ஒருவரிடம் இல்லாவிட்டாலோ அதைப் பெரிதுபடுத்தாத முஸ்லிம்கள், ஒருவர் தொப்பி அணியத் தவறினால் அதைப் பெரிதுபடுத்துவதைக் காண முடிகிறது. தமிழகத்தில் பல பள்ளிவாசல்களில் தொப்பி அணியாதவர் பள்ளிவாசலில் தொழ அனுமதிக்கப்பட மாட்டார் என்று அறிவிப்பு பலகையே வைத்துள்ளதைக் காண முடிகிறது.

எல்லா நேரத்திலும் தொப்பி அணியாவிட்டாலும் தொழுகை, திருமணம், மற்றும் இஸ்லாமியப் பொது நிகழ்ச்சிகளில் கட்டாயம் தொப்பி அவசியம் என்று கருதப்படுகிறது. சில ஊர்களில் சினிமாவுக்குச் சென்றாலும் சூதாட்டத்தில் இறங்கினாலும் கூட தொப்பி அணிந்தே காட்சி தருவதையும் காண முடிகிறது.

இஸ்லாத்தின் முதன்மையான அடையாளமாக இந்திய முஸ்லிம்களால் கருதப்படும் தொப்பி குறித்து திருக்குர்ஆன் என்ன கூறுகிறது? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்ன கூறுகிறார்கள்? தொப்பிக்கு இந்திய முஸ்லிம்கள் கொடுக்கும் முக்கியத்துவத்துக்கு ஆதாரம் உள்ளதா? என்பதை முஸ்லிம்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த நூலை வெளியிடுகிறோம்.

தொப்பி அவசியம் எனக் கூறுவோரும் அவசியம் இல்லை எனக் கூறுவோரும் தமது வாதத்தை நிலை நாட்ட எடுத்து வைக்கும் ஆதாரங்கள் யாவை? இவற்றில் எந்தக் கருத்து சரியானது? என்பதை முழுமையாக விளக்கும் ஆய்வு நூலாக இது அமைந்துள்ளது.

தொப்பி குறித்து இஸ்லாத்தின் நிலைபாடு என்ன என்பதை தக்க சான்றுகளுடன் அறிந்து கொள்ள விரும்புவோருக்கு இது போதுமான நூலாகும் என்பது எங்களின் நம்பிக்கை.

நபீலா பதிப்பகம்

தொப்பி ஓர் ஆய்வு

முஸ்லிம்கள் என்று காட்டிக் கொள்வதற்கு தொப்பி முக்கிய அடையாளமாக கருதப்பட்டு வருகிறது. தொப்பியே இஸ்லாத்தின் அடையாளம் என்றும் பெரும்பாலான முஸ்லிம்கள் நம்பிச் செயல்படுத்தி வருகின்றனர். இஸ்லாத்தின் ஏனைய கடமைகளை விட தொப்பி முஸ்லிம்களிடம் முதலிடம் பெற்று வருகிறது.

முஸ்லிம்கள் நடத்தும் நிழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் முஸ்லிமல்லாத அரசியல் தலைவர்களும் தொப்பி அணிந்து முஸ்லிம்களைக் கவர முயற்சிப்பதையும் நாம் பார்க்கிறோம். முஸ்லிமல்லாதவர்கள் கூட தொப்பி தான் இஸ்லாத்தின் அடையாளம் என்று கருதும் அளவுக்கு இந்தக் கருத்து ஆழமாக வேரூன்றி விட்டது.

குறிப்பாக தொழுகை நேரங்களில் ஒருவரிடம் தொப்பி இல்லையென்றால் அவர் தொழுவதற்குத் தகுதியற்றவர் என்று பொது மக்களும் ஆலிம்களும் எண்ணுகின்றனர். எனவே பல பள்ளிவாசல்களில் தொப்பி அணியாமல் தொழக் கூடாது!' என்ற கடுமையான வாசகம் பள்ளிவாசலின் முகப்பில் எழுதப்பட்டுள்ளது.

மேலும் சில பள்ளிவாசல்களில் ரெடிமேட் தொப்பிகள் வாங்கி வைத்துள்ளனர். இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கும் தொப்பிக்கு அல்லாஹ் முக்கியத்துவம் கொடுத்துள்ளானா?நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்களா? இதற்கு ஆதாரங்கள் உண்டா? என்பதைக் காண்போம்.

திருக்குர்ஆனில் ஆதாரம் இல்லை.

இஸ்லாத்தின் மிக முக்கியமான கடமையாகக் கருதப்படும் தொப்பி அணிவது பற்றி திருக்குர்ஆன் என்ன கூறுகிறது? தொப்பி அணிவதை வலியுறுத்தியோ ஆர்வமூட்டியோ திருக்குர்ஆனில் எந்த இடத்திலும் கூறப்படவில்லை என்பது தான் இக்கேள்விக்கான விடையாகும்.

தொப்பியை வலியுறுத்துவது ஒரு புறமிருக்கட்டும். தொப்பியைக் குறிப்பதற்கு அரபு மொழியில் பல சொற்கள் உள்ளன. அந்தச் சொற்களில் ஒரு சொல் கூட குர்ஆனில் கூறப்படவில்லை. தொப்பி என்ற சொல்லே குர்ஆனில் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

தொப்பி அணிவது தான் இஸ்லாத்தின் சின்னம் என்றிருந்தால் அது பற்றி அல்லாஹ் தன்னுடைய வேதத்தில் சொல்லாமல் இருக்க மாட்டான்.

நபிவழியில் ஆதாரங்கள் உண்டா

சாதாரணமாக தொப்பி அணியாவிட்டாலும் தொழுகையின் போது தொப்பி அணிய வேண்டும் என்று தான் அதிகமான முஸ்லிம்கள் நம்புகின்றனர். ஆனால் தொழுகையின் போது தொப்பி அவசியம் எனக் கூறும் ஒரு நபி மொழியும் இல்லை. தொழுகையின் போதோ தொழுகை அல்லாத மற்ற சந்தர்ப்பங்களிலோ தொப்பி அணிவது அவசியம் என்றோ அல்லது விரும்பத்தக்கது என்றோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாகவும் எந்தச் சான்றும் இல்லை.

இன்னும் சொல்வதாக இருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையிலும் மற்ற சந்தர்ப்பங்களிலும் தொப்பி அணியாமல் இருந்துள்ளனர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. நபிகள் நாயகம் ஸல் அவர்கள் முன்னிலையில் நபித்தோழர் பலர் தொப்பி இல்லாமல் காட்சி தந்துள்ளனர் என்பதற்கும் சான்றுகள் உள்ளன.

صحيح البخاري 275 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، قَالَ: أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: أُقِيمَتِ الصَّلاَةُ وَعُدِّلَتِ الصُّفُوفُ قِيَامًا، فَخَرَجَ إِلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا قَامَ فِي مُصَلَّاهُ، ذَكَرَ أَنَّهُ جُنُبٌ، فَقَالَ لَنَا: «مَكَانَكُمْ» ثُمَّ رَجَعَ فَاغْتَسَلَ، ثُمَّ خَرَجَ إِلَيْنَا وَرَأْسُهُ يَقْطُرُ، فَكَبَّرَ فَصَلَّيْنَا مَعَهُ

(ஒரு நாள்) தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டது. வரிசைகள் சரி செய்யப்பட்டன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டிலிருந்து வெளியே வந்தார்கள். தொழுகைக்காக அவர்களுடைய இடத்தில் போய் நின்றதும் தமக்கு குளிப்பு கடமையானது நினைவுக்கு வந்ததால் எங்களைப் பார்த்து உங்களுடைய இடத்தில் நில்லுங்கள்'' என்று சொல்லி விட்டு (வீட்டிற்குள்) சென்றார்கள். பின்னர் அவர்கள் குளித்து விட்டுத் தலையில் ஈரம் சொட்டச் சொட்ட வந்தார்கள். தக்பீர் சொல்லி தொழுகை நடத்தினார்கள். நாங்கள் அவர்களுடன் தொழுதோம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 275

புகாரியின் 571ஆவது ஹதீஸில்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீர் சொட்ட, தம் கையைத் தலையில் வைத்தவர்களாகப் புறப்பட்டதை இன்று பார்ப்பது போல் உள்ளது'' என்று இடம் பெற்றுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வீட்டில் குளித்துவிட்டு வரும் போது அவர்களின் தலையில் நீர் சொட்டிக் கொண்டிருந்தது. மேலும் அவர்களின் கையை தலையில் வைத்தவர்களாகவும் வந்துள்ளார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பி அணிந்திருந்தால் தம் கையைத் தொப்பியின் மீது வைத்துக் கொண்டு வந்தார்கள் என்று நபித்தோழர் குறிப்பிட்டிருப்பார்கள். அவ்வாறு கூறாததால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெறும் தலையுடன் தான் வந்து தொழுவித்துள்ளார்கள் என்பதை அறியலாம். மேலும் யாரும் தலையில் நீர் வடிய தொப்பியணிந்து கொண்டு வர மாட்டார்கள் என்பதும் கவனிக்கத் தக்கது!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பி அணியாமல் தலையைத் திறந்த நிலையில் தான் பெரும்பாலும் இருந்துள்ளர்கள் என்பதைப் பின்வரும் நபிமொழிகள் மூலம் நாம் அறியலாம்.

سنن النسائي 5060 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَمَّارٍ، قَالَ: حَدَّثَنَا الْمُعَافَى، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَقَ، عَنْ الْبَرَاءِ قَالَ: «مَا رَأَيْتُ أَحَدًا أَحْسَنَ فِي حُلَّةٍ حَمْرَاءَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَجُمَّتُهُ تَضْرِبُ مَنْكِبَيْهِ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலையை வாரி இரண்டு சிவப்பு நிற ஆடைகளை அணிந்திருந்தார்கள். அப்போது அவர்களை விட அழகான ஒருவரை அதற்கு முன்பும் பின்பும் நான் பார்த்ததில்லை.

அறிவிப்பவர்: பரா (ரலி)

நூல்: நஸயீ 5219

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்போதும் தொப்பி அணிந்திருந்தால் அவர்கள் தலை வாரி இருக்கிறார்களா? இல்லையா? என்பதை அறிய முடியாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலை வாரி இருந்தார்கள் என்ற வாசகம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தலை திறந்த நிலையில் இருந்தது என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

صحيح البخاري 5905 - حَدَّثَنِي عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، قَالَ: سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ شَعَرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «كَانَ شَعَرُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجِلًا ، لَيْسَ بِالسَّبِطِ وَلاَ الجَعْدِ، بَيْنَ أُذُنَيْهِ وَعَاتِقِهِ»

நான் அனஸ் (ரலி) அவர்களிடம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தலைமுடி எப்படி இருந்தது?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அவர்களது தலைமுடி அலையலையானதாக இருந்தது. சுருள் முடியாகவும் இல்லை; படிந்த முடியாகவும் இல்லை. அது அவர்களது காது மடல்களுக்கும் தோள்களுக்கும் இடையே தொங்கிக் கொண்டிருந்தது'' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: கதாதா

நூல்: முஸ்லிம் 4666

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தலைமுடி அலையலையானதாக இருந்தது; சுருள் முடியாகவும் இல்லை, படிந்த முடியாகவும் இல்லை என்று கூற வேண்டுமானால் தொப்பி அணியாமல் தலை திறந்த நிலையில் இருந்தால் தான் மற்றவர்களால் கூற முடியும்.

صحيح مسلم 109 - (2344) وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عُبَيْدُ اللهِ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ سِمَاكٍ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ سَمُرَةَ، يَقُولُ: " كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ شَمِطَ مُقَدَّمُ رَأْسِهِ وَلِحْيَتِهِ، وَكَانَ إِذَا ادَّهَنَ لَمْ يَتَبَيَّنْ، وَإِذَا شَعِثَ رَأْسُهُ تَبَيَّنَ، وَكَانَ كَثِيرَ شَعْرِ اللِّحْيَةِ، فَقَالَ: رَجُلٌ وَجْهُهُ مِثْلُ السَّيْفِ؟ قَالَ: لَا، بَلْ كَانَ مِثْلَ الشَّمْسِ وَالْقَمَرِ، وَكَانَ مُسْتَدِيرًا وَرَأَيْتُ الْخَاتَمَ عِنْدَ كَتِفِهِ مِثْلَ بَيْضَةِ الْحَمَامَةِ يُشْبِهُ جَسَدَهُ "

ஜாபிர் பின் ஸமுரா (ரலி) அவர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நரை முடி பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தலையில் எண்ணெய் தேய்த்திருந்தால் அவர்களது தலையிலிருந்து ஒரு சில நரை முடி கூடத் தென்படாது; அவர்கள் எண்ணெய் தேய்த்திருக்காவிட்டால் சில நரைமுடிகள் தென்படும்'' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: ஸிமாக் பின் ஹர்ப்

நூல்: முஸ்லிம் 4680

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் எண்ணெய் தேய்த்திருக்கும் போது தெய்க்காமல் இருந்த போதும் தலையை தொப்பியால் மறைக்காமல் இருந்துள்ளனர் என்பது இதில் இருந்து தெரிகிறது.

صحيح البخاري مشكول (4/ 187) 3548 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكُ  بْنُ أَنَسٍ، عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّهُ سَمِعَهُ يَقُولُ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَ بِالطَّوِيلِ البَائِنِ، وَلاَ بِالقَصِيرِ، وَلاَ بِالأَبْيَضِ الأَمْهَقِ، وَلَيْسَ بِالْآدَمِ، وَلَيْسَ بِالْجَعْدِ القَطَطِ، وَلاَ بِالسَّبْطِ، بَعَثَهُ اللَّهُ عَلَى رَأْسِ أَرْبَعِينَ سَنَةً، فَأَقَامَ بِمَكَّةَ عَشْرَ سِنِينَ، وَبِالْمَدِينَةِ عَشْرَ سِنِينَ، فَتَوَفَّاهُ اللَّهُ وَلَيْسَ فِي رَأْسِهِ وَلِحْيَتِهِ عِشْرُونَ شَعْرَةً بَيْضَاءَ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய தலையிலும் தாடியிலும் இருபது வெள்ளை முடிகள் கூட இல்லாத நிலையில் அல்லாஹ் அவர்களை இறக்கச் செய்தான்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 3548

தாடியில் உள்ள நரை முடி எத்தனை என்று சொல்வதற்கு ஏற்றவாறு எவ்வாறு தாடி மறைக்கப்படாமல் இருந்ததோ அப்படித்தான் தலையும் மறைக்கப்படாமல் இருந்துள்ளது என்பதை இதில் இருந்து அறியலாம்.

صحيح البخاري 3558 - حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ يَسْدِلُ شَعَرَهُ، وَكَانَ المُشْرِكُونَ يَفْرُقُونَ رُءُوسَهُمْ، فَكَانَ أَهْلُ الكِتَابِ يَسْدِلُونَ رُءُوسَهُمْ، وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحِبُّ مُوَافَقَةَ أَهْلِ الكِتَابِ فِيمَا لَمْ يُؤْمَرْ فِيهِ بِشَيْءٍ، ثُمَّ فَرَقَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأْسَهُ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது முடியை (நெற்றியின் மீது) தொங்க விடும் வழக்கமுடையவர்களாக இருந்தனர். இணை வைப்பவர்ர்கள் தங்கள் தலை முடியைப் பிரித்து (நெற்றியில் விழ விடாமல் இரு பக்கமும்) தொங்க விட்டு வந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த விஷயங்களில் தமக்கு இறைக் கட்டளை எதுவும் இடப்படவில்லையோ, அந்த விஷயங்களில் வேதக்காரர்களுடன் ஒத்துப் போக விரும்பி வந்தார்கள். பிறகு, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் (தலை) முடியை (இரு பக்கங்களிலும்) பிரித்து (வகிடெடுத்துக்) கொண்டார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 3558

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எத்தனை நரை முடிகள் இருந்தன? எப்படி வகிடு எடுத்தார்கள்? என்றெல்லாம் அறிவிக்க வேண்டுமானால் திறந்த நிலையில் அவர்களின் தலை இருந்திருக்க வேண்டும் என்பதைச் சாதாரணமாக நாம் அறிந்து கொள்ளலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டுமல்லாமல் நபித் தோழர்களும் கூட தலையை மறைக்காதவர்களாகப் பெரும்பாலும் காட்சியளித்துள்ளார்கள் என்பதற்கும் சான்றுகள் உள்ளன.

سنن النسائي 5052 - أَخْبَرَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، أَخُو قَبِيصَةَ، وَمُعَاوِيَةُ بْنُ هِشَامٍ، قَالَا: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنَا عَاصِمُ بْنُ كُلَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ قَالَ: أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلِي شَعْرٌ، فَقَالَ ذُبَابٌ:، فَظَنَنْتُ أَنَّهُ يَعْنِينِي، فَأَخَذْتُ مِنْ شَعْرِي، ثُمَّ أَتَيْتُهُ، فَقَالَ لِي: «لَمْ أَعْنِكَ وَهَذَا أَحْسَنُ»

நான் நீண்ட முடியுடையவனாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது ஆட்சேபணை செய்வது போன்ற ஒரு சொல்லைக் கூறினார்கள். உடனே நான் சென்று என் முடியைக் கத்தரித்து விட்டுச் சென்றேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நான் உன்னைச் சொல்லவில்லை என்றாலும் இது (முன்பை விட) அழகாக உள்ளது'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)

நூல்கள்: நஸாயீ 4980, அபூதாவூத் 3658

முக்கியமான மார்க்க அறிஞர் முன்னால் செல்லும் பொது தொப்பி போட்டுக் கொண்டு போக வேண்டும் என்று மக்கள் நம்புகிறார்கள். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னிலையில் ஒரு நபித்தோழர் தலையைத் திறந்த நிலையில் இருந்துள்ளார். முடியைக் குறைப்பதற்கு முன்னாலும் குறைத்த பிறகும் தலை திறந்தவராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னிலையில் அவர் வந்த போதும் தொப்பி போட்டுக் கொண்டு வரக்கூடாதா என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை.

سنن النسائي 5236 - أَخْبَرَنَا عَلِيُّ بْنُ خَشْرَمٍ، قَالَ: أَنْبَأَنَا عِيسَى، عَنْ الْأَوْزَاعِيِّ، عَنْ حَسَّانَ بْنِ عَطِيَّةَ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّهُ قَالَ: أَتَانَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَأَى رَجُلًا ثَائِرَ الرَّأْسِ فَقَالَ: «أَمَا يَجِدُ هَذَا مَا يُسَكِّنُ بِهِ شَعْرَهُ»

தலைவிரி கோலத்துடன் ஒரு மனிதரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டார்கள். அப்போது, இவர் தமது முடியைப் படிய வைக்கும் ஒரு பொருளைப் பெற்றுக் கொள்ளவில்லையா?'' என்று கேட்டார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்கள்: நஸாயீ 5141, அபூதாவூத் 3540

தொப்பி தான் முக்கியமானது என்று இருந்தால் உனக்கு ஒரு தொப்பி கிடைக்கவில்லையா என்று அவர்கள் கேட்டிருப்பார்கள்.

صحيح مسلم مشكول 79 - (2102) وحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَخْبَرَنَا عَبْدُ اللهِ بْنُ وَهْبٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، قَالَ: أُتِيَ بِأَبِي قُحَافَةَ يَوْمَ فَتْحِ مَكَّةَ وَرَأْسُهُ وَلِحْيَتُهُ كَالثَّغَامَةِ بَيَاضًا، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «غَيِّرُوا هَذَا بِشَيْءٍ، وَاجْتَنِبُوا السَّوَادَ»

மக்கா வெற்றி நாளில் (அபூபக்ரின் தந்தை) அபூகுஹாஃபா, (நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம்) கொண்டு வரப்பட்டார். அவரது தலைமுடியும் தாடியும் தும்பைப் பூவைப் போன்று வெள்ளை நிறத்தில் இருந்தன. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இ(ந்த வெள்ளை நிறத்)தை ஏதேனும் (சாயம்) கொண்டு மாற்றுங்கள். கறுப்பு நிறத்தைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 4270

தலைவிரி கோலமாக வந்தது, தலை வாராமல் வந்தது, வெள்ளை முடியுடன் வந்தது என்று பல நபித் தோழர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்கள் முன்னால் காட்சியளித்த போது எண்ணெய் தேய்த்து தலை வாரச் சொன்னார்களே தவிர, தலைக்குத் தொப்பி அணியுமாறு கூறவில்லை என்பதைக் கவனியுங்கள்.

سنن أبي داود 691 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الزُّهْرِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، قَالَ: رَأَيْتُ شَرِيكًا «صَلَّى بِنَا فِي جَنَازَةٍ الْعَصْرَ فَوَضَعَ قَلَنْسُوَتَهُ بَيْنَ يَدَيْهِ» يَعْنِي فِي فَرِيضَةٍ حَضَرَتْ

ஷரீக் அவர்கள் ஒரு ஜனாஸா தொழுகை நடத்தும் போது தமது தொப்பியைக் கழற்றி முன்னால் வைத்துக் கொண்டு தொழுகை நடத்தினார்கள் என்று கூறப்படுகின்றது.

நூல்: அபூதாவூத் 592

தொழுகைக்கு வெளியே அணிந்திருந்த தொப்பியை தொழுகையின் போது கழற்றி வைத்திருக்கின்றார் என்பதிலிருந்து அன்றைக்குத் தொப்பி தொழுகையுடன் சம்மந்தமில்லாத சாதாரண ஆடையாக இருந்துள்ளது என்பதை அறியலாம்.

صحيح البخاري 352 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، قَالَ: حَدَّثَنَا عَاصِمُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنِي وَاقِدُ بْنُ مُحَمَّدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ المُنْكَدِرِ، قَالَ: «صَلَّى جَابِرٌ فِي إِزَارٍ قَدْ عَقَدَهُ مِنْ قِبَلِ قَفَاهُ وَثِيَابُهُ مَوْضُوعَةٌ عَلَى المِشْجَبِ»، قَالَ لَهُ قَائِلٌ: تُصَلِّي فِي إِزَارٍ وَاحِدٍ؟، فَقَالَ: «إِنَّمَا صَنَعْتُ ذَلِكَ لِيَرَانِي أَحْمَقُ مِثْلُكَ وَأَيُّنَا كَانَ لَهُ ثَوْبَانِ عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»

ஜாபிர் (ரலி) அவர்கள் தமது கீழாடையை (பிடரி வரை தூக்கிக்) கட்டிக் கொண்டு தொழுதார்கள். அவர்களது உபரியான ஆடை மரச் சட்டத்தின் மீது வைக்கப்பட்டிருந்தது. அப்போது ஒருவர், ஒரு ஆடையுடனா தொழுகின்றீர்கள்?'' என்று கேட்டார். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், உன் போன்ற அறிவிலிகள் என்னைப் பார்க்க வேண்டுமென்றே இவ்வாறு செய்தேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் எங்களில் எவரிடம் இரண்டு ஆடைகள் இருந்தன?'' என்று விடை யளித்தார்கள்.

நூல்: புகாரி 352

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் தொப்பி போன்ற உபரி ஆடைகள் பலரிடம் இருந்ததில்லை என்பதற்கும், ஆண்கள் தலையை மறைப்பது அவசியம் இல்லை என்பதற்கும் இது மேலதிக ஆதாரமாக அமைந்துள்ளது.

صحيح البخاري 353 - حَدَّثَنَا مُطَرِّفٌ أَبُو مُصْعَبٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي المَوَالِي، عَنْ مُحَمَّدِ بْنِ المُنْكَدِرِ، قَالَ: رَأَيْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يُصَلِّي فِي ثَوْبٍ وَاحِدٍ، وَقَالَ: «رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي فِي ثَوْبٍ»

ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் ஒரேயொரு ஆடையை அணிந்து தொழுதார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரேயொரு ஆடை அணிந்து தொழுததை நான் பார்த்துள்ளேன் எனவும் கூறினார்கள்.

நூல்: புகாரி 353

இடுப்புக்கு மேல் ஒரு ஆடை, இடுப்புக்குக் கீழ் ஒரு ஆடை என இரண்டு ஆடைகள் அணியாமல், இரண்டுக்கும் சேர்த்து ஒரு ஆடை மட்டும் அணிந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுதுள்ளார்கள் என்பதிலிருந்து அவர்கள் தலையை மறைக்காமல் தொழுதுள்ளது உறுதியாகின்றது.

பழக்க வழக்கம் என்ற அடிப்படையில் விரும்பியவர் தொப்பியை அணிந்து கொண்டால் தவறில்லை. தொழுகையின் போதோ, தொழுகைக்கு வெளியிலோ அவ்வாறு ஒருவர் அணிந்து கொண்டால் அதைத் தடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை.

அது போல் ஒருவர் தொழுகையின் போதோ, தொழுகைக்கு வெளியிலோ தொப்பி அணியாமல் இருந்தால் அவரைத் தொப்பி அணியுமாறு கட்டாயப்படுத்துவதற்கும்,ஆர்வமூட்டுவதற்கும் யாருக்கும் அதிகாரம் இல்லை.

தலையை மறைத்துக் கொள்ள உபரியான ஆடை இருந்தும் வேண்டுமென்றே மறைக்காமல் நபித்தோழர்கள் தொழுதுள்ளனர் என்பதற்கும் ஆதாரங்கள் கிடைக்கின்றன.

தொப்பி அணியுமாறு அல்லாஹ்வோ அவனது தூதரோ கூறியதற்கு ஆதாரம் ஏதும் இல்லாததால் தொப்பி அணிவது மார்க்க சம்மந்தப்பட்டது அல்ல என்பதைச் சந்தேகமற அறியலாம்.

தொப்பி அவசியம் என்போரின் ஆதாரங்கள்

தொப்பி அணிவது அவசியம் என்ற கருத்துடையவர்கள் சில ஆதாரங்களை எடுத்துக் காட்டுகிறார்கள். அவற்றுள் சில ஆதாரங்கள் பலவீனமானவையாக உள்ளன.

மற்றும் சில ஆதாரங்கள் அவர்களின் கருத்தை நிலைநாட்டும் வகையில் இல்லை.

இன்னும் சில ஆதாரங்கள் அவர்களின் வாதத்துக்கு எதிராக உள்ளன. அவர்களின் ஆதாரங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

தொப்பி அணிவது அவசியம் என்பதற்கு அவர்கள் பின்வரும் ஹதீஸை தங்களின் ஆதாரமாக முன்வைக்கிறார்கள்

سنن الترمذي 1644 - حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ عَطَاءِ بْنِ دِينَارٍ، عَنْ أَبِي يَزِيدَ الخَوْلَانِيِّ، أَنَّهُ سَمِعَ فَضَالَةَ بْنَ عُبَيْدٍ، يَقُولُ: سَمِعْتُ عُمَرَ بْنَ الخَطَّابِ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " الشُّهَدَاءُ أَرْبَعَةٌ: رَجُلٌ مُؤْمِنٌ جَيِّدُ الإِيمَانِ، لَقِيَ العَدُوَّ، فَصَدَقَ اللَّهَ حَتَّى قُتِلَ، فَذَلِكَ الَّذِي يَرْفَعُ النَّاسُ إِلَيْهِ أَعْيُنَهُمْ يَوْمَ القِيَامَةِ هَكَذَا " وَرَفَعَ رَأْسَهُ حَتَّى وَقَعَتْ قَلَنْسُوَتُهُ، قَالَ: فَمَا أَدْرِي أَقَلَنْسُوَةَ عُمَرَ أَرَادَ أَمْ قَلَنْسُوَةَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: «وَرَجُلٌ مُؤْمِنٌ جَيِّدُ الإِيمَانِ لَقِيَ العَدُوَّ فَكَأَنَّمَا ضُرِبَ جِلْدُهُ بِشَوْكِ طَلْحٍ مِنَ الجُبْنِ أَتَاهُ سَهْمٌ غَرْبٌ فَقَتَلَهُ فَهُوَ فِي الدَّرَجَةِ [ص:178] الثَّانِيَةِ، وَرَجُلٌ مُؤْمِنٌ خَلَطَ عَمَلًا صَالِحًا وَآخَرَ سَيِّئًا لَقِيَ العَدُوَّ فَصَدَقَ اللَّهَ حَتَّى قُتِلَ فَذَلِكَ فِي الدَّرَجَةِ الثَّالِثَةِ، وَرَجُلٌ مُؤْمِنٌ أَسْرَفَ عَلَى نَفْسِهِ لَقِيَ العَدُوَّ فَصَدَقَ اللَّهَ حَتَّى قُتِلَ فَذَلِكَ فِي الدَّرَجَةِ الرَّابِعَةِ»: هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ عَطَاءِ بْنِ دِينَارٍ. سَمِعْتُ مُحَمَّدًا يَقُولُ: قَدْ رَوَى سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ هَذَا الحَدِيثَ، عَنْ عَطَاءِ بْنِ دِينَارٍ، وَقَالَ: عَنْ أَشْيَاخٍ مِنْ خَوْلَانَ، وَلَمْ يَذْكُرْ فِيهِ عَنْ أَبِي يَزِيدَ. وقَالَ عَطَاءُ بْنُ دِينَارٍ: «لَيْسَ بِهِ بَأْسٌ»

....அல்லாஹ்வின் பாதையில் உயிர் தியாகம் செய்தவருக்கு கியாமத் நாளில் கிடைக்கும் பதவிகளை மக்கள் தம் தலைகளை உயர்த்தி (அண்ணாந்து) பார்ப்பார்கள்'' என்று கூறிய அவர்கள் தமது தலையை உயர்த்திக் காட்டினார்கள். அப்போது அவர்களின் தொப்பி கீழே விழுந்தது... அவர்களின் தொப்பி என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தொப்பியா? அல்லது உமர் (ரலி) அவர்களின் தொப்பியா? என்பது எனக்குத் தெரியவில்லை என்று அறிவிப்பாளர் ஐயத்திற்கிடமான வார்த்தைகளால் அறிவித்துள்ளார்.

திர்மிதீ 1568, அஹ்மத் 145 ஆகிய நூற்களில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் இரண்டு பலவீனங்கள் உள்ளன. சொர்க்கத்தில் கிடைக்கும் உயர்ந்த பதவிகளை மக்கள் அண்ணாந்து பார்ப்பார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவ்வாறு கூறும் போது அவர்கள் அண்ணாந்து பார்ப்பதை செயல் மூலம் காட்டினார்கள். இதை உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் போது அவர்களும் தமது தலையை உயர்த்தி அண்ணாந்து பார்த்து இப்படி அண்ணாந்து பார்ப்பார்கள் என்று கூறினார்கள்.

இப்படி அண்ணாந்து பார்ப்பதைச் செயல் மூலம் காட்டிய போது அவர்களின் தொப்பி கீழே விழுந்தது என்று அடுத்த அறிவிப்பாளர் கூறுகிறார். அவர்களின் தொப்பி விழுந்தது என்று கூறியது உமர் (ரலி) அவர்களின் தொப்பி கீழே விழுந்தது என்ற கருத்தில் கூறினாரா?அல்லது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தொப்பி கீழே விழுந்தது என்ற கருத்தில் கூறினாரா? என்பதை அறிவிப்பாளர் தெளிவுபடுத்தவில்லை என்று அவருக்கு அடுத்த அறிவிப்பாளர் கூறுகிறார். இது அந்த ஹதீஸின் வாசகத்திலேயே கூறப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பி அணிந்ததாக எடுத்துக் காட்டப்படும் ஹதீஸ் இந்த ஒன்று மட்டுமே. இதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பி அணிந்தது உறுதிப்படுத்தப்படவில்லை.

இது இந்தச் செய்தியில் காணப்படும் முதல் பலவீனம். இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள் குறித்தும் குறைபாடுகள் உள்ளதால் இந்தச் செய்தி மொத்தமாக நிராகரிக்கப்படும் நிலையில் இருப்பது இதில் உள்ள இரண்டாவது பலவீனமாகும். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூயஸீத் அல்கவ்லானி என்பார் யாரென அறியப்படாதவர் ஆவார். மேலும் இப்னு லஹ்யஆ என்ற அறிவிப்பாளரும் இதில் இடம் பெறுகின்றார். இவர் பலவீனமானவர் ஆவார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பி அணிந்தது உறுதி இல்லாவிட்டாலும் உமர் (ரலி) தொப்பி அணிந்திருக்கலாம் என்று முடிவு எடுப்பதைக் கூட மேற்கண்ட பலவீனங்கள் தடுத்து விடுகின்றன. இந்தச் செய்தி ஒட்டு மொத்தமாக பலவீனமாக உள்ளதால் இதை வைத்து எந்த முடிவும் எடுக்க முடியாது என்பதில் சந்தேகம் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பி அணிந்திருந்தனர் என்று கூறும் எந்த ஆதாரப்பூர்வமான செய்தியும் இல்லை என்பதை நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நரை முடிகளைக் கூட எண்ணிச் சொன்ன நபித் தோழர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பி அணிந்ததாகக் கூறவில்லை என்றால் அவர்கள் தமது வாழ்நாளில் ஒரு தடவை கூட தொப்பி அணிந்திருக்கவில்லை என்பது உறுதி.

سنن الترمذي 1784 - حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَبِيعَةَ، عَنْ أَبِي الحَسَنِ العَسْقَلَانِيِّ، عَنْ أَبِي جَعْفَرِ بْنِ مُحَمَّدِ بْنِ رُكَانَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ رُكَانَةَ صَارَعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَرَعَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ رُكَانَةُ: [ص:248] سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ فَرْقَ مَا بَيْنَنَا وَبَيْنَ المُشْرِكِينَ العَمَائِمُ عَلَى القَلَانِسِ»: هَذَا حَدِيثٌ غَرِيبٌ وَإِسْنَادُهُ لَيْسَ بِالقَائِمِ، وَلَا نَعْرِفُ أَبَا الحَسَنِ العَسْقَلَانِيَّ، وَلَا ابْنَ رُكَانَةَ

நமக்கும் இணை வைப்பவர்களுக்கும் மத்தியில் உள்ள வேறுபாடு, தொப்பிகளின் மீது தலைப்பாகைகளை அணிவதாகும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ருக்கானா (ரலி)

நூல்கள்: திர்மிதீ 1706, அபூதாவூத் 3556

இந்த ஹதீஸைப் பதிவு செய்த இமாம்களில் ஒருவரான திர்மிதீ அவர்கள் இந்தச் செய்தியின் தரத்தை அதன் கீழே இவ்வாறு பதிவு செய்துள்ளார்கள்: இதன் அறிவிப்பாளர் தொடர் வலிமையானதல்ல. இதில் இடம் பெறும் நான்காவது அறிவிப்பாளர் அபுல் ஹஸன் அல்அஸ்கலானீ என்பவரையும் இரண்டாவது அறிவிப்பாளர் (முஹம்மத் பின் ருக்கானா என்ற) ருக்கானாவின் மகனையும் நாம் யாரென அறிய மாட்டோம்'' என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

ஹதீஸ் கலையின் மற்ற அறிஞர்களும் இவர்கள் யார் என்ற விபரத்தைக் கூறவில்லை.

யார் என்றே தெரியாத இரண்டு அறிவிப்பாளர்கள் வழியாக இது அறிவிக்கப்படுவதால் இந்தச் செய்தி பலவீனமானது என்பதால் இந்தச் செய்தியையும் ஆதாரமாகக் கொள்ள முடியாது.

மேலும் இந்தச் செய்தியை ஆதாரமாகக் காட்டுபவர்கள், இதை முழுமையாகவும் செயல்படுத்துவதில்லை. இந்தச் செய்தியின்படி தொப்பி அணிந்து அதன் மேல் தலைப்பாகையும் அணிய வேண்டும். இது தான் இந்த ஹதீஸின்படி முஸ்லிம்களின் அடையாளம். இதை யாரும் செயல்படுத்துவதில்லை. வலியுறுத்துவதும் இல்லை. தொப்பி அணிவதை வலியுறுத்துவோர் வெறும் தொப்பி மட்டும் அணிந்தால் போதும் என்றே கூறுகின்றனர். ஆனால் தொப்பி மட்டும் அணிபவர்கள் இணை வைப்பவர்களுக்கான அடையாளத்தைக் கொண்டவர்கள் என்பது தான் இந்த ஹதீஸின் கருத்தாக உள்ளது.

இது பலவீனமான ஹதீஸாக இருப்பதுடன் தொப்பி அணிவதற்கு எதிரான ஆதாரமாகவே உள்ளது.

பின்வரும் செய்தியையும் தங்களின் ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பிக்கு மேல் தலைப்பாகை அணிவார்கள். (சில நேரங்களில்) தலைப்பாகை இல்லாமல் தொப்பி மட்டும் அணிவார்கள். (சில நேரங்களில்) தொப்பி இல்லாமல் தலைப்பாகை மட்டும் அணிவார்கள்.

நூல்: ஸாதுல் மஆத், பாகம்: 1, பக்கம்: 130

ஸாதுல் மஆத் எனும் மேற்கண்ட நூலாசிரியர் இப்னுல் கையும் ஆவார். இவர் ஹதீஸ்களைத் தொகுத்த இமாம்களில் ஒருவர் அல்ல. இவர் ஹிஜ்ரி 691-751 ஆண்டில் வாழ்ந்தவர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்பான ஒரு செய்தியை இவர் குறிப்பிடுவதாக இருந்தால் அந்தச் செய்திக்கான ஹதீஸ் நூலை இவர் குறிப்பிட வேண்டும். அப்படி எந்த நூலையும் குறிப்பிடாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பி அணிந்தார்கள் என்று இவர் கூறுவதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.

மேலும் இவர் கூறுவது போல் ஹதீஸ் நூல்களில் எந்தச் செய்தியும் இல்லை என்பதே உண்மை.

صحيح البخاري 134 - حَدَّثَنَا آدَمُ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ رَجُلًا سَأَلَهُ: مَا يَلْبَسُ المُحْرِمُ؟ فَقَالَ: «لاَ يَلْبَسُ القَمِيصَ، وَلاَ العِمَامَةَ، وَلاَ السَّرَاوِيلَ، وَلاَ البُرْنُسَ، وَلاَ ثَوْبًا مَسَّهُ الوَرْسُ أَوِ الزَّعْفَرَانُ، فَإِنْ لَمْ يَجِدِ النَّعْلَيْنِ فَلْيَلْبَسِ الخُفَّيْنِ، وَلْيَقْطَعْهُمَا حَتَّى يَكُونَا تَحْتَ الكَعْبَيْنِ»

அல்லாஹ்வின் தூதரே! இஹ்ராம் கட்டியவர் எந்த ஆடையை அணிய வேண்டும்?''என்று ஒருவர் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இஹ்ராம் கட்டியவர் சட்டை அணியக் கூடாது. முழுக்கால் சட்டை அணியக் கூடாது. புர்னுஸ் அணியக் கூடாது. அவருக்குக் காலணிகள் கிடைக்காவிட்டால் அவர் காலுறைகளைக் கணுக்கால்களுக்குக் கீழே இருக்கும்படி அணிந்து கொள்ளட்டும்'' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 134, 36 6, 1838, 1842, 5794, 5803, 5805, 5806

இந்தச் செய்தியில் இடம் பெறும் புர்னுஸ்' என்ற சொல்லுக்கு தொப்பி என்று மொழி பெயர்த்து, இந்த ஹதீஸ் தொப்பி அணிவதற்கு ஆதாரம் என்று இவர்கள் கூறுகின்றனர். அதாவது இஹ்ராம் கட்டியவர் தொப்பியை அணியக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதிலிருந்து இஹ்ராம் கட்டாதவர் தொப்பி அணியலாம் எனவும், நபி (ஸல்) அவர்கள் காலத்தில் தொப்பி இருந்துள்ளதையும் விளங்கலாம்' எனவும் இவர்கள் கூறுகின்றனர்.

முதலில் புர்னுஸ்' என்ற சொல்லுக்கு என்ன பொருள் என்பதைப் பார்க்கலாம்.

لسان العرب ( برنس ) البُرْنُس كل ثوب رأْسه منه مُلْتَزِقٌ به دُرَّاعَةً كان أَو مِمْطَراً أَو جُبَّة وفي حديث عمر رضي اللَّه عنه سقط البُرْنُسُ عن رأْسي هو من ذلك الجوهري البُرْنُسُ قَلَنْسُوَة طويلة وكان النُّسَّاكُ يلبسونها في صدر الإِسلام

தலையை மறைத்து உடல் முழுவதும் போர்த்திக் கொள்ளும் ஆடை2. நீண்ட தொப்பி. இதை இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் ஹஜ் செய்பவர்கள் அணிந்திருந்தனர்.

(நூல்: லிஸானுல் அரப், பாகம்: 6, பக்கம்: 26)

அரபி மொழி அகராதி நூலாகக் கருதப்படும் லிஸானுல் அரப் என்ற நூலில் இந்த இரண்டு பொருள்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

புகாரியில் இடம் பெறும் புர்னுஸ் என்ற வார்த்தைக்கு நீண்ட தொப்பி என்று பொருள் கொண்டாலும் இவர்கள் அணியும் இந்தத் தொப்பியை அது குறிக்காது. ஏனெனில் தற்போது அணியும் தொப்பி நீண்ட வகை தொப்பி கிடையாது. மிக மிகச் சிறிய வகை தொப்பியையே தொப்பி எனக் குறிப்பிடுகின்றனர்.

மேலும் அன்றைய காலத்தில் இருந்த தொப்பி (புர்னுஸ்)யை வைத்து மற்றவர்களைத் தாக்க முடியும். அவ்வளவு பெரியது, கனமானது. இதற்குப் பின்வரும் செய்தி சான்றாக இடம் உள்ளது.

உமர் (ரலி) அவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் புகாரியில் விரிவாக இடம் பெற்றுள்ளது.

صحيح البخاري 3700 - حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ حُصَيْنٍ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، قَالَ: رَأَيْتُ عُمَرَ بْنَ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَبْلَ أَنْ يُصَابَ بِأَيَّامٍ بِالْمَدِينَةِ، وَقَفَ عَلَى حُذَيْفَةَ بْنِ اليَمَانِ، وَعُثْمَانَ بْنِ حُنَيْفٍ، قَالَ: " كَيْفَ فَعَلْتُمَا، أَتَخَافَانِ أَنْ تَكُونَا قَدْ حَمَّلْتُمَا الأَرْضَ مَا لاَ تُطِيقُ؟ قَالاَ: حَمَّلْنَاهَا أَمْرًا هِيَ لَهُ مُطِيقَةٌ، مَا فِيهَا كَبِيرُ فَضْلٍ، قَالَ: انْظُرَا أَنْ تَكُونَا حَمَّلْتُمَا الأَرْضَ مَا لاَ تُطِيقُ، قَالَ: قَالاَ: لاَ، فَقَالَ عُمَرُ: لَئِنْ سَلَّمَنِي اللَّهُ، لَأَدَعَنَّ أَرَامِلَ أَهْلِ العِرَاقِ لاَ يَحْتَجْنَ إِلَى رَجُلٍ بَعْدِي أَبَدًا، قَالَ: فَمَا أَتَتْ عَلَيْهِ إِلَّا رَابِعَةٌ [ص:16] حَتَّى أُصِيبَ، قَالَ: إِنِّي لَقَائِمٌ مَا بَيْنِي وَبَيْنَهُ، إِلَّا عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ غَدَاةَ أُصِيبَ، وَكَانَ إِذَا مَرَّ بَيْنَ الصَّفَّيْنِ، قَالَ: اسْتَوُوا، حَتَّى إِذَا لَمْ يَرَ فِيهِنَّ خَلَلًا تَقَدَّمَ فَكَبَّرَ، وَرُبَّمَا قَرَأَ سُورَةَ يُوسُفَ، أَوِ النَّحْلَ، أَوْ نَحْوَ ذَلِكَ , فِي الرَّكْعَةِ الأُولَى حَتَّى يَجْتَمِعَ النَّاسُ، فَمَا هُوَ إِلَّا أَنْ كَبَّرَ فَسَمِعْتُهُ يَقُولُ: قَتَلَنِي - أَوْ أَكَلَنِي - الكَلْبُ، حِينَ طَعَنَهُ، فَطَارَ العِلْجُ بِسِكِّينٍ ذَاتِ طَرَفَيْنِ، لاَ يَمُرُّ عَلَى أَحَدٍ يَمِينًا وَلاَ شِمَالًا إِلَّا طَعَنَهُ، حَتَّى طَعَنَ ثَلاَثَةَ عَشَرَ رَجُلًا، مَاتَ مِنْهُمْ سَبْعَةٌ، فَلَمَّا رَأَى ذَلِكَ رَجُلٌ مِنَ المُسْلِمِينَ طَرَحَ عَلَيْهِ بُرْنُسًا، فَلَمَّا ظَنَّ العِلْجُ أَنَّهُ مَأْخُوذٌ نَحَرَ نَفْسَهُ، وَتَنَاوَلَ عُمَرُ يَدَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ فَقَدَّمَهُ، فَمَنْ يَلِي عُمَرَ فَقَدْ رَأَى الَّذِي أَرَى، وَأَمَّا نَوَاحِي المَسْجِدِ فَإِنَّهُمْ لاَ يَدْرُونَ، غَيْرَ أَنَّهُمْ قَدْ فَقَدُوا صَوْتَ عُمَرَ، وَهُمْ يَقُولُونَ: سُبْحَانَ اللَّهِ سُبْحَانَ اللَّهِ، فَصَلَّى بِهِمْ عَبْدُ الرَّحْمَنِ صَلاَةً خَفِيفَةً، فَلَمَّا انْصَرَفُوا قَالَ: يَا ابْنَ عَبَّاسٍ، انْظُرْ مَنْ قَتَلَنِي، فَجَالَ سَاعَةً ثُمَّ جَاءَ فَقَالَ: غُلاَمُ المُغِيرَةِ، قَالَ: الصَّنَعُ؟ قَالَ: نَعَمْ، قَالَ: قَاتَلَهُ اللَّهُ، لَقَدْ أَمَرْتُ بِهِ مَعْرُوفًا، الحَمْدُ لِلَّهِ الَّذِي لَمْ يَجْعَلْ مِيتَتِي بِيَدِ رَجُلٍ يَدَّعِي الإِسْلاَمَ، قَدْ كُنْتَ أَنْتَ وَأَبُوكَ تُحِبَّانِ أَنْ تَكْثُرَ العُلُوجُ بِالْمَدِينَةِ، - وَكَانَ العَبَّاسُ أَكْثَرَهُمْ رَقِيقًا - فَقَالَ: إِنْ شِئْتَ فَعَلْتُ، أَيْ: إِنْ شِئْتَ قَتَلْنَا؟ قَالَ: كَذَبْتَ بَعْدَ مَا تَكَلَّمُوا بِلِسَانِكُمْ، وَصَلَّوْا قِبْلَتَكُمْ، وَحَجُّوا حَجَّكُمْ. فَاحْتُمِلَ إِلَى بَيْتِهِ فَانْطَلَقْنَا مَعَهُ، وَكَأَنَّ النَّاسَ لَمْ تُصِبْهُمْ مُصِيبَةٌ قَبْلَ يَوْمَئِذٍ، فَقَائِلٌ يَقُولُ: لاَ بَأْسَ، وَقَائِلٌ يَقُولُ: أَخَافُ عَلَيْهِ، فَأُتِيَ بِنَبِيذٍ فَشَرِبَهُ، فَخَرَجَ مِنْ جَوْفِهِ، ثُمَّ أُتِيَ بِلَبَنٍ فَشَرِبَهُ فَخَرَجَ مِنْ جُرْحِهِ، فَعَلِمُوا أَنَّهُ مَيِّتٌ، فَدَخَلْنَا عَلَيْهِ، وَجَاءَ النَّاسُ، فَجَعَلُوا يُثْنُونَ عَلَيْهِ، وَجَاءَ رَجُلٌ شَابٌّ، فَقَالَ: أَبْشِرْ يَا أَمِيرَ المُؤْمِنِينَ بِبُشْرَى اللَّهِ لَكَ، مِنْ صُحْبَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَدَمٍ فِي الإِسْلاَمِ مَا قَدْ عَلِمْتَ، ثُمَّ وَلِيتَ فَعَدَلْتَ، ثُمَّ شَهَادَةٌ، قَالَ: وَدِدْتُ أَنَّ ذَلِكَ كَفَافٌ لاَ عَلَيَّ وَلاَ لِي، فَلَمَّا أَدْبَرَ إِذَا إِزَارُهُ يَمَسُّ الأَرْضَ، قَالَ: رُدُّوا عَلَيَّ الغُلاَمَ، قَالَ: يَا ابْنَ أَخِي ارْفَعْ ثَوْبَكَ، فَإِنَّهُ أَبْقَى لِثَوْبِكَ، وَأَتْقَى لِرَبِّكَ يَا عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، انْظُرْ مَا عَلَيَّ مِنَ الدَّيْنِ، فَحَسَبُوهُ فَوَجَدُوهُ سِتَّةً وَثَمَانِينَ أَلْفًا أَوْ نَحْوَهُ، قَالَ: إِنْ وَفَى لَهُ، مَالُ آلِ عُمَرَ فَأَدِّهِ مِنْ أَمْوَالِهِمْ، وَإِلَّا فَسَلْ فِي بَنِي عَدِيِّ بْنِ كَعْبٍ، فَإِنْ لَمْ تَفِ أَمْوَالُهُمْ فَسَلْ فِي قُرَيْشٍ، وَلاَ تَعْدُهُمْ إِلَى غَيْرِهِمْ، فَأَدِّ عَنِّي هَذَا المَالَ انْطَلِقْ إِلَى عَائِشَةَ أُمِّ المُؤْمِنِينَ، فَقُلْ: يَقْرَأُ عَلَيْكِ عُمَرُ السَّلاَمَ، وَلاَ تَقُلْ أَمِيرُ المُؤْمِنِينَ، فَإِنِّي لَسْتُ اليَوْمَ لِلْمُؤْمِنِينَ أَمِيرًا، وَقُلْ: يَسْتَأْذِنُ عُمَرُ بْنُ الخَطَّابِ أَنْ يُدْفَنَ مَعَ صَاحِبَيْهِ، فَسَلَّمَ وَاسْتَأْذَنَ، ثُمَّ دَخَلَ عَلَيْهَا، فَوَجَدَهَا قَاعِدَةً تَبْكِي، فَقَالَ [ص:17]: يَقْرَأُ عَلَيْكِ عُمَرُ بْنُ الخَطَّابِ السَّلاَمَ، وَيَسْتَأْذِنُ أَنْ يُدْفَنَ مَعَ صَاحِبَيْهِ، فَقَالَتْ: كُنْتُ أُرِيدُهُ لِنَفْسِي، وَلَأُوثِرَنَّ بِهِ اليَوْمَ عَلَى نَفْسِي، فَلَمَّا أَقْبَلَ، قِيلَ: هَذَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ، قَدْ جَاءَ، قَالَ: ارْفَعُونِي، فَأَسْنَدَهُ رَجُلٌ إِلَيْهِ، فَقَالَ: مَا لَدَيْكَ؟ قَالَ: الَّذِي تُحِبُّ يَا أَمِيرَ المُؤْمِنِينَ أَذِنَتْ، قَالَ: الحَمْدُ لِلَّهِ، مَا كَانَ مِنْ شَيْءٍ أَهَمُّ إِلَيَّ مِنْ ذَلِكَ، فَإِذَا أَنَا قَضَيْتُ فَاحْمِلُونِي، ثُمَّ سَلِّمْ، فَقُلْ: يَسْتَأْذِنُ عُمَرُ بْنُ الخَطَّابِ، فَإِنْ أَذِنَتْ لِي فَأَدْخِلُونِي، وَإِنْ رَدَّتْنِي رُدُّونِي إِلَى مَقَابِرِ المُسْلِمِينَ، وَجَاءَتْ أُمُّ المُؤْمِنِينَ حَفْصَةُ وَالنِّسَاءُ تَسِيرُ مَعَهَا، فَلَمَّا رَأَيْنَاهَا قُمْنَا، فَوَلَجَتْ عَلَيْهِ، فَبَكَتْ عِنْدَهُ سَاعَةً، وَاسْتَأْذَنَ الرِّجَالُ، فَوَلَجَتْ دَاخِلًا لَهُمْ، فَسَمِعْنَا بُكَاءَهَا مِنَ الدَّاخِلِ، فَقَالُوا: أَوْصِ يَا أَمِيرَ المُؤْمِنِينَ اسْتَخْلِفْ، قَالَ: مَا أَجِدُ أَحَدًا أَحَقَّ بِهَذَا الأَمْرِ مِنْ هَؤُلاَءِ النَّفَرِ، أَوِ الرَّهْطِ، الَّذِينَ تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ عَنْهُمْ رَاضٍ، فَسَمَّى عَلِيًّا، وَعُثْمَانَ، وَالزُّبَيْرَ، وَطَلْحَةَ، وَسَعْدًا، وَعَبْدَ الرَّحْمَنِ، وَقَالَ: يَشْهَدُكُمْ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ، وَلَيْسَ لَهُ مِنَ الأَمْرِ شَيْءٌ - كَهَيْئَةِ التَّعْزِيَةِ لَهُ - فَإِنْ أَصَابَتِ الإِمْرَةُ سَعْدًا فَهُوَ ذَاكَ، وَإِلَّا فَلْيَسْتَعِنْ بِهِ أَيُّكُمْ مَا أُمِّرَ، فَإِنِّي لَمْ أَعْزِلْهُ عَنْ عَجْزٍ، وَلاَ خِيَانَةٍ، وَقَالَ: أُوصِي الخَلِيفَةَ مِنْ بَعْدِي، بِالْمُهَاجِرِينَ الأَوَّلِينَ، أَنْ يَعْرِفَ لَهُمْ حَقَّهُمْ، وَيَحْفَظَ لَهُمْ حُرْمَتَهُمْ، وَأُوصِيهِ بِالأَنْصَارِ خَيْرًا، {الَّذِينَ تَبَوَّءُوا الدَّارَ وَالإِيمَانَ مِنْ قَبْلِهِمْ}، أَنْ يُقْبَلَ مِنْ مُحْسِنِهِمْ، وَأَنْ يُعْفَى عَنْ مُسِيئِهِمْ، وَأُوصِيهِ بِأَهْلِ الأَمْصَارِ خَيْرًا، فَإِنَّهُمْ رِدْءُ الإِسْلاَمِ، وَجُبَاةُ المَالِ، وَغَيْظُ العَدُوِّ، وَأَنْ لاَ يُؤْخَذَ مِنْهُمْ إِلَّا فَضْلُهُمْ عَنْ رِضَاهُمْ. وَأُوصِيهِ بِالأَعْرَابِ خَيْرًا، فَإِنَّهُمْ أَصْلُ العَرَبِ، وَمَادَّةُ الإِسْلاَمِ، أَنْ يُؤْخَذَ مِنْ حَوَاشِي أَمْوَالِهِمْ، وَيُرَدَّ عَلَى فُقَرَائِهِمْ، وَأُوصِيهِ بِذِمَّةِ اللَّهِ، وَذِمَّةِ رَسُولِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُوفَى لَهُمْ بِعَهْدِهِمْ، وَأَنْ يُقَاتَلَ مِنْ وَرَائِهِمْ، وَلاَ يُكَلَّفُوا إِلَّا طَاقَتَهُمْ، فَلَمَّا قُبِضَ خَرَجْنَا بِهِ، فَانْطَلَقْنَا نَمْشِي، فَسَلَّمَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ، قَالَ: يَسْتَأْذِنُ عُمَرُ بْنُ الخَطَّابِ، قَالَتْ: أَدْخِلُوهُ، فَأُدْخِلَ، فَوُضِعَ هُنَالِكَ مَعَ صَاحِبَيْهِ، فَلَمَّا فُرِغَ مِنْ دَفْنِهِ اجْتَمَعَ هَؤُلاَءِ الرَّهْطُ، فَقَالَ عَبْدُ الرَّحْمَنِ: اجْعَلُوا أَمْرَكُمْ إِلَى ثَلاَثَةٍ مِنْكُمْ، فَقَالَ الزُّبَيْرُ: قَدْ جَعَلْتُ أَمْرِي إِلَى عَلِيٍّ، فَقَالَ طَلْحَةُ: قَدْ جَعَلْتُ أَمْرِي إِلَى عُثْمَانَ، وَقَالَ سَعْدٌ: قَدْ جَعَلْتُ أَمْرِي إِلَى عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، فَقَالَ عَبْدُ الرَّحْمَنِ: أَيُّكُمَا تَبَرَّأَ مِنْ هَذَا الأَمْرِ، فَنَجْعَلُهُ إِلَيْهِ وَاللَّهُ عَلَيْهِ وَالإِسْلاَمُ، لَيَنْظُرَنَّ أَفْضَلَهُمْ فِي نَفْسِهِ؟ فَأُسْكِتَ الشَّيْخَانِ، فَقَالَ عَبْدُ الرَّحْمَنِ: أَفَتَجْعَلُونَهُ إِلَيَّ وَاللَّهُ عَلَيَّ أَنْ لاَ آلُ عَنْ أَفْضَلِكُمْ قَالاَ: نَعَمْ، فَأَخَذَ بِيَدِ أَحَدِهِمَا فَقَالَ: لَكَ قَرَابَةٌ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالقَدَمُ فِي [ص:18] الإِسْلاَمِ مَا قَدْ عَلِمْتَ، فَاللَّهُ عَلَيْكَ لَئِنْ أَمَّرْتُكَ لَتَعْدِلَنَّ، وَلَئِنْ أَمَّرْتُ عُثْمَانَ لَتَسْمَعَنَّ، وَلَتُطِيعَنَّ، ثُمَّ خَلاَ بِالْآخَرِ فَقَالَ لَهُ مِثْلَ ذَلِكَ، فَلَمَّا أَخَذَ المِيثَاقَ قَالَ: ارْفَعْ يَدَكَ يَا عُثْمَانُ فَبَايَعَهُ، فَبَايَعَ لَهُ عَلِيٌّ، وَوَلَجَ أَهْلُ الدَّارِ فَبَايَعُوهُ "

அதில் ...உமர் (ரலி) அவர்கள் கத்தியால் குத்தப்பட்ட நாளன்று அதிகாலை (தொழுகைக்காக) நான் (தொழுகை அணியில்) நின்று கொண்டிருக்கிறேன். எனக்கும் உமர் (ரலி) அவர்களுக்கும் இடையில் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களைத் தவிர வேறு எவரும் இருக்கவில்லை. உமர் (ரலி) அவர்கள் (மக்களுக்குத் தொழுவிப்பதற்கு முன்) இரு தொழுகை அணிகளுக்கு இடையில் சென்றால் சீராக நில்லுங்கள்'' என்று கூறுபவர்களாக இருந்தார்கள். அணிகளுக்குக்கிடையே சீர்குலைவு தென்படாத போதே முன் சென்று (தொழுகைக்காக) தக்பீர் (தஹ்ரீமா) கூறுவார்கள். சில சமயம் யூசுஃப் அத்தியாயம் அல்லது நஹ்ல் அத்தியாயம் அல்லது அது போன்ற (வேறோர் அத்தியாயத்)தை மக்கள் தொழுகைக்காக வந்து சேரும் வரையில் முதல் ரக்அத்தில் ஓதுவார்கள். (சம்பவ தினத்தன்று) அப்போது தான் தக்பீர் கூறியிருப்பார்கள். என்னை நாய் கொன்று விட்டது... அல்லது தின்றுவிட்டது'' என்று கூறினார்கள். (அப்போது அபூலுஃலுஆ ஃபைரோஸ் என்பவன் பிச்சுவாக் கத்தியால் அவர்களைக் குத்தி விட்டிருந்தான்) உடனே இந்த இல்ஜ் (அரபியல்லாத அந்நிய மொழி பேசும் இறை மறுப்பாளன்) தனது பிச்சுவாக் கத்தியை எடுத்துக் கொண்டு தனது வலப்பக்கம், இடப்பக்கம் நிற்கும் எவரையும் விடாமல் குத்திக் கொண்டே விரைந்தோடலானான். முடிவாக பதிமூன்று ஆண்களை அவன் குத்தி விட்டிருந்தான். அதில் ஏழு பேர் இறந்து விட்டனர். இதைக் கண்ட (அங்கிருந்த) முஸ்லிம்களில் ஒருவர் தமது நீண்ட தொப்பியை (புர்னுஸ்) (கழற்றி) அவன் மீது வீசி எறிந்தார். அந்த அந்நிய மொழிக்காரனான இறை மறுப்பாளன், தாம் பிடிபட்டு விடுவோம் என்று எண்ணிய போது தன்னைத் தானே அறுத்துக் (கொண்டு தற்கொலை செய்து) கொண்டான்.

நூல்: புகாரி 3700

முஸன்னஃப் இப்னு அபீ ஷைபாவின் அறிவிப்பில் அவனைப் பிடிப்பதற்காக நீண்ட தொப்பியை எறிந்தார் என்று இடம் பெற்றுள்ளது.

ஒருவரைத் தாக்கிப் பிடிக்கும் அளவுக்கு அந்தத் தொப்பி நீளமானதாகவும், கனமானதாகவும் இருந்துள்ளது. நம்மிடம் இருக்கும் நூல் தொப்பி குறிப்பிட்ட இடத்துக்குக் கூட போய் சேராது. கனமில்லாததால் இடையிலேயே விழுந்து விடும். எனவே ஹதீஸில் குறிப்பிடப்படும் புர்னுஸ் எனும் தொப்பியும் நமது காலத்தில் நடைமுறையில் இருக்கும் தொப்பியும் ஒன்றல்ல என்பதை இதில் இருந்து விளங்கிக் கொள்ளலாம். புர்னுஸ் என்ற வார்த்தை இடம் பெறும் இந்தச் செய்தியை தொப்பி அணிய ஆதாரமாகக் காட்டுவோர் ஹதீஸில் கூறப்படுவது போன்ற இரும்புத் தொப்பியை அணியுமாறு தான் கூற வேண்டும். னவே நடைமுறையில் அறியப்பட்டுள்ள தொப்பிக்கும் இந்த ஹதீஸுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.

தொப்பி என்பதற்கு இப்போது நமது காலத்தில் வழக்கத்தில் உள்ள தொப்பி என்பது தான் பொருள் என்று ஒரு வாதத்துக்காக வைத்துக் கொண்டாலும் இந்த ஹதீஸ் வாசகத்தில் இருந்து தொப்பி அணியலாம் என்ற கருத்து தான் கிடைக்கும் அவசியம் என்ற கருத்தோ சிறந்தது என்ற கருத்தோ கிடைக்காது.

குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் ஒரு காரியத்தைச் செய்யக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டால் மற்ற சந்தர்ப்பங்களில் அந்தக் காரியத்தைச் செய்யலாம் என்று தான் புரிந்து கொள்ள வேண்டும். மற்ற சந்தர்ப்பங்களில் அதைச் செய்தாக வேண்டும் என்று புரிந்து கொள்ளக் கூடாது.

நோன்பாளிகள் பகலில் தாம்பத்தியத்தில் ஈடுபடக் கூடாது என்றால் இரவில் தாம்பத்தியத்தில் ஈடுபடலாம் என்று தான் பொருள் வரும். இரவில் கண்டிப்பாக தாம்பத்தியத்தில் ஈடுபட்டே ஆக வேண்டும் என்று யாரும் பொருள் கொள்ள மாட்டார்கள்.

ஜும்மாவுக்குப் பாங்கு சொன்ன உடன் கடையைத் திறந்திருக்கக் கூடாது என்றால் இதை எப்படிப் புரிந்து கொள்வது? ஜும்மா முடிந்தவுடன் விரும்பினால் கடையைத் திறக்கலாம். திறக்காமலும் இருக்கலாம் என்று தான் புரிந்து கொள்வோம். அது போல் தான் இந்த ஹதீஸையும் புரிந்து கொள்ள வேண்டும்.

இஹ்ராம் கட்டியிருக்கும் போது தொப்பி அணியக் கூடாது என்றால் மற்ற நேரங்களில் அணிவதற்கு அனுமதி உள்ளது என்று தான் விளங்க வேண்டும். இன்னும் சொல்லப் போனால் தொப்பி அணிவது கட்டாயமான ஒன்றல்ல என்பதற்கு இந்த ஹதீஸ் சிறந்த எடுத்துக் காட்டாக உள்ளது.

தொப்பி அணிவது அனுமதிக்கப்பட்டது என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. அது கட்டாயம் இல்லை என்பது தான் நமது நிலைப்பாடு. அந்த நிலைபாட்டுக்கு ஆதாரமாகத் தான் இந்த் ஹதீஸ் அமைந்துள்ளது.

தொப்பி அணிவது அவசியம் என்ற கருத்தைத் தான் இந்த ஹதீஸ் தருகிறது யாராவது பிடிவாதம் பிடித்தால் இந்த ஹதீஸில் கூறப்பட்ட அனைத்து ஆடைகளைப் பற்றியும் அவ்வாறு தான் அவர்கள் கருத்து கொள்ள வேண்டும்.

அதாவது இஹ்ராம் அணிந்தவர் தொப்பி அணியக் கூடாது என்பதை மட்டும் இந்த ஹதீஸ் கூறவில்லை. அத்துடன் சட்டை, பேன்ட், காலுறை ஆகியவற்றையும் இஹ்ராமின் போது அணியக் கூடாது எனக் கூறப்படுகிறது. இஹ்ராம் அல்லாத நேரத்தில் இம்மூன்றையும் அணிவது கட்டாயக் கடமை என்று இவர்கள் கூறுவார்களா?

மேலும் புகாரியின் இந்த ஹதீஸை வைத்து தொப்பி அணிவது சுன்னத் என்று சொன்னால் அந்த ஹதீஸில் உள்ள மற்றவைகளை அணிவதும் சுன்னத் என்று சொல்ல வேண்டும். சட்டை, முழுக்கால் சட்டை (பேண்ட்) செருப்பு, காலுறை (சாக்ஸ்) இவற்றையெல்லாம் அணிவது சுன்னத் என்று சொல்வார்களா?

صحيح البخاري 1846 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، دَخَلَ عَامَ الفَتْحِ، وَعَلَى رَأْسِهِ المِغْفَرُ، فَلَمَّا نَزَعَهُ جَاءَ رَجُلٌ فَقَالَ: إِنَّ ابْنَ خَطَلٍ مُتَعَلِّقٌ بِأَسْتَارِ الكَعْبَةِ فَقَالَ «اقْتُلُوهُ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது தலையில் இரும்புத் தொப்பியுடன் (மக்காவினுள்) நுழைந்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 1846, 3044, 4286, 5808

இந்த ஹதீஸை தொப்பி போடுவதற்கு ஆதாரம் காட்டுவோர் ராணுவ வீரர் போல் இரும்புத் தொப்பி போடுவது தான் சுன்னத் என்று கூற வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவை நோக்கி இணை வைப்பாளர்களிடம் போர் புரியச் சென்றார்கள். அதனால் அவர்கள் தலையில் இரும்பு கவசத் தொப்பி இருந்தது. போர்க் களங்கள் தவிர வேறு நேரங்களில் அவர்கள் இரும்புத் தொப்பி அணிந்ததற்கு ஆதாரம் இல்லை.

இரும்புத் தொப்பியை எல்லாம் தொப்பிக்கு ஆதாரமாக இவர்கள் காட்டுவதில் இருந்து உருப்படியான ஆதாரம் ஒன்றும் இல்லை என்பது தெளிவாகிறது.

ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு தொழுமிடத்திலும் உங்கள் அலங்காரத்தைச் செய்து கொள்ளுங்கள்! உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான்.

அல்குர்ஆன் 7:31

இந்த வசனம் பள்ளிவாசலுக்கு அலங்காரத்துடன் வருமாறு கட்டளையிடுகிறது; .எனவே தொப்பி என்பதும் ஒரு அலங்காரம். ஆகவே தொப்பி அணிந்து வர வேண்டும்''என்று சிலர் வாதிடுகின்றனர்.

இவர்களின் வாதம் முற்றிலும் பலவீனமானதாகும். தொப்பி ஒரு அலங்காரப் பொருளாக நடைமுறையில் பயன்படுத்தப்படுவதில்லை. இவர்கள் மார்க்கக் கடமை என்று தவறான கருத்தை விதைத்ததாலும் நிர்பந்தப்படுத்துவதாலும் தொப்பி அணிந்து பள்ளிக்குச் செல்கிறார்கள். தொழுது முடித்தவுடன் அதை மடித்து சட்டைப் பைக்குள் வைப்பவர்களே அதிகம். இதிலிருந்து இதை ஒரு அலங்காரப் பொருளாக இவர்கள் பயன்படுத்துவதில்லை என்பதையும் அலங்காரத்துக்கு எதிரானதாக தொப்பியைக் கருதுகிறார்கள் என்பதையும் விளங்கலாம்.

மேலும் உண்மையில் அலங்காரமாக அழகாக இருக்கும் பல பொருட்களை இவர்கள் அணிந்து வருமாறு கட்டளையிடுவதில்லை. கண்ணாடி, கோட், சூட், டை போன்ற பொருட்கள் அலங்காரப் பொருட்களாக இன்று பயன்படுத்தப்படுகின்றன. இவற்றையெல்லாம் அணிந்து வருவது சுன்னத் என்று சொல்வார்களா?.

இறைவனை வணங்க வரும் போது நல்ல ஆடைகளை அணிந்து தூய்மையாக வர வேண்டும் என்பதையும், அன்றைய காலத்தில் நடைமுறையில் இருந்த நிர்வாணமாக தவாஃப் செய்வது போன்ற காரியத்தை செய்யக் கூடாது என்பதையும் தான் இவ்வசனம் கூறுகிறது. இவர்கள் கூறுவது போன்று தொப்பி அணிந்து பள்ளிவாசலுக்கு வருமாறு இந்த வசனம் கூறவில்லை.

இவை தான் தொப்பி போடுவது சுன்னத் என்று சொல்பவர்களின் ஆதாரம். இந்த ஆதாரங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சம்மந்தப்பட்ட செய்திகளில் தொழுகையில் தொப்பி போட்டிருந்தார்கள் என்ற வாசகம் இடம் பெறவில்லை.

அடுத்து இவர்கள் காட்டிய ஆதாரங்களில், தொப்பி என்று அவர்கள் மொழிபெயர்த்திருக்கும் அரபிச் சொல்லுக்கு நீண்ட தொப்பி என்றே பொருள் கொள்ள வேண்டும். மேலும் அவை அடுத்தவர்களைத் தாக்கும் அளவுக்குக் கனமானதாகவும் இருந்துள்ளது. இதற்கும் இப்போது தொப்பி எனக் கூறப்படுவதற்கும் சம்மந்தம் இல்லை.

தொப்பியைப் பற்றி இவர்கள் எடுத்துக் காட்டிய எந்தச் செய்தியிலும் தொப்பி அணிய வேண்டும் என்ற கட்டளையோ ஆர்வமூட்டுதலோ இல்லை.

மேலும் இவர்கள் தமிழில் வெளியிட்ட தொழுகை ஷாஃபீ, தொழுகை ஹனஃபீ ஆகிய நூல்களில் தொழுகையின் பர்லுகள், வாஜிபுகள், சுன்னத்துகள் என்று சில விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளனர். அவற்றில் தொப்பி அணிவது பர்லு என்றோ வாஜிபு என்றோ அல்லது சுன்னத் என்றோ குறிப்பிடவில்லை. இதிலிருந்து தொப்பி போடுவது சுன்னத் இல்லை என்பதை அவர்கள் நூலில் இருந்தே அறிந்து கொள்ளலாம்.

மேலும் தொப்பி போடாமல் தொழுதால் தொழுகை கூடாது என்றோ, அல்லது தொப்பி போடாமல் தொழுபவர்களைப் பள்ளியில் அனுமதிக்கக் கூடாது என்றோ எந்த மத்ஹப் நூல்களிலும் குறிப்பிடப்படவில்லை என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.

சுன்னத் என்பதன் இலக்கணம்

ஒரு பேச்சுக்கு இவர்கள் கூறுவது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பி அணிந்திருந்தார்கள் என்று ஏற்றுக் கொண்டாலும் அதை சுன்னத் என்று கூற முடியாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நடவடிக்கைகள் இரு வகைகளில் அமைந்துள்ளன. ஒன்று வணக்கவழிபாடுகள். மற்றொன்று உலகம் சம்மந்தப்பட்ட காரியங்கள். வணக்கவழிபாடுளைப் பொருத்தவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்தார்கள் என்பதற்கு ஆதாரம் கிடைத்தால் அவை மார்க்கச் சட்டமாகி விடும். ஆனால் உலகக் காரியங்களைப் பொருத்தவரை அவர்கள் செய்தார்கள் என்பதற்கு ஆதாரம் கிடைத்தாலும் அவை மார்க்கச் சட்டமாகாது. தாம் செய்ததுடன் அவர்கள் வாயால் கட்டளை இட்டால் மட்டுமே அவை மார்க்கச் சட்டமாக ஆகும்.

ஒட்டகத்தில் பயணம் செய்தது, கோதுமை உணவை உட்கொண்டது, போன்ற காரியங்களை இரண்டாம் வகைக்கு நாம் உதாரணமாக நாம் குறிப்பிடலாம். மேற்கண்ட காரியங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்தார்கள் என்பது உண்மை என்றாலும் அவற்றை நாம் செய்வது சுன்னத் என்று ஆகாது. இதை இன்னும் தெளிவாக அறிந்து கொள்ள தலைமுடி வளர்ப்பதையும், தாடி வைப்பதையும் உதாரணமாகக் கூறலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாடியும் வைத்துள்ளனர். தலைமுடியும் வளர்த்துள்ளனர். ஆனாலும் தாடி வைப்பதை சுன்னத் என்கிறோம். தலைமுடி வளர்ப்பதை சுன்னத் என்று யாரும் கூறுவதில்லை. தாடியும், தலைமுடியும் வணக்க வழிபாடுகளில் உள்ளவை அல்ல. எல்லா மனிதர்களும் செய்யக் கூடிய காரியங்களே. ஆனாலும் தாடி வைத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் தாடி வளர்த்ததோடு நிறுத்திக் கொள்ளாமல் மற்றவர்களுக்கும் அது குறித்து கட்டளை இட்டதால் அது சுன்னத் ஆகிறது. ஆனால் தலைமுடி வளர்த்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலை முடி வளர்க்குமாறு மற்றவர்களுக்கு கட்டளை இடாததால் அது சுன்னத் ஆக ஆகவில்லை.

மற்றொரு உதாரணத்தின் மூலமும் இந்த வித்தியாசத்தை நாம் புரிந்து கொள்ளலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேரீச்சம் பழத்தை உணவாக உட்கொண்டனர். இதனால் பேரீச்சம் பழத்தை உணவாக உட்கொள்வது சுன்னத் என்று யாரும் கூற மாட்டோம். ஆனால் நோன்பு துறக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேரீச்சம் பழத்தின் மூலம் நோன்பு துறந்ததுடன் பேரீச்சம் பழத்தின் மூலம் நோன்பு துறங்கள் என்று அவர்கள் ஆர்வமூட்டியதால் அது சுன்னத்தாக ஆகி விடுகிறது.

எனவே மார்க்க விஷயங்களைப் பொருத்தவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதும் மார்க்கமாகும். அவர்கள் செய்ததும் மார்க்கமாகும். அவர்கள் அங்கீகரித்ததும் மார்க்கமாகும்.

உலக விஷயங்களைப் பொருத்த வரை அவர்கள் கட்டளையிட்ட அனைத்தும் மார்க்கமாக ஆகும். ஆனால் அவர்கள் செய்தவை அனைத்தும் மார்க்கமாகாது. அது போல் அவர்கள் அங்கீகரித்தவை அனைத்தும் மார்க்கமாகாது. மாறாக அவர்கள் செய்ததுடன் மற்றவர்களுக்கும் அது குறித்து கட்டளையிட்டால் மட்டுமே அவை மார்க்கமாக ஆகும்.

தொப்பி என்பது ஒரு ஆடையாகும் இது வணக்க வழிபாடுகளில் ஒன்று அல்ல. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சில நேரங்களில் தொப்பி அணிந்து இருந்தாலும் அவர்கள் தொப்பி அணியுமாறு கட்டளையிடவில்லை. ஆர்வமும் ஊட்டவில்லை. எனவே தொப்பி அணிவது சுன்னத் ஆக ஆகாது.

தொழுகையிலோ, தொழுகைக்கு வெளியிலோ ஒருவர் தொப்பி அணிய விரும்பினால் அணியலாம்; விரும்பினால் அணியாமலும் இருக்கலாம்.

வரலாற்றுப் பின்னணியில்

இந்திய முஸ்லிம்களிடம் தொப்பி மிகுந்த முக்கியத்தைப் பெற்றதற்கு வரலாற்று ரீதியான காரணமும் உள்ளது.

உலக இஸ்லாமியர்களுக்கு ஒவ்வொரு காலத்திலும் ஒரு நாடு தலைமை வகித்து வந்தது. கிலாஃபத் என்று சொல்லப்பட்ட இந்த தலைமைத்துவம் கடைசியாக துருக்கி வசம் வந்தது. துருக்கி தான் இஸ்லாமிய உலகின் தலைமையாக கருதப்பட்ட நேரத்தில் இந்தியாவைப் போல் துருக்கியும் அடிமைப்படுத்தப்பட்டது. எனவே இந்திய முஸ்லிம்கள் இந்தியாவின் சுதந்திரத்துக்கு பாடுபட்ட அதே நேரத்தில் துருக்கியின் கிலாஃபத்தை மீட்பதற்கும் பாடுபட்டனர். இதற்காக கிலாஃபத் இயக்கத்தையும் இங்கே உருவாக்கினார்கள்.

இந்திய முஸ்லிம்கள் துருக்கியின் விடுதலைக்காக பாடுபட்டதால் இந்திய முஸ்லிம்களை இங்குள்ள விஷமிகள் துருக்கர் எனக் குறிப்பிடலாயினர். இது தான் பேசு வழக்கில் துலுக்கர் என ஆயிற்று.

கவி பாரதி கூட தனது கவிதையில் முஸ்லிம்களைப் பற்றி கூறும் போது

தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி

பெண்ணின் முகமலர் திரையிட்டு மறைத்து வைத்தல்

எனப் பாடினான்.

அது போல் திக்கை வணங்கும் துருக்கர்

எனவும் முஸ்லிம்களைப் பற்றி கூறியுள்ளான்.

இஸ்லாமிய உலகின் தலைமையாக கடைசி காலத்தில் கருதப்பட்ட துருக்கி மக்கள் அனைவரும் தொப்பி போடுவதை தங்களின் தேசிய அடையாளமாகக் கருதினார்கள்.

அவர்கள் இஸ்லாத்தைப் பேணுகிறார்களோ இல்லையோ தொப்பியைப் பேணுவதில் தவற மாட்டார்கள்.

போர்க்களத்தில் கூட தொப்பி அணிந்து வாளைப் பிடிப்பதை விட தொப்பி கீழே விழாமல் காப்பாற்ற முயன்றதால் தான் எதிரிகளிடம் துருக்கியர் தோற்றுப் போனார்கள் என்று வரலாறு கூறுகிறது. அந்த அளவுக்கு தொப்பி அவர்களின் வாழ்வோடு ஒன்றி இருந்தது.

நமக்கு தலைமை துருக்கி தான் என்ற எண்ணம் விதைக்கப்பட்டதன் விளைவாக இங்குள்ள் முஸ்லிம்கள் நாமும் தொப்பி போடுவது மார்கக்க் கடமை என்ற முடிவுக்கு வந்தனர். அதிலும் ஆரம்ப காலத்தில் ஒரு முழம் உயரமுள்ள துருக்கி தொப்பியையே அணிந்து வந்தனர். காலம் சென்ற ஜமாஅதுல் உலமா மாநிலத் தலைவரும் ரஹ்மத் மாத இதழ் ஆசிரியருமான கலீல் ரஹ்மான் ரியாஜீ அவர்கள் ஒரு முழ உயரம் கொண்ட துருக்கி தொப்பி அணிந்ததை நான் பார்த்துள்ளேன். இன்னும் பல மார்க்க அறிஞர்களையும் இவ்வாறு கண்டுள்ளேன்.

எனவே துருக்கியின் தாக்கம் காரணமாகவே தொப்பி இஸ்லாமியச் சின்னம் என்ற கருத்து இந்திய முஸ்லிம்களிடம் ஆழப் பதிந்ததே தவிர மார்க்க ஆதாரங்களின் அடிப்படையில் அல்ல.

03.07.2011. 23:51 PM

 

தப்லீக் தஃலீம் தொகுப்பு ஓர் ஆய்வு

நூலின் பெயர் : தப்லீக் த்ஃலீம் தொகுப்பு ஓர் ஆய்வு

ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன்

தப்லீக் தஃலீம் தொகுப்பு ஓர் ஆய்வு

தப்லீக் ஜமாத் என்ற பெயரில் உலகெங்கும் வியாபித்திருக்கின்ற இயக்கம் முஸ்லிம்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை உண்மை முஸ்லிம்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை உண்மை முஸ்லிம்களாக வாழச்செய்யும் உயர் நோக்கில் தோற்றுவிக்கப்பட்ட இயக்கமாகும்.

பெயரளவில் மாத்திரம் முஸ்லிம்களாக இருந்து கொண்டு அல்லாஹ்வை மறந்து வாழ்ந்த மக்களையும், சமாதி வழிபாடுகளிலும் தனிநபர் வழிபாட்டிலும் மூழ்கிக்கிடந்த மக்களையும், இஸ்லாமியக்கடமைகள் இன்னதென்று அறியாமல் அவற்றை அலட்சியப்படுத்தி வாழ்ந்த மக்களையும் கண்டு பெரியார் இல்யாஸ் (ரஹ்) அவர்கள் கவலைப்பட்டு துவக்கிய இயக்கமே தப்லீக் இயக்கமாகும்.

இந்த இயக்கம் புத்துயிர் பெற்ற பிறகு சமாதிகளில் மண்டியிட்டவர்கள் அல்லாஹ்வின் சன்னதியில் சிரம் பணியலானார்கள். பூட்டிக்கிடந்த இறையில்லங்கள் தொழுகையாளிகளால் நிரப்பப்பட்டன. நபி (ஸல்) அவர்கள் பற்றிய மதிப்பு மக்களின் உள்ளங்களில் அதிகமாகியது.

இந்தப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ள மக்கள் தங்களின் பொருளையும், உழைப்பையும் தியாகம் செய்கின்ற நிலை ஏற்பட்டது. மவ்லவிகள் மட்டுமே மார்க்கத்தைச் சொல்லத்தக்கவர்கள் என்ற நிலை இந்த ஜமாத்தின் எழுச்சியினால் ஓரளவாவது மாறியது. இதெல்லாம் இந்த இயக்கத்தினால் சமுதாயத்திற்கு கிடைத்த நற்பயன்கள். அதில் ஈடுபாடு கொண்ட மக்களின் நோக்கத்தில் இன்றளவும் குறைகாணமுடியாது.

ஆனாலும் பெரியார் இல்யாஸ் (ரஹ்) அவர்களின் புதல்வர் யூசுப் (ரஹ்) ஆகியோரின் மறைவிற்குப்பிறகு இந்த இயக்கத்தின் மார்க்க அறிஞர்கள் தப்லீகின் உயர் நோக்கத்திலிருந்து அதைத் திசை திருப்பும் பணியில் ஈடுபடலானார்கள்.

மனிதர்களுக்கும், பெரியார்களுக்கும் அளவு கடந்த மரியாதை செய்யும் அளவுக்கு மக்களின் மூளைகளை சலவை செய்யலானார்கள். மீண்டும் சமாதிவழிபாட்டுக்கும் தனிமனித வழிபாட்டுக்கும் மக்களை இழுத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபடலானார்கள்.

இந்தப் பணியைச் செய்தவர்களில் முதலிடத்திலிருப்பவர் உ.பி மாநிலம் சஹாரன்பூரைச் சேர்ந்த ஸகரிய்யா சாஹிப் என்பவர் காலம் சென்ற இவர் தனக்கும் அப்போதைய ஹஜ்ரத்ஜீக்கும் மத்தியில் நிலவிய மாமன் மருமகன் என்ற உறவைப் பயன்படுத்தி தான் எழுதிய நூல்களை தப்லீகின் தஃலீம்களில் படிக்க வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தினார்.

குர்ஆனையும், நபிவழியையும் கற்பிப்பதற்காக தோற்றுவிக்கப்பட்ட இந்த இயக்கத்தில் இவர் எழுதிய கற்பனைகளும்,கதைகளும் படிக்கப்படும் நிலை ஏற்பட்டுவிட்டது.

குர்ஆனை விட அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு பள்ளிவாயில்கள் தோறும் படிக்கப்படுகின்ற இவரது தஃலீம் தொகுப்பு, தப்லீக் ஜமாத்தினருக்குக் கிடைத்த புதியவேதமாக ஆகிவிட்டது.

தப்லீக் ஜமாத்தில் நல்ல சிந்தனையாளர்களும் உண்மையை அறிய விரும்புபவர்களும் கணிசமாக ​இருக்கிறார்கள் என்று நாம் நம்புவதால் தஃலீம் தொகுப்பில் காணப்படுகின்ற அபத்தங்களையும் பொய்களையும் கற்பனைக் கதைகளையும் அடையாளம் காட்ட விரும்புகின்றோம்.

தொழுகையின் சிறப்பு, ஸதகாவின் சிறப்பு, ரமலானின் சிறப்பு என்றெல்லாம் பலவேறு தலைப்புகளின் கீழ் தொகுக்கப்பட்ட இவரது நூலில் மிகவும் தந்திரமாக எவருக்கும் சந்தேகம் வாரத வகையில் நச்சுக்கருத்துகள் பல புகுத்தப்பட்டுள்ளன. ஸகரியா சாகிப் முதலில் சில குர்ஆன் வசனங்களை எழுதுவார். அடுத்து சில ஹதீஸ்களை எழுதுவார். இவர் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தான் இதை எழுதியுள்ளார் என்ற நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்துவார். அதன்பிறகு சிறப்புகள் என்ற பெயரில் தனது சொந்தச் சரக்குகளை விற்க ஆரம்பித்து விடுவார்.

ஆரம்பத்தில் உள்ள சில பக்கங்களில் இவர் மக்கள் உள்ளங்களில் நல்ல இடத்தைப் பெற்று விடுவதால் அடுத்தடுத்து இவர் அளக்கும் கப்ஸாக்களை பாமர உள்ளங்கள் கண்டு கொள்வதில்லை எனவே தான் தஃலீம் தொகுப்புகளில் மலிந்துள்ள அபத்தங்களை நாம் இனம் காட்ட வேண்டியுள்ளது. அதிலுள்ள அபத்தங்கள் அனைத்தையும் எழுதுவதென்றால் பல ஆயிரம் பக்கங்களில் எழுத வேண்டும். ஆகவே சிந்தனையாளர்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் ஒரு சில அபத்தங்களை மட்டும் நாம் இனம் காட்டுகிறோம்.

தொழுகையா? சொர்க்கமா?

இப்னு ஸீரின் (ரஹ்) கூறுகிறார்கள்; சொர்க்கம் செல்லுதல், இரண்டு ரக்அத்கள் தொழுதல். இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றைத்தேர்ந்தெடுத்துக் கொள்ள எனக்கு அனுமதியளித்தால் இரண்டு ரக்அத்கள் தொழுவதையே நான் தேர்ந்தெடுத்துக் கொள்வேன். ஏனெனில் சொர்க்கம் செல்வது என்னுடைய மகிழ்ச்சிக்காக வேண்டியதாகும். இரண்டு ரக்அத்கள் தொழுவதோ என்னுடைய எஜமானனின் திருப்திக்காக வேண்டியதாகும்.

தொழுகையின் சிறப்பு என்ற பகுதியில் பக்கம் 25 ல் இவ்வாறு கதையளக்கிறார் ஸகரிய்யா சாஹிப்.

மேலோட்டமாகப் பார்க்கும் போது தொழுகையின் சிறப்பைக் கூறுவது போல் இது தோற்றமளித்தாலும் சிந்தித்துப் பார்க்கும் போது இதில் மலிந்துள்ள அபத்தங்கள் தெரியவரும்.

இப்னு ஸீரின் என்பவர் மிகவும் சிறந்த மார்க்க அறிஞர் ஆவார். ஹிஜ்ரி 110 ல் மரணமடைந்த இப்பெரியார் ஹதீஸ்களை அறிவிக்கும் போது அதன் வார்த்தைகளில் கூட மாற்றம் செய்யாமல் அறிவிக்கும் அளவுக்குப் பிடிப்புள்ளவர்.

 இது போன்ற பெரியார்களின் பெயரைப் பயன்படுத்தினால் தான் மக்களிடம் எடுபடும் என்பதற்காக அந்தப் பெரியாரின் பெயரைப் பயன்படுத்தியுள்ளார் ஸகரிய்யா சாஹிப். இப்னு ஸீரின் இவ்வாறு கூறினால் எந்த நூலில் இது இடம் பெற்றுள்ளது? அந்த நூல் எந்த ஆண்டில் யாரால் எழுதப்பட்டது? ஹிஜ்ரி 110 ல் மரணமடைந்த அப்பெரியார் இவ்வாறு கூறுயிருந்தால் அந்தக் காலக்கட்டத்திலோ அதற்கடுத்த காலகட்டத்திலோ எழுதப்பட்ட நூல்களில் இது இடம் பெற்றுள்ளதா? என்று எந்த விபரத்தையும் ஸகரிய்யா சாஹிப் கூறவில்லை. இப்னு ஸீரின் என்னவோ இவரது வகுப்புத் தோழர் போலவும் அவர் வந்து நேரில் கூறியது போலவும், 1300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் பற்றி சித்தரிக்கிறார் ஸகரிய்யா சாஹிப். இந்தப் பெரியார் இவ்வாறு கூறியிருக்க முடியாது என்பதைக் கருத்தில் கொண்டு இதன் தவறுகளை ஆராய்வோம்.

அல்லாஹ்வோடு அவனது அடியார்கள் நடந்து கொள்வதற்கு சில ஒழுங்குகள் உள்ளன. அல்லாஹ்வின் ஏற்பாட்டில் குறை காண்பது போலவோ, அல்லாஹ் சொன்னதை விட சிறந்ததை அல்லாஹ்வுக்குச் சொல்லிக் கொடுப்பது போலவோ ஒரு அடியான் பேசினால் அவன் அல்லாஹ்வின் மதிப்பை உணரவில்லை என்று பொருள்.

தொழுகை மற்றும் ஏனைய வணக்கங்களை நிறைவேற்றினால் அதன் பரிசு சுவர்க்கம் என்பது இறைவனின் எற்பாடு. இந்த ஏற்பாட்டை குறை காண்பது உண்மை முஸ்லிமுக்கு அழகல்ல.

முஹம்மது (ஸல்) அவர்களை நபியாக ஆக்குவதற்குப் பதில் என்னை நபியாக அவன் ஆக்கியிருந்தால் இப்படிச் செய்திருப்பேன் என ஒருவன் கூறினால் அதை எந்த முஸ்லிம் ஜீரணிக்கமாட்டான். இறைவன் அவ்வாறு ஆக்கவில்லை என்பது தெளிவாகத் தெரியும் போது அவ்வாறு ஆக்கியிருந்தால்... எனக்கூறுவது ஆணவப் போக்காகவே கருதப்படும். சொர்க்கத்தையும், இரண்டு ரக்அத் தொழுவதையும் எதிரெதிரே நிறுத்தி இதில் எது வேண்டும் என இறைவன் கேட்க மாட்டான்.

இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானதல்ல. ஒன்றுக்கு பரிசு மற்றொன்று என்ற வகையில் இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. இறைவனுடன் மரியாதைக்குறைவாக நடக்கும் இது போன்ற வார்த்தைகளை ஸகரிய்யா சாஹிப் சொல்ல முடியுமே தவிர பெரியார் இப்னு ஸீரின் சொல்லியிருக்க மாட்டார்கள்.

இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்குமாறு இறைவன் கூறினால் நான் தொழுவதையே  தேர்ந்தெடுப்பேன் என்பதில் மற்றொரு தவறும் உள்ளது.

ஒரு பேச்சுக்காக இப்படி இறைவன் கேட்பதாகவே வைத்துக் கொள்வோம். அப்படிக் கேட்கும்போது இவர் இதைத்தான் தேர்ந்தெடுப்பேன் என்று எப்படிக் கூற முடியும்?

அந்த நேரத்தில் இறைவன் எத்தகைய முடிவு எடுக்கும் வகையில் நம் உள்ளத்தைப் புரட்டுகின்றானோ அந்த முடிவைத் தான் எடுக்க முடியுமே தவிர இந்த முடிவைத் தான் எடுப்பேன் என்று கூற முடியாது. அவ்வாறு கூறுவதும் ஆணவப்போக்காகும். எவரும் தான் நினைத்தவாறெல்லாம் முடிவெடுப்பேன் என்று கூறமுடியாது.

சொர்க்கம் செல்வது என்னுடைய மகிழ்ச்சிக்காக வேண்டியதாகும். இரண்டு ரக்அத்கள் தொழுவது என்னுடைய எஜமானனின் திருப்திக்காக வேண்டியதாகும் என்ற வாசகமும் இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்க்கின்றது.

இந்த வாசகத்தில் இறைவன் தொழுகையின்பால் தேவையுள்ளவன் போன்று சித்தரிக்கப்படுகின்றான். இறைவன் எதை எப்போது செய்யச் சொல்கின்றானோ அப்போது அது இறைவனின் திருப்திக்கு உரியதாகின்றது. இறைவன் தொழச்சொல்லும் போது தொழுவதும் தொழாதே என்று சொல்லும் போது தொழாமலிருப்பதும் தான் இறைவனின் திருப்திக்குரியதாகும்.

நோன்பு வைப்பது இறைவனின் திருப்திக்காக. பெருநாள் எனது திருப்திக்காக. எனவே நான் இறைவன் திருப்திக்காக பெருநாள் அன்று நோன்பு வைப்பேன் என்று ஒருவன் கூறினால் அவனை விட அறிவிலி எவனும் இருக்க முடியாது. இப்படிச் செய்வதால் இறைவனின் கடுமையான கோபத்திற்கு அவன் ஆளாகுவான். இறைவனின் திருப்தியைப் பெறமுடியாது.

 இறைவன் சுவர்க்கத்துக்குப் போகச் சொல்லும் போது எனக்கு சுவரக்கம் வேண்டாம் தொழப் போகிறேன் என்று கூறுபவனுக்கும் பெருநாள் தினத்தில் நோன்பு வைப்பவனுக்கும் அடிப்படையில் எந்த வித்தியாசமும் இல்லை.

தொழுகையின் சிறப்பை விளக்க, குர்ஆனில் எத்தனையோ வசனங்கள் உள்ளன. ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன. அதை விடுத்து இது போன்ற அபத்தங்களைக் கூறி தொழுகையின் சிறப்பை விளக்க எந்த அவசியமும் இல்லை.

பெரியார்கள் எவ்வளவு ஈடுபாடுடன் இருந்திருக்கிறார்கள் பார்த்தீர்களா? என்று புருவத்தை உயரச்செய்வதே இதன் நோக்கம்.

 பாவங்களைப் பார்க்காத பெரியார்

கடந்த காலத்தில் வாழ்ந்து மறைந்த நல்லோர்களைப் பற்றி பொய்களையும் மிகையான புகழுரைகளையும் தப்லீகின் தஃலீம் தொகுப்பில் ஏராளமாக நாம்காண முடிகிறது. இந்த வகையிலமைந்த பொய் ஒன்றைக் காண்போம்.

உளூ செய்பவர் கழுவப்பட வேண்டிய உறுப்புக்களை கழுவும் போது அவ்வுறுப்புகளால் அவர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்று ஆதாரபூர்வமான பல ஹதீஸ்கள் உள்ளன. நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியுள்ளதால் உண்மை முஸ்லிம்களுக்கு இதில் எந்த சந்தேகமும் ஏற்படப் போவதில்லை. இது பற்றி வந்துள்ள ஹதீஸ்களை விளக்கவுரை ஏதுமின்றி மொழிமாற்றம் செய்தாலே உளூவின் சிறப்பை அறிந்து கொள்ளலாம்.

ஸகரிய்யா சாஹிப் இது பற்றி வந்துள்ள ஒரு ஹதீஸை எழுதிவிட்டு அதற்கு விளக்கவுரை என்ற பெயரில் கதையளந்திருக்கிறார்.

கஷ்ப் என்னும் அகப்பார்வை உடைய பெரியோர்களுக்கு உறுப்புகளிலிருந்து பாவங்கள் நீங்குவது புலப்படுகிறது. இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களுடைய சம்பவம் பிரபலமானதாகும். உளூச் செய்யும் போது அதன் மூலம் எந்தப்பாவம் கழுவப்படுகிறது என்பதையும் அவர்கள் கண்டு கொள்ளும் ஆற்றல் பெற்றிருந்தார்கள்.

(பார்க்க தொழுகையின் சிறப்பு பக்கம் 27)

உளூவின் சிறப்பு பற்றி விளக்குவதற்கு இந்த இடத்தில் இந்தக்கதை அவசியமில்லாமலிருந்தும் வலுக்கட்டாயமாக இந்த இடத்தில் நுழைக்கப்படுகிறது. இதை நாம் பல்வேறு கோணங்களில் அலசிப்பார்க்க வேண்டியது அவசியம்.

ஸகரிய்யா சாஹிப் கூறுவது போல் கஷ்பு எனும் அகப்பார்வை என்று ஒன்று உண்டா: திருக்குர்ஆனிலோ ஆதாரபூர்வமான ஹதீஸ்களிலோ இதற்கு உண்டா? நிச்சயமாக இல்லை. சூபியாக்கள் என்ற வழி கேடர்களும் முரீது வியாபாரிகளும் கண்டுபிடித்த தத்துவமே கஷ்பு என்பது.

மற்றவர்களுக்கு இருப்பதைவிட கூடுதலான மரியாதையை மக்களிடமிருந்து பெறுவதற்காக தங்களுக்கு அகப்பார்வை உண்டு என்று கூறி மக்களை இவர்கள் மிரளச் செய்தார்கள். இந்தப் போலி ஞானத்தையே ஸகரிய்யா சாஹிப் அவர்கள் இங்கே இஸ்லாத்தின் பெயரால் அறிமுகம் செய்கிறார்.

இறைவனுடன் வஹீ எனும் தொடர்பு கொண்டிருந்த நபிமார்களுக்குத்தான் இறைவன் புறத்திலிருந்து மற்றவர்களுக்கு கிடைக்காத ஞானம் கிடைக்குமே தவிர மற்றவர்களுக்கு விசேஷ ஞானம் எதுவுமில்லை.

கஷ்பு எனும் அகப்பார்வை இருப்பது உண்மையானால் அந்த அகப்பார்வை இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களுக்கு இருந்தது உண்மையானால் அவர்களை விட பலமடங்கு உயர்வான மதிப்புடைய நபித்தோழர்களுக்கு அந்த ஞானம் இருந்திருக்க வேண்டும். ஆனால் நபித்தோழர்களில் எவருமே எந்தெந்த பாவங்கள் கழுவப்படுகின்றன என்பதை அறிந்திருந்தார்கள் என்று காணமுடியவில்லை. நபித்தோழர்கள் கஷ்பு எனும் ஞானத்தின் வாயிலாக இதை அறிந்திருப்பார்களானால் பாவங்கள் கழுவப்படுகின்றன, என்ற விபரத்தை நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்குக் கூற வேண்டிய அவசியமில்லை.

நபித்தோழர்களை விட்டு விடுவோம். நபி (ஸல்) அவர்கள் முன்னிலையில் எத்தனையோ நபித்தோழர்கள் உளூச் செய்திருக்கிறார்கள். அது போன்ற சந்தர்ப்பங்களில் இவரது இந்தப் பாவம் கழுவப்படுகின்றது என்று நபி (ஸல்) கூறியதுண்டா? நிச்சயமாக இல்லை. ஸகரிய்யா சாஹிப் நபித்தோழர்களை விடவும் நபி (ஸல்) அவர்களை விடவும் உயர்வானவர்களாக, தான் பின்பற்றும் இமாமைக் கருதுகிறார். இது போன்ற மிகைப்படுத்தப்பட்ட பொய்யான புகழுரைகள் தான் மத்ஹபுகளையும் தரீக்காக்களையும் தாங்கிப் பிடித்து கொண்டிருக்கின்றன.

மறைவான ஞானம் இறைவனுக்கு மாத்திரமே உரியது எனபதில் எவருக்குமே மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஒருவன் எவருக்கும் தெரியாமல் ஒரு பாவம் செய்கின்றான் என்றால் அதுபாவம் செய்தவனுக்கும் இறைவனுக்கும் மட்டும் தெரிந்த விஷயமாகும். இவர்கள் கற்பனை செய்து கொண்டிருக்கும் கஷ்பு என்பது, அந்த ஞானத்தில் மற்றவர்களுக்கு பங்கு போட்டுக் கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது.

கஷ்பு என்னும் ஞானம (?) பெற்றவர்கள் இறைவனுக்கு மாத்திரமே தெரிந்த இந்த இரகசியத்தையும் அறிந்து கொள்வார்கள் என்ற நச்சுக் கருத்து இதன் மூலம் இஸ்லாத்திற்குள் நுழைக்கப்படுவதை சிந்திக்கும் போது உணரலாம். இவர்கள் மதிக்கும் பெரியார்களுக்கு இறைத்தன்மையில் பங்கு போட்டுக் கொடுக்கும் இந்தக் கதையை எப்படி நம்ப முடியும்?

மற்றொரு வழியிலும் நாம் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம் உளூச் செய்யும் போது எந்தெந்த பாவங்கள் கழுவப்படுகின்றன என்பதை அபூஹனீபா (ரஹ்) அவர்கள் கண்டதை அவர்களைத் தவிர மற்ற எவரும் அறிந்து கொள்ள முடியாது. அபூஹனீபா (ரஹ்) அவர்களே தன்னைப் பற்றி இவ்வாறு கூறியிருந்தால் மட்டுமே மற்றவர்களால் அதை அறிய முடியும்.

அபூஹனீபா (ரஹ்) அவர்கள் எந்த நூலிலாவது தன்னைப் பற்றி இவ்வாறு எழுதியுள்ளார்களா? நிச்சயமாக இல்லை. அல்லது இவர்கள் தமது மாணவர்களில் எவரிடமாவது கூறி அந்த மாணவர்களாவது எழுதி வைத்திருக்கின்றார்களா? அதுவும் இல்லை.

அபூஹனீபா (ரஹ்) அவர்களுக்கு மட்டுமே தெரிந்த இந்த விஷயம் அவர்கள் கூறாமல் மற்றவர்கள் அறிந்து கொள்ள முடியாத இந்த விஷயம் ஸகரிய்யா சாஹிபுக்கு எப்படித் தெரிந்தது? அபூஹனீபா (ரஹ்) அவர்களின் காலத்திற்குச் சுமார் 1200 ஆண்டுகள் பின்னர் வாழ்ந்த ஒருவர் இதை எப்படி அறிய முடியும்? இந்த தஃலீம் தொகுப்பை தங்களின் வேதப் புத்தகமாகக் கொண்டாடுவோர் இதை விளக்குவார்களா?

இறந்தவர்கள் பெயரால் எதை வேண்டுமானாலும் கூறலாம் என்ற அசட்டுத் துணிவில் மார்க்கத்துடன் விளையாடிப்பார்க்கிறது இந்த தஃலீம் தொகுப்பு.

 ஸஹாரன்பூர் அரபிக் கல்லூரியில் பல்லாண்டுகள் ஹதீஸ் வகுப்பு நடத்தி, தனக்குத் தானே ஷைகுல் ஹதீஸ் (ஹதீஸ் கலை மேதை) என்று பட்டம் சூட்டிக் கொண்ட ஸகரிய்யா சாஹிப் ஒரு ஆதாரமும் இல்லாமல் அபூஹனீபா (ரஹ்) அவர்களின் சம்பவம் பிரபலமானதாகும் என்று மொட்டையான முத்திரையுடன் இதைப் பதிவு செய்தது எப்படி என்பது தான் விந்தையாக உள்ளது.

அமல்களின் வணக்க வழிபாடுகளின் சிறப்புகளைக் கூறுவது போன்ற பாணியில் பெரியார்களுக்கு தெய்வீக அம்சம் வழங்கி தங்களுக்கும் அதில் ஒரு பாதியை பங்கு போட்டுக்கொள்வதே இவர்களின் நோக்கமாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

 பணக்காரராகும் வழி என்ன?

அல்லாஹ்வுடைய தனித்தன்மையைப் பெரியார்களுக்கு பங்கு போட்டுக் கொடுக்கும் விதமாகவும், நபி (ஸல்) அவர்களின் நுபுவ்வத்தில் மற்றவர்களையும் பங்காளிகளாக்கும் விதமாகவும் பலவேறு கப்ஸாக்களை தப்லீகின் தஃலீம் தொகுப்பில் நாம் காணமுடிகின்றது. இந்த வகையில் அமைந்த கப்ஸா ஒன்றைக் காணுங்கள்!

ஹஜ்ரத் ஷகீக் பல்கீ (ரஹ்) என்பவர்கள் பிரபலமான சூபியும் பெரியாருமாவார்கள். அவர்கள் கூறியதாவது; நாம் ஐந்து விஷயங்களைத் தேடினோம். அவற்றை ஐந்து இடங்களில் பெற்றுக் கொண்டோம்.

  1. இரணத்தில் பரக்கத்து, லுஹாத் தொழுகையில் கிடைத்தது.
  2. கப்ருக்கு ஒளி, தஹஜ்ஜுத் தொழுகையில் கிடைத்தது.
  3. முன்கர் நகீரின் கேள்விக்கு பதில், கிராஅத்தில் கிடைத்தது.
  4. சிராத்துல் முஸ்தகீம் பாலத்தை எளிதாகக்கடப்பது நோன்பிலும் சதகாவிலும் கிடைத்தது.
  5. அர்ஷுடைய நிழல் தனிமையிலிருப்பதில் கிடைத்தது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

தொழுகையின் சிறப்புகள் பகுதியில் பக்கம் 37 ல் இந்தத் தத்துவம் (?) இடம் பெற்றுள்ளது. பயபக்தியுடன் இந்த கப்ஸாக்கள் பள்ளிவாசல்களில் வைத்துப் படிக்கப்பட்டு வருகின்றன். இதைப் பல கோணங்களில் நாம் அலசுவோம்.

ஐந்து விஷயங்களை பல இடங்களில் தேடியதாகவும் அவற்றை ஐந்து இடங்களில் பெற்றுக் கொண்டதாகவும் ஷகீக் பல்கீ என்பவர் கூறியதாக ஸகரிய்யா சாஹிப் கூறுகிறார்.

இரணத்தில் பரக்கத் லுஹாத் தொழுகையில் கிடைத்தது என்பது முதல் விஷயம். அவருக்கு இரணத்தில் பரக்கத் கிடைத்திருக்கலாம். அது லுஹாத் தொழுகையினால் தான் கிடைத்தது என்று அவருக்கு எப்படி தெரிந்தது? அவர் செய்த வேறு நல்ல அமல்களுக்காக அது கிடைத்திருக்க முடியாதா? அல்லது வேறு எந்த நல் அமலும் அவர் செய்ததேயில்லையா?

இந்த அமல் செய்தால் இது கிடைக்கும் என்று அறிவிப்பது அல்லாஹ்வின் முடிவில் உள்ளது. அதை நபி (ஸல்) அவர்கள் வழியாக தவிர வேறு எவரும் அறிய முடியாது. லுஹாத் தொழுகையினால் இரணத்தில் பரக்கத் கிடைக்கும் என்று இவருக்கு வஹீ ஏதேனும் வந்ததா? ஸகரிய்யா சாஹிபுக்கே வெளிச்சம். இதையாவது அனுபவத்தின் வாயிலாக அறிந்ததாகக் கூறி சமாளிக்கலாம். ஏனைய நான்கு விஷயங்களை இவர் தெரிந்து கொண்டது தான் மிகப் பெரிய ஆச்சரியம்!

 கப்ருக்கு ஒளி தஹஜ்ஜுத் தொழுகையில் கிடைத்தது என்கிறார் ஸகரிய்யா சாஹிப், கப்ரில் ஒளி கிடைக்கும் என்றுகூட இவர் சொல்லவில்லை. கிடைத்தது என்கிறார். கப்ரில் ஒளி கிடைத்தது என்று கூறுவதென்றால் இவர் செத்துப் பிழைத்து இதைக் கூறினாரா? கப்ரில் ஒளி கிடைத்ததை இவர் வேறு எந்த வழியில் அறிந்து கொண்டார்? தப்லீக் அறிஞர்கள் விளக்குவார்களா?

முன்கர் நகீரின் கேள்விக்கு பதில் கிராஅத்தில் கிடைத்தது என்கிறார். அப்படியானால் முன்கர் நகீரின் கேள்விகளை இவர் சந்தித்த பிறகு இதைக் கூறினாரா? அதாவது இறந்த பிறகு உயிர்த்தெழுந்தாரா? அல்லது இறப்பதற்கு முன்பே முன்கர் நகீரைச் சந்தித்து விட்டாரா? இதையும் அவர்கள் விளக்கட்டும்!

சிராதுல் முஸ்தகீம் பாலத்தை எளிதாகக் கடப்பது நோன்பிலும், சதகாவிலும் கிடைத்தது என்று கூறுகிறார். சிராதுல் முஸ்தகீம் என்ற பெயரில் பாலம் எதுவும் உண்டா என்பது தனியாக இருக்கட்டும்! இவர் எப்போது அந்தப் பாலத்தைக் கடந்தார்? பாலத்தைக் கடந்து விட்டால் உடனே சுவர்க்கத்தில் நுழைந்திருப்பாரே! ஒருவேளை சுவர்க்கத்திலிருந்து கொண்டு தான் ஷகீக் பல்கீ இதைக் கூறினாரா?

ஏட்டில் எழுதப்பட்டு விட்டால் நம்பித் தொலைக்க வேண்டும் என்ற மனப்பான்மை மக்களிடம் நிலவுவதால் இவ்வாறெல்லாம் மக்களில் பலர் சிந்திப்பதில்லை.

குண்டாந்தடியைத் தூக்கிக் கொண்டு கொசு பறக்கிறது என்று கூறினாலும் ஆமாம் என்று தலையாட்டுபவர்களாக மக்கள் இருப்பதால் ஸகரிய்யா சாஹிபுக்கு இந்தக் கதைகளை மார்க்கம் என்ற பெயரால் வியாபாரம் செய்ய முடிகிறது.

லுஹா, தஹஜ்ஜுத், கிராஅத், நோன்பு, ஸதகா ஆகிய நல்லறங்களை வலியுறுத்தி எத்தனையோ ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் உள்ளன. இது போன்ற பொய்கள் மூலம் அதற்கு சிறப்பு சேர்க்க என்ன அவசியம்? என்பதை தப்லீக் ஜமாஅத்தினர் சிந்திக்க வேண்டும். பெரியார்கள் என்பவர்கள் கப்ரில் நடப்பதை எல்லாம் அறியும் திறனுள்ளவர்கள் என்ற நம்பிக்கையை மக்கள் உள்ளங்களில் பதியச் செய்வதே இக்கதையின் நோக்கம் என்பதை இனியாவது உணர வேண்டும்.

மேற்கூறிய நான்கு விஷயங்களாவது செய்யத்தக்க நல்லறங்களாகவே உள்ளன. அவற்றின் பலன்கள் பற்றி மட்டுமே பொய் புனையப்பட்டுள்ளது. இவர் கடைசியாகக் குறிப்பிடும் விஷயம் மார்க்கத்துடன் எந்த விதத்திலும் சம்மந்தமில்லாததாகும். குர்ஆன், ஹதீஸ் போதனைகளுடன் நேரடியாக மோதக் கூடியதுமாகும்.

அர்ஷுடைய நிழல் தனிமையிலிருப்பதில் கிடைத்தது என்கிறார். அர்ஷுடைய நிழலில் அமர்ந்து கொண்டு தான் இதைக் கூறினாரா? இதை எப்படி கண்டு பிடித்தார்? என்பது போன்ற கேள்விகளை விட்டு விடுவோம்.

தனிமையில் இருப்பது மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்ட அல்லது வரவேற்கப்பட்ட அல்லது அனுமதிக்கப்பட்ட காரியமாக நிச்சயமாக இல்லை. இது இஸ்லாத்தில் முழுமையாக தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.

நன்மையை ஏவி தீமையைத் தடுக்க வேண்டும் என்று அடிக்கடி போதனை செய்யும் தப்லீக் ஜமாஅத்தினர் எப்படி இதை ஜீரணிக்கிறார்கள் என்பது தான் நமக்கு ஆச்சரியமாக உள்ளது. நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதென்றால் சமுதாயத்தில் கலந்து வாழ்வதன் மூலமே இது சாத்தியமாகும்.

தப்லீகின் ஸ்தாபகர் மரியாதைக்குரிய முஹம்மது இல்யாஸ் (ரஹ்) அவர்கள் தனிமையை நாடிச்சென்றிருந்தால் தப்லீக் இயக்கமே தோன்றியிருக்க முடியாது. தனிமையின் மூலம் அர்ஷுடைய நிழலை அடையமுடியும் என்பது உண்மையானால் தப்லீக் ஜமாஅத்தினர் ஏன் ஊர்ஊராகச் சென்று மக்களைச் சந்தித்து தொழுகைக்கு அழைக்க வேண்டும்? பல்வேறு பகுதிகளில் கல்விக்கூடங்களை ஏன் அவர்கள் துவக்க வேண்டும்? தப்லீக் ஜமாஅத்துடைய அடிப்படையையே தகர்க்கும் நோக்கில் தான் ஸகரிய்யா சாஹிப் அவர்கள் இவ்வாறு கதைக்கட்டி விட்டிருக்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

கல்வத் என்று கூறப்படும் இந்தத் தனிமைப் பற்றி இஸ்லாம் கூறுவது என்ன என்பதைக் காணுவோம்.

நன்மையை ஏவுதல், தீமையை தடுத்தல், ஒருவொருக்கொருவர் உறுதுணையாக இருத்தல், முஸ்லிம்களின் தேவைகளில் உதவி செய்தல், அவர்களுக்கிடையே சமரசம் செய்தல், மனைவி, மக்கள், தாய், தந்தையருக்குச் செய்ய வேண்டிய கடமைகள், ஜமாஅத் ஜும்ஆ,பெருநாள் தொழுகையில் பங்கெடுத்தல், தனது வயிற்றுக்காக உழைத்தல், அமானிதம் பேணுதல், வாக்குறுதியை நிறைவேற்றல், ஸலாம் கூறுதல், நோயுற்றவர்களை விசாரிக்கச் செல்லுதல், மரணித்தவரை அடக்கம் செய்தல், ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்ளுதல், அறப்போரில் பங்கெடுத்தல் மற்றும் பல்லாயிரம் கடமைகள் முஸ்லிம்கள் மீது உள்ளன.

இந்தத் தனிமை, மேற்கண்ட கடமைகள் அனைத்தை விட்டும் ஒரு முஸ்லிமை அப்புறப்படுத்தி விடுகின்றன. இவ்வளவு கடமைகளை முஸ்லிம்கள் மீது சுமத்தியுள்ள இஸ்லாம் தனிமையை ஒரு போதும் அங்கீகரிக்காது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணரக் கடமைப்பட்டுள்ளனர்.

ஒரு நபித்தோழர், சுவை மிகுந்த நீரூற்று அமைந்த ஒரு கணவாயைக் கடந்து சென்றார். அது அவரை மிகவும் கவர்ந்தது. நான் மக்களை விட்டு விலகி இந்தக் கணவாயிலேயே தங்கி விடலாமே என்று தனக்குள் அவர் கூறிக்கொண்டார். இது பற்றி அவர் நபி (ஸல்) அவர்களிடம் கூறிய பொழுது அவ்வாறு செய்யாதே! ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் ஈடுபடுவது 70 ஆண்டுகள் அவர் தொழுததை விட மேலானது. அல்லாஹ் உங்களை மன்னித்து உங்களை சுவர்க்கத்தில் சேர்ப்பதை நீங்கள் விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்யுங்கள்! ஒரு ஒட்டகத்தின் பால் கறக்கும் நேரம் ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிந்தால் சுவர்க்கம் அவருக்கு கடமையாகிவிட்டது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : திர்மிதீ

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் சிறு படையாக புறப்பட்டோம். எங்களில் ஒருவர் தண்ணீரும் தாவரங்களும் நிறைந்த குகைக்கருகே சென்றார். அந்த இடத்தில் தங்கிக் கொண்டு உலகை விட்டும் தனிமைப்பட அவர் மனம்விரும்பியது. இது சம்பந்தமாக நபி (ஸல்) அவர்களிடம் அவர் அனுமதி கேட்டார். அப்ப்போது நபி (ஸல்) அவர்கள் நான் யூத மார்க்கத்தையும் கிறித்தவ மார்க்கத்தையும் கொண்டு அனுப்பப்படவில்லை. தெளிவான நேரான மார்க்கத்தைக்கொண்டு அனுப்பப்பட்டுள்ளேன். யாருடைய கையில் இந்த முஹம்மதுவின் உயிர் இருக்கின்றதோ அவன் மீது ஆணையாக அல்லாஹ்வின் பாதையில் காலையில் சிறிதுநேரம் அல்லது மாலையில் சிறிதுநேரம் செலவிடுவது இவ்வுலகை விடவும், அதில் உள்ளவற்றை விடவும் மிகவும் மேலானதாகும். (போர்) அணியில் ஒருவர் சற்று நேரம் நிற்பது அவர் அறுபது ஆண்டுகள் தொழுததை விட சிறந்ததாகும் என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூஉமாமா (ரலி),

நூல் : அஹ்மத்

கல்வத் என்ற தனிமைக்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அது யூத, கிறித்தவ மார்க்கத்திலிருந்து காப்பியடிக்கப்பட்ட சித்தாந்தமாகும் என்பதை மேற்கண்ட ஹதீஸ்கள் அறிவிக்கின்றன. இந்த இறக்குமதி சரக்குக்குத் தான் இஸ்லாமிய முத்திரை குத்த முயல்கிறார் ஸகரிய்யா சாஹிப்.

அர்ஷுடைய நிழல் தனிமையில் இருப்பதில் கிடைத்தது என்ற வாசகம் இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்க்கும் மாற்று மதச்சித்தாந்தம் என்பதை இனியேனும் தப்லீக் ஜமாஅத்தினர் உணர்வார்களா?

தனது நிழலைத் தவிர வேறு நிழலேதும் இல்லாத அந்நாளில் ஏழு நபர்களுக்கு அல்லாஹ் தனது நிழலில் நிழல் தருவான் என்று நபி (ஸல்) கூறிவிட்டு அவர்களை வரிசைப்படுத்தினார்கள்.

  1. நீதியாக நடந்த தலைவன்:

சமுதாயத்தில் கலந்து அவர்களுக்குத் தலைமை தாங்கி அவர்களிடையே நீதியுடன் நடந்து கொண்ட தலைவனுக்கு அர்ஷின் நிழல் கிடைக்கும் என்று நபி (ஸல்) உத்தரவாதம் தருகிறார்கள். ஸகரிய்யா சாஹிபோ தனிமையில் நிழலைத் தேடுகிறார்.

  1. அல்லாஹ்வின் வணக்கத்தில் ஊறித் திளைத்த இளைஞன்:

இளம் வயதிலேயே வணக்க வழிபாடுகளில் பேணுதலாக நடந்து கொண்ட இளைஞனுக்கும் அர்ஷின் நிழல் உண்டு என நபி (ஸல்) உறுதியளிக்கிறார்கள்.

வணக்கத்தில் ஊறித் திளைப்பது என்றால் அல்லாஹ்வின் அனைத்து ஏவல் விலக்கல்களையும் பேணி நடப்பதுதான்.

 3,4 அல்லாஹ்வுக்காகவே ஒருவரை ஒருவர் நேசித்து அல்லாஹ்வுக்காகவே பகைத்துக் கொண்ட இருவர்:

 சமுதாயத்தில் கலந்து வாழ்வதன் மூலமே இது சாத்தியமாகும்.

  1. அழகும், குணமும் உடைய பெண்மணி அழைக்கும் போது நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன் என்று கூறி (தன்னைக்) காத்துக்கொண்ட மனிதன்:

சமூகத்தில் கலந்து வாழும் போதே இந்த நிலையை ஒருவன் அடைய முடியும்.

  1. வலது கையால் கொடுப்பதை இடது கை அறியாத வகையில் இரகசியமாக தர்மம் செய்தவன்:

தர்மம் செய்வதென்றால் காடோ, செடியோ என்று மக்களை விட்டு விலகிவிட்டால் அது சாத்தியமாகாது.

  1. தனித்திருக்கும்போது அல்லாஹ்வை நினைத்து கண்ணீர் வடித்தவன்:

இது கூட காடோ, செடியோ என்று போவதைக் குறிப்பிடவில்லை. சமூகத்தில் கலந்து வாழும் போது சிறிதளவு தனிமையைப் பெறும் போது அப்போதும் அல்லாஹ்வை நினைத்து அஞ்சுவதையே குறிப்பிடுகிறது.

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம் உட்பட பல நூல்களில் காணக் கிடைக்கின்றது.

அர்ஷுடைய நிழலைத் தேடும் வழிகளை அல்லாஹ்வின் தூதர் மிகத் தெளிவாக அறிவித்த பிறகு ஷகீக் பல்கி என்பவர் யூத மார்க்கத்திலும் கிறித்தவ மார்க்கத்திலும் அந்த நிழலைத் தேடினார் என்பதை அறிவுடையவர்கள் நம்ப முடியுமா?

இது போன்ற போதனைகள் நாளடைவில் மக்கள் உள்ளங்களில் ஆழமாகப் பதிந்ததால் நாளைக்கு தப்லீக் இயக்கமும் அழிந்து விடும். தொழுகைக்கு அழைப்பதை விட்டு விட்டு தனிமையை நோக்கி அவர்கள் ஓடி விடக் கூடும். இதை உணர்ந்தாவது இந்த தஃலீம் தொகுப்பைத் தூக்கி எறிவார்களா?

 சொர்க்கத்தில் தொழுகையா?

ஹஜ்ரத் முஜத்தித் அல்பதானி (ரஹ்) அவர்களைப் பற்றி அறியாதவர்கள் இந்தியாவில் யாரும் இருக்க முடியாது. அவர்களுடைய கலீபாக்களில் ஒருவரான மௌலானா அப்துல் வாஹித் லாஹீர் (ரஹ்) அவர்கள் ஒரு நாள் சொர்க்கத்தில் தொழுகை இருக்காதா? என்று கவலையுடன் கேட்டார்கள். அப்பொழுது அங்கிருந்த ஒருவர் ஹஜ்ரத் சொர்க்கத்தில் தொழுகை எவ்வாறு இருக்க முடியும்? அது அமல்களுக்குப் பிரதி பலன்கள் வழங்கப்படும் இடமாயிற்றே! அமல் செய்யும் இடமல்லவே என்று கூறியவுடன், ஆஹ் என்று ஒரு பெருமூச்சு விட்டு அழ ஆரம்பித்து விட்டார்கள். பிறகு சொர்க்கத்திலும் தொழுகையில்லாமல் எவ்வாறு வாழ முடியும்? என்று கூறினார்கள்.

இப்படிப்பட்ட நல்லடியார்களினால்தான் இவ்வுலகம் நிலை பெற்றுள்ளது. உண்மையில் வாழ்க்கையின் இன்பத்தைச் சம்பாதித்துக் கொள்பவர்கள் இப்படிப்பட்ட பெரியார்கள் தான்.

இது தப்லீக் தஃலீம் தொகுப்பு நூலில் பக்கம் 45 ல் இடம் பெற்றுள்ளது.

என்னே பக்தி! என்னே தக்வா? என்று அப்பாவிகள் மூக்கில் விரலை வைத்து வியப்படையுமளவுக்கு இந்தக் கதை பெரியார்கள் (?) மீது போலிமதிப்பை ஏற்படுத்துவதுடன் இஸ்லாத்தை தவறான வடிவத்திலும் அறிமுகப்படுத்துகின்றது.

தொழுகையாகட்டும்! இன்ன பிற வணக்க வழிபாடுகளாகட்டும்! ஒவ்வொரு முஸ்லிமும் அதை விரும்பியாக வேண்டும். அதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை. ஆயினும் அதற்கு ஒரு வரையறை உண்டு என்பதை மறந்துவிடக் கூடாது. இறைவன் கட்டளையிட்டுள்ளான் என்ற ஒரே காரணத்துக்காக அவற்றை விரும்ப வேண்டுமே தவிர இறைவன் விரும்பாவிட்டாலும் அவற்றை விரும்புவேன் என்று அடம் பிடிக்க முடியாது.

 எப்போது அவற்றை நிறைவேற்ற வேண்டும் என இறைவன் நிர்ணயித்துள்ளானோ அப்போது அதைச் செய்ய வேண்டும். எப்படிச் செய்ய வேண்டும் என்று வழிகாட்டியுள்ளானோ அப்படிச் செய்ய வேண்டும்.

 தொழுகை நல்லது தானே என்று எண்ணிக் கொண்டு நான்கு ரக்அத்களுக்கு பதிலாக ஆறு ரக்அத்கள் ஒருவன் தொழுதால் அவன் பக்தனல்ல. அகம்பாவம் கொண்டவனாகவோ அல்லது மார்க்கத்தை அறியாத மூடனாகவோ அவன் இருக்க வேண்டும்.

பக்தி எனும் பெயரில் ஒருவன் பகலில் நோன்பு நோற்பதற்குப் பதிலாக இரவிலும் நோன்பு நோற்க முயன்றால், தொழக் கூடாத நேரங்களில் ஒருவன் தொழுதால் அவன் தக்வாதாரியாக விட முடியாது. இந்த அடிப்படையைப் புரிந்து கொண்டு இந்தக் கதையை மீண்டும் ஒரு முறை படியுங்கள்! இதன் போலித்தனம் பளிச்சிடும்.

சொர்க்கத்தில் தொழுகை கிடையாதா? என்று அஷ்ரப் அலி தானவியின் கலீபா அப்துல் வாஹித் என்பார் மேற்கொண்ட கதையில் கேட்கிறார். சொர்க்கத்தில் தொழுகை உட்பட எந்தவிதமான வணக்கமுறைகளும் கிடையாது என்பதைக்கூட அவர் அறிந்திருக்கவில்லை என்பது இதிலிருந்து தெரிய வருகின்றது. எல்லா முஸ்லிம்களும் அறிந்துள்ள இந்த சாதாரண விஷயம் கூட இந்தப் பெரியாருக்குத் தெரியவில்லை.

அதுதான் போகட்டும்! எத்தனையோ பேரறிஞர்களுக்கு சில நேரங்களில் சாதாரண விஷயம் தெரியாமலிருப்பது இயற்கையே என்பதால் விட்டுவிடுவோம். ஒரு விபரமறிந்த மனிதர் இந்த பெரியாருக்கு சொர்க்கத்தில் தொழுகை கிடையாது என்பதை விளக்கிய பிறகும் கூட அவர் தனது அறியாமையை நீக்கிக் கொள்ள முன் வரவில்லை. தனது அறியாமையில் மேலும் பிடிவாதம் காட்டுகிறார். அவர் எதிரொலி தான் சொர்க்கத்திலும் தொழுகையில்லாமல் எவ்வாறு வாழ முடியும்? என்ற அவரது கேள்வி.

இந்தக் கேள்வியில் அவரது முரட்டு அறியாமை மட்டும் வெளிப்படவில்லை. இறைவனது ஏற்பாட்டில் நம்பிக்கையின்மையும் சேர்ந்து வெளிப்படுகின்றது.

தொழுகை மற்றும் வணக்கங்கள் எதுவுமின்றி சொர்க்கத்தில் வாழ முடியும் என இறைவன் ஏற்பாடு செய்திருக்கும்போது அது எப்படிச் சாத்தியமாகும்? என்று இவர் ஐயம் தெரிவிக்கிறார் இறைவனது ஏற்பாட்டில் குறை காண்கிறார்.

 ஸகரிய்யா சாஹிப் பார்வையில் வேண்டுமானால் அந்தப் பெரியாரின் மகாத்மியம் தென்படலாம். நடுநிலையோடு சிந்திப்பவர்கள் இறைவனின் மகாத்மியத்திற்கு இவர் மாசு கற்பிக்கிறார் என்றே முடிவுக்கு வருவார்கள்.

எந்த இறைவனது மேன்மையை அடியான் ஒப்புக்கொள்வதற்காக தொழுகை கடமையாக்கப்பட்டதோ, இறைவன் எஜமான் என்பதையும், தான் அவனது அடிமை என்பதையும் பறைசாற்றுவதற்காக தொழுகை கடமையாக்கப்பட்டதோ, அந்தத் தொழுகையை வைத்தே இறைவனை ஸகரிய்யா சாஹிபும் இந்தப் பெரியாரும் தூர எறிகிறார்கள்.

மார்க்கத்தைப் பற்றிய அறிவு இல்லாதவராகவும், இறைவனது ஏற்பாட்டில் குறை கண்டவராகவும் அறிமுகம் செய்யப்பட வேண்டிய இப்பெரியார் இங்கே மகானாக அறிமுகப்படுத்தப்படுகிறார்.

இது போன்ற கதைகளை தொழுகையைச் சிறப்பிப்பதற்காக கூறுவது போல் மேலோட்டமாகத் தோன்றினாலும் உண்மையான நோக்கம் அதுவல்ல. பெரியார்களைப் பற்றிய மதிப்பு மக்களிடம் இடம் பெற வேண்டும் என்பதுவே இவரது நோக்கம். இது ஆதாரமற்ற கற்பனை அல்ல. இந்த நோக்கத்தை ஸகரிய்யா சாஹிப் அவர்களே அவரையும் அறியாமல் ஒப்புக் கொள்கிறார்.

இந்தக் கதையை எழுதிவிட்டு, பார்த்தீர்களா தொழுகையின் சிறப்பை? என்று ஸகரிய்யா சாஹிப் விமர்சனம் செய்திருந்தால் கதை சரியாக இல்லாவிட்டாலும் ஸகரிய்யா சாஹிபின் நோக்கத்தையாவது சந்தேகிக்காமலிருக்கலாம். இவரோ கதையை எழுதிவிட்டு இப்படிப்பட்ட நல்லடியார்களினால் தான் இவ்வுலகம் நிலை பெற்றுள்ளது என்று கூறுகிறார். அதாவது அந்தப் பெரியாரின் மதிப்பைக் கூட்டிக்காட்டுவது தான் அவரது நோக்கம் என்பதற்கு இந்த விமர்சனமே சான்று.

 பெரியார்களை இப்படி உயர்த்தி அவர்களைப் பற்றி புனிதர்கள் என்ற நம்பிக்கையை வேரூன்றச் செய்தால் தன்னையும் மற்றவர்கள் புனிதாரக மதிப்பார்கள் என்ற திட்டமே இந்தக் கதைகளை அறிமுகப்படுத்துவதன் நோக்கம். ஸகரிய்யா சாஹிப் அறிமுகப்படுத்தும் வாஹிதும் இந்த ஸகரிய்யா சாஹிபும் முஜத்திதே அல்பதானி அவர்களின் சீடர்கள், தனது சகாவின் மகிமையை உயர்த்தினால் தனக்குப் பிற்காலத்தில் அதுபோன்ற உயர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பே கதையின் பின்னணி.

தங்களைப் பற்றி இமேஜை உயர்த்திக் கொண்டு முரீது வியாபாரத்தை தடங்கலின்றி நடத்திட இது போன்ற கதைகள் இவருக்குத் தேவைப்படுகிறது.

 பிறர் மெச்சுவதற்காக வணங்குதல்

திருக்குர்ஆனிலும், நபிவழியிலும் அனுமதி உண்டா இல்லையா என்பதைப் பற்றியெல்லாம் கடுகளவும் அக்கறை கொள்ளாமல் தனி நபர்களை அளவுக்கதிகமாக உயர்த்தும் வகையில் அமைந்துள்ள மற்றொரு கதையைப் பாருங்கள்.

 முஹம்மது ஸிமாக் (ரஹ்) என்பவர்கள் கூறுகிறார்கள். கூபா நகரில் என் வீட்டுக்குப் பக்கத்தில் ஒருவர் குடியுருந்தார். அவருடைய மகன் ஒருவர் பகலெல்லாம் நோன்பு வைத்திருப்பார் இரவெல்லாம் தொழுகையிலும் இறைக்காதல் பாடல்கள் பாடுவதிலும் கழிப்பார். இதனால் அவர் இளைத்து எலும்பும், தோலுமாகக் காட்சியளித்தார். அவருடைய தந்தை என்னிடம் வந்து தன் மகனுக்கு அறிவுரை கூறுமாறு கேட்டுக் கொண்டார்.

 நான் ஒரு தடவை என் வீட்டு வாசற்படியில் உட்கார்ந்திருந்த போது அவருடைய மகன் அவ்வழியே சென்றார். நான் அவரை அழைத்தேன். அவர் என்னருகில் வந்து ஸலாம் சொல்லி உட்கார்ந்தார். நான் அவர் சம்மந்தமாக பேச ஆரம்பித்தவுடனேயே, எனது சிறிய தந்தை அவர்களே! நான் என்னுடைய உழைப்பைக் குறைத்துக் கொள்ள வேண்டுமெனத் தாங்கள் ஆலோசனை சொல்லப் போகிறீர்கள் இல்லையா? சிறிய தந்தையாரே! இந்த மஹல்லாவை சேர்ந்த சில வாலிபர்களாகிய நாங்கள் இபாதத் செய்வதில் அதிகம் முயற்சிப்பவர்கள் யார் என்பதைப் பார்க்கலாம் என்று எங்களுக்கிடையே ஒரு போட்டியை ஏற்படுத்தினோம். என்னுடைய நண்பர்களாகிய அவர்கள் தங்களால் இயன்ற அளவு முயற்சித்து வணக்கங்கள் புரிந்தனர். இறுதியில் அவர்கள் அல்லாஹுதஆலாவின் பால் அழைக்கப்பட்டுக் கொண்டார்கள். அவர்கள் செல்லும் போது மிக்க மகிழ்ச்சியுடனும், ஆனந்தத்துடனும் சென்றார்கள்.

இப்பொழுது அவர்களில் என்னைத் தவிர வேறு யாருமில்லை. ஒவ்வொரு நாளும் இரண்டு தடவை என்னுடைய அமல்கள் அவர்களுக்கு எடுத்துக் காட்டப்படும் பொழுது அதில் அவர்கள் குறை கண்டால் என்னைப்பற்றி அவர்கள் என்ன கூறுவார்கள்.

 இப்படிப் போகிறது கதை, இது தப்லீகின் தஃலீம் தொகுப்பில் தொழுகையின் சிறப்பு எனும் பாடத்தில் பக்கம் 43,44 ல் இடம் பெற்றுள்ளது.

முகவரியில்லாத ஒருவர் பகலெல்லாம் நோன்பு வைத்து இரவெல்லாம் நின்று வணங்கியதாகக் கூறப்படுகின்றது. நல்லடியார்கள் என்பதற்கு இதுவே அளவு கோலாகவும் அப்பாவி முஸ்லிம்கள் நம்ப வைக்கப்பட்டுள்ளனர்.

இஸ்லாம் இந்த நம்பிக்கையை மறுக்கின்றது. ஒரு முஸ்லிம் பகலெல்லாம் நோன்பு வைத்துக்கொண்டும் இரவெல்லாம் நின்று வணங்கிக் கொண்டும் இருக்கக் கூடாது என்று இஸ்லாம் நமக்கு கற்றுத்தருகின்றது.

உலகுக்குச் செய்ய வேண்டிய கடமைகள், ஊருக்கு ஆற்ற வேண்டிய பணிகள், அண்டை அயலாருக்குச் செய்யும் கடமைகள், குடும்பத்திற்கு ஆற்றும் கடமைகள் என்று ஏராளமான கடமைகள் முஸ்லிம்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன. இறைவணக்கத்தை நிறைவேற்றும் அதே நேரத்தில் இந்தக் கடமைகளையும் நிறைவேற்றியாக வேண்டும். இரண்டில் எதனையும் எதன் காரணமாகவும் விட்டுவிட முடியாது. இது தான் இஸ்லாத்தின் போதனை. வணக்கம் என்ற பெயரில் கூட அளவு கடந்து செல்வதை அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளனர். இது பற்றிய சான்றுகளைக் காண்போம்.

 நபித் தோழர்களில் ஒருவர் திருமணமே செய்யமாட்டேன் என முடிவு செய்தார். மற்றொருவர் நான் தூங்காமல் தொழுது கொண்டே இருப்பேன் என்றார். வேறொருவர் விடாமல் நோன்பு வைப்பேன் என்றார்.இந்த விஷயம் நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிய வந்த போது இவ்வாறெல்லாம் கூறியவர்கள் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்? நான் (சில போது) நோன்புவைக்கிறேன் (சில போது) விட்டு விடுகிறேன். தொழவும் செய்கிறேன் உறங்கவும் செய்கிறேன். பெண்களைத் திருமணமும் செய்து உள்ளேன். யார் எனது (இந்த) வழிமுறையைப் புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்லர் என்று கூறினார்கள். அனஸ் (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் அஹ்மதில் இடம் பெற்றுள்ளது. இந்தக் கருத்து புகாரி, நஸயீ ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது. எத்தகையவர்கள் என்னைச் சேர்ந்தவரல்லர் என்று நபி (ஸல்) அடையாளம் காட்டினார்களோ அவர்கள் இங்கே மகான்களாக அறிமுகம் செய்யப்படுகின்றனர்.

நான் காலமெல்லாம் நோன்பு வைப்பவனாகவும், இரவெல்லாம் குர்ஆன் ஓதுபவனாகவும் இருந்தேன். என்னைப் பற்றி நபி (ஸல்) அவர்களுக்கு கூறப்பட்டதோ அல்லது அவர்களாகவே அறிந்தார்களோ நான் அவர்களின் அழைப்புக்கேற்ப வந்தேன்.

நீ காலமெல்லாம் நோன்பு நோற்பதாகவும் இரவெல்லாம் குர்ஆன் ஓதுவதாகவும் எனக்குக் கூறப்படுகிறதே எனக் கேட்டார்கள். நான் ஆம் இதன் மூலம் நல்லதையே நாடுகிறேன் என்றேன். அதற்கவர்கள் மாதம் தோறும் மூன்று நோன்புகள் நோற்பது உனக்குப் போதுமாகும் என்றார்கள். அதற்கு நான் இதை விட சிறப்பாக (கூடுதலாக) செய்ய நான் சக்தி பெற்றவன் என்றேன். அதற்கவர்கள் உன் மனைவிக்கு நீ செய்ய வேண்டிய கடமைகள் உள்ளன. உன் விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உள்ளன என்று கூறினார்கள் 

என அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னுள் ஆஸ் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது. இந்தக் கருத்து புகாரி, நஸயியிலும் இடம் பெற்றுள்ளது. மற்றொரு அறிவிப்பில் இதைவிட சிறந்தது இல்லை எனவும் கூறப்படுகிறது.

உலகுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைப் புறக்கணித்து விட்டு வணக்கங்களில் வரம்பு மீறலாகாது என்பதற்கு இன்னும் ஏராளமான ஹதீஸ்கள் சான்றுகளாக உள்ளன. வணக்கத்தில் ஈடுபடுகிறேன் என்ற பெயரில் உடம்பை வருத்திக் கொள்வது இஸ்லாம் காட்டும் வாழ்க்கை நெறிக்கு முற்றிலும் எதிரானதாகும். இந்த கருத்துக்கொண்ட கதைகளைத் தான் ஸகரிய்யா சாஹிப் தனது நூல் நெடுகிலும் கூறுகிறார்.

ஸகரிய்யா சாஹிபாகட்டும்! இன்றைக்கு தப்லீகின் தலைமைப் பீடத்தில் இருப்பவர்களாகட்டும்! இந்தக் கதையின் போதனைகள் அவர்களே கூட கடைப்பிடிக்காத கடைப்பிடிக்க முடியாததாகும். இந்தக் கதை கூறும் போதனைப்படி எவரும் எலும்பும் தோலுமாகக் காட்சி தந்ததில்லை. அறுசுவை உணவுகளை விரும்பி உண்ணக் கூடியவர்களாகவே காண்கிறோம். நடைமுறைச் சாத்தியமற்ற இஸ்லாம் விரும்பாத போதனைகளை உள்ளடக்கியது தான் தஃலீம் தொகுப்பு நூல்.

கதையின் நாயகரான முகவரியில்லாத அந்த வாலிபர் தன்னுடைய அமல்கள் தினமும் இரண்டுமுறை தன்னுடைய நண்பர்களுக்கு எடுத்துக்காட்டப்பட்டால் அவர்கள் என்ன சொல்வார்கள் என்று ஆதங்கப்படுகிறார்.

முன்னரே இறந்தி விட்ட இவரது நண்பர்களுக்கு இவரது அமல்கள் இரண்டு தடவை எடுத்துக் காட்டப்படும் என்பதற்கு என்ன ஆதாரம்? நல்லடியார்கள் கியாம நாள் வரையில் மண்ணறையில் ஆழ்ந்த நித்திரையில் இருப்பதாக ஏராளமான ஹதீஸ்கள் கூறுகின்றன. அதற்கு மாற்றமாக மற்றவர்களின் அமல்கள் எடுத்துக் காட்டப்படும் என்று எப்படிக் கூறமுடியும்?

ஷைகுமார்கள் என்ற போர்வையில் முரீதுகளை ஏமாற்றும் எண்ணம் படைத்தவர்கள் தான் இதுபோன்ற நம்பிக்கையை ஏற்படுத்தி மக்களை வழிகெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் முரீதுகளின் செயல்கள் தங்களுக்கு எடுத்துக்காட்டப்படும் என்று பயமுறுத்தி மக்களை அடிமைப்படுத்தவே இது போன்ற கதைகள்.

முரீது வழங்கிய ஸகரிய்யா சாஹிபுக்கு இந்தக் கதைகள் தேவைப்பட்டிருக்கலாம். முஸ்லிம்களுக்கு இது தேவையில்லாததாகும். இப்படிக் கூறிய வாலிபர் அவர் பார்வையில் மகானாக இருக்கலாம். அல்லாஹ்வின் தூதருடைய பார்வையில் அவர் ஒரு வழிகேடர்.

அந்த வாலிபர் இப்படி நடந்து கொண்டது ஒரு புறம் தவறு என்றால், அவரது எண்ணம் அதைவிட மோசமானது. தன்னுடைய நண்பர்கள் என்ன நினைப்பார்கள் என்பதற்காகவே இப்படிக் கூடுதல் அமல் செய்வதாகக் கூறுகிறார். இந்த எண்ணமே அவரது அமல்கள் நல்லதாக இருந்தால் அதனை அழித்துவிடப் போதுமானதாகும். மூடர்களையும், வழிகேடர்களையும் மகான்களாக சித்தரித்து இஸ்லாத்திற்கு தவறான வடிவம் தரும் கதைகள் இவை.

 இருநூறு ரக்அத்கள் தொழுத பெரியார்

பெரியார்கள் மேல் அளவுக்கதிகமான மதிப்பையும், மலைப்பையும் ஏற்படுத்தும் மற்றொரு கதையைப் பாருங்கள்.

முஹம்மதுப்னு ஸிமாஆ (ரஹ்) என்ற பெரியார் சிறந்த ஆலிமாக இருந்தார்கள். இவர் இமாம் அபூயூசுப் (ரஹ்), இமாம் முஹம்மது (ரஹ்) ஆகிய இரு இமாம்களின் மாணவராவார். அன்னார் தங்களுடைய நூற்றிமுப்பதாவது வயதில் காலமாகும் வரை ஒவ்வொரு நாளும் இரு நூறு ரக்அத்கள் நபில் தொழுது கொண்டிருந்தார்களாம், அவர்கள் கூறுகிறார்கள்: நாற்பது ஆண்டுகள்வரை தொடர்ந்து முதல் தக்பீர் தவறாமல் நான் தொழுது வந்திருக்கிறேன் ஒரே நேரத்தை தவிர...... இப்படிப் போகிறது கதை!

இந்தக் கதை தப்லீகின் தஃலீம் தொகுப்புநூலில் தொழுகையின் சிறப்புகள் என்ற பகுதியில் 86ம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.

ஒரு நாளைக்கு 200 ரக்அத்கள் நபில் தொழுவது சாத்தியப்படக் கூடியது தானா? இதை முதலில் நாம் ஆராய்வோம்.

ஒரு நாளைக்கு மொத்தம் 24 மணி நேரங்களே உள்ளன. இந்த இருபத்திநான்கு மணி நேரங்களில் ஏறத்தாழ மூன்று மணிநேரங்கள் தொழக்கூடாத நேரங்களாகும்.

சூரியன் உதிக்கத் துவங்கி முழுமையாக உதிப்பதற்கு 20 நிமிடங்கள். சூரியன் உச்சிக்கு வரத் துவங்கி உச்சி சாய்வதற்கு 20 நிமிடங்கள். சூரியன் மறையத் துவங்கி முழுமையாக மறைவதற்கு 20 நிமிடங்கள். இந்த மூன்று நேரங்களிலும் தொழக்கூடாது என்று ஹதீஸ்களில் தடைவந்துள்ளது. இந்த வகையில் 24 மணிநேரங்களில் ஒரு மணிநேரம் குறைகின்றது.

அஸர் தொழுத பிறகு உபரியான தொழுகை தொழுவதற்கும் ஹதீஸ்களில் தடை வந்துள்ளது. இந்தப் பெரியார் முதல் தக்பீரிலேயே தொழுதுவிடும் வழக்கமுடையவர் என்று இந்தக் கதையில் கூறப்படுகின்றது. அஸர் தொழுகையை நான்கு மணிக்கு அவர் நிறைவேற்றினால் மஃரிப் வரை குறைந்தது இரண்டு மணி நேரங்கள் தொழக் கூடாத நேரங்கள். இந்த வகையில் இரண்டு மணி நேரங்கள் கழிந்து விட்டால் எஞ்சியிருப்பது 21 மணி நேரங்களே.

ஒரு நாளைக்கு இரண்டு தடவை மலம் கழிப்பது நான்கு தடவை சிறுநீர் கழிப்பது என்று வைத்துக் கொண்டாலும், குறைந்தது அரைமணி நேரமாவது தேவைப்படும். இவ்வாறு ஆறு தடவை வுளூ செய்யவேண்டும். இந்த வகையில் குறைந்தது அரைமணி நேரமாகும்.இப்போது எஞ்சியிருப்பது 20 மணி நேரங்களே.

மனிதன் என்ற முறையில் சில மணி நேரங்களாவது தூங்க வேண்டும். நபியவர்களும் கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் பற்றி வலியுறுத்துகிறார்கள். மனித உடலும் இயற்கையாகவே தூக்கத்தின் பால் நாட்டம் கொண்டதாகவே உள்ளது. குறைந்த பட்சம் ஐந்து மணி நேரங்கள் தூக்கத்தில் கழித்தால் எஞ்சியிருப்பது பதினைந்து மணிநேரங்களே.

எவ்வளவு பெரிய மகானாக இருந்தாலும் பசி உயர்வு இல்லாத மலக்குகளாக அவர்கள் ஆக முடியாது. டீ, காபி, டிபன் என்று பல தடவை உண்ணாவிட்டாலும் குறைந்தது இரண்டு தடவைகளாவது உண்ணவேண்டும். இதற்கு குறைந்தபட்சமாக அரைமணி நேரமாவது தேவைப்படும். இப்போது எஞ்சியிருப்பது பதினான்கரை மணி நேரங்களே.

இந்த பதினான்கரை மணி நேரங்களில் இந்தப் பெரியார் ஐவேளைக் கடமையான தொழுகைகளையும் தொழுதுவிட்டு சுன்னத்தான தொழுகைகளையும் தொழுதுவிட்டு உபரியாக 200 ரக்அத்கள் நபில் தொழுதுள்ளார்களாம்.

ஜமாஅத்துடன் ஐவேளைத் தொழுகையையும் தொழ சுமார் ஒரு மணி நேரம். அதன் பின் ஓதவேண்டிய சுன்னத்தான திக்ருகள் துஆக்கள் ஆகியவற்றுக்கு அரை மணிநேரம், தொழுகையின் முன்பின் சுன்னத்துகளுக்காக ஒரு மணிநேரம், இரவுத் தொழுகை, லுஹாத் தொழுகை ஆகியவற்றுக்கு ஒரு மணிநேரம். இப்போது எஞ்சுயிருப்பது பதினொரு மணி நேரங்களே.

இந்தப் பதினொரு மணி நேரங்களில் அதாவது 660 நிமிடங்களில் 200 ரக்அத் நபில் தொழ முடியுமா? பெரியார்கள் நம்மைப் போல் அவசர அவசரமாகத் தொழமாட்டார்கள். நிறுத்தி நிதானமாகத் தொழுவார்கள். இந்தப் பெரியார் இதில் விதிவிலக்கானவர். நம்மைப் போல் வேகமாகத் தொழுபவர் என்று வைத்துக் கொண்டாலும் ஒரு ரக்அத்துக்கு ஐந்து நிமிடங்களாவது ஆகும். 200 ரக்அத்துகளுக்கு 1000 நிமிடங்கள் தேவை.

மிக முக்கியமான தேவைகளுக்குப் போக எஞ்சியிருக்கும் 660 நிமிடங்களில் 200 ரக்அத்கள் தொழுவது எப்படி சாத்தியமாகும்? அப்படித் தொழுதால் அது தொழுகையாக இருக்க முடியுமா? சிந்தியுங்கள்.

இது போக இன்னும் பல அலுவல்களைக் கணக்கில் நாம் சேர்க்கவில்லை. அவற்றுக்கு மழுப்பலான பதில்களை ரெடிமேடாக வைத்துள்ளனர்.

மனைவி மக்களுடன் மகிழ்ச்சியாக இருப்பதற்கு நேரம் தேவை என்று நாம் சொன்னால் இந்தப் பெரியார் அந்த உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவர் என்று அவர்கள் கூறலாம். அவர் வேண்டுமானால் அப்பாற்பட்டவராக இருக்கலாம், அவரது மனைவியும் அப்பாற்பட்டவராக இருந்திருப்பாரா? என்று நாம் கேட்டால் அவர் பிரம்மச்சாரியாக இருந்திருக்கலாம் என அவர்கள் கூறலாம்.

தான் உண்பதற்காகவும், தனக்குச் சமைத்துப் போடுவோர்கள் உண்பதற்காகவும், உழைக்க நேரம் தேவை என்று நாம் சொன்னால் பூர்வீகச் சொத்துக்கள் ஏராளமாக இருந்துருக்கலாம் அல்லவா என்பர்.

மார்க்க அறிஞராக அவர் இருப்பதால் மார்க்கத்தை கற்றுக் கொடுப்பதற்கும், நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதற்கும் நேரம் தேவை என்று நாம் கூறினால் அந்தக் காலத்தில் எல்லாருமே மார்க்க அறிஞர்களாக இருந்துருக்கலாம் என்பர்.

திருமணம், ஜனாஸா போன்ற சுன்னத்தான காரியங்களுக்கும் நேரம் தேவை என்று நாம் கூறினால் அந்தக் காலத்தில் பித்அத்கள் மலிந்திருந்ததால் அவற்றை புறக்கணித்திருக்கலாம் என்பர். முன்னர் கூறியதற்கு இது முரணாக உள்ளதே என்று இவர்கள் சிந்திப்பதில்லை.

நியாயப்படுத்தவே முடியாத பணிகளுக்கு மட்டுமே நேரம் ஒதுக்கியுள்ளோம். இவற்றையெல்லாம் நீக்கிவிட்டுப் பார்த்தாலும் 200 ரக்அத்கள் தொழுவதற்கு நிச்சயமாக நேரம் கிடைக்காது.

 பெரியார்களைப் பற்றி மலைப்பை ஏற்படுத்தி அவர்களை வழிபடுவதற்காகவே இது போன்ற கதைகளை கட்டியுள்ளனர். ஸகரிய்யா சாஹிபும் இதற்கு விதிவிலக்கல்ல. அதனால்தான் தன் நூல் நெடுகிலும் இது போன்ற நம்ப முடியாத அபத்தமான கதைகளை அள்ளி விடுகிறார்.

 மலஜலம் கழிக்காத பெரியார்

தொழுகையின் சிறப்புக்களைக் கூறும் சாக்கில் பெரியார்கள் மீது மலைப்பை ஏற்படுத்தும் மற்றொரு கதையைக் கேளுங்கள்!

சூபியாக்களில் பிரபலமான ஷைகு அப்துல் வாஹித் (ரஹ்) என்பவர்கள் கூறுகிறார்கள்: ஒரு நாள் இரவு எனக்கு தூக்கம் மிகைத்து நான் வழமையாக ஓதக்கூடிய திக்ருகளையும் ஓதாமல் தூங்கி விட்டேன். அப்போது கனவில் மிக அழகிய மங்கை ஒருத்தியைக் கண்டேன். அவள் பச்சைப் பட்டாடை அணிந்திருந்தாள். அவளுடைய காலணிகள் கூட தஸ்பீஹ் செய்வதில் ஈடுபட்டிருந்தன.

 அவள் என்னை நோக்கி நீர் என்னை அடைய முயற்சிப்பீராக! நான் உம்மை அடைய முயற்சிக்கிறேன் என்று கூறி சில பேரின்பக் காதல் கீதங்கள் பாடினாள்.

இக்கனவைக் கண்டு விழித்த நான் இனிமேல் இரவில் தூங்குவது இல்லை என்று சத்தியம் செய்து கொண்டேன். அவ்வாறே நாற்பது ஆண்டுகள்வரை இஷாவுக்குச் செய்த உளூவுடன் சுப்ஹுத் தொழுது வந்தேன் என்று கூறுகிறார்கள்.

இந்தக் கதை தொழுகையின் சிறப்பு எனும் பகுதியில் 118ம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைப் புறக்கணித்து விட்டு அல்லாஹ்வின் தூதருடைய வழிகாட்டுதலை அலட்சியம் செய்துவிட்டு அதிகப் பிரசங்கித்தனமாக நடப்பவர் எப்படிப் பெரியாராக இருக்க முடியும்!

இஷாவுக்குச் செய்ய உளூவைக் கொண்டு நாற்பது ஆண்டுகள் 14,400 இரவுகள் எப்படி சுபஹ் தொழமுடியும்? இந்தப் பதினான்கு ஆயிரத்து நானூறு நாட்கள் அவர் உறங்கியதே இல்லை என்பதை நம்பமுடியவில்லை. இத்தனை இரவுகளும் அவர் மலஜலம் கழிக்கவில்லை: காற்றுப் பிரியவில்லை: மனைவியுடன் சம்போகம் செய்யவில்லை என்பது அதைவிட நம்ப முடியாததாக உள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலை அவர் அறியாத நிலையில் அவர் வரம்பு மீறியதையாவது நம்பலாம். தன்னைப் பற்றிப் பெருமையாக அவரே கூறுவதை எப்படி நியாயப்படுத்த முடியும்?

சாத்தியமற்ற இது போன்ற சாதனைகளையும் பெரியார்கள் நிகழ்த்திக் காட்டுவார்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதைத் தவிர இந்தக் கதையில் ஒரு முஸ்லிமுக்கு எந்தப் படிப்பினையும் காணோம். இதே போன்ற மற்றொரு கதையைப் பாருங்கள்!

அபூபக்கர் ளரீர் (ரஹ்) என்ற பெரியார் கூறுகிறார்கள்:- என்னிடம் வாலிபரான ஓர் அடிமை இருந்தார்? அவர் பகல் முழுவதும் நோன்பு வைத்திருப்பார். இரவு முழுவதும் தஹஜ்ஜுத் தொழுகையில் ஈடுபட்டிருப்பார். ஒரு நாள் அவர் என்னிடம் வந்து நான் இன்றிரவு எதிர் பாராத விதமாக தூங்கிவிட்டேன். அப்போது கனவு ஒன்று கண்டேன். அதில் நான் தொழுமிடத்திலுள்ள மிஹ்ராப் சுவர் உடைந்து அதன் வழியாக சில பெண்கள் வந்தனர். அவர்கள் மிக அழகிய தோற்றமுடியவர்களாக இருந்தனர். அவர்களில் ஒருத்தி மட்டும் அருவருப்பான தோற்றமுடையவளாக இருந்தாள். நான் அப்பெண்களிடம் நீங்களெல்லாம் யார்? இந்த அருவருப்பான பெண் யார்? என்று கேட்டதற்கு நாங்களெல்லாம் உம்முடைய சென்று போன இரவுகள். இப்பெண் உமது இன்றைய இன்றைய இரவு என்று இப்பெண்கள் பதில் அளித்தார்கள்.

இந்தக் கதை 119ம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. ஒரு முஸ்லிம் இரவில் தூங்கக் கூடாது என்றும் பகலெல்லாம் நோன்பு வைத்திருக்க வேண்டும் என்றும் இந்தக் கதை மூலம் ஸகரிய்யா சாஹிப் சொல்ல வருகிறாரா? தூங்கிய இரவுகள் பாழாய்ப்போன இரவுகள் என்கிறாரா?

குடும்பத்துக்கும், ஊருக்கும், உலகுக்கும், தனக்கும் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றிக் கொண்டு இரவில் உறங்க வேண்டிய அளவுக்கு உறங்கிவிட்டு பின்னிரவில் எழுந்து வணங்கிய நபித்தோழர்கள் எல்லாம் தங்கள் இரவுகளைப் பாழடித்துவிட்டதாக ஸகரிய்யா சாஹிப் கூற வருகிறாரா?

இந்தப் பெரியார்களின் வழியில் ஸகரிய்யா சாஹிப் கூட நடந்ததில்லை. அவர் உறங்கியுள்ளார். பகல் காலங்களில் சுவைமிக்க உணவுகளை உண்டுகளித்துள்ளார். அவரும் கூட தனது இராப் பொழுதுகளை பாழடித்தவர்தானா?

முஸ்லிம்களைப் பண்டார சன்னிதிகளாகவும், துறவிகளாகவும் ஆக்கி அவர்களை முடக்குவதற்காகவே இப்படிப்பட்ட கதைகளை பொறுக்கி எடுத்து எழுதியுள்ளாரோ என்று எண்ணத் தோன்றுகிறது அல்லவா?

இரவெல்லாம் தூங்காத பகலெல்லாம் நோன்பு வைத்த கதைகள் ஏராளமாக அந்த நூலில் மலிந்துள்ளன. ஸகரிய்யா சாஹிபுக்குத் தோன்றிய பெயர்களையெல்லாம் பயன்படுத்தி இவ்வாறு கதையளந்துள்ளனர். இதுவரை நாம் செய்த விமர்சனமே இந்த வகையான அனைத்து கதைகளுக்கும் பொருந்தும் என்பதால் வேறு வகையான கதைகளைப் பார்ப்போம்.

 கடமை மறந்த கூலிக்காரர்

ஷைகு அபூ அப்தில்லாஹ் ஜலாவு (ரஹ்) என்பவர்கள் கூறுவதாவது: ஒரு நாள் என்னுடைய தாயார், என் தந்தையாரிடம் மீன் வாங்கி வரும்படியாகக் கூறினார். என் தந்தை கடைத்தெருவிற்குச் சென்றார்கள். நானும் அன்னாருடன் சென்றிருந்தேன். அங்கு மீனை வாங்கி அதனை வீட்டுக்குக் கொண்டுவர ஒரு கூலிக்காரரைத் தேடினார்கள். அப்பொழுது எங்களுக்கருகில் நின்றிருந்த ஒரு வாலிபர், பெரியவரே இதனைத் தூக்கி வர கூலியாள் வேண்டுமா? என்று கேட்டார். ஆம் என்று என் தந்தை பதில் கூறியதும் அவர் அதனை தலை மீது தூக்கி வைத்துக் கொண்டு எங்களுடன் நடந்து வந்தார்.

சென்று கொண்டிருக்கும் போது வழியில் பாங்கு சப்தம் கேட்டதும் அந்த வாலிபர், நான் உளூச் செய்ய வேண்டியிருக்கிறது. உளூச் செய்து தொழுத பின்னர்தான் இதனை எடுத்து வர முடியும். உங்களுக்கு விருப்பமிருந்தால் சற்று நேரம் காத்திருங்கள். இல்லையானால் தங்களுடைய மீனை எடுத்துச் செல்லலாம் என்று கூறி மீனை வைத்து விட்டுச் சென்று விட்டார்.

ஒரு கூலிக்காரப் பையன் இவ்வளவு பக்தியுடன் இருக்கும் பொழுது, நாம் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைப்பதற்கு இவரை விட மிக மிகத்தகுதியுள்ளவர்கள் என்பதற்காக என் தந்தையார் எண்ணியவராக அந்த மீன் கூடையை அங்கேயே வைத்துவிட்டு மஸ்ஜிதுக்குச் சென்று விட்டார்கள். நாங்கள் தொழுகையை முடித்து திரும்பி வந்த போது அந்த மீன் அங்கேயே அப்படியே இருந்தது. அந்த வாலிபர் அதனைத் தூக்கி எங்களுடைய வீட்டில் கொண்டு வந்து விட்டார்.

வீட்டுக்குச் சென்று தந்தை இந்த ஆச்சர்யமான நிகழ்ச்சியை என் தாயாரிடம் கூறினார். அதற்கு என் தாயார், அவரை இருக்கச் சொல்லுங்கள். அவரும் மீன் சாப்பிட்டுச் செல்லட்டும் என்று கூறினார். இதனை அவ்வாலிபரிடம் கூறியதும், நான் நோன்பு வைத்திருக்கிறேன் என்றார் அவர். சரி மாலையிலாவது இங்கு வந்து நோன்பு திறக்க வேண்டும் என்று என் தந்தையார் வற்புறுத்திக் கூறியதும், நான் போய்விட்டுத்திரும்பி வர முடியாது. வேண்டுமானால் இங்கு அருகிலுள்ள மஸ்ஜிதில் தங்கி இருக்கிறேன். மாலையில் உங்களுடைய விருந்தைச் சாப்பிட்டுச் செல்கிறேன். என்று கூறிவிட்டு அருகிலுள்ள மஸ்ஜித்துக்கு சென்று விட்டார்.

மாலை நேரமானதும் மஃரிபிற்குப் பின் அவர் வந்தார். சாப்பிட்டு முடித்த பின் அவர் இரவில் தங்குவதற்காக தனிமையான ஓர் இடம் ஒதுக்கப்பட்டது. அதில் அவர் தங்கினார். எங்களுக்குப் பக்கத்து வீட்டில் நடக்க முடியாத சப்பாணிப்பெண் ஒருத்தி இருந்தாள். அவள் மறுநாள் முற்றிலும் சுகம் உடையவளாக - நன்கு நடக்கக் கூடியவளாக இருப்பதைப் பார்த்தோம். நாங்கள் அவளிடம் உனக்கு எப்படிச் சுகம் ஏற்பட்டது என்று கேட்டதற்கு உங்கள் வீட்டுக்கு வந்திருந்த விருந்தாளியின் பொருட்டால் நான் அல்லாஹுதஆலாவிடம் துஆ கேட்டேன். யா அல்லாஹ் இந்த விருந்தாளியின் பரக்கத்தால் எனக்கு சுகமளிப்பாயாக என்று கேட்டதும் உடனே எனக்குச் சுகம் எற்பட்டுவிட்டது. என்று அப்பெண் கூறினாள். பிறகு நாங்கள் அவ்வாலிபர் தனிமையில் இருந்த இடத்திற்குச் சென்று பார்த்தபோது கதவு மூடியே இருந்தது. ஆனால் அவரை அங்கு காணவில்லை. எங்கு சென்றார் என்றே தெரியவில்லை.

இந்தக் கதை மேற்படி நூலில் 124ஆம் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.

கூலியாள் வேண்டுமா என்று இவ்வாலிபர் வந்து கேட்கிறார். மீனைத் தூக்கி வருவதாக ஒப்பந்தம் செய்து கொண்டு பொறுப்பேற்றுக் கொண்டவர் இடையிலேயே ஒப்பந்தத்தை முறிக்கிறார். இப்படி நடக்க வேண்டும் என்று இஸ்லாம் போதிக்கவில்லை. கூலிக்கு வேலை கேட்கும் போதே அவர் யோசித்திருக்க வேண்டும். அல்லது பாங்கு சப்தம் கேட்கும் வரை நான் தூக்கி வருவேன் என்று அவர் நிபந்தனை விதித்திருக்க வேண்டும். ஆனால் அவர் இடையில் கழுத்தறுக்கிறார். இத்தகைய ஒப்பந்தத்தை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

 பாங்கோசை கேட்டவுடன் ஒப்புக் கொண்ட வேலையைக் கூட உதறித் தள்ளிய இந்த வாலிபர் மஃரிபுக்குப் பின் சாப்பிட்டு விட்டு தனியறைக்குச் சென்று விட்டதாக இந்தக் கதை கூறுகிறது. இவ்வளவு பேணுதலுள்ளவர் இஷா ஜமாஅத்துக்காக ஏன் புறப்படவில்லை? இந்தக் கதை பொய்யாகப் புனையப்பட்டது என்பதை இந்த முரண்பாடு காட்டிக் கொடுத்து விடுகின்றது.

தொழுகையின் சிறப்பைச் சொல்லும் சாக்கில் ஸகரிய்யா சாஹிப் தூவுகின்ற விஷக்கருத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

 எவரது பொருட்டாலும் இறைவனிடம் எதையும் கேட்கலாகாது என்பது இஸ்லாமிய அடிப்படைக்கொள்கை. ஒவ்வொருவரும் தத்தமது நல்லறங்களின் பொருட்டாலேயே இறைவனிடம் உதவி தேட வேண்டும். ஸகரிய்யா சாஹிப் பின்பற்றுகின்ற இமாம் அபூஹனீபா அவர்கள் கூட இதை மிகவும் தெளிவாக அறிவித்துள்ளார்கள்.

இதற்கு மாற்றமாக அந்த வாலிபரின் பொருட்டால் அப்பெண்மணி குணமடைந்தாள் என்று கதை விடுகிறார். தனது இமாமுடைய போதனைக்கு மாற்றமாகவும் இவர் கதையளந்திருப்பது இது போன்ற மரியாதையை மற்றவர்களிடமிருந்து பெறுவதற்கே.

நல்லடியார்களை ஷைகுமார்களை மக்கள் இவ்வளவு உயரத்தில் வைத்துப் போற்ற வேண்டும் என்ற போதனை தான் இந்தக்கதையின் முக்கிய அம்சமாக உள்ளது.

 மண்ணறை நெருப்பைக் கண்ட பெரியார்

அல்லாமா இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் ஜவாஹிர் என்ற நூலில் எழுதியுள்ளதாவது:

 ஒரு பெண் இறந்து விட்டாள். அடக்கம் செய்யும் போது அப்பெண்ணின் சகோதரரும் உடனிருந்தார். அப்பொழுது அவருடைய பணப்பை அக்கப்ரில் விழுந்து விட்டது. அது அவருக்குத் தெரியவில்லை. பிறகு அது அவருக்கு நினைவு வந்த பொழுது மிகவும் கவலையடைந்தார். யாருக்கும் தெரியாமல் கப்ரை தோண்டி அதனை எடுத்து வந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அங்குச் சென்று கப்ரை தோண்டியபோது அந்தக் கப்ரு நெருப்புக் கங்குகளால் நிரம்பி இருக்கக் கண்டு பயந்து போய் அழுதவராக தன் தாயாரிடத்தில் வந்து விபரத்தைக் கூறி விளக்கம் கேட்டார். அதற்கு அவருடைய தாயார், அவள் தொழுகையில் சோம்பல் செய்பவளாக அதனைக் களா செய்பவளாக இருந்தாள் என்று கூறினார்.

 இந்த கதை தப்லீகின் தஃலீம் தொகுப்பில் பக்கம் 76ல் இடம்பெற்றுள்ளது.

தொழுகையை விடுவது மிகப்பெரும் பாவம் என்பதும் கப்ருடைய வேதனை உண்டு என்பதும் முழு உண்மைதான். இந்த இரண்டையும் வலியுறுத்த எண்ணற்ற ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன. இந்தக்கதை உண்மையா என்பதே இங்கு ஆராயப்பட வேண்டிய உண்மை.

கப்ரில் நடக்கும் வேதனைகளை உலகில் வாழும் மனிதர்கள் அறிய முடியுமா? என்பதை முதலில் ஆராய்வோம்.

அவர்கள் எழுப்பப்படும் நாள் வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது.

(அல்குர்ஆன் 23:)

மனிதர்கள் மரணித்துவிட்டால் அவர்கள் முன்னே திரை போடப்படுகின்றது என்று இவ்வசனம் கூறுவதால் உயிருடனிருப்பவர்கள் கப்ரில் நடப்பதையும், கப்ரில் இருப்பவர்கள் இவ்வுலகில் நடப்பதையும் அறிய முடியாது என்பதை அறிகிறோம். அறிய முடியும் என்றால் திரை போடப்படுகின்றது என்ற இறைவனின் வார்த்தைக்கு அர்த்தமில்லாது போய்விடும்.

இந்த சமுதாயம் கப்ரில் சோதிக்கப்படுகின்றது. நீங்கள் ஒருவரை ஒருவர் அடக்கம் செய்யமாட்டீர்கள் என்ற அச்சம் இல்லாவிட்டால் நான் செவியுறுகின்ற கப்ரின் வேதனையை நீங்கள் செவியுறுமாறு அல்லாஹ்விடம் துஆ செய்திருப்பேன் என்பது நபிமொழி.

அறிவிப்பவர் : ஸைத் இப்னு ஸாபித் (ரலி)

நூல் : முஸ்லிம்

கப்ரில் நடந்ததை நீங்கள் அறிந்து கொண்டால் ஒருவரை ஒருவர் அடக்கம் செய்ய முன்வரமாட்டீர்கள் என்ற தகுந்த காரணத்தைக் கூறி, அதனால் கப்ரில் நடப்பதை நீங்கள் அறிய முடியாது எனவும் நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்துகின்றனர்.

கப்ரில் நடக்கும் வேதனையை மனிதஜின் இனத்தைத் தவிர கிழக்குக்கும் மேற்குக்கும் இடைப்பட்ட அனைத்தும் செவியுறும் என்பது நபிமொழி.

அறிவிப்பவர் : பரா (ரலி)

நூல்கள் : அஹ்மத், அபூதாவூத்

இந்த ஹதீஸும் கப்ரில் நடப்பதை எந்த மனிதனும் அறிய முடியாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவிக்கின்றது.

இந்த நபிமொழிகளுக்கும், மேற்கண்ட குர்ஆன் வசனத்துக்கும் முரணாக இந்தக் கதை அமைந்துள்ளது.

தொழுகையை விட்ட எத்தனையோ நபர்களின் சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காகத் திரும்பவும் தோண்டி எடுக்கப்படுகின்றன. எத்தனையோ காபிர்களின் சடலங்களும் தோண்டி எடுக்கப்படுகின்றன. இவ்வாறு தோண்டி எடுக்கப்படும் போது தீக்கங்குகளால் கப்ரு நிரம்பியிருந்ததை எவருமே கண்டதில்லை.

ஒருவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் சில நாட்களுக்குப் பின் மற்றொருவர் அடக்கம் செய்யப்படுகிறார். இப்படி ஒரு இடத்தில் பல நூறு நபர்கள் அடக்கம் செய்யப்படுகின்றனர். மற்றொருவரை அடக்கம் செய்வதற்காக ஒரு அடக்கத்தலம் தோண்டப்படும் போது எந்த சந்தர்ப்பத்திலும் எவரும் கப்ரில் தீக்கங்குகள் நிரம்பி இருந்ததை காணவில்லை.

இந்த நடைமுறையும் அந்தக் கதை பொய் என்பதற்கு போதுமான ஆதாரமாக உள்ளது.

இந்தக் கதை பொய்யானது என்பதற்கு இந்தக் கதையே சான்று கூறுவதையும் சிந்திக்கும் போது உணரலாம்.

அந்தக் கதையில் உலகில் எவருமே காணாத ஒரு காட்சியை ஒருவர் காண்கிறார். இக்கதை உண்மை என்று வைத்துக் கொண்டால் இவ்வளவு முக்கியமான நிகழ்ச்சியைக் கண்டவர் யார் என்பது பிரசித்தமாக இருக்க வேண்டும்.

இதைக் கண்டவரின் பெயரோ அவரின் தந்தையின் பெயரோ, அவர் நம்பகமானவர் என்பதற்கான சரித்திரக் குறிப்புகளோ எதுவுமே இக்கதையில் இல்லை.

இவ்வளவு அதிசயமான நிகழ்ச்சி நடந்த காலம் என்ன? எந்த ஆண்டு, எந்த மாதம், எந்த நாடு, எந்த ஊர் என்ற விபரமும் இல்லை.

இக்கதையில் வரும் சகோதரிக்கும் முகவரி இல்லை. தாயாருக்கும் முகவரி இல்லை.

இது உண்மை என்றிருக்குமானால் இவ்வளவு விபரங்களும் தெரிந்திருக்கும். அவை பதிவு செய்யப்பட்டிருக்கும்.

 இந்தக் கதை ஏற்படுத்தும் தீய விளைவுகளையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.

ஒருவன் தான் மதிக்கின்ற பெரியாரின் புகழை மேலோங்கச் செய்ய எண்ணி அப்பெரியாரின் கப்ரு ஒளிமயமாக இருந்தது என்று கதை விடலாம். மறுமையில் இறைவன் வழங்கக் கூடிய தீர்ப்பை இங்கேயே வழங்க சிலர் முற்படலாம். தனக்கு பிடிக்காதவர்களின் கப்ரில் தீக்கங்குகளை கண்டதாக கதை விடலாம். இது தான் இந்தக் கதையினால் ஏற்படும் விளைவாகும்.

இந்த விளைவை ஏற்படுத்துவதே இந்தக் கதையை எழுதியவர்களின் நோக்கமாக இருக்குமோ என்று நமக்குத் தோன்றுகிறது.

சில பெரியார்களின் கப்ரு வாழ்க்கைப் பற்றி கட்டிவிடப்பட்டுள்ள கதைகள் இந்த சந்தேகத்தை வலுப்படுத்துகின்றது.

 கப்ரில் தொழுத பெரியார்

 ஸாபித் பன்னானி (ரஹ்) அவர்கள் இறந்தபின் அன்னாரை அடக்கம் செய்யும்போது நானும் உடனிருந்தேன். அடக்கம் செய்து கொண்டிருக்கும் போது ஒரு செங்கல் கீழே விழுந்து உள்ளே துவாரம் ஏற்பட்டது. அதன் வழியாக நான் பார்த்த போது அவர் கப்ருக்குள் நின்று தொழுது கொண்டிருக்கக் கண்டேன். அருகிலிருந்தவரிடம் அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று பாருங்கள் என்று கூறினேன். அதற்கு அவர் பேசாமலிரு என்று என்னிடம் கூறிவிட்டார்.

 தப்லீகின் தஃலீம் தொகுப்பு பக்கம் 129 ல் இந்தக் கதை இடம்பெற்றுள்ளது.

கப்ரில் நடப்பதை எவரும் அறியமுடியாது என்பதற்குப் பல ஆதாரங்களை நாம் எடுத்துக் காட்டியுள்ளோம். அந்த ஆதாரங்களுடன் இந்தக் கதையும் நேரடியாக மோதுகிறது.

ஸாபித் பன்னானி அவர்கள் உண்மையில் நல்லடியாராக இருந்தார் என்றே வைத்துக் கொள்வோம். நல்லடியாராக இருந்தால் கப்ரில் எத்தகைய நிலையில் இருப்பார் என்பதை நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்தனர். அவர்கள் கற்றுத் தந்ததற்கு மாற்றமாகவும் இந்நிகழ்ச்சி அமைந்துள்ளது.

நல்லடியார்கள் மண்ணறையில் வைக்கப்பட்டதும் முன்கர் நகீர் எனும் இரு வானவர்கள் அவரிடம் கேள்வி கேட்பர். அவர் கேள்விக்கு சரியான விடையளிப்பார். அந்த நிகழ்ச்சியை நபி (ஸல்) விளக்கும் போது,

கேள்வி கேட்கப்பட்ட பின் 70 X 70 என்ற அளவில் அவரது அடக்கத் தலம் விரிவாக்கப்படும். பின்னர் அதில் ஒளி ஏற்படுத்தப்படும். பின்னர் அவரிடம் உறங்குவீராக எனக் கூறப்படும். நான் எனது குடும்பத்தாரிடம் சென்று இச்செய்தியைக் கூறிவிட்டு வருகிறேன் என்று அவர் கூறுவார். அப்போது இரு மலக்குகளும் புது மணமகனைப் போல் உறங்குவீராக! எனக் கூறுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். (திர்மிதி)

நல்லடியார்கள் கியாமத் நாள் வரை மண்ணறையில் உறங்கிக் கொண்டே இருப்பார்கள் என்று இந்த நபிமொழி கூறுகிறது. இந்த நபிமொழிக்கு மாற்றமாக ஸாபித் என்ற பெரியார் தொழுது கொண்டிருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

அது மட்டுமன்றி கப்ரிலிருந்து செங்கல் ஒன்று விழுந்துவிட்டது. அதன் மூலம் ஓட்டை ஏற்பட்டது என்று கூறப்படுவதும் நம்பும்படி இல்லை. கப்ரில் செங்கல்லுக்கு வேலை இல்லை. அதுவும் ஸாபித் பன்னானி அடக்கம் செய்யப்படும் போதே இது நிகழ்ந்துள்ளது. செங்கல்லால் கட்டடம் கட்டத் தடை இருந்தும் தொழும் காட்சியைக் கண்டு அறிவித்த இந்த மகான் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார்.

எனவே இந்தக் கதையும் உண்மை கலக்காத பச்சைப் பொய் என்பதில் சந்தேகமில்லை.

 இரவில் உறங்காத பெரியார்கள்

அபூ இதாப் ஸல்மீ (ரஹ்) அவர்கள் நாற்பது ஆண்டுகள் வரை இரவு முழுவதும் தொழுது கொண்டே இருந்தார்கள் பகல் முழுவதும் நோன்பு வைத்திருந்தார்கள்.

(பக்கம் 132)

இமாம் அஹ்மதுப்னு ஹம்பல் (ரஹ்) அவர்கள் தினமும் முன்னூறு ரக்அத்கள் நபில் தொழுபவர்களாக இருந்தார்கள்.

(பக்கம் 132)

இமாம் ஷாபியீ (ரஹ்) அவர்கள் ரமளான் மாதத்தில் தொழுகையில் அறுபது தடவை குர்ஆனை ஓதி முடிப்பார்கள்.

(பக்கம் 132)

ஹஜ்ரத் ஸயீது இப்னுல் முஸய்யப் (ரஹ்) ஐம்பது ஆண்டுகள் இஷாவையும், சுபுஹையும் ஒரே உளூவைக் கொண்டு தொழுது வந்தார்கள்.

(பக்கம் 131)

 அபுல் முஃதமர் (ரஹ்) அவர்கள் நாற்பது ஆண்டுகள் வரை இவ்விதம் தொழுததாகக் கூறப்பட்டுள்ளது.

(பக்கம் 131)

 இமாமுல் அஃளம் அபூஹனீபா (ரஹ்) அவர்கள் முப்பது ஆண்டுகள் அல்லது நாற்பது ஆண்டுகள் அல்லது ஐம்பது ஆண்டுகள் இஷாவுடைய உளூவைக் கொண்டு சுபுஹைத் தொழுததாகக் கூறப்பட்டுள்ளது.

(பக்கம் 132)

இமாம் அபூயூசுப் (ரஹ்) அவர்களுக்கிருந்த கல்வி சம்மந்தமான வேலைகள் பளுவைப் பற்றி அனைவருக்கும் தெரியும், அத்துடன் அவர்கள் அந்நாட்டின் பிரதம நீதிபதியாகவும் இருந்து வந்ததால் அது சம்மந்தமான வேலைகளும் ஏராளமாக இருந்தன. அவ்வாறிருந்தும் ஒவ்வொரு நாளும் இருநூறு ரக்அத்கள் நபில் தொழுது வந்தார்கள்.

(பக்கம் 130)

இப்படிப்பட்ட கதைகள் நூல் நெடுகிலும் மலிந்து காணப்படுகின்றன. மத்ஹபையும், தரீக்காவையும் நியாயப்படுத்துவதற்காக இப்பெரியார்களின் வணக்க வழிபாடுகள் பற்றி மலைப்பூட்டப்படுகின்றன.

உண்ணுதல், உழைத்தல், குடும்பத்துக்கும், சமூகத்துக்கும் ஆற்ற வேண்டிய கடமைகள் இவைகளை எல்லாம் முடித்து விட்டு 200 அல்லது முன்னூறு ரக்அத்கள் தொழ முடியுமா?

நாற்பது, ஐம்பது ஆண்டுகள் உறங்காமல், மனைவியுடன் கூடாமல், மலஜலம் கழிக்காமல் இஷாவுக்குச் செய்த உளூவைக் கொண்டு சுபுஹ் தொழ முடியுமா?

 ஒரு இரவுத் தொழுகையில் இரண்டு தடவை குர்ஆனை ஓதி முடிக்க முடியுமா?

இதைச் சிந்தித்தாலே இந்தக் கதைகளின் தரத்தை விளங்கிக் கொள்ளலாம். இதை எல்லாம் தூக்கி சாப்பிடுகிறது மற்றொரு கதை!

ஹஜ்ரத் ஜைனுல் ஆபிதீன் (ரஹ்) அவர்கள் ஒவ்வொரு நாளும் ஆயிரம் ரக்அத்கள் நபில் தொழுது வந்தார்கள்.

(பக்கம் 160)

ஒரு ரக்அத்துக்கு ஒரு நிமிடம் என்று வைத்துக் கொண்டால் கூட ஒரு இரவுக்கு 1000 ரக்அத் நபில்கள் தொழ முடியுமா? இஷாவிலிருந்து சுபுஹ் வரை 500 நிமிடங்கள் கூட இராது.

இந்தச் சாதாரண கணக்கைக் கூட சமுதாயம் கவனிக்கத் தவறுவதால் ஸகரிய்யா சாஹிப் வாயில் வந்தவாறெல்லாம் கதையளக்கிறார்.

ரக்அத்களின் எண்ணிக்கை பற்றிக் கூறும் போது 1000 ரக்அத்கள், 200 ரக்அத்கள் என்றெல்லாம் பெரியார்கள் தொழுது வந்ததாக பிரமிப்பூட்டும் ஸகரிய்யா சாஹிப் அவர்கள் எப்படித் தொழுதார்கள் என்பதைக் கூறும்போது மலைப்பின் உச்சிக்கே நாம் சென்று விடுகிறோம்.

ஹஜ்ரத் உவைஸுன் கரனீ (ரஹ்) அவர்கள் பிரபலமான பெரியார். தாபியீன்களின் மிகச் சிறந்தவர்கள். அவர்கள் இரவு நேரங்களில் தொழும்போது சில சமயங்களில் ருகூவுச் செய்வார்கள். இரவு முழுவதும் அப்படியே ருகூவிலேயே சென்று விடும். சில சமயங்களில் ஸஜ்தாச் செய்வார்கள். இரவு முழுவதும் ஒரு ஸஜ்தாவிலேயே கழிந்துவிடும்.

(பக்கம் 161)

இப்படியெல்லாம் தொழவேண்டுமென்பதற்காக இந்த சம்பவத்தையும் ஸகரிய்யா சாஹிப் எழுதுகிறார். தொழுகை இப்படித்தான் அமைந்திருக்க வேண்டுமென்றால் 1000 ரக்அத்து சமாச்சாரமெல்லாம் பொய்யென்று ஆகின்றது.

தொழுகையின் சிறப்பு என்ற பெயரில் ஸகரிய்யா சாஹிபுடைய புருடாக்கள் சிலவற்றைக் கண்டோம். பலவீனமான ஹதீஸ்கள் பல இடம் பெற்றிருந்தாலும் அவற்றை நாம் விமர்சனம் செய்யவில்லை. கதைகளை மட்டுமே விமர்சித்துள்ளோம்.

இந்தக் கதைகளை எழுதிய ஸகரிய்யா சாஹிபுக்கே இதில் சந்தேகம் வந்துவிட்டது போலும் யாரும் நம்ப மாட்டார்களே என்ற சந்தேகத்தில் ஒரு முடிவுரையும் தந்து நியாயப்படுத்துகிறார். அவர் கூறுவதையும் கேளுங்கள்!

ஆனால் இப்படிப்பட்ட சம்பவங்களை நாம் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் முதலாவதாக, இந்தச் சம்பவங்கள் எல்லாம் சரியான ஆதாரங்களுடன் அதிகமான அறிவிப்புத் தொடருடன் கூறப்பட்டுள்ளன. நாம் இவற்றைச் சந்தேகிப்போமானால் சரித்திரம் முழுவதுமே நம்பிக்கை அற்றதாகிவிடும். ஒரு நிகழ்ச்சி உண்மை என்பதற்கு அது அதிகமாக பல நூற்களில் பல ஆசிரியர்களால் கூறப்பட்டிருப்பது சான்றாகும்.

இவ்வாறு ஸகரிய்யா சாஹிப் பக்கம் 167 ல் நியாயப்படுத்துகிறார்.

பல நூற்களில் எழுதப்பட்டது உண்மை என்பதற்கு சான்றாக ஒரு போதும் ஆகாது. இதிலும் குர்ஆன் ஹதீஸுக்கு மாற்றமாக இந்தக் கதைகள் அமைந்திருக்கும் போது ஒரு போதும் அது உண்மையாக இராது. சமாதி வழிபாட்டை ஸகரிய்யா சாஹிப் எதிர்த்து வந்தவர். ஆனால் சமாதி வழிபாட்டை நியாயப்படுத்தும் கதைகள் பல நூல்களில் எழுதப்பட்டுள்ளதை அவர் ஏற்கவில்லையே அது ஏன்?

சரியான ஆதாரங்களுடன் அதிகமான அறிவுப்புத் தொடருடன் அறிவிக்கப்பட்டுள்ளது  என்ற கூற்றிலும் பச்சைப் பொய் சொல்லியிருக்கிறார்.

இந்தக் கற்பனைக் கதைகளில் பல அறிவுப்புத் தொடர்களையும் வெளியிட்டு அதன் அறிவிப்பாளர்களின் நம்பகத்தன்மையையும் நிரூபிக்க வேண்டும். ஸகரிய்யா சாஹிப் இன்று இல்லாததால் தப்லீகின் தலைமைப் பிரச்சாரர்களாக திகழும் அறிஞர்கள் இதை நிரூபிக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

இந்தக் கதைகளை நியாயப்படுத்த அவர் கூறும் மற்றொரு நியாயத்தையும் கேளுங்கள்.

இரண்டாவதாக, சில மனிதர்களை நாம் காண்கிறோம். அவர்கள் சினிமா தியேட்டர்களிலும் வீண் வேடிக்கைகளிலும் இரவு முழுவதையும் விழித்திருந்து கழிக்கின்றனர். அதனால் அவர்களுக்கு எவ்விதச் சிரமும் தெரிவதில்லை. தூக்கம் விழிப்பதால் துன்பங்கள் ஏதும் தெரிவதில்லை.

இதுவும் அறியாமையில் எழுந்த வாதமே! இந்தக் கதைக்கு உதாரணமாக இவற்றைக் கூறவே முடியாது.

சினிமாவிலேயே இரவைக் கழிக்கும் ஒருவர் பற்றி ஒரு இரவில் 20 சினிமா பார்த்தார் என்று கூறப்படுவதில்லை. ஒரு இரவில் எத்தனை சினிமா பார்க்க முடியுமோ அத்தனை சினிமா பார்த்ததாகத்தான் கூறப்படுகின்றது. ஆனால் ஸகரிய்யா சாஹிபின் கதையில் ஒரு இரவில் எத்தனை ரக்அத்கள் அதிகபட்சம் தொழ முடியுமோ அது போல் ஐம்பது மடங்கு கூடுதலாகக் கூறப்படுகின்றது.

நாற்பது ஆண்டுகள், ஐம்பது ஆண்டுகள் இரவு முழுவதும் சினிமா பார்த்துக் கொண்டே இருந்தார். பகலிலும் அவர் உறங்கிவிடவில்லை என்று எவரைப் பற்றியும் கூறப்படுவதில்லை. ஏதோ சில திருநாட்களில் இரவில் விழித்துவிட்டு அதற்குப் பகரமாக பகலில் அவர்கள் உறங்குவதாகவே கூறப்படுகின்றது. அப்படித் தான் நடந்தும் வருகின்றது. அந்த நாட்களில் கூட இரவு முழுவதும் மலஜலம் கழிக்கவில்லை என்று கூறப்படுவதில்லை. ஸகரிய்யா சாஹிபின் கதையில் இவையெல்லாம் கூறப்படுகின்றன.

அப்படி யாராவது நாற்பது ஆண்டுகள் இரவில் விழித்து சினிமா பார்த்து விட்டு பகலிலோ, இரவிலோ உறங்காமலிருந்தால் அவர்கள் கீழ்பாக்கத்துக்கு அனுப்பப்படுவதை காண்கிறோம். எந்தத் தீங்கும் ஏற்படுவதில்லை என்பது ஆதாரமற்றதாகும்.

இவற்றையெல்லாம் விட ஸகரிய்யா சாஹிபின் கதைகள் தீனுடைய போர்வையில் அறிமுகம் செய்யப்படுகின்றன. சினிமா பார்ப்பவனின் கதைக்கு தீனுடைய முத்திரை எதுவும் குத்தப்படுவதில்லை.

எவ்வகையிலும் நியாயப்படுத்திட இயலாத இந்தப் பொய்கள் தான் தொழுகையின் சிறப்பு பகுதி முழுவதும் மலிந்துள்ளன.

மாதிரிக்காக ஒரு சில நிகழ்ச்சிகளை மட்டும் இங்கே நாம் இனம் காட்டியுள்ளோம். சிந்தனையுடைய மக்களுக்கு இதுவே போதுமானதாகும்.

குர்ஆனும், நபிவழிக்கும் முரணான தப்லீகின் ஸ்தாபகர் காலத்திற்குப் பின்னர் உள்ளவர்களால் தயாரிக்கப்பட்ட இந்த நூலை தப்லீக் ஜமாஅத்தினரும் பொது மக்களும் புறக்கணிப்பார்கள் என்று நம்புவோமாக! அடுத்து ரமலானின் சிறப்புகள் பகுதியில் இடம்பெற்றுள்ள கற்பனைக் கதையைப் பார்ப்போம்.

மவ்லானா ஷாஹ் அப்துர்ரஹீம் ஸாஹிப் ராய்ப்பூரி (ரஹ்) அவர்களிடத்திலோ ரமலான் மாதத்தின் இரவு பகல் முழுவதும் குர்ஆன் ஓதுவதாகவே இருந்தது. அதில் கடிதம் எழுதுவதையும் நிறுத்தி விடுவார்கள். அன்பர்களைச் சந்திப்பதையும் அவர்கள் விரும்புவதில்லை. அவர்கள் தராவீஹுக்குப் பின்னால் இரண்டு கோப்பை வெறும் தேநீர் அருந்துகிற நேரத்தில் மட்டும் அவர்களின் சமூகத்துக்கு வந்து செல்லலாம் என்ற அனுமதி சில குறிப்பான பணிவிடையாளர்களுக்கு மட்டும் இருந்து வந்தது.

(ரமலானின் சிறப்பு பக்கம் 17)

மனித ரமலான் சிறப்பான மாதம் என்பதிலோ அதில் இயன்ற அளவுக்கு நன்மைகளில் ஈடுபட வேண்டுமென்பதிலோ எந்த சந்தேகமுமில்லை.

ஆனால் இந்தப் பொரியார் நடந்து கொண்டது போல் நடக்க வேண்டுமா? என்பது தான் கேள்வி. இந்தக் கதையை எழுதிவிட்டு தொடர்ந்து ஸகரிய்யா சாஹிப் பின்வருமாறு எழுதுகிறார்:-

பெரியார்களுடைய இந்தப் பழக்கவழக்கங்களெல்லாம் மேலெழுந்த வாரியாகப் பார்த்துப் படிப்பதற்கு மட்டுமோ அல்லது அவர்களுக்குப் புகழ் வார்த்தைகள் கூறப்பட வேண்டுமென்பதற்காகவோ எழுதப்படுவதில்லை, எனினும் தன் முயற்சிக்குத் தக்கவாறு அவர்களைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காகவே எழுதப்படுகின்றன. இயன்ற அளவு பூர்த்தியாக்குவதில் முயற்சி எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

இந்தக் கதையைப் பின்பற்றி நடக்க வேண்டுமென்பதற்காகவே எழுதியுள்ளதாக ஸகரிய்யா சாஹிப் வாக்கு மூலம் தருகிறார்.

இவரை பின்பற்றினால் என்னவாகும்? மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகளை இம்மாதம் முழுவதும் செய்யக் கூடாது. தன் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் செய்யக் கூடாது. கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் செய்யக் கூடாது. தொழில் வியாபாரம் செய்யக் கூடாது. பிள்ளை குட்டிகளைக் கவனிக்கக் கூடாது. நண்பர்களை, அண்டை வீட்டாரைச் சந்திக்கக் கூடாது. அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளையும் செய்யக் கூடாது. நன்மையை ஏவி, தீமையத் தடுக்கவும் கூடாது. எந்நேரமும் குர்ஆனை ஓதிக்கொண்டே இருக்கவேண்டும். இவ்வாறு நடக்குமாறுதான் ஸகரிய்யா சாஹிப் உபதேசிக்கிறார். சுருங்கச் சொன்னால் பண்டாரங்களாகவும், பரதேசிகளாகவும் முஸ்லிம்கள் ஆகிவிட வேண்டும் என்கிறார்.

புனித ரமலானில் போர்க்களங்களில் நபி (ஸல்) பங்கெடுத்துக் கொண்டதும், சமூகத்தில் அவர்கள் கலந்துரையாடியதும் தம்தோழர்களையும் அவர்கள் சந்தித்ததும் நன்மையை ஏவி தீமையத் தடுத்ததும் இல்லறத்தில் அவர்கள் ஈடுபட்டு குளிப்புக் கடமையானவர்களாக நோன்பு நோற்றதும் பின்பற்றத் தக்கதல்ல என்கிறார்.

நபி (ஸல்) அவர்கள் புனித ரமலானை எப்படிக் கழித்தார்கள் என்பதைச் சொல்லியிருந்தால் அது நியாயமானதாக இருக்கும். நபிவழிக்கு மாற்றமாக நடந்தவரகளை பெரியார்கள் என்று அறிமுகப்படுத்தி அவர்கள் வழியில் செல்ல சமுதாயத்தையும் தூண்டுகிறார்.

இவர் சொல்லக் கூடிய பெரியார்களுக்கு வேண்டுமானால் இது சாத்தியமாகி இருக்கலாம். ஏனெனில், அவர்கள் உழைத்து உண்பவர்களாக இருந்ததில்லை. பிறரிடமிருந்து காணிக்கைகள் ஹதியாக்களில் காலத்தை ஓட்டியவர்கள். எது எக்கேடு கெட்டாலும் கிடைக்கவேண்டியது கிடைத்து விடும். தனக்குப் பணியாட்களை நியமித்துக்கொள்ளும் அளவுக்கு (அந்தக் கதையில் இதை விளங்கலாம்) உழைக்காமலேயே செல்வத்தைப் பெருக்கிக் கொண்டவர்கள்.

எவ்வித வியாபாரமோ, விவசாயமோ, தொழிலோ செய்யத் தேவையில்லாத அளவுக்கு இஸ்லாமே பிழைப்புக்கு வழியாகவும் சொகுசு வாழ்க்கைக்குச் சாதனமாகவும் ஆகிவிட்ட ஸகரிய்யா சாஹிப் போன்றவர்களுக்கு வேண்டுமானால் இது சாத்தியமாகலாம். (ஆனால் அவருக்கும் இது சாத்தியமாகவில்லை என்பதை அவரை நேரில் கண்ட என்னைப் போன்றவர்கள் அறிவார்கள்)

அன்றாடம் கூலி வேலை செய்தே தன் வயிற்றையும், தன் குடும்பத்தார் வயிற்றையும் கழுவக் கூடிய சராசரி மனிதனுக்கு இது சாத்தியமாகுமா?

தங்கள் தொழிலை நேரடியாக மேற்பார்வை செய்தால் தான் இலாபம் அடைய முடியும் என்ற நிலையில் உள்ளவர்களுக்கு இது சரிபட்டு வருமா?

இந்தப் பெரியார்களுக்குக் கிடைத்தது போன்று இந்த சாமான்ய மக்களுக்கு காணிக்கைகள் குவியுமா என்ன? இஸ்லாமியர்களின் உணர்வுகளை மழுங்கடிக்கச் செய்யவே இந்தக் கதைகள் உதவும் என்பதை சமுதாயம் கண்டு கொள்ளவேண்டும்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இந்தக் கதைக்கு முரணான போதனையையும் வேறொரு இடத்தில் செய்கிறார்.

இது பிறருடைய சுக, துக்கங்களில் பங்கு கொள்ளும் மாதம் என்று கூறியுள்ளார்கள். அதாவது ஏழை, எளியோருடன் கலந்துறவாடி நடந்து கொள்ளுதல் என்பதாகும்.

(ரமலானின் சிறப்பு பக்கம் 20)

ஏழை, எளியோருடன் கலந்துறவாடாமல் அவர்களது கஷ்டத்தில் பங்கு கொள்ளாமல் மேற்படி பெரியார் நடந்துள்ளார் எனும் போது அவர் எப்படி பின்பற்றத்தக்கவராவார்?

இஸ்லாத்திற்குத் தவறான வடிவம் தந்து இஸ்லாம் நடைமுறை சாத்தியமற்ற மார்க்கம் என்று காட்டுவதும் பெரியார்கள் மீது மலைப்பூட்டும் வகையில் பக்தியை ஏற்படுத்துவதும் தான் இவரது நோக்கமோ என்னவோ?

புனித ரமலானின் சிறப்பைக் கூறப் புகுந்த ஸகரிய்யா சாஹிப் ஆங்காங்கே செய்யும் போதனைகளையும் நாம் அலச வேண்டியுள்ளது.

நோன்பு திறக்கும் பொழுது ஹலாலான உணவானாலும் வயிறு புடைக்க அதிகமாகச் சாப்பிடாமலிருப்பது ஏனெனில், இதனால் நோன்பின் நோக்கம் தவறி விடுகின்றது. நோன்பு வைப்பதன் நோக்கம் மனோ இச்சைகளையும் மனிதனிலுண்டாகும் மிருக இச்சைகளையும் குறைத்து ஒளிமயமான சக்திகளையும், மலக்குகளின் தன்மைகளையும் வளர்த்துக் கொள்வதாகும். பதினொரு மாதங்கள் வயிறு நிறையச் சாப்பிட்டிருக்கிறோம். ஒரு மாதம் அதில் கொஞ்சம் குறைத்துக்கொண்டால் உயிரா போய் விடப்போகிறது?

(பக்கம் 62)

தவறி விட்ட உணவையும் சேர்த்துச் சாப்பிட்டு மனிதன் நோன்பு திறந்தால் நோன்பின் நோக்கமாகிய இப்லீஸை அடக்குதல், நப்ஸின் இச்சையை முறியடித்தல் ஆகியவை எவ்வாறு சாத்தியமாகும்? என்பதற்காக இமாம் கஸ்ஸாலி (ரஹ்) எழுதுகிறார்கள்.

(பக்கம் 62)

பிஷ்ருல் ஹாபி (ரஹ்) என்ற பெரியாரிடம் ஒரு மனிதர் சென்றார். அப்பொழுது அவர்கள் குளிரினால் நடுங்கிக் கொண்டிருந்தார்கள். அருகில் அவர்களுடைய உடைகள் கழற்றி வைக்கப்பட்டிருந்தன. இதனைக் கண்ட அம்மனிதர் இந்த நேரத்தில் உடைகளைக் கழற்றி வைத்துவிட்டு குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கக் காரணம் என்ன? என்று கேட்டார். அதற்கு அவர்கள் ஏழைகள் பலர் ஆடையின்றி இருக்கின்றனர். அவர்களின் துன்பத்தில் பங்கு கொள்ள எனக்கு சக்தியில்லை. ஆகையால், அவர்களைப் போன்றாவது நானிருந்து அவர்களின் துன்பத்தில் பங்கு கொள்ளவே எவ்வாறு நான் இருக்கிறேன் என்று கூறினார்கள்.

(பக்கம் 64)

சுகவாசிகளின் வழக்கத்தைப் போன்று ஸஹர் நேரத்தில் அதிகமாகச் சாப்பிடக்கூடாது. ஏனெனில் அது நோன்பின் நோக்கத்தைத் தவறச்செய்து விடுகின்றது என்று மராகில் பலாஹ் என்ற நூலின் ஆசிரியர் எழுதுகிறார்கள்.

(பக்கம் 64)

என்னுடைய ஷைகு மௌலானா கலீல் அஹ்மது சாஹிப் (ரஹ்) அவர்களை ரமலான் மாதம் முழுவதும் நான் கவனித்திருக்கிறேன். இப்தார் ஸஹர் இரண்டு நேரத்துக்கும் சேர்த்து ஒன்றரை ரொட்டியை விட அதிகமாக அவர்கள் சாப்பிட்டதே இல்லை. இதனைப் பற்றி அவர்களின் சீடர் ஒருவர் கேட்டதற்கு எனக்குப் பசி ஏற்படுவதில்லை. நண்பர்களை கவனத்தில் கொண்டுதான் அவர்களுடன் சேர்ந்து உட்கார்ந்து இதனையும் சாப்பிடுகிறேன். 

(பக்கம் 65)

மவ்லானா ஷாஹ் அப்துர் ரஹீம் ராய்ப்பூரி (ரஹ்) அவர்கள் சம்மந்தமாக இதைவிட இன்னும் மேலாக கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்கள் பல நாட்கள் தொடராக இரவு நேரத்தில் ஸஹருக்கும் இப்தாருக்கும் சேர்ந்து சில கோப்பைகள் பாலில்லாத தேநீரைத் தவிர வேறு எதையும் சாப்பிடாமல் இருந்திருக்கிறார்கள். ஒரு தடவை ஹஜ்ரத் அவர்களின் பிரதமச் சீடர் மவ்லானா ஷாஹ் அப்துல் காதிர் ஸாஹிப் அவர்கள் ஹஜ்ரத் எதுவும் சாப்பிடாமலிருந்தால் பலவீனம் அதிகமாகி விடுமே? என்று பரிவுடன் கூறியதற்கு அல்ஹம்துலில்லாஹ்! சொர்க்கத்தின் இன்பம் உண்டாகிக் கொண்டிருக்கிறது என்று பதிலளித்தார்களாம்.

(பக்கம் 65)

இப்படி ஏராளமான போதனைகளை ஸகரிய்யா சாஹிப் செய்கிறார். சாப்பிடுவது சம்மந்தமாக அவர் கூறியுள்ள போதனைகளை குர்ஆன், ஹதீஸ் ஒளியில் நாம் அலசுவோம். இதற்கு முன்னால் குளிரில் நடுங்கிய பெரியார் பற்றி அவர் கூறும் கதையைப் பார்ப்போம்.

 ஏழைகள் ஆடையின்றி இருக்கிறார்கள் என்பதற்காக தனது ஆடைகளைக் களைந்து விட்டு குளிரில் அப்பெரியார் நடுங்கியதாக கதை விடுகிறார்.

நபிகள் (ஸல்) காலத்திலும் ஏழைகள் பலர் இருந்துள்ளனர். போதுமான ஆடையின்றி சிரமப்பட்டவர்கள் பலர் இருந்தனர். கபனிடுவதற்கு கூட போதிய ஆடையின்றி மரணித்தவர்கள் பலர் இருந்துள்ளனர். அதில் உலக மாந்தரை விடவும் இரக்க குணம் கொண்ட நபியவர்கள் இருக்கின்ற ஆடையைக் கழற்றிவைக்கவில்லை. ஏழைகள் மலிந்துள்ளார்கள் என்பதற்கு பரிகாரம் இதுவென்றால் நபியவர்கள் அவ்வாறு நடந்திருப்பார்கள். முட்டாள்தனமான காரியத்தைச் செய்தவர்களை எல்லாம் பெரியார்கள் என்று முத்திரைக் குத்தி விளம்பரப்படுத்துகிறார்.

ஸகரிய்யா சாஹிப் காலத்திலும் குளிருக்கு நடுங்குமளவுக்கு ஏழைகள் இருந்தனர். இன்றும் உள்ளனர். இந்த போதனையை ஸகரிய்யா சாஹிபும் பின்பற்றவில்லை. அவரது ஸஹாரன்பூர் மதரஸாவின் ஆசிரியர்களும், மாணவர்களும் பின்பற்றவில்லை. தப்லீக் மதரஸாக்களும் பின்பற்றவில்லை.

ஏனைய மதரஸாக்களை விட தப்லீக் மதரஸாக்களில் தான் முட்டுக்கால்களுக்கும் கீழே தொங்குமளவுக்கு ஜிப்பாக்கள் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நாட்டில் துணிப்பஞ்சம் ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சுமளவுக்கு மூன்று சட்டைகள் தைக்கும் அளவுக்கு ஒரு ஜிப்பாவுக்கு துணி தேவைப்படுகிறது.

 ஏழைகளைக்கருத்தில் கொண்டு ஒரு ஜுப்பா தைக்கும் செலவில் ஒரு ஏழைக்கு இரு சட்டைகள் தைத்துக் கொடுக்கலாமே! இதுபோதாதென்று பத்து முழம் துணியில் தலைப்பாகை வேறு. அதில் ஐந்து ஏழைகளுக்கு ஆடை வழங்கலாம்.

பிஷ்ருல் ஹாபியைப் போல் எல்லாவற்றையும் கழற்றி எறியாவிட்டாலும் ஏழைகளைக் கருத்தில் கொண்டு இதையாவது செய்யலாம் அல்லவா? இதெல்லாம் நடைமுறைசாத்தியமில்லை என்று தெரிந்தேதான் அவர் எழுதியுள்ளார் என்பதற்காகவே இதைக் கூறவேண்டியுள்ளது.

மனதை அடக்குவதே நோன்பின் நோக்கம் என்று காரணம் கற்பித்துக் கொண்டு மற்ற நாட்களை விடவும் குறைவாக உண்ணச் சொல்கிறார் ஸகரிய்யா சாஹிப். அல்லாஹ்வோ அவனது தூதரோ இந்தக் காரணத்தைக் கூறவில்லை.

யார் பொய்யான பேச்சையும், அதைச் செயல்படுத்துவதையும் விடவில்லையோ அவன் தனது உணவையும், தண்ணீரையும் விட்டு விடுவதில் அல்லஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை. 

இது நபிமொழி. புகாரி உட்பட பல நூல்களில் இது இடம் பெற்றுள்ளது.

பசியையும், தாகத்தையும் அடக்குவது அல்ல நோன்பின் நோக்கம். அதனால் இறைவனுக்கு ஏதும் ஏற்படப் போவதில்லை. மாறாக இறைவன் தடுத்ததற்காக உணவையும் தண்ணீரையும் சிறிது நேரம் தியாகம் செய்தது போல் இறைவன் தடுத்த அனைத்தை விட்டும் விலகவேண்டியதே நோன்பின் நோக்கம் என்பதை இந்த நபிமொழி விளக்குகின்றது.

நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்த போது வெப்பம் தாளாமல் தமது தலையில் தண்ணீர் ஊற்றியதை நான் பார்த்திருக்கிறேன் என நபித்தோழர் ஒருவர் அறிவிக்கும் ஹதீஸ் அஹ்மத், அபூதாவூத் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.

மலக்குகளின் தன்மையை அடைவதுதான் நோன்பின் நோக்கம் என்றால் அந்த வெப்பத்தையும் சிரமத்துடன் நபி (ஸல்) சகித்திருப்பார்கள். தலையில் தண்ணீர் ஊற்றியிருக்கமாட்டார்கள்.

நோன்பு நோற்றிருக்கும் போது தன்னை நபிகள் முத்தமிடுவார்கள் என்று உம்மு ஸலமா அறிவிக்கிறார்கள்.

(புகாரி, முஸ்லிம், அஹ்மத்)

ஹலாலான இச்சையையும் அடக்கிக் கொள்வதே நோன்பின் நோக்கம் என்றால் நபியவர்கள் இவ்வாறு செய்திருக்க மாட்டார்கள்.

 விரைந்து நோன்பு துறக்கும் காலமெல்லாம் மக்கள் நன்மையில் உள்ளனர் என்பதும் நபிமொழி, ஸஹ்ல் (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், அஹ்மத் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.

உணவின் மேல் உள்ள நாட்டத்தை அகற்றுவதே நோன்பின் நோக்கம் என்றால் நோன்பைத் தாமதமாகத் துறக்குமாறு வழிகாட்டியிருப்பார்கள். அவசரமாக நோன்பு துறக்கச் சொன்னதன் மூலம் உணவின் மேல் உள்ள நாட்டத்தை மனிதன் துறந்து விடலாகாது என்று கற்றுத் தருகிறார்கள்.

 ரமலான் காலங்களில் உண்பதைப்பற்றி இறைவன் கூறும்போது,

இரவிலிருந்து பஜ்ர் வரை உண்ணுங்கள்! பருகுங்கள் என்று கூறுகிறான்.

(அல்குர்ஆன் 2:187)

இரவு வந்தது முதல் பஜ்ர் வரையிலும் உண்ணலாம் என்று இறைவன் அனுமதிக்கிறான். இவ்வளவு நேரமும் ஒருவன் சாப்பிட்டுக் கொண்டே இருந்தால் கூட நோன்பின் நோக்கத்தை அவன் மீறியவனாக மாட்டான் என்று இந்த வசனம் கூறுகின்றது.

உண்மையில் நோன்பின் நோக்கம், எவ்வளவு உண்கிறான் என்று கணக்கெடுப்பதன்று. உணவின் மீது இவ்வளவு ஆசை உள்ள மனிதன், இறைவன் சொன்னதற்காக பகல் பொழுதில் தியாகம் செய்கிறானா என்று கணக்கெடுப்பதுதான்.

எவ்வளவு உணவை தியாகம் செய்கிறோம் என்பதை விட எதற்காக தியாகம் செய்கிறோம் என்பதே நோன்பின் நோக்கமாகும்.

பாலில்லாத் தேநீரை அருந்தி விட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்களும், தனக்குப் பசிப்பதேயில்லை என்று கூறி மனித தன்மைக்கும் அப்பாற்பட்டவராகத் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்பவர்களும் ஒருக்காலும் பெரியார்களாக முடியாது.

உழைக்காமல் வயிறு வளர்க்கும் ஹஜ்ரத்மார்களுக்கே சாத்தியப்படாத இந்தப் போதனை அன்றாடம் உழைத்து வாழும் மக்களுக்கு எப்படிச் சாத்தியமாகும்?

திண்ணை தூங்கிகளுக்குரிய மார்க்கமாக இஸ்லாத்தை அறிமுகம் செய்யத்தான் இந்நூல் எழுதப்பட்டதோ என்ற எண்ணம் உறுதியாகின்றதல்லவா?

பெரியார்கள் மீது மலைப்பையும், மதிப்பையும் ஏற்படுத்துவதே ஸகரிய்யா சாஹிபின் நோக்கம் என்பதைப் பின்வரும் அவரது போதனை ஊர்ஜிதம் செய்கின்றது.

எனவே நோன்பு நோற்றிருக்கும் நிலையில் நோன்பு திறப்பதற்காக பொருள் ஏதேனும் இருக்கிறதா இல்லையா? என்ற சிந்தனை அவர்களுக்கு வருவதும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதும் கூட குற்றமெனக் கூறியுள்ளனர். நோன்பின் மாலை, நோன்பு திறப்பதற்காக ஏதேனும் பொருளைத் தயார் செய்ய வேண்டுமென எண்ணங்கொள்வதும் குற்றமென சில பெரியார்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏனெனில் அவ்வாறு எண்ணுவது உணவளிப்பது பற்றி அல்லாஹ் வாக்களித்திருக்கும் நம்பிக்கையைக் குறைத்து விடுகிறது என்பதற்காக.

(நோன்பின் சிறப்பு பக்கம் 67,68)

நோன்பு திறப்பதற்கு முன் எங்கிருந்தாவது ஏதாவது பொருள்ள அவர்களுக்கு வந்தால் மனதின் கவனம் அதன் பக்கம் செல்லாமலிருப்பதற்காகவும், தவக்குல் என்ற இறை நம்பிக்கையில் குறை ஏதும் ஏற்படாமலிருப்பதற்காகவும் அந்தப் பொருளை மற்றவர்களுக்குக் கொடுத்து விடுவார்கள்.

(நோன்பின் சிறப்பு பக்கம் 68)

எனினும் இக்காரியங்கள் பெரும் ஆத்மீக வலிமையுடைய மனிதர்களுக்கு உள்ளவையாகும். நம் போன்றோர் இவ்விஷயங்களைச் சிந்திப்பதும் தகுதியில்லாததாக இருக்கின்றது மேலும் அந்த நிலையை அடையாமல் நாம் அதனைத் தேர்ந்தெடுப்பது நம்மை அழிவின் பக்கம் சேர்த்து விடுவதாகும். 

(நோன்பின் சிறப்பு பக்கம் 68)

ஸகரிய்யா சாஹிபின் மேற்கண்ட போதனைகளை ஊன்றிக்கவனிக்கும் போது அதில் மலிந்து கிடக்கும் தவறுகளையும் இவரது நோக்கத்தையும் நாம் புரிந்து கொள்ளலாம்.

நோன்பு துறப்பதற்காக உணவுகளைத் தயார் செய்வதும் அது பற்றி சிந்திப்பதும் தவக்குல் எனும் இறை நம்பிக்கைக்கு மாற்றமென்றால்  அல்லாஹ்வின் ரிஸ்கைத் தேடுங்கள்! ஹலாலான முறையில் பொருளீட்டுங்கள்! என்றெல்லாம் இறைவன் போதிப்பது ஏன்? ஜகாத், ஸதகா போன்ற நல்லறங்களை இறைவன் வலியுறுத்துவது ஏன்? நோன்பு வைப்பதற்கான நேரம் முடிந்ததும் உண்ணுங்கள் பருகுங்கள் என்று இறைவன் போதிப்பது ஏன்? இவையெல்லாம் கூட தவக்குலுக்கு எதிரான போதனைகள் தானா?

திருக்குர்ஆன் போதனைகளையும், நபி (ஸல்) அவர்களின் அழகிய வழிகாட்டுதலையும் அறியாத அறிவீனர்கள்தான் இப்படியெல்லாம் கூற முடியும்.

பெரும் ஆத்மீக வலிமையுடையவர்களுக்குத் தான் இந்த போதனைகள் என்றும் சரடு விடுகிறார். இப்படிச் சரடு விடாவிட்டால் வேளாவேளைக்கு உண்டு வந்த ஸகரிய்யா சாஹிப் மாட்டிக் கொள்ள வேண்டி வருமல்லவா? அதனால் தான் ஆத்மீக வலிமை பற்றிப் பேசுகிறார்.

கிடைக்கும் போது சுவையான உணவுகளை உட்கொண்ட நபியவர்கள், உண்பதற்கு ஏதும் உண்டா என்று தன் குடும்பத்தாரிடம் கேட்ட நபியவர்கள், ஆட்டுத் தொடைக் கறியைக் கேட்டு வாங்கிச் சாப்பிட்ட நபியவர்கள் ஆத்மவலிமையுடையவர்கள் அல்ல. தவக்குல் உடையவர்கள் அல்ல என்று ஸகரிய்யா சாஹிப் அவர்கள் கூறுகிறார் போலும்.

 பெரும் வணிகர்களாகத் திகழ்ந்த அபூபக்கர் சித்தீக் (ரலி) அப்துர் ரஹ்மான் பின் அவ்பு (ரலி) போன்றவர்களும், யாரேனும் தங்களை உண்ண அழைக்கமாட்டார்களா என்று எதிர்பார்த்த அபூஹுரைரா (ரலி) போன்ற திண்ணைத் தோழர்களும் ஆத்மீக வலிமை பெற்றவர்கள் அல்லர் தவக்குல் உடையவர்கள் அல்லர் என்கிறார் ஸகரிய்யா சாஹிப்.

தவக்குலை போதிக்கும் இறைவன் தான், பொருள் தேடுவதையும் போதிக்கிறான் என்ற சாதாரண உண்மை கூடதெரியாத அறிவீனர்கள்தான் பெரும் ஆத்மீக வலிமையுடையவர்களாம்.

இஸ்லாமிய சட்டங்களில் இப்படியெல்லாம் இரண்டு நிலைகள் கிடையாது. அல்லாஹ்வின் கட்டளைகள் அனைவருக்கும் பொதுவானது என்ற சாதாரண உண்மை கூட தெரியாத ஸகரிய்யா சாஹிப் போன்றவர்கள் தான் ஷைகுல் ஹதீஸ்களாம்!

ஆத்மீக வலிமை பெற்றவர்களுக்குத் தான் இது சாத்தியம் என்றால், ஆன்மீக வலிமை பெறாத அப்பாவி தப்லீக் ஜமாஅத்தினருக்கு இதை ஏன் போதிக்க வேண்டும்? ஆன்மீக வலிமை உள்ளவர்களைத் தேடிப்பிடித்து அவர்களுக்கு இதை சொல்ல வேண்டியதுதானே!

ஆத்மீக வலிமை பெறாத பாமரமக்களிடம் இதைக் கூறுவதற்கு காரணம் அந்தப் பெரியார்கள் மீது மலைப்பை ஏற்படுத்துவது தான் இதைத்தவிர வேறு எந்தக் காரணமும் இருக்க முடியாது.

தொழுகையில் சிறப்பு, ரமலான் சிறப்பு ஆகிய பகுதிகளில் மட்டுமின்றி தொகுப்பு முழுவதும் அபத்தங்கள் நிரம்பியுள்ளன. சிந்திக்கும் மக்களுக்கு இதுவே போதுமாகும்.

நல்ல நோக்கத்தில் தப்லீக் இயக்கத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர்கள் இந்தக் கற்பனைத் தொகுப்பை தூக்கி எறிந்தால் வெற்றியடைவார்கள்.

அல்லாஹ் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!

02.06.2010. 16:17 PM

More Articles …