Sidebar

17
Thu, Sep

திருக்குர்ஆன் விளக்கம்

அல் கஹ்ஃப் (அந்தக் குகை)

பீ. ஜைனுல் ஆபிதீன்

(ஒற்றுமை மாதம் இருமுறை இதழில் பீ.ஜே எழுதிய விளக்கவுரை)

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன். 

கஹ்ஃப் என்ற வார்த்தையின் பொருள் குகை. அல் கஹ்ஃப் என்றால் அந்தக் குகை என்பது பொருள்.  இந்த அத்தியாயத்தின் ஒன்பதாவது வசனம் முதல் இருபத்தி ஆறாவது வசனம் வரை ஒரு குகையில் தஞ்சம் புகுந்த நல்லடியார்கள் குறித்த வரலாற்றுக் குறிப்பு கூறப்படுகிறது.  இந்த அத்தியாயத்திற்கு அல் கஹ்ஃப் (அந்தக் குகை) என்று பெயர் வர இதுவே காரணமாகும். 

இந்த அத்தியாயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மக்கா வாழ்க்கையின் போது அருளப்பட்டது என்பதில் அறிஞர்கள் ஒருமித்த கருத்தில் உள்ளதாக குர்துபி உள்ளிட்ட பல விரிவுரையாளர்கள் கூறுகின்றனர்.  ஆயினும் இதற்கு ஆதாரப்பூர்வமான சான்றுகள் எதையும் இவர்கள் எடுத்துக் காட்டவில்லை. 

இந்த அத்தியாயத்தில் உள்ள வசனங்களில் கூறப்படும் செய்திகளைப் பார்க்கும் போது. சில செய்திகள் மக்காவில் அருளப்பட்டு இருக்கலாம்.  வேறு சில செய்திகள் மதினாவில் அருளப்பட்டு இருக்கலாம் என்று அனுமானம் செய்வதற்கு போதுமான காரணங்கள் உள்ளன.  இன்னும் சில வசனங்களின் அமைப்பைப் பார்க்கும் போது அது மக்காவில் அருளப்பட்டது என்றோ, மதினாவில் அருளப்பட்டது என்றோ முடிவுக்கு வரமுடியாத நிலையில் உள்ளன. 

எனவே, ஒட்டு மொத்தமாக இந்த அத்தியாயம் மக்காவில் அருளப்பட்டது என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.  ஏற்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் கிடையாது. 

இது மக்காவில் அருளப்பட்டது; அல்லது மதினாவில் அருளப்பட்டது என்று நபித்தோழர்கள் கூறியதாக குறிப்பு கிடைக்கும் போது மட்டுமே இது பற்றி நாம் முடிவுக்கு வர வேண்டும். 

அவ்வாறு குறிப்புகள் கிடைக்காத போது மக்கீ, மதனி என்று ஏதாவது ஒன்றைக் கூறியாக வேண்டும் என்பதற்காக எதையாவது கூறுவதை ஒப்புக் கொள்ள முடியாது.  திருக்குர்ஆன் விரிவுரையாளர்களில் பலர் மக்கீ, மதனி என்று எதையாவது கூறியாக வேண்டுமே என்பதற்காகத் தான் கூறியுள்ளனர் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

அல்லாஹ்வின் வார்த்தைகள் என்ற அடிப்படையில் திருக்குர்ஆனின் எல்லா வசனங்களும் சமமானவையே என்றாலும் சில அத்தியாயங்களுக்கு தனிச் சிறப்புகள் இருப்பதாக ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன.  திருக்குர்ஆனின் ஒவ்வொரு அத்தியாயங்களின் சிறப்புகளை எடுத்துரைக்கும் இத்தகைய ஹதீஸ்களில் பெரும்பாலானவை இட்டுக் கட்டப்பட்டவையாகவே உள்ளன.

அல் பகரா, குல்ஹுவல்லாஹ், குல்அஊது பிரப்பின்னாஸ், குல்அஊது பிரப்பில் ஃபலக், அல்ஹம்து, ஆயத்துல் குர்ஸி, அல் கஹ்ஃப் ஆகிய அத்தியாயங்களின் சிறப்பு குறித்த ஹதீஸ்களில் மட்டுமே ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களைக் காண முடிகிறது.  கஹ்ஃப் அத்தியாயத்தின் சிறப்புகள் குறித்தும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளதால் அந்த சிறப்புகளை அறிந்து விட்டு இந்த அத்தியாயத்தின் விளக்கத்திற்குள் நாம் நுழைவோம்.

صحيح مسلم م

257 - (809) وحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ الْغَطَفَانِيِّ، عَنْ مَعْدَانَ بْنِ أَبِي طَلْحَةَ الْيَعْمَرِيِّ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ حَفِظَ عَشْرَ آيَاتٍ مِنْ أَوَّلِ سُورَةِ الْكَهْفِ عُصِمَ مِنَ الدَّجَّالِ».

கஹ்ஃப் அத்தியாயத்தின் முதல் பத்து வசனங்களை யார் மனனம் செய்கிறாரோ அவர் தஜ்ஜாலை விட்டும் பாதுகாப்பு பெறுவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூதர்தா (ரலி)

நூல் : முஸ்லிம்

இந்தப் பத்து வசனங்களுக்கும், தஜ்ஜாலுக்கும் என்ன தொடர்பு என்பதை பத்து வசனங்களுக்கான விளக்கம் நிறைவடையும் போது நாம் குறிப்பிடுவோம் இன்ஷா அல்லாஹ். 

இந்தப் பத்து வசனங்களை மனனம் செய்வது தஜ்ஜாலிடமிருந்து பாதுகாக்கும் கேடயம் என்பதை மட்டும் இப்போது புரிந்து கொண்டால் போதுமானது.

 صحيح مسلم 

فَمَنْ أَدْرَكَهُ مِنْكُمْ، فَلْيَقْرَأْ عَلَيْهِ فَوَاتِحَ سُورَةِ الْكَهْفِ،

உங்களில் யார் தஜ்ஜாலை அடைகிறீர்களோ அவர் அவனை நோக்கி கஹ்ஃப் அத்தியாயத்தின் ஆரம்ப வசனங்களை ஓதட்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (நீண்ட ஹதீஸின் சிறு பகுதி)

அறிவிப்பவர் : நவ்வாஸ் பின் சம்ஆன் (ரலி)

நூல் : முஸ்லிம்

அபூதாவூத் நூலின் அறிவிப்பில்,

سنن أبي داود 

 فَمَنْ أَدْرَكَهُ مِنْكُمْ فَلْيَقْرَأْ عَلَيْهِ فَوَاتِحَ سُورَةِ الْكَهْفِ، فَإِنَّهَا جِوَارُكُمْ مِنْ فِتْنَتِهِ»

"அவனை உங்களில் யார் அடைகிறீர்களோ அவர் அவனை நோக்கி கஹ்ஃப் அத்தியாயத்தின் ஆரம்ப வசனங்களை ஓதட்டும் நிச்சயமாக அது தஜ்ஜாலின் சோதனைகளிலிருந்து பாதுகாக்கும்'' என்று கூறப்பட்டுள்ளது. 

முஸ்லிம் சமுதாயத்தின் மிகப் பெரிய சோதனையாக இருக்கும் தஜ்ஜால் வருகையின் போது ஈமானைக் காக்கும் கேடயமாக இவ்வசனங்கள் அமைந்திருப்பது இந்த அத்தியாயத்திற்கான சிறப்புக்களில் ஒன்றாகும்.

 صحيح البخاري 

3614 - حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، سَمِعْتُ البَرَاءَ بْنَ عَازِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَرَأَ رَجُلٌ الكَهْفَ، وَفِي الدَّارِ الدَّابَّةُ، فَجَعَلَتْ تَنْفِرُ، فَسَلَّمَ، فَإِذَا ضَبَابَةٌ، أَوْ سَحَابَةٌ غَشِيَتْهُ، فَذَكَرَهُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «اقْرَأْ فُلاَنُ، فَإِنَّهَا السَّكِينَةُ نَزَلَتْ لِلْقُرْآنِ، أَوْ تَنَزَّلَتْ لِلْقُرْآنِ»

ஒரு மனிதர் கஹ்ஃப் அத்தியாயத்தை ஓதிக் கொண்டிருந்தார்.  அப்போது வீட்டிலிருந்த கால்நடை ஓட ஆரம்பித்தது.  கஹ்ஃப் அத்தியாயத்தை ஓதிய மனிதர் கவனித்த போது அவர் மீது மேகம் நிழலிட்டுக் கொண்டிருந்தது.  அவர் இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறினார்.  அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "இந்த நிலை குர்ஆனை ஓதும் போது இறங்கிய (சகீனத் எனும்) அமைதியாகும்'' என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர் : பராஃ (ரலி)

நூல் : புகாரி 3614

அல் கஹ்ஃப் அத்தியாயம் இத்தகைய தனிச் சிறப்புகள் வாய்ந்த அத்தியாயம் ஆகும்.  இந்த அத்தியாயத்தின் விளக்கத்தை இனி காணலாம்.

"தனது அடியார் (முஹம்மது) மீது இவ்வேதத்தை அருளிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்''

என்று இந்த அத்தியாயம் துவங்குகிறது. அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் என்று அல்லாஹ் கூறுவதால் அவன் தன்னைத் தானே புகழ்ந்து கொள்கிறான் என்று கருதிக் கொள்ளக் கூடாது. மாறாக அவனது அடியார்களாகிய நாம் அவனைப் புகழ வேண்டும் என்று கற்றுத் தருவதற்காகவே இவ்வாறு குறிப்பிடுகிறான்.

ஃபாத்திஹா அத்தியாயம், அல் அன்ஆம் அத்தியாயம், ஸபா அத்தியாயம், ஃபாதிர் அத்தியாயம் ஆகிய நான்கு அத்தியாயங்களும் எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே என்று துவங்குகின்றன.

ஃபாத்திஹா அத்தியாயத்தில் எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே எனக் கூறி விட்டு உன்னையே வணங்குகின்றோம் என்று தொடர்ந்து கூறுகின்றான்.  உன்னையே வணங்குகின்றோம் என்று அல்லாஹ் கூறினாலும் நாம் அவ்வாறு கூற வேண்டும் என்று கற்றுத் தருவது தான் இதன் கருத்தாகும்.  எனவே, இந்த வசனத்தையும் இவ்வாறு தான் புரிந்து கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வை அவனுடைய அடியார்களாகிய நாம் புகழ வேண்டும் என்பதை மட்டும் கூறாமல் ஏன் அவனை நாம் புகழ வேண்டும் என்ற காரணத்தையும் அல்லாஹ் இங்கே குறிப்பிடுகின்றான். 

அவனது அடியார் மீது இவ்வேதத்தை அருளியது தான் அந்தக் காரணம். "எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே'' என்று துவங்கும் ஏனைய நான்கு அத்தியாயங்களில் அல்லாஹ்வை நாம் ஏன் புகழ வேண்டும் என்பதற்கு இங்கே கூறிய காரணத்தைக் குறிப்பிடவில்லை.  மாறாக அல்லாஹ் அளவற்ற அருளாளனாக இருப்பதாலும், அவன் வானங்கள் மற்றும் பூமியைப் படைத்தற்காகவும், உலகில் உள்ள எல்லாப் பொருட்களும் அவனுக்கு உரிமையானதாக இருப்பதாலும் அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் என்று கூறிய இறைவன், இங்கே திருக்குர்ஆன் எனும் இவ்வேதத்தை அருளியதால் எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று கூறச் சொல்கிறான். 

வேதத்தை அருளியதற்காக நாம் ஏன் அவனைப் புகழ வேண்டும்? அது என்ன அவ்வளவு மகத்தானதா என்றால் நிச்சயமாக மகத்தானது தான். 

அல்லாஹ் இந்தச் சமுதாயத்துக்கு அருளிய அருட்கொடைகளில் அதற்கு ஈடானது ஏதுமில்லை.  தனது அடியார்கள் மீது வேதத்தை அருளிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் என்று கூறிய இறைவன் அதைத் தொடர்ந்து,

"அதில் எந்தக் கோணலையும் அவன் ஏற்படுத்தவில்லை''

என்ற அற்புதமான சொற்றொடரையும் பயன் படுத்தியுள்ளான்.

வேதம் என்பதை சாதாரண புத்தகம் போன்று எண்ணி விடாதீர்கள்.  இந்த வேதம் அத்தகையது அன்று. இவ்வேதத்தில் எந்தக் கோணலும் கிடையாது. ஒரு கோணலும் இல்லாத இவ்வேதத்தை அருளியதால் அவனுக்கே எல்லாப் புகழும் என்று அந்தக் காரணத்திற்கு வலிமை சேர்க்கப்பட்டுள்ளது.

பொய், முரண்பாடு, எல்லாக் காலத்திற்கும் தாக்குப் பிடிக்க முடியாத தன்மை, சொல்வதை தெளிவாகச் சொல்லாமல் குழப்புதல் போன்றவை கோணல் எனப்படும். இதில் எதுவுமே இல்லாமல் ஒரு வழிகாட்டும் நெறியை வழங்கிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.

மறதி, பலவீனம், எதிர்காலம் பற்றிய ஞானமின்மை போன்ற பலவீனங்களைக் கொண்ட மனிதனின் வார்த்தையில் கோணல் இருக்கலாம். இருக்கும். எந்தப் பலவீனமும் இல்லாத அல்லாஹ்வின் வார்த்தையில் கோணல் இருக்கலாகாது. கோணல் இல்லை என்று இங்கே அல்லாஹ் அறை கூவல் விடுக்கிறான்.

இதன் காரணமாகத் தான் திருக்குர்ஆனில் பல இடங்களில் இது போன்றதொரு வேதத்தை எவராலும் கொண்டு வர முடியாது என்று அல்லாஹ் சவால் விடுகிறான்.

23. நமது அடியாருக்கு (முஹம்மதுக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு, (அதில்) நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்!7

திருக்குர்ஆன் 2 : 23

38. "இதனை இவர் இட்டுக்கட்டி விட்டார்'' என்று அவர்கள் கூறுகிறார்களா? "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தையேனும் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வையன்றி உங்களால் இயன்றவர்களைத் துணைக்கு அழைத்துக் கொள்ளுங்கள்!'' என்று (முஹம்மதே!) கூறுவீராக!7

திருக்குர்ஆன் 10 : 38

13. "இவர் இதை இட்டுக்கட்டிக் கூறுகிறார்'' என்று அவர்கள் கூறுகிறார்களா? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இட்டுக்கட்டி, பத்து அத்தியாயங்களை இது போன்று கொண்டு வாருங்கள்!7 அல்லாஹ்வையன்றி உங்களுக்கு இயன்றவர்களை (துணைக்கு) அழைத்துக் கொள்ளுங்கள்!'' என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 11 : 13

88. "இக்குர்ஆன் போன்றதைக் கொண்டு வருவதற்காக மனிதர்களும், ஜின்களும் ஒன்று திரண்டாலும் இது போன்றதைக் கொண்டு வர முடியாது. அவர்களில் ஒருவர் மற்றவருக்கு உதவியாளராக இருந்தாலும் சரியே'' என்று கூறுவீராக!7

திருக்குர்ஆன் 17 : 88

49. "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவ்விரண்டை விட நேர்வழி காட்டும் வேதத்தை அல்லாஹ்விடமிருந்து கொண்டு வாருங்கள்! அதைப் பின்பற்றுகிறேன்'' என்று கூறுவீராக!7

திருக்குர்ஆன் 28 : 49

34. அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் இது போன்ற ஒரு செய்தியை அவர்கள் கொண்டு வரட்டும்.7

திருக்குர்ஆன் 52 : 34

இவை குர்ஆனைப் பற்றி அல்லாஹ் விடுக்கும் அறைகூவல்கள். கோணல் நிறைந்த புத்தகம் குறித்து இது போன்ற அறைகூவல் விட முடியாது.

82. அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.123

திருக்குர்ஆன் 4 : 82

42. இதன் முன்னும், பின்னும் இதில் தவறு வராது.123 புகழுக்குரிய ஞானமிக்கோனிடமிருந்து இது அருளப்பட்டது.351

திருக்குர்ஆன் 41 : 42

இந்த வேதத்தைச் சிந்திக்க மாட்டார்களா? என்று அறைகூவல் விடுக்கும் வேதம் இந்த உலகில் திருக்குர்ஆனைத் தவிர வேறு எதுவும் இல்லை. துருவி ஆராய்ந்தால் கூட இதில், ஒரு முரண்பாட்டைக் கூட காணமுடியாது என்று கூறக்கூடிய வேதமும் இது ஒன்று தான்.

இதில் கோணல் எதுவும் இல்லாத காரணத்தினால் தான் 1400 ஆண்டுகளைக் கடந்த பின்பும் இஅது நடைமுறைப்படுத்தப்படுகிறது. எந்த மாறுதலும் தேவைப்படவில்லை. காலத்தால் இஸ்லாத்திற்குப் பிந்திய எல்லா தத்துவங்களும், கொள்கைக் கோட்பாடுகளும் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் காலத்தை வென்று நிற்கும் ஒரே புத்தகமாக இது திகழ்கிறது.

இஸ்லாத்தின் எதிரிகள் கூட இஸ்லாத்தின் சட்டங்கள் தான் உலகில் அமைதியை ஏற்படுத்தும் என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளக் கூடிய அளவுக்கு ஒரு கோணலும் அற்றதாக உள்ளது.

இருபதாம் நூற்றாண்டில் தீர்க்க முடியாத தீண்டாமைக் கொடுமை முதல் ஏனைய கிரிமினல் குற்றங்கள் வரை வேரோடு அறுத்தெறியப்பட வேண்டுமானால் குர்ஆனை விட்டால் வேறு வழியே கிடையாது என்பது சந்தேகமற நிரூபிக்கப்பட்டு விட்டது.

மயிர் பிளக்கும் வாதங்கள் புரியும் அறிவுலக மேதைகள் எல்லாம் எந்த ஆற்றலும் இல்லாத ஒரு கல்லின் முன்னால் தலைகுனிந்து வணங்கும் நேரத்தில் கையெழுத்து போடத் தெரியாத ஒரு முஸ்லிம் மட்டும் அதைக் கல் என்று சரியாகப் புரிந்து கொள்கின்றான் என்றால் அதற்குக் காரணம் இவ்வேதம் தான்.

எனவே தான் இவ்வளவு அற்புதமான வேதத்தை அருளி அதன் மூலம் மிருகங்களாக இருந்தவர்களை மனிதர்களாக வாழச் செய்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் என்று அல்லாஹ் துதி பாடச் சொல்கிறான்.

இதில் எந்தக் கோணலையும் ஏற்படுத்தவில்லை என்பதுடன் நிறுத்திக் கொள்ளாமல் மேலும் அழுத்தம் கொடுக்கும் விதமாக, "இதை நேரானதாகவும் அருளியிருக்கின்றான்'' என்று கூறுகின்றான். கோணலை ஏற்படுத்தவில்லை. மாறாக நேரானதாக அதை அருளியிருப்பதாகக் கூறி, புகழ் அனைத்திற்கும் அவன் மட்டுமே உரித்தானவன் என்பதை வலியுறுத்துகின்றான்.

"நேரானதாகவும் எவ்விதக் கோணலும் அற்றதாகவும் இவ்வேதத்தை அருளிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்'' என்று கூறினால் சொல்லவருகின்ற கருத்து முழுமை அடைந்து விடும். ஆயினும், இங்கே "தன் அடியார் மீது'' என்ற சொற்றொடரையும் சேர்த்து கூறுகின்றான்.

வேதம் அருளப்பட்டது மட்டும் அருட்கொடை ஆகாது. அருளப்படுவதற்குத் தகுதியானவர் மீது அருளப்பட்டதும் சேர்த்துத் தான் இது அருட்கொடையாகிறது.

வேதத்தில் சில வசனங்களைப் பார்க்கும் போது தெளிவற்றதாகத் தோற்றமளிக்கலாம். ஆனால் யார் மீது இவ்வேதத்தை அல்லாஹ் அருளினானோ அவர் அளித்த விளக்கம் காரணமாக பிரகாசமான தெளிவு தென்படும்.

எனவே தான் "தனது அடியாருக்கு இவ்வேதத்தை அருளிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்'' என்கிறான்.

வேதத்துக்கு நபிகள் நாயகத்தின் விளக்கம் அவசியம் இல்லை என்றால் "தனது அடியார் மீது'' என்ற வாசகம் பொருளற்றதாகி விடும்.

இவ்வேதம் அருளப்பட்டது ஓர் அருள். அதில் ஒரு கோணலும் இல்லாமல் நேராக அமைந்திருப்பது மற்றோர் அருள். மேலும் யாருக்கு அருள வேண்டுமோ அத்தகையவருக்கு அருளியிருப்பது இன்னோர் அருள் எனக்கூறிய இறைவன் அடுத்து வரும் வசனங்களில் இவ்வேதம் என்ன நோக்கத்திற்காக அருளப்பட்டது என்பதை விளக்குகிறான்.

தன்னிடமுள்ள கடுமையான தண்டனை குறித்து எச்சரிப்பதற்காகவும், நல்லறங்கள் புரிந்தோருக்கு நிச்சயமாக அழகான பரிசு இருக்கிறது என்று நற்செய்தி கூறுவதற்காகவும் (இவ்வேதத்தை அருளினான்) அதில் (பரிசாகப் பெறக் கூடிய சொர்க்கத்தில்) அவர்கள் என்றென்றும் நிலைதிருப்பார்கள். (2,3 வசனங்கள்)

திருக்குர்ஆன் எவ்விதக் குறைபாடும், முரண்பாடும் இல்லாமல் அருளப்பட்டதாகக் கூறிய இறைவன் இவ்வசனங்களில் திருக்குர்ஆன் அருளப்பட்ட நோக்கத்தைத் தெளிவுபடுத்துகிறான்.

அந்த நோக்கம் மறுமை வாழ்க்கை குறித்து எச்சரிப்பது தான்.  இந்த ஒரு நோக்கத்திற்காகத் தான் திருக்குர்ஆன் அருளப்பட்டுள்ளது என்பதை மேற்கண்ட வசனங்கள் கூறுகின்றன.

தீமை செய்பவர்கள் சொகுசான இன்பமான வாழ்க்கையை அனுபவிப்பதையும், நல்லறங்களில் ஈடுபடுவோர் துன்பங்களில் உழல்வதையும் இவ்வுலகில் வாழும் மனிதன், காண்கிறான்.

நல்லவனாக வாழ்ந்தால் ஒரு பயனும் இல்லை.  தீயவனாக நடப்பதால் ஒரு கேடும் இல்லை என்று அவனது மனம் கணக்குப் போடுகிறது. அவனும் தீயவனாக மாறிவிடுகிறான்.

இந்த மனநிலையை மாற்றியமைப்பது தான் திருக்குர்ஆன் அருளப்பட்டதற்கான நோக்கம்.

இவ்வுலகில் நல்லவனாக வாழும் போது பல இன்பங்களை இழக்க நேரிட்டாலும், பல துன்பங்களைச் சுமக்க நேரிட்டாலும் நல்லவனாக வாழ்வதில் எந்தப் பயனும் இல்லை என்று நினைத்து விடாதீர்கள்!  மாறாக நீங்கள் இழந்த இன்பங்களை விடப் பல மடங்கு இன்பங்கள் உங்களுக்குக் காத்திருக்கின்றன.

அந்த இன்பங்கள் சொற்பமான நாட்களில் முடிந்துவிடக் கூடியதல்ல.  மாறாக என்றென்றும் நிலைத்திருக்கக் கூடியவை என்று ஆர்வமூட்டுவது தான் திருக்குர்ஆன் அருளப்பட்டதன் நோக்கம்.

நல்ல காரியங்களில் ஈடுபட ஆர்வமிருந்தும் அதனால் எந்தப் பயனும் இல்லையே எனக் கருதுவோரை இந்த நம்பிக்கை நல்வழிப்படுத்தும்.

இது போலவே தீய காரியங்களில் ஈடுபடுபவன், தான் செய்யும் காரியங்கள் தீமையானவை தான் என்று அறிவுப்பூர்வமாக உணர்ந்தாலும், தனது தீய காரியங்களால் மற்றவர்கள் பல விதமான பாதிப்புகளுக்கு ஆளாக நேர்வதைக் கண்கூடாகக் கண்டாலும் அவன் அக்காரியங்களிலிருந்து விலகிக் கொள்ள மறுக்கிறான்.

காரணம், தான் செய்கின்ற தீய காரியங்களால் தனக்கு எந்தக் கேடும் ஏற்படவில்லையே!  தனக்குச் செல்வமும், செல்வாக்கும் புகழும் தானே அதிகரிக்கிறது.  பிறகு ஏன் இக்காரியங்களிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும்? என்றெல்லாம் நினைக்கக் கூடியவன் தீய காரியங்களில் தொடர்ந்து மூழ்கி விடுகிறான்.

தனது ஒவ்வொரு தீயசெயலும் தன்னைப் படைத்த இறைவனால் கண்காணிக்கப்பட்டு பதிவு செய்யப்படுகின்றன.  அவனை எவ்வகையிலும் ஏமாற்ற இயலாது.  இவ்வுலகில் வாழும் போதே தவறுகளிலிருந்து திருந்திக் கொள்ளாமல் இதே நிலையிலேயே மரணித்து விட்டால் கடவுளால் தண்டிக்கப்படுவோம்.  அந்தத் தண்டனை இவ்வுலகில் நல்லவனாக வாழ்ந்தால் அடைகின்ற துன்பங்களை விடக் கடுமையானவை.  தாங்கிக் கொள்ள முடியாதவை என்றெல்லாம் எச்சரிக்கவே இந்தக் குர்ஆன் அருளப்பட்டது.

மரணித்தவுடன் எல்லாம் முடிந்து விடுகிறது என்ற நம்பிக்கை தான் மனிதனது தீய செயல்களுக்கு அடிப்படையாகவுள்ளன.  இந்த அடிப்படையைத் தகர்க்காமல் என்ன தான் சட்டங்கள் போட்டாலும் எத்தனை அறிவுரைகள் கூறினாலும் அதனால் போதுமான பயன் ஏற்படாது.

முதன் முதலில் நம்மைப் படைத்த இறைவன் மீண்டும் படைக்க ஆற்றல் மிக்கவன்.  அவன் மக்கள் அனைவரையும் அழித்த பின் மீண்டும் அனைவரையும் உயிர்த்தெழச் செய்வான்.  உயிர்த்தெழச் செய்தபின் நல்லவர்கள் அழியாப் பேரின்பத்தை அடைவார்கள்.  தீயோர் தாங்க முடியாத நரக நெருப்பில் வீசப்படுவார்கள்.  இந்த அடிப்படை தான் இஸ்லாத்தின் வெற்றிக்கு மூலகாரணம்.

இந்த அடிப்படை தான் மற்ற சமுதாயங்களை விட முஸ்லிம்கள் வீரமிக்கவர்களாகத் திகழ்வதற்கும், மற்றவர்களை விட அதிகமதிகமாக வாரி வழங்கும் வள்ளல் தன்மைக்கும் இன்ன பிற சிறப்புத் தகுதிகளுக்கும் காரணமாக இருந்தது.  இன்றைக்கும் இருக்கிறது.

திருக்குர்ஆனில் கூறப்படுகின்ற வரலாறுகளானாலும், அதில் கூறப்படுகின்ற உவமைகளானாலும், சட்டதிட்டங்களானாலும், கொள்கை முழக்கங்களானாலும் அனைத்துமே அந்த நம்பிக்கையை ஏற்படுத்துவதற்குத் தான் கூறப்படுகின்றன.

மேலே நாம் எடுத்துக் காட்டிய இவ்வசனங்களும் இதைத் தான் கூறுகின்றன.

1,2,3,4. அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். அவனே தனது அடியார் மீது, எவ்விதக் கோணலும் இல்லாத நேரான இவ்வேதத்தை, தனது கடுமையான வேதனை பற்றி எச்சரிப்பதற்காகவும், நல்லறங்கள் செய்யும் நம்பிக்கை கொண்டோருக்கு அழகிய கூலி உண்டு; அதில் என்றென்றும் தங்குவார்கள் என நற்செய்தி கூறுவதற்காகவும், அல்லாஹ் சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான் என்று கூறுவோரை எச்சரிப்பதற்காகவும் அருளினான்.26

தனது கடுமையான தண்டனை குறித்துப் பொதுவாக எச்சரிப்பதற்காக இவ்வேதத்தை அருளியதாக முந்தைய வசனத்தில் இறைவன் கூறினான்.  கடவுளை நிராகரிப்போர், கடவுளுக்கு இணை வைப்போர், கடவுளுக்கு மனைவி மக்களைக் கற்பிப்போர் ஆகிய அனைவரும் அந்தப் பொதுவான எச்சரிக்கைக்குள் அடங்குவார்கள் என்றாலும் கடவுளுக்கு மகன் இருப்பதாகக் கூறுவோரைத் தனியாகக் குறிப்பிட்டு இவ்வசனங்கள் மூலம் இறைவன் எச்சரிக்கிறான்.

ஏற்கனவே கூறிய பொதுவான எச்சரிக்கையில் இவர்களும் அடங்குவார்கள் என்ற போதும் இவர்களைத் தனியாக இறைவன் குறிப்பிட்டுள்ளதிலிருந்து கடவுளுக்கு மகன் இருப்பதாகக் கூறுவது மற்ற இரண்டு குற்றங்களை விடக் கடுமையானது என்பதை விளங்கலாம்.

மனிதர்கள் பேசும் வார்த்தைகளிலேயே இது தான் பெரிய வார்த்தை என்ற சொற்பிரயோகமும் இதைத் தெளிவாக அறிவிக்கின்றது.  இணை வைத்தலில் கடவுளுக்கு மகன் இருப்பதாகக் கூறுவது முதலிடத்தில் நிற்கும் என்பதை இதிலிருந்து உணர்ந்து கொள்ளலாம்.

பொதுவாக மனிதன் தனக்குச் சந்ததி இருப்பதில் பெருமை கொள்கிறான்.  மகிழ்ச்சியடைகிறான்.  சந்ததி இல்லாவிட்டால் இடிந்து போகிறான்.  ஆனால் எல்லாம் வல்ல இறைவனோ தனக்கு சந்ததி இருப்பதாகக் கூறுவதைக் கடுமையாக வெறுக்கிறான். 

மனிதன் ஏன் தனக்கு சந்ததிகள் வேண்டும் என்று விரும்புகிறான்? இந்தக் கேள்விக்கு விடை கண்டால் இறைவன் ஏன் சந்ததிகளை ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்ற கேள்விக்கும் விடை காணலாம்.

மனிதன் குறிப்பிட்ட காலத்தில் தள்ளாத வயதை அடைவான்.  அவனது எல்லா செயல்பாடுகளும் படிப்படியாகக் குறைந்து செயலற்றவனாக ஆகிவிடுவான்.  அந்த நேரத்தில் தன்னைக் கவனித்துக் கொள்ள மற்றவரின் துணை அவனுக்குத் தேவைப்படுகிறது.

அந்த மற்றவன் தனது உதிரத்திலிருந்து உருவானவனாக இருந்தால் தன்னைக் கவனித்துக் கொள்வது நிச்சயம் என்று மனிதன் நினைக்கிறான்.  இதன் காரணமாகவே மனிதன் சந்ததிகளை விரும்புகிறான்.

மேலும் தான் என்றாவது ஒரு நாள் மரணித்து விடுவோம் என்பதையும் மனிதன் அறிந்து வைத்திருக்கிறான்.  தான் சிரமப்பட்டு திரட்டிய செல்வங்களை யாரோ எவரோ அனுபவிப்பதை விட நமது உதிரத்திலிருந்து பிறந்தவன் அனுபவிக்கட்டுமே என்ற எண்ணமும் தான் மனிதன் சந்ததிகளைப் பெற்றுக் கொள்ள நினைப்பதற்கான காரணம்.

ஆனால் கடவுளைப் பொறுத்த வரை அவனுக்கு முதுமையோ, இயலாமையோ, மரணமோ ஏற்படப் போவதில்லை. சந்ததிகள் வேண்டும் என்று ஆசைப்படுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.  இறைவனுக்கு மகனிருக்க முடியாது என்பதற்கு இது ஒரு காரணம்

கடவுள் தன்மை என்பது பங்கு போட்டுக் கொடுக்க முடியாத தனி உரிமையாகும்.  கடவுளுக்குப் பிறப்பவன் நிச்சயம் கடவுளாகத் தான் இருப்பான்.  பிறகு அந்த மகனுக்கும் மகன்கள் பிறப்பார்கள். அவர்களும் கடவுள்களாகவே இருப்பார்கள்.  கடவுள் தன்மையைப் பலரும் பங்கு போட்டுக் கொள்ளக் கூடிய நிலை ஏற்படும்.  போட்டியும், பகைமையும் ஏற்படும்.  இதனால் கடவுளின் பணிகளே பாதிக்கப்பட்டுப் போய் விடும்.

கடவுளுக்கு மகன்களைக் கற்பித்த மதங்களில் தந்தைக் கடவுளுக்கும் மகன் கடவுளுக்கும் சண்டை நடந்த கதைகளைக் காண்கிறோம்.  அண்ணன் கடவுளுக்கும் தம்பி கடவுளுக்கும் சண்டை நடந்திருக்கிற கதைகளை கேள்விப்பட்டுள்ளோம்.

மனிதனுக்கு மகன் இருப்பது நன்மை பயக்கும்.  கடவுளுக்கு மகன் இருந்தால் கேடு தான் ஏற்படும்.

இது போக, கடவுள் என்பவன் எந்தத் தேவையுமற்றவனாக இருக்க வேண்டும்.  சந்ததி இருக்கிறது எனக் கூறும் போது அவனுக்குத் தேவை இருக்கிறது என்று ஆகும்.  சந்ததி மட்டும் தேவை என்று ஆகாது.  கூடவே மனைவியும் தேவை என்று ஆகும்.  அப்புறம் கணவன் கடவுளுக்கும் மனைவி கடவுளுக்கும் நடக்கும் சண்டைகளால் உலகம் ஸ்தம்பித்துப் போகும்.

இந்தக் கேலிக்கூத்துகளுக்கு இடமளிக்கக் கூடாது என்பதற்காகவே அல்லாஹ் தனக்கு மகனோ மகளோ இல்லை எனக் கூறுகிறான்.  அவ்வாறு கூறுவதும், நம்புவதும் கடும் குற்றம் எனவும் எச்சரிக்கிறான்.  இதன் காரணமாகத் தான் சொற்களில் பெரும் பாதகமான சொல் எனக் கூறுகிறான்.

திருக்குர்ஆனில் இந்த ஒரு இடத்தில் மட்டுமல்ல.  பல இடங்களில் இந்தக் குற்றத்தைக் குறித்து இறைவன் எச்சரிக்கிறான். சில இடங்களில் இதைவிடக் கடுமையாகவும் எச்சரித்துள்ளான்.

116. "அல்லாஹ் மகனை ஏற்படுத்திக் கொண்டான்'' எனக் கூறுகின்றனர். அவ்வாறில்லை! அவன் தூயவன்.10 வானங்களிலும்,507 பூமியிலும் உள்ளவை அவனுக்கே உரியன. அனைத்தும் அவனுக்கே அடிபணிகின்றன.

திருக்குர்ஆன் 2 : 116

"வானங்களிலும் பூமியிலும் உள்ள யாவும் அவனது உடமைகள்'' என்பது அற்புதமான சொற்றொடர்.

நாம் ஒரு பொருளைக் காசு கொடுத்து வாங்கி அதை நமது உடமையாக்கிக் கொள்கிறோம்.  அத்தகைய பொருளை நமது சந்ததி என்று நாம் கூறுவோமா? காசு கொடுத்து வாங்கிய காளை மாட்டை இது தான் எனது ஆண் மகன் எனக் கூறுவோர் உண்டா? உடமையாக்கிக் கொண்ட பொருளை யாரும் தனது சந்ததி எனக் கூற மாட்டார்கள்.

அல்லாஹ்வைப் பொறுத்த வரை வானங்களும், (நாம் உள்ளிட்ட) இந்தப் பூமியும் அவனது உடமைகள்.  யாரைக் கடவுளின் மகன் எனக் கூறுகிறார்களோ அவரும் அவனுக்குச் சொந்தமான தட்டு முட்டுச் சாமான் போன்றவர் தான்.  எனவே எனக்கு எவரும் மகனாக முடியாது என்று காரணத்துடன் விளக்குகிறான்.

நாம் சட்டையில் குத்திக் கொண்ட நமது உடமையாக இருக்கின்ற பேனாவை நமது மகன் எனக் கூற மாட்டோம்.  நமக்கும், பேனாவுக்கும் எவ்வளவு வித்தியாசங்கள் உள்ளனவோ அதை விட அதிக வித்தியாசம் கடவுளுக்கும் கடவுளின் மகன் எனக் கூறப்படுபவருக்கும் இடையே உள்ளது.

நம்மைப் பொறுத்த வரை பேனா எந்த நிலையில் உள்ளதோ அது போன்ற நிலையில் படைக்கப்பட்ட எல்லாப் பொருட்களும் இறைவனின் பார்வையில் உள்ளன.  "அனைத்தும் எனது உடமை'' என்ற அற்புதமான சொற்றொடர் மூலம் தனக்குச் சந்ததியில்லை என்பதை அறிவுப்பூர்வமாக விளக்குகிறான்.

இதே வாதத்தை 4 : 171, 10 : 68 ஆகிய வசனங்களிலும் முன்வைக்கிறான்.

101. (அவன்) வானங்களையும்,507 பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவன். அவனுக்கு மனைவி இல்லாத நிலையில் அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். அவன் அனைத்துப் பொருட்களையும் அறிந்தவன்.

திருக்குர்ஆன் : 6 : 101

111. "சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை'' என்று (முஹம்மதே!) கூறுவீராக! அவனை அதிகம் பெருமைப்படுத்துவீராக!

திருக்குர்ஆன் 17 : 111

35. எந்தப் பிள்ளையையும் ஏற்படுத்திக் கொள்வது அல்லாஹ்வுக்குத் தகுதியானதன்று. அவன் தூயவன்.10 ஒரு காரியத்தைப் பற்றி அவன் முடிவெடுத்தால் ஆகு என்றே அதற்குக் கூறுவான். உடனே அது ஆகி விடும்.

திருக்குர்ஆன் 19 : 35

88. "அளவற்ற அருளாளன் பிள்ளையை ஏற்படுத்திக் கொண்டான்'' என்று அவர்கள் கூறுகின்றனர்.

89. அபாண்டத்தையே கொண்டு வந்து விட்டீர்கள்.

90, 91. அளவற்ற அருளாளனுக்குப் பிள்ளை இருப்பதாக அவர்கள் வாதிடுவதால் வானங்கள்507 வெடித்து, பூமி பிளந்து, மலைகள் நொறுங்கப் பார்க்கின்றன.26

92. பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளும் அவசியம் அளவற்ற அருளாளனுக்கு இல்லை.

93. வானங்களிலும்,507 பூமியிலும் உள்ள ஒவ்வொருவரும் அளவற்ற அருளாளனிடம் அடிமையாகவே வருவார்கள்.

94. அவர்களை அவன் சரியாக எண்ணிக் கணக்கிட்டிருக்கிறான்.

95. அவர்கள் அனைவரும் கியாமத் நாளில்1 அவனிடம் தன்னந்தனியாகவே வருவார்கள்.

திருக்குர்ஆன் 19 : 88-95

26. "அளவற்ற அருளாளன் சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான்'' எனக் கூறுகின்றனர். அவன் தூயவன்.10 மாறாக அவர்கள் (வானவர்கள்) மரியாதைக்குரிய அடியார்கள்.

திருக்குர்ஆன் 21 : 26

91. அல்லாஹ் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அவனுடன் எந்தக் கடவுளும் இல்லை. அவ்வாறிருந்தால் தான் படைத்தவற்றுடன் ஒவ்வொரு கடவுளும் (தனியாகப்) போயிருப்பார்கள். ஒருவரையொருவர் மிகைத்திருப்பார்கள். அவர்கள் கூறுவதை விட்டும் அல்லாஹ் தூயவன்.10

திருக்குர்ஆன் 23 : 91

2. அவனுக்கே வானங்கள்507 மற்றும் பூமியின் அதிகாரம் உள்ளது. அவன் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அதிகாரத்தில் அவனுக்கு எந்தப் பங்காளியும் இல்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் படைத்தான். அதைத் திட்டமிட்டு அமைத்தான்.

திருக்குர்ஆன் 25 : 2

4. அல்லாஹ் மகனை ஏற்படுத்த நினைத்திருந்தால், தான் படைத்தவற்றில் தான் நாடியதை எடுத்துக் கொண்டிருப்பான். அவன் தூயவன்.10 அவனே அடக்கியாளும் ஏகனாகிய அல்லாஹ்.

திருக்குர்ஆன் 39 : 4

100. ஜின்களை அல்லாஹ்வே படைத்திருக்கும்போது அவர்களை அவனுக்கு இணையாக்கி விட்டனர். அவனுக்கு ஆண் மக்களையும், பெண் மக்களையும் அறிவில்லாமல் கற்பனை செய்து விட்டனர். அவனோ தூயவன்.10 அவர்கள் வர்ணிப்பதை விட்டும் அவன் உயர்ந்து விட்டான்.

திருக்குர்ஆன் 6 : 100

3. (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.

திருக்குர்ஆன் 112 : 3

3. எங்கள் இறைவனின் மகத்துவம் உயர்ந்தது. அவன் மனைவியையோ, பிள்ளைகளையோ ஏற்படுத்திடவில்லை.

திருக்குர்ஆன் 72 : 3

இவ்வசனங்களில் தனக்கு மகனோ, மகளோ இருக்க முடியாது என்பதற்கு அடுக்கடுக்கான ஆதாரங்களை முன் வைக்கிறான்.

இது தனக்கு எவ்வளவு கோபத்தை ஏற்படுத்தும் எனவும் கூறுகிறான்.

மறுமை நாளில் யாரைக் கடவுளின் மகன் என்று கற்பனை செய்தீர்களோ அவரே ஓர் அடிமையாகத் தான் என் முன்னே நிறுத்தப்படுவார்.  மகனாக அல்ல எனவும் கூறுகிறான்.

இவ்வளவு கடுமையான குற்றமாக இது இருப்பதால் தான் இவர்களுக்குத் தனியாகவும் இறைவன் எச்சரிக்கிறான்.

இந்தச் செய்தியை அவர்கள் நம்பவில்லையானால் அதற்காகக் கவலைப்பட்டு உம்மையே அழித்துக் கொள்வீர் போலும். (வசனம் 6)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த கொள்கையை ஏற்க மறுத்தவர்களைப் பற்றிக் கூறி விட்டு அவர்களுக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகவும் கவலை கொள்வதைப் பற்றி இவ்வசனத்தில் குறிப்பிடுகிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளைக் கேட்டு அதைப் பலரும் நிராகரிக்கலானார்கள்.  இந்த நிராகரிப்பு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கவலையை ஏற்படுத்தியது.  மிகப் பெரிய அளவில் கவலைப்பட்டு தம்மையே அழித்துக் கொள்வார்களோ என்று கருதும் அளவுக்குக் கவலைப்பட்டார்கள்.  இதைத் தான் மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் சுட்டிக் காட்டுகிறான்.

இப்படியெல்லாம் கவலைப் படக் கூடாது என்று இங்கே கூறுகிறானா?. மனித குலத்தின் மீது நபிகள் நாயகத்துக்கு இருந்த அக்கறையைச் சுட்டிக் காட்டி பாராட்டுகிறானா?

இவ்வசனத்தின் வாசக அமைப்பைப் பார்க்கும் போது இரண்டு விதமாகவும் இதைப் புரிந்து கொள்ளும் வகையில் தான் அமைந்துள்ளது.

குடும்பத்திற்காக ஓடாய்த் தேய்கிறாயே என்று ஒருவரிடம் நாம் கூறும் போது இப்படியெல்லாம் தேய வேண்டியதில்லை என்றும் எடுத்துக் கொள்ளலாம் அல்லது குடும்பத்தின் மீது தான் இவனுக்கு எவ்வளவு அக்கறை என்பதை மறைமாகப் பாராட்டுவதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

அது போன்ற நிலையில் தான் இவ்வாசக அமைப்பும் உள்ளது.

எனவே இவ்வசனத்தை மட்டும் எடுத்துக் கொண்டால் எப்படி வேண்டுமானாலும் புரிந்து கொள்ளலாம் என்றாலும் வேறு இடங்களில் இது பற்றி ஏதும் கூறப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்த பின்னர் தான் இந்த இடத்தில் எவ்வாறு பொருள் கொள்வது என்பதைத் தீர்மானிக்க முடியும்.  அவ்வாறு ஆய்வு செய்யும் போது இது குறித்து தெளிவான கருத்தைக் கூறுகின்ற வசனத்தைக் காணமுடிகின்றது.

8. யாருக்கு தனது தீய செயல் அழகாகக் காட்டப்பட்டு, அதை அவனும் அழகானதாகக் கருதினானோ அவனா (சொர்க்கவாசி)? தான் நாடியோரை அல்லாஹ் வழிகேட்டில் விடுகிறான். தான் நாடியோருக்கு நேர்வழி காட்டுகிறான். (முஹம்மதே!) அவர்களுக்காகக் கவலைப்பட்டு உமது உயிர் போய்விட வேண்டாம்.81 அவர்கள் செய்வதை அல்லாஹ் அறிந்தவன்.

திருக்குர்ஆன் 35 : 8

அவர்கள் நேர்வழிக்கு வரவில்லை என்பதற்காக உம்மையே அழித்துக் கொள்ளும் அளவுக்குக் கவலைப்படக் கூடாது என்று 35 : 8 வசனத்தில் தெளிவாகக் கூறுவதால் கஹ்பு அத்தியாயத்தின் மேற்கண்ட வசனத்தையும் இந்தக் கருத்திலேயே புரிந்து கொள்ள வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மையே மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு சமுதாயம் குறித்து கவலைப்படுவது வரவேற்கத்தக்கப் பண்பாடு தானே என்று சிலருக்குத் தோன்றலாம்.  இந்தப் பண்பாடு இருப்பதால் நபிகள் நாயகத்துக்குப் பெருமை தானே சேரும்.  இதை ஏன் இறைவன் கடிந்து கொள்ள வேண்டும்? என்ற சந்தேகம் எழலாம்.

மக்களுக்காகக் கவலைப்படுவது மனிதனின் உயர்ந்த பண்பு தான்.  இறைவன் ஏன் இதைத் தடுக்க வேண்டும்?

இக்கேள்விக்கான விடை இவ்வசனத்தில் கூறப்படாவிட்டாலும் நாம் எடுத்துக் காட்டிய 35 : 8 வசனத்தில் கூறப்பட்டுள்ளது.

ஒருவர் நேர்வழி பெறுவதும், பெறாமல் போவதும் இறைவனின் அதிகாரத்தின் பாற்பட்டதாகும்.  எவரையும் நேர்வழியில் சேர்க்கும் அதிகாரம் எந்த மனிதருக்கும் கிடையாது.  சிலர் நேர்வழி பெற மறுக்கிறார்கள் என்பதற்காக கவலைப்பட்டு தம்மையே அழித்துக் கொள்வது அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடுவதாக அமையும்.  இறைவனின் முடிவைக் குறை கூறுவதாக அமையும்.  அல்லாஹ்வுடைய முடிவில் அதிருப்தி கொள்வதாகவும் இது அமைந்து விடும்.  இந்தக் காரணத்துக்காகத் தான் இப்படி கவலைப்பட்டு தம்மைத் தாமே அழித்துக் கொள்ளக் கூடாது என்று அல்லாஹ் கூறுகிறான்.

இவ்வாறு நாம் சுயகற்பனையை கூறவில்லை.  35 : 8 வசனத்தில் இந்தக் கருத்து அடங்கியுள்ளதைப் பார்க்கலாம்.  "அவன் தான் நாடியவர்களுக்கு நேர்வழி காட்டுகிறான், நாடியவர்களை வழிகேட்டில் விட்டு விடுகிறான்'' எனக் கூறிவிட்டுத் தான் "கவலைப்பட்டு உம்மையே மாய்த்துக் கொள்ள வேண்டாம்' எனக் கூறுகிறான்.

உமக்குச் சம்பந்தமில்லாத ஒன்றுக்காக நீர் ஏன் வீணாகக் கவலைப்பட்டு அழிய வேண்டும் என்ற தோரணையில் தான் இந்த அறிவுரை கூறப்படுகிறது.

صحيح البخاري 

3884 - حَدَّثَنَا مَحْمُودٌ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ ابْنِ المُسَيِّبِ، عَنْ أَبِيهِ، أَنَّ أَبَا طَالِبٍ لَمَّا حَضَرَتْهُ الوَفَاةُ، دَخَلَ عَلَيْهِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعِنْدَهُ أَبُو جَهْلٍ، فَقَالَ: «أَيْ عَمِّ، قُلْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، كَلِمَةً أُحَاجُّ لَكَ بِهَا عِنْدَ اللَّهِ» فَقَالَ أَبُو جَهْلٍ وَعَبْدُ اللَّهِ بْنُ أَبِي أُمَيَّةَ: يَا أَبَا طَالِبٍ، تَرْغَبُ عَنْ مِلَّةِ عَبْدِ المُطَّلِبِ، فَلَمْ يَزَالاَ يُكَلِّمَانِهِ، حَتَّى قَالَ آخِرَ شَيْءٍ كَلَّمَهُمْ بِهِ: عَلَى مِلَّةِ عَبْدِ المُطَّلِبِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَأَسْتَغْفِرَنَّ لَكَ، مَا لَمْ أُنْهَ عَنْهُ» فَنَزَلَتْ: {مَا كَانَ لِلنَّبِيِّ وَالَّذِينَ آمَنُوا أَنْ يَسْتَغْفِرُوا لِلْمُشْرِكِينَ وَلَوْ كَانُوا أُولِي قُرْبَى مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمْ أَنَّهُمْ أَصْحَابُ الجَحِيمِ} [التوبة: 113]. وَنَزَلَتْ: {إِنَّكَ لاَ تَهْدِي مَنْ أَحْبَبْتَ} [القصص: 56]

3884 முஸய்யப் பின் ஹஸ்ன் பின் அபீ வஹ்ப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூதாலிப் அவர்களுக்கு மரண வேளை வந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரிடம் சென்றார்கள். அப்போது அபூ ஜஹ்ல் அவரருகே இருந்தான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், என் பெரிய தந்தையே! லா இலாஹ இல்லல்லாஹ்'- வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை' என்று சொல்லுங்கள். இந்தச் சொல்லை (நீங்கள் சொல்லிவிட்டால் அதை) வைத்து (மறுமையில் நரகத்திலிருந்து விடுதலை கேட்டு) உங்களுக்காக அல்லாஹ்விடம் நான் வாதாடுவேன் என்று சொன்னார்கள். அபூதாலிபே! அப்துல் முத்தலிபின் மார்க்கத்தையா புறக்கணிக்கப் போகிறீர்கள்? என்று அப்போது அபூஜஹ்லும், அப்துல்லாஹ் பின் அபீ உமய்யாவும், கேட்டனர். அவ்விருவரும் இவ்வாறே தொடர்ந்து அவரிடம் பேச இறுதியில் அவர், (என் இறப்பு என் தந்தை) அப்துல் முத்தlஇபின் மார்க்கத்தில் தான் (நிகழும்) என்று அவர்களிடம் சொன்னார். எனவே, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், எனக்குத் தடைவிதிக்கப்படும் வரை நான் உங்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவேன்; என்று சொன்னார்கள். அப்போது தான், இணைவைப்பவர்கள் நரகவாசிகள் தாம் என்பது தெளிவாகிவிட்ட பின்பும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருவதற்கு, அவர்கள் உறவினர்களாயிருந்தாலும் கூட இறைத்தூதருக்கும் இறை நம்பிக்கையாளர்களுக்கும் உரிமையில்லை என்னும் (9:113) திருக்குர்ஆன் வசனமும், (நபியே!) நீங்கள் விரும்பியவரை உங்களால் நேர்வழியில் செலுத்தி விட முடியாது என்னும் (28:56) திருக்குர்ஆன் வசனமும் அருளப்பட்டன.

நூல் புகாரி 3884

ஒருவர் நேர்வழி பெறவில்லை என்பதற்காக கவலைப்படுவதை அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடுவதாக அல்லாஹ் எடுத்துக் கொள்கிறான் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

அவர்களுக்கு நேர்வழி காட்டுவது உமது பொறுப்பு அல்ல.  எனினும் அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு நேர்வழி காட்டுகிறான் (அல்குர்ஆன் 2 : 272) என்ற வசனமும்  நீர் எவ்வளவு தான் ஆசைப்பட்டாலும் பெரும்பாலான மக்கள் நம்பிக்கை கொள்ளக் கூடியவர்களாக இல்லை (அல்குர்ஆன் 12 : 103) என்ற வசனமும் ஏன் கவலைப்படக் கூடாது என்பதை விளக்குகின்றன.

நபிகள் நாயகத்துக்கே இந்த அதிகாரம் இல்லை என்றால் நம்மவர்களின் நிலை என்ன என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

இத்தனை வருடமாக நான் சொல்லியும் கேட்க மறுக்கிறார்களே!  என் தந்தையை என்னால் திருத்த முடியவில்லையே என்றெல்லாம் மாய்ந்து போகும் உரிமை நமக்கு இல்லை.  எடுத்துச் சொல்லும் கடமை தவிர வேறு கடமை நமக்கில்லை என்பதை இவ்வசனத்திலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

இந்த இடத்தில் மற்றொரு விஷயத்தை நாம் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.

கவலைப்படும் படியான நிகழ்வுகள் ஏற்படும் போது நம்மையுமறியாமல் கவலை ஏற்படுவது இயல்பான ஒன்று தான்.  அது நமது அதிகாரத்தின் பாற்பட்டது அல்ல.  இத்தைகைய கவலை இங்கே தடை செய்யப்படவில்லை.  35 : 8 வசனத்திலும் இந்த அத்தியாயத்திலும் கவலைப்பட்டு கவலைப்பட்டு உயிரையே மாய்த்துக் கொள்ளும் படியான கவலைக்குத் தான் தடை விதிக்கப்பட்டுள்ளது.  வாசக அமைப்பிலிருந்தே அதை அறிந்து கொள்ளலாம்.

உயிரைப் போக்கிக் கொள்ளும் அளவுக்குக் கவலைப்பட வேண்டாம் எனக் கூறுவதிலிருந்தே சாதாரணமாக ஏற்படும் கவலைக்கு தடை இல்லை. அது மனித அதிகாரத்தில் இல்லை என்பதை விளங்கலாம்.

நாம் வேண்டிய உறவினரை இழந்து விடும் போது அழுவது அல்லாஹ்வின் தீர்ப்பை மறுப்பதாக ஆகாது.  அதே நேரத்தில் காலமெல்லாம் அதையே நினைத்து பிரலாபித்துக் கொண்டிருப்பது அல்லாஹ்வின் தீர்ப்பை எதிர்ப்பதாக ஆகும். இது போலத் தான் இந்தக் கவலையையும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பொதுவாகக் கவலைப்பட வேண்டாம் என்ற கருத்திலும் சில வசனங்கள் உள்ளன.  அவ்வசனங்களை ஆதாரமாகக் கொண்டு சிறிய அளவில் கூட இதற்காகக் கவலைப்படக் கூடாது என்று நினைக்கலாகாது.  அந்த வசனங்கள் இவை தாம்.

176. (இறை)மறுப்பை நோக்கி விரைந்து செல்வோர் குறித்து நீர் கவலைப்படாதீர்! அவர்கள் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்ய முடியாது. மறுமையில் அவர்களுக்கு எந்த நற்பேறும் இருக்கக் கூடாதென்று அல்லாஹ் நாடுகிறான். அவர்களுக்குக் கடும் வேதனை உண்டு.

திருக்குர்ஆன் 3 : 176

41. நம்பிக்கை கொண்டோம் என்று தம் வாய்களால் கூறி, உள்ளங்களால் நம்பிக்கை கொள்ளாமல் (இறை)மறுப்பை நோக்கி விரைந்து செல்வோர் குறித்தும், யூதர்களைக் குறித்தும் தூதரே கவலைப்படாதீர்! அவர்கள் பொய்களையே அதிகம் செவியுறுகின்றனர். உம்மிடம் வராத மற்றொரு சமுதாயத்திற்காக (உமது பேச்சை) செவியுறுகின்றனர். வார்த்தைகளை அவற்றுக்குரிய இடங்களை விட்டும் மாற்றிக் கூறுகின்றனர். "அது (சாதகமானது) உங்களுக்கு வழங்கப்பட்டால் அதை எடுத்துக் கொள்ளுங்கள்! அது கொடுக்கப்படாவிட்டால் அதைத் தவிர்த்து விடுங்கள்!'' என்று கூறுகின்றனர். அல்லாஹ் சோதிக்க484 நாடுபவரை அல்லாஹ்விடமிருந்து காப்பாற்ற சிறிதும் நீர் அதிகாரம் பெறமாட்டீர். அவர்களின் உள்ளங்களை அல்லாஹ் தூய்மையாக்க விரும்பவில்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவு இருக்கிறது. மறுமையில் கடும் வேதனை உண்டு.

திருக்குர்ஆன் 5 : 41

23. (நம்மை) மறுத்தோரின் மறுப்பு உம்மைக் கவலையில் ஆழ்த்த வேண்டாம். அவர்களின் மீளுதல் நம்மிடமே உள்ளது. அவர்கள் செய்ததை அவர்களுக்கு நாம் அறிவிப்போம். உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் அறிந்தவன்.

திருக்குர்ஆன் 31 : 23

இந்த வசனங்கள் யாவும் காஃபிர்களுக்காக அறவே கவலைப்படக் கூடாது என்று தானே கூறுகின்றன.  உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவுக்குக் கவலைப்பட வேண்டாம் எனக் கூறவில்லையே என்பது தான் அந்தச் சந்தேகம்.

கவலைப்படுதல் என்பது இரண்டு வகைகளில் ஏற்படும்.

நரகத்தில் கிடந்து வேதனைப்படப் போகிறார்களே என்று கழிவிரக்கம் கொண்டு மற்றவர்களுக்காக படுகின்ற கவலை ஒரு வகை.

நமக்கெதிராகத் திரண்டு விட்டார்களே, இவர்களால் நமக்கோ நம்மைச் சேர்ந்தவர்களுக்கோ ஏதும் தீங்கு நேருமோ என்று தமக்காகப் படும் கவலை மற்றொரு வகை.

ஒன்று பரிதாபத்தால் ஏற்படுவது.  மற்றொன்று பயத்தால் ஏற்படுவது. 

ஒன்று மற்றவருக்காகக் கவலைப்படுவது.  மற்றொன்று தமக்காகக் கவலைப்படுவது.

மேற்கண்ட வசனங்கள் யாவும் இரண்டாவது வகையான கவலையைக் குறிக்கின்றன.

அவர்கள் இறை நிராகரிப்பின் பால் விரைந்து செல்வது பற்றிக் கவலைப்படாதே எனக் கூறிவிட்டு அவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனது மார்க்கத்துக்கும் எந்தத் தீங்கும் செய்ய முடியாது என்று அல்லாஹ் கூறுகிறான்.  அவர்களால் ஏதும் தீங்கு நேருமோ என்று பயந்து கவலைப்படாதீர் என்ற கருத்திலேயே இவ்வசனங்கள் அமைந்துள்ளன.  கழிவிரக்கம் கொண்டு மற்றவர்களுக்காகக் கவலைப்படுவதைக் கூறவில்லை.

சங்பரிவாரக் கும்பலைப் பற்றி கவலைப்படாதே என்பதும், மனைவி இறந்ததற்காகக் கவலைப்படாதே என்பதும் ஒரே வகையானது அல்ல. 

இதைப் புரிந்து கொண்டால் ஒருவர் இஸ்லாத்தை ஏற்கவில்லை என்பதற்காக நம்மையே மாய்த்துக் கொள்ளும் அளவுக்குக் கவலைப்படக் கூடாது, அதே சமயம் அக்கறையின் காரணமாக சாதாரணமாகக் கவலை கொள்ள எந்தத் தடையும் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

அவர்களில் அழகிய நல்லறம் செய்பவர் யார் எனச் சோதிப்பதற்காக இந்தப் பூமியின் மேல் உள்ளவைகளை அதற்கு அலங்காரமாக நாம் ஆக்கியுள்ளோம்.  மேலும் அதன் மேல் உள்ளதை வறண்ட மண்ணாகவும் நாம் ஆக்கக் கூடியவர்களே!

(ஏழு மற்றும் எட்டாவது வசனங்கள்)

இவ்விரு வசனங்களிலும் இரண்டு செய்திகள் அடங்கியுள்ளன.

இறைவன் எத்தகைய ஆற்றல் மிக்கவன் என்பது ஒரு செய்தி!

மனிதர்களுக்கு இவ்வுலகில் இன்பங்களை வாரி வழங்கியிருப்பது ஏன் என்பது மற்றொரு செய்தியாகும்.

இவ்வசனத்தில் தனது வல்லமையைக் கூற வெகு தொலைவுக்கு மனிதனை இழுத்துச் செல்லாமல் அவன் எந்த மண்ணில் வாழ்கின்றானோ அந்த மண்ணையே இதற்குக் களமாக்கிக் காட்டுகின்றான்.

எவ்விதக் கவர்ச்சியும், அலங்காரமும் இல்லாமல் கட்டாந்தரையாகக் கிடந்த பூமியின் மேல் மழையை விழச் செய்து அவற்றில் மரம் செடி கொடிகளை முளைக்கச் செய்கிறான்.  இவ்வாறு முளைத்தவுடன் பூமிக்கு புதுப் பெண்ணின் கவர்ச்சி வந்து விடுகின்றது.  இதை நாம்  தான் செய்கின்றோம் என்று இங்கே சுட்டிக் காட்டுகின்றான்.

திருக்குர்ஆனின் வேறு இடங்களில் இன்னும் அழுத்தமாகத் தனது இந்த ஆற்றலை மனிதனுக்குச் சுட்டிக் காட்டியிருக்கின்றான்.

99. அவனே வானிலிருந்து507 தண்ணீரை இறக்கினான். அதன் மூலம் ஒவ்வொரு பொருளின் விளைச்சலையும் வெளிப்படுத்துகிறோம். அதிலிருந்து பசுமையான பயிர்களை வெளிப்படுத்துகிறோம். அடுக்கி வைக்கப்பட்ட தானியத்தை அப்பயிர்களில் வெளிப்படுத்துகிறோம். பேரீச்சை மரத்தின் பாளைகளில் தொங்கும் பழக்குலைகளையும், திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவமரம், மாதுளை ஆகியவற்றையும் (வெளிப்படுத்துகிறோம்.) அவ்விரண்டும் (தோற்றத்தில்) ஒன்றுபட்டதாகவும், (தன்மையில்) வேறுபட்டதாகவும் உள்ளன. அது பலன் கொடுக்கும் போது அதன் பலனையும், அது கனிவதையும் கவனியுங்கள்! நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

திருக்குர்ஆன் 6 : 99

141. படரவிடப்பட்ட, படரவிடப்படாத தோட்டங்களையும், பேரீச்சை மரங்களையும், மாறுபட்ட உணவான தானியங்களையும், (தோற்றத்தில்) ஒன்றுபட்டும் (தன்மையில்) வேறுபட்டும் உள்ள மாதுளை மற்றும் ஒலிவ மரங்களையும் அவனே படைத்தான். அவை பலன் தரும்போது அதன் பலனை உண்ணுங்கள்! அதை அறுவடை செய்யும் நாளில் அதற்குரிய (ஜகாத் எனும்) கடமையை வழங்கி விடுங்கள்! வீண் விரயம் செய்யாதீர்கள்! வீண் விரயம் செய்வோரை அவன் நேசிக்க மாட்டான்.

திருக்குர்ஆன் 6 : 141

4. பூமியில் அருகருகில் அமைந்த பல பகுதிகள் உள்ளன. திராட்சைத் தோட்டங்களும், பயிர்களும், கிளைகளுடையதும் கிளைகளே இல்லாததுமான பேரீச்சை மரங்களும் உள்ளன. ஒரே தண்ணீர் தான் அவற்றுக்குப் புகட்டப்படுகின்றது. (இவ்வாறு இருந்தும்) சுவையில் ஒன்றை விட மற்றொன்றைச் சிறந்ததாக்கியுள்ளோம். விளங்கும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

திருக்குர்ஆன் 13 : 4

11. அதன் மூலம் பயிர்களையும், ஒலிவ மரம், பேரீச்சை, திராட்சை மற்றும் அனைத்துக் கனிகளையும் உங்களுக்காக அவன் முளைக்கச் செய்கிறான். சிந்திக்கும் சமுதாயத்திற்கு இதில் தக்க சான்று இருக்கிறது.

திருக்குர்ஆன் 16 : 11

20. தூர் ஸினாயிலிருந்து வெளிப்படும் (ஆலிவ்) மரத்தையும் (படைத்தோம்.) அது எண்ணெயையும், உண்பவருக்கு குழம்பையும் உற்பத்தி செய்கிறது.

திருக்குர்ஆன் 23 : 20

7. பூமியில் மதிப்புமிக்க ஒவ்வொரு வகையிலும் எத்தனையோ (பயிர்களை) முளைக்கச் செய்துள்ளோம் என்பதை அவர்கள் காணவில்லையா?

திருக்குர்ஆன் 26 : 7

60. (நீங்கள் இணைகற்பித்தவை சிறந்தவையா? அல்லது) வானங்களையும்,507 பூமியையும் படைத்து வானத்திலிருந்து507 தண்ணீரை உங்களுக்காக இறக்கி வைத்தவனா? அதன் மூலம் செழிப்பான தோட்டங்களை முளைக்கச் செய்கிறோம். அதில் ஒரு மரத்தைக் கூட உங்களால் முளைக்கச் செய்ய இயலாது. அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? இல்லை. அவர்கள் (இறைவனுக்கு மற்றவர்களை) சமமாக்கும் கூட்டமாகவே உள்ளனர்.

திருக்குர்ஆன் 27 : 60

27. "வறண்ட பூமியை நோக்கி தண்ணீரை நாமே ஓட்டிச் செல்கிறோம்'' என்பதை அவர்கள் காணவில்லையா? அதன் மூலம் பயிர்களை வெளிப்படுத்துகிறோம். அதிலிருந்து அவர்களும், அவர்களது கால்நடைகளும் சாப்பிடுகின்றனர். அவர்கள் சிந்திக்க மாட்டார்களா?

திருக்குர்ஆன் 32 : 27

36. பூமி முளைக்கச் செய்வதிலிருந்தும், அவர்களிலிருந்தும், அவர்கள் அறியாதவற்றிலிருந்தும் ஜோடிகள்242 அனைத்தையும் உருவாக்கியவன் தூயவன்.10

திருக்குர்ஆன் 36 : 36

21. அல்லாஹ் வானத்திலிருந்து507 நீரை இறக்கி அதைப் பூமியில் ஊற்றுக்களாக ஓடச் செய்கிறான் என்பதை நீர் அறியவில்லையா? பின்னர் அதன் மூலம் மாறுபட்ட நிறங்களைக் கொண்ட பயிர்களை வெளிப்படுத்துகிறான். பின்னர் அது காய்ந்து, மஞ்சள் நிறமாக ஆவதைக் காண்கிறீர். பின்னர் அதைச் சருகுகளாக ஆக்குகிறான். அறிவுடையோருக்கு இதில் அறிவுரை உள்ளது.

திருக்குர்ஆன் 39 : 21

63. நீங்கள் பயிரிடுவதைச் சிந்தித்தீர்களா?

64. நீங்கள் அதை முளைக்கச் செய்கிறீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கிறோமா?

திருக்குர்ஆன் 56 : 63, 64

கடவுள் ஒருவன் இருக்கின்றான் என்பதற்கும், அவனது வல்லமைக்கும் மண்ணில் முளைக்கும் பயிர் பச்சைகள் மிகப் பெரும் சான்றாகவுள்ளதால் தான் இதை முக்கியத்துவத்துடன் அல்லாஹ் சுட்டிக் காட்டுகின்றான்.

இனிப்பான மாம்பழத்தை மா மரம் உற்பத்தி செய்கின்றது என்றால்

மாங்கொட்டையில் அந்த இனிப்பு இருக்கவில்லை.

 அது புதைக்கப்பட்ட மண்ணிலும் அந்த இனிப்பு இருக்கவில்லை. 

ஊற்றுகின்ற தண்ணீரிலோ, வீசுகின்ற காற்றிலோ வெளிச்சத்திலோ இனிப்பு இருந்ததில்லை.

ஆனாலும் மாம்பழங்கள் இனிக்கின்றன. இப்படிப் பல்வேறு சுவைகள் கொண்ட கனிகளை மனிதன் உண்ணும் போது அதைப் பற்றிச் சிந்தித்தால் "சூப்பர் பவர்'  உள்ள ஒருவன் ஆட்டிப் படைக்கின்றான் என்பதைச் சந்தேகமற அறிந்து கொள்வான்.

இலைகள், பூக்கள், காய்கள், கனிகளில் தான் எத்தனை வண்ணங்கள்!  அந்த வண்ணங்கள் எப்படி வந்தன? என்றெல்லாம் ஆராயும் ஒருவன் கடவுளை மறுக்கவே மாட்டான்.

அடிக்கடி பார்த்துப் பழகியதால் நாம் இதை உரிய விதத்தில் சிந்திப்பதில்லை.  மண்ணில் முளைத்தெழும் ஒவ்வொன்றிலும் கணக்கிட முடியாத அதிசயங்கள் புதைந்து கிடப்பதை நாம் சிந்திப்பதில்லை.  எப்போதுமே தூரத்தில் இருப்பது தான் நமக்கு அதிசயமாகத் தோன்றும்.  நம் பக்கத்தில் நிற்கும் அதிசயங்கள் அதிசயமாகத் தோன்றாது.

மனிதன் இதைச் சிந்திக்க மாட்டான் என்பதற்காகத் தான் இம்மண்ணின் மேல் உள்ளவற்றை மண்ணுக்கு அலங்காரமாக ஆக்கினோம் என்று அல்லாஹ் கூறுகின்றான்.

இதை மட்டும் கூறி விட்டு றிறுத்திக் கொண்டால் கூட இதெல்லாம் இயற்கை என்று மனிதன் கூறி விடுவான்.

நாளை வறண்ட பாலைவனமாகவும் நாம் ஆக்குவோம் என்று சேர்த்துக் குறிப்பிடுகின்றான்.

உரிய நேரத்தில் உரிய அளவில் மழை பெய்த பிறகு இயற்கையாக முளைத்தன என்று கூறும் மனிதனே!  உரிய நேரத்தில் மழை பெய்ததும் இயற்கையா?  உரிய அளவில் மழை பெய்ததும் இயற்கையா?  மேலப்பாளையத்தில் பெய்து விட்டு பாளையங்கோட்டையில் பெய்யாமல் இருந்ததும் இயற்கையா?

காற்றும் குளிர்ந்து, தரையும் குளிர்ந்து இதோ மழை வரப் போகின்றது என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது ராஜஸ்தான் பாலைவனத்தில் - அனலாய் கொதிக்கும் பூமியில் - மழையை விரட்டிச் சென்று பெய்விப்பவன் யார்?

இதற்கு இயற்கை என்று எவனும் காரணம் சொல்ல முடியாது அல்லவா? இதனால் தான் தனது வல்லமைக்கு பசுமையை மட்டும் சான்றாகக் கூறி நிறுத்திக் கொள்ளாமல் வறட்சியை ஏற்படுத்துவதும் நாம் தான் எனக் கூறி ஆப்பு வைக்கிறான்.

இந்த இடத்தில் ஏன் இத்தனை வருடங்களாக மழை பெய்யவில்லை என்ற கேள்விக்கு "இயற்கை' என்று விடை கூற முடியாது.  யாரோ ஒருவன் தான் இதற்குக் காரணமாக இருக்கின்றான் என்பது தான் இதற்கு விடையாக இருக்க முடியும்.

இறைவனை மனிதன் நம்ப வேண்டும், அதுவும் சிந்தித்து விளங்கி நம்ப வேண்டும் என்ற காரணத்தினால் தான் இந்த இரண்டு தன்மைகளையும் கூறுகின்றான்.

அவனது வல்லமையைக் காட்டுவது ஒருபுறமிருக்க உன்னைச் சோதித்துப் பார்ப்பதும் இதற்குக் காரணம் என்பதையும் சின்னஞ்சிறு சொற்றொடருக்குள் சேர்த்துக் கூறிவிடுகின்றான்.

அவர்களில் அழகிய நல்லறம் செய்பவர் யார் எனச் சோதிப்பதற்காக இந்தப் பூமியின் மேல் உள்ளவைகளை அதற்கு அலங்காரமாக நாம் ஆக்கியுள்ளோம்.  மேலும் அதன் மேல் உள்ளதை வறண்ட மண்ணாகவும் நாம் ஆக்கக் கூடியவர்களே!

(ஏழு மற்றும் எட்டாவது வசனங்கள்)

கடவுளை எல்லா மதத்தவர்களும் நம்புகின்றனர்.  ஆனால் மற்ற எந்தச் சமயத்தவர்களையும் விட முஸ்லிம்களின் கடவுள் நம்பிக்கை வலிமை மிக்கதாக இருப்பதை யாரும் மறுக்க முடியாது.

பக்திமான்களாக இருந்தவர்கள் கூட தங்கள் வாழ்க்கையில் துன்பங்களைச் சந்திக்கும் போது நாத்திகர்களாகி விடுவதை மற்ற மதத்தவர்களிடம் சர்வ சாதாரணமாகக் காண்கின்றோம்.

கடவுள் என இவர்கள் நம்புகின்ற கற்சிலைகளுக்கு முன்னால் நின்று கொண்டு அதைத் திட்டுகின்ற காட்சியையும், மண்ணை வாரி தூற்றுகின்ற காட்சியையும் பிற மதத்தவர்களிடம் சர்வ சாதாரணமாகக் காண முடிகின்றது.  "கடவுளே! உனக்கு கண் இருக்கிறதா?'' என்றெல்லாம் துன்பம் வரும் வேளையில் புலம்புகின்றவர்களையும் நாம் பார்க்கிறோம்.

கடவுளை நம்புகின்ற மற்ற மதத்தவர்களிடம் காணப்படும் இந்தக் கோளாறு முஸ்லிம்களிடம் காணப்படுவதில்லையே அது ஏன்?

மற்ற மதத்தினர் தவறான அடிப்படையின் மீது தங்கள் நம்பிக்கை எனும் மாளிகைகளை எழுப்பிக் கொண்டது தான் இதற்குக் காரணம்.

இவ்வுலகில் வாழ்கின்ற மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரியான செல்வச் செழிப்புடனும் வசதி வாய்ப்புகளுடனும் இருப்பதில்லை.  சிலர் அதிகமான வசதிகளையும், பதவிகளையும் பெற்றுள்ளனர்.  பலர் இத்தகைய வாய்ப்பைப் பெற்றிருக்கவில்லை.  இதற்குக் காரணம் என்ன என்பதை விளக்கும் போது மற்ற மதங்கள் செய்கின்ற தவறுகள் தான் அடிப்படைக் கோளாறு எனலாம்.

நீ கடவுள் மீது பக்தியுடன் இருந்தால் உனக்கும் எண்ணற்ற வசதிகள் கிடைக்கும் என்று ஏழைகளிடம் அம்மதங்கள் பேசுகின்றன.  சென்ற பிறவியில் நல்ல பக்திமானாக இல்லாததே நீ இப்போது ஏழையாக இருப்பதற்குக் காரணம் என்று அவனுக்கு அறிவுரை கூறுகின்றன.

இதுபோல் வசதி வாய்ப்புகளுடன் உள்ளவனை நோக்கி, கடவுள் உன் மீது அன்பாய் இருக்கிறார்.  நீ நல்லவனாக இருப்பதால் தான் இந்த நிலையை அடைந்திருக்கிறாய் என்றும் சென்ற பிறவியில் நீ நல்லவனாக இருந்ததால் தான் இந்த உயர்ந்த நிலை கிடைத்தது என்றும் பேசுகின்றன.

செழிப்பாய் இருந்தவனுக்கு ஒரு நட்டம் ஏற்பட்டால் "இவன் என்னவோ செய்திருப்பான்' என்று கூறுவதும் இதனால் தான் இப்படி ஏற்பட்டது என்று பேசுவதும் இந்த நம்பிக்கையின் வெளிப்பாடுதான்.

கீழ் நிலையில் இருந்த ஒருவனுக்கு நல்ல நிலை ஏற்பட்டால் அவன் கொடுத்து வைத்திருக்கிறான்.  இவன் புண்ணியம் செய்திருப்பான் என்று காரணம் கூறுவதற்கும் இந்த நம்பிக்கை தான் காரணம்.

இந்த நம்பிக்கை ஆழமாகப் பதிந்த பிறகு ஒரு கேடுகெட்டவன் உயர்ந்த நிலையை அடைவதைப் பார்க்கும் போதும் ஒரு நல்லவன் சொல்லெனாத் துன்பத்தை அடையும் போதும் கடவுள் நம்பிக்கையே அவன் உள்ளத்திலிருந்து விலகி விடுகின்றது.  மதத்தை வளர்ப்பதற்காக பொய்யான காரணங்களைக் கூறி நம்மை ஏமாற்றி விட்டனர் என்று அவனுக்குக் கோபம் ஏற்படுகின்றது.  இதனால் தான் கடவுள் (?) மீதே மண்ணை வாரித் தூற்ற முடிகின்றது.

ஆனால் இஸ்லாம் பொய்யான காரணங்களைக் கூறி மக்களை ஏமாற்றவில்லை.  பொய்யான வாக்குறுதிகள் எதனையும் அளிக்கவில்லை.    எது உண்மையோ அதை மட்டுமே கூறுகின்றது.

இவ்வுலகில் உள்ள ஏழைகள் பலரை நாம் பார்க்கிறோம்.  அவர்கள் அனைவரும் கெட்டவர்களாக இருப்பதில்லை.  அது போல் அனைவரும் நல்லவர்களாகவும் இருப்பதில்லை.  அவர்களின் ஏழ்மை நிலைக்கும் அவர்களது பாவ புண்ணியத்திற்கும் ஒரு தொடர்பும் இல்லை என்பது கண்கூடாகத் தெரிகின்ற உண்மை.

அது போல் செல்வந்தர்களிலும், நல்லவர்களும் கெட்டவர்களும் கலந்தே உள்ளனர்.  இவர்களின் செல்வ நிலைக்கும், பாவ புண்ணியத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லாமலிருப்பதைக் காண்கின்றோம்.

இந்த நிதர்சனமான உண்மையை அப்படியே கூறுகின்ற ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே!

இவ்வுலகில் நல்ல வசதி வாய்ப்புகளுடன் இருப்பதற்கும், நல்லவர்களாக இருப்பதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.  இந்த வசதிகளைப் பெற்ற பிறகும் நீங்கள் நல்லவர்களாக வாழ்கிறீர்களா என்று சோதித்துப் பார்க்கவே இவை வழங்கப்பட்டுள்ளன.  வசதிகள் வந்த பின் அதன் காரணமாக ஆணவம் பிடித்து அலைந்தால் நீ கெட்டவனாவாய்!  அதை மற்றவருக்கு வாரி வழங்கி நற் செயல்களில் உன்னை ஈடுபடுத்திக் கொண்டால் நல்லவனாவாய் என்று இஸ்லாம் கூறுகின்றது.

அது போல் நீ வசதி வாய்ப்புகளைப் பெறவில்லை என்பதால் நீ கெட்டவன் இல்லை.  இந்த வறுமையின் காரணமாக நீ தடம் மாறுகிறாயா அல்லது தடம் புரளாமல் உறுதியாக நிற்கிறாயா? என்று சோதித்துப் பார்க்கவே இந்த நிலை என்று இஸ்லாம் கூறுகின்றது.

செழிப்பு, வறட்சி இரண்டுமே இரண்டு வகையான பரீட்சைகள் என்று இஸ்லாம் கூறுகின்ற காரணத்தினால் தான் முஸ்லிம்கள் எத்தகைய துன்பத்தை அடைய நேர்ந்தாலும் அவர்கள் அதைப் பொறுத்துக் கொள்கின்றனர்.  கடவுளே உனக்குக் கண்ணில்லையா என்று கேட்பதில்லை.

இரண்டு நிலைகளில் எது ஏற்பட்டாலும் இரண்டும் சோதனை தானே தவிர நல்லவன் கெட்டவன் என்று வழங்கப்படும் தீர்ப்பு அல்ல.  இனிமேல் தான் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.  அங்கே நல்ல தீர்ப்பு பெறுவதற்காக வறட்சியிலும், செழிப்பிலும் நிலை குலையாமல் இருக்க வேண்டும் என்று உறுதியான அடிப்படையின் மீது முஸ்லிம்களின் நம்பிக்கை எழுப்பப்பட்டுள்ளது.

அல் கஹ்ஃப் அத்தியாயத்தின் ஏழாவது வசனமும் அந்த அடிப்படையைத் தான் சொல்லித் தருகின்றது.  இப்பூமியில் உள்ள செழிப்புகள் யாவும் நீங்கள் நல்லவர்களாக நடக்கிறீர்களா என்று சோதித்துப் பார்ப்பதற்குத் தான் என்று கூறி முஸ்லிம்களின் நம்பிக்கையைப் பலமான அஸ்திவாரத்தின் மீது எழுப்புகின்றது.  பின் வரும் வசனங்களும் இந்த வசனத்தின் விளக்கவுரைகளாகத் திகழ்கின்றன.

155. ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்களையும், உயிர்களையும், பலன்களையும் சேதப்படுத்தியும் நாம் உங்களைச் சோதிப்போம்.484 பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!

156. தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும்போது "நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்'' என்று அவர்கள் கூறுவார்கள்.

திருக்குர்ஆன் 2 : 155, 156

186. உங்கள் செல்வங்களிலும், உயிர்களிலும் சோதிக்கப்படுவீர்கள்.484 உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்தும்,27 இணை கற்பித்தோரிடமிருந்தும் ஏராளமான சங்கடம் தரும் சொற்களைச் செவியுறுவீர்கள். நீங்கள் சகித்துக் கொண்டு (இறைவனை) அஞ்சினால் அது உறுதிமிக்க காரியங்களில் ஒன்றாகும்.

திருக்குர்ஆன் 3 : 186

35. ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைப்பவரே. நன்மை, தீமையின் மூலம் பரீட்சித்துப் பார்ப்பதற்காக உங்களைச் சோதிப்போம்.484 நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!

திருக்குர்ஆன் 21 : 35

11. விளிம்பில் இருந்து கொண்டு அல்லாஹ்வை வணங்குபவனும் மனிதர்களில் இருக்கிறான். அவனுக்கு நன்மை ஏற்பட்டால் அதில் நிம்மதியடைகிறான். அவனுக்குச் சோதனை ஏற்பட்டால்484 தலைகீழாக மாறி விடுகிறான். இவ்வுலகிலும், மறுமையிலும் அவன் நட்டமடைந்து விட்டான். இதுவே தெளிவான நட்டம்.

திருக்குர்ஆன் 22 : 11

15. மனிதனை அவனது இறைவன் மரியாதையுடன் வாழச்செய்து இன்பத்தையும் வழங்கி சோதிக்கும்போது484 "என் இறைவன் என்னைக் கண்ணியமாக நடத்தினான்'' என்று கூறுகிறான்.

16. அவனது செல்வத்தை அளவுடன் வழங்கி சோதிக்கும்போது484 "என் இறைவன் என்னை அவமானப்படுத்தி விட்டான்'' எனக் கூறுகிறான்.

திருக்குர்ஆன் 89 : 15, 16

எனவே செல்வமும் வறுமையும் சோதனைக்குத் தான் என்பதை உணர்ந்து சோதனையில் தேறிட வல்ல இறைவன் அருள் புரியட்டும்.

"அந்தக் குகை' எனும் பெயர் பெற்ற இந்த அத்தியாயத்தின் எட்டு வசனங்களுக்கான விளக்கத்தை இது வரை நாம் பார்த்தோம்.

ஒன்பதாம் வசனம் முதல் 26வது வசனம் வரை கடந்த காலத்தில் நடந்த ஒரு வரலாறு மிகவும் சுருக்கமாகக் கூறப்படுகிறது.  இந்த வரலாறு ஒரு குகையுடன் தொடர்புடையதாக இருப்பதால் தான் இந்த அத்தியாயத்திற்கு "அந்தக் குகை' - அல் கஹ்ஃப் என்ற பெயர் வந்தது.

முதலில் அந்த வசனங்களின் தமிழாக்கத்தைத் தொடராகப் பார்த்து விட்டு அதன் விளக்கத்தைப் பின்னர் பார்ப்போம்.

9. "அந்தக் குகைக்கும், அந்த ஏட்டுக்கும் உரியோர் நமது சான்றுகளில் ஆச்சரியமானவர்கள்'' என்று நீர் நினைக்கிறீரா?271

10. சில இளைஞர்கள் குகையில் ஒதுங்கிய போது "எங்கள் இறைவா! உன் அருளை எங்களுக்கு வழங்குவாயாக! எங்கள் பணியை எங்களுக்குச் சீராக்குவாயாக!'' என்றனர்.

11. எனவே அக்குகையில் பல வருடங்கள் அவர்களின் காதுகளில் திரையை ஏற்படுத்தினோம்.462

12. அவர்கள் தங்கிய காலத்தை இரு சாராரில் நன்கறிந்தவர் யார் என்பதை அறிவிப்பதற்காகப் பின்னர் அவர்களை எழுப்பினோம்.

13. அவர்களது உண்மை வரலாறை நாம் உமக்குக் கூறுகிறோம். அவர்கள் இளைஞர்கள். அவர்கள் தமது இறைவனை நம்பினார்கள். அவர்களுக்கு நேர்வழியை அதிகமாக்கினோம்.

14. அவர்கள் எழுந்து "நமது இறைவன் வானங்களுக்கும்,507 பூமிக்கும் இறைவனாவான். அவனையன்றி வேறு கடவுள்களைப் பிரார்த்திக்க மாட்டோம். (அவ்வாறு செய்தால்) வரம்பு மீறிய வார்த்தையைக் கூறியவர்களாவோம்'' என்று அவர்கள் கூறியபோது அவர்களது உள்ளங்களை உறுதிப்படுத்தினோம்.

15. இதோ எங்கள் சமுதாயத்தினர் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டனர். அவற்றைப் பற்றி அவர்கள் தெளிவான சான்றைக் கொண்டு வர வேண்டாமா? அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவனை விட மிகப் பெரும் அநீதி இழைத்தவன் யார்?

16. அவர்களையும், அல்லாஹ்வையன்றி அவர்கள் வணங்குபவற்றையும் விட்டு விலகி அந்தக் குகையில் ஒதுங்குங்கள்! உங்கள் இறைவன் தனது அருளை உங்களுக்குத் தாராளமாக அளிப்பான். உங்கள் பணியை எளிதாக்குவான் (எனவும் கூறினர்).

17. சூரியன் உதிக்கும்போது அது அவர்களின் குகையை விட்டும் வலப் புறமாகச் சாய்வதையும், அது மறையும் போது இடப்புறமாக அவர்களைக் கடப்பதையும் காண்பீர்! அவர்கள் அதில் உள்ள விசாலமான பகுதியில் உள்ளனர். இது அல்லாஹ்வின் சான்றுகளில் ஒன்று. அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டினானோ அவரே நேர்வழி பெற்றவர். அவன் யாரை வழிகேட்டில் விட்டு விடுகிறானோ அவருக்கு நேர்வழி காட்டும் பொறுப்பாளரைக் காண மாட்டீர்.

18. அவர்கள் விழித்துக் கொண்டிருப்பதாக நீர் நினைப்பீர்! (ஆனால்) அவர்கள் உறங்கிக் கொண்டுள்ளனர்.462 அவர்களை வலப் புறமும் இடப்புறமுமாகப் புரட்டுகிறோம். அவர்களின் நாய் தனது முன் கால்களை விரித்து வாசலில் உள்ளது. அவர்களை நீர் எட்டிப் பார்த்திருந்தால் அவர்களை விட்டு வெருண்டு ஓடியிருப்பீர்! அவர்களால் அதிகம் அச்சமடைந்திருப்பீர்!

19. அவர்கள் தங்களிடையே விசாரித்துக் கொள்வதற்காக இவ்வாறு அவர்களை உயிர்ப்பித்தோம். "எவ்வளவு (நேரம்) தங்கியிருப்பீர்கள்'' என்று அவர்களில் ஒருவர் கேட்டார். "ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறு பகுதி தங்கினோம்'' என்று (மற்றவர்கள்) கூறினர். "நீங்கள் தங்கியதை உங்கள் இறைவன் நன்கு அறிந்தவன். உங்களில் ஒருவரை இந்த வெள்ளிக் காசுடன் நகரத்துக்கு அனுப்புங்கள்! தூய்மையான உணவு வைத்திருப்பவர் யார் என்பதைக் கவனித்து அதிலிருந்து அவர் உணவை உங்களுக்காக வாங்கி வரட்டும். அவர் எச்சரிக்கையாக இருக்கட்டும்! உங்களைப் பற்றி அவர் யாருக்கும் சொல்ல வேண்டாம்'' என்றும் கூறினர்.413

20. அவர்கள் உங்களைக் கண்டு கொண்டால் உங்களைக் கல்லால் எறிந்து கொல்வார்கள்! அல்லது அவர்களின் மார்க்கத்தில் உங்களை மீண்டும் சேர்த்து விடுவார்கள். அப்போது ஒருக்காலும் வெற்றி பெற மாட்டீர்கள்! (என்றும் கூறினர்.)

21. அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்பதையும், யுகமுடிவு நேரம்1 சந்தேகம் இல்லாதது என்பதையும் அறிந்து கொள்வதற்காக (குகைவாசிகளைப் பற்றி) அவர்களுக்கு இவ்வாறே வெளிப்படுத்தினோம். அப்போது அவர்கள் தமக்கிடையே முரண்பட்டனர். "அவர்கள் மீது ஒரு கட்டடத்தை எழுப்புங்கள்! அவர்களைப் பற்றி அவர்களது இறைவனே அறிவான்'' என்றனர். தமது காரியத்தில் யாருடைய கை ஓங்கியதோ அவர்கள் "இவர்கள் மீது ஒரு வழிபாட்டுத் தலத்தை ஏற்படுத்துவோம்''397 என்றனர்.

22. "(அவர்கள்) மூவர்; நான்காவது அவர்களின் நாய்'' என்று (சிலர்) கூறுகின்றனர். "ஐவர்; ஆறாவது அவர்களின் நாய்'' என்று மறைவானதைப் பற்றி யூகத்தினடிப்படையில் (வேறு சிலர்) கூறுகின்றனர். "எழுவர்; எட்டாவது அவர்களின் நாய்'' என்று (சிலர்) கூறுகின்றனர். "அவர்களின் எண்ணிக்கையைப் பற்றி என் இறைவனே நன்கு அறிந்தவன். சிலரைத் தவிர அவர்களை யாரும் அறிய மாட்டார்கள்''496 என்று (முஹம்மதே!) கூறுவீராக! அவர்கள் குறித்து தெரிந்ததைத் தவிர (வேறு எதிலும்) தர்க்கம் செய்யாதீர். அவர்களைக் குறித்து இவர்களில் ஒருவரிடமும் விளக்கம் கேட்காதீர்!

23, 24. அல்லாஹ் நாடினால் (என்பதைச் சேர்த்தே) தவிர, நாளை நான் இதைச் செய்பவன் என்று எதைப் பற்றியும் கூறாதீர்! நீர் மறந்து விடும்போது உமது இறைவனை நினைப்பீராக! "எனது இறைவன் இதை விட சமீபத்தில் வழிகாட்டக் கூடும்'' என்று கூறுவீராக!26

25. அவர்கள் தமது குகையில் முன்னூறு ஆண்டுகள் தங்கினார்கள் (என்றும்) ஒன்பது ஆண்டுகளை அதிகமாக்கிக் கொண்டனர் (என்றும் கூறுகின்றனர்).

26. "அவர்கள் தங்கிய(காலத்)தைப் பற்றி அல்லாஹ்வே நன்கு அறிந்தவன். வானங்களிலும்507 பூமியிலும் மறைவானது அவனுக்கே உரியது. அவன் நன்றாகப் பார்ப்பவன்!488 நன்றாகச் செவியுறுபவன்.488 அவனன்றி அவர்களுக்கு எந்தப் பொறுப்பாளரும் இல்லை. அவன் தனது அதிகாரத்தில் யாரையும் கூட்டாக்கிக் கொள்ள மாட்டான்'' என்று கூறுவீராக!

குகைவாசிகள் குறித்து குர்ஆன் கூறும் வரலாறு இதுதான். திருக்குர்ஆனில் எத்தனையோ வசனங்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கம் அளித்திருப்பதை நாம் அறிந்திருக்கிறோம்.  ஆனால் ஆச்சரியமான உண்மை என்னவென்றால் குகைவாசிகளின் வரலாறு குறித்து இவ்வசனங்களில் கூறப்பட்டதைத் தவிர நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு வார்த்தையும் கூறவில்லை.  இவ்வசனங்களில் கூறப்பட்டதை விட மேலதிகமாக யார் எதைக் கூறினாலும் அவை வெறும் கற்பனையே தவிர வேறில்லை.  மேற்கண்ட வசனங்களுக்கிடையே இது குறித்து அல்லாஹ்வே நன்கறிந்தவன் என்று கூறப்படுவதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மேலதிகமாக எந்த விளக்கமும் கூறாமல் இருந்தது ஆச்சரியப்படக்கூடிய விஷயம் அன்று.

எனவே இவ்வசனங்களில் கூறப்பட்டவைகளை மட்டும் அடிப்படையாக வைத்துத் தான் அவர்களின் வரலாறை நாம் அறிந்து கொள்ளும் நிலையில் இருக்கிறோம். 

ஆனால் கவலைப்பட வேண்டிய அம்சம் என்னவென்றால் எது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூட எதையும் மேலதிகமாகக் கூறவில்லையோ அது பற்றி விரிவுரை என்ற பெயரில் கட்டுக்கதைகளைப் புனைந்து எழுதியுள்ளனர்.

இவ்வாசகங்களிலிருந்து நாம் அறிந்து கொள்ளும் வரலாறு என்ன?  விரிவுரை என்ற பெயரில் இட்டுக்கட்டப்பட்டவை யாவை? என்பதை இனி காண்போம்.

குகைவாசிகளின் வரலாற்றைக் கூறும் ஒன்பது முதல் இருபத்தாறு வரையுள்ள வசனங்களின் தமிழாக்கத்தை இதுவரை நாம் கண்டோம்.  இனி ஒவ்வொரு வசனத்திற்குரிய விளக்கத்தை விரிவாகப் பார்ப்போம்.

குகை மற்றும் ரக்கீம் உடையவர்கள் நமது அத்தாட்சிகளில் ஆச்சரியமானவர்கள் என்று நீர் கருதுகின்றீரா?

(ஒன்பதாம் வசனம்)

என்று இவ்வரலாற்றை இறைவன் கூறத் துவங்குகின்றான்.

எந்த மனிதனும் வருடக் கணக்கில் உறங்கிட முடியாது.  பல நூறு வருடங்கள் உறங்கி விட்டு மீண்டும் விழித்தெழ முடியாது என்பதை மனிதன் சந்தேகமற அறிந்திருக்கிறான்.  பத்து நாட்கள் ஒருவர் உறக்கத்திலேயே இருக்கிறார் என்று கூறப்பட்டால் கூட அதை மனிதன் நம்ப மாட்டான்.  பல நூறு நாட்கள் அல்ல.  பலநூறு வருடங்கள் சில பேர் தூக்கத்தில் கழித்து விட்டு ஏதும் அறியாதவர்கள் போல் விழித்தெழுந்தார்கள் என்று கூறினால் எந்த மனிதனாலும் அதை நம்ப முடியாது.

இத்தகைய ஒரு நிகழ்ச்சி நிச்சயம் நடந்திருக்க முடியாது என்றே மனிதன் நினைப்பான்.  எனவே தான் இந்த அற்புத வரலாற்றைக் கூறுவதற்கு முன்னால் மனிதர்கள் அதை நம்புவதற்குரிய காரணங்களை இங்கே முதலில் குறிப்பிடுகிறான்.

மனிதர்களே! இதை உங்களது நிலையிலிருந்து நோக்காதீர்கள்.  இதைக் குகைவாசிகளின் சாதனை எனவும் கருதாதீர்கள்.  இதை நிகழ்த்திக் காட்டியவன் யார் என்ற கோணத்தில் இதைச் செவிமடுங்கள்.

இது உங்களையெல்லாம் படைத்து பரிபாலித்து வரும் சர்வ சக்தனாகிய நான் நிகழ்த்திக் காட்டிய அற்புதமாகும்.  நான் இவ்வுலகில் எண்ணிலடங்கா அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியுள்ளேன்.  அந்த அற்புதங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது இது மிகவும் சாதாரணமான நிகழ்ச்சி தான் என்று விளக்குவதற்காகவே "நமது அத்தாட்சிகளில் இது அதிசயமானது என நினைக்கிறீரா?'' என்று கேட்கிறான்.

வானங்களையும், பூமியையும் படைத்திருப்பது, எண்ணற்ற கோள்களைப் படைத்து அந்தரத்தில் மிதக்க விட்டிருப்பது, கோடானு கோடி உயிரினங்களைப் படைத்து அவற்றுக்குள் அதிசயங்களை நிகழ்த்தி வருவது, இவை யாவும் திட்டமிட்டபடி சீராக இயங்குவது போன்ற பேராச்சரியங்களைப் பார்க்கும் மனிதன் - இந்த அதிசயங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் குகைவாசிகள் பற்றிய நிகழ்ச்சியை எவ்வாறு மறுக்க முடியும்?

இறைவனால் எதுவும் இயலும் என்பதை நம்புகின்ற மக்களுக்கு இதை நம்புவதற்கு எந்தத் தயக்கமும் இருக்காது.  இருக்கக் கூடாது என்பதற்காகத் தான் துவக்கத்திலேயே தனது எண்ணற்ற அற்புதங்களை நினைவுபடுத்திக் காட்டுகிறான்.

இறைவனை நம்புகின்ற மக்களைப் பொறுத்த வரை அவர்கள் இந்நிகழ்ச்சியை நம்பிட இவ்வசனத்தில் இறைவன் எழுப்பியுள்ள கேள்வியே போதுமானதாகும்.

ஆனால் இறைவனையும், இறைவனது ஆற்றலையும் நம்பாதவர்கள் இதை எப்படி நம்புவார்கள்?  இது போன்ற அற்புதங்கள் உங்கள் மார்க்கத்தில் இருப்பதை விட அதிகமாகவும், பிரம்மாண்டமாகவும் ஏனைய மதங்களில் இருக்கின்றனவே! என்றெல்லாம் கேள்வி கேட்பவர்கள் இதை நம்ப வேண்டுமானால் இதற்கான தடயங்களைக் காட்ட வேண்டும். அப்போது தான் அவர்கள் நம்பிக்கை கொள்வார்கள். நம்பிக்கை கொள்ளாவிட்டாலும் ஆட்சேபனை செய்யாமலாவது இருப்பார்கள்.

இவர்களது வாதத்தையும் திருக்குர்ஆன் கவனத்தில் கொள்கிறது.  திருக்குர்ஆனில் கூறப்படும் அற்புதமான நிகழ்ச்சிகளுக்குரிய தடயங்கள் இன்றளவும் கிடைத்துக் கொண்டிருப்பது தான் இஸ்லாத்தின் தனிச் சிறப்பாகும்.

நூஹ் நபியவர்கள் காலத்தில் மாபெரும் வெள்ளப் பிரளயம் ஏற்பட்டது.  நூஹ் நபியவர்களும் அவர்களை ஏற்றவர்களும் கப்பல் தயாரித்து அதில் ஏறிக் கொள்ள, மற்றவர்கள் அடியோடு அழிக்கப்பட்டார்கள் என்ற அற்புத வரலாற்றை திருக்குர்ஆன் கூறுகிறது.  அப்போது ஏற்பட்ட வெள்ளப் பிரளயத்தினால் மலை உயரத்துக்கு தண்ணீர் உயர்ந்தது எனவும் திருக்குர்ஆன் கூறுகிறது.  மலை உயரத்துக்கு மேல் தண்ணீர் மட்டம் உயர்வதை யாராலும் நம்ப முடியாது.

இந்த அற்புத நிகழ்ச்சியை நிகழ்த்திய இறைவன், "வெள்ளம் வடியத் துவங்கிய போது நூஹ் நபியின் கப்பல் ஜூதி மலை மீது அமர்ந்தது" (அல்குர்ஆன் 11 : 44) என்று கூறுகிறான்.

மலையின் மீது அமர்ந்த கப்பல் பனிப்பொழிவுகளால் மறைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தது.  பின்னர் இம்மலை மீது உள்ள கப்பலை மனிதர்கள் கண்டு பிடித்தனர்.  இவ்வளவு உயரமான மலை மீது கப்பலைக் கொண்டு போய் யாரும் வைத்திருக்க முடியாது.  மலை மட்டத்திற்கு தண்ணீர் இருந்தால் மட்டுமே கப்பல் மலை உச்சிக்கு வர முடியும் என்ற முடிவுக்கு வந்து அந்த அதிசய நிகழ்ச்சியை உண்மைப்படுத்தினார்கள்.

இதே போல் குகை வாசிகள் குறித்த நிகழ்ச்சியிலும் இறை நம்பிக்கையற்றவர்கள் சந்தேகம் கொள்வார்கள் என்பதை நன்றாக அறிந்து வைத்துள்ள இறைவன் அந்த நிகழ்ச்சிக்கும் அற்புதமான தடயத்தை விட்டு வைத்துள்ளான்.

அந்தத் தடயத்தைக் காணும் உலகம் அதிசயித்து பிரமிக்கிறது.

அந்தத் தடயம் குறித்தும் இதே வசனத்திலேயே வல்ல இறைவன் குறிப்பிடுகிறான்.

அந்தத் தடயம் எது என்பதை இப்போது பார்ப்போம்.

அந்த நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்டவர்கள் ஒரு குகையில் தூங்கிய காரணத்தால் குகை வாசிகள் என்று குறிப்பிடப்படுகின்றனர்.  ஆனால் குகைவாசிகள் என்பதுடன் "ரகீம்'' வாசிகள் - ரகீம் உடையவர்கள் என்றும் இறைவன் குறிப்பிடுகின்றான்.

ரகீம் என்றால் ஏடு, எழுதப்பட்டது என்று பொருள்.  "அர் ரகீம்'' என்றால் அந்த ஏடு என்று பொருள்.

குகையில் தங்கியவர்களைப் பற்றி கூறுவதென்றால் குகைவாசிகள் என்று மட்டும் கூறினால் போதுமானது.  "அந்த ஏட்டுக்குரியவர்கள்'' என்று கூறுவது ஏன்?

ஏதோ ஓர் ஏட்டை அவர்கள் வைத்திருந்தார்கள் என்பதற்காக மட்டும் இவ்வாறு நிச்சயமாகக் கூறப்பட்டிருக்காது.  "அந்த ஏடு' என்று குறிப்பிட்டுச் சொல்வதென்றால் அது ஒரு முக்கியமான ஏடாக இருக்க வேண்டும்.

அந்த ஏடு ஒரு காலத்தில் கண்டெடுக்கப்பட்டு மக்களுக்கு அதில் உள்ள உண்மைகள் தெரிய வேண்டும் என்பதற்காகவே "அந்த ஏட்டுக்குரியவர்கள்'' என்று அல்லாஹ் கூறியிருக்க முடியும்.  அந்த ஏடு யாருக்குமே கிடைக்காது என்றால் "அந்த ஏடு'' என்று முக்கியத்துவப்படுத்தி இறைவன் கூறியிருக்க முடியாது.

அந்த ஏடு தான் இந்நிகழ்ச்சிக்குரிய முக்கியமான தடயம் என்று நாம் கூறுகிறோம்.

சாவுக்கடல் சாசனச் சுருள்கள் மேற்கண்ட தலைப்பில் 1998ம் ஆண்டு ஒரு மாதத்தில் பல தடவை பி.பி.சி. யில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.  அதில் சொல்லப்பட்ட செய்திகள் கேட்போர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவதாக இருந்தது.  இந்த நிகழ்ச்சியின் முதல் ஒளிபரப்பு 1993 ஆம் ஆண்டிலேயே காட்டப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.  அதன் விபரங்கள் :

1947-ஆம் ஆண்டு ஒரு நாள் ஆடு மேய்க்கும் ஓர் அரபுச் சிறுவன், காணாமல் போன தனது ஆட்டுக் குட்டி ஒன்றைத் தேடி சாவுக்கடலை ஒட்டிய ஜோர்டான் நாட்டு மலைப்பகுதிகளில் தேடி அலைந்தான்.  அந்த மலைப்பகுதி கும்ரான் மலைப்பகுதி என்று அழைக்கப்படுகிறது.

ஆட்டுக்குட்டியைத் தேடிய சிறுவன் அங்கிருந்த குகைக்குள் பார்த்த பொழுது, மண் சாடிகளில் சுருட்டி நிரப்பி வைக்கப்பட்ட தோல் ஆவணங்களைக் கண்டிருக்கின்றான்.  அவைகளில் சிலவற்றை எடுத்து வந்து செருப்புத் தொழிலாளியான தன் தந்தையிடம் கொடுக்க, மறுநாள் தந்தையும் மகனும் சேர்ந்து குகைக்குள் இருந்த அனைத்து சுருள்களையும் வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்தார்கள்.

அந்தப் பழைய தோல்களை தமது செருப்புத் தொழிலுக்குப் பயன்படுத்த எண்ணிய அந்தச் சிறுவனின் தந்தை தோல்களில் ஹிப்ரு மொழியில் எழுதப்பட்டிருந்த வார்த்தைகளின் பொருள் புரியாமல், அதை அப்பொழுது ஜோர்டான் மன்னர் ஆட்சியிலிருந்த கிழக்கு ஜெருசலத்தைச் சேர்ந்த ஒரு பழைய புத்தகக் கடைக்காரரிடம் காண்பித்திருக்கிறார்.

ஓரளவு ஹிப்ரு மொழியறிந்த அந்தக் கடைக்காரர் அந்தச் சுருள்கள் பழங்காலச் செய்திகளைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று கருதி, ஒரு சில தீனார்களுக்கு அத்தனை சுருள்களையும் அந்த செருப்புத் தொழிலாளியிடமிருந்து விலைக்கு வாங்கிக் கொண்டார்.  கிறித்தவரான அந்தப் புத்தகக் கடைக்காரர் அந்தச் சுருள்களை அந்நகரில் இருந்த கிறித்தவ ஆலயத்தில் ஒப்படைத்து விட்டார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் சுருள்கள் கண்டெடுக்கப்பட்ட விஷயம் வெளிப்பட்டது.  அதில் உள்ள செய்திகளைத் தெரிந்து கொள்வதற்கு யூதர்களும், முஸ்லிம்களும் ஆர்வம் காட்டினர்.  அப்போது ஜோர்டானை ஆட்சி செய்த மன்னர் ஹுசைன், அந்த சாசனச் சுருள்கள் முஸ்லிம், யூத, கிறித்தவர்கள் அடங்கிய ஒரு குழுவிடம் பொதுவாக ஒப்படைக்கப்பட்டு அவை ஆராயப்பட வேண்டும் என்று விண்ணப்பித்தார்.

ஆனால் கிறித்தவப் பாதிரியார்கள், அது தனியார் சொத்து என்று வாதிட்டு அதைப் பொதுவில் வைக்க மறுத்து விட்டனர். 

கிறித்தவர்களில் பல அறிஞர்களுக்கும் கூட அவைகளைப் படிப்பதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை.  இடைப்பட்ட ஐந்தாண்டு காலங்களில் ஜெருசலத்தில் இருந்த பாதிரிமார்கள் சில குழுக்களை ஏற்படுத்தி கும்ரான் மலைப்பகுதிகளில் இருந்த பொதுங்குகளில் தேடியலைந்து அங்கிருந்த சாசனச் சுருள்கள் அனைத்தையும் தங்கள் கைவசம் கொண்டு வந்து விட்டனர்.  1952ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அனைத்து சுருள்களும் கிறித்தவப் பாதிரிமார்கள் கையில் போய் சேர்ந்து விட்டன.  பதினைந்தாயிரம் மெனுஸ்கிரிப்ட் இவ்வகையில் இருப்பதாக தற்பொழுது கணக்கிட்டுள்ளனர்.

கடந்த ஐம்பதாண்டுகளுக்கு மேல் அந்த சாசனச் சுருள்களில் அடங்கிய செய்திகளை, ஒரு குறிப்பிட்ட கிறித்தவப் பாதிரிகள் அடங்கிய குழு இருட்டடிப்பு செய்து விட்டது. பல கிறித்தவ அறிஞர்களும் ஆராய்ச்சியாளர்களும் அதைப் படிப்பதற்கு ஆர்வம் கொண்டு கேட்ட போதெல்லாம், அவர்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது.

சாசனச் சுருள்களைக் கைவசம் கொண்ட குழுவில் ஒருவர் இறக்க நேரிட்டால் அவருக்குப் பதில் அக்குழுவில் உள்ள மற்றவர்களால் வேறொரு பாதிரியார் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவருக்கு மட்டுமே அதைப் படிப்பதற்கு உரிமை வழங்கப்பட்டு வந்தது.  இவ்விதமாகவே இவ்வளவு காலமும் அந்த சாசனச் சுருள்களின் செய்திகள் ரகசியமாக வைக்கப்பட்டு வந்தது.  இந்த இரகசியக் காப்பில் போப்பாண்டவரின் வாட்டிகன் சபை முன்னணியில் இருந்தது.

தோலில் பதிந்த அந்தப் பழங்கால சாசனம் அழிந்து விடும் நிலையைக் கண்ட அதன் ரகசியக் காப்பாளர்கள் அச்சாசனங்களை மைக்ரோபிலிம் எடுத்தார்கள்.  அதன் ஒரு செட் போட்டோ காப்பிகள் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருக்கும் ஒரு நூலகத்துக்கு ரகசிய பாதுகாப்புக்காக அனுப்பி வைக்கப் பட்டது.

1990-ம் ஆண்டு அந்த நூலகத்துக்குத் தலைவராக ஐஸ்மேன் என்ற அறிஞர் நியமிக்கப்\பட்டார்.  அவர் முன்பே அந்த சாசனச் சுருள்களைப் படிப்பதற்கு ஆர்வம் காட்டி, அதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டவர்.  இப்போது தனது அதிகாரத்தில் உள்ள நூலகத்தில் இருந்து சாசனச் சுருள்களின் நுண்ணிய போட்டோக்களை பெரிய அளவில் போட்டோ எடுக்கச் செய்து அவைகளைப் படித்தார்.  அவற்றைப் படித்தபோது தமக்கு வியப்பு ஏற்பட்டதாக வாக்குமூலம் அளிக்கின்றார்.  இத்தனை காலமும் கிறித்தவ சபை அந்த சாசனச் சுருள்களை மற்றவர்களுக்குக் காட்டாமல் இருந்ததன் உள்நோக்கம் என்ன என்பதையும் புரிந்து கொண்டதாகக் கூறுகின்றார்.

மைக்கேல் வைஸ் என்னும் சிகாகோ பல்கலைக் கழக ஹிப்ரு மொழிப் பேராசிரியர் ஒருவரின் உதவியைக் கொண்டு அந்த சாசனச் சுருள்களில் முக்கியமானது என்று அவர் கருதிய 100 மெனுஸ்கிரிப்ட்-களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிடுகின்றார்.  அந்தப் புத்தக வெளியீடு கிறித்தவ உலகத்தை உலுக்கியது என்றும் குறிப்பாக கிறித்தவ மத ஆலயங்கள் பேரதிர்ச்சியில் உறைந்து போயின என்றும் அந்த டாக்குமென்டரியின் செய்தியாளர் கூறுகின்றார்.

மேற்கத்திய மக்களின் மத நம்பிக்கையைத் தகர்ப்பதாக அந்தப் புத்தக வெளியீடு இருந்தது என்றும் ஆகவே அந்த இரு அறிஞர்களும் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்ற அச்சம் இருந்தது என்றும் அதன் செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.  அப்படி எது நடந்தாலும் அதைத் தாங்கள் எதிர் கொள்ளத் தயாராக இருப்பதாகவும் இதற்கு அஞ்சி ஒரு மிகப் பெரும் பேருண்மையை உலகத்திலிருந்து தாங்கள் மறைக்க விரும்பவில்லை என்றும் அவ்விரு அறிஞர்களும் வெளிப்படையாகக் கூறுவதையும் அந்தத் தொலைக்காட்சி டாக்குமெண்டரி பதிவு செய்து காட்டுகின்றது.

கிறித்தவப் பாதிரியார்கள் இவ்வளவு காலமும் "சாவுக்கடல் சாசனச் சுருள்களை'' ரகசியமாக வைத்திருந்ததன் காரணத்தை அந்த இரு அறிஞர்களும் விளக்குகின்றார்கள்.

இந்த சாசனங்கள் கும்ரான் மலைப்பகுதிகளில் அக்கால ரோமர்களின் ஆட்சியை எதிர்த்து ரகசியமாகக் குடியேறியவர்களால் எழுதப் பட்டிருக்கின்றது.  அவர்கள் "எஸ்ஸீன்ஸ்'' என்ற பெயரால் அழைக்கப் படுகின்றனர்.  அவர்கள் இல்லற வாழ்வைத் துறந்தவர்கள்.  தமது பணியின் கடுமை கருதி அவர்கள் துறவறம் மேற்கொண்டவர்கள்.  ஏசு பிறப்பதற்கு 300 ஆண்டுகளுக்கு முன்பே யூதர்கள் மத்தியில் இந்த இறைப் பணியாளர்கள் இருந்தார்கள்.  அவர்களின் தலைவர்கள் பலர் "மெஸய்யா'' (மஸீஹ்) என்று அழைக்கப்படுகின்றார்கள்.  எனவே மெஸய்யா என்பது ஏசுவுக்கு மட்டும் உள்ள பிரத்தியேகப் பெயர் அல்ல.  ஒரு தலைவர் ரோமர்களால் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டால் மற்றொருவர் அந்தப் பொறுப்புக்கு வருகிறார்.  அதைத் தான் "மஸீஹ் - உயிர்த்தெழுந்தார்' (தங்ள்ன்ழ்ழ்ங்ஸ்ரீற்ங்க்) என்று அவர்கள் கூறி வந்தார்கள்.  மஸீஹை சிலுவை மூலம் கொலை செய்வது யூதர்கள் காலத்தில் இருந்த வழக்கம்.  இப்படி பலர் ரோமர்களால் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.  உதாரணமாக ஜேம்ஸ் என்ற நல்ல தலைவர் இருந்தார்.  அவரும் "மெஸய்யா'' என்றே சாசனத்தில் அழைக்கப்படுகிறார்.  அவரை சிலுவையில் அறைந்தே ரோமர்கள் கொலை செய்கின்றார்கள்.

அந்த "எஸ்ஸீன்ஸ்'களில் இருந்து வந்தவர் தான் ஏசு.  ஆகவே தான் அவரும் "மெஸய்யா' என்று குறிப்பிடப் படுகின்றார். ஏசு ஒன்றும் சாந்த சொரூபி அல்ல.  ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்ட வேண்டும் என்பதெல்லாம் அவர் கொள்கை அல்ல.  இப்போது ஏசுவைப் பற்றி சொல்லப்படுவதற்கு சாசனச் சுருள்களில் எந்த ஆதாரமும் இல்லை.  ஏசு ரோமர்களை எதிர்க்க ரகசியமாக ஒரு படையைத் தயாரித்துக் கொண்டிருந்தார் என்பதற்கே ஆதாரங்கள் இருக்கின்றன.

கிறித்தவ மத ஆலயங்களில் இப்போது ஏசுவின் பெயரால் செய்யப்படும் மதச் சடங்குகளும், வழிபாடுகளும் ஆரம்ப கிறித்தவர்களிடையே நடைபெறவில்லை என்பதையே சாசனச் சுருள்கள் நிரூபிக்கின்றன. இந்தச் சடங்குகளுக்கும் ஏசுவின் பிரச்சாரத்திற்கும், கொள்கை கோட்பாடுகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.  அவை அனைத்தும் "பவுல்' என்பவரால் பிற்காலத்தில் ஏற்படுத்தப்பட்டவை.  மொத்தத்தில் இப்போது ஏசுவின் பெயரால் சொல்லப்படும் அனைத்து கிறித்தவக் கொள்கைகளும் பொய்யானது.  அவற்றை ஏசுவிற்கு அடுத்த தலைமுறையில் வாழ்ந்த உண்மையாளர்களின் வாழ்வில் காண முடியவில்லை.

மேற்கண்டவாறு அறிஞர் ஐஸ்மேன் கூறி வரும்போது, ஒரு யூதரிடம் அவற்றைப் பற்றி வாதம் செய்யும் போது, ஒற் ஸ்ரீர்ய்ச்ண்ழ்ம்ள் ணன்ழ்ஹய் - அது குர்ஆனை உறுதிப்படுத்துகிறது என்று ஆணித்தரமாகக் கூறுகின்றார். அவ்விடத்தில் அந்த வாதம் நிறுத்தப்பட்டு மறு காட்சி காட்டப்படுகின்றது.

இதே முறையில் மைக்கேல் வைஸ் என்ற அறிஞரும் பேசும் போது, ஒற் ஸ்ரீர்ய்ச்ண்ழ்ம்ள் ஒள்ப்ஹம் - அது இஸ்லாத்தை உறுதிப்படுத்துகின்றது என்று கூறுகின்றார். இங்கும் காட்சி மாற்றப்படுகின்றது.  ஆகவே இந்த சாசனச் சுருள்கள் எப்படி குர்ஆனையும் இஸ்லாத்தையும் உண்மைப்படுத்துகின்றன என்று அவர்கள் கூறுகின்றார்கள் என்பதை பார்வையாளர்கள் அறிய முடியவில்லை.  அதன் பிறகு தான் அந்த டாக்குமெண்டரியை நான் பதிவு செய்தேன்.  பலமுறை பார்த்தேன்.  ஓரளவு தெளிவான பின் அந்த அறிஞர்களின் கருத்துக்கு ஆதாரத்தைத் தேடி ஆராய்ச்சியில் இறங்கினேன்.

அந்த ஆராய்ச்சியின் போது திருக்குர்ஆனின் 18-ம் அத்தியாயம் "குகை' என்ற தலைப்பில் இருப்பது என் கவனத்தைக் கவர்ந்தது. அங்கு குகை வாழ் தோழர்களின் ஆச்சரியமான வாழ்க்கையின் செய்திகள் சொல்லப்படுகின்றன. அந்தத் தோழர்கள் ஆரம்ப காலத்தில் ஏசுவின் வழியை மேற்கொண்ட கிறித்தவர்கள் என்று பல அறிஞர்கள் தங்கள் உரைகளில் கூறுகின்றார்கள்.

"தஜ்ஜாலின் பாதிப்பிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள விரும்புபவர்கள் குகை அத்தியாயத்தின் முதல் பத்து வசனங்களை நினைவுபடுத்திக் கொள்ளட்டும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய ஹதீஸ் உள்ளது என்று ஓர் அறிஞர் கூறுகின்றார்.  தஜ்ஜால் என்பதற்கு ஏசு எதிர்ப்பாளர் என்றும் குழப்பவாதி என்றும் பொருள் இருப்பதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.  ஆகவே இதிலிருந்து தஜ்ஜால் யாராக இருக்க முடியும் என்பதையும் நாம் அறிய முடியும் என்பது அவரின் வாதம்.

அந்தச் செய்தியிலிருந்து நாம் ஆச்சரியமான உண்மையைத் தெரிந்து கொள்கிறோம்.

ஈஸா (அலை) அவர்களுக்கு இறைவன் இஞ்சீல் எனும் வேதத்தை வழங்கியதாக திருக்குர்ஆன் பல இடங்களில் கூறுகின்றது.

ஆனால் கிறித்தவ சமுதாயத்திடம் அந்த வேதம் இருக்கின்றதா என்றால் நிச்சயமாக இல்லை எனலாம்.

ஏனெனில் பைபிளின் புதிய ஏற்பாடு என்பது இயேசுவுக்கு கடவுள் வழங்கியதன்று.  மாறாக ஏசுவைப் பற்றி மற்றவர்கள் எழுதிய குறிப்புகள் தான் புதிய ஏற்பாடு.

பைபிளின் பல இடங்களில் இயேசு, ராஜ்ஜியத்தின் சுவிஷேசத்தைப் பிரசங்கித்தார் என்று கூறப்பட்டுள்ளது.

ராஜ்ஜியத்தின் சுவிஷேசம் என்பதை மறைத்துவிட்டு ஈஸா நபியைப் பற்றி உண்மையையும் பொய்யையும் கலந்து எழுதியதே பைபிள்.  (அதிக விபரங்களுக்கு இதுதான் பைபிள் என்ற நமது நூலைப் பார்வையிடுக)

எந்த இறைவேதத்தை அவர்கள் மறைத்தார்களோ அதைத் தான் இயேசுவின் வழிவந்த நல்ல மனிதர்கள் தங்களுடன் எடுத்துச் சென்று குகையில் தங்கினார்கள் என்று முடிவு செய்யப் போதுமான காரணம் இருக்கிறது.

"குர்ஆனை ஒத்திருக்கின்றது'' என்பது தான் அந்தச் சுருள்களைப் படித்த கிறித்தவ அறிஞர்களின் கருத்தாகும்.

இஞ்சீல் எனும் வேதத்தை குர்ஆன் மெய்ப்பிப்பதாக திருக்குர்ஆனும் பல இடங்களில் குறிப்பிடுகின்றது.

அடுத்ததாக அதை வாசித்த பாதிரியார்கள் திட்டமிட்டு மறைத்ததும் அந்தக் கருத்தை உறுதிப்படுத்துகின்றது.  இதுதான் இயேசுவின் வேதமாக இருக்க முடியும், இது அம்பலமானால் காலா காலமாக தாங்கள் போதித்த கொள்கைக்கு சாவுமணி அடிக்கப்படும் என்று இவர்கள் அஞ்சியதே இதை மேலும் உறுதிப்படுத்துகின்றது.

மனிதர்களால் எழுதப்பட்ட ஏட்டுக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளித்து இறைவன் கூறியிருக்க மாட்டான் என்பதும் இக்கருத்தை மேலும் உறுதிப்படுத்துகின்றது.

குகைவாசிகளும் (இவர்கள் திட்டமிட்டு மறைத்த) அந்த ஏட்டுக்குரியவர்களும் நமது அத்தாட்சிகளில் ஆச்சரியமானவர்கள் என்று எண்ணுகிறீர்களா? என்ற வசனத்தை வாசிக்கும் போது நம்மையும் அறியாமலே நாம் ஆச்சரியத்தின் விளிம்புக்குச் சென்று விடுகின்றோம்.

நாற்பது வயதில் தான் சட்டதிட்டங்களா?

(ஒற்றுமை மாதமிருமுறை இதழில் தேர்வு செய்யப்பட்ட குர்ஆன் வசனங்களுகு பீஜே எழுதிய விளக்கம்)

15. தனது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தினோம். அவனை அவனது தாய் சிரமத்துடன் சுமந்தாள். சிரமத்துடனே ஈன்றெடுத்தாள். அவனைச் சுமந்ததும், பால்குடியை மறந்ததும் முப்பது மாதங்கள்.314 அவன் தனது பருவ வயதை அடைந்து, நாற்பது வயதை அடையும்போது "என் இறைவா! எனக்கும் என் பெற்றோருக்கும் நீ செய்த அருட்கொடைக்கு நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் நல்லறத்தை நான் செய்யவும் வாய்ப்பளிப்பாயாக! எனக்காக எனது சந்ததிகளைச் சீராக்குவாயாக! நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நான் முஸ்லிம்களில்295 ஒருவன்'' என்று கூறுகிறான்.340

திருக்குர்ஆன்: 46:15

இவ்வசனம் என்ன கூறுகிறது என்பதில் பல    நூற்றாண்டுகளாக எவருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இருக்கவில்லை.

குர்ஆன் மட்டுமே போதும் என்று கூறிக் கொண்டு குர்ஆன் எந்த மொழியில் அருளப்பட்டதோ அம்மொழியின் அரிச்சுவடி கூட அறியாத ராஷாத் கலீபா என்பவனும் அவனைப் போன்றவர்களும் இவ்வசனத்தைத் தங்களின் நச்சுக் கருத்துக்குப் பயன்படுத்திக் கொண்டு வருகின்றனர்.

நாற்பது வயது வரை மனிதன் மீது எந்தக் கடமையும் கிடையாது. நாற்பது வயது வரை மனிதன் எப்படி வாழ்ந்தாலும் அல்லாஹ் மன்னித்து விடுவான் என்பது இந்த மூடர்கள் இவ்வசனத்துக்கு அளிக்கும் விளக்கமாகும்.

நாற்பது வயதை அடையும் போது என்ற வாசகத்தைத் தான் இவர்கள் தங்களின் கூற்றுக்குச் சான்றாக எடுத்துக் கொள்கின்றனர். இதற்கு அடுத்து வருகின்ற வசனத்தில் இவர்களது நன்மைகளை ஏற்று தீமைகளை மன்னிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அதையும் தங்கள் வாதத்துக்குப் பலம் சேர்ப்பதற்கு எடுத்துக் காட்டுகின்றனர்.

நாற்பது வயது வரை மனிதன் மீது எதுவும் கடமையாவதில்லை என்று வாதிட்டாலும், அது தவறாகும்.

நாற்பது வயதுக்கு முன்பே மனிதன் மீது கடமைகள் சுமத்தப்பட்டு விடுகின்றன. ஆயினும், மன்னிப்புக் கேட்டால் நாற்பது வயது வரை அல்லாஹ் மன்னிப்பான் என்று கூறினாலும் அதுவும் தவறானதாகும்.

இவ்வாறு வாதிடுவதற்கு ஏற்ற வகையில் இவ்வசனம் அமைந்திருக்கவில்லை. இவ்வசனம் என்ன கூறுகிறது என்பதை அறிவதற்கு முன்னால் மனிதன் மீது எப்போது முதல் பொறுப்புகளும், கடமைகளும் சுமத்தப்படுகின்றன என்பதைப் பார்ப்போம்.

அனாதைகள் பருவம் அடைவது வரை அழகிய முறையில் தவிர அவர்களின் சொத்துக்களின் பக்கம் நெருங்காதீர்கள்.

திருக்குர்ஆன்: 6:152, 17:34

பிறரது பராமரிப்பில் வளரும் அனாதைகள் சுயமாகப் பொறுப்பேற்கும் காலம் குறித்து இவ்வசனம் விளக்குகிறது. அனாதைகள் பருவம் அடைந்து விட்டால் தாங்கள் சொத்துக்களைத் தாங்களே நிர்வகித்துக் கொள்வார்கள். அதுவரை தான் மற்றவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்பது இவ்வசனத்தின் வழிகாட்டுதலாகும்.

பருவமடைதல் என்றால் அது தான் நாற்பது வயதை அடைதல் என்று விளக்கம் கூறுவோரும் விபரம் கெட்டவர்களும் உள்ளனர். பருவம் அடைதல் என்றால் உடலுறவு கொள்ளத் தகுதியை அடைதல் தான் என்று அல்லாஹ்வே தெளிவாகக் கூறி விடுகிறான்.

அனாதைகளைப் பரீட்சித்துப் பாருங்கள்! அவர்கள் உடலுறவு கொள்ளும் பருவத்தை அடைந்து அவர்களிடம் நீங்கள் திறமையைக் கண்டால் அவர்களின் செல்வங்களை அவர்களிடம் வழங்கி விடுங்கள்.

திருக்குர்ஆன்: 4:6

உடலுறவு கொள்ளும் பருவம் என்று தமிழாக்கம் செய்த இடத்தில் நிகாஹ் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. "நிகாஹை அவர்கள் அடையும் போது'' என்பதற்கு உடலுறவு கொள்ளும் பருவத்தை அடைதல் என்பதே பொருளாகும். பருவம் அடைதல் என்று எதை நாம் கூறுகிறோமோ அதுவே மனிதன் முதிர்ச்சியடையும் வயதாகும் என்று இவ்வசனத்திலிருந்து அறியலாம்.

சொத்துக்களைப் பாராமரிப்பது பற்றித் தானே இவ்வசனங்கள் கூறுகின்றன. மார்க்கத்தின் சட்ட திட்டங்கள் அதாவது வணக்க வழிபாடுகளுக்கு இவ்வாறு கூறப்பட்டுள்ளதா என்று சிலருக்குத் தோன்றலாம்.

அவ்வாறு கூறப்படாவிட்டாலும் அறிவுடையோர் இதிலிருந்து அதை விளங்கிக் கொள்ள இயலும். ஏனெனில், சொந்தமாக- சுயமாக மனிதன் இயங்கும் வயது இது தான் என்று கூறுவதே போதுமானதாகும்.

ஆனாலும், இவர்கள் எதை விரும்புகிறார்களோ அதையும் அல்லாஹ் கூறாமல் இல்லை.

பிறரது வீடுகளுக்குச் செல்லும் போது அனுமதி கேட்ட பிறகு தான் செல்ல வேண்டும் என்பது திருக்குர்ஆனின் கட்டளையாகும். ஆனால், சிறுவர்கள் அனுமதி கேட்கத் தேவையில்லை என்பதும் குர்ஆனுடைய கட்டளை ஆகும்.

சிறுவர்களுக்கு வழங்கப்பட்ட இந்தச் சலுகை எதுவரை என்றால் நாற்பது வயது வரை அல்ல. மாறாக, பருவம் அடையும் வரை தான் என்று அல்லாஹ் கூறுகிறான்.

இன்னும் உங்களிலுள்ள குழந்தைகள் பருவ வயதை அடைந்துவிட்டால் அவர்களும், தங்களுக்கு (வயதில்) மூத்தவர்கள் அனுமதி கேட்பவர்கள் போல் அனுமதி கேட்க வேண்டும்; இவ்வாறே அல்லாஹ் தன்னுடைய வசனங்களை உங்களுக்கு விவரிக்கிறான்; அல்லாஹ் (யாவற்றையும்) அறிந்தவன்; ஞானமிக்கவன்.

திருக்குர்ஆன் 24:59

சிறுவர்கள் பருவ வயதை அடைந்தவுடன் பெரியவர்களுக்குரிய சட்டத்திற்குள் வந்து விடுகிறார்கள் என்பதை இவ்வசனத்திலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

இப்போது விளக்கத்திற்காக நாம் எடுத்துக் கொண்ட வசனத்திற்கு வருவோம். இவ்வசனத்தில் பருவம் அடைவது நாற்பது வயதில் தான் என்று கூறப்படவே இல்லை. மாறாக அதற்கு எதிரான கருத்தே கூறப்பட்டுள்ளது.

"மனிதன் பருவத்தை அடைந்து மேலும், நாற்பது வயதை அடையும் போது'' என்று தான் இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளது. பருவத்தை அடைவதே நாற்பது வயதில் என்றால் இவ்வாறு கூற முடியாது. இரண்டில் ஏதேனும் ஒன்றைக் கூறினாலே போதுமானதாகும்.

பருவ வயதை அடைதல் என்பது வேறு.

நாற்பது வயதை அடைதல் என்பது வேறு

என்பதை இவ்வசனத்திலிருந்து முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

"நாற்பது வயதை அடையும் போது'' என்ற சொற்றொடரை இங்கே ஏன் குறிப்பிட வேண்டும்? இதற்கு இவ்வசனத்திலேயே விடை கிடைக்கிறது.

பொதுவாக மனிதன் பருவம் அடையும் போது பெற்றோரின் மகத்துவத்தை உணராதவனாக இருக்கிறான். தாய் அவனைக் கஷ்டப்பட்டு சுமந்ததையும், பெற்றதையும் கூட அவன் நினைப்பதில்லை. அவனுக்குத் திருமணம் ஆகும் போது பெற்றோர் மேலும் தேவையற்றவர்களாக மனிதனுக்குத் தோன்றுகிறார்கள். உடல் சுகத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பெற்றோரை, உதாசீனம் செய்கிறான். அவனுக்கு ஒரு குழந்தை அல்லது பல குழந்தைகள் பிறக்கின்றன. அப்போதாவது பெற்றோரின் மதிப்பை உணர்கிறானா என்றால் அதுவுமில்லை.

அவன் பெற்ற பிள்ளை பருவ வயதை அடைந்து அவனையே எதிர்த்துப் பேசும் போது தான் பெற்றோரை மதிக்க வேண்டும் என்ற உணர்வு வருகிறது! நாம் நமது தந்தையை நடத்தியது போலவே நமது மகன் நம்மை நடத்த ஆரம்பித்து விட்டானே என்று அதிர்ச்சியடைந்து காலம் கடந்து பெற்றோரின் மதிப்பை உணர்கிறான். இந்த நிலையை சராசரியாக மனிதன் நாற்பது வயதில் அடைகிறான்.

இருபது வயதில் அவன் திருமணம் செய்திருந்தால் தனது நாற்பதாவது வயதில் 20 வயது மகனைப் பெறுகிறான். 25 வயதில் தாமதமாகத் திருமணம் செய்தால் கூட நாற்பதாவது வயதில் 15 வயது மகனைப் பெற்றிருப்பான்.

தனது பிள்ளை தன்னை உதாசீனம் செய்யும்  போது தான் தந்தையின் மதிப்பை மனிதன் உணர்கிறான். இதற்கு இவ்வளவு காலம் மனிதனுக்கு தேவைப்படுகிறது.

பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு கட்டளை!

கருவில் சுமந்தபோது தாய்பட்ட கஷ்டம்!

பெற்றெடுக்கும் போது அவள் படுகின்ற சிரமம்!

இவற்றையெல்லாம் சுட்டிக் காட்டிய பின் " நாற்பது வயதை அடையும் போது'' என்று கூறுவதிலிருந்து அறிவுடைய யாரும் இதை அறியலாம்.

"என் பிள்ளைகளை எனக்கேற்றவாறு ஆக்கு'' என்று நாற்பது வயதில் மனிதன் வேண்டுவதாகவும் இவ்வசனம் கூறுகிறது. பிள்ளை பெற்று அவன் பருவ வயதை அடையும் போது தான் மனிதன் தனது பெற்றோரை நினைத்துப் பார்க்கிறான் என்பதை இது மேலும் உறுதிப்படுத்துகிறது.

நான் பெற்றோரை மதிக்காதது போல என் பிள்ளைகள் என்னை மதிக்காதவாறு செய்திடாதே! நான் நல்ல முஸ்லிமாக நடந்து கொள்கிறேன் எனக் கூறி திருந்துகிறான். இவ்வசனத்தை ஆரம்பம் முதல் கடைசி வரை கவனமாக வாசிக்கும் போது நாற்பது வயதை அடையும் போது பெற்றோரின் மகிமையை மனிதன் உணர்கிறான் என்பது தான் கூறப்படுகிறதே தவிர நாற்பது வயது வரை ஆட்டம் போட எந்த அனுமதியும் இவ்வசனத்தில் இல்லை.

உடல் முறுக்குடன் மனிதன் இருக்கும் போது தான் அவனை நெறிப்படுத்திட ஒரு வாழ்க்கைத் திட்டம் தேவைப்படுகிறது. உடல் தளர்ந்த பின் பல தீமைகளைச் செய்வதற்குரிய வலுவை உடல்  தானாக இழந்து விடும். இவர்களை விட இளமைப் பருவத்தில் உள்ளவர்களை நெறிப்படுத்தத் தான் சட்ட திட்டங்கள் தேவை.

ஆனால், இந்த மூடர்கள் நாற்பது வயது வரை எப்படி வேண்டுமானாலும் ஆட்டம் போடலாம் என்று நரகின் விறகுக் கட்டைகளாக மாறுகின்றனர்.

நாற்பது வயது வரை எது வேண்டுமானாலும் செய்யலாம் என்பதை நாலைந்து மனநோயாளிகளான இவர்கள் மட்டும் கூறுவதால் இதன் விபரீதம் புரியவில்லை. உலகில் உள்ள அனைவரும் இந்தச் சித்தாந்தத்தைச் கடைப்பிடித்தால் என்னவாகும்? என கொஞ்சம் கற்பனை செய்து பார்த்தால் கூட இது எந்த அளவு ஆபத்து என்பதை உணர்வார்கள்.

இவ்வாறு கூறுகின்றவர்களிடம் நாற்பது வயதுக்கும் குறைவான சிலர் சென்று இழுத்துப் போட்டு உதைத்தால் - இவர்களின் பெண்களிடம் தகாத முறையில் நடந்தால் - இவ்வளவையும் செய்து விட்டு எங்களுக்கு நாற்பது வயது ஆகவில்லை என்பதால் பெரிதுபடுத்தாதீர்கள் என்று கூறினால் இந்த வசனத்தின் சரியான அர்த்தம் அவர்களுக்கு உடனே விளங்கி விடும்.

பருவம் அடைந்தவுடன் சட்ட திட்டங்கள் நடைமுறைக்கு வந்து விடுகின்றன. நாற்பது வயது வரை அவை மன்னிக்கப்படும் என்றே நாம் கூறுகிறோம் என்று இவர்கள் சமாளிக்கக்கூடும்.

அல்லாஹ்வின் மன்னிப்பு என்பது நாற்பது வயதுக்கு மேற்பட்டவனுக்கு இல்லையா? ஐம்பது வயதுடையவன் மன்னிப்புக் கேட்டால் அல்லாஹ் மன்னிக்க மாட்டானா? என்று கேட்டால் திருதிருவென முழிப்பார்கள்!

மன்னிப்புக் கேட்டு மன்னிப்பதற்கு வயது வரம்பு இல்லை. மன்னிப்புக் கேட்காமலே மன்னிப்பு கிடைப்பதற்குத் தான் நாற்பது வயது வரம்பு என்று உளறுவார்கள்!

மனோ இச்சையை மார்க்கமாக்கிக் கொண்டவர்களே! இவ்வசனத்தில் நாற்பது வயதுடையவன் " நான் மன்னிப்புக் கேட்கிறேன்'' என்று பாவமன்னிப்புத் தேடுவதாகத் தான் கூறப்பட்டுள்ளது. பாவமன்னிப்புக் கேட்காமல் மன்னிப்பதாக இங்கே கூறப்படவில்லை என்பதையாவது விளங்க மாட்டீர்களா?

நபிமார்களிடம் எடுத்த உறுதிமொழி என்ன?

(ஒற்றுமை மாதம் இருமுறை இதழில் தேர்வு செய்யப்பட்ட திருக்குர்ஆன் வசனங்களுக்கு பீஜே எழுதிய விளக்கம்)

81. "உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும்67 நான் தந்த பின் உங்களிடம் இருப்பதை உண்மைப்படுத்தும் தூதர் உங்களிடம் வந்தால் அவரை நம்புவீர்களா? அவருக்கு உதவுவீர்களா?'' என்று நபிமார்களிடம் அல்லாஹ் உறுதிமொழி எடுத்து95 "இதை ஒப்புக் கொண்டீர்களா? எனது பலமான உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டீர்களா?'' என்று கேட்டபோது, "ஒப்புக் கொண்டோம்'' என்று அவர்கள் கூறினர். "நீங்களே இதற்குச் சாட்சியாக இருங்கள்! உங்களுடன் நானும் சாட்சியாக இருக்கிறேன்'' என்று அவன் கூறினான்.

திருக்குர்ஆன் 3:81

இவ்வசனத்திற்கு பல ஆண்டுகளாக அறிஞர்களில் பலர் தவறான விளக்கம் அளித்து வருகின்றனர். அவர்களின் தவறான விளக்கத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ரஷாத் கலீஃபா என்பவன் தன்னை ஒரு ரஸுல் (இறைத் தூதர்) என்று அறிவித்துக் கொண்டான். இவ்வசனம் உண்மையில் கூறுவது என்ன என்பதை மார்க்க அறிஞர்களில் பலரும் கவனிக்கவில்லை. ரஷாத் என்பவனும் விளங்கிடவில்லை.

நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் இறுதிக் காலத்தில் வரவுள்ளனர். அவ்வாறு அவர்கள் வரும் போது அனைவரும்  அவர்களை ஏற்று உதவ வேண்டும் என்பது தான் இங்கே கூறப்படும் உடன்படிக்கை என்பது பெரும்பாலான அறிஞர்களின் விளக்கம்.

இவர்களது தவறான விளக்கத்தைத் தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்ட ரஷாத் கலீஃபா என்பவன் தன்னை ஒரு ரஸுல் என்று எவ்வாறு பிரகடனம் செய்தான் என்று முதலில் பார்ப்போம்.

7, 8. நபிமார்களிடம் (குறிப்பாக) உம்மிடமும், நூஹ், இப்ராஹீம், மூஸா, மர்யமின் மகன் ஈஸா ஆகியோரிடமும் அவர்களது உறுதிமொழியை95 நாம் எடுத்ததை நினைவூட்டுவீராக! உண்மையாளர்களை அவர்களது உண்மை பற்றி விசாரிப்பதற்காக அவர்களிடம் கடுமையான உடன்படிக்கையை எடுத்தோம். (தன்னை) மறுப்போருக்கு அவன் துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளான்.26

திருக்குர்ஆன் 33:7

இவ்வசனத்தில் நபிமார்களிடம் எடுக்கப்பட்ட உடன்படிக்கையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அடக்கம் என்பது தெரிய வருகிறது. ஏனெனில், உம்மிடமும் என்று இங்கே தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்பட அனைத்து நபிமார்களிடமும் எடுக்கப்பட்டதே இவ்வுடன்படிக்கை. இனி மேல் வரக்கூடிய தூதரை ஏற்க வேண்டும் என்று நபிகள் நாயகத்திடமும் உடன்படிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் நபிகள் நாயகத்துக்குப் பிறகு ஒரு தூதர் வரவிருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது. அந்தத் தூதர் நானாவேன் என்று ரஷாத் கலீஃபா என்பவன் வாதிட்டான்.

பெரும்பாலான அறிஞர்களின் விளக்கமும், அந்த விளக்கத்தின் அடிப்படையில் இவன் எழுப்பிய வாதமும் இரண்டுமே முற்றிலும் தவறானதாகும்.

மேற்கண்ட வசனம் எதிர்காலத்தில் வரவிருக்கிற ஒரு தூதர் பற்றிய முன்னறிவிப்பாகும் என்பது தான் இருவரின் வாதத்துக்கும் அடிப்படை.

முன்னறிவிப்பில் கூறப்படுபவர் யார் என்பதில் தான் இவர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது.

ஆனால் இவ்வசனத்தை கவனமாகப் பார்க்கும் போது இது யாரைப் பற்றியும் முன்னறிவிப்புச் செய்யவில்லையென்பதே உண்மையாகும்.

இவ்வசனம் என்ன சொல்கிறது என்பதை இவ்வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள வாசகங்களை வைத்துத் தான் புரிந்து கொள்ள வேண்டும். வாசக அமைப்புக்கு எதிரான கருத்தை இதற்கு விளக்கமாகக் கூறக் கூடாது. அவ்வாறு யார் கூறினாலும் அது முற்றிலும் தவறானதாகும்.

இவ்வசனம் என்ன சொல்கிறது என்பதை இவ்வசனத்திலிருந்தே அறிவது தான் சரியானதாகும்.

நபிமார்களிடம் இறைவன் உறுதிமொழி எடுத்திருக்கிறான். இதில் எல்லா நபிமார்களும் அடங்குவார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அடங்க மாட்டார்கள் என்று கருதுவதற்கு இவ்வசனம் இடம் தரவில்லை. நபிகள் நாயகத்திடமும் உறுதிமொழி எடுக்கப்பட்டதை 33:7 வசனம் தெளிவாகவும் அறிவித்து விடுகிறது.

எனவே, நபிகள் நாயகம் (ஸல்) உட்பட எல்லா நபிமார்களிடமும் எடுக்கப்பட்ட உடன்படிக்கையையே இவ்வசனம் கூறுகிறது. நபிகள் நாயகத்தை விட்டுவிட்டு மற்ற நபிமார்களிடம் உடன்படிக்கை எடுத்ததாகக் கூறுவது இவ்வசனத்தில் இல்லாத கருத்தும் இவ்வசனத்திற்கு முரணான கருத்துமாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வருகையைப் பற்றி ஏனைய நபிமார்களிடம் தான் உடன்படிக்கை எடுக்கப்பட்டது என்று பெரும்பாலான அறிஞர்கள் இதை விளங்கியதால் இதை நபிகள் நாயகம் (ஸல்) பற்றிய முன்னறிவிப்பு என்று கூறினார்கள்.

இவர்கள் இவ்வாறு முன்னறிவிப்பு என்று தவறாகக் கூறியதைத் தான் ரஷாத் கலிஃபா என்பவன் தனக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டான். இது முன்னறிவிப்பு தான் ஆனால் அது நபிகள் நாயகத்தைக் குறித்த முன்னறிவிப்பு இல்லை. மாறாக, என்னைக் குறித்த முன்னறிவிப்பாகும் என்று வாதிட்டான்.

உம்மிடமும் என்று 33:7 வசனத்தில் கூறப்பட்டுள்ளதால், இந்த முன்னறிவிப்பு நபிகள் நாயகம் (ஸல்) பற்றியதாக இருக்க முடியாது என்றான்.

அதாவது இவ்வசனம் ஒரு முன்னறிவிப்பு என்பதில் இவனும் பெரும்பாலான அறிஞர்களும் ஒன்றுபடுகிறார்கள். யாரைப் பற்றிய முன்னறிவிப்பு என்பதில் தான் இருவருக்கும் கருத்து வேறுபாடு உள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) உட்பட அனைத்து நபிமார்களிடமும் உறுதிமொழி எடுக்கப்பட்டது என்பது உண்மை தான். ஆனால் இதில் எந்த முன்னறிவிப்பும் இல்லை. எனவே, எடுக்கப்பட்ட உடன்படிக்கை என்ன என்பதை அவ்வசனத்திலிருந்தே நாம் ஆராய்வோம்.

உங்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் நான் தந்த பின் இன்னொரு தூதர் உங்களிடம் வந்தால் அவரை ஏற்று உதவ வேண்டும் என்பது தான் உடன்படிக்கை.

அல்லாஹ் ஒரு வார்த்தையைக் கூட தேவையில்லாமல் பயன்படுத்த மாட்டான். நபிமார்களிடம் உடன்படிக்கை எடுக்கும் போது "உங்களிடம் ஒரு தூதர் வந்தால்'' என்று அல்லாஹ் கூறுகிறான். உங்களிடம் என்ற வார்த்தை முதலில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

ஒரு நபிக்குப் பின் இன்னொரு நபி வருவதை இவ்வாசகம் கூறவில்லை. ஒரு நபி வாழ்ந்து கொண்டிருக்கும் போது அவரிடம் இன்னொரு நபி வருவதையே இவ்வாசகம் குறிக்கிறது.

ஸும்ம ஜாஅகும் - பின்னர் உங்களிடம் வந்தால் என்று அல்லாஹ் கூறுவதைத் தான் மார்க்க அறிஞர்களில் பலர் கவனத்தில் கொள்ளத் தவறி விட்டனர்.

"உங்களை நான் நபியாக நியமனம் செய்து விட்டேன். இது உங்கள் தகுதியினாலோ, உழைப்பினாலோ கிடைத்தது அல்ல. மாறாக, நானாக உங்களுக்கு வழங்கியதாகும். நபியாக நியமனம் செய்யப்பட்டதால் இனி மேல் நமது தகுதிக்கு எந்தக் குறையும் ஏற்படாது என்று நினைக்காதீர்கள்! நீங்கள் நபியாக இருக்கும் போதே உங்களிடம் இன்னொரு தூதரை நான் அனுப்பினால் உடனே அவரை நீங்கள் ஏற்க வேண்டும். அவருக்கு உதவி செய்திட முன்வரவேண்டும். இந்த நிபந்தனையின் அடிப்படையிலேயே உங்களுக்கு அந்தத் தகுதி வழங்கப்படுகிறது'' என்பது தான் இவ்வசனத்தின் கருத்தாகும். இதை இவ்வசனத்தின் வாசக அமைப்பே உறுதி செய்கிறது.

இது நபிகள் நாயகத்தைப்  பற்றிய முன்னறிவிப்பு என்று கருதினால் நபிமார்கள் தமது உடன்படிக்கையை நிறைவேற்றவில்லை என்று ஆகிவிடும். "அவரை நம்பி அவருக்கு உதவ வேண்டும்'' என்பது தான் உடன்படிக்கையின் ஷரத்து. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வுலகிற்கு வந்த போது எந்த நபியும் உலகில் இருக்கவில்லை. நபிகள் நாயகத்துக்கு உதவவுமில்லை.

அது போல் ரஷாத் கலீஃபா என்பவனையோ வேறு யாரையோ இது குறிக்கிறது என்று வைத்துக் கொண்டால் அவனை நபிகள் நாயகம் (ஸல்) ஏற்று அவனுக்கு உதவியாக இருந்திருக்க வேண்டும். ரஷாத் கலீஃபாவுக்கு நபிகள் நாயகம் உதவவுமில்லை. அவன் மீது ஈமான் கொள்ளவுமில்லை. எனவே இவ்வசனம் யாரைப் பற்றிய முன்னறிவிப்பும் இல்லை.

மாறாக "நபித்துவம்' என்பது மனிதனின் உழைப்புக்காகவோ திறமைக்காகவோ வழங்கப்படுவதல்ல. அல்லாஹ்வின் கருணையால் வழங்கப்படுவது. வேறொருவருக்கு அதை நான் வழங்கினால் அதற்கு கட்டுப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் இதை வழங்குகிறேன் என்பது தான் உடன்படிக்கை.

1. உங்களிடம் அவர் வந்தால்.

2. அவரை நீங்கள் நம்ப வேண்டும்.

3. அவருக்கு நீங்கள் உதவ வேண்டும்.

ஆகிய வாசகங்கள் இதைத் தெளிவாகக் கூறுகின்றன.

ஒரு நபியை இறைவன் அனுப்பிய பின் அவருக்கு பக்கபலமாக இருப்பதற்காக மேலும் சிலரை அல்லாஹ் அனுப்பியதை 36:14 வசனம் கூறுகிறது. அவ்வாறு அனுப்பப்பட்டவர்களை முதலில் அனுப்பப்பட்டவர்கள் ஏற்றுக் கொண்டனர்.

நமக்குக் கிடைத்த தகுதியை இன்னும் சிலருக்கு அல்லாஹ் பங்கு போட்டுக் கொடுத்து விட்டானே என்றெல்லாம் முதலில் அனுப்பப்பட்டவர்கள் உரிமைக் குரல் எழுப்பக்கூடாது என்று ஏற்கனவே இறைவன் கடுமையான உறுதிமொழி எடுத்த தன் காரணமாகவே 36 வது அத்தியாயத்தில் கூறப்பட்டவாறு ஒரு சமுதாயத்துக்கு ஒரு காலக்கட்டத்தில் பல நபிமார்கள்  அனுப்பப்பட்டனர்.

நபிகள் நாயகம் (ஸல்) வாழும் காலத்தில் துணைக்கு மேலும் சிலரை அல்லாஹ் நியமித்திருந்தால் அதை மனப்பூர்வமாக நபிகள் நாயகம் (ஸல்) ஏற்றுக் கொள்ள வேண்டும்.

யாருடைய விளக்கத்தையும் கவனத்தில் கொள்ளாமல் இவ்வசனத்தைச் சிந்தித்தால் இந்தக் கருத்துக்குத் தான் வர முடியும்.

எனவே, ரஷாத் கலீஃபா என்பவன் தன்னைத் தூதர் என்று கூறிக் கொண்டதற்கு இவ்வசனத்தில் எள்ளளவும் எள் முனையளவும் ஆதாரம் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) பற்றிய முன்னறிவிப்பு என்பதற்கும் இதில் ஆதாரம் ஏதுமில்லை.

இந்த இடத்தில் இவ்வசனத்திற்கு எதிராக முஸ்லிம்களில் பலரிடம் காணப்படும் தவறான நம்பிக்கையையும் சுட்டிக்காட்டும் கடமை நமக்கு இருக்கிறது.

ஹில்ரு நபி என்று ஒருவர் இருக்கிறார். அவர் ஹயாத் நபி. அவர் உலகில் - பூமியில் - இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது தான் அந்த நம்பிக்கை.

அந்த நம்பிக்கை தவறானது என்பதை இவ்வசனம் சந்தேகமற அறிவிக்கிறது.

ஹில்ரு நபி உயிருடன் இருக்கும் போது முஹம்மது நபியவர்கள் அல்லாஹ்வின் தூதராக அனுப்பப்படுகிறார்கள் என்றால் நபிமார்களிடம் எடுக்கப்பட்ட உறுதிமொழியின் படி அவர் என்ன செய்திருக்க வேண்டும்?

நபிகள் நாயகத்தைத் தேடி அவர் ஓடி வந்திருக்க வேண்டும்.

அவர்கள் கஷ்டப்பட்ட நேரத்தில் உதவிகள் புரிந்திருக்க வேண்டும்.

பத்ரு, உஹதுப் போர்களில் பங்கெடுத்திருக்க வேண்டும்.

அவ்வாறு ஏதும் நடக்கவில்லை. நடந்ததாக எந்தச் சான்றும் இல்லை. உயிருடன் அவர் இருந்திருந்தால் அவர் இந்த உடன்படிக்கையை நிறைவேற்றியிருக்க வேண்டும்.

இவ்வசனத்திலிருந்து ஹில்ரு நபி உயிருடன் இல்லை என்பதையும் கூடுதலாக அறிந்து கொள்ளலாம். அல்லது அவர் நபியில்லை என்று கூற வேண்டும். (ஈஸா நபியவர்கள் ஏன் உதவவில்லை என்று கேட்க முடியாது. அவர்கள் இம்மண்ணுலகில் இல்லை. மேலும் ஈஸா நபியவர்கள் உயிருடன் உள்ளனர் என்பதற்கு குர்ஆனில் ஏராளமான சான்றுகள் உள்ளன. அவற்றைப் பின்னர் நாம் விளக்கவுள்ளோம்.

கப்ரு எனும் மண்ணறை வாழ்க்கை குர்ஆனுக்கு எதிரானதா?

(ஒற்றுமை மாதமிருமுறை இதழில் தேர்வு செய்யப்பட்ட வசனங்களுக்கு பீஜே அளித்த விளக்கம்.)

51. ஸூர் ஊதப்படும். உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து தமது இறைவனை நோக்கி விரைவார்கள்.

52. எங்கள் உறக்கத்தலத்திலிருந்து எங்களை உயிர்ப்பித்தவன் யார்?'' என்று கேட்பார்கள்.332 அளவற்ற அருளாளன் வாக்களித்ததும், தூதர்கள் உண்மையெனக் கூறியதும் இதுவே (எனக் கூறப்படும்.)

திருக்குர்ஆன் 36 : 51, 52

உலகம் அழிக்கப்பட்ட பின்னர் மனிதர்கள்     அனைவரும் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவார்கள். மனிதர்கள் செய்த நன்மை தீமைகளுக்கேற்ப சொர்க்கத்தையோ, நரகத்தையோ பரிசாகப் பெறுவார்கள் என்பதை முஸ்லிம்களாகிய நாம் நம்புகிறோம்.

இந்த நம்பிக்கையைப் பொருத்தவரை முஸ்லிம் சமுதாயத்தில் எந்த விதமான கருத்து வேறுபாடும் கிடையாது. மறுமை வாழ்வு தான் இஸ்லாத்தின் அஸ்திவாரமான நம்பிக்கையாக இருப்பதை ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் ஏற்றுக் கொள்கிறது.

உலகம் ஒட்டு மொத்தமாக அழிக்கப்படுவதற்கு முன் மனிதர்கள் தமது வாழ் நாள் முடியும் போது மரணித்துக் கொண்டே உள்ளனர். இவ்வாறு மரணித்தவர்கள் உலகம் முழுமையாக அழிக்கப்படும் காலம் வரை பர்ஸக் எனும் மண்ணறை வாழ்க்கையைப் பெற்றுத் தங்களின் செயல்களுக்கேற்ப தண்டனைகளைப் பெறுகிறார்கள் என்பதும் இஸ்லாமிய நம்பிக்கைகளில் முக்கியமானதாகும்.

கப்ர் வாழ்க்கை அல்லது கப்ரில் வேதனையைப் பொருத்த வரை முஸ்லிம் சமுதாயத்தில் மிகப் பெரும் தொகையினர் நம்பிக்கை வைத்துள்ளனர்.

ஆனாலும், விரல் விட்டு எண்ணக் கூடிய சிலர் மட்டும் கப்ர் வாழ்க்கை என்பதே கிடையாது; என வாதிடுகின்றனர். அவ்வாறு வாதிடுபவர்கள் தங்கள் வாதத்துக்கு ஆதாரமாகக் காட்டும் வசனங்களைத் தான் நீங்கள் மேலே காண்கிறீர்கள்.

யாஸீன் அத்தியாயத்தின் 51, 52 ஆகிய இவ்விரு வசனங்களும் மறுமை நாளில் மனிதர்கள் எழுப்பப்படுவது பற்றிக் கூறுகின்றன.

அவ்வாறு எழுப்பப்படும் போது "எங்கள் உறக்கத்திலிருந்து எங்களை எழுப்பியவர் யார்?'' என்று கேட்டுக் கொண்டே எழுவார்கள் என்று இவ்வசனங்களில் கூறப்படுகிறது. இவ்வாறு எழுப்பப்படுவது குறித்து அவர்கள் கை சேதம் அடைவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

கப்ரில் அவர்கள் வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்தால் எங்கள் உறக்கத்திலிருந்து எங்களை எழுப்பியவர் யார் என்று எப்படிக் கூறுவார்கள்?

எந்த வேதனையும் இல்லாமல், இருந்தால் தான் அவர்களால் இவ்வாறு கூற முடியும். இவ்வாறு எழுப்பப்பட்டது குறித்து அவர்கள் கைசேதமும் கவலையும் அடைகிறார்கள் என்றால் எள்ளளவும் அவர்கள் வேதனை செய்யப்படவில்லை என்பதைச் சந்தேகமற அறியலாம்.

கப்ரில் வேதனை இருப்பதாக ஹதீஸ்களில் கூறப்பட்டாலும் இந்த வசனங்களுடன் அவை நேரடியாக மோதுவதால் அதை நாம் நம்பத் தேவையில்லை என்று இந்தக் கருத்துடையவர்கள் வாதிடுகின்றனர்.

தங்கள் வாதத்துக்கு வலிமை சேர்ப்பதற்காக மற்றொரு சான்றையும் அவர்கள் முன் வைக்கின்றனர்.

அல்லாஹ் யாருக்கும் எந்த அநியாயமும் செய்ய மாட்டான். கப்ருடைய வேதனை இருப்பதாக நம்புவது அல்லாஹ் அநீதி இழைக்கிறான் என்ற கருத்தை மறைமுகமாக உள்ளடக்கியுள்ளது என்பது இவர்களின் மற்றொரு வாதம்.

ஆதம் (அலை) அவர்களின் மகன்களில் ஒருவர் அவர் செய்த ஒரு தவறுக்காக கப்ரில் வேதனை செய்யப்படுவதாக வைத்துக் கொள்வோம். உலகம் அழிவதற்கு பத்து நாட்களுக்கு முன் மரணித்த ஒருவனும் அதே தவறுக்காக கப்ரில் வேதனை செய்யப்படுவதாக வைத்துக் கொள்வோம். இரண்டாமவன் வெறும் பத்து நாட்கள் மட்டுமே கப்ருடைய வேதனையை அனுபவிக்கிறான். ஆனால் ஆதம் (அலை) அவர்களின் மகனோ இலட்சோப லட்சம் வருடங்கள் கப்ரில் வேதனை செய்யப்பட்டுக் கொண்டே இருக்கிறார்.

ஒரே குற்றத்தைச் செய்த இருவரில் ஒருவருக்கு பத்து நாள் தண்டனை என்பதும் இன்னொருவருக்கு பல லட்சம் வருடங்கள் தண்டனை என்பதும் எப்படி நீதியான தீர்ப்பாக இருக்க முடியும்? இத்தகைய அநீதியான தீர்ப்பை இறைவன் வழங்குவானா? என்று இவர்கள் கேட்கின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் இறந்த ஒருவர் தொழுகையை விட்டதற்காக கப்ரில் தண்டிக்கப்படுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அது போல் இன்று மரணித்த ஒருவரும் அதே குற்றத்துக்காகத் தண்டிக்கப்படுவதாக வைத்துக் கொள்வோம். இருவரும் வேதனை செய்யப்பட்ட காலத்தைக் கணக்கிடப்பட்டால் இன்று மரணித்த வரை விட முன்னர் மரணித்தவர் 1400 வருடங்கள் அதிகமான தண்டனை பெற்றிருப்பார். இது தான் இறைவன் வழங்கும் நீதியா? என்றும் இவர்கள் வாதிடுகின்றனர்.

மேலும் கப்ரு வேதனை பற்றி குர்ஆனில் எங்குமே கூறப்படாததையும், தங்கள் வாதத்துக்கு வலிமை சேர்ப்பதற்காகச் சுட்டிக் காட்டுகின்றனர்.

ஆகவே, கப்ரில் வேதனை இருப்பதாக நம்புவது திருக்குர்ஆனை மறுப்பதாகவும் அல்லாஹ்வின் நீதியை சந்தேகிப்பதாகவும் அமைந்துள்ளது என்று அவர்கள் வாதிடுகின்றனர்.

இவர்களின் வாதத்தில் உண்மையுள்ளதா? இவர்களின் வாதம் தவறு என்றால் இந்தக் கேள்விகளுக்கான விடை என்ன?

"எங்கள் உறக்கத்திலிருந்து எங்களை எழுப்பியவன் யார்?'' என்று மனிதர்கள் கூறுவதால் கப்ரு வாழ்க்கை இல்லை என்ற முடிவு முற்றிலும் தவறானதாகும்.

குர்ஆனை முழுமையாக ஆய்வு செய்யாமல் இவ்விரு வசனங்களை மட்டும் தங்கள் மனோ இச்சைப்படி புரிந்து கொண்டதன் விளைவு தான் இந்த வாதம்.

ஒரு உலகத்திலிருந்து இன்னொரு உலகத்தை அடைபவர்கள் முந்தைய உலகில் நடந்தவற்றை மறந்து விடுவார்கள். அப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தது என்பது அவர்களுக்கு அறவே நினைவுக்கு வராமல் போய்விடும். எனவே தான் கப்ரு வேதனையை அனுபவித்தவர்கள் மீண்டும் எழுப்பப்பட்டு வேறு உலகிற்கு கொண்டு செல்லப்பட்டவுடன் கப்ரில் நடந்ததை அடியோடு மறந்து விடுகிறார்கள்.

ஒரு உலகில் நடந்ததை வேறொரு உலகிற்கு இடம் பெயரும் போது மறந்து விடுவார்கள் என்பது நமது கற்பனை அல்ல. மாறாக திருக்குர்ஆனிலேயே இதற்குச் சான்றுகள் உள்ளன.

172, 173. "ஆதமுடைய மக்களின்504 முதுகுகளிலிருந்து189 அவர்களின் சந்ததிகளை உமது இறைவன் வெளியாக்கி, அவர்களை அவர்களுக்கு எதிரான சாட்சிகளாக்கினான். நான் உங்கள் இறைவன் அல்லவா?'' (என்று கேட்டான்.) "ஆம்! (இதற்கு) சாட்சி கூறுகிறோம்'' என்று அவர்கள் கூறினர். "இதை விட்டும் நாங்கள் கவனமற்று இருந்து விட்டோம்'' என்றோ, "இதற்கு முன் எங்களின் முன்னோர்கள் இணை கற்பித்தனர்; நாங்கள் அவர்களுக்குப் பின் வந்த சந்ததிகளாக இருந்தோம்; அந்த வீணர்களின் செயலுக்காக எங்களை நீ அழிக்கிறாயா?'' என்றோ கியாமத் நாளில்1 நீங்கள் கூறாதிருப்பதற்காக (இவ்வாறு உறுதிமொழி எடுத்தோம்.)26

திருக்குர்ஆன் 7 : 172

முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களைப் படைத்தவுடன் அவர் வழியாகப் பிறக்கவுள்ள எல்லா சந்ததிகளையும் வெளிப்படுத்தி "நான் உங்கள் இறைவனல்லவா?'' என்று அல்லாஹ் கேட்டான். அனைவரும் "ஆம்'' என்றனர் என்பதை இவ்வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான்.

"ஆம்' எனக் கூறியவர்களில் நான், நீங்கள் மற்றும் அனைத்து மாந்தரும் அடங்குவோம்.

இவ்வாறு இறைவன் கேட்டதும் நாம் "ஆம்'' எனக் கூறியதும் நமக்கு நினைவில் இல்லை. இறைவன் திருக்குர்ஆன் மூலம் நமக்குச் சுட்டிக் காட்டிய பிறகும் நமக்கு அது நினைவுக்கு வருவதில்லை. இறைவன் கூறுவதால் அதை நாம் நம்புகிறோமே தவிர, நமக்கு நினைவுக்கு வந்து நாம் இதை நம்புவதில்லை.

ஒரு உலகிலிருந்து மறு உலகுக்கு மனிதன் இடம் பெயரும் போது முந்தைய உலகில் நடந்த அனைத்தையும், மனிதன் அடியோடு மறந்து விடுவான் என்பதை இவ்வசனத்திலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

எந்த உலகத்தில் வைத்து அல்லாஹ்  உறுதிமொழி வாங்கினானோ, அந்த உலகத்தில் நாம் மீண்டும் எழுப்பப்படுவோம். உறுதிமொழி வாங்கிய அந்த உலகத்தில் இறைவன் எடுத்த உறுதிமொழி நமக்கு நினைவுக்கு வரும் எனவும் இவ்வசனத்திலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

இறைவன் இருக்கிறான் என்பது எங்களுக்குத் தெரியாதே! என்றெல்லாம் கியாமத் நாளில் யாரும் மறுத்து விடக்கூடாது என்பதற்காகத் தான் அந்த உறுதிமொழி என்று அல்லாஹ் கூறுகிறான். இதிலிருந்து மறுமை நாளில் அந்த உறுதிமொழி நமக்கு நிச்சயமாக நினைவுக்கு வரும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

எந்த உலகில் வைத்து உறுதிமொழி எடுத்தோமோ அந்த உலகை விட்டு வந்ததும் நமக்கு அது நினைவில் இல்லை. மீண்டும் அங்கே சென்றதும் அது நமக்கு நினைவுக்கு வருகிறது என்பதிலிருந்து இந்த உண்மையை நாம் சந்தேகமற அறியலாம்.

கப்ருடைய வாழ்வு என்பது தனி உலகம், திரும்ப எழுப்பப்பட்டு இறைவன் முன்னால் நிறுத்தப்படுவது வேறு உலகம். எனவே, இவ்வுலகத்திலிருந்து இன்னொரு உலகத்துக்குச் செல்லும் போது "எங்கள் உறக்கத்திலிருந்து எழுப்பியவர் யார்?'' என்று கேள்வி கேட்பதை மட்டும் ஆதாரமாகக் கொண்டு கப்ரில் வேதனை இல்லை என்று மறுப்பது அறிவீனமாகும்.

ஒரு உலகிலிருந்து மறு உலகத்துக்கு இடம் பெயர்ந்தது மட்டுமின்றி மற்றொரு காரணத்தினாலும் உறக்கத்திலிருந்து எங்களை எழுப்பியவன் யார் என்று கேள்வியெழுப்பியிருக்கலாம்.

பொதுவாக மனிதன் கடுமையான அதிர்ச்சிக்கு ஆளாகும் போது அதற்கு முன்னிருந்த நிலையை மறந்துவிடுவான். திரும்ப உயிர்ப்பிக்கப்பட்டவுடன் மனிதன் காண்கின்ற பயங்கரமான நிகழ்வுகள் அதற்கு முன் அவன் அனுபவித்த தண்டனைகளை அடியோடு மறக்கச் செய்துவிடுகிறது.

"எங்கள் உறக்கத்திலிருந்து எங்களை எழுப்பியவர் யார்?'' என்று மனிதன் கேட்பதற்கு இதுவும் மற்றொரு காரணமாக அமைந்துவிடுகிறது.

இந்தக் காரணமும் நமது சொந்தக் கற்பனை அல்ல. மாறாக திருக்குர்ஆனிலேயே இக்காரணம் கூறப்பட்டுள்ளதற்கு சான்று உள்ளது.

1. மனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அந்த நேரத்தின்1 திடுக்கம் கடுமையான விஷயமாகும்.

2. நீங்கள் அதைக் காணும் நாளில் பாலூட்டும் ஒவ்வொருத்தியும், தான் பாலூட்டியதை (குழந்தையை) மறந்து விடுவாள். ஒவ்வொரு கர்ப்பிணியும், தன் கருவில் சுமந்ததை ஈன்று விடுவாள். போதை வயப்பட்டோராக மனிதர்களைக் காண்பீர்! அவர்கள் போதை வயப்பட்டோர் அல்லர். மாறாக அல்லாஹ்வின் வேதனை கடுமையானது.

திருக்குர்ஆன் 22:1,2

மனிதன் திரும்ப எழுப்பப்படும் நாளில் காணப்படும் அதிர்ச்சிகரமான நிலைமை, அனைத்தையுமே மறக்கடிக்கச் செய்வதாக இருக்கும். பெற்ற தாய் பிள்ளையைக் கூட மறக்குமளவுக்கு கடுமையானதாக இருக்கும்.

திரும்ப எழுப்பப்படும் மனிதன் அந்த அதிர்ச்சிகரமான நிலையைக் காணும் போது பேரதிர்ச்சிக்கு உள்ளாகிறான். அத்தகைய அதிர்ச்சியின் போது அவன் கூறும் வார்த்தை நூறு சதவிகிதம் உண்மையானதாக இருக்காது. மறுமை நாளின் கொடூரமான நிலை அதற்கு முன் அவன் பட்ட வேதனைகளை மறக்கடிக்கச் செய்து விடுகிறது. அதனால் தான் கப்ர் வேதனையை மறந்து "உறக்கத்திலிருந்து எழுப்பியவர் யார்?'' எனக் கூறுகிறான்.

அதிர்ச்சிகரமான நிலையை அடைந்தவனின் கூற்றாகத் தான் விளக்கவுரைக்கு நாம் எடுத்துக் கொண்ட வசனம் அமைந்துள்ளது. அல்லாஹ்வின் கூற்றாக அமையவில்லை. இறந்தவர்கள் உறங்கிக் கொண்டு இருப்பதாக அல்லாஹ் எங்கேயும் கூறவில்லை.

அதிர்ச்சிக்கு ஆளானவன் இவ்வாறு புலம்புவதாகத் தான் அல்லாஹ் எடுத்துக் காட்டுகிறான்.

மறுமையில் இத்தகைய காஃபிர்கள் புலம்புவதை ஆதாரமாகக் கொண்டவர்கள் நபிகள் நாயகத்தின் கூற்றை மறுப்பது தான் விந்தையிலும் விந்தை.

எனவே கப்ருடைய வேதனையை விடப் பலமடங்கு கடுமையான நிலையைக் கண்ட அதிர்ச்சியின் புலம்பலைத் தான் அல்லாஹ் இங்கு எடுத்துக் காட்டுகிறான் என்பதில் சந்தேகமில்லை.

மேலும் மறுமை நாளில் காஃபிர்கள் இது மட்டுமின்றி இன்னும் பல உண்மைக்கு மாற்றமான கூற்றுக்களைத் தான் கூறுவார்கள். அவர்கள் கூறுவதை அல்லாஹ் எடுத்துக் காட்டுவதால் அதுவே உண்மை நிலை என்று நம்புவதை விட பெரிய அறியாமை எதுவும் இருக்க முடியாது.

இதை நாம் கற்பனையாகக் கூறவில்லை. திருக்குர்ஆன் தான் இவ்வாறு கூறுகிறது.

55. யுகமுடிவு1 ஏற்படும் நாளில் சிறிது நேரம் தவிர தாம் வாழவில்லை என்று குற்றவாளிகள் சத்தியம் செய்து கூறுவார்கள். இவ்வாறே அவர்கள் திசை திருப்பப்பட்டு வந்தனர்.

திருக்குர்ஆன் 30:55

மறுமையில் எழுப்பப்படும் இந்தக் காஃபிர்கள் உறக்கத்திலிருந்து விழித்ததாக மட்டும் கூற மாட்டார்கள். மாறாக, ஒரு மணி நேரம் கூட உலகில் அல்லது கப்ரில் தங்கியிருக்கவில்லை எனவும் கூறுவார்கள். அதுவும் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறுவார்கள் என்று இவ்வசனங்கள் கூறுகின்றன. இதை ஆதாரமாகக் கொண்டு மனிதன் இறந்து ஒரு மணி நேரத்தில் கியாமத் நாள் வந்து விடும் என்று இவர்கள் கூறுவார்களா? அல்லது இவ்வுலகில் சிறிது நேரமே வாழ்ந்தார்கள் என்று கூறுவார்களா? அதிர்ச்சியின் புலம்பல் என்பார்களா?

நிச்சயமாக அதிர்ச்சியின் புலம்பல் என்றே கூறுவார்கள். இது புலம்பல் என்றால் "தூக்கத்திலிருந்து எழுப்பியது யார்?'' என்று இவர்கள் புலம்புவதை மட்டும் எப்படி ஆதாரமாகக் கொள்கிறார்கள்.

காஃபிர்கள் அதிர்ச்சியில் புலம்புவதை ஆதாரமாகக் கொண்டு கப்ரு வாழ்க்கையை மறுப்பதை விட பெரிய அறிவீனம் எதுவும் இருக்க முடியாது.

காஃபிர்கள் உலகில் நடந்த எத்தனையோ விஷயங்களை மறுமை நாளில் மறுப்பார்கள். அவர்களுக்கு எதிராக அவர்களின்  கைகளும், கால்களும் சாட்சியமளிக்கும் என்றெல்லாம் திருக்குர்ஆன் கூறுகிறது. காஃபிர்கள் இவற்றை மறுப்பதால் அவர்கள் அக்காரியங்களைச் செய்யவில்லை என்று அறிவுடைய யாரேனும் விளங்கிக் கொள்வார்களா?

எனவே, காஃபிர்கள் இவ்வாறு கூறுவதிலிருந்து கப்ருடைய வாழ்வு இல்லை  எனக் கூறுவது அறியாமை என்பதில் சந்தேகமில்லை.

மறுமையில் வழங்கப்படும் தண்டனை தவிர வேறு தண்டனை இருப்பதாக குர்ஆனில் கூறப்படவில்லை என்ற இவர்களின் வாதமும் அறியாமையின் வெளிப்பாடு தான். "கப்ருடைய வேதனை' என்ற வார்த்தை தான் குர்ஆனில் கூறப்படவில்லை. அத்தகைய வேதனை உள்ளது பற்றி வேறு வார்த்தைகளால் கூறப்பட்டுள்ளது. இதை அறியாத காரணத்தினால் தான் இவ்வாறு வாதிடுகின்றனர்.

45. எனவே அவர்கள் சூழ்ச்சி செய்த தீங்குகளை விட்டும் அவரை அல்லாஹ் காப்பாற்றினான். ஃபிர்அவ்னின் ஆட்களை தீய வேதனை சூழ்ந்து கொண்டது.

46. காலையிலும், மாலையிலும் நரக நெருப்பில் அவர்கள் காட்டப்படுவார்கள்.349 யுகமுடிவு நேரம்1 வரும்போது ஃபிர்அவ்னின் ஆட்களைக் கடுமையான வேதனையில் நுழையச் செய்யுங்கள்! (எனக் கூறப்படும்)

திருக்குர்ஆன் 40:45,46

கியாமத் நாள் வருவதற்கு முன், ஃபிர்அவ்னுடைய கூட்டத்தினர் நரக நெருப்பின் முன்னால் காலையிலும், மாலையிலும் அதாவது தினந்தோறும் காட்டப்படுகிறார்கள் என்று இவ்வசனங்கள் கூறுகின்றன. கியாமத் நாளில் இதை விடக் கடுமையான வேதனையுள்ளது எனவும் கூறப்படுகிறது. கியாமத் நாளில் கடுமையான வேதனை செய்யப்படுவதற்கு முன் காலையிலும், மாலையிலும் அவர்கள் அன்றாடம் வேதனை செய்யப்படுகிறார்கள் என்று தெளிவாகவே இவ்வசனங்கள் கூறுகின்றன.

இதற்கு விளக்கமாகத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், கப்ருடைய வேதனை பற்றி விளக்கமளித்துள்ளனர். இத்தகைய ஹதீஸ்கள் யாவும் இவ்வசனத்தின் விளக்கவுரைகளே தவிர முரணானவை அல்ல.

சில அதிமேதாவிகள் ஃபிர்அவ்னுடைய கூட்டத்திற்கு மட்டும் உள்ள சிறப்புத் தண்டனை இது; மற்றவர்களுக்கு இது இல்லை என்கின்றனர்.

மற்றவர்களுக்கு இது இல்லை என்று கூறுவதற்கு காஃபிர்கள் மறுமையில் புலம்புவதைத் தவிர இவர்களிடம் வேறு ஆதாரம் கிடையாது.

50. (ஏகஇறைவனை) மறுப்போரின் முகங்களிலும், முதுகுகளிலும் வானவர்கள் அடித்து அவர்களைக் கைப்பற்றும்போது,165 "சுட்டெரிக்கும் வேதனையை அனுபவியுங்கள்!''166 என்று கூறுவதை நீர் பார்க்க வேண்டுமே!

51. நீங்கள் செய்த வினையே இதற்குக் காரணம். அடியார்களுக்கு அல்லாஹ் அநீதி இழைப்பவன் அல்லன்.

52. ஃபிர்அவ்னின் ஆட்களுக்கும், அவர்களுக்கு முன் சென்றோருக்கும் ஏற்பட்ட கதியைப் போலவே (இவர்களுக்கும் ஏற்படும்). அவர்கள் அல்லாஹ்வின் சான்றுகளை மறுத்தனர். அவர்களது பாவங்களின் காரணமாக அவர்களை அல்லாஹ் தண்டித்தான். அல்லாஹ் வலிமை மிக்கவன்; கடுமையாகத் தண்டிப்பவன்.

திருக்குர்ஆன் 8:50, 51, 52

மலக்குகள், அக்கிரமக்காரர்களின் உயிர்களைக் கைப்பற்றும் போது அவர்களை அடிப்பார்கள். மேலும், "சுட்டெரிக்கும் வேதனையைச் சுவையுங்கள்'' எனக் கூறுவார்கள் என்று கூறுகின்ற இறைவன் "ஃபிர்அவ்னின் கூட்ட்த்தினருக்குச் செய்யப்படுவது போல்'' எனவும் கூறுவதை அறிவுடையோர் சிந்திக்க வேண்டும்.

கப்ர் வேதனை பற்றி ஃபிர்அவ்ன் கூட்டத்தார் விஷயமாக மட்டுமே இறைவன் குறிப்பிட்டுள்ளான். மற்றவர்களுக்கு இது இருக்காது என்று யாரும் கருதி விடக்கூடாது என்பதற்காகவே இவ்வசனத்தில் அற்புதமாக இவ்வார்த்தையை இறைவன் பயன்படுத்தியுள்ளான்.

உயிர்களைக் கைப்பற்றிய பின்னர் அளிக்கப்படும் வேதனை ஃபிர்அவ்னுடைய கூட்டத்தினருக்கு அளிக்கப்படும் வேதனை போன்றதாகும் எனக் கூறி மற்றவர்களுக்கும் கப்ரு வேதனை உள்ளது என்று இறைவன் வலியுறுத்திக் கூறுகிறான்.

எனவே கப்ர் வேதனை குர்ஆனில் இல்லை எனக் கூறுவதும், அது குர்ஆனுக்கு எதிரானது என வாதிடுவதும் குர்ஆனை அறியாதவர்களின் கற்பனையில் உதித்ததாகும் என்பதை இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

சிலர் அதிக காலமும் சிலர் குறைந்த காலமும் தண்டிக்கப்படுவது என்ன நியாயம்? என்ற கேள்வியும் தவறாகும். இறைவனின் ஏற்பாடு இது தான் என்பது தெரிந்த பின்னர் இவ்வாறு கேள்வி கேட்கக் கூடாது.

அப்படிக் கேட்டால், அதற்கு நியாயமான விடையும் குர்ஆனிலேயே கூறப்பட்டுள்ளது. நூறு வருடங்களுக்கு முன் ஒருவன் ஒரு பாவத்தைச் செய்கிறான். இன்றைக்கு ஒருவன் அதே பாவத்தைச் செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம். பாவத்தைப் பொறுத்தவரை இரண்டும் ஒரே மாதிரியானவை என்றாலும் குற்றத்தில் இருவருக்கும் இடையே வித்தியாசம் உள்ளது.

நூறு வருடங்களுக்கு முன் பாவம் செய்தவன் தனக்கு அடுத்து வருபவன் அதே பாவத்தைச் செய்திட தைரியமளித்து விட்டுச் செய்கிறான். மற்றவன் அப்பாவத்தைச் செய்வதற்கு முன்மாதிரியாகவும் திகழ்கிறான்.

நூறு வருடத்திற்குப் பின், நாம் செய்யும் அந்தப் பாவத்துக்கு அவன் வழிகாட்டியாக இருந்துள்ளான். நூறு வருடத்தில் நடைபெற்ற அதே பாவத்துக்கும் வழிகாட்டியாக இருந்துள்ளான். எனவே இவன் செய்த தப்புக்கும் தண்டிக்கப்பட வேண்டும். இத்தனை பேரைக் கெடுத்ததற்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும்.

கப்ரு வேதனையின் மூலமே இத்தகைய நீதியை வழங்க முடியும்.

ஆதமுடைய ஒரு மகன் செய்த கொலை தான் உலகில் நடக்கும் எல்லாக் கொலைகளுக்கும் முன்னுதாரணம். அவன் தான் கொலையாளிகளின் வழிகாட்டி. எனவே, அவன் மற்ற எவரையும் விட அதிக நாட்கள் தண்டனை அனுபவிப்பது தான் சரியான நீதியாகும்.

எத்தனை பேரைக் கெடுத்தார்கள் என்ற வகையில் சிந்தித்தால் ஒருவர் அதிக நாட்களும், இன்னொருவர் குறைவான நாட்களும் கப்ரில் தண்டிக்கப்படுவது அநீதி என்று அறிவுடையோர் கூற மாட்டார்கள்.

25. கியாமத் நாளில்1 முழுமையாகத் தமது சுமைகளையும், அறிவின்றி யாரை இவர்கள் வழிகெடுத்தார்களோ அவர்களின் சுமைகளையும்254 சுமப்பதற்காக (இவ்வாறு கூறுகின்றனர்) கவனத்தில் கொள்க! அவர்கள் சுமப்பது மிகவும் கெட்டது.

திருக்குர்ஆன் 16:25

13. அவர்கள் தமது சுமைகளையும், தமது சுமைகளுடன் வேறு சில சுமைகளையும் சுமப்பார்கள்.254 அவர்கள் இட்டுக்கட்டியது பற்றி கியாமத் நாளில்1 விசாரிக்கப்படுவார்கள்.

திருக்குர்ஆன் 29:13

வழிகெடுத்த பாவத்தையும் ஒருவன் சுமந்தாக வேண்டும் என்று இறைவன் கூறுவதால் இவர்களின் இந்த வாதமும் அடிப்பட்டுப் போகிறது.

எனவே, குர்ஆனை முழுமையாக நம்புபவர்கள் கப்ருடைய வேதனையை ஒருக்காலும் மறுக்க மாட்டார்கள்.

ஆண்கள் தங்கம் அனிய குர்ஆன் அனுமதிக்கிறதா?

(மாதமிருமுறை ஒற்றுமை இதழில் தேர்வு செய்யப்பட்ட குர்ஆன் வசனங்களுக்கு பீஜே எழுதிய விளக்கம். இது ஆறாவது தொடர்)

14. பெண்கள், ஆண் மக்கள், திரட்டப்பட்ட தங்க வெள்ளிக் குவியல்கள், அழகிய குதிரைகள், கால்நடைகள், விளைநிலங்கள் ஆகிய மனம் கவருபவற்றை நேசிப்பது மனிதர்களுக்குக் கவர்ச்சியாக்கப்பட்டுள்ளது. இவை இவ்வுலக வாழ்க்கையின் வசதிகள். அல்லாஹ்விடம் அழகிய புகலிடம் உள்ளது.88

திருக்குர்ஆன்: 3:14

இவ்வுலகில் எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் மனோ இச்சைப்படி வாழ்வதற்குத் தான் பெரும்பாலோர் விரும்புகின்றனர். இறை நம்பிக்கையாளர்களுக்கும் இத்தகைய விருப்பம் இருந்தாலும் இறைவனுக்காக அவ்விருப்பத்தைத் தியாகம் செய்து வாழ்கின்றனர்.

எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாத வாழ்க்கையை அல்லாஹ்வே அனுமதித்தால் நாமும் மற்றவர்களைப் போல வாழலாமே என எண்ணுவோர் அதற்கேற்ப யாரேனும் மார்க்கத் தீர்ப்பு தரமாட்டார்களா? என்று எதிர்பார்க்கின்றனர். இத்தகையோரின் பலவீனத்தையும், அறியாமையையும் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட ஒரு கும்பல் இவ்வசனத்தை தங்களுக்குச் சாதகமாக்கி அப்பாவிகளை வழி தவறச் செய்திட முயல்கின்றனர்.

ஆண்கள் தங்க நகைகள் அணிவதும், தங்க, வெள்ளிப் பாத்திரங்களில் ஆண், பெண் இரு பாலரும் உண்பதும், பருகுவதும் தடை செய்யப்பட்டிருப்பதை நாம் அறிவோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்து விட்டதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.

ஆனால் குர்ஆன் மட்டும் போதும் என வாதிடும் வழிகேடர்கள் இவ்வசனத்தை ஆதாரமாகக் காட்டி அல்லாஹ் இவ்வசனத்தில் தங்கத்தை அனுமதித்திருக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) எப்படித் தடுக்க முடியும்? குர்ஆனுக்கு எதிரான இத்தடையை நாம் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

எனவே ஆண்கள் தங்க நகைகளை அணியலாம். தங்கம் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களில் உண்ணலாம்! பருகலாம்! என்றெல்லாம் வாதிடுகின்றனர். தங்க நகை அணிந்து மற்றவர்களைப் போல் வாழ ஆசைப்படுவோருக்கு இவ்வாதம் இனிப்பாகத் தோன்றலாம். நபிகள் நாயகத்தின் கட்டளையை மறுத்தாவது தங்கள் மனோ இச்சைப்படி நடக்க விரும்பலாம்.

ஆனால் இவர்கள் எடுத்து வைக்கும் வாதத்துக்கு இவ்வசனத்தில் இடம் இருக்கிறதா? என்றால் நிச்சயமாக இல்லை.

குர்ஆனைப் பற்றிய அறிவோ, தெளிவான சிந்தனையோ அற்றவர்கள் தான் இவ்வாறு வாதிட முடியும் என்பதை அறிவுடையோர் புரிந்து கொள்வார்கள்.

*             இவற்றை விரும்புவது மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது.

*             இவை இவ்வுலகின் அனுபவப் பொருட்களாகும்

என்ற இரு சொற்றொடர்ககள் தான் இவர்களின் வாதத்திற்கு அடிப்படை.

"அழகாக்கப்பட்டுள்ளது'' என்ற பட்டியலில் தங்கத்தையும் அல்லாஹ் சேர்த்திருக்கும் போது தங்க நகைகள் அணிவதை எப்படித் தடை செய்ய முடியும்?

அல்லாஹ் எதை "அழகாகக் கப்பட்டுள்ளது'' என்று கூறுகிறானோ அதைக் கூடாது என்று கூறுவதை எவ்வாறு ஏற்க முடியும்? என்று இவர்கள் கேட்கின்றனர்.

இன்னும் சொல்வதானால் பெண்களை விரும்புவது அழகாக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுவதிலிருந்து இவ்வசனம் ஆண்களையே முன் நிறுத்திப் பேசுகிறது.

இதை அவர்கள் கவனிக்காததால் இந்தக் கோணத்தில் தமது வாதத்தை அவர்கள் வலிமைப் படுத்தவில்லை. இதையும் கூட நாம் சேர்த்துக் கொள்வோம்.

ஆண்களையே அழைத்து தங்கம் அனுமதிக்கப்பட்டுள்ளது என இவ்வசனம் கூறுவதால் ஆண்களுக்கு தங்கம் அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது உறுதி. இதற்கு எதிராக நபிகள் நாயகத்தின் தடை அமைந்துள்ளதால் அதை ஏற்க வேண்டியதில்லை என்று அவர்கள் சார்பாக அவர்கள் வாதத்தை நாம் வலிமைப்படுத்தி விட்டு அதற்கான விளக்கத்தைக் காண்போம்.

"அழகாக்கப்பட்டுள்ளது'' என்ற வாசக அமைப்பு "அனுமதிக்கப்பட்டுள்ளது'' என்ற பொருளில் அமைந்துள்ளதாக இவர்கள் கருதுவதே அடிப்படையில் தவறான தாகும்.

திருக்குர்ஆனுடைய வழக்கில் அழகாக்கப்பட்டுள்ளது என்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்படாதவைகளுக்கும் பல இடங்களில் பயன் படுத்தப்பட்டுள்ளது.

இத்தகைய வார்த்தை பயன் படுத்தப்பட்டுள்ள சில வசனங்களை நாம் பார்ப்போம்.

108. அல்லாஹ்வையன்றி யாரிடம் அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ அவர்களை ஏசாதீர்கள்! அவர்கள் அறிவில்லாமல் வரம்பு மீறி அல்லாஹ்வை ஏசுவார்கள்.170 இவ்வாறே ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அவர்களது செயலை அழகாக்கிக் காட்டினோம். பின்னர் அவர்களின் மீளுதல் அவர்களின் இறைவனிடமே உள்ளது. அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் அவர்களுக்கு அறிவிப்பான்.

திருக்குர்ஆன்: 6:108

122. இறந்தவனை உயிர்ப்பித்து, மக்களிடையே நடந்து செல்வதற்காக அவனுக்கு ஒளியையும் ஏற்படுத்தினோமே அவன், இருள்களில்303 கிடந்து அதிலிருந்து வெளியேற முடியாமல் உள்ளவனைப் போல் ஆவானா? இவ்வாறே (நம்மை) மறுப்போருக்கு அவர்கள் செய்து வருபவை அழகாக்கப்பட்டுள்ளன.

திருக்குர்ஆன்: 6:122

37. (மாதத்தின் புனிதத்தை) தள்ளிப் போடுவது (இறை)மறுப்பை அதிகப்படுத்துவதாகும். இதன் மூலம் (ஏகஇறைவனை) மறுப்போர் வழிகெடுக்கப்படுகின்றனர். ஒரு வருடம் அதன் புனிதத்தை நீக்கி விடுகின்றனர். மறு வருடம் அதற்குப் புனிதம் வழங்குகின்றனர். அல்லாஹ் புனிதமாக்கிய எண்ணிக்கையைச் சரி செய்வதற்காக அல்லாஹ் புனிதப்படுத்தியதைப் புனிதமற்றதாக்கி விடுகின்றனர். அவர்களின் தீய செயல்கள் அவர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளன. (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் வழிகாட்ட மாட்டான்.

திருக்குர்ஆன்: 9:37

12. மனிதனுக்குத் தீங்கு ஏற்படுமானால் படுத்தவனாகவோ, அமர்ந்தவனாகவோ, நின்றவனாகவோ நம்மிடம் பிரார்த்திக்கிறான். அவனது துன்பத்தை அவனை விட்டு நாம் நீக்கும்போது அவனுக்கு ஏற்பட்ட துன்பத்திற்காக நம்மை அழைக்காதவனைப் போல் நடக்கிறான். இவ்வாறே வரம்பு மீறியோருக்கு அவர்கள் செய்து வந்தவை அழகாக்கப்பட்டுள்ளன.

திருக்குர்ஆன்: 10:12

4. மறுமையை நம்பாமல் இருப்போரின் செயல்களை அவர்களுக்கு அழகாக்கிக் காட்டுகிறோம். எனவே அவர்கள் தட்டழிகின்றனர்.

திருக்குர்ஆன்: 27:4

இவ்வாறே ஃபிர்அவ்னுக்கு அவனது தீய செயல் அழகாக்கிக் காட்டப்பட்டது. (நேர்)வழியை விட்டும் அவன் தடுக்கப்பட்டான். ஃபிர்அவ்னின் சூழ்ச்சி அழிவில் தான் முடிந்தது.26

திருக்குர்ஆன்: 40:37

இது போல் இன்னும் பல வசனங்கள் உள்ளன. இவ்வசனங்கள் அனைத்திலும் 3:14 வசனத்தில் பயன்படுத்தப்பட்டது போன்ற அழகாக்கப்பட்டுள்ளது என்ற வாசகம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களின் வாதத்தின் அடிப்படையில் இவ்வசனங்களைப் புரிந்து கொண்டால் என்னவாகும்?

ஒருவன் இஸ்லாத்தை விட்டே வெளியேறலாம். அதையும் அல்லாஹ் அழகாக்கியதாக மேற்கண்ட வசனங்களை எடுத்துக் காட்டலாம்.

நானே கடவுள் என்று கூட ஒருவன் வாதிடலாம். ஏனெனில் அவ்வாறு கூறிய ஃபிர்அவ்னுக்கு அவனுடைய செயல் அழகாக்கப்பட்டதாக அல்லாஹ் கூறுகிறான். எனவே அவ்வாறு கூறுவதற்கு அனுமதி உள்ளது என்று வாதிடலாம்.

எல்லா தீய செயல்களிலும் ஒருவர் ஈடுபட்டு இதற்கு அனுமதியுள்ளது என்று சாதிக்கலாம். ஏனெனில் தீய செயல்கள் அழகாக்கப்பட்டதாக மேற்கண்ட வசனங்களில் கூறப்படுவதால் அதற்கு அனுமதியுள்ளது என்பது தான் பொருள் என்று கூறலாம்.

இவ்வாறு கூறுபவனை ஞான சூன்யம் என்போம். இத்தகைய ஞான சூன்யங்கள் தான் குர்ஆன் மட்டும் போதும் என்போர். குர்ஆனைப் பற்றிய அரிச்சுவடி கூட அறியாதவர்கள், அளிக்கும் கிறுக்குத் தனமான விளக்கத்தின் விபரீதங்கள் இவை.

"அழகாக்கப்பட்டுள்ளது'' என்பதன் பொருள் "அனுமதிக்கப்பட்டது'' என்பது அல்ல.

மனிதர்களுக்கு அழகானதாகத் தோன்றுகிறது என்பது தான் பொருள். அவற்றில் அனுமதிக்கப்பட்டவையும் இருக்கலாம். அனுமதிக்கப்படாதவையும் இருக்கலாம்.

இந்தச் சாதாரண உண்மையைக் கூட இவர்கள் விளங்கவில்லை.

இவர்கள் சுட்டிக்காட்டும் அதே வசனத்தையே நாம் ஆய்வு செய்து பார்ப்போம். "பெண்களை விரும்புவது அழகாக்கப்பட்டுள்ளது'' என்று அல்லாஹ் கூறுகிறான். எந்தப் பெண்ணை வேண்டுமானாலும்  காதலிக்க அனுமதியுள்ளது என்று இவர்கள் கூறுவார்களா? ஆண்கள் இயல்பிலேயே பெண்களை விரும்புகிறார்கள். மனைவியை அவ்வாறு காதலித்தால் அது அனுமதிக்கப்பட்டதாக ஆகின்றது. மனைவியல்லாதவளை அடுத்தவன் மனைவியை காதலித்தால் அது அனுமதிக்கப்படாததாக ஆகிவிடுகிறது. அனுமதிக்கப்படாததாக இருந்தாலும் அதுவும் சிலருக்கு அழகானதாகத் தான் தெரிகின்றது. அழகாக்கப்பட்டுள்ளது என்பது அனுமதிக்கப்பட்டுள்ளது என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படவே இல்லை என்பது இதிலிருந்து தெரிகிறது.

ஆண் மக்களை விரும்புவது அழகாக்கப்பட்டுள்ளது என இரண்டாவதாகக் கூறப்படுகிறது. இயல்பிலேயே தங்களுக்கு ஆண் குழந்தை வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர் என்பது தான் இதன் கருத்து. ஆண் மக்களைப் பற்றி அழகாக்கப்பட்டுள்ளது என்று அல்லாஹ் கூறுவதால் பெண் மக்கள் பெறுவது ஹராம் என்று யாருமே விளங்கிக் கொள்ள மாட்டார்கள்.

இது போல் தான் இவ்வசனத்தில் கூறப்பட்டவற்றை மனிதர்கள் விரும்புகிறார்கள் என்பது மட்டும் தான் இங்கே கூறப்பட்டுள்ளதே தவிர அனுமதிக்கப்பட்டது எனக் கூறப்படவில்லை. அதுபோல தங்கம் மனிதர்களை ஈர்க்கிறது. அதற்கு ஆசைப்படுகிறார்கள். அதுவும் மனித இயல்பு தான். அனுமதிக்கப்பட்டது என்பது பொருளல்ல.

இவ்விடத்தில் இன்னொரு அம்சத்தையும் நாம் சுட்டிக் காட்டுவது பொருத்தமானதாக இருக்கும்.

தங்கம், வெள்ளியைக் குறிப்பிடும் போது தங்கம் வெள்ளி ஆபரணங்கள் என்று கூறவில்லை. குவியல்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். அனுமதிக்கப்பட்டவற்றின் பட்டியல் தான் இவ்வசனம் என்று ஒரு வாதத்துக்காக வைத்துக் கொண்டாலும் தங்கம் வெள்ளியைக் குவியலாக - சொத்தாக வைத்துக் கொள்ளலாம் என்று தான் கூறப்படுகிறதே தவிர அணிந்து கொள்ளலாம் என்று கூறவில்லை.

ஆண்கள் தங்கள் லாக்கரில் பீரோக்களில் தங்கம் வெள்ளிகளைச் சேர்த்து வைத்துக் கொள்வது பற்றி எந்தத் தடையும் இல்லை. ஆண்கள் அணிவதற்குத் தான் தடையுள்ளது. இவ்வசனம் அணிவது பற்றிப் பேசாததால் நபிகள் நாயகத்தின் தடை இவ்வசனத்தில் உள்ள அனுமதிக்கு எதிரானது என்ற வாதம் அடிப்பட்டு போகும்.

ஒரு வாதத்திற்குத் தான் இவ்வாறு கூறுகிறோம். "அழகாக்கப்பட்டது' என்பதற்கு "அனுமதிக்கப்பட்டது' என்று பொருள் கொள்வதே தவறு என்பதை நினைவில் கொள்க.

பெண்கள் அழகாக்கப்பட்டுள்ளனர் என்றால் அவர்களை அறுத்து பிரியாணி போடலாம் என்று புரிந்து கொள்ள மாட்டோம். தங்கக் குவியல் என்று கூறாமல் தங்க நகை அழகாக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தால் அணிவது பற்றி பேசுவதாக கருதுவதில் அர்த்தம் உள்ளது.

தங்கக் குவியல்கள் என்பது மனிதர்களின் சொத்துச் சேர்க்கும் ஆசையைக் குறிப்பதற்கான சொல் என்பதை இவர்கள் விளங்க வேண்டும்.

இவ்வுலகின் அனுபவப் பொருட்கள் என்று அல்லாஹ் கூறுகிறானே! அதிலிருந்து இவை அனுமதிக்கப்பட்டவை என்று தெரியவில்லையா? எனவும் இவர்கள் வாதிடுகின்றனர். இதுவும் குர்ஆனைப் பற்றிய அறிவு இல்லாததால் எழுப்பப்படும் வாதமேயாகும்.

"இவ்வுலகின் அனுபவப் பொருட்கள்'' என்ற வாசக அமைப்பு ஹலால், ஹராம்  பற்றிப் பேசுவது அல்ல. இவற்றையெல்லாம் மனிதர்கள் அனுபவிக்கிறார்கள். இவற்றில் அனுமதிக்கப்பட்டவையும் இருக்கலாம். அனுமதிக்கப்படாதவையும் இருக்கலாம்.

இதை வெறும் அனுமானத்தில் நாம் கூறவில்லை. "இவ்வுலகின் அனுபவப் பொருட்கள்'' என்ற இதே வாசக அமைப்பு திருக்குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளதை ஆய்வு செய்தே இவ்வாறு கூறுகிறோம்.

23. அவர்களை அவன் காப்பாற்றும்போது, நியாயமின்றி பூமியில் அட்டூழியம் செய்கின்றனர். மனிதர்களே! உங்கள் அட்டூழியம் உங்களுக்கே எதிரானது. இவ்வுலக வாழ்வில் சில வசதிகள் உண்டு. பின்னர் நம்மிடமே உங்கள் மீளுதல் உண்டு. நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அப்போது உங்களுக்கு அறிவிப்போம்.

திருக்குர்ஆன்: 10:23

60. உங்களுக்கு எந்தப் பொருள் வழங்கப்பட்டாலும் அது இவ்வுலக வாழ்க்கையின் வசதியும், அலங்காரமுமாகும். அல்லாஹ்விடம் இருப்பதே சிறந்தது; நிலையானது. விளங்க மாட்டீர்களா?

திருக்குர்ஆன்: 28:60, 42:36

எவையெல்லாம் கொடுக்கப்பட்டனவோ அவையாவும் அனுபவப் பொருட்கள் என்று இவ்வசனங்கள் கூறுவதால் தனக்கு ஹராமான வழியில் கிடைத்தவற்றை ஹலால் என்று வாதிட முடியுமா? அவ்வாறு வாதிடுவதற்கும் இவர்களின் வாதத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

இவர்கள் எடுத்துக் காட்டுகின்ற வசனம் ஹலால், ஹராம் பற்றிப் பேசுகின்ற வசனம் அல்ல. மாறாக மனிதர்களின் பலவீனங்களையும், இயல்பையும் படம் பிடித்துக் காட்டும் வசனங்களாகும். தங்கம் அனுமதிக்கப்பட்டது என்றோ அனுமதிக்கப்படவில்லை என்றோ இவ்வசனம் கூறவில்லை.

எனவே நபிகள் நாயகம் இவ்வசனத்தில் அனுமதிக்கப்பட்டதைத் தடை செய்யவில்லை என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

நபிகள் நாயகத்துக்கு எழுதப்படிக்கத் தெரியுமா?

(ஒற்றுமை மாதமிருமுறை இதழில் தேர்வு செய்யப்பட்ட குர்ஆன் வசனங்களுக்கு பீஜே எழுதிய விளக்கவுரை, நான்காவது மற்றும் ஐந்தாவது தொடர் இது.)

48. (முஹம்மதே!) இதற்கு முன் எந்த வேதத்திலிருந்தும்4 நீர் வாசிப்பவராக இருந்தில்லை. (இனியும்) உமது வலது கையால் அதை எழுதவும் மாட்டீர்!152&312 அவ்வாறு இருந்திருந்தால் வீணர்கள் சந்தேகம் கொண்டிருப்பார்கள்.

திருக்குர்ஆன்: 29:48

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுதப் படிக்க அறிந்திருக்கவில்லை என்பதை முஸ்லிம்கள் அறிந்து வைத்திருக்கின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நடந்தால் பாதம் தரையில் படாது!

அவர்களின் நிழல் தரையில் படாது!

இருளில் நடந்து சென்றால் வீதியெங்கும் வெளிச்சம் பரவும்!

என்றெல்லாம் கட்டுக்கதைகளைக் கூறி சிலர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் புகழ்வதைக் (?) காண்கிறோம். அன்பின் மேலீட்டால் இவர்கள் இப்படிச் செய்தாலும் இதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை. உண்மையான வரலாறுகளின் அடிப்படையில் தான் புகழவேண்டும்.

யார் என்னைப் பற்றி ஒரு செய்தியைப் பொய்யாகக் கூறுகிறாரோ அவர் சென்றடையும் இடம் நரகம் தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்து விட்டனர்.

அறியாத மக்கள் இத்தகைய கட்டுக்கதைகளின்  மூலம் நபிகள் நாயகத்துக்குச் சிறப்புச் சேர்க்க முயல்வது போல் "நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எழுதவும் வாசிக்கவும் தெரியும்'' என்று படித்தவர்கள் தங்கள் பங்குக்கு இட்டுக்கட்டிக் கூறி வருகின்றனர்.

படிப்பறிவைக் கொண்டே மனிதர்களின் தகுதிகள் வரையறை செய்யப்படும் காலத்தில் இவர்கள் வாழ்வதால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் படிக்காதவர் என்று சொல்ல இவர்கள் கூச்சப்படுகிறார்கள். இவ்வாறு கூறினால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சிறப்புக்குப் பங்கம் ஏற்பட்டுவிடுமோ என்று கருதிக் கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எழுதவும், படிக்கவும் தெரியும் என்று வாதிட்டு வருகின்றனர்.

இதற்கு ஆதரவாக சில சான்றுகளையும் எடுத்து வைக்கின்றனர். இந்தச் சான்றுகள் சரியானவை தானா என்பதை ஆய்வு செய்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு படிப்பறிவு இல்லாமல் இருப்பது உண்மையில் தகுதிக் குறைவு தானா? என்பதை ஆராய்வோம்.

படிப்பறிவின்மை பொதுவாக தகுதிக் குறைவாகவே கருதப்பட்டாலும் நபிகள் நாயகத்துக்கு இது தகுதிக் குறைவை ஏற்படுத்தாது ஏனெனில், தகுதிக் குறைவாகக் கருதப்படும் சில விஷயங்கள் சில இடங்களில் தகுதியை அதிகப்படுத்தக் கூடியதாக அமைந்து விடும்.

மனிதர்களுக்கு படிப்பறிவு கூடுதல் தகுதியை ஏற்படுத்தக் கூடியதாக இருந்தாலும் அல்லாஹ்வின் தூதராக நியமிக்கப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு படிப்பறிவு இல்லாமல் இருப்பது தான் சிறப்பாகும்.

எனக்கு இறைவனிடமிருந்து தூதுச் செய்தி வருகிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அந்தச் செய்தி மிகவும் உயர்ந்த இலக்கியத் தரத்தில் அமைந்திருந்தது. இது போல் யாராலும் இயற்ற முடியாது என்று அறைகூவல் விடும் அளவுக்கு அதன் தரம் இருந்தது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் படித்தவராக இருந்திருந்தால் அவர்களின் படிப்புத் திறமையினால் இதை இயற்றியுள்ளார் என்று தான் மக்கள் நினைத்திருப்பார்கள். இதனால் நபிகள் நாயகம் திறமைசாலி என்பது நிரூபணமாகுமே தவிர அல்லாஹ்வின் தூதர் என்பது நிரூபணமாகாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரபு மொழிப் பண்டிதர் என்பதை விட அல்லாஹ்வின் தூதர் என்பது தான் பல்லாயிரம் மடங்கு சிறந்த தகுதியாகும். அவர்கள் எழுதவோ படிக்கவோ தெரிந்திருந்தால் அவர்களை நேரடியாகக் கண்ட மக்கள் அல்லாஹ்வின் தூதர் என்று ஏற்க மாட்டார்கள். அவர் கூறிய தூதுச் செய்தியை அல்லாஹ்வின் வேதம் என்றும் ஏற்றிருக்க மாட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் என்பதை நிரூபிக்க அல்லாஹ் விரும்பி ஏற்படுத்திய நிலை தான் இந்தத் தகுதிக் குறைவு.

எழுதப் படிக்கத் தெரியாதவர் இவ்வளவு உயர்ந்த தரத்தில் செய்திகளைக் கூறுகிறாரே! நிச்சயமாக இவரது திறமையில் இது உருவாக்கப்பட்டிருக்கவே முடியாது. இவர் கூறுவது போல் இறைவனது செய்தியாகத் தான் இருக்க முடியும் என்று அன்றைய மக்கள் நம்புவதற்கு நபிகள் நாயகத்தின் படிப்பறிவின்மை தான் முக்கிய காரணமாக இருந்தது.

இதை நாம் கற்பனை செய்து கூறவில்லை. மேலே நாம் சுட்டிக் காட்டிய வசனத்தில் அல்லாஹ்வே இவ்வாறு தான் கூறுகிறான். எழுதத் தெரிந்திருந்தால் "வீனர்கள் சந்தேகம் கொண்டிருப்பார்கள்'' என்ற வாசகத்தைச் சிந்திப்பவர்கள் இதைச் சந்தேகமற அறியலாம்.

வேறொரு சிறப்பை அவர்களுக்கு அளிப்பதற்காக இதை அல்லாஹ் அவர்களுக்கு வழங்கவில்லை என்று இவ்வசனம் இரண்டாவது கருத்துக்கு இடமின்றி அறிவித்து விடுகிறது.

எழுதப் படிக்கத் தெரிந்திருப்பது சிறப்பானது தான். அதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நபிகள் நாயகத்துக்கு மட்டும் எழுதப் படிக்கத் தெரியாமல் இருப்பது தான் சிறப்பு. இதனால் இறைத்தூதர் என்ற சிறப்பு - உழைப்பால் எவரும் அடைய முடியாத சிறப்பு - அவர்களுக்குக் கிடைக்கிறது.

இதைப் புரிந்து கொண்டால் இந்தக் குழப்பம் விலகி விடும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எழுதவும் படிக்கவும் தெரியும் என்று கூறுபவர்கள் வேறு சில வாதங்களையும் எடுத்து வைக்கிறார்கள்.

திருக்குர்ஆனைப் பற்றி திருக்குர்ஆனில் குறிப்பிடும் போது பல இடங்களில் "கிதாப்' என்றே கூறப்படுகிறது. பகரா அத்தியாயத்தின் ஆரம்பத்தில் "இந்த கிதாபில் எந்தச் சந்தேகமும் இல்லை'' என்று கூறப்பட்டுள்ளது. இப்படி பல இடங்களில் கிதாப் என்றே குர்ஆன் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிதாப் என்பது கதப என்ற வேர்ச் சொல்லிலிருந்து பிறந்தது. கதப என்றால் எழுதினான் என்று பொருள். கிதாப் என்றால் எழுதப்பட்டது - நூல் என்பது பொருள். எழுதப்பட்ட ஏடுகளாகத் தான் குர்ஆன் வழங்கப்பட்டது என்பதை கிதாப் என்ற வார்த்தைப் பிரயோகத்திலிருந்து அறியலாம். எழுதப்பட்ட ஏடுகளாகத் தான் குர்ஆன் வழங்கப்பட்டது என்றால் யாருக்கு அது வழங்கப்பட்டதோ அவருக்கு வாசிக்கத் தெரிந்திருக்க வேண்டும். எனவே, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நிச்சயமாக வாசிக்கத் தெரியும் என்பது இவர்களது வாதம்.

இந்த வாதம் முற்றிலும் தவறாகும். கதப என்ற வார்த்தைக்கு எழுதினான் என்று அகராதியில் பொருள் இருந்தாலும் வேறு அர்த்தங்களிலும் அந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு திருக்குர்ஆனிலேயே ஆதாரங்கள் உள்ளன.

புத்தக வடிவமாகத் தயாரிக்கப்பட்டதை கிதாப் என்று கூறலாம் என்பது உண்மையே. அதை மட்டும் தான் கிதாப் என்று கூற வேண்டும் என்பது தவறாகும்.

நுôல் வடிவம் பெற வேண்டும் என்பதற்காக ஒருவர் மற்றவருக்கு (டிக்டேட்) கூறும் செய்திகளையும் கிதாப் எனக் கூறலாம். இனிமேல் அதற்கு எழுத்து வடிவம் கிடைக்கவுள்ளதே இதற்குக் காரணம்.

அது போல் எழுதப்பட்டதிலிருந்து மனனம் செய்து ஓதிக் காட்டினால் அதையும் கூட கிதாப் என்று கூறலாம்.

எதை நூலாக எழுத வேண்டும் என்று நாம் மனதில் தீர்மானித்திருக்கிறோமோ அதையும் கூட கிதாப் என்று கூறலாம். ஒரு நூலை எழுதுவதாக முடிவு செய்து கொண்டு எழுத ஆரம்பிப்போம். "இந்த நூல் இத்தகைய தன்மையில் அமைந்துள்ளது'' என்று ஆரம்பத்திலேயே நாம் குறிப்பிடுவோம். நூல் முழுமையாக எழுதப்படுவதற்கு முன்பு முன்னுரையிலேயே இந்த நூல் என்ற குறிப்பிடுவது ஏன்? நூல் நமது மூளையில் வடிவம் பெற்று விட்டது. விரைவில் எழுத்து வடிவத்துக்கு வரவுள்ளது என்ற அடிப்படையில் இவ்வாறு கூறுவோம்.

அரபு மொழியில் மட்டும் இல்லாமல் எல்லா மொழிகளிலும் இத்தகைய வார்த்தைப் பிரயோகம் சர்வ சாதனம்.

"சட்டை தைக்க வேண்டும்' என்று கூறுவோம். துணியைத் தான் சட்டையாகத் தைக்க வேண்டும். இனிமேல் அது சட்டையாக ஆகப் போவதால் துணியையே சட்டை எனக் கூறுவோம். சோறு ஆக்க வேண்டும், டீ போட வேண்டும் என்பது போல் ஏராளமாக இது போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் உள்ளன.

இனி மேல் கிடைக்கவுள்ள வடிவத்தைக் கவனத்தில் கொண்டு அந்த வடிவம் கிடைப்பதற்கு முன்பே அந்த வார்த்தையைப் பயன்படுத்துவது எல்லா மொழிகளிலும் சகஜமாகவுள்ளது.

எனவே கிதாப் என்ற வார்த்தைக்கு மேற்கண்ட நான்கு அர்த்தங்கள் உள்ளன என்பதால் எந்த அர்த்தம் செய்வது பொருத்தமானது என்பதை ஆய்வு செய்து தான் முடிவுக்கு வரவேண்டும்.

இந்த நான்கு அர்த்தங்களில் நிச்சயமாக முதலாவது அர்த்தம் செய்யவே முடியாது. எழுதப்பட்ட வடிவில் குர்ஆன் அருளப்படவே இல்லை என்று திருக்குர்ஆன் பல இடங்களில் திட்டவட்டமாக அறிவிப்பதால் மற்ற மூன்று அர்த்தங்களில் ஒன்றைத் தான் கருத்தில் கொள்ள வேண்டுமே தவிர முதல் அர்த்தத்தை நிச்சயமாகக் கொள்ள முடியாது. திருக்குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்படவில்லை என்பதைத் திட்டவட்டமாக அறிவிக்கும் சான்றுகளைப் பார்ப்போம்.

ஏட்டில் எழுதப்பட்ட கிதாபை உம் மீது நாம் இறக்கியிருந்தால் அதையும் தமது கரங்களால் தீண்டியிருப்பார்கள். இது வெளிப்படையான சூனியம் தவிர வேறில்லை எனவும் கூறியிருப்பார்கள்.

திருக்குர்ஆன் 6:7

ஏட்டில் எழுதப்பட்ட நூலை நாம் இறக்கியிருந்தால் அதையும் இவர்கள் விமர்சனம் செய்திருப்பார்கள் என்ற சொற்றொடர் குர்ஆன் எழுதப்பட்டதாக அருளப்படவில்லை என்பதை சந்தே கத்திற்கு இடமின்றி அறிவிக்கிறது.

வானத்திலிருந்து அவர்கள் மீது ஒரு நூலை நீர் இறக்கிவிட வேண்டும் என்று வேதமுடையவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். நிச்சயமாக இவர்கள் மூஸாவிடம் இதை விடப் பெரிய ஒன்றைக் கேட்டனர். அல்லாஹ்வை நேருக்கு நேராக எங்களுக்குக் காட்டுவீராக என்று அவர்கள் கேட்டனர்.

திருக்குர்ஆன் 4:153

எழுத்து வடிவமாக ஒரு நூல் வானிலிருந்து இறங்க வேண்டும். அன்றைய மக்கள் கேட்டதிலிருந்து அவ்வாறு அருளப்படவில்லை என்பதை ஐயத்திற்கிடமின்றி அறியலாம். இறைவனை நேருக்கு நேர் காட்டுவீராக என்று அவர்கள் கேட்டது போன்ற நடக்காத காரியம் எனவும் இவ்வசனம் கூறுகிறது. எழுத்து வடிவமாக அருளப்படவில்லை என்பதற்கு இதுவும் வலுவான சான்றாக உள்ளது.

97. யாரேனும் ஜிப்ரீலுக்கு எதிரியாக இருந்தால் (அது தவறாகும்.) ஏனெனில் அவரே அல்லாஹ்வின் அனுமதியின்படி இதை (முஹம்மதே!) உமது உள்ளத்தில்152 இறக்கினார்.492 "இது, தனக்கு முன் சென்றவற்றை4 உண்மைப்படுத்துவதாகவும், நம்பிக்கை கொண்டோருக்கு நேர்வழியாகவும், நற்செய்தியாகவும் உள்ளது'' என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 2:97

இவ்வேதம் எழுத்து வடிவில் அருளப்படவில்லை. மாறாக ஜிப்ரீல் என்ற வானவர் மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்தில் பதிவு செய்யப்பட்டது என்று திருக்குர்ஆன் கூறுகிறது. எழுத்து வடிவில் அருளப்பட்டிருந்தால் இவ்வாறு கூறப்பட்டிருக்காது. ஜிப்ரீல் ஒதிக் காட்டி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மனதில் பதியவைத்துக் கொண்டார்களே தவிர எழுத்து வடிவில் பெற்று சேகரித்துக் கொள்ளவில்லை.

192. இது அகிலத்தின் இறைவனால் அருளப்பட்டது.

193, 194, 195. எச்சரிக்கை செய்வோரில் (முஹம்மதே) நீர் ஆவதற்காக, உமது உள்ளத்தில்152 தெளிவான அரபு489 மொழியில்227 நம்பிக்கைக்குரிய ரூஹ்444 இதை இறக்கினார்.26&492

திருக்குர்ஆன் 26:192

இறைவனிடமிருந்து ஜிப்ரீல் எனும் வானவர் இச்செய்தியைக் கொண்டு வந்து நபிகள் நாயகத்தின் உள்ளத்தில் போட்டார் என்று திட்டவட்டமாக இவ்வசனமும் கூறுகிறது.

ஏட்டில் எழுதிக் கொண்டு வந்து கையில் கொடுத்தார் எனக் கூறப்படவில்லை.

6. (முஹம்மதே!) இதற்காக (குர்ஆனை மனனம் செய்வதற்காக) அவசரப்பட்டு உமது நாவை அசைக்காதீர்!152

17. அதைத் திரட்டுவதும், ஓதச் செய்வதும் நம்மைச் சேர்ந்தது.

18. எனவே நாம் அதை ஓதும்போது அந்த ஓதுதலைப் பின்பற்றுவீராக!152

19. பின்னர் அதைத் தெளிவுபடுத்துவது நம்மைச் சேர்ந்தது.

திருக்குர்ஆன் 75:16-19

ஜிப்ரீல் எழுத்து வடிவில் கொடுத்திருந்தால் அவசரம் அவசரமாக நபிகள் நாயகம் (ஸல்) மளனம் செய்ய முயற்சிக்க வேண்டியதில்லை. ஜிப்ரில் போன பிறகு எழுத்தைப் பார்த்து மீண்டும் வாசித்து மனதில் பதிய வைத்துக் கொள்ள முடியும். எழுத்து வடிவில் இல்லாததால் தான் மறந்து விடுமோ என்று பயந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நாவை வேகவேகமாக அசைக்கிறார்கள். அவ்வாறு அசைக்கத் தேவையில்லை. இதயத்தில் பதிவு செய்ய வைப்பது என்னுடைய வேலை என்று இறைவன் பொறுப்பேற்கிறான்.

எழுத்து வடிவில் குர்ஆன் அருளப்படவே இல்லை என்பதற்கு இதுவும் மிகத் தெளிவான சான்று.

6, 7. (முஹம்மதே!) உமக்கு ஓதிக் காட்டுவோம்.152 நீர் மறக்க மாட்டீர்.220 அல்லாஹ் நாடியதைத் தவிர. அவன் பகிரங்கமானதையும், மறைவானதையும் அறிகிறான்.26

திருக்குர்ஆன் 87 : 6, 7

நாம் உமக்கு ஓதிக் காட்டுவோம் என்ற வாசகம் எழுத்து வடிவில் அருளப்படவில்லை என்பதைக் கூறுகிறது. அதை நீர் மறக்க மாட்டீர் என்பது மேலும் இதை வலுப்படுத்துகிறது. மறக்க முடியாத நினைவாற்றல் வழங்கப்பட்டிருப்பதால் எழுத்து வடிவம் தேவையில்லை என்பதும் உணரப்படுகிறது.

எனவே திருக்குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்படவே இல்லை என்பது சந்தேகமற நிரூபணமாகிறது. எழுத்து வடிவில் அருளப்பட்டாததால் அவர்களுக்கு எழுதவும், வாசிக்கவும் தெரியும் என்பதும் அடிப்பட்டுப் போகிறது.

நபிகள் நாயகத்துக்கு எழுதவும், வாசிக்கவும் தெரியாது என்பதை திருக்குர்ஆன் தெளிவாகவும் பல இடங்களில் குறிப்பிடுகிறது.

157. எழுதப் படிக்கத்312 தெரியாத152 இத்தூதரை, இந்த நபியை (முஹம்மதை) அவர்கள் பின்பற்றுகின்றனர். தங்களிடம் உள்ள தவ்ராத்திலும், இஞ்சீலிலும்491 இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதை457 அவர்கள் காண்கின்றனர்.25 இவர், நன்மையை அவர்களுக்கு ஏவுகிறார். தீமையை விட்டும் அவர்களைத் தடுக்கிறார். தூய்மையானவற்றை அவர்களுக்கு அனுமதிக்கிறார். தூய்மையற்றவைகளை அவர்களுக்குத் தடை செய்கிறார்.186 அவர்களுடைய சுமையையும், அவர்கள் மீது (பிணைக்கப்பட்டு) இருந்த விலங்குகளையும் அப்புறப்படுத்துகிறார். இவரை நம்பி, இவரைக் கண்ணியப்படுத்தி, இவருக்கு உதவியும் செய்து, இவருடன் அருளப்பட்ட ஒளியையும் பின்பற்றுவோரே வெற்றி பெற்றோர்.

திருக்குர்ஆன் 7 : 157,158

இவ்விரு வசனங்களிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை "உம்மீ' என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

உம்மு என்றால் தாய் என்பது பொருள். உம்மீ என்றால் தாயைச் சார்ந்திருப்பவன் என்பது பொருள். கைக்குழந்தைகள் தாயையே சார்ந்திருப்பதால் கைக்குழந்தைகள் உம்மீ எனக் குறிப்பிடப்பட்டனர். பின்னர் எழுதவும், வாசிக்கவும் தெரியாதவர்கள் இந்த விஷயத்தில் கைக்குழந்தைகளின் நிலையில் இருப்பதால் உம்மீ எனப்பட்டனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அனுப்பப்பட்ட சமுதாயத்தை உம்மீகள் என்று பல இடங்களில் அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான். இவ்விரு வசனங்களிலும் நபிகள் நாயகத்தையும் "உம்மீ'  என்று கூறுகிறான். நபிகள் நாயகம் (ஸல்) எழுதப்படிக்கத் தெரியாமல் இருந்தார்கள் என்பதற்கு இதுவும் சரியான சான்றாக உள்ளது.

4. "இது பொய்யைத் தவிர வேறு இல்லை. இதை இவரே இட்டுக்கட்டிக் கொண்டார். மற்றொரு சமுதாயத்தினரும் இதற்காக இவருக்கு உதவினார்கள்'' என்று (ஏகஇறைவனை) மறுப்போர் கூறுகின்றனர். அவர்கள் அநியாயத்தையும், பாவத்தையுமே கொண்டு வந்துள்ளனர்.

5. "இது முன்னோர்களின் கட்டுக்கதை. அதை இவர் எழுதச் செய்து152 கொண்டார்.312 காலையிலும், மாலையிலும் அது இவருக்கு வாசித்துக் காட்டப்படுகிறது'' எனவும் கூறுகின்றனர்.142

திருக்குர்ஆன் 25 : 4, 5

இந்தக் குர்ஆனை நபிகள் நாயகம் (ஸல்) இட்டுக் கட்டியதாக அவர்கள் கூறினார்கள். மேலும், பலர் இதற்கு உதவியாக இருந்ததாகவும் கூறினார்கள். அப்படிக் கூறும் போது கூட நபிகள் நாயகம் (ஸல்) அவராக எழுதிக் கொண்டார் எனக் கூறாமல் மற்றவர்களை வைத்து எழுதிக் கொண்டார் எனக் குறிப்பிட்டனர். நபிகள் நாயகத்துக்கு எழுதத் தெரியாது என்பது அந்த மக்களுக்கும் நன்றாகத் தெரிந்த காரணத்தினால் தான் எழுதத் தெரிந்தவர்களை வைத்து எழுதிக் கொண்டார் என்று கூறினார்கள். நபிகள் நாயகத்துக்கு எழுதத் தெரியாது என்பதற்கு இதுவும் பலமான சான்றாகவுள்ளது.

"கதப' என்றால் எழுதினான் என்பது பொருள். இக்ததப என்றால் ஒருவரிடம் சொல்லி எழுத வைத்தான் என்பது பொருள். மேலே நாம் எடுத்துக்காட்டிய வசனத்தில் இக்ததப என்ற வார்த்தை தான் இடம் பெற்றுள்ளது.

(தமிழாக்கம் செய்த சிலர் இதைக் கவனிக்காமல் எழுதினார், எழுதிக் கொண்டார் என்று மொழி பெயர்த்துள்ளனர். இது தவறான மொழி பெயர்ப்பாகும். பிறருக்குச் சொல்லி எழுதச் செய்கிறார் என்பது தான் இதன் சரியான மொழி பெயர்ப்பாகும்.)

இவை அனைத்துக்கும் மேலாக சென்ற இதழின் ஆரம்பத்தில் நாம் சுட்டிக்காட்டிய 29:48 வசனம் அமைந்துள்ளது.

இதற்கு முன்னரும் எந்த நூலிலிருந்தும் நீர் வாசித்ததில்லை. இனியும் உமது வலக்கரத்தால் எழுத மாட்டீர் என்று திட்டவட்டமாக இவ்வசனம் அறிவிக்கிறது.

உமது வலக்கரத்தால் எழுதிக் கொண்டும் இருந்ததில்லை என்று சிலர் தமிழாக்கம் செய்திருப்பது தவறாகும். வலாதாஹுத்து என்பது வருங்கால வினைச் சொல்லாகும். இனியும் எழுத மாட்டீர் என்பதே இதன் நேரடியான சரியான மொழிபெயர்ப்பாகும்.

நபியாக ஆவதற்கு முன்பும் நீர் எழுதவில்லை. இனியும் எழுத மாட்டீர் என்று அல்லாஹ் அறிவித்து விட்டதால் நபியாக ஆன பின்பு எழுதப் படிக்க அறிந்திருக்கக்கூடும் அல்லவா? என்று சிலர் வாதம் செய்வதும் தவறு என்பதை இவ்வாசக அமைப்பு நிரூபிக்கின்றது.

குர்ஆன் 23 ஆண்டுகளில் சிறிது சிறிதாக அருளப்பட்டது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை அருளப்பட்டு கொண்டே வந்தது. இதை அனைவரும் அறிவோம். நபிகள் நாயகத்திற்கு ஆரம்பத்தில் எழுதத் தெரியாமல் இருந்து, பிறகு எழுதக் கற்றுக் கொண்டார்கள் என்றும் கூற முடியாது. எழுத கற்றுக் கொண்ட பிறகு அருளப்பட்ட குர்ஆன் நபிகள் நாயகம் (ஸல்) சுயமாக கற்பனை செய்தார் என்ற சந்தேகத்திற்கு உள்ளாகும். அவர்கள் மரணிக்கும் வரை குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டே வந்ததால் மரணிக்கும் வரை எழுதத் தெரியாமல் இருப்பது தான் இறைவேதம் என்று திருக்குர்ஆனை நிரூபித்துக் காட்டும். இதனால் தான் இனியும் எழுத மட்டீர் என்று கூறி கடைசி வரை அவர்களை உம்மியாக எழுதப் படிக்கத் தெரியாதவராகவே அல்லாஹ் ஆக்கிவிட்டான்.

நபிகள் நாயகத்திற்கு எழுதப் படிக்கத் தெரியும் எனக் கூறுவோர் பின்வரும் நிகழ்ச்சியையும் ஆதாரமாகக் காட்டுவார்கள்.

صحيح البخاري 

2698 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ: سَمِعْتُ البَرَاءَ بْنَ عَازِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: لَمَّا صَالَحَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَهْلَ الحُدَيْبِيَةِ، كَتَبَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ بَيْنَهُمْ كِتَابًا، فَكَتَبَ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ، فَقَالَ المُشْرِكُونَ: لاَ تَكْتُبْ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ، لَوْ كُنْتَ رَسُولًا لَمْ نُقَاتِلْكَ، فَقَالَ لِعَلِيٍّ: «امْحُهُ»، فَقَالَ عَلِيٌّ: مَا أَنَا بِالَّذِي أَمْحَاهُ، فَمَحَاهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ، وَصَالَحَهُمْ عَلَى أَنْ يَدْخُلَ هُوَ وَأَصْحَابُهُ ثَلاَثَةَ أَيَّامٍ، وَلاَ يَدْخُلُوهَا إِلَّا بِجُلُبَّانِ السِّلاَحِ، فَسَأَلُوهُ مَا جُلُبَّانُ السِّلاَحِ؟ فَقَالَ: القِرَابُ بِمَا فِيهِ

2698 பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹுதைபிய்யாக்காரர்களிடம் (மக்காவாசிகளான குறைஷிகளிடம் ஹுதைபிய்யா எனுமிடத்தில்) சமாதான ஒப்பந்தம் செய்து கொண்ட போது அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள், அவர்களிடையிலான ஒப்பந்தப் பத்திரத்தை எழுதினார்கள். அப்போது, அல்லாஹ்வின் தூதரான முஹம்மத்' என்று அவர்கள் எழுத, இணைவைப்பவர்கள், அல்லாஹ்வின் தூதரான முஹம்மத்' என்று எழுதாதீர்கள் (என்று சொல்லிவிட்டு) முஹம்மத் (ஸல்) அவர்களை நோக்கி), நீர் அல்லாஹ்வின் தூதராக இருந்திருந்தால் நாங்கள் உம்முடன் போரிட்டிருக்க மாட்டோம் என்று கூறினர். ஆகவே, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம், அதை அழித்து விடுங்கள் என்று கூறினார்கள். அலீ (ரலி) அவர்கள், நான் அதை (ஒரு போதும்) அழிக்கப் போவதில்லை என்று கூறி விட்டார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது திருக்கரத்தால் அதை அழித்தார்கள். நானும், என் தோழர்களும் (மக்கா நகரில்) மூன்று நாட்கள் தங்குவோம். அதில் நாங்கள், ஜுலுப்பானுஸ் ஸிலாஹ்' உடன் தான் நுழைவோம் என்றும் அவர்களுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். மக்கள், ஜுலுப்பா னுஸ் ஸிலாஹ்' என்றால் என்ன? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டனர். அவர்கள், உள்ளிருக்கும் ஆயுதங்களுடன் கூடிய உறை என்று பதிலளித்தார்கள்.

நூல் : புகாரி 2698

நபிகள் நாயகத்துக்கு எழுதத் தெரிந்தால் தானே தமது பெயரைக் கண்டுபிடித்து அழித்திருக்க முடியும் என்று சிலர் வாதிடுகின்றனர்.

எழுதத் தெரியாது என்று தெளிவான சான்று இவ்வளவு இருக்கும் போது சுற்றி வளைத்துக் கொண்டு ஆதாரம் காட்டுகின்றனர்.

இந்த சந்தேகத்தைக் கீழ்க்காணும் ஹதீஸ்கள் முற்றாக நீக்கி விடுகின்றன.

صحيح البخاري 

3184 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُثْمَانَ بْنِ حَكِيمٍ، حَدَّثَنَا شُرَيْحُ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يُوسُفَ بْنِ أَبِي إِسْحَاقَ، قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ: حَدَّثَنِي البَرَاءُ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا أَرَادَ أَنْ يَعْتَمِرَ أَرْسَلَ إِلَى أَهْلِ مَكَّةَ يَسْتَأْذِنُهُمْ لِيَدْخُلَ مَكَّةَ، فَاشْتَرَطُوا عَلَيْهِ أَنْ لاَ يُقِيمَ بِهَا إِلَّا ثَلاَثَ لَيَالٍ، وَلاَ يَدْخُلَهَا إِلَّا بِجُلُبَّانِ السِّلاَحِ، وَلاَ يَدْعُوَ مِنْهُمْ أَحَدًا، قَالَ: فَأَخَذَ يَكْتُبُ الشَّرْطَ [ص:104] بَيْنهُمْ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ فَكَتَبَ هَذَا مَا قَاضَى عَلَيْهِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ، فَقَالُوا: لَوْ عَلِمْنَا أَنَّكَ رَسُولُ اللَّهِ لَمْ نَمْنَعْكَ وَلَبَايَعْنَاكَ، وَلكِنِ اكْتُبْ هَذَا مَا قَاضَى عَلَيْهِ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ، فَقَالَ: «أَنَا وَاللَّهِ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ، وَأَنَا وَاللَّهِ رَسُولُ اللَّهِ» قَالَ: وَكَانَ لاَ يَكْتُبُ، قَالَ: فَقَالَ لِعَلِيٍّ: «امْحَ رَسُولَ اللَّهِ» فَقَالَ عَلِيٌّ: وَاللَّهِ لاَ أَمْحَاهُ أَبَدًا، قَالَ: «فَأَرِنِيهِ»، قَالَ: فَأَرَاهُ إِيَّاهُ فَمَحَاهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ، فَلَمَّا دَخَلَ وَمَضَتِ الأَيَّامُ، أَتَوْا عَلِيًّا، فَقَالُوا: مُرْ صَاحِبَكَ فَلْيَرْتَحِلْ، فَذَكَرَ ذَلِكَ عَلِيٌّ رَضِيَ اللَّهُ عَنْهُ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «نَعَمْ» ثُمَّ ارْتَحَلَ

3184 பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஹுதைபிய்யா ஆண்டில்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உம்ரா செய்ய நாடிய போது மக்காவாசிகளிடம் ஆளனுப்பி மக்காவினுள் நுழைய அனுமதி கேட்டார்கள் அவர்கள் (அடுத்த ஆண்டு உம்ரா செய்ய வரலாம் என்றும்) மூன்று நாட்களுக்கு மேல் அங்கு தங்கக் கூடாது என்றும் ஆயுதங்களை உறைகளில் இட்ட படி தான் நுழைய வேண்டும் என்றும் அவர்களில் எவரையும் (தம் மார்க்கத்தை ஏற்கும்படி) அழைக்கக் கூடாது என்றும் நிபந்தனையிட்டனர். அவர்கள் இருவருக்குமிடையிலான (ஒப்பந்த) ஷரத்துகளை அலீ பின் அபீ தாலிப் (ரலி) அவர்கள் எழுதலானார்கள். அப்போது அவர்கள், இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்து கொண்ட சமாதான ஒப்பந்தமாகும் என்று எழுதினார்கள். மக்காவாசிகள், நீங்கள் அல்லாஹ்வின் தூதர் தாம் என்று நாங்கள் நம்பியிருந்தால் உங்களை (மக்காவினுள் நுழையவிடாமல்) தடை செய்திருக்க மாட்டோம். மேலும், உங்களை நாங்கள் (ஏற்றுக் கொண்டு) பின்பற்றவும் செய்திருப்போம். மாறாக, இது அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது செய்து கொண்ட சமாதான ஒப்பந்தம்' என்று எழுதுங்கள் என்று கூறினர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது தான். மேலும், அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் அல்லாஹ்வின் தூதருமாவேன் என்று கூறினார்கள். ஆனால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுதத் தெரியாதவர்களாக இருந்தார்கள். ஆகவே, அலீ (ரலி) அவர்களிடம்,   அல்லாஹ்வின் தூதர்' என்னும் சொல்லை அழித்து விடுங்கள் என்று உத்தரவிட்டார்கள். அலீ (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் அதை ஒரு போதும் அழிக்க மாட்டேன் என்று மறுத்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அப்படியானால் அ(ந்தச் சொல் இருக்கும் இடத்)தை எனக்குக் காட்டுங்கள் என்று கேட்டார்கள். அலீ (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அதைக் காட்டினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைத் தம் கரத்தால் அழித்தார்கள். பின்பு (அடுத்த ஆண்டு), நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (உம்ரா விற்காக) மக்காவிற்குள் நுழைந்து மூன்று நாட்கள் கழிந்தவுடன் மக்காவாசிகள் அலீ (ரலி) அவர்களிடம் வந்து, உங்கள் தோழரை (மக்காவை விட்டுப்) புறப்படும் படி கூறுங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள். உடனே, அலீ (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அதைத் தெரிவித்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஆமாம் (புறப்பட வேண்டியது தான்) என்று கூறிவிட்டுப் புறப்பட்டார்கள்.

நூல் : புகாரி 3184

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு  எழுதவும் வாசிக்கவும் தெரியாது தமது பெயர் எந்த இடத்தில் உள்ளது கேட்டு அழித்தார்கள் என்று இந்த ஹதீஸ் தெளிவாகச் சொல்கிறது

எழுதத் தெரியாமல் இருப்பது பொதுவாக தகுதிக் குறைவு என்றாலும் அதுவே நபிகள் நாயகத்திற்கு மட்டும் சிறப்பான தகுதியாகும் என்பதில் சந்தேகமில்லை.

நான்கு வகை உணவுகள் மட்டும் தான் ஹாரமா?

(ஒற்றுமை மாதம் இருமுறை இதழில் தேர்வு செய்யப்பட்ட வசனங்களுக்கு பீஜே விளக்கவுரை எழுதினார். அதன் மூன்றாம் தொடர் இது.)

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி,407 அல்லாஹ் அல்லாதோருக்காக சப்தமிடப்பட்டவை42 ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான்.171 வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்படுவோர்431 மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன்:- 2:173

இதே கருத்து 16:115 வசனத்திலும் உள்ளது

"தாமாகச் செத்தது, ஓட்டப்பட்ட இரத்தம், அசுத்தமாகிய பன்றியின் இறைச்சி,407 அல்லாஹ் அல்லாதோருக்காக சப்தமிடப்பட்ட42 பாவமான (உண)வை தவிர வேறு எதுவும் மனிதர் உண்பதற்குத் தடை செய்யப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்ட செய்தியில் நான் காணவில்லை'' என்று கூறுவீராக! யாரேனும் வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்பட்டால்431 உமது இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.171

திருக்குர்ஆன்: 6:145

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களுக்காகப் படையல் செய்யப்பட்டவை ஆகிய உணவுகளை முஸ்லிம்கள் அறவே உண்ணக்கூடாது என்று இவ்வசனங்கள் கூறுகின்றன. இதற்கு பெரிய அளவில் விளக்கம் எதுவும் தேவையில்லை.

ஆனால் இவ்வசனத்தில் அடங்கியிருக்கும் மற்றொரு செய்தியைச் சிலர் தவறாக விளங்கிக் கொண்டு குழம்பிப் போய் இருக்கின்றனர். அந்தச் செய்தியைக் குறித்துத் தான் விளக்கம் தேவைப்படுகின்றது.

குர்ஆன் மட்டும் போதும், நபிகள் நாயகத்தின் வழிகாட்டுதல் தேவையில்லை என்று குர்ஆனுக்கு எதிரான வாதத்தை முன்வைக்கும் அறிவீனர்கள் - குர்ஆனைப் பற்றி சரியான அறிவு இல்லாத காரணத்தால் தாமும் வழிகெட்டு மக்களையும் வழிகெடுக்க எண்ணுகின்றனர்.

இத்தகையோர் வழிகெடுப்பதற்கு பயன்படுத்தும் வசனங்களில் இந்த வசனங்களும் அடங்கும். எனவே, இது குறித்து நாம் விரிவாக ஆராய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

மேலே நாம் எடுத்துக்காட்டிய வசனங்களில் நான்கு உணவுகள் ஹராம் என்பது மட்டும் தெரியவில்லை. மாறாக இந்த நான்கைத் தவிர வேறு எந்த உணவும் ஹராமில்லை என்பதும் தெரிகிறது.

எனக்கு வஹியாக (இறைச் செய்தியாக) அறிவிக்கப்பட்டதில் அந்த நான்கைத் தவிர வேறு எதுவும் ஹராமாக்கப்பட்டதாக நான் காணவில்லை என்ற வாசக அமைப்பிலிருந்தும் தாமாகச் செத்தவை.... ஆகியவற்றைத் தான் ஹராமாக்கியுள்ளான் என்ற வாசக அமைப்பிலிருந்தும் அதை விளங்கலாம்.

எனவே, கழுதை, நாய், கரப்பான் பூச்சி, பாம்பு, பல்லி, தேள், முள்ளம் பன்றி, குரங்கு போன்ற எதுவானாலும் உண்ணத்தக்கதே என்று இவர்கள் வாதிடுகின்றனர். வெளிப்படையாகக் கூறாவிட்டாலும் மலத்தையும் கூட உண்ணலாம் என்பது இவர்களின் வாதத்தில் அடங்கும்.

இவ்வாறு வாதிடக்கூடிய "அறிவு ஜீவிகள்'' தமது வாதத்துக்கு இந்த வசனங்களைத் தான் சான்றுகளாக முன் வைக்கின்றனர்.

இந்நான்கைத் தவிர வேறு எதுவும் ஹராமாக்கப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்படவில்லை என்று அல்லாஹ் தேவையில்லாமல் கூறுவானா? என்றும் இவர்கள் கேட்கின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நாய், கழுதை போன்றவற்றை ஹராம் என்று அறிவித்துள்ளனர். இது குறித்த ஹதீஸ்கள் யாவும் மேற்கண்ட வசனங்களுக்கு முரணாகவுள்ளதால் அவற்றை நம்பக்கூடாது எனவும் வாதிடுகின்றனர்.

மேற்கண்ட வசனங்களில் இவர்கள் வாதிடுவது போன்ற கருத்துக்கள் அடங்கியுள்ளன என்பது உண்மை தான். ஆனால், இது குறித்து சரியான விளக்கத்தை அறிய திருக்குர்ஆனை இன்னும் ஆராய வேண்டும்.

ஹலால் ஹராம் குறித்து அந்த வசனங்கள் தவிர வேறு வசனங்கள் உள்ளனவா? எனவும் தேடிப்பார்க்க வேண்டும். அதன் பிறகு தான் ஒரு முடிவுக்கு வர வேண்டும். இத்தகைய ஆய்வு இல்லாததன் காரணமாகவே கிறுக்குத்தனமான இத்தகைய வாதங்களை முன் வைக்கின்றனர்.

3. செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி,407 அல்லாஹ் அல்லாதோருக்காக சப்தமிடப்பட்டவை42 உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.171 கழுத்து நெரிக்கப்பட்டவை, அடிபட்டவை, (மேட்டிலிருந்து) உருண்டு விழுந்தவை, (தமக்கிடையே) மோதிக்கொண்டவை, வனவிலங்குகள் சாப்பிட்ட பிராணிகள் ஆகியவற்றில் (உயிர் இருந்து) நீங்கள் முறையாக அறுத்தவை தவிர (மற்றவை தடைசெய்யப்பட்டுள்ளன.) பலி பீடங்களில்135 அறுக்கப்பட்டவையும், அம்புகள் மூலம் குறி கேட்பதும்136 (உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.) இது தீயதாகும். (ஏகஇறைவனை) மறுப்போர், உங்கள் மார்க்கத்தை (அழித்திடலாம் என்பது) பற்றி இன்று நம்பிக்கை இழந்து விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்! இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாகப் பொருந்திக் கொண்டேன். பாவம் செய்யும் நாட்டமில்லாமல், வறுமையின் காரணமாக நிர்பந்தத்துக்கு431 உள்ளானோரை அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.42

திருக்குர்ஆன்: 5:3

இவ்வசனமும் விலக்கப்பட்ட உணவுகளைக் குறிப்பிடும் வசனம் தான். இவ்வசனத்தில் முன்னர் கூறப்பட்ட நான்கு உணவுகளையும் கூறி விட்டு மேலும் சில உணவுகள் தடை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

நான்கைத் தவிர வேறு சில உணவுகள் ஹராம் என்று ஹதீஸ்களில் கூறப்படும் போது "குர்ஆனுக்கு முரண்' எனக் கூறி நிராகரித்தவர்கள் இப்போது இந்த வசனமே மேற்கண்ட வசனங்களுக்கு முரணாக இருப்பதைச் சிந்திக்கத் தவறிவிட்டனர்.

நான்கைத் தவிர வேறு எதுவும் ஹராம் இல்லை என்ற கருத்தில் அமைந்த வசனங்களும், நான்கைத் தவிர வேறு சில உணவுகளும் ஹராம் எனக் கூறும் வசனங்களும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை தான். குர்ஆனில் எந்த முரண்பாடும் இருக்காதே! ஆனால் இங்கே முரண்பாடு இருப்பதாகத் தெரிகிறதே என்று சிந்தித்திருந்தால் சரியான தீர்வைக் கண்டிருப்பார்கள்.

திருக்குர்ஆன் ஒரே நாளில் மொத்தமாக அருளப்படவில்லை. சிறிது சிறிதாக 23 ஆண்டுகளில் இறங்கியது என்பதை அனைவரும் அறிவோம். சிறிது சிறிதாக கடமைகளும் கட்டளைகளும் அதிகரிக்கப்பட்டு வந்தன.

அந்த அடிப்படையில் நாம் ஆரம்பமாக எடுத்துக் காட்டிய வசனங்கள் எப்போது அருளப்பட்டனவோ அந்தக் கால கட்டத்தில் அந்த நான்கு உணவுகள் மட்டுமே ஹராமாக்கப்பட்டிருந்தன. இவ்வசனங்கள் அருளப்படுவதற்கு முன் அந்த நான்கு கூட ஹராமாக்கப்படாமல் இருந்தன. எதுவுமே ஹராமாக்கப்படாமல் இருந்த நிலையை மாற்றி நான்கு உணவுகள் முதலில் ஹராமாக்கப்பட்டன. பின்னர் மேலும் சில உணவுகள் ஹராமாக்கப்பட்டன. அதைத் தான் இப்போது நாம் சுட்டிக்காட்டிய 5:3 வசனம் கூறுகிறது.

எனவே நான்கைத் தவிர வேறு ஹராம் இல்லை என்பது ஒரு கால கட்டத்தில் இருந்த நிலைமை. அந்த நிலைமை 5:3 வசனத்தின் மூலம் மாற்றப்பட்டு விட்டது.

இதில் இன்னொன்றையும் நாம் கவனிக்கக் கடமைப்பட்டுள்ளோம். நான்கு உணவுகளை மட்டும் ஹராம் எனக் கூறும் வசனங்களில் இவை மட்டும் தான். இவை தவிர வேறு இல்லை என்பது போன்ற வாசக அமைப்பைப் பயன்படுத்தியுள்ளான்.

ஆனால், இவ்வசனத்தில் இவற்றைத் தவிர வேறு இல்லை என்று குறிப்பிடவில்லை. இவற்றைத் தவிர வேறு ஹராம் இல்லை எனக் கூறாததால், மேலும் ஹராம்கள் இருப்பதற்கான சாத்தியத்தை இவ்வசனம் மறுக்கவில்லை.

இவ்வாறு விளங்கிக் கொண்டால் குர்ஆனுடன் குர்ஆன் முரண்படுகிறதே என்ற ஐயமும் விலகும். ஹதீஸ்கள் குர்ஆனுடன் முரண்படுகிறதே என்ற ஐயமும் விலகும்.

இறுதியாக அருளப்பட்ட வசனத்தில் எவை ஹராமாக்கப்பட்டுள்ளதோ அவற்றை மட்டும் ஹராம் என்று கூற வேண்டியது தானே? ஹராமாக்கும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டும் உரியது தானே? என்று சிலர் கேட்கலாம்.

அல்லாஹ் உமக்கு ஹலாலாக்கியதை நீர் எப்படி ஹராமாக்கலாம் என்று 66:1 வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகிறான். இதிலிருந்து ஹராமாக்கும் அதிகாரம் அல்லாஹ்வுக்குத் தான் உள்ளதே தவிர நபிகள் நாயகத்துக்கு இல்லை எனவும் கூறுகின்றனர்.

இதுவும் அறியாமையின் வெளிப்பாடுதான்.

157. எழுதப் படிக்கத்312 தெரியாத152 இத்தூதரை, இந்த நபியை (முஹம்மதை) அவர்கள் பின்பற்றுகின்றனர். தங்களிடம் உள்ள தவ்ராத்திலும், இஞ்சீலிலும்491 இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதை457 அவர்கள் காண்கின்றனர்.25 இவர், நன்மையை அவர்களுக்கு ஏவுகிறார். தீமையை விட்டும் அவர்களைத் தடுக்கிறார். தூய்மையானவற்றை அவர்களுக்கு அனுமதிக்கிறார். தூய்மையற்றவைகளை அவர்களுக்குத் தடை செய்கிறார்.186 அவர்களுடைய சுமையையும், அவர்கள் மீது (பிணைக்கப்பட்டு) இருந்த விலங்குகளையும் அப்புறப்படுத்துகிறார். இவரை நம்பி, இவரைக் கண்ணியப்படுத்தி, இவருக்கு உதவியும் செய்து, இவருடன் அருளப்பட்ட ஒளியையும் பின்பற்றுவோரே வெற்றி பெற்றோர்.

திருக்குர்ஆன்: 7:157

29. வேதம் கொடுக்கப்பட்டோரில்27 அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பாமல், அல்லாஹ்வும், அவனது தூதரும் விலக்கியவற்றை விலக்கிக் கொள்ளாமல்,186 உண்மையான மார்க்கத்தைக் கடைப்பிடிக்காமல் இருப்போர் சிறுமைப்பட்டு ஜிஸ்யா வரியைத்201 தம் கையால் கொடுக்கும் வரை அவர்களுடன் போரிடுங்கள்!53

திருக்குர்ஆன்: 9:29

அல்லாஹ்வும் அவனது தூதரும் ஹராமாக்கியவைகளை ஹராம் எனக் கருதாதவர்களுடன் போரிடுமாறு  இவ்வசனம் கூறுகிறது. ஹராமாக்கும் அதிகாரம் நபிகள் நாயகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை இவ்வசனம் மிகத் தெளிவாகவே எடுத்துரைக்கின்றது. திருக்குர்ஆனில் தேவையில்லாத ஒரு வார்த்தையும் இருக்காது என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

குர்ஆன் மூலம் ஹராமாக்கப்பட்டவை மட்டும் தான் ஹராம் என்று இருந்தால் அல்லாஹ் ஹராமாக்கியவை என்று மட்டும் அல்லாஹ் கூறியிருக்கலாம். ஆனால், அல்லாஹ்வும், ரசூலும் ஹராமாக்கியவை என்று கூறியது ஏன்? என்பதைச் சிந்திக்க வேண்டும்.

7:157 வசனத்தில் நல்லவைகளை அவர் ஹலாலாக்குவார். கெட்டவைகளை ஹராமாக்குவார் என்று தெளிவாகப் பிரகடனம் செய்யப்பட்டு விட்டது. நான்கைத் தவிர வேறு ஹராம் இல்லை என்றால் இந்த வாசகத்திற்கு எந்தத் தேவையுமில்லை.

"கெட்டவை ஹராம் என்று கூறுகிற இறைவன் அவற்றுக்கான விளக்கத்தை நபிகள் நாயகத்தின் இதயத்தில் போடுகிறான். அதன் மூலம் அவர்கள் ஹராமாக்கப்பட்டதை அறிவிக்கிறார்கள்'' என்பதைத் தவிர இதற்கு வேறு பொருள் இருக்க முடியாது.

எனவே, நான்கைத் தவிர வேறு ஹராம் இல்லை எனக் கூறுவோர் மேற்கண்ட குர்ஆன் வசனங்களையே மறுக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.

அல்லாஹ் உமக்கு ஹலாலாக்கியதை உமது மனைவியரின் திருப்தியை நாடி நீர் ஏன் ஹராமாக்கிக் கொண்டீர் என்ற வசனத்தை (66:1) ஆதாரமாகக் கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எதையும் ஹராம் என்று பிரகடனம் செய்ய அதிகாரமில்லை என்று சிலர் வாதிடுகின்றனர்.

இவ்வசனத்தைச் சரியாக சிந்திக்காத காரணத்தால் இத்தகைய வாதத்தை எழுப்புகின்றனர். அல்லாஹ் ஹலாலாக ஆக்கிய ஒரு பொருளை (தேனை) தமது மனைவியருக்காக தம் மீது மட்டும் ஹராமாக்கிக் கொண்டார்கள். இனி மேல் தேனை உட்கொள்ள மாட்டேன் என்று முடிவு செய்தார்கள். மக்கள் அனைவருக்கும் தேனை ஹராமாக ஆக்கவில்லை.

அல்லாஹ் அனுமதித்த ஒரு பொருள் ஒருவருக்குப் பிடிக்கவில்லையானால் அதை தன்னளவில் அவர் தவிர்த்துக் கொள்ளலாம். அதில் எந்தத் தவறும் இல்லை. ஹலால் என்றாலே உண்பது எப்படி அனுமதியோ, உண்ண மறுப்பதும் அனுமதி என்றே பொருள்.

எனவே அல்லாஹ் ஹலாலாக ஆக்கியதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் மீது மட்டும் விலக்கிக் கொண்டார்கள் என்பதைத் தான் இவ்வசனம் கூறுகிறது.

அல்லாஹ் ஹலாலாக ஆக்கியதை ஹராம் என்று அறிவித்தார்கள் என்று கூறவில்லை. அவ்வாறு எந்த இறைத் தூதரும் கூற மாட்டார்கள்.

அப்படியானால் இந்தச் செயலை இறைவன் ஏன் ஆட்சேபிக்கிறான்? அதற்கான காரணம் அவ்வசனத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. மனைவியரின் திருப்தியை நாடி - தமக்கு அதில் விருப்பம் இருந்தும் விலக்கிக் கொண்டார்களே அது தான் இங்கே ஆட்சேபிக்கப்படுகிறது.

அல்லாஹ் குர்ஆன் மூலம் எவற்றை ஹலால் என்றோ ஹராம் என்றோ கூறவில்லையோ அத்தகைய பொருட்களில் அல்லாஹ்வின் இன்னொரு வகையான வஹி (இறைச் செய்தி)யைப் பெற்று இவை ஹலால் எனவும், இவை ஹராம் எனவும் அறிவிக்கும் அதிகாரம் நபிகள் நாயகத்திற்கு இருக்கிறது. மேலே நாம் எடுத்துக் காட்டிய 7:159, 9:29 ஆகிய இரு வசனங்களும் இதை இரண்டாவது கருத்துக்கு இடமில்லாமல் தெரிவித்து விடுகிறது.

பன்மடங்காகப் பெருகும் வட்டி

(ஒற்றுமை மாதமிருமுறை இதழில் தேர்வு செய்யப்பட்ட வசங்களுக்கு பீஜே விளக்கம் எழுதினார். அதன் இரண்டாவது கட்டுரை இது)

நம்பிக்கை கொண்டோரே! பன்மடங்காகப் பெருகிக் கொண்டிருக்கும் நிலையில் வட்டியை84 உண்ணாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இதனால் வெற்றி பெறுவீர்கள்.

திருக்குர்ஆன்: 3:130

இ ஸ்லாம் மார்க்கம் எல்லாக் காலத்துக்கும் பொருந்தக் கூடிய, நடைமுறைப்படுத்தக் கூடிய வாழ்க்கை நெறியாகும். மார்க்கத்தைப் பற்றிய சரியான அறிவும், ஆய்வும் இல்லாத சிலர் நவீன காலத்துக்கு ஏற்றவாறு இஸ்லாத்தை வளைக்க முயன்று வருகின்றனர். இஸ்லாம் தடை செய்த பல விஷயங்களில் ஈடுபாடு கொண்ட இவர்கள் அதற்கு இஸ்லாமியச் சாயம் பூசி அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர்.

மதுபானத்தை அல்லாஹ் ஹராமாக - விலக்கப்பட்டதாக - ஆக்கியுள்ளான். ஆனாலும், மதுவுக்கு புதுப்புது வியாக்கியானம் கொடுத்து பீர் குடிக்கலாம், பிராந்தி குடிக்கலாம், கள் சாராயம் தான் குடிக்கக் கூடாது என்று கூறி மேலை நாட்டுக் கலாச்சாரத்துக்கு இஸ்லாமிய வர்ணம் பூசுவோர் உள்ளனர்.

இது போன்ற பிரச்சினைகளில் வட்டியும் ஒன்றாகும். வட்டியை அல்லாஹ் தடை செய்து விட்டான். மிகப் பெரிய குற்றம் எனவும் பிரகடனம் செய்து விட்டான்.

275. வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்.83 "வியாபாரம் வட்டியைப் போன்றதே'' என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.

276. அல்லாஹ் வட்டியை அழிக்கிறான். தர்மங்களை வளர்க்கிறான். நன்றிகெட்ட எந்தப் பாவியையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.

277. நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் புரிந்து, தொழுகையை நிலைநாட்டி, ஜகாத்தையும் கொடுத்து வருவோருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உள்ளது. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.

278. நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்!84

279. அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் போர்ப் பிரகடனத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்! நீங்கள் திருந்திக் கொண்டால் உங்கள் செல்வங்களில் மூலதனம் உங்களுக்கு உரியது. நீங்களும் அநீதி இழைக்கக் கூடாது. உங்களுக்கும் அநீதி இழைக்கப்படாது.

திருக்குர்ஆன்: 2:275-2:279

வட்டி வாங்குவோர் நிரந்தர நரகத்தை அடைவார்கள் என்பதும், அல்லாஹ்வுக்கு எதிராகப் போர் பிரகடனம் செய்கிறார்கள் என்பதும் சாதாரணமான எச்சரிக்கை அல்ல. இறைவனை அஞ்சுகிற எந்த முஸ்லிமும் நிரந்தர நரகத்தில் தள்ளுகின்ற காரியத்தை ஒருக்காலும் செய்ய மாட்டான்.

ஆனால், இன்றைய நவீன உலகில் வட்டியை அறவே தவிர்க்க முடியவில்லை. பல உலக நாடுகள் வட்டியைச் சட்டப்பூர்வமாக அங்கீகரித்து விட்டன. வட்டியில்லாத எந்தக் கொடுக்கல் வாங்கலையும் காண முடியவில்லை. அரசாங்கம் கூட வட்டியின் அடிப்படையில் தான் நாட்டு மக்களுக்கு உதவுவதைப் பார்க்கிறோம்.

இதையெல்லாம் பார்க்கும் சிலர் இஸ்லாம் வட்டியைத் தடை செய்துள்ளதே! ஆனால், அது தவிர்க்க முடியாததாக இருக்கிறதே! வட்டியைத் தடை செய்யாமல் இருந்தால் சிறப்பாக இருக்குமே என்றெல்லாம் எண்ணத்  தலைப்படுகின்றனர். வட்டியை அனுமதிக்கின்ற வகையில் அல்லது ஓரளவுக்காவது வட்டியை அனுமதிக்கின்ற வகையில் ஒரு ஆதாரம் இருக்கக் கூடாதா? என்று கருதுவோரின் கண்ணில் பட்ட ஆதாரம் தான் நாம் ஆரம்பமாக எடுத்துக்காட்டியுள்ள வசனம்.

பன்மடங்காகப் பெருகிக் கொண்டிருக்கும் நிலையில் வட்டியை உண்ணாதீர்கள்! என்ற வாசகத்துக்கு புதுமையான விளக்கம் கூறிக் கொண்டு இஸ்லாமும் ஓரளவு வட்டியை ஆதரிக்கவே செய்கிறது என்று கூறினார்கள்.

(திருக்குர்ஆனை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த யூசுப் அலி போன்றவர்களும் இதிலிருந்து தப்பவில்லை. பின்னர் அது திருத்தப்பட்டது)

வட்டிக்கு வட்டி; அந்த வட்டிக்கும் வட்டி என்ற அடிப்படையில் தான் வட்டி வாங்கக் கூடாது. பன்மடங்காகப் பெருக்கப்பட்ட நிலையில் என்று கூறப்படுவதன் விளக்கம் இது தான். எனவே, சாதாரண வட்டி கூடும், கொடும் வட்டி, வட்டிக்கு வட்டி, மீட்டர் வட்டி போன்றவை தான் கூடாது என மேற்கண்ட வசனத்திற்கு விளக்கம் தருகின்றனர்.

அறிவு ஜீவிகள் எனப்படுவோரும் குர்ஆன் மட்டுமே போதும் நபி வழி தேவையில்லை என்று கூறும் குர்ஆனைப் பற்றிய அறிவில்லாதவர்களும் இவ்வாறு கூறுபவர்களில் முக்கியமானவர்களாவர்.

இவர்கள் கூறும் விளக்கம் தவறானது என்பது திருக்குர்ஆனைச் சிந்தித்தாலே விளங்கும்.

2:279 வசனத்தைப் பாருங்கள்!

"நீங்கள் வட்டியிலிருந்து விலகிக் கொண்டால் உங்கள் மூலதனம் உங்களுக்கு உரியது. நீங்களும் அநியாயம் செய்ய வேண்டாம். அநியாயம் செய்யப்படவும் வேண்டாம் என்று அவ்வசனம் கூறுகிறது.

வட்டிக்குப் பணம் கொடுத்தவர்கள் திருந்துவதாக இருந்தால் கொடுத்த கடனை - அசலை - மூலதனத்தை - மட்டும் தான் திருப்பி வாங்க வேண்டும் என்று கூறப்படுவது கவனமாக சிந்திக்கப்பட வேண்டும்.

"கொடுத்த கடனும் சாதாரண வட்டியும் உங்களுக்கு உரியது'' என்று கூறவில்லை. அசல் மட்டுமே சொந்தம் என்று அல்லாஹ் கூறுகிறான். இதிலிருந்து வட்டி சிறிதளவும் அனுமதிக்கப்படவில்லை என்பதை  அறியலாம்.

"பன்மடங்காகப் பெருக்கப்பட்ட நிலையில்'' என்ற வார்த்தையின் பொருள் என்ன என்பதை இப்போது ஆராய்வோம்.

பொதுவாக வட்டி என்பதே சாதாரணமாகப் பன்மடங்காகவே பெருகிக் கொண்டு தான் இருக்கும். சாதாரண வட்டியிலும் கூட அந்த நிலை இருக்கத் தான் செய்யும். "நூறு ரூபாய்க்கு இரண்டு ரூபாய் வட்டி'' என்று வைத்துக் கொள்வோம். எவ்வளவு காலம் கடந்தாலும் இரண்டு ரூபாயை மட்டும் வட்டியாக வாங்கிக் கொள்ள மாட்டார்கள். அந்த மாதம் இரண்டு ரூபாய் அடுத்த மாதம் இரண்டு ரூபாய் அசலைத் திருப்பித் தர எவ்வளவு மாதம் ஆகுமோ அவ்வளவு இரண்டு ரூபாய் என்று பெருகிக் கொண்டே செல்லும்.

பத்து ரூபாய் பொருளை 20 ரூபாய்க்கு விற்றாலும் அத்துடன் உறவு முடித்து விடும். மாதா மாதம் பத்து ரூபாய் கொடுக்க மாட்டோம்.

வட்டியில் - அது எந்த வகை வட்டியானாலும் அது பல்கிப் பெருகிக் கொண்டே தான் இருக்கும். பல்கிப் பெருகுதல் வட்டிக்கு வட்டியில் மட்டும் தான் ஏற்படும் என்பது தவறாகும்.

இதைப் புரிந்து கொண்டு 2:279 வசனத்தையும் சிந்திக்கின்ற யாரும் எல்லாவிதமான வட்டியையும் இஸ்லாம் அடியோடு தடுத்திருப்பதை அறிந்து கொள்வர்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

More Articles …