Sidebar

17
Thu, Sep

திருக்குர்ஆன் விளக்கம்

(ஒற்றுமை மாதம் இரு முறை இதழில் பீஜே அவர்கள் தேர்வு செய்யப்பட்ட வசனங்களுக்கு விளக்கவுரை எழுதினார். அதன் முதல் கட்டுரை தான் இது. )

ஈஸா நபியால் முன்னறிவிக்கப்பட்டவர் யார்?

{وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَابَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِنْ بَعْدِي اسْمُهُ أَحْمَدُ فَلَمَّا جَاءَهُمْ بِالْبَيِّنَاتِ قَالُوا هَذَا سِحْرٌ مُبِينٌ (6) وَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَى عَلَى اللَّهِ الْكَذِبَ وَهُوَ يُدْعَى إِلَى الْإِسْلَامِ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ (7)61

இஸ்ராயீலின் மக்களே! நிச்சயமாக நான் உங்களின் பால் (அனுப்பப்பட்ட) அல்லாஹ்வின் தூதராவேன். எனக்கு முன்னுள்ள தவ்ராத் (வேதத்)தை மெய்ப்பிப்பவனாகவும், எனக்குப் பின் வரவிருக்கின்ற அஹ்மத் என்னும் பெயருடைய ஒரு தூதரைப் பற்றி நற்செய்தி கூறுபவனாகவும் (வந்துள்ளேன்) என்று மர்யமின் மகன் ஈஸா கூறியதை நினைத்துப் பாருங்கள்! அவர் (அஹ்மத்) தெளிவான சான்றுகளை அவர்களிடம் கொண்டு வந்த போது இது பகிரங்கமான சூனியம் எனக் கூறி விட்டனர். இஸ்லாத்தின் பால் அழைக்கப்படும் நிலையில், அல்லாஹ்வின் மேல் பொய்யை இட்டுக்கட்டுபவனை விட மிகவும் அநியாயக்காரன் யாரிருக்க முடியும். அல்லாஹ் அநியாயக்கார கூட்டத்தினருக்கு நேர்வழி காட்டமாட்டான்.]

திருக்குர்ஆன் 61:6,7

இ து யாருடைய விளக்கவுரையும் தேவைப்படாத அளவுக்கு மிகத் தெளிவாக அமைந்த வசனமாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்னால் இறைவனின் தூதராக அனுப்பப்பட்ட ஈஸா நபியவர்கள், தமது சமுதாயமான இஸ்ரவேல் மக்களிடம் ஒரு முன்னறிவிப்புச் செய்கின்றனர். எனக்குப் பின்னால் அஹ்மத் என்ற பெயருடைய ஒரு தூதர் வரவிருக்கிறார் என்று அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி முன்னறிவிப்பு செய்ததைத் தான் இவ்வசனம் கூறுகிறது.

ஈஸா நபி மட்டுமின்றி இன்னும் பல நபிமார்களும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வருகை குறித்து முன்னறிவிப்பு செய்திருக்கின்றனர்.

இவ்வளவு தெளிவான வசனத்திற்கு எதற்காக விளக்கவுரை என்று கேட்கிறீர்களா? விளக்கவுரை தேவைப்படாத வசனம். என்றாலும் இவ்வசனத்திற்கு சென்ற நூற்றாண்டைச் சேர்ந்த மிர்ஸா குலாம் அஹ்மத் என்பவன் அறிவுக்குப் பொருந்தாத விளக்கம் கொடுத்தான்.

இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் குறிக்கவில்லை, என்னைத் தான் குறிக்கிறது என்று வாதிட்டான்.

நபிகள் நாயகத்தின் பெயர் "முஹம்மத்' தானே தவிர அஹ்மத் அல்ல. என் பெயர் தான் அஹ்மதாக உள்ளது. எனவே, இவ்வசனத்தில் முன்னறிவிப்பு செய்யப்பட்டவன் நான் தான் என்று வாதிட்டான்.

தானும் ஒரு நபி தான் என்று கூறினான். இவ்வசனத்தில் இவனது வாதத்திற்கு ஏதாவது இடமிருக்கிறதா என்று பார்க்காத ஒரு கூட்டம், அவனையும் நபியென்று நம்பியது. இவர்கள் காதியாணிகள் என்று கூறப்படுகின்றனர். முஸ்லிம் சமுதாயத்தின் அனைத்து தரப்பினராலும், இவர்கள் "முஸ்லிமல்லாத புது மதத்தவர்கள்'' என்று தீர்ப்பளிக்கப்பட்டனர்.

மிர்ஸா குலாம் அஹ்மத் என்பவனைப் பற்றியும் அவன் உருவாக்கிய காதியாணி மதம் பற்றியும் இந்தச் சிறிய அறிமுகம் போதுமானதாகும்.

இனி இவ்வசனத்திற்கு இவன் கொடுத்த விளக்கம் சரிதானா? என்று ஆராய்வோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயர் முஹம்மத் மட்டுமல்ல. அஹ்மத் என்பதும் அவர்களின் பெயர் தான்.

صحيح البخاري 

3532 - حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ المُنْذِرِ، قَالَ: حَدَّثَنِي مَعْنٌ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " لِي خَمْسَةُ أَسْمَاءٍ: أَنَا مُحَمَّدٌ، وَأَحْمَدُ وَأَنَا المَاحِي الَّذِي يَمْحُو اللَّهُ بِي الكُفْرَ، وَأَنَا الحَاشِرُ الَّذِي يُحْشَرُ النَّاسُ عَلَى قَدَمِي، وَأَنَا العَاقِبُ "

எனக்கு ஐந்து பெயர்கள் உள்ளன. நான் தான் முஹம்மத். நான் தான் அஹ்மத். நான் தான் ஹாஷிர். நான் தான் ஆகிப். நான் தான் மாஹீ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

நூல் : புகாரி 3352

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே தமது பெயர்களில் அஹ்மதும் ஒன்று எனக் கூறுகிறார்கள். நபிகள் நாயகத்திற்கு அஹ்மத் என்ற பெயர் கிடையாது என்று கூறிய மிர்ஸா குலாம் அஹ்மத் என்பவன் மார்க்க அறிவற்றவன் என்பது இதிலிருந்து தெரியவரும்.

மிர்ஸா குலாம் அஹ்மத் என்ற இவனது பெயரில் அஹ்மத் என்ற வார்த்தை உள்ளதல்லவா? அதனால் இது தன்னைப் பற்றிய முன் அறிவிப்பு என்றான்.

ஒருவனது பெயர் அப்துல்லாஹ்  என்று இருந்தால் அதில் அப்து என்றும் அல்லாஹ் என்றும் இரண்டு சொற்கள் உள்ளன. (இதன் பொருள் அல்லாஹ்வின் அடிமை) அப்துல்லாஹ் என்ற பெயரில் அல்லாஹ் என்ற சொல் உள்ளதால் நான் தான் அல்லாஹ் என்று யாரேனும் கூறினால் நாம் ஏற்றுக் கொள்வோமா?

பெரியார் தாசன் என்று ஒருவருக்குப் பெயர். ஈ.வெ.ரா. பெரியாரைப் பற்றிக் கூறும் வாசகம் தன்னைத் தான் குறிப்பதாக அவர் வாதிட்டால் அவரை நாம் என்னவென்போம்!

மிர்ஸா குலாம் அஹ்மதின் வாதமும், இவரது வாதமும் சமமானவை தான்.

குலாம் என்றால் ஊழியன், பணியாளன், தாசன் என்று பொருள். குலாம் அஹ்மத் என்றால் அஹ்மத் என்பவரின் தாசன் என்பது பொருள்.

"அஹ்மதின் தாசன்' என்ற பெயருடையவன் "அஹ்மத்' என்பது தன்னையே குறிக்கும் என்று கூற முடியாது.

இன்னும் சொல்வதாக இருந்தால், இவனது பெயரே நபிகள் நாயகத்தின் பெயர் அஹ்மத் என்பதற்குச் சான்றாக உள்ளது எனலாம்.

"அஹ்மதின் தாசன்' என்று இவனது தந்தை இவனுக்குப் பெயர் சூட்டிய போது, அவர் அஹ்மத் என்று யாரை நினைத்திருப்பார்? இவன் கூட இவ்வாறு வாதம் செய்த பின் தன் பெயரை அஹ்மத் என்று மாற்றிக் கொள்ளவில்லை. காலமெல்லாம் "அஹ்மத் தாசன்' (குலாம் அஹ்மத்) என்ற பெயரைத் தான் பயன்படுத்தி வந்தான்.

அஹ்மத் தாசன் என்ற பெயரை இவன் கடைசி காலம் வரை பயன்படுத்தியதிலிருந்து இவன் அஹ்மத் அல்ல என்பதும், அஹ்மத் என்பவரின் தாசனே என்பதும் மிகத் தெளிவாகத் தெரிகிறது. அஹ்மத் தாசன் என்று, பெயர் வைத்திருந்த அவன் அந்த அஹ்மத் யார்? என்ற கேள்விக்கு விடையளிக்க முடியாமலே போய்ச் சேர்ந்து விட்டான்.

மிர்ஸா குலாம் அஹ்மத் என்பவனும் ஒரு நபி என்றே வாதத்துக்காக வைத்துக் கொள்வோம். ஈஸா நபி அவர்கள் நிச்சயமாக இவனைக் குறிப்பிட்டிருக்க மாட்டார்கள். ஏனெனில், அவர்களுக்குப் பின் வரக்கூடிய நபிகள் நாயகத்தைத் தான் முன்னறிவிப்புச் செய்வார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) தான் முக்கிய நபி; தான் அவர்களின் நிழல் நபி என்று தான் மிர்ஸா குலாம் வாதிட்டான். ஒரிஜினலும், நிழலும் வரவிருக்கும் போது, ஒரிஜினலை விட்டு விட்டு நிழலைப் பற்றி யாரேனும் முன்னறிவிப்பு செய்வார்களா?

ஒரு கலெக்டர் பின்னால் வருவதை முன் கூட்டியே ஒருவன் அறிவித்துச் செல்கிறான். கலெக்டருடன் அவரது டிரைவரும் வருவார். அறிவிப்புச் செய்பவன் கலெக்டர் வருகிறார் என்று கூறுவானா? கலெக்டரின் டிரைவர் வருகிறார் என்று கூறுவானா?

முதல்வரும்  18-வது வார்டு உறுப்பினரும்  வந்து கொண்டிருக்கும் போது முதல்வர் வருகையைக் கூறாமல் 18-வது வார்டு மெம்பர் வருகிறார் என்று யாரேனும் அறிவிப்பு செய்வார்களா? என்பதைக் கூட இவனும், இவனது மதத்தவர்களும் சிந்திக்கவில்லை.

இது நபிகள் நாயகத்தைத் தவிர வேறு எவரையும் குறிக்கவே முடியாது என்பதற்கு இந்த வசனத்திலேயே வலுவான ஆதாரம் உள்ளது.

"அவர் (அஹ்மத்) அவர்களிடம் வந்த போது, அவர்கள் சூனியம் என்று கூறிவிட்டனர்'' என்று இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த வசனம் அருளப்பட்ட காலத்திற்குப் பிறகு தான் அஹ்மத் வருவார் என்பது இதன் கருத்தாக இருந்தால் இவ்வாறு கூற முடியாது. "அவர் இனி மேல் வரும் போது சூனியம் எனக் கூறுவார்கள்'' என்று வருங்கால வினையாகச் சொல்லப்பட்டிருக்கும். "அவர் வந்த போது'' என்று சென்ற கால வினைச் சொல் (ஃபலம்மா ஜாஅ) பயன்படுத்தப்பட்டுள்ளது.

"அவர் வந்த போது'' "கூறினார்கள்'' என்று குர்ஆன் கூறுவதால், இவ்வசனம் அருளப்பட்ட காலத்தில் அந்த அஹ்மத் வந்திருக்க வேண்டும். அவர் வந்த பின் அவர்கள் அவரை நிராகரித்திருக்கவும் வேண்டும். அவ்வாறு நடந்திருந்தால் தான் "அவர் வந்த போது'' எனக் கூறியிருக்க முடியும்.

இவ்வசனம் அருளப்பட்ட போது மிர்ஸா குலாம் அஹ்மத் என்பவன் வந்திருக்கவில்லை. இவனைப் பற்றிக் குறிப்பிடுவதாக இருந்தால்  "அவர் வரும் போது'' "சூன்யம் எனக் கூறுவார்கள்'' என்று வசனம் அமைந்திருக்கும்.

"அவர் வந்த போது சூனியம் என்று கூறினார்கள்'' என்று கூறப்படுவதால், இவ்வசனம் அருளப்படும் போதே அஹ்மத் வந்துவிட்டார் என்பது தெளிவு.

இவ்வசனம் அருளப்பட்ட போதே வந்திருந்தவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தானே தவிர, இவ்வசனம் அருளப்பட்ட போது எந்தப் பொருளாகவும் இருந்திராத அஹ்மத் தாசன் (குலாம் அஹ்மத்) அல்ல.

இவ்வசனம் தன்னைத் தான் குறிக்கிறது என்பதற்கு இவன் எடுத்துக்காட்டும் முக்கியமான ஆதாரம் என்ன தெரியுமா? "இஸ்லாத்தின் பால் அழைக்கப்படும் போது அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுபவனை விட அநியாயக்காரன் யார்?'' என்று அடுத்த வசனத்தில் கூறப்பட்டுள்ளது.

இவ்வசனத்தில் "இஸ்லாத்தின் பால் அழைக்கப்படும் நிலையில்" என்ற வாசகத்தை எடுத்துக் கொண்டான். எல்லோரும் என்னைக் காஃபிர்கள் என்று கூறி இஸ்லாத்தின் பால் அழைக்கின்றனர். இஸ்லாத்தின் பால் அழைக்கப்பட்டவன் நான் மட்டுமே. எனவே இது என்னைத் தான் குறிக்கிறது என்பது தான் இவனது ஆதாரம்.

முந்தைய வசனம் இவனைக் குறிக்காது என்பதற்கு போதுமான காரணங்களைக் கூறியுள்ளோம்.

இவன் சுட்டிக்காட்டிய இரண்டாவது வசனம் இவனைக் குறிக்கும் என்பதை நாம் மறுக்க வேண்டியதில்லை. அது இவனைத் தான் (இவனையும் தான்) குறிக்கிறது.

"இஸ்லாத்தின் பால் அழைப்பு விடப்படும் நிலையில் அல்லாஹ்வின் பெயரால் பொய் கூறி நானும் நபி என்று வாதிட்டவனைத் தவிர மிகவும் அநியாயக்காரன் யார்?'' என்பது நிச்சயமாக இவனைக் குறிக்கும். அஹ்மத் என்பது ஒருக்காலும் இவனைக் குறிக்காது.

இன்னொரு விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். மிர்ஸா குலாம் அஹ்மத், நபி வேறு - ரசூல் வேறு என்று வித்தியாசப்படுத்தி, தான் ரசூல் அல்ல நபி தான் என்று கூறினான். "ஒரு ரசூலின் வழியில் பல நபிமார்கள் வருவார்கள். அந்த வகையில் முஹம்மது ரசூல் அவர்கள் வழியில் வந்த நபி தான் நான்'' என்றான்.

இப்படி வாதிட்டவன், இந்த வசனத்தில் ரசூலைப் பற்றித் தான் முன்னறிவிப்புச் செய்யப்பட்டுள்ளதை வசதியாக மறைத்து விட்டான். இந்த வசனத்தில் எனக்குப் பின் வரக்கூடிய ரசூலைப் பற்றி முன்னறிவிப்புச் செய்கிறேன் என்று ஈஸா நபி கூறியதாகக் குறிப்பிடுகிறது.

இவனது வாதத்தின்படி இவன் ரசூல் இல்லை.

பெயரிலும் பொய் சொல்லியதாலும், இவனது வாதப்படியே ரசூலாக இல்லாதிருந்தும் ரசூல் என்று வாதிட்டு பொய்யுரைத்ததாலும், இவன் நபியாகவும் இருக்க முடியாது. பொய்யனும்- மூடனும்- மனநோயாளிகளும்- நபியாக அனுப்பப்பட மாட்டார்கள்.

வழிகேடர்கள், தெளிவான வசனங்களையும் எப்படி திசை திருப்புகிறார்கள் என்பதற்கு ஒரு சோற்றுப் பதமே இது.

(வளரும்)

கேள்வி

இரண்டாம் அத்தியாயத்தில் பகரத் என்ற சொல்லுக்கு மற்ற தமிழாக்கங்களில் பசு மாடு என்று மொழி பெயர்த்திருக்க நீங்கள் மட்டும் காளை மாடு என்று பொருள் செய்துள்ளீர்கள். இது அகராதி அர்த்தத்துக்கு முரணாக உள்ளது என்று சிலர் கூறுகிறார்களே? இதற்கு உங்கள் பதில் என்ன?

கா.அ.ஃபழ்லுல் இலாஹி

பதில்:

بقرة என்ற சொல்லில் ة தா உள்ளதால் அதைப் பெண்பால் என்று கருதி இக்கேள்வியைக் கேட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் இது பெண்பாலைக் குறிக்கும் ة தா அல்ல.

பகரத் என்ற சொல்லின் இறுதியில் உள்ள தா என்ற எழுத்து எதற்காக சேர்க்கப்பட்டுள்ளது என்பதை முக்தாருஸ் ஸிஹாஹ் பின்வருமாறு சொல்கிறது.

مختار الصحاح

و للفرق بين الواحد و الجمع نحو بقرة و تمرة و بقر و تمر

பகர் என்றால் பன்மை. அதை ஒருமையாக்குவதற்கு தா சேர்க்கப்படும். அதாவது பகர் என்றால் மாடுகள், பகரத் என்றால் ஒரு மாடு என்று பொருள். தம்ரத் என்றால் ஒரு பேரீச்சம்பழம். தம்ரு என்றால் பேரீச்சம் பழங்கள்

ஆதாரம் : முக்தாருஸ்ஸிஹாஹ்

அதாவது பகரத் என்பதில் உள்ள தா என்பது ஒருமையின் அடையாளமாகும். பெண்பாலின் அடையாளம் அல்ல.

பகர் என்பதும் பகரத் என்பதும் பசு மாடு, காளை மாடு இரண்டுக்கும் பொதுவான சொல்லாகும்.

இதற்கு குர்ஆனில் நேரடியான ஆதாரமும் உள்ளது.

وَمِنَ الْإِبِلِ اثْنَيْنِ وَمِنَ الْبَقَرِ اثْنَيْنِ قُلْ آلذَّكَرَيْنِ حَرَّمَ أَمِ الْأُنْثَيَيْنِ أَمَّا اشْتَمَلَتْ عَلَيْهِ أَرْحَامُ الْأُنْثَيَيْنِ أَمْ كُنْتُمْ شُهَدَاءَ إِذْ وَصَّاكُمُ اللَّهُ بِهَذَا فَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَى عَلَى اللَّهِ كَذِبًا لِيُضِلَّ النَّاسَ بِغَيْرِ عِلْمٍ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ (144)6

144. "ஒட்டகத்தில் இரண்டு, (பகரில்) மாட்டில் இரண்டு உள்ளன. இவற்றில் ஆண் பிராணிகளையா தடை செய்திருக்கிறான்? அல்லது பெண் பிராணிகளையா? அல்லது பெண் பிராணிகளின் கருவில் உள்ளவைகளையா?'' என்று கேட்பீராக!

திருக்குர்ஆன் 6:144

இவ்வசனத்தில் பகர் என்ற சொல் இடம்பெற்றுள்ளது. பகரில் ஆண் பிராணியை அல்லாஹ் ஹராமாக்கினானா? பகரில் பெண் பிராணியை அல்லாஹ் ஹராமாக்கினானா என்று அல்லாஹ் கூறுகிறான்.

அதாவது பகர் என்பது காளை மாடு, பசு மாடு ஆகிய இரண்டுக்கும் பொதுவான சொல்லாகும் என்பதால் பகரில் ஆண்பிராணியா பகரில் பெண் பிராணியா என்று அல்லாஹ் கேட்கிறான். பகர் என்பதன் ஒருமைச் சொல்லான பகரத் என்பதும் இரண்டையும் குறிக்கும்.

எனவே அகராதி அடிப்படையில் பகரத் என்ற சொல்லுக்கு மாடு என்று பொதுவாக மொழி பெயர்க்க வேண்டும்.

பகரத் என்பது பசுமாட்டைத் தான் குறிக்கும் என்று யார் சொல்கிறார்களோ அவர்கள் 6:144 வசனத்துடன் மோதுகிறார்கள்.

பசுமாடு என்றோ காளைமாடு என்றோ மொழிபெயர்ப்பதாக இருந்தால் தக்க சான்று இருக்க வேண்டும்.

அப்படியானால் இரண்டுக்கும் பொதுவான சொல்லுக்கு காளை மாடு என்று நாம் ஏன் பொருள் செய்தோம்? என்ற கேள்விக்கு வருவோம்.

காளை மாடு, பசுமாடு ஆகிய இரண்டையும் பொதுவாக இச்சொல் குறிக்கும் என்றாலும் பயன்படுத்தப்படும் இடத்துக்கு ஏற்ப பொருத்தமான பொருளையே கொள்ள வேண்டும்.

பால் வியாபாரம் செய்ய மாடு வாங்கினேன் என்று சொல்லும் போது காளை மாட்டை வாங்கினேன் என்று பொருள் கொள்ள முடியாது.

உழுவதற்காக மாடு வாங்கினேன் என்று சொன்னால் பசு மாடு வாங்கினேன் என்று பொருள் கொள்ள முடியாது.

அது போல் இங்கே அந்த மாட்டைப் பற்றி மூஸா நபியின் சமுதாயம் கூடுதல் விபரம் கேட்ட போது

"அது நிலத்தை உழவோ, விவசாயத்துக்கு நீரிறைக்கவோ பழக்கப்படுத்தப்படாத மாடு; குறைகளற்றது; தழும்புகள் இல்லாதது'' என்று அவன் கூறுவதாக (மூஸா) கூறினார்.

திருக்குர்ஆன் 2:71

என்று அல்லாஹ் கூறுகிறான்.

உழவு வேலைக்கும், நீரிறைக்கவும் காளை மாடுகள் தான் பயன்படுத்தப்படும்.

மேற்கண்ட வேலைகளுக்குப் பயன்படுத்தப்படும் வகையிலான மாடாக இருந்தும் அந்த வேலைகளுக்குப் பழக்கப்படுத்தப்படாத மாடு என்பது தான் இதன் கருத்து.

பசுமாடாக அந்த மாடு இருந்தால் பசுமாடு என்று அல்லாஹ் சொன்னாலே இக்கருத்து வந்து விடும். ஆனால் அப்படிச் சொல்லவில்லை

அறுக்கச் சொன்னது பசுமாடு அல்ல என்பதால் தான் மேற்கண்ட வேலைகளுக்குப் பழக்கப்படுத்தப்படாமல் செல்லமாக வளர்க்கப்படும் மாடு என்று அல்லாஹ் கூறுகிறான்,

எனவே இந்த இடத்தில் காளை மாடு என்பது தான் பொருத்தமானது என்பதால் நாம் அவ்வாறு பொருள் செய்துள்ளோம்.

பொதுவான சொல்லுக்கு பசுமாடு என்று யார் பொருள் செய்தார்களோ அவர்கள் அதற்கான பொருத்தமான காரணம் கூற வேண்டும். 

ஈஸா நபி கியாமத் நாளின் அடயாளம் என்பது சரியா?

கேள்வி

43:61 வசனத்தில் ஈஸா நபி மறுமை நாளின் அடையாளம் என்று மொழி பெயர்ப்பு மிக பெரும் மோசடியாக தெரிகிறது. இல்முல் சா அத்தி என்பது மறுமை நாளின் அடையாளம் என்று மொழி பெயர்த்துள்ளீர்கள். இல்ம் என்பது அறிவு என்று இருக்க அது மறுமை குறித்து பேசும் போது ஈஸா நபியை அங்கே தினிப்பதற்காக அறிவை அடையாளமாக மாற்றலாமா? அந்த வசனம் குர்ஆனையே குறிக்கிறது. அதுவே எந்த மாற்றமும் இல்லாமல் நேரடியாக பொருள்படுகிறது. மேலும் அந்த வசனத்தின் முடிவில் ஈஸா நபி மறுமை நாளின் அடையாளம்; எனவே என்னைப் பின்பற்றுங்கள் என்று ரசூல் சல் அவர்களை சொல்லச் சொல்வது கேலியாக முடியும். அவர் மறுமை நாளின் அடையாளம் என்று தான் கிருத்துவர்கள் நம்புகிறார்கள். அதையே ரசூல் சல் அவர்கள் கூறி அதனால் தன்னைப் பின்பற்றச் சொல்வார்களா? அல்லது குர்ஆன் மறுமை நாளின் குறித்த இல்மை தருகிறது என்று சொல்லி தன்னைப் பின்பற்ற வேண்டும் என்று சொல்வார்கள்?

நௌசாத், சுவீடன்

பதில்

நமது இந்த மொழி பெயர்ப்பு கவனமில்லாமல் செய்யப்பட்டதல்ல. மிகுந்த கவனத்துடன் தான் செய்யப்பட்டுள்ளது. மறு ஆய்வுக்கு இடமில்லாத வகையில் தான் கவனமாகச் செயல்பட்டுள்ளோம்.

அடையாளம் என்ற மொழிபெயர்ப்பு சரியா என்பதை முதலில் பார்ப்போம். பின்னர் உங்கள் வாதம் சரியா எனப் பார்ப்போம்.

43:61 வசனத்தில் இல்மு (عِلْمٌ) என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் பொருள் அறிவு என்று இருக்க அடையாளம் என்று மொழி பெயர்க்கலாமா என்று கேட்டுள்ளீர்கள்.

இல்மு என்பதற்கு ஒரே ஒரு அர்த்தம் தான் உள்ளது என்று கருதி இக்கேள்வியைக் கேட்டுள்ளீர்கள். இச்சொல்லுக்கு கல்வி என்ற பொருளும் உண்டு. அடையாளம் என்ற பொருளும் உண்டு.

علم என்ற சொல்லில் இருந்து தான் علامة (அலாமத்) என்ற சொல் பிறக்கிறது. அடையாளம் என்பது இதன் பொருள். இதன் பன்மைச் சொல்லான علامات (அலாமாத்) என்ற சொல் அடையாளங்கள் என்ற பொருளில் திருக்குர்ஆனிலும் (16:16) பயன்படுத்தப்பட்டுள்ளது.

16{وَعَلَامَاتٍ وَبِالنَّجْمِ هُمْ يَهْتَدُونَ  [النحل: 16

கடல் பயணிகளுக்கு மலைகள் அடையாளமாக உள்ளதால் மலைகளைக் குறிக்க اعلام  என்ற சொல் 42:32, 55:24 ஆகிய வசனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

42{وَمِنْ آيَاتِهِ الْجَوَارِ فِي الْبَحْرِ كَالْأَعْلَامِ [الشورى: 32]

55{ وَلَهُ الْجَوَارِ الْمُنْشَآتُ فِي الْبَحْرِ كَالْأَعْلَامِ} [الرحمن: 24]

இச்சொற்கள் அனைத்தும் இல்ம் என்ற அதே வேர்ச் சொற்களைக் கொண்டவையாகும்.

குறிப்பிட்ட துறையைக் குறிப்பதற்கும் இல்ம் என்ற சொல் பயன்படுத்தப்படும்.

இல்ம் எனும் சொல் மற்றொரு சொல்லுடன் இணைத்துச் சொல்வதாக இருந்தால் இடைச் சொல் உதவியில்லாமல் நேரடியாக சேர்த்துச் சொல்லப்படும்.

அறிவு என்ற சொல்லை குர்ஆன் பற்றிய அறிவு என்று சொல்ல வேண்டுமானால் இரு சொற்களையும் இடைச் சொல் உதவியில்லாமல் علم القران (இல்முல் குர்ஆன்) என இணைக்க வேண்டும்.

இடைச் சொல் உதவியுடன் இணைத்தால் அடையாளம் என்ற அர்த்தம் வரும்.

இல்மு عِلْمٌ என்ற சொல்லுடன் அஸ்ஸாஅத் السَّاعَةِ எனும் சொல் இணைக்கப்பட்ட நான்கு சொற்கள் குர்ஆனில் உள்ளன. அவற்றில் மூன்று சொற்கள் லி لِ என்னும் இடைச் சொல் துணையில்லாமல் இணைக்கப்பட்டுள்ளது. ஈஸா நபி குறித்த சொல் அப்படி இணைக்கப்படாமல் லி لِ என்ற இடைச் சொல்லின் துணையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இடைச்சொல் துணையில்லாமல் இணைக்கப்பட்ட சொற்களுக்கு கியாமத் நாள் பற்றிய அறிவு என்று பொருள் கொள்ள வேண்டும்.

ஈஸா நபி பற்றி பேசும் வசனத்தில் லி لِ எனும் இடைச் சொல்லின் துணையுடன் இணைக்கப்பட்டுள்ளதால் அடையாளம் என்று தான் பொருள் கொள்ள வேண்டும். அறிவு என்று பொருள் கொள்வதாக இருந்தால் மற்ற மூன்று இடங்களில் பயன்படுத்தப்பட்டது போல் தான் பயன்படுத்தப்பட்டு இருக்கும்

அந்த நான்கு வசனங்களையும் காண்க

31{إِنَّ اللَّهَ عِنْدَهُ عِلْمُ  السَّاعَةِ} [لقمان: 34

41{إِلَيْهِ يُرَدُّ عِلْمُ السَّاعَةِ } [فصلت: 47

43{وَعِنْدَهُ عِلْمُ السَّاعَةِ وَإِلَيْهِ تُرْجَعُونَ} [الزخرف: 85

இம்மூன்று வசனங்களிலும் இல்மு என்ற சொல் அஸ்ஸாஅத் எனும் சொல்லுடன் நேரடியாக இணைந்துள்ளதால் இம்முன்று சொற்களுக்கும் கியாமத் நாள் பற்றிய அறிவு என்று நாம் மொழி பெயர்த்துள்ளோம்.

ஆனால் 43:61 வசனத்தில் இல்முஸ்ஸாஅத் என கூறாமல் இல்முன் லிஸ் ஸாஅதி என்று கூறப்பட்டுள்ளது. லி என்ற இடைச் சொல்லால் இணைக்கப்பட்டுள்ளதால் கியாமத் நாளின் அடையாளம் என்பதே சரியான மொழி பெயர்ப்பாகும்.

43{وَإِنَّهُ لَعِلْمٌ لِلسَّاعَةِ فَلَا تَمْتَرُنَّ بِهَا وَاتَّبِعُونِ هَذَا صِرَاطٌ مُسْتَقِيمٌ  [الزخرف: 61

அடுத்து ஹு என்ற சொல் அவர் என்ற பொருளிலும், அது என்ற பொருளிலும் பயன்படுத்தப்படும். நீங்கள் அது என்று பொருள் கொண்டு குர்ஆனைக் குறிக்கும் என்று கேட்டுள்ளீர்கள்.

நாம் அவர் என்று பொருள் கொண்டு ஈஸா நபி என  பொருள் கொண்டுள்ளோம்.

ஹு என்ற சொல்லுக்கு பொருள் கொள்\ளும் போது அதற்கு முன் எது பற்றி பேசப்படுகிறது என்பதைக் கவனிக்க வேண்டும். ஈஸா நபி பற்றித் தான் பேசப்பட்டுள்ளது என்பதால் இவ்விடத்தில் குர்ஆன் என்று கருத முடியாது.

மேலும் இல்ம் என்பதற்கு அடையாளம் என்பது தான் பொருள் என நிருபணமாகி விட்டதால் குர்ஆன் என்ற அர்த்தம் பொருந்தாது. குர்ஆன் கியாமத் நாளின் அடையாளமாக இல்லை. கியாமத் நாளின் நெருக்கத்தில் குர்ஆன் அருளப்படும் என்று இருந்தால் தான் குர்ஆன் கியாமத் நாளின் அடையாளம் என்று சொல்ல முடியும்.

ஈஸா நபி கியாமத் நாளின் அடையாளம் என்று நாம் சொல்வது போல் கிறித்தவர்களும் நம்புகிறார்கள் என்ற அடிப்படையில் பின்வரும் கருத்தைக் கூறியுள்ளீர்கள்..

அந்த வசனத்தின் முடிவில் ஈஸா நபி மறுமை நாளின் அடையாளம்; எனவே என்னைப் பின்பற்றுங்கள் என்று ரசூல் சல் அவர்களை சொல்லச் சொல்வது கேலியாக முடியும் என்று கேட்டுள்ளீர்கள்.

நீங்கள் இந்த வசனத்தை மட்டும் வைத்து இப்படி வாதிடுகிறீர்கள். இது குறித்து பேசும் 57 வது வசனம் முதல் 61 வசனம் வரை சேர்த்துப் பார்த்தால் இந்தக் கேள்விக்கு இடமில்லை.

{وَلَمَّا ضُرِبَ ابْنُ مَرْيَمَ مَثَلًا إِذَا قَوْمُكَ مِنْهُ يَصِدُّونَ (57) وَقَالُوا أَآلِهَتُنَا خَيْرٌ أَمْ هُوَ مَا ضَرَبُوهُ لَكَ إِلَّا جَدَلًا بَلْ هُمْ قَوْمٌ خَصِمُونَ (58) إِنْ هُوَ إِلَّا عَبْدٌ أَنْعَمْنَا عَلَيْهِ وَجَعَلْنَاهُ مَثَلًا لِبَنِي إِسْرَائِيلَ (59) وَلَوْ نَشَاءُ لَجَعَلْنَا مِنْكُمْ مَلَائِكَةً فِي الْأَرْضِ يَخْلُفُونَ (60) {وَإِنَّهُ لَعِلْمٌ لِلسَّاعَةِ فَلَا تَمْتَرُنَّ بِهَا وَاتَّبِعُونِ هَذَا صِرَاطٌ مُسْتَقِيمٌ (61)} [الزخرف: 61]

57. மர்யமின் மகன் உதாரணமாகக் கூறப்பட்டபோது அதைக் கேட்டு உமது சமுதாயத்தினர் (ஏளனமாகக்) கூச்சலிட்டனர்.

58. "எங்கள் கடவுள்கள் சிறந்தவர்களா? அல்லது அவரா?'' என்று கேட்டனர். விதண்டாவாதம் செய்வதற்காகவே தவிர அவரைப் பற்றி அவர்கள் கூறவில்லை. இல்லை! அவர்கள் வீண் தர்க்கம் செய்வோரே!

59. நாம் அருள் புரிந்த அடியாரைத் தவிர அவர் வேறில்லை.459 இஸ்ராயீலின் மக்களுக்கு அவரை முன்னுதாரணமாக ஆக்கினோம்.

60. நாம் நினைத்திருந்தால் உங்களுக்குப் பகரமாக வானவர்களை இப்பூமியில் வழித்தோன்றல்களாக46 ஆக்கியிருப்போம்.

61. "அவர் (ஈஸா) அந்த நேரத்தின்1 அடையாளமாவார்.342 அதில் நீர் சந்தேகப்படாதீர்! என்னையே பின்பற்றுங்கள்! இதுவே நேர்வழி'' (எனக் கூறுவீராக.)

இதில் 57வது வசனம் கிறித்தவர்கள் பற்றிப் பேசவில்லை. ஈஸா நபியை ஏற்காத மக்கத்து காஃபிர்களைப் பற்றி பேசுகிறது. ஈஸா நபி தந்தையில்லாமல் பிறந்ததைக் கேட்டு அவர்கள் எள்ளி நகையாடினார்கள்.

ஈஸா நபி சம்மந்தமாக நபிகள் நாயகம் கொண்ட கருத்தில் மக்காவின் காஃபிர்கள் இருக்கவில்லை. அதற்கு மாற்றமான கருத்தில் தான் இருந்தனர். எனவே என்னைப் பின்பற்றுங்கள் என அவர்களுக்குக் கூறுவது கேலிக்குரியதாக ஆகாது.

அவர் எப்படி உயர்த்தப்பட்டு இருக்க முடியும்? இது சாத்தியமற்றதல்லவா என்ற எண்ணம் ஆழ்மனதில் இருப்பதால் அதைப் பொய்யாக்க இயன்ற வரை மனித மனம் நினைக்கிறது.

ஆனால் அவரது பிறப்பு இதை விட அற்புதமானது சாத்தியமற்றது என்பதை நம்புவோருக்கு இது பிரச்சனை இல்லை.

மிஃராஜில் நபியை அழைத்துப் போனதில் நபியின் திறமை  ஒன்றும் இல்லை. வல்லமை மிக்க அல்லாஹ்வின் வல்லமையைக் காட்டும் நிகழ்வு என்று புரிந்து கொள்கிறோம்.

அது போல் தான் ஈஸா நபி உயத்தப்பட்டதில் அவரது ஆற்றலோ வல்லமையோ வெளிப்படவில்லை. அல்லாஹ் தான் நினைத்த்தைச் செய்யும் வல்லமை உள்ளவன் என்று புரிந்து கொண்டால் இதில் எந்த மனக்குழப்பமும் ஏற்படாது.

ஈஸா நபி குறித்து கீழ்க்கண்ட ஆக்கங்களையும் பார்க்கவும்

ஈஸா நபி உயிருடன் உயர்த்தப்பட்டார்களா

ஈஸா நபி சிலுவையில் அறையப்பட்டாரா

ஈஸா நபி மரணிப்பதற்கு முன் அவரை ஏற்பார்கள்

ஈஸா நபி உயர்த்தப்பட்டதை உறுதி செய்யும் மறுமை விசாரணை

உயிருடன் உள்ள ஈஸா நபி யாருக்கு ஜகாத் கொடுப்பார்

இறுதிக்காலத்தில் ஈஸா வருவார்

எதுவரை இறைவனை வணங்க வேண்டும்?

ஒற்றுமை மாதமிருமுறை இதழில் தேர்வு செய்யப்பட்ட வசனங்களுக்கு பீஜே எழுதிய விளக்கம்

உமக்கு யகீன் வரும் வரை உமது இறைவனை வணங்குவீராக.

திருக்குர்ஆன் 15:99

உலகில் உள்ள ஆன்மீக நெறிகளில் இஸ்லாம் தலைசிறந்த ஆன்மீக நெறியாகத் திகழ்கிறது. ஆன்மீகத்தின் பெயரால் சுரண்டல் நடப்பதை அடியோடு தடை செய்திருக்கும் மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. இதில் நாம் பெருமிதம் கொள்கிறோம். முஸ்லிமல்லாத அன்பர்களும் கூட இதை ஒப்புக் கொள்கின்றனர்.

ஆயினும், முஸ்லிம் சமுதாயத்திலும் போலி ஆன்மீகவாதிகள் உருவானர்கள். அவர்களின் போலி ஆன்மீகக் கொள்கைக்கு குர்ஆனிலும், நபிவழியிலும் ஆதாரம் ஏதும் இல்லை என்ற போதிலும், திருக்குர்ஆனின் சில வசனங்களைத் தங்கள் விருப்பம் போல் வளைத்து, அதை ஆதாரமாகக் காட்டினார்கள். மார்க்கம் அறியாத மக்களை ஏமாற்றலானார்கள்.

போலி ஆன்மீகவாதிகள் தமக்குச் சாதகமாக வளைத்துக் காட்டும் வசனங்களில் மேலே கூறப்பட்ட வசனமும் ஒன்றாகும்.

ஆன்மீகக் குருமார்கள் என்று தம்மைத் தாமே கூறிக் கொள்ளும் போலிகள் இஸ்லாத்தின் ஏராளமான கட்டளைகளைக் கடைப்பிடிக்க மாட்டார்கள். தொழுகை, நோன்பு போன்ற கடமைகளைக் கூட நிறைவேற்ற மாட்டார்கள்.

ஆடல், பாடல் கேளிக்கைகளில் கூட மூழ்குவார்கள்! அந்நியப் பெண்ணிடம் தனித்திருப்பார்கள்!

ஏன் இப்படி நடக்கிறீர்கள் என்று கேட்டால் சட்டதிட்டங்கள் எல்லாம் சாதாரணமானவர்களுக்குத் தான். நாங்கள் ஆன்மீகத்தில் கரை கண்டு விட்டதால் எங்களுக்கு எந்தச் சட்டதிட்டங்களும் இல்லை என்று கூறுவார்கள்.

உறுதி வரும் வரை இறைவனை வணங்க வேண்டும் என்று தான் அல்லாஹ் கூறுகிறான். உறுதி வராத சாதாரண மக்கள் மீது தான் வணக்க வழிபாடுகள் கடமையாகும். எங்களுக்கு உறுதி வந்து விட்டதால் நாங்கள் இறைவனை வணங்க வேண்டியதில்லை எனக் கூறுவார்கள். மேற்கண்ட வசனத்தை இதற்கு ஆதாரமாகக் காட்டுவார்கள்.

உறுதி வரும் வரை இறைவனை வணங்கு என்று குர்ஆனில் கூறப்பட்டுள்ளதால் போலிகளின் வாதத்தை உண்மையென்று நம்பிப் பலரும் ஏமாந்து போகின்றனர்.

எனவே இந்த வசனம் கூறுவது என்ன? என்பதை விரிவாகவே நாம் ஆராய்வோம்.

உறுதி என்று தமிழாக்கம் செய்யப்பட்ட இடத்தில் யகீன் என்ற மூலச்சொல் இடம்பெற்றுள்ளது. இச்சொல்லுக்கு உறுதி, உறுதியான நிகழ்வு என்று பொருள் உண்டு.

உறுதி, உறுதியான நிகழ்வு ஆகிய இரண்டு அர்த்தங்கள் இச்சொல்லுக்கு இருக்கிறது. இரண்டுக்குமுள்ள வேறுபாட்டை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

உறுதி என்றால் மனிதனின் சிந்தனையில் ஏற்படும் நம்பிக்கை.

உறுதியான நிகழ்வு என்றால் சந்தேகத்திற்கிடமில்லாத காரியத்தைக் குறிக்கும்.

உறுதியான காரியத்தைக் குறிப்பதற்கும், உறுதியான நம்பிக்கையைக் குறிப்பதற்கும் யகீன் என்ற சொல் அரபு மொழியில் பயன்படுத்தப்படும்.

ஒரு கல்லை எடுத்து மேலே நாம் வீசுகிறோம். வீசிய கல் கீழே விழுவது உறுதியாக நடந்து விடும் என்பதால் இதையும் யகீன் (உறுதியான நிகழ்வு) என்று எனலாம்.

கல்லை மேலே வீசாமலே ஒரு கல்லை மேலே வீசினால் கீழே விழும் என்று நம்புகிறோம். இதையும் யகீன் (உறுதியான நம்பிக்கை) எனக் கூறலாம்.

இந்த வசனத்தில் உள்ள யகீன் என்பதற்கு எவ்வாறு பொருள் கொள்வது?

உனது உள்ளத்தில் - சிந்தனையில் - உறுதி வரும் வரை என்று பொருள் கொள்வதா?

அல்லது உறுதியான ஒரு காரியம் அதாவது மரணம் உம்மிடம் வரும் வரை என்று பொருள் கொள்வதா? என்பதை முடிவு செய்து விட்டால் தெளிவு கிடைத்துவிடும்.

யகீன் (உறுதியான காரியம்) என்று பொதுவாகப் பயன்படுத்தப்பட்டால் உறுதியான காரியங்கள் பல இருந்தாலும் மரணத்தையே அரபுகள் கருத்தில் கொள்வார்கள்.

ஏனெனில், உலகிலேயே மிகவும் உறுதியான ஒரே விசயம் மரணம் மட்டுமே.

ஒவ்வொரு மனிதனும் மரணிப்பான் என்பதை நம்பாத ஒரே ஒரு மனிதன் கூட உலகில் கிடையாது. அனைத்து மக்களும் உறுதியான காரியமாக நம்புவது மரணத்தை மட்டுமே. எனவே உறுதி என்ற பொருளைத் தவிர்த்து உறுதியான காரியம் என்று பொருள் கொண்டால் அதன் கருத்து மரணம் தான் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த வசனத்தில் உமக்கு உறுதி(யான நம்பிக்கை) வரும் வரை என்று பொருள் கொள்ள முடியாது.

உமக்கு உறுதி(யான நிகழ்வு-மரணம்) வரும் வரை என்று தான் இங்கே பொருள் கொள்ள வேண்டும்.

இதற்குப் பல காரணங்கள் உள்ளன.

முதலாவது காரணம் என்னவென்றால் யகீன் என்ற சொல்லுடன் வருகை என்ற சொல்லோ, அல்லது வருகையிலிருந்து பிறந்த சொல்லோ இணையுமானால் அப்போது உறுதியான நம்பிக்கை என்று பொருள் கொள்ளக் கூடாது. உறுதியான நிகழ்வு - உறுதியான காரியம் - (அதாவது மரணம்) என்று தான் பொருள் கொள்ள வேண்டும்.

யகீன் வந்தது

யகீன் வரும்

யகீன் வருமானால்

யகீனின் வருகை

என்றெல்லாம் யகீன் என்ற சொல்லுடன் வருகை அல்லது அதிலிருந்து பிறந்த சொற்கள் சேர்ந்தால் மரணம் என்றே பொருள்.

நாம் மேலே குறிப்பிட்டுள்ள வசனத்தில் உமக்கு யகீன் வரும் வரை என்று கூறப்பட்டுள்ளது. வருகையுடன் சேர்த்து கூறப்பட்டுள்ளதால் உறுதியான நம்பிக்கை என்று பொருள் கொள்ளவே முடியாது.

உள்ளத்தில் உறுதியான நம்பிக்கை வருவது வரை என்று கூற வேண்டுமானால் யகீன் என்ற சொல்லை வினைச் சொல்லாக மாற்றிக் கூறவேண்டும்.

அதாவது ஹத்தா தஸ்தைகின எனக் கூறினால் உறுதியான நம்பிக்கை உமக்கு வரும் வரை எனப் பொருள். யகீன் என்பது தஸ்தைகின என்று வினைச் சொல்லாக மாற்றப்பட்டுள்ளது.

யகீன் உம்மிடம் வரும் வரை என்று (ஹத்தா யஃதியகல் யகீன்) கூறப்பட்டால் உறுதியான நம்பிக்கை உமக்கு வரும் வரை என்ற அர்த்தம் செய்யவே முடியாது. உறுதியாக நிகழ வேண்டிய ஒரு காரியம் உம்மை வந்து அடையும் வரை என்று தான் பொருள் கொள்ள முடியும்.

அரை குறையான மொழியறிவை வைத்துக் கொண்டு தான் இவ்வசனத்திற்கு இலக்கணப்படி செய்யத் தகாத அர்த்தம் செய்து மக்களை ஏமாற்றுகின்றனர் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

இதற்குச் சான்றாக திருக்குர்ஆனில் இடம்பெற்ற இது போன்ற மற்றொரு வசனத்தை நாம் எடுத்துக் காட்டலாம்.

திருக்குர்ஆனின் 74வது அத்தியாயத்தின் இறுதியில் நரகவாசிகளுடன் நல்லடியார்கள் உரையாடும் காட்சியை அல்லாஹ் எடுத்துக் காட்டுகிறான்.

நீங்கள் ஏன் நரகத்துக்கு வந்தீர்கள் என்ற கேள்விக்கு நரகவாசிகள் விடையளிக்கும் போது:

நாங்கள் தொழுகையாளிகளாக இருந்ததில்லை. ஏழைகளுக்கு நாங்கள் உணவளிக்கவில்லை. வீணர்களுடன் மூழ்கிக் கிடந்தோம். நியாயத் தீர்ப்பு நாளை நம்பாமல் இருந்தோம்

என்றெல்லாம் காரணங்களை நரகவாசிகள் அடுக்குவார்கள். எதுவரை இவ்வாறு நடந்து கொண்டோம் எனக் கூறும் போது:

எங்களுக்கு யகீன் வரும் வரை என்றும் அவர்கள் கூறுவார்கள். (74:47)

15:99 வசனத்தில் இடம் பெற்ற அதே யகீன் என்ற சொல் வருகையிலிருந்து பிறந்த வரும்வரை என்ற சொல்லுடன் இணைந்து இங்கே இடம்பெற்றுள்ளது.

15:99 வது வசனத்திற்கு போலி ஆன்மீகவாதிகள் எவ்வாறு பொருள் செய்தார்களோ அது போல் இங்கேயும் அவர்கள் பொருள் செய்து காட்டவேண்டும்.

அதாவது எங்களுக்கு உறுதி வரும் வரை தொழாமல் இருந்தோம். எங்களுக்கு உறுதி வரும் வரை நியாயத் தீர்ப்பு நாளை மறுத்து வந்தோம் என்று தான் இவர்களது வாதத்தின்படி பொருள் கொள்ள வேண்டும்.

உறுதி வரும் வரை தொழாமல் இருந்தோம். உறுதி வந்தவுடன் தொழுது விட்டோம் என்ற கருத்து அதனுள் அடங்கியுள்ளது.

உறுதி வந்த பின்னர் தொழுதார்கள் என்றால் ஏன் நரகத்தில் தள்ளப்பட வேண்டும்?

உறுதி வந்த பின் ஏழைகளுக்கு உணவளித்தவர்கள் ஏன் நரகத்திற்குச் சென்றார்கள்?

அவர்கள் சொர்க்கத்திற்கு அல்லவா சென்றிருக்க வேண்டும். இந்த இடத்தில் தான் இவர்களது அறியாமை அம்பலமாகின்றது.

மரணம் என்று இங்கே பொருள் செய்து பாருங்கள்!

எங்களுக்கு மரணம் வரும் வரை ஏழைகளுக்கு உணவளிக்கவில்லை என்று பொருள் கொண்டால் அவர்கள் ஏன் நரகத்திற்குச் சென்றார்கள் என்ற கேள்விக்குரிய பொருத்தமான விடையாக அமைந்து விடுகிறது.

உறுதி வரும் வரை என்று பொருள் கொண்டால் ஏன் நரகத்திற்குச் சென்றார்கள் என்ற கேள்விக்கு விடையாக அது அமையாது.

எங்களுக்கு யகீன் (உறுதியான நிகழ்வு என்னும் மரணம்) வரும் வரை என்று இங்கே பொருள் கொள்ளும் நிலைக்கு அவர்கள் இப்போது தள்ளப்படுவார்கள்.

15:99 வசனத்திற்கும் இப்படித் தான் பொருள் கொள்ள வேண்டும். அது தான் இலக்கண விதியாகும்.

எனவே உறுதியான நிகழ்வு என்னும் மரணம் வரும் வரை உமது இறைவனை வணங்க வேண்டும் என்பது தான் இவ்வசனத்தின் பொருளாகும்.

மனிதர்களிலேயே அதிகமான உறுதியைப் பெற்றவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம். உறுதி வரும் வரை தான் வணங்க வேண்டும் என்பது இறைவனின் கட்டளையாக இருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எல்லா வணக்கத்தையும் விட்டிருப்பார்கள்.

எனக்கு உறுதி வந்து விட்டதால் நான் வணங்க மாட்டேன். வணங்கத் தேவையில்லை. நீஙகள் மட்டும் வணங்குங்கள் என்று அவர்கள் கூறியிருக்க வேண்டும். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மரணம் வரை இறைவனை வணங்கிக் கொண்டே இருந்தார்கள்.

மற்றவர்களுக்கு எதைத் தடை செய்தார்களோ அதை முதலில் தவிர்த்துக் கொள்பவர்களாக கடைசி வரை அவர்கள் இருந்தார்கள். மற்றவர்களை விட அதிகம் வணங்குபவர்களாக அவர்கள் இருந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை இவ்வசனத்தின் பொருளை நமக்கு மேலும் தெளிவாக விளக்கி விடுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அடுத்து உறுதியான நம்பிக்கையைப் பெற்றவர்கள் நபித்தோழர்கள். இந்தப் போலி ஆன்மீகவாதிகளை விட பல மடங்கு உறுதியை அவர்கள் பெற்றிருந்தார்கள். அவர்களில் ஒருவர் கூட எனக்கு உறுதி வந்து விட்டதால் இனி மேல் வணங்க மாட்டேன் எனக் கூறவில்லை. மரணிக்கும் வரை அவர்கள் வணங்கிக் கொண்டு தான் இருந்தார்கள்.

இதன் காரணமாகவும், போலி ஆன்மீகவாதிகள் செய்த அர்த்தம் தவறானது என்பது உறுதியாகிறது.

ஆன்மீகம் என்பது மேலும் மேலும் மனிதனின் நிலையை உயர்த்த வேண்டும். மேலும் மேலும் மனிதனைப் பக்குவப்படுத்த வேண்டும். ஆனால், இந்தப் போலி ஆன்மீகவாதிகள் கொடுக்கும் விளக்கம் மனிதனை மேலிருந்து கீழே இறக்குவதாக அமைந்துள்ளது.

அதாவது உறுதி வரும் வரை தொழுவார்களாம்! உறுதி வந்து விட்டால் கஞ்சா அடிப்பார்களாம்! ஆட்டம் போடுவார்களாம்! ஒரு பொறுக்கியின் நடவடிக்கைக்கு ஒப்ப நடப்பார்களாம்!

மனிதனைப் பாதாளப் படுகுழியில் தள்ளுகின்ற இப்படி ஒரு வழியை இஸ்லாம் கூறுமா என்பதைச் சிந்தித்தால் இவர்கள் எந்த அளவுக்கு கேடுகெட்டவர்கள் என்பதை அறியலாம்.

உஸ்மான் பின் மழ்வூன் என்ற தோழர் இறந்தபோது இவர் மரணித்து விட்டார் என்று சொல்வதற்குப் பதிலாக இவருக்கு யக்கீன் வந்து விட்டது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (பார்க்க : புகாரீ 1243)

எனவே உறுதி வரும் வரை வணங்குவீராக என்பது இதன் பொருளல்ல. உறுதியான மரணம் வரும் வரும் வரை வணங்குவீராக என்பது தான் இதன் பொருளாகும். எனவே போலி ஆன்மிகவாதிகளுக்கு இதில் எந்த ஆதாரமும் இல்லை.

உறுதியான காரியமாக இருக்கக் கூடிய மரணம் உங்களுக்கு வரும் வரை வணங்கிக் கொண்டே இருங்கள் என்பது தான் இவ்வசனத்தின் பொருளே தவிர போலி ஆன்மீக வாதிகள் கூறுவது போல் பொருள் கொள்ள முடியாது என்பதில் எள் முனையளவு கூட சந்தேகமில்லை.

06.02.2011. 9:26 AM

யூசுப் அத்தியாயம் ஓதினால் குழந்தை அழகாக பிறக்குமா?

கேள்வி:

குழந்தை வயிற்றில் இருக்கும் பத்து மாதமும் யூசுப் அத்தியாயம் ஓதினால் குழந்தை அழகாக பிறக்குமா ?

அன்ஆம் அத்தியாயம் ஓதினால் நாம் நினைத்த நாட்டங்கள் நிறைவேறும் என்கிறார்களே அது உண்மை தானா?

சித்தி லைலா

பதில்:

குழந்தை வயிற்றில் இருக்கும் போது பத்து மாதமும் யூசுஃப் அத்தியாயம் ஓதினால் குழந்தை அழகாகப் பிறக்கும் என்று நம்புவதற்கு ஏற்கத் தகுந்த எந்த ஆதாரமும் இல்லை. இந்தக் கருத்தைக் கூறும் ஒரு இட்டுக்கட்டப்பட்ட செய்தியைக் கூட நம்மால் பார்க்க முடியவில்லை.

யூசுஃப் நபி பேரழகுடையவராக இருந்தார் என்று ஹதீஸ்கள் உள்ளன. அவரைப் பற்றிக் கூறும் அத்தியாயத்தை ஓதினால் குழந்தை அழகாகப் பிறக்கும் என்று முடிவு செய்வது மடமையாகும்.

மேலும் அல்அன்ஆம் அத்தியாயத்தை ஓதினால் நமது நாட்டங்கள் நிறைவேறும் என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை.

இது மட்டுமல்லாமல் ஜின் அத்தியாயத்தை ஓதினால் ஜின்னை வசப்படுத்தலாம் என்றும் சிலர் உளறி வருகின்றனர்.

ஜின்களைப் பற்றி இந்த அத்தியாயம் பேசுவதால் அந்த அத்தியாயத்துக்கு ஜின் என்று பெயர். ஜின்களை வசப்படுத்தலாம் என்பதற்காக இந்த அத்தியாயம் அருளப்படவில்லை. இந்த அத்தியாயத்தைச் சிந்தித்தால் ஜின்களை மனிதன் வசப்படுத்த முடியாது என்று தான் முடிவு செய்ய இயலும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குர்ஆன் ஓதிய போது அதை ஜின்கள் செவியுற்றனர். ஆனால் இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தெரியவில்லை. அல்லாஹ் வஹீ மூலம் இதை அறிவித்த பிறகுதான் அறிந்தனர் என்று இந்த அத்தியாயம் கூறுகிறது.

ஜின்களில் ஒரு கூட்டத்தார் செவியுற்று "நாங்கள் ஆச்சரியமான குர்ஆனைச் செவியுற்றோம் எனக் கூறியதாக எனக்கு (வஹீ மூலம்) அறிவிக்கப்பட்டது'' என (முஹம்மதே!) கூறுவீராக!

திருக்குர்ஆன் 72:1

இந்த அத்தியாயத்தின் முதல் வசனமே இப்படித்தான் ஆரம்பிக்கிறது. ஜின்கள் தனிப்படைப்பு. மனிதர்களின் பார்வையில் பட மாட்டார்கள். அருகில் அமர்ந்து நாம் ஓதுவதை அவர்கள் கேட்டாலும் அதை நாம் அறிந்து கொள்ள முடியாது எனும் போது ஜின்களை எப்படி வசப்படுத்த முடியும்?

ஜின்களை மனிதன் வசப்படுத்த முடியும் என்றால் மனிதனை விட ஜின்கள் பலவீனமாக இருக்க வேண்டும். ஆனால் மனிதர்களை விட அதிக ஆற்றல் ஜின்களுக்கு உள்ளன என்று இதே அத்தியாயம் கூறுகிறது.

வானத்தைத் தீண்டினோம். அது கடுமையான பாதுகாப்பாலும், தீப்பந்தங்களாலும் நிரப்பப்பட்டுள்ளதைக் கண்டோம். (ஒட்டுக்) கேட்பதற்காக அங்கே பல இடங்களில் அமர்வோராக இருந்தோம். இப்போது யார் (ஒட்டுக்) கேட்கிறாரோ அவர் காத்திருக்கும் தீப்பந்தத்தை தனக்கு (எதிராக) காண்பார்.

திருக்குர்ஆன் 72:8,9

எவ்வித சாதனங்களும் இல்லாமல் வானுலகம் வரை செல்லும் ஆற்றல் ஜின்களுக்கு உள்ளன என்று இவ்வசனங்கள் கூறுகின்றன. எனவே நாம் வசப்படுத்தும் அளவுக்கு ஜின்கள் பலவீனமாக இல்லை.

நாஸ் என்றால் மனிதர்கள் என்று பொருள். இந்தப் பெயரில் ஒரு அத்தியாயம் திருக்குர்ஆனில் உள்ளது.

இதை ஓதினால் மனிதர்களை வசப்படுத்த முடியும் என்று சொல்வார்களா?

மாடு எனும் பொருள் கொண்ட பகரா அத்தியாயத்தை ஓதிகொண்டே இருந்தால் மாட்டை வசப்படுத்திவிட முடியுமா?

தேனீ, எறும்பு, சிலந்தி, யானை ஆகிய பெயர்களைக் கொண்ட அத்தியாயங்கள் உள்ளன. இந்த அத்தியாயங்களை ஓதி தேனீக்களையும், எறும்புகளையும், சிலந்திகளையும், யானைகளையும் வசப்படுத்தலாம் என்று சொல்வார்களா?

இது போன்று சொல்லப்படும் அனைத்தும் கட்டுக் கதைகளாகத் தான் உள்ளன.

04.04.2010. 1:14 AM

நபியின் பெற்றோர் குறித்த அறியாமை வாதத்திற்கு பதில்!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெற்றோர் சொர்க்கம் செல்வார்கள் என்ற கருத்தில் ஒருவர் வாதிடும் வீடியோ ஒன்று பரவி வருகிறது.

இதில் பேசுபவர் என்ன வாதிடுகிறார் என்றால் திருக்குர்ஆனின் 17:24 வசனத்தில், கீழ்க்கண்டவாறு அல்லாஹ் நபிக்குக் கூறுகிறான் :

சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள் புரிவாயாக!  என்று கேட்பீராக.

நபியவர்கள் தமது பெற்றோருக்காக துஆ செய்யுமாறு அல்லாஹ் கூறுவதால் அவர்களின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்வான் என்று தெரிகிறது.

இவ்வசனத்தின் அடிப்படையில் நபியின் பெற்றோர் சொர்க்கம் செல்வார்கள் என்பது தெரிகிறது.

நபியின் பெற்றோருக்கு நரகம் என்று வரும் ஹதீஸ்கள் இவ்வசனத்துக்கு முரணாக உள்ளது. குர்ஆனின் கருத்துப்படி நபியின் பெற்றோர் சொர்க்கவாசிகளே என்பது இவரது வாதம்.

அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தவர்களுக்கு பாவமன்னிப்பு கேட்கக் கூடாது என்பதை இவர் இந்த வீடியோவில் ஏற்றுக் கொள்கிறார்.

இவர் கூறுவது போல் குர்ஆனில் இருந்தால் இவரது வாதம் ஏற்கத்தக்கது தான். குர்ஆனுக்கு முரணாக உள்ள ஹதீஸ்களை ஏற்கக் கூடாது என்ற அடிப்படை சரியானது தான்.

ஆனால் இவர் குர்ஆனை தனக்கு விருப்பமான கருத்துக்கு ஏற்ப வளைத்துள்ளதால் இப்படி ஒரு வாதத்தை வைத்துள்ளார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது தாயும், தந்தையும் பற்றி ஹதீஸ்களில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதை முதலில் பார்ப்போம்.

இது பற்றிய ஹதீஸ்கள் என்ன என்பதை அறிந்து கொள்வதுடன் தமது பெற்றோரை நரகவாசிகள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருப்பதில் தான் அவர்களின் சிறப்பும் கொள்கைத் தெளிவும் மிளிர்கிறது என்பதை மாமனிதர் நபிகள் நாயகம் என்ற நூலில் பீஜே அவர்கள் பின்வருமாறு விளக்கியுள்ளார்.

صحيح مسلم

521 – حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا عَفَّانُ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ أَنَّ رَجُلاً قَالَ يَا رَسُولَ اللَّهِ أَيْنَ أَبِى قَالَ « فِى النَّارِ ». فَلَمَّا قَفَّى دَعَاهُ فَقَالَ « إِنَّ أَبِى وَأَبَاكَ فِى النَّارِ »

ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து என் தந்தை எங்கே இருக்கிறார் என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நரகத்தில் என்றார்கள். அவர் கவலையுடன் திரும்பிச் சென்றார். அவரை மீண்டும் அழைத்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என் தந்தையும், உன் தந்தையும் நரகத்தில் தான் இருப்பார்கள் என்று கூறினார்கள்.

நூல் : முஸ்லிம்

கேள்வி கேட்டவரின் தந்தை ஒரு கடவுளை நம்பாமல் சிலைகளைக் கடவுளாக கருதி வணங்கி வந்த நிலையிலேயே மரணித்து விட்டார். அவர் நரகத்தில் தான் இருப்பார் என்று தயக்கமின்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விடையளிக்கிறார்கள். யாருடைய மனமும் புண்படக் கூடாது என்பதற்காக எந்த விதமான சமரசமும் அவர்கள் செய்யவில்லை.

ஆனால் வந்தவர் தனது தந்தை பற்றித் தான் கேள்வி கேட்டார். நபிகள் நாயகத்தின் தந்தை பற்றி எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. வேறு யாரும் இத்தகைய கேள்விகளைக் கேட்கவில்லை. ஆனாலும் வலிய வந்து தமது தந்தையும் நரகத்தில் தான் இருப்பார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

இது அவர்களின் மாசு மருவற்ற நேர்மைக்கும், கொள்கைப் பிடிப்புக்கும் எடுத்துக் காட்டாக உள்ளது.

கேள்வி கேட்டவரின் தந்தை எவ்வாறு பல தெய்வ நம்பிக்கையுடையவரோ, அது போல் தான் நபிகள் நாயகத்தின் தந்தையும் இருந்தார். பல தெய்வ நம்பிக்கையுடையோரை இறைவன் நரகத்தில் தள்ளுவான் என்ற விதியில் எனது தந்தை என்பதற்காக எந்த விதிவிலக்கும் இல்லை என்று அறிவிக்கிறார்கள்.

தந்தையைப் பற்றி மட்டுமின்றி தமது தாயாரைப் பற்றியும் இவ்வாறே அறிவிப்புச் செய்தார்கள்.

صحيح مسلم

2303 – حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ وَمُحَمَّدُ بْنُ عَبَّادٍ – وَاللَّفْظُ لِيَحْيَى – قَالاَ حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ عَنْ يَزِيدَ – يَعْنِى ابْنَ كَيْسَانَ – عَنْ أَبِى حَازِمٍ عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « اسْتَأْذَنْتُ رَبِّى أَنْ أَسْتَغْفِرَ لأُمِّى فَلَمْ يَأْذَنْ لِى وَاسْتَأْذَنْتُهُ أَنْ أَزُورَ قَبْرَهَا فَأَذِنَ لِى ».

என் தாயாரின் பாவங்களை மன்னிப்பு கேட்டு பிரார்த்திக்க இறைவனிடம் நான் அனுமதி கேட்டேன். அவன் மறுத்து விட்டான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : முஸ்லிம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தந்தையைப் போலவே தாயாரும் பல தெய்வ நம்பிக்கையுடையவராகவே இருந்து மரணித்திருந்தார். நபிகள் நாயகத்தின் தாயார் என்பதற்காக எவ்வித விதிவிலக்கும் அளிக்கப்பட மாட்டாது என்று தெளிவுபடுத்துகிறார்கள்.

ஆன்மிகத் தலைவர்கள் மற்றவர்களுக்கு விலக்கு அளிக்கிறார்களோ இல்லையோ தங்களுக்கு விலக்கு அளித்துக் கொள்வார்கள். எதைப் போதித்தார்களோ அதற்கு மாற்றமாக நடப்பார்கள். யரேனும் கேள்வி எழுப்பினால் நாங்கள் தனிப் பிறவிகள் என்பார்கள்.

ஆனால் நபிகள் நாயகம் அவர்கள் இந்தக் கொள்கையை நான் மீறினாலும் எனக்குக் கிடைப்பது நரகமே என்று தெளிவான வார்த்தைகளால் பிரகடனம் செய்தார்கள்.

  • மாமனிதர் நபிகள் நாயகம் என்ற நூலில் இருந்து

நபியின் பெற்றோர் குறித்த மேற்கண்ட ஹதீஸ்கள் தான் குர்ஆனுக்கு முரணானவை என்று இந்த வீடியோக்காரர் வாதிடுகிறார்.

இவரது வாதப்பட்டி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இஸ்லாத்தை ஏற்ற அத்தனை நபித்தோழர்களின் பெற்றோர்கள் குறித்து இந்த வாதத்தை இவர் எடுத்து வைப்பாரா?

நபிகள் நாயகத்துக்கு முன் மரணித்த நபித்தோழர்களின் பெற்றோர்கள் அனைவரும் சொர்க்கவாசிகள் என்று இவர் வாதிடுவாரா?

அப்படி வாதிட மாட்டார் என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கொள்கையில் தமது பெற்றோருக்கு மட்டும் விதிவிலக்கு அளித்துக் கொண்டார்கள் என்று ஆகும். அல்லாஹ்வின் தூதர் ஒருக்காலும் கொண்ட கொள்கையில் சமரசம் செய்து கொண்டதே இல்லை என்பது தான் உண்மை. அதற்கு அவர்களுக்கு அதிகாரமும் இல்லை.

இந்த வீடியோக்காரர் சுட்டிக்காட்டும் வசனங்கள் கூறுவது என்ன?

என்னைத் தவிர யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்! என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் (தாய் தந்தை ஆகிய) அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி சீ எனக் கூறாதீர்! அவ்விருவரையும் விரட்டாதீர்! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுவீராக! அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக! சிறுவனாக இருக்கும்போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள் புரிவாயாக! என்று கேட்பீராக!

திருக்குர்ஆன் 17:23,24

இவ்வசனம் நபிகள் நாயகத்துக்கான கட்டளை அல்ல. பொதுவாக மனிதர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள் என்று தான் இவ்வசனம் கூறுகிறது.

மனிதர்கள் தமது பெற்றோர் விஷயத்தில் நடந்து கொள்ள வேண்டிய பொதுவான வழிமுறை இதுவாகும்.

பெற்றோர்கள் அல்லாஹ்வுக்கு இணைகற்பித்து இருந்தால் அவர்களுக்கு மன்னிப்பு கேட்கக் கூடாது என்ற சட்டம் இந்தப் பொது விதியில் இருந்து விலக்கு பெறுகிறது.

மேற்கண்ட வசனம் நபிக்குப் பொருந்தாது என்பது மேற்கண்ட வசனத்தில் இருந்தே தெரிகிறது.

சிறுவனாக இருக்கும்போது என்னை இருவரும் பராமரித்தது போல்

என்ற வாசகம் சொல்வது என்ன?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறுவராக இருந்த போது அவர்களை பெற்றோர்கள் பராமரித்து இருந்தால் தான் இது அவர்களுக்குப் பொருந்தும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாய் வயிற்றில் இருந்த போதே தந்தை மரணித்து விட்டார்கள். நபியவர்களை அவர்களின் தந்தை  பராமரிக்கவே இல்லை.

அப்படி இருக்கும் போது என் தாயும் தந்தையும் என்னைப் பராமரித்தது போல் என்று நபி அவர்கள் பொய்யான பிரார்த்தனை செய்தார்களா?

இதை இந்த வீடியோக்காரர் சிந்தித்துப் பார்த்து இருந்தால் இது மனிதர்களுக்கான பொதுவான கட்டளை என்று அறிந்திருப்பார்.

அடுத்து மேலே எடுத்துக்காட்டப்பட்ட வசனத்தில்

அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி சீ எனக் கூறாதீர்! அவ்விருவரையும் விரட்டாதீர்! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுவீராக!

என்று கூறப்படுகிறது.

இவ்வசனம் அருளப்படும் போது நபியின் பெற்றோரில் ஒருவரோ, இருவருமோ உயிருடன் இல்லை என்று தெரியும் போது அவர்கள் உயிருடன் உம்மிடம் இருந்தால் என்று அல்லாஹ் கூறுவானா?

இவ்வாசகத்தில் இருந்து இது நபிக்குப் பொருந்தாது என்று இவர் அறிய வேண்டாமா?

இது எப்படிப் பொருந்தாதோ அது போல் தான் அல்லாஹ்வுக்கு இணைகற்பித்த பெற்றோருக்கும் பொருந்தாது என்று விளங்க வேண்டாமா?

குர்ஆனை நுனிப்புல் மேயும் போக்கு மிகவும் ஆபத்தானது என்பதை அவருக்கு நாம் சொல்லிக் கொள்கிறோம்.

அடுத்து சாலிஹான குழந்தைகள் பெற்றோருக்கு செய்யும் துஆ ஏற்கப்படும் என்று நபிகள் கூறியதையும் எடுத்துக் காட்டுகிறார்.

ஆனால் இவரே இப்ராஹீம் நபியின் தந்தைக்கு இப்ராஹீம் நபி கேட்ட துஆவை அல்லாஹ் ஏற்கவில்லை என்றும் கூறுகிறார்.

அப்படியானால் இப்ராஹீம் நபி சாலிஹான குழந்தை இல்லையா?

சாலிஹான குழந்தையாக இருந்தாலும் ஈமான் இல்லாத பெற்றோருக்குச் செய்யும் துஆ ஏற்கப்படாது என்பதை விளங்கிக் கொண்டே மனமுரண்டாக இவர் வாதம் செய்கிறார். தனக்குத் தானே முரண்படுகிறார்.

நபியின் பெற்றோர், நபி அனுப்பப்படாத சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் எந்த மார்க்கத்தைப் பின்பற்றி இருக்க வேண்டும் என்ற கேள்வி எழும். இது குறித்து ஏற்கனவே நமது ஆன்லைன் பீஜே இணையதளத்தில் வெளியிடப்பட்ட பதிவை காணவும்:

நபியின் பெற்றோர் எந்த மார்க்கத்தைப் பின்பற்றி இருக்க வேண்டும்?

02.03.2016. 13:02 PM

ஒற்றுமையை எதிர்ப்பது ஏன்

குர்ஆனுக்கு முரணாக உள்ள ஹதீஸ்களை விட்டு விடலாம் என்ற நிலைப்பாட்டில் உள்ள நீங்கள், குரானில் வலியுறுத்தப்பட்ட ஒற்றுமைக்கு (3:103 ) இடையூறாக உள்ள ஒரு சில நபிவழிகளை நடைமுறைபடுத்துவதில் ஏன் இவ்வளவு பிடிவாதமாக இருக்குறீர்கள் என்று நம்மை பார்த்து கேட்கும் சகோதரர்களுக்கு மார்க்கம் சொல்லக் கூடிய ஒற்றுமை தான் என்ன? விளக்கவும்.

- அபு ரியீபா, துபாய்

பதில் : திருக்குர்ஆனில் நீங்கள் குறிப்பட்ட வசனத்திலோ வேறு வசனங்களிலோ ஒற்றுமை பற்றி வலியுறுத்தப்படவில்லை.

நீங்கள் சுட்டிக் காட்டும் வசனம் அனைவரும் சேர்ந்து அல்லாஹ்வின் கயிற்றைப் பிடித்துக் கொள்ளுங்கள் என்றுதான் கூறுகிறது. இது குறித்து நம்முடைய தமிழாக்கம் விளக்க குறிப்பில் நாம் இதை தெளிவு படுத்தியுள்ளோம்.

ஒற்றுமை எனும் கயிறு

தமிழகத்தில் நீண்ட காலமாக இவ்வசனம் (3:103) மேடைகளில் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. சில மார்க்க அறிஞர்களும் கூட தவறாகவே இதைப் பயன்படுத்தி வருகின்றனர். ஒற்றுமை என்னும் கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்... என்று திருக்குஆன் கூறுவதாக இவ்வசனத்தைக் குறிப்பிட்டு வருகின்றனர்.

நமக்கிடையே எத்தகைய தீமைகள் நிலவினாலும் அதை எடுத்துச் சொல்வதால் ஒற்றுமை பாதிக்கும் என்றால் ஒற்றுமைக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் இதன் அடிப்படையில் வாதிட்டு வருகின்றனர்.

இவர்களின் வாதத்திற்கு இவ்வசனத்தில் எள்ளளவும் இடமில்லை. ஓர் ஊரில் அனைவரும் சினிமா பார்த்தால் வரதட்சணை வாங்கினால் அவர்களுடன் சேர்ந்து ஒற்றுமையாக அந்த தீமையை செய்யுமாறு அல்லாஹ் கூறுவானா என்று கூட இவர்கள் சிந்திக்கவில்லை.

அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடியுங்கள் என்று தான் இவ்வசனம் கூறுகிறது. அல்லாஹ்வின் கயிறு என்பது குர்ஆனும் அதன் விளக்க உரையான நபிமொழிகளும் தான். அனைவரும் சேர்ந்து திருக்குர்ஆன், நபி வழியைப் பற்றிப் பிடியுங்கள் எனக் கூறும் வசனமே இது.

குர்ஆன் ஹதீஸில் உள்ளவைகளை எடுத்துச் சொல்வதால், ஒற்றுமை கெடுகின்றது; எனவே அதைச் சொல்லாதீர்கள் என்று இவர்கள் நேர்மாறன விளக்கத்தைத் தருகின்றனர்.

அல்லாஹ்வின் கயிற்றை நாம் பிடிக்கும் போது மற்றவர்கள் அதைப் பிடிக்க முன் வராவிட்டால் பிடியை நாம் விட்டுவிடக் கூடாது. அவர்களையும் பிடிக்குமாறு அழைப்பது தான் நம் மீதுள்ள கடமையாகும்.

ஒற்றுமை வாதம்தான் மனித குலத்தை நாசப்படுத்தும் நச்சுக் கிருமியாகும். அயோக்கியர்களையும் நல்லவர்களையும் சமநிலையில் நிறுத்தும் இந்த வாதம்தான் எல்லா தீமைகளுக்கும் ஆணிவேராக இருக்கிறது.

அல்லாஹ்வை வணங்கு எனக் கூறினால் அதனால் ஒற்றுமை கெடாது. அல்லாஹ்வைத் தவிர யாரையும் வணங்கக் கூடாது எனக் கூறினால் உடனே ஒற்றுமை கெடும். ஆனால் இஸ்லாம் ஒற்றுமைக்கு எதிரான இந்த நெகடிவ்-எதிர்மறை அடிப்படையில் தான் தனது ஏகத்துவக் கொள்கையை அமைத்துள்ளது. சிலை வணங்குபவனிடம் போய் இதை வணங்காதே எனக் கூறினாலும் தர்கா வணங்கியிடம் தர்காவை வணங்காதே எனக் கூறினாலும் மனிதனை வணங்குபவனிடம் இவனை வணங்காதே எனக் கூறினாலும் உடனே ஒற்றுமைக்குப் பங்கம் வந்து விடும். ஆனாலும் அதைத்தான் இஸ்லாம் மனித குலத்துக்கு போதிக்கிறது.

தீமையை தடுக்க வேண்டும் என்று குர்ஆன் கூறுகிறது. நிச்சயம் இது ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கவே செய்யும்.

தீமைக்கு உதவாதீர்கள் என்றும் குர்ஆன் கூறுகிறது. இதுவும் ஒற்றுமைக்கு உலை வைக்கவே செய்யும்.

சொந்த பந்தங்களை விட கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுங்கள் எனவும் குர்ஆன் கூறுகிறது, இதுவும் ஒற்றுமைக்கு எதிரானது தான்.

அனைவரும் சேர்ந்து குடிப்பதை விட அனைவரும் சேந்து ஒற்றுமையாக வரதட்சணை வாங்குவதை விட அனைவரும் சேர்ந்து அயோக்கியத்தனங்கள் செய்வதை விட அவர்களில் இருந்து நல்லவர்களைப் பிரித்து நல்லவர்களும் கெட்டவர்களும் ஒருக்காலும் சமமாக மாட்டார்கள் என்று பிரகடனப்படுத்தவே இஸ்லாம் வழங்கப்பட்டது.

தீமையை எதிர்க்கத் துணிவற்றவர்களும் வளைந்து கொடுப்பவர்களும் கண்டுபிடித்த பொய்யான தத்துவமே ஒற்றுமை வாதம்

ஒற்றுமை வாதம் என்னும் இஸ்லாத்துக்கு எதிரான நச்சுக் கிருமியை ஒழித்தால் தான் சமுதாயம் உருப்படும்.

24.10.2011. 4:25 AM

உயிரோடு உள்ளவர்களிடம் இறந்தவர்கள் பேசுவார்கள் என்று 6:111 வசனம் சொல்கிறதா?

பதில்

6:111 வசனத்தைச் சரியான முறையில் புரிந்து கொண்டால் அந்த வசனம் இதற்கு நேர் முரணான பொருளைத் தான் உள்ளடக்கியுள்ளது என்பதை அறியலாம்.

அந்த வசனத்தின் நேரடி மொழிபெயர்ப்பையும், அரபு மூலத்தையும்  கீழே காண்க!


وَلَوْ أَنَّنَا نَزَّلْنَا إِلَيْهِمُ الْمَلَائِكَةَ وَكَلَّمَهُمُ الْمَوْتَىٰ وَحَشَرْنَا عَلَيْهِمْ كُلَّ شَيْءٍ قُبُلًا مَا كَانُوا لِيُؤْمِنُوا إِلَّا أَنْ يَشَاءَ اللَّهُ وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ يَجْهَلُونَ ﴿111﴾

அவர்களிடம் வானவர்களை நாம் இறக்கினாலும், இறந்தோர் அவர்களுடன் பேசினாலும், ஒவ்வொரு பொருளையும் அவர்களின் கண்முன்னே நாம் ஒன்று திரட்டினாலும், அல்லாஹ் நாடினால் தவிர அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். எனினும் அவர்களில் அதிகமானோர் அறியாதவர்கள்.

திருக்குர்ஆன் 6:111

ஒரு காரியம் நடக்காது என்பதை உறுதிபட நாம் சொல்லும் போது நடக்க முடியாத மற்றொரு உதாரணத்தை மேற்கோளாகக் காட்டி பேசுவோம். அது போல் தான் இவ்வசனம் அமைந்துள்ளது.

ஊசியின் துவாரத்தில் ஒட்டகம் நுழைந்தாலும் இவன் ஜெயிக்க மாட்டான் என்று நாம் கூறினால் ஊசியின் துவாரத்தில் ஒட்டகம் நுழையும் என்றா நாம் புரிந்து கொள்வோம்?

ஊசியின் துவாரத்தில் ஒட்டகம் நுழைவது எப்படி சாத்தியமில்லையோ அது போல் இவன் ஜெயிப்பதும் சாத்தியமில்லை என்றே புரிந்து கொள்வோம்.

மனிதர்கள் காணும் வகையில் அல்லாஹ் வானவர்களை இறக்க மாட்டான். நடக்க முடியாத இந்த நிகழ்வு நடந்தாலும் இவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள் என்ற கருத்தில் தான் இவ்வசனம் சொல்லப்பட்டுள்ளது.

உயிருடன் உள்ளவர்களிடம் இறந்தவர்கள் பேச மாட்டார்கள். ஒரு பேச்சுக்கு பேச வைத்தாலும் இவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் என்று தான் இவ்வசனம் கூறுகிறது.

உயிருடன் உள்ளவர்களிடம் இறந்தவர்கள் பேச மாட்டார்கள் என்பது சந்தேகத்துக்கு அப்பாற்பட்டதாக உள்ளது. இது நடக்கவே நடக்காது. ஒரு பேச்சுக்கு நடக்க முடியாத இந்த நிகழ்வு நடந்தால் கூட இவர்கள் ஈமான் கொள்வது நடக்காது என்பது இதன் ஒட்டு மொத்த கருத்தாகும்

அரபு மொழியில் لَوْ லவ் எனும் சொல் நடக்க சாத்தியமில்லாதவைகளைச் சுட்டிக்காட்டுவதற்கே பயன்படுத்தப்படும்.

அந்தச் சொல் தான் இவ்வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

உதாரணமாக 4:82 வசனத்தைப் பாருங்கள்!

இந்தக் குர்ஆன் அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள் என்று இவ்வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது. இதிலும் லவ் لَوْ என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே அல்லாஹ் அல்லாதவர்களிடமிருந்து குர்ஆன் வந்துள்ளது என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டால் என்ற கருத்து இதனுள் அடங்கியுள்ளது.

அது போல் 21:22 வசனத்தைப் பாருங்கள்! இதிலும் லவ் لَوْ என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது.

வானத்திலும், பூமியிலும் அல்லாஹ் அல்லாத தெய்வங்கள் இருந்திருந்தால் வானமும் பூமியும் சீர் கெட்டிருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இருக்கலாம் என்ற கருத்தை இது தராது. ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டால் என்ற கருத்தையே தரும்.

லவ் لَوْ என்ற சொல்லைக் கொண்டு பேசும் இடங்களில் ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டால் என்ற கருத்து அடங்கியிருக்கும்.

இறந்தவர்கள் பேசுவார்கள் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டால் என்ற கருத்தில் தான் நீங்கள் சுட்டிக்காட்டிய வசனம் அமைந்துள்ளது

More Articles …