Sidebar

02
Mon, Jun
12 New Articles

42. தடை செய்யப்பட்ட உணவுகள்

விளக்கங்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

42. தடை செய்யப்பட்ட உணவுகள்

நான்கு உணவுகள் தடை செய்யப்பட்டுள்ளதாக இவ்வசனங்களில் (2:173, 5:3, 5:96, 6:119, 6:145, 16:115) கூறப்பட்டுள்ளது.

முறையாக அறுக்கப்படாமல் செத்த பிராணிகள், இரத்தம், பன்றி ஆகிய மூன்று பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன என்பது எளிதாக நமக்கு விளங்குகிறது.

அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை என்பது குறித்து மேலதிக விளக்கத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

இந்த வசனங்களில் அறுக்கப்பட்டவை என்று நாம் தமிழாக்கம் செய்த இடத்தில் அரபு மூலத்தில் உஹில்ல என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதன் நேரடிப் பொருள் சப்தமிடப்பட்டவை என்பதாகும்.

அன்றைய அரபுகள் தங்கள் சிலைகளுக்காகப் பொருட்களைப் படைக்கும் போதும், அறுக்கும் போதும் அந்தச் சிலைகளின் பெயரைச் சப்தமிட்டுச் சொல்வார்கள். இதன் காரணமாகவே சப்தமிடப்பட்டவை என்று இவ்வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது.

ஆயினும் அகராதியில் உள்ள இந்த அர்த்தம் காலப்போக்கில் பிராணிகளை அறுத்தல் என்ற பொருளுக்கு மாறி விட்டது.

ஒரு சொல்லின் அகராதி அரத்தம், பேச்சு வழக்கில் வேறு அர்த்தத்துக்கு மாற்றப்பட்டு விடுமானால் அந்தச் சொல்லுக்கு அரபியரின் பேச்சு வழக்கில் மாறிவிட்ட பொருளைத் தான் செய்ய வேண்டும். இது எல்லா மொழிகளுக்கும் பொதுவானதாகும்.

குடித்து விட்டு வாகனம் ஓட்ட வேண்டாம் என்ற சொல்லுக்கு பொதுவாக எதையும் குடித்து விட்டு வாகனம் ஓட்டக் கூடாது என்று அகராதி அர்த்தம் இருந்தலும் போதைப் பொருளைக் குடித்து விட்டு வாகனம் ஓட்ட வேண்டாம் என்ற பொருளுக்கு பேச்சு வழக்கில் மாறிவிட்டதால் அந்தப் பொருளைத் தான் கொடுக்க வேண்டும்.

அந்த அடிப்படையில் உஹில்ல என்ற சொல்லின் பொருள் அரபுகளின் பேச்சு வழக்கில் அறுக்கப்பட்டவை என்று மாறிவிட்டது.

அரபு மொழியில் எழுதப்பட்ட எல்லா தப்ஸீர்களிலும் இச்சொல் அறுக்கப்பட்டவை என்ற பொருளுக்கு மாறிவிட்டது என்று குறிப்பிடுகின்றனர். ஒரு தஃப்ஸீர் நூலில் கூட உயிரினம் அல்லாதவற்றை படையல் செய்வது என்ற பொருளைக் குறிப்பிடவில்லை.

மேலும் கடந்த காலத்தில் வாழ்ந்த ஒரு அறிஞர் கூட இதற்கு மாற்றுக் கருத்து கூறவில்லை.

ஒரு சொல்லுக்கு என்ன பொருள் என்பதற்கு அரபு மொழி பண்டிதர்களால் எழுதப்பட்ட தப்ஸீர்களைத் தான் ஆதாரமாக எடுக்க முடியும். மொழி விஷயமாக தப்ஸீர்களை ஆதாரமாகக் கொள்வதால் மற்ற விஷயங்களுக்கு தப்சீர்களை ஆதாரமாகக் கொள்ளலாம் என்று ஆகாது.

தப்சீர் தப்ரீ, தப்சீர் இப்னு கஸீர், தப்சீர் குர்துபி, தப்சீர் பத்ஹுல் கதீர் உள்ளிட்ட அனைத்து தப்சீர்களிலும் உஹில்ல என்பதன் பொருள் அறுக்கப்பட்டவை என்று குறிப்பிடுகின்றனர்.

எனவே உயிரினங்களை அறுக்கும் போது அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் கூறினால் அதைச் சாப்பிடக் கூடாது என்பதைத் தான் இவ்வசனம் கூறுகிறது.

உயிரற்ற மற்ற உணவுப் பொருட்கள் சிலைகளுக்கோ மற்ற தெய்வங்களுக்கோ பெரியார்களுக்கோ படைக்கப்படுமானால் அந்த உனவுகள் ஹராமாக ஆகாது.

மேலும் 5:3 வசனத்தில் சிலைகளுக்காக அறுக்கப்பட்டவை என்பதையும் அல்லாஹ் சேர்த்துக் கூறுகிறான்.

உயிரினங்களை அறுப்பதில் மக்கள் இரு விதமான குற்றங்களைச் செய்கிறார்கள். பிராணிகளை அறுக்கும் போது மற்ற தெய்வங்களின் பெயர்களைக் கூறுதல் முதலாவது குற்றம். அந்தப் பிராணிகளை மற்ற தெய்வங்களுக்கு காணிக்கையாக அறுத்தல் இரண்டாவது குற்றம்.

ஒருவர் ஒரு ஆட்டை அறுக்கும் போது அல்லாஹ் அல்லாதவர்களின் பெயர்களைக் கூறுகிறார். அத்துடன் அல்லாஹ் அல்லாதவர்களுக்கு காணிக்கையாக அறுக்கிறார் என்றால் இவர் இரு குற்றங்களையும் செய்தவராக ஆகிறார்.

ஒருவர் அல்லாஹ்வின் பெயரைக் கூறி அறுக்கிறார். ஆனால் அதை நாகூர் ஆண்டவருக்காக அறுத்தால் அவர் ஒரு குற்றம் செய்தவராக ஆகிறார். இப்படி அறுத்தாலும் அது ஹராமாகி விடும்.

இதை விலக்குவதற்காகத் தான் மற்ற தெய்வங்களின் பெயர்கள் கூறி அறுக்கப்பட்டவை என்றும் மற்ற தெய்வங்களுக்காக அறுக்கப்பட்டவை என்றும் இரு சொற்களை அல்லாஹ் பயன்படுத்தியுள்ளான்.

அல்லாஹ் அல்லாதவருக்காகப் படையல் செய்யப்பட்டவை, அபிஷேகம் செய்யப்படும் பொருட்கள், அல்லாஹ் அல்லாதவருக்காக உடைக்கப்படும் தேங்காய்கள், அல்லாஹ் அல்லாதவருக்குக் காட்டப்படும் ஆராதனைப் பொருட்கள், கடவுள் சிலைகள் மீது ஊற்றப்படும் அபிஷேகப் பொருட்கள், தர்காக்களில் அடக்கம் செய்யப்பட்டவர்களுக்காக நேர்ச்சை செய்த மாமிசம் அல்லாத உணவுகள், அவர்களுக்காக ஃபாத்திஹா ஓதி புனிதமாகக் கருதப்படும் பொருட்கள் ஆகிய அனைத்தும் ஹராமான உணவுகளில் சேராது. இவற்றை உண்ணக் கூடாது என்று தடுக்கும் எந்த ஆதாரமும் இல்லை

இவ்வசனங்களில் கூறப்படும் நான்கு வகையான உணவுகளைத் தவிர வேறு எதுவும் தடை செய்யப்பட்டவை அல்ல என்ற கருத்தை இவ்வசனங்கள் தருகின்றன.

இவற்றைத் தவிர நாய், நரி, கழுதை போன்றவற்றை உண்ணலாமா? என்று சிலருக்குச் சந்தேகம் இதனால் ஏற்படலாம்.

இந்த நான்கைத் தவிர இன்னும் பல உணவுகளும் மார்க்கத்தில் தடை செய்யப்பட்டு உள்ளன. அப்படி இருக்கும் போது நான்கை மட்டும் ஏன் அல்லாஹ் கூற வேண்டும்?

இதை நாம் விளக்கமாக அறிந்து கொள்ள வேண்டும்.

இஸ்லாமியச் சட்டங்கள் படிப்படியாகத் தான் மக்களுக்கு அருளப்பட்டன. ஒரு காலத்தில் எந்த உணவும் அல்லாஹ்வால் தடுக்கப்படாத நிலை இருந்தது. பின்னர் மேற்கண்ட நான்கு வகையான உணவுகள் மட்டும் தடுக்கப்பட்டன. இந்தக் காலகட்டத்தில் வேறு எதுவும் தடுக்கப்பட்டிருக்கவில்லை.

இதன் பின்னர் தூய்மையானவை அனைத்தும் அனுமதிக்கப்பட்டன; தூய்மையற்றவை அனைத்தும் தடை செய்யப்பட்டன. தூய்மையற்றவை யாவை? என்பதை விளக்கும் அதிகாரம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்டது. திருக்குர்ஆன் 7:157, 9:29 வசனங்களில் இதைக் காணலாம்.

எனவே இந்த நான்கைத் தவிர எவற்றை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்களோ அவையும் தடை செய்யப்பட்டவையாகும்.

திருக்குர்ஆனில் தடை செய்யப்பட்ட இவற்றுடன் வேறு சில உயிரினங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளனர். அந்தத் தடையும் இறைவன் புறத்திலிருந்து வந்த தடை தான். அதையும் நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

அவற்றை விபரமாகப் பார்ப்போம்

கடல்வாழ் உயிரினங்கள்

கடல்வாழ் உயிரினங்களில் தடை செய்யப்பட்டவை ஒன்று கூட இல்லை. கடல்வாழ் உயிரினங்கள் அனைத்துமே ஹலால் தான்.

நண்டு, சுறா, திமிங்கலம் ஆகியவற்றை உண்ணக் கூடாது என்று சில மார்க்க அறிஞர்கள் கூறுவதை ஏற்கத் தேவையில்லை. ஏனெனில் இவ்வாறு கூறுவதற்கு திருக்குர்ஆனிலும், ஹதீஸிலும் எந்தச் சான்றும் இல்லை. அவர்களாகவே கற்பனை செய்து தான் கூறியுள்ளார்கள்.

கடலில் வேட்டையாடுவதும், அதன் உணவும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன என்று 5:96 வசனம் கூறுகிறது.

பசுமையான மாமிசத்தை நீங்கள் புசிப்பதற்காக அவன் தான் கடலை உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான் என்று 16:14 வசனம் கூறுகிறது.

கடல் நீரில் செத்தவைகளும் கூட ஹலால் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

(நூற்கள்: திர்மிதீ 64, அபூதாவூத் 76, இப்னுமாஜா 380, நஸாயீ 59, 330, 4275 அஹ்மத் 6935, 8380, 8557, 8737, 14481, 22017 முஅத்தா)

கடல்வாழ் உயிரினங்களில் ஏதேனும் உண்ணத் தடை செய்யப்பட்டிருந்தால் அதை அல்லாஹ்வும், அவனது தூதரும் தான் கூற வேண்டும். வேறு எவருக்கும் தடை செய்யும் அதிகாரம் கிடையாது. அல்லாஹ்வும், அவனது தூதரும் கடல்வாழ் உயிரினங்களில் எந்த ஒன்றையும் உண்ணத் தகாதது என அறிவிக்கவில்லை.

கடல் வாழ் உயிரினங்கள் என்பதில் குளம், குட்டை, ஆறு, ஏரி, கண்மாய், கினறு உள்ளிட்ட அனைத்து நீர் நிலைகளில் வாழ்பவையும் கடல் வாழ் உயிரினங்களில் அடங்கும் அவற்றையும் உண்ணலாம்.

கடலைப் பற்றிக் குறிப்பிடும் 25:53, 35:12 ஆகிய வசனங்களில் ஒரு பகுதி உப்பு நீராக உள்ளது. மற்றொரு பகுதி சுவையான தண்ணீராக உள்ளது என்று அல்லாஹ் கூறிவிட்டு இரண்டில் இருந்தும் பசுமையான மாமிசத்தை நீங்கள் உண்ணுகிறீர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.

சுவையான தண்ணீர் என்று அல்லாஹ் எதைக் கூறுகிறான்? ஆறுகள் வழியாக கடலில் கலக்கும் தண்ணீரைத் தான் கூறுகிறான். இந்த தண்ணீர் கடலுடன் கலக்க அதிக காலம் எடுத்துக் கொள்ளும். உப்பு இல்லாத அந்த தண்ணீரில் கிடைக்கும் மீன் வகைகளும் ஹலால் என்று இதன் மூலம் நாம் அறியலாம்.

ஆனால் மனிதனுக்குக் கேடு விளைவிக்கும் அனைத்தும் மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளன. கடல்வாழ் உயிரினங்களில் மனிதனுக்குக் கேடு விளைவிப்பவை இருந்தால் அவை மார்க்கத்தில் தடுக்கப்பட்டவை என்பதில் சந்தேகம் இல்லை.

பறவையினம்

பறவையினத்தின் பெயர்களைப் பட்டியல் போட்டு இவை ஹலால், இவை ஹராம் என்று திருக்குர்ஆனிலும், ஹதீஸிலும் கூறப்படவில்லை. ஆயினும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பறவையினத்தில் எவை ஹராம் என்பதற்குப் பொதுவான அடிப்படையைக் கூறியுள்ளனர்.

'மிக்லப்' உடைய ஒவ்வொரு பறவையையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உண்பதற்குத் தடை செய்தார்கள்.

நூல் : முஸ்லிம் 3914

'மிக்லப்' என்ற சொல்லுக்கு நகம் என்று சிலர் பொருள் கொள்கின்றனர். எந்தப் பறவையாக இருந்தாலும் அதற்கு நகம் இருக்கும். அப்படியானால் ஒரு பறவையைக் கூட நாம் சாப்பிடக் கூடாது என்று கூறும் நிலை ஏற்படும்.

பாய்ந்து பிடித்து வேட்டையாடுவதற்குரிய நகங்கள் என்பது தான் இதன் சரியான பொருளாகும். வேட்டையாடுவதற்குப் பயன்படும் நகங்கள் எந்தப் பறவைகளுக்கு உள்ளனவோ அவை உண்ணத் தடை செய்யப்பட்டவையாகும்.

கழுகு, பருந்து, வல்லூறு போன்ற பறவைகள் ஏனைய உயிரினங்களைத் தமது நகங்களால் வேட்டையாடுகின்றன. இவை போன்ற பறவையினங்களை நாம் உண்ணக்கூடாது. கோழி போன்ற பறவையினங்களுக்கு கூரிய நகங்கள் இருந்தாலும் அவை செத்தவற்றை உண்ணும் போது தான் துணைக்கு நகங்களைப் பயன்படுத்துகின்றன. உயிரினத்தை (புழு பூச்சிகளை) வேட்டையாட தமது வாயையே பயன்படுத்துகின்றன.

எனவே ஏனைய உயிரினங்களை வேட்டையாட நகங்களைப் பயன்படுத்தும் பறவைகள் தவிர மற்ற அனைத்துப் பறவைகளும் உண்ண அனுமதிக்கப்பட்டவையாகும்.

விலங்கினங்கள்

விலங்கினங்களைப் பொறுத்தவரை பன்றி ஹராம் எனக் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.

வீட்டுக் கழுதை ஹராம் என்று புகாரீ 4217, 4215, 4199, 3155, 4218, 4227, 5115, 5522, 5527, 5528 ஆகிய ஹதீஸ்கள் கூறுகின்றன.

இவை தவிர மற்ற விலங்கினங்களைப் பற்றி எவ்வாறு முடிவு செய்வது என்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பொதுவான அடிப்படையைத் தந்துள்ளனர்.

விலங்கினங்களில் எவற்றுக்குக் கோரைப் பற்கள் உள்ளனவோ அவற்றை உண்ணக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். (நூல்: புகாரீ 5781, 5530)

மேல் பகுதியில் அமைந்துள்ள பற்களில் வலப்பக்கம் ஒரு பல்லும், இடப்பக்கம் ஒரு பல்லும் மற்ற பற்களை விட அதிக நீளமாக இருக்கும்.

இந்தக் கோரைப் பல் எவற்றுக்கு உள்ளதோ அவற்றை நாம் உண்ணக் கூடாது.

இந்த அடிப்படையை விளங்கிக் கொண்டால் எவற்றை உண்ணலாம் என்பது எளிதில் விளங்கி விடும். கழுதையைப் பொறுத்த வரை அதன் பற்கள் வரிசையாக இருந்தாலும் அதைக் குறிப்பிட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹராமாக்கி விட்டதால் கழுதைக்கு இந்த அளவுகோலைப் பொருத்தக் கூடாது.

புழுக்கள், பூச்சிகள்

எந்த உயிரினத்தை உண்பதாக இருந்தாலும் அதன் கழுத்து நரம்புகள் அறுக்கப்பட்டு இரத்தம் வெளியேற்றப்பட வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அவற்றை உண்ணக் கூடாது.

முறையாக அறுக்காமல் செத்தவை இதனால் தான் ஹராமாக்கப்பட்டுள்ளன.

புழுக்கள், பூச்சிகள், வண்டுகள், ஈசல்கள், ஈக்கள், எறும்புகள் போன்ற உயிரினங்களில் மார்க்கம் கூறும் முறைப்படி அறுத்தல் ஏற்படுவதில்லை. கழுத்து நரம்பை அறுத்து இரத்தத்தை வெளியேற்றுதல் இவற்றில் இல்லை.

இப்படி அறுப்பதன் மூலம் இரத்தம் ஓட்டப்படாவிட்டால் அவை செத்தவை என்பதில் அடங்கும்.

எனவே செத்தவை ஹராம் என்பதில் புழு பூச்சி வகைகளும் அடங்கும்.

செத்தவைகளில் மீன்கள் வெட்டுக்கிளிகள் ஆகிய இரண்டும் ஹலால் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

மீன்களைப் பொருத்தவரை அவற்றில் அறுத்தல் இல்லை என்பதால் அவை செத்தவைகளில் அடங்கும் என்றாலும் அவை ஹலால் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதி விலக்கு அளித்துள்ளனர்.

அது போல் வெட்டுக்கிளிகளில் அறுத்தல் ஏற்படாது. எனவே அவை செத்தவைகளில் அடங்கினாலும் இவை ஹலால் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக்கியுள்ளனர்.

இவை தவிர அறுத்தல் ஏற்படாத எந்த உயிரினமும் ஹலால் இல்லை.

இந்த அடிப்படையில் புழு, பூச்சி, வண்டு, பாம்பு, தேள் கரப்பான், கரையான், ஈ எறும்பு போன்ற எல்லா உயிரினங்களும் ஹராம் ஆகும்.

எந்த உயிரினமும் முறையாக அறுக்காவிட்டால் ஹலால் ஆகாது.

பூச்சியினத்தைச் சேர்ந்த வெட்டுக் கிளியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் அவர்களின் முன்னிலையில் நபித்தோழர்கள் சாப்பிட்டுள்ளனர். இதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் சேர்ந்து வெட்டுக் கிளியைச் சாப்பிட்டுக் கொண்டு ஆறு ஏழு யுத்தங்கள் செய்துள்ளோம். (நூல் : புகாரீ 5495)

மேலும் உயிரினங்களாக இருந்தாலும், உயிரற்றவையாக இருந்தாலும் அவற்றில் மனிதனுக்கு கேடு ஏற்படுமானால் அவையும் ஹராமாகும்.

உங்களை நீங்களே அழித்துக் கொள்ளாதீர்கள்.

திருக்குர்ஆன் 2:195

உங்களை நீங்களே சாகடித்துக் கொள்ளாதீர்கள்.

திருக்குர்ஆன் 4:29

என்று அல்லாஹ் கூறுவதால் கேடு விளைவிக்கும் அனைத்தும் ஹராம்  ஆகும்.

ஒரு தாவரத்தைச் சாப்பிடுவது கேடு விளைவிக்கும் என்றால் அதை உண்பது ஹராம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இது உயிரினங்களுக்கு மட்டுமின்றி தாவரங்களுக்கும், தானியங்களுக்கும், ஏனைய உணவு வகைகளுக்கும் பொதுவானதாகும்.

உயிரினங்களில் தடை செய்யப்பட்டவை இவை மட்டுமே. இவை தவிர மற்ற எல்லா உயிரினங்களும் மனிதர்கள் உண்ண அனுமதிக்கப்பட்டவையாகும்.

இவ்வாறு அனுமதிக்கப்பட்டவைகளில் சில நமக்கு அருவருப்பாக இருக்கலாம். அப்படி இருந்தால் அதைத் தவிர்த்துக் கொள்ளலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உடும்புக் கறியை விரும்ப மாட்டார்கள். ஆனாலும் அவர்கள் முன்னே மற்றவர்கள் அதைச் சாப்பிடுவதைத் தடுக்கவில்லை. (நூல் : புகாரீ 2575, 5391, 5400, 5402, 5536, 5537, 7267)

நிர்பந்தத்திற்கு ஆளானவர்கள் தடை செய்யப்பட்ட உணவுகளை உண்ணலாம் என்றும் இவ்வசனங்கள் கூறுகின்றன. எது நிர்பந்தம் என்று அறிய 431வது குறிப்பை வாசிக்கவும்.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account