Sidebar

17
Thu, Sep

மனிதன் அல்லாஹ்வுக்கு உதவி செய்ய முடியுமா?

கேள்வி :

திருக்குர்ஆன் 22வது அத்தியாயம் 40வது வசனத்தில் தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ் உதவி செய்வான் என்று கூறப்பட்டுள்ளது. மனிதன் அல்லாஹ்வுக்கு எப்படி உதவி செய்ய முடியும்?

பி.இதாயத்துல்லாஹ், மதுரவாயல்.

பதில்:

இதுதான் நீங்கள் குறிப்பிடும் வசனம்:

எங்கள் இறைவன் அல்லாஹ்வே என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத்தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ் வலிமையுள்ளவன்; மிகைத்தவன்.

திருக்குர்ஆன் 22:40

இதே கருத்தில் பின்வரும் வசனமும் அமைந்துள்ளது.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவினால் அவன் உங்களுக்கு உதவுவான். உங்கள் பாதங்களை அவன் உறுதிப்படுத்துவான்.

திருக்குர்ஆன் 47:7

அல்லாஹ் யாரிடமும் எந்த தேவையுமற்றவன் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை. முழுக் குர்ஆனும் இந்தக் கொள்கையைத் தான் போதிக்கிறது. அவன் தான் உதவக் கூடியவன்; யாரும் அவனுக்கு உதவிட முடியாது.

ஆயினும் சில வசனங்களில் அல்லாஹ்வுக்கு மற்றவர்கள் உதவுவது போல் அமைந்துள்ளன. இது போன்ற வசனங்களை இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்கு முரணில்லாத வகையில் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு கல்விக் கூடத்தில் பயிற்றுவிக்கும் ஆசிரியர், மாணவர்கள் மீது அதிக அக்கறை கொண்டவராக இருந்தால் மாணவர்களை ஊக்குவிப்பதற்காக ஆர்வமூட்டுவார். நீங்கள் அதிக மதிப்பெண் பெற்றால் அது எனக்குச் செய்யும் உதவியாகும் என்பார். நல்ல மதிப்பெண் வாங்கியவருக்கு பரிசு வழங்குவேன் என்றும் கூறுவார்.

ஒரு மாணவன் அதிக மதிப்பெண் வாங்கினாலும், வாங்காமல் போனாலும் அது அந்த மாணவனுக்குத் தான் நல்லதாக கெட்டதாக அமையும். ஆசிரியருக்கு இதனால் அறிவு அதிகரிக்காது. ஆனாலும் இப்படி கூறுவதால் ஆசிரியரை மகிழ்விக்கவும் அவர் அளிக்கும் பரிசுகளைப் பெறவும் மாணவன் நன்றாகப் படிப்பான்.

எனக்காக நீ நன்றாகப் படி என்று ஒரு தாய் மகனிடம் கூறுவாள். இதனால் அந்தத் தாயின் அறிவு அதிகரிக்காது. மகனின் அறிவுதான் அதிகரிக்கும்.

ஆனாலும் இப்படிச் சொல்லும் போது நமது நன்மைக்காக நாம் படித்தாலும் நமது தாயை அது மகிழ்ச்சியில் ஆழ்த்தும் என்று எண்ணி முழு கவனத்துடன் படிப்பான்.

இது போல் தான் அல்லாஹ்வுக்கு உதவுதல் என்பதும் அமைந்துள்ளது. அல்லாஹ்வுக்கு உதவுங்கள் என்று கூறி விட்டு அல்லாஹ் சொல்லும் காரியங்கள் மனிதனுக்கு உதவும் காரியங்களாகவே உள்ளன. போர்க்களத்தில் கலந்து போரிட்டு வெற்றி பெற்றால் அதனால் கனீமத் எனும் லாபமும், புகழும் மனிதனுக்குக் கிடைக்கிறது. இதனால் அல்லாஹ்வுக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை.

நாம் போரில் பங்கெடுப்பதால் அல்லாஹ் கூலி தருவான்; அதை அவனுக்குச் செய்த உதவியாக எடுத்துக் கொள்வான்; நமது தியாகம் வீண் போகாது. மாறாக அல்லாஹ் தனக்குச் செய்த உதவியாகக் கருதி மகத்தான கூலியை வழங்குவான் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காகவே அல்லாஹ் இப்படிக் கூறுகிறான். இதனால் மனிதன் நற்காரியங்களை அதிக முனைப்புடன் செய்வான்.

இதற்காகத் தான் அல்லாஹ் இப்படி கூறுகிறான். அவனுக்கு மற்றவர்களின் உதவி தேவை என்பதற்காக அல்ல.

அய்யூப் நபி பெயரால் கட்டுக்கதை

(ஒற்றுமை மாதமிருமுறை இதழில் தேர்வு செய்யப்பட்ட வசனங்களுக்கு பீஜே எழுதிய விளக்கம்)

41, 42. நமது அடியார் அய்யூபை நினைவூட்டுவீராக! "ஷைத்தான் வேதனையாலும், துன்புறுத்தலாலும் என்னைத் தீண்டி விட்டான்'' என்று தமது இறைவனிடம் அவர் பிரார்த்தித்தபோது, "உமது காலால் மிதிப்பீராக! இதோ குளிர்ந்த குளிக்குமிடம்! பானம்!'' (எனக் கூறினோம்).26

43. அவருக்கு அவரது குடும்பத்தினரையும், அவர்களுடன் அவர்களைப் போன்றோரையும் வழங்கினோம். இது நம்மிடமிருந்து கிடைக்கப் பெறும் அருளும், அறிவுடையோருக்கு அறிவுரையுமாகும்.

44. உமது கையால் புல்லில் ஒரு பிடியை எடுத்து அதன் மூலம் அடிப்பீராக! சத்தியத்தை முறிக்காதீர்!339 (என்றோம்.) நாம் அவரைப் பொறுமையாளராகக் கண்டோம். அவர் நல்லடியார். அவர் (நம்மிடம்) திரும்புபவர்.

திருக்குர்ஆன் 38;41-44

இவ்வசனங்கள் அய்யூப் நபியவர்கள்     சோதனைக்குப் பின் அதிலிருந்து     மீண்டதைக் கூறும் வசனங்களாகும்.

இவ்வசனங்கள் என்ன கூறுகின்றன என்பதை விளக்கப் புகுந்த திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள் அனைவரும் ஆதாரமற்ற கட்டுக்கதைகளைக் கூறி அந்தக் கதைக்கேற்ப விளக்கம் தந்திருப்பதைக் காண்கிறோம்.

அய்யூப் நபியவர்கள் தமக்கு நோய் குணமானதும் தமது மனைவியை நூறு தடவை அடிப்பதாக சத்தியம் செய்தார்களாம். குணமடைந்தவுடன் நூறு இழைகள் கொண்ட ஒரு பிடி புல் கட்டால் மனைவியை அடிக்குமாறும் இதன் மூலம் செய்த சத்தியத்தை நிறைவேற்றுமாறும், இறைவன் இவ்வசனத்தில் கட்டளையிடுகிறான் என்பதே அவர்களின் விளக்கமாகும்.

மனைவியை நூறு தடவை அடிப்பதாக ஏன் சத்தியம் செய்தார் என்பதை விளக்கும் போது அதற்கும் பல கதைகளைக் கூறுகின்றனர். எந்தக் கதையை ஏற்பது என்பதில் அவர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளதே தவிர மனைவியை நூறு தடவை அடிப்பதாகச் சத்தியம் செய்தார் என்பதிலும், நூறு இழைகள் கொண்ட புல் கட்டால் அடிக்குமாறு இறைவன் கட்டளையிட்டான் என்பதிலும் விரிவுரையாளர்கள் ஒருமித்த முடிவில் தான் உள்ளனர்.

திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள் இவ்வசனத்திற்கு விளக்கம் தருவதில் தவறு செய்து விட்டார்கள் என்பதை,, சிந்திக்கின்ற யாரும் புரிந்து கொள்ள முடியும்.

"ஒரு கைப்பிடி புல் கட்டால் அடிப்பீராக'' என்று தான் திருக்குர்ஆன் கூறுகிறது. "மனைவியை அடிப்பீராக'' என்று திருக்குர்ஆனில் இல்லை. "உமது மனைவியை'' என்பது மொழி பெயர்ப்பாளர்கள் சுயமாக எழுதிக் கொண்டதாகும்.

உமது மனைவியை அடிப்பீராக என்று இவ்வசனத்திற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் விளக்கம் தரவில்லை.

மூலத்தில் இல்லாத "உமது மனைவியை'' என்ற சொல்லை இடையில் நுழைப்பதனால் தான் கட்டுக்கதைகளைத் தேடியலையும் நிலைமை இவர்களுக்கு ஏற்பட்டது.

ஒரு கைப்பிடி புல் கட்டால் அடிப்பீராக என்று தான் இவ்வசனத்தில் உள்ளது. அதில் நூறு இழைகள் இருக்க வேண்டும் என்று குர்ஆனிலோ, ஹதீஸ்களிலோ இல்லை.

இது கட்டுக்கதை என்பதைப் புரிந்து கொள்ள சிறிய அளவிலான இஸ்லாம் பற்றிய அறிவே போதுமானதாகும்.

அய்யூப் நபியவர்கள் தமது மனைவியை நூறு தடவை அடிப்பதாக சத்தியம் செய்தார்கள் என்பது உண்மையாக இருந்தால் இது போன்ற சத்தியங்களை நிறைவேற்றத் தேவையில்லை. அநியாயமான காரியங்களைச் செய்வதாக சத்தியம் செய்தால் அந்தச் சத்தியத்தை நிறைவேற்றக் கூடாது, மாறாக முறித்து விட வேண்டும்.

மனைவியை என்ன காரணத்துக்காக இருந்தாலும் நூறு தடவை அடிப்பதாக அய்யூப் நபியவர்கள் சத்தியம் செய்திருக்க முடியாது. அப்படியே கோபத்தில் சத்தியம் செய்தார்கள் என்று வைத்துக் கொண்டாலும் கோபத்தில் நிதானமிழந்து செய்யும் சத்தியங்களுக்காக அல்லாஹ் எந்தக் கேள்வியும் கேட்க மாட்டான்.

இது கட்டுக் கதை என்பதற்கு முதல் காரணம் இது.

அய்யூப் நபியவர்கள் செய்த சத்தியம் சரியானது என்று வைத்துக் கொண்டால் அதை அப்படியே நிறைவேற்றுவது தான் அவர் மீதுள்ள கடமை. நூறு தடவை அடிப்பதாகச் சத்தியம் செய்துவிட்டு புல் கட்டால் ஒரு தடவை அடிப்பது சத்தியத்தை நிறைவேற்றுவதாக ஆகாது. புல் கட்டில் நூறு இழைகள் இருந்தாலும் ஆயிரம் இழைகள் இருந்தாலும் அதனால் அடிப்பது ஒரு தடவை அடித்ததாகத் தான் ஆகும். இது கட்டுக் கதை என்பது இதிலிருந்தும் உறுதியாகிறது.

இறைவன் வெறும் சொற்களைக் கவனிப்பவன் அல்ல. உள்ளத்தைத் தான் கவனிப்பான். நூறு தடவை மனைவியை அடிப்பதாக அய்யூப் நபி கூறியிருந்தால் அவ்வாறு கூறும் போது அவர் என்ன நினைத்துக் கூறினாரோ அதைத் தான் இறைவன் கவனிப்பான். இவர்கள் கூறுவது உண்மையாக இருந்தால் அய்யூப் நபி சத்தியம் செய்யும் போது நூறு இழைகள் கொண்ட புல் கட்டால் மனைவியை அடிப்பதாக நினைத்திருக்க மாட்டார். எனவே இந்தக் கட்டுக்கதை இறைவனின் பண்புகளுக்கு எதிராகவும், அமைந்துள்ளது.

மேலும் இவ்வசனத்தில் அய்யூப் நபியைப் பற்றி இறைவன் குறிப்பிடும் போது அவரைப் பொறுமையாளராகக் கண்டோம் என்று நற்சான்று வழங்குகிறான். பொறுமையாளர் என்று இறைவனே நற்சான்று வழங்கும் ஒருவர் மனைவியை நூறு தடவை அடிப்பதாக எப்படிச் சத்தியம் செய்வார்? பொறுமை குறைவாக இருக்கும் நம்மைப் போன்றவர்களே மனைவியை நூறு தடவை அடிப்பதாக சத்தியம் செய்ய மாட்டோம். பொறுமைக்கு முன்னுதாரணமாகக் கூறப்படும் அய்யூப் நபியவர்கள் எப்படி இவ்வாறு சத்தியம் செய்திருப்பார்கள்.

இந்தக் கட்டுக்கதை உண்மையாக இருந்தால் "அய்யூபை கோபக்காரராகக் கண்டோம்'' என்று தான் அல்லாஹ் கூறியிருப்பான். பொறுமையாளர் எனக் கூறியிருக்க மாட்டான். இதன் காரணமாகவும் இது கட்டுக்கதை என்பது உறுதியாகின்றது.

அப்படியானால் இந்த வசனத்தின் விளக்கம் தான் என்ன? என்று கேட்பவர்கள் விளக்கத்துக்காக எங்கேயும் அலையத் தேவையில்லை. இவ்வசனத்திலும் இதற்கு முந்தைய இரு வசனங்களிலும் சிந்தனையைச் செலுத்தினால் எந்தக் கட்டுக் கதையின் துணையுமின்றி சரியான விளக்கத்தைக் கண்டு கொள்ளலாம்.

அய்யூப் நபியவர்கள் நோய்வாய்ப்பட்டு சோதிக்கப்பட்டார்கள் இறைவன் அவர்களுக்கு நிவாரணம் அளிக்க நாடிய போது சில காரணங்களை ஏற்படுத்தி அதன் மூலமே நிவாரணம் தந்தான். "ஆகு' என்ற கட்டளை மூலம் ஆக்கவல்ல இறைவன், அவரது நோயைத் தீர்க்க குளிக்கும் தண்ணீரையும், குடிக்கும் தண்ணீரையும் தனது ஆற்றலால் உருவாக்கினான். அந்தத் தண்ணீரில் குளித்ததும், குடித்ததும் நோய் தீர்க்கும் காரணிகளாக இறைவனால் பயன்படுத்தப்பட்டன.

இதைக் கூறிவிட்டுத் தான் ஒரு பிடி புல்லை எடுத்து அதனால் அடிப்பீராக என்று இறைவன் கூறுகிறான். இதையும் முன்சொன்ன இரண்டு காரணங்களுடன் தான் தொடர்புபடுத்த வேண்டும். குளிக்கும் நீரும், குடிக்கும் நீரும் அவரது நோய் தீர்க்கும் மருந்தாக எவ்வாறு பயன்பட்டதோ அதைப் போல் புல்கட்டால் அவர் மேனியில் அடிப்பதும் நோய் தீர்க்கும் மருந்தாக பயன்பட்டது என்பதே இதன் கருத்தாக இருக்க வேண்டும்.

"உமது மனைவியை'' என்ற சொற்றொடரும், "நூறு இழைகள் கொண்ட'' என்ற சொற்றொடரும் மொழிபெயர்ப்பினர்களும், விரிவுரையாளர்களும் இடையில் நுழைத்தவை. எனவே அதை நீக்கிவிட்டு இவ்வசனத்தைக் கவனித்தால் இப்படி விளங்குவதற்குத்தான் இவ்வசனம் இடம் தருகிறது.

ஒரு பிடி புல்கட்டால் (உம்மீது) அடிப்பீராக என்ற பொருள் தான் இறைவனின் பண்புக்கு ஏற்றதாகவும், பொறுமைக்கு முன்னுதாரணமான அய்யூப் நபியின் தகுதிக்கு ஏற்றதாகவும் அமைந்துள்ளது.

இவ்வசனத்தில் "சத்தியத்தை முறிக்காதீர்'' என்ற சொல் இடம் பெற்றுள்ளது. இச்சொல்லின் காரணமாகவே அய்யூப் நபி மனைவியை அடிப்பதாக சத்தியம் செய்தார் என்று கதை காட்டினார்கள்.

எவ்விதக் கதையும் கட்டாமலேயே இந்தச் சொல்லின் பொருளையும் புரிந்து கொள்ளலாம்.

தமக்கு நோய் நிவாரணம் கிடைத்தால் இறைவனுக்காக ஏதோ ஒரு வணக்கத்தையோ, தர்மத்தையோ, செய்வதாக சத்தியமோ, நேர்ச்சையோ செய்திருக்கலாம். மனிதர்கள் நோய்வாய்ப்படும் போது, இவ்வாறு நினைப்பது வழக்கமான ஒன்றுதான். நோய் நீங்கினால் மனைவியை அடித்து சித்திரவதை செய்வேன என்று நினைப்பது வழக்கத்தில் இல்லாதது. எனவே, தனக்காக அவர் செய்த நேர்ச்சையை நிறைவேற்றுமாறு கட்டளையிடுகிறான். நோய் குணமாகி விட்டதால் அதை நிறைவேற்றுமாறு இறைவன் நினைவுபடுத்துகிறான் என்று புரிந்து கொண்டால் எந்தக் குழப்பமும் இல்லை.

இது கட்டுக்கதை என்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) தொடர்பான ஒரு நிகழ்ச்சியும் சான்றாக வுள்ளது.

அஷ்அரீ கோத்திரத்தைச் சேர்ந்த நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று பயணம் செய்ய வாகனம் (ஒட்டகம்) கேட்டோம். அவர்கள் மறுத்து விட்டனர். மீண்டும் கேட்டோம். அவர்கள் மறுத்தார்கள். மேலும் அல்லாஹ்வின் மீது சத்தியமாக உங்களுக்கு வாகனம் தர மாட்டேன் என்றும் கூறினார்கள். சற்று நேரத்தில் (ஜகாத் நிதிக்காக) சில ஒட்டகங்கள் கொண்டு வரப்பட்டன. எங்களுக்கு ஐந்து ஒட்டகங்களைத் தருமாறு கட்டளை பிறப்பித்தார்கள். அதைப் பெற்றுக் கொண்டோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தரமாட்டேன் என்று சத்தியம் செய்து, அதை மறந்துவிட்டு நமக்கு ஒட்டகத்தைத் தந்து விட்டார்கள். நபிகள் நாயகத்தை ஏமாற்றினால் நாம் ஒரு போதும் வெற்றி பெற முடியாது என்று முடிவு செய்தோம். நபிகள் நாயகத்திடம் சென்று "எங்களுக்குத் தரமாட்டேன் என்று சத்தியம் செய்துவிட்டு அதை மீறி விட்டீர்களே என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்'' ஆம்! ஆயினும் நான் ஏதேனும் சத்தியம் செய்து அதை விடச் சிறந்ததைக் கண்டால் அந்தச் சிறந்ததைச் செய்து விடுவேன் எனக்கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி)

நூல்: புகாரி 3133, 4385, 5518, 6721 7555, 6623, 6649, 6718

அய்யூப் நபியவர்கள் மனைவியை நூறு  தடவை அடிப்பதாகச் சத்தியம் செய்திருந்தாலும் அவர்கள் அதை முறிப்பது தான் சிறந்ததே தவிர அதை எந்தத் தந்திரம் செய்தாவது நிறைவேற்றுவது நபியின் பண்பாக இருக்க முடியாது என்பதை இந்த ஹதீஸ்களிலிருந்தும் அறிந்து கொள்ளலாம்.

நபிகளும் அல்லாஹ்வும் ஒருவரா?

(ஒற்றுமை மாதமிருமுறை இதழில் தேர்வு செய்யப்பட்ட வசனங்களுக்கு பீஜே எழுதிய விளக்கம்)

எனவே அவர்களை நீங்கள் சொல்லவில்லை. எனினும், அல்லாஹ் தான் அவர்களைக் கொன்றான். (முஹம்மதே) நீர் எறிந்த போது நீர் எறியவில்லை. எனினும் அல்லாஹ் தான் எறிந்தான்; நம்பிக்கையாளர்களை அழகிய முறையில் சோதிப்பதற்காக இவ்வாறு செய்தான். நிச்சயமாக அல்லாஹ் செவியுறுபவன், அறிந்தவன்.

திருக்குர்ஆன்: 8:17

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சந்தித்த முதல் போர்க் களம் பத்ருப் போர் என்பதை நாம் அறிவோம்.

இஸ்லாமிய எழுச்சிக்கு வித்திட்ட இப்போரில் இறைவன் எண்ணற்ற அற்புதங்களை நிகழ்த்தி முஸ்லிம்களுக்கு வெற்றியை வழங்கினான்.

எதிரிகளை விட எண்ணிக்கையில் மூன்றில் இரு மடங்கு குறைவாக முஸ்லிம்கள் இருந்தனர். ஆயுதங்கள், வாகனங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் போன்ற சாதனங்களும் முஸ்லிம்களிடம் இருந்ததை விட எதிரிகளிடம் பல மடங்கு அதிகமாக இருந்தன.

இரு படையினரையும் யார் எடை போட்டுப் பார்த்தாலும் முஸ்லிம்கள் நிச்சயமாகத் தோல்வியைத் தழுவுவார்கள் என்று தான் கணிக்க முடியும். அந்த அளவுக்கு பலவீனமான நிலையில் முஸ்லிம்கள் இருந்தனர். ஆனாலும் இறைவன் - முஸ்லிம்களுக்கு மகத்தான வெற்றியை வழங்கினான்.

* ஆயிரம் வானவர்களை இறைவன் களத்தில் இறக்கினான். (8:9)

* சுறுசுறுப்புடன் போரிடுவதற்காக அதற்கு முன் சிறிய தூக்கத்தை ஏற்படுத்தி முஸ்லிம்களின் இதயங்களை அமைதிப்படுதினான். (8:11)

* அன்றிரவு மழையை இறக்கி அவர்களைத் தூய்மைப்படுத்தியதுடன் அவர்களின் பாதங்களையும் உறுதிப்படுத்தினான். (8:11)

* வானவர்களும் களத்தில் இறங்கிப் போரிட்டனர்.

* எதிரிகளின் உள்ளங்களில் பீதியை ஏற்படுத்தினான். (8:12)

இந்த அற்புதங்களுடன் சேர்த்து நிகழ்த்திய மற்றொரு அற்புதத்தைத் தான் மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

பொடிக் கற்களில் ஒரு கைப்பிடியை எனக்கு எடுத்துவா என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் கூறினார்கள். அவர் எடுத்துக் கொடுத்தார். அதை எதிரிகளின் முகங்களை நோக்கி நபிகள் நாயகம் (ஸல்) எறிந்தனர். எதிரிக் கூட்டத்தின் ஒவ்வொருவர் கண்களிலும் அது படாமல் இருக்கவில்லை. அந்தச் சந்தர்ப்பத்தில் தான் "நீர் எறிந்த போது நீர் எறியவில்லை. எனினும், அல்லாஹ் தான் எறிந்தான்'' என்ற வசனத்தை அல்லாஹ் அருளினான். (நூல்: தப்ரானி)

ஒரு கூட்டத்தை நோக்கி யாரேனும் ஒருவர் பொடிக் கற்களை வீசி எறிந்தால் அவற்றுள் சில கற்கள் சிலர் மீது படலாம். அனைவர் மீதும் அதுவும் குறி வைத்து வீசியது போல் அனைவரின் கண்கள் மீதும் அது படும் எனக் கூற முடியாது.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீசிய பொடிக் கற்கள் குறி வைத்து வீசப்பட்டது போல் எதிரிகளின் கண்களைப் பதம் பார்த்தது. இதைத் தான் மேற்கண்ட வசனத்தில அல்லாஹ் கூறுகிறான்.

மனிதர்கள் கற்களை வீசினால் என்ன விளைவு ஏற்படுமோ அது போன்ற விளைவு ஏற்படாமல் இறைவனே விசினால் எத்தகைய விளைவுகள் ஏற்படுமோ அத்தகைய விளைவுகள் ஏற்பட்டது மற்றொரு அற்புதமாகும்.

இத்தகைய அற்புதங்களால் தான் வெற்றி பெற முடிந்ததே தவிர போரில் பங்கெடுத்தவர்களின் ஆற்றலினால் அல்ல என்பதை உணர்த்தவே இறைவன் இவ்வாறு சுட்டிக் காட்டுகிறான்.

இவ்வளவு தெளிவான வசனத்தையும் சில வழிகேடர்கள் தங்களின் தவறான கொள்கைக்கு ஆதாரமாக ஆக்கிக் கொள்கின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்து ஐநூறு ஆண்டுகளுக்குப் பின் தோன்றியவர்கள் தாம் இந்த வழிகேடர்கள். இவர்கள் நபிகள் நாயகத்தை நேசிக்கிறோம் எனக் கூறிக் கொண்டு வரம்பு மீறி அவர்களைப் புகழலானார்கள். இதன் உச்சகட்டமாக "அல்லாஹ் தான் ரசூல், ரசூல் தான் அல்லாஹ்'' என்றும் கூறத் துணிந்தார்கள்.

அல்லாஹ் வேறு, நபிகள் நாயகம் வேறு அல்ல. இருவரும் ஒருவரே என்றெல்லாம் உளற ஆரம்பித்தார்கள். ஏராளமான கட்டுக் கதைகளையும் இதற்கேற்ப இவர்கள் உருவாக்கினார்கள்.

ஈஸா நபி விஷயத்தில் கிறிஸ்தவர்கள் வரம்பு மீறியதையும் இவர்கள் மிஞ்சினார்கள்.

குர்ஆன் வசனங்களையோ, ஹதீஸ்களையோ வளைத்து தங்களின் உளறலை நியாயப்படுத்த முடியுமா? என்று தேடியவர்களுக்கு மேற்கண்ட வசனம் மிகப் பெரிய சான்றாகத் தென்பட்டது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மனிதராக இருந்தால் இப்படி எறிய முடியுமா? அல்லாஹ்வாக இருந்தால் தானே எறிய முடியும்? அவர்கள் எறிந்ததை அல்லாஹ், தான் எறிந்ததாக அல்லவா கூறுகிறான். எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அல்லாஹ்வும் ஒருவரே என்று இந்த மூடர்கள் உளறலானார்கள்.

இவ்வசம் கூறுவது என்ன என்பதை விளங்காத சில மூடர்களும் இவர்களது வாதத்தில் மயங்கினார்கள். எந்த மார்க்கம் இணை வைத்தலின் வாசலைக் கூட இறுக்கமாக அடைத்ததோ அந்த மார்க்கத்திலேயே இவர்கள் விளையாடலானார்கள். எந்த மார்க்கம் மனிதன் ஒருக்காலும் கடவுளாக முடியாது என அறைகிறதோ அந்த மார்க்கத்திலேயே மனிதரைக் கடவுளாக்கினார்கள்.

ஆனால் இந்த வசனம் அவர்களது வாதத்துக்கு நேர் எதிரானதாகும்.

"நான் கல்லை வீசினால் போதும்! எதிரிகள் ஓட்டமெடுப்பார்கள் என்று முஹம்மதே நீர் நினைத்து விடக் கூடாது. மாறாக குறிப்பிட்ட இந்த நிகழ்ச்சியில் நீர் கல்லை வீசிய போது எனது வல்லமையால் அதைப் பரவச் செய்தேன்'' என்பது தான் இவ்வசனத்தின் கருத்தாகும்.

இது தான் இவ்வசனத்தின் கருத்து என்பதை விளங்கிட வேறு எங்கேயும் நாம் போக வேண்டியதில்லை. இவ்வசனத்திலேயே இதற்கான காரணம் அடங்கியுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பொடிக் கற்களை வீசியதைக் கூறுவதற்கு முன் நபித்தோழர்கள் போரில் எதிரிகளை வெட்டி வீழ்த்தியதை அல்லாஹ் குறிப்பிடுகிறான். "நீங்கள் அவர்களைக் கொல்லவில்லை. மாறாக அல்லாஹ் தான் அவர்களைக் கொன்றான்'' என்று குறிப்பிடுகிறான்.

நபித்தோழர்கள் தமது வாள்களாலும், வேல்களாலும் தான் எதிரிகளை வெட்டி வீழ்த்தினார்கள். நபித்தோழர்களின் கரத்தால் செய்யப்பட்ட இந்த தீரச் செயலுக்கு அல்லாஹ் சொந்தம் கொண்டாடுகிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எறிந்தது பற்றிப் பேசும் போது பயன்படுத்தியது போன்ற வாசக அமைப்பையே இங்கேயும் பயன்படுத்துகிறான். நபிகள் நாயகம் மட்டுமல்ல, பத்ருப் போரில் கலந்து கொண்ட அனைத்துத் தோழர்களுமே அல்லாஹ்வாக இருந்தார்கள் என்று இவர்கள் வாதிட வேண்டுமல்லவா?

அல்லாஹ் தான் நபி, நபி தான் அல்லாஹ் என்று இவர்கள் கூறியது போல் அல்லாஹ் தான் நபித்தோழர்கள். நபித்தோழர்கள் தான் அல்லாஹ் எனவும் கூற வேண்டிய நிலை ஏற்படும்.

பத்ருப் போரில் பல நபித்தோழர்கள் கொல்லப்பட்டனர். இவர்களின் கிறுக்குத் தனமான வாதப்படி அல்லாஹ் தான் கொல்லப்பட்டான் என்று கூறும் நிலை ஏற்படும்.

இந்த வெற்றிக்கு நபிகள் நாயகமோ நபித் தோழர்களோ சொந்தம் கொண்டாடி விடக் கூடாது என்பதற்காகத் தான், தான் நடத்திய அற்புதங்களை இதற்கு முந்தைய வசனங்களில் அல்லாஹ் நினைவுபடுத்துகிறான்.

நானும் உங்களைப் போன்ற மனிதனே என்று தெளிவாக அவர்களை அல்லாஹ் கூறச் சொல்கிறான். (திருக்குர்ஆன் 18:110)

தெளிவான இந்தப் பிரகடனத்தை அலட்சியம் செய்துவிட்டு சம்பந்தமில்லாத உளறலை நியாயப்படுத்த எண்ணுகின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உண்டது, பருகியது, அவர்கள் மலஜலம் கழித்தது, குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டது, மற்றவர்களைப் போல் தாய், தந்தையருக்குப் பிறந்தது, மனைவி-மக்களை இழந்து கவலைப்பட்டது, சித்ரவதைக்கு ஆளானது, நாடு கடத்தப்பட்டது, தமது மனைவியின் மீது எதிரிகள் பழி கூறிய போது உண்மை நிலையை அறியாமல் இருந்தது, ஒரு கூட்டத்தாரின் அழைப்பை ஏற்று அனுப்பிய எழுபது நபித் தோழர்கள் அவர்களால் கொல்லப்படுவார்கள் என்பதை முன்பே அறியாமல் இருந்தது, வறுமையில் உழன்றது,

என ஆயிரமாயிரம் நிகழ்ச்சிகள் மூலம் அவர்கள் தாம் ஒரு மனிதர் என்பதை நிரூபித்துச் சென்ற பிறகும் இப்படி உளறுபவன் அறிவுடையவனாக இருக்க முடியாது.

நபிகள் நாயகத்துக்கும் நபித்தோழர்களுக்கும் மட்டுமல்ல காஃபிர்கள் உள்ளிட்ட எல்லா மனிதர்கள் விஷயத்திலும் கூட இறைவன் இத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளான்.

நீங்கள் விவசாயம் செய்கிறீர்களே! அதைப் பற்றிக் கூறுங்கள்! நீங்கள் தான் அதை விவசாயம் செய்கிறீர்களா? அல்லது நாம் விவசாயம் செய்கிறோமா? (திருக்குர்ஆன் 56:63,64) என்று அல்லாஹ் கூறுகிறான்.

நாம் விவசாயம் செய்வதைக் கூறி விட்டு உண்மையில் நீங்கள் விவசாயம் செய்யவில்லை. நாமே விவசாயம் செய்கிறோம் என்கிறானே! விவசாயிகள் அனைவரும் அல்லாஹ்வா? இந்த மூடர்கள் சிந்திக்க வேண்டாமா?

நீங்கள் விந்துத் துளியாகச் செலுத்துகிறீர்களே! அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கிறோமோ? எனவும் அல்லாஹ் கேட்கிறான். (திருக்குர்ஆன் 56:58,59)

நாம் தான் விந்துத் துளியைத் செலுத்துகிறோம். ஆனாலும், அதைக் குழந்தையாக ஆக்குவதும், ஆக்காது விடுவதும் அவனது கட்டளைப்படி நடப்பது என்று இதைப் புரிந்து கொள்கிறோம்.

நாம் தான் விதைகளை விதைக்கிறோம். ஆனாலும் விதைத்ததை முளைப்பிக்கச் செய்து ஒன்றுக்கு நூறாக இன்னும் அதிகமாக ஆக்குவது அவனது வல்லமையின் பாற்பட்டது என்று இதையும் விளங்கிக் கொள்கிறோம்.

அது போல் தான் மேற்கண்ட வசனத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்னொரு கோணத்தில் சிந்தித்தால் இவர்களது வாதம் எந்த அளவுக்கு அபத்தமானது என்பது எளிதில் விளங்கும்.

நீர் எறிந்த போது

நீர் எறியவில்லை

என இரண்டு சொற்றொடர்கள் இங்கே இடம் பெற்றுள்ளன. நீர் எறிந்த போது எனக் கூறும் போது எறிந்தவர் நபிகள் நாயகம் என்று அல்லாஹ் ஒப்புக் கொள்கிறான். எதை ஒப்புக் கொண்டானோ அதையே நீர் எறியவில்லை எனக் கூறி உடனே மறுக்கவும் செய்கிறான்.

அல்லாஹ்வின் வார்த்தையில் நிச்சயமாக முரண்பாடு இருக்கவே முடியாது. "நான் சாப்பிட்ட போது நான் சாப்பிடவில்லை'' என்று ஒருவன் கூறினால் அதை நாம் அபத்தம் என்போம்.

ஆனால் இறைவன் எப்படி முரண்பட்டுப் பேசுவான் என்பதைச் சிந்திப்பார்களானால் இதன் சரியான பொருளை விளங்கிக் கொள்வார்கள். இப்படி உளறிக் கொட்ட மாட்டார்கள்.

இது போன்ற வார்த்தைப் பிரயோகத்தை நேரடியான பொருளில் நாம் எடுத்துக் கொள்வது கிடையாது. முரண்பட்ட இரண்டுக்கும் இரு வேறு அர்த்தங்களையே நாம் கருத்தில் கொள்வோம்.

நாம் பயிரிடும் போது நாம் பயிரிடுவதில்லை. அல்லாஹ் தான் பயிரிடுகிறான் என்று கூறினால் பயிரிடுதல் என்பதற்கு இரு வேறு இடங்களில் இரு வேறு அர்த்தங்களை நாம் கவனத்தில் கொள்கிறோம்.

நாம் பயிரிடும் போது என்ற சொற்றொடருக்கு தானியத்தை மண்ணில் புதைக்கும் போது நீர் பாய்ச்சும் போது என்று பொருள் கொள்கிறோம்.

நாம் பயிரிடுவதில்லை என்று அடுத்துக் கூறுகிறோம். இந்த இடத்திலும் அதே பொருளைக் கொண்டால் அது உளறலாகி விடும். நாம் முளைக்கச் செய்வில்லை என்று வேறு பொருள் கொள்கிறோம். இப்போது முரண்பட்டதாகவோ உளறலாகவோ ஆகாது.

அதாவது நாம் (பயிரிடும் போது) விதையைப் புதைக்கும் போது நாம் அதைப் (பயிரிடுவது இல்லை) முளைக்கச் செய்வதில்லை என்ற கருத்து வரும்.

இது போல் தான் மேற்கண்ட வசத்திலும் பொருள் கொள்ள வேண்டும்.

நீர் எறிந்த போது

நீர் எறியவில்லை

என்று முரண்பட்ட இரண்டு சொற்றொடர்களில் ஒவ்வொன்றும் வெவ்வேறு பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நீ எறிந்த போது அதாவது பொடிக் கற்களை வீசிய போது,

நீர் எறியவில்லை அதாவது ஒவ்வொருவர் முகத்திலும் நீர் கொண்டு போய்ச் சேர்க்கவில்லை

என்று பொருள் கொண்டால் தான் முரண்பாடில்லாத வாசகமாக அது அமையும்.

இது போன்ற வார்த்தைப் பிரயோகம் அனைத்து மொழி இலக்கியங்களிலும் மக்களின் உரையாடல்களிலும் காணக் கூடியது தான். குர்ஆனுக்கு மட்டும் உரிய இலக்கணம் இல்லை.

பன்னீர் செல்வம் பேசிய போது, பன்னீர் செல்வம் பேசவில்லை. ஜெயலலிதா தான் பேசினார் என்று இப்போதும் நாம் கூறலாம்.

ஆனால் இரண்டு இடத்திலும் வெவ்வேறு பொருளைக் கொள்ள வேண்டும். இல்லா விட்டால் அது உளறல் தவிர வேறு இல்லை.

பன்னீர் செல்வம் பேசவில்லை. அதாவது கருத்து அவருடையதல்ல என்று பொருள் கொண்டால் தான் இந்த வாசக அமைப்பு சரியானதாகும்.

இந்த விதியின் அடிப்படையில் மேற்கண்ட வசனத்திற்குப் பொருள் கொண்டால் எறிந்தது நபிகள் நாயகம். அதைச் சேர்த்து வைத்தது அல்லாஹ் என்ற கருத்து வரும். அல்லாஹ் செய்தது வேறு! அவன் தூதர் செய்தது வேறு. அல்லாஹ் வேறு! அவன் தூதர் வேறு என்பது இதன் மூலம் உறுதியாகும்.

வணங்கப்படுவோர் மரணித்து விட்டனர் என்பது ஈஸா நபியை உள்ளடக்குமா?

(ஒற்றுமை மாதமிருமுறை இதழில் தேர்வு செய்யப்பட்ட வசனங்களுக்கு பீஜே எழுதிய விளக்கம்)

அல்லாஹ்வையன்றி இவர்கள் யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதனையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்பட்டவர்கள். (அவர்கள்) இறந்தவர்கள். உயிருள்ளவர்கள் அல்லர். தாம் எப்போது எழுப்பப்படுவோம் என்பதை அவர்கள் அறியமாட்டார்கள்.

திருக்குர்ஆன் 16:20, 21

ஈஸா நபியவர்கள் மரணித்து விட்டார்கள். உயிருடன் இல்லை என்று வாதிடக் கூடியவர்கள் இவ்வசனங்களையும் தங்களின் கருத்துக்குச் சான்றாக எடுத்து வைக்கின்றனர். அல்லாஹ்வையன்றி யாரெல்லாம் கடவுள் நிலையில் வைத்துப் பிரார்த்தனை செய்யப்படுகிறார்களோ அவர்கள் அனைவரும் மரணித்தவர்கள் என்றும், உயிருடன் உள்ளவர்கள் அல்லர் எனவும் இவ்வசனங்களில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

ஈஸா நபியவர்கள் இறைவனின் நிலையில் வைத்து பிரார்த்திக்கப்படுகின்றார். வணங்கப்படுகின்றார். வணங்கப்படுவோர் யாவரும் மரணித்தவர்கள் என்று கூறப்படுவதால் ஈஸா நபியும் மரணித்து விட்டார்கள் என்பது இவர்களின் வாதம்.

தங்களின் தவறான முடிவை நியாயப்படுத்துவதற்காக திருக்குர்ஆனின் கூற்றைப் பொய்யாக்கவும் இவர்கள் தயாராக உள்ளனர் என்பது இந்த வாதத்திலிருந்து தெளிவாகத் தெரிகின்றது.

இன்று நமது நாட்டிலும் உலகின் பல பாகங்களிலும் உயிருடன் வாழ்கின்ற மனிதர்களை வணங்கக்கூடியவர்கள் உள்ளனர். அவர்களை கடவுளின் அவதாரங்களாக நினைப்பவர்களும் உள்ளனர்.

சாய்பாபா, கல்கி, பங்காரு அடிகளார் போன்றவர்கள் நம் கண் முன்னே வாழ்கிறார்கள். இவர்களைக் கடவுளின் அவதாரங்ளாக எண்ணி வழிபடும் கோடிக்கணக்கான மக்களும் உள்ளனர்.

அல்லாஹ்வையன்றி யாரை நீங்கள் வணங்குகிறீர்களோ அவர்களெல்லாம் இறந்தவர்கள் என்ற வசனம் இவர்கள் கருத்தில் கொண்ட பொருளின்படி இப்போது பொய்யாகி விடுகின்றது. (நவூது பில்லாஹ்)

யாரையெல்லாம் வணங்குகிறார்களோ அவர்களெல்லாம் இறந்தவர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். ஆனால் அல்லாஹ் கூறியவாறு இல்லாமல் வணங்கப்படும் பலர் உயிருடன் உலகில் வாழ்ந்து வருகின்றனர். உயிருடன் நம் கண் முன்னே வாழ்பவர்களை மரணித்தவர்கள் என்று கூறினால் தான் குர்ஆன் வசனம் மெய்யாக முடியும்.

ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்பதற்காக இவ்வாறு வாதம் செய்தவர்கள் சாய்பாபா போன்றவர்கள் குறித்து என்ன சொல்லப் போகிறார்கள்?

சாய்பாபாக்களை விட்டு விடுவோம். இவ்வசனங்கள் அருளப்பட்ட காலத்தில் வணங்கப்பட்ட பலர் உயிருடன் இருந்துள்ளனர். திருமறைக் குர்ஆனிலிருந்தே இதை நாம் அறிந்து கொள்ள இயலும்.

கிறிஸ்தவர்கள் ஈஸா நபியைக் கடவுளின் மகன் என்றனர். இது போலவே மக்காவில் வாழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எதிரிகள் மலக்குகள் என்னும் வானவர்களை அல்லாஹ்வின் புதல்விகள் என்றனர். மலக்குகளை வணங்கியும் வந்தனர்.

உங்களுக்கு ஆண் குழந்தைகளைத் தேர்வு செய்து விட்டு வானவர்களைத் (தனது) பெண் மக்களாக (அல்லாஹ்) ஏற்படுத்திக் கொண்டானா? நிச்சயம் நீங்கள் பயங்கரமான வார்த்தையையே கூறுகிறீர்கள்.

திருக்குர்ஆன்: 17:40

ரஹ்மான் (ஆகிய அல்லாஹ்) சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான் எனக் கூறினார்கள். அவன் தூயவன். மாறாக அவர்கள் மரியாதைக்குரிய அடியார்களாவர்.

திருக்குர்ஆன்: 21:26

ரஹ்மானின் அடியார்களாக உள்ள வானவர்களை பெண்களாக ஆக்கிவிட்டனர். அவர்களைப் படைத்த போது இவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்களா? இவர்களின் கூற்று பதிவு செய்யப்படும். மேலும், இவர்கள் விசாரிக்கப்படுவார்கள். ரஹ்மான் நாடியிருந்தால் நாங்கள் அவர்களை (வானவர்களை) வணங்கியிருக்க மாட்டோம் எனவும் கூறுகின்றனர். இது பற்றி அவர்களுக்கு எந்த அறிவும் இல்லை. அவர்கள் வீண் கற்பனையே செய்கிறார்கள்.

திருக்குர்ஆன்: 43:19, 20

இவ்வசனங்கள் கூறுவது என்ன? வானவர்களை அல்லாஹ்வின் புதல்விகள் என்று மக்கத்து காபிர்கள் கூறியுள்ளனர். அவர்களை வணங்கியும் உள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது.

வணங்கப்பட்டவர்கள் யாவரும் மரணித்தவர்கள் என்றால் இந்த வாதப்படி வானவர்களும் மரணித்தவர்கள் என வாதிட வேண்டும். வானவர்களில் யாரும் இப்போது உயிருடன் இல்லை என்று இவர்கள் கூற வேண்டும்.

ஈஸா நபியைப் பற்றி எந்தத் தவறை கிறிஸ்தவர்கள் செய்தார்களோ அதே தவறைத் தான் வானவர்கள் விஷயத்தில் மக்கத்துக் காபிர்களும் செய்தனர். இறைவனுக்கு மகன் இருக்கலாம் என்ற வாதமும், மகள்கள் இருக்கலாம் என்ற வாதமும் அடிப்படையில் சமமானவை தான்.

ஈஸா நபியை வணங்கியதால் அவர்கள் மரணித்து விட்டார்கள் என்று வாதிட்டால் மலக்குகளை வணங்கியதால் மலக்குகளும் மரணித்து விட்டார்கள் என்று வாதிட வேண்டும்.

மலக்குகளை மட்டுமின்றி ஜின்களையும் மனிதர்கள் வணங்கியுள்ளனர்.

அவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டும் நாளில் "இவர்கள் தாம் உங்களை வணங்கிக் கொண்டிருந்தார்களா?'' என்று வானவர்களிடம் அவன் கேட்பான். அதற்கவர்கள் "நீ தூயவன் - நீ தான் எங்கள் பாதுகாவலன் அவர்களல்ல. மாறாக அவர்கள் ஜின்களையே வணங்கினார்கள். அவர்களில் அதிகமானோர் அவர்களையே நம்பிக்கை கொண்டார்கள்.

திருக்குர்ஆன்: 34:40, 41

அன்றைய மனிதர்கள் ஜின்களை வணங்கினார்கள் என்று இவ்வசனங்கள் கூறுகின்றன. ஒருவர் வணங்கப்படுவது அவர் இறந்துவிட்டார் என்பதற்கான ஆதாரமாக இருந்தால் ஜின்களும் மரணித்து விட்டார்கள் என்று வாதிடவேண்டும். ஈஸா நபி விஷயத்தில் செய்த வாதத்தை ஜின்கள் விஷயத்தில் இவர்கள் செய்வதில்லை.

மலக்குகள் - ஜின்கள் ஆகியோர் வேற்று இனத்தவர்கள். மனித இனத்தில் வணங்கப் படுபவர்களைத் தான் இவ்வசனங்கள் கூறுகின்றன என்று சமாளிப்பார்களானால் அதுவும் தவறு தான். ஏனெனில், உயிருடன் உள்ள மனிதர்களும் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வணங்கப்பட்டுள்ளனர்.

தங்கள் பாதிரிகளையும், மத குருமார்களையும், மர்யமின் மகன் மஸீஹையும் (ஈஸாவையும்) அல்லாஹ்வையன்றி கடவுளர்களாக இவர்கள் ஏற்படுத்திக் கொண்டார்கள். ஒரே ஒரு கடவுளை வணங்குமாறு தவிர இவர்கள் கட்டளையிடப்படவில்லை. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. இவர்கள் இணைவைப்பதை விட்டும் அவன் தூயவன்.

திருக்குர்ஆன்: 9:31

ஈஸா நபியை எவ்வாறு கடவுளாகக் கருதினார்களோ அது போலவே பாதிரிகளையும், மத குருக்களையும் கடவுளாக கருதினார்கள் என்று இவ்வசனம் மிகத் தெளிவாகக் கூறுகிறது. ஒருவர் வணங்கப்படுவது தான் அவரது மரணத்திற்குரிய ஆதாரம் என்ற இவர்களின் வாதப்படி உலகில் எந்தப் பாதிரியாரும், மதக் குருக்களும் உயிருடன் இல்லை என்று இவர்கள் அறிவிக்க வேண்டும். ஈஸா நபியைத் தவிர மற்றவர்கள் குறித்து இவர்கள் அவ்வாறு அறிவிக்க மாட்டார்கள்.

யாரை இவர்கள் அழைக்கிறார்களோ அவர்கள், இறந்தவர்கள் என்று குர்ஆனில் உள்ளதே! இவர்கள் விளங்குவது போன்ற கருத்தை அது தருகிறதே என்ற அடிப்படையான கேள்விக்கு வருவோம்.

திருக்குர்ஆனை அணுக வேண்டிய முறைப்படி அணுகினால் இந்தக் கேள்விக்கு விடை கிடைத்து விடும்.

திருக்குர்ஆனில் பொதுப்படையாக ஒரு இடத்தில் ஒரு செய்தி கூறப்பட்டால் அதற்கு வேறு இடங்களில் ஏதேனும் விதிவிலக்கு கூறப்பட்டுள்ளதா என்று ஆராய வேண்டும். விதிவிலக்குகள் இருக்குமானால் அவற்றைப் பொதுவாகக் கூறப்பட்டதிலிருந்து நீக்கி விட வேண்டும். மனிதன் அநியாயக்காரன், மனிதன் நன்றி கெட்டவன் என்றெல்லாம் திருக்குர்ஆனில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. அதே குர்ஆன் சில நல்லடியார்கள் நன்றியுள்ளவர்களாக நடந்து கொண்டார்கள் எனவும் குறிப்பிடுகிறது. மனிதன் நன்றி கெட்டவன் என்ற பொதுவான வார்த்தைப் பிரயோகத்தை வைத்துக் கொண்டு நபிமார்கள் உட்பட அனைவருமே நன்றி கெட்டவர்கள் என்று முடிவு செய்வது அறியாமையாகும்.

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை வணங்குகிறீர்களோ அவர்கள் நரகத்தின் எரி பொருட்களாவர் என்று குர்ஆன் 21:98 வசனம் கூறுகிறது.

இதனடிப்படையில் மனிதர்களால் வணங்கப்பட்ட ஈஸா நபி உள்ளிட்ட நபிமார்கள், நல்லடியார்கள் அனைவரும் நரகில் போட்டு எரிக்கப்படுவார்கள் என்று புரிந்து கொள்ளக்கூடாது.

இந்த வாசக அமைப்பு இதற்கு இடமளித்தாலும் 21:101 வசனத்திலும், வேறு பல இடங்களிலும் நபிமார்கள் மற்றும் நல்லடியார்களை யாரேனும் வணங்கினால் வணங்கியவர்கள் தான் நரகில் போடப்படுவார்களே தவிர வணங்கப்பட்டவர்கள் நரகில் போடப்பட மாட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்த விதிவிலக்கையும் சேர்த்துத்தான் இவ்வசனத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அது போல் தான் நீங்கள் யாரை வணங்குகிறீர்களோ அவர்கள் இறந்தவர்கள் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். வானவர்கள், பாதிரிகள், ஜின்கள், ஷைத்தான் ஆகியோர் வணங்கப்பட்டாலும் அவர்கள் உயிருடன் உள்ளனர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. அதே போல் ஈஸா நபியவர்கள் இன்னும் மரணிக்கவில்லை என்பதற்கும் சான்றுகளை முன்னரே காட்டியுள்ளோம்.

அவர் கியாமத் நாளின் அடையாளமாவார், வேதமுடையோர் அவர் மரணிப்பதற்கு முன்னால் அவரை நம்பாமல் இருக்கமாட்டார்கள் என்று 43:61, 4:159 ஆகிய வசனங்களில் ஈஸா நபி உயிருடன் உள்ளனர் என்ற விதிவிலக்கு கூறப்பட்டுள்ளது.

ஈஸாவுக்கு முன்னுள்ளவர்கள் மரணித்து விட்டார்கள் (5:75) என்ற வசனம் அவர் மரணிக்கவில்லை என்ற கருத்தை உள்ளடக்கி நிற்கிறது.

இது போன்ற விதிவிலக்குகள் இருக்கும் போது அதைக் கண்டு கொள்ளாமல் அதற்கு உரிய எந்த விளக்கமும் தராமல் 16:20, 21 வசனங்களின் அடிப்படையில் ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என வாதிடுவது அறியாமையும், மோசடியுமாகும்.

9:31 வசனத்தில் பாதிரிகளையும், மதக் குருக்களையும் ஈஸாவையும் கடவுளர்களாக ஆக்கினார்கள் என்று இறைவன் கூறுகிறான். உயிருடன் உள்ள முதலிருவருடன் ஈஸா நபியையும் சேர்த்துக் கூறுகிறான். இறைவன். ஏற்கனவே மரணித்து விட்ட அவரது தாயார் மர்யமை இங்கே கூறாமல் தவிர்க்கிறான்.

உயிருடன் வாழக் கூடியவர்களுடன் ஈஸா நபியையும் சேர்த்துக் கூறியிருப்பது அவர்கள் மரணிக்கவில்லை எனக் கூறும் மற்றொரு சான்றாக அமைந்துள்ளது.

எனவே ஈஸா நபி இறந்துவிட்டார் என்ற இந்த வாதமும் அர்த்தமற்றது என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகின்றது.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

வானத்தில் ஈஸா நபிக்கு உணவு உண்டா?

மர்யமின் மகன் மஸீஹ் (என்னும் ஈஸா) தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவரது தாய் அதிக நம்பிக்கை கொண்டவர். அவ்விருவரும் உணவு உண்பவர்களாக இருந்தனர். நாம் அவர்களுக்குச் சான்றுகளை எவ்வாறு தெளிவுபடுத்துகிறோம் என்பதை கவனிப்பீராக! பின்னர் அவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர் என்பதையும் கவனிப்பீராக!

திருக்குர்ஆன் : 5:75

ஆயினும், ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்ற கருத்துடையோர் மேற்கண்ட வசனத்தை தமது கருத்துக்குச் சான்றாக முன் வைக்கின்றனர். "அவர்கள் இருவரும் உணவு உண்பவர்களாக இருந்தனர்'' என்ற சொற்றொடரை ஆதாரமாகக் கொண்டு ஈஸா நபி மரணித்து விட்டார் எனக் கூறுகின்றனர்.

ஈஸா நபி உயிரோடு இருந்தால் அவர் உணவு உட்கொள்ள வேண்டும். வானத்தில் உணவுப் பொருட்கள் பயிரிடப்படுகின்றனவா? அங்கே எப்படி உணவு உட்கொள்ள முடியும்?

என்றெல்லாம் அற்புதமான (?) கேள்விகளைக் கேட்டு ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்று நிறுவ முயல்கின்றனர். ஈஸா நபி இப்பூமியில் இல்லாததால் அவர் உணவு உட்கொள்ள வில்லையாதலால் அவர் மரணித்து விட்டார் என்பது உறுதி என்பது இவர்களின் வாதம்.

பொதுவாக நபிமார்கள் உணவு உட்கொள்பவர்களாகவே இருந்தனர் எனக் கூறும் 21:8, 25:20 ஆகிய வசனங்களையும் தமது கருத்துக்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

இது அறியாமை நிறைந்த வாதம் என்றாலும் இதை ஒரு வலுவான ஆதாரமாக மாற்றுக் கருத்துடையவர்கள் சித்தரிக்கிறார்கள்.

ஈஸா நபி உயிருடன் இருக்கிறார்களா? இல்லையா? என்பது தான் அடிப்படையான பிரச்சனை. அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்பது நிரூபணமாகிவிட்டால், அதிலிருந்தே அவர்கள் உணவு உண்கிறார்கள் என்றோ அல்லது உணவு உண்ணாமல் வேறு வகையில் உயிருடன் உள்ளனர் என்றோ முடிவு செய்தாக வேண்டும்.

உயிருடன் இருக்கிறார்கள் என்பதிலிருந்து உணவு உட்கொள்கிறார்கள் என்று விளங்குவதற்கு பதிலாக ஈஸா நபி உணவு உண்பது தமக்குத் தெரியவில்லை என்பதிலிருந்து அவர் மரணித்து விட்டார் என்று தலைகீழாக விளங்கிக் கொள்கின்றனர்.

உணவு என்பது அரிசியும், பருப்பும் மட்டும் அல்ல. அல்லாஹ் நாடினால் வாய் வழியாக இல்லாமல் தனது வல்லமையால் உணவளிக்க இயலும் என்பதற்கு திருக்குர்ஆனில் பல சான்றுகள் உள்ளன.

கஹ்ப் அத்தியாயத்தில் நன்மக்கள் சிலரை பல வருடங்கள் தூங்க வைத்ததாக அல்லாஹ் கூறுகிறான். (18:11)

அவர்கள் ஒரு பக்கமாகவே படுத்துக்கிடந்தால் உடலைப் பாதிக்கும் என்பதற்காக வலப்புறமும், இடப்புறமும் புரட்டிப் போடுவதாக 18:18 வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

பல வருடங்கள் உண்ணாமல் ஒருவர் தூங்க முடியுமா? நிச்சயமாக முடியாது. ஒரே பக்கமாகப் படுத்துக் கிடப்பதே முடியாது என்பதால் அவர்களைப் புரட்டிப் போடும் இறைவன் உணவு வழங்கவே இல்லை. இறைவன் மறைமுகமாக ஏதோ ஒரு வகையில் அவர்களுக்கு உணவளித்திருக்க வேண்டும்; அல்லது உணவு உட்கொள்ளாமலேயே உயிர் வாழ்வதற்குரிய ஏற்பாட்டைச் செய்திருக்க வேண்டும். அவர்கள் உணவு உட்கொள்ளாததிலிருந்து அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று கருதுவது அறியாமையாகும்.

இது போல் ஒரு நல்லடியாரை அல்லாஹ் நூறு வருடங்கள் மரணிக்கச் செய்ததாக குர்ஆன் கூறுகிறது.

259. அல்லது ஒரு கிராமத்தைக் கடந்து சென்றவரைப் பற்றி (நீர் அறிவீரா?) அந்த ஊர் அடியோடு வீழ்ந்து கிடந்தது. "இவ்வூர் அழிந்த பிறகு அல்லாஹ் எவ்வாறு இதை உயிராக்குவான்?'' என்று அவர் நினைத்தார். உடனே அவரை அல்லாஹ் நூறு ஆண்டுகள் மரணிக்கச் செய்தான். பின்னர் அவரை உயிர்ப்பித்து "எவ்வளவு நாளைக் கழித்திருப்பீர்?'' என்று கேட்டான். "ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிதளவு நேரம் கழித்திருப்பேன்'' என்று அவர் கூறினார். "அவ்வாறில்லை! நூறு ஆண்டுகளைக் கழித்து விட்டீர்! உமது உணவும், பானமும் கெட்டுப் போகாமல் இருப்பதைக் காண்பீராக!406 (செத்துவிட்ட) உமது கழுதையையும் கவனிப்பீராக! மக்களுக்கு உம்மை எடுத்துக் காட்டாக ஆக்குவதற்காக (இவ்வாறு செய்தோம். கழுதையின்) எலும்புகளை எவ்வாறு திரட்டுகிறோம் என்பதையும், அதற்கு எவ்வாறு மாமிசத்தை அணிவிக்கிறோம் என்பதையும் கவனிப்பீராக!'' என்று அவன் கூறினான். அவருக்குத் தெளிவு பிறந்தபோது "அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன் என்பதை அறிகிறேன்'' எனக் கூறினார்.79

திருக்க்குர் ஆன் 2:259

இந்த நல்லடியாரை உறக்க நிலையில் இறைவன் வைத்தான் என்று ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்ற கருத்துடையோர் விளக்கம் கூறுகின்றனர்.

நூறு வருடங்கள் எதையுமே உண்ணாமல், பருகாமல் அந்த நல்லடியாரை உயிர் வாழச் செய்த இறைவன் ஈஸா நபியை வாழச் செய்வான் என்பதில் மட்டும் சந்தேகம் கொள்கின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவு பகல் 24 மணி நேரமும் தொடர்ந்து பல நாட்கள் நோன்பு நோற்றனர். மற்றவர்களுக்கு அதைத் தடை செய்தனர். "என் இறைவன் புறத்திலிருந்து எனக்கு உணவளிக்கப்படுகிறது'' என்று விளக்கமும் கூறினார்கள்.

(புகாரி 1961, 1962, 1963, 1964)

இந்த உணவு வாய்வழியாக அளிக்கப்படும் உணவு என்றால் நோன்பு முறிந்துவிடும். எனவே, இறைவன் வேறு விதமாக வழங்கும் ஆற்றல் என்பதே இதன் கருத்தாகும்.

அல்லாஹ் ஒருவரை உயிர் வாழச் செய்ய நினைத்தால் அவன் அதற்கான ஏற்பாட்டைச் செய்வான் என்பது ஆச்சரியப்படக்கூடிய ஒன்றல்ல.

பூமியில் மட்டும் தான் உண்பதற்குரிய உணவுகள் உள்ளன என நினைப்பதும் அறியாமையின் வெளிப்பாடுதான்.

"இறைவா! வானிலிருந்து எங்களுக்கு உணவுத் தட்டை அனுப்பு என்று ஈஸா நபி பிரார்த்தனை செய்தார்கள். அதை ஏற்று அல்லாஹ் அதை வழங்கினான் என்பதை 5:114 வசனத்திலிருந்து அறியலாம்.

"வானத்தில் உணவெல்லாம் கிடையாது. பூமியிலேயே தயார் செய்து கொள்ளுங்கள்'' என்று அல்லாஹ் கூறவில்லை. மாறாக வானத்திலிருந்து உணவை இறக்கி வைத்தான். மன் ஸல்வா என்னும் பதார்த்தங்களை மூஸா நபியின் சமுதாயத்திற்கு இறக்கி வைத்ததாக 20:80, 7:160, 2:57 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

இதன் பிறகும் வானத்தில் உணவு கிடைக்குமா என்று கேட்பது அறியாமையில்லாமல் வேறு என்ன?

51:22, 34:24, 16:73 ஆகிய வசனங்களில் வானங்களிலும் உணவு உள்ளன என்பது தெள்ளத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

எனவே, ஈஸா நபி உயிருடன் உள்ளனர் என்பதற்கு மறுக்க முடியாத சான்றுகள் பல உள்ளதாலும், இறைவனைப் பொருத்த வரை உணவு என்பது ஒரு பிரச்சனையே அல்ல என்பதாலும் இவர்களின் இந்த வாதமும் அடிபட்டுப் போகின்றது.

முஹம்மது நபிக்கு முன் வந்த நபிமார்கள் அனைவரும் மரணித்து விட்டார்களா?

ஒற்றுமை மாதம் இருமுறை இதழில் தேர்வு செய்யப்பட்ட திருக்குர்ஆன் வசனங்களுக்கு பீஜே எழுதிய விளக்கம்

144. முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர்.101 அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான்.

திருக்குர்ஆன் 3:144

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உலக முஸ்லிம்களின் ஒரே தலைவராகவும், வழிகாட்டியாகவும் இருக்கிறார்கள். ஆனாலும், அவர்கள் இறைவனின் தூதரே தவிர இறைவனல்லர் என்பதை இவ்வசனம் வலியுறுத்துகின்றது. முஹம்மத் (ஸல்) அவர்கள் மரணித்து விட்டால் வந்த வழியே திரும்பிச் சென்று விடக்கூடாது. இறைவனது தண்டனைக்கு அஞ்சியும், இறைவனது பரிசுகளை எதிர்பார்த்தும் தான் இம்மார்க்கத்தில் இருக்க வேண்டுமே தவிர முஹம்மத் (ஸல்) அவர்களுக்காக இம்மார்க்கத்தில் இருக்கக் கூடாது என்று இவ்வசனம் அழுத்தம் திருத்தமாகக் கூறுகின்றது.

இந்தக் கருத்தைத் தெரிவிப்பதற்காக இவ்வசனம் அருளப்பட்டாலும் இவ்வசனத்தைச் சிந்திக்கும் போது ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்ற கருத்தும் இதனுள் அடங்கியுள்ளதாக சிலர் வாதிடுகின்றனர்.

"முஹம்மது நபிக்கு முன் தூதர்கள் சென்றுவிட்டனர்'' என்ற சொற்றொடரின் அடிப்படையில் இவ்வாறு வாதிடுகின்றனர். முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர் என்றால் அவர்களுக்கு முன் வந்த அனைத்துத் தூதர்களும் மரணித்து விட்டனர் என்பதே பொருள். எனவே, முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு முன் வந்த ஈஸா நபி உள்ளிட்ட அனைத்துத் தூதர்களும் மரணித்து விட்டனர் என்பது இவர்களின் வாதம்.

ஏற்கனவே வந்த தூதர்கள் மரணித்ததை முன்னுதாரணமாகக் காட்டி நபிகள் நாயகம் (ஸல்) மரணிப்பார்கள் என்பதை இறைவன் அறிவிப்பதால் இக்கருத்து மேலும், வலுவடைகின்றது எனவும் கூறுகின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த போது, பெரும்பாலான நபித்தோழர்கள் அவர்களின் மரணத்தை நம்ப மறுத்தனர். அப்போது அபூபக்கர் (ரலி) அவர்கள் இவ்வசனத்தை எடுத்துச் சொல்லித்தான் நபித்தோழர்களைச் சரியான வழிக்குக் கொண்டு வந்தார்கள். இந்த வரலாறு புகாரி (3670, 1242, 4454) மற்றும் பல ஹதீஸ் நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.

இந்த ஹதீஸ்களையும் தங்களின் வாதத்துக்கு வலுசேர்ப்பதற்கு இவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

ஈஸா நபி மரணிக்காமல் இருந்திருந்தால் அபூபக்கர் (ரலி)யின் வாதத்தை நபித்தோழர்கள் ஏற்றிருக்க மாட்டார்கள். ஈஸா நபி மரணிக்காமல் இருப்பது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் ஏன் மரணிக்காமல் இருக்கக் கூடாது என்று எதிர்க்கேள்வி கேட்டிருப்பார்கள்.

அபூபக்கர் (ரலி) இவ்வசனத்தை ஆதாரமாகக் காட்டி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்ததை நிரூபித்தபோது நபித்தோழர்கள் எவ்வித எதிர்க் கேள்வியும் இல்லாமல் ஏற்றுக் கொண்டனர். எனவே, ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்பதை நபித்தோழர்கள் ஏகமனதாக நம்பியிருந்தார்கள் என்பதும் இவர்களின் வாதமாகும்.

திருக்குர்ஆனை அணுக வேண்டிய விதத்தில் அணுகாமல் இந்த வாதத்தை எடுத்து வைக்கின்றனர் ஒரு விஷயத்தைப் பற்றி ஒரு வசனத்தில் கூறப்பட்டதை வைத்து உடனேயே ஒரு முடிவுக்கு வருவது குர்ஆனை அணுகும் வழிமுறையல்ல.

இது பற்றி வேறு வசனங்களில் கூடுதல் விளக்கம் உள்ளதா? அல்லது விதி விலக்குகள் உள்ளனவா? என்றெல்லாம் தேடிப் பார்க்க வேண்டும். அப்படி ஏதும் இல்லாவிட்டால் அந்த ஒரு வசனத்திலிருந்து எது விளங்குகிறதோ அதை அடிப்படையாகக் கொண்டு வாதிடலாம். அவ்வாறு இல்லாமல் பல இடங்களில் அந்த விஷயம் குறித்து கூறப்பட்டால் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரு முடிவுக்கு வருவதே குர்ஆனை அணுகும் முறையாகும்.

திருக்குர்ஆனில் எத்தனையோ வசனங்களில் பொதுவாகக் கூறப்பட்டதற்கு வேறு இடங்களில் விதிவிலக்குகள் கூறப்பட்டுள்ளன. இது தான் குர்ஆனின் தனி நடையாகும்.

இந்த இடத்திலேயே ஈஸா நபியைத் தவிர என்று கூறப்படவில்லையே என்று கேட்பது குர்ஆனின் நடையைப் புரிந்து கொள்ளாதவர்களின் கேள்வியாகும்.

"பெற்றோருக்கு உபகாரம் செய்யுமாறு மனிதனுக்கு நாம் வலியுறுத்தினோம்'' என்று குர்ஆன் கூறுகிறது. மேலும், மனிதனை அவனது தாய் சிரமத்துடன் பெற்றெடுத்தாள் எனவும் கூறுகிறது. (பார்க்க திருக்குர்ஆன் 31:14)

இவ்வசனத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு மனிதர்கள் அனைவரது நிலையும் இதுதான் என்று கூற முடியாது. மனிதன் என்பதில் ஆதம், ஹவ்வா,, ஈஸா ஆகியோரும் அடங்குவார்கள். எனவே, அவர்களுக்கும் தாய், தந்தையர்கள் இருந்தார்கள் என்று ஒருவர் வாதிடுவது எந்தளவு அறிவீனமோ இந்த வாதமும் அது போன்றதாகும்.

இவ்வசனத்தில் மனிதன் என்று பொதுவாகக் கூறப்பட்டாலும் திருக்குர்ஆனின் வேறு வசனங்களில் ஆதம், ஹவ்வா, ஆகியோருக்கு இவ்வாறு பெற்றோரைப் பேணுமாறு கட்டளை பிறப்பித்திருக்க முடியாது என்று அறிந்து கொள்கிறோம்.

மனிதர்களே என்று அழைத்து உங்களை ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம் என்று அல்லாஹ் கூறுகிறான். (பார்க்க திருக்குர்ஆன் 49:13)

இந்த ஒரு வசனத்தை மட்டும் வைத்துப் பார்த்தால் ஈஸா நபிக்கும் தந்தை இருக்க வேண்டும் என்று முடிவு செய்ய இயலும். ஆயினும் வேறு இடங்களில் அவருக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டதால் அவரை இதிலிருந்து நீக்கி விடுகிறோம்.

மனிதனை விந்திலிருந்து படைத்ததாகப் பல வசனங்கள் கூறுகின்றன. இதில் ஆதம், ஹவ்வா, ஈஸா ஆகியோர் விதி விலக்குப் பெற்றது வேறு வசனங்களில் கூறப்பட்டுள்ளது. இது போல் ஏராளமான வசனங்கள் குர்ஆன் முழுவதும் உள்ளன.

எனவே, முஹம்மதுக்கு முன் தூதர்கள் சென்றுவிட்டனர் என்ற வார்த்தைக்குள் ஈஸா நபி அடங்கினாலும் அவர்களுக்கு வேறு இடங்களில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதைக் கவனிக்காததால் தான் இவ்வாறு வாதிட்டு வருகின்றனர்.

ஈஸா நபி கியாமத் நாளின் அடையாளமாக இருக்கிறார்.

ஈஸா நபி மரணிப்பதற்கு முன் அவரை வேதக்காரர்கள் நம்பிக்கை கொள்வார்கள்

என்ற கருத்திலமைந்த இரு வசனங்கள் (43:61, 4:159) பற்றி முன்னர் குறிப்பிட்டுள்ளோம். அவ்விரு வசனங்களும் ஈஸா நபியவர்கள் மரணிக்கவில்லை என்று அறிவிக்கின்றன. இவ்வசனத்தைக் காட்டி ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்று வாதிடுவோர் அவ்விரு வசனங்களை என்ன செய்யச் சொல்கிறார்கள்? வேதத்தில் பாதியை ஏற்று மீதியை மறுப்பவர்கள் தான் இவ்வாறு வாதிட முடியும்.

எனவே அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டார்கள் என்பதையும் இவ்விரு வசனங்களையும் இணைத்து "ஈஸா நபி தவிர மற்ற தூதர்கள் இவருக்கு முன் மரணித்து விட்டார்கள்'' என்று தான் முடிவு செய்ய வேண்டும்.

மனிதனை விந்துத் துளியிலிருந்து படைத்தோம் என்பதையும், ஆதமைக் களிமண்ணால் படைத்தோம் என்பதையும் இணைத்து "ஆதம் தவிர மற்றவர்களை விந்துத் துளியில் படைத்தோம் என்று முடிவு செய்தது போல் தான் இங்கேயும் முடிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு முடிவு செய்யும் போது எந்த வசனத்தையும் நாம் மறுக்கவில்லை. எல்லா வசனங்களும் சேர்ந்து எந்தக் கருத்தைத் தருகிறதோ அந்தக் கருத்தைத் தான் நாம் கொள்கிறோம்.

இவர்களின் வாதம் தவறானது என்பதற்கு மேற்கண்ட இரு வசனங்கள் மட்டுமின்றி மற்றொரு வசனமும் சான்றாக அமைந்துள்ளது. ஏறத்தாழ இந்த வசனத்தைப் போல் அமைந்த அந்த வசனம் இவர்களின் கருத்து தவறானது என்பதைச் சந்தேகமற நிரூபிக்கின்ற விதமாக அமைந்துள்ளது.

75. மர்யமின் மகன் மஸீஹ்92 தூதரைத் தவிர வேறில்லை.459 அவருக்கு முன் பல தூதர்கள் சென்று விட்டனர்.101 அவரது தாய் உண்மையாளர். அவ்விருவரும் உணவு உண்போராக இருந்தனர். இவர்களுக்குச் சான்றுகளை எவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளோம் என்பதைச் சிந்திப்பீராக! பின்னர் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர் என்பதையும் சிந்திப்பீராக!

திருக்குர்ஆன்: 5:75

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி  3:144 வசனம் குறிப்பிடுவது போலவே இவ்வசனம் ஈஸா நபியைக் குறித்துப் பேசுகிறது.

இவ்வசனத்தைக் கவனமாகப் பார்த்தால் ஈஸா நபியவர்கள் மரணிக்கவில்லை என்பது பளிச்சென விளங்கும்.

இவ்வசனம் அருளப்பட்ட காலத்தில் - நபிகள் நாயகம் (ஸல்) வாழ்ந்த காலத்தில் - ஈஸா நபி மரணித்திருந்தார்கள் என்று ஒரு வாதத்துக்காக வைத்துக் கொள்வோம். அவரைக் கடவுளாக நம்புகிற மக்களுக்கு மறுப்புக் கூறும் போது எவ்வாறு கூற வேண்டும்?

"ஈஸா தூதர் தான். அவரே மரணித்து விட்டார்'' என்று கூறினால் அது தான் சரியான பதிலாக இருக்க முடியும்.

மரணித்தவரை எப்படிக் கடவுள் எனக் கருதலாம் என்ற கருத்தை இது அழுத்தமாகச் சொல்லும். ஈஸா நபி மரணித்திருந்தால் அதைச் சொல்ல வேண்டிய இடம் இது தான். ஈஸா நபியைக் கடவுளாக்கியவர்களுக்கு மறுப்புச் சொல்லும் இந்த இடத்தில் இறைவன் பயன்படுத்திய வார்த்தையைக் கவனித்தீர்களா?

"ஈஸா தூதர் தான். அவருக்கு முன்னர் தூதர்கள் சென்று விட்டனர்'' என்று அல்லாஹ் கூறுகிறான்.

அல்லாஹ் ஞானமிக்கவன். நுண்ணறிவாளன். அவன் பொருத்தமற்ற சொற்களைப் பயன்படுத்துவதை விட்டும் தூய்மையானவன். ஈஸா நபி மரணித்திருந்தால் இந்த வாசக அமைப்பு இறைவன் தெளிவாகக் கூறுபவன் அல்லன் என்ற கருத்தைத் தந்து விடும்.

அவரே இறந்திருக்கும் போது அதைக் கூறாமல் அவருக்கு முன் சென்றவர்கள் இறந்து விட்டார்கள் என்று விவேகமுள்ளவர் யாரேனும் பேசுவதுண்டா?

அவருக்கு முன்னர் தூதர்கள் சென்றுவிட்டனர் எனக் கூறி விட்டு அவர்கள் பூமியில் வாழும் போது சாப்பிட்டுக் கொண்டிருந்ததைக் காரணமாகக் காட்டி கடவுள் தன்மையை மறுக்கிறான். அவர் மரணித்திருந்தால் அதையே காரணமாகக் காட்டி இறைவன் தக்க பதில் கூறியிருப்பான்.

முஹம்மதுக்கு முன் தூதர்கள் சென்றுவிட்டனர் என்ற வசனம் அருளப்படும் போது முஹம்மத் (ஸல்) உயிரோடு இருந்தனர் என்று புரிந்து கொள்கிறோம்.

அதுபோல் ஈஸாவுக்கு முன் தூதர்கள் சென்றுவிட்டனர் என்ற வசனம் இறங்கும் போதும் ஈஸா நபி உயிருடன் இருந்தனர் என்று தான் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரே மாதிரியாக அமைந்த இரண்டு இடங்களில் வித்தியாசமாகப் பொருள் கொள்வது ஏற்புடையதன்று.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த போது நபித்தோழர்கள் நடந்து கொண்ட முறையை அவர்கள் ஆதாரமாகக் காட்டுவதும் சரியல்ல.

ஈஸா நபி வருவார்கள் என்ற ஏராளமான ஹதீஸ்களை நபித்தோழர்கள் தான் அறிவிக்கின்றனர். நாம் முன்னர் சுட்டிக் காட்டிய 43:61, 4:159 இரு வசனங்களையும் அறிந்திருந்தனர். ஈஸா நபிக்கு விதிவிலக்கு இருந்ததைச் சந்தேகமற அவர்கள் அறிந்திருந்தனர். நபிகள் நாயகத்துக்கும் அது போல விதிவிலக்கு இருக்கும் என்று அவர்கள் எண்ணியதால் தான் அவர்கள் மரணிக்கவில்லை என்று வாதிட்டனர். நபிகள் நாயகத்துக்கு விதிவிலக்கு இல்லை என்பது அபூபக்கர் (ரலி)யின் வாதத்தின் மூலம் தெரிந்ததும் தங்கள் நிலையை மாற்றிக் கொண்டார்கள்.

ஈஸா நபி வருகை பற்றி அறிந்து கொள்ள 4:159 வசனத்தை ஓதுங்கள் என்று அபூஹுரைரா (ரலி) கூறியதை முன்னர் நாம் குறிப்பிட்டதும், ஈஸா நபியின் வருகை பற்றிய ஹதீஸ்களைப் பல நபித்தோழர்கள் அறிவித்திருப்பதும் நபித்தோழர்களின் நிலைப்பாட்டை நமக்கு விளக்குகிறது.

அனைவருக்கும் சர்வசாதாரணமாகத் தெரிந்த விதிவிலக்குகளை யாரும் ஆதாரமாகக் காட்டிப் பேச மாட்டார்கள்.

வவ்வால் பறவையினமாக இருந்தும் அது பாலூட்டியாக இருப்பது அனைவருக்கும் தெரிந்த விதிவிலக்கு. இது அனைவருக்கும் தெரிந்த விஷயமாக இருப்பதால் "பறவைகள் பாலூட்டுவதில்லை'' என்று நாம் பேசலாம். அதை யாரும் குறை காண மாட்டார்கள். பேசுபவருக்கும் கேட்டவருக்கும் வவ்வால் விதிவிலக்கு என்பது சொல்லாமலேயே தெரியும்.

ஈஸா நபி விஷயம் விதிவிலக்கானது என்பதை நபித்தோழர்கள் நம்பியிருந்ததால் தான் அவர்கள் அதை ஆதாரமாகக் காட்டி கேள்வியெழுப்பவில்லை.

எனவே, இவ்வசனம் ஈஸா நபி மரணித்ததைக் கூறவில்லை. இது போல அமைந்த 5:75 வசனம் அவர்கள் இதுவரை மரணிக்கவில்லை என்று விதிவிலக்கைக் கூறுகிறது என்பதே சரியாகும்.

ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்று கூறுவோர் வேறு சில வாதங்களையும் முன் வைக்கிறார்கள்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

ஈஸா நபி யுகமுடிவு நாளின் அடையாளமாவார்

ஒற்றுமை மாதம் இருமுறை இதழில் தேர்வு செய்யப்பட்ட வசனங்களூக்கு பீஜே எழுதிய விளக்கம்

61. "அவர் (ஈஸா) அந்த நேரத்தின்1 அடையாளமாவார்.342 அதில் நீர் சந்தேகப்படாதீர்! என்னையே பின்பற்றுங்கள்! இதுவே நேர்வழி'' (எனக் கூறுவீராக.)

திருக்குர்ஆன்: 43:61

இவ்வசனம் அருளப்படுவதற்கு முன்பு ஈஸா நபி மரணித்திருந்தார் என்று வைத்துக் கொள்வோம். ஏற்கனவே இறந்த ஒருவர் யுக முடிவு நாளின் அடையாளமாக இருக்கிறார் என்று கூற முடியாது. அவ்வாறு கூறினால் அதற்கு எந்த அர்த்தமும் இருக்காது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூட யுக முடிவு நாளின் அடையாளமாக இருக்கிறார்கள் என்று கூறப்படாத போது அவர்களுக்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன் மரணித்த ஒருவரைப் பற்றி இவ்வாறு கூறவே முடியாது.

யுக முடிவு நாள் நெருங்கும் போது அதை உணர்த்தும் அடையாளமாக அவர் இருக்கிறார் என்றால் யுக முடிவு நாள் நெருங்கும் போது அவரது வருகை அவசியமாகும்.

(இது பற்றி ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அதை நாம் இங்கே குறிப்பிடவில்லை. ஈஸா நபியின் வருகை என்பது குர்ஆனுக்கு முரணானது என்று அறிவீனர் சிலர் வாதிடுவதால் குர்ஆனிலிருந்தே இதை நிரூபிக்கின்றோம்.)

சென்ற இதழில் நாம் எடுத்துக்காட்டிய வசனமும் அதிலிருந்து எடுத்து வைத்த வாதங்களும் இவ்வசனமும் இதிலிருந்து எடுத்து வைத்த வாதங்களும் ஈஸா நபியவர்கள் இனி மேல் தான் மரணிப்பார்கள் என்பதை உறுதியாகக் கூறுவதை அறிந்து கொள்ளலாம்.

ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்று வாதிடக்கூடியவர்கள் சில வசனங்களை ஆதாரமாகக் காட்டுவார்கள். ஆனால், அவர்கள் இவ்விரு வசனங்களுக்கு ஏற்கத்தக்க எந்த விளக்கத்தையும் கூற மாட்டார்கள். இவ்விரு வசனங்களும் குர்ஆனில் இல்லாதது போல் நழுவி விடுவார்கள்.

கீழ்க்காணும் வசன்ங்களை எடுத்துக் காட்டி ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்று எதிர்வாதம் செய்கிறார்கள்.

{ وَإِذْ قَالَ اللَّهُ يَاعِيسَى ابْنَ مَرْيَمَ أَأَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُونِي وَأُمِّيَ إِلَهَيْنِ مِنْ دُونِ اللَّهِ قَالَ سُبْحَانَكَ مَا يَكُونُ لِي أَنْ أَقُولَ مَا لَيْسَ لِي بِحَقٍّ إِنْ كُنْتُ قُلْتُهُ فَقَدْ عَلِمْتَهُ تَعْلَمُ مَا فِي نَفْسِي وَلَا أَعْلَمُ مَا فِي نَفْسِكَ إِنَّكَ أَنْتَ عَلَّامُ الْغُيُوبِ (116) مَا قُلْتُ لَهُمْ إِلَّا مَا أَمَرْتَنِي بِهِ أَنِ اعْبُدُوا اللَّهَ رَبِّي وَرَبَّكُمْ وَكُنْتُ عَلَيْهِمْ شَهِيدًا مَا دُمْتُ فِيهِمْ فَلَمَّا تَوَفَّيْتَنِي كُنْتَ أَنْتَ الرَّقِيبَ عَلَيْهِمْ وَأَنْتَ عَلَى كُلِّ شَيْءٍ شَهِيدٌ (117) إِنْ تُعَذِّبْهُمْ فَإِنَّهُمْ عِبَادُكَ وَإِنْ تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ (118)} [المائدة: 116 - 118]

116. "மர்யமின் மகன் ஈஸாவே! அல்லாஹ்வையன்றி என்னையும், என் தாயாரையும் கடவுள்களாக்கிக் கொள்ளுங்கள்! என நீர் மக்களுக்குக் கூறினீரா?''459 என்று அல்லாஹ் (மறுமையில்) கேட்கும்போது, "நீ தூயவன்.10 எனக்குத் தகுதியில்லாத வார்த்தையை நான் கூற உரிமையில்லாதவன். நான் அவ்வாறு கூறியிருந்தால் அதை நீ அறிவாய். எனக்குள் உள்ளதை நீ அறிவாய்! உனக்குள் உள்ளதை நான் அறிய மாட்டேன். நீயே மறைவானவற்றை அறிபவன்'' என்று அவர் பதிலளிப்பார்.

117, 118. "நீ எனக்குக் கட்டளையிட்டபடி எனது இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்! என்பதைத் தவிர வேறு எதையும் நான் அவர்களிடம் கூறவில்லை. நான் அவர்களுடன் இருக்கும் போது அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். என்னை நீ கைப்பற்றியதும் நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். நீ அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவன்.151 அவர்களை நீ தண்டித்தால் அவர்கள் உனது அடியார்களே. அவர்களை நீ மன்னித்தால் நீ மிகைத்தவன்; ஞானமிக்கவன்'' (எனவும் அவர் கூறுவார்.)26

திருக்குர் ஆன் 5:116, 117, 118

இம்மூன்று வசனங்களிலும் மறுமை நாளில் ஈஸா நபி விசாரிக்கப்படுவதும் அவர்கள் அளிக்கவுள்ள பதிலும் முன்கூட்டியே நமக்கு எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.

இம்மூன்று வசனங்களில் "என்னை நீ கைப்பற்றிய போது'' என்ற சொற்றொடர் உள்ளது. இந்த சொற்றொடர் தான் அவர்களின் ஆதாரமாக இருக்கிறது.

என்னை நீ கைப்பற்றிய போது என்று நாம் மொழியாக்கம் செய்த இடத்தில் "ஃபலம்மா தவஃப்பைத்தனீ' என்ற வாசகம் அமைந்துள்ளது.

இவ்வாசகத்துக்கு "என்னை நீ மரணிக்கச் செய்த போது'' என்பது தான் சரியான மொழிபெயர்ப்பு என்றும்,  என்னை மரணிக்கச் செய்த பின் அவர்களின் நடவடிக்கைக்கு நீயே பொறுப்பு என்று ஈஸா நபியே கூறியுள்ளதிலிருந்து அவர்கள் மரணித்துவிட்டார்கள் என்பதை அறியலாம் என்றும் இவர்கள் வாதிடுகின்றனர்.

தவஃப்பா என்ற சொல் திருக்குர்ஆனில் 25 இடங்களில் இடம் பெற்றுள்ளது. அவற்றில் 23 இடங்களில் மரணிக்கச் செய்தல் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இந்த வசனத்திலும் அவ்வாறே பொருள் கொள்ள வேண்டும் என்பதும் இவர்களின் வாதம்.

இவர்களின் இந்த வாதம் நிராகரிக்கப்படவேண்டிய வாதமாகும். இவர்களின் வாதத்திலேயே இவர்களின் வாதத்துக்கு மறுப்பும் அமைந்திருக்கிறது.

இவர்களின் வாதப்படி 23 இடங்களில் மரணிக்கச் செய்தல் என்று பொருள் கொள்ளப்பட்டிருந்தும் இரண்டு இடங்களில் கைப்பற்றுதல் எனப் பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இவர்களின் வாதம் சரி என்று வைத்துக் கொண்டால் 23 இடங்களில் செய்த பொருளையே மீதி இரண்டு இடங்களுக்கும் செய்திருக்க வேண்டும். எனவே, அந்தந்த இடங்களில் எந்தப் பொருள் சரியானது என்பது தான் கவனிக்கப்பட வேண்டுமே தவிர பெரும்பான்மை அடிப்படையில் எல்லா இடங்களுக்கும் ஒரே அர்த்தம் செய்வது ஏற்கத்தக்கது அல்ல.

இது குறித்து நாம் விரிவாகவே ஆராய்வோம். தவஃப்பா என்ற சொல்லின் நேரடிப் பொருள் மரணிக்கச் செய்தல் அல்ல. முழுமையாக எடுத்துக் கொள்ளுதல் என்பதே அதன் நேரடிப் பொருளாகும். மரணத்தின் மூலம் மனிதன் முழுமையாக எடுத்துக் கொள்ளப்படுவதால் மரணிக்கச் செய்வதை இச்சொல் மூலம் குறிப்பிடுவது வழக்கத்துக்கு வந்தது.

2:224, 2:240, 3:193, 4:97, 6:61, 7:37, 7:126, 8:50, 10:46, 10:104, 12:101, 13:40, 16:28, 16:32, 16:70, 22:05, 32:11, 40:17, 40:77, 47:27 ஆகிய இடங்களில் மரணிக்கச் செய்தல் என்ற பொருளில் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அவன் தான் உங்களை இரவில் கைப்பற்றுகிறான். (6:60)

இவ்வசனத்தில் அதே சொல் இடம் பெற்றாலும் மரணிக்கச் செய்தல் என்று இங்கே பொருள் இல்லை. தூக்கத்தில் ஒருவரைக் கைப்பற்றுதல் என்பதே இதன் பொருளாகவுள்ளது.

அவர்களை மரணம் கைப்பற்றும் வரை வீட்டில் தடுத்து வையுங்கள். (4:15)

மரணம் மரணிக்கச் செய்யும் வரை என்பது கூறியது கூறலாக உள்ளதால் மரணம் கைப்பற்றிக் கொள்ளும் வரை என்ற பொருள் கொள்கிறோம். இங்கும் அதே சொல் தான் இடம் பெற்றுள்ளது.

உயிர்கள் மரணிக்கும் போதும் மரணிக்காதவைகளை அவற்றின் உறக்கத்தின் போதும் அல்லாஹ் கைப்பற்றுகிறான்.(39:42)

இந்த இடத்தில் கைப்பற்றுகிறான் என்று தான் அதே சொல்லுக்குப் பொருள் கொள்கிறோம். மரணிக்கச் செய்தல் என்று பொருள் கொள்வதில்லை.

இவை தவிர மறுமையில் முழுமையாக கூலி தரப்படும் என்பதைக் கூறும் 2:281, 3:161, 3:185, 16:111 ஆகிய வசனங்களிலும் இதே சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வசன்ங்களுக்கு முழுமையாகக் கூலி தரப்படும் என்று தான் பொருள் கொள்ள வேண்டும். மறுமையில் சாகடிக்கப்படுவார்கள் என்று பொருள் கொள்ள முடியாது.

மரணிக்கச் செய்தல், கைப்பற்றுதல், முழுமையாக வழங்குதல் ஆகிய பொருள்கள் இச்சொல்லுக்கு உண்டு. எந்தெந்த இடத்துக்கு எது பொருத்தமானதோ அதை அந்த இடத்தில் செய்ய வேண்டும். மெஜாரிட்டி அடிப்படையில் பொருள் செய்யக் கூடாது.

தொழுகையைக் குறிக்கும் ஸலாத் என்ற சொல்லும், அதிலிருந்து பிறந்த சொற்களும் 109 இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 102 இடங்களில் தொழுகையைக் குறிப்பதற்கும் 7 இடங்களில் அகராதியில் உள்ள அர்த்தத்துக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்படி ஏராளமான சொற்களைக் காணலாம்.

இப்போது விவாதத்துக்கு எடுத்துக் கொண்ட வசனத்தில் இடம்பெற்ற தவஃப்பா என்ற சொல்லுக்கு எவ்வாறு பொருள் கொள்வது?

என்னை மரணிக்கச் செய்த போது என்று இந்த இடத்தில் நாம் பொருள் கொண்டால் அவர் கியாமத் நாளின் அடையாளமாக உள்ளார் என்ற வசனத்துடனும், அவர் மரணிப்பதற்கு முன் வேதமுடையோர் நம்பிக்கை கொள்ளாமல் இருக்க மாட்டார்கள் என்ற வசனத்துடனும் மோதுகின்றது. கைப்பற்றுதல் என்று பொருள் கொண்டால் அவ்விரு வசனங்களுடன் ஒத்துப் போகின்றது.

மரணிக்கச் செய்தல் என்பது எவ்வாறு தவஃப்பாவின் பொருளாக இருக்கிறதோ அது போலவே கைப்பற்றுதல் என்பதும் அச்சொல்லுக்குரிய பொருள் தான். அச்சொல்லுக்குரிய இரண்டு அர்த்தங்களில் எந்த அர்த்தம் ஏனைய வசனங்களுடன் முரண்படாத வகையில் ஒத்துப் போகிறதோ அதைக் கொடுப்பது தான் சரியானதாகும்.

மேலும், ஈஸா நபி கூறிய வாசக அமைப்பும் இக்கருத்துக்கு வலு சேர்க்கின்றது.

நான் உயிருடன் இருந்த வரை அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன் என்று ஈஸா நபி கூறவில்லை.

நான் அவர்களுடன் இருந்த போது பார்த்துக் கொண்டிருந்தேன் என்று தான் ஈஸா நபி கூறுவார்கள்.

இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை நாம் சிந்திக்க வேண்டும். நான் உயிருடன் இருந்த போது எனக் கூறாமல் அவர்களுடன் இருந்த போது என்று கூறுகிறார்கள்.

அதாவது ஈஸா நபி அவர்களுடன் இருந்து கண்காணிக்கும் நிலையையும் அடைவார்கள். அவர்களுடன் இல்லாமல் இருக்கும் நிலையையும் அடைவார்கள் என்பதை இதிலிருந்து ஊகம் செய்யலாம்.

நான் உயிருடன் இருந்த போது என்று கூறி விட்டு ஃபலம்மா தவஃப் பைதனி என்று அவர்கள் கூறினால் அந்த இடத்தில் என்னை மரணிக்கச் செய்த போது என்று தான் பொருள் கொள்ள முடியும். அல்லாஹ் அந்த வார்த்தைகளைத் தவிர்த்து விட்டு முற்றிலும் வித்தியாசமான வார்த்தைப் பிரயோகத்தைப் பயன்படுத்தியுள்ளான்.

தவஃப்பா என்ற சொல்லுக்கு என்னைக் கைப்பற்றிய போது என்று பொருள் கொள்ள வேண்டும் என்பதை இவ்வாசக அமைப்பும் உணர்த்துகின்றது.

அந்த மக்களுடன் ஈஸா (அலை) இவ்வுலகில் வாழ்ந்தபோது அம்மக்களைக் கண்காணிப்பார்கள். அம்மக்களை விட்டும் உயர்த்தப்பட்ட பின் கண்காணிக்க மாட்டார்கள் என்ற கருத்து முன்னர் நாம் சுட்டிக்காட்டிய வசனங்களுடன் அழகாகப் பொருந்திப் போகின்றன.

இது தவிர வேறு சில ஆதாரங்களையும் அவர்கள் முன் வைக்கின்றனர். அவற்றைப் பார்ப்போம். இன்ஷா அல்லாஹ் தொடரும்..

ஈஸா நபியை இறுதிக் காலத்தில் யூதர்கள் ஏற்பார்களா?

ஒற்றுமை மாதம் இருமுறை இதழில் தேர்வு செய்யப்பட்ட வசனங்களுக்கு பீஜே எழுதிய விளக்க உரை

வேதமுடையவர்களில் ஒவ்வொருவரும் அவரது மரணத்திற்கு முன்னர் அவரை நம்பிக்கை கொள்ளாமல் இருக்க மாட்டார்கள். மேலும், நியாயத் தீர்ப்பு நாளில் அவர்களுக்கு சாட்சியாக அவர் இருப்பார்.

திருக்குர்ஆன்: 4:159

நான்காவது அத்தியாயம் 159 வது வசனத்தின் நேரடியான தமிழாக்கம் இது தான்.

வேதமுடையவர்கள் என்பது யூதர்களையும், கிறித்தவர்களையும் குறிப்பிடும் சொல்லாகும்.

யூதர்களைப் பொருத்த வரை அவர்கள் ஈஸா நபியின் பகிரங்கமான எதிரிகளாக இருந்தனர். ஈஸா நபியை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. விபச்சார புத்திரன் (நவூதுபில்லாஹ்) என்றெல்லாம் ஈஸா நபியை விமர்சனம் செய்தனர்.

கிறித்தவர்கள் ஈஸா நபியை நம்பினாலும், மதித்தாலும் அவரை எவ்வாறு மதிக்க வேண்டுமோ அவ்வாறு நம்பவுமில்லை; மதிக்கவுமில்லை. கடவுளின் மகன் என்று அவர்கள் நம்பினார்கள். எனவே, இவர்கள் ஈஸா நபியை நம்ப வேண்டிய விதத்தில் நம்பவில்லை.

இவ்விரு சாராரும் எதிர்காலத்தில் ஈஸா நபியை நம்புகின்ற நிலைமை உருவாகும் என்பதை மேற்கண்ட வசனம் முன்னறிவிப்புச் செய்கிறது.

இம்முன்னறிவிப்பை மக்கள் புரிந்து கொள்ளாத வகையில் சிலர் தவறான மொழிபெயர்ப்புச் செய்துள்ளதால் அதை முதலில் சுட்டிக் காட்டி விட்டு முன்னறிவிப்புக்குள் நுழைவோம்.

அவரை நம்பிக்கை கொள்ளாமல் (இல்லா லயூமினன்ன பிஹி) என்ற சொற்றொடரில் "அவரை' என்ற சொல் யாரைக் குறிக்கும்? ஈஸா நபியைத் தான் குறிக்கும் என்று அனைத்து அறிஞர்களும் எந்தக் கருத்து வேறுபாடும் இன்றி ஒருமித்துக் கூறுகின்றனர். இதற்கு முந்தைய வசனங்களில் ஈஸா நபியைப் பற்றிப் பேசி வருவதால் அது ஈஸா நபியைத் தான் குறிக்கும் என்பதில் எவருக்கும் இரண்டாவது கருத்து இருக்கவில்லை. இதில் யாருக்கும் எந்தக் குழப்பமும் இல்லை.

இதே வசனத்தில் இடம் பெற்றுள்ள "அவரது மரணத்திற்கு முன்னர்'' (கப்ல மவ்திஹி) என்ற சொற்றொடரில் அமைந்த "அவரது'' என்பது யாரைக் குறிக்கும்? இதில் தான் சிலர் தவறான கருத்துக்குச் சென்றுவிட்டனர்.

"வேதமுடையவர் ஒவ்வொருவரும் அவரது (அதாவது தனது) மரணத்திற்கு முன்னர்'' என்று பொருள் கொண்டுள்ளனர்.

வேதமுடையவர் ஒவ்வொருவரும் "ஈஸாவின் மரணத்திற்கு முன்னர்'' என்று பெரும்பாலானவர்கள் பொருள் கொண்டுள்ளனர். பல காரணங்களாôல் இதுவே சரியான மொழி பெயர்ப்பாகும்.

அரபு இலக்கணப்படி இரு விதமாகவும் பொருள் கொள்ள இடமிருக்கிறது. இது போன்ற இடங்களில் எது சரியானது? எது தவறானது என்பதைத் தீர்மானிக்க வேறு வசனங்களில் கூறப்பட்டுள்ள செய்திகளை அடிப்படையாகக் கொள்ள் வேண்டும்.

இந்த இரண்டு மொழிபெயர்ப்புகளில் முதல் மொழிபெயர்ப்பு தவறானது என்பதை விளங்கிட வேறு எங்கேயும் நாம் செல்லத் தேவையில்லை. இந்த மொழி பெயர்ப்பின்படி கிடைக்கும் மொத்தக் கருத்து பொய்யாகவும், கேலிக்குரியதாகவும் அமைந்துள்ளதே இந்த மொழிபெயர்ப்பு தவறு என்பதைச் சந்தேகமற நிரூபித்து விடுகிறது.

இந்த மொழிபெயர்ப்பின் அடிப்படையில் இவ்வசனத்தின் கருத்தைப் பாருங்கள்!

வேதமுடையவர்களில் ஒவ்வொருவரும் தனது மரணத்திற்கு முன்னால் ஈஸா நபியை நம்பிக்கை (ஈமான்) கொள்ளாமல் மரணிக்க மாட்டார்கள். இது தான் முதல் சாராரின் மொழி பெயர்ப்பின்படி கிடைக்கும் கருத்தாகும்.

அதாவது வேதமுடையவர்களான யூதர்களும், கிறிஸ்தவர்களும் என்ன தான் அக்கிரமங்களைச் செய்தாலும் தவறான கொள்கையைக் கொண்டிருந்தாலும் அவர்கள் மரணிப்பதற்கு முன்னால் ஈமான் கொண்டு விடுகிறார்கள்.

இது முஸ்லிம்களுக்குக் கூட கிடைக்காத பாக்கியமாகவுள்ளது. யூதர்களும், கிறிஸ்தவர்களும் மரணிப்பதற்கு முன்னால் முஃமின்களாக மாறியே மரணிக்கிறார்கள். இன்னும் ஆழமாகச் சென்றால் யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் நரகமே கிடையாது. ஏனெனில், அவர்களின் கடைசி நிலை நல்லதாகவே அமைந்து விடுகிறது. இந்த மொழி பெயர்ப்பின் கருத்து இதுதான்.

மற்றவர்களைப் போலவே யூதர்களும், கிறித்தவர்களும் தண்டிக்கப்படுவார்கள் எனக் கூறும் எண்ணற்ற வசனங்களுடன் இக்கருத்து மோதுகின்றது.

ஒவ்வொரு யூதரும், கிறித்தவரும் மரணிக்கும் போது முஃமின்களாக மரணிக்கிறார்கள் என்ற கருத்தை எவருமே சரி என்று ஏற்க முடியாது.

இந்த மொழி பெயர்ப்பு தவறானது என்பது சந்தேகமறத் தெரியும் போது, இரண்டாவது மொழிபெயர்ப்பைத் தான் நாம் ஏற்றாக வேண்டும்.

அவரது மரணத்திற்கு முன் - அதாவது ஈஸாவின் மரணத்திற்கு முன்னால் வேதமுடையவர்கள் ஈஸா நபியை நம்பிக்கை கொள்ளாமல் இருக்கமாட்டார்கள்.

இவ்வசனம் அருளப்படும் போது ஈஸா நபி மரணித்திருக்கவில்லை. அவர் மரணித்திருந்தால் "ஈஸா மரணிப்பதற்கு முன்னால்'' என்று கூற முடியாது. மேலும், நம்பிக்கை கொண்டார்கள் என்று சென்ற கால வினையாகk கூறாமல் நம்பிக்கை கொள்ளாமல் இருக்க மாட்டார்கள் என்று வருங்கால வினையாகக் கூறப்பட்டுள்ளது. ஈஸா நபி மரணிப்பதற்கு முன்னால் எதிர்காலத்தில் யூதர்களும் கிறித்தவர்களும் அவரை நம்புவார்கள் என்பதைத் தவிர இவ்வசனத்திற்கு வேறு எந்தக் கருத்தையும் கொடுக்க முடியாது.

ஈஸா நபியவர்கள் மரணிக்கவில்லை. இனிமேல் தான் மரணிப்பார். அவ்வாறு அவர் மரணிக்கும் நிலை ஏற்படுவதற்கு முன்னால் அனைவரும் அவரைச் சரியான முறையில் நம்புவார்கள் என்பதைத் தவிர இதற்கு வேறு கருத்து இருக்க முடியாது.

இறைவனால் உயர்த்தப்பட்டுள்ள ஈஸா நபியவர்கள் எதிர்காலத்தில் இறங்கும் போது இந்த நிலை ஏற்படுவது ஆச்சரியமான ஒன்றல்ல.

சாட்டிலைட் யுகத்தில் நாம் வாழ்கிறோம். இந்த யுகத்தில் விண்ணிலிருந்து ஒருவர் இறங்கினால் உலகின் அத்தனை செயற்கைக் கோள்களும் அவரைப் படம் பிடித்து நமது வீட்டு டி.வி. பெட்டியில் காட்டி விடும். இவ்வாறு அதிசயமாக ஒருவர் இறங்கும் போது அவர் கூறும் உண்மையை உலகம் நிச்சயம் ஏற்றுக் கொள்ளவே செய்யும்.

திருக்குர்ஆனில் ஒரு செய்தி கூறப்படுமானால் அதை நமது சொந்த அபிப்பிராயங்களைக் கூறி நிராகரிக்கக் கூடாது. "ஈஸாவின் மரணத்திற்கு முன்னால் அவரை வேதமுடையவர்கள் ஏற்கும் நிலை உருவாகும்'' என்றால் இதிலிருந்து அவர் மரணிக்கவில்லை என்று புரிந்து கொள்ள பெரிய ஆராய்ச்சி ஏதும் தேவையில்லை.

ஏற்கனவே மரணமடைந்த ஒருவரைப் பற்றி "அவர் மரணிப்பதற்கு முன்னால் இது நடக்கும்'' என்று கூறவே முடியாது.

ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்று வாதிடும் எந்தக் கூட்டமும் இவ்வசனத்திற்கு வேறு பொருள் கொடுக்கவும் முடியாது. இதை ஒரு அறைகூவலாகவே நாம் விடுக்கிறோம்.

صحيح البخاري

3448  حَدَّثَنَا إِسْحَاقُ، أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ أَنَّ سَعِيدَ بْنَ المُسَيِّبِ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَيُوشِكَنَّ أَنْ يَنْزِلَ فِيكُمْ ابْنُ مَرْيَمَ حَكَمًا عَدْلًا، فَيَكْسِرَ الصَّلِيبَ، وَيَقْتُلَ الخِنْزِيرَ، وَيَضَعَ الجِزْيَةَ، وَيَفِيضَ المَالُ حَتَّى لاَ يَقْبَلَهُ أَحَدٌ، حَتَّى تَكُونَ السَّجْدَةُ الوَاحِدَةُ خَيْرًا مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا»، ثُمَّ يَقُولُ أَبُو هُرَيْرَةَ: " وَاقْرَءُوا إِنْ شِئْتُمْ: {وَإِنْ مِنْ أَهْلِ الكِتَابِ إِلَّا لَيُؤْمِنَنَّ بِهِ قَبْلَ مَوْتِهِ، وَيَوْمَ القِيَامَةِ يَكُونُ عَلَيْهِمْ شَهِيدًا} [النساء: 159

3448 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! விரைவில் (உலக அழிவுக்கு முன்) மர்யமின் மைந்தர் உங்களிடையே நேர்மையாகத் தீர்ப்பளிக்கும் நீதிபதியாக இறங்கவிருக்கிறார். அவர் சிலுவையை உடைப்பார்; பன்றியைக் கொல்வார்; ஜிஸ்யா (எனும் காப்பு) வரியை வாங்க மறுப்பார்; செல்வம் (பெருகி) வழிந்தோடும். எந்த அளவுக்கென்றால் அதை வாங்கிக் கொள்பவர் எவரும் இருக்க மாட்டார். அந்த நேரத்தில், ஒரேயொரு சஜ்தா இந்த உலகத்தையும், அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்ததாக ஆகிவிடும்.

இந்த நபிமொழியை அறிவித்து விட்டு அபூஹுரைரா (ரலி) அவர்கள், வேதம் வழங்கப்பட்டவர்களில் எவரும், தாம் இறப்பதற்கு முன்பாக அவர் மீது நம்பிக்கை கொள்ளாமல் போக மாட்டார். மேலும், மறுமை நாளில் அவர்களுக்கெதிராக அவர் சாட்சியம் அளிப்பார்' (4:159) என்னும் வசனத்தை நீங்கள் விரும்பினால் ஓதிக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.

நூல் : புகாரி: 3448

ஈஸா நபி மரணமடையவில்லை என்பதற்குச் சான்றாக இவ்வசனம் அமைந்துள்ளது. இதற்கு முந்தைய வசனங்களுடன் சேர்த்துப் பார்க்கும் போது இது மேலும் உறுதியாகின்றது.

155. அவர்கள் தமது உடன்படிக்கையை முறித்ததாலும், அல்லாஹ்வின் வசனங்களை ஏற்க மறுத்ததாலும், நியாயமின்றி நபிமார்களைக் கொலை செய்ததாலும், எங்கள் உள்ளங்கள் மூடப்பட்டுள்ளன என்று கூறியதாலும், (இதற்கும்) மேலாக அவர்கள் (ஏகஇறைவனை) மறுத்ததாலும் அவர்களின் உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிட்டான். அவர்கள் குறைவாகவே நம்பிக்கை கொள்கின்றனர்.

156, 157. அவர்கள் (ஏகஇறைவனை) மறுத்ததாலும், மர்யமின் மீது மிகப் பெரும் அவதூறை அவர்கள் கூறியதாலும், அல்லாஹ்வின் தூதரான மர்யமின் மகன் மஸீஹ்92 எனும் ஈஸாவை நாங்களே கொன்றோம் என்று அவர்கள் கூறியதாலும் (இறைவன் முத்திரையிட்டான்.) அவரை அவர்கள் கொல்லவில்லை. அவரைச் சிலுவையிலும் அவர்கள் அறையவில்லை. மாறாக அவர்களுக்கு ஆள் மாறாட்டம் செய்யப்பட்டது.456 இதில் முரண்பட்டோர் சந்தேகத்திலேயே உள்ளனர். ஊகத்தைப் பின்பற்றுவதைத் தவிர அவர்களுக்கு இது குறித்து அறிவு இல்லை. அவர்கள் அவரை உறுதியாகக் கொல்லவே இல்லை.26

158. மாறாக அவரை அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையோனாகவும் இருக்கிறான்.133

159. வேதமுடையோரில்27 ஒவ்வொருவரும் அவர் (ஈஸா, மீண்டும் வந்து) மரணிப்பதற்கு முன் அவரை நம்பிக்கை கொள்ளாமல் இருக்க மாட்டார்கள்.134 கியாமத் நாளில்1 அவர்களுக்கு சாட்சியாக அவர் இருப்பார்.

திருக்குர்ஆன்  4:155, 156, 157, 158, 159

"அவரைக் கொல்லவில்லை. கொல்லவே இல்லை. அவரைத் தன்னளவில் உயர்த்திக் கொண்டான் என்பதையெல்லாம் கூறிய பிறகு தான் மேலே நாம் எடுத்துக்காட்டிய வசனத்தை அல்லாஹ் கூறுகிறான்.

அவரை அவர்கள் கொல்லவில்லை என்றால் தானாக மரணித்திருக்கலாம் அல்லவா? என்று சிலர் உளறினார்கள்.

அவரைத் தன்னளவில் உயர்த்திக் கொண்டான் என்றால் அவரது அந்தஸ்தை உயர்த்தினான் என்று பொருத்தமில்லாத வியாக்கியானத்தைச் சிலர் கூறினார்கள். அவை அனைத்துக்கும் மறுப்பாகத் தான் 159வது வசனம் அமைந்துள்ளது. அவர் மரணமடையவில்லை. இனி மேல் தான் மரணிப்பார் என்று தெள்ளத் தெளிவாக அறிவிக்கிறது.

ஈஸா நபி மரணித்து விட்டார்கள் எனக் கூறுவோர் 4:159 வசனத்திற்கு எந்தச் சமாளிப்பும் கூற முடியாத வகையில் தெள்ளத் தெளிவாக அமைந்துள்ளது.

இவ்வளவு தெளிவான சான்றுக்குப் பிறகும் ஈஸா நபி மரணித்துவிட்டார்கள் என்று வாதிடுவோரின் ஏனைய அர்த்தமற்ற வாதங்களை அடுத்த இதழில் காண்போம்.

More Articles …