Sidebar

17
Thu, Sep

அல்லாஹ் போட்ட அணுகுண்டு

அல் ஜன்னத் பத்திரிகையில் பீஜே ஆசிரியராக இருந்த போது, அணு குண்டும் ஏவுகணையும் என்ற தலைப்பில் அளித்த அல்குர்ஆன் விரிவுரையை அல்லாஹ் போட்ட அணுகுண்டு என்ற தலைப்பில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் வெளியீடான அழைப்பு இதழில், மீள் பிரசுரம் செய்தோம். இது, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, இலங்கையில் வெளிவரும் தேசிய நாளேடு ஒன்று இதை மீள் பிரசுரம் செய்தது. மாற்று இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கூட இவ்விரிவுரையைப் பாராட்டி வாசகர்  பகுதிக்கு எழுதியிருந்தனர்.

பாபர் மசூதி 1992 டிசம்பர் 6ஆம் நாள் சங்பரிவாரக் கும்பல்களால் தகர்க்கப்பட்ட போது, இதே 105வது அத்தியாயத்திற்கு நீங்கள் அபாபீல் பறவைகள் எங்கே போயின? என்ற தலைப்பில் விளக்கம் அளித்திருந்தீர்கள்.

இதை ஆன்லைனில் வெளியிட்டால் நேயர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் அனுப்பி வைக்கின்றேன்.

எம்.ஏ.ஹஃபீழ் ஸலஃபி, இலங்கை.

அல்லாஹ் போட்ட அணுகுண்டு

பீ. ஜைனுல் ஆபிதீன்

யானைப் படையினரை உமது இறைவன் எவ்வாறு ஆக்கினான் என்பதை நீர்சிந்திக்கவில்லையா? அவர்களின் சூழ்ச்சியை அவன் முறியடிக்கவில்லையா? அபாபீல் பறவைகளை அவர்கள் மீது அவன் அனுப்பவில்லையா? அப்பறவைகள் சூடேற்றப்பட்ட கற்களை அவர்கள் மீது எறிந்தன. அதனால் அவன், அவர்களை மெல்லப்பட்ட வைக்கோலைப் போன்று ஆக்கினான்.

அத்தியாயம் அல்ஃபீல் : 1-5

இந்த அத்தியாயத்தை ஆய்வு செய்வதற்கு முன், இந்த அத்தியாயம் கூறுகின்ற வரலாறு என்னவென்பதைச் சுருக்கமாக அறிந்து கொள்வோம்.

புனித மக்கா நகரில் இப்ராஹீம் நபியால் மறுநிர்மாணம் செய்யப்பட்ட ஆலயம் உள்ளது. அது கஅபா எனக் குறிப்பிடப்படுகிறது.

இந்த ஆலயம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திற்கு முன்பிருந்தே புனிதத் தலமாக அரபு சமுதாயத்தால் கருதப்பட்டு வந்தது. அரபுகள் கூட்டம் கூட்டமாக இந்த ஆலயம் வந்து வழிபட்டு வந்தனர்.

எமன் நாட்டைச் சேர்ந்த அப்ரஹா என்ற மன்னன், இதனால் பொறாமை கொண்டு, கஅபாவுக்குப் போட்டியாக, தனது நாட்டில் அன்றைய தலைநகராக இருந்த சன்ஆ எனும் நகரில் ஓர்ஆலயத்தை எழுப்பினான். அதன் புனிதம் குறித்துப் பரவலாகப் பிரச்சாரம் செய்தான்.

ஆனாலும், இவனது பிரச்சாரம் எந்தப் பலனையும் அளிக்கவில்லை. கஅபாவை நோக்கிச் செல்லும் கூட்டம் குறையவில்லை.

கஅபா ஆலயம் இருக்கும் வரை தனது நாட்டை நோக்கி மக்கள் வரமாட்டார்கள் என்பதை உணர்ந்து கொண்ட மன்னன், கஅபாவை இடித்துத் தரைமட்டமாக்கிட யானைப் படையைத் திரட்டிக் கொண்டு, மக்காவை முற்றுகையிட்டான்.

ஆனால், அவனால் கஅபா ஆலயத்தை இடிக்க முடியவில்லை. இறைவனால் அனுப்பப்பட்ட அபாபீல் எனும் பறவைகள் கற்களால் தாக்கி, அவனையும் அவனது படையினரையும் அழித்தன.

இது தான், இந்த அத்தியாயத்தில் கூறப்படும் வரலாற்றுச் சம்பவம். இந்த நிகழ்ச்சி நடந்த ஆண்டில் தான், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்தார்கள்.

இந்தச் சம்பவத்தை நினைவுபடுத்தி இறைவன் தனது ஆலயத்தை - உலகில் ஒரே இறைவனை வணங்குவதற்காக, முதலில் எழுப்பப்பட்ட ஆலயத்தை அற்புதமான முறையில் காப்பாற்றியதைத் தான் இந்த அத்தியாயம் குறிப்பிடுகிறது.

இறைவனின் வல்லமையையும் அவனது ஆற்றலையும் விளக்கி, இறை நம்பிக்கையை வலுப்படுத்துவதும், இத்தகைய ஆற்றலுடைய இறைவன், நபிகள் நாயகத்தையும் அவர்களால் உருவாக்கப்பட்ட சமுதாயத்தையும் காப்பாற்றி, அவர்களுக்கு வெற்றியளிப்பான் என்று நம்பிக்கையூட்டுவதும் தான் இந்த அத்தியாயம் அருளப்பட்டதன் பிரதான நோக்கம்.

இந்த அத்தியாயத்தைக் கேட்ட அன்றைய மக்கள், இப்படித் தான் இதைப் புரிந்து கொண்டனர். ஆனாலும், உலகம் உள்ளளவும் தோன்றக் கூடிய மக்களுக்கு, இன்னும் பல படிப்பினைகளும் இந்த அத்தியாயத்தில் அடங்கியுள்ளதை நாம் மறுக்க முடியாது.

இறை நம்பிக்கையாளர்களைப் பொறுத்தவரை, இந்தச் சம்பவத்தை நூறு சதவிகிதம் நம்புவார்கள். ஆனாலும், இறை நம்பிக்கையற்றவர்களின் பார்வையில் இது நம்ப முடியாத நிகழ்ச்சி, கட்டுக்கதை என்று தான் இதைக் கருதுவார்கள்.

நம்புவதற்குச் சிரமமான, அல்லது நம்ப முடியாத கட்டுக் கதைகளைக் கூறுவோர் கேட்பவர்கள் அப்படியே நம்ப வேண்டும் என்பற்காக இதைப் பற்றிச் சிந்திக்கக் கூடாது! கண்ணை மூடிக் கொண்டு நம்புங்கள் என்று தான் கூறுவது வழக்கம்.

ஆனால், இந்த அத்தியாயத்தில் இறை நம்பிக்கையற்றவர்களால் நம்ப முடியாத ஒரு நிகழ்ச்சி கூறப்பட்டாலும், இதன் துவக்கத்திலேயே நீர் சிந்திக்கவில்லையா? என்று கூறப்படுகிறது.

ஆம்! சிந்திக்காது நம்புங்கள் என்று கூற வேண்டிய இடத்தில், சிந்திக்குமாறு தூண்டுகிறது இந்த அத்தியாயம்.

அப்படியானால், இந்த அத்தியாயத்தில் சிந்திக்க வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது என்பது தெளிவாகிறது.

எதைச் சிந்திப்பது? யானைப் படையினரை உமது இறைவன் என்ன செய்தான் என்பதைச் சிந்திக்கவில்லையா? என்று கூறாமல் எப்படி ஆக்கினான் என்பதைச் சிந்திக்கவில்லையா? என்று இந்த அத்தியாயம் கூறுகிறது.

என்ன நடந்தது? என்பதைச் சிந்திப்பதற்கும் எப்படி நடந்தது? என்பதைச் சிந்திப்பதற்கும் மிகப் பெரிய வேறுபாடு உள்ளது.

என்ன நடந்தது? என்பதைச் சிந்தித்தால், நடந்த சம்பவத்தைப் பூரணமாக அறிந்துகொள்க என்பது பொருள்.

எப்படி நடந்தது? எவ்வாறு அவர்கள் அழிக்கப்பட்டார்கள்? என்பதைச் சிந்திக்கச் சொல்கிறான் இறைவன்.

இது எப்படி நடந்தது? இவர்களை அழிக்க எத்தகைய சக்தி பயன்படுத்தப்பட்டுள்ளது? என்பதைச் சிந்தியுங்கள் என்கிறான் இறைவன். அதனால் தான் கைஃப ஃபஅல (எப்படி அழித்தான்) என்ற வாசகத்தைப் பயன்படுத்தியுள்ளான்.

எப்படி அழித்தான் என்பதைச் சிந்திக்கச் சொல்வதன் பயன் என்ன? எப்படி நடந்தது என்பதை ஆராயுமாறு ஒருவரிடம் நாம் கூறினால், அதை அவர் கண்டுபிடித்து, அது போல் செய்ய முடியும் என்ற நிலையில் தான் எப்படி நடந்தது எனச் சிந்தித்துப் பார் என்று நாம் கூறுவோம்.

இது போன்ற வார்த்தைப் பிரயோகமே இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

எறியப்பட்ட கல்லை முதலில் எடுத்துக் கொள்வோம். சூடேற்றப்பட்ட கல் என்று பரவலாக தமிழாக்கம் செய்யப்பட்டு வந்தாலும் அந்தப் பொருளே நமது ஆய்வுக்குப் போதுமானதாக இருந்தாலும், அந்தப் பொருள் சரியானதன்று.

பி ஹிஜாரதின் சிஜ்ஜீல் எனக் கூறினால், சூடேற்றப்பட்ட கல் எனும் தமிழாக்கம் சரியானதாக இருக்கலாம்.பி ஹிஜாரதின் மின் சிஜ்ஜீல் என்று இறைவன் கூறுகிறான். இந்த மின் என்ற வார;த்தை மிகவும் கவனமாக ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும்.

கா(த்)தமுன் மின் தஹபின் என்றால், தங்கம் எனும் மூலத்தாலான மோதிரம் என்று பொருள். ஒரு மூலத்தாலான என்ற கருத்து மின் என்ற சொல்லில் அடங்கியுள்ளது.

ஹிஜாரதுன் என்றால், கல் என்பது பொருள்.மின் சிஜ்ஜீல் என்றால், சிஜ்ஜீல் எனும் மூலத்திலான என்பது பொருள்.

ஹிஜாரதுன் மின் சிஜ்ஜீல் என்றால், சிஜ்ஜீல் எனும் மூலத்தினாலான கல் ஆகும்.

அதாவது, கல் என்றால் வீதியில் கிடக்கும் சாதாரண கல் என்று நினைத்து விட வேண்டாம். மிக மிகக் கடுமையான வெப்பத்தைக் கொண்ட, சிஜ்ஜீல் எனும் மூலத்திலான கல் என்று இறைவன் கூறுகிறான். சிஜ்ஜீல் என்பதன் பொருள் மிகவும் வெப்பமானது என்பது பொருளாகும்.

அணுகுண்டுக்குத் தேவையான யுரேனியம், புளுட்டோனியம் போன்றவை அடிப்படையில் கல் வகை தான். ஆனாலும், கடுமையான வெப்பத்தைக் கொண்டது. வெப்பத்தின் அளவைக் கொண்டு மதிப்பிடக் கூடியது. இத்தனை கிலோ டன் வெப்பமுடையது என்று தான் அதன் சக்தியைக் குறித்துக் குறிப்பிடுகின்றனர்.

மண்ணில் மறைந்து கிடக்கின்ற, மிகவும் கடுமையான வெப்பத்தை வெளிப்படுத்தக் கூடிய, ஒரு மூலப் பொருளால் உருவாக்கப்பட்ட கல் என்று இந்த வசனம் கூறுகிறது.

வெறும் அற்புதம் என்ற வகையில் மாத்திரம் நடத்தப்பட்டதென்றால், அந்தக் கல்லுக்குரிய சக்தியை இறைவன் குறிப்பிட வேண்டியதில்லை. இன்னும் சொல்வதானால், சாதாரண கல்லால் அழிப்பது தான் அற்புதமாகும். சக்தி மிக்க கல்லால் அழிப்பதில் பெரிய அற்புதம் இல்லை.

கல்லின் மூலத்தையும் அதன் தன்மையையும் இறைவன் கூறியிருப்பதிலிருந்தும், அதைச் சிந்தித்துப் பார்க்குமாறு கூறியிருப்பதிலிருந்தும் அற்புதமாக நடந்த சம்பவமாக மட்டும் நினைத்து விட வேண்டாம் என்று மறைமுகமாக உணர்த்தப்படுகிறது.

அதாவது, உலகில் மண் இனத்தைச் சேர்ந்த மூலப்பொருள் ஒன்று உண்டு. அது, கடுமையான வெப்பத்தை வெளிப்படுத்தக் கூடியது. அதில், சிறிய அளவு கூட பெரும் படையை அழிக்க வல்லது. அதைச் சிந்தித்துக் கண்டுபிடித்துக் கொள்ளுங்கள் என்பது தான் இதிலிருந்து புரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.

இது மட்டுமன்றி, அந்தக் கற்களால் தாக்கப்பட்டவர்கள் அழிந்த விதம், இன்னும் நம்மை வியப்பிலாழ்த்துகிறது.

அந்தக் கல் பட்டதும் மூர்ச்சையுற்றார்கள்!, அல்லது அதிர்ச்சியில் பிணமானார்கள் என்றெல்லாம் இறைவன் கூறாமல், மென்று உமிழப்பட்ட வைக்கோல் போலானார்கள் என்கிறான்.

அதாவது இந்தக் கல்லால் தாக்கப்பட்டவர்கள், வெடித்துச் சிதறிக் கூழாகி விட்டனர் என்கிறான். எவரது உடலும் முழு உடலாக இருக்கவில்லை.

அணு சக்தியைப் பயன்படுத்தினால் அதன் மூலம் ஏற்படும் அழிவு எப்படி இருக்குமோ, அதை நம் கண் முன்னே கொண்டு வருகிறான் இறைவன்.

பெரும் படையைத் திரட்டி வந்தவர்கள் மீது போடப்பட்ட அந்த அணுகுண்டு, அளவில் மிகவும் குறைவானதாகும். ஒரு பறவையின் வாயில் குறிபார்த்து வீசுவதற்கு ஏற்ற வகையில், அதிக பட்சமாக பத்து கிராம் எடையைத் தான் வைக்க முடியும். நூறு பறவைகள் வந்திருந்தால் கூட, அவை சுமந்து வந்த கற்களின் மொத்த எடை ஒரு கிலோ தான். ஒரு கிலோவால் ஒரு படையை அழிக்க முடியுமா? அணுகுண்டால் முடியும்.

அது மட்டுமன்றி, இந்தக் கற்களை பறவைகள் சுமந்து வந்து போட்டன என்கிறான் இறைவன்.

சூடேற்றடப்பட்ட கல்லை - படையினரையே அழிக்க வல்ல கல்லை - பறவைகள் வாயில் சுமக்கும் போது, அந்தச் சூட்டினால் பறவைகள் கருகவில்லையே! இது ஏன்?

இதுவும், சிந்திக்க வேண்டிய ஒன்றாகும். சில பேர் கூறுவது போல், அந்தக் கல் பழுக்கச் சூடு படுத்தப்பட்டிருந்தது என்று பொருள் கொண்டால், படையினர் அழிவதற்கு முன், பறைவகள் அழிந்து போயிருக்க வேண்டும்!

இந்தச் சூடு என்பது, வீசி வெடிக்கப்படும் போது தான் வெளிப்படுமே தவிர, வெடிக்காமல் சுமக்கும் போது வெளிப்படாது. எந்த வெடி குண்டையும் நாம் சுமந்தால், நம்மை அது சுடுவதில்லை. வெடிக்கச் செய்தால், அதிலிருந்து வெளிப்படும் வெப்பம் நம்மையே அழித்துவிடும்.

இதிலிருந்து, அந்த வெப்பமான மூலப் பொருளின் தன்மை என்ன என்பதையும் இறைவன் கூறுகிறான்.

அது மாத்திரமன்றி, இத்தகைய வெடிகுண்டுகளை நாம் தூக்கிச் செல்ல வேண்டியதில்லை; இருந்த இடத்திலிருந்தே ஏவி, இன்னொரு இலக்கைத் தாக்க முடியும் என்பதையும், அதாவது ஏவுகணையைப் பற்றியும் இங்கே குறிப்பிடுகிறான்.

உலகில் உள்ள எந்தப் பறவையையும் அபாபீல் என்று கூறுவதில்லை. இது, இறைவனே சூட்டிய பெயர். அவை, இந்தப் பணிக்காக மாத்திரம் அனுப்பிய பறவைகள்.

நாட்டு மக்களுக்குத் தெரியாத பறவையைப் பற்றிக் கூறுகிறான். அது, இறைவனால் அனுப்பி வைக்கப்பட்ட உயிருள்ள பறவையாக இருக்கலாம் என்பதை நாம் மறுக்க வேண்டியதில்லை.

இதையும் சிந்திக்க வேண்டுமல்லவா? தயாரிக்கப்பட்ட வெடிகுண்டுகளைத் தூக்கிக் கொண்டு அலையத் தேவையில்லை. இருந்த இடத்திலிருந்தே பொருத்தலாம். அவை அபாபீல் பறவையைப் போல், பறந்து சென்று குறிப்பிட்ட இலக்கைத் தாக்கி அழித்து விடும் என்பதை விளங்கலாம்.

ஏவுகணை குறித்து வேறு வசனங்கள் உள்ளன. என்றாலும், அணுகுண்டு சக்தி குறித்து விளங்கிட இதுவே போதுமானதாகும்.

இன்றைய அரபுகள் இந்த வசனத்தை ஆய்வு செய்திருந்தால், அல்லது இனியாவது ஆய்வு செய்தால், அந்தப் பகுதியில் சிஜ்ஜீல் எனும் மூலப் பொருளைக் கண்டெடுத்திருக்க முடியும். ஏனோ இதிலெல்லாம் அவர்களுக்கு அக்கறையில்லை.

08.02.2010. 17:58 PM

இறைவன் கூறும் ஸலவாத் என்றால் என்ன?

பி. ஜைனுல் ஆபிதீன்

இது ஒற்றுமை இதழில் வெளியான கட்டுரை. நேயர்கள் பயன் பெறுவதற்காக இங்கே வெளியிடுகிறோம்.

இந்த நபியின் மீது அல்லாஹ்வும் அவனுடைய வானவர்களும் ஸலவாத் கூறுகின்றனர். நம்பிக்கை கொண்டோரே! அவர் மீது நீங்கள் ஸலவாத்தும் நல்ல முறையில் ஸலாமும் கூறுங்கள்!

திருக்குர்ஆன் 33:56

இது முஸ்லிம்கள் அதிக அளவில் செவியுறும் வசனங்களில் ஒன்றாகும். இவ்வசனத்தைத் தமிழகத்தின் மார்க்க அறிஞர்கள் பலர் தவறான பொருள் செய்து அதன் அடிப்படையில் விளக்கம் கூறி வருவதை நாம் காண்கிறோம்.

இவ்வசனத்தில் இரண்டு வாக்கியங்கள் உள்ளன.

1-இந்த நபியின் மீது அல்லாஹ்வும், அவனுடைய வானவர்களும் ஸலவாத் கூறுகின்றனர்.

2-நீங்கள் அவர் மீது ஸலவாத் கூறுங்கள்.

இதில் இரண்டாவது வாக்கியத்துக்கு அனைவரும் சரியாகவே பொருள் கொள்கின்றனர். ஆனால், முதல் வாக்கியத்துக்கு மேற்கண்டவாறு பொருள் கொள்வது தவறாகும்.

இது எப்படி தவறான மொழிபெயர்ப்பாக உள்ளது என்பதை அறிவதற்கு முன் ஸலவாத் கூறுவது என்றால் என்ன என்பதை அறிந்து கொள்வது அவசியமாகும்.

இவ்வசனம் அருளப்பட்ட பின் எவ்வாறு ஸலவாத் கூறுவது என்ற சந்தேகம் நபித்தோழர்களுக்கு ஏற்பட்டது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் உங்கள் மீது நாங்கள் எவ்வாறு ஸலவாத் கூறுவது என்று விளக்கம் கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கீழ்க்காணும் சொற்களைக் கற்றுக் கொடுத்தனர்.

அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக ஹமீதுன் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக ஹமீதுன் மஜீத்.

ஸலாவத் எவ்வாறு கூறுவது என நபித்தோழர்கள் கேட்ட போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு விடையளித்தார்கள் என்ற செய்தி புகாரி (3369, 4798, 6357, 6358, 6360) ஆகிய எண்களுடைய ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்த மேற்கண்ட ஸலவாத்தின் பொருளை அறிந்து கொண்டால் ஸலவாத் கூறுதல் என்பதன் பொருளும் தெரிய வரும்.

இறைவா! இப்ராஹீம் நபிக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும், நீ அருள் புரிந்ததைப் போல் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் அருள் புரிவாயாக!. நீ புகழுக்குரியவன், மகத்துவமிக்கவன்.

இறைவா! இப்ராஹீம் நபிக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் நீ பரகத் புரிந்ததைப் போல் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் பரகத் (மறைமுகமான பேரருள்) செய்வாயாக! நீ புகழுக்குரியவன், மகத்துவமிக்கவன்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த மேற்கண்ட ஸலவாத்தின் தமிழாக்கம் இது தான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருள் புரியுமாறு அல்லாஹ்விடம் நாம் வேண்டுவது தான் ஸலவாத் கூறுதல் எனப்படும் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

மற்ற சமுதாயத்தினர் தங்கள் நபிமார்களை வணக்கத்திற்குரியவர்களாகவும், பிரார்த்தனை செய்யப்படுவோராகவும் ஆக்கி விட்டனர். முஸ்லிம்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அவ்வாறு ஆக்கி விடக் கூடாது என்பதற்கான கேடயமே ஸலவாத் கூறுதல்.

நபிகள் நாயகத்திடம் நமது தேவைகளைக் கேட்காமல் அவர்களுக்காக நாம் தான் இறைவனிடம் கேட்கிறோம். இதிலிருந்து இறந்தவருக்காக நாம் தான் பிரார்த்தனை செய்ய வேண்டுமே தவிர இறந்தவரிடம் பிரார்த்திக்கக் கூடாது என்ற கருத்தும் பெறப்படுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த - தொழுகையில் நாம் ஓதி வருகின்ற - ஸலவாத் மட்டுமின்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரைக் கேட்கும் போது, நாமாக ஓதி வரும் ஸலவாத்தின் பொருளைக் கவனித்தாலும் இந்த உண்மையை உணரலாம்.

அல்லாஹும்ம ஸல்லி வஸல்லிம் வபாரிக் அலைஹி என்று சிலர் கூறுவார்கள். இறைவா! அவர்கள் மீது அருளும், பாக்கியமும் பொழிவாயாக என்பது இதன் பொருள்.

ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று வேறு சிலர் கூறுவார்கள். அவர்கள் மீது அல்லாஹ் அருள் புரிந்து ஈடேற்றமளிப்பானாக என்பது இதன் பொருள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்காக நாம் செய்யும் பிரார்த்தனையே ஸலவாத் என்பதை இதிலிருந்தும் அறிந்து கொள்ளலாம்.

இதை விரிவாக விளக்குவதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

ஸலவாத் கூறுதல் என்பதன் பொருளை விளங்காமல் ஸலவாத் கூறுவதன் மூலம் நபிகள் நாயகத்திடம் நாம் எதையோ வேண்டுவதாகச் சிலர் நினைக்கின்றனர். சாதாரண மக்கள் இவ்வாறு நினைப்பதையாவது மன்னித்து விடலாம். சில மவ்லவிமார்களும், இப்படி விளங்கி வைத்திருப்பது நமக்குப் பெரும் வியப்பாக இருக்கிறது.

நபிகள் நாயகத்திடம் எதையும் கேட்கக் கூடாது. அவர்களுக்காக நாம் தான் கேட்க வேண்டும் என்ற தத்துவத்தை உள்ளடக்கிய ஸலவாத்தை இதற்கு நேர் எதிராக விளங்கியுள்ளனர்.

இனி முன்னர் குறிப்பிட்ட விசயத்திற்கு வருவோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் ஸலவாத் கூறுகிறான் என்று பொருள் கொள்வது எவ்வாறு தவறு என்பதைக் காண்போம்.

நபிகள் நாயகத்திற்காக இறைவனிடம் வேண்டுவதே ஸலவாத் என்பதை விளங்கியுள்ளோம். இதனடிப்படையில் அல்லாஹ் ஸலவாத் கூறுகிறான் என்றால் நபிகள் நாயகத்திற்காக அல்லாஹ் இறைவனிடம் அருளை வேண்டுகிறான் என்ற கருத்து வருகிறது.

அதாவது நாம் கூறுவது போலவே அல்லாஹ்வும் ஸலவாத் கூறுகிறான் என்றால்- அல்லாஹும்ம ஸல்லி வஸல்லிம் வபாரிக் அலைஹி என்று அல்லாஹ் கூறுகிறான் என்றால் - இத்தகைய விபரீத அர்த்தம் வரும்.

இறைவா! நீ அருள் புரிவாயாக என்று அல்லாஹ் எப்படிக் கூறுவான்?

அப்படி அல்லாஹ் கூறினால் அல்லாஹ்வுக்கு மேல் ஒரு அல்லாஹ் இருக்கிறானா?

அந்த அல்லாஹ்விடம் இந்த அல்லாஹ் இவ்வாறு வேண்டுகிறானா?

என்றெல்லாம் பல கேள்விகள் இதில் எழும். அல்லாஹ் ஸலவாத் கூறுகிறான் என்று பொருள் கொள்வது அப்பட்டமான இணை கற்பித்தலாகவே அமையும்.

அப்படியானால் இதன் சரியான பொருள் என்ன?

ஸலவாத் என்ற சொல்லுக்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளன.

  1. பிறருக்காக அருள் வேண்டுதல்.
  2. பிறருக்கு அருள் புரிதல்.

என்பதே அந்த இரண்டு அர்த்தங்கள்.

இச்சொல்லை மனிதர்கள், வானவர்கள், ஜின்கள் உள்ளிட்டவர்களுடன் தொடர்புபடுத்தும் போது, அருள் வேண்டினார்கள் என்று பொருள் கொள்ள வேண்டும்.

இதே சொல்லை அல்லாஹ்வுடன் இணைத்துச் சொல்லும் போது, அருளை வேண்டினான் என்ற பொருளைக் கொள்ளாமல் அருள் புரிகிறான் என்று பொருள் கொள்ள வேண்டும்.

இது நமது புதிய கண்டுபிடிப்பு அல்ல. அரபுக் கல்லூரிகளில் அல்ஃபியா போன்ற இலக்கண நூல்களிலேயே இந்த விபரம் கூறப்பட்டு உலமாக்கள் அறிந்து வைத்திருக்கிற சிறிய விசயம் தான். ஆனாலும், சில உலமாக்கள் தாம் அறிந்ததற்கு மாறாக அல்லாஹ் ஸலவாத் கூறுகிறான் என்று விபரீதம் புரியாமல் மேடைகளிலேயே பேசி விடுகின்றனர்.

இவ்வசனத்திற்கு முழுமையாகப் பொருள் கொள்வதென்றால் கீழ்கண்டவாறு தான் பொருள் கொள்ள வேண்டும்.

இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். வானவர்கள் அவருக்காக அவனது அருளை வேண்டுகின்றனர். நம்பிக்கை கொண்டோரே நீங்களும் அவருக்காக அருளை வேண்டுங்கள்! நல்ல முறையில் அவருக்காக ஸலாம் கூறுங்கள்.

இப்படித் தான் இவ்வசனத்திற்குப் பொருள் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்திருந்தால் அல்லாஹ் ஸலவாத் கூறுகிறான் என்பது போன்ற விபரீதமான சொற்கள் வழக்கத்தில் வந்திருக்காது.

நாம் கூறியதை மேலும் வலுப்படுத்திட இதே அத்தியாயத்தின் 43வது வசனத்தையும் உதாரணமாகக் குறிப்படலாம்.

இருள்களிலிருந்து வெளிச்சத்திற்கு உங்களைக் கொண்டு செல்வதற்காக அவனும், அவனது வானவர்களும் உங்கள் மீது ஸலவாத் கூறுகின்றனர். அவன் நம்பிக்கை கொண்டோரிடம் அன்புமிக்கவனாக இருக்கிறான்.

திருக்குர்ஆன் 33:43

இவ்வசனத்தைக் கவனியுங்கள்! 56 வது வசனத்தில் நபிகள் நாயகத்தின் மீது அல்லாஹ் ஸலவாத் கூறுவதாகக் குறிப்பிட்டது போல் அனைத்து நம்பிக்கையாளர்கள் மீதும் அல்லாஹ் ஸலவாத் கூறுவதாக இவ்வசனம் கூறுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பயன்படுத்திய அதே சொல்லை இவ்வசனத்தில் அனைத்து முஸ்லிம்களுக்கும் இறைவன் இங்கே பயன்படுத்தியுள்ளான்.

அனைத்து முஸ்லிம்களுக்கும் அல்லாஹ் ஸலவாத் கூறுகிறான் என்று இந்த வசனத்திற்கு பொருள் கொள்ளாமல் அல்லாஹ் அருள் புரிகிறான் என்று சரியாக பொருள் செய்யும் உலமாக்கள், அது போன்று அமைந்த 56வது வசனத்திற்கு மட்டும் ஏறுக்கு மாறாகப் பொருள் செய்வதிலிருந்து அவர்கள் அறிந்து கொண்டே தான் தவறான கருத்தைத் தருகிறார்கள் என்பதை அறிய முடிகிறது.

33:43 வசனத்திற்குச் சரியான பொருள் கீழ்கண்டவாறு தான் அமைய வேண்டும்.

இருள்களிலிருந்து வெளிச்சத்திற்கு உங்களைக் கொண்டு செல்வதற்காக அவன் தான் உங்களுக்கு அருள் புரிகிறான். அவனது வானவர்கள் உங்களுக்காக அவனது அருளை வேண்டுகிறார்கள். நம்பிக்கை கொண்டோரிடம் அவன் அன்புமிக்கவனாக இருக்கிறான்.

இவ்வசனத்திற்குப் பொருள் கொள்வது போலவே 33:56 வசனத்திற்கும் பொருள் கொண்டால் எந்தக் குழப்பமும் ஏற்படாது.

பெரும்பாலான உலமாக்கள் சரியான முறையில் இதை விளக்கினாலும் மிகச் சிலர் தவறான பொருள் கொடுப்பதை எடுத்துச் சொல்லி அவர்களைத் திருத்தும் கடமை தங்களுக்கு இருக்கிறது என்பதை மறந்து விடக் கூடாது.

18.01.2010. 9:23 AM

லைலத்துல் கத்ர் இரவில் முழுக் குர்ஆனும் அருளப்பட்டதா?

லைலத்துல் கத்ர் இரவில் குர்ஆன் இறக்கப்பட்டது என்று கூறுகின்றார்கள். குர்ஆன் முழுவதுமாக இறக்கப்பட்டதா? அல்லது ஒரு அத்தியாயம் மட்டும் இறக்கப்பட்டதா?

குர்ஆன் ஒட்டு மொத்தமாக ஒரே நாளில் இறக்கியருளப்படவில்லை. சிறிது சிறிதாகவே அருளப்பட்டது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது வாழ்நாளில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அந்தந்தச் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப ஒரு வசனமோ, அல்லது சில வசனங்களோ, அல்லது ஒரு முழு அத்தியாயமோ அருளப்பட்டது.

(முஹம்மதே!) நாமே உமக்கு இக்குர்ஆனைச் சிறிது சிறிதாக அருளினோம்.

திருக்குர்ஆன் 76:23)

மக்களுக்கு இடைவெளி விட்டு நீர் ஓதிக் காட்டுவதற்காக குர்ஆனைப் பிரித்து அதைப் படிப்படியாக அருளினோம்.

திருக்குர்ஆன் 17:106

இவர் மீது குர்ஆன் ஒட்டு மொத்தமாக அருளப்படக் கூடாதா? என (நம்மை) மறுப்போர் கூறுகின்றனர். (முஹம்மதே!) இப்படித் தான் இதன் மூலம் உமது உள்ளத்தைப் பலப்படுத்திட சிறிது சிறிதாகவே அருளினோம்.

திருக்குர்ஆன் 25:32

திருக்குர்ஆன் சிறிது சிறிதாகவே அருளப்பட்டது என்பதையும், அதற்கான காரணத்தையும் இந்த வசனங்கள் தெளிவாகக் கூறுகின்றன.

மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம்.

திருக்குர்ஆன் 97:1

இந்த வசனத்தில் லைலத்துல் கத்ர் எனும் இரவில் அருளப்பட்டது என்று அல்லாஹ் கூறுவது திருக்குர்ஆன் அருளப்பட்டதன் துவக்கம் என்றே புரிந்து கொள்ள வேண்டும்.

படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக!

திருக்குர்ஆன் 96:1

என்ற வசனம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட முதல் வசனமாகும். இந்த வசனம் லைலத்துல் கத்ரு எனும் இரவில் தான் அருளப்பட்டது என்று புரிந்து கொள்ள வேண்டும்.

12.08.2009. 5:04 AM

அல்லாஹ்வின் கைப்பிடிக்கு அளவு என்ன?

ஆதம் (அலை) அவர்களை இறைவன் தனது ஒரு கைப்பிடி மண்ணில் படைத்தான் என்று ஹதீஸ் உள்ளது. அறுபது முழம் அவருடைய உயரம் எனவும் ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் வானங்கள் அவனது கைப்பிடிக்குள் அடங்கும் என்று குர்ஆன் கூறுகிறது. அப்படியானால் அல்லாஹ்வின் கைப்பிடி என்பது அறுபது முழத்தை உள்ளடக்கும் அளவா? வானங்களை உள்ளடக்கும் அளவா?

ராஜ் முஹம்மத், குவைத்.

அல்லாஹ்வைப் பொருத்தவரை அவனது பிரம்மாண்டம் பற்றி நாம் வரையறுக்க முடியாது. ஆனால் அவனைக் குறிப்பிட்ட உயரத்துக்குள் அடக்க முடியாது. சில நேரங்களில் அவன் தனது தோற்றத்தை வானம் பூமியை விடவும் பெரிதாகக் காட்டுவான். சில நேரங்களில் மனிதர்கள் அண்ணாந்து பார்க்கும் சிறிய தோற்றத்திலும் இருப்பான். நிர்ணயித்த அளவு அவனுக்கு இல்லை என்பதால் நீங்கள் கேட்ட விஷயத்தில் முரன்பாடு ஏதும் இல்லை. இது குறித்து ஷேக் அப்துல்லா ஜமாலி விவாதத்தில் ஆதாரங்களை குறிப்பிட்டுள்ளோம்.

04.08.2011. 16:14 PM

இரவை பகல் தொடருமா?

7 : 54 வசனத்தில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை இங்கு சுட்டிக்காட்டுகிறேன். தயவு செய்து விளக்கம் அளிக்கவும் உங்கள் மொழியாக்கத்தில் இரவைப் பகலால் மூடுகிறான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வேறு வேறு தர்ஜுமாக்களில் இரவைக்கொண்டு பகலை மூடுகிறான் என்று மொழிபெயர்த்துள்ளனர்.

இரண்டும் முரண்பாடான கருத்தல்லவா? எது சரி?

இன்னொன்று, அதே வசனத்திற்கு , உங்கள் மொழியாக்கத்தில் பகல், இரவை தொடர்கிறது, என்று சொல்லியுள்ளீர்கள்.

வேறு வேறு மொழியாக்கங்களில் இரவு பகலைத் தொடர்கிறது என்று மொழியாக்கம் செய்துள்ளனர்.

இரண்டும் முரண்பாடான கருத்தல்லவா? எது சரி?

பதில்

நம்முடைய மொழி பெயர்ப்பு தான் சரியானது.

إِنَّ رَبَّكُمُ اللّهُ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ يُغْشِي اللَّيْلَ النَّهَارَ يَطْلُبُهُ حَثِيثاً وَالشَّمْسَ وَالْقَمَرَ وَالنُّجُومَ مُسَخَّرَاتٍ بِأَمْرِهِ أَلاَ لَهُ الْخَلْقُ وَالأَمْرُ تَبَارَكَ اللّهُ رَبُّ الْعَالَمِينَ (54)

யுக்ஷி

அல்லைல

அன்னஹார

என்று மூலத்தில் உள்ளது.

அல்லைல - அன்னஹார என்ற இரண்டு செயப்படு பொருட்கள் இதில் கூறப்பட்டுள்ளன. இவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட செயப்படு பொருள் வந்தால் முதலாவது கூறப்பட்ட செயப்படு பொருளுக்கு ஐ காரம் சேர்த்து அர்த்தம் செய்ய வேண்டும். அதாவது இரவால் என்று கூறாமல் இரவை என்று மொழி பெயர்ப்பது தான் சரியானது.

இரண்டாவதாக கூறப்பட்ட மற்றொரு செயப்படு பொருளாக உள்ள அன்னஹார என்பதற்கு ஐ காரம் சேர்த்து பகலை என்று பொருள் கொள்ளாமல் ஆல் அல்லது மூலம் என்று சேர்த்து பொருள் செய்ய வேண்டும். அதாவது பகலால் பகல் மூலம் என்று கூற வேண்டும். தக்க காரணம் இருந்தால் தவிர இதில் மாற்றம் செய்யக் கூடாது என்பது அரபு இலக்கண விதி

இந்த இலக்கண விதி அனைவரும் அறிந்த விதியாக இருந்தாலும் மற்ற மொழிபெயர்ப்பாளர்கள் இரவு தான் பகலை மூடுகிறது என்று கருதியதால் அந்த அர்த்தம் வர வேண்டுமென்பதற்காக இதை மீறியுள்ளனர். தக்க காரணம் இருக்கும் போது இவ்வாறு மீறுவது இலக்கணப் பிழையாக ஆகாது என்ற அடிப்படையில் அவ்வாறு செய்துள்ளனர்.

ஆனால் இவர்கள் இரவு பகலின் அடிப்படையை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. உலகில் இரவு தான் இயற்கையானது. சூரியன் என்ற ஒரு பொருள் படைக்கப்பட்டதால் தான் பகல் ஏற்படுகிறது. சூரியன் என்ற ஒன்று இல்லாவிட்டால் எப்போதும் இருட்டு தான்.

பூமியின் இயற்கையான தன்மை இருட்டு எனும் போது அதை பகல் தான் மூடுகிறது. பகல் எனும் திரையை நீக்கி விட்டால் இரவாகி விடும்.

இதற்கேற்ப திருக்குர்ஆன் முதல் செயப்படு பொருளாக இரவை கூறி மாபெரும் அறிவியல் உண்மையைக் கூறியுள்ளது. ஆனால் இதை விளங்காமல் கருத்துப் பிழை வந்து விடும் என தவறாக்க் கருதி இலக்கணத்தை மீறி பொருள் செய்துள்ளனர்.

இரவும் அவர்களுக்கு ஒரு சான்று. அதிலிருந்து பகலை உரித்தெடுக்கிறோம். உடனே அவர்கள் இருளில் ஆழ்ந்து விடுகிறார்கள்.

திருக்குர்ஆன் 36:37

இவ்வசனத்தில் இரவில் இருந்து பகலை உரித்து எடுக்கிறோம் என இறைவன் கூறுகிறான். அதாவது இரவின் மீது பகல் எனும் போர்வை போர்த்தப்பட்டுள்ளதாகவும், பகலை உரித்து எடுத்தவுடன் தானாக இரவு வந்து விடுகிறது எனவும் இவ்வசனத்தில் சொல்லிக் காட்டுகிறான். அதே கருத்தைத் தான் நீங்கள் சுட்டிக்காட்டிய வசனமும் சொல்கிறது, நாம் செய்த மொழி பெயர்ப்பு தான் மிகச் சரியானது.

உங்களின் இரண்டாம் கேள்விக்கும் இதிலேயே விடை உள்ளது.

يَطْلُبُهُ حَثِيثاً

அதை இது தொடர்கிறது என்று தான் மூலத்தில் உள்ளது.

எது முதலில் உள்ளதோ அது தான் தொடரப்படும் பொருள் என்பதும், எது பிந்தையதாக உள்ளதோ அது தான் தொடரும் பொருள் என்பதும் தான் சரியான கருத்தாக இருக்க முடியும். எனவே இதிலும் நாம் செய்த அர்த்தம் தான் சரியானது. இரவு தான் இயற்கையானது எனும் போது இரவைப் பகல் தொடர்கிறது என்பதே சரியானது.

29.07.2011. 21:24 PM

பூமியை நெருப்புக் கோழி முட்டை வடிவில் படைத்ததாக குர்ஆனில் உள்ளதா?

இப்படி ஒரு அர்த்தம் இருப்பதாக ஜாகிர் நாயக் கூறி உள்ளார். இது சரியா?

முஹம்மத் அஃப்சல்

பதில் :

நீங்கள் குறிப்பிடும் வசனத்தின் சரியான மொழிபெயர்ப்பு இதுவே.

وَالْأَرْضَ بَعْدَ ذَلِكَ دَحَاهَا (30) 79

இதன் பின்னர் பூமியை விரித்தான்.

திருக்குர்ஆன் 79 : 30)

ஆனால் ஜாகிர் நாயக் இவ்வசனத்திற்கு இவ்வாறு பொருள் கொள்ளாமல் இதன் பின்னர் பூமியை நெருப்புக்கோழி முட்டையின் வடிவில் படைத்தான் என்று மொழிபெயர்த்துள்ளார்.

இந்த வசனத்தில் வரும் தஹா என்ற சொல்லுக்கு நெருப்புக்கோழியின் முட்டை என்று அர்த்தம் உள்ளதாகவும் எனவே பூமியை நெருப்புக் கோழி முட்டை வடிவில் படைத்தான் என்று மொழிபெயர்த்துள்ளார்.

பூமி நெருப்புக் கோழியின் முட்டை வடிவில் அமைந்திருப்பதாகவும் இந்த மாபெரும் விஞ்ஞான உண்மையை இவ்வசனம் கூறுவதாகவும் அவர் வாதிடுகின்றார்.

இவர் கூறுவது போல் தஹா என்ற சொல்லுக்கு இப்பொருள் இருப்பதாக அரபு அகராதி நூற்களிலோ, தஃப்சீர் நூற்களிலோ கூறப்படவில்லை. மாறாக தஹா என்ற இச்சொல்லுக்கு பஸத விரித்தான் என்பதே பொருள் என அனைவரும் கூறுகின்றனர்.

தஹா என்ற இச்சொல்லிலிருந்து பிரிந்து வந்த மத்ஹா, உத்ஹீ போன்ற சொற்களுக்கு நெருப்புக் கோழியின் கூடு என்றும் அது குஞ்சு பொறிக்கும் இடம் என்றும் பொருள் கூறப்பட்டுள்ளது.

நெருப்புக் கோழி தனது கூட்டை தரையில் பரவிய வகையில் விரிவாக அமைக்கக் கூடியது. விரித்தல் என்ற அசலான பொருள் இதனுள் அடங்கியுள்ளது. இதனடிப்படையில் தான் இச்சொற்களுக்கு நெருப்புக் கோழியின் கூடு என்று பொருள் கொள்ளப்படுகின்றது.

தஹா என்ற சொல்லிலிருந்து பிரிந்து வந்த எந்தச் சொல்லுக்கும் நெருப்புக் கோழியின் முட்டை என்ற பொருள் அறவே கிடையாது. பரந்து விரிந்த கூடு என்ற கருத்தில் நெருப்புக் கோழியின் கூடு என்ற பொருள் மட்டுமே உள்ளது.

ஒரு பேச்சுக்கு இவர் கூறுவது போல் துஹ்யா என்ற சொல்லுக்கு நெருப்புக் கோழியின் முட்டை என்று பொருள் இருப்பதாக ஒத்துக் கொண்டாலும் இவருடைய மொழிபெயர்ப்பு சரியாகி விடாது.

ஏனென்றால் துஹ்யா என்பது பெயர்ச் சொல். தஹா என்பது வினைச் சொல். அரபு மொழியில் ஒரு வினைச் சொல்லுக்கு பொருள் கொடுப்பதாக இருந்தால் அந்த வினைச் சொல்லுக்கு என்னென்ன பொருள்கள் கூறப்பட்டுள்ளன என்றே பார்க்க வேண்டும். இதை விட்டுவிட்டு நமது இஷ்டப்படி பெயர் சொல்லிலிருந்து அந்த வினைச்சொல்லுக்கு பொருள் எடுத்தல் கூடாது.

ஒரு வினைச் சொல்லை அரபு அகராதியில் குறிப்பிடுகின்றார்கள் என்றால் அதற்குரிய அனைத்து அர்த்தங்களையும் விவரிக்காமல் விட மாட்டார்கள்.

எந்த அரபு அகராதி நூலிலும் தஹா இந்த வினைச் சொல்லுக்கு நெருப்புக் கோழியின் முட்டை வடிவில் ஆக்கினான் என்று பொருள் கூறப்படவே இல்லை.

எனவே ஜாகிர் நாயக் செய்துள்ள இந்த மொழிபெயர்ப்புக்கு எந்த ஆதாரமும் இல்லை.

விஞ்ஞான உண்மைகளைப் பற்றிப் பேசும் வசனங்கள் குர்ஆனில் இருப்பதைப் போன்று விஞ்ஞானத்தைப் பற்றி பேசாமல் வேறு விஷயங்களைப் பற்றி பேசக்கூடிய வசனங்களும் குர்ஆனில் இருக்கின்றன.

குர்ஆன் வசனங்கள் கூறாத விஞ்ஞானக் கருத்துக்கள் அவ்வசனங்களில் இருப்பதாக வலிந்து வாதிடுவது தவறான போக்காகும். இவ்வாறு செய்தால் இறைவன் கூறாத கருத்தை இறைவன் பெயரால் இட்டுக்கட்டிய குற்றம் ஏற்படும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

14.06.2011. 12:05 PM

முதலில் படைக்கப்பட்டது வானமா பூமியா?

கேள்வி

பூமி முதலில் படைக்கப்பட்டது என்று குர்ஆனில் ஓரிடத்திலும், வானம் தான் முதலில் படைக்கப்பட்டது என்று வேறொரு இடத்திலும் கூறப்பட்டிருப்பதாகக் கிறித்தவர்கள் கூறுகின்றனர்.

இது உண்மையா?

செய்யத் சம்சுத்தீன்.

கிறித்தவர்களின் பைபிளில் ஏராளமான பொய்களையும், ஆபாசங்களையும், முரண்பாடுகளையும் பட்டியல் போட்டு நாம் கேள்வி கேட்டு வருகிறோம். ஆண்டுகள் பல ஓடிய பிறகும் அவற்றுக்கு எந்த பதிலும் அவர்களால் சொல்ல முடியவில்லை.

குர்ஆனிலும் முரண்பாடு என்று கூறி பேலன்ஸ் செய்யும் தந்திரத்தைத் தான் அவர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். ஆனால் அதில் அவர்கள் உண்மையாளர்களாக இல்லை. இல்லாத முரண்பாட்டை இவர்களாகச் சித்தரிக்கின்றனர். அதில் ஒன்று தான் நீங்கள் சுட்டிக்காட்டுவது.

திருக்குர்ஆனின் இரண்டாவது அத்தியாயம் இருபத்தி ஒன்பதாவது வசனத்தில்

அவனே பூமியில் உள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். பின்னர் வானத்தை நாடி, அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்குபடுத்தினான். அவன் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.

என்று கூறப்பட்டுள்ளது. பூமியைப் படைத்த பின்னர் வானத்தைப் படைத்ததாக இவ்வசனம் கூறுகிறது.

قُلْ أَئِنَّكُمْ لَتَكْفُرُونَ بِالَّذِي خَلَقَ الْأَرْضَ فِي يَوْمَيْنِ وَتَجْعَلُونَ لَهُ أَنْدَادًا ذَلِكَ رَبُّ الْعَالَمِينَ (9) وَجَعَلَ فِيهَا رَوَاسِيَ مِنْ فَوْقِهَا وَبَارَكَ فِيهَا وَقَدَّرَ فِيهَا أَقْوَاتَهَا فِي أَرْبَعَةِ أَيَّامٍ سَوَاءً لِلسَّائِلِينَ (10) ثُمَّ اسْتَوَى إِلَى السَّمَاءِ وَهِيَ دُخَانٌ فَقَالَ لَهَا وَلِلْأَرْضِ ائْتِيَا طَوْعًا أَوْ كَرْهًا قَالَتَا أَتَيْنَا طَائِعِينَ (11) 41

பூமியை இரண்டு நாட்களில் படைத்தவனையா மறுக்கிறீர்கள்? மேலும் அவனுக்கு நிகரானவர்களைக் கற்பனை செய்கிறீர்கள். அவனே அகிலத்தின் அதிபதியாவான் என்று கூறுவீராக! நான்கு நாட்களில் அதன் மேலே முளைகளை ஏற்படுத்தினான். அதில் பாக்கியம் செய்தான். அதன் உணவுகளை அதில் நிர்ணயம் செய்தான். கேள்வி கேட்போருக்குச் சரியான விடை இதுவே. பின்னர் வானம் புகையாக இருந்த போது அதை நாடி விரும்பியோ, விரும்பாமலோ நீங்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று அதற்கும், பூமிக்கும் கூறினான். விரும்பியே கட்டுப்பட்டோம் என்று அவை கூறின.

திருக்குர்ஆன் 41 :9

இவ்விரு வசனங்கள் கூறுவதற்கு எதிராகப் பின்வரும் வசனம் பூமி பின்னர் படைக்கப்பட்டதாகக் கூறுகிறது என கிறித்தவ குழுக்கள் கூறுகின்றனர்.

படைக்கப்படுவதில் நீங்கள் கடினமானவர்களா? அல்லது வானமா? அதை அவன் நிறுவினான். அதன் முகட்டை உயர்த்திச் சீராக்கினான். அதன் இரவை மூடி பகலை வெளிப்படுத்தினான். இதன் பின்னர் பூமியை விரித்தான். அதிலிருந்து அதற்கான தண்ணீரையும், மேய்ச்சல் பயிர்களையும் வெளிப்படுத்தினான். மலைகளை முளைகளாக நாட்டினான்.

திருக்குர்ஆன் 79 : 27-30

இந்த வசனத்தில் பூமி பின்னர் படைக்கப்பட்டதாகக் கூறப்படவில்லை. மாறாக பின்னர் பூமியை விரித்ததாகத் தான் கூறப்பட்டுள்ளது. ஒன்றைப் படைப்பதும் அதை விரிவுபடுத்துவதும் வேறுவேறாகும்.

பூமியை அல்லாஹ் முதலில் படைத்து விட்டு, பின்னர் வானத்தைப் படைத்தான். அதன் பின்னர் ஏற்கனவே படைக்கப்பட்டிருந்த் பூமியை விரிவுபடுத்தினான் என்பது தான் இவ்வசனத்தில் இருந்து பெறப்படும் கருத்தாகும்.

பிரபஞ்சத்தில் உள்ள கோள்களில் பூமியில் மட்டுமே உயிரினங்கள் வாழ்வதற்கான ஏராளமான ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளன. பூமியைப் படைத்த பின்னர் அந்த ஏற்பாடுகளைச் செய்ய நான்கு நாட்கள் எடுத்துக் கொண்டதாக பின் வரும் வசனங்கள் கூறுகின்றன.

பூமியை இரண்டு நாட்களில் படைத்தவனையா மறுக்கிறீர்கள்? மேலும் அவனுக்கு நிகரானவர்களைக் கற்பனை செய்கிறீர்கள். அவனே அகிலத்தின் அதிபதியாவான்'' என்று கூறுவீராக! நான்கு நாட்களில் அதன் மேலே முளைகளை ஏற்படுத்தினான். அதில் பாக்கியம் செய்தான். அதன் உணவுகளை அதில் நிர்ணயம் செய்தான்.179 கேள்வி கேட்போருக்குச் சரியான விடை இதுவே.

திருக்குர்ஆன் 41:9,10

பூமியை முதலில் படைத்து விட்டு பிறகு வானத்தை அல்லாஹ் படைத்தான். அதன் பின்னர் பூமியில் பல ஏற்பாடுகளைச் செய்து அதை விரிவாக்கம் செய்தான். அதைத் தான் குர்ஆன் கூறுகிறது. வானத்தைப் படைத்த பின் பூமியைப் படைத்ததாக திருக்குர்ஆன் கூறவில்லை.

எனவே இதில் எந்த முரண்பாடும் இல்லை.

28.10.2011. 13:02 PM

லூத் நபி கூறியதை முரண்பட்டு குர்ஆன் கூறுகிறதா?

குர்ஆனில் முரண்பாடு எனக் கூறும் கிறித்தவர்கள் நபி லூத் (அலை) அவர்களின் சமுதாயத்தின் பதில் இதுவாக இருந்தது என ஓரிடத்திலும் வேறொரு இடத்தில் வேறு ஒரு பதிலைச் சொன்னார்கள் என்றும் உள்ளதாக கூறுகின்றனர். குர்ஆனில் முரண்பாடுகள் இருப்பதாக வாதிடுகின்றனர். விளக்கம் தேவை.

செய்யத் ஷம்சுத்தீன்

லூத் நபிக்கு அவர்களின் சமுதாயத்தார் அளித்த பதிலை அல்லாஹ் இரண்டு இடங்களில் குறிப்பிடுகின்றான். இந்த பதில்கள் வேறுபடுவதால் இதை முரண்பாடாகச் சிலுவை வணங்கிகள் குறிப்பிட்டுள்ளனர்.

فَمَا كَانَ جَوَابَ قَوْمِهِ إِلَّا أَنْ قَالُوا أَخْرِجُوا آلَ لُوطٍ مِنْ قَرْيَتِكُمْ إِنَّهُمْ أُنَاسٌ يَتَطَهَّرُونَ(56)27

லூத்துடைய குடும்பத்தினரை உங்கள் ஊரை விட்டும் வெளியேற்றுங்கள்! அவர்கள் தூய்மையான மக்களாகவுள்ளனர் என்பதே அவரது சமுதாயத்தினரின் பதிலாக இருந்தது.

திருக்குர்ஆன் 27:56

أَئِنَّكُمْ لَتَأْتُونَ الرِّجَالَ وَتَقْطَعُونَ السَّبِيلَ وَتَأْتُونَ فِي نَادِيكُمْ الْمُنكَرَ فَمَا كَانَ جَوَابَ قَوْمِهِ إِلَّا أَنْ قَالُوا ائْتِنَا بِعَذَابِ اللَّهِ إِنْ كُنتَ مِنْ الصَّادِقِينَ(29)29

சரியான வழியைத் துண்டித்து விட்டு ஆண்களிடம் செல்கிறீர்களா? உங்கள் சபையில் அந்த வெறுக்கத்தக்க செயலைச் செய்கிறீர்களா? என்று அவர் தமது சமுதாயத்துக்குக் கூறிய போது, நீர் உண்மையாளராக இருந்தால் அல்லாஹ்வின் வேதனையைக் கொண்டு வருவீராக என்று கூறியதைத் தவிர வேறு எதுவும் அவரது சமுதாயத்தின் பதிலாக இருக்கவில்லை.

திருக்குர்ஆன் 29:29

27:56வது வசனத்தில் லூத்துடைய குடும்பத்தினரை உங்கள் ஊரை விட்டும் வெளியேற்றுங்கள்! என்று கூறியதாகவும்,

29 : 29 வது வசனத்தில் நீர் உண்மையாளராக இருந்தால் அல்லாஹ்வின் வேதனையைக் கொண்டு வருவீராக என்று கூறியதாகவும் சொல்லப்படுகின்றது.

இதைத் தான் முரண்பாடு என்கின்றனர்.

இவர்களுக்கு சிந்திக்கும் திறன் சிறிதளவும் இல்லை என்பது இதில் இருந்து தெளிவாகத் தெரிகிறது.

லூத் நபி அவர்கள் அந்த மக்களுக்குப் பிரச்சாரம் செய்த போது அவர்கள் லூத் நபிக்கு சொன்ன பதில் நீர் உண்மையாளராக இருந்தால் வேதனையைக் கொண்டுவா என்பதாகும்.

அதே சமயம் தங்கள் இனத்தவர்களிடம் அவர்கள் சொன்ன பதில் இவர்களை வெளியேற்றுங்கள் என்பதாகும்.

இவர்களை வெளியேற்றுங்கள் என்பது லூத் நபியை நோக்கிச் சொன்னதல்ல.

இரண்டு வகையான மக்களிடம் அவர்கள் இரண்டு விதமான பதில்களைச் சொல்லியுள்ளனர்.

ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டவர்கள் சார்பில் நான் மன்னிப்பு கேட்கிறேன் என்பதுதான் போப் ஆண்டவரின் பதிலாக இருந்தது.

பாதிரிமார்கள் திருமணம் செய்து கொள்வது தான் இதைத் தடுக்கும் என்பது தான் போப் ஆண்டவரின் பதிலாக இருந்தது.

இப்படி போப் சொன்னதை நாம் எடுத்துக்காட்டினால் இதை முரண் என்று சொல்ல முடியுமா? ஒன்று மக்களுக்கு சொன்னது. மற்றொன்று பாதிரிமார்களுக்குச் சொன்னது. 

இதைப் புரிந்து கொள்வது போல் மேற்கண்ட வசனங்களையும் புரிந்து கொண்டால் இதில் முரண்பாடு உள்ளதாகக் கருத மாட்டார்கள்.

இதில் எந்த முரண்பாடும் இல்லை.

வேதனையைக் கொண்டு வா ஆனால் கொண்டு வராதே எனக் கூறினால் அதாவது வரும் ஆனால் வராது என்று பைபிள் கூறுவது போல் கூறினால் தான் அது முரண்பாடு.

28.10.2011. 13:15 PM

More Articles …