Sidebar

17
Wed, Jun
சமீபத்திய செய்திகள்

மன்னித்த பின் தவறைச் சொல்லிக்காட்டலாமா?

நஸ்ரின்

பதில்:

யாரேனும் நமக்குத் தீமை செய்தால் அவர்களை மன்னிக்கவும், அவர்கள் செய்த தீமையின் அளவுக்கு தண்டிக்கவும் அல்லாஹ் நமக்கு உரிமை வழங்கியுள்ளான்.

ஒருவர் நமக்குச் செய்த அநீதியை மன்னித்துத் தான் ஆக வேண்டும் என்று எந்தக் கட்டளையும் மார்க்கத்தில் இல்லை. ஒருவரை மன்னிக்காமல் நாம் மரணித்து விட்டால் அதற்காக அல்லாஹ் மறுமையில் நம்மைக் கேள்வி கேட்க மாட்டான். மறுமையில் நாம் முறையிடும் போது நமக்கு அல்லாஹ் நீதியும் வழங்குவான்.

ஆனால் தண்டிப்பதை விட மன்னிப்பது மிகவும் சிறந்தது. மன்னிக்காமல் இருப்பதால் மறுமையில் எதிரியிடமிருந்து நமக்கு பெற்றுத்தரப்ப்டும் நன்மையை விட மன்னிப்பதால் அல்லாஹ்விடம் சிறந்த கூலி உண்டு. இந்த நன்மையை எதிர்பார்த்துத் தான் ஒருவரை நாம் மன்னிக்க வேண்டும்.

கீழ்க்காணும் வசனங்களில் இருந்து இதை நாம் அறிந்து கொள்ளலாம்.

நீங்கள் தண்டிப்பதாக இருந்தால் நீங்கள் துன்புறுத்தப்பட்ட அளவுக்குத் தண்டியுங்கள்! நீங்கள் பொறுமையைக் கடைப்பிடித்தால் பொறுமையாளர்களுக்கு அதுவே சிறந்தது.

திருக்குர்ஆன் 16:126

தீமையின் கூலி அது போன்ற தீமையே. மன்னித்து சமாதானமாகச் செல்வோருக்கு அவரது கூலி அல்லாஹ்விடம் உள்ளது. அவன் அநீதி இழைத்தோரை விரும்ப மாட்டான்.

திருக்குர்ஆன் 42:40

உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தோருக்கும் உதவ மாட்டோம் என்று செல்வமும், வசதியும் உடையோர் சத்தியம் செய்ய வேண்டாம். மன்னித்து அலட்சியம் செய்யட்டும். அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன் 24:22

அல்லாஹ்விடம் மகத்தான கூலியை எதிர்பார்த்து மன்னித்து விட்டால் அந்த நிமிடமே அவர் நமக்கு அநீதியிழைக்காதவர் போல் நடந்து கொள்ள வேண்டும். இதுதான் மன்னிப்பதன் பொருள். மன்னித்து விட்டதாகக் கூறிவிட்டு பின்னர் அதை நாம் சொல்லிக் கொண்டு இருந்தால் நாம் உண்மையில் மன்னிக்கவே இல்லை என்று தான் பொருள்.

இதுதான் மன்னிப்பின் பொருள் என்று அல்லாஹ் சொல்லிக்காட்டுகிறான்.

(முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராகவும், கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள். அவர்களை மன்னிப்பீராக! அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவீராக! காரியங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்வீராக! உறுதியான முடிவு செய்துவிட்டால் அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! தன்னையே சார்ந்திருப்போரை அல்லாஹ் நேசிக்கிறான்.

திருக்குர்ஆன் 3:159

நபித்தோழர்கள் செய்த தவறை நபியவர்கள் மன்னிக்க வேண்டும் என்று போதிக்கும் இறைவன் அதன் பின்னர் அவர்களுடன் ஆலோசனை செய்ய வேண்டும் எனவும் நபிகளுக்கு வழிகாட்டுகிறான். தவறு செய்வதற்கு முன் எப்படி ஆலோசனை கலந்தார்களோ அது போல் தான் மன்னித்த பிறகும் நடக்க வேண்டும் என அல்லாஹ் வழிகாட்டுகிறான்.

எனவே மன்னித்த பின் அதை மனதில் வைத்துக் கொண்டு நடந்தால் மன்னிக்கவில்லை என்பதுதான் பொருள். மன்னிப்பதற்கான எந்த நன்மையும் கிடைக்காது.

* மன்னிக்காமல் இருக்க உரிமை உண்டு

* மன்னிப்பது சிறந்தது

* மன்னித்த பின் அதை சொல்லிக் காட்டி வேதனைப்படுத்தினால் மன்னிக்கவில்லை என்பதே அதன் பொருள்

ஆகிய மூன்று விஷயங்களுடன் மற்றொரு எச்சரிக்கையையும் அல்லாஹ் செய்கிறான்.

ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் செய்யும் அநியாயங்களில் அவனது குடும்பத்தில் ஒருவனை கொலை செய்வதாகும். இந்தக் கொலையைக் கூட மன்னித்து நட்ட ஈடு பெற்றுக் கொள்ள அல்லாஹ் அனுமதி அளிக்கிறான்.

நம்பிக்கை கொண்டோரே! சுதந்திரமானவனுக்காக (கொலை செய்த) சுதந்திரமானவன், அடிமைக்காக (கொலை செய்த) அடிமை, பெண்ணுக்காக (கொலை செய்த) பெண், என்ற வகையில் கொல்லப்பட்டோருக்காகப் பழி வாங்குவது உங்களுக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது. கொலையாளிக்கு (கொல்லப்பட்டவனின் வாரிசாகிய) அவனது (கொள்கைச்) சகோதரன் மூலம் ஏதேனும் மன்னிக்கப்படுமானால் நல்ல விதமாக நடந்து அழகிய முறையில் (இழப்பீடு) அவனிடம் வழங்க வேண்டும். இது உங்கள் இறைவன் எளிதாக்கியதும், அருளுமாகும். இதன் பிறகு யாரேனும் வரம்பு மீறினால் அவருக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.

திருக்குஆன் 2:178

இப்படி மன்னித்த பிறகு வரம்பு மீறினால் கடும் தண்டனை உண்டு என்ற எச்சரிக்கையைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மன்னித்து விட்டு வரம்பு மீறி அல்லாஹ்வின் தண்டனைக்கு உள்ளாவதை விட மன்னிக்காமல் இருப்பது மேலானது. மன்னித்த பிறகும் யார் வரம்பு மீறுவோம் என்று அஞ்சுகிறார்களோ அவர்கள் மன்னிக்காமலே இருந்து விடலாம். இதனால் சில நன்மைகள் நமக்குக் கிடைக்காமல் போகுமே தவிர தண்டனை எதுவும் கிடைக்காது. ஆனால் மன்னித்த பின் சொல்லித் திரிந்தால் தண்டனைக்கும் ஆளாக நேரிடும்.

18.11.2012. 8:07 AM

பெண்ணிடம் தவறாக நடந்தவருக்கு மன்னிப்பு உண்டா?

பதில் :

ஒரு பாவத்தைச் செய்து திருந்தி விட்டால் அந்தப் பாவத்தை பிறரிடம் பகிரங்கப்படுத்தக் கூடாது என மார்க்கம் கூறுகின்றது.

6069 حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ عَنْ ابْنِ أَخِي ابْنِ شِهَابٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ كُلُّ أُمَّتِي مُعَافًى إِلَّا الْمُجَاهِرِينَ وَإِنَّ مِنْ الْمُجَاهَرَةِ أَنْ يَعْمَلَ الرَّجُلُ بِاللَّيْلِ عَمَلًا ثُمَّ يُصْبِحَ وَقَدْ سَتَرَهُ اللَّهُ عَلَيْهِ فَيَقُولَ يَا فُلَانُ عَمِلْتُ الْبَارِحَةَ كَذَا وَكَذَا وَقَدْ بَاتَ يَسْتُرُهُ رَبُّهُ وَيُصْبِحُ يَكْشِفُ سِتْرَ اللَّهِ عَنْهُ رواه البخاري 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் சமுதாயத்தாரில் (பாவம் செய்த) அனைவரும் (இறைவனால்) மன்னிக்கப்படுவர்; (தம் பாவங்களைத்) தாமே பகிரங்கப்படுத்துகின்றவர்களைத் தவிர. ஒரு மனிதன் இரவில் ஒரு (பாவச்) செயல் புரிந்து விட்டுப் பிறகு காலையானதும் அல்லாஹ் அவனது பாவத்தை (பிறருக்குத் தெரியாமல்) மறைத்து விட்டிருக்க, இன்னாரே! நேற்றிரவு நான் (பாவங்களில்) இன்னின்னதைச் செய்தேன் என்று அவனே கூறுவது பகிரங்கப்படுத்துவதில் அடங்கும். (அவன் செய்த பாவத்தை) இரவில் (பிறருக்குத் தெரியாமல்) இறைவன் மறைத்து விட்டான். (ஆனால்,) இறைவன் மறைத்ததைக் காலையில் அந்த மனிதன் தானே வெளிச்சமாக்கி விடுகிறான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 6069

பொதுவாக ஆணும், பெண்ணும் தவறிழைப்பவர்களாகவே உள்ளனர். ஒழுக்க விஷயங்களிலும் இந்தத் தவறுகள் ஏற்படவே செய்கின்றன.

திருமணத்துக்கு முன்பு தன் வாழ்க்கைத் துணையாக வருபவரிடம் இந்தத் தவறுகளை வெளிப்படுத்தினால் பெரும்பாலும் யாரும் திருமணத்துக்கு உடன்பட மாட்டார்கள். இதனால் பலருக்குத் திருமணமே ஆகாத நிலை ஏற்படும்.

அப்படியே உடன்பட்டாலும் ஒரு நெருடல் அவருடைய மனதில் இருந்து கொண்டே இருக்கும். நாளடைவில் இதுவே குடும்பத்தில் பிரச்சனைகள் உருவாகக் காரணமாகலாம்.

எனவே ஒருவர் தான் செய்த தவறுக்காக மனம் வருந்தி திருந்தி விட்டால் அவர் அத்தவறை செய்யாதவரைப் போன்றவராகி விடுகின்றார். இத்தவறைப் பிறரிடம் வெளிப்படுத்தாமல் இருப்பதே நல்லது.

விபச்சாரம் செய்தவருக்குத் தண்டனை என்பது இஸ்லாமிய அரசாங்கம் இருந்தாலே அத்தண்டனையை நிறைவேற்றும். இந்தியாவில் இஸ்லாமிய அரசு இல்லை என்பதால் இதற்கான தண்டனையை இங்கு நிறைவேற்ற முடியாது.

அதே நேரத்தில் இந்தப் பாவத்தை மன்னிப்பதும், மன்னிக்காமால் தண்டிப்பதும் இறைவனுடைய நாட்டத்தைப் பொறுத்து உள்ளது. எனவே நீங்கள் இந்தத் தவறுக்காக இறைவனிடம் அதிகமாக மன்னிப்புக் கேளுங்கள்.

18 حَدَّثَنَا أَبُو الْيَمَانِ قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ عَنْ الزُّهْرِيِّ قَالَ أَخْبَرَنِي أَبُو إِدْرِيسَ عَائِذُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ أَنَّ عُبَادَةَ بْنَ الصَّامِتِ رَضِيَ اللَّهُ عَنْهُ وَكَانَ شَهِدَ بَدْرًا وَهُوَ أَحَدُ النُّقَبَاءِ لَيْلَةَ الْعَقَبَةِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ وَحَوْلَهُ عِصَابَةٌ مِنْ أَصْحَابِهِ بَايِعُونِي عَلَى أَنْ لَا تُشْرِكُوا بِاللَّهِ شَيْئًا وَلَا تَسْرِقُوا وَلَا تَزْنُوا وَلَا تَقْتُلُوا أَوْلَادَكُمْ وَلَا تَأْتُوا بِبُهْتَانٍ تَفْتَرُونَهُ بَيْنَ أَيْدِيكُمْ وَأَرْجُلِكُمْ وَلَا تَعْصُوا فِي مَعْرُوفٍ فَمَنْ وَفَى مِنْكُمْ فَأَجْرُهُ عَلَى اللَّهِ وَمَنْ أَصَابَ مِنْ ذَلِكَ شَيْئًا فَعُوقِبَ فِي الدُّنْيَا فَهُوَ كَفَّارَةٌ لَهُ وَمَنْ أَصَابَ مِنْ ذَلِكَ شَيْئًا ثُمَّ سَتَرَهُ اللَّهُ فَهُوَ إِلَى اللَّهِ إِنْ شَاءَ عَفَا عَنْهُ وَإِنْ شَاءَ عَاقَبَهُ فَبَايَعْنَاهُ عَلَى ذَلِك رواه البخاري

உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மைச் சுற்றிலும் தம் தோழர்களின் ஒரு குழுவினர் அமர்ந்திருக்க, அல்லாஹ்வுக்கு எதையும் (எவரையும்) இணையாக்க மாட்டீர்கள் என்றும், திருட மாட்டீர்கள் என்றும், விபசாரம் புரிய மாட்டீர்கள் என்றும், உங்கள் குழந்தைகளைக் கொல்ல மாட்டீர்கள் என்றும், நீங்களாக அவதூறு எதனையும் புனைந்து கொண்டு வரமாட்டீர்கள் என்றும், எந்த நல்ல காரியத்திலும் (எனக்கு) மாறு செய்ய மாட்டீர்கள் என்றும் என்னிடம் உறுதிமொழி கொடுங்கள்! உங்களில் எவர் (இந்த உறுதிமொழியின் மீது) நிலைத்திருக்கிறாரோ அவருக்கரிய நற்பலனைத் தருவது அல்லாஹ்வின் பொறுப்பாகும். இவற்றில் (மேற்கூறப்பட்ட குற்றங்களில்) ஏதேனுமொன்றை ஒருவர் செய்து, அதற்காக அவர் இந்த உலகத்திலயே தண்டிக்கப்பட்டுவிட்டால் அதுவே அவருக்குரிய பரிகாரமாகிவிடும். இவற்றில் ஏதேனுமொன்றை ஒருவர் செய்து அல்லாஹ் அவரது குற்றத்தை (உலகவாழ்வில்) மறைத்து விட்டால் அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் விடப்படுகிறார். அவன் நாடினால் அவரைத் தண்டிப்பான்; அவன் நாடினால் அவரை மன்னிப்பான் என்ற சொன்னார்கள். உடனே நாங்கள் அவற்றுக்காக நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்தோம்.

நூல் : புகாரி 18

10.06.2011. 6:22 AM

பாதிக்கப்பட்டவரின் துஆவுக்கு அஞ்சிக்கொள்ளுங்கள் என்றால் அநியாயம் செய்தவர் பாதிக்கப்பட்டவரிடம் மன்னிப்பு கேட்டும் மன்னிக்காவிட்டால் அந்த இருவரின் நிலை என்ன?

More Articles …

Page 2 of 3