Sidebar

22
Mon, Jun
சமீபத்திய செய்திகள்

வைர வைடூரியக் கற்களுக்கு ஜகாத் கொடுப்பது அவசியமா?

நம்முடைய பொருளாதாரத்தில் எஞ்சிய செல்வத்தை அனுமதிக்கப்பட்டதாக இறைவன் ஆக்க வேண்டும் எனில் அதற்கு ஜகாத் வழங்க வேண்டும். ஒவ்வொன்றிற்கும் ஜகாத் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதை அல்லாஹ்வும், அவனது தூதரும் தெளிவுபடுத்தி விட்டார்கள். கால்நடைகளுக்கும், விளைபொருட்களுக்கும் உரிய ஜகாத் மார்க்கத்தில் சொல்லப்பட்டுள்ளது. மேலும் தங்கம், வெள்ளிக்கும் உரிய ஜகாத்தும் மார்க்கத்தில் சொல்லப்பட்டுள்ளது.

வைரம், வைடூரியம், மரகதம், மாணிக்கம், பிளாட்டினம் போன்றவைகளுக்கு ஜகாத் உண்டு என்று மார்க்கத்தில் நேரடியாகச் சொல்லப்படவில்லை. ஆனாலும் செல்வங்களுக்கு ஜகாத் உண்டு என்று பொதுவாகச் சொல்லப்பட்டதில் மேற்கண்டவையும் அடங்கும்.

(முஹம்மதே!) அவர்களின் செல்வங்களில் தர்மத்தை எடுப்பீராக! அதன் மூலம் அவர்களைத் தூய்மைப்படுத்தி, பரிசுத்தமாக்குவீராக! அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக! உமது பிரார்த்தனை அவர்களுக்கு மன அமைதி அளிக்கும். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.

திருக்குர்ஆன்:9:103

இந்த வசனத்தில்  ‘அவர்களின் செலவங்களில் இருந்து தர்மத்தை எடுப்பீராக’ என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான். மதிப்புமிக்க அனைத்துமே செல்வங்களில் அடங்கிவிடும். தங்கம், வெள்ளி ஆகியவை மதிப்புமிக்க செல்வமாக இருந்தது மட்டுமின்றி அவை அன்றைக்கு நாணயமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தன. அதன் காரணமாகவே தங்கம், வெள்ளி என்று குறிப்பிட்டுச் சொல்லப்பட்டுள்ளது.

ரூபாய் நோட்டுக்களுக்கு ஜகாத் உண்டு என்று என்பதை உலக முஸ்லிம்கள் அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர். தங்கம், வெள்ளி பற்றித் தான் ஹதீஸ்களில் சொல்லப்பட்டுள்ளது; அதனால் ரூபாய்களுக்கு ஜகாத் இல்லை என்று யாரும் சொல்வதில்லை.

ரூபாயை வைத்து தங்கம், வெள்ளியை வாங்க முடியும் என்பதால் ரூபாய்களுக்கும் ஜகாத் உண்டு என்று புரிந்து கொள்கிறோம்.

அது போல் தான் வைரம், வைடூரியம் போன்ற கற்களைக் கொண்டு தங்கம், வெள்ளியை வாங்க முடியும். எனவே ரூபாய்களை எப்படி நாம் தங்கமாக, வெள்ளியாகக் கணக்கிட்டு ஜகாத் கொடுக்கிறோமோ அது போல் மதிப்பு மிக்க கற்களுக்கும் ஜகாத் கொடுக்க வேண்டும். நேரடியாகச் சொல்லப்பட்டவைகளுக்கு மட்டுமே ஜகாத் என்று சொன்னால் ஜகாத் என்ற அம்சமே சமுதாயத்தில் இல்லாமல் போய்விடும்.

தனக்கு வரும் கோடானுகோடி ரூபாய்களை வைரமாக ஒருவன் பெற்றுக் கொண்டு ஜகாத் கொடுக்காமல் தப்பித்துக் கொள்வான். ஒருவருக்கு நாம் பத்து லட்சம் ரூபாய்களை அல்லது அதன் மதிப்பிலான தங்கத்தை அன்பளிப்பாகக் கொடுக்கிறோம். அன்பளிப்பாகப் பெற்றவருக்கு இது வருமானமாக சொத்தாக அமைந்துள்ளதால் அதற்கு அவர் ஜகாத் கொடுக்க வேண்டும்.

ஆனால் ரூபாய்களாகவோ, தங்கமாகவோ கொடுக்காமல் பத்து லட்சம் மதிப்புள்ள வைரத்தை வாங்கி அன்பளிப்பாகக் கொடுத்தால் அவருக்கு ஜகாத் இல்லை என்ற நிலை ஏற்படும். அதுபோல் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கார்களை ஒருவன் பெற்றால் அதற்கு ஜகாத் இல்லை என்ற நிலை ஏற்படும். பல கோடி மதிப்புள்ள வீடு ஒருவனுக்குக் கிடைத்தால் அதற்கு அவன் ஜகாத் கொடுக்க வேண்டியதில்லை என்ற நிலை இதனால் ஏற்படும்.

நேரடியாகச் சொல்லப்பட்டுள்ளதா என்ற கேள்வி, செல்வந்தர்கள் ஜகாத் கொடுக்காமல் தப்பிக்க வழி வகுக்கும். எனவே வைரம், வைடூரியம் போன்றவைகளுக்கும் ஜகாத் உண்டு என்பதே சரியானதாகும். கற்களுக்கு ஜகாத் இல்லை என்று சில நபிமொழிகள் உள்ளன. அவை அனைத்தும் பலவீனமானவையாகும்.

வைரம் போன்ற விலை உயர்ந்த ஆபரணக் கற்களுக்கு ஜகாத் இல்லை என்பதற்கு இவற்றை ஆதாரமாகக் கொள்ளலாகாது.

கேள்வி :

இருப்புத் தொகைக்கு ஆண்டுதோறும் ஜகாத் கொடுக்க வேண்டுமா?

நான் கடந்த மூன்று வருடங்களாக வங்கியில் 2 இலட்சம் ரூபாய் வைத்துள்ளேன். நான் ஒவ்வொரு வருடமும் ஜகாத் கொடுக்க வேண்டுமா? அல்லது ஒரு தடவை கொடுத்தால் போதுமா?

ஒருவரிடம் ஐந்து இலட்சம் மதிப்புள்ள கடை உள்ளது. வாடகையாக மாதாமாதம் 12,000 ரூபாய் வருமானம் வருகிறது. இப்போது அவர் ஐந்து இலட்சத்திற்கு மட்டும் ஜகாத் கொடுக்க வேண்டுமா? அல்லது வாடகையாக வரும் 12,000க்கும் ஜகாத் கொடுக்க வேண்டுமா?

பதில் :

முதல் கேள்விக்கான பதில் :

ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்றோ, அல்லது வருடத்திற்கு ஒரு முறை தான் ஜகாத் கொடுக்க வேண்டும் என்றோ எந்த ஒரு ஆதாரப்பூர்வமான ஹதீஸும் கிடையாது.

எனவே ஒரு பொருளுக்கு ஒரு தடவை ஜகாத் கொடுத்துவிட்டால் போதுமானதாகும். அது பரிசுத்தமாகிவிடும். மீண்டும், மீண்டும் அல்லது வருடத்திற்கொருமுறை கொடுக்க வேண்டிய அவசியமில்லை.

கீழே உள்ள ஆக்கத்தை வாசிக்கவும்

ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் ஜகாத் கொடுக்க வேண்டுமா

https://onlinepj.in/index.php/prayers/prayers-2/zakkath/jakath-ayvu-book

இரண்டாவது கேள்விக்கான பதில் :

ஒருவரிடம் ஐந்து இலட்சம் மதிப்புள்ள கடை இருந்தால் அவர் அதற்கு ஒரு முறை ஜகாத்தை நிறைவேற்றிவிட்டால் அது பரிசுத்தமாகிவிடும். பிறகு ஒவ்வொரு மாதமும் அந்தக் கடையின் மூலம் வரும் வருமானம் வந்தால் அதற்கும் இரண்டரை சதவிகிதம் ஜகாத்தை அவர் வழங்க வேண்டும். ஒருவருக்கு வரும் வருவாய், அவரது சொத்துக்கள், இருப்புக்கள் ஆகிய அனைத்துக்கும் ஜகாத் உண்டு.

இதில் ஏழைகள் அடங்கிவிடக் கூடாது என்பதற்காக ஒரு எல்லைக் கோட்டை இஸ்லாம் வகுத்துள்ளது.

ஐந்து ஊகியா வெள்ளி வைத்து இருப்பவர் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று ஹதீஸ் கூறுகிறது. ஒரு ஊகியா என்பது 40 திர்ஹமாகும். அன்றைய ஒரு திர்ஹத்தின் இன்றைய எடை 3.6 கிராம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 200 திர்ஹத்தின் எடை 720 கிராம் ஆகும். அதாவது இன்றைய மதிப்பில் 50 முதல் 55 ஆயிரம் ரூபாய் உள்ளவருக்கு ஜகாத் கடமையாகி விடும்.

ஒருவர் மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார். அவரிடம் வேறு எந்த இருப்பும் இல்லை. அவர் ஜகாத் கொடுக்க மாட்டார். சிறிது சிறிதாக மிச்சம் பிடித்து 720 கிராம் வெள்ளி அளவுக்கு அவரிடம் இருப்பு வந்து விட்டது என்றால் அந்த 720 கிராமுக்கும், அதன் பின் அவருக்கு வரும் ஒவ்வொரு ரூபாய்க்கும் ஜகாத் கொடுக்க வேண்டும்.

எப்போது 720 கிராம் வெள்ளிக்கும் கீழ் குறைந்து விடுகிறதோ அப்போது ஜகாத் கடமை இல்லை.

ஒருவர் மாதம் மூவாயிரம் சம்பளம் வங்குகிறார். ஆனால் அவரிடம் ஏற்கனவே 720 கிராம் வெள்ளியின் மதிப்புடைய பொருள் இருந்தால் அவர் அந்த 720 கிராம் வெள்ளிக்கும் ஜகாத் கொடுக்க வேண்டும். அந்த மூன்றாயிரம் ரூபாய்க்கும் ஜகாத் கொடுக்க வேண்டும். எப்போதெல்லாம் அவருக்கு செல்வம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் ஜகாத் கடமையாகி விடும்.

கேள்வி

வருமானத்தில் 2.5 ஜகாத் கொடுக்க வேண்டுமா? அல்லது செலவு போக மீதமுள்ளதில் 2.5 கொடுக்க வேண்டுமா?

பதில்

திருக்குர்ஆன் (9:103, 51:19, 70:24 ஆகிய வசனங்களில் சொத்துக்களுக்கு ஜகாத் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தேவைக்கு மேல் மீதமுள்ளதற்குத் தான் ஜகாத் என்று குர்ஆனிலும், ஹதீஸிலும் கூறப்படவில்லை.

செலவு போக மீதமுள்ளதற்குத் தான் ஜகாத் என்ற கருத்தைச் சில அறிஞர்கள் கூறினாலும் அது ஏற்கத்தக்கதல்ல.

தேவைக்கு மேல் மீதமானவை என்பது குழப்பமான கருத்துடையதாகும். தேவைக்கு மேல் என்றால் ஒரு நாள் தேவையா? ஒரு மாதத் தேவையா? ஒரு வருடத் தேவையா? என்பது பற்றி பலரும் பலவாறாக விளக்கம் கூறிக் கொண்டு ஜகாத் கொடுக்காமல் இருக்கும் தந்திரத்தை இதன் மூலம் கையாள்வார்கள்.

ஒருவன் ஒரு கோடி ரூபாய்க்கு ஒரு வீட்டை வாங்கிக் கொண்டு இது என் தேவைக்கு உரியது என்று கூறலாம். இன்னும் தனது தோட்டம், துரவு, கார், பங்களா ஆகிய அனைத்துமே தனது தேவைக்கு உரியது என்று வாதிட இந்தக் கருத்து வழி வகுக்கும்.

கிலோ கணக்கில் தங்க ஆபரணங்களை அணிந்து கொண்டு கணவனை மகிழ்விக்கும் தேவைக்காக இதை வைத்துள்ளேன் என்று பெண்கள் கூறலாம்.

மொத்தத்தில் ஜகாத் என்பதே நடைமுறையில் இல்லாமல் போய் விடும்.

صحيح البخاري

1463 – حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، قَالَ: سَمِعْتُ سُلَيْمَانَ بْنَ يَسَارٍ، عَنْ عِرَاكِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَ عَلَى المُسْلِمِ فِي فَرَسِهِ وَغُلاَمِهِ صَدَقَةٌ»

ஒருவருக்குச் சொந்தமான குதிரை, சொந்தமான அடிமை ஆகியவற்றுக்காக ஜகாத் இல்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

(நூல் : புகாரி 1463, 1464)

மார்ககத்தில் விதிவிலக்கு இருந்தால் இது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தி இருப்பார்கள். ஒருவருக்கு வரும் வருவாய், அவரது சொத்துக்கள், இருப்புக்கள் ஆகிய அனைத்துக்கும் ஜகாத் உண்டு. இதில் ஏழைகள் அடங்கிவிடக் கூடாது என்பதற்காக ஒரு எல்லைக் கோட்டை இஸ்லாம் வகுத்துள்ளது.

ஐந்து ஊகியா வெள்ளி வைத்து இருப்பவர் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று ஹதீஸ் கூறுகிறது. ஒரு ஊகியா என்பது 40 திர்ஹமாகும். அன்றைய ஒரு திர்ஹத்தின் இன்றைய எடை 3.6 கிராம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 200 திர்ஹத்தின் எடை 720 கிராம் ஆகும். அதாவது இன்றைய மதிப்பில் 50 முதல் 55 ஆயிரம் ரூபாய் உள்ளவருக்கு ஜகாத் கடமையாகி விடும்.

ஒருவரிடம் 40 ஆடுகள் அல்லது ஐந்து ஒட்டகங்கள் இருந்தால் அவர் செல்வந்தராவார் என்று இஸ்லாம் வரையரை செய்துள்ளது. இந்த வரையறை மூலம் ஏழைகள் ஜகாத் கொடுக்கும் நிலை ஏற்படாது.

ஒருவர் மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார். அவரிடம் வேறு எந்த இருப்பும் இல்லை. அவர் ஜகாத் கொடுக்க மாட்டார்.

சிறிது சிறிதாக மிச்சம் பிடித்து 720 கிராம் வெள்ளிக்கான அளவுக்கு அவரிடம் பணமோ, பண்டபாத்திரங்களோ, இதர சொத்துக்களோ சேர்ந்து விட்டது என்றால் அந்த 720 கிராமுக்கும் அதன் பின் அவருக்கு வரும் ஒவ்வொரு ரூபாய்க்கும் ஜகாத் கொடுக்க வேண்டும்.

720 கிராம் வெள்ளிக்கும் கீழ் கையிருப்பின் மதிப்பு இருந்தால் அப்போது ஜகாத் கடமை இல்லை.

ஒருவர் மாதம் மூவாயிரம் சம்பளம் வாங்குகிறார். ஆனால் அவரிடம் ஏற்கனவே 720 கிராம் வெள்ளியின் மதிப்புக்கு பணம் உள்ளது என்றால் இவர் 720 கிராமுக்கும் ஜகாத் கொடுக்க வேண்டும். அந்த மூன்றாயிரம் ரூபாய்க்கும் ஜகாத் கொடுக்க வேண்டும்.

எப்போதெல்லாம் அவருக்கு செல்வம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் ஜகாத் கடமையாகி விடும்.

மௌலவி முஜாஹித் ஜக்காத் தொடர்பாக சொல்லும் கருத்து ஏற்புடையதா 

சமகால நிகழ்வுகளும் வாஃப்ஸ் அப் கேள்வி பதில்களும்

உரை: பீ.ஜைனுல் ஆபிதீன்’

12/02/2023

 

ஒரு தடவை ஜகாத் கொடுத்த பொருளுக்கு வருடா வருடம் மீண்டும் ஜகாத் கொடுக்க வேண்டுமா?

என்ற தலைப்பில் பீஜே அவர்களுக்கும், மவலவி நூர் முஹம்மது பாகவி அவர்களுக்கும் 10&11-02-2017 அன்று மதுரையில் பகிரங்க விவாதம் நடைபெற்றது.

விவாத முடிவில் பார்வையாளர்கள் இரு அறிஞர்களிடமும் கேள்வி கேட்கும் நடைமுறை இந்த விவாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த விவாதத்தை 17 பாகங்களாக இங்கே வெளியிடுகிறோம். பாகம் ஒன்று இதை டவுன்லோடு செய்ய பாகம் இரண்டு இதை டவுன்லோடு செய்ய பாகம் மூன்று இதை டவுன்லோடு செய்ய பாகம் நான்கு இதை டவுன்லோடு செய்ய பாகம் ஐந்து இதை டவுன்லோடு செய்ய பாகம் ஆறு இதை டவுன்லோடு செய்ய பாகம் ஏழு இதை டவுன்லோடு செய்ய பாகம் எட்டு இதை டவுன்லோடு செய்ய பாகம் ஒன்பது இதை டவுன்லோடு செய்ய பாகம் பத்து இதை டவுன்லோடு செய்ய பாகம் பதினொன்று இதை டவுன்லோடு செய்ய பாகம் பன்னிரண்டு இதை டவுன்லோடு செய்ய பாகம் பதிமூன்று இதை டவுன்லோடு செய்ய பாகம் பதினான்கு இதை டவுன்லோடு செய்ய பாகம் பதினைந்து இதை டவுன்லோடு செய்ய பாகம் பதினாறு இதை டவுன்லோடு செய்ய பாகம் பதினேழு இதை டவுன்லோடு செய்ய

More Articles …