Sidebar

18
Thu, Jun
சமீபத்திய செய்திகள்

தாமதமாக வருபவர் ரக்அத்தை எப்போது அடைய முடியும்?

ஜமாஅத் தொழுகைக்கு தாமதமாக வருபவர் இமாம் எந்த நிலையில் இருக்கும் போது சேர்ந்தால் அவருக்கு ரக்அத் கிடைக்கும்?

தொழுகையில் ருகூஃவிலிருந்து இமாம் நிமிர்வதற்கு முன்பு இணைந்துவிட்டால் அந்த ரக்அத்தை அடைந்து விடலாம்.

இக்கருத்தில் பலவீனமான நபிமொழிகள் இருந்தாலும் பின்வரும் நபிமொழி ஆதாரப்பூர்வமானதாகும்.

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ قَالَ حَدَّثَنَا هَمَّامٌ عَنْ الْأَعْلَمِ وَهُوَ زِيَادٌ عَنْ الْحَسَنِ عَنْ أَبِي بَكْرَةَ أَنَّهُ انْتَهَى إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ رَاكِعٌ فَرَكَعَ قَبْلَ أَنْ يَصِلَ إِلَى الصَّفِّ فَذَكَرَ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ زَادَكَ اللَّهُ حِرْصًا وَلَا تَعُدْ رواه البخاري

அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ருகூஉ செய்து கொண்டிருந்த போது நான் சென்று வரிசையில் சேர்வதற்கு முன்பே ருகூஉ செய்து விட்டேன். இது குறித்து நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் உனது ஆர்வத்தை அதிகப்படுத்துவானாக! இனிமேல் அப்படிச் செய்யாதீர் என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 783

இந்தச் செய்தியில் ருகூவை அடைந்தால் அந்த ரக்அத்தை அடைந்து விடலாம் என்பதற்கான ஆதாரம் அடங்கியுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்திக் கொண்டிருக்கும் போது ருகூஃவில் இருக்கிறார்கள். அப்போது, அபூ பக்ரா (ரலி) அவர்கள் வேகமாக வந்து ஸஃப்பில் இணைவதற்கு முன்பாகவே ருகூஃவு செய்துவிட்டு பின்பு ஸஃப்பில் வந்து இணைந்திருக்கிறார்.

ருகூஃவில் இணைந்து விட்டால் ரக்அத் கிடைத்துவிடும் என்பதால் தான் அவர் இவ்வாறு செய்துள்ளார் என்பது தெரிகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர் வேகமாக ஓடி வந்ததைத் தான் இவ்வாறு இனிமேல் செய்யாதே என்று சொல்கின்றார்கள்.

மேலும், ருகூஃவில் இணைந்த அவருக்கு ரக்அத் தவறியிருக்குமேயானால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த ரக்அத்தை எழுந்து தொழக் கட்டளையிட்டிருப்பார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்அவ்வாறு செய்யவில்லை என்பதிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதற்கு ஒப்புதல் வழங்கிவிட்டார்கள் என்பதும் தெரிகிறது.

அல்லாஹ் உனது ஆர்வத்தை அதிகப்படுத்துவானாக! என்று அவருக்கு அல்லாஹ்வின் தூதர் கூறியதிலிருந்து அவர் ரக்அத்தை அடைவதற்காக வேகமாக வருகிற ஆர்வத்தைப் பற்றித்தான் இந்தச் செய்தி பேசுகிறது என்று புரிந்து கொள்ளலாம்.

ருகூவை அடைந்தால் அந்த ரக்அத் நமக்குக் கிடைத்துவிடும் என்பது இந்தச் செய்தியிலிருந்து தெளிவாகிறது.

இமாம் சப்தமிட்டு ஓதும் தொழுகையில் ஃபாத்திஹா அத்தியாயம் ஓத வேண்டுமா?

தொழுகையில் அல்ஹம்து அத்தியாயம் அவசியம் ஓத வேண்டும் என்று நாம் அறிந்து வைத்துள்ளோம். ஆனால் இமாம் சப்தமிட்டு ஓதும் ரக்அத்களில் மட்டும் அதைச் செவி தாழ்த்திக் கேட்க வேண்டும் என்றும், எதுவும் ஓதக் கூடாது என்றும் நாம் கூறுகிறோம். இது சரியல்ல. இமாம் சப்தமிட்டு ஓதும் ரக்அத்களிலும் அல்ஹம்து அத்தியாயம் அவசியம் ஓத வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். இது பற்றி விளக்கவும்.

ஜவாஹிரா, காயல்பட்டிணம்.

இமாமைப் பின்பற்றி தொழுபவர் இமாம் சப்தமிட்டு ஓதும் ரக்அத்களிலும் அல்ஹம்து சூராவைக் கண்டிப்பாக ஓத வேண்டும் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் வந்துள்ளன. சிலர் அந்த ஹதீஸ்களை அடிப்படையாக வைத்து இமாம் சப்தமிட்டு ஓதும் ரக்அத்களிலும் கண்டிப்பாக அல்ஹம்து அத்தியாயத்தை ஓத வேண்டும் என்று கூறுகின்றனர்.

தங்களுக்குச் சான்றாக அவர்கள் எடுத்துவைக்கும் ஆதாரங்களை முதலில் காண்போம்.

حَدَّثَنَا هَنَّادٌ حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَقَ عَنْ مَكْحُولٍ عَنْ مَحْمُودِ بْنِ الرَّبِيعِ عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ قَالَ صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الصُّبْحَ فَثَقُلَتْ عَلَيْهِ الْقِرَاءَةُ فَلَمَّا انْصَرَفَ قَالَ إِنِّي أَرَاكُمْ تَقْرَءُونَ وَرَاءَ إِمَامِكُمْ قَالَ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ إِي وَاللَّهِ قَالَ فَلَا تَفْعَلُوا إِلَّا بِأُمِّ الْقُرْآنِ فَإِنَّهُ لَا صَلَاةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِهَا  رواه الترمدي

உப்பாதா பின் ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சுபுஹ் தொழுகையை நடத்தினார்கள். கிராஅத் ஓதுவது அவர்களுக்குச் சிரமமாகி விட்டது. அவர்கள் தொழுகையை முடித்ததும் “நீங்கள் உங்களுடைய இமாமிற்குப் பின்னால் ஓதுகிறவர்களாக நான் காண்கிறேனே”  என்று கேட்டார்கள். “அல்லாஹ்வின் தூதரே அல்லாஹ்வின் மீது சத்தியமாக ஆம் (நாங்கள் ஓதுகிறோம்)“ என்று நாங்கள் கூறினோம்.  அதற்கு நபியவர்கள் “அவ்வாறு செய்யாதீர்கள் என்றாலும் உம்முல் குர்ஆன் (அல்ஹம்து சூராவை மட்டும் ஓதிக் கொள்ளுங்கள்). ஏனென்றால் யார் அதை ஓதவில்லையோ அவருக்குத் தொழுகை இல்லை“ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : திர்மிதி 286

மேற்கண்ட ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு இமாம் சப்தமிட்டு ஓதும் ரக்அத்களிலும் மஃமூம்கள் அல்ஹம்து அத்தியாயத்தை ஓத வேண்டும் என்று சிலர் வாதிடுகின்றனர். ஒரு ஹதீஸை ஆதாரமாக வைத்து வாதிடுவது என்றால் அந்த ஹதீஸ் என்ன சொல்கிறதோ அதை முழுமையாக அமுல்படுத்த வேண்டும். ஆனால் இந்த ஹதீஸை ஆதாரமாகக் காட்டி விட்டு இந்த ஹதீஸ் சொல்லாத சட்டத்தைத் தான் இவர்கள் கூறுகிறார்கள். இந்த ஹதீஸ் சொல்லக் கூடிய கருத்தை மறுக்கவும் செய்கிறார்கள்.

இந்த ஹதீஸ் சொல்வது என்ன? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இமாமாக நின்று ஓதும் போது பின்னால் நின்றவர்கள் சப்தமிட்டு ஓதினார்கள் என்ற கருத்தைத் தான் இந்த ஹதீஸ் தருகிறது. இதன் காரணமாகத் தான் நபியவர்களுக்கு கிராஅத் ஓதுவது மிகவும் சிரமமாக ஆகியிருக்கிறது.

இந்த ஹதீஸை ஆதாரம் காட்டுபவர்கள் இமாம் அல்ஹம்து சூராவை ஓதும் போது பின்பற்றித் தொழுபவர்கள் சப்தமிட்டு ஓத அனுமதிக்க வேண்டும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்வதில்லை. அவர்களே இந்த ஹதீஸைப் பின்பற்றவில்லை என்பதை இதில் இருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.

நபியவர்கள் ஓதிக் கொண்டிருக்கும் போது தான் பின்னால் நின்ற சஹாபாக்கள் அவர்களோடு சேர்ந்து சப்தமிட்டு ஓதினார்கள் என்பதைப் பின்வரும் செய்திகளிலிருந்தும் மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

மேற்கண்ட செய்தியை அறிவித்த உப்பாதா பின் ஸாமித் (ரலி) அவர்கள் தான் பின்வரும் சம்பவத்தில் இடம்பெறுகிறார்கள்.

سنن الدارقطني

 12 – حدثنا أبو محمد بن صاعد ثنا محمد بن زنجويه وأبو زرعة عبد الرحمن بن عمرو الدمشقي واللفظ له قالا نا محمد بن المبارك الصوري ثنا : صدقة بن خالد ثنا زيد بن واقد عن حرام بن حكيم ومكحول عن نافع بن محمود بن الربيع كذا قال إنه سمع عبادة بن الصامت يقرأ بأم القرآن وأبو نعيم يجهر بالقراءة فقلت رأيتك صنعت في صلاتك شيئا قال وما ذاك قال سمعتك تقرأ بأم القرآن وأبو نعيم يجهر بالقراءة قال نعم صلى بنا رسول الله صلى الله عليه و سلم بعض الصلوات التي يجهر فيها بالقراءة فلما انصرف قال منكم من أحد يقرأ شيئا من القرآن إذا جهرت بالقراءة قلنا نعم يا رسول الله فقال رسول الله صلى الله عليه و سلم وأنا أقول مالي أنازع القرآن فلا يقرأن أحد منكم شيئا من القرآن إذا جهرت بالقراءة إلا بأم القرآن هذا إسناد حسن ورجاله ثقات كلهم ورواه يحيى البابلتي عن صدقة عن زيد بن واقد عن عثمان بن أبي سودة عن نافع بن محمود

அபூ நுஐம் அவர்கள் சப்தமிட்டு கிராஅத் ஓதும் போது உப்பாதா பின் சாமித் அவர்கள் உம்முல் குர்ஆன் (அல்ஹம்து சூராவை சப்தமிட்டு ஓதுவதை) நான் செவியேற்றேன். நீங்கள் உங்கள் தொழுகையில் ஒன்றைச் செய்ததை நான் கண்டேனே என்று கூறினேன். அது என்ன? என்று அவர் கேட்டார். அபூ நுஐம் சப்தமிட்டு ஓதும்போது நீங்கள் உம்முல் குர்ஆன் (அல்ஹம்து சூராவை சப்தமிட்டு) ஓதுவதை நான் செவியேற்றேன்“ என்று கூறினார். அதற்கவர் “ஆம், நபியவர்கள் சப்தமிட்டு ஓதும் சில தொழுகைகளை எங்களுக்குத் தொழுவித்தார்கள் அவர்கள் தொழுது முடித்ததும் ”நான் சப்தமிட்டு ஓதும் போது உங்களில் யாராவது குர்ஆனிலிருந்து எதையேனும் ஓதுகிறீர்களா? எனக் கேட்டார்கள்.  நாங்கள் “ஆம் அல்லாஹ்வின் தூதரே“ என்று கூறினோம். அதற்கு நபியவர்கள் “நான் (தொழும் போது) குர்ஆனிலே நான் தடுமாறுகிறேனே! எனக்கு என்ன நேர்ந்தது? என்று (எனக்குள்) எண்ணிக் கொண்டேன். நான் சப்தமிட்டு கிராஅத் ஓதும் போது உம்முல் குர்ஆனைத் தவிர குர்ஆனிலிருந்து வேறு எதையும் உங்களில் எவரும் ஓத வேண்டாம்“ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : மஹ்மூத் பின் ரபீஃ

நூல் : தாரகுத்னீ (12) பாகம் : 1, பக்கம் : 320

இமாம் சப்தமிட்டு ஓதும் போது அவருடன் அல்ஹம்து சூராவை மட்டும் சப்தமிட்டு ஓத வேண்டும் என்பதை மேற்கண்ட செய்தி வலியுறுத்துகிறது.

இப்படி வாதிடுகிறார்கள்.

இதை ஆதாரமாகக் காட்டுவோர் இமாம் சப்தமிட்டு ஓதும் ரக்அத்களில் பின்பற்றித் தொழும் மக்களும் சப்தமிட்டு அல்ஹம்து அத்தியாயத்தை ஓத வேண்டும் என்று தான் கூற வேண்டும்.

ஆனால் அவ்வாறு கூறாமல் அல்ஹம்து அத்தியாயத்தை மனதுக்குள் ஓத வேண்டும் என்று கூறுகின்றனர்.

அதாவது எதை ஆதாரம் என்று காட்டுகிறார்களோ அது ஆதாரம் இல்லை என்று இன்னொரு வகையில் காட்டிக் கொள்கிறார்கள். இதிலிருந்தே அவர்கள் இந்த ஹதீஸை மறுக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

இமாம் சப்தமிட்டு ஓதும் ரக்அத்களில் பின்பற்றித் தொழுபவர்கள் மனதிற்குள் ஓதிக் கொள்ள வேண்டும் என்றும் அறிவிப்புகள் வந்துள்ளன.

صحيح ابن حبان –

 1844 – أخبرنا أبو يعلى قال : حدثنا مخلد بن أبي زميل قال : حدثنا عبيد الله بن عمرو عن أيوب عن أبي قلابة   عن أنس بن مالك : أن النبي صلى الله عليه و سلم صلى بأصحابه فلما قضى صلاته أقبل عليهم بوجهه فقال : ( أتقرؤون في صلاتكم خلف الإمام والإمام يقرأ ) ؟ فسكتوا فقالها ثلاث مرات فقال قائل أو قائلون : إنا لنفعل قال : ( فلا تفعلوا وليقرأ أحدكم بفاتحة الكتاب في نفسه قال شعيب الأرنؤوط : إسناده صحيح

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்முடைய தோழர்களுக்கு தொழுகை நடத்தினார்கள். தொழுகையை நிறைவேற்றியதும் மக்களை நோக்கி “இமாம் ஓதிக் கொண்டிருக்கும் நிலையில் நீங்கள் இமாமிற்குப் பின்னால் உஙகள் தொழுகையில் ஓதுகிறீர்களா?” என்று கேட்டார்கள். மக்கள் மவுனமாக இருந்தார்கள். இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூன்று தடவை கேட்டதும் நபித்தோழர்கள் ”நாங்கள் அவ்வாறு செய்கிறோம்“ என்று கூறினார்கள். அதற்கு நபியவர்கள் “அவ்வாறு செய்யாதீர்க்ள. உங்களில் ஒருவர் “அல்ஹம்து சூராவை“ தன்னுடைய மனதிற்குள் ஓதிக் கொள்ளட்டும்“ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்கள் : இப்னு ஹிப்பான் (1844) பாகம் : 5 பக்கம் : 152)

அல் முஃஜமுல் அவ்ஸத் (2680 பாகம் : 3 பக்கம் : 124)

முஸ்னத் அபீ யஃலா (2805 பாகம் : 5 பக்கம் : 187)

அஸ்ஸூனனுல் குப்ரா (3040 பாகம் : 2 பக்கம் : 166)

அல்கிராஅத்து கல்ஃபல் இமாம் புகாரி (156 பாகம் : 1 பக்கம் : 161)

இந்த ஹதீஸ் இமாம் சப்தமிட்டு ஓதும் போது அவருடன் சேர்ந்து  அல்ஹம்து சூராவை மட்டும் மனதிற்குள் ஓதிக் கொள்ளலாம் என்ற கருத்தைத் தருகிறது.

மேற்கண்ட செய்தியில் இருந்து நாம் அறிந்து கொள்வது என்ன?

இமாம் சப்தமிட்டு ஓதும் ரக்அத்களில் பின்னால் நிற்பவர்கள் சப்தமிட்டு ஓத வேண்டும் என்று முதல் ஹதீஸும்

சப்தமில்லாமல் ஓத வேண்டும் என்று இரண்டாவது ஹதீஸும்

கூறுகின்றன.

இதை ஆதாரமாகக் காட்டுவோர் இந்த ஹதீஸ்களுக்கு மத்தியில் உள்ள முரண்பாட்டுக்கு ஒரு விளக்கமும் அளிப்பதில்லை. இரண்டும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களாக இருந்தும் சப்தமிட்டு ஓத வேண்டும் என்ற கருத்தில் அமைந்த ஹதீஸை ஒரு காரணமும் சொல்லாமல் நிராகரித்து விடுகின்றனர்.

இந்த இரு ஹதீஸ்களைப் பொருத்தவரை நமது நிலைபாடு என்ன?

இந்த இரண்டு ஹதீஸ்களும் ஆதாரப்பூர்வமானவையே. இமாம் சப்தமிட்டு ஓதும் ரக்அத்களில் பின்பற்றித் தொழக் கூடியவர்கள் சப்தமிட்டு அலஹம்து அத்தியாயம் ஓதலாம் என்ற நிலையும், சப்தமில்லாமல் அல்ஹம்து அத்தியாயத்தை ஓத வேண்டும் என்ற நிலையும் இருவேறு காலகட்டத்தில் நடைமுறையில் இருந்துள்ளன. ஆனால் இந்த இரண்டுமே மாற்றப்பட்டு விட்டன. எனவே இவ்விரண்டையும் கடைப்பிடிக்க அவசியம் இல்லை என்பதுதான் நமது நிலைபாடு.

இதைப் பின்வரும் ஆதாரங்களிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ حَدَّثَنَا مَعْمَرٌ عَنِ الزُّهْرِيِّ قَالَ سَمِعْتُ ابْنَ أُكَيْمَةَ يُحَدِّثُ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى صَلَاةً جَهَرَ فِيهَا بِالْقِرَاءَةِ ثُمَّ أَقْبَلَ عَلَى النَّاسِ بَعْدَمَا سَلَّمَ فَقَالَ هَلْ قَرَأَ مِنْكُمْ أَحَدٌ مَعِي آنِفًا قَالُوا نَعَمْ يَا رَسُولَ اللَّهِ قَالَ إِنِّي أَقُولُ مَا لِي أُنَازَعُ الْقُرْآنَ فَانْتَهَى النَّاسُ عَنْ الْقِرَاءَةِ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيمَا يَجْهَرُ بِهِ مِنْ الْقِرَاءَةِ حِينَ سَمِعُوا ذَلِكَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

تعليق شعيب الأرنؤوط : إسناده صحيح رجاله ثقات رجال الشيخين غير ابن أكيمة

அபூ ஹூரைரா (ரலி) அவர்கள அறிவிக்கிறார்கள் :

நபியவர்கள் சப்தமாக கிராஅத் ஓதி ஒரு தொழுகையைத் தொழ வைத்தார்கள். பிறகு ஸலாம் கொடுத்த பிறகு மக்களை முன்னோக்கி ”சற்று முன்னர் உங்களில் எவரும் என்னுடன் ஓதினீர்களா?” என்று கேடடார்கள். அதற்கவர்கள் “ஆம் அல்லாஹ்வின் தூதரே“ என்று கூறினார்கள். அதற்கு நபியவர்கள் “நான் குர்ஆனிலே நான் தடுமாறுகிறேனே! எனக்கு என்ன நேர்ந்தது? என்று எண்ணிக் கொண்டேன்“ என்று கூறினார்கள். நபியவர்களிடமிருந்து இதைக் கேட்ட மாத்திரத்தில் நபியவர்கள் சப்தமிட்டு ஓதும் ரக்அத்களில் மக்கள் நபியவர்களுடன் ஓதுவதை நிறுத்திக் கொண்டார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹூரைரா (ரலி)

நூல் : அஹ்மத்

حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ وَأَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ الْأُمَوِيُّ وَاللَّفْظُ لِأَبِي كَامِلٍ قَالُوا حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ قَتَادَةَ عَنْ يُونُسَ بْنِ جُبَيْرٍ عَنْ حِطَّانَ بْنِ عَبْدِ اللَّهِ الرَّقَاشِيِّ قَالَ صَلَّيْتُ مَعَ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ صَلَاةً فَلَمَّا كَانَ عِنْدَ الْقَعْدَةِ قَالَ رَجُلٌ مِنْ الْقَوْمِ أُقِرَّتْ الصَّلَاةُ بِالْبِرِّ وَالزَّكَاةِ قَالَ فَلَمَّا قَضَى أَبُو مُوسَى الصَّلَاةَ وَسَلَّمَ انْصَرَفَ فَقَالَ أَيُّكُمْ الْقَائِلُ كَلِمَةَ كَذَا وَكَذَا قَالَ فَأَرَمَّ الْقَوْمُ ثُمَّ قَالَ أَيُّكُمْ الْقَائِلُ كَلِمَةَ كَذَا وَكَذَا فَأَرَمَّ الْقَوْمُ فَقَالَ لَعَلَّكَ يَا حِطَّانُ قُلْتَهَا قَالَ مَا قُلْتُهَا وَلَقَدْ رَهِبْتُ أَنْ تَبْكَعَنِي بِهَا فَقَالَ رَجُلٌ مِنْ الْقَوْمِ أَنَا قُلْتُهَا وَلَمْ أُرِدْ بِهَا إِلَّا الْخَيْرَ فَقَالَ أَبُو مُوسَى أَمَا تَعْلَمُونَ كَيْفَ تَقُولُونَ فِي صَلَاتِكُمْ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطَبَنَا فَبَيَّنَ لَنَا سُنَّتَنَا وَعَلَّمَنَا صَلَاتَنَا فَقَالَ إِذَا صَلَّيْتُمْ فَأَقِيمُوا صُفُوفَكُمْ ثُمَّ لْيَؤُمَّكُمْ أَحَدُكُمْ فَإِذَا كَبَّرَ فَكَبِّرُوا وَإِذْ قَالَ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ فَقُولُوا آمِينَ يُجِبْكُمْ اللَّهُ فَإِذَا كَبَّرَ وَرَكَعَ فَكَبِّرُوا وَارْكَعُوا فَإِنَّ الْإِمَامَ يَرْكَعُ قَبْلَكُمْ وَيَرْفَعُ قَبْلَكُمْ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَتِلْكَ بِتِلْكَ وَإِذَا قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ فَقُولُوا اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ يَسْمَعُ اللَّهُ لَكُمْ فَإِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى قَالَ عَلَى لِسَانِ نَبِيِّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ وَإِذَا كَبَّرَ وَسَجَدَ فَكَبِّرُوا وَاسْجُدُوا فَإِنَّ الْإِمَامَ يَسْجُدُ قَبْلَكُمْ وَيَرْفَعُ قَبْلَكُمْ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَتِلْكَ بِتِلْكَ وَإِذَا كَانَ عِنْدَ الْقَعْدَةِ فَلْيَكُنْ مِنْ أَوَّلِ قَوْلِ أَحَدِكُمْ التَّحِيَّاتُ الطَّيِّبَاتُ الصَّلَوَاتُ لِلَّهِ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ ح و حَدَّثَنَا أَبُو غَسَّانَ الْمِسْمَعِيُّ حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ حَدَّثَنَا أَبِي ح و حَدَّثَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ أَخْبَرَنَا جَرِيرٌ عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ كُلُّ هَؤُلَاءِ عَنْ قَتَادَةَ فِي هَذَا الْإِسْنَادِ بِمِثْلِهِ وَفِي حَدِيثِ جَرِيرٍ عَنْ سُلَيْمَانَ عَنْ قَتَادَةَ مِنْ الزِّيَادَةِ وَإِذَا قَرَأَ فَأَنْصِتُوا وَلَيْسَ فِي حَدِيثِ أَحَدٍ مِنْهُمْ فَإِنَّ اللَّهَ قَالَ عَلَى لِسَانِ نَبِيِّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ إِلَّا فِي رِوَايَةِ أَبِي كَامِلٍ وَحْدَهُ عَنْ أَبِي عَوَانَةَ قَالَ أَبُو إِسْحَقَ قَالَ أَبُو بَكْرِ ابْنُ أُخْتِ أَبِي النَّضْرِ فِي هَذَا الْحَدِيثِ فَقَالَ مُسْلِمٌ تُرِيدُ أَحْفَظَ مِنْ سُلَيْمَانَ فَقَالَ لَهُ أَبُو بَكْرٍ فَحَدِيثُ أَبِي هُرَيْرَةَ فَقَالَ هُوَ صَحِيحٌ يَعْنِي وَإِذَا قَرَأَ فَأَنْصِتُوا فَقَالَ هُوَ عِنْدِي صَحِيحٌ فَقَالَ لِمَ لَمْ تَضَعْهُ هَا هُنَا قَالَ لَيْسَ كُلُّ شَيْءٍ عِنْدِي صَحِيحٍ وَضَعْتُهُ هَا هُنَا إِنَّمَا وَضَعْتُ هَا هُنَا مَا أَجْمَعُوا عَلَيْهِ حَدَّثَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ وَابْنُ أَبِي عُمَرَ عَنْ عَبْدِ الرَّزَّاقِ عَنْ مَعْمَرٍ عَنْ قَتَادَةَ بِهَذَا الْإِسْنَادِ وَقَالَ فِي الْحَدِيثِ فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ قَضَى عَلَى لِسَانِ نَبِيِّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ

இமாம் தகபீர் சொல்லும் போது நீங்களும் தக்பீர் சொல்லுங்கள். இமாம் கைரில் மக்லூபி அலைஹிம் என்று சொன்னால் நீங்கள் ஆமீன் சொல்லுங்கள். இமாம் தக்பீர் சொல்லி ருகூவு செய்யும் போது நீங்களும் தக்பீர் சொல்லி ருகூவு செய்யுங்கள். இமாம் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா எனக் கூறும் போது நீங்கள் ரப்பனா லகல் ஹம்து எனக் கூறுங்கள். ……….. இமாம் ஓதினால் நீங்கள் வாயை மூடி மவுனமாக இருங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம்

இமாம் செய்வதையே நாமும் செய்வது தான் அவரைப் பின்பற்றுதல் என்றாலும், சில விஷயங்களில் வேறு விதமாகச் செய்வது தான் பின்பற்றுதல் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வித்தியாசப்படுத்திக் காட்டுகிறார்கள்.

இமாம் கைரில் மக்லூபி அலைஹிம் வலள்லால்லீன் எனக் கூறினால் நாம் ஆமீன் கூறுவது தான் அதில்  பின்பறுவதாகும் எனவும், இமாம் ஓதினால் நாம் மவுனமாகி விடுவது தான் அதில் பின்பற்றுதலாகும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.

மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து இமாம் சப்தமிட்டு ஓதும் ரக்அத்துகளில் நாம் மவுனமாகத் தான் இருக்க வேண்டும் என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

அல்ஹம்து சூராவை இமாம் ஓதும் போது நாம் ஆமீன் கூறுவதே நாம் ஓதியதைப் போன்றதாகும்.

وَإِذَا قُرِئَ الْقُرْآَنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنْصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ [الأعراف/204(

குர்ஆன் ஓதப்படும் போது அதைச் செவிமடுங்கள்! வாய் மூடுங்கள்! நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள்!

திருக்குர்ஆன் 7:204

குர்ஆன் ஓதப்பட்டால் செவிதாழ்த்த வேண்டும் எனவும், மவுனமாக இருக்க வேண்டும் எனவும் திருக்குர்ஆன் தெளிவாகக் கட்டளை இடுகிறது. இதை நாம் தக்க முறையில் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வசனத்தை அர்த்தமுள்ளதாகவும் ஆக்க வேண்டும்.

நாம் கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். அப்போது ஒருவர் நம் அருகில் வந்து குர்ஆனை ஓதினால் நாம் அதைச் செவிதாழ்த்தி கேட்டு வாயை மூட வேண்டும் என்று புரிந்து கொள்ள முடியாது.

நாம் மேடையில் உரை நிகழ்த்திக் கொண்டு இருக்கிறோம். அப்போது நம் அருகில் ஒருவர் குர்ஆனை ஓதினால் நாம் பிரசங்கத்தை நிறுத்த வேண்டும் என்று புரிந்து கொள்ள முடியாது.

இப்படி புரிந்து கொண்டால் நாம் ஒரு வேலையும் செய்ய முடியாது. நாம் எந்த வேலையில் ஈடுபட்டிருந்தாலும் ஒருவர் வந்து குர்ஆனை ஓத ஆரம்பித்து விட்டால் நாம் பேச்சை நிறுத்திக் கொண்டு மவுனமாகி விட வேண்டும் என்ற கருத்தில் இவ்வசனம் அருளப்பட்டிருக்க முடியாது. அப்படி வைத்துக் கொண்டால் நாம் செய்யும் எந்த வேலையையும் ஒருவர் குர்ஆனை ஓதி தடுத்து நிறுத்தி விட முடியும்.

ஒருவர் தனக்காக, தன்னளவில் குர்ஆன் ஓதுவதை இவ்வசனம் குறிப்பிடவில்லை. தனக்காக மட்டுமில்லாமல் நமக்காகவும் சேர்த்து ஒருவர் குர்ஆன் ஓதும் நிலை மார்க்கத்தில் இருந்தால் அப்போது அதைக் கேட்க வேண்டும் என்று பொருள் கொண்டால் தான் இவ்வசனத்துக்குச் செயல் வடிவம் கொடுக்க முடியும்.

நமக்காக மற்றவர் குர்ஆன் ஓதும் நிலை ஜமாஅத் தொழுகையில் தான் உள்ளது. இமாம் சப்தமிட்டு ஓதுவது நாம் கேட்க வேண்டும் என்பதற்காகத் தான். நாம் செவிதாழ்த்திக் கேட்பது அவசியம் இல்லை என்றாலோ இமாம் தனக்காகவே ஓதிக் கொள்கிறார் என்றாலோ அவருக்கு சப்தமிட்டு ஓதும் அவசியம் இல்லை.

என்வே இவ்வசனம் தொழுகையில் நமக்காக இமாம் சப்தமிட்டு ஓதுவதைத் தான் குறிக்கும். பொதுவாக எப்போது குர்ஆன் ஓதினாலும் நாம் வாயை மூடிக் கொள்ள வேண்டும் என்ற கருத்தைத் தராது. விதண்டாவாதமாக யாராவது இப்படி சொல்வார்களானால் எப்போது குர்ஆன் ஓதினாலும் வாயை மூடி விட வேண்டும் என்பது தான் இதன் பொருள் என்று வாதிடுவார்களானால் அந்த வாதத்தின்படி பார்த்தாலும் இமாம் சப்தமிட்டு ஓதும் போது நாம் வாயை மூடிக் கொள்ள் வேண்டும் என்ற கருத்தும் அதனுள் அடங்கி விடும். இதற்கு என்ன பொருள் கொடுத்தாலும் இமாம் சப்தமிட்டு ஓதினால் நாம் வாயை மூட வேண்டும் என்பது உறுதியாகி விடும்.

மேலே நாம் எடுத்துக் காட்டிய இரண்டு ஹதீஸ்களின் கருத்தும் இவ்வசனத்துக்கு விளக்கமாக எடுத்துக் கொள்ளலாம்.

இந்த வசனத்தின் கட்டளைக்கு முரணில்லாமல் நடக்க வழி உள்ளதாகக் கூறி பின்வரும் ஹதீஸைச் சிலர் ஆதாரமாகக் காட்டுகின்றனர். இமாம் கிராஅத்தை நிறுத்தும் போது ஓதலாம் என்ற கருத்தில் வரக்கூடிய அந்தச் செய்தி மிக மிகப் பலவீனமானதாகும்.

سنن الدارقطني – (ج 1 / ص 320)

 15 – حدثنا محمد بن مخلد ثنا العباس بن محمد الدوري ثنا محمد بن عبد الوهاب ثنا محمد بن عبد الله بن عبيد بن عمير عن عمرو بن شعيب عن أبيه عن جده قال قال رسول الله صلى الله عليه و سلم : من صلى صلاة مكتوبة أو تطوعا فليقرأ فيها بأم الكتاب وسورة معها فإن انتهى إلى أم الكتاب فقد أجزى ومن صلى صلاة مع إمام يجهر فليقرأ بفاتحة الكتاب في بعض سكتاته فإن لم يفعل فصلاته خداج غير تمام محمد بن عبد الله بن عبيد بن عمير ضعيف

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

“யார் கடமையான அல்லது உபரியான தொழுகைகளைத் தொழுகிறாரோ அவர் அதிலே “உம்முல் கிதாப் (அல்ஹம்து சூராவை)யும், அதனுடைய வேறொரு சூராவையும் ஓதிக் கொள்ளட்டும். அல்ஹம்து சூராவுடன் நிறுத்திக் கொண்டாலும் அது அவருக்குப் போதுமானதாகும். இமாம் சப்தமிட்டு ஓதும் போது யார் அவருடன் ஒரு தொழுகையைத் தொழுகிறாரோ அவர் இமாம் நிறுத்துமிடங்களில் “அல்ஹம்து சூராவை” ஓதிக் கொள்ளட்டும். அவ்வாறு செய்யவில்லையென்றால் அவருடைய தொழுகை குறை உடையதாகும். முழுமையற்றதாகும்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி)

நூற்கள் : தாரகுத்னீ (15 பாகம் : 1 பக்கம் : 320)

ஹாகிம் ( 868 பாகம் : 1 பக்கம் 364)

அல்கிராஅத்து கல்ஃபல் இமாம்-  பைஹகி (143 பாகம் : 1 பக்கம் : 153)

மேற்கண்ட செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் “முஹம்மத் பின் அப்தில்லாஹ் பின் உபைத் பின் உமைர்“ என்ற அறிவிப்பாளர் இடம் பெறுகிறார். இந்தச் செய்தியை பதிவு செய்த இமாத் தாரகுத்னீ அவர்கள் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்கள். இமாம் பைஹகீ அவர்களும் இவரைப் பலவீனமானவர் என்ற கூறியுள்ளார்கள். எனவே இது ஆதாரத்திற்கு தகுதியற்ற பலவீனமான செய்தியாகும்.

இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றலாமா?

இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றுதல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்தித்திராத, சந்திக்க முடியாத பிரச்சனையாகும். ஏனெனில்  நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இணைகற்பித்துக் கொண்டிருந்தவர்கள் தான் அதிலிருந்து விடுபட்டு முஸ்லிம்களானார்கள். இதனால் முஸ்லிம் சமுதாயத்துக்குள் இணைவைப்போர் என்று ஒரு சாரார் இருக்கவில்லை. இணைவைக்கும் செயலும் இருக்கவில்லை. அதாவது இணை வைக்காமல் இருந்தால் தான் முஸ்லிம் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்து நிலைமை.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் சில கிராமவாசிகள் நம்ப வேண்டியவைகளைச் சரியாக நம்பாமல் முஸ்லிம்கள் பட்டியலில் இருந்தாலும் அவர்கள் தொழுகைக்குத் தலைமை தாங்கும் பிரச்சனை எழவில்லை. எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இந்தக் கேள்வியே எழவில்லை.

ஆனால் இஸ்லாத்தை விளங்கிப் பின்பற்றாமல் பரம்பரை அடிப்படையில் முஸ்லிம்கள் உருவான பிறகு அடிப்படைக் கொள்கை தெரியாத ஒரு சமுதாயம் பிற்காலத்தில் முஸ்லிம்களுக்குள் கலந்தது. அவர்களிடம் இணைவைப்பும் நுழைந்தது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப் பிறகே முஸ்லிம் சமுதாயத்தில் இணைகற்பிப்பவர்கள் உருவானதால் இணைகற்பிக்கும் இமாமைப் பின்பற்றலாம் என்றோ, பின்பற்றக் கூடாது என்றோ நேரடியாக ஆதாரம் இருக்க முடியாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இல்லாத விஷயங்கள் பிற்காலத்தில் தோன்றினால் அதற்கு நேரடி ஆதாரம் இருக்காது என்றாலும் எவ்வாறு முடிவு செய்வது என்ற அடிப்படை நிச்சயமாக இருக்கும். ஏனெனில் இது போன்ற நிலை ஏற்படும் என்று இறைவனுக்குத் தெரியும். எனவே பிற்காலத்தவர்கள் அந்தப் பிரச்சனையைச் சந்திக்கும் போது எவ்வாறு முடிவு செய்வது என்பதற்கு அடிப்படை உள்ளதா என்ற வகையில் தான் இதை அணுக வேண்டும்.

இதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு இந்தப் பிரச்சனையை நாம் ஆராய வேண்டும்.

ما كان للمشركين أن يعمروا مساجد الله شاهدين على أنفسهم بالكفر أولئك حبطت أعمالهم وفي النار هم خالدون(17)9

இணைகற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு,தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்.

திருக்குர்ஆன் 9:17

இணைவைக்கும் இமாமைப் பின்பற்றுவது குறித்து நாம் என்ன நிலை எடுக்க வேண்டும் என்பதற்கு இவ்வசனம் வழிகாட்டுகிறது.

அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போர் பள்ளிவாசலை நிர்வகிக்கக் கூடாது என்று இவ்வசனம் கூறுகிறது.

அன்றைய காலத்தில் பள்ளிவாசல்கள் கீற்றுக் கூறைகள் தான். அதில் நிர்வாகம் என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை. வணக்க வழிபாடுகளுக்குத் தலைமை ஏற்பது மட்டுமே அன்று இருந்த ஒரே நிர்வாகம். இணைகற்பிப்போர் பள்ளியை நிர்வகிக்கக் கூடாது என்றால் அதன் தலைமைப் பொறுப்பு அவர்களிடம் இருக்கக் கூடாது என்பது தான் கருத்தாக இருக்க முடியும். தொழுகைக்குத் தலைமை தாங்கும் பொறுப்பைத் தான் இது முதன்மையாக எடுத்துக் கொள்ளும்.

எனவே அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பவர் இமாமாக இருக்கக் கூடாது என்பது தெளிவாகத் தெரிகின்றது. அவர்களின் அமல்கள் அழிந்து விட்டன என்று அதைத் தொடர்ந்து கூறப்படுவதில் இருந்து அமல்களில் தலைமை தாங்குவதைத் தான் இது குறிக்கிறது என்பது உறுதியாகும்.

இன்னும் சொல்லப்போனால் வெள்ளை அடித்தல், கட்டுமானப் பணி மேற்கொள்ளுதல், மின் இணைப்பு பணி செய்தல், பராமரித்தல் போன்றவை இரண்டாம் பட்சமானது தான். அதற்கான வசதிகள் இல்லாவிட்டால் அதை விட்டுவிடலாம். ஆனால் வணக்க வழிபாடுகளை பள்ளிவாசல்களில் நிறுத்த முடியாது. எனவே தொழுகை நடத்துவது தான் முதன்மையான முக்கியமான நிர்வாகப் பணியாகும்.

இன்றைய காலத்தில் தான் ஜமாஅத் தொழுகையின் நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இமாம் எப்போது வருகிறாரோ அப்போது தான் ஜமாஅத் நடக்கும். தொழுகையின் நேரம் முடிந்து விடும் என்ற நிலையில் மட்டுமே மற்றவர்கள் தொழுகைக்குத் தலைமை தாங்குவார்கள். அதாவது தொழுகையை நடத்தும் இமாமிடம் தான் அதிகாரம் இருந்துள்ளது என்பது இதில் இருந்து தெளிவாகும்.

எனவே தொழுகைக்குத் தலைமை தாங்கும் உரிமை, தகுதி இணைவைப்பவருக்குக் கிடையாது என்பதற்கு இதை விட வேறு ஆதாரம் தேவை இல்லை. அவர்கள் தலைமை தாங்கக் கூடாது என்றால் அந்தத் தலைமையை நாம் ஏற்கக் கூடாது என்பதைப் புரிந்து கொள்வது எளிதானதே.

لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا منهم تقاة ويحذركم الله نفسه وإلى الله المصير(28)3

நம்பிக்கை கொண்டோர், நம்பிக்கை கொண்டோரை விட்டு விட்டு (ஏக இறைவனை) மறுப்போரைப் பொறுப்பாளர்களாக ஆக்கக் கூடாது. அவர்களிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக தவிர. இவ்வாறு செய்பவருக்கு அல்லாஹ்விடமிருந்து (பாதுகாப்பு) எதுவுமில்லை. அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறான். திரும்புதல் அல்லாஹ்விடமே உள்ளது.

திருக்குர்ஆன் 3:28

மூமின்களைத்தான் (அதாவது இணைகற்பிக்காதவர்களைத் தான்) தலைவர்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும். தவிர்க்க முடியாது என்ற அச்சுறுத்தல் இருந்தால் அவர்களைத் தலைவர்களாக ஏற்றுக் கொள்ளலாம் என்று இவ்வசனம் கூறுகிறது. அது ஆட்சித் தலைமைக்கு உரியது என்றாலும் அதை விட மேலான வணக்க வழிபாடுகளுக்கு இன்னும் சிறப்பாகப் பொருந்தும்.

பின்வரும் வசனங்களும் இதே கருத்தைக் கூறுகின்றன.

ياأيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون(23)9

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் பெற்றோரும், உங்கள் சகோதரர்களும் நம்பிக்கையை விட (இறை) மறுப்பை விரும்புவார்களானால் அவர்களை உற்ற நண்பர்களாக்காதீர்கள்! உங்களில் அவர்களை உற்ற நண்பர்களாக்குவோரே அநீதி இழைத்தவர்கள்.

திருக்குர்ஆன் 9:23

الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين أيبتغون عندهم العزة فإن العزة لله جميعا(139)4

நம்பிக்கை கொண்டோரை விடுத்து (ஏக இறைவனை) மறுப்போரை அவர்கள் உற்ற நண்பர்களாக்கிக் கொண்டனர். கண்ணியத்தை அவர்களிடம் தேடுகிறார்களா? கண்ணியம் யாவும் அல்லாஹ்வுக்கே உரியது.

திருக்குர்ஆன் 4:139

ياأيها الذين آمنوا لا تتخذوا الكافرين أولياء من دون المؤمنين أتريدون أن تجعلوا لله عليكم سلطانا مبينا(144)4

நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்டோரை விடுத்து (ஏக இறைவனை) மறுப்போரை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்! உங்களுக்கு எதிராக தெளிவான சான்றை அல்லாஹ்வுக்கு ஏற்படுத்திக் கொடுக்க விரும்புகிறீர்களா?

திருக்குர்ஆன் 4:144

தொழுகையில் நமக்காகவும், அனைவருக்காகவும் பாவ மன்னிப்புக் கோரும் துஆக்கள் உள்ளன. அந்த துஆவில் இமாமும் அடங்குவார். ஆனால் பின்வரும் வசனம் இதைத் தடை செய்யும் வகையில் உள்ளது.

ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم(113)9

இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும், இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது.

திருக்குர்ஆன் 9:113

இணை கற்பிப்பவரை இமாமாக ஏற்றுப் பின்பற்றுவதன் மூலம் அல்லாஹ்வின் இந்தக் கட்டளை – நபிகள் நாயகத்துக்கும் இப்ராஹீம் நபிக்கும் கூட தளர்த்தப்படாத இந்தக் கட்டளை- மீறப்படும் நிலை ஏற்படும்.

எனவே இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்ற அறவே அனுமதி இல்லை என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த இடத்தில் ஒரு சந்தேகத்தைச் சிலர் எழுப்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

தவ்ஹீத் ஜமாஅத் அனைத்து முஸ்லிம்களுக்கான பல போராட்டங்களில் ஈடுபடுகின்றது. அவர்களில் இணைகற்பிப்பவர்களும் உள்ளனர். அவர்களையும் ஒரு பக்கம் முஸ்லிம்கள் என்று ஒப்புக் கொண்டு, இன்னொரு பக்கம் இணை கற்பிப்பவர்கள் என்று முத்திரை குத்துவது ஏன்? அவர்கள் பின்னே தொழக் கூடாது என்று கூறுவது ஏன்?

இது தான் அந்தக் கேள்வி. தவ்ஹீத் ஜமாஅத் அனைத்து முஸ்லிம்களுக்காகவும் போராடக் கூடாது என்பதற்காக இப்படிக் கேட்கிறார்களா? அல்லது அவர்கள் பின்னால் தொழலாம் என்று ஃபத்வாவை மாற்ற வேண்டும் என்பதற்காக இவ்வாறு கூறுகிறார்களா? என்பது நமக்குப் புரியவில்லை.

ஆனாலும் இதற்குப் பதில் சொல்லும் கடமை நமக்கு உண்டு.

இணைவைக்கும் இமாமைப் பின்பற்றித் தொழக் கூடாது என்று நாம் ஆதாரத்தின் அடிப்படையில் கூறுவது போலவே அவர்களை முஸ்லிம்கள் பட்டியலில் சேர்ப்பதும் ஆதாரத்தின் அடிப்படையில் தான்.

ஒருவர் அல்லாஹ்வின் பதிவேட்டில் முஸ்லிமாக இருப்பது வேறு. உலகக் கணக்கில் முஸ்லிம்கள் பட்டியலில் சேர்க்கப்படுவது வேறு. ஒருவர் உலகில் முஸ்லிம்கள் கணக்கில் சேர்க்கப்பட்டால் முஸ்லிம் என்ற உலக நன்மையை அவரும் பெற்றுக் கொள்வார் என்பது இஸ்லாத்தின் நிலைபாடு தான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் கிராமவாசிகள் சிலர் இஸ்லாத்தின் கொள்கையை நம்பாமல் தங்களை மூமின்கள் நம்பிக்கையாளர்கள் என்ற பட்டியலில் சேர்த்துக் கொண்டனர். இதை அல்லாஹ் கண்டித்து அவ்வாறு கூறக் கூடாது; ஆனால் முஸ்லிம்கள் என்று கூறிக் கொள்ளலாம் என்று அனுமதிக்கிறான்.

''நம்பிக்கை கொண்டோம்'' என்று கிராமவாசிகள் கூறுகின்றனர்.''நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. நம்பிக்கை உங்கள் உள்ளங்களில் நுழையவில்லை. மாறாக' கட்டுப்பட்டோம்' என்று கூறுங்கள்'' என (முஹம்மதே!) கூறுவீராக! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் நீங்கள் கட்டுப்பட்டால் உங்கள் செயல்களில் எதையும் அவன் குறைத்து விட மாட்டான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன் 49:14

இதை இன்னும் தெளிவாக அறிந்து கொள்ள இவ்வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள அரபு மூலச் சொற்களைக் கவனிக்க வேண்டும்.

கிராமவாசிகள் ஆமன்னா எனக் கூறினார்கள். இது ஈமான் என்ற சொல்லில் இருந்து பிறந்தது. அதாவது தம்மை மூமின்கள் என்று அவர்கள் வாதிட்டனர்.

நம்பிக்கை உங்கள் உள்ளங்களில் நுழையவில்லை என்று கூறி அவர்களிடம் ஈமான் இல்லை என்று அல்லாஹ் தெளிவுபடுத்தி விட்டு அஸ்லம்னா என்று கூற அனுமதிக்கிறான்.

அஸ்லம்னா என்பது இஸ்லாம் என்ற சொல்லில் இருந்து பிறந்ததாகும். அதாவது வெளிப்படையான செயல்களில் கட்டுப்பட்டோம் என்ற பொருள் தரும் வகையில் அஸ்லம்னா (முஸ்லிம்களாக இருக்கிறோம்) என்று அல்லாஹ் கூறச் சொல்கிறான்.

அவர்களிடம் ஈமான் இல்லாவிட்டாலும் வெளிப்படையாக முஸ்லிம்கள் என்று சொல்ல அல்லாஹ் அனுமதிப்பதை இதிலிருந்து அறியலாம்.

இதே கருத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் தெளிவுபடுத்துகிறார்கள்.

صحيح البخاري

27 – حَدَّثَنَا أَبُو اليَمَانِ، قَالَ: أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي عَامِرُ بْنُ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ سَعْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْطَى رَهْطًا وَسَعْدٌ جَالِسٌ، فَتَرَكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا هُوَ أَعْجَبُهُمْ إِلَيَّ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ مَا لَكَ عَنْ فُلاَنٍ فَوَاللَّهِ إِنِّي لَأَرَاهُ مُؤْمِنًا، فَقَالَ: «أَوْ مُسْلِمًا» فَسَكَتُّ قَلِيلًا، ثُمَّ غَلَبَنِي مَا أَعْلَمُ مِنْهُ، فَعُدْتُ لِمَقَالَتِي، فَقُلْتُ: مَا لَكَ عَنْ فُلاَنٍ؟ فَوَاللَّهِ إِنِّي لَأَرَاهُ مُؤْمِنًا، فَقَالَ: «أَوْ مُسْلِمًا». ثُمَّ غَلَبَنِي مَا أَعْلَمُ مِنْهُ فَعُدْتُ لِمَقَالَتِي، وَعَادَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ قَالَ: «يَا سَعْدُ إِنِّي لَأُعْطِي الرَّجُلَ، وَغَيْرُهُ أَحَبُّ إِلَيَّ مِنْهُ، خَشْيَةَ أَنْ يَكُبَّهُ اللَّهُ فِي النَّارِ»

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நான் அமர்ந்திருந்த போது, அவர்கள் மக்களில் ஒரு குழுவினருக்கு மட்டும் (தர்மப் பொருட்களை) கொடுத்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு வேண்டிய ஒருவரை விட்டுவிட்டார்கள். ஆகவே நான், அல்லாஹ்வின் தூதரே! அவர் மீது உங்களுக்கு என்ன அதிருப்தி? அல்லாஹ்வின் மீதாணையாக! அவரை நான் நம்பிக்கையாளர் (மூமின்) என்றே கருதுகின்றேன் என்றேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவரை முஸ்லிம் என்று சொல் என்றார்கள். சிறிது நேரம் நான் அமைதியாக இருந்தேன். தொடர்ந்து நான் அவரைப் பற்றி அறிந்திருந்த விஷயங்கள் என்னையும் அறியாமல் வந்த போது முன்பு சொன்னதையே திரும்பவும் சொன்னேன். அவர் மீது உங்களுக்கு என்ன அதிருப்தி? அல்லாஹ்வின் மீதாணையாக! நிச்சயமாக நான் அவரை ஒரு நம்பிக்கையாளர் (மூமின்) என்றே கருதுகிறேன் என்றேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரை முஸ்லிம் என்று சொல் என்றார்கள். அவரைப் பற்றி நான் அறிந்திருந்த விஷயத்தை என்னையும் மீறி மீண்டும் மீண்டும் கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பழைய பதிலையே கூறிவிட்டு, சஅத்! (அன்பளிப்புகள் எதுவாகட்டும்) நான் ஒருவருக்குக் கொடுக்கிறேன்; ஆனால் நான் யாருக்குக் கொடுக்கவில்லையோ அவர் என் அன்புக்குப் பாத்திரமானவராய் இருக்கிறார். அவரை இறைவன் நரகில் முகம் குப்புறத் தள்ளிவிடுவானோ எனும் அச்சம்தான் என்றார்கள்.

நூல் : புகாரி 27

உலகில் முஸ்லிமாகக் கருதப்படுவது வேறு! அல்லாஹ்விடம் முஸ்லிமாகக் கருதப்படுவது வேறு என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மேலும் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

صحيح البخاري

391 – حَدَّثَنَا عَمْرُو بْنُ عَبَّاسٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ المَهْدِيِّ، قَالَ: حَدَّثَنَا مَنْصُورُ بْنُ سَعْدٍ، عَنْ مَيْمُونِ بْنِ سِيَاهٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ صَلَّى صَلاَتَنَا وَاسْتَقْبَلَ قِبْلَتَنَا، وَأَكَلَ ذَبِيحَتَنَا فَذَلِكَ المُسْلِمُ الَّذِي لَهُ ذِمَّةُ اللَّهِ وَذِمَّةُ رَسُولِهِ، فَلاَ تُخْفِرُوا اللَّهَ فِي ذِمَّتِهِ»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் நாம் தொழுவது போன்று தொழுது, நமது (தொழும் திசையான) கிப்லாவை முன்னோக்கி, நம்மால் அறுக்கப்பட்டதைப் புசிக்கின்றாரோ அவர் தாம் முஸ்லிம். அத்தகையவருக்கு அல்லாஹ்வின் பொறுப்பும் அவனுடைய தூதரின் பொறுப்பும் உண்டு. எனவே அல்லாஹ் ஏற்றுக்கெண்டிருக்கும் பொறுப்பில் அல்லாஹ்வுக்கு வஞ்சனை செய்து விடாதீர்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல் : புகாரி 391

صحيح البخاري

392 – حَدَّثَنَا نُعَيْمٌ، قَالَ: حَدَّثَنَا ابْنُ المُبَارَكِ، عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَقُولُوا لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، فَإِذَا قَالُوهَا، وَصَلَّوْا صَلاَتَنَا، وَاسْتَقْبَلُوا قِبْلَتَنَا، وَذَبَحُوا ذَبِيحَتَنَا، فَقَدْ حَرُمَتْ عَلَيْنَا دِمَاؤُهُمْ وَأَمْوَالُهُمْ، إِلَّا بِحَقِّهَا وَحِسَابُهُمْ عَلَى اللَّهِ»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என இம்மக்கள் (உறுதி) கூறும் வரை அவர்களோடு போரிடவேண்டுமென நான் பணிக்கப்பட்டுள்ளேன். எனவே இதை அவர்கள் கூறி, நாம் தொழுவது போன்று தொழுது, நமது (தொழும் திசையான) கிப்லாவை முன்னோக்கி, நம்மால் அறுக்கப்பட்டதை அவர்கள் புசிப்பார்களேயானால் தக்க காரணமின்றி அவர்களுடைய உயிர் உடைமைகள் (மீது கை வைப்பது) நம்மீது விலக்கப்பட்டதாக ஆகிவிடும்; மேலும் அவர்களின் விசாரணை அல்லாஹ்வின் பொறுப்பிலுள்ளது.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : புகாரி 392

صحيح البخاري

393 – قَالَ ابْنُ أَبِي مَرْيَمَ: أَخْبَرَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، حَدَّثَنَا حُمَيْدٌ، حَدَّثَنَا أَنَسٌ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَالَ عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الحَارِثِ، قَالَ: حَدَّثَنَا حُمَيْدٌ، قَالَ: سَأَلَ مَيْمُونُ بْنُ سِيَاهٍ، أَنَسَ بْنَ مَالِكٍ، قَالَ: يَا أَبَا حَمْزَةَ، مَا يُحَرِّمُ دَمَ العَبْدِ وَمَالَهُ؟ فَقَالَ: «مَنْ شَهِدَ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَاسْتَقْبَلَ قِبْلَتَنَا، وَصَلَّى صَلاَتَنَا، وَأَكَلَ ذَبِيحَتَنَا، فَهُوَ المُسْلِمُ، لَهُ مَا لِلْمُسْلِمِ، وَعَلَيْهِ  مَا عَلَى المُسْلِمِ»

மைமூன் பின் சியாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், அபூஹம்ஸா! (இஸ்லாமிய அரசில்) ஓர் அடியாரின் உயிரையும், பொருளையும் காப்பது எது? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், யார் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என உறுதி மொழிந்து, நமது கிப்லாவை முன்னோக்கி நாம் தொழுவது போன்றே தொழுது, நம்மால் அறுக்கப்பட்டதைப் புசிக்கின்றாரோ அவர் தாம் முஸ்லிம். மற்ற முஸ்லிம்களுக்கு கிட்டும் லாபமும் அவருக்கு உண்டு; மற்ற முஸ்லிம்களுக்கு ஏற்படும் நட்டமும் அவருக்கு உண்டு. என்று கூறினார்கள்.

நூல் : புகாரி 393

ஒருவர் வெளிப்படையான காரியங்களைச் செய்தால் இஸ்லாமிய அரசில் அவர் முஸ்லிமாகக் கருதப்பட்டுவார். அனைத்து முஸ்லிம்களுக்கு உள்ள உரிமையைப் பெறுவார். ஆனால் அவர் உண்மையில் மூமினாக இல்லாவிட்டால் அவரைப் பற்றிய விசாரனை அல்லாஹ்விடம் உள்ளது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இஸ்லாமிய அரசில் ஈமான் இல்லாத கிராமவாசிகள் முஸ்லிம்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டு இருந்தனர்.

இதை அடிப்படையாக வைத்து தன்னை முஸ்லிம் என்று சொல்பவரை உலகக் கணக்கில் முஸ்லிம்கள் பட்டியலில் நாமும் சேர்க்க வேண்டும்.

(நபிகள் நாயகத்துக்குப் பின் இன்னொருவரை நபி என்று ஏற்றுக் கொண்டவர்கள் இதில் அடங்க மாட்டார்கள். அவர்கள் தனி மதத்தவர்களாவர். காதியானிகள், 19 கூட்டத்தினர் இதில் அடங்க மாட்டார்கள்.)

உலக விஷயங்களில் அவர்களை முஸ்லிம்கள் பட்டியலில் நாம் சேர்த்தாலும் அவர்களை இமாமாக ஏற்கக் கூடாது; இணை கற்பிப்பவர்களைத் திருமணம் செய்யக் கூடாது; இணை கற்பிப்பவருக்கு பாவமன்னிப்பு கேட்கக் கூடாது போன்ற கட்டளைகளையும் பேணிக் கொள்ள வேண்டும். உலக விஷயங்களில் உலக உரிமைகளில் முஸ்லிம் என்று ஒருவர் சொல்லிக் கொண்டால் அவரை முஸ்லிம்கள் பட்டியலில் சேர்க்கவும் வேண்டும். இரண்டுமே ஆதாரங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு தான்.

மாற்றுக் கருத்துக்கு மறுப்பு

இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றலாம் என்று வாதிட்டு சமூக ஊடகங்களில் சில வாதங்களை எடுத்து வைக்கப்படுகின்றன.

முதல் வாதம்

(நபியே!) எவன் நிராகரிப்பானோ அவனுடைய குஃப்ரு – நிராகரிப்பு உம்மை விசனப்படுத்த வேண்டாம். அவர்களின் மீளுதல் நம்மிடத்தில் தான் இருக்கிறது. அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதை அப்போது நாம் அவர்களுக்கு அறிவிப்போம். நிச்சயமாக அல்லாஹ்வே இருதயங்களில் உள்ளவற்றை அறிபவன்.

திருக்குர்ஆன் 31:23

தோல்வியுற்று ஓடும் எதிரிப்படையில் ஒருவனை நபித்தோழர் ஒருவர் பாய்ந்து அவரைத் தாக்க முற்பட்டபோது அவர் லா இலாஹ இல்லல்லாஹு' என்று கூறினார். அப்போது நபித்தோழர் அதைப் பொருட்படுத்தாமல் அவரை வெட்டி வீழ்த்திவிட்டார். பிறகு அவரை வெட்டியது பற்றி வருந்தி நபிகள்  நாயகம் (ஸல்) அவர்களிடம் இந்த விஷயத்தை எடுத்து கூறினார். அப்போது அவன் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவே கலிமாவைக் கூறினான் என்றார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்' நீர் அவனது உள்ளத்தைப் பிளந்து பார்த்தீரோ? உள்ளக்கிடக்கியை நாவின் மூலமே வெளியிட முடியும் என்றார்கள்.

அறிவிப்பாளர்: கபீஸாபின்துவைபு (ரழி)

நூல்: முஸ்னத் அப்திர் ரஜ்ஜாக், இப்னு அஸாக்கீர்)

இவ்வசனமும், இந்த நபிமொழியும் சொல்வது என்ன? ஒருவன் உள்ளத்தில் உள்ளதை மற்றவர்கள் அறிய முடியாது என்று சொல்கின்றன. அப்படி இருக்கும் போது ஒருவரைப் பற்றி இணைகற்பிப்பவர் என்று எப்படி முடிவு செய்ய இயலும்? இணை வைப்பவர் என்று முடிவு செய்ய முடியாததால் அவரைப் பின்பற்றித் தொழக் கூடாது என்று எப்படி முடிவு செய்ய முடியும்?

இதுதான் மாற்றுக் கருத்துள்ளவர்களின் வாதம்.

ஒருவனுடைய உள்ளத்தில் உள்ளதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய முடியாது என்பது மறுக்க முடியாத இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை. அதே சமயம் வெளிப்படையாகத் தெரிவதை வைத்து முடிவு எடுக்க வேண்டும் என்பதும் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை.

இணைகற்பிக்கும் இமாம் என்று நாம் எப்படி முடிவு செய்கிறோம்? அவரது உள்ளத்தில் ஊடுறுவிப் பார்த்துத் தான் முடிவு செய்கிறோமா? நிச்சயமாக இல்லை. வெளிப்படையான அவரது செயலைப் பார்க்கிறோம். அது அப்பட்டமான இணைவைப்பாக இருக்கிறது. இதை வைத்து அவர் இணை கற்பிக்கிறார் என்று நாம் முடிவு செய்கிறோம்.

இவர்கள் எடுத்துக் காட்டும் ஹதீஸும் அதைத் தான் சொல்கிறது. ஒருவர் லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறி விட்டார். இது வெளிப்படையாகத் தெரிகிறது. இதை வைத்து முடிவு செய் என்று நபிகள் நாயகம் (ஸல்) வழிகாட்டுகிறார்கள். அது போல் லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறியவர் ஒரு கல்லை வணங்குகிறார். இதுவும் வெளிப்படையானது தான். லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதை இவர் நம்பவில்லை என்பதை இவரே வெளிப்படுத்தி விட்டார். இப்போது வெளிப்படையானதை வைத்து முடிவு செய்யக் கூடாது என்பது இவர்களின் வாதமாக உள்ளது.

உள்ளத்தைப் பிளந்து பார்த்து முடிவு எடுக்க முடியாது என்பது வெளிப்படையாகத் தெரிந்தாலும் முடிவு எடுக்கக் கூடாது என்று இவர்கள் வாதிடுகின்றனர்.

இவர்கள் முதன் முதலில் எடுத்துக் காட்டிய குர்ஆன் வசனத்தை இவர்கள் புரிந்து கொண்டது போல் புரிந்து கொண்டால் ராமகோபாலனையும் இமாமாக ஏற்று பின்பற்றலாம் என்று கூற வேண்டும்.

ஏனெனில் கஃபிர்களைப் பற்றித் தான் அவ்வசனம் கூறுகிறது. அவர்களின் உள்ளங்களில் உள்ளதையும் அறிய முடியாது என்பதால் அத்வானி இமாமத் செய்தாலும் அவரைப் பின்பற்றலாம் என்பது தான் இவர்களது ஆய்வின் முடிவு.

திருக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் இணைகற்பிப்பவர்களுடன் எப்படி நடக்க வேண்டும்; கெட்டவர்களுடன் எப்படி நடக்க வேண்டும் என்றெல்லாம் வழி காட்டப்பட்டுள்ளது. இவர்களின் வாதப்படி அவை யாவும் வீணானவையாகி விடும். ஒருவன் இணைகற்பிப்பவன் என்பதும், ஒருவன் கெட்டவன் என்பதும் அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த விஷயம். நாங்கள் யாரையும் அப்படி நினைக்க மாட்டோம் என்று இவர்கள் வாதிட்டால் இவர்கள் அல்லாஹ்வின் வசனங்களைக் கேலி செய்கிறார்கள் என்பதே பொருள்.

உங்கள் புதல்விகளை நல்ல ஒழுக்கமானவனுக்குத் திருமணம் செய்து கொடுங்கள்! கெட்டவனுக்குத் திருமணம் செய்து கொடுக்காதீர்கள் என்று கூறினால் வெளிப்படையான செயல்களை வைத்துத்தான் முடிவு எடுங்கள் என்பதே அதன் பொருளாக இருக்க முடியும். 

எனவே இவர்கள் வாதத்துக்கும், இணைகற்பிக்கும் இமாமைப் பின்பற்றுவதற்கும் எந்தச் சம்மந்தமுமில்லை. இணை கற்பிப்பவர் என்ற முடிவு வெளிப்படையான செயல்களை வைத்துத்தான் முடிவு செய்யப்படுகிறது.

இரண்டாவது ஆதாரம்

மறுமை நாளில் மார்க்க அறிஞர், செல்வந்தர், உயிர் தியாகி ஆகியோர் நரகில் தள்ளப்படுவார்கள் என்ற ஹதீஸையும் ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

இம்மூவரின் வெளிப்படையான செயல்களைப் பார்த்து  நல்லவர்கள் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் உள்ளத்தைப் பார்க்கும் அல்லாஹ் வேறு முடிவு எடுக்கிறான்.

இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது? நாம் நமது கண்களால் திட்டமாகப் பார்ப்பதை வைத்தோ, அல்லது நமது அறிவு ஆராய்ச்சியால் திட்டமாக விளங்கியோ ஒருவனுடைய உள்ளத்தில் இருப்பது ஈமானா – இறை விசுவாசமா, குஃப்ரா – இறை நிராகரிப்பா என்று முடிவு கட்டிவிட முடியாது.

ஒருவனுடைய உள்ளத்திலிருப்பதை தீர விசாரித்தும் நம்மால் அறிந்து கொள்ள முடியாது. இந்த நிலையில் தொழ வைக்கும் ஒரு இமாமின் குப்ரை பற்றித் திட்டமாகத தெரிந்து கொள்வது எப்படி சாத்தியம்?

இப்படி வாதிடுகின்றனர்.

மீண்டும் அதே அறியாமை தான் இங்கும் வெளிப்படுகிறது. இவ்வுலகில் நாம் நல்லவன் என்று நினைத்தவன் மறுமையில் கெட்டவனாக இருக்கலாம். நாம் கெட்டவன் என்று நினைத்தவன் மறுமையில் நல்லவனாக இருக்கலாம் என்பது வேறு. இவ்வுலகில் வெளிப்படையானதை வைத்து நல்லவன் கெட்டவன் என்று முடிவு எடுக்கலாமா என்பது வேறு.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே சிலரை நல்லவர்கள் என்று முடிவு செய்திருப்பார்கள்; ஆனால் அவர்கள் மறுமை நாளில் ஹவ்லுல் கவ்ஸருக்குச் செல்ல முடியாமல் தடுக்கப்படுவார்கள் என்று உள்ளது. நாம் வெளிப்படையானதை வைத்து முடிவு எடுக்க வேண்டும்; ஆனால் அல்லாஹ்வின் முடிவும் இப்படித் தான் இருக்கும் என்று கூற முடியாது.

இவர்கள் எடுத்துக் காட்டும் ஹதீஸின்படி மூன்று பேர் தண்டிக்கப்பட்டனர். ஆனால் அந்த மூன்று பேரையும் வெளிப்படையான செயல்களை வைத்து நல்லவர்கள் என்று கூறியவர்கள் கண்டிக்கவோ, தண்டிக்கவோ படவில்லையே?

சரி இவர்கள் உலக வாழ்க்கையில் அப்படித்தான் நடக்கிறார்களா? வெளிப்படையாக இவர்களுக்கு எதிராக நடப்பவர்களை இவர்கள் ஏன் எதிரிகளாக நினைக்கின்றனர்? அவர்களின் உள்ளத்தில் உள்ளது எங்களுக்குத் தெரியாது என்று கூறக் காணோமே?

மார்க்கத்தை வளைப்பதற்கு மட்டும் இந்தத் தவறான வாதத்தை எடுத்து வைப்பவர்கள் சொந்த விஷயம் என்று வரும் போது ஒருவனை கெட்டவன் என்று முடிவு செய்வது ஏன்?

இதிலிருந்து இவர்கள் செய்வது சந்தர்ப்பவாதம் என்பது தெரிகிறது.

எந்த மனிதனையும் நாங்கள் வெளிப்படையான செயல்களை வைத்து கண்டிக்க மாட்டோம் என்று அறிவித்து அதன்படி நடக்கத் தயாரா? இல்லை என்றால் அவர்கள் ஏதோ புதிதாக எதையாவது உளறி பேர் எடுக்க வேண்டும் என்பதற்காக உளறுகிறார்கள் என்பது உறுதியாகிறது.

மனிதர்கள் இவ்வுலகில் வாழும் போது வெளிப்படையான செயல்கள் அடிப்படையில் முடிவு செய்யும் நிலையில் தான் படைக்கப்பட்டுள்ளனர்.

அதன் அடிப்படையில் ஒருவரைப் பற்றி முடிவு செய்தால் அதன் பொருள் என்ன?

எங்களுடைய சக்திக்கு உட்பட்டு வெளிப்படையானதைத் தான் பார்க்க முடியும். அதன்படி தான் முடிவு செய்ய முடியும். அவ்வாறு முடிவு செய்வதை அல்லாஹ் அனுமதித்துள்ளான். ஆனால் நாங்கள் செய்த முடிவுக்கு மாற்றமாக அல்லாஹ்வின் முடிவு இருக்கலாம்

இவ்வளவு அர்த்தத்தையும் உள்ளடக்கியே ஒருவனை நல்லவன் என்றோ, கெட்டவன் என்றோ ஒரு முஸ்லிம் கூறுகிறான். இதைக் கூட இவர்கள் விளங்கவில்லை.

என்னிடம் வழக்கு கொண்டு வருவார்கள். வெளிப்படையான வாதத்தை வைத்து நான் ஒருவருக்குச் சார்பாக தீர்ப்பளித்து விடுவேன். ஆனால் மறுமையில் வேறு விதமாக தீர்ப்பு இருக்கலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதைக் கவனித்தால் இன்னும் இது தெளிவாகும்.

மேற்படி கருத்துடையவர்கள் நீதிபதிகளாக இருப்பதாக வைத்துக் கொள்வோம். ஒரு பொருள் யாருக்குச் சொந்தம் என்று இரண்டு பேர் வழக்கு கொண்டு வருகின்றனர். இந்த நீதிபதி இது யாருக்கு உரியது என்று அல்லாஹ்வுக்குத் தான் தெரியும். நான் தீர்ப்பளிக்க மாட்டேன் என்று தீர்ப்பளிப்பாரா?.

ஒருவர் விபச்சாரம் செய்ததாக வழக்கு வருகிறது. தக்க சாட்சிகள் உள்ளனர். இருந்தாலும் இவர் விபச்சாரம் செய்தாரா? இல்லையா என்று அல்லாஹ்வுக்குத் தான் தெரியும். நான் தீர்ப்பு அளிக்க மாட்டேன் என்று இந்த நீதிபதி கூறுவாரா?

இஸ்லாத்தைக் கேலிக் கூத்தாக்கும் எவ்வளவு ஆபத்தான வாதத்தை எடுத்து வைக்கின்றனர் என்பதை விளக்குவதற்காகவே இவ்வாறு தெளிவுபடுத்துகிறோம்.

இணை கற்பிப்பவரை இமாமாக ஏற்கலாம் என்ற கருத்தை நேரடியாகவோ, மறைமுகமாகவோ சொல்லாத ஆதாரங்களை பொருத்தமில்லாத இடத்தில் பொருத்தமில்லாத வகையில் பயன்படுத்தியுள்ளனர்.

More Articles …