Sidebar

18
Thu, Jun
சமீபத்திய செய்திகள்

482. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் பார்த்தார்களா?

இவ்வசனங்களில் (53:11-13) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரைப் பார்த்தார் கூறப்பட்டுள்ளது.

அவரைப் பார்த்தார் என்பது ஜிப்ரீல் எனும் வானவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்ததைப் பற்றி பேசுகிறது.

சிலர் அவரை என்ற இடத்தில் அவனை என்று மொழிபெயர்த்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் பார்த்தார்கள் என்று விளக்கமளித்துள்ளனர்.

(அரபு மொழியில் அவர் என்பதற்கும் அவன் என்பதற்கும் ஒரே சொல்லமைப்பு தான் உள்ளது.)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் பார்த்தார்கள் என்பது சரியான கருத்து அல்ல. ஜிப்ரீலைப் பார்த்தார்கள் என்பது தான் சரியான கருத்தாகும்.

ஜிப்ரீல் அவர்கள் முதல் வஹீயைக் கொண்டு வந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜிப்ரீலை அவரது இயல்பான தோற்றத்தில் கண்டார்கள். பின்னர் மிஃராஜ் சென்ற போது ஜன்னத்துல் மஃவா எனும் இடத்தில் மற்றொரு தடவையும் ஜிப்ரீல் எனும் வானவரைக் கண்டார்கள்.

இதைத் தான் இவ்வசனங்கள் சொல்கின்றன.

முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனைப் பார்த்தார்கள் என்று கூறுபவன் பெரிய தவறு புரிந்து விட்டான். எனினும் அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களை அவர்களுடைய இயல்பான உருவிலும், அமைப்பிலும் வான விளிம்பு முழுவதையும் அடைத்தபடி கண்டார்கள் என்று ஆயிஷா (ரலி) கூறுகிறார்கள்.

நூல் : புகாரீ 3234

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைக் கண்டதில்லை என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியபோது, 53:13 வசனத்தை சான்றாகக் காட்டி, அவரை மற்றொரு முறையும் கண்டார் என்று திருக்குர்ஆனில் கூறப்பட் டுள்ளதே என்று இந்த ஹதீஸை அறிவிக்கும் மஸ்ரூக் கேட்கும் போது ஆயிஷா (ரலி) அவர்கள் "அது ஜிப்ரீலைக் குறிக்கின்றது'' என்று பதிலளித்தார்கள்.

நூல் : புகாரீ 3235

"நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்ததுண்டா?'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, "அவனோ ஒளிமயமானவன்; நான் எப்படி அவனைப் பார்க்க முடியும்?'' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் 291

எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிஃராஜின் போது இறைவனைக் கண்டார்கள் என்பது பொய் என்பதில் சந்தேகமில்லை.

இறைவனை இவ்வுலகில் காண முடியுமா என்பதை மேலும் விளக்கமாக அறிய 21, 249, 488வது குறிப்புகளைப் பார்க்கவும்.

இறைவனை அல்லாஹ் என்று மட்டும் அழைப்பதேன்?

கேள்வி:

இறைவனை கடவுள், ஹுதா, காட் போன்று மக்கள் தங்கள் தாய்மொழியில் அழைக்கின்ற போது, நீங்களோ அல்லாஹ்' என்று அரபியில் மட்டுமே அழைக்கக் காரணம் என்ன? என்று முஸ்லிமல்லாத என் நண்பர்கள் கேட்கின்றனர்?

- அபூமுஜாஹிதீன், அஜ்மான், யு.ஏ.ஈ.

பதில்:

ஏக இறைவனைக் குறிக்கும் எந்தச் சொல்லையும் எந்த மொழியிலும் நாம் பயன்படுத்தலாம்.

நபிகள் நாயகத்துக்கு முன்னர் அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் தத்தமது மொழியில் தான் கடவுளைக் குறிப்பிட்டனரே தவிர அல்லாஹ் என்று அரபு மொழியில் குறிப்பிடவில்லை. குறிப்பிட்டிருக்கவும் முடியாது.

கடவுள் கூறினார் என்று நான் பேசும்போது அகில உலகையும் படைத்துப் பரிபாலிக்கும் ஒரே இறைவனைத் தான் நான் குறிப்பிடுகிறேன் என்று நீங்கள் விளங்கிக் கொண்டால் அது போன்ற சந்தர்ப்பங்களில் அவ்வாறு பயன்படுத்தலாம்.

ஏராளமான கடவுள்கள் இருப்பதாக நம்புகின்ற மக்களிடம் பேசும் போது அல்லாஹ் என்று கூறினால் தான் ஏக இறைவனைக் குறிப்பிடுவதாக அவர்கள் புரிந்து கொள்வார்கள்.

கடவுள் சொன்னார் எனக் கூறினால் எந்தக் கடவுள்? ராமரா? கிருஷ்னரா? சிவனா? விஷ்ணுவா? முருகனா? விநாயகரா? இயேசுவா? மேரியா? என்றெல்லாம் குழப்பம் அடைவார்கள். எனவே பல கடவுள் நம்பிக்கையுடைய மக்களிடம் பேசும்போது அல்லாஹ் என்று கூறுவது தான் பொருத்தமானது.

(பீஜே எழுதிய அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் எனும் நூலில் இருந்து)

நபிமார்களும், அவ்லியாக்களும் அல்லாஹ்வின் சின்னங்களா?

நபிமார்கள், நல்லடியார்கள், மகான்கள் என்போர் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களாவர். அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களை முஸ்லிம்கள் கண்ணியப்படுத்துவது இறையச்சத்தின் வெளிப்பாடாகும் என இறைவன் திருக்குர்ஆனில் குறிப்பிட்டுள்ளான். எனவே அவர்களுக்கு நாம் தர்கா கட்டலாம் என்றும் ஆதாரம் காட்டுகின்றனர்.

அல்லாஹ்வின் சின்னங்கள் கண்ணியப்படுத்தப்பட வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனால் அல்லாஹ்வின் சின்னம் எது? என்பதையும் அதை எவ்வாறு கண்ணியப்படுத்தப்பட வேண்டும்? என்பதையும் அல்லாஹ்வும், அவனது தூதரும்தான் கற்றுத்தர வேண்டும்.

ஸஃபா, மர்வா ஆகிய இரு குன்றுகள் அல்லாஹ்வின் சின்னங்கள் என்று அல்லாஹ் கூறி அதைக் கண்ணியப்படுத்தும் முறையையும் கற்றுத் தந்துள்ளான்.

ஸஃபாவும், மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள். இந்த ஆலயத்தில் ஹஜ்ஜோ, உம்ராவோ செய்பவர், அவ்விரண்டையும் சுற்றுவது குற்றமில்லை. நன்மைகளை மேலதிகமாகச் செய்பவருக்கு அல்லாஹ் நன்றி பாராட்டுபவன்; அறிந்தவன்.

திருக்குர்ஆன் 2:158

ஸஃபா, மர்வா அல்லாஹ்வின் சின்னங்கள் என்று கூறிய இறைவன், ஸயீ செய்வதே அதைக் கண்ணியம் செய்யும் முறை எனவும் கற்றுத் தந்துள்ளான்.

ஸஃபா, மர்வா இரண்டும் அல்லாஹ்வின் சின்னங்கள் என்பதால் அதை வழிபாடு செய்யலாம், அதனிடத்தில் தேவைகளை முறையிடலாம் என்பதற்கு இது ஆதாரமாகாது.

பலிப்பிராணிகள் அல்லாஹ்வின் சின்னங்கள் என அல்லாஹ் கூறுகிறான். பலிப்பிராணிகளைக் கும்பிடுவதும், அல்லது அதற்கு தர்கா கட்டுவதும் கண்ணியப்படுத்துவதாக ஆகாது. எவ்வாறு கண்ணியப்படுத்த வேண்டும் என்று அல்லாஹ் சொல்லி இருக்கிறானோ அதைச் செய்வதுதான் கண்ணியப்படுத்துதலாகும்.

 (பலியிடப்படும்) ஒட்டகங்களை உங்களுக்காக அல்லாஹ்வின் (மார்க்கச்) சின்னங்களில் ஒன்றாக ஆக்கியுள்ளோம். அவற்றில் உங்களுக்கு நன்மையுள்ளது. நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அதன் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள்! அது விலாப்புறமாக விழுந்ததும் அதை உண்ணுங்கள்! யாசிப்பவருக்கும், யாசிக்காதவருக்கும் உண்ணக் கொடுங்கள்! நீங்கள் நன்றி செலுத்திட இவ்வாறே அதை உங்களுக்குப் பயன்படச் செய்தான்.

திருக்குர்ஆன் 22:36

பலிப்பிராணிகள் அல்லாஹ்வின் சின்னம் என்று கூறிய இறைவன் அதை அறுத்து உண்ணச் சொல்கிறான். அறுத்து உண்பதுதான் அதைக் கண்ணியப்படுத்துதல் என்கிறான். அப்படியானால் உயிரோடு வாழும் உலமாக்களையும், ஷைகுமார்களையும் நிற்க வைத்து அறுத்து கொல்வது தான் அவர்களைக் கண்ணியப்படுத்துதல் என்று ஒப்புக் கொள்வார்களா?

மேலும் எதையேனும் அல்லாஹ்வின் சின்னம் என்று குறிப்பிடுவதாக இருந்தால் அதற்குத் தகுந்த சான்று இருக்க வேண்டும்.

நபிமார்களோ, இறைநேசர்களோ அல்லாஹ்வின் சின்னங்கள் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை. அல்லாஹ்வோ, நபிகள் நாயகமோ அவ்வாறு நமக்குச் சொல்லவுமில்லை. அவ்வாறிருக்க இறைவனின் அதிகாரத்தைக் கையில் எடுக்கும் விதமாக நாமாக முடிவு செய்வது அல்லாஹ்விற்கே அவனது மார்க்கத்தை கற்றுக் கொடுக்கும் அதிகப் பிரசங்கித்தனமாகும்.

உங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்குக் கற்றுக் கொடுக்கிறீர்களா? வானங்களிலும், பூமியிலும் உள்ளதை அல்லாஹ் அறிவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன் என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 49:16

ஒரு வாதத்திற்கு நபிமார்கள் அல்லாஹ்வின் சின்னங்கள் என்று இருந்தால் கூட அத்தகைய தூதர்களில் ஒருவரான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் கப்ருகள் கட்டுவது கூடாது என்று வன்மையாகத் தடை செய்துள்ளார்கள். கப்ரின் மேல் கட்டடம் எழுப்புவது அல்லாஹ்வின் சாபத்திற்குரிய செயல் என்று எச்சரித்துள்ளார்கள்.

நபிமார்கள் அல்லாஹ்வின் சின்னங்கள் என்று நம்பினால் அவர்கள் சொன்னதைப் பின்பற்றுவதுதான் உண்மையில் அவர்களைக் கண்ணியப்படுத்தும் முறையாகும். இதனடிப்படையில் கப்ர்கள் இடிக்கப்பட வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதை நடைமுறைப்படுத்துவது தான் அல்லாஹ்வின் சின்னமான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மதிப்பதாகும்.

இறைத்தூதர்களுக்கும், நல்லடியார்களுக்கும் கப்ர் கட்டுவது, அலங்கரிப்பது அல்லாஹ்வின் சின்னங்களைக் கண்ணியப்படுத்தும் செயல்களாக இருந்திருந்தால், அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அதைச் செய்திருப்பார்கள். நபிமார்களின் கப்ர்களுக்கு கட்டடம் எழுப்பி, அல்லாஹ்வின் சின்னத்தைக் கண்ணியப்படுத்திய யூதக் கிறித்தவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்திருக்க மாட்டார்கள்.

நபிமார்களின் கப்ரில் கட்டடம் எழுப்பி, அதை அழகுபடுத்துவது அல்லாஹ்வின் சின்னங்களைக் கண்ணியப்படுத்தும் செயலாக இருந்திருந்தால், நபிமார்களுக்குச் சிலை வடிப்பது கப்ர் கட்டுவதையும் விட மேலான கண்ணியம் இல்லையா?

صحيح البخاري

1601 - حدثنا أبو معمر، حدثنا عبد الوارث، حدثنا أيوب، حدثنا عكرمة، عن ابن عباس رضي الله عنهما قال: إن رسول الله صلى الله عليه وسلم لما قدم أبى أن يدخل البيت وفيه الآلهة، فأمر بها فأخرجت، فأخرجوا صورة إبراهيم، وإسماعيل في أيديهما الأزلام، فقال رسول الله صلى الله عليه وسلم: «قاتلهم الله، أما والله لقد علموا أنهما لم يستقسما بها قط». فدخل البيت، فكبر في نواحيه، ولم يصل فيه

1601 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (மக்காவுக்கு) வந்த போது, கஅபாவில் சிலைகள் இருந்ததால் உள்ளே நுழைய மறுத்து அவற்றை அப்புறப்படுத்துமாறு கட்டளையிட்டார்கள். உடனே அவை அப்புறப்படுத்தப்பட்டன. அச்சிலைகளில் (குறிபார்ப்பதற்குரிய) அம்புகளைக் கையில் தாங்கியவாறு இப்ராஹீம் (அலை), இஸ்மாயீல் (அலை) ஆகியோரின் உருவங்களும் இருந்தன. அவற்றையும் வெளியேற்றினார்கள். இதைக்கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அல்லாஹ் இ(தைச் செய்த)வர்களை அழிப்பானாக! அல்லாஹ்வின் மீதாணையாக! இவ்விரு நபிமார்களும் அம்புகள் மூலமாகக் குறிபார்ப்பவர்களாக ஒரு போதும் இருந்ததில்லை என்பதை இதைச் செய்தவர்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள் என்று கூறிவிட்டுக் கஅபாவில் நுழைந்தார்கள். அதன் ஓரங்களில் (நின்று) தக்பீர் கூறினார்கள்; அதில் தொழவில்லை.

நூல் : புகாரி1601

இப்றாஹீம் (அலை), இஸ்மாயீல் (அலை) ஆகியோருக்கு சிலைகளை வடித்து கண்ணியம் செய்த மக்கத்து இணைவைப்பாளர்களை நபிகள் நாயகம் ஏன் கண்டிக்க வேண்டும்? அந்தச் சிலைகளை ஏன் தகர்க்க வேண்டும்?

இதிலிருந்தே கப்ர் கட்டி வழிபாடு செய்வது அல்லாஹ்வின் சாபத்திற்குரிய யூதக்கிறித்தவ கலாச்சாரம் தான். அது இஸ்லாமியக் கலாச்சாரம் அல்ல என்பதைத் தெளிவாகப் புரியலாம்.

மனிதன் அல்லாஹ்வுக்கு உதவி செய்ய முடியுமா?

கேள்வி :

திருக்குர்ஆன் 22வது அத்தியாயம் 40வது வசனத்தில் தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ் உதவி செய்வான் என்று கூறப்பட்டுள்ளது. மனிதன் அல்லாஹ்வுக்கு எப்படி உதவி செய்ய முடியும்?

பி.இதாயத்துல்லாஹ், மதுரவாயல்.

பதில்:

இதுதான் நீங்கள் குறிப்பிடும் வசனம்:

எங்கள் இறைவன் அல்லாஹ்வே என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத்தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ் வலிமையுள்ளவன்; மிகைத்தவன்.

திருக்குர்ஆன் 22:40

இதே கருத்தில் பின்வரும் வசனமும் அமைந்துள்ளது.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவினால் அவன் உங்களுக்கு உதவுவான். உங்கள் பாதங்களை அவன் உறுதிப்படுத்துவான்.

திருக்குர்ஆன் 47:7

அல்லாஹ் யாரிடமும் எந்த தேவையுமற்றவன் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை. முழுக் குர்ஆனும் இந்தக் கொள்கையைத் தான் போதிக்கிறது. அவன் தான் உதவக் கூடியவன்; யாரும் அவனுக்கு உதவிட முடியாது.

ஆயினும் சில வசனங்களில் அல்லாஹ்வுக்கு மற்றவர்கள் உதவுவது போல் அமைந்துள்ளன. இது போன்ற வசனங்களை இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்கு முரணில்லாத வகையில் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு கல்விக் கூடத்தில் பயிற்றுவிக்கும் ஆசிரியர், மாணவர்கள் மீது அதிக அக்கறை கொண்டவராக இருந்தால் மாணவர்களை ஊக்குவிப்பதற்காக ஆர்வமூட்டுவார். நீங்கள் அதிக மதிப்பெண் பெற்றால் அது எனக்குச் செய்யும் உதவியாகும் என்பார். நல்ல மதிப்பெண் வாங்கியவருக்கு பரிசு வழங்குவேன் என்றும் கூறுவார்.

ஒரு மாணவன் அதிக மதிப்பெண் வாங்கினாலும், வாங்காமல் போனாலும் அது அந்த மாணவனுக்குத் தான் நல்லதாக கெட்டதாக அமையும். ஆசிரியருக்கு இதனால் அறிவு அதிகரிக்காது. ஆனாலும் இப்படி கூறுவதால் ஆசிரியரை மகிழ்விக்கவும் அவர் அளிக்கும் பரிசுகளைப் பெறவும் மாணவன் நன்றாகப் படிப்பான்.

எனக்காக நீ நன்றாகப் படி என்று ஒரு தாய் மகனிடம் கூறுவாள். இதனால் அந்தத் தாயின் அறிவு அதிகரிக்காது. மகனின் அறிவுதான் அதிகரிக்கும்.

ஆனாலும் இப்படிச் சொல்லும் போது நமது நன்மைக்காக நாம் படித்தாலும் நமது தாயை அது மகிழ்ச்சியில் ஆழ்த்தும் என்று எண்ணி முழு கவனத்துடன் படிப்பான்.

இது போல் தான் அல்லாஹ்வுக்கு உதவுதல் என்பதும் அமைந்துள்ளது. அல்லாஹ்வுக்கு உதவுங்கள் என்று கூறி விட்டு அல்லாஹ் சொல்லும் காரியங்கள் மனிதனுக்கு உதவும் காரியங்களாகவே உள்ளன. போர்க்களத்தில் கலந்து போரிட்டு வெற்றி பெற்றால் அதனால் கனீமத் எனும் லாபமும், புகழும் மனிதனுக்குக் கிடைக்கிறது. இதனால் அல்லாஹ்வுக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை.

நாம் போரில் பங்கெடுப்பதால் அல்லாஹ் கூலி தருவான்; அதை அவனுக்குச் செய்த உதவியாக எடுத்துக் கொள்வான்; நமது தியாகம் வீண் போகாது. மாறாக அல்லாஹ் தனக்குச் செய்த உதவியாகக் கருதி மகத்தான கூலியை வழங்குவான் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காகவே அல்லாஹ் இப்படிக் கூறுகிறான். இதனால் மனிதன் நற்காரியங்களை அதிக முனைப்புடன் செய்வான்.

இதற்காகத் தான் அல்லாஹ் இப்படி கூறுகிறான். அவனுக்கு மற்றவர்களின் உதவி தேவை என்பதற்காக அல்ல.

அல்லாஹ்வின் கைப்பிடிக்கு அளவு என்ன?

ஆதம் (அலை) அவர்களை இறைவன் தனது ஒரு கைப்பிடி மண்ணில் படைத்தான் என்று ஹதீஸ் உள்ளது. அறுபது முழம் அவருடைய உயரம் எனவும் ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் வானங்கள் அவனது கைப்பிடிக்குள் அடங்கும் என்று குர்ஆன் கூறுகிறது. அப்படியானால் அல்லாஹ்வின் கைப்பிடி என்பது அறுபது முழத்தை உள்ளடக்கும் அளவா? வானங்களை உள்ளடக்கும் அளவா?

ராஜ் முஹம்மத், குவைத்.

அல்லாஹ்வைப் பொருத்தவரை அவனது பிரம்மாண்டம் பற்றி நாம் வரையறுக்க முடியாது. ஆனால் அவனைக் குறிப்பிட்ட உயரத்துக்குள் அடக்க முடியாது. சில நேரங்களில் அவன் தனது தோற்றத்தை வானம் பூமியை விடவும் பெரிதாகக் காட்டுவான். சில நேரங்களில் மனிதர்கள் அண்ணாந்து பார்க்கும் சிறிய தோற்றத்திலும் இருப்பான். நிர்ணயித்த அளவு அவனுக்கு இல்லை என்பதால் நீங்கள் கேட்ட விஷயத்தில் முரன்பாடு ஏதும் இல்லை. இது குறித்து ஷேக் அப்துல்லா ஜமாலி விவாதத்தில் ஆதாரங்களை குறிப்பிட்டுள்ளோம்.

04.08.2011. 16:14 PM

அல்லாஹ்வின் பெயரை மற்றவர்களுக்குச் சூட்டலாமா?

அல்லாஹ்வுக்கு அழகிய திருப்பெயர்கள் பல உள்ளன. அவற்றில் சில பெயர்கள் மனிதர்களுக்கும் பயன்ப்டுத்தப்பட்டுள்ளன. இதைச் சரியான முறையில் புரிந்து கொள்ளாமல் அந்த மனிதர்கள் அல்லாஹ்வைப் போன்றவர்கள் என்று விதண்டா வாதம் செய்வோரும் உள்ளனர்.

ஆனால் அல்லாஹ்வுக்கு அந்தப் பெயர்கள் பயன்படுத்தப்படும் போது அதன் பொருள் வேறு; மனிதர்களுக்குப் பயன்படுத்தப்படும் போது அதன் பொருள் வேறு.

உதாரணமாக ரஹீம் என்ற திருப்பெயர் அல்லாஹ்விற்குரிய பெயர்களில் ஒன்றாகும்.. ரஹீம் என்ற இந்தச் சொல் அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களுக்கும் சில சமயங்களில் பயன்படுத்தப்படுவதுண்டு. திருக்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் இதற்குச் சான்றுகள் உள்ளன.

لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِنْ أَنْفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَاعَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِينَ رَءُوفٌ رَحِيمٌ (128)

உங்களிடம் உங்களைச் சேர்ந்த தூதர் (முஹம்மத்) வந்து விட்டார். நீங்கள் சிரமப்படுவது அவருக்குப் பாரமாக இருக்கும். உங்கள் மீது அதிக அக்கறை உள்ளவர். நம்பிக்கை கொண்டோரிடம் பேரன்பும், இரக்கமும் உடையவர்.

திருக்குர்ஆன் 9:128

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் புகழ்ந்துரைக்கும் போது ரஹீம் என்ற அடைமொழியை இவ்வசனத்தில் பயன்படுத்தியிருக்கிறான்.

ரஹீம் என்ற தன் பெயரையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் அல்லாஹ் பயன்படுத்தியுள்ளதால் அல்லாஹ்வைப் போலவே அவர்களும் நிகரற்ற அன்புடையவர்கள் தாம் என்று சில அறிவீனர்கள் எண்ணுகின்றனர்.

ரஹீம் என்ற சொல்லுக்கு நிகரற்ற அன்புடையவன் என்று பொருளிருப்பதைப் போல் இரக்க குணம் உள்ளவர் என்ற பொருளும் உண்டு. அல்லாஹ்வுக்கு அதைப் பயன்படுத்தும் போது அவனது தகுதிக்கும், அந்தஸ்துக்கும் ஏற்றவாறு நிகரற்ற அன்புடையவன் என்ற பொருளைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களுக்கு அந்த வார்த்தை பயன்படுத்தப்படும் போது இறைவனின் அந்தஸ்தைக் குறைத்து விடக் கூடாது என்பதற்காக இரக்க குணம் கொண்டவர் என்ற பொருளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற சாதாரணமான உண்மையைக் கூட இத்தகையோர் உணர்வதில்லை.

ரஹீம் என்ற சொல்லை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டும் தான் அல்லாஹ் பயன்படுத்தியுள்ளான் என்று இவர்கள் எண்ணிக் கொண்டதே இவர்களின் தவறான விளக்கத்துக்கு காரணமாகும்.

ரஹீம் என்ற சொல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டுமின்றி நபித்தோழர்களுக்கும், நம்மைப் போன்றவர்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளதை இவர்கள் அறியவில்லை.

مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ وَالَّذِينَ مَعَهُ أَشِدَّاءُ عَلَى الْكُفَّارِ رُحَمَاءُ بَيْنَهُمْ تَرَاهُمْ رُكَّعًا سُجَّدًا يَبْتَغُونَ فَضْلًا مِنَ اللَّهِ وَرِضْوَانًا سِيمَاهُمْ فِي وُجُوهِهِمْ مِنْ أَثَرِ السُّجُودِ ذَلِكَ مَثَلُهُمْ فِي التَّوْرَاةِ وَمَثَلُهُمْ فِي الْإِنْجِيلِ كَزَرْعٍ أَخْرَجَ شَطْأَهُ فَآزَرَهُ فَاسْتَغْلَظَ فَاسْتَوَى عَلَى سُوقِهِ يُعْجِبُ الزُّرَّاعَ لِيَغِيظَ بِهِمُ الْكُفَّارَ وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ مِنْهُمْ مَغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا (29)

முஹம்மது அல்லாஹ்வின் தூதராவார். அவருடன் இருப்போர் (ஏக இறைவனை) மறுப்போர் மீது கடுமையாகவும், தமக்கிடையே (ரஹீம்களாகவும்) இரக்கம் மிகுந்தும் இருக்கின்றனர்.

திருக்குர்ஆன் 48:29

இவ்வசனத்தில் நபித்தோழர்களை ரஹீம்கள் என அல்லாஹ் கூறுகிறான்.

صحيح البخاري 1284 - حَدَّثَنَا عَبْدَانُ، وَمُحَمَّدٌ، قَالاَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا عَاصِمُ بْنُ سُلَيْمَانَ، عَنْ أَبِي عُثْمَانَ، قَالَ: حَدَّثَنِي أُسَامَةُ بْنُ زَيْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: أَرْسَلَتِ ابْنَةُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَيْهِ إِنَّ ابْنًا لِي قُبِضَ، فَأْتِنَا، فَأَرْسَلَ يُقْرِئُ السَّلاَمَ، وَيَقُولُ: «إِنَّ لِلَّهِ مَا أَخَذَ، وَلَهُ مَا أَعْطَى، وَكُلٌّ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى، فَلْتَصْبِرْ، وَلْتَحْتَسِبْ»، فَأَرْسَلَتْ إِلَيْهِ تُقْسِمُ عَلَيْهِ لَيَأْتِيَنَّهَا، فَقَامَ وَمَعَهُ سَعْدُ بْنُ عُبَادَةَ، وَمَعَاذُ بْنُ جَبَلٍ، وَأُبَيُّ بْنُ كَعْبٍ، وَزَيْدُ بْنُ ثَابِتٍ وَرِجَالٌ، فَرُفِعَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّبِيُّ وَنَفْسُهُ تَتَقَعْقَعُ - قَالَ: حَسِبْتُهُ أَنَّهُ قَالَ كَأَنَّهَا شَنٌّ - فَفَاضَتْ عَيْنَاهُ، فَقَالَ سَعْدٌ: يَا رَسُولَ اللَّهِ، مَا هَذَا؟ فَقَالَ: «هَذِهِ رَحْمَةٌ جَعَلَهَا اللَّهُ فِي قُلُوبِ عِبَادِهِ، وَإِنَّمَا يَرْحَمُ اللَّهُ مِنْ عِبَادِهِ الرُّحَمَاءَ»

நிச்சயமாக அல்லாஹ் தனது அடியார்களில் ரஹீம்களாக (இரக்கம் மிகுந்தவர்களாக) உள்ளவர்களுக்கே அருள் புரிகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உஸாமா பின் ஸைத் (ரலி)

நூல்: புகாரி 1284, 5655, 6655, 7377, 7448

மனிதர்கள் அனைவரும் ரஹீம்களாக இருக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இங்கே கூறியுள்ளார்கள்.

நபித்தோழர்களும், மனிதர்கள் அனைவரும் நிகரற்ற அன்புடையவர்கள் என்று இவர்கள் பொருள் கொள்வார்களா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் புகழ்கிறோம் என்று நினைத்துக் கொண்டு அல்லாஹ்வுக்குச் சமமாக அவர்களைக் கருதினார்கள். முடிவில் ரஹீம் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டுமின்றி நபித்தோழர்களுக்கும் நம்மைப் போன்றவர்களுக்கும் பயன்படுத்தப்பட்டதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எந்தச் சிறப்பும் இல்லாமல் இவர்கள் ஆக்கிவிட்டார்கள்.

பொதுவாக அல்லாஹ்வின் பண்புகளைப் பற்றிப் புரிந்து கொள்வதற்கு சில வரையறைகள் உள்ளன. அவற்றை விளங்காத காரணத்தினாலேயே இப்படியெல்லாம் கூறுகின்றனர்.

அல்லாஹ்வின் பண்புகளில் ஸமீவுன் என்பதும் ஒன்று. செவியுறுபவன் என்பது இதன் பொருள். இதே பண்பு மனிதர்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கும் செவியுறுபவன் என்று தான் பொருள்.

எனவே அல்லாஹ்வும், மனிதனும் ஒன்று தான் எனக் கூறக் கூடாது. வார்த்தையை மட்டும் பார்க்காமல் யாருக்குப் பயன்படுத்தப்படுகிறதோ அவர்களது தகுதியையும் கவனத்தில் கொண்டு தான் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

தனக்கு நிகராக யாருமில்லை என்று அல்லாஹ் திட்டவட்டமாக அறிவித்து விட்டதால் அல்லாஹ்வை ஸமீவுன் என்று குறிப்பிடும் போது அவனது தகுதிக்கேற்ப அதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

எத்தனை ஓசைகளையும் ஒரே நேரத்தில் கேட்பவன், எவ்வளவு தொலைவிலிருந்தாலும் கேட்பவன், எந்த நேரத்திலும் கேட்பவன், சுருங்கச் சொன்னால் அனைத்தையும் செவியுறுபவன் என்று கூறலாம்.

மனிதனை ஸமீவுன் எனக் கூறும் போது அனைத்தையும் செவியுறுபவன் என்று கூற முடியாது. ஒரு நேரத்தில் இரண்டு பேரின் குரலைக் கூட அவனால் கேட்க முடியாது.

இது போலவே பார்ப்பவன், சக்தியுள்ளவன், அன்பு செலுத்துபவன், உயர்ந்தவன் போன்ற பண்புகள் மனிதர்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அனைத்தையும் பார்ப்பவன், அனைத்தின் மீதும் சக்தி உள்ளவன், நிகரற்ற அன்புடையவன், அனைத்தையும் விட உயர்ந்தவன் என அல்லாஹ்வைப் பற்றி பேசும் போது புரிந்து கொள்ள வேண்டும். மனிதர்களுக்குப் பயன்படுத்தும் போது சாதாரணமான பொருளில் புரிந்து கொள்ள வேண்டும்.

இதை விளங்காதது தான் குழப்பத்திற்குக் காரணமாகும்.

ஸமீவுன் பஸீருன் (பார்ப்பவன், கேட்பவன்) என்ற தனது பண்புகளை மனிதர்களுக்கும் அல்லாஹ் பயன்படுத்தியதை அல்குர்ஆன் 76:2 வசனத்தில் காணலாம்.

ஜப்பார் என்ற தனது பண்பை மனிதர்களுக்கும் அல்லாஹ் பயன்படுத்தியுள்ளதை 11:59, 14:15, 40:35 ஆகிய வசனங்களில் காணலாம்.

ஹஸீப் என்ற தனது பண்பை மனிதனுக்கும் அல்லாஹ் பயன்படுத்தியிருப்பதை 17:14 வசனத்தில் காணலாம்.

ஃகபீர் என்ற தனது பண்பை 25:59 வசனத்தில் மனிதர்களுக்கும் அல்லாஹ் பயன்படுத்தி இருக்கிறான்.

ரப்பு என்ற தனது பண்பை அல்லாஹ் மனிதர்களுக்கும் பயன்படுத்தியிருப்பதை 12:42, 12:50, 12:23 ஆகிய வசனங்களில் காணலாம்.

அஸீஸ் என்ற தனது பண்பை மனிதர்களுக்கும் அல்லாஹ் பயன்படுத்தியிருப்பதை 12:30, 12:51, 12:78, 12:88 ஆகிய வசனங்களில் காணலாம்.

அலீம் என்ற தனது பண்பை மனிதர்களுக்கும் அல்லாஹ் பயன்படுத்தியிருப்பதை 7:109-112, 10:79, 12:76, 15:53, 26:34, 26:37, 51:28 ஆகிய வசனங்களில் காணலாம்.

அலீ என்ற அல்லாஹ்வின் பெயர் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மருமகன் அலீ (ரலி) அவர்களுக்கும் சூட்டப்பட்டது. அதை நபிகள் நாயகம் (ஸல்) மாற்றவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் ரஹீம் எனக் குறிப்பிட்டுள்ளான். எனவே அல்லாஹ்வும் நபியும் ஒன்று தான். அல்லாஹ்விடம் கேட்பதை நபியிடம் கேட்கலாம் என்றெல்லாம் சில அறிவீனர்கள் கூறி வருகின்றனர். அவர்களுக்காகவே இந்த விபரங்களை நாம் குறிப்பிடுகிறோம்.

அல்லாஹ்வின் பல பண்புகள் மனிதர்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்த இடங்களில் நாம் எப்படிப் புரிந்து கொள்கிறோம். அல்லாஹ்வைக் குறிக்கும் போது அவனது தகுதிக்கேற்பவும் மனிதர்களைக் குறிக்கும் போது அவர்களின் நிலைமைக் கேற்பவும் தான் புரிந்து கொள்கிறோம்.

அது போலவே தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் ரஹீம் என்று குறிப்பிட்டுள்ளதையும் புரிந்து கொள்ள வேண்டும். அது போலவே தான் மற்ற மனிதர்களை ரஹீம் எனக் கூறப்படும் போதும் புரிந்து கொள்ள வேண்டும்.

More Articles …