Sidebar

22
Mon, Jun
சமீபத்திய செய்திகள்

மூஸா நபியை விட முஸ்லிம்கள் சிறந்தவர்களா?

அல்லாஹ்வே உன்னுடன் பேச நீ கொடுத்த கண்ணியத்தை எனக்குக் கொடுத்தது போல் போல் வேறு யாருக்கும் நீ கொடுத்துள்ளாயா? என ஒரு முறை இறைவனின் தூதர் மூஸா அவர்கள் கேட்டார்களாம். அதற்கு இறைவன், மூஸாவே, கடைசி காலத்தில் முஹம்மதின் உம்மத்தவர்களை நான் அனுப்புவேன். அவர்கள் காய்ந்த உதடுகளுடனும், குழி விழுந்த கண்களுடனும், தாகத்தால் வறண்ட நாக்குகளுடனும், பலவீனமான உடலுடன் பசியால் துன்பப்படும் வயிறுகளுடனும், காய்ந்த ஈரல்களுடனும் என்னை அழைப்பார்கள். மூஸாவே அவர்கள், உன்னை விட அதிகம் சிறந்தவர்கள். நீர் என்னுடன் பேசும்போது சுமார் 70 000 திரைகள் உனக்கும் எனக்கும் இடையில் உள்ளன. ஆனால் இப்தார் நேரத்தில் ஒரு சிறு திரை கூட எனக்கும், நோன்பு திறக்கும் முஹம்மதின் உம்மத்தினருக்கும் இடையில் இல்லை. மூஸாவே, நானே, எனக்குள் நோன்பு திறக்கும் நேரத்தில் நோன்பாளிகள் கேட்கும் பிரார்த்தனையை ஒரு போதும் மறுக்கக் கூடாது எனும் பொறுப்பை எடுத்துக் கொண்டேன்.

இந்த துஆ எந்த கிரந்தத்தில் உள்ளது? இதன் தரம் என்ன?  கருத்துக்களைச் சிந்தித்தால் நிறைய கேள்விகள் எழுகின்றன. தெளிவாக்குங்கள்..

ஹஸன்

பதில்

இந்தக் கருத்தில் எந்த ஆதாரப்பூர்வமான செய்தியும் கிடையாது. இது ஒரு கட்டுக்கதையாகும். இதற்கும் இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

இறைவன் வானத்தில் இருந்து கொண்டே பூமியில் உள்ள மூஸா நபியிடம் தனது பேச்சைக் கேட்கும் விதமாக நேரடியாகப் பேசியிருக்கிறான். இது நபிமார்களிலேயே மூஸா நபிக்கு மட்டும் உரிய சிறப்பாகும். அதனாலே அவர்கள் கலீமுல்லாஹ் (இறைவனிடம் உரையாடியவர்) என்றழைக்கப்படுகிறார்கள்.

இத்தூதர்களில், சிலரை விடச் சிலரைச் சிறப்பித்திருக்கிறோம். அவர்களில் சிலரிடம் அல்லாஹ் பேசியுள்ளான். அவர்களில் சிலருக்கு, பல தகுதிகளை அவன் உயர்த்தியிருக்கிறான்.
திருக்குர்ஆன் 2:253

صحيح البخاري فَيَأْتُونَ إِبْرَاهِيمَ، فَيَقُولُ: لَسْتُ لَهَا، وَلَكِنْ عَلَيْكُمْ بِمُوسَى فَإِنَّهُ كَلِيمُ اللَّهِ، فَيَأْتُونَ مُوسَى فَيَقُولُ: لَسْتُ لَهَا

விசாரணை நாளின் போது மக்கள் மூஸா நபியை நோக்கி அல்லாஹ் நேரடி உரையாடலுக்கு உங்களைத் தேர்வு செய்தான் என்று கூறுவார்கள் என நபியவர்கள் கூறியுள்ளனர்.
பார்க்க புகாரி 7510
அங்கே அவர் வந்த போது "மூஸாவே' என்று அழைக்கப்பட்டார். "நான் தான் உமது இறைவன். எனவே உமது செருப்புகளைக் கழற்றுவீராக! நீர் "துவா' எனும் தூய்மையான பள்ளத்தாக்கில் இருக்கிறீர். நான் உம்மைத் தேர்ந்தெடுத்து விட்டேன். எனவே அறிவிக்கப்படும் தூதுச் செய்தியைச் செவிமடுப்பீராக!
அல்குா்ஆன் 20:11-13
(முஹம்மதே!) இதற்கு முன் சில தூதர்களின் வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம். சில தூதர்களின் வரலாற்றை நாம் உமக்குக் கூறவில்லை. அல்லாஹ் மூஸாவுடன் உண்மையாகவே பேசினான்.
அல்குா்ஆன் 4:164

நோன்பு துறக்கும் போது செய்யும் பிரார்த்தனை இறைவனுடைய பேச்சை நாம் நேரடியாக கேட்கும் விதமாக இருக்காது. இவ்வாறிருக்கையில் இது இறைவன் மூஸா நபியிடம் பேசியதை விட எப்படி சிறப்பானதாகும்.

இதுவே இந்தச் செய்தி தவறு என்பதை உணர்த்துகின்றது. மேலும் மூஸா நபியைச் சிறப்பித்து பல ஹதீஸ்கள் உள்ளன. நபியர்கள் மூஸாவை விட தன்னைச் சிறப்பித்து உயர்த்தி விடக்கூடாது எனுமளவுக்கு கூறியிருக்கிறார்கள்.

صحيح البخاري 2411 – حَدَّثَنَا يَحْيَى بْنُ قَزَعَةَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، وَعَبْدِ الرَّحْمَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: اسْتَبَّ رَجُلاَنِ رَجُلٌ مِنَ المُسْلِمِينَ وَرَجُلٌ مِنَ اليَهُودِ، قَالَ المُسْلِمُ: وَالَّذِي اصْطَفَى مُحَمَّدًا عَلَى العَالَمِينَ، فَقَالَ اليَهُودِيُّ: وَالَّذِي اصْطَفَى مُوسَى عَلَى العَالَمِينَ، فَرَفَعَ المُسْلِمُ يَدَهُ عِنْدَ ذَلِكَ، فَلَطَمَ وَجْهَ اليَهُودِيِّ، فَذَهَبَ اليَهُودِيُّ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخْبَرَهُ بِمَا كَانَ مِنْ أَمْرِهِ [ص:121]، وَأَمْرِ المُسْلِمِ، فَدَعَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ المُسْلِمَ، فَسَأَلَهُ عَنْ ذَلِكَ، فَأَخْبَرَهُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ تُخَيِّرُونِي عَلَى مُوسَى، فَإِنَّ النَّاسَ يَصْعَقُونَ يَوْمَ القِيَامَةِ، فَأَصْعَقُ مَعَهُمْ، فَأَكُونُ أَوَّلَ مَنْ يُفِيقُ، فَإِذَا مُوسَى بَاطِشٌ جَانِبَ العَرْشِ، فَلاَ أَدْرِي أَكَانَ فِيمَنْ صَعِقَ، فَأَفَاقَ قَبْلِي أَوْ كَانَ مِمَّنِ اسْتَثْنَى اللَّهُ»

ஒரு முஸ்லிமும் ஒரு யூதரும் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டனர். அந்த முஸ்லிம், "உலகத்தார்  அனைவரை விடவும் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு மேன்மையை அளித்தவன் மீது சத்தியமாக!'' என்று கூறினார். அந்த யூதர், "உலகத்தார் அனைவரை விடவும் மூசாவுக்கு மேன்மையை அளித்தவன் மீது சத்தியமாக!'' என்று கூறினார். அதைக் கேட்டு (கோபம் கொண்டு)  அந்த முஸ்லிம் தன் கையை ஓங்கி யூதரின் முகத்தில் அறைந்து விட்டார். அந்த யூதர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று தனக்கும் அந்த முஸ்லிமுக்கும் இடையே நடந்த (சச்சர)வையெல்லாம் தெரிவித்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த முஸ்லிமை அழைத்து வரச்சொல்லி அது பற்றி அவரிடம் கேட்டார்கள். அவர் விபரத்தைக் கூறினார். (நடந்தவை அனைத்தையும் விசாரித்துத் தெரிந்து கொண்ட பின்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "மூசாவை விட என்னைச் சிறப்பாக்கி (முதலிடம் தந்து உயர்த்தி) விடாதீர்கள். ஏனெனில், மக்கள் அனைவரும் மறுமை நாளில் மூர்ச்சையாகி விடுவார்கள்.  நானும் அவர்களுடன் மூர்ச்சையாகி விடுவேன். நான் தான் முதலாவதாக மயக்கம் தெளிந்து எழுவேன். அப்போது, மூசா (அலை), (அல்லாஹ்வுடைய) அர்ஷின் ஓரத்தைப் பிடித்துக் கொண்டிருப்பார். மக்களோடு சேர்ந்து அவரும் மூர்ச்சையாகி, பிறகு எனக்கு முன்பாகவே மயக்கம் தெளிந்து விட்டிருப்பாரா? அல்லது அல்லாஹ் அவருக்கு மட்டும் (மூர்ச்சையடையத் தேவையில்லையென்று) விதி விலக்கு அளித்திருப்பானா என்று எனக்குத் தெரியாது'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 2411

இறைவன் மூஸா நபியிடம் நேரடியாகப் பேசியதை குா்ஆனில் அல்லாஹ் சிறப்பித்து குறிப்பிடுகிறான்.

மறுமையில் மூஸா நபிக்கு உள்ள அந்தச் சிறப்பை இப்றாஹீம் நபி வாயிலாக மக்கள் குறிப்பிடுகிறார்கள்.

ஆனால் இந்த கட்டுக்கதை மூஸா நபிக்கு இறைவன் வழங்கிய அந்தச் சிறப்பை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுகிறது.

எனவே இந்தச் செய்தி அடிப்படை ஆதாரமற்ற கட்டுக்கதை என்பதில் சந்தேகமில்லை.

மேலும் நோன்பு நோற்பது பற்றி அல்லாஹ் கூறும் போது உங்களுக்கு முன்னர் வாழ்ந்தவர்களுக்கு கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் கடமையாக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறான்.

ஒட்டிய வயிறு உள்ளிட்ட மேற்சொன்ன கட்டுக்கதையில் உள்ள அனைத்தும் அனைத்து சமுதாயத்துக்கும் உள்ளதாகும்.

மேலும் நோன்பு துறக்கும் இப்தார் என்பதும் அனைத்து சமுதாயங்களுக்கும் வழங்கப்பட்ட பொதுவான சிறப்பாகும். மற்ற சமுதாய மக்களுக்கு நோன்பு இல்லாதது போலவும் முஹம்மது நபியின் உம்மத்துகளுக்குத் தான் நோன்பு கடமையாக்கப்பட்டது போலவும் இந்தக் கட்டுக்கதையில் சொல்லப்படுகிறது.

எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம் எந்த உம்மத்தின் எந்த மனிதனும் எந்த ஒரு நபியை விடவும் உயர முடியாது. ஒரு நபியை விட நபியல்லாதவர்கள் சிறந்தவர்கள் என்று எந்த நூலில் இடம் பெற்றாலும் கண்ணை மூடிக் கொண்டு அதைக் கட்டுக்கதை என்று சொல்லிவிடலாம்

ஆதம் (அலை) நபியா?

முதல் மனிதராகிய  ஆதம் (அலை) அவர்கள் நபியா? இல்லையா? என்பதில்  சிலர்  கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர். முதல்  மனிதராகிய  ஆதம் (அலை)  அவர்கள் இறைத்தூதர் தான்  என்பதே  நம்முடைய  உறுதியான நிலைப்பாடாகும்.

இதற்கு திருக்குர்ஆன், மற்றும் நபிமொழிகள் சான்றாகத் திகழ்கின்றன. ஒருவர் நபி என்பதற்கு முதன்மையான ஆதாரம் மக்கள் பின்பற்ற வேண்டிய மார்க்க சட்டதிட்டங்கள் அவருக்கு வஹியாக அறிவிக்கப்படும். மார்க்கச் சட்டங்கள் நபிமார்கள் தவிர வேறு யாருக்கும் அறிவிக்கப்படாது.

அல்லாஹ்வின் விருப்பப்படி மக்கள் கட்டுப்பட வேண்டுமென்பதற்காகவே தவிர எந்தத் தூதரையும் நாம் அனுப்புவதில்லை.
திருக்குர்ஆன் 4:64

மக்கள்  பின்பற்ற  வேண்டிய மார்க்க வழிகாட்டுதல்களை நபிமார்கள் மூலமாக மட்டுமே அல்லாஹ் வழங்குவான் என்பதற்கு மேற்கண்ட  வசனம் தெளிவான சான்றாகும்.

ஆதம் (அலை) அவர்களை சொர்க்கச் சோலையில் இருந்து அல்லாஹ் வெளியேற்றும் போது கீழ்க்கண்டவாறு சொல்லி அனுப்பினான்.

قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ [البقرة/38]

"இங்கிருந்து  அனைவரும்  இறங்கி  விடுங்கள்!  என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும்போது எனது நேர்வழியைப் பின்பற்றுவோருக்கு எந்த  அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும்  மாட்டார்கள்'' என்று கூறினோம்.
திருக்குர்ஆன் 2:38

ثُمَّ اجْتَبَاهُ رَبُّهُ فَتَابَ عَلَيْهِ وَهَدَى (122) قَالَ اهْبِطَا مِنْهَا جَمِيعًا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنِ اتَّبَعَ هُدَايَ فَلَا يَضِلُّ وَلَا يَشْقَى  [طه/122، 123]

பின்னர்  அவரை  அவரது  இறைவன்  தேர்ந்தெடுத்தான். அவரை மன்னித்து  நேர்வழி காட்டினான்.   இருவரும்  ஒட்டுமொத்தமாக இங்கிருந்து  இறங்குங்கள்!  உங்களில்  சிலர் மற்றும்  சிலருக்கு பகைவர்களாவீர்கள்.  என்னிடமிருந்து  உங்களுக்கு  நேர்வழி வரும். அப்போது எனது நேர்வழியைப்  பின்பற்றுபவர்  வழிதவற மாட்டார். துர்பாக்கியசாலியாகவும் மாட்டார்.
திருக்குர்ஆன் 20:122,123

சொர்க்கத்தை விட்டு ஆதம் அலை அவர்கள் வெளியேற்றப்பட்ட பின்னர் ஆதமும் அவர்களின் சந்ததிகளும் எவ்வாறு வாழ வேண்டும் என்ற வழிகாட்டுதல் அல்லாஹ்விடமிருந்து வரும் என இவ்வசனங்கள் கூறுகின்றன.

மனிதன் அல்லாஹ்விடமிருந்து கிடைக்கப் பெறும் வழிகாட்டுதல் படியே வாழ வேண்டும். தன்னிஷ்டத்துக்கு வாழும் உரிமையை மனிதர்களுக்கு அல்லாஹ் வழங்கவில்லை.

எனவே ஆதம் பூமிக்கு வந்தது முதல் அவர் எப்படி வாழ வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல் அல்லாஹ்விடமிருந்து அவருக்கு வந்தன. இப்படி அல்லாஹ்விடமிருந்து வழிகாட்டுதலைப் பெறுவதுதான் நபித்துவம். இப்படி செய்திகளை அல்லாஹ்விடமிருந்து பெற்றவர் தான் நபியாவார். ஆதம் அவர்கள் நபி தான் என்பதற்கு இவ்வசனங்கள் ஆதாரங்களாக உள்ளன.

ஆதம் (அலை) அவர்கள் நபி அல்ல என்றால் அவருக்கும் அவரது சந்ததிகளுக்கும் வழிகாட்டும் தூதர் அனுப்பப்படவில்லை என்று ஆகிவிடும். ஆனால் எந்த சமுதாயமும் வழிகாட்டும் இறைத்தூதர் இல்லாமல் விடுபட்டதில்லை.

ஆதம் (அலை) அவர்கள் நபியல்ல என்று கூறுவோர் பின்வரும் ஆதாரங்களை முன்வைக்கிறார்கள்.

إِنَّا أَوْحَيْنَا إِلَيْكَ كَمَا أَوْحَيْنَا إِلَى نُوحٍ وَالنَّبِيِّينَ مِنْ بَعْدِهِ

நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த நபிமார்களுக்கும் தூதுச் செய்தி அறிவித்தது போல் (முஹம்மதே!) உமக்கும் நாம் தூதுச்செய்தி அறிவித்தோம்.
திருக்குர்ஆன் 4:163

நபி நூஹ் (அலை) அவர்களுக்கும், அவர்களுக்குப் பின் வந்த நபிமார்களுக்கும் எவ்வாறு நாம் வஹீ அறிவித்தோமோ அதே போன்று உமக்கும் அறிவிக்கிறோம் என்று அல்லாஹ் இந்த வசனத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பார்த்துக் கூறுகிறான்.

ஆதம் (அலை) அவர்கள் நபியாக இருந்திருந்தால் ஆதமுக்கு நாம் எவ்வாறு வஹீ அறிவித்தோமோ அவ்வாறே உமக்கு அறிவித்தோம் என்று அல்லாஹ் கூறியிருப்பான்.

நூஹ் (அலை) அவர்களுக்கு அறிவித்ததைப் போன்று உமக்கு அறிவிக்கிறோம் என்று அல்லாஹ் கூறுவதின் மூலம் ஆதம் (அலை) அவர்களுக்கு இறைவன் தூதுத்துவத்தை வழங்கவில்லை என்பதை அறியலாம் என்று வாதிடுகின்றனர்.

இவ்வசனம் நூஹ் நபிக்கு முன்னர் இறைத்தூதர்கள் அனுப்ப்படவில்லை என்ற கருத்தைத் தராது. வஹீ அறிவித்த முறையைத் தான் இவ்வசனம் கூறுகிறது. நபிமார்களுக்கு வானவர் மூலம் இறைச் செய்தியை அறிவிப்பதே பெரும்பாலும் இறைவனின் வழக்கமாக இருந்தது.

ஆனால் நூஹ் நபிக்கு முன்னர் ஆதம் (அலை) அவர்களுக்கு அறிவித்த வகை இந்த வகையிலானது அல்ல. மாறாக நேருக்கு நேராகப் பேசி அறிவித்ததாகும்.

சொர்க்கத்தில் இருந்து வெளியேற்றப்படுவதற்கு முன்னரும் அல்லாஹ் ஆதம் நபியிடம்  நேருக்கு நேராக உரையாடி இருக்கிறான்.

பார்க்க : திருக்குர்ஆன் 2:33, 2:35, 7:19, 20:117

சொர்க்கத்தை விட்டு வெளியேற்றிய போதும் ஆதமுடன் அல்லாஹ் பேசியுள்ளான் என்பதை முன்னர் நாம் எடுத்துக் காட்டியுள்ளோம்.

எனவே ஆதமுக்கு வஹி அறிவித்தது போல் மற்றவர்களுக்கு வஹி அறிவிக்கவில்லை. எனவே தான் ஆதமைப் பற்றி இவ்வசனத்தில் கூறப்படவில்லை.

நூஹுக்கு எப்படி வானவர் மூலம் அல்லாஹ் வஹி அறிவித்தானோ அதுபோல் தான் நபிகள் நாயகத்துக்கு அல்லாஹ் வஹி அறிவித்துள்ளான் என்பதே இவ்வசனத்தின் கருத்தாகும்.

இப்படி கருத்து கொள்ளாவிட்டால் நூஹுக்கு முன்னர் வாழ்ந்த மக்களுக்கு அல்லாஹ்விடமிருந்து எந்த வழிகாட்டலும் வரவில்லை என்று ஆகிவிடும். என்னிடமிருந்து உனக்கு நேர்வழி வரும் என்று ஆதம் அவர்களுக்கு அல்லாஹ் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்று ஆகிவிடும்.

وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ قَالَ لَأَقْتُلَنَّكَ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ [المائدة/27]

ஆதமுடைய இரு புதல்வர்களின் உண்மை வரலாற்றை அவர்களுக்குக் கூறுவீராக! அவ்விருவரும் ஒரு வணக்கத்தைப் புரிந்தனர். அவர்களில் ஒருவரிடம் அது ஏற்கப்பட்டது. மற்றொருவரிடம் ஏற்கப்படவில்லை. "நான் உன்னைக் கொல்வேன்'' என்று (ஏற்கப்படாதவர்) கூறினார். "(தன்னை) அஞ்சுவோரிடமிருந்தே அல்லாஹ் ஏற்றுக்கொள்வான்'' என்று (ஏற்கப்பட்டவர்) கூறினார்.
திருக்குகுர்ஆன் 5:27

நூஹ் (அலை) அவர்கள் தான் முதல் நபி என்றால் ஆதம் (அலை) அவர்களின் மகன்களுக்கு இறைவனின் பக்கம் நெருக்கமாக்கி வைக்கும் ஒரு வணக்கத்தை கற்றுக் கொடுத்தது யார்? என்ற கேள்வி ஏற்படும்.

ஏனெனில் ஆதம் (அலை) அவர்களின் இரு மகன்களும் நூஹ் (அலை) அவர்களுக்கு முந்தியவர்கள் ஆவர். எனவே தமக்குரிய ஷரியத்தை ஆதம் (அலை) அவர்கள் மூலமே அவர்கள் பெற்றிருக்க முடியும் என்பது தெளிவாகிறது.

எனவே ஆதம் (அலை) அவர்கள் நபியாக இருந்த காரணத்தினால் அவருடைய மகன்கள் இறைவனுக்குச் செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளை ஆதம் (அலை) அவர்கள் மூலம் பெற்றுக் கொண்டனர் என்பதே சரியானதாகும்.

மறுமை நாளில் மக்கள் நூஹ் (அலை) அவர்களிடம் சென்று ”நீங்கள் தான் பூமியிலுள்ளவர்களுக்கு அல்லாஹ் அனுப்பி வைத்த தூதர்களில் முதலாமவர்” என்று கூறுவார்கள் என ஹதீஸ்களில் வந்துள்ளது. (பார்க்க புகாரி 4476, 4712, 6565)

மேற்கண்ட ஹதீஸில் நூஹ் (அலை) அவர்கள் தான் பூமியிலுள்ளவர்களுக்கு அனுப்பப்பட்ட முதல் தூதர் என்று வருகிறது. எனவே நூஹ் (அலை) அவர்கள் தான் முதல் தூதர் என்பதால் ஆதம் நபி அல்லர் எனவும் வாதிடுகின்றனர்.

மேற்கண்ட செய்தியில் பொத்தாம் பொதுவாக நூஹ் (அலை) அவர்கள் முதல் தூதர் என்று குறிப்பிடப்படவில்லை. மாறாக,

يَا نُوحُ أَنْتَ أَوَّلُ الرُّسُلِ إِلَى أَهْلِ الْأَرْضِ

நூஹே ! நீர் பூமியில் உள்ளவர்களுக்கு முதல் தூதர் ஆவீர். (புகாரி 3340)

يَا نُوحُ أَنْتَ أَوَّلُ الرُّسُلِ إِلَى الأَرْضِ

மக்கள் நூஹ் (அலை) அவர்களிடம், "நூஹே! நீங்கள் பூமிக்கு முதல் ரசூல் ஆவீர்கள்''என்றும் கூறுவார்கள். (முஸ்லிம் – 327)

أَوَّلُ رَسُولٍ بَعَثَهُ اللَّهُ إِلَى أَهْلِ الْأَرْضِ

நூஹே ! நீர் பூமியில் உள்ளவர்களுக்கு அல்லாஹ் அனுப்பிய முதல் தூதர் ஆவீர். (புகாரி 4476)

أَوَّلَ نَبِيٍّ بَعَثَهُ اللَّهُ إِلَى أَهْلِ الْأَرْضِ

பூமியில் உள்ளவர்களுக்கு அல்லாஹ் அனுப்பிய முதல் நபி (நூஹ்) ஆவார். (7440)

என்று கூறப்பட்டுள்ளது.

பூமியில் உள்ள அனைவருக்கும் அனுப்பப்பட்ட தூதர்களில் முதலாமவர் என்ற கருத்தையே இது தருகிறது.

உலகத் தூதராக அனுப்பப்பட்ட முதல் தூதர் நூஹ் அவர்கள் தான்.

அதனால் தான் அவரது காலத்தில் முழு உலகுக்கும் பிரளயத்தை ஏற்படுத்தி அல்லாஹ் அழித்தான்.

அதற்கு முன்னர் அனுப்பப்பட்ட நபிமார்கள் ஒரு குடும்பத்துக்கோ, ஒரு பகுதிக்கோ, ஒரு கோத்திரத்துக்கோ தான் அனுப்பப்பட்டனர். பூமியில் உள்ளவர்களுக்கு அனுப்பப்பட்ட முதல் தூதர் என்ற வாசகத்தில் இருந்து இதனை அறியலாம்.

அதுமட்டுமின்றி நூஹ் நபி தான் முதல் நபி என்றால் அவருக்கு முன்னர் வாழ்ந்த மக்களுக்கு இறைவன் எந்த வழிகாட்டலையும் வழங்கவில்லை என்று ஆகும்.

எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம் என்று அல்லாஹ் விட்டுவிட்டான் என்று ஆகும்.

இறைத்தூதர் வராவிட்டால் தொழுகை நோன்பு உள்ளிட்ட எந்த வணக்கத்தையும் அவர்கள் செய்திருக்க முடியாது.

மர்யம், துல்கர்னைன், தாலூத்,  மூஸா நபியின் தாயார் போன்ற நல்லடியார்களுக்கும் வஹி அறிவித்ததாக திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது. எனவே அவர்களையும் நபி என்று குறிப்பிடுவீர்களா? என சிலர் இவ்விடத்தில் வினா எழுப்புகின்றனர்.

இவர்களுக்கு வஹியாக அறிவிக்கப்பட்ட செய்திகள் தனிப்பட்ட விஷயங்களாகும். மக்களுக்கு அறிவித்து அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் அல்ல. இத்தகைய வஹீயைப் பெற்றவர்கள் நபிமார்களாக ஆக மாட்டார்கள்.

ஆதம் அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட விஷயங்கள் மக்கள் கடைப்பிடித்து ஒழுக வேண்டிய விஷயங்களாகும். என்னிடமிருந்து வரும் அந்த நேர்வழியைப் பின்பற்றியவர்கள் கவலைப்பட மாட்டார்கள். எதற்கும் அஞ்ச மாட்டார்கள் என்று அந்த வசனங்களிலேயே சொல்லப்பட்டுள்ளது. பின்வரும் ஹதீஸும் ஆதம் அவர்கள் நபி என்பதற்கு ஆதாரமாக அமைந்துள்ளது.

صحيح ابن حبان

6296 – أخبرنا محمد بن عمر بن يوسف ، حدثنا محمد بن عبد الملك بن زنجويه ، حدثنا أبو توبة ، حدثنا معاوية بن سلام ، عن أخيه زيد بن سلام ، قال : سمعت أبا سلام ، قال : سمعت أبا أمامة ، أن رجلا ، قال : يا رسول الله أنبي كان آدم ؟ قال : « نعم ، مكلم » ، قال : فكم كان بينه وبين نوح ؟ قال : « عشرة قرون » . أبو توبة اسمه : الربيع بن نافع

அல்லாஹ்வின் தூதரே! ஆதம் (அலை) அவர்கள் நபியாக இருந்தார்களா? என ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபியவர்கள் ஆம்! அவர் (அல்லாஹ்வுடன்) நேரடியாக உரையாடியவர் என்று குறிப்பிட்டார்கள். ஆதம் (அலை) அவர்களுக்கும், நூஹ் (அலை) அவர்களுக்கும் எத்தனை ஆண்டுகள் இடைவெளி?” என்று அந்த மனிதர் கேட்டார். அதற்கு நபியவர்கள் பத்து தலைமுறைகள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ உமாமா (ரலி)
நூல் : இப்னு ஹிப்பான் (6296)

மேற்கண்ட ஹதீஸ் ஆதாரப்பூர்வமான செய்தியாகும்.

இதனுடைய அறிவிப்பாளர்களான அபுஸ்ஸல்லாம், ஸைத் பின் அபீ ஸல்லாம், அபூ தவ்பா அர்ரஃபீ பின் நாஃபிவு ஆகியோர் முஸ்லிம் நூலில் இடம்பெறும் அறிவிப்பாளர்கள் ஆவர். நம்பகமானவர்களும்ஆவார். முஆவியா பின் அபீ ஸல்லாம் என்பவர் புகாரி, முஸ்லிம் ஆகிய இரு நூல்களில் இடம்பெறும் அறிவிப்பாளராவார். முஹம்மத் பின் அப்துல் மலிக் பின் ஸன்ஜவைஹி, மற்றும் முஹம்மத் பின் உமர் பின்யூசுஃப் ஆகிய இருவரும் உறுதியான அறிவிப்பாளர்கள் ஆவார்கள்.

மேற்கண்ட ஆதாரப்பூர்வமான செய்தியின் அடிப்படையில் ஆதம் (அலை) அவர்கள் இறைத்தூதர் என்பதை நாம் மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

சில பலவீனமான அறிவிப்பாளர்கள் தொடர் வழியாகவும் மேற்கண்ட ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றை நாம் ஆதாரமாகக் கொண்டு வரவில்லை.

சரியான அறிவிப்பாளர் தொடர் கொண்டுள்ள செய்தியை மட்டுமே நாம் ஆதாரமாகக் காட்டியுள்ளோம். இந்த ஹதீஸ் ஆதம் (அலை) அவர்கள் நபி என்று மட்டும் சொல்லவில்லை. முகல்லம் அதாவது அல்லாஹ்வுடன் நேரடியாகப் பேசியவர் என்று இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. மூஸா நபியுடன் அல்லாஹ் நேரடியாகப் பேசியது போல் ஆதம் (அலை) அவர்களிடமும் பேசியுள்ளான்.

இத்தூதர்களில் சிலரை, மற்றும் சிலரை விடச் சிறப்பித்திருக்கிறோம். அவர்களில் சிலரிடம் அல்லாஹ் பேசியுள்ளான். அவர்களில் சிலருக்கு, பல தகுதிகளை அவன் உயர்த்தியிருக்கிறான். திருக்குர்ஆன் 2:253

மறுமை நாளில் மக்கள் அல்லாஹ்விடம் பரிந்துரை செய்வதற்காக ஒருவரைத் தேடுவார்கள்.

ஆதம் (அலை),

நூஹ் (அலை),

இப்ராஹீம் (அலை),

மூஸா (அலை),

ஈஸா (அலை)

என்று ஒவ்வொருவராகச் சென்று இறுதியாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வருவார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பரிந்துரை செய்வார்கள் என்ற செய்தி புகாரி, முஸ்லிம், இன்னும் பல நூல்களில் இடம் பெற்றுள்ளது.

ஆதம் (அலை) நபியாக இல்லாவிட்டால் தமக்குப் பரிந்துரை செய்ய ஆதம் (அலை) அவர்களை மக்கள் தேடிச் செல்ல மாட்டார்கள்.

மேலும் மிஃராஜ் பயணத்தின் போது முஹம்மது  நபியவர்கள்,

மூஸா (அலை),

இப்றாஹீம் (அலை),

இத்ரீஸ் (அலை),

யூசுஃப் (அலை),

ஈஸா (அலை),

யஹ்யா (அலை),

ஹாரூன் (அலை)

போன்ற நபிமார்களையும் இவர்களுடன் ஆதம் (அலை) அவர்களைச் சந்தித்ததாகவும் புகாரி, முஸ்லிம் போன்ற பல நூற்களில் இடம் பெற்றுள்ளது.

மேற்கண்ட இரண்டு சம்பவங்களிலும் கூறப்பட்டுள்ள அனைத்து நபிமார்களின் பெயர்களுடன் ஆதம் (அலை) அவர்களின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

ஆதம் (அலை) அவர்கள் இறைத்தூதர் தான் என்பதற்கு முதல் ஆதாரமாக திருக்குர்ஆன் வசனத்தையும், இரண்டாவதாக ஆதாரப்பூர்வமான நபிமொழியையும் கண்டோம்.

எனவே மக்கள் பரிந்துரைக்காக ஆதம் (அலை) அவர்களைச் தேடிச் செல்வது அவருக்கு முதல் மனிதர், அவரை அல்லாஹ் கையால் படைத்திருப்பது, மற்றும் மலக்குமார்களை அவருக்கு ஸஜ்தாச் செய்யுமாறு கூறியது போன்ற தனிச் சிறப்புகள் இருப்பதுடன் அவர் நபியாகவும் இருக்கின்ற காரணத்தினால் தான் என்பது தெளிவாகிறது.

ஏனெனில் மக்கள் ஒவ்வொரு நபியிடமும் சென்று அவருக்கு அல்லாஹ் வழங்கிய தனிச் சிறப்புகளைக் கூறி அல்லாஹ்விடம் தங்களுக்காக பரிந்துரை செய்யுமாறு வேண்டுகிறார்கள். அது போன்ற ஆதம் (அலை) அவர்கள் நபியாக இருக்கின்ற காரணத்தினால் தான் அவருடைய தனிச் சிறப்புகளைக் கூறி தங்களுக்காகப் பரிந்துரை செய்யுமாறு ஆதம் (அலை) அவர்களிடம் கோரிக்கை வைக்கிறார்கள்.

மேலும் மிஃராஜ் பயணத்தில் நபியவர்கள் ஒவ்வொரு வானத்திலும் ஒரு நபியைப் பார்க்கின்றாரகள். ஆதம் (அலை) அவர்கள் நபியாக இருக்கின்ற காரணத்தினால் தான் அவர்களையும் முதல் வானத்திலே நபியவர்கள் பார்க்கின்றார்கள். இதிலிருந்தும் ஆதம் (அலை) அவர்கள் இறைத்தூதர்தான் என்பது தெளிவாகிறது.

நாம் நபிக்கு அடிமை என்று குர்ஆன் கூறுகிறதா?

மனிதர்களாகிய நாம் அல்லாஹ்வுக்கு மட்டும் அடிமையல்ல! அவனுடைய தூதருக்கும் அடிமை தான் என்று சிலர் கூறுகின்றனர். அதற்கு ஆதாரமாக பின்வரும் குரான் வசனத்தையும் கூறுகின்றனர்.

தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று தெரிவிப்பீராக! திருக்குர்ஆன் 39:53

"எனது அடியார்களே"! என்று மக்களை அழைக்குமாறு நபிக்கு அல்லாஹ் கட்டளையிடுகிறான். இதன் மூலம் நாம் நபியவர்களுக்கும் அடிமைகளே என்று கூறுகின்றனர். இது சரியா?

முஹம்மது இஹ்ஸாஸ்

பதில்:

இறைவனுக்கு இணை வைக்கின்ற விஷயத்தில் வெறிபிடித்து திரிபவர்கள் இப்படிப்பட்ட வாதத்தை வைக்கின்றனர்.

இந்தப் பெரும் பாவத்தைச் செய்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் புகழ் சேர்க்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.

ஆனால் இவ்வாறு கூறுபவர்கள் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி முழு இணைவைப்பில் விழுந்து விடுகிறார்கள்.

இறைவனுக்கும், மனிதர்களுக்கும் இடையே உள்ள மிகப்பெரிய வேறுபாடு இறைவன் எஜமானாகவும், மனிதர்கள் அவனுக்கு அடிமையாகவும் இருப்பது தான்.

இறைவனுக்கு மட்டும் உரிய இந்தத் தகுதியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உள்ளது என்று நம்பிவிட்டால் இதற்கு மேல் பெரிய இணைவைப்பு என்ன இருக்கின்றது?.

இவர்கள் சுட்டிக்காட்டும் வசனத்தின் கருத்து என்ன?

பொதுவாக எல்லா மொழிகளிலும் இது போன்ற சொற்களுக்கு இரண்டு கருத்துக்கள் உள்ளன.

உங்களுக்கும், உங்கள் தகப்பனாருக்கும் பிரச்சனை ஏற்பட்டு இருவரும் பேசிக் கொள்வதில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் நண்பர் ஒருவரை அழைத்து தந்தையிடம் ஒரு செய்தியைச் சொல்லி அனுப்புகிறீர்கள். என் தந்தையே நான் இனிமேல் உங்கள் மனம் புண்படும்படி நடக்க மாட்டேன் என்று சொல்லி விட்டு வா என்று நண்பரிடம் கூறுகிறீர்கள். இந்த வார்த்தையை மட்டும் பார்த்தால் உங்கள் தந்தை உங்கள் நண்பருக்கும் தந்தை போல் தோற்றம் தருகிறது.

வார்த்தையில் அந்தக் கருத்து இருந்தாலும் செய்தியைச் சொன்ன நீங்களும், சொல்லி அனுப்பிய உங்கள் நண்பரும், உங்கள் தந்தையும் அவ்வாறு பொருள் கொள்ள மாட்டார்கள்.

ஏனெனில் மேற்கண்ட வாசகத்தில் ஒரு சொல் மறைந்து நிற்கிறது என்று தான் இதைப் புரிந்து கொள்வோம்.

என் தந்தையே நான் இனிமேல் உங்கள் மனம் புண்படும்படி நடக்கமாட்டேன் என்று சொல்லி விட்டு வா என்றால் என் தந்தையே நான் இனிமேல் உங்கள் மனம் புண்படும்படி நடக்கமாட்டேன் என்று (நான் சொன்னதாக) சொல்லி விட்டு வா என்றுதான் அர்த்தம்.

நான் சொன்னதாக என்ற வார்த்தை இல்லாவிட்டாலும் பயன்படுத்தப்பட்ட சூழ்நிலை இதை நமக்குச் சொல்லித் தந்து விடுகிறது.

உங்கள் நண்பரின் தந்தை வேறு; உங்கள் தந்தை வேறு என்பதால் அதுவே சரியான பொருளை நமக்குச் சொல்லித்தந்து விடுகிறது.

இது போல் ஆயிரமாயிரம் சொற்பிரயோகங்கள் அனைத்து மொழி பேசும் மக்கள் மத்தியிலும் பரவலாகக் காணப்படுகிறது.

மனிதர்களின் பேச்சு வழக்கில் தான் குர்ஆனும் அருளப்பட்டதால் இது போல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எழுத்து நடையில் குர்ஆன் அருளப்படவில்லை. பேச்சு நடையில் அருளப்பட்டது. பேச்சு வழக்கில் அதை எடு இதை எடு என்று சொல்வோம். எதைச் சொல்கிறோம் என்பதை வார்த்தை விளக்காவிட்டாலும் சூழ்நிலை அதை விளக்கி விடும்.

ஆனால் எழுத்து நடையில் பேனாவை எடு பென்சிலை எடு என்று தான் எழுத வேண்டும். அதாவது பேச்சுக்களுக்கு பொருள் கொள்ளும் போது அது சொல்லப்பட்ட சூழ்நிலைகளும் கவனத்தில் கொள்ளப்படுதல் வேண்டும்.

இன்னும் தெளிவாக இதைப் புரிந்து கொள்ள ஒரு உதாரணத்தைப் பாருங்கள்.

திருக்குர்ஆனின் முதல் அத்தியாயம் அல்ஃபாத்திஹா அத்தியாயம். எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே. அவன் அகிலத்தில் அதிபதி. அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் என்று அது ஆரம்பிக்கிறது. சூழலைக் கவனிக்காமல் சொல்லை மட்டும் பார்த்தால் இது அல்லாஹ்வின் வார்த்தை அல்ல எனக் கூறலாம். அல்லாஹ் சொல்வதாக இருந்தால் இப்படி படர்க்கையாகக் கூறாமல் எல்லாப் புகழும் எனக்கே. நான் அகிலத்தின் அதிபதி. நான் அளவற்ற அருளாளன். நிகரற்ற அண்புடையோன் என்று தான் கூற வேண்டும்.

சொல்லமைப்பை மட்டும் வைத்துக் கொண்டு 39:53 வசனத்துக்கு இந்தக்கேடு கெட்டவர்கள் அர்த்தம் செய்தது போல் இதற்கும் அர்த்தம் செய்வார்களா? இச்சொல்லமைப்பு அல்லாஹ் கூறுவது போல் இல்லை. எனவே இது அல்லாஹ்வைப் புகழ்வதற்காக முஹம்மது நபி சுயமாகச் சொன்ன வார்த்தை என்று இவர்கள் கூறுவார்களா?

எனவே தான் இவ்வசனத்துக்கான நம்முடைய தமிழாக்கத்தில் அடைப்புக் குறிக்குள் மறைந்து கிடக்கும் வார்த்தையைப் போட்டுள்ளோம்.

தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக! என்று நாம் நமது தமிழாக்கத்தில் தெளிவுபடுத்தியுள்ளோம்.

நபிகள் நாயகத்துக்கோ, வேறு நபிமார்களுக்கோ மனிதர்கள் அடிமைகள் அல்லர் என்று பல வசனங்கள் தெளிவாகக் கூறுவதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

மனிதர்கள் இறைவனைத் தவிர வேறு யாருக்கும் அடிமைகளாக இருக்க முடியாது. மக்கள் தனக்கு அடிமையாக இருக்க வேண்டும் எனக் கூற எந்த இறைத் தூதருக்கும் தகுதியில்லை என்று குர்ஆன் தெளிவாகக் கூறுகின்றது.

مَا كَانَ لِبَشَرٍ أَنْ يُؤْتِيَهُ اللَّهُ الْكِتَابَ وَالْحُكْمَ وَالنُّبُوَّةَ ثُمَّ يَقُولَ لِلنَّاسِ كُونُوا عِبَادًا لِي مِنْ دُونِ اللَّهِ وَلَكِنْ كُونُوا رَبَّانِيِّينَ بِمَا كُنْتُمْ تُعَلِّمُونَ الْكِتَابَ وَبِمَا كُنْتُمْ تَدْرُسُونَ (79)3

எந்த மனிதருக்காவது அல்லாஹ் வேதத்தையும், அதிகாரத்தையும், நபி எனும் தகுதியையும் வழங்கினால் (அதன்) பின் "அல்லாஹ்வையன்றி எனக்கு அடிமைகளாக ஆகி விடுங்கள்!'' என்று கூறுகின்ற அதிகாரம் அவருக்கு இல்லை. மாறாக, "வேதத்தை நீங்கள் கற்றுக் கொடுப்போராக இருப்பதாலும், அதை வாசித்துக் கொண்டிருப்பதாலும் இறைவனுக்குரியோராக ஆகி விடுங்கள்!'' (என்றே கூறினர்)

நபிமார்கள் உட்பட பூமியில் உள்ளவர்கள் அனைவரும் அல்லாஹ் ஒருவனுக்குத் தான் அடிமையாக இருக்க வேண்டும். 

இதைப் பின்வரும் வசனமும் தெளிவுபடுத்துகின்றது.

إِنْ كُلُّ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ إِلَّا آتِي الرَّحْمَانِ عَبْدًا(93)19

வானங்களிலும், பூமியிலும் உள்ள ஒவ்வொருவரும் அளவற்ற அருளாளனிடம் அடிமையாகவே வருவார்கள்.

திருக்குர்ஆனில் பல இடங்களில் மனிதர்களை எனது அடியார்களே என்று அல்லாஹ் அழைக்கின்றான்.

அது போன்று  39:53 வது வசனத்திலும் எனது அடியார்களே என்று இறைவனே அழைத்துள்ளான்.

இறைவனுடைய இந்த அழைப்பை மக்களிடம் எடுத்துச் சொல்லுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உத்தரவிடப்படுகின்றது. இதுவே குர்ஆனைச் சரியாக புரிந்துகொள்ளும் முறை.

நபிமார்களும் அல்லாஹ்வின் அடிமைகளாகத் தான் இருக்க முடியும். அவர்கள் எவ்வளவு தான் இறைவனுக்கு நெருக்கமானாலும் இறைவனுக்கு அடிமை என்ற நிலையிலிருந்து மாற முடியாது. பின்வரும் ஆதாரங்கள் இதை தெளிவுபடுத்துகின்றது.

وَأَنَّهُ لَمَّا قَامَ عَبْدُ اللَّهِ يَدْعُوهُ كَادُوا يَكُونُونَ عَلَيْهِ لِبَدًا(19)72

அல்லாஹ்வின் அடியார் (முஹம்மது) அவனிடம் பிரார்த்திக்க எழும் போது (மக்கள்) கூட்டம் கூட்டமாக அவரை நெருங்கி விடுகின்றனர்.

سُبْحَانَ الَّذِي أَسْرَى بِعَبْدِهِ لَيْلًا مِنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا إِنَّهُ هُوَ السَّمِيعُ الْبَصِيرُ (1)17

மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை (முஹம்மதை) அழைத்துச் சென்றவன் தூயவன். அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.

1130 حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ قَالَ حَدَّثَنَا مِسْعَرٌ عَنْ زِيَادٍ قَالَ سَمِعْتُ الْمُغِيرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ إِنْ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيَقُومُ لِيُصَلِّيَ حَتَّى تَرِمُ قَدَمَاهُ أَوْ سَاقَاهُ فَيُقَالُ لَهُ فَيَقُولُ أَفَلَا أَكُونُ عَبْدًا شَكُورًا رواه البخاري

முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "தமது பாதங்கள்' அல்லது "கணைக்கால்கள்' வீங்கும் அளவுக்கு நின்று தொழுவார்கள். இது பற்றி அவர்களிடம் கேட்கப்படும்போது "நான் நன்றியுள்ள அடிமையாக இருக்க வேண்டாமா?'' என்று கேட்பார்கள்.
நூல் : புகாரி 1130

3445 حَدَّثَنَا الْحُمَيْدِيُّ حَدَّثَنَا سُفْيَانُ قَالَ سَمِعْتُ الزُّهْرِيَّ يَقُولُ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ عَنْ ابْنِ عَبَّاسٍ سَمِعَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ عَلَى الْمِنْبَرِ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا تُطْرُونِي كَمَا أَطْرَتْ النَّصَارَى ابْنَ مَرْيَمَ فَإِنَّمَا أَنَا عَبْدُهُ فَقُولُوا عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ رواه البخاري

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

"கிறித்தவர்கள் மர்யமின் மகன் ஈசாவை வரம்பு மீறி உயர்த்தியதைப் போல் நீங்கள் என்னை வரம்பு மீறி உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில், நான் அல்லாஹ்வின் அடிமை தான். (அப்படி ஏதாவது என்னைப் பற்றிச் சொல்வதாயிருந்தால்) "அல்லாஹ்வின் அடிமை' என்றும் "அல்லாஹ்வின் தூதர்' என்றும் சொல்லுங்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என மிம்பரின் (உரை மேடை) மீதிருந்தபடி உமர் (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.
நூல் : புகாரி 3445

இந்த ஆதாரங்கள் நபிகள் நாயகமும் அல்லாஹ்வின் அடிமை என்று கூறுவதாலும், அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் மனிதர்கள் அடிமைகள் அல்லர் என்று கூறுவதாலும் இதற்கு ஏற்பத்தான் 33:59 வசனத்துக்குப் பொருள் கொள்ள வேண்டும்.

எனது அடியார்களே அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழக்காதீர்கள் என்று அல்லாஹ் கூறுவதைத் தெரிவிப்பீராக என்பது தான் இதன் பொருளாகும்.

நபிமார்களும் மனிதர்களே

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன் எண்ணற்ற நபிமார்கள் அனுப்பப்பட்டனர். அவர்களில் ஏராளமான நபிமார்களை அவர்களின் எதிரிகள் கொன்று விட்டனர். இதைப் பின்வரும் வசனங்களில் காணலாம்.

அல்லாஹ்வின் உடன்படிக்கையும், மனிதர்களின் உடன்படிக்கையும் இருந்தால் தவிர அவர்கள் எங்கிருந்த போதும் அவர்களுக்கு இழிவு விதிக்கப்பட்டு விட்டது. அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளானார்கள். அவர்களுக்கு வறுமை விதிக்கப்பட்டு விட்டது. அல்லாஹ்வின் வசனங்களை அவர்கள் ஏற்க மறுத்ததும், நபிமார்களை அநியாயமாகக் கொலை செய்ததுமே இதற்குக் காரணம். மேலும் அவர்கள் பாவம் செய்ததும் வரம்பு மீறியதும் இதற்குக் காரணம்.

திருக்குர்ஆன் 3:212:612:912:873:183 ஆகிய வசனங்களிலும் நபிமார்களை அவர்களின் எதிரிகள் கொலை செய்ததை அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

நினைத்த மாத்திரத்தில் அன்றாடம் அற்புதம் நிகழ்த்தும் சக்தி நபிமார்களுக்கு வழங்கப்பட்டிருந்தால் அவர்கள் ஏன் கொல்லப்பட்டனர்?

யாரேனும் நம்மைக் கொல்ல வந்தால் நம்மிடம் உள்ள வலிமையைப் பயன்படுத்தி அதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பது கட்டாயக் கடமை. கை கட்டிக் கொண்டு தலையை நீட்ட மார்க்கத்தில் அனுமதி இல்லை.

அற்புதம் நிகழ்த்தும் ஆற்றல் நபிமார்களிடம் இருந்திருந்தால் எதிரிகள் கொல்ல வரும் போது அதைப் பயன்படுத்தும் கடமை அவர்களுக்கு உண்டு. அற்புதத்தைப் பயன்படுத்தியிருந்தால் அவர்களை யாராலும் கொன்றிருக்கவே முடியாது. ஆனாலும் அவர்கள் கொல்லப்பட்டனர்.

நபிமார்களுக்குச் சில அற்புதங்கள் வழங்கப்பட்டு இருந்தாலும், மற்ற எல்லா விஷயங்களிலும் அவர்கள் மற்ற மனிதர்களைப் போலவே இருந்தனர் என்பது இதிலிருந்து தெரிகிறது.

நபிமார்கள் பட்ட துன்பங்களை திருக்குர்ஆன் பல இடங்களில் கூறுகிறது. நபிமார்கள் வறுமையில் வாடியுள்ளனர். சமுதாயத்திலிருந்து நீக்கி வைக்கப்பட்டனர். அடித்துச் சித்திரவதை செய்யப்பட்டனர். நாட்டை விட்டு விரட்டப்பட்டனர். திருக்குர்ஆனில் ஏராளமான இடங்களில் இது பற்றிக் கூறப்பட்டுள்ளது.

உங்களுக்கு முன் சென்றோருக்கு ஏற்பட்டது போல் உங்களுக்கும் ஏற்படாமல் சொர்க்கத்தில் நுழையலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? அவர்களுக்கு வறுமையும், துன்பமும் ஏற்பட்டன. 'அல்லாஹ்வின் உதவி எப்போது?' என்று (இறைத்) தூதரும் அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரும் கூறுமளவுக்கு அலைக்கழிக்கப்பட்டனர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் உதவி அருகிலேயே உள்ளது.
முடிவில் தூதர்கள் நம்பிக்கை இழந்து, தாங்கள் நிராகரிக்கப்பட்டு விட்டோம் என்று எண்ணிய போது நமது உதவி அவர்களிடம் வந்தது. நாம் நாடியோர் காப்பாற்றப்பட்டனர். குற்றம் புரிந்த கூட்டத்தை விட்டும் நமது வேதனை நீக்கப்படாது.
'அல்லாஹ்வையே சாராதிருக்க எங்களுக்கு என்ன நேர்ந்தது? அவன் எங்களுக்கு எங்களின் பாதைகளைக் காட்டி விட்டான். நீங்கள் எங்களுக்கு அளிக்கும் துன்பங்களைச் சகித்துக் கொள்வோம். உறுதியான நம்பிக்கை வைப்போர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்' (என்றும் கூறினர்.)
நமது அடியார் அய்யூபை நினைவூட்டுவீராக! ஷைத்தான் வேதனையாலும், துன்புறுத்தலாலும் என்னைத் தீண்டி விட்டான் என்று தமது இறைவனிடம் அவர் பிரார்த்தித்த போது, உமது காலால் மிதிப்பீராக! இதோ குளிர்ந்த குளிக்குமிடம்! பானம்! (எனக் கூறினோம்).
(முஹம்மதே!) அவர்கள் கூறுவது உம்மைக் கவலையில் ஆழ்த்துவதை அறிவோம். அவர்கள் உம்மைப் பொய்யரெனக் கூறவில்லை. மாறாக அநீதி இழைத்தோர் அல்லாஹ்வின் வசனங்களையே மறுக்கின்றனர்.
(முஹம்மதே!) உமக்கு முன் சென்ற தூதர்கள் பொய்யரெனக் கருதப்பட்டுள்ளனர். அவர்கள் பொய்யரெனக் கருதப்பட்டதையும், தொல்லைப்படுத்தப்பட்டதையும் சகித்துக் கொண்டனர். முடிவில் அவர்களுக்கு நமது உதவி வந்தது. அல்லாஹ்வின் வார்த்தைகளை மாற்றுபவன் யாருமில்லை. தூதர்கள் பற்றிய செய்தி உமக்கு (ஏற்கனவே) வந்துள்ளது.
அப்படியல்ல! உங்கள் உள்ளங்கள் ஒரு காரியத்தைச் செய்யத் தூண்டி விட்டன. எனவே அழகிய பொறுமையைக் கடைப்பிடிக்கிறேன். அவர்கள் அனைவரையும் அல்லாஹ் என்னிடம் சேர்க்கக் கூடும். அவன் அறிந்தவன்; ஞானமிக்கவன்' என்று அவர் (யஃகூப்) கூறினார். அவர்களை விட்டும் அவர் ஒதுங்கிக் கொண்டார்!  யூஸுஃபுக்கு ஏற்பட்ட துக்கமே' என்றார். கவலையால் அவரது கண்கள் வெளுத்தன. அவர் (துக்கத்தை) அடக்கிக் கொள்பவராக இருந்தார். 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! உமது உடல் மெலியும் வரை, அல்லது இறக்கும் வரை நீர் யூஸுஃபை நினைத்துக் கொண்டேயிருப்பீர் (போலும்)' என்று அவர்கள் கூறினர். 'எனது துக்கத்தையும், கவலையையும் அல்லாஹ்விடமே முறையிடுகிறேன். நீங்கள் அறியாததை அல்லாஹ்விடமிருந்து அறிகிறேன்' என்று அவர் கூறினார்.
அல்லாஹ் உமக்குத் துன்பத்தை ஏற்படுத்தினால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. அவன் உமக்கு நன்மையை ஏற்படுத்தி விட்டால் அவன் அனைத்துப் பொருட்களின் மீது ஆற்றலுடையவன்.
'அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்' என்று (முஹம்மதே!) கூறுவீராக!

நபிமார்களுக்கு அவர்கள் விரும்பியவாறு அற்புதம் நிகழ்த்தும் ஆற்றல் இருந்தால் காலமெல்லாம் அவர்கள் துன்பத்திற்கு ஆளானது ஏன்? அற்புதம் செய்யும் ஆற்றல் நபிமார்களுக்கு வழங்கப்பட்டிருந்தால் கட்டாயம் அந்த ஆற்றலை அவர்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும்.

அற்புதங்கள் அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ளது என்பதை இதிலிருந்தும் புரிந்து கொள்ளலாம்.

எத்தனையோ நபிமார்கள் பல்வேறு போர்க்களங்களைச் சந்தித்தனர். அதில் எத்தனையோ உற்ற தோழர்களை இழந்தனர். அற்புதம் செய்யும் ஆற்றல் அவர்களிடம் இருந்தால் இதெல்லாம் தேவையில்லை. எந்தச் சேதமும் இல்லாமல் எதிரிகளை அழித்திருக்க முடியும்.

யூசுஃப் நபி அவர்களை அவர்களின் சகோதரர்கள் கிணற்றில் வீசிய போதும், அவர் அடிமையாக விற்கப்பட்ட போதும் அதை யாகூப் நபியால் அறியவும் முடியவில்லை; தடுக்கவும் முடியவில்லை. பல்லாண்டுகள் மகனின் பிரிவை எண்ணி கவலைப்படத்தான் முடிந்தது.

"அல்லாஹ்வின் மீது ஆணையாக! உமது உடல் மெலியும் வரை, அல்லது நீர் இறக்கும் வரை யூஸுஃபை நினைத்துக் கொண்டேயிருப்பீர் (போலும்)'' என்று அவர்கள் கூறினர். "எனது துக்கத்தையும், கவலையையும் அல்லாஹ்விடமே முறையிடுகிறேன். நீங்கள் அறியாததை அல்லாஹ்விடமிருந்து அறிகிறேன்'' என்று அவர் கூறினார்.

நினைத்ததை நினைத்த போது செய்யும் ஆற்றல் யாகூப் நபிக்கு இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா?

யூசுஃப் நபி அவர்கள் குற்றம் செய்யாத போதும் சிறையில் அடைக்கப்பட்டார்கள். பல்லாண்டுகள் சிறையில் கிடந்தார்கள். சிறைக்குச் செல்லாமல் யூசுஃப் நபியால் தம்மைக் காப்பாற்ற முடியவில்லை.

(பொய்யான) சான்றுகளைக் கண்ட பின்னர் "குறிப்பிட்ட காலம் வரை அவரைச் சிறையிலடைக்க வேண்டும்'' என்று அவர்களுக்குத் தோன்றியது.
அவ்விருவரில் யார் விடுதலையாவார் என்று நினைத்தாரோ அவரிடம் "என்னைப் பற்றி உமது எஜமானனிடம் கூறு!'' என்று யூசுஃப் கூறினார். அவர் தமது எஜமானனிடம் கூறுவதை ஷைத்தான் மறக்கச் செய்து விட்டான். எனவே அவர் (யூசுஃப்) சிறையில் பல வருடங்கள் தங்கினார்.

நினைத்ததை நினைத்த போது செய்யும் ஆற்றல் யூசுஃப் நபிக்கு இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா?

அய்யூப் நபி அவர்கள் கடுமையான நோய்களுக்கும், துன்பங்களுக்கும் உள்ளாக்கப்பட்டார்கள். இந்தத் துன்பம் தமக்கு வராமல் தடுத்துக் கொள்ள அய்யூப் நபியால் இயலவில்லை.

"எனக்குத் துன்பம் நேர்ந்து விட்டது. நீ கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன்'' என அய்யூப் தமது இறைவனை அழைத்தபோது, அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். அவருக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கினோம். அவரது குடும்பத்தாரையும் அவர்களுடன் அவர்களைப் போன்றோரையும் நம் அருளாக அவருக்கு வழங்கினோம். வணக்கசாலிகளுக்கு இது அறிவுரை.
நமது அடியார் அய்யூபை நினைவூட்டுவீராக! "ஷைத்தான் வேதனையாலும், துன்புறுத்தலாலும் என்னைத் தீண்டி விட்டான்'' என்று தமது இறைவனிடம் அவர் பிரார்த்தித்தபோது, "உமது காலால் மிதிப்பீராக! இதோ குளிர்ந்த குளிக்குமிடம்! பானம்!'' (எனக் கூறினோம்).

இப்ராஹீம் நபியவர்கள் அல்லாஹ்வின் உற்ற தோழராக இருந்தும், தள்ளாத வயது வரை அவர்களுக்குக் குழந்தை இல்லை. எல்லா மனிதர்களும் எந்த வயதில் பிள்ளைக்கு ஏங்குவார்களோ அந்த வயதில் அவர்களுக்கு அல்லாஹ் குழந்தையைக் கொடுக்கவில்லை. தள்ளாத வயதை அடைந்த போதுதான் அவர்களுக்கு அல்லாஹ் குழந்தையைக் கொடுத்தான்.

இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும் முதுமையில் எனக்கு வழங்கிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். என் இறைவன் பிரார்த்தனையை ஏற்பவன்.
"நீர் பயப்படாதீர்! அறிவுடைய ஆண் குழந்தை பற்றி உமக்கு நாங்கள் நற்செய்தி கூறுகிறோம்'' என்று அவர்கள் கூறினர். "எனக்கு முதுமை ஏற்பட்ட நிலையில் எனக்கு நற்செய்தி கூறுகிறீர்களா? எதனடிப்படையில் நற்செய்தி கூறுகிறீர்கள்?'' என்று அவர் கேட்டார்.

தனக்கு இனி பிள்ளை பிறக்காது என்று இப்ராஹீம் நபி அவர்கள் கருதிய தள்ளாத வயதில் தான் அல்லாஹ் அவர்களுக்குப் பிள்ளகளைக் கொடுக்கிறான்.

விருப்பமான நேரத்தில் குழந்தையை உருவாக்கிக் கொள்ளும் ஆற்றல் இப்ராஹீம் நபியவர்களுக்கு இருந்திருந்தால் எந்த வயதில் பிள்ளையைக் கொஞ்சி மகிழ மனிதன் ஆசைப்படுவானோ அந்த இளம் வயதில் தமக்குப் பிள்ளைகளை உருவாக்கிக் கொண்டிருக்க மாட்டார்களா?

ஸகரிய்யா நபி அவர்கள் தமக்கொரு வாரிசு வேண்டும் என்று அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து கொண்டே இருந்த போதும் அவர்கள் தளர்ந்து முதியவராக ஆனபிறகு தான் அல்லாஹ் அவருக்குக் குழந்தையைக் கொடுத்தான்.

அப்போது தான் ஸக்கரிய்யா "இறைவா! உன்னிடமிருந்து எனக்கொரு தூய குழந்தையைத் தருவாயாக! நீ வேண்டுதலைச் செவியுறுபவன்'' என்று தம் இறைவனிடம் வேண்டினார்.  அவர் தொழுமிடத்தில் நின்று தொழுது கொண்டிருந்தபோது "யஹ்யாவைப் பற்றி அல்லாஹ் உமக்கு நற்செய்தி கூறுகிறான். அல்லாஹ்வின் வார்த்தையை அவர் உண்மைப்படுத்துவார். தலைவராகவும், ஒழுக்கக் கட்டுப்பாடு மிக்கவராகவும், நபியாகவும், நல்லவராகவும் இருப்பார்'' என்று வானவர்கள் அவரை அழைத்துக் கூறினர். "என் இறைவா! எனக்கு முதுமை வந்து விட்ட நிலையிலும், என் மனைவி மலடியாகவுள்ள நிலையிலும் எனக்கு எவ்வாறு குழந்தை உருவாகும்?'' என்று அவர் கேட்டார். "தான் நாடியதை அல்லாஹ் இப்படித்தான் செய்வான்'' என்று (இறைவன்) கூறினான்.
(இது) உமது இறைவன் தனது அடியார் ஸக்கரிய்யாவுக்குச் செய்த அருளைக் கூறுதல்! அவர் தமது இறைவனை இரகசியமாக அழைத்துப் பிரார்த்தித்தார். என் இறைவா! என் எலும்பு பலவீனமடைந்து விட்டது. தலையும் நரையால் மின்னுகிறது. என் இறைவா! உன்னிடம் பிரார்த்தித்ததில் நான் துர்ப்பாக்கியசாலியாக இருந்ததில்லை. எனக்குப் பின் உறவினர்கள் குறித்து நான் அஞ்சுகிறேன். என் மனைவியும் பிள்ளைப்பேறு அற்றவளாக இருக்கிறார். எனவே ஒரு உதவியாளனை உன்புறத்திலிருந்து நீ எனக்கு வழங்குவாயாக!  அவர் எனக்கும், யாகூபின் குடும்பத்தாருக்கும் வாரிசாவார். என் இறைவா! அவரை (உன்னால்) பொருந்திக் கொள்ளப்பட்டவராக ஆக்குவாயாக! (என்றார்.)
"என் இறைவா! என்னைத் தனியாளாக விட்டு விடாதே! நீ மிகச் சிறந்த உரிமையாளன்'' என்று ஸக்கரிய்யா தமது இறைவனை அழைத்தபோது, அவருக்காக (அவரது பிரார்த்தனையை) ஏற்றோம். அவருக்கு யஹ்யாவை அன்பளிப்பாக அளித்தோம். அவரது மனைவியை அவருக்காக (குழந்தை பெறும்) தகுதியுடையவராக ஆக்கினோம். அவர்கள் நன்மைகளை நோக்கி விரைந்து செல்வோராகவும், ஆர்வத்துடனும் அச்சத்துடனும் நம்மிடம் பிரார்த்திப்போராகவும் இருந்தனர். நமக்குப் பணிவோராகவும் இருந்தனர்.

நபிமார்களுக்கு அற்புதங்கள் கொடுக்கப்பட்டாலும் அவர்கள் நினைத்த போது தமக்கு ஒரு குழந்தையை உருவாக்கிக் கொள்ள முடியவில்லை என்று இதிலிருந்து அறிகிறோம்.

நபிமார்களுக்கு சில அற்புதம் வழங்கப்பட்டதால் அவர்களால் ஆகாதது எதுவும் இல்லை என்று இருந்தால் பல நபிமார்களும், அவர்களை ஏற்றுக் கொண்ட நன்மக்களும் வறுமையில் வாடியிருக்க மாட்டார்கள்.

இறைத்தூதர்கள் என்பதாலும் அவர்களுக்கு ஓரிரு அற்புதங்கள் வழங்கப்பட்டதாலும் அவர்களால் அனைத்தும் இயலும் மக்கள் நினைத்திடக் கூடாது என்பதற்காக பின்வருமாறு நபிமார்கள் வாயால் அல்லாஹ் சொல்ல வைக்கிறான்.

"அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் உள்ளன; மறைவானதை அறிவேன்; என்று உங்களிடம் கூற மாட்டேன். நான் வானவர் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர (வேறெதனையும்) நான் பின்பற்றுவதில்லை'' என்று (முஹம்மதே!) கூறுவீராக! "குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? சிந்திக்க மாட்டீர்களா?'' என்று கேட்பீராக!
"என்னிடம் அல்லாஹ்வின் கருவூலங்கள் உள்ளன என்று உங்களிடம் கூற மாட்டேன். மறைவானவற்றையும் அறிய மாட்டேன். நான் வானவர் என்றும் கூற மாட்டேன். உங்கள் கண்கள் யாரை இழிவாகக் காண்கிறதோ அவர்களுக்கு அல்லாஹ் எந்த நன்மையும் அளிக்கவே மாட்டான் எனவும் கூற மாட்டேன். (அவ்வாறு கூறினால்) நான் அநீதி இழைத்தவனாகி விடுவேன். அவர்களின் உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் மிக அறிபவன்'' (எனவும் கூறினார்.)
(முஹம்மதே!) அதிகாரத்தில் உமக்கு ஏதுமில்லை. அவன் அவர்களை மன்னிக்கலாம். அல்லது அவர்களைத் தண்டிக்கலாம். ஏனெனில் அவர்கள் அநீதி இழைத்தவர்கள்.
"அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக!
"அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கே தீங்கு செய்யவோ, நன்மை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை'' என்று (முஹம்மதே!) கூறுவீராக! ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு காலக்கெடு உள்ளது. அவர்களின் காலக்கெடு வரும்போது சிறிது நேரம் அவர்கள் பிந்தவும் மாட்டார்கள். முந்தவும் மாட்டார்கள்.
அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
அல்லாஹ் உமக்குத் துன்பத்தை ஏற்படுத்தினால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. அவன் உமக்கு நன்மையை ஏற்படுத்தி விட்டால் அவன் அனைத்துப் பொருட்களின் மீது ஆற்றலுடையவன்.
"நான் என் இறைவனிடமிருந்து வந்த சான்றுடன் இருக்கிறேன். நீங்கள் அதைப் பொய்யெனக் கருதுகிறீர்கள். நீங்கள் அவசரப்படுவது என்னிடம் இல்லை. அதிகாரம் அல்லாஹ்வுக்கே தவிர (எவருக்கும்) இல்லை. அவன் உண்மையை உரைக்கிறான். தீர்ப்பளிப்போரில் அவன் மிகச் சிறந்தவன்'' என்றும் கூறுவீராக!

நபிமார்களுக்கு சில அற்புதங்கள் வழங்கப்பட்டு இருந்தன என்பது எந்த அளவுக்கு உண்மையோ அது போல் மற்ற விஷயங்களில் அவர்களுக்கு எந்த அற்புத சக்தியும் இருக்கவில்லை என்பதும் உண்மையாகும்.