Sidebar

18
Thu, Jun
சமீபத்திய செய்திகள்

மறைவான விஷயங்களை இறைநேசர்களுக்கு அல்லாஹ் இல்ஹாம் மூலம் அறிவித்து கொடுப்பானா?

மறைவான விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய முடியாது. எனினும் நபிமார்களுக்கு வஹீயின் மூலமாகவும், இறை நேசர்களுக்கு (இல்ஹாம் எனும்) உதிப்பின் மூலமாகவும் பொதுமக்களில் சிலருக்கு சில அடையாளங்கள் மூலமாகவும் மறைவான விஷயங்களை அல்லாஹ் அறிவித்துக் கொடுக்கின்றான் என்று சிலர் கூறுகின்றார்கள். இது மார்க்க அடிப்படையில் சாத்தியமானது தானா?

ஈ. இஸ்மாயில் ஷெரீஃப், சென்னை.

மறைவான செய்திகளை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய முடியாது என்று அல்லாஹ் தெளிவாகத் தனது திருமறையில் அறிவித்து விட்டான்.

வானங்களிலும் பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். தாங்கள் எப்போது உயிர்ப்பிக்கப்படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்'' என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 27:65

6:59, 10:20, 31:34, 34:3 ஆகிய வசனங்களும் இதே கருத்தில் அமைந்துள்ளன. இந்த வசனங்களின் அடிப்படையில் நபிமார்கள், மலக்குகள், ஜின்கள், மனிதர்கள் உள்ளிட்ட எவரும் மறைவானவற்றை அறிய முடியாது என்பது தெளிவாகிறது.

நல்லவரிலிருந்து கெட்டவரை அவன் பிரித்துக் காட்டாமல் நீங்கள் எப்படி (கலந்து) இருக்கிறீர்களோ அப்படியே (கலந்திருக்குமாறு) நம்பிக்கை கொண்டோரை அல்லாஹ் விட்டு விட மாட்டான். மறைவானதை அல்லாஹ் உங்களுக்குக் காட்டித் தருபவனாக இல்லை. மாறாக அல்லாஹ் தனது தூதர்களில் தான் நாடியோரைத் தேர்வு செய்கிறான். எனவே அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்புங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்களுக்கு மகத்தான கூலி உண்டு.

திருக்குர்ஆன் 3:179

அவன் மறைவானதை அறிபவன். தனது மறைவான விஷயங்களை அவன் பொருந்திக் கொண்ட தூதரைத் தவிர யாருக்கும் வெளிப்படுத்த மாட்டான். அவர்கள் தமது இறைவனின் தூதுச் செய்திகளை எடுத்துச் சொன்னார்களா என்பதை அறிவிப்பதற்காக அவருக்கு முன்னும் அவருக்குப் பின்னும் கண்காணிப்பாளரை ஏற்படுத்துகிறான். அவர்களிடம் உள்ளதை அவன் முழுமையாக அறிவான். ஒவ்வொரு பொருளையும் அவன் எண்ணிக்கையால் அறிவான்.

திருக்குர்ஆன் 72:26-28

இறைத்தூதர்களில் தான் நாடியோருக்கு அல்லாஹ் மறைவானவற்றை அறிவித்துக் கொடுப்பதாக இந்த வசனங்கள் குறிப்பிடுகின்றன. இதை வைத்து நபிமார்களுக்கு மறைவான விஷயங்கள் அனைத்தும் தெரியும் என்று சிலர் வாதிடுகின்றனர். இது இஸ்லாத்தின் அடிப்படைக்கே முரணான வாதமாகும். நபிமார்களுக்கு மறைவான ஞானம் இல்லை என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் குர்ஆனில் உள்ளன. இறுதித் தூதரான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் மறைவான ஞானம் இல்லை என்று திருக்குர்ஆன் தெளிவாகப் பிரகடனம் செய்கின்றது.

(பார்க்க திருக்குர்ஆன் 5:109, 6:50, 7:188, 11:31, 11:49)

அப்படியானால் மறைவானவற்றை இறைத்தூதர்களில் தான் நாடியவர்களுக்கு அறிவித்துக் கொடுப்பான் என்று மேற்கண்ட இரண்டு வசனங்களும் கூறுவதன் பொருள் என்ன?

3:179 வசனத்தில் மறைவானவற்றைத் தனது தூதருக்கு இறைவன் அறிவித்துக் கொடுப்பதாகக் கூறுவது பொதுவானதல்ல.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நயவஞ்சகர்கள் முஸ்லிம்களைப் போலவே வேடமிட்டு முஸ்லிம்களுடன் இரண்டறக் கலந்திருந்தனர். இத்தகைய நயவஞ்சகர்களை நபிகள் நாயகத்திற்கு அறிவித்து கொடுப்பதையே இவ்வசனம் குறிப்பிடுகிறது.

இவ்வசனத்தின் துவக்கத்தில் முஸ்லிம்களையும், நயவஞ்சகர்களையும் இரண்டறக் கலந்திருக்குமாறு இறைவன் விட்டு வைக்க மாட்டான் என கூறிவிட்டுத் தான்,மறைவானதை தான் தேர்ந்தெடுத்த தூதர்களுக்கு அறிவிப்பதாக அல்லாஹ் கூறுகிறான்.

அது போல் 72:26,27 வசனங்களில் அனைத்து மறைவான விஷயங்களையும் இறைத்தூதர்களுக்கு அறிவித்துக் கொடுப்பான் என்று கூறப்படவில்லை. மாறாக நம்பிக்கை கொள்ள வேண்டிய மறுமை, சொர்க்கம், நரகம் போன்ற மறைவானவைகளைப் பற்றி இறைத்தூதர்களுக்கு அறிவிப்பதையே இவ்வசனங்கள் கூறுகின்றன. இதைப் புரிந்து கொள்வற்கு இவ்வசனங்களிலேயே போதுமான சான்றுகள் உள்ளன.

தமக்கு அறிவிக்கப்படுகிற செய்திகளைத் தூதர்கள் மக்களுக்கு அறிவிக்கிறார்களா? என்று கண்காணிப்பதற்காக, கண்காணிக்கும் வானவர்களை தொடர்ந்து அனுப்புவதாக இவ்வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான். எனவே நம்பிக்கை கொள்ள வேண்டிய மறைவான விஷயங்களை இறைத்தூதருக்கு அறிவித்துக் கொடுத்து அதை அவர் மக்களுக்கு அறிவிப்பார் என்பது தான் இவ்வசனத்தின் கருத்தாகும்.

எனவே நபிமார்களுக்கு மறைவான செய்திகளை அல்லாஹ் அறிவித்துக் கொடுப்பான் என்பது பொதுவானதல்ல என்பதை இதிலிருந்து அறியலாம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்நாளில் நடைபெற்ற எத்தனையோ சம்பவங்கள் அவர்களுக்கு மறைவான ஞானம் இல்லை என்பதை உணர்த்துவதாக அமைந்துள்ளதை ஹதீஸ்களில் நாம் காண முடிகின்றது.

மறைவான விஷயங்களை நபிமார்களால் கூட அறிய முடியாது எனும் போது, இறைநேசர்கள் "இல்ஹாம்' என்ற உதிப்பின் மூலம் அறிவார்கள் என்பது மார்க்கத்திற்கு முற்றிலும் முரணான கருத்து என்பதை நாம் விளக்கத் தேவையில்லை.

உள்ளத்தின் மீதும் அதை வடிவமைத்ததன் மீதும் சத்தியமாக! அதன் நன்மையையும், தீமையையும் அதற்கு அவன் அறிவித்தான்.

திருக்குர்ஆன் 91:7,8

மனிதனின் உள்ளத்திற்கு நன்மை, தீமையை இறைவன் அறிவித்துக் கொடுத்தான் என்று கூறுவதற்கு "இல்ஹாம்' என்ற வார்த்தையைத் தான் இந்த வசனத்தில் அல்லாஹ் பயன்படுத்துகின்றான். எனவே இந்த "இல்ஹாம்' என்பது இறைநேசர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டதல்ல! எல்லா மனிதனுக்கும் பொதுவான ஒன்று தான் என்பதை இந்த வசனத்திலிருந்து அறியலாம்.

ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளுணர்வுகள் ஏற்படுவதுண்டு. ஏதோ சோதனை ஏற்படப்போகின்றது என்று மனதில் சில எண்ணங்கள் தோன்றும். பல சமயங்களில் அது பொய்யாகிப் போய் விடும். சில சமயங்களில் அதற்கேற்ப ஏதேனும் சோதனை ஏற்படுவதும் உண்டு. கனவுகள் தோன்றுவதும் இதே வகையைச் சேர்ந்தது தான். இது அவரவருக்கு உள்ளத்தில் ஏற்படுகின்ற உள்ளுணர்வுகள்! இவற்றை வைத்துக் கொண்டு மறைவான விஷயம் எனக்குத் தெரியும் என்று யாரும் வாதிட முடியாது.

அது போல் ஒருவருக்கு ஏற்படும் உள்ளுணர்வையோ, அல்லது கனவையோ அடுத்தவரிடத்தில் செயல்படுத்தவும் முடியாது. உதாரணமாக, உங்களுக்கு ஒருவர் பத்தாயிரம் ரூபாய் தரவேண்டும் என்று நீங்கள் கனவில் கண்டதன் அடிப்படையில் அவரிடம் போய் பணம் கேட்க முடியாது.

உனது வாழ்க்கையில் இது நடக்கும் என்று எனக்கு "இல்ஹாம்' மூலம் தெரிந்தது என்று கதைகளை அவிழ்த்து விட்டு முரீது வியாபாரிகள் ஏமாற்று வேலைகளைச் செய்து வருகின்றார்கள். இது அப்பட்டமான பொய் என்பதற்குக் கீழ்க்கண்ட ஹதீஸ் ஆதாரமாக அமைந்துள்ளது.

3469 - حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: إِنَّهُ قَدْ كَانَ فِيمَا مَضَى قَبْلَكُمْ مِنَ الأُمَمِ مُحَدَّثُونَ، وَإِنَّهُ إِنْ كَانَ فِي أُمَّتِي هَذِهِ مِنْهُمْ فَإِنَّهُ عُمَرُ بْنُ الخَطَّابِ "

உங்களுக்கு முன் சென்ற சமுதாயங்களில் "முன் கூட்டியே (சில செய்திகள்) அறிவிக்கப்பட்டவர்கள்' இருந்திருக்கின்றார்கள். அத்தகையவர்களில் எவராவது எனது இந்தச் சமுதாயத்தில் இருப்பாராயின் அது உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் தாம்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 3469

"முன் கூட்டியே (சில செய்திகள்) அறிவிக்கப்பட்டவர்கள்' என்று யாராவது எனது சமுதாயத்தில் இருப்பாராயின் அது உமர் (ரலி) தான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவது இந்த உம்மத்தில் அப்படிப்பட்ட யாரும் கிடையாது என்பதையே காட்டுகின்றது.

உயிர் தியாகியைக் கூட இறை நேசர் என்று கூறக் கூடாது

மனிதர்களைப் பற்றி நாம் எடுக்கும் முடிவுகள் சரியனவையாக இருக்கும் என்று சொல்ல முடியாது. இறைவனின் நேசர்கள் என்று சிலரைப் பற்றி நாமாக முடிவு எடுத்து அவர்களைக் கொண்டாடி வருகிறோம். அவர்கள் உண்மையில் நல்லடியார்களாக இருப்பார்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியாது என்பது இஸ்லாத்தின் கொள்கை.

ஒரு நபித்தோழர் நபிகள் நாயகத்துடன் இணைந்து போரிட்டார். அப்போரில் அவர் கொல்லப்பட்டார். அவர் சொர்க்கவாசி என்று நபித்தோழர்கள் கூறியதை நபியவர்கள் கண்டித்துள்ளார்கள்.

صحيح مسلم

   حدثني  زهير بن حرب ، حدثنا  هاشم بن القاسم ، حدثنا  عكرمة بن عمار ، قال : حدثني  سماك الحنفي أبو زميل ، قال : حدثني  عبد الله بن عباس ، قال : حدثني  عمر بن الخطاب ، قال :  لما كان يوم خيبر، أقبل نفر من صحابة النبي صلى الله عليه وسلم، فقالوا : فلان شهيد، فلان شهيد، حتى مروا على رجل، فقالوا : فلان شهيد، فقال رسول الله صلى الله عليه وسلم : " كلا، إني رأيته في النار، في بردة غلها أو عباءة ". ثم قال رسول الله صلى الله عليه وسلم : " يا ابن الخطاب، اذهب، فناد في الناس : أنه لا يدخل الجنة إلا المؤمنون ". قال : فخرجت، فناديت : ألا إنه لا يدخل الجنة إلا المؤمنون.

உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கைபர் போர் தினத்தன்று நபித்தோழர்களில் சிலர் "இன்னார் உயிர்த்தியாகி (ஷஹீத்) ஆகி விட்டார், இன்னார் உயிர்த்தியாகி ஆகிவிட்டார்'  என்று கூறிக் கொண்டே வந்து இறுதியாக ஒரு மனிதரைப் பற்றி "இன்னாரும் உயிர்த்தியாகி ஆகிவிட்டார்' என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இல்லை! (போர்ச்செல்வங்கள் பங்கிடப்படும் முன் அவற்றிலிருந்து) கோடுபோட்ட வண்ணப் போர்வை ஒன்றை அவர் எடுத்துக் கொண்ட காரணத்தால் அவரை நான் நரகத்தில் கண்டேன் (எனவே அவரை உயிர்த்தியாகி என்று கூறாதீர்கள்)'' என்றார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 182 

 

இது போல் அமைந்த மற்றொரு ஹதீஸைப் பாருங்கள்!

صحيح البخاري

2898   حدثنا  قتيبة ، حدثنا  يعقوب بن عبد الرحمن ، عن  أبي حازم ، عن  سهل بن سعد الساعدي  رضي الله عنه،  أن رسول الله صلى الله عليه وسلم التقى هو والمشركون فاقتتلوا، فلما مال رسول الله صلى الله عليه وسلم إلى عسكره، ومال الآخرون إلى عسكرهم، وفي أصحاب رسول الله صلى الله عليه وسلم رجل لا يدع لهم شاذة ولا فاذة إلا اتبعها يضربها بسيفه، فقال : ما  أجزأ  منا اليوم أحد كما أجزأ فلان. فقال رسول الله صلى الله عليه وسلم : " أما إنه من أهل النار ". فقال رجل من القوم : أنا صاحبه. قال : فخرج معه، كلما وقف وقف معه، وإذا أسرع أسرع معه. قال : فجرح الرجل جرحا شديدا، فاستعجل الموت، فوضع نصل سيفه بالأرض وذبابه بين ثدييه، ثم تحامل على سيفه فقتل نفسه. فخرج الرجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال : أشهد أنك رسول الله. قال : " وما ذاك ؟ " قال : الرجل الذي ذكرت آنفا أنه من أهل النار فأعظم الناس ذلك، فقلت : أنا لكم به، فخرجت في طلبه، ثم جرح جرحا شديدا فاستعجل الموت فوضع نصل سيفه في الأرض، وذبابه بين ثدييه ثم تحامل عليه فقتل نفسه. فقال رسول الله صلى الله عليه وسلم عند ذلك : " إن الرجل ليعمل عمل أهل الجنة فيما يبدو للناس وهو من أهل النار، وإن الرجل ليعمل عمل أهل النار فيما يبدو للناس وهو من أهل الجنة ".

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், இணை வைப்போரும் (கைபர் போர்க்களத்தில்) சந்தித்துப் போரிட்டுக் கொண்டனர். நபியவர்கள் தம் படையின் பக்கம் சென்று விட மற்றவர்களும் தம் படையின் பக்கம் சென்றுவிட்டனர். அப்போது நபி (ஸல்) அவர்களின் தோழர்களுக்கிடையே ஒருவர் இருந்தார். அவர் (எதிரிகளில்) போரில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி நிற்பவர், படையிலிருந்து விலகிப் போய் தனியே சென்றவர் (அதாவது எதிர்த்து நிற்பவர், பணிந்து செல்பவர் என்று) எவரையும் விட்டு வைக்காமல் அனைவரையும் தம் வாளால் வெட்டியபடி துரத்திச் சென்று (மூர்க்கமாகப் போரிட்டுக்) கொண்டிருந்தார். (அவரது துணிச்சலான போரைக் கண்ட) நபித் தோழர்கள், "இந்த மனிதர் போரிட்டதைப் போல் இன்று நம்மில் வேறெவரும் தேவை தீரப் போரிடவில்லை'' என்று (வியந்து) கூறினார்கள். இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "அவர் நரகவாசியாவார்'' என்று கூறினார்கள். அப்போது கூட்டத்திலிருந்து ஒரு மனிதர், "நான் அவருடன் இருக்கிறேன் (அவர் என்ன செய்கிறார் என்று பார்ப்பதற்கு)'' என்று சொல்லிவிட்டு அந்த மனிதருடன் புறப்பட்டார். அவர் நின்ற போதெல்லாம் இவரும் நின்றார். அவர் விரைந்தால் இவரும் விரைந்தார். (ஒரு கட்டத்தில்) அவர் கடுமையாகக் காயப்படுத்தப்பட்டார். அதனால் சீக்கிரமாக மரணித்து விட விரும்பி, தன் வாளின் (கைப்பிடியுள்ள) முனையை பூமியில் ஊன்றி, அதன் கூரான முனையைத் தன் இரு மார்புகளுக்கு இடையே வைத்து, அந்த வாளின் மீது தன் உடலை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். (இதை உடனிருந்து கண்காணித்துவிட்டு) அந்த மனிதர் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, "தாங்கள் அல்லாஹ்வின் தூதர் தாம் என்பதற்கு நான் சாட்சியம் அளிக்கிறேன்'' என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், "என்ன விஷயம்?'' என்று கேட்டார்கள். அவர், "சற்று முன்பு தாங்கள் ஒருவரைப் பற்றி "அவர் நரகவாசி' என்று கூறினீர்கள் அல்லவா? அதைக் கண்டு மக்கள் வியப்படைந்தனர். நான் (மக்களிடம்), "உங்களுக்காக (அவரது நிலைகளை அறிந்து வர) நான் அவருடன் போய் வருகிறேன்'' என்று கூறிவிட்டு, அவரைத் தேடிப் புறப்பட்டேன். அவர் கடுமையாக காயப்படுத்தப்பட்டார். உடனே, அவர் சீக்கிரமாக மரணமடைய விரும்பி, வாளின் பிடிமுனையை பூமியில் நட்டு, அதன் கூர்முனையைத் தன் இரு மார்புகளுக்கிடையே வைத்து, அதன் மீது தன்னை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்'' என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மக்களின் வெளிப் பார்வைக்கு ஒரு மனிதர் சொர்க்கத்திற்குரிய (நற்) செயலைச் செய்து வருவார். ஆனால், அவர் (உண்மையில்) நரகவாசியாக இருப்பார். மக்களின்ன் வெளிப்பார்வைக்கு ஒரு மனிதர் நரகத்திற்குரிய செயலைச் செய்து வருவார். ஆனால், (உண்மையில்) அவர் சொர்க்கவாசியாக இருப்பார்'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி)
நூல்: புகாரி 2898 

உயிரைத் தியாகம் செய்வதற்கு நிகரான நல்லறம் ஏதும் இல்லை.

அத்தகைய ஷஹீதுகள் குறித்து நபித்தோழர்கள் எடுத்த முடிவு தவறாகி விட்டதென்றால் நாம் கொடுக்கும் மகான்கள் பட்டம் எப்படிச் சரியாக இருக்க முடியும்?

குளிக்காதவர், பல் துலக்காதவர், ஜடா முடி வளர்த்தவர், மஸ்தானாக (போதையாக) திரிந்தவர், தலைவாரிக் கொள்ளாமல் அலங்கோலமாக வருபவர், பீடி அடிப்பவர் போன்றவர்களுக்கெல்லாம் அவ்லியா பட்டம் கொடுப்பது கொடுமையிலும் கொடுமை. நல்லடியார்களைக் கண்டுபிடிக்கும் ஆற்றலை அல்லாஹ் மனிதர்களுக்கு வழங்குவதாக இருந்தால் தனது தூதராகிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வழங்கி இருப்பான். ஆனால் வஹீயின் மூலம் அல்லாஹ் அறிவித்துக் கொடுத்தவர்கள் தவிர நபிகள் நாயகத்தால் நல்லடியார் என்று கருதப்பட்ட சிலர் மகா கெட்டவர்களாக இருந்துள்ளனர்.

ஹிஜ்ரத் செய்தவர்களைக் கூட நல்லடியார் என்று கூறத் தடை

மனிதர்களைப் பற்றி நாம் எடுக்கும் முடிவுகள் சரியனவையாக இருக்கும் என்று சொல்ல முடியாது. இறைவனின் நேசர்கள் என்று சிலரைப் பற்றி நாமாக முடிவு எடுத்து அவர்களைக் கொண்டாடி வருகிறோம். அவர்கள் உண்மையில் நல்லடியார்களாக இருப்பார்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியாது என்பது இஸ்லாத்தின் கொள்கை.صحيح البخاري

1243   حدثنا  يحيى بن بكير ، حدثنا  الليث ، عن  عقيل ، عن  ابن شهاب ، قال : أخبرني  خارجة بن زيد بن ثابت  أن  أم العلاء  – امرأة من الأنصار بايعت النبي صلى الله عليه وسلم – أخبرته أنه  اقتسم المهاجرون قرعة  فطار  لنا عثمان بن مظعون، فأنزلناه في أبياتنا فوجع وجعه الذي توفي فيه، فلما توفي وغسل وكفن في أثوابه دخل رسول الله صلى الله عليه وسلم فقلت : رحمة الله عليك أبا السائب فشهادتي عليك : لقد أكرمك الله. فقال النبي صلى الله عليه وسلم : " وما يدريك أن الله قد أكرمه ؟ " فقلت : بأبي أنت يا رسول الله، فمن يكرمه الله ؟ فقال : " أما هو فقد جاءه اليقين، والله إني لأرجو له الخير، والله ما أدري – وأنا رسول الله – ما يفعل بي ". قالت : فوالله لا أزكي أحدا بعده أبدا.

நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழிப் பிரமாணம் (பைஅத்) செய்திருந்த அன்சாரிப் பெண்மணியான உம்முல் அலா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மதீனாவுக்கு வந்த) முஹாஜிர்களில் யார், எவர் வீட்டில் தங்குவது என்பதையறிய சீட்டுக் குலுக்கிப் போட்டுக்கொண்டிருந்த போது உஸ்மான் பின் மழ்வூன் (ரலி) அவர்கள் எங்கள் வீட்டில் தங்குவது என முடிவானது. அதன்படி அவரை எங்கள் வீட்டில் தங்க வைத்தோம். பிறகு அவர் நோயுற்று மரணமடைந்தார். அவரது உடல் நீராட்டப்பட்டு அவரது ஆடையிலேயே கஃபனிப்பட்டதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள். நான் (உஸ்மானை நோக்கி), "ஸாயிபின் தந்தையே! உம் மீது இறையருள் உண்டாகட்டும்! அல்லாஹ் உம்மைக் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பதற்கு நான் சாட்சியம் கூறுகிறேன்'' எனக் கூறினேன். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "அவரை அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பது, உனக்கெப்படித் தெரியும்?'' என்று கேட்டார்கள். "அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். பின் யாரைத் தான் அல்லாஹ் கண்ணியப்படுத்துவான்?'' என நான் கேட்டேன். அதற்கு, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "இவர் இறந்து விட்டார். எனவே அல்லாஹ்வின் மீதாணையாக! இவர் விஷயத்தில் நன்மையையே நான் விரும்புகின்றேன். ஆயினும் நான் அல்லாஹ்வின் தூதராக இருந்தும் எனது நிலைமை (நாளை) என்னவாகும் என்பது எனக்குத் தெரியாது'' என்று கூறினார்கள். "அல்லாஹ்வின் மீதாணையாக! அதற்குப் பிறகு நான் யார் விஷயத்திலும் (அவ்வாறு) பாராட்டிக் கூறுவதேயில்லை.''

நூல்: புகாரி 1243 

உஸ்மான் பின் மழ்வூன் (ரலி) அவர்கள் மிக நல்லவராகவும், வணக்கசாலியாகவும் வாழ்ந்தார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் எனும் தியாகப் பயணத்தையும் மேற்கொண்டவர்கள். அன்னார் மரணித்த போது அவர்களோடு பல காலம் நட்பு கொண்ட, அவர்களுடைய நல்லொழுக்கங்களை அவர்களோடு இருந்து அறிந்து கொண்ட உம்முல் அஃலா அவர்கள், "அல்லாஹ் உம்மைக் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பதற்கு நான் சாட்சியம் கூறுகிறேன்' எனக் கூறுகிறார்.

நபியவர்கள் அதைக் கடுமையாகக் கண்டிக்கிறார்கள். நம்முடைய பார்வைக்கு நல்லவராக இருந்தாலும் அவர் நிலை என்னவென்று நாம் தீர்மானிக்க இயலாது என்பதை நபியவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள். நபியவர்கள் கூட ஒரு நபித்தோழரின் நிலையை அறிய முடியாது என்றால் இன்று நாம் அவ்லியாக்கள் என்று பட்டம் சூட்டுகின்றோமே இது எந்த வகையில் சரியானது?

தனக்கு அறிமுகமான ஒரு நபித்தோழர் குறித்து இன்னொரு நபித்தோழர் இறைநேசர் என்று கூறியது நபியவர்களால் கண்டிக்கப்பட்டு இருக்கும் போது நமக்கு எந்த அறிமுகமும் இல்லாத, நம்முடைய காலத்தில் வாழாத ஒருவரை இறைநேசர் என்று பட்டம் சூட்டுவது சரிதானா?

பாவமறியா குழந்தையை கூட நல்லடியார் என்று சொல்ல தடை

மனிதர்களைப் பற்றி நாம் எடுக்கும் முடிவுகள் சரியனவையாக இருக்கும் என்று சொல்ல முடியாது. இறைவனின் நேசர்கள் என்று சிலரைப் பற்றி நாமாக முடிவு எடுத்து அவர்களைக் கொண்டாடி வருகிறோம். அவர்கள் உண்மையில் நல்லடியார்களாக இருப்பார்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியாது என்பது இஸ்லாத்தின் கொள்கை.

صحيح مسلم 2662 ( 30 )   حدثني  زهير بن حرب ، حدثنا  جرير ، عن  العلاء بن المسيب ، عن  فضيل بن عمرو ، عن  عائشة بنت طلحة ، عن  عائشة  أم المؤمنين قالت :  توفي صبي، فقلت :  طوبى  له عصفور من عصافير الجنة. فقال رسول الله صلى الله عليه وسلم : " أولا تدرين أن الله خلق الجنة وخلق النار، فخلق لهذه أهلا ولهذه أهلا ؟ ".

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அன்சாரிகளில் ஒரு குழந்தை இறந்த போது, அதன் பிரேத நல்லடக்கத்திற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைக்கப்பட்டார்கள். அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே! அக்குழந்தைக்கு நல் வாழ்த்துகள்! அது சொர்க்கத்தின் சிட்டுக் குருவிகளில் ஒரு சிட்டுக்குருவி. அது எந்தத் தீமையையும் செய்யவில்லை. அதற்கான பருவத்தையும் அது அடையவில்லை'' என்று சொன்னேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "வேறு ஏதேனும் உண்டா, ஆயிஷா? அல்லாஹ் சொர்க்கத்திற்கென்றே சிலரைப் படைத்துள்ளான். அவர்கள் தம் பெற்றோரின் முதுகுத் தண்டுகளில் இருந்தபோதே அதற்காகவே அவர்களை அவன் படைத்து விட்டான்; நரகத்திற்கென்றே சிலரைப் படைத்தான். அவர்கள் தம் பெற்றோரின் முதுகுத் தண்டுகளில் இருந்தபோதே அதற்காகவே அவர்களைப் படைத்து விட்டான்'' என்று கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 5175 

ஒன்றுமே அறியாத சிறு குழந்தையைக் கூட சுவர்க்கவாசி என்று கூறும் அதிகாரம் நமக்கு இல்லை எனும் போது பாவம் செய்ய வாய்ப்புள்ள பெரியவர்களை அவ்லியாக்கள் என்றும், அல்லாஹ்வின் நேசர் என்றும் நாம் எவ்வாறு கருத முடியும்?

 

நல்லவர் என்று நபிகளின் கணிப்பும் தவறாகலாம்!

மனிதர்களைப் பற்றி நாம் எடுக்கும் முடிவுகள் சரியனவையாக இருக்கும் என்று சொல்ல முடியாது. இறைவனின் நேசர்கள் என்று சிலரைப் பற்றி நாமாக முடிவு எடுத்து அவர்களைக் கொண்டாடி வருகிறோம். அவர்கள் உண்மையில் நல்லடியார்களாக இருப்பார்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியாது என்பது இஸ்லாத்தின் கொள்கை.

இதோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிலரை நல்லவர்கள் என்று நம்பி உள்ளதையும் அது பொய்யாகிப் போனதையும் பாருங்கள்! இதிலிருந்து உரிய பாடத்தைக் கற்றுக் கொள்ளுங்கள்.

صحيح البخاري 2680 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ زَيْنَبَ، عَنْ أُمِّ سَلَمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " إِنَّكُمْ تَخْتَصِمُونَ إِلَيَّ، وَلَعَلَّ بَعْضَكُمْ أَلْحَنُ بِحُجَّتِهِ مِنْ بَعْضٍ، فَمَنْ قَضَيْتُ لَهُ بِحَقِّ أَخِيهِ شَيْئًا، بِقَوْلِهِ: فَإِنَّمَا أَقْطَعُ لَهُ قِطْعَةً مِنَ النَّارِ فَلاَ يَأْخُذْهَا "

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் என்னிடம் வழக்குகளைக் கொண்டு வருகிறீர்கள். உங்களில் ஒருவர் மற்றொருவரை விட வாக்கு சாதுர்யம் மிக்கவராக இருக்கக் கூடும். ஆகவே, எவரது (சாதுர்யமான) சொல்லை வைத்து அவரது சகோதரனின் உரிமையில் சிறிதை (அவருக்குரியது) என்று தீர்ப்பளித்து விடுகின்றேனோ அவருக்கு நான் நரக நெருப்பின் ஒரு துண்டைத் தான் துண்டித்துக் கொடுக்கிறேன். ஆகவே, அவர் அதை எடுத்துக் கொள்ள வேண்டாம்.
 
நூல்: புகாரி 2680

தம்மிடம் வழக்குகள் கொண்டு வரப்படும் போது வெளிப்படையான வாதங்களையும், ஆதாரங்களையும் வைத்துத் தீர்ப்பளிப்பதாகவும் சில நேரங்களில் அந்தத் தீர்ப்பு தவறாக அமைந்து விடும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸில் தெளிவுபடுத்துகிறார்கள். அதாவது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யாரை நல்லவர்கள் என்று கருதினார்களோ அவர்களில் சிலர் மறுமையில் கெட்டவர்களாகவும், கெட்டவர்கள் என்று நபிகள் நாயகத்தால் தீர்ப்பளிக்கப்பட்டவர்களில் சிலர் நல்லவர்களாகவும் இருப்பார்கள்.

தன் முன்னால் நின்று வழக்குரைக்கும் இருவரில் யார் உண்மையாளன் என்பதை நபியவர்களால் கண்டுபிடிக்க முடியாது என்றால் மற்றவர்களுக்கு அது இயலுமா? மனிதர்களின் உள்ளத்தில் இருப்பதை நபியவர்கள் அறிபவர்களாக இருந்தால் அவ்விருவரில் யார் பொய் சொல்கிறார், யார் உண்மை சொல்கிறார் என்பதை அறிந்து அவர்களிடம் விசாரணை செய்யாமல் அந்தப் பொருள் யாருக்குரியதோ அவரிடம் கொடுத்திருப்பார்கள்.

எனவே நபியவர்களால் கூட நல்லவர் யார். கெட்டவர் யார் என்பதை அறிய முடியவில்லை என்பதற்கு இந்தச் செய்தி சான்றாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்முடைய வாழ்நாளில் எத்தனையோ பேருக்கு இப்படி தீர்ப்பளித்திருப்பார்கள். எத்தனையோ நல்லவனை, கெட்டவன் என்று முடிவு செய்திருப்பார்கள். எத்தனையோ கெட்டவனை நல்லவன் என்று முடிவு செய்திருப்பார்கள்.

இவ்வாறிருக்க நாம் எப்படி ஒருவரை அவ்லியா, இறைநேசர், மகான் என்று கண்டுபிடிக்க முடியும்? அவ்வாறு முடியும் என்று சொன்னால், நபியவர்களை விட நமக்கு அதிகமான அறிவு ஞானம் இருக்கிறது என்றாகிவிடாதா? நபிகள் நாயகத்துக்குத் தெரியாதது எங்களுக்குத் தெரியும்; உள்ளத்தில் உள்ளதை நபியவர்களுக்குக் கண்டுபிடிக்கத் தெரியாது; ஆனால் எங்களுக்கு கண்டுபிடிக்கத் தெரியும் என்றாகி விடாதா? இதை நாம் புரிந்து கொண்டால் நாம் யாரையும் அவ்லியா என்றோ மகான் என்றோ சொல்ல மாட்டோம்.

துரோகிகளை நம்பிய நபிகள் நாயகம்

மனிதர்களைப் பற்றி நாம் எடுக்கும் முடிவுகள் சரியனவையாக இருக்கும் என்று சொல்ல முடியாது. இறைவனின் நேசர்கள் என்று சிலரைப் பற்றி நாமாக முடிவு எடுத்து அவர்களைக் கொண்டாடி வருகிறோம். அவர்கள் உண்மையில் நல்லடியார்களாக இருப்பார்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியாது என்பது இஸ்லாத்தின் கொள்கை.

இதோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிலரை நல்லவர்கள் என்று நம்பி உள்ளதையும் அது பொய்யாகிப் போனதையும் பாருங்கள்! இதிலிருந்து உரிய பாடத்தைக் கற்றுக் கொள்ளுங்கள்.

صحيح البخاري

3064 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، وَسَهْلُ بْنُ يُوسُفَ، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَاهُ رِعْلٌ، وَذَكْوَانُ، وَعُصَيَّةُ، وَبَنُو لَحْيَانَ، فَزَعَمُوا أَنَّهُمْ قَدْ أَسْلَمُوا، وَاسْتَمَدُّوهُ عَلَى قَوْمِهِمْ، «فَأَمَدَّهُمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِسَبْعِينَ مِنَ الأَنْصَارِ»، قَالَ أَنَسٌ: كُنَّا نُسَمِّيهِمُ القُرَّاءَ، يَحْطِبُونَ بِالنَّهَارِ وَيُصَلُّونَ بِاللَّيْلِ، فَانْطَلَقُوا بِهِمْ، حَتَّى بَلَغُوا بِئْرَ مَعُونَةَ، غَدَرُوا بِهِمْ وَقَتَلُوهُمْ، فَقَنَتَ شَهْرًا يَدْعُو عَلَى رِعْلٍ، وَذَكْوَانَ، وَبَنِي لَحْيَانَ، قَالَ قَتَادَةُ: وَحَدَّثَنَا أَنَسٌ: أَنَّهُمْ قَرَءُوا بِهِمْ قُرْآنًا: أَلاَ بَلِّغُوا عَنَّا قَوْمَنَا، بِأَنَّا قَدْ لَقِيَنَا رَبَّنَا، فَرَضِيَ عَنَّا وَأَرْضَانَا، ثُمَّ رُفِعَ ذَلِكَ بَعْدُ

நபிகள் நாயகம்  (ஸல்) அவர்களிடம் ரிஅல், தக்வான்,  உஸய்யா,  பனூ லஹ்யான் ஆகிய குலத்தார் (சிலர்) வந்து, தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விட்டதாகக் கூறினர். மேலும்,  தமது சமுதாயத்தினரை நோக்கி ஒரு படையனுப்பி உதவும்படியும் நபிகள் நாயகம்  (ஸல்) அவர்களிடம் அவர்கள் கேட்டுக் கொண்டனர். நபிகள் நாயகம் (ஸல்)  அவர்கள், அன்சாரிகளிலிருந்து எழுபது பேரை அனுப்பி அவர்களுக்கு உதவினார்கள். அவர்களை நாங்கள் காரீகள் (குர்ஆனை மனனம் செய்து முறைப்படி ஓதுவோர்) என்று அழைத்து வந்தோம். அவர்கள் பகல் நேரத்தில் விறகு சேகரிப்பார்கள்; இரவு நேரத்தில் தொழுவார்கள். அவர்களை அழைத்துக் கொண்டு அந்தக் குலத்தார் சென்றனர். இறுதியில், மவூனா என்ற கிணற்றை அவர்கள் அடைந்தவுடன் முஸ்லிம்களை ஏமாற்றிக்  கொன்று விட்டனர். உடனே,  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு மாதம் (முழுவதும்) ரிஅல், தக்வான், பனூ லிஹ்யான் ஆகிய குலங்களுக்குத் தீங்கு நேரப் பிரார்த்தனை செய்தார்கள். (கொல்லப்பட்ட) அந்த எழுபது பேரைக் குறித்து (அவர்கள் சொல்வதாக அருளப்பட்ட) ஓர் இறை வசனத்தை குர்ஆனில் நாங்கள் ஓதி வந்தோம்.
 
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
 
நூல்: புகாரி 3064

மேலும் இந்த ஹதீஸ் புகாரியில் 1002, 3170, 4088, 4090, 4096 ஆகிய இலக்கங்களிலும் பதிவாகியுள்ளது.

நபியவர்களிடம் வந்த நான்கு கூட்டத்தாரும் வஞ்சகர்கள் என்பதும், துரோகம் செய்யப் போகிறார்கள் என்பதும் நபியவர்களுக்குத் தெரியவில்லை.

70 முஸ்லிம்களைக் கொன்ற பிறகு தான் அந்தக் கூட்டத்தினர் கெட்டவர்கள் என்பது அவர்களுக்குத் தெரிய வருகிறது. 70 பேரையும் அழைத்துச் சென்று வஞ்சமாகக் கொலை செய்யவே இவர்கள் வந்திருக்கிறார்கள் என்பதை முதலிலேயே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிந்திருந்தால், அந்தக் கூட்டத்தினரைக் கைது செய்திருப்பார்கள். ஓரிருவர் அல்ல; 70 நபர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்றால் இது சாதாரணமான விஷயம் அல்ல. கொல்லப்பட்ட 70 தோழர்களும் குர்ஆனை நன்கு மனனம் செய்தவர்கள். குர்ஆனை மிகவும் அறிந்த ஆலிம்கள். மார்க்க அறிஞர்களாக இருந்த ஸஹாபாக்கள். நபியவர்கள் அத்தகைய ஸஹாபாக்களை முத்துக்களைப் போல பொறுக்கி எடுத்து அவர்களுடன் அனுப்பி வைக்கிறார்கள். ஆனால் நல்லவர்கள் என்ற நம்பிக்கையுடன், பாதுகாப்பிற்காக ஆயுதங்கள் எதுவும் எடுக்காமல் வெறுங்கையுடன் சென்ற அந்த 70 பேரையும் நம்ப வைத்து அந்த துரோகிகள் கழுத்தை அறுத்திருக்கிறார்கள்.

நான்கு குலத்தார்களையும் நல்லவர்கள் என்று நபியவர்கள் கணித்தது தவறாக ஆகிவிட்டது. நபியவர்களும், மற்ற ஸஹாபாக்களும் யாரை முஸ்லிம்கள் என்றும், நல்லவர்கள் என்றும் நினைத்தார்களோ அவர்கள் கெட்டவர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்களுடைய வெளிப்படையான தோற்றத்தை வைத்து நல்லவர்கள் என நம்பி ஏமாந்துள்ளார்கள்.

அந்த 70 பேரும் கொல்லப்பட்டது வஹீயின் மூலம் வந்தபோது தான் அவர்களுக்குத் தெரிந்தது. ஆக நபியவர்களைக் கூட ஒரு கூட்டம் ஏமாற்றியிருக்கிறது என்றால் நம்மை ஒருவன் ஏமாற்றுவது பெரிய விஷயமே அல்ல. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையே ஒரு கூட்டம் ஏமாற்ற முடியும் என்றால், நம்மைப் போன்ற சாதாரண மக்களை ஏமாற்ற முடியாதா? தர்காக்களில் அடக்கம் செய்யப்பட்டவர்கள் எல்லாம் மகான்கள் என்று நாம் நாம் நம்புகிறோமே நாம் எப்படி இதைக் கண்டுபிடித்தோம்? அல்லாஹ்வின் தூதரால் கண்டுபிடிக்க முடியாததை நாம் கண்டுபிடித்து விட முடியுமா?

ஒட்டகத்தைத் திருடியவர்களைப் பற்றி நபிகளின் கணிப்பு பொய்த்தது!

صحيح البخاري 3018 – حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَهْطًا مِنْ عُكْلٍ، ثَمَانِيَةً، قَدِمُوا عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاجْتَوَوْا المَدِينَةَ، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ ابْغِنَا رِسْلًا، قَالَ: «مَا أَجِدُ لَكُمْ إِلَّا أَنْ تَلْحَقُوا بِالذَّوْدِ»، فَانْطَلَقُوا، فَشَرِبُوا مِنْ أَبْوَالِهَا وَأَلْبَانِهَا، حَتَّى صَحُّوا وَسَمِنُوا، وَقَتَلُوا الرَّاعِيَ وَاسْتَاقُوا الذَّوْدَ، وَكَفَرُوا بَعْدَ إِسْلاَمِهِمْ، فَأَتَى الصَّرِيخُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَبَعَثَ الطَّلَبَ، فَمَا تَرَجَّلَ النَّهَارُ حَتَّى أُتِيَ بِهِمْ، فَقَطَّعَ أَيْدِيَهُمْ وَأَرْجُلَهُمْ، ثُمَّ أَمَرَ بِمَسَامِيرَ فَأُحْمِيَتْ فَكَحَلَهُمْ بِهَا، وَطَرَحَهُمْ بِالحَرَّةِ، يَسْتَسْقُونَ فَمَا يُسْقَوْنَ، حَتَّى مَاتُوا، قَالَ أَبُو قِلاَبَةَ: قَتَلُوا وَسَرَقُوا وَحَارَبُوا اللَّهَ وَرَسُولَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَسَعَوْا فِي الأَرْضِ فَسَادًا

"உக்ல்'' குலத்தைச் சேர்ந்த எட்டுப் பேர் கொண்ட குழு ஒன்று நபி (ஸல்) அவர்களிடம் (மதீனாவிற்கு) வந்தது. அவர்களுக்கு மதீனாவின் சூழல் ஒத்துக் கொள்ளவில்லை இல்லை. ஆகவே அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்குச் சிறிது (ஒட்டகப்) பால் கொடுத்து உதவுங்கள்'' என்று கேட்டார்கள். அதற்கு  நபி  (ஸல்) அவர்கள், "நீங்கள் ஒட்டக மந்தையை அணுகுவதைத் தவிர வேறு வழியை நான் காணவில்லை'' என்று பதிலளித்தார்கள். உடனே, (ஸகாத்தாகப் பெறப்பட்டிருந்த ஓர் ஒட்டக மந்தையை நோக்கி) அவர்கள் சென்றார்கள். அதன் சிறுநீரையும், பாலையும் குடித்தார்கள். (அதனால்)  உடல்  நலம் பெற்றுப் பருமனாக ஆனார்கள். மேலும், ஒட்டகம் மேய்ப்பவனைக் கொன்றுவிட்டு, ஒட்டகங்களை ஓட்டிச் சென்று விட்டார்கள்; இஸ்லாத்தை ஏற்ற பின் நிராகரித்து விட்டார்கள் என்று ஒருவர் இரைந்து சத்தமிட்ட படி  நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். நபி  (ஸல்)  அவர்கள் "உக்ல்' குலத்தாரைத் தேடிப் பிடித்து வர ஒரு குழுவினரை அனுப்பி வைத்தார்கள். பகல், உச்சிக்கு உயர்வதற்குள் அவர்கள் (பிடித்துக்)  கொண்டு வரப்பட்டனர். அவர்களுடைய கைகளையும் கால்களையும் நபி (ஸல்) அவர்கள் துண்டித்தார்கள். பிறகு, ஆணிகளைக்  கொண்டு வரச் சொல்லி உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவை (கொண்டு வரப்பட்டு) பழுக்கக் காய்ச்சப்பட்டன. அவற்றால் அவர்களுடைய கண் இமைகளின் ஓரங்களில் சூடிட்டார்கள். அவர்களை (கருங்கற்கள் நிறைந்த) "ஹர்ரா' எனுமிடத்தில் எறிந்து விட்டார்கள். அவர்கள் (தாகத்தால்) தண்ணீர் கேட்டும் இறக்கும் வரை அவர்களுக்குத் தண்ணீர் புகட்டப்படவில்லை.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 3018

மேலும் இந்தச் செய்தி புகாரியில் 1051, 4192, 4610, 5685, 5686, 5728, 6802, 6804, 6805, 6899 ஆகிய இலக்கங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்தக் கூட்டத்தினர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்காக வரவில்லை. ஒட்டகத்தைத் திருடுவதற்காக தான் வந்தனர். நாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விட்டோம் என்று பொய் சொன்னார்கள். உள்ளத்தை அறிந்து, இவர்கள் நடிக்கிறார்கள் என்பதை அறியக் கூடியவர்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருந்தால் ஏமாந்திருக்க மாட்டார்கள். ஒரு காவலரைப் பலி கொடுத்திருக்கவும் மாட்டார்கள். ஒட்டகத்தையும் இழந்திருக்க மாட்டார்கள். அவர்கள் துரோகம் செய்த பிறகுதான் இவர்கள் துரோகிகள் என்று நபியவர்களுக்குத் தெரிகிறது.

இதை நாம் எதற்காக இங்கே சுட்டிக்காட்டுகிறோம் என்றால் நாம் ஒருவரை அவ்லியா என்று நினைத்து, அவருக்கு விழா நடத்துகிறோம். கந்தூரி கொண்டாடுகிறோம். அவர் அவ்லியா என்பதற்கு என்ன ஆதாரம்? அவரை அவ்லியா என்று சொன்னது யார்? அவ்லியா என்ற ஒருவர் இந்தக் கப்ரில் அடங்கியிருக்கிறாரா? அப்படி ஒருவர் இந்த உலகத்தில் வாழ்ந்தாரா? அப்படியே வாழ்ந்து அவர் நல்ல செயல்களைத் தான் செய்தார் என்று நீங்கள் பார்த்தீர்களா? அப்படியே நல்ல செயல் செய்தாலும், அதை வெளிப்படையாகச் செய்திருக்கலாம். ஆனால் அது அவருடைய உள்ளத்தில் இருந்ததா? அல்லது நல்லவனைப் போல் நடிப்பதற்காகச் செய்தாரா? இது போன்ற ஏராளமான கேள்விகள் இதில் எழுகின்றன. அவ்லியா பட்டம் கொடுப்போர் இந்தக் கேள்விகளுக்கு அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டும்.

صحيح البخاري 2617 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الوَهَّابِ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الحَارِثِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ هِشَامِ بْنِ زَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ يَهُودِيَّةً أَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَاةٍ مَسْمُومَةٍ، فَأَكَلَ مِنْهَا، فَجِيءَ بِهَا فَقِيلَ: أَلاَ نَقْتُلُهَا، قَالَ: «لاَ»، فَمَا زِلْتُ أَعْرِفُهَا فِي لَهَوَاتِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

யூதப் பெண் ஒருத்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் விஷம் கலந்த ஆட்டிறைச்சியை அன்பளிப்பாகக் கொண்டு வந்தாள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதிலிருந்து (சிறிது) உண்டார்கள். "அவளைக் கொன்று விடுவோமா?'' என்று (நபி (ஸல்) அவர்களிடம்) கேட்கப்பட்டது.  அவர்கள், "வேண்டாம்'' என்று கூறி விட்டார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி) 
நூல்: புகாரி 2617

நல்லவள் என நம்பித்தான் அந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைச்சியை வாங்கிச் சாப்பிட்டார்கள். தன்னைக் கொல்வதற்காக இதைத் தருகிறாள் என அவர்களால் கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டது. அப்படியானால் நாம் கொடுக்கும் அவ்லியா பட்டத்தின் நிலை என்னவாகும்? வெளிப்படையாக எவன் நல்ல செயல் செய்கிறானோ அவன் நம் பார்வையில் நல்லவனாகத் தென்படுவான். வெளிப்படையாகவும் நல்ல செயல்கள் இருந்து, உள்ளமும் பரிசுத்தமாக இருந்தால்தான் அல்லாஹ்விடத்தில் ஒருவன் நல்லவனாக முடியும்.

தவறிப்போன யாகூப் நபியின் கணிப்பு

யஃகூப் (அலை) அவர்களுக்கு யூசுப் நபியைச் சேர்த்து மொத்தம் 12 பிள்ளைகள். இதில் 11 பேரும் திட்டம் போட்டு, தங்களுடைய தந்தையை ஏமாற்றி, "யூசுப் நபியை எங்களுடன் அனுப்பி வையுங்கள்; நாங்கள் பத்திரமாகத் திரும்ப அழைத்து வருகின்றோம்'' என்று கூறி அழைத்துச் சென்று அவரைக் கிணற்றில் தள்ளி விடுகின்றார்கள்.

இந்த விஷயம் அவர்களின் தந்தை யஃகூப் நபியவர்களுக்கு தெரியவில்லை. பெற்ற பிள்ளைகளே தங்களுடைய மனதில் கெட்ட எண்ணம் கொண்டுள்ளார்கள் என்ற விஷயத்தை அவர்களால் அறிய முடியாமல் போய் விட்டது.

இதன் முழு விபரத்தை திருக்குர்ஆனின் 12வது அத்தியாயமான சூரா யூசுப் என்ற அத்தியாயத்தில் காணலாம்.

பெற்ற பிள்ளைகளின் கபடத்தை இறைத்தூதரான யாகூப் நபியால் அறிய முடியவில்லை என்றால் என்றோ அடக்கம் செய்யப்பட்டவர்கள் குறித்து சொல்லப்படும் கதைகளை நம்பி அவ்லியா பட்டம் கொடுக்க முடியுமா? இது அல்லாஹ்வுக்குக் கோபத்தை ஏற்படுத்தாதா? ஒருவருடைய வெளித்தோற்றத்தை வைத்து நல்லவர், கெட்டவர் என்று நம்மளவில் கூறிக்கொன்டாலும் அவர்கள் உண்மையில் நல்லடியார்கள் என்று  தீர்மானித்துச் சொல்ல இயலாது என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

More Articles …