மஹர் வரதட்சணை
மனைவியின் பெற்றோர் செய்யும் உதவிகள் வரதட்சனையாகுமா?
மனைவியின் பெற்றோர் செய்யும் உதவிகள் வரதட்சனையாகுமா?
திருமணத்திற்கு முன்பும், திருமணம் நடக்கும் போதும் கொடுப்பது தான் வரதட்சணை ஆகும்.
திருமணம் நடந்து மருமகன் தங்கள் குடும்பத்தில் ஒருவராக ஆன பின்பு அவர்களின் தேவைக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் பெண்ணின் பெற்றோர் கொடுப்பது வரதட்சணையில் சேராது.
صحيح البخاري
3113 - حَدَّثَنَا بَدَلُ بْنُ المُحَبَّرِ، أَخْبَرَنَا شُعْبَةُ، قَالَ: أَخْبَرَنِي الحَكَمُ، قَالَ: سَمِعْتُ ابْنَ أَبِي لَيْلَى، حَدَّثَنَا عَلِيٌّ، أَنَّ فَاطِمَةَ عَلَيْهَا السَّلاَمُ اشْتَكَتْ مَا تَلْقَى مِنَ الرَّحَى مِمَّا تَطْحَنُ، فَبَلَغَهَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِسَبْيٍ، فَأَتَتْهُ تَسْأَلُهُ خَادِمًا، فَلَمْ تُوَافِقْهُ، فَذَكَرَتْ لِعَائِشَةَ، فَجَاءَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرَتْ ذَلِكَ عَائِشَةُ لَهُ، فَأَتَانَا، وَقَدْ دَخَلْنَا مَضَاجِعَنَا، فَذَهَبْنَا لِنَقُومَ، فَقَالَ: «عَلَى مَكَانِكُمَا». حَتَّى وَجَدْتُ بَرْدَ قَدَمَيْهِ عَلَى صَدْرِي، فَقَالَ: «أَلاَ أَدُلُّكُمَا عَلَى خَيْرٍ مِمَّا سَأَلْتُمَاهُ، إِذَا أَخَذْتُمَا مَضَاجِعَكُمَا فَكَبِّرَا اللَّهَ أَرْبَعًا وَثَلاَثِينَ، وَاحْمَدَا ثَلاَثًا وَثَلاَثِينَ، وَسَبِّحَا ثَلاَثًا وَثَلاَثِينَ، فَإِنَّ ذَلِكَ خَيْرٌ لَكُمَا مِمَّا سَأَلْتُمَاهُ»
3113 அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் துணைவியாரான) ஃபாத்திமா அவர்கள் மாவரைக்கும் திருகையினால் தமக்கு ஏற்பட்ட வேதனையைக் குறித்து முறையிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சில போர்க் கைதிகள் கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள்
என்னும் செய்தி ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு எட்டியது. உடனே, அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் (அந்தப் போர்க் கைதிகளிலிருந்து) ஒரு பணியாளை (தமக்குக் கொடுக்கும்படி) கேட்கச் சென்றார்கள். ஆனால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டில் இல்லாததால் அவர்களை ஃபாத்திமா (ரலி) அவர்களால் அந்த நேரத்தில் சந்திக்க முடியவில்லை. ஆகவே, ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறி(விட்டுத் திரும்பி)னார்கள். பின்னர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்தவுடன் அவர்களுக்கு ஆயிஷா (ரலி) அவர்கள் விஷயத்தைச் சொன்னார்கள். (விபரமறிந்து கொண்ட) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நாங்கள் படுக்கைக்குச் சென்று விட்ட பின்னால் எங்களிடம் வருகை தந்தார்கள். அவர்களைக் கண்டவுடன் நாங்கள் எழுந்து நிற்க முனைந்தோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், (எழுந்திருக்க வேண்டாம்.) உங்கள் இடத்திலேயே இருவரும் இருங்கள் என்று கூறினார்கள். (பிறகு) நான் அவர்களுடைய பாதத்தின் குளிர்ச்சியை என் நெஞ்சின் மீது உணர்ந்தேன். (அந்த அளவிற்கு எங்கள் அருகில் வந்து அமர்ந்து கொண்டார்கள்). பின்னர், நீங்கள் இருவரும் என்னிடம் கேட்டதை விடச் சிறந்த ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? நீங்கள் படுக்கைக்குச் செல்லும் போது, அல்லாஹு அக்பர் - அல்லாஹ் பெரியவன்' என்று முப்பத்து நான்கு முறையும், அல்ஹம்து லில்லாஹ்- புகழனைத்தும் அல்லாஹ்விற்கே' என்று முப்பத்து மூன்று முறையும், சுப்ஹானல்லாஹ்- அல்லாஹ் குறைகளிலிருந்து தூய்மையானவன்' என்று முப்பத்து மூன்று முறையும் சொல்லுங்கள். ஏனெனில், அது நீங்கள் இருவரும் என்னிடம் கேட்டதை விடச் சிறந்ததாகும் என்று சொன்னார்கள்.
நூல் : புகாரி 3113
ஃபாத்திமா (ரலி) தந்தையிடம் பணியாளரைக் கேட்டுள்ளார்கள். அலீ (ரலி) அவர்களுக்கும் அக்கோரிக்கையில் பங்கு உண்டு என்பதால் தான் நீங்கள் இருவரும் என்னிடம் கேட்டதை விட .. என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்/
மாமனாரிடம் மருமகன் கேட்கலாமா என்று அறிவுரை கூறவில்லை. மாமனாரிடம் எப்படி உதவி கேட்பது என்று அலீ (ரலி) அவர்களும் தயக்கம் காட்டவில்லை. திருமணம் செய்வதற்கு நேரடியான அல்லது மறைமுகமான நிபந்தனை என்ற அடிப்படையில் இந்த உதவி அமையவில்லை.
المستدرك على الصحيحين للحاكم
6840 - حَدَّثَنَا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ، ثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ الْجَبَّارِ، ثَنَا يُونُسُ بْنُ بُكَيْرٍ، عَنِ ابْنِ إِسْحَاقَ، ثَنَا يَحْيَى بْنُ عَبَّادِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: لَمَّا بَعَثَ أَهْلُ مَكَّةَ فِي فِدَاءِ أُسَارَاهُمْ بَعَثَتْ زَيْنَبُ بِنْتُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي فِدَاءِ أَبِي الْعَاصِ بِقِلَادَةٍ، وَكَانَتْ خَدِيجَةُ أَدْخَلَتْهَا بِهَا عَلَى أَبِي الْعَاصِ حِينَ بَنَى عَلَيْهَا، فَلَمَّا رَآهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَقَّ لَهَا رِقَّةً شَدِيدَةً وَقَالَ: «إِنْ رَأَيْتُمْ أَنْ تُطْلِقُوا لَهَا أَسِيرَهَا، وَتَرُدُّوا عَلَيْهَا الَّذِي لَهَا» هَذَا حَدِيثٌ صَحِيحٌ عَلَى شَرْطِ مُسْلِمٍ وَلَمْ يُخَرِّجَاهُ "
பத்ருப் போரில் எதிரிகள் தரப்பில் போரிட்ட அபுல் ஆஸ் கைதியாகப் பிடிக்கப்பட்டு இருந்தார். இவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மூத்த மகள் ஸைனபின் கணவராவார். கைதிகளை தண்டம் செலுத்தி அழைத்துக் கொள்ளலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவித்தனர். கணவரை மீட்பதற்காக ஸைனப் அவர்கள் தன் தாயார் கதீஜா (ரலி) அணிவித்த கழுத்து மாலையைக் கொடுத்து அனுப்பினார்கள். அந்த மாலையைப் பார்த்ததும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மகளுக்காக கடுமையாக பச்சாதாபம் கொண்டார்கள். அபுல் ஆஸை எந்த இழப்பீடும் இல்லாமல் விடுவிக்கவும், இந்த மாலையை அவரிடமே திருப்பிக் கொடுக்கவும் நீங்கள் சம்மதிக்கிறீர்களா? என்று நபித்தோழர்களிடம் கேட்டார்கள். (அவர்கள் சம்மதித்த பின் விடுவித்தார்கள்.)
நூல் : ஹாகிம்
மருமகன் என்ற உறவுக்காக அவருக்கான தண்டத் தொகையை விட்டுக் கொடுத்தார்கள். இது அவருக்கு கொடுத்த வரதட்சனையாக ஆகாது.
مسند أحمد ط الرسالة (38/ 109)
23001 - حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، حَدَّثَنِي حُسَيْنُ بْنُ وَاقِدٍ، حَدَّثَنِي عَبْدُ اللهِ بْنُ بُرَيْدَةَ قَالَ: سَمِعْتُ أَبِي يَقُولُ: إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " عَقَّ عَنِ الْحَسَنِ وَالْحُسَيْنِ " (
ஹஸன் ஹுஸைன் ஆகிய இருவருக்காகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அகீகா கொடுத்தார்கள்.
நூல் :அஹ்மத்
ஹஸன், ஹுஸைன் ஆகியோரின் தந்தையான அலி (ரலி) தான் அகீகா கொடுக்க கடமைப்பட்டவர் ஆவார். ஆனால் அவருக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அகீகா கொடுத்தது வரதட்சணையில் சேராது.
எனவே மகளும் மருமகனும் முன்னேற வேண்டும் என்பதற்காக திருமணம் முடிந்த பின்னர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ நிர்பந்தம் ஏதுமில்லாமல் கொடுக்கும் அன்பளிப்புகளும் செய்யும் உதவிகளும் வரதட்சணையில் சேராது.
மனைவி வீட்டில் கணவன் வாழவேண்டுமா?
திருமணத்திற்குப் பின்பு மனைவி வீட்டில் கணவன் வாழலாமா?
திருமணத்திற்குப் பிறகு பெண், கணவன் வீட்டில் வாழ வேண்டுமா? அல்லது கணவன், மனைவியின் வீட்டில் வாழ வேண்டுமா?
சமீரா அஜீஸ், அதிராம்பட்டிணம்.
பதில் :
சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள்.
திருக்குர்ஆன் 4:34
ஆண்கள், பெண்களை நிர்வாகம் செய்பவர்கள் என்றும், ஆண்களே பெண்களுக்காக பொருள் செலவு செய்ய வேண்டும் என்றும் இந்த வசனம் கூறுகின்றது. இந்த அடிப்படையில் மனைவிக்குத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் அனைத்தும் கணவன் தான் கொடுத்தாக வேண்டும்.
உங்கள் வசதிக்கேற்ப அவர்களை நீங்கள் குடியிருக்கும் இடத்தில் குடியமர்த்துங்கள்! அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி அவர்களுக்குத் தீங்கு செய்யாதீர்கள்! அவர்கள் கர்ப்பிணிகளாக இருந்தால் அவர்கள் பிரசவிக்கும் வரை அவர்களுக்காகச் செலவிடுங்கள்!
திருக்குர்ஆன் 65:6
இந்த வசனத்தில் தலாக் விடப்பட்ட பெண்களுக்கு, அவர்கள் கர்ப்பிணிகளாக இருந்தால் பிரசவிக்கும் வரை கணவன் செய்ய வேண்டிய கடமையைப் பற்றி அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான். இதில் கணவன், மனைவிக்கு இருப்பிடத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று இறைவன் கட்டளையிடுகின்றான். தலாக் விடப்பட்ட பெண்களுக்கே கணவன் இருப்பிடம் அமைத்துக் கொடுக்க வேண்டும் எனும் போது, சேர்ந்து வாழும் போது சொல்ல வேண்டியதே இல்லை. கண்டிப்பாக கணவனின் வீட்டில் தான் மனைவி இருக்க வேண்டுமே தவிர, மனைவியின் வீட்டில் கணவன் போய் இருப்பது குர்ஆனின் கட்டளைக்கு மாற்றமானது.
வரதட்சணை வாங்கவில்லை என்று கூறிக் கொண்டு, பெண்ணிடமிருந்து வீடு வாங்கும் வழக்கம் ஏகத்துவவாதிகள் என்று தங்களைக் கூறிக் கொள்ளும் சிலரிடம் உள்ளது. குறிப்பாக காயல்பட்டிணம், கீழக்கரை போன்ற பகுதிகளில் மாப்பிள்ளைக்கு வீடு கொடுக்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாகவே உள்ளது.
ஆண்கள் செலவு செய்வதால் தான் பெண்களை நிர்வாகம் செய்யக் கூடிய தகுதி ஆண்களுக்கு உள்ளது என்று அல்லாஹ் கூறுகின்றான். அதற்கு மாற்றமாக பெண் வீட்டில் போய் ஆண் இருக்கும் போது, இயற்கையாகவே ஆண்களுக்கு அல்லாஹ் வழங்கியுள்ள அந்த நிர்வாகத் திறன் இல்லாமல் போய் அங்கு ஆண்கள் அடிமைகளாக நடத்தப்படுவதையும் நாம் பார்க்க முடிகின்றது.
எனவே அல்லாஹ்வின் கட்டளைக்கு மாற்றமாக பெண் வீட்டில் போய் கணவன் தங்கும் நிலை முற்றிலும் மாற வேண்டும். வரதட்சணை திருமணங்களைப் புறக்கணிப்பது போல், இது போன்று பெண்ணிடமிருந்து வீடு வாங்கி நடத்தப்படும் திருமணங்களையும் ஏகத்துவவாதிகள் புறக்கணிக்க வேண்டும்.