Sidebar

18
Thu, Jun
சமீபத்திய செய்திகள்

ஆலிம் என்பவர் யார்? எல்லோரும் ஆலிம் ஆகமுடியாதா? இலங்கை முபாரக் என்பவருக்கு நமது விளக்கமும் கேள்விகளும்

கேள்வி

மிருகபுத்திரன் என்று கூற மார்க்கத்தில் அனுமதி உண்டா?

மனுஷ்யபுத்திரன் என்பவர் இஸ்லாம் குறித்து தவறாக விமர்சனம் செய்வதற்கு பதிலளிக்கும் போது அவரைப் பற்றி மிருகபுத்திரன் என்று குறிப்பிட்டது ஏன்? இது மார்க்கத்தில் கூடுமா?

மசூது, கடையநல்லூர்

குறிப்பிட்ட மனிதன் மிருகத்துக்குப் பிறந்தான் என்ற கருத்தில் அவ்வாறு கூற அனுமதி இல்லை. ஆனால் மிருகத்தின் தன்மை கொண்டவன் என்ற பொருளில் கூறுவதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது. மார்க்கத்தில் மட்டுமல்ல. எழுத்துலகிலும் முன்மாதிரி உண்டு.

இவரது இயற்பெயர் வேறாக இருந்தும் தன்னை மனுஷ்ய புத்திரன் என்று மாற்றம் செய்து கொண்டார். இதை நேரடிப் பொருளில் அவர் சூட்டிக் கொண்டாரா?

நான் மனிதனுக்குப் பிறந்தவன் என்பதைச் சொல்வதற்காகவா மனுஷ்யபுத்திரன் என்று வைத்துக் கொண்டார்? அப்படியானால் அவரை ஆதரிக்கும் முற்போக்காளர் உள்ளிட்ட அனைவரும் மிருக புத்திரர்கள் என்று ஆகிவிடும். இவர் மனிதனுக்குப் பிறந்தவர் என்பதை யாராவது எந்தக் காலத்திலாவது மறுத்து இருந்தால் அப்போது நான் மனிதனுக்குப் பிறந்தவன் என்று கூறலாம்.

அப்படியானால் எந்த பொருளில் இந்தப் பெயரைச் சூட்டிக் கொண்டார்? மனிதத் தன்மை கொண்ட புத்திரன் என்ற பொருளில் தான் பயன்படுத்துகிறார். அப்படித்தான் அனைவரும் எடுத்துக் கொள்கின்றனர்.

இது போல் தான் மிருகபுத்திரன் என்பதும். மிருகம் போல் சிந்திக்காத தன்மை குறித்து சொல்லப்பட்டது என்பது ஏன் புரியவில்லை?

இவர் ஆட்டுக்கும், மாட்டுக்கும் பிறந்தவர் என்ற அர்த்தத்தில் நான் சொல்லவில்லை என்று தெரிந்தும் இதை பாரதூரமாக ஆக்குவோர் எழுத்தாளர்கள் தாமா?

கோ பாலன் என்பதைப் பசுவுக்குப் பிறந்தவன் என்றா இவர்கள் அர்த்தப்படுத்துகிறார்கள்?

அபூஹுரைரா என்ற நபித்தோழர் பூனையின் தந்தை என அழைக்கப்பட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை அனுமதித்தார்கள்.

அபூஹுரைரா பூனைக்குட்டியைப் பெற்றெடுத்தார் என்று அறிவுடைய யாரும் பொருள் கொள்ள மாட்டார்கள். பூனையைச் செல்லமாக வளர்த்ததால் இந்தப் பெயர். அவ்வளவு தான்.

அலீ (ரலி) என்ற நபியின் மருமகனை மண்ணுக்கு தகப்பன் என நபிகள் நாயகம் அழைத்தார்கள்.

இவர் மண்ணைப் பெற்றெடுத்தார் என்ற பொருளில் இது சொல்லப்படவில்லை. அவர் மேனியில் மண் படிந்திருப்பதைப் பார்த்த போது நபிகள் இப்படி சொன்னார்கள்.

இலக்கியத்தையும் மொழிநடையையும் அறியாதவர்கள் தான் இது போல் கேள்வி எழுப்புவார்கள்.

மனுஷ்ய புத்திரன் என்பவர் சிந்திக்காமல் உளறிய தன்மை குறித்துத் தான் அது சொல்லப்பட்டது என்பது அந்தக் கட்டுரையை வாசித்தாலே தெரியும்

29.01.2013. 0:18 AM

உங்களை யூதக்கைக்கூலி என்று உங்கள் எதிரிகள் சொல்கிறார்களே அது ஏன்?

அப்துல்லாஹ், வத்தலக்குண்டு

பதில் :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலம் முதல் இன்றைய தேதி வரை யூதர்கள் முஸ்லிம்களை எதிரிகளாகக் கருதி செயல்பட்டு வருகின்றனர். தாங்கள் உயர்ந்த இனம் என்று யூதர்கள் கொண்டிருந்த இறுமாப்பை இஸ்லாம் ஒழித்துக் கட்டியது போல் வேறு எந்த இஸங்களும் ஒழித்துக் கட்டியதில்லை.

பிறப்பால் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று யூதர்கள் கட்டிவைத்த கோட்டை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் தகர்த்து எறியப்பட்டதால் இஸ்லாத்தை ஒழிக்க வேண்டும் என்ற வெறி அவர்கள் இரத்தத்தில் ஊறிப் போனது.

வலிமையால் இஸ்லாத்தை வெல்ல முடியாததால் நரித்தனம் செய்து இஸ்லாத்தை வீழ்த்த நினைத்தனர். கேடுகெட்ட கொள்கைகளை இஸ்லாமியக் கொள்கை என்ற சாயம் பூசி முஸ்லிம்களிடம் தினித்தனர். இதனால் இஸ்லாமும் மற்ற மதங்களைப் போல் மூட நம்பிக்கை நிறைந்த மார்க்கம் என்ற கருத்தை விதைக்க நினைத்தனர். ஆனால் அதிலும் அவர்களால் வெற்றிபெற முடியவில்லை.

இந்த வரலாறை அனைத்து முஸ்லிம்களும் அறிந்து வைத்திருப்பதால் சீர்திருத்தம் செய்பவர்களுக்கு யூதக்கைக்கூலி என்ற முத்திரை குத்தினால் அதன் மூலம் சத்தியப் பிரச்சாரத்தை முடக்கிவிடலாம் என்று கருதி இவ்வாறு விமர்சிக்கின்றனர். நாம் எடுத்துக் காட்டும் எந்த ஆதாரத்துக்கும் பதில் இல்லாததால் யூதக் கைக்கூலி என்ற ஒரு பதிலில் தப்பித்துக் கொள்ளப் பார்க்கின்றனர்.

இந்தச் சமுதாயத்தில் அவ்வப்போது யூதக் கைக்கூலிகள் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் யூதக்கைக்கூலி என்று ஒருவரை அல்லது ஒரு இயக்கத்தைச் சொல்வதாக இருந்தால் அதற்கான காரண காரியத்தை விளக்க வேண்டும்.

யூதர்களின் கொள்கைக்கு நாம் வக்காலத்து வாங்குகிறோம் என்பதற்காக இப்படி சொல்கிறார்களா? அல்லது யூதர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு நாம் பிரச்சரம் செய்கிறோம் என்பதற்காக இப்படி சொல்கிறார்களா என்பதை அவர்கள் தெளிவுபடுத்துவதில்லை.

ஆனால் நம்மை இப்படி விமர்சிப்பவர்கள் தான் யூதக் கைக்கூலிகள் என்று நாம் ஆதாரத்துடன் சொல்ல முடியும்.

யூதர்கள் உசைரைக் கடவுளின் மகன் என்று சொன்னார்கள். அதாவது உசைர் என்பார் கர்த்தரின் மகன் என்ற தரத்தில் உள்ளவர் என்பது அவர்களின் கொள்கை.

அப்துல் காதிர் ஜீலானி என்பவர் அல்லாஹ்வின் அர்ஷுக்கு அருகில் தொட்டிலில் துங்கிக் கொண்டு இருப்பதாகக் கதை எழுதி வைத்துக் கொண்டு சுன்னத் ஜமாஅத்தினர் பலர் அதை நம்புகின்றனர்.

இது தான் யூதக் கொள்கை. இவர்கள் தான் யூதக்கைக்கூலி என்று சொல்ல முடியும்.

யூதர்கள் தங்களின் நபிமார்களின் அடக்கத்தலங்களை தர்காவாக ஆக்கிக் கொண்டார்கள் என்பதற்காக அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மரணத்தறுவாயில் கண்டித்தார்கள்.

செத்துப் போனவர்களுக்கு ஊர்கள் தோறும் தர்கா கட்டி அந்த யூதர்கள் வழியில் யூதக் கொளகைக்கு உயிர் கொடுக்கும் சுன்னத் ஜமாஅத்தினர் தான் யூதக் கைக்கூலிகள். தர்காவைத் தகர்க்க வெண்டும் எனக் கூறி நாம் யூதக் கொள்கைக்கு எதிராகப் பிரச்சாரம் செய்கிறோம்.

பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை. மொழியால் உயர்வு தாழ்வு இல்லை என்பது நபி வழி.

ஆனால் யூதர்கள் தங்களை உயர்ந்த இனம் என்று நினைத்துக் கொண்டார்கள். சுன்னத் ஜமாஅத்தினர் அரபி பேசுபவன் சிறந்தவன் என்றும் குறிப்பிட்ட வமசத்தில் பிறந்தவன் சிறந்தவன் என்றும் மத்ஹபு நூல்களில் எழுதி வைத்து யூதக் கொளகையை இஸ்லாத்தில் தினித்தார்கள். இவர்கள் தான் யூதக் கைக்கூலிகள்.

எழுத்துக்களுக்கு நம்பர் கொடுத்து மந்திர வேலை பார்ப்பது யூதர்களின் வழிமுறை. அதை அப்படியே பின்பற்றி அப்ஜத் கணக்கு என்று போட்டு அதே போல் மக்களை ஏமாற்றிவரும் கூட்டம் தான் யூதக் கைக்கூலிகள்.

இன்று நாம் எதிர்த்து பிரச்சாரம் செய்யும் கொள்கைகளில் அதிகமானவை யூதர்களைப் பார்த்து காப்பி அடிக்கப்பட்டவையாகும். யூதக் கொள்கையை முஸ்லிம் சமுதாயத்தில் இருந்து ஒழித்துக்கட்டுபவர்கள் ஒருக்காலும் யூதக்கைக்கூலியாக இருக்க முடியாது.

மேலும் யூதர்களின் இஸ்ரேல் அரசுக்கு நரசிம்மராவ் அரசு அங்கீகாரம் அளித்த போதும் இன்னபிற சந்தர்ப்பங்களிலும் நாம் அதை எதிர்த்துப் போராட்டங்கள் நடத்தியுள்ளோம்.

ஆனால் நம்மை யூதக் கைக்கூலி எனச் சொல்லும் கூட்டத்தினராகிய மத்ஹப்வாதிகள் எகிப்தில் என்ன செய்தார்கள்? இஸ்ரேலுடன் காதல் கொண்டு உறவை வளர்த்தனர். சரணாகதி அடைந்தனர்.

இஸ்ரேலுக்கும், நமக்கும் நிலப் பிரச்சனை தான் உள்ளது; கொள்கைப் பிரச்சனை இல்லை என்று சொன்ன கிறுக்கனை எல்லாம் இன்றும் மார்க்க் அறிஞராக ஒரு கூட்டம் போற்றிக் கொண்டு அவனது நூல்களை மொழி பெயர்த்து வெளியிட்டுக் கொண்டுள்ளது. இவர்கள் தான் யூதக் கைக்கூலிகள்

நாம் யூதக் கொள்கையை ஒழித்துக் கட்ட சபதம் ஏற்ற கூட்டத்தினராவோம். நாம் யூதக்கைக்கூலி என்று சொல்லக் கூடியவர்கள் அதற்கான காரணத்தைச் சொல்லட்டும்.

உணர்வு 16:31

28.03.2012. 12:06 PM

திருத்திய தவறு மக்களுக்கு சேராவிட்டால் யார் பொறுப்பு?

PJ தனது விளக்கத்தில் தவறு செய்து பின்னர் அதனைத் திருத்தி எழுதியதாக வைத்து கொள்வோம். நான் ஒரு கேள்வி வைக்கிறேன். ஒருவரிடம் பிஜே தவறாக எழுதிய குர்ஆன் உள்ளது. திருத்தி எழுதியது அவருக்குத் தெரியவில்லை என்றால், அவர் அந்தத் தவறுகளுடன் தானே படிப்பார்? பின்னர் அந்தக் குர்ஆனை மாற்று மத சகோதரர்களுக்குக் கொடுக்கிறார் என்றால் அவரும் அதனை தவறாகத் தான் படிப்பார்?

பிஜே நான் தவறாக எழுதியதை திருத்திக் கொள்ளுங்கள் என்று அவர் வெப்சைடில் கொடுத்திருக்கிறார். நாம் அதனைத் திருத்தி பின்னர் அதை மாற்று மத சகோதரருக்குக் கொடுத்தால், இதில் என்ன திருத்தம் உள்ளது என்று கேட்பார். குர்ஆனில் திருத்தம் உள்ளதா? என்று கேட்பார் என்றால் அதற்கு நாம் என்ன பதில் கூறுவது?

இப்படி ஒரு கேள்வியை இணைய தளங்களில் சிலர் உலாவ விட்டுள்ளனர். ஆனால் பதில் சொல்வது எப்படி அறிவு சார்ந்து இருக்க வேண்டுமோ அது போல் கேள்வியும் இருக்க வேண்டும். நானும் கேள்வி கேட்டேன் என்பதற்காக எதையாவது உளறி வைக்கக் கூடாது.

இவர் கேட்பது பீஜே தொடர்பான விஷயம் அல்ல. பொதுவானது. மனிதனாகப் பிறந்த யாராலும் தவிர்க்க முடியாத பிரச்சனையாகும். மாமேதைகளாக இருந்தாலும் கூட அவர்களும்சந்தித்தே ஆக வேண்டிய பிரச்சனை. இதை பீஜேயின் பிரச்சனையாக பார்ப்பது முதலாவது அறியாமையாகும்.

பீ.ஜே விளக்கத்தில் தவறு இருந்தால் என்ன செய்வது என்று கவலைப்படும் இவர்கள் மற்றவர்களிடம் தவறு ஏற்பட்டால் இது போன்ற நிலை ஏற்படாது என்று எண்ணுகிறார்களா?

மனிதனின் சிந்தனையில் தவறு ஏற்பட்டால் அவருக்கு முன்னாள் இரண்டு வழிகள் தான் உள்ளன.

தவறு என்று தெரிந்தாலும் அதை மக்கள் மத்தியில் கூறாமல் மறைத்து விடுவது ஒரு வழி.

தவறை மக்களிடம் சொல்லி விடுவது இன்னொரு வழி.

இதில் மூன்றாவது வழி இல்லை.

தவறு என்று தெரிந்தாலும் அதை மக்கள் மத்தியில் கூறாமல் மறைத்து இருந்தால் இவர் கூறுவது போன்ற சிக்கல் வராது. ஆனால் அதை நாம் செய்ய முடியாது, மறுமையில் அதை விட சிக்கல் ஏற்பட்டு விடும்.

மக்களிடம் சொன்னால் இவர் கேட்ட நிலை அனைத்து அறிஞர்களுக்கும் ஏற்படும்.

இந்தக் கேள்வியைக் கேட்பவருக்கே ஒரு தவறு ஏற்படுகிறது. அதைப் பிறகு உணர்ந்து திருத்திக் கொள்கிறார். இவர் திருத்திக் கொண்டது அனைவருக்கும் தெரிய முடியாது.

நம்மிடம் கேட்ட அதே கேள்வியை அவரும் இப்போது சந்திக்கிறார். உலகத்தில் யாராக இருந்தாலும் சந்தித்தே தீர வேண்டிய ஒரு விஷயத்தை பீஜேக்கு மட்டும் உரியதாக நினைப்பதில் அறியாமை பளிச்சிடுகிறது.

அடுத்து இவரது கேள்வியில் இன்னொரு தவறும் உள்ளது.

பீஜே என்ற ஒரு மனிதனுக்கு மட்டும் தான் தவறு ஏற்படும்; வேறு யாருக்கும் எந்தத் தவறும் ஏற்படாது என்ற எண்ணம் இருந்தால் தான் இதை பீஜே சம்மந்தப்பட்டதாகக் கேட்க முடியும்.

மேலும் பீஜே வாழும் நவீன யுகத்தில் பீஜே ஒரு தவறைத் திருத்திக் கொண்டதைத் தெரிவித்தால் அதிகமான மக்களை அது சென்றடைந்து விடும். ஆனால் இமாம்கள் காலத்தில் இந்த நிலை இருக்கவில்லை. அவர்கள் அனைவருமே ஆயிரக்கணக்கான சட்டங்களில் முன்னர் கூறியதற்கு மாற்றமாகக் கூறியுள்ளனர். உடனடியாக மக்களைச் சென்றடையும் ஊடகங்கள் இல்லாத காலத்தில் அவர் மாற்றிக் கூறிய கருத்து பெரிய அளவில் மக்களைச் சென்றடைந்து இருக்காது.

இதற்கு இவர்கள் அளிக்கும் பதில் என்ன?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னர் கூறியதைப் பின்னர் மாற்றி உள்ளனர். ஆனால் பல நபித்தோழர்களுக்கு மாற்றிய விபரம் தெரியாமல் முந்தைய முறைப்படியே நபித்தோழர்கள் நடந்துள்ளனர். இதற்கு என்ன பதில் கூறப் போகிறார்?

صحيح البخاري

790 - حَدَّثَنَا أَبُو الوَلِيدِ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي يَعْفُورٍ، قَالَ: سَمِعْتُ مُصْعَبَ بْنَ سَعْدٍ، يَقُولُ: صَلَّيْتُ إِلَى جَنْبِ أَبِي، فَطَبَّقْتُ بَيْنَ كَفَّيَّ، ثُمَّ وَضَعْتُهُمَا بَيْنَ فَخِذَيَّ، فَنَهَانِي أَبِي، وَقَالَ: كُنَّا نَفْعَلُهُ، «فَنُهِينَا عَنْهُ وَأُمِرْنَا أَنْ نَضَعَ أَيْدِينَا عَلَى الرُّكَبِ»

790 முஸ்அப் பின் சஅத் பின் அபீவக்காஸ் அவர்கள் கூறியதாவது:

நான் என் தந்தை (சஅத் பின் அபீவக்காஸ் -ரலி) அருகில் நின்று தொழுதேன். அப்போது (ருகூவில்) என் இரு கைகளையும் கோத்து என் இரு தொடைகளின் இடுக்கில் வைத்துக் கொண்டேன். அவ்வாறு செய்ய வேண்டாமென என்னை அவர்கள் தடுத்துவிட்டு, நாங்கள் இவ்வாறு செய்து கொண்டிருந்தோம். பின்னர் அவ்வாறு செய்யக் கூடாதென நாங்கள் தடுக்கப்பட்டு, எங்கள் கைகளை முழங்கால்கள் மீது வைக்குமாறு உத்தரவிடப்பட்டோம் என்று கூறினார்கள்.

நூல் : புகாரி 790

நபிகள் நயகம் (ஸல்) அவர்கள் மாற்றிய விபரம் தெரியாமல் பழைய முறைப்படியே தொழுது மரணித்தவர்களின் நிலை என்ன?

இதற்கெல்லாம் என்ன பதிலோ அது தான் நமக்குரிய பதிலாகும்.

இதைற்கு சரியான விடை இதுதான்:

எந்த மனிதனையும் அல்லாஹ் சக்திக்கு மீறிப் பிடிக்க மாட்டான். தவறான மொழிபெயர்ப்பை வாசித்து ஒருவர் தவறாக விளங்கிக் கொண்டால் சரியான மொழி பெயர்ப்பை அறிய அவருக்கு வழி இல்லாவிட்டால் அவரை அல்லாஹ் குற்றம் பிடிக்க மாட்டான்.

அது போல் மொழிபெயர்த்தவர் தனது மொழி பெயர்ப்பில் வேண்டுமென்று தவறு செய்யவில்லை;, ஆய்வு செய்பவர் ஆய்வில் எந்தக் குறைவும் வைக்காமல் ஆய்வு செய்கிறார். அவற்றில் ஒன்றிரண்டு தவறாகி விடுகிறது. இதனால் அவர் தண்டிக்கப்பட மாட்டார்.

صحيح البخاري

7352 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ المُقْرِئُ المَكِّيُّ، حَدَّثَنَا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، حَدَّثَنِي يَزِيدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الهَادِ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ الحَارِثِ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، عَنْ أَبِي قَيْسٍ، مَوْلَى عَمْرِو بْنِ العَاصِ، عَنْ عَمْرِو بْنِ العَاصِ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِذَا حَكَمَ الحَاكِمُ فَاجْتَهَدَ ثُمَّ أَصَابَ فَلَهُ أَجْرَانِ، وَإِذَا حَكَمَ فَاجْتَهَدَ ثُمَّ أَخْطَأَ فَلَهُ أَجْرٌ»

7352 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீதிபதி தீர்ப்பளிப்பதற்காக ஆய்வு செய்து சரியான தீர்ப்பு வழங்குவாராயின் அவருக்கு இரண்டு நன்மைகள் உண்டு. அவர் தீர்ப்பளிப்பதற்காக ஆய்வு செய்து தவறான தீர்ப்பு வழங்குவாராயின் அவருக்கு ஒரு நன்மை உண்டு.

இதை அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : புகாரி  7352

எனவே மொழி பெயர்த்தவரும் அல்லாஹ்விடம் மாட்டிக் கொள்ள மாட்டார்.

தவறான மொழிபெயர்ப்பைத் தவறு என அறியாமல் அதன் படி செயல்பட்டவரும் மாட்டிக் கொள்ள மாட்டார்.

அல்லாஹ்வுக்கு இல்லாத அக்கறை இவர்களுக்குத் தேவை இல்லை என்பது தான் இதற்கான பதிலாகும்.

29.04.2010. 16:14 PM

ஹதீஸ் மறுப்பாளர்களுக்கு பதில்!

தற்போது தவ்ஹீதின் எழுச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் எரிச்சல் கண்டவர்கள் நம்மை பார்த்து, ஹதீஸ் மறுப்பாளர்கள் என்று அவதூறு பரப்பி வருகின்றார்கள்.

ஆனால் உண்மை என்ன தெரியுமா?

இப்படி நம்மைப் பார்த்து அவதூறு பரப்புபவர்கள் தான் உண்மையில் ஹதீஸ் மறுப்பாளர்களாக உள்ளார்கள்.

ஸஹருக்கு பாங்கு சொல்வது நபி வழி என்பதை நாம் அறிவோம்.

குர்ஆன் ஹதீசைச் சரியாக பின்பற்றுவதாகக் கூறிக் கொள்ளும் ஜாக் என்ற இயக்கத்தினர் ஸஹருக்கு பாங்கு சொல்லும் நபிவழியைப் பின்பற்றினால் குழப்பம் ஏற்படும் என்று சொல்லி ஹதீஸை நிராகரித்துள்ளனர்.

இது குறித்து அவர்களது இதழில் கேட்கப்பட்ட கேள்வியும், அதற்கு அவர்களது உளறலும், அதற்கு நமது விளக்கத்தையும் இங்கே காண்போம்.

ஸஹர் பாங்கு குழப்பமா?:

அல்ஜன்னத் மாத இதழில் ஒரு கேள்விக்குப் பதில் அளிக்கும் போது,, ஸஹர் பாங்கு சொல்வதால் குழப்பம் ஏற்படும் என்று கூறி, ஸஹர் பாங்கு சொல்லத் தேவையில்லை என்று எழுதியுள்ளார்கள்.

ஹதீஸைச் செயல்படுத்தினால் குழப்பம் ஏற்படும் என்று மத்ஹபுவாதிகள் கூறிய அதே காரணத்தை இப்போது இவர்கள் கூறியுள்ளார்கள் என்பதைப் பார்க்கும் போது இவர்கள் குர்ஆன், ஹதீஸை விட்டு விலகி எங்கோ சென்று விட்டார்கள் என்பதையே இது காட்டுகின்றது.

அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழிகெட்டு விட்டார்.

திருக்குர்ஆன் 33:36

அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் ஒன்றைக் கற்றுத் தந்திருக்கும் போது, மனோ இச்சையின் அடிப்படையில் அதை மறுப்பது தெளிவான வழிகேடாகும் என்பதை இந்த வசனம் விளக்குகின்றது.

இந்த ஹதீஸை நிராகரிக்க ஜாக் இயக்கம் சொல்லும் காரணம் இதுதான்:

தூங்குபவர்கள் எழுந்து ஸஹர் செய்ய வேண்டும் என்ற காரணத்தை மட்டும் அடிப்படையாக வைத்துச் சொல்லப்பட்டதாகும். ஸஹர் நேரத்தை மக்களுக்குத் தெரிவிப்பது தான் இதன் நோக்கம். இன்று நேரத்தைத் தெரிந்து கொள்வதற்கு எத்தனையோ வழிமுறைகள் கையாளப்படுகின்றன. நேரத்தை அறிந்து கொள்வது என்ற காரணம் நிறைவேறிவிடுமானால் அதுவே போதுமானதாகக் கொள்ளலாம்.

என்று வியாக்கியானம் கூறியுள்ளனர்.

இவர்கள் கூறுகின்ற காரணத்துக்காகத் தான் ஸஹர் பாங்கு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. வணக்க வழிபாடுகளைப் பொருத்தவரை ஒரு காரணத்துக்காக அது ஏற்படுத்தப்பட்டாலும் அது தொடர் வணக்கமாக ஆக்கப்பட்டால் அதை மாற்ற முடியாது.

தொழுகைக்கு அழைக்கப்படும் பாங்கை எடுத்துக் கொள்வோம்.

صحيح البخاري

606 – حَدَّثَنَا مُحَمَّدٌ هُوَ ابْنُ سَلاَمٍ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الوَهَّابِ الثَّقَفِيُّ، قَالَ: أَخْبَرَنَا خَالِدٌ الحَذَّاءُ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: «لَمَّا كَثُرَ النَّاسُ» قَالَ: «ذَكَرُوا أَنْ يَعْلَمُوا وَقْتَ الصَّلاَةِ بِشَيْءٍ يَعْرِفُونَهُ، فَذَكَرُوا أَنْ يُورُوا نَارًا، أَوْ يَضْرِبُوا نَاقُوسًا فَأُمِرَ بِلاَلٌ أَنْ يَشْفَعَ الأَذَانَ، وَأَنْ يُوتِرَ الإِقَامَةَ»

தொழுகைக்கான நேரத்தை மக்களுக்கு அறிவிப்பதற்காகத் தான் பாங்கு அறிமுகப்படுத்தப்பட்டது. மக்களின் எண்ணிக்கை அதிகமான போது, அவர்கள் அறிந்திருக்கின்ற ஏதாவது ஒரு முறையில் தொழுகையின் நேரத்தை அறிந்து கொள்ள ஆலோசித்தனர். அப்போது நெருப்பை மூட்டுவதன் மூலமோ, மணி அடிப்பதன் மூலமோ அறிந்து கொள்ளலாம் என கருத்துச் சொல்லப்பட்டது. ஆனால் பாங்கின் வாசகங்களை இரட்டை இரட்டையாகவும் இகாமத்தின் வாசகங்களை ஒற்றையாகவும் சொல்லுமாறு பிலால் (ரலி) கட்டளையிடப்பட்டார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல்: புகாரி 606

தொழுகையின் நேரத்தை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பது தான் தொழுகைக்கான பாங்கின் நோக்கம் என்பது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இன்று நேரத்தைத் தெரிந்து கொள்வதற்கு எத்தனையோ வழிமுறைகள் கையாளப்படுகின்றன. நேரத்தை அறிந்து கொள்வது என்ற காரணம் நிறைவேறிவிடுமானால் அதுவே போதுமானதாகக் கொள்ளலாம் என்று இவர்கள் கூறும் வியாக்கியானத்தின் அடிப்படையில் ஐவேளைத் தொழுகைக்கு பாங்கு சொல்லத் தேவையில்லை என்று இவர்கள் வாதிடுவார்களா?

காரணத்தோடு ஒரு விஷயம் சொல்லப்பட்டால் அந்தக் காரணம் இல்லாவிட்டால் பின்பற்றத் தேவையில்லை என்பது வணக்க வழிபாடுகளுக்குப் பொருந்தாது என்பதை விளங்கிக் கொள்ள இதுவே போதுமானதாகும்.

தங்களது கருத்தை நியாயப்படுத்துவதற்காக மேலும் சில வாதங்களையும் முன் வைத்துள்ளனர்.

இரண்டு பாங்குக்கும் இடையிலுள்ள இடைவெளி மேடையில் ஏறி இறங்கும் நேரம் தான் என்று ஹதீஸில் இடம் பெறுகின்றது. அதாவது இரண்டு பாங்குக்கும் இடையில் அதிகப்படியாக ஐந்து நிமிட இடைவெளி தான் இருக்கும் என்று தெரிய வருகின்றது… ஐந்து நிமிட இடைவெளிக்குள் இரண்டு பாங்குகள் சொல்லும் போது மக்களிடம் குழப்பமான நிலை ஏற்படும்

என்றும் ஜாக் பத்திரிகையில் கூறியுள்ளனர்.

மேடையில் ஏறி, இறங்கும் நேரம் தான் என்று ஒரு அறிவிப்பாளர் கூறுவதை மட்டும் அடிப்படையாக வைத்து, ஐந்து நிமிட இடைவெளி என்று முடிவு செய்ய முடியாது. ஏனெனில் மற்றொரு அறிவிப்பில்,

صحيح البخاري

1921 – حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هِشَامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ، عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «تَسَحَّرْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ قَامَ إِلَى الصَّلاَةِ»، قُلْتُ: كَمْ كَانَ بَيْنَ الأَذَانِ وَالسَّحُورِ؟ " قَالَ: «قَدْرُ خَمْسِينَ آيَةً»

ஸஹருக்கும், சுப்ஹுக்கும் இடையில் ஐம்பது வசனங்கள் ஓதும் அளவுக்கு இடைவெளி இருக்கும் என்று அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்.

நூல் : புகாரி 1921

ஐம்பது வசனங்கள் ஓதும் நேரம் என்பது சாதாரணமாக நிறுத்தி நிதானமாக ஓதினால் இருபது நிமிடத்திலிருந்து அரை மணி நேரம் வரை தேவைப்படும். எனவே இரண்டு பாங்குக்கும் இடையில் அரை மணி நேரம் இடைவெளி விடலாம். ஆனால் இவர்களாக ஐந்து நிமிட இடைவெளி என்று தீர்மானித்துக் கொண்டு அதனால் குழப்பம் ஏற்படும் என்று கூறுகின்றனர்.

ஒரே ஊரில் பல பள்ளிகள் இருப்பதால் எல்லா பள்ளிகளிலும் பாங்கு சொல்லும் போது இது முதலாவதா, இரண்டாவதா என்பது தெரியாமல் மக்களிடம் குழப்பம் அதிகரித்து விடும் என்றும் கூறியுள்ளனர்.

ஸஹர் பாங்கு என்ற நபிவழியைப் புறக்கணிப்பதற்காக, நேரம் அறிந்து கொள்ள எத்தனையோ வழிமுறைகள் இருப்பதாக வாதிட்டார்கள். ஆனால் அதே சமயம், இரண்டு பாங்கு சொல்லப்படும் போது பாங்கின் நேரத்தை வைத்து இது எந்த பாங்கு என்பதைத் தீர்மானிக்கலாம் என்று கூறாமல் குழப்பம் அதிகரிக்கும் என்று கூறுகின்றனர் என்றால் இவர்களுக்கு ஹதீஸைச் செயல்படுத்துவதில் எந்த அளவுக்கு ஈடுபாடு உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

இந்த ஹதீஸை எப்படியாவது நிராகரித்துவிட வேண்டும் என்பதுதான் இவர்களது நோக்கம் என்பது இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த ஸஹர் பாங்கை, இது போன்ற பொருந்தாத காரணங்களைக் கூறி புறக்கணிக்கின்றனர். மக்களிடம் வழக்கத்தில் இல்லை என்றால் உரிய முறையில் அறிவிப்புச் செய்து விட்டு அதை நடைமுறைப்படுத்த வேண்டும். இத்தனை மணிக்கு ஸஹர் பாங்கு சொல்லப்படும், இத்தனை மணிக்கு சுப்ஹ் பாங்கு சொல்லப்படும் என்பதை போஸ்டர்கள் மூலமோ, பிரசுரங்கள் மூலமோ அறிவிப்புச் செய்தால் எந்தக் குழப்பமும் ஏற்படாது.

இன்று பல ஊர்களில் தவ்ஹீது பள்ளிகளில் ஸஹர் பாங்கு சொல்லப்படுகின்றது. அந்த ஊர்களிலெல்லாம் எந்தக் குழப்பமும் ஏற்படவில்லை. குழப்பம் இவர்களுடைய கொள்கையில் தான் உள்ளது.

விரலசைத்தல், நெஞ்சின் மீது கை கட்டுதல், இரவுத் தொழுகை போன்றவற்றுக்குத் தெளிவான ஆதாரங்கள் இருந்த போதும், மக்களிடம் நடைமுறையில் இல்லை என்பதால் அதைக் குழப்பம் என்று குராஃபிகள் கூறினர். இப்போது அதே வழிமுறையைப் பயன்படுத்தி, இவர்களும் தாங்கள் செயல்படுத்தவில்லை என்பதற்காக, நபிவழியைக் குழப்பம் என்று கூறுகின்றார்கள் என்றால் இவர்கள் எந்த நிலைக்குச் சென்று விட்டார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இதன் மூலம் இவர்கள் ஹதீஸ்களைத் திருப்பவும், வளைக்கவும் முனைந்துள்ளார்கள். இதுதான் தெளிவான ஹதீஸ் நிராகரிப்பு. இவர்கள் தான் உண்மையிலேயே ஹதீஸ் மறுப்பாளர்கள்.

More Articles …