Sidebar

18
Thu, Jun
சமீபத்திய செய்திகள்

எளிமையான இஸ்லாமிய மார்கத்தை எங்களைபோன்ற பாமரர்கள் எப்படி ஆய்வு செய்து பின்பற்றமுடியும்?

விவாதத்தில் ஆபாசம் தேவையா

களியக்காவிளையில் நடைபெற்ற விவாதம் தொலைக் காட்சியில் ஒளிபரப்பானது. அதில் நீங்கள் விவாதம் செய்த சில தலைப்புகள் மிகவும் ஆபாசமாகவும் அருவருப்பாகவும் இருந்தது. அதைத் தவிர்த்து இருக்கலாமே?

பதில் :

களியக்காவிளையில் நடைபெற்ற விவாதம் சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் இடையில் நடைபெற்ற போராட்டமாகும்.

தர்ஹா, தரீக்கா, மவ்லிது, இறந்தவர்களிடம் உதவி தேடுதல், மத்ஹபுகள் இவை அனைத்தையும் சரி என்று வாதிடக் கூடிய ஒரு கூட்டத்துடன் நாம் விவாதம் செய்தோம். குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் இவை தவறானவை என்பதை நிரூபிக்க வேண்டியது நமது கடமையாகும்.

அவ்வாறு நிரூபிக்காவிட்டால் அவர்கள் சொல்லும் கருத்து தான் சரியானது என்று மக்கள் எண்ணி, வழிகேட்டில் வீழ்ந்து விடுவார்கள். அந்த அடிப்படையில் தான் மத்ஹபு சட்டங்களில் உள்ள அசிங்கங்களை, ஆபாசங்களை நாம் எடுத்துக் காட்டி அவை குர்ஆன், ஹதீசுக்கு மாற்றமானவை என்பதை நிரூபித்தோம்.

உமக்குக் கட்டளையிடப்பட்டதைத் தயவு தாட்சண்யமின்றி எடுத்து உரைப்பீராக! இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக!

திருக்குர்ஆன் 5:94

என்ற வசனத்தின் அடிப்படையில் உண்மையைப் போட்டு உடைத்தோம்.

மத்ஹபுகளில் உள்ள குப்பைகளை நாம் அந்தச் சபையில் போட்டு உடைக்காவிட்டால், அந்தச் சட்டங்கள் அனைத்தும் குர்ஆன், ஹதீசுக்கு உட்பட்டவை தான் என்ற நிலை ஏற்பட்டு விடும்.

இந்தச் சட்டத்தில் இப்படி உள்ளது; இது இந்த ஹதீஸுக்கு மாற்றமானது என்பதை நாம் விளக்கும் போது அவர்களுடைய சட்டத்தை எடுத்துக் காட்டித் தான் ஆக வேண்டும். இதைத் தவிர்த்து விட்டு அந்த விவாதத்தை எப்படி நடத்த முடியும்? அந்தக் குப்பைகளை இஸ்லாத்தின் அடிப்படை என்று நாமும் ஒப்புக் கொண்டு போக வேண்டிய நிலை தான் ஏற்படும். அல்லாஹ் பாதுகாப்பானாக!

மத்ஹபுகளில் உள்ள அசிங்கங்களை இஸ்லாத்தின் அடிப்படைகள் என்று வாதிடுபவர்களே வெட்கப்படாத போது, அவற்றைக் குப்பைகள் என்று கூறும் நாம் ஏன் வெட்கப்பட வேண்டும்?

حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ ابْنِ الْمُنْكَدِرِ سَمِعْتُ جَابِرًا رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَتْ الْيَهُودُ تَقُولُ إِذَا جَامَعَهَا مِنْ وَرَائِهَا جَاءَ الْوَلَدُ أَحْوَلَ فَنَزَلَتْ نِسَاؤُكُمْ حَرْثٌ لَكُمْ فَأْتُوا حَرْثَكُمْ أَنَّى شِئْتُمْ

ஒருவர் தம் மனைவியிடம் பின் பக்கத்தில் இருந்தவாறு இல்லறத்தில் ஈடுபட்டால் குழந்தை மாறு கண் கொண்டதாகப் பிறக்கும் என்று யூதர்கள் சொல்லி வந்தார்கள். எனவே உங்கள் மனைவியர் உங்களின் விளை நிலங்கள். ஆகவே உங்கள் விளை நிலங்களுக்கு நீங்கள் விரும்பியவாறு செல்லுங்கள்! என்ற (2:223வது) வசனம் இறங்கியது.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

நூல்: புகாரி 4528

இந்த ஹதீஸில் யூதர்களின் கருத்து தவறானது என்பதை அல்லாஹ் தனது திருமறையில் வசனம் இறக்கி மக்களுக்கு அறிவிக்கின்றான். இந்தச் செய்தி ஹதீஸ் நூற்களிலும் பதிவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது. இதுவெல்லாம் ஆபாசம் என்று கருதி இஸ்லாம் விட்டு விடவில்லை.

எத்தனையோ பெண் நபித்தோழியர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் மாதவிடாய், ஸ்கலிதம் போன்றவை குறித்து விளக்கம் கேட்டுள்ளனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அதற்கு விளக்கம் அளித்துள்ளனர். அந்தச் செய்திகளும் ஹதீஸ்களாகப் பாதுகாக்கப்பட்டுள்ளன.

மார்க்கச் சட்டத்தைத் தெரிந்து கொள்வதற்கே வெட்கப்படக் கூடாது எனும் போது, சத்தியத்தை நிலைநாட்டும் விவாதத்தில் இவற்றை எடுத்துக் கூறுவதற்கு நாம் தயங்க வேண்டிய அவசியமே இல்லை என்பதை அறியலாம்.

இருந்தாலும் எடுத்துச் சொல்லும் போது விரசமாக தெரியாத வகையில் இயன்றவரை கவனமாக இருக்க வேண்டும் என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம்.

15.08.2009. 10:57 AM

குரானின் கருத்துக்களை தர்க்கம் செய்ய கூடாது என்றால் விவாதம் செய்ய கூடாது என்று விளங்குகிறதே?

13/05/2020 ரமலான் மாத வாட்ஸ் அப் கேள்வி பதில்

இறை மறுப்பாளருடன் விவாதம் செய்வதில் பயன் என்ன?

ஹாஜா நஜ்முத்தீன்

பதில் :

சத்திய மார்க்கத்தை எடுத்துரைப்பதற்கு இறைவன் பல வழிமுறைகளை நமக்குக் காட்டித் தந்துள்ளான். அதில் ஒன்று தான் அழகிய முறையில் விவாதம் செய்வதாகும். இறைவன் தன்னுடைய திருமறையில் கூறுகிறான்

விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன்; அவன் நேர்வழி பெற்றோரையும் அறிந்தவன்.

திருக்குர்ஆன் 16:125

நபிமார்கள் காலத்தில் முஸ்லிம்கள் அனைவரும் நபிக்குக் கட்டுப்பட்டு ஒரு கருத்தில் தான் இருந்தார்கள்.  முஸ்லிமல்லாதவர்களுடன் தான் நபிமார்கள் விவாதம் செய்தார்கள். எந்த நபியும் முஸ்லிம்களிடம் விவாதம் செய்யவில்லை.

முஸ்லிமல்லாதவர்களுடன் தான் விவாதம் செய்வதே முதன்மையானது. அதற்குத் தான் நேரடியான ஆதாரங்கள் உள்ளன.

தனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்ததற்காக இப்ராஹீமிடம் அவரது இறைவன் குறித்து தர்க்கம் செய்தவனை நீர் அறியவில்லையா? என் இறைவன் உயிர் கொடுப்பவன்; மரணிக்கச் செய்பவன்; என்று இப்ராஹீம் கூறிய போது, நானும் உயிர் கொடுப்பேன்; மரணிக்கச் செய்வேன் என்று அவன் கூறினான். அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய்! என்று இப்ராஹீம் கேட்டார். உடனே (ஏக இறைவனை) மறுத்த அவன் வாயடைத்துப் போனான். அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.

திருக்குர்ஆன் 2:258

இவ்வேதத்தில் இப்ராஹீமைப் பற்றியும் நினைவூட்டுவீராக! அவர் மிக்க உண்மையாளராகவும், நபியாகவும் இருந்தார். என் தந்தையே! செவியுறாத, பார்க்காத, உமக்கு எந்தப் பயனும் அளிக்காததை ஏன் வணங்குகிறீர்? என்று அவர் தமது தந்தையிடம் கூறியதை நினைவூட்டுவீராக!

திருக்குர்ஆன் 19:41,42

இப்ராஹீமே! எங்கள் கடவுள்களை நீர் தான் இவ்வாறு செய்தீரா? என்று அவர்கள் கேட்டனர். அதற்கவர், இல்லை! அவற்றில் பெரிய சிலையே இதைச் செய்தது. அவை பேசக்கூடியவையாக இருந்தால் (உடைக்கப்பட்ட) அவற்றிடமே விசாரித்துக் கொள்ளுங்கள்! என்று அவர் கூறினார். உடனே விழிப்படைந்து நீங்கள் தாம் (இவற்றை வணங்கியதன் மூலம்) அநீதி இழைத்தீர்கள் என்று தமக்குள் பேசிக் கொண்டனர். பின்னர் தலைகீழாக அவர்கள் மாறி, இவை பேசாது என்பதை நீர் அறிவீரே! என்றனர். அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்தப் பயனும் அளிக்காதவற்றையும் உங்களுக்குத் தீங்கும் தராதவற்றையும் வணங்குகின்றீர்களா? என்று கேட்டார். அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவற்றுக்கும், உங்களுக்கும் கேவலமே! விளங்க மாட்டீர்களா? என்று கூறினார்.

திருக்குர்ஆன் 21:62-67

நூஹ் (அலை) அவர்கள் தம்முடைய சமுதாய மக்களிடம் அதிகமான அளவில் விவாதம் செய்துள்ளார்கள். நபி நூஹ் (அலை) அவர்களின் ஆணித்தரமான வாதங்களுக்கு அவர்களால் பதிலளிக்க இயலாத போது,

நூஹே! எங்களுடன் தர்க்கம் செய்து விட்டீர்! அதிகமாகவே தர்க்கம் செய்து விட்டீர்! உண்மையாளராக இருந்தால் நீர் எங்களுக்கு எச்சரிப்பதை எங்களிடம் கொண்டு வாரும்! என்று அவர்கள் கூறினர்.

திருக்குர்ஆன் 11:32

திருக்குர்ஆனில் பல வசனங்கள் இறைமறுப்பாளர்களுடன் விவாதம் செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த இறைமறுப்பாளர்கள் எழுப்பிய கேள்விகள் அனைத்திற்கும் அல்லாஹ் அறிவுப்பூர்வமாகவும், மறுப்புத் தெரிவிக்க முடியாத வகையில் ஆணித்தரமாகவும் பதிலளிக்கின்றான்.

இறை மறுப்பாளர்களுடன் விவாதம் செய்வது உறுதியான நம்பிக்கையின் வெளிப்பாடாகும். இஸ்லாத்தை உறுதியாக நம்பக்கூடியவர்களே அதற்காக விவாதம் செய்ய முன்வருவார்கள்.

இந்த விவாதங்களால் நம்முடன் விவாதம் செய்யக்கூடிய இறை மறுப்பாளர்கள் நேர்வழி பெறாவிட்டாலும் விவாதத்தைப் பார்க்கின்ற பலர் நேர்வழி அடையும் நிலை ஏற்படுகின்றது. இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு இந்த விவாதங்களின் மூலம் கொள்கை உறுதியும் கொள்கைத் தெளிவும் முன்பை விட அதிகமாகின்றது.

முஸ்லிமல்லாதவர்களுடன் விவாதம் செய்யலாமா என்ற கேள்விக்கே இடமில்லை.

எனவே தான் நாம் இறை மறுப்பாளர்களுடன் விவாதம் நடத்தினோம். இறைவன் அருளால் அந்த விவாதத்தில் இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்பதும் குர்ஆன் இறைவேதம் என்பதும் சந்தேகத்திற்கிடமின்றி தெளிவாகும் விதத்தில் அல்லாஹ் நமக்கு வெற்றியளித்தான். புகழனைத்தும் அல்லாஹ்விற்கே.

அந்த விவாதத்தை பார்க்க

நாத்திகர்களுடன் விவாதம்

 

08.03.2011. 10:19 AM

More Articles …