Sidebar

18
Thu, Jun
சமீபத்திய செய்திகள்

வீடுகட்டுவதற்கு செலவிடுவதால் இறைவனிடத்தில் எந்த நன்மையையும் இல்லை என்று இலங்கையை சேர்ந்த முஜாஹித் என்பவர் சொல்வது சரியா


இதை டவுன்லோடு செய்ய
onlinepj

பட்டாசுக்களால் பலியாகும் உயிர்கள்

தடுக்க வழி என்ன?

சிவகாசி பட்டாசு வெடிவிபத்தில் ஏராளமானோர் பலியாகி பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இது போன்று எதிர் காலத்தில் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

முஹம்மது அப்துல்காதர், விருதுநகர்

அரசாங்கத்தை நடத்தக்கூடியவர்களுக்கு கொஞ்சம் மூளை இருந்து, அந்த மூளையைப் பயன்படுத்தி சட்டங்களை இயற்றி இருந்தால், இதுபோன்ற பேரழிவுகளைத் தடுத்திருக்க முடியும்.

வெடி மருந்துகள் மிகவும் ஆபத்தானவை என்பதை அனைவரும் அறிந்துள்ளோம். மிக அவசியமான தேவைகளுக்காகவே தவிர, வேறு எதற்காகவும் வெடி மருந்துகளைப் பயன்படுத்தக்கூடாது என்றுதான் அறிவுடைய மக்கள் முடிவுக்கு வருவார்கள்.

பாறைகளை உடைப்பதன் மூலம்தான் சாலை வசதிகளைப் பெற முடியும் என்பதால், இதற்காக வெடிமருந்துகளைப் பயன்படுத்துவதை நம்முடைய அறிவு ஏற்றுக் கொள்கிறது.

உணவைச் சமைத்துச் சாப்பிட நெருப்பு அவசியம். அதை உருவாக்கிட தீப்பெட்டி அவசியம் என்பதால் இதற்காக வெடிமருந்துகள் பயன்படுத்துவதை நம்முடைய அறிவு ஏற்றுக் கொள்கிறது.

படிப்படியாகக் குறைந்து வரும் தீப்பெட்டிப் பயன்பாடு காலப்போக்கில் அறவே இல்லாமல் போய்விடும். அதுபோல் ஜல்லிகள் மூலம் சாலைகள் போடுவதற்குப் பதிலாக பிளாஸ்டிக் சாலைகள் அமைக்கும் தொழில் நுட்பம் அதிகரிக்கும்போது பாறைகளை உடைக்கும் அவசியம் இல்லாமல் போய்விடும். அப்போது மக்களுக்கு வெடி மருந்துகளுடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் போய்விடும்.

அதுவரை மேற்கண்ட இரண்டு காரியங்களுக்கு மட்டுமே வெடிமருந்துகள் குறைந்த அளவுக்கு தேவைப்படும். இவற்றைத் தவிர மற்ற அனைத்துப் பயன்பாடுகளில் இருந்தும் வெடி மருந்துகளைத் தள்ளிவைப்பதுதான் அறிவுப்பூர்வமானது.

ஆனால் மக்கள் சர்வசாதாரணமாக வெடி மருந்துகளுடன் விளையாடும் நிலைக்கு பட்டாசு உபயோகமே காரணமாகும். தீபாவளி போன்ற பண்டிகைகளுடன் தொடர்புபடுத்தி இதற்கு பட்டாசு வியாபாரிகள் மதச் சாயம் பூசிவிட்டதே இந்த பேராபத்துக்குக் காரணம்.

உண்மையில் இதற்கும் இந்து மதத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை. பட்டாசுகள் பிற்காலத்தில் வந்த கண்டுபிடிப்பாகும்.

முந்தைய காலத்தில் தீபாவளி கொண்டாடிய இந்துக்கள் பட்டாசுகளை அறிந்திருக்கவில்லை. எனவே மதத்துக்கு வெளியே நின்று சிந்திப்பதுதான் சரியானதாகும். இப்படி சிந்தித்தால் பட்டாசுகள் வெடிப்பதால் கீழ்க்கண்ட தீமைகள் ஏற்படுவதை உணரலாம்.

 பொருளாதாரத்தைத் பயனற்ற வழியில் விரயமாக்குவது

 பட்டாசு வெடித்து உயிர்கள் பலியாவது

 பட்டாசுகள் மூலம் குடிசைகள் எரிந்து சாம்பலாவது

 பட்டாசு வெடிப்பவர்களுக்கும் அருகிலிருப்பவர்களுக்கும் படுகாயங்களை ஏற்படுத்துவது

மனிதனின் காதுகள் தாங்கிக் கொள்ள முடியாத அதிக சப்தம் காரணமாக கேட்கும் திறனில் ஏற்படும் பாதிப்புகள்

இதய நோயாளிகளும், பச்சிளம் குழந்தைகளும், சிந்திப்பவர்களும், படிப்பவர்களும் இந்த சப்தம் காரணமாக கடுமையான பாதிப்புகளுக்கும் மன உளைச்சல்களுக்கும் ஆளாகுவது

 பட்டாசுகள் மூலமாக வெளியேறும் நச்சுப்புகை மூலம் காற்று மாசு படுகிறது

 அதை சுவாசிப்பதன் மூலம் மனிதர்களும், இன்னபிற உயிரினங்களும் கடும் பாதிப்புக்குகளைச் சந்திக்கின்றன.நோயாளிகளும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

 பட்டாசு வெடிப்பதன் மூலம் குப்பைகளின் அளவும் அதிகரித்து சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது.

 நச்சுப் பொருள் கலந்த குப்பைகளால் மண் வளமும் பாதிக்கப்படுகிறது.

இவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்துவதுடன் இதனால் எந்த நன்மையாவது உள்ளதா என்றால் அதுவும் இல்லை.

நவீன சாதனங்கள் பயன்படுத்துவதன் காரணமாக காற்று மாசு படுவதாகவும், பூமி வெப்பமயமாகி வருவதாகவும், ஓசோன் படலத்தில் ஓட்டை ஏற்பட்டு புற ஊதாக்கதிர்கள் பூமிக்கு வந்து மனிதர்களுக்கு கேடுகள் ஏற்படுத்துவதாகவும் கூறி அந்த நவீன சாதனங்களின் பயன்பாட்டைத் தடுக்க ஐக்கிய நாடுகள் சபை கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

மேற்கண்ட சாதனங்களால் சில கேடுகள் ஏற்பட்டாலும் அது பட்டாசினால் ஏற்படும் கேடுகளை விட பலப்பல மடங்கு குறைவானதுதான். அத்துடன் இந்த சாதனங்கள் மூலம் விரைவாகவும் பணிகள் முடிகின்றன. சொகுசான இன்பங்களை அனுபவிக்கிறோம். இதற்காக மேற்கண்ட தீமைகளை நாம் சகித்துக் கொள்வதில் அர்த்தம் உள்ளது. ஆனால் இதைவிட பெரும்கேடு ஏற்படுத்தும் பட்டாசுகளால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை.

அறிவுள்ள மக்களுக்குத் தெரியும் இந்த விபரம் ஆட்சியாளர்களுக்கு ஏன் தெரியவில்லை.

அவசியமற்ற கேடுகள் விளைவிக்கின்ற பட்டாசுகளுக்கு அறவே அனுமதி இல்லை என்று முடிவு செய்தால், இதுபோன்ற அழிவுகளுக்கு இடமில்லை.

பட்டாசைக் காரணம்காட்டி வெடி மருந்துகள் பரவலாகக் கிடைப்பதால்தான், வெடிகுண்டு தயாரிக்கும் பயங்கரவாதிகளுக்கும் வசதியாகப் போய்விடுகிறது.

இதைப்பற்றி சிந்திக்காமல் நீதி விசாரணை நடத்துவதும் நஷ்ட ஈடு கொடுப்பதும்தான் அரசின் நடவடிக்கையாக இருக்கும்பட்சத்தில் இதுபோன்ற பேரழிவுகள் தொடர்கதையாகிப் போய்விடும்.

11.09.2012. 2:07 AM

ரொட்டியைக் குப்பைத் தொட்டியில் போடலாமா?

சவூதியில் மக்கள் ரொட்டித் துண்டை குப்பைத் தொட்டியில் போடாமல் அதன் பக்கத்தில் போடுகின்றனர். இதற்கு குர்ஆன் ஹதீஸ் வழியில் ஆதாரம் இருக்கின்றதா?

செய்யது மஸ்ஊத்.

பதில் :

வீண் விரயம் செய்வது இஸ்லாத்தில் வன்மையாகக் கண்டிக்கப்பட்டுள்ளது.

صحيح البخاري

1477 – حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عُلَيَّةَ، حَدَّثَنَا خَالِدٌ الحَذَّاءُ، عَنِ ابْنِ أَشْوَعَ، عَنِ الشَّعْبِيِّ، حَدَّثَنِي كَاتِبُ المُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ: كَتَبَ مُعَاوِيَةُ إِلَى المُغِيرَةِ بْنِ شُعْبَةَ: أَنِ اكْتُبْ إِلَيَّ بِشَيْءٍ سَمِعْتَهُ مِنَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَكَتَبَ إِلَيْهِ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " إِنَّ اللَّهَ كَرِهَ لَكُمْ ثَلاَثًا: قِيلَ وَقَالَ، وَإِضَاعَةَ المَالِ، وَكَثْرَةَ السُّؤَالِ "

பொருள்களை வீணாக்குவதை இறைவன் வெறுக்கின்றான் என்பது நபிமொழி.

நூல் : புகாரி 1477

உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரயம் செய்யாதீர்கள்! வீண் விரயம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான்.

திருக்குா்ஆன் 7:31

உறவினருக்கும், ஏழைக்கும், நாடோடிக்கும் அவரவரின் உரிமையை வழங்குவீராக! ஒரேயடியாக வீண் விரயம் செய்து விடாதீர்! விரயம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.

திருக்குா்ஆன் 17:26,27

வீண் விரயம் செய்வது ஷைத்தானுடைய செயல் என்றும், ஆதலால் வீண் விரையம் செய்யக்கூடாது என்றும் இறைவன் மேற்கண்ட வசனங்களில் தெரிவிக்கின்றான்.

உணவுப் பொருட்களில் நமக்கு தேவையான அளவை அறிந்து மீதம் ஏற்படாதவாறு நமது சாப்பாட்டு முறையை அமைத்துக் கொள்வது முஸ்லிம்களின் மீது அவசியமாகும். மீதம் வந்தால் கூட அதை வீண் விரயம் செய்யாது பிறருக்கு வழங்கி விட வேண்டும்.

நம்மால் இயன்ற அளவுக்கு திட்டமிட்டு உணவைத் தயாரித்தாலும் சில நேரம் உணவுகள் மீதமாகிவிடும். அதைப் பெற்றுக் கொள்வோரும் கிடைக்க மாட்டார்கள். வீட்டுக்குள் வைத்திருந்தால் அந்த உணவுப் பொருள் கெட்டுப்போய் விடும். வீட்டில் இருப்பதால் ஆரோக்கியக் குறைவை ஏற்படுத்தி விடும். இது போன்ற சூழ்நிலையில் குப்பைத் தொட்டியில் போடுவது வீண்விரயத்தில் சேராது.

பணத் திமிரைக் காட்டுவதற்காக எப்போது பார்த்தாலும் மீதமாகும் என்பதைத் தெரிந்து கொண்டே கூடுதலாக சமைத்து குப்பைத் தொட்டியில் போட்டால் அது வீண் விரயம் செய்த குற்றத்தில் சேரும்.

அவ்வாறு குப்பைத் தொட்டியில் போடும் போது ஒவ்வொரு நாட்டிலும் பலவிதமான குப்பைத் தொட்டிகளை அமைத்து இருப்பார்கள்.

சீக்கிரம் மக்கிப் போகும் குப்பைகளுக்கு தனி குப்பைத் தொட்டிகளும், மக்கிப்போவதற்கு அதிக காலம் பிடிக்கக் கூடிய பொருட்களுக்கு வேறு குப்பைத் தொட்டிகளும் வைப்பார்கள். சீக்கிரம் மக்கிப் போகக் கூடிய குப்பைகள் உரமாக ஆகலாம். அல்லது மண்ணோடு மண்ணாக ஆகிவிடலாம் என்பதற்காக அதற்கேற்ப பயன்படுத்துவார்கள்.

பிளாஸ்டிக் போன்ற மக்கிப் போகாத பொருட்களை மண்ணில் போட்டால் நிலத்தடி நீரைத் தடுக்கும் என்பதால் அதை எரித்து விடுவார்கள்.

இது போன்று பல வகை குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டு இருந்தால் அதை நாம் பேண வேண்டும்.

ரொட்டியைத் தனியாக ஒரு குப்பைத் தொட்டியில் சேர்த்து கால்நடைகளுக்கு உணவாக அளிக்கப்படலாம். இன்னும் ஏதோ பயன்பாட்டுக்காக அவ்வாறு அரசாங்கம் ஏற்பாடு செய்திருக்கலாம். அப்படி இருந்தால் அதைப் பேணிக்கொள்வது வரவேற்கத் தக்கது தான்.

அவ்வாறு இல்லாமல் வீணாகிவிட்ட உணவை, உணவு அல்லாத மற்ற பொருட்களுடன் போட்டால் அது உணவுக்குச் செய்யும் அவமரியாதை என்று கருதினால் அது மூட நம்பிக்கையாகும்.

உண்பதற்குத் தகுதியற்ற உணவுப் பொருட்கள் உணவுப் பட்டியலில் வராது. மற்ற கழிவுப் பொருட்களும், வீணாகிப் போன உணவுப் பொருட்களும் சமமானவை தான். அவை கழிவுப் பொருட்கள் தான். அவற்றை மற்ற குப்பைகளுடன் போடுவது தவறில்லை. அது உணவுப்பொருளை அவமரியாதை செய்த குற்றத்தில் வராது.

15.05.2013. 2:09 AM

வீட்டில் எத்தனை மாடி வரை கட்டலாம்?

அப்துல் அலீம்

பதில்:

இதற்கு எந்த அளவையும் இஸ்லாம் நிர்ணயிக்கவில்லை. காலத்துக்கும், இடத்துக்கும் ஏற்ப மாற்றத்துக்கு உள்ளாகும் விஷயங்களில் இஸ்லாம் பொதுவான எல்லையை நிர்ணயிப்பது கிடையாது. எத்தனை மாடிகள் கட்டலாம் என்பதற்கு எக்காலத்துக்கும் பொருந்தக் கூடிய விதிமுறையை உருவாக்க முடியாது.

உறுதியான கட்டுமான பொருட்கள் இல்லாத காலத்தில் ஒரு மாடிக்கு மேல் கட்ட முடியாது. இன்று 200 மாடிகள் கொண்ட கட்டடங்களைக் கட்டும் அளவுக்கு உறுதியான கட்டுமான பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது போன்ற முன்னேற்றங்களைப் பொருத்து மாடியின் அளவு வித்தியாசப்படும்.

அடிக்கடி நிலச்சரிவும், சுனாமியும் ஏற்படும் ஜப்பானின் பல பகுதிகளில் ஒரு மாடி கூட கட்ட முடியாது. கட்டினால் அழிவு ஏற்படும் போது கடும் பாதிப்பு ஏற்படும். இதைப் பொருத்தும் மாறுபடும்.

மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளில் அதிகமான மாடிகள் கட்டினால் காற்றோட்டம் பாதிக்கப்படும். இடைவெளி விட்டு மக்கள் வசிக்கும் இடங்களில் எவ்வளவு மாடிகள் கட்டினாலும் அதனால் பாதிப்பு ஏற்படாது. இதைப்பொருத்தும் மாறுதல் ஏற்படும்.

நிலத்தின் தன்மையைப் பொருத்தும் இது நிர்ணயிக்கப்படும்.

இப்படி பல காரணங்களால் ஊருக்கு ஊர் காலத்துக்கு காலம் இது மாறிக் கொண்டே வரும் என்பதால் எத்தனை மாடி கட்டலாம் என்று இஸ்லாம் நிர்ணயித்து சொல்லவில்லை.

மாடி கட்டுவதற்கு பொதுவான அனுமதி உள்ளதால் நமது வசதிக்கு ஏற்ப நாட்டின் சட்டதிட்டங்களை அனுசரித்து மாடிகளைக் கட்டிக் கொள்ளலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் மரத்தால் ஆன மாடியைக் கட்டி அதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்துள்ளனர்.

صحيح البخاري

378 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ: أَخْبَرَنَا حُمَيْدٌ الطَّوِيلُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَقَطَ عَنْ فَرَسِهِ فَجُحِشَتْ سَاقُهُ – أَوْ كَتِفُهُ – وَآلَى مِنْ نِسَائِهِ شَهْرًا، فَجَلَسَ فِي مَشْرُبَةٍ لَهُ دَرَجَتُهَا مِنْ جُذُوعٍ، فَأَتَاهُ أَصْحَابُهُ يَعُودُونَهُ، فَصَلَّى بِهِمْ جَالِسًا وَهُمْ قِيَامٌ، فَلَمَّا سَلَّمَ قَالَ: «إِنَّمَا جُعِلَ الإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ، فَإِذَا كَبَّرَ فَكَبِّرُوا، وَإِذَا رَكَعَ فَارْكَعُوا، وَإِذَا سَجَدَ فَاسْجُدُوا، وَإِنْ صَلَّى قَائِمًا فَصَلُّوا قِيَامًا» وَنَزَلَ لِتِسْعٍ وَعِشْرِينَ، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّكَ آلَيْتَ شَهْرًا، فَقَالَ: «إِنَّ الشَّهْرَ تِسْعٌ وَعِشْرُونَ»

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது குதிரையிலிருந்து கீழே விழுந்து விட்டார்கள். இதனால் அவர்களது கணைக் கால் அல்லது தோள்பட்டை கிழிந்து விட்டது. மேலும் (இந்தக் காலகட்டத்தில்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் மனைவிமார்களை ஒரு மாத காலத்திற்கு நெருங்கமாட்டேன் என்று சத்தியம் செய்திருந்தார்கள். அப்போது அவர்கள் தமக்குரிய மாடி அறையொன்றில் ஏறி அமர்ந்தார்கள். அதனுடைய ஏணி பேரீச்சங்கட்டையினால் அமைந்திருந்தது. ஆகவே அவர்களுடைய தோழர்கள் அவர்களிடம் உடல் நலம் விசாரிக்க வந்த போது (அந்த அறைக்குள்ளேயே) அவர்களுக்கு அமர்ந்தவாறே தொழுவித்தார்கள்; நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்து (தொழுகையை) முடித்த போது, பின்பற்றப்படுவதற்காகவே இமாம் ஏற்படுத்தப்பட்டுள்ளார். எனவே, அவர் தக்பீர் சொன்னால் நீங்களும் தக்பீர் சொல்லுங்கள்; அவர் ருகூஉ செய்தால் நீங்களும் ருகூஉ செய்யுங்கள்; அவர் ஸஜ்தாச் செய்தால் நீங்களும் ஸஜ்தாச் செய்யுங்கள்; அவர் நின்றவராகத் தொழுதால் நீங்களும் நின்றவராகத் தொழுங்கள் என்று சொன்னார்கள் என்று கூறினார்கள்.

(அந்த அறையிலிருந்து) அவர்கள் இருபத்தொன்பதாம் நாள் இறங்கி வந்தார்கள். அப்போது மக்கள், ஒரு மாத காலம் மனைவிமார்களை நெருங்க மாட்டேன் என தாங்கள் சத்தியம் செய்திருந்தீர்களே அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இந்த மாதத்திற்கு இருபத்தொன்பது நாட்கள்தாம் என்று கூறினார்கள்.

நூல் : புகாரி 378

13.01.2012. 21:55 PM

Page 4 of 4