Sidebar

17
Wed, Jun
சமீபத்திய செய்திகள்

ஃப்ரீகால் முறையில் பேசலாமா?

பெரும்பாலான வெளிநாடுகளில் ஃபிரீ கால் (FREE CALL) என்றொரு சாப்ட்வேரைப் பயன்படுத்தி போன் செய்கின்றார்களே இதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா? உள்ளதென்றால் அந்த நாடு அதைத் தடை செய்தாலும் பயன்படுத்தலாமா?

கடையநல்லூர் மசூது

பதில்:

ஃப்ரீ கால் என்பது இணையதளத்தைப் பயன்படுத்தி ஒருவர் இன்னொருவரிடம் இலவசமாகப் பேசிக் கொள்வதாகும். இவ்வாறு பேசுவதால் நாம் யாருக்கும் தீங்கு செய்யவில்லை. யாருடைய பொருளையும் முறைகேடாகப் பயன்படுத்தவுமில்லை.

இவ்வாறு பேசும் போது தொலைத் தொடர்பு நிறுவனங்களின் வருமானம் குறையும் என்பதால் அரசாங்கம் இதைத் தடை செய்கின்றது. இந்த நிறுவனங்கள் நன்கு சம்பாதிப்பதற்காக மக்களுக்குத் தடைகளை ஏற்படுத்துவது அநியாயமாகும்.

நவீன கண்டுபிடிப்புகளாலும், விஞ்ஞான வளர்ச்சியினாலும் எத்தனையோ குடிசைத் தொழில்கள் நலிவடைந்து விட்டன. இந்த குடிசைத் தொழிலாளர்களுக்காக நவீன கண்டுபிடிப்புகளை எந்த நாடும் தடை செய்வதில்லை. இது போன்று மக்களுக்கு நன்மை தருகின்ற எந்த ஒரு அம்சத்தையும் தடை செய்வது கூடாது.

மக்களைப் பாதிக்கும் அநியாயமான சட்டங்களை ஒரு நாடு இயற்றுமானால் அதற்கு அடிபணிவது மார்க்கக் கடமை அல்ல. ஆனால் இது போன்ற தடைகளை மீறும் போது அரசாங்கத்தினால் ஏற்படும் தீய விளைவுகளை நாம் தாங்கிக் கொள்ள இயலுமா என்பதை நாம் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

30.08.2011. 12:28 PM

Share this:

பணம் கொடுத்து வேலை தேடுவது குற்றமா?

நான் வேலையில்லாமல் இருக்கிறேன். வேலை வாங்கித் தரும் நிறுவனங்களில் குறிப்பிட்ட தொகையைக் கொடுத்து வேலை வாங்கினால் அது குற்றமா?

பதில்:

அதிகாரிகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும், நீதிபதிகளுக்கும் அளிக்கப்படும் பொருட்கள் பல வகைகளில் உள்ளன.

பிறர் பொருளை நம்முடையதாக ஆக்கிக் கொள்வதற்காக ஒரு பொருளை அதிகாரிகளுக்கோ, நீதிபதிகளுக்கோ கொடுத்தால் அது தடுக்கப்பட்டதாகும். இப்படிக் கொடுப்பது தான் லஞ்சம் எனப்படும். இவ்வாறு கொடுப்பதும் வாங்குவதும் குற்றமாகும்.

உங்களுக்கிடையே (ஒருவருக்கொருவர்) உங்கள் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்! தெரிந்து கொண்டே மக்களின் பொருட்களில் ஒரு பகுதியைப் பாவமான முறையில் சாப்பிடுவதற்காக அதிகாரிகளிடம் உங்கள் பொருட்களைக் கொண்டு செல்லாதீர்கள்!

திருக்குர்ஆன் 2:188

அது போல் வரிசைப்படியும், முன்னுரிமை அடிப்படையிலும் கிடைக்க வேண்டிய உரிமைகளை முன்னரே பெற்றுக் கொள்வதற்காக கொடுக்கப்படும் தொகையும் லஞ்சம் தான். நமக்கு முன்னால் காத்திருப்பவனைப் பின்னால் தள்ளி விட்டு நாம் முன்னால் அடைந்து கொள்வது முறைகேடாகும்.

மற்றவனின் உரிமை பறிக்கப்படுவதற்காக கொடுக்கப்படுவதால் இதுவும் லஞ்சம் தான்.

அது போல் தகுதியின் அடிப்படையில் பங்கிடப்படும் உரிமைகளில் குறைந்த தகுதி உள்ளவர் பணத்தைக் கொடுத்து அதிகத் தகுதி உள்ளவரைப் பின்னால் தள்ளி விட்டு அந்த இடத்தை அடைந்தால் அதுவும் குற்றமாகும். நம்மை விட அதிகத் தகுதி உள்ளவன் காத்திருக்கும் போது அவனைப் பின்னால் தள்ளி விடுவதற்காகக் கொடுக்கப்படும் பணமும் லஞ்சம் தான். இதை வாங்குவதும், கொடுப்பதும் குற்றமாகும்.

மற்றவர்களின் உரிமையைப் பாதிக்காத வகையில் நம்முடைய உரிமையைப் பெறுவதற்காக பல நேரங்களில் பணம் கொடுத்தாக வேண்டியுள்ளது.

மின் இணைப்பு பெற வேண்டும். வீடு கட்டுவதற்கு அனுமதி பெற வேண்டும். அல்லது இது போல் நமக்குச் சேர வேண்டிய உரிமையைப் பெற வேண்டும்.

இது போன்ற காரியங்களைச் செய்து தருவதற்காக பணம் கொடுக்கும் நிலை ஏற்படுகிறது. இப்படி கொடுக்கும் பணத்தின் மூலம் நாம் யாருடைய உரிமையையும் பறிப்பதில்லை. நம்முடைய உரிமையைத் தான் அடைந்து கொள்கிறோம்.

இதைச் செய்வதற்காக அதிகாரிகளுக்கு ஊதியம் அளிக்கப்படுவதால் மக்களிடம் எதையும் பெற்றுக் கொள்ளாமல் தான் செய்து கொடுக்க வேண்டும். அவர்களின் கடமையைச் செய்வதற்காக பணம் வாங்கினால் அது மார்க்கத்தில் குற்றமாகும். கடமையைச் செய்வதற்காக ஒரு முஸ்லிம் லஞ்சம் வாங்க அனுமதி இல்லை.

ஆனால் பணம் கொடுக்காமல் காரியம் ஆகாது என்ற அளவுக்கு கேடு கெட்டவர்கள் ஆட்சி செய்தால் அப்போது நாம் நம்முடைய உரிமையை அடைவதற்காக பணம் கொடுப்பது நிர்பந்தம் என்ற அடிப்படையில் மன்னிக்கப்படும்.

பணம் கொடுக்காவிட்டால் ரேஷன் கார்டு கிடைக்காது என்றால் ரேஷன் கார்டு அவசியம் என்பதால் இது நிர்பந்த நிலையாகி விடுகிறது. இல்லாவிட்டால் நம்முடைய அடிப்படைத் தேவைகளை அடைய முடியாமல் போய் விடும்.

கடமையைச் செய்ய லஞ்சம் கேட்பவனைக் கையும் களவுமாக பிடித்துக் கொடுக்க இயலும் என்றால் அதைச் செய்ய வேண்டும். அவ்வாறு இயலாதவர்கள் குற்றம் பிடிக்கப் பட மாட்டார்கள்.

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக சப்தமிடப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான். வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன் 2:173

மேலும் பார்க்க: திருக்குர் 6:119, 6:145, 16:115

முன்னுரிமை அடிப்படையில் அரசு வழங்கும் வேலை வாய்ப்பு அல்லாமல் தனியார்களுக்கு வேலைக்கு ஆட்களைச் சேர்த்தல் ஆட்களுக்கு வேலை கொடுத்தல் போன்றதை ஒருவர் செய்தால் அது ஒரு உழைப்பாகும். அந்த உழைப்புக்கு கூலி பெறுவதும், கொடுப்பதும் குற்றமாகாது.

நீங்கள் குறிப்பிட்ட பிரச்சனையில் மார்க்கத்திற்கு மாற்றமான அம்சம் எதுவும் இல்லை. எந்த வேலைக்கு எப்படிச் செல்லலாம் என்பது உங்களுத் தெரியாது. இவற்றை அறிந்தவர்களை நீங்கள் அனுகும்போது அவர்களுடைய உதவியால் உங்களுக்கு வேலை கிடைக்கின்றது. இதற்காக நீங்கள் அவர்களுக்குப் பணம் கொடுக்கிறீர்கள்.

இவ்வாறு நீங்கள் செய்யும் போது யாருடைய உரிமையையும் நீங்கள் பறிக்கவில்லை. நியாயத்திற்கு எதிராக நீங்கள் பணம் கொடுக்கவுமில்லை. எனவே இது தவறல்ல.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்த போது தனக்கு வழிகாட்டியாக ஒருவரை ஏற்படுத்தி அவருக்கு கூலி கொடுத்தார்கள்.

صحيح البخاري

2263 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامٌ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: " وَاسْتَأْجَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، وَأَبُو بَكْرٍ رَجُلًا مِنْ بَنِي الدِّيلِ، ثُمَّ مِنْ بَنِي عَبْدِ بْنِ عَدِيٍّ هَادِيًا خِرِّيتًا - الخِرِّيتُ: المَاهِرُ بِالهِدَايَةِ - قَدْ غَمَسَ يَمِينَ حِلْفٍ فِي آلِ العَاصِ بْنِ وَائِلٍ، وَهُوَ عَلَى دِينِ كُفَّارِ قُرَيْشٍ، فَأَمِنَاهُ فَدَفَعَا إِلَيْهِ رَاحِلَتَيْهِمَا، وَوَاعَدَاهُ غَارَ ثَوْرٍ بَعْدَ ثَلاَثِ لَيَالٍ، فَأَتَاهُمَا بِرَاحِلَتَيْهِمَا صَبِيحَةَ لَيَالٍ ثَلاَثٍ، فَارْتَحَلاَ وَانْطَلَقَ مَعَهُمَا عَامِرُ بْنُ فُهَيْرَةَ، وَالدَّلِيلُ الدِّيلِيُّ، فَأَخَذَ بِهِمْ أَسْفَلَ مَكَّةَ وَهُوَ طَرِيقُ السَّاحِلِ "

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் :

(மக்காவைத் துறந்து, ஹிஜ்ரத் செய்து மதீனாவுக்குச் சென்றபோது) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அபூபக்ர் (ரலி) அவர்களும் பனூ அப்து பின் அதீ, பனூதீல் குலத்தைச் சேர்ந்த ஒருவரை (வழிகாட்டியாகக்) கூலிக்கு அமர்த்தினார்கள்.  அவர் தேர்ந்த வழிகாட்டியாக இருந்தார். அம்மனிதர் ஆஸ் பின் வாயிலிலின் குடும்பத்தாரிடம் உடன்படிக்கை செய்திருந்தார்; மேலும், அவர், குறைஷிக்  காஃபிர்களின் மார்க்கத்தில் இருந்தார்.

நூல் : புகாரி 2263

வட்டிப்பணத்தில் நடக்கும் நிறுவனத்தில் வேலை செய்யலாமா?

கேள்வி : என்னுடன் பணிபுரிந்த முஸ்லிமல்லாத நண்பர் ஒருவர் விளம்பரப் பொருட்கள் தயார் செய்யும் ஒரு புதிய நிறுவனம் ஒன்றைத்  தொடங்க உள்ளார். அதில் பாதி சொந்தப் பணமும், பாதித் தொகை வங்கியில் வட்டிக்கு வாங்கியும் முதலீடு செய்ய உள்ளார். அதில் தயாரிப்பு மேற்பார்வையாளராகச் சேர என்னை அழைக்கின்றார். எனக்கு 30% வரை லாபத்தில் பங்கு தருவதாகவும் சொல்கிறார். இதில் என்னுடைய முதலீடு எதுவும் இல்லை. இதைப் பற்றி மார்க்கம் என்ன சொல்கிறது? இது ஹலாலா, ஹரமா?

பதில்:

பதில் : கிடைக்கும் லாபத்தில் 30 சதவீதம் நீங்கள் பங்கு வாங்குவதை சம்பளம் என்று கூற முடியாது. ஏனென்றால் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் போது உங்களுக்குப் பணம் கூடுதலாகக் கிடைக்கும். நஷ்டம் ஏற்படும் போது உங்களுக்கும் நஷ்டம் ஏற்படும். இது போன்ற பிரச்சனை கூட்டு சேர்ந்து வியாபாரம் செய்பவர்களுக்கு ஏற்படும்.

எனவே நீங்கள் உங்களுடைய நண்பருடன் கூட்டு சேர்ந்து வியாபாரம் செய்கிறீர்கள். உங்கள் நண்பர் முதலீடு செய்துள்ளார். நீங்கள் உங்களுடைய உழைப்பைக் கொடுக்கிறீர்கள்.

ஒரு வியாபாரத்தில் கூட்டுச் சேருபர்கள் எந்த வியாபாரத்தை நடத்தப் போவதாக முடிவெடுக்கப்பட்டிருக்கின்றதோ அந்த வியாபாரம் மார்க்கத்தில் ஹலாலா? அல்லது ஹராமா? என்று பார்க்க வேண்டும். எந்த வியாபாரத்தைத் தனியாக நடத்துவதை மார்க்கம் தடை செய்கின்றதோ அதைக் கூட்டு சேர்ந்து நடத்தினாலும் தவறு தான். எந்த வியாபாரத்தைத் தனியாக நடத்த அனுமதியுள்ளதோ அதைக் கூட்டாக சேர்ந்து நடத்துவதற்கும் அனுமதியுள்ளது. 

உதாரணமாக வட்டிக் கடை, மதுக்கடை ஆகியவற்றை நடத்த கூட்டு சேருவது கூடாது. அதே நேரத்தில் மளிகைக் கடை நடத்துவதற்குக் கூட்டுச் சேரலாம். உங்கள் நண்பர் வியாபாரப் பொருட்களைத் தயார் செய்யும் தொழிலை நடத்தப் போவதாக நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். இத்தொழிலைச் செய்யும் போது மார்க்க வரம்புகள் மீறப்படாதென்றால் அத்தொழிலில் நீங்கள் (ஒர்க்கிங்) உழைப்பு பார்ட்னராக இருந்து உங்கள் நண்பர் உங்களுக்குத் தரும் 30 சதவீதப் பங்கை வாங்குவது தவறில்லை.

உங்கள் நண்பர் வட்டிக்கு வாங்கி முதலீடு செய்திருப்பதால் அந்த வியாபாரத்தில் கிடைக்கும் பங்கு ஹராம் ஆகாது.

கடன் கொடுத்து வட்டி வாங்குவதற்கும்,  வட்டிக்குக் கடன் வாங்குவதற்கும் வித்தியாசம் இருக்கின்றது. உங்கள் நண்பர் பிறருக்குக் கடன் கொடுத்து அதற்காக அவர் வட்டி வாங்கினால் அந்த வட்டிப் பணம் தான் அவருக்கு ஹராமாகும்.

பிறரிடம் கடன் வாங்கி, வாங்கிய பணத்துக்காக வட்டி கட்டும் போது இதனால் கடன் வாங்கப்பட்ட பணம் ஹராமாகி விடாது. மாறாக வட்டிக்குத் துணை நின்றார் என்ற குற்றம் மட்டுமே ஏற்படும்.

அந்த வகையில் உங்கள் நண்பர் குற்றவாளியாகிறார்.

அவரும், நீங்களும் சேர்ந்து வங்கியில் கூட்டாகக் கடன் வாங்கினால் அந்தப் பாவத்தில் உங்களுக்கும் பங்கு உண்டு. அவர் மட்டும் தனிப்பட்ட முறையில் வட்டிக்கு வாங்கி அந்தக் கடனில் உங்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லாமல் ஒர்க்கிங் பார்ட்னராக நீங்கள் இருந்தால் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை.

உங்களுக்கும், உங்கள் நண்பருக்கும் இடையேயுள்ள ஒப்பந்தம் மார்க்க வரம்புகளுக்கு உட்பட்டு இருக்கின்றதா? என்பதை மட்டும் நீங்கள் கவனித்தால் போதும். நண்பர் எந்த வழியில் பணத்தைப் பெற்று முதலீடு செய்திருந்தாலும் அதில் உங்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை.

உதாரணமாக நீங்கள் ஒரு வியாபாரியாக இருக்கின்றீர்கள். உங்களிடம் பலர் வந்து பணம் கொடுத்து பொருட்களை வாங்கிச் செல்கிறார்கள். ஹராமான வழியில் பொருளீட்டியவர்களும், ஹலாலான வழியில் பொருளீட்டியவர்களும் இருப்பார்கள். அந்தப் பணம் நுகர்வோருக்கு எப்படி வந்திருந்தாலும் அதை நாம் பொருட்படுத்துவதில்லை. நாம் பொருள் தருகிறோம். அவர்கள் பணம் தருகிறார்கள் என்பதை மட்டுமே கவனிக்கின்றோம்.

இதே போன்று தான் உங்கள் பிரச்சனையும் அமைந்துள்ளது. நீங்கள் வேலை பார்க்கின்றீர்கள். அந்த வேலைக்காக 30 சதவிகிதம் பங்கு தரப்படுகின்றது. உங்களுக்குப் பணம் வருகின்ற வழி ஹலாலாக இருக்கின்றது. உங்கள் நண்பருக்கு இந்தப் பணம் ஹலாலான வழியில் வந்ததா? என்று பார்க்க வேண்டியதில்லை.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் யூதர்கள் வட்டித்தொழில் செய்து வந்தனர். அதன் வருமானத்தையே உண்டு வந்தனர். இதைப் பின்வரும் வசனங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

யூதர்கள் செய்த அநீதியின் காரணமாகவும், அல்லாஹ்வின் பாதையை விட்டும் அதிகமானோரை அவர்கள் தடுத்ததன் காரணமாகவும், வட்டியை விட்டு அவர்கள் தடுக்கப்பட்டிருந்தும் வட்டி வாங்கியதாலும், மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் அவர்கள் சாப்பிட்டதாலும் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த தூய்மையானவற்றை அவர்களுக்கு விலக்கினோம். அவர்களில் (நம்மை) மறுப்போருக்குத் துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம்.

திருக்குர்ஆன் 4:161

வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். "வியாபாரம் வட்டியைப் போன்றதே'' என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து அறிவுரை தமக்கு வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.

திருக்குர்ஆன் 2:275

வட்டித் தொழில் செய்து வந்த யூதர்கள் தந்த அன்பளிப்புகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மறுக்காமல் ஏற்றுக் கொண்டார்கள்.

صحيح البخاري 

2617 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الوَهَّابِ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الحَارِثِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ هِشَامِ بْنِ زَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ يَهُودِيَّةً أَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَاةٍ مَسْمُومَةٍ، فَأَكَلَ مِنْهَا، فَجِيءَ بِهَا فَقِيلَ: أَلاَ نَقْتُلُهَا، قَالَ: «لاَ»، فَمَا زِلْتُ أَعْرِفُهَا فِي لَهَوَاتِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

அனஸ் ரலி) அவர்கள் கூறினார்கள் :

யூதப் பெண் ஒருத்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களீடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை அன்பளிப்பாகக் கொண்டு வந்தாள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதிலிருந்து (சிறிது) உண்டார்கள். "அவளைக் கொன்று விடுவோமா?'' என்று (நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம்) கேட்கப்பட்டது.  அவர்கள், "வேண்டாம்'' என்று கூறி விட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தொண்டைச் சதையில் அந்த விஷத்தின் பாதிப்பை நான் தொடர்ந்து பார்த்து வந்தேன்.

நூல் :  புகாரி 2617

صحيح البخاري

2615 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ قَتَادَةَ، حَدَّثَنَا أَنَسٌ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: أُهْدِيَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جُبَّةُ سُنْدُسٍ، وَكَانَ يَنْهَى عَنِ الحَرِيرِ، فَعَجِبَ النَّاسُ مِنْهَا، فَقَالَ: «وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ، لَمَنَادِيلُ سَعْدِ بْنِ مُعَاذٍ فِي الجَنَّةِ أَحْسَنُ مِنْ هَذَا»،

அபூ ஹுமைத் அஸ் ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறினார்கள் :

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் தபூக் போரில் கலந்து கொண்டோம். "அய்லா'வின் அரசன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வெள்ளை நிறக் கோவேறுக் கழுதை ஒன்றை அன்பளிப்புச் செய்தான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவருக்குச் சால்வையொன்றை (அனுப்பி) அணிவித்தார்கள். மேலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்லாமிய அரசின் கீழ் கட்டுப்பட்டு இருக்கும்படியும்  அவருக்கு எழுதினார்கள்.

நூல் : புகாரி 3161

صحيح البخاري

2616 - وَقَالَ سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ: «إِنَّ أُكَيْدِرَ دُومَةَ أَهْدَى إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»

அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

தூமத்துல் ஜந்தலின் அரசர் உகைதிர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்புகளை அனுப்பினார். 

நூல் :   புகாரி 2616

யூதர்கள் வட்டி வாங்கி சம்பாதித்து இருந்தாலும் அவர்களிடமிருந்து வந்த அன்பளிப்புகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்றார்கள். யூதர்களிடமிருந்து தனக்கு இந்தப் பொருட்கள் எவ்வாறு வந்தன என்பதை மட்டுமே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்துள்ளார்கள். அதாவது அன்பளிப்பு என்ற ஆகுமான வழியில் வந்துள்ளது.

யூதர்கள் இந்த அன்பளிப்புகளை ஹராமான வழியில் சம்பாதித்து இருக்கின்றார்கள். எனவே நாம் இதை வாங்கக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முடிவு எடுக்கவில்லை.

ஒருவரிடமிருந்து நமக்குப் பொருள் வந்தால் அவரிடமிருந்து நமக்கு அப்பொருள் வந்த வழி சரியாக இருக்கின்றதா என்பதை மட்டுமே நாம் கவனிக்க வேண்டும். இவ்வாறு தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்துள்ளார்கள்.

صحيح البخاري

1495 - حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِلَحْمٍ تُصُدِّقَ بِهِ عَلَى بَرِيرَةَ، فَقَالَ: «هُوَ عَلَيْهَا صَدَقَةٌ، وَهُوَ لَنَا هَدِيَّةٌ» وَقَالَ أَبُو دَاوُدَ: أَنْبَأَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، سَمِعَ أَنَسًا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

பரீராவுக்கு தர்மமாகக் கொடுக்கப்பட்ட இறைச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டது. அப்போது அவர்கள் இது பரீராவுக்குத் தர்மமாகும்; ஆனால் நமக்கு அன்பளிப்பாகும்" என்றார்கள்.

நூல் :  புகாரி 1495

உங்கள் நண்பர் ஹராமான வழியில் சம்பாதித்து இருந்தால் அதற்கான குற்றம் அவரை மட்டுமே சேரும். இதில் உங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை.

அதே நேரத்தில் ஒருவர் தீமை செய்திருப்பதை நாம் காணும் போது சம்பந்தப்பட்டவரிடம் அவர் செய்த தவறை சுட்டிக் காட்டுவது நமது கடமையாகும். எனவே உங்கள் நண்பருக்கு வட்டி வாங்குவதைப் போன்று வட்டி கொடுப்பதும் தவறு தான் என்பதை உணர்த்தி விடுங்கள்.

பிறரது இணையதள இணைப்பைத் திருடுவது கூடுமா?

இன்னொருவருக்குச் சொந்தமான இணையதள இணைப்பை கள்ளத் தனமாக நான் பயன்படுத்தினால் அது குற்றமாகுமா?

பதில்:

இது கேள்வி கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய பாரதூரமான விஷயம் அல்ல. மற்றவருக்குச் சொந்தமானதை அவரது அனுமதி இல்லாமல் பயன்படுத்துவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இறுதிப் பேருரையில் பிறருடைய பொருட்களை புனிதத் தலத்துக்கும், புனித மாதத்துக்கும் நிகராக மதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

صحيح البخاري

1741 - حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ، حَدَّثَنَا قُرَّةُ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، قَالَ: أَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِي بَكْرَةَ، وَرَجُلٌ - أَفْضَلُ فِي نَفْسِي مِنْ عَبْدِ الرَّحْمَنِ -، حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي بَكْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: خَطَبَنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ النَّحْرِ، قَالَ: «أَتَدْرُونَ أَيُّ يَوْمٍ هَذَا؟»، قُلْنَا: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، فَسَكَتَ حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ بِغَيْرِ اسْمِهِ، قَالَ: «أَلَيْسَ يَوْمَ النَّحْرِ؟» قُلْنَا: بَلَى، قَالَ: «أَيُّ شَهْرٍ هَذَا؟»، قُلْنَا: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، فَسَكَتَ حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ بِغَيْرِ اسْمِهِ، فَقَالَ «أَلَيْسَ ذُو الحَجَّةِ؟»، قُلْنَا: بَلَى، قَالَ «أَيُّ بَلَدٍ هَذَا؟» قُلْنَا: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، فَسَكَتَ حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ بِغَيْرِ اسْمِهِ، قَالَ «أَلَيْسَتْ بِالْبَلْدَةِ الحَرَامِ؟» قُلْنَا: بَلَى، قَالَ: «فَإِنَّ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ عَلَيْكُمْ حَرَامٌ، كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا، فِي شَهْرِكُمْ هَذَا، فِي بَلَدِكُمْ هَذَا، إِلَى يَوْمِ تَلْقَوْنَ رَبَّكُمْ، أَلَا هَلْ بَلَّغْتُ؟»، قَالُوا: نَعَمْ، قَالَ: «اللَّهُمَّ اشْهَدْ، فَلْيُبَلِّغِ الشَّاهِدُ الغَائِبَ، فَرُبَّ مُبَلَّغٍ أَوْعَى مِنْ سَامِعٍ، فَلَا تَرْجِعُوا بَعْدِي  كُفَّارًا، يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ»

அபூ பக்ரா நுஃபைஉ பின் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

...(இறுதி ஹஜ்ஜின் போது, துல்ஹஜ் 10 ஆம் நாளான) நஹ்ருடைய நாளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது, "இது எந்த மாதம் என்பதை நீங்கள் அறிவீர்களா?'' எனக் கேட்டார்கள். நாங்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்'' என்றோம். அவர்கள் அந்த மாதத்திற்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவிற்கு மௌனமாக இருந்துவிட்டு, "இது துல்ஹஜ் இல்லையா?'' என்று கேட்டார்கள். நாங்கள், "ஆம்'' என்றோம். (பிறகு,) "இது எந்த நகரம்?'' எனக் கேட்டார்கள். அதற்கு நாங்கள், "அல்லாஹ்வும், அவனுடைய தூதருமே நன்கறிவர்'' என்றோம். அப்போதும், அவர்கள் அதற்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவிற்கு மௌனமாக இருந்துவிட்டு, "இது புனித நகரமல்லவா?'' எனக் கேட்க, நாங்கள், "ஆம்'' என்றோம். மேலும், "இது எந்த நாள்?'' என்று கேட்டார்கள். நாங்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்'' என்றோம்.  அவர்கள் அதற்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவிற்கு மௌனமாக இருந்துவிட்டு, "இது நஹ்ருடைய (துல்ஹஜ் 10ஆம்) நாள் அல்லவா?'' எனக் கேட்க, நாங்கள், "ஆம்'' என்றோம். (பிறகு,) "உங்களது இந்த நகரத்தில், உங்களின் இந்த மாதத்தில் இன்றைய தினம் எந்த அளவு புனிதமானதோ அந்த அளவிற்கு உங்கள் உயிர்களும், உங்கள் உடைமைகளும், உங்கள் மானமும் உங்களுக்குப் புனிதமானவையாகும். நீங்கள் (மறுமையில்) உங்களுடைய இறைவனைச் சந்திப்பீர்கள். அப்போது அவன் உங்களிடம் உங்கள் செயல்கள் குறித்து விசாரணை செய்வான்.  அறிந்து கொள்ளுங்கள்: எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் வழி கெட்டவர்களாய் நீங்கள் மாறி விடாதீர்கள். இதோ! இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு (நான் சொன்ன கட்டளைகளை) அறிவித்து விடுங்கள். ஏனெனில், இந்தச் செய்தி எவரிடம் தெரிவிக்கப்படுகிறதோ அவர், தாம் யாரிடமிருந்து இதைக் கேட்டாரோ அவரை விட (அதாவது தமக்கு இதைச் சொன்னவரை விட) நன்கு (புரிந்து) பாதுகாப்பவராயிருக்கலாம். பிறகு, நபிகள் நயகம் (ஸல்) அவர்கள், "நான் உங்களிடம் (இறைச் செய்திகள் அனைத்தையும்) சேர்த்து விட்டேனா?'' என்று இரண்டு  முறை கேட்டார்கள்.  

நூல் : புகாரி : 1741,4406,550,7447

பொதுவாகக் கெட்ட செயல்களைச் சர்வ சாதாரணமாகச் செய்து வரும் ஒரு மனிதன், அவன் புனிதமாக மதிக்கும் இடத்தில் அந்தச் செயலைச் செய்ய மாட்டான். ஒரு திருடன் அவன் புனிதமாக மதிக்கும் இடத்தில் திருடத் துணிய மாட்டான். புனிதமான மாதத்தையும், புனித ஆலயத்தையும் நாம் எவ்வாறு மதித்துப் பேணுகிறோமோ அது போல் மற்றவர்களின் பொருளாதாரத்தையும் மதிக்க வேண்டும் என்ற அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளனர்.

உங்களுக்கிடையே (ஒருவருக்கொருவர்) உங்கள் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்! தெரிந்து கொண்டே மக்களின் பொருட்களில் ஒரு பகுதியைப் பாவமான முறையில் சாப்பிடுவதற்காக அதிகாரிகளிடம் உங்கள் பொருட்களைக் கொண்டு செல்லாதீர்கள்!

திருக்குர்ஆன் 2 ; 188

அற்பமான பொருட்களாக இருந்தாலும் பாதுகாப்பு இல்லாமல் கிடக்கும் பொருள் என்றாலும் பிறருடைய பொருட்கள் நமக்கு ஹலால் ஆகாது என்ற அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளனர்.

صحيح البخاري

2435 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لاَ يَحْلُبَنَّ أَحَدٌ مَاشِيَةَ امْرِئٍ بِغَيْرِ إِذْنِهِ، أَيُحِبُّ أَحَدُكُمْ أَنْ تُؤْتَى مَشْرُبَتُهُ، فَتُكْسَرَ خِزَانَتُهُ، فَيُنْتَقَلَ طَعَامُهُ، فَإِنَّمَا تَخْزُنُ لَهُمْ ضُرُوعُ مَوَاشِيهِمْ أَطْعِمَاتِهِمْ، فَلاَ يَحْلُبَنَّ أَحَدٌ مَاشِيَةَ أَحَدٍ إِلَّا بِإِذْنِهِ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவரின் கால்நடையில் அவரது அனுமதியின்றி எவரும் பால் கறக்க வேண்டாம். உங்களின் சரக்கு அறைக்கு ஒருவர் வந்து, உங்களின் உணவுக் கருவூலத்தை உடைத்து, உங்களது உணவை எடுத்துச் சென்று விடுவதை ஒப்புவாரா? இவ்வாறே, மற்றவர்களின்  கால் நடைகளுடைய மடிகள் அவர்களுடைய உணவையே சேகரித்துப் பாதுகாத்து வைத்திருக்கின்றன. ஆகவே, எவரும் ஒருவரது கால்நடையில் அவரது அனுமதியின்றிப் பால் கறக்க வேண்டாம்.

அறிவிப்பவர் :  அப்துல்லாஹ் பின் உமர் (ரலி),

நூல் : புகாரி 2435

صحيح البخاري

2449 - حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، حَدَّثَنَا سَعِيدٌ المَقْبُرِيُّ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ كَانَتْ لَهُ مَظْلَمَةٌ لِأَخِيهِ مِنْ عِرْضِهِ أَوْ شَيْءٍ، فَلْيَتَحَلَّلْهُ مِنْهُ اليَوْمَ، قَبْلَ أَنْ لاَ يَكُونَ  دِينَارٌ وَلاَ دِرْهَمٌ، إِنْ كَانَ لَهُ عَمَلٌ صَالِحٌ أُخِذَ مِنْهُ بِقَدْرِ مَظْلَمَتِهِ، وَإِنْ لَمْ تَكُنْ لَهُ حَسَنَاتٌ أُخِذَ مِنْ سَيِّئَاتِ صَاحِبِهِ فَحُمِلَ عَلَيْهِ»، قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: " قَالَ إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ: إِنَّمَا سُمِّيَ المَقْبُرِيَّ لِأَنَّهُ كَانَ نَزَلَ نَاحِيَةَ المَقَابِرِ "، قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: " وَسَعِيدٌ المَقْبُرِيُّ: هُوَ مَوْلَى بَنِي لَيْثٍ، وَهُوَ سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ وَاسْمُ أَبِي سَعِيدٍ كَيْسَانُ "

ஒருவர், தன் சகோதரனின் மானத்திலோ, வேறு விஷயத்திலோ இழைத்த அநீதி (ஏதும் பரிகாரம் காணப்படாமல்) இருக்குமாயின், அவர் அவனிடமிருந்து தீனாரோ, திர்ஹமோ (பொற்காசுகளோ வெள்ளிக் காசுகளோ) பயன் தராத நிலை வருவதற்கு முன்னால் அதற்கு இன்றே மன்னிப்புப் பெற்றுக் கொள்ளட்டும். (ஏனெனில், மறுமை நாளில்) அவரிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவனது அநீதியின் அளவுக்கு அவனிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு (அநீதிக்குள்ளானவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு) விடும்.  அநீதியிழைத்தவனிடம் நற்செயல்கள் எதுவும் இல்லையென்றால் அவனது தோழரின் (அநீதிக்குள்ளானவரின்) தீய செயல்கள் (அவர் கணக்கிலிருந்து) எடுக்கப்பட்டு அநீதியிழைத்தவனின் மீது சுமத்தப்பட்டு விடும்.

அறிவிப்பவர் :  அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 2449, 6534

எனவே மற்றவர் பணம் செலுத்தி பெற்றுள்ள சேவை அவருக்குச் சொந்தமானது. அவரது அனுமதி இல்லாமல் இவ்வாறு பயன்படுத்துவது கூடாது.

அவர் அன்லிமிடெட் எனும் எல்லையற்ற சேவையைப் பெற்றிருந்தால் நீங்கள் பயன்படுத்துவதால் அவருக்குப் பண இழப்பு ஏற்படாமல் போகலாம். அப்படி இருந்தாலும் அதுவும் மார்க்கத்தில் கூடாத செயலாகும். ஏனெனில் அவரது இணைப்பில் இருந்து நீங்கள் கொள்ளும் தொடர்புகள் தவறானதாக இருந்தால் அவர் தான் மாட்டிக் கொள்வார். மேலும் அவருக்குச் சம்மந்தமில்லாதவை அவர் பெயரில் சுமத்தப்படும். இதுவும் மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதாகும்.

தாங்கள் செய்தவற்றுக்காக மகிழ்ச்சியடைந்து, தாம் செய்யாதவற்றுக்காகப் புகழப்பட வேண்டுமென விரும்புவோர் வேதனையிலிருந்து தப்பித்து விட்டார்கள் என்று நீர் நினைக்காதீர்! அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.

திருக்குர்ஆன் 3:180

அதே நேரத்தில் விமான நிலையங்கள், பொது இடங்கள், மற்றும் தனியார் நிறுவனங்களில் பொது அனுமதி அளித்திருப்பார்கள். யார் வேண்டுமானாலும் வைஃபை மூலம் இணைப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அனுமதி அளித்திருப்பார்கள். அப்படி இருந்தால் சம்மந்தப்பட்ட இணைப்பின் உரிமையாளர் அனுமதி அளித்துள்ளதன் அடிப்படையில் பயன்படுத்துவது குற்றமாகாது.