மத்ஹப் - தக்லீத் - தரீக்கா
நான் என்பது உடலா உயிரா?
நான் என்பது உடலா உயிரா?
யாசிர்
மெஞ்ஞானம் என்ற பெயரில் சிலர் உளறிக்கொட்டிய கேள்வியை நீங்கள் கேட்டுள்ளீர்கள்.
நான் என்று சொல்லும் போது அதில் இருந்து உங்களுக்கு ஒன்றுமே புரியாவிட்டால் தான் கேள்வி கேட்க வேண்டும். நான், நீ, அவன் என்பன அனைத்தும் அனைவருக்கும் புரியும் போது அதற்கு மேல் விளக்கம் கேட்பது மடமையாகும்.
நீ சாப்பிடு என்று உங்களிடம் ஒருவர் கூறினால் விழுந்தடித்துக் கொண்டு சாப்பிட ஓடுவீர்கள். நான் என்பது எனது உயிரா உடலா? என்று கேட்க மாட்டீர்கள். உயிர் சாப்பிட வேண்டுமா? உடல் சாப்பிட வேண்டுமா? என்றும் அப்போது கேட்க மாட்டீர்கள். நீ என்பது என்ன என்று உங்களுக்குப் புரிந்திருப்பதே இதற்குக் காரணம்.
நான் ஆயிரம் ரூபாய் தருகிறேன் எனக் கூறினால் உங்கள் உடல் தருமா? உயிர் தருமா எனக் கேட்க மாட்டீர்கள். எப்போது தருவீர்கள் என்று தான் கேட்பீர்கள். நான் என்பதன் அர்த்தம் இப்போதெல்லாம் உங்களுக்குப் புரிகிறது.
சாப்பிட்டு அனுபவித்து முடித்து வெட்டியாக இருக்கும் போது இந்த அஞ்ஞானக் கும்பல் உளறுவதை அசை போடுகிறீர்கள்.
எடுத்த எடுப்பிலேயே இது உளறல் என்று அலட்சியப்படுத்த வேண்டாமா?
மாம்பழம் என்றால் என்ன? அதன் தோலா? கொட்டையா? அதன் சதையா? அல்லது அதில் உள்ள சாறா? அல்லது இனிப்பா? அல்லது அதன் நிறமா என்றெல்லாம் கேட்காமல் அதைப் புரிந்து கொள்கிறீர்கள். அது போல் மனிதன் என்பதையும் அவனைக் குறிப்பிடுவதற்கு பயன்படுத்தப்படும் நான், நீ, அவன், இவன் போன்ற சொற்களையும் புரிந்து கொள்ளுங்கள்
12.08.2011. 16:40 PM
▶️இஸ்லாத்தின் அடிப்படை
இஸ்லாத்தின் அடிப்படை
▶️தொழுகையில் விரல் அசைக்கலாமா
தொழுகையில் விரல் அசைக்கலாமா
மத்ஹபு மோகத்துக்குக் காரணம் என்ன?
தனிமனித வழிபாடு
அல்ஜன்னத் மாத இதழில் பீஜே ஆசிரியராக இருந்த போது எழுதிய கட்டுரை - தேவையான திருத்தங்களுடன்
இன்றைக்கு மார்க்க அறிஞர்கள் என்று தங்களைக் கூறிக் கொள்ளும் உலமாக்கள், ஏழாண்டு காலம் மதரஸாக்களில் காலம் கழித்த உலமாக்கள் மற்ற விஷயங்களை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருந்தாலும் மத்ஹபு விஷயத்தில் மட்டும் இவ்வளவு பிடிவாதம் பிடிக்க வேண்டிய காரணம் என்ன?
பல மவ்லவிகளை நாம் சந்தித்துப் பேசும் போது நீங்கள் சொல்வது சரி தான். ஆனால் இந்த மத்ஹபு விஷயத்தை நீங்கள் எழுதியிருக்கக் கூடாது. அதைத் தான் எங்களால் ஜீரணிக்க முடியவில்லை என்று நம்மிடம் கூறுகின்றனர்.
மதரஸாக்களுக்குச் செல்லாதவர்கள் கூட எளிதில் புரிந்து கொள்ளும் இந்த உண்மையை மதரஸா சென்றவர்கள் புரிந்து கொள்ள முடியாமல் போவதற்குக் காரணமென்ன? மிகமிக முக்கியமான காரணம் இட்டுக் கட்டப்பட்ட பொய்யான ஹதீஸ்களை இவர்கள் நம்பியதும், நம்ப வைக்கப்பட்டதுமே ஆகும்.
தனி நபர்கள் மீது ஏற்பட்ட காரணமற்ற பக்தியின் காரணமாக அவர்களைச் சிறப்பித்து பொய்யான ஹதீஸ்களை உருவாக்கி அதை நம்ப வைத்து விட்டார்கள்.
முதன் முதலில் அலி (ரலி) அவர்களை உயர்த்தியும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோரைத் தாழ்த்தியும் ஷியாக்கள் பல பொய்யான ஹதீஸ்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரால் உலவவிட்டனர். இஸ்லாமிய வரலாற்றில் உருவாக்கப்பட்ட பொய்யான ஹதீஸ்கள் முதன் முதலில் இந்த ஷியாக்களாலேயே தயாரிக்கப்பட்டன.
ஷியாக்களின் அதே வழிமுறையைப் பின்பற்றி இமாம்கள் பற்றி மத்ஹபுவாதிகள் பல ஹதீஸ்களைத் தயாரித்தனர். தங்களின் இமாம்களை உயர்த்துவதற்காக ஏனைய இமாம்களைத் தாழ்த்தி உருவாக்கப்பட்ட ஹதீஸ்களும் உள்ளன.
இந்தப் பொய்யான ஹதீஸ்கள் மதரஸா செல்லும் பிஞ்சு உள்ளங்களில் ஆழமாகப் பதிக்கப்பட்டு விட்டதால் தான் மத்ஹபு வெறியிலிருந்து மவ்லவிகள் விடுபட யோசிக்கிறார்கள்.
மதரஸாக்களில் ஐந்தாம் வகுப்புக்குச் சட்ட நூல் என்று ஓதிக் கொடுக்கப்படும் துர்ருல் முக்தாரிலும் அதன் விரிவுரையான ரத்துல்முக்தாரிலும் முன்னுரையில் இத்தகைய பொய்யான ஹதீஸ்கள் கூறப்பட்டு இமாம்கள் மீது பக்தி ஊட்டப்படுகின்றது. அதை உண்மை என்று நம்பிய காரணத்தாலேயே இமாம்கள் வழிபாட்டிலிருந்து விடுபட மவ்லவிகள் தயங்குகின்றார்கள்.
وعنه عليه الصلاة والسلام (إن آدم افتخر بي وأنا أفتخر برجل من أمتي اسمه نعمان وكنيته أبو حنيفة، هو سراج امتيالدر المختار
ஆதம் (அலை) அவர்கள் என் மூலம் பெருமை அடைந்தார்கள். நான் என் உம்மத்தில் வருகின்ற நுஃமான் எனும் இயற்பெயர் கொண்ட அபூஹனீஃபாவைக் கொண்டு பெருமையடைவேன். அவர் என் சமுதாயத்துக்கு விளக்காவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக அந்த துர்ருல் முக்தாரில் கூறப்பட்டுள்ளது.
وعنه عليه الصلاة والسلام (إن ساير الانبياء يفتخرون بي، وأنا أفتخر بأبي حنيفة، من أحبه فقد أحبني، ومن أبغضه فقد أبغضني
எல்லா நபிமார்களும் என் மூலம் பெருமை அடைந்தனர். நான் அபூஹனீஃபா மூலம் பெருமை பெறுகிறேன். அவரை யார் விரும்புகிறாரோ அவர் என்னை விரும்புகிறார். அவரை யார் வெறுக்கிறாரோ அவர் என்னை வெறுக்கிறார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றும் துர்ருல் முக்தாரில் கூறப்பட்டுள்ளது.
சாதாரண அறிவு படைத்தவனுக்கும் பச்சைப் பொய் என்று தெளிவாகத் தெரியக்கூடிய இந்த ஹதீஸ் மவ்லவிகளின் சிறு பருவத்திலேயே போதிக்கப்பட்டால் எப்படி அவர்கள் மத்ஹபிலிருந்து விடுபடுவார்கள்.?
ஆதம் (அலை) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூலம் பெருமையடைந்தார்கள் என்றால் அதில் நியாயமிருக்கிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆதம் (அலை) அவர்களை விட உயர்வானவர்கள். அவர்கள் மூலம் ஆதம் (அலை) அவர்கள் பெருமையடையலாம்.
ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அபூஹனீபாவைக் கொண்டு பெருமை அடைகிறார்கள் என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை விடவும் அபூஹனீபா இமாம் அவர்கள் அல்லவா உயர்ந்த அந்தஸ்துக்கு போகின்றார்கள்?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இல்லாத அந்தஸ்து அபூஹனீபா அவர்களுக்கு இருப்பதாகவும், அதன் மூலம் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெருமையடைய இருக்கின்றார்கள் என்றும் கூறும் இந்த விஷக் கருத்து பலமாகப் பதிந்து விட்டதனால் தான் மவ்லவிகள் அதை இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரையே பயன்படுத்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுபடுத்தி, அவர்களை விட இமாமை உயர்வாகக் காட்டும் இந்தப் பொய்யைத் தான் எல்லா மதரஸாக்களும் சட்ட நூலாக ஒப்புக் கொண்ட துர்ருல் முக்தாரில் குறிப்பிட்டுள்ளனர்.
ஒரு செய்தியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாகச் சொல்வது என்றால் அதன் அறிவிப்பாளர்கள் யார்? எந்த ஹதீஸ் நூலில் இடம் பெற்றுள்ளது? அறிவிப்பாளர்களின் தகுதி என்ன? என்றெல்லாம் ஆதாரம் இருக்க வேண்டும். இத்தகைய ஆதாரத்துடன் தான் எந்த நபிமொழியையும் எடுத்துக் காட்ட வேண்டும். ஆனால் மேற்கண்ட செய்திக்கு இது போன்ற எந்த ஆதாரத்தையும் அந்த நூலில் எடுத்துக் காட்டப்படவில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதாக மொட்டையாக அந்த நூலில் கூறப்படுகிறது.
இவர்கள் இத்துடன் நின்று விடவில்லை. அல்லாஹ்வின் பெயராலும் பொய்யைக் கூறி தங்கள் இமாமை உயர்த்த எண்ணுகின்றனர். அதே துர்ருல் முக்தார் முன்னுரையில் இடம் பெற்றுள்ள மற்றொரு பொய்யைக் காண்போம்.
ولها قصة مشهورة وفي حجته الاخيرة استأذن حجبة الكعبة بالدخول ليلا، فقام بين العمودين على رجله اليمنى ووضع اليسرى على ظهرها حتى ختم القرآن، فلما سلم بكى وناجى ربه وقال: إلهي ما عبدك هذا العبد الضعيف حق عبادتك، لكن عرفك حق معرفتك فهب نقصان خدمته لكمال معرفته، فهتف هاتف من جانب البيت: يا أبا حنيفة قد عرفتنا حق المعرفة وخدمتنا فأحسنت الخدمة، قد غفرنا لك ولمن اتبعك ممن كان على مذهبك الى يوم القيامة. الدر المختار
அபூ ஹனீஃபா அவர்கள் கஅபாவின் காவலாளியிடம் கஅபாவின் உள்ளே செல்ல ஒரு இரவில் அனுமதி கேட்டார்கள். இரண்டு தூண்களுக்கிடையில் வலது காலில் நின்றார்கள். இடது காலை வலது கால் மீது வைத்துக் கொண்டார்கள். இந்த நிலையில் குர்ஆனை ஓதி முடித்தார்கள். ஸலாம் கூறியதும் அழுதார்கள். தமது இறைவனிடம் இரகசியமாக உரையாடினார்கள். என் இறைவா இந்த அடியான் உன்னை வணங்க வேண்டிய விதத்தில் வணங்கவில்லை. எனினும் உன்னை அறிய வேண்டிய விதத்தில் அறிந்துள்ளேன். எனவே இந்த அடியானின் முழு ஞானம் காரணமாக இவரது வணக்கத்தில் உள்ள குறைபாடுகளை மன்னித்து விடு என்று துஆ செய்தார்கள். அப்போது கஅபாவின் ஒரு பகுதியில் இருந்து அவர்களை நோக்கி அபூஹனீஃபாவே! நம்மை விளங்க வேண்டிய விதத்தில் விளங்கிக் கொண்டீர். உம்மையும் உம்மைப் பின்பற்றியவர்களையும் கியாம நாள் வரை மன்னித்து விட்டேன் என்று அசரீரியில் அல்லாஹ் கூறினானாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் தங்களின் இமாமுக்கும் வஹீ வந்திருக்கிறது; அதுவும் அவரைப் பின்பற்றியவர்களை கியாம நாள் வரை மன்னிக்கும் உத்திரவாதத்துடன் வஹீ வந்திருக்கிறது என்று சிறு பருவத்திலேயே நம்ப வைத்து விட்டார்கள்.
இமாம் அபூஹனீபா அவர்களிடம் அல்லாஹ்வே நேரடியாக உரையாடி விட்டான் என்று நம்ப வைக்கப்பட்டவர்கள் - கியாம நாள் வரை அவரைப் பின்பற்றியவர்களுக்கு மன்னிப்பு உண்டு என்று அல்லாஹ் உத்தரவாதம் தருவதாக நம்பியவர்கள் - எப்படி அதிலிருந்து விடுபட முடியும்?
இது போன்ற கதைகளை மதரஸா சென்றவர்கள் மட்டுமே அறியமுடியும்.
أحاديث مختارة للذهبي مأمون بن أحمد ثنا أحمد بن عبد الله الجوبياري أنا عبد الله بن معدان عن أنس مرفوعا يكون في أمتي رجل يقال له محمد بن إدريس أضر على أمتي من إبليس وآخر يقال له أبو حنيفة هو سراج أمتي
பொருள்: என் உம்மத்தில் முஹம்மத் இப்னு இத்ரீஸ் (அதாவது ஷாபி இமாம்) என்று ஒருவர் தோன்றுவார். இப்லீஸை விட என் சமுதாயத்திற்கு அவர் கேடு செய்வார். மேலும் என் சமுதாயத்தில் அபூஹனீஃபா என்று ஒருவர் தோன்றுவார். அவர் என் சமுதாயத்தின் விளக்கு ஆவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்களாம்.
ஒரு தனி மனிதர் மீது ஏற்பட்ட பக்தி இன்னொரு இமாமை இப்லீஸை விட கெட்டவர் என்று கூறும் அளவுக்குச் சிலரை ஆக்கி விட்டது. அதுவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் இப்படிச் சொன்னார்கள் என்ற முத்திரையுடன்..
இதை அறிவிப்பவர்களில் மஃமூன் இப்னு அஹ்மத் என்ற பெரும் பொய்யனும், அஹ்மத் இப்னு அப்துல்லாஹ் அல் ஜூவைபாரி என்ற பொய்யனும் இடம் பெறுகின்றனர். இவ்விரு பொய்யர்களில் யாரோ ஒருவர் தான் இதை இட்டுக் கட்டியிருக்கின்றனர் என்று ஹதீஸ் கலை மேதை இப்னுல் ஜவ்ஸி அவர்கள் தமது மவ்லூஆத் என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள்.
மஃமூன் என்ற பொய்யனிடம் ஷாபி இமாமையும், அவரைச் சார்ந்தவர்களையும் பற்றி நீர் என்ன கருதுகிறீர்? என்று கேட்கப்பட்ட போது மேற்கூறிய பொய்யான ஹதீஸை அவன் கூறினான். மஃமூன் என்ற பொய்யனே இதை இட்டுக்கட்டி இருக்க முடியும் என்று இமாம் ஹாகிம் அவர்கள் தனது அல்மத்ஹல் என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள். மேலும் சிறிதளவாவது அறிவு உள்ள ஒவ்வொருவனுக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட பெரும் பொய் இது என்று தெளிவாகத் தெரியும் எனக் குறிப்பிடுகிறார்கள்.
ஸூயூத்தி அவர்கள் அல்லஆலில் மஸ்னூஆ என்ற நூலில் முதல் பாகத்தில் 457 ஆம் பக்கத்தில் இதைப் பொய்யென நிரூபித்துள்ளார்கள். மேலும் பல அறிஞர்களும் இதைப் பொய்யென நிரூபித்துள்ளனர். இவ்வளவு தெளிவாகப் பொய் என்று அறிஞர்கள் முடிவு செய்த பின்பும் ஹனபி அறிஞர்கள் பலர் இதைச் சரி காணவே முயற்சிக்கிறார்கள்.
ரத்துல் முக்தார் ஆசிரியர் இது சரியான ஹதீஸ் என்று சாதிக்கிறார். மேற்கூறிய அறிஞர்கள் எல்லாம் அபூஹனீபா அவர்கள் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியினால் இதைப் பொய் என்று கூறுவதாகத் தெரிவிக்கிறார்.
ஐனீ போன்ற அறிஞர்களும் இதிலிருந்து தப்பவில்லை. ஹதீஸ் கலை மேதைகள் அறிவிப்பாளர்களின் தராதரத்தை எடை போட்டு தக்கக் காரணங்களுடன் அடையாளம் காட்டியுள்ளதை ஒரு ஆதாரமுமின்றி இந்த ஹனஃபீ அறிஞர்கள் மறுக்கிறார்கள்.
இந்தக் குருட்டுப் பக்தி ஏற்பட்டு விட்டதால் தான் தங்கள் இமாம் சொன்னதில் தவறே ஏற்படாது என்று நம்புகின்றனர். தவறே ஏற்பட்டாலும் கியாம நாள் வரைக்கும் அல்லாஹ் அதை மன்னித்து விடுவான் என்றும் நம்புகின்றனர். மற்றொரு இமாமை இப்லீஸை விட மோசமானவர் என்று நம்புவதால் தான் அந்த இமாமுடைய எந்தக் கருத்தையும் நாம் ஏற்கக் கூடாது என்ற அளவுக்கு தங்களை மாற்றிக் கொண்டு விட்டார்கள்.
وقد جعل الله الحكم لاصحابه وأتباعه من زمنه الى هذه الايام، الى أن يحكم بمذهبه عيسى عليه السلام- الدر المختار
ஈஸா (அலை) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் படி தீர்ப்பு வழங்குவார்கள் என்றிருக்க இமாம் அபூஹனீஃபா அவர்களைப் பின்பற்றி ஹனஃபி மத்ஹபின் அடிப்படையிலேயே தீர்ப்பு வழங்குவார்களாம். இதுவும் துர்ருல் முக்தார் என்ற நூலில் தான் கூறப்பட்டுள்ளது.
இமாம்களை இப்லீஸை விடக் கெட்டவர்கள் என்று சித்தரிக்கக் கூடியவர்கள் தான் இமாம்களை மதிக்கின்றார்களா?
அரபு மொழி தெரியாதவர்களுக்கு குர்ஆன் விளங்குமா?
அரபு மொழி தெரியாதவர்களுக்கு குர்ஆன் விளங்குமா?
கேள்வி : சாதாரணமானவர்களால் குர்ஆன், ஹதீஸை எப்படி விளங்க முடியும்? மொழி பெயர்ப்புகளைத் தானே நம்ப வேண்டியுள்ளது ?
S.M செய்யிது அஹ்மது அலி BA, தூத்துக்குடி.
பதில் : மத்ஹபுகளை நியாயப்படுத்துவோர் எடுத்து வைக்கும் ஆதாரமற்ற வாதங்களில் இதுவும் ஒன்றாகும். குர்ஆன், ஹதீஸையே பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையுடையவர்களுக்குக் கூட மயக்கத்தை ஏற்படுத்தும் பொய்யான வாதமாகும் இது.
குர்ஆனும், ஹதீஸ்களும் அரபு மொழியிலேயே அமைந்துள்ளன என்பது உண்மை தான். அரபு மொழி அறியாத மக்கள் மொழி பெயர்ப்புகளைத் தான் நம்ப வேண்டியுள்ளது என்பதும் உண்மை தான்.
இந்தக் காரணங்களுக்காகத் தான் மத்ஹபுகள் அவசியம் என்றால் மத்ஹபுடைய இமாம்கள் தமிழ்நாட்டில் பிறந்து, தமிழ் மொழியில் தான் சட்டங்களை எழுதினார்களா?
(அபூஹனீபா தவிர) மற்ற மூன்று இமாம்களும் அரபி மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்களே! அவர்கள் எழுதிய அல்லது எழுதியதாகச் சொல்லப்படும் நூல்கள் யாவுமே அரபி மொழியில் அமைந்தவையே.
இதே வாதத்தின் அடிப்படையில் இவர்கள் என்ன சொல்ல வேண்டும்? மத்ஹபுகளின் சட்டங்கள் அரபி மொழியிலேயே எழுதப்பட்டுள்ளது என்பதனாலும், அந்த இமாம்கள் எழுதியதை மொழிபெயர்ப்புகளை வைத்துத் தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதாலும், அந்த இமாம்களும் அரபியராக இருந்ததனாலும் மத்ஹபுகளும், அதன் சட்டங்களும் விளங்காது என்று கூறியிருக்க வேண்டும்.
தமிழ் நாட்டில் பிறந்த யாரையாவது இமாமாக ஏற்றிருக்க வேண்டும் அப்படிச் செய்யவில்லையே? அது ஏன்?
இதைத் தான் நாம் சிந்திக்க வேண்டும்.
மத்ஹபுடைய மூல நூல்கள் அரபு மொழியில் இருந்தாலும் அதைத் தமிழாக்கம் செய்தால் மக்களுக்குப் புரியும் என்று இவர்கள் நம்பியதால் தானே மத்ஹபுகளைப் பின்பற்றுவதாகக் கூறுகின்றார்கள்.
அரபு மொழியில் எழுதப்பட்ட மத்ஹபுச் சட்டங்களைத் தமிழாக்கம் செய்தால் விளங்க முடியும் என்றால் இந்த நியாயம் குர்ஆன், ஹதீஸ் விஷயத்தில் பொருந்தாமல் போனது ஏன்?
மத்ஹபுகள் மீது இவர்களுக்கு வெறி இருப்பதாலும், குர்ஆன், ஹதீஸ் இவர்களுக்குத் தேவையற்றதாக இருப்பதாலுமே இந்தப் பாரபட்சமான முடிவுக்கு வருகின்றனர்.
தவறுகளும், சரியானவையும் கலந்துள்ள மனிதர்களின் அரபு மொழி வாசகங்கள் தமிழாக்கம் செய்யப்பட்டால் விளங்க முடியும் என்றால் தவறே இல்லாத முற்றிலும் சரியாகவே உள்ள குர்ஆன், ஹதீஸ்கள் தமிழாக்கம் செய்யப்படும் போது ஏன் விளங்காது?
மொழி பெயர்ப்புகளில், மொழி பெயர்த்தவர்களின் கவனக் குறைவினாலோ, வேறு காரணங்களினாலோ சில தவறுகள் ஏற்படலாம் என்பதை நாம் மறுப்பதற்கில்லை.
குர்ஆன், ஹதீஸ் மட்டுமின்றி எல்லா மொழி மாற்றத்தின் போதும் இது ஏற்படத்தான் செய்யும். இதை அரபி மொழி அறியாதவர்களால் சில வேளை கண்டுபிடிக்கப்படாமலும் போகும்.
ஆனால் அதற்காக குர்ஆன், ஹதீஸை விட்டு விட முடியுமா? விட்டு விட வேண்டும் என்றால் மத்ஹபுகள் உள்பட எந்த மொழி மாற்றத்தையும் விட்டாக வேண்டும்.
நம்மால் இயன்றளவு முயற்சித்துப் பார்த்துவிட்டு மொழிபெயர்ப்பை நாம் நம்புகிறோம். நாம் அறியாத வகையில் தவறுகள் நிகழ்ந்திருந்தால் அதை அல்லாஹ் மன்னிப்பான். வேண்டுமென்றே குர்ஆன், ஹதீஸை அலட்சியம் செய்வதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான்.
இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். இந்தக் கருத்துடையவர்கள் தாங்கள் சொற்பொழிவுகளில், குத்பாக்களில், புத்தகங்களில் குர்ஆன், ஹதீஸ் மொழிபெயர்ப்புகளை அவ்வப்போது பயன்படுத்துகின்றார்களே விளங்காத குர்ஆன், ஹதீஸை ஏன் மக்களிடம் கூற வேண்டும்.
மக்களிடம் வசூல் வேட்டை நடத்துவதற்கு மட்டும் குர்ஆன், ஹதீஸ்களைக் கூறினால் விளங்கும்; மற்ற விஷயங்களுக்கு விளங்காதா?
இதெல்லாம் ஷைத்தானின் மாய வலை இதில் சிக்கிக் கொள்ள வேண்டாம்.
நாம் எப்படி திருக்குர்ஆனுக்கு தமிழாக்கம் வெளியிட்டுள்ளோமோ அது போல் குர்ஆன் விளங்காது என்ற கொள்கை உடையவர்கள் ஏன் திருக்குர்ஆன் தமிழாக்கம் வெளியிட்டனர் என்பதும் கவனிக்கத்தக்கது.
20.02.2010. 15:40 PM
பைஅத், முரீது (தீட்சை)
பைஅத், முரீது (தீட்சை)
மனிதனது அறிவை மழுங்கச் செய்யும் எந்தக் காரியத்திற்கும் இஸ்லாத்தில் அறவே அனுமதி இல்லை. பைஅத், முரீது என்பது தான் மனிதனின் அறிவை மழுங்கச் செய்வதில் முதடத்தில் உள்ளது எனலாம். இதை விரிவாகப் பார்ப்போம்.
ஷெய்கு எனப்படுபவர் தன்னிடம் பைஅத் (தீட்சை) வாங்கியவர்களுடன் உள்ளத்தால் தொடர்பு வைத்திருக்கிறார்; முரீதின் (சீடரின்) உள்ளத்தில் ஊடுருவி போதனைகளைப் பதியச் செய்கிறார் என்றெல்லாம் நம்பப்படுகிறது. இந்த நம்பிக்கை இஸ்லாமிய அடிப்படையில் சரியானது தானா? எந்த ஒரு மனிதனும் எந்த மனிதனின் உள்ளத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்த முடியாது என்பது இஸ்லாத்தின் கோட்பாடு.
உள்ளங்களைப் புரட்டக் கூடியவனே! என் உள்ளத்தை உனது மார்க்கத்தில் உறுதியாக ஆக்கி வைப்பாயாக! என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிரார்த்தனையாக இருந்தது.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : திர்மிதீ 3511
மனிதனின் உள்ளங்கள் அல்லாஹ்வின் இரண்டு விரல்களுக்கிடையே உள்ளன. அவன் விரும்பியவாறு அந்த உள்ளங்களைப் புரட்டுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ் (ரலி)
நூல் : முஸ்லிம் 4798
உள்ளங்கள் இறைவனது கைவசத்திலேயே உள்ளன; அதில் எவருக்கும் எந்தப் பங்குமில்லை என்பதற்கு இவை தெளிவான சான்றுகள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் மனைவியர் விஷயத்தில் மிகவும் நேர்மையுடன் நடந்து கொண்டார்கள். அவர்களுக்கிடையே எந்தப் பாரபட்சமும் காட்டியது இல்லை. ஆனாலும் தம் மனைவியரில் ஆயிஷா (ரலி)யை மட்டும் மற்றவர்களை விட அதிகம் நேசித்தார்கள். இவ்வாறு ஒருவர் மீது நேசம் வைப்பது மனிதனின் முயற்சியால் நடப்பது அல்ல. முயற்சியையும் மீறி நடப்பதாகும்.
இதைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது
இறைவா! எனது சக்திக்கு உட்பட்ட விஷயங்களில் நான் சரியாக நடந்து கொள்கிறேன். எனது சக்திக்கு மீறிய (சிலர் மீது அதிக அன்பு வைக்கும்) காரியங்களில் என்னைக் குற்றவாளியாக்காதே! என்று குறிப்பிடுபவர்களாக இருந்தனர்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல்கள் : திர்மிதீ 1059, அபூதாவூத் 1822, நஸயீ 3883 இப்னுமாஜா 1961, அஹ்மத் 23959
தமது உள்ளத்தைக் கட்டுக்குள் கொண்டு வருவது அல்லாஹ்வின் தூதருக்கே இயலவில்லை என்றால், அடுத்தவர் உள்ளங்களில் ஷெய்கு (குரு) எப்படி ஆட்சி செலுத்த முடியும்?
மிகவும் அக்கறையுடனும், ஆர்வத்துடனும், கலப்பற்ற தூய எண்ணத்துடனும் தம் பெரிய தந்தை அபூதாலிபுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போதித்தும் அவர் இஸ்லாத்தை ஏற்கவில்லை. அவரது உள்ளத்தை ஊடுருவி போதனையைப் பதியச் செய்ய இயலவில்லை.
இது பற்றி இறைவன் கூறும் போது
(முஹம்மதே!) நீர் விரும்பியோரை உம்மால் நேர் வழியில் செலுத்த முடியாது! மாறாக,தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர் வழி காட்டுகிறான். அவன் நேர் வழி பெற்றோரை நன்கறிந்தவன்.
அல்குர்ஆன் 28:56
என்ற வசனத்தை அருளினான்.
எத்தனையோ நபிமார்கள் தங்கள் மனைவியருக்கும், மக்களுக்கும், பெற்றோருக்கும் செய்த போதனைகள் பயனளிக்கவில்லை.
மலைகளைப் போன்ற அலை மீது அது அவர்களைக் கொண்டு சென்றது. விலகி இருந்த தன் மகனை நோக்கி அருமை மகனே! எங்களுடன் ஏறிக் கொள்! (ஏக இறைவனை) மறுப்போருடன் ஆகி விடாதே! என்று நூஹ் கூறினார். ஒரு மலையில் ஏறிக் கொள்வேன்; அது என்னைத் தண்ணீரிருந்து காப்பாற்றும் என்று அவன் கூறினான். அல்லாஹ் அருள் புரிந்தோரைத் தவிர அல்லாஹ்வின் கட்டளையிருந்து காப்பாற்றுபவன் எவனும் இன்று இல்லை என்று அவர் கூறினார். அவ்விருவருக்கிடையே அலை குறுக்கிட்டது. அவன் மூழ்கடிக்கப்பட்டோரில் ஆகி விட்டான். பூமியே! உனது தண்ணீரை நீ உறிஞ்சிக் கொள்! வானமே நீ நிறுத்து! என்று (இறைவனால்) கூறப்பட்டது. தண்ணீர் வற்றியது. காரியம் முடிக்கப்பட்டது. அந்தக் கப்பல் ஜூதி மலை மீது அமர்ந்தது. அநீதி இழைத்த கூட்டத்தினர் (இறையருளை விட்டும்) தூரமானோர் எனவும் கூறப்பட்டது. நூஹ், தம் இறைவனை அழைத்தார். என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவன்; உனது வாக்குறுதியும் உண்மையே; நீயே தீர்ப்பு வழங்குவோரில் மேலானவன் என்றார். நூஹே! அவன் உன் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன்; இது நல்ல செயல் அல்ல; உமக்கு அறிவு இல்லதாது பற்றி என்னிடம் கேட்காதீர்; அறியாதவராக நீர் இருக்கக் கூடாது என உமக்கு அறிவுரை கூறுகிறேன் என்று அவன் கூறினான். இறைவா! எனக்கு அறிவு இல்லாதது பற்றி உன்னிடம் கேட்பதை விட்டும் உன்னிடமே நான் பாதுகாப்புத் தேடுகிறேன்; நீ என்னை மன்னித்து அருள் புரியா விட்டால் நஷ்டமடைந்தவனாக ஆகி விடுவேன் என்று அவர் கூறினார்.
அல்குர்ஆன் 11: 42-48
நூஹுடைய மனைவியையும், லூத்துடைய மனைவியையும் (தன்னை) மறுப்போருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் காட்டுகிறான். அவ்விருவரும் நமது இரு நல்லடியார்களின் மனைவியராக இருந்தனர். அவர்களுக்குத் துரோகம் செய்தனர். எனவே அவ்விருவரையும் அல்லாஹ்விடமிருந்து அவர்கள் சிறிதளவும் காப்பாற்றவில்லை. நரகில் நுழைவோருடன் சேர்ந்து இருவரும் நுழையுங்கள்! என்று கூறப்பட்டது.
(அல்குர்ஆன் 66:10)
இவையெல்லாம் நமக்கு என்ன பாடம் கற்பிக்கின்றன?
ஒருவர் எவ்வளவு இறையச்சம் உடையவர் ஆனாலும், தூய்மையான எண்ணம் கொண்டவரானாலும், பழுத்த பழமாக இருந்தாலும் அவர் தனது போதனைகளை எந்த உள்ளங்களிலும் சேர்ப்பிக்க முடியாது என்பது தான் இதிலிருந்து நாம் பெற வேண்டிய பாடம்.
இதற்கு மாற்றமாக பைஅத், முரீது என்பது அமைந்துள்ளது.
எடுத்துக் காட்டாக, முரீது வியாபாரத்தில் நேர்மையான வியாபாரிகள் என்று நம்பப்படும் சிஷ்திய்யா தரீக்காவை எடுத்துக் கொள்வோம். இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மவ்லவிகள் பலரும் இந்த தரீக்காவில் முரீது வாங்கியுள்ளனர்.
ஹுஸைன் அஹ்மத் மதனீ, ரஷீத் அஹ்மத் கங்கோஹி போன்ற பெரியார்களெல்லாம் இதன் கலீஃபாக்களாக இருந்ததாகச் சொல்கிறார்கள்.
தப்லீக் தஃலீம் புத்தகம் எழுதிய முஹம்மது ஜக்கரிய்யா அவர்கள் இந்த தரீக்காவின் வரலாறு பற்றி உருதுவில் எழுதிய நூலை ஆரணியைச் சேர்ந்த கமாலுத்தீன் அவர்கள் (இவர் தமிழகத்தில் இந்த தரீக்காவின் கலீஃபா அதாவது ஏஜெண்ட்) சிஷ்திய்யா ஷைகு வரலாறு என்ற பெயரில் தமிழாக்கம் செய்துள்ளார்.
இவருக்கு நிறைய மவ்லவிகள் இன்றளவும் முரீதுகளாக உள்ளனர். அந்த நூலில் இடம் பெறும் சில சம்பவங்களையே இங்கே நாம் எடுத்துக் காட்டாக கூறப் போகிறோம்.
மஷாயிகுமார்கள் (பெரியார்கள்) தங்களிடமுள்ள குணாதிசயங்களைப் பிறரில் பரவச் செய்கிறார்கள். அதற்கு நடைமுறையில் தவஜ்ஜுஹே இத்திஹாதீ என்று சொல்லப்படுகின்றது.
நூல் சிஷ்திய்யா ஷைகு வரலாறு பக்கம் 10)
இந்த தவஜ்ஜுஹே இத்திஹாதீ சம்பந்தமாக ஹஜ்ரத் காஜா பாக்கிபில்லாஹ் கத்தஸல்லாஹு சிர்ரஹுல் அஸீஸ் அவர்களின் சம்பவம் பிரபல்யமானதாகும். அதை ஷைகு அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள் எழுதியுள்ளார்கள். ஒரு முறை ஹஜ்ரத் அவர்களுடைய வீட்டிற்கு விருந்தனர் பலர் வந்து விட்டனர். விருந்தினரை உபசரிக்க வீட்டில் எதுவுமில்லை. கவலையுடன் ஹஜ்ரத் அவர்கள் வெளியே வந்தார்கள். அருகே ரொட்டிக் கடைக்காரர் ஒருவர் வந்தார். அவர் ஹஜ்ரத் வீட்டிற்கு விருந்தினர் வந்ததைப் பார்த்து விட்டு நல்ல உணவுப் பொருட்களைத் தட்டில் வைத்து எடுத்துக் கொண்டு ஹஜ்ரத்திடம் வந்தார். ஹஜ்ரத் அவர்கள் அம்மனிதரை நோக்கி மகிழ்ச்சி மேலீட்டால், உனக்கு என்ன வேண்டுமோ கேள்! என்றார்கள். அதற்கு அம்மனிதர் உங்களைப் போன்றே என்னையும் ஆக்கி விடுங்கள்! என்றார். ஹஜ்ரத் அவர்கள், நீ சமாளிக்க மாட்டாய் என்றார்கள். எனினும் அம்மனிதர் பல முறை கெஞ்சி வேண்டிக் கொள்ள ஆரம்பித்து விட்டார். பல தடவை மறுத்தும் அவர் கேட்காததால் வேறு வழியின்றி ஹஜ்ரத் அவர்கள் அவரை வேறு அறைக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே தவஜ்ஜுஹே இத்திஹாதீ செய்தார்கள். அறையிலிருந்து வெளியே வந்த போது இருவரின் முகமும் ஒரே மாதிரித் தோற்றமளித்தது. ஹஜ்ரத் காஜா சாஹிப் உணர்வோடு இருந்தார்கள். அம்மனிதரோ உணர்வின்றி இருந்தார். இது தான் வித்தியாசம். அதே உணர்வற்ற நிலையில் மூன்று நாட்கள் இருந்து பின்னர் இறந்து விட்டார்.
நூல் சிஷ்திய்யா ஷைகு வரலாறு பக்கம்: 11, 12)
இப்படியெல்லாம் மூளைச் சலவை செய்யும் மடமைக் கதைகளுக்கும் சுப்ஹானல்லாஹ் சொல்லக் கூடியவர்கள் இருக்கிறார்கள்.
மனிதனை முட்டாளாக்கி, அல்லாஹ்வின் தூதரை விடவும் தன்னை உயர்த்திக் கொள்ள முற்படும் இந்தப் பித்தலாட்டக்காரர்கள் ஷெய்குகளாம்! பக்குவப்பட்டவர்களாம்!
மேலே நாம் காட்டிய சான்றுகளுடன் இதை ஒப்பிட்டுப் பாருங்கள்! இவர்கள் இஸ்லாத்திற்கு எவ்வளவு பகிரங்கமான எதிரிகளாக உள்ளனர் என்பதை அறிவீர்கள்.
கற்பனை உலகில் தங்கள் முரீதுகளை மிதக்க விடுவதற்காக இவர்கள் கட்டியுள்ள கதைகள் எண்ணிலடங்கா.
அப்துல் வாஹித் சார்பாக நதியே நீ காய்ந்து விடு என்று நதியிடம் அப்துல் வாஹித் தன் முரீதுகளை சொல்லச் சொன்னார்களாம். அப்படியே நடந்ததாம்.
நூல் சிஷ்திய்யா ஷைகு வரலாறு பக்கம் : 143)
ஹஜ்ரத் அவர்களிடம் பக்கீர்கள் கூட்டம் ஒன்று வந்ததாம். ஹஜ்ரத் துஆ செய்தததும் காசு மழை பொழிந்ததாம். அதற்கு அல்வா வாங்கிச் சாப்பிட்டார்களாம்.
நூல் சிஷ்திய்யா ஷைகு வரலாறு பக்கம் 143)
நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கொருமுறை நோன்பு திறப்பது இவர்களின் வழக்கமாக இருந்தது. அதுவும் புல் பூண்டுகளைக் கொண்டு நோன்பு திறப்பார்கள்.
நூல் சிஷ்திய்யா ஷைகு வரலாறு பக்கம் 156)
இப்படியெல்லாம் இஸ்லாத்தைத் தகர்த்து தரை மட்டமாக்கும் சம்பவங்கள் ஏராளம்! தன்னைப் போன்ற ஒரு மனிதரை இந்த அளவுக்கு உயர்த்திட இவர்கள் எங்கே கற்றார்கள்?அல்லாஹ்விடமிருந்தா? அல்லாஹ்வின் தூதரிடமிருந்தா? நிச்சயமாக இல்லை.
பண்டாரங்கள், பரதேசிகள் ஆகியோரிடமிருந்து இதைக் கற்று இஸ்லாத்தில் திணித்து விட்டனர். பிறர், இஸ்லாத்திற்கு வருவதற்கு தடைக் கற்களை ஏற்படுத்தி விட்டனர். இவர்கள் கப்ரு வணக்கத்தை ஏற்படுத்தியவர்களை விட மோசமானவர்கள். அல்லது அதற்குச் சற்றும் குறையாதவர்கள்.
மிகவும் உயர்வானது என மதிக்கப்படும் தரீக்காவின் நிலை இது. இதே தரீக்காவில் இன்னும் நவீன கோட்பாடுகள் பல உள்ளன.
காலில் விழச் சொல்லும் ஷெய்குகள்
இசையில் மயங்கும் ஷெய்குகள்
தொழுகை போன்ற வணக்கங்கள் தேவையில்லை எனக் கூறும் ஷெய்குகள்
என்றெல்லாம் பல பித்தலாட்டக்காரர்கள் உள்ளனர்.
ஒழுங்கான இஸ்லாமிய ஆட்சி நடந்தால் இவர்களெல்லாம் மரண தண்டனைக்கு உரியவர்கள்.
திருக்குர்ஆன் விரிவுரையாளர்களில் அனைத்து தரப்பினாலும் ஏற்கப்பட்ட ஹிஜ்ரி 971ல் மரணமடைந்த இமாம் குர்துபீ (முஹம்மத் பின் அஹ்மத் அல் அன்ஸாரி) அவர்கள் தமது அல் ஜாமிவுல் அஹ்காமில் குர்ஆன் எனும் திருமறை விரிவுரை நூலில் குறிப்பிடுவதை இங்கே எடுத்துக் காட்டுவது பொருத்தமாக இருக்கும்.
சூஃபியாக்களின் கொள்கை முட்டாள் தனமானதும், வழிகேடும் ஆகும். இஸ்லாம் என்பது அல்லாஹ்வின் வேதத்தையும், அவன் தூதருடைய நடைமுறையையும் தவிர வேறில்லை. நடனமாடுவது, இறைக் காதல் என்பதெல்லாம் ஸாமிரி என்பவன் உருவாக்கியதாகும். இஸ்லாமிய ஆட்சியாளர்கள், இவர்கள் பள்ளிவாசலுக்கு வருவதைத் தடுத்து நிறுத்துவது அவசியமாகும். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புகின்ற எவரும் இவர்களின் அவைக்கு வருகை தரக் கூடாது. இவர்களின் தவறுக்கு துணை நிற்கலாகாது. இது தான் இமாம் மாலிக், இமாம் அபூஹனீபா, இமாம் ஷாபீ, இமாம் அஹ்மத் பின் ஹம்பல் மற்றும் முஸ்லிம் அறிஞர்களின் முடிவாகும் என அபூபக்கர் தர்தூஷி அவர்கள் சூபியாக்கள் பற்றிய கேள்விக்கு விடையளித்தார்கள்.
(பார்க்க தாஹா அத்தியாயம் 92 வது வசனத்தின் விரிவுரை)
இந்த வழிகெட்ட சூபியாக்கள் நான்கு மத்ஹபுகளுக்கும் கூட அப்பாற்பட்டவர்கள் என்பதற்கு குர்துபி அவர்களின் இந்தக் குறிப்பு சான்றாக அமைந்துள்ளது.