Sidebar

19
Fri, Jun
சமீபத்திய செய்திகள்

345. இறைவன் உண்டு என்பதற்குச் சான்று

இவ்வசனங்களில் (30:37, 39:52) நாடியோருக்கு இறைவன் தாராளமாக உணவளிக்கிறான். நாடியோருக்கு அளவோடும் உணவு வழங்குகிறான் என்று கூறிவிட்டு "சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன'' என்று அல்லாஹ் கூறுகிறான்.

உலகில் பெரிய அறிஞர்கள், மாபெரும் விற்பன்னர்கள், திறமைசாலிகள், கடின உழைப்பாளிகள் போன்ற ஏராளமான மக்கள் வறுமையில் உழல்வதை ஒரு பக்கம் பார்க்கிறோம்.

திறமையில்லாதவர்கள், குறைந்த உழைப்புடையவர்கள், பல விஷயங்களைப் பற்றிய போதுமான அறிவு இல்லாதவர்கள், திட்டமிடத் தெரியாதவர்கள் எனப் பலரும் கோடிக் கணக்கான முதலீட்டில் வியாபாரம் மற்றும் தொழில் செய்யும் நிலையையும் இன்னொரு பக்கம் பார்க்கிறோம். திறமைமிக்கவர்கள் குறைந்த அளவிலேயே வெற்றி பெறுவதையும் பார்க்கிறோம்.

இங்கே தான் இறைவன் இருக்கிறான் என்பது நிரூபணம் ஆகிறது. மனிதனின் உழைப்பினாலும், திறமையினாலும் தான் பொருளாதாரம் கிடைக்கிறது என்று சொன்னால் திறமையில்லாத, படிப்பறிவு இல்லாத பலர் பல கோடிகளுக்கு அதிபதிகள் ஆனது எப்படி?

இறைவன் ஒருவன், தான் நினைத்தவாறு நடைமுறைப்படுத்தினால் மட்டுமே இது சாத்தியமாகும். இறைவன் இல்லை என்று சொன்னால் உலகத்தில் திறமைசாலிகள் வசதி படைத்தவர்களாகவும், திறமையற்றவர்கள் பரம ஏழைகளாகவும் தான் இருக்க முடியும்.

அவ்வாறு இல்லாத இந்தச் சூழ்நிலையே இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதைச் சந்தேகமற நிரூபிக்கும் சான்றுகளாக இருக்கின்றன. இதைத் தான் சிந்திக்கும் மக்களுக்குச் சான்றுகள் இருப்பதாக இவ்வசனம் கூறுகிறது.

உணவுக்கு இறைவன் பொறுப்பு என்றால் பட்டினிச்சாவு ஏன்?

இவ்வசனங்களில் (6:14, 6:151, 10:31, 11:6, 17:31, 22:58, 26:79, 27:64, 29:60, 30:40, 34:24, 35:3, 51:58, 62:11, 65:3, 67:21, 106:4) அனைவரின் உணவுக்கும் அல்லாஹ்வே பொறுப்பாளன் என்று கூறப்பட்டுள்ளது.

அனைத்து உயிரினங்களுக்கும் இறைவன் உணவளிக்கிறான் என்றால் பட்டினிச்சாவுகள் ஏற்படுகிறதே? அப்படியானால் உணவுக்கு இறைவன் பொறுப்பேற்கவில்லையா என்று சிலர் விதண்டாவாதம் செய்கிறார்கள்.

இறைவன் உணவுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டதால் ஒருவரும் எப்போதும் சாகக் கூடாது என்று இவர்கள் கேட்பார்களா? உணவுக்கு இறைவன் பொறுப்பு என்றால் எவ்வளவு காலம் ஒருவன் வாழ வேண்டும் என்று இறைவன் முடிவு செய்துள்ளானோ அந்தக் காலம் வரை இறைவன் பொறுப்பு என்பது தான் இதன் பொருள்.

மேலும் இறைவனைத் தவிர யாரும் பொறுப்பேற்க முடியாது என்பதும் இதன் கருத்தாகும்.

உணவு மட்டுமின்றி எல்லா பாக்கியங்களுக்கும் இறைவன் தான் பொறுப்பு என்றாலும் அனைத்துமே நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவைக் கொண்டதாகும். நிரந்தரமானதல்ல. எவ்வளவு காலத்துக்கு இறைவன் பொறுப்பேற்றுள்ளானோ அந்தக் காலம் வரை அவன் உணவளிப்பான் என்பதுதான் இதன் பொருள்.

திருக்குர்ஆனின் பல்வேறு வசனங்களில் மனிதனுக்கு வழங்கப்படும் அனைத்தும் காலக்கெடுவுடன் கூடியதாகும் என்று அல்லாஹ்வே தெளிவுபடுத்தி விட்டான்.

இதை 6:2, 7:34, 10:49, 11:3, 16:61, 71:4 ஆகிய வசனங்களில் காணலாம்.

ஒருவனுக்கு எப்போது மரணம் என்று இறைவன் நிர்ணயம் செய்துள்ளானோ அதுவரை தான் உணவுக்கு இறைவன் பொறுப்பேற்றுள்ளான். தவணை வந்து விட்டால் பொறுப்பேற்றல் என்பது கிடையாது.

இது உணவுக்கு மட்டும் அல்ல. அனைத்துக்கும் உள்ள பொதுவான விதியாகும். ஒரு மனிதனின் ஆரோக்கியத்துக்கு இறைவன் தான் பொறுப்பு. ஒருவனின் பாதுகாப்புக்கும் இறைவன் தான் பொறுப்பு என்று கூறப்பட்டால் எந்த மனிதனுக்கும் நோய் வராது என்றும், எந்த மனிதனும் சாக மாட்டான் என்றும் அறிவுடைய மக்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள்.

கடவுளுடன் தான் விவாதிப்பேன் என்ற வாதம் சரியா?

மசூது, கடையநல்லூர்

மனுஷ்ய புத்திரனுக்கு நாம் விவாத அழைப்பு கொடுத்த போது அதை ஏற்காமல் தவிர்ப்பதற்காக கடவுளின் சட்டம் குறித்து கடவுளிடம் தான் விவாதிப்பேன் என்கிறார்.

மரண தண்டனை கடவுள் கொடுத்த தண்டனையா என்பது விவாதத் தலைப்பாக இருந்தால் கூட இவர் இப்படி கூறி தப்பிக்க முடியாது.

கடவுளின் சொல் என்று மனிதனாகிய நான் தான் அவரிடம் சொல்கிறேன். அது குறித்து என்னிடம் தான் அவர் விவாதிக்க வேண்டும். கடவுளே இவரிடம் நேரடியாகக் கூறும் போது கடவுளிடம் விவாதித்துக் கொள்ளட்டும்.

ஆனால் தலைப்பு இப்படி இருந்தால் கூட இது மனிதன் செய்யக் கூடிய வாதமல்ல.

ஆனால் நான் இரண்டு விஷயங்களுக்குத் தான் விவாத அழைப்பு கொடுக்கிறேன்.

குற்றங்களைக் குறைக்க மரண தண்டனை தான் ஒரே வழி. இது ஒரு தலைப்பு. இதில் கடவுள் இழுக்கப்பட மாட்டார். மரண தண்டனை சரியா இல்லையா என்பது தான் விவாதிக்கப்படும், இதற்கு ஏன் கடவுள் வர வேண்டும்?

மரண தண்டனை கூடாது என்று இவர் மனிதர்களிடம் தான் கூறினார். அதைப் பார்த்த மனிதன் தான் விவாதத்துக்கு அழைக்கிறேன்.

ஒரு அப்பாவிக்கும், சிறுமிக்கும் சவூதியில் மரண தண்டனை கொடுத்து விட்டனர் என்று மனிதர்களிடம் தான் இவர் பேசினார். அது பொய் என்று கூறி விவாதிக்க அழைக்கிறேன். இப்போது சொல்லுங்கள் இது அறிவார்ந்த கேள்வியா?

29.01.2013. 0:15 AM

More Articles …