Sidebar

18
Thu, Jun
சமீபத்திய செய்திகள்

ஹாமித் பக்ரி கைதும் கைவிட்ட தமுமுகவும்

(பத்து ஆண்டுகளுகு முன் 2010ல் எழுதப்பட்ட ஆக்கம்)

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் மாநிலப் பேச்சாளரும் அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பின் (இது தான் பின்னர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.) முன்னாள் மாநிலத் தலைவருமான மல்லவி ஹாமித் பக்ரி 2002 ஆம் ஆண்டு புனித ரமலான் மாதம் பிறை 27 ல் (2/12/2002) கைது செய்யப்பட்டார்.

பொதுவாக அநியாயமாக யார் கைது செய்யப்பட்டாலும் குரல் கொடுப்பதற்காகவும், களம் இறங்கி போராடுவதற்காகவும் இருந்த ஒரே அமைப்பாக அன்று தமுமுக மட்டுமே இருந்தது. இந்த இயக்கத்துடன் தொடர்பு இல்லாதவர்கள் பாதிக்கப்படும் போது கூட இந்த இயக்கம் பல்வேறு போராட்டங்களை நடத்தியிருந்தது.

ஹாமித் பக்ரி இந்த இயக்கத்தின் ஆரம்ப கால தூண்களில் ஒருவராக இருந்தும், தமுமுக இயக்கத்தை நாடு முழுவதும் பிரச்சாரத்தின் மூலம் கொண்டு சென்ற பேச்சாளர்களில் ஒருவராகவும், பீஜே, ஜவாஹிருல்லா, ஹைதர், பாக்கர், ரிபாயி உள்ளிட்ட தமுமுகவில் அன்றைய தலைவர்களின் தனிப்பட்ட நண்பராக இருந்தும் ஹாமித் பக்ரி கைது செய்யப்பட்டதற்காக அன்றைய தமுமுக கண்டன அறிக்கை விடவில்லை. அவரை விடுதலை செய்வதற்காக எந்தப் போராட்டத்தையும் அறிவிக்கவில்லை. கைது செய்யப்பட்ட ஹாமித் பக்ரி வழக்குக்காக உதவி கேட்டு தமுமுகவுக்கு கடிதம் எழுதிய போதும் அவருக்கு எந்த உதவியும் செய்யவில்லை.

இது உண்மையில் அன்றைக்கு பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கும்.

யார் யாருக்கோ போராட்டம் நடத்திய தமுமுக இயக்கம் ஹாமித் பக்ரிக்காக ஏன் போராட்டம் நடத்தவில்லை? என்ற கேள்வி நியாயமானது என்றாலும் அதற்குப் பகிரங்கமாக தமுமுக எந்தப் பதிலும் சொல்லவில்லை.

செயல் வீரர்கள் கூட்டத்தில் நெருக்கமானவர்கள் மத்தியில் மட்டும் தான் தமுமுக விளக்கம் அளித்ததே தவிர மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் எந்த விளக்கத்தையும் தமுமுக அளிக்கவில்லை.

தமுமுக எப்படி ஹாமித் பக்ரியை கைவிட்டதோ அது போல் அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பும் ஹாமித் பக்ரியைக் கை விட்டது. அவருக்காக எந்த உதவியும் செய்யவில்லை. மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளக் கூடிய வகையில் வெளிப்படையான எந்த விளக்கத்தையும் தவ்ஹீத் ஜமாஅத்தும் அளிக்கவில்லை.

தமுமுக அவரைக் கைவிட்டதிலும் தவ்ஹீத் ஜமாஅத் அவரைக் கைவிட்டதிலும் எனக்கும் பங்கு உண்டு. சொல்லப் போனால் அதிகப் பங்கு உண்டு. தமுமுக மீது பழியைப் போட்டு விட்டு நான் ஒதுங்க முடியும் என்றாலும் நானே சம்மந்தப்பட்ட விஷயத்தில் எனக்குப் பொறுப்பு இல்லை என்று மறுக்கும் கயமைத்தனம் பொய்யனுக்குத் தேவையாக இருக்கலாம். எனக்குத் தேவை இல்லை.

இது நம்ப முடியாத ஆச்சரியமாகவே மக்களுக்கு இருந்தது.

அப்போது தமுமுகவோ, தவ்ஹீத் ஜமாஅத்தோ வாய் திறந்திருந்தால் ஹாமித் பக்ரியின் நிலை இன்னும் மோசமாகப் போய் இருக்கும் என்பதால் இரண்டு இயக்கங்களும் அசாத்திய மவுனம் சாதித்தன.

ஆனால் இன்று எல்லாம் பழைய செய்தியாகி விட்டதால் இப்போது இந்த உண்மைகளைக் கூறுவதால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது என்பதால் இந்த உண்மைகளை நாம் சொல்லும் நிலை ஏற்பட்டு விட்டது. பொய்யன் கூட்டமும் இந்த உண்மைகள் வெளிவர வேண்டும் என்று பிரச்சாரம் மேற்கொண்டிருப்பதால் நாம் இந்த விஷயத்திலும் வாய் திறக்கும் அவசியம் திணிக்கப்பட்டு விட்டது.

இது குறித்த உள் விபரங்களுக்குச் செல்வதற்கு முன்னாள் ஹாமித் பக்ரி எதற்காகக் கைது செய்யப்பட்டார்? எப்படி அவர் கைது செய்யப்படும் நிலை ஏற்பட்டது என்பதை நாம் விளக்க வேண்டியுள்ளது.

மவ்லவி அப்துர் ரஹ்மான் ஷிப்லி தென்காசியைச் சேர்ந்தவர். தமுமுகவில் நெல்லை மாவட்டத்தில் மாவட்டப் பொறுப்பை வகித்தவர். அவர் வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டில் நம்முடைய தவ்ஹீத் பள்ளியில் இமாமாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் ஹாமித் பக்ரி கைது செய்யப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் ஆந்திரப் போலீஸார் அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் நடந்த குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்டவரிடம் அல்லது கொல்லப்பட்டவரிடம் கைப்பற்றப்பட்ட செல் போனில் அப்துர் ரஹ்மான் ஷிப்லியின் போன் நம்பர் பதிவாகி இருந்ததன் அடிப்படையில் அவர் செய்யப்பட்டார்.

அவருக்காக நாங்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தவுள்ளோம் என்று பேர்ணாம்பட் தமுமுக கிளை தெரிவித்த போது தமுமுக தலைவர்கள் இதற்காக போராட்டம் நடத்த வேண்டாம் கூறினார்கள். நானும் அதையே கூறி காரணத்தையும் விளக்கினேன். காரணத்தைப் பரப்ப வேண்டாம் என்றும் கூறினேன்.

இதன் பின்னர் அப்துர்ரஹ்மான் ஷிப்லி கொடுத்த தகவலின் படி தான் 2/12/2002 அன்று ஹாமித் பக்ரி கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் போலீஸ் படை குவித்து சோதனை செய்யப்பட்டது. அவர் நடத்திய தாவா செண்டரும் சோதனை இடப்பட்டது. அவர் முதல்வராக இருந்த ஆயிஷா சித்தீகா பெண்கள் கல்லூரியிலும் சோதனை நடத்தப்பட்டு காயல்பட்டணமே அல்லோல கல்லோலப்பட்டது.

இது குறித்து காயல்பட்டணம் தமுமுகவினரும், உள்ளூர் பிரமுகர்களும் தமுமுக தலமையின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர். ஏதாவது செய்யும்படி கேட்டுக் கொண்டனர். ஆனால் தமுமுக இதில் இப்போது நாம் தலையிட முடியாது. 8/12/2002 அன்று பீஜே கலந்து கொள்ளும் பொதுக் கூட்டம் உங்கள் ஊரில் நடக்க உள்ளதால் அபோது பீஜே வரும் போது அதற்கான காரணங்களை தமுமுக சார்பில் தெரிவிப்பார் என்று அனைவருக்கும் ஒரே பதில் சொல்லப்பட்டது.

ஹாமித் பக்ரி கைது செய்யப்பட்ட மறு நாளோ அல்லது அதே நாளிலோ காயல்பட்டிணம் ஜாமியுல் அஸ்ஹர் இமாம் மவலவி அப்துல் மஜீத் மஹ்ளரி கைது செய்யப்பட்டார். இதே காரணத்துக்காக அதிராம்பட்டிணம் தவ்பீக் என்பவரும். சென்னை மணடி ஜக்கரியா என்பவரும் கைது செய்யப்பட்டனர்.

யாருக்கும் அறிமுகமில்லாத மல்லிப்பட்டிணத்தைச் சேர்ந்த இருவரோ, மூவரோ இதே காரணத்துக்காக கைது செய்யப்பட்டனர். பின்னர் பின்னர் இந்த வழக்கு குற்றாலத்தில் ரகசியக் கூட்டம் நடத்திய வழக்காக மாற்றப்பட்டது.

மூன்று மவ்லவிகள் உள்பட பத்துக்கும் உட்பட்டவர்கள் கைது செய்யப்பட்டும் தமுமுகவும், அனைத்து தவ்ஹீத் ஜமாஅத்தும் மவுனம் சாதித்தது.

அது மட்டுமில்லாமல் உணர்வு இதழில் தமுமுக சார்பில் முக்கிய அறிவிப்பு ஒன்றும் வெளியிடப்பட்டது.

அந்த அறிவிப்பு இது தான்

இந்த அறிவிப்பு ஹாமித் பகரி கைது விஷயத்தில் தமுமுக தலையிடாது என்பது மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

இந்த அறிவிப்பு வெளியிடப்படும் போது தமுமுக தலைவராக ஜவாஹிருல்லாவும், பொதுச் செயலாளராக ஹைதர் அலியும், பொருளாளராக பாக்கரும் இருந்தனர். நான் அமைப்பாளராக இருந்தேன்.

அனைவரும் சேர்ந்து தான் இந்த அறிவிப்பை வெளியிட்டோம். இதில் அனைவரும் சம பங்காளிகள் என்று இருந்தும் பொய்யன் (பாக்கர்) கூட்டம் வழக்கம் போல் ஹாமித் பக்ரிக்கு பீஜே அநீதி இழைத்து விட்டார் எனக் கூறி முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கப் பார்க்கிறது. ஹாமித் பக்ரியைக் கைவிட்டதில் பீஜேக்கு உரிய பங்கு போல் பொய்யருக்கும் உண்டு என்பதற்கு இது ஆதாரமாகும்.

அத்துடன் அதே பக்கத்தில் பெண்கள் மதரஸா பற்றிய அறிவிப்பு ஒன்றும் என் பெயரில் வெளியிடப்பட்டது. ஹாமித் பக்ரியின் இரண்டாம் மனைவி மதுரையில் நடத்திய பெண்கள் மதரஸாவுக்கு என் பெயரைப் பயன்படுத்தி வசூல் வேட்டை ந்டத்தியதால் அதற்கும், எனக்கும் சம்மந்தம் இல்லை என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதுவும் நிர்வாகிகள் அனைவரும் ஆலோசித்தே உணர்வில் வெளியிடப்பட்டது.

இந்த உணர்வு அறிக்கை பைண்டிங் செய்யப்படட் புத்தகத்தில் இருந்து ஸ்கேன் செய்யப்பட்டது. அதானல் ஒரப்பகுதி ஸ்கேனில் வரவில்லை. நாளை பைண்டிங்கை பிரித்து முழுமையாக வாசிக்கும் வகையில் இன்ஷா அல்லாஹ் வெளியிடுகிறேன்.

இப்படி ஹாமித பக்ரியையும் இன்னும் சிலரையும் நாங்கள் அனைவரும் சேர்ந்து கைவிடக் காரணம் என்ன? இன்ஷா அல்லாஹ் நாளை அதை விளக்குகிறேன்.

இல.கனேசனுடன் கைகோர்த்த ஜவாஹிருல்லாஹ்

ஜவாஹிருல்லாவின் பொய்யான வாதங்கள்

பா.ஜ.க.வுடன் கைகோர்த்த ம.ம.கட்சி என்ற தலைப்பில், ஜவாஹிருல்லா சங்பரிவாரத் தலைவர் இல.கணேசனுடன் கைகோர்த்து போஸ் கொடுத்து நின்ற செய்தியை புகைப்படத்துடன் வெளியிட்டிருந்தோம்.

பி.ஜே.பி.யின் மூத்த தலைவர் இல.கணேசனுடன் கை கோர்த்து போஸ் கொடுத்து நின்றது ஏன்? என்பதற்கு அற்புதமான(?) விளக்கத்தை ஜவாஹிருல்லாஹ் அளித்துள்ளார்.

அதொல்லியல் துறையால் கோவில் கையகப்படுத்துவதை தடுத்து நிறுத்தக் கோரி நடைபெற்ற போராட்ட்த்தில் இல கனேசனுடன் கலந்து கொண்டதைப் பின்வருமாறு ஜவாஹிருல்லா நியாயப்படுத்துகிறார்.

மாமல்லபுரத்தில் ஏற்கெனவே இந்திய தொல்லியல் துறை (Archeological Survey of India) வழிபாடு இல்லாத 32 பழங்கால கோயில்கள் மற்றும் புராதான இடங்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் முன்பே கொண்டு வந்தது. தற்போது புதிய சட்டத்தின் கீழ் எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டு பிறகு 14ஆம் நூற்றாண்டில் புணரமைக்கப்பட்டு மக்கள் வழிபாட்டில் இருக்கும் தலசயானப் பெருமாள் கோயிலும் புராதானச் சின்னம் என தொல்லியல் துறை அறிவித்தது. இதன் காரணமாக ஹிந்துப் பெருங்குடி மக்களின் வழிப்பாட்டு உரிமை பறிக்கப்பட்டதுடன் இந்தக் கோயிலைச் சுற்றி 300 மீட்டர் அளவிற்கு வாழும் அனைத்து சமூக மக்களின் வாழ்வுரிமையும் பறிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தொல்லியல் துறை எடுத்துள்ள 32 இடங்கள் மற்றும் கடைசியாக எடுத்த தலசயானப் பெருமாள் கோயிலும் புராதானச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதால் மாமல்லபுரத்தில் எவ்வித கட்டுமானப் பணியோ அல்லது புனரமைப்புப் பணியோ அல்லது ஒரு மின்விசிறியை மாற்றி மாட்டும் பணியோ முடங்கிப் போகும் சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மாமல்லபுரத்தில் வாழும் 200க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான முஸ்லிம் வியாபாரிகள் உட்பட அனைத்து சமுதாய மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டுள்ளது. இப்படி தொல்லியல் பாதுகாப்பு என்ற பெயரில் மக்கள் வாழும் மாமல்லபுரத்தை மயான பூமியாக மாற்ற இந்திய தொல்லியியல் துறை திட்டமிட்டத்தைக் கண்டித்துத் தான் பல்வேறு போராட்டங்களின் ஒரு பகுதியாக கடந்த ஜுன் 28 அன்று தொடர் முழக்கப் போராட்டத்திற்கு மாமல்லபுரத்தில் உள்ள அனைத்து கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்தன என்று முதலில் தான் ஏன் அந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றேன்

என்று ஜவாஹிருல்லாஹ் சொல்லுகின்றார்.

மாமல்லபுரத்திலுள்ள முஸ்லிம்களும் தொல்லியல் துறையின் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்படுவார்களாம். அதனால் தான் முஸ்லிம்கள் நலம் நாடி இந்தப் போராட்டத்தில் சங்பரிவாரக் கும்பலோடு கைகோர்த்ததாக சொல்லுகின்றார்.

இவர் சொல்லும் காரணம் சரியானது தானா? இவர் கூறுவது உண்மையா? என்பதை நாம் இப்போது ஆய்வு செய்வோம்.

அதாவது தொல்லியல்துறை இந்தக் கோவிலை கையில் எடுத்தால் மாமல்லபுரத்தில் வாழும் 200க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான முஸ்லிம் வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் என்ற  வாதம் முற்றிலும் பொய்யானது.

அவர் தனது அறிக்கையில், மாமல்லபுரத்தில் ஏற்கெனவே இந்திய தொல்லியல் துறை (Archeological Survey of India) வழிபாடு இல்லாத 32 பழங்கால கோயில்கள் மற்றும் புராதான இடங்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் முன்பே கொண்டு வந்தது என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது ஏற்கனவே மாமல்லபுரத்திலுள்ள 32 கோவில்களையும், பழங்கால கட்டடங்களையும் தொல்லியல்துறை கையில் எடுத்துள்ளதால் இவரது கூற்றுப்படி அங்கு அதைச் சுற்றியுள்ள 300மீட்டர் தூரம் அளவுக்கு எந்த முஸ்லிமுடைய வீட்டிலும் மின்விசிறி கூட மாற்ற முடியாத நிலை இதற்கு முன்பே இருந்து இருக்க வேண்டும்

அப்படியானால் தற்போது தலசயன பெருமாள் கோவிலை தொல்லியல் துறை கையில் எடுத்தால் என்னென்ன புதிய சட்ட திட்டங்கள் போடுவார்களோ, அந்தப் புதிய வரையறைகள் எல்லாம் ஏற்கனவே மாமல்லபுரத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. இப்பொழுது இந்த தலசயன பெருமாள் கோவிலை தொல்லியல்துறை கையில் எடுப்பதால் புதிதாக எந்த முஸ்லிமும் பாதிக்கப்படப் போவதில்லை என்ற உண்மை இவரது அறிக்கையிலிருந்தே வெளிப்படுகின்றது.

ஏற்கனவே 32 கோவில்களை கையகப்படுத்தியபோது எந்த முஸ்லிமும் கொதித்தெழவில்லை. எந்த முஸ்லிம் அமைப்புகளும் போராட்டம் நடத்தவில்லை. தற்போது இந்தப் போராட்டத்தை அறிவித்தவர்களும் முஸ்லிம்கள் இதில் பாதிக்கப்படுகின்றார்கள் என்று சொல்லவில்லை. அப்படியிருக்கையில் தான் செய்த ஈனச் செயலை நியாயப்படுத்தத்தான் இந்த பதிலை யோசித்து தயார் செய்துள்ளார் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

இதனால் கோவிலில் நடைபெறும் சிறப்பு பூஜைகள் தடைபட்டு விடும் என்பது தான் பிரதானப் பிரச்சனையே தவிர முஸ்லிம்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.

இச்சட்டத்தின் கீழ் தமிழக அரசின் தலைமைச் செயலகம் அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டையும் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரின் அறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்றாலும் தொல்லியல் துறையின் முன் அனுமதி பெற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு இச்சட்டத்தை எதிர்க்க வேண்டும், மத்திய அரசு இச்சட்டத்தைக் கைவிட வேண்டும் என்று பேசினேன் என்று அடுத்து ஒரு புளுகை அவிழ்த்துவிட்டுள்ளார் ஜவாஹிருல்லாஹ்

அதாவது ஜார்ஜ் கோட்டையான தலைமைச்செயலகத்தை தொல்லியல்துறை கையகப்படுத்தியுள்ளது என்றால் அதிலிருந்து 100மீட்டர் தொலைவுக்கு உள்ள பகுதி தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதா? அந்த 100மீட்டர் தொலைவிற்குள் எந்த ஈ காக்காயும் போவதில்லையா?

மேலும், தலைமைச்செயலகத்திலிருந்து 300மீட்டர் தொலைவிற்குள் உள்ள எந்த கட்டடத்திலும் ஆணி அடிக்கப்படுவதில்லையா? மின்விசிறி மாற்றப்படுவதில்லையா? கட்டுமானங்கள் நடைபெறுவதில்லையா? என்ற கேள்விக்கு இவர் பதிலளிக்க வேண்டும்.

மாமல்லபுரத்தில் உள்ள பள்ளிவாசல் பாதிக்கப்படுமாம்:

அடுத்ததாக, நான் பேசிய மேடையில் மாமல்லபுரம் முஸ்லிம் ஜமாஅத்தின் தலைவரும் இருந்தார். பேசி முடித்த பிறகு மக்ரிப் தொழுகைக்காக மாமல்லபுரம் பள்ளிவாசலுக்கு அவருடன்தான் சென்றேன். இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அந்தப் பள்ளிவாசலும் பாதிக்கப்படும் நிலை உள்ளதை என்னால் அறிய முடிந்தது என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டு தான் செய்த செயலுக்கு புதிய ஆதாரத்தை உருவாக்க முயல்கின்றார் ஜ்வாஹிருல்லாஹ்

அந்த கோவிலை தொல்லியல் துறை கையில் எடுத்தால் நமது பள்ளிவாசலும் பாதிக்கப்படும் என்று தூர(?) நோக்கோடு சிந்திக்கக்கூடிய இவரிடம் ஒரு கேள்வியை கேட்க விரும்புகின்றோம்.

இந்தப் போராட்டத்தில் இல.கணேசனுடன் போஸ் கொடுத்துவிட்டு வந்த பிறகுதான் பள்ளிவாசல் மேல் உங்களுக்கு அக்கறை வந்ததா? பள்ளிவாசல்கள் மேல் இவ்வளவு அக்கறை உள்ளதால்தான், பாபர் மசூதிக்கு சொந்தமான இடத்தை, மூன்றாகப் பிரித்து இடித்தவனுக்கு இரண்டு பங்கும், இழந்தவனுக்கு ஒரு பங்கும் வழங்க வேண்டும் என்ற அலகாபாத் நீதிபதிகளின் கட்டப்பஞ்சாயத்துத் தீர்ப்பை, அற்புதமான தீர்ப்பு; அதை நாங்கள் வரவேற்கின்றோம் என்று வரவேற்று அறிக்கை விட்டீர்களா? இதுதான் நீங்கள் பள்ளிவாசல்களை பாதுகாக்கும் லட்சணமா?.

ஒரு கோவிலை தொல்லியல் துறை கையில் எடுத்தால், அதைச் சுற்றியுள்ள பள்ளிவாசல்கள் பாதிக்கப்படும் என்று சட்டம் பேசும் தாங்கள், இராமேஸ்வரத்தை புனித பூமியாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தீர்களே! அப்படி புனித பூமியாக அறிவிக்கப்பட்ட ஊரில் உள்ள பள்ளிவாசல்கள் அனைத்திற்கும் ஆப்பு வைக்கப்படும் என்ற உண்மையைத் தெரிந்து கொண்டுதானே இந்தக் கோரிக்கையை வைத்தீர்கள்.

இப்படி பள்ளிவாசல்களுக்கு மூடுவிழா நடத்த அறிக்கை வெளியிட்டு, கோரிக்கை வைத்த தாங்கள் தான் பள்ளிவாசல் நலனிற்காக இல.கணேசனுடன் சேர்ந்து போராட்டம் நடத்தினீர்களா?

அடுத்து ஜவாகிருல்லா சொல்வதைக் கேளுங்கள்!

நேரடியாக மேடைக்கு வந்து எனக்கு அருகில் தான் உட்காருவேன் என்று அடம் பிடித்து என் அருகில் இல.கனேசன் அமர்ந்துக் கொண்டார். உடனே பத்திரிகையாளர்கள் அனைவரையும் எழுந்து நின்று புகைப்படம் எடுக்க கைகோர்த்து நிற்கச் சொல்ல மேடையில் இருந்த நெருக்கடியின் காரணமாக நான் நகர முடியாமல் மனதில் பெரும் வருத்தத்துடன் இல. கணேசனுடன் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது என்று கூறியுள்ளார்.

அனைவரும் எழுந்து உற்சாகமாக கைகோர்த்து பத்திரிக்கையாளர்களுக்கு போஸ் கொடுக்கும் வீடியோ காட்சி சன் நியூஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அந்த வீடியோவில் இல.கணேசனுடைய கையை பிடித்துக் கொண்டு இவர் விடாததும், இல.கணேசன் இவரது கையை உதறிவிடும் காட்சியும் தெளிவாக ஒளிபரப்பப்பட்டன.

இலகணேசன் வருவது முன்கூட்டியே தெரியுமாம்:

இவர் வெளியிட்ட மறுப்பு அறிக்கைக்குப் பிறகு தான் தெரிகின்றது. இல.கணேசன் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள வருகின்றார் என்ற செய்தி இவரிடம் முன்பே சொல்லப்பட்டுள்ளது.

;பிற மக்களின் வழிபாட்டு உரிமையை பறிக்கும் மார்க்கம் அல்ல இஸ்லாம் என்பதற்கு சான்றாக கலீபா உமர் (ரலி) அவர்கள் ஆட்சியின் கீழ் ஜெருசலம் நகரம் முஸ்லிம்களின் ஆளுகையின் கீழ் வந்த நிலையில் அந்நகரில் கலீபா உமர் (ரலி) அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு அவர்களை அந்நகரின் கிறிஸ்தவத் தலைமை குரு சோபோர்னிசிஸ் அந்நகரைச் சுற்றிக் காட்டிய நிகழ்ச்சியையும் ஏசு நாதர் பிறந்ததாக சொல்லப்படும் தேவலாயத்திற்கு (Church of Nativity) சென்று அதனை பார்வையிட்டுக் கொண்டிருந்த நேரத்தில் பாங்கு சொல்லப்பட்ட வேளையில் அந்த தேவலாயத்திலேயே தொழுகையை நிறைவேற்றும்படி அந்த பாதிரியார் கேட்டுக் கொள்ள அதனை உமர் ரலி மறுத்ததையும் எடுத்துக் கூறினேன். நான் இங்கு இப்போது தொழுதால் பிற்காலத்தில் முஸ்லிம்கள் இது எங்கள் கலீபா தொழுத இடம் என்று உங்கள் வழிப்பாட்டு உரிமை கோரக்கூடும். அதற்கு நான் வழி வகுக்க விரும்பவில்லை என்று உமர் (ரலி) தொழுவதற்கு மறுப்புத் தெரிவித்ததற்கான காரணத்தை விளக்கி பேசினேன். நான் இந்த கருத்தைத் தெரிவித்த போது போராட்டத்தில் பங்குக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் இஸ்லாத்தின் இந்த அற்புதமான சகிப்புத்தனத்தை அங்கீகரிக்கும் வகையில் பெரிய கரகோஷத்துடன் அதனை வரவேற்றனர் என்று தான் பேசிய பேச்சிற்கு பலத்த கரகோஷம் கிளம்பியதாக கூறியுள்ளார் ஜவாஹிருல்லாஹ்

முதலில்,

இவர் கூறிய இந்தச் சம்பவத்திற்கு எந்த ஆதாரத்தையும் இவர் காட்டவில்லை.

இது ஆதாரப்பூர்வமான செய்திதான் என்பதற்கு சரியான சான்றை தர வேண்டும்

அடுத்ததாக, இந்தச் சம்பவம் முஸ்லிம்கள் எல்லாம் அடாவடித்தனம் செய்யக்கூடியவர்கள் என்ற கருத்தை தரக்கூடியதாக உள்ளது.

ஒரு கலீபா தொழுத இடம் என்பதற்காக பிறமத வழிபாட்டுத்தலத்தை முஸ்லிம்கள் தங்களுடையது என்று சொந்தம் கொண்டாடுவார்கள் என்று சொல்வதாக இருந்தால், அந்த அளவிற்கு முஸ்லிம்கள் என்ன மோசமானவர்களா?

இப்படி இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் ரீதியில் பேசியதால் தான் இல.கணேசன் உட்பட அனைவரும் பலத்த கரகோஷத்தை எழுப்பினார்கள் போலும்.

மேலும், இந்தச் செய்தி உண்மை என்று வைத்துக் கொண்டாலும், அந்தச் செய்தியிலேயே, தேவாலயத்தை பார்வையிட்டுக் கொண்டிருந்த போது, பாங்கு சொல்லப்பட்ட வேளையில் அந்த சம்பவம் நடந்ததாக கதை சொல்லியுள்ளார். அப்படியானால் அருகே பள்ளிவாசல் இருந்திருக்குமேயானால் உமர் (ரலி) அவர்கள் அங்கு சென்றுதானே தொழுகையை நிறைவேற்றியிருப்பார்கள். அதைத்தானே காரணமாகச் சொல்லியிருப்பார்கள்? என்ற சந்தேகமும் எழுகின்றது.

இவரது இந்த உரை இல.கணேசனுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும் என்று ஆரூடம் சொல்கிறார் வாத்தியார்.

இவரது இந்த உரை இல.கணேசனுக்கு குஷியைத்தான் அதிகப்படுத்தியிருக்கும். ஏனெனில் சங்பரிவாரம் முஸ்லிம்களை அடாவடிக்காரர்களாக சித்தரித்து செய்யும் வேலையை அவர்களது பினாமி செய்து அவர்களது வேலையை இலகுவாக்கி உள்ளது என்றால் அவர்களுக்கு குஷிதானே வரும்.

மேலும் அவர் தனது உரையில்,

இந்திய தொல்லியல் துறை மக்களின் உணர்வுகளை மதிக்காமல் எவ்வாறு செயல்பட்டு வருகின்றது என்பதை விவரிக்கும் போது வேலூர் கோட்டையில் உள்ள பள்ளிவாசலில் முஸ்லிம்களின் வழிப்பாட்டு உரிமையைப் பறித்து இந்திய முஸ்லிம்களுக்கு அரசியல் சாசனச் சட்டம் வழங்கியுள்ள உரிமையை பறித்த விபரத்தையும் அதனை மீட்பதற்காக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் போராடி வரும் வரலாற்றையும் எடுத்துரைத்தேன். இதே போல் மாமல்லபுரத்தில் வழிபாடு இல்லாத கோயில்களை தன்வசப்படுத்தி அவற்றை பாதுகாக்க தவறி வரும் இந்திய தொல்லியல் நிறுவனம், மக்களால் பாதுகாக்கப்பட்டு வழிபாடு நடந்து வரும் தலசயானப் பெருமாள் கோயிலை தமிழக இந்து அறநலத்துறையிடமிருந்து தன் வசப்படுத்தி வழிப்பாட்டு உரிமையை பறிப்பது அரசியல் சாசனச் சட்டத்திற்கு முரணானது என்பதை சுட்டிக் காட்டினேன் என்று அள்ளிவிட்டுள்ளார்.

இவர் உண்மையிலேயே துணிச்சலான ஆளாக இருப்பாரேயானால், வேலூரில் உள்ள பள்ளிவாசலில் தொழ அனுமதி வழங்கக்கோரி முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்திய போது, தொழுவதற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று சங்பரிவாரக் கும்பல் எதிர்ப் போராட்டம் நடத்தியது. அதைக் கண்டித்து, சங்பரிவாரக் கும்பலின் தலைவர் முன்னிலையில் பேசியிருக்க வேண்டுமா? இல்லையா?

இந்த இடத்தில் வேலூர் பள்ளிவாசலைப் பற்றி பேசும்போது சங்பரிவாரத்தின் தலைவன் அமர்ந்திருக்கும் மேடையில், முஸ்லிம்களின் வழிபாட்டு உரிமையை தடுக்கக் கூடிய சங்பரிவாரத்தின் உண்மை முகத்தை தோலுரித்துக் காட்டுவதற்கு ஏற்ற இடம் அதுதான். அதைவிட்டுவிட்டு மேடையில் அதற்கு ஜால்ரா தட்டிவிட்டு தான் செய்த ஈனச் செயலுக்கு இதை ஆதாரமாகக் காட்டித் திரிகின்றார் இந்த (மா)மாவீரர்(?).

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று புதிய அரசு ஆட்சியில் அமைச்சரவை பதவி ஏற்கும் நிகழ்ச்சிக்கு குஜராத் கொடியவன் மோடி வருகிறான் என்று தெரிந்த பிறகு நாம் அந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்ளவில்லை. இதனால் யாருக்கும் எந்த இழப்பும் இல்லை. பா.ஜ.க. என்ற பாசிச கட்சியின் எதிர்ப்பில் நாம் உறுதியாக இருக்கிறோம் என்று சொல்லி காமெடி பண்ணியுள்ளார்.

நரபலி மோடி வருவதால்தான் பதவியேற்பு விழாவை ம.ம.கட்சி புறக்கணித்தது என்று இதற்கு முன்னால் இந்த ஜால்ரா மன்னன் எந்த ஒரு இடத்திலும் மூச்சுக் கூட விடவில்லை.

நரபலி மோடி வருவதால்தான் பதவியேற்பு விழாவை ம.ம.கட்சி புறக்கணித்தது என்று கண்டன அறிக்கையாவது வெளியிட்டாரா? இல்லவே இல்லை.

நரபலி மோடியை பதவியேற்பு விழாவிற்கு அழைத்த ஜெயலலிதாவை கண்டித்தாரா இவர்? இல்லவே இல்லை.

நரபலி மோடியின் உண்ணாவிரதத்திற்கு ஆளனுப்பி ஆசி வழங்கிய அம்மாவை கண்டித்தாரா?

இவ்வளவு அநியாயத்தையும் செய்து விட்டு, பா.ஜ.க. என்ற பாசிச கட்சியின் எதிர்ப்பில் நாம் உறுதியாக இருக்கிறோம் என்ற பில்டப் விட்டதுதான் இருப்பதிலேயே ஹைலைட் காமெடி.

இவ்வளவு பதிலையும் மறுப்பு அறிக்கை என்ற ரீதியில் கொடுத்துவிட்டு, நான் அந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டதை வைத்து கடும் விமர்சனத்தை சிலர் இப்போது செய்து வருகிறார்கள். ஆனால் அதைப் பற்றி நாம் கவலைப்படப் போவதில்லை. ஏனெனில் நாம் பதில் சொல்ல வேண்டியது நியாயத் தீர்ப்பு நாளின் அதிபதி அல்லாஹ்விடம் தான். செயல்கள் அனைத்தும் எண்ணங்களின் அடிப்படையில்தான் அமைந்துள்ளன என்ற அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அமுதமொழிக்கேற்ப தான் நான் அந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டேன். நான் அந்த நிகழ்ச்சியில் எந்த எண்ணத்துடன் பங்கு கொண்டேன் என்பதை அல்லாஹ் நன்கு அறிவான் என்று இவர் கூறியுள்ளதுதான் இவர் எத்தகைய நாடக நடிகர் என்பதை படம்பிடித்துக் காட்டுகின்றது.

இத்தனை பக்கத்திற்கு பதில் சொல்லிவிட்டு, நான் யாருக்கும் பதில் சொல்ல அவசியமில்லை என்று இவர் உளறுவதே இவர் போடும் வேஷத்தை வெளிப்படுத்திவிட்டது.

இவர் ஆதாரமில்லாத உமர் (ரலி) விஷயத்தை உதாரணமாகக் கூறியதால், நாம் இவருக்கு உரைக்கும் வகையில் ஆதாரப்பூர்வமான அலி (ரலி) அவர்களது உதாரணம் ஒன்றை சுட்டிக்காட்டுகின்றோம்.

அலி (ரலி) அவர்களை எதிர்க்க களம்கண்ட காரிஜியாக்கள் இப்படித்தான் அதிகாரங்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே என்ற திருமறை வசனத்தை சொல்லிக் கொண்டு அவர்களுக்கு எதிராக போர் புரிய வந்தனர். அப்போது அலி(ரலி) அவர்கள் சொன்ன விஷயத்தையே நாம் இவருக்கு பதிலாகக் கூறிக் கொள்கின்றோம்.

அதிகாரங்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே என்ற திருமறை வசனத்தை காரிஜியாக்கள் சொல்லிய போது தவறான இடத்தில் பயன்படுத்தப்பட்ட சரியான வார்த்தை என்று அலி (ரலி) அவர்கள் கூறினார்களே, அதுபோலத் தான் இவர் வாயிலிருந்து வரும் இந்த வார்த்தையும் அமைந்துள்ளது.

நாம் பதில் சொல்ல வேண்டியது நியாயத் தீர்ப்பு நாளின் அதிபதி அல்லாஹ்விடம்தான் என்று இவர் சொல்வாரேயானால் பிறகு ஏன் இங்கு விளக்கம் கொடுக்கின்றார். பொது வாழ்க்கையில் வந்துவிட்டால் பொதுமக்கள் கேட்கக்கூடிய கேள்விக்கு பதில் சொல்லியாக வேண்டும். அதைவிடுத்து விட்டு, திருடிய திருடன் கையும் களவுமாக பிடிக்கப்பட்டவுடன் போலீசாரிடத்தில் விசாரணையின் போது நான் உங்களுக்கெல்லாம் பதில் சொல்லத்தேவையில்லை நான் பதில் சொல்ல வேண்டியது நியாயத் தீர்ப்பு நாளின் அதிபதி அல்லாஹ்விடம் தான். என்று சொன்னால் அது எப்படி இருக்குமோ அதுபோலத்தான் இவர் வைக்கும் வாதமும் உள்ளது. கையும் களவுமாக பிடிபட்ட திருடனைப் போலத்தான் வாத்தியார் இப்போது விழிபிதுங்கி நிற்கின்றார்.

அடுத்து தான் செய்த இழி செயலுக்கு வாத்தியார் காட்டும் அடுத்த நபிமொழி, செயல்கள் அனைத்தும் எண்ணங்களின் அடிப்படையில் தான் அமைந்துள்ளன. மேற்கண்ட நபிமொழியையும் தனது தவறுக்கு ஆதாரமாக்கப் பார்க்கின்றார். செயல்கள் அனைத்தும் எண்ணங்களின் அடிப்படையில் தான் அமைந்துள்ளன என்ற நபிமொழி நல்ல செயல்களை செய்துவிட்டு அதற்கு அல்லாஹ் தகுந்த கூலியை எப்போது வழங்குவான் என்றால் எண்ணம் தூய்மையாக இருந்தால்தான் வழங்குவான் என்பதற்காக சொல்லப்பட்டது.

ஒருவன் விபச்சாரியிடத்தில் சென்று விபச்சாரம் செய்துவிட்டு, அவளுக்கு கணவன் இல்லாத காரணத்தால், அவளுடைய உள்ளம் நொந்து விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில், அவளது உணர்வுகளுக்கு வடிகால் ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற பரந்த நோக்கத்தில்தான் நான் அவளிடம் விபச்சாரம் செய்தேன். எனது எண்ணம் தூய எண்ணம். செயல்கள் அனைத்தும் எண்ணங்களின் அடிப்படையில் தான் அமைந்துள்ளன என்று ஒருவன் சொன்னால் எப்படி இருக்குமோ அதுபோலத் தான் வாத்தியாரின் இந்த உதாரணம் உள்ளது. கேடுகெட்டவர்களுடன் கைகோர்த்து நின்று ஈனச் செயல் புரிந்துவிட்டு செயல்கள் அனைத்தும் எண்ணங்களின் அடிப்படையில் தான் அமைந்துள்ளன என்று தனது இழிசெயலுக்கு நபிகளாரின் பொன்மொழியை இவர் ஆதாரம் காட்டுகின்றார் என்றால் இவரை என்னவென்பது?

11.07.2012. 6:37 AM

தமுமுக பேரணியை டிஎன்டிஜே தடுத்ததா?

தமுமுக போராட்டத்துக்குத் தடை போட தவ்ஹீத் ஜமாஅத்து தான் காரணம் என்றும், வெகுண்டு எழுந்த கூட்டத்தைக் கண்டு தவ்ஹீத் ஜமாஅத் கதிகலங்கிப் போயுள்ளது என்றும் முகநூல்களில் பரப்புகின்றனர். இது எந்த அளவுக்கு உண்மை?

சொல்லின் செல்வன், அதிராம்பட்டிணம்.

தவ்ஹீத் ஜமாஅத் ஜெயலலிதா அவர்களை வானளாவப் புகழ்ந்து கொண்டிருக்கவில்லை. சட்டமன்றத்தில் பேசும்போதெல்லாம், இவர்கள் அடித்த ஜால்ராவைப்போல் ஜால்ரா அடிக்கவில்லை. மலர்க் கொத்து கொடுத்து வாழ்த்து கூறிக் கொண்டிருக்கவில்லை. அப்படியிருந்தும் தவ்ஹீத் ஜமாஅத் சொல்வதைக் கேட்டு முதல்வர் முடிவு செய்கிறார் என்று இவர்கள் சொல்வது உண்மையென்றால், இவர்கள் தங்களையும் அறியாமல் ஒரு உண்மையை ஒப்புக் கொள்கிறார்கள்.

ஜால்ரா அடிப்பவர்களை விட தட்டிக்கேட்பவர்களுக்குத் தான் அல்லாஹ் மரியாதையை ஏற்படுத்துவான் என்ற உண்மையை இவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள் என்பது தெரிகிறது. அதையாவது புரிந்துகொண்டு தவ்ஹீத் ஜமாஅத் போல் நடக்க முயற்சித்து இவர்கள் சொல்வதையும் ஜெயலலிதா கேட்பது போல் நடந்து கொள்ளட்டும்.

ஜெயலலிதா அவர்கள் நம்மைக் கேட்டு எந்த முடிவையும் எடுக்கும் அளவுக்கு நமக்கு அவருடன் நெருக்கம் ஏதுமில்லை. பிற இயக்கங்கள் குறித்து எந்த முடிவை எடுக்க வேண்டும் என்று இரகசியக் கோரிக்கை வைப்பதும் தவ்ஹீத் ஜமாஅத்தின் வழிமுறை அல்ல.

பொதுவாக சென்னையில் பேரணி நடத்துவது என்றால் போக்குவரத்துக்குப் பாதிப்பு இல்லாத வகையில் தான் அனுமதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே இது போல் யார் பேரணி நடத்தினாலும் தடையை மீறி கைதாவதற்கு உடன்பட்டுத் தான் நடத்த வேண்டும். இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் நீதி மன்றத்தை அணுகினார்கள். நீதிமன்றம் இதை அனுமதிக்காது என்ற அறிவுகூட இவர்களுக்கு இருக்கவில்லை.

நீதிமன்றத்தை அணுகாமல் காவல் துறையிடம் பேசி நாங்கள் தடையை மீறுகிறோம் என்று சொன்னால் பேச்சுவார்த்தை மூலம் ஒரு இடத்தில் கூடச் செய்து அங்கே கைது செய்வார்கள். இதுதான் வழக்கமான நடைமுறை.

அதைச் செய்யாமல் உயர்நீதி மன்றத்தை இவர்கள் அணுகியது மடத்தனமானது. உயர்நீதிமன்றம் இதை அனுமதிக்காது என்ற சாதாரண விஷயம் கூட தெரியாமல் இவர்கள் என்ன இயக்கம் நடத்துகிறார்கள்? கடுகளவு அறிவுள்ளவனைக் கேட்டாலும் இவர்கள் கேட்ட இடத்தில் பேரணி நடத்த நீதிமன்றம் அனுமதிக்காது என்று கூறிவிடுவார்.

நீதிமன்றம் தடையை உறுதி செய்யும் நிலையை இவர்களே ஏற்படுத்தினார்கள்.

உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர் காவல் துறையினர் பேரணிக்காக கூடாமல் தடுத்து ஆக வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்றத்துக்குப் பதில் சொல்லியாக வேண்டும். இந்த நிலையை இவர்களே ஏற்படுத்தினார்கள்.

நீதிமன்றம் தலையிடும் வரை தான் புரிந்துணர்வு அடிப்படையில் காவல்துறை செயல்பட முடியும். நீதிமன்றம் தலையிட்ட பின்னர் நீதிமன்றத்துக்கு பதில் சொல்வதற்கேற்பவே காவல் துறை நடக்க முடியும்.

இயக்கம் நடத்தக் கூடியவர்களுக்கு அறிவு இல்லாவிட்டால் அடுத்தவர் மீது பழி போடுவது என்ன நியாயம்?

வெகுண்டெழுந்த கூட்டத்தைக் கண்டு தவ்ஹீத் ஜமாஅத் அரண்டு போய்விட்டது என்று இவர்கள் கூறுவது தான் உச்சகட்ட காமெடியாக உள்ளது.

தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் பெரிய பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ளும் மக்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், அதைவிடக் குறைவான மக்களையே இவர்களால் திரட்ட முடிந்தது என்பதை அறியலாம்.

தவ்ஹீத் ஜமாஅத் பலவீனமாக உள்ள மாவட்டம் கரூர் மாவட்டம். காவல்துறையின் காட்டு தர்பாரைக் கண்டித்து கண்டனப் போராட்டம் சென்ற வாரம் நடத்தப்பட்டது. முடிவு எடுத்து இரு நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போராட்டத்தில் ஐயாயிரத்துக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர். எவ்வித விளம்பரமும் உழைப்பும் இல்லாமல் இரு நாட்களில் பலவீனமான மாவட்டம் கூட்டிய கூட்டத்தில் பாதியைக் கூட இவர்கள் மாநில அளவில் கூட்ட முடியவில்லை எனும் போது நாம் ஏன் கதி கலங்க வேண்டும்.

சில ஊடகங்கள் (சன் டிவி உட்பட) நூற்றுக் கணக்கானோர் கைது என்று குறிப்பிட்டனர். அதிகபட்சமாக சுமார் 3000 பேர்கள் என்று சில ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. அந்தக் கூட்டத்தின் வீடியோவை நிறுத்தி நிறுத்தி எண்ணிப் பார்த்தால் மூவாயிரம் பேருக்குள் தேறுவார்கள்.

பல மாதங்கள் உழைத்து இலட்சக்கணக்கில் செலவு செய்த பின்னரும், நாற்பது மாவட்டங்களுக்கு 3000 பேர்கள் என்றால், மாவட்டத்திற்கு 75 பேர் வீதம் வந்துள்ளனர்.

சமுதாயத்தின் முக்கியமான கோரிக்கையை வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டமாக இருந்தும், கடுமையாக உழைத்தும், இதற்காக ஏராளமான பொதுக்கூட்டங்கள் நடத்தி விழிப்புணர்வு ஊட்டியும், மாவட்டத்திற்கு 75 பேர் வீதம்தான் வந்துள்ளனர் என்றால் அடித்தளம் அறவே சரிந்து விட்டதை அவர்கள் இதிலிருந்து உணர்வதற்கான எச்சரிக்கை மணியாகவே இது அமைந்துள்ளது.

இவர்கள் நீதி மன்றத்தை அணுகியது இதனால் கிடைக்கும் பரபரப்பிற்கும், விளம்பரத்திற்கும் உதவலாம். ஒரு நாள் செய்தியோடு இது முடிந்துவிடும்.

கட்டப் பஞ்சாயத்தைக் கைவிட்டு அடிமைச் சேவகம் செய்யும் போக்கில் இருந்து விடுபட்டு, 1995ல் காணப்பட்ட அர்ப்பணிப்பு மனப்பான்மையை நோக்கி இவர்கள் திரும்பாவிட்டால், இருக்கும் சிலரையும் இழப்பார்கள். இதைத்தான் இந்தக்கூட்டத்திலிருந்து இவர்கள் கற்றுக்கொள்ளவேண்டும்.

உண்மையில் சொல்லப்போனால் இவர்கள் தான் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

13.07.2013. 15:34 PM

தமுமுக பற்றிய கேள்விகளுக்கு ஆரம்பகால நிர்வாகிகள் கூட்டாக அளித்த பதில்கள்

பாகம் ஒன்று

இதை டவுன்லோடு செய்ய

பாகம் இரண்டு

இதை டவுன் லோடு செய்ய

பாகம் மூன்று

இதை டவுன்லோடு செய்ய

பாகம் நான்கு

இதை டவுன்லோடு செய்ய

 

 

More Articles …