Sidebar

18
Thu, Jun
சமீபத்திய செய்திகள்

ஜாக்குக்கு பகிரங்க அறைகூவல்

மரியாதைக்குரிய ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் இயக்கத்தின் தலைவருக்கும், உலமாக்களுக்கும் பீ.ஜைனுல் ஆபிதீன் எழுதிக் கொள்வது அஸ்ஸலாமு அலைக்கும்.

சமீப காலமாக உங்கள் இயக்கம் மூலம் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் ஜைனுல் ஆபிதீனாகிய நான் எனது கொள்கையில் இருந்து விலகி விடுமாறு அழைப்பு விட்டு வருவது என் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

நீங்கள் நேர்வழி என்று நினைக்கும் பாதைக்கு மற்றவர்களை அழைக்க உங்களுக்கு உரிமை உள்ளது.

நமக்கிடையே நீண்ட நெடுங்காலமாக அடிப்படைக் கொள்கைகளில் கருத்து வேறுபாடு இருந்து வருவது முஸ்லிம் சமுதாயம் அறிந்து வைத்துள்ள உண்மையாகும்.

இரு வேறு கருத்துக் கொண்டவர்களில் ஒரு தரப்பினர் மற்ற தரப்பினரை தமது வழியின் பால் எப்போது அழைக்கலாம்? இரு தரப்பும் கருத்து வேறுபாடுள்ள விஷயங்களைக் குறித்து விவாதம் செய்து ஒரு தரப்பின் கருத்து தான் சரியானது என்பது தெளிவானால் தான் வென்ற தரப்பு தோற்ற தரப்பை தனது கொள்கையின் பால் அழைக்க நியாயம் உள்ளது.

அப்படி எதுவும் நிகழவில்லை. நான் நீண்ட காலமாக விவாதிக்க அழைப்பு விட்டும் அதை ஏற்க மறுக்கும் நீங்கள் என்னை உங்கள் வழிகெட்ட கொள்கையின் பால் அழைப்பது வேடிக்கையாக உள்ளது.

எனவே நேர்வழியில் இருக்கின்ற நான் தான் உங்களைச் சரியான வழியின்பால் அழைக்க நியாயம் உண்டு என்பதை முதலில் சொல்லிக் கொள்கிறேன்.

உங்களிடம் நான் வேறுபடும் கொள்கைகளில் நான் நேர்வழியில் இருப்பதாக நன்கு ஆராய்ந்து உறுதியான முடிவில் இருக்கிறேன்.

வஹீ மட்டும் தான் இஸ்லாத்தின் மூல ஆதாரம். நபித்தோழர்கள் உள்ளிட்ட எவரது கருத்தும், செயலும் மார்க்க ஆதாரமாகாது என்பது எனது கொள்கை.

நபித்தோழர்கள் இந்த உம்மத்தில் சிறந்தவர்கள் என்பதில் நானும், நீங்களும் ஒத்த கருத்தில் இருந்தாலும் நபித்தோழர்களும் பாவத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர். இஸ்லாத்தை ஏற்ற பின்பும் அவர்களிடம் பாவங்கள் நிகழ்ந்துள்ளன. அதில் சிலர் நீடித்தும் உள்ளனர். மார்க்கம் என்று கருதி மார்க்கத்தில் இல்லாததை உருவாக்கியவர்களும் நபித்தோழர்களில் இருந்துள்ளனர். இதைக் கூறுவது அவர்களை அவமதிப்பதாக ஆகாது என்று நான் கருதுகிறேன். இதில் நீங்கள் மாறுபடுகிறீர்கள்.

சூனியத்துக்கு எந்தத் தாக்கமும் இல்லை என்றும், அதை நம்புவது அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதாகவும் ஆகும் என்றும் நான் கூறுவதில் நீங்கள் மாறுபடுகிறீர்கள்.

அறிவிப்பாளர் தொடர் சரியானது என்று கருதப்படும் ஹதீஸ்கள் திருக்குர்ஆன் கூறும் அறிவுக்கு முரணில்லா விட்டால் அவற்றை ஏற்றுச் செயல்பட வேண்டும்; திருக்குர்ஆன் கூறும் அறிவுக்கு முரணாக அமைந்த ஹதீஸ்களின் அறிவிப்பாளர் தொடர் சரியானதாகக் கருதப்பட்டாலும் அவை ஹதீஸ்கள் அல்ல என்று நான் கூறுவதில் நீங்கள் முரண்படுகிறீர்கள்.

மேலும் திருக்குர்ஆன் விளக்கத்தில் நான் தவறான நச்சுக்கருத்துக்களைப் புகுத்தி உள்ளதாக பகிரங்கமாக கூறி அழைப்பு விட்டுள்ளீர்கள்.  அவை என்ன என்பதையும் பட்டியலிட்டு அவை குறித்தும் விவாதம் நடத்தப்பட வேண்டும்.

இவை குறித்து நாம் ஒத்த கருத்துக்கு வந்து விட்டால் நாம் ஒத்த கொள்கையில் பயணிக்கலாம்.

எனவே நான் குறிப்பிட்ட இந்த விஷயங்களில் நீங்கள் வழிகேட்டில் இருப்பதாக நான் உறுதியாக நம்புகிறேன்.

இது குறித்து கன்னியமான முறையில் நட்பு அடிப்படையிலான விவாதத்துக்கு அழைப்பு விடுக்கிறேன்.

அந்த விவாதத்தில் நீங்கள் கொண்ட கொள்கை தான் சரியானது என்று நிரூபித்தால் அதை ஏற்று பகிரங்கமாக அறிவிக்க நான் தயாராக உள்ளேன். நீங்கள் கொண்ட கொள்கை தவறானது என்று நான் நிரூபித்தால் நீங்கள் உங்கள் நிலையை மாற்றிக் கொள்ளுங்கள்.

அப்படி நிகழ்ந்தால் ஒரே கொள்கையில் நாம் பயணிக்கும் நிலை ஏற்படும்.

பொது மேடைகளில் நீங்கள் விடுக்கும் அழைப்புக்கு எனது பதில் இதுதான்.

இதற்கான பதிலை எதிர்வரும் நவம்பர் 30 ஆம் தேதிக்குள் எதிர்பார்க்கிறேன்.

விவாதம் நடத்த ஒப்புக் கொண்டு நீங்கள் பதில் தந்த பின் நம் இரு தரப்புக்கும் வசதியான ஒரு நாளில் விவாதம் செய்வதற்கான ஒழுங்குகள், விதிகள்,  விவாதம்  நடக்கும் காலம் ஆகியவற்றைப் பேசி முடிவு செய்து கொள்ளலாம்.

அன்புடன்

பீ.ஜைனுல் ஆபிதீன்

குறிப்பு: சென்னை மண்ணடியில் அன்பான அழைப்பு விடுக்கும் மேடையில் உங்களிடமிருந்து வெளிப்பட்ட கர்வத்தையும், ஆணவத்தையும் நான் அலட்சியம் செய்கிறேன்.

பெரிய மேடையில் பேசிய பீஜே இன்று அறைக்குள் லைவ் போடுவது பரிதாபமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இயக்க பலம் இல்லாமல் போய்விட்டான் என்பதால் தான் நீங்கள் எனக்கு அழைப்பு விடுகிறீர்கள் என்றால் இதை விட அறிவீனம் எதுவுமில்லை.

எனக்கு இயக்க பலம் இல்லை என்பது தான் இந்த அழைப்புக்குக் காரணம் என்று கருதும் அளவுக்கு உங்கள் நிலை அமைந்துள்ளதை எண்ணி பரிதாபப்படுகிறேன்.

நான் தனி ஒருவனாக இருந்தாலும் கொள்கையை எடை போட அது அளவு கோல் அல்ல என்பதை முதலில் உணருங்கள்.

ஆனால் அது கூட உண்மை இல்லை. நீங்கள் பெரிய முயற்சி எடுத்து தலை நகரில் கூட்டிய கூட்டத்தை விட அதிகமான மக்கள் முன்னிலையில் அதிராம்பட்டிணத்தில் பொது நிகழ்வில் நான் சில நாட்களுக்கு முன்னர் தான் உரையாற்றியுள்ளேன். உங்கள் இந்தப் பரிதாபம் முற்றிலும் தவறானது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் மட்டுமே தனித்து விடப்பட்டாலும் கொள்கை தவறு என்பதை உரிய முறையில் நிரூபித்தால் மட்டுமே நான் மாற்றிக் கொள்வேன்.

பீஜே என்று மக்கள் அழைத்த போது நான் சரியாக இருந்ததாகவும் அண்ணன் என்று அழைக்கப்பட்ட பின் நான் மாறிவிட்டதாகவும் நீங்கள் பொதுமேடையில் பேசியதைக் காணும் போது இந்த அளவுக்கு உங்கள் சிந்தனை வரண்டு விட்டதா என்று நான் பரிதாபப்படுகிறேன்.

ஒவ்வொரு முஸ்லிமும் சகோதரன் என்ற குர்ஆன் வசனத்தையே நீங்கள் மறுப்பதாக இது அமைந்துள்ளது. என்னை விட குறைந்த வயதுள்ளவர்கள் அண்ணன் என்று என்னை அழைப்பது மார்க்கத்தில் தவறா?

மவ்லானா மவ்லவி பட்டம் போட்டு நீங்கள் ஒருவருக்கொருவர் அழைத்துக் கொள்கிறீர்களே அது போன்ற மமதை அண்ணன் என்று அழைப்பதில் இல்லை.

உங்களைத் தமிழகத்துக்கு அறிமுகம் செய்த கமாலுத்தீன் மதனி அவர்கள் எப்படி அறிமுகம் செய்தார்களோ அந்த நிலைக்கு மாறி எங்களுடன் சேருங்கள் என்றும் ஆணவமாக பொது மேடையில் பேசி தரம் தாழ்ந்துள்ளீர்கள்.

நாகர்கோவிலில் முடங்கிக் கிடந்த கமாலுத்தீன் மதனியை நாடு முழுவதும் நான் தான் அறிமுகம் செய்தேன். அவருக்கு முன்னர் நான் தான் அஹ்லுல் குர்ஆன் ஹதீஸ் இயக்கத் தலைவனாக இருந்தேன்; நான் அடியோடு மறுத்து கமாலுத்தீன் மதனியைத் தலைவராக்கினேன் என்று உங்களைப் போல் நான் சொன்னால் அது உண்மையாக இருந்தாலும் நாகரிகமுள்ள மக்கள் கர்வமாகத் தான் அதைக் கருதுவார்கள்.

இது போல் கீழ்த்தரமான விமர்சனங்கள் வேண்டாம். நாம் கண்ணியமான முறையில் விவாதம் செய்வோம். எது நேர்வழி என்பதும் யார் திருந்த வேண்டும் என்பதும் அப்போது முடிவாகும். இன்ஷா அல்லாஹ்

"பி.ஜைனுல் ஆபிதீன்"

ஏகத்துவம் செப்டம்பர் 2006

அழைப்புப் பணிக்கு ஆப்பு வைக்கும் ஜாக்

"ஜாக்” இப்போது ஒரு தெளிவான முடிவில் இருக்கின்றது. எந்த ஏகத்துவக் கொள்கையை நிர்மாணம் செய்ய அந்த அமைப்பு உருவாக்கப்பட்டதோ அந்த ஏகத்துவக் கொள்கையை நிர்மூலமாக்காமல் விடுவதில்லை என்பது தான் அந்த முடிவு! அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுக்கும் அக்கிரமத்தில் ஒரு கரை காணாமல் இருக்கப் போவதில்லை என்று கலகக் கும்பலுடன் கைகோர்த்துக் கொண்டு தவ்ஹீதுக்கு எதிரான களத்தில் குதித்திருக்கின்றது.

தவ்ஹீதுக்கு எதிரான காரியங்கள் நடக்கும் போது அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் .அப்படித் தடுத்து நிறுத்த முடியவில்லை என்றால் அதைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபடுவோருக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்க வேண்டும். அதுவும் முடியவில்லை என்றால் எதையும் செய்யாமல் ஒதுங்கியாவது இருக்க வேண்டும். ஆனால் ஜாக் பரிவாரமோ, தானும் செய்யாமல், செய்பவர்களையும் செய்யவிடாமல் தடுத்து வருகின்றது. அதாவது அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்து, அழைப்புப் பணிக்கு ஆப்பு வைக்கின்றது. இதற்கு அண்மையில் மேலப்பாளையத்தில் நடந்த ஒரு நிகழ்வை உதாரணமாகக் கூறலாம்.

வண்ண நிறங்களில் வாண வேடிக்கைகள்

மேலப்பாளையத்தில் உள்ள தர்ஹாக்களில் வழக்கமாக கந்தூரிகள் நடக்கும். ஆனால் இந்த முறை நடந்த கந்தூரிகள், வருடாந்திர உரூஸ் விழாக்கள் வேண்டுமென்றே நமக்கு எதிராகத் திட்டமிட்டு படு விமர்சையாகவும், படோடபமாகவும் அமைந்திருந்தன.

உண்மையில் அவை கோயில் திருவிழாக்களைத் தோற்கடிக்கும் விதமாக இருந்தன. அதிகமான பணச் செலவில் டிஜிடல் மியூசிக் பேண்ட் வாத்தியங்கள், அதிர வைக்கும் வாண வேடிக்கைகள் என அமர்க்களமாக, ஆர்ப்பாட்டமாக அதிகாலை வரை நடத்தப்பட்டன. சுன்னத் வல் ஜமாஅத்தினர் என்று சொல்லிக் கொள்வோர் கூட இந்த அக்கிரமங்களைக் கண்டு பொறுக்க முடியாமல் மனம் வெறுத்து, வெதும்பிக் கொண்டிருந்தனர்; வேதனைப்பட்டுக் கொண்டிருந்தனர். உடனே நாம் முதல் கட்ட நடவடிக்கையாக இந்தக் கந்தூரிகளில் நடந்த அட்டூழியங்களையும் அனாச்சாரங்களையும் கண்டித்து, துண்டுப் பிரசுரம் வெளியிட்டோம். இது மக்களிடத்தில் பலத்த வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து, கந்தூரி நடந்த தெருக்களில் ஒன்றான மேலப்பாளையம் பஸீரப்பா தெருவில், தர்ஹா வழிபாடு எதிர்ப்புப் பொதுக் கூட்டம் என்ற தலைப்பில் 19.08.2006அன்று ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தோம். இதற்காக மேலப்பாளையம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

இதைக் கண்ட ஜாக் கலகக் கும்பல், கூட்டத்தைத் தடுத்து நிறுத்தும் விதமாகக் காவல்துறையில் புகார் செய்தனர். இவர்கள் தங்களது புகாரில், "பஸீரப்பா தெருவில் நடைபெற விருக்கும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது” என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர்.

ஏற்கனவே சம்பந்தப்பட்ட தர்ஹா கூட்டத்தினர் இந்தப் பொதுக் கூட்டத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று தவமிருக்கின்றனர். தகுந்த முகாந்திரங்களைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். அதற்கு ஏற்றவாறு இவர்களும் காவல் துறையில் புகார் கொடுத்து, கூட்டத்தை நடத்த முடியாத அளவுக்கு சூட்சுமத்தையும் சூழ்ச்சி வலையையும் பின்னினர்.

அது மட்டுமின்றி நமது சகோதரர்களிடம், "கூட்டம் நடக்குமா? பார்த்து விடுவோம்” என்ற ரீதியில் சவாலும் விட்டுள்ளனர். இவர்கள் கொடுத்த இந்தப் புகாரின் காரணமாகவும் இவர்கள் பரப்பி விட்ட வதந்திகள் காரணமாகவும் அன்று பொதுக்கூட்டம் நடக்குமா? என்பது கேள்விக் குறியாகி நகரமே பரபரப்பில் ஆழ்ந்தது. இதனால் கூட்டம் நடக்கும் தெருவில் காவல்துறை ஏராளமான காவலர்களை நிறுத்தி வைத்தது.

அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே!

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! சூழ்ந்த ஞானம் படைத்த அவன், இவர்கள் பின்னிய சூழ்ச்சி வலைகளை அறுத்தெறிந்தான். இறைவனின் மகத்தான கிருபையால் அன்று இரவு கூட்டம் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது. கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஆயிரக்கணக் கானவர்கள் என்று சொல்லும் அளவுக்கு அலை அலையாய் மக்கள் திரண்டு வந்திருந்தனர். வந்தவர்கள் அனைவரும் தவ்ஹீதுவாதிகள் அல்ல! சுன்னத் வல் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

அந்த அளவுக்கு இந்தக் கந்தூரி வெறியாட்டங்கள் பாதிப்புக்கும் கொதிப்புக்கும் உள்ளாக்கியிருந்ததை நாம் உணர முடிந்தது. சுன்னத் வல்ஜமாஅத்தினருக்கு ஏற்பட்ட இந்த சூடு, கொதிப்பு எல்லாம் அழைப்புப் பணியைச் சொல்லி அரபு நாட்டில் சம்பளம் வாங்கும் ஜாக் கும்பலுக்கு ஏற்படவில்லை.

ஜாக் கலகக் கும்பலின் இந்தப் புகார் மற்றும் வதந்திகளால் ஏற்பட்ட மற்றொரு விளைவு, தொடர்ந்து ஏகத்துவப் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்துவதற்குக் காவல்துறையினர் கடும் கெடிபிடிகளைச் செய்ய ஆரம்பித்தனர். வழக்கம் போல் அடுத்த வாரம் 26.08.06 அன்று மேலப்பாளையத்தில் ஏகத்துவப் பிரச்சாரக்கூட்டம் நடத்துவதற்கு காவல்துறையில் அனுமதி வாங்கச் சென்ற போது, "நீங்கள் கூட்டம் நடத்துவதால் எங்களுக்கு அதிகமான சிரமம் ஏற்படுகின்றது. பாதுகாப்பு அதிகம் தர வேண்டியுள்ளது. எனவே அனுமதி தர முடியாது” என்று மறுத்து விட்டனர்.

பின்னர் பெரும் போராட்டத்திற்குப் பிறகு, உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பேசிய பின், கூட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆக, ஜாக் கலகக் கும்பல் செய்த இந்தக் காரியங்களால் ஒட்டு மொத்த ஏகத்துவப் பிரச்சாரமும் முடங்கிப் போகும் நிலை ஏற்பட்டு விட்டது. இதிலிருந்து இவர்கள் செய்வது அழைப்புப் பணியல்ல! அழைப்புப் பணிக்கு எதிராக ஆப்புவைக்கும் பணி என்பது நிரூபணமாகின்றது. இனியும் இவர்களை ஏகத்துவவாதிகள் என்றுநம்பி நம் ஈமானை இழந்து விடாமலிருக்க அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவோம்.

ஏகத்துவம் 2006 ஜூன்

சறுகலை ஒப்புக் கொள்ளும் ஜாக்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக குமரி மாவட்டக் கொள்கைச் சகோதரர்கள் கடந்த ஹஜ் பெருநாளன்று கோட்டாற்றில் முதல் முறையாக நபிவழிப் படி பெருநாள் தொழுகையை திடலில் தொழுதனர்.

கோட்டாற்றில் ஏகத்துவக் கொள்கை தோன்றிய நாள் முதற்கொண்டு இது வரை ஏகத்துவக் கொள்கையாளர்கள் பெருநாள் தொழுகையை திடலில் தொழுததில்லை. பள்ளிகளிலேயே தொழுது கொண்டிருக்கின்றனர்.

எனவே பெருநாள் தொழுகையைத் திடலில் தொழும் இந்த நபிவழியை அமல்படுத்தும் விதமாக துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள் வாயிலாக தவ்ஹீத் ஜமாஅத்தினர் விளம்பரம் செய்தனர்.

அவ்வளவு தான்! கொள்கைச் சகோதரர்களின் இந்தச் செயல் ஜாக் வர்க்கத்தினரிடம் கோபத்தை ஏற்படுத்தியது! கொந்தளிப்பை உருவாக்கியது. அந்த ஆத்திரத்தில் ஜாக் அமீர்சில கேள்விக் கணைகளைத் தொடுத்தார்.

1. நாகர்கோவிலில் குராபிகள் திடலில் தொழுகை நடத்துகிறார்களே! அங்கு போய்இவர்கள் (தவ்ஹீதுவாதிகள்) தொழ வேண்டியது தானே?

2. பள்ளிவாசலில் பெருநாள் தொழுகையைத் தொழுவதற்குத் தடை இருக்கிறதா?

3. நபி (ஸல்) அவர்கள் காலத்தில்பள்ளிகள் சிறியதாக இருந்தன. அதனால் திடலில்தொழுதார்கள்.

4. திடலில் கண்டிப்பாகத் தொழுது தான் ஆக வேண்டுமா? குர்ஆன் ஹதீஸ் பெயரில் இயக்கம் நடத்தும் இவர் குராபிகளின் பாணியில் குர்ஆன் ஹதீசுக்கு எதிராகக் கிளம்பியிருக்கிறார் என்பதை மேலே கண்ட கேள்விகளைப் படித்தவுடன் விளங்கிக் கொள்ளலாம்.

மார்க்கமா? மனோ இச்சையா?

இவர் முன்னுரிமையும் முதலிடமும் கொடுப்பது மார்க்கத்திற்கா? மனோ இச்சைக்கா? என்றால் மனோ இச்சைக்குத் தான் என்பதை மேற்கண்ட வினாக்களிலிருந்து, விஷம் தோய்ந்த அம்புகளிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

இவர் எந்தெந்த வகையில் என்னென்ன ஹதீஸ்களை மறுக்கின்றார்; இவரும் இவரைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் ஆதரவாளர்களும் எந்த அளவுக்கு குர்ஆன், ஹதீஸ் என்ற வளையத்தை விட்டு வெளியே போய் விட்டார்கள் என்று விவரித்தும், விமர்சித்தும் ஏகத்துவம் பிப்ரவரி 2006 இதழில் எழுதியிருந்தோம்.

ஜாக் செல்லும் சறுகல் பாதை என்ற அந்த விமர்சனத்தில் மூன்று முக்கியக் குற்றச்சாட்டுகளைக் குறிப்பிட்டு இருந்தோம்.

1. பெருநாள் தொழுகையை நபிவழிப்படி திடலில் தொழாமல் பள்ளிவாசலில் தொழுதல்

2. தொழ வருபவர்களை, பள்ளியில் தொழ விடாமல் தடுத்தல்

3. திருமணத்தின் போது பெண் வீட்டு சார்பில் நடைபெறும் விருந்தில் கலந்து கொள்ளுதல்

ஆகிய மூன்று குற்றச்சாட்டுகளைக் குறிப்பிட்டிருந்தோம். இதற்குத் தாங்கள் பதில் எழுதினால் சரிப்பட்டு வராது; சமாளித்து எழுத வேண்டி வரும் என்று கருதி, பதில் எழுதும் பொறுப்பை அஷ்ரப்பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். ஜாக் எனும் சங்கத்தின் அங்கத்தினராகிய அவர்கள் ஜாக்கின் சறுகலைக் கடுகளவும் குற்ற உணர்வின்றி, குறுகுறுக்கும் உறுத்தல் இன்றி தெளிவாக ஒப்புக் கொண்டுள்ளனர்.

அவற்றை இப்போது ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

நமது விமர்சனத்திற்கு மார்ச் 2006 அல்ஜன்னத்தில் பதில் தந்துள்ளார்கள். இந்தப் பதிலை அவர்கள் நமக்காகத் தந்தாலும் அது அவர்கள் தங்களுக்கே அளித்த பதிலாகி விட்டது. மார்க்கத்தின் பெயரால் மற்றவர்களைத் தாக்த தற்போது இவர்கள் கையில் எடுத்திருக்கும் ஆயுதம் திடல் தொழுகை. பெருநாள் தொழுகைக்கு இவர்களால் சூட்டப்பட்ட புதிய பெயர். பெருநாள் தொழுகையை மைதானத்தில் தொழுவது மார்க்த்திற்கு விரோதமல்ல. அது சுன்னத் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே…

அல்ஜன்னத், பக்கம் 17, 18

இப்போது சுன்னத் என்கிறார்களா? இதைத் தான் நாம் முதலில் சொன்னோம். நாம் சுன்னத் என்று சொன்ன போது, அவர்கள் "தடையிருக்கின்றதா?” என்று கேட்டார்கள். அவர்களின் இந்தக் கேள்விக்கு அவர்களே அல்ஜன்னத் நவம்பர் 2002 இதழில் எழுதியதை மேற்கோள் காட்டியதும் இப்போது சுன்னத் என்று சொல்ல முன் வந்திருக்கின்றார்கள்.

அத்துடன், "திடல் கைவசமில்லை” என்றொரு சப்பைக் கட்டையும் கட்டுகின்றார்கள்.

நாம் திடலில் தொழ ஆரம்பித்த போது, இந்தப் பதிலை அவர்கள் சொல்லியிருந்தால் கூட சரி எனலாம். ஆனால் நாம் திடலில் தொழுவதைக் கேள்விப்பட்டவுடன் தாறுமாறாகக் கேள்விகளை அல்லவா நம் மீது வீசியெறிந்தார்கள்? சறுகியதற்கு ஜாக் சொல்கின்ற சாக்கு நாம் பெருநாள் தொழுகையை திடலில் தொழாததற்குக் காரணம் கைவசம் மைதானம் இல்லாததேயாகும்.

திடலில் தொழுவதை ஃபர்ளு போல சித்தரிப்பவர்கள் கூட தங்களுக்கென நிரந்தரமாக இது வரை ஒரு மைதானத்தைப் பெற்றிருக்கவில்லை. அதற்காக முயற்சிக்கவுமில்லை. ஆண்டு தோறும் அங்குமிங்குமாக திடலை மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள்.

அல்ஜன்னத், பக்கம் 18

திடல் கைவசம் இல்லாததால் தொழவில்லையாம்! கோட்டாற்றில் செல்வச் சீமான்களைக் கொண்ட ஜமாஅத் அஷ்ரப் பள்ளி ஜமாஅத்! ஒரு சுன்னத்தை நிறைவேற்றுவதற்கு இத்தகைய செலவைச் செய்தால் என்ன? எத்தனையோ பெண் வீட்டு விருந்துகளை ரத்துச் செய்து விட்டு அந்தப் பணத்தை இதற்காக மடை திருப்பிவிடலாம் அல்லவா?

குர்ஆன், ஹதீஸ் இயக்கம் என்ற பெயர் வைத்தால் மட்டும் போதுமா? அந்த ஹதீஸைச் செயல்படுத்த வேண்டுமே! அதை யார் செய்வது? குராபிகள் கூட இந்த சுன்னத்தைப் பேணுகின்ற போது, குர்ஆன், ஹதீஸைப் போதிப்பவர்கள் சோடையாகி விடலாமா? மனமிருந்தால் இடமுண்டு! இந்த சுன்னத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணமிருந்தால் இடம் ஒரு பிரச்சனையே இல்லை.

ஆனால் அது போன்ற எண்ணம் இவர்களிடம் கடுகளவு கூட கிடையாது. நபிவழியை அமல்படுத்தத் தான் இல்லை! அதைச் செயல்படுத்துவோரை விமர்சிக்காமலாவது விடலாம்! விமர்சனம் செய்தது மட்டுமல்ல! இந்த நபிவழியைச் செயல்படுத்துவோரைக் கேலியும் கிண்டலும் செய்கின்றனர்.

வாடகைக்குத் திடல் பிடிப்பது என்ன தவறா? மார்க்க அடிப்படையில் குற்றமா? குறையா? இவர்களைப் போன்ற பணக்கார வர்க்கமாக இருந்தால் இந்தப் பொடியன்மார்கள் ஒரு திடலைச் சொந்தமாக வாங்கி இருப்பார்கள். வசதியில்லை! அதனால் இப்போதைக்கு வாடகைக்குப் பிடித்திருக்கிறார்கள்.

ஒரு சுன்னத்தை நிறைவேற்றுவதற்காக திடலை வாங்கியதும் அதை பெருநாள் தொழுகைக்கும், சமுதாய நலக் காரியங்களுக்கும், விளையாட்டுப் பயிற்சிகளுக்கும் பயன்படுத்துவார்கள், இன்ஷா அல்லாஹ்!

நிரந்தரமாக இல்லாததால் அங்கும் இங்கும் அலைகின்றார்கள். அவ்வாறு அலைவதற்கும் இவர்களிடத்திலிருந்து கேலி, கிண்டல் வந்தாலும் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக இதற்குக் கூலி உண்டு! இவர்கள் செய்யும் கேலிக்கு அல்லாஹ் தண்டனை அளிக்காமல் இருக்கப் போவதில்லை.

நபிவழியைக் கேலியும் கிண்டலும் செய்வது யூத, கிறித்தவர்களின் வேலை! அதை இவர்கள்இப்போது கையில் எடுத்திருக்கிறார்கள். இப்படி நபிவழியைக் கிண்டல் செய்பவர்கள் தான் குர்ஆன், ஹதீஸைப் பின்பற்றுகிறார்களாம்! இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று உண்மையான ஏகத்துவவாதிகள் விளங்கிக் கொண்டுவிட்டார்கள்.

திடல் தொழுகை

அடுத்து, வடிகட்டிய முட்டாள் தனமான வாதம் ஒன்றை எடுத்து வைக்கின்றார்கள்.

"பெருநாள் தொழுகைக்கு இவர்களால்சூட்டப்பட்ட பெயர் திடல் தொழுகை” என்ற சொத்தை வாதத்தை வைக்கின்றார்கள்.

அதாவது பெருநாள் தொழுகைக்கு மாற்றம் செய்து திடல் தொழுகை என்ற ஒன்றை நாம் கண்டுபிடித்திருப்பது போல் இந்த வாதத்தை எழுப்புகின்றார்கள்.

நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் என்று இவர்களும் நாமும் சொல்கின்றோமே இவையெல்லாம் ஹதீஸில் உள்ளவையா? நோன்புக்குப் பிறகு வருவதால் நோன்புப் பெருநாள் என்றும், ஹஜ்ஜை மையமாக வைத்து வருவதால் ஹஜ்ஜுப் பெருநாள் என்றும் கூறுகின்றோம்.

இது போன்று தான் பெருநாள் தொழுகை என்றால் அதற்கு உயிர் நாடியாக அமைவது திடல் தொழுகை தான். அந்தத் தொழுகையைத் திடலில் தான் தொழ வேண்டும். அப்படித்தான் நபி (ஸல்) அவர்கள் தொழுது இருக்கின்றார்கள் என்பதை உணர்த்தும் வண்ணம் திடல் தொழுகை என்ற வார்த்தையைக் குறிப்பிட்டு உள்ளனர்.

இதில் என்ன குறைபாடு வந்து விட்டது? பொடியன்மார் இந்தத் தொழுகையை அறிமுகப்படுத்துவதா? அதை நாம் ஏற்பதா? என்ற அகந்தையும் ஆணவமும் தவிர வேறு ஏதாவது இதில் பொருள் இருக்கிறதா? இந்தத் தொழுகையைத் திடலில் தொழுவது சுன்னத் என்றாலும் அதை தவ்ஹீத் ஜமாஅத்தினர் செய்து காட்டியதால் எங்களால் ஒத்துக் கொள்ள முடியவில்லை என்று தாங்கள் சறுகியதை ஒப்புக் கொள்கின்றனர்.

பெண் வீட்டு விருந்து இவர்களுக்கு எதிராக நாம் எடுத்து வைத்த அடுத்தக் குற்றச்சாட்டு

பெண் வீட்டு விருந்து! தங்களைக் குர்ஆன், ஹதீஸ் படி நடப்பவர்கள் என்று பீற்றியும், பிதற்றியும் கொள்கின்ற இவர்கள் பெண் வீட்டு விருந்து எனில் கொள்கையைக் காற்றில் பறக்க விட்டு விடுகின்றனர். அதனால் தான் இதை விமர்சித்து, "சத்தியப் பேச்சு சாப்பாடு என்றால் போச்சு” என்ற பிரசுரத்தை குமரி மாவட்ட தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் வெளியிட்டனர். பெண் வீட்டு விருந்தைச் சாப்பிடுவதில் பேயாக நிற்கும் இவர்கள் அந்த விருந்து கூடும் என்று கூவிக் கொண்டிருக்கின்றார்கள். அந்த நிலைபாட்டிலிருந்து இன்னும் மாறவில்லை. எனவே அதையும் பிப்ரவரி2006 இதழில் விமர்சித்து எழுதியிருந்தோம்.

அதற்கு இவர்கள் தரும் பதிலைப் பாருங்கள்.

திருமணத்தில் பெண் வீட்டார் மீது மாப்பிள்ளை வீட்டார் நிர்ப்பந்தமாக எந்தச் செலவினங்களையும் சுமத்தக் கூடாது என்பது தான் நமது தவ்ஹீது பிரச்சாரத்தில் மையக்கரு. எனினும் பெண் வீட்டார் வசதி வாய்ப்புள்ளவர்களாக இருந்து எந்த நிர்பந்தமுமில்லை அவர்களாகவே முன் வந்து எனது பிள்ளை திருமணத்தன்று நடைபெறும் விருந்துபசாரப் பொறுப்பை நானே ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறி அவர்களாக முன் வந்து விருந்தளித்தால் அந்த விருந்து உபசாரத்தைத் தடுப்பதற்கு என்ன ஆதாரமிருக்கின்றது? த.த.ஜ.வினரின் பாணியில் கேட்பதானால் "இதற்குத் தடைஇருக்கின்றதா?” (ஏனெனில் விருந்தளிப்பு என்பது உலக விஷயம் தானே?)

அல்ஜன்னத், பக்கம் 19

இதில் இரண்டு விஷயங்களை எடுத்து வைக்கின்றார்கள். பெண் வீட்டாரிடம் நிர்ப்பந்திக்கக் கூடாதாம். அது தான் தவ்ஹீது பிரச்சாரத்தின் மையக் கருவாம். எனினும் பெண் வீட்டார் தாமாகக் கொடுத்தால் தப்பில்லையாம். வரதட்சணை கூடாது என்று சொன்னதும் குராபிகள் வரதட்சணையை நியாயப்படுத்த எடுத்து வைத்த அதே வாதத்தை இவர்கள் கொஞ்சம் கூட உறுத்தலின்றி அப்படியே எடுத்து வைக்கின்றார்கள்.

எப்படி ஒரு கேடு கெட்ட கீழ்வழிக்குப் போயிருக்கின்றார்கள் என்று பாருங்கள். தவறான வழிக்குச் சென்றது மட்டுமின்றி அதை நியாயப்படுத்தவும் கிளம்பியிருக்கின்றார்கள்.

அஸ்த் எனும் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரை (ஜகாத்) வசூலிப்பவராக நபி (ஸல்) அவர்கள் நியமித்தார்கள். அவர் இப்னுல் லுத்பிய்யா என்று அழைக்கப்பட்டு வந்தார். அவர் ஜகாத் வசூலித்துக் கொண்டு வந்த போது, "இது உங்களுக்குரியது. இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "இவர் தன் தந்தையின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு, தமக்கு அன்பளிப்பு கிடைக்கிறதா? இல்லையா? என்று பார்க்கட்டும். என் உயிரைத் தன் கைவசம் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! உங்களில் யாரேனும் அந்தஜகாத் பொருளிலிருந்து முறைகேடாக எதனைப் பெற்றாலும் அதை அவர் மறுமைநாளில் தனது பிடரியில் சுமந்து கொண்டு வருவார். அது ஒட்டகமாக இருந்தால் கனைத்துக் கொண்டிருக்கும். பசுவாகவோ, ஆடாகவோ இருந்தால் கத்திக்கொண்டிருக்கும்” என்று கூறினார்கள். பிறகு அவர்களுடைய அக்குள் வெண்மையை நாங்கள் பார்க்கும் அளவுக்குத் தமது கைகளை உயர்த்தி, "இறைவா! நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா? நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா?” என்று மூன்று முறை கேட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுமைத் அஸ்ஸாயிதி (ரலி)

நூல்: புகாரி 2597, 6636

வசூல் செய்த இந்தத் தோழர், "மக்கள் தாமாகத் தந்தார்கள்” என்ற சூப்பர் பாயிண்டைத் தான் முன் வைக்கின்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதற்கு மேலான சூப்பர்பாயிண்டைத் தூக்கிப் போடுகின்றார்கள்.

இவர் வீட்டில் இருந்தால் இது கிடைக்குமா? என்று கேட்கின்றார்கள். இது போல் தான் இவர்களிடம் நாம் கேட்பது, "இவர்கள் திருமணம் முடித்ததால் தான் அந்த விருந்தைப் பெண் வீட்டார் வைக்கின்றார்களா? அல்லது வேறு காரணத்திற்காகவா? தன் மகளைக் கட்டிக் கொடுத்திருப்பதால் மாப்பிள்ளை மற்றும் மாப்பிள்ளை வீட்டார் தன் மகளை ஒழுங்காக வைத்துக் காப்பாற்ற வேண்டும் என்ற காரணத்திற்காகத் தான் பெண் வீட்டுக்காரர்கள் இந்த விருந்து, சீதனம், நகை, தொகை எல்லாவற்றையும் கொடுக்கின்றார்கள்.

எனவே தானாக முன்வந்து கொடுக்கின்றார்கள் என்று இவர்கள் கூறும் காரணம் போலியானது என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம். உண்மையில் பெண் வீட்டுக்காரர்கள் கொடுப்பது ஒரு மறைமுக நிர்ப்பந்தமே! அதை இவர்களும் ஒப்புக் கொள்கின்றார்கள்.

ஒன்றிரண்டு இடங்களில் திருமணச் செலவுகள் நிர்பந்தமாக பெண் வீட்டார் மீது சுமத்தப்படுகிறது என்பது உண்மையே. எனினும் வரதட்சணை பெறாமல் மஹர் கொடுத்து மணம் செய்யும் அளவிற்குப் பக்குவம் பெற்றவர்கள் விரைவிலேயே இதரவிஷயங்களிலும் முழுமையான மாற்றத்தைப் பெறுவார்கள் என்ற நம்பிக்கை நமக்குண்டு.

அல்ஜன்னத், பக்கம் 19

நிர்ப்பந்தப்படுத்தி திருமணச் செலவுகளைப் பெண் வீட்டார் மீது திணிப்பது உண்மை தானாம். ஆனால் மஹர் கொடுத்து திருமணம் செய்வதால் அவர்கள் திருந்தி விடுவார்கள் என்று இவர்களுக்கு நம்பிக்கை உள்ளதாம். உண்மையில் மஹர் என்ற பெயரில் இது போன்ற மறைமுக வரதட்சணைகள் தான் பல இடங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

தொகையாகக் கொடுத்தால் தான் தப்பு, இது போன்று வேறு பெயரில் வாங்கினால் தப்பில்லை என்று சொல்ல வருகின்றார்கள். மஹர் என்று சொல்லி, பெயருக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டு, சீதனம், நகை, வீடு,விருந்து என்ற பெயர்களில் பெண் வீட்டிலிருந்து இலட்சக்கணக்கில் வசூல் செய்பவர்கள் இனி ஜாக் தலைமையை அணுகலாம்.

அடுத்து, பெண் வீட்டார் விருந்தளிக்கத் தடையுள்ளதா? என்று கேட்பதுடன், த.த.ஜ.பாணியில் விருந்து என்பது உலக விஷயம் தானே? என்றும் கிண்டலுடன் கேட்கின்றார்கள்.

யூத, கிறித்தவர்களின் பாதையிலும் பாணியிலும் சென்று விட்டவர்களுக்கு குர்ஆன், ஹதீஸைச் சொல்லும் போது கிண்டல் அடிப்பது என்பது சகஜமான, சர்வ சாதாரணமான ஒன்றாகி விடும். ஏற்கனவே, பெருநாள் தொழுகையைப் பள்ளிவாசலில் தொழுவதற்குத் தடை இருக்கின்றதா? என்று இவர்கள் கேட்ட கேள்விக்குத் தான் பிப்ரவரி இதழில் இதை விளக்கி இருந்தோம்.

இபாதத் விஷயத்தில் தடையிருக்கின்றதா? என்று கேட்கக் கூடாது. உலக விஷயத்தில் தான் தடையிருக்கின்றதா? என்று கேட்க வேண்டும் என்று ஆதாரத்துடன் விளக்கியிருந்தோம்.

அதற்குப் பதில் சொல்லாத இவர்கள், விருந்து வைப்பது உலக விஷயம் தானே என்று போகின்ற போக்கில் உளறிக் கொட்டி இருக்கின்றார்கள். இங்கேயும் தங்களது கூமுட்டைத் தனத்தையும், குருட்டுச் சிந்தனையையும் வெளிப்படுத்துகின்றனர். இந்த இலட்சணத்தில் நம்மைப் பார்த்து கிண்டல் வேறு செய்துகொள்கிறார்கள்.

வழக்கமும் வணக்கமும்

வழக்கத்திற்கும் வணக்கத்திற்கும் வித்தியாசம் தெரியாததால் அல்லது தெரிந்துகொண்டே மறைப்பதால் இவர்களிடம் இந்தக் கருத்துக் குழப்பம்!

சாதாரண அடிப்படையைக் கூட விளங்காமல் இருட்டில் தடுமாறிக் கொண்டிருக்கின்றார்கள் அல்லது திட்டமிட்டு மறைக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் பேரீச்சம்பழம், கோதுமை ரொட்டி போன்றவற்றைச் சாப்பிட்டார்கள். இது அரபு நாட்டு வழக்கம். அதாவது உலக விஷயம். இதை அடிப்படையாகக் கொண்டு தமிழக முஸ்லிம்கள் சோறு சாப்பிடக் கூடாது; அது பித்அத்; காரணம் நபி (ஸல்) அவர்கள் சோறு சாப்பிடவில்லை; பேரீச்சம்பழம் சாப்பிடுவது தான் சுன்னத் என்று கூறக் கூடாது. காரணம் இவை வழக்கங்கள் ஆகும்.

எனவே வழக்கங்கள் வணக்கங்கள் ஆகாது. ஆனால் அதில் நபி (ஸல்) அவர்களின் உத்தரவு வந்து விட்டால் அது வணக்கமாகி விடும். பேரீச்சம்பழத்தைச் சாப்பிட்டு நோன்பு துறக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்களின் கட்டளை வந்து விட்டதால், அதைக் கொண்டு நோன்பு துறப்பது நபிவழியாகிவிடுகின்றது. இதே அளவுகோல் கொண்டு திருமண விருந்தை நாம் பார்க்க வேண்டும். பொதுவாக விருந்துகள் கொடுப்பது உலக வழக்கங்களில் உள்ளது தான். அதிலே நபி (ஸல்) அவர்களின் உத்தரவு வந்து விடும் போது அந்த வழக்கம் வணக்கமாகி விடும்.

திருமணம் முடித்த அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களை நோக்கி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், விருந்து கொடுக்குமாறு கட்டளை இட்டதால் அந்த விருந்து சுன்னத் ஆகி விடுகின்றது. அதாவது வணக்கமாகி விடுகின்றது. நபி (ஸல்) அவர்கள் மணமகனைப் பார்த்து விருந்து வை என்று சொல்லும் போது, அந்த விருந்தை மாப்பிள்ளை தான் வைக்க வேண்டும். அதாவது ஒருவர் திருமணம் முடித்தார் எனில் அவர் விருந்து வைப்பது நபிவழி. அது ஒரு வணக்கம். எனவே இது உலக விஷயங்களில் ஒன்றாக ஆகாது.

திருமண விருந்து தொடர்பாக இப்படி ஒரு வழி காட்டுதல் வந்த பிறகு, பெண் வீட்டார் விருந்து வைப்பதற்குத் தடை இருக்கின்றதா? என்று கேட்பதற்குக் காரணம், திருமண விருந்து என்பது இபாதத் இல்லை, உலக விஷயம் என்று இந்த மாமேதைகள் புரிந்ததால் தான்.

தங்களுக்குப் பிடிக்காதவர்களைச் சாடுவதற்கு இவர்கள் ஆயுதமாக எடுத்துக் கொண்டிருப்பது பெண் வீட்டு விருந்து என்றும் எழுதியுள்ளனர்.

அதாவது இவர்களிடம் இல்லாத ஒன்றை, இவர்களைச் சாடுவதற்காக நாம் பயன்படுத்துகின்றோம் என்ற கருத்தில் எழுதியுள்ளனர். இந்தச் சறுகல் அவர்களிடம் இருப்பதால் தான் நாம் சாடுகின்றோம். பெண் வீட்டு விருந்தை ஆதரித்து இவர்கள் சப்பைக்கட்டு கட்டுவதன் மூலம் நமது குற்றச்சாட்டை அவர்கள் ஒப்புக்கொண்டு, நாம் சொன்னது சரி தான் என்று நிரூபித்துள்ளனர்.

இப்போது அவர்கள் மறுக்கின்ற மூன்றாவது விஷயத்திற்கு வருவோம். இவர்களின் மூன்றாவது குற்றச்சாட்டு த.த.ஜ.வைச் சேர்ந்த ஒருவரை அஷ்ரஃப் பள்ளிச் செயலாளர் இங்கு நீ தொழ வரக் கூடாது என்று தடுத்தனர் என்பதாகும். இந்தக் கூற்றில் சிறிதளவும் உண்மையில்லை.

அல்ஜன்னத், பக்கம் 20,

முதல் பாரா இந்தப் பாராவில் மறுத்ததை அடுத்த பாராவில் உடனே ஒத்துக் கொள்கின்றார்கள் பாருங்கள். இனி மேற்கொண்டு இரண்டாவது ஜமாஅத் நடத்தக் கூடாது என்று கண்டித்தாரே தவிர இவர்கள் திரித்துக் கூறுவது போல தொழக் கூடாது என்று தடுக்கவில்லை.

அல்ஜன்னத், பக்கம் 20, 2வது பாரா

தொழுவதைத் தடை செய்யும் அநியாயம்

இன்று சுன்னத் வல் ஜமாஅத் எனப்படுவோர் பள்ளிவாசல்களில் தவ்ஹீதுவாதிகள் தொழுவதற்கு விதிக்கும் தடைகள் இரண்டு விதமாக அமைந்துள்ளன.

1. தனியாகவோ, அல்லது அவர்களது ஜமாஅத்தில் சேர்ந்தோ தொழக் கூடாது.

2. இரண்டாவது ஜமாஅத் நடத்தக் கூடாது.

இதில் அதிகமான பள்ளிகளில் முதல் வகையான தடை இப்போது மிக அரிதாகி விட்டது. ஏகத்துவப் பிரச்சாரம் வளர்ச்சி கண்டுள்ள மேலப்பாளையம் போன்ற ஊர்களில் கூட இப்போது இரண்டாவது ஜமாஅத் நடத்துவதற்குத் தான் தடை விதிக்கப்படுகின்றது. (அதற்கும் நமது ஜமாஅத்தினர் கட்டுப்படுவது கிடையாது என்பது வேறு விஷயம்)

குராபிகள் செய்யும் அதே வேலையைத் தான் தாங்கள் செய்ததாக அஷ்ரஃப் பள்ளி நிர்வாகம் பக்காவாக, ஆவணப்பூர்வமாக, ஆணித்தரமாக, அழுத்தம் திருத்தமாக ஒப்புக் கொள்கின்றது.

இது அக்கிரமம், அநியாயம் இல்லாமல் வேறு என்ன வகை?

சு.ஜ.காரர்கள் தங்கள் நிலைபாட்டில் தெளிவாக இருந்து கொண்டு தடுக்கின்றார்கள். இந்த வகையில் அவர்களை நாம் பாராட்டலாம். ஜாக் இயக்க வர்க்கமோ, குர்ஆன், ஹதீஸ் வழி நடக்கிறோம் என்ற போர்வையில் இந்த அக்கிரமத்தைப் பள்ளியில் அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனர். அது நடப்பு; இது நடிப்பு; அதாவது நயவஞ்சகத்தனம்.

அது மட்டுமின்றி இவர்கள் என்ன பேசினார்கள் என்பதற்கு நம்மிடம் ஒலிநாடாவும் இருக்கின்றது. இதற்குமேலும் இவர்கள் பொய் பேசினால் நாம் அந்த ஒலிநாடாவைவெளியிட வேண்டிய அவசியம் வரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு நாம் குறிப்பிட்டதும், இவர்கள் டேப்ரிக்கார்டர் கொண்டு வந்த மர்மம் என்ன? சண்டைக்கு இழுக்க வேண்டும் என்று திட்டமிட்டே வந்திருக்கின்றார்கள் என்று கூறி திசை திருப்பும் வேலையிலும் ஈடுபடுவார்கள் என்பதால் இது குறித்த விளக்கத்தையும் நாம் அளிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

அன்று அரவிந்த கண் மருத்துவ முகாம் நடைபெற்றதால் அந்த நிகழ்ச்சிக்காக நமது சகோதரர்களால் டேப்ரிக்கார்டர் கொண்டு செல்லப்பட்டது. தொழுது முடித்தவுடன் இந்த வாய்த் தகராறு ஏற்பட்டதால் அப்போது இவர்கள் பேசிய பேச்சு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை ஆதாரமாகக் கொண்டு தான், அவர்கள் இந்த அக்கிரமப் போக்கை, பள்ளியில் தொழுவதைத் தடுக்கும் விதமாக உதிர்த்த ஆணவ வார்த்தைகளைப் பயன்படுத்தினார்கள் என்று அடித்துச் சொல்கிறோம்.

எனவே இவர்கள் தங்கள் பதிலில் பச்சைப் பொய் சொல்கின்றார்கள் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறோம். மேற்குறிப்பிட்ட பொய்கள் அல்லாமல் வேறு சில பொய்களையும் அல்ஜன்னத்தில் அவிழ்த்து விட்டிருக்கின்றார்கள். அள்ளித் தெளித்திருக்கின்றார்கள்.

ஷிர்க்கும், பித்அத்தும், கொடி ஊர்வலமும், யானை ஊர்வலமும், சமாதி வழிபாடும் இன்னமும் நடந்து வருகின்றது. இவை எதுவும் த.த.ஜ.வினரின் கண்களுக்குத் தென்படவில்லை. இவற்றைக் கண்டித்து எந்த வகையான தடுப்புப் பிரச்சாரத்தையும் சமீப காலமாக தவ்ஹீது ஜமாஅத்தினர் மேற் கொள்ளவில்லை.

 அல்ஜன்னத், பக்கம் 21

நாம் என்னவோ இவர்களின் குறைகளை ஆராயும் ஒரேயொரு தொழிலை மட்டும் செய்வதாகவும், ஷிர்க், பித்அத், கொடி ஊர்வலம், சமாதி வழிபாடு போன்றவற்றை நாம் கண்டு கொள்ளாது சும்மா இருப்பதும் போல் சித்தரித்திருக்கின்றார்கள்.

நீங்கள் உங்கள் பாட்டுக்கு, குராபிகளின் குறைகளை மட்டும் பார்த்து விட்டுச் சொல்லுங்கள், எங்கள் பக்கம் ஏன் உங்கள் பார்வையைத் திருப்புகின்றீர்கள்? எங்கள் தப்புகளை, தகிடு தத்தங்களைக் கண்டு கொள்ளாதீர்கள் என்பதைத் தான் இந்தச்செய்தியின் மூலம் இவர்கள் நம்மிடமிருந்து எதிர்பார்க்கின்றார்கள்.

குராபிகளிடம் உள்ள ஷிர்க், பித்அத்களைக் கடுமையாக விமர்சிப்போம். அவற்றை விளாசித் தள்ளுவோம். ஆனால் இவர்கள் செய்கின்ற தப்பை இரு மடங்கு விமர்சிப்போம் .காரணம், இவர்கள் குர்ஆன், ஹதீஸ் என்ற போர்வையில் அசத்தியத்தை அரங்கேற்றுகின்றனர். குராபிகள் தங்களுக்குரிய தெளிவான நிலைபாட்டில் இருந்துகொண்டு தங்களது பாதையில் செல்கின்றனர்.

குர்ஆன், ஹதீஸ் படித் தான் நடக்கின்றோம் என்று சொல்லிக் கொண்டு இந்தத் தவறுகளைச் செய்யவில்லை. இது தான் குராபிகளுக்கும் இவர்களுக்கும் உள்ள பெரிய வேறுபாடாகும். அடுத்து இவர்களின் குற்றச்சாட்டுக்கு வருவோம்.

சமீப காலமாக தவ்ஹீத் ஜமாஅத்தினர் ஷிர்க், பித்அத்தைக் கண்டித்து எந்தப் பிரச்சாரமும் செய்யவில்லை என்று இவர்கள் கூறுவதும் பச்சைப் பொய்யாகும். இவர்கள் தான் பெரும் பெரும் மர்கஸ் கோட்டைகளைக் கட்டிக் கொண்டு, சவூதிச் சம்பளத்திற்குக் கணக்குக் காட்டுவதற்காக சம்பிரதாயத்திற்கு ஏதோ ஒரு சில கூட்டங்கள்போட்டு விட்டு, குறட்டை விட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அல்லாஹ்வின் மகத்தான அருளைக் கொண்டு, ஜாக் செல்லாத, இது வரையிலும் போய்ச் சொல்லாத பல இடங்களில் போய் ஏகத்துவப் பிரச்சாரம் செய்து வருகின்றோம். தக்கலை, குளச்சல், புத்தன்துறை, களியக்காவிளை போன்ற ஊர்களில் உள்ளே நுழைந்திருக்கின்றோம். அங்கு சென்று உண்மையை உரைத்திருக் கின்றோம், அல்ஹம்துலில்லாஹ்.

எனவே இந்த விஷயத்திலும் இவர்கள் பொய்யைத் தான் கூறியிருக்கின்றார்கள்.

மணப்பெண் புர்கா இல்லாமல் மண மேடைக்கு அழைத்து வரப்பட்டு வீடியோ சகிதங்களுக்கிடையில் வீற்றிருக்க நமது பள்ளி இமாம் செய்யித் அலி பைஸி குத்பா கொடுத்ததைப் போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்யப்பட்டுள்ளது. இதுவும் ஒரு பித்தலாட்ட வேலையாகும். அப்படி எந்த தவறும் குத்பா நிகழ்த்தப்படும் போது நடைபெறவே இல்லை. மணப் பொருத்தம் மார்க்கப் பிடிப்பை அடிப்படையாகக் கொண்டு இருக்க வேண்டும். அந்த வகையில் இந்த மணமகனும் ஒரு தொழுகையாளி என்று கூறியதைத் திரித்துக் கூறியுள்ளனர்.

அல்ஜன்னத், பக்கம் 19

நாம் கூறிய எந்தத் தவறும் குத்பா நிகழ்த்தப்படும் போது நடைபெறவே இல்லை என்று கூறுகின்றனர். நடக்கவேயில்லை என்று மறுக்காமல் குத்பா நடக்கும் போது என்பதையும் சேர்த்துச் சொல்வதிலிருந்து இதையும் அவர்கள் ஒப்புக் கொள்கின்றார்கள் என்பதை அறியலாம்.

மணமகன் தொழுகையாளியாக இருப்பது மட்டும் மார்க்கப் பிடிப்பாகி விடுமா? தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும். (அல்குர்ஆன் 29:45) என்று அல்லாஹ் கூறுகின்றான். வரதட்சணையை விட அருவருக்கத் தக்க,வெட்கக்கேடான காரியம் வேறு என்ன இருக்க முடியும்? இந்த மணமகனைப் போய் நமது தவ்ஹீத் ஜமாஅத்தினர் சந்தித்து, பெண் வீட்டு விருந்து வேண்டாம் என்று விளக்கமாகவும் விரிவாகவும் எடுத்துக் கூறிய பின்னரும் பெண் வீட்டு விருந்தைப் போட்டு விளாசுகின்றார் என்றால் இதற்குப் பெயர் மார்க்கப் பற்றா?

இவர்கள் சொல்கின்ற தொழுகையாளி என்ற அளவுகோலை வைத்துப் பார்த்தால் தஹஜ்ஜத் உட்பட அனைத்தும் தொழக் கூடிய தொழுகையாளிகள் தான் ஷிர்க் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே அவர்களையும் மார்க்கப் பற்றுள்ளவர்கள் என்று சொல்வார்களா?

இவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக, நாளுக்கு நாள் அசத்திய சகதியில் சறுகி இறங்கிக் கொண்டிருப்பதால் இவர்களுடைய வார்த்தைகளும் சறுகிக் கொண்டே இருக்கின்றன என்பதற்கு இவை தெளிவான சான்றுகளாகும். அடுத்து இவர்கள் எழுப்பும் கேள்வி, சின்னச் சின்ன விஷயங்களுக்காக எல்லாம், நீங்கள் தவ்ஹீதுவாதிகள் இல்லை என்று கூறி வெளியே தள்ளவா முடியும்? என்பதாகும்.

வரதட்சணை போன்ற கொடுமைகளெல்லாம் சமரசம் செய்து கொள்ளக் கூடிய தப்புகள் கிடையாது. பெண் வீட்டு விருந்து போன்றவை ஜீரணிக்கக் கூடிய விஷயமல்ல! இது போன்ற திருமணங்களில் ஒரு ஜமாஅத் கலந்து கொண்டால் இந்தத் தீமையை ஒழிக்கும் பணியிலிருந்து அந்த ஜமாஅத் வெளியே போய் விடும். ஜமாஅத் என்பது ஜமாஅத்தாக இருக்க வேண்டும். தீமைகளில் சமரசம் செய்து கொள்ளக் கூடாது. அதனால் தான் இன்று ஜாக் என்ற அமைப்பு பிறர் மனைவியை அபகரித்துச்செல்லும் காமுகர்களின் கூடாரமாகி விட்டது. அதுவும் இத்தகையவர்கள் சாதாரண உறுப்பினர் மட்டத்தில் இல்லாமல் மேல்மட்டப் பிரச்சாரகர்களாக இருக்கின்றனர். இது போன்ற கூவத்தில் குளித்துக் கொண்டு எங்களைப் பார்த்து பித்தலாட்டம் என்றால் இன்னும் உங்கள் முகத்திரையைக் கிழிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என்று எச்சரிக்கை செய்து வைக்கிறோம்.

மதம் மாறுது ஒரு கூட்டம் மவுனம் காக்குது ஜாக்

ஏகத்துவம் அக்டோபர் 2005

1980களுக்கு முந்திய கால கட்டத்தில் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களைத் தவிர ஒட்டுமொத்த தமிழகமும் இணை வைப்பிலும், தக்லீது எனும் தனி மனித வழிபாட்டிலும் மூழ்கி இருண்டு கிடந்தது.

தர்ஹாக்களின் மினாராக்களில் ஷிர்க், கொடி கட்டிப் பறந்ததைப் போன்று, சமாதி கட்டுதல், அதை முத்தமிடுதல், சந்தனம் பூசுதல், பட்டுப் போர்வை போர்த்துதல், விளக்கேற்றுதல், மனிதர்களின் காலில் விழுந்து வணங்குதல் போன்ற இணை வைப்புக் கலாச்சாரமும் கொடி கட்டிப் பறந்தன.

இந்நிலையில் மதீனாவில் போய் படிக்காத நம்முடைய ஆலிம்கள் பிரச்சாரத்தின் மூலம் ஏகத்துவ வெளிச்சத்தைப் பாய்ச்சினர். இதை எதிர்த்து, அசத்தியத்தின் ஆலிம்கள் பிரச்சாரம் செய்யத் தலைப்பட்ட போது, நாம் அவர்களிடம் இவற்றுக்குரிய ஆதாரங்கள் எங்கே? என்ற கேள்விகளை எழுப்பினோம். அதற்கு அந்த அசத்திய ஆலிம்கள் மத்ஹபு நூல்களைத் தான் ஆதாரமாகக்காட்டினர்.

 “கப்ரு வணக்கம் கூடாது என ஓர் இமாம் கூறியிருக்கின்றார்” என்று நாம் கூறினால், “இன்னோர் இமாம் கூடும் என்று கூறுகின்றார்” என்பதே அவர்களின் பதிலாக இருந்தது. அப்போது தான் நமக்கு ஓர் உண்மை புலப்பட்டது.

இவர்கள் குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டு எல்லைக் கோடுகளை மட்டும் வரையறைகளாகக் கொண்டு நிற்காமல், நான்கு கலீபாக்கள், ஸஹாபாக்கள், நான்கு இமாம்கள், நல்லோர்கள், நாதாக்கள் என பல எல்லைக் கோடுகளைத் தங்கள் மூல ஆதாரங்களாகக் கொண்டுள்ளனர். இது தான் அவர்களை அசத்தியப் பாதைக்குக் கொண்டு சென்றது என்ற உண்மை நமக்குத் தெளிவானது.

இரண்டு தான் என்றும் அடிப்படை

அப்போது மத்ஹபு நூல்களைத் தோண்டினோம்; துளாவினோம். அந்நூல்களில் அப்பிக் கிடந்த அசிங்கங்களை – ஆபாசங்களை மக்களுக்கு அடையாளம் காட்டி, இவை அடிப்படைகளாக மட்டுமல்ல; அர்த்தமுள்ளவைகளாகக் கூட கிடையாது என்று கூறி மக்களின் சிந்தனைகளைக் கிளறி விட்டு, மத்ஹபு நூல்கள் மீதுள்ள மாயையை அப்புறப்படுத்தி அகற்றினோம்.

அதன் பின்னர் அல்குர்ஆன், ஹதீஸ் இரண்டை அடிப்படையாகக் கொண்டு ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் என்ற அமைப்பையும் கண்டோம். இந்த அமைப்பைக் காண்பதற்கு முன்னரும், கண்ட பின்னரும் பல விவாத அரங்குகளைச் சந்தித்தோம்.

கோட்டாற்று விவாதத்தில் அசத்தியத்திற்குக் கல்லறை கட்டினோம்.

கோவையில் காதியானிகளின் முகமூடியைக் கிழித்தெறிந்தோம்.

அன்று ஓடிய காதியானிகள் இன்று வரை நம்மிடம் வாலாட்டவில்லை.

ஏன் இந்த விவாதங்கள்?

விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கிஅழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக!

(அல்குர்ஆன் 16:125)

என்ற அல்லாஹ்வின் உத்தரவுப்படி விவாதப் போர் தொடுத்தோம்; வெற்றி கண்டோம்.

“கஃபா நிலைக்குமா?” என்று கேட்ட கிறித்தவ அறிஞர் ஜெபமணியை, “கப்ஸா நிலைக்குமா?” என்று கேட்டு, வாதப் படிக்கட்டுகளில் சத்தியச் சாட்டைகள் கொண்டு உருட்டி எடுத்தோம். உருண்டு விழுந்து, சுருண்டு எழுந்து ஓடியவர் தான். அவர் மட்டுமல்ல; அவர் வெளியிட்ட பத்திரிகையும் ஒதுங்கி, ஒடுங்கிப் போனது.

அல்லாஹ் கூறும் வாத அஸ்திரத்தைக் கையில் எடுத்த போது, அசத்தியக் கூட்டங்கள் ஆட்டம் கண்டன; ஓட்டம் பிடித்தன. இப்படி ஒரு வலுவான இயக்கம் தன் வேர்ப் பிடிப்புகளை வளப்படுத்தவும் வலுப்படுத்தவும் வேண்டுமாயின் சமுதாயப் பிரச்சனைகளைக் கையில் எடுக்க வேண்டும் என்று அந்த இயக்கத்தினரிடம் கூறிய போது, அவற்றைப் பணிவாகக் கோரிய போதும் அதை ஏற்க மறுத்தனர்.

குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் அடுக்கடுக்கான சான்றுகளை முன்வைத்த போதும் அவற்றை நிராகரித்தனர். பிடிவாதமாக ஒரு பிரிவுக்கு வழி வகுத்தனர்.

அல்லாஹ்வை விட்டு விட்டு, காஃபிர்களிடம் போய் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கேட்பதா? என்று நம்மைக் கேலி செய்தவர்கள் இன்று முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று தாங்கள் நடத்தும் மாநாடு(?)களில் தீர்மானம் போட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்தச் சந்தர்ப்பவாதச் சாக்கடையைப் பற்றி இங்கே நாம் சொல்ல வரவில்லை.

புது மத உதயம்

பல்வேறு பிரிவினரிடம் விவாதத்தில் களம் கண்டு, தூய இஸ்லாத்தை நிலை நாட்டிக் கொண்டிருக்கும் வேளையில், குர்ஆன் மட்டும் போதும் என்ற கோர சிந்தனையைக் கொண்ட ஒரு புது மதம் தமிழகத்தில் தலை காட்டத் துவங்கியது. அதன் தாக்கம் ஜாக்கினரிடம் அலை அலையான ஐயப்பாடுகளை ஏற்படுத்தியது.

இந்தப் புதிய சிந்தனைக்குப் போதிய விளக்கத்தை வழங்க ஜாக் தலைமை தவறியது. விளைவு, சொல்லிவைத்தாற் போல் ஜாக்கில் மேல் மட்டப் பொறுப்பு வகித்தவர்கள் அதற்குப் பலியானார்கள்; அந்தப்புது மதத்தில் புகுந்தனர்.

இப்படி ஒரு புதிய நச்சுக் கருநாகம் தலை தூக்கியவுடனேயே ஒரு விவாதத்திற்கு அழைத்திருந்தால் அது தன் தலையைப் படுக்கப் போட்டிருக்கும்; அதன் விஷப் பற்கள் வீழ்த்தப்பட்டிருக்கும். விவாதம் செய்யக் கூடாது என்ற முடிவிலிருந்த ஜாக் தலைமை இந்தக் கோரத் தீமையைக் கண்டு கொதிக்கவில்லை; கொந்தளிக்கவில்லை. தங்களது வாய்களுக்கு இறுக்கமான பூட்டுக்களைப் போட்டுக் கொண்டது.

அழகிய விவாதம்

ஆனால் இதைக் கண்டு தவ்ஹீத் ஜமாஅத் வாளாவிருக்கவில்லை. போர் முனையில் மின்னும் கூர் வாளாகக் களம் புகுந்தது. பல கட்டங்களில் பல்வேறு அமர்வுகளில் வாதப் பரிமாற்றங்கள்! முடிவில் “குர்ஆன் மட்டும் போதும்” என்ற விஷச் சிந்தனை முளையிலேயே கிள்ளிஎறியப்பட்டது.

மீண்டும் அது துளிர் விடாமல் இருக்க அல்முபீனில், குர்ஆன் மட்டும் போதுமா? என்ற சிறப்பிதழும், அதன் பிறகு தொடர் கட்டுரைகளும் எழுதப்பட்டு அந்தச் சிந்தனைக்கு முடிவுகட்டப்பட்டது.

சென்னையில் இந்தச் சிந்தாந்தம் புறப்பட்ட வேகத்திலேயே செத்து மடிந்தது. ஆனால் அதை எதிர்த்து ஜாக் இது வரை எந்த வேலையையும் செய்யவில்லை. ஜாக்கின் இந்த மவுன ராகம் இந்தப் புது மதத்தினருக்குப் புதுத் தெம்பைக் கொடுத்தது.

அதனால் தான் சென்னையில் களையெடுக்கப்பட்ட அந்தச் சிந்தாந்தம் கோட்டாற்றில் தலை தூக்கியது. குர்ஆன் மட்டும் போதும் என்ற கோர சிந்தனையாளர்கள் கோட்டாரில் மூன்று நாட்கள் பயான் என்ற பெயரில் கொள்ளியைக் கொளுத்தினர்.

அவர்கள் கொளுத்திய தீயின் வேக்காட்டில் ஒரு சில ஜாக்கினர் சிந்தனை ரீதியாக வெந்துபோயினர்.

“ஆஹா, என்ன அழகான கருத்துக்களை அள்ளித் தருகின்றனர்” என்று “இச்’ கொட்டி, அந்தப் புது மதம் தழுவத் துடித்துள்ளனர்.

இந்நிலையில் இவர்களால் கத்துக் குட்டி என்று வர்ணிக்கப்பட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ”பொடியன்மார்கள்’ அந்த நச்சு மேடைக்குச் சென்று கேள்வி கேட்டுள்ளனர். கேள்விக் கணைகளுக்கு இங்கு அனுமதி இல்லை என்று அந்தப் புது மதத்தினர் மறுத்துள்ளனர். அப்படியானால் விவாதத்திற்கு நாள் குறியுங்கள் என்றதும் ஆடிப் போய் ஓடி ஒளிந்துள்ளனர்.

இந்தக் கத்துக் குட்டிகள் வெளிப்படுத்திய அசாதாரண சத்தியத் துணிச்சலில் அசத்தியவாதிகளின் சித்து வேலைகள் செத்து நீர்த்துப் போயின. இன்னும் அந்தப் பக்கம் சாயவிருந்த ஜாக்கினரின் தொடர் வீழ்ச்சி தடுத்து நிறுத்தப்பட்டது. மூன்று நாள் கதா காலாட்சேபத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

மேதைகளின் மெத்தனப் போக்கு

பெண் வீட்டு விருந்துகளில் கலந்து கொண்டு வெளுத்துக் கட்டும் பேச்சாளப் பெருந்தகைகள், மெத்தப் படித்த மேதாவிகள் இது போன்ற தீமைகளைக் கண்டு கொள்ளாத மெத்தனப் போக்கில் உள்ளனர்.

குர்ஆன் மட்டும் போதும் என்ற குருட்டுச் சிந்தனைக் கூட்டம் ஆள் பிடிக்கும் போது ஜாக் தலைவர்கள் அமைதியாகக் குறட்டை விடுகின்றனர். “பாருங்கள்! பொடியன்மார்கள் அவர்களிடம் போய் ஒரு பிடி பிடித்து விட்டு வந்திருக்கின்றனர்; ஆனால் இவர்கள் வாய் மூடிக் கிடக்கின்றனர்” என்று மக்கள் பேசத் துவங்கியதும், “அஹ்லெ குர்ஆன் என்று ஐந்து பேர் இருக்கின்றனர்; அவர்களிடம் போய் விவாதம் செய்ய வேண்டுமா?” என்று ஜாக்கினர் வேதாந்தம் பேசுகின்றனர்.

 “ஹதீஸ்களை எல்லாம் குப்பையில் கொண்டு போய் போடு!” என்று கபூர் என்பவரின் கொடூர வார்த்தைகள் ஜாக்கினரின் குருதியைச் சூடேற்றவில்லை. ஆனால் கொதித்துப் போய் இந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்பவர்களின் சூட்டைத் தணிக்கும் விதமாக சால்ஜாப்பு சொல்லி சமாதானப்படுத்தும் சூட்சுமத்தைத் தான் இது வரை ஜாக்கினர் கையாள்கின்றனர்.

நாம் என்னவோ எல்லோரையும் ஜட்டி போட்டுக் கொண்டு தான் தொழ வர வேண்டும் என்று சொன்னதாகக் கற்பனை செய்து கொண்டு நம் விஷயத்தில் இவர்கள் இரத்தம் கொதித்து, வானத்திற்கும் பூமிக்கும் குதித்து, பேச்சிலும் எழுத்திலும் நம்மைத் திட்டித் தீர்ப்பது போல் கபூர் என்பரின் குருட்டுச் சிந்தனையைக் கண்டித்து வார்த்தைகளைக் கொட்டக் காணோம்; திட்டக்காணோம்.

கபூர் என்பவர் காசுள்ள ஆசாமி என்பதாலோ என்னவோ இந்த மவுன விரதம். இதற்கெல்லாம் காரணம், எவரையும் விவாதக் களத்தில் சந்திக்கத் திராணியற்று இருப்பது தான். அசத்தியத்திற்கு எதிராக அல்லாஹ் அளித்திருக்கும் இந்த ஆயுதத்தைத் தாங்கவில்லை என்றால் நாமும் குறட்டை விட்டுத் தூங்க வேண்டியது தான்; கொள்கையில் கோட்டை விட வேண்டியது தான்.

எனவே குமரி முனையில் எழுந்த இந்தத் தீமை எங்கு எழுந்தாலும் அதற்கு எதிராகப் பொங்கி எழுவோமாக! குர்ஆன் மட்டும் போதும் என்று கூறி, இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்றை நீக்கிவிடாமலும், ஸஹாபாக்கள், இமாம்கள், நாதாக்கள் என்று கூறி இஸ்லாத்தின் மூல ஆதாரத்தை நீட்டி விடாமலும் நமது சத்தியப் பயணத்தைத் தொடர்வோமாக!

ஏகத்துவம் ஆகஸ்ட் 2006

பள்ளிவாசலை இழுத்து மூட சதி

ஸபானிய்யாக்களை மறந்த ஜாக் சபையினர்

அன்று ஏகத்துவத்தை மக்களிடம் எடுத்துச் சொன்ன போது எங்கு பார்த்தாலும் அடி,உதை, ஊர் நீக்கம் என்ற கொடுமைகள் நமக்கு எதிராக அணி வகுத்துக் கிளம்பின. அத்துடன் நாம் பள்ளிவாசல்களில் தொழுவதற்கும் தடுக்கப்பட்டோம்; மீறி தொழச்சென்றால் தடியர்களால் தாக்கப்பட்டோம். காவல் நிலையம், நீதிமன்றம் என்று வழக்குகளைச் சந்தித்துக் கொண்டிருந்தோம்.

பாங்குசொல்லப்பட்டதும் பள்ளியில் போய்த் தொழ வேண்டும் என்று நம் மனம் ஆர்வப் படும். ஆனால் பள்ளியில் போய்த் தொழ முடியாது. அதனால் நமது வீடுகளிலேயே தொழுவோம். என்ன தான் குறித்த நேரத்தில் வீடுகளில் தொழுதாலும் பள்ளியில் தொழுதது போன்ற நிம்மதியிருக்காது. இப்படி ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் அல்லாஹ் நமக்குப் பள்ளிவாசல்களை வழங்கினான்.

அந்தப் பள்ளிகள் நிறுவப்பட்ட பிறகு மாநபி காட்டிய வழிமுறையில் மன நிறைவுடன் தொழுகைகளை நிலை நாட்டினோம். கடைசியில் பள்ளிகள் நிரம்பி வழிந்தன. அந்தப்பள்ளிகள் நமக்குப் போதவில்லை என்றாகி விட்டது. விரிவாக்கத்தில் விரைந்து செயலாற்றிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் குர்ஆன், ஹதீஸை தனக்குப் பெயராக்கிக் கொண்ட ஜாக் என்ற இயக்கம் இன்று பள்ளிவாசல்களை மூடும் மூர்க்கத்தனமான செயலில் இறங்கியிருக்கிறது.

முதல் கட்டமாக மூன்று நாட்கள் மூடுதல்

அதன் தொடக்கமாகவும், முதல் கட்டமாகவும் தென்காசியில் மூன்று நாட்கள் பள்ளிவாசலை மூடி ஒத்திகை பார்த்தார்கள்.

அதன் பின் அந்த ஆலய மூடல் அநியாயத்தை, அக்கிரமத்தை உள்ளத்தில் ஓர் எள்ளளவும் உறுத்தலின்றி கடையநல்லூர் அல்மஸ்ஜிதுல் முபாரக்கில் ஜாக் அரங்கேற்றியது. அதற்காக தமுமுக சங்கத்தைத் துணைக்கு அழைத்துக் கொண்டது

.ஏற்கனவே தவ்ஹீதையும், தவ்ஹீது வாதிகளையும் அழிப்பதற்குக் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் தமுமுக இதைத் தக்க தருணமாகக் கருதி ஜாக்குடன் கைகோர்த்துக் களம் இறங்கியது.  

முடிவு, அவர்கள் எதிர்பார்த்தபடி அப்பள்ளிவாசல் மூடப்பட்டது. இன்று வரைகடையநல்லூரிலுள்ள ஏகத்துவவாதிகள் பள்ளியில் போய் தொழ முடியாமல் பரிதவிக்கின்றனர்; அனல் புழுக்களாய் துடிக்கின்றனர். அன்று நாம் பள்ளி இல்லாமல் அலைக்கழிந்த காலத்தையும், இன்று பள்ளி எனும் அருட்கொடை இருந்தும் அலைக் கழிவதையும் எண்ணிப் பார்க்கவேண்டியுள்ளது.

இத்தனைக்கும் யார் காரணம்? ஜாக்! அன்று சுன்னத் வல்ஜமாஅத்தினர் பள்ளிவாசல்களில் தொழுவதைத் தான்தடுத்தனர். பள்ளிகளை இழுத்து மூடும் துரோகத்திலும் துரைத்தனத்திலும் இறங்கவில்லை.

அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அவனது பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரும் அநீதி இழைத்தவன் யார்? பயந்து கொண்டே தவிர அவற்றில் நுழையும் உரிமை அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும்,மறுமையில் கடுமையான வேதனையுமுண்டு.

(அல்குர்ஆன் 2:114)

அன்று சு.ஜ.வை எதிர்த்து இந்தத்தீமைக்கு எதிராக, மேற்கண்ட குர்ஆன் வசனத்தை ஆதாரமாகக் கொண்டு பிரச்சாரம் செய்தனர் இந்த ஜாக்கினர். அப்போது நாமும் அவர்களுடன் இருந்தோம். அவர்களை விட அதிகமாக இந்தத் தீமைகளை எதிர்த்து எரிமலையாய் கனன்றோம். நாம் இன்றும் அதே நிலையில் இருக்கிறோம். ஆனால் இவர்களோ சு.ஜ.வினரை விட ஒருபடி தாண்டி, பள்ளிகளை இழுத்து மூடுவது என்ற கொடிய தீமையின் கொடுமுடிக்கே சென்று விட்டனர்.

அபூஜஹ்லின் பாதையில் அடியெடுத்து வைக்கும் ஜாக்

தொழும் அடியாரைத் தடுப்பவனைப் பார்க்கவில்லையா? அவர் நேர் வழியில் இருப்பதையே, அல்லது இறையச்சத்தை ஏவுவதையே அவன் பொய்யெனக் கருதி அலட்சியம் செய்வதை நீர் கவனித்தீரா? அல்லாஹ் பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா? அவ்வாறில்லை. அவன் விலகிக் கொள்ளவில்லையானால் முன்நெற்றியைப் பிடிப்போம். அது குற்றமிழைத்த பொய் கூறிய முன் நெற்றி. அவன் தனது சபையோரை அழைக்கட்டும். நாம் (ஸபானிய்யாக்கள் எனும்) நரகின் காவலர்களை அழைப்போம். எனவே, அவனுக்குக் கட்டுப்படாதீர்! ஸஜ்தாச் செய்வீராக! நெருங்குவீராக!

(அல்குர்ஆன் 96:9-19)

இந்த வசனங்கள் யாரைக் குறிக்கின்றன? அபூஜஹ்லைத் தான் என்று நாம் யாவரும் அறிந்து வைத்திருக்கின்றோம்.

அவனது இந்தப் பாணியைப் பின்பற்றி அவனது பணியைக் கையாண்டு, பொய்யான வழிமுறைகளில் ஜாக் களமிறங்கி உள்ளது.

கடையநல்லூரில் அல்மஸ்ஜிதுல் முபாரக் பள்ளியில் தமுமுகவினருடன் இணைந்து தவ்ஹீத் ஜமாஅத்தினரைத் தாக்கி இரத்தம் குடித்து, ருசி கண்டு, அந்தப் பள்ளியைப் பூட்டிய இந்த ஆக்டோபஸ் ஜாக் இப்போது மேலப்பாளையத்தில் மஸ்ஜிதுர் ரஹ்மானை ஹைஜாக் செய்து இழுத்து மூடுவதற்கு வந்திருக்கின்றது.

மேலப்பாளையத்தில் ஜாக்குக்கு என்று ஆட்கள் கிடையாது. எனவே தமுமுகவின் துணையுடன் இந்த அராஜகத்தை அரங்கேற்ற முயற்சிக்கின்றது. அவன் தனது சபையோரை அழைக்கட்டும் என்று அல்லாஹ் சொல்லிக் காட்டுவது போல் தமுமுக போன்ற தவ்ஹீது ஜமாஅத்திற்கு விரோதமான ஜமாஅத்துகளை அழைத்துக் கொண்டது ஜாக்.

அது குற்றமிழைத்த பொய் கூறிய முன் நெற்றி என்று அல்லாஹ் பட்டியலிடும் தன்மைகளின் படி குற்றமிழைத்து, பல பொய்களில் இறங்குகின்றது. மறுமை நாளில் ஸபானிய்யாக்களை (நரகக் காவலர்களை) சந்திப்போம் என்பதை மறந்து ஆளும் வர்க்கத்தினரை, ஆட்சியாளர்களை தங்கள் சூழ்ச்சி வலைகளில் வளைக்க முயற்சி செய்தனர். ஆனால் எல்லாம் வல்ல அல்லாஹ் சூழ்ச்சியாளர்களுக்கெல்லாம் சூழ்ச்சியாளன் என்பதை அவர்கள் பின்னிய சதி வலைகளின் கண்ணிகளைத் தகர்த்தெறிவதன் மூலம் நிரூபித்துக் கொண்டிருக்கிறான். 

ஏகத்துவம் பிப்ரவரி 2006

ஜாக் செல்லும் சறுகல் பாதை

மனோ இச்சைக்குத் தக்க மார்க்கத்தை வளைத்ததால் தான் தர்ஹா வழிபாடு, மத்ஹபு மாயை, தரீக்காக்கள் பற்று, தாயத்து தட்டு போன்ற கலாச்சாரங்கள் தோன்றின. அந்தத் தரித்திர நிலை மாறி மார்க்கத்துக்குத் தக்க மனோ இச்சையை வளைக்கும் நிலை இப்போது தோன்றி தொடர்ந்து கொண்டிருக்கின்றது. மனோ இச்சைக்குத் தக்க மார்க்கத்தை மாற்றுவது அசத்திய வாதிகளின் வேலை. மார்க்கத்திற்குத் தக்க மனோ இச்சையை மாற்றிக் கொள்வது ஏகத்துவவாதிகளின் நிலை. அசத்தியவாதிகளுக்கும் நமக்கும் உள்ள வேறுபாடே இது தான்.

ஆனால் இன்று ஜாக் அந்தப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டு அடிப்படைகளில் மட்டும் செயல்பட வேண்டும் என்பதற்காக நிர்ணயித்து நிர்மாணிக்கப்பட்ட இந்த இயக்கம், மார்க்கத்துக்குத் தக்க மனோ இச்சையை மாற்றாமல், மனோ இச்சைக்குத் தக்க மார்க்கத்தை வளைக்கத் துவங்கி விட்டனர்.

இதை நாம் வெறும் கற்பனையாகச் சொல்லவில்லை. சரியான, நிதர்சனமான சான்றுகளின் அடிப்படையிலேயே கூறுகின்றோம்.

அண்மையில் ஹஜ் பெருநாள் அன்று நாகர்கோவில், கோட்டாற்றில் வரலாற்றிலேயே முதன் முறையாக, நபிவழியின் அடிப்படையில் பெருநாள் தொழுகையைத் திடலில் தொழுவதற்கு தவ்ஹீத் ஜமாஅத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். அதற்கான அறிவிப்பை வெளியிட்டது தான் தாமதம். ஜாக் இயக்கவாதிகள் கோபத்தில் கொந்தளிக்கத் துவங்கினர். குமரி மாவட்ட ஜாக் வகையறாக்கள் குராபிகளை விடவும் கேடாகக் குமுறினர். அவர்கள் கொட்டிய கொடுஞ் சொற்களை, ஆபாச அர்ச்சனை வார்த்தைகளைக் கேட்பதற்குக் காதுகள் கூசியது போலவே எழுதுவதற்கும் கூசுகின்றன.

இவர்களின் தலைவர் – இல்லை – அமீர் தனது தொண்டர்களின் எண்ணங்களைப் பெருநாள் காலையில் சுப்ஹ் தொழுகைக்குப் பின்னரும், அதன் பின்னர் தொடர்ந்த உரைகளிலும் எதிரொலித்துள்ளார்; எரிமலையாக வெடித்துள்ளார். அவர் வீசிய வினாப் பொறிகள் இதோ:

1. நாகர்கோவிலில் குராபிகள் திடலில் தொழுகை நடத்துகிறார்களே! அங்கு போய் இவர்கள் (தவ்ஹீதுவாதிகள்) தொழ வேண்டியது தானே?

2. பள்ளிவாசலில் பெருநாள் தொழுகையைத் தொழுவதற்குத் தடை இருக்கிறதா?

3. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பள்ளிகள் சிறியதாக இருந்தன. அதனால் திடலில் தொழுதார்கள்.

4. திடலில் கண்டிப்பாகத் தொழுது தான் ஆக வேண்டுமா? இது அமீரின் ஆக்கப்பூர்வமான (?) கேள்விக் கணைகள் மட்டுமல்ல! ஜாக் பிரச்சாரப் பரிவாரங்களும், பீரங்கிகளும் வைக்கின்ற பரிசுக்குரிய, பாராட்டுக்குரிய கேள்விகளாகும். இவற்றுக்கான பதிலைப் பார்க்கும் முன் பெருநாள் தொழுகையைத் திடலில் தொழுவதன் அவசியத்தைப் பார்ப்போம்.

திடலில் தொழுகை

நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெரு நாளிலும் (பள்ளியில் தொழாமல்) முஸல்லா எனும் மைதானத்திற்குச் செல்பவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஸயீது அல் குத்ரீ (ரலி),

நூல்: புகாரி

மேற்கண்ட ஹதீஸில் இடம் பெறும் முஸல்லா என்ற சொல்லுக்கு தொழுமிடம் என்று சிலர் மொழி பெயர்க்கின்றார்கள். முஸல்லா என்றால் தொழுமிடம் என்ற பொருள் உள்ளது என்றாலும் இந்த ஹதீஸில் கூறப்படுவது முஸல்லா என்ற பெயருடைய மைதானத்தைத் தான்.

கஸீர் பின் ஸல்த் (ரலி) என்ற நபித் தோழருடைய வீட்டிற்கு முன்னால் முஸல்லா என்ற மைதானம் ஒன்று இருந்தது. அந்த மைதானத்தில் நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகைகளை நிறைவேற்றியதாகத் தான் ஹதீஸ்களில் காணப்படுகின்றன. நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் பெருநாள் தொழுகையைத் தொழுததாக எந்த ஒரு ஆதாரப்பூர்வமான ஹதீஸும் இல்லை.

மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட எனது இந்தப் பள்ளியில் (மஸ்ஜிதுந் நபவீ) தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)

நூல்: புகாரி

இந்த ஹதீஸின் அடிப்படையில் மஸ்ஜிதுந் நபவீயில் தொழுவது மற்ற சாதாரண பள்ளிகளில் தொழுவதை விட ஆயிரம் மடங்கு சிறந்ததாகும். பெருநாள் தொழுகைகளைப் பள்ளியில் தொழுவது சரியான நடைமுறையாக இருந்திருந்தால் ஆயிரம் மடங்கு நன்மைகளைப் பெற்றுத் தரக் கூடிய மஸ்ஜிதுந் நபவீயில் நபி (ஸல்) அவர்கள் தொழுதிருப்பார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த விஷயத்தில் நன்மைகள் அதிகமோ அதைத் தான் நடைமுறைப்படுத்துவார்கள்.

அந்த அடிப்படையில் நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகைகளைத் திடலில் தொழுதிருக்கும் போது, அதைப் புறக்கணித்து விட்டு பள்ளியிலேயே தொழுவது நபிவழிக்கு மாற்றமானதாகும். புனித நகரமான மக்காவாக இருந்தாலும் பெருநாள் தொழுகை திட-ல் தான் நடத்தப்பட வேண்டும். கஃபாவில் தொழுவது ஒரு லட்சம் மடங்கு சிறந்தது என்று கூறி நபிவழிக்கு மாற்றம் செய்ய முடியாது.

ஆனால் மக்காவில் இந்த நடைமுறை புறக்கணிக்கப்பட்டு வருகின்றது. புனிதமிக்க ஒரு நகரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கட்டளை, காற்றில் பறக்க விடப்படுவது வேதனைக்குரிய விஷயமாகும்.

மாதவிடாய் காலத்தில் பெண்கள் பள்ளிக்கு வர முடியாது. பெருநாள் தொழுகையைப் பள்ளிவாசலில் தொழும் போது மாதவிடாய்ப் பெண்களுக்கு பெருநாள் சந்தோஷங்களில் பங்கெடுக்க முடியாத நிலை ஏற்பட்டு விடுகின்றது. இதன் மூலம் அவர்களுடைய உரிமையை நாம் மறுப்பதோடு பரக்கத்தும், புனிதமும் மிக்க அந்த நாளில் அவர்கள் (குத்பா) உரையைக் கேட்பது, தக்பீர் கூறுவது, துஆச் செய்வது போன்ற நற்செயல்களில் ஈடுபடுவதை விட்டும் தடுத்தவர்களாகி விடுகிறோம்.

ஓர் ஊரிலுள்ள முஸ்லிம்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடி தொழுகை நடத்தும் போது அதில் சகோதரத்துவம் வலுப்படுகின்றது. எல்லோரும் ஓரணியில் நின்று தொழுகின்ற இந்தக் கட்டமைப்பு, இஸ்லாத்தில் தீண்டாமை இல்லை என்பதை உலகிற்குப் பறை சாற்றுவதுடன் மாற்று மதத்தவர்களிடம் இஸ்லாத்தைப் பற்றிய ஓர் உயர்ந்த எண்ணத்தைத் தோற்றுவிக்கின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகைக்குத் திடலைத் தேர்வு செய்ததில் இது போன்ற எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன. இந்த நபிவழியைப் புறக்கணித்து பள்ளிவாசலில் பெருநாள் தொழுகை தொழுவது பல தவறான நடைமுறைகளுக்கு வழிவகுத்துள்ளது.

பல ஊர்களில் பெண்கள் பெருநாள் தொழுகையே தொழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடுகின்றது. குறிப்பாக ஹனஃபி மத்ஹபில் பெண்களைப் பெருநாள் தொழுகை தொழுவதற்கு அனுமதிப்பதில்லை. அபூஹனீபா இமாமின் சட்டத்தில் இவ்வாறு இல்லாவிட்டாலும் நடைமுறையில் ஆண்கள் மட்டுமே பெருநாள் தொழுகை தொழுகின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வலியுறுத்திய இந்த வணக்கத்தைப் பெண்களுக்குக் கிடைக்காமல் தடுப்பவர்கள் அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டும்.

இன்னும் சில ஊர்களில் ஏதேனும் வீட்டில் வைத்து பெண்களுக்கென பெருநாள் தொழுகை ஏற்பாடு செய்து நடத்துகின்றார்கள். இது போன்று ஏற்பாடு செய்யப்படும் தொழுகைகள் ஒரே ஜமாஅத்தாக நடைபெறுவதில்லை. ஒரு வீட்டில் பல ஜமாஅத்கள் நடத்தி தொழுகின்றார்கள். நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இப்படி பெண்கள் தனியாக ஓரிடத்தில் கூடி ஜமாஅத்தாகப் பெருநாள் தொழுகை தொழுததாக எந்த ஒரு ஹதீஸையும் நம்மால் காண முடியவில்லை.

திடல் தொழுகையைப் புறக்கணிப்பது தான் இத்தகைய பித்அத்கள் உருவாவதற்குக் காரணம் என்பதை மறுக்க முடியாது.

இவற்றைக் கருத்தில் கொண்டும், திடலில் தொழுவது தான் நபிவழி என்ற அடிப்படையிலும் பெருநாள் தொழுகைகளை கண்டிப்பாகத் திடலில் தான் நிறைவேற்ற வேண்டும். திடல் இல்லாவிட்டால் அதற்கென விலைக்கு வாங்கியாவது இந்த நபிமொழியைப் பேண வேண்டும்.

இந்த அடிப்படையில் தான் நாகர்கோவில் கோட்டாரில் தவ்ஹீது ஜமாஅத்தினர் இந்த ஆண்டு ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையைத் திடலில் தொழுவது என்று முடிவெடுத்தனர். இதைத் தாங்கிக் கொள்ள முடியாத ஜாக்கினரும், அவர்களது அமீரும் எழுப்பிய கேள்விகளைத் தான் ஆரம்பத்தில் குறிப்பிட்டோம். இப்போது இவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கான பதிலைப் பார்ப்போம்.

"குராபிகள் திடலில் தொழுகை நடத்துகிறார்களே! அங்கு போய் இவர்கள் (தவ்ஹீதுவாதிகள்) தொழ வேண்டியது தானே?” என்று கேட்கும் சறுகல் பாதையில் சறுகிக் கொண்டிருக்கும் ஜாக்கிடம் நாம் ஒரு கேள்வியைத் திருப்பிக் கேட்கிறோம்.

இவர்கள் ஏன் தமிழகத்தின் பல பகுதிகளில் பள்ளிகளைக் கட்டினர்? எதற்காக? இவ்வாறு இவர்களிடம் நாம் கேட்கும் போது இவர்கள் தரும் பதில் இரண்டாகத் தான் இருக்க முடியும்.

1. குராபிகள் இணை வைப்பவர்கள். எனவே அவர்களின் பின்னால் நின்று தொழ முடியாது.

2. குராபிகளின் பள்ளிகளில் தவ்ஹீதுவாதிகள் தொழுவதற்கு அவர்கள் விதித்த தடை.

இந்த இரண்டு காரணங்களால் தான் அவர்களும் பிரிந்தார்கள். அவர்களுடன் இணைந்திருந்த நாமும் பிரிந்தோம். இந்த இரு காரணங்களும் இன்றளவும் அவர்களிடம் இருக்கப் போய் தான் குராபிகள் பின்னால் தொழுவதில்லை. இதை அவர்கள் நன்கு தெரிந்து கொண்டே இவ்வாறு நம்மைப் பார்த்து குராபிகள் பின்னால் தொழச் சொல்கின்றனர். ஏன்?

இவர்கள் திட்டமிட்டே இதுவரை திடலில் தொழும் நபிவழியை விட்டு வந்திருக்கின்றனர். நாங்கள் செய்யாத அந்த நபிவழியை நீங்களும் செய்யக் கூடாது என்ற எண்ணம் தான் இதற்குக் காரணம்.

குராபிகள் கூட நடைமுறைப் படுத்திக் கொண்டிருக்கும் இந்த நபிவழியை இவர்கள் பின்பற்ற மாட்டேன் என்று கங்கணம் கட்டுகின்றார்கள் என்றால் அவர்களை விட இவர்கள் மோசமாகப் போய் விட்டார்கள் என்று தானே அர்த்தம்?

இந்த லட்சணத்தில் ஜாக் (குர்ஆன் மற்றும் நபிவழி இயக்கம்) என்ற பெயர் வேறு! உண்மையில் நாம் ஏற்கனவே ஏகத்துவத்தில் எழுதியது போல், தவ்ஹீது ஜமாஅத்தினர் எதைச் செய்தாலும், அது குர்ஆன், ஹதீஸாக இருந்தாலும் அதற்கு மாற்றமாகச் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர் என்பது அழுத்தம் திருத்தமாக உறுதிப்பட்டு விடுகின்றது.

பள்ளிவாசலில் பெருநாள் தொழுகையைத் தொழுவதற்குத் தடை இருக்கிறதா? என்று கேட்கின்றனர். இந்தக் கேள்வியை எண்ணிப் பார்த்து ஒரு பக்கம் வேதனைப்பட வேண்டியுள்ளது. மறுபக்கம் இந்த வேடிக்கையை நினைத்து சிரிக்கவும் வேண்டியிருக்கிறது. தவ்ஹீது ஜமாஅத்தினர் மீது கொண்டிருக்கும் காழ்ப்புணர்ச்சியும், கசப்புணர்ச்சியும் ஏன் இவர்களை இந்த அளவுக்குத் தரம் தாழ்த்தி விட்டது?

இது உண்மையில் பக்கா குராபிகளின் வாதம்! நாம் வரதட்சணை வாங்கக் கூடாது என்று வீரிய பிரச்சாரம் மேற்கொண்ட உடனே வெறி கொண்ட ஆலிம் கூட்டம் நமக்கு எதிராகக் கிளப்பிய வெற்றுக் கேள்வி தான் இது! குர்ஆன், ஹதீஸ் அடிப்படையைத் தங்கள் பாதையாகக் கொள்ளாததால் இந்தக் கேள்வியைக் குராபிகள் எழுப்புகின்றனர் என்று சொல்லி அதைக் கிண்டல் அடித்தோம்; கேலி செய்தோம்.

ஒரு பிச்சைக்காரன் யாசகம் கேட்கின்றான். அவனுடைய பாத்திரத்தில் கையை விட்டு, இன்னொருவன் காசை எடுக்கின்றான். "ஏன் இவ்வாறு பிச்சைக்காரனிடமிருந்து காசை எடுக்கின்றாய்?” என்று கேட்கும் போது, "பிச்சைக்காரன் பிச்சை போடு என்று தானே சொன்னான். என்னிடமிருந்து எதையும் எடுக்காதே என்று சொன்னானா?” என்று கேட்பது போல் இருக்கிறது என்ற உதாரணங்களை எல்லாம் கூறி குராபிகளைக் கிண்டல் செய்தோம்.

அந்த வாதத்தை இப்போது இந்த ஜாக் அமீர் கையில் எடுத்திருக்கிறாரே என்பதை நினைத்து சிரிக்க வேண்டியிருக்கிறது. இதே கேள்வியை ஜாக்கின் கடைநிலை உறுப்பினர் கேட்டால் கூட ஏதோ விவரம் தெரியாமல் கேட்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதன் அமீர், மதீனா பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்ற மார்க்க அறிஞர் எனப்படுபவர் கேட்பதை அப்படி எடுத்துக் கொள்ள முடியாது.

அடிப்படை தெரியாத அறிஞர்

இதன் மூலம் இவருக்கு இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையே தெரியவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகி விடுகின்றது.

அப்படியானால் தடை இருக்கின்றதா? என்ற கேள்வியே கேட்கக் கூடாதா? என்று வினவலாம். எனவே இது குறித்து சற்று விளக்கமாகப் பார்ப்போம்.

பொதுவாகவே குராபிகள் வணக்க விஷயத்தையும், உலக விஷயத்தையும் போட்டுக் குழப்பிக் கொள்வார்கள். நாம் மார்க்கத்தில் பித்அத் – புதிய காரியம் கூடாது என்று சொல்லும் போது, "நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தில் போனார்கள். நீ காரில் போகலாமா? இது பித்அத் இல்லையா?” என்று கேட்பார்கள்.

இப்படி அவர்கள் கேட்பதற்குக் காரணம், வணக்க வழிபாட்டையும் உலக விஷயத்தையும் போட்டுக் குழப்பிக் கொண்டது தான்.

அது போலவே கமாலுத்தீன் மதனியும் குழம்பிக் கொண்டிருக்கிறார். அதனால் தான் தடை இருக்கிறதா? என்ற கேள்வியை எழுப்புகின்றார்.

அவனே பூமியில் உள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். பின்னர் வானத்தை (படைக்க) நாடி அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்குபடுத்தினான். அவன் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன். (அல்குர்ஆன் 2:29)

இந்த வசனத்தின் படி உலகத்தில் படைக்கப்பட்ட பொருள்கள் அனைத்தும் மனிதன் பயன்படுத்துவதற்காகத் தான். இந்தப் பயன்பாடு என்பது உணவு, உடை, உலோகம், வாகனம் என்று எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ளும்.

உலகத்தில் மனித வாழ்வுக்குத் தேவையான பண்டங்கள், பொருட்களை ஒவ்வொன்றாகக் குறிப்பிட்டு, பட்டியல் போட்டு இது உனக்குக் கூடும் என்று மார்க்கம் சொல்லாது. ஆடு சாப்பிடலாம்; மாடு சாப்பிடலாம்; மீன் சாப்பிடலாம் என்று உணவு வகைகளைப் பட்டியல் போட்டால் குர்ஆன், ஹதீஸ் இரண்டும் மலையளவு பாகங்களாக வெளி வந்தாலும் போதாது என்றாகி விடும். அதனால் எது தடுக்கப்பட்டதோ அதை மட்டும் மார்க்கம் சொல்லி விடும்.

உதாரணத்திற்கு,

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன. கழுத்து நெறிக்கப்பட்டவை, அடிபட்டவை, (மேட்டிலிருந்து) உருண்டு விழுந்தவை, (தமக்கிடையே) மோதிக் கொண்டவை, மற்றும் வன விலங்குகள் சாப்பிட்ட பிராணிகள் ஆகியவற்றில் (உயிர் இருந்து) நீங்கள் முறையாக அறுத்தவை தவிர (மற்றவை தடை செய்யப்பட்டுள்ளன.) பலி பீடங்களில் அறுக்கப் பட்டவையும்,அம்புகள் மூலம் குறி கேட்பதும் (உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.) இவை குற்றமாகும்.

(அல்குர்ஆன் 5:3)

இந்த வசனத்தில் கூறப்படுவதைப் போல் உணவுகளில் எவையெல்லாம் தடுக்கப்பட்டுள்ளன என்ற விபரம் மட்டும் மார்க்கத்தில் விளக்கப்படும்.

அது போன்று "உலோகத்தில் தங்கமும், உடையில் பட்டும் ஆண்களுக்குத் தடை” என்று கூறப்படும். இந்த அடிப்படையில் அல்லாஹ்வால் தடை செய்யப்பட்டவைகளைத் தவிர மற்றவை அனுமதிக்கப்பட்டவை என்று நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக, "முயல் இறைச்சி சாப்பிடக் கூடாது” என்று ஒருவர் கூறுகின்றார் என்று வைத்துக் கொள்வோம். அப்போது நாம் அவரிடம், முயல் இறைச்சி சாப்பிடக் கூடாது என்று தடை உள்ளதா? என்று கேட்கலாம். இவ்வாறு மனித வாழ்வியல் சம்பந்தப்பட்ட, உலக விவகாரங்களில் தடையிருக்கின்றதா? என்று பார்க்க வேண்டும். எனவே தடையிருக்கின்றதா? என்று கேட்பது வாழ்வியல் தொடர்பான உலக விஷயங்களில் தான். வணக்க விஷயங்களில் அல்ல.

வணக்கத்திற்கு அவசியம் உத்தரவு தான்

வணக்க விஷயத்தில் தடை இருக்கின்றதா? என்று பார்ப்பதும், கேட்பதும் கடைந்தெடுத்த மடைமைத்தனமாகும். வணக்க விஷயத்தில் உத்தரவு இருக்கின்றதா? என்று தான் பார்க்க வேண்டும். தடையிருக்கின்றதா? என்று பார்க்கக் கூடாது. அந்த உத்தரவு நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகிய மூன்று அம்சங்களில் அமைந்திருக்கும். அதனால் தான்…

நாம் உத்தரவிடாத வணக்கத்தைச் செய்பவரின் வணக்கம் மறுக்கப்படும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

(புகாரி 2697, முஸ்லிம் 3243)

இந்த அடிப்படையில் தான் கூட்டு துஆ, தராவீஹ் இருபது ரக்அத்துகள் போன்றவற்றை பித்அத் என்று நாம் கூறுகின்றோம். வணக்கத்தில் தடையிருக்கின்றதா? என்று பார்க்க ஆரம்பித்தால் அது தான் பித்அத்துக்கள் நுழைவதற்குரிய தலைவாசல் ஆகி விடும்.

கூட்டு துஆ, கத்தம் பாத்திஹா, தராவீஹ் இருபது ரக்அத்துகள் என்று எல்லாவற்றையும் திறந்து விடுவதற்கு இது வசதியாக அமைந்து விடும்.

எனவே வணக்க வழிபாடுகளில், இபாதத்துகளில் தடையிருக்கின்றதா? என்று பார்க்கக் கூடாது; தடை இருக்கின்றதா? என்று கேட்கக் கூடாது.

அப்படிக் கேட்டால் என்ன ஆகும்?

உதாரணத்திற்குத் தொழுகையை எடுத்துக் கொள்வோம். ஒருவர் தொழுகையில் தலையை ஆட்டுகின்றார். அவரிடம் போய் "நீங்கள் ஏன் தலையை ஆட்டுகின்றீர்கள்? தலையை ஆட்டாதீர்கள்” என்று சொன்னால் அவர் நம்மிடத்தில், "தொழுகையில் தலையை ஆட்டுவதற்குத் தடை இருக்கிறதா?” என்று கேட்பார். அது போலவே ருகூவு செய்து முடித்த பின்னர் தனது இரு கைகளையும் தனது முதுகுக்குப் பின் ஒருவர் கட்டுகின்றார். அவரிடம் போய் "இது போன்று செய்யாதீர்கள்” என்று சொன்னால், அவரும், "இப்படிச் செய்யக் கூடாது என்பதற்குத் தடை இருக்கின்றதா?” என்று கேட்பார். இதற்கு என்ன பதில்?

பெருநாள் தொழுகையைப் பள்ளியில் தொழுவதற்குத் தடை இருக்கின்றதா? என்று கேட்கும் கமாலுத்தீன் மதனீ இதற்கு என்ன பதில் கூறுவார்? தொழுகையில் மேற்கண்ட காரியங்களைச் செய்வதற்குத் தடையில்லை; அதனால் செய்யலாம் என்று கூறுவாரா? அல்லது கூடாது என்று தடுக்கப் போகிறாரா? இதற்குச் சரியான பதிலைத் தர வேண்டும்.

நோன்பில் பீடி குடிக்கத் தடை இருக்கின்றதா?

நோன்பில் உண்ணுவது, பருகுவது, உடலுறவு கொள்வது தான் தடுக்கப் பட்டுள்ளது. நோன்பு வைத்துக் கொண்டு ஒருவர் பீடி குடிக்கின்றார். அவரிடம் போய் கேட்டால், புகைப்பதற்குத் தடை இருக்கின்றதா? என்று கேட்டால் கமாலுத்தீன் மதனீ என்ன பதில் சொல்வார்?

எனவே இபாதத்தில் தடை இருக்கின்றதா? என்று பார்க்கக் கூடாது. உத்தரவு இருக்கின்றதா? என்று தான் பார்க்க வேண்டும்.

இவ்வாறு நாம் கூறும் போது, இபாதத்திலும் தடை இருக்கின்றதா? என்று பார்ப்பதற்கு அனுமதி இருக்கின்றது என்று கூறி, நபி (ஸல்) அவர்கள் ருகூவில் கிராஅத் ஓதுவதைத் தடை செய்தார்கள் என்பதை ஆதாரமாகக் காட்டி சிலர் வாதிடலாம்.

இங்கு நாம் ஓர் அடிப்படையைப் புரிந்து கொள்ள வேண்டும். உலக விஷயங்களில் தடையைப் பார்க்க வேண்டும் என்று நாம் சொல்லும் போது, தடையை மட்டும் தான் பார்க்க வேண்டும், அனுமதி தொடர்பாக மார்க்கம் எதையுமே கூறாது என்பது பொருளல்ல. கடல் பிராணிகள் அனைத்தும் அனுமதிக்கப்பட்டவை, அதில் செத்தவை கூட அனுமதி தான் என்றும் மார்க்கம் கூறியுள்ளது.

இது போலத் தான் வணக்க வழிபாடுகள் விஷயத்திலும் சில அம்சங்களில் தடை செய்யப்பட்டிருக்கும். அந்தத் தடையைப் பேணிக் கொள்ள வேண்டுமே தவிர இதை அடிப்படையாக வைத்து எல்லா இபாதத்துகளிலும் தடையிருக்கின்றதா? என்று கேள்வி கேட்க முடியாது.

ருகூவில் குர்ஆன் ஓதுவதற்குத் தடை என்ற விஷயத்தையே எடுத்துக் கொள்வோம். இதை வைத்து வணக்க வழிபாடுகள் விஷயத்திலும் தடை இல்லாவிட்டால் செயல் படுத்தலாம் என்று வாதிட்டால், அவர்களிடம் நாம் இன்னொரு கேள்வியைக் கேட்போம்.

ருகூவில் அத்தஹிய்யாத் துஆவை ஓதலாமா? என்பது தான் அந்தக் கேள்வி. ருகூவில் அத்தஹிய்யாத் ஓதத் தடையிருக்கின்றதா? என்ற கேள்விக்கு இவர்கள் பதில் சொல்லியாக வேண்டும். இவ்வாறு கேட்டால் ஓதக் கூடாது என்று தான் பதில் கூறுவார்கள். எனவே இபாதத்துகளைப் பொறுத்த வரை தடை இல்லாவிட்டால் எதையும் செய்து கொள்ளலாம் என்ற வாதம் தவறானது என்பது இதன் மூலம் நிரூபணமாகின்றது.

வணக்க வழிபாடுகள் விஷயத்தில் தடை இருக்கின்றதா? என்ற வாதத்தை முன் வைத்து ஒரு செயலைச் செய்வது பைத்தியக்காரத்தனம் என்பதும் நிரூபணமாகின்றது. மார்க்கத்தின் அடிப்படையை விளங்கியவர்கள் இந்தக் கேள்வியை ஒருக்காலும் கேட்க மாட்டார்கள். இது முற்றிலும் குராபிகளின் வாதமாகும்.

இந்த வாதத்தைச் சொல்லியே இணை வைப்பு ஆலிம்கள் மக்களைத் தங்கள் பக்கம் தக்க வைத்துக் கொண்டு, சத்தியத்தின் பக்கம் வர விடாமல் தடுத்துக் கொண்டு உள்ளனர். தர்ஹா வழிபாடு, தரீக்கா வழிபாடு, தனி நபர் வழிபாடு, பித்அத், தாயத்து, தட்டு எல்லாவற்றிற்கும் மூல முதல் ஆதாரமாக அமைந்திருப்பது, கமாலுத்தீன் மதனீ எழுப்பிய தடை இருக்கின்றதா? என்ற கேள்வி தான்.

குராபிகளின் இந்த ஆழமான, ஆணித் தரமான (?) ஆதாரத்தைத் தான் கமாலுத்தீன் மதனீ கையில் எடுத்துள்ளார். ஜாக்கின் சறுகலுக்கு இதை விடச் சான்று தேவையில்லை. இவர்கள் தடையிருக்கின்றதா? என்று கேட்பது இன்று ஏற்பட்டதல்ல. ஏற்கனவே பெண் வீட்டு விருந்துக்கும் இதே கேள்வியைக் கேட்டு நியாயப்படுத்தினார்கள்.

பெண் வீட்டு விருந்து

குராபிகள் எடுத்து வைத்த அதே வாதத்தை, அவர்களின் செயல்பாடுகளை அப்படியே செய்வதன் மூலம் இவர்களும் அவர்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றார்கள். அதற்கு இன்னொரு சிறந்த எடுத்துக்காட்டு,

இன்று பெண் வீட்டு விருந்துக்களில் ஜாக் அமைப்பினர் கலந்து கொண்டு வெளுத்துக் கட்டுவதாகும். இஸ்லாத்தில் பெண் வீட்டு விருந்து என்பதே கிடையாது. இது முதல் அடிப்படை!

அப்படி விருந்து வைத்தால் கூட அதில் மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் மருந்துக்குக் கூட அதில் போய் கலக்கக் கூடாது. இது இரண்டாவது அடிப்படை!

ஏனென்றால் இது மிகப்பெரும் சமூகக் கொடுமையான வரதட்சணை ஆகும். இன்று பெற்றோர் இறந்த பிறகு அவர்களிடமிருந்து கிடைக்க வேண்டிய சொத்துக்கள் பெண் மக்களுக்குக் கிடைப்பதில்லை. ஆண் மக்கள் அந்தச் சொத்தை அப்படியே அபகரித்து அனுபவித்துக் கொள்கின்றார்கள். அதற்கு அவர்கள் கூறும் காரணம், பெண் மக்களுக்கான கல்யாணச் செலவு தான்.

கழுத்தில் போட்ட நகை, கையில் கொடுத்த தொகை, வைத்த விருந்து ஆகியவற்றிற்கு நிறைய செலவாகி விட்டது; எனவே அதைப் பெண்ணுக்குச் சேர வேண்டிய சொத்தில் கழித்துக் கொள்கிறோம்; அதற்கு இது சரியாகி விட்டது என்று காரணம் கூறுகின்றனர்.

இப்படி வாரிசுக்குச் சேர வேண்டிய சொத்தை மறுப்பது வரம்பு மீறுதலாகும். இதற்குத் தண்டனை நிரந்தர நரகம் என்று அல்குர்ஆன் 4:13,14 வசனங்கள் கூறுகின்றன.

நிரந்தர நரகத்திற்குத் தூண்டும் இந்தப் பாவத்தை ஒரு ஏகத்துவவாதி செய்யத் துணியலாமா? குமரி மாவட்டத்தில் இன்று இரு வீட்டார் அழைப்பு என்ற பெயரில் பெண் வீட்டுத் தலையில் விருந்துச் செலவில் பாதியைக் கட்டி விடுகின்றனர். கல்யாண வீட்டுச் சாப்பாடு என்றால் போதும்; மார்க்கத்தை எல்லாம் தூர வைத்து விடுவது குராபிகளின் செயல்.

ஆனால் இதைச் சர்வ சாதாரணமாக இந்த ஏகத்துவவாதிகள் (?) செய்து வருகின்றனர்.

இதற்கு எடுத்துக்காட்டாக அண்மையில் நாகர்கோவிலில் நடந்த ஒரு திருமணத்தைக் கூறலாம். இந்தத் திருமணத்திற்காக சம்பந்தப் பட்டவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை அணுகி திருமணப் பதிவேடு கேட்டனர். இது குறித்து நாம் விசாரித்த போது, பெண் வீட்டு சார்பில் விருந்து ஏற்பாடு செய்யப் பட்டிருந்ததைத் தெரிந்து, திருமணப் பதிவேடு கொடுக்க மறுத்து விட்டோம். நாம் மார்க்கத்தைக் கருத்தில் கொண்டு, திருமணப் பதிவேடு கொடுக்க மறுத்த திருமணத்திற்கு தவ்ஹீதின் கேந்திரமாகத் திகழும் (?) மஸ்ஜிதுல் அஷ்ரஃப் ஜமாஅத் தனது திருமணப் பதிவேட்டை மகிழ்ச்சியோடு கொடுத்துத் திருமணத்தை நடத்தி வைத்தது.

இதில் கேடு கெட்ட விஷயம் என்னவென்றால் மணப் பெண்ணை மேடையில் புர்கா இல்லாமல் வைத்துக் கொண்டு எல்லோரையும் ரசிக்க வைத்ததுடன், போட்டோவும் எடுத்து, தங்களது கொள்கையைப் படு விமரிசையாகப் பறை சாற்றியிருக்கின்றார்கள். இந்த லட்சணத்தில் மஸ்ஜிதுல் அஷ்ரஃபின் இமாமும், கதீஜத்துல் குப்ரா மற்றும் ஃபிர்தவ்ஸியா ஆகிய மதரஸாக்களின் ஆசிரியருமான செய்யது அலீ என்பவர் தனது உரையில், இந்த மாப்பிள்ளை தவ்ஹீது அடிப்படையில் நடப்பவர் என்ற கருத்தில் புகழாரம் சூட்டியிருக்கின்றார்.

திருமணத்தின் போது மணப்பெண்ணை போட்டோ எடுக்கும் அசிங்கத்தை குராபிகள் கூட செய்தில்லை. ஆனால் இவர்கள் தவ்ஹீது என்ற போர்வையில் இந்தத் தரங்கெட்ட வேலையைச் செய்திருக்கின்றார்கள்.

மேலப்பாளையத்தில் இந்த அமீர் வந்து நடத்திய ஒரு திருமணத்தில், பெண் வீட்டில் ஆயிரக் கணக்கானோரை அழைத்து விருந்து போட்டனர். இது சரியா? என்று ஒரு கொள்கைச் சகோதரர் கேள்வி எழுதிக் கொடுத்தார். அதற்கு இந்த அமீர்,தடையில்லை என்று அருமையான பதிலைச் சொன்னார். என்ன ஒரு அற்புதமான பதில்.

மிகப் பெரிய சமூக நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தும் ஒரு செயலை, தடையில்லை என்று சர்வ சாதாரணமாகக் கூறி விட்டுச் செல்கின்றார். வரதட்சணை வாங்குவதற்குத் தடை இருக்கின்றதா? என்று குராபிகள் கேட்டார்கள். அதையே இப்போது இவர்களும் கேட்கின்றார்கள்.

சுய விளக்கங்கள் கூறுவோரின் சுயரூபங்கள்

ஹதீஸ் குழப்பத்தை ஏற்படுத்தும்; அதாவது நபி (ஸல்) அவர்களின் வழிமுறை குழப்பத்தை ஏற்படுத்தும் என்று சொன்ன உத்தமர், உன்னத மகான் இவர் தான் என்பதையும் நாம் இங்கு சுட்டிக் காட்டக் கடமைப்பட்டுள்ளோம்.

குழப்பத்தை ஏற்படுத்தும் ஹதீஸ்

அல்ஜன்னத் மாத இதழில் ஒரு கேள்விக்குப் பதில் அளிக்கும் போது,, ஸஹர் பாங்கு சொல்வதால் குழப்பம் ஏற்படும் என்று கூறி, ஸஹர் பாங்கு சொல்லத் தேவையில்லை என்று எழுதியுள்ளார்கள்.

ஹதீஸைச் செயல்படுத்தினால் குழப்பம் ஏற்படும் என்று மத்ஹபுவாதிகள் கூறிய அதே காரணத்தை இப்போது இவர்கள் கூறியுள்ளார்கள் என்பதைப் பார்க்கும் போது இவர்கள் குர்ஆன், ஹதீஸை விட்டு விலகி எங்கோ சென்று விட்டார்கள் என்பதையே இது காட்டுகின்றது.

அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார்.

(அல்குர்ஆன் 33:36)

இத்தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை வாங்கிக் கொள்ளுங்கள்! எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ (அதிலிருந்து) விலகிக் கொள்ளுங் கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.

(அல்குர்ஆன்59:7)

அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் ஒன்றைக் கற்றுத் தந்திருக்கும் போது, தமது மனோ இச்சையின் அடிப்படையில் அதை மறுப்பது தெளிவான வழிகேடாகும் என்பதை இந்த வசனங்கள் விளக்குகின்றன.

அல்லாஹ் இவ்வளவு கடுமையாக எச்சரித்திருந்தும் தமது மனோ இச்சையின் அடிப்படையில் வியாக்கியானம் கொடுத்து நபிவழியைப் புறக்கணிக்கின்றனர். அவர்கள் கொடுக்கும் வியாக்கியானங்களையும் அவற்றின் விளக்கத்தையும் பார்ப்போம்.

"தூங்குபவர்கள் எழுந்து ஸஹர் செய்ய வேண்டும் என்ற காரணத்தை மட்டும் அடிப்படையாக வைத்துச் சொல்லப்பட்டதாகும். ஸஹர் நேரத்தை மக்களுக்குத் தெரிவிப்பது தான் இதன் நோக்கம். இன்று நேரத்தைத் தெரிந்து கொள்வதற்கு எத்தனையோ வழிமுறைகள் கையாளப்படுகின்றன. நேரத்தை அறிந்து கொள்வது என்ற காரணம் நிறைவேறிவிடுமானால் அதுவே போதுமானதாகக் கொள்ளலாம்”என்று வியாக்கியானம் கூறியுள்ளனர்.

காரணத்தோடு ஒரு விஷயம் சொல்லப்பட்டால் அந்தக் காரணம் இல்லாவிட்டால் பின்பற்றத் தேவையில்லை என்பது இபாதத்துகள் அல்லாத ஏனைய உலக விஷயங்களுக்குத் தான்.

தூங்கும் போது விளக்குகளை அணைத்து விடுங்கள். ஏனெனில், தீங்கிழைக்கக்கூடியது (எலி) திரியை இழுத்துச் சென்று வீட்டில் இருப்பவர்களை எரித்து விடக்கூடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி),

நூல்: புகாரி 3316

தூங்கும் போது விளக்குகளை அணைத்து விடுங்கள் என்று கூறும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதற்குக் காரணமும் இந்த ஹதீஸில் கூறுகின்றார்கள். விளக்கின் திரியை எலி இழுத்துச் சென்று தீ விபத்து ஏற்படும் என்பது தான் அந்தக் காரணம்.

இந்தக் காரணம் இப்போது பொருந்தாது. இப்போது மின்சார விளக்குகளை நாம் பயன்படுத்துவதால் எலி இழுத்துச் சென்று தீ விபத்து ஏற்படும் என்று நாம் அஞ்சத் தேவையில்லை. எனவே இந்தக் காலத்தில் உறங்கச் செல்லும் போது மின்சார விளக்குகளை அணைக்கத் தேவையில்லை.

இது போன்ற உலக விஷயத்தில் காரணம் கூறப்பட்டு, அந்தக் காரணம் இல்லை என்றால் அதைச் செயல்படுத்தத் தேவையில்லை என்று கூறலாம்.

ஆனால் வணக்க வழிபாடுகள் விஷயத்தில் இது பொருந்தாது. ஸஹர் பாங்காக இருந்தாலும் தொழுகைக்காக அழைக்கப்படும் பாங்காக இருந்தாலும் பாங்கு என்பது ஒரு வணக்கமாகும். இது போன்ற இபாதத்துகளில் காரணம் இருந்தால் செய்ய வேண்டும். காரணம் இல்லாவிட்டால் அந்த வணக்கத்தையே விட்டு விட வேண்டும் என்பதெல்லாம் கிடையாது.

தொழுகைக்கு அழைக்கப்படும் பாங்கையே எடுத்துக் கொள்வோம். தொழுகைக்கான நேரத்தை மக்களுக்கு அறிவிப்பதற்காகத் தான் பாங்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

மக்களின் எண்ணிக்கை அதிகமான போது, அவர்கள் அறிந்திருக்கின்ற ஏதாவது ஒரு முறையில் தொழுகையின் நேரத்தை அறிந்து கொள்ள ஆலோசித்தனர். அப்போது நெருப்பை மூட்டுவதன் மூலமோ, மணி அடிப்பதன் மூலமோ அறிந்து கொள்ளலாம் என கருத்துச் சொல்லப்பட்டது. ஆனால் பாங்கின் வாசகங்களை இரட்டை இரட்டையாகவும் இகாமத்தின் வாசகங்களை ஒற்றையாகவும் சொல்லுமாறு பிலால் (ரலி) கட்டளையிடப்பட்டார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 606

தொழுகையின் நேரத்தை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பது தான் தொழுகைக்கான பாங்கின் நோக்கம் என்பது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

"இன்று நேரத்தைத் தெரிந்து கொள்வதற்கு எத்தனையோ வழிமுறைகள் கையாளப்படுகின்றன. நேரத்தை அறிந்து கொள்வது என்ற காரணம் நிறைவேறிவிடுமானால் அதுவே போதுமானதாகக் கொள்ளலாம்” என்று இவர்கள் கூறும் வியாக்கியானத்தின் அடிப்படையில் தொழுகைக்கு பாங்கு சொல்லத் தேவையில்லை என்று இவர்கள் வாதிடுவார்களா?

 "நீங்கள் பூமியில் பயணம் மேற்கொள்ளும் போது மறுப்போர் உங்களைத் தாக்கக் கூடும் என்று அஞ்சினால் தொழுகையைச் சுருக்கிக் கொள்வது உங்கள் மீது குற்றம் ஆகாது (4:101) என்று தானே அல்லாஹ் கூறுகின்றான். தற்போது மக்களுக்குப் பாதுகாப்பு ஏற்பட்டு விட்டதே?” என்று நான் உமர் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: "உங்களுக்கு ஏற்பட்ட வியப்பு எனக்கும் ஏற்பட்டது. எனவே இது குறித்து நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அப்போது, "அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய கொடையாகும். அவனது கொடையை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: யஅலா பின் உமைய்யா (ரலி),

நூல்: முஸ்லிம் 1222

இறை மறுப்பாளர்கள் தாக்குவார்கள் என்ற அச்சம் இருந்தால் பயணத்தின் போது தொழுகையை சுருக்கிக் கொள்ள இறைவன் அனுமதி அளித்தான். இந்தக் காரணம் நீங்கி விட்டதால் இப்போது சுருக்கித் தொழத் தேவையில்லையே என்ற சந்தேகத்தை உமர் (ரலி) அவர்கள் கேட்கும் போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.

(அல்குர்ஆன் 2:187)

இந்த வசனத்தில் இறையச்சம் ஏற்பட வேண்டும் என்பதற்காக நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது என்று அல்லாஹ் கூறுகின்றான். இன்று யாராவது ஒருவர் எனக்கு இறையச்சம் நிறைய இருக்கின்றது, அதனால் நான் நோன்பு நோற்கத் தேவையில்லை என்று வாதிட்டால் ஏற்றுக் கொள்ள முடியுமா?

காரணத்தோடு ஒரு விஷயம் சொல்லப்பட்டால் அந்தக் காரணம் இல்லாவிட்டால் பின்பற்றத் தேவையில்லை என்பது வணக்க வழிபாடுகளுக்குப் பொருந்தாது என்பதை விளங்கிக் கொள்ள இதுவே போதுமானதாகும்.

தங்களது கருத்தை நியாயப் படுத்துவதற்காக மேலும் சில வாதங்களையும் முன் வைத்துள்ளனர்.

இரண்டு பாங்குக்கும் இடையிலுள்ள இடைவெளி மேடையில் ஏறி இறங்கும் நேரம் தான் என்று ஹதீஸில் இடம் பெறுகின்றது. அதாவது இரண்டு பாங்குக்கும் இடையில் அதிகப்படியாக ஐந்து நிமிட இடைவெளி தான் இருக்கும் என்று தெரிய வருகின்றது… ஐந்து நிமிட இடைவெளிக்குள் இரண்டு பாங்குகள் சொல்லும் போது மக்களிடம் குழப்பமான நிலை ஏற்படும் என்று கூறியுள்ளனர்.

மேடையில் ஏறி, இறங்கும் நேரம் தான் என்று ஒரு அறிவிப்பாளர் கூறுவதை மட்டும் அடிப்படையாக வைத்து, ஐந்து நிமிட இடைவெளி என்று முடிவு செய்ய முடியாது. ஏனெனில் மற்றொரு அறிவிப்பில்,

ஸஹருக்கும், சுப்ஹுக்கும் இடையில் ஐம்பது வசனங்கள் ஓதும் அளவுக்கு இடைவெளி இருக்கும் என்று அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்.

(புகாரி 1921)

ஐம்பது வசனங்கள் ஓதும் நேரம் என்பது சாதாரணமாக நிறுத்தி நிதானமாக ஓதினால் இருபது நிமிடத்திலிருந்து அரை மணி நேரம் வரை தேவைப்படும். எனவே இரண்டு பாங்குக்கும் இடையில் அரை மணி நேரம் இடைவெளி விடலாம். ஆனால் இவர்களாக ஐந்து நிமிட இடைவெளி என்று தீர்மானித்துக் கொண்டு அதனால் குழப்பம் ஏற்படும் என்று கூறுகின்றனர்.

ஒரே ஊரில் பல பள்ளிகள் இருப்பதால் எல்லா பள்ளிகளிலும் பாங்கு சொல்லும் போது இது முதலாவதா, இரண்டாவதா என்பது தெரியாமல் மக்களிடம் குழப்பம் அதிகரித்து விடும் என்றும் கூறியுள்ளனர்.

ஸஹர் பாங்கு என்ற நபிவழியைப் புறக்கணிப்பதற்காக, நேரம் அறிந்து கொள்ள எத்தனையோ வழிமுறைகள் இருப்பதாக வாதிட்டார்கள். ஆனால் அதே சமயம், "இரண்டு பாங்கு சொல்லப்படும் போது பாங்கின் நேரத்தை வைத்து இது எந்த பாங்கு என்பதைத் தீர்மானிக்கலாம்” என்று கூறாமல் "குழப்பம் அதிகரிக்கும்” என்று கூறுகின்றனர் என்றால் இவர்களுக்கு ஹதீஸைச் செயல் படுத்துவதில் எந்த அளவுக்கு ஈடுபாடு உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த ஸஹர் பாங்கை, இது போன்ற பொருந்தாத காரணங்களைக் கூறி புறக்கணிக்கின்றனர். மக்களிடம் வழக்கத்தில் இல்லை என்றால் உரிய முறையில் அறிவிப்புச் செய்து விட்டு அதை நடைமுறைப்படுத்த வேண்டும்.

இத்தனை மணிக்கு ஸஹர் பாங்கு சொல்லப்படும், இத்தனை மணிக்கு சுப்ஹ் பாங்கு சொல்லப்படும் என்பதை போஸ்டர்கள் மூலமோ, பிரசுரங்கள் மூலமோ அறிவிப்புச் செய்தால் எந்தக் குழப்பமும் ஏற்படாது.

இன்று பல ஊர்களில் தவ்ஹீது ஜமாஅத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் ஸஹர் பாங்கு சொல்லப்படுகின்றது. அந்த ஊர்களிலெல்லாம் எந்தக் குழப்பமும் ஏற்படவில்லை. குழப்பம் இவர்களுடைய கொள்கையில் தான் உள்ளது.

விரலசைத்தல், நெஞ்சின் மீது கை கட்டுதல், இரவுத் தொழுகை போன்றவற்றுக்குத் தெளிவான ஆதாரங்கள் இருந்த போதும், மக்களிடம் நடைமுறையில் இல்லை என்பதால் அதைக் குழப்பம் என்று குராபிகள் கூறினர். இப்போது அதே வழிமுறையைப் பயன்படுத்தி, இவர்களும் தாங்கள் செயல்படுத்தவில்லை என்பதற்காக, நபிவழியைக் குழப்பம் என்று கூறுகின்றார்கள் என்றால் இவர்கள் எந்த நிலைக்குச் சென்று விட்டார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் இவர்கள் தங்களைக் கிப்லாவாக்கி, அதற்குத் தக்க ஹதீஸ்களைத் திருப்பவும், வளைக்கவும் முனைந்துள்ளார்கள்.

திடல் தொழுகையும் திரிபு வாதமும்

அன்றைய யூத, கிறித்தவர்கள் குர்ஆனின் கட்டளைக்குத் தங்களை மாற்றிக் கொள்ள மறுத்து, திரிபு வாதம் செய்தது போல் – இன்றைய குராபிகள் மார்க்கத்துக்குத் தக்கவாறு தங்களை மாற்றிக் கொள்ளாமல் திரிபு வாதம் செய்வது போல் – இவர்களும் திடல் தொழுகை விஷயத்தில் திரிபு வாதம் செய்கின்றனர்.

அதிலும் நாம் திடல் தொழுகையை அமுல்படுத்தி விட்டோம் அல்லவா? அதனால் இதை அவர்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

திடலில் கண்டிப்பாகத் தொழுது தான் ஆக வேண்டுமா? இது ஜாக் பரிவாரத்தின் அடுத்த கேள்வி!

இப்படிப்பட்ட வாதங்களைச் சத்தியத்தைப் பின்பற்றும் ஒருவர் எழுப்ப முடியுமா? என்பதை ஜாக்குக்கு வக்காலத்து வாங்குவோர் சிந்தித்துப் பார்க்க வேண்டும். உண்மையில் இதுவும் ஒரு கேலிக் கூத்தான கேள்வியாகும்.

விரல் அசைக்கும் ஹதீஸை நாம் எடுத்து வைத்தவுடன் குராபிகள் இந்த வாதத்தைத் தான் எடுத்து வைத்தனர். அதே வாதத்தை இன்று இவர்களும் தூக்கிப் பிடிக்கின்றனர். இப்படிக் கேட்கும் இவர்களிடம் திரும்பத் திரும்ப, பல அடுக்கடுக்கான கேள்விக் கணைகளைத் தொடுக்கலாம்.

தொழுகையில் தக்பீர் சொன்னதும் நெஞ்சில் கைகளை வைத்துத் தான் ஆக வேண்டுமா? ருகூவில், சுப்ஹான ரப்பியல் அழீம் என்று சொல்லித் தான் ஆக வேண்டுமா? இப்படித் தொழுகையில் செய்ய வேண்டிய சுன்னத்துக்களையே ஏராளமாகப் பட்டியல் போடலாம். இவ்வளவு ஏன்? பெருநாள் தொழுகையைத் தொழுது தான் ஆக வேண்டுமா? என்று கூடக் கேட்கலாம்.

இப்படிச் சிந்திக்க ஆரம்பித்தால் ஒரு சுன்னத்தைக் கூட நடைமுறைப்படுத்த முடியாது. இப்படி நகைப்பிற்குரிய கேள்வியைத் தான் இன்று இவர்கள் கிளப்பிக் கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் இன்று இவ்வாறு கூறக் காரணம் இந்த சுன்னத்தை நாம் அமல்படுத்துகிறோம் என்பதைத் தவிர வேறு இல்லை.

ஏனென்றால் பெருநாள் தொழுகையைத் திடலில் தொழ வேண்டும் என்ற கருத்தில் தான் இவர்கள் ஏற்கனவே இருந்தனர். தற்போது நாம் அதை நாகர்கோவிலில் செயல்படுத்திய பிறகு தான் இந்தக் கேலிக் கூத்தான கேள்விகளை எல்லாம் கேட்டு, திடல் தொழுகையை மறுக்கின்றார்கள். இதற்கு அவர்களது இதழிலிருந்தே நாம் ஆதாரம் காட்ட முடியும்.

பெருநாள் தொழுகையை திறந்த வெளியில் தான் தொழ வேண்டும் நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையை பள்ளியில் தொழுததாக ஆதாரம் இல்லை. முதலில் நாம் குறிப்பிட்டுள்ள உம்மு அதிய்யா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் முஸல்லா தொழும் இடத்திற்குப் புறப்பட்டுச் செல்லுமாறு வந்துள்ளது. பள்ளியாக இருந்தால் மஸ்ஜித் என்ற வாசகம் இடம் பெற்றிருக்கும். நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகைக்கு ஒரு வழியில் சென்று மற்றொரு வழியில் திரும்பி வருவார்கள் என்ற புகாரி, முஸ்லிமில் வரும் ஹதீஸும் அவர்கள் பள்ளியில் தொழ வைக்கவில்லை என அறிவிக்கின்றது. ஏனெனில் அவர்களின் வீடு பள்ளிவாசலிலேயே அமைந்திருந்தது. ஒரு பெருநாளில் மழை பெய்ததால் தொழுகையைப் பள்ளிவாசலில் தொழ வைத்தார்கள் என்று அபூதாவூத், இப்னுமாஜா ஆகிய நூல்களில் வரும் ஹதீஸ் பலவீனமானதாகும். ஏனெனில் ஈஸா பின் அப்துல் அஃலா என்ற ஒருவர் வழியாக இது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் யாரென்றே அறியப்படாதவர்.

அல்ஜன்னத் நவம்பர் 2002 இதழில் 24ம் பக்கத்தில் இவ்வாறு எழுதியுள்ளார்கள்.

இந்தக் கட்டுரையைத் தங்கள் இதழில் எழுதிய காலத்திலும் இவர்கள் பள்ளியில் தான் தொழுது கொண்டிருந்தார்கள். ஆனாலும் உள்ளதை மறைக்காமல் அப்படியே எழுதினார்கள். இன்று மாறுகின்றார்கள்; மறுக்கின்றார்கள் என்றால் நாம் இதைக் கோட்டாரில் சொல்லி, அங்கேயே நபிவழிப்படி திடல் தொழுகையைச் செயல்படுத்திக் காட்டியதைத் தான் அவர்களால் தாங்க முடியவில்லை.

தாங்களே கூறி வந்த கருத்துக்கு மாற்றமாக இன்று இவர்கள் திடல் தொழுகையை மறுப்பதற்குத் தனி நபர் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியும், அதற்காக மார்க்கத்தையே மாற்றத் துணிந்ததும் தான் காரணம்.

இதில் இன்னும் வேதனை என்னவென்றால் சில ஜாக் வெறியர்கள், "ஐந்து வேளைத் தொழுகைகளையும் திடலில் போய் தொழ வேண்டியது தானே?” என்றும் கேலி செய்துள்ளனர்.

இவர்கள் யாரிடம் இந்தக் கேள்வியைக் கேட்கின்றார்கள்? நம்மிடமா? அல்லது நாம் யாரை வழிகாட்டியாகக் கொண்டு இந்த சுன்னத்தை நடைமுறைப் படுத்துகின்றோமோ அந்த அல்லாஹ்வின் தூதரிடம் இந்தக் கேள்வியைக் கேட்கின்றார்களா? குர்ஆன், ஹதீஸ் என்ற பெயரை வைத்துக் கொண்டு இவர்கள் எந்த நிலைக்குச் சென்று விட்டார்கள் என்று பாருங்கள். திடல் தொழுகையை அறிவித்து நமது ஜமாஅத் சார்பில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளையும் இவர்கள் கிழித்து எறிந்துள்ளனர்.

அஷ்ரப் பள்ளியில் அரங்கேறிய அநியாயம்

அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அவனது பெயர் கூறப்படுவதைத் தடுத்து,அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரும் அநீதி இழைத்தவன் யார்? பயந்து கொண்டே தவிர அவற்றில் நுழையும் உரிமை அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும், மறுமையில் கடுமையான வேதனையுமுண்டு.

(அல்குர்ஆன் 2:114)

இந்த வசனம் தவ்ஹீதுவாதிகள் பலருக்கு மனப்பாடமே ஆகி விட்டது. அந்த அளவுக்கு அந்த வசனத்தைத் திரும்பத் திரும்ப மக்கள் மன்றத்தில் வைத்தோம். காரணம் தவ்ஹீதைச் சொன்னவுடன் முதன்முதலில் பள்ளிவாசலில் தொழுவதற்குத் தான் குராபிகள் தடை விதித்தனர்; அடித்து விரட்டினர்; "தொழக் கூடாது” என்று கரும் பலகைகளில் சாக்பீஸால் எழுதினால் அழிந்து விடும் என்று கருதிப் பெயிண்டால் எழுதி வைத்தனர். காவல் துறை, நீதி மன்றம் என்ற இது தொடர்பான வழக்குகள் இன்றும் நிலுவையில் உள்ளன. ஐந்து நேரத் தொழுகைகளின் போது அடிக்கடி இந்த அத்துமீறல்கள், அடிதடித் தகராறுகள், அக்கிரமங்கள் அரங்கேறிக் கொண்ருக்கும் வேளையில் தான் தனிப் பள்ளி கட்டினோம். சில இடங்களில் ஏற்கனவே இருந்த பள்ளிகளும் அல்லாஹ்வின் கிருபையால் நம் கைவசமாயின.

அப்படிக் கைவசமான ஒரு பள்ளி தான் கோட்டாரில் உள்ள பள்ளிவாசல். இன்று அந்தப் பள்ளியின் அவல நிலையைப் பாருங்கள். வெகு வேகமாக ஏகத்துவம் வளர்ந்து கொண்டிருக்கும் இந்தக் குறுகிய கால கட்டத்திலேயே அல்லாஹ்வின் அருட்கொடையை மறுக்கும் நிலைக்கு ஜாக் சென்று கொண்டிருக்கின்றது.

தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த ஒரு சகோதரர் அந்தப் பள்ளியில் தொழுது கொண்டிருக்கின்றார். அவர் தொழுது கொண்டிருக்கும் போதே அவரது காதில் விழுமாறு கிண்டல் செய்கின்றனர் ஜாக்கினர். குராபிகள் செய்த அதே வேலையை நூற்றுக்கு நூறு அப்படியே பின்பற்றுகின்றனர். தொழுது முடித்தவுடன் பள்ளியின் செயலாளர் – நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். குராபி பள்ளியின் செயலாளர் அல்ல. தவ்ஹீது பள்ளியின் செயலாளர் – தொழுத சகோதரரைப் பார்த்து, "நீ இங்கு தொழ வரக் கூடாது” என்று எச்சரிக்கை விடுக்கின்றார்.

அதற்கு அந்தச் சகோதரர் மேலே இடம் பெற்றுள்ள 2:114 வசனத்தைச் சுட்டிக் காட்டியிருக்கின்றார்.

"அந்த வசனம் எங்களுக்குத் தெரியும்” என்று பதில் அளித்துள்ளார்.

இதன் பொருள் என்ன? "இந்த வசனத்தின் இறைக் கட்டளையை மறுத்து, நிராகரித்துத் தான் உன்னை வெளியே தூக்கி எறிகின்றேன்” என்று அவர் எக்காளமிட்டிருக்கின்றார்.

சுன்னத் வல் ஜமாஅத்தில் நடந்த இந்த அட்டூழியங்களை எதிர்த்துத் தானே போர்க் குரல் உயர்த்தி, போர்க் கொடி தூக்கினோம். தனிப் பள்ளி கட்டினோம். இன்று இந்த அக்கிரத்தை, அநியாயத்தை, அழிச்சாட்டியத்தை குர்ஆன், ஹதீஸின் படி செயல்படுகின்றோம் என்று ஜம்பம் அடிக்கும் ஜாக்கின் நிர்வாகச் சக்கரவர்த்திகள் அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனர். எனவே தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது கொண்டுள்ள வெறுப்பிலும், வீராப்பிலும் இவர்கள் எத்தகைய அக்கிரமத்தையும் செய்யத் தயங்க மாட்டார்கள் என்பதற்கு இவை நிதர்சனச் சான்றுகள்; சாட்சியங்கள்.

நம் மீது கொண்டுள்ள வெறுப்பு காரணமாக அல்லாஹ்வின் மீது போர் தொடுக்கும் அநியாயத்தைக் கூட செய்யத் துணிந்து விட்டார்கள் என்பதைப் பார்க்கும் போது, ஜாக் சறுகல் பாதையில் சரியான வேகத்தில் சென்று கொண்டிருக்கின்றது என்பதை நாம் தெளிவாக உணரலாம்.

ஜாக்குடன் சமாதான முயற்சியா? நடந்தது என்ன?

அல்லாஹ்வின் வேதம், அவனது தூதர் (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகிய இரண்டைத் தவிர்த்து வேறு எவரது கருத்துக்கும் இஸ்லாத்தில் இடமில்லை என்ற அஸ்திவாரத்தில் தான் ஜாக் என்ற கட்டடம் ஆரம்பத்தில் எழுப்பப்பட்டது.

இடையில் ஸஹாபாக்கள் என்ற மூன்றாவது அஸ்திவாரத்தையும் ஜாக் சேர்த்துக் கொண்டுள்ளது.

ஆனால் குர்ஆன், ஹதீஸ் என்ற இரண்டு அஸ்திவாரத்தில் இன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், பட்டி தொட்டிகளில் எல்லாம் பரவி வேரூன்றி வளர்ந்து கொண்டிருக்கின்றது. இந்த அஸ்திவாரத்தின் அடிப்படையில் இவ்விரு அமைப்புகளுக்கும் மத்தியில் ஓர் இணக்கமான சூழ்நிலை ஏற்படுமாயின் அதை நோக்கி முதன் முதலில் சமாதானக் கையை நீட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தயங்காது என்பதை ஏகத்துவம் இதழ் சார்பில் சார்பில் இங்கே பதிவு செய்து கொள்கிறோம்.

கடந்த ஜனவரி 2009 இதழ் ஏகத்துவம் தலையங்கத்தில் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் சார்பில் ஜாக் அமைப்பிற்கு இப்படி ஓர் அழைப்பு விடுக்கப்பட்டது.

ஜாக்கை நோக்கி தவ்ஹீது ஜமாஅத் திடீரென்று இப்படி சமாதானக் கரம் நீட்டுவது ஏன்? தவ்ஹீது ஜமாஅத்திற்கு ஏதோ ஒரு பலவீனம்! அதனால் தான் ஜாக்குடன் அது இணக்கக் குரலை எழுப்புகின்றது என்ற ஐயம் ஜாக் அமைப்பிற்கு ஏற்பட்டிருக்கின்றது. இதற்கான விளக்கத்தை இப்போது பார்ப்போம்.

2.12.2008 அன்று சகோதரர் பி.ஜே. அவர்களை திரைப்பட இயக்குனர் அமீர் சந்தித்து, ஜாக்கும், தவ்ஹீது ஜமாஅத்தும் இணக்கமாகச் செயல்பட்டால் என்ன? என்ற சமாதானக் கருத்தை முன்வைத்தார்.

அவரது நல்லிணக்க முயற்சிக்கு மரியாதை அளிக்கும் விதத்தில் அவரிடம் பி.ஜே. ஒரு கடிதத்தை அளித்தார். அந்தக் கடிதத்தின் விபரம் வருமாறு:

அன்புள்ள சகோதரர் அமீர் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.

ஜாக் இயக்கத்துக்கும், தவ்ஹீத் ஜமாஅத்துக்கும் இடையிலான அனைத்துப் பிரச்சனைகள் குறித்தும் இரு தரப்பும் மனம் விட்டுப் பேசி, ஒவ்வொரு தரப்பும் தனது தவறுகளை ஒப்புக் கொண்டு இணக்கமாகச் செயல்பட வேண்டும் என்ற நல்லெண்ணத்தை நேரில் சந்தித்து வலியுறுத்தினீர்கள்.

இதைன நான் ஏற்றுக் கொள்கிறேன். தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளும் என்னிடம் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். தாங்கள் இதற்கான முன் முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்பதையும் கொள்கையில் சமரசம் இல்லாத வகையில் அனைத்து ஒற்றுமைகளையும் நாம் மனதார விரும்புகிறோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்புடன்

பீ.ஜைனுல் ஆபிதீன்

இந்தக் கடிதம் அமீர் அவர்கள் மூலம் ஜாக் தலைவர் கமாலுத்தீன் மதனியிடம் கொடுக்கப்பட்டு விட்டது.

அமீரின் இந்த முயற்சியை அடிப்படையாகக் கொண்டு தான் ஏகத்துவம் இதழ் இணக்கத்திற்குத் தயார் என்று தெரிவித்திருந்தது.

ஏற்கனவே கோவை ஜாக்கில் உள்ள சில சகோதரர்கள் இதே இணக்க சிந்தனை ஓட்டத்தில் இருந்தனர். அவர்கள் தவ்ஹீது ஜமாஅத் சகோதரர்களிடம் இணக்கம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டும் இருந்தனர். 04.04.09 அன்று பி.ஜே. கோவை வந்திருந்த போது அவரை அந்தச் சகோதரர்கள் சந்தித்தனர்.

கோவை ஆராதனா ஹோட்டலில் நடைபெற்ற அந்தச் சந்திப்பில் ஜாக் சகோதரர்கள் முன்வைத்த கருத்துக்கள், யோசனைகள் வருமாறு:

இன்று அரசியலில் கூட வலது, இடது கம்யூனிஸ்ட்கள் இணைந்து செயல்படுகின்றனர். குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் உள்ள நாம் ஏன் இணைந்து செயல்பட முடியாது?

நாம் நமக்குள்ளேயே பகிரங்கமாக விமர்சித்துக் கொண்டும், ஒருவரையொருவர் தாக்கிப் பேசிக் கொண்டும் இருக்கிறோம். முதலில் ஜாக்கிலிருந்து பிரிந்து சி.டி. போட்டீர்கள். பிறகு தமுமுக தோன்றியது. பிறகு அதிலிருந்து பிரிந்து சி.டி. போட்டீர்கள். பிறகு பாக்கர் பிரிந்ததும் அதற்கும் சி.டி. போட்டிருக்கிறீர்கள் என்ற குற்றச்சாட்டுக்கள் தங்கள் மீது சொல்லப்படுகின்றன. இந்நிலையில் தாங்கள் இணக்கத்திற்குத் தயாராக இருப்பதை அறிந்து நாங்கள் மகிழ்ச்சி அடைந்து ஒரு நெருக்கத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.

இந்நிலையில் இமயம் தொலைக்காட்சியில், ஜாக் ஒரு மத்ஹப்' என்று தாங்கள் பேசியது ஒளிபரப்பானது. மேலும் 'ஜாக் மற்றும் தமுமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களை தவ்ஹீது ஜமாஅத்தில் சேர்த்துக் கொள்வீர்களா?' என்ற கேள்விக்குத் தாங்கள் அளித்த பதில்: ஜாக்கிலிருந்து நீக்கப்பட்டவர்களை சேர்த்துக் கொள்ள மாட்டோம்; அந்த அமைப்புக்கே தகுதியில்லை என்று தூக்கி எறியப்பட்ட ஒருவரை தவ்ஹீது ஜமாஅத் எப்படிச் சேர்த்துக் கொள்ளும்? அந்த அமைப்பு சரியில்லை என்று மனம் மாறி வந்தால் தவ்ஹீது ஜமாஅத் சேர்த்துக் கொள்ளும்' என்று குறிப்பிட்டீர்கள்.

அதாவது ஜாக் என்பது அந்த அளவுக்கு மட்ட ரகமான அமைப்பு என்பது போல் பதில் சொன்னீர்கள். இது எங்களுடைய சமாதான முயற்சிக்குப் பின்னடைவாக அமைந்தது.

நீங்கள் சமாதானம் என்று சொல்கிறீர்கள். ஆனால் பி.ஜே. இவ்வளவு பகிரங்கமாக ஜாக்கை தாக்கிப் பேசுகின்றார்' என்று எங்களது சகாக்கள் கூறுகின்றார்கள்.

இதையெல்லாம் கவனத்தில் கொண்டு நாங்கள் சில யோசனைகளை இங்கு முன் வைக்கிறோம்.

1. நீங்கள் இருவரும் (பி.ஜே. மற்றும் எஸ்.கே.) சந்தித்து மனம் விட்டுப் பேச வேண்டும்.

2. நமக்கு மத்தியிலுள்ள மஸாயில் சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும்.

3. இரு அமைப்பினரும் பரஸ்பரம் விமர்சனம் செய்யக் கூடாது. குறை சொல்லக்கூடாது.

4. ஜாக் மேடையில் தவ்ஹீத் ஜமாஅத்தினரும், தவ்ஹீத் ஜமாஅத் மேடையில் ஜாக்கினரும் கலந்து கொண்டு பேச வேண்டும்.

இவை தான் கோவை ஜாக் சகோதரர்கள் வைத்த கருத்துக்கள், யோசனைகள்!

இவை ஒவ்வொன்றுக்கும் பி.ஜே. அளித்த விளக்கத்தைப் பார்ப்போம்.

சி.டி. போட்டு விமர்சித்தல்

ஜாக்கில் இருக்கும் போது, அதன் நிர்வாகத்திடம் சில குறைகளைக் களையுமாறு நாங்கள் சுட்டிக் காட்டினோம். உதாரணத்திற்கு நாகூர் பள்ளிவாசல் கட்டுமானப் பணிகளில் நியமிக்கப்பட்ட ஒருவர் செய்த ஊழலைக் குறிப்பிடலாம். அவர் மீது கமாலுத்தீன் மதனி எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. காரணம், அவர் கமாலுத்தீன் மதனியின் நெருங்கிய உறவினர். அவர் மீது நடவடிக்கை எடுக்காதது மட்டுமல்ல! அவருக்குப் பதவி உயர்வும் வழங்கப்பட்டது.

இதுபோன்று திருச்சி ஜாக் பொறுப்பாளர் ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டு வந்தது. அவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாறாக அவருடைய அந்தஸ்து மேலும் உயர்ந்தது.

இது போன்ற காரணங்களால் ஜாக்கை விட்டுத் தனித்து, தஃவா பணி செய்யலானோம். இந்தச் சந்தர்ப்பத்தில் ஜாக் தான் முதன் முதலில் சி.டி. வெளியிட்டது. அதற்கு நாம் பதில் தான் சொன்னோமே தவிர நாமாக சி.டி. போடவில்லை.

தமுமுக பற்றி சி.டி. போட்டதாகச் சொன்னீர்கள். 'நீங்கள் தவ்ஹீதில் இருக்கிறீர்கள்; தமுமுகவின் வளர்ச்சியை உங்களது தவ்ஹீதுக் கொள்கை பாதிக்கின்றது' என்று தவ்ஹீதைக் காரணம் காட்டி என்னை தமுமுகவிலிருந்து வெளியேற்றினார்கள்.

அப்போது உண்மை சொல்வோம்' என்று ஜவாஹிருல்லாஹ் சி.டி. வெளியிட்டார். அதற்கு நாங்கள், உண்மை மட்டும் சொல்வோம்' என்று பதில் சிடி தான் வெளியிட்டோம்.

பாக்கர் தொடர்பாக சி.டி. போட்டதைக் குறிப்பிட்டீர்கள்.

பாக்கர் மீது பாலியல் குற்றச்சாட்டு வந்து, அது நிரூபணமாகி அவர் மீது நடவடிக்கை எடுத்து நீக்கியிருக்கிறோம்.

அவரை வெளியேற்றிய விஷயத்தை மக்களிடம் விளக்கி விட்டு இனி பாக்கர் விஷயமாக நாங்கள் எதுவும் பேசுவதில்லை என்று முடிவெடுத்து அதை உணர்விலும் வெளியிட்டோம்.

அவர் வெளியே போய், தன் விஷயத்தில் ஜமாஅத் அநியாயம் செய்து விட்டது என்ற ரீதியில் பேச ஆரம்பித்தார். எனவே அது பற்றித் தெளிவுபடுத்தவே ஜமாஅத் சி.டி. வெளியிட்டது. ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு நீக்கப்பட்ட பாக்கர் விவகாரத்தை மற்ற விஷயங்களுடன் ஒப்பிட முடியாது. இந்த வித்தியாசத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இப்போது நீங்கள் தெரிவித்த யோசனைகளுக்கு வருகின்றேன்.

முதலாவது யோசனை - பரஸ்பரம் சந்தித்தல்

நானும், எஸ்.கே.யும் சந்தித்து மனம் விட்டுப் பேச வேண்டும் என்று குறிப்பிட்டீர்கள்.

இது இணக்கத்திற்கு வழிவகுக்காது. காரணம் இது போன்று பலமுறை சந்தித்து மனம்விட்டுப் பேசியிருக்கிறோம். ஒவ்வொரு சந்திப்பின் போதும் சொல்கின்ற குறைகளைச் சரிப்படுத்துகின்றேன் என்று கமாலுத்தீன் மதனி சொல்வார். சபையில் வைத்து அத்தனையையும் ஒத்துக் கொள்வார். பிறகு மாறி விடுவார்.

இந்தச் சந்திப்பு பல்வேறு இடங்களில், பல்வேறு கட்டங்களில் நடந்திருக்கின்றது.

1. சென்னை ஜான் டிரஸ்ட்

2. திருச்சி அரிஸ்டோ ஹோட்டல்

3. நாகர்கோவில் ஹனீபா நகர் பள்ளிவாசல்

இந்தச் சந்திப்புகளுக்கு முன்னர் தவ்ஹீது பிரச்சாரக் குழு என்ற பெயரில் 14.11.1998 முதல் செயல்பட்டுக் கொண்டிருந்தோம். இலங்கையில் நடைபெற்ற ஓர் ஏகத்துவ மாநாட்டிற்கு இந்தப் பெயரிலேயே நமது தாயீக்கள் சென்று வந்தனர்.

இந்நிலையில் தான் நாகர்கோவில் ஹனீபா நகர் பள்ளிவாசலில் சந்திப்பு ஏற்பட்டது. இந்தச் சந்திப்பின் போது ஜாக் நிர்வாகம், தமுமுக விவகாரம் அனைத்தும் விவாதிக்கப்பட்டது.

இந்த இணக்க முயற்சிகளை வலுப்படுத்துவற்காக ஆர்.டி.ஓ.வில் பணிபுரிந்து கொண்டிருந்த பஷீர், ஸய்யித் முஹம்மத் மதனீ ஆகியோர் அடங்கிய ஒரு குழுவும் நியமிக்கப்பட்டது. மூன்று மாதத்திற்குள்ளாகக் குறைகள் சரிசெய்யப்பட்டு இணக்கத்திற்கு வழிவகுக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.

இம்மூன்று மாத காலத்திற்கு தவ்ஹீது பிரச்சாரக் குழு தனது அனைத்து செயல்பாட்டையும் நிறுத்தி வைக்க வேண்டும் என்று கமாலுத்தீன் கேட்டுக் கொண்டார். அதற்கு இணங்க தவ்ஹீது பிரச்சாரக் குழுவின் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.

இணக்கத்திற்கான பதிலுக்காகக் காத்திருந்தோம். மூன்று மாத கால அவகாசமும் முடிந்தது. கமாலுத்தீன் மதனி தனது மவுனத்தைக் கலைக்கவில்லை. தவ்ஹீது பிரச்சாரக் குழுவை முடக்கி வைத்ததைத் தவிர்த்து வேறு எந்த முன்னேற்றமும் நடைபெறவில்லை. கமாலுத்தீன் மதனி எங்களை ஏமாற்றியது தான் மிச்சம்!

அரிஸ்டோ ஹோட்டல்

திருச்சி அரிஸ்டோ ஹோட்டலில் ஒரு சந்திப்பு நடந்தது. இணக்கத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்புகளில் இது முக்கியமானதாகும். இதற்காக ஷம்சுல்லுஹா, ஸைபுல்லாஹ், அப்துர்ரஹ்மான் பிர்தவ்ஸி ஆகியோர் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆரம்ப கால தவ்ஹீதுவாதிகளைச் சந்தித்து அழைப்புக் கொடுத்தனர்.

1997ல் தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த இந்த சமாதானக் கூட்டச் சந்திப்பின் மூலம் ஓர் இணக்க சூழல் உருவானது. (இந்த இணக்க காலத்தில் தான் சென்னை ஜாக் மர்கஸில் பி.ஜே., ஈமானின் கிளைகள்' என்ற தலைப்பில் தொடர் ஜும்ஆ உரையாற்றினார்.

ஆனால் அந்த இணக்கச் சூழலும் அற்ப ஆயுளில் முடிந்தது. இணக்க சூழ்நிலை நிலவிய அந்த ஆண்டு ரமளானில் கமாலுத்தீன் தன்னிச்சையாக, பிறை பற்றி அறிவிப்பு விடுத்தார். பிறை விவகாரத்தால் மீண்டும் ஒரு பிரிவினை ஏற்பட்டது.

இலங்கை ஜிஃப்ரியின் இணைப்பு முயற்சி

2000ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மதுரை தமுக்கம் மைதானத்தில் ஒரு தவ்ஹீது மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டு சமயத்தில் அப்துல் வதூத் ஜிஃப்ரீ அவர்கள் ஓர் இணக்க முயற்சியை மேற்கொண்டார். அதுவும் தோல்வியிலேயே முடிந்தது.

பக்ரி தலைமையில் ஒரு முயற்சி

இதன் பின்னரும் இணக்க முயற்சி தொடரத் தான் செய்தது. மதுரை மாநட்டிற்குப் பின் அனைத்து தவ்ஹீது ஜமாஅத் கூட்டமைப்பு உருவானது.

தவ்ஹீதுவாதிகள் சுன்னத் ஜமாஅத்தினரால் அடிக்கடி தாக்கப்பட்டு பெரும் சோதனைகளுக்கு உள்ளாயினர். சிறைவாசம் சென்றனர். ஊர் நீக்கம் செய்யப்பட்டனர். பிரச்சாரம் செய்வதை விட்டும் தடுக்கப்பட்டனர். பள்ளிவாசலில் தொழ விடாமல் தடுக்கப்பட்டனர்.

இவ்வாறு தாக்கப்படுகின்ற வேளையில் அப்போது காவல்துறை அதிகாரிகளை அணுகுவதற்கு இருந்த அமைப்பு தமுமுக தான். தமுமுக மேல்மட்டத்திற்கு இது கசக்க ஆரம்பித்தது. சு.ஜ., தவ்ஹீது ஜமாஅத் பிரச்சனையில் தவ்ஹீதுவாதிகளுக்கு ஆதரவாகச் சென்றால் சுன்னத் ஜமாஅத்தினரின் ஆதரவு கிடைக்காமல் போய்விடும் என்று சிந்திக்க ஆரம்பித்தனர். முகம் சுளித்தனர்; எரிந்து விழுந்தனர். இந்நிலையில் உதயமானது தான் அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பு!

நல்ல கட்டமைப்பைக் கொண்டு குறுகிய காலத்தில் சிகரத்தை எட்டிய அமைப்பு! அந்த அமைப்பைக் கலைத்து விட்டு ஜாக்குடன் சங்கமிக்கத் தயாராக இருந்தோம். ஹாமித் பக்ரி தலைமையில் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இரு அமைப்புகளில் உள்ள தற்போதைய தலைவர்கள் விலகி, ஆரம்ப காலத் தவ்ஹீதுவாதிகளை தலைவர்களாகத் தேர்ந்தெடுத்து அவர்களது தலைமையில் ஜாக் பெயரிலேயே சேர்ந்து செயல்பட வேண்டும்.

ஜாக் அமைப்பிலுள்ள ஒவ்வொருவருக்கும் உறுப்பினர் அட்டை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வைத்தோம். அதை கமாலுத்தீன் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார்.

இயக்குனர் அமீரின் இணக்க முயற்சி

அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் பரிணமித்தது. பல்லாயிரக்கணக்கான கிளைகளைக் கொண்டு ஒரு வலிமையான அமைப்பாக அது செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இவ்வேளையில் தான் விடுதலைப் புலிகள் ஆதரவு தொடர்பான விஷயமாக திரைப்பட இயக்குனர் அமீர் என்னைச் சந்திக்கின்றார். அந்தச் சந்திப்பின் போது அவர் இணக்கத்திற்கான கோரிக்கையை முன்வைத்தார். அப்போது தான் அந்த இணக்கக் கடிதத்தை அவரிடம் கொடுத்தேன். அவரும் அந்தக் கடிதத்தை கமாலுத்தீன் மதனியிடம் சேர்த்து விட்டதாகத் தகவல் வந்தது. ஆனால் கமாலுத்தீன் இதுவரை அதற்கு எந்தப் பதிலும் தரவில்லை.

எனவே இதுவரை சொன்ன விளக்கங்களிலிருந்து பார்த்தால், நானும், கமாலுத்தீனும் பல தடவை மனம் விட்டுப் பேசியிருக்கின்றோம். தூதுக் குழுக்கள் மூலம் பேசியிருக்கின்றோம். சபையில் வைத்து எல்லாவற்றிற்கும் சரி என்பார். ஓர் அவகாசம் கேட்பார். பின்னர் பல்டி அடித்து விடுவார். அதனால் இருவரும் சந்தித்து மனம் விட்டுப் பேசினால் பிரச்சனை தீர்ந்து விடும் என்ற யோசனை ஏற்கனவே பலமுறை செயல்படுத்தப்பட்டு தோல்வியைத் தழுவிய யோசனை! அது எந்தப் பலனையும் தராது.

இரண்டாவது யோசனை - மஸாயில் பிரச்சனைகள்

நமக்கு மத்தியிலுள்ள மஸாயில் சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும்.

மஸாயில் பிரச்சனை என்று வருகின்ற போது அதை நாம் இரண்டாகப் பிரித்துப் பார்க்க வேண்டும்.

தொழுகையில் தக்பீர் நெஞ்சுக்கு மேல் கட்டுவதா? அல்லது தொப்புளுக்குக் கீழ் கட்டுவதா? என்ற பிரச்சனை தொழுகையுடன் மட்டும் நின்று விடும். மஸாயில் பிரச்சனைகளில் இப்படி ஒரு வகை இருக்கின்றது.

மற்றொரு வகை, அந்தந்த விஷயத்துடன் நின்று விடாமல் ஆயிரம் மஸாயில் - மார்க்கச் சட்டங்கள் எடுப்பதற்கு அடிப்படையாக அமைந்து விடும். அதற்கு எடுத்துக்காட்டு, ஸஹாபாக்களைப் பின்பற்றலாம் என்ற பிரச்சனை! ஸஹாபாக்களைப் பின்பற்றலாம் என்று ஜாக் சொல்கின்றது.

என்று பீஜே கோவையில் விளக்கிய போது ஜாக் சகோதரர்கள்: நாங்கள் ஸஹாபாக்களைப் பின்பற்றலாம் என்று சொல்லவில்லையே! என்று குறுக்கிட்டனர்.

ஸஹாபாக்களைப் பின்பற்றலாம் என்று அல்ஜன்னத்தில் கமாலுத்தீன் எழுதியிருக்கின்றார் என்பதை பீஜே எடுத்துக் காட்டினார்.

இது தொடர்பாக அவர்கள் அல்ஜன்னத்தில் வெளியிட்ட தீர்மானங்கள் இதோ:

அல்ஜன்னத், அக்டோபர் 2004 இதழில் பக்கம் 15ல் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

1. நபிமார்களுக்குப் பிறகு ஸஹாபாக்களான நபித்தோழர்கள் சிறப்பு மிக்கவர்களாக இருக்கின்றார்கள். இதற்கு ஏராளமான சான்றுகள் குர்ஆன் ஹதீஸில் உள்ளன.

2. நபித்தோழர்களை அல்லாஹ் திருப்திப்பட்டுக் கொண்டதாக குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.

3. அல்லாஹ் விரும்பியது போன்று அவர்கள் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டதினாலேயே அல்லாஹ் அவர்களைப் புகழ்ந்துள்ளான்.

4. நபித்தோழர்களின் ஈமான் அவர்களுக்குப் பின்னால் வந்தவர்களுடைய ஈமானை விடச் சிறந்ததாகும்.

5. நபித்தோழர்கள் குர்ஆனையும், சுன்னாவையும் நன்கு விளங்கியவர்களாவர்.

6. நபித்தோழர்களை சங்கைப்படுத்துவதும், அவர்களின் சிறப்பை மதிப்பதும் முஸ்லிம்கள் மீது கடமையாகும்.

7 ஸஹாபாக்கள் ஏகோபித்துக் கூறியுள்ள விஷயங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

8. ஸஹாபாக்கள் குர்ஆன் சுன்னாவிற்கு ஏகோபித்துக் கொடுக்கின்ற விளக்கத்தைக் கவனத்தில் கொள்வது அவசியமாகும்.

9. ஸஹாபாக்களுக்கிடையில் கருத்து வேறுபாடான விஷயங்களில் குர்ஆன் சுன்னாவிற்கு மிகவும் நெருக்கமான கருத்தையே ஏற்க வேண்டும்.

10. ஸஹாபாக்கள் குர்ஆன் சுன்னாவிற்குக் கொடுக்கின்ற விளக்கங்கள் அவர்களுக்குப் பின்னால் வந்தவர்கள் கொடுக்கின்ற விளக்கங்களை விடச் சிறந்ததாகும்.

11. குர்ஆன் சுன்னாவிற்கு மாற்றமாக எந்த ஒரு விஷயத்தையும் ஸஹாபாக்கள் கூறியதில்லை.

இது தான் அந்த அறிக்கை!

ஸஹாபாக்களைப் பின்பற்றலாம் என்ற இந்த வாசலைத் திறந்து விட்டால் போதும். எல்லா பித்அத்களையும் நியாயப்படுத்த இது அடிப்படையாக அமைந்து விடும்.

தராவீஹ் 20 ரக்அத்கள், ஜும்ஆவுக்கு இரண்டு பாங்கு, முத்தலாக் அத்தனையையும் சரி என்று நியாயப்படுத்தும் நிலை தோன்றி விடும்.

மூன்றாவது யோசனை - பரஸ்பர விமர்சனம் கூடாது

இரு அமைப்பினரும் பரஸ்பரம் விமர்சனம் செய்யக் கூடாது. குறை சொல்லக்கூடாது என்பது மூன்றாவது யோசனை.

நீங்கள் சொல்கின்ற இந்த யோசனையை ஏற்றுக் கொள்ள முடியாது. தவ்ஹீத் ஜமாஅத் மீது உள்ள குறைகளை நீங்கள் விமர்சியுங்கள்; ஜாக்கில் உள்ள குறைகளை நாங்கள் விமர்சிப்போம். விமர்சிக்காமல் விட மாட்டோம்.

மதுரையில் நடந்த கேள்வி பதில் நிகழ்ச்சி இமயம் டி.வி.யில் ஒளிபரப்பானது. அதில் ஜாக் ஒரு தனி மத்ஹப் என்று நான் விமர்சித்தேன்.

ஜாக் சகோதரர்கள்: ஜாக் ஒரு தனி மத்ஹப் என்று எப்படிக் கூற முடியும்?

பி.ஜே.: ஜாக் தன்னிலை விளக்கம் என்று ஒரு நூல் வெளியிட்டிருக்கின்றது. அந்த நூலில், மார்க்க விஷயத்திலும் உலக விஷயத்திலும் அமீருக்குக் கட்டுப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தன்னிலை விளக்கம் என்ற அந்நூலில் ஜாக்கில் சேர்த்துக் கொள்வதற்கு சில நிபந்தனைகளை கூறியுள்ளனர்.

'அமீர் என்ற தலைமையை ஏற்று அரசியல், சமூகம், மார்க்க பிரச்சனைகளுக்கும் வழிமுறைகளுக்கும் அவரின் முடிவுக்கு கட்டுப்படுபவராக இருத்தல் வேண்டும். மாநில அளவிலோ கிளைகளிலோ தலைமைக்கு எதிரான கருத்துக்களையும் தங்களது சுய கருத்துக்களையும் (நிர்வாகம் மற்றும் மார்க்க விஷயங்களில்) தன்னிச்சையாகத் தெரிவித்தல் கூடாது.'

இவை தான் அந்த நூலில் காணப்படும் வாசகங்கள்.

மார்க்கப் பிரச்சனைகளுக்கும் அமீரின் முடிவுக்குக் கட்டுப்படுபவராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதைத் தானே மத்ஹபுகள் கூறுகின்றன. இதை எதிர்த்துத் தான் இவ்வளவு காலமும் அடி உதைகளை வாங்கிக் கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றோம்.

இன்னும் சொல்லப் போனால் மத்ஹபுகளில் கூட இவ்வாறு கூறப்படவில்லை. நான் கூறுவது குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் மாற்றமாக இருந்தால் எனது சொல்லை விட்டுவிடுங்கள் என்று ஷாஃபி இமாமும் அபூஹனிபா இமாமும் கூறியதாக மேடை தோறும் பேசுகின்றோம். ஆனால் ஜாக்கில் இருக்க வேண்டும் என்றால் குர்ஆன் ஹதீஸுக்கு மாற்றமாக இருந்தாலும் அமீரின் முடிவுக்குத் தான் கட்டுப்பட வேண்டும் என்று எழுதியுள்ளனர்.

இது தான் தனி மத்ஹப் என்று குறிப்பிட்டேன். அதனால் இது போன்ற குறைகளை விமர்சிக்காமல் எப்படி இருக்க முடியும்?

திடல் தொழுகை

நாகர்கோவில், கோட்டாற்றில் வரலாற்றிலேயே முதன் முறையாக, நபிவழியின் அடிப்படையில் பெருநாள் தொழுகையைத் திடலில் தொழுவதற்கு தவ்ஹீத் ஜமாஅத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். அதற்கான அறிவிப்பை வெளியிட்டது தான் தாமதம். கமாலுத்தீன் மதனி, பெருநாள் காலையில் சுப்ஹ் தொழுகைக்குப் பின்னரும், அதன் பின்னர் தொடர்ந்த உரைகளிலும் இதைக் கடுமையாக விமர்சித்தார்.

1. நாகர்கோவிலில் குராபிகள் திடலில் தொழுகை நடத்துகிறார்களே! அங்கு போய் இவர்கள் (தவ்ஹீதுவாதிகள்) தொழ வேண்டியது தானே?

2. பள்ளிவாசலில் பெருநாள் தொழுகையைத் தொழுவதற்குத் தடை இருக்கிறதா?

3. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பள்ளிகள் சிறியதாக இருந்தன. அதனால் திடலில் தொழுதார்கள்.

4. திடலில் கண்டிப்பாகத் தொழுது தான் ஆக வேண்டுமா?

இவ்வாறு பேசினார்.

வணக்க வழிபாடுகள் விஷயத்தில் தடை இருக்கின்றதா? என்ற வாதத்தை முன் வைத்து ஒரு செயலைச் செய்யக் கூடாது. மார்க்கத்தின் அடிப்படையை விளங்கியவர்கள் இந்தக் கேள்வியை ஒருக்காலும் கேட்க மாட்டார்கள்.

இந்த வாதத்தைச் சொல்லியே இணை வைப்பு ஆலிம்கள் மக்களைத் தங்கள் பக்கம் தக்க வைத்துக் கொண்டு, சத்தியத்தின் பக்கம் வர விடாமல் தடுத்துக் கொண்டு உள்ளனர்.

தர்ஹா வழிபாடு, தரீக்கா வழிபாடு, தனி நபர் வழிபாடு, பித்அத், தாயத்து, தட்டு எல்லாவற்றிற்கும் மூல முதல் ஆதாரமாக அமைந்திருப்பது, தடை இருக்கின்றதா? என்ற கேள்வி தான். குராபிகளின் இந்த வாதத்தை தான் கமாலுத்தீன் மதனீ கேட்கின்றார். பெண் வீட்டு விருந்துக்கும் இதே கேள்வியைக் கேட்டு நியாயப்படுத்துகின்றனர்.

பெண் வீட்டு விருந்து

இன்று பெண் வீட்டு விருந்துகளில் ஜாக் அமைப்பினர் கலந்து கொள்கின்றனர். இஸ்லாத்தில் பெண் வீட்டு விருந்து என்பதே கிடையாது. இது முதல் அடிப்படை! அப்படி விருந்து வைத்தால் கூட அதில் மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் மருந்துக்குக் கூட அதில் போய் கலக்கக் கூடாது. இது இரண்டாவது அடிப்படை! ஏனென்றால் இது மிகப்பெரும் சமூகக் கொடுமையான வரதட்சணை ஆகும். குமரி மாவட்டத்தில் இன்று இரு வீட்டார் அழைப்பு என்ற பெயரில் பெண் வீட்டுத் தலையில் விருந்துச் செலவில் பாதியைக் கட்டி விடுகின்றனர்.

மேலப்பாளையத்தில் கமாலுத்தீன் மதனி வந்து நடத்திய ஒரு திருமணத்தில், பெண் வீட்டில் ஆயிரக்கணக்கானோரை அழைத்து விருந்து போட்டனர். இது சரியா? என்று ஒரு கொள்கைச் சகோதரர் கேள்வி எழுதிக் கொடுத்தார். அதற்கு அவர், தடையில்லை என்று பதில் சொன்னார்.

மிகப் பெரிய சமூக நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தும் ஒரு செயலை, தடையில்லை என்று சர்வ சாதாரணமாகக் கூறி விட்டுச் செல்கின்றார். இப்படித் தான், வரதட்சணை வாங்குவதற்குத் தடை இருக்கின்றதா?' என்று குராபிகள் கேட்டார்கள்.

ஸஹர் பாங்கு

அல்ஜன்னத் மாத இதழில் ஒரு கேள்விக்குப் பதில் அளிக்கும் போது, ஸஹர் பாங்கு சொல்வதால் குழப்பம் ஏற்படும் என்று கூறி, ஸஹர் நேரத்தில் பாங்கு சொல்லத் தேவையில்லை என்று எழுதியுள்ளார்கள்.

'இது தூங்குபவர்கள் எழுந்து ஸஹர் செய்ய வேண்டும் என்ற காரணத்தை மட்டும் அடிப்படையாக வைத்துச் சொல்லப்பட்டதாகும். ஸஹர் நேரத்தை மக்களுக்குத் தெரிவிப்பது தான் இதன் நோக்கம். இன்று நேரத்தைத் தெரிந்து கொள்வதற்கு எத்தனையோ வழிமுறைகள் கையாளப்படுகின்றன. நேரத்தை அறிந்து கொள்வது என்ற காரணம் நிறைவேறிவிடுமானால் அதுவே போதுமானதாகக் கொள்ளலாம்' என்று கூறியுள்ளனர்.

நவீன கால வசதியைக் கவனித்து ஸஹர் பாங்கு வேண்டாம் என்றால், பயணத்தின் போதும் கஸர் தொழுகை தேவையில்லை என்றாகி விடும். பாங்கு சொல்லத் தேவையில்லை; அலாரம் வைத்துக் கொண்டால் போதும் என்று கூற வேண்டி வரும். தொழுகைக்கு இமாம் தேவையில்லை; வீடியோ போட்டுக் கொண்டு அதைப் பின்பற்றித் தொழலாம் என்ற நிலை ஏற்படும்.

இது போன்ற குறைகளைக் கண்டு கொள்ளக் கூடாது; விமர்சிக்கக் கூடாது என்றால் அது சரியான யோசனை இல்லை.

நான்காவது யோசனை - ஒரே மேடையில்...

ஜாக் மேடையில் தவ்ஹீத் ஜமாஅத்தினரும், தவ்ஹீத் ஜமாஅத் மேடையில் ஜாக்கினரும் கலந்து கொண்டு பேச வேண்டும் என்பது அடுத்த யோசனையாகும்.

இதுவும் இணக்கத்தைத் தராது. நீங்கள் எங்கள் மேடையில் பேசுவதினாலோ அல்லது நாங்கள் உங்கள் மேடையில் பேசுவதினாலோ பெரிய இணக்கம் ஏற்பட்டு விடாது. இன்னும் சொல்லப்போனால் பிரச்சனை தான் மேலும் பெரிதாகும். நீங்கள் எங்கள் மேடையிலும் நாங்கள் உங்கள் மேடையிலும் பேசிக் கொண்டிருப்போம். ரமளான் மாதம் வரும். பிறையைப் பற்றி நீங்கள் ஒரு கருத்தைச் சொல்வீர்கள். நாங்கள் ஒரு கருத்தைச் சொல்வோம். உங்களுக்கு ஒரு ரமளான் பிறை எங்களுக்கு ஒரு ரமளான் பிறை என்றும், உங்களுக்கு ஒரு பெருநாள்; எங்களுக்கு ஒரு பெருநாள் என்றும் பிரிந்து விடுவோம். மேடையில் கலந்து கொள்வது இந்த அளவுக்குத் தான் பயனைத் தரும். எனவே நாம் காணவிருக்கும் இணக்கம் சாத்தியமானதாகவும், நிரந்தரமானதாகவும் இருக்க வேண்டும்.

அதற்கு வழி என்ன?

நமக்கு மத்தியில் என்னென்ன பிரச்சனைகள் குறுக்கே வந்து நிற்கின்றன? அவற்றை அடையாளம் கண்டு இரு தரப்பில் உள்ள அறிஞர்களை வைத்துப் பேச வேண்டும்.

1. ஸஹாபாக்களைப் பின்பற்றுதல்

2. பிறை

3. ஜகாத்

என என்னென்ன பிரச்சனைகள் உள்ளனவோ அத்தனையையும் பேச வேண்டும்.

நீங்கள் சொல்வது சரியாக இருந்தால் உங்கள் கருத்துக்கு நாங்கள் வந்து விட வேண்டும். நாங்கள் சொல்வது சரியாக இருந்தால் எங்கள் கருத்துக்கு நீங்கள் வந்து விட வேண்டும். இணக்கத்திற்கான பேச்சுவார்த்தை இந்த அடிப்படையில் அமைந்தால் தான் அது சரியாக அமையும். இல்லையெனில் அது ஒரு நடிப்பாக, நாடகமாக அமையும்.

இந்த நெருடல்களைக் களைந்த பின்னர் தான் இருவரும் ஒரே மேடையில் இணைந்து பிரச்சாரம் செய்வது சாத்தியமாகும். அதுவரை ஒரே மேடையில் கலந்து கொள்வதென்பது சாத்தியமில்லை. அத்துடன் இங்கு இன்னொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இப்போது இரு சாராரும் தங்கள் அமைப்புகளைக் கலைத்து விட்டு ஒன்று சேர்வது இப்போது சாத்தியமில்லை. ஆனால் இருவரும் அழைப்புப் பணியில் இணைந்து பணியாற்றலாம். அதற்கு முன் நமக்கு மத்தியிலுள்ள நெருடல்களை நான் கூறிய அடிப்படையில் பல அமர்வுகள் உட்கார்ந்து சரி செய்து கொள்வோம்.

கோவை ஜாக் சகோதரர்கள், பி.ஜே.யுடன் இணக்கம் தொடர்பாகச் சந்தித்த போது நடைபெற்ற உரையாடலின் தொகுப்பை மேலே தந்திருக்கிறோம்.

ஜாக் சகோதரர்கள் பி.ஜே.வைச் சந்தித்த பிறகு இணக்கத்திற்கான முயற்சிகள் மேலும் வலுப்பெறும் என்றிருந்த நமக்கு, கமாலுத்தீன் மதனி தருகின்ற பதிலைப் பாருங்கள்.

'இந்த இலட்சியப் பயணத்தில் வெற்றி நடைபோட்டுக் கொண்டிருந்த நேரத்தில் ஏதோ காரணங்களுக்காக சிலர் இந்த அமைப்பிலிருந்து பிரிந்து சென்று வேறு அமைப்புகளை உருவாக்கினார்கள். அதனால் ஏகத்துவப் பிரச்சாரத்திற்கு மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டது என்பதை சத்தியத்தை விரும்புகிறவர்கள் உணர்ந்தார்கள். ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டிய ஏகத்துவக் கொள்கையுடையவர்கள் சிதறி ஒருவருக்கொருவர் விரோத, குரோதத்தோடு வாழ்கின்றனர் என்பதைக் கண்டு வேதனையடைந்தனர்.

இதையெல்லாம் அறிந்து, நமது அமைப்பிலிருந்து பிரிந்து சென்று இயக்கங்களை உருவாக்கியவர்கள் மீண்டும் தாய் அமைப்பில் இணைந்து சத்தியப் பிரச்சாரத்தை சிறப்பான முறையில் செயல்படுத்த எண்ணம் தெரிவித்திருப்பதாக சில சகோதரர்கள் மூலம் அறிந்து பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்'

அல்ஜன்னத், ஏப்ரல் 2009

இயக்குனர் அமீர் ஒரு மூன்றாவது நபர்! விடுதலைப்புலிகள் விவகாரம் குறித்து பி.ஜே.யுடன் அவருக்கு ஒரு சந்திப்பு நிகழ்கின்றது. அந்தச் சந்திப்பின் போது சமாதானம், இணக்கம் பற்றிப் பேசுகின்றார். அவருடைய வேண்டுகோளை மதித்து பி.ஜே. இணக்கக் கடிதம் கொடுக்கின்றார். அதற்கு ஒரு மரியாதைக்குக் கூட கமாலுத்தீன் மதனி பதில் தரவில்லை.

நாம் ஏதோ ஜாக்கில் போய்ச் சேர வேண்டும் என்று தவியாய் தவிப்பது போலவும், தவமாய் காத்துக் கிடப்பது போலவும், நாம் தவறு செய்து விட்டு இவரிடம் தவ்பா செய்வது போலவும் வார்த்தைகளை இந்த அறிவிப்பில் அள்ளித் தெளித்திருக்கின்றார்.

தவ்ஹீது ஜமாஅத் ஒரு போதும் ஜாக்கின் கதவைத் தட்டவில்லை. தட்டவும் செய்யாது. அதற்கான அவசியமும் இல்லை. ஏன்?

குர்ஆன், ஹதீஸ் என்ற இரு சக்கரங்களை விட்டு ஜாக் என்ற வண்டி கழன்று ஸஹாபாக்கள் என்ற மூன்றாவது சக்கரத்தைச் சேர்த்து நாளாகி விட்டது. ஆனால் தவ்ஹீது ஜமாஅத், குர்ஆன் ஹதீஸ் என்ற அடிப்படையிலேயே அவ்விரண்டிலும் எள்ளளவும் சமரசம் செய்து கொள்ளாது தனது பயணத்தைத் தொடர்கின்றது.

More Articles …