Sidebar

17
Wed, Jun
சமீபத்திய செய்திகள்

பிற மதத்தவரின் திருமணத்தில் கலந்து கொள்ளலாமா?

பிற மதத்தினரின் அழைப்பை ஏற்று அவர்களது திருமணங்களில் கலந்து கொள்ளலாமா? இஸ்லாமியர்களுக்குத் தானே இறைவன் கட்டளையும், நபிகள் நாயகத்தின் வழிமுறைகளும். மற்றவர்களுக்கு அது எப்படிப் பொருந்தும்? எளிமையாக திருமணங்களை நடத்தி நாம் தானே அவர்களுக்கு ஒரு முன்மாதிரியைக் காட்ட வேண்டும். உங்கள் விளக்கம் தேவை.

ரஃபீக், நாகர்கோவில்

பதில்:

பிற மதத்தவர்களுக்கு இஸ்லாத்தின் சில சட்டங்கள் பொருந்தாது என்பது உண்மை தான். அவர்கள் பன்றி இறைச்சி சாப்பிட்டால் அதை இஸ்லாமிய அரசு தடுக்காது. அவர்கள் சிலை வழிபாடு செய்தால் அவர்களின் வழிபாட்டு உரிமை என்று அதை எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால் நம் மார்க்கத்தில் தடுக்கப்பட்ட செயல்களை அவர்கள் செய்யும் போது அந்தச் சபையில் நாம் இருப்பதற்கு இது எப்படி ஆதாரமாக அமையும்?

முஸ்லிமல்லாதவர்கள் நடித்துள்ள ஆபாசக் காட்சியை நாம் பார்ப்பது கூடுமா? அவர்கள் பன்றியைச் சாப்பிடுவதால் அதை அவர்கள் நமக்குத் தரும் போது நாம் சாப்பிட முடியுமா?

இறைவனின் கட்டளைகளும், நபிகள் நாயகத்தின் வழிமுறைகளும் பிறமதத்தினருக்குப் பொருந்துமா? பொருந்தாதா? என்ற அடிப்படையில் இப்பிரச்சனையை நாம் அனுகக் கூடாது.

மார்க்கம் தடை செய்த காரியங்களில் நாம் பங்கெடுப்பது கூடுமா? கூடாதா? என்ற அடிப்படையில் தான் இது குறித்து முடிவு செய்ய வேண்டும்.

மார்க்கத்திற்கு மாற்றமான காரியங்களை நாம் செய்யக் கூடாது என்று முஸ்லிம்களாகிய நமக்கு அல்லாஹ் கட்டளையிட்டிருப்பது போல் அக்காரியங்கள் நடைபெறும் சபையில் கலந்து கொள்ளக்கூடாது என்றும் நமக்குக் கட்டளையிட்டிருக்கின்றான்.

தீமையான காரியங்களை நாம் செய்யாவிட்டாலும் அக்காரியங்கள் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும், வைபவங்களிலும் நாம் பங்கெடுத்தால் நாமும் அத்தீமையைச் செய்ததாகவே இறைவனால் கருதப்படுகின்றது.

அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் அல்லாஹ் நரகில் ஒன்று சேர்ப்பான்.

திருக்குர்ஆன் 4:140

பொதுவாக அல்லாஹ்வின் வசனங்களைக் கேலி செய்யும் வகையிலும், அதை மறுக்கும் வகையிலும் யார் செயல்பட்டாலும் அவர்களுடன் நாம் அமரக் கூடாது என்று இவ்வசனம் கூறுகின்றது.

இத்தடையை மீறி அமர்ந்தால் நாமும் அவர்களைப் போன்றவர்களே என்று எச்சரிக்கின்றது.

இஸ்லாத்தை ஏற்றவர்கள் இவ்வாறு செய்தால் அமரக் கூடாது மற்றவர்கள் செய்தால் அமரலாம் என்று அல்லாஹ் வேறுபடுத்தி சட்டத்தைக் கூறவில்லை. மார்க்கத்திற்கு மாற்றமான காரியத்தை யார் செய்தாலும் அந்தச் சபையில் இருக்கக்கூடாது என்று பொதுவாகவே கூறுகிறான்.

தீமை நடக்கக் கண்டால் ஒரு முஸ்லிம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று நபியவர்கள் நமக்கு வழிகாட்டியுள்ளார்கள்.

صحيح مسلم

186 - حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ سُفْيَانَ ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ كِلاَهُمَا عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ - وَهَذَا حَدِيثُ أَبِى بَكْرٍ - قَالَ أَوَّلُ مَنْ بَدَأَ بِالْخُطْبَةِ يَوْمَ الْعِيدِ قَبْلَ الصَّلاَةِ مَرْوَانُ فَقَامَ إِلَيْهِ رَجُلٌ فَقَالَ الصَّلاَةُ قَبْلَ الْخُطْبَةِ. فَقَالَ قَدْ تُرِكَ مَا هُنَالِكَ. فَقَالَ أَبُو سَعِيدٍ أَمَّا هَذَا فَقَدْ قَضَى مَا عَلَيْهِ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ « مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ وَذَلِكَ أَضْعَفُ الإِيمَانِ

"உங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியாவிட்டால் தமது நாவால் (தடுக்கட்டும்) அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (வெறுத்து ஒதுங்கட்டும்) இந்த நிலையானது இறைநம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.

அறிவிப்பவர்: அபூஸயீதுல்குத்ரீ (ரலி)

நூல்: முஸ்லிம்

தீமைகளைக் காணும் போது முடிந்தால் கையால் தடுக்க வேண்டும். இதற்கு இயலாவிட்டால் நாவால் தடுக்க வேண்டும். இதற்கும் இயலாவிட்டால் வெறுத்து ஒதுங்க வேண்டும்.

மூன்றாவதாகக் கூறப்பட்ட வெறுத்து ஒதுங்குவது என்ற நிலை பலவீனமான நிலை என்று கூறப்படுகின்றது. மார்க்கத்திற்குப் புறம்பான சபைகளை வெறுப்பதென்றால் அதில் நாம் பங்கெடுக்காமல் இருப்பதாகும். அந்தச் சபைகளில் கலந்து அவற்றுக்கு அங்கீகாரம் கொடுத்துவிட்டு நான் மனதால் வெறுத்து விட்டேன் என்று கூற முடியாது.

பிறமதத்தவர்கள் நடத்தும் திருமண நிகழ்ச்சிகளில் இணைவைப்பு, மூடநம்பிக்கைகள், இசை போன்ற அனாச்சாரங்கள் நிறைந்திருக்கும். இந்நிகழ்ச்சிகளில் நாம் பங்கெடுத்துவிட்டு வந்தால் இத்தீமைகளை நாம் ஆதாரித்ததாக ஆகிவிடும். நாமே இவற்றைச் செய்த குற்றமும் ஏற்படும்.

மேலும் ஒருவர் தவறு செய்வதைக் கண்டால் ஏதோ ஒரு வகையில் அத்தவறை அவருக்கு உணர்த்துவது நமது கடமை. மார்க்கத்திற்கு மாற்றமான நிகழ்ச்சிகளை நாம் புறக்கணித்தால் தான் அவற்றை நடத்துபவர்கள் தாங்கள் செய்வது தவறு என்பதை உணருவார்கள். இந்நிகழ்ச்சிகளில் நமது பங்களிப்பை அளித்தால் தங்களது தவறுகளை அவர்களால் உணர முடியாமல் போகின்றது.

அழகிய முறையில் திருமணத்தை நடத்தி நாம் தான் அவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இதற்காக பிறமதத்தினர்களை நமது திருமணங்களுக்கு அழைக்கலாம். ஆனால் நாம் அவர்களின் திருமணங்களுக்குச் செல்லும் போது மேலே நாம் சுட்டிக்காட்டிய வசனத்துக்கும், நபிமொழிக்கும் மாற்றமாக நடக்கும் நிலை உருவாகிறது.

மேலும் முஸ்லிமல்லதவர்களுக்கு இஸ்லாத்தின் சட்ட்திட்டங்கள் பொருந்தாது என்று கூறி அதில் கலந்து கொள்வதை நாம் கூடும் என்று சொன்னால் அவர்கள் நடத்தும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளலாம் என்றே கூற வேண்டும். அவர்கள் நடத்தும் கும்பாபிஷேகம், கோவில் திருவிழாக்கள், சிலை திறப்பு விழா, கிரகப் பிரவேசம், பூப்புனித நீராட்டு விழா, காது குத்தும் விழா என்று இன்னும் மார்க்கத்திற்கு மாற்றமான ஏராளமான நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கலாம் என்று கூற வேண்டி வரும்.

முடிவில் தீமையைக் கண்டால் அதை வெறுக்கும் குணம் காலப்போக்கில் அத்தீமைகளை ஆதரிக்கும் குணமாக மாறிவிடும். மேலும் அவர்களின் கலாச்சாரம் நமது சமுதாயத்திலும் தொற்றிக்கொள்ளும். எனவே தான் மார்க்கம் இதைத் தடைசெய்கின்றது.

மாற்றார்களின் திருமணத்தில் நமது மார்க்கம் தடுத்துள்ளவை நடக்குமானால் பங்கெடுக்கக் கூடாது என்றாலும் திருமணத்துக்கு முன்போ, அல்லது பின்போ தீமைகள் அரங்கேறாத போது மணமக்களைப் பார்த்துவிட்டு வந்தால் அது மார்க்கத்தில் தவறல்ல.

அவர்கள் வருத்தப்படாத வகையில் பக்குவமாக இப்ராஹீம் நபி காட்டிய வழியை நாம் பின்பற்றினால் நாமும் நமது கடமையைச் செய்தவர்களாக ஆவோம். அவர்களும் மனவருத்தப்படாமல் பார்த்துக் கொள்ளலாம். இப்ராஹீம் நபியவர்கள் தம்மை நோயாளி என்று பொய் சொல்லி தீமையில் பஙெடுக்காமல் தவிர்த்துக் கொண்டனர். (பார்க்க திருக்குர்ஆன் 37:2)

இது முஸ்லிமல்லாதவர் என்ற இன வேறுபாட்டினால் அல்ல. மார்க்கத்தில் தடுக்கப்பட்டவைகளை ஒரு முஸ்லிம் செய்தாலும் நாம் புறக்கணிப்போம் என்று அவர்களிடம் தெளிவுபடுத்தினால் அவர்கள் புரிந்து கொள்வார்கள். செயலின் அடிப்படையில் தமது முடிவுகளை அமைத்துக் கொள்பவர்களுக்கு இது பிரச்சனை இல்லை.

முஸ்லிம்கள் நடத்தும் அனாச்சார நிகழ்ச்சிகளில் கலந்து விட்டு முஸ்லிமல்லாதவர்களுக்கு வேறு நிலை எடுப்பவர்களுக்குத் தான் இது கடினமானது.

மற்ற மதங்களை விமர்சிக்கக் கூடாதா?

கேள்வி: ஏனைய மதங்களை விமர்சிக்கக் கூடாது என்று திருக்குர்ஆன் கூறுகிறது. ஆனால், திருக்குர்ஆனே பல இடங்களில் ஏனைய மதங்களையும், ஏனைய மதங்களின் கடவுள் கொள்கையைப் பற்றியும் விமர்சிக்கின்றதே? ஏன் இந்த முரண்பாடு?

- ஹெச்.எம். ஹில்மி, அக்கூரன, இலங்கை.

பதில்:

ஏனைய மதங்களை விமர்சிக்கக் கூடாது என்று திருக்குர்ஆனில் எந்த இடத்திலும் கூறப்படவில்லை. பிற மதத்தவர்கள் கடவுளர்களாகக் கருதுவோரை ஏசக் கூடாது என்று தான் குர்ஆன் கூறுகிறது.

அல்லாஹ்வையன்றி யாரிடம் அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ அவர்களை ஏசாதீர்கள்! அவர்கள் அறிவில்லாமல் வரம்பு மீறி அல்லாஹ்வை ஏசுவார்கள்.

திருக்குர்ஆன் 6:108

ஏசுவதற்கும், விமர்சிப்பதற்கும் மிகப் பெரிய வேறுபாடு இருக்கிறது.

முஸ்லிமல்லாதவர்களால் கடவுளர்களாக மதிக்கப்படுவோரின் தனிப்பட்ட நடத்தைகள் போன்றவற்றைக் கேலி செய்வதும், தரக்குறைவான வார்த்தைகளைப் பேசுவதும் தான் ஏசுதல் என்பதன் பொருளாகும்.

கொள்கை, கோட்பாடு மற்றும் சட்டதிட்டங்களின் அடிப்படையில் இது தான் சரியானது என்று வாதிடுவதையும், மற்ற கொள்கைகள் தவறானவை என்று கூறுவதையும் இஸ்லாம் அனுமதிக்கின்றது.

குர்ஆனில் அதிகமான இடங்களில் அறிவுப்பூர்வமான இத்தகைய வாதங்களும், விமர்சனங்களும் காணப்படுகின்றன. ஆனால் ஒரு இடத்திலும் பிற மதத்தினரால் கடவுளர்களாக மதிக்கப்படுவோர் ஏசப்படவே இல்லை.

ஈஸா நபியைக் கிறித்தவர்கள் கடவுளின் மகன் எனக் கூறுவதை இஸ்லாம் மறுக்கிறது. அதற்கான காரண காரியங்களையும் தெளிவாகக் கூறுகிறது. ஆனால் ஒரு இடத்தில் கூட ஈஸா நபியைப் பற்றி தரக் குறைவான ஒரு சொல்லையும் குர்ஆன் பயன்படுத்தவில்லை.

வேதமுடையோரே! உங்கள் மார்க்கத்தில் வரம்பு மீறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதனையும்) கூறாதீர்கள்! மர்யமின் மகன் ஈஸா எனும் மஸீஹ் அல்லாஹ்வின் தூதரும் அவனது கட்டளையா(ல் உருவானவருமா)வார். அக்கட்டளையை அவன் மர்யமிடம் போட்டான். அவனது உயிருமாவார். எனவே அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்புங்கள்! (கடவுள்) மூவர் எனக் கூறாதீர்கள்! விலகிக் கொள்ளுங்கள்! (அது) உங்களுக்குச் சிறந்தது. அல்லாஹ்வே ஒரே வணக்கத்திற்குரியவன். தனக்குப் பிள்ளை இருப்பதை விட்டும் அவன் தூயவன். வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அல்லாஹ் பொறுப்பேற்கப் போதுமானவன்.

திருக்குர்ஆன் 4:171

'மர்யமின் மகன் மஸீஹ் தான் அல்லாஹ் எனக் கூறியவர்கள் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர். 'இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை' என்றே மஸீஹ் கூறினார்.

திருக்குர்ஆன் 5:72

மர்யமின் மகன் மஸீஹ் தூதரைத் தவிர வேறில்லை. அவருக்கு முன் பல தூதர்கள் சென்று விட்டனர். அவரது தாய் உண்மையாளர். அவ்விருவரும் உணவு உண்போராக இருந்தனர். அவர்களுக்குச் சான்றுகளை எவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளோம் என்பதைச் சிந்திப்பீராக! பின்னர் அவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர் என்பதையும் சிந்திப்பீராக!

திருக்குர்ஆன் 5:75

லாத், உஸ்ஸா போன்ற பெண் பாத்திரங்களைக் கடவுளின் புதல்விகள் என்று மக்காவில் வாழ்ந்தவர்கள் நம்பி வந்தனர். உங்களுக்கு மட்டும் ஆண் மக்கள்! அல்லாஹ்வுக்கு மட்டும் பெண் மக்களா! என்று குர்ஆன் கேள்வி எழுப்பியது.

இறைவனுக்கு மனைவியும், மக்களும் அறவே இல்லை என்பதையும் கூறியது. லாத், உஸ்ஸா பற்றி அவர்கள் நம்பி வந்த கட்டுக் கதைகளின் அடிப்படையில் கீழ்த்தரமாக விமர்சிக்க முடியும். அப்படி எந்த விமர்சனமும் குர்ஆனில் இல்லை.

இந்துக்கள் கடவுளர்களாக மதிக்கும் இராமன், கிருஷ்ணன், முருகன், விநாயகர், சிவன், விஷ்ணு போன்றவர்கள் குறித்து முஸ்லிம்கள் அவர்களைக் குறை கூறக் கூடாது. அதைத் திருக்குர்ஆன் தடை செய்கிறது.

அதே நேரத்தில் ஒரு கடவுள் தான் இருக்க முடியும். பல கடவுள்கள் இருக்க முடியாது என்று வாதம் செய்யலாம். பல கடவுள் கொள்கையை நம்புவதால் ஏற்படும் கேடுகளைப் பட்டியலிட்டு கொள்கைப் பிரச்சாரம் செய்யலாம். மற்றவர்கள் கடவுளர்களாக மதிக்கக்கூடியவர்களின் பெயர்களைக் குறிப்பிடாமலேயே இத்தகைய பிரச்சாரத்தைச் செய்ய முடியும்.

அறிவுப்பூர்வமான வாதங்களின் அடிப்படையில் இவ்வாறு பிரச்சாரம் செய்வதை இஸ்லாம் அனுமதிக்கிறது. இத்தகைய பிரச்சாரத்தால் சமூக நல்ணக்கத்திற்கு எந்தக் கேடும் ஏற்படாது. எனவே ஏசுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதும் அறிவுப்பூர்வமாக விமர்சனம் செய்யலாம் என்பதும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல.

(பீஜே எழுதிய அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் எனும் நூலில் இருந்து)

பிற மதப் பண்டிகைகளின் போது வாழ்த்துக் கூறலாமா?

ஃபஸ்லான், இங்கிலாந்து

பதில் :

முஸ்லிம்கள் மட்டும் வாழும் பகுதிகளில் இது போன்ற பிரச்சனைகளுக்கு இடமிருக்காது. மற்ற சமுதாய மக்களுடன் கலந்து வாழும் பகுதிகளில் அவர்கள் நம்முடைய பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்லி அன்பைப் பகிர்ந்து கொள்வதால் நாமும் அதற்கேற்ப நடக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்கு ஏற்படுகிறது.

இது போன்ற பண்டிகைகளில் நமக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் நாம் வாழ்த்துச் சொல்லாவிட்டால் நம்மை மத வெறியர்களாக அவர்கள் கருதும் நிலை ஏற்படும். நாளை சத்தியத்தை அவர்களுக்கு எடுத்துச் சொல்வதற்கும் இது தடையாக அமைந்து விடும் என்பதன் காரணமாகவே இது குறித்து கேள்விகள் எழுகின்றன.

நம்முடைய மார்க்க வரம்பை மீறாமலும், அவர்கள் தவறாக எண்ணாமலும் இருக்கும் வகையிலான வழிமுறைகள் இருந்தால் அதைக் கடைப்பிடிப்பதில் தவறு இல்லை.

இஸ்லாம் மார்க்கத்துக்கு இப்ராஹீமின் மார்க்கம் என்று மற்றொரு பெயரை அல்லாஹ் சூட்டியுள்ளான். அவர்களின் வாழ்க்கையில் நமக்கு முன்மாதிரி உள்ளது என்றும் அல்லாஹ் கூறுகிறான். அவர்களைப் பற்றி அல்லாஹ் கூறும் போது

பின்னர் நட்சத்திரங்களைக் கவனமாகப் பார்த்தார். நான் நோயாளி எனக் கூறினார். அவரை விட்டு விட்டு அவர்கள் சென்றனர்.

திருக்குர்ஆன் 37:89

இவ்வசனத்தில் நான் நோயாளியாக இருக்கிறேன் என்று இப்ராஹீம் நபி சொன்னதாகக் கூறப்படுகிறது.

இது இறைவனுக்காக இப்ராஹீம் நபி சொன்ன பொய் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள்.

(பார்க்க: முஸ்லிம் 4371)

இப்ராஹீம் நபியவர்கள் நோயாளியாக இல்லாவிட்டாலும், இறைவனுக்காக நோயாளி என்று கூறியுள்ளார்கள் என்பது இந்த ஹதீஸிலிருந்து தெரிகின்றது.

இது போல் ஒரு தீமையில் பங்கேற்காமல் இருப்பதற்காக இது போன்ற பொய்களை நாம் சொன்னால் அது குற்றமாகாது.

முஸ்லிம் அல்லாத மக்கள் இவ்வுலகில் எல்லா வளமும் பெற்று வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்ய நமக்கு அனுமதி இருக்கிறது. அது போல் அவர்கள் நேர்வழிக்கு வந்து மறுமையில் வெற்றி பெறுவதற்காக பிரார்த்தனை செய்வதற்கும் அனுமதி இருக்கிறது.

இந்த அனுமதிக்கு உட்பட்டு நல்வழி நடந்து எல்லா நாட்களும், எல்லா வளமும் உங்களுக்குக் கிடைக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் என்பது போன்ற கருத்தைத் தரும் வார்த்தைகளைத் தேர்வு செய்து கூறினால் அவர்கள் அதை வாழ்த்து என்று புரிந்து கொள்வார்கள். நாமும் வரம்பு மீறியவர்களாக மாட்டோம்.

இன்னும் சொல்லப் போனால் அவர்கள் பயன்படுத்தும் வாழ்த்துக்களை விட இது அவர்களுக்கு அதிக மனநிறைவைத் தரும். நம்முடைய துஆ அல்லாஹ்வால் ஏற்கப்பட்டால் அவர்கள் இஸ்லாத்தில் ஈர்க்கப்படவும் வாய்ப்பு உண்டு.

மேலும் அந்தப் பண்டிகை தினத்தில் மட்டும் இன்றி அவ்வப்போது இது போல் பயன்படுத்திக் கொண்டால் பண்டிகைக்காக வாழ்த்தியதாக ஆகாது.

23.01.2010. 18:18 PM

பிற மத சகோதரர்கள் பூஜை செய்ய பயன்படுத்தும் பூ மாலை போன்ற வியாபாரம் செய்யலாமா?

06/09/2020 வாட்ஸ் அப் கேள்வி பதில்

More Articles …

Page 2 of 4