Sidebar

17
Wed, Jun
சமீபத்திய செய்திகள்

முதலில் தோன்றிய மதம் எது?

கேள்வி: உலகில் மதம் மாற்றப்படும் அனைவரும் இந்துக்கள் தான் என்றும், அவர்களுக்கு மதங்கள் போதிக்கப்படுவதில்லை என்றும், புத்த மதம் உலகில் தோன்றிய முதல் மதம் என்றும், பின்பு கிறித்தவம். அதன் பின்பு இஸ்லாம் வந்தது என்றும் இவையனைத்திற்கும் முன்பு தோன்றியது இந்து மதம் என்றும் முஸ்லிமல்லாத என் நண்பர் கேட்கிறார்.

ராஜா கவுஸ், அல்படாயா, சவூதி அரேபியா.

இந்து மதத்தின் தோற்றம் எப்போது என்பதற்கு வரலாற்றுக் குறிப்பு இல்லை. இஸ்லாம், கிறித்தவம், புத்தம் ஆகிய மதங்களின் தோற்றத்துக்கு வரலாற்றுக் குறிப்பு உண்டு.

எனவே தான் இம்மதங்கள் தோன்றுவதற்கு முன் இந்து மதம் தான் இருந்தது என்று அவர் வாதிட்டிருக்கிறார்.

இந்து மதம் என்று ஒரு மதமே இல்லை என்பது தான் வரலாற்று உண்மை.

இந்து மதம் என்றால் என்ன என்று அவரிடம் இலக்கணம் கேளுங்கள்! அவர் கூறும் இலக்கணத்தை 99 சதவிகிதம் இந்துக்கள் மறுப்பார்கள். ஆம். இந்து மதம் எது என்பதற்கு நூற்றுக்கணக்கான இலக்கணங்கள் உள்ளன. ஒவ்வொரு இலக்கணத்திற்கும் ஒவ்வொரு காரணம் கூறுகின்றனர்.

'யார் முஸ்லிம் இல்லையோ, யார் கிறித்தவர் இல்லையோ அவர் தான் இந்து' என்று எதிர்மறையாகத் தான் இந்துக்களுக்கு இந்திய அரசு இலக்கணம் கூறுகிறது.

இந்து மதம் என்ற பெயர் இம்மதத்திற்குரியது அல்ல என்று காஞ்சிப் பெரியவாள் கூட கூறியுள்ளார்.

எனவே, நூற்றுக்கணக்கான மதங்களை ஒருங்கிணைப்பதற்காகத் தான் இப்பெயர் பிற்காலத்தில் சூட்டப்பட்டது. சைவம், வைணவம், ஜைனம், சமணம் என்று பல நூறு மதங்களுக்கும் பொதுப் பெயராக இப்பெயர் பயன்படுத்தப்பட்டது.

இவற்றில் எது முதல் தோன்றியது என்பதில் அவர்களுக்குள்ளேயே கருத்து வேறுபாடு உள்ளது.

ஆனால், அகில உலகுக்கும் ஒரு கடவுள் என்ற கொள்கை முதல் மனிதரிலிருந்தே இருந்து வருகிறது. இந்து மதத்தின் முக்கிய நூல்களிலும் கூட ஓரிறைக் கொள்கை குறித்த குறிப்புகள் இன்றளவும் கிடைக்கின்றன. இக்கொள்கையின் பெயர் தான் இஸ்லாம்.

எனவே, கடவுள் ஒரே ஒருவன் தான் என்ற கொள்கை தான் முதல் கொள்கை. இக்கொள்கையில் இஸ்லாம் மட்டும் அறவே சமரசம் செய்து கொள்ளாமல் கடைப்பிடித்து வருகிறது என்பதை அவருக்கு விளக்குங்கள்!

(பீஜே எழுதிய அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் எனும் நூலில் இருந்து)

இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படை தோற்று விட்டது எனக் கருதலாமா?

கேள்வி: இந்து மற்றும் கிறிஸ்தவ மதங்கள் தனி மனிதனிடம் ஒழுக்க நெறிகளையும், நேர்மைப் பண்புகளையும் கடைபிடிக்குமாறு வலியுறுத்துவதில்லை. ஒரு மதம் ஒருவன் செய்யும் பாவ புண்ணியங்களை அது அவனின் முன் ஜென்ம வினை (ஊழ்வினை) என்று ஒதுங்கிக் கொள்கிறது. மற்றொரு மதமோ என்ன தவறு செய்துவிட்டாலும் பாவ மன்னிப்பு பெற்றுவிட்டால் போதும் என்கிறது. எனவே, இம்மதங்கள் தோற்றுப் போகவோ, அழியவோ வழியில்லை.

ஆனால் இஸ்லாம் மார்க்கம் தனி மனிதனுக்கு ஒழுக்க நெறிகளையும், நேர்மைப் பண்புகளையும் கடைபிடிக்க கடுமையாக வலியுறுத்துகிறது. ஆனால் அதை அட்சரம் பிசகாமல் கடைபிடிக்கும் முஸ்லிம்கள் மிக மிகச் சொற்பமாக இருக்கலாம். மற்றவர்கள் முஸ்லிம் வேடதாரிகளே. முஸ்லிம்களில் மிகப் பெரும்பாலோர் முஸ்லிம் பெயர் தாங்கிகளே.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு இஸ்லாமிய மார்க்கம் அடிப்படையில் தோற்று விட்டது எனக் கருதலாமா?

எம்.எஸ். இஸ்மாயீல் ஹுஸைன், கருங்கல்பாளையம்..

பதில்: எத்தனை பேர் கடைபிடிக்கிறார்கள் என்பதை வைத்து ஒரு சித்தாந்தத்தின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கக் கூடாது. அது அறிவுடைமையும் அல்ல.

மாறாக, அது ஏற்படுத்தும் விளைவுகளின் அடிப்படையில் தான் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்க வேண்டும்.

பலவித நோய்களையும் நீக்கக்கூடிய அருமருந்து ஒன்று உள்ளது என வைத்துக் கொள்வோம்.

இம்மருந்தை பலரும் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை;

வேறு சிலர் இம்மருந்தை வாங்கி வைத்துக் கொண்டு பயன்படுத்தாமல் உள்ளனர்;

இன்னும் சிலர் அதைப் பயன்படுத்தினாலும் அரைகுறையாக ஏனோ தானோ என்று பயன்படுத்துகிறார்கள்; மிகச் சிலர் மட்டும் அம்மருந்தைப் பயன்படுத்த வேண்டிய முறையில் பயன்படுத்துகின்றனர் என்று வைத்துக் கொள்வோம்.

இவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தாலும் இம்மருந்தைப் பயன்படுத்தியதால் மற்றவர்களை விட ஆரோக்கியமாக இவர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் மருந்து தோற்று விட்டது என்று நாம் கூற மாட்டோம். மாறாக அதன் மகத்துவத்தை உணராத மனிதர்கள் தோற்று விட்டார்கள் என்றே கூறுவோம்.

இது போல் தான் இஸ்லாம் என்னும் மருந்தை முழுமையாகவும், சரியாகவும் பயன்படுத்துகின்றவர்களிடம் நேர்மை, நாணயம், ஒழுக்கம், சிறந்த பண்பாடுகள், வீரம், துணிவு, பொது நலநோக்கு என்று பல சிறப்புத் தகுதிகள் காணப்படுகின்றன.

அரைகுறையாகப் பயன்படுத்தக் கூடியவர்களிடம் கூட மற்றவர்களிடம் காணப்படுகின்ற அளவுக்கு மூடநம்பிக்கைகள் இல்லை.

மற்ற சமுதாயத்தின் பண்டிதர்கள் கூட தீண்டாமையை ஊக்குவிக்கும் நிலையில் இந்தச் சமுதாயத்தில் உள்ள பாமரனும் கூட அதைத் தவறு என்று உணர முடிகின்றது.

இப்படி ஆயிரமாயிரம் நன்மைகளை இம்மார்க்கம் மக்களிடம் உருவாக்கியுள்ளது. அந்த அடிப்படையில் தான் இஸ்லாத்தை எடை போட வேண்டும். எத்தனை பேர் பின்பற்றுகிறார்கள் என்ற அடிப்படையில் எடை போடக் கூடாது.

இந்த அளவுகோல் இஸ்லாத்திற்கு மட்டுமில்லை. எந்தக் கொள்கைக்கும் இதைத் தான் அளவுகோலாகக் கொள்ள வேண்டும்.

இப்போது நீங்கள் ஒரு கோணத்தில் கேள்வி கேட்கிறீர்கள். இப்படிக் காரண காரியத்துடன் கேள்வி கேட்பவர்கள் உலகில் மிகவும் குறைவாகவே உள்ளனர். இதனால் உங்கள் கேள்வியோ அல்லது நீங்களோ தோற்று விட்டீர்கள் என்று கூற முடியாது. எனவே சரியான அளவுகோலில் எடை போட்டால் இஸ்லாம் மாபெரும் வெற்றி பெற்று விட்டது என்ற முடிவுக்குத் தான் வர முடியும்.

அர்த்தமுள்ள கேள்விகள் முழு நூலை வாசிக்க

அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள்

இஸ்லாம் தான் சரியான மார்க்கம் என்று மற்றவர்கள் எப்படி அறிய முடியும்?

பெற்றோர் முஸ்லிமாக இருப்பதால் குழந்தையும் முஸ்லிமாகவே வளருகிறது. ஆனால் முஸ்லிமல்லாத பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகள் அந்தப் பெற்றோரின் மார்க்கத்தைத் தானே பின்பற்றும்? அப்படியிருக்கும் போது முஸ்லிமல்லாதவர்களுக்கு இஸ்லாம் தான் சரியான மார்க்கம் என்பது எப்படித் தெரியும்? என்று முஸ்லிமல்லாத நண்பர் கேட்கிறார். இதற்கு எப்படி விளக்கம் தருவது?

ஒரு மனிதன் ஒரு குறிப்பிட்ட மார்க்கத்தைப் பின்பற்றுவதற்குப் பெற்றோர் முக்கியக் காரணமாக அமைந்தாலும் மனிதனுக்கு பகுத்தறிவை இறைவன் வழங்கியுள்ளான். எல்லா விஷயங்களிலும் அவன் பெற்றோர் சொன்னதை மட்டுமே மனிதன் பின்பற்றுவதில்லை. எது தனக்கு நன்மை தரும் என்பதை ஆராய்ந்து அதைத் தான் எடுத்துக் கொள்கிறான்.

இது போன்றே கடவுள் கொள்கையிலும் மனிதன் சிந்தித்து, எது உண்மையான மார்க்கம் என்பதைத் தேர்வு செய்ய வேண்டும் என்பது தான் இஸ்லாத்தின் நிலைபாடு.

திருக்குர்ஆனை ஆய்வு செய்து பார்த்தால் வானம், பூமி, மலைகள், காற்று, மழை, சூரியன், சந்திரன், கோள்கள் போன்ற ஒவ்வொன்றைப் பற்றியும் கூறி விட்டு, இவற்றையெல்லாம் படைத்தது யார் என்பதைச் சிந்திக்கச் சொல்கிறது.

இவ்வாறு சிந்தித்துப் பார்த்தால் அவற்றைப் படைத்தவன் ஓர் இறைவன் தான் என்பதை மனிதன் அறிந்து கொள்வான். இவ்வாறு சிந்தித்து இஸ்லாத்தைப் பின்பற்ற வேண்டும் என்று தான் இஸ்லாம் கூறுகின்றது.

இஸ்லாத்தைப் பொறுத்த வரை வாரிசு அடிப்படையிலோ, அல்லது பெயர் அடிப்படையிலோ யாரையும் முஸ்லிம் என்று கூற முடியாது. முஸ்லிமான பெற்றோருக்குப் பிறந்தவர்கள், முஸ்லிம் பெயர்களைக் கொண்டவர்கள் எத்தனையோ பேர் இன்று இஸ்லாத்திற்கு எதிரான சமாதி வழிபாடு, இறந்தவர்களிடம் உதவி தேடுதல் போன்ற காரியங்களில் ஈடுபடுவதைப் பார்க்கிறோம். இவர்களெல்லாம் பெயரளவில் முஸ்லிம்களாக இருந்தாலும் இறைவனின் பார்வையில் இவர்கள் ஒரு போதும் முஸ்லிம்களாக முடியாது.

எனவே இஸ்லாம் என்பது பிறப்பு அடிப்படையில் ஏற்படுவதல்ல. ஒரு மனிதனிடம் உள்ள நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்படுவதாகும்.

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என்பதை அறிந்து கொள்வீராக!

திருக்குர்ஆன் 47:19

வணக்கத்திற்குரிவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்று சொல்லுங்கள் என்று இந்த வசனத்தில் அல்லாஹ் கூறவில்லை. மாறாக, அறிந்து கொள்ளுங்கள் என்று கூறுகின்றான்.

லாயிலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரிவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை) என்று வாயளவில் சொன்னால் போதாது. அதை விளங்கி ஏற்றுக் கொள்ள வேண்டும். தன்னைத் தவிர கடவுள் இல்லை என்பதை சந்தேகத்துக்கிடமின்றி அறிந்து கொள்ள வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.

எனவே முஸ்லிமான பெற்றோருக்குப் பிறந்தவர்கள் எல்லோரும் முஸ்லிம்கள் என்று கூற முடியாது. அதே போல் முஸ்லிமல்லாத பெற்றோருக்குப் பிறந்தவர்கள் எல்லோரும் அந்த மார்க்கத்தில் தான் இருக்க வேண்டும் என்பதும் கிடையாது.

இந்தியாவை எடுத்துக் கொண்டால் இங்குள்ள முஸ்லிம்கள் எல்லோருமே ஒரு காலத்தில் இந்துவாக இருந்தவர்கள் தான். இஸ்லாத்தின் கொள்கைகளால் கவரப்பட்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள் தான்.

எனவே முஸ்லிமல்லாத பெற்றோர்கள் தங்களது மார்க்கத்தைப் பிள்ளைகளுக்குப் போதித்தாலும், இறைவன் அவர்களுக்கு வழங்கியுள்ள பகுத்தறிவைப் பயன்படுத்தி சிந்தித்து, எந்த மார்க்கம் உண்மையானது என்பதை விளங்கி பின்பற்ற வேண்டும்.

ஒரு கடவுள் தான் இருக்க முடியும்; அந்த ஓரிறைக் கொள்கையைப் போதிக்கின்ற இஸ்லாம் தான் உண்மையான மார்க்கம் என்பதை முஸ்லிம்களும் மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லக் கடமைப்பட்டுள்ளனர். அவர்கள் அந்தப் பணியை முழுமையாகச் செய்யாததால் தான் இது போன்ற கேள்விகள் எழுகின்றன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மனிதர்கள் வெவ்வேறு தோற்றத்துடன் இருப்பது ஏன்?

கேள்வி:

ஒரு இந்து சகோதரரிடம் உரையாடும் போது 'மனித சமுதாயம் ஆதம்' ஹவ்வா' எனும் இருவர் வழியாகவே உருவாகியுள்ளது' என்று கூறினேன். அதற்கு அவர் அப்படியெனில் ஆப்பிரிக்கர்கள், வெள்ளையர்கள், சீனர்கள், ஆதிவாசிகள் வெவ்வேறு தோற்றத்துடன் இருக்கிறார்களே? என்றார். இதற்கு எப்படி விளக்கம் கொடுக்க வேண்டும்?

- எஸ். ஷாஹுல் ஹமீது, அய்யம்பேட்டை.

பதில்:

இந்த வாதத்தில் உள்ள அடிப்படைத் தவறை விளக்கினாலே போதும்.

ஒரு தாய்க்கும், ஒரு தந்தைக்கும் பிறந்தவர்கள் ஒரே தோற்றத்தில், ஒரே நிறத்தில் இருப்பார்கள் என்ற அடிப்படையே தவறாகும்.

இதற்குப் பெரிய ஆராய்ச்சி எதுவும் தேவையில்லை. உங்கள் குடும்பத்தில், உங்கள் தெருவில், உங்கள் ஊரில் உள்ளவர்களை ஆராய்ந்தாலே போதுமானதாகும்.

ஒரு தாய் தந்தையருக்குப் பிறந்த அண்ணன் தம்பிகளை முரண்பட்ட நிறத்திலும், தோற்றத்திலும் சர்வ சாதாரணமாக நாம் பார்க்கிறோம்.

அவர்களின் புறத்தோற்றம் மட்டுமின்றி பண்பாடு, பழக்க வழக்கம், குணாதிசயம் போன்றவையும் மாறுபட்டிருப்பதை நாம் காண்கிறோம்.

மருத்துவ சோதனைக்கு உட்படுத்தினால் இரண்டு சகோதரர்களின் இரத்தங்களும் கூட ஒரே வகையைச் சேர்ந்ததாக இருக்காது.

நேரடிப் பிள்ளைகள் மத்தியிலேயே இவ்வளவு வித்தியாசங்கள் இருக்கும் போது, பல தலைமுறைகள் கடக்கும் போது ஏன் வித்தியாசம் இருக்காது என்று கூறினால் ஏற்றுக் கொள்வார்கள்.

இந்த வேற்றுமைகளை விட முக்கியமான ஒரு ஒற்றுமையையும் நீங்கள் சுட்டிக் காட்டலாம்.

ஒரு மரத்தில் காய்க்கும் காய்கள் பல்வேறு அளவுகளிலும், வடிவங்களிலும், தோற்றத்திலும் இருந்தாலும் அவை ஒரே மரத்தில் உருவான ஒரு இனத்தைச் சேர்ந்த காய்கள் என்று கூறுகிறோம்.

அது போல் பகுத்தறிவு என்னும் அம்சத்தில் ஐரோப்பியர்களும், ஆப்ரிக்கர்களும் ஒன்றுபட்டுள்ளனர்.

இதை விட முக்கியமாக, இக்கொள்கையை உலகம் ஏற்பதால் உலகத்துக்குக் கிடைக்கும் நன்மைகளையும் அவர்களுக்குச் சுட்டிக் காட்ட வேண்டும்.

எல்லா மனிதர்களும் ஒரு தாய் தந்தைக்குப் பிறந்தவர்கள் என்பதை ஏற்றால், அனைத்து மனிதர்களும் சகோதரர்கள் என்பதும், பிறப்பால் எவரும் உயர முடியாது என்பதும் நிரூபணமாகும்.

குலம், சாதியின் பெயரால் மனிதர்கள் பிளவுபட்டிருப்பது இந்தக் கொள்கையைத் தழுவிய மறு வினாடியே ஒழிந்து போய் விடும்.

முஸ்லிம்கள் இதை நம்புவதால் தான் அவர்களிடம் தலித் முஸ்லிம், நாடார் முஸ்லிம் என்றெல்லாம் சாதி வேற்றுமை இல்லாமல் இருக்கிறது என்பதையும் சுட்டிக் காட்டலாம்.

(பீஜே எழுதிய அர்த்தமுள்ள் கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் எனும் நூலில் இருந்து)

இஸ்லாம் மார்க்கமா? மதமா?

கேள்வி:

நான் நேரான பாதையில் செல்ல விரும்புகிறேன். ஆகையால், இஸ்லாத்தின் வழி நடக்க எனக்குச் சில சந்தேகங்கள் உள்ளன. இந்து மதம், கிறித்தவ மதம், சீக்கிய மதம், பிராமண மதம் எனப் பல வகையான மதங்கள் உண்டு. ஆனால், இஸ்லாமிய மதம் என்று கூறாமல், இஸ்லாமிய மார்க்கம் என்று கூறுவது ஏன்?

- டி. பாலு, கோவை.

பதில்:

முஸ்லிம்கள் இஸ்லாத்தை மதம் என்று கூறாமல் மார்க்கம் என்று கூறி வருகின்றனர். மற்ற மதத்தவர்கள் தங்கள் மதங்களை மதங்கள் என்று தான் கூறிக் கொள்கின்றனர். மார்க்கம் எனக் கூறிக் கொள்வதில்லை.

மார்க்கம் என்றால் பாதை, வழி என்பது பொருள். மனிதன் உலகில் வாழும் போது எந்தப் பாதையில் சென்றால் வெற்றி பெறலாம்? அவன் வாழ்க்கையில் சந்திக்கின்ற எண்ணற்ற பிரச்சனைகளின் போது எந்த வழியில் செல்வது தீர்வாக அமையும்? என்பதற்கெல்லாம் விடை இருந்தால் அதை மார்க்கம் எனக் கூறலாம்.

மலஜலம் கழித்தல் முதல், மனைவியுடன் தாம்பத்தியம் கொள்வது வரை அனைத்து விஷயங்களுக்கும் இஸ்லாத்தில் வழிகாட்டல் உள்ளது. அரசியல், பொருளாதாரம், குற்றவியல் சட்டங்கள், சிவில் சட்டங்கள், விசாரணைச் சட்டங்கள், உள்ளிட்ட எல்லாப் பிரச்சினைகளுக்கும் இஸ்லாத்தில் வழிகாட்டுதல் உள்ளது.

உலகில் உள்ள ஏனைய மதங்கள் கடவுளை வழிபடும் முறைகளையும், புரோகிதர்கள் தொடர்புடைய சடங்குகளையும் மட்டுமே கூறுகின்றன. இதன் காரணமாகத் தான் இஸ்லாம் மார்க்கம் எனவும் ஏனையவை மதங்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றன.

மதம் என்பது வெறி என்ற பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது. (உம்: மதம் பிடித்த யானை) இதன் காரணமாகவும் முஸ்லிம்கள் இவ்வார்த்தையைத் தவிர்க்கின்றனர்.

(பீஜே எழுதிய அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் எனும் நூலில் இருந்து)

1400 ஆண்டுகளுக்கு முன்பு திருக்குர்ஆன் அருளப்பட்டதற்கான ஆதாரம் என்ன?

கேள்வி: திருக்குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றியது என்பதற்கான ஆதாரம் என்ன? என்று மாற்றுமத சகோதரர் கேட்கிறார்.

- ஆஸிப் இப்ராஹீம், புதுக்கோட்டை-1

பதில்: முஹம்மது நபியவர்கள் கற்காலத்தில் வாழ்ந்தவரல்லர். வரலாறுகள் எழுதப்படுகிற காலத்தில் வாழ்ந்தவர். முஹம்மது நபியவர்கள் வாழ்ந்த காலம், அவர்களது பிரச்சாரம், சாதனை யாவும் வரலாற்றில் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. முஸ்லிமல்லாதவர்களும் இவ்வரலாற்றைப் பதிவு செய்துள்ளனர்.

அந்த வரலாற்றின்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கி.பி. 571 ஆம் ஆண்டு பிறந்தார்கள். அவர்களின் நாற்பதாம் வயதில் (ஆங்கில வருடக் கணக்குப்படி 39 ஆம் வயதில்) தம்மை இறைத்தூதர் எனக் கூறினார்கள். அப்போது முதல் தமக்கு குர்ஆன் அருளப்பட்டதாகக் கூறினார்கள். எனவே நபிகள் நாயகத்தின் காலம் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டதிலிருந்து குர்ஆனுடைய காலத்தையும் அறிந்து கொள்ளலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பின் 20 ஆண்டுகளுக்குள் பிரதி எடுக்கப்பட்ட திருக்குர்ஆன் கையெழுத்துப் பிரதிகள் ரஷ்யாவின் தாஷ்கண்ட் நகரத்திலுள்ள அருங்காட்சியகத்திலும், துருக்கியின் இஸ்தான்பூல் நகரத்திலுள்ள அருங்காட்சியகத்திலும் இன்றைக்கும் காட்சிக்குக் கிடைக்கின்றன.

திருக்குர்ஆனை சில வருடங்களுக்கு முன்னால் யாரோ எழுதி நபிகள் நாயகத்துடன் சம்பந்தப்படுத்தி விட்டார்கள் என்று கூற முடியாது. 1400 வருடங்களுக்கு முந்தைய பிரதிகள் பாதுகாக்கப்பட்டிருப்பதை விட வேறு என்ன சான்று வேண்டும்?

(பீஜே எழுதிய அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் எனும் நூலில் இருந்து)

ஏன் தத்து எடுக்கக் கூடாது?

கேள்வி : ஒரு இந்து மத நண்பர் என்னிடம் இஸ்லாத்தில் தத்து எடுத்தல் கூடாது என்று உள்ளது பெரிய குறையாக உள்ளது. குழந்தையே இல்லாது தங்களுக்குக் குழந்தை வேண்டும் என்று விரும்புவோர் என்ன செய்வது? விபத்து, பெற்றோரின் நடத்தை சரியில்லாமல் பிரியும் குழந்தைகளுக்கு நாம் ஒரு வழிகாட்டியாக திகழலாம். இது கூடாது என்பதினால் இதை விட மோசமான டெஸ்ட் டியூப் பேபி' என்ற முறையைத் தேர்ந்தெடுகிறார்கள் என்று கேட்டதற்கு என்னால் பதில் சொல்ல இயலவில்லை. விளக்கம் தரவும்.

எம்.எஸ். முஹம்மது ஹபீபுல்லாஹ், சீர்காழி.

பதில் : குழந்தை இல்லாதவர்கள் மற்றவர்களின் குழந்தைகளை எடுத்து வளர்ப்பதை இஸ்லாம் தடை செய்யவில்லை. இவ்வாறு எடுத்து வளர்க்கப்படும் குழந்தைகள் பெற்றெடுத்த குழந்தைகளுக்கான சட்ட உரிமைகளைப் பெற மாட்டார்கள் என்று தான் இஸ்லாம் கூறுகிறது.

ஒருவர் குழந்தை இல்லை என்பதற்காக ஆண் குழந்தையை எடுத்து வளர்க்கிறார். பின்னர் அவருக்கு அல்லாஹ் ஒரு பெண் குழந்தையைக் கொடுக்கிறான். அந்தப் பெண் குழந்தை பருவமடைந்ததும் அவர் வளர்த்த ஆணுக்கு தனது மகளை மணமுடித்துக் கொடுக்கலாம். ஏனெனில் அந்த ஆண் இவரது மகனில்லை. எனவே இவரது மகளுக்கும் அவன் சகோதரனாக மாட்டான் என்று இஸ்லாம் கூறுகிறது.

இது போல் வளர்த்தவர் மரணித்து விட்டால் அவரது சொத்துக்களுக்கு பெற்ற மகன் வாரிசாவது போல் வளர்க்கப்பட்டவன் வாரிசாக முடியாது. ஏனெனில் இவன் அவரது மகன் இல்லை. உடன் பிறந்த சகோதரர்கள், சகோதரிகள் போன்ற பல உறவினர்கள் இருக்கும் போது யாரோ ஒருவனை வாரிசெனக் கூறுவது அந்த உறவினர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தும். உறவினர்களைப் பகைக்கும் நிலைமை ஏற்படும்.

வளர்க்கப்பட்டவனுக்கு ஏதேனும் கொடுக்க விரும்பினால் மூன்றில் ஒரு பகுதியை விட அதிகமாகாமல் மரண சாசனம் எழுதலாம்.

ஒருவனை நாம் எடுத்து வளர்க்கிறோம். நம் வீட்டில் நமது உடன் பிறந்த சகோதரிகள் உள்ளனர். இவர்களுக்கும் வளர்க்கப்பட்டவனுக்கும் எந்த விதமான உறவும் கிடையாது. எனவே அன்னிய ஆண்களுடன் நடந்து கொள்ள வேண்டிய வகையில் தான் அவனுடன் அவர்கள் நடந்து கொள்ள வேண்டும்.

இரத்தம் சம்பந்தம் இல்லாததால் தந்தையின் சகோதரிகள் என்று அவர்களை அவன் கருத மாட்டான். இதனால் விபரீதங்கள் ஏற்படலாம்.

வளர்க்கப்பட்டவனிடம் 'நீ என் மகன் தான்' என்று கூறி ஏமாற்றுவதையும் இஸ்லாம் தடுக்கிறது. ஒவ்வொருவரையும் அவரது தந்தையின் பெயரிலேயே அழைக்க வேண்டும்.

எந்த மனிதருக்குள்ளும் இரண்டு உள்ளங்களை அல்லாஹ் ஏற்படுத்தவில்லை. உங்களின் மனைவியரில் யாரைத் தாயுடன் ஒப்பிட்டீர்களோ அவர்களை உங்கள் தாயார்களாக அவன் ஆக்கவில்லை. உங்களால் வளர்க்கப்படும் பிள்ளைகளை உங்கள் பிள்ளைகளாக அல்லாஹ் ஆக்கவில்லை. இது உங்கள் வாய்களால் கூறும் வார்த்தை. அல்லாஹ் உண்மையே கூறுகிறான். அவனே நேர் வழி காட்டுகிறான். அவர்களை அவர்களின் தந்தையருடனே சேர்த்து அழையுங்கள்! அதுவே அல்லாஹ்விடம் நீதியானது. அவர்களின் தந்தையரை நீங்கள் அறியாவிட்டால் அவர்கள் உங்களின் கொள்கைச் சகோதரர்களும் உங்கள் நண்பர்களுமாவர். தவறுதலாக நீங்கள் கூறி விடுவதில் உங்கள் மீது குற்றம் இல்லை. மாறாக உங்கள் உள்ளங்களால் தீர்மானித்துக் கூறுவதே (குற்றமாகும்). அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

திருக்குர்ஆன் 33:4,5

'நீ இன்னாரின் மகன் தான்; எனக்குக் குழந்தையில்லாததால் உன்னை எடுத்து வளர்க்கிறேன்' என்று தான் அவனிடம் கூற வேண்டும். உலகத்துக்கும் இப்படித்தான் கூற வேண்டும். இன்னொருவருக்குப் பிறந்தவனை தனக்குப் பிறந்தவன் எனச் சொந்தம் கொண்டாடுவதை இஸ்லாம் தடுக்கிறது.

குழந்தைகளை எடுத்து வளர்ப்பதை இஸ்லாம் தடுக்கவில்லை.

(பீஜே எழுதிய அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் எனும் நூலில் இருந்து)

கருவளர்ச்சி காலம் பற்றி குர்ஆன் கூறுவது சரியா?

கேள்வி: மனித வளர்ச்சியில் கருவறையின் காலம் சராசரி பத்து மாதங்கள். குர்ஆனில் 2:233 வது வசனம் பால்குடியின் காலம் 2 வருடம் (அதாவது 24 மாதங்கள்) எனக் கூறுகிறது. இவை இரண்டும் சேர்ந்தால் மொத்த மாதங்கள் முப்பத்து நான்கு ஆகிறது. இப்படியிருக்க, அல்குர்ஆனின் 46:15 வது வசனம் கருவறை மற்றும் பால்குடியின் கால அளவு 30 மாதங்கள் எனக் கூறுகிறது. இரண்டும் முரண்படுகிறதே என்ற என்னுடைய மற்றும் என் தோழருடைய கேள்விக்கு விளக்கம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

- எம்.ஏ. பக்கீர் முஹம்மது, தென்காசி.

பதில்: 2:233 வது வசனத்தில் மட்டுமின்றி 31:14 வது வசனத்திலும் பால்குடி மறக்கடிக்கப்படும் காலம் இரண்டு வருடங்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

ஆனால், 46:15 வது வசனத்தில் பாலூட்டும் காலத்தையும், கர்ப்ப காலத்தையும் சேர்த்துக் குறிப்பிடும் போது மொத்தம் முப்பது மாதங்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

அதில், பாலூட்டும் காலங்கள் என்று இறைவன் கூறிய இரண்டு வருடங்களை (24 மாதங்களை) கழித்தால் கர்ப்ப காலம் ஆறு மாதம் என்று ஆகிறது. ஒரு குழந்தையின் கர்ப்ப காலம் ஆறு மாதம் என்று எந்தக் காலத்திலும் எவரும் கூறியதில்லை. ஏறத்தாழ பத்து மாதங்கள் என்று இன்றைய சமுதாயம் விளங்கி வைத்துள்ளது போலவே திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்து மக்களும் விளங்கி வைத்திருந்தனர்.

கர்ப்ப காலம் பத்து மாதம் என்று அனைத்து மனிதர்களும் விளங்கி வைத்திருக்கும் போது, 'கர்ப்ப காலம் ஆறு மாதம்' என்று குர்ஆன் கூறுகிறது என்றால் வேண்டுமென்றே தான் அவ்வாறு கூறுகிறது. இந்த இடத்தில் அவ்வாறு குறிப்பிடுவது தான் பொருத்தமானதாகும்.

அனைவரும் தெரிந்து வைத்துள்ள நிலைக்கு எதிராக இறைவன் கூறுகிறான் என்றால் இதற்கு ஆழமான பொருள் இருக்கும் என்று சிந்தித்து, கரு வளர்ச்சியை ஆராயும் போது இவ்வசனம் இறை வார்த்தை என்பதை தனக்குத் தானே நிரூபிக்கும் அதிசயத்தைக் காண்கிறோம்.

மனிதனுக்குத் தனியான வித்தியாசமான வடிவம் உள்ளது. மற்ற விலங்கினங்களுக்கு தனியான வடிவம் இருக்கிறது. மனிதன் கருவில் விந்துத் துளியாகச் செலுத்தப்படுகிறான். பின்னர் கருவறையின் சுவற்றில் ஒட்டிக் கொண்டு வளர்கிறான். அதன் பின்னர் சதைக் கட்டியாக ஆகின்றான். இந்தக் காலக்கட்டங்களில் மனிதன் தனக்கே உரிய வடிவத்தை எடுப்பதில்லை. தாயின் கருவறையில் இருக்கும் ஆடு எவ்வாறு ஒரு இறைச்சித் துண்டு போல் கிடக்குமோ அது போலவே மனிதனும் இருக்கிறான். கைகளோ, கால்களோ எதுவுமே தோன்றியிருக்காது.

கருவறையில் இந்த நிலையை அடைந்த இறைச்சித் துண்டைப் பார்த்து இது மனிதனுக்குரியது. இது இன்ன பிராணிக்குரியது என்று கூற முடியாது. ஆய்வும், சோதனைகளும் நடத்திப் பார்த்தாலும் அதில் மனிதனுக்குரிய அம்சம் ஏதும் இருக்காது.

இந்த நிலையைக் கடந்த பின் தான் மனிதனிடம் உள்ள செல்கள் உரிய இடங்களுக்குச் செல்கின்றன. அதன் பின்னர்தான் மனிதன் என்று சொல்லப்படுவதற்குரிய தன்மைகளுடனும் உறுப்புகளுடனும் அது வளரத் துவங்குகிறது.

மனிதனுக்கே உள்ள சிறப்புத் தகுதிகளுடனும், மனித உருவத்திலும் கருவில் வளரும் மாதங்கள் மொத்தம் ஆறு தான். அதற்கு முந்திய கால கட்டத்தில் மனிதன் என்று சொல்லப்படுவதற்குரிய எந்தத்  தன்மையும், அடையாளமும் இல்லாத இறைச்சித்துண்டு தான் கருவில் இருந்தது.

நீங்கள் சுட்டிக் காட்டிய வசனத்தில் கருவளர்ச்சி என்று கூறாமல் மனிதன் - இன்ஸான் - என்ற சொல்லை இறைவன் பயன்படுத்தி விட்டு 'இன்ஸானை (மனிதனை) அவள் சுமப்பது ஆறு மாதம்' என்று கூறுகிறான்.

பின்னர் விந்துத் துளியை கருவுற்ற சினை முட்டையாக்கினோம். பின்னர் கருவுற்ற சினை முட்டையை சதைத்துண்டாக ஆக்கினோம். சதைத்துண்டை எலும்பாக ஆக்கி எலும்புக்கு இறைச்சியையும் அணிவித்தோம். பின்னர் அதை வேறு படைப்பாக ஆக்கினோம். அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியசாலியாவான்.

திருக்குர்ஆன் 23:14

பின்னர் மற்றொரு படைப்பாக அதை நாம் ஆக்கினோம் என்பது எவ்வளவு அற்புதமான சொல்! இந்த நிலையை அடையும் வரை கருவில் எல்லாப் படைப்பும் ஒன்று தான். அதன் பின்னர் ஆடு ஆடாகவும், மாடு மாடாகவும், மனிதன் மனிதனாகவும் வேறுபடும் நிலை உருவாகிறது.

எனவே அதை மற்றொரு படைப்பு என்று இறைவன் கூறுகிறான். இதையே தான் மனிதனை தாய் ஆறு மாதம் சுமந்தாள் என்ற வசனமும் கூறுகிறது.

இந்த மாபெரும் உண்மை, படைத்த இறைவனுக்குச் சாதாரண விஷயம் என்பதால் தான் மக்கள் விளங்கி வைத்திருந்ததற்கு மாற்றமாக வேண்டுமென்றே மனிதனைத் தாய் சுமந்தது ஆறு மாதம் என்கிறான். கருவின் வளர்ச்சி காலம் எனக் கூறவில்லை. எனவே எந்த முரண்பாடும் இல்லை.

(பீஜே எழுதிய அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் எனும் நூலில் இருந்து)

More Articles …