Sidebar

17
Wed, Jun
சமீபத்திய செய்திகள்

ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன்

இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா?

உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. இஸ்லாத்தின் இந்த வளர்ச்சியால் கதிகலங்கிப் போன மேற்கத்திய உலகம் இஸ்லாத்தின் எந்தக் கொள்கையையும், கோட்பாட்டையும் குறை காண முடியவில்லை. அவர்கள் ஏற்றிப் போற்றும் எந்தச் சித்தாந்தத்தையும் விட இஸ்லாம் சிறந்து விளங்குவதால் அவர்களால் இஸ்லாத்தை விமர்சிக்க முடியவில்லை. இஸ்லாத்தை விமர்சித்து அதன் வளர்ச்சியைத் தடுத்திட இரண்டே இரண்டு விமர்சனங்களைத் தான் அவர்கள் செய்து வருகின்றனர்.

இஸ்லாம் தீவிரவாதிகளை உருவாக்குகிறது.

இஸ்லாம் பெண்களின் உரிமைகளைப் பறிக்கிறது.

இந்த இரண்டுமே பொய்யான விமர்சனங்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

இஸ்லாம் பெண்களின் உரிமைகளைப் பறிக்கிறது என்ற பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையிலும் ஆண்களை விட பெண்களே அதிகமாக இஸ்லாத்தை ஏற்று வருகின்றனர்.

அது போல் முஸ்லிம் தீவிரவாதம் என்ற பிரச்சாரத்துக்குப் பின் தான் உலகம் இஸ்லாத்தின் பால் தனது பார்வையைத் திருப்பியுள்ளது.

இன்று கூட பெண்களுக்கு வழங்க முடியாத உரிமைகளை இஸ்லாம் 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே வழங்கி விட்டது என்பதே உண்மை.

இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் கீழ்க்காணும் குற்றச்சாட்டுகளைத் தான் முன் வைக்கின்றனர்

ஆண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்து கொள்ள இஸ்லாம் அனுமதிக்கிறது.

மனைவியைப் பிடிக்காவிட்டால் சர்வ சாதாரணமாக விவகரத்துச் செய்ய இஸ்லாம் ஆண்களுக்கு உரிமை வழங்கியுள்ளது.

விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு ஜீவனாம்சம் கொடுப்பதையும் இஸ்லாம் மறுக்கிறது.

பெண்களை ஹிஜாப் எனும் ஆடையால் போர்த்தி அவர்களின் சதந்திரத்தைப் பறிக்கிறது.

வாரிசுரிமைச் சட்டத்தில் ஆன்களுக்கு இரு மடங்கும், பெண்களுக்கு ஒரு மடங்கும் எனப் பாரபட்சம் காட்டுகிறது.

இரண்டு பெண்களின் சாட்சி ஒரு ஆணுடைய சாட்சிக்குச் சமமானது என்று பாரபட்சம் காட்டுகிறது.

கணவன் இறந்து விட்டால் இத்தா என்ற பெயரில் குறிப்பிட்ட காலம் பெண்களைத் தனிமைப்படுத்தி வைக்கிறது.

பெண்கள் ஆட்சித் தலைமை வகிக்கக் கூடாது எனக் கூறி பெண்களின் அரசியல் அதிகாரத்தைப் பறிக்கிறது.

முஸ்லிம் பெண்கள் கல்வி கற்பதில்லை.

முஸ்லிம் பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதில்லை.

என்பன போன்ற குற்றச்சாட்டுக்கள் தான் பெண்கள் தொடர்பாக எடுத்து வைக்கப்படுகின்றன.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் அனைத்துக்கும் முழுமையாகவும், எந்த எதிர்க்கேள்வியும் கேட்க முடியாத வகையிலும் விளக்கம் அளிக்கும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது.

இது தவிர நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டும் மற்றவர்களை விட அதிகமான பெண்களை மணந்தது ஏன் என்ற கேள்வியும் பலரால் எழுப்பப்படுகிறது. இதற்கான விளக்கத்தை 'நபிகள் நாயகம் (ஸல்) பல திருமணங்கள் செய்தது ஏன்?' என்ற தலைப்பில் தனி நூலாக வெளியிட்டுள்ளோம்.

ஜிஸ்யா, முஸ்லிமல்லாதவர்களுக்கு எதிராகப் போர் செய்தல், கஅபாவை வணங்குதல், திசையை வணங்குதல், முஸ்லிம்களிடம் சகிப்புத் தன்மை இல்லை என்பன போன்ற குற்றச்சாட்டுக்கள் அனைத்துக்கும் விடையாக 'குற்றச்சாட்டுக்களும் பதில்களும்' என்ற தலைப்பில் தனி நூலை வெளியிட்டுள்ளோம்.

தத்துவ ரீதியாக இஸ்லாம் பற்றி முஸ்லிமல்லாதவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு விடையாக 'அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள்' எனும் நூலில் விளக்கம் அளித்துள்ளோம். இந்த நான்கு நூல்களையும் வாசிப்பவர்கள் இஸ்லாம் குறித்த எந்தக் குற்றச்சாட்டுக்கும் விளக்கம் பெறலாம்.

முஸ்லிம் அல்லாத மக்களுக்கு இஸ்லாத்தை அறிமுகம் செய்வோர் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்

முஸ்லிமல்லாதவர்களுக்கு அன்பளிப்புச் செய்ய ஏற்ற நூல்

பதிப்புரை

நல்லவை எங்கே கிடைத்தாலும் அவற்றைத் தேடிப் பெற்றுக் கொள்பவர்களாகவே பெரும்பாலான மனிதர்கள் உள்ளனர்.

குறிப்பாக ஆன்மீகத்தின் பால் மனிதர்களின் தேடுதல் மிகவும் அதிகமாகவே உள்ளது. இவ்வாறு தேடியலையும் மக்களுக்கு நல்ல ஆன்மீக வழி தென்படுமானால் தயக்கமில்லாமல் அவ்வழியில் செல்ல அவர்கள் தயாராகவே உள்ளனர்.

அமைதியைத் தேடியலையும் மக்களின் பார்வையில் இஸ்லாம் சிறந்த வாழ்க்கை நெறியாகத் தென்படுகிறது. அதன் கொள்கைகள் அறிவுப்பூர்வமாக உள்ளன. அதன் சட்ட திட்டங்கள் நடைமுறைப்படுத்திட எளிதாக உள்ளன.

இதன் காரணமாக அவர்களை இஸ்லாம் ஈர்த்தாலும் இஸ்லாத்தின் சில கொள்கைகளும், கோட்பாடுகளும் தவறானவை; காலத்துக்கு ஒவ்வாதவை என்று அவர்கள் எண்ணுகின்றனர்.

அவர்களுக்கு இருக்கும் சந்தேகங்களை உரிய விதத்தில் தெளிவுபடுத்தினால் அவர்களை இஸ்லாம் முழுமையாக ஈர்க்கும்.

முஸ்லிமல்லாத மக்களின் இந்தச் சந்தேகங்களை நீக்கும் வகையில் தமிழில் தகுதியான நூல் இல்லை என்ற குறையை நீக்கும் வகையில் இந்த நூலை வெளியிடுவதில் மனநிறைவு அடைகிறோம்.

இஸ்லாத்தில் பெண்கள் நிலை குறித்துத் தான் அவர்களுக்கு அதிகப்படியான சந்தேகங்கள் உள்ளன.

அந்தச் சந்தேகங்களை நீக்கும் வகையில் 'இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா?' என்ற இந்த நூல் உங்கள் கைகளில் தவழ்கிறது.

முஸ்லிமல்லாத மக்களின் சந்தேகங்களை நீக்க இந்த நூல் பயன்பட வல்ல இறைவனை இறைஞ்சுகிறோம்.

இவன்,

நபீலா பதிப்பகம்

முன்னுரை

இன்றைய உலகில் பல்வேறு மதங்கள் மலிந்து கிடப்பதை நாம் காண்கிறோம். எல்லா மதங்களும், மதவாதிகளும் தங்கள் மதமே சிறந்தது' என்று அறிவித்துக் கொள்கின்றனர். தங்கள் மதத்தைப் பிரச்சாரமும் செய்கின்றனர்.

எனினும் மற்ற மதங்களை விட இஸ்லாம் பல வகையில் சிறந்து விளங்குவதை சிந்தனையாளர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். இஸ்லாம் வெறும் வணக்க வழிபாடுகளை மட்டும் சொல்லித் தரும் மதமாக இல்லாமல் மனித வாழ்வின் எல்லாப் பிரச்சனைகளையும் கவனிக்கிறது!

அதில் தலையிடுகிறது!

தக்க தீர்வையும் சொல்கிறது!

அன்றிலிருந்து இன்று வரை மனிதக் கரங்களால் மாசு படுத்த முடியாத மகத்தான வேதத்தை இஸ்லாம் மட்டுமே வைத்திருக்கிறது!

என்றெல்லாம் இஸ்லாத்தைப் பற்றி நற்சான்று வழங்குபவர்கள் இஸ்லாத்தின் ஒரு சில சட்டங்களைப் பற்றி அதிருப்தி அடைகிறார்கள்.

இத்தகையவர்களின் ஐயங்களைத் தர்க்க ரீதியாகவும், அவர்களின் அறிவு ஏற்றுக் கொள்ளும் வகையிலும் நீக்குகின்ற கடமை முஸ்லிம்களுக்கு இருக்கிறது.

ஏனெனில் இஸ்லாம் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமான மார்க்கமன்று. முழு உலகுக்கும் அருளப்பட்ட மார்க்கமாகும்.

எனவே, இஸ்லாம் பெண்ணுரிமைக்கு எதிரானது எனக் கூறுவோர் எடுத்து வைக்கும் அனைத்து வாதங்களுக்கும் விடையளிக்கும் வகையில் இந்நூலைத் தயாரித்துள்ளேன்.

ஏனைய குற்றச் சாட்டுக்களுக்கான விளக்கங்கள் மற்ற இரு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளன.

பெண்கள் குறித்து இஸ்லாத்திற்கு எதிராக எடுத்து வைக்கும் அனைத்து வாதங்களுக்கும் இந்தப் பாகத்தை வாசிப்பவர்கள் விடை காணலாம்.

மூன்று பாகங்களையும் வாசிப்பவர்கள் இஸ்லாம் குறித்த எந்தக் குற்றச்சாட்டுக்கும் உரிய விளக்கத்தைப் பெறலாம்.

முஸ்லிமல்லாத மக்களின் சந்தேகங்கள் விலக வேண்டும் என்ற ஒரே நோக்கத்திலேயே இந்நூலை எழுதியுள்ளேன். அந்த நோக்கம் நிறைவேற வல்ல இறைவனை இறைஞ்சுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்,

P.ஜைனுல் ஆபிதீன்

திருக்குர்ஆனும், பெண்களும்.

பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் பெண்ணுரிமையைப் பேணிப்பாதுகாத்தது. பெண்களின் கண்ணியத்தை உயர்த்தியது.

அத்தகைய திருக்குர்ஆன் வசனங்கள் சிலவற்றைக் கீழே தந்துள்ளோம்.

பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. அவர்களை விட ஆண்களுக்கு ஓர் உயர்வு உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

திருக்குர்ஆன் 2:228

அவர்கள் உங்களுக்கு ஆடை. நீங்கள் அவர்களுக்கு ஆடை.

திருக்குர்ஆன் 2:187

மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான்.

திருக்குர்ஆன் 4:1

பொருள் திரட்டும் உரிமை

சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள்! ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. அல்லாஹ்விடம் அவனது அருளை வேண்டுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான்.

திருக்குர்ஆன் 4:32

கல்வி கற்றல் கற்பித்தல்

நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். தொழுகையை நிலைநாட்டுவார்கள். ஸகாத்தையும் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் அருள்புரிவான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

திருக்குர்ஆன் 9:71

சொத்துரிமை

குறைவாக இருந்தாலும், அதிகமாக இருந்தாலும் பெற்றோரும், உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் ஆண்களுக்கும் பங்கு உண்டு. பெற்றோரும் உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் பெண்களுக்கும் பங்கு உண்டு. இப்பங்கீடு கட்டாயக் கடமை.

திருக்குர்ஆன் 4:7

உங்கள் மனைவியருக்குக் குழந்தை இல்லாவிட்டால் அவர்கள் விட்டுச் சென்றதில் பாதி உங்களுக்கு உண்டு. அவர்களுக்குக் குழந்தை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றதில் கால் பாகம் உங்களுக்கு உண்டு. அவர்கள் செய்த மரண சாசனம், கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பிறகே (பாகம் பிரிக்க வேண்டும்). உங்களுக்குக் குழந்தை இல்லாவிட்டால் நீங்கள் விட்டுச் சென்றதில் கால் பாகம் உங்கள் மனைவியருக்கு உண்டு. உங்களுக்குக் குழந்தை இருந்தால் நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம் அவர்களுக்கு உண்டு. நீங்கள் செய்த மரண சாசனம், கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பின்பே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்). இறந்த ஆணோ, பெண்ணோ பிள்ளை இல்லாதவராக இருந்து அவர்களுக்கு ஒரு சகோதரனும், ஒரு சகோதரியும் இருந்தால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உள்ளது. அதை விட அதிகமாக இருந்தால் மூன்றில் ஒரு பங்கில் அவர்கள் அனைவரும் கூட்டாளிகள். செய்யப்பட்ட மரண சாசனம், மற்றும் கடனுக்குப் பிறகே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்.) (இவை அனைத்தும் யாருக்கும்) பாதிப்பு ஏற்படாத வகையில் (செய்யப்பட வேண்டும்.) இது அல்லாஹ்வின் கட்டளை. அல்லாஹ் அறிந்தவன்; சகிப்புத் தன்மை மிக்கவன்.

திருக்குர்ஆன் 4:12

இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஓர் ஆணுக்கு உண்டு என்று உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் அல்லாஹ் வலியுறுத்துகிறான். அனைவரும் பெண்களாகவும் (இரண்டு அல்லது) இரண்டுக்கு மேற்பட்டும் இருந்தால் (பெற்றோர்) விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பங்கு அவர்களுக்கு உண்டு. ஒரே ஒரு பெண் மட்டும் இருந்தால் அவளுக்கு (மொத்தச் சொத்தில்) பாதி உள்ளது. இறந்தவருக்குச் சந்ததி இருந்தால் அவர் விட்டுச் சென்றதில் பெற்றோர் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு. இறந்தவருக்குச் சந்ததி இல்லாவிட்டால் அவர் விட்டுச் சென்றதற்குப் பெற்றோர் இருவரும் வாரிசாவார்கள். அவரது தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் உண்டு. இறந்தவருக்குச் சகோதரர்கள் இருந்தால் அவரது தாய்க்கு ஆறில் ஒரு பாகம் உண்டு. (இவை யாவும்) அவர் செய்த மரண சாசனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னரே. உங்கள் பெற்றோர் மற்றும் பிள்ளைகளில் உங்களுக்கு அதிகமாகப் பயன் தருபவர் யார் என்பதை அறிய மாட்டீர்கள். (இது) அல்லாஹ் விதித்த கடமை. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.

திருக்குர்ஆன் 4:11

பிள்ளை இல்லாத ஒரு மனிதன் இறக்கும் போது அவனுக்குச் சகோதரி இருந்தால் அவன் விட்டுச் சென்றதில் பாதி அவளுக்கு உண்டு. அவளுக்குப் பிள்ளை இல்லாவிட்டால் (அவள் இறக்கும் போது) அவ(ளது சகோதர)ன் அவளுக்கு வாரிசாவான். இரண்டு சகோதரிகள் இருந்தால் அவன் விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு அவர்களுக்கு உண்டு. ஆண்களும், பெண்களுமாக உடன் பிறப்புக்கள் இருந்தால் இரண்டு பெண்களுக்குரிய பங்கு ஓர் ஆணுக்கு என்ற விகிதத்தில் உண்டு. நீங்கள் வழி தவறி விடாமல் இருக்க அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் அறிந்தவன்.

திருக்குர்ஆன் 4:176

மணமகனைத் தேர்வு செய்யும் உரிமை

நம்பிக்கை கொண்டோரே! பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை. அவர்களுக்கு நீங்கள் வழங்கியதில் எதையும் பிடுங்கிக் கொள்வதற்காக அவர்களைத் துன்புறுத்தாதீர்கள்! அவர்கள் வெளிப்படையான வெட்கக்கேடானதைச் செய்தால் தவிர. அவர்களுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத்திருப்பான்.

திருக்குர்ஆன் 4:19

திருமணக் கொடை (மஹர்)

பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுடனும், மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்!

திருக்குர்ஆன் 4:4

மறுமணம் செய்யும் உரிமை

பெண்களை விவாகரத்துச் செய்த பின் அவர்கள் தமது காலக் கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் (தமக்குப் பிடித்த) கணவர்களை விருப்பப் பட்டு நல்ல முறையில் மணந்து கொள்வதைத் தடுக்காதீர்கள்! உங்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறு அறிவுரை கூறப்படுகிறது. இதுவே உங்களுக்குத் தூய்மையானது; பரிசுத்தமானது. அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.

திருக்குர்ஆன் 2:232

உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் (மறுமணம் செய்யாமல்) அப்பெண்கள் காத்திருக்க வேண்டும். அந்தக் காலக்கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் தம் விஷயமாக நல்ல முறையில் முடிவு செய்வதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன்.

திருக்குர்ஆன் 2:234

விவாகரத்துக்குப் பின் பொருளாதாரப் பாதுகாப்பு

அவர்களைத் தீண்டாத நிலையிலோ, அவர்களுக்கென மஹர் தொகையை முடிவு செய்யாத நிலையிலோ விவாகரத்துச் செய்வது உங்களுக்குக் குற்றமில்லை. வசதி உள்ளவர் தமக்குத் தக்கவாறும் ஏழை தமக்குத் தக்கவாறும் சிறந்த முறையில் அவர்களுக்கு வசதிகள் அளியுங்கள்! இது நன்மை செய்வோர் மீது கடமை.

திருக்குர்ஆன் 2:236

விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு நல்ல முறையில் வசதிகள் அளிக்கப்பட வேண்டும். (இறைவனை) அஞ்சுவோருக்கு இது கடமை.

திருக்குர்ஆன் 2:241

உங்கள் வசதிக்கேற்ப அவர்களை நீங்கள் குடியிருக்கும் இடத்தில் குடியமர்த்துங்கள்! அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி அவர்களுக்குத் தீங்கு செய்யாதீர்கள்! அவர்கள் கர்ப்பிணிகளாக இருந்தால் அவர்கள் பிரசவிக்கும் வரை அவர்களுக்காகச் செலவிடுங்கள்! உங்களுக்காக அவர்கள் பாலூட்டினால் அவர்களுக்குரிய கூலிகளை அவர்களுக்கு வழங்கி விடுங்கள்! உங்களுக்கிடையே நல்ல முறையில் (இது பற்றி) முடிவு செய்து கொள்ளுங்கள்! ஒருவருக்கொருவர் (இதைச்) சிரமமாகக் கருதினால் அவருக்காக இன்னொருத்தி பாலூட்டட்டும். வசதியுள்ளவர் தனது வசதிக்கேற்ப செலவிடட்டும். யாருக்கு செல்வம் அளவாகக் கொடுக்கப்பட்டதோ அவர் தனக்கு அல்லாஹ் வழங்கியதிலிருந்து செலவிடட்டும். அல்லாஹ் எதைக் கொடுத்துள்ளானோ அதற்கு மேல் எவரையும் சிரமப்படுத்த மாட்டான். சிரமத்திற்குப் பின் வசதியை அல்லாஹ் ஏற்படுத்துவான்.

திருக்குர்ஆன் 65:6,7

பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாகரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும். அவர்களுக்கு நல்ல முறையில் உணவும் உடையும் வழங்குவது குழந்தையின் தந்தைக்குக் கடமை. சக்திக்கு உட்பட்டே தவிர எவரும் சிரமம் தரப்பட மாட்டார். பெற்றவள் தனது பிள்ளையின் காரணமாகவோ, தந்தை தனது பிள்ளையின் காரணமாகவோ சிரமம் கொடுக்கப்பட மாட்டார்கள். (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அவரது வாரிசுக்கு இது போன்ற கடமை உண்டு.

திருக்குர்ஆன் 2:233

பிரியும் உரிமை

பெண்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால் அவர்கள் தமக்குரிய காலக் கெடுவின் இறுதியை அடைவதற்குள் நல்ல முறையில் அவர்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் விட்டு விடுங்கள்! அவர்களைத் துன்புறுத்தி வரம்பு மீறுவதற்காகச் சேர்த்துக் கொள்ளாதீர்கள்! இவ்வாறு செய்பவர் தமக்கே அநீதி இழைத்துக் கொண்டார். அல்லாஹ்வின் வசனங்களைக் கேலிக்குரியதாக்கி விடாதீர்கள்! உங்களுக்கு அல்லாஹ் செய்துள்ள அருட்கொடையையும், வேதம் மற்றும் ஞானத்தை வழங்கியதையும் எண்ணிப் பாருங்கள்! இது குறித்து அவன் உங்களுக்கு அறிவுரை கூறுகிறான். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

திருக்குர்ஆன் 2:231

விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்பி இருந்தால் தமது கருவறைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை மறைப்பதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை. இருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அவர்களின் கணவர்கள் அவர்களைத் திரும்பச் சேர்த்துக் கொள்ளும் உரிமை படைத்தவர்கள். பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. அவர்களை விட ஆண்களுக்கு ஓர் உயர்வு உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

திருக்குர்ஆன் 2:228

தன் கணவனிடம் பிணக்கையோ, புறக்கணிப்பையோ ஒரு பெண் அஞ்சினால் அவ்விருவரும் தமக்கிடையே சமாதானம் செய்து கொள்வது (அல்லது பிரிந்து விடுவது) இருவர் மீதும் குற்றமில்லை. சமாதானமே சிறந்தது. மனிதர்களிடம் கஞ்சத்தனம் இயல்பாகவே அமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் (ஒருவருக்கொருவர்) உதவி செய்து (இறைவனை) அஞ்சிக் கொண்டால் அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவனாக இருக்கிறான்.

திருக்குர்ஆன் 4:128

இவ்வாறு விவாகரத்துச் செய்தல் இரண்டு தடவைகளே. (இதன் பிறகு) நல்ல முறையில் சேர்ந்து வாழலாம். அல்லது அழகான முறையில் விட்டு விடலாம். மனைவியருக்கு நீங்கள் கொடுத்தவற்றிலிருந்து எந்த ஒன்றையும் திரும்பப் பெறுவதற்கு அனுமதி இல்லை. அவ்விருவரும் (சேர்ந்து வாழும் போது) அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நாட்ட மாட்டார்கள் என்று அஞ்சினால் தவிர. அவ்விருவரும் (சேர்ந்து வாழும் போது) அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நாட்ட மாட்டார்கள் என்று நீங்கள் அஞ்சினால் அவள் எதையேனும் ஈடாகக் கொடுத்து பிரிந்து விடுவது இருவர் மீதும் குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகள். எனவே அவற்றை மீறாதீர்கள்! அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவோரே அநீதி இழைத்தவர்கள்.

திருக்குர்ஆன் 2:229

ஆன்மீக ஈடுபாட்டில் ஆணும் பெண்ணும் சமம்.

உங்களில் ஆணோ, பெண்ணோ எவரது செயலையும் நான் வீணாக்க மாட்டேன் என்று அவர்களது இறைவன் அவர்களுக்குப் பதிலளித்தான். உங்களில் சிலர் மற்றும் சிலரிடமிருந்து (தோன்றியவர்கள்.)

திருக்குர்ஆன் 3:195

ஆண்களிலோ, பெண்களிலோ நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்தோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 4:124

ஆணோ, பெண்ணோ நம்பிக்கை கொண்டு, நல்லறம் செய்தால் அவரை மகிழ்ச்சியான வாழ்க்கை வாழச் செய்வோம். அவர்கள் செய்து கொண்டிருந்த நல்லவற்றின் காரணமாக அவர்களின் கூலியை அவர்களுக்கு வழங்குவோம்.

திருக்குர்ஆன் 16:97

யாரேனும் ஒரு தீமையைச் செய்தால் அது போன்றதைத் தவிர அவர் கூலி கொடுக்கப்பட மாட்டார். ஆண்களிலோ, பெண்களிலோ நம்பிக்கை கொண்டவராக நல்லறம் செய்வோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். அதில் கணக்கின்றி வழங்கப்படுவார்கள்.

திருக்குர்ஆன் 40:40

சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள்! ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. அல்லாஹ்விடம் அவனது அருளை வேண்டுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான்.

திருக்குர்ஆன் 4:32

நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் சொர்க்கச் சோலைகளை அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். நிலையான சொர்க்கச் சோலைகளில் தூய்மையான வசிப்பிடங்களும் உள்ளன. அல்லாஹ்வின் பொருத்தம் மிகப் பெரியது. இதுவே மகத்தான வெற்றி.

திருக்குர்ஆன் 9:72

நம்பிக்கை கொண்ட ஆண்கள், மற்றும் பெண்களின் ஒளி அவர்களுக்கு முன்னேயும் வலப்புறமும் விரைவதை (முஹம்மதே!) நீர் காணும் நாள்! இன்றைய தினம் சொர்க்கச் சோலைகளே உங்களுக்குரிய நற்செய்தி. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பீர்கள். இதுவே மகத்தான வெற்றி.

திருக்குர்ஆன் 57:12

முஸ்லிமான ஆண்களும், பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், கட்டுப்பட்டு நடக்கும் ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண்களும், பெண்களும், பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும், பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் ஆகிய அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான்.

திருக்குர்ஆன் 33:35

பாதுகாப்பு

ஒழுக்கமுள்ள பெண்கள் மீது பழி சுமத்தி, பின்னர் நான்கு சாட்சிகளைக் கொண்டு வராதவர்களை எண்பது கசையடி அடியுங்கள்! அவர்களின் சாட்சியத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்! அவர்களே குற்றம் புரிபவர்கள்.

திருக்குர்ஆன் 24:4

நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் அவர்கள் செய்யாததைக் கூறி துன்புறுத்துவோர் அவதூறையும், தெளிவான பாவத்தையும் சுமந்து விட்டனர்.

திருக்குர்ஆன் 33:58

நம்பிக்கை கொண்ட வெகுளிகளான ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவோர் இவ்வுலகிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டனர். அவர்களுக்குக் கடும் வேதனை உண்டு.

திருக்குர்ஆன் 24:23

பெண்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால் அவர்கள் தமக்குரிய காலக் கெடுவின் இறுதியை அடைவதற்குள் நல்ல முறையில் அவர்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் விட்டு விடுங்கள்! அவர்களைத் துன்புறுத்தி வரம்பு மீறுவதற்காகச் சேர்த்துக் கொள்ளாதீர்கள்! இவ்வாறு செய்பவர் தமக்கே அநீதி இழைத்துக் கொண்டார். அல்லாஹ்வின் வசனங்களைக் கேலிக்குரியதாக்கி விடாதீர்கள்! உங்களுக்கு அல்லாஹ் செய்துள்ள அருட்கொடையையும், வேதம் மற்றும் ஞானத்தை வழங்கியதையும் எண்ணிப் பாருங்கள்! இது குறித்து அவன் உங்களுக்கு அறிவுரை கூறுகிறான். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

திருக்குர்ஆன் 2:231

நபியே! (முஹம்மதே!) பெண்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால் அவர்கள் இத்தாவைக் கடைப்பிடிப்பதற்கேற்ப விவாகரத்துச் செய்யுங்கள்! இத்தாவைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்! உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சுங்கள்! பகிரங்கமான வெட்கக்கேடான காரியத்தை அப்பெண்கள் செய்தாலே தவிர அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றாதீர்கள்! அவர்களும் வெளியேற வேண்டாம். இவை அல்லாஹ்வின் வரம்புகள். அல்லாஹ்வின் வரம்புகளை மீறுபவர் தமக்கே தீங்கு இழைத்துக் கொண்டார். இதன் பிறகு அல்லாஹ் ஒரு கட்டளை பிறப்பிக்கக் கூடும் என்பதை நீர் அறிய மாட்டீர்.

திருக்குர்ஆன் 65:1

மனைவியரிடையே நீதியாக நடந்து கொள்ள நீங்கள் ஆசைப்பட்டாலும் உங்களால் இயலாது. எனவே முழுமையாக (ஒரு பக்கமாக) சாய்ந்து, (இன்னொருத்தியை) அந்தரத்தில் தொங்க விடப்பட்டவளைப் போல் விட்டு விடாதீர்கள்! நீங்கள் நல்லிணக்கம் பேணி (இறைவனை) அஞ்சினால் அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

திருக்குர்ஆன் 4:129

அவர்கள் தமக்குரிய தவணையை அடையும் போது அவர்களை நல்ல முறையில் தடுத்து வைத்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் அவர்களைப் பிரிந்து விடுங்கள்! உங்களில் நேர்மையான இருவரை சாட்சிகளாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்காக சாட்சியத்தை நிலை நாட்டுங்கள்! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறே அறிவுரை கூறப்படுகிறது. அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவன் ஒரு போக்கிடத்தை ஏற்படுத்துவான்.

திருக்குர்ஆன் 65:2

தங்களைத் தவிர வேறு சாட்சிகள் இல்லாத நிலையில் தமது மனைவியர் மீது பழி சுமத்துவோர், தாங்கள் உண்மையாளர்கள் என்று அல்லாஹ்வின் மீது நான்கு தடவை (சத்தியம் செய்து) சாட்சியமளிக்க வேண்டும். தான் பொய்யனாக இருந்தால் தன் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படட்டும் என்று ஐந்தாவதாக (கூற வேண்டும்) அவனே பொய்யன் என்று அல்லாஹ் வின் மீது நான்கு தடவை (சத்தியம் செய்து) அப்பெண் சாட்சியமளிப்பது தண்டனை யிலிருந்து அவளைக் காக்கும் அவன் உண்மையாளனாக இருந்தால் தன் மீது அல்லாஹ்வின் கோபம் ஏற்படட்டும் என்று ஐந்தாவதாக (கூறுவாள்).

திருக்குர்ஆன் 24:6, 7, 8, 9

நம்பிக்கை கொண்டோரே! பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை. அவர்களுக்கு நீங்கள் வழங்கியதில் எதையும் பிடுங்கிக் கொள்வதற்காக அவர்களைத் துன்புறுத்தாதீர்கள்! அவர்கள் வெளிப்படையான வெட்கக்கேடானதைச் செய்தால் தவிர. அவர்களுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத்திருப்பான்.

திருக்குர்ஆன் 4:19

பண்பாடு

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

திருக்குர்ஆன் 24:30

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.

திருக்குர்ஆன் 24:31

நபியே! உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப் படாமல் இருக்கவும் இது ஏற்றது. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

திருக்குர்ஆன் 33:59

கெட்ட பெண்கள், கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள், கெட்ட பெண்களுக்கும் (உரியோர்). நல்ல பெண்கள், நல்ல ஆண்களுக்கும் நல்ல ஆண்கள், நல்ல பெண்களுக்கும் (தகுதியானோர்). இவர்கள் கூறுவதை விட்டும் அவர்கள் சம்பந்தமில்லாதவர்கள். இவர்களுக்கு மன்னிப்பும், மரியாதையான உணவும் உண்டு.

திருக்குர்ஆன் 24:26

திருமணத்தை நினைத்துப் பார்க்காத முதிய வயதுப் பெண்கள் அலங்காரம் செய்து கொள்ளாது, தமது மேலாடைகளைக் களைந்திருப்பதில் குற்றமில்லை. அவர்கள் பேணிக் கொள்வது அவர்களுக்குச் சிறந்தது. அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.

திருக்குர்ஆன் 24:60

நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்.

திருக்குர்ஆன் 33:32

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் வீடுகள் அல்லாத வேறு வீடுகளில் அவர்களின் அனுமதி பெறாமலும் அவ்வீட்டாருக்கு ஸலாம் கூறாமலும் நுழையாதீர்கள்! இதுவே உங்களுக்குச் சிறந்தது. இதனால் பண்படுவீர்கள்.

திருக்குர்ஆன் 24:27

இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா?

எல்லா விஷயத்திலும் ஆணும் பெண்ணும் சமமா?

இஸ்லாம் மார்க்கத்தில் பெரும்பாலான சட்டங்கள் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவாகவே உள்ளன. ஆயினும் சில சட்டங்களில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக சட்டங்கள் உள்ளன.

ஆண்களும், பெண்களும் சமமானவர்களாக இருக்கும் போது சட்டங்களில் பாரபட்சம் ஏன் என்று பெண்களின் உரிமையைப் பறிக்கிறது எனக் கூறுவோர் கேள்வி எழுப்புகின்றனர்.

முதலில் இந்தத் தத்துவம் அறிவுக்கு ஏற்புடையது தானா? என்பதை ஆராய்வோம்.'

ஆணுக்குப் பெண் சரிநிகர் சமம்' என்ற சித்தாந்தத்தை இஸ்லாம் ஒப்புக் கொள்ளவில்லை. இந்த வாதம் கேட்க இனிமையாக இருந்தாலும் அறிவுக்குப் பொருந்தாததால் இதனை இஸ்லாம் அடியோடு நிராகரிக்கின்றது.

ஆண் வேறு! பெண் வேறு! இரு பாலரின் உடற்கூறுகளும், அவர்களின் இயல்புகளும், குண நலன்களும் வேறு வேறு!

இப்படி வேறுபட்டிருப்பதால் தான் ஆண், ஆணாகவும் பெண், பெண்ணாகவும் இருக்க முடிகின்றது.

எந்தெந்த அம்சங்களில் ஆணும், பெண்ணும் உண்மையிலேயே சம நிலையில் இருக்கின்றார்களோ அந்த அம்சங்களில் அவ்விருவரையும் இஸ்லாம் சமமாகவே கருதுகிறது. அந்த அம்சங்களில் ஒரே விதமான சட்டங்களையே இருவருக்கும் இஸ்லாம் விதிக்கின்றது.

எந்தெந்த அம்சங்களில் ஆணும், பெண்ணும் சமமாக இல்லையோ, இருக்க முடியாதோ அந்த அம்சங்களில் இருவரையும் இஸ்லாம் சமமாகப் பாவிப்பதில்லை.

பெண்களிடம் இல்லாத சிறப்புத் தகுதி ஆண்களுக்கு மட்டும் இருந்தால் அந்த வகையில் ஆண்கள் உயர்ந்து விடுகிறார்கள். ஆண்களிடம் இல்லாத சிறப்புத் தகுதி பெண்களிடம் இருந்தால் அந்த வகையில் பெண்கள் சிறந்து விடுகிறார்கள். இப்படித் தான் இஸ்லாம் கருதுகிறது.

ஆண்களின் உடற்கூறுகளைக் கவனித்து அவர்களுக்குச் சில சலுகைகளையும், கடமைகளையும் ஏற்படுத்திய இஸ்லாம், பெண்களின் உடற்கூறுகளைக் கவனித்து அவர்களுக்கு வேறு விதமான கடமைகளையும், சலுகைகளையும் வழங்குகின்றது.

இரு பாலரும் எல்லா வகையிலும் சமமாக இல்லை என்பது சராசரி மனிதனுக்கும் பளிச்சென்று தெரிகின்றது. எனவே இரு பாலரும் முழுக்க முழுக்கச் சமமானவர்கள் என்று கூறுவது தவறாகும். போலித் தனமான இந்த வாதத்தை இஸ்லாம் அங்கீகரிக்க மறுக்கின்றது.

இதை ஒரு உதாரணத்தின் மூலம் எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.

ஒரு பெண்ணுக்கு 15 வயதில் ஒரு புதல்வனும், ஒரு வயதிற்குட்பட்ட ஒரு புதல்வனும் இருப்பதாக வைத்துக் கொள்வோம். இரு புதல்வர்களும் அவளது பிள்ளைகள் தாம். இரு பிள்ளைகளையும் அவள் தான் கருவறையில் சுமந்தாள். அவளது பிள்ளைகள் என்ற முறையில் இருவருமே அவளுக்குச் சமமானவர்கள் தாம்.

அதே நேரத்தில் மூத்த புதல்வனுக்கு அந்தப் பெண் கடினமான உணவுகளை வழங்குகிறாள். அவன் விரும்பும் நல்ல உணவுகளை எல்லாம் கொடுக்க மறுப்பதில்லை. ஒரு வயதுக்கு உட்பட்ட மகனுக்கும் அதே உணவை வழங்க மாட்டாள். அப்படி வழங்கினால் அவள் தாயாக இருக்கத் தகுதியற்றவள் ஆகிறாள். எளிதில் ஜீரணமாகும் உணவை மட்டுமே அவனுக்கு வழங்குகிறாள். மூத்தவனுக்கு வழங்கிய அதே உணவை இளையவனுக்கு வழங்காததால் அவள் பாரபட்சமாக நடந்து விட்டாள் என்று எவரும் கூற மாட்டார்கள்.

இந்தச் சமயத்தில் இளையவனை விட மூத்தவனுக்கு அதிகச் சலுகை காட்டி விட்டதாகவும் எவரும் கூற மாட்டார்கள்.

இன்னொரு கோணத்தில் இதைப் பார்ப்போம். ஒரு வயதுக்குட்பட்ட பையனுக்கும், பதினைந்து வயதுப் பையனுக்கும் ஒரே நேரத்தில் பசிக்கிறது. சிறியவனின் பசியைத் தீர்ப்பதற்கே அந்தத் தாய் முதலிடம் தருவாள். அதன் பின்பே மூத்தவனைக் கவனிப்பாள்.

இந்தச் சமயத்தில் மூத்தவனை விட இளையவனுக்கு அதிகச் சலுகை காட்டி விட்டதாக எவரும் கூற மாட்டார்கள்.

இரண்டு புதல்வர்களின் ஜீரண சக்தியிலும், பசியைத் தாங்கும் சக்தியிலும் வித்தியாசம் இருப்பதால் அந்தத் தாய் இருவரையும் வித்தியாசமாக நடத்துவதை நமது அறிவு ஏற்றுக் கொள்கிறது.

இரண்டு புதல்வர்களுக்கும் உடல் அமைப்பில் உள்ள வித்தியாசத்தை விட ஆணுக்கும், பெண்ணுக்கும் அதிக வித்தியாசங்கள் உள்ளன. ஜீரண சக்தியில் உள்ள வித்தியாசம், நாளடைவில் மறைந்து விடும் தன்மை வாய்ந்தது. ஆண், பெண் உடல் அமைப்பில் உள்ள வித்தியாசங்கள் நிரந்தரமானவை; காலப் போக்கில் மாறாதவை.

எனவே, நிரந்தரமான வித்தியாசங்களின் அடிப்படையில் சில விஷயங்களில் ஆணுக்கும், பெண்ணுக்கும் தனித் தனியான சட்டங்கள் வகுக்கப்பட்டிருப்பது பாரபட்சமாகாது.

பெண்ணாக இருக்கும் தாய், ஆணாக இருக்கும் தந்தை ஆகிய இருவரில் தாய்க்குத் தான் இஸ்லாம் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.

'நான் அதிகம் கடமைப்பட்டிருப்பது யாருக்கு?' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு தோழர் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'தாயாருக்கு' என்றார்கள். 'அடுத்ததாக யாருக்கு?' என்று அவர் கேட்டார். அப்போதும் 'தாயாருக்கு' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். 'அடுத்ததாக யாருக்கு?' என்று அவர் கேட்ட போதும் அதே பதிலையே கூறினார்கள். 'அடுத்தது யார்?' என்று அவர் மீண்டும் கேட்ட போது 'தந்தைக்கு' என்றார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 5971

தாயாருக்கு அடுத்த இடத்தில் கூட தந்தை இல்லை என்ற அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண்களின் சிறப்பை உயர்த்திக் கூறுகிறார்கள்.

எல்லா வகையிலும் ஆண்கள் தான் சிறந்தவர்கள் என்பது இஸ்லாத்தின் நிலையாக இருந்திருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியிருக்க மாட்டார்கள்.

ஆண்களை உயர்த்தும் இடத்தில் தக்க காரணம் கொண்டே இஸ்லாம் அவர்களை உயர்த்துகிறது. பெண்களை உயர்த்தும் இடத்தில் தக்க காரணம் கொண்டே அவர்களை உயர்த்துகிறது.

எல்லா வகையிலும் ஆண்கள் உயர்ந்தவர்களுமல்லர்.

எல்லா வகையிலும் பெண்கள் தாழ்ந்தவர்களுமல்லர்.

எல்லா வகையிலும் இருவரும் சமமானவர்களும் அல்லர்.

காரண காரியங்களின் அடிப்படையில் ஒருவரை விட மற்றவர் உயர்ந்தவராக இருக்கிறார் என்பது தான் இஸ்லாத்தின் நிலைப்பாடு. இது தான் அறிவுப்பூர்வமான நிலைப்பாடு என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்.

இஸ்லாத்தில் பெண்கள் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் எனக் கூறுவோரின் முதலாவது குற்றச் சாட்டைக் காண்போம்.

1 பலதார மணம்

ஆண்கள் நான்கு மனைவியர் வரை திருமணம் செய்யலாம் என்று இஸ்லாத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதை முஸ்லிமல்லாதார் அதிகமாக விமர்சிக்கின்றனர். பெண்களிடம் இஸ்லாம் பாரபட்சமாக நடந்து கொள்கிறது என்று கூறுவோருக்கு இது தான் முக்கியமான ஆதாரமாக அமைந்துள்ளது.

இஸ்லாம் மட்டுமே பலதார மணத்தை ஆதரிக்கிறது; மற்ற மதங்கள் ஆதரிக்கவில்லை என்ற கருத்து பரவலாக இருக்கிறது.

இக்கருத்து பிரச்சாரமும் செய்யப்படுகிறது. எனவே பலதார மணத்தை இஸ்லாம் ஏன் அனுமதித்தது என்பதை ஆராய்வதற்கு முன் இந்தக் குற்றச்சாட்டை ஆராய வேண்டியது அவசியமாகும்.

பலதார மணத்தை இஸ்லாம் மட்டும் ஆதரிக்கவில்லை.

நபிகள் நாயகத்துக்கு முன்பே உலகின் பல பாகங்களிலும் பலதார மணம் நடந்தே வந்துள்ளது. அது பெருமைக்குரியதாகவும் கருதப்பட்டு வந்தது. இதற்கு உலக வரலாற்றில் அனேக சான்றுகள் உள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்த முஸ்லிமல்லாத அரபியர்கள் கணக்கு வழக்கின்றிப் பல பெண்களைச் சர்வ சாதாரணமாக மணந்து வந்திருக்கின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்னால் உலக மாந்தர் அனைவரும் ஏக பத்தினி விரதத்தை மேற்கொண்டிருந்ததைப் போன்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்து தான் முதன் முதலில் பலதார மணத்தை அனுமதித்தது போன்றும் தவறாகச் சித்தரிக்கின்றனர்.

ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் இஸ்லாத்தை ஏற்காத அரபியர் பல பெண்களை மணந்து வாழ்ந்திருக்கிறார்கள். அதற்கென்று விதி முறைகளோ, வரம்புகளோ அவர்களிடம் இருந்ததில்லை.

அரபுலகில் மட்டுமின்றி உலகின் பல பாகங்களிலும் பலதார மணம் இருந்திருக்கின்றது. பல மதங்களும் இதனை அங்கீகரித்திருந்தன.

வள்ளி, தெய்வானை எனும் இரண்டு மனைவியருடன் வாழ்ந்த முருகன் நமது நாட்டில் கடவுளாகக் கருதப்பட்டு இன்றளவும் வணங்கப்பட்டு வருவதைக் காண்கிறோம்.

ஏக பத்தினி விரதம் கடைப்பிடித்ததாகக் கூறப்படும் இராமனின் தந்தை தசரதனுக்கு அறுபது ஆயிரம் மனைவியர் இருந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.

இந்துக்கள் கடவுளாக மதிக்கும் கிருஷ்ணருக்கு பாமா, ருக்மணி எனும் இரு மனைவியர் இருந்ததாகவும் புராணங்களிலிருந்து அறிய முடிகின்றது. அவர் நமது இந்துக்களால் கடவுளாகக் கருதப்பட்டு இன்றளவும் வணங்கப்பட்டு வருகிறார்.

எத்தனையோ மன்னர்களும், மற்றவர்களும் இந்த மண்ணில் பல மனைவியரை மணந்ததாக வரலாறுகள் கூறுகின்றன.

அது போல் கிறித்தவர்களும், யூதர்களும் பெரிதும் போற்றும் தாவீது ராஜா, ஆப்ரகாம், யாக்கோபு மற்றும் ஏராளமான தீர்க்கதரிசிகள் பல மனைவியருடன் வாழ்ந்ததாக பைபிளிலும், யூத வேதங்களிலும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக யூத கிறித்தவ சமுதாயத்தினர் பலதாரமணம் செய்த அவர்களை வெறுக்கவில்லை.

பலதார மணத்தை இஸ்லாம் தான் முதன் முதலில் உலகுக்கு அறிமுகம் செய்தது போல் பிரச்சாரம் செய்யப்படுவது அடிப்படையில்லாதது என்பதை இதன் மூலம் அறியலாம்.

பலதார மணத்தை இஸ்லாம் ஏன் அனுமதிக்கின்றது? அனுமதிக்கக் கூடாது என்போரின் வாதங்கள் எந்த அளவு நியாயமானவை என்பதை இனி ஆராய்வோம்.

பலதார மணத்தைத் தடுப்பது விபச்சாரத்தை வளர்க்கும்

ஆண்கள் பலதார மணம் செய்வதால் முதல் மனைவி பாதிக்கப்படுகிறாள். எனவே இதைத் தடுக்க வேண்டும் என்பது தான் இந்தப் பிரச்சினையில் எடுத்து வைக்கப்படும் முக்கியமான வாதம்.

முதல் மனைவி பாதிக்கப்படுகிறாள் என்பது தான் இந்தக் கோரிக்கைக்குக் காரணம் என்றால் பலதார மணத்திற்கு மட்டும் அவர்கள் தடை கோரக் கூடாது. மாறாக மனைவி அல்லாத பிற பெண்களை வைப்பாட்டிகளாக வைத்துக் கொள்வதற்கும் அவ்வப்போது பல பெண்களுடன் விபச்சாரம் செய்வதற்கும் தடை விதிக்குமாறு கோர வேண்டும்.

ஆனால் நமது நாட்டிலும், உலகின் பெரும்பாலான நாடுகளிலும் வைப்பாட்டிகள் வைத்துக் கொள்ளவோ, விபச்சாரம் செய்யவோ தடை இல்லை. தங்கு தடையின்றி ஆண்கள் இதைச் செய்து வருகின்றனர். இதற்கு எதிராக பெண்ணுரிமை பேசுவோர் கூட குரல் கொடுப்பதில்லை.

இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்வதை விட இது பெரிய அநியாயமாகும். ஏனெனில் பல பெண்களுடன் உறவு வைத்து அதனால் ஏற்படும் நோயை மனைவிக்கும் அவன் பரப்பும் வாய்ப்பு இதில் உள்ளது.

முதல் மனைவி பாதிக்கப்படுவது தான் பலதார மணத்தைத் தடை செய்ய வேண்டுமென வலியுறுத்திடக் காரணம் என்றால் விபச்சாரத்திற்கும், வைப்பாட்டிகள் வைத்துக் கொள்வதற்கும் எதிராக பெண்களின் இயக்கங்களோ, பெண்ணுரிமை பேசும் ஆண்களோ ஏன் வலிமையாகக் குரல் கொடுக்கவில்லை?

நமது நாட்டுச் சட்டத்தையே எடுத்துக் கொள்வோம்!

நமது நாட்டில் முஸ்லிம்கள் ஒரு மனைவி இருக்கும் போது இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்யலாம்.

முஸ்லிமல்லாதவர்கள் ஒரு மனைவி இருக்கும் போது இன்னொரு பெண்ணைச் சின்ன வீடாக வைத்துக் கொள்ளலாம்.

இது தான் நமது நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டமாகும். முஸ்லிம்கள் இன்னொரு பெண்ணை மணந்து கொள்வது தடுக்கப்பட வேண்டும் எனக் கூக்குரல் போடுவோர் முஸ்லிமல்லாத சமுதாயத்தினர் வைப்பாட்டி வைத்துக் கொள்வதைத் தடுக்க சட்டம் போட வேண்டும் என்று இது வரை கேட்டார்களா?

விபச்சாரத்துக்கு எதிராகக் குரல் கொடுக்காமல் இருப்பதைக் கூட மன்னித்து விடலாம். ஆனால் நமது நாட்டில் உள்ள பெண்ணுரிமை இயக்கங்கள் அனைத்துமே விபச்சாரிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கின்றன. அவர்களைப் பாலியல் தொழிலாளிகளாக அங்கீகரிக்க வேண்டும் எனவும் குரல் எழுப்புகின்றனர்.

விபச்சாரிகளுக்கு ஆதரவாக நடத்தப்படும் மாநாடுகளிலும், கருத்தரங்குகளிலும் பெண்ணுரிமை இயக்கத்தினரும், முற்போக்கு சிந்தனையாளர்களும் பங்கெடுத்து வருகின்றனர்.

இதன் மூலம் அவர்கள் எதை ஆதரிக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

விபச்சாரிகளை அங்கீகரிக்க வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கை என்றால் அந்த விபச்சாரிகளிடம் செல்லும் ஆண்களையும் ஆதரிக்கிறார்கள். அதாவது மனைவி இருக்கும் போது அவளுக்குத் துரோகம் செய்யும் கணவர்களுக்கு ஆதரவாக நிற்கிறார்கள் என்பதைத் தவிர இவர்களது நடவடிக்கைகளுக்கு வேறு என்ன பொருள்?

கட்டிய மனைவி பாதிக்கப்படுகிறாள் என்ற அக்கரையில் பலதாரமணத்தை இவர்கள் எதிர்ப்பது உண்மை என்றால் கட்டிய மனைவிக்கு துரோகம் செய்யக் காரணமாக உள்ள விபச்சாரிகளைக் கடுமையாக வெறுக்க வேண்டும். மனைவியுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்தும் ஆண்களைத் தவறான பாதைக்கு இழுத்துச் செல்லக் காரணமான விபச்சாரிகளுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்குமாறு கோர வேண்டும்.

அவ்வாறு கோரக் கடமைப்பட்டவர்கள் விபச்சாரிகளுக்கு ஆதரவாக நிற்கிறார்கள்.

ஆண்கள் பல பெண்களை நாடக் கூடியவர்களாக உள்ளனர் என்பதையும், அதைத் தடுக்க முடியாது என்பதையும் அவர்களின் உள்ளுணர்வு உணர்த்துவது தான் அவர்களது இந்த நிலைமைக்குக் காரணம்.

பெண்ணுரிமை பேசுவோரும், முற்போக்குவாதிகளும் மனைவி அல்லாத இன்னொரு பெண்ணுடன் ஆண்கள் உறவு வைப்பதை ஆதரிக்கவே செய்கிறார்கள்.

இன்னொரு பெண்ணுடன் நீ உறவை வைப்பதாக இருந்தால் அவளைச் சட்டப்பூர்வமாக மணந்து கொள் என்று இஸ்லாம் கூறுகிறது.

மணந்து கொள்ளாமலேயே எத்தனை பெண்களுடன் வேண்டுமானாலும் உறவு வைத்துக் கொள் என்று இவர்கள் கூறுகிறார்கள்.

இவ்விரு நிலைகளில் எது சிறந்தது?

இன்னொரு பெண்ணுடன் வாழ்க்கை நடத்தும் போது அவளைச் சட்டப்பூர்வமான மனைவி என்று அறிவித்தால் அந்தப் பெண்ணின் உரிமை காக்கப்படுகிறது. வைப்பாட்டிகளுக்கோ எந்த விதமான உரிமையும் கிடையாது.

வைப்பாட்டியின் மூலம் ஒருவனுக்குப் பிறந்த குழந்தைக்கு மகன் என்ற உரிமையும் கிடையாது.

மனைவி இருக்கும் போது இன்னொரு பெண்ணை அனுபவிப்பதில் இவர்களுக்கு எந்த மறுப்பும் இல்லை. அவளை மணந்து கொள்வதில் மட்டும் தான் இவர்களுக்கு மறுப்பு இருக்கிறது என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

ஆண்கள் பல பெண்களை நாடுவது அடியோடு ஒழிக்கப்பட முடியாத போது அதைக் குறைப்பதற்கு உரிய வழி என்ன என்பதைச் சிந்திக்க வேண்டும்.

ஒரு பெண்ணிடம் இன்பம் அனுபவித்து விட்டு அதற்காக எதிர்காலத்தில் எந்தப் பொறுப்பையும் ஆண்கள் சுமக்கத் தேவையில்லை எனும் போது அதிகமான பெண்களை ஆண்கள் நாடிச் செல்வார்கள்.

ஒரு பெண்ணிடம் இன்பம் அனுபவிப்பதாக இருந்தால் அவளுக்குச் சட்டப்படி மனைவி என்ற உரிமையை அளிக்க வேண்டும். அவள் பெற்றெடுக்கும் பிள்ளைகளுக்குச் சட்டப்படி பிள்ளைகள் என்ற உரிமையை அளிக்க வேண்டும். முதல் மனைவிக்கு உள்ள உரிமைக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் இரண்டாம் மனைவிக்கும் வழங்க வேண்டும். எல்லா வகையிலும் இருவரையும் சமமாக நடத்த வேண்டும் என்றெல்லாம் கட்டுப்பாடு விதிக்கும் போது மனைவி அல்லாத பெண்களை நாடுவோர் குறைவார்கள். தவிர்க்கவே இயலாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் மட்டுமே இன்னொரு திருமணம் செய்ய முயல்வார்கள். எனவே பலதார மணத்திற்கான அனுமதி தான் முதல் மனைவிக்கும் இரண்டாம் மனைவிக்கும் உண்மையில் பாதுகாப்பானது.

நமது நாட்டில் உள்ள சட்டப்படி எந்த ஆணும் எந்தப் பெண்ணுடன் வேண்டுமானாலும் விபச்சாரம் செய்யலாம். 'அந்தப் பெண் மைனராக (18 வயதுக்குட்பட்டவராக) இருக்கக் கூடாது; பலாத்காரம் செய்யப்பட்டிருக்கக் கூடாது' என்பது மட்டுமே நிபந்தனை.

மேலும் விபச்சாரத்தைத் தொழிலாக நடத்துவது தான் நமது நாட்டில் குற்றமே தவிர விபச்சாரம் குற்றமில்லை. இதன் காரணமாகத் தான் விலைமாதர்களிடம் ஒரு ஆண் செல்லும் போது விலைமாது மட்டும் தண்டிக்கப்படுகிறாள். ஆண் விடுவிக்கப்படுகிறான்.

இது போல் திருமணம் செய்யாமல் ஒரு பெண்ணுடன் ஒருவன் சேர்ந்து எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் வாழலாம். அவள் இன்னொருவரின் மனைவியாக இருக்கக் கூடாது என்பதைத் தவிர இதற்கு வேறு நிபந்தனை ஏதுமில்லை.

மனைவி பாதிக்கப்படுகிறாள் என்று காரணம் கூறி பலதாரமணத்தை எதிர்ப்பவர்கள் அதை விட அதிகப் பாதிப்பு ஏற்படுத்தும் விபச்சாரத்தை எதிர்ப்பதில்லை.

மேலும் மும்பை, கல்கத்தா போன்ற பெரு நகரங்களில் விபச்சாரம் செய்யும் பெண்களுக்கு சட்டப்பபூர்வமான தொழில் அனுமதியும் வழங்கப்பட்டு விபச்சாரம் சட்டப்பூர்வமாக ஆக்கப்பட்டுள்ளது.

மனைவிடன் வாழும் ஒருவன் அவளுக்குத் தெரியாமல் விபச்சார விடுதிக்குச் சென்றால் அது மனைவியைப் பாதிக்காதா? நிச்சயம் பாதிக்கவே செய்யும். ஆனாலும் அதை ஒழிக்க வேண்டும் எந்தப் பெண்ணுரிமைப் போராளிகளும் குரல் கொடுக்காததது ஏன்?

பலதாரமணத் தடை நடைமுறைச் சாத்தியமற்றது

எந்த ஒரு சட்டத்தை இயற்றுவதாக இருந்தாலும் அச்சட்டம் நடைமுறைக்குச் சாத்தியமானது தானா என்பதைத் தான் முதலில் கவனிக்க வேண்டும்.

நமது நாட்டில் முஸ்லிம்களுக்குப் பலதார மணத்திற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. முஸ்லிமல்லாதவர்களுக்கு அது அறவே தடுக்கப்பட்டுள்ளது. முஸ்லிமல்லாதவர்கள் ஒரு மனைவி இருக்கும் போது இன்னொரு பெண்ணை மணப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.

முஸ்லிமல்லாத மக்கள் பலதாரமணம் செய்யக் கூடாது என்று போடப்பட்ட தடைச் சட்டத்தின் நிலை என்ன?

யாருக்கு பலதார மணத்திற்கு இந்த நாட்டில் அனுமதியுள்ளதோ அவர்களை விட யாருக்கு பலதார மணம் தடை செய்யப்பட்டுள்ளதோ அவர்கள் தான் அதிக அளவில் பலதாரமணம் புரிந்துள்ளனர்.

இஸ்லாத்தில் பெண்களின் நிலை பற்றி ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட குழு (COMMITTEE OF THE STATUS OF WOMAN IN ISLAM) 1975 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ள புள்ளி விபரக் கணக்கின்படி  '1951 ஆம் ஆண்டுக்கும் 1961 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட 10 ஆண்டுகளில்

இந்துக்கள் 5.06 சதவிகிதமும்

முஸ்லிம்கள் 4.31 சதவிகிதமும்

பழங்குடியினர் 17.98 சதவிகிதமும்

பலதாரமணம் புரிந்துள்ளனர்.

அதாவது 1951 முதல் 1960 வரை நூறு முஸ்லிம்களில் நான்கு பேர் பலதாரமணம் செய்துள்ளனர். ஆனால் நூறு இந்துக்களில் ஐந்து பேர் பலதாரமணம் புரிந்துள்ளனர். நூறு பழங்குடியினரில் 18 பேர் பலதாரமணம் புரிந்துள்ளனர் என்று இந்தப் புள்ளி விபரம் கூறுகிறது.

சமத்துவத்தை நோக்கி (Towards Equality) என்ற தலைப்பில் 1974 -ல் வெளியிட்ட அறிக்கையிலும் இது  வெளியிடப்பட்டது.

பழங்குடியினரும் இந்துக்கள் தான். அவர்களையும் இந்துக்களுடன் சேர்த்துக் கணக்கிட்டால் பலதார மணம் புரிந்த இந்துக்கள் பலதார மணம் புரிந்த முஸ்லிம்களை விட மிக அதிக சதவிகிதமாக இருப்பார்கள்.

பலதார மணத்திற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தும் இந்துக்களே அதிக அளவில் பலதாரமணம் செய்துள்ளனர் என்பதிலிருந்து பலதாரமணத் தடைச் சட்டம் நடைமுறைச் சாத்தியமற்றது என்பதை விளங்கலாம்.

இதனால் தான் ராம் விலாஸ் பஸ்வான் உள்ளிட்ட பலர் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களுடன் வாழ்க்கை நடத்திக் கொண்டே நாடாளுமன்ற உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் முடிகின்றது.

தி.மு.க தலைவர் கருணாநிதி அவர்கள் முஸ்லிமாக இல்லாதிருந்தும் இரண்டு பெண்களுடன் குடும்பம் நடத்துகிறார். இது சட்டப்படி குற்றம் என்றால் பல தடவை அவர் தமிழகத்தின் முதல்வராக ஆனது எப்படி?

இரண்டு பெண்களுடன் குடும்பம் நடத்திய கா.காளிமுத்து அவர்கள் பல தடவை அமைச்சராகவும், சபாநாயகராகவும் ஆனது எப்படி?

அறந்தாங்கி திருநாவுக்கரசு அவர்கள் பல தடவை மாநில அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் ஆனது எப்படி?

இரண்டாம் திருமணம் செய்து நீதிமன்றங்களால் தண்டிக்கப்படாதவர்கள்

இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் இரண்டாம் திருமணம் செய்த போது முதல் மனைவிகள் பல சந்தர்ப்பங்களில் நீதிமன்றங்களின் கதவைத் தட்டியுள்ளனர். நீதி மன்றங்கள் இரண்டாம் திருமணம் செய்து கொண்டவரைத் தண்டிக்க மறுத்து விட்டதையும் நாம் காண முடிகின்றது.

மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த, இந்து மதத்தைச் சேர்ந்த பாவ்ராவ் சங்கர் லோகாண்டே முதல் மனைவி இருக்க இரண்டாம் திருமணம் செய்தார். முதல் மனைவி இதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார். கீழ்நிலை நீதிமன்றங்களும், உயர் நீதிமன்றமும் அவரைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்தன. ஆனால் பாவ்ராவ் சங்கர் லோகாண்டே உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த போது இரண்டாம் திருமணத்தின் போது சில சடங்குகள் விடுபட்டதால் இரண்டாவதாக நடந்தது திருமணமே இல்லை; எனவே பாவ்ராவ் சங்கர் இரண்டாம் திருமணம் செய்யவில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

(பாவ்ராவ் சங்கர் லோகாண்டே எதிர் மராட்டிய அரசு AIR 1965 sc 1566)

சுரேஷ் சந்திர கோஷ் என்பவர் முதல் மனைவி இருக்கும் போது இரண்டாம் திருமணம் செய்தார். அவரது மனைவி பிரியா பாலா கோஷ் அவருக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கிலும் உச்சநீதிமன்றம் இரண்டாம் திருமணம் செய்த சுரேஷ் சந்திர கோஷைத் தண்டிக்கவில்லை. இரண்டாம் திருமணத்தின் போது சில சடங்குகள் நடந்தது நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி சுரேஷைத் தண்டிக்க மறுத்து விட்டது.

(பிரியா பாலா கோஷ் எதிர் சுரேஷ் சந்திர கோஷ் AIR 1971 sc 1153)

ஆந்திராவைச் சேர்ந்த எல்.வெங்கடரெட்டி என்பவர் முதல் மனைவி இருக்கும் போது இரண்டாவது திருமணம் செய்தார். முதல் மனைவி லிங்காரி ஒப்புல்லம்மா கணவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கிலும் உச்சநீதிமன்றம் வெங்கடரெட்டியைத் தண்டிக்கவில்லை. இரண்டாம் திருமணத்தின் போது சில சடங்குகள் செய்யப்படாததே காரணம்.

(லிங்காரி ஒப்புல்லம்மா எதிர் எல்.வெங்கடரெட்டி மற்றும் சிலர் AIR 1979 sc 848)

காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பங்காரி என்பவர் முதல் மனைவி இருக்கும் போது இரண்டாம் திருமணம் செய்தார். இரண்டாம் திருமணத்தின் போது சில சடங்குகள் விடுபட்டதால் அது திருமணமே அல்ல. இரண்டாம் மனைவி அவரது வைப்பாட்டி தான். வைப்பாட்டி வைத்துக் கொள்வதைத் தண்டிக்க சட்டத்தில் இடமில்லை என்று காஷ்மீர் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

(பங்காரி எதிர் ஜம்மு கஷ்மீர் மாநில அரசு AIR 1965 jk105)

இப்படி ஏராளமான வழக்குகளில் நாட்டின் உச்சநீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் தீர்ப்பளித்துள்ளன.

மனைவி இருக்கும் போது ஒரு ஆண் இன்னும் பல பெண்களுடன் வாழ்க்கை நடத்துவது குற்றமில்லை; திருமணம் செய்வது தான் குற்றம் என்பது தான் சட்டத்தின் பார்வையாகும்.

முதல் மனைவி பாதிக்கப்படுகிறாள் என்ற காரணத்துக்காக பலதார மணத்தைத் தடுக்க வேண்டும் என்ற வாதம் பொய் என்பது இதன் மூலம் நிருபணமாகின்றது. திருமணம் என்ற முறையில் அல்லாமல் எத்தனை பெண்களுடனும் குடும்பம் நடத்தலாம் என்பது தான் நமது நாட்டில் உள்ள சட்டமாகும்.

இன்னொரு பெண்ணிடம் குடும்பம் நடத்தி விட்டு அவளுக்கு சட்டப்படியான மனைவி என்ற தகுதியைக் கொடுக்காமல் அநீத் இழைப்பதை விட அவளுக்கும் மனைவி எனும் தகுதியை வழங்குவது சிறந்தது என்பதைச் சிந்திக்க வேண்டும்.

பலதார மணத்தைத் தடுப்பதால் ஏற்படும் தீய விளைவுகள்

ஆண்களில் அதிகமானோர் ஒரு மனைவியுடனேயே காலம் முழுவதும் வாழ்பவர்களாக உள்ளனர் என்றாலும் கனிசமான ஆண்கள் சட்டத்தின் ஓட்டைகளுக்குள் புகுந்து இரண்டாம் திருமணம், மூன்றாம் திருமணம் செய்கின்றனர்.

மற்றும் சிலர் வைப்பாட்டி வைத்துக் கொண்டு முதல் மனைவிக்குத் துரோகம் செய்பவர்களாக உள்ளனர்.

வேறு சிலர் அவ்வப்போது விபச்சாரிகளிடமும், அறிமுகமான பெண்களிடமும் தகாத உறவு வைப்பவர்களாக உள்ளனர்.

இவர்களைத் தடுத்து நிறுத்த எந்தச் சட்டமும் இல்லை. இத்தகையோரால் ஏற்படும் மோசமான பாதிப்புகளையும், தீய விளைவுகளையும் அறிந்தால் தவறான வழியில் செல்லும் நிலையில் உள்ளவர்களுக்குப் பலதார மணத்தை அனுமதிப்பதை யாரும் குறை கூற மாட்டார்கள்.

மலேசிய இந்து மக்கள் போர்க்கொடி

இதனால் ஏற்படும் தீய விளைவுகளை மலேசிய இந்து இயக்கங்களின் தீர்மானத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

முஸ்லிம்களைத் தவிர மற்றவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணக்கக் கூடாது என்ற சட்டம் நமது நாட்டைப் போலவே மலேசியாவிலும் உள்ளது.

அங்கே முஸ்லிமல்லாதவர்கள் தமக்கும் பலதார அனுமதி வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

திருமணம் ஆகாமல் பல பெண்கள் கர்ப்பமடைவதாகவும், அவர்கள் கைவிடப்படுவதாகவும், தகப்பனில்லாத குழந்தைகள் தாறுமாறாக அதிகரித்து விட்டதாகவும் கருதும் மலேசிய நாட்டு இந்துக்கள் இதைத் தவிர்க்க ஒரே வழி பலதாரமணம் மட்டுமே என்ற உண்மையை உணர ஆரம்பித்துள்ளனர்.

மனைவிக்குச் செய்யும் துரோகம் என்ற அடிப்படையில் பலதார மணத்துக்குத் தடை போடப்பட்டாலும் எதைத் துரோகம் என்று கருதுகிறார்களோ அதைத் தடுக்க முடியவில்லை.

மலேசியாவில் உள்ள பி.பி.பி கட்சி தனது இளைஞர் அணி மாநாட்டை நடத்தியது. அந்த மாநாட்டில் பி.பி.பியின் இளைஞர் அணித் தலைவர் முருகையா பின்வருமாறு பிரகடனம் செய்தார்.

'சமுதாயத்தில் திருமணம் புரிந்த பல ஆடவர்கள் மற்ற பெண்களுடன் வைத்துக் கொள்ளும் உறவின் மூலம் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் எதிர்காலமும் கேள்விக்குரியதாக இருக்கிறது. இந்தப் பெண்களின் பிரச்சினைகள், சிக்கல்களைக் கருதி முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் இரு தார அனுமதியை அரசாங்கம் வழங்க வேண்டும்' என்பது தான் அவரது முழக்கம்.

இவரது கருத்துக்கு மலேசியாவில் உள்ள சில பெண்கள் அமைப்புகள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.

ஆனாலும் இந்த எதிர்ப்புகளால் முருகையா தனது கருத்தை மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை.

'நான் சொன்ன கருத்தும் ஒரு வகையில் பெண்ணுரிமை சம்மந்தப்பட்டது தான். எனது கருத்தை இந்த மகளிர் பிரிவுகள் தவறாக அர்த்தம் கொண்டு விட்டன. எனது கருத்துக்கு இவர்கள் தெரிவிக்கும் ஆட்சேபமானது இரண்டாவது மனைவிகள் பலரின் உரிமைகளை இவர்களே மறுதலிக்கிறார்கள் என்றே அர்த்தமாகிறது. பி.பி.பி இளைஞர் உச்சமன்றத்தில் எல்லோரும் கூடிப் பேசியே இந்தக் கருத்தை நான் வலியுறுத்தினேன். இது எனது சொந்தக் கருத்து மட்டுமல்ல. இரண்டு பெண்டாட்டிகளை வைத்துக் கொள்ளுங்கள் என்று யாரையும் நாங்கள் ஊக்குவிக்கவில்லை. இரு தார அனுமதியை அரசாங்கம் தந்தால் அது முஸ்லிமல்லாதாரிடையே நிலவும் பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்கு முடிவு கட்டும் என்பதே எனது வாதம். தன்னால் பாதிக்கப்பட்ட இரண்டாவது பெண்ணுக்கும் ஒரு ஆண் பொறுப்புள்ளவனாக இருக்கச் செய்யும்' என்று தனது கருத்தை முருகையா ஆணித்தரமாகக் குறிப்பிடுகிறார்.

பினாங்கு மாநில பி.பி.பி மகளிர் அணித் தலைவர் எலிசபெத் ஸ்டெனிஸ் லாவ்ஸ் என்பவர் முக்கியமானவர்.

மலாய்க்காரர் அல்லாதவர்களுக்கு இரு தார அனுமதியை வழங்கலாம். என் கணவரே இன்னொரு மனைவியை மணக்க நானே அனுமதிப்பேன். இருவரையும் வைத்துக் காப்பாற்றுவதாக உறுதியளித்தால் நானே என் கணவருக்கு அனுமதியளிப்பேன்.

இது ஒன்றும் பாவம் அல்ல. என் கருத்தைப் பல பெண்கள் ஆமோதிப்பார்கள்.

ஒரு கணவர் இரண்டாவது பெண்ணுடன் வைக்கும் தொடர்பின் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளை மையமாக வைத்தே பி.பி.பி இளைஞரணி தனது கருத்தை வலியுறுத்தியது. அதனை நானும் ஆதரிக்கிறேன்.

இந்தக் குழந்தைகள் தகப்பன் இல்லாக் குழந்தைகள் என்று அநியாயமாக முத்திரை குத்தப்படுகின்றனர்.

இரு தார விஷயத்தில் பெண்கள் கனவுலகில் ஒளிந்து கொண்டிருக்கும் போக்கைக் கைவிட்டு வெளியே வர வேண்டும். நடைமுறை உலகுக்கு அவர்கள் திரும்ப வேண்டும் என்று இவர் தனது ஆதரவை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளனர்.

தகப்பனில்லாத இளைஞர்கள் அதிகளவில் உருவாகியுள்ளதால் இளைஞர்களிடையே இந்தக் கருத்து வேகமாகப் பரவி வருகிறது.

மலேசியாவில் முஸ்லிமல்லாத சமுதாயத்தின் நிலையைப் பற்றி தேசியப் பதிவு இலாகா பின்வருமாறு அறிக்கை வெளியிட்டுள்ளது.

நாட்டில் திருமணம் ஆகாமல் பெண்கள், குழந்தைகள் பெறும் சம்பவங்கள் கவலைக்குரிய கட்டத்தை அடைந்துள்ளது. இவர்களில் அதிகமானோர் கல்லூரிப் பெண்கள். 17 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இதில் அதிகமாக இருக்கிறார்கள் என்று தேசிய பதிவு இலாகா இயக்குனர் டத்தோ அஜிகான் கூறுகிறார்.

ஆதாரம்: 5-1-2002 தேதியிட்ட மலேசியா நண்பன் நாளிதழ்.

இரண்டாம் தாரமாகவாவது மணந்து கொண்டு சட்டப்பூர்வ உரிமை தந்தால் மட்டுமே முஸ்லிம் பெண்கள் தங்களை ஆண்களிடம் ஒப்படைக்கிறார்கள்.

முஸ்லிமல்லாத பெண்களோ ஆசை வார்த்தை காட்டப்பட்டு ஏமாற்றப்படுகின்றனர். குழந்தை பெற்ற பின் நிராதரவாக விடப்படுகின்றனர்.

இவர்களின் எண்ணிக்கை எல்லை கடந்து விட்ட நிலையில் தான் மலேசிய இந்து இளைஞர்கள் மத்தியில் முருகையாவின் கருத்துக்கு அமோக வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

இந்த விபரங்களிலிருந்து பலதாரமணம் என்பது அனைத்து சமுதாயத்திலும் தவிர்க்க முடியாததாகவே உள்ளதை அறிந்து கொள்ளலாம்.

பலதார மணத்தை அனுமதிப்பதற்கான காரணங்கள்

பலதார மணத்தை எந்தச் சட்டத்தினாலும் தடுக்க முடியவில்லை. அப்படியே தடுத்தாலும் சின்ன வீட்டையும், விபச்சாரத்தையும் தடுக்க முடியவில்லை என்பதால் மட்டும் இஸ்லாம் பலதார மணத்தை அனுமதிக்கவில்லை. மாறாக பலதார மணத்தை இஸ்லாம் அனுமதித்திருப்பதற்கு இன்னும் பல காரணங்களும், நியாயங்களும் உள்ளன

1. பெண்களின் பிறப்பு விகிதம் குறைவு:-

இல்லற வாழ்வு மூலம் பெறப்படும் உடல் சுகம் மனிதனுக்கு மிகவும் அவசியமான ஒன்று. ஆண், பெண் இரு பாலருக்குமே இது இன்றியமையாத தேவையாகும்.

மற்ற சுகங்களைக் கூடத் தியாகம் செய்து விடுபவன் இந்த உடல் சுகத்தை எளிதில் தியாகம் செய்வதில்லை.

இந்த சுகத்தைத் தரும் ஒரு பெண்ணுக்காக ஒரு ஆண் எதுவும் செய்யத் தயாராகி விடுகிறான். உற்றார் உறவினரையும், பெற்றோரையும் கூட உதறி எறிந்து விடத் துணிந்து விடுகிறான். இந்த சுகத்தைத் தருகின்ற ஆணுக்காக ஒரு பெண் எந்தத் தியாகத்தையும் செய்கிறாள்.

சிலர் இந்த சுகத்தை அடைவதற்காக எத்தகைய இழிசெயலையும் செய்யத் துணிந்து விடுவதையும் நாம் காண்கிறோம். இதை அடைவதற்கு யாராவது குறுக்கே நின்றால் அவரைக் கொலை செய்தாவது அடைய முயற்சிக்கின்றனர்.

உணர்வுகள் பொங்கி எழும் பருவத்தில் இந்த உடல் சுகம் கிடைக்கவில்லையானால் அத்தகையோர் மன நோய்க்கு ஆளாகி விடுவதை இரு பாலரிடமும் நாம் காண முடிகின்றது. மன நோய் நிபுணர்களும் இதை உறுதி செய்கின்றனர். மனித வாழ்வில் மிகவும் அவசியமான இந்தச் சுகம் எந்த மனிதனுக்கும் மறுக்கப்படக் கூடாது என்பதில் எவருக்குமே மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

இந்தச் சுகம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டுமானால் உலகில் ஆண்களும், பெண்களும் சம அளவில் பிறக்க வேண்டும். அப்போது தான் இரு பாலரும் இந்தச் சுகத்தைப் பெற இயலும்.

ஆனால் இந்த நிலை உலகில் இருக்கின்றதா? என்றால் பல நூற்றாண்டுகளாகவே இல்லை என்று தான் கூற வேண்டும். ஆண்களை விடப் பெண்களே அதிக அளவில் பிறக்கின்றார்கள். விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில நாடுகள் வேண்டுமானால் சில கால கட்டங்களில் இதிலிருந்து விலக்குப் பெறலாம். ஆனால் உலகின் பெரும்பாலான பகுதிகளில் பெண்களின் பிறப்பு விகிதமே அதிகம் என்பதை எவரும் மறுக்க முடியாது.

உலகில் ஆண்களின் எண்ணிக்கைக்கும், பெண்களின் எண்ணிக்கைக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லையே! சிறிய அளவில் தானே பெண்கள் அதிகமாகவுள்ளனர் என்று நினைக்கலாம்.

ஆனால் திருமணத்துக்குரிய தகுதி பெற்றவர்கள் என்ற அடிப்படையையும் நாம் சேர்த்துக் கணக்கிட வேண்டும்.

ஆண்கள் 25 வயதுக்கு மேல் தான் திருமணம் செய்யும் நிலையை அடைகிறார்கள். பெண்களோ பதினைந்து வயதிலேயே திருமணம் செய்விக்கப்படுகிறார்கள். (சட்டப்படி 18 வயது என்பதெல்லாம் ஏட்டில் உள்ளதே தவிர நாட்டில் இல்லை).

அதாவது திருமணம் செய்யும் தகுதி பெற்றவர்கள் என்று எடுத்துக் கொண்டால் பெண்களை விட ஆண்கள் பத்து வருடங்கள் பின் தங்கியுள்ளனர்.

ஒரு ஊரில் ஒரு நாளில் 25 ஆண் குழந்தைகள், 25 பெண் குழந்தைகள் பிறக்கின்றன' என வைத்துக் கொள்வோம். பதினைந்து வருடங்கள் நிறைவடையும் போது 25 பெண்களும் திருமணத்துக்குத் தயாராக நிற்பார்கள். 25 ஆண் குழந்தைகளில் ஒருவனும் திருமணத்துக்குத் தயாராகியிருக்க மாட்டான்.

உடற்கூறு ரீதியாக சீக்கிரமே பெண்கள் முதிர்ச்சியடைவதால் திருமணம் செய்யும் வயதுடைய ஆண்கள், திருமணம் செய்யும் வயதுடைய பெண்கள் என்று எடுத்துக் கொண்டால் ஆண்களை விடப் பெண்கள் மிக அதிகமாகவே உள்ளனர் என்பதை அறியலாம்.

பெண்கள் அதிகமாகவும், ஆண்கள் குறைவாகவும் உள்ள சூழ்நிலையில் கனிசமான பெண்களுக்கு இந்தச் சுகம் கிடைப்பதற்கான வாய்ப்பே இல்லாமல் போய் விடுகிறது.

நொண்டி, முடம், கூன், குருடு போன்ற உடல் ஊனமுற்ற ஆண்களுக்கும், மது, சூது, விபச்சாரம் போன்ற தீமைகளில் ஈடுபட்டு உள்ளம் ஊனமுற்ற ஆண்களுக்கும் சர்வ சாதாரணமாக மனைவியர் கிடைத்து விடுகின்றனர். அழகும், நல்லொழுக்கமும் உள்ள மங்கையர் பலர் இந்தச் சுகத்தை அடைய முடியாத நிலையில் உள்ளனர். இது பெண்களின் விகிதாச்சாரம் எந்தளவுக்கு அதிகமாகியுள்ளது என்பதற்கு நிதர்சனமான சான்று ஆகும்.

இந்த ஏற்றத் தாழ்வை சமன் செய்ய என்ன செய்வது?

ஆண்களும், பெண்களும் சம அளவில் பிறக்க வேண்டும். நடைமுறையில் அவ்வாறு இல்லை.

சம வயதில் இருவரும் திருமணத்துக்கு உடல் ரீதியாக தயாராக வேண்டும். இது சாத்தியமில்லை.

அல்லது அன்றைய அறியாமைக் கால மக்கள் செய்தது போல் உயிருடன் பெண்களைப் புதைத்து பெண்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். மனசாட்சி உள்ள எவரும் இதை ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

இதற்கு ஏதேனும் பரிகாரம் கண்டே ஆக வேண்டும். பரிகாரம் காணத் தவறினால் பல தீய விளைவுகளைச் சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

மண வாழ்வை அடைய முடியாத பெண்கள் மன நோய்க்கு ஆளாவது,

அல்லது தவறான வழிகளிலேனும் அந்தச் சுகத்தை அடைந்திடத் துணிவது,

வசதியுள்ளவர்கள் தங்கள் பெண்களுக்காக மாப்பிள்ளைகளை அதிக விலை கொடுத்து வாங்குவது

போன்ற பல தீய விளைவுகள் ஏற்படும்.

இந்த நிலைகளை உலகம் சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறது.

ஆண்களை விடப் பெண்களே அதிக அளவில் மன நோய்க்கு ஆளாவதையும், இயல்பிலேயே வெட்க உணர்வு அதிகம் பெற்றிருக்கின்ற பெண்கள் தெருவில் நின்று கொண்டு வெட்கத்தைத் துறந்து ஆண்களை அழைப்பதையும் நாம் காண்கிறோம்.

எனவே சில ஆண்களாவது பலதார மணம் புரிவதில் தான் மணவாழ்வு கிடைக்காமல் பெருமளவு தேங்கி நிற்கும் பெண்களுக்கு மறுவாழ்வு இருக்கிறது.

2. ஆண்களின் இறப்பு விகிதம் அதிகம்

போர்க் களங்களும் போராட்டங்களும்:-

பிறப்பு விகிதத்தைப் பொறுத்த வரை பெண்களே மிகைத்து நிற்கிறார்கள் என்றால் இறப்பு விகிதத்திலும் ஏற்றத் தாழ்வுகள் உள்ளன. இயற்கையின் சீற்றம், நோய், முதுமை போன்ற காணரங்களால் ஏற்படும் மரணத்தைப் பொறுத்த வரை சமமாகவே இறக்கின்றனர்.

ஆயினும் வேறு சில வழிகளில் பெண்களை விட ஆண்களே அதிக அளவில் இறப்பெய்துகின்றனர்.

மனித சமுதாயம் தோன்றியதிலிருந்து இன்று வரை பல போர்களை உலகம் சந்தித்துள்ளது. மனிதனின் போர்க்குணம் உலகம் அழியும் வரை மாறுவதாகத் தெரியவில்லை.

இன்னும் சொல்வதென்றால் கடந்த காலத்தை விடப் போர் செய்து மனித சமுதாயத்தை அழித்தொழிப்பதில் மனிதன் மிகவும் முன்னேறியே இருக்கிறான். வாள், வேல் போன்ற ஆயுதங்களால் மட்டுமே போர் செய்து குறைந்த எண்ணிக்கையில் எதிரிகளை அழிக்கத் தெரிந்திருந்த மனிதன் இன்று ஒரு நொடிப் பொழுதில் பல்லாயிரம் எதிரிகளை அழிக்க வல்ல அணு ஆயுதங்களைத் தயார் செய்து விட்டான். கண்டம் விட்டுக் கண்டம் சென்று தாக்கக் கூடிய நவீன ரக ஏவுகணைகளைக் கண்டுபிடித்து விட்டான்.

இது போன்ற போர்க்களங்களில் அழிக்கப்படுவது ஆண்கள் மட்டுமே. அவர்கள் மட்டுமே போரில் நேரடியாக ஈடுபடுகின்றனர். இந்த அழிவு பெண்களுக்குப் பொதுவாக ஏற்படுவதில்லை.

1914 ஆகஸ்ட் 14ல் துவங்கி, 1917 மார்ச் 3ல் முடிவுற்ற முதல் உலகப் போரை எடுத்துக் கொள்வோம். சுமார் 33 மாதங்கள் நடந்த இந்தப் போரில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 85 லட்சம்.

ரஷ்யா 17,00,000

பிரான்ஸ் 13,57,800

பிரிட்டன் 9,08,400

இத்தாலி 6,50,000

அமெரிக்கா 126,000

ருமேனியா 3,35,700

செர்பியா45,000

பெல்ஜியம்13,700

கிரிஸ் 5000

போர்ச்சுகல் 7000

ஜெர்மனி 17,73,700

ஆஸ்திரேலியா 1,20,0000

உஸ்மானியப் பேரரசு 3,25,000

பல்கேரியா 87,500

மொத்தம் 85லட்சத்து 34 ஆயிரம்.

இரண்டாம் உலகப் போரை எடுத்துக் கொள்வோம்

ஆஸ்திரேலியா 23,250

பெல்ஜியம் 7750

பிரேசில் 1000

கனடா 37500

சீனா 1324500

செக் 6750

டென்மார்க் 4250

பிரான்ஸ் 205750

கிரீஸ் 16250

இந்தியா 24250

நெதர்லாந்து 13750

நியூசிலாந்து 12250

நார்வே 4750

போலந்து 320000

தென் ஆப்ரிக்கா 8750

பிரிட்டன் 264500

அமெரிக்கா 405500

ரஷ்யா 13600000

யூகோஸ்லோவியா 305000

ஆஸ்திரேலியா 380000

பின்லாந்து 79000

ஜெர்மனி 3300000

ஹங்கேரி 147500

இத்தாலி 262500

ஜப்பான் 1140500

ருமேனியா 300000

மொத்தம் 2 கோடியே 21 லட்சம்.

ஆதாரம்: மைக்ரோ சாஃப்ட் என்சைக்ளோபீடியா

இது போல் உலகில் நடந்த போர்களில் பல கோடிப்பேர் மாண்டிருக்கிறார்கள். நெப்போலியன் நடத்திய போர்களில் மட்டும் 20 லட்சம் மக்கள் மாண்டிருக்கிறார்கள்.

வியட்நாமில் அமெரிக்காவும், ஆப்கானிஸ்தானில் ரஷ்யாவும் நிகழ்த்திய படுகொலைகளும், அரபு, இஸ்ரேல், ஈரான், ஈராக் யுத்தப் படுகொலைகளும், இலங்கை, பாலஸ்தீன் மக்களின் உரிமைப் போராட்டங்களும், சமீபத்தில் ஆப்கான் மீது அமெரிக்கா குண்டுகளை வீசி ஒரு லட்சம் அப்பாவிகளைக் கொன்றதும், இராக் மீது அமெரிக்கா நடத்திய அநியாயத் தாக்குதலும் பெரும்பாலும் ஆண்களையே அழித்தொழித்துள்ளன.

பஞ்சாப், காஷ்மீர், கூர்க்காலாந்து, போராட்டங்களாகட்டும்; ஹிந்து – முஸ்லிம், வகுப்புக் கலவரங்களாகட்டும்; வன்னிய, – ஹரிஜன், தேவர் ஆகியோரிடையே ஏற்படும் சாதிக் கலவரங்களாகட்டும்; வர்க்கப் போராட்டங்களாகட்டும் இதில் எல்லாம் முழுமையாக ஆண்கள் தாம் ஈடுபடுகிறார்கள். அதுவும் இள வயது ஆண்கள்! ஆண்டொன்றுக்கு கோடிக்கணக்கில் மாண்டு விடும் இளைஞர்களின் இளம் விதவை மனைவிகளின் நிலை என்ன?

கன்னியர்களுக்கே மணவாழ்வு கிடைக்காத போது ஏற்கனவே இந்த சுகத்தை அனுபவித்த இந்த விதவைகள் என்ன செய்வார்கள்? அவர்களுக்கு ஏதேனும் வழி செய்ய வேண்டாமா?

விதவைகளாகவே ஏக்கத்தில் தங்கள் வாழ்வைக் கழிக்க வேண்டுமா?

அல்லது தவறான வழிகளில் அந்த சுகத்தை அடைய வேண்டுமா?

அல்லது உடன் கட்டை ஏற வேண்டுமா?

நியாய உணர்வு படைத்த எவரும் இம்மூன்றில் எதனையும் ஆதரிக்க மாட்டார்.

ஆண்களை விட குறைந்த எண்ணிக்கையில் பெண்கள் பிறப்பதாலும், ஆண்களை விட பத்து வருடங்களுக்கு முன் பெண்கள் திருமணத்திற்குத் தயாராவதாலும், பெண்களை விட ஆண்கள் அதிக எண்ணிக்கையில் மரணிப்பதாலும் அனைத்து பெண்களுக்கும் வாழ்க்கைத் துணை கிடைப்பது அறவே சாத்தியமற்றதாகும்.

தவறான வழியில் சென்று விடுவோம் என்று அஞ்சுவோர் மட்டுமாவது மற்றொரு திருமணம் செய்தால் தான் இந்த எற்றத் தாழ்வைச் சரி செய்து அனைத்துப் பெண்களுக்கும் வாழ்க்கைத் துணை கிடைப்பது சாத்தியமாகும்.

3. தற்கொலைகள்:

போர்க்களங்கள், போராட்டங்களில் மட்டுமின்றி தற்கொலை செய்யும் பெண்களை விட தற்கொலை செய்யும் ஆண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் ஆண்களின் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கிறது.

வருடம் 1982 ஆண்கள் 3314 பெண்கள் 2076

வருடம் 1983 ஆண்கள் 3366 பெண்கள் 2096

வருடம் 1984 ஆண்கள் 4450 பெண்கள் 3021

இது தமிழ்நாட்டில் 82, 83, 84 ஆகிய மூன்று ஆண்டுகளில் தற்கொலை செய்தவர்களின் அதிகாரப்பூர்வமான பட்டியல். (ஆதாரம்: 12.6.88 தினமணி கதிர்)

பிறப்பில் குறைவாக இருப்பதோடு, இறப்புகளிலும் ஆண்கள் அதிகமாகி விடுகிறார்கள் என்பதால் ஆண்களின் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கிறது.

ஏற்கனவே குறைவாகப் பிறக்கின்ற ஆண்கள், அதிகமாக அழிவுக்கு ஆளாகும் போது, பலதார மணத்தைத் தவிர வேறு என்ன பரிகாரம் தான் காண முடியும்?

4. வரதட்சணை:

திருமணத்தின் மூலம் மட்டுமே உடல் சுகத்தை அனுபவிக்க வேண்டும் என்ற பண்பாடுள்ள இந்தியா போன்ற நாடுகளில் வரதட்சணைக் கொடுமை தாண்டவமாடுவதற்கும் இது காரணமாக உள்ளது.

ஆண் மகனைப் பெற்றவர்கள் மாப்பிள்ளையின் ரேட்டை' அதிகமாக்கிக் கொண்டே செல்வதும் கிலோ கணக்கில் நகைகள் கேட்பதும் லாரிக் கணக்கில் சீர் வரிசை என்ற பெயரில் கொள்ளையடிப்பதும் அதிகமாகி வருகின்றன. பெண்கள் மலிவாகக் கிடைக்கிறார்கள் என்பதற்காக ஆண்களின் கொடுமை எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது.

வசதி படைத்தவர்கள் இந்தப் போட்டியில் ஜெயித்து விடுகிறார்கள். வசதியற்ற ஏழைப் பெண்கள் நாதியற்று நிற்கிறார்கள்.

மானமுள்ள பெண்கள் ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டே மன நோய்க்கு ஆளாகி விடுகிறார்கள்;

அல்லது உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.

மானம் கெட்டவர்கள் என்றால் வீதிக்கு வந்து விடுகிறார்கள்.

ஒருவனுக்கு ஒருத்தி என்ற தத்துவத்தை வலியுறுத்துவோர் மன வாழ்வுக்கு வசதியின்றி ஏங்கி நிற்கும் இத்தகைய பெண்களுக்கு என்ன பரிகாரம் வைத்திருக்கிறார்கள்?

பரிகாரம் காணத் தவறுவதால் ஏற்படக் கூடிய இந்தத் தீய விளைவுகளை எப்படித் தடுக்கப் போகின்றார்கள்? அந்த அபலைப் பெண்களுக்கு மாற்று வழி காட்டாமல் வெற்றுச் சட்டங்களால் இந்தத் தீய விளைவுகளைத் தடுத்து விட முடியும் என்று எண்ணுகிறார்களா?

சட்டங்கள் இயற்றப்பட்ட பின்னரும் வரதட்சணை ஒழிந்ததா? ஒழுக்கக் கேடுகள் மடிந்தனவா? இல்லையே! அப்படியானால் இதற்கு என்ன பரிகாரம்?

இத்தனையையும் கருத்தில் கொண்டு தான், நிபந்தனையுடன் இஸ்லாம் ஆண்களுக்கு நான்குக்கு உட்பட்டுப் பெண்களை மணந்து கொள்ள அனுமதி வழங்குகின்றது.

இந்த நிபந்தனைக்கு உட்பட்டு, விபச்சாரத்தில் விழுந்து விடுவோம் என அஞ்சுவோரும், சின்ன வீடு வைத்துக் கொள்வோரும் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்து கொண்டால் இதைச் சமன் செய்ய முடியும். அதனால் மட்டுமே இந்தத் தீய விளைவுகளைத் தடுத்து நிறுத்த முடியும். இவ்வாறு செய்வதால் மட்டுமே பெண்கள் மலிவாகக் கிடைக்கிறார்கள் என்ற நிலை மாறும்; அதன் மூலம் வரதட்சணைக் கொடுமையும் ஒழியும்.

இதை ஒப்புக் கொள்ள மறுப்பவர்கள் நாம் குறிப்பிட்ட தீமைகளைத் தடுத்திட தக்க வழிகளையாவது கூற வேண்டும்.

5. உயிருடன் சமாதி:

பெண் குழந்தைகள் பிறந்தவுடன் உயிருடன் கொன்று விடக் கூடிய கொடுமை பல பகுதிகளில் பரவி வருகின்றது. பஞ்சாப் மாநிலத்திலும், தமிழகத்தின் சேலம், மதுரை, தர்மபுரி, தேனி மாவட்டங்களிலும் இந்தக் கொடுமை பெருமளவு தலைவிரித்தாடுகின்றது.

கருவில் இருப்பது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என்பதைக் கண்டறியும் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு கருவிலேயே பெண் குழந்தைகள் சமாதி கட்டப்படும் நிலை உருவாகி வருகின்றது.

பெற்ற குழந்தைக்காக தமது சுகங்களைத் தியாகம் செய்யும் தாய்மார்கள் ஈவிரக்கமின்றித் தங்கள் பெண் குழந்தைகளைத் தாங்களே கொல்லத் துணிவதற்குக் காரணம் என்ன?

இப்பெண் குழந்தைகளை வளர்ப்பது சிரமம்; ஆண் குழந்தை என்றால் கோவணத்துடன் வெளியில் விட்டு விடலாம்; பெண் குழந்தை என்றால் அப்படி எல்லாம் விட்டு விட முடியாது. அப்பெண் குழந்தை பருவ வயதை அடைந்து விட்டால் அவளுக்குத் திருமணம் செய்தாக வேண்டும். ஆனால் மாப்பிள்ளைகள் கிடைப்பதில்லை. இதற்காகவே கொல்கிறோம்' என்று பஞ்சாப் மாநிலம் மற்றும் சேலம், மதுரை மாவட்டங்களில் பெண்கள் கூறியதாக பி.பி.சி படம் பிடித்துக் காட்டுகிறது.

இந்தக் கொடுமையை ஒழிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்துவோர், இதற்கான காரணத்தைக் கண்டு கொள்ள மறுக்கின்றனர்.

வெறும் சட்டங்களால் இதை ஒழிக்க முடியுமா? இவற்றைக் குற்றமென அறிவிக்கும் சட்டங்கள் முன்பிருந்தே இருக்கத் தான் செய்கின்றன. இந்தச் சட்டங்கள் இருக்கும் நிலையில் தான் இந்தக் கொடுமைகள் தொடர்கின்றன.

காரணங்கள் களையப்படாத நிலையில் போடப்படும் எல்லாச் சட்டங்களுக்கும் இந்தக் கதி தான் ஏற்படும்.

இதற்குரிய காரணம் என்ன என்பது பெண் குழந்தைகளைக் கொல்லும் தாய்மார்களின் பேட்டியிலேயே தெளிவாகக் கூறப்பட்டு விட்டது. மாப்பிள்ளை கிடைக்காததே' அந்தக் காரணம்.

இந்தக் காரணத்தைக் களைய இரண்டே வழிகள் தாம் உள்ளன. மாப்பிள்ளைகளின் உற்பத்தி அதிகரிக்க வேண்டும். இது சாத்தியமில்லை. இருக்கின்ற மாப்பிள்ளைகளைப் பங்கிட்டுக் கொள்ள வேண்டும். அதாவது மிகச் சிலராவது பல திருமணங்களைச் செய்ய வேண்டும். இஸ்லாம் அதைத் தான் கூறுகிறது.

இதை ஏற்க மறுப்பவர்கள் பெண் சிசுக் கொலையை ஏற்றுக் கொள்ள வேண்டியது தான். பெண் சிசுக் கொலைக்கு எதிராக இவர்கள் நடத்தும் போராட்டமே பலதார மணத்தின் அவசியத்தை நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

பெண்கள் வாழ்வதே கேள்விக் குறியாகிவிட்ட நிலையில் இவர்கள் சமத்துவம் பேசிக் கொண்டிருப்பது பிரச்சனையின் ஆழத்தை இவர்கள் உணரவில்லை என்பதை விளக்கிக் கொண்டிருக்கிறது.

பலதார மணம் அனுமதிக்கப்பட்டால் சில ஆண்டுகளிலேயே பெண் சிசுக் கொலை முழுமையாக நிறுத்தப்பட்டு விடும் என்பதை ஏனோ உணர மறுக்கிறார்கள்.

சமூக நலனை விட தங்கள் சுய நலனையே பெரிதாகக் கருதுவதால் தான் முற்போக்குப் பெண்டிர் பலதார மணத்தை எதிர்க்கின்றனர்.

சமூகத்தின் மீது பரிவும், கவலையும் கொண்டு சிசுக் கொலை ஒழிக்கப்பட வேண்டும் என்ற உண்மையான அக்கறையுடன் அணுகினால் பலதார மணம் தவிர வேறு பரிகாரமே இதற்கு இல்லை என்பதை ஐயமற உணர்வார்கள்.

பெண்களின் பிறப்பு மற்றும் இறப்பு விகிதம் அதிகமாக இருக்கும் வரையிலும், ஆண்களை விட பத்து வருடங்களுக்கு முன்பாகவே பெண்கள் மணவாழ்க்கைக்குத் தயாராவது இருக்கும் வரையிலும் இஸ்லாம் காட்டும் இந்தப் பரிகாரம் கட்டாயம் ஏற்கப்பட்டே ஆக வேண்டும். இதை மறுப்போர் இதற்கு நிகரான அல்லது இதை விடச் சிறந்த மாற்றுப் பரிகாரத்தை முன் வைக்க வேண்டும்.

6. பிரம்மச்சாரியம்:

மனைவி மக்களைக் காப்பாற்ற அதற்குரிய வசதிகள் தம்மிடம் இல்லையே என்று மன வாழ்வை மறுப்பவர்கள் அல்லது மண வாழ்வைத் தள்ளிப் போடுவோர், இந்தப் பற்றாக்குறையை இன்னமும் அதிகப்படுத்துகின்றனர்.

இந்த நிலையில் என்ன தான் செய்வது? மண வாழ்வுக்கு வழி இல்லாத கன்னியர்களையும், மண வாழ்வை அனுபவித்து இழந்த இளம் விதவைகளையும் கண்டு கொள்ளாமலேயே விட்டு விடுவதா? ஒழுக்கக் கேடுகளும், உடன் கட்டைகளும் தான் இதற்குப் பரிகாரமா? எண்ணிப் பாருங்கள்.

7. தாம்பத்ய ஈடுபாடு:

இல்லற சுகம் அனுபவிப்பதற்காகவே மனிதர்கள் திருமணம் செய்கிறார்கள். இல்லற சுகம் தேவைப்படும் போது அது கிடைக்கவில்லை என்றால் திருமண வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லாமல் போய் விடும்.

ஆண்களின் உடற்கூறையும் பெண்களின் உடற்கூறையும் எடுத்துக் கொண்டால் ஆண்களை விட பெண்கள் சீக்கிரமே தாம்பத்திய உறவுக்குத் தகுதியற்றவர்களாகி விடுகிறார்கள்.

தமது உணவுப் பழக்கம், கடந்த கால உடற்பயிற்சி ஆகியவற்றின் காரணமாக மரணிக்கும் காலம் வரை கூட ஆண்கள் இல்லறத்தில் ஈடுபட இயலும். அதை விரும்பவும் இயலும். அறுபது அல்லது எழுபது வயது வரை, ஏன் அதற்கு மேலும் கூடக் குழந்தையை உருவாக்கும் சக்தி பெற்றவனாக ஆண் இருக்கிறான். அவனிடம் குழந்தையை உருவாக்கும் உயிரணுக்கள் முடிந்து போய் விடுவதில்லை.

பெண்களின் நிலை அவ்வாறில்லை. எவ்வளவு திடகாத்திரமான பெண்களும் 50 வயதுடன் ஓய்ந்து விடுகிறார்கள். மாதந்தோறும் ஏற்பட்டு வந்த மாதவிடாயும் அந்தப் பருவத்தில் நின்று விடுகின்றது. உடலுறவிலும் நாட்டமின்றிப் போய் விடுகின்றது.

திடகாத்திரமாக இருக்கும் ஒருவன் தன் மனைவி உடலுறவில் நாட்டமின்றிப் போய்விடும் காலகட்டத்தில் அவனுக்கு அதில் நாட்டமிருந்தால் என்ன செய்வான்? அவனுக்கு ஏதேனும் பரிகாரம் காண வேண்டுமா? கூடாதா?

50 வயதைத் தாண்டியவர்களின் பார்வை தான் அன்னியப் பெண்களை அதிகம் நோக்குவதை நாம் பார்க்கின்றோம். சிறுமிகள், மற்றும் வேலைக்காரிகளைக் கற்பழிப்போரும் இத்தகையோர் தாம். அவர்களை மட்டும் சொல்லிக் குற்றமில்லை. காரணம், அவர்களுக்கு ஆசை இருக்கிறது; உடலில் வலு இருக்கிறது; ஆனால் அவர்களின் மனைவியர் அதற்கு ஏற்றவர்களாக இல்லை. மனைவிக்கு அந்த உணர்வு மங்கி விட்டது என்பதற்காக இவனும் தன் உணர்வைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியுமா?

ஒவ்வொன்றையும் அணுகுவதற்கு ஒரு நியாயமான முறை உண்டு. இந்த விஷயத்தில் உணர்வுகளுக்கு ஆளானவர்களையே நாம் கவனிக்க வேண்டும்.

பெண்களின் உடற்கூற்றை அறியாதவர்கள், இருவருக்குமுள்ள வித்தியாசத்தை உணராதவர்கள் தான், பலதார மணத்தைப் பாவமெனக் கருதுவர்.

வித்தியாசங்களை உணர்ந்து கொண்ட எவரும் இதை மறுக்கவே இயலாது. உண்மையாகவே தேவைப்படுவோருக்கு அதை அனுமதிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

மாதம் தோறும் அவர்களுக்கு ஏற்படுகின்ற மாதவிடாய்க் காலத்தில் இந்த உறவை அவர்களால் விரும்ப முடியாது. அப்படியே சில பெண்களின் உள்ளம் அதை விரும்பினாலும் அந்த நேரத்தில் அவர்களின் உடல் அதற்கு ஏற்றதாக இராது. உடலும், உள்ளமும் ஏற்றதாக இருப்பதாக வைத்துக் கொண்டாலும் அது போன்ற ஒரு அருவருப்பான சூழ்நிலையில் ஒரு ஆண் கிளர்ச்சியடையவும் முடியாது. அதுவும் ஏற்பட்டு விடும் என்று வைத்துக் கொண்டாலும் மருத்துவ ரீதியாகக் கூடப் பல விளைவுகள் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவனது மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டு அந்த உபாதையினால் அவளுடன் அவனால் உறவு கொள்ள இயலவில்லை என்றால் அவனது நிலை என்ன? சில பெண்கள் 15 நாட்கள் வரை கூட மாதவிடாய்த் தொல்லைக்கு ஆளாகி விடுவதுண்டு. இது போன்ற காலக் கட்டத்தில் மாதா மாதம் இப்படி ஒரு நிலையை அவன் எதிர்கொள்ளும் போது அவன் என்ன செய்வான்? இத்தகையோர் குறைந்த எண்ணிக்கையினர் தானே என்று அலட்சியப்படுத்துவதா?

இவர்களைப் போன்றவர்கள் தாம் அதிக அளவில் விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள். அழகும், இளமையும் கொண்ட மனைவியர் வீட்டிலிருந்தும் விபச்சாரத்தைச் சிலர் நாடிச் செல்லக் காரணம் இது தான். இயற்கையாக அவர்களுக்கு அமைந்திருக்கும் உணர்வுகளுக்குப் போதிய வடிகால் இல்லை. விபச்சாரத்தில் ஈடுபட்டுத் தங்கள் மனதையும், உடலையும் கெடுத்துக் கொள்வதை விட முறையாக இன்னுமொரு மனைவியை மணந்து அந்த இன்பத்தை அடைவதில் என்ன தவறு இருக்க முடியும்?

பலதார மணத்தை இவர்களைப் போன்றவர்களுக்கு அனுமதிப்பது இவர்களை மட்டும் செம்மைப்படுத்தவில்லை; இவர்களை நம்பியே தங்களின் தொழிலை நடத்துகின்ற ஒழுக்கம் கெட்ட பெண்களும் செம்மைப் படுத்தப்படுகிறார்கள். மாதவிடாய் மட்டுமின்றிக் கர்ப்ப காலம், பிரசவ காலம், மற்றும் பாலூட்டும் காலங்களில் இந்த உறவை நாடாத பெண்களும் உள்ளனர். இத்தகையவர்களை மனைவியாக அடைந்தவன் பல மாதங்கள் இந்த உறவுக்காக ஏங்கும் நிலைமையை அடைகிறான். எத்தனை மாதங்கள் ஆனாலும் தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்வோர் இருக்கத் தான் செய்கிறார்கள். எனினும் கட்டுப்படுத்திக் கொள்ள இயலாதவர்களும் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.

இவ்வளவு நியாயமான காரணங்களினால் தான் பலதார மணத்தை ஆண்களுக்கு மட்டும் இஸ்லாம் அனுமதித்திருக்கின்றது. இஸ்லாம் அகில உலகுக்கும் பொதுவான வாழ்க்கைத் திட்டமாகவும், எல்லாத் தரப்பு மக்களுக்கும் சரியான தீர்வைக் காட்டும் பரந்த கண்ணோட்டமுடைய மார்க்கமாகவும் இருப்பதால் எல்லாக் காலத்திற்கும், எல்லாப் பகுதிகளுக்கும் ஏற்ற வகையில் சட்டங்களை வழங்கியுள்ளது.

பலதார மணம் ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்டதற்கு ஏராளமான காரணங்களை நாம் கூறியுள்ளோம். இக்காரணங்களில் ஒன்றிரண்டு காரணங்கள் சிலருக்கு ஏற்புடையதல்ல என்று தோன்றலாம். அவர்களும் ஏற்கக் கூடிய காரணங்கள் அதன் பிறகும் எஞ்சியிருப்பதை அவர்கள் மறுக்க முடியாது.

மண வாழ்வைப் பெற்றுள்ள பெண்கள் இதில் திருப்தியடைய மாட்டார்கள்; இதற்கு ஒப்ப மாட்டார்கள்; தங்கள் வாழ்வைப் பங்கு வைக்க உடன்பட மாட்டார்கள்.

ஆனால், இந்தப் பரிகாரம் நாளை அவர்களுக்கே தேவைப்படும் போது இதன் அவசியத்தை உணர்வார்கள். வாழ்ந்து கொண்டிருந்த பெண் திடீரென விதவையாகி விட்டு வாழ்க்கையின் வசந்தங்களுக்காக ஏங்கும் பொழுது இதன் அவசியத்தை உணர்வாள்.

விதவையாயினும், கன்னியாயினும் மண வாழ்வு கிடைத்து விடும் என்ற உத்திரவாதம் பெற வேண்டுமானால், வசதியுள்ளவர்கள், நேர்மையாக நடக்கும் எண்ணமுள்ளவர்கள், உடல் வலிமையுள்ளவர்கள், தேவையுடையவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்து இந்தப் பற்றாக்குறையை ஈடு செய்வதைத் தவிர வேறு வழியே இல்லை.

பெண்கள் கிடைக்கவில்லை' என்ற அளவுக்கு மாறினால் மட்டுமே, வரதட்சணை, விபச்சாரம், மற்றும் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் ஒழிய முடியும்.

பலதார மணத்தைத் தடை செய்தாலும் மனைவியைத் தவிர பிற பெண்களை நாடுவோர் கணிசமான எண்ணிக்கையில் இருக்கத் தான் செய்கின்றனர். எந்தச் சட்டங்களாலும் இவர்களைத் தடை செய்ய முடியவில்லை. இத்தகையோர் சட்டப்படி இன்னொருத்தியை மணந்து கொள்வது விபச்சாரத்தில் ஈடுபடுவதை விட எவ்விதத்திலும் தாழ்ந்தது அல்ல என்பதை யாராலும் மறுக்க முடியாது.

அழகிகள் கைது' என்ற செய்திகள் இடம்பெறாத நாளே இல்லை என்ற அளவுக்கு பெண்கள் ஆண்களை வலை வீசித் தேடிக் கெடுக்கின்றனர். ஆனால் அழகன்கள் கைது' என்ற ஒரு செய்தியையும் நாம் காண்பதில்லை.

பெண்கள் கடை வீதிகளிலும், பேருந்து நிலையங்களிலும், ஹோட்டல்களிலும், பொழுது போக்கும் இடங்களிலும் மானமிழந்து ஆண்களுக்கு அழைப்பு விடுகிறார்களே! அவர்களுக்கு ஒரு வாழ்வு கிடைத்திருந்தால் இந்த இழிவைத் தாமே தேடிக் கொள்வார்களா? என்பதையும் சிந்திக்க வேண்டும்.

பொறுப்பைச் சுமக்க வேண்டும்.

திருமணம் விபச்சாரம் போன்றது அல்ல. 'ஒருத்தியை மணந்து கொண்டால் காலமெல்லாம் அவளுக்குரிய உணவு, உடை மற்றும் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும்; அவள் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்காகவும் சம்பாதிக்க வேண்டும்' என்பதை உணரும் போது ஒரு சதவிகிதம் பேர் கூட அதற்கு முன் வர மாட்டார்கள்.

பலதார மணம் தடை செய்யப்பட்டு விபச்சாரம் தடுக்கப்படாத போது பிற பெண்களை நாடுவோர் மிக அதிக அளவில் இருப்பார்கள்.

விபச்சாரத்தைத் தடுத்து பலதார மணத்தை அனுமதித்தால் அதை விட மிக மிகக் குறைந்த அளவு ஆண்கள் தாம் பிற பெண்களை நாடுவார்கள்.

காரணம் சில ரூபாய்களை வீசி எறிந்து விட்டால் போதும்! வேறு எந்தப் பொறுப்பும் கிடையாது எனும் போது பிற பெண்களை சர்வ சாதாரணமாக நாடுவார்கள்.

செய்யும் செயலுக்காக காலமெல்லாம் பொறுப்பு ஏற்க வேண்டும் எனும் போது பலமுறை யோசித்துத் தான் செய்வார்கள்.

எனவே பிற பெண்களை நாடுவோரின் எண்ணிக்கை பலதார மணத்தினால் பல மடங்கு குறையும். திருமணம் என்ற முறையில் இல்லாமல் எந்தப் பெண்ணுடனும் எந்த ஆணும் உறவு கொள்ளக் கூடாது என்று சட்டம் இயற்றிப் பார்க்கட்டும்! அப்போது புரிந்து கொள்வார்கள்.

இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். ஒருவனுக்கு இரண்டாவது மனைவியாக வாழ்க்கைப்படுபவள் தன் பரிபூரண சம்மதத்துடன் தான் முன் வருகிறாள். சம்மதமின்றி அவளை யாரும் இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட நிர்பந்திக்க முடியாது. அவ்வாறு நிர்பந்தம் செய்யும் திருமணங்களை இஸ்லாம் செல்லாததெனவும் அறிவிக்கிறது.

இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட முன்வருகிறாளே அவள் தான் இது பற்றிக் கவலைப்பட வேண்டும்.

எண்ணிக்கையை அதிகப்படுத்துவது இதன் நோக்கமா?

சமீப காலமாக, சிலர் எடுத்து வைக்கும் வினோதமான வாதத்தையும் நாம் கவனிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். பலதார மணத்தினால் முஸ்லிம்கள் அதிகமாகி நாம் சிறுபான்மையாவோம்; அதனால் பலதார மணத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

1961-ஆம் ஆண்டு இந்திய அரசு வெளியிட்ட மக்கள் தொகைக் கணக்கின் படி இந்துக்கள் 36.6 கோடிப் பேர் இருந்தனர்.

முப்பது ஆண்டுகளுக்குப் பின் 1991 ஆம் ஆண்டு இந்திய அரசால் வெளியிடப்பட்ட மக்கள் தொகைக் கணக்கின் படி இந்துக்களின் எண்ணிக்கை 67.2 கோடியாகும்.

இந்தக் கணக்கின் படி முப்பது வருடங்களில் 100 இந்துக்கள் 183 இந்துக்களாக வளர்ந்துள்ளனர்.

இந்த வளர்ச்சியுடன் மதமாற்றத்தினால் இந்துக்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட குறைவையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

முப்பது ஆண்டுகளில் இலட்சம் இலட்சமாக தலித் மக்கள் புத்த மதங்களைத் தழுவியுள்ளனர்.

முப்பது ஆண்டுகளில் சில மாநிலங்களில் கிறித்தவர்கள் பெரும்பான்மையாக மாறும் அளவுக்கு கிறித்தவ மதத்தை பல கோடிப்பேர் தழுவியுள்ளனர்.

நாடு முழுவதும் தினந்தோறும் பல நூறு பேர் இஸ்லாத்தையும் ஏற்றுள்ளனர். கிராமம் கிராமமாக இஸ்லாத்தை ஏற்கும் நிகழ்ச்சிகளும் நடந்துள்ளன.

பகுத்தறிவு இயக்கங்களின் எழுச்சியின் காரணமாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு படிவத்தில் தங்களை எந்த மதத்தையும் சேராதவர்கள் என்று குறிப்பிடக் கூடிய இந்துக்களும் பெருகியுள்ளனர்.

இவ்வாறு மதம் மாறியவர்கள் அனைவரும் இந்துக்களாகப் பிறந்தவர்கள் தான். இந்துக்களாகப் பிறந்து விட்டு வேறு மதங்களுக்குச் சென்றவர்கள் தான்.

மாதத்திற்கு ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர் மதம் மாறுவதாக இந்துத்துவ இயக்கங்கள் கவலை தெரிவிக்கின்றன. இதனால் நாடு முழுவதும் மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று கோருகின்றனர்.

மாதம் ஒரு லட்சம் இந்துக்கள் பௌத்தவர்களாகவும், கிறித்தவர்களாகவும், முஸ்லிம்களாகவும், மதம் சாராதவர்களாகவும் மாறுகிறார்கள் என்றால் வருடத்திற்கு 12 லட்சம் பேர் மதம் மாறுகின்றனர். 1961 முதல் 1991 வரை உள்ள முப்பது வருடங்களில் பல்வேறு மதங்களுக்கு மாறிய இந்துக்கள் 3.6 கோடியாவர்.

1961-ல் அதவாது 36.6 கோடியாக இருந்த இந்துக்கள் 67.2 + 3.6 = 70.8 என்ற கணக்கில் பெருகியுள்ளனர். அதாவது நூறு இந்துக்கள் முப்பது ஆண்டுகளில் 193 இந்துக்களாகப் பிறப்பின் அடிப்படையில் பெருகியுள்ளனர்.

இதைக் கவனத்தில் கொண்டு முஸ்லிம்களின் வளர்ச்சி விகிதத்தைக் காண்போம்.

1961-ல் இந்திய அரசு வெளியிட்ட மக்கள் தொகைக் கணக்கின் படி முஸ்லிம்கள் 4.6 கோடியாக இருந்தனர்.

முப்பது ஆண்டுகளுக்குப் பின் 1991ல் எடுக்கப்பட்ட கணக்கின் படி முஸ்லிம்களின் எண்ணிக்கை 9.5 கோடி.

நூறு இந்துக்கள் 193 இந்துக்களாகப் பிறப்பால் பெருகுகின்றனர் என்ற கணக்குப் படி முஸ்லிம்களின் பிறப்பு விகிதமும் இருந்தால் 4.6 கோடியாக இருந்த முஸ்லிம்கள் 8.87 கோடியாக இருக்க வேண்டும். இந்தக் கணக்கை விட 63 லட்சம் முஸ்லிம்கள் தான் அதிமாக உள்ளனர்.

அதாவது முப்பது ஆண்டுகளில் இந்துக்களின் வளர்ச்சி விகிதத்தை விட 63 லட்சம் பேர் அதிகம் என்றால் ஆண்டுக்கு இரண்டு லட்சம் ஆகிறது. இந்த எண்ணிக்கை அதிகரிப்பிற்குக் காரணம் பிற மதங்களிலிருந்து இஸ்லாத்தைத் தழுவுவோர் தான். ஆண்டுக்கு இரண்டு லட்சத்தை விட அதிகமாகவே முஸ்லிமல்லாதவர்கள் இஸ்லாத்தைத் தழுவுகின்றனர்.

இந்த நாட்டில் முஸ்லிம்களின் கணக்கு ஜீரோவிலிருந்து தான் துவங்குகிறது. முஸ்லிமல்லாதவர்கள் இஸ்லாத்தைத் தழுவும் காரணத்தினாலேயே முஸ்லிம்கள் இங்கே உருவானார்கள். இது காலம் காலமாகத் தொடர்ந்து நடக்கின்றது. எனவே முஸ்லிம்களாக மதம் மாறியவர்களைத் கழித்துப் பார்த்தால் இந்துக்கள் தமது மனைவியர் மூலம் எந்த அளவு மக்கள் தொகையைப் பெருக்குகிறார்களோ அதே கணக்குப் படி தான் முஸ்லிம்களும் மக்கள் தொகையைப் பெருக்குகிறார்கள். நான்கு மனைவியரைத் திருமணம் செய்வதால் இந்துக்களை விட முஸ்லிம்கள் அதிகம் வளர்ச்சியடைந்து விட்டார்கள் எனக் கூறுவது முற்றிலும் தவறாகும்.

மேலும் நடைமுறையில் முஸ்லிம்களை விட முஸ்லிமல்லாதவர்கள் தான் அதிக சதவிகிதத்தில் பலதார மணம் புரிந்துள்ளனர். இதை முன்னர் நாம் விளக்கியுள்ளோம்.

அதிக மனைவியரை மணந்து மக்கள் தொகையைப் பெருக்குகிறார்கள் என்று கூறுவதாக இருந்தால் முஸ்லிம்களை விட அதிக அளவு பலதார மணம் செய்துள்ள இந்துக்களுக்குத் தான் இந்தக் குற்றச்சாட்டு பொருந்தும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பலதார மணத்துக்கு நாம் எடுத்து வைத்த நியாயமான காரணங்களைச் சிந்தித்தால் முஸ்லிம்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது பலதார மணத்தின் நோக்கம் அல்ல என்பதை உணரலாம்.

பலதார மணம் பெண்களுக்கில்லை:

இந்த வித்தியாசங்களையும், நியாயமான காரணங்களையும் முதுகுக்குப் பின்னால் தள்ளி விட்டு ஆணுக்கு அனுமதிப்பது போல் பெண்ணுக்கும் பலதார மணத்தை அனுமதிக்க வேண்டுமென்று சிலர் கூறுகின்றனர். இது ஏற்க முடியாத வாதமாகும். பெண்களுக்குப் பல கணவர்களை அனுமதிக்க நியாயமான ஒரு காரணமும் இல்லை. மாறாகப் பெண்ணுக்கும் இந்த அனுமதி வேண்டும் என்போரின் விருப்பப்படி அனுமதிப்பதனால் விபரீதங்களும், கேடுகளும் தான் ஏற்படும்.

ஒரு ஆண் நூறு பெண்களுடன் ஒரு ஆண்டு தனித்து விடப்பட்டால் அந்த நூறு பெண்களும் நூறு குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியும்! ஒரு பெண் நூறு ஆண்களுடன் தனித்து விடப்பட்டால் அவளால் நூறு குழந்தைகளைப் பெற முடியுமா? ஒரு ஆணுக்குப் பல பெண்கள் மூலம் பத்துப் பிள்ளைகள் பிறந்தால் அந்தப் பத்துப் பிள்ளைகளின் தந்தை யார்? தாய் யார்? என்பதை அறிந்து கொள்ள முடியும்.

பல ஆண்களிடம் உறவு வைத்துள்ள ஒரு பெண் பெற்றெடுக்கும் ஒரு பிள்ளைக்கு 'தாய் யார்?' என்பது தான் தெரியுமே தவிர, தன் 'தந்தை யார்?' என்பதை அறிந்து கொள்ள முடியாது.

இந்த நிலையை விட அந்தக் குழந்தைக்கு வேறு கேவலம் எதுவுமிருக்க முடியாது. இது போல் தகப்பன் யார் என்று தெரியாமல் உருவாகக் கூடிய சந்ததிகள் உள்ளம் நொறுங்கி மனோ வியாதிக்கு ஆளாவார்கள்.

ஒரு ஆண் நான்கு மனைவிகள் மூலம் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்தால் அந்த நான்கு குழந்தைகளையும் பராமரிக்கும் பொறுப்பை அவன் தலையில் சுமத்தி விடலாம். அந்தக் குழந்தைகளுக்கு ஆகும் செலவுகளைக் கொடுக்குமாறு அவனை நிர்பந்திக்க முடியும். ஆனால் ஒரு பெண் நான்கு ஆண்களுடன் கூடிப் பெற்றெடுக்கும் ஒரு குழந்தைக்கு இந்த உத்திரவாதம் அளிக்க முடியுமா?

ஒவ்வொருவனும் என்னுடையதில்லை என்று மறுத்து விட்டால் எந்த அடிப்படையில் அவன் மீது பொறுப்பைச் சுமத்த முடியும்? அதற்குரிய செலவினங்களைக் கொடுக்குமாறு அவனை எப்படி நிர்பந்தப்படுத்த முடியும்? வளரப் போகும் அந்தக் குழந்தையின் எதிர்காலம் இருள் நிறைந்ததாக அல்லவா ஆகும்! அது போல் ஒவ்வொருவனும் அந்தக் குழந்தை தன்னுடையது என்று உரிமை கொண்டாடினால் அந்தக் குழந்தையைக் கூறு போட்டு ஆளுக்குக் கொஞ்சம் பிரித்துக் கொடுக்க முடியுமா?

ஒருவனுக்குப் பல மனைவியர் மூலம் பல நூறு குழந்தைகள் இருந்தாலும் அவன் இறந்த பின் பல நூறு குழந்தைகளுக்கும் தந்தை இன்னார் என்று தெரிவதால் வாரிசுகள் என்ற அடிப்படையில் அவனது சொத்தில் பங்கு கேட்க முடியும்.

பல ஆண்களை மணந்தவளின் கணவர்களில் எவர் இறந்தாலும், அவளது பிள்ளைகள் தந்தையின் சொத்து என்று உரிமை கொண்டாட வழியில்லாது போகும்.

இவ்வளவு வித்தியாசங்கள் இருப்பதனாலேயே எல்லாம் அறிந்த ஏக இறைவன் ஆண்களுக்கு மாத்திரம் இதை நிபந்தனைகளுடன் அனுமதித்திருக்கிறான். நீக்கிவிட முடியாத வித்தியாசங்கள் இருக்கும் வரை பலதார மணத்தை விமர்சனம் செய்பவர் புத்திசாலியாக இருக்க முடியாது.

ஆண்களுக்குப் பலதார மணத்தை அனுமதித்துப் பெண்களுக்கு மறுத்திட மிகமிக முக்கியமான மற்றொரு காரணமும் உண்டு.

பல மனைவியரைக் கட்டியவன் நினைத்த போது விரும்பிய மனைவியுடன் உடலுறவு கொள்ள முடியும்; ஒரு மனைவி அவள் விரும்பிய கணவனிடம் அவன் விரும்பாத போது உறவு கொள்ள இயலாது என்பதைச் சிந்தித்தால் ஆண்களுக்கு மட்டுமே பலதார மணத்தை அனுமதித்திருப்பதன் நியாயத்தை உணரலாம்.

திருமணத்துக்கு தயார் நிலையில் உள்ள ஆண்களும், பெண்களும் சமமான எண்ணிக்கையில் இருக்கும் போது அனைத்துப் பெண்களுக்கும் மண வாழ்வு கிடைத்து விடுவதால் இரண்டாவதாக வாழ்க்கைப்பட பெண்கள் முன்வர மாட்டார்கள். பல தாரமணம் செய்ய ஒருவர் விரும்பினாலும் அது சாத்தியமாகாது. அப்போது எந்தச் சட்டமும் போடாமலேயே பலதார மணம் தானாக நின்று விடும். முதல் தாரத்துக்கு பிரகாசமான வாய்ப்பு இருக்கும் போது எந்தப் பெண் இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட விரும்புவாள்?

அந்த நிலை ஏற்படும் வரை எந்தச் சட்டத்தினாலும் இதைத் தடுக்க முடியாது.

இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கின்றது என்போரின் அடுத்த குற்றச்சாட்டு தலாக்' குறித்ததாகும். அது பற்றியும் நாம் ஆராய்வோம்.

திருக்குர்ஆன் கூறும் தலாக் சட்டம்

இஸ்லாம் மார்க்கத்தில் ஆண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள தலாக் எனும் விவாகரத்துச் செய்யும் உரிமை நாட்டில் மிகப்பெரிய விவாதப் பொருளாக ஆக்கப்பட்டுள்ளது.

தலாக் எனும் விவாகரத்துச் சட்டத்தினால் முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற காரணத்தைச் சொல்லியே இது விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுகிறது.

கணவன் மனைவியர் சேர்ந்து வாழ்ந்து விட்டுப் பிரியும் போது பெரும்பாலும் பெண்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதையும், சில வேளை ஆண்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதையும் மறுக்க முடியாது.

இந்தக் காரணம் அனைவருக்குமானதே தவிர முஸ்லிம்களுக்கு மட்டும் உரியது அல்ல. முஸ்லிம் ஆண்கள் தமது மனைவியரை விவாகரத்து செய்தால் முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்படுவது போல், இந்து ஆண்கள் விவாகரத்துச் செய்தால் இந்துப் பெண்கள் பாதிக்கப்படுவார்கள். கிறித்தவ ஆண்கள் விவாகரத்துச் செய்தால் கிறித்தவப் பெண்கள் பாதிக்கப்படுவார்கள். எந்த மதத்தைச் சேர்ந்த ஆண்கள் விவாகரத்து செய்தாலும் அந்தந்த மதத்துப் பெண்கள் பாதிக்கப்படுவார்கள். மதத்தை நம்பாதவர்கள் விவாகரத்துச் செய்தாலும் அவர்களின் மனைவியர் பாதிக்கப்படுவார்கள்.

பொதுவான இந்தப் பிரச்சனையில் கருத்து சொல்பவர்கள் நியாயமானவர்களாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்? யாருமே விவாகரத்து செய்யக் கூடாது என்று கூற வேண்டும்.

அப்படி ஒருவரும் கூறுவதில்லை. கூற முடியாது. ஏனெனில் திருமண உறவு என்பது தாய், தந்தை, அண்ணன் தம்பி போன்ற பிரிக்க முடியாத உறவு அல்ல.

திருமணம் என்பது ஆண்களும், பெண்களும் தங்களின் தேவைகள் சிலவற்றை நிறைவேற்றிக் கொள்வதற்காக ஏற்படுத்திக் கொள்ளும் உறவாகும்.

திருமணம் செய்த பின்னர் பெரும்பாலும் தம்பதிகள் மகிழ்வோடு வாழ்கிறார்கள். சிலர் குறைகளைச் சகித்துக் கொண்டு வாழ்கிறார்கள். மிகச் சிலர் சேர்ந்து வாழ முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இந்த நிலைக்கு ஆளானவர்களுக்கு விவாகரத்துச் செய்யும் உரிமை இல்லாவிட்டால் அவர்களை எந்தச் சட்டத்தின் மூலமும் சேர்த்து வைக்க முடியாது.

விவாகரத்துச் செய்ய அனுமதிக்க முடியாது என்று சட்டம் போட்டால் அந்த ஆண் பெயருக்குத் தான் அவளுக்குக் கணவனாக இருப்பான். அவளுடன் இல்லறம் நடத்த மாட்டான். வேண்டாத மனைவி என்பதால் சித்திரவதை செய்வான். மனைவியைக் கவனிக்காமல் கள்ள உறவுகளை ஏற்படுத்திக் கொண்டு மனைவியை மனம் நோகச் செய்வான்.

கள்ள உறவு வேண்டாம்; முறையாக இன்னொருத்தியைத் திருமணம் செய்து வாழலாம் என்று அவன் நினைத்தால் முதல் மனைவி அதற்குத் தடையாக நிற்கிறாள் என்பதால் மனைவியை தந்திரமான வழிகளில் கொலை செய்து விடுகிறான். இப்படி ஆண்டு தோறும் நூற்றுக்கணக்கான பெண்கள் கணவனால் கொல்லப்படுகிறார்கள். அல்லது கணவன் இருந்தும் வாழாவெட்டியாக நரக வாழ்க்கை வாழ்கிறார்கள்.

இதற்கான ஒரே தீர்வு எளிதான விவாகரத்து தான்.

இது ஆணுக்கு மட்டுமல்ல; மனைவிக்கு கணவனைப் பிடிக்காமல் போனால் அவள் கணவனையும் பிள்ளைகளையும் விட்டு விட்டு இன்னொருவனுடன் ஓடிப் போகிறாள். அல்லது கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனைத் தீர்த்துக் காட்டுகிறாள்.

இது போன்ற சம்பவங்களும் ஆண்டு தோறும் நூற்றுக் கணக்கில் நடக்கின்றன.

மிகப் பெரிய தீமைகள் பெண்களுக்கோ ஆண்களுக்கோ ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகத் தான் உலகெங்கும் விவாகரத்துச் சட்டம் உள்ளது. இதனால் சிறிய அளவில் பாதிப்பு இருந்தாலும் பெரிய பாதிப்புகளைத் தவிர்க்க சிறிய பாதிப்புகளைச் சகித்துக் கொள்வது தான் அறிவுடமை.

இந்தியாவில் மட்டும் அல்ல. உலகின் எல்லா நாடுகளிலும் விவாகரத்துச் சட்டங்கள் உள்ளன. விவாகரத்துச் சட்டம் இல்லாத ஒரு நாடு கூட உலகில் இல்லை.

தலாக் கூறுவதால் முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற காரணம் கூறி முஸ்லிம் கணவனைச் சிறையில் தள்ளும் சட்டம் இயற்றுவோர், அதை ஆதரிப்போர் தமது மதத்துப் பெண்கள் விவாகரத்தினால் பாதிக்கப்படுவது பற்றிக் கவலைப்படவில்லை. இந்துப் பெண்கள் இந்துக் கணவர்களால் விவாகரத்து செய்யப்பட்டும், விவாகரத்து செய்யாமல் கைவிடப்பட்டும் அல்லல் படுகின்றனர். அவர்களின் கணவன்மார்களைச் சிறையில் தள்ளும் சட்டம் இல்லை.

இது நடுநிலையாளர்கள் சிந்திக்க வேண்டியதாகும்.

அடுத்து இஸ்லாம் கூறும் தலாக் சட்டத்துக்கும் முஸ்லிமல்லாதவர்கள் ஏற்றுக் கொண்ட விவாகரத்துச் சட்டங்களுக்கும் உள்ள வேறுபாடுகளை அறிந்து கொண்டால் இஸ்லாம் கூறும் தலாக் சட்டமே பெண்களுக்குக் குறைந்த பாதிப்பு கொண்ட சட்டமாகும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

தலாக், விவாகரத்து வேறுபாடு

தலாக் எனும் விவாகரத்துச் சட்டத்துக்கும், முஸ்லிமல்லாத மக்களின் விவாகரத்துக்கும் சில முக்கியமான வேறுபாடுகள் உள்ளன.

முஸ்லிமல்லாதவர்கள் தமது மனைவியரை விவாகரத்துச் செய்ய முடிவு செய்தால் நீதிமன்றத்தை அணுக வேண்டும். நீதிமன்றங்கள் பல அமர்வுகள் விசாரணை செய்து விவாகரத்து வழங்கும்.

இப்படி விவாகரத்து நடந்து விட்டால் தம்பதியர் நிரந்தரமாகப் பிரிந்து விடுவார்கள்.

இஸ்லாம் மார்க்கத்தின் தலாக் நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்படுவதில்லை. ஜமாஅத்தார் முன்னிலையில் விசாரித்து நடைமுறைப்படுத்தப்படுகிறது.

விவாகரத்து வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் சட்ட வாசகங்களை மட்டும் தான் கவனிப்பார்கள். வழக்கு தொடுத்த தம்பதிகளின் குடும்பம் பற்றியோ, இன்ன பிற சூழல் பற்றியோ அவர்கள் அறிய மாட்டார்கள். ஆனால் உள்ளூர் ஜமாஅத்தார்கள் அந்தத் தம்பதிகளுக்கு உறவினராக இருப்பார்கள். அவர்கள் மீது அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள். இதனால் நீதிமன்றங்களை விட உள்ளூர் ஜமாஅத்தார்களுக்குத் தான் அதிக அக்கறையும், இந்த விஷயத்தில் அதிக ஞானமும் இருக்கும்.

இந்த வித்தியாசத்தை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

நீதிமன்றத்தில் கணவன், மனைவி இருவரும் பொய்யான குற்றச்சாட்டுக்களை ஒருவர் மீது மற்றவர் எளிதாகச் சுமத்த முடியும். ஆனால் உள்ளூர் ஜமாஅத்தில் இப்படி சுமத்த முடியாது.

எனவே ஜமாஅத்தார்கள் முன்னிலையில் செயல்படுத்தப்படும் தலாக் சட்டம் தான் இருவரின் நலனிலும் அக்கறை செலுத்தும் சட்டமாக இருக்க முடியும்.

தலாக்கின் விதிமுறைகள்

ஒரு கணவனுக்கு மனைவியைப் பிடிக்காவிட்டால் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று தலாக் கூற முடியாது. பல கட்டங்களைக் கடந்து தான் தலாக் எனும் முடிவுக்கு வர வேண்டும்.

பிடிக்கவில்லை என்றவுடன் தலாக் கூறாமல் விவாகரத்து முடிவை எடுத்தால் அதனால் ஏற்படும் பாதகங்களை மனைவிக்குப் புரியவைக்கும் வகையில் அறிவுரை கூற வேண்டும்.

இந்த அறிவுரைகள் பயனளிக்காத போது இருவரும் படுக்கையில் இருந்து விலகிப் பார்க்க வேண்டும்.

இப்படி சில நாட்கள் மனைவியுடன் சேராமல் இருக்கும் போது கனவனுக்கு மனைவியின் குறைகள் மட்டுமின்றி அவளது அருமையும் தெரிய வரும். அதுபோல் கணவனைப் பிரிந்தால் அது எத்தகையதாக இருக்கும் என்பது மனைவிக்கும் தெரிய வரும்.

இதனால் மனைவியிடம் தவறு இருந்தால் அவள் தன்னைத் திருத்திக் கொள்வாள். கணவனிடம் தவறு இருந்தால் அவன் தன்னைத் திருத்திக் கொள்வாள்.

தலாக் கூறும் முடிவு இதனால் மாறக்கூடிய வாய்ப்பு உண்டு.

தலாக் என்ற நிலைக்குப் போய்விடக் கூடாது என்பதற்காக மனைவியிடம் பெரிய குறைகள் இருந்தால் அடித்துத் திருத்தியாவது தலாக் கூறும் முடிவுக்குச் செல்லாமல் இஸ்லாம் தடுக்கப் பார்க்கிறது.

இதன் பின்னரும் இணக்கம் ஏற்படாவிட்டால் உடனே தலாக் கூற முடியாது. ஜமாஅத்துக்கு அவன் பிரச்சனையைக் கொண்டு வந்தவுடன் அவனது குடும்பத்தில் இருந்து பக்குவமாக அணுகும் ஒருவரையும், அவளது குடும்பத்தில் இருந்து பக்குவமாக அணுகும் ஒருவரையும் ஜமாஅத்தார் நியமித்து அவர்கள் வழியாக சமரசம் செய்யும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இது முஸ்லிம்களின் வேதமான திருக்குர்ஆனில் தெளிவான வார்த்தைகளால் சொல்லப்பட்டுள்ளது. அந்த வசனங்களைப் பாருங்கள்!

சிலரை விட சிலரை அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள், பெண்களை நிர்வாகம் செய்பவர்கள் ஆவர். கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானவற்றை (கற்பை) காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். பிணக்கு ஏற்படும் என்று (மனைவியர் விஷயத்தில்) நீங்கள் அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்! படுக்கைகளில் அவர்களை விலக்குங்கள்! அவர்களை அடியுங்கள்! அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்! அல்லாஹ் உயர்ந்தவனாகவும், பெரியவனாகவும் இருக்கிறான்.

திருக்குர்ஆன் 2:34

அவ்விருவரிடையே பிளவு ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் அவன் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும், அவள் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும் அனுப்புங்கள்! அவ்விருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அல்லாஹ் அவ்விருவருக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துவான். அல்லாஹ் அறிந்தவனாகவும், நன்றாகவே அறிந்தவனாகவும் இருக்கிறான்.

திருக்குர்ஆன் 2:35

நடுவர்களை ஏற்படுத்துங்கள் என்று கூறப்படுவதால் ஆண்கள் சுயமாக தலாக் கூற முடியாது. மூன்றாம் தரப்பான ஜமாஅத் தலையீடு இதில் இருப்பது அவசியம் என்பதை இதிலிருந்து அறியலாம்.

இந்த நான்கு நடவடிக்கைகளாலும் இணக்கம் ஏற்படவில்லையானால் அவர்கள் இணைந்து வாழ்வதில் அர்த்தமேயில்லை! இந்நிலையில் வேறு வழியின்றி தலாக்கை இஸ்லாம் அனுமதிக்கிறது.

மூன்று வாய்ப்புகள்:

தலாக் கூறிட ஆண்களுக்கு மூன்று வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. முதல் இரண்டு வாய்ப்புகளைப் பயன்படுத்திய பின் அவர்கள் திரும்பவும் சேர்ந்து வாழலாம். மூன்றாவது வாய்ப்பையும் பயன்படுத்தி விட்டால் அவர்கள் சேர்ந்து வாழ முடியாது. இது தான் தலாக் கூறுவதற்கு திருக்குர்ஆன் கூறும் சட்டமாகும்.

ஒருவன் தன் மனைவியை ஒரு தடவை தலாக் கூறுகிறான் என்று வைத்துக் கொள்வோம். அந்தப் பெண்ணுக்கு மூன்று மாதவிடாய் ஏற்பட்டு தூய்மையாவதற்குள் இருவரும் சேர்ந்து கொள்ளலாம். (ஏறத்தாழ இரண்டரை முதல் மூன்று மாதங்கள் இதற்கு ஆகலாம்.)

இப்படி தலாக் கூறும்போது மனைவி மாதவிடாய் நின்று போன பருவத்தில் இருந்தால் மூன்று மாதங்களுக்குள் அவர்கள் மீண்டும் சேர்ந்து கொள்ளலாம்.

இதற்கு எந்தச் சடங்கும் கிடையாது.

இது குறித்து திருக்குர்ஆனில் மிகத் தெளிவாக சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் கூறப்பட்டுள்ளது. அவ்வசனங்களைக் கீழே காண்க!

விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்பி இருந்தால் தமது கருவறைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை மறைப்பதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை. இருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் இதற்குள் (இந்தக் காலகட்டத்துக்குள்) அவர்களின் கணவர்கள் அவர்களைத் திரும்பச் சேர்த்துக் கொள்ளும் உரிமை படைத்தவர்கள். பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. அவர்களை விட ஆண்களுக்கு ஓர் உயர்வு உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

திருக்குர்ஆன் 2:228

இவ்வாறு விவாகரத்துச் செய்தல் இரண்டு தடவைகளே. (இதன் பிறகு) நல்ல முறையில் சேர்ந்து வாழலாம். அல்லது அழகான முறையில் விட்டுவிடலாம். மனைவியருக்கு நீங்கள் கொடுத்தவற்றிலிருந்து எந்த ஒன்றையும் திரும்பப் பெறுவதற்கு அனுமதி இல்லை. அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலைநாட்ட மாட்டார்கள் என்று அஞ்சினால் தவிர. அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலைநாட்ட மாட்டார்கள் என்று நீங்கள் அஞ்சினால் அவள் (மஹரிலிருந்து) ஈடாகக் கொடுத்து பிரிந்து விடுவது இருவர் மீதும் குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகள். எனவே அவற்றை மீறாதீர்கள்! அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவோரே அநீதி இழைத்தவர்கள்.

திருக்குர்ஆன் 2:229

(இரண்டு தடவை விவாகரத்துச் செய்து சேர்ந்து கொண்ட பின் மூன்றாவது தடவையாக) அவளை அவன் விவாகரத்துச் செய்தால் அவள் வேறு கணவனை மணம் செய்யாதவரை அவனுக்கு அனுமதிக்கப்பட்டவளாக ஆக மாட்டாள். (இரண்டாம் கணவனாகிய) அவனும் அவளை விவாகரத்துச் செய்து, (மீண்டும் முதல் கணவனும் அவளும் ஆகிய) இருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலைநாட்ட முடியும் எனக் கருதினால் (திருமணத்தின் மூலம்) சேர்ந்து கொள்வது குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகள். அறிகின்ற சமுதாயத்திற்கு அவன் இதைத் தெளிவுபடுத்துகிறான்.

திருக்குர்ஆன் 2:230

பெண்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால் அவர்கள் தமக்குரிய காலக்கெடுவை நிறைவு செய்வதற்குள் நல்ல முறையில் அவர்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் விட்டு விடுங்கள்! அவர்களைத் துன்புறுத்தி வரம்பு மீறுவதற்காகச் சேர்த்துக் கொள்ளாதீர்கள்! இவ்வாறு செய்பவர் தமக்கே அநீதி இழைத்துக் கொண்டார். அல்லாஹ்வின் வசனங்களைக் கேலிக்குரியதாக்கி விடாதீர்கள்! உங்களுக்கு அல்லாஹ் செய்துள்ள அருட்கொடையையும், வேதத்தையும் ஞானத்தையும் வழங்கியதையும் எண்ணிப் பாருங்கள்! இது குறித்து அவன் உங்களுக்கு அறிவுரை கூறுகிறான். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! "அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்" என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

திருக்குர்ஆன் 2:231

பெண்களை விவாகரத்துச் செய்த பின் அவர்கள் தமது காலக்கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் (தமக்குப் பிடித்த) கணவர்களை விருப்பப்பட்டு நல்ல முறையில் மணந்து கொள்வதைத் தடுக்காதீர்கள்! உங்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறு அறிவுரை கூறப்படுகிறது. இதுவே உங்களுக்குத் தூய்மையானது; பரிசுத்தமானது. அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.

திருக்குர்ஆன் 2:232

பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாகரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும். அவர்களுக்கு நல்ல முறையில் உணவும், உடையும் வழங்குவது குழந்தையின் தந்தைக்குக் கடமை. சக்திக்கு உட்பட்டே தவிர எவரும் சிரமம் தரப்பட மாட்டார். பெற்றவள் தனது பிள்ளையின் காரணமாகவோ, தந்தை தனது பிள்ளையின் காரணமாகவோ சிரமம் கொடுக்கப்பட மாட்டார்கள். (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அவரது வாரிசுக்கு இது போன்ற கடமை உண்டு. இருவரும் ஆலோசனை செய்து மனம் விரும்பி பாலூட்டுவதை நிறுத்த முடிவு செய்தால் இருவர் மீதும் எந்தக் குற்றமும் இல்லை. உங்கள் குழந்தைகளுக்கு (வேறு பெண் மூலம்) பாலூட்ட வேண்டும் என நீங்கள் விரும்பினால் (பெற்றவளுக்குக்) கொடுக்க வேண்டியதை நல்ல முறையில் கொடுத்து விட்டால் உங்கள் மீது எந்தக் குற்றமுமில்லை. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

திருக்குர்ஆன் 2:233

முதல் தடவை தலாக் கூறியவுடன் திருமண உறவு அடியோடு முறிந்து விடுவதில்லை; மாறாக மனைவியின் பிரிவை உணர்ந்து மீண்டும் சேரும் வாய்ப்பு இருக்கிறது என்பதை இவ்வசனங்களிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

மேற்கூறப்பட்ட காலக் கெடுவுக்குள் இருவரும் சேர்ந்து கொள்ளாவிட்டால் அதன் பிறகு சேரவே முடியாதா என்றால் அதுவும் இல்லை. பத்து வருடங்கள் கழித்து கூட இருவரும் சேர்ந்து வாழ விரும்பினால் சேர வழியுண்டு. அதாவது இருவரும் மீண்டும் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து தம்பதிகளாக வாழலாம்.

இவ்வாறு சேர்ந்து வாழும்போது மீண்டும் அவர்களிடையே பிணக்கு ஏற்பட்டு, வாழ்வைத் தொடர இயலாத நிலை ஏற்பட்டால் இரண்டாவது தலாக்கைக் கூறலாம்.

இந்த இரண்டாவது வாய்ப்பைப் பயன்படுத்தினால் அப்போதும் திருமண உறவு அடியோடு முறிந்து விடுவதில்லை; மனைவியின் பிரிவை உணர்ந்து மீண்டும் சேரும் வாய்ப்பு இருக்கிறது.

முதல் வாய்ப்பைப் பயன்படுத்திய பின் சேர்ந்து கொண்டது போன்று அந்தக் கெடுவுக்குள் மீண்டும் திரும்ப அழைத்துக் கொள்ளலாம்; அல்லது கெடு முடிந்த பிறகு அவள் சம்மதித்தால் மீண்டும் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம்; அல்லது அப்படியே விட்டு விடலாம். இதையும் மேற்கண்ட திருக்குர்ஆன் வசனங்களில் இருந்து அறியலாம்.

இப்படி தலாக் விட்டபின் மனைவியை அவளது தாய் வீட்டுக்கு அனுப்பக் கூடாது. மாறாக மூன்று மாத காலம் கணவன் வீட்டில் தான் அவள் இருக்க வேண்டும். இருவரும் எப்படியாவது சேர்ந்து கொள்ள மாட்டார்களா என்று கருணை கொண்டு அல்லாஹ் இந்தக் கட்டளையைப் பிறப்பிக்கிறான்.

இது பற்றி திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.

நபியே! பெண்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால் அவர்கள் இத்தாவைக் கடைப்பிடிப்பதற்கேற்ப விவாகரத்துச் செய்யுங்கள்! இத்தாவைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்! உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சுங்கள்! பகிரங்கமான வெட்கக்கேடான காரியத்தை அப்பெண்கள் செய்தாலே தவிர அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றாதீர்கள்! அவர்களும் வெளியேற வேண்டாம். இவை அல்லாஹ்வின் வரம்புகள். அல்லாஹ்வின் வரம்புகளை மீறுபவர் தமக்கே தீங்கிழைத்துக் கொண்டார். இதன் பிறகு அல்லாஹ் ஒரு கட்டளை பிறப்பிக்கக் கூடும் என்பதை நீர் அறிய மாட்டீர்.

திருக்குர்ஆன் 65:1

இருவரும் எப்படியாவது சேர்ந்து வாழ வேண்டும் என்ற அல்லாஹ்வின் கருணை இதில் வெளிப்படுகிறது.

முஸ்லிமல்லாத மக்கள் செய்து கொள்ளும் விவாகரத்தினால் அவர்கள் முழுமையாகப் பிரிந்து கொள்ளும் நிலை ஏற்படுகிறது. ஆனால் திருக்குர்ஆன் கூறும் தலாக் சட்டம் தற்காலிக விவாகரத்தாக இரு வாய்ப்புகளை வழங்கி அவர்கள் எப்படியாவது சேர்ந்து கொள்ள வேண்டும் என்று அக்கறை செலுத்துகிறது.

உலகில் உள்ள எந்த நாட்டின் விவாகரத்துச் சட்டங்களையும் விட இஸ்லாத்தின்  விவாகரத்துச் சட்டம் பன்மடங்கு சிறந்து விளங்குகிறது.

எஸ்.எம்.எஸ் மூலம், தபால் மூலம், போன் மூலம், வாட்சப் மூலம் தலாக் சொல்வதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை. இது இஸ்லாத்தை அறியாத மூடர்களின் செயலாகும். ஏனெனில் விவாகரத்து செய்வதாக இருந்தாலும், பின்னர் சேர்ந்து கொள்வதாக இருந்தாலும் இரு சாட்சிகள் முன்னிலையில் தான் அது நடக்க வேண்டும்.

இது பற்றி திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.

அவர்கள் தமக்குரிய தவணையை அடையும்போது அவர்களை நல்ல முறையில் தடுத்து வைத்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் அவர்களைப் பிரிந்து விடுங்கள்! உங்களில் நேர்மையான இருவரை சாட்சிகளாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்காக சாட்சியத்தை நிலைநாட்டுங்கள்! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறே அறிவுரை கூறப்படுகிறது. அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவன் ஒரு போக்கிடத்தை ஏற்படுத்துவான்.

திருக்குர்ஆன் 65:2

சாட்சிகள் என்றால் தலாக் கூறுவதற்கும், சேர்வதற்கும் மட்டும் சாட்சிகள் என்று கருதக் கூடாது. மாறாக முன்னர் நாம் எடுத்துக் காட்டிய எல்லா வழிமுறைகளையும் அந்த ஆண் கடைப்பிடித்துள்ளானா என்பதை அறிந்தவன் தான் சாட்சி சொல்ல வேண்டும். அநீதியாக சாட்சி கூற இஸ்லாத்தில் தடை உள்ளது.

எல்லா முயற்சிகளையும் கடைப்பிடித்து விட்டு இறுதியாகத் தான் இந்த முடிவுக்கு வந்துள்ளான் என்பதை அறியாத ஒருவன் தலாக்குக்கு சாட்சியாக இருக்கக் கூடாது.

இரண்டு முறை தலாக் கூறி சேர்ந்து வாழும் போது மீண்டும் தலாக் கூறும் முடிவுக்கு ஒருவன் வந்தால் அதுதான் கடைசி வாய்ப்பு என்பதால் அதைக் கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக, அவனது மனம் எளிதில் ஒப்பாத மிகக் கடுமையான நிபந்தனையை இஸ்லாம் விதித்துள்ளது.

இதன் பின் (மூன்றாம் முறை) அவளை அவன் விவாகரத்துச் செய்தால் அவள் வேறு கணவனை மணம் செய்யாத வரை அவனுக்கு அனுமதிக்கப்பட்டவளாக ஆக மாட்டாள். (இரண்டாம் கணவனாகிய) அவனும் அவளை விவாகரத்துச் செய்து, (மீண்டும் முதல் கணவனும் அவளும் ஆகிய) இருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலைநாட்ட முடியும் எனக் கருதினால் (திருமணத்தின் மூலம்) சேர்ந்து கொள்வது குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகள். அறிகின்ற சமுதாயத்திற்கு அவன் இதைத் தெளிவுபடுத்துகிறான்.

திருக்குர்ஆன் 2:230

விவாகரத்துச் செய்த பின்னர் மீண்டும் சேர்வதற்கான வாசலை உலகில் எந்தச் சட்டமும் இந்த அளவுக்கு விசாலமாகத் திறந்து வைக்கவில்லை.

எல்லா நாடுகளிலும் எல்லா மதத்தினரும் விவாகரத்துச் செய்கின்றனர். அந்தச் சட்டங்களை விட பெண்களுக்கு அதிக நன்மை இஸ்லாம் கூறும் தலாக் சட்டத்தில் தான் உள்ளது.

இந்த நேரத்தில் முத்தலாக் என்பதற்கும் மூன்று தலாக் என்பதற்கும் உள்ள வேறுபாட்டையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

முத்தலாக் – ஒரு விளக்கம்:

தலாக் கூறுவதற்கு இஸ்லாம் மூன்று வாய்ப்புகளை ஆண்களுக்கு வழங்கியுள்ளது. இதை அறியாத சில முஸ்லிம்கள் ஒரே சமயத்தில் தலாக், தலாக், தலாக் என்று கூறுகின்றனர். அல்லது முத்தலாக் என்று கூறுகின்றனர். இப்படிக் கூறிவிட்டதால் மூன்று தலாக்கும் முடிந்து விட்டது என்றும், இனிமேல் மனைவியுடன் சேர வழியில்லை என்றும் கருதுகின்றனர்.

மார்க்க அறிவு குறைந்த மதகுருமார்கள் சிலரும் இப்படி மார்க்கத் தீர்ப்பு வழங்கி நிரந்தரமாகப் பிரித்து விடுகின்றனர்.

இது இஸ்லாம் அனுமதிக்காத வழக்கமாகும்.

தலாக் என்றால் விடுவித்தல் என்பது பொருள். மூன்று தடவை விடுவித்தல் என்றால் மூன்று தடவை அது நிகழ வேண்டும். மூன்று என்ற வார்த்தையால் மூன்று தடவை நிகழ்ந்ததாக ஆகாது.

ஒரு மனிதன் ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறான். அவனை அந்த நிறுவனத்தின் உரிமையாளர் வேலையை விட்டு நீக்குகிறார். அப்படி நீக்கும் போது உன்னை நீக்கி விட்டேன்; உன்னை நீக்கி விட்டேன்; உன்னை நீக்கி விட்டேன் என்று மூன்று தடவை கூறுகிறார். இப்படிக் கூறியதால் மூன்று தடவை நீக்கியதாக ஆகுமா? லட்சம் தடவை இச்சொல்லை அவன் சொன்னாலும் ஒரு தடவை நீக்கியதாகத் தான் அர்த்தம். மூன்று தடவை உன்னை நீக்கி விட்டேன் என்று சொன்னாலும் ஒரு தடவை நீக்கியதாகத் தான் பொருள்.

வேலையை விட்டு நீக்கி, பின்னர் மீண்டும் சேர்த்து, பின்னர் மீண்டும் நீக்கி, பின்னர் சேர்த்து பின்னர் நீக்கினால் தான் மூன்று தடவை நீக்கியதாக ஆகும்.

ஒருவன் ஒரு தலாக் சொன்னவுடன் அவள் அவனுக்கு மனைவியாக இருக்க மாட்டாள். அதன்பின் சொன்ன தலாக் மனைவியல்லாதவளுக்குச் சொன்னதாகத்தான் ஆகும். மீண்டும் சேர்த்துக் கொள்ளாமல் அடுத்த தலாக் கூறுதல் அறிவீனமாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இப்படி சிலர் சொன்ன போது அது ஒரு தலாக் என்றே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்துள்ளார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் மூன்று தலாக் கூறுவது ஒரு தலாக்காகவே கருதப்பட்டது.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 2689, 2690, 2691

மூன்று தலாக் என்று ஒருவன் கூறினால் இஸ்லாம் அவனுக்கு வழங்கிய மூன்று வாய்ப்புகளில் ஒரு வாய்ப்பைத் தான் பயன்படுத்தியுள்ளான்.

குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் அவன் அவளுடன் சேரலாம். காலம் கடந்து விட்டால் மீண்டும் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம். இதன் பிறகு மேலும் இரண்டு தடவை விவாகரத்துக் கூறும் உரிமை அவனுக்கு உள்ளது.

மூன்று தலாக் என்ற சொல்லைப் பயன்படுத்தி விட்டால் இனி மனைவியுடன் சேரவே முடியாது என்று சிலர் கருதுவது தான் மற்றவர்களால் அதிகம் விமர்சிக்கப்படுகிறது. முஸ்லிம்கள் இஸ்லாத்தில் இல்லாத இந்த நம்பிக்கையை விட்டொழிக்க வேண்டும்.

மூன்று தலாக் இஸ்லாத்தில் உள்ளது. முத்தலாக் இஸ்லாத்தில் இல்லை என்பதை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பெண்களின் விவாகரத்து உரிமை:-

ஆண்களுக்கு இருப்பது போல் விவாகரத்துச் செய்யும் உரிமை பெண்களுக்கு இஸ்லாத்தில் இல்லை என்று முஸ்லிமல்லாதார் தவறாகக் கருதிக் கொண்டுள்ளனர். பெண்களுக்கும் அந்த உரிமை வழங்கப்பட்டுள்ளது என்பதை அறியாததால் தான் அவர்கள் இவ்வாறு கருதுகின்றனர். விவாகரத்துச் செய்யும் முறையில் தான் இருவருக்குமிடையே வித்தியாசங்கள் உள்ளனவே தவிர உரிமையில் வித்தியாசம் ஏதுமில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஸாபித் பின் கைஸ் என்பாரின் மனைவி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! எனது கணவரின் நன்னடத்தையையோ, நற்குணத்தையோ நான் குறை கூற மாட்டேன். ஆனாலும் இஸ்லாத்தில் இருந்து கொண்டே (இறைவனுக்கு) மாறு செய்வதை நான் வெறுக்கிறேன்' என்றார். (அதாவது கணவர் நல்லவராக இருந்தாலும் அவருடன் இணைந்து வாழத் தனக்கு விருப்பமில்லை என்கிறார்) உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'அப்படியானால் (அவர் உனக்கு மஹராக வழங்கிய) அவரது தோட்டத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறாயா?' என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி 'சரி' என்றார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரது கணவரிடம் 'தோட்டத்தைப் பெற்றுக் கொண்டு அவளை ஒரேயடியாக விடுவித்து விடு' என்றார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி 5273, 5277

மேற்கண்ட செய்தியிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலிருந்த நடைமுறையை அறியலாம்.

ஒரு பெண்ணுக்கு கணவனைப் பிடிக்காவிட்டால் அவள் சமுதாயத் தலைவரிடம் முறையிட வேண்டும். அந்தத் தலைவர், அவள் கணவனிடமிருந்து பெற்றிருந்த மஹர் தொகையைத் திரும்பக் கொடுக்குமாறும் அந்த மஹர் தொகையைப் பெற்றுக் கொண்டு கணவன் அவளை விட்டு விலகுமாறும் கட்டளையிட வேண்டும்; திருமணத்தையும் ரத்துச் செய்ய வேண்டும் என்பதை இந்தச் செய்தியிலிருந்து அறியலாம்.

பெண்கள் தாமாகவே விவாக ஒப்பந்தத்தை முறித்து விடாமல் தலைவர் முன்னிலையில் முறையிடுவது அவசியமாகின்றது. ஏனெனில் பெண்கள் கணவர்களிடமிருந்து ஊரறிய மஹர் தொகை பெற்றிருப்பதாலும், அதைத் திரும்பவும் கணவனிடம் ஊரறிய ஒப்படைக்க வேண்டும் என்பதாலும் இந்த நிபந்தனை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் விவாகரத்துப் பெற்ற பின்னால் அதிகச் சிரமத்துக்கு பெண்களே ஆளாவதால் அத்தகைய முடிவுக்கு அவர்கள் அவசரப்பட்டு வந்து விடக் கூடாது என்பதற்காகவும் இந்த ஏற்பாடு அவசியமாகின்றது. சமுதாயத் தலைவர் அவளுக்கு நற்போதனை செய்ய வழி ஏற்படுகின்றது. இதனால் சமுதாயத் தலைவரிடம் தெரிவித்து விட்டு அவர் மூலமாகப் பிரிந்து கொள்வதே அவளுக்குச் சிறந்ததாகும்.

பெண்கள் விவாகரத்துப் பெற இதை விட எளிமையான வழி உலகில் எங்குமே இல்லை. இந்த இருபதாம் நூற்றாண்டில் கூட வழங்கப்படாத உரிமையை இஸ்லாம் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு வழங்கி விட்டது.

இவ்வாறு பெண்கள் விவாக விடுதலை பெற மிகப் பெரிய காரணம் ஏதும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலே கண்ட செய்தியில் அப்பெண்மணி கணவர் மீது எந்தக் குறையையும் கூறவில்லை. தனக்குப் பிடிக்கவில்லை என்றே கூறுகிறார். அதற்கு என்ன காரணம் என்று கூட நபியவர்கள் கேட்கவில்லை. காரணம் கூறுவது முக்கியம் என்றிருந்தால் நபியவர்கள் கட்டாயம் அதைப் பற்றி விசாரித்திருப்பார்கள். அவர்கள் ஏதும் விசாரிக்காமலேயே விவாகரத்து வழங்கியதிலிருந்து இதை உணரலாம்.

குடிகாரக் கணவனை, கொடுமைக்கார கணவனைப் பிடிக்காதவர்கள் மட்டுமின்றி எவ்விதக் காரணமுமின்றி கணவனைப் பிடிக்காவிட்டால் கூட கணவனைப் பிரியலாம் என்பதையும் மேற்கண்ட சம்பவம் தெளிவுபடுத்துகின்றது.

இஸ்லாம் திருமணத்தைப் பிரிக்க முடியாத பந்தமாகக் கருதவில்லை. மாறாக வாழ்க்கை ஒப்பந்தமாகவே அதைக் கருதுகிறது.

இதைத் திருக்குர்ஆன் 'உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை அவர்கள் எடுத்து, நீங்கள் ஒருவர் மற்றவருடன் இரண்டறக் கலந்திருக்கும் நிலையில் எப்படி நீங்கள் அதைப் பிடுங்கிக் கொள்ள முடியும்?' (4:21) என்றும்

பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. (2:228) என்றும் கூறுகிறது.

பெண்களுக்கு விவாகரத்துச் செய்யும் உரிமை வழங்கப்படாவிட்டால் அதனாலும் பல தீய விளைவுகள் ஏற்படும்; ஏற்படுகின்றன.

கணவனைப் பிடிக்காத பெண்கள் விவாகரத்துச் சட்டம் கடுமையாக இருப்பதால் கணவரையே கொலை செய்யும் நிகழ்ச்சிகள் அதிகமாகி வருகின்றன.

பெண்கள் ஸ்டவ் வெடித்துச் செத்தால், விஷம் கொடுக்கப்பட்டு கணவர்கள் கொல்லப்படுகிறார்கள். நன்றாகத் தான் படுத்தார். காலையில் பிணமாகி விட்டார் என்று கூறப்படுவதில் கனிசமானவை மனைவியரால் செய்யப்படும் கொலைகளாகும். சமையல் அவர்கள் கையில் இருப்பதால் எளிதாகக் கதையை முடிக்கிறார்கள்.

அல்லது கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை வெட்டிக் கொலை செய்கின்றனர். கணவனிடமிருந்து எளிதாக விவாகரத்துப் பெற்று, தனக்கு விருப்பமானவனைச் சட்டப்படி மணந்து கொள்ள எளிமையான வழியிருந்தால் இது போன்ற கொடூரம் நடைபெறாது.

எனவே தான் ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்கும் விவாகரத்துச் சட்டத்தை இஸ்லாம் மிக மிக எளிமையாக்கியுள்ளது.

ஆண்களுக்கு வழங்கப்பட்ட உரிமைக்குச் சற்றும் குறைவில்லாத வகையில் இஸ்லாம் பெண்களுக்கும் உரிமை வழங்கியுள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்.

ஜீவனாம்சம்

'விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு இஸ்லாத்தில் ஜீவனாம்சம் வழங்கப்படுவதில்லை' என்பதும் முஸ்லிமல்லாதாரால் அதிகமாக விமர்சனம் செய்யப்படும் விஷயமாகும்.

ஷாபானு வழக்கின் போது தான் இந்தியாவின் அனைத்துப் பத்திரிகைகளும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு இஸ்லாத்தைக் குறை கூறின என்பதில்லை. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம், இஸ்லாத்தை விமர்சிக்க விரும்பும் போதெல்லாம் இந்தப் பிரச்சனையை அவர்கள் குறிப்பிடத் தவறுவது கிடையாது.

ஜீவனாம்சம் வழங்குவது அவசியம் என்போர் அதை நியாயப்படுத்துவதற்கு கூறும் காரணங்களைக் காண்போம்.'

இல்லற வாழ்வில் அதிகமான சிரமத்துக்கும், இழப்புக்கும் ஆளாகுபவள் பெண் தான். ஒரு ஆணுடன் சிறிது காலம் அவள் இல்லறம் நடத்துவதால் தனது அழகையும், இளமையையும் இழந்து விடுகிறாள். இந்த நிலையில் அவள் விவாகரத்துச் செய்யப்பட்டால் அவளது எதிர்காலம் என்னாவது? எனவே அவளது எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தான் விவாகரத்து செய்த கணவன் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்கிறோம்'. ஜீவனாம்சத்தை நியாயப்படுத்துவோர் கூறும் காரணம் இது தான்.

'ஆணுக்குப் பெண் சரிநிகர் சமம்' என்று கூறுவோரும் இவ்வாறு கூறுவது தான் இதில் வேடிக்கை. இவ்வாறு கூறுவது தங்கள் கொள்கைக்கே எதிரானது என்பதை ஏனோ இவர்கள் உணரவில்லை.

இருவரும் இல்லறத்தில் ஈடுபட்டு இருவரும் பிரிகிறார்கள் என்றால் கணவன் மட்டும் மனைவிக்கு ஜீவனாம்சம் ஏன் கொடுக்க வேண்டும்? இருவருமே எதையும் கொடுக்க வேண்டியதில்லை என்றல்லவா சமத்துவம் பேசுவோர் கூற வேண்டும்.

கூறுபவர்களுக்குத் தகுதி இல்லை என்றாலும் இந்தக் கூற்றில் உள்ள நியாயத்தை மட்டும் அலசுவோம்.

இந்த நியாயமான காரணத்தை மனிதாபிமானமுள்ள எவரும் மறுக்க முடியாது. இல்லற வாழ்வில் ஒரு பெண் அதிக சிரமத்தை அடைவார் என்பதும், அதிகமாக இழப்பு அவளுக்குத் தான் என்பதும், பெண்ணின் எதிர்காலம் கேள்விக் குறியாகும் என்பதும் உண்மை. இந்தக் காரணத்தை மாற்றார் மட்டுமின்றி எந்த முஸ்லிமும் மறுப்பது கிடையாது.

காரணம் உண்மை என்றாலும் அந்தக் காரணத்துக்காகக் கண்டுபிடிக்கப்பட்ட தீர்வு சரியில்லை என்பதே முஸ்லிம்களின் வாதம். அதாவது மேற்கண்ட காரணத்தினால் அந்தப் பெண்ணுக்கு ஜீவனாம்சம் வழங்கச் சொல்வது சரியான பரிகாரமாகாது. ஏனெனில் இவர்கள் நியாயப்படுத்துகின்ற ஜீவனாம்சம் அந்தக் காரணத்தைக் களைய உதவவில்லை என்பதுடன் வேறு மோசமான விளைவையும் ஏற்படுத்தி விடுகின்றது.

ஒருவன் விவாகரத்துச் செய்யும் போது அவனிடம் எந்த விதமான வசதியும் கிடையாது என்று வைத்துக் கொள்வோம்.

இந்த நிலையில் ஜீவனாம்சம் வழங்குமாறு எந்த நீதிமன்றமும் உத்தரவிடாது. அப்படியே உத்தரவிட்டாலும் அவனால் அதை நிறைவேற்ற முடியாது. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றத் தவறியதற்காக அவனைக் கைது செய்ய முடியுமே தவிர விவாகரத்துச் செய்யப்பட்டவளுக்கு எதையும் அவனிடமிருந்து பெற்றுத் தர முடியாது.

இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் ஏழைகளாகவே உள்ளனர் என்பதைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது விவாகரத்துச் செய்யப்படும் பெரும்பாலான பெண்களுக்கு ஜீவனாம்சம் கிடைக்க வழியில்லை; இவர்களைப் பொருத்த வரை ஜீவனாம்சம் என்பது ஏட்டுச் சுரைக்காய் தான்.

வசதியுள்ளவர்கள் விஷயத்திலாவது நியாயம் வழங்கலாமே என்று கேட்கலாம். இரண்டு காரணங்களால் இந்தக் கேள்வியும் அர்த்தமற்றுப் போகின்றது.

விவாகரத்துச் செய்தவன் வசதி மிக்கவன் என்றே வைத்துக் கொள்வோம். ஜீவனாம்சம் கொடுக்க முடியாது என்று அவன் முடிவு செய்து விட்டால் அதைக் கொடுக்காமலிருக்க அவனால் முடியும்.

தன்னிடம் எவ்வளவு தான் வசதிகள் இருந்தாலும் எந்த வசதியுமே தன்னிடம் இல்லை என்று கூறிப் பொய்யான சான்றுகளை அவனால் தயாரிக்க முடியும். ஆயிரக்கணக்கான அதிகாரிகளைக் கொண்ட அரசாங்கத்திற்குச் சேர வேண்டிய வரிகளையே ஏய்த்து ஏப்பம் விடுவோர், ஒரு அபலையை ஏமாற்றுவது பெரிய காரியம் அல்ல. வசதியுள்ளவர்கள் தாமாக மனது வைத்தால் தான் ஜீவனாம்சம் கிடைக்க வழி உண்டு. இல்லையெனில் இவர்கள் விஷயத்திலும் சட்டம் ஏட்டுச் சுரைக்காய் தான். இது முதலாவது காரணம்.

பொருளாதாரத் தகுதியை அடிப்படையாகக் கொண்டே பெரும்பாலும் திருமணங்கள் நடக்கின்றன. ஏழைப் பெண்களுக்கு ஏழை ஆண்களும், வசதி மிக்க பெண்களுக்கு வசதி மிக்க ஆண்களும் தான் வாழ்க்கைத் துணைவர்களாகின்றனர். இதில் ஒன்றிரண்டு விதி விலக்குகள் இருக்கலாம். ஆயினும் பொதுவான நிலைமை இது தான்.

வசதியான ஆடவனை மணந்தவள் – அதாவது வசதியான பெண்மணி- அவனிடமிருந்து கிடைக்கும் ஜீவனாம்சத்தை எதிர்பார்த்து வாழும் நிலையிலிருக்க மாட்டாள். அவளைப் பொருத்தவரை இந்த ஜீவனாம்சம் தேவையில்லாத ஒன்று. வசதியற்றவனை மணந்தவளுக்கு – அதாவது ஏழைப் பெண்ணுக்கு – ஜீவனாம்சம் தேவை என்றாலும் அவளது கணவன் அதைக் கொடுக்க முடியாதவனாக இருக்கிறான்.

யாருக்குத் தேவையில்லையோ அவளுக்குக் கிடைக்க வாய்ப்புள்ளது; யாருக்குத் தேவையோ அவளுக்குக் கிடைக்க வழியில்லை. இது இரண்டாவது காரணம். ஆக மொத்ததில் ஜீவனாம்சம் என்பது நடைமுறைப்படுத்த சிரமமானதாகவும் எந்தக் காரணத்துக்காக அது நியாயப் படுத்தப்படுகின்றதோ அந்தக் காரணத்தைக் களைய உதவாததாகவும் உள்ளது.

ஜீவனாம்சம் வாங்கித் தருவதாக சில வழக்கறிஞர்கள் பெண்களைத் தூண்டி விட்டு ஜீவனாம்சத்தை விட அதிகமாகவே அவர்களிடம் கறந்து விடுவதையும் நாம் காண்கிறோம்.

நீதிமன்றத் தீர்ப்பைப் பெற்ற பிறகும் ஜீவனாம்சம் பெற முடியாமல் நீதி மன்றத்துக்கு மீண்டும் மீண்டும் அலைபவர்களையும் பார்க்கிறோம்.

ஒரு சில ஆண்கள் நீதிமன்றத்தில் அற்பமான ஜீவனாம்சத் தொகையைச் செலுத்துகின்றனர். அதை மாதா மாதம் நீதிமன்றத்தில் வந்து பெறுவதற்காக பயணச் செலவு, நீதிமன்ற அலுவலர்களுக்கு லஞ்சம் என்றெல்லாம் கழித்துப் பார்த்தால் ஒன்றுமே பெண்களுக்கு மிச்சமாவதில்லை என்பதையும் கண்கூடாகக் காண்கிறோம்.

இந்த ஜீவனாம்சத்தினால் அரைக் காசுக்கு பயனில்லை என்று தெரிந்து கொண்டே தான் இது சிறப்பான தீர்வு' என்று கூறி தங்களைத் தாங்களே சிலர் ஏமாற்றிக் கொள்கிறார்கள்.

இவற்றையெல்லாம் கடந்து, முறையாக ஜீவனாம்சம் கிடைக்கிறது என்று ஒரு வாதத்துக்காக வைத்துக் கொள்வோம். அப்போது வேறொரு மோசமான விளைவு ஏற்படக் கூடும்.

விவாகரத்துச் செய்யப்பட்டவள் மரணிக்கும் வரை அல்லது அவள் மறுமணம் செய்யும் வரை ஜீவனாம்சம் கொடுக்கப்பட வேண்டும்.'

சட்டம் இப்படித் தான் கூறுகிறது.

முன்னர் நாம் குறிப்பிட்ட இடையூறுகளைக் கடந்து விவாகரத்துச் செய்யப்பட்ட அனைவருக்கும் ஜீவனாம்சம் கிடைப்பது உறுதி செய்யப்படும் போது ஏற்படும் விளைவுகளைப் பார்ப்போம்.

திருமணம் செய்து கொள்வதால் கணவனுக்குப் பணிவிடை செய்ய வேண்டும்; கணவனின் குடும்பத்திற்கும் பணிவிடை செய்ய வேண்டும்; ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருந்தாக வேண்டும் என்பதையெல்லாம் விவாகரத்துச் செய்யப்பட்டவள் அனுபவப்பூர்வமாக உணர்ந்து இருக்கிறாள்.

மறுமணம் செய்யும் வரை ஜீவனாம்சம் கிடைத்து விடும் என்ற நிலை இருந்தால் மறுமணம் செய்யும் முடிவுக்கு அவள் வரமாட்டாள். பழைய கணவனிடமிருந்து தொடர்ந்து ஜீவனாம்சம் பெறுவதையே தேர்வு செய்வாள்; சுதந்திரப் பறவையாகத் திரிவதையே அவள் விரும்பி வரவேற்பாள்.

வயிற்றுப் பசியைப் பொறுத்த வரை அவளுக்குக் கவலையில்லை. அவளுடைய உணர்ச்சிகள் என்னாவது? ஒரு முறை நடைபெற்ற திருமணத்தால் கணவனுடன் பிணக்கேற்பட்டுத் அதனால் மனம் புண்பட்ட இவள் திருமணமில்லாத வழிகளில் தான் உணர்ச்சிகளைத் தீர்க்க முயல்வாள்.

இன்னொருவனுக்குச் சுகமளித்து விட்டுப் பழைய கணவனிடம் ஜீவனாம்சம் எதிர்பார்ப்பது என்ன நியாயம்? திட்டவட்டமாக ஜீவனாம்சம் கிடைத்து விடும் என்ற நிலையில் இந்த விளைவு ஏற்படுவதைத் தடுக்க முடியாது.

விவாகரத்துச் செய்யப்பட்ட அனைத்துப் பெண்களும் இப்படி நடப்பார்கள் என்று நாம் கூறவில்லை. கணிசமானவர்கள் இப்படி நடக்க ஆரம்பிப்பார்கள். மற்றவர்களுக்கும் இந்த எண்ணம் நாளடைவில் பரவி விடும் என்றே கூறுகிறோம்.

இந்தப் பெண்களின் நிலைக்குப் பரிகாரம் தான் என்ன? இந்த ஜீவனாம்ச முறை குறைபாடு உடையது என்றால் குறைபாடு இல்லாத மாற்று வழி தான் என்ன? அந்தப் பெண்களின் எதிர்காலம் என்னாவது? என்ற கேள்விகளுக்கு இஸ்லாத்தின் விடை என்ன?

விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு மூன்று வகையான பாதுகாப்பை இஸ்லாம் ஏற்படுத்துகின்றது.

முதல் பாதுகாப்பு

ஒன்று, திருமணத்தின் போது கணிசமான தொகையை மஹராகப் பெற்று அவள் தனது பொறுப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்.

திருமணத்தின் பின் கணவனால் கைவிடப்படும் நிலையும் ஏற்படலாம் என்பதைப் பெண்கள் உணர்ந்து முன் கூட்டியே ஜீவனாம்சத் தொகையை மொத்தமாக வாங்கிக் கொள்ளுமாறும், ஆண்கள் அதைக் கொடுத்து விடுமாறும் இஸ்லாம் வழி காட்டுகின்றது.

பெண்கள் எவ்வளவு வேண்டுமானாலும் மஹராகக் கேட்கலாம் எனவும், அந்தப் பணத்தில் அவளைத் தவிர எவருக்கும் உரிமையில்லை எனவும் இஸ்லாம் வரையறுத்துள்ளது.

அரபு நாடுகளில் இன்றும் கூட திருமணத்தின் போது பெண்கள் இலட்சக் கணக்கில் மஹர் தொகை கேட்கிறார்கள்.

திருமணத்தின் போதே இப்படி மஹர் வாங்கிக் கொள்ளும் போது வசதியில்லை என்று கூறி கணவன் ஏமாற்றவும் இடமில்லை. தவறான வழியை மனைவி தேர்வு செய்யவும் இடமில்லை.

மறுமணம் செய்தாலும், செய்யாவிட்டாலும் பழைய கணவனிடமிருந்து தனக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை என்பதால் அவள் மறுமணத்தையே தேர்வு செய்வாள். அதனால் அவளுக்கு மீண்டும் ஒரு முறை மஹர் கிடைக்கின்றது. அவளுடைய வாழ்க்கைச் செலவுக்கும் புதிய கணவன் பொறுப்பேற்றுக் கொள்கிறான்.

இன்றைய இந்திய முஸ்லிம்கள் இதைப் பேணத் தவறி விட்டனர்; பெண்களிடம் வரதட்சணைக் கேட்கும் பழக்கத்திற்கு ஆளாகிவிட்டனர் என்பதால் இஸ்லாத்தைக் குறை கூற முடியாது; அறிவுடையோர் அவ்வாறு கூற மாட்டார்கள்.

இரண்டாவது பாதுகாப்பு

'விவாகரத்துச் செய்தவுடன் கணவனின் பொருளாதார வசதியைக் கவனித்து பெருந்தொகையை, சொத்தை அவளுக்கு ஜமாஅத்தினரோ அல்லது இஸ்லாமிய அரசோ வாங்கிக் கொடுக்க வேண்டும்' என்பது விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு இஸ்லாம் ஏற்படுத்திய இரண்டாவது பாதுகாப்பாகும்.

திருக்குர்ஆன் 2:241 வசனம் இதைத் தான் கூறுகிறது.

விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு நல்ல முறையில் வசதிகள் அளிக்கப்பட வேண்டும். (இறைவனை) அஞ்சுவோருக்கு இது கடமை.

திருக்குர்ஆன் 2:241

இவ்வசனத்தின் ஒவ்வொரு சொல்லும் ஆழமாகக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.

விவாகரத்தின் போது நியாயமான பாதுகாப்புத் தொகையை கணவனிடமிருந்து ஜமாஅத்தார் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று இஸ்லாத்தின் சட்டம் தெளிவாகக் கூறுகிறது.

ஆயினும் முஸ்லிம்களில் உள்ள சில அறிவீனர்கள் திருக்குர்ஆனின் மேற்கண்ட கட்டளைக்கு தவறான சுய விளக்கம் கொடுத்து பெண்களுக்கு வழங்க வேண்டிய பாதுகாப்பு தொகையை வழங்க மறுக்கின்றனர்.

அதாவது இத்தா காலத்துக்கு, அதாவது மூன்று மாத காலத்துக்கு ஜீவனாம்சம் வழங்குவதையே 2:241 வசனம் குறிக்கிறது என்று அவர்கள் நினைக்கின்றனர்.

இவர்கள் கூறும் கருத்தை இவ்வசனம் தரவில்லை. அழகிய முறையில், நியாயமான முறையில் வழங்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான்.

ஒரு பெண்ணுடன் வாழ்ந்து அவளது இளமையை அனுபவித்து விட்டு மூன்று மாதம் செலவுக்குப் பணம் கொடுப்பது அழகிய முறையாகவோ, நியாயமான முறையாகவோ இருக்காது.

தனது மகளுக்கு இப்படி நேர்ந்தால் எது நியாயமானதாகப் படுகிறதோ அது தான் நியாயமானது.

திருக்குர்ஆன் 2:236 வசனம் கூறுவதை இதற்கு அளவு கோலாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

அவர்களைத் தீண்டாத நிலையிலோ, அவர்களுக்கென மஹர் தொகையை முடிவு செய்யாத நிலையிலோ விவாகரத்துச் செய்வது உங்களுக்குக் குற்றமில்லை. வசதி உள்ளவர் தமக்குத் தக்கவாறும் ஏழை தமக்குத் தக்கவாறும் சிறந்த முறையில் அவர்களுக்கு வசதிகள் அளியுங்கள்!

திருக்குர்ஆன் 2:236

மனைவியைத் தீண்டாமல் விவாகரத்துச் செய்தவர் தமது வசதிக்குத் தக்கவாறு பெண்களுக்கு வசதிகள் அளிக்குமாறு இவ்வசனம் கூறுகிறது.

மனைவியைத் தீண்டி அனுபவித்தவர் விவாகரத்துச் செய்யும் போது இதையே அடிப்படையாகக் கொள்வது தான் பொருத்தமானது.

விவாகரத்துச் செய்தவன் வசதியுள்ளவனாக இருந்தால் அவனது வசதிக்கேற்ப கோடிகளைப் பெற்றுத் தரும் பொறுப்பும், சில ஆயிரங்கள் தான் அவனால் கொடுக்க இயலும் என்றால் அதைப் பெற்றுத் தரும் பொறுப்பும் ஜமாஅத்துகளுக்கு உண்டு. இறைவனை அஞ்சுவோருக்கு இது கட்டாயக் கடமையாகும்.

விவாகரத்துக்குப் பின் பெண் வீட்டாரிடமிருந்து கணவன் வீட்டார் வாங்கிய வரதட்சணையை மட்டும் தான் சில ஜமாஅத்தினர் பெற்றுத் தருகிறார்கள். அது உண்மையில் அவளுக்குச் சேர வேண்டியது தான். அதை வாங்கிக் கொடுப்பதுடன் இழப்பீட்டுத் தொகையையும் வாங்கிக் கொடுப்பது அவசியமாகும்.

முஸ்லிம் சமுதாயம் இந்த இறைக் கட்டளையை நடைமுறைப்படுத்தாத காரணத்தால் தான் முஸ்லிம்கள் பல விதமான விமர்சனங்களைச் சந்திக்கின்றனர். இஸ்லாத்திற்கு எதிரான பிரச்சாரத்துக்கும் இது பயன்படுத்தப்படுகிறது. போலி ஜீவனாம்சத்தை முஸ்லிம்கள் மீதும் திணிக்க முயற்சிக்கப்படுகிறது.

எனவே ஜமாஅத்தினர் இவ்வசனத்தின் ஒவ்வொரு சொல்லையும் கவனித்து அல்லாஹ்வுக்கு அஞ்சி பெண்களுக்கு நியாயம் வழங்க வேண்டும்.

திருக்குர்ஆன் 65:6 வசனத்தில் கர்ப்பிணிகளாக இருந்தால் பிரசவிக்கும் வரை செலவு செய்யுமாறு கூறப்பட்டுள்ளது. இதனால் இத்தா காலம் வரை தான் ஏதும் கொடுக்க வேண்டும் என்று சிலர் விளக்கம் கூறுகின்றனர்.

அவனது கருவை அவள் சுமந்திருப்பதால் அதற்காக மேலதிகமாக அவன் செய்ய வேண்டிய செலவைத் தான் இவ்வசனம் கூறுகிறது. அதைக் காரணம் காட்டி திருக்குர்ஆன் 2:241 வசனத்தில் கூறப்படும் கட்டளையைப் புறக்கணிக்க முடியாது.

விவாகரத்துச் செய்யப்பட்டவள் விவாகரத்துச் செய்த கணவன் மூலம் குழந்தைகளைப் பெற்றிருந்தால் அந்தக் குழந்தைகள் தாயிடமே வளர்ந்து வந்தாலும் அவர்களுக்கான முழுச் செலவையும் தந்தையே ஏற்க வேண்டும். கைக்குழந்தையாக இருந்தால் அக்குழந்தைக்குப் பாலூட்டுவதற்காகவும் கூட அக்குழந்தையின் தந்தை உரிய தொகை கொடுத்து வர வேண்டும் என்றும் குர்ஆன் கட்டளையிடுகிறது.

பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாகரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும். அவர்களுக்கு நல்ல முறையில் உணவும், உடையும் வழங்குவது குழந்தையின் தந்தைக்குக் கடமை. சக்திக்கு உட்பட்டே தவிர எவரும் சிரமம் தரப்பட மாட்டார். பெற்றவள் தனது பிள்ளையின் காரணமாகவோ, தந்தை தனது பிள்ளையின் காரணமாகவோ சிரமம் கொடுக்கப்பட மாட்டார்கள். (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அவரது வாரிசுக்கு இது போன்ற கடமை உண்டு. இருவரும் ஆலோசனை செய்து மனம் விரும்பி பாலூட்டுவதை நிறுத்த முடிவு செய்தால் இருவர் மீதும் எந்தக் குற்றமும் இல்லை. உங்கள் குழந்தைகளுக்கு (வேறு பெண் மூலம்) பாலூட்ட வேண்டும் என நீங்கள் விரும்பினால் (பெற்றவளுக்குக்) கொடுக்க வேண்டியதை நல்ல முறையில் கொடுத்து விட்டால் உங்கள் மீது எந்தக் குற்றமுமில்லை. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

திருக்குர்ஆன்: 2:233

மூன்றாவது பாதுகாப்பு

இது தவிர மற்றொரு பாதுகாப்பையும் விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு இஸ்லாம் ஏற்படுத்தியுள்ளது. விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு குழந்தைகள் ஏதும் இல்லாவிட்டால் அவர்களுக்கு அதிகமான பாதிப்புகள் ஏற்படுவதில்லை.

அவர்களுக்குக் குழந்தைகள் இருந்தால் பிள்ளைப் பாசம் காரணமாக தம்முடனே குழந்தைகளை வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். இதனால் அவர்கள் மிகுந்த சிரமங்களைச் சந்திக்க வேண்டிய நிலமை ஏற்படுகிறது. இதையும் இஸ்லாம் கவனத்தில் கொள்கிறது.

தான் பெற்ற பிள்ளைகளுக்குப் பாலூட்டினால் கூட அதற்கான கட்டணத்தைக் கணவனிடமிருந்து பெறலாம் என்று இவ்வசனம் கூறுகிறது. பாலூட்டுவதற்காக அவளுக்கு எந்த விதப் பொருளாதாரச் செலவும் ஏற்படுவதில்லை. அது இயற்கையாகவே இறைவன் வழங்கிய அருட்கொடையாகும்.

நியாயமான முறையில் கணவனிடமிருந்து தேவையான தொகையைப் பெறலாம் என்றால் குழந்தைகளுக்கான மற்ற செலவுகளும் தந்தையையே சேரும் என்பதில் சந்தேகம் இல்லை.

எனவே குழந்தைகள் தாயிடம் வளர்ந்தாலும் அவர்களுக்கான உணவு, உடை மற்றும் குழந்தைகளின் மருத்துவம் உள்ளிட்ட அவசியத் தேவைகளுக்காகவும், தந்தை பொறுப்பேற்க வேண்டும். குழந்தைகளைப் பேணிப் பராமரிப்பதற்கான கூலிக்கும் அவனே பொறுப்பேற்க வேண்டும்.

மேற்கண்ட வசனத்தை சிந்தித்தால் இதை எவரும் விளங்கலாம்.

குழந்தை பெறாத பெண்களும், பெற்றும் வளர்க்க விரும்பாமல் கணவனிடமே தள்ளிவிடக் கூடியவர்களும் தான் இவ்வாறு பெற முடியாது.

எனவே ஜீவனாம்சம் சம்மந்தமாக இஸ்லாம் காட்டிய வழி, உலகில் எங்குமே காண முடியாத சிறப்பான வழி தான். காழ்ப்புணர்வு இன்றிச் சிந்திப்பவர்கள் இதைக் குறை கூற மாட்டார்கள்.

உடலை மறைக்கும் புர்கா

பெண்கள் தங்கள் முகங்களையும், முன் கைகளையும் தவிர மற்ற பாகங்களை அன்னிய ஆடவரிடமிருந்து மறைத்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகின்றது. இது பர்தா, புர்கா, துப்பட்டி என்று குறிப்பிடப்படுகின்றது.

முஸ்லிமல்லாதாரின் விமர்சனத்துக்கு இலக்காகும் பிரச்சனைகளில் இதுவும் முக்கியமானதாகத் திகழ்கின்றது.

புர்கா என்பது பெண்களுக்குக் கூடுதல் சுமையாகவும், அவர்களது உரிமையைப் பறிப்பதாகவும், அவர்களது தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவதாகவும் அமைந்துள்ளது!' என்று முற்போக்குவாதிகளும் அறிவு ஜீவிகளும் கூறுகின்றனர். எப்படியும் வாழலாம் என்று கருதும் பெண்டிரும் இந்தப் போலித் தனமான சுதந்திரத்தில் மயங்கி விடுகின்றனர்.

புர்கா என்பது உண்மையில் பெண்களைக் கௌரவிப்பதற்காகவும், அவர்களின் பாதுகாப்புக்காகவும் ஏற்படுத்தப்பட்டதே தவிர அவர்களது உரிமையைப் பறிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது அன்று.

இது பற்றி விளக்குவதற்கு முன்னால் இவர்களின் போலித்தனத்தையும் இவர்கள் தங்களின் கூற்றுக்குத் தாங்களே முரண்படுவதையும் விளக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

புர்காவை எதிர்ப்பவர்களின் போலித்தனம்

ஹிஜாப் என்பது பெண்களின் சுதந்திரத்தில் தலையிடுவது எனவும், கூடுதல் சுமை எனவும் கூறுவோர் தங்கள் கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்? ஆடை விஷயத்தில் ஆண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதே சுதந்திரத்தை அவர்கள் பெண்களுக்கும் அளிக்க வேண்டும்.

ஆனால் சமத்துவம் பேசும் அவர்கள் அவ்வாறு அளிக்கத் தயாராக இல்லை.

உழைப்பாளியாகிய ஒரு ஆடவன் சட்டை, பனியன் போன்ற மேலாடை எதுவுமின்றி வெறும் அரை நிக்கர் மட்டும் அணிந்து தனது வேலைகளைப் பார்க்கிறான். பலர் முன்னிலையில் இந்தக் கோலத்தில் இருக்கிறான். ஆனால் உழைப்பாளியாகிய பெண் மேலாடை ஏதுமின்றி பணி புரியவோ, பலருக்கும் காட்சி தரவோ அனுமதிக்கப்படுவதில்லை.

தம் மனைவியை, தம் தாயை, தம் சகோதரியைப் பிறர் முன்னிலையில் இந்த அளவு ஆடையுடன் காட்சி அளிக்க முற்போக்குவாதிகள் உட்பட எவரும் அனுமதிப்பதில்லை.

அதுபோல் நடுத்தர அல்லது மேல்தட்டு ஆடவன் மேலாடை ஏதுமின்றி வீட்டிற்குள் குடும்பத்தினர் முன்னிலையில் இருக்கிறான். எல்லா நேரங்களிலும் இவ்வாறு இல்லா விட்டாலும் கடினமான வேலையின் போதும், கடுமையான கோடையின் போதும் இந்தக் கோலத்துடன் இருக்கிறான். ஆனால் அதே வர்க்கத்துப் பெண்கள் இவ்வாறு இருப்பதற்கு அனுமதிக்கப் படுகிறார்களா என்றால் நிச்சயமாக இல்லை.

அன்னிய ஆடவர்கள் முன்னிலையில் மட்டுமின்றிக் குடும்பத்து ஆடவர்கள் முன்னிலையில் கூட இந்த நிலையில் பெண்கள் காட்சி தருவது கிடையாது. ஏன் குடும்பத்துப் பெண்கள் முன்னிலையில் கூட அவ்வாறு காட்சி தர அனுமதிக்கப்படுவது கிடையாது. முற்போக்குவாதிகள் உட்பட எவருமே இதை அனுமதிக்க மாட்டார்கள்.

'ஆண்களை விடப் பெண்களிடம் மறைக்கப்பட வேண்டிய பகுதிகள் கூடுதலாக உள்ளன என்பதை அப்பெண்களும் உணர்ந்துள்ளனர்; ஆண்களும் உணர்ந்து உள்ளனர்' என்பதற்கு இந்த மனநிலை ஆதாரமாக அமைந்துள்ளது.

புர்காவை விமர்சனம் செய்பவர்களிடம் நாம் கேட்கிறோம்; ஆணுக்குப் பெண் சரி நிகர் சமானம் என்பது இப்போது எங்கே போயிற்று? பெண்களின் சுதந்திரம் இப்போது என்னவாயிற்று? முழு அளவுக்கு இல்லையானாலும் ஓரளவுக்கு இவர்களும் புர்காவை வற்புறுத்துகின்றனர் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.

பெண்கள் ஆண்களை விடக் கூடுதலான பாகங்களை மறைக்க வேண்டும் என்பதை தங்களது நடவடிக்கையின் மூலம் இவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். மறைக்கும் அளவு எது என்பதில் தான் நமக்கும் அவர்களுக்குமிடையே கருத்து வேறுபாடு. சரிநிகர் சமானம் என்பதிலோ, பெண்களின் சுதந்திரம் என்பதிலோ அல்ல.

ஏனெனில் அவர்களும் கூட ஆண்களுக்கு இருக்கும் அதே அளவு சுதந்திரத்தை இந்த விஷயத்தில் பெண்களுக்கு வழங்கி விடவில்லை.

புர்கா பெண்களுக்குப் பாதுகாப்பு

இனி ஹிஜாப் எவ்வாறு பெண்களுக்குப் பாதுகாப்பாகவும், அவர்களைக் கவுரவிப்பதாகவும் அமைந்துள்ளது என்பதைக் காண்போம்.

ஆண்கள் பெண்களை ரசிக்கக் கூடியவர்களாகவும், பெண்கள் ஆண்களை ரசிக்கக் கூடியவர்களாகவும் படைக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். ஆயினும் இரு பாலரின் ரசனைகளும் வித்தியாசமானவை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். பெண்களின் நிறம், அழகு, இளமை, அல்லது உறுப்புகளின் திரட்சி ஆகியவையே ஆண்களால் ரசிக்கப்படுகின்றன. இதன் காரணமாகத் தான் குறைந்த ஆடையுடன் அல்லது கவர்ச்சியை வெளிப்படுத்திக் காட்டும் இறுக்கமான ஆடையுடன் பெண்கள் காட்சி தரும் போது அதை ஆண்கள் ரசிக்கின்றனர். திரும்பத் திரும்பப் பார்க்க விரும்புகின்றனர். விதி விலக்காக மிகச் சிலர் இருந்தாலும் பொதுவாக ஆண்களின் இயல்பு இது தான்.

பெண்களின் ரசனை இத்தகையது அன்று. ஆண்களின் உடலுறுப்புக்களின் கவர்ச்சியில் அவர்களின் ரசனை செல்வது கிடையாது. இதன் காரணமாகத் தான் ஆண்கள் எவ்வளவு குறைந்த அளவு ஆடையுடன் காணப்பட்டாலும் பெண்கள் பார்த்து ரசிப்பதில்லை. திரும்பப் பார்க்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவதில்லை.

ஆபாச சினிமாக்கள், புத்தகங்கள் ஆகியவை பெண்களின் நிர்வாணக் கோலத்தை வியாபாரமாக்குவதிலிருந்தும் ஆண்களின் நிர்வாணக் கோலத்தை வியாபாரமாக ஆக்க முடிவதில்லை என்பதிலிருந்தும் இதை அறியலாம்.

ஆண்களும், பெண்களும் கலந்து வாழ்கின்ற இவ்வுலகில் பெண்களின் விருப்பத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அவர்களின் ஆடையைத் தீர்மானிப்பது தவறாகும். இவர்களைப் பார்த்து ரசிக்கின்ற ஆண்களின் மனோ நிலையையும் கருத்தில் கொண்டே அவர்களது ஆடைகள் தீர்மானிக்கப்பட வேண்டும். இரு சாராரும் கற்புடனும், ஒழுக்கத்துடனும் நடந்து கொள்ள இவ்வாறு கவனிப்பது மிக மிக அவசியமாகும்.

அழகான அன்னியப் பெண்ணிடம் எதை எல்லாம் பார்த்து ரசிக்க ஒரு ஆண் விரும்புகிறானோ அவை கண்டிப்பாக மறைக்கப்பட வேண்டும். ஏனெனில் அவளை முழுமையாக ரசிக்கும் உரிமை அவளது கணவனுக்கு மட்டுமே உரியதாகும். மற்றவர்களுக்கு இதில் எந்த உரிமையும் கிடையாது.

பார்ப்பதால் என்ன குறைந்து விடப் போகிறது என்ற கேள்வி தவறாகும். இதனால் ஏற்படக் கூடிய விளைவுகளை அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கவே செய்கிறோம். தம் மனைவியரை விட அதிக அளவு ரசிக்கத் தக்கவளாக ஒருத்தியைக் காண்பவர்களில் பலர் ரசிப்பதோடு நிறுத்திக் கொண்டாலும் சிலர் முறையின்றி அவளை அடையவும், அனுபவிக்கவும் முயல்வர். கற்பழிப்பு, கொலை வரை கூட இவர்கள் சென்று விடுவதைக் காண முடிகின்றது.

இவ்வளவு மோசமாக நடக்காதவர்கள் கூட மனதளவில் அவளது நினைவிலேயே மூழ்கி விடுகின்றனர். தம் மனைவியருடன் ஒப்பிட்டுப் பார்த்து மனைவியின் மேல் உள்ள ஈடுபாட்டைக் குறைத்துக் கொள்கின்றனர்.

ஒழுக்க வாழ்வில், மிகவும் மோசமாக உலகம் பின்னடைந்திருப்பதற்கு முதற் காரணம் பெண்களின் அரைகுறை ஆடைகளும், ஆண்களைச் சுண்டி இழுக்கும் அலங்காரங்களுமே.

பெண்களைப் பார்த்து ஆண்கள் ரசிப்பது போலவே பெண்களும் ஆண்களை ரசிக்கவே செய்கிறார்கள் என்று சிலர் கூறுகின்றனர். இந்த வாதத்தை உண்மையென்று ஒப்புக் கொண்டாலும் கூட புர்காவை மறுப்பதற்கு இவ்வாதம் வலுவானதன்று.

ஏனெனில் ஆண்கள் பெண்களை ரசித்து விட்டுப் பெண்களின் விருப்பமில்லாமலேயே பலவந்தமாக அவர்களை அனுபவித்து விட முடியும். பெண்கள் ஆண்களை ரசிப்பதாகவே வைத்துக் கொண்டாலும் ஆண்கள் விரும்பாத வரை பெண்களால் ஆண்களைப் பலவந்தமாக அனுபவித்து விட முடியாது.

இந்நிலையில் ஒரு ஆண் எவ்வளவு குறைவான ஆடையுடன் இருந்தாலும் அவனுக்குப் பாதிப்பில்லை. ஆனால் அரைகுறையான, கிளர்ச்சியூட்டக் கூடிய ஆடையை அணிந்திருக்கும் ஒரு பெண்ணுக்கு அவளது அரைகுறை ஆடையால் தூண்டப்பட்ட ஆண்களால் பாதிப்புண்டு என்பதில் ஐயமில்லை.

அவளது விருப்பத்திற்கு மாறாகப் பலவந்தமாக அவள் அனுபவிக்கப்படும் போது அவளது உரிமையும், பெண்மையும், தன்மானமும் பாதிக்கப்படுகின்றன. கற்பழித்த குற்றத்துக்காக தண்டிக்கப்படுவோம் என்று அஞ்சும் கயவர்கள் அவளைக் கொன்றும் விடுகின்றனர். ஹிஜாபைக் குறை கூறுவோர் இதைச் சிந்திப்பதில்லை.

பெண்ணுரிமை இயக்கங்களும், முற்போக்கு வாதிகளும் நாட்டில் தினந்தோறும் நடக்கும் கற்பழிப்புக்களையும் பெண்களுக்கெதிரான கொடுமைகளையும் கண்டிக்கின்றனர். 'இச்செயல்களில் ஈடுபடுவோரைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்; அரபு நாட்டுச் சட்டம் இங்கும் வேண்டும்' என்றெல்லாம் கூறுகின்றனர். ஆனால் ஆண்களைத் தூண்டும் வகையில் பெண்களின் உடை அமைந்திருப்பதும் இந்த நிலைக்கு முக்கியமான காரணம் என்பதை மறந்து விடுகின்றனர். காரணத்தை மறந்து விட்டுக் காரியத்தை மட்டும் கண்டிக்கின்றனர்.

பெண்ணுரிமை இயக்கங்களும் முற்போக்குவாதிகளும் ஆபாச சினிமா மற்றும் சுவரொட்டிகளுக்கு எதிராகப் போராடுவதையும், ஆபாச சுவரொட்டிகளைக் கிழிப்பதையும், சாயம் பூசி மறைப்பதையும் நாம் காண்கிறோம். இது எதை உணர்த்துகிறது? பெண்கள் ஆண்களை விட அதிகப்படியாக உடலை மறைக்க வேண்டும் என்பதை இவர்களின் உள் மனது ஒத்துக் கொள்வதை உணர்த்தவில்லையா?

பெண்களை அதிகப்படியான ஆடையணிவித்து மூடி வைப்பது அவர்களின் சுதந்திரத்திலும், உரிமையிலும் குறுக்கிடுவதாகும் என்று முழங்கும் இவர்கள் ஆபாசப் போஸ்டர்களைக் கிழிப்பதும் கண்டிப்பதும் ஏன்?

பெண்ணுரிமையைப் பயன்படுத்தியே அப்பெண் (நடிகை) அப்படிக் காட்சியளிக்கிறாள். அது அவளது சுதந்திரம்; அவளது ஒப்புதலுடன் தான் அக்காட்சி வெளியிடப்படுகிறது எனும் போது இப்படிப்பட்ட காட்சிகளைக் கண்டிப்பதும், கிழிப்பதும் இவர்கள் கூற்றுப்படி அப்பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரத்திலும், உரிமையிலும் தலையிடுவதாகாதா?

பெண்ணுரிமை வெறி முற்றிப் போனது தான் அவள் இப்படி ஆபாசமாகக் காட்சியளிப்பதற்குக் காரணம் என்பதை இவர்கள் மறந்தது ஏனோ?

எனவே இவர்களது கூற்று இவர்களது செயல்களுக்கு முரணாகவே அமைந்துள்ளது. பெண்களின் உடல் மறைக்கப்பட்டாக வேண்டும் என்று இஸ்லாம் கூறுவதையே இவர்களது உள் மனதும் ஒப்புக் கொள்கிறது என்பதை இவர்களது செயல்களே காட்டுகின்றன.

பெண்கள் தம்மை யார் என்று கண்டறிய முடியாத வகையில் முகத்தையும் மறைக்கிறார்களே இது சரியா? இது சரியான செயல் அல்ல.

ஆண்களாயினும், பெண்களாயினும் அவர்களில் இறைவனை அஞ்சி ஒழுக்கமாக வாழ்பவர்கள் மிகக் குறைவே. பெரும்பாலோர் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள முக்கியக் காரணம் தமக்குத் தெரிந்த மனிதர்களிடம் தம் மதிப்பு, பாதிக்கப்படும் என்று அஞ்சுவது தான். இந்த அச்சத்தினாலேயே ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். உள்ளூரில் ஒழுக்கமாக நடப்பவர்கள் வெளியூர்களில் ஒழுக்கம் தவறி விடுவதற்கு இது தான் காரணம்.

முகத்தையும் ஒரு பெண் முழுமையாக மறைத்து விட்டால் அவள் யாரென்று அடையாளம் கண்டு கொள்வது கடினம். தன்னை யாருமே கண்டு கொள்ள மாட்டார்கள் எனும் போது அவள் ஒழுக்கம் தவறுவதற்கான துணிவைப் பெற்று விடுகின்றாள். எந்த ஆணுடன் அவள் தனித்துச் சென்றாலும் அவள் யாரென்று தெரியாததால் அவனுடைய மனைவியாக இருப்பாள் என்று உலகம் எண்ணிக் கொள்ளும். முகத்தையும் மறைத்துக் கொள்ளக் கட்டளையிட்டால் தவறு செய்யத் தூண்டுவதற்கு வழி செய்து கொடுக்கப்பட்டதாகவே ஆகும்.

ஆண்கள் கூட முகமூடி அணிந்து எவரும் கண்டு கொள்ளாத வகையில் ஆடை அணிய அனுமதிக்கப்பட்டால் அவனது சுய ரூபமும் அப்போது வெளிப்படும். இறையச்சம் இல்லா விட்டாலும் சமூகத்தைப் பற்றிய அச்சமாவது ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கத் தூண்ட வேண்டும்.

மேலும் முகத்தையும் மறைக்கக் கட்டளையிட்டால் முஸ்லிம் பெண்கள் மட்டுமின்றி முஸ்லிமல்லாத பெண்களும் கூட தவறு செய்யும் போது முகத்தை மறைத்துக் கொள்ளும் நிலைமை ஏற்படும். அப்படியும் சில பகுதிகளில் நடப்பதை நம்மால் அறிய முடிகின்றது.

பெண்கள் மட்டுமின்றி தவறான செயல்களில் ஈடுபடும் ஆண்கள் கூட பெண்களைப் போல் முகம் மறைத்து பல தவறுகளைச் செய்யக் கூடிய நிலமையும் ஏற்படலாம்.

எனவே தான் முகத்தை மறைக்குமாறு இஸ்லாம் கட்டளையிடவில்லை.

நபித்தோழியர் எவரும் தாங்கள் யார் என்று அடையாளம் தெரியாத வகையில் முகத்தை மறைத்துக் கொண்டதில்லை என்று வரலாற்று நூற்களில் காண்கிறோம்.

கொடுக்கல், வாங்கல் இன்ன பிற அலுவல்களில் ஈடுபடக் கைகள் வெளியே தெரிவது மிகவும் அவசியம். அவற்றையும் மறைத்துக் கொண்டால் எந்தக் காரியத்திலும் பெண்கள் ஈடுபட இயலாத நிலை ஏற்படும். இதனால் தான் மணிக்கட்டு வரை கைகளை மறைத்துக் கொண்டு மற்ற பகுதியை மட்டும் மறைக்காமலிருக்கலாம் என்று இஸ்லாம் அனுமதிக்கின்றது.

இதைத் தவிர மற்ற பாகங்கள் கண்டிப்பாக ஆண்களின் ஒழுக்கத்திற்குச் சவால் விடக் கூடியவை. அப்பாகங்களைத் திறந்து காட்டுவதால் எந்தப் பயனுமில்லை. அன்னியப் பெண்களைத் தடையின்றிப் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற கீழ்த்தரமான ஆசை கொண்டவர்களே பெண்களை அரை நிர்வாணத்துடனும் கால் நிர்வாணத்துடனும் நடைபோட அனுமதி கேட்கின்றனர்.

முகமும், கைகளும் மட்டும் தெரியும் வகையில் ஆடை அணிவது பெண்களின் முன்னேற்றத்துக்கு தடை எனக் கூறுவதும் ஏற்கக்கூடிய வாதமன்று.

இந்த நாட்டிலும், உலகின் பல நாடுகளிலும் பிரதமர்கள், ஜனாதிபதிகள், மாநில முதல்வர்கள் எனப் பல்வேறு பதவிகளை வகிக்கும் ஆண்கள் முகம், கை தவிர மற்ற பகுதிகளை முழுமையாகவே மறைத்துள்ளனர். ஆயினும் அவர்கள் பெரும் பதவிகளை வகிக்க இது தடையாக இருக்கவில்லை.

பெரும் பதவி வகிக்கும் எந்த ஆணும் இடையில் தொப்புள் மட்டும் தெரியும் வகையில் ஆடை அணிவதில்லை. முட்டுக்கால் வரை கவுன் அணிந்து கால்களைக் காட்டிக் கொண்டிருப்பதில்லை.

ஆனால் ஆண்களை விடக் குறைவான அளவு பெண்கள் மறைப்பதைச் சுதந்திரம் என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும்?

அடுத்தவர் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற வக்கிர எண்ணத்திற்கு சுதந்திரம் எனப் பெயர் சூட்டுவதை ஒப்புக்கொள்ள முடியாது.

ஆண்கள் குறைவான அளவு மறைத்தாலும் கேடுகள் ஏற்படாது. அவ்வாறு இருந்தும் ஆண்கள் நிறைவாக ஆடை அணிந்து முன்னேறுகிறார்கள். குறைவான அளவு ஆடையால் அடுத்தவரைப் பாதிக்கும் உடலமைப்பு கொண்ட பெண்கள் நேர்மாறாக நடப்பது தான் வியப்பாகவுள்ளது.

இன்னொன்றையும் இங்கே நாம் சுட்டிக் காட்ட வேண்டும். புர்கா என்பது குறிப்பிட்ட நிறம், மற்றும் வடிவத்திலானது அல்ல. எந்த நிறத்திலும், எந்த வடிவத்திலும் இருக்கலாம். முகம், முன் கை தவிர மற்ற பகுதிகளை அது மறைக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதே விதியாகும்.

கீழ்த்தரமான எண்ணம் கொண்ட ஆண்களிடமிருந்து பெண்களைப் பாதுகாத்திடவும், சமூகத்தில் ஒழுக்கம் நிலைபெறவும் தான் புர்கா இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலை நாடுகளில் வழங்கப்பட்ட ஆடை சுதந்திரம் ஏற்படுத்திய விளைவுகளைக் கண்ட பிறகும் எவரும் புர்காவைக் குறை கூற முடியாது.

பாகப்பிரிவினையில் பாரபட்சம்

இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தில் ஆண்களுக்கு இரு பங்குகளும் பெண்களுக்கு ஒரு பங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் பெண்களுக்கு அநீதி இழைக்கின்றது என்பதும் முஸ்லிமல்லாதாரின் குற்றச் சாட்டுகளில் ஒன்றாகும்.

பலமுடையவர்களாகவும், பொருளைத் திரட்டுவதற்கான வாய்ப்புகளை அதிகம் பெற்றவர்களாகவும் உள்ள ஆண்களுக்குக் குறைந்த அளவும் பலவீனர்களாகவும், பொருளீட்டும் வாய்ப்புகளைக் குறைவாகப் பெற்றவர்களாகவும் உள்ள பெண்களுக்கு அதிக அளவும் வழங்குவதே நியாயமானதாகும். அதிகச் சொத்துரிமைக்குப் பெண்களுக்கே அதிகத் தகுதி இருக்கும் நிலையில் – இருவருக்கும் சம அளவில் வழங்குவதே நியாயமாக இராது என்ற நிலையில் – ஆணுக்குக் கிடைப்பதில் பாதியளவு தான் பெண்ணுக்குக் கிடைக்க வேண்டுமென்பது மாபெரும் அநீதியாகும். இப்படி அவர்களின் குற்றச்சாட்டு விரிவடைகின்றது.

முஹம்மது நபி காலத்துக்கு முன் உலகில் பெண்களுக்கு சொத்துரிமை இருந்ததில்லை. பெற்றோர்களின் சொத்துக்களிலிருந்தோ, ஏனைய உறவினர்களின் சொத்துக்களிலிருந்தோ பெண்கள் வாரிசுரிமை பெறுவதுமில்லை.

இஸ்லாம் மார்க்கம் தான் முதலில் பெண்களுக்குச் சொத்துரிமையை வழங்கியது. இஸ்லாம் மார்க்கம் வந்த பின்பு கூட பல நூற்றாண்டுகளாக முஸ்லிமல்லாத சமுதாயத்தில் பெண்களுக்குச் சொத்துரிமை இருந்ததில்லை.

பெண்களுக்குச் சொத்துரிமை உள்ளது என்று சமீப காலத்தில் தான் நமது நாட்டில் சில பகுதிகளில் சட்டமாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தமிழக அரசு பெற்றோர்களின் சொத்துக்களில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சம அளவிலான உரிமை உண்டு என்று கருணாநிதி ஆட்சியின் போது சட்டமியற்றியது. ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் பெண்களுக்குச் சொத்துரிமையை வழங்கியது.

அறிவுப்பூர்வமான, நியாயமான காரணங்களுக்காகவே இஸ்லாம் ஆண்களுக்கு இரு மடங்குகளும், பெண்களுக்கு ஒரு மடங்கும் எனப் பாகப்பிரிவினைச் சட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்களுக்கே கூடுதல் சுமை.

இஸ்லாமியச் சமூக அமைப்பில் பெண்களை விட ஆண்கள் மீது கூடுதலான சுமைகள் சுமத்தப்பட்டுள்ளன. ஒரு ஆண் தனது மனைவிக்கு உணவும், உடையும், உறைவிடமும் வழங்கக் கடமைப்பட்டிருக்கிறான். ஒரு பெண் தன் கணவனுக்காக இதைச் செய்ய வேண்டியதில்லை.

ஒரு ஆண் தன் குழந்தைகளின் பராமரிப்புச் செலவையும் சுமக்கக் கடமைப்பட்டுள்ளான். குழந்தையின் உற்பத்தியிலும் வளர்ச்சியிலும் கூடுதலாகப் பங்கெடுத்துக் கொண்ட பெண் தன் குழந்தைகளின் பராமரிப்புச் செலவுக்குக் கூடப் பொறுப்பாளியாக மாட்டாள்.

தாய், தந்தை, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை மற்றும் தூரத்து, நெருங்கிய உறவினர்கள் ஆகியோர் சிரமப்படும் போது அவர்களைப் பராமரிக்கும் கடமை ஆண்களுக்கு இருக்கின்றது. பெண்களுக்கு இது போன்ற கடமைகள் எதுவும் அவர்களுக்குக் கிடையாது.

இஸ்லாமிய சமூக அமைப்பில் மட்டுமின்றி ஏனைய சமூகங்களிலும் கூட இந்த நிலையை நாம் காணலாம். இந்த அடிப்படையான விஷயத்தை மறந்து விடுபவர்கள் தாம் இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தை குறை கூறக் கூடியவர்கள்.

யாருக்குத் தேவைகள் அதிக அளவு இருக்கின்றதோ அவர்களுக்குக் கூடுதலாகவும், யாருக்குத் தேவைகள் குறைந்த அளவு இருக்கின்றதோ அவர்களுக்குக் குறைவாகவும் வழங்குவது எந்த விதத்தில் அநீதியாகும்?

ஒரு ஆண், வாரிசுரிமை மூலம் பெண்ணை விட இரு மடங்குகள் பெற்றாலும் அவை போதாது என்ற அளவுக்கு அவன் மீது கடமைகள் உள்ளன. ஒரு பெண் ஒரு மடங்கைப் பெற்றாலும் அவளுக்கு அது தேவையில்லை என்ற அளவுக்குப் பொறுப்புகளிலிருந்து அவளுக்கு விலக்களிக்கப்படுகின்றது.

தனக்காகக் கூட இன்னொரு ஆண் செலவு செய்ய வேண்டும் என்ற அளவுக்கு அவளது சொத்துக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படுகின்றது. எனவே ஆண்களுக்கு இரு பங்குகளும், பெண்களுக்கு ஒரு பங்கும் என்ற இஸ்லாமிய பாகப் பிரிவினைச் சட்டம் அறிவுக்குப் பொருத்தமான நியாயமான சட்டமாகும் என்பது தெளிவு!

பெண்ணின் சொத்து அன்னியருக்குச் சேரும்.

ஒவ்வொரு மனிதனும் தனது சொத்துக்கள் தன் மரணத்திற்குப் பிறகு தன் குடும்பத்திற்குள்ளேயே அந்தச் சொத்துக்கள் செலவிடப்பட வேண்டும் என்று விரும்புகிறான். இந்த விருப்பத்தில் நியாயமும் இருக்கின்றது. எல்லா மனிதரும் விரும்பக் கூடிய இந்த விருப்பம் முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவாவது நிறைவேற வேண்டுமானால் ஆண்களுக்கு இரு மடங்கு என்ற வாரிசுரிமைச் சட்டத்தால் தான் சாத்தியமாகும்.

உதாரணமாக ஒரு மனிதனுக்கு ஒரு மகனும், ஒரு மகளும், மனைவியும் சில சகோதர சகோதரிகளும் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அந்தச் சகோதர சகோதரிகள் மிகவும் ஏழ்மையில் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றும் வைத்துக் கொள்வோம்.

அந்த மனிதனின் மரணத்திற்குப் பின்னர் அவனது மகளுக்குச் சேரும் ஒரு பங்கு அவனது இரத்த பந்தங்களுக்குச் செலவிடப்படாது. அது இன்னொரு குடும்பத்துக்குப் போய்ச் சேரும். அந்த மகள் தனக்கே அதை வைத்துக் கொள்ள முடியும் என்றாலும் கணவனுக்காக அனைத்தையும் வழங்கி விடுதல்' என்ற பலவீனம் இல்லாத பெண்கள் அரிது. கணவனின் நலனுக்காகக் காதுகளிலும், கழுத்துகளிலும் கிடப்பதைக் கூட கழற்றிக் கொடுப்பவர்களைக் காண்கின்றோம். இந்த பலவீனத்தினால் பெண்ணுக்குக் கிடைக்கின்ற வாரிசுச் சொத்துக்கள் தாமாக இன்னொரு குடும்பத்துக்குப் போய்ச் சேர்ந்து விடுகின்றன.

மகனுக்குக் கிடைத்த இரு மடங்குச் சொத்துக்கள் தந்தையின் இரத்த சம்மந்தமான உறவுகளுக்காகவும், பெற்ற தாய்க்காகவும் செலவிட ஏற்ற வகையில் இறந்தவனின் குடும்பத்தையே சுற்றி வருகின்றன. இறந்தவனின் இயல்பான விருப்பம் ஓரளவு நிறைவு செய்யப்பட்டு விடுகின்றது. இந்தக் காரணத்தைச் சிந்திக்கும் போது ஆண்களுக்குச் சிறிது அதிகமாக வழங்குவதில் எந்த அநியாயமும் இல்லை என்பதை உணரலாம்.

பெண் கைவிடப்பட்டால் பிறந்த வீடு தான் அவளைப் பராமரிக்க வேண்டும்.

பெண்கள் பலவீனர்களாக இருப்பதனால் அவர்களுக்குக் கூடுதலாக வழங்க வேண்டும் என்று முஸ்லிமல்லாதார் கூறுகின்றனர். பெண்கள் பலவீனர்களாக இருப்பதும் அவர்களின் பங்கைக் குறைத்ததற்கான காரணங்களில் ஒன்றாகும் என்று நாம் கூறுகிறோம்.

பெண்களின் பலவீனத்தைப் பயன்படுத்திக் கணவனாலும், கணவனது குடும்பத்தினராலும் பெண்களுக்குக் கிடைக்கின்ற சொத்துக்கள் எடுத்துக் கொள்ளப்படலாம். பிறகு அவள் தள்ளப்பட்டும் விடலாம். இந்த நிலையில் அவளது வருங்காலப் பாதுகாப்புக்கு யார் உத்திரவாதம் தருவது? அவள் பிறந்தகம் தான் வந்தாக வேண்டும். அவளது உடன் பிறந்தவன் தான் அவளையும் பராமரிக்க வேண்டும்.

அவளை விடச் சிறிது கூடுதலாக அவன் பெற்றிருந்தால் தான் உடன் பிறந்தவள் மீது பச்சாதாபம் ஏற்பட முடியும். அவளைத் தொடர்ந்து பராமரிக்க முடியும்.

ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமமான பங்குகள் என்று பிரிக்கப்பட்டால் எனக்குக் கிடைத்தது போன்று தானே இவளுக்கும் கிடைத்தது? இவளை ஏன் நான் கவணிக்க வேண்டும்' என்ற எண்ணம் சகோதரர்களுக்கு ஏற்பட்டு அவள் புறக்கணிக்கப்படுவாள்.

ஆண் இரண்டு பங்கைப் பெற்றிருந்தால் நம் சகோதரிக்குக் கிடைத்தது போல் இரு மடங்கை நாம் பெற்றுள்ளோம். எனவே சகோதரியையும் இந்த இக்கட்டான நேரத்தில் நாம் தான் கவணிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். இது பெண்களின் எதிர்காலத்துக்குப் பாதுகாப்பாக அமையும்.

சொத்தைப் பெருக்குவதில் ஆண்களின் பங்கு அதிகம்.

பெரும்பாலும் சொத்துக்களைப் பெருக்குவதில் ஆண்களே உறுதுணையாக உள்ளனர். ஒரு தந்தைக்கு ஒரு மகனும், மகளும் இருந்தால் அந்தத் தந்தைக்குச் சொந்தமான நிறுவனங்களில் தந்தைக்கு உறுதுணையாக ஆண்களே இருக்கின்றனர். சொத்து பெருகுவதில் ஆண்களுக்கே அதிக உழைப்பு உண்டு என்பதும் இதற்கான காரணங்களில் ஒன்றாகும். பெரும்பாலும் பெண்கள் தந்தையின் சொத்து வளர்ச்சியில் ஈடுபாடு காட்டுவதில்லை. யார் சொத்து வளர்ச்சிக்கு உதவியாக இருக்கிறார்களோ அவர்களுக்குக் கூடுதலாக பாகங்கள் வழங்குவதை அநியாயம் என்று எப்படிக் கூற முடியும்?

தந்தையிடமிருந்து அதிகம் பெறுவது பெண்களே

உணவு, உடை போன்ற செலவினங்கள் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சம அளவில் செய்யப்பட்டாலும் இதர வகையில் பெண்களுக்கு ஆண்களை விடக் கூடுதலாக செலவு செய்யப்படுகின்றது.

ஒரு தந்தைக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருந்தால் அந்த மகளுக்காக அந்தத் தந்தை ஆபரணங்கள், நகைகள் என்று செய்து போட்டு அழகு பார்க்கிறார். இவை வெறும் அழகு சாதனங்கள் மட்டுமல்ல. பெரும் சொத்துக்களாகவும் உள்ளன. வசதி படைத்தவர்கள் தங்கள் பெண்களுக்காக இலட்சக் கணக்கிலும் வசதியே இல்லாதவர்கள் பல ஆயிரங்களுக்கும் நகைகள் செய்து போடுகின்றனர். இது அந்தப் பெண்களின் சொத்தாகவே ஆகி விடுகின்றது. இது தவிர திருமணத்தின் போது மகளுக்காகச் சீர் என்று பல சாதனங்களையும் தந்தை வழங்குகின்றார்.

தந்தையின் சொத்தில் ஆண்கள் அனுபவிப்பதை விடக் கூடுதலாக பெண்கள் அனுபவிக்கிறார்கள். தந்தையின் மரணத்திற்குப் பிறகு எஞ்சியுள்ள சொத்துக்களில் தான் ஆணுக்கு இரண்டு பெண்ணுக்கு ஒன்று என்ற கணக்கில் பிரிக்கப்படுகிறது. தந்தை உயிருடனிருக்கும் போது பெண்களே அதிக அளவில் தந்தையிடமிருந்து பெற்றுக் கொள்கிறார்கள்.

இது போன்ற நியாயமான காரணங்கள் இதன் பின்னணியில் உள்ளதை நாம் உணரலாம்.

2.8.2001 தினமணி நாளேட்டில் (சென்னைப் பதிப்பு) 'சொத்தில் சமபங்கு! கடமையில்?' என்ற கட்டுரை வெளியானது. சுதந்திர தயாகான் அவர்கள் இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ள முக்கியமான அம்சத்தைச் சிந்தித்தால் இஸ்லாமியச் சொத்துரிமைச் சட்டம் எவ்வளவு அறிவுப்பூர்வமானது என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். கட்டுரையின் முக்கியப் பகுதி இதோ…

…'எனவே, சொத்தில் சம உரிமை என்பது அதிசயிக்கத்தக்க ஒரு விஷயம் அல்ல. எனினும் சொத்தில் சம உரிமை கொடுக்கப்படும் போது, கடமையிலும் பெண் குழந்தைகள் பங்கு கொள்கிறார்களா என்பது ஆராய வேண்டிய ஒன்று. ஆண் பிள்ளைகளைப் போல், பெண் பிள்ளைகளைப் படிக்க வைத்து, நல்ல வரண் பார்த்து, ஒரு லட்சத்திற்கு நகை, ஒரு லட்சம் திருமணச் செலவு எனப் பெற்றோர் மணம் முடித்து வைக்கிறார்கள். பேறு காலம் பார்த்து, விருந்துக்கு அழைத்து, விடுமுறைக்கு அழைத்து மகிழ்விக்கின்றனர். பின், ஆண் பிள்ளைகளுக்குக் கொடுப்பது போல், பணம், வீடுவாசல் என சொத்திலும் சம பங்கு அளிக்கின்றனர். அவ்வாறு செய்யும் பெற்றோர், வயதான காலங்களில், முடியாத காலங்களில், பெண் பிள்ளைகளுடன் சென்று தங்கி, அவர்கள் கண்காணிப்பில் இருக்க முடியுமா? என்பது கேள்விக்குறியே.

கிடைத்த வரை பெற்றுக் கொண்டு, கொடுத்தவர்களுக்கு முடியாத காலங்களில் அவர்களைக் கவனிக்க வேண்டிய கடமை மகனுக்கு மட்டுமே என்ற நடைமுறை மாற வேண்டும்.

தன் மனைவி வீட்டில் சகலமும் அனுபவிக்கும் மருமகன், தன் மாமனார், மாமியாரை, அவர்களின் வயதான காலங்களில் தம்முடன் வைத்துப் பராமரிக்க முன் வரவேண்டும். 'உரிமை மகளுக்கு கடமை மகனுக்கு' என்ற நிலை வரும் போது மகனும், மருமகளும் சற்று சோர்வடைவதில் வியப்பில்லை.

ஆண் பிள்ளைகளைப் போல், பெண் பிள்ளைகளும் தங்கள் பெற்றோரைப் பராமரிக்க வேண்டும். சொத்தில் சம உரிமை பெறுவதால், தம் சகோதரியும் பெற்றோரைக் கவனித்தால் என்ன? என்று சகோதரர்கள் நினைப்பது இயற்கை. சகோதரிகளுக்கும், பெற்றோருக்கும் கடமை செய்ய மாத்திரமே ஆண் மகன் என்ற நிலை மாற வேண்டும். உரிமையில் சமம் எனில், கடமையிலும் சமபங்கு வகிக்கப் பெண் குழந்தைகள் நிர்பந்திக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை.

முதியோர் இல்லங்கள் பெருகுவது ஒரு வேளை, பெண் குழந்தைகளுக்கு உரிமை (மட்டும்) சமபங்கு கொடுக்கப்படுவதால் ஏற்பட்ட கால மாற்றத்தின் விளைவோ என்று கூட நினைக்கத் தோன்றுகிறது.'

இவ்வாறு அக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

இஸ்லாம் கூறுகின்ற வாரிசுரிமைச் சட்டம் அமுல்படுத்தப்பட்டால் இந்த்த் தீய விளைவுகளை நாம் கண்டிப்பாகத் தவிர்க்க இயலும்.'

பெண்களுக்கு ஒன்று ஆண்களுக்கு இரண்டு' என்ற வகையில் பங்கீடு செய்வது தான் அறிவுப்பூர்வமானது. பெண்களுக்கும், பெற்றோருக்கும் சிறந்தது என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

இந்த அடிப்படையில் பார்க்கும் போது இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தில் காட்டப்படும் இந்த வித்தியாசம் முற்றிலும் நியாயமானதே! அறிவுக்குப் பொருத்தமானதே!

ஒரு ஆண் சாட்சி இரு பெண் சாட்சிகளுக்குச் சமமா?

'இரண்டு பெண்களுடைய சாட்சியம் ஒரு ஆணுடைய சாட்சியத்திற்கு நிகராகும்' என்று இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ளது. இதையும் முஸ்லிமல்லாதவர்கள் விமர்சனம் செய்கின்றனர்.

உங்கள் ஆண்களில் இருவரை சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள்! இரு ஆண்கள் இல்லாவிட்டால் சாட்சிகள் என நீங்கள் திருப்தியடையும் ஓர் ஆணையும், இரண்டு பெண்களையும் (ஆக்கிக் கொள்ளுங்கள்!)

திருக்குர்ஆன் 2:282

இரண்டு பெண்களின் சாட்சியத்தை ஒரு ஆணுடைய சாட்சிக்குச் சமமாகக் குர்ஆன் கூறுகிறது. இது பெண்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதியாகும் என்று அவர்கள் வாதிடுகின்றனர்.

பள்ளி, கல்லூரித் தேர்வுகளில் ஆண்களை விடப் பெண்களே தொடர்ந்து அதிக மதிப்பெண்கள் பெற்று வருகின்றனர். இது பெண்களின் நினைவாற்றலுக்கும், அறிவுத் திறனுக்கும் சான்றாக உள்ளது. சாட்சியம் கூறுவதற்குத் தேவையான அறிவுத் திறனும், நினைவாற்றலும் ஆண்களை விடப் பெண்களுக்கு அதிகமாகவே உள்ள போது அவர்களின் சாட்சியத்தைப் பாதி சாட்சியமாகக் கருத எந்தவித நியாயமும் இல்லை.

பெண்களில் சிலர் சில நாடுகளின் தலைமைப் பதவியில் இருந்து சிறப்பாக நிர்வகித்து வரும் போது சாதாரண சாட்சியம் கூறும் தகுதியில் கூடப் பாரபட்சம் காட்டுவது அக்கிரமமானது எனவும் வாதங்கள் வைக்கப்படுகின்றன.

இந்த வாதங்கள் நியாயமானவை என்றாலும் சாட்சியம் கூறுவதற்கும், இவற்றுக்கும் சம்மந்தமில்லை என்பதை விளங்கினால் இந்த வாதம் அடிபட்டுப் போகும்.

பெண்களுக்கு நல்ல நினைவாற்றலும் அறிவுத் திறனும் உள்ளதை இஸ்லாம் மறுக்கவில்லை. சில விஷயங்களில் ஆண்களை விட இவர்களுக்கு அதிகமாக அந்தத் தகுதிகள் உள்ளதையும் இஸ்லாம் மறுக்கவில்லை.

நல்ல, கூரிய மதி உடைய ஆண் மகனுடைய அறிவையே செயலிழக்கச் செய்யும் அளவுக்குப் பெண்களே உங்களுக்குத் திறமை உண்டு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நூல்: புகாரி 304, 1463

அன்னை ஆயிஷா (ரலி), அன்னை உம்மு ஸலமா (ரலி) போன்ற பெண்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்களுக்கே பாடம் சொல்லித் தருமளவிற்கு நினைவாற்றல் மிக்கவர்களாக இருந்துள்ளனர். ஆண்களையே தர்க்க ரீதியாக எதிர்கொள்ளும் அளவுக்கு அவர்களின் அறிவுத் திறமை மேலோங்கியிருந்தது. இஸ்லாமிய வரலாற்றில் இவை ஆதாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் ஆகும்.

மிகைப்படுத்திக் கூறல்

ஆனால் சாட்சியம் கூறுவதற்கு நினைவாற்றல், அறிவுத் திறன் என்ற இரண்டு தகுதிகள் மட்டும் போதுமா? நிச்சயமாகப் போதாது! இவ்விரண்டை விட மிக முக்கியமான தகுதி ஒன்று அவசியம். உள்ளதை உள்ளபடி கூட்டாமல், குறைக்காமல், மிகைப்படுத்தாமல், திரிக்காமல் கூற வேண்டும். இந்தத் தகுதி தான் சாட்சியம் கூறுவதற்கு மிக முக்கியம். சாட்சியம் என்பது உண்மையை உலகறியச் செய்வதும், இன்னொருவரின் எதிர்காலத்தை முடிவு செய்வதுமாகும்.

தனக்கு வேண்டியவர்களிடம் காணப்படும் மிகப்பெரும் குறையையும் மிகச் சிறிய குறையாகக் காண்பதும், தனக்கு வேண்டாதவர்களிடம் காணப்படும் சின்னஞ் சிறிய குறையையும் மிகப் பெரிய குறையாகக் காண்பதும் பெண்களின் இயல்பாக அமைந்துள்ளதை எவரும் மறுக்க முடியாது. நிறை விஷயத்திலும் அப்படியே.

ஊசியை உலக்கையாகவும், யானையைப் பூனையாகவும் பார்க்கக் கூடிய இந்த இயல்பு, சாட்சியம் கூறுவதற்கான தகுதியில் குறைவை ஏற்படுத்துகின்றது. மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம் என்ற பழமொழி இவர்களின் இயல்புக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

புகுந்த வீட்டில் மகள் பாதிக்கப்படும் போது பேசுகின்ற நியாயத்தில் கடுகளவைக் கூட மருமகள் விஷயத்தில் கடைப்பிடிக்காத மாமியார்கள் பலரை நாம் காண்கிறோம்.

நன்கு அலங்காரம் செய்த பெண்களை அச்சில் ஏற்றத் தகாத வார்த்தைகளால் விமர்சனம் செய்து விட்டு அதை விட அதிகமாகத் தானும், தன்னைச் சேர்ந்தவர்களும் அலங்காரம் செய்து கொண்டு அதில் பெருமையடிக்கும் பெண்களும் இதற்கு நிதர்சனமான எடுத்துக் காட்டுக்களாவர்.

இது போல் அனேக விஷயங்களில் பெண்களை இப்படித் தான் காண முடிகின்றது. ஆண்களிலும் இத்தகையோர் சிலர் இருக்கலாம். பெண்களில் இத்தகைய இயல்பு இல்லாதவர்களும் இருக்கலாம். விரல் விட்டு எண்ணி விடக் கூடிய விதி விலக்குகள் இவை. மிகப் பெரும்பாலோரின் நிலை இதுவாகத் தான் இருக்கின்றது.

பிடிக்காத ஒருவன் இன்னொருவனிடம் 100 ரூபாய் கடன் வாங்கியதற்குச் சாட்சி கூறும் போது கட்டுக்கட்டாகக் கொடுத்ததாக அறிந்தோ, அறியாமலோ கூறினால் அங்கே நீதி செத்து விடும். பிடித்தவன் விஷயத்தில் குறைத்துக் கூறினாலும் அப்படியே.

இந்த விஷயத்தில் ஆண்களும், பெண்களும் சமமாக இல்லை என்று இன்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

சிந்திப்பது, மனனம் செய்வது உள்ளிட்ட அனைத்து இயக்கங்களையும் மூளை தான் தீர்மானிக்கிறது. ஆண்களின் மூளைக்கும், பெண்களின் மூளைக்கும் அடிப்படையில் பல வேறுபாடுகள் உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

பெண்களின் மூளையை விட ஆண்களின் மூளை 100 கிராம் அதிக அளவு கொண்டதாகப் படைக்கப்பட்டுள்ளது. சிந்தித்தல், மனனம் செய்தல், உணர்வுகளை வெளிப்படுத்துதல், கற்பனை செய்தல், ஆசைப்படுதல், கோபப்படுதல் என ஒவ்வொன்றுக்கும் மூளையில் குறிப்பிட்ட பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சிந்தித்து, ஆராய்ந்து, சீர்தூக்கிப் பார்த்தல் ஆண் பெண் இருபாலருக்கும் உள்ளது என்றாலும் ஆண்களின் மூளையில் பெண்களின் மூளையை விட 13 சதவிகிதம் நியூரான்கள் அதிகமாக உள்ளன. இதனால் பெண்களை விட ஆண்கள் சிந்தித்து முடிவு செய்வதில் சிறந்து விளங்குகிறார்கள்.

மூளையின் நினைவாற்றல் பகுதி ஆண்களை விட பெண்களுக்கு 11 சதவிகிதம் அதிகமாக உள்ளது என்றும் கண்டறிந்துள்ளனர்.

இதனால் தான் மனனம் செய்கிற துறையில் பெண்கள் பிரகாசிக்கிறார்கள். பள்ளிக்கூடப் பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்குவதில் அதிகமானவர்கள் பெண்களாகத் தான் இருக்கிறார்கள். பிள்ளை பிறந்த தேதி, திருமண தேதி, முக்கிய நாட்களின் தேதி போன்றவற்றை மிகச் சரியாகச் சொல்பவர்கள் பெண்களாகத்தான் இருக்கிறார்கள். ஆண்கள் இதில் பின் தங்கியே இருக்கிறார்கள்.

அதே நேரத்தில் சிந்திக்கும் சக்தி பெண்களுக்கு ஆண்களை விட குறைவாகத் தான் இருக்கும். உலகில் அதிகமான சிந்தனையாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள், ஆய்வாளர்கள் ஆண்களில் தான் அதிகம் இருக்கிறார்கள். ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவரும் ஆண்களாகத்தான் இருக்கிறார்கள்.

மேலும் கற்பனை செய்யும் தன்மை பெண்களின் மூளையில் அதிகமாக உள்ளது என்றும் கண்டறிந்துள்ளனர்.

தனக்கு வேண்டியவர்களிடம் காணப்படும் மிகப்பெரும் குறையையும் மிகச் சிறிய குறையாகக் காண்பதும், தனக்கு வேண்டாதவர்களிடம் காணப்படும் சின்னஞ்சிறிய குறையையும் மிகப் பெரிய குறையாகக் காண்பதும் பெண்களின் இயல்பாக அமைந்துள்ளதை எவரும் மறுக்க முடியாது. நிறை விஷயத்திலும் அப்படியே.

பதற்றமின்றிப் பொய் சொல்வதில் ஆண்களை விடப் பெண்களே வல்லவர்களாக இருப்பது பல்வேறு ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகளிடம் உண்மை கண்டறிவதற்காகக் கருவிகளின் மூலம் சோதனை நடத்தப்படுகின்றது. பொய் சொல்லும்போது ஏற்படும் பதற்றத்தால் மூளையில் உண்டாகும் அதிர்வுகளைக் கருவிகள் பதிவு செய்கின்றன. சொல்வது உண்மையா, பொய்யா என்பதை இதைக் கொண்டு தீர்மானிக்கின்றனர்.

இந்தச் சோதனைகளின் போது பெண்கள் பொய் சொன்னால் பெரும்பாலும் கருவிகளில் அது துல்லியமாகத் தெரிவதில்லை. ஆண்கள் பொய் சொல்வதைத் தான் இக்கருவிகள் கண்டுபிடிக்கின்றன. பதற்றமோ, உறுத்தலோ இல்லாமல் பெண்கள் சகஜமாகப் பொய் சொல்வதால் அதைக் கருவிகளால் கண்டுபிடிக்க முடிவதில்லை.

இதே போன்று நீதிமன்றத்தில் நடைபெறும் குறுக்கு விசாரணையின் போதும் பெண்கள், பதற்றமோ, தடுமாற்றமோ இன்றிப் பொய் சொல்வதால் அதைப் பொய்யென்று கண்டறிவது சிரமம்.

இயற்கையாக அமைந்த பலவீனம்

பெண்கள் ஆண்களைப் போன்ற உடலமைப்புக் கொண்டவர்களல்லர். பலவீனமானவர்களாகவும் இயற்கையில் மாதாந்திர உதிரப் போக்கு என்ற உபாதைக்கு ஆளாகுபவர்களாகவும் உள்ளனர். இந்த மாதாந்திர உபாதை, மனநிலையில் பாதிப்பையும், தடுமாற்றத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தும் என மருத்துவவியலாரும், மனோதத்துவ இயலாரும், உடற்கூறு வல்லுனர்களும் கூறுவது அனைவரும் அறிந்ததே!

ஒரு சம்பவத்திற்கு சாட்சியாக அழைக்கப்படும் பெண், மாதாந்திர உபாதையுடனிருக்கும் போது அச்சம்பவத்தைப் பார்த்திருந்தாலோ, அல்லது சாட்சியத்திற்கு அழைக்கப்படும் போது அவ்வுபாதையுடனிருந்தாலோ அவள் அளிக்கும் சாட்சியத்தில் அவளது உடல் நிலை காரணமாக ஏற்பட்டுள்ள மனநிலை பிரதிபலிப்பதால், சாட்சியம் முழுமையடையாது.

உள்ளதை உள்ளபடி கூறாமல் குழம்பிய நிலையில் அளிக்கப்படும் சாட்சியத்தால் நீதி வழங்குவதிலும் குறைபாடு ஏற்படும். இது இரண்டாவது காரணம்.

இவ்விடத்தில் மற்றொரு கேள்வி எழலாம். மாதவிடாய் நின்று போன பெண்ணையாவது ஒரு ஆணுக்கு நிகரான சாட்சியாக ஏற்கலாமல்லவா என்று வினவலாம். ஆனால் இத்தகைய பெண்களுக்கு வேறு விதமான மனநிலைக் குழப்பம் ஏற்படுவதையும் மருத்துவ விஞ்ஞானம் உறுதி செய்வதால் இவ்வினா அர்த்தமற்றுப் போகிறது!

மிரட்டலுக்கு அஞ்சுதல்

பொதுவாக சாட்சி கூறும் போது இரு தரப்பில் ஒரு தரப்புக்குப் பாதகமாகத் தான் அது அமையும். யார் பாதிக்கப்படுகிறானோ அவன் தனக்கு எதிராகச் சாட்சி கூறும் பெண்ணை மிரட்டலாம். அவளையோ, அவளது குடும்பத்தில் ஒருவரையோ கொன்று விடுவதாகக் கூறினால் போதும், சாட்சியத்தை மாற்றிக் கூறி விடக் கூடியவர்கள் பெண்களில் அதிகமாகவுள்ளனர். இந்தப் பலவீனத்தின் காரணமாகவும், இவ்வாறு வேறுபடுத்த வேண்டியது அவசியமாகும்.

இயல்பிலே அமைந்த இரக்க குணம்

மேலும், பெண்கள் இயல்பிலேயே இரக்கமும், பச்சாதாபமும் கொண்டுள்ளனர். இந்நிலையில் அவர்களின் தாய்மையுணர்வின் காரணமாகக் குற்றவாளியின் மீது இரக்கப்பட்டு, சாட்சியத்தில் ஒளிவு மறைவு செய்யலாம் என்பதாலும், ஒரு ஆணுக்கு நிகராக இரு பெண்கள் சாட்சியத்திற்குத் தேவைப்படுகின்றனர். நிச்சயமாக இரு பெண்கள் ஒரு சம்பவத்தை ஒரே மாதிரியாகக் கூறுவதில்லை என்பதை முதலாவது சொன்ன காரணம் உறுதிப்படுத்துகின்றது.

எனவே ஒரு ஆணுடைய சாட்சிக்கு நிகராக இரு பெண் சாட்சிகள் தேவை என்று இஸ்லாம் வகுத்துள்ள சட்டம் அறிவுக்குப் பொருத்தமானதும் நியாயமானதும் ஆகும் என்பது தெளிவாகிறது.

எனவே இரண்டு பெண்களின் சாட்சியம், ஒரு ஆணின் சாட்சியத்திற்குச் சமம் என்று இஸ்லாம் கூறுகின்றது அறிவுப்பூர்வமாகவும், அறிவியல் பூர்வமாகவும் சரியானது தான் என்பதில் சந்தேகம் இல்லை

மேலும் ஒரு பெண் சாட்சியமளிப்பதோ, அளிக்காமல் இருப்பதோ அவளது உரிமையில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கணவனை இழந்த பெண்ணை அடைத்து வைக்கும் இத்தா

'கணவன் இறந்தவுடன் மனைவியர் உடனே திருமணம் செய்யக் கூடாது; சில காலம் கழித்தே திருமணம் செய்ய வேண்டும்; ஆண்களுக்கு இந்தச் சட்டம் கிடையாது; மனைவி இறந்த தினத்தில் கூட மறுமணம் செய்யலாம்' என்று இஸ்லாம் கூறுகிறது. இதுவும் பெண்களுக்கு எதிரானதாக உள்ளது என்று குற்றம் சாட்டப்படுகிறது.

கணவன் இறக்கும் போது மனைவி கர்ப்பிணியாக இருந்தால் அவள் பிரசவிக்கும் வரை மறுமணம் செய்யக் கூடாது.

கணவன் இறக்கும் போது அவள் கர்ப்பினியாக இல்லாவிட்டால் நான்கு மாதம் பத்து நாட்கள் கழித்துத் தான் மறுமணம் செய்ய வேண்டுமே தவிர உடனடியாக மறுமணம் செய்யக் கூடாது என்று இஸ்லாம் கூறுவது உண்மை தான். இவ்வாறு திருமணம் செய்யாமல் காத்திருக்கும் காலம் இத்தா' எனப்படுகிறது.

இது பெண்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்துவது போல் தோற்றமளித்தாலும் அதற்கான காரணங்களை அறிந்து கொண்டால் இது பெண்களுக்கு நன்மை பயக்கக் கூடியது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

கணவன் இறந்தவுடன் மனைவி அவனது கருவைச் சுமந்திருக்கலாம். அந்த நிலையில் அவள் இன்னொருவனை மணந்து கொண்டால் அதில் பல அநீதிகள் ஏற்பட்டு விடும்.

இறந்து போன கணவனின் குழந்தையைப் புதிய கணவனின் தலையில் சுமத்தும் நிலை ஏற்படும்.

பிறக்கும் குழந்தை தன்னைப் போன்ற தோற்றத்தில் இல்லாவிட்டால் மனைவி தன்னை ஏமாற்றி விட்டதாக இரண்டாம் கணவன் கருதுவான். தனது குழந்தை என்று ஒப்புக் கொள்ள மறுப்பான். குழந்தையின் உண்மையான தந்தையாகிய முதல் கணவனிடமிருந்தும் குழந்தைக்கு எந்தச் சொத்துரிமையும் கிடைக்காமல் போய் விடும்.

தன்னுடைய கருவில் முதல் கணவனின் வாரிசு உருவாகவில்லை என்பதை நிரூபித்து விட்டு திருமணம் செய்வது தான் அவளுக்கும், அவள் பெற்றெடுக்கும் குழந்தைக்கும் பாதுகாப்பானது.

'ஒரு பெண் கருவுற்றிருக்கிறாளா அல்லவா என்பதைக் கண்டுபிடிக்க நான்கு மாதமும் பத்து நாட்களும் தேவையில்லையே? அதை விடக் குறைவான காலத்திலேயே இது தெரிந்து விடுமே? முதல் மாதமே மாதவிடாய் வந்து விட்டால் அவள் இன்னொரு திருமணம் செய்து கொள்ளலாமே?' என்று சிலருக்குச் சந்தேகம் ஏற்படலாம்.

கருவில் குழந்தை இல்லை என்பதை முதல் மாதத்திலேயே தெரிந்து கொள்ள முடியும் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை.

ஆனால் அவளுக்கு மாதவிடாய் வருகிறதா என்பது அவளுக்கு மட்டுமே தெரிந்த அந்தரங்க விஷயம். மாதவிடாய் நின்ற பிறகும் கூட திருமணத்திற்கு அவசரப்பட்டு அவள் மாதவிடாய் வழக்கமாக வந்து கொண்டிருக்கிறது என்று பொய் கூறலாம்.

இதற்காக அந்தரங்கச் சோதனையெல்லாம் மேற்கொள்வது அவளை அவமானப்படுத்துவதாகவே முடியும்.

அவளுக்கு மட்டுமே தெரிந்த இந்த விஷயம் அனைவருக்கும் தெரிய வேண்டுமானால் நான்கு மாதங்களுக்கு மேல் அவகாசம் தேவைப்படும்.

நான்கு மாதமும், பத்து நாட்களும் கழிந்த பிறகு அவளது வயிறு வெளிப்படையாக பெரிதாகாவிட்டால் அவள் கருவில் குழந்தை இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமாகி விடும். இப்படி அனைவருக்கும் தெரியும் வகையில் நிரூபிப்பதற்கு சில நியாயங்களும் உள்ளன.

கணவன் இறந்த பின் ஒரு பெண்ணுக்கு வழக்கமான மாதவிடாய் ஏற்பட்டு, கருவில் குழந்தை இல்லை என்பதைக் காரணம் காட்டி, மறு மாதமே திருமணம் செய்து விடுகிறாள் என்று வைத்துக் கொள்வோம்.

இந்த நிலையில் இரண்டாம் கணவன் மூலம் அவள் கருவுற்று விடுகிறாள். அந்தக் கரு வளர்ந்து பத்தாவது மாதம் குழந்தையை அவள் பெற்றெடுத்தால் பிரச்சினை ஏதும் ஏற்படாது. ஆனால் குறைப் பிரசவமாக எட்டாவது அல்லது ஒன்பதாவது மாதத்தில் குழந்தையைப் பெற்றெடுத்தால் இரண்டாம் கணவனால் பிரச்சினை ஏற்படும்.

இது தனக்குப் பிறந்தததாக இருக்காது. முதல் கணவனுக்குப் பிறந்ததாகத் தான் இருக்க வேண்டும். இரண்டு மாதக் கருவைச் சுமந்து கொண்டு தன்னை ஏமாற்றி திருமணம் செய்து விட்டாள் என்று நினைப்பான். அவனது குடும்பத்தினரும் அவ்வாறே நினைப்பார்கள்.

நான்கு மாதம் கழித்து ஊரறிய நிரூபித்த பின்னர் இரண்டாம் திருமணம் செய்து, குறைப் பிரசவமாக அவள் குழந்தையைப் பெற்றாலும் அது தனது குழந்தை இல்லை என்று இரண்டாம் கணவன் கூற மாட்டான். சந்தேகப்படவும் மாட்டான். முதல் கணவனின் குந்தையாக இருந்திருந்தால் நான்கு மாதங்கள் வரை அவளது வயிறு பெரிதாகாமல் இருக்காது என்பது அவனுக்குத் தெரியும்.

எனவே பெண்களின் இரண்டாம் திருமணத்தின் மூலம் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கவும், பெற்றெடுக்கும் குழந்தைக்குச் சட்டப் பூர்வமான உரிமையைப் பெற்றுத் தரவும் இந்த ஏற்பாடு மிகவும் அவசியமே. இது பெண் குலத்துக்கு நன்மை பயக்கக் கூடியதே என்பதை இதன் மூலம் அறியலாம்.

கணவன் இறந்து விட்டால் கணவனின் சொத்தில் மனைவிக்கு உரிமை இருப்பது போலவே அவனால் அவள் பெற்றெடுக்கும் குழந்தைக்கும் உரிமை உள்ளது.

எனவே அவசரப்பட்டு திருமணம் செய்து குறைப்பிரசவத்தில் குழந்தை பெற்றால் முதல் கணவனின் குடும்பத்தினர் அது தமது குடும்பத்தைச் சேர்ந்த குழந்தை இல்லை என்று வாதிடுவார்கள். அக்குழந்தைக்குச் சேர வேண்டிய சொத்துரிமை இல்லாமல் போய் விடும். இரண்டாம் கணவனும் தனது குழந்தை இல்லை என்று மறுப்பான்.

கணவனை இழந்த பெண்கள் நான்கு மாதங்களும், பத்து நாட்களும் மறுமணம் செய்யாமல் இத்தாவைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது இன்று அறிவியல் மூலமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ராபர்ட் கில்ஹாம் என்ற யூத விஞ்ஞானி இது குறித்து ஓர் ஆய்வை மேற்கொண்டார்.

தம்பதியர் உடலுறவு கொண்டால், ஆண், தனது பாலின ரேகையைப் பெண்ணிடம் விட்டுச் செல்கின்றான். அந்த ரேகை மூன்று மாதங்களுக்குப் பிறகே முற்றாக அழியும் என்று ராபர்ட் கண்டுபிடித்தார். அதற்கேற்ப, அமெரிக்காவில் ஆப்பிரிக்க முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஒரு பகுதியில் கள ஆய்வில் இறங்கினார். அப்பகுதியில் வாழும் முஸ்லிம் பெண்களிடம் அவர்களின் கணவர்களது ரேகைகள் மட்டுமே பதிவாகியிருந்தன.

அதே நேரத்தில், அமெரிக்கப் பெண்கள் வாழும் ஒரு தெருவில் ஆய்வை மேற்கொண்ட போது, அப்பெண்களிடம் பல்வேறு ரேகைகள் காணப்பட்டன. மூன்று வெவ்வேறு ரேகைகள் அவர்களில் பதிவாகியிருந்தன.

ராபர்ட் கில்ஹாம் அதிரடியாக ஒரு காரியம் செய்தார். அவர் தம் மனைவியை மருத்துவப் பரிசோதனைக்கு ஈடுபடுத்தினார்.

அவளிடம் மூன்று ரேகைப் பதிவுகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அத்துடன் தம்முடைய மூன்று மகன்களில் ஒருவன் மட்டுமே தமக்குப் பிறந்தவன் என்பதையும் கண்டறிந்தார்.

கணவன் இறந்த ஓரிரு மாதங்களில் ஒரு பெண் திருமணம் செய்தால் இரண்டாம் கணவன் மூலம் பெற்றெடுக்கும் அவளது குழந்தை இரண்டாம் கணவனின் டி.என்.ஏவுடன் ஒத்துப் போகாமல் இருக்க சாத்தியமுண்டு. முதல் கணவனின் டி.என்.ஏ,யுடன் ஒத்துப் போகும் வாய்ப்பும் உள்ளது.

இந்தக் கண்டுபிடிப்பும் இத்தாவின் அவசியத்தை உணர்த்துகிறது.

நான்கு மாதங்களும், பத்து நாட்களும் கழித்து அவள் மறுமணம் செய்துகொண்டால், டி.என்.ஏ. பரிசோதனையில் குழப்பம் இராது.

இது போன்ற நியாயமான காரணங்களால் தான் பெண்கள் மீது இத்தா எனும் கடமையை இஸ்லாம் விதியாக்கியுள்ளது.

பெண்களுக்கு ஆட்சித் தலைமையை மறுப்பது ஏன்?

'பெண்கள் ஆட்சித் தலைமையை ஏற்கக் கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது. இது பெண்களின் உரிமையைப் பறிப்பதும் அவர்களை அவமானப்படுத்துவதுமாகும்' என்று முஸ்லிமல்லாதவர்கள் விமர்சனம் செய்கின்றனர்.

'பெண்கள் ஆட்சி செய்யும் சமுதாயம் வெற்றி பெறவே மாட்டாது' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியது உண்மை தான்.

நூல்: புகாரி 4425, 7099

ஆட்சித் தலைமை தவிர வேறு தலைமைகளை அவர்கள் வகிக்கக் கூடாது என்று இஸ்லாம் கூறவில்லை.

மக்கள் தேர்வு செய்யும் ஆட்சித் தலைமை எவ்வாறு உருவாகிறது என்பதை முதலில் நாம் சிந்திப்போம்.

கொல்லைப் புறமாக பதவிக்கு வருதல்

அடிமட்டத்திலிருந்து ஒருவன் பாடுபடுவான். போராட்டங்களில் பங்கெடுப்பான். சிறைச் சாலையில் அடைக்கப்படுவான். அடி உதைகளுக்கு ஆளாவான். இப்படிப் பல தியாகங்கள் செய்த பின்னர் தான் படிப்படியாக உயர்ந்து தனது ஆற்றலையும், திறமையையும் பயன்படுத்தி மற்றவர்களைப் பின்னுக்குத் தள்ளி முன்னே வருகிறான். இதன் மூலம் ஆட்சித் தலைமையை ஏற்கிறான்.

ஆனால் பெண்கள் எவ்வாறு ஆட்சித் தலைமைக்கு வருகிறார்கள்! கோஷம் போட்டு கொடி பிடித்து, பசைக் கலயம் சுமந்து, சுவரொட்டிகள் ஒட்டி போராட்டங்களில் பங்கு கொண்டு படிப்படியாகத் தான் தலைமைப் பதவியைப் பெறுகிறார்களா என்றால் நிச்சயமாக இல்லை.

கஷ்டப்பட்டு உழைத்துப் பதவியைப் பெற்றவனின் மனைவியாக அல்லது மகளாக இருப்பது தவிர இப்பதவிக்காக எந்தத் தியாகமும் செய்திருக்க மாட்டார்கள்.

தலைவனுக்கு அடுத்த நிலையில் இருப்பவன் கட்சிக்காக கடுமையாக உழைத்து அப்பதவிக்குத் தகுதியானவனாக இருப்பான். ஆனால் தலைவனின் உறவுக்காரப் பெண் என்ற ஒரு காரணத்தை மட்டுமே முன்னிறுத்தி பெண்கள் தலைமைப் பதவியைப் பெறுகின்றனர்.

ஜவஹர்லால் நேருவுக்குப் பின் காங்கிரசில் எத்தனையோ தியாகிகளும், தலைவர்களும் இருந்தார்கள். நேருவின் மகள் என்ற தகுதியில் இந்திரா காந்தி பதவியைப் பெற்றார்.

இலங்கையில் பண்டார நாயக்கா படுகொலை செய்யப்பட்ட பின் அவரது கட்சியில் அடுத்த கட்ட தலைவர்கள் பலர் இருந்தனர். ஆனால் ஒரு தியாகமும் செய்யாத அவர் மனைவி ஸ்ரீமாவோ பண்டார நாயக்கா, அவரது மனைவி என்ற காரணத்தினால் பிரதமரானார்.

அது போலவே ஸ்ரீமாவோ பண்டார நாயக்காவின் மகள் என்ற காரணத்துக்காகவே சந்திரிகா அதிபராக ஆனார்.

ஜுல்பிகார் அலி புட்டோவின் மகள் என்ற ஒரே காரணத்துக்காகத் தான் பேநஸீர் புட்டோ பாகிஸ்தானில் பிரதமராக முடிந்ததே தவிர அவரது கட்சியின் அடிமட்டத் தொண்டனின் அளவு கூட அவர் உழைத்ததில்லை.

நுஸ்ரத் புட்டோ பதவியைப் பெற்றதும் பூட்டோவின் மனைவி என்பதால் தான்.

முஜிபுர்ரஹ்மானின் மனைவி என்ற தகுதியின் காரணமாக மட்டுமே ஷேக் ஹஸீனா பங்களாதேஷுக்குப் பிரதமராக முடிந்தது. முஜிபுர்ரஹ்மானுடன் சேர்ந்து விடுதலைக்காகப் போராடி பல தியாகங்கள் செய்த பலர் பின்னுக்குத் தள்ளப்பட்டார்கள்.

ஜியாவுர்ரஹ்மானின் மனைவி என்ற ஒரே தகுதியின் காரணமாகத் தான் கலிதா ஜியா இன்றைக்கு பங்களாதேஷின் பிரதமராக இருக்கிறார்.

இந்தோனேசியாவின் மிகப்பெரும் தலைவராக இருந்த சுகர்னோவின் மகள் என்ற ஒரே காரணத்துக்காக மேகவதி அந்த நாட்டுக்கு அதிபராக ஆகியிருக்கிறார்.

தமிழகத்தில் எம்ஜியாரின் மனைவி என்பதால் ஜானகியும், மனைவியைப் போன்றவராக மக்கள் கருதியதால் ஜெயலலிதாவும் பதவிக்கு வர முடிந்தது.

லல்லு பிரசாத் யாதவின் மனைவி என்ற ஒரே காரணத்துக்காக ரப்ரி தேவி பீகாரின் முதல்வராக முடிந்தது.

என்.டி.ராமராவின் மனைவி என்பதற்காக அவரது கட்சியின் தலைமைப் பொறுப்பை சிவபார்வதியால் பெற முடிந்தது.

ஹிபதுல்லாஹ்வின் மனைவி என்பதற்காகவே நஜ்மா ஹிபதுல்லாவுக்கு பதவி கிடைத்தது.

நாளை சோனியா காந்தியோ, பிரியங்காவோ பிரதமரானால் அதுவும் இப்படிக் கிடைத்த பதவியாகத் தான் இருக்கும்.

ஆண்கள் ஒரு பதவியைப் பெறுவதற்குச் செய்யும் தியாகங்கள் எதையும் செய்யாமல் தான் பெண்கள் ஆட்சித் தலைமைக்கு வருகிறார்கள். அப்படித் தான் வர முடியும்.

இது எவ்வளவு பெரிய அக்கிரமம்! தனக்கு தலைமைப் பதவி ஒரு காலத்தில் கிடைக்கும் என்பதற்காக பலவித தியாகங்கள் செய்தவர்களின் தியாகங்கள் இதனால் அலட்சியப் படுத்தப்படுகின்றன. இது அவர்களுக்கு மக்கள் செய்யும் பெரியதுரோகமாகும்.

கருணாநிதி எப்படித் தலைவராக ஆனாரோ அப்படி ஜெயலலிதா தலைவியாக ஆகவில்லை! பெண்ணுக்குப் பதவி கிடைக்கிறது என்பதற்காக தியாகங்களைப் புறந்தள்ளி விட முடியாது.

இவ்வாறு இல்லாமல் பதவியைப் பெறுவது என்றால் பெண்கள் வேறு விதமான (?) விலையைக் கொடுக்காமல் பதவியைப் பெற முடியாது என்பதை விரிவாக விளக்கத் தேவையில்லை.

இது முதலாவது காரணமாகும்.

கேடயமாக்கப்படும் பெண்மை.

பெண்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்து விடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் தமது தவறுகளுக்குப் பெண்மையையே கேடயமாக்குவார்கள். ஆண்கள் அவ்வாறு ஆக்குவதில்லை.

பெண் ஆட்சியாளர்களின் ஊழல் மற்றும் தவறான நடவடிக்கைகள் தக்க காரணத்துடன் விமர்சிக்கப்பட்டாலும் உடனே 'நான் ஒரு பெண் என்பதால் இப்படி விமர்சிக்கிறார்கள்' என்று குண்டைத் தூக்கிப் போட்டு வாயை அடைப்பார்கள். இந்திராவிலிருந்து ஜெயலலிதா வரை இதைக் கையாண்டுள்ளனர்.

அவர்களது நடத்தை, ஒழுக்கம் போன்றவைகளை விமர்சிக்கும் போது இப்படிக் கூறினால் அதை ஏற்றுக் கொள்ளலாம். ஊழலை விமர்சிக்கும் போது கூட இதைக் கேடயமாகப் பயன்படுத்தினால் இதற்காகவே அவர்கள் அப்பதவியில் இருக்கத் தகுதியற்றுப் போகிறார்கள்.

பெண்மை ஊழலைக் காக்கும் கேடயமல்ல என்று பொங்கி எழ வேண்டிய பெண் அமைப்புகளும் சேர்ந்து கொண்டு பெண் என்பதற்காக இந்தப் பாடுபடுத்தலாமா?' என்று பல சந்தர்ப்பங்களில் முழங்கியுள்ளனர்.

இதன் காரணமாகத் தான் பெண் ஆட்சியாளர்கள் செய்யும் சிறிய அளவிலான ஊழல் மற்றும் முறைகேடுகளை விமர்சனம் செய்ய மீடியாக்கள் தயங்குகின்றன. ஊழலும், அக்கிரமமும் எல்லை மீறிப்போகும் போது தான் பெண் ஆட்சியாளர்கள் விமர்சிக்கப்படுவார்கள்.

எவ்வித விமர்சனங்களும் தங்கள் மீது வராமல் பெண்மையைக் கேடயமாகப் பயன்படுத்துவது அப்பெண்ணின் சுயநலத்துக்குப் பயன்படலாம். மக்களுக்கோ, மற்ற பெண்களுக்கோ, நாட்டுக்கோ இது மாபெரும் தீமையாக முடியும்.

இது இரண்டாவது காரணம்.

வாரிசுகள் திணிப்பு.

பொதுவாக ஆண் தலைவர்கள் தமது வாரிசுகளைத் திடீரென்று தினிக்க மாட்டார்கள். படிப்படியாக நுழைத்து தங்கள் வாரிசுகளும் தகுதியானவர்கள் தான் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி விட்டு தினிப்பார்கள்.

பெண்களோ எந்த விதமான தர்மத்தையும், நியாயத்தையும் கடைப்பிடிக்காமல் தமது வாரிசுகளைத் தினிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்திரா காந்தியும், ஸ்ரீமாவோவும், நுஸ்ரத் புட்டோவும் இதற்குச் சரியான உதாரணங்களாக உள்ளனர்.

இது மூன்றாவது காரணம்.

சர்வாதிகாரம்

வாய்ப்புக் கிடைக்காத வரை பெண்கள் இயல்பில் சாதுவானவர்கள் தான். ஆனால் ஆட்சித் தலைமை கிடைத்து விட்டால் அவர்கள் சர்வாதிகாரம் செய்வதையும் அதிக அளவில் காணலாம்.

இந்திரா, சந்திரிகா, ஜெயலலிதா என்று ஏராளமான உதாரணங்கள் கண் முன்னே உள்ளன.

பத்து ஆண் ஆட்சியாளர்களில் ஒருவர் சர்வாதிகாரியாக இருப்பது அரிதானது.

பத்து பெண் ஆட்சியாளர்களில் ஒரு ஜனநாயகவாதி இருப்பது அபூர்வத்திலும் அபூர்வம்.

இப்படி ஆண்களை மிஞ்சும் அளவுக்கு 'ஆண் தன'த்தை வெளிப்படுத்தினால் தான் தலைமையைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற மனோ நிலைக்கு ஆளாகி இப்படி நடந்து கொள்கின்றனர்.

இது நான்காவது காரணம்.

இரவு பகல் எந்நேரமும் முழுமையாக ஈடுபட வேண்டிய பணி தான் தலைமைப் பதவி என்பது. இத்தகைய கடினமான ஒரு பணியைப் பெண்கள் சுமக்காமல் இருந்தால் பெண் குலத்துக்கு கேடு ஏதும் ஏற்படாது.

அது போக மாதவிடாய்க் காலம், மாதவிடாய் அடியோடு நிற்கும் வயது ஆகியவை அவர்களைத் தாறுமாறாகச் சிந்திக்க வைக்கும். இந்த நிலையில் அவர்கள் எடுக்கும் முடிவுகள் ஒரு நாட்டையே பாதித்து விடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பெண்ணுரிமைக்குச் சம்மந்தமில்லை.

பெண்ணிடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் என்பது பெண்ணுரிமை சம்மந்தப்பட்டதும் அல்ல. 100 கோடி மக்களைக் கொண்ட நாட்டில் 50 கோடிப் பெண்கள் உள்ளனர் என்றால் நாட்டின் அதிபர் பதவி ஒருவருக்குத் தான் கிடைக்கும்.

50 கோடிப் பெண்கள் சம்மந்தப்பட்டதாகவோ, கணிசமான பெண்கள் சம்மந்தப்பட்டதாகவோ இருந்தால் தான் அது பெண்ணுரிமை சம்மந்தப்பட்டதாக இருக்க முடியும்.

கல்வி, வேலைவாய்ப்பு, சொத்துரிமை, மணவாழ்வைத் தேர்வு செய்யும் உரிமை போன்றவை அனைத்துப் பெண்களின் அல்லது கனிசமான பெண்களின் உரிமை பற்றியதாகும். ஆட்சித் தலைமை என்பது பெண்ணுரிமையில் சேராது.

பெண்களால் தான் பெண்களுக்கு பாதுகாப்பா?

பெண்கள் தலைமையேற்றால் தான் பெண்களுக்குப் பாதுகாப்பு என்றும், பிரச்சாரம் செய்யப்படுகிறது. இதுவும் கட்டுக் கதையாகும்.

பெண்களுக்குப் பாதிப்பு ஏற்படும் எல்லா சந்தர்ப்பத்திலும் ஆண்கள் தான் பெண்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கின்றனர். பொது இடங்களில் பெண்ணுக்கு இடையூறு செய்தால் இவளுக்கு இது வேண்டும்' என்பது தான் பெண்களின் விமர்சனமாக உள்ளது. ஆண்கள் தான் தட்டிக் கேட்கின்றனர்.

பேருந்தில் பயணம் செய்யும் போது உட்கார இடம் இல்லாத கிழவியாக இருந்தாலும் இன்னொரு பெண் இடம் கொடுப்பது அரிதாகும். ஆண்கள் பெரும்பாலும் தமது இருக்கையைக் கொடுத்து விடுவார்கள்.

அலங்காரம் செய்து கொண்டவளைக் கேவலமாக விமர்சிப்பதும், பெண்களின் நடத்தை பற்றி அவதூறு பேசுவதும் பெண்கள் தான்.

தன்னைப் போன்ற ஒரு பெண்ணிடம் வரதட்சணை கேட்பதிலும் பெண்கள் தான் பெரும் பங்கு வகிக்கின்றனர்.

முஸ்லிம் ஜமாஅத்துகளில் குடும்பப் பிரச்சினை பற்றிய வழக்கின் போது அனைவரும் பெண்கள் சார்பாக பேசி வருவதைக் காண்கிறோம். இதன் காரணமாகத் தான் முஸ்லிம் சமுதாயப் பெண்கள் அதிகப் பாதுகாப்புடன் உள்ளனர். எனவே நாட்டிற்கு, ஜமாஅத்திற்கு பெண்கள் தலைமை தாங்கினால் பெண்களுக்கு நன்மை என்பதெல்லாம் நூறு சதவிகிதம் கட்டுக் கதையாகும்.

பெண்கள் கல்வி கற்கக் கூடாது.

பெண்கள் கல்வி கற்கக் கூடாது என்று இஸ்லாம் கூறுவதாகவும் அவதூறு கூறுகின்றனர்.

கல்வியை இஸ்லாம் வலியுறுத்தும் அளவுக்கு வேறு எந்த மதமும் வலியுறுத்தியதில்லை. கற்பவர்களை ஆண் பெண் பேதமின்றி இஸ்லாம் பாராட்டுகிறது.

ஆயினும் ஆண்களும், பெண்களும் சேர்ந்து பயிலும் முறையை மட்டும் தான் இஸ்லாம் எதிர்க்கிறது.

புகழ்ச்சியில் மயங்கி தம்மை இழப்பவர்கள் பெண்களில் அதிகமாகவுள்ளனர்.

கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களே அவர்களை வஞ்சித்து அனுபவிக்கும் செய்திகளும், சக மாணவர்களால் ஏமாற்றப்படும் செய்திகளும் அன்றாடச் செய்திகளாகி விட்டன.

இவ்வாறு சேர்ந்து படிப்பதால் தான் ஆண்களின் கவனமும் சிதறடிக்கப்படுகிறது.

பெண்கள் தனியாகப் படித்தால் படிப்பு ஏறாது என்று கூற முடியாது.

எதில் பாதுகாப்பு அதிகமோ அந்த வழியில் நின்று பெண்களுக்கே உரிய கல்லூரியில் பெண்கள் பயிலுவது தான் அவர்களுக்குப் பாதுகாப்பானது என இஸ்லாம் கூறுகிறது.

பேருந்துகளில் கூட ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி பேருந்துகளில் விடப்படுகின்றன.

ஒரே பேருந்து விடப்படும் இடங்களில் இருவருக்கும் தனித்தனி வழியும் இடமும் ஒதுக்கப்படுகிறது.

சிறிது நேரப் பயணத்தின் போதே இவ்வளவு பாதுகாப்பு நடவடிக்கை என்றால் காலமெல்லாம் ஆண்களுடனே பெண்களை விட்டால் என்னவாகும்?

ஏமாற்றப்படும் அபலைகள் எண்ணிக்கை பெருகி வருவதைக் கண்கூடாகக் கண்ட பின் இதை யாரும் குறை கூற மாட்டார்கள். முஸ்லிமல்லாத பெண்களும் கூட பெண்களுக்கே உள்ள கல்லூரிகளில் படிப்பதே பாதுகாப்பானது என்பதை உணர வேண்டும்.

ஆண்களும், பெண்களும் சேர்ந்து படிப்பதால் எத்தகைய விளைவுகள் ஏற்பட்டு வருகின்றன? இதனால் பெண்கள் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதைத் தனி நூலாகவே எழுதலாம்.

ஏமாற்றப்படும் அபலைகள் பற்றிய செய்தி செய்தித் தாள்களில் அன்றாடம் இடம் பிடித்து வருவதே இதைப் புரிந்து கொள்ள போதுமானதாகும்.

பெண்கள் பள்ளிவாசலுக்கு வரலாமா?

பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்லக் கூடாது என்று இஸ்லாம் கூறுவதாக சிலர் நினைக்கின்றனர்.

இது முற்றிலும் தவறாகும். நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் பெண்கள் பள்ளிவாசலுக்கு தினமும் வந்து தொழுகையில் பங்கெடுத்துள்ளனர். நபிகள் நாயகம் (ஸல்) அனுமதித்த ஒன்றை யாரும் தடை செய்ய முடியாது.

இந்தியாவில் வாழும் முஸ்லிம்களில் பெரும்பாலானவர்களின் அறியாமை காரணமாக பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் இஸ்லாம் இதை அனுமதிக்கின்றது.

பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதைத் தடுக்காதீர்கள்'

என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

நூல் : புகாரி 900, 873, 5238

பெண்கள் இரவு நேரத்தில் பள்ளிக்குச் செல்ல அனுமதி கேட்டால் அவர்களை அனுமதியுங்கள் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

நூல் : புகாரி 865, 899

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் பெண்களும் வைகறைத் தொழுகையில் கலந்து விட்டு இல்லம் திரும்புவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) கூறினார்கள்.

நூல் : புகாரி 578, 372, 867, 872

.'நான் நீண்ட நேரம் தொழுகை நடத்தும் எண்ணத்தில் நிற்பேன். அப்போது குழந்தையின் அழுகுரலை நான் கேட்டு விட்டால் தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுகிறேன். (தொழுகையில் கலந்து கொண்ட) அக்குழந்தையின் தாயாரின் உள்ளம் தவிக்கக் கூடாது என்பதே இதற்குக் காரணம்' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

நூல் : புகாரி 707, 862, 708, 709, 710, 868

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நாள் இரவுத் தொழுகையைத் தாமதமாகத் தொழுதனர். அப்போது உமர் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று 'பெண்களும் சிறுவர்களும் உறங்குகின்றனர்' என்று தெரிவித்தார்கள்.

நூல் : புகாரி 866, 569, 862, 864

தொழுகை முடிந்தவுடன் பெண்கள் முதலில் வெளியே செல்லும் வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், மற்ற ஆண்களும் தமது இடத்திலேயே அமர்ந்திருப்பது வழக்கம்.

நூல் : புகாரி 875, 837, 866

பெண்கள் பள்ளிவாசலுக்கு வந்து வழிபடலாம். கூட்டுத் தொழுகையில் பங்கேற்கலாம் என்பதற்கு இன்னும் ஏராளமான சான்றுகள் உள்ளன.

அரபு நாடுகளிலும், மலேசியாவிலும் பெண்கள் இன்றளவும் பள்ளிவாசலுக்கு வந்து தொழுகை நடத்துகின்றனர்.

முஸ்லிம்களின் பள்ளிவாசல்களில் முதலிடம் மக்காவில் உள்ள பள்ளிவாசலுக்கு உண்டு. அங்கே ஆண்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றுவது போல் பெண்களும் நிறைவேற்றுகின்றனர். தொழுகின்றனர்.

மார்க்கம் அறியாத சில பேர் சில பகுதிகளில் பெண்களைத் தடுத்தாலும் அது சிறிது சிறிதாக மாறி வருகிறது.

அடிமைப் பெண்கள்

திருமணம் செய்யாமல் அடிமைப் பெண்களுடன் அவர்களின் எஜமானர்கள் குடும்பம் நடத்தலாம் என்று திருக்குர்ஆனின் பல வசனங்களில் கூறப்பட்டுள்ளது.

(பார்க்க : திருக்குர்ஆன் 4:3, 4:24,25, 4:36, 16:71, 23:6, 24:31, 24:33, 24:58, 30:58, 33:50, 33:52, 33:55, 70:30)

இது முஸ்லிமல்லாதவர்களுக்கும், சில முஸ்லிம்களுக்கும் பலவித ஐயங்களை ஏற்படுத்தக் கூடும்.

திருமணம் செய்யாமலேயே அடிமைப் பெண்களை அனுபவிக்கலாம் என்பது விபச்சாரத்திற்கு அனுமதி வழங்கியது போல் உள்ளது. விபச்சாரத்திற்கும், இதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று அவர்கள் கருதலாம்.

மேலோட்டமாகப் பார்க்கும் போது வைப்பாட்டிகள் வைத்துக் கொள்வதற்கும், அடிமைப் பெண்களை அனுபவிப்பதற்கும் வித்தியாசம் எதுவும் தென்படாததால் அவர்களுக்கு இவ்வாறு ஐயம் ஏற்படுவது இயற்கையே! ஆயினும் இது பற்றிய உண்மை நிலையை விளங்கிக் கொண்டால் இந்தச் சட்டம் அறிவுப் பூர்வமானது என்பதை அவர்களும் ஒப்புக் கொள்வார்கள். எனவே இது பற்றி விரிவாக நாம் அறிந்து கொள்வது அவசியமாகும்.

இன்று அடிமைப் பெண்களோ, அடிமை ஆண்களோ இல்லாததால் இதைப் புரிந்து கொள்வதற்கு இது பற்றிய வரலாறு தெரிந்திருப்பது அவசியம்.

இரண்டு நாடுகளுக்கிடையே போர் நடக்கும் போது, போரில் வெற்றி பெற்றவர்கள் தோற்றவர்களைச் சிறைப் பிடிப்பார்கள். சிறைப் பிடிக்கப்பட்டவர்களில் ஆண்களும் இருப்பார்கள். குறைந்த அளவில் பெண்களும் இருப்பார்கள்.

இவ்வாறு சிறைப் பிடிக்கப்பட்டவர்களை அடைத்து வைக்க அன்று சிறைக் கூடங்கள் இருக்கவில்லை.

அவர்களுக்கு உணவளித்துப் பராமரிப்பதும் தேவையற்ற சுமையாக அமையும். எனவே கைது செய்யப்பட்டவர்களைப் போரில் ஈடுபட்டவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுப்பார்கள்.

அவர்களிடம் வேலை வாங்கி விட்டு அவர்களுக்கு உணவளிப்பது சிரமமாக இருக்காது.

வேலைக்கு ஆள் தேவையில்லை என்ற நிலையில் இருப்பவர்கள் தமக்குக் கிடைத்த அடிமைகளை வசதியானவர்களிடம் விற்று விடுவார்கள். இதனால் அடிமைச் சந்தைகளும் கூட செயல்பட்டு வந்தன.

மேலும் சில கொடூர மனம் படைத்த மன்னர்கள் வெற்றி கொள்ளப்பட்ட நாட்டில் நுழைந்து போரில் சம்மந்தப்படாத அழகிய பெண்களையும் பிடித்து வந்து அடிமைகளாக்கிக் கொண்டதுமுண்டு. அடிமைகள் இப்படித் தான் உருவானார்கள்.

மொத்த உலகமும் இதை அங்கீகாரம் செய்திருந்த காலத்தில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்யலானார்கள். இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பே உலகெங்கும் ஆண் அடிமைகளிடம் வேலை வாங்குவதும், பெண் அடிமைகளை விருப்பம் போல் அனுபவிப்பதும் வழக்கத்தில் இருந்தது என்பதை இந்த விபரங்களிலிருந்து அறியலாம்.

உலகெங்கும் நடந்து வந்த அடிமை வியாபாரத்தை இஸ்லாம் ஒரு ஒழுங்குக்குக் கொண்டு வந்ததேயன்றி அடிமைகள் விடுதலை செய்யப்படுவதற்கான வழிகளைக் காட்டியதேயன்றி இஸ்லாமே அடிமைகளை உருவாக்கவில்லை.

எத்தனையோ சமூகக் கொடுமைகளை ஒரு உத்தரவின் மூலம் ஒழித்துக் கட்டிய இஸ்லாம் அடிமைகளையும் ஒழித்துக் கட்டியிருக்க முடியாதா? ஏன் இஸ்லாமும் அதை ஏற்றுக் கொண்டது? என்ற கேள்வி சிலருக்குத் தோன்றலாம்.

இதில் பல விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். போர்க்களத்தில் பிடிக்கப்படுவதன் மூலம் அடிமைகள் உருவானாலும் போர் வீரர்கள் உடனுக்குடன் அவர்களை விற்றுக் காசாக்கி விடுவார்கள். பெரும்பாலும் விலை கொடுத்து வாங்கியவர்களிடம் தான் அடிமைகள் இருந்தனர்.

இனிமேல் அடிமைகள் இருக்கக் கூடாது என்று உத்தரவிட்டால் அடிமைகளை விலைக்கு வாங்கியவர்கள் பெரிய அளவில் நஷ்டமடைவார்கள்.

அவர்கள் அனைவருக்கும் நஷ்ட ஈடு அளித்தால் அரசை நடத்த முடியாது. நஷ்ட ஈடு அளிக்காமல் உத்தரவு போட்டால் சட்டப்பூர்வமான அனுமதி இருந்த போது செய்த வியாபாரத்தில் மக்களுக்கு நஷ்டம் ஏற்படுத்துவது அநியாயமாகும்.

அப்படியே அனைத்து அடிமைகளுக்காகவும் நஷ்ட ஈடு கொடுத்து விடுவிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டாலும் அது கேடாகத் தான் முடியும்.

ஏனெனில் அடிக்கடி போர்கள் நடந்து கொண்டிருந்த அன்றைய சூழ்நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டும் ஒருதலைப் பட்சமாக இவ்வாறு அறிவித்தால், முஸ்லிம் கைதிகள் மற்ற நாட்டில் அடிமைகளாக இருக்கும் நிலை ஏற்படும். எதிரிகள் உடனே விடுதலையாகும் நிலையும் ஏற்படும். அந்த எதிரிகள் மீண்டும் படை திரட்டி வரக்கூடிய அபாயமும் உண்டு.

உலக நாடுகள் அனைத்தும் ஒருமித்த தீர்மானத்திற்கு வரும் வரை நபிகள் நாயகம் (ஸல்) மட்டும் முடிவெடுப்பது நன்மை பயக்காது.

'நபிகள் நாயகத்தை எதிர்த்துப் போர் செய்தால் நமக்குப் பெரிய இழப்பு ஏற்படாது; அவருக்குத் தான் இழப்பு ஏற்படும்' என்ற எண்ணம் சுற்றியுள்ள நாடுகளுக்கு ஏற்படும். எனவே தான் உத்தரவு போட்டு அடிமை முறையை ஒழிக்கவில்லை.

அதே சமயத்தில் அடிமைகளை இல்லாதொழிக்க வேறு பல ஏற்பாடுகளை இஸ்லாம் செய்தது.

ஒருவர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து விட்டு அதை முறித்தாலோ, அல்லது நோன்பை முறித்தாலோ இது போன்ற குற்றங்களுக்குப் பரிகாரமாக வசதியுள்ளவர்கள் அடிமைகளை விடுதலை செய்ய வேண்டும் என்று இஸ்லாம் ஆணையிட்டது.

(பார்க்க : திருக்குர்ஆன் 2:177, 4:92, 5:89, 9:60, 58:3, 90:13)

ஒப்பந்த அடிப்படையில் அடிமைகள் விடுதலையாவதற்கும் இஸ்லாம் ஏற்பாடு செய்தது. உன்னை நான் விடுதலை செய்கிறேன். நீ உழைத்து சிறிது சிறிதாக எனது கடனை அடைக்க வேண்டும் என்று எஜமானர்கள் அடிமைகளிடம் உடன்படிக்கை செய்து விடுக்க ஆர்வமூட்டினார்கள்.

(பார்க்க : திருக்குர்ஆன் 24:33)

யாரேனும் அடிமையை விடுதலை செய்தால் அந்த அடிமை பிற்காலத்தில் சம்பாதிப்பவைகளுக்கு அவனது எஜமான் வாரிசாவார் என்று சட்டம் கொண்டு வந்து அடிமைகளை விடுவிக்க இஸ்லாம் தூண்டியது.

(பார்க்க : புகாரி 456, 1493, 2155, 2156, 2168, 2169, 2561, 2562, 2563, 2564, 2565, 2578, 2717, 2726, 2729, 2735, 5097, 5279, 5284, 5430, 6717, 6751, 6752, 6754, 6757, 6759)

இத்தகைய சட்டங்கள் மூலம் தமது வாழ்நாளில் கணிசமான அளவுக்கு அடிமைகளின் எண்ணிக்கையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறைத்தார்கள். இது பொதுவாக அடிமைகள் பற்றியது.

அடிமைப் பெண்கள் விஷயத்தையும் அறிந்து கொள்வோம்.

அடிமைப் பெண்களாக விற்கப்படுவோர் எஜமான் வீட்டில் தான் தங்கும் நிலை இருக்கும். அவளது கணவன் வேறு நாட்டில் இருப்பான்; அல்லது இல்லாமலும் இருப்பான்.

இந்த நிலையில் அப்பெண்ணைத் தகாத முறையில் அடைய பலரும் முயற்சிப்பார்கள். இதற்கு வேலி போட்டாக வேண்டும். அவளுக்கும் உடல் ரீதியான தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

இதைக் கருத்தில் கொண்டு தான் அடிமைகளை விலைக்கு வாங்கிய எஜமான் (பல எஜமான் இருந்தால் அவர்களில் ஒரே ஒருவர் மட்டும்) குடும்பம் அவளுடன் நடத்தலாம். இவ்வாறு குடும்பம் நடத்தும் போது அவள் குழந்தையைப் பெற்றால் அவளும், குழந்தையும் அடிமைத் தளையிலிருந்து விடுபடுவார்கள் என்று இஸ்லாம் சட்டம் போட்டது.

இதை அந்தச் சமயத்தில் அனுமதிக்காவிட்டால் அவளுக்காகப் பரிந்து பேச யாருமில்லாத நாட்டில் அவளது எஜமானையே முழுவதும் சார்ந்திருக்கும் போது அவளை அவன் அனுபவிப்பதைத் தடுக்க முடியாது போகும்.

அடிமை தானே! நாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற எண்ணம் மற்றவர்களுக்கும் ஏற்படும். அவளுக்கு கணவன் இல்லாவிட்டாலும் கணவன் அந்தஸ்தில் எஜமான் இருக்கிறான் என்ற எண்ணம் ஏற்படும் போது அவளுக்குப் பாதுகாப்பு ஏற்படும்.

அவளுடன் ஒரு எஜமானர் தான் குடும்பம் நடத்த வேண்டும் எனக் கூறுவதாலும், அவளுக்குப் பிறந்த குழந்தை சொந்த எஜமானின் குழந்தையாகவே கருதப்படும் என்பதாலும் இது விபச்சாரமாகாது.

ஒரு முதலாளியிடம் ஓர் இளம் பெண் வேலைக்குச் சேர்கிறாள் என்று வைத்துக் கொள்வோம். அந்த வேலைக்காரியை அந்த முதலாளி விலை கொடுத்து வாங்கி விடவில்லை. அந்த முதலாளியை விட்டால் அவளுக்கு வேறு கதியே இல்லை என்ற நிலைமையும் இல்லை. அவளுக்காகப் பரிந்து பேசவும் அவளுக்கு நேரும் கொடுமைகளைத் தட்டிக் கேட்கவும் அவளுக்கென்று சிலர் உள்ளனர்.

இந்த வேலைக்காரப் பெண்ணுக்கு இவ்வளவு சுதந்திரமும், பாதுகாப்பும் இருந்தும் கூட எத்தனையோ வேலைக்காரப் பெண்கள் முதலாளியின் காமப் பசிக்கு இரையாகி விடுகின்றனர். விரும்பியும் விரும்பாமலும் இப்படி இறையாவோர் ஏராளம்!

சுதந்திரமும், உறவினர்களும் உள்ள வேலைக்காரிக்கே இந்தக் கதி என்றால் இந்த வேலைக்காரிக்கு இருப்பது போன்ற சுதந்திரமும், பாதுகாப்பும் இல்லாத அடிமைப் பெண்ணின் கதி என்ன என்பதை எளிதில் உணரலாம். இத்தகைய நிலையில் அடிமைப் பெண்களை அவர்களின் எஜமானர்கள் அனுபவிப்பதற்குத் தடை விதித்தால் அது அர்த்தமற்ற தடையாகவே அமையும்.

அடிமைப் பெண்கள் என்ற நிலை இருந்த காலத்தில் இந்த அனுமதியை அளிப்பதைத் தவிர வேறு வழியில்லை. இன்று உலகமெங்கும் அடிமை முறை ஒழிக்கப்பட்டு விட்டதால் இப்போது இதை நடைமுறைப்படுத்த முடியாது.

இவ்வாறு தடை விதிக்காததற்கு இன்னொரு காரணமும் உண்டு.

இஸ்லாம் குற்றங்களைத் தடுப்பதற்காகக் கடுமையான தண்டனைகளை குற்றவாளிகளுக்கு வழங்குகின்றது. இந்தத் தண்டனைகளுக்கு அஞ்சி மக்கள் குற்றங்களிலிருந்து விலகிக் கொள்வார்கள்.

அடிமைப் பெண்களை அனுபவிக்கக் கூடாது என்று சட்டமியற்றி, அக்குற்றத்திற்குக் கடும் தண்டனை உண்டு என்று அறிவித்தால் கூட இதைத் தடுக்க முடியாது.

ஏனெனில் அடிமைப் பெண்கள் எஜமானர்களின் வீட்டிலேயே எப்போதும் இருப்பதால் அவர்களின் தனிமையைச் சந்தேகப்படவும் முடியாது. அப்படி நடந்து விட்டால் அதற்கு சாட்சிகளும் இருக்க மாட்டார்கள்.

நடப்பதையும் தடுக்க முடியாது. நடந்து விட்டால் நிரூபிக்கவும் முடியாது என்ற நிலையில் தான் அடிமைப் பெண்கள் விஷயத்தில் இந்த அனுமதியை இஸ்லாம் வழங்கியது

வேலைக்காரிகளின் கற்புக்குக் கூட பாதுகாப்பற்ற நிலை தானே உள்ளது. எனவே அவர்களையும் அனுபவிக்கலாமா? என்று சிலர் கேட்கலாம்.

வேலைக்காரிக்கும் அடிமைப் பெண்ணுக்குமிடையே பெரிய வித்தியாசங்கள் உள்ளன. ஒரு வேலைக்காரி, வேலைக்காரியாகத் தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. குறிப்பிட்ட ஒரு முதலாளியிடம் தான் வேலை செய்ய வேண்டும் என்பதும் கட்டாயமில்லை. முதலாளி ஒரு மாதிரியாக நடக்கக் கூடியவர் என்று உணர்ந்தால் அந்த வேலையை அவள் உதறி விட முடியும். சுருங்கச் சொன்னால் வேலைக்காரி அந்த நிலையை அவளே தேர்ந்தெடுக்கிறாள். அடிமைப் பெண்கள் விருப்பத்துடன் அவர்களாகவே அடிமையாவதில்லை.

ஆக வேலைக்காரி தன் கற்பைக் காத்துக் கொள்ள மனப்பூர்வமாக விரும்பினால், கற்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சந்தர்ப்பங்களைத் தவிர்த்துக் கொள்ள முடியும். அடிமைப் பெண் அப்படியெல்லாம் தவிர்த்துக் கொள்ள முடியாது. எனவே வேலைக்காரியுடன் அடிமைகளை ஒப்பிடக் கூடாது.

உடலுறவுத் தேவை என்பது ஆண்களுக்கு இருப்பது போலவே பெண்களுக்கும் பொதுவானது. பெண்களின் பால் ஆண்களுக்கு நாட்டமிருப்பது போலவே, ஆண்களின் பால் பெண்களுக்கும் நாட்டம் உண்டு. இரு சாராருடைய உணர்வுகளும் கவனிக்கப்பட வேண்டியவையே!

அடிமைப் பெண் என்பவள் கணவனை விட்டுப் பிரிக்கப்பட்டோ, அல்லது கன்னியாகவோ பிடித்து வரப்படுகிறாள். அவள் பிடித்து வரப்பட்ட நாட்டில் அவளுக்கு மணம் செய்து வைக்க யாருமே இல்லை. யாராவது முன் வந்தாலும் அவளது எஜமானன் அவளை விலை கொடுத்து வாங்கியிருப்பதால் அதற்கு உடன்பட மாட்டான். திருமணம் செய்து வைத்தால் அவளிடமிருந்து முழு அளவில் வேலை வாங்க முடியாது என்பதால் அவன் அதை நிராகரிக்கவே செய்வான்.

அவன் நிராகரிக்க மாட்டான் என்று வைத்துக் கொண்டாலும் இன்னொருவனின் முழு நேர அடிமையாக உள்ள ஒருத்தியை மணக்க யாருமே முன் வரமாட்டார்கள்.

அவளது உடல் தேவை முழுமையாக மறுக்கப்படும் நிலை; இந்த நிலையில் அவள் என்ன செய்வாள்? கள்ளத் தனமாக மற்றவரை நாடுவாள். அல்லது தனது எஜமானனையே சபலப்படுத்தி வெற்றி காண்பாள்.

தன்னைத் தெரிந்தவர்கள் யாருமே இல்லாத இடத்தில் சர்வ சாதாரணமாக அவள் குற்றம் புரியத் துணிந்து விடுவாள். கள்ள உறவு வைத்துக் கொள்வதைத் தடுக்கவும், அவளது உணர்வுகளுக்கு வடிகால் ஏற்படுத்தவும் அவளது எஜமானனுக்கு மட்டும் அதை அனுமதிப்பதைத் தவிர வேறு மார்க்கம் இல்லை. எப்படித் தடுத்தாலும் இது நடந்தே தீரும் விஷயமாக உள்ளதால் இஸ்லாம் அதை அனுமதிக்கின்றது.

இது மூன்றாவது காரணம்.

இது போன்ற நியாயமான காரணங்களால் அடிமைப் பெண்கள் விஷயத்தில் அன்றைய காலத்தில் பொருத்தமான சட்டத்தையே இஸ்லாம் வழங்கியுள்ளது என்பதில் ஐயமில்லை.

09.07.2009. 2:03 AM

ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன்

வரு முன் உரைத்த இஸ்லாம்

கடந்த 2003 ஆம் ஆண்டு பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் நபிகள் நாயகத்தின் முன்னறிவிப்புக்கள் என்ற தலைப்பில் ரமளான் முழுவதும் தொடர் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.

அந்த உரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் தாம் என்பதைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கும் வகையில் அமைந்தது. தனியார் தொலைக்காட்சியிலும் சஹர் நேரத்தில் ஒளிபரப்புச் செய்யப்பட்டது.

அந்த உரையில் நபிகள் நாயகத்தின் முன்னறிவிப்புகள் மட்டுமே இடம் பெற்றுள்ளது. அதை விட முக்கியமான அறிவியல் உண்மைகளும், எதிர்கால நிகழ்வுகள் பற்றிய முன்னறிவிப்புகளும் திருக்குர்ஆனில் ஏராளம் உள்ளன. எனவே அவற்றையும் தொகுத்து நபிகள் நாயகத்தின் முன்னறிவிப்புடன் இணைத்து வெளியிட்டுள்ளோம்.

இஸ்லாம் இறைவன் வழங்கிய மார்க்கம் என்பதை நிரூபிக்கும் சான்றாக திருக்குர்ஆனும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்புக்களும் அமைந்துள்ளன என்பதை பின் வரும் தலைப்புகளில் இந்நூல் தெளிவுபடுத்துகிறது.

திருக்குர்ஆன் ஓர் வாழும் அற்புதம்!

அறிவியல் கண்டுபிடிப்புகள்

1 பெருவெடிப்புக் கொள்கை

2 திருப்பித் தரும் வானம்

3 விண்வெளிப் பயணம் சாத்தியமே

4 முகடாக வானம்

5 பூமியில் தான் வாழ முடியும்

6 புவி ஈர்ப்பு சக்தி

7 முளைகளாக மலைகள்

8 ஓரங்களில் குறையும் பூமி

9 பூமியைத் தொட்டிலாக

10 பூமிக்கு அடியில் எவ்வளவு ஆழத்திற்குச் செல்ல முடியும்?

11 நிலத்தடி நீர் எவ்வாறு சேமிக்கப்படுகிறது

12 இரு கடல்களுக்கிடையே தடுப்பு

13 உதிக்கும் பல திசைகள்

14 மனிதர்களால் குறையும் பூமி

15 ஆழ் கடலில் அலை

16 மலட்டுக் காற்று

17 சூரியனும் கோள்களும் ஓடுகின்றன

18 கருவில் குழந்தையின் வளர்ச்சி

19 கலப்பு விந்துவிலிருந்து மனிதனின் உற்பத்தி

20 ஜோடி ஜோடியாக…

21 விந்தின் பிறப்பிடம்

22 கர்ப்ப அறையின் தனித் தன்மை

23 விரல் ரேகையின் முக்கியத்துவம்

24 பால் எவ்வாறு உற்பத்தியாகிறது

25 தேன் எவ்வாறு உற்பத்தியாகிறது

26 நவீன வாகனங்கள்

27 பெருங்கவலை போக்கும் அரு மருந்து

28 வேதனைகளை உணரக் கூடிய நரம்புகள்

29 பாதுகாக்கப்படும் திருக்குர்ஆன்

30 கஃபா பற்றி முன்னறிவிப்பு

31 மனிதர்களால் நபிகள் நாயகத்தைக் கொல்ல முடியாது

32 பாதுகாக்கப்பட்ட ஃபிர்அவ்னின் உடல்

33 நுஹ் நபியின் கப்பல்

34 இஸ்லாமிய ஆட்சி உருவாகும் என்ற முன்னறிவிப்பு

35 மக்காவை நபிகள் நாயகம் (ஸல்) வெற்றி கொள்வார்கள் என்ற முன்னறிவிப்பு

36 பத்ருப் போரில் வெற்றி பற்றிய முன்னறிவிப்பு

37 அபூலஹப் குறித்த முன்னறிவிப்பு

38 பாரசீகம் ரோமாபுரியிடம் தோற்கும்

39 கண்டுபிடிக்கப்பட்ட ஏடு

40 தீய நோக்கத்தில் கட்டப்பட்ட பள்ளிவாசல்

நபிகள் நாயகத்தின் முன்னறிவிப்புகள்

1 பாரசீகம் வெற்றி கொள்ளப்படும்

2 தமது மரணம் குறித்து அறிவித்த முன்னறிவிப்பு

3 தனி நபரைப் பற்றி நரகவாசி என்ற முன்னறிவிப்பு

4 தமது மகளின் மரணம் பற்றிய முன்னறிவிப்பு

5 அம்மாரின் மரணம் பற்றிய முன்னறிவிப்பு

6 ஸைனப் (ரலி) அவர்கள் மரணம் பற்றிய முன்னறிவிப்பு

7 இரண்டு கலீஃபாக்களின் வீர மரணம் பற்றி முன்னறிவிப்பு

8 ஒட்டகப் போர் பற்றி முன்னறிவிப்பு

9 ஹஸன் (ரலி) மூலம் ஏற்பட்ட சமாதான உடன்படிக்கை

10 வழிப்பறிக் கொள்ளைகள் தடுக்கப்படும்

11 பாரசீகம் மற்றும் ரோமப் பேரரசின் வீழ்ச்சி பற்றிய முன்னறிவிப்பு

12 யமன் வெற்றிகொள்ளப்படும் என்ற முன்னறிவிப்பு

13 பைத்துல் முகத்தஸ் வெற்றி கொள்ளப்படுதல்

14 எகிப்து வெற்றி கொள்ளப்படும் என்ற முன்னறிவிப்பு

15 போலி இறைத்தூதர்கள் பற்றிய எச்சரிக்கை

16 ஸம்ஸம் கிணறு பற்றிய முன்னறிவிப்பு

17 தனது எஜமானியைத் தானே பெற்றெடுக்கும் பெண்கள் பற்றிய முன்னறிவிப்புகள்

18 ஆடு மேய்ப்பவர்கள் உயரமான கட்டடங்களைக் கட்டுவர்

19 ஆடை அணிந்தும் நிர்வாணம்

பொதுவான முன்னறிவிப்புகள்

முன்னுரை

இஸ்லாம் மார்க்கம் முஹம்மது நபி (ஸல்) அவர்களால் உருவாக்கப்பட்ட மார்க்கம் என்று முஸ்லிமல்லாதவர்கள் சிலர் கருதுகிறார்கள்.

ஆனால், இஸ்லாம் மார்க்கம் அகில உலகையும் படைத்த இறைவனால் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வழியாக வழங்கப்பட்டது என்று முஸ்லிம்கள் நம்பி வருகின்றனர்.

முஸ்லிம்கள் கண்மூடித்தனமாக இவ்வாறு நம்புவதில்லை. தக்க காரணங்களின் அடிப்படையில் தான் இஸ்லாம் இறைவனால் வழங்கப்பட்ட மார்க்கம் என்று நம்புகின்றனர்.

இந்த மார்க்கத்தை நிச்சயம் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சுயமாகக் கற்பனை செய்து உருவாக்கியிருக்க முடியாது என்பதற்கு திருக்குர்ஆன் முதன்மையான சான்றாக உள்ளது.

எதிர்காலத்தில் நிகழவுள்ள பல செய்திகளைத் திருக்குர்ஆன் முன் கூட்டியே அறிவித்திருப்பதை நடுநிலையோடு சிந்திப்பவர்கள் 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதர் இதைக் கூறியிருக்கவே முடியாது என்ற முடிவுக்கு வருவார்கள்.

அது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதிர்காலத்தில் நிகழவுள்ள பல நிகழ்ச்சிகளை முன்னரே அறிவித்துள்ளனர். அவர்கள் அறிவித்தவாறு அவை அப்படியே நிறைவேறி வருவதைச் சிந்திப்பவர்கள் – இறைவன் புறத்திலிருந்து தான் இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவித்திருக்க வேண்டும் என்பதைச் சந்தேகமற அறிந்து கொள்வார்கள்.

இதைத் தெளிவுபடுத்தும் நோக்கத்தில் வருமுன் உரைத்த இஸ்லாம் எனும் இந்நூலைத் தொகுத்துள்ளேன். இந்நூலை வாசிப்பவர்கள் இஸ்லாம் இறைவனால் அருளப்பட்ட மார்க்கம் என்பதை அறிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

திருக்குர்ஆன் ஓர் வாழும் அற்புதம்!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்கள் கி.பி. 570-ல் பிறந்தார்கள்.

இந்தக் காலகட்டத்தில் உலக மக்கள் அறிவியலில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தார்கள். உலகம் உருண்டை என்ற சாதாரண அறிவு கூட அன்றைய மக்களுக்கு இருக்கவில்லை.

இத்தகைய காலத்தில் வாழ்ந்தவர் எவ்வளவு பெரிய மேதையாக இருந்தாலும், அவரது காலத்து அறிவைக் கடந்து எதையும் கூறவே இயலாது. சுமார் நூறு வருடம் கடந்த பின் அவரது நூலை வாசித்தால் அதில் பல தவறுகள் இருப்பதை உலகம் கண்டு கொள்ளும்.

நூறு வருடங்களுக்குப் பின் என்ன நடக்கும்; என்னென்ன கண்டுபிடிக்கப்படும் என்ற விபரங்களை நூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்தவரால் ஊகம் செய்ய இயலாது என்பதே இதற்குக் காரணம்.

பல அறிஞர்கள் கூட்டாகச் சேர்ந்து உருவாக்கிய நூலாக இருந்தால் கூட நூறு வருடங்கள் கழித்துப் பார்க்கும் போது அதில் பல தவறுகள் இருப்பதைக் காண முடியும். அந்த நூலே காலத்திற்கு ஒவ்வாத நூலாகி விடும்.

ஆனால் எழுதவும், படிக்கவும் தெரியாத, மிகவும் பின்தங்கிய சமுதாயத்தில் வாழ்ந்த ஒருவர் எதை இறைவேதம் என்று அறிமுகம் செய்தாரோ அந்த வேதத்தில் எந்த ஒன்றையும் தவறானது என்று இன்றைக்கும் நிரூபிக்க முடியவில்லை.

திருக்குர்ஆனைப் பொருத்த வரை அது ஆன்மீகத்தைப் பற்றி மட்டும் பேசவில்லை, எல்லாத் துறைகளைப் பற்றியும் ஆங்காங்கே பேசுகிறது.

பூமி மற்றும் ஏனைய கோள்களின் அமைப்பு, வானில் இருக்கின்ற அதிசயங்கள், புவியியல் மற்றும் வானியல் குறித்துப் பேசும் போது, இந்த நூற்றாண்டின் மாமேதையும், வானியல் நிபுணரும் பேசினால் எவ்வாறு இருக்குமோ அதை விடச் சிறப்பாக திருக்குர்ஆன் பேசுகிறது.

அது போல் மனிதன் மற்றும் உயிரினங்கள், அவற்றின் உள் அமைப்புகள், உயிரினங்கள் உற்பத்தியாகும் விதம் எனப் பல விஷயங்களைக் குர்ஆன் பேசுகிறது. 14 நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன் பேசுவது போல் பேசவில்லை. இந்த நூற்றாண்டின் தேர்ந்த மருத்துவ மேதை பேசுவதை விட அழகாகப் பேசுகிறது.

தாவரங்களைப் பற்றிப் பேசினாலும், மலைகளைப் பற்றிப் பேசினாலும், நதிகளைப் பற்றிப் பேசினாலும் 14 நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் பேசியது போல் திருக்குர்ஆனின் பேச்சு இல்லை.

அது மட்டுமின்றி சென்ற நூற்றாண்டுக்கு முன்னால் வரை கண்டுபிடிக்கப்படாத, தற்போது கண்டுபிடிக்கப்பட்ட பல விஷயங்களை குர்ஆன் அன்றே சொல்லியிருக்கிறது.

பல்வேறு துறைகளிலும் தேர்ந்த அறிவுடைய ஒருவர் பேசுவதை விடச் சிறப்பாக திருக்குர்ஆன் பேசுவதையும், நபிகள் நாயகத்தின் காலச் சூழ்நிலையையும் ஒரு சேர சிந்திப்பவர்கள் இது முஹம்மது நபியின் சொந்த வார்த்தையாக இருக்க முடியாது; முக்காலமும் உணர்ந்த இறைவனின் வார்த்தையாகத் தான் இருக்க முடியும் என்ற முடிவுக்குத் தான் வந்தாக வேண்டும்.

அறிவியல், நவீன கண்டுபிடிப்புகள் மட்டுமின்றி குர்ஆன் கூறுகின்ற அரசியல் சட்டங்கள், குற்றவியல் மற்றும் சிவில் சட்டங்களை ஒருவர் ஆய்வு செய்தால் இன்று உலகமெங்கும் உள்ள எல்லாச் சட்டங்களை விட அது சிறந்து விளங்குவதையும், மனித குலத்துக்கு அதிகப் பயன் தரக்கூடிய வகையில் அமைந்திருப்பதையும் அறிந்து கொள்வார். முஸ்லிமல்லாதவர்கள் கூட குர்ஆன் கூறும் சட்டங்களை அமுல்படுத்தக் கோரும் அளவுக்கு குர்ஆன் கூறும் சட்டங்கள் அமைந்துள்ளன.

ஏராளமான சட்டங்களையும், மரபுகளையும், முன் அனுபவங்களையும் ஆய்வு செய்து பல்வேறு சட்ட மேதைகள் உருவாக்கிய சட்டங்களே ஆண்டு தோறும் திருத்தப்பட்டு வரும் நிலையில் இறைச் சட்டங்கள் என முஹம்மது நபி அவர்கள் அறிமுகப்படுத்திய சட்டங்கள் பலராலும் வரவேற்கப்படுவது முஹம்மது நபியின் சொந்தக் கூற்றாக குர்ஆன் இருக்க முடியாது என்பதற்கு மற்றொரு சான்றாக உள்ளது.

அது போல் உலகம் சந்திக்கின்ற தீர்க்க முடியாத பல பிரச்சனைகளுக்கு ஏற்கத்தக்க அற்புதமான தீர்வுகளைக் குர்ஆன் கூறுவதும் இது முஹம்மது நபியின் சொந்தக் கூற்று இல்லை என்பதற்கான ஆதாரமாக உள்ளது.

குலம், கோத்திரம், சாதி, இவற்றால் ஏற்படும் தீண்டாமை உலகில் பல நாடுகளில் பல நூறு ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத பிரச்சனையாக உள்ளது. இந்தச் சிக்கலான பிரச்சினைக்கும் திருக்குர்ஆன் மிக எளிதான தீர்வை வழங்கி தீண்டாமையை அடியோடு ஒழித்துக் கட்டியதை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.

எதிர்காலத்தில் நடக்கவுள்ள பல செய்திகளைக் குர்ஆன் கூறுகிறது. அது கூறியவாறு அவற்றுள் பல நிகழ்வுகள் நடந்து முடிந்துள்ளன. வார்த்தைக்கு வார்த்தை நிறைவேறிய இத்தகைய முன்னறிவிப்புகள் ஏராளம்.

முஹம்மது நபியின் சொந்தக் கூற்றாக குர்ஆன் இருக்கவே முடியாது என்பதற்கு இவை யாவும் ஆதாரங்களாக உள்ளன.

அவற்றில் சிலவற்றை நாம் இப்போது காண்போம்.

அறிவியல் கண்டு பிடிப்புகள்

1 பெருவெடிப்புக் கொள்கை

வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் (நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா?

திருக்குர்ஆன் 21:30

இந்த உலகம் எவ்வாறு படைக்கப்பட்டது என்பது பற்றி பலவிதமான கட்டுக் கதைகளைத் தான் முந்தைய நூல்கள் கூறுகின்றன.

திருக்குர்ஆன் மட்டும் தான் இன்றைய விஞ்ஞானிகள் சொல்கின்ற அதே கருத்தை 1400 ஆண்டுகளுக்கு முன்பே கூறியது. வானம், பூமி உள்ளிட்ட அனைத்தும் ஒரே பொருளாக இருந்தன. அவற்றை நாம் தான் பிரித்துப் பிளந்து எடுத்தோம் என்று அல்லாஹ் கூறுகிறான்.

இதைத் தான் இன்றைய அறிவியல் உலகமும் சொல்கிறது. இந்தப் பேருண்மை 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதருக்கு எப்படித் தெரியும்? படைத்த இறைவனின் வார்த்தையாக திருக்குர்ஆன் இருந்தால் மாத்திரமே இதைக் கூற முடியும்.

இவ்வாறு பிளக்கப்பட்ட பின் முதலில் தூசுப் படலம் உருவானது. பின்னர் அந்தத் தூசுப் படலங்கள் ஆங்காங்கே திரண்டு கோள்கள் உருவாயின என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இதையும் திருக்குர்ஆன் தெளிவாகக் கூறுகின்றது.

பின்னர் வானம் புகையாக இருந்த போது அதை நாடினான். விரும்பியோ, விரும்பாமலோ நீங்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று அதற்கும், பூமிக்கும் கூறினான். விரும்பியே கட்டுப்பட்டோம் என்று அவை கூறின.

திருக்குர்ஆன் 41:11

இவ்வசனத்தில் வானம் புகையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இவ்வாறு பிரித்தெடுக்கப்பட்ட பின் வானம் புகை மூட்டமாக இருந்து அதன் பிறகு தான் ஒவ்வொரு கோள்களும் உருவாயின என்று இப்போது விஞ்ஞானிகள் கூறுவதை 14 நூற்றாண்டுகளுக்கு முன் திருக்குர்ஆன் கூறி இது இறை வேதம் தான் என்பதைச் சந்தேகமற நிரூபிக்கிறது.

2 திருப்பித் தரும் வானம்

திருப்பித் தரும் வானத்தின் மீது சத்தியமாக! பிளக்கும் பூமியின் மீது சத்தியமாக! இது தெளிவான கூற்றாகும். இது கேலிக்குரியதல்ல.

திருக்குர்ஆன் :86:11, 12, 13, 14

திருக்குர்ஆன் முஹம்மது நபியின் கற்பனை அல்ல. மாறாக என்னுடைய கூற்றாகும் என்பதைச் சத்தியம் செய்து இறைவன் கூறுகிறான். வானத்தின் மேல் சத்தியம் செய்து இதைக் கூறும் போது திருப்பித் தரும் வானம் என்ற அற்புதமான அடைமொழியை அல்லாஹ் பயன்படுத்துகிறான்.

வானம் எதைத் திருப்பித் தருகிறது என்றால் ஏராளமான விஷயங்களை நமக்கு திருப்பித் தந்து கொண்டே இருக்கிறது.

கடலிலிருந்தும், நீர் நிலைகளிலிருந்தும் உறிஞ்சுகின்ற தண்ணீரை மேலே எடுத்துச் சென்று மழையாக நமக்கு வானம் திருப்பித் தருகிறது.

இங்கிருந்து அனுப்புகின்ற ஒலி அலைகளை வானம் நமக்கே திருப்பி அனுப்புகிறது. திருப்பித் தருகின்ற தன்மையை வானம் பெற்றிருக்கின்ற காரணத்தினால் தான் இன்றைக்கு நாம் ரேடியோ போன்ற வசதிகளை அனுபவிக்க முடிகிறது.

மேல் நோக்கி அனுப்பப்படும் செய்திகள் ஒரு இடத்தில் தடுக்கப்பட்டு திரும்பவும் கீழ் நோக்கி நமக்கே அனுப்பப்படுகின்றன.

இன்றைக்கு செயற்கைக் கோள் மூலம் ஒளிபரப்பப்படும் காட்சிகள் நமக்கு இங்கே வந்து சேருகின்றன. இங்கேயிருந்து நாம் ஒளிபரப்ப நினைப்பதை வானத்திற்கு அனுப்பினால் வானம் உடனே நமக்கு அனுப்புகிறது.

மேலே இருந்து திருப்பித் தருகின்ற அம்சத்தோடு வானத்தை இறைவன் படைத்திருக்கிறான்.

இன்னும் நாம் சிந்திக்கும் போது ஏராளமான விஷயங்களை வானம் நமக்குத் திருப்பித் தருவதை அறியலாம்.

திருப்பித் தரும் வானம் என்று யாராவது வானத்திற்கு அடைமொழி சொல்வார்களா? அதுவும் 14 நூற்றாண்டுகளுக்கு முன்னால் சொல்வார்களா?

இந்த மாபெரும் அறிவியல் உண்மையை எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது சொல்கிறார் என்றால் நிச்சயமாக இது அவருடைய வார்த்தையாக இருக்க முடியாது; படைத்த இறைவனின் வார்த்தையாகத் தான் இருக்க முடியும்.

3 விண்வெளிப் பயணம் சாத்தியமே

மனிதன் இன்று விண்வெளியில் பயணம் செய்வதற்கேற்ற சாதனங்களை உருவாக்கி அதன் வழியாக சந்திரனுக்குச் சென்று வந்து விட்டான். செவ்வாய்க் கிரகத்துக்கும், இன்ன பிற கோள்களுக்கும் செல்லும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளான். நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன் விண்வெளிப் பயணம் பற்றி அறிந்திருக்கவில்லை. ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களின் நிலையைச் சொல்லத் தேவையில்லை.

பூமி உருண்டை வடிவிலானது என்பதையோ, பூமி சுழல்வதையோ, அது சூரியனைச் சுற்றிக் கொண்டிருப்பதையோ, மற்ற கோள்களும் சுற்றிச் சுழல்கின்றன என்பதையோ அவர்கள் அறிந்திருக்கவில்லை.

இத்தகைய காலகட்டத்தில் வாழ்ந்த எழுதப் படிக்கத் தெரியாத ஒருவர் வின் வெளிக்குச் செல்வது பற்றியோ, செல்வதற்கான சரியான வழி பற்றியோ, செல்பவருக்கு ஏற்படும் அனுபவம் பற்றியோ பேச முடியுமா? 1400 ஆண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் இவை அனைத்தையும் தெளிவான வார்த்தைகளால் கூறியிருக்கிறது

மனித ஜின் கூட்டமே! வானங்கள் மற்றும் பூமியின் விளிம்புகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெற்றால் கடந்து செல்லுங்கள்! ஆற்றல் மூலம் தவிர நீங்கள் கடந்து செல்ல மாட்டீர்கள்.

திருக்குர்ஆன் : 55:33

விண்ணுலகம் வரை மனிதன் பயணம் மேற்கொள்ளலாம்; மேற்கொள்ள முடியும் என்று இவ்வசனம் தெளிவாகச் சொல்கிறது. அதே நேரத்தில் அது எவ்வாறு சாத்தியமாகும் என்பதற்கான வழிகளையும் சொல்கிறது.

ஒரு ஆற்றலை உருவாக்கிக் கொள்வதன் மூலமாகவே தவிர நீங்கள் இந்த எல்லைகளையெல்லாம் கடக்க இயலாது என்று கூறுகிறது.

விண்ணில் பறக்க முடியுமா? என்பதைக் கற்பனை செய்து கூட பார்த்திராத அந்தச் சமுதாயத்தில் விண்ணில் பறக்க முடியும் என்பதையும், அதற்கென ஒரு ஆற்றல் தேவை என்பதையும் கூறி, இறைவேதம் தான் என்று திருக்குர்ஆன் தன்னைத் தானே நிரூபித்துக் கொள்கிறது.

விண்வெளிப் பயணம் மேற்கொள்பவர்களின் இதயங்கள் இறுக்கமான நிலையை அடைவதை மனிதன் இன்று அனுபவப்பூர்வமாக விளங்கியிருக்கிறான். விமானங்களில் பயணம் செய்பவர்கள் கூட இந்த அனுபவத்தை உணர முடியும்.

விண்வெளிப் பயணம் செய்பவனின் இதயம் நெருக்கடியைச் சந்திக்கும் என்பதையும் திருக்குர்ஆன் கூறியிருக்கிறது.

ஒருவனுக்கு நேர்வழி காட்ட அல்லாஹ் நாடினால் அவனது உள்ளத்தை இஸ்லாத்திற்காக விரிவடையச் செய்கிறான். அவனை வழிதவறச் செய்ய நாடினால் அவனது உள்ளத்தை வானத்தில் ஏறிச் செல்பவனைப் போல் இறுக்கமாக்கி விடுகிறான். இவ்வாறே நம்பிக்கை கொள்ளாதோருக்கு வேதனையை அல்லாஹ் வழங்குகிறான்.

திருக்குர்ஆன் : 6:125

இந்த அறிவு 1400 வருடங்களுக்கு முன்னர் எவருக்கும் இருந்ததில்லை. விர்ரென்று மனிதன் மேலேறிச் செல்ல முடியும் என்று அவர்கள் கற்பனை கூட செய்திருக்க மாட்டார்கள்.

இத்தகைய காலகட்டத்தில் விண்வெளிப் பயணம் மேற்கொள்பவனின் இதயம் இறுக்கமான நிலையை அடையும் என்று முஹம்மது நபியால் எப்படிக் கூற முடியும்? அன்றைய நிலையில் இது படைத்த இறைவனுக்கு மட்டுமே தெரிந்த உண்மையாகும்.

மேலும் மற்றொரு கோனத்திலும் வின்வெளிப் பயணம் சாத்தியம் என்பதை வேறு வார்த்தைகளில் பின்வருமாறு இறைவன் குறிப்பிடுகிறான்.

பாதைகளையுடைய வானத்தின் மீது சத்தியமாக!

திருக்குர்ஆன் 51:7

பூமியில் மாத்திரமே பாதைகள் உண்டு என்று மனிதன் நம்பி வந்த காலத்தில் வானத்திலும் ஏராளமான பாதைகள் உள்ளன எனக் கூறி விண்வெளிப் பயணத்தின் சாத்தியத்தை 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே அல்லாஹ் கூறியிருப்பது திருக்குர்ஆன் இறை வேதம் என்பதற்கு மற்றொரு சான்றாகும்.

4 முகடாக வானம்

வானத்தை பாதுகாக்கப்பட்ட முகடு என்று திருக்குர்ஆன் பல வசனங்களில் குறிப்பிடுகிறது.

அவனே பூமியை உங்களுக்கு விரிப்பாகவும், வானத்தை முகடாகவும் அமைத்தான். வானிலிருந்து தண்ணீரையும் இறக்கினான். அதன் மூலம் கனிகளை உங்களுக்கு உணவாக (பூமியிலிருந்து) வெளிப்படுத்தினான். எனவே அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கு நிகராக எவரையும் கற்பனை செய்யாதீர்கள்!

திருக்குர்ஆன் 2:22

வானத்தைப் பாதுகாக்கப்பட்ட முகடாக்கினோம். அவர்களோ அதில் உள்ள சான்றுகளைப் புறக்கணிக்கின்றனர்.

திருக்குர்ஆன் 21:32

அல்லாஹ்வே இப்பூமியை உங்களுக்கு நிலையானதாகவும், வானத்தை முகடாகவும் அமைத்தான்.

திருக்குர்ஆன் 40:64

உயர்த்தப்பட்ட முகட்டின் மேல் சத்தியமாக!

திருக்குர்ஆன் 52:5

வானத்தை முகடு என ஏன் திருக்குர்ஆன் கூறுகிறது?

விண்ணிலிருந்து வருகின்ற புற ஊதாக் கதிர்கள் வானத்தில் வடிகட்டப்படுகின்றன. அங்கிருந்து வருகின்ற எரி கற்களின் வேகம் மட்டுப்படுத்தப்பட்டு எரிக்கப்பட்டு கேடு விளைவிக்காத அளவில் கீழே விழுகின்றன.

மேலே இருக்கின்ற முகடு, சூரியனின் அளவு கடந்த வெப்பத்தையும் குறைக்கிறது. இது மாதிரியான பாதுகாப்புகளைச் செய்வதால் வானத்தை முகடு என்று திருக்குர்ஆன் கூறுகிறது. இதுவும் மாபெரும் அறிவியல் உண்மையாகும்.

5 பூமியில் தான் வாழ முடியும்

நாம் வாழ்கின்ற பூமியைப் போலவே இன்னும் பல கோள்கள் இருப்பதையும், பூமியைப் போலவே அவை சுற்றிச் சுழல்வதையும் திருக்குர்ஆன் கூறுகிறது. விண்வெளிப் பயணம் கூட சாத்தியம் எனத் திருக்குர்ஆன் கூறுகிறது.

ஆனாலும் பூமியில் தான் மனிதன் வாழ முடியும்; வேறு எந்தக் கிரகத்திலும் மனிதன் வாழ முடியாது என்பதை அழுத்தமாக எடுத்துரைக்கிறது.

உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை வாழ்விடமும், வசதியும் உள்ளன என்றும் கூறினோம்.

திருக்குர்ஆன் : 2:36

உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை தங்குமிடமும், வசதியும் உள்ளன என்று (இறைவன்) கூறினான்.

திருக்குர்ஆன் 7:24

அதிலேயே வாழ்வீர்கள்! அதிலேயே மரணிப்பீர்கள்! அதிருந்தே வெளிப்படுத்தப்படுவீர்கள் என்றும் கூறினான்.

திருக்குர்ஆன் 7:25

பூமியில் உங்களை வாழச் செய்திருக்கிறோம். உங்களுக்கு வசதி வாய்ப்புகளையும் இதில் ஏற்படுத்தினோம்.

திருக்குர்ஆன் 7:10

அவனது கட்டளைப்படி வானமும், பூமியும் நிலை பெற்றிருப்பதும் அவனது சான்றுகளில் உள்ளவை. பின்னர் அவன் உங்களை ஒரே தடவை அழைப்பான். அப்போது பூமியிலிருந்து வெளிப்படுவீர்கள்.

திருக்குர்ஆன் 30:25

பூமியிலிருந்து மீண்டும் எழுப்பப்படுவீர்கள் என்ற சொற்றொடர் முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டிய சொற்றொடராகும். எல்லா மனிதர்களும் அழிக்கப்பட்ட பின் அனைவரும் பூமியிலிருந்து எழுப்பப்படுவார்கள் என்பது ஒரு மனிதன் கூட பூமிக்கு வெளியே வாழ முடியாது என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

இதில் தான் வாழ்வீர்கள் என்ற சொற்றொடர் பூமியைத் தவிர வேறு எங்கும் மனிதர்கள் இயற்கையாக வாழ முடியாது என்பதை எடுத்துரைக்கிறது. சில கோள்களில் உயிரினம் வாழ்ந்த தடயம் தென்படுகிறது என்றெல்லாம் கூறினாலும் அது நிரூபிக்கப்படவில்லை. மனிதன் பூமியில் மட்டும் தான் வாழ முடியும் என்பதை விஞ்ஞானிகளும் ஒப்புக் கொள்கிறார்கள்.

மனிதன் தாங்கிக் கொள்கின்ற அளவுக்கு வெப்பமும், குளிரும் பூமியில் மட்டுமே உள்ளது.

சில கோள்களில் காணப்படும் வெப்பம் மனிதனைக் கரிக் கட்டையாக்கி விடும்.

சில கோள்களில் காணப்படும் குளிர் மனித இரத்தத்தை உறைந்து போகச் செய்து விடும்.

உயிர் வாழ அவசியமான காற்றும் பூமியில் தான் இருக்கிறது. ஆக்ஸிஜன் துணையுடன் சில நாட்கள் விண்வெளியில், அல்லது சந்திரனில் தங்குவதை வாழ்வது என்று கூறக் கூடாது. அது இயற்கைக்கு மாற்றமானது.

அதை விட முக்கியமாகக் கவனிக்க வேண்டியது பூமி மட்டுமே சூரியனிலிருந்து 23 டிகிரி சாய்வாகச் சுழல்கிறது. இப்படிச் சாய்வாகச் சுழல்வதால் தான் கோடை, குளிர், வசந்தம், மற்றும் இலையுதிர் காலங்கள் ஏற்படுகின்றன.

வருடமெல்லாம் ஒரே சீரான வெப்பமோ, குளிரோ இருந்தால் அதுவும் வாழ்வதற்கு ஏற்றதாக இராது. எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபிக்கு இதில் தான் வாழ்வீர்கள் என்று எவ்வாறு அடித்துக் கூற இயலும்? எல்லாக் கோள்களையும் படைத்த இறைவனால் மட்டுமே அன்றைய நிலையில் இதனைக் கூற முடியும். எனவே இதுவும் இறை வேதம் என்பதை நிரூபிக்கும் சான்றாக உள்ளது.

6 புவி ஈர்ப்பு சக்தி

வானத்துக்கும், பூமிக்கும் இடையே எந்தத் தூண்களும் இல்லை என்பதை நாம் காண்கிறோம். வானத்தைப் பற்றிப் பேசும் போது தூண்களில்லாத வானம் என்று தான் அனைவரும் குறிப்பிட்டு வருகிறோம். ஆனால் திருக்குர்ஆன் வழக்கத்துக்கு மாற்றமான வர்னணையுடன் வானத்தைப் பற்றி பேசுகிறது.

நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி வானங்களை அல்லாஹ்வே உயர்த்தினான்.

திருக்குர்ஆன் 13:2

நீங்கள் பார்க்கக் கூடிய தூண் இன்றி வானங்களைப் படைத்தான்.

திருக்குர்ஆன் 31:10

வானங்களுக்கும், பூமிக்கும் தூண்கள் உள்ளன; ஆனால் அவைகளைப் பார்க்க முடியாது என்று இவ்வசனங்கள் கூறுகின்றன.

பார்க்க முடியாத தூண்கள் இருக்கின்றனவா? என்றால் நிச்சயமாக இருக்கின்றன. உலகத்தில் இருக்கின்ற பூமி உள்ளிட்ட எல்லாக் கோள்களும் அவற்றிற்குரிய இடங்களில் நீந்துவதற்கு, அவற்றைக் குறிப்பிட்ட வேகத்துடன் இழுத்துப் பிடித்திருக்கின்ற ஒரு ஈர்ப்பு விசை எல்லாப் பகுதியிலும் பரவியிருப்பது தான் காரணம். இந்த ஈர்ப்பு விசையின் காரணமாகத் தான் ஒவ்வொரு கோளும் அந்தரத்தில் எவ்விதப் பிடிமானமும் இன்றி தொங்குகின்ற காட்சியைப் பார்க்கின்றோம்.

எனவே சில நூற்றாண்டுகளுக்கு முன் மனிதன் கண்டறிந்த ஈர்ப்பு விசை எனும் கண்டுபிடிப்பை பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் கூறுகிறது.

வானத்திற்கும், பூமிக்கும் இடையே எந்தத் தூண்களும் இல்லை என்று தெளிவாகத் தெரியும் போது, திருக்குர்ஆன் பார்க்கின்ற தூண்களின்றி என்ற வார்த்தையைத் தேவையில்லாமல் பயன்படுத்தி இருக்க முடியாது.

வானங்களையும், பூமியையும் படைத்தவன் பேசுகின்ற வார்த்தையாக இருப்பதால் தான் பார்க்கின்ற தூண்களின்றி என்ற சொல்லைப் பயன்படுத்தி, பார்க்காத தூண்கள் இருக்கின்றன என்ற உண்மையை மறைமுகமாகக் குறிப்பிடுகிறான்.

திருக்குர்ஆன், முஹம்மது நபியின் கற்பனையல்ல; ஏக இறைவனின் கூற்றுத் தான் என்பதற்கு மற்றுமொரு சான்றாக இது அமைந்துள்ளது.

பூமிக்கும், வானத்துக்கும் இடையே ஈர்ப்பு விசை இயங்குகிறது என்பதை வேறு வார்த்தைகள் மூலம் மற்றொரு வசனத்திலும் இறைவன் தெளிவுபடுத்துகிறான்.

வானங்களும், பூமியும் இடம் பெயராதபடி அவனே தடுத்து வைத்துள்ளான். அவ்விரண்டும் இடம் பெயருமானால் அவனன்றி எவரும் அவற்றைத் தடுத்து நிறுத்த முடியாது. அவன் சகிப்புத் தன்மையுடையவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கிறான்.

திருக்குர்ஆன் 35:41

வானங்களும், பூமியும் விலகி விடாமல் இருக்குமாறு கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளது.

வானங்களும், பூமியும் ஒன்றோடு ஒன்று ஈர்ப்பு விசையால் பிணைக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒன்றின் ஈர்ப்பு விசை அதிகரித்தாலோ, குறைந்தாலோ அவை சிதறிச் சின்னா பின்னமாகி விடும் என்ற கருத்து இதனுள் அடங்கியிருப்பதை யாரும் அறியலாம்.

புவி ஈர்ப்பு விசை பற்றி மற்றொரு கோணத்திலும் திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது.

ஆகாய வெளியில் வசப்படுத்தப்பட்ட நிலையில் பறவையை அவர்கள் பார்க்கவில்லையா? அல்லாஹ்வைத் தவிர யாரும் அவற்றை (அந்தரத்தில்) நிறுத்தவில்லை. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

திருக்குர்ஆன் 16:79

வானங்களிலும், பூமியிலும் உள்ளவையும், அணிவகுத்த நிலையில் பறவைகளும் அல்லாஹ்வைத் துதிப்பதை நீர் அறியவில்லையா? ஒவ்வொன்றும் தனது வணக்கத்தையும், துதித்தலையும் அறிந்துள்ளன. அவர்கள் செய்வதை அல்லாஹ் அறிந்தவன்.

திருக்குர்ஆன் 24:41

அவர்களுக்கு மேலே பறவைகள் (சிறகுகளை) விரித்தும், மடக்கியும் இருப்பதை அவர்கள் காணவில்லையா? அளவற்ற அருளாளனைத் தவிர வேறு எதுவும் அவற்றைக் கீழே விழாது தடுத்துக் கொண்டிருக்கவில்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் பார்ப்பவன்.

திருக்குர்ஆன் 67:19

பறவைகளைப் பற்றிக் குறிப்பிடும் போது அவை ஆகாயத்தில் வசப்படுத்தப்பட்டுள்ளன. உமது இறைவன் தான் அதை வசப்படுத்தி இருக்கின்றான் என்று இறைவன் கூறுகிறான்.

இதில் மிகப் பெரிய அறிவியல் உண்மை உள்ளடங்கி இருக்கிறது. பூமி தன்னைத் தானே சுற்றுவதை நாம் அறிவோம். தன்னைத் தானே சுற்றுவதுடன் சூரியனையும் இந்தப் பூமி ஒரு வருடத்தில் வட்டமடித்து முடிக்கிறது. சூரியனைச் சுற்றுவதற்காக அது செல்கின்ற வேகம் வினாடிக்கு 250 கிலோ மீட்டர் தூரம்.

வினாடிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் பூமி வேகமாக நகரும் போது, பூமி நகர்கின்ற திசையில் இருக்கின்ற அந்தப் பறவைகள் மீது மோத வேண்டும்.

பூமியின் ஈர்ப்பு சக்தி ஒரு குறிப்பிட்ட தொலைவு வரை இருப்பதால் பூமி, அந்தப் பறவையைச் சேர்த்து இழுத்துக் கொண்டே போகிறது. முன் பக்கம் இருக்கும் பறவையைத் தள்ளிக் கொண்டும், பின்பக்கம் இருக்கின்ற பறவையை இழுத்துக் கொண்டும் பூமி நகர்கிறது. முன்பக்கம் பறக்கின்ற பறவையைத் தள்ளாமல் இந்தப் பூமி வேகமாகச் சென்றால் எந்தப் பறவையும் பறக்க முடியாது, பூமியில் மோதி செத்து விடும்.

இந்தப் பேருண்மையைத் திருக்குர்ஆன் அற்புதமான சொற்களால் குறிப்பிடுகிறது. இதுவும் திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்கு மறுக்க முடியாத சான்றாகும்.

7 முளைகளாக மலைகள்

பூமியில் அமைக்கப்பட்டுள்ள மலைகளைப் பற்றி அல்லாஹ் கூறும் போது அதை முளைகளாக நாட்டியிருக்கிறோம் என்று கூறுகிறான்.

மலைகளை முளைகளாக நாட்டினான்.

திருக்குர்ஆன் 79:31

பூமியைத் தொட்டிலாகவும், மலைகளை முளைகளாகவும் நாம் ஆக்கவில்லையா?

திருக்குர்ஆன் 78:6,7

அதில் உயர்ந்த முளைகளை நிறுவினோம். இனிமையான நீரையும் உங்களுக்குப் புகட்டினோம்.

திருக்குர்ஆன் 77:27

பூமியை விரித்தோம். அதில் முளைகளை நட்டினோம். அதில் எடை வரையறுக்கப்பட்ட ஒவ்வொரு பொருளையும் முளைக்கச் செய்தோம்.

திருக்குர்ஆன் 15:19

பூமி, உங்களை அசைத்து விடாதிருக்க அதில் முளைகளையும், நீங்கள் வழியறிவதற்காக பல பாதைகளையும், நதிகளையும், பல அடையாளங்களையும் அவன் அமைத்தான். நட்சத்திரத்தின் மூலம் அவர்கள் வழியை அறிந்து கொள்கின்றனர்.

திருக்குர்ஆன் 16:15,16

பூமி அவர்களைச் சாய்த்து விடாதிருப்பதற்காக முளைகளை ஏற்படுத்தினோம். அவர்கள் வழி காண்பதற்காக பல நீண்ட பாதைகளையும் அதில் ஏற்படுத்தினோம்.

திருக்குர்ஆன் 21:31

(நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது) பூமியை வசிப்பிடமாக்கி, அவற்றுக்கிடையே ஆறுகளை உருவாக்கி அவற்றுக்கு முளைகளையும் அமைத்து இரண்டு கடல்களுக்கிடையே தடுப்பையும் ஏற்படுத்தியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? இல்லை! அவர்களில் அதிகமானோர் அறிவதில்லை.

திருக்குர்ஆன் 27:61

நீங்கள் பார்க்கக் கூடிய தூண் இன்றி வானங்களைப் படைத்தான். உங்களைச் சாய்த்து விடாதிருக்க பூமியில் முளைகளைப் போட்டான். அதில் ஒவ்வொரு உயிரினத்தையும் பரவச் செய்தான்.

திருக்குர்ஆன் 31:10

அதன் மேலே முளைகளை ஏற்படுத்தினான். அதில் பாக்கியம் செய்தான். நான்கு நாட்களில் அதன் உணவுகளை அதில் நிர்ணயம் செய்தான். கேள்வி கேட்போருக்குச் சரியான விடை இதுவே.

திருக்குர்ஆன் 41:10

ஒரு பொருள் இன்னொரு பொருளை விட்டும் பிரிந்து விடாதிருப்பதற்காக அறையப்படுவதே முளைகளாகும்.

இந்தப் பூமி பல்வேறு அடுக்குகளால் அமைக்கப்பட்டுள்ளது. மேல் அடுக்குகள் எடை குறைந்தவையாகவும், உள் அடுக்குகள் கனத்த எடை உடையவையாகவும் உள்ளன.

வேகமாகப் பூமி சுழலும் போது உள்ளடுக்கில் உள்ள கனமான பொருட்களும், மேலடுக்கில் உள்ள எடை குறைவாக உள்ள பொருட்களும் ஒரே வேகத்தில் சுற்ற இயலாது.

இந்த நிலை ஏற்பட்டால் மேல் அடுக்கில் உள்ள மனிதர்கள் தூக்கி எறியப்படுவார்கள்; கட்டடங்களெல்லாம் நொறுங்கி விடும்.

இதைத் தடுக்க வேண்டுமானால் கனமான அடுக்குகளையும், கனம் குறைந்த அடுக்குகளையும் இணைக்கும் விதமாக முளைகள் நாட்டப்பட வேண்டும். அதைத் தான் மலைகள் செய்கின்றன.

ஆங்காங்கே நிறுவப்பட்டுள்ள மலைகள் காரணமாக மேல் அடுக்குகளும், கீழ் அடுக்குகளும் ஒன்றையொன்று பிரிந்து விடாத வகையில் சுழல முடிகிறது.

இந்த மாபெரும் அறிவியல் உண்மை 14 நூற்றாண்டுகளுக்கு முன்னரே கூறப்பட்டிருப்பது, திருக்குர்ஆன் இறை வேதம் என்பதற்கு மற்றொரு சான்றாகும்.

பூமி முதல் உருவாகி பிறகு தான் மலைகள் உருவாகின என்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு மலைகள் முளைகளாக நாட்டப்பட்டுள்ளன என்ற வசனங்கள் எதிரானவை என்று கருதக் கூடாது.

முதல் இரண்டு நாட்களில் பூமியைப் படைத்ததாகவும், பிறகு இரண்டு நாட்களில் பூமியில் மலைகளை நிறுவி அதிலுள்ள உணவு உற்பத்திக்கான ஏற்பாடுகள் செய்ததாகவும் திருக்குர்ஆன் 41:10 வசனம் கூறுவதைக் கவனிக்கவும்.

8 ஓரங்களில் குறையும் பூமி

நிலப்பரப்பு சிறிது சிறிதாக கடலால் விழுங்கப்பட்டு குறைந்து வருவதை சமீப காலத்தில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

14 நூற்றாண்டுகளுக்கு முன்பு நிலப்பரப்பு, கடலால் அரிக்கப்பட்டு அதன் ஓரங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருவதை யாரும் அறிந்திருக்க முடியாது.

ஓரங்களில் சிறிது சிறிதாக நிலப்பரப்பு குறைக்கப்பட்டு வருகிறது என்ற இந்த அறிவியல் கண்டுபிடிப்பு 14 நூற்றாண்டுகளுக்கு முன் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.

பூமியை, அதன் ஓரங்களில் நாம் குறைத்து வருவதை அவர்கள் காணவில்லையா? அல்லாஹ்வே தீர்ப்பளிப்பான். அவனது தீர்ப்பை ஒத்திவைப்பவர் எவருமில்லை. அவன் விரைந்து விசாரிப்பவன்.

திருக்குர்ஆன் 13:41

.அவர்களுக்கு ஆயுளை அதிகமாக்கி அவர்களுக்கும், அவர்களின் முன்னோர்களுக்கும் வாழ்க்கை வசதியைக் கொடுத்தோம். பூமியை அதன் ஓரப் பகுதிகளில் குறைத்து வருகிறோம் என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டாமா? அவர்களா (நம்மை) வெல்பவர்கள்?

திருக்குர்ஆன் 21:44

திருக்குர்ஆன், இறைவனின் வார்த்தையே என்பதற்கு இவ்வசனங்கள் தெளிவான சான்றாக அமைந்திருக்கின்றன.

9 பூமியைத் தொட்டிலாக

திருக்குர்ஆன் பல இடங்களில் பூமியைத் தொட்டிலாக ஆக்கியிருப்பதாகக் குறிப்பிடுகிறது.

அவனே பூமியை உங்களுக்குத் தொட்டிலாக அமைத்தான்.

திருக்குர்ஆன் 20:53

அவனே பூமியை உங்களுக்குத் தொட்டிலாக அமைத்தான். நீங்கள் வழிகளை அடைவதற்காக அதில் பல பாதைகளை அமைத்தான்.

திருக்குர்ஆன் 43:10

பூமியைத் தொட்டிலாகவும், மலைகளை முளைகளாகவும் நாம் ஆக்கவில்லையா?

திருக்குர்ஆன் 78:6,7

பூமி சூரியனால் ஈர்க்கப்பட்டு சூரியனை விட்டு விலகாமல் ரங்கராட்டினம் சுழல்வது போல் சூரியனைச் சுற்றி வருகிறது. சூரியனுடன் ஒரு கயிற்றால் கட்டி இழுக்கப்படுவது போன்ற நிலையில் இந்தப் பூமி சூரியனைச் சுற்றி வருகிறது.

வினாடிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் சூரியனை ஒரு ரங்கராட்டினம் போல் பூமி சுற்றி வந்தாலும் அதை நம்மால் உணர முடிவதில்லை. அது சுற்றுவது நமக்குத் தெரிவதும் இல்லை. குழந்தைகளைத் தொட்டில் இட்டு ஆட்டும்போது அதன் சுழற்சி குழந்தைகளுக்குத் தெரியாது. அவர்களுக்கு அது சுகமாகவும், நித்திரை தரக் கூடியதாகவும் இருக்கும்.

பூமி வேகமாகச் சுழன்றாலும் அந்தச் சுழற்சி நமக்குத் தெரியாது. எந்த விதமான பாதிப்பும் நமக்கு இருக்காது. தொட்டிலாக என்ற சொல் மூலம் இதைத் தான் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

10 பூமிக்கு அடியில் எவ்வளவு ஆழத்திற்குச் செல்ல முடியும்?

பூமியில் கர்வத்துடன் நடக்காதே! நீ பூமியைப் பிளந்து, மலைகளின் உயரத்தின் அளவை அடையவே மாட்டாய்!

திருக்குர்ஆன் 17:37

மனிதன் ஆகாயத்தில் லட்சக் கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ளவற்றை எல்லாம் அறியும் திறன் பெற்றிருக்கிறான். அங்கே சென்று வரும் அளவுக்கு ஆற்றலும் பெற்றிருக்கிறான்.

ஆனால் அவன் வசிக்கின்ற பூமியில் பெரிய அளவுக்கு அவன் இன்னும் ஊடுறுவிச் செல்லவில்லை. மிக அதிகமாக அவன் சென்றிருக்கும் தூரம் 3 கிலோ மீட்டர் தூரம் தான்.

3 கிலோ மீட்டர் ஆழத்திற்குக் கீழே இன்னும் மனிதன் சென்றடையவில்லை. சென்றடைய முடியாது என்றும், சாத்தியமற்றது என்றும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். பல ஏற்கத்தக்க காரணங்களையும் கூறுகிறார்கள்.

விண்வெளிப் பயணம் போக முடியும் என்று சொல்கின்ற திருக்குர்ஆன், விண்வெளிப் பயணம் செல்லும் போது இதயம் சுருங்கி விடும் என்று விளைவையும் கூட சொல்லித் தருகின்ற திருக்குர்ஆன் பூமிக்கு அடியில் நீண்ட மலையின் நீளத்திற்குப் போக முடியாது என்பதை இவ்வசனத்தின் மூலம் சொல்கின்றது.

உலகின் மிக உயரமான மலை இமய மலையாகும். இம்மலையின் உயரம் சுமார் ஒன்பது கிலோ மீட்டராகும். இத்தகைய மலையின் உச்சியை மனிதன் அடைந்து விட முடியும். ஆனால் அந்த உயரத்திற்குக் கீழே செல்ல முடியுமா? என்றால் ஒருக்காலும் சாத்தியமே ஆகாது. அதிகபட்சம் மனிதன் பூமிக்கு அடியில் சென்றிருக்கும் தூரம் 3 கிலோ மீட்டருக்கும் குறைவானவையே.

நீ மேலே போகலாம்; இன்ன பிற சாதனைகள் நிகழ்த்தலாம்; உன் காலுக்குக் கீழே ஒரு நீண்ட மலை உயரத்திற்குப் போக முடியுமா? என்றால் போக முடியாது என்று 14 நூற்றாண்டுகளுக்கு முன் திருக்குர்ஆன் சொன்னதை இன்றைக்கு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துச் சொல்லும் அதிசயத்தைப் பார்க்கிறோம்.

இது மனிதனின் வார்த்தை அல்ல என்பதற்குச் சான்றாகும்.

11 நிலத்தடி நீர் எவ்வாறு சேமிக்கப்படுகிறது?

வானத்திலிருந்து அளவோடு தண்ணீரை இறக்கினோம். அதைப் பூமியில் தங்க வைத்தோம். அதைப் போக்கி விடுவதற்கும் நாம் ஆற்றலுடையவர்கள்.

திருக்குர்ஆன் 23:18

பூமியின் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பது போல் பூமியின் கீழ்ப் பரப்பிலும் பெரிய ஆறுகளும், ஏராளமான தண்ணீரும் உள்ளன.

இந்த நிலத்தடி நீர் கடல் வழியாக பூமிக்கு வருவதாகத் தான் முதலில் நம்பினார்கள். உண்மையில் ஆகாயத்திலிருந்து பெய்யும் மழை ஆங்காங்கே பூமியால் உறிஞ்சப்பட்டு அந்த நீர் தான் பூமிக்கு அடியில் நிலத்தடி நீராக சேமித்து வைக்கப்பட்டுள்ளது என்று கி.பி 1580ல் தான் கண்டறிந்தனர். சமீப காலத்தில் தான் மழை நீரை நிலத்தடியில் சேமிப்பதற்கான பலவிதமான நடவடிக்கைகளையும் அரசுகள் எடுத்து வருகின்றன.

இந்தப் பேருண்மைகளை திருக்குர்ஆன் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே தெளிவுபடுத்தி விட்டது.

பெய்கின்ற மழை நீரை உறிஞ்சுவதற்கு ஏற்ப ஊர்களையும், நகரங்களையும் அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற மறைமுகமான வழிகாட்டுதலும் இந்த வசனத்திற்குள் அடங்கியிருக்கிறது.

12 இரு கடல்களுக்கிடையே தடுப்பு

திருக்குர்ஆன் பல இடங்களில் இரண்டு கடல்கள் சங்கமமாகும் இடத்தில் அவ்விரண்டுக்கும் இடையே ஒரு பலமான தடையையும், தடுப்பையும் ஏற்படுத்தியிருப்பதாகக் கூறுகிறது.

(நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது) பூமியை வசிப்பிடமாக்கி, அவற்றுக்கிடையே ஆறுகளை உருவாக்கி அவற்றுக்கு முளைகளையும் அமைத்து இரண்டு கடல்களுக்கிடையே தடுப்பையும் ஏற்படுத்தியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? இல்லை! அவர்களில் அதிகமானோர் அறிவதில்லை.

திருக்குர்ஆன் 27:61

இரண்டு கடல்கள் சந்திக்குமாறு அவன் ஏற்படுத்தியுள்ளான். இரண்டுக்குமிடையே ஒரு திரை உள்ளது. ஒன்றையொன்று கடக்காது.

திருக்குர்ஆன் 55:19,20

கடல் பற்றி ஆய்வு செய்பவர்கள் ஆராய்ச்சி செய்து இரு கடல்கள் சங்கமமாகும் இடங்களில் இரண்டு தண்ணீரும் சுவையிலும், அடர்த்தியிலும், உப்பின் அளவிலும் வேறுபட்டிருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

பிரஞ்சு நாட்டைச் சேர்ந்த கடல் இயல் ஆய்வாளர் ஜேக்கூஸ் கோஸ்டோ என்பவர் ஆராய்ந்து இரண்டு கடல்களுக்கிடையே தடுப்பு இருப்பதை முதலில் கண்டறிந்தார்.

இது எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபிக்கு 14 நூற்றாண்டுகளுக்கு முன் எப்படித் தெரியும்? எனவே திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை தான் என்பதற்கு இதுவும் சான்றாக இருக்கிறது.

13 உதிக்கும் பல திசைகள்

சாதாரணமாக திசைகளைப் பற்றி பேசும் போது கிழக்கு, மேற்கு என்று ஒருமையில் தான் குறிப்பிடுவர். ஆனால் திருக்குர்ஆன் இரண்டு கிழக்குகள் இரண்டு மேற்குகள் எனவும் பல கிழக்குகள், பல மேற்குகள் எனவும் பயன்படுத்தியுள்ளது.

(அவன்) வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவற்றுக்கு இறைவன். கிழக்குகளுக்கும் இறைவன்.

திருக்குர்ஆன் 37:5

(அவன்) இரண்டு கிழக்குத் திசைகளுக்கும் இறைவன். இரண்டு மேற்குத் திசைகளுக்கும் இறைவன்.

திருக்குர்ஆன் 55:17

கிழக்குகளுக்கும், மேற்குகளுக்குமுரிய இறைவன் மேல் ஆணையிடுகிறேன். அவர்களை விடச் சிறந்தோரைப் பகரமாக்கிட நாம் ஆற்றலுடையவர்கள். நாம் தோற்போர் அல்லர்.

திருக்குர்ஆன் 70:40

இரண்டு கிழக்குகள் இரண்டு மேற்குகள் என்ற சொற்றொடரும், பல கிழக்குகள், பல மேற்குகள் என்ற சொற்றொடரும் இந்தப் பூமி உருண்டை என்பதற்குத் தெளிவான சான்றாக அமைந்துள்ளது. பூமி தட்டையாக இருந்தால் சூரியன் ஒரு இடத்தில் உதித்து மறு இடத்தில் மறைந்து விடும். சூரியன் உதிக்கும் திசையைக் கிழக்கு என்போம். மறையும் திசையை மேற்கு என்போம்.

பூமி உருண்டையாக இருந்தால் நமக்கு எந்தத் திசையில் சூரியன் மறைகிறதோ அதே திசையில் சூரியன் உதிப்பதை பூமியின் மறுபக்கத்தில் உள்ளவர் காண்பார். அதாவது நமக்குக் கிழக்காக இருப்பது மறுபக்கம் உள்ளவருக்கு மேற்காக அமைகின்றது. நமக்கு மேற்காக இருப்பது மறுபக்கம் உள்ளவருக்கு கிழக்காக அமைகின்றது. இரண்டு கிழக்குகள், இரண்டு மேற்குகள் என்பது எவ்வளவு பொருள் பதிந்தது என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

பூமி உருண்டையாக இருந்தால் பூமியுடைய ஒவ்வொரு புள்ளியிலும் உதிக்கும் பல திசைகள் உருவாகின்றன; மறையும் திசைகளும் இவ்வாறே இருக்கின்றன.

பல உதிக்கும் திசைகள், பல மறையும் திசைகள் என்ற சொல் மூலம் பூமி உருண்டை வடிவிலானது என்ற அறிவியல் உண்மையை உள்ளடக்கி ஒரு மாபெரும் விஞ்ஞானி பேசுவது போல் திருக்குர்ஆன் பேசுகிறது. இதுவும் திருக்குர்ஆன் இறை வேதம் என்பதற்குச் சான்றாகும்.

14 மனிதர்களால் குறையும் பூமி

அவர்களால் பூமி எவ்வளவு குறைந்திருக்கிறது என்பதை அறிவோம். நம்மிடம் பாதுகாக்கப்பட்ட ஏடு உள்ளது.

திருக்குர்ஆன் 50:4

அல்லாஹ் உங்களைப் பூமியிலிருந்தே வளர்த்துப் பெரிதாக்கினான்.

திருக்குர்ஆன் 71:17

உலகில் வாழும் மனிதர்களால் பூமி குறைகிறது என்ற தத்துவம் இவ்வசனங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இதில் மிகப் பெரிய அறிவியல் உண்மை அடங்கியிருக்கிறது.

பூமியில் எவ்வளவு உயிரினங்கள் உருவானாலும் அதற்குரிய எடை வெளியிலிருந்து கிடைப்பதில்லை; பூமியுடைய எடை குறைந்து தான் அது மனிதனாக, மிருகங்களாக, மரங்களாக, மற்ற உயிரினங்களாக உற்பத்தியாகின்றன.

இப்படியே முளைக்கின்ற, வளருகின்ற எல்லாப் பொருள்களுமே தங்களின் எடையைப் பூமியிலிருந்து தான் எடுத்துக் கொள்கின்றன.

எத்தனை கோடி மக்கள் பெருகினாலும் அதனால் பூமியுடைய எடை கூடாது. இந்த மக்களோடு சேர்த்து பூமியை எடை போட்டால் ஆரம்பத்தில் பூமியைப் படைத்த போது இருந்த எடை தான் இருக்கும். மனிதன் பூமியிலிருந்து தான் தனது எடையை எடுத்துக் கொண்டு வளர்கிறான் என்ற அறிவியல் உண்மையை 14 நூற்றாண்டுகளுக்கு முன்னால் கூறியிருப்பதன் மூலம் இது இறைவனின் வேதம் தான் என்பது நிரூபணம் ஆகிறது.

இதே தத்துவத்தை மற்றொரு கோனத்திலும் திருக்குர்ஆன் பின் வரும் வசனத்தில் கூறுகிறது.

அவனே உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்தான். (உங்களுக்கு) தங்குமிடமும் ஒப்படைக்கப்படும் இடமும் உள்ளன. புரிந்து கொள்ளும் சமுதாயத்திற்குச் சான்றுகளை விளக்கியுள்ளோம்.

திருக்குர்ஆன் 6:98

இவ்வசனத்தில் கூறப்படும் தங்குமிடம் என்பது இந்த உலகத்தில் வாழுகின்ற பூமியைக் குறிக்கும் என்பதையும், ஒப்படைக்கப்படும் இடம் என்பது மனிதன் மண்ணுக்குள் அடக்கம் செய்யப்படக் கூடிய இடத்தைக் குறிக்கும் என்பதையும் சாதாரணமாக யாரும் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் திருக்குர்ஆன் பயன்படுத்தியிருக்கின்ற ஒப்படைக்கப்படும் இடம் என்ற வார்த்தை மிகப் பெரிய உண்மையைச் சொல்கிறது.

மனிதன் இந்த உலகில் சின்னஞ் சிறிய அளவில் பிறப்பெடுக்கிறான். அவன் பிறப்பெடுத்த போது இருந்த அளவை விட பலப் பல மடங்கு பெரிதாக வளர்ந்து பின்னர் மரணிக்கின்றான். அவன் பிறப்பெடுக்கும் போது இருந்த அந்த எடை பல மடங்கு பெரிதாக எப்படி ஆனது என்றால் இந்த மண்ணிலிருந்து சத்துக்களை அவன் பெறுவதால் தான் ஆனது.

மண்ணிலிருந்து உற்பத்தியாகின்ற தானியங்கள், பருப்புகள், இன்ன பிற சத்துக்களைப் பெற்று தன்னைப் பெரிதாக்கிக் கொண்டு பூமியின் எடையை மனிதன் குறைத்தான்.

50 கிலோ எடையுள்ள ஒரு மனிதன் வாழ்கிறான் என்றால் இவன் வாழ்வதனால் மண்ணிலிருந்து 50 கிலோ குறைந்து விட்டது என்பது பொருள். எங்கிருந்து இந்த 50 கிலோ எடையைப் பெற்றிருக்கின்றானோ அதனை அங்கே அவன் ஒப்படைக்க வேண்டும்.

ஒப்படைக்கப்படும் இடம் என்று சொன்னால் இவன் பூமிக்கு உடைமையான ஒரு பொருளாக இருக்கிறான். ஏனெனில் அங்கிருந்து தான் இவன் எடுக்கப்பட்டிருக்கின்றான் என்பது கருத்து.

மனிதன் பூமியிலுள்ள மண்ணை நேரடியாகச் சாப்பிடுவதில்லை. மண் வேறு பொருளாக மாறி அதனை மனிதன் சாப்பிட்டு தன் உடலை வளர்த்துக் கொண்டான் என்ற தத்துவத்தை உள்ளடக்கி ஒப்படைக்கப்படுகின்ற இடம் என்ற சொல்லை அல்லாஹ் மிகப் பொருத்தமாகப் பயன்படுத்தியிருக்கிறான்.

15 ஆழ் கடலில் அலைகள்

கடலின் மேற்பரப்பில் அலைகள் தவழ்வதை அனைவரும் அறிந்துள்ளனர். ஆனால் ஆழ்கடலுக்கு உள்ளேயும் அலைகள் உள்ளன; கடலின் ஆழத்தில் ஏற்படும் பேரலைகள் சுனாமியாகச் சீற்றமடைகிறது என்ற உண்மையை சுனாமிக்குப் பிறகே மனிதர்கள் பரவலாக அறிந்து கொண்டனர்.

ஆழ்கடலிலும் அலைகள் உள்ளன என்ற பேருண்மையைத் திருக்குர்ஆன் கூறியிருக்கிறது.

அல்லது ஆழ்கடலில் உள்ள பல இருள்களைப் போன்றது. ஓர் அலை அதை மூடுகிறது. அதற்கு மேலே மற்றொரு அலை! அதன் மேலே மேகம்! ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் பல இருள்கள்! அவன் தனது கையை வெளிப்படுத்தும் போது அதை (கூட) அவனால் பார்க்க முடியாது.

திருக்குர்ஆன் 24:40

இவ்வசனத்தில் கடலைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும் போது, ஒருவன் கடலுக்குள் மூழ்கும் போது அங்கே அவன் மேல் அலை அடிக்கும் எனவும். அதற்கு மேலேயும் அலை இருக்கும் எனவும் கூறுகிறான்.

கடலின் மேற்பரப்பில் அதுவும் கடற்கரை ஓரங்களில் மாத்திரமே அலை இருக்கும் என்று கருதப்பட்ட காலத்தில் கடலின் அடியில் அலைக்கு மேல் அலை இருக்கும் என்ற மாபெரும் அறிவியல் உண்மையை இவ்வசனம் கூறுகிறது.

கடலின் ஆழத்தில் கடுமையான அலைகளின் சுழற்சி இருப்பதை சமீபத்தில் தான் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

கடல் ஆழத்தைப் பற்றிய அறிவு எதுவும் இல்லாத காலத்தில் வாழ்ந்த நபியால் இதைச் சொந்தமாகக் கூறியிருக்க முடியாது.

எனவே திருக்குர்ஆன் அல்லாஹ்வின் வேதம் தான் என்பது இவ்வசனத்தின் மூலம் நிரூபணம் ஆகிறது.

16 மலட்டுக் காற்று

ஆது சமுதாயத்திடமும் (படிப்பினை) உள்ளது. அவர்கள் மீது மலட்டுக் காற்றை அனுப்பினோம். அது எப்பொருளில் பட்டாலும் அதை மக்கிப் போனதைப் போன்று ஆக்காமல் இருந்ததில்லை.

திருக்குர்ஆன் 51:41,42

காற்றை அனுப்பி ஒரு சமுதாயத்தை எப்படி அழிக்க முடியும்? இக்கேள்விக்கு இவ்வசனத்திலேயே விடை அமைந்துள்ளது. அதாவது இந்தக் காற்று மலட்டுக் காற்றாக இருந்ததே காரணம் என்று இறைவன் கூறுகிறான்.

காற்று மனிதனுக்குப் பயன்பட வேண்டுமானால் அதில் ஆக்ஸிஜன் போன்றவை இருந்தாக வேண்டும். காற்றில் உள்ள ஆக்ஸிஜனைப் பிரித்து எடுத்து விட்டால் காற்று இருந்தாலும் மனிதனால் உயிர் வாழ முடியாது. இதையே மலட்டுக் காற்று என்று இவ்வசனம் கூறுகிறது.

நவீன உலகில் சில வகையான வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதை ஒரு பகுதியில் வீசினால் அப்பகுதியில் உள்ள கட்டடங்கள் எதுவும் சேதமாகாது. ஆனால் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை மட்டும் இல்லாமல் ஆக்கி விடும். இதனால் குறிப்பிட்ட பகுதியில் உள்ள உயிரினங்கள் செத்து விடும். இது போன்ற காற்றையே இறைவன் அனுப்பியிருக்க வேண்டும் என்பதை மலட்டுக் காற்று என்ற சொல் மூலம் அறிந்து கொள்ளலாம்.

17 சூரியனும் கோள்களும் ஓடுகின்றன

சூரியன் குறிப்பிட்ட காலம் வரை ஓடிக் கொண்டே இருக்கிறது என்று திருக்குர்ஆன் பல வசனங்களில் கூறுகிறது. ஏனைய எல்லா கோள்களும் இவ்வாறே ஓடுவதாகத் திருக்குர்ஆன் கூறுகிறது.

சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணை வரை ஓடுகின்றன. காரியத்தை அவனே நிர்வகிக்கிறான். உங்கள் இறைவனின் சந்திப்பை நீங்கள் உறுதியாக நம்புவதற்காக சான்றுகளை அவன் தெளிவுபடுத்துகிறான்.

திருக்குர்ஆன் 13:2

அல்லாஹ் இரவைப் பகலில் நுழைப்பதையும், பகலை இரவில் நுழைப்பதையும், சூரியனையும் சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதையும் நீர் அறியவில்லையா? ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலக்கெடு வரை சென்று கொண்டிருக்கும். அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன்.

திருக்குர்ஆன் 31:29

அவன் இரவைப் பகலில் நுழைக்கிறான். பகலை இரவில் நுழைக்கிறான். சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலக்கெடு வரை செல்கின்றன. அவனே அல்லாஹ்; உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம். அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர்.

திருக்குர்ஆன் 35:13

சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இது அறிந்தவனாகிய மிகைத்தவனுடைய ஏற்பாடாகும்.

திருக்குர்ஆன் 36:38

தக்க காரணத்துடனேயே வானங்களையும், பூமியையும் அவன் படைத்தான். பகலின் மீது இரவைச் சுருட்டுகிறான். இரவின் மீது பகலைச் சுருட்டுகிறான். சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட கால கட்டம் வரை ஓடும். கவனத்தில் கொள்க! அவனே மிகைத்தவன்; மன்னிப்பவன்.

திருக்குர்ஆன் 39:5

பூமி தட்டையாக இருக்கிறது என்று மனிதன் ஒரு காலத்தில் நம்பினான்.

பிறகு உருண்டையாக இருக்கிறது என்றான்.

உருண்டையாக இருக்கின்ற பூமி தான் இந்தக் குடும்பத்தின் மையப் பகுதி என்று கூறி, சூரியன் தான் பூமியைச் சுற்றி வருகிறது என்றான்.

பிறகு சூரியனைத் தான் பூமி சுற்றி வருகிறது என்றான். இன்றைய அறிவியல் கண்டு பிடிப்பிற்குப் பிறகே பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்கிறது; சூரியனையும் சுற்றுகிறது என்றும், தன்னைத் தானே சுற்றுவதற்கு ஒரு நாள் என்றும், சூரியனைச் சுற்றி முடிக்கின்ற காலம் ஒரு வருடம் என்றும் மனிதன் அறிந்து கொண்டான்.

பூமி இவ்வாறு சூரியனைச் சுற்றும் போது சூரியன் என்ன செய்கிறது என்றால் அது தன்னைத் தானே சுற்றிக் கொண்டு இந்தப் பூமியையும், தன் குடும்பத்தைச் சேர்ந்த மற்ற கோள்களையும் இழுத்துக் கொண்டு ஓடிக் கொண்டே இருக்கின்றது.

ஆக சூரியன் சுழன்று கொண்டே இருக்கின்றது என்பது மட்டுமல்ல; ஓடிக் கொண்டே இருக்கின்றது. அதுவும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஓடிக் கொண்டே இருக்கின்றது என்று சொல்ல வேண்டுமானால் நிச்சயம் அது இறைவனின் கூற்றாகத் தான் இருக்க முடியும்.

இந்த உண்மையை 14 நூற்றாண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த, எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபியால் ஒருக்காலும் சொல் இருக்கவே முடியாது.

இங்கே பயன்படுத்தி இருக்கின்ற வார்த்தைப் பிரயோகத்தை நேர்மையான பார்வையுடன் ஒருவர் யோசித்தால் நிச்சயமாக இது மனிதனது வார்த்தையல்ல; கடவுளின் வார்த்தை என்பதைத் தெளிவாக அறிந்து கொள்வார்.

19 கருவில் குழந்தையின் வளர்ச்சி

பின்னர் விந்துத் துளியை கருவுற்ற சினைமுட்டையாக்கினோம். பின்னர் கருவுற்ற சினைமுட்டையைச் சதைத் துண்டாக ஆக்கினோம். சதைத் துண்டை எலும்பாக ஆக்கி எலும்புக்கு இறைச்சியையும் அணிவித்தோம். பின்னர் அதை வேறு படைப்பாக ஆக்கினோம். அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியசாலியாவான்.

திருக்குர்ஆன் 23:14

இவ்வசனத்தில் கருவளர்ச்சியின் பல்வேறு நிலைகளைக் கூறி வரும் பொழுது பின்னர் அதனை வேறு படைப்பாக ஆக்கினோம் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

இது ஆழமான அறிவியல் உண்மையைப் பேசும் சொல்லாகும். ஏனெனில் கருவில் வளர்கின்ற உயிர்கள் சுமார் மூன்று மாதங்கள் வரை அவற்றுக்கான வடிவத்தைப் பெறுவதில்லை. வெறும் சதைப் பிண்டமாகவே வளரும். மனிதன் அல்லாத உயிரினத்தின் கருவும், மனிதனின் கருவும் இந்தக் கால கட்டத்தில் ஒரே மாதிரியாகவே அமைந்திருக்கும். மூன்று மாதங்கள் கழிந்த பிறகு தான் ஒவ்வொரு உறுப்புகளும் எங்கெங்கே அமைய வேண்டுமோ அங்கே அதற்கான செல்கள் நகர்ந்து வடிவம் உருவாகும்.

இதைத் தான் பின்னர் வேறு படைப்பாக மாற்றினோம் என்ற சொற்றொடர் மூலம் திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது.

20 கலப்பு விந்துவிலிருந்து மனிதனின் உற்பத்தி

மனிதனைச் சோதிப்பதற்காக கலப்பு விந்துத்துளியிலிருந்து அவனை நாம் படைத்தோம். அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்.

திருக்குர்ஆன் 76:2

மனிதன் படைக்கப்பட்டதைக் கூறும் போது விந்துத் துளியிலிருந்து படைத்ததாகப் பல வசனங்களில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

துளி என நாம் மொழி பெயர்த்திருந்தாலும், விந்துத் துளியில் உள்ள ஒரு உயிரணுவிருந்து மனிதனைப் படைத்ததாகவும், அது கலப்பு விந்துத் துளி எனவும் இந்த வசனத்தில் இறைவன் கூறுகிறான்.

ஆணிடமிருந்து வெளிப்படும் உயிரணு, பெண்ணிடமிருந்து வெளிப்படுகின்ற சினைமுட்டையுடன் இரண்டறக் கலந்து, பிறகு தான் அது பெண்ணின் கருவறைக்குச் சென்று மனிதனாக உருவாகிறது.

மனித உற்பத்தியில் ஆணுடைய உயிரணுவும், பெண்ணுடைய சினை முட்டையும் கலந்தாக வேண்டும் என்ற அறிவியல் உண்மையை 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் கூறி இது இறைவனின் வார்த்தை தான் என்பதை நிரூபிக்கிறது.

21 ஜோடி ஜோடியாக…

திருக்குர்ஆன் பல வசனங்களில் உயிரினங்களில் மட்டுமின்றி தாவரங்களிலும் ஜோடிகளை அமைத்திருப்பதாகக் குறிப்பிடுகின்றது.

பூமி முளைக்கச் செய்வதிலிருந்தும், அவர்களிலிருந்தும், அவர்கள் அறியாதவற்றிலிருந்தும் ஜோடிகள் அனைத்தையும் உருவாக்கியவன் தூயவன்.

திருக்குர்ஆன் 36:36

அவனே பூமியை விரித்தான். மலைகளையும், நதிகளையும் அதில் அமைத்தான். ஒவ்வொரு கனிகளிலும் ஒரு ஜோடியை அமைத்தான். இரவைப் பகலால் மூடுகிறான். சிந்திக்கும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

திருக்குர்ஆன் 13:3

அவனே பூமியை உங்களுக்குத் தொட்டிலாக அமைத்தான். உங்களுக்காக அதில் பாதைகளை எளிதாக்கினான். வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி, அதன் மூலம் பல தரப்பட்ட தாவரங்களை ஜோடிகளாக வெளிப்படுத்தினோம்.

திருக்குர்ஆன் 20:53

அவனே ஜோடிகள் அனைத்தையும் படைத்தான். கப்பல்களிலும், கால்நடைகளிலும் நீங்கள் ஏறிப் பயணம் செய்வதையும் உங்களுக்காக ஏற்படுத்தினான்.

திருக்குர்ஆன் 43:12

நீங்கள் சிந்திப்பதற்காக ஒவ்வொரு பொருளிலும் ஜோடிகளைப் படைத்தோம்.

திருக்குர்ஆன் 51:49

தாவரங்களிலும் ஆண், பெண் உள்ளன என்பது தற்காலக் கண்டுபிடிப்பாகும்.

தாவரங்களிலும் ஜோடிகள் இருப்பதாகப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் கூறியிருப்பது இது இறைவனின் வார்த்தை என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது.

மேலும் ஜோடிகளைப் பற்றிக் குறிப்பிடும் சில வசனங்களில் இவர்கள் அறியாமல் இருப்பவற்றிலிருந்தும் ஜோடிகளைப் படைத்திருப்பதாக இறைவன் கூறுகிறான்.

அன்றைய மனிதர்கள் அறியாமல் இருந்த பல ஜோடிகளை இன்றைக்கு மனிதன் கண்டுபிடித்திருக்கின்றான்.

மின்சாரத்தில் பாஸிட்டிவ், நெகட்டிவ் என்ற ஜோடிகள் இருக்கின்றன.

அது போல் அணுவில் கூட ஒவ்வொரு அணுவிலும் புரோட்டான், எலக்ட்ரான் என்று ஜோடிகள் இருக்கின்றன.

இப்படி மனிதர்கள் அறியாமல் இருக்கின்ற பல விஷயங்களிலும் ஜோடிகளாகவே அமைத்திருப்பதாக இறைவன் குறிப்பிடுவதிலிருந்து இது முஹம்மது நபியின் சொந்தச் சொல் இல்லை; இறைவனின் வார்த்தை தான் என்பதை அறிந்து கொள்ளலாம்.

22 விந்தின் பிறப்பிடம்

மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதைச் சிந்திக்கட்டும். குதித்து வெளிப்படும் நீரிலிருந்து படைக்கப்பட்டான். அது முதுகுத் தண்டுக்கும், முன் பகுதிக்கும் இடையிலிருந்து வெளிப்படுகிறது.

திருக்குர்ஆன் 86:5,6,7

சமீப காலத்திற்கு முன்பு வரை மனிதனின் விதைப் பையிலிருந்து தான் விந்து வெளிப்படுகிறது என்று நம்பி வந்தனர்.

ஆனால் விதைப் பையில் விந்து உற்பத்தியானாலும் அது மேலேறிச் சென்று முதுகுத் தண்டிற்கும், முன் பகுதிக்கும் இடையே உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்து அங்கிருந்து தான் வேகமாகத் தள்ளப்படுகிறது என்பதை சமீப காலத்தில் கண்டுபிடித்தனர்.

இதை 1400 ஆண்டுகளுக்கு முன் திருக்குர்ஆன் அது முதுகுத் தண்டுக்கும், முன் பகுதிக்கும் இடையிலிருந்து வெளிப்படுகிறது என்ற சொற்றொடர் மூலம் குறிப்பிட்டிருப்பது, இது முஹம்மது நபியின் வார்த்தை இல்லை. மாறாக இறைவனின் வார்த்தையே என்பதை நிரூபிக்கும் சான்றாக அமைந்துள்ளது.

23 கர்ப்ப அறையின் தனித் தன்மை

ஒவ்வொரு பெண்ணும் (கருவறையில்) சுமப்பதையும், கருவறைகள் சுருங்குவதையும், விரிவடைவதையும் அல்லாஹ் அறிகிறான். ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் நிர்ணயிக்கப்பட்ட அளவு உள்ளது.

திருக்குர்ஆன் 13:8

திருக்குர்ஆனின் இவ்வசனம் மிகப் பெரும் அறிவியல் உண்மையைக் கூறும் வசனமாகும்.

பொதுவாக மனித உடலுக்கு சில தனித் தன்மைகள் உள்ளன. தனக்குள் அன்னியப் பொருள் எதனையும் அது ஏற்றுக் கொள்ளாது என்பது அவற்றுள் ஒன்றாகும். இதற்கு உதாரணமாக கண்களைக் குறிப்பிடலாம். கண்களில் ஏதேனும் தூசுகள் விழுந்து விட்டால் அதை எப்படியாவது வெளியேற்றவே கண்கள் முயற்சிக்கும்.

இது போலவே பெண்களின் கருவறைகளும் அமைந்துள்ளன. ஆயினும் கருவறை அன்னிய உயிரைத் தனக்குள் ஏற்றுக் கொள்கிறது. கருவைப் பல மாதங்கள் வளர்த்து திடீரென அதை வெளியேற்றுவதற்காக முயற்சிக்கிறது. இவ்வாறு முயற்சிக்கும் போது கருவறை சுருங்கி விரிகின்றது. இதன் காரணமாகவே பிரசவ வேதனை ஏற்படுகிறது. இதனைத் தான் இவ்வசனம் கூறுகிறது.

ஒவ்வொரு பொருளும் குறிப்பிட்ட கால நிர்ணயப்படியே அவனிடத்தில் உள்ளன என்ற சொற்றொடர் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியதாகும். இயற்கைக்கு மாறாக அன்னியப் பொருளை ஏற்றுக் கொண்டிருந்த கருவறை ஒரு குறிப்பிட்ட நேரம் வந்ததும் வெளியேற்றுவதற்கு இன்று வரை காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை.

அன்னியப் பொருளை கருவறை பல மாதங்களாக ஏற்றுக் கொண்டது எப்படி? என்ற கேள்விக்கும் இது வரை விடையில்லை.

இயற்கைக்கு மாறாக இறைவன் தனது வல்லமையைப் பயன்படுத்தி ஒரு காலக் கெடுவை நிர்ணயிக்கிறான். அந்த நிர்ணயத்தின் படியே நீண்ட காலம் அன்னியப் பொருளை கருவறை சுமந்து கொண்டிருக்கிறது என இந்தச் சொற்றொடர் விளக்குகிறது.

24 விரல் ரேகையின் முக்கியத்துவம்

அவ்வாறில்லை! அவனது விரல் நுனிகளையும் சீராக்க நாம் ஆற்றலுடையவர்கள்.

திருக்குர்ஆன் 75:4

மனிதனை மீண்டும் என்னால் படைக்க முடியும் என்று குறிப்பிடும் இறைவன், விரல் நுனிகளையும் என்னால் சீராக்க முடியும் என்று கூறுகிறான்.

விரல் நுனிகளைக் குறிப்பிட்டுக் கூறக் காரணம் என்ன? இதை விட முக்கியமான பகுதிகளெல்லாம் மனித உடல் இருக்கும் போது விரல் நுனிகளை மட்டும் குறிப்பிட்டுச் சொல்வதற்குரிய காரணம் என்னவென்றால், மனிதனின் எந்த அங்கமாக இருந்தாலும் அந்த அங்கம் குறிப்பிட்ட மனிதனுடையது தான் என்று அடித்துச் சொல்ல முடியாது.

ஏனென்றால் அது போல் பலரது அங்கங்கள் அமைந்திருக்கும். ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதன் முழுமையாக வேறுபடுவது விரல்களில் அமைந்திருக்கும் ரேகைகளால் தான்.

ஒருவரது ரேகைகள் போல இன்னொருவரது ரேகைகள் இருக்காது. இந்த ரேகைகளைக் கூட நாம் திரும்பக் கொண்டு வந்து விடுவோம் என்று இந்த அறிவியல் உண்மையை உள்ளடக்கி அல்லாஹ் கூறுகிறான்.

25 பால் எவ்வாறு உற்பத்தியாகிறது?

கால் நடைகள் மூலம் மனிதர்களுக்குக் கிடைக்கும் பால் எப்படி உற்பத்தியாகிறது என்பதை இன்றைய விஞ்ஞானிகள் கூறுவது போல் 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் கூறியுள்ளது.

கால்நடைகளில் உங்களுக்குப் படிப்பினை உள்ளது. அதன் வயிறுகளில் உள்ள செறிக்கப்பட்ட உணவுக்கும், இரத்தத்திற்கும் இடைப்பட்ட நிலையில் தூய்மையான பாலை உங்களுக்குப் புகட்டுகிறோம். அருந்துவோருக்கு அது இனிமையானது.

திருக்குர்ஆன் 16:66

தலைசிறந்த உணவாகக் கருதப்படும் பால் எவ்வாறு உற்பத்தியாகிறது என்பது மிகப் பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. பல வருடங்களுக்கு முன்னால் வரை இரத்தம் தான் பாலாக மாறுகிறது என்று நம்பி வந்தனர்.

உண்மையில் இரத்தம் பாலாக ஆவதில்லை. மாறாக உண்ணுகின்ற உணவுகள் சிறு குடலுக்குச் சென்று அரைக்கப்பட்டுக் கூழாக இருக்கும் போது அங்குள்ள உறிஞ்சுகள் மூலமாக அதிலிருந்து உறிஞ்சப்படும் சத்துகள் தான் இரத்தமாகவும், இன்ன பிற பொருட்களாகவும் மாற்றப்படுகின்றன.

இவ்வாறு உறிஞ்சப்படும் பொருட்களை இரத்தம் இழுத்துச் சென்று பாலை உற்பத்தியாக்கும் மடுக்களில் சேர்க்கிறது. அங்கே பாலாக உருமாறுகிறது.

அதாவது அறைக்கப்பட்ட உணவுக் கூழுக்கும், இரத்தமாக மாறுகின்ற நிலைக்கும் இடைப்பட்ட பொருளில் இருந்து தான் பால் உற்பத்தியாகிறது என்ற 21 ஆம் நூற்றாண்டு விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பை, சுற்றி வளைக்காமல் அதே வார்த்தைகளை நேரடியாக திருக்குர்ஆன் கூறியிருப்பது, இது மனிதனின் வார்த்தையே அல்ல என்பதற்கும், கடவுளின் வார்த்தையே என்பதற்கும் மறுக்க முடியாத சான்றாக அமைந்துள்ளது.

26 தேன் எவ்வாறு உற்பத்தியாகிறது

மலைகளிலும், மரங்களிலும், மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள்! பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு! உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்! என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது.

திருக்குர்ஆன் 16:68,69

இவ்வசனத்தில் தேன் எவ்வாறு உற்பத்தியாகின்றது என்ற உண்மை கூறப்படுகிறது.

பெரும்பாலான மக்கள் இன்று கூட தேன் எப்படி உற்பத்தியாகிறது என்பதை அறிந்திருக்கவில்லை. தேனீக்கள் மலர்களிலிருந்து தேனை உறிஞ்சி வந்து கூடுகளில் சேமித்து வைக்கின்றன என்று தவறாக விளங்கி வைத்திருக்கின்றனர்.

உண்மை என்னவென்றால் மலர்களிலும், கனிகளிலும் உள்ள குளூக்கோஸை, தேனீக்கள் உணவாக உட்கொள்கின்றன. உட்கொண்ட பிறகு அவற்றின் வயிற்றுக்குள் சென்ற பொருள் மாற்றமடைந்து, அதன் வயிற்றிலிருந்து வெளிப்படுகின்ற ஒரு கழிவு தான் தேன்.

இதை இன்றைய விஞ்ஞானிகள் நிரூபித்திருக்கின்றார்கள். ஆனால் 14 நூற்றாண்டுகளுக்கு முன்னால் அருளப்பட்ட திருக்குர்ஆன் தேனீக்கள் தேனை உணவாகச் சாப்பிடுகின்றன எனக் கூறுகிறது. நீ சாப்பிடு! என்ற கட்டளையிலிருந்து இதனை விளங்கலாம்.

சாப்பிட்ட பிறகு அதன் வாயிலிருந்து தேன் வெளிப்படுகிறது என்று சொல்லாமல், அதன் வயிறுகளிலிருந்து தேன் வெளிப்படுகிறது என்று 14 நூற்றாண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த எந்த மனிதனாலும் கூறுவதற்குச் சாத்தியமில்லை.

அத்துடன் தேனீக்கள் தேனைத் தேடுவதற்காக மிக எளிதாகச் சென்று விட்டு, எளிதாகத் தங்கள் கூட்டுக்கு வந்து சேர்ந்து விடுகின்றன என்ற அறிவியல் உண்மையும் இணைத்துச் சொல்லப்படுகிறது.

தேனில் இருக்கின்ற மருத்துவக் குணத்தை எல்லா விதமான மருத்துவத் துறையினரும் ஒப்புக் கொள்கின்றனர். அதுவும் இவ்வசனத்தில் கூறப்படுகிறது. இவை மனிதனது வார்த்தை இல்லை என்பதை மிகத் தெளிவாக உணர்த்துகின்ற வசனமாகும்.

27 நவீன வாகனங்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் குதிரை ஒட்டகம் ஆகிய உயிரினங்களையே மனிதன் வாகனமாகப் பயன்படுத்தி வந்தான். இன்று நாம் பயன்படுத்தும் நவீன வாகனங்கள் பற்றி மனிதன் கற்பனை கூட செய்திருக்க முடியாது. இதற்கான எந்த அறிகுறியும் அப்போது இருக்கவில்லை.

இத்தகைய காலகட்டத்தில் தான் நவீன வாகனங்கள் இனி மேல் கண்டுபிடிக்கப்படும் என்று தெளிவான வார்த்தைகளால் திருக்குர்ஆன் முன்னறிவிப்பு செய்தது.

கால்நடைகளை உங்களுக்காகவே அவன் படைத்தான். அவற்றில் குளிரைத் தடுப்பவை (கம்பளி) உண்டு. பல பயன்களும் உள்ளன. அவற்றிலிருந்து சாப்பிடுகிறீர்கள். மாலையில் ஓட்டிச் செல்லும் போதும், காலையில் ஓட்டிச் செல்லும் போதும், அதில் உங்களுக்கு அந்தஸ்து இருக்கிறது. பெரும் சிரமத்துடனே நீங்கள் சென்றடையும் ஊருக்கு உங்கள் சுமைகளை அவை சுமந்து செல்கின்றன. உங்கள் இறைவன் நிகரற்ற அன்புடையோன்; இரக்கமுள்ளவன். குதிரைகள், கோவேறுக் கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச் செல்லவும், மதிப்புக்காகவும் (அவன் படைத்தான்.) நீங்கள் அறியாதவற்றை (இனி) படைப்பான்.

திருக்குர்ஆன் : 16:5,6,7,8

மனிதர்கள் அன்றைக்குப் பயன்படுத்தி வந்த குதிரை, கோவேறுக் கழுதை, கழுதை ஆகிய வாகனங்களைக் குறிப்பிட்டு விட்டு, நீங்கள் அறியாதவற்றை இனி படைப்பான் என்று இவ்வசனங்களில் கூறப்படுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பின் எத்தனையோ விதமான வாகனங்கள் படைக்கப்படவிருப்பதை முன் கூட்டியே அறிவிப்பதாக இது அமைந்துள்ளது.

28 பெருங்கவலை போக்கும் அரு மருந்து

உஹதுப் போரில் வெற்றி நழுவிப் போனதுடன் உயிரிழப்புகளும், காயங்களும் முஸ்லிம்களுக்கு அதிக அளவில் ஏற்பட்டன.

இதனால் முஸ்லிம்கள் மனச் சோர்வு அடைந்து தளர்ந்து போயிருந்த நேரத்தில் அதை விடப் பெருங் கவலையாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொல்லப்பட்டார்கள் என்ற வதந்தி அமைந்தது.

முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அந்தக் கவலைகள் இதனால் மறைந்தன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்க்ள் கொல்லப்பட்டு விட்டார்களே என்ற ஒரே கவலை தான் அப்போது இருந்தது.

அந்தக் கவலையைப் போக்கும் விதமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் உள்ள செய்தி கிடைத்தவுடன் நபித்தோழர்கள் பெரும் உத்வேகம் பெற்றனர். மீண்டும் வெற்றி வாகை சூடினார்கள்.

மனோதத்துவ ரீதியாக இது போன்ற நடவடிக்கைகளால் தான் கவலையை மறக்கடிக்கச் செய்ய இயலும் என்று இன்று கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இதைக் கண்டுபிடிப்பதற்கு பல நூறு வருடங்களுக்கு முன்பே திருக்குர்ஆன் இந்த வழிமுறையைக் கற்றுத் தருகிறது.

உங்களுக்குப் பின்னால் இத்தூதர் (முஹம்மத்) உங்களை அழைத்துக் கொண்டிருக்கும் போது எவரையும் திரும்பிப் பார்க்காமல் நீங்கள் (மலை மேல்) ஏறிச் சென்றதை எண்ணிப் பாருங்கள்! உங்களுக்கு (வெற்றி) தவறியதற்காகவும், துன்பம் ஏற்பட்டதற்காகவும் நீங்கள் கவலைப்படாமலிருப்பதற்காக அதை விடப் பெருங்கவலையை அவன் உங்களுக்குப் பரிசளித்தான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். பின்னர் கவலைக்குப் பிறகு உங்களுக்கு மன அமைதியை ஏற்படுத்த சிறு தூக்கத்தைத் தந்தான்.

திருக்குர்ஆன் :3:153, 154

உங்களுக்கு வெற்றி தவறியதற்காகவும், துன்பம் ஏற்பட்டதற்காகவும் நீங்கள் கவலைப்படாமலிருப்பதற்காக அதை விடப் பெருங்கவலையை அவன் உங்களுக்குப் பரிசளித்தான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். பின்னர் கவலைக்குப் பிறகு உங்களுக்கு மன அமைதியை ஏற்படுத்த சிறு தூக்கத்தைத் தந்தான் என்ற வாசகம் சிந்திக்கத் தக்கது.

மனக் கவலையில் ஆழ்ந்திருப்பவர்களையும், மன நோய்க்கு ஆளானவர்களையும் குணப்படுத்த அதை விடப் பெரும் கவலையை அவர்களுக்கு கற்பனையாக ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு பெரும் கவலையை ஏற்படுத்தியவுடன் ஏற்கனவே இருந்த சிறிய கவலைகள் மறைந்து விடும். பெரும் கவலை மட்டுமே முழு உள்ளத்தையும் ஆக்ரமித்துக் கொள்ளும். கற்பனையாக ஏற்படுத்திய கவலையை கற்பனை எனப் புரிய வைத்தால் அனைத்துக் கவலைகளிலிருந்தும் அவர் விடுபடுவார்.

மனோதத்துவ நிபுணர்கள் கையாளும் இந்த வழிமுறையைக் காரண காரியத்துடன் குர்ஆனும் விளக்குகின்றது.

தூக்கத்தைக் கொடுத்தது மேலும் பயன் தந்ததாக இதைத் தொடர்ந்து திருக்குர்ஆன் கூறுகிறது.

பெரும் கவலையை ஏற்படுத்தி, தூக்கத்தையும் ஏற்படுத்தி பெரும் கவலையை நீக்கினால் எல்லா விதமான கவலைகளும் பறந்து போய் விடும்.

20ஆம் நூற்றாண்டில் மிகப் பெரிய ஆய்வுகளுக்குப் பின் கண்டறியப்பட்ட இந்த வழிமுறையை 14 நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் என்றால் நிச்சயம் இது இறைவன் புறத்திலிருந்து கிடைத்த செய்தியாகத் தான் இருக்க வேண்டும்.

29 வேதனைகளை உணரக் கூடிய நரம்புகள்

மறுமை நாள் எனும் நியாயத் தீர்ப்பு நாளில் தீயவர்கள் நரக நெருப்பினால் வேதனை செய்யப்படுவார்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. இதைக் கூறும் போது நரகவாசிகளின் தோல்கள் கருகும் போது உடனே வேறு தோலை மாற்றுவோம் என்று இறைவன் கூறுகிறான். வேறு தோலை ஏன் மாற்ற வேண்டும் என்பதற்கான காரணத்தையும் அதைத் தொடர்ந்து இறைவன் குறிப்பிடுகிறான்.

நமது வசனங்களை மறுப்போரை நரகில் கருகச் செய்வோம். அவர்களின் தோல்கள் கருகும் போதெல்லாம் அவர்கள் வேதனையை உணர்வதற்காக வேறு தோல்களை அவர்களுக்கு மாற்றுவோம். அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.

திருக்குர்ஆன் 4:56

வேதனைகளை உணரக் கூடிய நரம்புகள் மனிதனின் தோலில் தான் உள்ளன. தோல் கரிந்து விட்டால் எந்த வேதனையையும் மூளை உணராது என்பது சமீபத்திய கண்டு பிடிப்பு.

இதனால் தான் மேல் தோலை மட்டும் மரத்துப் போகச் செய்யும் ஊசிகளைப் போட்டு அறுவை சிகிச்சை செய்கின்றனர். முழு உடலையும் மரத்துப் போகச் செய்வதில்லை. அவ்வாறு மரத்துப் போகச் செய்தால் மனிதன் செத்து விடுவான்.

அது போல் தீக்காயத்தில் தோல் கருகிப் போனவர்கள் வேதனையால் துடிக்காமல் இருப்பதையும் காண்கிறோம். பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த முஹம்மது நபிக்கு இது எப்படித் தெரியும்? அவர்களின் தோல் கருகும் போது அதை மாற்றுவோம் என்று கூறாமல் வேதனையை அவர்கள் உணர்வதற்காகவே மாற்றுவோம் என்று 14 நூற்றாண்டுகளுக்கு முன்னால் கூறுவதென்றால் மனிதனைப் படைத்த இறைவனால் தான் சாத்தியமாகும். திருக்குர்ஆன் இறைவனின் வேதம் என்பதற்கு இதுவும் வலுவான சான்றாக அமைந்துள்ளது.

வரலாறு தொடர்பான முன்னறிவிப்புகள்

30 பாதுகாக்கப்படும் திருக்குர்ஆன்

நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம்.

திருக்குர்ஆன் 15:9

திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்களும், அதை ஏற்றுக் கொண்ட மக்களும் பெரும்பாலும் படிப்பறிவற்றவர்களாக இருந்தனர். மேலும் அந்தக் காலத்தில் எழுதி வைத்துக் கொள்ளக் கூடிய சாதனங்களாக மரப்பட்டைகளும், தோல்களுமே பயன்பட்டன.

இத்தகைய காலகட்டத்தில் 23 வருடங்களில் சிறிது சிறிதாக அருளப்பட்ட திருக்குர்ஆன் 14 நூற்றாண்டுகள் கடந்து விட்ட பிறகும் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. எவ்வித மாறுதலுக்கும் இடம் தராமல் அருளப்பட்ட மூல மொழியிலேயே இவ்வேதம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஆனால் இவ்வேதம் அருளப்பட்ட காலத்திற்கு நம் மனக் குதிரையை ஓடவிட்டால் அந்த மக்களால் இந்தக் குர்ஆனைப் பாதுகாக்க முடியும் என்று நம்ப முடியாது. மிகவும் பலவீனமான நிலையிலும், எதிரிகளால் பல வகையான இன்னல்களுக்கு இலக்காக்கப்பட்ட நிலையிலும், படிப்பறிவற்ற நிலையிலும் உள்ள சமுதாயம் தமக்கு வழங்கப்படும் போதனையை எழுத்துப் பிசகாமல் பாதுகாக்கும் என்று யாராலும் எண்ணிப் பார்க்க முடியாது.

ஆனால் திருக்குர்ஆன் இவ்வசனத்தில் இதை நாமே அருளினோம், நாமே பாதுகாப்போம் என்று உத்தரவாதம் அளிக்கிறது. திருக்குர்ஆனுக்குப் பிறகு உருவாக்கப்பட்ட எத்தனையோ நூல்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போன நிலையில் திருக்குர்ஆன் அருளப்பட்ட வடிவத்திலேயே பாதுகாக்கப்பட்டு வருவது இது இறைவனின் வேதம் என்பதற்குச் சான்றாக உள்ளது.

31 கஅபா பற்றி முன்னறிவிப்பு

உலகில் இறைவனை வணங்குவதற்காக முதன் முதலில் எழுப்பப்பட்ட ஆலயம் கஅபா. இந்த ஆலயம் மக்களின் அபய பூமியாகத் திகழும் எனத் திருக்குர்ஆன் கூறுகிறது.

அந்த ஆலயத்தை மக்களின் ஒன்று கூடுமிடமாகவும், பாதுகாப்பு மையமாகவும் நாம் அமைத்ததை நினைவூட்டுவீராக!

திருக்குர்ஆன் 2:125

அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. யாரேனும் (ஏக இறைவனை) மறுத்தால் அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன்.

திருக்குர்ஆன் 3:97

இறைவா! இவ்வூரை அபயமளிக்கக் கூடியதாக ஆக்குவாயாக! என்னையும், என் பிள்ளைகளையும் சிலைகளை வணங்குவதை விட்டும் காப்பாயாக! என்று இப்ராஹீம் கூறியதை நினைவூட்டுவீராக!

திருக்குர்ஆன் 14:35

இவர்களைச் சுற்றியுள்ள மனிதர்கள் வாரிச் செல்லப்படும் நிலையில் (இவர்களுக்கு) அபயமளிக்கும் புனிதத் தலத்தை நாம் ஏற்படுத்தியிருப்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? வீணானதை நம்பி, அல்லாஹ்வின் அருளுக்கு நன்றி மறக்கிறார்களா?

திருக்குர்ஆன் 29:67

அபயமளிக்கும் இவ்வூர் மீதும் சத்தியமாக!

திருக்குர்ஆன் 95:3

கஅபா, அபய பூமி என அறிவிக்கப்பட்டு 14 நூற்றாண்டுகளைக் கடந்த பின்பும், எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நடந்த பின்பும் அது இன்றளவும் அபய பூமியாகவே அமைந்துள்ளது. 14 நூற்றாண்டுகளாக எந்தத் தாக்குதலுக்கும் உள்ளாகாத வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயமாகவும் அது இருந்து வருகிறது.

திருக்குர்ஆன் கூறியவாறு அது அபய பூமியாகவே நீடித்து வருவது திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தைகள் தாம் என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது.

சில சந்தர்ப்பங்களில் கஅபா ஆலயத்துக்குள் விஷமிகள் புகுந்து ஆயுதத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது அபயபூமி என்பதற்கு எதிராக உள்ளதே என்று கேட்கலாம்.

அபய பூமியாக இருப்பதால் சிலர் தமக்குள் சண்டை போட மாட்டார்கள் என்று பொருளல்ல. ஆயுதம் தரித்து சிலர் புரட்சி செய்ய மாட்டார்கள் என்பதும் இதன் பொருளல்ல. அப்படி முயற்சிப்பவர்கள் முறியடிக்கப்படுவார்கள் என்பது தான் இதன் பொருள்.

அவர்களின் கைகள் ஓங்கி மக்காவின் புனிதத்தை மறுப்பவர்களின் கைகளுக்கு மக்கா நகரம் செல்லாது என்பது இதன் பொருளாகும்.

அகிலத்தையே கட்டி ஆண்ட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்தப் பூமிக்கு அருகில் உள்ள பகுதிகளை எல்லாம் தன் கைவசத்தில் கொண்டு வந்த காலத்தில் கூட மக்காவை அவர்களால் நெருங்க முடியவில்லை. சிலுவைப் போர் என்ற பெயரில் இஸ்லாம் மதத்துக்கு எதிராக நடத்தப்பட்ட போர்களிலும் கூட மக்காவைக் கையகப்படுத்துவது தான் கிறித்தவர்களின் மெய்யான வெற்றி என்ற நிலையிலும் மக்காவை நெருங்க முடியவில்லை.

எனவே மக்கா அபயபூமியாகவே அன்றும் இன்றும் நீடித்து வருகிறது என்பதில் ஐயம் இல்லை.

திருக்குர்ஆன் இறைவேதமே என்பதற்கான சான்றுகளில் ஒன்றாக இவ்வசனங்கள் அமைந்துள்ளன.

மக்கா நகரம், நபிகள் நாயகம் காலத்திலும், அதற்கு முன்னரும் எவ்விதக் கனி வர்க்கமும் முளைக்காத பாலைவனப் பெருவெளியாக இருந்தது.

இந்த பாலைவனப் பெருவெளிக்கு உலகத்தின் பல பாகங்களிலிருந்து கனிகள் கொண்டு வரப்படும் எனத் திருக்குர்ஆன் முன்னறிப்பு செய்கிறது.

நாங்கள் உம்முடன் சேர்ந்து நேர்வழியைப் பின்பற்றினால் எங்களின் பூமியிலிருந்து வாரிச் செல்லப்பட்டு விடுவோம் என்று அவர்கள் கூறுகின்றனர். அபயம் அளிக்கும் புனிதத் தலத்தை அவர்களுக்காக வசிப்பிடமாக நாம் ஆக்கவில்லையா? ஒவ்வொரு கனி வர்க்கமும் நம்மிடமிருந்து உணவாக அதை நோக்கிக் கொண்டு வரப்படுகிறது. எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 28:57

இந்த முன்னறிவிப்பு நிறைவேறியதை ஹஜ்ஜுக்குச் செல்லும் ஒவ்வொருவரும் கண்கூடாகக் காண முடியும்.

உலகத்தில் உள்ள எல்லா விதமான கனி வகைகளும் அந்த மக்களை நோக்கிக் கொண்டு செல்லப்படுகின்ற காட்சியை உலகம் இன்றைக்கும் பார்த்துக் கொண்டிருக்கிறது. திருக்குர்ஆன் இறை வேதம் என்ற சான்றுகளில் இதுவும் ஒன்றாகும்.

32 மனிதர்களால் நபிகள் நாயகத்தைக் கொல்ல முடியாது

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உலகத் தலைவர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட தலைவராகத் திகழ்ந்தார்கள்.

பல்லாயிரம் ஆண்டுகள் மக்களிடம் ஊறித் திளைத்த மூட நம்பிக்கைகளைத் தாட்சண்யமில்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதிர்த்தார்கள்.

கடவுளின் பெயராலும், மதத்தின் பெயராலும் சுரண்டிக் கொழுத்தவர்களையும் ஆள் பலம், பண பலம் காரணமாக பலவீனர்களுக்குக் கொடுமை செய்த வலிமை மிக்க தலைவர்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூர்க்கமாக எதிர்த்தார்கள்.

அனைத்து விதமான தீமைகளையும் எதிர்த்து வீரியத்துடன் பிரச்சாரம் செய்ததால் அதிகமான எதிரிகளையும் சம்பாதித்து வைத்திருந்தார்கள்.

இவரைக் கொன்றொழித்தால் தான் நமக்கு நல்லது என்று தீயவர்கள் பல சந்தர்ப்பங்களில் திட்டமிடும் அளவுக்கு அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்து வந்தது. இதன் காரணமாகவே மக்காவில் இரகசியமாகப் பிரச்சாரம் செய்து வந்தனர். எதிரிகள் அனைவரும் கூட்டுச் சேர்ந்து கொலை செய்யத் திட்டம் தீட்டியதை அறிந்து சொந்த ஊரை விட்டு வெளியேறி மதீனாவுக்கு அடைக்கலம் தேடிச் சென்றார்கள்.

மதீனா சென்ற பிறகு அவர்களின் ஆதரவுத் தளம் விரிவடைந்தாலும் அங்கேயும் அவர்களுக்கு எதிரிகள் இருந்தனர். நல்லவர்களைப் போல் நடித்து திட்டம் தீட்டியவர்கள் மதீனாவில் இருந்தனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (எதிரிகள் பற்றிய அச்சம் காரணமாக) தூக்கமில்லாதவர்களாக இருந்தனர். மதீனாவுக்கு வந்த போது இரவில் என்னைப் பாதுகாக்கும் நல்லவர் ஒருவர் இல்லையா? என்று கூறினார்கள். அப்போது ஆயுதத்தின் சப்தத்தை நாங்கள் கேட்டோம். யாரது? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டனர். நான் தான் ஸஅது பின் அபீ வக்காஸ்; உங்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க வந்துள்ளேன் என்று ஆயுதத்திற்கு உரியவர் கூறினார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உறங்கினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நுல் : புகாரி 2885,7231

இரவில் உறக்கம் வராத அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எதிரிகள் பற்றி அச்சம் இருந்தது என்பதை இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

பத்ருப் போர், உஹதுப் போர், அகழ்ப் போர், கைபர் போர், ஹூனைன் போர் வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அப்பாஸ் (ரலி) உள்ளிட்ட மெய்க்காப்பாளர்கள் இருந்தனர்.

இந்த நிலையில் தான் பின்வரும் வசனத்தை அல்லாஹ் அருளினான்.

தூதரே! உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டதை எடுத்துச் சொல்வீராக! (இதைச்) செய்யவில்லையானால் அவனது தூதை நீர் எடுத்துச் சொன்னவராக மாட்டீர்! அல்லாஹ் உம்மை மனிதர்களிடமிருந்து காப்பாற்றுவான். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் வழிகாட்ட மாட்டான்.

திருக்குர்ஆன் 5.67

சத்திய மார்க்கத்தை அச்சமின்றி எடுத்துச் சொல்லுமாறும், எடுத்துச் சொல்வதால் எதிரிகளால் எந்த ஆபத்தும் நேராமல் காப்பது தன் கடமை என்றும் இறைவன் இவ்வசனத்தில் அறிவிக்கிறான்.

இறைவன் இவ்வாறு அறிவித்ததாக ஒருவர் கூறினால் அதன் விளைவு என்ன? இறைவனே பாதுகாப்பதாகக் கூறுவதால் இனி மேல் அவருக்குப் பாதுகாப்பு தேவையில்லை என்பது பொருள். மேலும் தன்னை எவராலும் கொல்ல முடியாது என்று அறைகூவல் விடுகிறார் என்பதும் பொருள்.

இந்த உத்தரவாதம் இறைவனிடமிருந்து வந்திருக்காவிட்டால் இப்படி அறிவித்த காரணத்துக்காகவே எதிரிகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கொலை செய்து அவர்கள் இறைத்தூதர் அல்ல என்று நிரூபித்திருப்பார்கள்.

நபிகள் நாயகம் (ஸல் அவர்களின் அன்றாட நடவடிக்கைகளையும், வாழ்க்கை முறைகளையும் ஒருவர் ஆராய்ந்தால் உலகிலேயே மிகவும் எளிதாகக் கொல்லப்பட முடியும் என்ற நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருந்தார்கள் என்பதை அறிந்து கொள்வார்.

நபிகள் நாயகம் (ஸல் அவர்கள் குடிசையில் தான் வசித்தார்கள். அந்தக் குடிசைக்கு தாழிடப்படும் வசதியான கதவுகள் கூட இருக்கவில்லை. யார் வேண்டுமானாலும் பட்டப்பகலிலோ, நள்ளிரவிலோ வீட்டுக்குள் புகுந்து அவர்களைக் கொல்ல முடியும் என்ற அளவுக்குப் பலவீனமான நிலையில் இருந்தார்கள்.

மேலும் தினசரி ஐந்து நேரமும் பள்ளிவாசலில் வந்து தொழுகை நடத்தி வந்தார்கள். தினமும் குறிப்பிட்ட ஐந்து நேரத்தில் மக்களால் சந்திக்கப்படும் நிலையில் உள்ள ஒருவரைத் தக்க தருணம் பார்த்துக் கொல்வதாக இருந்தால் கொன்று விட முடியும்.

மேலும் வெளிப்படையாக ஒருவர் இஸ்லாத்தை ஏற்பதாகக் கூறினால் அவரைப் பற்றி எதையும் விசாரிக்காமல் அவரது வாக்குமூலத்தை நம்பி முஸ்லிம்கள் பட்டியலில் அவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இணைத்துக் கொள்வார்கள்.

உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் மட்டுமே அறிவான். நம்மால் வெளிப்படையானதை மட்டும் தான் அறிய முடியும் என்பதைக் கொள்கையாகவே கொண்டிருந்தனர். பள்ளிவாசலுக்கு வரும் யாரும் எந்தச் சோதனைக்கும் உட்படுத்தப்பட மாட்டார்கள்.

இதனால் தான் முஸ்லிம்களாக இல்லாமல் முஸ்லிம்களாக நடித்த நயவஞ்சகர்கள் பள்ளிவாசலில் வந்து தொழுவதாக நடித்து வந்தனர். அவர்களில் ஒருவர் கூட தடுக்கப்படவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கொல்ல நினைக்கும் ஒருவர் அவர் யாரென்றே அறியப்படாதவராக இருந்தாலும் சாதாரணமாகப் பள்ளிவாசலுக்குள் நுழையலாம். யாரும் கேட்டால் நானும் முஸ்லிம் தான் என்று கூறினால் உள்ளே நுழைய அதுவே போதுமானதாக இருந்தது.

அரண்மனையிலும், கோட்டைகளிலும் வாழாமல் எந்த மனிதரும் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்ற நிலையில் அவர்கள் வாழ்ந்திருந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை எவரும் கொல்ல முடியாது என்று இறைவன் அறிவித்தான்.

கொல்லப்படுவதற்கான வழிகளைத் திறந்து வைத்து விட்டு அனைத்து தீமைகளையும் எதிர்த்ததன் மூலம் எதிரிகளின் எண்ணிக்கையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதிகப்படுத்திக் கொண்டு இருந்தும் அவர்களை யாராலும் கொல்ல முடியாது என்று இறைவன் அறிவித்தான். இறைவன் அறிவித்தபடியே இயற்கையான முறையில் தமது 63வது வயதில் அவர்கள் மரணம் அடைந்தார்கள்.

34 நுஹ் நபியின் கப்பல்

நுஹ் நபி அவர்கள் முக்கியத்துவத்துடன் குர்ஆனில் குறிப்பிடப்படும் இறைத் தூதர்களில் ஒருவராக இருந்தார்கள்.

950 ஆண்டுகள் வாழ்ந்த இவர்களின் பிரச்சாரத்தை சொற்பமானவர்களே ஏற்றனர். பெரும் பகுதி மக்கள் அவர்களை நம்ப மறுத்தனர். சொல்லவொண்ணாத துன்பங்களையும் கொடுத்தனர்.

இறுதியாக இறைவனிடம் நுஹ் நபி அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். இனிமேல் இவர்கள் திருத்த மாட்டார்கள். இவர்களை அழித்து விடு என்று அவர்கள் பிரார்த்தனை செய்ததால் இறைவன் ஒரு கப்பலைச் செய்யுமாறு கட்டளையிட்டான்.

கப்பல் செய்து முடித்ததும் நம்பிக்கை கொண்டவர்களைக் கப்பலில் ஏற்றிக் கொள்ளுமாறும் ஒவ்வொரு உயிரினங்களில் ஒரு ஜோடியை ஏற்றிக் கொள்ளுமாறும் இறைவன் கட்டளையிட்டான்.

இதன் பின்னர் பயங்கரமான வெள்ளப் பிரளயம் ஏற்பட்டது. வானத்திலிருந்து மழை கொட்டியது. பெரிய மலைகளே மூழ்கும் அளவுக்கு வெள்ளத்தின் கடுமை இருந்தது. கப்பல் ஏறிக் கொண்ட நன்மக்கள் காப்பாற்றப்பட்டனர். ஏற்காத மக்கள் முழுவதுமாக அழிக்கப்பட்டனர்.

வெள்ளம் வடியத் தொடங்கியவுடன் இந்தக் கப்பல் ஜுதி எனும் மலை மீது இறங்கியது. இது பற்றி திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.

பூமியே! உனது தண்ணீரை நீ உறிஞ்சிக் கொள்! வானமே நீ நிறுத்து! என்று (இறைவனால்) கூறப்பட்டது. தண்ணீர் வற்றியது. காரியம் முடிக்கப்பட்டது. அந்தக் கப்பல் ஜூதி மலை மீது அமர்ந்தது. அநீதி இழைத்த கூட்டத்தினர் (இறையருளை விட்டும்) தூரமாயினர் எனவும் கூறப்பட்டது.

திருக்குர்ஆன் 11:44

நூஹை அவரது சமுதாயத்திடம் அனுப்பினோம். அவர்களுடன் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஐம்பது ஆண்டுகள் குறைவாக வசித்தார். அவர்கள் அநீதி இழைத்த நிலையில் அவர்களைப் பெரு வெள்ளம் பிடித்துக் கொண்டது. அவரையும், கப்பலில் இருந்தோரையும் காப்பாற்றினோம். இதை அகிலத்தாருக்குச் சான்றாக்கினோம்.

திருக்குர்ஆன் 29:14.15

நான் தோற்கடிக்கப்பட்டு விட்டேன்; எனவே நீ உதவி செய்வாயாக! என்று அவர் தமது இறைவனிடம் பிரார்த்தித்தார். அப்போது வானத்தின் வாசல்களைக் கொட்டும் நீரால் திறந்து விட்டோம். பூமியில் ஊற்றுகளைப் பீறிட்டு ஓடச் செய்தோம். ஏற்கனவே திட்டமிட்டபடி தண்ணீர் இணைந்தது. பலகைகள் மற்றும் ஆணிகள் உடைய (கப்பல்) ஒன்றில் அவரை ஏற்றினோம். அது நமது கண்காணிப்பில் ஓடியது. இது (தன் சமுதாயத்தால்) மறுக்கப்பட்டவருக்கு (நூஹுக்கு) உரிய கூலி. அதைச் சான்றாக விட்டு வைத்தோம். படிப்பினை பெறுவோர் உண்டா? எனது வேதனையும், எனது எச்சரிக்கைகளும் எவ்வாறு இருந்தன? இக்குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம். படிப்பினை பெறுவோர் உண்டா?

திருக்குர்ஆன் 54:10-17

மலை போன்ற உயரத்திற்கு வெள்ளம் வந்ததால் ஜூதி மலைக்கு மேல் கப்பல் நிலைகொண்டது. இம்மலை துருக்கி நாட்டின் எல்லையில் அமைந்துள்ளது. இதன் உயரம் 16 ஆயிரம் அடியாகும். துருக்கியில் உள்ள அராராத் மலை (ஜுதி மலை) மீது பணிகளுக்கிடையில் கப்பல் ஒன்று புதைந்து கிடப்பதை அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.

இவ்வளவு பெரிய கப்பல் மலையின் மீது அமர வேண்டுமானால் அந்த அளவுக்குப் பெருவெள்ளம் ஏற்பட்டால் தான் சாத்தியம். இந்தக் கப்பலை அத்தாட்சியாக விட்டு வைத்தோம் என்று இறைவன் கூறுவது நிறைவேறி திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை தான் என்பதைச் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கிறது.

35 இஸ்லாமிய ஆட்சி உருவாகும் என்ற முன்னறிவிப்பு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் மிகவும் சிரமத்திற்குரிய நிலையிலும், பலவீனமான நிலையிலும் இருந்த போது பின்வரும் வசனம் அருளப்பட்டது. இறைவனை எவ்வாறு தொழ வேண்டும் என்பதை விளக்குவதற்காக இவ்வசனம் அருளப்பட்டாலும் இதில் ஒரு முன்னறிவிப்பும் அடங்கியுள்ளது.

(முஹம்மதே!) நீரும், உம்முடன் உள்ள ஒரு தொகையினரும் இரவில் மூன்றில் இரு பகுதிக்கு நெருக்கமாகவும், இரவில் பாதியும், இரவில் மூன்றில் ஒரு பகுதியும் நின்று வணங்குகின்றீர்கள் என்பதை உமது இறைவன் அறிவான். அல்லாஹ்வே இரவையும், பகலையும் அளவுடன் அமைத்துள்ளான். நீங்கள் அதைச் சரியாகக் கணிக்க மாட்டீர்கள் என்பதையும் அவன் அறிவான். எனவே அவன் உங்களை மன்னித்தான். ஆகவே குர்ஆனில் உங்களுக்கு இயன்றதை ஓதுங்கள். உங்களில் நோயாளிகளும், அல்லாஹ்வின் அருளைத் தேடி பூமியில் பயணம் செய்வோரும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரும் உருவாவார்கள் என்பதை அவன் அறிந்து வைத்துள்ளான். எனவே அதில் உங்களுக்கு இயன்றதை ஓதுங்கள்! தொழுகையை நிலைநாட்டுங்கள்! ஸகாத் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுங்கள்! உங்களுக்காக நீங்கள் முற்படுத்தும் நன்மையை அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வீர்கள். அதுவே சிறந்தது. மகத்தான கூலி. அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன் 73:20

பாதி இரவோ, மூன்றில் ஒரு பகுதி இரவோ தொழுதால் போதும் என்று அல்லாஹ் கூறுகிறான்.

இப்படிக் கூறும் போது உங்களில் நோயாளிகளும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரும் இனி மேல் உருவாவார்கள் என்பதை அல்லாஹ் அறிந்து வைத்திருக்கிறான் எனக் கூறுகிறான்.

நோயாளிகள் உருவாவதை யாரும் சொல்லி விட முடியும். முஸ்லிம்களாக வாழ்வதே சிரமமாக இருக்கும் நிலையில் இந்தச் சமுதாயத்தில் அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவர்கள் உருவாவார்கள் என்று இவ்வசனம் கூறுகிறது.

அல்லாஹ்வின் பாதையில் போரிடுவது என்றால் ஒரு ஆட்சியை அமைத்து படை திரட்டிக் கொண்டு போர் புரிவதைக் குறிக்கும்.

இப்படி போர் புரியக் கூடியவர்கள் உருவாவார்கள் என்பதை அன்றைய சூழ்நிலையில் கணிக்கவே முடியாது. ஆனாலும் இறைவன் கூறியவாறு மிகச் சில வருடங்களிலேயே நபிகள் நாயகம் (ஸல்) தலைமையில் ஒரு ஆட்சி உருவானது. இதனால் அல்லாஹ்வின் பாதையில் போரிடக் கூடியவர்கள் உருவானார்கள்.

திருக்குர்ஆன் இறைவனின் வேதம் என்பதற்குரிய மற்றொரு சான்றாக இந்த முன்னறிவிப்பு அமைந்துள்ளது.

36 மக்காவை நபிகள் நாயகம் (ஸல்) வெற்றி கொள்வார்கள் என்ற முன்னறிவிப்பு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது நாற்பதாம் வயதில் தம்மை இறைத்தூதர் என்று அறிவித்தது முதல் பதிமூன்று ஆண்டு காலம் சொந்த ஊரான மக்காவில் பலவிதமான எதிர்ப்புகளைச் சந்தித்தார்கள். சமூகப் புறக்கணிப்பு உள்ளிட்ட கொடுமைகளைத் தாங்கினார்கள்.

அவர்களையும், அவர்களை ஏற்றுக் கொண்ட தோழர்களையும் அவர்களின் எதிரிகள் சொல்லொண்ணாத இன்னல்களுக்கு உட்படுத்தினார்கள்.

சொந்த ஊரில் இனிமேல் வாழவே முடியாது என்ற அளவுக்குக் கொடுமைகள் எல்லை மீறிய போது தமது தோழர்களில் ஒரு பகுதியினரை அபீஸீனியா நாட்டுக்கு அகதிகளாக அனுப்பி வைத்தார்கள்.

தாமும், தமது நெருக்கமான தோழர்கள் சிலரும் சொந்த ஊரில் இருந்து கொண்டு துன்பங்களைத் தாங்கிக் கொண்டு இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்தனர்.

நபிகள் நாயகத்தையே கொன்று விட எதிரிகள் திட்டம் தீட்டிய போது உயிரைக் காப்பாற்றிக் கொண்டு இரவோடு இரவாக மதீனாவுக்குச் சென்றார்கள்.

இந்த ஊரில் இனிமேல் வாழவே முடியாது என்ற நிலையில் ஊரை விட்டுப் புறப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின்வரும் உறுதி மொழியை இறைவன் வழங்கினான்.

(முஹம்மதே!) உமக்கு இந்தக் குர்ஆனை விதித்தவன் உம்மை வந்த இடத்திலேயே மீண்டும் சேர்ப்பவன். நேர்வழியைக் கொண்டு வந்தவன் யார்? தெளிவான வழிகேட்டில் உள்ளவன் யார்? என்பதை என் இறைவன் நன்கறிந்தவன் என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 28:85

இதன் பொருள் என்ன? எந்த ஊரிலிருந்து விரட்டியடித்தார்களோ அதே ஊருக்குள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நுழைவார்கள் என்பது தான் இதன் பொருள்.

ஒரு மனிதன் தோல்வியடையும் போது இறுதி வெற்றி எனக்குத் தான் என்று கூறுவதைப் பார்க்கிறோம். தோல்வியடையும் நாட்டின் தலைவன் மீண்டும் வெல்வேன் என்று கூறுவது சகஜமான ஒன்று தான்.

ஊரை விட்டு விரட்டப்பட்ட எத்தனையோ பேர் இதே ஊருக்கு மீண்டும் வருவேன் என்று கூறியிருக்கிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதில் என்ன ஆச்சரியம் உள்ளது? என்று சிலருக்குத் தோன்றலாம்.

தோற்றவர்கள் கூறுவது போல் சில வேளை நடக்கலாம். சில வேளை நடக்காமலும் போகலாம். அவர்கள் கூறியவாறு நடந்தால் அவர்கள் பெருமைப்பட்டுக் கொள்வார்கள். அவர்கள் கூறியவாறு நடக்காவிட்டால் நான் மனிதன் தானே? ஏதோ ஒரு நம்பிக்கையில் அப்படிக் கூறி விட்டேன் எனக் கூறிச் சமாளிப்பார்கள். இதை மக்களும் ஏற்றுக் கொள்வார்கள்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நான் மீண்டும் மக்கா வருவேன் என்று கூறவில்லை. மாறாக உம்மை உமது இறைவன் மீண்டும் மக்காவுக்குக் கொண்டு வந்து சேர்ப்பான் என்று இறைவனே தன்னிடம் கூறினான் என்பது தான் நபிகள் நாயகத்தின் முன்னறிவிப்பு. அதாவது என்னை மக்காவுக்குள் மீண்டும் கொண்டு வருவதாக இறைவன் எனக்கு உத்தரவாதம் தந்துள்ளான் என்ற பொருள்படும் வகையில் அவர்களின் முன்னறிவிப்பு அமைந்துள்ளது.

இறைவனே இவ்வாறு கூறியதாக அறிவிப்பதென்றால் அது நிச்சயம் நிறைவேற வேண்டும். அவ்வாறு நிறைவேறாவிட்டால் அது இறைவன் கூறியதல்ல; முஹம்மது கற்பனை செய்து கூறியது என்று ஆகிவிடும். இதனால் முஹம்மது இறைத்தூதர் அல்ல என்பதும் வெளிச்சமாகிவிடும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரச்சாரம் செய்த மார்க்கமே பொய் என்றும் ஆகி விடும்.

ஆம் மக்காவிலிருந்து விரட்டப்பட்டு ஆறு ஆண்டுகளில் எவ்வித எதிர்ப்புமின்றி கத்தியின்றி இரத்தமின்றி மக்காவுக்குள் வெற்றி வீரராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நுழைந்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைவன் அளித்த உத்தரவாதம் முழுமையாக நிறைவேறியது. திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை என்பதும் நிருபணமாகிறது.

37 பத்ருப் போர் வெற்றி பற்றிய முன்னறிவிப்பு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவிற்குச் சென்ற பின் ஒரு ஆட்சியை நிறுவினார்கள். அவ்வாறு நிறுவிய பின் முஸ்லிம்களின் எதிரி நாட்டவரான மக்காவாசிகள் தமது வியாபாரப் பயணத்தை மதீனா வழியாக மேற்கொண்டு வந்தனர்.

எனவே தமது நாட்டுக்குள் சட்ட விரோதமாகப் புகுந்து பயணம் செய்யும் எதிரிகளைத் தடுத்து நிறுத்திட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திட்டமிட்டார்கள். இந்த நிலையில் மக்காவின் முக்கியப் பிரமுகர் அபூஸுஃப்யான் தலைமையில் ஒரு வணிகக் கூட்டம் இஸ்லாமிய நாட்டு எல்லையில் புகுந்து செல்லும் தகவல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கிடைத்தது.

அவர்களை வழிமறித்து அவர்களின் பொருட்களைப் பறிமுதல் செய்ய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் படையுடன் புறப்பட்டனர். இச்செய்தி மக்காவில் உள்ள தலைவர்களுக்குக் கிடைத்து, அவர்கள் தமது வணிகக் கூட்டத்தைக் காப்பாற்றும் நோக்கில் படைதிரட்டி வந்தனர்.

வணிகக் கூட்டத்தை வழிமறிப்பதா? அல்லது போருக்குப் புறப்பட்டு வரும் கூட்டத்துடன் மோதுவதா? என்ற சிக்கல் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டது. இரண்டில் முஸ்லிம்கள் எதைத் தேர்வு செய்தாலும் அதில் வெற்றி என்று இறைவன் புறத்திலிருந்து வாக்களிக்கப்பட்டது.

எதிரிகளின் இரண்டு கூட்டத்தினரில் ஒன்று உங்களுக்கு (சாதகமாக இருக்கும்) என்று அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்ததை எண்ணிப் பாருங்கள்! ஆயுதம் தரிக்காத (வியாபாரக்) கூட்டம் உங்களுக்கு வேண்டும் என்று நீங்கள் விரும்புகின்றீர்கள். அல்லாஹ் தனது கட்டளைகள் மூலம் உண்மையை நிலை நாட்டவும், (தன்னை) மறுப்போரை வேரறுக்கவும் விரும்புகிறான்.

திருக்குர்ஆன் 8:7

முஸ்லிம்களின் படை பலம் சுமார் 300 ஆக இருக்கையில் எதிரிப்படையினர் சுமார் 1000 நபர்கள் இருந்தனர். இந்த விபரம் முஸ்லிம் 1763 வது ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.

பலவீனமான நிலையில் இருந்த முஸ்லிம்கள் வெற்றி பெறுவார்கள் என்று மேற்கண்ட வசனத்தில் இறைவன் முன்னறிவிப்புச் செய்தது போலவே போர் நடப்பதற்குச் சற்று முன்னர் மீண்டும் வெற்றியை உறுதி செய்து பின் வரும் வசனத்தை இறைவன் அருளினான்.

இக்கூட்டம் தோற்கடிக்கப்படும். புறங்காட்டி ஓடுவார்கள்.

திருக்குர்ஆன் 54:45

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூடாரத்தில் இருந்து கொண்டு இறைவா! நீ அளித்த வாக்குறுதியை நீ நிறைவேற்றக் கோருகிறேன். இறைவா நீ நாடினால் இன்றைய தினத்துக்குப் பின் உன்னை வணங்க யாரும் இருக்க மாட்டார்கள் என்று பிரார்த்தனை செய்தார்கள். உடனே அபூபக்கர் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதரே போதும்; உங்கள் இறைவனிடம் கெஞ்ச வேண்டிய அளவு கெஞ்சிவிட்டீர்கள் எனக் கூறினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கவசத்தை அணிந்து கொண்டு இக்கூட்டம் தோற்கடிக்கப்படும். புறங்காட்டி ஓடுவார்கள் என்ற வசனத்தை ஓதிக் கொண்டே வெளியே வந்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பஸ் (ரலி)

நூல் : புகாரி 2915, 3953, 4875, 4877

இயந்திரங்களும், வெடி மருந்துகளும் போர்க் கருவிகளாக பயன்படுத்தாத காலத்தில் எண்ணிக்கை பலத்தைக் கொண்டு மட்டுமே வெற்றி பெற முடியும். எதிரியின் பலத்துடன் ஒப்பிடும் போது முஸ்லிம்களை விட எதிரிகள் மூன்று மடங்கு அதிகமாக இருந்தும் இறைவன் வாக்களித்த படி முஸ்லிம்கள் மகத்தான வெற்றி பெற்றார்கள்.

குர்ஆன் இறைவனின் வேதம் என்பதும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்பதும் இந்த முன்னறிவிப்பு நிறைவேறியதன் மூலம் நிரூபனமானது.

38 அபூலஹப் குறித்த முன்னறிவிப்பு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட பின் மக்களுக்குப் பிரச்சாரம் செய்யும் எந்தக் கட்டளையும் அவர்களுக்கு வரவில்லை.

உமது நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக (26.214) என்பது தான் பிரச்சாரம் செய்வது பற்றிய முதல் கட்டளையாக இருந்தது. இந்தக் கட்டளையை ஏற்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது குடும்பத்தினரையும், உறவினரையும் அழைத்து அவர்களிடம் பிரச்சாரத்தைத் துவக்கினார்கள்.

உமது நெருங்கிய உறவினரை எச்சரிப்பீராக (26.214) என்ற வசனம் அருளப்பட்ட பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஃபா எனும் குன்றின் மேல் ஏறினார்கள். குறைஷ்களின் உட்கிளைகளான பனூ ஃபஹ்ர், பனூ அதீ ஆகியோரை அழைத்தார்கள். அனைவரும் அங்கே குழுமினார்கள். வர முடியாதவர், என்ன நடக்கிறது என்பதைக் கவனிக்க தன் பிரதிநிதி ஒருவரை அனுப்பினார். (நபிகள் நாயகத்தின் பெரிய தந்தை) அபூலஹபும், குறைஷ்களும் வந்தனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்தப் பள்ளத்தாக்கிலிருந்து குதிரைப் படை ஒன்று உங்களைத் தாக்க வந்து கொண்டிருக்கிறது என்று நான் கூறினால் என்னை நம்புவீர்களா? என்று கேட்டார்கள். அதற்கவர்கள் ஆம் நீங்கள் உண்மையைத் தவிர வேறு எதையும் பேசியதாக நாங்கள் கண்டதில்லை என்று கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையான வேதனை பற்றி நான் உங்களை எச்சரிக்கிறேன் என்று கூறினார்கள். இதைக் கேட்டதும் அபூலஹப் என்றென்றும் உனக்கு நாசம் உண்டாகட்டும்; இதற்காகத்தானா எங்களை ஒன்று கூட்டினாய்? என்று கேட்டான். அப்போது அபூலஹபின் இரு கைகளும் அழிந்தன. அவனும் அழிந்தான். அவனது செல்வமும், அவன் சம்பாதித்தவையும் அவனைக் காப்பாற்றவில்லை என்ற வசனம் இறங்கியது.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி 4770

இந்த நிகழ்ச்சி 1394, 4801, 4971, 4972, 4973 ஆகிய எண்களைக் கொண்ட ஹதீஸாகவும் புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சுட்டிக்காட்டப்படும் அத்தியாயம் இதுதான்:

அபூலஹபுடைய இரு கைகளும் அழிந்தன. அவனும் அழிந்தான். அவனது செல்வமும், அவன் செய்தவையும் அவனைக் காக்கவில்லை. கொளுந்து விட்டெரியும் நெருப்பில் அவனும் விறகு சுமக்கும் அவனது மனைவியும் கருகுவார்கள். அவள் கழுத்தில் முறுக்கேறிய ஈச்சமரக் கயிறு உள்ளது.

திருக்குர்ஆன் 111 வது அத்தியாயம்

நபிகள் நாயகத்தின் பெரிய தந்தையான அபூலஹப் நபிகள் நாயகத்தின் மீது அதிக அன்பு வைத்திருந்தான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பாட்டனார் இறந்த பின் நபிகள் நாயகத்தைத் தன் பொறுப்பில் வளர்க்க ஆசைப்பட்டான். ஒரே இறைவனைத் தான் வணங்க வேண்டும்; சிலைகளையோ, வேறு எதனையுமோ வணங்கக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரச்சாரம் செய்த போது அதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இரத்தத்தில் ஊறிப் போன கொள்கையை தன் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே குழி தோண்டிப் புதைக்க புறப்பட்டு வந்து விட்டாரே என்று எண்ணியதால் அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

இதன் காரணமாகவே தனது தம்பி மகன் என்று பாராமல் நபிகள் நாயகத்தைச் சபித்தான். இதற்குப் பதிலடியாகத் தான் மேற்கண்ட அத்தியாயம் அருளப்பட்டது.

இது ஒரு வரலாற்று நிகழ்ச்சியானாலும் இதில் முக்கியமான முன்னறிவிப்பும் அடங்கியுள்ளது. இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்பதற்கு அசைக்க முடியாத சான்றுகளில் ஒன்றாகவும் இது அமைந்துள்ளது.

கேரிமில்லர் என்ற கிறித்தவப் பாதிரியார் இந்த அத்தியாயத்தை ஆய்வு செய்து விட்டு இஸ்லாத்தை ஏற்றார். அத்தகைய அற்புதமான முன்னறிவிப்பு இது.

அபூலஹபும், அவனது மனைவியும் நாசமாவார்கள் என்றும் இருவரும் நரகத்தில் நுழைவார்கள் என்றும் இதில் கூறப்பட்டுள்ளது. இஸ்லாமிய நம்பிக்கையின் படி இதன் கருத்து என்னவென்றால் அவ்விருவரும் இஸ்லாத்தை ஏற்க மாட்டார்கள். இஸ்லாத்தை ஏற்க மறுத்து அதன் காரணமாக நரகத்தை அடைவார்கள் என்பதாகும்.

அவ்விருவரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் அவர்கள் நரகில் நுழைய மாட்டார்கள்.

இஸ்லாத்தை எப்படியாவது ஒழித்துக்கட்ட வேண்டும் என்று ஆரம்பம் முதல் அயராது பாடுபட்டவன். அபூலஹப்.

நானும், என் மனைவியும் இஸ்லாத்தை ஏற்கிறோம் என்று அபூலஹப் நடித்திருந்தால் அன்றோடு இஸ்லாத்தை ஒழித்திருக்க முடியும்.

அபூலஹபும், அவன் மனைவியும் இஸ்லாத்தை ஏற்க மாட்டார்கள் என்று இறைவன் கூறியது பொய்யாகி விட்டது; எனவே இது இறைவனின் கூற்று அல்ல; முஹம்மதின் கற்பனை தான்; எனவே முஹம்மது இறைத்தூதர் அல்லர் என்று மறைமுகமாகப் பிரச்சாரம் செய்து இஸ்லாத்தை இல்லாது ஒழித்திருக்க முடியும்.

அவ்வாறு செய்ய வேண்டும் என்று அவனுக்குத் தோன்றக் கூட இல்லை. இது இறைவனின் கூற்றாக இருந்ததால் தான் இவ்வாறு அவனுக்கும் தோன்றவில்லை. அவனுக்குப் பக்க பலமாக இருந்த நபிகள் நாயகத்தின் எதிரிகளுக்கும் இப்படிச் செய்து இஸ்லாத்தை ஒழிக்கலாமே என்று தோன்றவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் அவர்களை நம்பி ஏற்றுக் கொண்டவர்களில் ஓரிருவரைத் தவிர மற்ற அனைவரும் ஆரம்பத்தில் நபிகள் நாயகத்தைக் கடுமையாக எதிர்த்தவர்கள் தான். இவ்வாறு எதிர்த்தவர்கள் எல்லாம் நபிகள் நாயகத்துடன் வந்து இணைந்து கொண்டிருக்கும் வேளையில் குறிப்பிட்ட இருவரைப் பற்றி இவ்விருவரும் ஒருக்காலும் இஸ்லாத்தை ஏற்க மாட்டார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுயமாக அறிவித்திருக்க முடியாது.

மற்றவர்களைப் போலவே இவர்களும் இஸ்லாத்தில் இணைவார்கள் என்று கருதுவதற்குத் தான் அதிக வாய்ப்புகள் இருந்தன.

அவ்விருவரும் இஸ்லாத்தை ஏற்க மாட்டார்கள் என்று நபிகள் நாயகம் மனதால் நினைத்தாலும் அதைச் சொல்லியிருக்க மாட்டார்கள். ஏனெனில் இவ்வாறு சொல்விட்டால் இதைப் பொய்யென்று நிரூபிக்கும் திட்டத்துடன் அவ்விருவரும் இஸ்லாத்தில் சேருவதாக அறிவித்து மற்றவர்களை இஸ்லாத்தை விட்டும் விரட்டினால் என்ன ஆகும் என்று எண்ணி இதை வெளிப்படுத்தாமல் இருந்திருப்பார்கள்.

இறைவாக்கு நிச்சயம் நிறைவேறும். அதை எந்த மனிதனாலும் மீற முடியாது என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை வெளிப்படையாக மக்கள் முன்னே வைத்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்கள் அறிவித்தவாறு அபூலஹபும், அவனது மனைவியும் இஸ்லாத்தின் எதிரிகளாகவே இருந்து மரணித்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத்தூதர் தான் என்பதற்கு இதுவும் வலுவான சான்றாக அமைந்துள்ளது.

39 பாரசீகம் ரோமாபுரியிடம் தோற்கும்

பாரசீகமும், இத்தாலியின் ரோம் சாம்ராஜ்யமும் இருபெரும் வல்லரசுகளாகத் திகழ்ந்தன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்த போது இரண்டு நாடுகளுக்கிடையே போர் மூண்டது. இப்போரில் பாரசீகம் ரோமாபுரியை வென்றது. ரோமாபுரி அரசு படுதோல்வியடைந்தது.

பாரசீகத்தின் வெற்றி மக்காவில் இருந்த நபிகள் நாயகத்தின் எதிரிகளுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் பாரசீக நாட்டவர் மக்காவாசிகளைப் போல் உருவச் சிலைகளை வணங்குபவர்களாக இருந்தனர்.

ரோம் நாட்டவர் கிறித்தவ மதத்தைப் பின்பற்றுவோராகவும், மறுமை, சொர்க்கம் ஆகியவற்றை முஸ்லிம்களைப் போல் நம்புபவர்களாகவும் இருந்தனர். இறைவனிடமிருந்து வேதங்கள் அருளப்படும் என்பதும் அவர்களின் நம்பிக்கையாக இருந்தது. இதனால் நபிகள் நாயகத்தின் கொள்கைக்கு இவர்கள் நெருக்கமானவர்களாக இருந்தனர்.

எங்கள் கொள்கைக்கு நெருக்கமானவர்கள் வெற்றி பெற்று விட்டார்கள். சிலைகளுக்குச் சக்தி உள்ளது என்ற எங்கள் நம்பிக்கை வெற்றி பெற்று விட்டது என்று முஸ்லிம்களிடம் மக்காவாசிகள் இதனால் பெருமையடித்தனர்.

முஸ்லிம்களின் நம்பிக்கை இதனால் பாதிக்கப்படவில்லையென்றாலும் பதில் சொல்ல முடியாமல் கவலைப்பட்டனர்.

இந்த நேரத்தில் தான் பின் வரும் வசனங்கள் இறைவனால் அருளப்பட்டன.

ரோமப் பேரரசு அருகில் உள்ள பூமியில் வெற்றி கொள்ளப்பட்டு விட்டது. அவர்கள் தோல்விக்குப் பிறகு சில வருடங்களில் அல்லாஹ்வின் உதவியால் வெற்றி பெறுவார்கள். முன்னரும், பின்னரும் அதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது. நம்பிக்கை கொண்டோர் அந்நாளில் மகிழ்ச்சியடைவார்கள். தான் நாடியோருக்கு அவன் உதவி செய்கிறான். அவன் மிகைத்தவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன் 30.14

பாரசீகர்களால் சின்னாபின்னமாக்கப்பட்ட ரோம் இனிமேல் தலையெடுக்க முடியாது என்ற நிலையில் இருந்தது. இனிமேல் ரோம் சாம்ராஜ்யம் தலை தூக்கவே முடியாது என்ற நேரத்தில் தான் மிகச் சில ஆண்டுகளில் பாரசீகம் ரோமானியர்களால் தோற்கடிக்கப்படும் என்று இறைவன் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்.

சில ஆண்டுகள் என்று மொழி பெயர்த்த இடத்தில் ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்களைக் குறிக்கும் பிள்வு என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது இந்த வெற்றி ஒன்பது ஆண்டுகளுக்குள் நடந்தேறும் என்று இறைவன் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தார்கள். அவர்கள் சொன்னது போலவே ஆறு ஆண்டுகளில் ரோமானியர்கள் எழுச்சி பெற்று பாரசீகர்களைத் தோற்கடித்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத்தூதர் தான் என்பது இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.

40 கண்டுபிடிக்கப்பட்ட ஏடு

அந்தக் குகை மற்றும் அந்த ஏட்டுக்குரியோர் நமது சான்றுகளில் ஆச்சரியமானோர் என்று நீர் நினைக்கிறீரா? சில இளைஞர்கள் குகையில் ஒதுங்கிய போது எங்கள் இறைவா! உன் அருளை எங்களுக்கு வழங்குவாயாக! எங்கள் பணியை எங்களுக்குச் சீராக்குவாயாக! என்றனர். எனவே அக்குகையில் பல வருடங்கள் அவர்களை உறங்கச் செய்தோம்.

திருக்குர்ஆன் 18:9,10,11

இந்த வசனத்தில் குகையில் தங்கியவர்களைப் பற்றிக் குறிப்பிடும் போது குகைவாசிகள் என்று மட்டும் குறிப்பிட்டால் போதும். அத்துடன் ஏட்டுக்குரியவர்கள் (சுவடிக்கு உரியவர்கள்) என்றும் அல்லாஹ் கூறுகிறான்.

அப்படியானால் ஒரு சுவடி இவர்கள் வரலாற்றோடு முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஏதோ ஓர் ஏட்டை அவர்கள் வைத்திருந்தார்கள் என்பதற்காக மட்டும் இவ்வாறு நிச்சயமாகக் கூறப்பட்டிருக்காது. அந்த ஏடு என்று குறிப்பிட்டுச் சொல்வதென்றால் அது ஒரு முக்கியமான ஏடாக இருக்க வேண்டும்.

அந்த ஏடு ஒரு காலத்தில் கண்டெடுக்கப்பட்டு மக்களுக்கு அதில் உள்ள உண்மைகள் தெரிய வேண்டும் என்பதற்காகவே அந்த ஏட்டுக்குரியவர்கள் என்று அல்லாஹ் கூறியிருக்க முடியும். அந்த ஏடு யாருக்குமே கிடைக்காது என்றால் அந்த ஏடு என்று முக்கியத்துவப்படுத்தி இறைவன் கூறியிருக்க முடியாது.

அது என்ன சுவடி? அது என்ன ஏடு? என்பதெல்லாம் பல வருடங்களாக உலகத்திற்குத் தெரியவில்லை. ஆனால் சமீப காலங்களில் அந்த ஏடுகளில் இருந்த செய்திகள் இப்போது அம்பலமாகியுள்ளன.

சாவுக்கடல் சாசனச் சுருள்கள் என்ற தலைப்பில் 1998 ஆம் ஆண்டு ஒரு மாதத்தில் பல தடவை பி.பி.சி.யில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு நிகழ்ச்சி ஒளி பரப்பப்பட்டது. அதில் சொல்லப்பட்ட செய்திகள் கேட்போர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவதாக இருந்தது.

இந்த நிகழ்ச்சியின் முதல் ஒளிபரப்பு 1993 ஆம் ஆண்டிலேயே காட்டப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. அதன் விபரங்கள்:

1947-ம் ஆண்டு ஒரு நாள் ஆடு மேய்க்கும் ஓர் அரபுச் சிறுவன், காணாமல் போன தனது ஆட்டுக் குட்டி ஒன்றைத் தேடி சாவுக்கடலை ஒட்டிய ஜோர்டான் நாட்டு மலைப் பகுதிகளில் தேடி அலைந்தான். அந்த மலைப்பகுதி கும்ரான் மலைப்பகுதி என்று அழைக்கப்படுகிறது.

ஆட்டுக் குட்டியைத் தேடிய சிறுவன் அங்கிருந்த குகைக்குள் பார்த்த போது, மண் பாண்டங்களில் சுருட்டி நிரப்பி வைக்கப்பட்ட தோல் ஆவணங்களைக் கண்டிருக்கின்றான். அவைகளில் சிலவற்றை எடுத்து வந்து செருப்புத் தொழிலாளியான தன் தந்தையிடம் கொடுக்க, மறுநாள் தந்தையும், மகனும் சேர்ந்து குகைக்குள் இருந்த அனைத்துச் சுருள்களையும் வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்தார்கள்.

அந்தப் பழைய தோல்களைத் தமது செருப்புத் தொழிலுக்குப் பயன்படுத்த எண்ணிய அந்தச் சிறுவனின் தந்தை தோல்களில் ஹிப்ரு மொழியில் எழுதப்பட்டிருந்த வார்த்தைகளின் பொருள் புரியாமல், அதை அப்பொழுது ஜோர்டான் மன்னரின் ஆட்சியிலிருந்த கிழக்கு ஜெருஸலத்தைச் சேர்ந்த ஒரு பழைய புத்தகக் கடைக்காரரிடம் காண்பித்திருக்கிறார்.

ஓரளவு ஹிப்ரு மொழியறிந்த அந்தக் கடைக்காரர் அந்தச் சுருள்கள் பழங்காலச் செய்திகளைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று கருதி, ஒரு சில தீனார்களுக்கு அத்தனை சுருள்களையும் அந்த செருப்புத் தொழிலாளியிடமிருந்து விலைக்கு வாங்கிக் கொண்டார்.

கிறித்தவரான அந்தப் புத்தகக் கடைக்காரர் அந்தச் சுருள்களை அந்நகரில் இருந்த கிறித்தவ ஆலயத்தில் ஒப்படைத்து விட்டார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் சுருள்கள் கண்டெடுக்கப்பட்ட விஷயம் வெளிப்பட்டது. அதில் உள்ள செய்திகளைத் தெரிந்து கொள்வதற்கு யூதர்களும், முஸ்லிம்களும் ஆர்வம் காட்டினர்.

அப்போது ஜோர்டானை ஆட்சி செய்த மன்னர் ஹுசைன், அந்தச் சாசனச் சுருள்கள் முஸ்லிம், யூத, கிறித்தவர்கள் அடங்கிய ஒரு குழுவிடம் பொதுவாக ஒப்படைக்கப்பட்டு அவை ஆராயப்பட வேண்டும் என்று விண்ணப்பித்தார்.

ஆனால் கிறித்தவப் பாதிரியார்கள், அது தனியார் சொத்து என்று வாதிட்டு அதைப் பொதுவில் வைக்க மறுத்து விட்டனர். கிறித்தவர்களில் பல அறிஞர்களுக்கும் கூட அவற்றைப் படிப்பதற்குச் சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை.

இடைப்பட்ட ஐந்தாண்டு காலங்களில் ஜெருஸலத்தில் இருந்த பாதிரிமார்கள் சில குழுக்களை ஏற்படுத்தி கும்ரான் மலைப் பகுதிகளில் இருந்த பொதுங்குகளில் தேடியலைந்து அங்கிருந்த சாசனச் சுருள்கள் அனைத்தையும் தங்கள் கைவசம் கொண்டு வந்து விட்டனர்.

1952-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அனைத்துச் சுருள்களும் கிறித்தவப் பாதிரிமார்கள் கையில் போய்ச் சேர்ந்து விட்டன. பதினைந்தாயிரம் கையெழுத்துப் பிரதிகள் இவ்வகையில் இருப்பதாகத் தற்பொழுது கணக்கிட்டுள்ளனர்.

கடந்த ஐம்பதாண்டுகளுக்கு மேல் அந்தச் சாசனச் சுருள்களில் அடங்கிய செய்திகளைக் குறிப்பிட்ட கிறித்தவப் பாதிரிகள் அடங்கிய குழு இருட்டடிப்புச் செய்து வந்தது.

பல கிறித்தவ அறிஞர்களும், ஆராய்ச்சியாளர்களும் அதைப் படிப்பதற்கு ஆர்வம் கொண்டு கேட்டபோதெல்லாம், அவர்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது.

சாசனச் சுருள்களைக் கைவசம் கொண்ட குழுவில் ஒருவர் இறக்க நேரிட்டால் அவருக்குப் பதில் அக்குழுவில் உள்ள மற்றவர்களால் வேறொரு பாதிரியார் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவருக்கு மட்டுமே அதைப் படிப்பதற்கு உரிமை வழங்கப்பட்டு வந்தது.

இவ்விதமாகவே இவ்வளவு காலமும் அந்தச் சாசனச் சுருள்களின் செய்திகள் ரகசியமாக வைக்கப்பட்டு வந்தன. இந்த இரகசியக் காப்பில் போப்பாண்டவரின் வாட்டிகன் சபை முன்னணியில் இருந்தது.

தோலில் பதிந்த அந்தப் பழங்காலச் சாசனம் அழிந்து விடும் நிலையைக் கண்ட அதன் ரகசியக் காப்பாளர்கள் அச்சாசனங்களை நுண்ணிய படச்சுருள் எடுத்தார்கள்.

அதன் ஒரு செட் போட்டோ காப்பிகள் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருக்கும் ஒரு நூலகத்துக்கு பாதுகாப்புக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

1990-ம் ஆண்டு அந்த நூலகத்துக்குத் தலைவராக ஐஸ்மேன் என்ற அறிஞர் நியமிக்கப்பட்டார். அவர் முன்பே அந்த சாசனச் சுருள்களைப் படிப்பதற்கு ஆர்வம் காட்டி, அதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டவர்.

இப்போது தனது அதிகாரத்தில் உள்ள நூலகத்தில் இருந்து சாசனச் சுருள்களின் நுண்ணிய போட்டோக்களைப் பெரிய அளவில் போட்டோ எடுக்கச் செய்து அவற்றைப் படித்தார்.

அவற்றைப் படித்த போது தமக்கு வியப்பு ஏற்பட்டதாக வாக்குமூலம் அளிக்கின்றார். இத்தனை காலமும் கிறித்தவ சபை அந்த சாசனச் சுருள்களை மற்றவர்களுக்குக் காட்டாமல் இருந்ததன் உள் நோக்கம் என்ன என்பதையும் புரிந்து கொண்டதாகக் கூறுகின்றார்.

மைக்கேல் வைஸ் என்னும் சிகாகோ பல்கலைக் கழக ஹிப்ரு மொழிப் பேராசிரியர் ஒருவரின் உதவியைக் கொண்டு அந்தச் சாசனச் சுருள்களில் முக்கியமானது என்று அவர் கருதிய 100 கையெழுத்துப் பிரதிகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிட்டார். அந்தப் புத்தக வெளியீடு கிறித்தவ உலகத்தை உலுக்கியது என்றும், குறிப்பாக கிறித்தவ மத ஆலயங்கள் பேரதிர்ச்சியில் உறைந்து போயின என்றும் அந்த டாக்குமென்டரியின் செய்தியாளர் கூறுகின்றார்.

மேற்கத்திய மக்களின் மத நம்பிக்கையைத் தகர்ப்பதாக அந்தப் புத்தக வெளியீடு இருந்தது என்றும், ஆகவே அந்த இரு அறிஞர்களும் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்ற அச்சம் இருந்தது என்றும் அதன் செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

அப்படி எது நடந்தாலும் அதைத் தாங்கள் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், இதற்கு அஞ்சி ஒரு மிகப் பெரும் பேருண்மையை உலகத்திலிருந்து தாங்கள் மறைக்க விரும்பவில்லை என்றும், அவ்விரு அறிஞர்களும் வெளிப்படையாகக் கூறுவதையும் அந்தத் தொலைக்காட்சி டாக்குமெண்டரி பதிவு செய்து காட்டுகின்றது.

கிறித்தவ மத ஆலயங்களில் இப்போது ஏசுவின் பெயரால் செய்யப்படும் மதச் சடங்குகளும், வழிபாடுகளும் ஆரம்ப கிறித்தவர்களிடையே நடைபெறவில்லை என்பதையே சாசனச் சுருள்கள் நிரூபிக்கின்றன.

இந்தச் சடங்குகளுக்கும், ஏசுவின் பிரச்சாரத்திற்கும், கொள்கைக் கோட்பாடுகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவை அனைத்தும் பவுல் என்பவரால் பிற்காலத்தில் ஏற்படுத்தப்பட்டவை.

மொத்தத்தில் இப்போது ஏசுவின் பெயரால் சொல்லப்படும் அனைத்துக் கிறித்தவக் கொள்கைகளும் பொய்யானவை. அவற்றை ஏசுவிற்கு அடுத்த தலைமுறையில் வாழ்ந்த உண்மையாளர்களின் வாழ்வில் காண முடியவில்லை.

மேற்கண்டவாறு அறிஞர் ஐஸ்மேன் கூறி வரும் போது, ஒரு யூதரிடம் அவற்றைப் பற்றி வாதம் செய்யும் போது, ஒற் அது குர்ஆனை உறுதிப்படுத்துகிறது என்று ஆணித்தரமாகக் கூறுகின்றார். அவ்விடத்தில் அந்த வாதம் நிறுத்தப்பட்டு மறு காட்சி காட்டப்படுகின்றது.

இதே முறையில் மைக்கேல் வைஸ் என்ற அறிஞர் பேசும் போது, அது இஸ்லாத்தை உறுதிப்படுத்துகின்றது என்று கூறுகின்றார். இங்கும் காட்சி மாற்றப்படுகின்றது.

ஆகவே இந்தச் சாசனச் சுருள்கள் எப்படி குர்ஆனையும், இஸ்லாத்தையும் உண்மைப்படுத்துகின்றன என்று அவர்கள் கூறுகின்றார்கள் என்பதைப் பார்வையாளர்கள் அறிய முடியவில்லை.

அந்தச் செய்தியிலிருந்து நாம் ஆச்சரியமான ஓர் உண்மையைத் தெரிந்து கொள்கிறோம்.

ஈஸா (அலை) அவர்களுக்கு இறைவன் இஞ்ஜீல் எனும் வேதத்தை வழங்கியதாகத் திருக்குர்ஆன் பல இடங்களில் கூறுகின்றது. ஆனால் கிறித்தவ சமுதாயத்திடம் அந்த வேதம் நிச்சயமாக இல்லை எனலாம்.

ஏனெனில் பைபிளின் புதிய ஏற்பாடு என்பது இயேசுவுக்குக் கடவுள் வழங்கியதன்று. மாறாக ஏசுவைப் பற்றி மற்றவர்கள் எழுதிய குறிப்புகள் தான் புதிய ஏற்பாடு.

பைபிளின் பல இடங்களில் ராஜ்ஜியத்தின் சுவிஷேசத்தை இயேசு பிரசங்கித்தார் என்று கூறப்பட்டுள்ளது. எந்த இறைவேதத்தை மறைத்தார்களோ அதைத் தான் இயேசுவின் வழி வந்த நல்ல மனிதர்கள் தங்களுடன் எடுத்துச் சென்று குகையில் தங்கினார்கள் என்று முடிவு செய்யப் போதுமான காரணம் இருக்கிறது.

குர்ஆனை ஒத்திருக்கின்றது என்பது தான் அந்தச் சுருள்களைப் படித்த கிறித்தவ அறிஞர்களின் கருத்தாகும்.

இஞ்ஜீல் எனும் வேதத்தைத் திருக்குர்ஆன் மெய்ப்பிப்பதாக திருக்குர்ஆனும் பல இடங்களில் குறிப்பிடுகின்றது.

அதை வாசித்த பாதிரியார்கள் திட்டமிட்டு மறைத்ததும் இந்தக் கருத்தை உறுதிப்படுத்துகின்றது.

மனிதர்களால் எழுதப்பட்ட ஏட்டுக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளித்து இறைவன் கூறியிருக்க மாட்டான் என்பதும் இக்கருத்தை மேலும் உறுதிப்படுத்துகின்றது.

41 தீய நோக்கத்தில் கட்டப்பட்ட பள்ளிவாசல்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த பின் அது வரை மதீனாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த யூதர்களின் தலைமைக்கு ஆபத்து வந்தது.

பெரும்பாலான மக்கள் நபிகள் நாயகத்தை ஏற்றுக் கொண்டதால் ஆட்சியும் அவர்கள் கைக்கு வந்தது. முஹம்மது நபியை எப்படியாவது கொலை செய்தால் தான் ஆட்சி நம் கைக்கு மீண்டும் வரும் என்று யூதர்கள் சதித் திட்டம் தீட்டினார்கள்.

இந்தச் சதித் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக மதீனாவுக்கு வெளியே ஒரு பள்ளிவாசலைக் கட்டினார்கள். தங்களை முஸ்லிம்கள் என்று அறிவித்துக் கொண்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தங்களின் பள்ளிவாசலுக்கு அழைத்து வந்து மறைந்திருந்து தாக்கி அவர்களைக் கொல்வது அவர்களின் நோக்கமாக இருந்தது.

பள்ளிவாசலுக்குள்ளே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கொல்லத் திட்டம் தீட்டிக் கொண்டு நபிகள் நாயகத்தை அழைத்தார்கள். தங்கள் பள்ளிவாசலுக்கு வருகை தந்து முதல் தொழுகை தொழுது ஆரம்பித்து வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

ஊருக்கு வெளியே இப்பள்ளிவாசல் கட்டப்பட்டதால் இதன் பின்னணியில் உள்ள சதித்திட்டம் நபிகள் நாயகத்திற்கும், மற்ற முஸ்லிம்களுக்கும் தெரியவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இவர்களின் சதித் திட்டத்தை அறியாமல் அந்தப் போலிப் பள்ளிவாசலுக்குச் செல்ல ஒப்புக் கொண்டனர். இந்தச் சந்தர்ப்பத்தில் தான் பின் வரும் வசனங்களை இறைவன் அருளினான்.

தீங்கிழைப்பதற்காகவும், (ஏக இறைவனை) மறுப்பதற்காகவும், நம்பிக்கை கொண்டோரிடையே பிரிவை ஏற்படுத்திடவும், இதற்கு முன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போரிட்டோருக்குப் புகலிடமாகவும் ஒரு பள்ளிவாசலை ஏற்படுத்திக் கொண்டோர் நாங்கள் நல்லதைத் தவிர வேறெதனையும் நாடவில்லை என்று சத்தியம் செய்கின்றனர். அவர்கள் பொய்யர்களே என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான். (முஹம்மதே!) அதில் நீர் ஒரு போதும் வணங்காதீர்! ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலே நீர் வணங்குவதற்குத் தகுதியானது. அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மையானவர்களை விரும்புகிறான்.

திருக்குர்ஆன் 9.107,108

அல்லாஹ் அறிவித்தவாறு அப்பள்ளிவாசலைச் சோதனையிட்ட போது சதிகாரர்களின் சதி அம்பலமானது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் தான் என்பது இதன் மூலம் நிரூபனமானது.

நபிகள் நாயகத்தின் முன்னறிவிப்புகள்

இஸ்லாம் இறைவனால் வழங்கப்பட்ட மார்க்கம் என்பதற்கு திருக்குர்ஆன் எவ்வாறு ஆதாரமாக உள்ளதோ அது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்புகளும் ஆதாரங்களாக அமைந்துள்ளன. அவற்றில் சிலவற்றைக் காண்போம்.

1 பாரசீகம் வெற்றி கொள்ளப்படும்

நபிகள் நாயகம் (ஸல) அவர்கள் மரணிக்கும் வேளையில் பாரசீகம் மிகப் பெரிய வல்லரசாகத் திகழ்ந்தது. இந்த வல்லரசை முஸ்லிம்கள் வெற்றி கொள்வார்கள் என்றும், இந்த வெற்றி மிகவும் குறுகிய காலத்தில் கிட்டும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தார்கள்.

பாரசீக மன்னன் கிஸ்ராவின் கருவூலங்கள் வெற்றி கொள்ளப்படுவதை உனக்கு நீண்ட ஆயுள் வழங்கப்பட்டால் நிச்சயம் காண்பாய் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதீ பின் ஹாதிம் (ரலி) அவர்களிடம் கூறினார்கள்.

நூல் : புகாரி 3595

பாரசீகப் பேரரசு முஸ்லிம்களால் வெற்றி கொள்ளப்படும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

அதீ பின் ஹாதிம் (ரலி) அவர்கள் அந்த வெற்றியைத் தம் கண்களால் காண்பார் என்பதையும் கூறுகிறார்கள்.

பலநுறு வருடங்கள் காத்திருக்கத் தேவையில்லை. உன் வாழ்நாளிலேயே அதைக் காண்பாய் என்றும் அதீ பின் ஹாதிமிடம் தெரிவிக்கிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தவாறு பாரசீகத்தை உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்கள் கைப்பற்றினார்கள். அதன் கருவூலங்களையும் தமதாக்கிக் கொண்டார்கள்.

பாரசீக மன்னன் கிஸ்ராவின் கருவூலங்களை வெற்றி கொண்டவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன் என்று அதீ பின் ஹாதம் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

நூல் : புகாரி 3595

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்த முன்னறிவிப்பும் மாற்றம் ஏதுமின்றி முழுமையாக நிறைவேறியது.

2 தமது மரணம் குறித்த முன்னறிவிப்பு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நாற்பதாம் வயதில் துவக்கிய இஸ்லாமியப் பிரச்சாரத்தை 63 வது வயதில் முடித்துவிட்டு மரணம் அடைந்தார்கள்.

மனிதன் தீராத நோய்க்கு ஆளாகும் போதும், படுத்த படுக்கையில் நாட்களைக் கழிக்கும் போதும் தனக்கு மரணம் நெருங்கி விட்டதை ஓரளவுக்கு ஊகித்து அறிந்து கொள்வான்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தள்ளாத வயதை அடைவதற்கு முன் திடகாத்திரத்துடன் இருக்கும் போதே தமக்கு மரணம் மிக விரைவில் வந்து விடும் என்று பல்வேறு சந்தர்ப்பங்களில் முன்னறிவிப்புச் செய்தார்கள். அவர்கள் முன்னறிவிப்புச் செய்தவாறு மரணத்தைத் தழுவினார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு சுமார் நான்கு மாதங்களுக்கு முன் ஹஜ் செய்தனர். மதீனாவிலிருந்து மக்கா சென்று ஹஜ் செய்ய அன்றைக்கு நல்ல திடகாத்திரமும், உடல் வலிவும் இருக்க வேண்டும். அந்த நிலையில் அவர்கள் இருந்ததால் தான் ஹஜ் கடமையை மேற்கொண்டார்கள்.

நபிகள் நாயகத்தின் முதல் ஹஜ்ஜாகவும். கடைசி ஹஜ்ஜாகவும் திகழ்ந்த அந்த ஹஜ்ஜின் போது பின்வரும் வசனம் தமக்கு அருளப்பட்டதாகக் கூறினார்கள்.

இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாகப் பொருந்திக் கொண்டேன்.

திருக்குர் ஆன் 5.3

இன்றுடன் மார்க்கத்தை இறைவன் முழுமைப்படுத்தி விட்டான் என்றால் இனிமேல் இறைவனிடமிருந்து எந்தச் சட்ட திட்டமும் வராது. அதைப் பெற்று மக்கள் மன்றத்தில் வைக்கக் கூடிய தூதருக்கு இனி வேலையில்லை என்ற கருத்தும், மிக விரைவிலேயே அவர்கள் இவ்வுலகை விட்டுப் பிரிவார்கள் என்ற கருத்தும் இதனுள் அடங்கியுள்ளது.

இந்த ஆண்டுக்குப் பின் இனிமேல் உங்களை நான் சந்திக்க முடியாமல் போகலாம் என்று தமது இறுதிப் பேருரையில் குறிப்பிட்டார்கள்.

நூல் : தப்ரானி அல்கபீர்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (உஹத் போர் நடந்து) எட்டு ஆண்டுகள் கழிந்து உஹத் போரில் கொல்லப்பட்டவர்களுக்காக ஜனாஸா தொழுகை நடத்தினார்கள். இது உயிரோடு உள்ளவர்களிடமும், இறந்தவர்களிடமும் விடைபெறுவது போல் அமைந்திருந்தது. பின்னர் மேடையில் ஏறினார்கள். நான் உங்களுக்கு முன்னே செல்கிறேன். உங்களுக்கு நான் சாட்சியாக இருப்பேன். ஹவ்லுல் கவ்ஸர் எனும் தடாகத்தில் (மறுமையில்) உங்களைச் சந்திப்பேன் என்று உரை நிகழ்த்தினார்கள். அது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நான் கடைசியாகப் பார்த்ததாகும் என்று உக்பா பின் ஆமிர் (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல் : புகாரி 4042

ஆண்டு தோறும் ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னிடம் வந்து (அது வரை அருளப்பட்ட) குர்ஆன் வசனங்களை ஓதச் செய்து வந்தனர். இந்த ஆண்டு இரண்டு தடவை என்னிடம் வந்தார்கள். என் மரணம் நெருங்கி விட்டதாகவே எண்ணுகிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) தமது மகள் ஃபாத்திமாவிடம் தெரிவித்தார்கள்.

நூல் : புகாரி 3624, 6285

ஏமன் நாட்டின் ஆளுநராக முஆத் பின் ஜபலை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். முஆது அவர்கள் குதிரையில் ஏறி அமர்ந்து வர அவருடன் நடந்தே வந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழி அனுப்பி வைத்தார்கள். அப்போது பல அறிவுரைகளைக் கூறிவிட்டு அடுத்த ஆண்டு நீ என்னைச் சந்திக்க மாட்டாய் என்றே நினைக்கிறேன் என்று கூறினார்கள்.

நூல் : அஹ்மத் 22404

அவர்கள் அறிவித்தபடியே அந்த ஆண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்தார்கள்.

3 தனி நபரைப் பற்றி நரகவாசி என்ற முன்னறிவிப்பு

நியாயத்திற்காகக் களம் இறங்கிப் போராடுவதற்கு நிகரான நன்மை வேறு எதிலும் கிடைக்காது. இவ்வாறு தன் உயிரைத் தியாகம் செய்ய போர்க்களத்திற்கு வந்த ஒருவரைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நரகவாசி என்று குறிப்பிட்டார்கள். அவர்கள் நரகவாசி என்று அடையாளம் காட்டிய அந்த நபர் கடைசியாக நரகில் செல்வதற்குரிய வழியைத் தேர்வு செய்து கொண்டார். இது பற்றிய நிகழ்ச்சி பின்வருமாறு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், இணைவைப்பவர்களும் போர்க்களத்தில் மோதினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது படையினரைச் சார்ந்து போரிட்டார்கள். இணைவைப்பவர்கள் தமது படையினரைச் சார்ந்து போரிட்டனர். நபித்தோழர்களில் ஒரு மனிதர் மட்டும் தனது படையினரைச் சாராமல் விரட்டிச் சென்று போரிட்டார். இவரைப் போல் நம்மில் யாரும் வீரமிக்கவர் இல்லை என்று நபித்தோழர்கள் பேசிக் கொண்டனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவர் நரகவாசியாவார் என்று அவரைப் பற்றிக் கூறினார்கள். அங்கே சபையில் இருந்த ஒருவர் நான் இவருடன் சேர்ந்து இவரைக் கண்கானிக்கிறேன் என்று புறப்பட்டார். அவர் ஓடினால் இவரும் ஓடுவார். இந்த நிலையில் அந்த அந்த மனிதருக்குக் கடுமையான காயம் ஏற்பட்டது. (வேதனை தாள முடியாமல்) தனது வாளைத் தரையில் ஊன்றி அதன் மீது தனது மார்பை அழுத்தி தற்கொலை செய்து விட்டார். அவரைக் கண்காணிக்க முன் வந்த அந்த மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து நீங்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நான் உறுதி கூறுகிறேன் எனக் கூறி நடந்ததை விளக்கினர்.

நூல் : புகாரி 2898

தற்கொலை செய்பவர்கள் என்றென்றும் நரகில் கிடப்பார்கள் என்பது இஸ்லாத்தின் கொள்கை. இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் எச்சரிக்கை செய்திருந்தனர். இதன் அடிப்படையில் அந்த மனிதர் தற்கொலை செய்து கொண்டதன் மூலம் நரகவாசியாக மரணித்தார்.

போர்க்களத்தில் வீரதீரமாகப் போரிடும் ஒருவரைப் பற்றி நரகவாசி என்று எந்த மனிதராலும் கூற முடியாது. கடைசியில் அவர் தற்கொலை செய்து கொள்வார் என்பது இறைவனுக்கு மட்டுமே தெரிந்த உண்மையாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதராக இருந்ததால் இதை இறைவன் முன்பே அறிவித்துக் கொடுத்திருக்கிறான் என்பதால் தான் இவ்வாறு அறிவிக்க முடிந்தது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் என்பதற்கு இதுவும் ஓர் ஆதாரமாக அமைந்துள்ளது.

4 தமது மகளின் மரணம் பற்றிய முன்னறிவிப்பு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் நான்கு பெண் குழந்தைகளை வழங்கியிருந்தான். ஸைனப், ருகையா, உம்மு குல்ஸும் ஆகிய மூவரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வுலகில் வாழும் போதே மரணித்து விட்டார்கள். கடைசி மகள் ஃபாத்திமா (ரலி) அவர்கள் மட்டும் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை உயிரோடு இருந்தார்கள்.

தமது குடும்பத்து உறுப்பினர்களில் ஃபாத்திமா (ரலி) அவர்கள் தான் முதலில் மரணிப்பார்கள் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தார்கள்.

என் குடும்பத்தார்களில் (நான் மரணித்த பின்) என்னை முதலில் வந்து சேர்பவர் நீ தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் தெரிவித்தார்கள்.

நூல் : புகாரி 3626, 3716, 4434

நபிகள் நாயகத்தின் மனைவியரிலும், அவர்களின் உறவினர்களிலும் அதிக வயதுடைய பலர் இருந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது ஃபாத்திமா (ரலி) அவர்கள் சுமார் 25 வயதுடையவராகத் தான் இருந்தார்கள். மரணத்தை நெருங்கிய வயதுடையவராக அவர்கள் இருக்கவில்லை.

அப்படி இருந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தபடி ஃபாத்திமா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் மரணித்து ஆறாவது மாதத்தில் மரணத்தைத் தழுவினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் தான் என்பதை இச்செய்தியை இறைவன் அறிவித்துக் கொடுத்ததன் மூலம் மெய்ப்படுத்தினான்.

5 அம்மாரின் மரணம் பற்றிய முன்னறிவிப்பு

ஆரம்ப கால முஸ்லிம்களில் யாஸிர், சுமய்யா தம்பதிகள் முக்கியமானவர்கள். சுமய்யா (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்காக அவர்களது எஜமானனால் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இஸ்லாத்திற்காக முதன் முதலில் உயிர் நீத்தவர் என்ற பெருமையைப் பெற்றார்கள்.

இவர்களின் புதல்வரான அம்மார் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நெருக்கமான தோழராக இருந்தார்கள். மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்த அம்மார் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அன்புக்குப் பாத்திரமானவராகத் திகழ்ந்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வந்தவுடன் மதீனாவில் பள்ளிவாசல் ஒன்றை எழுப்பினார்கள். கூலி ஆட்கள் இன்றி தன்னார்வத் தொண்டர்களான நபித்தோழர்களே அப்பள்ளிவாசலைக் கட்டினார்கள். ஒவ்வொரு நபித்தோழரும் ஒவ்வொரு கல்லாகச் சுமந்து வந்தனர். அம்மார் (ரலி) அவர்கள் இரண்டிரண்டு கற்களாகச் சுமந்து வந்தார். இதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரது தலையில் படிந்த புழுதியைத் துடைத்து விட்டனர். பாவம் அம்மார்! இவரை வரம்பு மீறிய கூட்டத்தினர் கொலை செய்வார்கள் என்று முன்னறிவிப்புச் செய்தார்கள்.

நூல் : புகாரி 2812, 447

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பின் அபூபக்கர் (ரலி), அவர்களுக்குப் பின் உமர் (ரலி), அவர்களுக்குப் பின் உஸ்மான் (ரலி) ஆட்சி புரிந்தனர். உஸ்மான் (ரலி) கொல்லப்பட்ட பின் அலீ (ரலி) ஆட்சிப் பொறுப்பேற்றனர்.

இவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற போது சிரியாவின் ஆளுநராக இருந்த முஆவியா (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்களின் கட்டுப்பாட்டில் வராமல் சிரியாவைத் தனி நாடாக அறிவித்துக் கொண்டார்கள். இதன் காரணமாக அலீ (ரலி) அவர்களுக்கும், முஆவியா (ரலி) அவர்களுக்கும் இடையே பல்வேறு சண்டைகள் நிகழ்ந்தன. சிஃப்பீன் என்ற இடத்தில் இரு தரப்புப் படைகளும் மோதிக் கொண்ட யுத்தம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

கி.பி.657 ஆம் ஆண்டு நடந்த இப்போரில் அம்மார் (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்களின் படையில் அங்கம் வகித்தனர். இப்போரில் அவர்கள் கொல்லப்பட்டனர்.

அலீ (ரலி) அவர்கள் அதிபராக இருக்கும் போது அவர்களுக்குக் கட்டுப்படாமல் முஆவியா (ரலி) அவர்கள் வரம்பு மீறினார்கள்.

வரம்பு மீறிய கூட்டம் அம்மாரைக் கொல்லும் என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்த முன்னறிவிப்பு நிறைவேறியது. அவர்கள் இறைவனின் தூதர் என்பது நிரூபணமானது.

6 ஸைனப் (ரலி) அவர்கள் மரணம் பற்றிய முன்னறிவிப்பு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியரில் ஸைனப் (ரலி) அவர்கள் முக்கியமானவர்கள். நபிகள் நாயகத்தின் மாமி மகளான ஸைனபை ஸைது எனும் அடிமைக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மணமுடித்து வைத்தார்கள். ஸைது அவர்களுக்கும், ஸைனப் அவர்களுக்கும் மனக் கசப்பு ஏற்பட்டதால் ஸைத் அவர்கள் ஸைனபை விவாகரத்துச் செய்தார்கள்.

இதன் பின்னர் அல்லாஹ்வே ஸைனபை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்தான்.

பார்க்க திருக்குர்ஆன் : 33:37

தமது மனைவியரில் யார் முதலில் மரணிப்பார்கள் என்பது பற்றிய பேச்சு வந்த போது உங்களில் நீளமான கைகளை உடையவரே முதலில் மரணிப்பார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டனர். இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியர் ஒரு குச்சியின் மூலம் ஒவ்வொருவரின் கைகளையும் அளந்து பார்த்தனர். மற்றவர்களின் கைகளை விட ஸவ்தா (ரலி) அவர்களின் கைகளே நீளமாக இருந்தன. ஆனால் நபிகள் நாயகத்தின் மனைவியரில் ஸைனப் (ரலி) தான் முதலில் மரணித்தனர். தாரளமாக வாரி வழங்குபவர் என்ற கருத்திலேயே கைகள் நீளமானவர் என்ற சொல்லை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்தியதை அவர்களின் மனைவியர் புரிந்து கொண்டார்கள்.

இந்த விபரம் புகாரி 1420 வது ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தவாறு அவர்களின் மனைவியரில் ஸைனப் அவர்கள் முதலில் மரணித்தார்கள்.

7 இரண்டு கலீஃபாக்களின் வீர மரணம் பற்றி முன்னறிவிப்பு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பின் ஆட்சிப் பொறுப்பேற்ற அபூபக்ர் (ரலி) அவர்கள் இயற்கை மரணம் அடைந்தார்கள்.

அவர்களுக்குப் பின் ஆட்சிப் பொறுப்பேற்ற உமர் (ரலி) அவர்கள் யூதன் ஒருவனால் கொல்லப்பட்டார்கள்.

அவர்களுக்குப் பின் ஆட்சிப் பொறுப்பேற்ற உஸ்மான் (ரலி) அவர்கள் கலகக்காரர்களால் படுகொலை செய்யப்பட்டார்கள்.

உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகிய இருவரும் இயற்கை மரணத்தைத் தழுவ மாட்டார்கள். கொல்லப்பட்டு வீர மரணம் தான் அடைவார்கள் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்திருந்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோரும் ஒரு முறை உஹத் மலை மீது ஏறினார்கள். அப்போது உஹத் மலை நடுங்கியது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உஹத் மலையே அசையாமல் நில். உன் மீது ஓர் இறைத் தூதரும், ஒரு (சித்தீக்) உண்மையாளரும், வீர மரணம் அடையும் இருவரும் உள்ளனர் என்று குறிப்பிட்டார்கள்.

நூல் புகாரி 3675

உமர் (ரலி) அவர்களும், உஸ்மான் (ரலி) அவர்களும் இயற்கையாக மரணத்தைத் தழுவ மாட்டார்கள். எதிரிகளால் கொல்லப்பட்டே மரணிப்பார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தவாறு இருவரும் எதிரிகளால் கொல்லப்பட்டனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் தாம் என்பதை நிரூபிக்கும் சான்றாக இந்த முன்னறிவிப்பும் அமைந்துள்ளது.

8 ஒட்டகப் போர் பற்றி முன்னறிவிப்பு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) அவர்களுக்கும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மருமகன் அலீ (ரலி) அவர்களுக்குமிடையே போர் நடக்கும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு வழிகளில் முன்னறிவிப்புச் செய்தனர்.

உஸ்மான் (ரலி) அவர்கள் இஸ்லாமிய அரசின் தலைநகரமான மதீனா நகரில் கலகக்காரர்களால் கொல்லப்பட்டனர். அவர்கள் கொல்லப்பட்ட பின் இக்கொலைப் பழி அலீ (ரலி) அவர்கள் மீது விழுகிறது. தான் ஆட்சிக்கு வருவதற்காக அலீ தான் உஸ்மானைக் கொல்லத் திட்டம் தீட்டினார் என்று சில விஷமிகள் பிரச்சாரம் செய்தனர்.

மற்றும் சிலர் அலீ (ரலி) அவர்களுக்கு இக்கொலையில் தொடர்பு இல்லாவிட்டாலும் கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் தாமதம் செய்கிறார் என்றும் அவர்களைக் காப்பாற்ற முனைகிறார் என்றும் பிரச்சாரம் செய்தனர்.

உஸ்மான் (ரலி) அவர்களின் கொலைக்கு நியாயம் கேட்டு ஆயிஷா (ரலி) அவர்கள் படை திரட்டினார்கள். அலீ (ரலி) அவர்களுக்கும், ஆயிஷா (ரலி) அவர்களுக்கும் இடையே பெரிய அளவில் போர் மூண்டது. இப்போரில் ஆயிஷா (ரலி) அவர்கள் வீற்றிருந்த ஒட்டகத்தின் கால்கள் வெட்டப்பட்டன. அவர்கள் கீழே விழுந்ததும் அவர்களின் படையினர் நிலைகுலைந்து தோற்றுப் போனார்கள். இதன் காரணமாக இப்போர் ஒட்டகப் போர் என்று குறிப்பிடப்படுகிறது.

ஒட்டகப் போருக்காக ஆயிஷா (ரலி) அவர்கள் புறப்பட்ட போது வழயில் ஒரு இடத்தில் தங்கினார்கள். அந்த இடத்தில் நாய்கள் குரைத்தன. இதைக் கண்ட ஆயிஷா (ரலி) அவர்கள் இந்த இடத்தின் பெயரென்ன என்று கேட்டார்கள். அவர்களின் சகாக்கள் ஹவ்அப் என்று கூறினார்கள். உடனே ஆயிஷா (ரலி) அவர்கள் திரும்பிச் செல்ல முற்பட்டனர். தோழர்கள் காரணம் கேட்ட போது (என் மனைவியராகிய) உங்களில் ஒருவருக்கு எதிராக ஹவ்அப் என்ற இடத்தில் நாய்கள் குரைக்கும். அப்போது அவரது நிலை மோசமானதாக இருக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை நினைவு கூர்ந்தார்கள்.

நூல் : அஹ்மத் 24758

ஆனாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பின் படி தமது நிலை தவறு என்று புரிந்து கொண்டாலும் அவர்களின் சகாக்கள் செய்த நிர்பந்தத்தால் அவர்கள் போருக்குச் செல்லும் முடிவை மாற்றிக் கொள்ள முடியவில்லை.

தமது மனைவிக்கு மட்டுமின்றி மருமகன் அலீ (ரலி) அவர்களுக்கும் இது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தார்கள்.

அலீயே உனக்கும் என் மனைவி ஆயிஷாவுக்கும் இடையே பிரச்சினை ஏற்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள் உங்கள் மனைவிக்கும், எனக்கும் இடையே சண்டை ஏற்படுமா? அப்படி நடந்தால் என்னைவிட துர்பாக்கியசாலி இருக்க முடியாது என்று கூறினார்கள். அந்தச் சம்பவம் நிகழும் போது ஆயிஷாவைப் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைத்துவிட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : அஹ்மத் 25943

இந்த இரண்டு முன்னறிவிப்புகளும் அப்படியே முழுமையாக நிறைவேறின. அலீ (ரலி) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களைக் கன்னியமான முறையில் பாதுகாப்பாக அனுப்பி வைத்தார்கள்.

9 ஹஸன் (ரலி) மூலம் ஏற்பட்ட சமாதான உடன்படிக்கை

நான்காவது ஜனாதிபதியான அலீ (ரலி) அவர்கள் இப்னு முல்ஜிம் என்பவனால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட பின் அவர்களின் மூத்த மகன் ஹஸன் (ரலி) அவர்களை மக்கள் ஜனாதிபதியாக ஏற்றுக் கொண்டனர்.

இஸ்லாமிய அரசை இரண்டாகக் கூறு போட்டு விட்டார் என்று முஆவியா (ரலி) அவர்கள் மீது கோபமாக இருந்த மக்கள் முஆவியாவுக்கு எதிராகப் போர் செய்யுமாறு ஹஸன் (ரலி) அவர்களை வலியுறுத்தி வந்தனர். ஆரம்பத்தில் இதற்கு உடன்படாத ஹஸன் (ரலி) அவர்கள் வேறு வழியின்றி முஆவியா (ரலி) அவர்களுடன் போருக்குத் தயாரானார்கள்.

போருக்குச் செல்லும் வழியில் ஓரிடத்தில் ஹஸன் (ரலி) அவர்கள் தமது படையினருடன் தங்கினார்கள். அப்போது ஹஸன் (ரலி) அவர்களின் வலதுகரமாக விளங்கிய கைஸ் என்பார் கொல்லப்பட்டதாக வதந்தி பரவியது. இதனால் ஹஸன் (ரலி) அவர்களின் படையினர் தங்களுக்குள் மோதிக் கொள்ளும் நிலைமை ஏற்பட்டது. ஹஸன் (ரலி) அவர்களும் காயமடைந்தனர்.

கட்டுப்பாடற்ற இந்தப் படையை வைத்துப் போர் செய்வதை விட முஆவியா (ரலி) அவர்களுடன் சமாதானம் செய்து கொள்வதே சிறந்தது என்று கருதி முஆவியா (ரலி) அவர்களுக்கு ஹஸன் (ரலி) அவர்கள் மடல் எழுதினார்கள்.

தமக்குத் தேவையான மாணியத்தைப் பெற்றுக் கொள்வதாக ஒப்புக் கொண்டு தமது கட்டுப்பாட்டில் இருந்த ஆட்சியை முஆவியா (ரலி) அவர்களிடம் ஒப்படைத்து விட்டார்கள். பிரிந்து கிடந்த இஸ்லாமிய அரசு ஒரே அரசாக இதன் மூலம் வலிமை பெற்றது. முஸ்லிம்கள் தமக்கிடையே இரத்தம் சிந்துவது இதன் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டது.

ஹிஜ்ரி 41ஆம் ஆண்டு ரபிய்யுல் அவ்வல் மாதம் பிறை 5ல் நடந்த இந்தச் சமாதான உடன்படிக்கை பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்திருந்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிம்பர் மீது இருந்தார்கள். அவர்களின் அருகில் ஹஸன் (ரலி) அவர்கள் இருந்தனர். எனது இந்தப் பேரப்பிள்ளை மூலமாக முஸ்லிம்களின் இருபெரும் அணிகளிடையே அல்லாஹ் சமாதானத்தை ஏற்படுத்துவான் என்று அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி 2704

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தவாறு இது நிறைவேறியது.

10 வழிப்பறிக் கொள்ளைகள் தடுக்கப்படும்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து வழிப்பறிக் கொள்ளை பற்றி முறையீடு செய்தார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் ஹீரா என்ற ஊர் உனக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். கேள்விப்பட்டிருக்கிறேன் என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கஅபாவை வலம் வருவதற்காக ஒரு பெண் ஹீரா எனும் ஊரிலிருந்து ஒட்டகத்தில் பயணம் செய்து வருவாள். அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் அஞ்ச மாட்டாள். உன் வாழ்நாள் அதிகரித்தால் நீ இதைக் காண்பாய் என்று என்னிடம் கூறினார்கள். வழிப்பறிக் கொள்ளை செய்வதில் வல்லவரான தய்யி கோத்திரத்தார் அப்போது எங்கே சென்றிருப்பார்கள்? என்று எனக்குள் நான் கூறிக் கொண்டேன் என்று அதீ பின் ஹாதிம் (ரலி) கூறுகிறார்.

நூல் : புகாரி 3595

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைக் கூறும் போது ஹீரா என்ற ஊருக்கும், மக்காவுக்கும் இடையே வாழ்ந்த தய்யி எனும் கோத்திரத்தார் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு வந்தனர். இந்தக் கூட்டம் ஒடுக்கப்படும் என்றும், ஹீரா முதல் மக்கா வரை உள்ள பகுதிகள் முஸ்லிம்களின் கைவசம் வரும் என்றும், மிகச் சீக்கிரத்தில் இது ஏற்படும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தார்கள்.

அவர்கள் முன்னறிவிப்புச் செய்தவாறு அபூபக்கர் (ரலி) அவர்களின் ஆட்சியில் ஹீரா எனும் பகுதியும், தய்யி கூட்டத்தர் வாழ்ந்த பகுதியும் முஸ்லிம்கள் கைவசம் வந்தன. கொள்ளைக் கூட்டம் ஒடுக்கப்பட்டது. தன்னந்தனியாக ஒரு பெண் ஹீராவிலிருந்து மக்கா வரை எவ்வித அச்சமுமின்றி வந்து செல்லும் உன்னதமான நிலை ஏற்பட்டது. அதீ பின் ஹாதிம் (ரலி) வாழ்நாளிலேயே இது நிறைவேறியது.

11 பாரசீகம் மற்றும் ரோமப் பேரரசின் வீழ்ச்சி பற்றிய முன்னறிவிப்பு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இரண்டு சக்திகள் உலகின் பல நாடுகளைக் கைப்பற்றி மாபெரும் சாம்ராஜ்ஜியங்களாகத் திகழ்ந்தன.

இத்தாலியைத் தலைமையாகக் கொண்ட ரோமப் பேரரசு உலகின் பல நாடுகளைத் தனக்குக் கீழ் அடிமைப்படுத்தி மிகப் பெரும் சாம்ராஜ்யமாக விளங்கியது.

இது போல் ஈரானைத் தலைமையிடமாகக் கொண்ட பாரசீகப் பேரரசு பல்வேறு நாடுகளை அடிமைப்படுத்தி மற்றொரு சாம்ராஜ்யமாக விளங்கியது.

ரோமப் பேரரசின் மன்னர் கைஸர் என்று அழைக்கப்பட்டார்.

பாரசீகப் பேரரசின் மன்னர் கிஸ்ரா என அழைக்கப்பட்டார்.

உலகின் இருபெரும் வல்லரசுகளாகத் திகழ்ந்த பாரசீகப் பேரரசு பற்றியும், ரோமப் பேரரசு பற்றியும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தர்கள்.

கிஸ்ரா வீழ்ந்து விட்டால் அதன் பிறகு கிஸ்ரா எவரும் இருக்க மாட்டார். கைஸர் வீழ்ந்து விட்டால் அவருக்குப் பின் கைஸர் எவரும் இருக்க மாட்டார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தார்கள்.

நூல் : புகாரி 3618

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தவாறு பாரசீகம் முஸ்லிம்களால் வெற்றி கொள்ளப்பட்டது. அன்று முதல் இன்று வரை பாரசீகம் எனும் ஈரான் முஸ்லிம்கள் வசமே இருந்து வருகிறது. அதன் பின்னர் கிஸ்ரா எவரும் வர முடியவில்லை.

அது போல் ரோமப் பேரரசின் கீழ் அடிமைப்பட்டுக் கிடந்த பல நாடுகள் முஸ்லிம்களின் கைவசம் வந்தன. ரோமப் பேரரசு இத்தாலியாகச் சுருங்கியது. இதன் பின்னர் இரண்டாவது கைஸர் யாரும் வர முடியவில்லை. இன்றளவும் இந்த முன்னறிவிப்பு நிறைவேறிக் கொண்டிருக்கிறது.

12 யமன் வெற்றிகொள்ளப்படும் என்ற முன்னறிவிப்பு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் பிரச்சாரம் செய்த ஆரம்ப காலத்தில் மகிப் பெரும் துன்பங்களை எதிர்கொண்டனர். நபிகள் நாயகத்தை நம்பி ஏற்றுக் கொண்ட மக்கள் கடுமையான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

சித்திரவதை தாங்காமல் நபிகள் நாயகத்தின் தோழர்கள் முறையீடு செய்தனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கீழ்க்கண்ட முன்னறிவிப்பை வெளியிட்டார்கள்.

அல்லாஹ்வின் மேல் ஆணையாக! இந்த மார்க்கத்தை அல்லாஹ் முழுமைப்படுத்துவான். யமனில் உள்ள ஒருவர் ஹள்ரமவ்த் என்னும் ஊரிலிருந்து ஸன்ஆ எனும் ஊர் வரை அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாமல் பயணம் செய்வார். தனது ஆடுகள் விஷயத்தில் ஓநாய்கள் பற்றி அஞ்சுவதைத் தவிர (கொலை கொள்ளை போன்ற) அச்சம் எதுவும் அவருக்கு இருக்காது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி 3612

உயிர் வாழ்வதே கேள்விக் குறியாக இருந்த நெருக்கடியான காலகட்டத்தில் வெற்றிக்கான எந்த அறிகுறியும் தென்படாத காலத்தில் ஏமன் நாடு முஸ்லிம்களால் வெற்றி கொள்ளப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரகடனம் செய்தார்கள். அவர்கள் பிரகடனம் செய்தது போலவே உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஏமன் நாடு முஸ்லிம்களின் கீழ் வந்தது. இஸ்லாத்தின் கடுமையான குற்றவியல் சட்டம் காரணமாக ஹள்ரமவ்த்திலிருந்து ஸன்ஆ வரை அச்சமின்றி பயணம் மேற்கொள்ளும் பொற்காலமும் வந்தது.

13 பைத்துல் முகத்தஸ் வெற்றி கொள்ளப்படுதல்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் ரோமப் பேரரசின் கீழ் தான் பைத்துல் முகத்தஸ் என்ற புனிதத் தலம் இருந்தது. முஸ்லிம்களின் மூன்று புனிதப் பள்ளிவாசல்களில் ஒன்றான இப்பள்ளியிலிருந்து தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விண்ணுலகப் பயணத்துக்கு இறைவனால் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதைப் பற்றியும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தார்கள்.

உலகம் அழிவதற்கு முன் ஆறு நிகழ்வுகள் நிகழும். அவற்றை எண்ணிக் கொள் என்று கூறிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதலாவதாக தமது மரணத்தைக் குறிப்பிட்டார்கள். இரண்டாவது பைத்துல் முகத்தஸ் வெற்றி கொள்ளப்படும் என்பதைக் குறிப்பிட்டார்கள்.

நூல் : புகாரி 3176

ஜெருசலம் நகரமும், அதில் உள்ள பைத்துல் முகத்தஸ் பள்ளிவாசலும் முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி கிறித்தவர்களுக்கும், யூதர்களுக்கும் புனிதத் தலங்களாக இருந்தன. ரோமப் பேரரசின் கீழ் இருந்த நாடுகளில் ஜெருசலம் முக்கியத்துவம் வாய்ந்ததாகத் திகழ்ந்தது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தது போலவே பைத்துல் முகத்தஸ் முஸ்லிம்கள் கைவசம் வந்தது.

முஸ்லிம்களில் எழுச்சியைக் கண்டு திகைத்த கிறித்தவ பாதிரிமார்கள் எவ்வித எதிர்ப்புமின்றி உமர் (ரலி) அவர்களிடம் ஜெரூசலத்தை ஒப்படைத்தார்கள்.

14 எகிப்து வெற்றி கொள்ளப்படும் என்ற முன்னறிவிப்பு

உலகின் பழமையான நாடுகளில் ஒன்றாகத் திகழ்ந்த எகிப்து ரோமப் பேரரசின் கீழ் அடிமைப்பட்டுக் கிடந்தது.

எகிப்தை முஸ்லிம்கள் வெற்றி கொள்வார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தார்கள்.

நூல் : முஸ்லிம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்து பத்து ஆண்டுகளில் உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் எகிப்தை முஸ்லிம்கள் வெற்றி கொண்டனர்.

நபிகள் நாயகத்தின் இந்த முன்னறிவிப்பும் நிறைவேறி அவர்கள் இறைவனின் தூதர் தான் என்பதை நிரூபித்தது.

15 போலி இறைத்தூதர்கள் பற்றிய எச்சரிக்கை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் என்று தம்மை அறிமுகம் செய்தார்கள். அதற்கான சான்றுகளையும் முன் வைத்தார்கள்.

இதனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் செல்வாக்கு அதிகரித்து மாபெரும் தலைவராக உருவெடுத்தார்கள். இதைக் கண்ட போலிகள் சிலர் தம்மையும் இறைத்தூதர்கள் என்று அறிவித்துக் கொண்டனர். இதனால் நபிகள் நாயகத்தைப் போலவே தாங்களும் தனிப் பெரும் தலைவர்களாக உருவெடுக்கலாம் என்று எண்ணத் தலைப்பட்டனர்.

இதில் முக்கியமானவன் முஸைலாமா என்பவன். யமாமா என்ற பகுதியைச் சேர்ந்த இவன் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் மதீனா வந்து நபிகள் நாயகத்தைச் சந்தித்தான். உங்களுக்குப் பின் நான் ஒரு நபி என்பதை நீங்கள் ஏற்றுக் கொண்டால் உங்களை நபி என்று நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று நபிகள் நாயகத்திடம் பேரம் பேசினான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவனை எச்சரித்து அனுப்பினார்கள்.

நூல் : புகாரி 3620

இவனைப் போலவே அஸ்வத் அல் அன்ஸீ என்பவனும் தன்னை நபியெனப் பிரகடனப்படுத்தி ஏமன் மக்களை வழி கெடுத்தான். இவ்விரு போலி நபிகளின் பிரச்சினை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பெரும் கவலையில் ஆழ்த்தியது. மக்களை வழி கெடுக்கிறார்களே என்று ஆதங்கப்பட்டார்கள். ஆனாலும் இவர்கள் தோல்வியடைவார்கள் என்று இறைவன் அறிவித்துக் கொடுத்தான். அதைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு அறிவிப்புச் செய்தார்கள்.

நான் தூங்கிக் கொண்டிருந்த போது என் கைகளில் இரண்டு தங்கக் காப்புகளைக் கண்டேன். அவை எனக்குப் பாரமாக இருந்தன. அதை ஊதி விடுவீராக என்று எனக்குக் கூறப்பட்டது. நான் ஊதியவுடன் அவை பறந்து விட்டன. இந்தக் கனவு அஸ்வத் மற்றும் யமாமாவின் முஸைலமா ஆகிய போலி நபிகள் பற்றியது என்று விளங்கிக் கொண்டேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

நூல் : புகாரி 3621, 4374, 4375, 4379

இவ்விருவரும் வெளித் தோற்றத்தில் வலிமை மிக்கவர்களாகக் காட்சி தந்தாலும் உண்மையில் அவர்களின் வாதம் அழிந்து போகும் என்று இறைவன் புறத்திலிருந்து நபிகள் நாயகத்துக்கு அறிவிக்கப்பட்டது. அவ்வாறே இவ்விருவரின் கதையும் முடிந்தது.

யமாமாவில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த முஸைலமாவை ஒழிக்க படை ஒன்றை அபூபக்கர் (ரலி) அவர்கள் அவர்கள் தமது ஆட்சியின் போது அனுப்பினார்கள். இப்போரில் முஸைலமா கொல்லப்பட்டான். உஹதுப் போரில் ஹம்ஸா (ரலி) அவர்களைக் கொன்ற வஹ்ஷி அவர்கள் தான் அவர்கள் தான் இவனைக் கொன்றார்கள்.

பிற்காலத்தில் இது பற்றி வஹ்ஷி (ரலி) அவர்கள் கூறும் போது மனிதர்களில் மிகவும் சிறந்தவரை (ஹம்ஸாவை) நான் தான் கொன்றேன். மிக மோசமான மனிதனையும் (முஸைலமாவை) நான் தான் கொன்றேன் என்று குறிப்பிட்டார்கள். இது போலவே ஏமன் நாட்டில் தன்னை நபியென வாதிட்டு மக்களை வழிகெடுத்த அஸ்வத் அல் அன்ஸியும், பைரோஸ் என்பவரால் கொல்லப்பட்டான்.

இவ்விருவராலும் போலியான இரண்டு மதங்கள் தோன்றி நிலைத்து விடுமோ என்று ஆரம்பத்தில் நபிகள் நாயகம் அஞ்சினாலும் பின்னர் இறைவனின் அறிவிப்பால் அந்த அச்சம் விலகியது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறுதி நபி என்பதால் அவர்களுக்குப் பின் எந்த இறைத்தூதரும் வரமுடியாது. வருவதற்கான எந்த அவசியமும் இல்லை என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம்.

அவர்களுக்கு அருளப்பட்ட இஸ்லாம் முழுமையாக்கப்பட்டதாகவும் பாதுகாக்கப்பட்டதாகவும் உள்ளதால் எந்தத் தூதரும் வரவேண்டிய தேவை இல்லை.

தனக்குப் பின் எந்த நபியும் வர மாட்டார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாகவும் அறிவித்துள்ளனர். திருக்குர்ஆனிலும் இதற்கு ஏரளமான சான்றுகள் உள்ளன.

ஆனாலும் இறைத்தூதர் என்று ஒருவரை மக்கள் நம்பினால் எவ்விதக் கேள்வியும் ஆதாரமும் கேட்காமல் மக்கள் அவரைப் பின்பற்றுவார்கள் என்பதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் பலர் தம்மை இறைத்தூதர் என்று அறிவித்துக் கொண்டார்கள். இதைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு அறிவித்தார்கள்.

எனக்குப் பின் முப்பது பொய்யர்கள் தோன்றுவார்கள். அனைவரும் தம்மை நபியெனக் கூறிக் கொள்வார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி 7121

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது போலவே தலீஹா, முக்தார் சில ஆண்டுகளுக்கு முன் மிர்சா குலாம் அஹ்மத் காதியானி என்பவன் உள்ளிட்ட பொய்யர்கள் தம்மை இறைத்தூதர் என்று வாதிட்டனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தவாறு பொய்யர்கள் வந்து கொண்டு தான் இருப்பார்கள்.

16 ஸம்ஸம் கிணறு பற்றிய முன்னறிவிப்பு

மக்காவில் ஸம்ஸம் என்ற கிணறு உள்ளது. ஆண்டு முழுவதும் மக்காவாசிகளும், புனிதப் பயணம் செய்வோரும் இந்தத் தண்ணீரைத் தான் பயன்படுத்துகின்றனர்.

ஹஜ் காலத்திலும், புனித ரமளான் மாதத்திலும் இருபது லட்சத்துக்கும் அதிகமான மக்கள் குழுமி இந்தத் தண்ணீரைப் பயன்படுத்துகின்றனர். கேன்களில் அடைத்து தமது ஊர்களுக்கும் எடுத்துச் செல்கின்றனர்.

பாலைவனத்தில் நிலத்தடி நீர் போதுமான அளவில் இருக்காது. இத்தகைய பாலைவனத்தில் உள்ள ஒரு கிணறு பல ஆயிரம் ஆண்டுகள் வற்றாத நீரூற்றாகவும் எத்தனை இலட்சம் மக்கள் குழுமினாலும் அவர்களின் தேவையை நிறைவு செய்வதாகவும் அமைந்துள்ளது. இது எப்படிச் சத்தியம் உலகமே அதிசயிக்கும் இந்தக் கிணறு பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தார்கள். இக்கிணறு உருவான வரலாற்றையும் அவர்கள் விளக்குகிறார்கள்.

இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவனின் கட்டளைப்படி தமது மனைவி ஹாஜர் அவர்களையும் குழந்தை இஸ்மாயீலையும் இப்போது மக்கா நகரம் அமைந்துள்ள இடத்தில் விட்டுச் சென்றார்கள். அப்போது யாரும் குடியிருக்காத பாலை நிலமாக அது இருந்தது. குழந்தை இஸ்மாயீல் தாகத்தால் துடித்த போது ஜிப்ரீல் எனும் வானவரை இறைவன் அனுப்பி அவர் மூலம் நீரூற்றை வெளிப்படுத்தினான். ஹாஜர் அவர்கள் அந்தத் தண்ணீரை ஓடவிடாமல் தடுப்பு ஏற்படுத்தினார்கள். அவர்கள் அவ்வாறு செய்திருக்காவிட்டால் அது வற்றாத ஜீவநதியாக ஓடிக் கொண்டிருக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி 3364

அந்தக் கிணறு இறைவன் கட்டளைப்படி உருவாக்கப்பட்டது என்பதையும் வற்றாத நதியாக ஓடும் அளவுக்கு அதன் நீரோட்டம் அமைந்துள்ளது என்பதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்ததற்கு ஏற்ப இன்று வரை இலட்சக்கணக்கான மக்களுக்கு தினசரி தண்ணீரை வழங்கிக் கொண்டிருக்கிறது.

17 தனது எஜமானியைத் தானே பெற்றெடுக்கும் பெண்கள் பற்றிய முன்னறிவிப்புகள்

யுக முடிவு நாள் நெருங்கும் போது ஏற்படும் மாற்றங்கள் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல முன்னறிவிப்புகளைச் செய்துள்ளனர். அவற்றுள் முக்கியமான அடையாளங்களைத் தனி நுலாக ஏற்கனவே நாம் வெளியிட்டுள்ளோம்.

ஒரு பெண் தனது எஜமானியைத் பெற்றெருப்பாள் என்பதும் அவற்றுள் ஒன்றாகும்.

நூல் : புகாரி 4777

ஒரு பெண் தனது எஜமானியைப் பெற்றெடுப்பாள் என்பதன் கருத்து என்ன?

பொதுவாகப் பெண்கள் தங்கள் முதுமையில் தங்கள் புதல்வர்களால் கவனிக்கப்படுபவார்கள். இது தான் ஆரம்ப முதல் வழக்கமாக இருந்து வருகிறது.

ஆனால் பெற்ற தாயைக் கவனிப்பாரற்று விடும் ஆண்கள் இன்று அதிகரித்து வருகின்றனர். இதனால் தாய் தனது மகளைச் சார்ந்து அவள் வீட்டில் அடைக்கலமாவது அதிகரித்து வருகிறது.

அந்த வீட்டின் எஜமானியாக மகள் இருப்பாள்; அந்த எஜமானியின் கீழ் அவளைப் பெற்ற தாய் அண்டி வாழும் நிலை ஏற்படுகிறது.

பெற்ற தாயை ஆண்பிள்ளைகள் கவனிக்க மாட்டார்கள். பெண் பிள்ளைகள் தான் அவர்களைச் சுமப்பார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுட்டிக் காட்டிய இந்தச் சீரழிவு இன்று அதிகரித்து வருவதை நாம் காண்கிறோம்.

18 ஆடு மேய்ப்பவர்கள் உயரமான கட்டடங்களைக் கட்டுவர்

கறுப்பு ஒட்டகங்களை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் உயரமான கட்டடங்களைக் கட்டுவார்கள்

நூல் : புகாரி 50

ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் உயர்ந்த கட்டடங்களை எழுப்புவார்கள்

நூல் : முஸ்லிம் 9

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் உயரமான கட்டடங்களைக் கட்டுவது எளிதானதாக இருக்கவில்லை. அரசாங்கம் மட்டுமே இதைச் செய்ய முடியும் என்ற அளவுக்கு இது சிரமமானதாக இருந்தது.

இந்த நிலை மாறும்; சர்வ சாதாரணமாக உயரமான கட்டடங்கள் கட்டும் தொழில் நுட்பம் கண்டுபிடிக்கப்படும் என்ற கருத்து மேற்கண்ட சொற்றொடரில் அடங்கியுள்ளது. இதற்கேற்ப எளிதாக உயரமான கட்டடங்களைக் கட்டும் தொழில் நுட்பம் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏழைகள் தீடீர் பணக்காரர்களாக ஆவதற்கான வழிகள் கடந்த காலங்களில் இல்லை. இன்றோ புதிய வகையான தொழில் முறைகளால் அடித்தட்டு மக்கள் கூட திடீரென்று வசதி மக்கவர்களாக ஆக முடிகின்றது.

இந்த இரண்டு மாறுதலையும் மேற்கண்ட சொற்கள் மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்கிறார்கள்.

19 ஆடை அணிந்தும் நிர்வாணம்

எதிர்காலத்தில் இரண்டு சாரார் தோன்றுவார்கள். இவர்களை இன்னும் நான் காணவில்லை. ஒரு சாரார் மாட்டு வால்களைப் போன்ற சாட்டைகளை வைத்துக் கொண்டு மக்களைச் சித்திரவதை செய்வார்கள். இன்னொரு சாரார் சில பெண்கள். அவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் 3971

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்துக்குப் பின் மக்களை அடக்கி ஒடுக்கும் சர்வாதிகாரிகள் தோன்றினார்கள்.

இன்று நாம் வாழ்கின்ற காலத்தில் பெண்கள் மெல்லிய சருகுகள் போன்ற ஆடைகளை அணிகின்றனர். இதனால் ஆடை அணிந்தும் நிர்வாணமாக அவர்கள் காட்சி தருகின்றனர்.

மேலும் பலர் அரை குறை ஆடைகள் அணிந்து மறைக்க வேண்டிய பகுதிகளை வெளிப்படுத்திக் காட்டுகின்றனர்.

ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள் என்ற நபிகள் நாயகத்தின் முன்னறிவிப்பு நிறைவேறிக் கொண்டிருக்கிறது.

பொதுவான முன்னறிவிப்புகள்

விபச்சாரம் பெருகும்

கொலைகள் அதிகரிக்கும்

நாணயமும், நேர்மையும் அரிதாகி விடும்

பெண்களின் எண்ணிக்கை அதிகமாகும்

பூகம்பங்கள் அதிகமாகும்

செல்வம் பெருகும்

என்றெல்லாம் பொதுப்படையாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் முன்னறிவிப்புச் செய்துள்ளனர்.

இவையனைத்தும் இன்று நிறைவேறி வருவதை நாம் காண்கிறோம்.

இதுவரை நாம் எடுத்துக் காட்டியவை நம்முடைய சிற்றறிவில் பட்டவை மட்டும் தான். சிந்தனையாளர்களும், அறிஞர்களும் திருக்குர்ஆனை ஆழமாகச் சிந்தித்தால் இன்னும் எண்ணற்ற அதிசயங்களைத் திருக்குர்ஆனில் நிச்சயம் காண்பார்கள். திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள அறிவியல் உண்மைகளும், எதிர்கால நிகழ்வுகளை எடுத்துக் கூறும் வசனங்களும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்புக்களும் இஸ்லாம் இறைவன் புறத்திலிருந்து அருளப்பட்ட மார்க்கம் என்பதைச் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.

12.07.2009. 10:30 AM

தர்கா வழிபாடு

ஆசிரியர்: பீ.ஜைனுல் ஆபிதீன்

மார்க்கத்தின் எச்சரிக்கை!

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும். இந்த இணைய தளத்தில் உள்ளவைகளைப் பிரச்சாரம் செய்வதற்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் சில சகோதரர்கள் நமது ஆக்கங்களை அப்படியே பயன்படுத்தி தமது ஆக்கம் போல் காட்டுகின்றனர்.

இன்னாருடைய கட்டுரையில் இருந்து, அல்லது புத்தகத்தில் இருந்து இது எடுக்கப்பபட்டது என்று குறிப்பிடாமல் புகழடைவதற்காக இவ்வாறு செய்கின்றனர்.

சில இணைய தளங்களும் என்னுடைய ஆக்கங்களை அப்படியே வெளியிட்டு தம்முடைய ஆக்கம் போல் காட்டுகின்றன. மேலும் சில புத்தக வியாபாரிகளும் எனது நூல் உட்பட மற்றவர்களின் நூல்களைச் சிறிது மாற்றியமைத்து அனாமதேயங்களின் பெயர்களில் வெளியிட்டுச் சம்பாதிக்கின்றனர். உலகைப் பற்றியும் இவர்களுக்கு வெட்கம் இல்லை. மறுமையைப் பற்றியும் பயம் இல்லை.

இஸ்லாத்தில் இவ்வாறு செய்ய அனுமதி இல்லை. இவர்கள் நல்லது செய்யப் போய் மறுமையின் தண்டனைக்கு தம்மைத் தாமே உட்படுத்திக் கொள்கின்றனர்.

பிறரது ஆக்கங்களைப் பயன்படுத்துவோர் இது இன்னாருடைய ஆக்கம் என்று குறிப்பிடாமல் தன்னுடைய ஆக்கம் போல் காட்டுவது மார்க்க அடிப்படையில் குற்றமாகும்.

இவர்களுக்கு அல்லாஹ் விடுக்கும் எச்சரிக்கையை இங்கே சுட்டிக் காட்டுகிறோம்.

தாங்கள் செய்தவற்றுக்காக மகிழ்ச்சியடைந்து, தாம் செய்யாதவற்றுக்காகப் புகழப்பட வேண்டுமென விரும்புவோர் வேதனையிலிருந்து தப்பித்து விட்டார்கள் என்று நீர் நினைக்காதீர்! அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.

திருக்குர்ஆன் 3:188

தர்கா வழிபாடு

ஒரு மனிதரை மகான் என்று நாம் தீர்மானம் செய்ய முடியுமா?

அல்லாஹ்வும், அவனது தூதரும் யாரை மகான்கள் என நமக்கு அறிவித்தார்களோ அவர்களுக்கு இறைத் தனமையோ அல்லது இறைத் தன்மையில் சிறு பகுதியோ உண்டா?

மகான்கள் அல்லாஹ்விடம் பெற்றுத் தருவார்கள் என்ற நம்பிகையில் மகான்களைப் பிரார்த்திப்பது தவறா?

தர்காக்களில் அற்புதங்கள் நிகழ்வது எப்படி?

மகான்கள் கனவில் வந்து கட்ட்ளை இடுவது பொய்யா?

மக்கத்துக் காஃபிர்களின் கொள்கைக்கும் தர்கா வழிபாடு செய்வோரின் கொள்கைக்கும் இடையே வித்தியாசம் உண்டா?

நம்மைப் போன்ற சாதாரணமானவர்கள் அல்லாஹ்வை நெருங்க முடியுமா?

வஸீலா தேடுவது தவறா?

தர்கா கட்ட மார்க்கத்தில் அனுமதி உள்ளதா?

நல்லடியார்கள் மரணித்த பிறகும் உயிருடன் இருக்கிறார்களா?

சிலைகளைத் தான் வணங்கக் கூடாது; மகான்களை வணங்கலாம் என்பது சரியான வாதமா?

என்பன போன்ற ஏராளமான கேள்விகளுக்கு தக்க சான்றுகளுடன் விடை அளிக்கும் நூல்.

அறிமுகம்

உங்களுக்கு முன் சென்றோரின் வழியை நீங்கள் அப்படியே பின்பற்றுவீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரித்துச் சென்றதை மெய்ப்பிக்கும் வகையில் கனிசமான முஸ்லிம்கள் பிற சமயக் கோட்பாடுகளைத் தமதாக்கிக் கொண்டு விட்டனர்.

அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும்; அவனைத் தவிர எவரையும், எதனையும் வணங்கக் கூடாது என்ற இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையைக் கூட பலர் தூக்கி எறிந்து விட்டு சமாதிகளையும், அதில் அடக்கம் செய்யப்பட்டவர்களையும், கொடி மரங்களையும் வணங்கி வருகின்றனர்.

நபிமார்களின் அடக்கத் தலங்களை வணக்கத் தலங்களாக மாற்றிக் கொண்ட யூதர்கள் மற்றும் ஈஸா நபியைப் பிரார்த்திக்கும் கிறித்தவர்களுக்கும், இவர்களுக்கும் இடையே எந்த வேறுபாட்டையும் காண முடியவில்லை.

என்றைக்கோ மரணித்து விட்டவர்களிடம் குழந்தை வரம் கேட்கின்றனர்! தமது வறுமையை முறையிடுகின்றனர்! நோய் தீர்க்க வேண்டுகின்றனர்.

சமாதிகளில் காணிக்கை செலுத்துகின்றனர். விழுந்து கும்பிடுகின்றனர்! அறுத்துப் பலியிடுகின்றனர்! நேர்ச்சை செய்கின்றனர்!

இவற்றை இஸ்லாத்தின் பெயரால் தான் இவர்கள் செய்து வருகின்றனர். இவற்றுக்கு மார்க்கத்தில் அனுமதி உண்டு என்று போலி மத குருமார்கள் இவர்களுக்குக் கற்பித்திருப்பதே இந்த நிலைமைக்குக் காரணம்.

முஸ்லிம்களை நிரந்தர நரகத்தில் தள்ளி விடக் கூடிய இந்தப் பாவத்திலிருந்து முஸ்லிம்களை மீட்டெடுக்கும் நோக்கத்தில் தர்கா வழிபாடு என்ற இந்த நூலை வெளியிடுகிறோம்.

தர்கா வழிபாட்டுக்கும், தனி நபர் வழிபாட்டுக்கும் இஸ்லாத்தில் அனுமதி இல்லை என்பது இந்நூலில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

தர்கா வழிபாட்டை நியாயப்படுத்துவோர் எடுத்து வைக்கும் வாதங்கள் அனைத்துக்கும் தக்க பதில் இந்த நூலில் தரப்பட்டுள்ளது.

திறந்த மனதுடன் இந்நூலை வாசிக்கும் எவரும் தர்கா வழிபாடு இஸ்லாத்திற்கு விரோதமானது என்பதைச் சந்தேகமற அறிந்து கொள்ள முடியும்.

இதன் மூலம் ஏகத்துவக் கொள்கையை எழுச்சி பெறச் செய்வானாக என்று வல்ல இறைவனை இறைஞ்சுகிறோம்.

– நபீலா பதிப்பகம்.

இஸ்லாத்தின் அடிப்படை

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும். இஸ்லாத்தின் கொள்கை இது தான் என்பதை முஸ்லிமல்லாதவர்களும் கூட அறிந்து வைத்துள்ளனர்.

ஆனாலும் தமிழகத்தில் வாழும் கனிசமான முஸ்லிம்கள் இக்கொள்கையைச் சரியாகப் புரிந்து கொள்ளாதவர்களாக உள்ளனர்.

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்பதில் இரண்டு செய்திகள் அடங்கியுள்ளன.

1. அல்லாஹ்வை வணங்க வேண்டும்.

2. அல்லாஹ்வைத் தவிர எவரையும் வணங்கக் கூடாது.

இதில் முதலாவது செய்தியை ஓரளவு ஏற்று நடக்கும் முஸ்லிம்கள் இரண்டாவது செய்தியை அறியாதவர்களாகவுள்ளனர். இதன் காரணமாகத் தான் ஒரு பக்கம் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டு இன்னொரு பக்கம் இறந்தவர்களையும், அவர்களை அடக்கம் செய்துள்ள சமாதிகளையும், மகான்கள் என்று உலா வரும் போலிகளையும் வணங்கி வருகின்றனர்.

இவ்விரண்டு செய்திகளில் இரண்டாவது தான் முக்கியமானதாகும். இதைச் சொல்வதற்காகத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டனர்.

அல்லாஹ்வை வணங்குங்கள் என்று சொல்லித் தருவதற்காகவோ, அல்லாஹ்வின் பண்புகளைச் சொல்லிக் கொடுப்பதற்காகவோ மட்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பப்படவில்லை. ஏனெனில் அம்மக்கள் அல்லாஹ்வை நன்றாக அறிந்து வைத்திருந்தார்கள். அல்லாஹ்வை வணங்குவதிலும் அவர்களுக்கு ஆட்சேபனை ஏதும் இருந்ததில்லை.

அல்லாஹ்வைத் தவிர எவரையும், எதனையும் வணங்கக் கூடாது என்பது தான் அவர்களால் எதிர்க்கப்பட்டது.

இது கற்பனை அல்ல. தக்க சான்றுகள் மூலம் நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.

வரலாற்றுச் சான்று

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது தந்தையின் பெயர் அப்துல்லாஹ் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. அல்லாஹ்வின் அடிமை என்பது இதன் பொருள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தந்தைக்கு அல்லாஹ்வின் அடிமை என்ற பொருளில் அவர்களின் பாட்டானார் பெயர் சூட்டியிருப்பதிலிருந்து அம்மக்கள் அல்லாஹ்வைப் பற்றி முன்பே அறிந்திருந்தார்கள் என்பதை அறியலாம்.

திருக்குர்ஆன் சான்று

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஏற்காத அம்மக்கள் அல்லாஹ்வை அறிந்திருந்தார்கள் என்பதற்குப் பின்வரும் வசனங்களும் சான்றாக அமைந்துள்ளன.

வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? செவிப் புலனையும், பார்வைகளையும் தன் கைவசம் வைத்திருப்பவன் யார்? உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் வெளிப்படுத்துபவன் யார்? காரியங்களை நிர்வகிப்பவன் யார்? என்று கேட்பீராக! அல்லாஹ் என்று அவர்கள் கூறுவார்கள். நீங்கள் அஞ்ச மாட்டீர்களா என்று நீர் கேட்பீராக!

திருக்குர்ஆன் 10:31

;பூமியும், அதில் உள்ளோரும் யாருக்குச் சொந்தம்? நீங்கள் அறிந்தால் (பதிலளியுங்கள்!) என்று (முஹம்மதே!) கேட்பீராக! அல்லாஹ்வுக்கே என்று அவர்கள் கூறுவார்கள். சிந்திக்க மாட்டீர்களா? என்று கேட்பீராக!

திருக்குர்ஆன் 23:84,85

ஏழு வானங்களுக்கும் அதிபதி, மகத்தான அர்ஷுக்கும் அதிபதி யார்?எனக் கேட்பீராக! அல்லாஹ்வே என்று கூறுவார்கள். நீங்கள் அஞ்ச மாட்டீர்களா;? என்று கேட்பீராக!

திருக்குர்ஆன் 23:86,87

பாதுகாப்பவனும், (பிறரால்) பாதுகாக்கப்படாதவனும், தன் கைவசம் ஒவ்வொரு பொருளின் அதிகாரத்தை வைத்திருப்பவனும் யார்? நீங்கள் அறிந்தால் (பதில் கூறுங்கள்!) என்று கேட்பீராக! அல்லாஹ்வே என்று அவர்கள் கூறுவார்கள். நீங்கள் எவ்வாறு மதி மயக்கப்படுகிறீர்கள்? என்று கேட்பீராக!

திருக்குர்ஆன் 23:88,89

வானங்களையும், பூமியையும் படைத்தவனும், சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனும் யார்? என்று அவர்களிடம் நீர் கேட்டால்  அல்லாஹ்  என்று கூறுவார்கள். அப்படியாயின்  எவ்வாறு அவர்கள் திசை திருப்பப்படுகிறார்கள்?

திருக்குர்ஆன் 29:61

வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி பூமி செத்த பின் அதன் மூலம் அதற்கு உயிரூட்டுபவன் யார்?  என்று அவர்களிடம் நீர் கேட்டால்  அல்லாஹ்  என்றே கூறுவார்கள்.  அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்  என்று கூறுவீராக! மாறாக அவர்களில் அதிகமானோர் விளங்கிக் கொள்வதில்லை.

திருக்குர்ஆன் 29:63

வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?  என்று அவர்களிடம் நீர் கேட்டால்  அல்லாஹ்  என்று அவர்கள் கூறுவார்கள்.  அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்  என்று கூறுவீராக! எனினும் அவர்களில் அதிமானோர் அறிய மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 31:25

வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?  என்று அவர்களிடம் நீர் கேட்டால்  அல்லாஹ்  என்று கூறுவார்கள். அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றைப் பற்றிக் கூறுங்கள்!  என்று கேட்பீராக! அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கை நாடி விட்டால் அவனது தீங்கை அவர்கள் நீக்கி விடுவார்களா? அல்லது அவன் எனக்கு அருளை நாடினால் அவர்கள் அவனது அருளைத் தடுக்கக் கூடியவர்களா? அல்லாஹ் எனக்குப் போதும். சார்ந்திருப்போர் அவனையே சார்ந்திருப்பார்கள்  என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 39:38

வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?  என்று அவர்களிடம் நீர் கேட்டால்  மிகைத்தவனாகிய அறிந்தவனே இவற்றைப் படைத்தான்  எனக் கூறுவார்கள்.

திருக்குர்ஆன் 43:9

அவர்களைப் படைத்தவன் யார் என்று அவர்களிடமே நீர் கேட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள். எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்?

திருக்குர்ஆன் 43:87

மக்கத்துக் காஃபிர்கள் அல்லாஹ்வை நம்பியிருந்தார்கள், அவனது வல்லமையைப் புரிந்து வைத்திருந்தார்கள் என்பதை இந்த வசனங்கள் சந்தேகத்திற்கிடமின்றி அறிவிக்கின்றன.

மக்கத்துக் காபிர்களின் நம்பிக்கையும் இன்றைய முஸ்லிம்களின் நம்பிக்கையும்

இன்றைக்கு தமிழக முஸ்லிம்களில் பலர் அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டு சமாதிகளிலும் வழிபாடு நடத்துகிறார்களே இது போன்று தான் மக்கத்துக் காஃபிர்களின் கடவுள் நம்பிக்கை இருந்தது.

அல்லாஹ்வைப் பற்றி இவ்வாறு நம்புவது மட்டும் போதும் என்றிருந்தால் அவர்களுக்கு ஒரு நபியை அல்லாஹ் அனுப்பி இருக்கத் தேவையே இல்லை. ஒரு வகையில் பார்த்தால் இன்றைய தமிழக முஸ்லிம்கள் பலரின் நம்பிக்கையை விட மக்கத்துக் காஃபிர்களின் நம்பிக்கை சற்று மேலானதாக இருந்தது என்று கூறலாம்.

ஏனெனில் இன்றைய தமிழக முஸ்லிம்களில் பலர் கடுமையான துன்பம் நேரிடும் போதும், பெரிய ஆபத்தைச் சந்திக்கும் போதும் முஹ்யித்தீனே என்று அழைப்பதைக் காண்கிறோம்.

ஆனால் மக்கத்துக் காஃபிர்கள் சிறிய துன்பம் ஏற்படும் போதும், சிறிய அளவிலான கோரிக்கையின் போதும் மட்டுமே அல்லாஹ் அல்லாதவர்களைப் பிரார்த்தனை செய்து வந்தனர்.

மிகப் பெரிய ஆபத்தின் போது அவர்கள் அல்லாஹ்வைத் தான் அழைப்பார்கள். குட்டித் தெய்வங்களையும், மகான்களையும் மறந்து விடுவார்கள்.

இதைப் பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

இதிலிருந்து அவன் எங்களைக் காப்பாற்றினால் நன்றி செலுத்துவோராக இருப்போம்  என்று பணிவாகவும், இரகசியமாகவும் அவனிடம் பிரார்த்தனை செய்யும் போது  நிலம் மற்றும் கடலின் இருள்களிலிருந்து உங்களைக் காப்பாற்றுபவன் யார்?  என்று கேட்பீராக!  இதிலிருந்தும், ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் அல்லாஹ்வே உங்களைக் காப்பாற்றுகிறான். பின்னர் நீங்கள் இணை கற்பிக்கிறீர்கள்  என்றும் கூறுவீராக!

திருக்குர்ஆன் 6:63, 64

உங்களிடம் அல்லாஹ்வின் வேதனை வந்தால் அல்லது அந்த நேரம் வந்து விட்டால் அல்லாஹ் அல்லாதவர்களையா அழைக்கிறீர்கள்? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் பதில் சொல்லுங்கள்! என்று கேட்பீராக! மாறாக அவனையே அழைக்கிறீர்கள். நீங்கள் இணை கற்பித்தவர்களை மறந்து விடுகிறீர்கள். அவன் நாடினால் அவனை எதற்காக அழைத்தீர்களோ அதை நீக்கி விடுகிறான்.

திருக்குர்ஆன் 6:40, 41

கடலிலும், நிலத்திலும் அவனே உங்களைப் பயணம் செய்ய வைக்கிறான். நீங்கள் கப்பலில் இருக்கின்றீர்கள். நல்ல காற்று அவர்களை வழி நடத்துகிறது. அவர்கள் மகிழ்ச்சியடையும் போது புயல் காற்று அவர்களிடம் வருகிறது. ஒவ்வொரு இடத்திலிருந்தும் அவர்களிடம் அலையும் வருகிறது. தாம் சுற்றி வளைக்கப்பட்டு விட்டதாக அவர்கள் முடிவு செய்கின்றனர். வழிபாட்டை உளத்தூய்மையுடன் அவனுக்கே உரித்தாக்கி  இதிலிருந்து எங்களை நீ காப்பாற்றினால் நன்றியுள்ளோராக ஆவோம்  என்று அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கின்றனர்.

திருக்குர்ஆன் 10:22

கடலில் உங்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டால் அவனைத் தவிர யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் மறைந்து விடுகின்றனர். அவன் உங்களைக் காப்பாற்றிக் கரை சேர்த்தவுடன் புறக்கணிக்கிறீர்கள்! மனிதன் நன்றி கெட்டவனாகவே இருக்கிறான்.

திருக்குர்ஆன் 17:67

அவர்கள் கப்பலில் ஏறிச் செல்லும் போது பிரார்த்தனையை அவனுக்கே உளத்தூய்மையுடன் உரித்தாக்கி அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களைக் காப்பாற்றி நிலத்தில் சேர்த்ததும் அவர்கள் இணை கற்பிக்கின்றனர்.

திருக்குர்ஆன் 29:65

மனிதர்களுக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது தமது இறைவனிடம் திரும்பி அவனிடம் பிரார்த்திக்கின்றனர். பின்னர் அவர்களுக்குத் தன் அருளை அவன் சுவைக்கச் செய்தால் நாம் அவர்களுக்கு வழங்கியதற்கு நன்றி மறந்து தமது இறைவனுக்கு அவர்களில் ஒரு பகுதியினர் இணை கற்பிக்கின்றனர். அனுபவியுங்கள்! அறிந்து கொள்வீர்கள்.

திருக்குர்ஆன் 30:33, 34

முகடுகளைப் போல் அலைகள் அவர்களை மூடும் போது உளத்தூய்மையுடன் வணக்கத்தை அவனுக்கே உரித்தாக்கி அவனைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களைக் காப்பாற்றி நிலத்தில் சேர்த்ததும் அவர்களில் நேர்மையாக நடப்பவரும் உள்ளனர். நன்றி கெட்ட சதிகாரர்களைத் தவிர வேறு எவரும் நமது சான்றுகளை நிராகரிப்பதில்லை.

திருக்குர்ஆன் 31:32

மனிதனுக்கு ஒரு தீங்கு ஏற்படுமானால் தனது இறைவனிடம் சரணடைந்தவனாக அவனை அழைக்கிறான். பின்னர் இறைவன் தனது அருட்கொடையை வழங்கும் போது முன்னர் எதற்காகப் பிரார்த்தித்தானோ அதை அவன் மறந்து விடுகிறான். அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுப்பதற்காக அவனுக்கு இணை கற்பிக்கிறான்.  உனது (இறை) மறுப்பில் சிறிது காலம் சுகம் அனுபவித்துக் கொள்! நீ நரகவாசிகளைச் சேர்ந்தவன்  எனக் கூறுவீராக!

திருக்குர்ஆன் 39:8

மனிதனுக்கு ஏதேனும் தீங்கு ஏற்படுமானால் நம்மை அழைக்கிறான். பின்னர் நாம் அவனுக்கு நமது அருட்கொடையை வழங்கினால்  எனது அறிவால் இது எனக்குத் தரப்பட்டது  எனக் கூறுகிறான். அவ்வாறல்ல! அது ஒரு சோதனை! எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 39:49

மனிதனுக்கு நாம் அருள் புரிந்தால் அலட்சியம் செய்து தன் பக்கமே திரும்பிக் கொள்கிறான். அவனுக்குத் தீமை ஏற்பட்டால் அவன் நீண்ட பிரார்த்தனை செய்பவனாக இருக்கிறான்.

திருக்குர்ஆன் 41:51

மக்கத்துக் காஃபிர்கள் மிகப் பெரிய துன்பங்களின் போது அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களைப் பிரார்த்திக்கவில்லை என்பதை இவ்வசனங்கள் தெளிவாக அறிவிக்கின்றன.

மிகப் பெரிய ஆபத்தின் போது அல்லாஹ்வை மட்டுமே நினைக்கும் அளவுக்கு நம்பிக்கை வைத்திருந்த அம்மக்கள் ஏன் இறைவனின் கோபத்திற்கும், கண்டனத்துக்கும் ஆளானார்கள்?

அல்லாஹ்வை அவர்கள் நம்பியிருந்தாலும் அவனது ஆற்றலைப் பற்றி அவர்கள் அறிந்திருந்தாலும் வணக்கங்களில் சிலவற்றை அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களுக்கும் அவர்கள் செய்து வந்தனர்.

இவ்வாறு மற்றவர்களை வணங்கும் போது அவர்கள், கடவுள்கள் என்ற நம்பிக்கையோ, அவர்களுக்கு அனைத்து ஆற்றலும் உண்டு என்ற நம்பிக்கையோ அம்மக்களிடம் இருக்கவில்லை.

 இந்த மகான்கள் அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர்கள்; இவர்களுக்கு வழிபாடு நடத்தினால் அல்லாஹ்விடம் பேசி நமது தேவைகளைப் பெற்றுத் தருவார்கள். அல்லாஹ்விடம் நம்மையும் நெருக்கமாக ஆக்குவார்கள்  என்பது தான் அவர்களின் நம்பிக்கையாக இருந்தது.

இதைத் திருக்குர்ஆன் மிகத் தெளிவாகவே குறிப்பிடுகிறது.

அல்லாஹ்வையன்றி தமக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர்.  அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்  என்றும் கூறுகின்றனர்.  வானங்களிலும், பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்  என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 10:18

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர்  அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை  (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.

திருக்குர்ஆன் 39:3

உங்களுக்கு நாம் வழங்கியவற்றையெல்லாம் உங்கள் முதுகுக்குப் பின்னால் விட்டு விட்டு உங்களை ஆரம்பத்தில் நாம் படைத்தது போல் தன்னந்தனியாக நம்மிடம் வந்து விட்டீர்கள்! தெய்வங்கள் என்று நீங்கள் கருதிக் கொண்டிருந்த, உங்கள் பரிந்துரையாளர்களை நாம் உங்களுடன் காணவில்லையே? உங்களுக்கிடையே (உறவுகள்) முறிந்து விட்டன. நீங்கள் கற்பனை செய்தவை உங்களை விட்டும் மறைந்து விட்டன  (என்று கூறப்படும்.)

திருக்குர்ஆன் 6:94

அல்லாஹ்வையன்றி பரிந்துரை செய்வோரை அவர்கள் கற்பனை செய்து கொண்டார்களா? அவர்கள் எந்தப் பொருளுக்கும் உடமையாளர்களாக இல்லாமலும், விளங்காமலும் இருந்தாலுமா?  என்று கேட்பீராக!  பரிந்துரைகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே  என்று கூறுவீராக! வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் அவனுக்கே உரியது! பின்னர் அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!

திருக்குர்ஆன் 39:43, 44

மக்கத்துக் காஃபிர்கள் அல்லாஹ்வை நம்பியதுடன் அவனிடம் தங்களைப் பற்றி எடுத்துச் சொல்லிப் பரிந்துரைப்பதற்காக மற்றவர்களை வணங்கி வந்தனர் என்பதை இந்த வசனங்கள் அறிவிக்கின்றன.

மரணித்தவர்களை அழைப்பதும், பிரார்த்திப்பதும் தவறல்ல என்று முஸ்லிம்களில் சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் தான் அல்லாஹ்வைக் கடவுளாக ஏற்று விட்டோமே! பரிந்துரை செய்பவர்களாகத் தானே பெரியார்களைக் கருதுகிறோம் என்று தங்கள் நிலையை நியாயப்படுத்திக் கொள்கின்றனர்.

மக்காவில் வாழ்ந்த காஃபிர்களும் இது போல் தான் நம்பினார்கள். அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையெல்லாம் வணங்கினார்களோ அவர்களைக் கடவுள்கள் என்று மக்காவின் காஃபிர்கள் கூறவேயில்லை. கடவுளிடம் பரிந்து பேசுபவர்கள் என்று தான் நம்பினார்கள் என்பதை மேற்கண்ட வசனங்கள் தெளிவாக அறிவிக்கின்றன.

இந்த நம்பிக்கையை ஒழிக்கத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அனுப்பப்பட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த நம்பிக்கையை ஒழிக்க அனுப்பப்பட்டார்களோ அதையே இஸ்லாம் என்ற பெயரில் முஸ்லிம்கள் செய்வது தான் வேதனையானது.

சிலைகள் வேறு! சமாதிகள் வேறு!

இறைவனிடம் சிபாரிசு செய்பவர்கள் என்று மக்கத்துக் காஃபிர்கள் எண்ணியது ஒரு சக்தியுமற்ற கற்சிலைகளைத் தான்; மகான்களை அல்ல என்று சிலருக்குச் சந்தேகம் எழலாம்.

இது அடிப்படையில்லாத சந்தேகமாகும்.

அல்லாஹ்வைத் தவிர எவரையும், எதனையும் வணங்கக் கூடாது என்பது தான் நமக்கு இடப்பட்ட கட்டளை. இதில் சமாதியையும், சிலைகளையும் வேறுபடுத்திப் பார்க்க எந்த ஆதாரமும் இல்லை. முகாந்திரமும் இல்லை. சிலைகளும், சமாதிகளும் இதில் சமமானவை தான்.

மக்கத்துக் காஃபிர்கள் சிலைகளை வணங்கியதால் வழிகெட்டார்கள் என்பதற்காகக் கண்டிக்கப்பட்டார்கள். அது போல் மதீனாவில் வழ்ந்த யூதர்கள் நல்லடியார்களின் சமாதிகளை வழிபாடு செய்தபோதும் கண்டிக்கப்பட்டார்கள். எனவே சிலைகளை வனங்குவதும், சமாதிகளை வணங்குவதும் சமமான தீமைகள் தான்.

மக்கத்துக் காஃபிர்கள் வணங்கியது தீயவர்களின் சிலைகளைத் தான். நாங்கள் மகான்களின் சமாதிகளை அல்லவா வணங்குகிறோம் என்றும் சிலர் கேட்கின்றனர்.

இந்த வாதமும் தவறானதாகும். ஏனெனில் மக்கா காஃபிர்கள் வணங்கியதும் பெரும்பாலும் நல்லடியார்களையும், நபிமார்களையும் தான். இதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது.

صحيح البخاري

1601 – حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الوَارِثِ، حَدَّثَنَا أَيُّوبُ، حَدَّثَنَا عِكْرِمَةُ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا قَدِمَ أَبَى أَنْ يَدْخُلَ البَيْتَ وَفِيهِ الآلِهَةُ، فَأَمَرَ بِهَا فَأُخْرِجَتْ، فَأَخْرَجُوا صُورَةَ إِبْرَاهِيمَ، وَإِسْمَاعِيلَ فِي أَيْدِيهِمَا الأَزْلاَمُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قَاتَلَهُمُ اللَّهُ، أَمَا وَاللَّهِ لَقَدْ عَلِمُوا أَنَّهُمَا لَمْ يَسْتَقْسِمَا بِهَا قَطُّ». فَدَخَلَ البَيْتَ، فَكَبَّرَ فِي نَوَاحِيهِ، وَلَمْ يُصَلِّ فِيهِ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது கஅபாவுக்குள் இப்ராஹீம் (அலை), இஸ்மாயீல் (அலை) ஆகியோரின் உருவச்சிலைகளைக் கண்டார்கள். அவற்றைத் தம் கைத்தடியால் அப்புறப்படுத்திய பின்பே உள்ளே நுழைந்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 1601, 3352, 4289

மற்றொரு அறிவிப்பில்

صحيح البخاري

3351 – حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرٌو، أَنَّ بُكَيْرًا، حَدَّثَهُ عَنْ كُرَيْبٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: دَخَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ البَيْتَ، فَوَجَدَ فِيهِ صُورَةَ إِبْرَاهِيمَ، وَصُورَةَ مَرْيَمَ، فَقَالَ «أَمَا لَهُمْ، فَقَدْ سَمِعُوا أَنَّ المَلاَئِكَةَ لاَ تَدْخُلُ بَيْتًا فِيهِ صُورَةٌ، هَذَا إِبْرَاهِيمُ مُصَوَّرٌ، فَمَا لَهُ يَسْتَقْسِمُ»

இப்ராஹீம் நபி, மர்யம் (அலை) ஆகியோரின் சிலைகள் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

நூல்: புகாரி 3351

நல்லடியார்களிடம் பிரார்த்தனை செய்வதும், அவர்கள் இறைவனிடம் பரிந்து பேசிப் பெற்றுத் தருவார்கள் என்று நம்பி அவர்களை வழிபடுவதும் மார்க்கத்தில் அனுமதிக்கப் பட்டிருக்குமானால் அந்த நபிமார்களின் சிலைகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்புறப்படுத்தியிருக்க வேண்டியதில்லை.

صحيح البخاري

435 – حَدَّثَنَا أَبُو اليَمَانِ، قَالَ: أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّ عَائِشَةَ، وَعَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ، قَالاَ: لَمَّا نَزَلَ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ طَفِقَ يَطْرَحُ خَمِيصَةً لَهُ عَلَى وَجْهِهِ، فَإِذَا اغْتَمَّ بِهَا كَشَفَهَا عَنْ وَجْهِهِ، فَقَالَ وَهُوَ كَذَلِكَ: «لَعْنَةُ اللَّهِ عَلَى اليَهُودِ وَالنَّصَارَى، اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ» يُحَذِّرُ مَا صَنَعُوا

யூத, கிறித்தவர்களை அல்லாஹ் சபிப்பானாக! ஏனெனில் அவர்கள் தங்கள் நபிமார்களின் சமாதிகளை வணங்குமிடமாக ஆக்கி விட்டனர்  என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 436, 437, 1390, 3454, 4441, 4444, 5816

سنن أبي داود

2042 – حدَّثنا أحمدُ بنُ صالح، قرأتُ على عبدِ الله بنِ نافع، قال: أخبرني ابنُ أبي ذئبٍ، عن سعيدٍ المقبري عن أبي هُريرة، قال: قال رسولُ الله – صلَّى الله عليه وسلم -: "لا تجعلوا بيوتَكُم قُبوراً، ولا تجعلُوا قَبْرِي عِيداً؛ وصلُّوا عليَّ فإن صلاتكُم تُبْلُغُنِي حَيْثُ كُنْتُمْ"

உங்கள் வீடுகளை அடக்கத்தலங்களாக ஆக்காதீர்கள்! மேலும் எனது அடக்கத்தலத்தில் விழா எடுக்காதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: அபூதாவூத்

صحيح البخاري

427 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ المُثَنَّى، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ هِشَامٍ، قَالَ: أَخْبَرَنِي أَبِي، عَنْ عَائِشَةَ أُمِّ المُؤْمِنِينَ، أَنَّ أُمَّ حَبِيبَةَ، وَأُمَّ سَلَمَةَ ذَكَرَتَا كَنِيسَةً رَأَيْنَهَا بِالحَبَشَةِ فِيهَا تَصَاوِيرُ، فَذَكَرَتَا لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «إِنَّ أُولَئِكَ إِذَا كَانَ فِيهِمُ الرَّجُلُ الصَّالِحُ فَمَاتَ، بَنَوْا عَلَى قَبْرِهِ مَسْجِدًا، وَصَوَّرُوا فِيهِ تِلْكَ الصُّوَرَ، فَأُولَئِكَ شِرَارُ الخَلْقِ عِنْدَ اللَّهِ يَوْمَ القِيَامَةِ»

அவர்களில் நல்லவர் ஒருவர் மரணித்து விட்டால் அவரது அடக்கத்தலத்தில் ஒரு வழிபாட்டுத் தலத்தை எழுப்பிக் கொண்டனர். அவர்களது உருவங்களையும் அதில் செதுக்கிக் கொண்டனர். அல்லாஹ்வின் படைப்புகளிலேயே இவர்கள் தான் மிகவும் கெட்டவர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 427, 434, 1341, 3873

صحيح مسلم

2289 – حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ عَنِ ابْنِ جُرَيْجٍ عَنْ أَبِى الزُّبَيْرِ عَنْ جَابِرٍ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- أَنْ يُجَصَّصَ الْقَبْرُ وَأَنْ يُقْعَدَ عَلَيْهِ وَأَنْ يُبْنَى عَلَيْهِ.

சமாதிகளின் மீது கட்டடம் கட்டுவதையும், அது பூசப்படுவதையும், அதன் மீது உட்கார்வதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம்

இஸ்லாத்தின் பார்வையில் சமாதிகளும், சிலைகளும் சமமானவை தான் என்பதற்கு இந்த நபிமொழிகள் சான்றுகளாக உள்ளன.

 சமாதி வழிபாடும் இறைவனின் சாபத்திற்குரியதே  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக அறிவித்த பின் சமாதிகளை வழிபடலாம் என்ற வாதத்தில் நியாயம் எதுவுமில்லை என்பதை உணர வேண்டும்.

வணக்கம் என்றால் என்ன?

 அல்லாஹ்வைத் தவிர எவரையும், எதனையும் வணங்கக் கூடாது  என்று ஒப்புக் கொள்ளும் முஸ்லிம்களில் சிலர் வணக்கம் என்றால் என்ன என்பதைப் புரியாத காரணத்தினால் ஒரு சில வணக்கங்களை இறைவனல்லாத மற்றவர்களுக்கும் செய்து வருகின்றனர்.

வணக்கம் என்பது தொழுகை, நோன்பு போன்ற கடமைகள் மட்டுமில்லை. இவை அல்லாத இன்னும் பல வணக்கங்களும் உள்ளன.

அறுத்துப் பலியிடல் வணக்கமே!

எனவே உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக!

திருக்குர்ஆன் 108:2

இந்த வசனத்தில் இறைவனுக்காக மட்டுமே தொழ வேண்டும்; அவனுக்காக மட்டுமே அறுத்துப் பலியிட வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். தொழுகையை வணக்கம் என்று அனைவரும் அறிந்திருப்பதால் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்காகவும் தொழுவதில்லை. ஆனால், அறுத்துப் பலியிடுவதை வணக்கம் என்று அறியாத காரணத்தினால் இறைவனல்லாதவர்களுக்காக அறுத்துப் பலியிடுகின்றனர். இத்தகையோருக்கு இந்த வசனத்தில் சரியான விளக்கம் அமைந்துள்ளது.

صحيح مسلم

5239 – حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ وَسُرَيْجُ بْنُ يُونُسَ كِلاَهُمَا عَنْ مَرْوَانَ قَالَ زُهَيْرٌ حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ الْفَزَارِىُّ حَدَّثَنَا مَنْصُورُ بْنُ حَيَّانَ حَدَّثَنَا أَبُو الطُّفَيْلِ عَامِرُ بْنُ وَاثِلَةَ قَالَ كُنْتُ عِنْدَ عَلِىِّ بْنِ أَبِى طَالِبٍ فَأَتَاهُ رَجُلٌ فَقَالَ مَا كَانَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- يُسِرُّ إِلَيْكَ قَالَ فَغَضِبَ وَقَالَ مَا كَانَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- يُسِرُّ إِلَىَّ شَيْئًا يَكْتُمُهُ النَّاسَ غَيْرَ أَنَّهُ قَدْ حَدَّثَنِى بِكَلِمَاتٍ أَرْبَعٍ. قَالَ فَقَالَ مَا هُنَّ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ قَالَ قَالَ « لَعَنَ اللَّهُ مَنْ لَعَنَ وَالِدَهُ وَلَعَنَ اللَّهُ مَنْ ذَبَحَ لِغَيْرِ اللَّهِ وَلَعَنَ اللَّهُ مَنْ آوَى مُحْدِثًا وَلَعَنَ اللَّهُ مَنْ غَيَّرَ مَنَارَ الأَرْضِ ».

யார் அல்லாஹ் அல்லாத மற்றவர்களுக்காக அறுக்கின்றானோ, அவனை அல்லாஹ் சபிக்கிறான்  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)

நூல்: முஸ்லிம்

سنن أبي داود

3313 حدَّثنا داودُ بن رُشَيد، حدَّثنا شعيبُ بن إسحاقَ، عن الأوزاعيِّ، عن يحيى بن أبي كثيرِ، حدَّثني أبو قِلابةَ حدَّثني ثابتُ بن الضحَّاك، قال: نذرَ رجلٌ على عهدِ رسولِ الله -صلَّى الله عليه وسلم- أن ينحرَ إبلاً ببُوانةَ، فأتى رسول الله -صلَّى الله عليه وسلم -، فقال: إني نذرتُ أن أنحر إبلاً ببُوانةَ، فقال رسول الله -صلَّى الله عليه وسلم-: "هل كان فيها وثنٌ من أوثانِ الجاهليةُ يُعبَدُ؟ " قالوا: لا، قال: "هل كان فيها عِيدٌ من أعيادِهم؟ "

புவானா என்ற இடத்தில் அல்லாஹ்வுக்காக அறுத்துப் பலியிடுவதாக நான் நேர்ச்சை செய்து விட்டேன். அதை நான் செய்யலாமா  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  அந்த இடத்தில் மற்றவர்களால் வழிபாடு நடத்தப்படும் தெய்வங்கள் உள்ளனவா? என்று கேட்டார்கள். நான்  இல்லை என்றேன்.  அது மற்றவர்கள் திருவிழாக்கள் நடத்தும் இடமா?  என்று கேட்டார்கள். நான்  இல்லை  என்றேன். அப்படியானால் உமது நேர்ச்சையை நிறைவேற்றுவீராக என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸாபித் பின் ளஹ்ஹாக் (ரலி)

நூல்கள்: அபூதாவூத், பைஹகீ

அல்லாஹ்வுக்கு அறுத்துப் பலியிட நேர்ச்சை செய்தால் கூட மற்ற வழிபாடுகள் நடக்கும் இடத்தில் அதைச் செய்யக் கூடாது. சந்தேகத்தின் சாயல் கூடப் படியக் கூடாது என்றால் சமாதிகளில் கோழி, ஆடு, மாடுகளை அறுத்துப் பலியிடுவோர் தங்களின் நிலை என்னவாகும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நேர்ச்சையும் வணக்கமே!

தங்களின் நோய் நீங்கி விட்டால், அல்லது கோரிக்கை நிறைவேறினால், அவ்லியாவே! உங்களுக்காக நான் அதைச் செய்வேன்; இதைச் செய்வேன்  என்று கூறுபவர்களும், அவ்வாறே செயல்படுத்துபவர்களும் நம்மவர்களில் உள்ளனர். நேர்ச்சை ஒரு வணக்கம் என்பதைப் புரிந்து கொண்டு விட்டால் இவ்வணக்கத்தை இறைவனல்லாத எவருக்கும் செய்ய மாட்டார்கள்.

நீங்கள் எதையேனும் (நல் வழியில்) செலவிட்டாலோ, நேர்ச்சை செய்தாலோ அல்லாஹ் அதை அறிகிறான். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளரும் இல்லை.

திருக்குர்ஆன் 2:270

பின்னர் அவர்கள் தம்மிடம் உள்ள அழுக்குகளை நீக்கட்டும்! தமது நேர்ச்சைகளை நிறைவேற்றட்டும்! பழமையான அந்த ஆலயத்தை தவாஃப் செய்யட்டும்.

திருக்குர்ஆன் 22:29

அவர்கள் நேர்ச்சையை நிறைவேற்றுவார்கள். தீமை பரவிய நாளைப் பற்றி அஞ்சுவார்கள்.

திருக்குர்ஆன் 76:7

நேர்ச்சைகள் இறைவனுக்காக மட்டுமே செய்யப்பட வேண்டும் என்றும், இறைவனுக்காகச் செய்த நேர்ச்சையை நிறைவேற்ற வேண்டும் என்றும் இந்த வசனங்கள் மூலம் அல்லாஹ் கற்றுத் தருகிறான்.

இறைவா! நீ இந்தக் காரியத்தை நிறைவேற்றினால் உனக்காகத் தொழுகிறேன்; நோன்பு வைக்கிறேன்; உனக்காக ஆட்டை அறுத்துப் பலியிடுகிறேன்; உனக்காக அவற்றை ஏழைகளுக்கு வழங்குகிறேன் என்பது போல் தான் நேர்ச்சை செய்ய வேண்டுமே தவிர இறைவனல்லாத எவருக்கும் நேர்ச்சை செய்யலாகாது. அறியாத காலத்தில் அவ்வாறு நேர்ச்சை செய்திருந்தால் அதை நிறைவேற்றவும் கூடாது.

صحيح البخاري

6696 – حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ طَلْحَةَ بْنِ عَبْدِ المَلِكِ، عَنِ القَاسِمِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ نَذَرَ أَنْ يُطِيعَ اللَّهَ فَلْيُطِعْهُ، وَمَنْ نَذَرَ أَنْ يَعْصِيَهُ فَلاَ يَعْصِهِ»

யார் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதாக நேர்ச்சை செய்கிறாரோ, அதை அவர் நிறைவு செய்யட்டும்! யார் இறைவனுக்கு மாறு செய்யும் விஷயங்களில் நேர்ச்சை செய்கிறாரோ, அதை நிறைவேற்றலாகாது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 6696

பிரார்த்தனையும் ஒரு வணக்கமே!

سنن أبي داود

1479 – حدَّثنا حفصُ بنُ عُمَرَ، حدَّثنا شعبةُ، عن منصورٍ، عن ذرٍّ، عن يُسيعٍ الحضرميِّ عن النعمان بن بشير، عني النبيِّ – صلى الله عليه وسلم – قال: "الدُّعاءُ هو العِبادةُ، قال ربُّكم: {ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ} [غافر: 60]

பிரார்த்தனை தான் வணக்கமாகும்  என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)

நூல்கள்: அபூதாவூத், அஹ்மத், திர்மிதீ

பிரார்த்தனை ஒரு வணக்கம் என்று சொல்லாமல் வணக்கங்களிலேயே தலை சிறந்த வணக்கம் பிரார்த்தனை எனத் தெளிவாக இந்த நபிமொழி அறிவிக்கின்றது.

ஒரு அடியான் தனது அடிமைத்தனத்தைப் பரிபூரணமாக உணருவதும், தன்னைப் படைத்தவனை எஜமானனாக ஏற்பதும் தான் வணக்கத்தின் முக்கியமான அம்சமாகும். இந்த அம்சம் துஆவில் கூடுதலாகவே உள்ளது எனலாம்.

இறைவனல்லாதவர்களைப் பிரார்த்தனை செய்வதற்கு எந்த நியாயமுமில்லை. அவர்களால் எதுவும் செய்ய இயலாது என்பதையெல்லாம் பின்வரும் வசனங்களில் அல்லாஹ் தெளிவுபடக் கூறுகிறான்.

என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால்  நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர் வழி பெறுவார்கள்  (என்பதைக் கூறுவீராக!)

திருக்குர்ஆன் 2:186

எதையும் படைக்காதவற்றையா அவர்கள் (இறைவனுக்கு) இணை கற்பிக்கின்றனர்? அவர்களே படைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு உதவிட அவர்களுக்கு இயலாது. தமக்கே கூட அவர்கள் உதவிக் கொள்ள மாட்டார்கள். (எதையும்) தெரிவிக்க அவர்களை நீங்கள் அழைத்தால் அவர்கள் உங்களைப் பின்பற்ற மாட்டார்கள். நீங்கள் அவர்களை அழைப்பதும், மௌனமாக இருப்பதும் உங்களைப் பொறுத்த வரை சமமானது. அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்! அவர்களுக்கு நடக்கின்ற கால்கள் உள்ளனவா? அல்லது பிடிக்கின்ற கைகள் உள்ளனவா? அல்லது பார்க்கின்ற கண்கள் உள்ளனவா? அல்லது கேட்கின்ற காதுகள் உள்ளனவா? உங்கள் தெய்வங்களை அழைத்து எனக்கெதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்! எனக்கு எந்த அவகாசமும் தராதீர்கள்!  என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 7:191 195

அவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவிட இயலாது. தமக்கே அவர்கள் உதவ முடியாது. (எதையும்) தெரிவிக்க நீங்கள் அவர்களை அழைத்தால் அவர்கள் செவியுற மாட்டார்கள். அவர்கள் உம்மைப் பார்ப்பது போல் நீர் காண்பீர்! (ஆனால்) அவர்கள் பார்க்க மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 7:197, 198

அல்லாஹ்வையன்றி உமக்குப் பயனும், தீங்கும் தராதவற்றைப் பிரார்த்திக்காதீர்! (அவ்வாறு) செய்தால் நீர் அநீதி இழைத்தவராவீர்!  அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன் 10:106

அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர். அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள்  என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 16:20, 21

மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைச் செவிதாழ்த்திக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.

திருக்குர்ஆன் 22:73

அல்லாஹ்வையன்றி நீங்கள் கற்பனை செய்தவற்றை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் வானங்களிலும், பூமியிலும் அணுவளவுக்கும் அதிகாரம் பெற மாட்டார்கள். இவ்விரண்டிலும் அவர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. அவர்களில் அவனுக்கு எந்த உதவியாளரும் இல்லை  என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 34:22

அவன் இரவைப் பகலில் நுழைக்கிறான். பகலை இரவில் நுழைக்கிறான். சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலக்கெடு வரை செல்கின்றன. அவனே அல்லாஹ்; உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம். அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர். நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.

திருக்குர்ஆன் 35:13, 14

அல்லாஹ்வையன்றி நீங்கள் அழைக்கின்ற, உங்கள் தெய்வங்கள் பூமியில் எதனைப் படைத்தன?  என்று எனக்குக் காட்டுங்கள்! அல்லது வானங்களிலாவது அவர்களுக்குப் பங்கு உண்டா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்!  என்று கேட்பீராக! அல்லது அவர்களுக்கு நாம் ஒரு வேதத்தை அளித்து அதனால் (கிடைத்த) தெளிவில் அவர்கள் இருக்கிறார்களா? இல்லை. இந்த அநியாயக்காரர்களில் ஒருவருக்கொருவர் மோசடியையே வாக்களிக்கின்றனர்.

திருக்குர்ஆன் 35:40

என்னை எதை நோக்கி அழைக்கிறீர்களோ அதற்கு இவ்வுலகிலும், மறுமையிலும் பிரார்த்திக்கப்படும் தகுதி இல்லை என்பதிலும், நாம் திரும்புவது அல்லாஹ்விடமே என்பதிலும், வரம்பு மீறுவோர் தான் நரகவாசிகள் என்பதிலும் எந்தச் சந்தேகமும் இல்லை.

திருக்குர்ஆன் 40:43

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் பூமியில் எதைப் படைத்தனர் என்று எனக்குக் காட்டுங்கள்! அல்லது வானங்களில் அவர்களுக்குப் பங்கு உண்டா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதற்கு முன் சென்ற வேதத்தையோ, அறிவுச் சான்றையோ என்னிடம் கொண்டு வாருங்கள்!  என்று (முஹம்மதே!) கேட்பீராக! கியாமத் நாள் வரை தமக்குப் பதில் தராத, அல்லாஹ் அல்லாதோரை அழைப்பவரை விட மிகவும் வழி கெட்டவர் யார்? அவர்களோ தம்மை அழைப்பது பற்றி அறியாது உள்ளனர். மக்கள் ஒன்று திரட்டப்படும் போது அவர்கள் இவர்களுக்குப் பகைவர்களாக ஆவார்கள். இவர்கள் தம்மை வணங்கியதையும் மறுப்பார்கள்.

திருக்குர்ஆன் 46:6

இறைவனல்லாத எவரையும் பிரார்த்திக்கக் கூடாது என்பதையும், அதனால் பயனில்லை என்பதையும், அது இணை வைக்கும் பெரும்பாவம் என்பதையும் இந்த வசனங்கள் அறிவிக்கின்றன.

தவறான வாதங்கள்

இறைவனுடைய கட்டளைக்கு மாறுசெய்ய வேண்டுமென்றோ, இறைத்தூதரின் வழிகாட்டுதலைப் புறக்கணிக்க வேண்டுமென்றோ எந்த முஸ்லிமும் எண்ண மாட்டான்.

இறைவனல்லாதவர்களைப் பிரார்த்தனை செய்பவர்கள் தங்கள் தரப்பில் சில நியாயங்கள் வைத்திருக்கிறார்கள். அதனடிப்படையிலேயே இறைவனல்லாதவர்களைப் பிரார்த்திக்கின்றனர். சிந்தித்துப் பார்க்கும் போது அவர்களது வாதங்கள் யாவுமே அர்த்தமற்றதாக அமைந்துள்ளதை உணரலாம்.

பரிந்துரையை வேண்டுவது குற்றமாகுமா?

பெரியார்களைப் பிரார்த்திக்கும் நாங்கள் அவர்களுக்கு இறைத்தன்மை உண்டு என்று எண்ணவில்லை; மாறாக, அவர்களும் இறைவனின் அடிமைகள்  என்றே கூறுகிறோம்.  ஆயினும் அவர்கள் இறைவனது நெருக்கத்தைப் பெற்றுள்ளதால் அவர்கள் இறைவனிடம் பெற்றுத் தருவார்கள்  என்றே நாங்கள் நம்புகிறோம்.  சுயமாக எதுவும் அவர்கள் செய்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை; இவ்வாறு நம்புவது எப்படித் தவறாகும்?

இது இவர்களின் தரப்பில் கூறப்படும் நியாயங்களில் ஒன்றாகும்.

மேலோட்டமாகப் பார்க்கும் போது இதில் நியாயம் இருப்பது போல் தோன்றினாலும் இதில் எந்த நியாயமும் இல்லை.

இறைவனின் ஆற்றல் அந்தப் பெரியார்களுக்கு உண்டு என்று இவர்கள் நம்பவில்லை என்பது உண்மையே. ஆனால் மற்றொரு வகையில் இறைவனுக்குச் சமமான ஆற்றல் அந்தப் பெரியவர்களுக்கு உண்டு என்று இவர்கள் நம்புகிறார்கள் என்பதை மறுக்க முடியாது.

எங்கிருந்து அழைத்தாலும், எத்தனை பேர் அழைத்தாலும், எந்த நேரத்தில் அழைத்தாலும், எந்த மொழியில் அழைத்தாலும் அனைத்தையும் ஒரே சமயத்தில் அறிந்து கொள்ளும் ஆற்றல் அல்லாஹ் ஒருவனுக்கு மாத்திரமே சொந்தமானதாகும். இதே போன்ற ஆற்றல் அந்தப் பெரியார்களுக்கு உண்டு என்று இவர்கள் நம்புகிறார்கள்.

இதன் காரணமாகவே உலகின் பல பாகங்களிலிருந்தும் பலரும் அந்தப் பெரியார்களைப் பிரார்த்திக்கின்றனர். தங்களது பிரார்த்தனையை அல்லாஹ் செவிமடுப்பது போலவே பெரியார்களும் செவிமடுக்கின்றனர் என்று நம்பி இந்த விசயத்தில் இறைவனுக்குச் சமமாகப் பெரியார்களை நம்புகின்றனர்.

முழுக்க முழுக்க இறைத்தன்மை பெற்றவர்களாக மற்றவர்களை எண்ணுவது மாத்திரம் இணைவைத்தல் அன்று. மாறாக, இறைவனது தன்மைகளில் ஏதேனும் ஒரு தன்மை இறைவனுக்கு இருப்பது போலவே மற்றவர்களுக்கும் இருப்பதாக எண்ணுவதும் இணை வைத்தலாகும். இதைப் புரிந்து கொள்ளாததாலேயே இறைவனல்லாதவர்களைப் பிரார்த்திக்கின்றனர்.

அல்லாஹ்வையன்றி அவர்களுக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள் என்றும் கூறுகின்றனர். வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்  என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 10:18

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர்  அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.

திருக்குர்ஆன் 39:3

மக்கத்துக் காஃபிர்கள் பெரியார்கள் பற்றிக் கொண்டிருந்த நம்பிக்கையை இவ்விரு வசனங்களும் தெளிவுபடுத்துகின்றன. இறைவனிடம் பரிந்துரை செய்வார்கள் என்பதற்காக மட்டுமே பெரியார்களை அவர்கள் பிரார்த்தனை செய்து வந்தனர். ஆனால் அதை அல்லாஹ் அங்கீகரிக்காது அவர்களைக் காஃபிர்கள் எனப் பிரகடனம் செய்து விட்டான்.

இறைவனிடம் பெற்றுத் தருவார்கள் என்ற எண்ணத்தில் கூட இறைவனல்லாத எவரையும் பிரார்த்திக்கலாகாது என்பதற்கு இது போதிய சான்றாகும்.

ஆ. உதாரணங்கள் ஆதாரங்களாகுமா?

சமாதி வழிபாட்டை நியாயப்படுத்த சில உதாரணங்களைக் கூறி அவற்றை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

அதாவது உயர் பதவியிலுள்ள ஒருவரை நாம் நேரடியாக அணுகவோ, சந்திக்கவோ இயலாது. எனவே தான் நம்மைப் பற்றி அவரிடம் பரிந்து பேச இடைத் தரகர்களை ஏற்படுத்திக் கொள்கிறோம். அவர் மூலமாக நமது காரியத்தைச் சாதித்துக் கொள்கிறோம்.

இவர்களை விட மிக மிக உயர்வான நிலையிலுள்ள அல்லாஹ்வை நாம் எப்படி நேரடியாக அணுக முடியும்? இதற்காகவே பெரியார்களைப் பயன்படுத்திக் கொள்கிறோம் என்கின்றனர்.

ஷைத்தான் இவர்களது தீய செயல்களை இவ்வாறே அழகானதாகக் காட்டுகிறான். உண்மையில் இதுவும் முட்டாள்தனமான வாதமேயாகும்.

உயர் பதவிகளில் உள்ளவர்களை நாம் நேரடியாக அணுக முடியாது என்பது உண்மை தான். ஏன் அணுக முடியவில்லை என்றால் அந்த அதிகாரிக்கு நம்மைப் பற்றித் தெரியாது. அந்த உயரதிகாரிக்கு எப்படி நம்மைப் பற்றித் தெரியாதோ அதே போல் இறைவனுக்கும் நம்மைப் பற்றி எதுவும் தெரியாதா? இந்தப் பெரியார்கள் நம்மைப் பற்றிச் சொன்னால் தான் இறைவனுக்கு நம்மைப் பற்றித் தெரியுமா? என்று இவர்கள் சிந்திக்கத் தவறி விட்டனர்.

சாதாரண உயர் அதிகாரியின் நிலை எதுவோ அது தான் இறைவனது நிலையும் என்றல்லவா இவர்கள் எண்ணுகின்றனர்!

யாவற்றையும் அறிந்து வைத்திருக்கின்ற, முக்காலமும் உணர்ந்து வைத்திருக்கின்ற, மனதில் மறைத்து வைத்திருக்கின்றவற்றையும் துல்லியமாக அறிகின்ற அந்த வல்லவனை அவனது அடிமைகளில் ஒருவரான அதிகாரிக்குச் சமமாக எண்ணுவதை விடவும் மோசமான உதாரணம் என்ன இருக்க இயலும்?

நம் வழக்குகளில் நாமே வாதாடுவதில்லை. ஒரு வக்கீலை நியமித்துக் கொள்கிறோம். அவ்வாறிருக்க இறைவனிடம் வாதாடும் வக்கீலாக வலிமார்களைக் கருதுவதில் என்ன தவறு? எனவும் இவர்கள் கேட்கின்றனர்.

நீதிபதியிடம் வாதாட வக்கீல் அவசியம் தான். வக்கீல், தன் வாதத் திறமையால்  குற்றவாளியையும் நிரபராதியாக்கி விடுவார்; நிரபராதியையும் குற்றவாளியாக்கி விடுவார். அதை நீதிபதியும் நம்பி தீர்ப்பு அளித்து விடுவார்.

இறைவனின் நிலைமை நீதிபதியின் இந்த நிலைமை போன்றது தானா? திறமையான வாதத்தினடிப்படையில் குற்றவாளியை நிரபராதியென தீர்ப்பளிக்கும் நீதிபதியைப் போல் இறைவனும் தவறான தீர்ப்பை வழங்கக் கூடியவன் தானா?

யார் உண்மையில் குற்றாவளி? யார் நிரபராதி? என்பது நீதிபதிக்குத் தெரியாதது போலவே இறைவனுக்கும் தெரியாது என்கிறார்களா?

இறைவனது நல்லடியார்களின் வேலையும் வக்கீலுடைய வேலை போன்றது தானா? குற்றவாளிகளை நல்லவர்கள் என்று இறைவனிடம் அவர்கள் வாதிடப் போகிறார்களா? இல்லை என்றால் வக்கீல் எதற்காக?

அல்லாஹ்வைப் பற்றிக் கூறுவதென்றால் வக்கீல், நீதிபதி, அதிகாரி என்றெல்லாம் உதாரணம் கூறுவதைத் தவிர்க்க வேண்டும். அல்லாஹ்வைப் போல் எதுவும் இல்லாததால் எதையும் உதாரணம் காட்டிப் பேசலாகாது என அல்லாஹ் சொல்லித் தருகிறான்.

அல்லாஹ்வுக்கு உதாரணங்களைக் கூறாதீர்கள்! அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.

திருக்குர்ஆன் 16:74

அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.

திருக்குர்ஆன் 42:11

அவனுக்கு நிகராக யாருமில்லை.

திருக்குர்ஆன் 112:4

அவன் நமக்கு உதாரணம் கூறுகிறான். அவனை (நாம்) படைத்திருப்பதை அவன் மறந்து விட்டான்.

திருக்குர்ஆன் 36:78

அல்லாஹ்வுக்கு எதையும் உதாரணமாகக் கூறலாகாது என்பதை இவ்வசனங்கள் அறிவிக்கின்றன.

இ. பாவிகள் கடவுளை எப்படி நெருங்க முடியும்?

 நாம் பாவங்களைச் செய்தவர்கள். இறைவனின் பல கட்டளைகளை மீறியவர்கள். இவ்வாறிருக்க, எப்படி இறைவனிடம் நாம் கேட்க முடியும்? எங்கள் மேல் அல்லாஹ் கோபமாக இருக்கும் போது அவனது கோபத்தைக் குறைத்து அமைதிப்படுத்தத் தான் பெரியார்களைப் பிடித்துக் கொள்கிறோம்  என்பது இவர்களின் மற்றொரு நியாயம்.

அதாவது இறைவனிடம் கேட்பதற்குரிய தகுதி தங்களுக்கு இல்லை என்று கூறிக் கொண்டு இவர்கள் திசை மாறிச் செல்கிறார்கள்.

அல்லாஹ்வின் கட்டளையை நாம் மீறியதால் நாம் அல்லாஹ்விடம் கேட்க முடியாது. அதனால் தான் அவ்லியாக்களிடம் கேட்கிறோம் என்போர் அளவற்ற அருளாளன் என்ற அல்லாஹ்வின் பண்பையே மறுக்கிறார்கள்.

 அல்லாஹ் கோபக்காரன்; அவ்லியாக்கள் அளவற்ற அருளாளர்கள்  என நம்பக் கூடியவர்கள் தான் இவ்வாறு வாதிட முடியும். அல்லாஹ்வை விட அவ்லியாக்கள் அதிகமாக அருள் புரிவார்கள் என்பது இணை வைத்தலை விட கொடிய குற்றமாகும். இது அல்லாஹ்வை விட அவ்லியாக்களை உயர்த்தும் கொடுஞ்செயலாகும்.

இவர்களின் இந்த அறியாமையை அல்லாஹ் பின்வரும் வசனத்தில் சுட்டிக் காட்டுகிறான்.

தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக!

திருக்குர்ஆன் 39:53

அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்! (ஏக இறைவனை) மறுக்கும் கூட்டத்தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்க மாட்டார்கள் .

திருக்குர்ஆன் 12:87

மனிதன் எவ்வளவு பாவங்கள் செய்தாலும் தவறை உணர்ந்து தன்னிடம் கேட்டால் தனது அருள் உண்டு என அல்லாஹ் உத்திரவாதம் தருகிறான். பாவிகள் தன்னிடம் வரலாகாது என்று அல்லாஹ் கூறவில்லை. மாறாக, பாவிகளையே அழைத்து என் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள் என்கிறான்.

ஈ. அல்லாஹ்வின் பாதையில்கொல்லப்பட்டவர்கள் உயிருடன் உள்ளனர்

வரட்டு வாதங்களைக் கூறி சமாதி வழிபாட்டை நியாயப்படுத்துவது போலவே குர்ஆனிலிருந்தும் தவறான வியாக்கியானம் கொடுத்து இவர்கள் ஆதாரங்களைச் சமர்ப்பிக்கிறார்கள்.

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் எனக் கூறாதீர்கள்! மாறாக உயிருடன் உள்ளனர். எனினும் உணர மாட்டீர்கள்.

திருக்குர்ஆன் 2:154

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என எண்ணாதீர்கள்! மாறாக அவர்கள் தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர்; உணவளிக்கப்படுகின்றனர்.

திருக்குர்ஆன் 3:169

மரணித்த பின்பும் நல்லடியார்கள் வாழ்கிறார்கள் என்று இரண்டு வசனங்களும் கூறுவதால் அவர்களை வழிபடலாம் என்பது இவர்களின் வாதம்.

பல நியாயமான காரணங்களால் இவர்களின் இந்த வாதம் முற்றிலும் தவறாகும்.

முதலாவது வசனத்தில் அவர்கள் உயிருடன் உள்ளனர்; எனினும் (அதை) நீங்கள் உணர மாட்டீர்கள் என்று கூறப்படுகிறது.

அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்றால் நீங்கள் தெரிந்து வைத்துள்ள அர்த்தத்தில் அல்ல. மாறாக இதை நீங்கள் உணர முடியாது என்று இங்கே அல்லாஹ் தெளிவுபடுத்துகின்றான். நாம் உணர்ந்து கொள்ள இயலாத வேறொரு விதமான வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

இரண்டாவது வசனத்தில் தங்கள் இறைவனிடம் அவர்கள் உயிருடன் உள்ளனர் என்று அல்லாஹ் கூறுகிறான். நம்மைப் பொருத்த வரை அவர்கள் மரணித்து விட்டாலும் இறைவனிடம் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நாம் பேசுவதைக் கேட்கவோ, பதிலளிக்கவோ இயலாத நமக்குத் தெரியாத இன்னொரு வாழ்க்கையை அவர்கள் வாழ்வதாகத் தான் இந்த வசனங்கள் கூறுகின்றனவே அன்றி இவர்கள் நினைக்கின்ற அர்த்தத்தில் வாழ்கிறார்கள் எனக் கூறவில்லை.

அடுத்து இந்த வசனம் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) சொன்ன விளக்கத்தையும் இவர்கள் கவனிக்கத் தவறி விட்டனர்.

صحيح مسلم

4993 – حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى وَأَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ كِلاَهُمَا عَنْ أَبِى مُعَاوِيَةَ ح وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ أَخْبَرَنَا جَرِيرٌ وَعِيسَى بْنُ يُونُسَ جَمِيعًا عَنِ الأَعْمَشِ ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ – وَاللَّفْظُ لَهُ – حَدَّثَنَا أَسْبَاطٌ وَأَبُو مُعَاوِيَةَ قَالاَ حَدَّثَنَا الأَعْمَشُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُرَّةَ عَنْ مَسْرُوقٍ قَالَ سَأَلْنَا عَبْدَ اللَّهِ عَنْ هَذِهِ الآيَةِ (وَلاَ تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِى سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا بَلْ أَحْيَاءٌ عِنْدَ رَبِّهِمْ يُرْزَقُونَ) قَالَ أَمَا إِنَّا قَدْ سَأَلْنَا عَنْ ذَلِكَ فَقَالَ « أَرْوَاحُهُمْ فِى جَوْفِ طَيْرٍ خُضْرٍ لَهَا قَنَادِيلُ مُعَلَّقَةٌ بِالْعَرْشِ تَسْرَحُ مِنَ الْجَنَّةِ حَيْثُ شَاءَتْ ثُمَّ تَأْوِى إِلَى تِلْكَ الْقَنَادِيلِ فَاطَّلَعَ إِلَيْهِمْ رَبُّهُمُ اطِّلاَعَةً فَقَالَ هَلْ تَشْتَهُونَ شَيْئًا قَالُوا أَىَّ شَىْءٍ نَشْتَهِى وَنَحْنُ نَسْرَحُ مِنَ الْجَنَّةِ حَيْثُ شِئْنَا فَفَعَلَ ذَلِكَ بِهِمْ ثَلاَثَ مَرَّاتٍ فَلَمَّا رَأَوْا أَنَّهُمْ لَنْ يُتْرَكُوا مِنْ أَنْ يُسْأَلُوا قَالُوا يَا رَبِّ نُرِيدُ أَنْ تَرُدَّ أَرْوَاحَنَا فِى أَجْسَادِنَا حَتَّى نُقْتَلَ فِى سَبِيلِكَ مَرَّةً أُخْرَى. فَلَمَّا رَأَى أَنْ لَيْسَ لَهُمْ حَاجَةٌ تُرِكُوا».

இந்த வசனம் பற்றி நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவர்களின் உயிர்கள் பச்சை நிறத்துப் பறவைக் கூட்டுக்குள்ளிருந்து சொர்க்கத்தில் விரும்பியவாறு சுற்றித் திரிகின்றன  என்று விளக்கமளித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)

நூல்: முஸ்லிம்

அவர்கள் உயிருடன் உள்ளனர் என்பதன் பொருள் சொர்க்கத்து வாழ்வு தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) விளக்கிய பின் அதற்கு மாற்றமாக இவர்கள் தரும் விளக்கம் தள்ளப்பட வேண்டியதாகும்.

இந்த நிலை கூட எல்லா நல்லடியார்களுக்கும் பொதுவானதன்று. அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களுக்கே உரியதாகும். மற்ற நல்லடியார்களுக்கு இந்த நிலைமை இல்லை.

மற்ற நல்லடியார்களின் நிலை என்ன என்பதைப் பின்வரும் நபிமொழி விளக்குகின்றது.

سنن الترمذي

1071 – حَدَّثَنَا أَبُو سَلَمَةَ يَحْيَى بْنُ خَلَفٍ قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ المُفَضَّلِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَاقَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ المَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِذَا قُبِرَ المَيِّتُ – أَوْ قَالَ: أَحَدُكُمْ – أَتَاهُ مَلَكَانِ أَسْوَدَانِ أَزْرَقَانِ، يُقَالُ لِأَحَدِهِمَا: الْمُنْكَرُ، وَلِلْآخَرِ: النَّكِيرُ، فَيَقُولَانِ: مَا كُنْتَ تَقُولُ فِي هَذَا الرَّجُلِ؟ فَيَقُولُ: مَا كَانَ يَقُولُ: هُوَ عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، فَيَقُولَانِ: قَدْ كُنَّا نَعْلَمُ أَنَّكَ تَقُولُ هَذَا، ثُمَّ يُفْسَحُ لَهُ فِي قَبْرِهِ سَبْعُونَ ذِرَاعًا فِي سَبْعِينَ، ثُمَّ يُنَوَّرُ لَهُ فِيهِ، ثُمَّ يُقَالُ لَهُ، نَمْ، فَيَقُولُ: أَرْجِعُ إِلَى أَهْلِي فَأُخْبِرُهُمْ، فَيَقُولَانِ: نَمْ كَنَوْمَةِ العَرُوسِ الَّذِي لَا يُوقِظُهُ إِلَّا أَحَبُّ أَهْلِهِ إِلَيْهِ، حَتَّى يَبْعَثَهُ اللَّهُ مِنْ مَضْجَعِهِ ذَلِكَ، وَإِنْ كَانَ مُنَافِقًا قَالَ: سَمِعْتُ النَّاسَ يَقُولُونَ، فَقُلْتُ مِثْلَهُ، لَا أَدْرِي، فَيَقُولَانِ: قَدْ كُنَّا نَعْلَمُ أَنَّكَ تَقُولُ ذَلِكَ، فَيُقَالُ لِلأَرْضِ: التَئِمِي عَلَيْهِ، فَتَلْتَئِمُ عَلَيْهِ، فَتَخْتَلِفُ فِيهَا أَضْلَاعُهُ، فَلَا يَزَالُ فِيهَا مُعَذَّبًا حَتَّى يَبْعَثَهُ اللَّهُ مِنْ مَضْجَعِهِ ذَلِكَ "

ஒரு நல்லடியார் கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவுடன் கேள்விகள் கேட்கப்படும். அவர் சரியாகப் பதில் கூறுவர். அதன் பின்னர்  புது மணமகனைப் போல் நீ உறங்கு! அல்லாஹ் உன் உறக்கத்திலிருந்து உன்னை எழுப்பும் வரை உறங்கு!  எனக் கூறப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (சுருக்கம்)

அஹ்மத், திர்மிதீ ஆகிய நூல்களில் இது இடம் பெற்றுள்ளது.

மண்ணறையில் அவர்கள் உயிருடன் இருந்தாலும் கியாம நாள் வரை எழாமல் உறங்கிக் கொண்டே இருப்பவர்களை அழைப்பது என்ன நியாயம்?

இதையெல்லாம் கூட விட்டு விடுவோம். இவர்கள் நினைக்கின்ற விதமாக உயிருடன் இருப்பதாகவே வைத்துக் கொள்வோம்.

உயிருடன் இருப்பது மட்டும் பிரார்த்தனை செய்வதற்குரிய தகுதியாகுமா?

ஒருவர் உயிரோடு இருக்கிறார் என்பதற்காக அவரிடம் போய்ப் பிள்ளையைக் கேட்க முடியுமா? மழையைக் கேட்க முடியுமா? அவர்கள் உயிரோடு இருப்பதால் அவர்களிடம் பிரார்த்திக்கின்றோம் என்றால் பிரார்த்திப்பவர்களும் உயிருடன் தானே உள்ளனர்?

ஈஸா நபி உண்மையாகவே உயிருடன் உள்ளார். மலக்குகள் உயிருடன் உள்ளனர். ஈஸா நபியைப் பிரார்த்திப்பவர்களைக் காஃபிர்கள் எனக் கூறுவோர் தங்கள் செயலை எப்படி நியாயப்படுத்த முடியும்?

அவ்லியாக்களின் அற்புதங்கள்!

நபிமார்கள் அற்புதங்கள் நிகழ்த்தியதாக ஏராளமான சான்றுகள் திருக்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் உள்ளன. இவற்றை ஆதாரமாகக் கொண்டு  மகான்கள் அற்புதங்கள் நிகழ்த்துவார்கள்; எனவே அவர்களிடம் நமது தேவைகளைக் கேட்கலாம்; பிரார்த்திக்கலாம்  என்று சிலர் வாதிடுகின்றனர்.

அற்புதங்கள் பற்றி இவர்களுக்கு முழுமையான விளக்கமில்லாத காரணத்தால் தான் இந்த வாதத்தை முன் வைக்கின்றனர்.

அவ்லியாக்கள் அற்புதங்கள் நிகழ்த்துவார்கள்  என்ற இந்த நம்பிக்கை தான் தர்கா வழிபாட்டுக்கு அடித்தளமாக அமைந்துள்ளது.

அற்புதங்கள் அல்லாஹ்வின் கையில்

நபிமார்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் அற்புதங்கள் நிகழ்த்தியதாக திருக்குர்ஆன் கூறுகிறது. எனவே அதை மறுப்பவர் குர்ஆனை மறுத்தவராவார்.

ஆனால் நபிமார்கள் எப்போது அற்புதம் நிகழ்த்திக் காட்ட விரும்புகிறார்களோ, அல்லது அவர்களிடமிருந்து மக்கள் எப்போது அற்புதத்தை எதிர்பார்க்கிறார்களோ அப்போதெல்லாம் நபிமார்கள் அற்புதங்களை நிகழ்த்த முடியாது. அல்லாஹ் எப்போது அனுமதி அளித்துள்ளானோ அந்த நேரத்தில் மட்டும் தான் அவர்களால் அற்புதங்கள் நிகழ்த்த முடியும். அற்புதங்கள் நிகழ்த்தும் அதிகாரம் அல்லாஹ்வின் கையிலேயே உள்ளது.

உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும், மக்களையும் ஏற்படுத்தினோம். எந்த ஒரு தூதரும் அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் கொண்டு வர முடியாது. ஒவ்வொரு தவணையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருக்குர்ஆன் 13:38

உமக்கு முன் பல தூதர்களை அனுப்பினோம். அவர்களில் சிலரைப் பற்றி உமக்குக் கூறியிருக்கிறோம். அவர்களில் சிலரைப் பற்றி நாம் உமக்குக் கூறவில்லை. அல்லாஹ்வின் விருப்பப்படியே தவிர எந்த அற்புதத்தையும் கொண்டு வருவது எந்தத் தூதருக்கும் இல்லை. எனவே அல்லாஹ்வின் கட்டளை வரும் போது நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும். அப்போது வீணர்கள் நஷ்டமடைவார்கள்.

திருக்குர்ஆன் 40:78

நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்கள் தாம். ஆயினும் தனது அடியார்களில் தான் நாடியவர் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் உங்களிடம் எங்களால் கொண்டு வர இயலாது. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்  என்று அவர்களின் தூதர்கள் கூறினர்.

திருக்குர்ஆன் 14:11

அல்லாஹ்வின் அனுமதியில்லாமல் நபிமார்கள் எந்த ஒரு அற்புதத்தையும் நிகழ்த்த முடியாது என்பதற்கு மறுக்க முடியாத ஆதாரமாக இவ்வசனங்கள் அமைந்துள்ளன.

இப்பூமியில் நீரூற்றை எங்களுக்காக நீர் ஓடச் செய்யாத வரை உம்மை நாங்கள் நம்பவே மாட்டோம் என்று கூறுகின்றனர். அல்லது உமக்கு பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டம் இருக்க வேண்டும். அவற்றுக்கு இடையே நதிகளை நீர் பெருக்கெடுத்து ஓடச் செய்ய வேண்டும். அல்லது நீர் நினைப்பது போல் வானத்தைத் துண்டு துண்டாக எங்கள் மீது விழச் செய்ய வேண்டும். அல்லது அல்லாஹ்வையும், வானவர்களையும் நேரில் நீர் கொண்டு வர வேண்டும். அல்லது தங்கத்தால் உமக்கு ஒரு வீடு இருக்க வேண்டும். அல்லது வானத்தில் நீர் ஏற வேண்டும். நாங்கள் வாசிக்கும் விதமாக எங்களிடம் ஒரு புத்தகத்துடன் இறங்கினால் தவிர நீர் ஏறிச் சென்றதை நம்ப மாட்டோம் (எனவும் கூறுகின்றனர்)  என் இறைவன் தூயவன். நான் மனிதனாகவும், தூதராகவுமே இருக்கிறேன்  என்று (முஹம்மதே!) கூறுவீராக!

திருக்குர்ஆன் 17:90-93

மேற்கண்ட அற்புதங்களை நிகழ்த்திக் காட்டுவது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதானது தான். இவை அனைத்தையும் செய்து காட்டுமாறு அவர்கள் கோரிக்கை வைக்கவில்லை. இவற்றில் ஏதேனும் ஒன்றைத் தான் கோரினார்கள். அவ்வாறு செய்து காட்டினால் நபிகள் நாயகத்தை நம்புவதாகவும் கூறினார்கள்.

மனிதன் என்றும் இறைவனின் தூதர் என்றும் வாதிடும் என்னிடம் இறைவனிடம் கேட்பதை எப்படிக் கேட்க முடியும்? என்ற கருத்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அளித்த பதிலில் அடங்கியுள்ளது.

அற்புதங்களை நிகழ்த்துபவன் அல்லாஹ் தான். அவன் நாடும் போது மனிதர்கள் மூலம் வெளிப்படுத்துகிறான் என்பதைப் புரிந்து கொள்ள இந்த ஆதாரங்கள் போதுமானவையாகும்.

அற்புதங்களைச் செய்பவன் அல்லாஹ் மட்டுமே என்பதைப் புரிந்து கொள்ள மற்றொரு கோணத்திலும் நாம் சிந்திக்க வேண்டும்.

நபிமார்கள் கொல்லப்பட்டது ஏன்?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன் எண்ணற்ற நபிமார்கள் அனுப்பப்பட்டனர். அவர்களில் ஏராளமான நபிமார்களை அவர்களின் எதிரிகள் கொன்று விட்டனர். இதைப் பின்வரும் வசனங்களில் காணலாம்.

அல்லாஹ்வின் உடன்படிக்கையும், மனிதர்களின் உடன்படிக்கையும் இருந்தால் தவிர அவர்கள் எங்கிருந்த போதும் அவர்களுக்கு இழிவு விதிக்கப்பட்டு விட்டது. அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளானார்கள். அவர்களுக்கு வறுமை விதிக்கப்பட்டு விட்டது. அல்லாஹ்வின் வசனங்களை அவர்கள் ஏற்க மறுத்ததும், நபிமார்களை அநியாயமாகக் கொலை செய்ததுமே இதற்குக் காரணம். மேலும் அவர்கள் பாவம் செய்ததும் வரம்பு மீறியதும் இதற்குக் காரணம்.

திருக்குர்ஆன் 3:112

திருக்குர்ஆன் 3:21, 2:61, 2:91, 2:87, 3:183 ஆகிய வசனங்களிலும் நபிமார்களை அவர்களின் எதிரிகள் கொலை செய்ததை அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

நினைத்த மாத்திரத்தில் அற்புதம் நிகழ்த்தும் சக்தி நபிமார்களுக்கு வழங்கப்பட்டிருந்தால் அவர்கள் ஏன் கொல்லப்பட்டனர்? யாரேனும் நம்மைக் கொல்ல வந்தால் நம்மிடம் உள்ள வலிமையைப் பயன்படுத்தி அதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பது கட்டாயக் கடமை. கை கட்டிக் கொண்டு தலையை நீட்ட மார்க்கத்தில் அனுமதி இல்லை.

அற்புதம் நிகழ்த்தும் ஆற்றல் நபிமார்களிடம் இருந்திருந்தால் எதிரிகள் கொல்ல வரும் போது அதைப் பயன்படுத்தும் கடமை அவர்களுக்கு உண்டு. அற்புதத்தைப் பயன்படுத்தியிருந்தால் அவர்களை யாராலும் கொன்றிருக்கவே முடியாது. ஆனாலும் அவர்கள் கொல்லப்பட்டனர். எனவே அற்புதங்கள் நிகழ்த்தும் அதிகாரம் அல்லாஹ்வுடையதே தவிர நபிமார்களுக்கோ, மற்றவர்களுக்கோ உரியதன்று என்பதை இதிலிருந்து அறிய முடியும்.

நபிமார்கள் துன்பப்பட்டது ஏன்?

நபிமார்கள் பட்ட துன்பங்களை திருக்குர்ஆன் பல இடங்களில் கூறுகிறது.

நபிமார்கள் வறுமையில் வாடியுள்ளனர்.

சமுதாயத்திலிருந்து நீக்கி வைக்கப்பட்டனர்.

அடித்துச் சித்திரவதை செய்யப்பட்டனர்.

நாட்டை விட்டு விரட்டப்பட்டனர்.

திருக்குர்ஆனில் ஏராளமான இடங்களில் இது பற்றிக் கூறப்பட்டுள்ளது.

உங்களுக்கு முன் சென்றோருக்கு ஏற்பட்டது போல் உங்களுக்கும் ஏற்படாமல் சொர்க்கத்தில் நுழையலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? அவர்களுக்கு வறுமையும், துன்பமும் ஏற்பட்டன. அல்லாஹ்வின் உதவி எப்போது? என்று (இறைத்) தூதரும் அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரும் கூறுமளவுக்கு அலைக்கழிக்கப்பட்டனர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் உதவி அருகிலேயே உள்ளது.

திருக்குர்ஆன் 2:214

முடிவில் தூதர்கள் நம்பிக்கை இழந்து, தாங்கள் நிராகரிக்கப்பட்டு விட்டோம் என்று எண்ணிய போது நமது உதவி அவர்களிடம் வந்தது. நாம் நாடியோர் காப்பாற்றப்பட்டனர். குற்றம் புரிந்த கூட்டத்தை விட்டும் நமது வேதனை நீக்கப்படாது.

திருக்குர்ஆன் 12:110

அல்லாஹ்வையே சாராதிருக்க எங்களுக்கு என்ன நேர்ந்தது? அவன் எங்களுக்கு எங்களின் பாதைகளைக் காட்டி விட்டான். நீங்கள் எங்களுக்கு அளிக்கும் துன்பங்களைச் சகித்துக் கொள்வோம். உறுதியான நம்பிக்கை வைப்போர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்  (என்றும் கூறினர்.)

திருக்குர்ஆன் 14:12

நமது அடியார் அய்யூபை நினைவூட்டுவீராக! வேதனையாலும், துன்புறுத்தலாலும் ஷைத்தான் என்னைத் தீண்டி விட்டான் என்று தமது இறைவனிடம் அவர் பிரார்த்தித்த போது, உமது காலால் மிதிப்பீராக! இதோ குளிர்ந்த குளிக்குமிடம்! பானம்! (எனக் கூறினோம்).

திருக்குர்ஆன் 38:41,42

(முஹம்மதே!) அவர்கள் கூறுவது உம்மைக் கவலையில் ஆழ்த்துவதை அறிவோம். அவர்கள் உம்மைப் பொய்யரெனக் கூறவில்லை. மாறாக அநீதி இழைத்தோர் அல்லாஹ்வின் வசனங்களையே மறுக்கின்றனர்.

திருக்குர்ஆன் 6:33

(முஹம்மதே!) உமக்கு முன் சென்ற தூதர்கள் பொய்யரெனக் கருதப்பட்டுள்ளனர். அவர்கள் பொய்யரெனக் கருதப்பட்டதையும், தொல்லைப்படுத்தப்பட்டதையும் சகித்துக் கொண்டனர். முடிவில் அவர்களுக்கு நமது உதவி வந்தது. அல்லாஹ்வின் வார்த்தைகளை மாற்றுபவன் யாருமில்லை. தூதர்கள் பற்றிய செய்தி உமக்கு (ஏற்கனவே) வந்துள்ளது.

திருக்குர்ஆன் 6:34

அப்படியல்ல! உங்கள் உள்ளங்கள் ஒரு காரியத்தைச் செய்யத் தூண்டி விட்டன. எனவே அழகிய பொறுமையைக் கடைப்பிடிக்கிறேன். அவர்கள் அனைவரையும் அல்லாஹ் என்னிடம் சேர்க்கக் கூடும். அவன் அறிந்தவன்; ஞானமிக்கவன்  என்று அவர் (யஃகூப்) கூறினார். அவர்களை விட்டும் அவர் ஒதுங்கிக் கொண்டார்!  யூஸுஃபுக்கு ஏற்பட்ட துக்கமே  என்றார். கவலையால் அவரது கண்கள் வெளுத்தன. அவர் (துக்கத்தை) அடக்கிக் கொள்பவராக இருந்தார்.  அல்லாஹ்வின் மீது ஆணையாக! உமது உடல் மெலியும் வரை, அல்லது இறக்கும் வரை நீர் யூஸுஃபை நினைத்துக் கொண்டேயிருப்பீர் (போலும்)  என்று அவர்கள் கூறினர். எனது துக்கத்தையும், கவலையையும் அல்லாஹ்விடமே முறையிடுகிறேன். நீங்கள் அறியாததை அல்லாஹ்விடமிருந்து அறிகிறேன்  என்று அவர் கூறினார்.

திருக்குர்ஆன் 12:83-86

அல்லாஹ் உமக்குத் துன்பத்தை ஏற்படுத்தினால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. அவன் உமக்கு நன்மையை ஏற்படுத்தி விட்டால் அவன் அனைத்துப் பொருட்களின் மீது ஆற்றலுடையவன்.

திருக்குர்ஆன் 6:17

அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்  என்று (முஹம்மதே!) கூறுவீராக!

திருக்குர்ஆன் 7:188

நபிமார்களுக்கு அற்புதம் நிகழ்த்தும் ஆற்றல் இருந்தால் காலமெல்லாம் அவர்கள் துன்பத்திற்கு ஆளானது ஏன்? அற்புதம் செய்யும் ஆற்றல் நபிமார்களுக்கு வழங்கப்பட்டிருந்தால் கட்டாயம் அந்த ஆற்றலை அவர்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும்.

அற்புதங்கள் அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ளது என்பதை இதிலிருந்தும் புரிந்து கொள்ளலாம்.

எத்தனையோ நபிமார்கள் பல்வேறு போர்க்களங்களைச் சந்தித்தனர். அதில் எத்தனையோ உற்ற தோழர்களை இழந்தனர். அற்புதம் செய்யும் ஆற்றல் அவர்களிடம் இருந்தால் இதெல்லாம் தேவையில்லை. எந்தச் சேதமும் இல்லாமல் எதிரிகளை அழித்திருக்க முடியும்.

நபிமார்கள் மூலம் சில அற்புதங்கள் நிகழ்ந்தவுடன் அதை அவர்கள் தமது ஆற்றலால் செய்கிறார்கள் என்று தவறாக விளங்கிக் கொள்கின்றனர்.

இதை எப்படி விளங்கிக் கொள்ள வேண்டும்.

நபிமார்கள் மூலம் மட்டுமின்றி மாற்றார்கள் வழியாகவும் அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன. வாயில்லா ஜீவன்கள் வழியாகவும் அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன.

ஹுத் ஹுத் எனும் பறவை சுலைமான் நபியுடன் பேசியது, அப்பறவை இன்னொரு நாட்டை ஆட்சி புரியும் பெண்ணைப் பற்றி அறிந்து கொள்கிறது. அவர்களின் நடவடிக்கைகளையும் அறிந்து சுலைமான் நபியிடம் கூறுகிறது.

பறவைகளை அவர் ஆய்வு செய்தார். ஹுத்ஹுத்  பறவையை நான் காணவில்லையே! அது ஓடி ஒளிந்து விட்டதா? என்றார். அதைக் கடுமையான முறையில் தண்டிப்பேன்; அல்லது அதை அறுத்து விடுவேன். அல்லது அது என்னிடம் தெளிவான சான்றைக் கொண்டு வர வேண்டும் (என்றும் கூறினார்). (அப்பறவை) சிறிது நேரமே தாமதித்தது.  உமக்குத் தெரியாத ஒன்றைத் தெரிந்து ஸபா எனும் ஊரிலிருந்து உறுதியான ஒரு செய்தியை உம்மிடம் கொண்டு வந்துள்ளேன்  என்று கூறியது. நான் ஒரு பெண்ணைக் கண்டேன். அவள் அவர்களை ஆட்சி செய்கிறாள். அவளுக்கு ஒவ்வொரு பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது. அவளுக்கு மகத்தான சிம்மாசனமும் உள்ளது. அவளும், அவளது சமுதாயமும் அல்லாஹ்வையன்றி சூரியனுக்கு ஸஜ்தா செய்யக் கண்டேன். அவர்களின் செயல்களை ஷைத்தான் அவர்களுக்கு அழகாக்கிக் காட்டி, அவர்களை (நல்) வழியை விட்டும் தடுத்துள்ளான். அவர்கள் நேர்வழி பெற மாட்டார்கள் (என்றும் கூறிற்று.) வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை வெளிப்படுத்தும் அல்லாஹ்வுக்கு ஸஜ்தாச் செய்ய மாட்டார்களா? நீங்கள் மறைப்பதையும், வெளிப்படுத்துவதையும் அவன் அறிவான். அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் மகத்தான அர்ஷுக்கு அதிபதி.  நீ உண்மை சொல்கிறாயா? பொய்யர்களில் ஆகி விட்டாயா? என ஆராய்வோம்  என்று அவர் கூறினார்.  எனது இந்தக் கடிதத்தை நீ கொண்டு சென்று அவர்களிடம் அதைப் போடு! பின்னர் அவர்களை விட்டும் விலகி என்ன பதில் தருகிறார்கள் என்று கவனி!  (என்றார்).

திருக்குர்ஆன் 27:20-28

ஹுத் ஹுத் எனும் பறவை மனிதனைப் போல் பகுத்தறிவு பெற்றிருந்தது என்று இதைப் புரிந்து கொள்ள மாட்டோம். சுலைமான் நபிக்காக ஒரே ஒரு பறவைக்கு ஒரே ஒரு தடவை அந்த ஆற்றலை அல்லாஹ் அளித்தான் என்று தான் விளங்க வேண்டும். ஹுத் ஹுத் பறவை அற்புதம் செய்தது என்று புரிந்து கொள்ளாமல் அல்லாஹ், அவன் நிகழ்த்த விரும்பும் அற்புதத்தை இப்பறவையின் மூலம் வெளிப்படுத்தினான் என்பது தான் இதன் பொருள்.

சுலைமான் நபி அவர்கள் தமது படையினருடன் சென்ற போது எறும்புப் புற்றைக் கடந்து சென்றனர். அதை எறும்பு புரிந்து கொண்ட விபரம் திருக்குர்ஆனில் உள்ளது.

அவர்கள் எறும்புப் புற்றின் அருகே வந்த போது  எறும்புகளே! உங்கள் குடியிருப்புகளுக்குள் நுழையுங்கள்! ஸுலைமானும், அவரது படையினரும் அறியாத நிலையில் உங்களை மிதித்து விடக் கூடாது  என்று ஓர் எறும்பு கூறியது.

திருக்குர்ஆன் 27:18

அந்த எறும்புக்கே இந்த ஆற்றல் இருந்தது என்றும், எறும்புக் கூட்டங்களுக்கு இதைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் அளிக்கப்பட்டது என்றும் இதை விளங்கக் கூடாது. இந்தச் சந்தர்ப்பத்தில் அல்லாஹ் தனது அற்புதத்தை அந்த எறும்பின் மூலம் வெளிப்படுத்தினான் என்றே புரிந்து கொள்ள வேண்டும்.

எறும்பு, ஹுத் ஹுத் பறவை மூலம் தனது அற்புதத்தை அல்லாஹ் சில சமயங்களில் வெளிப்படுத்தியதைப் போலவே நபிமார்கள் வழியாகவும் சில சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியுள்ளான்.

பறவைகள், எறும்புகள் ஒரு புறம் இருக்கட்டும். அல்லாஹ்வின் எதிரிகள் வழியாகவும் அல்லாஹ் அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியிருக்கிறான்.

ஸாமிரி என்பவன் மூஸா நபி காலத்தில் வாழ்ந்தவன். அவன் தங்கத்தால் ஒரு காளை மாட்டைச் செய்து அதை இரத்தமும், சதையும் கொண்ட காளையாக ஆக்கி அதைச் சப்தமிடவும் செய்தான். இந்த விபரங்களைப் பின் வரும் வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான்.

அவர்களுக்காக உடலுடன் கூடிய காளைக் கன்றை (ஸாமிரி) வெளிப்படுத்தினான். அது சப்தமும் போட்டது. உடனே அவன் இதுவே உங்கள் இறைவன்; மூஸாவின் இறைவன். அவர் வழிமாறிச் சென்று விட்டார்  என்றான்.  அது எந்தச் சொல்லுக்கும் பதிலளிக்காது என்பதையும், அவர்களுக்குத் தீங்கு செய்யவும், நன்மை செய்யவும் அது அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்பதையும் அவர்கள் கவனிக்க வேண்டாமா? என் சமுதாயமே! இதன் மூலம் சோதிக்கப்பட்டுள்ளீர்கள்! அளவற்ற அருளாளன் தான் உங்கள் இறைவன். எனவே என்னைப் பின்பற்றுங்கள்! எனது கட்டளைக்குக் கட்டுப்படுங்கள்!  என்று இதற்கு முன் அவர்களிடம் ஹாரூன் கூறியிருந்தார்.

திருக்குர்ஆன் 20:88-90

மூஸா நபியின் சமுதாய மக்கள் எந்த அளவு உறுதியுடன் இருக்கிறார்கள் என்பதைச் சோதிக்கும் விதமாக அல்லாஹ் இந்த அற்புதத்தை ஸாமிரி மூலம் நிகழ்த்திக் காட்டினான். என் சமுதாயமே!  இதன் மூலம் சோதிக்கப்பட்டுள்ளீர்கள்  என்று ஹாரூன் நபி கூறியதிலிருந்து இதை அறிந்து கொள்ளலாம்.

நினைத்த மாத்திரத்தில் நினைத்த அற்புதத்தை ஸாமிரி செய்வான் என்று இதைப் புரிந்து கொள்ள முடியாது.

இது போலவே எதிர்காலத்தில் தஜ்ஜால் என்பவனும் சில அற்புதங்களை நிகழ்த்துவான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  கூறினார்கள். இதனால் அவன் நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் செய்யும் ஆற்றலுடையவனாகி விட்டான் என்று புரிந்து கொள்ளக் கூடாது.

صحيح البخاري

1882 – حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّ أَبَا سَعِيدٍ الخُدْرِيَّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: حَدَّثَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدِيثًا طَوِيلًا عَنِ الدَّجَّالِ فَكَانَ فِيمَا حَدَّثَنَا بِهِ أَنْ قَالَ: " يَأْتِي الدَّجَّالُ، وَهُوَ مُحَرَّمٌ عَلَيْهِ أَنْ يَدْخُلَ نِقَابَ المَدِينَةِ، بَعْضَ السِّبَاخِ الَّتِي بِالْمَدِينَةِ، فَيَخْرُجُ إِلَيْهِ يَوْمَئِذٍ رَجُلٌ هُوَ خَيْرُ النَّاسِ، أَوْ مِنْ خَيْرِ النَّاسِ، فَيَقُولُ أَشْهَدُ أَنَّكَ الدَّجَّالُ، الَّذِي حَدَّثَنَا عَنْكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدِيثَهُ، فَيَقُولُ الدَّجَّالُ: أَرَأَيْتَ إِنْ قَتَلْتُ هَذَا، ثُمَّ أَحْيَيْتُهُ هَلْ تَشُكُّونَ فِي الأَمْرِ؟ فَيَقُولُونَ: لاَ، فَيَقْتُلُهُ ثُمَّ يُحْيِيهِ، فَيَقُولُ حِينَ يُحْيِيهِ: وَاللَّهِ مَا كُنْتُ قَطُّ أَشَدَّ بَصِيرَةً مِنِّي اليَوْمَ، فَيَقُولُ الدَّجَّالُ: أَقْتُلُهُ فَلاَ أُسَلَّطُ عَلَيْهِ "

இறந்தவரை ஒரு தடவை அவன் உயிர்ப்பிப்பான். ஆனால் மற்றொரு தடவை அவனால் இதைச் செய்ய முடியாது என நபிகள் நாயகம் (ஸல்) தெளிவுபடுத்தி விட்டனர்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: புகாரி 1882

ஷைத்தான் கூட எத்தனையோ அற்புதங்களை நிகழ்த்தியுள்ளான். நிகழ்த்திக் கொண்டே இருக்கிறான். மனிதர்களின் உள்ளங்களில் ஊடுறுவி அவர்களது எண்ணங்களையே மாற்றி விடுகிறான்.

இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன? நம் கண் முன்னே ஒருவர் அற்புதத்தை நிகழ்த்திக் காட்டினால் உடனே அவரை மகான் என்றும், அல்லாஹ்வுக்கு விருப்பமான அடியார் என்றும் கருதி விடக் கூடாது. மனிதர்களைச் சோதித்துப் பார்க்க கெட்டவர்களுக்கும் அல்லாஹ் அற்புதம் வழங்குவான் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வளவு சான்றுகளை அல்லாஹ்வின் வேதத்திலிருந்து எடுத்துக் காட்டிய பின்னரும் தங்கள் பழைய நம்பிக்கையை விட்டு விட தயக்கம் காட்டுவோர் இருக்கத் தான் செய்கின்றனர்.

அடக்கத்தலங்களில் அற்புதங்களை எதிர்பார்க்கின்றனர். எவ்வளவோ அற்புதங்கள் தர்காக்களில் நடக்கின்றனவே என்று தங்கள் கூற்றை இவர்கள் நியாயப்படுத்துகின்றனர்.

அற்புதங்கள் பல நிகழ்த்திய ஈஸா நபியை அழைக்கும் கிறித்தவர்களைக் காஃபிர்கள் என்று கூறும் இவர்களுக்கு, ஈஸா நபிக்குச் சமமாகாத மற்றவர்களை அழைப்பது ஈமானாகத் தோற்றமளிப்பது ஆச்சரியமாகவுள்ளது.

பல நபிமார்கள் மூலம் அல்லாஹ் அற்புதங்கள் நிகழ்த்தியதாக நாம் முன்னர் குறிப்பிட்டோம். அவர்கள் மூலம் வெளிப்பட்ட அற்புதங்கள் அவர்கள் உயிரோடு இருக்கும் போது தான் நடந்தன. அவர்கள் மரணித்த பிறகு அவர்கள் வழியாக அற்புதங்கள் நிகழ்ந்தன என்று குர்ஆனிலோ, நபிமொழிகளிலோ கூறப்படவே இல்லை.

ஆனால் இவர்களோ இறந்தவர்களுக்கு அற்புதங்கள் நடப்பதாகக் கூறுகின்றனர்.

صحيح مسلم

4310 – حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ وَقُتَيْبَةُ – يَعْنِى ابْنَ سَعِيدٍ – وَابْنُ حُجْرٍ قَالُوا حَدَّثَنَا إِسْمَاعِيلُ – هُوَ ابْنُ جَعْفَرٍ – عَنِ الْعَلاَءِ عَنْ أَبِيهِ عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « إِذَا مَاتَ الإِنْسَانُ انْقَطَعَ عَنْهُ عَمَلُهُ إِلاَّ مِنْ ثَلاَثَةٍ إِلاَّ مِنْ صَدَقَةٍ جَارِيَةٍ أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ ».

மனிதன் இறந்து விட்டால் அவனது செயல்பாடுகளும் முடிந்து விடுகின்றன என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம்

உயிரோடு இருக்கும் போதே நினைத்த அற்புதங்களை யாரும் நிகழ்த்த முடியாது; இறந்த பின் அறவே எந்தச் செயல்பாடும் கிடையாது என்பது தான் இஸ்லாத்தின் அடிப்படை.

அப்படியானால் தர்காக்களில் அற்புதங்கள் நடக்கின்றனவே? இதை நாங்கள் பார்த்திருக்கிறோமே என்ற வாதத்துக்கு என்ன பதில்?

அற்புதங்கள் நடக்கட்டுமே! அதனால் அவர்களிடம் பிரார்த்திக்கலாம் என்று ஆகிவிடுமா? ஸாமிரியும் தான் அற்புதம் நிகழ்த்தினான். அற்புதத்தைப் பார்த்துத் தான் மக்கள் ஈமானைப் பறிகொடுத்தார்கள்.

நாளை தஜ்ஜால் வந்து அற்புதங்கள் நிகழ்த்திக் காட்டும் போது அவனிடம் துஆச் செய்வார்களா? துஆச் செய்யலாம் எனக் கூறுவார்களா?

அற்புதங்கள் தர்காக்களில் நடக்கின்றன எனக் கூறுகிறார்களே அது கூட உண்மையில்லை. அற்புதங்கள் நிகழ்வதாகப் பரப்பப்படும் வதந்திகள் தான் அத்தகைய எண்ணத்தை ஏற்படுத்தி வருகின்றன.

ஒரு தர்காவுக்கு ஆயிரம் பேர் சென்று பிரார்த்தித்து அதிகமான செல்வத்தை வேண்டுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்களில் ஒருவர் அல்லது இருவர் சில நாட்களில் செல்வந்தராக ஆகி விடக் கூடும். ஆயிரத்தில் 998 பேர் செல்வந்தராக ஆகவில்லையே அது ஏன்? இதைத் தான் சிந்திக்க மறுக்கின்றனர்.

செல்வந்தராகி விட்ட அந்த இரண்டு பேர், 998 பேருக்கும் சேர்த்து பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால் காரியம் கை கூடாத 998 பேர் வாயைத் திறப்பதில்லை.  இவரெல்லாம் ஒரு மகானா  என்று கூறிவிட்டால் ஏதேனும் கேடு விளைந்து விடுமோ என அஞ்சி வாய் திறப்பதில்லை.

இதன் காரணமாகத் தான் தர்காக்களில் அற்புதங்கள் நடக்கின்றன என்ற நம்பிக்கை நிலவுகிறது. எத்தனையோ பேர் தமக்குக் குழந்தை இல்லை என்பதற்காக எல்லா தர்காக்களிலும் ஏறி இறங்கி கடைசி வரை குழந்தை பாக்கியம் கிடைக்காமல் உள்ளதை நாம் பார்க்கிறோம்.

ஆயிரத்தில் இரண்டு என்ற கணக்கில் தர்காக்களில் மட்டும் அற்புதங்கள் நடக்கவில்லை.

மாறாக

கோவில்களில் நடக்கின்றன.

சர்ச்சுகளில் நடக்கின்றன.

இன்னும் பல வழிபாட்டுத் தலங்களில் அற்புதங்கள் நடக்கின்றன.

இவ்வாறு நடப்பதால் தான் கோவில்களிலும், சர்ச்சுகளிலும் தர்காக்களில் குவிவதை விட பல மடங்கு அதிகமாக காணிக்கைகள் குவிகின்றன. தங்கள் கோரிக்கை நிறைவேறிய பிறகு தான் காணிக்கைகள் செலுத்துவர் என்பதை அனைவரும் அறிவோம்.

இவர்களின் வாதப்படி கோவில்களிலும், சர்ச்சுகளிலும் பிரார்த்திப்பது குற்றமில்லை என்று ஆகிவிடும். ஏனெனில் தர்காக்களில் அற்புதங்கள் நிகழ்கின்றனவே என்பது தான் இவர்களின் வாதமாக இருக்கிறது.

ஆயிரத்தில் இரண்டு என்ற அளவில் அற்புதங்கள் நடக்கின்றனவே இது எப்படி நடக்கின்றது என்பதைப் பற்றியும் நாம் அறிந்து கொண்டால் தெளிவு பிறக்கும்.

ஒவ்வொரு காரியமும் நிகழ்வதற்கு அல்லாஹ் ஒரு நேரத்தை நிர்ணயம் செய்துள்ளான். அந்த நேரம் வரும் போது தானாக அந்தக் காரியம் நிறைவேறும்.

அந்த நேரம் வரும் போது தர்காவில் இருப்பவர்கள், அவ்லியா நிகழ்த்திய அற்புதம் என்று நினைத்துக் கொள்கின்றனர்.

அந்த நேரம் வரும்போது கோவிலில் இருப்பவர்கள் சிலையின் அற்புதம் என நினைத்துக் கொள்கின்றனர்.

அந்த நேரம் வரும் போது சர்ச்சுகளில் இருப்பவர்கள் இயேசுவின் அல்லது மேரியின் அற்புதம் என்று நினைத்துக் கொள்கின்றனர்.

இவர்கள் தர்காவுக்கோ, சர்ச்சுக்கோ, கோவிலுக்கோ செல்லாவிட்டாலும் உரிய நேரம் வந்ததும் இவர்களது காரியம் கைகூடி இருக்கும். உரிய நேரம் வந்துவிட்டால் ஒரு விநாடி முந்தவும், பிந்தவும் செய்யாது என்பது குர்ஆனின் போதனை.

ஒவ்வொரு சமுதாயத்துக்கும் கெடு உண்டு. அவர்களின் கெடு வரும் போது சிறிது நேரம் அவர்கள் முந்தவும் மாட்டார்கள். பிந்தவும் மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 7:34

அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கே தீங்கு செய்யவோ, நன்மை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்று (முஹம்மதே!) கூறுவீராக! ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு காலக் கெடு உள்ளது. அவர்களின் காலக்கெடு வரும் போது சிறிது நேரம் அவர்கள் பிந்தவும் மாட்டார்கள். முந்தவும் மாட்டார்கள்.

திருக்குர்ஆன்  10:49

மனிதர்களுடைய அநீதியின் காரணமாக அவர்களை அல்லாஹ் தண்டிப்பதாக இருந்தால் பூமியில் எந்த உயினத்தையும் அவன் விட்டு வைக்க மாட்டான். மாறாக குறிப்பிட்ட காலக்கெடு வரை அவர்களைப் பிற்படுத்தியிருக்கிறான். அவர்களின் கெடு வந்ததும் சிறிது நேரம் பிந்தவும் மாட்டார்கள். முந்தவும் மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 16:61

எனவே அற்புதம் பற்றி தெளிவாக அறிந்து கொண்டால் இந்தக் குழப்பத்திலிருந்து விடுபட முடியும்.

கனவுகள் இறைவனின் கட்டளையாகுமா?

அல்லாஹ்விடம் மட்டும் தான் உதவி தேட வேண்டும் என்பதை ஏற்காதவர்கள் தங்கள் தரப்பில் மற்றொரு வாதத்தையும் முன் வைக்கின்றனர்.

அல்லாஹ்வைத் தவிர யாரிடமும் பிரார்த்திக்கக் கூடாது என்றால் மகான்கள் எங்கள் கனவில் வந்து தர்காவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கிறார்களே! மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட ஒரு காரியத்துக்கு மகான்கள் அழைப்பார்களா? என இவர்கள் கேட்கின்றனர்.

கனவுகள் பற்றி இவர்கள் சரியான முறையில் அறியாததே இந்த வாதத்துக்குக் காரணம்.

صحيح البخاري

110 – حَدَّثَنَا مُوسَى، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «تَسَمَّوْا بِاسْمِي وَلاَ تَكْتَنُوا بِكُنْيَتِي، وَمَنْ رَآنِي فِي المَنَامِ فَقَدْ رَآنِي، فَإِنَّ الشَّيْطَانَ لاَ يَتَمَثَّلُ فِي صُورَتِي، وَمَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ»

யார் கனவில் என்னைக் காண்கிறாரோ அவர் என்னையே கண்டார். ஏனெனில் ஷைத்தான் என் வடிவில் வர மாட்டான்  என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 110, 6197

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வடிவத்தில் தவிர மற்ற எவருடைய வடிவத்திலும், எவருடைய பெயரைக் கூறிக் கொண்டும் ஷைத்தான் கனவில் வருவான் என்பது இந்த ஹதீஸின் கருத்தாகும்.

கனவில் நான் தான் அப்துல் காதிர் ஜிலானி  என்று கூறுவதால் அவர் அப்துல் காதிர் ஜிலானியாக மாட்டார். ஷைத்தானே கனவில் வந்து  நான் தான் அப்துல் காதிர் ஜிலானி  எனக் கூறலாம்.

மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட ஒரு செயலுக்கு – தர்காவில் பிரார்த்தனை செய்யும் செயலுக்கு – அழைப்பு விடுப்பதிலிருந்து வந்தவன் ஷைத்தான் தான் என்பது உறுதியாகின்றது.

கனவில் ஒருவரை நாம் பார்த்து அடையாளம் காண்பது என்றால் அவரை நேரடியாக நாம் பார்த்திருக்க வேண்டும். நாம் நேரில் சந்தித்திராத ஒருவரை கனவில் பார்த்து இன்னார் என்று கண்டு பிடிக்க முடியாது.

கனவில் அப்துல் காதிர் ஜிலானியைப் பார்த்ததாகக் கூறுவோர் அவர் காலத்தில் வாழவில்லை. அவரை நேரடியாகப் பார்த்ததுமில்லை. பிறகு எப்படி இவர் தான் அப்துல் காதிர் ஜிலானி என்று கண்டுபிடித்தார்கள்?

கனவில் ஒருவர் வருகிறார் என்றால் அவரே வருகிறார் என்று பொருள் இல்லை. உதாரணமாக என்னை நீங்கள் கனவில் கண்டால் அது எனக்குத் தெரியாது. நான் நேற்றிரவு உங்கள் கனவில் வந்தேனே என்று என்னால் உங்களிடம் கூற முடியாது. கனவில் என்னை யாராவது கண்டாலும் நான் எதையாவது கூறுவதாகக் கண்டாலும் அதற்கும், எனக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.

ஒரு மகானையே கனவில் கண்டால் கூட அந்த மகானுக்கு இன்னார் கனவில் நாம் வருகிறோம் என்பது தெரியாது. நல்ல நோக்கத்திற்காகவும், சோதித்துப் பார்ப்பதற்காகவும் கனவுகளில் பலவிதமான காட்சிகளை அல்லாஹ் காட்டுவான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டு விட்டதால் மார்க்க சம்மந்தமான எந்த உத்தரவும் கனவில் வராது. மார்க்கத்தின் கட்டளைகளுக்கு எதிரான எந்த உத்தரவும் அல்லாஹ்விடமிருந்து கனவில் வராது.

எனவே ஒரு மகானையே கனவில் கண்டாலும் அவர் என்ன கூறினாலும் அவர் மகானுமல்ல, அவர் கூறுவது மார்க்கமும் அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்வதைப் போல் கனவு கண்டால் காலையில் எழுந்தவுடன் கிணற்றில் விழுந்து சாக மாட்டோம். பெரும் தொகையை ஒருவருக்கு கொடுப்பதைப் போல் நாம் கனவு கண்டால் விழித்தவுடன் அத்தொகையை அவரிடம் கொடுத்து விட மாட்டோம்.

உலக விஷயங்களில் மிகவும் விழிப்போடு தான் இருக்கிறோம். கனவில் கண்டதையெல்லாம் செய்ய முடியுமா என்று கேள்வி கேட்டு கனவில் காண்பதை நடைமுறைப்படுத்தாமல் உலக விஷயங்களில் தவிர்த்து வருகிறோம்.

ஆனால் மார்க்க விஷயத்தில் தான் கனவைக் காரணம் காட்டி நாசமாகிறோம்.

நபிமார்களின் கனவுகள் தான் முழுக்க முழுக்க வஹீயாகும். இதன் காரணமாகத் தான் மகனை அறுப்பதாகக் கனவு கண்ட இப்ராஹீம் நபி அவர்கள் அதை நடைமுறைப்படுத்தத் தயாரானார்கள். மற்ற எவரது கனவும் நடைமுறைப்படுத்த வேண்டியவை அல்ல.

நமக்கு எதிர்காலத்தில் நடக்கக் கூடிய சில பயன்களை முன்கூட்டியே சில நேரத்தில் கனவு மூலம் அறிவிக்கப்படலாம். ஆனால் மார்க்கக் கட்டளைகள் ஒன்று கூட கனவில் வராது. இதைப் புரிந்து கொள்ள பின்வரும் நபிமொழி உதவுகிறது.

صحيح البخاري

6990 – حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، حَدَّثَنِي سَعِيدُ بْنُ المُسَيِّبِ: أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «لَمْ يَبْقَ مِنَ النُّبُوَّةِ إِلَّا المُبَشِّرَاتُ» قَالُوا: وَمَا المُبَشِّرَاتُ؟ قَالَ: «الرُّؤْيَا الصَّالِحَةُ»

நற்செய்தி கூறக்கூடியவை தவிர, வஹியில் எதுவும் மிச்சமாக இருக்கவில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நற்செய்தி கூறக்கூடியவை என்றால் என்ன என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நல்ல கனவுகள் என விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6990

நற்செய்திகள் தான் கனவில் வர முடியுமே தவிர மார்க்கத்தின் எந்தச் சட்டமும் கனவில் வராது.

மறுமையில் பரிந்துரை

நல்லடியார்களும், நபிமார்களும் மறுமையில் பரிந்துரை செய்வார்களே என்ற காரணத்தைக் கூறி தங்கள் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவோர் உள்ளனர். இதன் காரணமாகவே அவ்லியாக்களின் ஷபாஅத்தை வேண்டுகிறோம் என்றும் கூறுகின்றனர்.

பரிந்துரை பற்றி சரியான விளக்கம் இல்லாதது தான் இந்த வாதத்தின் அடிப்படை.

எந்த ஆத்மாவும் எந்த ஆத்மாவுக்கும் எதனையும் செய்து விட முடியாத, எந்த ஆத்மாவிடமிருந்தும் எந்தப் பரிந்துரையும் ஏற்றுக் கொள்ளப்படாத ஒரு நாளை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள்.

திருக்குர்ஆன் 2:48

அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்?

திருக்குர்ஆன் 2:255

அவனது அனுமதியின்றி எந்தப் பரிந்துரைப்பவனும் இல்லை. அவனே அல்லாஹ். உங்கள் இறைவன். அவனை வணங்குங்கள்! படிப்பினை பெற மாட்டீர்களா?

திருக்குர்ஆன் 10:3

அந்நாளில் அளவற்ற அருளாளன் யாருக்கு அனுமதியளித்து அவரது சொல்லையும் பொருந்திக் கொண்டானோ அவரைத் தவிர எவரது பரிந்துரையும் பயனளிக்காது.

திருக்குர்ஆன் 20:109

யாருக்கு அவன் அனுமதியளித்தானோ அவருக்கே தவிர அவனிடம் பரிந்துரை பயன் தராது.

திருக்குர்ஆன் 34:23

இந்த வசனங்களையும் இந்தக் கருத்தில் அமைந்த ஏனைய வசனங்களையும் நாம் ஆராயும் போது பரிந்துரை செய்வதற்காக இறைவன் சிலருக்கு அனுமதி வழங்குவான். அதை ஏற்றுக் கொள்ளவும் செய்வான் என்ற கருத்தைப் பெற முடிகின்றது.

ஒரு நபியோ, அல்லது மற்றவர்களோ தாங்கள் எப்போது விரும்புகிறார்களோ அப்போதெல்லாம் பரிந்துரைக்க முடியாது. அப்படியே அவர்கள் பரிந்துரைத்தாலும் அவர்களின் அனைத்துப் பரிந்துரைகளும் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படாது.

صحيح البخاري

0 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ المُغِيرَةِ بْنِ النُّعْمَانِ، شَيْخٌ مِنَ النَّخَعِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: خَطَبَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: " إِنَّكُمْ مَحْشُورُونَ إِلَى اللَّهِ حُفَاةً عُرَاةً غُرْلًا، {كَمَا بَدَأْنَا أَوَّلَ خَلْقٍ نُعِيدُهُ، وَعْدًا عَلَيْنَا إِنَّا كُنَّا فَاعِلِينَ} [الأنبياء: 104]، ثُمَّ إِنَّ أَوَّلَ مَنْ يُكْسَى يَوْمَ القِيَامَةِ إِبْرَاهِيمُ، أَلاَ إِنَّهُ يُجَاءُ بِرِجَالٍ مِنْ أُمَّتِي، فَيُؤْخَذُ بِهِمْ ذَاتَ الشِّمَالِ، فَأَقُولُ: يَا رَبِّ أَصْحَابِي، فَيُقَالُ: لاَ تَدْرِي مَا أَحْدَثُوا بَعْدَكَ، فَأَقُولُ كَمَا قَالَ العَبْدُ الصَّالِحُ: {وَكُنْتُ عَلَيْهِمْ شَهِيدًا، مَا دُمْتُ فِيهِمْ} [المائدة: 117] إِلَى قَوْلِهِ {شَهِيدٌ} [المائدة: 117] فَيُقَالُ: إِنَّ هَؤُلاَءِ لَمْ يَزَالُوا مُرْتَدِّينَ عَلَى أَعْقَابِهِمْ مُنْذُ فَارَقْتَهُمْ "

நான் ஹவ்லு (அல்கவ்ஸர்) எனும் தடாகத்தினருகே இருப்பேன். யார் என்னைக் கடந்து செல்கிறாரோ அவர் அதிலிருந்து அருந்துவார். அதை அருந்தியவர் ஒரு போதும் தாகிக்க மாட்டார். அப்போது என்னருகே சில சமூகத்தினர் (நீரருந்த) வருவார்கள். அவர்களை நானும் அறிவேன். அவர்களும் என்னை அறிவார்கள். அப்போது எனக்கும் அவர்களுக்குமிடையே தடை ஏற்படுத்தப்படும்.  அவர்கள் என்னைச் சேர்ந்தவர்களாயிற்றே என்று நான் கூறுவேன். உமக்குப் பின்னால் அவர்கள் புதிதாக உருவாக்கியவற்றை நிச்சயம் நீர் அறிய மாட்டீர் என்று என்னிடம் கூறப்படும். எனக்குப் பின்னால் (மார்க்கத்தை) மாற்றி விட்டவர்களுக்குக் கேடு உண்டாகட்டும் என்று நான் கூறுவேன் என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃது (ரலி)

நூல்: புகாரி 4740, 6526, 6576, 6585, 6586, 7949

صحيح البخاري

4476 – حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هِشَامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ح وقَالَ لِي خَلِيفَةُ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " يَجْتَمِعُ المُؤْمِنُونَ يَوْمَ القِيَامَةِ، فَيَقُولُونَ: لَوِ اسْتَشْفَعْنَا إِلَى رَبِّنَا، فَيَأْتُونَ آدَمَ فَيَقُولُونَ: أَنْتَ أَبُو النَّاسِ، خَلَقَكَ اللَّهُ بِيَدِهِ، وَأَسْجَدَ لَكَ مَلاَئِكَتَهُ، وَعَلَّمَكَ أَسْمَاءَ كُلِّ شَيْءٍ، فَاشْفَعْ لَنَا عِنْدَ رَبِّكَ حَتَّى يُرِيحَنَا مِنْ مَكَانِنَا هَذَا، فَيَقُولُ: لَسْتُ هُنَاكُمْ، وَيَذْكُرُ ذَنْبَهُ فَيَسْتَحِي، ائْتُوا نُوحًا، فَإِنَّهُ أَوَّلُ رَسُولٍ بَعَثَهُ اللَّهُ إِلَى أَهْلِ الأَرْضِ، فَيَأْتُونَهُ فَيَقُولُ: لَسْتُ هُنَاكُمْ، وَيَذْكُرُ سُؤَالَهُ رَبَّهُ مَا لَيْسَ لَهُ بِهِ عِلْمٌ فَيَسْتَحِي، فَيَقُولُ: ائْتُوا خَلِيلَ الرَّحْمَنِ، فَيَأْتُونَهُ فَيَقُولُ: لَسْتُ هُنَاكُمْ، ائْتُوا مُوسَى، عَبْدًا كَلَّمَهُ اللَّهُ وَأَعْطَاهُ التَّوْرَاةَ، فَيَأْتُونَهُ فَيَقُولُ: لَسْتُ هُنَاكُمْ، وَيَذْكُرُ قَتْلَ النَّفْسِ بِغَيْرِ نَفْسٍ، فَيَسْتَحِي مِنْ رَبِّهِ، فَيَقُولُ: ائْتُوا عِيسَى عَبْدَ اللَّهِ وَرَسُولَهُ، وَكَلِمَةَ اللَّهِ وَرُوحَهُ، فَيَقُولُ: لَسْتُ هُنَاكُمْ، ائْتُوا مُحَمَّدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَبْدًا غَفَرَ اللَّهُ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَا تَأَخَّرَ، فَيَأْتُونِي، فَأَنْطَلِقُ حَتَّى أَسْتَأْذِنَ عَلَى رَبِّي، فَيُؤْذَنَ لِي، فَإِذَا رَأَيْتُ رَبِّي وَقَعْتُ سَاجِدًا، فَيَدَعُنِي مَا شَاءَ اللَّهُ، ثُمَّ يُقَالُ: ارْفَعْ رَأْسَكَ وَسَلْ تُعْطَهْ، وَقُلْ يُسْمَعْ وَاشْفَعْ تُشَفَّعْ، فَأَرْفَعُ رَأْسِي، فَأَحْمَدُهُ بِتَحْمِيدٍ يُعَلِّمُنِيهِ، ثُمَّ أَشْفَعُ فَيَحُدُّ لِي حَدًّا، فَأُدْخِلُهُمُ الجَنَّةَ، ثُمَّ أَعُودُ إِلَيْهِ فَإِذَا رَأَيْتُ رَبِّي مِثْلَهُ، ثُمَّ أَشْفَعُ فَيَحُدُّ لِي حَدًّا، فَأُدْخِلُهُمُ الجَنَّةَ، ثُمَّ أَعُودُ الرَّابِعَةَ، فَأَقُولُ مَا بَقِيَ فِي النَّارِ إِلَّا مَنْ حَبَسَهُ القُرْآنُ، وَوَجَبَ عَلَيْهِ الخُلُودُ " قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: إِلَّا مَنْ حَبَسَهُ القُرْآنُ، يَعْنِي قَوْلَ اللَّهِ تَعَالَى: {خَالِدِينَ فِيهَا} [البقرة: 162]

4476 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமை நாளில் நம்பிக்கையாளர்கள் ஒன்றுகூடி, நம் இறைவனிடம் நாம் மன்றாடினால் (எவ்வளவு நன்றாயிருக்கும்!) என்று (தங்களிடையே) பேசிக் கொள்வார்கள். பிறகு, அவர்கள் ஆதம் (அலை) அவர்களிடம் வந்து, நீங்கள் மனிதர்களின் தந்தையாவீர்கள். அல்லாஹ், தன் கையால் உங்களைப் படைத்தான். தன்னுடைய வானவர்களை உங்களுக்குச் சிரம் பணியச் செய்தான். மேலும், உங்களுக்கு எல்லாப் பொருள்களின் பெயர்களையும் கற்றுத் தந்தான். எனவே, இந்த(ச் சோதனையான) கட்டத்திலிருந்து எங்களை விடுவிப்பதற்காக உங்களுடைய இறைவனிடத்தில் எங்களுக்காகப் பரிந்துரை செய்யுங்கள் என்று சொல்வார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள், (நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை என்று கூறிவிட்டு, தாம் புரிந்த பாவத்தை நினைத்துப் பார்த்து வெட்கப்படுவார்கள். நீங்கள் (நபி) நூஹ் அவர்களிடம் செல்லுங்கள். ஏனென்றால், அவர் (எனக்குப் பின்) பூமியிலுள்ளவர்களுக்கு அல்லாஹ் அனுப்பிவைத்த (முக்கிய) தூதர்களில் முதலாமவர் ஆவார் என்று சொல்வார்கள்.

உடனே, நம்பிக்கையாளர்கள் நூஹ் (அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவரும், (நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை என்று கூறிவிட்டு, தாம் அறியாத ஒன்றைக் குறித்துத் தம் இறைவனிடத்தில் கேட்டதை நினைத்து வெட்கப்படுவார்கள். பிறகு, நீங்கள் கருணையாளனின் உற்ற நண்பரிடம் (இப்ராஹீம் (அலை) அவர்களிடம்) செல்லுங்கள் என்று சொல்வார்கள். உடனே,  நம்பிக்கையாளர்கள் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவர்களும், (நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை. அல்லாஹ் உரையாடி, தவ்ராத்தையும் அளித்த அடியாரான (நபி) மூஸாவிடம் நீங்கள் செல்லுங்கள் என்று சொல்வார்கள். உடனே, அவர்கள் மூஸா (அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவர்கள், (நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை என்று கூறிவிட்டு, (தம் வாழ்நாளில் ஒரு முறை) எந்த உயிருக்கும் ஈடாக இல்லாமல் ஒரு (மனித) உயிரைக் கொன்றதை நினைவு கூர்ந்து தம் இறைவனுக்கு முன் வெட்கப்படுவார்கள். பிறகு, நீங்கள் அல்லாஹ்வின் அடியாரும், அவனுடைய தூதரும், அவனுடைய வார்த்தையும், அவனுடைய ஆவியுமான (நபி) ஈசாவிடம் செல்லுங்கள் என்று சொல்வார்கள். (அவ்வாறே அவர்கள் செல்ல,) அப்போது அவர்களும், (நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை. நீங்கள் முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட அடியாரான முஹம்மத் (ஸல்) அவர்களிடம் செல்லுங்கள் என்று சொல்வார்கள்.

உடனே, அவர்கள் என்னிடம் வருவார்கள். அப்போது நான், என்னுடைய இறைவனிடத்தில் அனுமதி கேட்பதற்காகச் செல்வேன். அப்போது (எனக்கு) அனுமதி வழங்கப்படும். என் இறைவனை நான் காணும் போது சஜ்தாவில் விழுவேன். தான் விரும்பிய வரையில் (அப்படியே) என்னை அவன் விட்டு விடுவான். பிறகு, (இறைவனின் தரப்பிலிருந்து) உங்கள் தலையை உயர்த்துங்கள்! கேளுங்கள்; உங்களுக்குத் தரப்படும். சொல்லுங்கள்; செவியேற்கப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும் என்று சொல்லப்படும். அப்போது நான் எனது தலையை உயர்த்தி, இறைவன் எனக்குக் கற்றுத் தரும் புகழ் மொழிகளைக் கூறி அவனைப் புகழ்வேன். பிறகு நான் பரிந்துரை செய்வேன். அப்போது இறைவன், (நான் யார் யாருக்குப் பரிந்துரை செய்யலாம் என்பதை வரையறுத்து) எனக்கு வரம்பு விதிப்பான். பிறகு அவர்களை நான் சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன். பிறகு மீண்டும் நான் இறைவனிடம் செல்வேன். என் இறைவனைக் காணும் போது நான் முன்பு போலவே செய்வேன். பிறகு நான் பரிந்துரைப்பேன். அப்போதும் இறைவன், (நான் யார் யாருக்குப் பரிந்துரை செய்யலாம் என்பதை வரையறுத்து) எனக்கு வரம்பு விதிப்பான். பிறகு, நான் அவர்களைச் சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன். பிறகு மூன்றாம் முறையாக (இறைவனிடம்) நான் செல்வேன். பிறகு நான்காம் முறையும் செல்வேன். (இறுதியாக) நான், குர்ஆன் தடுத்துவிட்ட, நிரந்தர நரகம் கட்டாயமாகி விட்டவர்களைத் தவிர வேறு யாரும் நரகத்தில் மிஞ்சவில்லை என்று சொல்வேன்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி

பரிந்துரை செய்தல் மறுமையில் உண்டு என்பதையும், இறைவன் அனுமதி வழங்கும் போது மட்டும் தான் பரிந்துரை செய்ய முடியும் என்பதையும் இந்த ஹதீஸிலிருந்து அறியலாம்.

மேலும் யார் இறைவனுக்கு இணை வைத்து விட்டார்களோ அவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பரிந்துரை செய்ய மாட்டார்கள் என்பதையும் பின் வரும் ஹதீஸ் அறிவிக்கின்றது.

صحيح مسلم

512 – حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ وَأَبُو كُرَيْبٍ – وَاللَّفْظُ لأَبِى كُرَيْبٍ – قَالاَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنِ الأَعْمَشِ عَنْ أَبِى صَالِحٍ عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « لِكُلِّ نَبِىٍّ دَعْوَةٌ مُسْتَجَابَةٌ فَتَعَجَّلَ كُلُّ نَبِىٍّ دَعْوَتَهُ وَإِنِّى اخْتَبَأْتُ دَعْوَتِى شَفَاعَةً لأُمَّتِى يَوْمَ الْقِيَامَةِ فَهِىَ نَائِلَةٌ إِنْ شَاءَ اللَّهُ مَنْ مَاتَ مِنْ أُمَّتِى لاَ يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا ».

எனது உம்மத்தில் அல்லாஹ்வுக்கு எதனையும் இணை வைக்காதவர்களுக்கே என் பரிந்துரை, என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அவ்ஃப் பின் மாலிக் (ரலி)

நூல்: முஸ்லிம்

நபிமார்கள் மற்றும் பெரியார்களின் பரிந்துரையை எதிர்பார்த்து அவர்களை அல்லாஹ்வுக்கு இணை வைப்பவர்களுக்கு அதுவே பரிந்துரைக்குத் தடையாகிப் போகும். இதை சமாதி வழிபாட்டுக்காரர்கள் உணர வேண்டும். பரிந்துரை செய்ய ஒருவருக்கு அனுமதியளிப்பது இறைவனது தனிப்பட்ட அதிகாரத்தின் பாற்பட்டது என்பதை உணர்ந்தால் இத்தகைய இணை வைத்தலில் இறங்க மாட்டார்கள்.

வானங்களில் எத்தனையோ வானவர்கள் உள்ளனர். தான் நாடியோருக்கு அல்லாஹ் அனுமதியளித்து பொருந்திக் கொண்டவருக்காக தவிர (மற்றவர்களுக்காக) அவர்களின் பரிந்துரை சிறிதும் பயன் தராது.

திருக்குர்ஆன் 53:26

அவர்களுக்கு முன்னும், பின்னும் உள்ளதை அவன் அறிவான். அவன் பொருந்திக் கொண்டோருக்காகவே தவிர (மற்றவருக்கு) அவர்கள் பரிந்துரை செய்ய மாட்டார்கள். அவர்கள் அவனது அச்சத்தால் நடுங்குவார்கள்.

திருக்குர்ஆன் 21:28

அறவே பரிந்துரை கிடையாது என்பவர்களின் கூற்றும் தவறானது.

பரிந்துரை செய்யும் அதிகாரம் நல்லடியார்களின் கையிலே இருக்கிறது; அவர்கள் தங்களுக்கு விருப்பமானவர்களை நரகிலிருந்து வெளியேற்றி விடுவார்கள் என்ற நம்பிக்கையும் தவறானது.

யாரை, எப்போது, யாருக்காகப் பரிந்துரை செய்ய அனுமதிப்பது என்ற அதிகாரம் இறைவனுக்கே உரியது என்ற காரணத்தினால் தான் – மக்கத்து காஃபிர்கள் இறைவனை மறுக்காதவர்களாக இருந்தும் இறைவனின் வல்லமையை ஏற்றுக் கொண்டவர்களாக இருந்தும், பெரியோர்கள் சுயமாகப் பரிந்துரை செய்வார்கள் என்று கருதி அவர்களைத் திருப்திபடுத்த முயன்ற போது அவர்களைக் காஃபிர்கள் என்று இறைவன் பிரகடனம் செய்தான்.

வஸீலா தேடுவது தவறா?

அடக்கம் செய்யப்பட்ட நல்லடியார்களிடம் எதையும் கேட்கக் கூடாது என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகளை முன் வைத்தாலும் அவற்றுக்கு எந்த மறுப்பும் சொல்ல முடியாதவர்கள் பொருத்தமில்லாத வாதங்கள் மூலம் தமது நிலையை நியாயப்படுத்த முயல்கின்றனர்.

அல்லாஹ் திருக்குர்ஆனில்

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அவனை நோக்கி ஒரு வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள்! அவன் பாதையில் அறப்போர் செய்யுங்கள்! வெற்றி பெறுவீர்கள்.

திருக்குர்ஆன் 5:35

என்று கூறுகிறான்.

வஸீலா தேடுமாறு அல்லாஹ்வே கட்டளையிடுவதால் தான் நாங்கள் அவ்லியாக்களிடம் வஸீலா தேடுகிறோம் என்று வாதிடுகின்றனர்.

அல்லாஹ்வே வஸீலா தேடுமாறு கட்டளையிட்டிருக்கும் போது அதை எவரும் மறுக்க முடியாது. மறுக்கவும் கூடாது.

ஆனால் வஸீலா என்பது என்னவென்பதில் இவர்கள் தவறு செய்கிறார்கள்.

வஸீலா என்பதன் பொருள் துணைச் சாதனம். கடலில் பயணம் செய்ய உதவும் கப்பல் வஸீலா எனப்படும். மேலே ஏறுவதற்கு உதவும் ஏணி அதற்கான வஸீலா எனப்படும். அல்லாஹ்வின் பால் வஸீலாவைத் தேடுங்கள் என்று அல்லாஹ் கூறுவதன் பொருள் அல்லாஹ்வின் பால் நெருங்குவதற்கான சாதனங்களைத் தேடுங்கள் என்பதாகும்.

அல்லாஹ்வின் பால் நெருங்குவதற்கான சாதனமாக தொழுகை, பொறுமை இன்ன பிற வணக்கங்கள் தான் குர்ஆனில் கூறப்பட்டுள்ளனவே தவிர, ஒரு நபர் மூலம் அல்லாஹ்வை நெருங்கலாம் என்று எந்த இடத்திலும் கூறப்படவில்லை. வஸீலா என்பதற்கு இடைத்தரகர் என்ற பொருளும் கிடையாது.

அல்லாஹ்விடம் நாம் எதையும் கேட்பது என்றால் அவனது கட்டளைகளை நிறைவேற்றி விட்டு, அவனுக்காக ஒரு வணக்கத்தை நிறைவேற்றி விட்டு அவனிடம் கேட்க வேண்டும். அந்த நல்லறத்தை வஸீலாவாக ஆக்கிக் கொள்ள வேண்டும். இது தான் இவ்வசனத்தின் கருத்தேயன்றி நல்லடியார்களின் சமாதிகளைக் கட்டி அழுங்கள் என்பது இதன் பொருள் அல்ல.

இதை இன்னும் உறுதியாக அறிந்து கொள்ள இந்த வசனத்திலேயே ஆதாரம் உள்ளது. எப்படியென்று பார்ப்போம்.

நம்பிக்கையாளர்களே! என்று இவ்வசனம் துவங்குகிறது. இதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் மற்றும் யுக முடிவு நாள் வரை வரக்கூடிய முஸ்லிம்களும் அடங்குவர்.

முஸ்லிம்கள் அனைவருக்கும் இவ்வசனத்தில் மூன்று கட்டளைகளை அல்லாஹ் பிறப்பிக்கிறான்.

முதல் கட்டளை அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் என்பதாகும்.

இந்தக் கட்டளை நமக்கு மட்டுமில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூட இக்கட்டளையின் படி இறைவனை அஞ்சியாக வேண்டும். அவர்கள் அவ்வாறு அஞ்சினார்கள்.

இரண்டாவது கட்டளை அல்லாஹ்வின் பால் வஸீலா தேடுங்கள் என்பதாகும். இக்கட்டளையும் எல்லா முஸ்லிம்களுக்கும் உரியதாகும்.

வஸீலா என்பதற்கு நல்லறங்கள் என்று பொருள் கொண்டால் நல்லறங்கள் செய்யுங்கள் என்ற கட்டளையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நம்மை விட சிறப்பாக நிறைவேற்றியுள்ளதால் இது பொருந்திப் போகிறது.

வஸீலா என்பது நல்லடியார்களைப் பிடித்துக் கொள்வது என்று பொருள் கொண்டால் இந்தக் கட்டளை நபிகள் நாயகத்துக்கும், இன்னும் பல நல்லடியார்களுக்கும் பொருந்தாமல் உள்ளது.

முஹம்மதே! அல்லாஹ்வின் பால் வஸீலாவைத் தேடுங்கள்  அதாவது ஒரு நல்லடியாரைத் தேடுங்கள் என்று பொருள் கொண்டால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தப் பெரியாரை வஸீலாவாக ஆக்கினார்கள்? என்ற கேள்விக்கு இவர்கள் விடை கூற வேண்டும்.

இவர்கள் எந்த மகானிடம் வஸீலா தேடுகிறார்களோ அந்த மகான்களுக்கும் கூட இந்தக் கட்டளை உள்ளது. அந்த மகான்கள் யாரை வஸீலாவாக்கினார்கள்? யாரையும் அவர்கள் வஸீலாவாக்கவில்லையென்றால் இந்தக் கட்டளையை அவர்கள் மீறிவிட்டார்களா?

எனவே வஸீலாவுக்கு இடைத்தரகர் என்று பொருள் கொள்வது உளறலாக இருக்குமே தவிர அதற்கு எந்த அர்த்தமும் இருக்காது.

நாம் ஒரு மனிதரிடம் உதவி தேடிப் போகிறோம். நான் உங்களின் கட்டளைகளை எல்லாம் நிறைவேற்றி வருகின்றேனே எனக்காக உதவக் கூடாதா? என்று கேட்டால் இதில் அர்த்தம் இருக்கிறது.

இப்ராஹீம் உங்கள் சொல்லைக் கேட்டு நடந்ததால் எனக்கு உதவுங்கள்  என்று கேட்டால் நம்மைப் பைத்தியக்காரனாகத் தான் அவர் கருதுவார்.  இப்ராஹீம் என் சொல்லைக் கேட்டு நடந்தால் அவருக்கு நான் உதவுவேன். அவர் நல்லவராக இருந்ததற்காக உனக்கு ஏன் உதவ வேண்டும்  என்று கேட்பார்.

 இன்னார் பொருட்டால் இதைத் தா  என்று இறைவனிடம் இவர்கள் கேட்பதும் இது போன்ற உளறலாக உள்ளது.

 நபிகள் நாயகத்துக்காக எனக்கு இதைத் தா  என்று அல்லாஹ்விடம் கேட்டால் அல்லாஹ்வுக்குக் கோபம் வராதா?

நபிகள் நாயகத்துக்காக உனக்கு ஏன் தர வேண்டும்! நீ எனக்கு என்ன செய்தாய்?  என்று அல்லாஹ் கேட்க மாட்டானா? சாதாரண மனிதனுக்குப் புரிவது கூட அல்லாஹ்வுக்குப் புரியாது என்று இவர்கள் நினைக்கின்றனர்.

ஒருவர் நல்லவராக இருப்பதைச் சுட்டிக் காட்டி இன்னொருவர் உதவி கேட்பதை விட கோமாளித்தனம் எதுவும் இருக்க முடியாது. நம்மிடம் அப்படி யாரேனும் கேட்டால் நமக்குக் கோபம் வருகிறது. ஆனால் அல்லாஹ்விடம் இப்படிக் கோமாளித்தனமாகக் கேட்டால் அவனுக்குக் கோபம் வராது என்று நம்புகிறார்களே! இதை விட அல்லாஹ்வின் கண்ணியத்தைக் குறைக்கும் செயல் வேறு இருக்க முடியாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பாடம் கற்ற நபித்தோழர்கள் நபிகள் நாயகத்தின் கப்ரில் போய் வஸீலா தேடவில்லை. நபிகள் நாயகத்தின் பொருட்டால் இறைவனிடம் துஆச் செய்யவுமில்லை.

எனவே வஸீலா தேடுங்கள் என்ற இறைவனின் கட்டளையை சரியான முறையில் விளங்கிக் கொண்டால் இவ்வாறு வாதிட மாட்டார்கள். இது அல்லாஹ்வின் கன்னியத்தைக் குறைக்கும் செயல் என்பதைப் புரிந்து கொள்வார்கள்.

ஸியாரத் ஒரு நபிவழியல்லவா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸியாரத் செய்யுமாறு கூறியுள்ளனர். அந்த அடிப்படையில் நல்லடியார்களின் அடக்கத்தலம் சென்று ஸியாரத் செய்வதும், அவர்களது துஆக்களை வேண்டுவதும் எப்படித் தவறாகும் என்று சிலர் கேட்கின்றனர்.

இந்த வாதத்திலும் பல தவறுகள் உள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் வாழ்ந்த காலம் வரை அல்லாஹ்விடம் தங்களுக்காகச் துஆச் செய்யுமாறு நபித்தோழர்கள் கேட்டதுண்டு. இதற்கு ஆதாரங்கள் உள்ளன.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பின்பு அவர்களது அடக்கத்தலம் வந்து நபித்தோழர்கள் யாரும் எங்களுக்காக துஆச் செய்யுங்கள் என்று கேட்டதில்லை. அடக்கத்தலம் வராமல் இருந்த இடத்திலிருந்தும் இவ்வாறு கேட்டதில்லை.

எனவே ஸியாரத் செய்ய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதித்தால் அதை மற்றொரு செயலைச் செய்வதற்கு ஆதாரமாகக் காட்டக் கூடாது.

இனி ஸியாரத் விஷயத்திற்கு வருவோம்.

سنن الترمذي

1054 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، وَمَحْمُودُ بْنُ غَيْلَانَ، وَالحَسَنُ بْنُ عَلِيٍّ الخَلَّالُ، قَالُوا: حَدَّثَنَا أَبُو عَاصِمِ النَّبِيلُ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قَدْ كُنْتُ نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ القُبُورِ، فَقَدْ أُذِنَ لِمُحَمَّدٍ فِي زِيَارَةِ قَبْرِ أُمِّهِ، فَزُورُوهَا فَإِنَّهَا تُذَكِّرُ الآخِرَةَ»

அடக்கத்தலங்களை ஸியாரத் செய்வதை விட்டும் உங்களை நான் தடுத்திருந்தேன். முஹம்மதாகிய எனக்கு என் தாயின் அடக்கத்தலத்தை ஸியாரத் செய்ய அனுமதிக்கப்பட்டு விட்டது. எனவே இனிமேல் அடக்கத்தலங்களை ஸியாரத் செய்யுங்கள்! ஏனெனில் அது மறுமையை நினைவுபடுத்தும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: புரைதா (ரலி)

நூல்: திர்மிதி

இது தான் ஸியாரத் பற்றி பல்வேறு நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸாகும்.

ஆரம்ப காலத்தில் அடக்கத்தலங்களை ஸியாரத் செய்வது தடை செய்யப்பட்டிருந்தது. பின்னர் தான் இதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அனுமதி வழங்கினார்கள்.

இந்த ஹதீஸை மேலோட்டமாகப் பார்க்காமல் ஆழமாக ஆய்வு செய்தால் இந்த ஹதீஸ் அடக்கத்தலங்களில் பிரார்த்தனை செய்வதற்கு எதிரானதாக அமைந்துள்ளதைக் காணலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸியாரத்தை அனுமதிக்கும் போது அனுமதி அளிப்பதற்குரிய காரணத்தையும் சேர்த்துக் கூறியுள்ளனர். இது முதலில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

மறுமையை நினைவுபடுத்தும் என்பது தான் அவர்கள் கூறிய காரணம். வேறு சில அறிவிப்புகளில் மரணத்தை நினைவுபடுத்தும் என்றும் மற்றும் சில அறிவிப்புகளில் உலகப் பற்றைக் குறைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அடக்கத் தலங்களுக்கு நாம் செல்லும் போது  இவர்களைப் போல் நாமும் ஒரு நாள் மரணிக்க வேண்டி வரும்  என்ற எண்ணத்தை ஏற்படுத்திக் கொள்வது தான் ஸியாரத் அனுமதிக்கப்பட்டதற்கான ஒரே காரணம்.

அடக்கம் செய்யப்பட்டவர்கள் மகான்கள் என்பதற்காகவோ, அல்லது அவர்களின் ஆசியை வேண்டுவதற்காகவோ இந்த அனுமதி அளிக்கப்படவில்லை.

இன்னும் தெளிவாகக் கூறுவதென்றால் நல்லடியார்களின் அடக்கத்தலங்களை ஸியாரத் செய்யுங்கள் எனக் கூறாமல் அடக்கத்தலங்களை ஸியாரத் செய்யுங்கள் என்று பொதுவாகத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். எனவே இந்த அனுமதி பொதுமக்கள் அடக்கப்பட்டுள்ள பொது அடக்கத்தலத்தையே குறிக்கிறது.

ஸியாரத் என்ற இந்த நபிவழியை நடைமுறைப்படுத்துவதற்காக எந்த வெளியூருக்கும் போகத் தேவையில்லை. எந்த ஊராக இருந்தாலும் அங்கே நிச்சயம் அடக்கத்தலம் இருக்கத் தான் செய்யும். அங்கே போய் ஸியாரத் செய்த நன்மையைப் பெற்று விடலாம்.

இன்னும் ஆழமாகச் சிந்தித்தால் தர்காக்களுக்குச் செல்வதால் நபிகள் நாயகம் (ஸல்) கூறிய நோக்கம் நிறைவேறாது என்று கூற முடியும்.

ஏனெனில் அங்கே நடக்கும் காரியங்கள் மறுமையின் நினைவை மறக்கச் செய்வதாகவே உள்ளன. ஆடம்பரமான கட்டடங்கள், நறுமணப் புகை, ஆண்களும் பெண்களும் ஒட்டி உரசிக் கொள்வது, சிறப்பான நாட்களில் நடக்கும் ஆடல், பாடல், ஆபாசக் கூத்துக்கள் யாவும் மறுமையின் சிந்தனையை மறக்கடிக்கச் செய்வதாகவே உள்ளன.

எந்த நோக்கத்துக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸியாரத் செய்ய அனுமதித்தார்களோ அந்த நோக்கத்தை தர்காக்கள் நாசப்படுத்துகின்றன என்ற உண்மையை யாராலும் மறுக்க முடியாது.

நல்லடியார்களின் அடக்கத்தலம் செல்வது தான் ஸியாரத் என்று நினைப்பது முற்றிலும் தவறானது என்பதற்கு மற்றொரு நபிமொழியும் சான்றாகவுள்ளது.

صحيح مسلم

2303 – حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ وَمُحَمَّدُ بْنُ عَبَّادٍ – وَاللَّفْظُ لِيَحْيَى – قَالاَ حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ عَنْ يَزِيدَ – يَعْنِى ابْنَ كَيْسَانَ – عَنْ أَبِى حَازِمٍ عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « اسْتَأْذَنْتُ رَبِّى أَنْ أَسْتَغْفِرَ لأُمِّى فَلَمْ يَأْذَنْ لِى وَاسْتَأْذَنْتُهُ أَنْ أَزُورَ قَبْرَهَا فَأَذِنَ لِى ».

என் தாயாருக்கு பாவமன்னிப்புத் தேட அல்லாஹ்விடம் நான் அனுமதி கேட்டேன். அவன் அனுமதிக்க மறுத்து விட்டான். என் தாயாரின் அடக்கத்தலத்தை ஸியாரத் செய்ய அனுமதி கேட்டேன். அல்லாஹ் அனுமதித்தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம்

எந்த ஒரு முஸ்லிமுடைய பாவத்துக்காகவும் பாவமன்னிப்புத் தேடுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. முஸ்லிமல்லாதவர்களுக்காக மட்டுமே பாவமன்னிப்புத் தேடுவது தடுக்கப்பட்டுள்ளது.

இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும், இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது.

திருக்குர்ஆன் 9:113

நபிகள் நாயகத்தின் தாயாருக்காக பாவமன்னிப்புத் தேட அல்லாஹ் அனுமதி மறுக்கிறான் என்பதிலிருந்து அவர்கள் முஸ்லிமாக இருக்கவில்லை என விளங்கலாம். முஸ்லிமாக இல்லாத தாயாரின் அடக்கத் தலத்தை ஸியாரத் செய்வதற்கு அல்லாஹ் அனுமதி அளித்துள்ளதிலிருந்து ஸியாரத்தின் நோக்கத்தை இன்னும் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

ஸியாரத், நல்லடியார்கள் என்பதற்காக நடத்தப்பட வேண்டிய காரியமல்ல. மாறாக மரணத்தை நினைவுபடுத்தும் காரியமே. முஸ்லிமல்லாதவர்களின் அடக்கத்தலத்தை ஸியாரத் செய்தும் கூட இந்த நோக்கத்தை அடைந்து கொள்ளலாம் என்பதை மேற்கண்ட ஹதீஸிலிருந்து அறியலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தர்காக்கள் குறித்து கடுமையான எச்சரிக்கை செய்துள்ளனர். தர்காக்கள் இருக்கவே கூடாது என்று உத்தரவிட்டுள்ளனர். அவ்வாறிருக்க இடிக்க வேண்டிய ஒன்றை ஸியாரத் செய்யுங்கள் என்று கூறியிருப்பார்களா? என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.

صحيح مسلم

2289 – حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ عَنِ ابْنِ جُرَيْجٍ عَنْ أَبِى الزُّبَيْرِ عَنْ جَابِرٍ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- أَنْ يُجَصَّصَ الْقَبْرُ وَأَنْ يُقْعَدَ عَلَيْهِ وَأَنْ يُبْنَى عَلَيْهِ.

கப்ருகள் கட்டப்படுவதையும், கப்ருகள் பூசப்படுவதையும் நபிகள் நாயகம் (ஸல்) தடுத்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம்

صحيح البخاري

435 – حَدَّثَنَا أَبُو اليَمَانِ، قَالَ: أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّ عَائِشَةَ، وَعَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ، قَالاَ: لَمَّا نَزَلَ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ طَفِقَ يَطْرَحُ خَمِيصَةً لَهُ عَلَى وَجْهِهِ، فَإِذَا اغْتَمَّ بِهَا كَشَفَهَا عَنْ وَجْهِهِ، فَقَالَ وَهُوَ كَذَلِكَ: «لَعْنَةُ اللَّهِ عَلَى اليَهُودِ وَالنَّصَارَى، اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ» يُحَذِّرُ مَا صَنَعُوا

தங்கள் நபிமார்களின் அடக்கத் தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கிக் கொண்ட யூதர்களையும், கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 436, 437, 1330, 1390, 3454, 4441, 4444, 5816

صحيح البخاري

427 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ المُثَنَّى، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ هِشَامٍ، قَالَ: أَخْبَرَنِي أَبِي، عَنْ عَائِشَةَ أُمِّ المُؤْمِنِينَ، أَنَّ أُمَّ حَبِيبَةَ، وَأُمَّ سَلَمَةَ ذَكَرَتَا كَنِيسَةً رَأَيْنَهَا بِالحَبَشَةِ فِيهَا تَصَاوِيرُ، فَذَكَرَتَا لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «إِنَّ أُولَئِكَ إِذَا كَانَ فِيهِمُ الرَّجُلُ الصَّالِحُ فَمَاتَ، بَنَوْا عَلَى قَبْرِهِ مَسْجِدًا، وَصَوَّرُوا فِيهِ تِلْكَ الصُّوَرَ، فَأُولَئِكَ شِرَارُ الخَلْقِ عِنْدَ اللَّهِ يَوْمَ القِيَامَةِ»

அவர்களில் ஒரு நல்ல மனிதர் இறந்து விட்டால் அவரது அடக்கத்தலத்தின் மேல் வணக்கத்தலத்தை எழுப்பிக் கொள்கின்றனர். இவர்கள் தாம் அல்லாஹ்வின் படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 427, 434, 1341, 3873

مسند أحمد

7352 – حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ حَمْزَةَ بْنِ الْمُغِيرَةِ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ -صلى الله عليه وسلم-: "اللَّهُمَّ لاَ تَجْعَلْ قَبْرِى وَثَناً، لَعَنَ الله قَوْماً اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ".

இறைவா! எனது அடக்கத்தலத்தை வணக்கத்தலமாக ஆக்கி விடாதே என்று நபிகள் நாயகம் (ஸல்) பிரார்த்தனை செய்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)

நூல்: அஹ்மத்

என்று நபிகள் நாயகம் (ஸல்) எதைத் தடை செய்தார்களோ அதைத் தேடிச் செல்வதை வணக்கமாகக் கருதுவது தகுமா? என்று சிந்திக்க வேண்டும்.

எனவே ஸியாரத்துக்கும், தர்காக்களுக்குப் போவதற்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.

மனிதர்களிடம் உதவி தேடுதல்

அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேடுங்கள் என்று நாம் கூறும் போது மற்றொரு கேள்வியை எழுப்புகிறார்கள்.

நமது வாழ்க்கையில் பல்வேறு தேவைகளை நம்மைப் போன்ற மனிதர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். இவ்வாறு கேட்காத மனிதன் எவனுமே இல்லை. மற்ற மனிதர்களின் உதவியின்றி மனிதனால் இந்த உலகில் வாழ்வது கூட சாத்தியமாகாது. நபிகள் நாயகம் (ஸல்) உட்பட மாந்தர் அனைவருமே, பிற மனிதர்களிடம் உதவி தேடியே இருக்கிறார்கள்.

ஒரு மனிதன் பிறரது உதவியின்றி வாழ முடியாது எனும் போது, இறந்து விட்ட நல்லடியார்களிடம் கேட்பதில் என்ன தவறு இருக்க முடியும்? என்பதே  அந்தக் கேள்வி.

இது பற்றி விரிவாகவும், விளக்கமாகவும் அறிந்து கொள்ள நாம் கடமைப்பட்டுள்ளோம்.

நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்!

திருக்குர்ஆன் 5:2

இந்த வசனத்தில் மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வதை அல்லாஹ் அனுமதிக்கின்றான். வலியுறுத்தவும் செய்கிறான்.

மனிதனை இறைவனது அம்சம் பொருந்தியவனாகக் கருதி உதவி தேடுவதை மட்டுமே இஸ்லாம் மறுக்கிறது.

இறந்தவரை ஒருவன் அழைத்து உதவி தேடும் போது அவர் இறைவனது அம்சம் கொண்டவராக நம்பப்படுகிறார். உயிருடன் உள்ள ஒரு மனிதரிடம் கேட்கப்படும் சாதாரண உதவிகள் இத்தகைய நிலையில் இல்லை.

ஒருவன் இறந்தவரிடம் தமது நோயைக் குணப்படுத்துமாறு வேண்டுகிறான். மற்றொருவன் ஒரு மருத்துவரிடம் சென்று தனது நோயைக் குணப்படுத்துமாறு கேட்கிறான். இரண்டும் மேலோட்டமாகப் பார்க்கும் போது ஒரே மாதிரியாகத் தென்பட்டாலும், இரண்டுக்குமிடையே அநேக வித்தியாசங்கள் உள்ளன.

முதல் வித்தியாசம்

மருத்துவரை அணுகுபவன் மருத்துவரைத் தனது கண்களால் நேரடியாகப் பார்க்கிறான். மருத்துவரும் இவனை நேரடியாகப் பார்க்கிறார்.

இறந்தவரை அணுகுபவன், அவரைத் தன் கண்களால் காண்பதில்லை. அல்லாஹ் எப்படி மறைவாக இருந்து கொண்டு கண்காணித்துக் கொண்டிருக்கிறானோ அது போல் இந்தப் பெரியாரும் தன்னைக் கண்காணிக்கிறார் என்ற நம்பிக்கை இருப்பதாலேயே அவரை அழைக்கிறான்.

மறைவாக இருந்து கொண்டு அனைத்தையும் கண்காணிக்கும் இறைவனது தன்மையை இறந்தவருக்கும் அவன் அளித்து விடுகிறான். மருத்துவரிடம் தேடும் உதவிகள் இப்படி அமைந்திருக்கவில்லை.

இரண்டாவது வித்தியாசம்

மருத்துவரை அணுகும் போது, இந்த மருத்துவர் தன்னால் இயன்ற அளவு நோய் தீர்க்க முயற்சிக்கிறார். அவர் எவ்வளவு தான் சிறப்பாக மருத்துவம் செய்தாலும் அந்த மருத்துவம் பயனளிக்காமலும் போகலாம். இந்த மருத்துவர் குணமளிக்க வேண்டும் என்று நாடிவிட்டால் அது நடந்து தான் ஆகும் என்பது கிடையாது என்ற நம்பிக்கையிலேயே மருத்துவரை அணுகுகின்றான்.

இறந்தவரை அணுகுபவனின் நம்பிக்கை இப்படி இல்லை.  இந்தப் பெரியார் மாத்திரம் நமக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்து விட்டால் நிச்சயமாக நமது நோய் நீங்கிவிடும். இவர் நினைத்தால் அது நடக்காமல் போகாது  என்ற நம்பிக்கை தான் இவனிடம் உள்ளது. அதாவது பலவீனத்திற்கு அப்பாற்பட்டவராகவும், அனைத்துக் காரியங்களின் மீதும் ஆற்றல் பெற்றவராகவும் இவர் கருதப்படுகிறார்.

மூன்றாவது வித்தியாசம்

ஒரு மருத்துவரை அணுகும் போது  இந்த மருத்துவர் ஒரு சமயத்தில் ஒருவரது பேச்சையே கேட்க முடியும். ஒரு சமயத்தில் பலபேர் தங்கள் நோய்கள் பற்றி முறையிட்டால் இவரால் எதையுமே கேட்க முடியாது  என்ற நம்பிக்கையில் தான் அணுகுகிறோம்.

இறந்தவரை அணுகும் போது, இவன் உதவி தேடும் அதே சமயத்தில் இன்னும் பலரும் அவரிடம் உதவி தேடுவார்கள். உலகின் பல பகுதிகளிலிருந்தும் பலரும் இவரை அழைப்பார்கள் என்பதைத் தெரிந்து கொண்டே அவரை அணுகுகின்றான். அதாவது எங்கிருந்து அழைத்தாலும், எத்தனை பேர் அழைத்தாலும் இந்தப் பெரியார் கேட்கிறார் என்ற நம்பிக்கை இருப்பதாலேயே அழைக்கிறான். இந்தத் தன்மை இறைவனுக்கு மாத்திரம் சொந்தமான தனித்தன்மையாகும்.

மருத்துவரின் கேட்கும் ஆற்றல் தன்னுடைய ஆற்றல் போன்றது தான் என்று ஒருவன் நம்புகிறான்.

இறந்து போனவரின் கேட்கும் திறனோ, இறைவனது கேட்கும் திறனுக்கு நிகரானது என்று நம்புகிறான்.

நான்காவது வித்தியாசம்

மருத்துவருக்கு மருத்துவ ஆற்றல் இருப்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். அல்லாஹ் மனிதனுக்கு இத்தகைய ஆற்றல்களை வழங்கியுள்ளான் என்பதற்குச் சான்றும் உள்ளது.

இறந்தவரிடம் இத்தகைய ஆற்றல் இருப்பதை நாம் காண்பதில்லை. இறந்த பின் அவரிடம் இத்தகைய ஆற்றல் இருக்கும் என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை. இன்னும் சொல்வதென்றால், உயிரோடு இருந்த போது அவரிடம் இருந்த ஆற்றல்களும் கூட இறந்த பின் இல்லாது போய் விடுகின்றது. அதற்குத் தான் சான்றுகள் உள்ளன.

ஐந்தாவது வித்தியாசம்

மருத்துவர், மருத்துவம் செய்யும் போது அதற்குரிய மருந்துகள், மாத்திரைகள், ஊசிகள், ஆயுதங்கள் போன்ற சாதனங்களின் துணையுடன் செய்கிறார். அதை நாம் காணவும் செய்கிறோம்.

ஆனால் இறந்தவரோ இப்படி சாதனங்கள் எதனையும் பயன்படுத்தாமல் மந்திர சக்தியால் குணப்படுத்துவதாக நம்பப்படுகிறது. அதாவது அல்லாஹ் உதவி செய்வது போலவே, இறந்தவரும் உதவி செய்வதாக இவன் நம்புகிறான்.

உதாரணத்துக்காகத் தான் மருத்துவரிடம் உதவி தேடுவதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளோம். ஒரு அமைச்சரிடமோ, அதிகாரியிடமோ, தொழிலதிபரிடமோ, தொழிலாளியிடமோ, வியாபாரியிடமோ, வேறு எவரிடமோ கேட்கும் உதவிகள் அனைத்தும் மருத்துவரிடம் தேடப்படும் உதவி போலவே அமைந்துள்ளன.

ஆனால் மகான்கள், பெரியார்கள், மெஞ்ஞான குருநாதர்கள், என நம்பப்படுவோரிடம் தேடப்படும் உதவிகள் இறைவன் நிலையில் அவர்களை வைத்து உதவி தேடுவது போல் அமைந்துள்ளன. இந்த வேறுபாட்டை விளங்காததன் காரணமாகவே இக்கேள்வியை எழுப்புகிறார்கள்.

ஆக, மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவி தேடும் போதும், உதவி செய்யும் போதும் எவருமே இறைத்தன்மை பெற்றவராக எண்ணப்படுவதில்லை. சமாதிகளில் போய்க் கேட்கும் உதவிகளில் சமாதிகளில் அடங்கப்பட்டவருக்கு இறைத் தன்மை அளிக்கப்படுகிறது.

இணை வைத்தலின் விளைவுகள்

தர்கா வழிபாடு அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கும் மாபாதகமாகும். ஏனைய குற்றங்கள் புரிவோருக்கு கிடைக்கும் மன்னிப்பு இவர்களுக்கு அறவே கிடையாது.

இவர்கள் ஒரு காலத்திலும் சொர்க்கத்தில்  நுழைய முடியாது.

இணை வைத்தல்  என்று சொல்லப்படுகின்ற இந்தப் பாவத்தைப் புரிவோர் ஏதேனும் நல்லறங்கள் புரிந்தாலும், அந்த நல்லறங்களும் கூட அழிந்து பாழாகி விடும் என்பதை அல்லாஹ் தன் திருமறையில் பல்வேறு இடங்களில் வலியுறுத்துகிறான்.

தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ்நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.

திருக்குர்ஆன் 4:48

மர்யமின் மகன் மஸீஹ் தான் அல்லாஹ் எனக் கூறியவர்கள் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர். இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை  என்றே மஸீஹ் கூறினார்.

திருக்குர்ஆன் 5:72

மனிதனுக்கு ஒரு தீங்கு ஏற்படுமானால் தனது இறைவனிடம் சரணடைந்தவனாக அவனை அழைக்கிறான். பின்னர் இறைவன் தனது அருட்கொடையை வழங்கும் போது முன்னர் எதற்காகப் பிரார்த்தித்தானோ அதை அவன் மறந்து விடுகிறான். அல்லாஹ்வின் பாதையை விட்டு வழி கெடுப்பதற்காக அவனுக்கு இணை கற்பிக்கிறான். உனது (இறை) மறுப்பில் சிறிது காலம் சுகம் அனுபவித்துக் கொள்! நீ நரகவாசிகளைச் சேர்ந்தவன்  எனக் கூறுவீராக!

திருக்குர்ஆன் 39:8

நீர் இணைகற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் நஷ்டமடைந்தவராவீர். மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!  என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது.

திருக்குர்ஆன் 39:65, 66

இதுவே அல்லாஹ்வின் வழி. தனது அடியார்களில் தான் நாடியோரை இதன் மூலம் நேர்வழியில் செலுத்துகிறான். அவர்கள் இணைகற்பித்திருந்தால் அவர்கள் செய்த (நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.

திருக்குர்ஆன் 6:88

صحيح البخاري

4497 – حَدَّثَنَا عَبْدَانُ، عَنْ أَبِي حَمْزَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ شَقِيقٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَلِمَةً وَقُلْتُ أُخْرَى، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ مَاتَ وَهْوَ يَدْعُو مِنْ دُونِ اللَّهِ نِدًّا دَخَلَ النَّارَ» وَقُلْتُ أَنَا: مَنْ مَاتَ وَهْوَ لاَ يَدْعُو لِلَّهِ نِدًّا دَخَلَ الجَنَّةَ

எவன் அல்லாஹ்வுக்கு நிகராக எவரையும் பிரார்த்தித்த நிலையில் மரணிக்கிறானோ அவன் நரகில் நுழைவான்  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)

நூல்: புகாரி 4497

صحيح البخاري

32 – حَدَّثَنَا أَبُو الوَلِيدِ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، ح قَالَ: وحَدَّثَنِي بِشْرُ بْنُ خَالِدٍ أَبُو مُحَمَّدٍ العَسْكَرِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: لَمَّا نَزَلَتْ: {الَّذِينَ آمَنُوا وَلَمْ يَلْبِسُوا} [الأنعام: 82] إِيمَانَهُمْ بِظُلْمٍ قَالَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّنَا لَمْ يَظْلِمْ؟ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ: {إِنَّ الشِّرْكَلَظُلْمٌ عَظِيمٌ لقمان: 13

நம்பிக்கை கொண்டு, தமது நம்பிக்கையுடன் அநீதியைக் கலந்து விடாமல் இருப்போர்க்கே அச்சமற்ற நிலை உள்ளது. அவர்களே நேர்வழி பெற்றோர். (6:82) என்ற வசனம் இறங்கியதும்,  அநீதி செய்யாதவர் நம்மில் எவரிருக்க முடியும்?  என்று நபித்தோழர்கள் கூறினார்கள். இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  இணைகற்பித்தல் மகத்தான அநீதியாகும்   (31:13) என்ற வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)

நூல்: புகாரி 32, 3360, 3428, 3429, 4629, 4776, 6918

இறைவனின் இந்தக் கடும் எச்சரிக்கைக்கு அஞ்சி தர்கா வழிபாட்டை விட்டொழிப்போம்.

06.07.2009. 18:55 PM

நூலின் பெயர் : இது தான் பைபிள்

ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன்

முன்னுரை

அளவற்ற அருளாளனும் நிகரற்ற கருணையாளனுமாகிய எல்லாம் வல்ல இறைவனின் திருப்பெயரால்…

அன்புக் கிறித்தவ நண்பர்களே! புத்தகத்தின் தலைப்பு உங்களில் சிலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தக் கூடும். சிலரைப் புண்படுத்தவும் கூடும். உங்களை ஆச்சரியப்படுத்துவதோ புண்படுத்துவதோ என் நோக்கம் அன்று.

உங்களுக்கும், முஸ்லிம்களாகிய எங்களுக்குமிடையே நல்லிணக்கமும் பல விஷயங்களில் ஒத்த கருத்தும் இருக்கின்ற உரிமையில் உண்மையை உங்களுக்கு உரைக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு நோக்கம் ஏதும் எனக்கில்லை.

பரலோக ராஜ்ஜியத்தில் கர்த்தரின் முன்னிலையில் நீங்களும், முஸ்லிம்களாகிய நாங்களும் விசாரிக்கப்பட இருக்கின்றோம். இந்த உலகில் நமது நம்பிக்கையும், நடத்தையும் சரியானதாக அமைந்தால் தான் அந்த விசாரணையில் தப்பிக்க முடியும். இதை நீங்கள் நன்றாக அறிவீர்கள்.

உங்களது வேதம், உங்களின் நம்பிக்கை, பரலோக ராஜ்ஜியத்தில் நித்திய ஜீவனை அடைய உதவுவதாக இல்லை. உங்கள் மதகுருமார்கள் உங்களைத் தவறான வழியில் இழுத்துச் சென்று கொண்டிருக்கின்றார்கள். இந்த உண்மையை பைபிளின் துணையுடன் இந்நூலில் நிறுவியுள்ளோம்.

காலம் காலமாக உங்கள் மதகுருமார்கள் கர்த்தரின் போதனைக்கு முரணாக உங்களுக்குப் போதித்தவற்றைத் தூக்கி எறிந்துவிட்டு, மதகுருமார்கள் மீதுள்ள அளவு கடந்த மரியாதையை ஒதுக்கிவிட்டு நான் இந்நூலில் எடுத்து வைத்திருக்கின்ற வாதங்களையும் அதில் உள்ள நியாயங்களையும் நடுநிலையோடு, திறந்த மனதுடன் நீங்கள் சிந்தித்தால் நாங்கள் வந்த முடிவை நோக்கி நீங்களும் நிச்சயம் வருவீர்கள்.

பைபிள் கர்த்தரின் வார்த்தைகளாக இருக்கவே முடியாது; மனிதனது வார்த்தைகள் கலந்துள்ளன; கர்த்தரின் வார்த்தைகள் பல நீக்கப்பட்டுள்ளன; மாற்றப்பட்டுள்ளன என்பதை மிகத் தெளிவாகவே இந்த நூலிலிருந்து நீங்கள் அறிந்து கொள்வீர்கள் என்று உறுதியாக நான் நம்புகின்றேன்.

இந்நூலில் நான் எடுத்து வைத்துள்ள வாதங்களுக்கும், கருத்துகளுக்கும் தக்க ஆதாரத்துடன் மறுப்பைத் தெரிவித்தால், அதைப் பரிசீலித்து, ஏற்று, திருத்திக் கொள்ளவும் தயாராகவுள்ளேன். நாங்களும், நீங்களும் கர்த்தரின் பரலோக ராஜ்ஜியத்தில் நித்திய ஜீவனை அடைய உரிய வழி எது என்பதை அறிய வேண்டும் என்பதே என் ஆவல். அதற்காகவே இந்நூலைத் தந்துள்ளேன்.

அன்புடன்

P. ஜைனுல் ஆபிதீன்

பைபிள் ஓர் அறிமுகம்

பைபிள் எனும் நூல் இரண்டு பகுதிகளைக் கொண்டதாகும். ஒரு பகுதி பழைய ஏற்பாடு எனவும் இன்னொரு பகுதி புதிய ஏற்பாடு எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

கிறித்த நம்பிக்கைப்படி பழைய ஏற்பாடு என்பது இயேசுவுக்கு முன் வாழ்ந்த தீர்க்கதரிசிகளுடைய வேதங்களின் தொகுப்பாகும். அதாவது பழைய ஏற்பாடு என்பது பல வேதங்களின் தொகுப்பு எனலாம்.

உதாரணமாக பழைய ஏற்பாட்டில் 39 அல்லது 45 ஆகமங்கள் உள்ளன. இதில் முதல் 5 ஆகமங்கள் மோசே எனும் தீர்க்கதரிசியின் வேதமாகும்.

6வது ஆகமம் யோசுவாவின் புஸ்தகம் என்பதாகும். இது யோசுவா அவர்களின் வேதம்.

முதலாம் சாமுவேல் இரண்டாம் சாமுவேல் என்று இரண்டு ஆகமங்கள் உள்ளன. இது சாமுவேல் எனும் தீர்க்கதரிசியின் வேதமாகும்.

யோபு என்றொரு ஆகமம். இது யோபு அவர்களின் வேதம்.

இப்படிப் பல தீர்க்கதரிசிகளுக்கு வழங்கப்பட்ட பல வேதங்களின் தொகுப்பே கிறித்தவ நம்பிக்கையின் படி பழைய ஏற்பாடு ஆகும்.

கிறித்தவர்களின் நம்பிக்கைப்படி புதிய ஏற்பாடு என்பது ஏசுவுக்குப் பிறகு வந்தவர்கள் பரிசுத்த ஆவியினால் உந்தப்பட்டு எழுதியவையாகும். இப்படிப் பலர் எழுதியவைகளின் தொகுப்பே புதிய ஏற்பாடு. உதாரணமாக மத்தேயு என்றொரு சுவிசேஷம். இது மத்தேயு என்பவரால் எழுதப்பட்டது. மாற்கு என்ற சுவிசேஷம் மாற்கு என்பவரால் எழுதப்பட்டது.

சுருங்கச் சொல்வதனால் பழைய ஏற்பாட்டை கி.மு என்றும், புதிய ஏற்பாட்டை கி.பி என்றும் கூறலாம்.

ஏசுவுக்கு முன்னர் எழுதப்பட்டவைகளையும், ஏசுவுக்குப் பின்னர் எழுதப்பட்டவைகளையும் பாதுகாத்து வைத்திருப்பதாகக் கூறும் கிறித்தவ உலகம் ஏசு எழுதியதையும், ஏசுவுக்கு கர்த்தரிடமிருந்து வந்ததையும் மட்டும் ஏன் பாதுகாக்கவில்லை என்பது கிறித்தவர்கள் சிந்திக்க வேண்டிய விஷயம்.

புதிய ஏற்பாடும், பழைய ஏற்பாடும் கடவுளின் ஏற்பாட்டின்படி பரிசுத்த ஆவியின் தூண்டுதலினால் எழுதப்பட்டதாக நீங்கள் நம்புவது சரி தானா? என்பதை ஆராய வேண்டாமா நண்பர்களே!

ஒரு நூலை இறைவேதம் என்று நம்புவதற்கு சில தகுதிகள் இருக்க வேண்டும். சாதாரண மனிதனால் எழுதப்பட்ட நூல்களில் காணப்படும் குறைபாடுகள் இறைவேதம் எனக் கருதப்படும் நூலில் இருக்குமானால் அதை இறைவேதம் என்று கூற முடியாது.

பைபிளை ஆராயும் பொழுது சாதாரண மனிதர்களால் எழுதப்பட்ட நூல்களில் காணப்படும் குறைகளை விட அதிக அளவு குறைகளைக் காண்கிறோம். நடுநிலையான சிந்தனையுடன் நீங்கள் ஆராய்ந்தால் இதை மறுக்க மாட்டீர்கள்.

பைபிளை இறை வேதம் என்று ஏற்கத் தடையாகவுள்ள குறைபாடுகளை இப்போது ஒவ்வொன்றாக ஆராய்வோம்.

 1 மூல மொழியில் பாதுகாக்கப்படவில்லை.

இது இறைவனிடமிருந்து தான் அருளப்பட்டது என்று ஒரு நூலைப் பற்றி நம்புவதென்றால் அது எந்த மொழியில் அருளப்பட்டதோ அந்த மூல மொழியில் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும். வேதத்தை வேறு மொழியில் மாற்றம் செய்யக் கூடாது என்பது இதன் கருத்தன்று. எத்தனை மொழிபெயர்ப்புகள் வந்த போதிலும் மூல மொழியிலும் பாதுகாக்கப்பட்டிருப்பது மிக மிக அவசியமாகும். இது முக்கியமான தகுதியாகும்.

மூல மொழியில் ஒரு நூல் பாதுகாக்கப்பட்ட நிலையிலேயே அதன் மொழிபெயர்ப்புகள் வித்தியாசப்படுவதை நாம் சகஜமாகக் காண்கிறோம். மூல மொழியில் உள்ள நூலே இல்லை எனும் போது ஏற்படும் விளைவுகளைச் சொல்ல வேண்டியதில்லை. சாதாரணமாக மனிதர்கள் எழுதும் நூல்களே மூல மொழியுடன் இருக்க வேண்டும் எனும் போது கடவுளின் வேதம் என்று நம்பப்படும் நூல் மூல மொழியில் பாதுகாக்கப்பட்டிருப்பது மிக மிக அவசியம் அல்லவா? இதை என்றேனும் சிந்தித்திருக்கிறீர்களா?

இந்த விஷயத்தில் வேதங்களுக்கும், ஏனைய நூல்களுக்குமிடையே மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது. இறைவனிடமிருந்து வந்ததாக ஒரு நூலைப் பற்றி மக்கள் நம்பினால் அதற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள். அதைப் பாதுகாப்பாக வைத்திருக்க அதிக முயற்சிகளை மேற்கொள்வார்கள். திருக்குர்ஆனை இதற்கு உதாரணமாகக் கூறலாம். கடந்த 14 நூற்றாண்டுகளாகக் குர்ஆனை எவ்விதக் கூடுதல் குறைவுமின்றி, மூலமொழியில் அப்படியே முஸ்லிம்கள் பாதுகாத்து வருகின்றனர்.

இந்த முதலாவது தகுதி பைபிளுக்கு இருக்கிறதா? இல்லை. இல்லவே இல்லை! உலகில் எங்கேயும் பைபிள் மூலமொழியுடன் பாதுகாக்கப்பட்டிருக்கவில்லை. மொழி பெயர்ப்புகளே உள்ளன. அதை விட பரிதாபமான நிலைமை என்னவென்றால் பைபிளின் மூலமொழி எதுவென்பதில் கூட கிறித்தவ மத குருமார்களுக்கிடையே கருத்து வேறுபாடு நிலவுவது தான்.

வேதத்தின் மூல மொழி எதுவென்பதைக் கூட தெரியாமலிருப்பதை விட பரிதாபம் வேறு என்ன இருக்க முடியும்? இதை நாம் சுயமாகக் கூறவில்லை. கிறித்தவ மத குருமார்களின் கூற்றின் அடிப்படையிலேயே பைபிள் அதன் மூலமொழியில் பாதுகாக்கப்படவில்லை என்றும் அதன் மூலமொழி எதுவென்று தெரியாதென்றும் கூறுகிறோம்.

 2- பைபிளின் மூலமொழி எது?

இது பற்றி கிறித்தவ உலகம் தருகின்ற வாக்குமூலங்களைப் பார்ப்போம்.

பெங்களூரில் உள்ள இந்திய வேதாகமச் சங்கம் தமிழில் ஒரு பைபிளை வெளியிட்டுள்ளது. இந்தச் சங்கம் புரோட்டஸ்டண்டு எனும் கிறித்தவப் பிரிவைச் சார்ந்தது. இந்த பைபிளின் முதல் பக்கத்தில்,  எபிரேயு, கிரேக்கு எனும் மூல பாஷைகளிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.

இவர்கள் பழைய ஏற்பாடு எபிரேயு (ஹீப்ரு) மொழியிலும், புதிய ஏற்பாடு கிரேக்க மொழியிலும் ஆரம்பத்தில் அருளப்பட்டதாகவும் அந்த மூலம் தங்களிடம் உள்ளதாகவும் அந்த மூலத்தை வைத்தே தமிழில் மொழி மாற்றம் செய்ததாகவும் உலகுக்குச் சொல்கிறார்கள். இந்த அர்த்தத்திலேயே மேற்கண்ட வாசகத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.

பழைய ஏற்பாட்டின் மூலமொழி எபிரேயு தானா? புதிய ஏற்பாட்டின் மூலமொழி கிரேக்க மொழி தானா? என்பதை நாம் ஆராய்வதற்கு முன்னால் இந்திய வேதாகமச் சங்கம் உங்களை ஏமாற்றுவதை அடையாளம் காட்டுவது அவசியமாகின்றது.

ஒரு வாதத்துக்காக இவர்களின் கூற்றில் நம்பிக்கை வைத்து, பழைய ஏற்பாட்டின் மூலமொழி எபிரேயு என்றே வைத்துக் கொள்வோம். இந்த நம்பிக்கையின் அடிப்படையில் நாம் கேட்கிறோம். எபிரேயு மொழியில் பைபிள் உலகில் இருக்கின்றதா? இருக்கிறது என்றால் எங்கே இருக்கின்றது? எபிரேயு மொழியிலிருந்து தமிழில் மொழி பெயர்க்க வேண்டுமானால் எபிரேயு மொழியும் தமிழ் மொழியும் தெரிந்த தான் மொழி பெயர்க்க முடியும். அந்த எபிரேயு மொழி வல்லுனர் யார்? இந்தக் கேள்விக்கு கிறித்தவ உலகில் விடை கிடைக்காது.

உலகில் எபிரேயு மொழி செத்துப் போய் பல நூறு ஆண்டுகளாகி விட்டன. வழக்கொழிந்து போய்விட்ட – உலகில் எவருக்குமே தெரியாத – எபிரேயு மொழியிலிருந்து தான் இந்த பைபிள் மொழி மாற்றம் செய்யப்பட்டது என்று கூறுவது அப்பட்டமான மோசடியாகும்.

இஸ்ரேலில் இப்போது இந்த மொழி பயிற்றுவிக்கப்படுகின்றதே என்று சிலர் கருதலாம். செத்து வழக்கொழிந்து போன பின்னர் ஒரு மொழியை உருவாக்கிக் கொண்டு இன்று அதற்கு எபிரேயு என்று பெயரிட்டுள்ளார்களே தவிர அது புராதண எபிரேயு மொழி அன்று. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் உலகை விட்டு முற்றிலுமாக விடைபெற்று விட்ட அம்மொழி இனி ஒருக்காலும் திரும்பி வர முடியாது.

இது கற்பனையோ, வெறும் அனுமானமோ இல்லை. அதே கிறித்தவ உலகம் தந்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இவ்வாறு கூறுகிறோம்.

கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்த, திண்டிவனம் தமிழ்நாடு விவிலிய மறைக் கல்வி வழிபாட்டு நிலையத்தினர் ஒரு பைபிளைத் தமிழில் வெளியிட்டுள்ளனர். 6.4.1980 – ல் வெளியிடப்பட்ட பரிசுத்த வேதாகமம் என்ற இந்த பைபிளின் முன்னுரையில்,

நம் மக்களின் தேவைகளை நிறைவு செய்ய துணை புரியும் வகையில் திருச்சி தமிழ் இலக்கியக் கழகம் 1960 – ல் பழைய ஏற்பாடும், புதிய ஏற்பாடும் இணைந்த ஒரு நூலாக  வுல்காத்தா எனும் இலத்தீன் மொழிபெயர்ப்பைத் தழுவி பரிசுத்த வேதாகமத்தை முதன் முறையாக தமிழ் மொழியில் வெளியிட்டது

என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கிறித்தவ நண்பர்களே! நன்றாகக் கவனியுங்கள். இலத்தீன் மொழி பெயர்ப்பைத் தழுவியே பைபிள் தமிழ்ப்படுத்தப்பட்டதாகத் தமிழ் பைபிளின் முன்னுரை கூறுகிறது.

எபிரேயு எனும் மூலமொழி உலகில் இருந்திருந்தால் – அந்த மூலமொழியில் பைபிள் பாதுகாக்கப்பட்டிருந்தால் – இலத்தீன் மொழிபெயர்ப்பைத் தழுவுவார்களா? மூலமொழியும், மூலமொழியில் பைபிளும் உலகில் இல்லாத காரணத்தினால் தான் ஒரு மொழிபெயர்ப்பைத் தழுவி எழுத வேண்டிய அவசியம் அவர்களுக்கு நேரிட்டது என்பதில் உங்களுக்கு ஐயமுண்டா?

நண்பர்களே! மற்றொரு விஷயத்தைக் கவனியுங்கள்.

மூலமொழியில் பைபிள் பாதுகாக்கப்பட்டிருக்குமானால் அது கத்தோலிக்கப் பிரிவினரிடம் இருப்பதற்குத் தான் அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் புரோட்டஸ்டண்டு பிரிவை விட காலத்தால் முந்தியதும், ஆதியானதும் கத்தோலிக்கப் பிரிவே.

மூலமொழி வேதத்தின் ஒரு பிரதியாவது அவர்களிடம் இருக்க அதிக வாய்ப்பு உள்ளது என்பதையும், அவர்களிடம் இல்லையென்றால் உலகில் எவர்களிடமும் குறிப்பாகப் புரோட்டஸ்டண்டுகளிடம் இருக்கவே முடியாது என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள். எனவே பைபிளின் மூலமொழி வேதம் உலகில் இல்லை என்பது உறுதியாகின்றது.

கத்தோலிக்க உலகம் இந்த உண்மையை ஒப்புக் கொள்கிறது. புரோட்டஸ்டண்டுகள் எபிரேயு மூலமொழியில் பைபிள் உலகில் இருக்கின்றது என்ற பொய்யான கருத்தை மெய்ப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

பழைய ஏற்பாட்டின் மூலமொழி எபிரேயு என்றும், புதிய ஏற்பாட்டின் மூலமொழி கிரேக்கு என்றும் புரோட்டஸ்டண்டுகள் கூறுகின்றனர்.

இந்தக் கூற்றிலாவது உண்மை இருக்கின்றதா என்றால் அதுவுமில்லை. புரோட்டஸ்டண்டுகளின் இந்திய வேதாகமச் சங்கம் வெளியிட்ட பைபிளில் புதிய ஏற்பாட்டின் துவக்கத்தில்,

நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் புதிய ஏற்பாடு இது  மூல பாஷையாகிய கிரேக்குக்கு இசையத் திருத்திய மொழிபெயர்ப்பு (1954) எனக் குறிப்பிட்டுள்ளனர்.

புதிய ஏற்பாடு என்பது முதன் முதலில் கிரேக்க மொழியிலேயே எழுதப்பட்டதாகவும், அதிலிருந்து தான் பல மொழிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டதாகவும் உலகை நம்ப வைப்பதற்காகத் திட்டமிட்டு இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். இந்தக் கூற்றாவது உண்மையா?  இல்லை என்று தனக்குத் தானே மறுத்துக் கொள்கிறது கிறித்தவ உலகம்.

புதிய ஏற்பாட்டின் முதலாவது சுவிஷேசம்  மத்தேயு என்பது. கத்தோலிக்கர்கள் திண்டிவனத்திலிருந்து வெளியிட்ட பைபிளில் மத்தேயு சுவிஷேசத்தின் முன்னுரையில்,

ஆகையால் அக்காலத்தில் பாலஸ்தீன நாட்டில் வழக்கிலிருந்த  அரமாயிக் மொழியில் எழுதினார். அவர் சுவிஷேசத்தை கி.பி 50ஆம் ஆண்டுக்குள் எழுதியிருக்க வேண்டும். 70ஆம் ஆண்டுக்குப் பின் இது கிரேக்க மொழியில் பெயர்த்தெழுதப்பட்டது

எனக் குறிப்பிட்டுள்ளனர்.

சுவிஷேசம் எழுதப்பட்ட காலத்தில் பாலஸ்தீன நாட்டில் அரமாயிக் மொழி தான் வழக்கத்தில் இருந்தது. அந்த மொழியில் தான் சுவிஷேசங்கள் எழுதப்பட்டன. அதன் பிறகு கிரேக்க மொழியில் பெயர்த்தெழுதப்பட்டது என்று கத்தோலிக்கர்கள் தெளிவான வாக்கு மூலம் தருகின்றனர்.

கிரேக்க பைபிள் – புதிய ஏற்பாடு – ஒரு மொழி பெயர்ப்புத் தானே தவிர மூலமொழி நூல் அன்று. புதிய ஏற்பாட்டின் மூலமொழியாக இருந்த அரமாயிக் மொழியில் புதிய ஏற்பாடு உலகில் இருக்கின்றதா? அந்த மொழி அறிந்தவர்கள் இருக்கின்றார்களா? நிச்சயமாக இல்லை.

புதிய ஏற்பாட்டின் மூலமொழி கிரேக்க மொழியில்லை என்பதற்கும் அரமாயிக் எனும் மூலமொழியில் உலகில் எங்கேயும் பைபிள் கிடையாது என்பதற்கும் இதை விட வேறு சான்று தேவை இல்லை.

மூலமொழியாக நம்பப்படும் எபிரேயு மொழியில் பழைய ஏற்பாடு உலகில் கிடையாது என்பது ஒரு புறமிருக்க, அதன் மூலமொழி எபிரேயு தானா? என்பதும் சந்தேகத்திற்குரியதே.

ஏனெனில் பழைய ஏற்பாடு என்பது மோசே, தானியேல், எசக்கியேல், யோபு போன்ற பல தீர்க்கதரிசிகளுக்கு அருளப்பட்டவற்றின் தொகுப்பு என்பதை முன்னரே நாம் கண்டோம். வெவ்வேறு பகுதிகளிலும், வெவ்வேறு காலகட்டங்களிலும் வெவ்வேறு தீர்க்கதரிசிகளுக்கு அருளப்பட்டவை அனைத்தும் எபிரேயு எனும் ஒரே மொழியில் அருளப்பட்டிருக்க வழியில்லை.

ஒவ்வொருவரும் வெவ்வேறு மொழி பேசி இருக்கலாம். அவரவர் மொழியில் அவரவர் வேதங்கள் அருளப்பட்டிருக்கலாம். பல்வேறு மொழிகளில் அருளப்பட்டவை பின்னர் எபிரேயு மொழியில் பெயர்த்தெழுதப்பட்டு பின்னர் அதுவும் மறைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இதில் எழுகிறது.

இந்த எண்ணம் தவறு என்றே வைத்துக் கொண்டாலும், பழைய ஏற்பாட்டின் மூலமொழி எபிரேயு என்பதை ஒப்புக் கொண்டாலும் எபிரேயு மொழியில் பைபிளில் பழைய ஏற்பாடு கிடையாது என்பதில் ஐயமில்லை.

அது போல் புதிய ஏற்பாடும் அதன் மூலமொழியாகிய அரமாயிக் மொழியில் கிடையாது. கிறிஸ்தவ உலகில் பைபிளில் மூலநூல் நிலையில் கிரேக்க மொழி பெயர்ப்பே இருக்கின்றது.

இப்போது உங்கள் முன்னுள்ள கேள்வி, இரண்டு ஏற்பாடுகளும் ஏன் மூல மொழியில் பாதுகாக்கப்படவில்லை என்பதே!

 3- மூலமொழி நூல் தவறலாமா?

எத்தனையோ மொழிகள் உலகில் தோன்றி மறைந்துள்ளன! அது போல பைபிளின் மூலமொழியும் மறைந்திருக்கலாம் என்று சில பேர் காரணம் கூறுவர். இது ஏற்க முடியாத காரணமாகும். வழக்கொழிந்து விட்ட மற்ற மொழிகளுடன் அரமாயிக், எபிரேயு மொழிகளை ஒப்பிட முடியாது. இதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன.

ஒரு நூலை இறை வேதம் என்று மக்கள் நம்பினால் அதற்கு அதிகளவு முக்கியத்துவம் அளிப்பார்கள். அதைப் பாதுகாக்கவும், அந்த மொழியை வளர்க்கவும் பெரும் முயற்சிகளை மேற்கொள்வார்கள். ஆயிரம் மொழிகளில் அது மொழிபெயர்க்கப்பட்டாலும் மூலத்தை அவ்வளவு எளிதில் விட்டு விடமாட்டார்கள். மக்களின் இந்த இயல்பைப் புரிந்து கொள்ள ஆதாரம் எதுவும் தேவையில்லை.

இந்த மனித இயல்புக்கு மாற்றமாக, பைபிளை இறை வேதம் என்று நம்புகின்ற ஒரு பெரும் சமுதாயம் மூலமொழி நூலை எப்படித் தொலைத்திருக்க முடியும்? இது சிந்திக்க வேண்டிய கேள்வியாகும்.

அடுத்ததாக, வரலாற்றில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய எந்தச் சமுதாயத்தினரும் தங்கள் மொழியைக் காப்பதில் அதிக சிரத்தை மேற்கொள்வார்கள். உலகில் மாபெரும் நிலப்பரப்பை நீண்ட நெடுங்காலம் ஆட்சி புரிந்து, உலக வரலாற்றில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இஸ்ரவேலர்கள் தங்களின் மூலமொழியை எப்படி கை கழுவினார்கள்? இதுவும் விடை காணப்பட வேண்டிய கேள்வியாகும்.

மக்களின் இந்த இயல்பைப் புரிந்து கொள்ள ஹிந்து மதத்தினரை உதாரணமாக நாம் கொள்வோம்.

பைபிளை விட மிகவும் பழமையான வேதத்திற்குச் சொந்தக்காரர்கள் ஹிந்துக்கள். வேதம் என்று அவர்கள் நம்புகின்ற நூல்கள், அவர்கள் மூலமொழி என்று நம்புகின்ற சமஸ்கிருத மொழியில் இன்றளவும் பாதுகாக்கப்பட்டுள்ளன. பேச்சு வழக்கில் அம்மொழி செத்து விட்டாலும் அதை அறிந்திருப்பவர்களை இன்றளவும் நாம் காணலாம். காலம் சென்ற இராஜாஜி, இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற துக்ளக்  சோ ராமசாமி ஆகியோரை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இன்னும் ஏராளமான பிராமணர்கள் தங்கள் வேதத்தை அதன் மூல மொழியாகிய சமஸ்கிருதத்திலேயே அறியக் கூடியவர்களாக உள்ளனர். சமஸ்கிருதக் கல்லூரிகளும் கூட அம்மதத்தினரால் நடத்தப்பட்டு வருகின்றன.

வேதத்துக்குச் சொந்தக்காரர்களும், வரலாற்றுப் பாரம்பரியம் உடையவர்களும் எளிதில் தங்கள் மொழியை விட்டு விடமாட்டார்கள் என்பதற்கு இது மறுக்க முடியாத ஆதாரமாகும்.

இந்த நிலையில் பைபிள் அதன் மூலமொழியில் பாதுகாக்கப்படாமல் போனதைத் தற்செயலானது என்று நம்ப முடிவில்லை. அன்றாடம் மக்களால் படித்துப் பாதுகாக்கப்படுகின்ற வேதம் அதன் மூலமொழியில் பாகாக்கப்படாமல் போனது இயற்கையான விபத்து என்றும் நம்ப முடியவில்லை.

அந்த மொழியின் காவலர்களாக விளங்கிய மதகுருமார்களே திட்டமிட்டு இந்த நிலையை உருவாக்கி இருக்க வேண்டும். அவர்களைத் தவிர மற்றவர்களால் இத்தகைய வரலாற்றுச் சிறப்புப் பெற்ற மொழியை ஒழித்திருக்க முடியாது.

பைபிள் அதன் மூலமொழியில் இருக்கும் நிலையில் அந்த மூலமொழியை அறிந்த மக்களும் இருப்பார்களானால் தங்கள் சொந்தச் சரக்கை அதில் சேர்க்க முடியாது என்று கருதிய அம்மதத் தலைவர்கள் திட்டமிட்டே அம்மொழியையும், மூல நூலையும் ஒழித்துக் கட்டி விட்டனர் என்பதே உண்மை.

இதை ஆதாரமற்ற அனுமானம் என்று எவரும் கருதிவிட வேண்டாம். கிறிஸ்தவ அறிஞர்கள் இந்த வேதத்தில் சேர்த்தவை, நீக்கியவை, மாற்றியவை, மறைத்தவை, ஏராளம்! அவற்றைப் பிறகு தக்க சான்றுகளுடன் உங்களுக்கு விளக்குவோம்.

ஆகையால், வேதம் அதன் மூலமொழியில் பாதுகாக்கப்படாமல் போனதைச் சாதாரண விஷயமாகக் கருதிவிடக் கூடாது. இறை வேதம் என்ற நம்பிக்கையை ஆட்டம் காணச் செய்யும் மிகப் பெரிய விஷயமாகவே இதை நீங்கள் கருத வேண்டும்.

மூலமொழியில் உள்ள பைபிள் தொலைந்து போனது தற்செயலான ஒன்று தான் என்று இதற்குப் பிறகும் எவராவது நம்பினால் அப்போதும் கூட மதகுருமார்கள் மீதுள்ள சந்தேகம் வேண்டுமானால் நீங்கலாமே தவிர, பைபிளின் மீதுள்ள சந்தேகம் நீங்கிவிடப் போவதில்லை.

மூலத்திலிருந்து மொழிமாற்றம் செய்தவர், சில இடங்களில் தவறாக மொழி மாற்றம் செய்திருக்கலாம்; சில வார்த்தைகளை அவர் விட்டிருக்கலாம். வேண்டுமென்று இப்படிச் செய்யாவிட்டாலும் மனிதன் என்ற முறையில் எவரிடமிருந்தும் இத்தகைய தவறுகள் நிகழ்வது சகஜம் தான்.

கிரேக்க மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்ட பைபிள் சரியான முறையில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளதா? என்பதைக் கண்டறிய மூலத்துடன் ஒப்பு நோக்கியாக வேண்டும். மூலமே இல்லை என்ற நிலையில் சந்தேகம் நீங்க வழியில்லை. எந்த இடத்தில் தவறாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்பதை அறிய வழியில்லாத போது ஒவ்வொரு வசனமும்  தவறாக மொழிமாற்றம் செய்யப்பட்டது இந்த வசனமாக இருக்குமோ? என்ற எண்ணத்தை ஏற்படுத்தி, மொத்த பைபிளையும் சந்தேகத்திற்குரியதாக்கி விடுகின்றது.

ஒரு வேதத்திற்கு இதை விடப் பரிதாபமான நிலை வேறு என்ன இருக்க முடியும்? நியாய உணர்வுள்ள கிறிஸ்தவ நண்பர்களே! இதைச் சிந்திப்பீர்களா!

 4- வரலாற்று முரண்

இந்த ஒரு காரணத்திற்காக மட்டும் பைபிள் இறை வேதம் அல்ல என நாம் கூற வரவில்லை. இன்னும் ஏராளமான காரணங்கள் உள்ளன. அவற்றையும் பார்ப்போம்.

பழைய ஏற்பாடு என்பது பல்வேறு தீர்க்கதரிசிகளுக்கு வழங்கப்பட்ட வேதங்களின் தொகுப்பு என்பதை முன்னரே நாம் கண்டோம். (அதாவது கிறிஸ்தவ நம்பிக்கையின் படி)

உதாரணமாக, பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து ஆகமங்களான ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம் ஆகியவை மோசே எனும் தீர்க்கதரிசியால் எழுதப்பட்டவை என்று கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். தவ்றாத் என்று குர்ஆனில் குறிப்பிடப்படுவது, இந்த ஐந்து ஆகமங்கள் தாம் என்று முஸ்லிம்களிடம் ஊடுருவிக் குழப்பம் விளைவிக்கும் கிறிஸ்தவர்களும் உள்ளனர். இந்த ஐந்து ஆகமங்களில் ஒன்றான உபாகமத்தின் இறுதி வசனத்தைப் பாருங்கள்.

1. பின்பு மோசே மோவாபின் சமனான வெளிகளிலிருந்து எரிகோவுக்கு எதிரான நேபோ மலையிலிருக்கும் பிஸ்காவின் கொடுமுடியில் ஏறினான்; அப்பொழுது கர்த்தர் அவனுக்கு, தாண் மட்டுமுள்ள கீலேயாத் தேசம் அனைத்தையும்,

2. நப்தலி தேசம் அனைத்தையும், எப்பிராயீம் மனாசே என்பவர்களின் தேசத்தையும், கடைசிச் சமுத்திரம் வரைக்குமுள்ள யூதா தேசம் அனைத்தையும்,

3. தென்புறத்தையும், சோவா வரைக்குமுள்ள பேரீச்சமரங்களின் பட்டணம் என்னும் ஊர் முதற்கொண்டு எரிகோவின் பள்ளத்தாக்காகிய சமனான பூமியையும் காண்பித்தார்.

4. அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: நான் உங்கள் சந்ததிக்குக் கொடுப்பேன் என்று ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் ஆணையிட்ட தேசம் இது தான். இதை உன் கண் காணும்படி செய்தேன்; ஆனாலும் நீ அவ்விடத்திற்குக் கடந்து போவதில்லை என்றார்.

5. அப்படியே கர்த்தரின் தாசனாகிய மோசே மோவாப் தேசமான அவ்விடத்திலே கர்த்தருடைய வார்த்தையின் படியே மரித்தான்.

6. அவர் அவனை மோவாப் தேசத்திலுள்ள பெத்பேயோருக்கு எதிரான பள்ளத்தாக்கிலே அடக்கம் பண்ணினார். இந்நாள் வரைக்கும் ஒருவனும் அவன் பிரேதக் குழியை அறியான்.

7. மோசே மரிக்கிற போது நூற்றிருபது வயதாயிருந்தான்; அவன் கண் இருளடையவுமில்லை, அவன் பெலன் குறையவுமில்லை.

8. இஸ்ரவேல் புத்திரர் மோவாபின் சமனான வெளிகளில் மோசேக்காக முப்பது நாள் அழுது கொண்டிருந்தார்கள்; மோசேக்காக அழுது துக்கங்கொண்டாடின நாட்கள் முடிந்தது.

9. மோசே நூனின் குமாரனாகிய யோசுவாவின் மேல் தன் கைகளை வைத்தபடியினால் அவன் ஞானத்தின் ஆவியினால் நிறையப்பட்டான்; இஸ்ரவேல் புத்திரர் அவனுக்குக் கீழ்ப்படிந்து, கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.

10. மோசே எகிப்து தேசத்திலே பார்வோனுக்கும், அவனுடைய எல்லா ஊழியக்காரருக்கும், அவனுடைய தேசம் அனைத்திற்கும் செய்யும்படி கர்த்தர் அவனை அனுப்பிச் செய்வித்த சகல அடையாளங்களையும் அற்புதங்களையும்,

11. அவன் இஸ்ரவேலர் எல்லாருக்கும் பிரத்தியட்சமாய்ச் செய்த சகல வல்லமையான கிரியைகளையும், மகா பயங்கரமான செய்கைகளையும் பார்த்தால்,

12. கர்த்தரை முகமுகமாய் அறிந்த மோசேயைப் போல, ஒரு தீர்க்கதரிசியும் இஸ்ரவேலில் அப்புறம் எழும்பினதில்லை என்று விளங்கும்.

(மோசே எனும் தீர்க்கதரிசியால் எழுதப்பட்டது என்று கிறிஸ்தவ உலகம் நம்புகின்ற உபாகமத்தின் 34:1 முதல் 34:12 வரையிலான வசனங்கள் இவை)

மோசே எழுதிய இந்த ஆகமத்தில் மோசேயின் மரணம் பற்றிய செய்தியும், அவரை அடக்கம் செய்த விபரமும், மரணிக்கும் போது மோசேயின் வயது எவ்வளவு என்ற விபரமும், மோசேயின் மரணத்திற்குப் பின் இஸ்ரவேலர்கள் முப்பது நாட்கள் துக்கம் கொண்டாடிய செய்தியும், மோசேவுக்குப் பிறகு யோசுவா என்பவர்அடுத்த தலைவராக ஆகிய விபரமும் எப்படி இடம் பெற முடியும்?

இதிலிருந்து இந்த ஆகமங்களுக்கும், மோசேவுக்கும் யாதொரு சம்பந்தம் இல்லை என்பதை அறிவுடையோர் உணரலாம். மிக மிகப் பிற்காலத்தில் இது யாராலோ எழுதப்பட்டு மோசேயின் பெயரால் அரங்கேற்றப்பட்டிருக்க வேண்டும் என்பது இதிலிருந்து உறுதியாகின்றது.

மேற்கண்ட பைபிள் வசனங்களில்  மோசேவுக்கு நிகரான தீர்க்கதரிசி இஸ்ரவேலில் பிற்காலத்தில் தோன்றியதில்லை என்ற வாசகம் கவனிக்கத்தக்கது.

பிற்காலத்தில் மோசேயைப் போல் எவரும் தோன்றவில்லை என்பது இறந்து போய் அடக்கம் பண்ணிய பிறகு மோசேவுக்கு எப்படித் தெரியும்? அதை மோசே எப்படி எழுதியிருக்க முடியும் என்பதையாவது சிந்திக்கக் கூடாதா? பிற்காலம் வரை வாழ்ந்து, அந்தக் காலம் வரை மோசேயைப் போல் எவரும் தோன்றியதில்லை என்பதை அறிந்தவர் தாம் இப்படிச் சொல்ல முடியும். மோசேவுக்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னால் வந்தவர்களாலேயே இந்த ஆகமம் எழுதி செருகப்பட்டுள்ளது என்பதற்கு இதை விட வேறு சான்று தேவையில்லை.

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் கிறிஸ்தவத் திருச்சபையிடம் பதிலில்லை. எந்த விதமான சமாதானமும் கூற முடியாத அளவுக்குக் கேள்விகள் நியாயமாக உள்ளதால் கிறிஸ்தவ உலகம் பின்வரும் பதிலைக் கூறுகின்றது:-

மோயிசனின் (மோசே) மரணத்தைக் குறித்த பகுதியுடன் இப்பகுதி முடிவடைகின்றது. இதைப் பிற்காலத்தில் இந்த நூலில் சேர்த்திருக்கலாம். (பார்க்க: கத்தோலிக்க பைபிள்-உபாகமம் முன்னுரை)

அதாவது இந்தப் பகுதி மட்டும் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்று ஒப்புக் கொள்வதன் மூலம் இதைத் தவிர உள்ள மற்ற பகுதிகளின் புனிதத்துவத்தைத் தக்க வைத்துக் கொள்ள முயல்கிறது கிறிஸ்தவத் திருச்சபை.

இந்தப் பகுதி பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது என்றால் இன்னும் வேறு எவையெல்லாம் சேர்க்கப்பட்டிருக்கும் என்ற ஐயம் ஏற்படாதா? கிறிஸ்தவ நண்பர்களே! பிற்காலத்திலும் கூட எதையும் சேர்க்கலாம் என்ற அளவுக்கு அவ்வளவு பாதுகாப்பற்ற பரிதாபமான நிலையில் தான் பைபிள் இருந்து வந்துள்ளது என்பது உங்களுக்குப் புலனாகவில்லையா?

பிற்காலத்தில் தான் இவை சேர்க்கப்பட்டன என்றால் இதை எப்படிக் கண்டுபிடிப்பது? மூலத்துடன் ஒத்துப் பார்க்கலாமே என்றால் மூலம் உலகிலேயே இல்லையே!

இங்கே மற்றொரு நியாயமான சந்தேகமும் நமக்கு வருகின்றது. பின்னாளில் தான் மோசே மரணம் சம்பந்தப்பட பகுதி சேர்க்கப்பட்டது என்பதை ஒப்புக் கொள்ளும் கிறிஸ்தவ உலகம், இடைச் செருகல், பிற்சேர்க்கை என்று தெரிந்த பிறகு அதை அப்புறப்படுத்தாதது ஏன்? வேதத்திலிருந்து அதை நீக்கிவிடுவது தானே முறை! இதையும் செய்யவில்லை.

இதை நீக்கிவிட்டால் இன்னும் ஏராளமான அபத்தங்கள் பைபிள் முழுவதும் மலிந்து கிடக்கின்றனவே அவற்றையும் நீக்க வேண்டியது வரும். அப்படி நீக்கினால் இப்போது இருக்கும் பைபிளில் கால் பாகம் கூட மிஞ்சாது. (அந்த அபத்தங்கள் பிறகு அடையாளம் காட்டப்பட்டுள்ளன.)

இதற்கெல்லாம் அஞ்சித் தான் கிறிஸ்தவத் திருச்சபைகள் இடைச்செருகல் என்று தெரிந்தும் கூட அதை நீக்குவதற்குத் தயக்கம் காட்டுகின்றன. பழைய ஏற்பாட்டின் நிலை இதுவென்றால் புதிய ஏற்பாடும் இதற்குத் தப்பவில்லை.

புதிய ஏற்பாட்டின் முகப்பில் இயேசு கிறிஸ்தவனின் பரிசுத்த சுவிசேஷம் என்று கத்தோலிக்க பைபிளிலும் நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் புதிய ஏற்பாடு என்று புரோட்டஸ்டண்டு பைபிளிலும் குறிப்பிடப்படுகின்றது.

அதாவது பைபிளின் புதிய ஏற்பாடு இயேசுவால் எழுதப்பட்டது என்று நம்ப வைக்க முயல்கிறது கிறிஸ்தவ உலகம்.

புதிய ஏற்பாடு என்பது இயேசுவாலேயே எழுதப்பட்டது என்பதை ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொள்வோம். அப்படியானால் புதிய ஏற்பாட்டில் இயேசுவின் மரணம், அவரது அடக்கம், அவருக்காக துக்கம் கொண்டாடிய விபரம் ஆகியவை இடம் பெற்றுள்ளனவே அது எப்படிச் சாத்தியமாகும். இயேசுவுக்கும், புதிய ஏற்பாட்டுக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை என்பதற்கு இதை விட வேறு சான்று தேவையில்லை.

பிற்காலத்தில் சாதாரண மனிதர்களால் எழுதப்பட்டு அந்தத் தீர்க்கதரிசிகளின் பெயரால் சுவிசேஷங்கள் அறிமுகம் செய்யப்பட்டன என்பதே உண்மை. பைபிள் இறை வேதமாக இருக்கவே முடியாது என்பதற்கு இவை மட்டுமின்றி இன்னும் அனேக சான்றுகளும் உள்ளன.

 5- தெளிவான வாக்குமூலம்

பைபிளின் முன் பக்கத்தில் தான் புதிய ஏற்பாடு இயேசுவுடையது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் புதிய ஏற்பாட்டின் உள்ளே மத்தேயு மார்க்கு, லூக்கா, யோவான் ஆகியோர் எழுதியதாகக் காணப்படுகின்றது! எந்தவொரு இடத்திலும் இயேசு எழுதியதாக பைபிளில் இல்லவே இல்லை. முன் சொன்ன நான்கு சுவிசேஷகர்களும் இன்றைய கிறிஸ்தவத்தை உருவாக்கிய பவுலும் புதிய ஏற்பாட்டில் உள்ளவற்றை தாங்கள் சுயமாகப் எழுதியதாக வாக்குமூலம் தந்துள்ளனர்.

பைபிளின் புதிய ஏற்பாட்டில் மூன்றாவது சுவிசேஷம் லூக்கா என்பது. லூக்கா என்பவர் பரிசுத்த ஆவியின் உந்துதலால் அதை எழுதினார் என கிறிஸ்தவ உலகம் நம்புகின்றது. இந்த லூக்கா என்பவர் தருகின்ற வாக்குமூலத்தைப் பாருங்கள்!

மகாகனம் பொருந்திய தெயோப்பிலுவே! நீங்கள் முழு நிச்சயமாய் நம்புகிற சந்ததிகளை ஆரம்ப முதல் கண்ணாரக்கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு அறிவித்தபடியே அவைகளைக் குறித்து சரித்திரம் எழுத அனேகர் ஏற்பட்டபடியினாலேயே ஆதி முதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட விசேஷங்களின் நிச்சயத்தை நீர் அறிய வேண்டும் என்று அவர்களை ஒழுங்காய் உமக்கு எழுதுவது எனக்கு நலமாய்த் தோன்றிற்று.

லூக்கா 1:2-4

இது நான் நேரடியாகப் பார்த்து எழுதிய வேதம் அன்று; பரிசுத்த ஆவியின் தூண்டுதலால் எழுதப்பட்டதுமன்று; நான் விசாரித்தறிந்ததையே எழுதியிருக்கின்றேன் என லூக்கா ஒப்புக் கொள்கிறார். கடந்த காலத்தில் நடந்த சம்பவங்களின் தொகுப்பு எனவும் ஒப்புக் கொள்கிறார். அந்தச் சம்பவங்கள் நிகழ்ந்ததை நான் கண்ணால் கண்டதில்லை என்றும் ஒப்புக் கொள்கின்றார். இவ்வளவு தெளிவான வாக்கு மூலத்திற்குப் பிறகும் பைபிளை இறை வேதம் என்று யார் தான் நம்ப முடியும்?

புதிய ஏற்பாட்டின் நான்காவது சுவிசேஷத்தை எழுதியவர் யோவான். இவரும் பரிசுத்த ஆவியின் தூண்டுதலால் தான் இதை எழுதினார் எனத் திருச்சபைகள் சாதிக்கின்றன. சம்பந்தப்பட்ட யோவானோ அதை மறுக்கிறார். இதோ யோவான் கூறுவதைக் கேளுங்கள்:-

இயேசு செய்த வேறு அனைத்து காரியங்களும் உண்டு. அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புத்தகங்களை உலகம் தானும் கொள்ளாதென்று எண்ணுகிறேன்.

யோவான் 21:25

இது இறைவேதம் என்பதும், இறைவனின் கட்டளைப் பிரகாரமே எழுதப்பட்டது என்பதும் உண்மையானால் அனேக காரியங்களை யோவான் எப்படி எழுதாமல் விட்டிருக்க முடியும்? இயேசுவைப் பற்றி விசாரிந்தறிந்தவைகளை இவர் சுயமாக எழுதியதனாலேயே காகிதங்கள் போதாதென்று காரணங்காட்டிப் பல விஷயங்களை விட்டு விட்டார். தாம் எழுதியது இறை வேதம் அல்ல என யோவான் இவ்வளவு தெளிவான வாக்குமூலம் தந்த பிறகும் பைபிளுக்கு வேத முலாம் பூசுவது நியாயமா என்பதைக் கிறித்தவ உலகம் சிந்திக்கட்டும்!

புதிய ஏற்பாட்டின் மிகப்பெரும் பகுதியை எழுதிய அப்போஸ்தலர் பவுல் என்பார் பல இடங்களில் தருகின்ற வாக்கு மூலங்களும் பைபிள் இறைவேதம் அல்ல என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.

தேவனே சத்தியர். எந்த மனிதனும் பொய்யர். நான் மனுஷர் பேசுகிற பிரகாரமாய் பேசுகிறவன். நம்முடைய அநீதி தேவனுடைய நீதியை விளங்கப் பண்ணினால் என்னுடைய பொய்யினால் தேவனுடைய சத்தியம் அவருக்கு மகிமை உண்டாக விளங்கினதுண்டானால் இனி நான் பாவியென்று தீர்க்கப்படுவானேன்.

ரோமர் 3:4-7

தேவனுக்கு மகிமையுண்டாக்குவதற்காகப் பொய் பேசலாம் என்ற புதிய தத்துவத்தை உதிர்ப்பதுடன், தாம் பேசுவது பொய் எனவும் பவுல் வாக்குமூலம் தருகின்றார். எதைப் பொய் என்று பவுல் பச்சையாக ஒப்புக் கொள்கிறாரோ அதுவும் புதிய ஏற்பாட்டின் ஒரு பகுதியாக -புனித வேதமாக- இடம் பெற்றுள்ளது.

திருவாளர் பவுல் மேலும் கூறுவதைக் கேளுங்கள்:

நான் ஒருவனுக்கும் அடிமைப்படாதவனாய் இருந்தும் நான் அதிக ஜனங்களை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு என்னைத் தானே எல்லோருக்கும் அடிமையாக்கினேன். யூதரை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு யூதருக்கு யூதனைப் போலவும், நியாயப் பிரமாணத்துக்கு கீழ்ப்படிந்தவனை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு நியாயப் பிரமாணத்திற்கு கீழ்ப்பட்டவனைப் போலவுமானேன். நியாயப் பிரமாணமில்லாதவர்களை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு அவனுக்கு நியாயப் பிரமாணமில்லாதவனைப் போலவுமானேன். அப்படி இருந்தும் நான் தேவனுக்கு முன்பே நியாயப் பிரமாணமில்லாதவனாயிராமல் கிறிஸ்துவின் பிரமாணத்துக்கு உள்ளானவனாயிருக்கிறேன். பலவீனரை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு பலவீனருக்கு பலவீனரைப் போலவுமானேன். எப்படியாயினும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லோருக்கும் எல்லாமானேன். சுவிசேஷத்தில் நான் உடன் பங்காளியாகும் படிக்கு அதினிமித்தமே இப்படிச் செய்கிறேன்.

முதலாம் கொரிந்தியர் 9:19-23

பைபிள் என்பது மனிதனின் கற்பனையில் உருவானது என்பதற்கு இதை விட சான்று தேவையில்லை. எல்லோருக்கும் எல்லாமுமாக நடித்து, திட்டமிட்டுப் பொய் கூறுகிறேன்; வேதத்தில் எனக்கும் பங்கு இருக்கும் படிக்கே இவ்வாறு செய்கிறேன் என்ற இவ்வளவு தெளிவாக பவுல் வாக்குமூலம் தருகிறார். கிறித்தவ நண்பர்களே! மேலே உள்ள இந்த பைபிளின் வாசகத்தை மீண்டும் ஒருமுறை படியுங்கள்! பைபிள் இறைவேதமாக இருக்கக் கூடுமோ என்ற கடுகளவு நம்பிக்கை இருந்தாலும் அது தகர்ந்து விடுகிறதல்லவா?

இதன் பிறகும் கூட பைபிளை இறை வேதம் எனவும் பரிசுத்த ஆவிகளால் எழுதப்பட்டது எனவும் நம்புவதற்கு இடமுண்டா?

மேலும் பவுல் கூறுவதைக் கேளுங்கள்!

நான் கொஞ்சம் புத்தியீனமாய்ப் பேசுகிறேன். நீங்கள் இதைப் பொறுத்துக் கொண்டால் நலமாயிருக்கும். பொறுத்தும் இருக்கின்றீர்களே!

இரண்டாம் கொரிந்தியர் 11:1

பின்னும் நான் சொல்லுகிறேன். ஒருவனும் என்னைப் புத்தியீனன் என்று எண்ண வேண்டாம். அப்படி எண்ணிக் கொண்டாலும் நானும் சற்றே பெருமை பாராட்டும்படி புத்தியீனனைப் போலாவிலும் என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்! இப்படி நான் பேசுகிறது ஆண்டவருக்கு ஏற்றபடி பேசாமல் பெருமை பாராட்டும் என்ற தைரியத்தினால் புத்தியீனனைப் போல் பேசுகிறேன்.

 இரண்டாம் கொரிந்தியர் 11:16,17

நான் புத்தியீனனானேன். இதற்கு நீங்களே என்னைக் கட்டாயப்படுத்தினீர்கள். நீங்கள் தான் என்னை மெச்சிக்கொள்ள வேண்டியதாயிருந்தது. நான் ஒன்றுமில்லை; ஆகிலும் மகாபிரதான அப்போஸ்தலர்களை விட எவ்வகையிலும் நான் குறைவுள்ளவனல்ல.

இரண்டாம் கொரிந்தியர் 12:11

இவை யாவும் பவுல் தரும் வாக்குமூலங்கள். புத்தி கெட்டுப் போய் உளறுவதாகவும் பிறரது வற்புறுத்தலுக்காகவே தாம் பேசுவதாகவும், பேசுவது ஆண்டவரல்லர் தம் தைரியத்தினாலேயே தாம் பேசுவதாகவும் தெளிவாக ஒப்புக் கொள்கிறார் பவுல்.

அந்தப் புத்திகெட்ட உளறல்களும், பிறரது வற்புறுத்தலுக்காகவும் தம் சொந்த தைரியத்தினாலும் பேசிய பொய்களும் எப்படி இறை வேதமாக இருக்க முடியும்? எதனை வேதம் என்று கிறித்தவ உலகம் நம்புகின்றதோ அந்த வேதத்திலேயே இந்த வாக்கு மூலங்களும் இடம்பெற்றுள்ளன. இதை விடப் பெரிய முரண்பாடு வேறு என்ன இருக்க முடியும்? இதன் பிறகுமா பைபிள் இறைவேதம் என்று நம்புகின்றீர்கள்?

மேலும் பவுல் தரும் வாக்கு மூலங்களைக் கேளுங்கள்!

மற்றவர்களுக்கோ ஆண்டவரல்ல நானே சொல்லுவதாவது

முதலாம் கொரிந்திரியர் 7:12

கன்னிகைகளைக் குறித்து ஆண்டவரால் எனக்குக் கட்டளையில்லை. ஆகிலும் நான் உண்மையுள்ளவனாய் இருக்கிறதற்கு ஆண்டவரால் இரக்கம் பெற்றவனாய் என் அபிப்பிராயத்தைச் சொல்கிறேன்.

முதலாம் கொரிந்திரியர் 7:25

எனினும் அவள் அப்படியே இருந்துவிட்டால் அதிகப் பாக்கியவதி என்பது என்பதும் என் அபிப்பிராயம். நானும் கடவுளின் ஆவியுடையவன் என்று எண்ணுகிறேன்.

முதலாம் கொரிந்திரியர் 7:40

பவுல் ஆகிய நான் இதை என் கைப்பட எழுதியிருக்கிறேன். நானே அதைச் செலுத்தித் தீர்ப்பேன்.

பிலமோனுக்கு எழுதின நிருபம்,19

இந்த வாக்குமூலங்களிலிருந்து தெரிய வருவது என்ன? வேதங்களின் போதனைகளை மறைத்து விட்டு பவுல் என்ற சவுல் தமது சொந்தச் சரக்குகளை கலந்து வேதங்களை அறிமுகப்படுத்தினார். வேதத்தின் கட்டளைகள் பலவற்றைப் புறக்கணித்து புது மார்க்கம் கண்டார் என்பதைத் தவிர வேறு என்ன?

பன்றியின் மாமிசம், மதுபானம் போன்றவை வேதத்தில் தடை செய்யப்பட்டிருந்தும் அந்தத் தடையை இவர் சுயமாக நீக்கினார். இல்லறத்தை வேதம் போதிக்க, துறவறத்தை இவர் நியாயப்படுத்தினார். விருத்த சேதனத்தையும் இவர் ரத்துச் செய்தார். இவற்றையெல்லாம் இறைக் கட்டளையின்படியே தாம் செய்வதாகக் கூறி மக்களை ஏமாற்றினார். (பைபிளில் முரண்பாடுகளைப் பற்றி அலசும் போது இதை விபரமாக நாம் தருவோம்)

இயேசு போதிக்காத புதிய மார்க்கம் கண்டவர், அது கடவுளின் புறத்திலிருந்து அவருக்கு வந்திருக்குமானால் அதில் உறுதியாக இருக்க வேண்டுமல்லவா? மக்களின் எதிர்ப்பைக் கண்டு அவர் பலமுறை பல்டியடித்துள்ளதை அவரே ஒப்புக் கொள்ளவும் செய்கிறார்.

பின்பு அவனிடம் சகோதரனே! யூதருக்குள் பல்லாயிரம் பேர் விசுவாசியாக இருக்கிறதைக் காண்கிறீரே! அவர்கள் எல்லோரும் நியாயப் பிரமாணத்தைக் குறித்து வைராக்கியம் உள்ளவர்கள். புற ஜாதிகளிடத்திலிருக்கின்ற யூதர் எல்லோரும் தங்கள் பிள்ளைகளுக்கு விருத்தசேதனஞ் செய்யாமலும் முறைமைகளின்படி நடவாமலிருந்து மோசேயை விட்டு மாறுபட நீர் உபதேசிக்கின்றீர் என்று உம்மைப் பற்றி இவர்களுக்குப் போதிக்கப்பட்டிருக்கின்றது. இப்படியிருக்க செய்ய வேண்டியது என்ன? நீர் வந்திருக்கிறீர் என இவர்கள் கேள்விப்படுவது நிச்சயம். ஆகையால் நாங்கள் உமக்குச் சொல்கிறதைச் செய்யும். பொருத்தனை பண்ணிக்கொண்ட நாலு பேர் எங்களிடம் இருக்கிறார்கள். அவர்களைச் சேர்த்துக் கொண்டு நீரும் அவர்களோடு சுத்திகரிப்பு செய்து கொள்ளும். அவர்கள் தலைச் சவரஞ் செய்து கொள்வதற்கு அவர்களுக்காக நீரே செலவு செய்யும். அப்படிச் செய்தால் உம்மைப் பற்றி போதிக்கப்பட்டவைகள் அப்பத்தமென்றும் நீரும் நியாயப் பிரமாணத்தைக் கொண்டு நடக்கிறவரென்றும் யாவரும் அறிந்து கொள்வார்கள்.

விக்கிரகங்களுக்குப் பலியிட்டதற்கும், இரத்தத்திற்கும், நெருக்குண்டு செத்ததற்கும், வேசித்தனத்திற்கும் விசுவாசிகளான புற ஜாதிகள் விலகியிருந்து தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் அவர்களைப் பற்றி தீர்மானம் அவர்களுக்கு எழுதியனுப்பினோமே என்றார்கள். அப்பொழுது பவுல் அந்த மனுசரைச் சேர்த்துக் கொண்டு மறுநாள் அவர்களோடு தானும் சுத்திகரிப்புச் செய்து கொண்டு தேவாலயத்தில் பிரவேசித்து சுத்திகரிப்பு நாட்கள் எப்பொழுது நிறைவேறும் என்றும் ஒவ்வொருவனுக்காகவும் எப்பொழுது பலி செலுத்தப்படும் என்றும் தெரிவித்தான்.

அப்போஸ்தலர் 2:20-26

பைபிள் என்பது பவுலின் சொந்தத் தயாரிப்பு என்பதும், அதில் கூறுகின்ற போதனைகளிலும் அவருக்கே உறுதியில்லை என்பதும், கர்த்தருக்கும் இயேசுவுக்கும் இதில் யாதொரு சம்பந்தமுமில்லை என்பதும், மோசேயின் நியாயப் பிரமாணங்களை இவர் அலட்சியப்படுத்தியவர் என்பதும் இதன் மூலம் தெரியவருகின்றதல்லவா?

பைபிளிலேயே இந்த வாக்குமூலங்கள் இடம் பெற்று இது மனிதக் கற்பனையே என்பதைப் பறைசாற்றிக் கொண்டிருக்கையில் கிறித்தவர்கள் அதை வேத நூலாக நம்புவது ஆச்சரியத்திலும் ஆச்சரியமல்லவா!

 6- கூட்டல், குறைத்தல்

ஒரு நூலை இறைவேதம் என்று நம்ப வேண்டுமானால் அதை வேதமென்று நம்புகின்ற மக்கள் அனைவரிடமும் ஒரே விதமாக அமைந்திருப்பது அவசியமாகும். கூட்டல், குறைத்தல், திருத்தல், மாற்றுதல் போன்ற குறைபாடுகளுக்கு அப்பாற்பட்டதாகவும் அது இருப்பது அவசியமாகும்.

வேதத்திற்கு இந்தத் தகுதி இருந்தாக வேண்டும் என்பதைப் பைபிளும் ஒப்புக் கொள்கின்றது. மனித உள்ளங்களும் வேதத்தில் இந்தத் தகுதியை எதிர்பார்க்கின்றது.

நான் உங்களுக்குக் கற்பிக்கின்ற வசனத்தோடே நீங்கள் ஒன்றும் கூட்டவும் வேண்டாம், குறைக்கவும் வேண்டாம்.

உபாகமம் 4:2

நான் உனக்கு விதிக்கின்ற யாவையும் செய்யும்படி கவனமாயிரு! நீ அதனோடு கூட்டவும் வேண்டாம், குறைக்கவும் வேண்டாம்.

உபாகமம் 12:32

அவருடைய வசனங்களோடு ஒன்றையும் கூட்டினால் அவர் உன்னைக் கடிந்து கொள்வார். நீ பொய்யானவனாவாய்.

நீதிமொழிகள் 30:6

ஒருவன் இந்த தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப் போட்டால் ஜீவ புஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளில் இருந்தும் அவனுடைய பங்கை தேவன் எடுத்துப் போடுவார்.

வெளிப்படுத்தின சுவிசேஷம் 22:19

வேதம் என்பது கூட்டப்படாமலும் குறைக்கப்படாமலும் பாதுகாக்கப்பட்டதாக இருப்பது அவசியமாகும் என்பதை மேற்கண்ட வசனங்கள் ஒப்புக் கொள்கின்றன.

பைபிளே நிர்ணயிக்கின்ற இந்தத் தகுதி பைபிளுக்கு உண்டா என்றால் இல்லை என்று நாம் உறுதியாக நாம் கூறி விடலாம்.

வேதம் எதுவென முடிவு செய்வதில் கிறித்தவ உலகம் தடுமாறுகின்றது. கிறிஸ்தவர்களில் ஒரு பிரிவினர் வேதம் என்று நம்புகின்ற பல வசனங்களை மற்றும் ஒரு பிரிவினர் வேதமில்லை என மறுக்கின்றனர்.

கத்தோலிக்கப் பிரிவினருடைய பைபிளின் பழைய ஏற்பாட்டில் மொத்தம் 46 ஆகமங்கள் உள்ளதாக நம்புகின்றனர். தமிழ்நாடு விவிலிய மறைக் கல்வி வழிபாட்டு நிலையம் (திண்டிவனம்) வெளியிட்டுள்ள பரிசுத்த வேதாகமத்தில் இன்றளவும் 46 ஆகமங்கள் இருப்பதைக் காணலாம்.

புரோட்டஸ்டண்டுகளுடைய பைபிளின் பழைய ஏற்பாட்டில் மொத்தம் 39 ஆகமங்கள் மட்டுமே உள்ளதாக நம்புகின்றனர். இந்திய வேதாகமச் சங்கம் (பெங்களூர்) வெளியிட்டுள்ள புரோட்டஸ்டண்டு பிரிவினரின் பைபிளில் இன்றளவும் 39 ஆகமங்கள் இருப்பதைக் காணலாம்.

இங்கே வித்தியாசப்படுவது ஏழு வார்த்தைகளோ, ஏழு வசனங்களோ, ஏழு அதிகாரங்களோ இல்லை! ஏழு ஆகமங்கள் வித்தியாசப்படுகின்றன. அதாவது பல ஆயிரம் வசனங்கள் வித்தியாசப்படுகின்றன அவை பின்வருமாறு:-

1. தொபியாஸ் ஆகமம்                    297 வசனங்கள்

2. யூதித் ஆகமம்                                 346 வசனங்கள்

3. ஞான ஆகமம்                                 439 வசனங்கள்

4. சிராக் ஆகமம்                                1589 வசனங்கள்

5. பாரூக் ஆகமம்                                213 வசனங்கள்

6. முதலாம் மக்கபே ஆகமம்        928 வசனங்கள்

7. இரண்டாம் மக்கபே ஆகமம்       558 வசனங்கள்

 மொத்தம்                                              4370 வசனங்கள்

4370 வசனங்களைக் கொண்ட இந்த ஏழு ஆகமங்களும் கத்தோலிக் பிரிவின் பைபிளில் காணப்படுகின்றன. புரோட்டஸ்டண்டு பைபிளில் இந்த 4370 வசனங்கள் காணப்படவில்லை. முழுமையாக வித்தியாசப்படும் ஏழு ஆகமங்கள் இவை. இவை தவிர அரைகுறையாக வித்தியாசப்படும் ஏழு ஆகமங்கள் உள்ளன.

தானியேல் என்றொரு ஆகமம் இரண்டு பிரிவினரின் பைபிளிலும் உள்ளது. இந்த ஆகமம் புரோட்டஸ்டண்டுகளின் பைபிளில் 12 அதிகாரங்களுடன் முடிந்து விடுகின்றது. கத்தோலிக்க பைபிளில் இதே ஆகமத்தில் 14 அதிகாரங்கள் உள்ளன. அதாவது 64 வசனங்களைக் கொண்ட 13 வது அதிகாரமும் 43 வசனங்களைக் கொண்ட 14 வது அதிகாரமும் (மொத்தம் 107 வசனங்கள்) புரோட்டஸ்டண்டு பைபிள்களில் காணப்படவில்லை.

முன்னர் நாம் குறிப்பிட்ட 4370 வசனங்களுடன் இந்த 107 வசனங்களைச் சேர்க்கும் போது 4477 வசனங்கள் வித்தியாசப்படுகின்றன.

இதே தானியேல் ஆகமத்தில் 3 வது ஆகமத்தில் புரோட்டஸ்டண்டு பைபிளில் 30 வசனங்கள் மட்டுமே உள்ளன. ஆனால் கத்தோலிக்க பைபிளில் 97 வசனங்கள் உள்ளன. இங்கே 67 வசனங்கள் வித்தியாசப்படுகின்றன.

இதையும் சேர்த்து வித்தியாசப்படும் வசனங்கள் 4554 ஆக உயர்கின்றன.

எஸ்தர் என்றொரு ஆகமம் இரண்டு தரப்பினரின் பைபிள்களிலும் காணப்படுகின்றது. இந்த ஆகமத்தின் 10 வது அதிகாரம் புரோடஸ்டண்டு பைபிளில் 3 வசனங்களுடன் முடிந்து விடுகின்றது. ஆனால் கத்தோலிக்க பைபிளில் 13 வசனங்களைக் கொண்டதாக இந்த அதிகாரம் அமைந்துள்ளது.

இந்த 10 வசனங்களையும் சேர்த்து 4554 வசனங்கள் வித்தியாசப்படுகின்றன.

வித்தியாசங்கள் இத்துடன் முடியவில்லை.

இதே எஸ்தர் ஆகமம் புரோட்டஸ்டண்டுகளின் பைபிளில் 10 அதிகாரங்களுடன் முடிகின்றது. கத்தோலிக்க பைபிளில் 16 அதிகாரங்கள் காணப்படுகின்றன. இந்த 6 அதிகாரங்களிலும் (முறையே 12+6+18+19+19+24=98) வசனங்கள் உள்ளன.

ஆக மொத்தம் 4652 (4554+98=4652) வசனங்கள் வேதமா? இல்லையா என்பதில் கிறித்தவர்களுக்கிடையே அடிதடிகள்!

இந்த 4652 வசனங்களும் வேதத்தில் உள்ளவை தான்; புரோட்டஸ்டண்டுகள் அவற்றை நீக்கி விட்டார்கள் என்று கத்தோலிக்க உலகம் குற்றஞ்சாட்டுகின்றது.

இவை வேதத்தில் உள்ளவை அல்ல! கத்தோலிக்க குருமார்களின் சொந்தக் கற்பனை என்று புரோட்டஸ்டண்டுகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

கத்தோலிக்கர்கள் கூற்று உண்மை என்றால் வேதத்தின் பெரும் பகுதியை சிலர் நீக்கிவிடும் அளவிற்கு பைபிள் பலவீனமானதாகவும், பாதுகாக்கப்படாததுமாகவும் இருந்துள்ளது என்பது உறுதியாகின்றது.

புரோட்டஸ்டண்டுகளின் கூற்று தான் உண்மை என்று வைத்துக் கொண்டால் வேதத்தில் இல்லாததையும் கூட வேதத்தில் சேர்த்து விடுமளவுக்குத் தான் பைபிளின் பாதுகாப்புத் தன்மை இருந்துள்ளது என்பது உறுதியாகின்றது.

இது போக இன்னும் எத்தனை வசனங்கள் நீக்கப்பட்டிருக்குமோ? என்ற சந்தேகமும் ஏற்படுகின்றது. எப்படிப் பார்த்தாலும் இரண்டு பிரிவினரின் வேதமும் இப்போது சந்தேகத்திற்குரியதாகி விடுகின்றது.

4652 வசனங்களை நீக்கவிட்ட புரோட்டஸ்டண்டுகள் எப்போது தோன்றினார்கள்? இந்தப் பிரிவு தோன்றியதே 16 ஆம் நூற்றாண்டில் தான். இயேசுவுக்கு 1600 ஆண்டுகளுக்குப் பிறகு தோன்றிய இந்தப் பிரிவினர் இவ்வளவு பெரும் எண்ணிக்கையிலான வசனங்களை எப்படி நீக்க முடிந்தது? அதனை எதிர்த்து கத்தோலிக்கத் திருச்சபைகளால் ஏன் எதுவுமே செய்ய முடியவில்லை?

தங்கள் வேதத்தில் நீக்கம் செய்வதை அன்றைய மக்கள்- கிறித்துவ மக்கள்- எப்படிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்? இந்தப் பிரிவினரும் எப்படி வளர முடிந்தது? சிந்திக்க வேண்டிய கேள்விகள் இவை.

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஒரே விடை தான் இருக்க முடியும். இவர்கள் இதற்கு முன்பே அடிக்கடி நீக்கியும், சேர்த்தும் வந்துள்ளனர். மக்களும் இந்த நீக்குதல் சேர்த்தலுக்கு நன்கு பழக்கப்பட்டுப் போயிருந்தார்கள். இதனால் தான் இவ்வளவு வசனங்கள் நீக்கப்பட்டதையும் கிறித்தவர்கள் ஜீரணித்துக் கொண்டார்கள். கத்தோலிக்க திருச்சபையின் எதிர்ப்பு எடுபடாமல் போனதற்கு இதைத் தவிர எந்தக் காரணமும் இருக்க முடியாது.

புரோட்டஸ்டன்டுகள் இவற்றை நீக்குவதற்கு ஏன் துணிந்தனர் என்பதையும் கிறித்தவ உலகம் அறிந்து கொள்வது அவசியமாகும். எந்த ஆகமங்களைப் புரோட்டஸ்டண்டுகள் நிராகரித்து விட்டனரோ அந்த ஆகமங்களில் பவுல் உருவாக்கிய கிறித்தவக் கோட்பாட்டுக்கு எதிரான பல வசனங்கள் இடம் பெற்றிருந்தன என்பது முதல் காரணமாகும்.

இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரணித்து மீண்டும் உயிர்பெற்று எழுந்தார் என்பது கிறித்தவர்களின் அடிப்படைக் கொள்கை. இந்தக் கொள்கையை நம்பாத எவரும் கிறித்தவராக இருக்க முடியாது.

ஆதாம் எனும் முதல் மனிதர் ஒரே ஒரு பாவம் செய்தார். அப்பாவத்தைக் கர்த்தர் கடைசி வரை மன்னிக்கவே இல்லை. அப்பாவம் மன்னிக்கப்பட வேண்டுமானால் அதற்குப் பெரிய விலை கொடுக்க வேண்டியிருந்தது. இதனால் பிறக்கும் மாந்தர் அனைவரும் பாவிகளாகவே பிறக்கின்றனர். இயேசு வந்து தம்மையே சிலுவையில் பலி கொடுத்து அனைவரின் பாவங்களையும் சுமந்து கொண்டார்என்பது கிறித்தவத்தின் மற்றொரு நம்பிக்கை. புரோட்டஸ்டண்டுகள் நீக்கியுள்ள ஞான ஆகமமும் சீராக் ஆகமமும் இந்தக் கொள்கையையும் தவிடு பொடியாக்குவதைப் பாருங்கள்!

முதல் மனிதன் தனியாக உண்டாக்கப்பட்டிருந்தான். ஞானமே அவனைக் காத்து வந்தது. அவனைப் பாவத்தினின்று விடுவித்தது.

ஞான ஆகமம் 10:1

(கடவுள்) எழுந்து அவனவனுக்கு அவனவன் செய்ததற்குத் தக்கபடி தீர்ப்பிடுவார்.

சீராக் ஆகமம் 17:20

இந்த இரண்டு வசனங்களையும் சிந்தித்தால் ஆதாமின் பாவம் மன்னிக்கப்பட்டு விட்டது என்பதையும் அவனவன் செய்ததற்கு அவனே பொறுப்பாளி; மற்றவர் வந்து அதனைச் சுமக்க முடியாது என்பதையும் அறியலாம். உதாரணத்துக்காக நாம் எடுத்துக் காட்டிய மூன்று வசனங்களும் கிறித்தவக் கோட்பாட்டையே தகர்த்து தரை மட்டமாக்கி விடுவதனால் தான் புரோட்டஸ்டண்டுகள் இந்த ஆகமங்களை நீக்கியுள்ளனர்.

இப்படிப் பல ஆயிரம் வசனங்களை புரோட்டஸ்டண்டுகள் நீக்கும் போது கத்தோலிக்கர்களால் ஏன் எதுவும் செய்ய முடியவில்லை? கிறித்தவ உலகில் பெருமளவு மக்கள் புரோட்டஸ்டண்டு பிரிவின் இந்த நீக்குதல் வேலையை எப்படி ஜீரணித்துக் கொண்டார்கள்?

புரோட்டஸ்டண்டுகள் என்ற பெயரில் பிரிவதற்கு முன் கத்தோலிக்கர்களுடன் இணைந்து ஒரே பிரிவாக இவர்கள் இருக்கும் போது இரு சாராரும் இணைந்து பல்லாயிரக் கணக்கான வசனங்களை முன்னரே நீக்கியுள்ளனர். பல ஆகமங்களை மறைத்துள்ளனர்.

இவர்கள் அடிக்கடி நீக்கியும், மறைத்தும், கூட்டியும், குறைத்தும் வந்துள்ளதால் வேதத்தின் இலக்கணத்தையே கிறித்தவர்கள் மறந்து விட்டனர். வேதத்தில் எதையும் நீக்கவோ, மறைக்கவோ கூடாது என்று அவர்கள் நம்புவதில்லை.

இப்படி நீக்குவதற்கும், குறைப்பதற்கும், அதை ஜீரணிப்பதற்கும் கிறித்தவ மக்கள் பழகிப்போன காரணத்தினால், மார்ட்டின் லூதர் வந்து புரோட்டஸ்டண்டு பிரிவைத் தோற்றுவித்த போதும், வேதத்தின் பல்லாயிரக் கணக்கான வசனங்களை நீக்கிய போதும் கிறித்தவர்களில் ஒரு பிரிவினர்அதையும் ஜீரணித்துக் கொண்டனர். அவர்,பின்னாலும் கணிசமான மக்கள் திரண்டனர்.

கத்தோலிக்க திருச்சபைகளால் எதுவுமே செய்ய முடியாமல் போனதற்கு இதுதான் முக்கிய காரணம். இவர்களே பல ஆகமங்களை நீக்கியிருக்கும் போது மார்ட்டின் லூதர் சில ஆகமங்களை நீக்கியதை எப்படி விமர்சிக்க முடியும்?

கத்தோலிக்கர்களும் இதற்கு முன், வேதத்தில் ஏராளமான ஆகமங்களை நீக்கி விட்டனர் என்று நாம் கூறுவதை எந்த ஆதாரமுமற்ற சொந்தக் கருத்து என்று எண்ணி விடாதீர்கள். பைபிள் தருகின்ற வாக்கு மூலத்தினடிப்படையிலேயே நாம் இதைக் கூறுகிறோம்.

பைபிள் என்பது ஒரு தீர்க்கதரிசிக்கு அருளப்பட்டதன்று. மாறாகப் பல்வேறு தீர்க்கதரிசிகளுக்கும், ஞான திருஷ்டிக்காரர்களுக்கும் அருளப்பட்ட பல்வேறு வேதங்களின் தொகுப்பே என்பதை முன்னரே நாம் குறிப்பிட்டுள்ளோம்.

பைபிளில் இடம் பெற்றுள்ள சில ஆகமங்கள் தமக்கு முந்தைய ஆகமங்கள் பற்றி ஆங்காங்கே குறிப்பிடுவதை பைபிளில் நாம் காணலாம்.

 உதாரணமாக:-

உசியாவின் ஆதியோடந்த நடபடியான மற்ற வர்த்தனமானங்களை ஆமோத்சின் குமரனாகிய  ஏசாயா எனும் தீர்க்கதரிசி எழுதினான்.

இரண்டாம் நாளாகமம் 26:22

இரண்டாம் நாளாகமத்தில்  ஏசாயா எனும் தீர்க்கதரிசி எழுதிய வேதம் பற்றிக் குறிப்பிடுகின்றது. ஏசாயா தீர்க்கதரிசி எழுதிய ஆகமம் பைபிள் தொகுப்பில் இடம் பெற்றுள்ளதா என்று நாம் தேடிப் பார்த்தால் கத்தோலிக்க பைபிளின் 27ஆவது ஆகமமாகவும் புரோட்டஸ்டண்டு பைபிளில் 23ஆவது ஆகமமாகவும்  ஏசாயா ஆகமம் இடம் பெற்றுள்ளதைக் காணலாம்.

எசக்கியாவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்த நன்மைகளும் ஆமோத்சின் குமரனாகிய ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகத்திலும் யூதா, இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்திலும் எழுதியிருக்கிறது.

இரண்டாம் நாளாகமம் 32:32

இங்கே கூறப்படுவது போலவே ராஜாக்கள் எனும் புஸ்தகம் ஒன்றுக்கு இரண்டாக (முதலாம் ராஜாக்கள், இரண்டாம் ராஜாக்கள்) பைபிள் தொகுப்பில் காணப்படுகின்றது.

பைபிளின் சில ஆகமங்கள் வேறு சில ஆகமங்கள் பற்றி அனேக இடங்களில் குறிப்பிடுகின்றன. அவற்றில் ஒருசில ஆகமங்கள் தாம் பைபிளில் உள்ளனவே தவிர, பைபிள் குறிப்பிடும் ஏராளமான ஆகமங்களை பைபிளில் காணவில்லை. இரண்டு சாராருமே சேர்ந்து அவற்றை நீக்கி விட்டார்கள் என்பதை இதன் மூலம் நாம் உணரலாம். இதை விரிவாகவே நாம் காண்போம்.

ஞானதிருஷ்டிக்காரனாகிய சாமுவேலின் பிரபந்தத்திலும், தீர்க்கதரிசியாகிய நாத்தானின் பிரபந்தத்திலும், ஞானதிருஷ்டிக்காரனாகிய காத்தின் பிரபந்தத்திலும் எழுதியிருக்கிறது.

முதலாம் நாளாகமம் 29:29

இந்த வசனத்தில் மூன்று ஆகமங்கள் பற்றிக் குறிப்பிடப்படுகின்றது. இவற்றில் சாமுவேல் ஆகமம் பைபிளில் இன்றளவும் உள்ளது. ஆனால் தீர்க்கதரிசியாகிய நாத்தான் எழுதிய பிரபந்தமும், ஞானதிருஷ்டிக்காரனாகிய  காத் தின் பிரபந்தமும் பைபிளில் காணப்படவில்லை. இந்த இரண்டு ஆகமங்களும் எங்கே?

இரண்டோடு முடியவில்லை இன்னும் ஏராளமான ஆகமங்கள் மறைக்கப்பட்டுள்ளன.

ஆர் எனும் ஸ்தலத்துக்குப் பாயும் நீரோடையும், மோவோபின் எல்லையைச் சார்ந்திருக்கிறது எனும் வசனம் கர்த்தருடைய யுத்த புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.

எண்ணாகமம் 21:15

இது யாசேரின் புஸ்தகத்தில் எழுதியிருக்கவில்லையா?

யோசுவா 10:13

சாலெமோனுடைய ஆதியந்தமான மற்ற நடபடிகள் தீர்க்கதரிசியாகிய நாத்தானின் புஸ்தகத்திலும், சீயோனியனாகிய அகியா எழுதின தீர்க்கதரிசனத்திலும் நேபாத்தின் குமரனாகிய யெரோபெயாமைக் குறித்து ஞானதிருஷ்டிக்காரனாகிய இத்தோ எழுதின தரிசனங்களிலும் அல்லவோ எழுதியிருக்கிறது.

இரண்டாம் நாளாகமம் 9:29

மேற்கண்ட வசனங்களில் சுட்டிக் காட்டப்படுகின்ற இத்தனை ஆகமங்களும் பைபிளில் காணப்படவில்லை.

நாத்தானுடைய புஸ்தகம் எங்கே?

காத்துடைய பிரபந்தம் எங்கே?

கர்த்தருடைய யுத்த புஸ்தகம் காணாமல் போன மர்மம் என்ன?

யாசேருடைய புஸ்தகமும் காணாமல் போய்விட்டதா?

அகயிர் எழுதிய புஸ்தகம் எங்கே போய்விட்டது?

இத்தோ எழுதிய பிரபந்தம் தொலைந்து விட்டதா? இதற்கெல்லாம் கிறித்தவ உலகில் விடை இல்லை.

ஆக, இப்படி  நீக்குவது என்ற வியாதி ஆரம்பம் முதலே கிறித்தவர்களிடத்தில் இருந்து வந்துள்ளது என்பதற்கு இவை மறுக்க முடியாத சான்றுகளாகும்.

பைபிளின் பழைய ஏற்பாட்டின் பரிதாப நிலை இது. புதிய ஏற்பாட்டை எடுத்துக் கொள்வோம்.

புதிய ஏற்பாடு என்பது என்ன?  நம்முடைய கர்த்தரும், ஆண்டவருமாகிய இயேசுவின் புதிய ஏற்பாடு என்று கிறித்தவர்கள் சொன்னாலும் மறுபுறம் அவர்களே அதை மறுத்துக் கொள்கின்றனர்.

புதிய ஏற்பாடு என்பது இயேசுவுக்கு இறைவன் அருளியதுமன்று. ஏசு கூறியதும் அன்று. மாறாக இயேசுவைப் பற்றி மற்றவர்கள் எழுதியவற்றின் தொகுப்பே புதிய ஏற்பாடு.  மத்தேயு என்றால் இயேசுவைப் பற்றி மத்தேயு என்பவர் எழுதியது.  மாற்கு என்றால் இயேசுவைப் பற்றி மாற்கு எழுதியது.  யோவான் முதலான மற்றும் பல பெயர்களில் இடம் பெற்றவைகளின் நிலையும் இது தான் என்பதை முன்னர் கண்டோம்.

இயேசுவுக்குப் பின் மற்றவர்கள் எழுதி வைத்த – இயேசுவைப் பற்றிய பொய்யும் மெய்யும் கலந்த – வரலாறு தான் புதிய ஏற்பாட்டில் உள்ளதேயன்றி இயேசுவுக்கு அருளப்பட்ட, இயேசு போதித்த வேதமன்று.

நாம் கேட்கிறோம்! மிகப் பெரிய தீர்க்கதரிசிகளில் ஒருவரான இயேசுவுக்குக் கடவுளிடமிருந்து எந்த வேதமும் வரவில்லையா? கிறித்தவ நம்பிக்கையின்படி பாவிகளாகவே பிறந்த பல தீர்க்கதரிசிகளுக்கு வேதங்கள் அருளப்பட்டிருக்கும் போது அனைவரின் பாவங்களையும் சுமக்க வந்தவருக்கு புஸ்தகமோ, பிரபந்தமோ, வேதமோ இல்லாமலிருக்குமா?

இயேசுவுக்கும் ஒரு வேதம் அருளப்பட்டிருக்கும் என்பது நமது அனுமானமன்று. புதிய ஏற்பாடே அதை வெளிப்படையாகப் பல இடங்களில் ஒப்புக் கொள்ளவும் செய்கிறது.

பின்பு இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து அவர்களுடைய ஜெப ஆலயங்களில் உபதேசித்து ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார்.

மத்தேயு 4:23

இயேசு கலிலேயாவில் வந்து தேவனுடைய ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார்.

மாற்கு 1:14

காலம் நிறைவேறிற்று. தேவனுடைய ராஜ்ஜியம் சமீபமாயிற்று. மனம் திரும்பி சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் என்றார்.

மாற்கு 1:15

இயேசுவைப் பற்றி எழுதிய மத்தேயுவும், மாற்கும் ராஜ்ஜியத்தின் சுவிசேஷத்தை (புத்தகத்தை) இயேசு பிரசங்கித்ததாகக் கூறுகிறார்கள். மாற்கு ஒரு படி மேலே போய் தேவனுடைய புத்தகம் அது என்கிறார். தேவனால் அருளப்பட்டதும், ராஜ்ஜியத்தின் சுவிசேஷம் எனப் பெயர்பெற்றதும் இயேசுவால் மக்களுக்குப் பிரசிங்கப்பட்டதுமான அந்தப் புத்தகம் எங்கே?

யார்யாருடைய புத்தகங்களை எல்லாமோ வேத முத்திரையுடன் உலா வரச் செய்த கிறித்தவ உலகம் -இயேசுவுக்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்களுக்கு அருளப்பட்டதையெல்லாம் பாதுகாத்துப் பழைய ஏற்பாட்டில் சேர்த்த கிறித்தவ உலகம் – இயேசுவே பிரசங்கித்த புஸ்தகத்தை எப்படிக் கோட்டை விட்டது?

பவுல் அவராக ஒரு கோட்பாட்டை உருவாக்கிக் கொண்டு, அதை இயேசுவின் பெயரால் அரங்கேற்றியதால் அதற்குத் தடையாகவுள்ள  ராஜ்ஜியத்தின் சுவிசேஷத்தைத் தலை முழுகி விட்டார் என்பது தெளிவாகத் தெரியவில்லையா?

புத்தகத்தை விசுவாசியுங்கள் என்று இயேசு கூறியது அவருக்குப் பின்னால் கற்பனை செய்யப்பட்ட இந்த புதிய ஏற்பாட்டையா? அவரே பிரசங்கித்த புத்தகத்தையா? கிறித்தவ உலகம் சிந்திக்குமா?

இயேசு எழுதிய – பிரசங்கித்த – போதித்த – வேதத்தையே தலை முழுகியவர்கள் எதைத் தான் நீக்கியிருக்க மாட்டார்கள்? என்ற கேள்வி உங்களுக்கு எழ வேண்டாமா? இனியும் எப்படி பைபிளை இறை வேதம் என்று நம்ப முடியும்?

 7- பொருந்தாத போதனைகள்

வேதம் என்பது கடவுளால் மனிதனுக்குக் காட்டப்பட்ட நல்வழியாகும். கடவுள் காட்டுகின்ற அந்த வழி அறிவுக்கு ஏற்றதாகவும், நியாயமானதாகவும், நடைமுறைச் சாத்தியமானதாகவும் இருப்பது அவசியமாகும்.

அறிவுக்குப் பொருந்தாததாகவும் நடைமுறைச் சாத்தியமற்றதாகவும் பலவீனர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அநீதி இழைக்கக் கூடியதாகவும் ஒரு நூலின் போதனை இருக்குமானால் அது இறை வேதமாக இருக்க முடியாது.

இத்தகைய நூல் இறை வேதமா? என்பது ஒரு புறமிருக்கட்டும்! நேர்மையான, அறிவுடைய மனிதனால் எழுதப்பட்டதாகக் கூட அந்நூல் இருக்க முடியாது. பைபிளின் போதனைகளில் இந்தக் குறைபாடுகள் ஏராளம் தாராளம்!

அ) விதவா விவாகம்

மனைவியை இழந்த கணவனுக்கு மறுமணம் செய்ய உரிமை இருப்பது போல், கணவனை இழந்த பெண்களும் மறுமணம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்று அறிவுலகம் எதிர்பார்க்கின்றது.

ஆண், பெண் இரு பாலருமே இல்லற உறவில் தேவையுடையவர்களாக உள்ளதால் ஒரு சாராருக்கு மட்டும் இந்த உரிமை மறுக்கப்படக் கூடாது என்று பாரபட்சமில்லாத சிந்தனையுடையவர்கள் எவரும் கருதுவர்.

கணவனால் கைவிடப்பட்டவளுக்கும், கணவனை இழந்தவளுக்கும் உலகம் முழுவதும் இந்த உரிமை வழங்கப்பட்டுள்ளது. கிறித்தவர்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட நாடுகளும் கூட இந்த உரிமையை வழங்குகின்றன.

பெண்களுக்கு மறுமணம் செய்யும் உரிமை இருந்தாக வேண்டும் என்பதில் உலகில் அறிவுடைய எவருமே மாற்றுக் கருத்துக் கொள்ளவில்லை.

மொத்த மனித சமுதாயத்துக்கும் நியாயமாகத் தோன்றுகின்ற இந்த விஷயம் பைபிளுக்கு நியாயமாகத் தோன்றவில்லை. விதவா விவாகத்தை பைபிள் உறுதியாக மறுக்கின்றது. கடவுளின் கட்டளையாகவும் அது கூறப்படுகிறது.

நான் கர்த்தர். கன்னிகையாயிருக்க பெண்ணை அவன் விவாகம் செய்ய வேண்டும். விதவையையாகிலும், தள்ளப்பட்டவளையாகிலும், வேசியையாகிலும், கற்பழிக்கப்பட்டவளையாகிலும் அவன் விவாகம் செய்யாமல் தன் ஜனத்தைச் சேர்ந்த கன்னிகையையே விவாகம் பண்ண வேண்டும்.

லேவியராகமம் 21:13,14

நாகரீகமடைந்த எந்தச் சமூகமும் ஏற்றுக் கொள்ளாத இந்தப் போதனையை பைபிள் போதிக்கின்றது. விதவைகளையும், கணவனால் கைவிடப்பட்டவளையும் வேசிகளின் நிலையில் வைத்துப் பார்க்கிறது பைபிள்.

ஒருத்தி விதவையாவதிலும், தள்ளப்படுவதிலும் அவளுக்குச் சம்பந்தமில்லை. கர்த்தருடைய விதிப்படியே அவள் விதவையாகிறாள். அந்த விதவைகளுக்கும் உணர்வுகள் இருக்கும் என்பது மனிதனை விட கடவுளுக்கு நன்றாகவே தெரிய வேண்டும். அப்படித் தெரியாதவன் கடவுளாக இருக்க முடியாது.

எனவே நிச்சயமாக கடவுள் இது போன்ற அக்கிரமமான ஒரு போதனையைச் செய்திருக்க முடியாது. பெண்களை அடிமைப்படுத்திப் போகப் பொருளாகக் கருதியவர்கள் தாம் இது போன்ற போதனைகளைக் கடவுளின் பெயரால் செய்திருக்க முடியும்.

தன் ஜனத்தைச் சேர்ந்த கன்னிகையைத் திருமணம் செய்ய வேண்டும் என்று பைபிள் கூறுவதையும் இந்த இடத்தில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தன் ஜனம் என்று கூறுவதன் மூலம் ஜாதி வித்தியாசத்தைப் பேணிக் காக்கிறது பைபிள். எல்லா ஜனமும் ஒரு ஜனம் என்று தான் கடவுள் கருத முடியும். பல ஜனங்களாகப் பிரித்து ஒவ்வொரு ஜாதியையும் தத்தமது ஜாதிகளுக்குள்ளேயே திருமணம் செய்யச் சொல்வதன் மூலம் ஜாதி வேற்றுமையை, தீண்டாமையை பைபிள் ஆதரிக்கின்றது.

கடவுளின் வேதமாகப் பைபிள் இருக்க முடியாது என்பதற்கு இதுவும் சான்றாக உள்ளது.

ஆ) மாதவிடாய்

மாதவிடாய் என்பது பெண்களுக்கு இயற்கையாக ஏற்படக்கூடிய உபாதை. மாதவிடாய் காலத்தில் பெண்களுடன் உடலுறவு கொள்ளலாகாது என்று கூறினால் அதை நம் அறிவு ஏற்கிறது. ஆனால் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களைப் பற்றி பைபிள் கூறுவது என்ன தெரியுமா?

சூதகஸ்திரீ தன் சரீரத்திலுள்ள உதிர ஊறலினிமித்தம் ஏழு நாள் விலக்கமாயிருக்க வேண்டும். அவளைத் தொடுகின்ற எவனும் சாயங்கால மட்டும் தீட்டுள்ளவனாயிருப்பான். அவள் விலக்கமாயிருக்கையில் எதின் மேல் படுத்துக்கொள்கிறாளோ, எதின் மேல் உட்காருகிறாளோ, அதெல்லாம் தீட்டாகும். அவள் படுக்கையைத் தொடுகிற எவனும் தன் வஸ்திரங்களைத் துவைத்து தண்ணீரில் முழுக வேண்டும். சாயங்கால மட்டும் அவன் தீட்டுள்ளவனாயிருப்பான். அவள் படுக்கையின் மேலாகிலும் அவள் உட்கார்ந்த மனையின் மேலாகிலும் இருந்த எதையாகிலும் தொட்டவன் சாயங்கால மட்டும் தீட்டுள்ளவனாயிருப்பான். ஒருவன் அவளோடு படுத்துக் கொண்டதும் அவள் தீட்டு அவன் மேல் பட்டதுமுண்டானால் அவன் ஏழு நாள் தீட்டுள்ளவனாயிருப்பான். அவன் படுக்கிற எந்தப் படுக்கையும் தீட்டுப்படும்.

லேவியராகமம் 15:19,24

இயற்கையாக ஏற்படுகின்ற மாதவிடாய் பற்றி பைபிள் இப்படிக் கூறுகிறது. தேவைப்படும் போது பெண்களை அனுபவித்துவிட்டு  அந்த நாட்களில் மட்டும் தீட்டு என்று தள்ளி வைப்பதை அறிவுடைய எவரேனும் ஏற்க முடியுமா?

அவளைத் தொட்டாலும் தீட்டு, அவள் தொட்ட பொருட்களைத் தொட்டாலும் தீட்டு, அந்தப் பொருட்களைத் தொட்டவனும் தீட்டு, அவன் எதையாகிலும் தொட்டால் அதுவும் தீட்டு என சங்கிலித் தொடர்போல் தீட்டு.

இதை விடப் பெண்ணினத்தை இழிவு செய்யும் கொடுமை வேறு என்ன இருக்க முடியும்?  அந்த நாட்களில் அவளை எந்த மனிதரும் நெருங்க முடியாத அளவுக்கு ஒதுக்கி வைத்திருக்கும் போது அவள் மனம் என்ன பாடுபடும் என்பதைக் கூட கர்த்தர் உணரவில்லையா?

கிறித்தவப் பெண்களே! இது உங்களைச் சிந்திக்கத் தூண்டவில்லையா? கடவுள் இப்படிச் சொல்லியிருக்க முடியாது என்பது அனுபவப்பூர்வமாக உங்களுக்கு விளங்கவில்லையா?

மேலும் கிறித்தவ உலகில் எந்தக் கிறித்தவராவது இதைக் கடைபிடித்து ஒழுக முடியுமா? மொத்த உலகத்தாலும் நிராகரிக்கப்படத்தக்க இந்தப் போதனையைக் கர்த்தர் நிச்சயமாகச் சொல்லியிருக்க முடியாது. பெண் இனத்தை இழி பிறவியாக நம்பியவர்களின் கற்பனையில் தான் இது போன்ற கருத்துகள் உருவாயிருக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை.

இ) பிரசவத் தீட்டு

மாதவிடாய் விஷயமாகப் பொருந்தாத போதனையைக் கூறுவது போலவே பிரசவிப்பதையும் பைபிள் பாவம் என்கிறது. அதற்காகப் பரிகாரமும் செய்யச் சொல்கிறது.

பின்னும் கர்த்தர் மோசேயினிடம், நீ இஸ்ரவேலோடு பேசி ஒரு ஸ்திரீ பிரசவித்து ஆண்பிள்ளைகளைப் பெற்றால் அவள், சூதகஸ்திரீ விலக்கமாய் இருக்கும் நாட்களுக்குச் சரியாக ஏழு நாள் தீட்டாய் இருப்பாள். எட்டாம் நாளில் அந்தப் பிள்ளையினுடைய நுனித்தோலில் மாமிசம் விருத்தசேதனம் பண்ணப்பட வேண்டும். பின்பு அவள் 33 நாள் தன் உதிரச்சுத்திகரிப்பு நிலையில் இருந்து கர்த்தர் மோசேயினிடம் நாட்கள் நிறைவேறும் அளவும் பரிசுத்தமான யாதொரு வஸ்தையும் தொடக் கூடாது. பரிசுத்த ஸ்தலத்திற்குள் வரவும் கூடாது. பெண் பிள்ளைகளைப் பெற்றாளாகில் அவள் இரண்டு வாரம் சூதகஸ்திரியைப் போல் தீட்டாயிருந்து பின்பு 66 நாட்கள் உதிரச் சுத்திகரிப்பு நிலையில் இருக்க வேண்டும். அவளுடைய சுத்திகரிப்பின் நாட்கள் நிறைவேறின பின்பு தான் பெற்ற ஆண் பிள்ளைக்காவது பெண் பிள்ளைக்காவது ஒரு வயதான ஆட்டுக் குட்டியை தகனப் பலியாகவும் ஒரு புறாக்குஞ்சியாவது காட்டுப் புறாவையாவது பாவ நிவாரணப் பலியாகவும் தரிசனக் கூடார வாசலில் ஆசாரியினிடம் அவள் கொண்டு வர வேண்டும். அதை அவன் கர்த்தருடைய சந்நிதியில் படைத்து அவளுக்காக பிராயச்சித்தம் செய்வான். செய்யவே அவள் தன் உதிரம் ஊறும் தீட்டு நீங்கி சுத்தமாவாள்.

லேவியராகமம் 12:1-7

இத்தகைய போதனையைக் கர்த்தர் செய்திருப்பார் என்று அறிவுடைய எவரும் நம்ப முடியுமா? கிறித்தவ உலகம் சிந்திக்கட்டும்!

ஆண் குழந்தையைப் பெற்றால் ஏழு நாட்கள் தீட்டு என்றும், பெண் குழந்தையைப் பெற்றால் இரண்டு வாரம் தீட்டு என்றும் கூறுவதையும் ஆண் குழந்தையைப் பெற்றால் 33 நாட்கள் உதிரச் சுத்திகரிப்பு, பெண் குழந்தையைப் பெற்றால் 66 நாட்கள் உதிரச் சுத்திகரிப்பு என்று கூறுவதையும் கவனத்தில் கொள்க!

ஈ) வர்ணாசிரமத்துக்கு வக்காலத்து

மனிதர்கள் அனைவரும் ஆதாம், ஏவாள் என்ற இருவர் மூலமாகப் பல்கிப் பெருகியுள்ளனர். இது இஸ்லாமும் கிறித்தவமும் ஏற்றுக் கொண்ட உண்மையாகும். மனித சமுதாயம் முழுவதும் ஒரு தாய், தந்தையின் சந்ததிகள் எனும் போது அவர்களுக்கிடையே பிறப்பால் உயர்வு, தாழ்வு கற்பிக்க முடியாது.

ஒருவன் தனது நன்னடத்தையால், நல்ல கொள்கைகளை நம்புவதால் மற்றவனை விட உயர முடியும் என்பதை நம்முடைய அறிவு ஒப்புக் கொள்கிறது.

ஒரு குலத்தில் பிறந்து விட்ட காரணத்தினால் அவன் எவ்வளவு மோசமான செயல்களைச் செய்பவன் என்றாலும் வேறொரு குலத்தில் பிறந்தவனை விட அவன் எவ்வளவு நல்லொழுக்கமுள்ளவனாக இருந்தாலும் சிறப்புப் பெற்றவன் என்ற சித்தாந்தத்தை நியாயமான அறிவுடைய எவரும் ஏற்க முடியாது.

பிறக்கின்ற குலத்தினடிப்படையில் மனிதர்கள் வித்தியாசப்படுவதே ஜாதிகள் தோன்றவும் தீண்டாமை வேரூன்றவும் காரணம்.

தீண்டாமையின் ஆணிவேராகத் திகழும் இந்த நச்சுக் கோட்பாட்டை பைபிள் ஆதரிக்கிறது; போதிக்கின்றது.

அபிஷேகம் பெற்றவனும் தன் தகப்பன் பட்டத்துக்கு வந்து ஆசாரிய ஊழியஞ் செய்யப் பிரதிஷ்டை பண்ணப் பட்டவனுமாகிய ஆசாரியனே பிராயச்சித்தம் செய்ய வேண்டும். அவன் பரிசுத்த வஸ்திரங்களாகிய சணல் நூல் உடைகளை உடுத்திக் கொண்டு பரிசுத்த ஸ்தலத்துக்காக பிராயச்சித்தம் செய்ய வேண்டும்.

லேவியராகமம் 16: 32-33

ஒரு ஜாதியினர் தாம் கடவுளுக்கு பூஜை செய்பவர்களாக வர முடியும். அதுவும் வாரிசினடிப்படையில் தான் வர முடியும் என்று பைபிளில் போதனை செய்கிறது.

மனிதர்களை இப்படிப் பல ஜாதிகளாகப் பிரித்தது கடவுள் தான் எனவும் பைபிள் பறை சாற்றுகிறது.

கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடி நீங்களும் எனக்கென்று பரிசுத்தராயிருக்க வேண்டும். நீங்கள் என்னுடையவர்களாக இருக்கும்படி நான் உங்களுக்கும் மற்ற ஜனங்களுக்கும் வித்தியாசம் பண்ணி உங்களைப் பிரித்தெடுத்தேன்.

லேவியராகமம் 20:26

இஸ்ரவேல் பரம்பரையினராகிய யூதர்களை உயர்ந்த ஜாதிகளாக ஆக்கியதாக பைபிளில் கர்த்தர்(?) கூறுகிறார். புரோகிதர்களுக்கும் தீண்டாமைக்கும் பைபிளில் வக்காலத்து வாங்குவதை இன்னும் தெளிவாக அறிந்து கொள்ள பின்வரும் வசனங்களைப் பாருங்கள்!

அன்னியவன் ஒருவனும் பரிசுத்தமானவைகளில் புசிக்கக் கூடாது. ஆசாரியின் வீட்டில் தங்கியிருக்கிறவனும் வேலை செய்பவனும் பரிசுத்தமானதில் புசிக்கலாகாது.

லேவியராகமம் 22:10

ஆசாரியினுடைய குமாரத்தி அன்னியனுக்கு வாழ்க்கைப்பட்டால் அவள் பரிசுத்தமானவைகளின் படைப்பிலே புசிக்கலாகாது.

லேவியராகமம் 22:12

ஆசாரியன் (புரோகிதன்) குலத்தில் பிறந்து விட்டவளானாலும் அன்னிய ஜாதிக்கு அவள் வாழ்க்கைப் பட்டுவிட்டால் அவளும் அந்த அன்னிய ஜாதியில் சேர்ந்துவிடுகிறாள் என்கிறது பைபிள்.

ஒருவன் அறியாமல் பரிசுத்தமானதில் புசித்தது உண்டானால் அவன் அதிலே ஐந்தில் ஒரு பங்கு அதிகமாய் கூட்டி பரிசுத்தமானவைகளோடும் கூட ஆசாரியனுக்கு கொடுக்கக்கடவன்.

லேவியராகமம் 22:14

நீ இஸ்ரவேல் புத்திரரோட சொல்ல வேண்டியது என்னவென்றால் நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்தில் நீங்கள் போய்ச் சேர்ந்து அதில் வெள்ளாமையை அறுக்கும் போது உங்கள் அறுப்பின் முதற்பலனாகிய ஒரு கதிர்க்கட்டை ஆசாரியரிடத்தில் கொண்டு வரக்கடவீர்கள். உங்களுக்காக அது அங்கீகரிக்கப் படும்படி ஆசாரியின் அந்தக் கதிர்க்கட்டை ஓய்வு நாளுக்கு மறு நாள் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்ட வேண்டும். நீங்கள் அந்தக் கதிர்கட்டை அசைவாட்டும் நாளில் கர்த்தருக்கு சர்வாங்க தகனபலியாக ஒரு வயதான பழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டியைக் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாக ஒரு மரக்காலிலோ பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவாகிய போஜன பலியையும் திராட்சை பழரசத்திலே காற்படியாகிய பானப்பலியையும் செலுத்தக்கடவீர்கள்.

லேவியராகமம் 23:19-13

இவற்றையெல்லாம் கடவுளே சாப்பிடப் போகிறாரா? அல்லது ஏழைகளுக்குப் பங்கிட்டு கொடுக்க வேண்டுமா? அதெல்லாம் கிடையாது. அவையனைத்தும் மதகுருமார்களுக்குச் சேர வேண்டும்.

அவைகளை ஆசாரியன் முதற்பலனாகிய அப்பத்தோடும் இரண்டு ஆட்டுக் குட்டிகளோடும் கூட கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டக் கடவன். கர்த்தருக்குப் பரிசுத்தமாகிய அவைகள் ஆசாரியனுடையதாகும்.

லேவியராகமம் 23:20)

பைபிளின் இந்த போதனைகளைப் பார்க்கும் பொழுது ஆசாரியர்கள் (அதாவது பூசாரிகள்) தங்கள் பிழைப்பை நடத்துவதற்காக கடவுளின் பெயரால் இட்டுக்கட்டி கூறியிருக்கிறார்கள் என்பது தெளிவாகின்றது. எல்லா மாந்தரையும் ஒரு ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்துள்ள கர்த்தர் மனிதர்களைப் பிறப்பின் அடிப்படையில் ஜாதிகளாகப் பிரித்திருக்க மாட்டார்.

புரோகிதர்களுக்கு பைபிளில் நிர்ணயித்துள்ள தகுதிகளைப் பார்க்கும் போது அது கடவுளின் போதனையாக இருக்க முடியாது என்பது மேலும் உறுதியாகின்றது. அந்தத் தகுதிகளைப் பின்வரும் வசனங்களிலிருந்து அறியலாம்.

பின்னும் கர்த்தர் மோசேயிடம் நீ ஆரோனோடும் பேசியதைச் சொல். உன் சந்ததியாருக்குள்ளே அங்கவீனமுள்ளவர்கள் தலைமுறை தோறும் கடவுளின் அப்பத்தைப் படைக்கும் படி கிட்டிவரலாகாது. குருடன், சப்பாணி, முகவிகாரமுள்ளவன் அளவுக்கு மிஞ்சி நீண்ட அவயவம் உள்ளவன் கால் ஒடிந்தவன், கை ஒடிந்தவன், கூனன், அதிகம் மெலிந்தவன், பூவிழுந்த கண்ணன், சொறியன், அசருள்ளவன், விதை நசுங்கினவன் ஆகிய இவர்கள் கிட்டிவரலாகாது.

லேவியராகமம் 21:16-23

ஆணழகன் போட்டிக்கு வரத் தகுதியுள்ளவர்கள் மட்டும் தான் கடவுளின் அப்பத்தைப் படைக்கும் படி கிட்டிவர வேண்டுமா? இது போன்ற குறையுள்ள கிறித்தவர்களே! நீங்கள் கடவுளை பூஜை செய்யவோ பலி செய்யவோ முடியாது என்று கூறும் இந்தப் போதனை உங்களுக்குத் தேவையா?

மனிதர்களின் நடத்தையையும் உள்ளத்தூய்மையையுமே கடவுள் கவனிக்க வேண்டும். உடலமைப்பில் காணப்படும் குறைகளையெல்லாம் கடவுள் கவனிக்க மாட்டார். ஏனெனில் இந்தக் குறைகளை மனிதன் தானாக உண்டாக்கிக் கொள்ளவில்லை. கடவுளே ஏற்படுத்தினார். எனவே மேற்கண்ட தகுதிகளை கடவுள் கூறியிருக்கவே முடியாது என்பது மிகத் தெளிவாகவே தெரிகின்றது.

உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்று மனிதர்களை வித்தியாசப்படுத்துவது பழைய ஏற்பாட்டில் தான் உள்ளது. புதிய ஏற்பாட்டில் அத்தகைய போதனைகள் இல்லையே என்று கிறித்தவ உலகம் சமாளிக்கக் கூடும். இப்படிச் சமாளிக் முயல்வோர் முதலில் பழைய ஏற்பாடு என்பது இறை வேதம் அன்று என்பதைப் பகிரங்கமாக ஒப்புக்கொள்ளட்டும்!

குறைந்த பட்சம் இத்தகைய போதனைகள் மலிந்த லேவியராகமத்தையாவது இறை வேதம் அல்ல என்று ஒப்புக்கொள்ளட்டும்.

இனி புதிய ஏற்பாட்டையும் அடையாளம் காட்டுவோம். இதோ மத்தேயு கூறுவதைக் கேளுங்கள்!

அப்பொழுது அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானியஸ்திரீ ஒருத்தி அவரிடத்தில் (இயேசுவிடத்தில்) வந்து ஆண்டவரே! தாவீதின் குமாரனே! எனக்கு இரங்கும்: என் மகள் பிசாசினால் கொடிய வேதனை செய்யப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள். அவளுக்கு பிரதியுத்திரமாக அவர் ஒரு வார்த்தையையும் சொல்லவில்லை. அப்பொழுது அவருடைய சீடர்கள் வந்து இவள் நம்மைப் பின்தொடர்ந்து கூப்பிடுகிறாளே; இவளை அனுப்பிவிடு என்று அவரை வேண்டிக் கொண்டார்கள். அதற்கவர் காணாமல் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி மற்றபடியல்ல என்றார். அவள் வந்து ஆண்டவரே! எனக்கு உதவி செய்யும் என்று அவரைப் பணிந்து கொண்டாள். அவர் அவளை நோக்கி  பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றாள் அதற்கு அவள் மெய் தான் ஆண்டவரே! ஆயினும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜைகளிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்னுமே என்றாள்.

மத்தேயு 15:22-27

இதைத் தொடர்ந்து மாற்கு குறிப்பிடும் போது

அப்பொழுது அவர் நீ சொன்ன வார்த்தையின் நிமித்தம் போகலாம். பிசாசு உன் மகளைவிட்டு நீங்கிப்போயிற்று என்றார்.

மாற்கு 7:29

என்று சொல்கிறார்.

புதிய ஏற்பாட்டில் இடம்பெறும் இந்தக் கதையை ஒரு முறைக்குப் பலமுறை படியுங்கள்! தங்களை உயர்ந்த ஜாதியினர் என்று எண்ணி இறுமாப்புக் கொண்ட ஒரு ஜாதியினர் தான் இயேசுவின் பெயரைப் பயன்படுத்தி இப்படி கற்பனை செய்திருக்க முடியும் என்பதை உணர்வீர்கள்.

இஸ்ரவேல் புத்திரர் பிள்ளைகள் போன்றவர்களாம்! கானானிய இனத்தவர் நாய்களைப் போன்றவர்களாம்! உலகுக்கு ஒழுக்கத்தையும், பண்பாட்டையும் போதிக்க வந்த இயேசு இவ்வளவு அநாகரீகமாகப் பேசினார் என்பதை உங்களால் நம்ப முடிகின்றதா? ஜாதி வெறி பிடித்தவர்களாக இயேசுவைப் பற்றி நம்மால் கற்பனை செய்யக் கூட முடியவில்லை. ஆனால் பைபிளைத் தங்கள் சொந்த கற்பனையில் உருவாக்கிய மேல் ஜாதியினர் இயேசுவை அப்படித் தான் அறிமுகப்படுத்துகின்றனர்.

தன் மகளுக்கு நோய் ஏற்பட்டுள்ள நிலையில் மனம் நொந்து வேதனையுடன் வந்த பெண்ணை இயேசு மேலும் வார்த்தைகளால் புண்படுத்தியதாக இந்தக் கதை கூறுகின்றது. கடைசி நேரத்தில் அவளது பிசாசை இயேசு விரட்ட முன் வந்தது ஏன்? நீ சொன்ன வார்த்தையினிமித்தம் என்று இயேசு கூறுகிறார். அவள் தன்னை நாயினம் என்று ஒப்புக்கொண்டு வாக்குமூலம் தந்த காரணத்தினாலேயே அவர் பிசாசை ஓட்டியதாக பைபிள் பகிரங்கப்படுத்துகிறது.

அகில உலக இரட்சகர் என்று கிறித்தவ உலகம் அறிமுகப்படுத்தும் இயேசு இஸ்ரவேலர் என்ற உயர்ந்த ஜாதிக்குத் தான் இரட்சகராக பைபிளில் அறிமுகப்படுத்தப்படுகிறார். அந்த ஒரு ஜாதியை மட்டுமே மனித இனத்தில் சேர்க்கிறார். மற்ற ஜாதியினர் மிருக குலத்தில் உள்ளவர்கள் என்று கூறுகிறார்.

இவ்வளவு மோசமான வர்ணாசிரமத் தர்மத்துக்கு வக்காலத்து வாங்கக் கூடிய தீண்டாமையைப் பகிரங்கமாக ஆதரிக்கக்கூடிய மேற்கண்ட போதனைகளைக் கர்த்தரோ, இயேசுவோ கூறியிருப்பார்கள் என்று நம்புகின்றீர்களா? அவர்கள் பெயரால் பொய்களைப் புனைந்த இஸ்ரவேல் இனத்தின் கலப்படச் சரக்கே பைபிளாகும் என்பது உங்களுக்குத் தெரியவில்லையா? இந்தப் போதனையைச் சிந்திக்கும் நடுநிலையானவர்கள் இந்த முடிவுக்குத் தான் வந்தாக வேண்டும்.

இந்த அக்கிரமமான போதனைகளைக் கண்ட பிறகும் கூட இது கர்த்தரின் போதனை தான் இயேசுவின் போதனை தான் என்று கிறித்தவ உலகம் சாதிக்குமானால் இதை நடைமுறைப்படுத்திக் காட்டட்டும். தங்களின் பிரச்சார சாதனங்களை மூட்டை கட்டிக் கொண்டு இஸ்ரவேல் நாட்டுக்குச் சென்று விடட்டும்.

கடவுளே ஒதுக்கித்தள்ளிய – இயேசுவே புறக்கணித்த – நாய்களுக்கு அதாவது இஸ்ரவேல் ஜாதியைச் சேராதவர்களுக்கு இனிமேல் கிறித்தவப் பிரச்சாரம் செய்வதை நிறுத்திக் கொள்ளட்டும்!

இரண்டில் ஒன்றைத் தான் அவர்கள் செய்ய முடியும். ஒன்று அது இறைவனின் போதனை இல்லை என்று ஏற்றுக் கொள்ள வேண்டும். இறைவனின் போதனை என்றால் உடனே அதை நடைமுறைப்படுத்த முயல வேண்டும்.

பைபிள் வேதம் என்று கூறிக் கொண்டு அதன் போதனைக்கு மாற்றமாக நாய்களுக்குப் போதனை செய்வது என்று நடந்து கொண்டால் அவர்களுக்குக் கொள்கை எதுவும் இல்லை என்ற முடிவுக்கே நாம் வந்தாக வேண்டும்.

நாய்க்குட்டிகளுக்கும் ஒரு வார்த்தை கூறுவது நமக்கு அவசியமாகும். உங்களை மனித வர்க்கத்திலேயே சேர்க்காத வர்ணாசிரமக் கொள்கை உங்களுக்கு இனியும் தேவையா?

தன்னை நெருங்கவும். பூஜிக்கவும் புற சாதியினருக்குத் தகுதியில்லை என்று கூறும் போதனை தேவை தானா? அல்லது நாய்களாகவே இருப்பது என்று தீர்மானம் செய்து கொண்டீர்களா?

எந்த வர்ணாசிரமக் கொடுமைக்கு, ஜாதீய அடக்குமுறைக்கு, தீண்டாமை இழிவுக்கு அஞ்சி, இந்து மதத்தைத் துறந்து உங்கள் முன்னோர்களும் நீங்களும் கிறித்தவ மதத்தைத் தழுவினீர்களோ, அதே வர்ணாசிரம, தீண்டாமைக் கொடுமைகளைப் பைபிளில் பார்க்கிறீர்கள் அல்லவா? உங்கள் உள்ளம் உண்மையான விடுதலைக்கும் மேன்மைக்கும் ஏங்கவில்லையா?

8) உளறல்கள்

யதார்த்தமான நிலமைக்கு முரணான செய்திகள் கடவுளின் வார்த்தையில் இருக்க முடியாது. படித்தவுடன் பைத்தியக்காரத்தனமாகத் தோன்றும் செய்திகளும் கடவுளின் வார்த்தையில் இருக்க முடியாது; இருக்கவும் கூடாது. கடவுளின் வார்த்தைகளில் இத்தகைய குறைபாடு இருக்கலாகாது என்பதைப் பைபிளும் கூட ஒப்புக் கொள்கிறது.

ஒரு தீர்க்கதரிசி கர்த்தரின் நாமத்தினாலே சொல்லும் காரியம் நடவாமலும், நிறைவேறாமலும் போனால் அது கர்த்தர் சொல்லாத வார்த்தை. அந்தத் தீர்க்கதரிசி அதைத் துணிகரத்தினாலே சொன்னான். அவனுக்கு நீ பயப்பட வேண்டாம்.

உபாகமம் 18:22

பைபிளே ஒத்துக்கொள்ளும் இந்தத் தகுதி பைபிளுக்கு இருக்கின்றதா? இதை நாம் ஆராய்வோம்.

அ) ஆடைக்கு குஷ்டரோகம்

தொழு நோய் என்று சொல்லப்படும் குஷ்டரோகம் மனிதனுக்கு ஏற்படும் என்று கூறினால் அதை நம்பலாம். ஆடு, மாடுகளுக்கு ஏற்படும் என்று கூறினால் கூட நம்பலாம். அணிகின்ற ஆடைகளுக்கும் தொழுநோய் ஏற்படும் என்று எவரேனும் சொன்னால், குடியிருக்கும் வீட்டுக்கும் தொழுநோய் ஏற்படும் என்று எவரேனும் சொன்னால் அறிவுடைய எவரும் நம்ப மாட்டார்கள். அப்படிச் சொல்பவனின் அறிவில் தான் ஏதோ ரோகம் உள்ளது என்றே கூறுவார்கள்.

ஆனால், ஆடைகளுக்கும் வீடுகளுக்கும் கூடத் தொழுநோய் ஏற்படும் என்று கூறுவதுடன் அதற்கான வைத்திய முறையையும் பைபிள் கூறுகிறது. இதோ பைபிள் கூறுவதைக் கேளுங்கள்!

ஆடையில் குஷ்டரோகம் தோன்றினால் அது கம்பளி ஆடையானாலும் பஞ்சு ஆடையானாலும், பின்னிய துணியானாலும், பஞ்சுத் துணியானாலும், கம்பளித் துணியானாலும், தோலானாலும், தோலினால் செய்த எந்தப் பொருளானாலும் அதில் காணும் ரோகம் பச்சை நிறமாயாவது சிவப்பு நிறமாயாவது காணப்பட்டால் அது ஆடையானாலும் தோலானாலும் நெய்த துணியாலானாலும் தோலினால் பின்னிய துணியானாலும் தோலினால் செய்த எந்தப் பொருளானாலும் அது குஷ்டரோகமே.

அதை ஆசாரியனுக்குக் காண்பிக்க வேண்டும். ஆசாரியன் அதைப் பார்த்து ஏழு நாள் அடைத்து வைக்க வேண்டும். ஏழாம் நாளில் ரோகம் உள்ளதைப் பாரக்கும் பொழுது ஆடையிலோ நெய்த துணியிலோ பின்னிய துணியலோ தோலிலோ தோலினால் செய்த எந்தப் பொருளிலோ ரோகம் அதிகப்பட்டிருக்கக் கண்டால் அது அரிக்கிற குஷ்டம். அது அசுத்தமாகும்! அந்த ரோகமிருக்கிற ஆடையையும் நெய்த துணியையும் பின்னிய துணியையும் சுட்டெரிக்க வேண்டும். அது கம்பளியானாலும் சரி; துணியானாலும் சரி; தோலினால் செய்த எந்தப் பொருளானாலும் சரி; அது அரிக்கிற குஷ்டம். ஆகையால் நெருப்பினால் அதைச் சுட்டெரிக்க வேண்டும்.

ஆசாரியன் பார்க்கும் போது ஆடையிலாவது நெய்த துணியிலாவது பின்னிய துணியிலாவது தோலினால் செய்த எந்தப் பொருளிலாவது அந்த ரோகம் அதிகப்படவில்லை என்று கண்டால் ரோகமுள்ளதைத் துவைக்கச் சொல்லி அதை மறுபடியும் ஏழு நாள் அடைத்து வைக்க வேண்டும். அது துவைத்து வைக்கப்பட்ட பின் ஆசாரியன் அதைப் பார்க்க வேண்டும். பார்க்கும் போது அந்த ரோகம் பரவாதிருந்தும் அதன் நிறம் மாறாதிருந்தால் அது அசுத்தமே. நெருப்பினால் அதைச் சுட்டெரிக்க வேண்டும். அது துணியின் உட்புறத்திலிருந்தாலும் வெளிப்புறத்திலிருந்தாலும் அது அரிக்கிற ரோகமே.

துவைக்கப்பட்ட பின் நிறம் மங்கிப் போயிற்றென்று ஆசாரியன் கண்டானேயாகில் அது ஆடையிலாவது தோலிலாவது நெய்த துணியிலாவது பின்னிய துணியிலாவது இராதபடி கிழித்துப் போட வேண்டும். அது இன்னும் ஆடையிலாவது நெய்த துணியிலாவது தோலினால் செய்த எந்தப் பொருளிலாவது காணப்பட்டால் அது வெளிப்பட்டுத் தோன்றுகின்ற ரோகமே. அந்த ரோகம் உள்ளதை நெருப்பில் சுட்டெரிக்க வேண்டும். ஆடையாவது நெய்த துணியாவது பின்னிய துணியாவது தோலினால் செய்த எந்தப் பொருளாவது துவைக்கப்பட்ட பின் அந்த ரோகம் அதை விட்டுப்போயிற்றேயானால் அதை இரண்டாம் தரமும் துவைக்க வேண்டும். அப்பொழுது சுத்தமாகும். கம்பளி ஆடை, பஞ்சு ஆடை, நெய்த துணி, தோலினால் செய்த எவ்வகைப் பொருள் ஆகிய இவற்றுக்குரிய குஷ்டரோகப் பரிகாரம் இதுவே.

லேவியராகமம் 13ஆம் அதிகாரம் 47 முதல் 59 வரையிலான வசனங்கள்.

இவை அப்படியே பைபிளில் இடம்பெற்ற வாசகங்கள்!

குஷ்டரோகமும், அதற்குப் பரிகாரமும் எவ்வளவு அற்புதமாக விளக்கப்பட்டுள்ளன என்பதைக் கண்டு வியப்பு ஏற்படுகின்றதல்லவா? உங்கள் ஆடைகளில் சிவப்பாக, பச்சையாக ஏதேனும் தென்படுகிறதா என்று சோதித்துக் கொள்ளுங்கள்! அதைக் கூட நீங்கள் சோதிக்க முடியாது, ஆசாரியன் தான் சோதிக்க வேண்டும். பாவம் பெண்கள்…!

இது கர்த்தர் சொன்னதா? அல்லது கள்ளத் தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டதா? கர்த்தர் சொல்லியிருந்தால் அந்தக் கர்த்தரின் ஞானம் எவ்வளவு விசாலமானது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!

ஆ) வீட்டுக்கும் குஷ்டரோகம்

இனி வீட்டுக் குஷ்டத்தையும் விபரமாக அறிந்து கொள்ளுங்கள்!

உங்கள் காணியாட்சியான தேசத்திலே ஒரு வீட்டிலே குஷ்டரோகத்தை நான் வரப் பண்ணினால் அந்த வீட்டிற்கு உடையவன் வந்து, வீட்டில் ரோகம் போன்றதொன்று வந்திருக்கிறதாகத் தோன்றுகின்றது என்று ஆசாரியனுக்கு அறிவிக்க வேண்டும். அப்பொழுது வீட்டிலுள்ள யாவும் அசுத்தமாய்ப் போகாதபடி அந்த ரோகத்தைப் பார்க்கப் போகும் முன்னே வீட்டை ஒழித்து வைக்கும்படிச் சொல்ல வேண்டும். பின்பு ஆசாரியன் போய் அந்த வீட்டைப் பார்க்க வேண்டும். அந்த ரோகம் இருக்கிற இடத்தைப் பார்க்கும் போது வீட்டுச் சுவர்களிலே கொஞ்சம் பச்சையும் கொஞ்சம் சிவப்புமான கறைகள் உண்டாயிருக்கவும் அவைகள் சுற்றிலுமிருக்க சுவருக்கு பள்ளமாயிருக்கவும் கண்டால் ஆசாரியன் வீட்டை விட்டு வெளியே வாசற்படியில் வந்து வீட்டை ஏழு நாள் அடைத்து வைக்க வேண்டும்.

ஏழாம் நாளில் அவன் திரும்பப் பார்க்கும் போது ரோகம் வீட்டுச் சுவர்களில் பரவினதென்று கண்டால் ரோகம் இருக்கும் கற்களைப் பெயர்த்து ஊருக்கு வெளியே அசுத்தமான இடத்தில் போடச் சொல்ல வேண்டும். வீட்டை உள்ளே சுற்றிலும் செதுக்கச் சொல்லி செதுக்கிப் போட்ட மண்ணை ஊருக்கு வெளியே அசுத்தமான ஒரு இடத்தில் கொட்டவும், வேறு கற்களை எடுத்து வந்து பெயர்த்த கற்களுக்குப் பதிலாக வைத்துக் கட்டி வேறு சாந்தைக் கொண்டு வீட்டைப் பூசவும் கட்டளையிட வேண்டும். கற்களைப் பெயர்த்து வீட்டைச் செதுக்கிப் புதிதாய் பூசின பின்பும் ரோகம் மறுபடியும் வீட்டில் வெளிப்படத் தோன்றுமானால் ஆசாரியன் போய்ப் பார்க்க வேண்டும்.

பார்க்கும் போது ரோகம் வீட்டில் பரவியிருக்கிறதென்று கண்டால் அது வீட்டில் உண்டாகும் அரிக்கிற குஷ்டம். அது அசுத்தமாம். ஆகவே வீட்டை இடித்து அதன் கற்களையும் மரங்களையும் அதன் சாந்து எல்லாவற்றையும் ஊருக்கு வெளியே அசுத்தமான இடத்தில் கொண்டு போய்ப் போடவேண்டும்.

வீடு அடைபட்டிருக்கும் நாட்களில் அதற்குள் செல்லுகிறவன் சாயங்கால மட்டும் தீட்டப்பட்டிருப்பான். அந்த வீட்டிலே படுத்தவன் தன் வஸ்திரங்களைத் துவைக்க வேண்டும். அந்த வீட்டிலே சாப்பிட்டவனும் தன் வஸ்திரங்களைத் துவைக்க வேண்டும்.

ஆசாரியன் திரும்ப வந்து பார்க்கும் போது வீடு பூசப்பட்ட பின் வீட்டிலே ரோகம் பரவவில்லை என்று கண்டானேயாகில் ரோகம் நிவர்த்தியாகி விட்டபடியால் ஆசாரியன் அந்த வீட்டைச் சுத்தம் என்று தீர்க்க வேண்டும். அப்பொழுது ஆசாரியன் வீட்டுக்குத் தோஷங்களைக் கழிக்க இரண்டு குருவிகளையும், கேதுருக் கட்டைகயையும் சிவப்பு நூலையும் ஈசோப்பையும் எடுத்து ஒரு குருவியை மண்பாண்டத்திலுள்ள ஊற்று நீரின் மேல் கொன்று, கேதுருக் கட்டையையும் ஈசோப்பையும் சிவப்பு நூலையும் உயிருள்ள குருவியையும் எடுத்துக் கொல்லப்பட்ட குருவியின் இரத்தத்திலும் ஊற்று நீரிலும் இவைகளைத் தோய்த்து வீட்டின் மேல் ஏழுதரம் தெளிக்க வேண்டும்.

லேவியராகமம் 14ஆம் அதிகாரம் 34 முதல் 52 வரையிலான வசனங்கள் இவை.

இவை போல் அனேக தமாஷ்கள் லேவியராகமம் முழுவதிலும் பரவிக் கிடக்கின்றன. அவற்றை எழுதிப் பக்கங்களை வீணடிப்பதை விடக் கிறித்தவர்களே லேவியராகமத்தைக் கருத்தூன்றி படிக்கும்படி விட்டு விடுகிறோம்.

இதை இறை வேதம் என்று நம்புவது கிடக்கட்டும்! புத்தி சுவாதீனமுள்ள மனிதனின் கற்பனை என்றாவது உங்களால் நம்ப முடிகின்றதா? இதை எப்படி இறை வேதம் என்று நம்புகின்றீர்கள்? உங்கள் மனசாட்சியைக் கேட்டுப் பாருங்கள்.

இதே அளவுகோலில் இன்னும் சிலவற்றை அளந்து பார்ப்போம்.

இ) பலிக்காத சாபம்

கடவுள் ஆதாமையும் அவருக்குத் துணையாக ஏவாளையும் படைத்தான். ஒரு குறிப்பிட்ட மரத்தின் கனிகளை மட்டும் உண்ணக் கூடாது என்று அவர்களுக்குக் கடவுள் தடை விதித்திருந்தான். அவர்களிருவரும் கடவுளின் இந்தக் கட்டளையை மீறி அந்தக் கனியை உண்டார்கள்.

இந்தச் சம்பவத்தை ஒட்டி, பைபிள் கூறும் சில விஷயங்களை மேற்கண்ட அளவுகோலால் அளந்து பார்க்கும் பொழுது பைபிள் இறை வேதத்திற்கான தகுதியை இழந்து விடுகின்றது என்பதை எவரும் உணரலாம். பைபிள் கூறுகிறது:

ஸ்திரீயிடமோ நீ கற்பவதியாய் இருக்கும் போது உன் வாதையை மிகவும் பெருகப் பண்ணுவேன். வேதனையோடே பிள்ளை பெறுவாய் என்றார்.

ஆதியாகமம் 3:16

கர்த்தரின் கட்டளையை மீறியதற்காகக் கடவுள் இட்ட சாபம் இது! இது எத்தனை வகைகளில் பொருந்தாமல் போகின்றது என்பதை உங்கள் அறிவில் உரசிப் பாருங்கள் நண்பர்களே!

பெண்களுக்குப் பிரசவ வலி ஏற்படுகின்றது என்பது உண்மை தான். கடவுள் சொல்லா விட்டாலும் கூட இது அனைவருக்கும் தெரிந்தது தான். ஆனால் அதற்குச் சொல்லப்படும் காரணம் சரியா? பொருத்தமானது தானா? என்பதே ஆராய வேண்டிய விஷயம்.

1: கடவுளின் கட்டளையை மீறி, விலக்கப்பட்ட கனியை உண்டதற்காகத் தான் இந்தச் சாபம் என்றால் கட்டளையை மீறியது ஏவாள் மட்டுமல்லவே? ஆதாமும் கூட கட்டளையை மீறியவர் தாமே! பாவத்தில் சம பங்கு கொண்ட அவருக்கும் மற்ற ஆண்களுக்கும் ஏன் பிரசவமோ, பிரசவ வலியோ ஏற்படுவதில்லை?

2: ஏவாள் கடவுளின் கட்டளையை மீறிக் கனியை உண்டதனால் அவருக்கு மட்டும் தானே பிரசவ வலி ஏற்பட்டிருக்க வேண்டும். அந்தப் பாவத்தில் சம்பந்தப்படாத மற்ற பெண்களுக்கும் ஏன் பிரசவ வலி ஏற்பட வேண்டும்?

3: பெற்றோரின் குற்றம் பிள்ளைகளைச் சேரும் என்று கிறித்தவ உலகம் சமாளிக்குமானால் ஏவாள் பெற்றெடுத்த ஆண்களுக்கும் அந்தக் குற்றத்தில் பங்கிருக்க வேண்டுமே? ஏவாளின் சந்ததிகளான ஆண்களுக்கு அந்த வலி ஏற்படுவதில்லையே அது ஏன்?

4: தாயின் தவறில் அவரது பெண் சந்ததிகளுக்கும் தந்தையின் தவறில் அவரது ஆண் சந்ததிகளுக்கும் தான் பங்கு உண்டு என்று கிறித்தவ உலகம் தங்களின் கோட்பாட்டிற்கு விளக்கமளிப்பார்களானால் ஏவாள் பெற்றெடுத்த எல்லாப் பெண்களுக்கும் இந்த வலி ஏற்பட வேண்டுமே? மலடிகளுக்கும், மலட்டு ஆண்களை மணந்து கொண்ட பெண்களுக்கும் இந்த வலி ஏற்படுவதில்லையே? அப்படியாயின் கடவுளின் சாபம் என்னாவது? கிறித்தவக் கோட்பாடு தான் என்னாவது? பிரசவிக்காத பெண்களுக்கு அந்தப் பாவத்தில் பங்கு இல்லையா? அவர்கள் பாக்கியம் செய்து விட்டவர்களா? அவர்கள் தாய் வயிற்றில் பிறக்காமல் தாமாகத் தோன்றியவர்களா?

கிறித்தவக் கன்னியாஸ்திரீகளின் நிலை என்ன? பைபிளின் கொள்கை என்னாவது?

5: பாவத்தின் நிமித்தம் கடவுள் இட்ட சாபம் தான் பிரசவ வலி என்றால் மனித இனத்தைச் சேர்ந்த பெண்களுக்கு மட்டும் தான் அந்த வலி இருக்க வேண்டும் ஆடு, மாடு உள்ளிட்ட பிரசவிக்கும் அனைத்து உயிரினங்களும் பிரசவ வலியால் துடிக்கின்றனவே! அது ஏன்? எல்லா ஜீவராசிகளின் தாய்களும் கர்த்தரின் கட்டளைகளை மீறி விலக்கப்பட்ட கனியை உண்டுவிட்டனவா?

இப்படி அடுக்கடுக்காகக் கேள்விகளை இந்த வசனம் எழுப்பத் தூண்டுகிறது. கர்த்தர் சொன்ன பிரகாரம் எல்லாப் பெண்களுக்கும் (மலடிகள் உட்பட) பிரசவ வலி ஏற்படாததால் இது கள்ளத் தீர்க்கதரிசி தன் துணிகரத்தினாலே உண்டு பண்ணிச் சொன்னது என்பது தெளிவாகின்றது.

இந்தக் கேள்விகளுக்கான விடையைக் கிறித்தவ உலகம் சிந்திக்கட்டும்! அவர்களால் இந்தக் கேள்விகளுக்கு நியாயமான விடை அளிக்கவே முடியாது. கள்ளத் தீர்க்கதரிசிகள் உண்டு பண்ணிச் சொன்னவைகளும் பைபிளில் உள்ளன என்ற உண்மையை அவர்கள் ஒப்புக் கொள்வார்கள்.

ஈ) கால்களை இழந்த பாம்புகள்

இதே சம்பவத்தின் தொடரில் பைபிளில் இடம் பெற்றுள்ள மற்றொரு அபத்தத்தையும் பாருங்கள்! விலக்கப்பட்ட கனியை உண்ணுமாறு ஏவாளைத் தூண்டியது பாம்பு என்று பைபிள் கூறுகின்றது. அதனால் கடவுள் பாம்புக்குச் சாபம் கொடுத்ததாகவும் கூறுகின்றது.

கடவுளாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜந்துகளிலும் சர்ப்பமே தந்திரம் உள்ளதாயிருந்தது.

ஆதியாகமம் 3:1

நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டு மிருகங்களுக்கும், சகல காட்டு மிருகங்களுக்கும் விலக்கப்பட்டுச் சாபத்துக்குள்ளாவாய். கடவுளாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து உன் வயிற்றினாலேயே நீ நகர்ந்து உயிரோடு இருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய் என்றார்.

ஆதியாகமம் 3:14

1: மனிதனைத் தவறான வழியில் செலுத்தும் அளவுக்குப் பாம்புக்கு அறிவு கொடுக்கப்பட்டுள்ளது என்றால் இன்று எந்தப் பாம்பும் எந்த மனிதனையும் தவறான வழியில் செல்லத் தூண்டுவதில்லையே! அது ஏன்?

2: கடவுள் படைத்த காட்டு ஜீவராசிகளில் பாம்பு அளவுக்குத் தந்திரம் படைத்தது எதுவுமில்லை என்றால் தந்திரம் உள்ள எந்தப் பாம்பையும் நாம் காணவில்லையே? பாம்பு அளவுக்கு முட்டாள் தனம் நிறைந்த ஜீவராசியையும் அதிகமாக அடிபட்டுச் சாகும் ஜீவராசிகளையும் நாம் காணமுடியவில்லையே ஏன்?

3: நரிகள், பச்சோந்திகள், மீன் கொத்திப் பறவைகள், கொக்குகள், காகங்கள் போன்றவை பாம்பை விடப் பல மடங்கு தந்திரம் கொண்டதாக உள்ளனவே. ஒரு வேளை கர்த்தர் படைத்தவைகளில் அவை அடங்கவில்லையா?

4: ஏவாளைக் கெடுத்ததனால் பாம்புகள் ஊர்ந்து செல்கின்றன என்றால் ஏவாளைக் கெடுப்பதற்கு முன்னால் கால்களால் அவை நடந்து சென்றனவா?

5: ஏவாளைக் கெடுத்ததற்காகத் தான் பாம்புகள் தரையில் ஊர்ந்து செல்கின்றன என்றால் அதில் எந்த வகையிலும் சம்பந்தப்படாத பல நூறு புழுவினங்கள் வயிற்றால் ஊர்ந்து செல்கின்றனவே! அது ஏன்?

6: தரையில் ஊர்ந்து செல்லாமல் தண்ணீரில் செல்லும் பாம்புகள் வயிற்றால் நகர்ந்து செல்லவில்லையே! அவை விஷயத்தில் கர்த்தரின் சாபம் பலிக்கவில்லையே! அது ஏன்?

7 நீ உயிரோடு இருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய் என்று கடவுள் இட்ட சாபம் பலிக்கவில்லையே! அது ஏன்? கிறித்தவ நண்பர்களே! மண் தின்னும் பாம்புகள் எங்காவது உண்டா?

பதிலளிக்க முடியாத இத்தனை கேள்விகளை எழுப்பக் கூடிய வசனங்கள் கர்த்தர் சொன்னவையா? கள்ளத் தீர்க்கதரிசிகள் உண்டு பண்ணிச் சொன்னவையா? நியாய உணர்வுடன் கிறித்தவ உலகம் சிந்திக்கட்டும்!

உ) அதிசயப் பிரசவம்

நடந்திருக்க முடியாத, நம்ப முடியாத விஷயங்களின் வரிசையில் மற்றொரு சம்பவத்தைப் பார்ப்போம்.

ஒரு பெண் தன் மாமனாருடன் தகாத முறையில் உறவு கொண்டு கர்ப்பமாகி விடுகிறாள். (இந்தச் சம்பவம் பின்னர் விவரமாகக் கூறப்படும்) அவளது கர்ப்பத்தில் இரண்டு குழந்தைகள் உருவாயின. அது பற்றி பைபிள் கூறுவதைக் கவனியுங்கள்:

அவளுக்குப் பிரசவ காலம் வந்த போது அவள் கர்ப்பத்தில் இரட்டைப் பிள்ளைகள் இருந்தன. அவள் பிரசவிக்கும் போது ஒரு பிள்ளை கையை வெளியே நீட்டியது. அப்பொழுது மருத்துவச்சி அதன் கையைப் பிடித்து அதில் சிவப்பு நூலைக் கட்டி இது முதலில் வெளிப்பட்டது என்றாள். அது தன் கையை திரும்ப உள்ளே வாங்கிக் கொண்ட போது அதன் சகோதரன் வெளிப்பட்டான். அப்பொழுது அவள்  நீ மீறியது என்ன? என்று சொன்னாள்.

ஆதியாகமம் 38:27-30

இவ்வாறு நடந்திருக்க முடியாது என்பது தெளிவானது. இதிலிருந்து எழும் கேள்விகளுக்குக் கிறித்தவ உலகம் பதிலளிக்கட்டும்!

1: பிரசவத்தின் போது தலை தான் முதலில் வெளிப்பட வேண்டும். அது தான் சுகப் பிரசவமாக இருக்க முடியும். இல்லையென்றால் அன்றைய காலத்தில் தாயின் உயிருக்கே ஆபத்தாக முடிந்திருக்கும். முதலில் கை வெளிப்பட்டதும் மருத்துவச்சி திடுக்கிட்டிருக்க வேண்டும். இந்த ஆபத்தான கட்டத்தில் மருத்துவச்சி சிவப்பு நூலைக் கட்டியிருப்பாளா?

2: கையை நீட்டிய குழந்தை கையை உள்ளே இழுத்துக் கொள்ளும் என்பதும் கர்ப்பத்தில் இன்னொரு குழந்தை இருந்ததும் மருத்துவச்சிக்கு எப்படித் தெரிந்தது?

3: இதையெல்லாம் எதிர்பார்த்துச் சிவப்பு நூலை அவள் எடுத்துச் சென்றாளா?

4: கர்ப்ப அறையின் வாசலை ஒரு குழந்தை அடைத்துக் கொண்டிருக்கும் போது அதன் சகோதரன் எப்படி வெளிப்பட முடியும்?

இப்படி ஏராளமான கேள்விகள்! இந்தக் கேள்விகள் ஒரு புறமிருக்கட்டும். விபச்சாரத்தின் மூலம் பிறக்கும் குழந்தைகள் பிரசவித்த முறையை விலாவாரியாகக் கடவுள் விளக்க வேண்டுமா? இதனால் பயன் என்ன?

ஊ) உறைந்த இரத்தம் பீறிட்ட அதிசயம்

இதே போன்ற இன்னொரு கதையைக் கேளுங்கள்! ஒரு மனிதன் இறந்து விட்டால் அவனது உடலில் இருந்த இரத்தம் உறைந்து விடும் என்பது நிரூபிக்கப்பட்ட மருத்துவ உண்மை. இறந்தவனைத் துண்டு துண்டாக வெட்டினாலும் அவனிடமிருந்து இரத்தம் எதுவும் பீறிட்டு வராது என்பதிலும் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை. இந்த உண்மையை பைபிள் விளக்குவதைக் கேளுங்கள்!

அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து அவர் மரித்திருக்கறதைக் கண்டு அவருடைய கால் எலும்புகளை முறிக்கவில்லை. ஆகிலும் போர்ச் சேவகர்களில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவிலே குத்தினான். உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது.

யோவான் 19:33,34

கிறித்தவ நம்பிக்கையின் படி -பைபிளின் கூற்றுப்படி – இயேசு சாதாரணமாக மரிக்கவில்லை. சிலுவையில் அறையப்பட்டு மரணிக்கிறார். இவ்வாறு சிலுவையில் அறையப்பட்டதனால் அவரது உடலிலிருந்த இரத்தம் முழுமையாக வெளியேறி இருக்கும். அதன் பின்னர் அவர் மரித்து விட்டதால் ஏதேனும் இரத்தம் அவர் உடலில் மீதமிருந்தால் அதுவும் உறைந்து போயிருக்கும். அவரது விலாவில் ஈட்டியால் குத்தினால் இரத்தம் எப்படி புறப்பட்டிருக்கும்? இதைச் சிந்தித்தாலும் இது கர்த்தரின் வார்த்தையாக இருக்க முடியாது என்பதை விளங்கலாம்.

இவை போல் நம்ப முடியாதவைகளும், நடைமுறைச் சாத்தியமற்றவைகளும் பைபிளில் ஏராளம் மலிந்து காணப்படுகின்றன. மாதிரிக்குச் சில விஷயங்களை மட்டுமே கூறியிருக்கின்றோம். கடவுள் சொன்னதாக இருந்தால், அது எந்தத் தகுதியில் இருக்க வேண்டும் என்று பைபிளே ஒப்புக் கொள்கின்றதோ அந்தத் தகுதி நிச்சயமாக பைபிளுக்கு இல்லை. இந்தக் காரணத்தாலும் பைபிள் இறை வேதமல்ல என்ற முடிவுக்கு வரலாம்.

 9) ஆபாசம்

இறை வேதம் என்பது அனைவரும் படித்து அதன் படி ஒழுகுவதற்காக அருளப்பட்டதாகும். தந்தையும் மகளும், தாயும் மகனும், அண்ணனும் தங்கையும், ஒன்றாக அமர்ந்து படிக்க வெட்கப்படும் அளவுக்கு ஆபாசம் மலிந்துள்ள நூல் நிச்சயம் கர்த்தரின் வார்த்தையாக இருக்க முடியாது. இதைச் சாதாரண அறிவு படைத்தவரும் நாகரீக உணர்வு உள்ளவரும் அறியலாம்

(கத்தோலிக்க பைபிளிலும் புரோட்டஸ்டண்டு பைபிளிலும் பின்வரும் கதை இடம் பெற்றுள்ளது என்றாலும் எளிமையான தமிழ் நடையைக் கருதி இதை மட்டும் கத்தோலிக்க பைபிளில் இருந்து தருகிறோம்)

விபச்சார சகோதரிகள்…!

ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது  மனிதா! ஒரே தாயின் குமாரத்திகளான இரண்டு பெண்கள் இருந்தார்கள். இவர்கள் தங்கள் வாலிப வயதில் எகிப்தில் வேசித்தனம் செய்தார்கள்; அங்கே அவர்கள் மார்புகள் அமுக்கப்பட்டன; கன்னி கொங்கைகளைப் பிறர் தொட்டு விளையாடினர். அவர்களுள் தமக்கையின் பெயர் ஓல்லா, தங்கையின் பெயர் ஓலிபா. அவர்கள் நமக்கு உரிமை மனைவியராகிப் புதல்வர் புதல்வியரைப் பெற்றார்கள். ஓல்லா சமாரியாவையும், ஓலிபா யெருசலேமையும் குறிக்கின்றன. ஓல்லா என்னுடையவளாய் இருந்தும், விபச்சாரியானாள்; அசீரியாள் மீது காமம் கொண்டாள்; நீல ஆடையுடுத்தி, தலைவர்களும் அதிகாரிகளுமாய், ஆசை மூட்டும் அழகு கொண்ட வாலிபர்களுமாய்க் குதிரை மீது வந்த வீரர்கள் மேல் காதல் பைத்தியம் கொண்டாள். அசீரியருள் தலைசிறந்தவர்களான இவர்கள் அனைவருடனும் வேசித்தனம் செய்தாள். தான் காமம் கொண்ட அவர்களுடைய சிலைகளால் இவள் தீட்டுப்பட்டாள். தான் எகிப்தில் வாழ்ந்த நாளிலிருந்து செய்து வந்த வேசித்தனத்தை இவள் விட்டுவிடவில்லை. ஏனெனில் இவளுடைய வாலிப வயதில் அவர்கள் இவளுடன் படுத்து, இவளுடைய கன்னிக் கொங்கைகளைத் தொட்டு விளையாடி, தங்கள் காமத்தை இவள் மேல் தீர்த்துக் கொண்டார்கள். ஆகையால் அவள் மோகித்த அவளுடைய காதலர்களின் கைகளிலேயே – அந்த அசீரியரின் கைகளிலேயே நாம் அவளை விட்டு விட்டோம் – அவர்கள் அவள் ஆடைகளை உரித்தனர்; அவளுடைய புதல்வர் புதல்வியரைப் பிடித்துக்கொண்டு அவளை வாளால் கொன்று போட்டனர்; அவளுக்குக் கிடைத்த தண்டனையின் காரணமாய் அவள் பெண்களுக்குள்ளே பழிமொழிக்குள்ளானாள்.

அவள் தங்கை ஒலிபாவுக்கு இதெல்லாம் நன்கு தெரியும். தெரிந்திருந்தும் தமக்கையை விடக் காமத்திலும் வேசித்தனத்திலும் மிகுந்தவளானாள். பகட்டான ஆடைகளை உடுத்தி, தலைவர்களும் அதிகாரிகளுமாய் ஆசை மூட்டும் அழகு வாலிபர்களுமாய் குதிரை மீது ஏறி வந்து வீரர்களான அசீரியர்கள் மேல் காமம் கொண்டாள். இவ்வாறு சகோதரிகள் இருவரும் ஒரே வழியில் நடந்து காமத்தால் தீட்டுப்பட்டதைக் கண்டோம். ஆனால் ஒலிபா தன் வேசித்தனத்தில் இன்னும் மிகுதியாய் ஆழ்ந்தாள்; சுவரில் எழுதப்பட்ட ஆண்களின் உருவங்களையும், வரையப்பட்ட கல்தேயரின் ஓவியங்களையும் கண்டாள்; அவர்கள் தங்கள் பிறப்பிடமான கல்தேயாவிலுள்ள பாபிலோன் நகரத்தைப் போல் இடையில் கச்சை கட்டிக்கொண்டு தலையில் தலைப்பாகை அணிந்து படைத் தலைவர்கள் போலத் தோற்றமுள்ளவர்களாயும் இருந்ததைக் கண்டாள். கண்டதும் அவர்கள் மேல் காமம் கொண்டு அவர்களிடம் கல்தேயா நாட்டுத் தூதர்களை அனுப்பினாள். பாபிலோனியர்கள் வந்து, அவளோடு காமப் படுக்கையில் படுத்து, தங்கள் காமச் செயல்களால் அவளைத் தீட்டுப்படுத்தினார்கள்; தீட்டுப்பட்ட பின் அவர்கள் மேல் வெறுப்புக் கொண்டாள். இவ்வாறு அவள் தன் வேசித்தனத்தை வெளிப்படையாய்ச் செய்து, தன் நிருவாணத்தைக் காண்பித்த போது, அவள் சகோதரியை விட்டுப் பிரிந்தவாறே நம் மனம் இவளையும் விட்டுப் பிரிந்தது. இருப்பினும் அவள் எகிப்தில் தன் வாலிப வயதில் செய்த வேசித்தனத்தை நினைத்துக் கொண்டு, இன்னும் மிகுதியாய் அதில் ஆழ்ந்தாள். காம வெறியரின் மேல் அவள் மோகங் கொண்டாள்;

அவர்களுடைய உறுப்புகள் கழுதைகளின் உறுப்புகள் போலும், அவர்களுடைய இந்திரியம் குதிரைகளின் இந்திரியம் போலும் இருந்தன. இவ்வாறு எகிப்தியர் உன் இள மார்புகளைத் தொட்டு விளையாடி, உன் கன்னிக் கொங்கைகளை அமுக்கிய போது செய்த அதே வாலிப வயதின் வேசித்தனத்தை விரும்பினாய்…

எசக்கியேல் 23ஆம் அதிகாரம்

என்று இந்த வேசிகளின் ஆபாசக் கதையை வேதத்தில் கூற வேண்டிய அவசியம் என்ன? இதைத் தாயும் மகனும் அல்லது தந்தையும் மகளும் சேர்ந்து படிக்க இயலுமா? தேவாலயங்களில் கிறித்தவ மதகுருமார்கள் இதைப் படிக்கத் துணிவார்களா? கிறித்தவ நண்பர்களே! சிந்திக்க மாட்டீர்களா?

தந்தையும் குமாரத்திகளும்…?

பின்பு லோத்து சோவாரிலே குடியிருக்கப் பயந்து சோவாரை விட்டுப் போய் அவனும் அவனோடு கூட அவனுடைய இரண்டு குமாரத்திகளும் மலையிலே வாசம் பண்ணினார்கள். அங்கே அவனும் அவனுடைய இரண்டு குமாரத்திகளும் ஒரு கெபியிலே இருந்தார்கள். அப்பொழுது மூத்தவள் இளையவளைப் பார்த்து நம்முடைய தகப்பன் முதிர்ந்த வயதானதால் பூமியெங்கும் ஒரு புருஷனுமில்லை. நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாக்கும்படிக்கு அவருக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்து அவரோடு சயனிப்போம் வா என்றாள். அப்படியே அன்று இரவிலே தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். மூத்தவள் போய் தன் தகப்பனோட சயனித்தாள். அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான். மறு நாளிலே மூத்தவள் இளையவளைப் பார்த்து நேற்று ராத்திரி நான் தகப்பனோடே சயனித்தேன். இன்று ராத்திரியும் மதுவைக் குடிக்கக் கொடுப்போம். நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படி நீ போய் அவரோட சயனி என்றாள். அப்படியே அன்று ராத்திரியிலும் தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். அப்பொழுது இளையவள் எழுந்து அவனோடே சயனித்தாள். அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான் இவ்விதமாய் லோத்தின் குமாரத்திகள் இருவரும் தங்கள் தகப்பனாலேயே கர்ப்பவதியானார்கள்.

ஆதியாகமம் 19:31-37

அண்ணனும் தங்கையும்….?

தாவீதின் குமாரன் அப்சலோமுக்கு அழகுள்ள ஒரு சகோதரி இருந்தாள். அவள் பெயர் தாமார். தாவீதின் குமாரன் அம்னோன் அவள் மேல் மோகங்கொண்டான். தன் சகோதரியாகிய தாமாரினிமித்தம் ஏக்கங்கொண்டு வியாதிப்பட்டான். அவள் கன்னிகையாயிருந்தாள். அவளுக்கு ஏதேனும் செய்வது அம்னோனுக்கு அசாத்தியமாய்த் தோன்றிற்று. அம்னோனுக்கு யோனதாப் என்னும் ஒரு சிநேகிதன் இருந்தான்; இவன் தாவீதினுடைய சிமியாவின் குமாரன்; அந்த யோனதாப் மகா புத்திசாலி. இவன் அம்னோனைப் பார்த்து ராஜ குமாரனாகிய நீ காலைதோறும் இப்படி நோய் கொண்டவன் போல் காணப்படுகின்றாயே, காரணமென்ன? எனக்குச் சொல்ல மாட்டாயா? என்றான். அதற்கு அம்னோன்: என் சகோதரன் அப்சலோமின் சகோதரியாகிய தாமாரின் மேல் நான் ஆசை வைத்திருக்கிறேன் என்றான். அப்பொழுது யோனதாப் அவனைப் பார்த்து: நீ வியாதிக்காரனைப் போல் உன் படுக்கையின் மேல் படுத்துக் கொள்; உன்னைப் பார்க்க உன் தகப்பனார் வரும் போது, நீ, என் சகோதரியாகிய தாமார் வந்து, நான் பார்க்க என் கண்களுக்கு முன்பாகச் சமைத்து தன் கையினாலேயே எனக்குப் போஜனம் தரும்படி, நீர் அவளைத் தயவு செய்து அனுப்ப வேண்டும் என்று சொல் என்றான். அப்படியே அம்னோன் வியாதிக்காரனைப் போல் படுத்துக் கொண்டான்; ராஜா அவனைப் பார்க்க வந்த போது அவன் ராஜாவினிடம், என் சகோதரியாகிய தாமார் வந்து என் கண்களுக்கு முன்பாகவே இரண்டு மூன்று பணியாரங்களைச் செய்து, தன் கையினாலேயே எனக்குச் சாப்பிடக் கொடுப்பதற்கு நீர் சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். அப்பொழுது தாவீது வீட்டுக்குள் தாமாரிடம் ஆளனுப்பி, நீ உன் சகோதரனாகிய அம்னோன் வீட்டுக்குப் போய் அவனுக்குச் சமையல் செய்து கொடு என்று சொல்லச் சொன்னான். அப்படியே தாமார் தன் சகோதரனாகிய அம்னோன் படுத்திருந்த வீட்டுக்குப் போய், மாவெடுத்து, அவன் கண்களுக்கு முன்பாகப் பிசைந்து பணியாரங்களைச் சுட்டாள். சட்டியைக் கொண்டு வந்து பணியாரங்களைக் கொட்டி, அவனுக்கு முன்பாக அவைகளை வைத்தாள்; அவனோ சாப்பிட மாட்டேன் என்றான்; பின்பு அம்னோன், எல்லாரும் என்னை விட்டு வெளியே போகட்டும் என்று சொல்ல, அவனை விட்டு எல்லோரும் வெளியே போய் விட்டார்கள். அப்பொழுது அம்னோன் தாமாரைப் பார்த்து: நான் உன் கையினாலே சாப்பிடும்படி அந்தப் பணியாரங்களை உள்ளறைக்குக் கொண்டு வா என்றான். அப்படியே தாமார் தான் செய்த பணியாரங்களை உள்ளறைக்குத் தன் சகோதரனாகிய அம்னோனிடம் கொண்டு போனாள். அவன் சாப்பிடும்படி அவள் அவைகளை கிட்டக் கொண்டு வருகையில், அவன் அவளைப் பிடித்து, அவளைப் பார்த்து, என் சகோதரியே, நீ வந்து என்னோடு சயனி என்றான். அதற்கு அவள், வேண்டாம் என் சகோதரனே, என்னை அவமானப்படுத்தாதே. இஸ்ரவேலிலே இப்படிச் செய்யத்தகாது; இப்படிப்பட்ட மதிகேடான காரியத்தைச் செய்ய வேண்டாம். நான் என் வெட்கத்தோடே எங்கே போவேன்; நீயும் இஸ்ரவேலர்களில் மதிகேடரில் ஒருவனைப் போல் ஆவாய். நீ ராஜாவோடு பேசு. அவர் என்னை உனக்குத் தர மறுக்க மாட்டார் என்றாள். அவனோ அவள் சொல்லைக் கேளாமல் பலவந்தம் செய்து அவளோடு சயனித்து அவளைக் கற்பழித்தான். பிற்பாடு அவளை அம்னோன் மிகவும் அதிகமாய் வெறுத்தான்; முன் அவளை விரும்பின விருப்பத்திலும் பின் அவளை வெறுத்த வெறுப்பு அதிகம். ஆகவே, அவன் அவளிடம்: நீ எழுந்து போய்விடு என்று சொன்னான்.

இரண்டாம் சாமுவேல் 13:1-15

மாமனாரும் மருமகளும்….?

சேலா பெரியவனாகியும் தான் அவனுக்கு மனையாகக் கொடுக்கப்படவில்லை என்று அவள் கண்டபடியால், தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களைக் களைந்து போட்டு, முக்காடிட்டு தன்னை மூடிக் கொண்டு, திம்னாவுக்குப் போகிற வழியிலே ஏனாயீம் ஊருக்கு வெளியே சந்தியில் உட்கார்ந்தாள். யூதா அவளைக் கண்டு, அவள் தன் முகத்தை மூடியிருந்தபடியால், அவள் ஒரு வேசி என்று நினைத்து, அவள் வழியில் இருந்த இடமாய்த் திரும்பி, அவள் தன் மருமகள் என்று அறியாமல், நான் உன்னோடு சேர இடம் கொடு என்றான். அதற்கு அவள்: நீர் என்னோடு சேருகிறதற்கு எனக்கு என்ன தருவீர் என்றாள். அதற்கு அவன், நான் மந்தையிலிருந்து ஒரு வெள்ளாட்டுக் குட்டியை அனுப்புகிறேன் என்று சொல்ல, அவள், நீர் அதை அனுப்பும் அளவும் ஒரு அடைமானம் கொடுப்பீரா என்றாள். அப்பொழுது அவன்: நான் உனக்கு அடைமானமாக என்ன கொடுக்க வேண்டுமென்று கேட்க, அவள்: உம் முத்திரை மோதிரமும் உமது தாழ்வடமும் உமது கைக்கோலும் கொடுக்க வேண்டும் என்றாள். அவன் அவைகளை அவளுக்குக் கொடுத்து அவளோடு சேர்ந்தான். அவள் அவனாலே கர்ப்பந்தரித்து, எழுந்து போய், தன் முக்காட்டைக் களைந்து தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களை உடுத்திக் கொண்டாள்.

ஆதியாகமம் 38:14-19

மைத்துனனும் மைத்துனியும்….?

அப்பொழுது யூதா ஓனானைப் பார்த்து, நீ உன் தமையன் மனைவியைச் சேர்ந்து, அவளை மைத்துனச் சுதந்திரமாய்ப் படைத்து, உன் தமயனுக்குச் சந்ததியை உண்டாக்கு என்றான். அந்தச் சந்ததி தன் சந்ததியாயிராதென்று ஓனான் அறிந்தபடியினாலே, அவன் தன் தமையனின் மனைவியைச் சேரும் போது தன் தமயனுக்குச் சந்ததி உண்டாகாதபடி தன் வித்தைத் தரையிலே விழ விட்டுக் கொடுத்தான். அவன் செய்தது கர்த்தரின் பார்வையில் தீயதாயிருந்ததினால் அவனையும் அவர் அழித்துப் போட்டார்.

ஆதியாகமம் 38:8-10

தாவீதும் அடுத்தவர் மனைவியும்….?

ஒரு நாள் சாயங்காலம் தாவீது தன் படுக்கையிலிருந்து எழுந்து அரமனை மாடியின் மேல் உலாவிக் கொண்டிருக்கும் போது, ஸ்நானம் பண்ணுகிற ஒரு ஸ்திரீயை மாடியின் மேலிருந்து பார்த்தான். அந்த ஸ்திரீ மிகுந்த அழகுள்ளவள். தாவீது ஆள் அனுப்பி, அந்த ஸ்திரீ யார் என்று விசாரித்தான்; அவள் எலீயாமின் குமாரத்தியும் ஏத்தியனான உரியாவின் மனைவியுமாகிய பத்சேபாளே என்றார்கள். அப்பொழுது தாவீது ஆள் அனுப்பி அவளை அழைத்து வரச் சொன்னான்; அவள் அவனிடம் வந்த போது, அவளோடு சயனித்தான்; அவள் அப்போது தான் தன் தீட்டு நீங்கி, சுத்திகரித்துக் கொண்டிருந்தாள்; பின்பு அவள் தன் வீட்டுக்குப் போய்விட்டாள். அந்த ஸ்திரீ கர்ப்பந்தரித்து, தான் கர்ப்பவதி என்று தாவீதுக்கு அறிவிக்க ஆள் அனுப்பினாள். அப்பொழுது தாவீது, ஏத்தியனாகிய உரியாவை என்னிடம் அனுப்பு என்று யோவாப்பினண்டைக்கு ஆள் அனுப்பினான்; அப்படியே யோவாப் உரியாவைத் தாவீதினிடம் அனுப்பினான்……. தாவீது அவனைப் போர்க்களத்துக்கு அனுப்பிக் கொல்லச் செய்தான்.

இரண்டாம் சாமுவேல் 11:2-18

கிழவனும் குமரியும்…..?

தாவீது ராஜா வயது முதிர்ந்தவனானான்; போர்வைகளினால் அவனை மூடினாலும் அவனுக்கு அனல் உண்டாகவில்லை. அப்பொழுது அவன் ஊழியர் அவனிடம் வந்து: கன்னிகையான ஒரு வாலிபப் பெண்ணை ராஜாவாகிய எங்கள் ஆண்டவனுக்குத் தேடுவது நலம்; அவள் ராஜா சமூகத்தில் நின்று ராஜாவுக்குப் பணிவிடை செய்து, ராஜாவாகிய எங்கள் ஆண்டவனுக்கு அனல் உண்டாகும்படி உமது மடியிலே படுத்துக் கொள்ளட்டும் என்று சொன்னார்கள். அப்படியே அவர்கள் இஸ்ரவேலின் நாடெங்கும் அழகான ஒரு வாலிபப் பெண்ணைத் தேடி சூனேம் ஊராளாகிய அபிஷாகைக் கண்டு, அவளை ராஜாவினிடம் கொண்டு வந்தார்கள்.

முதலாம் ராஜாக்கள் 1:1-3

இப்படி முறையற்ற ஆண், பெண் தொடர்புக் கதைகள் மட்டுமின்றி பெண்களைப் பச்சையாக வர்ணிக்கும் கவிதைகளும் கூட பைபிளில் காணப்படுகின்றன. இறை வேதத்தில் இத்தகைய வர்ணனைகள் இருக்கலாமா? அதன் அவசியம் என்ன? என்பதை கிறித்தவ நண்பர்களே நடுநிலையோடு சிந்தியுங்கள்!

* மனோகரமான அன்பே! உனது அழகை என் சொல்ல! நீ எத்தனை இனிமை!

* பனை போல் உயர்ந்தாய்; ஸ்தனங்கள் குலைகளாம்.

* பனை மரத்திலேறி மடல்கள் பிடிப்பேன் என்றேன்.

* உன் ஸ்தனங்கள் திராட்சைக் குலைகளைப் போன்றவை.

* உன் சுவாச வாசனை கிச்சிலிப்பழம் போலும்.

* உன் வாய் உத்தம திராட்சரசமாம்.

* அந்த ரசம் என் வாயிலே மெதுவாயிறங்கும்,

* உதட்டையும் பற்களையும் அது நனைக்கும்.

* நான் உரியேன் காதலர்க்கு, அவர் ஆசை என் மேலாம்.

* வாரும், என் காதலரே, வயல் வெளிக்குச் செல்வோம், கிராமங்களிலே ராத்தங்கிடுவோம்.

* காலையில் எழுந்து திராட்சத்தோட்டம் சென்று

* திராட்சை தளிர்த்ததா, அதன் பூ மலர்ந்ததா,

* மாதளை பூத்ததா என்று பார்த்திடுவோம்;

* அங்கே என் அன்பை உமக்கு அளித்திடுவேன்;

* காதற்பழங்கள் வாசனை வீசும்;

* புதியவும் பழையவும் அரிய பல்கனிகள் நமது வாசல்கள் அண்டையிலுண்டு என் காதலரே! உமக்கென்றே அவை வைத்தேன்.

உன்னதப் பாட்டு 7:6-130

* ஆ! நீர் என் தாயின் பாலுண்ட என் சகோரனாயிருப்பின் எத்தனை நன்றாம்!

* நான் உம்மை வெளியே கண்டு முத்தமிட்டாலும் எவரும் என்னை நிந்தனை செய்யார்.

* என் தாய் வீட்டுக்கழைத்துப் போவேன், நீர்எனக்கப் போதிப்பீர், நீர்குடிப்பதற்கு நான் மணமுள்ள ரசமும், மாதளம்பழ ரசமும் தருவேன்.

* அவர் இடக்கை என் தலைக்கணையாக அவர் வலக்கை என்னைத் தழுவிக் கொள்ளுமே.

உன்னதப் பாட்டு 8:1-3

* நமக்கு ஓர் இளைய தங்கை உண்டு,

* அவளுக்கு இன்னும் ஸ்தனங்கள் இல்லை,

* அவளைப் பெண் பேசவரும் நாளிலே நாம் அவளுக்கு என்ன செய்வோம்.

* அவள் மதிலாயின் வெள்ளி முடியதின் மேல் அமைப்போம்;

* வாசலாயின் அதற்குக் கேருரப் பலகை வைத்தடைப்போம்.

* நான் மதிலே, என் ஸ்தனங்கள் கோபுரங்கள்;

* அவர் கண்களிலே கடாட்சம் பெறலானேன்.

உன்னதப் பாட்டு 8:8-10

* உன் உதடு சிவப்பு நூல், வாயும் இனிமை,

* முக்காட்டினுள் கன்னங்கள் வெடித்த மாதளம்பழம்.

* உன் கழுத்து தாவீதின் கோபுரமே போலும்,

* ஆயுத சாலையாய்க் கட்டியது அக்கோபுரம்;

* இவையெல்லாம் பராக்கிரமமுள்ளவர் கேடங்கள்.

* உனது இரு ஸ்தனங்கள் லில்லி மலர் மேயும் இள வெளிமான் இரண்டாம், இரட்டை மான் குட்டிகளாம்.

உன்னதப் பாட்டு 4:3-5

* குலமகளே, பாதரட்சையிட்டு நீ நர்த்தனம் செய்கின்ற அழகை என் சொல்ல!

* உனது இடுப்பின் உருண்டை வடிவம் கை தேர்ந்தவன் செய்யும் கழுத்தணி போன்றதே.

* உன் மடிவட்ட கலசமாம், அதிலே இனிய ரசம் என்றும் வற்றாதாகும்;

* உன் வயிறு லிலி சூழ் கோதுமை அம்பரம்.

* உன் ஸ்தனமிரண்டும் இள வெளி மானிரண்டாம்,

உன்னதப் பாட்டு 7:2-4

உன்னதப்பாட்டு நெடுகிலும் இப்படிக் கொச்சையான வர்ணனைகள் ஏராளம்! கிறித்தவ நண்பர்களே! இந்தப் போதனைகள் மனிதனை நல்வழிப்படுத்துமா? அவனைத் தவறான உறவுக்கு இழுத்துச் செல்லுமா? தகாத முறையில் ஆண்கள் பெண்களையும், பெண்கள் ஆண்களையும் அடைவதற்குத் தந்திரமான வழிகளைக் கற்றுத் தருவதாக இந்த வசனங்கள் இல்லையா? இதன் பிறகுமா பைபிளை இறை வேதம் என்கிறீர்கள்?

10) முரண்கள்

இது வரை நாம் எடுத்து வைத்த எந்த அளவுகோலின்படி பார்த்தாலும் பைபிள் இறை வேதமாக இருக்கச் சிறிதளவும் சாத்தியமில்லை. என்றாலும் இவற்றையெல்லாம் விட முக்கியமான தகுதி இறைவேதத்திற்கு இருந்தாக வேண்டும். இறை வேதம் என்பது எந்த விதமான முரண்பட்ட செய்திகளையும் கூறக் கூடாது என்பது தான் அந்தத் தகுதி.

மனிதனிடம் கூட முரண்பாடு ஏற்படும் போது நம்மால் சகித்துக் கொள்ள முடிவதில்லை. கடவுளின் வார்த்தையில் முரண்பாடு இருந்தால் எப்படிச் சகிக்க முடியும்? பைபிளில் முரண்பாடுகளுக்குப் பஞ்சமேயில்லை. சான்றாக:

யு) தலைமுறைத் தடுமாற்றம்

புதிய ஏற்பாட்டில் உள்ள மத்தேயு, லூக்கா ஆகிய சுவிசேஷங்கள் இயேசுவின் வம்சாவளியை மிகவும் விரிவாக எடுத்துரைக்கின்றன. சாதாரண மனிதர்கள் வம்சாவளிப் பட்டியலைக் கூறும் போது தவறி விடுவது இயற்கையே. பரிசுத்த ஆவியினால் உந்தப்பட்டு எழுதியவர்கள் தவறலாமா? தவறியிருக்கிறார்கள் என்பதை மேற்கண்ட இரண்டு சுவிசேஷங்களும் நிரூபிக்கின்றன.

இயேசுவின் தந்தை  யோசேப்பு என்று இரண்டு சுவிசேஷங்களும் கூறுகின்றன. அந்த யோசேப்பு என்பவரின் தந்தை  யாக்கோப்பு என்று மத்தேயுவும்(மத்தேயு 1:16)  ஏலி என்று லூக்காவும் (லூக் 3:23) கூறுகின்றனர்)

தாவீது என்பவரின் மகன் சாலொமோன் வழியில் இயேசு ஜனனமானார் என்று மத்தேயு கூறுகின்றார்.

(மத்தேயு 1:7)

லூக்காவோ தாவீத் என்பவரின் மகன் நாத்தாம் வழியில் இயேசு பிறந்தார் என்கிறார்.

(லூக்கா 3:31)

எகொனியா மகன் சலாத்தியேல் வழியில் இயேசு தோன்றினார் என்று மத்தேயுவும், நேரி என்பவரின் மகன் தோன்றினார் என்று வழியில் இயேசு பிறந்தார் என்று பிறந்தார் என்று கூறுகின்றார்.

 (மத்தேயு 1:12, லூக் 3:27)

செருபாபேல் என்பவரின் மகன் அபியூத் வழியில் இயேசு பிறந்ததாக மத்தேயுவும் (1:13) செருபாபேல் என்பவரின் மகன் ரேசா வழியில் இயேசு பிறந்ததாக லூக்காவும் (13:27) கூறுகிறார்கள்.

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் இந்த செருபாபேல் என்பவனுக்கு மொத்தம் ஏழு பிள்ளைகள் இருந்ததாகப் பெயர்களுடன் முதலாம் நாளாகமம் 3:19 கூறுகின்றது. அந்த ஏழு பெயர்களில் அபியூத் என்ற பெயரும் இல்லை; ரேசா என்ற பெயரும் இல்லை.

தாவீதிலிருந்து துவங்கி இயேசு வரை இருபத்தி ஆறு தலைமுறை என்கிறார் மத்தேயு. நாற்பத்தியொரு தலைமுறை என்கிறார் லூக்கா.

இயேசுவின் பரம்பரைப் பட்டியலைக் கூறும் போது இத்தனை தடுமாற்றம் கர்த்தருக்கோ, பரிசுத்த ஆவியின் உந்து சக்தியினால் எழுதியவருக்கோ ஏற்பட முடியுமா? இந்தத் தடுமாற்றம்  ஆதாரமற்ற மனிதக் கற்பனையே பைபிள் என்பதை ஐயத்திற்கு இடமின்றி நிரூபிக்கின்றது.

 டீ) விபச்சார சந்ததி

இதில் வேதனைப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த வம்சவழிப் பட்டியலை வெளியிட்டதன் மூலம் இயேசுவை மத்தேயுவும், லூக்காவும் இழிவுபடுத்தியுள்ளனர். எவ்வாறெனில் இந்தப் பட்டியலில் இடம்பெறும் சிலர்  அவ்வளவு பரிசுத்தமானவர்கள்! அதை விளக்குவதற்கு முன்னால் பின்வரும் போதனையை நினைவில் கொள்க!

விபச்சாரத்தில் பிறந்தவனும் கர்த்தருடைய சபைக் கூட்டத்திற்கு வரலாகாது; அவனுக்கு பத்தாம் தலைமுறையானவனும் கர்த்தருடைய சபைக் கூட்டத்திற்கு வரலாகாது.

உபாகமம் 23:22,3

எத்தகையோர் கர்த்தருடைய சபைக்கு வரலாகாது என்று பைபிள் கூறுகின்றதோ அத்தகையோர் வழியிலேயே இயேசு பிறந்தார்எனவும் அதே பைபிள் கூறுகின்றது.

யூதா, பேரேஸையும் சேராவையும் தாமாரினிடத்தில் பெற்றான். பேரேஸ் எஸ்ரோமைப் பெற்றான்.

மத்தேயு 1:3

இயேசுவின் பரம்பரைப் பட்டியலில்  தாமார் என்பவள் இடம் பெறுகிறாள். இதில் கூறப்படும்.

தாமார் என்பவள் யார்?

யூதா என்பவன் யார்?

பேரேஸ் என்பவன் யார்?

இந்தத் தாமார் என்பவள் யூதா என்பவரின் மருமகள். (மகனுடைய மனைவி) அவளுடன் அவர் கள்ளத் தனமாக உறவு கொள்கிறார். இந்த விபச்சாரத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒருவரே பேரேஸ் என்பவர். இதனை நாம் சொல்லவில்லை; பைபிள் சொல்கிறது.

(ஆதியாகமம் 38:6 முதல் 38:29 வரை பார்க்க:)

விபச்சாரத்தில் ஈடுபட்ட இந்த மாமனார், மருமகள் சந்ததியில் – அந்த விபச்சாரத்தில் பிறந்த பேரேஸ் என்பவருடைய பரம்பரையில் – இயேசு பிறந்ததாக மத்தேயு கூறுகிறார்.

மேலே நாம் நினைவூட்டிய போதனையின்படி விபச்சாரச் சந்ததியில் தோன்றியவர் கர்த்தரின் சபைக்கு வரலாகாது. அப்படியானால் இயேசுவும் கர்த்தருடைய சபைக்கு வரலாகாது. அவர் இறைவனின் குமாரர் என்பதும், மற்றவரின் பாவங்களை அவர் சுமந்து கொண்டார் என்பதும் இந்த வம்சாவழிப் பட்டியலின் படி அடிபட்டுப்போய் விடும். கர்த்தர் தனது சபைக்கு இத்தகையவரை நிச்சயம் தேர்வு செய்ய மாட்டார். (நாம் இயேசுவைப் பற்றி அப்படிக் கூறவில்லை. பைபிள் அப்படிச் சொல்கின்றது என்பதையே எடுத்துக் காட்டுகின்றோம்)

தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான்.

மத்தேயு 1:6

இவர்களும் இயேசுவின் முன்னோர்களாகக் கூறப்படுகின்றனர். தாவீது ராஜா இன்னொருவரின் மனைவியிடத்தில் சாலொமோனைப் பெற்றதாகப் பச்சையாக மத்தேயு ஒப்புக் கொள்கிறார். இயேசுவுக்கு இதை விட அநியாயம் வேறு என்ன இருக்க முடியும்?

இது ஆபாசம் என்ற தலைப்பில் விவரிக்கப்பட்டுள்ளது.

சாலொமோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்.

மத்தேயு 1:5

என்று வம்சாவழிப் பட்டியல் கூறுகின்றது.

இந்த ராகாப் யார்?

அவள் ஒரு விபச்சாரி என்று பைபிள் (யோசுவா 2:2) கூறுகின்றது. இந்த வம்சாவழியில் பிறந்ததாகக் கூறுவது ஏசுவுக்குப் பெருமை சேர்க்குமா?

ஊ) சூழ்நிலைத் தடுமாற்றம்

கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்குத் தோன்றி, ஏரோது பிள்ளையைக் கொலை செய்யத் தேடுவான். ஆதலால் நீ எழுந்து பிள்ளையையும், அதன் தாயையும் கூட்டிக் கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிப் போய் நான் உனக்குச் சொல்லும் வரைக்கும் அங்கே இரு என்றான். அவன் எழுந்து இரவில் பிள்ளையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு எகிப்துக்குப் போய் ஏரோதுவின் மரண பரியந்தம் அங்கே இருந்தான்.

மத்தேயு 2:13,14

இயேசு பிறந்த போது ஏரோது என்னும் கொடிய அரசன் ஆட்சி புரிந்ததாகவும், அவன் குழந்தை இயேசுவைக் கொல்லத் திட்டமிட்டதாகவும் அதற்குப் பயந்து இயேசுவின் பெற்றோர் இயேசுவையும் தூக்கிக் கொண்டு எகிப்துக்குச் சென்றதாகவும் மேற்கண்ட வசனத்தில் மத்தேயு கூறுகிறார்.

ஏரோது இறந்த பிறகு கூட அவனது மகன் அரகெலாவு என்பவர் ஆட்சிக்கு வந்ததால் அதற்குப் பயந்து கொண்டு இஸ்ரவேல் நாட்டுக்கு வராமல் நாசரேத்து எனும் ஊருக்குச் சென்றதாகவும் மத்தேயு (2:19-23) கூறுகிறார்.

ஆனால் லூக்காவோ இயேசு பிறந்த போது சர்வ சாதாரணமான நிலை நிலவியதாகக் கூறுகிறார்.

அவர்கள் பெத்லகேமிலேயே இருந்ததாகவும், அங்கிருந்து எருசலேமுக்கு வந்து போனதாகவும் அவரது பெற்றோர் வருஷம் தோறும் பஸ்கா பண்டிகைக்கு எருசலேமுக்குப் போவார்கள் எனவும் லூக்கா கூறுகிறார்.

லூக்கா 2:15-52

ஏரோது அரசன் இயேசுவைக் கொலை செய்யத் தேடியதையும், அவர்கள் எகிப்துக்கு ஓடிப் போனதையும் அதன் பின் ஏரோதுவின் மகன் ஆட்சிக்கு வந்ததையும் எருசலேமுக்குப் போகாமல் அவர்கள் மறைந்து வாழ்ந்ததையும் லூக்கா கூறவில்லை. மாறாக அந்தச் சமயத்தில் சர்வ சாதாரணமான நிலைமை நிலவியதாகவும் ஆண்டு தோறும் எருசலேமுக்கு அவர்கள் வந்து போய்க் கொண்டிருந்ததாகவும் சர்வ சாதாரணமாக அவர்கள் அந்த நாட்டில் நடமாடியதாகவும் கூறுகிறார்.

பரிசுத்த ஆவியின் தூண்டுதலால் எழுதப்பட்டவற்றில் ஏன் இந்த முரண்பாடு?

லூக்கா கூறுவது போல் சாதாரணமான நிலைமை இருந்ததா?

மத்தேயு கூறுவது போல் பயங்கரமான நிலை நிலவியதா?

ஆண்டுதோறும் எருசலேமுக்கு வந்து போவார்கள் என்பது உண்மையா?

அல்லது கர்த்தரின் கனவுக் கட்டளைப்படி எகிப்திலேயே இருந்தது உண்மையா?

ஒவ்வொரு சுவிசேஷக்காரரும் அவருக்குத் தோன்றியதையும் கேள்விப்பட்டதையும் எழுதியிருக்கிறார்களேயல்லாமல் கர்த்தரின் தூண்டுதலால் எழுதவில்லை என்பதற்கு இது போதுமான சான்று அல்லவா? இனியும் இதை இறைவேதம் என்று சொல்ல முடியுமா?

னு) பொய்யான முன்னறிவிப்பு

இயேசுவின் வருகை பற்றி முந்தைய வேதங்களில் முன்னறிவிப்புச் செய்யப்பட்டுள்ளதாக கிறித்தவர்கள் நம்புகின்றனர். புதிய ஏற்பாடும் இதைக் குறிப்பிடுகின்றது. இயேசு வருவதற்கு முன் எலியா என்பவர் வந்தாக வேண்டும் எனவும் பைபிள் கூறுகிறது.

அப்பொழுது சீஷர் அவரை நோக்கி, எலியா முந்தி வர வேண்டுமென்று வேதபாரகர் சொல்கிறார்களே அதெப்படி என்று கேட்க, அவர், எலியா வந்து எல்லாவற்றையும் சீர்படுத்துவது மெய்தான். ஆனாலும் எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்கிறேன். அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படியே அவனுக்குச் செய்தார்கள். மனுஷ குமாரனும் அவர்களால் இவ்விதமாயப் பாடுபடப் போகிறார் என்றார். அவர் யோவான் ஸ்நானகனைக் குறித்து தங்களிடம் பேசினார்என்று சீஷர் அப்போது அறிந்து கொண்டார்கள்.

மத்தேயு 17:10-13

நீங்கள் ஏற்றுக் கொள்ள மனமாயிருந்தால் வரப் போகிறவனாகிய எலியா இவன் தான். காதுள்ளவன், கேட்கக் கடவன்.

மத்தேயு 11:14

வாக்களிக்கப்பட்ட கிறிஸ்துவின் வருகைக்கு முன் எலியா என்பவர் வர வேண்டும். அவர் வந்து விட்டார். அவர் தாம் யோவான் என்று இயேசு கூறியதாக மேற்கண்ட வசனங்கள் குறிப்பிடுகின்றன. இயேசுவின் காலத்திலேயே யோவான் (அதாவது எலியா) வந்து விட்டதால் இந்த முன்னறிவிப்பு நிறைவேறிவிட்டது என்று கொள்ளலாம். ஆனால் புதிய ஏற்பாட்டின் இன்னொரு அதிகாரம் இதை மறுக்கிறது.

நீர் யார் என்று கேட்டதற்கு யூதர்கள் ஆசாரியரையும், லேவியரையும் எருசலேமிலிருந்து யோவானிடம் அனுப்பின பொழுது அவன் கூறிய சாட்சியம், நான் கிறிஸ்துவல்ல என்று அறிக்கையிட்டான். மறுக்காமலே அறிக்கையிட்டான். அப்பொழுது அவர்கள்  பின்னே என்ன? நீர் எலியாவோ என்று கேட்க, அவன் நான் அவனல்ல என்றான்.

 யோவான் 1:19-22

இங்கே உள்ள முரண்பாடுகளையும் குழப்பங்களையும் கவனியுங்கள்! தாமே வரப்போகிற கிறிஸ்து என்பதற்குச் சான்றாக  யோவான் தான் எலியா என்று இயேசு கூறுகிறார். இயேசுவால் எலியா என்ற அடையாளம் காட்டப்பட்ட யோவான்  நான் எலியா அல்லவென்று மறுக்கிறார். இரண்டு செய்திகளுமே கர்த்தரால் அருளப்பட்ட(?) புதிய ஏற்பாட்டிலேயே உள்ளன.

இயேசு கூறுவது போல் யோவான் தான் எலியா என்றால் யோவான் அதை ஏன் மறுக்கிறார்? எலியா ஏன் வர வேண்டுமென்றால் எல்லாவற்றையும் சீர்படுத்தி கிறிஸ்து வரும் போது அவரை மக்கள் ஏற்றுக் கொள்ளும் சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத் தான். மேற்கண்ட இயேசுவின் கூற்றிலிருந்தே இதை அறியலாம்.

யோவான் தான் எலியா என்றால் அதை யோவான் மறுக்க எந்த நியாயமுமில்லை. இயேசுவை அன்றைய மக்கள் ஏற்றுக் கொள்வதற்கு எலியா வரவில்லை என்பது தான் தடையாக இருந்தது. யோவான் எலியாவாக இருந்திருந்தால், அவர் தம்மை எலியா என்று பிரகடனம் செய்து, இயேசுவை மக்கள் எளிதில் அடையாளம் கண்டு ஏற்றுக் கொள்ள வழியேற்படுத்தியிருக்க வேண்டும். அவரோ தாம் எலியா அல்லர் என்று மறுக்கிறார்.

யோவான் கூறியது பொய் என்ற வைத்துக் கொண்டால் யோவான் பற்றி

அவர் எனக்கு முதல்வர், என்னிலும் பெரியவராயினார்.

யோவான் 1:30

என்றும்  ஸ்திரீகளிடம் பிறந்தவர்களில் யோவான் ஸ்நானகனைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் தோன்றியதில்லை.

மத்தேயு 11:11

என்றும் இயேசு எவ்வாறு புகழ்ந்துரைப்பார்? ஸ்திரீகளிடம் பிறந்தவர்களிடையே சிறந்தவரும் இயேசுவை விடப் பெரியவருமான யோவான் நிச்சயம் பொய் சொல்லியிருக்க முடியாது என்பதை இயேசுவின் வாக்கு மூலத்திலிருந்தே அறிகிறோம்.

யோவான் கூறியது உண்மை என்றால் இயேசு பொய் சொல்லியிருக்கிறார். அவர் கிறிஸ்துவாக இல்லாமலிருந்தும் தன்னைக் கிறிஸ்து என்று நிரூபணம் செய்வதற்காக எலியா வந்ததாகக் கூறியிருக்கிறார்.

கிறித்தவர்களால் யோவானையும் பொய்யரென்று கூற முடியாது; இயேசுவையும் பொய்யர் என்று கூற முடியாது. அவ்வாறு கூறினால் கிறித்தவமே ஆட்டம் கண்டுவிடும். கிறித்தவர்கள் இவ்வாறு கூறத் துணியாவிட்டாலும் அவர்களின் புதிய ஏற்பாடு இவ்வாறு கூறுவதை அவர்களால் மறுக்க முடியாது.

இந்த முரண்பட்ட இரண்டில் எது உண்மை என்றாலும் பைபிளில் மனிதக் கரங்கள் விளையாடியுள்ளன என்பது உறுதியாகிவிடும்.

நு) ஆள்மாறாட்டம்

இதோ, நான் என் தூதனை எனக்கு முன்பாக அனுப்புகிறேன். அவன் உமக்கு முன்னே போய் உமது வழியை ஆயத்தம் பண்ணுவான் என்று எழுதிய வாக்கியத்தால் குறிக்கப்பட்டவன் இவனே!

மத்தேயு 11:10

இதே விஷயம் மாற்கு, லூக்கா ஆகிய சுவிசேஷங்களிலும் காணப்படுகின்றது.

எலியாவின் வருகை பற்றி இயேசு குறிப்பிடும் போதே இவ்வாறு கூறியிருக்கிறார். முந்தைய வேதங்களில் எழுதப்பட்டதை அப்படியே இயேசு எடுத்துச் சொல்கிறார்.

இந்த வாசகத்தை நன்றாகக் கவனியுங்கள்! கடவுள் இயேசுவை நோக்கி இவ்வாறு கூறுவதாக இது அமைந்துள்ளது. நாம் கேட்கிறோம்: இயேசுவை நோக்கிக் கடவுள் கூறிய வாசகம் இயேசுவுக்கு முந்தைய வேதங்களில் எப்படி எழுதப்பட்டிருக்க முடியும்?. கர்த்தர் கூறியிருக்க முடியாத ஒரு வாசகத்தைக் கர்த்தரின் பெயரால் இயேசு கூறுகிறார் என்றே இதை நாம் எடுத்துக் கொள்ள முடியும்.

  …எழுதிய வாசகத்தால் என்று இயேசு கூறுவதிலிருந்து இந்த வாசகம் முந்தைய வேதங்களில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகின்றது. முந்தைய வேதமாகிய பழைய ஏற்பாட்டில் கர்த்தர் கூறியது என்ன என்ற விபரம் கிடைக்கின்றது. அந்த விபரத்துக்கும் இயேசு கூறுவதற்கும் பெரிய முரண்பாடு இருக்கிறது.

இதோ, என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய் வழியை ஆயத்தம் பண்ணுவான்.

 மலாக்கி 3:1

இது இயேசுவை நோக்கியோ இயேசுவைக் குறித்தோ சொல்லப்பட்டதன்று. கர்த்தர் எனக்கு முன்பாக என்று கூறுகிறார். இயேசுவோ  உமக்கு என்று அதைத் திருத்தி தம்மைப் பற்றியே கர்த்தர் கூறியதாகத் திசை திருப்புகிறார்.

இரண்டுக்குமிடையே எவ்வளவு பெரிய முரண்பாடு என்பதைச் சிந்தியுங்கள்!

மிகப்பெரிய ஆள் மாறாட்டம் இங்கே நடக்கின்றது. கர்த்தர்  எனக்கு என்று தன்னைப் பற்றிக் கூறும் விஷயத்தில்,  உமக்கு என்று திருத்தி, தம்மைப் பற்றியே கர்த்தர் கூறுவதாக இயேசு சொல்வது ஆள் மாறாட்டம் இல்லையா?

இரண்டில் எது உண்மை? ஏதோ ஒன்று உண்மையில்லை என்று நியாயமான பதிலைக் கூறினால் உண்மையில்லாத ஒன்று கர்த்தரின் வேதத்தில் எப்படி இடம்பெற முடியும்? அல்லது எப்படி வேதமாக இருக்க முடியும்?

 கு) எண்ணில் தடுமாற்றம்

அவர்கள் எரிகோவை விட்டுப் போகையில் பெரிய ஜனக்கூட்டம் அவருக்குப் பின் சென்றது. வழியோரம் உட்கார்ந்திருந்த இரண்டு குருடர் இயேசு அவ்வழியே வருகிறார் என்று கேள்விப்பட்டு ஆண்டவரே! தாவீதின் குமாரரே! எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள்.

மத்தேயு 20:29,30

இயேசு தம் சீடர்களுடன் சென்று கொண்டிருந்த போது இரண்டு குருடர்கள் இயேசுவிடம் கண்பார்வை வேண்டியதாக மத்தேயு கூறுகிறார்.

மாற்கோ ஒரு குருடன் என்கிறார்:

அவர்கள் எரிகோவுக்கு வந்தார்கள். அவரும் அவருடைய சீஷரும் பெரிய ஜனக்கூட்டமும் எரிகோவை விட்டுப் போகும் போது திமேயுவின் மகன் பர்திமேயு என்னும் கண் தெரியாத பிச்சைக்காரன் ஒருவன் வழியோரம் உட்கார்ந்திருந்தான்.

மாற்கு 10:46

இரண்டு குருடர்களா? ஒரு குருடரா? கர்த்தரின் வார்த்தையில் இந்தச் சின்ன எண்ணிக்கையில் ஏனிந்தத் தடுமாற்றம்? இது வேறு சம்பவம்! அது வேறு சம்பவம் என்றும் கருத முடியாது. இரண்டும் வேறு வேறு நிகழ்ச்சிகள் என்றால் ஒரு குருடர் பார்வை பெற்றதைச் சொன்ன மாற்கு அதை விடப் பெரிய அற்புதமான இரு குருடர்கள் பார்வை பெற்றதை வேறு இடத்தில் சொல்லியிருக்க வேண்டும். இந்த முக்கியமான அற்புதத்தை அவ்வளவு அலட்சியமாக அவர் விட்டிருக்க மாட்டார்.

மத்தேயு, மாற்கு என்ற இரண்டு மனிதர்கள் அவர்கள் கூற்றுப்படியே தாங்கள் கேள்விப்பட்டதை எழுதியுள்ளார்கள். கர்த்தருக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்பதே உண்மையாகும்.

பு) உண்டும் உண்ணாதவர்

யோவான் போஜன பானம் பண்ணாதவனாய் வந்தான். அவன் பேய் பிடித்திருக்கிறவன் என்கிறார்கள். மனுஷ குமாரன் போஜன பானம் பண்ணுகிறவராய் வந்தார்.

மத்தேயு 11:18

இயேசு இவ்வாறு கூறுவதாக மத்தேயு தெரிவிக்கிறார். யோவான் போஜனம், பானம் எதையுமே அருந்தாதவராக இருந்ததாகவும், மனுஷ குமாரனுமாகிய தாம் போஜனம் பண்ணக் கூடியவர் என்றும் இயேசு கூறுகிறார்.

இதே யோவான் பற்றி மாற்கு முரண்பட்டுக் கூறுவது என்ன தெரியுமா?

யோவான் ஒட்டக மயிர் உடை தரித்து தன் அரையில் வார்க்கச்சையைக் கட்டிக் கொண்டிருந்தான். வெட்டுக்கிளியையும் காட்டுத் தேனையும் புசித்து வந்தான்.

மாற்கு 1:6

ஒரு வேளை வெட்டுக் கிளியையும் தேனையும் போஜன பானமாக மாற்கு கருதவில்லையா?

ர்) தடி எடுப்பதில் தகராறு

இயேசு தமது பன்னிரு சீடர்களையும் பிரச்சாரத்துக்கு அனுப்பிய விஷயத்தை மத்தேயுவும், மாற்கும் வழக்கம் போல் முரண்பட்டே கூறுகின்றனர்.

…வழிக்குத் தடியைத் தவிர, ஆகாரம், பை, கச்சையில் காசு இவைகளைக் கொண்டு போக வேண்டாமென்றும் பாதரட்சைகளைப் போட்டுக் கொண்டு போவதன்றி இரண்டு அங்கிகளைத் தரித்துக் கொண்டு போக வேண்டாமென்றும் அவர்களுக்குக் கட்டளையிட்டார்.

மாற்கு 6:8

…வழிக்குப் பையாவது, இரண்டு அங்கி, பாதரட்சை, தடியாவது வேண்டாம்….

மத்தேயு 10:10

சீடர்கள் கைத்தடியை மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும் என்று இயேசு கட்டளையிட்டதாக மாற்கு கூறுகிறார்.

தடியைக் கூட எடுத்துச் செல்லக் கூடாது என்று இயேசு கூறியதாக மத்தேயு கூறுகிறார்.

செருப்பு போட்டுக்கொண்டு போக வேண்டாம் என்று இயேசு கூறியதாக மத்தேயு கூறுகிறார்.

செருப்பு போட்டுக் கொண்டு போகச் சொன்னதாக மாற்கு கூறுகிறார்.

கிறித்தவ நண்பர்களே! கர்த்தரின் வார்த்தையில் இத்தகைய முரண்பாடுகள் இருக்கலாகாது என்பது புரியவில்லையா?

ஐ) அறிந்தும் அறியாதவர்

இயேசுவின் வருகை பற்றியும், அவரின் தகுதி பற்றியும் யோவான் அறிந்து வைத்திருந்தார் என்பதைப் பல இடங்களில் பைபிள் கூறுகின்றது.

அப்பொழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவை விட்டு யோர்தானுக்கருகே அவனிடம் வந்தார். அவனோ நான் உம்மாலே ஞானஸ்நானம் பெற வேண்டியிருக்க நீர் என்னிடம் வருகிறீரே என்று சொல்லி அவரைத் தடுத்துப் பார்த்தான்.

மத்தேயு 3:13

இயேசுவைப் பற்றி யோவானுக்கு முன்னரே தெரிந்திருக்கிறது என்பதை இந்த வசனம் கூறுகின்றது.

மத்தேயு மற்றோர் இடத்தில் தம்மைத் தாமே மறுத்து முரண்படுகின்ற காட்சியை நாம் காண்கின்றோம்.

கிறிஸ்துவின் செயல்களைச் சிறைச் சாலையில் கேள்விப்பட்ட யோவான் தன் சீஷரை அனுப்பி, வருகிறவர் நீ தானோ அல்லது வேறொருவரை நாங்கள் எதிர்பார்க்க வேண்டுமா என்று கேட்டான்.

மத்தேயு 11:2

யோவான் இவ்வாறு கேட்டது இயேசு ஞானஸ்நானம் பெற்றதற்குப் பிறகு நடந்ததாகும். இதை பைபிளிலிருந்தே அறிந்து கொள்ளலாம்.

இயேசு ஞானஸ்நானம் பெற வரும் போதே அவரைப் பற்றி அறிந்திருந்த யோவானுக்கு, பிறகு எப்படி அவரைப் பற்றி தெரியாமல் போய்விடும்? வரப் போகிறவர் நீதானோ என்று ஏன் கேட்டு அனுப்ப வேண்டும்? அதுவும் ஒரு சுவிசேஷத்துக்குள்ளேயே இந்த முரண்பாடு அமைந்திருப்பது கவனிக்கத்தக்கதாகும்.

இது போல் ஒரு ஆகமத்துக்குள்ளேயே முரண்பட்டவைகள் பரவலாகப் பைபிளில் காணப்படுகின்றன.

 து) சாட்சித் தள்ளாட்டம்

என்னைக் குறித்து நானே சாட்சி சொன்னால் என் சாட்சி மெய்யாயிராது என்று இயேசு கூறியதாக யோவான் 5:31ல் கூறுகிறார்.

என்னைக் குறித்து நானே சாட்சி சொன்னாலும் என் சாட்சியம் உண்மையே என்று இயேசு கூறியதாக யோவான் 8:14ல் கூறுகிறார்.

இரண்டில் இயேசு கூறியது எது? இயேசுவின் பெயரால் உண்டுபண்ணிச் சொல்லப்பட்டது எது? கிறித்தவ உலகம் விளக்குமா?

இயேசுவின் கடைசிக் காலத்து நிகழ்ச்சிகளைக் கூறும் போது சுவிசேஷங்களிடையே அனேக முரண்பாடுகள் காணப்படுகின்றன.

மு) முத்தத்தில் முரண்பாடு

இயேசுவை யூதாஸ் என்ற சீடன் காட்டிக் கொடுத்தது கிறித்தவர்கள் நன்கு அறிந்த ஒன்றாகும். அவன் எப்படிக் காட்டிக் கொடுத்தான்?

அவரைக் காட்டிக் கொடுக்கிறவன், நான் எவனை முத்தமிடுவேனோ அவன் தான். அவனைப் பிடித்துக் கொள்ளுங்கள் என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான். உடனே அவன் இயேசுவிடம் போய் ரபீ வாழ்க என்று சொல்லி அவரை முத்தமிட்டான். இயேசு அவனை நோக்கி, சினேகிதனே எதற்காக வந்திருக்கிறாய் என்றார். அப்பொழுது அவர்கள் கிட்ட வந்து இயேசுவின் மேல் கை போட்டு அவரைப் பிடித்தார்கள்.

மத்தேயு 26:48-50

இயேசுவின் சீடர்களில் ஒருவன் இயேசுவை முத்தமிடுவதன் மூலம் எதிரிகளுக்குக் காட்டிக் கொடுத்தான் என்று மத்தேயு கூறுவதற்கு முரணாக மற்றொரு சுவிசேஷக்காரராகிய யோவான், இயேசு தாமாகத் தம்மைக் காட்டிக் கொடுத்து விட்டதாகக் கூறுகிறார். யூதாஸ் முத்தமிட்டுக் காட்டிக் கொடுத்ததாக அவர் கூறவில்லை.

இயேசு தமக்கு நேரிடப் போகிற யாவற்றையும் அறிந்து எதிரே வந்து அவர்களைப் பார்த்து யாரைத் தேடுகிறீர்கள் என்றார். அவர்கள் அவரிடம் நசரேயனாகிய இயேசுவை என்று சொல்ல நான்தான் என்றார்.

யோவான் 18:4

இயேசு பிடிக்கப்பட்டதும் அவரது சீடர்களில் ஒருவனாகிய பேதுரு என்பவன் இயேசுவைத் தனக்குத் தெரியாது என்ற மறுத்த விபரம் நான்கு சுவிசேஷங்களிலும் கூறப்படுகின்றது. அவற்றில் ஏராளமான முரண்பாடுகள்.

இரண்டு வேலைக்காரிகள் மற்றும் குடியிருந்தவர்கள் மத்தியில் இவ்வாறு அவன் மறுத்ததாக மத்தேயு (26:69,75) கூறுகிறார்.

ஒரு வேலைக்காரி, மற்றும் இரண்டு ஆண்கள் மத்தியில் அவன் மறுத்துரைத்ததாக லூக்கா (22:54,60) கூறுகிறார்.

பேதுரு சம்பந்தப்பட்ட இந்த விஷயம் குறித்து பைபிள் கூறுவதை வாசித்தால் இன்னும் பல முரண்பாடுகள் இருப்பதைக் காணமுடியும். விரிவஞ்சி அவற்றை இங்கே விட்டுவிடுகிறோம்.

டு) ஆட்டம் காணும் சிலுவை

கிறித்தவத்தின் அஸ்திவாரமே சிலுவை தான். சிலுவையைச் சுமந்து சென்றது யார் என்பதிலேயே இரண்டு சுவிசேஷங்களும் மோதிக் கொள்கின்றன.

அவர்கள் இயேசுவைக் கொண்டு போனார்கள். அவர் சிலுவையைத் தாமே சுமந்து கொண்டு வெளியே கபாலஸ்தலம் என்ற இடத்திற்குப் போனார்.

யோவான் 19:17

அவர்கள் அவரைக் கொண்டு போகையில் வயல் வெளியிலிருந்து வருகிற சிரேனே ஊரானாகிய சீமோனைப் பிடித்து, சிலுவையை இயேசுவின் பின் சுமந்து கொண்டு வரும்படி அதை அவன் மேல் வைத்தார்கள்.

 லூக்கா 23:26

இயேசு தாமே சிலுவையைச் சுமந்து சென்றாரா? சீமோன் சுமந்து சென்றாரா?

இயேசு சிலுவையில் அறையப்பட்டது ஆறாம் மணிநேரம் என்று மத்தேயு (27:45), மாற்கு (15:33), லூக்கா (23:44) ஆகியோர் கூறுகின்றனர்.

ஆனால் யோவான் தமது சுவிசேஷத்தில் (19:14) ஆறாம் மணிநேரத்தில் இயேசு பிலாத்துவினால் விசாரிக்கப்பட்டுக் கொண்டிருந்ததாகக் கூறுகிறார்.

இப்படி, சிலுவை பற்றிய நிகழ்ச்சிகளில் எண்ணற்ற முரண்பாடுகள்!

இயேசு சிலுவையில் அறையப்பட்ட போது அவருடன் இரண்டு திருடர்களும் சிலுவையில் அறையப்பட்டதாக மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகியோர் கூறுகின்றனர். இதிலும் வழக்கம் போலவே முரண்பாடுகள் காணப்படுகின்றன.

அவரோடு கூடச் சிலுவையில் அறையப்பட்ட கொள்ளைக்காரரும் அப்படியே அவரை நிந்தித்தார்கள்.

 மத்தேயு 27:47, மாற்கு 15:32

சிலுவையில் தொங்கின குற்றவாளிகளில் ஒருவன் நீ கிறிஸ்து தானே? உன்னையும், எங்களையும் இரட்சித்துக் கொள் என்று அவரை தூஷித்தான். மற்றவனோ அவனை நோக்கி நீயும் இதை ஆக்கினைக்குட்பட்டவனாய் இருக்கிறாயே, கடவுளுக்குப் பயப்படுகிறதில்லையா? நாம் நியாயமாகத் தண்டிக்கப்படுகிறோம். நாம் செய்தவைகளுக்கு தக்க பலனை அடைகிறோம். இவரோ தகாத ஒன்றையும் செய்யவில்லையே என்று அவனைக் கண்டித்து, பின்னும் இயேசுவே! நீர் உமது இராட்சியத்தில் வரும் போது அடியேனை நினைத்தருளும்? என்று சொல்ல அவர் அன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரதேசியிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்கின்றேன் என்றார்.

லூக்கா 23:39-43

ஒரு கொள்ளைக்காரன் மட்டுமே இயேசுவைக் குறை கூறியதாகவும் மற்றவன் அவனைக் கண்டித்ததோடு இயேசுவை விசுவாசித்ததாகவும் லூக்கா கூறுகிறார்.

மத்தேயும், மாற்கும் இரண்டு கொள்ளைக்காரர்களுமே அவரை நிந்தித்தாகக் கூறுகிறார்கள்.

கர்த்தரின் வார்த்தையில் இந்தத் தடுமாற்றம் இருக்கலாமோ?

 ஆ) உயிர்த்தெழுதலிலும் குழப்பம்

இயேசு அடக்கம் செய்யப்பட்ட பின் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்பதே கிறித்தவத்தின் அடிப்படைக் கோட்பாடு. அவர் உயிர்த்தெழுந்த(?) நிகழ்ச்சியாவது முரண்பாடில்லாமல் பைபிளில் கூறப்பட்டிருக்கிறதா? அதிலுள்ள முரண்பாடுகள் தான் எத்தனையெத்தனை?

ஓய்வு நாள் முடிந்தது. வாரத்தின் முதலாம் நாள் விடிந்து வருகையில் மகதேலேனா மரியாளும், மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தார்கள். இதோ பெரிய பூமி அதிர்ச்சியுண்டாயிற்று! கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்து இறங்கி வந்து வாசலில் இருந்த கல்லை உருட்டித் தள்ளி அதன் மேல் உட்கார்ந்தான். அவன் ரூபம் மின்னல் போலவும் அவன் வஸ்திரம் குறைந்த மழை போல் வெண்மையாகவும் இருந்தது.

மத்தேயு 28:1-3

ஓய்வு நாள் முடிந்த பின் மகதேலேனா மரியாளும், யாகோபின் தாயாகிய மரியாளும், சலாமே என்பவளும் அவருக்குப் பூச வேண்டும் என்று சுகந்த வர்க்கங்களை வாங்கினார்கள். வாரத்தின் முதல் நாள் அதிகாலையில் சூரியோதயத்திலேயே அவர்கள் கல்லறைக்கு வந்தார்கள். கல்லறையின் வாசலில் இருந்த கல்லை நமக்காக எவன் புரட்டித் தள்ளுவான் என்று ஒருவரோடு ஒருவர் சொல்லிக் கொண்டார்கள். அவர்கள் வந்து ஏறிட்டுப் பார்த்த போது அது தள்ளப்பட்டிருக்கக் கண்டார்கள். அந்தக் கல் மிகவும் பெரிது. அவர்கள் கல்லறைக்குச் சென்று வெள்ளையங்கி தரித்திருந்த ஒரு வாலிபன் வலது பக்கம் உட்கார்ந்திருந்ததைக் கண்டு திகைத்தார்கள்.

மாற்கு 16:1-5

வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையில் தாங்கள் ஆயத்தம் செய்த சுகந்த வர்க்கங்களை அவர்கள் எடுத்துக் கொண்டு கல்லறைக்கு வந்த போது கல்லறையிலிருந்து கல் புறப்பட்டிருப்பதைக் கண்டார்கள். உள்ளே சென்ற போதோ ஆண்டவராகிய இயேசுவின் சரீரத்தைக் காணவில்லை. அதைப் பற்றி அவர்கள் கலங்கிக் கொண்டிருக்கையில் பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த இரண்டு பேர் அவர்கள் அருகே வந்து நின்றார்கள்.

 லூக்கா 24:15

வாரத்தின் முதல் நாள் காலையில் இருட்டோடே மகதேலேனா மரியாள் கல்லறைக்கு வந்தாள். கல்லறையை அடைத்திருந்த கல் எடுக்கப்பட்டிருக்கக் கண்டு-

யோவான் 20:1

இயேசுவின் கல்லறைக்கு ஒரு மரியாள் மட்டும் வந்ததாக யோவான் கூறுவது கர்த்தரின் வார்த்தையா?

இரண்டு மரியாள்கள் வந்ததாக லூக்காவும், மத்தேயுவும் கூறுவது கர்த்தரின் வார்த்தையா?

இரண்டு மரியாள்களும், சலாமே என்பவளுமாக மூவர் வந்தார்கள் என்று மாற்கு கூறுவது கர்த்தரின் வார்த்தையா?

அவர்கள் வந்த போது அவர்கள் இரண்டு தேவ தூதர்களைச் சந்தித்ததாக லூக்கா கூறுவது கர்த்தரின் வார்த்தையா?

ஒரு தேவ தூதன் என்று மத்தேயுவும், மாற்கும் கூறுவது கர்த்தரின் வார்த்தையா?

அந்தத் தேவ தூதனை கல்லறைக்குள் உட்கார்ந்திருக்கக் கண்டார்கள் என்று மாற்கு கூறுவது கர்த்தரின் வார்த்தையா?

அல்லது வானத்திலிருந்து அவன் இறங்கி வந்ததாக மத்தேயு கூறுவது கர்த்தரின் வார்த்தையா?

அல்லது இரண்டு பேர் அருகே வந்து நின்றார்கள் என்று லூக்கா கூறுவது கர்த்தரின் வார்த்தையா?

உயிர்த்தெழுதலைப் பற்றி பைபிள் கூறும் தகவலில் ஏன் இத்தனை குழப்பங்கள்? உயிர்த்தெழுதல் நடந்திருந்தால் அதில் இவ்வளவு குழப்பங்களுக்கும் இடமிருக்குமா? கிறித்தவ நண்பர்களே நடுநிலையோடு சிந்திப்பீர்!

 N) கத்திமுனையில் சமாதானம்

சமாதானம் பண்ணுவோர் பாக்கியவான்கள். அவர்கள் கடவுளின் புத்திரர் எனப்படுவார்கள்.

 மத்தேயு 5:9

பூமியின் மேல் சமாதானத்தை அனுப்ப வந்தேன் என்று எண்ணிக் கொள்ளாதேயுங்கள்! சமாதானத்தையல்ல பட்டயத்தையே அனுப்ப வந்தேன். மகனைத் தகப்பனுக்கும் மகளைத் தாய்க்கும், மருமகளை மாமிக்கும் விரோதமாய்ப் பிரித்துவிட வந்தேன்.

 மத்தேயு 10:34

சமாதானத்தை இயேசு வலியுறுத்தியதாகக் கூறிய மத்தேயு இயேசு சமாதானத்துக்கு எதிராக வந்ததாகவும் கூறுகிறாரே; இரண்டில் கர்த்தரின் வார்த்தை எது விளக்க முடியுமா?

ழு) மரணக் குழப்பம்

அப்பொழுது அவன் அந்த வெள்ளிக் காசைத் தேவாலயத்திலே எறிந்துவிட்டுப் போய் நான்று கொண்டான். பிரதான ஆசாரியார் அந்த வெள்ளிக் காசை எடுத்து இது இரத்தக் கிரயமானதாக உள்ளதால் காணிக்கைப் பெட்டியிலே போடலாகாது என்று சொல்லி ஆலோசனை பண்ணின பின்பு அந்நியரை அடக்கம் பண்ணும் இடமாக குயவனுடைய நிலத்தை அதனாலே கொண்டார்கள்.

மத்தேயு 27:5,6

அநீதத்தின் கூலியினால் அவன் ஒரு நிலத்தைச் சம்பாதித்தான் அவன் முகங்குப்புற விழவே அவன் வயிறு வெடித்துக் குடல்களெல்லாம் சரிந்து போயின. இது எருசலேமிலுள்ள யாவருக்கும் தெரியலாயிற்று.

அப்போஸ்தலர் 1:18

இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாஸ் கயிற்றில் தொங்கிக் கொண்டு செத்தான் என்று மத்தேயு கூறுகிறார்.

ஆனால் பவுல் அவன் முகங்குப்புற விழுந்து செத்ததாகக் கூறுகிறார்.

இரண்டில் கர்த்தர் சொன்னது எது?

குடிமக்கள் யாவருக்கும் தெரிந்த செய்தி மத்தேயுவுக்குத் தெரியாமல் போனது எப்படி?

யூதாஸ் இயேசுவைக் காட்டிக் கொடுத்து விட்டு அதற்குக் கூலியாக நிலத்தைப் பெற்றதாகப் பவுல் கூறுகிறார். ஆனால் மத்தேயுவோ அவன் வெள்ளிக் காசைப் பெற்றதாகவும் அதைத் தூக்கி எறிந்து விட்டதாகவும் கூறுகிறார். இரண்டில் கர்த்தர் சொன்னது எது? கற்பனை செய்து கூறப்பட்டது எது? கயிற்றில் தொங்கும் அதே நேரத்தில் முகங்குப்புற விழும் வித்தையைக் கிறித்தவ உலகம் விளக்குமா?

P) தரிசனத் தடுமாற்றம்

இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரணமடைந்தார்; மூன்றாம் நாள் மறுபடியும் உயிர்பெற்றெழுந்தார்; சீடர்களுக்குக் காட்சி தந்தார் என்று மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு சுவிசேஷக்காரர்களும் சுறுகின்றனர். இந்த விஷயத்தை விபரிக்கும் நான்கு சுவிசேஷக்காரர்களும் முரண்பட்ட பல விஷயங்களைக் கூறுகின்றனர்.

மகதேலேனா மரியாளிடமும் மற்ற மரியாளிடமும் தேவ தூதன் காட்சி தந்து இயேசு உயிர்த்தெழுந்ததைக் கூறி சீஷருக்கு இதைக் கூறுமாறும் தெரிவிக்கிறார். அவ்விருவரும் சீஷர்களிடம் கூறுவதற்காகச் செல்லும் போது இயேசுவே அவர்களுக்குக் காட்சி தந்து,

நீங்கள் போய் கலிலேயாவுக்குப் போகும்படி என் சகோதரருக்குச் சொல்லுங்கள்! அங்கே என்னைக் காண்பார்கள் என்றார்.

மத்தேயு 28:10

பதினொரு சீஷருமோ இயேசு தங்களுக்குக் குறித்திருந்தபடி கலிலேயாவிலுள்ள மலைக்குப் போனார்கள். அங்கே அவர்கள் அவரைக் கண்டு பணிந்து கொண்டார்கள்.

மத்தேயு 28:16

இயேசுவின் கட்டளைப்படி பதினொரு சீஷரும் கலிலேயா எனுமிடம் சென்று இயேசுவைத் தரிசித்ததாக மத்தேயு இங்கே கூறுகிறார்.

ஆனால் மாற்கு,

அவர் உயிரோடு இருக்கிறார் என்றும், அவள் அவரை கண்டாள் என்றும் அவர்கள் கேள்விப்பட்ட போது நம்பவில்லை. அதன் பின்பு அவர்களில் இரண்டு பேர் ஒரு கிராமத்துக்கு வழிநடந்து போகிற பொழுது அவர்களுக்கு வேறு ரூபமாய்த் தரிசனமானார். அவர்களும் போய் மற்றவர்களுக்கு அறிவித்தார்கள். அவர்களையும் அவர்கள் நம்பவில்லை. பதினொருவரும் போஜன பந்தியில் இருக்கும் போது அவர்களுக்கு அவர் தரிசனமாகி உயிர்த்தெழுந்திருந்த தம்மைக் கண்டவர்களை அவர்கள் நம்பாமல் போனதினிமித்தம் அவர்கள் விசுவாசத்தைப் பற்றியும் இருதயக் கடினத்தைப் பற்றியும் அவர்களைக் கடிந்து கொண்டார்.

மாற்கு 16:11-14

பதினொரு சீடர்களும் இரண்டு மரியாள்களின் கூற்றை ஏற்று இயேசுவைத் தரிசிக்க கலிலேயா என்ற இடத்திற்குச் சென்றதாக மத்தேயு கூறுகிறார். சென்றது ஒரு மரியாள் என்றும் அவளது கூற்றை சீடர்கள் நம்பவில்லை என்றும் மாற்குக் கூறுகிறார்.

வழியில் இரண்டு சீடர்களுக்கு இயேசு தரிசனமானதாக மாற்கு கூறுகிறார்.

 மத்தேயு இது பற்றி எதையுமே கூறவில்லை.

கலிலேயா என்ற இடத்திற்குப் புறப்பட்டுச் சென்று அங்கே இயேசுவைத் தரிசனம் செய்ததாக மத்தேயுவும் இயேசுவை அவர்கள் போஜனம் பண்ணும் இடத்துக்கு வலிய வந்து காட்சி தந்ததாக மாற்கும் கூறுகிறார்கள்.

கிறித்தவத்தின் முக்கியமான கோட்பாட்டை விளக்கும் விஷயத்தில் கூட இவ்வளவு முரண்படுவானேன்? இரண்டுமே கர்த்தரின் தூண்டுதலால் எழுதப்பட்டிருந்தால் இத்தகைய முரண்பாடுகள் இருக்க முடியுமா? இதே விஷயத்தை லூக்கா கூறும் போது முரண்பட்ட இந்த இரண்டுக்கும் முரணாகக் கூறுகிறார்.

அந்நேரமே எழுந்திருந்து எருசலேமுக்குத் திரும்பிப் போய் பதினொருவர்களும், அவர்களோடிருந்தவர்களும் கூடியிருந்த இடத்தில் அவர்களைக் கண்டார்கள். அவர்கள் இவைகளைப் பற்றி பேசிக் கொண்டிருக்கையில் அவர் தாமே அவர்கள் நடுவிலே வந்து நின்று அவர்களைப் பார்த்து உங்களுக்குச் சமாதானம் என்றார்.

லூக்கா 24:33,37

கலிலேயாவிலும் இயேசுவைச் சந்திக்கவில்லை; அவர்கள் போஜனம் பண்ணும் போதும் சந்திக்கவில்லை. மாறாக அவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் எருசலேமில் தரிசனம் தந்ததாக லூக்கா கூறுகிறார்.

மரணித்த பிறகு உயிர்த்தெழுதல் என்பது சாதாரணமான ஒன்றல்ல. அப்படி நடந்திருந்தால் அவ்விஷயத்தில் இவ்வளவு முரண்பாடுகள் இருக்க வழியில்லை. உயிர்த்தெழுதல் என்பது பொய்யாக இருக்க வேண்டும் அல்லது இவ்வளவு முரண்பாடுகள் உள்ள பைபிள் இறை வேதம் அல்ல என்பதைக் கிறித்தவர்கள் ஒப்புக் கொள்ள வேண்டும். இந்த இரண்டில் ஒன்றைத் தவிர உங்களுக்கு வேறு வழியிருக்கிறதா நண்பர்களே!

ஞ) கேட்டும் கேட்காதவர்

இயேசுவின் உயிர்த்தெழுதலை கிறித்தவ மதத்தில் திட்டமிட்டு நுழைத்தவர் பவுல் என்னும் சவுல் ஆவார். நியாய உணர்வும், சிந்தனைத் தெளிவும் உள்ள கிறித்தவர்கள் இதனை ஏற்றுக் கொள்கின்றனர். கிறித்தவர்களுக்கு ஆரம்பத்தில் எதிரியாக இருந்து பின்னர் கிறித்தவ மார்க்கத்தில் இணைந்தது பற்றி பவுல் விளக்கும் போது அனேக இடங்களில் முரண்படுகிறார். பின்வரும் வசனங்களிலிருந்து அவற்றை அறியலாம். இங்கே அவன் என்று தம்மைப் பற்றியே பவுல் கூறுகிறார் என்பதைக் கவனத்தில் கொள்க!

அவன் பிரயாணம் செய்து தமஸ்குவைச் சமீபித்த போது சடுதியில் வானத்திலிருந்து ஒரு வெளிச்சம் அவனைச் சுற்றி பிரகாசித்தது. அவன் தரையிலே விழுந்தான். விழவே சவுலே சவுலே நீ என்னை ஏன் துன்பப் படுத்துகிறாய் என்று தன்னிடம் சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன். அதற்கு அவர் ஆண்டவரே! நீர் யாரென்று கேட்க அவர் நீ துன்பப்படுத்துகிற இயேசுவே நான். இப்பொழுது நீ எழுந்து பட்ணத்துக்குள்ளே போ! நீ செய்ய வேண்டியது இன்னதென்று அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார். அவனோடு பிரயாணம் செய்த மனுஷர் அந்தச் சத்தத்தைக் கேட்டும் ஒருவரையும் காணாமல் பேச்சற்று நின்றுவிட்டார்.

அப்போஸ்தலர் 9:3-8

அப்படியே நான் போகையில் தமஸ்குவைச் சமீபித்த போது மத்தியான வேளையில் சடுதியாய் வானத்திலிருந்து பெரிய வெளிச்சம் என்னைச் சுற்றி பிரகாசித்தது. நான் தரையில் விழுந்தேன். விழவே சவுலே! சவுலே! என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று என்னிடம் சொன்ன ஒரு சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான் நீர் யார் ஆண்டவரே என்றேன். அவர், நீ துன்பப் படுத்துகின்ற நசரேயன் இயேசுவே நான் என்றார். என்னோடிருந்தவர்கள் என்னிடம் பேசினவர் சத்தத்தைக் கேட்கவில்லை. அப்பொழுது நான் ஆண்டவரே! நான் என்ன செய்ய வேண்டுமென்று கேட்க, ஆண்டவர் என்னிடம் நீ எழுந்து தமஸ்குவுக்குப் போ!. நீ செய்யும்படி நியமிக்கப்பட்டவைகள் எல்லாவற்றையும் குறித்து அங்கே உனக்கு சொல்லப்படும் என்றார்.

அப்போஸ்தலர் 22:6-10

தமஸ்குவுக்குப் போகும் போது மத்தியான வேளையில் ராஜாவே வழியில் வானத்திலிருந்து ஒரு வெளிச்சம் என்னையும், என்னோடு பிரயாணம் பண்ணினவர்களையும் சுற்றிப் பிரகாசிக்கக் கண்டேன். அதன் பிரகாசம் சூரிய பிரகாசத்திலும் அதிகம். நாங்களெல்லோரும் தரையில் விழுந்த போது சவுலே! சவுலே! நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்? தாற்றுக்கோலுக்கு எதிர்த்து உதைப்பது உனக்கு கஷ்டமாம் என்று எபிரேயு பாஷையில் என்னிடம் சொன்ன ஒரு சத்தத்தைக் கேட்டேன். அப்பொழுது நான் நீர் யார் ஆண்டவரே! என்றேன். அதற்கு ஆண்டவர் நீ துன்பப்படுத்துகிற இயேசுவே நான். இப்பொழுது எழுந்து காலூன்றி நில்… (தொடர்ந்து சவுல் செய்ய வேண்டியவைகளை எல்லாம் கூறுகிறார்)

அப்போஸ்தலர் 27:13-16

அந்த சத்தத்தை தன்னோடு பிரயாணம் செய்தவர்களும் கேட்டதாக ஆரம்பத்தில் கூறுகிறார். அடுத்த இடத்தில் யாரும் சத்தத்தைக் கேட்கவில்லை என்கிறார். ஒரே நபர் கூறுகிற ஒரே விஷயத்தில் ஏன் தடுமாற்றம்?

பவுல் செய்ய வேண்டியவை தமஸ்கு நகரத்தில் கூறப்படும் என்று முதல் இரண்டு இடங்களில் கூறுகின்றார். மூன்றாவது இடத்தில் அங்கேயே அவை விளக்கப்பட்டதாகக் கூறுகிறார்.

ஒரு நபர் எழுதிய அப்போஸ்தலர் நடபடிகளில் ஏன் இந்த முரண்பாடு? இரண்டில் எது உண்மை? கிறித்தவ உலகம் அறியுமா?

சு) சாத்தானின் கையில் பரலோக ராஜ்ஜியம்

இயேசுவியின் சிலுவை மரணத்தில் மடடுமின்றி அதையொட்டி நடந்ததாகக் கூறப்படும் சம்பவங்களிலும் ஏராளமான முரண்பாடுகள் உள்ளன.

இயேசுவுடைய பன்னிரண்டு சீடர்களில் ஒருவன் காட்டிக் கொடுத்த தகவலில் முரண்பாடு உள்ளது போல் மற்றொரு சீடர் கூறும் போதும் பைபிள் முரண்படுகிறது. இயேசுவின் சீடர்களில் சீமோன் பேதுரு என்பவனும் ஒருவன்.

யோனாவின் குமாரன் சீமோனே! நீ பாக்கியவான். மாமிசமும், இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை. பரலோகத்திலிருக்கிற என் பிதாவே இதை உனக்கு வெளிப்படுத்தினார். நான் உனக்குச் சொல்லுகிறதைக் கேள்! நீ பேதுரு (கற்பாறை என்று பொருள்) இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. பரலோக ராஜ்ஜியத்தின் திறவு கோல்களை உனக்குத் தருவேன். பூலோகத்தில் நீ கட்டுவது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டதாகும். பூலோகத்தில் நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டதாகும் என்றார்.

மத்தேயு 16:17-19

இயேசுவுக்கு அடுத்த இடத்தைப் பேதுரு பெற்றிருக்கிறார். இயேசுவின் சீடர்களில் அவரே சிறந்தவர் என்பதெல்லாம் இதிலிருந்து தெரிய வருகின்றது.

இவ்வாறு இயேசுவால் பரலோக ராஜ்ஜியத்தின் திறவுகோல்கள் வழங்கப்பட்ட பேதுரு பற்றி இயேசு கூறியதாக மத்தேயு கூறுவதைக் கேளுங்கள்!

அவரோ திரும்பிப் பேதுருவைப் பார்த்து எனக்குப் பின்னாகப் போ சாத்தானே, நான் இடற ஏதுவாயிருக்கிறாய்; கடவுளுக்குரியவைகளைச் சிந்தியாமல் மனுஷனுக் குரியவைகளைச் சிந்திக்கிறாய் என்றார்.

மத்தேயு 16:22,23

இயேசு பேதுருவிடம் பரலோக ராஜ்ஜியத்தின் சாவியைக் கையில் கொடுத்து அடுத்த வினாடியே அவரைச் சாத்தான் என்று அழைக்கிறார்; நான் இடற ஏதுவாய் இருக்கிறாய் என்றும் கூறுகிறார். ஏன் இந்த முரண்பாடு?

இயேசு அவனிடம் (பேதுருவிடம்) இந்த இரவிலேயே சேவல் கூவுகிறதற்கு முன் நீ என்னை மூன்று தரம் மறுதலிப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்கிறேன் என்றார்.

மத்தேயு 26:34

இயேசு கூறியவாறு பேதுரு மூன்று தடவை இயேசுவை மறுதலித்ததாக மத்தேயுவும், மற்ற சுவிசேஷக்காரர்களும் கூறுகின்றனர். இவ்வளவு உயர்வான அந்தஸ்துடையவர் அவர் நினைத்தபடியே பரலோகத்திலும் நடக்கும் என்றெல்லாம் உயர்வாகச் சொல்லப்பட்ட பேதுரு சாத்தான் என்றும் இயேசுவை மறுதலிப்பவர் என்றும் கூறப்படுவது ஏன்? கடவுளின் வார்த்தையில் இந்தத் தடுமாற்றம் இருக்கலாமா? சிந்தியுங்கள்!

ளு) தலை, கால் புரியவில்லை

இயேசுவின் மீது ஒரு பெண் நறுமணத்தை ஊற்றிய சம்பவத்தை எல்லா சுவிசேஷக்காரர்களும் கூறுகின்றனர். இதிலும் ஏராளமான முரண்பாடுகள்!

இயேசு பெத்தானியாவில் குஷ்டரோகியான சீமோன் வீட்டில் இருக்கையில் ஒரு ஸ்திரீ விலையுயர்ந்த பரிமளத் தைலமுள்ள வெள்ளைக்கல் பரணியைக் கொண்டு வந்து அவர் போஜனப் பந்தியிலிருக்கும் போது அந்தத் தைலத்தை அவர் சிரசின் மேல் ஊற்றினாள்.

மத்தேயு 26:6,7

பரிசேயரில் ஒருவன் தன்னோடு போஜனம் பண்ண வேண்டும் என்று அவரைக் கேட்டுக் கொண்டான். அவர் அந்தப் பரிசேயன் வீட்டுக்குப் போய் பந்தியிருந்தார். அந்த ஊரிலிருந்த பாவியான ஒரு ஸ்திரீ அவர் பரிசேயன் வீட்டிலே பந்தியிருக்கிறதை அறிந்து வெள்ளைக்கல் பரணியில் பரிமளத் தைலம் கொண்டு வந்து அவர் பாதத்தருகே பின்னாக நின்று அழுது அவருடைய பாதங்களை தன் கண்ணீரினால் நனைக்கத் தொடங்கி தன் தலை மயிரினால் தொடைத்து அவர் பாதங்களைத் திரும்பத் திரும்ப முத்தமிட்டுப் பரிமளத்தைலத்தைப் பூசினாள்.

லூக்கா 7:36

இவ்வாறு நறுமணத் தைலத்தைப் பூசிய நிகழ்ச்சி சீமோன் என்வரின் வீட்டில் நடந்ததாக மத்தேயுவும், மாற்கும் (14:3) கூறுகிறார்கள்.

ஆனால் லூக்காவோ பரிசேயரின் வீட்டில் அது நடந்ததாகக் கூறுகிறார்.

நறுமணத் தைலத்தை தலையில் ஊற்றியதாக மத்தேயுவும், மாற்கும் (14:3) கூறுகிறார்கள்.

ஆனால் லூக்கா காலில் ஊற்றியதாகக் கூறுகிறார்.

அடக்கத்தைப் போதித்த இயேசு, காலில் தலை வைப்பதையும் தலைமயிரால் அவரது கால்களைத் துடைப்பதையும் அங்கீகரித்திருப்பாரா? என்பது ஒரு புறமிருந்தாலும் கடவுளின் வார்த்தையில் முரண்பாடு இருத்தலாகாது என்பதற்கே இதைச் சுட்டிக் காட்டுகிறோம்.

வு) உயிர்ப்பித்தலும் குணப்படுத்தலும்

இயேசு இறந்தவர்களை உயிர்ப்பித்த நிகழச்சிகளை புதிய ஏற்பாடு பல இடங்களில் குறிப்பிடுகிறது. தலைவருடைய மகளை அவர் உயிர்ப்பித்ததாக மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று சவிசேஷக்காரர்களும் கூறுகின்றனர். நாயீன் என்ற ஊரில் ஒலு வாலிபனை அவர் உயிர்ப்பித்தாக லூக்கா (7:11-15) கூறுகிறார்.

அடக்கம் செய்யப்பட்டு நான்கு நாட்களுக்குப் பிறகு லாசலு என்பனை அவர் உயிர்ப்பித்ததாக யோவான் (11:11-25) கூறுகிறார்.

ஆக மரணமடைந்த மூன்று நபர்களை இயேசு உயிர்ப்பித்திருக்கிறார் என்று சுவிசேஷங்களிலிருந்து நாம் அறிந்து கொள்கின்றோம்.

ஆனால் பவுலோ இம்மூன்று நிகழச்சிகளையும் பொய் என்கிறார். இயேசுவுக்கு முன்னர் எவருமே மரித்தோரிலிருந்து உயிர் பெற்றதில்லை என்று சாதிக்கிறார்.

அவரே திருச்சபை ஆகிய சரீரத்திற்குத் தலை. எல்லாவற்றிலும் முதல்வராகும் படி அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர்.

கொலோசேயர் 1:18

அவனவன் தன் விரிசையில் உயிர்ப்பிக்கப்படுவான் முதற்பலனானவர் கிறிஸ்து.

முதலாம் கொரிந்தியர் 15:23

தீர்க்கதரிசிகளும் மோசேயுவும் முன்னமே சொல்லியிருந்தபடி கிறிஸ்து பாடுபட வேண்டியதென்றும் மரித்தோர் உயிர்த்தெழுதலில் அவர் முதல்வராகி…

அப்போஸ்தலர் 26:23

பவுல் கூறுவதை ஏற்றுக் கொண்டால் மூன்று சுவிசேஷக்காரர்கள் குறிப்பிடுகின்ற மூவரை உயிர்ப்பித்த நிகழ்ச்சிகள் பொய்யாகின்றன. அவை இறைவேதமாக இருக்க முடியாது? மூன்று சுவிசேஷக்காரர்கள் குறிப்பிடும் நிகழ்ச்சிகள் உண்மை என்றால் பவுலின் நிரூபங்கள் இறை வேதமாக இருக்க முடியாது. இயேசு உயிர்த்தெழுந்ததும் கட்டுக் கதையாகின்றது. இரண்டில் எதை ஏற்றுக் கொண்டாலும் புதிய ஏற்பாட்டில் சரிபாதி அளவு இறை வேதமான இருக்கும் தகுதியை இழந்து விடுகின்றது.

ரு) காது கேட்கும் செவிடர்கள்

இயேசு கொன்னை வாயான ஒரு செவிடனைக் குணப்படுத்தியிருக்கிறார் என்று மாற்கு (7:31) கூறுகிறார். யோவானும், லூக்காவும் இதைப் பற்றிக் கூறவில்லை.

மத்தேயு இதைப் பற்றிக் கூறும் போது அப்பொழுது சப்பாணிகள், ஊனர், குருடர், ஊமையர் முதலிய அனேகரைத் திரளான ஜனங்கள் அவர் பாதத்தில் கொண்டு வந்து விட்டார்கள். அவர்களை அவர் குணமாக்கினார். (மத்தேயு 15:30) என்று கூறுகிறார்.

இந்த நோயாளிகளும் இவர்களை அழைத்து வந்தவர்களும் எவ்வளவு பேர் இருந்தார்கள் என்பதையும் அவர் குறிப்பிடுகிறார்.

ஸ்திரீகள், பிள்ளைகள் தவிர நாலாயிரம் புருஷர்கள்

மத்தேயு 15:39

பெண்களையும், பிள்ளைகளையும் தவிர நாலாயிரம் பேர் என்று மத்தேயு கூறுகிறார். ஏறத்தாழ பெண்களும் அதேயளவுக்கு இருந்திருந்தால் எட்டாயிரம் பேர் என்று ஆகின்றது. சிறுவர்களும் ஏறத்தாழ அதேயளவு என்று வைத்துக் கொண்டால் மொத்தம் பன்னிரண்டாயிரம் பேர் என்று ஆகின்றது.

பன்னிரண்டாயிரம் பேரில் ஒரு நோயாளிக்குத் துணையாக இரண்டு பேர் வந்ததாக வைத்துக் கொண்டால் கூட நோயாளிகள் மட்டும் நாலாயிரம் பேர் இருந்துள்ளனர்.

இப்போது கிறித்தவ உலகம் ஆராய நாம் சில கேள்விகளைக் கேட்கின்றோம்:-

சப்பாணிகள், ஊனர்கள், குருடர்கள், ஊமையர்கள் ஆகியோர் மிகவும் அரிதாகவே இருப்பார்கள். மிகப் பெரிய நகரங்களில் கூட இந்தக் குறைபாடு உடையவர்கள் இவ்வளவு எண்ணிக்கையில் இருக்க மாட்டார்கள். மக்கள் தொகை மிகவும் குறைவாக இருந்த இரண்டயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் இவ்வளவு எண்ணிக்கையில் இத்தகையவர்கள் இருந்திருப்பார்களா?

இயேசு பல்லாயிரக்கணக்கான குருடர்களையும், செவிடர்களையும் குணமாக்கி இதே வேளையாகவே இருந்திருக்கும் போது ஒரு கொன்னை வாயுடைய செவிடனைக் குணப்படுத்தியதை பெரிய அற்புதமாக மாற்கு ஏன் குறிப்பிட வேண்டும்? ஒரு செவிடனைக் குணப்படுத்திய நிகழ்ச்சியைக் கூறிய மாற்கு பல்லாயிரம் செவிடர்களைக் குணப்படுத்திய அதி அற்புத நிகழ்ச்சியை ஏன் குறிப்பிடவில்லை?

இவ்வளவு அற்புதமான நிகழ்ச்சி மற்ற சுவிசேஷக்கார்களுக்குத் தெரியாமல் போனது ஏன்?

இயேசுவை மகிமைப்படுத்த வேண்டும் என்பதற்காக மத்தேயு இஸ்டத்திற்குப் புகுந்து விளையாடியிருக்கிறார் என்றே கருத வேண்டியுள்ளது. இதன் காரணமாகவும் பைபிள் இறைவேதம் என்ற தகுதியை இழந்து விடுகின்றது என்கிறோம்.

ஏ) நாடு கடந்த பேய்

பேய் பிடித்த பெண்ணொருத்தியை இயேசு குணப்படுத்திய நிகழ்ச்சியை மத்தேயுவும், மாற்கும் கூறுகின்றனர். இவள் கிரேக்க ஸ்திரீ, சீரோபேனிக்கியா நாட்டாள் என்று மாற்கு (7:25) கூறுகிறார். ஆனால் மத்தேயு  அந்தத் திசைகளில் குடியிருந்த கானா நாட்டு ஸ்திரீ ஒருத்தி அவரிடம் வந்து என்று மத்தேயு (15:12) கூறுகிறார். இறைவனுடைய வேதத்தில் இந்தச் சின்ன விஷயத்திலும் கூட முரண்பாடிருக்குமா?

று) சிஷ்ய கோடிகள்

இயேசுவுக்கு பன்னிரண்டு சீடர்கள் இருந்ததை அனைவரும் அறிவார்கள். அவர்களில் சீமோன், அந்திரேயா என்ற இரண்டு சகோதரர்களும் உள்ளனர். அவ்விருவரும் எப்படிச் சீடர்களானார்கள் என்பதைக் கூறும் போது பைபிள் தடுமாறுகிறது.

அவர் கலிலேயாக் கடலோரமாய்ப் போகையில் சீயோனையும், அவன் சகோதரன் அந்திரேயாவையும் கண்டார். இவர்கள் மீன் பிடிக்கிறவர்கள். கடலில் வலை வீசிக் கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து என் பின்னே வாருங்கள்! உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார். உடனே அவர்கள் வலைகளை விட்டு அவரைப் பின்பற்றினார்கள்.

மாற்கு 1:16

மத்தேயுவும் (4:18) இதே கருத்தில் எழுதியுள்ளார்.

இயேசுவின் அழைப்புக்குப் பின் அவ்விருவரும் அவருக்குச் சீடர்களானதாக மத்தேயுவும் மாற்கும் கூறுவதை, யோவான் மறுக்கிறார். சீடர்களானதற்கு வேறொரு கதை விடுகிறார்.

மறு நாள் யோவானும் அவன் சீஷரில் இருவரும் நின்று கொண்டிருக்கும் போது நடந்து போகிற இயேசுவை அவன் உற்றுப் பார்த்து இதோ தேவ ஆட்டுக்குட்டி என்றான். அவன் சொன்னதை அவ்விரண்டு சீஷரும் கேட்டு இயேசுவுக்குப் பின் சென்றார்கள். இயேசு திரும்பி அவர்கள் பின்னே வருகிறதைக் கண்டு அவர்களிடம் என்ன தேடுகிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள் ரபீ நீர் எங்கே தங்கியிருக்கிறீர் என்று கேட்டார்கள். ரபீ என்பதற்கு குரு என்று அர்த்தம். அவர், வாருங்கள் காண்பீர்கள் என்றார். அவர்கள் வந்து அவர் தங்கியிருந்த இடத்தைக் கண்டு அன்றைய தினம் அவரோடு தங்கினார்கள். அப்பொழுது ஏறக்குறைய பத்தாம் மணி வேளை. யோவான் சொன்னதைக் கேட்டு அவருக்குப் பின் சென்ற இருவரில் ஒருவன் சீமோன் பேதுருவின் சகோதரன் அந்திரேயா. அவன் முதலாவது தனது சகோதரன் சீமோனைக் கண்டுபிடித்து அவனிடம், மேசியாவைக் கண்டு கொண்டோம் என்று சொன்னான். மேசியா என்பதற்கு கிறிஸ்து என்று அர்த்தம். அவனை இயேசுவிடம் கூட்டிக் கொண்டு வந்தான். இயேசு அவனை உற்றுப் பார்த்து நீ யோவானின் மகன் சீமோன். நீ கேபா எனப்படுவாய் என்றார். கேபா என்பதற்கு பேதுரு என்று அர்த்தம்.

யோவான் 1:35-42

அந்திரேயாவையும், அவன் சகோதரன் சீமோனையும் இயேசுவே அழைத்ததாகவும் இருவரும் ஒரே நேரத்தில் இயேசுவின் சீடர்களானதாகவும் மத்தேயுவும், மாற்கும் கூறுகின்றனர். அந்திரேயா மட்டும் இயேசு அழைக்காமலேயே அவரைப் பின் தொடர்ந்ததாகவும் அதன் பிறகு அவன் சகோதரன் சீமோனை அழைத்து வந்து இயேசுவுக்குச் சீடராக்கியதாகவும் யோவான் கூறுகிறார்.

பைபிள் இறைவனின் வார்த்தையென்றால், அதில் இத்தகைய முரண்பாடுகள் நிச்சயம் இருக்கமுடியாது.

ஓ) கழுதைச் சவாரி

இயேசு கழுதையில் சவாரி செய்த ஒரு நிகழ்ச்சியை நான்கு சுவிசேஷங்களும் கூறுகின்றன. அதிலும் முரண்பாடு.

தம்முடைய சீஷரில் இருவரை அனுப்பி உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போங்கள். அதனுட் செல்லும் போது ஒரு மனுஷனும் ஒருக்காலும் ஏறியிராத கழுதைக் குட்டியைக் கட்டியிருக்கக் காண்பீர்கள். அதை அவிழ்த்துக் கொண்டு வாருங்கள். அதை ஏன் அவிழ்க்கிறீர்கள் என்று யாராவது உங்களிடம் கேட்டால் அது ஆண்டவருக்குத் தேவை என்று சொல்லுங்கள் என்றார்.

லூக்கா 19:30

லூக்காவின் கருத்திலேயே மாற்கும், யோவானும் கூறுகின்றனர். ஆனால் மத்தேயு இதை வேறு விதமாகக் கூறுகிறார்.

இயேசு சீஷரில் இரண்டு பேரை அனுப்பி, உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போங்கள். போனவுடனே அங்கே ஒரு கழுதையையும், அதனோடு குட்டியையும் கட்டியிருக்கக் காண்பீர்கள். அவிழ்த்து என்னிடம் கொண்டு வாருங்கள்.

மத்தேயு 21:1-2

சீஷர் போய் இயேசு தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்து கழுதையையும், குட்டியையும் கொண்டு வந்து அவைகள் மேல் தங்கள் வஸ்திரங்களைப் போடவே அவர் அவைகளின் மேல் உட்கார்ந்தார்.

மத்தேயு 21:7

கழுதைக் குட்டியின் மீது சவாரி செய்ய முடியுமா? கழுதையின் மீதும் குட்டியின் மீதும் ஒரே நேரத்தில் சவாரி செய்ய முடியுமா? யார் வீட்டுக் கழுதையையோ அவிழ்த்துக் கொண்டு வருமாறு இயேசு போதனை செய்திருப்பாரா? கழுதையில் ஏறவேண்டிய அவசியம் என்ன வந்துவிட்டது? என்பது போன்ற கேள்விகள் ஒரு புறமிருக்கட்டும். அவர் அவிழ்த்துக் கொண்டு வரச் சொன்னது கழுதையையா? கழுதையையும் அதன் குட்டியையுமா? அவர் ஏறியது ஒரு கழுதையிலா? அல்லது இரண்டு கழுதைகளிலா? இறை வேதத்தில் ஏன் இந்தத் தகவல் முரண்பட்டு அமைந்துள்ளது என்பதை மட்டும் சிந்தியுங்கள் நண்பர்களே!

லு) கடலில் விழுந்த பேய்கள்

இயேசு பேய்களை விரட்டியடித்த சம்பவத்தை மத்தேயுவும், லூக்காவும் கூறுகின்றனர். அந்த நிகழ்ச்சிகளிலும் முரண்பாடுகள்!

அவர் அக்கரையில் கதரேனர் நாட்டுக்கு வந்த போது பேய் பிடித்திருந்த இருவர் கல்லறைகளிலிருந்து வெளியேறி அவருக்கு எதிரே வந்தார்கள். அவர்கள் மிகக் கொடியவராய் இருந்தபடியால் எவனும் அந்த வழியாகச் செல்ல இயலாதிருந்தது. சத்தமிட்டுக் கூப்பிட்டு, தேவ குமாரனே எங்களுக்கும், உமக்கும் என்ன? காலம் வருமுன்னே எங்களை வேதனைப்படுத்தவா இங்கே வந்தீர் என்றார்கள். அவர்களுக்குத் தூரத்தில் ஒரு பெரிய பன்றிக் கூட்டம் மேய்ந்து கொண்டிருந்தது. அப்பொழுது பேய்கள் நீர் எங்களைத் துரத்துவீரானால் அந்தப் பன்றிக் கூட்டத்திற்குள் எங்களை அனுப்பிவிடும் என்று அவரை வேண்டிக் கொள்கின்றனர். அதற்கவர் போங்கள் என்றார். அவைகள் வெளியேறிப் பன்றிக்குள் போகவே, அப்பன்றிக் கூட்டம் முழுவதும் மேட்டிலிருந்து கடலில் பாய்ந்து தண்ணீரில் மாண்டது.

மத்தேயு 8:28

பின்பு கலிலேயாவுக்கு கெரசேனர் நாட்டுக்குப் போய்ச் சேர்ந்தார்கள். அவர் கரை இறங்கவும் பேய்கள் பிடித்த அந்த ஊரான் ஒருவன் அவருக்கு எதிர்ப்பட்டான். அவன் நெடுநாளை வஸ்திரந்தரியாதவன். வீட்டில் தங்காமல் கல்லறைகளிலே தங்கினவன். அவன் இயேசுவைக் கண்ட போது கூக்குரலிட்டு அவருக்கு முன்பாக விழுந்து, இயேசு! உன்னதமான கடவுளின் குமாரனே எனக்கும், உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தாதிருக்க உம்மை வேண்டிக் கொள்கின்றேன் என்று மிகவும் சத்தமிட்டுச் சொன்னான். அசுத்த ஆவி அந்த மனுஷனை விட்டுப் போகும்படி அவர் கட்டளையிட்டிருந்தார். பல முறை அது அவனைப் பிடித்து வந்தது. அவன் சங்கிலிகளினாலும், விலங்குகளினாலும் கட்டுண்டு காவல் பண்ணப்பட்டிருந்ததும் கட்டுகளை முறித்துப் போட்டிருந்தான். பேய் அவனை வனாந்திரத்துக்குத் துரத்தியிருந்தது.

லூக்கா 8:26

பேய்கள் இருக்கின்றனவா என்பதையும் இருக்கின்றன என்றால் மனிதனல்லாதவர்களிடம் அவை ஊடுருவுமா என்பதையும் பன்றிகள் கடலில் விழுந்து சாவதால் பேய்களும் செத்துவிடுமா என்பதையும் பெரிதுபடுத்தாமல் விட்டு விட்டோம். நாம் கேட்பது இயேசு விரட்டியது இரண்டு மனிதர்களிடமிருந்த பேய்களையா? அல்லது ஒரு மனிதரிடமிருந்த பேய்களையா? இந்த விஷயத்தில் மத்தேயுவும், லூக்காவும் முரண்படுகின்றனர்.

ணு) பிசாசின் சோதனை

இயேசுவை நாற்பது நாட்கள் பிசாசு சோதித்ததாக மத்தேயுவும், லூக்காவும் கூறுகின்றனர்.

வனாந்தரத்திலிருந்து மலை உச்சிக்கு இயேசுவைக் கொண்டு சென்று அதன் பிறகு தேவாலயத்துக்குக் கொண்டு சென்றதாக லூக்கா கூறுகிறார்.

(லூக்கா 4:1-14)

முதலில் தேவாலயத்துக்கும் அதன் பிறகு மலையுச்சிக்கும் கொண்டு சென்றதாக மத்தேயு கூறுகிறார்.

(மத்தேயு 4:1-12)

கர்த்தர் இயேசுவைச் சோதனை செய்து பார்த்த இந்த நிகழ்ச்சியைக் கர்த்தரே கூறும் போது தடுமாற்றம் ஏற்படலாமா?

யுய) திமிர்வாதம் பிடித்தவன்

திமிர்வாதம் பிடித்த வேலைக்காரனைக் குணப்படுத்திய அற்புத நிகழ்ச்சியைக் கூறும் போது லூக்காவும், மத்தேயுவும் முரண்படுகின்றனர்.

அவர் கப்பர் நகூமுக்குச் சென்ற போது நூற்றுக்கதிபதி ஒருவன் அவரிடம் வந்து ஆண்டவனே! வீட்டில் என் வேலைக்காரன் திமிர்வாதமாய்க் கிடந்து கொடிய வேதனைப்படுகிறான் என்று அவரை வேண்டிக் கொண்டான். அவர் நான் வந்து அவனைச் சொஸ்தமாக்குவேன் என்று அவனிடம் சொன்னார். நூற்றுக்கதிபதியோ ஆண்டவனே நீ என் வீட்டினுட் பிரவேசிக்க நான் தகுந்தவனல்ல. வார்த்தை மாத்திரம் சொல்லும். அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்.

மத்தேயு 8:5-9

அங்கே நூற்றுக்கதிபதி ஒருவனுடைய வேலைக்காரன் வியாதிப்பட்டு மரண அவஸ்தையிலிருந்தான். எஜமானுக்கு அவன் அருமையானவன். அவன் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்ட போது அவர் வந்து தன் வேலைக்காரனைக் குணமாக்க வேண்டுமென்று அவரை வேண்டிக் கொள்ளும்படி யூதரின் மூப்பரில் சிலரை அவரிடம் அனுப்பினான். அவர்கள் இயேசுவினிடம் வந்து, நீர் இந்தத் தயவு செய்கிறதற்கு அவன் ஏற்றவன். அவன் நமது ஜனத்தை நேசிக்கிறான். ஒரு ஜெபாலயத்தையும் கட்டினான் என்று சொல்லி அவரை வருந்தி அழைத்தார்கள்.

 லூக்கா 7:2-6

வேலைக்காரனின் எஜமானனே இயேசுவிடம் வந்து முறையிட்டதாக மத்தேயு கூறுகிறார். யூதரின் முக்கியப் பிரமுகர்களை இயேசுவிடம் அனுப்பி வைத்ததாக லூக்கா கூறுகிறார். அவர்கள் அழைத்தவுடன் இயேசு புறப்பட்டு வீடு வரை சென்றதாகவும் அதன் பின் இயேசு அவர்களுடன் புறப்பட்டுச் சென்றதாகவும் வீட்டை அடைந்தததும் வீட்டுக்காரர் வேண்டாம் என்று கூறியதாகவும் லூக்கா (7:7) கூறுகிறார்.

ஆனால் மத்தேயுவோ இயேசு இடத்தை விட்டே புறப்படவில்லை என்று கூறுகிறார். இப்படி அனேக முரண்பாடுகள் உள்ளன. இந்த முரண்பாடுகள் பைபிள் இறை வேதமேயில்லை என்பதைச் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கின்றன.

யுடி) யோவானுக்குப் பயந்த மன்னன்!

ஏனென்றால் யோவான் நீதியும் பரிசுத்தமுள்ளவனென்று ஏரோது அறிந்து அவனுக்குப் பயந்து, அவனைப் பாதுகாத்து, அவன் பேசுவதைக் கேட்டு மிகவும் மனங்கலங்கியும் அவன் சொல்லை விருப்பத்தோடே கேட்டு வந்தான்.

மாற்கு 6:20

ஏரோது மன்னன் யோவானைக் கண்டு பயந்து, மதிப்பளித்து வந்ததாக இங்கே கூறப்படுகின்றது. இதற்கு நேர்முரணாக லூக்கா கூறுவதைக் கேளுங்கள்!

ஏரோது சிற்றரசன் தன் சகோதரன் மனைவி ஏரோளியாவினிமித்தமாகவும் தான் செய்த மற்ற பொல்லாங்குனிமித்தமாகவும் யோவானாலே கண்டிக்கப்பட்ட போது தான் செய்த மற்றப் பொல்லாங்குகளோடும் கூட யோவானையும் காவலில் அடைத்து வைத்தான்.

லூக்கா 3:19

ஏரோது மன்னன் ஏவானுக்குப் பயந்து அவரைப் பாதுகாத்து வந்தது உண்மையா? யோவானுக்குப் பயப்படாமல் அவனைச் சிறையில் அடைத்து வைத்தது உண்மையா? சிந்தியுங்கள் கிறித்தவர்களே!

யுஉ) இயேசு கூறிய உவமை

இயேசு பல சமயங்களில் உவமைகள் கூறி மக்களுக்குப் போதித்ததாக புதிய ஏற்பாடு கூறுகின்றது.

ஒரு எஜமான் ஒரு தோட்டத்தைச் சிலரிடம் குத்தகைக்கு விட்டுவிட்டு, கனிகள் உற்பத்தியானதும் அதை வாங்கி வருமாறு தன் ஊழியரை அனுப்பினான். குத்தகைக்காரர்களோ ஊழியரைக் கொன்று விட்டனர். இந்த உவமையைக் கூறிவிட்டு இயேசு தன் சீடர்களிடம்,

அப்படியிருக்க, திராட்சை தோட்டத்து எஜமான் வரும் போது குடியானவர்களை என்ன செய்வான் என்று கேட்க, அவர்கள் அந்தக் கொடியரைக் கொடுமையாய் அழித்துவிட்டு ஏற்ற காலங்களில் தனக்குக் கனிகளைக் கொடுக்கும் வேறு குடியானவர்களிடம் தோட்டத்தை விடுவான் என்றார்கள்.

மத்தேயு 21:40

இப்படியிருக்க திராட்சைத் தோட்டத்து எஜமான் அவர்களை என்ன செய்வான்? அவன் வந்து இந்தக் குடியானவர்களை அழித்து மற்றவர்களிடம் தோட்டத்தை விடுவான் என்றார். அவர்கள் அதைக் கேட்டு ஐயோ, அப்படி வேண்டாம் என்றார்கள்.

லூக்கா 20:15

எஜமான் வந்து குடியானவர்களை அழிப்பான் என்று இயேசுவின் சீடர்கள் கூறியதாக மத்தேயு கூறுவதும் இயேசு கூறி சீடர்கள் ஆட்சேபித்ததாக லூக்கா கூறுவதும் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டுள்ளதை உணரலாம். பைபிள் இறை வேதமில்லை என்பதற்கு இதுவும் சான்றாக அமைந்துள்ளது.

யுன) இயேசுவின் சிலுவைப் பலி

உலக மக்களின் பாவங்களைச் சுமப்பதற்காக இயேசு தம்மையே பலியாக்கிக் கொண்டதாகக் கிறித்தவ உலகம் நம்புகின்றது. இந்த நம்பிக்கை பின்வரும் வசனத்திலிருந்து பெறப்படுகின்றது.

அப்பொழுது இயேசு, பிதாவே! உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சப்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்.

லூக்கா 23:46

லூக்காவின் இந்த வசனம் கிறித்தவ நம்பிக்கையை வலுப்படுத்துகின்றது. ஆனால் லூக்கா கூறுவது பொய் என்று மத்தேயுவும், மாற்கும் அடித்துச் சொல்கின்றனர். இயேசு தாமாகப் பலியாகவில்லை என்று கூறிக் குட்டை உடைக்கின்றனர்.

ஏறக்குறைய ஒன்பதாம் மணிநேரத்தில் இயேசு ஏலீ ஏலீ லமா சபக்தானி என்று மிகுந்த சப்தமிட்டுக் கூப்பிட்டார். அதற்கு என் கடவுளே, என் கடவுளே, ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தம்.

மத்தேயு 27:46

ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி என்று மிகுந்த சப்தமிட்டுக் கூப்பிட்டார். அதற்கு என் கடவுளே, என் கடவுளே ஏன் என்னைக் கை விட்டீர் என்று அர்த்தமாம்.

மாற்கு 15:34

இயேசு பலியாக விரும்பவில்லை என்பதாகவும், எப்படியாவது தான் காப்பாற்றப்பட வேண்டும் என்று அவர் விரும்பியதாகவும் இந்த வசனங்கள் கூறுகின்றன. கிறித்தவக் கோட்பாடு, சிலுவைப் பலி யாவுமே கட்டுக் கதை என்பதையும் இவ்வசனங்கள் உறுதி செய்கின்றன.

இப்போது நாம் கேட்க விரும்புவது இயேசு விரும்பிப் பலியானாரா? அல்லது பலிகடாவாக இழுத்துச் செல்லப்பட்டாரா? என்பதைத் தான். இரண்டில் எது சரி என்பதை கிறித்தவ உலகம் விளக்குமா?

யுந) பாவச் சுமை

பாவஞ் செய்கிறவனே சாவான். குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதில்லை. தகப்பன் குமாரனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதில்லை. நீதிமான் தன் நீதியை அனுபவிப்பான். துஷ்டன் தன் துஷ்டத்தனத்தை அனுபவிப்பான்.

எசக்கியேல் 18:20

ஒருவனது பாவச் சுமையை இன்னொருவன் சுமக்க முடியாது என்பதை இவ்வசனம் அழுத்தமாகக் கூறுகிறது.

இந்தத் தத்துவம் அறிவுக்குப் பொருத்தமானதாகவும் இருக்கின்றது. இதை ஏற்றுக் கொண்டால்  அனைவரும் பாவிகளாகப் பிறக்கின்றனர்; இயேசு வந்து அனைவரின் பாவங்களையும் சுமந்து கொண்டார் என்ற கிறித்தவக் கோட்பாடு அடிபட்டுப் போய்விடும். இதற்காகக் கிறித்தவ உலகம் வேதத்தில் கை வரிசையைக் காட்டியுள்ளது.

பிதாக்களின் அக்கிரமத்தை பிள்ளைகளிடத்திலும், மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் விசாரிக்கிறவர் என்று (கர்த்தர்) கூறினார்.

யாத்திராகமம் 34:6

இங்கே நான்கு தலைமுறை வரையிலும் கர்த்தர் விசாரணை செய்வார் என்று கூறப்படுகின்றது. நான்கு தலைமுறை மட்டும் தான் கர்த்தர் விசாரிப்பது என்பது கிறித்தவக் கோட்பாட்டை நிலை நிறுத்த உதவாது என்பதால் மேலும் ஒரு படி ஏறி, லூக்கா புதிய தத்துவம் கூறுகிறார்.

இப்படிச் செய்வதினால் ஆபேலின் இரத்தம் முதல் பலிபீடத்துக்கும், தேவாலயத்துக்கும் நடுவில் கொலையுண்ட சகரியாவின் இரத்தம் வரைக்கும் உலகத் தோற்றம் முதல் சிந்தப்பட்ட சகல தீர்க்கதரிசிகளின் இரத்தமும் இந்தச் சந்ததியிடம் கேட்கப்படும் என்று தேவ ஞானம் சொல்லியிருக்கிறது. நிச்சயமாகவே இந்தச் சந்ததியிடம் அது கேட்கப்படும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

லூக்கா 11:50,51

ஆதாமின் மகன் ஆபேல் கொலையுண்டது பற்றி, பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் இயேசுவின் காலத்தில் வாழ்ந்த சந்ததியினர் விசாரிக்கப்படுவர் என்று இங்கே கூறப்படுகின்றது. இயேசு பாவங்களைச் சுமக்க வந்தார் என்பதை நிலைநாட்ட இவ்வாறு லூக்கா கூறினாலும் உண்மையில் அதற்கு முரணாகவே இவ்வசனம் அமைந்துள்ளது. இயேசு வந்த பின்பும் கூட ஆபேலின் கொலை பற்றி விசாரிக்கப்படும் என்றால் இயேசு எவரது பாவத்தையும் சுமக்கவில்லை என்பது தெளிவாகின்றது.

நாம் இங்கே கேட்க விரும்புவது என்னவென்றால், எவரது பாவத்தையும் எவரும் எப்போதும் சுமக்க முடியாது என்று எசக்கியேல் கூறுவது சரியா?

அல்லது ஒருவர் செய்த பாவத்தை அவரது சந்ததிகள் நான்கு தலைமுறை வரை சுமக்க வேண்டும் என்று யாத்திராகமம் கூறுவது சரியா?

அல்லது ஒருவன் செய்த பாவத்தை அவனது சந்ததிகள் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் சுமந்தாக வேண்டும் என்று லூக்கா கூறுவது சரியா?

அல்லது இம்மூன்றுக்கும் மாற்றமாக இயேசு எல்லோரின் பாவத்தையும் சுமந்து கொண்டார் என்று பவுல் உருவாக்கிய தத்துவம் சரியா?

இந்த ஒரு விஷயத்தில் இப்படி நான்கு முரண்பட்ட போதனைகள் இறை வேதத்தில் இருக்கலாமா? கிறித்தவ உலகில் இதற்கும் விடையில்லை.

யுக) தப்புக் கணக்கு

எகிப்திலே யோசேப்புக்குப் பிறந்த குமாரர் இரண்டு பேர். ஆக எகிப்துக்கு வந்த யாகோபின் குடும்பத்தார் எழுபது பேர்.

ஆதியாகமம் 46:27

யோசேப் எகிப்திலே வாசம் புரிந்து கொண்டிருந்த போது தந்தையையும், சகோதரர்களையும், அவர்களின் பிள்ளைகளையும் எகிப்துக்கு வரவழைத்தார். யாக்கோப்பு, யோசேப்பு, அவரது இரண்டு குமாரர்கள், யோசேப்பின் சகோதரர்கள், அவர்களின் புதல்வர்கள் அனைவருமே எழு பேர் தாம் என்று இங்கே கூறப்பட்டுள்ளது. இது பற்றிப் பவுல் கூறுவதைக் கேளுங்கள்!

யோசேப்பு தன் தகப்பன் யாக்கோப்பையும் அவன் குடும்பத்தார் அனைவரையும் அழைத்து வரச் சொல்லி அனுப்பினான். அவர்கள் எழுபத்தைந்து பேர்.

அப்போஸ்தலர் 7:14

யோசேப்பையும், அவரது இரண்டு மகன்களையும் சேர்த்து மொத்தம் எழுபது பேர் என்று ஆதியாகமம் கூறுகின்றது. பவுலோ யோசேப்பையும் அவரது இரண்டு குமாரரையும் நீக்கிவிட்டு எழுப்பத்தைந்து என்கிறார்.

ஆதியாகமம் கூறுகிற படி பார்த்தால் யோசேப்பும் அவனது இரு குமாரர்களையும் சேர்க்காவிட்டால் அவர்கள் அறுபத்தி ஏழு பேர் தான். ஆனால் எட்டுப் பேர்களை அதிகப்படியாக பவுல் கூறுகிறார்.

வந்தவர்கள் எழுபதா? எழுபத்து ஐந்தா? எழுபதில் மூன்றை நீக்கினால் அது எழுபத்தைந்தாகுமா? அறிவுக்குப் பொருந்தாத இந்தத் தப்பான கணக்கு இறை வேதத்தில் இடம் பெறலாமா? அப்படி இடம்பெற்ற பின்பும் அது இறை வேதமாக இருக்க முடியுமா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் அவர்களிடம் எந்த விடையுமில்லை.

முரண்பாடுகள் இத்தோடு நிற்கவில்லை; இன்னமும் தொடர்கின்றன.

யுப) இயேசு நீதிமான் இல்லையா?

பாவிகளாகப் பிறக்கும் எல்லா மனிதர்களின் பாவங்களையும் சுமப்பதற்காக இயேசு தம்மையே சிலுவையில் பலியிட்டுக் கொண்டார் என்பது கிறித்துவத்தின் அடிப்படைக் கொள்கைளில் ஒன்று. இந்தக் கோட்பாடு பின்வரும் வசனத்திலிருந்து பெறப்படுகின்றது.

நமது பாவங்களுக்கு மாத்திரமல்ல; சர்வலோகத்தின் பாவங்களுக்கும் கிருபாதார பலி அவரே!

யோவானின் முதலாம் நிரூபம் 2:2

புதிய ஏற்பாட்டில் காணப்படும் இந்த அடிப்படைக் கொள்கையைப் பழைய ஏற்பாடு முற்றிலும் நிராகரிக்கின்றது.

துஷ்டன் நீதிமானை மீட்கும் பொருளாவான். நேர்மையானவனுக்குத் துரோகி பதிலாவான்.

நீதி மொழிகள் 21:18

மனிதர்களில் யாரேனும் பலியிடப்பட வேண்டுமானால் துஷ்டனும், துரோகியுமே பலியிடப்பட வேண்டியவர்கள் என்று இந்த வசனம் கூறுகின்றது.

இயேசு, எல்லா மக்களுக்கும் பலியிடப்பட்டதாக நம்பினால் அவர் நீதிமான் அல்லவென்று ஏற்படும். இயேசுவை நீதிமான் என்று நம்பினால் அவர் பலியிடப்பட்டதை நம்ப முடியாமல் போகும். இரண்டில் எதை நம்பினாலும் பைபிளின் ஒரு வசனம் பொய்யாகி விடும். பைபிள் இறை வேதமாக இருக்க முடியாது என்பதற்கு இதுவும் சரியான சான்றாகும்.

யுh) பவுல் கண்ட புது மார்க்கம்

கர்த்தரின் பிரமாணம் உத்தமமானது. அது புது உயிர் கொடுக்கிறது. கர்த்தரின் சாட்சியம் நம்பப்படத்தக்கது. அது பேதையை ஞானியாக்குகிறது. கர்த்தரின் கட்டளைகள் நேர்மையானவை. அவை இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கும். கர்த்தரின் கற்பனை தூயது. அது கண்களைத் தெளிவிக்கிறது.

சங்கீதம் 19:7,8

பழைய ஏற்பாட்டில் காணப்படும் இந்த வசனங்கள் கர்த்தரின் வார்த்தைகளும், பிரமாணங்களும் மனிதனுக்கு நேர்வழி காட்டும் என்று போதிக்கின்றன.

கர்த்தரின் இந்தப் போதனைக்கு முரணாகப் பவுல் கருத்துத் தெரிவிக்கிறார். அது பைபிளிலும் இடம்பெற்றுள்ளது.

முந்தின கட்டளை பலவீனமுள்ளதும் பயனற்றதுமாய் இருந்ததினிமித்தம் அது தள்ளப்படுகின்றது. நியாயப் பிரமாணம் ஒன்றையும் பூரணப்படுத்தியதில்லை.

எபிரேயர் 7:18

முந்தைய நியாயப் பிரமாணத்தை இயேசு தள்ளினால் அதில் ஓரளவாவது நியாயம் இருக்கும். இயேசுவுக்குப் பின்னால் வந்த பவுல் கர்த்தரின் நியாயப் பிரமாணம் பரிபபூரணமானதன்று; பலவீனமானது என்கிறார். கர்த்தரையே அலட்சியம் செய்யும் பவுலடிகளைக் கிறித்தவ உலகம் நம்புவது தான் வேதனைக்குரியது.

கர்த்தரின் உத்தரவாதத்தைக் கிறித்தவ உலகம் நம்பப் போகிறதா? அதைத் தள்ளுபடி செய்யும் பவுல் போதனையை ஏற்கப் போகிறதா? எதை நம்பினாலும் பைபிள் இறை வேதமாக இருக்க முடியாது என்பது தெளிவு.

இனி பழைய ஏற்பாட்டின் சில வசனங்கள் மற்றும் சில வசனங்களுடன் எவ்வாறு முரண்படுகின்றன என்பதைக் காண்போம்.

யுi) புனித நாளின் கடமைகள்

இஸ்ரவேலர்களின் புனித நாட்களைப் பற்றியும், அந்நாட்களில் செய்ய வேண்டிய கடமைகள் பற்றியும் பைபிளின் எசக்கியேல், எண்ணாகமம் என்ற இரண்டு ஆகமங்கள் கூறுகின்றன. இரண்டு ஆகமங்களிலும் இந்த விஷயத்தில் அனேக முரண்பாடுகள்!

முதலாம் மாதம் பதினாலாந்தேதியிலே புளிப்பில்லாத அப்பம் புசிக்கும் ஏழு நாள் உற்சவமாகிய  பஸ்கா ஆரம்பமாகும். அந்நாளிலே அதிபதி தனக்காகவும், தேசத்து ஜனம் அனைத்துக்காகவும் பாவ நிவாரணப் பலியாக ஒரு காளையைப் படைக்க வேண்டும். உற்சவ நாட்கள் ஏழிலும் அவன் கர்த்தருக்குத் தகனப் பலியாக பழுதற்ற ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக் கடாக்களையும் அந்த ஏழு நாளும் தினந்தோறும் படைக்க வேண்டும். பாவ நிவாரணப் பலியாக ஒரு வெள்ளாட்டுக் கடாவையும் தினந்தோறும் படைக்க வேண்டும். போஜனப் பலியாக ஒரு காளையோடே ஒரு மரக்கால் மாவையும் ஒரு ஆட்டுக்கடாவோடே ஒரு மரக்கால் மாவையும் ஒரு மரக்கால் மாவோடே ஒருபடி எண்ணெயையும் படைக்க வேண்டும். ஏழாம் மாதம் பதினைந்தாம் தேதியில் ஆரம்பமாகிற உற்சவத்திலும் அவன் அது போலவே ஏழு நாளும் பாவ நிவாரணப் பலிகளையும் தகனப் பலிகளையும் போஜனப் பலிகளையும் எண்ணெயையும் படைக்க வேண்டும்.

எசக்கியேல் 45:21-25

பழுதில்லாத ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக்கடாக்களையும் தகனப் பலியாக செலுத்த வேண்டும் என்று இங்கே கூறப்படுவதற்கு மாற்றமாக  இரண்டு இளங்காளைகளையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒரு வயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும் பலியிட வேண்டும் என்று எண்ணாகமம் 28:19 கூறுகின்றது.

ஒரே இனத்துக்கு ஒரே காலத்தில் இடப்பட்ட கட்டளையில் இந்த முரண்பாடு ஏன்?

பாவ நிவாரணப் பலியாக ஒரு காளைமாட்டைப் படைக்க வேண்டும் என்று இங்கே கூறப்பட்டதற்கு மாற்றமாக பாவ நிவாரணப் பலிக்காக ஒரு வெள்ளாட்டுக் கடாவையும் செலுத்த வேண்டும் என்று எண்ணாகமம் 28:20 கூறுகிறது.

போஜனப் பலியாக ஒரு காளை, ஒரு மரக்கால் மாவு, ஒரு ஆட்டுக்கடா, ஒரு மரக்கால் மாவு, ஒருபடி எண்ணெய் ஆகியவற்றைப் படைக்க வேண்டும் என்று இங்கே கூறப்பட்டதற்கு மாற்றமாக  போஜன பலியாக எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவில் காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், ஆட்டுக்கடாவுக்காக பத்தில் இரண்டு பங்கையும் ஏழு ஆட்டுக் குட்டிகளில் ஒவ்வொன்றுக்காகவும் பத்தில் ஒரு பங்கையும் படைக்க வேண்டும் என்று எண்ணாகமம் 28:20 வசனம் கூறுகிறது.

முதலாம் மாதம் பதினாலாந்தேதி செய்தது போலவே ஏழாம் மாதம் பதினைந்தாம் தேதியிலும் பலியிட வேண்டும் என எசக்கியேலில் கூறப்படுகின்றது.

ஆனால் எண்ணாகமத்தில் ஏழாம் மாதம் பதினைந்தாம் தேதி பலியிட வேண்டியது பற்றி வேறு விதமாகக் கூறப்படுகின்றது.

ஏழாம் மாதம் பதினைந்தாம் தேதி உங்களுக்கு பரிசுத்த மகா சங்கம். அன்று சாதாரண வேலை எதையும் செய்யலாகாது. ஏழு நாள் கர்த்தருக்குப் பண்டிகை கொண்டாட வேண்டும். நீங்கள் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான நிவேதனமாகப் பதின் மூன்று இளங்காளைகளையும் இரண்டு ஆட்டுக் கடாக்களையும் ஒரு வயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக் குட்டிகளையும் தகன பலியிட வேண்டும் என்று எண்ணாகமம் 29:12 கூறுகிறது. இரண்டுக்கும் அனேக வித்தியாசங்கள் உள்ளன.

இவை தவிர இந்த விஷயத்தில் இன்னும் பல தகவல்கள் முரண்பட்டுக் காணப்படுகின்றன.

எண்ணாமம் 28,29 அதிகாரங்களையும் எசக்கியேல் 45,46 அதிகாரங்களையும் முழுமையாகப் படிப்போர், அவற்றைக் காணலாம்.

இரண்டுமே கடவுளின் வார்த்தைகள் என்றால் இவ்வளவு முரண்பாடுகள் இருப்பது ஏன்? அது மட்டுமின்றி, அந்த அதிகாரங்களில் கூறப்படுபவற்றைச் செய்வதென்றால் ஒவ்வொருவருக்கும் ஐந்தாறு ஆட்டுப் பண்ணைகளும், ஐந்தாறு மாட்டுப் பண்ணைகளும் இருக்க வேண்டும். சாதாரண நிலையில் உள்ளவர்களுக்கு இது கட்டுபடியாகாது என்பதையும் கிறித்தவர்கள் சிந்திக்கட்டும்.

 யுத) பாதியும் மீதியும்

காத் என்பவனின் புத்திரருக்குக் கடவுள் கொடுத்த நிலப்பரப்பைக் கூறும் போது பைபிள் தடுமாறுகிறது.

கர்த்தர் என்னிடம் சொன்னதாவது, இன்று நீ மோவாபின் எல்லையிலுள்ள ஆர் நகரத்தைக் கடந்து போவாய். அம்மோனியரை நெருங்கும் போது நீ அவர்களை வருத்தப்படுத்த வேண்டாம். அவர்களோடு போர் செய்யவும் வேண்டாம். அம்மோனியரின் தேசத்தில் எதையும் உனக்குக் கொடேன். அதை லோத்தின் புத்திரருக்குச் சொந்தமாகக் கொடுத்து விட்டேனே.

உபாகமம் 2:17-19

அம்மோனியர் தேசத்தில் எதையும் இவர்களுக்குக் கொடுக்கவில்லை. அது லோத்தின் குமாரருக்கு உரியது என்று இங்கே கூறியதற்கு மாற்றமாக

காத் புத்திரரின் கோத்திரத்துக்கு மோசே, அவர்கள் வம்சங்களின் படி கொடுத்தவை இவைகளே. யாசேரும் கிலியாத்தின் சகல பட்டணங்களும் ரபாவுக்கு எதிரே இருக்கிற அரோவர் மட்டுமுள்ள அம்மோனியரின் பாதித் தேசமும்… என்று யோசுவா  (13:24,25) கூறுகிறது.

அம்மோனியரின் தேசத்தில் எதையும் தொடக் கூடாது என்று கூறியது கர்த்தரின் கட்டளையா? அதில் பாதித் தேசத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்பது கர்த்தரின் வார்த்தையா? முரண்பட்ட இந்த இரண்டில் எது உண்மை என்றாலும் பைபிள் எப்படி இறை வேதமாக இருக்கமுடியும்?

 யும) குழப்பக் கணக்கு

பென்யமீன்களுடைய குமாரர்களைப் பற்றி பைபிள் கூறுகின்றது. அவனுடைய குமாரர்களின் எண்ணிக்கை, அவர்களின் பெயர்கள் ஆகியவற்றைக் கூறும் போதும் அனேக முரண்பாடுகள் உள்ளன.

பென்யமீன் குமாரர் பேலா, பேகேர், யெதீகவேல் எனும் மூவர்.

முதலாம் நாளாகமம் 7:6

பென்யமீன், பேலா என்னும் தன் மூத்த குமாரனையும், அஸ்பேல் எனும் இரண்டாம் குமாரனையும், அகராகு என்னும் மூன்றாம் குமாரனையும், நோகா என்னும் நாலாம் குமாரனையும், ராபா என்னும் ஐந்தாம் குமாரனையும் பெற்றான்.

முதலாம் நாளாகமம் 8:1,2

ஒரே ஆகமத்துக்குள்ளேயே இரண்டு முரண்கள். ஒரு இடத்தில் மூன்று குமாரர்கள் என்றும் இன்னொரு இடத்தில் ஐந்து குமாரர்கள் என்றும் கூறப்படுகின்றது. ஐந்து குமாரர்கள் என்று குறிப்பிடும் இடத்தில் முதலில் கூறிய மூவருடன் வேறு இரண்டு பேர்களை சேர்த்துள்ளதா என்றால் அதுவும் இல்லை. பேலா என்ற பெயர் மட்டுமே இரண்டு இடங்களிலும் கூறப்பட்டுள்ளது. மற்ற பெயர்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சம்பந்தமில்லாமல் உள்ளன. கடவுளின் வேதம் இப்படிக் குழப்பலாமா?

மூன்று குமாரர்கள் என்றும், ஐந்து குமாரர்கள் என்றும் ஒரு ஆகமத்துக்குள்ளேயே முரண்படும் பைபிள் இன்னொரு ஆகமத்தில் மேலும் முரண்படுகிறது.

பென்யமீனின் குமாரர் பேலா, பேகர், அஸ்பேல், கேரா, நாகமான், ஏகி, ரோஷ், முப்பீம், குப்பீம், ஆர்து என்பவர்கள்.

ஆதியாகமம் 46:21

இங்கே பென்யமீனுக்கு பத்துக் குமாரர்கள் இருந்ததாகக் கூறுவதுடன் பேலா எனும் பெயரைத் தவிர மற்ற பெயர்கள் யாவும் ஒன்றுடன் ஒன்று சம்பந்தமில்லாததாக உள்ளது.

இந்தப் பரம்பரைப் பட்டியல் அவசியம் தானா? இதைத் தெரிந்து ஆகப் போவது என்ன என்ற கேள்வி ஒரு புறமிருக்கட்டும்.

இந்தச் சிறிய எண்ணிக்கையை எண்ணிச் சொல்வதில் கர்த்தருக்கு – அல்லது கர்த்தரின் ஆவியால் உந்தப்பட்டவருக்கு இவ்வளவு குழப்பம் வர வேண்டுமா?

அது போல் சிலரது பரம்பரைப் பட்டியலை பைபிள் கூறுகின்றது. இரண்டு இடங்களில் ஏராளமான பெயர்கள் கூறப்படுகின்றன.

முதலாம் நாளாகமம் 8:29-38 வரை கூறப்படும் பெயர்களையும்

முதலாம் நாளாகமம் 9:35-44 வரை கூறப்படும் பெயர்களையும்

பார்வையிடுவோர் இரண்டு இடங்களிலும் அனேகம் முரண்பாடுகள் மலிந்து கிடப்பதைக் காணமுடியும்.

இத்தனைக்குப் பிறகும் அது இறை வேதம் என்று எப்படி நம்ப முடியும்? சாதாரணத் தகவல்களிலேயே குழப்பக் கூடிய புத்தகம், மனித வாழ்க்கைக்கு வழிகாட்டும் என்று எப்படி நம்ப முடியும்? கிறித்தவ உலகம் சிந்திக்குமா?

 யுi) செத்துப் பிழைத்த மிருகங்கள்

மறுநாளிலே கர்த்தர் அந்தக் காரியத்தைச் செய்தார். எகிப்தியரின் மிருகங்கள் எல்லாம் செத்துப் போயின. இஸ்ரவேலரின் மிருகங்களில் ஒன்றாகிலும் சாகவில்லை.

யாத்திராகமம் 9:6

மோசேயின் எதிரிகளான பார்வோனின் கூட்டத்தினரைத் தண்டிக்கும் விதமாக அவர்களின் மிருகங்கள் அனைத்தையும் கர்த்தர் சாகடித்ததாக இவ்வசனம் கூறுகின்றது.

இதே யாத்திராகமம் இதே அதிகாரத்தில் இதற்கு முரணாகவும் கூறுகின்றது.

பார்வோனின் ஊழியக்காரரில் எவன் கர்த்தருடைய வார்த்தைக்குப் பயப்பட்டானோ அவன் தன் வேலைக்காரரையும் தன் மிருகங்களையும் வீட்டுக்கு ஓடி வரச் செய்தான். எவன் கர்த்தருடைய வார்த்தையை மதியாமற் போனானோ அவன் தன் வேலைக்காரரையும், தன் மிருகங்களையும் வெளியிலே விட்டு விட்டான்.

யாத்திராகமம் 9:20,21

பார்வோன் கூட்டத்தினரின் எல்லா மிருகங்களும் கர்த்தரின் கட்டளைப்படி சாகடிக்கப்பட்ட பின், எப்படி மிருகங்களை வீட்டுக்கு ஓடிவரச் செய்திருக்க முடியும்? அல்லது அவற்றை எப்படி வெளியில் விட்டுவிட முடியும்? அம்மிருகங்களைக் கர்த்தர் அழித்து விட்டதாகக் கூறுவது சரியா? கர்த்தரின் கட்டளைக்குப் பின்பும் அழியவில்லை என்பது சரியா?

யுஅ) கடவுளின் தோல்வி

மோசேக்குப் பின்னர் யோசுவா இஸ்ரவேலர்களின் தலைமைப் பொறுப்பேற்றதாகவும், அனைத்து இராஜாக்களையும் தோல்வியுறச் செய்து அவர்களின் நாடுகளைப் பிடித்துக் கொண்டதாகவும் யோசுவா ஆகமம் விரிவாகக் கூறுகின்றது.

 … எருசலேமின் ராஜா, எப்ரோனின் ராஜா, யர்மூத்தின் ராஜா, லாகீஷின் ராஜா, எக்லோனின் ராஜா ஆகிய ஐந்து ராஜாக்களையும் குகையிலிருந்து அவனிடம் கொண்டு வந்தார்கள்.

யோசுவா 10:23

அதன் பின் யோசுவா அவர்களை வெட்டிக் கொன்று ஐந்து மரங்களிலே தூக்கிப் போட்டான்.

யோசுவா 10:26

எருசலேமின் ராஜா உட்பட ஐந்து ராஜாக்களை யோசுவா வெற்றி கொண்டதை இந்த வசனங்கள் அறிவிக்கின்றன. மேலும் 10:6-12 வரையிலான வசனங்களில் எருசலேம் நகர்வாசிகள் உட்பட அனைவரும் முறியடிக்கப்பட்டதும் அவர்களில் அனேகர் மாண்டதும் கூறப்படுகின்றன.

ஆனால் இதே ஆகமம் 15:63 வசனத்தைப் பாருங்கள்!

எருசலேமில் குடியிருந்து எபூசியரை யூதா புத்திரர் துரத்திவிட முடியாமற் போயிற்று. இந்நாள் மட்டும் எபூசியர் யூதா புத்திரரோடு எருசலேமிலே குடியிருக்கிறார்கள்.

யோசுவா 15:53

யோசுவா உள்ளிட்ட யூதாவின் புத்திரர்கள் எருசலேமை முறியடித்ததாகக் கூறப்படுவது கர்த்தரின் வார்த்தையா? அல்லது அவர்களை வெல்ல முடியாமற் போயிற்று என்று கூறப்படுவது கர்த்தரின் வார்த்தையா?

கர்த்தரின் துணையுடன் கர்த்தரே நேரடியாகக் களத்தில் இறங்கியும் (யோசுவா 10:42) எருசலேமுள்ளவர்களை வெல்ல முடியவில்லை என்றால் தோல்வி கர்த்தருக்கில்லையா? இவற்றுக்கும் கிறித்தவ உலகில் விடையில்லை.

யுn) உதைக்கும் கணக்குகள்

i) யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் மூன்றாம் வருஷத்தில் அகீயாவின் குமாரனாகிய பாஷா இஸ்ரவேல் அனைத்தின் மேலும் திர்சாவிலே ராஜாவாகி இருபத்து நாலு வருஷம் அரசாண்டான்.

இரண்டாம் ராஜாக்கள் 15:33

பாஷா நித்திரையடைந்து தன் பிதாக்களோடே சேரவே திரிசாவில அடக்கம் பண்ணப்பட்டான். அவன் குமாரன் ஏலா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

இரண்டாம் ராஜாக்கள் 16:6

ஆசா என்பவன் யூதாவுக்கு ராஜாவாகிய மூன்றாம் வருஷத்தில் பாஷா என்பவன் இஸ்ரவேலர்களுக்கு ராஜாவானதாகவும், 24 ஆண்டுகள் ஆண்டதாகவும் மேலே உள்ள முதல் வசனம் கூறுகின்றது. அவன் அரசனாகவே மரணமடைந்து உடன் அவன் மகன் ராஜாவாக ஆனதாக இரண்டாம் வசனம் கூறுகின்றது.

யூதாவுக்கு ஆசா ராஜாவான மூன்றாம் வருஷம் பாஷா ஆட்சிக்கு வந்து 24 வருடங்கள் ஆட்சி செய்து மரணித்திருக்கிறான்.

அதாவது ஆசா யூதாவுக்கு ராஜாவானது முதல் 27 (24+3) ஆண்டுகள் பாஷா வாழ்ந்திருக்கிறான். இதைக் கவனத்தில் கொண்டு பின்வரும் வசனங்களைப் படியுங்கள்!

ஆசா அரசாண்ட முப்பத்தாறாம் வருஷத்தில் இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா யூதாவுக்கு விரோதமாய் வந்து ஒருவரும் யூதாவின் ராஜாவாகிய ஆசாவிடம் போக்குவரத்தாயிராத படி ராமாவுக்கு அரண் கட்டினான்.

இரண்டாம் நாளாகமம் 16:1

ஆசா அரசாண்ட 27ஆம் வருடம் மரணித்து விட்ட பாஷா என்பவன், ஆசா அரசாண்ட முப்பத்தாறாம் ஆண்டில் எப்படி அரண் கட்டினான்? ஒரு வேளை அவன் உயிர்த்தெழுந்தான் என்று கிறித்தவ உலகம் சொல்லப் போகின்றதா? அப்படிச் சொன்னால் இயேசுவின் மகிமை என்னாவது?

ii) சாலமோன் கர்த்தருடைய நாமத்திற்கு ஒரு ஆலயத்தையும், தனக்கு ஒரு அரண்மனையையும் கட்டக் கட்டளையிட்டு சுமை சுமப்பதற்கு எழுபதினாயிரம் பேரையும், மலையில் கல்வெட்டுதற்கு எண்பதினாயிரம் பேரையும் இவர்களைப் பார்த்துக் கொள்வதற்கு மூவாயிரத்து அறுநூறு பேரையும் எண்ணி ஏற்படுத்தினான்.

இரண்டாம் நாளாகமம் 2:2

சாலமோன் அரண்மனை கட்டும் போது அதனை மேற்பார்வையிடுவதற்காக மூவாயிரத்து அறுநூறு பேரை ஏற்படுத்தியதாக இவ்சவனம் கூறுகிறது. இது உத்தேசமான கணக்கு அன்று; சாலமோன் எண்ணிப் பார்த்து ஏற்படுத்திய சரியான கணக்கு எனவும் இவ்வசனம் கூறுகிறது. இதே வசனத்தை முதலாம் ராஜாக்கள் பின்வருமாறு கூறுகின்றது.

… இவர்களைத் தவிர வேலையை விசாரித்து வேலையாட்களைப் பார்த்துக் கொள்வதற்குத் தலைமையான விசாரிப்புக்காரர் மூவாயிரத்து முன்னூறு பேர் இருந்தார்கள்.

முதலாம் ராஜாக்கள் 5:16

துல்லியமாக எண்ணி நியமிக்கப்பட்டவர்களில் ஏனிந்த முரண்பாடு? சாலமோன் எண்ணிக்கையில் தவறு செய்து விட்டாரா? அல்லது அந்த இரண்டு ஆகமங்களையும் கர்த்தரின் தூண்டுதலினால் எழுதிய(?) இருவரில் ஒருவர் தவறான எண்ணிக்கையைக் குறிப்பிட்டு விட்டாரா?

இரண்டு எண்ணிக்கையில் எது உண்மை என்றாலும் பைபிள் இறைவேதமாக இருக்க முடியாது என்பது நிரூபணமாகிறது.

 iii) சாலமோன் கட்டிய  கடல் தொட்டி என்ற தடாகத்தின் கொள்ளளவு பற்றி பைபிளின் இரண்டு ஆகமங்கள் முரண்பட்ட அளவைக் கூறுகின்றன.

…அது இரண்டாயிரம் குடம் தண்ணீர் பிடிக்கும்.

முதலாம் ராஜாக்கள் 7:26

அது மூவாயிரம் குடம் தண்ணீர் பிடிக்கும்.

இரண்டாம் நாளாகமம் 4:5

 பாபிலோன் ராஜாவாகிய நெபுகாத் நேச்சார் என்பவரால் சிறைப் பிடிக்கப்பட்டவர்களும், பல பட்டணங்களுக்கு அனுப்பப்பட்டவர்களுமான இஸ்ரவேலர்களின் தொகையை எஸ்ரா, நெகேமியா ஆகிய இரண்டு ஆகமங்கள் கூறுகின்றன. இரண்டு ஆகமங்களின் பட்டியல்களிலும் ஏராளமான முரண்பாடுகள்!

எஸ்ராவின் இரண்டாம் அதிகாரத்திலும் நெகேமியாவின் இரண்டாம் அதிகாரத்திலும் நெகேமியாவின் ஏழாம் அதிகாரத்திலும் இந்தப் பட்டியலைக் காணலாம்.

பட்டியல்                                  எஸ்ரா                        நெகேமியா

ஆரகின் சந்ததியர்                      775                            652

பகத், மோவாபின்                      2812                          2318

சத்தூவின் சந்ததியர்                  945                           845

பெபாயீன் சந்ததியர்                    629                          628

பாணியின் சந்ததியர்                  642                          648

அஸ்காதின் சந்ததியர்               1222                       2322

அதொனிகாமின் சந்ததியர்       666                         667

பிக்வாயின் சந்ததியர்               2056                       2067

ஆதினின் சந்ததியர்                    454                        665

பேத்சாயின் சந்ததியர்                323                      324

காசூமின் சந்ததியர்                      223                     328

செனாவின் சந்ததியர்               3630                   3930

இரண்டு ஆகமங்களும் இப்படி பல முரண்பாடுகள் கொண்ட பட்டியலைக் கூறுகின்றன. கர்த்தருடன் கடுகளவும் சம்பந்தப்படாத – கேள்விப்பட்டவைகளை எழுதிவிடக் கூடிய – மிகவும் சாதாரண மக்களால் எழுதப்பட்டிருந்தால் மட்டுமே இவ்வளவு முரண்பாடு இருக்க முடியும். இறைவேதமாக நம்புவது ஒரு புறமிருக்கட்டும். நம்பத் தகுந்த வரலாற்று ஆசிரியர்களால் எழுதப்பட்டதாகக் கூட நம்ப முடியாத அளவுக்கு முரண்பாடுகள்.

iஎ) ஆகாஸ் ராஜாவான போது அவனுக்கு வயது இருபது. அவன் எருசலேமில் பதினாரு வருஷம் அரசாண்டான்.

இரண்டாம் ராஜாக்கள் 16:2

ஆகாஸ் நித்திரையடைந்து தன் பிதாக்களோடு சேரவே தாவீதின் நகரத்தில் தன் பிதாக்களண்டையில் அடக்கம் பண்ணப்பட்டான். அவன் குமாரன் எசேக்கியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்

இரண்டாம் ராஜாக்கள் 16:20

இந்த இரண்டு வசனங்களும் கூறுவதைக் கவனமாகப் படியுங்கள்! ஆகாஸ் என்பவன் மரணித்தவுடன் அவனது மகன் எசேக்கியா ராஜாவானதாகவும், ஆகாஸ் என்பவன் இருபது வயதில் ராஜாவாகி பதினாறு ஆண்டுகள் ஆட்சி புரிந்ததாகவும் கூறுகின்றன. அதாவது தன் முப்பத்தாறாம் வயதில் (20+16) ஆகாஸ் மரணித்திருக்கிறான். அவன் மரணித்தவுடன் அவனது மகன் எசேக்கியா ராஜாவாயிருக்கிறான்.

இந்த விபரங்களைப் பதிய வைத்துக் கொண்டு பின்வரும் வசனத்தைப் படியுங்கள்!

ஆகாஸ் எனும் யூதா ராஜாவின் குமாரன் எசக்கியா ராஜாவானான். அவன் ராஜாவான போது அவனுக்கு இருபத்தி ஐந்து வயது.

இரண்டாம் ராஜாக்கள் 18:2

முப்பத்தி ஆறு வயதில் மரணித்த ஒருவனுக்கு அவன் மரணித்த சமயத்தில் இருபத்தி ஐந்து வயதில் மகன் இருப்பது எப்படிச் சாத்தியமாகும்?

முப்பத்தி ஆறு வயதில் மரணித்தவனுக்கு இருபத்தி ஐந்து வயதில் மகன் இருக்க வேண்டுமென்றால் அவன் தன் பதினொன்றாம் வயதில் தந்தையாகியிருக்க வேண்டும். 11 வயதில் தந்தையாக இருக்க வேண்டும் என்றால் 10 வயதில் அவன் இல்லற வாழ்வைத் துவக்க வேண்டும். பத்து வயதில் எந்த ஆணும் குழந்தை பெரும் பருவத்தை அடைவதில்லை.

ஒன்று அவன் 36 வயதில் மரணமடைந்த செய்தி பொய்யாக இருக்க வேண்டும். அல்லது அவன் மகன் இருபத்தி ஐந்து வயது உடையவனாக இருந்தது பொய்யாக இருக்க வேண்டும். இரண்டில் எது பொய் என்றாலும் பைபிளில் பொய் இடம் பெற்றுள்ளது என்பது உறுதியாகின்றது.

வயது பற்றிக் குறிப்பிடும் போது தவறுதலாக அச்சாகி இருக்கக் கூடும் என்று சமாளிக்க முடியாது. ஏனெனில் மற்றொரு ஆகமத்திலும் இந்த விபரம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆகாஸ் 36 வயதில் மரணமடைந்த செய்தி இரண்டாம் நாளாகமம் 28:1 இலும் அவரது மகன் 25 வயதில் ராஜாவான செய்தி இரண்டாம் நாளாகமம் 29:1இலும் கூட இடம் பெற்றுள்ளது.

வெவ்வேறு தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்டதாக நம்பப்படும் இரண்டு ஆகமங்களிலும் ஒரே மாதிரியான தவறுகள் ஏற்பட்டிருப்பதால் எந்தச் சமாதானமும் கூற வழியில்லை. சாதாரண மனிதர்களால் எழுதப்பட்டிருந்தால் மட்டுமே இது போன்ற தவறுகள் ஏற்பட முடியும்.

எ) சாலொமோன் ராஜாவிடம் இருந்த படை பலம் பற்றி முதலாம் ராஜாக்கள், இரண்டாம் நாளாகமம் ஆகிய இரண்டு ஆகமங்களும் கூறுகின்றன.

சாலொமோனுக்கு நாலாயிரம் குதிரை லாயங்களும், ரதங்களும் இருந்தன. பன்னீராயிரம் குதிரை வீரரும் இருந்தார்கள்.

இரண்டாம் நாளாகமம் 9:25

இரதக் குதிரைகளுக்குரிய லாயங்கள் சாலொமோனுக்கு நாற்பதினாயிரம் இருந்தன. பன்னீராயிரம் குதிரை வீரரும் இருந்தார்கள்.

முதலாம் ராஜாக்கள் 4:26

சாலொமோனுக்கு இருந்த ரதக் குதிரை லாயங்கள் நாலாயிரமா? நாற்பதினாயிரமா?

எi) தாவீது ராஜாவிடம் இருந்த பராக்கிரமசாலிகளைப் பற்றியும் அவர்களது பராக்கிரமம் பற்றியும் பைபிளின் இரண்டாம் சாமுவேல், முதலாம் நாளாகமம் ஆகிய இரண்டு ஆகமங்களும் குறிப்பிடுகின்றன. இறை வேதத்துக்குத் தகாத முரண்பாடுகள் இவ்விரு ஆகமங்களிலும் காணப்படுகின்றன.

தாவீதிடமிருந்த பராக்கிரம வீரர் இவர்களே! தக்கிமோனியனான யோஷேப் பஷேபத் மூவரில் மேலானாவன். இவன் எண்ணூறு பேரை ஒருமிக்க வெட்டி அவர்கள் மேல் வெற்றிக் குறியாக ஈட்டியை ஆட்டினவன்…

இரண்டாம் சாமுவேல் 23:8

தாவீதுக்கு இருந்த அந்த பராக்கிரம வீரரின் இலக்கமாவது; தக்மோனியின் குமாரன் யாஷொபியாம். இவன் முப்பது வீரருக்குத் தலைவன். இவன் முன்னூறு பேரை ஒருமிக்க வெட்டி அவர்கள் மேல் வெற்றிக் குறியாகத் தன் ஈட்டியை ஆட்டினவன்…

முதலாம் நாளாகமம் 11:11

அவன் தன் ஈட்டியை ஆட்டியது எண்ணூறு நபர்கள் மீதா? முன்னூறு நபர்கள் மீதா? இரண்டில் கர்த்தர் சொன்னது எது? கர்த்தரின் பெயரால் உண்டு பண்ணிச் சொன்னது எது?

எii) தாவீது எனும் தீர்க்கதரிசி தனது சேனாதிபதியிடம் இஸ்ரவேல் மக்களின் தொகையைக் கணக்கிடுமாறு கட்டளையிட்ட ஒரு செய்தியை இரண்டாம் சாமுவேல் என்ற ஆகமமும், முதலாம் தினவர்த்தமானம் (அல்லது முதலாம் நாளாகமம்) என்ற ஆகமமும் குறிப்பிடுகின்றன.

அவரது கட்டளைப்படியே அவரது சேனாதிபதி யோவாப் என்பவர், தாண் என்ற ஊர் முதல் பெயேர்ஷெபா என்ற ஊர் வரையிலுள்ள அத்தனை ஊர்களிலும் சுற்றித் திரிந்து மக்கள் தொகையைக் கணக்கெடுத்து தாவீதிடம் ஒப்படைக்கிறார். இந்தச் செய்தியை மேற்கண்ட இரண்டு ஆகமங்களும் கூறுகின்றன.

இரண்டாம் சாமுவேல் கூறுவதைப் பாருங்கள்:-

யோவாப் ஜனத்தை இலக்கம் பார்த்த தொகையை ராஜாவினிடம் கொடுத்தான். இஸ்ரவேலிலே பட்டயம் எடுக்கத்தக்க யுத்த வீரர் எட்டு லட்சம் பேர் இருந்தார்கள். யூதாவிலே ஐந்து லட்சம் பேர் இருந்தார்கள்.

இரண்டாம் சாமுவேல் 24:9

இதே சம்பவத்தை முதலாம் நாளாகமம் பின்வருமாறு கூறுகிறது.

ஜனத்தை இலக்கம் பார்த்த தொகையை யோவாப் தாவீதினிடம் கொடுத்தான். இஸ்ரவேலிலெல்லாம் பட்டயம் எடுக்கத் தக்க வீரர் பதினொரு லட்சம் பேரும் யூதாவில் பட்டயம் எடுக்கத்தக்க வீரர் நாலு இலட்சத்து எழுபதினாயிரம் பேரும் இருந்தார்கள்.

முதலாம் நாளாகமம் 21:5

மக்கள் தொகை குறைவாக இருந்த அந்தக் காலத்தில் அந்தச் சின்னஞ்சிறு பிரதேசத்தில் பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள், பட்டயம் எடுக்கத் தெரியாதவர்கள், ஊனமுற்றவர்கள், பொது மக்கள் நீங்கலாக இவ்வளவு போர் வீரர்கள் வாழ்ந்திருக்க முடியுமா? என்ற சந்தேகத்தை விட்டு விடுவோம்.

பைபிளை இறை வேதம் என்று நம்பும் மக்களிடம் நாம் கேட்பது இது தான்! எட்டு லட்சமா? பதினொரு லட்சமா? நாலு லட்சத்தி எழுபதினாயிரமா?

யோவோப் கணக்கெடுத்து வழங்கிய பட்டியலைப் பற்றி பேசும் இரண்டு ஆகமங்களுமே இறைவனால் வழங்கப்பட்ட வேதம் என்றால் ஏனிந்த முரண்பாடு? முரண்பட்ட இரண்டு தகவல்களும் உண்மையாக இருக்க முடியாது என்று ஒப்புக் கொள்ளப்பட்ட விதியினடிப்படையில் இவ்விரண்டில் எது உண்மை?

இரண்டில் எதை உண்மை என்று ஏற்றாலும் பொய்யும் பைபிளில் உள்ளதையும் சேர்த்தே ஒப்புக் கொண்டாக வேண்டும்.

இரண்டும் வெவ்வேறு நிகழ்ச்சிகளாக இருக்குமோ? வெவ்வேறு காலகட்டத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பாக இருக்குமோ என்றெல்லாம் எவரும் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை.

இரண்டுமே ஒரே காலத்தில் நடந்த ஒரே நிகழ்ச்சி தான். அந்த அதிகாரங்களை முழுமையாகப் பார்வையிட்டு எவரும் உறுதி செய்து கொள்ளலாம்.

யுழ) வாட்டும் பஞ்சம்

மேற்கண்ட இரண்டு ஆகமங்களிலும் உள்ள மற்றொரு முரண்பாட்டைக் கேளுங்கள்!

தாவீதின் காலத்தில்  காத் என்ற ஞானதிருஷ்டிக்காரன் ஒருவன் இருந்ததாக பைபிள் கூறுகிறது. இஸ்ரவேலர்களின் அக்கிரமங்கள் எல்லை மீறிய போது மூன்று விதமான தண்டனைகளில் ஒன்றைத் தேர்வு செய்யுமாறு கர்த்தர், காத் எனும் ஞானதிருஷ்டிக்காரன் மூலமாக தாவீதுக்குச் சொல்லியனுப்புகிறார். இந்தச் செய்தியை மேற்கண்ட இரண்டு ஆகமங்களும் முரண்பட்டுக் கூறுவதைக் கேளுங்கள்!

தாவீதின் ஞானதிருஷ்டிக்காரனாகிய காத் எனும் தீர்க்கதரிசிக்கு கர்த்தருடைய வார்த்தை வந்தது. நீ தாவீதிடம் போய் மூன்று காரியங்களை உனக்கு முன்வைக்கின்றேன். அவற்றில் ஒன்றைத் தெரிந்து கொள். அதை நான் உனக்குச் செய்வேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார். அப்படியே  காத் தாவீதிடம் வந்து இதை அவனுக்குத் தெரிவித்து உமது தேசத்திலே ஏழு வருஷம் பஞ்சம் வர வேண்டுமா? மூன்று மாதம் உமது சத்ருக்கள் உம்மைப் பிடிக்கத் தொடர நீ அவர்களுக்கு முன்பாக ஓடிப் போக வேண்டுமா? அல்லது உமது தேசத்திலே மூன்று நாள் கொள்ளை நோய் உண்டாக வேண்டுமா?

இரண்டாம் சாமுவேல் 24:11,12,13

அப்படியே காத் தாவீதினிடம் வந்து  கர்த்தர் உரைப்பதைக் கேள்! மூன்று வருஷத்துக்குப் பஞ்சம் வர வேண்டுமா? உன் பகைவரின் பட்டயம் உன்னைத் தொடரவே உன் சத்ருக்களால் மூன்று மாதச் சங்காரம் வேண்டுமா?…

முதலாம் நாளாகமம் 21:11,12

 ஏழு வருஷத்துப் பஞ்சமா? மூன்று வருஷப் பஞ்சமா? கர்த்தரின் வார்த்தையில் தடுமாற்றம் வரலாமா? இரண்டு தகவல்களில் எது உண்மை? எது உண்மை என்று வைத்துக் கொண்டாலும் உண்மையல்லாத மற்றொரு செய்தி இறை வேதத்தில் இடம்பெறலாமா?

யு) எட்டு வயது ராஜாவுக்குப் பதினெட்டு வயது

யோயாக்கீன் என்பவனைப் பற்றிய வரலாற்றை இரண்டாம் ராஜாக்கள் என்ற ஆகமமும், இரண்டாம் நாளாகமம் என்ற ஆகமமும் குறிப்பிடுகின்றன. அதிலுள்ள முரணைப் பாருங்கள்.

யோயாக்கீன் ராஜாவான போது அவனுக்குப் பதினெட்டு வயது. அவன் எருசலேமில் மூன்று மாதம் அரசண்டான்.

இரண்டாம் ராஜாக்கள் 24:80

யோயாக்கீன் ராஜாவான போது அவனுக்கு எட்டு வயது அவன் மூன்று மாதமும் பத்து நாளும் அரசாண்டு…

இரண்டாம் நாளாகமம் 36:9

இங்குள்ள முரண்பாடுகளைக் கவனிப்பதற்கு முன்னால் முக்கியமான ஒரு விஷயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

யோயாக்கீம் என்பவரின் மகன் யோயாக்கீன். ஒரு எழுத்து தான் வித்தியாசம். மேலே நாம் சுட்டிக் காட்டிய இரண்டாம் ராஜாக்கள் 24:8 வசனத்தில் யோயாக்கீன் என்றே ஆங்கில பைபிள்களிலும் கத்தோலிக்க பைபிளிலும் குறிப்பிடப்படுகின்றது.

ஆயினும் வேதாகமச் சங்கம் 1982ல் வெளியிட்ட பைபிளில் மேற்கண்ட வசனத்தில் யோயாக்கீம் என்று தந்தையின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளது. இதனால் மேற்கண்ட வசனங்களில் கூறப்படும் நபர் வெவ்வேறு நபர்கள்; ஒரு நபரல்ல என்று எவரும் வாதிடக்கூடும்.

முன் பின் வசனங்களை வைத்துப் பார்க்கும் போது இரண்டு வசனங்களிலுமே யோயாக்கீன் என்பதே சரியானது என்று விளங்கலாம். இவர் வேறு அவர் வேறு என்று எவரேனும் வாதிட்டால் இரண்டாம் நாளாகமத்தில் 36:5ல் யோயாக்கீம் ராஜாவான போது அவனுக்கு இருபத்தி ஐந்து வயது எனக் கூறப்படுவதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள்?

நாம் கேட்க விரும்புவது யோயாக்கீன் இராஜாவான போது அவனுக்கு பதினெட்டு வயதா? வெறும் எட்டு வயதா? அவன் ஆட்சி செய்தது மூன்று மாதங்களும் பத்து நாட்களுமா? மூன்று மாதங்கள் மட்டுமா? இரண்டில் எது உண்மை?

யுங) தடுமாறும் ஜோடிகள்

நோவாவும், அவரது குடும்பத்தினரும் பிரளயத்திலிருந்து காப்பாற்றப்பட்ட சம்பவத்தை ஆதியாகமம் கூறுகிறது. அந்த ஒரு ஆகமத்திலேயே முரண்பாடு இருப்பதைக் காணமுடிகின்றது.

மாம்சமான சகலவித ஜீவ ஜந்துக்களிலும் ஆணும் பெண்ணுமாக வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடு உன்னுடன் உயிரோடு காக்கப்படுவதற்கு பேழைக்குள் சேர்த்துக் கொள்! ஜாதி ஜாதியான பறவைகளிலும், ஜாதி ஜாதியான மிருகங்களிலும், பூமியிலுள்ள சகல ஜாதி ஜாதியான ஊரும் பிராணிகளிலும், வகை ஒன்றுக்கு வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடு காக்கப்படுவதற்கு உன்னிடம் வரக்கடவது…

ஆதியாகமம் 6:19,20

பூமியின் மீதெங்குமுள்ள வர்க்கங்களை உயிரோடு காக்கும் பொருட்டு நீ சுத்தமான சகல மிருகங்களிலும் ஆணும் பெண்ணுமாக ஒவ்வொரு ஜோடும் ஆகயத்துப் பறவைகளிலும் சேவலும் பேடுமாக எவ்வேழு ஜோடும் உன்னிடத்தில் சேர்த்துக்கொள்!

ஆதியாகமம் 7:2,3

 நோவா தன்னுடைய கப்பலில் ஏற்றிச் சென்றது ஒவ்வொரு ஜோடியா? ஏழு ஏழு ஜோடியா? இரண்டில் எது உண்மை?

யுச) அதிசயமாய் தோன்றிய சந்ததி

இவற்றையெல்லாம் விழுங்கி ஏப்பம் விடக்கூடிய மற்றொரு முரண்பாட்டைப் பாருங்கள்!

கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவர்கள் மிதியானிகளுடன் போர் செய்து சகல ஆண்களையும், கொன்று போட்டார்கள். அவர்களைக் கொன்று போட்டதுமின்றி, மிதியானிகளின் ஐந்து ராஜாக்களாகிய ஏவி, ரேக்கெம், சூர், குர், ரேபா என்பவர்களையும் கொன்று போட்டார்கள். பெயோரின் குமாரனாகிய பிலேயாமையும் கொன்று போட்டார்கள். அன்றியும் இஸ்ரவேலர் மிதியானிகளின் ஸ்திரீகளையும், குழந்தைகளையும் சிறைப்பிடித்து அவர்கள் ஆடு, மாடுகள் யாவையும் சகல பொருட்களையும் கொள்ளையிட்டு அவர்கள் குடியிருந்த சகல ஊர்களையும், அவர்கள் பாளையங்கள் அனைத்தையும் அக்கினியால் சுட்டெரித்துத் தாங்கள் கொள்ளையிட்ட பொருளையும் தாங்கள் பிடித்த ஆட்கள், மிருகங்கள் அனைத்தையும் சேர்த்துச் சிறைப் பிடித்தவர்களையும் தாங்கள் பிடித்தவைகளையும் கொள்ளையிட்டவைகளையும் எரிகோவுக்கு எதிரே யோர்தானுக்கு அக்கரையில் மோவோபின் சமவெளிகளில் பாளையத்திலிருந்த மோசேயினிடத்துக்கும் ஆசாரியனாகிய எலியாசாரியினடத்துக்கும் இஸ்ரவேல் சபையாரிடத்துக்கும் கொண்டு வந்தார்கள். மோசேயும் ஆசாரியனாகிய எலியாசாரும் சபையின் பிரபுகள் எல்லோரும் அவர்களைச் சந்திக்கப் பாளையத்திற்கு வெளியே எதிர்கொண்டு வந்தார்கள். அப்பொழுது மோசே யுத்தத்திலிருந்து வந்த ஆயிரத்துக்குத் தலைவரும் நூற்றுக்குத் தலைவருமாகிய சேனாதிபதிகள் மேல் கடுங்கோபம் கொண்டு அவர்களிடம் பெண்கள் எல்லோரையும் உயிரோடு விட்டு விட்டீர்களா? பெயோரின் சந்ததியில் பிலெயாமின் ஆலோசனையினால் இஸ்ரவேலர் கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம் பண்ணக் காரணமாயிருந்தவர்கள் இவர்கள் தானே? அதனால் கர்த்தரின் சபையில் வாதையும் நேரிட்டதே. ஆகையால் குழந்தைகளில் எல்லா ஆண்பிள்ளைகளையும், புருஷ சம்போகத்தை அறிந்த எல்லா ஸ்திரீகளையும் கொன்று போடுங்கள்! ஸ்திரீகளில் புருஷ சம்போகத்தை அறியாத எல்லாப் பெண் குழந்தைகளையும் உங்களுக்காக உயிரோடு வையுங்கள்!… என்று சொன்னார்.

எண்ணாகமம் 31:7-18

மோசே எனும் தீர்க்கதரிசி பச்சிளங்குழந்தைகளையும் பெண்களையும் கூடக் கொல்லுமாறு கூறியிருப்பாரா? அதுவும் கடவுளின் பெயரால் இதைக் கூறியிருப்பாரா? என்பதை நாம் இங்கே ஆட்சேபிக்கப் போவதில்லை.

சிவிலியன்கள் மீது குண்டு மழை பொழியும் கொடிய ஃபாஸிஸ்டுகளான அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் இது முன் மாதிரியாக இருந்து விட்டுப் போகட்டும்! முரண்பாட்டைச் சுட்டிக் காட்டவே இதை இங்கே குறிப்பிடுகிறோம்.

இஸ்ரவேலர்கள் மிதியானியர் என்ற இனத்தவரின் அனைத்து ஆண்களையும் ஆண் குழந்தைகள் அனைவரையும் கொன்று போட்டார்கள். அது மட்டுமின்றிப் புருஷ – சம்போகத்தை அறிந்த – (அந்தக் காலத்தில் இதை எப்படிக் கண்டுபிடித்தார்களோ-) அனைத்துப் பெண்களையும் கூட கொன்று விட்டனர். இதனால் கருவில் ஆண் குழந்தை இருந்து அது பிறகு பிறப்பதற்கும் இடமேயில்லை.

சுருங்கச் சொல்வது என்றால் மிதியானியர் என்ற இனமே பூண்டோடு ஒழிந்தது. அந்த இனத்தில் ஒரு மனிதன் கூடத் தோன்ற இனி வழியே இல்லை. இந்த விபரங்களை மேலே கண்ட வசனங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி தெரிவிக்கின்றன. இதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு பின்வரும் வசனங்களைக் கவனியுங்கள்!

பின்னும் இஸ்ரவேலர் கர்த்தரின் பார்வைக்குத் தீமையானதைச் செய்யவே கர்த்தர் அவர்களை ஏழு வருடம் மிதியானியர் கையில் ஒப்புக் கொடுத்தார்.

நியாயாதிபதிகள் 6:1

இஸ்ரவேலிலே ஆகாரத்தையாகிலும், ஆடு, மாடு, கழுதைகளையாகிலும் விட்டு வைப்பதில்லை. அவர்கள் தங்கள் மிருகங்களோடும், தங்கள் கூடாரங்களோடும் வெட்டுக் கிளிகளைப் போல் திரளாய் வருவார்கள். அவர்களும் அவர்களின் ஒட்டகங்களும் எண்ணி முடியாததாயிருக்கும்.

நியாயாதிபதிகள் 6:5

ஆண் வர்க்கமே அடியோடு அழிந்துவிட்ட ஒரு சமுதாயம் திரும்பவும் எப்படி உருவாக முடியும்? எண்ண முடியாத அளவுக்கு அவர்கள் எப்படிப் பெருக முடியும்? கர்த்தர் வானிலிருந்து மிதியானியர் எனும் இனத்தவரை இறக்கினாரா? அல்லது கொல்லப்பட்டவர்களுக்குத் திரும்பவும் உயிர் கொடுத்தாரா? கடுகளவு அறிவிருந்தால் கூட இதை நம்ப முடியாதே!

ஆண்கள் இல்லாவிட்டால் பல்லாயிரம் ஆண்டுகள் ஆனாலும் ஒரு சமுதாயம் திரும்பவும் உருவாக முடியாது. இங்கே இருநூறு ஆண்டுகளில் இந்த விந்தை நடந்துள்ளது.

மோசேவுக்குப் பின் யோசுவா, யூதா, ஒத்னியேல், ஏகூத் ஆகிய நான்கு தீர்க்கதரிசிகளே வந்துள்ளனர். இந்தக் காலகட்டம் ஏறத்தாழ 200 ஆண்டுகளே. இந்த 200 ஆண்டுகளுக்குள் அவர்கள் எண்ண முடியாத அளவுக்கு வளர்வது என்றால் விந்து வங்கியும், செயற்கை முறைக் கருவூட்டலும் அன்றைக்கு இருந்தது என்று கிறித்தவ உலகம் சொல்லப் போகின்றதா?

யுள) செத்துவிட்ட மலடி பெற்றுவிட்ட பிள்ளைகள்

யாரேனும் செத்த பின்பு பிள்ளை பெற முடியுமா? முடியும் என்று பைபிள் கூறுகின்றது. மீகாள் என்பவள் மரணமடையும் வரை பிள்ளை பெறாமல் இருந்துவிட்டு மரணித்த பின் ஐந்து பிள்ளைகளைப் பெற்றிருக்கிறாள். இதோ பைபிள் கூறுவதைக் கேளுங்கள்!

சவுலின் குமாரத்தியாகிய மீகாளுக்கு மரணமடையும் நாள் மட்டும் பிள்ளை இல்லாதிருந்தது.

இரண்டாம் சாமுவேல் 6:23

சவுலின் குமாரத்தியாகிய மீகாள் மேகோலாத்தியனான பர்சில்லாயின் குமாரன் ஆதரியேலுக்குப் பெற்ற ஐந்து குமாரரையும் பிடித்து…

இரண்டாம் சாமுவேல் 21:8

ஒரு ஆகமத்துக்குள்ளேயே இவ்வளவு பெரிய குழப்பம். கிறித்தவ நண்பர்களே! இதன் பிறகும் பைபிளை இறைவேதம் என்று நம்ப முடியுமா?

யுவ) இரு தாய் பெற்ற ஒரே பிள்ளை

 …அபீயா யூதாவின் மேல் ராஜாவாகிய மூன்று வருஷம் எருசலேமில் அரசாண்டான். அவனுடைய தாயின் பெயர் மிகாயாள். அவள் கிபியா ஊரானாகிய ஊரியேலின் குமாரத்தி.

இரண்டாம் நாளாகமம் 13:1,2

இந்த பைபிள் வசனம் அபீயா என்பவனின் தாயார் யார் எனக் கூறுகின்றது. ஊரியேலின் மகள் மிகாயாள் என்பதே அவனுடைய தாயாரின் பெயர் என்று மேற்கண்ட வசனம் கூறுகின்றது.

இதே ஆகமத்தில் வேறொரு இடத்தில் அவனது தாய்க்கு வெறு பெயர் கூறப்படுகின்றது.

(ரெகோபெயாம்) அவளுக்குப் பிறகு, அப்சலோமின் குமாரத்தியாகிய மாகாளை விவாகம் பண்ணினான். அவள் அவனுக்கு அபீயா, அத்தாயி, சிசா, ஷொலாமீத் என்பவர்களைப் பெற்றாள்.

இரண்டாம் நாளாகமம் 11:19

 இந்த வசனம் அபீயா என்பவன் மாகாள் என்பளின் குமாரன் என்று கூறுகின்றது. அபீயா என்பவன் மாகாளின் மகனா? மிகாயாளின் மகனா? இரண்டும் ஒரு பெண்ணுக்குரிய இரண்டு பெயர்கள் என்றெல்லாம் சமாளிக்க முடியாது. ஏனெனில் மாகாளின் தந்தை அப்சலோம் என்றும், மிகாயளின் தந்தை ஊரியல் என்றும் மேற்கண்ட வசனங்கள் கூறுகின்றன. இரண்டு தந்தையர்களுக்குப் பிறந்தவர்கள் ஒருவராக இருக்க முடியாது. ஒருவனுக்கு இரண்டு  தாய்கள் இருக்கும் அதிசயத்தைப் பைபிளில் தான் காண முடியும்.

மேற்கண்ட 11:19 வசனம் இன்னொரு வசனத்துடனும் முரண்படுகின்றது. அதாவது மாகாள் என்பவள் அப்சலோம் என்பவனின் மகள் என இவ்வசனம் கூறுகின்றது.

அப்சலோமுக்கு மூன்று குமாரரும் தாமார் என்று பெயர் கொண்ட ஒரு குமாரத்தியும் பிறந்தார்கள்.

இரண்டாம் சமுவேல் 14:27

அப்சலோம் என்பவனுக்குத் தாமார் என்று ஒரு மகள் மட்டும் இருந்தததாக இவ்வசனம் கூறும் போது, முந்தைய வசனம் மாகாள் என்ற திடீர் மகளை அறிமுகம் செய்கிறது.

முரண்பாடுகளின் மொத்த உருவமே பைபிள் தான் என்று முடிவு செய்யுமளவுக்கு மலிந்து கிடக்கும் முரண்பாடுகளையும் கண்டோம்.

இதுதான் பைபிள்

காலத்திற்குக் காலம், நாட்டுக்கு நாடு பைபிளில் சேர்த்தல்களும், நீக்கல்களும் நிகழந்து கொண்டேயிருக்கின்றன என்பதற்கு நமது நாட்டிலேயே ஒரு சான்றை உங்களுக்குக் காட்டுகிறோம்.

இதற்குப் பிறகு நிச்சயமாக, பைபிள் இறைவேதமன்று; மனிதக் கரங்களால் மாசுபடுத்தப்பட்டது என்ற முடிவுக்கு நீங்கள் வந்தே தீர்வீர்கள். இதோ அச்சான்று.

1993ஆம் ஆண்டு நவம்பர் மாதக் கடைசியில் மதுரையில் நடந்த கிறித்தவ சமூக மாத இதழ் வெளியீட்டு விழாவில் மதுரை மறை மாநிலப் பேராயர் ஆரோக்கிய சாமி பேசும் போது,  தமழிகத்திலுள்ள பல்வேறு கிறித்தவப் பிரிவினரின் ஆயர்கள் ஒன்று கூடி ஒரே பைபிளை வடிவமைக்க முடிவு செய்தனர். இக்கூட்டத்தில் அனைத்து ஆயர்களும் ஏற்றுக் கொண்ட புதிய பைபிள் உருவாக்கப்பட்டது.

இந்த பைபிளில் புதிய அதிகாரங்கள் மற்றும் சில பகுதிகள் சேர்க்கப்பட்டு அனைத்துப் பிரிவினரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் வரி வடிவம் பெற்றுள்ளது என்று குறிப்பிட்டார். (தினகரன்–மதுரை 1-12-93)

இதன் பிறகும் பைபிளை இறை வேதமென்று கிறித்தவர்கள் நம்ப மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் இந்நூலை நிறைவு செய்கிறோம்.

கிறித்தவ நண்பர்களே!

நாங்கள் இதுவரை எடுத்துக் காட்டிய ஆதாரங்களையும், அதனடிப்படையில் நாங்கள் எடுத்து வைத்த வாதங்களையும் நடுநிலையுடன் சிந்தித்தால் பைபிள் இறை வேதமாக இருக்க முடியாது என்ற முடிவுக்குத் தான் நீங்கள் வருவீர்கள்!

இந்த முடிவுக்கு நீங்கள் வந்து விட்டால் இனி எதை நம்புவது? எந்த வழியில் செல்வது? என்று திகைக்க வேண்டாம்!

பதினான்கு நூற்றாண்டுகளாக மாற்றமோ, திருத்தமோ, கூட்டலோ, குறைத்தலோ செய்யப்படாமல் உலகெங்கும் ஒரே விதமாக அமைந்திருக்கும் ஒரே வேதம் திருக்குர்ஆன் உள்ளது.

பைபிளில் இருப்பது போன்ற நகைப்பிற்கிடமான சட்டதிட்டங்கள் ஏதும் திருக்குர்ஆனில் கிடையாது; ஆபாசம் கிடையாது; முரண்பாடு கிடையாது; ஒழுக்கக் கேடுகளை ஆதரிக்கும் போக்குக் கிடையாது!

திருக்குர்ஆன் மனித வாழ்க்கையின் அனைத்துத் துறைக்கும் சரியான வழி காட்டுகிறது! அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சரியான தீர்வைத் தருகிறது!

இயேசு உள்ளிட்ட எல்லாத் தீர்க்கதரிசிகளையும் புகழ்ந்து போற்றுகிறது. அவர்களது சேவைகளையும், தியாகங்களையும் மதிக்கிறது.

தீர்க்கதரிசிகள் மது அருந்தியதாக, விபச்சாரம் செய்ததாகச் சுமத்தப்பட்ட களங்கங்களையெல்லாம் திருக்குர்ஆனே துடைத்தெரிந்தது.

அருமைக் கிறித்தவ நண்பர்களே! ஒரு முறையாவது திருக்குர்ஆனைக் கருத்தூன்றிப் படியுங்கள்! உங்கள் வாழ்க்கையில் மகத்தான மாற்றத்தை அது ஏற்படுத்துவதை அறிந்து கொள்வீர்கள்! அதன் மூலம் இஸ்லாத்தின் பால் உங்கள் பார்வைகளைத் திருப்புவீர்கள்! எங்கள் எதிர்பார்ப்பு வீணாகாது என்று நம்புகிறோம். இறைவன் உங்களுக்கும், எங்களுக்கும் நேர்வழி காட்ட பிரார்த்தனை செய்கிறோம்.

21.03.2010. 4:10 AM

நூலின் பெயர் : சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும்

ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன்

அறிமுகம்

திருக்குர்ஆனையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலையும் அடிப்படையாகக் கொண்டே முஸ்லிம்கள் தமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.

இக்கொள்கையைப் புரிந்து கொண்ட மக்களுக்கு சில குழப்பங்கள் உள்ளன.

திருக்குர்ஆனை முழுமையாக நாம் ஏற்றுச் செயல்படுகிறோம். திருக்குர்ஆனில் ஏற்கத்தக்கவை, ஏற்கத்தகாதவை என்று இரு வகைகள் இல்லை. அனைத்துமே ஏற்கத்தக்கவை தான்.

ஆனால் ஹதீஸ்களைப் பொருத்தவரை இட்டுக்கட்டப்பட்டவை என்றும் பலவீனமானவை என்றும் உள்ளன. அவற்றை ஆதாரமாகக் கொள்ளக் கூடாது. ஆதாரப்பூர்வமானவைகளை மட்டுமே ஏற்க வேண்டும்.

இதில் தான் அவர்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது.

ஹதீஸ் என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்பான செய்திகள் தானே? அவை அனைத்தையும் ஆதாரமாக ஏற்க வேண்டியதுதானே? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்பான செய்திகளில் சிலவற்றை ஏற்று சிலவற்றை மறுப்பது நபியை மறுப்பதாக ஆகாதா?

என்ற சந்தேகம் பலரிடம் உள்ளது.

நபிகள் நாயகம் சொன்னவை, செய்தவை, அங்கீகாரம் செய்தவை அனைத்துமே ஏற்கத்தக்கதாக இருக்கும் போது அவர்கள் சம்மந்தப்பட்ட சில செய்திகளை ஏற்கத்தகாதவை என்று கூறுவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அவமதித்த குற்றமாகாதா? என்று கேள்வி எழுப்புகின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியவை, செய்தவை, அங்கீகரித்தவை அனைத்துமே ஏற்கத்தக்கவை என்பதில் யாருக்கும் இரண்டாவது கருத்து இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்களா? என்பதில் ஏற்படும் சந்தேகம் காரணமாகவே சில ஹதீஸ்கள் மறுக்கப்படுகின்றன என்பதை விளக்கவே இந்நூல்.

அறிவிப்பாளர் சரியில்லை என்று நாம் காரணம் கூறி ஒரு ஹதீஸை நிராகரிக்கும் போது அறிவிப்பாளர்கள் நபித்தோழர்கள் தானே? நபித்தோழர்கள் அனைவரும் நம்பகமானவர்களாக இருக்கும் போது அறிவிப்பாளரை ஏன் குறை சொல்ல வேண்டும் என்றும் சிலர் நினைக்கின்றனர்.

நாம் நபித்தோழர்களைக் காரணம் காட்டி எந்த ஹதீஸையும் மறுப்பதில்லை. நபித்தோழர்கள் அல்லாத அறிவிப்பாளர்களை மட்டுமே காரணம் காட்டுகிறோம் என்ற உண்மை இந்நூலில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

சரியான ஹதீஸ்களையும், தவறான ஹதீஸ்களையும் எவ்வாறு கண்டறிவது என்று ஆசைப்படுவோருக்கு முழுமையான விளக்கம் இன்ஷா அல்லாஹ் இந்நூலில் கிடைக்கும்.

பி.ஜைனுல் ஆபிதீன்

சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும்

திருக்குர்ஆனுக்கும் ஹதீஸ்களுக்கும் வேறுபாடு என்ன?

திருக்குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தைகளாக இருப்பது போல் திருக்குர்ஆனுக்கு விளக்கமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னவையும், செய்தவையும் அல்லாஹ்வால் அருளப்பட்டவை தான். ஏனெனில் மார்க்க விஷயத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொந்தக் கருத்து எதையும் கூற மாட்டார்கள். அல்லாஹ்வின் புறத்திலிருந்து அறிவிக்கப்படுவதை மட்டுமே அவர்கள் மார்க்கம் என்று காட்டித்தருவார்கள். எனவே திருக்குர்ஆனும் இறைச் செய்தி தான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கமும் இறைச்செய்தி தான். இரண்டையும் முழுமையாகப் பின்பற்றுவது முஸ்லிம்களின் கடமையாகும்.

உங்கள் தோழர் (முஹம்மத்) பாதை மாறவில்லை. வழிகெடவுமில்லை. அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை.

திருக்குர்ஆன் 53:2,3

அப்படியானால் ஹதீஸ்களில் மட்டும் சரியானவை, தவறானவை என்று எப்படிச் சொல்லப்படுகிறது?

இதற்கான விளக்கம் இதுதான்:

ஒரு ஹதீஸ் தவறானது என்று சொல்லப்பட்டால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தவறாகச் சொல்லி விட்டார்கள் என்பது அதன் பொருளல்ல. அப்படி ஒருவர் சொன்னால் அவர் முஸ்லிமாக இருக்க முடியாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்களா? இல்லையா என்ற சந்தேகம் காரணமாகவே சில ஹதீஸ்கள் தவறானவை என்று சொல்லப்படுகின்றன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் நாம் வாழ்வதாக வைத்துக் கொள்வோம். அவர்கள் நம்மிடம் ஒரு திருக்குர்ஆன் வசனத்தை ஒதிக்காட்டினால் அதை அப்படியே ஏற்போம். அது போல் திருக்குர்ஆனில் சொல்லப்படாத கூடுதல் செய்தியைக் கூறினால் அதையும் அப்படியே ஏற்றாக வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை நாம் காதால் கேட்டதால் அவர்கள் சொன்னார்களா என்ற சந்தேகத்துக்கு இடமில்லை. அப்போது எல்லா செய்திகளுமே சரியானவை தான்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப் பின்னர் வாழும் மக்களுக்கு இந்த நிலை இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின் வந்த மக்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சம்மந்தப்பட்ட சரியான செய்திகளும் கிடைத்தன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சம்மந்தப்படாத பொய்களும் அவர்கள் பெயரால் மக்களை வந்தடைந்தன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் திருக்குர்ஆன் பாதுகாக்கப்பட்டது போல் ஹதீஸ்கள் பாதுகாக்கப்படவில்லை என்பதே இதற்குக் காரணம்.

திருக்குர்ஆனின் ஒவ்வொரு வசனமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் போதே எழுத்தர்கள் மூலம் எழுதச் செய்து பாதுகாக்கப்பட்டது.

ஆனால் ஹதீஸ்கள் அனைத்தையும் பாதுகாக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த ஏற்பாட்டையும் செய்யவில்லை. மிகச் சில நபித்தோழர்கள் மிகச் சில ஹதீஸ்களை எழுதி வைத்துக் கொண்டார்கள். அனைத்து ஹதீஸ்களும் அவர்கள் காலத்தில் யாராலும் எழுதப்படவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருக்குர்ஆனைத் தாமும் மனனம் செய்தார்கள்.

பல நபித்தோழர்களும் மனப்பாடம் செய்திருந்தனர்.

இது போல் ஹதீஸ்கள் பாதுகாக்கப்படவில்லை.

அனைத்து ஹதீஸ்களையும் மனப்பாடம் செய்த ஒரே ஒரு நபித்தோழர் கூட இருந்ததில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் போது ஒவ்வொரு ஆண்டும் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து திருக்குர்ஆனைச் சரிபார்ப்பார்கள்.

صحيح البخاري

6 – حَدَّثَنَا عَبْدَانُ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ قَالَ: أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، ح وحَدَّثَنَا بِشْرُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ: أَخْبَرَنَا يُونُسُ، وَمَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، نَحْوَهُ قَالَ: أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَجْوَدَ النَّاسِ، وَكَانَ أَجْوَدُ مَا يَكُونُ فِي رَمَضَانَ حِينَ يَلْقَاهُ جِبْرِيلُ، وَكَانَ يَلْقَاهُ فِي كُلِّ لَيْلَةٍ مِنْ رَمَضَانَ فَيُدَارِسُهُ القُرْآنَ، فَلَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَجْوَدُ بِالخَيْرِ مِنَ الرِّيحِ المُرْسَلَةِ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களிலேயே அதிகமாக வாரி வழங்குபவர்களாகத் திகழ்ந்தார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமளானில் தம்மைச் சந்திக்கும் வேளையில் இன்னும் அதிகமாக வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமளானின் ஒவ்வோர் இரவிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்தித்து (அதுவரை அருளப்பெற்ற) குர்ஆனை அவர்களுக்கு நினைவுபடுத்துவார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்ந்து வீசும் மழைக் காற்றைவிட நல்லவற்றை அதிகமாக வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி 6

இது போன்ற பாதுகாப்பு ஹதீஸ்களுக்கு இருக்கவில்லை.

நாம் இப்போது எதைத் திருக்குர்ஆன் என்று கூறுகிறோமோ அது தான் திருக்குர்ஆன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்கள் அனைவரும் ஒருமித்து அடுத்த தலைமுறைக்குச் சொன்னார்கள்.

இப்படி ஒவ்வொரு காலத்திலும் வாழ்ந்த முஸ்லிம்கள் எவ்விதக் கருத்து வேறுபாடும் இல்லாமல் இது தான் திருக்குர்ஆன் என்று அடுத்த தலைமுறைக்கு அறிமுகம் செய்தார்கள்.

ஆனால் ஹதீஸ்களைப் பொருத்தவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு நபித்தோழரோ, இரண்டு மூன்று நபித்தோழர்களோ தான் அடுத்த தலைமுறைக்கு – அதாவது அடுத்த தலைமுறையில் சிலருக்குச் – சொன்னார்கள்.

இப்படி ஒவ்வொரு காலத்திலும் மிகச் சிலர் தான் அடுத்த தலைமுறைக்கு ஹதீஸ்களைக் கொண்டு சேர்த்தார்கள்.

எழுத்து வடிவில் அனைத்து ஹதீஸ்களும் பாதுகாக்கப்படாததால் ஹதீஸ்கள் நூல் வடிவம் பெறும் காலம் வரை கட்டுக்கதைகளும் ஹதீஸ்கள் என்ற பெயரில் நுழைந்தன. ஆனால் திருக்குர்ஆனில் எந்த வார்த்தையும் எந்தக் காலத்திலும் இட்டுக்கட்டிக் கூறப்படவே இல்லை.

திருக்குர்ஆனைப் பாதுகாக்கும் பொறுப்பை அல்லாஹ்வே ஏற்றுக் கொண்டான்.

நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம்.

திருக்குர்ஆன் 15:9

ஒரு குர்ஆன் வசனம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டால் அவர்கள் அதை மனதில் பதிய வைத்துக் கொண்டு திருக்குர்ஆனை எழுதுவதற்காக நியமிக்கப்பட்டு இருந்த எழுத்தர்களை அழைத்து எழுதிக் கொள்ளச் செய்வார்கள். அவர்களில் பலர் மனப்பாடம் செய்தும் கொள்வார்கள்.

அருளப்பட்ட வசனங்களை கூட்டுத் தொழுகைகளில் சப்தமாக நபியவர்கள் ஓதி வந்ததால் எழுதத் தெரியாத நபித்தோழர்களும் குர்ஆன் வசனங்களை மனனம் செய்தார்கள்.

எழுதிவர்களின் கவனக்குறைவால் தவறுகள் நேர்ந்திருக்க வாய்ப்பு உண்டு என்பதால் அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் அனைவரின் எழுத்துப் பிரதிகளும் ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டு பின்னர் மனப்பாடம் செய்தவர்களின் மனனத்துடன் சரிபார்க்கப்பட்டு பிழையற்ற மூலப்பிரதி உருவாக்கப்பட்டது.

திருக்குர்ஆனில் இல்லாத ஒன்றை திருக்குர்ஆன் என்று இட்டுக்கட்டி சொல்ல முடியாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

ஆனால் ஹதீஸ்களைப் பாதுகாக்க இத்தகைய ஏற்பாட்டை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்யவில்லை. அனைத்து ஹதீஸ்களையும் யாரும் மனனம் செய்யவுமில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருக்குர்ஆன் அல்லாத ஒரு செய்தியை, ஒரு சட்டத்தை ஒரு சபையில் சொல்கிறார்கள் என்றால் அந்த சபையில் இருந்தவர்கள் மட்டுமே அதை அறிவார்கள். அவர்கள் தமது வாழ்க்கையில் அதைக் கடைப்பிடிப்பார்கள். அது மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டிய நிலை வந்தால் சொல்வார்கள். அதை அனைத்து நபித்தோழர்களும் அறிய முடியாது. அதிகமான நபித்தோழர்கள் கூட அறிய முடியாது.

ஒரு நபித்தோழர் வந்து நபிகள் நாயகத்திடம் ஒரு கேள்வியைக் கேட்டால் கேள்வி கேட்கும் போது ஓரிருவர் அதை செவிமடுக்கத் தான் வாய்ப்பு உள்ளது. பல்லாயிரம் தோழர்களைக் கொண்ட அச்சமுதாயத்தில் அந்தச் செய்தியை அ|றிந்த ஓரிருவர் தான் இருப்பார்கள்.

அடுத்த தலைமுறையிலும் இது போன்ற நிலைதான் இருந்தது.

அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு நபித்தோழர்கள் பல்வேறு பகுதிகளுக்கும் இடம் பெயர்ந்தார்கள்.

உதாரணமாக பத்து நபித்தோழர்கள் கெய்ரோ நகருக்கு இடம் பெயர்ந்தால் அந்தப் பத்து நபித்தோழர்கள் தமக்குத் தெரிந்த ஹதீஸ்களை மட்டும் தான் அந்த மக்களுக்குச் சொல்வார்கள். இது மொத்த ஹதீஸ்களில் ஒரு சதவிகிதம், இரு சதவிகிதம் என்ற அளவில் தான் இருக்கும். மீதி ஹதீஸ்கள் இவ்வூராருக்குக் கிடைக்க வழியில்லை.

ஒவ்வொரு பகுதிகளுக்கும் சென்ற நபித்தோழர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் செவியுற்ற செய்திகளை வாய்மொழியாக மட்டுமே அறிவித்து வந்தார்கள்.

அவர்களிடம் ஹதீஸ்களச் செவியுற்றவர்கள் அடுத்த தலைமுறையினருக்கு வாய்மொழியாகவே சொன்னார்கள். இப்படி வாய்மொழியாக மட்டுமே ஹதீஸ்கள் அறிவிக்கப்பட்டு வந்தன.

குர்ஆன் வசனம் என யாரேனும் ஒரு வசனத்தைக் கூறினால் எழுத்து வடிவில் பாதுகாக்கப்பட்ட மூலப்பிரதியைப் பார்த்தும், மனனம் செய்தவர்களைக் கேட்டும் அது குர்ஆனில் உள்ளதா? இட்டுக்கட்டப்பட்டதா என்று கண்டறிந்து விட முடியும். இதனால் குர்ஆனில் இல்லாத ஒன்றை, குர்ஆன் எனக் கூற யாருக்கும் துணிவு வரவில்லை.

ஆனால் ஹதீஸ்கள் ஒருவரால் கூட முழுமையாக மனனம் செய்யப்படவில்லை என்பதாலும், எழுத்து வடிவில் அனைத்து ஹதீஸ்களும் தொகுக்கப்படாததாலும் ஹதீஸ் என்ற பெயரால் இட்டுக்கட்டும் வாசல் அடைக்கப்படாமல் இருந்தது.’

ஒட்டு மொத்த ஹதீஸையே இட்டுக் கட்டினாலும், கூடுதலாக சில வாக்கியங்களைச் சேர்த்தாலும், நீக்கினாலும் அதைக் கண்டறிய முடியாத நிலை இருந்தது.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தீய சக்திகளும், அறிவீனர்களும் பொய்களை ஹதீஸ்கள் என்று கூறலானார்கள்.

இதனால் ஹதீஸ்களுடன் ஹதீஸ் அல்லாதவைகளும் கலந்து விட்டன.

இப்படி ஹதீஸ்களை இட்டுக்கட்டியவர்கள் பல தரப்பட்டவர்களாக இருந்தனர். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு நோக்கங்கள் இருந்தன.

அது குறித்து நாம் அறிந்து கொண்டால் தான் சரியானவை, தவறானவை என்று ஹதீஸ்களப் பிரிக்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது என்பதைத் தெளிவாக அறியலாம்.

1. இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்தல்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப் பின் இஸ்லாம் படுவேகமாகப் பரவி வந்தது. மதங்களின் பெயரால் வயிறு வளர்த்து வந்தவர்களுக்கு இந்த வளர்ச்சி பெரும் அதிர்ச்சியை அளித்தது. தங்கள் மதம் காணாமல் போய் தங்கள் தலைமை பறிபோய் வருமானம் தடைப்பட்டு விடுமோ என்று கவலைப்பட்ட இவர்கள் இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுக்கத் திட்டமிட்டனர்.

இஸ்லாத்தின் பெரு வளர்ச்சிக்கு அதன் அர்த்தமுள்ள கொள்கைகளும், எல்லா வகையிலும் அது தனித்து விளங்கியதும் தான் காரணம் என்பதைக் கண்டுபிடித்தார்கள்.

இஸ்லாத்திலும் அர்த்தமற்ற உளறல்கள் மலிந்து கிடப்பதாகக் காட்டி விட்டால் இஸ்லாத்தின் வளர்ச்சியைப் பெருமளவு மட்டுப்படுத்தலாம் என்று கணக்குப் போட்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் போதே திருக்குர்ஆன் எழுத்து வடிவில் பாதுகாக்கப்பட்டு விட்டதால் அதில் தங்கள் கைவரிசையைக் காட்ட முடியாது என்பது அவர்களுக்குத் தெரிந்தது. ஆனால் ஹதீஸ்கள் எழுத்து வடிவில் முழுமையாகப் பதிவு செய்யப்படாமல் வாய்மொழி அறிவிப்புகளாகவே மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வந்ததால் ஹதீஸ் என்ற பெயரில் இட்டுக்கட்டி பரப்பினால் தங்கள் நோக்கத்தில் வெற்றி பெறலாம் என்று எண்ணி இட்டுக் கட்டினார்கள்.

நம்ப முடியாத உளறல்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாகப் பரப்பலானார்கள்.

இவற்றைக் கேட்பவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும், அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தின் மீதும் சந்தேகம் ஏற்படாமல் இருக்க முடியாது. இவர்கள் இட்டுக்கட்டிய பொய்யான ஹதீஸ்களில் சிலவற்றைப் பாருங்கள்.

من قَالَ: لَا إِلَه إِلَّا الله خلق الله من كل كلمة طائرا، لَهُ سَبْعُونَ لِسَانا، فِي كل لِسَان ألف لُغَة، وَيَسْتَغْفِرُونَ الله لَهُ – كشف الخفاء

யாரேனும் லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறுவாரானால் அந்த வார்த்தையிலிருந்து அல்லாஹ் ஒரு பறவையைப் படைப்பான். அப்பறவைக்கு எழுபதாயிரம் நாக்குகள் இருக்கும். ஒவ்வொரு நாக்கும் எழுபதாயிரம் பாஷைகளைப் பேசும். அவனுக்காக அவை அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடும்.

நூல் : கஷ்ஃபுல் ஃகஃபா

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

والباذنجان شِفَاءٌ مِنْ كُلِّ دَاءٍ-الأسرار المرفوعة في الأخبار الموضوعة – 

கத்தரிக்காய் சாப்பிடுவது எல்லா நோய்களுக்கும் மருந்தாகும்.

நூல் : அல் அஸ்ராருல் மர்ஃபூவா

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

 الْبَاذِنْجَانُ لِمَا أُكِلَ لَهُ – نقد المنقول

எந்த நோக்கத்திற்காக கத்தரிக்காய் சாப்பிடுகிறோமோ அந்த நோக்கம் நிறைவேறும்.

நூல் : நக்துல் மன்கூல்

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

عَلَيْكُم بالعدس؛ فَإِنَّهُ مبارك، يرق الْقلب، وَيكثر الدمعة، قد بَارك فِيهِ سَبْعُونَ نَبيا، مِنْهُم عِيسَى ابْن مَرْيَم – تلخيص كتاب الموضوعات

பருப்பை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது இதயத்தை மென்மையாக்கும். ஈஸா நபி உள்ளிட்ட எழுபது நபிமார்கள் அதன் மூலம் பரகத் எனும் அருள் பெற்றனர்.

நூல் : தல்கீஸ் கிதாபுல் மவ்லூஆத்

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

لَوْ كَانَ الْأَرُزُّ رَجُلًا لَكَانَ حَلِيمًا مَا أَكَلَهُ جَائِعٌ إِلَّا أَشْبَعَهُ – الأسرار المرفوعة في الأخبار الموضوعة

நெல், ஒரு மனிதனாக இருந்தால் அது மிகவும் சகிப்புத் தன்மையுடையதாக இருந்திருக்கும். அதை யார் சாப்பிட்டாலும் பசியைப் போக்கும்.

நூல் : அல் அஸ்ராருல் மர்ஃபூஆ

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

أَحْضِرُوا مَوَائِدَكُمُ الْبَقْلَ فَإِنَّهُ مَطْرَدَةٌ لِلشَّيْطَانِ مَعَ التَّسْمِيَةِ -الموضوعات لابن الجوزي

உங்கள் உணவில் பிஸ்மில்லாஹ் கூறி கீரைகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அது ஷைத்தானை விரட்டியடிக்கும்.

நூல் : அல்மவ்லூஆத் இப்னுல்ஜவ்ஸி

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

سَخَّنْتُ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَاءً فِي الشَّمْسِ يَغْتَسِلُ بِهِ ، فَقَالَ : لَا تَفْعَلِي يَا حُمَيْرَاءُ فَإِنَّهُ يُورِثُ الْبَرَصَ -نصب الراية في تخريج أحاديث الهداية

ஆயிஷாவே! சூரிய வெளிச்சத்தால் சூடாக்கப்பட்ட தண்ணீரில் குளிக்காதே! அது வெண் குஷ்டத்தை ஏற்படுத்தும்.

நூல் : நஸ்புர் ராயா

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

مَنْ لَمْ يَكُنْ لَهُ مَالٌ يَتَصَدَّقُ بِهِ فَلْيَلْعَنِ الْيَهُودَ وَالنَّصَارَى -الأسرار المرفوعة في الأخبار الموضوعة

தர்மம் செய்ய ஏதும் கிடைக்கா விட்டால் யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் சபியுங்கள்! அது தர்மம் செய்ததற்கு நிகராக அமையும்.

நூல் : அல் அஸ்ராருல் மர்ஃபூஆ

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

ثَلَاثَةٌ تَزِيدُ فِي الْبَصَرِ النَّظَرُ إِلَى الْخُضْرَةِ وَالْمَاءِ الْجَارِي وَالْوَجْهِ الْحَسَنِ -الأسرار المرفوعة في الأخبار الموضوعة

பசுமையான பொருட்கள், ஓடுகின்ற தண்ணீர், அழகிய முகம் ஆகியவற்றைப் பார்ப்பது, பார்க்கும் திறனை அதிகரிக்கும்.

நூல் : அல் அஸ்ராருல் மர்ஃபூஆ

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

النَّظَرُ إِلَى الْوَجْهِ الْجَمِيلِ عبَادَةٌ – نقد المنقول والمحك المميز بين المردود والمقبول

அழகான முகத்தைப் பார்ப்பது ஒரு வணக்கமாகும்.

நூல் : நக்துல் மன்கூல்

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

الزُّرْقَةُ فِي الْعَيْنِ يُمْنٌ –   نقد المنقول والمحك المميز بين المردود والمقبول

கண்கள் நீல நிறமாக இருப்பது ஒரு பாக்கியமாகும்.

நூல் : நக்துல் மன்கூல்

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

أكل السمك يوهن الجسد –  نقد المنقول والمحك المميز بين المردود والمقبول

மீன் சாப்பிடுவது உடலைப் பலவீனப்படுத்தும்.

நூல் : நக்துல் மன்கூல்

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

من أَخذ لقْمَة من مجْرى الْغَائِط وَالْبَوْل، فغسلها ثمَّ أكلهَا؛ غفر لَهُ – نقد المنقول والمحك المميز بين المردود والمقبول

சாக்கடையில் விழுந்த ஒரு கவள உணவை யாரேனும் கழுவிச் சாப்பிட்டால் அவரது பாவங்கள் மன்னிக்கப்படும்.

நூல் : நக்துல் மன்கூல்

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

عَلَيْكُم بالملح؛ فَإِنَّهُ شِفَاء من سبعين دَاء — نقد المنقول والمحك المميز بين المردود والمقبول

உப்பை விட்டு விடாதீர்கள். உப்பில் எழுபது நோய்களுக்கு நிவாரணம் உள்ளது.

நூல் : நக்துல் மன்கூல்

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

مَا من رمان إِلَّا ويلقح بِحَبَّة من رمان الْجنَّة — نقد المنقول والمحك المميز بين المردود والمقبول

எந்த ஒரு மாதுளம் பழத்திலும் அதன் ஏதோ ஒரு விதையில் சொர்க்கத்தின் தண்ணீர் இருக்கும்.

நூல் : நக்துல் மன்கூல்

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

عَنْ مُعَاذَ بْنِ جَبَلٍ قَالَ: " لَمَّا بَعَثَنِي رَسُولُ الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْيَمَنِ، قَالَ: إِنَّكَ تَأْتِي قَوْمًا أَهْلَ كِتَابٍ فَإِنْ سَأَلُوكَ عَنِ الْمَجَرَّةِ فَأَخْبِرْهُمْ أَنَّهَا مِنْ عِرْقِ الأَفْعَى الَّتِي تَحْتَ الْعَرْشِ " —الموضوعات لابن الجوزي

ஆகாயத்தில் உள்ள பால்வெளி, அர்ஷின் கீழ் இருக்கும் பாம்பின் வியர்வையினால் படைக்கப்பட்டது.

நூல் : அல் மவ்லூஆத் இப்னுல் ஜவ்ஸி

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

عَنِ ابْنِ عُمَرَ قَالَ: " جَاءَ رَجُلٌ إِلَى النَّبِي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَشَكَى إِلَيْهِ قِلَّةَ الْوَلَدِ فَأَمَرَهُ أَنْ يَأْكُلَ الْبَيْضَ وَالْبَصَلَ – الموضوعات لابن الجوزي

முட்டையும், பூண்டும் சாப்பிட்டால் அதிகமான சந்ததிகள் பெற முடியும்.

நூல் : அல் மவ்லூஆத் இப்னுல் ஜவ்ஸி

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

شَاوِرُوهُنَّ وَخَالِفُوهُنَّ " – يَعْنِي النِّسَاءَ –الفوائد الموضوعة في الأحاديث الموضوعة

பெண்களிடம் ஆலோசனை கேளுங்கள்! ஆனால் அதற்கு மாற்றமாக நடங்கள்!

நூல் : அல்ஃபவாயிதுல் மவ்லூஆ

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

الدَّجَاجُ غَنَمُ فُقَرَاءِ أُمَّتِي –الموضوعات لابن الجوزي

கோழிகள் என் சமுதாயத்தின் ஏழைகளுக்கு ஆடுகளாகும்.

நூல் : அல் மவ்லூஆத் இப்னுல் ஜவ்ஸி

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

لَوْ يُرَبِّي أَحَدُكُمْ بَعْدَ السِّتِّينَ وَمِائَةِ جَرْوَ كَلْبٍ خَيْرٌ لَهُ من أَن يُربي ولدا –الأسرار المرفوعة في الأخبار الموضوعة

160 ஆம் ஆண்டுக்குப் பிறகு குழந்தை பெற்று வளர்ப்பதை விட நாய் வளர்ப்பது மேலாகும்.

நூல் : அல் அஸ்ராருல் மர்பூஆ

இப்படி ஏராளமான பொய்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரால் இட்டுக்கட்டினார்கள்.

இவை யாவும் பொய் என்பது திட்டவட்டமாகத் தெரிகின்றது.

கத்தரிக்காய் அனைத்து நோய்களுக்கும் மருந்தாக இல்லை.

மீன் சாப்பிடுவது உடலைப் பலவீனப்படுத்தவும் இல்லை.

பருப்பு சாப்பிடுவதற்கும், இதயம் இளகுவதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

கீரைக்கும், ஷைத்தானுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.

அர்ஷுக்குக் கீழே பாம்பும் கிடையாது. அதிலிருந்து பால்வெளி படைக்கப்படவும் இல்லை.

சூரிய வெளிச்சத்தில் சூடாக்கப்பட்ட சிறிய குளம் குட்டைகளில் குளிக்கும் இலட்சக்கணக்கான மக்களில் யாருக்கும் குஷ்டம் வரவில்லை.

ஓடுகின்ற தண்ணீருக்குப் பக்கத்தில் வசிப்பவர்களும், ஊட்டியில் பசுமையான இடங்களை அன்றாடம் பார்ப்பவர்களும், அழகான முகம் படைத்த மனைவியைப் பெற்றவர்களும் மற்றவர்களைப் போல் பார்வைக் குறைவுக்கு ஆளாகின்றனர்.

நீல நிறக் கண்கள் படைத்தவர்களிலும் தரித்திரம் பிடித்தவர்கள் இருக்கின்றார்கள்.

இவ்வாறு கூறியவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தின் மீது சந்தேகம் ஏற்படுத்தும் நோக்கத்தில் தான் மேற்கொண்ட செய்திகளைப் புனைந்தனர் என்பது தெளிவாகும்.

2. ஆர்வக் கோளாறு

 மார்க்கத்தில் ஆர்வமிருந்தும் அறிவு இல்லாத மூடக் கூட்டத்தினர் நல்ல நோக்கத்தில் ஹதீஸ்களைச் சுயமாகத் தயாரித்தனர்.

மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்ட தொழுகை, நோன்பு போன்ற வணக்கங்களுக்கு குர்ஆனிலும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலும் எவ்வளவோ சிறப்புகள் கூறப்பட்டுள்ளன. அவை இவர்களுக்குப் போதாததால் அந்த வணக்கங்களுக்கு இல்லாத சிறப்புகளை உருவாக்கினார்கள்.

இருக்கின்ற வணக்கங்களுக்கு இல்லாத சிறப்புகளை உருவாக்கியதோடு இவர்கள் நின்று விடவில்லை. புதிது புதிதாக வணக்கங்களையும் பொய்யான ஹதீஸ்கள் மூலம் உருவாக்கினார்கள்.

நூஹு பின் அபீ மர்யம் என்பவர் திருக்குர்ஆனின் ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் தனித்தனி சிறப்புகளைக் கூறும் ஹதீஸ்களைத் தயாரித்ததை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

أحاديث فضل سور القرآن مائة وأربعة عشر حديثا ذكرها الزمخشري والبيضاوي تبعا للواحدي كلها كذب على رسول الله واتهم المحدثون بوضعها نوح بن ابي مريم –أسنى المطالب في أحاديث مختلفة المراتب محمد بن درويش

நூஹ் பின் அபீமர்யம் திருக்குர்ஆனின் அத்தியாயங்களின் சிறப்பு குறித்து 114 ஹதீஸ்களை இட்டுக்கட்டினார்.

روى نوح بْن أبي مَرْيَم الْجَامِع فِي فَضَائِل الْقُرْآن سُورَة سُورَة عَن رجلٍ عَن عِكْرِمَة عَن ابْن عَبَّاس فَقيل لَهُ من أَيْنَ لَك هَذَا قَالَ لِأَن النَّاس قد اشتغلوا بمغازي ابْن إِسْحَاق وَغَيره فحرضتهم على قِرَاءَة الْقُرْآن –اللآلي المصنوعة

நூஹ் பின் அபீமர்யம் என்பாரிடம் இந்த ஹதீஸ்கள் உமக்கு எப்படிக் கிடைத்தன என்று கேட்கப்பட்ட போது மக்கள் இப்னு இஸ்ஹாக் என்பவர் எழுதிய வரலாற்று நூலில் ஈடுபாடு காட்டினார்கள். அவர்களைக் குர்ஆன் பக்கம் ஈர்ப்பதற்காக நான் தான் இட்டுக்கட்டினேன் என்று கூறினார்.

நூல் : அல்லஆலில் மஸ்னூஆ

அல்ஃபாத்திஹா அத்தியாயம், ஆல இம்ரான் அத்தியாயம், பகரா அத்தியாயம், ஆயத்துல் குர்ஸீ, பகராவின் கடைசி இரு வசனங்கள், கஹ்ஃபு அத்தியாயம், குல்ஹுவல்லாஹு அத்தியாயம், குல்அவூது பிரப்பில் ஃபலக் அத்தியாயம் , குல்அவூது பிரப்பின்னாஸ் அத்தியாயம், இதா ஸுல்ஸிலத் அத்தியாயம், குல் யா அய்யுஹல் காஃபிரூன் அத்தியாயம், தபாரக்கல்லதீ அத்தியாயம் போன்றவை தவிர மற்ற அத்தியாயங்களின் சிறப்புகள் பற்றி கூறப்படும் ஹதீஸ்கள் யாவும் இட்டுக்கட்டப்பட்டவை.

ومنها أحاديث الاكتحال يوم عاشوراء والتزين والتوسعة والصلاة فيه وغير ذلك من فضائل لا يصح منها شيء ولا حديث واحد و لا يثبت عن النبي صلى الله عليه و سلم فيه شيء غير أحاديث صيامه وما عداها فباطل –المنار المنيف

ஆஷுரா நாளில் சுருமா இட வேண்டும்; அலங்கரித்துக் கொள்ள வேண்டும்; குடும்பத்துக்கு அன்றைய தினம் அதிகமாகச் செலவிட வேண்டும்; அன்றைய தினத்துக்கான தொழுகை போன்ற ஹதீஸ்கள் அனைத்தும் ஆதாரமற்றவை. ஆஷூரா தினத்தில் நோன்பு வைப்பது பற்றிய ஹதீஸைத் தவிர மற்ற அனைத்துமே ஆதாரமற்றவையாகும்.

நூல் : அல்மனாருல் முனீஃப்

(அந்நாளில் மூஸா நபி காப்பாற்றப்பட்டார்கள். அந்நாளில் நோன்பு நோற்க வேண்டும் எனும் ஹதீஸ்கள் மட்டும் ஆதாரப்பூர்வமானவை)

حديث " البداءة في قلم الأظافر بمسبحة اليمنى والختم بإبهامها وفي اليسرى بالخنصر إلى الإبهام –تخريج أحاديث الإحياء

நகங்களை வெட்டும் போது வலது கை ஆட்காட்டி விரலில் ஆரம்பித்து கட்டை விரலில் முடிக்க வேண்டும்; இடது கை சுண்டு விரலில் ஆரம்பித்து கடைவிரலில் முடிக்க வேண்டும் என்று கஸ்ஸாலி, இஹ்யா நூலில் குறிப்பிட்டுள்ளதும் பொய்யான ஹதீஸாகும்.

நூல் : தக்ரீஜு அஹாதீஸில் இஹ்யா

 حَدِيثُ صَلَاةٌ بِخَاتَمٍ تَعْدِلُ سَبْعِينَ بِغَيْرِ خَاتَمٍ هُوَ مَوْضُوعٌ –الأسرار المرفوعة في الأخبار الموضوعة

மோதிரம் அணிந்து தொழுவது, மோதிரம் அணியாமல் தொழும் எழுபது தொழுகைகளை விடச் சிறந்தது.

நூல் : அல் அஸ்ராருல் மர்ஃபூஆ

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

أن الصلاة بعمامة تعدل بخمس وعشرين وجمعة بعمامة تعدل سبعين جمعة بغير عمامة إن الملائكة يشهدون الجمعة متعممين ولا يزالون يصلون على أصحاب العمائم حتى تغرب الشمس قال ابن حجر موضوع — الفوائد المجموعة للشوكاني

தலைப்பாகை அணிந்து தொழுவது தலைப்பாகை இல்லாமல் தொழும் இருபத்தி ஐந்து தொழுகைகளை விடச் சிறந்தது. தலைப்பாகையுடன் ஒரு ஜும்ஆ தொழுவது தலைப்பாகை இல்லாமல் தொழும் எழுபது தொழுகைகளை விடச் சிறந்ததாகும். வானவர்கள் தலைப்பாகையுடன் ஜும்ஆவுக்கு வந்து தலைப்பாகை அணிந்தவர்களுக்காக சூரியன் மறையும் வரை துஆ செய்கிறார்கள்.

நூல் : அல்ஃபவாயிதுல் மஜ்மூஆ

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

 مَنْ صَلَّى بَعْدَ الْمَغْرِبِ أَوَّلَ لَيْلَةٍ مِنْ رَجَبٍ عِشْرِينَ رَكْعَةً جَازَ عَلَى الصِّرَاطِ بِلَا حِسَابٍ –الأسرار المرفوعة في الأخبار الموضوعة

ரஜப் மாதம் முதல் நாள் இருபது ரக்அத்கள் யார் தொழுகிறாரோ அவர் விசாரிக்கப்படாமல் (நரகின்) பாலத்தைக் கடப்பார்.

நூல் : அல் அஸ்ராருல் மர்ஃபூஆ

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

ومنها  أحاديث صلاة ليلة النصف من شعبان  كحديث يا علي من صلى ليلة النصف من شعبان مئة ركعة بألف قل هو الله أحد قضى الله له كل حاجة طلبها تلك الليلة وساق جزافات كثيرة وأعطي سبعين ألف حوراء لكل حوراء سبعون ألف غلام وسبعون ألف ولدان إلى أن قال ويشفع والداه كل واحد منهما في سبعين –المنار المنيف –

அலீயே! யார் ஷஅபான் மாதம் பதினைந்தாம் இரவில் குல்ஹுவல்லாஹு அத்தியாயத்தை ஆயிரம் முறை ஓதி நூறு ரக்அத்கள் தொழுகிறாரோ அன்று இரவு அவர் கேட்ட அனைத்து கோரிக்கைகளையும் அல்லாஹ் நிறைவேற்றுவான்; என்பது உள்ளிட்ட ஷஅபான் 15 ஆம் இரவு தொழுவது மற்றும் அந்த இரவின் சிறப்பு பற்றிய ஹதீஸ்கள் அனைத்துமே ஆதாரமற்றவை .

நூல் : அல்மனாருல் முனீஃப்

ومنها الأحاديث الموضوعة في فضيلة رجب — الموضوعات للصغاني

ரஜப் மாதத்தின் சிறப்பு பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் ஆதாரமற்றவை.

நூல் : அல்மவ்லூஆத் சகானி

وباب صلاة الرغائب وصلاة نصف شعبان وصلاة نصف رجب وصلاة الإيمان وصلاة ليلة المعراج وصلاة ليلة القدر وصلاة كل ليلة من رجب وشعبان ورمضان ، وهذه الأبواب لم يصح فيها شئ أصلا –كشف الخفاء

ஷஃபான் பதினைந்துக்கான தொழுகை, ரஜப் பதினைந்துக்கான தொழுகை, மிஃராஜ் இரவுத் தொழுகை, லைலத்துல் கத்ர் இரவுக்கான தொழுகை, குறிப்பிட்ட பகல் குறிப்பிட்ட இரவுக்கென்று குறிப்பிட்ட வணக்கங்கள் ஆகிய அனைத்து ஹதீஸ்களும் ஆதாரமற்றவை.

நூல் : கஷ்ஃபுல் கஃபா

 إن الله خلق السموات والأرض يوم عاشوراء — نقد المنقول والمحك المميز بين المردود والمقبول

ஆஷுரா நாளில் அல்லாஹ் வானங்களையும், பூமிகளையும் படைத்தான்.

நூல் : நக்துல் மன்கூல்

வானம், பூமியைப் படைத்து இரவு பகல் ஏற்பட்ட பிறகு தான் ஆஷுரா நாளோ, வேறு நாளோ ஏற்படும். அதற்கு முன்னாள் ஆஷுரா நாளும், வேறு எந்த நாளும் இருந்திருக்க முடியாது.

وَعِنْدَ الثَّانِيَةِ مِنْهَا: قَرَّتْ عَيْنِي بِك يَا رَسُولَ اللَّهِ، ثُمَّ يَقُولُ: اللَّهُمَّ مَتِّعْنِي بِالسَّمْعِ وَالْبَصَرِ بَعْدَ وَضْعِ ظُفْرَيْ الْإِبْهَامَيْنِ عَلَى الْعَيْنَيْنِ فَإِنَّهُ – عَلَيْهِ السَّلَامُ – يَكُونُ قَائِدًا لَهُ إلَى الْجَنَّةِ –الدر المختار وحاشية ابن عابدين

مَنْ قَبَّلَ ظُفْرَيْ إبْهَامِهِ عِنْدَ سَمَاعِ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ فِي الْأَذَانِ أَنَا قَائِدُهُ وَمُدْخِلُهُ فِي صُفُوفِ الْجَنَّةِ –الدر المختار وحاشية ابن عابدين

அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் என்ற பாங்கின் வாசகத்தைச் செவியுறும் போது கட்டை விரல் நகத்தை யார் முத்தமிடுகிறாரோ அவரை நான் வழி நடத்திச் சென்று சொர்க்கத்தில் சேர்ப்பேன்

நூல் : துர்ருல் முக்தார்

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதாக மத்ஹபு நூல்களில் இட்டுக்கட்டியுள்ளனர்.

அமல்களில் ஆர்வமூட்டுவதாக எண்ணி இட்டுக் கட்டப்பட்டவைகளுக்கு இவை உதாரணங்கள்.

3. தனி மரியாதை பெறுவதற்காக

மார்க்க அறிஞர்களுக்கு மற்ற மதங்களில் உள்ளது போன்ற அந்தஸ்து இஸ்லாத்தில் இல்லை. மற்ற மதங்களில் கடவுளின் ஏஜென்டுகளாக மதகுருமார்கள் மதிக்கப்படுகின்றனர். புரோகிதர்களாகச் செயல்படுகின்றனர்.

ஆனால் இஸ்லாம் அதை அறவே ஒழித்து விட்டது.

இதைக் கண்ட போலி அறிஞர்கள் மற்ற மதங்களில் உள்ளது போல் தங்களுக்கும் மரியாதை வேண்டும் என்பதற்காக ஹதீஸ்களை உருவாக்கிக் கொண்டார்கள்.

حَدِيثُ إِذَا جَلَسَ الْمُتَعَلِّمُ بَيْنَ يَدَيِ الْعَالِمِ فَتَحَ اللَّهُ عَلَيْهِ سَبْعِينَ بَابًا مِنَ الرَّحْمَةِ وَلا يَقُومُ مِنْ عِنْدِهِ إِلا كَيَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ وَأَعْطَاهُ اللَّهُ بِكُلِّ حَرْفٍ ثَوَابَ سَبْعِينَ شَهِيدًا وَكَتَبَ لَهُ بِكُلِّ حَدِيثٍ عِبَادَةَ سَنَةٍ فِي الذَّيْلِ إِنَّهُ مَوْضُوعٌ — المصنوع في معرفة الحديث الموضوع

ஆலிமுக்கு முன்னால் மாணவர்கள் அமர்ந்தவுடன் அவர்களுக்கு அல்லாஹ் தனது அருளின் எழுபது வாசல்களைத் திறந்து விடுகின்றான். அவரை விட்டு எழும் போது அன்று பிறந்த பாலகனைப் போன்று அவர்கள் எழுகிறார்கள். அவர்கள் கற்ற ஒவ்வொரு எழுத்துக்காகவும் ஒரு ஷஹீதுடைய நன்மையை அல்லாஹ் தருவான்.

நூல் அல் மஸ்னூவு

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

 حَدِيثُ إِنَّ أَهْلَ الْجَنَّةِ لَيَحْتَاجُونَ إِلَى الْعُلَمَاءِ فِي الْجَنَّةِ وَذَلِكَ أَنَّهُمْ يَزُورُونَ اللَّهَ فِي كُلِّ جُمُعَة فَيَقُول تمنوا عَليّ ماشئتم فَيَلْتَفِتُونَ إِلَى الْعُلَمَاءِ فَيَقُولُونَ مَاذَا نَتَمَنَّى عَلَى رَبِّنَا فَيَقُولُونَ كَذَا وَكَذَا ذُكِرَ فِي الْمِيزَانِ أَنه مَوْضُوع — المصنوع في معرفة الحديث الموضوع

சொர்க்கத்திலும் உலமாக்கள் தேவைப்படுவார்கள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் அல்லாஹ்வை சொர்க்கவாசிகள் சந்திப்பார்கள். வேண்டியதைக் கேளுங்கள் என்று அல்லாஹ் கூறுவான். அவர்களுக்கு என்ன கேட்பது என்று தெரியாததால் உலமாக்களிடம் சென்று கேட்பார்கள். இன்னின்னதைக் கேளுங்கள் என்று உலமாக்கள் சொல்லிக் கொடுப்பார்கள்.

நூல் : அல் மஸ்னூவு

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

حَدِيثُ إِنَّ الْعَالِمَ وَالْمُتَعَلِّمَ إِذَا مَرَّا عَلَى قَرْيَةٍ فَإِنَّ اللَّهَ تَعَالَى يَرْفَعُ الْعَذَابَ عَنْ مَقْبَرَةِ تِلْكَ الْقَرْيَةِ أَرْبَعِينَ يَوْمًا قَالَ الْحَافِظُ الْجلالُ لَا أَصْلَ لَهُ –المصنوع في معرفة الحديث الموضوع

ஒரு ஆலிமோ, அல்லது மாணவரோ ஒரு ஊரைக் கடந்து சென்றால் அவ்வூரில் அடக்கம் செய்யப்பட்டவர்களுக்கு நாற்பது நாட்கள் வேதனையை அல்லாஹ் நிறுத்தி விடுவான்.

நூல் : அல் மஸ்னூவு

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

حَدِيثُ حُضُورُ مَجْلِسِ عَالِمٍ أَفْضَلُ مِنْ صَلاةِ أَلْفِ رَكْعَةٍ كَذَا فِي الإِحْيَاءِ مِنْ حَدِيثِ أَبِي ذَرٍّ قَالَ الْعِرَاقِيُّ ذَكَرَهُ ابْنُ الْجَوْزِيِّ فِي الْمَوْضُوعَاتِ –المصنوع في معرفة الحديث الموضوع

ஒரு ஆலிமுடைய சபையில் அமர்வது ஆயிரம் ரக்அத்கள் தொழுவதை விடச் சிறந்தது.

நூல் : அல் மஸ்னூவு

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

عُلَمَاء أمتِي كأنبياء بني إِسْرَائِيل ". لَا أصل لَهُ — النخبة البهية في الأحاديث المكذوبة على خير البرية

என் சமுதாயத்தில் உள்ள உலமாக்கள் பனீ இஸ்ரவேலர்களின் நபிமார்களைப் போன்றவர்கள்.

நூல் : அன்னுக்பதுல் பஹிய்யா

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

حَدِيثُ مَنْ أَذَلَّ عَالِمًا بِغَيْرِ حَقٍّ أَذَلَّهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ عَلَى رُؤُوس الْخَلائِقِ مِنْ نُسْخَةِ سَمْعَانَ بْنِ مَهْدِيٍّ الْمَكْذُوبَةِ كَذَا فِي الذَّيْلِ –المصنوع في معرفة الحديث الموضوع

ஒரு ஆலிமை யாரேனும் நியாயமில்லாமல் அவமானப்படுத்தினால் கியாமத் நாளில் மக்கள் மத்தியில் வைத்து அல்லாஹ் அவரை அவமானப்படுத்துவான்.

நூல் : அல் மஸ்னூவு

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

حديث من زار العلماء فقد زارني ومن صافح العلماء فكأنما صافحني ومن جالس العلماء فكأنما جالسني ومن جالسني في الدنيا أجلس الي يوم القيامة في إسناده كذاب –الفوائد المجموعة للشوكاني

யாரேனும் உலமாக்களைச் சந்தித்தால் அவர் என்னைச் சந்தித்தவர் போலாவார். உலமாக்களிடம் முஸாபஹா செய்தால் அவர் என்னிடம் முஸாபஹா செய்தவர் போன்றவராவார்.

நூல் : அல்ஃபவாயிதுல் மஜ்மூஆ

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

مِدَادُ الْعُلَمَاءِ أَفْضَلُ مِنْ دَمِ الشُّهَدَاءِ –الفوائد المجموعة للشوكاني

ஆலிமுடைய பேனாவின் மைத்துளி ஷஹீதுகளின் இரத்தத்தை விடச் சிறந்தது.

நூல் : அல்ஃபவாயிதுல் மஜ்மூஆ

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

عَنْ حُذَيْفَةَ سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ عِلْمِ الْبَاطِنِ مَا هُوَ فَقَالَ سَأَلْتُ جِبْرِيلَ عَنْهُ فَقَالَ عَنِ اللَّهِ هُوَ سِرٌّ بَيْنِي وَبَيْنَ أَحِبَّائِي وَأَوْلِيَائِي وَأَصْفِيَائِي أُودِعُهُ فِي قُلُوبِهِمْ لَا يَطَّلِعُ عَلَيْهِ مَلَكٌ مُقَرَّبٌ وَلا نَبِيٌّ مُرْسَلٌ قَالَ الْعَسْقَلانِيُّ مَوْضُوعٌ –المصنوع في معرفة الحديث الموضوع

ரகசியமான ஒரு இல்மு (ஞானம்) உள்ளது. அதை எனது நேசர்களுக்கு மட்டும் தான் நான் வழங்குவேன். எந்த மலக்கும், எந்த நபியும் இதை அறிய முடியாது என்று அல்லாஹ் கூறுகிறான்.

 நூல் : அல்மஸ்னூவு

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

இவையெல்லாம் போலி மார்க்க அறிஞர்கள் தங்களது மதிப்பை உயர்த்திக் கொள்வதற்காக இட்டுக்கட்டியவையாகும்.

4. மன்னர்களை மகிழ்விக்க

மன்னர்களின் தவறுகளை நியாயப்படுத்தவும், அவர்களுக்கு மக்கள் அதிகமான மரியாதை தர வேண்டும் என்பதற்காகவும் போலி அறிஞர்கள் பொய்யான ஹதீஸ்களை இட்டுக்கட்டினார்கள்.

மன்னர் மஹ்தி என்பவரின் ஆட்சியின் போது, அவருக்கேற்ப ஹதீஸ்களை இட்டுக்கட்டிய கியாஸ் பின் இப்ராஹீம் என்பவர் இதற்கு உதாரணமாகக் கூறப்படுகின்றார்.

மன்னர்களுக்குத் தண்டனை இல்லை.

மன்னரின் அனுமதியின்றி ஜும்ஆ இல்லை.

என்பன போன்ற ஹதீஸ்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இது மன்னர்களுக்காகச் சொன்னதால் இவை பிரபலமாகவில்லை. மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இத்தகைய பொய்கள் கிடைக்கின்றன.

5. இயக்க வெறி

மத்ஹபு வெறி, இயக்க வெறி, இனவெறி, ஒரு மனிதன் மீது கொண்ட பக்தி வெறி போன்ற காரணங்களுக்காகவும் ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்டன.

மத்ஹபு இமாம்களைப் புகழ்ந்தும், இகழ்ந்தும் தயாரிக்கப்பட்ட ஹதீஸ்கள்.

அலீ (ரலி) யைப் புகழ்ந்தும் மற்ற நபித்தோழர்களை இகழ்ந்தும் கூறக்கூடிய ஹதீஸ்கள்.

துருக்கியர், சூடானியர், அபீசீனியர், பாரசீகர் போன்றவர்களைப் புகழ்ந்தும், இகழ்ந்தும் உருவாக்கப்பட்டவை.

ஒரு மொழியைப் புகழ்ந்தும், இன்னொரு மொழியை இகழ்ந்தும் கூறுகின்ற ஹதீஸ்கள்.

நெசவு, விவசாயம் போன்ற தொழில்களின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் ஹதீஸ்களும் இந்த வகையைச் சேர்ந்தவையாகும்.

இந்த வகையில் முதலிடத்தில் இருப்பவர்கள் ஷியாக்கள் ஆவர். அலீ (ரலி)யின் சிறப்பைக் கூறும் வகையில் இவர்கள் இட்டுக்கட்டிய ஹதீஸ்கள் கணக்கிலடங்காது.

இவை அனைத்தும் இயக்க வெறியின் காரணமாக இட்டுக்கட்டப்பட்டவையாகும்.

6. பேச்சைப் பிழைப்பாக்கியவர்கள்

மக்கள் மத்தியில் உருக்கமாகவும், சுவையாகவும் உரை நிகழ்த்தி அதன் மூலம் அன்பளிப்பு பெறும் ஒரு கூட்டத்தினர் மார்க்க அறிஞர்கள் என்ற போர்வையில் நடமாடி வந்தனர்.

நீண்ட நேரம் புதுப்புது விஷயங்களைப் பேசி மக்களைக் கவர வேண்டும் என்பதற்காக இவர்கள் இட்டுக்கட்டிய ஹதீஸ்கள் தான் இந்த வகையில் அதிகம் காணப்படுகின்றன. இவர்கள் எந்த அளவுகோலும், வைத்திருப்பதில்லை. அன்றைய தினம் கைதட்டல் பெறுவதற்காக எதை வேண்டுமானாலும் கூறுவார்கள். இவர்கள் பெரும்பாலும் வரலாறுகளில் தான் கைவரிசை காட்டினார்கள்.

(انطلق النبي صلى الله عليه وسلم وأبو بكر إلى الغار، فدخلا فيه فجاءت العنكبوت فنسجت على باب الغار –مائة حديث من الأحاديث الضعيفة والموضوعة

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அபூபக்ர் (ரலி) அவர்களும் ஸவ்ர் குகையில் நுழைந்த உடன் ஒரு சிலந்தி வந்து குகையில் வலை பின்னியது.

நூல் : மிஅது ஹதீஸ்

وأما ما يدور على الألسنة اللهم أيد الإسلام بأحد العمرين قال في الأصل لا أعلم له أصلا –أسنى المطالب في أحاديث مختلفة المراتب محمد بن درويش

(அபூஜஹில், உமர் ஆகிய) இரண்டு உமர்களில் ஒருவர் மூலம் இஸ்லாத்தைப் பலப்படுத்து என்று நபிகள் நாயகம் (ஸல்) துஆ கேட்டதாகக் கூறுவது ஆதாரமற்றது.

நூல் : அஸ்னல் மதாலிப்

حديث مصارعته أبا جهل لا أصل له ذكره الحلبي في حاشية الشفا –المصنوع في معرفة الحديث الموضوع

அபூஜஹ்லுடன் நபிகள் நாயகம் (ஸல்) மல்யுத்தம் செய்தது பற்றிய செய்தி ஆதாரமற்றது.

நூல் : அல் மஸ்னூவு

وفي المواهب ما يذكره القصاص من أن القمر دخل في جيب النبي فخرج من كمه فليس له أصل –المصنوع في معرفة الحديث الموضوع

சந்திரன் பிளந்து பூமிக்கு வந்து நபிகள் நாயகத்தின் சட்டைக்குள் நுழைந்து இரு கைகள் வழியாக இரு பாதியாக வெளியே வந்தது என்பது கட்டுக்கதை.

நூல் : அல் மஸ்னூவு

حديث اجتماع الخضر وإلياس في كل عام في الموسم قال ابن حجر لا يثبت فيه شيء –الؤلؤ المرصوع للقاوقجي

ஹிழ்ர், இல்யாஸ் ஆகிய இருவரும் உயிருடன் இருக்கின்றார்கள். மினாவில் ஆண்டு தோறும் அவர்கள் சந்தித்துக் கொள்கின்றார்கள் என்ற ஹதீஸ்கள் பொய்யானவை.

நூல் : அல்லூலுவுல் மர்சூவு

حديث كان رسول الله صلى الله عليه و سلم يوحى إليه ورأسه في حجر علي فلم يصل العصر حتى غربت الشمس فقال رسول الله صلى الله عليه و سلم صليت قال لا قال اللهم إن كان في طاعتك وطاعة رسولك فاردد عليه الشمس فقالت أسماء فرأيتها غربت ثم رأيتها طلعت بعد ما غربت  –الفوائد المجموعة للشوكاني

மறைந்த சூரியன் அலீ (ரலி) அவர்களுக்காக மீண்டும் உதித்தது என்ற செய்தி ஆதாரமற்றது.

நூல் : அல்ஃபவாயிதுல் மஜ்மூஆ

حديث من ولد له مولود وسماه محمدا تبركا به كان هو ومولوده في الجنة ذكره ابن الجوزي في الموضوعات —  الفوائد المجموعة للشوكاني

முஹம்மது என்று பெயர் வைக்கப்பட்டவர் சொர்க்கம் செல்வார் என்பது கட்டுக்கதை.

நூல் : அல்பஃவாயிதுல் மஜ்மூஆ

ومنها 8 أن يكون في الحديث تاريخ كذا وكذا مثل قوله إذا كان سنة كذا وكذا وقع كيت وكيت وإذا كان شهر كذا وكذا وقع كيت وكيت –المنار المنيف

எதிர்காலத்தில் இந்த வருடத்தில் இது நடக்கும். இத்தனை ஆண்டுகளுக்குப் பின் அது நடக்கும் என்பது போன்ற செய்திகள் யாவும் கட்டுக்கதை.

நூல் : அல்மனாருல் முனீஃப்

இப்படியெல்லாம் இட்டுக்கட்டினார்கள். மக்கள் புதுமையாகப் பார்க்க வேண்டும் என்பது மட்டுமே இவர்களின் குறிக்கோளாக இருந்ததால் நல்ல கருத்துக்கள் அடங்கிய பழமொழிகள், தத்துவங்கள் ஆகியவற்றையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றாக அரங்கேற்றியவர்களும் இவர்களே!

إذا صدقت المحبة سقطت شروط الأدب –كشف الخفاء

அன்பு அதிகமானால் மரியாதை போய்விடும்.

நூல் : கஷ்புல் கஃபா

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

حديث: أمر بتصغير اللقمة في الكل، وتدقيق المضغ، قال النووي لا يصح –المقاصد الحسنة

சிறிய கவளமாக உண்ண வேண்டும். மென்று சாப்பிட வேண்டும்.

நூல் : அல்மகாசிதுல் ஹஸனா

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

حديث البخيل عدو الله ولو كان عابدا لا أصل له — المصنوع في معرفة الحديث الموضوع

கஞ்சன் வணக்கசாலியாக இருந்தாலும் அல்லாஹ்வின் பகைவன் ஆவான்.

நூல் :அல்மஸ்னூவு

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

حديث فكرة ساعة خير من عبادة ستين سنة –الفوائد المجموعة للشوكاني

 சிறிது நேரம் சிந்திப்பது ஒரு வருடம் வணங்குவதை விடச் சிறந்ததாகும்.

நூல் : அல் ஃபவாயிதுல் மஜ்மூஆ

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

حب الوطن من الإيمان، لم أقف عليه –المقاصد الحسنة

நாட்டுப்பற்று ஈமானில் ஒரு பகுதி.

நூல் : அல்மகாசிதுல் ஹஸனா

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

حديث: الفقر فخري وبه أفتخر، قال شيخنا هو باطل موضوع –المقاصد الحسنة

வறுமை எனக்குப் பெருமை.

நூல் : அல்மகாசிதுல் ஹஸனா

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

حديث ريق المؤمن شفاء ليس بحديث –أسنى المطالب

முஃமினின் உமிழ்நீர் நோய் நிவாரணியாகும்.

நூல் : அஸ்னல் மதாலிப்

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

اخلعوا نعالكم عند الطعام فإنه سنة جميلة قال الذهبي فيه متروكان وإسناده مظلم –أسنى المطالب

சாப்பிடும்போது செருப்பைக் கழற்றிவிடுங்கள். அது அழகிய நபிவழியாகும்.

நூல் : அஸ்னல் மதாலிப்

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

ي اللآلئ «يَا عَلِيُّ عَلَيْكَ بِالْمِلْحِ فَإِنَّهُ شِفَاءٌ مِنْ سَبْعِينَ دَاءً الْجُذَامَ والبرص وَالْجُنُون» لَا يَصح فِيهِ عبد الله بن أَحْمد بن عَامر وَهُوَ وَأَبوهُ يرويان عَن أهل الْبَيْت نُسْخَة كلهَا بَاطِلَة –تذكرة الموضوعات للفتني

உப்பு பைத்தியம், குஸ்டம் உள்ளிட்ட எழுபது நோய்களுக்கு நிவாரணமாகும்

நூல் : தத்கிரதுல் மவ்லூஆத்

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

اللآلئ «الأَكْلُ فِي السُّوقِ دَنَاءَةٌ» لَا يَصح قَالَ الْعقيلِيّ لَا يَصح فِي هَذَا الْبَاب شَيْء — تذكرة الموضوعات للفتني

கடைத் தெருவில் சாப்பிடுவது அநாகரிகமாகும்.

நூல் : தத்கிரதுல் மவ்லூஆத்

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

الكلام على المائدة، لا أعلم فيه شيئاً نفياً ولا إثباتاً –المقاصد الحسنة في بيان كثير من الأحاديث المشتهرة على الألسنة

உண்ணும் போது பேசக் கூடாது.

நூல் : அல்மகாசிதுல் ஹஸனா

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

كل ممنوع حلولا يعرف بهذا وفي معناه – إن ابن آدم لحريص على ما منع — الجد الحثيث في بيان ما ليس بحديث للعامري

தடுக்கப்பட்டவைகள் இனிமையாகத் தெரியும்.

நூல் : அல்ஜித்துல் ஹஸீஸ்

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

حديث من جهل شيئا عاداه ليس بحديث — أسنى المطالب

ஒருவனுக்கு எது தெரியவில்லையோ அதற்கு அவன் எதிரியாக இருப்பான்.

நூல் : அஸ்னல் மதாலிப்

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

خبر من حفر لأخيه قليبا وقع فيه قال السخاوي لم أجد له أصلا — أسنى المطالب

அடுத்தவனுக்குக் குழி வெட்டியவன் அதில் வீழ்வான்.

நூல் : அஸ்னல் மதாலிப்

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

حديث لا أدري نصف العلم — أسنى المطالب

 தெரியாது என்று கூறுவது பாதிக் கல்வியாகும்.

நூல் : அஸ்னல் மதாலிப்

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

حديث حسنات الأبرار سيئات المقربين من كلام الصوفية — الؤلؤ المرصوع للقاوقجي

நல்லவர்கள் செய்யும் நல்ல காரியங்கள் மிக நல்லவர்களுக்குக் கெட்டதாகத் தெரியும்.

நூல் : அல்லூலுவுல் மர்சூவு

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

حديث ريق المؤمن شفاء وكذا سؤر المؤمن شفاء ليس له أصل مرفوع –المصنوع

முஃமினின் உமிழ்நீர் நோய் நிவாரணியாகும்.

நூல் : அல்மஸ்னூவு

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

حديث حبذا السواك يزيد الرجل فصاحة قال الصغاني وضعه ظاهر —الفوائد المجموعة للشوكاني

பல் துலக்குவது பேச்சாற்றலை அதிகரிக்கும்.

நூல் : அல்பவாயிதுல் மஜ்மூஆ

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

حديث إنها تنزل الرحمة عند ذكر الصالحين قال العراقي وابن حجر لا أصل له — الفوائد المجموعة للشوكاني

நல்லடியார்களைப் பற்றிப் பேசும் போது அங்கே அருள் இறங்கும்.

நூல் : அல்ஃபவாயிதுல் மஜ்மூஆ

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

71 – حَدِيثُ إِنَّ الْوَرْدَ خُلِقَ مِنْ عَرَقِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْ مِنْ عَرَقِ الْبُرَاقِ قَالَ النَّوَوِيُّ لَا يَصِحُّ وَقَالَ الْعَسْقَلانِيُّ وَغَيْرُهُ مَوْضُوعٌ –المصنوع في معرفة الحديث الموضوع

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வியர்வையில் இருந்து ரோஜா படைக்கப்பட்டது.

நூல் : அல் மஸ்னூவு

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

حَدِيثُ حَسَنَاتُ الأَبْرَارِ سَيِّئَاتُ الْمُقَرَّبِينَ –المصنوع في معرفة الحديث الموضوع

நல்லவர்களிடம் நல்லவையாகக் கருதப்படுபவை இறையச்சமுடையவர்களுக்கு கெட்டதாகத் தெரியும்.

நூல்: அல் மஸ்னூவு

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

حَدِيثُ السَّلامَةُ فِي الْعُزْلَةِ لَيْسَ بِحَدِيث  –المصنوع في معرفة الحديث الموضوع

தனிமையில் தான் (ஈமானுக்கு) பாதுகாப்பு

நூல் : அல் மஸ்னூவு

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

حَدِيثُ عِنْدَ ذِكْرِ الصَّالِحِينَ تَنْزِلُ الرَّحْمَةُ –المصنوع في معرفة الحديث الموضوع

நல்லோரை நினைவு கூறும்போது ரஹ்மத் எனும் அருள் இறங்குகிறது.

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

لَوْلاكَ لَمَا خَلَقْتُ الأَفْلاكَ قَالَ الصَّغَانِيُّ مَوْضُوعٌ — المصنوع في معرفة الحديث الموضوع

முஹம்மதே நீர் இல்லாவிட்டால் அகிலத்தை நான் படைத்திருக்க மாட்டேன் என்று அல்லாஹ் கூரினானாம்.

நூல் : அல் மஸ்னூவு

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

حَدِيث مَا بديء بِشَيْءٍ يَوْمَ الأَرْبَعَاءِ إِلا تَمَّ قَالَ السَّخَاوِيُّ لَمْ أَقِفْ لَهُ عَلَى أَصْلٍ — المصنوع في معرفة الحديث الموضوع

புதன் கிழமை ஆரம்பித்த எந்தக் காரியமானாலும் நிறைவடையாமல் போகாது.

நூல் : அல் மஸ்னூவு

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

حَدِيثُ مَسْحُ الْعَيْنَيْنِ بِبَاطِنِ أُنْمُلَتَيِ الْمُسَبِّحَتَيْنِ بَعْدَ تَقْبِيلِها عِنْدَ سَمَاعِ قَوْلِ الْمُؤَذِّنِ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ مَعَ قَوْلِهِ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ رَضِيتُ بِاللَّهِ رَبًّا وَبِالإِسْلامِ دِينًا وَبِمُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَبِيًّا لَا يَصِحُّ رَفْعُهُ عَلَى مَا قَالَ السَّخَاوِيُّ –المصنوع في معرفة الحديث الموضوع

அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ் எனக் கூறும் போது ஆட்காட்டி விரலை முத்தமிட்டு அதைக் கண்களில் ஒற்றிக் கொள்வது பற்றிய ஹதீஸ்

நூல் : அல் மஸ்னூவு

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

حَدِيثُ مَنْ عَرَفَ نَفْسَهُ فَقَدْ عَرَفَ رَبَّهُ قَالَ ابْنُ تَيْمِيَّةَ مَوْضُوعٌ — المصنوع في معرفة الحديث الموضوع

தன்னை அறிந்தவன் தன் இறைவனை அறிந்தான்

நூல்: அல் மஸ்னூவு

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

حَدِيثُ مَا مِنْ جمَاعَة اجْتمعت إِلَّا وَفِيهِمْ ولي لله لَا هُمْ يَدْرُونَ وَلا هُوَ يَدْرِي بِنَفْسِهِ لَا أَصْلَ لَهُ — المصنوع في معرفة الحديث الموضوع

எந்த இடத்தில் மக்கள் கூட்டமாக இருக்கின்றார்களோ அங்கே நிச்சயம் ஒரு வலியுல்லாஹ் இருப்பார். ஆனால் அவர்கள் அதை அறிய மாட்டார்கள் அவரும் கூட தான் வலியுல்லாஹ் என்பதை அறிய மாட்டார்.

நூல் : அல் மஸ்னூவு

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டினார்கள்.

حَدِيثُ الْمَرِيضُ أَنِينُهُ تَسْبِيحٌ وَصِيَاحُهُ — المصنوع في معرفة الحديث الموضوع

நோயாளி புலம்புவதும், சப்தமிடுவதும் தஸ்பீஹ் ஆகும்.

நூல் : அல் மஸ்னூவு

373 – حَدِيثُ مُوتُوا قَبْلَ أَنْ تَمُوتُوا قَالَ الْعَسْقَلانِيُّ إِنَّهُ غَيْرُ ثَابِتٍ — المصنوع في معرفة الحديث الموضوع

சாவதற்கு முன் செத்து விடுங்கள்.

நூல் : அல் மஸ்னூவு

அலீ (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் செய்த வஸிய்யத் என்ற பெயரில் கட்டுக்கதைகள்.

இப்படி ஏராளமான ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்டன.

7. சுயலாபத்திற்காக இட்டுக்கட்டியோர்

ஒவ்வொருவரும் தாம் சார்ந்துள்ள துறையைக் குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிலாகித்துச் சொன்னதாக இட்டுக்கட்டியுள்ளனர்.

இவர்களில் மகா கெட்டவர்கள் வைத்தியர்களாவார்கள்.

யுனானி வைத்தியர்கள் என்ற பெயரில் உருவான சில பித்தலாட்டக்காரர்கள் நபிவழி மருத்துவம் எனப் பெயர் சூட்டிக் கொண்டு ஏராளமான ஹதீஸ்களை இட்டுக்கட்டியுள்ளனர்.

இவர்கள் செய்யும் எல்லா வைத்தியமும் நபிவழி மருத்துவம் என்றனர்.

ஒவ்வொரு நோய்க்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மருந்து கூறியதாகச் சித்தரித்தனர். ஒவ்வொரு பொருளின் மருத்துவ குணம் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருப்பதாகவும் இட்டுக்கட்டினார்கள்.

இன்னும் கூட இந்த யுனானி வைத்தியர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரில் கூறுவதில் தொன்னூறு சதவிகிதம் இட்டுக்கட்டப்பட்ட பச்சைப் பொய்யாக இருப்பதைக் காணலாம்.

8. மூளை குழம்பியவர்களின் உளறல்கள்

சிலர் முதுமையில் மூளை குழம்பி நினைவாற்றல் குறைவு காரணமாக பொய் சொல்ல வேண்டும் என்ற நோக்கம் இல்லாமல் பொய்யான ஹதீஸ்களை அறிவித்துள்ளனர்.

இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களின் சில உதாரணங்களைத் தான் இங்கு குறிப்பிட்டுள்ளோம். இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை அம்பலப்படுத்தும் வகையில் நல்லறிஞர்கள் தனியாக நூற்களையே எழுதியுள்ளனர்.

இப்னு ஜவ்ஸீ, முல்லா அலீ காரி, சுயூத்தி, ஸகானி, தஹபீ, சுப்கீ போன்ற அறிஞர்களின் நூற்கள் இவற்றில் பிரபலமானவையாகும்.

தங்களின் முழு வாழ்நாளையும் இந்த ஆய்வுக்காக அர்ப்பணித்து இட்டுக்கட்டப்பட்டவைகளை இந்த நல்லறிஞர்கள் இனம் காட்டிச் சென்றார்கள்.

இந்தப் பொய்களை இவர்கள் களையெடுக்கும் முயற்சியில் இறங்காதிருந்தால் இஸ்லாத்திற்கும், ஏனைய மார்க்கங்களுக்கும் வித்தியாசம் இல்லாத நிலை ஏற்பட்டிருக்கும்.

ஆனால் இன்றைக்கும் கூட மார்க்க அறிஞர்கள் இந்தப் பொய்களை மேடைகளிலும், ஜும்ஆப் பிரசங்கங்களிலும் கூறி வருகின்றார்கள் என்பது தான் வேதனை.

ஹதீஸ்கள் எவ்வாறு பிரித்தறியப்பட்டன?

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரால் சரியான செய்திகளும், தவறான செய்திகளும் கலந்து விட்டன.

ஹதீஸ் என்று சொல்லப்பட்டால் அது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதா? அவர்கள் பெயரால் இட்டுக்கட்டப்பட்டதா? சந்தேகத்துக்கு இடமானதா? என்று பிரித்தறியும் அவசியம் இதனால் தான் ஏற்பட்டது.

இப்படிப் பிரித்தறியாமல் இருந்திருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சம்மந்தப்படாதவைகளை மார்க்கம் என்று கருதும் நிலை ஏற்பட்டு இருக்கும். இஸ்லாம் அதன் தூய வடைவில் மக்களுக்குக் கிடைக்காமல் போயிருக்கும்.

சரியான செய்திகளுடன் தவறான செய்திகள் கலந்து விட்டதால் சரியான செய்திகளை எப்படிக் கண்டறிவது?’

இதற்கு அறிஞர்கள் இரு வழிகளைக் கண்டறிந்தனர்.

ஹதீஸ்களின் கருத்தை ஆய்வுக்கு உட்படுத்துவது முதல் வழியாகும்

அக்கருத்து திருக்குர்ஆனுக்கோ, கண்முன்னே தெரியும் உண்மைக்கோ முரணாக இருந்தால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லி இருக்க முடியாது.

என்பது அவர்கள் கண்டறிந்த முதல் வழியாகும்.

திருக்குர்ஆனுக்கு முரணாக அமைந்த செய்திகளை நம்பும்போது திருக்குர்ஆனை மறுக்கும் நிலை ஏற்படும் என்பதே இதற்குக் காரணம்.

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருக்குர்ஆனுக்கு விளக்கம் கொடுக்கவே அனுப்பப்பட்டார்கள் என்று 16:44 வசனம் கூறுகிறது.

திருக்குர்ஆனுக்கு விளக்கம் கொடுப்பதற்காக அனுப்பப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருக்குர்ஆனுக்கு முரணாகப் பேசவோ, நடக்கவோ மாட்டார்கள். அப்படி அவர்கள் பேசியதாக, அல்லது நடந்ததாக ஒரு செய்தி கிடைத்தால் அது எந்த நூலில் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும் அது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னது அல்ல; செய்தது அல்ல என்ற முடிவுக்கு நாம் வரவேண்டும்.

நபிகள் நாயகத்தின் சொற்களும், செயல்களும் திருக்குர்ஆனுக்கு விளக்கமாக இருக்குமே தவிர திருக்குர்ஆனுக்கு எதிராக இருக்காது என்பதே இதற்குக் காரணம்.

இது ஹதீஸ்களை மறுப்பதாக ஆகாது. இதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

பாதுகாக்கப்பட்ட விஷயத்தில் திருக்குர்ஆனும் ஹதீஸ்களும் சமமானவை அல்ல. திருக்குர்ஆன் யாராலும் இடைச் செருகல் செய்ய முடியாத அளவுக்குப் பாதுகாக்கப்பட்டிருப்பதால் அதன் நம்பகத் தன்மையுடன் ஹதீஸ்களை ஒப்பிட்டுப் பார்க்க முடியாது என்பதை முன்னர் சுட்டிக்காட்டியுள்ளோம்.

எனவே தான் கலப்படமான ஹதீஸா? மெய்யான ஹதீஸா என்பதை அறிவதற்கு திருக்குர்ஆனின் கருத்துக்கு முரணில்லாமல் உள்ளதா என்பதை முக்கிய அளவுகோலாக கொண்டனர்.

'ஒரு ஹதீஸ் எந்த வகையிலும் திருக்குர்ஆனுடன் அறவே ஒத்துப் போகவில்லை; திருக்குர்ஆனுடன் நேரடியாக மோதுவது போல் அமைந்துள்ளது; இரண்டையும் எந்த வகையிலும் இணைத்து விளக்கம் கூற முடியாது' என்றால் அது போன்ற சந்தர்ப்பங்களில் குர்ஆனை ஏற்று அந்த ஹதீஸை நிராகரிப்பதே குர்ஆனை தக்க முறையில் மதிப்பதாகும்.

அறிவிக்கப்படும் ஹதீஸின் கருத்து சரியானதா என்பதைக் கவனத்தில் கொண்டு சரியான ஹதீஸ்கள் பிரித்தறியப்பட்டது போல் இன்னும் பல வழிமுறைகளை ஆய்வு செய்தும் சரியான ஹதீஸ்கள் பிரித்து அறியப்பட்டன.

ஹதீஸ்களை நூல் வடிவில் ஒருவர் திரட்டினால் அவர் தனக்கு அந்தச் செய்தி யார் மூலம் கிடைத்தது என்பதையும் கூற வேண்டும். அத்துடன் அவருக்கு யார் கூறினார் என்று கூற வேண்டும். இப்படி நூலாசிரியரில் இருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வரை உள்ள அத்தனை அறிவிப்பாளர்களையும் குறிப்பிட வேண்டும். இடையில் யாராவது விடுபட்டால் அது சரியான செய்தி அல்ல.

அந்த அறிவிப்பாளர் சங்கிலித் தொடரில் உள்ள ஒவ்வொருவரின் நாணயம், நேர்மை, நினைவாற்றல் உள்ளிட்ட விபரங்களுக்கும் ஆதாரம் இருக்க வேண்டும். இதில் குறை இருந்தால் அது சரியான ஹதீஸ் அல்ல.

இப்படி பல காரணங்களை அலசி ஆராய்ந்து தவறான ஹதீஸ்கள் களையெடுக்கப்பட்டன.

ஹதீஸ்களின் வகைகளை நாம் பின்னர் குறிப்பிடும் போது இதைப் பற்றி முழுமயாக அறிந்து கொள்வீர்கள்.

ஹதீஸ் துறையில்

ஸஹீஹ் (சரியானது) என்றால் என்ன?

லயீஃப் (பலவீனமானது) என்றால் என்ன?

இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் என்றால் என்ன?

என்று தெரிந்து வைத்திருப்பவர்கள் மிகச் சொற்பமே. ஏகத்துவப் பிரச்சாரப் பணிகளில் ஈடுபடுவோர் ஹதீஸ் துறையில் உள்ள இந்தக் கலைச் சொற்களையும், அது குறித்த விளக்கங்களையும் நன்கு தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொற்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் செயல்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அங்கீகாரங்கள்

ஆகிய மூன்றும் ஹதீஸ்கள் எனப்படுகின்றன.

ஹதீஸ்களை அறிவிக்கும் அறிவிப்பாளர்களின் தகுதி, எண்ணிக்கை, அறிவிப்பாளர்களிடையே தொடர்பு போன்ற தன்மைகளின் அடிப்படையில் ஹதீஸ்களை அறிஞர்கள் தரம் பிரித்துள்ளனர்.

எந்த வகையான ஹதீஸ்களை ஏற்கலாம்? எவற்றை ஏற்கக் கூடாது என்ற அடிப்படையில் ஹதீஸ்களை நான்கு முக்கிய தலைப்புகளில் அடக்கலாம்.

 صحيح1 ஸஹீஹ் (ஆதாரப்பூர்வமானவை)

موضوع 2மவ்ளூவு (இட்டுக்கட்டப்பட்டது)

 متروك3மத்ரூக் விடப்பட்டவை

ضعيف 4ளயீஃப் பலவீனமானவை

எந்த ஹதீஸாக இருந்தாலும் இந்த நான்கு வகைக்குள் அடங்கிவிடும்.

இவற்றில் ஸஹீஹ் என்ற தரத்தில் உள்ளதை மட்டுமே நாம் நடைமுறைப்படுத்த வேண்டும்.

மற்ற மூன்று வகைகளில் அமைந்த ஹதீஸ்களை நடைமுறைப்படுத்தக் கூடாது.

இந்த நான்கு வகைகளையும் பற்றி விரிவாக நாம் அறிந்து கொள்வோம்.

1ஸஹீஹ் الصحيح (ஆதாரப்பூர்வமானவை)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றிய ஒரு செய்தியை இன்று நாம் அறிவிக்கும் போது அறிவிப்பாளர்களின் வரிசையுடன் கூறுவதில்லை. ஹதீஸ்கள் நூல் வடிவில் தொகுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளதால் அது தேவையுமில்லை.

ஆனால் நூல் வடிவில் தொகுக்கும் பணி நடந்து கொண்டிருந்த ஹிஜ்ரீ இரண்டாவது, மூன்றாவது நூற்றாண்டு காலகட்டத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்பான ஒரு செய்தியைக் கூறுவதென்றால் தனக்குக் கூறியவர் யார்? என்பதையும் சேர்த்துக் கூறினால் தான் ஹதீஸ் கலை அறிஞர்கள் அந்த ஹதீஸைத் தமது நூற்களில் பதிவு செய்வார்கள்.

தமக்கு அறிவித்தவர் யார்? என்பதை மட்டும் கூறினால் போதாது. மாறாக தமக்கு அறிவித்தவர் யாரிடம் கேட்டார்? அவர் யாரிடம் இச்செய்தியைக் கேட்டார்? என்று சங்கிலித் தொடராகக் கூறிக் கொண்டே சென்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வரை செல்ல வேண்டும். அப்படி இருந்தால் தான் அதை ஹதீஸ் என்று ஒப்புக் கொள்வார்கள்.

எல்லா ஹதீஸ்களும் இந்த வகையில் தான் தொகுக்கப்பட்டுள்ளன. உதாரணமாக திர்மிதீயில் இடம் பெற்றுள்ள முதல் ஹதீஸை எடுத்துக் கொள்வோம்.

1 – حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ: أَخْبَرَنَا أَبُو عَوَانَةَ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، ح وحَدَّثَنَا هَنَّادٌ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ سِمَاكٍ، عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا تُقْبَلُ صَلَاةٌ بِغَيْرِ طُهُورٍ وَلَا صَدَقَةٌ مِنْ غُلُولٍ»، قَالَ هَنَّادٌ فِي حَدِيثِهِ: «إِلَّا بِطُهُورٍ» —سنن الترمذي

தூய்மையின்றி எந்தத் தொழுகையும், மோசடிப் பொருட்களிலிருந்து எந்தத் தர்மமும் இறைவனால் ஏற்கப்படாது என்பது திர்மிதீயின் முதலாவது ஹதீஸ்.

இந்தச் செய்தியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கும் முதல் அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) என்ற நபித்தோழர் ஆவார். இவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து இதை நேரடியாகக் கேட்டு அறிவிக்கின்றார்.

முஸ்அப் பின் ஸஅது என்பார் இதை இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்து நேரடியாகக் கேட்டவர்.

முஸ்அப் பின் ஸஅதிடமிருந்து இதைக் கேட்டவர் ஸிமாக் என்பார்.

ஸிமாக்கிடம் வகீவு, அபூ அவானா ஆகிய இருவர் கேட்டனர்.

அதாவது வகீவு என்பார் வழியாகவும், அபூ அவானா என்பார் வழியாகவும் இரு வழிகளில் இந்த ஹதீஸ் திர்மிதி இமாமுக்குக் கிடைத்துள்ளது.

முதல் வழி

1. நபிகள் நாயகம் (ஸல்)

2. இப்னு உமர் (ரலி)

3. முஸ்அப் பின் ஸஅது

4. ஸிமாக் பின் ஹர்பு

5. இஸ்ராயீல்

6. வகீவு

7. ஹன்னாத்

8. திர்மிதீ

இரண்டாவது வழி

1. நபிகள் நாயகம் (ஸல்)

2. இப்னு உமர் (ரலி)

3. முஸ்அப் பின் ஸஅது

4. ஸிமாக் பின் ஹர்பு

5. அபூ அவானா

6. குதைபா

7. திர்மிதீ

மேற்கண்ட இரு வழிகளில் இந்த ஹதீஸ் திர்மிதீ இமாமுக்குக் கிடைத்துள்ளது. இவ்வளவு விபரங்களையும் இந்த ஹதீஸில் திர்மிதீ இமாம் கூறுகின்றார்.

நாம் எடுத்துக்காட்டிய இந்த முதல் ஹதீஸ் மட்டுமின்றி அந்த நூலில் இடம்பெற்ற ஒவ்வொரு ஹதீஸுக்கும் அறிவிப்பாளர்களின் சங்கிலித் தொடரை திர்மிதி கூறுகின்றார்.

உதாரணத்துக்காகத் தான் திர்மிதி என்ற ஹதீஸ் நூலை நாம் எடுத்துக் காட்டியுள்ளோம். எந்த ஹதீஸ் நூலை எடுத்துக் கொண்டாலும் ஒவ்வொரு ஹதீஸும் அதன் முழு அறிவிப்பாளர் வரிசைத் தொடருடன் தான் பதிவு செய்யப்பட்டு இருக்கும்.

எடுத்துக்காட்டாக திர்மிதி நூலிலிருந்து நாம் எடுத்துக்காட்டிய ஹதீஸைச் சரியான ஹதீஸ் என்று கூற வேண்டுமானால் கீழ்க்கண்ட அனைத்து விபரங்களும் சரியானதாக இருக்க வேண்டும்.

இந்தச் செய்தி இமாம் திர்மிதீ அவர்களுக்கு எவர்கள் வழியாகக் கிடைத்ததோ அவர்கள் அனைவரும் நம்பகமானவர்களாக இருக்க வேண்டும்.

அவர்கள் அனைவரும் உறுதியான நினைவாற்றல் உள்ளவராக இருக்க வேண்டும்.

அவர்கள் அனைவரது நேர்மையும் சந்தேகிக்கப்படாமல் இருக்க வேண்டும்.

அவர்கள் ஒவ்வொருவரும் தமக்கு முந்தைய அறிவிப்பாளரிடமிருந்து கேட்டிருக்க வேண்டும்.

இந்தத் தன்மைகள் ஒருங்கே அமையப் பெற்றிருந்தால் தான் அதை ஆதாரப்பூர்வமான – ஸஹீஹான  ஹதீஸ் என்பர்.

அத்துடன் ஹதீஸின் கருத்து திருக்குர்ஆனுடன் நேரடியாக மோதும் வகையில் இருக்கக் கூடாது.

ஆதாரப்பூர்வமான – ஸஹீஹான  ஹதீஸ்கள் என்றால் அதன்படி அமல் செய்வது அவசியம் என்பதில் அறிஞர்களிடையே எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை.

2. மவ்ளூவு الموضوع  (இட்டுக்கட்டப்பட்டது)

ஏற்கப்படாத ஹதீஸ்கள் வரிசையில் முதலிடத்தில் இருப்பது, மவ்ளூவு என்ற வகை ஹதீஸ்களாகும். மவ்ளூவு என்றால் இட்டுக்கட்டப்பட்டது என்று பொருள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறாதவற்றையோ,  செய்யாதவற்றையோ,  அங்கீகரிக்காதவற்றையோ அவர்கள் பெயரால் கூறுவது இட்டுக்கட்டப்பட்டது எனப்படும்.

திருக்குர்ஆனுக்கும், நிரூபிக்கப்பட்ட ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கும் நேர்முரணாகவும், எந்த வகையிலும் விளக்கம் கொடுக்க முடியாதவையாகவும் அமைந்தவை.

புத்தியில்லாதவனின் உளறலுக்கு நிகராக அமைந்தவை.

அறிவிப்பாளரில் ஒருவரோ, பலரோ பெரும் பொய்யர் என்று நிரூபிக்கப்பட்டவை.

இட்டுக்கட்டியவர்கள் பிற்காலத்தில் திருந்தி, தாம் இட்டுக்கட்டியதை ஒப்புக் கொள்ளுதல் அல்லது வசமாக மாட்டிக் கொள்ளும் போது ஒப்புக் கொள்ளுதல்.

மேற்கண்ட அம்சங்களில் ஒன்று இருந்தால் கூட அது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும். அதை ஏற்கக் கூடாது. அதன் அடிப்படையில் அமல் செய்யக் கூடாது.

இதில் அறிஞர்களுக்கிடையே எந்த விதமான கருத்து வேறுபாடும் இல்லை.

இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களைப் பற்றி இந்த விபரம் போதுமென்றாலும் இதில் அதிக விழிப்புணர்வு நமக்கு அவசியம் என்பதால் இது குறித்து இன்னும் சில விபரங்களைப் பார்ப்போம்.

3. மத்ரூக் المتروك  (விடப்படுவதற்கு ஏற்றது)

மவ்ளுவு எனும் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களுக்கு அடுத்த நிலையில் அமைந்தவை மத்ரூக் எனப்படும் ஹதீஸ்களாகும்.

அறிவிப்பாளர்களில் பொய்யர் என்று சந்தேகிக்கப்பட்டவர் இடம் பெறுவது மத்ரூக் எனப்படும். ஹதீஸ்களில் இவர் பொய் கூறினார் என்பது நிரூபிக்கப்படா விட்டாலும் பொதுவாக அவர் பொய் பேசக்கூடியவர் என்று நிரூபிக்கப்பட்டிருந்தால் அவர் அறிவிக்கும் ஹதீஸ்களும் மத்ரூக் எனப்படும்.

மவ்ளுவு (இட்டுக்கட்டப்பட்ட) ஹதீஸ்களுக்கும் மத்ரூக் எனும் ஹதீஸ்களுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் மவ்ளுவு என்றால் அறிவிப்பாளர் பொய்யர் என்று சந்தேகமற நிரூபிக்கப்பட்டிருக்கும். மத்ரூக் என்பதில் பொய்யர் என்று நிரூபிக்கப்பட்டிருக்காது. எனினும் பரவலாக அவர் மேல் பொய்யர் என்று சந்தேகம் தெரிவிக்கப்பட்டிருக்கும்.

மவ்ளுவு, மத்ரூக் ஆகிய இரண்டுமே அடியோடு நிராகரிக்கப்படும் என்பதில் எந்த அறிஞரும் மாற்றுக் கருத்து கொள்ளவில்லை.

ளயீஃப் الضعيف  (பலவீனமானவை)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்களா? இல்லையா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடியவை ளயீஃப் எனப்படும். அந்தச் சந்தேகம் பல காரணங்களால் ஏற்படலாம். காரணம் எதுவாயினும் சந்தேகத்துக்குரியவற்றை நாம் பின்பற்றக் கூடாது.

சந்தேகம் ஏற்பட்டால் ஏன் பின்பற்றக் கூடாது?

உனக்கு திட்டவட்டமான அறிவு இல்லாததைப் பின்பற்றாதே.

திருக்குர்ஆன் 17:36

என்று அல்லாஹ் கூறுகின்றான்.

2518 – حَدَّثَنَا أَبُو مُوسَى الأَنْصَارِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ بُرَيْدِ بْنِ أَبِي مَرْيَمَ، عَنْ أَبِي الحَوْرَاءِ السَّعْدِيِّ، قَالَ: قُلْتُ لِلْحَسَنِ بْنِ عَلِيٍّ: مَا حَفِظْتَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: حَفِظْتُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «دَعْ مَا يَرِيبُكَ إِلَى مَا لَا يَرِيبُكَ — سنن الترمذي

உனக்குச் சந்தேகமானதை விட்டு விட்டு சந்தேகமற்றதின் பால் சென்று விடு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

அறிவிப்பவர் : ஹஸன் (ரலி)

நூற்கள் : திர்மிதீ, அஹ்மத், ஹாகிம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்களா என்று சந்தேகம் வந்தால் அதைப் பின்பற்றுவது தடை செய்யப்பட்டுள்ளதை மேற்கண்ட ஆதாரங்கள் கூறுகின்றன.

பலவீனமான ஹதீஸ்கள் நூறு இருந்தாலும் அவை ஒருக்காலும் பலமானதாக ஆகாது. நூறு நோய்கள் இருந்தால் நோய் அதிகமாகுமே தவிர நோய் போகாது.

அந்தச் சந்தேகம் எப்படியெல்லாம் ஏற்படுகின்றது என்பதைப் பொறுத்து பல வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை ளயீஃபான ஹதீஸ்களின் வகைகள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பலவீனமான ஹதீஸ்களின் வகைகள்

அறிவிப்பாளர் தொடரை வைத்து ளயீஃபான ஹதீஸ்களை கீழ்க்கண்ட விதமாக வகைப்படுத்தலாம்.

1. முர்ஸல் المرسل

ஹதீஸ்களுக்கு அறிவிப்பாளர் தொடர் அவசியம் என்பதை முன்னர் குறிப்பிட்டுள்ளோம். எல்லா அறிவிப்பாளரையும் சரியாகக் கூறி விட்டு நபித்தோழரை மட்டும் கூறாவிட்டால் அத்தகைய ஹதீஸ்கள் முர்ஸல் எனப்படும்.

உதாரணத்துக்காக நாம் முன்னர் சுட்டிக் காட்டிய திர்மிதீயின் முதல் ஹதீஸையே எடுத்துக் கொள்வோம். அதில் இப்னு உமர் என்ற நபித்தோழர் விடுபட்டு விட்டால் அது முர்ஸல் எனும் வகையில் சேரும்.

ஹன்னாத்

 வகீவு,

 இஸ்ராயீல்,

 ஸிமாக்,

 முஸ்அப்,

நபிகள் நாயகம்

என்ற சங்கிலித் தொடரில் மேற்கண்ட ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வைத்துக் கொள்வோம்.

அறிவிப்பாளர் தொடர் சரியாகவே கூறப்பட்டாலும் நபித்தோழர் மட்டும் விடப்பட்டு விட்டார். முஸ்அப் என்பவர் நபித்தோழர் அல்ல. அவர் இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து நேரடியாகக் கேட்டிருக்கவே முடியாது.

இத்தகைய தன்மையில் அமைந்த ஹதீஸ்கள் முர்ஸல் எனப்படும்.

முர்ஸல் எனும் தரத்தில் அமைந்த ஹதீஸ்களை ஏற்கலாமா? கூடாதா? என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது. அதற்கு ஒரு அடிப்படையும் உள்ளது.

அறிவிப்பாளர்களின் நம்பகத் தன்மையை ஆராயும் போது நபித்தோழர்களைப் பற்றி ஆராய மாட்டார்கள். ஏனெனில் நபித்தோழர்கள் அனைவரும் நம்பகமானவர்கள். அவர்கள் மனிதர்கள் என்ற அடிப்படையில் தவறுகள் செய்திருக்கக் கூடும். என்றாலும் நிச்சயமாக நபிகள் நாயகத்தின் பெயரால் எதையும் இட்டுக்கட்டவே மாட்டார்கள். நபித்தோழர்களை அல்லாஹ்வும் புகழ்ந்து பேசுகின்றான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் புகழ்ந்து கூறியுள்ளார்கள்.

மேலும் ஒருவர் நம்பகமானவர் அல்ல என்று கூறுவதாக இருந்தால் அவரது காலத்தவர் தான் கூற வேண்டும்.ஒரு நபித்தோழர் பற்றி வேறொரு நபித்தோழர் தான் நம்பகமற்றவர் என்று கூற வேண்டும். எந்த நபித்தோழரும் எந்த நபித்தோழர் பற்றியும் இத்தகைய விமர்சனம் செய்ததில்லை. எனவே நபித்தோழர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என்பது ஷியாக்களைத் தவிர உலக முஸ்லிம் அறிஞர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்ட உண்மையாகும்.

இப்போது முர்ஸல் என்ற தன்மையில் அமைந்த ஹதீஸுக்கு வருவோம். இந்த ஹதீஸில் நபித்தோழர் தான் விடப்பட்டுள்ளார். விடப்பட்டவரின் பெயரோ, மற்ற விபரமோ தெரியாவிட்டாலும் விடப்பட்டவர் நபித்தோழர் என்பது உறுதி. அவர் யாராக இருந்தால் நமக்கென்ன? நபித்தோழர் தான் விடப்பட்டுள்ளார் என்று தெரிவதால் மற்ற அறிவிப்பாளர்களும் நம்பகமானவர்களாக இருப்பதால் இது ஏற்கப்பட வேண்டியது தான் என ஒரு சாரார் கூறுகின்றனர்.

இந்த வாதம் பாதி தான் சரியானது. நபித்தோழர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் முர்ஸல் என்ற நிலையில் உள்ள ஹதீஸ்களில் நபித்தோழர் மட்டும் தான் விடுபட்டிருப்பார் என்பது நிச்சயமானதல்ல.

இத்தகைய ஹதீஸை அறிவிக்கும் தாபியீ ஒருவர் தம்மைப் போன்ற மற்றொரு தாபியீயிடம் இதைக் கேட்டிருக்கலாம். இதற்கும் சாத்தியம் உள்ளது. முர்ஸல் என்றால் விடுபட்டவர் நபித்தோழர் மட்டும் தான் என்று நிச்சயமாகக் கூற முடியாது. ஒரு தாபியீயும், ஒரு நபித்தோழரும் கூட விடுபட்டிருக்கலாம்.

அந்தத் தாபியீ யார்? அவர் நம்பகமானவர் தானா? என்பதைக் கட்டாயம் பரிசீலிக்க வேண்டும். அவர் யார் என்பதே தெரியாத போது பரிசீலிக்க எந்த வழியும் இல்லை. எனவே நபித்தோழர் மட்டுமோ, அல்லது நபித்தோழரும் ஒரு தாபியுமோ விடுபட்டிருக்க வாய்ப்புள்ளதால் சந்தேகத்திற்குரியதை ஆதாரமாகக் கொள்ள முடியாது என்று மற்றொரு சாரார் கூறுகின்றனர்.

இவர்களின் வாதத்தில் வலிமை உள்ளதால் இதுவே சரியானதாகும்.

ஒரு நம்பகமான தாபியீ, நான் எந்த ஹதீஸையும் நபித்தோழர் வழியாக மட்டுமே அறிவிப்பேன் என்று அறிவித்திருந்தால் அத்தகைய முர்ஸஸை ஆதாரமாகக் கொள்ளலாம். ஆனால் எந்தத் தாபியீயும் அவ்வாறு கூறியதாக நாம் அறியவில்லை.

2. முன்கதிவு المنقطع  (தொடர்பு அறுந்தது)

நபித்தோழர் தான் விடுபட்டிருக்கின்றார் என்ற சந்தேகம் இருந்தால் அதை முர்ஸல் என்கிறோம். இடையில் வேறு அறிவிப்பாளர்கள் விடுபட்டிருப்பார்கள் என்றால் அல்லது விடுபட்டிருப்பதாகச் சந்தேகம் ஏற்பட்டால் அத்தகைய ஹதீஸ்களை முன்கதிவு (தொடர்பு அறுந்தவை) என்று கூறுவார்கள்.

உதாரணத்திற்கு நாம் முன்னர் சுட்டிக் காட்டிய திர்மிதீயின் முதல் ஹதீஸையே எடுத்துக் கொள்வோம்.

ஹன்னாத்,

 வகீவு,

 இஸ்ராயீல்,

 ஸிமாக்,

முஸ்அப்,

இப்னு உமர்,

நபிகள் நாயகம்.

இதில் உதாரணமாக ஸிமாக் என்பவர் குறிப்பிடப்படாமல் ஹன்னாத்,  வகீவு,  இஸ்ராயீல்,  முஸ்அப்,  இப்னு உமர்,  நபிகள் நாயகம் என்று குறிப்பிட்டால் முன்கதிவு (தொடர்பு அறுந்தது) என்று ஆகிவிடும்.

இதைப் புரிந்து கொள்ள ஓர் உதாரணத்தைப் பார்ப்போம்.

2004 வது ஆண்டில் 40 வயதில் உள்ள ஒருவர் காந்தி கூறியதாக ஒரு செய்தியைக் கூறுகின்றார். அவர் பொய் சொல்லாதவராகவும், நம்பிக்கைக் குறியவராகவும் இருக்கின்றார். இவர் பிறந்தது 1964 ஆம் ஆண்டு. காந்தி கொல்லப்பட்டது 1948 ஆம் ஆண்டு. காந்தி கொல்லப்படும் போது பிறக்காத இவர் காந்தி கூறியதாக ஒரு செய்தியைத் தெரிவித்தால் யாரோ இவருக்கு அதைச் சொல்லியிருக்க வேண்டும்.

இது போன்ற தன்மைகளில் அமைந்தவை முன்கதிவு எனப்படும். இதைக் கண்டுபிடிக்க பல வழிகள் உள்ளன.

அ என்ற அறிவிப்பாளர் ஹிஜ்ரி 120 ல் மரணித்து விட்டார்.

ஆ என்ற அறிவிப்பாளர் 120 ல் தான் பிறந்தார் என்று வைத்துக் கொள்வோம்.

அ என்பவர் ஆ என்பவர் வழியாக ஒரு செய்தியை அறிவித்தால் நிச்சயம் இடையில் ஒருவரோ, இருவரோ விடுபட்டிருப்பார்கள் என்பதைக் கண்டுபிடித்து விடலாம்.

ஆ என்பவர் மக்காவில் வாழ்ந்தார்.

அ என்பவர் எகிப்தில் வாழ்ந்தார்.

ஆ என்பவர் ஒரு போதும் எகிப்து செல்லவில்லை.

அ என்பவர் ஒரு போதும் மக்கா செல்லவில்லை.

வேறு பொது இடத்தில் இருவரும் சந்தித்ததாகவும் வரலாற்றுக் குறிப்பு இல்லை.

ஆயினும் ஒரே காலத்தில் வாழ்ந்திருக்கின்றார்கள்.

இந்த நிலையில் ஆ என்பார் அ என்பார் வழியாக ஒன்றை அறிவித்தால் அவரிடம் நேரில் கேட்டு அறிவித்திருக்க முடியாது. யார் மூலமாகவோ தான் அதை அறிந்திருக்க முடியும். நிச்சயம் இடையில் ஒருவரோ, இருவரோ விடுபட்டிருப்பார்கள் என்பதைக் கண்டுபிடித்து விடலாம்.

அ என்பவர் 120 ஆம் ஆண்டு இறந்தார்

ஆ என்பவர் 115 ல் பிறந்தார்

இப்போது அ என்பவரிடமிருந்து ஆ என்பவர் அறிவித்தாலும் இடையில் யாரோ விடுபட்டிருப்பதைப் புரிந்து கொள்ள முடியும். ஏனெனில் அ என்பவர் மரணிக்கும் போது ஆ என்பவரின் வயது ஐந்து தான். ஐந்து வயதில் ஹதீஸ்களைக் கேட்டு அறிவிக்க முடியாது.

அ என்பவரிடமிருந்து அறிவிக்கும் ஆ என்பவர், தான் அவரைப் பார்த்ததே இல்லை என்று வாக்குமூலம் தருகின்றார். அப்போதும் யாரோ விடுபட்டதைக் கண்டுபிடித்து விடலாம்.

இத்தகைய தன்மைகளில் அமைந்த ஹதீஸ்கள் ஆதாரமாகக் கொள்ளப்படாது. இதை ஏற்று அமல் செய்ய முடியாது. ஏனெனில் விடுபட்டவர் பொய்யராக இருக்கக் கூடும்; அல்லது நினைவாற்றல் இல்லாதவராக இருக்கக் கூடும்.

3. முஃளல் المعضل

ஒரே ஒரு அறிவிப்பாளர் விடுபட்டிருந்தால் அதை முன்கதிவு என்பார்கள். முஃளல் என்றால் ஒன்றுக்கு மேற்பட்ட அறிவிப்பாளர்கள் விடுபட்டதாகும்.

ஒரு அறிவிப்பாளர் விடுபட்டதையே ஆதாரமாகக் கொள்ள முடியாது என்றால் பலர் விடுபட்டிருப்பதைப் பற்றி கூறத் தேவையில்லை. எனவே இவையும் பலவீனமான ஹதீஸ்களாகும்.

4. முஅல்லக் المعلق

ஒரு நூலாசிரியர் தமக்கு அறிவித்தவரை விட்டு விட்டு அறிவிப்பவை முஅல்லக் எனப்படும்.

வேறு சிலரின் கருத்துப்படி அறிவிப்பாளர் தொடர் அறவே இல்லாதவை முஅல்லக் எனப்படும்.

உதாரணமாக எந்த அறிவிப்பாளர் வரிசையும் இல்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள் என்று திர்மிதீ கூறுவதாக வைத்துக் கொள்வோம். அது முஅல்லக் ஆகும்.

அல்லது உதாரணத்திற்கு நாம் சுட்டிக்காட்டிய திர்மிதீ முதல் ஹதீஸில் ஹன்னாத் என்ற தனது ஆசிரியரான அறிவிப்பாளரை மட்டும் விட்டு விட்டு மற்றவர்களைக் கூறுவதாக வைத்துக் கொள்வோம். அதுவும் முஅல்லக் வகை தான்.

புகாரியில் முஅல்லக் என்ற வகையில் பல ஹதீஸ்கள் உள்ளன. எந்த அறிவிப்பாளர் வரிசையும் இல்லாமல் ஹதீஸை மட்டும் புகாரி கூறுவார்.

இத்தகைய நிலையில் உள்ள ஹதீஸ்களை ஆய்வு செய்ய வேண்டும். புகாரி போன்றவர்கள் அப்படிக் கூறினால் அவரிடம் அறிவிப்பாளர் தொடர் இருக்கின்றதா? என்று தேடிப் பார்க்க வேண்டும். வேறு எங்காவது அறிவிப்பாளர் தொடருடன் கூறியிருந்தால், அல்லது வேறு நூற்களில் அறிவிப்பாளர் தொடர் கிடைத்தால் அது நம்பகமானதாகவும் இருந்தால் அதை ஏற்றுச் செயல்படலாம்.

அவ்வாறு கிடைக்கவில்லையானால் விடுபட்டவர்கள் யார் என்பது தெரியாததால் அந்த ஹதீஸைப் பலவீனமானது என முடிவு செய்ய வேண்டும்.

பலவீனமான ஹதீஸ்களின் மற்றொரு வகை

அறிவிக்கப்படும் செய்தி மற்றும் அறிவிப்பாளரைக் கவனத்தில் கொண்டு ளயீஃபான ஹதீஸ்கள் பின்வருமாறு பிரிக்கப்படும்.

1. ஷாத் الشاذ

அரிதானது என்பது இதன் பொருள்.

ஒரு ஆசிரியரிடம் பல மாணவர்கள் ஒரு ஹதீஸைச் செவியுறுகின்றனர். பத்து மாணவர்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என்று வைத்துக் கொள்வோம்.

இந்தப் பத்து பேரும் தாம் கேட்ட ஹதீஸைப் பலருக்கும் அறிவிக்கன்றார்கள். ஒன்பது பேர் அறிவிப்பது ஒரே மாதிரியாக உள்ளது. ஆனால் ஒருவர் அறிவிப்பது ஒன்பது பேர் அறிவிப்பதற்கு முரணாகவுள்ளது. இப்படி அமைந்த அறிவிப்பைத் தான் ஷாத் என்று கூறுவர்.

தொழுகையில் நான்கு தடவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கைகளை உயர்த்தினார்கள் என்ற ஹதீஸை எடுத்துக் கொள்வோம்.

இப்னு உமர் (ரலி) மூலம்

ஸாலிம்,

நாஃபிவு,

முஹாரிப்

ஆகியோர் அறிவித்துள்ளனர்.

அதே இப்னு உமர் (ரலி) மூலம் முஜாஹித் அறிவிக்கும் போது முதல் தக்பீரில் தவிர கைகளை உயர்த்தவில்லை என்கிறார்.

நால்வருமே நம்பகமானவர்கள் தான். ஆனாலும் மூவருக்கு மாற்றமாக ஒருவர் அறிவிக்கும் போது அது ஷாத் எனும் நிலையை அடைகிறது.

இங்கே இரண்டு செய்திகளும் ஒன்றுக்கொன்று நேர் முரணானவையாக உள்ளன. இரண்டில் ஏதேனும் ஒன்று தான் உண்மையாக இருக்க முடியும். இந்த நிலையில் என்ன செய்ய வேண்டும்?

மூன்று பேர் தவறுதலாகக் கூறுவதை விட ஒருவர் தவறாகக் கூறுவதற்கு வாய்ப்புகள் அதிகம். எனவே மூவர் கூறுவதை ஏற்றுக் கொண்டு ஒருவர் கூறுவதை விட்டு விட வேண்டும்.

நபித்தோழரிடம் கேட்டவர்களுக்கிடையே தான் இந்த நிலை ஏற்படும் என்று கருதக் கூடாது. அறிவிப்பாளர் வரிசையில் எந்த இடத்திலும் இந்த நிலை ஏற்படும்.

உதாரணமாக குதைபா என்ற அறிவிப்பாளரை எடுத்துக் கொள்வோம். இவரிடம் ஏராளமானவர்கள் ஹதீஸ்களைக் கற்றுள்ளனர்.

புகாரி, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், நஸாயீ, மூஸா பின் ஹாரூன், ஹஸன் பின் சுஃப்யான் ஆகியோர் இவர்களில் முக்கியமானவர்கள்.

குதைபா என்ற அறிஞர் கூறியதாக மேற்கண்டவர்களில் எல்லோரும் அறிவிப்பதற்கு மாற்றமாக நஸாயீ மட்டும் வேறு விதமாக அறிவித்தால் அதுவும் ஷாத் என்ற வகையில் சேரும்.

ஷாத் என்பது ஹதீஸின் வாசகத்திலும் ஏற்படலாம். அறிவிப்பாளர் பெயரைப் பயன்படுத்துவதிலும் ஏற்படலாம்.

ஒரு ஹதீஸை ஒரு ஆசிரியர் வழியாக நான்கு பேர் அறிவிப்பதாக வைத்துக் கொள்வோம். அந்த ஹதீஸின் மூன்றாவது அறிவிப்பாளர் பெயர் முஹம்மதின் மகன் இஸ்மாயீல் என்று மூன்று பேர் குறிப்பிடுகின்றனர். ஒருவர் மட்டும் மூஸாவின் மகன் இஸ்மாயீல் என்று குறிப்பிடுகின்றார்.

ஒரே ஆசிரியரிடம் இருந்து அறிவிக்கும் இந்த பெயர்ப் பட்டியலில் மூவர் குறிப்பிட்ட பெயருக்கு மாற்றமாக ஒருவர் குறிப்பிடுவதால் இதுவும் ஷாத் என்ற வகையைச் சேர்ந்தது தான். மூவர் குறிப்பிடக்கூடிய பெயர் தான் சரியானதாக இருப்பதற்கு அதிகச் சாத்தியம் உள்ளது.

அதாவது மூன்றாவது அறிவிப்பாளராகக் குறிப்பிடப்பட்ட முஹம்மதின் மகன் இஸ்மாயீல் பலவீனமானவராக உள்ளார். ஆனால் மூஸாவின் மகன் இஸ்மாயீல் பலவீனமானவர் இல்லை என்று வைத்துக் கொள்வோம்.

இந்த இடத்தில் தான் அறிவிப்பாளர் வரிசையிலும் ஷாத் ஏற்படுத்தும் விளைவைப் புரிந்து கொள்ள இயலும்.

முஹம்மதின் மகன் இஸ்மாயீல் நம்பகமானவரா? மூஸாவின் மகன் இஸ்மாயீல் நம்பகமானவரா? என்பதை விட வேறொரு விஷயத்தைத் தான் நாம் கவனிக்க வேண்டும்.

அதாவது முஹம்மதின் மகன் இஸ்மாயீல் என்பவரைத் தான் மூன்று பேர் கூறுகின்றனர். எனவே இவர்களின் ஆசிரியர் இந்தப் பெயரைத் தான் குறிப்பிட்டிருப்பார். மூஸாவின் மகன் இஸ்மாயீல் என்று ஒருவர் கூறுவதால் அந்த அறிவிப்பு ஷாத் என்ற நிலைக்கு வந்து விடும்.

முஹம்மதின் மகன் இஸ்மாயீல் என்பது தான் சரியானது என்று நாம் முடிவு செய்யும் போது அந்த ஹதீஸ் பலவீனமானதாக ஆகி விடுகின்றது. ஏனெனில் முஹம்மதின் மகன் இஸ்மாயீல் பலவீனமானவராக உள்ளார்.

அதாவது மூன்று பேர் சொன்ன முஹம்மதின் மகன் இஸ்மாயீல் தான் சரியான அறிவிப்பு என்றாலும் அந்த ஹதீஸ் பலவீனமாக ஆகிவிடுகிறது.

அந்த அறிவிப்பாளர் யார் என்று முடிவு செய்வதற்குத்தான் மூவரின் அறிவிப்பை எடுத்துக் கொள்கிறோம். அந்த அறிவிப்பாளர் தான் இதைக் கூறியவர் என்று ஆகும் போது அவர் பலவீனர் என்பதால் அவர் வழியாக அறிவிக்கப்பட்ட ஹதீஸும் பலவீனமாக ஆகிறது.

ஒரு ஆசிரியரிடமிருந்து ஒரு ஹதீஸை அறிவிக்கும் ஐந்து பேரில் நால்வர் அறிவிப்பதற்கு மாற்றமாக, முரணாக ஒருவர் அறிவிப்பது தான் ஷாத். ஆனால் முரணாக இல்லாமல் நால்வர் கூறாத ஒரு விஷயத்தை ஒருவர் கூடுதலாகக் கூறினால் அது ஷாத் அல்ல. அதை நாம் ஏற்கலாம். ஏற்க வேண்டும்.

உதாரணமாக முதல் ரக்அத்தில் இக்லாஸ் அத்தியாயம் ஓதினார்கள் என்று ஒரு ஆசிரியரின் நான்கு மாணவர்கள் கூறுகின்றனர். முதல் ரக்அத்தில் இக்லாசும், இரண்டாம் ரக்அத்தில் நாஸ் அத்தியாயமும் ஓதினார்கள் என்று அதே ஆசிரியரின் ஒரு மாணவர் அறிவிக்கின்றார்.

இது ஷாத் எனும் வகையில் சேராது. ஏனெனில் நால்வர் கூறியதை ஒருவர் மறுக்கவில்லை. மாறாக அதை ஒப்புக் கொள்வதுடன் மேலும் அதிகமான ஒரு செய்தியைக் கூறுகின்றார். இவரும் நம்பகமானவராக உள்ளதால் இந்த அறிவிப்பையும் நாம் ஏற்க வேண்டும்.

பல பேர் கூறாமல் விட்டு விட்டதை ஒரே ஒருவர் மட்டும் கூறுவது சர்வ சாதாரணமான நிகழ்வு தான்.

இது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விளக்கமாகும்.

ஒரு ஆசிரியர் வழியாக இல்லாமல் வெவ்வேறு ஆசிரியர் வழியாகப் பலரும் பல விதமாக அறிவித்தால் ஷாத் என்ற பேச்சு அங்கே எழாது.

நான்கு பேர் ஹன்னாத் வழியாக ஒரு செய்தியை அறிவிக்கின்றனர். ஆனால் ஒருவர் குதைபா வழியாக அதற்கு மாற்றமாக அறிவிக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். இந்த நிலையில் ஒருவர் அறிவிப்பது தவறு. நால்வர் அறிவிப்பது சரி என்று கூற முடியாது.

ஏனெனில் உண்மையில் இவர்கள் முரண்படவில்லை. இவர்கள் யாரிடம் செவியுற்றார்களோ அவரிடம் தான் முரண்பாடு உள்ளது. இந்த ஒருவர் தனது ஆசிரியரிடம் தான் கேட்டதை அறிவிக்கின்றார். அந்த நால்வர் தங்களது ஆசிரியர்களிடம் கேட்டதை அறிவிக்கின்றார்கள்.

எனவே இதை ஷாத் என்று கூற முடியாது. முரண்பாடாகக் கூறிய இவர்களது இரு ஆசிரியர்களின் தகுதிகளையும், இன்ன பிற அம்சங்களையும் கவனத்தில் கொண்டு எது சரியானது? என்ற முடிவுக்கு வர வேண்டும்.

ஒரு ஆசிரியரிடமிருந்து பல மாணவர்கள் அறிவிக்கும் போது பலர் ஒரு விதமாகவும். ஒருவர் அதற்கு முரணாகவும் அறிவித்து இருந்தால் அதை ஷாத் என்கிறோம்.

முரணாக ஒருவர் அறிவிப்பது ஷாத் என்றால் இதற்கு மாற்றமாகப் பலர் அறிவிப்பதற்கு தனிப் பெயர் உண்டா என்றால் உண்டு. இதை மஹ்பூள் என்று கூறுவார்கள்.

ஒரு ஹதீஸ் பற்றி மஹ்பூள் என்று கூறப்பட்டால் எதிராக ஷாத் எனும் அறிவிப்பு உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மஹ்பூள் என்றால் ஆதாரமாகக் கொள்ளத் தக்கது என்பது பொருள்.

2. முன்கர் المنكر  (நிராகரிக்கப்பட்டது)

ஒரு ஆசிரியரிடமிருந்து கற்ற பல மாணவர்கள் ஒரு செய்தியை எப்படி அறிவிக்கின்றார்களோ அதற்கு முரணாக ஒரே ஒருவர் அறிவித்தால் அவர் நம்பகமானவராகவும் இருந்தால் அதை ஷாத் என்று அறிந்தோம்.

மற்றவர்களை விட நம்பகத் தன்மையிலும், நினைவாற்றலிலும் குறைவானவராக அந்த ஒருவர் இருந்து விட்டால் அது முன்கர் எனப்படும்.

ஒரு ஹதீஸ் பற்றி முன்கர் என்று கூறப்பட்டால் அதை அறிவிக்கும் ஒருவர் பலவீனமாக உள்ளார் என்பதும் அதற்கு மாற்றமாக அதே ஆசிரியர் வழியாக நம்பகமான மற்ற மாணவர்கள் அறிவித்துள்ளனர் என்பதும் பொருள்.

ஷாத் என்ற நிலையில் அமைந்த ஹதீஸ்களையே ஆதாரமாகக் கொள்வதில்லை எனும் போது முன்கர் என்ற நிலையில் அமைந்த ஹதீஸ்களைப் பற்றி சொல்லத் தேவையில்லை.

(இப்னு ஸலாஹ் என்ற அறிஞர் முன்கர், ஷாத் இரண்டுமே ஒரு வகைக்கான இரண்டு பெயர்கள் என்று கூறுகின்றார். )

முன்கர் என்ற நிலையில் இல்லாத ஹதீஸ்கள் மஃரூஃப் என்று கூறப்படும்.

அதாவது ஒரு ஆசிரியரிடமிருந்து ஐந்து மாணவர்கள் அறிவிக்கின்றனர். ஐவரில் நால்வர் அறிவிப்பதற்கு மாற்றமாக ஒருவர் மட்டும் அறிவிக்கின்றனர். அந்த நால்வர் நம்பகமானவர்களாக இருப்பது போல் இந்த ஒருவர் நம்பகமானவராக இல்லை. இந்த ஒருவர் அறிவிப்பதை முன்கர் என்போம். அந்த நால்வர் அறிவிப்பதை மஃரூஃப் என்போம்.

மஃரூஃப் என்பது ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் ஒரு வகையாகும்.

பலவீனமான ஹதீஸ்களின் இன்னொரு வகை

அறிவிக்கப்படும் விதத்தைக் கவனத்தில் கொண்டு ளயீஃபான ஹதீஸ்கள் கீழ்க்கண்டவாறு பிரிக்கப்படும்.

1. முதல்லஸ் المدلس

பலவீனமான ஹதீஸில் முதல்லஸ் என்பதும் ஒரு வகையாகும். இச்சொல் தத்லீஸ் எனும் சொல்லில் இருந்து பிறந்த சொல்லாகும். மறைத்தல், இருட்டடிப்புச் செய்தல் என்பது இதன் பொருளாகும். ஒரு அறிவிப்பாளர் தனக்கு சொன்னவரைக் கூறாமல் அவருக்கு முந்திய அறிவிப்பாளரைக் கூறுதல் ஹதீஸ் கலையில் தத்லீஸ் எனப்படும்.

உதாரணமாக

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்ன செய்தியை அப்பாஸ் (ரலி) என்ற நபித்தோழர் அறிவிக்கிறார்.

அப்பாஸ் (ரலி) அவர்கள் ஹஸன் என்பாரிடம் கூறுகிறார்.

ஹஸன் என்பார் சலீம் என்பாரிடம் கூறுகிறார்.

சலீம் இதை எப்படி அறிவிக்க வேண்டும்? இதை ஹஸன் கூறினார். ஹஸனுக்கு அப்பாஸ் கூறினார். அப்பாஸுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று தான் அவர் கூற வேண்டும். இப்படிக் கூறினால் அவர் யாரையும் இருட்டடிப்புச் செய்யவில்லை.

இவ்வாறு அவர் கூறாமல்

அப்பாஸ் கூறினார். அப்பாஸுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று கூறுகிறார் என்று கூறுகிறார் என்றால் இவர் அப்பாஸிடம் தானே கேட்டது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. அப்பாஸ் கூறியதை இவர் செவியுறவில்லை. அப்பாஸ் கூறியதாக ஹஸன் கூறியதைத் தான் செவியுற்றார். தனக்கு கூறிய ஆசிரியரை விட்டு விட்டு அறிவிப்பதால் இது தத்லீஸ் எனப்படும்.

சலீம் என்பார் தனது ஆசிரியரைக் கூறாமல் மறைத்து விட்டதால் அவர் யார் என்று தெரியாமல் போய்விடுகிறது. அவர் யார் என்று தெரிந்தால் தான் அவரது நாணயம் நம்பகத்தன்மை உள்ளிட்ட விஷயங்களை ஆய்வு செய்து ஹதீஸின் தரத்தை முடிவு செய்ய முடியும்.

ஆசிரியரைக் கூறாமல் விட்டு விட்ட எல்லா ஹதீஸ்களும் முதல்லஸ் என்ற வகையில் சேராது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.

மேலே நாம் எடுத்துக் காட்டிய உதாரணத்தில் சலீம் என்பவர் சில செய்திகளை அப்பாஸிடம் நேரடியாக கேட்டு இருக்க வேண்டும். சில செய்திகளை அப்பாஸ் கூறியதாக மற்றவர் சொல்லி கேட்டிருக்க வேண்டும். இப்படி இருக்கும் நிலையில் அவர் அப்பாஸ் கூறியதாக அறிவித்தால் தான் தத்லீஸ் ஆகும்.

சலீம் என்பவர் அப்பாஸ் அவர்களைச் சந்திக்கவே இல்லை. அவர் காலத்தவராகவும் இல்லை. இந்த நிலையில் அவர் அப்பாஸ் கூறியதாகச் சொன்னால் இது முன்கதிவு என்ற வகையில் சேரும். சலீம் என்பார் அப்பாஸைச் சந்தித்து இருக்க மாட்டார் என்ற ஆதாரம் உள்ளதால் இவர் அப்பாஸிடம் கேட்டதாகச் சொல்வது தவறு என்ற தெளிவான முடிவுக்கு வந்து விடமுடியும்.

ஆனால் அப்பாஸிடம் இவர் நேரடியாகவும் சில ஹதீஸ்களைக் கேட்டுள்ளார். சில ஹதீஸ்களை அப்பாஸ் கூறியதாக மற்றவர்கள் இவருக்கு அறிவித்துள்ளனர். இப்போது இவர் அப்பாஸ் கூறினார் என்றால் இங்கு தான் குழப்பத்தை ஏற்படுத்துகிறார். அவர் அப்பாஸிடமும் கேட்டுள்ளதால் இதையும் அவர் அப்பாஸிடம் கேட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறார். இப்படி இருந்தால் தான் முதல்லஸ் எனப்படும்

சலீம் என்ற அறிவிப்பாளர் அப்பாஸ் வழியாக அறிவிக்கும் செய்தியை நான் அப்பாஸிடம் கேட்டேன்; அல்லது அப்பாஸ் எனக்குச் சொன்னார் என்பது போன்ற சொற்களைப் பயன்படுத்தி அறிவித்தால் இதில் அவர் இருட்டடிப்பு செய்யவில்லை. நேரடியாகக் கேட்டதாகச் சொல்வதால் இது ஏற்புடைய ஹதீஸ் ஆகும். இப்படிச் சொல்லாமல் அப்பாஸ் சொன்னார் என்று அறிவித்தால் இவரிடம் சொன்னார் என்ற கருத்து இதில் இல்லை. அப்பாஸ் இவரிடம் சொல்லி இருக்கலாம். அல்லது அப்பாஸ் சொன்னதாக மற்றவர் இவருக்குச் சொல்லி இருக்கலாம். இப்படி இருந்தால் அதை ஆதாரமாகக் கொள்ள கூடாது.

இதில் சில அறிவிப்பாளர்கள் விதிவிலக்கு பெறுவார்கள்.

ஒரு உதாரணத்தின் மூலம் இதைப் புரிந்து கொள்ளலாம்.

சலீம் என்பவர் அப்பாஸிடம் நேரிலும் கேட்டுள்ளார். அப்பாஸ் கூறியதாக இன்னொருவர் மூலமும் கேள்விப்பட்டுள்ளார். ஆனால் எதை நேரடியாக அப்பாஸிடம் கேட்டாரோ அதை மட்டுமே அப்பாஸ் கூறியதாக அறிவிப்பார். இன்னொருவர் வழியாக கேட்டதை அப்பாஸ் கூறியதாக அறிவிக்கவே மாட்டார் என்பது நிருபணமாக இருந்தால் அவர் அறிவிக்கும் ஹதீஸ் முதல்லஸ் ஆகாது. நான் நேரடியாகக் கேட்டேன் என்று சொல்லாவிட்டாலும் அது முதல்லஸ் ஆகாது.

முதல்லஸ் என்ற வகையில் அமைந்த ஹதீஸ்களை ஆதாரமாகக் கொள்ளக் கூடாது. ஏனெனில் விடுபட்ட ஒருவர் மோசமானவராகவும் இருக்கக் கூடும்.

ஒவ்வொரு ஹதீஸிலும் தத்லீஸ் என்ற தன்மை உள்ளதா? என்று பார்க்க வேண்டுமே தவிர ஒரு நபர் தத்லீஸ் செய்பவர் என்பதால் அவர் அறிவிக்கும் எல்லா ஹதீஸ்களையும் நிராகரித்து விடக்கூடாது.

இந்த விஷயத்தில் அறிஞர் பெருமக்களிடையே கருத்து வேறுபாடு இல்லை.

2. முஅன்அன் المعنعن

அன் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது முஅன்அன் எனப்படும்.

அன் அபீஹுரைரா (அபூஹுரைரா வழியாக)

அன் ஆயிஷா (ஆயிஷா வழியாக)

என்பது போல் குறிப்பிடும் ஹதீஸ்கள் முஅன்அன் எனப்படும்.

 நமக்குச் சொன்னார்;

 நமக்கு அறிவித்தார்;

எனக்குச் சொன்னார்;

என்னிடம் சொன்னார்;

நம்மிடம் தெரிவித்தார்;

நான் காதால் அவரிடம் செவியுற்றேன்

என்பது போல் அறிவிக்கப்படும் ஹதீஸ்களில் அறிவிப்பாளர் நம்பகமானவர்களாக இருந்தால் அப்படியே அதை ஏற்க வேண்டும்.

ஆனால் முஅன்அன் என்ற வகையில் அமைந்த ஹதீஸ்கள் பரிசீலனைக்குப் பிறகே ஏற்கப்படும்.

தக்லீஸ் செய்யும் வழக்கமுடையவராக அவர் இல்லாதிருந்து இவ்வாறு பயன்படுத்தினால் அதனால் ஹதீஸின் தரம் பாதிக்காது. அவர் வழியாக அவர் மூலம் என்றெல்லாம் இவர் பயன்படுத்துவதற்கும், நமக்கு அறிவித்தார் என்பதற்கும் இவரைப் பொறுத்தவரை வித்தியாசம் இல்லை.

அவர் தக்லீஸ் செய்யும் வழக்கமுடையவராக இருந்து இவ்வாறு அவர் அறிவித்தால் இவர் நேரடியாகச் செவியுற்றது வேறு வகையில் நிரூபிக்கப்பட்டுள்ளதா? என்று பார்க்க வேண்டும். நிரூபிக்கப்பட்டிருந்தால் அதை ஏற்கலாம். அவ்வாறு நிரூபிக்கப்படாவிட்டால் அதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.

அதாவது முஅன்அன் என்று கூறப்பட்டவுடன் அதை ஏற்கவோ, மறுக்கவோ கூடாது. மாறாக ஆய்வு செய்த பின்னர் தான் அது பற்றி முடிவு செய்ய வேண்டும்.

அது போல் ஒரு அறிவிப்பாளர் அறிவிப்பாளர் தொடரைக் கூறும் போது இடையிடையே அறிவிப்பாளர் விடக் கூடியவராக இருந்தால், ஒரு அறிவிப்பாளருக்கும் அவருக்கு அடுத்த அறிவிப்பாளரும் சமகாலத்தவராக இல்லாமலிருக்கும் போது அன் என்று பயன்படுத்தி அறிவித்தால் அதுவும் தள்ளுபடி செய்யபப்டும்.

3. முத்ரஜ் المدرج  (இடைச்செருகல்)

 ஹதீஸின் அறிவிப்பாளர், ஹதீஸை அறிவிக்கும் போது ஹதீஸில் தனது வார்த்தையையும் சேர்த்துக் கூறி விடுவதுண்டு.

 இந்த நேரத்தில் இதை ஓது என்ற கருத்தில் ஒரு ஹதீஸ் இருப்பதாக வைத்துக் கொள்வோம். இதை அறிவிக்கும் அறிவிப்பாளர், இந்த நேரத்தில்இதை ஓது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதைத் தெரிவித்து விட்டு, இவ்வளவு எளிமையான வணக்கத்தை விட்டு விடாதீர்கள் என்று சுய கருத்தையும் கூறிவிடுவார்.

இத்தகைய இடைச்செருகல் உள்ள ஹதீஸ்கள் முத்ரஜ் எனப்படும். இத்தகைய ஹதீஸ்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது எது? இடைச் செருகல் எது? என்பதைப் பிரித்து அறிந்து இடைச் செருகலை மட்டும் விட்டு விட வேண்டும்.

வேறு அறிவிப்பைப் பார்த்தும் இடைச் செருகலைக் கண்டுபிடிக்கலாம்.

இந்த அறிவிப்பாளரே பிரிதொரு சந்தர்ப்பத்தில், இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்று அல்ல; என்னுடைய கூற்று தான் என்றோ அல்லது எனக்கு அறிவித்தவரின் சொந்தக் கூற்று என்றோ கூறுவதை வைத்தும் கண்டுபிடிக்கலாம்.

இது நிச்சயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இருக்க முடியாது என்று முடிவு செய்யத் தக்க வகையில் அதன் கருத்து அமைந்திருப்பதை வைத்தும் கண்டு பிடிக்கலாம்.

அல்லது இத்துறையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட நல்லறிஞர்கள் எண்ணற்ற அறிவிப்புகளை ஆய்வு செய்து கூறும் முடிவின் அடிப்படையிலும் தெரிந்து கொள்ளலாம்.

பின்வரும் விதமாகவும் ஹதீஸ்கள் வகைப்படுத்தப்படுகின்றன.

பலவீனமான ஹதீஸ்களின் மேலும் ஒரு வகை

1. முள்தரப் المضطرب

குழப்பமானது என்று இதன் பொருள்.

முள்தரப் என்பதும் ஏற்கத் தகாத, பலவீனமான ஹதீஸ்களின் ஒரு வகையாகும்.

ஒரு ஆசிரியரிடமிருந்து ஒரு ஹதீஸைப் பல மாணவர்கள் செவியுற்று, ஒருவர் மட்டும் மற்றவர்கள் அறிவிப்பதற்கு முரணாக அறிவித்தால் அது ஷாத் எனப்படுகின்றது என்பதை ஏற்கனவே நாம் பார்த்துள்ளோம்.

முள்தரப் என்பது ஓரளவு இது போன்றது தான் என்றாலும் இரண்டுக்கும் முக்கியமான வித்தியாசம்உள்ளது.

ஒரு குறிப்பிட்ட செய்தியைப் பலரும் அறிவித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் அறிவிப்பதற்கு மாற்றமாக சிலர் அறிவிக்கின்றார்கள். இவர்கள் ஒரு ஆசிரியர் வழியாக அறிவிக்கவில்லை. வெவ்வேறு ஆசிரியர் வழியாக இப்படி அறிவிக்கின்றார்கள் என்றால் அது முள்தரப் எனப்படும்.

ஒரு சம்பவம் மக்காவில் நடந்ததாக ஐந்து பேர் ஒரு ஆசிரியர் கூறியதாக அறிவிக்க, மதீனாவில் நடந்ததாக வேறு ஒரு ஆசிரியர் வழியாக இரண்டு பேர் அறிவிக்கின்றார்கள் என்றால் இரண்டு பேர் அறிவிப்பது முள்தரப் எனப்படும். இரு விதமாக அறிவிப்பவர்களும் சமமான தரத்தில் இருந்தால் தான் இருவர் அறிவிப்பது முள்தரப் எனப்படும். ஐஅவரின் தரத்தை விட இருவரின் தரம் உயர்ந்தததாக இருந்தால் அப்போது இருவர் அறிவிப்பது தான் சரியான ஹதீஸ். இது முள்தரப் ஆகாது.

இந்த முடிவை அவசரப்பட்டு எடுத்துவிடக் கூடாது. மக்காவிலும், மதீனாவிலும் இரு வேறு சந்தர்ப்பங்களில் நடந்திருக்க முகாந்திரமோ, ஆதாரமோ இருந்தால் அதை முள்தரப் என்று கூறக் கூடாது.

முள்தரப் என்பது இன்னொரு வகையிலும் ஏற்படும்.

ஒரு அறிவிப்பாளர் நேற்று மக்காவில் நடந்ததாகக் கூறி விட்டு, இன்று மதீனாவில் நடந்ததாக அறிவித்தால் அதுவும் முள்தரப் (குழப்பத்தால் நேர்ந்த தவறு) தான்.

கருத்துக்களில் முள்தரப் எனும் நிலை இருப்பது போலவே அறிவிப்பாளர் வரிசையிலும் இந்த நிலை ஏற்படலாம்.

இப்ராஹீம் எனக்கு அறிவித்தார் என்று ஒரு செய்தியை அறிவித்த அறிவிப்பாளர், பின்னொரு சமயத்தில் அப்துல்காதிர் அறிவித்ததாக மாற்றிக் கூறினால் இதுவும் முள்தரப் தான்.

பெயரில் குழப்பம் ஏற்பட்டதால் இவ்விருவர் அல்லாத மூன்றாவது ஒருவராகவும் அவர் இருக்கக் கூடும். அவர் பலவீனமானவராக இருந்திருக்கவும் வாய்ப்புள்ளது என்பதால் இது போன்ற நிலையில் அமைந்த ஹதீஸ்களை ஆதாரமாகக் கொள்வதில்லை.

2. மக்லுாப் المقلوب  (மாறாட்டம்)

சில நேரங்களில் சில நிகழ்ச்சிகளை ஏறுக்குமாறாகக் கூறி விடுவோம். இருப்பதாகக் கூறியதை இல்லை என்போம். இல்லை என்று கூறியதை உண்டு என்போம். இப்படி ஏறுக்குமாறாகவும் ஹதீஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பிலால் பாங்கு சொன்னால் சாப்பிடுவதை நிறுத்த வேண்டாம். இப்னு உம்மி மக்தூம் பாங்கு சொன்னால் சாப்பிடுவதை நிறுத்தி விட்டு நோன்பு பிடியுங்கள் என்ற ஹதீஸ் பலர் வழியாக பல நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிலர், பிலால் இடத்தில் உம்மி மக்தூமையும், உம்மி மக்தூம் இடத்தில் பிலாலையும் போட்டு ஏறுக்குமாறாக அறிவித்துள்ளனர். அந்த அறிவிப்பாளர் நம்பகமானவர் என்றாலும் இத்தகைய தவறுகளிலிருந்து அப்பாற்பட்டவர்கள் இருக்கவே மாட்டார்கள்.

எது மாற்றிக் கூறப்பட்டது என்று கண்டறியப்படுகிறதோ அந்த ஹதீஸ்களையும் ஆதாரமாகக் கொள்ளக் கூடாது.

கருத்தில் இப்படி ஏற்படுவது போல் அறிவிப்பாளர் விஷயத்திலும் ஏற்படலாம். ஆசிரியரைக் கூற வேண்டிய இடத்தில் மாணவரையும், மாணவரைக் கூற வேண்டிய இடத்தில் ஆசிரியரையும் போட்டு விடுவதுண்டு.

3. மஜ்ஹுல் المجهول  (யாரென அறியப்படாதவர்கள்)

ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் வரலாற்றுக் குறிப்பு இருக்க வேண்டும். அவ்வாறில்லாதவர்கள் மஜ்ஹுல் எனப்படுவர்.

இஸ்மாயீலின் மகன் ஈஸா என்பவர் அறிவித்ததாக நம்பகமானவர் கூறுகின்றார். நமது சக்திக்கு உட்பட்டு தேடிப் பார்த்தால் அப்படி ஒருவர் பற்றிய எந்தக் குறிப்பும் கிடைக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். இவர் மஜ்ஹுல் எனப்படுவார்.

அல்லது இப்படி ஒருவர் இருந்ததாகத் தெரிகின்றது. ஆனால் அவர் எப்போது பிறந்தார்? எப்போது மரணித்தார்? அவரது நம்பகத்தன்மை எத்தகையது? அவரது நினைவாற்றல் எப்படி? என்ற எந்த விபரமும் கிடைக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம் இவரும் மஜ்ஹுல் தான்.

ஒருவர் நம்பகமானவர் தானா? என்பதைத் தீர்மானிப்பதற்கு தேவையான தகவல் கிடைக்கப் பெறாத ஒவ்வொருவரும் மஜ்ஹுல் எனப்படுவர்.

இத்தகையோர் அறிவிக்கும் ஹதீஸ்களும் ஆதாரமாகக் கொள்ளப்படாது. இதன் அடிப்படையில் எந்தச் சட்டமும் எடுக்கப்படக் கூடாது.

யாரைப் பற்றிய செய்தி என்ற அடிப்படையில் வகைப்படுத்துதல்

இது வரை பலவீனமான ஹதீஸ்கள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன என்ற விபரத்தைப் பார்த்தோம்.

யாரைப் பற்றிய செய்தி என்பதைப் பொறுத்தும் ஹதீஸ்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

யாருடைய சொல், செயல், அங்கீகாரம் அறிவிக்கப்படுகின்றது என்ற அடிப்படையில் ஹதீஸ்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சம்பந்தப்பட்ட செய்திகள் மர்பூஃவு என்றும்,

நபித்தோழர்கள் சம்பந்தப்பட்ட செய்திகள் மவ்கூஃப் என்றும்,

அதற்கடுத்த தலைமுறையினர் சம்பந்தப்பட்ட செய்திகள் மக்தூவு என்றும் கூறப்படும்.

இதை விரிவாகப் பார்ப்போம்.

1. முஸ்னத், மர்ஃபூவு (المسند– المرفوع)

முஸ்னத் என்றால் சங்கிலித் தொடரான அறிவிப்பாளர்கள் முழுமைப்படுத்தப்பட்டது என்று பொருள். மர்ஃபூவு என்றால் சேரும் இடம் வரை சேர்ந்தது என்று பொருள்.

முஸ்னத் என்பது அறிவிப்பாளரின் நம்பகத்தன்மையின் அடிப்படையில் சூட்டப்பட்ட பெயர் இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் தொடர்புபடுத்திக் கூறப்படும் செய்திகளா? இல்லையா? என்ற அடிப்படையில் கூறப்பட்டது தான்.

முஸ்னதாக இருக்கும் ஹதீஸின் அறிவிப்பாளர்களில் அனைவருமோ அல்லது ஒருவரோ நம்பிக்கைக்குரியவராக இல்லாதிருக்கலாம். எனவே அது முஸ்னதாக இருந்தும் ஏற்கத்தகாத ஹதீஸாகி விடும்.

மர்ஃபூவு என்பதும் ஏறக்குறைய முஸ்னதைப் போன்றது தான். எனினும் இரண்டுக்கும் சிறிய வித்தியாசம் உள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாகவோ, செய்ததாகவோ அறிவிக்கப்படும் ஒரு ஹதீஸின் இடையில் எந்த அறிவிப்பாளரும் விடுபடாமல் இருந்தால் அது முஸ்னத் எனப்படும்.

மர்ஃபூவு எனக் கூறுவதற்கு இந்த நிபந்தனை இல்லை. அறிவிப்பாளர் இடையில் விடுபட்டிருக்கலாம். அல்லது விடுபடாமல் இருக்கலாம். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும் என்பது தான் மர்ஃபூவு என்பதன் முக்கிய நிபந்தனையாகும்.

மர்ஃபூவு எனக் கூறப்படும் ஹதீஸ்களின் அறிவிப்பாளர் தொடரும் ஆய்வு செய்யப்பட வேண்டும். மர்ஃபூவு என்று கூறியவுடன் அதை அப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடாது.

2. மவ்கூஃப் الموقوف

சில ஹதீஸ்கள் மவ்கூஃப் என்று கூறப்படும். தடைபட்டு நிற்பது என்பது இதன் பொருள். இவை அறிவிப்பாளர்களின் நம்பகத் தன்மையின் அடிப்படையில் சூட்டப்பட்டதன்று.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொல்லையோ, செயலையோ, அங்கீகாரத்தையோ அறிவிப்பவை தான் ஹதீஸ்கள் எனப்படும்.

அவ்வாறு இல்லாமல் ஒரு நபித்தோழர் இவ்வாறு செய்தார்; இவ்வாறு சொன்னார் என்று ஒரு செய்தி அறிவிக்கப்படுகின்றது என்று வைத்துக் கொள்வோம். இச்செய்தியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படவில்லை. என்றால் மவ்கூஃப் எனப்படும்.

நம்பகமான அறிவிப்பாளர்கள் வழியாக நபித்தோழர் கூறியது நிரூபிக்கப்பட்டாலும் மார்க்கத்தில் அதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.

அல்லாஹ்வும், அவனது திருத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறியவை மட்டும் தான் ஆதாரமாக ஆக முடியும். மற்றவர்களின் கூற்று எவ்வளவு நம்பகமானவர்கள் வழியாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் நபித்தோழர்களின் கூற்று என்பது தான் உறுதியாகுமே தவிர அது ஆதாரமாக ஆகாது.

சில செய்திகள் மேலோட்டமாகப் பார்க்கும் போது மவ்கூஃப் போன்று தோற்றமளித்தாலும் அதை மவ்கூஃப் என்று கூற முடியாத வகையில் அமைந்திருக்கும்.

நாங்கள் நபி (ஸல்) காலத்தில் இப்படிச் செய்தோம்

எங்களுக்கு இவ்வாறு கட்டளையிடப் பட்டிருந்தது என்பது போன்ற வாசகங்களைப் பயன்படுத்தி நபித்தோழர்கள் அறிவித்துள்ளனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தவிர வேறு யாரும் நபித்தோழர்களுக்கு மார்க்கக் கட்டளை பிறப்பித்திருக்க முடியாது.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் நபித்தோழர்கள் ஒன்றைச் செய்தார்கள் என்று கூறப்பட்டால் அது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டும் தடுக்கவில்லை என்று பொருள் கொள்ள வேண்டும்.

எனவே இதை மவ்கூஃப் என்று கூறக் கூடாது என்று பெரும்பாலான அறிஞர்கள் கூறுகின்றனர். சிலர் இதற்கு மாற்றுக் கருத்தும் கொள்கின்றனர்.

3. மக்தூவு المقطوع  (முறிக்கப்பட்டது)

நபித்தோழர்களின் சொல், செயல்களைக் கூறும் ஹதீஸ்கள் மவ்கூஃப் என்று கூறுவது போல், நபித்தோழர்களுக்கு அடுத்த தலைமுறையினரான தாபியீன்களின் சொல், செயல்களைக் கூறும் ஹதீஸ்கள் மக்தூவு எனப்படும்.

நபித்தோழர்களின் கூற்றே மார்க்க ஆதாரமாக ஆகாது எனும் போது அவர்களுக்கு அடுத்த தலைமுறையினரின் சொல்லோ, செயலோ மார்க்க ஆதாரமாக ஆகாது என்பதில் சந்தேகம் இல்லை.

அறிவிப்பவரின் எண்ணிக்கை அடிப்படையில் வகைப்படுத்துதல்

எத்தனை நபர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது என்ற அடிப்படையில் ஹதீஸ்கள் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன.

1. முதவா(த்)திர் المتواتر  (ஒருமித்து அறிவிக்கப்படுவது)

ஒரு செய்தியை ஒருவர்; இருவர் அல்ல; ஏராளமானவர்கள் அறிவிக்கின்றனர். ஒவ்வொரு கால கட்டத்திலும் இவ்வாறு ஏராளமானவர்கள் அறிவித்துள்ளனர் என்றால் இத்தகைய செய்திகளை முதவா(த்)திர் என்று கூறுவர்.

மக்கா என்றொரு நகரம் உள்ளது என்பதை ஒவ்வொரு காலகட்டத்திலும் எண்ணற்றவர்கள் அறிவித்துள்ளனர். பத்ருப் போர் என்றொரு போர் நடந்தது என்பது இது போல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்திகள் ஹதீஸ்களிலேயே மிகவும் பலமானவை. எக்காரணம் கொண்டும் நிராகரிக்கப்பட முடியாதவை.

நம்பகமான ஒருவர் மூலம் உங்களுக்கு ஒரு ஹதீஸ் கிடைக்கின்றது. அதை நீங்கள் ஒரு லட்சம் பேருக்கு அறிவிக்கின்றீர்கள். அந்த ஒரு லட்சம் பேரும் அடுத்த தலைமுறையினருக்கு அறிவிக்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். இது முதவா(த்)திர் என்று கருதப்படாது. ஏனெனில் அந்த ஒரு லட்சம் பேரும் உங்களில் ஒருவர் வழியாகத் தான் அறிந்தனர். நீங்கள் ஒரே ஒருவர் மூலமாகத் தான் அதை அறிந்தீர்கள். எல்லா மட்டத்திலும் ஏராளமான பேர் அறிவித்தால் மட்டுமே அதை முதவா(த்)திர் எனலாம்.

குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வந்தது என்பதை ஏராளமான நபித்தோழர்கள் அறிவித்தனர். அவர்களிடம் கேட்ட ஏராளமான தாபியீன்கள் ஏராளமான தபவுத் தாபியீன்களுக்கு அறிவித்தனர். இப்படியே தொடர்ந்து இந்தச் செய்தி நம்மை வந்தடைந்துள்ளது. இன்றைக்கு 150 கோடி முஸ்லிம்களும் இந்தச் செய்தியை அடுத்த தலைமுறையினருக்கு அறிவிக்கின்றார்கள். இது தான் முதவா(த்)திர் எனப்படும்.

குர்ஆனை அல்லாஹ்வுடைய வேதம் என்று முதவா(த்)திரான ஹதீஸ்களின் துணையுடன் நம்புகிறோம்.

இப்படி அமைந்த ஹதீஸ்கள் மிகவும் அரிதாகவே உள்ளன. அதற்கு உதாரணம் காட்டும் அறிஞர்கள் அனைவரும். யார் என் பெயரால் ஒரு செய்தியை இட்டுக் கட்டிக் கொள்ளட்டும் என்ற ஹதீஸைத் தான் உதாரணம் காட்டுகின்றனர்.

இதை அறுபதுக்கும் மேற்பட்ட நபித்தோழர்கள் அறிவித்துள்ளனர். இப்படியே தலைமுறைதோறும் எண்ணற்றவர்கள் வழியாக இது அறிவிக்கப்பட்டுள்ளது.

2. ஹபருல் வாஹித் خبر الواحد  (தனி நபர் அறிவிப்பது)

தலைமுறை தோறும் எண்ணற்றவர்கள் வழியாக அறிவிக்கப்படாத ஹதீஸ்களை ஹபருல் வாஹித் என்பர். தனி நபர்களின் அறிவிப்பு என்பது இதன் பொருள்.

இதையும் பல வகைகளாகப் பிரித்துள்ளனர். மஷ்ஹுர், கரீப், அஸீஸ் என்று பல வகைகளாகப் பிரித்துள்ளனர்.

மஷ்ஹூர் مشهور

எல்லா மட்டங்களிலும் மூவர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் வழியாக அறிவிக்கப்படும் ஹதீஸ்கள் மஷ்ஹூர் எனப்படும்.

மூன்று நபித்தோழர்கள் ஒரு செய்தியை அறிவித்து, அம்மூவர் வழியாக கேட்டவர்களும் தலா மூவருக்கு அறிவித்து இப்படி சங்கிலித்தொடராக எல்லா நிலையிலும் மூவர் அல்லது அதைவிட அதிகமானவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்கள் மஷ்ஹூர் ஆகும். இது முதவாதிர் என்ற வகை ஹதீஸ்களுக்கு அடுத்த நிலையில் உள்ளதாகும். இத்தகைய ஹதீஸ்கள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன.

அஸீஸ் عزيز

எல்லா மட்டங்களிலும் இருவர் வழியாக அறிவிக்கப்படும் ஹதீஸ்கள் அஸீஸ் எனப்படும்.

இரண்டு நபித்தோழர்கள் ஒரு செய்தியை அறிவித்து, அவ்விருவர் வழியாக கேட்டவர்களும் தலா இருவருக்கு அறிவித்து இப்படி சங்கிலித் தொடராக எல்லா நிலையிலும் இருவர் அறிவிக்கும் ஹதீஸ்கள் அஸீஸ் ஆகும். இத்தகைய ஹதீஸ்கள் அதிக அளவில் காணப்படும். பெரும்பாலான ஹதீஸ்கள் இந்த தரத்தில் தான் அமைந்துள்ளன.

கரீப் الغريب

எல்லா மட்டங்களிலும் ஒருவர் வழியாக அறிவிக்கப்படும் ஹதீஸ்கள் கரீப் எனப்படும்.

கபர் அல் வாஹித் எனும் தனி நபர் ஹதீஸ்களில் இது தரம் குறைந்ததாகும். ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர்கள் வழியாக அறிவிக்கப்பட்டாலும் ஒருவர் வழியாக அறிவிக்கப்படுவதை கடைசித் தரத்தில் தான் ஹதீஸ் கலை அறிஞர்கள் கருதுகின்றனர். இதை ஆதாரமாக எடுக்கக் கூடாது என்றும் சிலர் கூறியுள்ளனர். ஆதாரமாக எடுக்கலாம் என்பதே சரியானதாகும்.

இவை எத்தனை அறிவிப்பாளர்கள் ஒவ்வொரு கட்டத்திலும் உள்ளனர் என்ற அடிப்படையில் பிரிக்கப்பட்டவையாகும். நம்பகமானவர்களா? இல்லையா? என்ற அடிப்படையில் பிரிக்கப்பட்டவை அல்ல.

எந்த ஹதீஸ்களை ஆதாரமாகக் கொள்ளலாம்? என்பதை அறிந்திட மேற்கண்ட விபரங்களே போதுமானவையாகும். இவை தவிர இன்னும் பல அம்சங்களைக் கருத்தில் கொண்டு ஹதீஸ்களை வகைப்படுத்தியுள்ளனர். விரிவஞ்சி அவற்றைத் தவிர்த்துள்ளோம்.

தவறான ஹதீஸ்களில் இருந்து சரியான ஹதீஸ்களைப் பிரித்தறிந்து சரியானதைப் பின்பற்றும் நன்மக்களாக அல்லாஹ் ஆக்கி அருள்வானாக.

நூலின் பெயர் : யாகுத்பா ஓர் ஆய்வு

ஆசிரியர் : பி.எஸ்.அலாவுத்தீன்

பக்கங்கள் : 96

விலை ரூபாய் 20.00

மார்க்கத்தின் எச்சரிக்கை!

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும். இந்த இணைய தளத்தில் உள்ளவைகளைப் பிரச்சாரம் செய்வதற்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் சில சகோதரர்கள் நமது ஆக்கங்களை அப்படியே பயன்படுத்தி தமது ஆக்கம் போல் காட்டுகின்றனர்.

இன்னாருடைய கட்டுரையில் இருந்து, அல்லது புத்தகத்தில் இருந்து இது எடுக்கப்பபட்டது என்று குறிப்பிடாமல் புகழடைவதற்காக இவ்வாறு செய்கின்றனர்.

சில இணைய தளங்களும் என்னுடைய ஆக்கங்களை அப்படியே வெளியிட்டு தம்முடைய ஆக்கம் போல் காட்டுகின்றன. மேலும் சில புத்தக வியாபாரிகளும் எனது நூல் உட்பட மற்றவர்களின் நூல்களைச் சிறிது மாற்றியமைத்து அனாமதேயங்களின் பெயர்களில் வெளியிட்டுச் சம்பாதிக்கின்றனர். உலகைப் பற்றியும் இவர்களுக்கு வெட்கம் இல்லை. மறுமையைப் பற்றியும் பயம் இல்லை.

இஸ்லாத்தில் இவ்வாறு செய்ய அனுமதி இல்லை. இவர்கள் நல்லது செய்யப் போய் மறுமையின் தண்டனைக்கு தம்மைத் தாமே உட்படுத்திக் கொள்கின்றனர்.

பிறரது ஆக்கங்களைப் பயன்படுத்துவோர் இது இன்னாருடைய ஆக்கம் என்று குறிப்பிடாமல் தன்னுடைய ஆக்கம் போல் காட்டுவது மார்க்க அடிப்படையில் குற்றமாகும்.

இவர்களுக்கு அல்லாஹ் விடுக்கும் எச்சரிக்கையை இங்கே சுட்டிக் காட்டுகிறோம்.

தாங்கள் செய்தவற்றுக்காக மகிழ்ச்சியடைந்து, தாம் செய்யாதவற்றுக்காகப் புகழப்பட வேண்டுமென விரும்புவோர் வேதனையிலிருந்து தப்பித்து விட்டார்கள் என்று நீர் நினைக்காதீர்! அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.

திருக்குர்ஆன் 3:188

அறிமுகம்

தமிழக முஸ்லிம்கள் மத்தியில் யாகுத்பா என்பது புனிதமிக்க பாடலாக அறிமுகமாகியுள்ளது.

அப்துல் காதிர் ஜீலானி அவர்களைப் புகழ்ந்து பாடப்படுவதாகக் கூறப்படும் இப்பாடலை விஷேச நாட்களிலும், ரபீவுல் ஆகிர் மாதத்திலும் பக்திப் பரவசத்துடன் பாடி வருகின்றனர்.

மவ்லுதுப் பாடல்களிலேயே மிகவும் அதிக அளவில் நச்சுக் கருத்தை உள்ளடக்கியுள்ள பாடல் யாகுத்பா எனும் பாடலாகும்.

இப்பாடலில் வலியுறுத்தப்படும் கருத்தின் அடிப்படையிலேயே காயல்பட்டிணம் போன்ற ஊர்களில் இருட்டில் இருந்து கொண்டு அப்துல் காதிர் ஜீலானி என்பவரை ஆயிரம் தடவை திக்ரு செய்யும் மௌட்டீக வழக்கம் நடைமுறைக்கு வந்தது.

எனவே இப்பாடலின் கருத்துக்கள் இஸ்லாத்திற்கு உகந்தது தானா?

இதைப் பாடுவதால் நன்மை கிடைக்குமா? என்பதை விரிவாக ஆராய்வதே இந்நூலின் நோக்கம்.

அத்துடன் மவ்லிதுகள் சமுதாயத்தில் நுழைந்த வரலாறும், அது ஏற்படுத்திய தீய விளைவுகளும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.

பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களின் சகோதரர் காலம் சென்ற பி.எஸ்.அலாவுதீன் எனும் பி.ஷேக் அலாவுதீன் அவர்கள் 20 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிய இந்நூலை உங்கள் கைகளில் தவழ விடுகிறோம்.

அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் யாகுத்பா பாடலின் நச்சுக் கருத்தை விளங்கி அதைப் புறக்கணித்து நடக்க வல்ல இறைவன் அருள்வானாக!

நபீலா பதிப்பகம்

யா குத்பா ஓர் ஆய்வு

சுப்ஹான மவ்லிது

ஹஸனார் மவ்லிது

ஹுஸைனார் மவ்லிது

முஹ்யித்தீன் மவ்லிது

ஷாகுல் ஹமீது மவ்லிது

ஹாஜா மவ்லிது

என்று பெரியார்களின் பெயர்களை மரியாதை இல்லாமல் அழைத்துக் கொண்டு இவர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஏதேனும் ஆதாரமுண்டா? என்று கேட்டால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் அவர்கள் முன்னிலையிலேயே ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி), கஅபு பின் ஜுஹைர் (ரலி) போன்றோர் அண்ணலாரைப் புகழ்ந்து பாடவில்லையா? எனக் கேட்கிறார்கள்.

அவ்விரு நபித்தோழர்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிர் வாழ்ந்த காலத்தில் அவர்கள் முன்னிலையில் தமது கவிதைகளை அரங்கேற்றி அவர்களின் அங்கீகாரம் பெற்றார்களே தவிர நபிகள் நாயகத்தின் மறைவுக்குப் பிறகு அந்தக் கவிதைகளை தமது வீடுகளிலும், கடைகளிலும், இத்யாதிகளுடன் ஓதிக் கொண்டு இருக்கவில்லை.

உண்மையில் அக்கவிதைகளைப் படிப்பது ஒரு நன்மையான காரியம் என்றிருந்தால், நன்மைகள் செய்வதில் நம்மை விட பேரார்வம் படைத்த அண்ணலாரின் அன்புத் தோழர்களும், தாபியீன்களும் அவற்றை ஓதாமலிருந்திருப்பார்களா?

மேலும், எந்தக் கவிதைகள் அண்ணலார் முன்பு பாடப்பட்டு அவர்களின் அங்கீகாரத்தைப் பெற்றனவோ அவை இன்று மவ்லிதுகளாக ஓதப்படுவதில்லை. ஹிஜ்ரி ஆயிரத்திற்குப் பின்னுள்ளவர்களால் எழுதப்பட்டவைகளைத் தான் இவர்கள் மவ்லிதுகள் என்ற பெயரால் ஓதி வருகின்றார்கள்.

அல்லாஹ்வும், அவனது திருத்தூதர் அவர்களும் காட்டித்தராத இந்த மவ்லிதுக் கச்சேரிகள் முக்கியமான வணக்கத்தைப் போல் கருதப்படுகின்றதே! இதற்கு இஸ்லாத்தில் அனுமதியுண்டா என்று இந்தக் கச்சேரியை நடத்துவோர் சிந்திப்பதில்லை.

மார்க்கத்தைக் குறைவின்றி முழுமையாகக் கற்றுத் தருவதற்காகவே தூதர்களை அல்லாஹ் நியமிக்கின்றான். இறுதித் தூதராம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூலமாக இந்த மார்க்கத்தைப் பூரணப்படுத்தியதாகவும் இறைவன் பிரகடணம் செய்கிறான்.

இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாகப் பொருந்திக் கொண்டேன்.

திருக்குர்ஆன் 5:3

மார்க்கத்தை இறைவன் நிறைவாக்கியிருக்க, பின்னால் உருவாக்கப்பட்ட காரியங்கள் எப்படி நல்லறமாக ஆக முடியும்?

உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்!

திருக்குர்ஆன் 7:3

இறைவனிடமிருந்து அருளப்பட்டதை மாத்திரமே ஒரு முஸ்லிம் பின்பற்ற வேண்டும் என இவ்வசனம் கூறுகிறது. இறைவனிடமிருந்து அருளப்பட்டது என்றால் அவனது வேதத்தில் குறிப்பிட்டிருக்க வேண்டும்; அல்லது அந்த வேதத்திற்கு விளக்கமளிக்க இறைவனால் நியமனம் செய்யப்பட்ட அவனது தூதர் கூறியிருக்க வேண்டும்.

மவ்லிதுக் கச்சேரிகள் நடத்தும்படியோ, இதை நடத்துவதால் இறைவனது அன்பும், இறைத்தூதரின் பரிந்துரையும் கிடைக்கும் என்றோ, இறைவனும் கூறவில்லை. அவனது தூதரும் கூறவில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக மார்க்கத்தை வியாபாரமாக்கும் முல்லாக்களைத் தவிர வேறு எவரும் இந்தக் கச்சேரியை நடத்துமாறு கூறவில்லை.

المعجم الكبير للطبراني

1520- حَدَّثَنَا زَكَرِيَّا بن يَحْيَى السَّاجِيُّ ، حَدَّثَنَا أَبُو حَفْصٍ عَمْرُو بن عَلِيٍّ ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ ، حَدَّثَنَا أَبُو عُبَادَةَ الزُّرَقِيُّ ، حَدَّثَنَا الزُّهْرِيُّ ، عَنْ مُحَمَّدِ بن جُبَيْرِ بن مُطْعِمٍ ، عَنْ أَبِيهِ ، قَالَ : كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، بِالْجُحْفَةِ فَخَرَجَ عَلَيْنَا ، فَقَالَ : أَلَيْسَ تَشْهَدُونَ أَنْ لا إِلَهَ إِلا اللَّهُ ، وَأَنِّي رَسُولُ اللَّهِ ، وَأَنَّ الْقُرْآنَ جَاءَ مِنْ عِنْدِ اللَّهِ ؟ قُلْنَا : نَعَمْ ، قَالَ : فَأَبْشِرُوا فَإِنَّ هَذَا الْقُرْآنَ طَرَفُهُ بِيَدِ اللَّهِ ، وَطَرَفُهُ بِأَيْدِيكُمْ ، فَتَمَسَّكُوا بِهِ ، وَلا تُهْلَكُوا بَعْدَهُ أَبَدًا.

المعجم الكبير للطبراني

17941 – حَدَّثَنَا عُبَيْدُ بن غَنَّامٍ، ثنا أَبُو بَكْرِ بن أَبِي شَيْبَةَ، ثنا أَبُو خَالِدٍ الأَحْمَرُ، ح وَحَدَّثَنَا عَلِيُّ بن عَبْدِ الْعَزِيزِ، قَالَ: ثنا ابْنُ الأَصْبَهَانِيُّ، أَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ، عَنْ عَبْدِ الْحَمِيدِ بن جَعْفَرٍ، عَنْ سَعِيدِ بن أَبِي سَعِيدٍ، عَنْ أَبِي شُرَيْحٍ الْخُزَاعِيِّ، قَالَ: خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ:أَبْشِرُوا، أَلَيْسَ تَشْهَدُونَ أَنَّ لا إِلَهَ إِلا اللَّهُ وَأَنِّي رَسُولُ اللَّهِ؟قَالُوا: بَلَى، قَالَ: إِنَّ هَذَا الْقُرْآنَ سَبَبٌ طَرَفَهُ بِيَدِ اللَّهِ، وَطَرَفَهُ بِأَيْدِيكُمْ فَتَمَسَّكُوا بِهِ فَإِنَّكُمْ لَنْ تَضِلُّوا، وَلَنْ تَهْلَكُوا بَعْدَهُ أَبَدًا.

இந்தக் குர்ஆனின் ஒரு பகுதி அல்லாஹ்வின் கையிலுள்ளது. மறுபகுதி உங்கள் கைகளில் உள்ளது. எனவே அதனையே நீங்கள் பற்றிக் கொள்ளுங்கள். நிச்சயமாக நீங்கள் வழி தவற மாட்டீர்கள்! அதன் பிறகு நீங்கள் (மறுமையில்) நாசமாகவும் மாட்டீர்கள் என்பது நபிமொழி.

அறிவிப்பவர்: அபூஷுரைஹ் (ரலி)

நூல்: தப்ரானி 22/188

المستدرك على الصحيحين للحاكم

 أخبرني إسماعيل محمد بن الفضل الشعراني ثنا جدي عن ثور زيد الديلي عن عكرمة عن ابن عباس : أن رسول الله صلى الله عليه و سلم خطب الناس في حجة الوداع فقال : قد يئس الشيطان بأن يعبد بأرضكم و لكنه رضي أن يطاع فيما سوى ذلك مما تحاقرون من أعمالكم فاحذروا يا أيها الناس إني قد تركت فيكم ما إن اعتصمتم به فلن تضلوا أبدا : كتاب الله و سنة نبيه صلى الله عليه و سلم إن كل مسلم أخ المسلم المسلمون إخوة و لا يحل لامرىء من مال أخيه إلا ما أعطاه عن طيب نفس و لا تظلموا و لا ترجعوا من بعدي كفارا يضرب بعضكم رقاب بعض

و قد احتج البخاري بأحاديث عكرمة و احتج مسلم بأبي أويس و سائر رواته متفق عليهم

ஒரு போதும் நீங்கள் வழிதவறிச் செல்ல முடியாத சிலவற்றை உங்களிடையே நான் விட்டுச் செல்கிறேன்; அவை அல்லாஹ்வின் வேதமும், அவனது நபியின் வழிகாட்டுதலுமாகும் என்பது நபிமொழி.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: ஹாகிம். 1/172

திருக்குர்ஆனையும், நபிவழியையும் தவிர பிறவற்றை மார்க்கம் என்று சொல்வதற்கு இடமே இல்லை. அவ்விரண்டையும் பேணி நடப்பதிலும், அவ்விரண்டில் இல்லாதவற்றைத் தூக்கி எறிவதிலும் தான் ஈடேற்றம் உள்ளது என்பதை இந்த நபிமொழிகள் கூறுகின்றன. மவ்லுதுக் கச்சேரிகள் நிறுத்தப்பட வேண்டுமென்பதற்கு இவையும் சான்றுகளாகும்.

தமது காலத்துக்குப் பின்னர் பலவிதமான அனாச்சரங்கள் தோன்றும். அவை அனைத்தும் மனிதனை நரகின் பால் இழுத்துச் செல்லும் எனவும், இறைவனிடம் அவை அங்கீகரிக்கப்படாது எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரித்துச் சென்றுள்ளனர்.

صحيح البخاري

2697 – حدثنا يعقوب، حدثنا إبراهيم بن سعد، عن أبيه، عن القاسم بن محمد، عن عائشة رضي الله عنها، قالت: قال رسول الله صلى الله عليه وسلم: «من أحدث في أمرنا هذا ما ليس فيه، فهو رد

நமது இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யார் உருவாக்குகின்றாரோ அது நிராகரிக்கப்படும் என்பது நபிமொழி.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 2697

صحيح مسلم

2042 – وَحَدَّثَنِى مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَبْدِ الْمَجِيدِ عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ عَنْ أَبِيهِ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- إِذَا خَطَبَ احْمَرَّتْ عَيْنَاهُ وَعَلاَ صَوْتُهُ وَاشْتَدَّ غَضَبُهُ حَتَّى كَأَنَّهُ مُنْذِرُ جَيْشٍ يَقُولُ « صَبَّحَكُمْ وَمَسَّاكُمْ ». وَيَقُولُ « بُعِثْتُ أَنَا وَالسَّاعَةَ كَهَاتَيْنِ ». وَيَقْرُنُ بَيْنَ إِصْبَعَيْهِ السَّبَّابَةِ وَالْوُسْطَى وَيَقُولُ « أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ وَشَرُّ الأُمُورِ مُحْدَثَاتُهَا وَكُلُّ بِدْعَةٍ ضَلاَلَةٌ ». ثُمَّ يَقُولُ « أَنَا أَوْلَى بِكُلِّ مُؤْمِنٍ مِنْ نَفْسِهِ مَنْ تَرَكَ مَالاً فَلأَهْلِهِ وَمَنْ تَرَكَ دَيْنًا أَوْ ضَيَاعًا فَإِلَىَّ وَعَلَىَّ ».

செய்திகளில் சிறந்தது, இறைவனின் வேதமாகும். வழிகாட்டுதலில் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலாகும். காரியங்களில் மிகவும் கெட்டது (எனக்குப் பின்னர்) உருவாக்கப்பட்டவையாகும். (இவ்வாறு) உருவாக்கப்பட்ட காரியங்கள் யாவும் அனாச்சாரங்களாகும். அனாச்சாரங்கள் யாவும் வழிகேடாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 1435

صحيح مسلم

4590 – وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ وَعَبْدُ بْنُ حُمَيْدٍ جَمِيعًا عَنْ أَبِى عَامِرٍ قَالَ عَبْدٌ حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ عَمْرٍو حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ الزُّهْرِىُّ عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ قَالَ سَأَلْتُ الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ عَنْ رَجُلٍ لَهُ ثَلاَثَةُ مَسَاكِنَ فَأَوْصَى بِثُلُثِ كُلِّ مَسْكَنٍ مِنْهَا قَالَ يُجْمَعُ ذَلِكَ كُلُّهُ فِى مَسْكَنٍ وَاحِدٍ ثُمَّ قَالَ أَخْبَرَتْنِى عَائِشَةُ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « مَنْ عَمِلَ عَمَلاً لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا فَهُوَ رَدٌّ ».

நமது உத்தரவு இல்லாமல் யாரேனும் ஒரு காரியத்தைச் செய்தால் அது நிராகரிக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: முஸ்லிம் 3243

நபிகள் நாயகம் (ஸல்) காலத்துக்குப் பின் உருவாக்கப்பட்ட காரியங்கள் எதுவானாலும் அவை இறைவனால் அங்கீகரிக்கப்படாது என்றும், அவை வழிகேடு என்றும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எச்சரித்த பிறகும், உண்மையான முஸ்லிம் எப்படி இந்த மவ்லிதுகளை ஓத முடியும்? நன்மை செய்கிறோம் என்று எண்ணி பாவத்தைச் சுமக்க முன் வருபவர் எப்படி உண்மை முஸ்லிமாக இருக்க முடியும்?

இந்த ஒரு காரணத்துக்காகவே யாகுத்பா உள்ளிட்ட மவ்லிதுகள் ஒழிக்கப்பட வேண்டும் என்றாலும் அவை ஏற்படுத்திய தீய விளைவுகள் மவ்லிதுகள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதை மேலும் வலுப்படுத்துகின்றன.

மவ்லிது ஏற்படுத்திய தீய விளைவுகள்

திருக்குர்ஆனை இழிவுபடுத்துதல்

திருக்குர்ஆன், நபிவழி மூலம் மார்க்கத்தில் அங்கீகரிக்கப்பட்ட நல்லறங்களில் ஒன்று என்று நிரூபிக்கப்பட முடியாத இந்த மவ்லிதுகள் இன்று முஸ்லிம்களில் பெருவாரியானவர்களின் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு அம்சமாக மாறிவிட்டிருக்கிறது. எந்த சுகதுக்கங்களிலும் மவ்லிதுகள் ஓதப்படவில்லையென்றால் அந்தக் காரியமே முழுமை பெறுவதில்லை என்று நம்பப்படுகிறது.

எவற்றிற்கு இதை ஓதுவது? எவற்றிற்கு இதை ஓதக் கூடாது என்ற விவஸ்தை இல்லாது, அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்து கொண்டு மவ்லிதுகள் கொட்டமடிக்கின்றன.

குழந்தைகள் பெயர் சூட்டும் நிகழ்ச்சியா?

மகள் பருவம் அடைந்து விட்டாளா?

பையனுக்கு சுன்னத்தா?

மக்களுக்குத் திருமணமா?

புதுமனைப் புகுவிழாவா?

திரவியம் தேட திரை கடலோடும் பயணமா?

ஹஜ்ஜுப் பயணமா?

பெருமானாரின் பிறந்த நாள் விழாவா?

பெரியார்களின் நினைவு நாட்களா?

வெள்ளியா?

திங்களா?

ஆறா?

பதினொன்றா?

அழைத்து வா ஆலிம்களை! ஓதச் சொல் மவ்லிதுகளை! என்று இந்த மவ்லிதுகள் படும் பாடு மத்தளம் படுமோ? தரி படுமோ யாமறியோம்.

சாவு வீடுகள் கூட இந்த மவ்லிதுக் கச்சேரிகளுக்குத் தப்புவதில்லை. இவர்களாகவே ஏற்படுத்திக் கொண்டு விட்ட மூன்றாம் பாத்திஹாவிலிருந்து ஏழாம் பாத்திஹாக்கள் ஈறாக, நாற்பதாம் பாத்திஹா, வருட பாத்திஹாக்கள் உட்பட மவ்லிதுக் கச்சேரிகள் இல்லை என்றால் அந்தச் சபைகளே நிரப்பதில்லை.

இது என்ன மனிதாபிமானமற்ற அரக்கத்தனமான கொடுஞ்செயல்? ஒரு முஸ்லிம் இறந்து போயிருக்கிறான். அதற்காகக் கவலைப்பட்டுக் கண்ணீர் வடிக்க வேண்டாம்; சினிமா மெட்டுக்களிலும், இனிய ராகங்களிலும், புலவு, பியாணி, குர்மா, கைமா என்று இந்த மவ்லிதுக் கச்சேரிகளை நடத்துவதையாவது தவிர்க்க வேண்டாமா?

யாராவது செத்தால் மட்டுமே கத்தம் ஓதுவதற்காகக் கையில் எடுக்கப்படும் திருக்குர்ஆனை உங்கள் வீட்டின் மங்கள நிகழ்ச்சிகளிலும் ஓதக் கூடாதா? என்று இவர்களிடம் கேட்டால், மங்கள நிகழ்ச்சிகளில் திருக்குர்ஆனா? இது சாவு வீடா என்ன? என்று கேட்டு திருக்குர்ஆனை இழிவுபடுத்துகின்றனர்.

وفي جواهر الفقه من قيل له ألا تقرأ القرآن أو لا تكثر قراءته فقال شبعت أو كرهت أو أنكر آية من كتاب الله أو عاب شيئا من القرآن أو أنكر كون المعوذتين من القرآن غير مؤول كفر قلت وقال بعض المتأخرين كفر مطلقا أول أو لم يؤول لكن الأول هو الصحيح المعول

திருக்குர்ஆன், பள்ளிவாசல் போன்ற மார்க்கத்தில் மரியாதைக்கு உரியவைகளாகக் கருதப்படுபவைகளை எவர்கள் அலட்சியப்படுத்தி இலேசு காண்பார்களோ அவர்கள் இஸ்லாத்திற்கு அப்பாற்பட்ட காஃபிர்கள்.

இப்படிச் சொல்வது யார் தெரியுமா?

மவ்லிது ஆதரவாளர்களால் வஹ்ஹாபிகள் என்று விமர்சிக்கப்படும் நாமல்ல; தமிழகத்தின் அனைத்து அரபுக் கல்லூரிகளிலும், இஸ்லாமியக் கொள்கை விளக்க நூல் என்று போதிக்கப்படும் ஷரஹ் பிக்ஹில் அக்பர் என்ற நூலில் அறிஞர் முல்லா அலீ காரி அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள். அவர்களே ஒப்புக் கொண்ட நூலையாவது நம்பி இந்த மவ்லிதைத் தொலைக்கக் கூடாதா?

திருக்குர்ஆனை நீ ஓதக் கூடாதா என்றோ, அதிகமாய் அதனை ஓதி வரக் கூடாதா என்றோ ஒருவனிடம் சொல்லப்படும் போது அது எனக்குப் பிடிக்கவில்லை என்றோ, ஓதியது போதும்; இனி எனக்கு அது தேவை இல்லை என்றோ கூறுவானேயானால் அவன் இஸ்லாத்தின் எல்லைக்கு அப்பாற்பட்ட காஃபிரே ஆவான் என்றும் அதே நூலில் முல்லா அலீ காரி (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

பள்ளிவாசல்களின் புனிதத்தைப் பாழாக்குதல்

பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்!

திருக்குர்ஆன்: 72:18

எந்தப் பள்ளிவாசல்களில் தன்னைத் தவிர வேறொருவரையும் அழைக்கக் கூடாது என்று அல்லாஹ் தனது திருமறையில் கட்டளையிட்டிருக்கிறானோ, அவற்றில் இருந்து கொண்டு, யா ஹபீபீ யா முஹம்மது என்றும், யா முஹ்யித்தீனி என்றும், யா ஸாஹிபன் நாஹுரி என்றும், யா ஹஸன், யா ஹுஸைன் என்றும், யா ஹாஜா என்றும் அழைப்பதுடன் தொழ வருபவர்களுக்கும் இடையூறுகள் விளைவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

போதாக்குறைக்கு ஒலி பெருக்கிகளையும், அலறவிட்டு விடுகிறார்கள். அல்லாஹ்வை மட்டுமே அழைக்க வேண்டிய இடத்தில் அவனது அடியார்கள் அழைக்கப்படுவதும், தொழுகையாளிகளுக்கு இடையூறு ஏற்படும் வண்ணம் திருக்குர்ஆனைக் கூடச் சப்தமிட்டு ஓதக்கூடாது என்றிருக்க இந்தக் கச்சேரிகளை நடத்திக் கொண்டிருப்பதும் கொடுமைகள் அல்லவா? இவைகள் ஒழிக்கப்பட வேண்டியவைகளில்லையா?

சில சமயங்களில் தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் போதும், பள்ளிவாசல்களில் ஜமாஅத் (கூட்டுத்) தொழுகை நடந்து கொண்டிருக்கும் போதும் கூட நிறுத்தப்படாமல் ஒலிபெருக்கிகள் மூலம் இந்த மவ்லிதுக் கச்சேரிகள் மாத்திரம் ஜாம் ஜாமென்று நடந்து கொண்டிருக்கும்.

பள்ளிவாசலின் நிர்வாகிகள், ஊரின் முக்கியப் புள்ளிகள் போன்றோரின் வீடுகளில் நடைபெறும் மவ்லிதுக் கச்சேரிகளுக்கு தப்பித்தவறி அங்கு பணியாற்றும் ஆலிம்கள் போகவில்லை என்றால் ஏதோ இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றை விட்டுவிட்டதைப் போன்று தாம்தூம் என்று குதிப்பதும், அதற்காக அவருக்குச் சீட்டுக் கிழிப்பதும் இன்று சர்வ சாதாரண நிகழ்ச்சிகளாகி விட்டன.

சில இடங்களில் தொழுகைகளுக்குச் சரியாக வராத ஆலிம்களைக் கூட கண்டு கொள்ளாமல் விட்டு விடுவதையும், மவ்லிதுக் கச்சேரிகளில் கலந்து கொள்ளாததை மட்டும் பெரிதுபடுத்தி விசாரிப்பதையும் நாம் பார்க்க முடிகின்றது.

மொத்தத்தில் கடமைகள் சாதாரணமானவை போன்றும், மார்க்கத்தில் ஒன்றுமே இல்லாதவை கடமைகளைப் போன்றும் மாறியதற்குக் காரணமான இந்த மவ்லிதுகள் தேவை தானா?

பிற சமயத்துக் கலாச்சாரம்

மவ்லிது, பாத்திஹாக்கள் ஓதப்படும் இடங்களில் வகைவகையான பதார்த்தங்கள், பழங்கள், பண்டங்கள், சீனி சர்க்கரை, சாம்பிராணி, பத்தி, வாசனைத் திரவியங்கள், மல்லிகை ரோஜா மலர்கள் என்று வரிசையாகப் படைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தால் அப்பப்பா கோவில்கள் கெட்டது போங்கள்!

பிற சமயத்து அன்பர்கள் தத்தமது மூர்த்திகளுக்கு முன்னால் அவற்றிற்குப் படைக்கப்படும் நைவேத்தியங்களையும், பிரசாதங்களையும் வரிசையாக அடுக்கி வைத்து படைத்து முடித்ததும், அவைகள் புனிதப் பொருட்களாகி விட்டதாகச் சொல்லி பக்தர்களுக்குப் பகிர்ந்தளிப்பதற்கும், இவர்களின் இந்தச் செயலுக்கும் என்ன வித்தியாசம்?

ஓதி முடிக்கப்பட்டதும் அவற்றில் பரக்கத் இறங்கிவிட்டதாகச் சொல்லி தபர்ரூக், நார்சா, நேர்ச்சை, சீருணி போன்ற பல்வேறு பெயர்களில் அந்தப் பிரசாதங்களை வினியோகிப்பதும், அவற்றைப் பத்திரப்படுத்தி எடுத்துச் சென்று ஆளுக்குக் கொஞ்சமாகப் பகிர்ந்தளித்து புளகாங்கிதமடைந்து போவதும், இடுப்பில் துண்டைக் கட்டாத குறையாக எழுந்து நின்று பக்திமேலீட்டால் கண்கள் சொருக அவற்றை வாங்கி வாயில் போட்டுக் கொள்வதும் வேடிக்கை தான் போங்கள்! இந்த ஆச்சாரங்கள் அனைத்தும் பிற சமயத்து நண்பர்களுடையதல்லவா? அவற்றை நாம் பின்பற்றலாமா?

கூலிக்கு மாரடித்தல்

மவ்லிதுகளில் தான் எத்தனை வகைகள்? வழங்கப்படும் தட்சணைகளுக்கேற்றவாறு அவற்றில் தான் எத்தனை டெக்னிக்குகள்!

நடை மவ்லிது!

ஓட்ட மவ்லிது!

அசுர வேக மவ்லிது!

ஜெட் மவ்லிது!

ராக்கெட் மவ்லிது!

என்று வழங்கப்படும் கூலிக்கும், ஓதுபவருக்கு அன்றைக்கு இருக்கும் கிராக்கிக்கும் ஏற்ப அதன் வேகங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.

ஒன்றே கால் ரூபாய்க்கு நடை மவ்லிதாக இருந்தது இருபத்தைந்து ரூபாய்க்கு அண்டை அயலில் வசிப்பவர்களின் உறக்கத்தையும் ஓதுபவர்களின் சுப்ஹுத் தொழுகையையும் கெடுக்கும் விடி மவ்லிதாக மாறி விடும் விந்தைகளைச் சொல்லி மாளாது.

தட்சணைகளிலும், தால்ச்சா தனிக்கறியின் சுவையிலும், களரிச் சோற்றிலும் மயங்கிக் கிடக்கும் சில ஆலிம்கள் இவற்றை மனப்பூர்வமாக ஆதரிப்பதுடன் இவற்றிற்காக வக்காலத்தும் வாங்குகின்றனர்.

தொழுவதற்கும், நோன்பு நோற்பதற்கும் கட்டணங்களும், விருந்துகளும் தரப்படாததைப் போன்று இவற்றிற்கும் கட்டணங்களோ, விருந்துகளோ கிடையாது என்றும், விரும்புபவர்கள் நன்மையை நாடி வந்து ஓதிவிட்டுச் செல்லலாம் என்றும் மக்கள் அனைவரும் ஒருமித்துச் சொன்னால் மவ்லிதுகள் ஓதுவது ஹராம் என்று கூற இப்படிப்பட்டவர்கள் தயங்க மாட்டார்கள்.

அன்னியப் பெண்களுடன் தனித்திருத்தல்

ஆண்கள் இல்லாமல் பெண்கள் மட்டும் இருக்கும் வீடுகளுக்கு மவ்லிது, பாத்திஹா, ஓதப் போகிறேன் பேர்வழி என்று இமாம்கள், மோதின்கள், லெப்பைகள், அரபிக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் போன்றோர் செல்வதும், அதனால் பல்வேறு விபரீதங்கள் விளைவதும் நாம் அடிக்கடி பல இடங்களிலும் பார்த்தும், கேள்விப்பட்டும் வரும் உண்மைகள் தானே?

நாற்பது வயதிற்கு மேற்பட்ட இமாம்கள் தேவை என்றும், குடும்பத்தை அழைத்து வராதவர்களை வேலையில் சேர்த்துக் கொள்வதில்லை என்றும் நிர்வாகிகள் இன்று நிபந்தனைகள் விதிப்பதற்கு ஒரு சில இடங்களில் விபரீதங்கள் விளைந்தது தானே காரணம்?

அந்த விபரீதங்களுக்கு வழி வகுத்து விட்ட இந்த மவ்லிதுகளும், பாத்திஹாக்களும் தேவை தானா? ஆலிம்களே! ஆண்கள் இல்லாத அந்த வீடுகளுக்கு நாம் அழைக்கப்பட்டாலும் போவது முறை தானா?

صحيح البخاري

5232 – حدثنا قتيبة بن سعيد، حدثنا ليث، عن يزيد بن أبي حبيب، عن أبي الخير، عن عقبة بن عامر: أن رسول الله صلى الله عليه وسلم قال: «إياكم والدخول على النساء» فقال رجل من الأنصار: يا رسول الله، أفرأيت الحمو؟ قال: «الحمو الموت»

(அந்நியப்) பெண்கள் இருக்கும் வீடுகளில் நுழைவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் என அண்ணலார் குறிப்பிட்ட போது ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரே! கணவனின் உறவினர்களைப் பற்றி என்ன கூறுகிறீர்கள்? எனக் கேட்டார். கணவனின் உறவு என்பது (விளைவுகளைப் பொறுத்த வரை) மரணத்திற்குச் சமமானது (அதாவது தவறான வழிகளுக்கு இட்டுச் சென்று அழித்து விடும்) என அண்ணலார் அவருக்குப் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)

நூல்: புகாரி 5232

நபிகளாரின் மேற்சொன்ன அறிவுரைகள் நமக்குச் சிறந்த எச்சரிக்கைகளில்லையா? பணத்தை விட நமது மானம், மரியாதைகள் மிக மிக முக்கியமானவைகளில்லையா?

குர்ஆனுக்குச் சமமாக்குதல்

மவ்லிதுகள் ஓதுவதன் மூலம் அண்ணலாரையும், பெரியார்களையும் புகழ்வது தான் தங்களின் நோக்கம் என்று கூறும் இவர்களில் எத்தனை பேருக்கு அங்கே ஓதப்படும் கவிதைகளின் பொருள் தெரியும்?

மவ்லிதுக் கச்சேரிகளுக்கு ஏற்பாடு செய்யும் வீட்டுக்காரர்களுக்கும், முறைக்காரர்களுக்கும், அவற்றின் பொருள் புரியுமா?

அல்லது கிடைக்கப் போகும் கூலிக்காக அவற்றை நீட்டி முழக்கி ஓதிக் கொண்டிருப்பவர்களில் பெரும்பாலோருக்குத் தான் அவற்றின் பொருள் புரியுமா?

அல்லது ஓதி முடிக்கப்பட்டதும் விநியோகிக்கப்படவிருக்கும் நார்சாக்கள், சீருணிகளுக்காகக் காத்துக் கிடக்கும் மக்களுக்குத் தான் அவற்றின் பொருள் புரியுமா?

திருக்குர்ஆனையும், ஓதி வருமாறு உத்தரவிடப்பட்டிருக்கின்ற சில திக்ருகளையும் தவிர வேறு எதனையும் வெறுமனே படிப்பதினால் நன்மைகள் கிடைக்கப் போவதில்லை. திருக்குர்ஆனை பொருள் புரியாது படித்தாலும் ஒரு எழுத்துக்குப் பத்து நன்மைகள் வீதம் கிடைக்கின்றன என்று நபிமொழிகள் அறிவிக்கின்றன.

سنن الترمذي

 2910 – حدثنا محمد بن بشار حدثنا أبو بكر الحنفي حدثنا الضحاك بن عثمان عن أيوب بن موسى قال سمعت محمد بن كعب القرظي قال سمعت عبد الله بن مسعود يقول : قال رسول الله صلى الله عليه و سلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول آلم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف

திருக்குர்ஆனுடைய ஒவ்வொரு எழுத்துக்கும் பத்து நன்மைகளை இறைவன் பதிவு செய்கிறான்; அலிப் லாம் மீம் என்பதை ஒரு எழுத்து என்று நான் சொல்லவில்லை. அலிப் என்பது ஒரு எழுத்து, லாம் என்பது ஒரு எழுத்து, மீம் என்பது ஒரு எழுத்து என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)

நூல்: திர்மிதி 2835

வீண் விரயம்

தொழுவதில்லை; இஸ்லாத்தின் ஏனைய கடமைகளில் அறவே அக்கறை செலுத்துவதில்லை; ஆனால் மவ்லிது ஓதுவதில் மாத்திரம் இவர்கள் காட்டும் அக்கறையும் ஆர்வமும், கவனமும், ஓதப்பட வேண்டிய நாட்களைக் கவனித்து எண்ணி வரும் கரிசனமும் நம்மை மலைக்கச் செய்கின்றன.

எந்தப் பெரியவர்களைப் புகழ்வதற்காகவும், அவர்களின் ஆசி(?)யையும் அன்பையும் பெறுவதற்காகவும் இவற்றை நாங்கள் ஓதுகிறோம் எனச் சொல்கின்றார்களோ அந்தப் பெரியார்களே தமது வாழ்க்கையில் மிக வன்மையாகக் கண்டித்திருக்கின்ற வீண் விரயங்கள், ஆடம்பரங்கள், அனாச்சாரங்கள் ஆகிய அத்தனையும் அவர்களின் பெயர்களால் ஓதப்படும் மவ்லிது மஜ்லிஸ்களில் படாதபாடுபடுவதை நாம் பார்க்கிறோம்.

அலங்கார மேடைகள்! கண்ணைச் சிமிட்டும் வண்ண விளக்குகள்! இரவைப் பகலாக்கும் வெளிச்சங்கள்! மேற்கட்டு, மலர் ஜோடனைகள்! வண்ணக் காகிதங்களில் வகை வகையான வேலைப்பாடுகள்! ஒலி பெருக்கிச் சாதனங்கள்! அப்பப்பா?

ஒரேயடியாக வீண் விரயம் செய்து விடாதீர்! விரயம் செய்வோர் ஷைத்தான்களின் உடன் பிறப்புக்களாக உள்ளனர்.

அல்குர்ஆன் 17:26, 27

வீண் விரயம் செய்யாதீர்கள்! வீண் விரயம் செய்வோரை அவன் நேசிக்க மாட்டான்.

அல்குர்ஆன் 6:141

உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரயம் செய்யாதீர்கள்! வீண் விரயம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான்.

அல்குர்ஆன் 7:31

என்பன போன்ற அல்லாஹ்வின் எச்சரிக்கைகள் இவர்களுக்கு ஒரு பொருட்டாகவே தெரிவதில்லை. நாம் தான் அந்தப் பெரியார்கள் மீது அன்பு வைத்து விட்டோமே நம்மை அந்த ஆண்டவன் என்ன செய்து விட முடியும்? என்ற இறுமாப்பு இவர்களுக்கு?

பின்னர் அந்நாளில் அருட்கொடை பற்றி விசாரிக்கப்படுவீர்கள்.

அல்குர்ஆன் 102:8

என்ற அல்லாஹ்வின் அறிவுறுத்தலையும் மறந்து விட்டு இவர்கள் அடிக்கும் கூத்துக்கு நாளை அல்லாஹ்வின் சந்நிதியில் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

வாக்கியங்களைச் சிதைத்தல்

தாம் விரும்பும் இராகங்களுக்கும், மெட்டுக்களுக்கும் ஏற்ப அந்தக் கவிதைகளை வளைத்தும், முறித்தும், உடைத்தும், சிதைத்தும் இவர்கள் செய்யும் அக்கிரமங்களுக்கோ ஒரு முடிவே இல்லை. கவிதைகளை எழுதியவர்களே தமது கவிதைகளுக்கு இழைக்கப்படும் இந்தக் கொடுமைகளைக் கண்டால் இவர்களை வாயாரச் சபிக்காமலிருக்க மாட்டார்கள்.

யாந – பீஸ – லாம – லைக்கும்

யார – ஸுல்ச – லாம – லைக்கும்

என்று இவர்கள் அதனை மென்று கடித்துக் குதறித் துப்புவதைப் பார்த்தால் யாருக்கும் குமட்டிக் கொண்டு வரும். புதிய படப் பாடல்களின் மெட்டுக்களில் இவ்விடம் மவ்லிது ஓதுவதற்கு ஆட்கள் சப்ளை செய்யப்படும் என்று விளம்பரப் பலகை மாட்டாத குறை தான்.

எந்தக் குழுவினர் இனிய ராகங்களிலும், புதிய படப் பாடல்களின் மெட்டுக்களிலும் ஓதத் தெரிந்திருக்கிறார்களோ அவர்களுக்குத் தான் மவுசு அதிகம்.

ரபீவுல் அவ்வல், ரபீவுல் ஆகிர், ஜமாதுல் ஆகிர், ரஜபு மாதங்கள் போன்ற மவ்லிது சீசன்கள் ஆரம்பமாகி விட்டால், கல்யாணம், கத்னா போன்ற வைபவங்களில் பைத்து சொல்ல அழைக்கப்பட்டு விட்டால், தை பிறந்ததும் நாதஸ்வரம் மேளம் வாசிப்பவர்களுக்கு ஏற்படும் கிராக்கியும், மதிப்பும் போல் இவர்களுக்கும் மதிப்பு உயர்ந்து விடும். பிறகென்ன வருமானத்திற்குக் கேட்கவா வேண்டும்? அது வரும் வழியைப் பற்றி இவர்களுக்கென்ன அக்கறை?

நான் பேசி வைத்திருந்த வீட்டில் அவன் போய் ஓதி விட்டு வந்து விட்டான்; நான் பேசிய கட்டணத்தை விட குறைந்த கட்டணம் பேசி ஓதிவிட்டு வந்து விட்டான் என்று உஞ்ச விருத்திப் பாப்பான்கள் போல் போட்டா போட்டிகளுக்கும், நடுத்தெருச் சண்டைகளுக்கும் குறைவே இல்லை.

மக்களுக்கு வழிகாட்டவும், அவர்களை அரசியல் ஆன்மீகம், பொருளாதாரம், சமூகம் போன்ற அனைத்துத் துறைகளிலும் சிறந்த முன் மாதிரிகளாக்கவும், படித்த தமது படிப்பைப் பயன்படுத்தக் கடமைப்பட்டவர்கள், இப்படிக் கீழ்த்தரமான காரியங்களுக்கும், உலக இன்பங்களுக்கும் அடகு வைத்துக் கொண்டு அலைந்தால் சமூகம் உருப்படுவது ஒரு புறமிருக்க இவர்கள் எப்படி உருப்படுவார்கள்? சிந்திக்க வேண்டாமா?

இந்தக் கொடுமைகளுக்கு எதிராக எவனாவது ஒருவன் தப்பித் தவறி வாய் திறந்து விட்டால் போதும். அவன் ஓநாய்களுக்கு மத்தியில் மாட்டிக் கொண்டு அவற்றால் கீறிக் கிழித்துக் குதறப்படும் ஆட்டுக்குச் சமமாகி விடுவான்.

வஹ்ஹாபி, ஜமாஅத்தே இஸ்லாமி, தப்லீக்குக்காரன் என்பன போன்ற கணைகளால் துளைக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டு விடுவான். திட்டமிட்டு இருட்டடிப்பும் செய்யப்படுவான். எத்தனை காலம் தான் இவர்கள் மக்களை ஏமாற்றி விடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்?

மவ்லிதுகள் என்ற பெயரால் ஓதப்பட்டு வரும் கவிதைகளிலெல்லாம், இஸ்லாத்தின் ஆணிவேரான ஏகத்துவத்தையே தகர்த்துத் தரைமட்டமாக்கக் கூடியதும், திருக்குர்ஆனுக்கும், அண்ணலாரின் அமுத மொழிகள் பலவற்றிற்கும் நேர் எதிரான கருத்துக்கள் கொண்டதும், இஸ்லாத்தைப் பற்றிய சாதாரண அறிவு படைத்த பாமரன் ஒருவனால் கூட சகித்துக் கொள்ள முடியாததுமான யா குத்பா என்ற கவிதையை எனது விமர்சனத்திற்கு எடுத்துக் கொள்கிறேன்.

யாகுத்பா

இந்தக் கவிதையின் பாட்டுடைத் தலைவராக எடுத்துக் கொள்ளப்பட்டிருப்பவர்கள் ஈரான் நாட்டின் ஜீலான் என்ற குக்கிராமம் ஒன்றில் பிறந்து ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில் அடக்கமாகியிருக்கும் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) என்ற பெரியாராவார்.

இவர்களைப் பற்றிச் சொல்லப்படும் கதைகளையும், புளுகு மூட்டைகளையும் படிக்கும் போது இவர்களது அபிமானிகள் என்று சொல்லிக் கொண்ட சிலரால் இந்து மதத்தின் அவதார புருஷர்களுக்கு நிகராக இவர்கள் மதிக்கப்பட்டிருப்பதையும், இன்று வரை அவ்வாறே போற்றப்படுவதையும் நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் இவர்களது தலை சிறந்த படைப்புகளான ஃகுன்யத்துத் தாலிபீன், இவர்களின் சொற்பொழிவுத் தொகுப்புகளான ஃபுத்தூஹுல் ஃகைப், அல்ஃபத்ஹுர் ரப்பானீ போன்ற நூல்களைப் படிக்கும் போது இவர்களது கல்வியறிவையும், ஏகத்துவத்தை நிலைநிறுத்தும் பணியில் தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட தியாக உணர்வையும், மன்னாதி மன்னர்களையும் துச்சமாக மதித்து சத்தியத்தை அவர்கள் முன் எடுத்து வைத்த மனத் துணிவையும், இறையச்சத்தையும் கண்டு நம்மையறியாமல் இவர் மீது ஒரு மதிப்பு ஏற்பட்டு விடுகின்றது.

ஒருவரை எத்தகைய அடைமொழிகளால் அழைப்பதற்கு திருக்குர்ஆனிலும், அண்ணலாரின் அமுதமொழிகளிலும் சற்றேனும் ஆதாரமில்லையோ அத்தகைய அடைமொழியான குத்புல் அக்தாப் என்ற பெயரில் இவர்களின் அபிமானிகள் இவர்களை அழைக்கின்றார்கள்.

குத்புகளுக்கெல்லாம் குத்பு என்பது இதற்குப் பொருள்.

குத்பு என்ற அரபிச் சொல்லுக்கு அச்சாணி என்பது பொருள். ஒரு கோளமோ, சக்கரமோ அச்சாணியின்றி எப்படிச் சுழலாதோ அது போல் இவரில்லாமல் இவ்வுலகம் சுழலாது என்று பொருள் படும் வகையில் அந்த வார்த்தையை இவருக்குப் பயன்படுத்துகின்றனர்.

குத்புகளுக்கெல்லாம் குத்பு எனும் போது இவர்களில்லாமல் இவ்வுலகம் அணுவத்தனையும் இயங்காது என்ற கருத்தே உணரப்படுகின்றது.

ஒரு மனிதரால் தான் இவ்வுலகமே இயங்குகின்றது என்ற இந்தக் கருத்தை அல்லாஹ்வையும், அவனது வல்லமையையும் புரிந்து கொண்ட எவரும் பிறருக்குச் சூட்ட மாட்டார். முதலில் இந்தக் கவிதையின் பாட்டுடைத் தலைவரே தனக்கு அத்தகைய ஒரு பெயரைச் சூட்டிக் கொள்ள விரும்ப மாட்டார்.

ஏனெனில் தனது நல்லடியார்களில் பலரை சித்தீக் (உண்மை என்று நம்புபவர்)

சாலிஹ் (நல்லவர்)

ஷஹீது (உயிர்த்தியாகி)

வலீ (நேசர்)

அப்து (அடியார்)

அவ்வாப் (நம்மையே நோக்கி நின்றவர்)

ஹலீம் (பொறுமையாளர்)

ரஹீம் (இரக்கமுள்ளவர்)

ரவூஃப் (அன்பாளர்)

என்றெல்லாம் புகழும் இறைவன் யாரையும் குத்பு என்றோ, குத்புல் அக்தாப் என்றோ புகழ்ந்துரைக்கவில்லை.

அண்ணலாரும் தமது சமுதாயத்தவர்களில் யாரையும் இவ்வாறு புகழ்ந்துரைத்திடவில்லை. சில அரபி மொழி அகராதி நூல்களில் குத்பு என்ற வார்த்தைக்கு தலைவர் என்ற பொருள் தரப்பட்டிருக்கிறது.

ஆனால் குணங்குடி மஸ்தான் என்பவர் அப்துல்காதிர் ஜீலானி அவர்களைப் புகழ்ந்து

அண்ட கோடிகளுமோர் பந்தெனக் கைக்குள்

அடக்கி விளையாட வல்லீர்

அகிலமோர் ஏழினையும் ஆடுங்கரங்கு போல்

ஆட்டி விளையாட வல்லீர்

மண்டலத் தண்டரை அழைத்தருகிருத்தியே

வைத்து விளையாட வல்லீர்

மண்ணகமும், விண்ணகமும் அணுவைத் துளைத்ததில்

மாட்டி விளையாட வல்லீர்

கண்டித்த கடுகில் எழு கடலைப் புகட்டிக்

கலக்கி விளையாட வல்லீர்

கருதரிய சித்தெலாம் வல்லநீர் அடிமை என்

கண்முன் வரு சித்தில்லையோ

நண்டளந் திடுநாழியாவனோ தேவரீர்

நற்குணங் குடிகொண்ட பாத்துஷாவான குரு

நாதன் முஹ்யித்தீனே!

என்று பாடியிருப்பதிலிருந்து வெறும் தலைவர் என்ற பொருளில் இவர்களின் அபிமானிகள் இவர்களைக் குத்பு என்று அழைக்கவில்லை. இவ்வையகமே சுழல்வது இவர்களால் தான் என்ற பொருளில் தான் இவ்வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள் என்பது மிகத் தெளிவாகப் புரிகிறது.

வானம் பூமியின் அச்சாணி

கவிதையின் முதல் அடி

يا قـطب أهل السما والأرض غوثهما

வானம் பூமி இரண்டிலும் வாழ்பவர்களின் குத்பு அவர்களே!

என்று துவங்குகிறது.

இதிலிருந்து தான் இக்கவிதையையே யா குத்பா – குத்பை அழைத்துப் பாடப்பட்ட கவிதை என்று குறிப்பிடுகின்றனர்.

வானத்தில் வாழ்பவர்கள் என்பதற்கு மலக்குகள் (வானவர்கள்) என்பதைத் தவிர வேறு பொருளிருக்க முடியாது. அப்படியானால் வானவர்களின் தலைவரே! அல்லது வானவர்களுக்கும் அச்சாணி போன்றவரே என்பது பொருளாகிறது. வானவர் தலைவர்களான ஜிப்ரீல் (அலை) மீக்காயில் (அலை) போன்றவர்களுக்கும் இவர் தலைவரா? அவர்களுக்கெல்லாம் இவர் தலைவர், அச்சாணி போன்றவர் என்பது வரம்பு மீறிய புகழ் அல்லவா?

அதே போன்று பூமியில் வாழ்பவர்கள் என்பதில் நபிமார்கள், அண்ணலாரின் அன்புத் தோழர்கள், இமாம்கள் அனைவரும் அடங்குவர். அவர்கள் அனைவருக்கும் இவர் தலைவர் என்பதையோ, அவர்களுக்கெல்லாம் அச்சாணி போன்றவர் என்பதையோ ஒரு முஸ்லிம் எப்படி ஏற்க முடியும்? இது இஸ்லாத்தின் கொள்கைக்கே முரணான ஒன்றில்லையா? இதுவல்ல அதன் பொருள் என்றால் அதற்கு என்ன தான் பொருள்? சம்பந்தப்பட்டவர்கள் விளக்கம் தருவார்களா?

மகத்தான ரட்சகர்

يا غــوث الأعظم كل الدهر والحين

எல்லாக் காலங்களிலும், நேரங்களிலும் (எங்களைக்) காப்பாற்றும் மகத்தான ரட்சகரே!

என்பது யாகுத்பாவின் மற்றொரு வரியாகும். எப்போதோ இவ்வுலகை விட்டுப் பிரிந்து விட்ட ஒரு மனிதரை இவ்வாறு கூவி அழைப்பது இஸ்லாமியக் கொள்கைக்கு எவ்வளவு முரணானது? மிகப் பெரும் தீர்க்கதரிசிகளில் ஒருவரான ஈசா (அலை) அவர்கள் தமது சமூகத்தவரின் குற்றங்கள் பற்றி மறுமையில் விசாரிக்கப்படும் போது,

மர்யமின் மகன் ஈஸாவே! அல்லாஹ்வையன்றி என்னையும், என் தாயாரையும் கடவுள்களாக்கிக் கொள்ளுங்கள்! என நீர் தான் மக்களுக்குக் கூறினீரா? என்று அல்லாஹ் (மறுமையில்) கேட்கும் போது, நீ தூயவன். எனக்குத் தகுதியில்லாத வார்த்தையை நான் கூற உரிமையில்லாதவன். நான் அவ்வாறு கூறியிருந்தால் அதை நீ அறிவாய். எனக்குள் உள்ளதை நீ அறிவாய்! உனக்குள் உள்ளதை நான் அறிய மாட்டேன். நீயே மறைவானவற்றை அறிபவன் என்று அவர் பதிலளிப்பார். நீ எனக்குக் கட்டளையிட்ட படி எனது இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்! என்பதைத் தவிர வேறு எதையும் நான் அவர்களிடம் கூறவில்லை. நான் அவர்களுடன் இருக்கும் போது அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். என்னை நீ கைப்பற்றியதும் நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். நீ அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவன். அவர்களை நீ தண்டித்தால் அவர்கள் உனது அடியார்களே. அவர்களை நீ மன்னித்தால் நீ மிகைத்தவன்; ஞானமிக்கவன் (எனவும் அவர் கூறுவார்)

திருக்குர்ஆன்: 5:116,117,118

எனத் திருக்குர்ஆனில் இறைவன் குறிப்பிடுகிறான்.

இதிலிருந்து ஒருவர் எவ்வளவு பெரிய மனிதராயிருப்பினும் இவ்வுலகை விட்டுப் பிரிந்த பின்னர் யாருக்கும் எதுவும் செய்து விடவோ, காப்பாற்றிக் கரை சேர்த்திடவோ இயலாது என்பது திட்டவட்டமாகத் தெகிறது.

இன்றளவும் உயிருடன் உள்ள தீர்க்கதரிசியின் நிலையே இதுவென்றால் அவர்களை விடத் தரத்தால் பலமடங்கு குறைந்த ஒருவர் இவ்வுலகை விட்டுப் பிரிந்த பின்னர் பிறரது செயல்களுக்குப் பொறுப்பேற்கவோ, அவர்களைக் காப்பாற்றிக் கரை சேர்த்திடவோ இயலாது என்பது திட்டவட்டமாகத் தெரிகிறது.

நான் உங்களுக்குத் தீங்கு செய்யவும், நன்மை செய்யவும் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்றும் கூறுவீராக! அல்லாஹ்விடமிருந்து என்னை எவரும் காப்பாற்ற மாட்டார். அவனன்றி ஒதுங்குமிடத்தையும் காண மாட்டேன் என்றும் கூறுவீராக

திருக்குர்ஆன்: 72:21,22

அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன் என்று (முஹம்மதே!) கூறுவீராக!

திருக்குர்ஆன்: 7:188

அவனே அல்லாஹ்; உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம். அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர். நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.

திருக்குர்ஆன்: 35:13,14

என்பன போன்ற திருவசனங்கள் இறைவனல்லாத எவராக இருப்பினும், அவர்கள் வாழ்வு, சாவு முதல் அனைத்துப் பிரச்சனைகளும் இறைவனின் அதிகாரத்திற்குட்பட்டவை தான் என்பதையும், அவனைத் தவிர எவருக்கும் எந்த விதமான சுய அதிகாரமும் கிடையாது என்பதையும், மறைவானவற்றை அறிந்திட எவராலும் இயலாது என்பதையும் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தி விடுகின்றன.

எல்லாக் காலங்களிலும், நேரங்களிலும் எங்களைக் காப்பாற்றும் மகத்தான இரட்சகரே என்று மரணித்தவரை அழைத்திட எவ்வாறு ஒரு முஸ்லிம் மனந்துணிவான்?

இறைவனைத் தவிர எவரை அழைத்துப் பிரார்த்தனை செய்தாலும் அவ்வாறு பிரார்த்திக்கப்படுபவர் நபியாக ஆனாலும், நல்லடியாராக இருந்தாலும் அவர்களும் இறைவனின் அடிமைகளே. ஒருக்காலும் அவர்கள் இரட்சகராக முடியவே முடியாது. இந்த அடிப்படையை உணராத காரணத்தாலேயே எல்லாக் காலங்களுக்கும் மகத்தான இரட்சகரே என்று இந்தக் கவிஞனும், இவனது அபிமானிகளும் அழைக்கத் துணிந்து விட்டனர்.

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!

திருக்குர்ஆன்: 7:194

அவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவிட இயலாது. தமக்கே அவர்கள் உதவ முடியாது.

திருக்குர்ஆன்: 7:197

மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைச் செவிதாழ்த்திக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.

திருக்குர்ஆன்: 22:73

வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று அவர்களிடம் நீர் கேட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள். அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றைப் பற்றிக் கூறுங்கள்! என்று கேட்பீராக! அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கை நாடி விட்டால் அவனது தீங்கை அவர்கள் நீக்கி விடுவார்களா? அல்லது அவன் எனக்கு அருளை நாடினால் அவர்கள் அவனது அருளைத் தடுக்கக் கூடியவர்களா? அல்லாஹ் எனக்குப் போதும். சார்ந்திருப்போர் அவனையே சார்ந்திருப்பார்கள் என்று கூறுவீராக!

திருக்குர்ஆன்: 39:38

திருக்குர்ஆனின் இந்த வசனங்களையும், இது போன்ற கருத்தில் வருகின்ற ஏராளமான வசனங்களையும் மீண்டும் ஒரு முறை கவனியுங்கள்! இந்த வசனங்கள் கூறும் உண்மைக்கு மாறாக யாகுத்பாவின் மேற்கண்ட வரிகள் அமைந்திருப்பதை உணர முடியும்.

எவராக இருந்தாலும் அவரும் அல்லாஹ்வின் அடிமையே. அணுவத்தனையும் அவர்களுக்கு அதிகாரம் இல்லை. தங்களுக்கே கூட சுயமாக அவர்களால் உதவிக் கொள்ள முடியாது. ஈயைப் படைக்கும் அளவுக்குக் கூட அவர்களுக்கு ஆற்றல் இல்லை என்ற போதனைகளையும் எல்லாக் காலங்களிலும் மகத்தான இரட்சகரே என்ற இந்தப் புலம்பலையும் ஒரு நேரத்தில் ஒருவன் எப்படி நம்ப முடியும்?

இந்த வரியை நம்பினால் அவன் இறை வசனங்களை மறுக்கிறான். இறை வசனங்களை நம்பினால் அவன் இந்த யாகுத்பாவை மறுக்க வேண்டும்.

மகத்தான இரட்சகரே என்று அழைப்பது ஒரு புறமிருக்கட்டும். சாதாரணமாக அவரது பெயரைச் சொல்லியாவது அழைக்கலாம்? என்றால் அதற்கும் கூட திருக்குர்ஆன் அனுமதி தரவில்லை.

சுமார் தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் அப்பெரியார். அவர் மரணித்து தொள்ளாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிருந்து கொண்டு அழைத்தால் அதை அவரால் செவியுறவே முடியாது.

இறந்தோரைச் செவியுறச் செய்ய உம்மால் முடியாது! செவிடர்கள் பின்வாங்கி ஓடினால் அழைப்பை அவர்களுக்குச் செவியேற்கச் செய்ய உம்மால் முடியாது.

திருக்குர்ஆன்: 30:52

உயிருடன் உள்ளோரும், இறந்தோரும் சமமாக மாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச் செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச் செய்பவராக இல்லை.

திருக்குர்ஆன்: 35:22

அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர். அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.

திருக்குர்ஆன்: 16:20,21

இறைவனின் இவ்வளவு தெளிவான போதனைகளுக்குப் பிறகு, என்றோ மரணித்து விட்ட அப்துல் காதிர் (ரஹ்) அவர்கள் கூப்பாடுகளைக் கேட்பார்கள் என்று நம்புவது இந்த வசனங்களை மறுத்ததாக ஆகாதா?

அனைத்து ஆற்றலும் கொண்டவர்

أعطاك من قدرة ما شئت من مستطاع - فأنـت مـقتدر في خـلقه ومـطاع

அப்துல் காதிர் ஜீலானி அவர்களே! நீங்கள் விரும்பிய அத்தனை ஆற்றலையும் அல்லாஹ் தங்களுக்கு வழங்கி விட்டான். எனவே தாங்கள் அவனது படைப்புகளில் எதனையும் சாதிக்கும் ஆற்றல் மிக்கவராயும் அவர்களின் கீழ்ப்படிதலுக்கு உரியவராயுமிருக்கிறீர்கள்

என்பது இதன் பொருள்:

ஒருவர் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசியாக இருந்த போதும் அவர் விரும்பிய ஆற்றல் அத்தனையும் இறைவன் அவருக்கு வழங்கியதில்லை.

மனித ஆற்றல் ஒரு வரையறைக்கு உட்பட்டது தானே தவிர இறைவனுடைய ஆற்றலைப் போன்று வரையறைக்கு அப்பாற்பட்டது அல்ல. மேலும் விருப்பங்கள் அனைத்தையும் இறைவன் யாருக்கும் நிறைவேற்றிக் கொடுக்கவில்லை.

தான் எண்ணிய அனைத்தையுமே சாதிப்பவன் என்ற சிறப்புத் தகுதி இறைவன் ஒருவனுக்கு மட்டுமே உண்டு. இவையனைத்தும் திருக்குர்ஆன், நபிமொழிகளிலிருந்து பெறப்படும் இஸ்லாமிய உண்மைகளும் அதன் கொள்கைகளுமாகும். இந்த உண்மைகளுக்கு முரணானதாகவே மேற்கூறப்பட்ட பாடல் அடி இயற்றப்பட்டிருக்கிறது.

மிகப்பெரும் இறைத் தூதர்களில் ஒருவரான நூஹ் (அலை) அவர்களின் மகன் தனது தந்தையின் வழியைப் பின்பற்றவில்லை. நிராகரிப்பவர்களில் ஒருவனாகவே இருந்தான். நிராகரிப்பவர்களை அழிப்பதற்காக இறைவன் மாபெரும் வெள்ளப் பிரளயத்தைத் தோற்றுவித்தான். இறைவனால் தெரிவிக்கப்பட்டதற்கேற்ப நூஹ் நபி அவர்கள் ஒரு கப்பலைச் செய்து அதில் ஆதரவாளர்களுடன் பயணமானார்கள்.

மலைகளைப் போன்ற அலை மீது அது அவர்களைக் கொண்டு சென்றது. விலகி இருந்த தன் மகனை நோக்கி அருமை மகனே! எங்களுடன் ஏறிக் கொள்! (ஏக இறைவனை) மறுப்போருடன் ஆகி விடாதே! என்று நூஹ் கூறினார். .ஒரு மலையில் ஏறிக் கொள்வேன்; அது என்னைத் தண்ணீலிருந்து காப்பாற்றும் என்று அவன் கூறினான். அல்லாஹ் அருள் புரிந்தவர்களைத் தவிர அல்லாஹ்வின் கட்டளையிலிருந்து காப்பாற்றுபவன் எவனும் இன்று இல்லை என்று அவர் கூறினார். அவ்விருவருக்கிடையே அலை குறுக்கிட்டது. அவன் மூழ்கடிக்கப்பட்டோரில் ஆகி விட்டான்.

திருக்குர்ஆன்: 11:42,43

நூஹ், தம் இறைவனை அழைத்தார். என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவன். உனது வாக்குறுதியும் உண்மையே. நீயே தீர்ப்பு வழங்குவோரில் மேலானவன் என்றார்.

திருக்குர்ஆன்: 11:45

என்று பிள்ளைப் பாசத்தால் காப்பாற்றும்படி கதறினார். அதற்கு இறைவன், நூஹே! அவன் உன் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன். இது நல்ல செயல் அல்ல. உமக்கு அறிவு இல்லாதது பற்றி என்னிடம் கேட்காதீர்! அறியாதவராக நீர் இருக்கக் கூடாது என உமக்கு அறிவுரை கூறுகிறேன் என்று அவன் கூறினான்.

திருக்குர்ஆன்: 11:46

இதே போன்று இப்ராஹீம் (அலை) அவர்கள், தம் தந்தை நேர்வழிக்கு வர வேண்டுமெனப் பெரிதும் விரும்பினார்கள். அவர்கள் விரும்பிய இந்தக் காரியம் கைகூடவில்லை என்பதைத் திருக்குர்ஆன் கூறுகின்றது.

சிலைகளைக் கடவுள்களாக நீர் கற்பனை செய்கிறீரா? உம்மையும், உமது சமூகத்தையும் தெளிவான வழிகேட்டில் இருப்பதாகவே நான் கருதுகிறேன் என்று இப்ராஹீம் தம் தந்தை ஆஸரிடம் கூறியதை நினைவூட்டுவீராக!

திருக்குர்ஆன்: 6:74

என் தந்தையே! செவியுறாத, பார்க்காத, உமக்கு எந்தப் பயனும் அளிக்காததை ஏன் வணங்குகிறீர்? என்று அவர் தமது தந்தையிடம் கூறியதை நினைவூட்டுவீராக!. என் தந்தையே! உமக்குக் கிடைக்காத ஞானம் எனக்குக் கிடைத்துள்ளது. எனவே என்னைப் பின்பற்றுவீராக! உமக்கு நேரான பாதையைக் காட்டுகிறேன். என் தந்தையே! ஷைத்தானை வணங்காதீர்! ஷைத்தான், அளவற்ற அருளாளனுக்கு மாறு செய்பவனாவான். என் தந்தையே! அளவற்ற அருளாளனிடமிருந்து உமக்கு வேதனை வந்து விடுமோ எனவும், ஷைத்தானுக்கு உற்ற நண்பராக ஆகி விடுவீரோ எனவும் நான் அஞ்சுகிறேன் (என்றார்.)

திருக்குர்ஆன்: 19:42-45

தன் தந்தை நேரான வழியை அடைய வேண்டுமென்பதில் இப்ராஹீம் நபிக்கு எவ்வளவு ஆர்வமும், அக்கரையும் இருந்தது என்பதை இந்த வசனங்கள் நமக்கு உணர்த்துகின்றன. இப்ராஹீம் (அலை) அவர்களின் இந்த விருப்பம் நிறைவேறியதா? அந்த ஆற்றலை அல்லாஹ் அவர்களுக்கு வழங்கினானா? நிச்சயமாக இல்லை. அவர்களால் தம் தந்தையை நேர்வழிக்குக் கொண்டுவர இயலவே இல்லை. அவர்களின் தந்தை அளித்த மறுமொழி இதை நமக்கு விளக்குகின்றது.

இப்ராஹீமே எனது கடவுள்களையே நீ அலட்சியப்படுத்துகிறாயா? நீ விலகிக் கொள்ளாவிட்டால் உன்னைக் கல்லால் எறிந்து கொல்வேன். நீண்ட காலம் என்னை விட்டு விலகி விடு! என்று (தந்தை) கூறினார்.

(அல்குர்ஆன்: 19:46)

இப்ராஹீம் (அலை) அவர்களுக்குக் கூட அவர்கள் விரும்பிய ஆற்றலை அல்லாஹ் வழங்கவில்லை என்று திருக்குர்ஆன் கூறுகிறது. அப்துல்காதிர் அவர்களுக்கு விரும்பிய ஆற்றலை எல்லாம் அல்லாஹ் வழங்கி விட்டான் என்று இந்தக் கவிஞன் கூறுகிறான்.

صحيح البخاري

1360 – حدثنا إسحاق، أخبرنا يعقوب بن إبراهيم، قال: حدثني أبي، عن صالح، عن ابن شهاب، قال: أخبرني سعيد بن المسيب، عن أبيه أنه أخبره: أنه لما حضرت أبا طالب الوفاة جاءه رسول الله صلى الله عليه وسلم، فوجد عنده أبا جهل بن هشام، وعبد الله بن أبي أمية بن المغيرة، قال رسول الله صلى الله عليه وسلم لأبي طالب: " يا عم، قل: لا إله إلا الله، كلمة أشهد لك بها عند الله " فقال أبو جهل، وعبد الله بن أبي أمية: يا أبا طالب أترغب عن ملة عبد المطلب؟ فلم يزل رسول الله صلى الله عليه وسلم يعرضها عليه، ويعودان بتلك المقالة حتى قال أبو طالب آخر ما كلمهم: هو على ملة عبد المطلب، وأبى أن يقول: لا إله إلا الله، فقال رسول الله صلى الله عليه وسلم: «أما والله لأستغفرن لك ما لم أنه عنك» فأنزل الله تعالى فيه: {ما كان للنبي} [التوبة: 113] الآية

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் பெரிய தந்தை அபூதாலிப் நேர்வழி பெற வேண்டுமெனப் பெரிதும் விரும்பினார்கள். அவர் மரணப் படுக்கையில் கிடக்கும் சமயத்தில் போதித்துப் பார்த்தார்கள். ஆனாலும் அவர் இஸ்லாத்தை ஏற்கவில்லை. இதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகவும் கலலையுற்ற போது (நபியே) நீர் விரும்பியோரை உம்மால் நேர் வழியில் செலுத்த முடியாது! மாறாக, தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர் வழி காட்டுகிறான். (28:56) என்ற வசனம் இறங்கியது.

நூல்: புகாரி 1360, 3884, 4675, 4772

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கே அவர்களின் அனைத்து விருப்பங்களையும் அல்லாஹ் நிறைவேற்றித் தரவில்லை. அப்துல் காதர் ஜீலானி அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை விடவும் உயர்ந்தவர் என்று இந்தக் கவிஞன் கருதுகின்றான்.

இப்பூமியில் நீரூற்றை எங்களுக்காக நீர் ஓடச் செய்யாத வரை உம்மை நாங்கள் நம்பவே மாட்டோம் என்று கூறுகின்றனர். அல்லது உமக்கு பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டம் இருக்க வேண்டும். அவற்றுக்கு இடையே நதிகளை நீர் பெருக்கெடுத்து ஓடச் செய்ய வேண்டும். அல்லது நீர் நினைப்பது போல் வானத்தைத் துண்டு துண்டாக எங்கள் மீது விழச் செய்ய வேண்டும். அல்லது அல்லாஹ்வையும். வானவர்களையும் நேரில் நீர் கொண்டு வர வேண்டும். அல்லது தங்கத்தால் உமக்கு ஒரு வீடு இருக்க வேண்டும். அல்லது வானத்தில் நீர் ஏற வேண்டும். நாங்கள் வாசிக்கும் விதமாக எங்களிடம் ஒரு புத்தகத்துடன் இறங்கினால் தவிர நீர் ஏறிச் சென்றதை நம்ப மாட்டோம் (எனவும் கூறுகின்றனர்) என் இறைவன் தூயவன். நான் மனிதனாகவும், தூதராகவுமே இருக்கிறேன் என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 17:90-93

நபியவர்களுக்கு வழங்கப்படாத ஆற்றல் வேறு ஒருவருக்கு இருப்பதாக யார் நம்பினாலும் அவன் இஸ்லாத்துக்கு அப்பாற்பட்டவனாகவே கருதப்படுவான்.

நபியவர்களின் தரத்தையும், தகுதியையும் குறைக்க வேண்டுமென்பதற்காக யூதர்களால் தான் இது புனையப்பட்டிருக்க வேண்டும் என்பது இதிலிருந்து புலனாகிறது. இந்தக் கவிஞர்களின் நோக்கம் அது தான் என்பதைக் கடைசி வரியில் இந்தக் கவிஞனே பகிரங்கமாக ஒப்புக் கொள்ளவும் செய்கிறான்.

நபியவர்களின் மதிப்பைக் குறைத்தல்

صلى الإله مدى ما الغوث الأعظم قام - عـلى محمـد الــعالي لخير مـقام

என்று கவிதையை இவன் முடிக்கிறான்.

கவ்ஸுல் அஃலம் அவர்கள் நிலைத்திருக்கும் காலமெல்லாம் நபியின் மீது அல்லாஹ் அருள் புரிவானாக!

என்பது இதன் கருத்து,

நபியின் புகழ் நிலைத்திருக்கும் காலமெல்லாம் அல்லாஹ் அப்துல் காதிர் ஜீலானிக்கு அருள் புரியட்டும் என்று இவன் பாடியிருந்தால் நபியை உரிய விதத்தில் மதித்திருக்கிறான் என்று கருதலாம். இந்தக் கவிஞன் அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் புகழ் நிலைத்திருப்பதால் தான் நபிக்கே அல்லாஹ் அருள் புரிய வேண்டும் என்கிறான்.

நபியவர்களின் மதிப்பைக் குறைப்பதே இது போன்ற கவிதைகளின் உண்மையான நோக்கம்.

அப்துல் காதிர் ஜீலானிக்கு வந்த வஹீ

وقـد أتـاك خـطاب الله مـستمعـا - يا غـوث الأعـظم كن بالقرب مجتمعا

أنـت الـخليفة لي فى الـكون ملتمعا -سـميت باسـم عـظيم محيى الـدين

காப்பாற்றிக் கரை சேர்க்கும் மகத்தான இரட்சகரே! (என்னை) நெருங்கி (என்னுடன்) ஒன்றி விடுவீராக! இப்பிரபஞ்சத்தில் பளீரென்று பிரகாசிக்கும் நிலையில் நீரே எனது கலீஃபாவாக இருக்கிறீர் என்ற இறைவனின் உரையாடல் நிச்சயமாக உம்மை வந்தடைந்தது; அதை நீங்கள் செவியுற்றீர்கள். முஹ்யித்தீன் அவர்களே! (இறைவனாலேயே மகத்தான இரட்சகரே என்று அழைக்கப்பட்டதன் மூலம்) நீங்கள் மகத்துவம் மிக்க திருநாமம் ஒன்றைச் சூட்டப்பட்டு விட்டீர்கள்.

என்பது இந்த நான்கு அடிகளுக்கும் பொருள். இந்த நான்கு வரிகளில் இந்தக் கவிஞன் சொல்ல வரும் விஷயங்களைக் காண்போம்.

* அப்துல் காதிர் ஜீலானியுடன் அல்லாஹ் நேரடியாகப் பேசினான். அதுவும் அவர் காதால் கேட்கும் அளவுக்குப் பேசினான்.

* அப்துல் காதிர் (கவ்ஸுல் அஃலமாக) மகத்தான இரட்சகராக இருக்கிறார்.

* மகத்தான இரட்சகர் என்ற பட்டத்தை மனிதர்கள் சூட்டவில்லை. அல்லாஹ்வே அவர்களுக்குச் சூட்டினான்.

* மனிதன் இறைவனுடன் ஒன்றி விட முடியும்.

* அப்துல் காதிர் ஜீலானி அல்லாஹ்வுக்கு கலீஃபாவாக இருக்கிறார்.

* இவைகளை அல்லாஹ்வே அவர்களை நோக்கிக் கூறினான்.

இவ்வளவு கருத்துக்களையும் இந்தக் கவிதை வரிகள் மறைமுகமாக அல்ல; தெளிவாகவே சொல்கின்றன.

இதில் சொல்லப்படும் எல்லாக் கருத்துக்களும் இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்ப்பதாக உள்ளன. இதில் எந்தக் கருத்துமே ஏற்புடையதல்ல.

அப்துல் காதிர் ஜீலானியுடன் அல்லாஹ் நேருக்கு நேர் பேசினான் என்ற கருத்தை எடுத்துக் கொள்வோம். சராசரி முஸ்மும் இதை நம்ப மாட்டான். நபிமார்களின் வருகையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோடு நிறைவுபடுத்தி விட்டதாக இறைவன் பிரகடனம் செய்கிறான்.

இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்.

திருக்குர்ஆன் 5:3

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இந்த மார்க்கம் முழுமை பெற்றபின் வேறு எவருடனும் இறைவன் எதற்காகப் பேச வேண்டும்? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் வேறு எவருடனாவது இறைவன் பேச வேண்டுமென்றால் இந்த உம்மத்திலேயே மிக உயர்ந்த இடத்தைப் பெற்ற அபூபக்கர் (ரலி) அவர்களுடன் பேசியிருப்பானே? உமருடைய நாவில் அல்லாஹ் பேசுகிறான் என்ற உயர் அந்தஸ்து பெற்ற உமர் (ரலி) அவர்களுடன் இறைவன் பேசவில்லையே? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் சிலாகித்துக் கூறப்பட்ட இந்த இரு நல்லடியார்களிடம் கூட உரையாடாத இறைவன் அவர்களின் தரத்தை அண்ணாந்து பார்க்கும் நிலையில் உள்ள ஒருவருடன் பேசினான்; நேரடியாகப் பேசினான் என்பதை ஒரு முஸ்லிம் எப்படி நம்ப முடியும்?

மிர்ஸா குலாம் அஹ்மத் என்பவன் தன்னை நபி என்றும் தனக்கு வஹீ வருகிறது என்றும் உளறிய போது தனக்கு வஹீ வருகின்றது என்று சொன்னவனையும், அவனது கூற்றை நம்பியவர்களையும் இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவர்கள்; காஃபிர்கள் என்று பத்வா அளித்த உலமாப் பெருமக்கள் அதே நச்சுக் கருத்தை எப்படிப் பாடிக் கொண்டிருக்கிறார்கள்?

அப்துல் காதிர் ஜீலானியை நபியாகச் சித்தரிக்கும் இந்த யாகுத்பா பாட்டை எழுதியவனும், இதை நம்பியவர்களும் காஃபிர்கள் என்று பத்வா அளிக்காததோடு தங்களுக்குக் கிடைக்கின்ற சில்லரைக்காக வீடுகளில் போய் ஓதிவிட்டு வரவும் எப்படித் துணிந்தார்கள்?

யா குத்பாவை ஆதரிப்பவர்களுக்கும், காதியானிகளுக்கும் கொள்கையில் என்ன வித்தியாசம் இருக்கிறது? இந்த நச்சுக் கருத்துக் கூட இவர்களின் கண்களுக்குத் தவறாகத் தோன்றாமல் போனது ஏன்?

இதில் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். உரையாடல் அல்லாஹ்வுக்கும் அப்துல்காதிர் ஜீலானிக்கும் நடந்ததாக இந்தக் கவிதையை எழுதியவன் கூறுகிறான். இவ்விருவருக்கும் இரகசியமாக நடந்த இந்த உரையாடலை மூன்றாம் நபராகிய இந்தக் கவிஞன் அறிய வேண்டுமானால் அது எப்படிச் சாத்தியமாகும்?

உரையாடிய அல்லாஹ் இதைச் சொல்லி இருக்க வேண்டும். அல்லது அதைக் கேட்டுக் கொண்டிருந்த அப்துல் காதிர் ஜீலானி சொல்லியிருக்க வேண்டும்; தனது நூல்களில் எழுதி வைத்திருக்க வேண்டும். ஆனால் அல்லாஹ்வும் சொல்லவில்லை; அப்துல் காதிர் ஜீலானியும் சொல்லவில்லை என்றால் இந்தக் கவிஞனுக்கு இது எப்படித் தெரிந்தது? இவ்வளவு பைத்தியக்காரத்தனமான கருத்தை எப்படி ஒரு சமுதாயம் நீண்ட காலமாக அனுமதித்து வருகிறது?

அல்லாஹ் அவரோடு பேசினான் என்று சொன்னது ஒரு புறம் இருக்கட்டும். அவன் என்ன பேசினான் என்பதைக் கவனித்தால் அதை விடவும் பிதற்றலாகவல்லவா உள்ளது?

மகத்தான இரட்சகரே என்று இறைவன் பேசினானாம்!

மகத்தான இரட்சகரே! என்று அல்லாஹ் இவரை அழைத்ததாகக் கூறுவதன் மூலம் நபியை விடவும் இவரை இக்கவிஞன் உயர்த்துகின்றான். ஏனெனில் நபியவர்களைக் கூட அல்லாஹ் மகத்தான இரட்சகர் எனக் கூறவில்லை.

திருமறை நெடுகிலும் தன்னை மட்டுமே மகத்தான இரட்சகனாகப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் அல்லாஹ் தன்னுடைய அடிமையை மகத்தான இரட்சகரே என்று அழைத்தான் என்றால் எந்தப் புத்திசாலி தான் இதை நம்ப முடியும்?

இவரை நபியாக ஆக்கியதோடு நின்று விடாமல் அல்லாஹ்வாக அல்லவா ஆக்கி விடுகிறான் இந்தக் கவிஞன்? அல்லாஹ்வே இவரை மகத்தான இரட்சகர் என்று அழைத்து விட்டதாகக் கூறும் போது அல்லாஹ்வுக்கு மேலானவராகவல்லவா இவர் சித்தரிக்கப்படுகின்றார்? சராசரி முஸ்லிமுடைய இரத்தமும் கொதிக்கக்கூடிய இந்த விஷக் கருத்தை பக்திப் பரவசத்துடன் எப்படித் தான் ஒதி வருகின்றார்களோ? மக்களுக்கு வேண்டுமானால் இதன் அர்த்தம் தெரியாமலிருக்கலாம். ஏழு ஆண்டுகள் அரபு மொழி கற்ற மவ்லவிகள், அதற்கு மேலும் கற்ற பாஸில்கள் இதற்கு வெண்சாமரம் வீசுவது தான் விந்தையாக உள்ளது.

இந்த நச்சுக் கருத்து தவறு என்பதற்குக் குர்ஆனிலிருந்தும், ஹதீஸிலிருந்தும் கூட ஆதாரம் தேவை இல்லை. அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் எழுத்துக்களும், அவர்களின் பேச்சுக்களும் இதைப் பொய்யெனப் பறை சாற்றுகின்றன. இதை எழுதியவன் மடையன் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன. அதைப் பார்ப்போம்.

அப்துல் காதில் ஜீலானி அவர்கள் தம் கையால் எழுதிய குன்யதுத் தாபீன் அவர்கள் சொற்பொழிவுத் தொகுப்புகளாகிய புதூஹுல் கைப், அல்பதஹுர் ரப்பானி ஆகிய நூல்களில் இவற்றைப் பரவலாகக் காண முடியும்.

إذا ركنت إلى غيره فقد أشركت

இறைவன் அல்லாத மற்றவர்கள் மேல் நீ நம்பிக்கை வைத்தால் நீ இணை வைத்து விட்டாய்.

என்று அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் தமது ஃபுதூஹுல் கைப் நூலில் குறிப்பிடுகிறார்கள்.

لا تشك من الخالق إلى الخلق بل أشك إليه هو الذي يقدر وأما غيره فلا

படைத்தவனை விடுத்து படைக்கப்பட்டவர்களிடம் நீ முறையிடாதே! அல்லாஹ் தான் (அனைத்திற்கும்) சக்தி பெற்றவன். மற்றவர்களுக்கோ எந்தச் சக்தியுமில்லை.

என்று அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் கூறியதாக அவர்களின் சொற்பொழிவுத் தொகுப்பாகிய அல்ஃபத்ஹுர் ரப்பானியில் இடம் பெற்றுள்ளது.

أجيبوني فإني داعي الله عز وجل أدعوكم إلى بابه وطاعته لا أدعوكم إلى نفسي المنافق ليس يدعو الخلق إلى الله عز وجل هو داع إلى نفسه

என் சொல்லைக் கேளுங்கள்! நான் அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைப்பவன். அவனுக்கு வழிப்பட்டு நடப்பதற்கும், அவனது வாசலுக்கும் தான் உங்களை நான் அழைக்கிறேன். என் பக்கம் உங்களை நான் அழைக்கவில்லை. மக்களை அல்லாஹ்வின் பால் அழைக்காமல் தன் பக்கம் அழைப்பவன் முனாஃபிக் (எனும் வேஷதாரி) ஆவான்

என்பதும் அவர்களின் சொற்பொழிவில் ஒரு பகுதியாகும். மேற்கூறிய அதே நூலில் இது இடம் பெற்றுள்ளது.

அல்லாஹ்வைத் தவிர உதவுபவன் எவனுமில்லை

لا معين إلا الله

என்றும்

به يكشف كل عمة وبلاء

அவன் மூலமே எல்லாக் கவலைகளும், சோதனைகளும் விலகும்

என்றும் தம் கைப்பட எழுதிய குன்யதுத் தாபீன் என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள்.

استوصى عبد الوهاب والده الشيخ رضي الله عنه في مرض موته فقال رضي الله عنه عليك بتقوى الله وطاعته ولا تخف أحدا ولا ترجه وكل الحوائج كلها إلى الله عز وجل ولا تعتمد إلا عليه سبحانه التوحيد التوحيد وجماع الكل التوحيد

வல்லமையும் கண்ணியமுமிக்க அல்லாஹ்வின் அச்சத்தை விட்டுவிடாதே! அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் நீ அஞ்சாதே! அல்லாஹ்வைத் தவிர எவரிடமிருந்தும் எதையும் எதிர்பாராதே! எல்லாத் தேவைகளையும் அல்லாஹ்விடமே ஒப்படைத்துவிடு! அவன் மீது மட்டுமே நம்பிக்கை வை! அவனிடமிருந்தே எல்லாத் தேவைகளையும் கேட்டுப் பெறு! அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் பற்றிப் பிடிக்காதே! தவ்ஹீத்! தவ்ஹீத்!

அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் சொற்பொழிவுத் தொகுப்பாகிய புதூஹுல் கைப் நூலில் இது இடம் பெற்றுள்ளது. அல்ஃபத்ஹுர் ரப்பானியிலும் ஏறக்குறைய இதே கருத்து இடம் பெற்றுள்ளது.

لا محيص لمخلوق من القدر المقدور الذي خط في لوح مستور وأن الخلائق لو جهدوا أن ينفعوا المرء بما لم يقضه الله تعالى لم يقدروا عليه ولو جهدوا أن يضروه بما لم يقضه الله لم يستطيعوا

விதிப்பலகையில் இறைவனால் எழுதப்பட்ட நிர்ணயிக்கப்பட்ட விதியிலிருந்து தப்பிக்க எந்த வழியும் இல்லை. இறைவன் விதிக்காத ஒன்றை ஒரு மனிதனுக்கு வழங்க படைப்பினங்கள் அனைத்தும் முயன்றாலும் அதற்கு அவை சக்தி பெற்றிருக்கவில்லை. இறைவன் விதிக்காத ஒரு தீமையை ஒரு மனிதனுக்கு ஏற்படுத்தி விட படைப்பினங்கள் அனைத்தும் முயன்றாலும் அதற்கு அவை சக்தி பெறாது

என்று அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் தமது குன்யதுத் தாலீபீன் நூலில் வரைந்து உள்ளார்கள்.

أنه قسم الأرزاق وقدره فلا يسدها ساد ولا يمنعها مانع لا زائدها ينقص ولا ناقصها يزيد ولا ناعمها يخشن ولا خشنها ينعم

இறைவன் (மனிதர்களின்) உணவைப் பங்கிட்டு நிர்ணயித்து விட்டான்; அதைத் தடுப்பவன் எவனும் இல்லை. கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டது குறையப் போவதுமில்லை, குறைவாக நிர்ணயிக்கப்பட்டது கூடப் போவதுமில்லை. கஷ்டம் என நிர்ணயிக்கப்பட்டது சுகமளிப்பதாக மாறப் போவதில்லை. இன்பம் என நிர்ணயிக்கப்பட்டது துன்பமாக மாறப் போவதுமில்லை

என்று அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் தமது குன்யதுத் தாலீபீனில் வரைந்துள்ளார்கள்.

ومن ذلك أن الإمام يعلم كل شيئ ما كان وما يكون

ஒரு பெரியார் நடந்ததையும், நடக்கவிருப்பதையும் அறிவார் என்ற கொள்கையும் வழிகெட்ட 72 கூட்டத்தினரின் கொள்கைகளில் ஒன்றாகும்

என அந்தப் பெரியார் தமது குன்யதுத் தாலீபீனில் வரைந்துள்ளார்கள்.

يكره من الألقاب والأسماء ما يوازي أسماء الله

அல்லாஹ்வின் திருப்பெயர்களுக்கு நிகரான பெயர்கள் சூட்டுவதும், பட்டப்பெயர்கள் சூட்டுவதும் கூடாத ஒன்றாகும்.

எனவும் அவர்கள் தமது குன்யதுத் தாலிபீனில் குறிப்பிட்டுள்ளார்கள். அவர்கள் கூடாது என்று தீர்ப்பளித்துள்ள கவ்துல் அஃலம் மகத்தான இரட்சகர் என்ற பட்டத்தை அவர்களுக்குச் சூட்டுபவர்களின் நிலையை என்னவென்பது?

أن الأموات يرجعون إلى الدنيا

இறந்தவர்கள் இந்த உலகத்துக்குத் திரும்பி வருவார்கள் என்ற கொள்கை வழிகெட்ட ராபிஜியாக் கூட்டத்தாரின் கொள்கையாகும்

என்றும் அந்த பெரியார் தமது குன்யதுத் தாலீபீன் நூலில் தம் கையால் வரைந்துள்ளார்கள்.

அறிவுடைய மக்களுக்கு அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் இந்தப் போதனை போதுமானதாகும். அல்லாஹ் ஒருவனிடம் மட்டும் எல்லாத் தேவைகளையும் கேட்க வேண்டும் என்று வலியுறுத்திய அல்லாஹ்வின் அடிமைகளில் ஒருவராகத் திகழ்ந்த அப்பெரியாரின் பெயரால் எவ்வளவு பெரிய பொய்களைக் கட்டவிழ்த்திருக்கிறார்கள் என்பதை இதன் மூலம் தெளிவாக உணர முடியும்.

قد قمت بالصدق والإخلاص والزهـد  - والإجـتهاد وفي الـوعـد والـعهـد

فكل أهـل التـقى والزهـد والجهـد - يـدعوك يا غـوث الأعظم محيي الدين

உண்மை உளத்தூய்மை, பற்றற்ற நிலை (வணக்க வழிபாடுகளில்) அருமுயற்சி ஆகியவற்றைக் கைக்கொள்வதில் தாங்கள் உறுதியாய் நின்றீர்கள்; வாக்குறுதிகளையும், உடன்பாடுகளையும் நிறைவேற்றுபவராய்த் திகழ்ந்தீர்கள். எனவே முஹ்யித்தீன் அவர்களே! இறையச்சம், பற்றற்ற நிலை, (வணக்க வழிபாடுகளில்) அருமுயற்சி ஆகிய பண்புகளையுடையோர் அனைவரும் தங்களை யா கவ்ஸல் அஃலம் எங்களின் மகத்தான இரட்சகரே என்று அழைக்கின்றனர் என்கிறார்.

இறையச்சமும், வணக்க வழிபாடுகளில் ஆர்வமுமுடைய யாராவது இறைவனைத் தவிர வேறு யாரையும், காப்பாற்றிக் கரை சேர்க்கும் மகத்தான ரட்சகரே என அழைக்கத் துணிவார்களா என்ன?

இருட்டு திக்ர்

ومـن يـنادي اسمـي ألـفا بخلـوته -عـزمـا بـهمتـه صـرما لـغفوته

أجـبته مـسرعا مـن أجـل دعوتـه -فالـيدع يا عـبد الـقادر محيي الدين

எவர் ஒருவர் தனிமையில் அமர்ந்தவராகவும், தனது உறக்கத்தைக் களைந்தவராகவும், உறுதியான நம்பிக்கையுடனும் என் திருநாமத்தை ஆயிரம் தடவைகள் அழைப்பாரோ அவ்வாறு அவர் (என்னை) அழைத்த காரணத்திற்காக விரைந்தோடி வந்து நான் அவருக்கு மறுமொழி சொல்வேன் எனவே ஓ! அப்துல் காதிர் முஹ்யித்தீனே! என்ற அவர் (என்னை) அழைக்கட்டும் (என்றும் தாங்கள் கூறினீர்கள்)

بـعد الصـلاة اثنتي عـشرة من ركعة -مـع الفـواتـح والإخلاص بالخضعة

يا غـوث الأعـظم عبد القادر السرعة -يـا سيـدي احـضرني يا محيي الدين

சூரத்துல் பாத்திஹாவும், சூரத்துல் இக்லாஸும் ஓதி உள்ளச்சப்பாட்டுடன் பன்னிரண்டு ரக்அத்துகள் தொழுத பின்னர் காப்பாற்றும் மகத்தான இரட்சகரே! அப்துல் காதிர் ஜீலானி அவர்களே! விரைந்து வாரும் என் தலைவரே! என்னிடம் ஆஜராகும். ஓ! முஹ்யித்தீனே! என்று அவர்கள் என்னை அழைக்கட்டும் (என்றும் கூறினீர்கள்)

என்று அந்த மாமேதை மீது மாபெரும் களங்கத்தையும், இட்டுக்கட்டையும் சுமத்தியிருக்கிறான் இந்தக் கவிஞன். இறைவனல்லாதவர்களைத் தமது இன்னல்களை நீக்குமாறும், துன்பங்களை அகற்றுமாறும், உதவிகள் புரியுமாறும் அழைப்பதற்கு திருக்குர்ஆன், நபிமொழிகளில் எங்காவது ஆதாரமுண்டா? அவ்வாறு அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவனும் ஒரு ஏகத்துவ நம்பிக்கையாளனாக இருக்க முடியுமா?

இறைவனுக்கு இணை கற்பிக்கும் இந்த மன்னிக்க முடியாத மாபெரும் குற்றத்தைச் செய்யுமாறு காலமெல்லாம் ஏகத்துவத்தை நிலைநிறுத்திடும் அறப்பணிக்குத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டிருந்த அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் பிறருக்குக் கட்டளையிட்டிருப்பார்களா?

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!

திருக்குர்ஆன் 7:194

அவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவிட இயலாது. தமக்கே அவர்கள் உதவ முடியாது.

திருக்குர்ஆன் 7:197

அவனே அல்லாஹ்; உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம். அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர். நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.

திருக்குர்ஆன் 35:13,14

அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர். அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 16:20,21

நமக்கு உதவிகள் செய்யவும், நமது துன்பங்களை நீக்கவும் இறைவன் ஒருவனை மட்டுமே அழைக்க வேண்டும் என்பதற்கும், அவனல்லாத யாருக்கும் நமது அழைப்பைச் செவியேற்று ஆவண செய்திடவோ நமது பிரார்த்தனைகளை அங்கீகரிக்கவோ அணுவத்தனை அதிகாரமுமில்லை என்பதற்கும் இந்த இறைவசனங்கள் அனைத்தும் சிறந்த சான்றுகளாகும்.

இந்த இறை வசனங்களுக்கு நேர் எதிராக உங்கள் துன்பங்களை அகற்றிடவும், தேவைகளை நிறைவேற்றிடவும், அப்துல் காதிர் ஜீலானி அவர்களே எதிர் வந்து இன்னல் தீரும் என்று என்னையே அழையுங்கள். நான் உங்கள் அழைப்புக்கு மறுமொழி சொல்கின்றேன். எதிர் வந்து இன்னல் தீர்க்கிறேன் என்று அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் கூறியிருப்பார்களா? இது அவர்கள் மீது கட்டி விடப்பட்டிருக்கும் எவ்வளவு பெரிய இட்டுக்கட்டு?

இஸ்லாமியக் கொள்கைப்படி இறைவன் எண்ணிக்கையால் மட்டும் ஒருவனல்ல; தனது பண்புகளிலும் அவனைப் போன்ற இன்னொருவர் இல்லாத அளவுக்குத் தனித்துவமானவன்.

எனவே ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்கள் இருக்கின்றார்கள் என்று நம்புவது மாத்திரம் இறைவனுக்கு இணை கற்பிக்கும் மிகப் பெரும் குற்றமல்ல; அவனது பண்புகளைப் போன்ற பண்புகள் இன்னொருவரிடம் இருப்பதாக நம்புவதும் கூட இறைவனுக்கு இணைகற்பிக்கும் மன்னிக்க முடியாத மிகப்பெரும் குற்றம் தான்.

இந்த மாபெரும் குற்றத்தைச் செய்யுமாறு அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் கூறினார்கள் என்று இட்டுக் கட்டிச் சொல்லியிருப்பது எவ்வளவு பெரிய தவறு? மார்க்கத்தோடு விளையாடும் இவர்கள் மறுமை நாளில் இதற்கெல்லாம் இறைவனிடம் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

குர்ஆன், ஹதீஸ் அடிப்படைகளையே இந்தக் கவிதை வரிகள் தகர்த்தெறிவதுடன், சுன்னத் ஜமாஅத் எனத் தங்களைக் கூறிக் கொள்வோர் எவற்றைச் சட்ட நூல்கள் என நம்பி இருக்கிறார்களோ அந்த நூல்களிலும் கூட இது போன்ற நம்பிக்கை இறைவனுக்கு இணைவைத்தல் என்று தெளிவாகக் கூறி இருக்கின்றனர். அவர்களே ஏற்றுக் கொண்ட அந்த நூல்களை நம்பியாவது இதை விட்டொழிப்பார்களா?

சுன்னத் ஜமாஅத் என்ற தம்மைக் கூறிக் கொள்வோரால் பெரிதும் மதிக்கப்படும் முஹம்மது அப்துல் ஹை லக்னவீ அவர்களால் வழங்கப்பட்ட பத்வாக்கள் தொகுப்பு (மஜ்மவுல் ஃபதாவா) வில் இடம் பெறும் தீர்ப்பு வருமாறு:

கேள்வி எண்:300: வலிமார்கள் என்ற இறை நேசர்கள் அருகிலிருந்தோ, தொலைவிலிருந்தோ, தம்மை அழைப்பவர்களின் அழைப்பைச் செவியுறுகிறார்கள்; அவ்வாறு தான் அழைக்கப்படுகிறோம் என்பதைப் புரிந்து கொள்கிறார்கள் என்று நம்பி, தம்முன்னே இருக்கும் ஒருவனை அழைப்பதற்குப் பயன்படுத்தும் வார்த்தைகளால் அவர்களை அழைத்து அவர்களிடம் உதவி கோருவதுடன், கால்நடைகளை அவர்களுக்காக நேர்ச்சை செய்து விட்டேன் என்று குறிப்பிடும் ஒரு மனிதன் பற்றித் தங்களின் கருத்து என்ன? தெளிவுபடுத்துங்கள்; இறைவனிடம் கைமாறு வழங்கப்படுவீர்.

பதில்: இம்மனிதன் கொள்கை கெட்டவன். இவனிடம் குஃப்ர் என்ற இறை நிராகரிப்புத் தன்மை கூட இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஏனெனில் வலிமார்கள் (செவியுற முடியாத) தொலைவிலிருக்கும் நிலையிலும் (அவர்களை அழைப்பவர் குரலைச்) செவியுறுகிறார்கள் என்பது ஆதாரமற்ற நிரூபணமில்லாத விஷயமாகும். அனைத்துப் பிரச்சனைகளையும், முக்காலங்களையும் பற்றிய பொதுவான ஞானம் எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனுக்கே உரியது. மேலும், எவர்கள் தமது குருமார்களின் ஆன்மாக்கள் (தமது அழைப்பை ஏற்று) வருகை தருகின்றன. (தமது அழைப்பைப்) புரிந்து கொள்கின்றன என்று சொல்கின்றார்களோ அவர்கள் இஸ்லாத்திற்கு அப்பாற்பட்ட காஃபிர்களாகி விட்டார்கள். எவன் அல்லாஹ்வின் சாட்சியாகவும், அவனது திருத்தூதரின் சாட்சியாகவும் என்று கூறி மணமுடித்துக் கொள்கிறானோ அவனும் இஸ்லாத்திற்கு அப்பாற்பட்ட காஃபிராகவே ஆகி விட்டான். ஏனெனில் இதன் மூலம் அவன் (இறைவனால் அறிவிக்கப்படாது எல்லா மறைவானவற்றையும் திருத்தூதர் தாமே சுயமாக) அறிந்து கொள்கிறார்கள் என்ற நம்பி விட்டான். அவ்வாறு நம்புவது

அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் உள்ளன என்றும், மறைவானதை அறிவேன் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். நான் வானவர் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர (வேறெதனையும்) நான் பின்பற்றுவதில்லை என்று (முஹம்மதே!) கூறுவீராக!

திருக்குர்ஆன் 6:50

என்ற இறை வசனத்திற்கு முரணானது என்று ஃபதாவா பஜ்ஜிய்யா என்ற மார்க்கத் தீர்ப்புகளின் தொகுப்பு நூலில் அந்த நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்கள். அல்பஹ்ருர் ராயிக் அத்துர்ருல் முஃக்தார் போன்ற சட்ட நூல்களிலும், ஏனைய சட்ட நூல்களிலும் தெரிவிக்கப்பட்டிருப்பதற்கேற்ப இறைவனல்லாதவர்களுக்காக நேர்ச்சைகள் செய்வது ஹராம். தடை செய்யப்பட்ட ஒன்றாகும். அல்லாஹ் மிக அறிந்தவன்.

(நூல்: மஜ்மவுல் ஃபதாவா , ஆசிரியர்: முஹம்மது அப்துல்ஹை, லக்னவி பக்கம் 361)

இது ஷிர்க் என்ற இணைகற்பிக்கும் பெரும் பாவமில்லையா? என்று அவர்களிடம் கேட்டால் திருக்குர்ஆனில் அவ்வாறு கண்டிக்கப்பட்டிருப்பது பிற சமயத்து தெய்வங்களான சிலைகள் போன்றவற்றை அழைப்பவர்களைத் தான். நாதாக்களையும், நல்லடியார்களையும் பிரர்த்தித்து அழைப்பதையோ, அவர்களை எதிர் வந்து இன்னல் தீர்க்குமாறு கோருபவர்களையோ அல்ல என்று திருக்குர்ஆனைப் பற்றிய அடிப்படை அறிவு கூட அற்றவர்களாகப் பிதற்றுகிறார்கள்.

மக்கத்து காஃபிர்களின் கொள்கை எதுவாக அமைந்திருந்ததோ அதனையே இவர்களும் கூறி தங்களின் கொள்கையை நியாயப்படுத்த முயல்கிறார்கள்.

மக்காவில் வாழ்ந்த காஃபிர்களின் கடவுள் கொள்கை எத்தகையதாக அமைந்திருந்தது? என்பதை அறிந்து கொண்டால் தான் இவர்களின் கொள்கைகளுக்கும், மக்கத்து காஃபிர்களின் கொள்கைக்கும் வித்தியாசம் எதுவுமே கிடையாது என்பதை உணர முடியும்.

மக்கத்து காஃபிர்கள் தங்களை இப்ராஹீம் நபியின் வழியில் நடப்பவர்கள் என்றே நம்பினர். இப்ராஹீம் நபியையும், இஸ்மாயீல் நபியையும் மதிக்கின்றோம் என்ற பெயரால் அவர்களையும், மற்றவர்களையும் வழிபட்டு வந்தனர்.

صحيح البخاري

1601 – حدثنا أبو معمر، حدثنا عبد الوارث، حدثنا أيوب، حدثنا عكرمة، عن ابن عباس رضي الله عنهما قال: إن رسول الله صلى الله عليه وسلم لما قدم أبى أن يدخل البيت وفيه الآلهة، فأمر بها فأخرجت، فأخرجوا صورة إبراهيم، وإسماعيل في أيديهما الأزلام، فقال رسول الله صلى الله عليه وسلم: «قاتلهم الله، أما والله لقد علموا أنهما لم يستقسما بها قط». فدخل البيت، فكبر في نواحيه، ولم يصل فيه

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது கஅபாவுக்குள் பிரவேசித்த போது அங்கே இப்ராஹீம் நபி, இஸ்மாயீல் நபி ஆகியோரின் உருவச் சிலைகளைக் கண்டார்கள். அவற்றை அப்புறப்படுத்திய பிறகே உள்ளே நுழைந்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 1601, 3351, 3352, 4289

இன்றைய மக்கள் கொண்டாடுகின்ற பெரியார்களை விடவும் பல்லாயிரம் மடங்கு இப்ராஹீம் நபியும், இஸ்மாயீல் நபியும் உயர்வானவர்களில்லையா?

صحيح البخاري

435 – حدثنا أبو اليمان، قال: أخبرنا شعيب، عن الزهري، أخبرني عبيد الله بن عبد الله بن عتبة، أن عائشة، وعبد الله بن عباس، قالا: لما نزل برسول الله صلى الله عليه وسلم طفق يطرح خميصة له على وجهه، فإذا اغتم بها كشفها عن وجهه، فقال وهو كذلك: «لعنة الله على اليهود والنصارى، اتخذوا قبور أنبيائهم مساجد» ي

யூத கிறிஸ்தவர்களை அல்லாஹ் சபிப்பானாக! ஏனெனில் அவர்கள் தங்கள் நபிமார்களின் கப்ருகளை வணக்க ஸ்தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள் என்பது நபிமொழி.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 436, 437, 1330, 1390, 3454, 4441, 4444, 5816

சிலைகளை, தேவதைகளை வணங்கியவர்களை இங்கே நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிடவில்லை. மாறாக நபிமார்களையும், அவர்களது அடக்க ஸ்தலங்களையும் வணக்க ஸ்தலங்களாகக் கருதுவதைத் தான் கண்டிக்கின்றார்கள்.

சிலைகளைத் தான் வணங்கக் கூடாது; நல்லடியார்களையும் அவர்களது சமாதிகளையும் வணங்கலாம் என்ற இவர்களின் கூற்று நியாயமற்றது என்பதை மேற்கண்ட சான்றுகள் கூறுகின்றன.

மக்கத்துக் காஃபிர்கள், யாகுத்பா பக்தர்கள் அளவுக்குக் கூட கடவுள் தன்மைகளைப் பெரியார்களுக்கு வழங்கவில்லை.

வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? செவிப் புலனையும், பார்வைகளையும் தன் கைவசம் வைத்திருப்பவன் யார்? உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் வெளிப்படுத்துபவன் யார்? காரியங்களை நிர்வகிப்பவன் யார்? என்று கேட்பீராக! அல்லாஹ் என்று கூறுவார்கள். அஞ்ச மாட்டீர்களா என்று நீர் கேட்பீராக!

திருக்குர்ஆன் 10:31

பூமியும், அதில் உள்ளோரும் யாருக்குச் சொந்தம்? நீங்கள் அறிந்தால் (பதிலளியுங்கள்!) என்று (முஹம்மதே!) கேட்பீராக! அல்லாஹ்வுக்கே என்று அவர்கள் கூறுவார்கள். சிந்திக்க மாட்டீர்களா? என்று கேட்பீராக!

திருக்குர்ஆன் 23:84,85

ஏழு வானங்களுக்கும் அதிபதி, மகத்தான அர்ஷுக்கும் அதிபதி யார்? எனக் கேட்பீராக! அல்லாஹ்வே என்று கூறுவார்கள். அஞ்ச மாட்டீர்களா;? என்று கேட்பீராக!

திருக்குர்ஆன் 23:86,87

பாதுகாப்பவனும், (பிறரால்) பாதுகாக்கப்படாதவனும், தன் கைவசம் ஒவ்வொரு பொருளின் அதிகாரத்தை வைத்திருப்பவனும் யார்? நீங்கள் அறிந்தால் (பதில் கூறுங்கள்!) என்று கேட்பீராக! அல்லாஹ்வே என்று கூறுவார்கள். எவ்வாறு மதி மயக்கப்படுகிறீர்கள்? என்று கேட்பீராக!

திருக்குர்ஆன் 23:88,89

வானங்களையும், பூமியையும் படைத்தவனும், சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனும் யார்? என்று அவர்களிடம் நீர் கேட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள். அப்படியாயின் எவ்வாறு அவர்கள் திசை திருப்பப்படுகிறார்கள்?

திருக்குர்ஆன் 29:61

வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி பூமி செத்த பின் அதன் மூலம் அதற்கு உயிரூட்டுபவன் யார்? என்று அவர்களிடம் நீர் கேட்டால் அல்லாஹ் என்றே கூறுவார்கள். அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் என்று கூறுவீராக! மாறாக அவர்களில் அதிகமானோர் விளங்கிக் கொள்வதில்லை.

திருக்குர்ஆன் 29:63

வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று அவர்களிடம் நீர் கேட்டால் அல்லாஹ் என்று அவர்கள் கூறுவார்கள். அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் என்று கூறுவீராக! எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 31:25

வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று அவர்களிடம் நீர் கேட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள். அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றைப் பற்றிக் கூறுங்கள்! என்று கேட்பீராக! அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கை நாடி விட்டால் அவனது தீங்கை அவர்கள் நீக்கி விடுவார்களா? அல்லது அவன் எனக்கு அருளை நாடினால் அவர்கள் அவனது அருளைத் தடுக்கக் கூடியவர்களா? அல்லாஹ் எனக்குப் போதும். சார்ந்திருப்போர் அவனையே சார்ந்திருப்பார்கள் என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 39:38

வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று அவர்களிடம் நீர் கேட்டால் மிகைத்தவனாகிய அறிந்தவனே இவற்றைப் படைத்தான் எனக் கூறுவார்கள்.

திருக்குர்ஆன் 43:9

அவர்களைப் படைத்தவன் யார் என்று அவர்களிடமே நீர் கேட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள். எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்?

திருக்குர்ஆன் 43:87

மக்கத்துக் காஃபிர்கள் அல்லாஹ்வை நம்பியிருந்தார்கள்; அவனது வல்லமையைப் புரிந்து வைத்திருந்தார்கள் என்பதை இந்த வசனங்கள் சந்தேகத்திற்கிடமின்றி அறிவிக்கின்றன.

பெரியார்கள், நல்லடியார்கள் பற்றி மக்கத்துக் காஃபிர்களின் அதிகபட்ச மரியாதை எத்தகையதாக இருந்தது என்பதையும் அல்லாஹ் விளக்குகின்றான்.

அல்லாஹ்வையன்றி அவர்களுக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள் என்றும் கூறுகின்றனர். வானங்களிலும், பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன் என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 10:18

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.

திருக்குர்ஆன் 39:3

மக்கத்துக் காஃபிர்களின் கொள்கையை விடவும் மோசமான இந்த நம்பிக்கையின் பால் மக்களை அழைக்கும் இந்தக் கவிதையை இனி மேல் பாடலாமா? என்பதைச் சிந்தியுங்கள்!

அல்லாஹ்வின் படைப்புக்களிலேயே முதலாவது இடத்தைப் பெற்றுள்ள நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றிக் கூட இப்படியெல்லாம் எவரும் நம்பி விடக் கூடாது என்பதால் இறைவன் நபியவர்களைப் பின்வருமாறு கூறும்படிக் கட்டளையிடுகிறான்.

அல்லாஹ்வே! ஆட்சியின் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொள்கிறாய். நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய். நாடியோரை இழிவுபடுத்துகிறாய். நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன் என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 3:26

என் இறைவனுக்கு நான் மாறு செய்தால் மகத்தான நாளின் வேதனையை அஞ்சுகிறேன் எனக் கூறுவீராக!

திருக்குர்ஆன் 6:15

அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் உள்ளன; மறைவானதை அறிவேன்; என்று உங்களிடம் கூற மாட்டேன். நான் வானவர் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர (வேறெதனையும்) நான் பின்பற்றுவதில்லை என்று (முஹம்மதே!) கூறுவீராக! குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? சிந்திக்க மாட்டீர்களா? என்று கேட்பீராக!

திருக்குர்ஆன் 6:50

அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன் என்று (முஹம்மதே!) கூறுவீராக!

திருக்குர்ஆன் 7:188

பல்வேறு அற்புதங்கள் நிகழ்த்தினால் இஸ்லாத்தை ஏற்பதாக காஃபிர்கள் கேட்டுக் கொண்ட போது

என் இறைவன் மிகவும் தூய்மையானவன். நான் மனிதனாகவும், தூதராகவும் தான் இருக்கிறேன் என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 17:93

என்று இறைவன் கட்டளையிடுகிறான்.

தூதர்களில் நான் புதியவன் அல்லன். எனக்கோ, உங்களுக்கோ என்ன செய்யப்படும் என்பதை அறிய மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்றவில்லை. நான் தெளிவாக எச்சரிக்கை செய்பவனே தவிர வேறில்லை எனக் கூறுவீராக!

திருக்குர்ஆன் 46:9

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூட இறைவனது வல்லமையில் எந்தப் பங்கையும் பெற்றிருக்கவில்லை என்பதை இதை விடத் தெளிவாக எவரும் சொல்ல முடியாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கே அல்லாஹ் வழங்காத வல்லமைகளையும், ஆற்றல்களையும் அப்துல் காதிர் ஜீலானி என்பவருக்கு இறைவன் வழங்கி விட்டதாகக் கூறும் இந்தக் கதைகளை இனியும் பாடலாமா?

அல்லாஹ்வையன்றி நீங்கள் கற்பனை செய்தோரைப் பிரார்த்தித்துப் பாருங்கள்! உங்களை விட்டும் கஷ்டத்தை நீக்கவோ, மாற்றவோ அவர்களுக்கு இயலாது என்று கூறுவீராக! இவர்கள் யாரிடம் பிரார்த்திக்கிறார்களோ அவர்களில் (இறைவனுக்கு) மிகவும் நெருக்கமானவர்களே தமது இறைவனை நோக்கி வஸீலாவைத் தேடுகின்றனர். அவனது அருளை எதிர்பார்க்கின்றனர். அவனது வேதனைக்கு அஞ்சுகின்றனர். உமது இறைவனின் வேதனை அச்சப்பட வேண்டியதாகும்.

திருக்குர்ஆன் 17:56,57

இந்த வசனத்தில் எவர்களை நீங்கள் உங்களின் இன்னல்களை அகற்றிடும்படி அழைத்துக் கொண்டிருக்கிறீர்களோ அவர்களால் உங்களின் இன்னல்களை அகற்றிடவோ, உதவிகள் செய்திடவோ இயலாது என்ற கருத்து திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டிருப்பதுடன் நீங்கள் உதவிக்கு அழைத்துக் கொண்டிருக்கும் அந்த ஏந்தலர்களே தமது இறைவனை நெருங்கிட முயற்சித்தவர்களாகவும், அவனது அருளை எதிர்பார்த்தவர்களாகவும், அவனது தண்டனையை அஞ்சியவர்களாகவுமே வாழ்ந்தார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறது.

வேறு சிலரோ நாம் உலகவாழ்வில் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வதையும், கைமாற்று, கொடுக்கல் வாங்கல் செய்து கொள்வதையும் சுட்டிக்காட்டி, இறைவனிடம் தான் உதவி கேட்க வேண்டுமென்றால், பின்னர் ஏன் மற்றவர்களிடம் கைமாற்று கேட்கிறீர்கள்; ஒருவருக்கொருவர் உதவிகள் செய்து கொள்கிறீர்கள் என்று குட்டையைக் குழப்புகிறார்கள்.

உலக வாழ்வில் செய்து கொள்ளப்படும் பரஸ்பர உதவிகளை நல்ல காரியங்களில் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள் என்று இறைவனே தமது திருமறையில் அனுமதித்திருக்கிறான்.

நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்!

திருக்குர்ஆன் 5:2

வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வது மார்க்கத்தில் விரும்பத்தக்கதாகவும், இறைவனாலேயே அனுமதிக்கப்பட்ட ஒன்றாகவும் இருக்கிறது.

இன்று எனக்கு ஒரு உதவி செய்தவருக்கு நாளை நான் ஒரு உதவி செய்திட நேர்ந்திடலாம். இன்று எனக்கு கைமாற்றுத் தந்து உதவியவருக்கு நாளைக்கு என்னிடம் கைமாற்றுக் கேட்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

இறந்து விட்டவர்களிடமும், இறைநேசர்களிடமும், சிலைகளிடமும் கேட்கப்படும் உதவிகள் ஒரு தரப்பிலிருந்து மட்டுமே எதிர்பார்க்கப்படுபவைகளாக இருக்கின்றன. எப்பொழுதும் அந்த நல்லவர்களும், நாதாக்களும் தான் இவர்களால் உதவி கேட்கப்படவும் பிரார்த்தித்து அழைக்கப்படவுமாக இருக்கின்றார்களே தவிர அவர்கள் இவர்களை அழைப்பதும் இவர்களிடம் உதவி கேட்பதும் நடப்பதே இல்லை.

எனவே உலக வாழ்வில் நாம் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுதல் என்ற அடிப்படையில் பிறரிடம் கேட்கும் உதவியைக் காரணம் காட்டி வலிமார்களிடம் உதவி கேட்கலாம் என்று இவர்கள் எடுத்து வைத்த வாதம் அடிபட்டுப் போய் விடுகின்றது.

உயிருடன் உள்ளவரிடம் பரஸ்பரம் உதவி தேடுவதற்கும், இறந்து விட்ட நல்லடியார் ஒருவரிடம் உதவி தேடுவதற்கும் அடிப்படையில் அனேக வித்தியாசங்கள் உள்ளன. அவற்றைப் புரிந்து கொள்வது அவசியமாகும்.

நாம் உயிருடனுள்ள ஒருவரிடம் உதவி தேடும் போது அவரிடம் தெய்வீக அம்சம் இருப்பதாக மறைமுகமாகவோ, நேரடியாகவோ நாம் நம்புவது கிடையாது. அவரை நம்மைப் போன்ற ஒரு மனிதராகவே நம்புகிறோம். இறந்து விட்டவரிடம் தேடப்படும் உதவி இவ்வாறு அமைந்திருக்கவில்லை.

ஒரு மனிதனிடம் அதாவது உயிருடனுள்ள மனிதனிடம் உதவி தேடும் அதே சமயத்தில் இன்னும் பலர் அவரிடம் உதவி தேடினால் அவரால் அனைத்தையும் ஒரு நேரத்தில் கேட்க முடியாது என்று நாம் நம்புகிறோம். ஆனால் இறந்து விட்டவரிடம் ஒரு நேரத்தில் பல்லாயிரம் பேர் கோரிக்கைகளைச் சமர்ப்பிக்கின்றார்கள். அனைவரது பிரார்த்தனைகளையும் அவரால் கேட்க முடியும் என்றும் நம்புகின்றனர். இறைவன் எப்படி ஒரு சமயத்தில் பல கோடிப் பிரார்த்தனைகளைக் கேட்க முடியுமோ அதே போல் இவரும் கேட்கிறார் என்றால் கேட்கும் திறனில் இறைவனும், இவரும் சமமாவார்கள் என்று ஆகிவிடாதா?

உயிருடனுள்ளவர்களிடம் உதவி தேடும் போது ஒரு வரம்புக்கு உட்பட்டுத் தான் உதவி தேடுவோம். அவரது உதவிக்கு வரம்பு உண்டு என்று திட்டவட்டமாக நாம் நம்புகின்றோம். ஆனால் இறந்தவர்களிடம் உதவி தேடும் போது அவரால் எதுவும் செய்ய முடியும் என நம்புகின்றனர். இங்கேயும் இறைவனுக்குச் சமமாக அவரை ஆக்கி விடுகின்றனர்.

நாம் எவரிடமாவது உதவி தேடினால் அவருக்கு அருகில் சென்று கேட்டால் தான் அவருக்கு விளங்கும் என்று நம்புகிறோம். இங்கே இருந்து கொண்டு அமெரிக்காவில் உள்ளவரிடம் (தொலைபேசி போன்ற சாதனங்கள் இன்றி) உதவி தேட முடியாது எனவும் நம்புகிறோம். ஆனால் இறந்துவிட்டவர் எவ்வளவு தொலைவில் இருந்து கேட்டாலும் அதைச் செவியுற முடியும் என்று நம்புகின்றனர். இறைவனது கேட்கும் திறனுக்கு எப்படித் தூரங்கள் தடையாக முடியாதோ அது போன்ற நிலையில் அவரைக் கருதுகின்றனர். இரண்டும் எப்படிச் சமமாக முடியும்?

உயிரோடு உள்ளவரிடம் உதவி தேடுவது என்றால் அவருக்குத் தெரிந்த மொழியில் மட்டும் தான் தேட முடியும். அவருக்குத் தெரியாத மொழிகளில் கேட்டால் அவருக்குப் புரியாது எனவும் நம்புகிறோம். ஆனால் எந்தப் பாஷையில் கேட்டாலும், உயிருடன் அவர் இருந்த சமயத்தில் அவர் அறிந்திராத பாஷையில் கேட்டாலும் இறந்தவர் அதனைப் புரிந்து கொள்வார் என நம்புகின்றனர். இறைத் தன்மையில் அவருக்குப் பங்கிருப்பதாகப் பறை சாற்றுகின்றனர்.

உயிரோடு உள்ளவர்களிடம் தேடப்படும் உதவிகள் நம் புலன்களுக்குத் தெரியும் விதமாக நம்மை அடைகின்றன. நாம் பத்து ரூபாய் கேட்டால் அவர் பத்து ரூபாயை எடுப்பதும் அதை நம்மிடம் தருவதும் நம் புலன்களுக்கு நன்றாகவே தெரிகின்றது.

ஒரு மருத்துவரிடம் சென்று உதவி தேடினால் அவர் தரும் மாத்திரைகளும், ஊசியும் நம் புலன் உணர்வுக்குப் புலப்படுகின்றது.

ஆனால் இறந்தவரிடம் கேட்கப்படும் உதவிகள் இப்படி அமைந்திருக்கவில்லை. நம் புலன்களுக்குப் புலப்படாத வகையில் புறச் சாதனங்களின் துணையின்றி இறைவன் அளிக்கும் உதவி போன்ற நிலையில் இது கருதப்படுகின்றது.

இது போல் இன்னும் அனேக வித்தியாசங்கள் உள்ளன. உயிருடன் உள்ளவர்களிடம் உதவி தேடுவதையும், இறந்தவர்களிடம் உதவி தேடுவதையும் சமமாகக் கருதுவதற்கும், அது கூடும் என்பதால் இதுவும் கூடும் எனக் கருதுவதற்கும் எந்த முகாந்திரமும் இல்லை.

நேரடி தரிசனம்

شـرفت جـيلان بالـميلاد ساكنـه عـظمت بـالقبر بـغدادا أمـاكنـه

يـزوره كـل مـشتاق ولـكنــه في بـيـتـه قـد يـلاقي محيي الدين

நீங்கள் ஜீலான் எனும் ஊரில் பிறந்ததன் மூலம் அவ்வூருக்குச் சிறப்பளித்தீர்கள். பாக்தாத் நகரில் உங்கள் கப்ரை அமைத்துக் கொண்டதன் மூலம் அவ்வூரை மகத்துவப்படுத்தி விட்டீர்கள். அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களை ஆசிக்கும் அனைவரும் ஸியாரத் செய்கின்றனர். எனினும் சில சமயங்களில் அவர்களை ஆசிப்பவர்கள் தமது வீட்டிலேயே முஹ்யித்தீனை நேரடியாகத் தரிசனம் செய்கின்றனர்.

இறந்தவர்களின் ஆவிகள் இவ்வுலகுக்கு வர முடியாது என்பது இஸ்லாத்தின் கொள்கை. இந்தக் கவிஞனோ அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் பூத உடலுடன் சிலரது வீடுகளுக்கு எழுந்தருளுவதாகக் கதை விடுகிறான். திருக்குர்ஆனும், நபிமொழிகளும் இது பற்றி என்ன சொல்கின்றன என்பதைப் பார்ப்போம்.

மனித இனத்திலேயே இறைவனுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் உயர்வான பதவிகளைப் பெற்றவர்கள் நபிமார்கள். அவர்களின் நிலையை வேறு எவரும் எப்போதும் அடையவே முடியாது. இந்த நிலையை ஒரு மனிதன் தன்னுடைய அமல்கள் மூலம் அடைந்து விட முடியுமா என்றால் அது முடியாது. இறைவனாகப் பார்த்து யாரைத் தேர்ந்தெடுக்கிறானோ அவர்கள் தான் அந்த நிலையை அடைய முடியும். அதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் அல்லாஹ் முழுமைப்படுத்தி முத்திரையிட்டு விட்டான்

ஒரு மனிதன் தனது அமல்கள் மூலம் அடையும் பதவிகளிலேயே மிகவும் உயர்வான பதவி பெறுபவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டு தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த உத்தமர்களாவர். அல்லாஹ்வுக்காக உயிரையே தியாகம் செய்யும் நிலையை வேறு எந்த அமல் மூலமும் அடைய முடியாது.

سنن أبي داود 

 2520 – حدثنا عثمان بن أبي شيبة ثنا عبد الله بن إدريس عن محمد بن إسحاق عن إسماعيل بن أمية عن أبي الزبير عن سعيد بن جبير عن ابن عباس قال  : قال رسول الله صلى الله عليه و سلم " لما أصيب إخوانكم بأحد جعل الله أرواحهم في جوف طير خضر ترد أنهار الجنة تأكل من ثمارها وتأوي إلى قناديل من ذهب معلقة في ظل العرش فلما وجدوا طيب مأكلهم ومشربهم ومقيلهم قالوا من يبلغ إخواننا عنا أنا أحياء في الجنة نرزق لئلا يزهدوا في الجهاد ولا ينكلوا عند الحرب ؟ فقال الله سبحانه أنا أبلغهم عنكم قال فأنزل الله { ولاتحسبن الذين قتلوا في سبيل الله } إلى آخر الآية " .

இத்தகைய ஷஹீத்களின் (உயிர்த்தியாகிகளின்) உயிர்கள் கைப்பற்றப்பட்டு இறைவனிடம் எடுத்துச் செல்லப்பட்டு அங்கே அவர்களுக்குக் கிடைத்து விட்ட மகத்தான வாழ்வைக் கண்டு அவர்கள் பிரமிக்கிறார்கள். பெருமகிழ்வு கொள்கிறார்கள். தங்களுக்குக் கிடைத்துள்ள இந்த மகத்தான பாக்கியங்களை, உலகில் உயிருடன் வாழ்பவர்கள் அறிந்தால், அவர்களும் தங்கள் உயிர்களை அல்லாஹ்வின் பாதையில் அர்ப்பணித்து இந்தப் பதவிகளைப் பெறுவார்களே என்று அவர்கள் எண்ணுகிறார்கள். இறைவா! எங்களுக்குக் கிடைத்துள்ள இந்த உயர்ந்த அந்தஸ்தைப் பற்றி உலகில் வாழ்பவர்களிடம் நாங்கள் சொல்லி விட்டு வந்து விடுகிறோம். இதனால் அவர்களும் தம் உயிரை அர்ப்பணிக்கத் துணிவார்கள் என்று இறைவனிடம் அவர்கள் விண்ணப்பிக்கின்றார்கள். அப்போது இறைவன் திரும்பவும் உலகுக்குச் செல்ல முடியாது என்பதால் உங்களுக்குக் கிடைத்துள்ள பாக்கியங்கள் யாவை என்பதையும் உலகில் வாழ்பவர்களுக்கு நீங்கள் நற்செய்தி கூறுவதையும் நானே உங்கள் சார்பாக உலகில் உள்ளவர்களுக்கு அறிவிக்கின்றேன் என்று கூறிவிட்டு பின்வரும் வசனங்களை இறக்கியருளினான்.

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என எண்ணாதீர்கள்! மாறாக அவர்கள் தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர்; உணவளிக்கப்படுகின்றனர். தமக்கு அல்லாஹ் வழங்கும் அருளை எண்ணி மகிழ்கின்றனர். தம்முடன் (இது வரை) சேராமல் பின்னால் (உயிர்த் தியாகம் செய்து) வரவிருப்போருக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள் என்பதை எண்ணி மகிழ்ச்சியுடன் உள்ளனர். அல்லாஹ்விடமிருந்து கிடைத்த பாக்கியம் மற்றும் அருள் பற்றியும், நம்பிக்கை கொண்டோரின் கூலியை அல்லாஹ் வீணாக்க மாட்டான் என்பது பற்றியும் அவர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். தங்களுக்கு (போரில்) காயம் ஏற்பட்ட பிறகும் அவர்கள் அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் பதிலளித்தார்கள். அவர்களில் நன்மை செய்து (இறைவனை) அஞ்சியோருக்கு மகத்தான கூலி உள்ளது. (3:169, 170, 171, 172) என்று இறைவன் கூறுகிறான்.

(நபிமொழியின் கருத்து)

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: அபூதாவூத் 2158

இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அந்த உயிர் தியாகிகள் நல்ல எண்ணத்துடன் தங்களுக்குக் கிடைத்த பதவிகளைப் பற்றிச் சொல்வதற்காக உலகுக்கு வர அனுமதி கேட்கிறார்கள். இவ்வுலகுக்குத் திரும்பி வருவதற்கு யாருக்கேனும் அனுமதி, அளிப்பதென்றால் இவர்கள் அதற்கு மிகவும் தகுதியானவர்கள். மேலும் இவர்கள் இவ்வுலகுக்குத் திரும்ப வருவதற்குக் கூட சுய நலம் எதுவும் காரணம் அல்ல. மாறாக மற்றவர்களையும் ஆர்வமூட்டி அவர்களையும் உயர் பதவிக்குரியவர்களாக ஆக்குவதே இவர்களின் நோக்கம்.

இவ்வளவு உயர்ந்த நோக்கத்திற்காக இவ்வுலகுக்குத் திரும்பி வர அனுமதி கேட்ட பிறகும் இறைவன் மறுக்கிறான். அவர்களின் விருப்பம் தகாத விருப்பம் என்பதனால் இறைவன் இதை மறுக்கவில்லை. ஏனெனில் அவர்கள் இவ்வுலகுக்குத் தெரிவிக்க விரும்பிய விஷயத்தை அவர்களின் சார்பாக இறைவனே மேற்கண்ட வசனத்தில் நமக்குத் தெரிவிக்கவும் செய்கிறான். இறந்தவர்கள் திரும்பவும் உலகுக்கு வர முடியாது என்று தான் வகுத்த நியதியை எவருக்காகவும் மாற்றிக் கொள்ள மாட்டான் என்பதனாலேயே இவ்வாறு மறுக்கிறான்.

உயிர் தியாகிகள் அனுமதி கேட்ட பிறகும் இவ்வுலகுக்கு வர இறைவன் அனுமதி மறுக்கிறான் என்றால் அப்துல் காதிர் ஜீலானி ஒவ்வொரு வீடுகளுக்கும் எழுந்தருளுகிறார்கள் என்று இந்தக் கவிஞன் கூறுவதை ஒரு முஸ்லிம் நம்ப முடியுமா? அவ்வாறு நம்பினால் அவன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்தப் பொன்னுரையை மறுத்தவனாக அல்லவா ஆக நேரும்?

இறைவன் அனுமதி மறுத்தாலும் கூட அதை மீறிக் கொண்டு அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் வீடு வீடாக வருவார்கள் என்று இதற்கு விளக்கம் சொல்லப் போகிறார்களா? போகிற போக்கைப் பார்த்தால் இப்படியும் சிலர் சொன்னாலும் அதில் ஆச்சயரிப்படுவதற்கில்லை.

அல்லாஹ்வின் தூதரைப் பொய்யாக்கும் இந்த நச்சுக் கவிதை தீயிட்டுக் கொளுத்தப்பட வேண்டாமா? அரபியில் எழுதப்பட்டு விட்டது என்ற காரணத்துக்காகவும், சிலரது வயிற்றுப் பிழைப்புக்கு வழி செய்கிறது என்ற காரணத்துக்காகவும், சில ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகின்றது என்ற காரணத்துக்காகவும் இந்தக் குப்பையை அங்கீகரிக்க வேண்டுமா? அல்லாஹ்வின் தூதருடன் போர்ப் பிரகடனம் செய்யும் இதை ஆதரிக்க வேண்டுமா?

سنن الترمذي

 1071 – حدثنا أبو سلمة يحيى بن خلف حدثنا بشر بن المفضل عن عبد الرحمن بن إسحق عن سعيد بن أبي سعيد المقبري عن أبي هريرة قال : قال رسول الله صلى الله عليه و سلم إذا قبر الميت ( أو قال أحدكم ) أتاه ملكان أسودان أزرقان ( يقال لأحدهما المنكر والآخر النكير فيقولان ما كنت تقول في هذا الرجل ؟ فيقول ما كان يقول هو عبد الله ورسوله أشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله فيقولان قد كنا نعلم أنك تقول هذا ثم يفسح له في قبره سبعون ذراعا في سبعين ثم ينور له فيه ثم يقال له نم فيقول ارجع إلى أهلي فأخبرهم ؟ فيقولان نم كنومة العروس الذي لا يوقظه إلا أحب أهله إليه حتى يبعثه الله من مضجعه ذلك وإن كان منافقا قال سمعت الناس يقولون فقلت مثله لا أدري فيقولان قد كنا نعلم أنك تقول ذلك فيقال للأرض التئمي عليه فتلتئم عليه فتختلف فيها أضلاعه فلا يزال فيها معذبا حتى يبعثه الله من مضجعه ذلك

நல்லடியார்களின் உடல்கள் கப்ரில் வைக்கப்பட்டு, கேள்விகள் கேட்கப்பட்டு தக்க பதில் கூறியதும் அவரது கப்ருக்கு சுவனத்தின் சுகந்தங்கள் திறந்து விடப்படுகின்றன. இதைக் கண்டு மகிழ்ச்சியடையும் அவர்கள் தங்களுக்குக் கிடைத்த அந்தஸ்து பற்றி தம் உறவினர்களிடம் கூறி வருவதற்கு அனுமதி கேட்கிறார்கள். புதுமணமகனைப் போல் நீ உறங்கு என்று வானவர்களால் அவர்களுக்குக் கூறப்படும் என்பது நபிமொழி.

திர்மிதீ 991

இந்த நபிமொழியைக் கொஞ்சம் கவனியுங்கள். நல்லடியார்கள் இவ்வுலகுக்கு வருவதற்கு அதுவும் அன்றாடம் வீடு வீடாக அலைவதற்கு அல்ல. ஒரே ஒரு தடவை மட்டும் தங்களின் சொந்த இல்லத்திற்கு மட்டும் வருவதற்கு அனுமதி கேட்கின்றனர். அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்படுகின்றது. தனது கோரிக்கையைத் திசை அவர் வற்புறுத்திக் கொண்டே இருந்து விடக் கூடாது என்பதற்காகவோ, என்னவோ அல்லாஹ் திரும்பவும் உயிர் கொடுத்து அவர் எழுப்பும் வரை உறங்குமாறு அவரிடம் கூறப்படுகின்றது. புதுமாப்பிள்ளை போல் உறங்குமாறும் கூறப்படுகின்றது.

ஒரே ஒரு தடவை தங்கள் சொந்த வீடுகளுக்குத் திரும்பி வரக் கூட நல்லடியார்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதை நம்புவதா? இந்த மூடக் கவிஞனின் கற்பனையை நம்புவதா? எண்ணிப் பாருங்கள்!

எந்த நல்லடியாரும் கியாமத் நாள் வரை உறக்க நிலையிலேயே உள்ளார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவித்து விட்டனர். அதற்கு மாற்றமாக வீடு வீடாக அலைந்து கொண்டிருப்பதாக அப்துல் காதிர் ஜீலானி அவர்களைச் சித்தரித்ததன் மூலம் அவர்களை நல்லடியார்கள் அல்ல என்று தானே நம்பச் சொல்கிறது இந்தக் கவிதை.

மத்ஹபு மாற்றம்

الشـافـعي فـصرت الـحنبلي بـلا -هـجر لـتحتاط بـالخـيرين مـعتدلا

இதுவும் யாகுத்பா கவிதையின் ஒரு அடியாகும்…

நீங்கள் ஷாஃபி மத்ஹபைச் சேர்ந்தவராக இருந்தீர்கள். இரண்டு நல்ல வழிகளையும் பேணுவதற்காக ஷாஃபி மத்ஹபில் எவ்வித வெறுப்புமின்றியே ஹம்பலியாக மத்ஹபு மாறினீர்.!

அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் பெயரால் இட்டுக்கட்டப்பட்டுள்ள ஏனைய பொய்களைப் போன்றே இதுவும் ஒரு பொய் என்பதைச் சிந்தனையாளர்கள் உணரலாம்.

பணியாற்றும் இடத்திற்கேற்ப ஷாஃபி மவ்லவி ஹனஃபியாகவும், ஹனஃபி மவ்லவி ஷாஃபியாகவும் மாறுவதை இன்று சகஜமாகக் காண்கிறோம். மத்ஹபு என்பது பிழைப்பிற்கு ஒரு வழியாகிவிட்டதை இந்த நிகழ்ச்சிகள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன. இவர்கள் போடக் கூடிய இரட்டை வேடத்தை நியாயப்படுத்த வேண்டுமல்லவா அதற்காகத் தான் இந்தப் பாடல் வரிகள்.

அப்துல் காதிர் ஜீலானி அவர்களே ஷாஃபி மத்ஹபிலிருந்து ஹம்பலீ மத்ஹபுக்கு மாறி இருக்கும் போது நாங்கள் மாறுவதில் என்ன தவறு? என்று சமாளிக்கவே இந்த வரிகளைப் புனைந்துள்ளனர். இந்த வரிகள் பல்வேறு கோணங்களில் அலசப்பட வேண்டியவையாகும்.

அப்துல் காதிர் ஜீலானி ஷாஃபி மத்ஹபில் இருந்ததற்கு என்ன ஆதாரம்? தான் ஷாஃபி மத்ஹபைச் சேர்ந்தவர் என்று அவர் சொல்லியிருக்கிறாரா? அல்லது ஆரம்ப காலத்தில் ஷாஃபி மத்ஹபின் சட்ட நூல் எதுவும் எழுதியுள்ளாரா? தனது நூற்களில் கூறும் சட்டங்களுக்கு ஷாஃபி இமாமுடைய கூற்றுக்களை ஆதாரமாகச் சமர்ப்பித்துள்ளாரா? இவற்றில் எதுவுமே இல்லை. அவர்கள் ஷாஃபி மத்ஹபைப் பின்பற்றினார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது.

ஷாஃபியாகவே இருந்தார் என்று கண்ணை மூடிக் கொண்டு நம்பினாலும் வேறு விதமான கேள்விகள் அங்கே பிறக்கின்றன. ஷாஃபி மத்ஹபின் சட்டங்கள் அதற்குரிய ஆதாரங்கள் சரியானவை என்று வைத்துக் கொண்டால், ஹம்பலி மத்ஹபின் சட்டங்கள், ஆதாரங்கள் சரியில்லை என்று ஆகும்.

ஷாஃபி மத்ஹபின் சட்டங்களை விடுத்து, ஹம்பலி மத்ஹபுக்கு மாறினார்கள் என்றால் அதன் சட்டங்கள், ஆதாரங்கள் சரியில்லை என்று ஆகும்.

ஷாஃபி மத்ஹபின் சட்டங்கள் சரியானவையாக இருக்கும் போதே மாறினால் சரியான வழியை விட்டு விட்டு தவறான வழியைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள் என்று ஆகும்.

அப்துல் காதிர் ஜீலானி அவர்களே ஷாஃபி மத்ஹபை விட்டு விலகி இருக்கும் போது, அவர்களை மதிப்பவர்கள் ஷாஃபி மத்ஹபிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டியது தானே?

இப்படியெல்லாம் எவராவது கேட்டு விடக் கூடாது அல்லவா? அதற்காகத் தான் இரண்டு நல்லவற்றையும் பேணுவதற்காக ஷாஃபி மத்ஹபின் மேல் எவ்வித வெறுப்புமின்றி மத்ஹபு மாறினார்கள் என்று புனைந்து உள்ளனர்.

ஷாஃபியிலிருந்து ஹம்பலி மத்ஹபுக்கு எப்போது மாறினார்கள்?

தான் அவ்வாறு மாறிவிட்டதாக எந்த நூலில் குறிப்பிடுகிறார்கள்?

ஹம்பலி மத்ஹபின் சட்ட நூல் எதுவும் எழுதியிருக்கிறார்களா?

தான் கூறும் சட்டங்களுக்கு ஹம்பலி இமாமை ஆதாரமாகக் காட்டுகிறார்களா?

இவற்றில் எதுவுமே இல்லை. வெறும் கற்பனையைத் தவிர வேறில்லை.

மத்ஹபை நியாயப்படுத்துவதிலும் கூட ஓர வஞ்சனையைப் பாருங்கள்! ஹனஃபி, மாலிகி மத்ஹபுகளை விட்டு விட்டார்கள். ஷாஃபி, ஹம்பலி இரண்டு மத்ஹபுகளையும் நல்லவை என்பதற்காக அவ்விரண்டிலும் மாறி மாறி இருந்தார்கள் என்றால் ஹனஃபியும், மாலிகியும் என்ன பாவம் செய்தன? அவற்றிலும் கொஞ்ச காலம் இருக்க வேண்டியது தானே!

இதை எழுதியவரும், இன்று வரை பக்திப் பரவசத்துடன் பாடிக் கொண்டிருப்போரும் ஹனஃபியும், மாலிகியும், அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் ராஜினாமா செய்த ஷாஃபியும் சரியானவை அல்ல என்று வாக்குமூலம் தருகின்றனர். மத்ஹபுகளை யாகுத்பா பித்தர்கள் முழுமையாக எதிர்க்காவிட்டாலும் மூன்று மத்ஹபுகள் தவறானவை என்று ஒப்புக் கொள்கின்றனர்.

அப்துல் காதிர் ஜீலானி அவர்களை இவர்கள் மதிப்பது உண்மையானால் ஷாஃபிகளும், ஹனஃபிகளும் அவ்விரு மத்ஹபுகளிலிருந்து விலக வேண்டும்; ஹம்பலிகளாக மாற வேண்டும். இக்கவிதையில் கூறப்படுவது பொய் என்று அவர்கள் கருதினால் இந்த யாகுத்பாவையாவது விட்டுத் தொலைக்க வேண்டும். இரண்டில் எதைச் செய்யப் போகிறார்கள்?

மத்ஹபுவாதிகளுக்கு இது ஒரு வாடிக்கை. காலம் சென்ற எவரைப் பற்றிக் கூறுவதென்றாலும், அவருக்கு ஏதேனும் மத்ஹபு முத்திரை குத்தாமல் விட்டதில்லை. புகாரி, முஸ்லிம் போன்ற ஹதீஸ்கலை மேதைகளாகட்டும்! அப்துல் காதிர் ஜீலானி போன்ற அறிஞர்களாகட்டும்! யாருமே இதிலிருந்து தப்பியதில்லை. மத்ஹபை எதிர்த்துப் போராடிய இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்களுக்கும் இதே முத்திரையைக் குத்தத் தவறவில்லை. அவரது மாணவர்களாம் இப்னுல் கையிமுக்கும், இப்னு கஸீருக்கும் கூட குத்தினார்கள்.

சான்றுகள் வழியாக மத்ஹபுகளை நிலைநாட்ட வழியில்லாமல் இறந்து போன பெரியார்களுக்கு இந்த முத்திரையைக் குத்துவதன் மூலம் மத்ஹபுகளை நியாயப்படுத்தி விடலாம் என்று திட்டமிட்டுச் செய்து வருகின்றனர். அதன் விளைவு தான் இந்த வரிகள்.

உண்மையில் அப்துல் காதிர் ஜீலானி அவர்களுக்கும், மத்ஹபுகளுக்கும் ஏதாவது சம்பந்தமுண்டா என்பதை அவர்களின் நூல்களிலிருந்தும், அவர்களின் சொற்பொழிவுகளிலிருந்தும் அறிய முடியும்.

يا غلام العمل بالقرآن يوقفك على منزله والعمل يالسنة يوقفك على الرسول

திருக்குர்ஆனின் அடிப்படையில் செயல்படுவது அல்லாஹ்வின் அருகாமையில் உன்னை நிறுத்தும்! நபிவழியின் பிரகாரம் செயல்படுவது நபியின் அருகே உன்னை நிறுத்தும்!

என்பது அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் பதினாறாவது சொற்பொழிவு.

(அல்ஃபத்ஹுர்ரப்பானி)

تحفظ القرآن ولا تعمل به تحفظ سنة رسول الله صلى الله عليه وسلم ولا تعمل بها فلأي شيئ تفعل ذلك

குர்ஆனை மனனம் செய்கிறாய். அதன்படி செயல்பட மாட்டேன் என்கிறாய். நபியின் சுன்னத்தை மனனம் செய்கிறாய். அதன்படி செயல்படுகிறாய் இல்லை! ஏன் இவ்வாறு செய்கிறாய்?

(அல்ஃபத்ஹுர்ரப்பானி எனும் நூலில் அவர்களின் பத்தாவது சொற்பொழிவு)

இதுவும் அதே நூலில் இடம் பெறும் அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் மூன்றாவது சொற்பொழிவு.

يا مسكين دع الكلام فيما لا ينفعك أترك التعصب في المذهب

ஏழையே! பயனற்ற பேச்சுக்களை விட்டுவிடு! மேலும் மத்ஹபு வெறியையும் விட்டு விடு!

என்பதும் அவர் எழுதியது. (குன்யதுத் தாலிபீன்)

إجعل الكتاب والسنة أمامك واعمل بهما ولا تغتر بالقال والقيل والهوس

குர்ஆனையும், நபிவழியையும் உனக்கு முன்னால் வைத்துக் கொள்! அதன்படி செயல்படு. அவர் சொன்னார்; அதில் சொல்லப்பட்டுள்ளது என்பது போன்ற கூற்றில் நீ மிரண்டு ஏமாந்துவிடாதே!

இவ்வளவு தெளிவாக மத்ஹபுகளை எதிர்த்த அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் முதலில் ஷாஃபி மத்ஹபில் சேர்ந்தார்களாம். பின்னர் ஹம்பலிக்கு மாறினார்களாம்!

அப்துல் காதிர் ஜீலானி அவர்களே நேரடியாகச் சொல்வதை நம்புவதா? அல்லது அவர்கள் பெயரால் அவிழ்த்து விடப்பட்ட பொய்யை நம்புவதா?

அந்தப் பெரியாரை மேலும் இழிவுபடுத்தும் விதமாக இந்தக் கவிஞன் பாடியுள்ள மற்றொரு அடியைக் கேளுங்கள்

தலைகளில் பாதம்

قـد قـلت بالإذن مـن مولاك مؤتمرا -قـدمي عـلى رقـبات الأولياء طـرا

فـكلهـم قـد رضوا وضعا لها بشرى -يـا من سـما اسما عليهم محيي الديـن

எனது பாதங்கள் எல்லா அவுலியாக்களின் பிடரி மீதும் உள்ளன என்று தங்களின் எஜமானனாகிய அல்லாஹ்விடம் அனுமதி பெற்று தாங்கள் கூறினீர்கள். அவ்வாறு தங்கள் பாதத்தை அனைவரும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டனர். எல்லா அவ்லியாக்களையும் விட உயர்ந்து விட்ட முஹ்யித்தீனே! என்பது இதன் பொருளாகும்.

திருக்குர்ஆனையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் ஓரளவுக்கு அறிந்து வைத்துள்ள முஸ்லிம் கூட இது பிதற்றல் எனப் புரிந்து கொள்ள முடியும். அதைக் கூட புரிந்து கொள்ளாதவர்களும் முஸ்லிம் சமுதாயத்தில் உள்ளதால் இந்தக் கவிதையையும் அலசுவோம்.

இந்தக் கவிதை வரிகளில் மூன்று விஷயங்களைக் கவிஞன் கூறுகிறான்.

* எல்லா அவ்லியாக்களின் தலையின் மீதும் தான் காலைத் தூக்கி வைத்ததாக அப்துல் காதிர் ஜீலானி கூறினார்களாம்!

* இதை அல்லாஹ்வின் அனுமதியுடன் செய்துவிட்டு, அவனது அனுமதியுடனே மக்களுக்கும் அறிவித்தார்களாம்.

* காலால் மிதிக்கப்பட்ட அந்த அவ்லியாக்களும் இதை மகிழ்வுடனே ஏற்றுக் கொண்டார்களாம்.

பூமியில் கர்வத்துடன் நடக்காதே! நீ பூமியைப் பிளந்து, மலைகளின் உயரத்தின் அளவை அடையவே மாட்டாய்!

திருக்குர்ஆன் 17:37

மனிதர்களை விட்டும் உனது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் கர்வமாக நடக்காதே! கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.

திருக்குர்ஆன் 31:18

என்று வல்ல அல்லாஹ் தன் திருமறையில் குறிப்பிடுகிறான். இந்தக் கட்டளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்பட அனைத்து முஸ்லிம்களுக்கும் பொதுவானது.

பெருமையையும், ஆணவத்தையும் வல்ல இறைவன் கண்டித்து இருக்கும் போது தன்னுடைய நேசம் இத்தகையோருக்குக் கிடைக்காது என்று பிரகடனம் செய்திருக்கும் போது ஒரு இறைநேசர் தன் காலை வலிமார்களின் தலையில் வைத்தேன் என்று கூறியிருப்பார்களா? உண்மையிலேயே அப்படிக் கூறி இருந்தால், இத்தகையோரை நேசிக்க மாட்டேன் என்று இறைவன் கூறியிருக்கும் போது அவர் எப்படி இறை நேசராக இருக்க முடியும்?

அப்துல் காதிர் ஜீலானியை இறை நேசர் அல்ல என்றும் இழிவுபடுத்தும் விதமாக இக்கவிதை அமைந்துள்ளதை இதிலிருந்து விளங்கலாம்.

سنن ابن ماجه

 1853 – حدثنا أزهر بن مروان . حدثنا حماد بن زيد عن أيوب عن القاسم الشيباني عن عبد الله بن أبي أوفى قال  : – لما قدم معاذ من الشام سجد للنبي صلى الله عليه و سلم . قال ( ما هذا يا معاذ ؟ ) قال أتيت الشام فوافقتهم يسجدون لأساقفتهم وبطارقتهم . فوددت في نفسي أن نفعل ذلك بك . فقال رسول الله صلى الله عليه و سلم ( فلا تفعلوا . فإني لو كنت آمرا أحد أن يسجد لغير الله لأمرت المرأة أن تسجد لزوجها

முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் பல பகுதிகளுக்கும் சென்ற போது, அங்குள்ள மக்கள் தம் தலைவர்களின் கால்களில் விழுந்து மரியாதை செய்வதைக் காண்கிறார்கள். இதைக் கண்டதும், இந்தத் தலைவர்களையெல்லாம் விட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயர்ந்தவர்களாயிற்றே! எனவே இது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு காலில் விழுந்து மரியாதை செய்ய வேண்டும் என்று எண்ணிக் கொண்டார். பின்னர் மதீனா வந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இதைக் கூறினார். அப்போது ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் சிரம் பணிய அனுமதி இல்லை. அவ்வாறு அனுமதி இருந்திருக்குமானால் ஒரு பெண் தன் கணவனுக்கு அந்த மரியாதையைச் செய்யுமாறு கூறியிருப்பேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இப்னுமாஜா 1843

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கால்களிலேயே தலையை வைப்பதற்கு அனுமதி இல்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகத் தெளிவாக அறிவித்து விட்ட பின், அதற்கு மாற்றமாக அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் சொல்லி இருப்பார்களா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை விடவும் இந்தக் கவிதை நாயகர் உயர்ந்தவர் என்று இந்தக் கவிதையைப் பக்தி சொட்ட சொட்டப் பாடுவோர் நம்புகின்றார்களா?

தனக்கு மரியாதை செலுத்தும் விதமாக மற்றவர்கள் எழுந்து நிற்பதைக் கூட வெறுத்தொதுக்கிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டலுக்கு மாற்றமாக இந்த மாபாதகமான சொல்லை அந்தப் பெரியவர் கூறி இருப்பார்களா?

وفي خـزانـة أسـرار روى سـنـدا -عـن كـل من وضعت في عنقه عددا

إلا أبـا بـكر مـنهم فـتاب فــدا حـزت الـمعالي جـما محيي الدين

இதுவும் யாகுத்பா என்ற கவிதையின் வரிகளாகும்.

தமது பாதம் எல்லா இறைநேசர்களின் கழுத்தின் மீதும் உள்ளதாக அப்துல் காதிர் ஜீலானி கூறியதாக இந்தக் கவிதையாசிரியர் காதில் பூச்சுற்றியதைக் கண்டோம். அதைத் தொடர்ந்து மேற்கண்ட வரிகளைக் கவிஞர் கூறுகிறார். இதன் பொருளைக் கேளுங்கள்.

யார் யாருடைய பிடரிகள் மீது அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் தமது பாதத்தை வைத்தார்களோ அவர்கள் அனைவர் பற்றியும் அறிவிப்பாளர் வரிசையுடன் கிஸானதுல் அஸ்ரார் என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. அபூபக்ரு என்பவர் (சுயமரியாதையின் காரணத்தினாலோ என்னவோ) தமது பிடரியைத் தர மறுத்து விட்டார். பின்பு அவரும் (மகிமை உணர்ந்து) தவ்பாச் செய்து விட்டார். முஹ்யித்தீன் அவர்களே எல்லா உயர்வுகளையும் தாங்கள் சேர்த்துப் பெற்று விட்டீர்கள்!

இது இந்தக் கவிதை வரிகளின் பொருள். எல்லா அவ்லியாக்களின் பிடரியின் மீதும் தனது பாதத்தை அப்துல் காதிர் ஜீலானி வைத்தார்கள் என்பதற்கு இங்கே ஆதாரம் சமர்ப்பிக்கிறான் இந்தப் புலவன்.

அதாவது யார் யாருடைய பிடரிகள் மீது மிதிக்கப்பட்டது என்ற பட்டியல் கைவசம் உண்டாம். கிஸானதுல் அஸ்ராரில் இது பதிவு செய்யப்பட்டுள்ளதாம். கேட்பவர்களுக்குக் கொஞ்சமாவது அறிவு இருக்கும் என்று கருதியிருந்தால் இப்படிக் கதை விடுவானா? இவன் உளறிக் கொட்டியிருந்தாலும் ஒரு வகையில் இந்தக் கவிதையினால் சில நன்மைகளும் ஏற்பட வழியுண்டு.

யாகுத்பா பக்தர்களிடமும், அதை ஆதரிக்கும் மவ்லவிமார்களிடமும் அந்த கிஸானதுல் அஸ்ராரை வெளியிடுமாறு நாம் கேட்டுக் கொள்கிறோம். முடியாவிட்டால் குறைந்த பட்சம் மிதிக்கப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியலையாவது பகிரங்கமாக வெளியிடுமாறு கேட்கிறோம்.

எல்லா இறைநேசர்களின் பிடரியின் மேலும் அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் மிதித்தார்கள். அவர்களால் மிதிபடாதவர் அவ்லியா இல்லை என்று கவிஞர் கூறியுள்ளதால் அந்தப் பட்டியலை வெளியிடும் போது உலகில் உள்ள அவ்லியாக்கள் யார் யார் என்று அறிந்து கொள்ள முடியும். இப்பட்டியலை அவர்கள் வெளியிடும் போது குறைந்த பட்சம் பல கப்ருகளில் அடங்கப்பட்டுள்ளவர்கள் அவ்லியாக்களே இல்லை என நிரூபிக்க முடியும்.

இதனால் தர்ஹாக்களின் எண்ணிக்கை குறைவதற்கு வழி உண்டு. ஏனெனில் அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் காலத்திற்குப் பின் வந்தவர்களின் பெயர்கள் அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருக்காது. அந்தப் பட்டியலையே ஆதாரமாக வைத்து தமிழ்நாட்டில் உள்ள எல்லா தர்ஹாக்களையும் அங்கே இருப்பவர்களையும் மிதி வாங்கவில்லை என்பதால் இடித்துத் தள்ளலாம்.

யாகுத்பா பக்தர்கள் இதைச் செய்ய முன் வராவிட்டால், கிஸானதுல் அஸ்ரார் என்பதெல்லாம் புருடா தான் என்று ஒப்புக் கொண்டால் அப்போதும் நன்மை ஏற்பட வழி இருக்கிறது.

அதாவது இப்படி புருடா விட்டுக் கொண்டிருக்கும் இந்தப் பாட்டைத் தீயிலிட்டுப் பொசுக்கச் சொல்லலாம். இந்தக் கப்ஸாக்களால் பயனில்லை என்று ஒப்புக் கொள்ளச் செய்யலாம்.

மவ்லவிமார்களிடம் நாம் கேட்பது இது தான். இந்த யாகுத்பாவை நீங்கள் உண்மை என்று நம்புகிறீர்களா? உண்மை என்று நீங்கள் நம்பினால் அந்த அவ்லியாக்களின் பட்டியலை அறிவிப்பாளர் வரிசையுடன் வெளியிடுங்கள் பார்ப்போம்.

வெளியிட முடியாது. இதில் கூறப்படுவது பொய் என்று நீங்கள் கருதினால் அதையாவது பகிரங்கமாக அறிவியுங்கள்! மக்கள் இந்த யாகுத்பா எனும் குப்பையைத் தூக்கி எறிவார்கள். மவ்லவிமார்கள் இரண்டில் எதைச் செய்யப் போகிறார்கள்.

وقـلت مـن لا لـه شيـخ فإني لـه -شيـخ ومـرشـده حتى كـأني لـه

جـليسه خـلوة ومـن لــدني لـه  وصـل فـكن هـكذا لي محيي الدين

யாருக்கு ஷைகு கிடையாதோ அவருக்கு நான் ஷைகாகவும், வழிகாட்டியாகவும் இருக்கிறேன். எந்த அளவுக்கு என்றால் அவன் தனிமையில் இருக்கும் போது நான் உற்ற நண்பனாக இருக்கிறேன். எனக்கும் அவனுக்குமிடையே ஒரு தொடர்பு இருக்கின்றது என்று நீங்கள் கூறினீர்கள். எனக்கும் அவ்வாறே நீங்கள் ஆகிவிடுங்கள் முஹ்யித்தீனே!

இந்த இந்த வரிகளின் நேரடிப் பொருள்.

இதைப் பல வகைகளிலும் நாம் அலச வேண்டியுள்ளது. அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் இவ்வாறு கூறியதாக இந்தக் கவிஞன் பாடியிருக்கிறான்.

அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் இவ்வாறு கூறியிருந்தால் அவர்கள் தமது எந்த நூலில் இப்படிக் குறிப்பிடுகிறார்கள்? அல்லது அவர்களின் காலத்திலோ, அதற்கு அடுத்த காலத்திலோ எழுதப்பட்ட எந்த நூலில் இந்த விபரம் இடம் பெற்றுள்ளது? இந்த யாகுத்பாவை அரங்கேற்றிக் கொண்டிருக்கும் உஞ்சவிருத்தி மவ்லவிகள் எடுத்துக் காட்டுவார்களா?

இதை எழுதியவன் யாரென்று திட்டவட்டமாகத் தெரிந்தால், அவன் இன்று வரை உயிருடனிருந்தால் அவனிடம் இந்தக் கேள்வியைக் கேட்கலாம். இதை எழுதியவர் யாரென்பது நிரூபிக்கப்படவுமில்லை. நிரூபிக்கப்பட்டாலும் நிச்சயம் அவன் இப்போது உயிருடனில்லை. இந்த யாகுத்பா கச்சேரியை யார் முன்னின்று நடத்துகிறார்களோ அந்த மவ்லவிமார்கள் தான் இதை எடுத்துக் காட்டக் கடமைப்பட்டிருக்கிறார்கள். எடுத்துக் காட்டுவார்களா?

ஹிஜ்ரி ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பெரியார் இப்படிச் சொல்லியிருந்தால் அவர்களது காலத்திலோ, அதை அடுத்த காலத்திலோ யாரும் இது பற்றிக் குறிப்பிடாத போது ஹிஜ்ரி பதினொன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் கவிஞருக்கு எப்படி இந்த விபரம் தெரிய வந்தது? கிஸானதுல் அஸ்ரார் என்ற நூலில் இதற்கு ஸனதுடன் குறிப்பு உண்டு என்று இந்த மவ்லவிகள் சொல்லப் போகிறார்களா?

அடுத்து இந்தக் கவிஞனின் கருத்தை அலசுவோம். யாருக்கு ஷைய்கு கிடையாதோ அவருக்குத் தானே ஷைகாக ஆகிவிட்டதாக அப்துல் காதிர் ஜீலானி கூறியிருக்கிறார்கள் அல்லவா?

இதனடிப்படையில் பார்க்கும் போது ஒரு ஷைகைப் பிடித்து முரீது வாங்குபவரை விட, முரீது வாங்காதவரே சிறந்தவர் என்று ஆகின்றது.

சாதாரணமானவரைப் பிடித்துக் கொண்டால் அவர் தான் நமக்கு ஷைகாக ஆகின்றார். ஆனால் எவரிடமும் முரீது வாங்காமல் எவரையும் ஷைகாக ஏற்றுக் கொள்ளாமல் இருப்பவருக்கோ அவ்லியாக்களின் தலைவர் என்று இவர்கள் நம்புகின்ற அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் ஷைகாக ஆகி விடுகின்றார்கள்.

இதை அரங்கேற்றும் மவ்லவிமார்களுக்கு இதில் உண்மையிலேயே நம்பிக்கை இருக்குமானால் அவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? எவரிடமும் முரீது வாங்குவதை விட முரீது வாங்காமல் இருப்பதே சிறந்தது எனக் கூற வேண்டும். அப்போது தான் அப்துல் காதிர் ஜீலானி அவர்களே நமக்கு ஷைகாக ஆவார்கள். இந்தப் பொய்யை இப்படிச் சொல்லித் தொலைத்தாலாவது கேடு கெட்ட தரீக்காக்கள் பல ஒழிந்து போகும்.

இந்த வரிகளில் கூறப்படுவதைப் பொய் என்று கூறி யாகுத்பாவை ஒழிக்கப் போகின்றார்களா? அல்லது இதை உண்மை என்று நம்பி, முரீது வாங்கக் கூடாது எனப் பிரச்சாரம் செய்யப் போகின்றார்களா? இரண்டில் எதைச் செய்தாலும் ஏதோ ஒரு விதத்தில் நன்மையே ஏற்படும்.

ஆனால் இந்த மவ்லவிமார்கள் இரண்டில் எதனையும் செய்ய மாட்டார்கள். இவர்களுக்கு இதன் அர்த்தம் பற்றியோ, விளைவு பற்றியோ கவலை எதுவும் கிடையாது. கொடுக்கப்படும் சில்லரைக்கு ஏற்ப நீட்டி முழங்குவதைத் தொழிலாகத் தானே இவர்கள் நடத்தி வருகின்றார்கள்.

முரீது வாங்காதவருக்குத் தானே ஷைகாக ஆகிவிடுவதாக மட்டும் அப்துல் காதிர் ஜீலானி கூறவில்லை. தனித்து இருக்கும் போது உற்ற நண்பராகவும் அவர் ஆகி விடுகின்றாராம். அவருக்கும் இவனுக்குமிடையே கனெக்சன் வேறு இருக்குமாம். கதை விடுகிறான் இந்தக் கவிஞன்.

இறந்து போன ஒருவர் எப்படி மனிதனிடம் கனெக்சன் வைத்துக் கொள்ள முடியும்? என்ற கேள்வி ஒருபுறமிருக்கட்டும். உயிருடன் உள்ள அவர் இவ்வுலகில் வாழும் சமயத்தில் கூட இப்படிச் செய்வது சாத்தியமாகுமா?

ஒரு மனிதன் பலகோடி மக்களுக்கருகில் தனிமையில் உள்ள நண்பனாக போய் உட்கார முடியுமா? ஒரு மனிதன் ஒரு இடத்திற்கு மேற்பட்டு, ஒரு நேரத்தில் இருக்க முடியுமா? உயிருடன் இருக்கும் போதே சாத்தியப்படாதது எப்படி மரணத்தின் பின் சாத்தியமாகும்?

ஒரு மனிதன் இன்னொரு மனிதன் உள்ளத்துடன் கனெக்சன் வைத்துக் கொள்ள முடியுமா? உயிருடனிருக்கும் போதே செய்ய முடியாத ஒன்று அவர் இறந்த பின் எப்படிச் சாத்தியமாகும்?

முரீது வாங்காத அனைவருடனும் அவர் கனெக்சன் வைத்துக் கொள்வதாக இந்தக் கவிஞன் கூறுகிறானே? அப்படியானால் எவரிடமும் முரீது வாங்காமல், விபச்சாரத்திலும், திருட்டிலும், வட்டியிலும் மூழ்கி பலர் இருக்கிறார்களே? இது கூட அந்தக் கனெக்சன்களின் வெளிப்பாடு தானா?

நானே அவருக்கு வழிகாட்டியாவேன் என்று அவர்கள் சொன்னதாகக் கூறப்படுகிறதே? இந்தத் தப்பான காரியங்களெல்லாம் கூட அவர்களின் வழிகாட்டுதலில் அடங்கியது தானா? யாகுத்பா பக்தர்கள் பதில் சொல்லட்டும்!

இதை விடவும் மோசமான வரிகளைப் பார்ப்போம். திருக்குர்ஆனின் போதனைகளையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளையும் ஆழமாக அறிந்து கொள்ளாத இஸ்லாத்தின் அடிப்படையை ஓரளவு அறிந்து வைத்துள்ள சராசரி முஸ்லிம் கூட இந்த வரிகளின் பொருள் அறிந்தால் ஏற்க மாட்டான்.

இந்த வரிகளின் பொருள் தெரியாத காரணத்தினாலேயே இதைப் புனிதமானது என்று இந்த சராசரி முஸ்லிம் எண்ணுகிறான். விளக்கமோ, விமர்சனமோ இன்றி இவ்வரிகளின் தமிழாக்கத்தை மட்டும் அவன் அறிந்து கொண்டால் இந்த யாகுத்பாவைத் தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்றே அவன் முடிவுக்கு வருவான். அவ்வளவு மோசமானவை இவ்வரிகள்.

இந்த அளவு மோசமான இந்த வரிகளையும் ஏழு ஆண்டுகள் அரபு மொழி கற்பதில் செலவிட்ட சில முல்லாக்கள் பாடி வருகின்றனர். இந்தக் கச்சேரியைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இங்கே நாம் அடையாளம் காட்டவுள்ள வரிகளைக் கண்ட பின்னும் இவர்களால் யாகுத்பா கச்சேரியை நிறுத்த முடியவில்லை என்றால் இவர்கள் நடத்தும் கச்சேரியின் அர்த்தத்தை இவர்கள் புரியாதவர்களாக இருக்க வேண்டும். பெரும்பாலும் தங்கள் ஸனதுகளைக் கூட வாசித்து பொருள் செய்யத் தெரியாதவர்களைத் தானே மதரஸாக்கள் உருவாக்கி வருகின்றன.

இந்த வரிகளின் அர்த்தத்தை அறிந்த பின்பும் இவர்கள் இக்கச்சேரியை நடத்துகின்றார்கள் என்றால் சராசரி மனிதன் இஸ்லாத்தைப் புரிந்து கொண்ட அளவு கூட புரிந்து கொள்ளாத ஞானசூன்யங்களாக இவர்கள் இருக்க வேண்டும். அல்லது தங்கள் தட்டில் வந்து விழும் தட்சணைகள் இஸ்லாத்தை விடவும் இவர்களைக் கவர்ந்திருக்க வேண்டும். இதைத் தவிர வேறு காரணம் எதுவும் இருக்க வழியில்லை.

இதோ அந்த வரிகள்:

وإن جـدي رسـول الله كـان يقول -أنـت الـخليفة لي في خـير كل مقول

فـكن لأمتي الـمدد ارتـضاك عقول -فأنـت قـيم شـرعي محيي الـديـن

இவையும் யாகுத்பா என்ற பெயரில் நம்மவர்களில் பலர் படித்து வரும் நச்சுக் கவிதையின் வரிகளாகும்.

நன்மையான எல்லா சொற்களுக்கும் நீங்களே எனக்கு கலீஃபாவாக இருந்து கொள்ளுங்கள்! என் சமுதாயத்துக்கு நீங்கள் உதவியாளராக ஆகி விடுங்கள்; அறிவுடையோர் உங்களைப் பொருந்திக் கொண்டனர். முஹ்யித்தீனே! நீங்கள் தான் என் மார்க்கத்தை நிலைநிறுத்தக் கூடியவர் என்று எனது பாட்டனார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்பவர்களாக இருந்தனர்.

மேலே கூறப்பட்ட வரிகளின் நேரடி மொழிபெயர்ப்பாகும். இது இந்த வரிகளில் தான் எத்தனை பொய்கள்?

தலையில் சிறிதளவு சரக்கும், சரித்திரத்தில் சிறிதளவு அறிவும் இருக்கக் கூடிய எவரும் கேட்டுச் சிரிக்கக் கூடிய இந்தப் பொய்களைத் தான் மார்க்கத்தின் பெயரால் மவ்லவிமார்கள் நம்மிடம் நிலைபெறச் செய்துள்ளனர். அரபு மொழியில் அறிமுகப்படுத்தப்பட்ட காரணத்தால் அதன் அர்த்தமும் நமக்குத் தெரியாது என்ற காரணத்தால் நாம் எந்த அளவு ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதை இப்போதாவது இதன் பக்தர்கள் புரிந்து கொள்வார்கள் என்று எதிர்பார்ப்போம்.

முதலாவது பொய்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலம் முடிந்து சுமார் ஐநூறு ஆண்டுகள் கழித்து வாழ்ந்த அப்துல் காதிர் ஜீலானி அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்படிச் சந்தித்திருக்க முடியும்? எப்படிப் பேசியிருக்க முடியும்?

அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்தார் என்று இதன் ஆதரவாளர்கள் சரித்திரத்தையே புரட்டப் பார்க்கிறார்களா? வயிற்றுப் பிழைப்புக்கு வழி செய்யும் என்றால் புரட்டினாலும் புரட்டுவார்கள். அப்படிப் புரட்டுவார்களேயானால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவரைத் தனது கலீஃபா என்று சொல்லியிருக்க(?) இவரை விட்டு விட்டு நபித்தோழர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களை தவறாக கலீஃபாவாக ஒப்புக் கொண்டு விட்டார்கள் என்று கூறப் போகிறார்களா?

அல்லது அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் காலம் வரை அதாவது ஹிஜ்ரி ஐநூறு வரை நபிகள் நாயகம் (ஸல்) வாழ்ந்தார்கள் என்று சொல்லப் போகிறார்களா?

அல்லது கிறித்தவர்களின் நம்பிக்கையைப் போல நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறந்து விட்டு மீண்டும் இவரது காலத்தில் உயிர்த்து எழுந்தார்கள் என்று இந்த மவ்லவிமார்கள் இதையும் நியாயப்படுத்தப் போகிறார்களா?

யார் யார் பெயராலோ பொய்களைச் சொல்லி கடைசியில் அல்லாஹ்வின் தூதர் பெயராலும் பொய் சொல்லத் துணிந்து விட்டனர்.

யார் என் பெயரால் வேண்டுமென்றே பொய் சொல்கிறானோ அவன் தனது புகலிடமாக நரகத்தையே அடைந்து கொள்ளட்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எச்சரிக்கையைக் கூட இந்தக் கவிஞன் பொருட்படுத்தவில்லை.

இவனுக்குத் தான் இறையச்சமும், மறுமை பற்றிய பயமும் இல்லை என்றால் ஏழு ஆண்டு காலம் கற்றுத் தேர்ந்த மவ்லவிமார்களுக்குமா இந்த எச்சரிக்கை தெரியாமல் போய் விட்டது? அல்லது நரகைப் பற்றி இவர்களுக்கு அச்சமே இல்லையா?

அல்லாஹ்வின் தூதர் பெயரால் பொய் சொல்லப்பட்டிருக்கின்ற இந்த ஒரேயொரு காரணத்துக்காகவே யாகுத்பா பாட்டு தீயிலிட்டுப் பொசுக்கப்பட வேண்டாமா?

இரண்டாவது பொய்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படித் தன்னிடம் வந்து பேசிக் கொண்டிருந்தார்கள் என அப்துல் காதிர் ஜீலானி அவர்களே சொன்னதாக மற்றொரு பொய்யையும் புனைந்திருக்கிறான் இந்தக் கவிஞன்.

இதை இவனாகச் சொல்லவில்லையாம். அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் தான் இப்படி நபியின் பெயரால் பொய் சொன்னார்களாம். உண்மையில் இந்தக் கவிஞன் அந்தப் பெரியாரைப் புகழ்ந்திருக்கிறானா? அல்லது கிண்டல் செய்வதற்காக இப்படிப் பாடியிருக்கின்றானா? என்ற சந்தேகம் நமக்கு வருகின்றது.

அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் காலம் ஹிஜ்ரி ஐநூறு என்றால் இந்தக் கவிஞனின் காலம் ஹிஜ்ரி ஆயிரத்திற்கும் மேல். இவனுக்கும் அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் காலத்திற்கும் ஐநூறு ஆண்டுகள் இடைவெளி இருக்கின்றது. (இது எழுதப்பட்ட ஆண்டு பற்றி இதன் பக்தர்கள் குறிப்பிடும் காலத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு பார்த்தாலும் இருவருக்கும் ஐநூறு ஆண்டுகள் இடைவெளி உண்டு.)

இந்தக் கவிஞனுக்கு ஐநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அப்பெரியார் இப்படிச் சொல்லி இருந்தால் அது எப்படி இந்தக் கவிஞனுக்குத் தெரியும்? அந்தப் பெரியார் எழுதிய நூல்களில் அல்லது அவரது சொற்பொழிவுத் தொகுப்புகளில் இந்த விபரம் உள்ளதா? நிச்சயமாக இல்லை. அல்லது அவரது காலத்தில் எழுதப்பட்ட மற்றவர்களின் நூல்களிலாவது இந்த விபரம் இருக்கின்றனவா? நிச்சயமாக அப்படியும் இல்லை.

திட்டமிட்டு அந்தப் பெரியாரின் பெயரால் இந்தக் கவிஞன் பொய் சொல்லியிருக்கிறான் என்பதைத் தான் இது காட்டுகிறது. நபிகள் நாயகத்தை மிகவும் நேசித்த அப்பெரியார் ஒருக்காலும் இப்படி அவர்கள் பெயரால் பொய் சொல்ல மாட்டார் என்று இதைப் பாடியவனுக்குத் தெரியாமல் போகலாம். இன்றளவும் இதற்கு ஆதரவு தெரிவிக்கின்ற கண்டிக்க முன் வராத இந்தப் புரோகிதர்களுக்கும் தெரியவில்லை என்றால் எப்படி நம்புவது?

மூன்றாவது பொய்

எல்லா விஷயத்திலும் நீங்கள் தான் எனது கலீஃபா என்று நபிகள் நாயகம் (ஸல்) சொன்னார்களாம்! காதிலே பூச்சுற்றுகிறான் இந்தக் கவிஞன். நாமும் காதுகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

அபூபக்ரோ, உமரோ, உஸ்மானோ, அலியோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கலீஃபா அல்லவாம்! ஐநூறு ஆண்டுகளாக வாழ்ந்த மக்களில் எவருக்குமே இந்தத் தகுதி இல்லையாம்! இவர் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் கலீஃபாவாம்.

இந்த சமுதாயத்திலேயே முதலிடத்தைப் பெற்ற அபூபக்ரையும், ஏனைய மூன்று கலீஃபாக்களையும், அனைத்து நபித்தோழர்களையும், அவர்களுக்கு அடுத்த தலைமுறையையும், எண்ணற்ற அறிஞர்களையும் மூலையில் தூக்கி எறிந்து விட்டு இவரை, அரியாசனத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்றி வைத்தார்கள் என்று கூறும் இந்த வரிகளையும் ஆதரித்து அறிக்கை விடுபவர்கள் தான் நபித்தோழர்களை குலஃபாயே ராஷீதீன்களை மதிக்கிறார்களாம். நன்றாகத் தான் மதிக்கின்றார்கள்(?)

நான்காவது பொய்

தனது சமுதாயத்தினருக்கு உதவி செய்ய எவருமே இருக்க மாட்டார்கள். அல்லாஹ்வும் கூட உதவி செய்ய மாட்டான் என்று அஞ்சி இந்தப் பெரியாரை தனது சமுதாயத்திற்கு உதவியாளராக நபியவர்களே நியமித்து விட்டார்களாம்.

எனது சமுதாயம் என்ற இந்தச் சொல்லில் நான்கு கலீஃபாக்கள் உட்பட அனைத்து நபித்தோழர்களும், நான்கு இமாம்களும் உட்பட பலநூறு அறிஞர்களும், அதற்குப் பின் வாழ்ந்த நல்லவர்களும் அடங்குவர். அவர்களுக்கெல்லாம் கூட இந்தப் பெரியாரைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உதவியாளராக நியமித்தார்களாம். சொல்லுகின்ற பொய்யை நம்பும்படியாகக் கூட இந்தக் கவிஞனுக்கு சொல்லத் தெரியவில்லை.

அல்லாஹ் ஒருவனை மட்டுமே உதவியாளனாக அறிமுகப்படுத்தி தனக்குத் தானே எந்த நன்மையும் செய்ய முடியாது என்றெல்லாம் தன்னிலை விளக்கம் தந்த இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள் இந்தச் சமுதாயம் முழுமையையும் அந்தப் பெரியாரின் கையில் அதுவும் நபியின் காலத்தில் பிறந்தே இருக்காத ஒருவரின் கையில் பிடித்துக் கொடுத்து விட்டுச் சென்றார்கள் என்றால் இதை யாரால் தான் நம்ப முடியும்? நம்புவன் எப்படி முஸ்லிமாக இருக்க முடியும்?

ஐந்தாவது பொய்

எனது மார்க்கத்தை நீங்களே நிலைநாட்டக் கூடியவர் என்றும் நபியவர்கள் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார்களாம். யாகுத்பா சொல்கிறது.

தனது தூதுத்துவப் பணியைச் சிறப்பாகச் செய்து மார்க்கத்தை முழுமையாக நிலைநாட்டி விட்டு எந்த ஒன்றையும் மறைக்காமல் அப்படியே மக்கள் முன் வைத்து விட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சென்றுள்ள போது பிறகு வரும் ஒருவர் தீனை நிலைநிறுத்துவார் என்றால் ஏற்க முடியுமா?

நிலை நிறுத்துவதற்கு வேறு பொருள் என அவர்கள் கூறினால் அதுவும் கூட நம்பும்படியாக இல்லை.

மற்ற நல்லவர்கள், பெரியார்கள், அறிஞர்கள் எப்படி தீனுக்காக உழைத்தார்களோ அந்த அளவுக்குத் தான் அந்தப் பெரியாரும் உழைத்தார்களேயன்றி குறிப்பிட்டுச் சொல்லும்படி அப்படி எதையும் நிலைநாட்டிடவில்லையே?

அவர்கள் காலத்திலும் பிளவுகள், பூசல்கள், தரீக்கா எனும் பெயரால் மோசடிகள், பித்அத்கள் யாவும் இருக்கத் தான் செய்தன. இன்று வரைக்கும் இருக்கத் தான் செய்கின்றன. மற்றவர்கள் போலவே அவற்றை இந்தப் பெரியாரும் கண்டித்துள்ளார்கள் என்பதைத் தவிர வேறு எதை இவர்கள் நிலைநாட்டினார்கள்?

يـا سيـدي سـندي غوثي ويا مددي -كـن لي ظـهيرا عـلى الأعداء بالمدد

مـجير عـرضي وخذ بيدي مدى مدد -خـليفـة الله فـينـا محيي الـديـن

என் தலைவரே! என் ஊன்று கோலே! என் இரட்சகரே எனக்கு உதவுபவரே! என் எதிரிகளுக்குப் பாதகமாக எனக்கு உதவுபவராக நீங்கள் ஆகி விடுங்கள்! என் கௌரவத்தைக் காப்பவராகவும் ஆகி விடுங்கள்! காலா காலம் என் கையைப் பிடித்துக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்குப் பகரமாக எங்களிடம் இருக்கும் முஹ்யித்தீனே!

என்பது இதன் பொருள்.

وعـدني مـن مـريدي نهجك الأقوم - ومـن عـبيدك عـبدا طـائعا أدوم

ومـن جـنودك مـقداما إلـيه يؤم نـعم الأمـير أمـيرا محيي الـديـن

உங்களின் தெளிவான பாட்டையை நாடும் (முரீதுகளில்) ஒருவனாக என்னையும் கருதிக் கொள்ளுங்கள்! உங்களுக்கு என்றென்றும் கட்டுப்பட்டு நடக்கும் உங்கள் அடியார்களில் ஒருவனாகவும் என்னைக் கருதிக் கொள்ளுங்கள்! உங்களின் போர்ப்படையில் முன்னணி வகிப்பவனாகவும் என்னைச் சேர்த்துக் கொள்ளுங்கள்! தலைவர்களிலெல்லாம் தலைசிறந்த முஹ்யித்தீனே!

என்பது இதன் பொருள்.

என்றோ இறந்து அடக்கம் செய்யப்பட்டு விட்ட அல்லாஹ்வின் அடியார் ஒருவரைக் கூவி அழைத்து இறைவனது தன்மையைப் பங்கு போடும் விதமாக அமைந்த இக்கவிதை வரிகள் படிக்கத்தக்கது தானா?

بـصر فـؤادي صـراطا أنت سالكه فـالله أعـطاكـه فـأنت مـالـكه

ونـجه مـن لـظي فـيها مـهالكه =-سـلطان كـل ولـي محيي الـديـن

நீங்கள் நடந்து சென்ற நேரான வழியை என் உள்ளத்துக்குக் காட்டி விடுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு அந்த ஆற்றலை வழங்கியுள்ளான். நீங்கள் அந்தத் துறைக்குச் சொந்தக்காரர்களாக உள்ளீர்கள். கொளுந்து விட்டெறியும் நெருப்பிலிருந்து காத்து விடுங்கள். அனைத்து வலிமார்களுக்கும் மன்னரே முஹ்யித்தீனே!

இந்த வரிகளில் அப்துல் காதிரை அல்லாஹ்வாகவே இந்தக் கவிஞன் கருதி இருப்பதை எவருமே உணரலாம்.

ஏராளமான நபிமார்கள் எதிரிகளால் கொல்லப்பட்டுள்ளனர். எத்தனையோ இறைநேசர்கள் எதிரிகளால் துன்புறுத்தப்பட்டதும் உண்டு. அந்தச் சமயங்களில் அந்த எதிரிகளிடமிருந்து சுயமாக அவர்களால் தங்களையே காத்துக் கொள்ள முடிந்ததில்லை. இந்தக் கவிஞனோ தன் எதிரிகளை ஒழிக்குமாறு அப்துல் காதிர் ஜீலானியிடம் முறையிடுகின்றான்.

அல்லாஹு லாயிலாஹ இல்லல்லாஹுவல் ஹய்யுல் கையூம் (நித்திய ஜீவனுள்ள அல்லாஹ்வைத் தவிர வேறு வணக்கத்திற்குரியவன் எவனுமில்லை) என்று ஒரு புறம் கூறிக் கொண்டு காலா காலம் என் கையைப் பிடித்துக் கொண்டே இருங்கள் என்று மற்றவரை நோக்கிக் கூப்பாடு போடுவது எப்படி முறையாகும்?

அப்துல் காதிர் என்பவரும் அல்லாஹ்வைப் போல நித்திய ஜீவன் பெற்றவரா? காலாகாலமாக இருக்கக் கூடிய வரம் எதனையும் அவர் பெற்று வைத்திருக்கிறாரா?

வேதத்தையும், ஞானத்தையும், நுபுவ்வத்தையும் ஒரு மனிதருக்கு வழங்கிய பின் எனக்கு நீங்கள் அடிமைகளாக ஆகுங்கள் என்று கூற எந்த மனிதருக்கும் அனுமதி இல்லை என்கிறது குர்ஆன்.

(பார்க்க 3:79)

நபிமார்களும் கூட தம் உம்மத்தினரை அடிமைகள் என்று கூற முடியாது என்ற நிலையில் இந்தக் கவிஞன் அப்துல் காதிர் ஜீலானி என்பவருக்கு அடிமைச் சாசனம் எழுதிக் கொடுக்கிறான்.

அப்துல் காதிர் என்றாலே அல்லாஹ்வின் அடிமை என்பது பொருள். தன்னையே அல்லாஹ்வின் அடிமை என நம்பி வாழ்ந்த இந்தப் பெரியாருக்கு இவன் தன்னை அடிமை என்கிறான். நம்மையும் அவருக்கு அடிமையாக்க எண்ணுகிறான்.

நேரான வழியை உள்ளத்திற்கு உணர்த்துமாறு அப்துல் காதிரிடம் கேட்கும் இந்தக் கவிஞன், உள்ளங்களை ஆட்சி செய்யும் அதிகாரத்தையும் அல்லாஹ்விடமிருந்து பறித்து அப்துல் காதிரிடம் கொடுக்க எண்ணுகிறான்.

அபூதாலிபு உள்ளத்தில் நேர்வழியை உணர்த்த நபியவர்களுக்கே ஆற்றல் இல்லை என்பதை முன்பே நாம் குறிப்பிட்டிருக்கின்றோம். அப்துல் காதிருக்கு அந்த ஆற்றல் இருப்பதாக இந்தக் கவிதை கூறுகின்றது.

இந்தக் கவிஞன் அல்லாஹ்வுக்கென்று எதையும் மிச்சம் வைக்கவில்லை. இவனது இந்தக் கவிதையை நம்பினால் அல்லாஹ் என்று ஒருவன் தேவையே இல்லை. இரண்டு அல்லாஹ் இருப்பதாக இவ்வளவு தெளிவாக அறிவிக்கக் கூடிய இதனை மறுமை நாளை நம்பக் கூடியவர்கள் ஓத முடியுமா?

இதன் பின்னரும் இந்த மாபாதகமான யாகுத்பாவை ஓதுபவர்கள் மறுமையில் நிச்சயம் நஷ்டத்தையே அடைவார்கள். இத்தகையவர்களுக்கு இறைவனின் எச்சரிக்கைகளையும் நினைவூட்டுகின்றோம்.

தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.

திருக்குர்ஆன் 4:48

அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை என்றே மஸீஹ் கூறினார்.

திருக்குர்ஆன் 5:72

நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் நஷ்டமடைந்தவராவீர். மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோல் ஆவீராக! என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது.

திருக்குர்ஆன் 39:65, 66

அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த (நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்

திருக்குர்ஆன் 6:88

நமது தொழுகை, நோன்பு, தான தர்மங்கள் இன்ன பிற நல்லறங்கள் யாவும் பயனற்றுப் போய் நிரந்தரமான நரகில் சேர்த்து விடக் கூடிய ஷிர்க் எனும் இணை வைக்கும் காரியத்தைத் தான் மார்க்கத்தின் ஒரு அம்சமாக நம்பி மக்கள் ஏமாந்து கொண்டிருக்கின்றார்கள். முல்லாக்களும் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

மறுமையில் இதற்கான தண்டனையை இவர்கள் நிச்சயம் அடைந்தே தீருவார்கள். இது வரை இதை ஓதியதற்காக அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டு இனி மேல் ஓதுவதில்லை எனத் தீர்மானமும் செய்து கொண்டால் மட்டுமே இறைவனுடைய வேதனையிலிருந்து தப்ப முடியும்.

وقـلت إن يـدي هـذي لـدائـمة -لـمن يـريد طـريـقي وهـي قائمة

فـازت بـها أنـفس لـلرشد رائمة -أنـا الـمنادي بـحق محيي الـديـن

எனது இந்தக் கை என்றென்றும் நிலைத்திருக்கும். என் தரீக்காவை நாடுபவர்களுக்கு என் கை துணை நிற்கும். நேர்வழியை நாடும் மக்கள் என் கையால் வெற்றி பெற்று விட்டனர். தீனை உயிர்ப்பித்தவர் என்று உண்மையில் அழைக்கப்படுவதற்கு நானே அதிக உரிமை படைத்தவன் என்று தாங்கள் கூறினீர்கள்.

இதற்கு முந்தைய வரிகளில் வரம்பு மீறியது போலவே இங்கும் வரம்பு மீறப்படுகின்றது. என்றென்றும் நீடித்திருக்கும் இறைவனது தனித்தன்மை இங்கே அப்துல் காதிருக்கு பங்கு போடப்படுகின்றது. மண்டைக் கனம் கொண்டவராக அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் இங்கே சித்தரிக்கப்படுகிறார்கள். முந்தைய அடிகளில் நாம் எடுத்து வைத்த குர்ஆன் வசனங்களுக்கும், நபிமொழிகளுக்கும் முரணாக இவ்வரிகள் அமைந்துள்ளன.

كم من كرامات حق منك قـد ظهرت -منـيرة في قـلوب الـخلق قد زهرت

كمـعجزات نـبي في الورى اشتهرت -يـا مـن دعـى ربـه يـا محيي الدين

உண்மையான அற்புதங்கள் ஏராளமாக உங்களிடமிருந்து வெளிப்பட்டன. மக்கள் உள்ளங்களில் அந்தச் செய்தி தெளிவாகப் பதிந்துள்ளது. நபியவர்களின் அற்புதம் போலவே மக்களிடம் பிரபல்யமாக உள்ளது. இறைவனால் முஹ்யித்தீன் என்று அழைக்கப்பட்டவரே!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அற்புதங்களுடன் அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் அற்புதங்களை இந்தக் கவிஞன் இங்கே ஒப்பிட்டுச் சமப்படுத்துகின்றான். அப்துல் காதிர் ஜீலானி பெயரால் ஏராளமான பொய்கள் அற்புதங்கள் என்று அவிழ்த்து விடப்பட்டிருப்பதில் ஆனந்தம் கொள்கிறான். புராண இதிகாசங்களில் இதை விடவும் அற்புதங்கள் கூறப்படுகின்றன.

அவை எவ்வாறு நம்பத்தக்கவை அல்லவோ அது போன்ற பொய்களைத் தான் இவன் அற்புதம் என்கிறான். அவரை இறைவனே, முஹ்யித்தீன் என்று அழைத்ததாகக் கூறும் இந்தக் கவிஞன் மற்றொரு இடத்தில் முஹ்யித்தீன் என்ற பெயர் எப்படி வந்தது என்பதற்கு வேறு ஒரு கதை சொல்கிறான். அந்தக் கவிதை வருமாறு:

رأيت دين الهدي شخصا غـدى حرضا -فـشفيتـه لـمسـة كـفيتـه عرضا

فـزال عـنه الـذي قـد عمه مرضا -فـقام يـدعـوك حـبا محيي الـدين

நேரான வழிகாட்டும் இஸ்லாமிய மார்க்கத்தை மெலிந்த மனிதனின் வடிவில் தாங்கள் கண்டீர்கள்! தங்கள் கைகளால் அவனைத் தாங்கள் தொட்டவுடன் அம்மனிதனிடம் இருந்த நோய் விலகி அவன் எழுந்து அன்புடன் தீனை உயிர்ப்பித்தவரே என்று தங்களை அழைக்கலானான்.

அப்துல் காதிர் ஜீலானி அவர்களுக்கு முஹ்யித்தீன் (தீனை உயிர்ப்பித்தவர்) என்ற பட்டம் எவ்வாறு கிடைத்தது என்று இந்தக் கவிஞன் இங்கே கூறுகிறான்.

இஸ்லாம் என்பது ஒரு வாழ்க்கைத் திட்டம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். அவ்வாறு இருக்க இஸ்லாம் எப்படி மனித வடிவம் பெற முடியும்? இதை எவரேனும் நம்ப முடியுமா?

இதை உருவகமாக அவன் கூறி இருக்கிறான் என்று வைத்துக் கொண்டாலும் கூட இந்தக் கவிதை தவறாகவே அமைந்துள்ளதை உணரலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப் பின் தூய இஸ்லாத்தில் கலப்படங்கள் நுழைய ஆரம்பித்தன. ஒவ்வொரு காலத்திலும், ஒவ்வொரு பகுதியிலும் அந்தக் கலப்படங்களை அப்புறப்படுத்தும் பணியை பலரும் மேற்கொண்டனர். அப்துல் காதிர் ஜீலானி அவர்களும் அவர்களில் ஒருவர் என்று கூறலாமே தவிர அவர் மாத்திரமே தீனை உயிர்ப்பித்தவர் என்பது எல்லா நல்லடியார்களின் சேவையையும் புறக்கணிப்பதாகவே அமையும்.

இப்படி இந்தக் கவிதை நெடுகிலும் ஏராளமான தவறுகள் மலிந்துள்ளன. மிகவும் மோசமான கவிதைகளையே இங்கே நாம் விமர்சனம் செய்துள்ளோம். எல்லா வரிகளும் விமர்சனம் செய்யப்படவில்லை. நாம் விமர்சிக்காது விட்டு விட்ட வரிகள் சிலவற்றில் தவறான கருத்துக்கள் இல்லை. வேறு சில வரிகளில் இருக்கும் தவறுகள் சமாளிக்கத்தக்கதாக உள்ளன. இதனாலேயே விமர்சிக்காமல் விட்டுள்ளோம். யாகுத்பாவிலும், மவ்லுதிலும் இருக்கின்ற தவறுகளை நீக்கி விட்டு அதை ஓதலாம் அல்லவா? என்பது சிலரது கேள்வி.

தவறுகள் இல்லாத எந்தப் பாடலையும் படிக்கத் தடை எதுவும் இல்லை. தவறு இல்லாத ஒரு தமிழ்ப்பாட்டை எப்படிப் படிக்கலாமோ அப்படிப் படிக்கலாம். அதற்காகப் பக்திப் பரவசத்துடன், பத்தி சாம்பிராணியுடன், மறுமையில் மகத்தான கூலி கிடைக்கும் என்ற எண்ணத்துடன் படிக்க முடியுமா?

தவறுகள் இல்லாத அந்தக் கவிதைகளின் அர்த்தம் தெரிந்தவர்கள் அதைப் படிக்கலாம். வணக்கமாக கருதப்படும் நிலையில் தவறுகளே இல்லாவிட்டாலும் படிக்கக் கூடாது. ஆரம்பமாக நாம் எடுத்துக் காட்டிய சான்றுகளிலிருந்து இதை விளங்கலாம். இந்த மவ்லிதுகள், யாகுத்பாக்கள் போன்ற ஈமானைப் பறிக்கும் நச்சுக் கவிதைகளிலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பானாக!

நபிகள் நாயகம் (ஸல்) பல பெண்களை மணந்தது ஏன்?

pala thirumanangal

ஒரே சமயத்தில் நான்கு மனைவிக்கு மேல் திருமணம் செய்யலாகாது என்று வரம்பு கட்டிய இஸ்லாம் அதன் தூதராக உள்ள நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மாத்திரம் இதில் விதி விலக்கு அளித்தது ஏன்?

ஆசைகளைக் கட்டுப்படுத்துவதில் மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டிய இஸ்லாத்தின் தூதர் அவர்கள் அந்த ஆசைக்கு அதிகமாகப் பலியாகி விட்டாரே! காமஉணர்வு மிக்கவராக நபியவர்களை அடையாளம் இது காட்டுகிறதே?

என்பது இஸ்லாத்தை விமர்சிப்பவர்களின் கேள்வியாகும்.

இந்த விமர்சனம் இஸ்லாத்திற்கு வெளியில் இருப்பவர்களால் செய்யப்பட்டாலும் பாரம்பர்ய முஸ்லிம்களில் சிலரின் உள்ளங்களிலும் இந்தச் சந்தேகம் குடிகொண்டிருக்கக் கூடும். புதிதாக இஸ்லாத்தை நோக்கி வருபவர்களின் முதல் கேள்வியும் இது பற்றியதாகவே அமைந்துள்ளது.

இந்த ஐயத்தை அகற்றும் விதமாக அறிஞர் பெருமக்கள் மிகுந்த ஆராய்ச்சி செய்து மறுப்புகள் பல அளித்திருக்கிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல திருமனங்கள் செய்ததற்குப் பல்வேறு காரணங்களைக் கூறியுள்ளனர். அந்தக் காரணங்களில் பெரும்பாலானவை சந்தேகங்களை நீக்கி தெளிவைத் தருவதற்குப் பதிலாக மேலும் சந்தேகங்களையே அதிகப்படுத்தி விட்டன.

அந்த அறிஞர்கள் சொல்லும் பொருந்தாத காரணங்களை முதலில் பார்த்து விட்டு உண்மையான காரணங்களைக் காண்போம்.

விதவைகளுக்கு மறுவாழ்வளிப்பதற்கா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இஸ்லாம் பல போர்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தில் இணைந்து நபியவர்களுக்குத் துணை நின்ற பல நபித்தோழர்கள் தங்கள் இன்னுயிரை அல்லாஹ்வின் பாதையில் அந்தப் போர்க்களங்களில் அர்ப்பனம் செய்தனர். இதன் காரணமாக விதவைகளாகி விட்ட அந்த நபித்தோழர்களின் மனைவியருக்கு வாழ்வளிக்கவும், விதவை மறுமணத்தை ஆர்வமூட்டவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த விதவைகளை மணம் செய்தனர் என்று சில அறிஞர்கள் காரணம் கூறுகின்றனர்.

இந்தக் காரணம் ஏற்க முடியாததாகும். விதவை மறுமணத்தில் ஆர்வமூட்டவும், விதவைகளுக்கு வாழ்வளிக்கவும் நபியவர்கள் நான்குக்கு மேற்பட்ட மனைவியரை மணந்தார்கள் என்றால் இதே காரணத்திற்காக மற்றவர்களுக்கும் இது அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும். எண்ணற்ற விதவைகளில் பத்துப்பன்னிரண்டு விதவைகளுக்கு மாத்திரமே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்வளித்தார்கள். அனைத்து விதவைகளுக்கும் இதன் மூலம் மறுவாழ்வு கிடைக்கவில்லை.

விதவைகளுக்கு மறுவாழ்வளிப்பது தான் காரணம் என்றால் இந்தக் காரணம் எப்போதெல்லாம் ஏற்படுகிறதோ, யாரெல்லாம் இந்தக் காரணத்தைச் சந்திக்கிறார்களோ அப்போதெல்லாம் அத்தகையவர்களுக்கு நான்கு மனைவியர் எனும் வரம்பு தளர்த்தப்பட வேண்டும். ஆனால் ஒரே சமயத்தில் நான்குக்கு மேல் மணம் செய்வதை எக்காலத்துக்கும் என்ன காரணத்திற்காக இருந்தாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தவிர மற்றவர்களுக்கு இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

இன்னொரு கோணத்தில் பார்த்தாலும் இந்தக் காரணம் சரியானதல்ல.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் விதவை மறுமணம் ஆர்வமூட்டப்பட வேண்டிய நிலைமையில் இருக்கவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திற்கு முன்பே அன்றைய அரபுகள் விதவை மறுமணம் செய்து வந்தனர். இஸ்லாத்தின் எதிரிகளாக இருந்த அரபுகளும் விதவை மறுமணம் செய்திருந்தனர். இதற்குச் சான்றாக கதீஜா (ரலி) அவர்களின் முந்தைய திருமணங்களைக் கூறலாம்.

காதீஜா (ரலி) அவர்கள் முன்னர் அபூ ஹாலா என்பவரின் மனைவியாக இருந்தார்கள். அவர் மரணித்த பின் அதீக் பின் ஆயித் என்பவரைத் திருமணம் செய்தார்கள். அவரும் மரணமடைந்த பிறகே நபியவர்களைத் திருமணம் செய்தார்கள்.

(பார்க்க : அல் இஸாபா)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மணப்பதற்கு முன்பே விதவையாக இருந்த கதீஜா (ரலி) அவர்களை அதீக் என்பவர் மணந்திருக்கிறார் என்பதை இதிலிருந்து அறியலாம்.

அன்றைய அரபுலக வரலாற்றைப் பார்க்கும் போது இந்தியாவில் இருந்தது போல் விதவை மறுமணம் மறுக்கப்பட்டிருக்கவில்லை. ஏராளமானோர் விதவை மறுமணம் செய்திருந்தனர் என்பதை அறியலாம். அந்த நல்ல வழக்கத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அங்கீகரித்தார்கள். இது தான் வரலாற்று உண்மை.

இந்த உண்மைக்கு மாறாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டும் தான் விதவை மறுமணம் செய்தார்கள் என்பதும், விதவை மறுமணத்தில் ஆர்வமூட்டுவதற்காக நிறைய விதவைகளைத் திருமணம் செய்தார்கள் என்பதும் பொருந்தாத காரணங்களாகும்.

நட்பைப் பலப்படுத்துவதற்கா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது பிரச்சாரத்தின் ஆரம்ப காலத்திலேயே இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட உற்ற நண்பர்கள் சிலர் இருந்தனர். அவர்களுடன் இருந்த உறவைப் பலப்படுத்திக் கொள்வதற்காகவும், அதன் மூலம் அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்திடவும் நபியவர்கள் சில திருமணங்களைச் செய்ய வேண்டிய நிலைக்கு ஆளானார்கள். அபூ பக்கர் (ரலி) அவர்களின் புதல்வி ஆயிஷா (ரலி), உமர் (ரலி) அவர்களின் புதல்வி ஹப்ஸா (ரலி) ஆகியோரை நபியவர்கள் திருமணம் செய்ததை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம் என்பர் வேறு சிலர்.

இந்தக் காரணமும் பொருந்தாக் காரணமேயாகும். நண்பர்களுடன் உள்ள உறவைப் பலப்படுத்துவதற்காக நான்கு என்ற வரம்பு நீக்கப்பட்டதென்றால் இதே காரணத்திற்காக மற்றவர்களுக்கும் வரம்பு நீக்கப்பட்டிருக்க வேண்டும். நண்பர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவதற்காக இது போன்று யார் செய்தாலும் வரவேற்கத்தக்க காரியம் தான் என்று மார்க்கம் சொல்லி இருக்க வேண்டும்.

மேலும் திருமணத்தின் மூலம் பலப்படுத்திக் கொள்ளும் அளவுக்கு நபியவர்களுக்கும், அவர்களின் நண்பர்களுக்கும் இடையே இடைவெளி எதுவுமிருக்கவில்லை. இந்தத் திருமணங்கள் நடந்திருந்தாலும், நடக்காதிருந்தாலும் அந்த உறவுக்குப் பங்கம் ஏதும் வந்திருக்காது. உலகத்து இலாபங்களை எதிர்பார்க்காது தங்கள் தலைவராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நேசித்தவர்கள் அந்தப் பெருமக்கள்.

இந்தக் காரணம் சரியென வைத்துக் கொண்டாலும் ஒன்றிரண்டு திருமணங்களுக்குத் தான் இது பொருந்தும். அனைத்து திருமணங்களுக்கும் இது பொருந்தாது என்பதால் இந்தக் காரணத்தையும் ஏற்க இயலாது.

எதிர்ப்பை மழுங்கச் செய்வதற்கா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மைச் சுற்றிலும் பலம் பொருந்திய கோத்திரத்தினரை – அண்டை நாட்டுத் தலைவர்களை எதிரிகளாகப் பெற்றிருந்தார்கள். அவர்களது எதிர்ப்பின் வேகத்தைக் குன்றச் செய்வதற்காக அவர்களின் கோத்திரத்தில் திருமணம் செய்து அதன் வேகத்தைக் குறைத்தனர் என்பர் இன்னும் சிலர்.

இதுவும் பொருந்தாத காரணமேயாகும். ஏனெனில் இது போல் திருமணம் நடந்த பின் ஒரு சில கோத்திரத்தில் எதிர்ப்பு வேகம் குறைந்திருந்தாலும், மற்றும் சிலருடைய எதிர்ப்பு வேகம் அதிகரித்திருந்தது.

அபூ சுப்யான் (ரலி) அவர்களின் மகள் உம்மு ஹபீபா (ரலி) அவர்களை நபியவர்கள் மணம் முடித்திருந்தும் பல்லாண்டுகள் நபியவர்களின் எதிரியாகவே அவர் திகழ்ந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எதிராகப் படை எடுத்து வந்து யுத்தங்கள் செய்தார். எனவே இந்தக் காரணமும் சரியானதல்ல.

நாட்டுத் தலைவர் என்ற முறையில் பகைமையைக் குறைத்துக் கொள்வதற்காக விதிவிலக்கு உண்டென்றால், இஸ்லாமிய ஆட்சித் தலைவராக வரும் தலைவர்கள் அனைவருக்கும் மட்டுமாவது இதே காரணத்துக்காக நான்குக்கு மேல் மணமுடிக்க அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி மார்க்கத்தில் அனுமதி வழங்கப்படவில்லை. நபியவர்கள் நான்குக்கு மேல் மணம் செய்ததற்குக் கூறப்படும் இது போன்ற காரணங்கள் ஏற்க இயலாதவையாகும். எளிதில் எவராலும் மறுத்துரைக்கத் தக்கவைகளாகும்.

காமவெறி தான் காரணமா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல பெண்களை மணந்ததற்கு இவை காரணமல்லவென்றால் உண்மையான காரணம் என்ன? இந்தக் கேள்விக்கு விடை காண்பதற்கு முன் நபியவர்கள் பல பெண்களை மணந்ததற்கு மிதமிஞ்சிய காம உணர்வே காரணம் என்ற பிரச்சாரம் எவ்வளவு தவறானது என்பதை விளங்கிக் கொள்வது அவசியம்.

ஒரு ஆண் மகனுக்கு அவனது இளமைப் பருவத்தில் தான் பெண்களின் பால் அதிக நாட்டம் இருக்கும். பெண்களை அனுபவிப்பதற்கான வலிமையும் இளமைப் பருவத்தில் தான் மிகுதியாக இருக்கும். உலகத்து இன்பங்களை – குறிப்பாக உடலுறவு மூலம் கிடைக்கும் இன்பத்தை – அனுபவிக்க வேண்டும் என்ற வெறி மேலோங்கி நிற்பதும் அந்தப் பருவத்தில் தான்.

வயதான காலத்தில் கூட சிலர் இதில் இளைஞர்களை விட அதிக நாட்டம் கொள்கிறார்களே என்று சிலருக்குத் தோன்றலாம். இது உண்மை தான், எனினும் முதிய வயதில் பெண்களை அதிகம் நாடுபவர்கள், அவர்களின் இளமைக் காலத்தில் அதை விடவும் அதிகம் நாடியிருப்பார்கள். அவரவர்களின் இளமைப் பருவத்துடன் அவரவர்களின் முதுமைப் பருவத்தை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இளமைப் பருவம் தான் அந்த இன்பத்தை அனுபவிக்க ஏற்ற பருவமாகும் என்பதைச் சந்தேகமற அறிந்து கொள்ளலாம்.

1- கதீஜா (ரலி) அவர்கள்

இந்த உண்மையைக் கவனத்தில் கொண்டு மாற்றாரின் விமர்சனத்தையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இளமைப் பருவத்தையும் நாம் அலச வேண்டும்.

நபியவர்கள் தமது இருபத்தைந்தாவது வயதில் முதல் திருமணம் செய்தார்கள். இருபத்தைந்து வயதுக்கு முன் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை ஒரு அதிசயமான வாழ்க்கை. எந்த ஒரு பெண்ணையும் ஏறெடுத்துப் பார்க்காத பரிசுத்த வாழ்வு அவர்களுடையது. தன் வயதொத்த இளைஞர்களுடன் சேர்ந்து பெண்களைப் பற்றி விமர்சனம் கூட செய்துவிடாத தூய வாழ்வு அவர்களுடையது.

பெண்களுடன் தகாத முறையில் சல்லாபம் செய்வது பெருமைக்குரிய ஒன்றாகக் கருதப்பட்ட அந்த அறியாமைக் காலத்தில் அவர்கள் மட்டும் – அவர்கள் மட்டுமே – இந்த அற்புத வாழ்வுக்குச் சொந்தக்காரராகத் திகழ்ந்தார்கள்.

அவர்கள் தம்மை இறைத்தூதர் என்று பிரகடனம் செய்த போது முதல் ஆதாரமாக தமது அப்பழுக்கற்ற நாற்பதாண்டு கால தூய வாழ்வைத் தான் அவர்கள் முன்வைத்தார்கள்.

எந்த ஒரு மனிதனும் தனது கடந்த கால வாழ்க்கையை மக்களுக்கு நினைவூட்டி என்னை நம்புங்கள் எனக் கூற முடியாது. ஏனெனில் எவரது கடந்த கால வாழ்க்கையும் முழு அளவுக்குத் தூய்மையாக இருக்க முடியாது. மகான்களேயானாலும் அவர்களின் இப்போதைய நிலையைத் தான் பார்க்க வேண்டுமே தவிர கடந்த காலத்தைப் பார்க்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் நதி மூலமும் ரிஷி மூலமும் பார்க்கக் கூடாது என்ற சொல் வழக்கு இங்கு உள்ளது.

தாம் இறைத் தூதர் என்பதற்கு தமது கடந்த கால வாழ்க்கையையே சான்றாகக் காட்டும் தைரியம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டுமே இருந்தது.

இதை முன்வைத்தே இறைத்தூதர் என்பதை நிலைநாட்டுமாறு திருக்குர்ஆனும் அவர்களுக்குக் கட்டளையிட்டது.

அல்லாஹ் நாடியிருந்தால் இதை உங்களுக்குக் கூறியிருக்க மாட்டேன். அவனும் இதை உங்களுக்கு அறிவித்திருக்க மாட்டான். உங்களிடம் இதற்கு முன் பல வருடங்கள் வாழ்ந்துள்ளேன். விளங்க மாட்டீர்களா? என்று (முஹம்மதே!) கூறுவீராக!

திருக்குர்ஆன் 10:16

தம்மை இறைத்தூதர் என்று வாதிட்ட நாற்பதாம் வயது வரை அவர்கள் பெண்கள் விஷயம் உட்பட அனைத்திலும் குறை சொல்ல முடியாத வாழ்க்கை வாழ்ந்துள்ளதில் இருந்து அவர்கள் காமவெறி காரணமாகப் பல திருமணங்களைச் செய்தார்கள் எனக் கூறுவது அடிப்படை அற்றது என்பதை அறிந்து கொள்ளலாம்.

பிற்காலத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கொலை செய்திட வேண்டும் என்கிற அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சமுதாயம் அவர்களை வெறுத்தது. பல்வேறு இழிந்த பட்டங்களைச் சூட்டி அவர்களை இழிவுபடுத்த முனைந்தது அந்தக் கூட்டம். இவ்வளவு வெறுப்புக்குரியவராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆகிவிட்ட பின்னரும் நபியவர்களின் கடந்த கால ஒழுக்க வாழ்வு பற்றி அவர்கள் விமர்சித்ததில்லை.

கையைப் பிடித்து இழுத்தார்கள் என்று சொல்ல முடியாவிட்டாலும் கடைக் கண்ணால் பார்த்தார்கள் என்ற அளவாவது அவர்களால் கூற முடிந்ததா என்றால் அதுவும் இல்லை. எதிரிகளாலும் விமர்சிக்க முடியாத பரிசுத்த வாழ்வு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடையது.

தாய், தந்தையின்றி வளரும் குழந்தைகள் தறுதலைகளாகத் திகழ்வது தான் இயல்பபு. தாய், தந்தையின்றி வளர்ந்த நபியவர்களுக்கு கெட்டுப் போவதற்கான எல்லா வசதியும் இருந்தது. அன்றைய சூழ்நிலை கெட்டுப் போவதற்கான எல்லா வாசல்களையும் திறந்து விட்டு வாய்ப்புக்களைத் தாராளமாக வழங்கியிருந்தது. இந்த நிலையிலும் அவர்கள் பரிசுத்த வாழ்வு வாழ்ந்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காமவெறி கொண்டவராக இருந்தார்கள் என்ற விமர்சனத்தை இது பொய்யாக்கி விடுகின்றது.

தமது இருபத்தைந்தாம் வயதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்து கொண்ட முதல் திருமணம் அவர்கள் காமவெறி கொண்டவர்களாக இருந்ததில்லை என்பதைத் தெளிவுபடுத்தும் முக்கிய ஆதாரமாக உள்ளது.

இருபத்தைந்து வயதில் ஆணழகராகத் திகழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்தப் பருவத்தில் எவரும் ஆசைப் படக்கூடிய கட்டழகுக் கன்னியை மணக்கவில்லை. ஏற்கனவே இரண்டு கணவர்களுக்கு வாழ்க்கைப்பட்டு நபியவர்களை விட பதினைந்து வயது அதிகமாகிப் போன நாற்பது வயது கதீஜா (ரலி) அவர்களையே மணம் செய்தார்கள்.

தவறான வழியில் சென்று விடாமல் இருக்க ஒரு மனைவி தேவை என்ற சாதாரண நோக்கம் தான் அவர்களுக்கு இருந்ததே அன்றி இளமை, அழகு, கன்னித் தன்மை எல்லாம் நிறைந்திருக்கக் கூடிய அதிகத் தகுதியுள்ள மனைவி வேண்டும் என்ற அளவுக்கு அவர்களின் நோக்கம் விரிந்திருக்கவில்லை. இந்தப் பருவத்தில் சராசரி மனிதன் விரும்பக் கூடிய அளவை விடவும் குறைந்த அளவையே அவர்கள் விரும்பியிருக்கிறார்கள் என்பதற்கு அவர்களின் முதல் திருமணமே சான்றாக உள்ளது.

இல்லற வாழ்வுக்குக் கன்னியரை விட விதவைகள் தான் அதிகம் பொருத்தமானவர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எண்ணி இருக்கலாமோ என்றால் அதுவும் இல்லை.

ஏனெனில் ஒரு இளைஞன் கன்னியரை மணப்பதே சிறந்தது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாகவே அறிந்து வைத்திருந்தார்கள்.

ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) என்ற இளைஞனிடம் நீ திருமணம் செய்து விட்டாயா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்கிறார்கள். அவர் ஆம்! என்றார். கன்னியா? விதவையா? என்று நபியவர்கள் கேட்டார்கள். அவர் விதவை தான் என்று பதிலளிக்கிறார். அதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீ ஒரு கன்னியை மணந்திருக்கக் கூடாதா? அவளுடன் நீ விளையாடவும் உன்னுடன் அவள் விளையாடவும்,அவளுடன் நீ மகிழ்ச்சியாக இருக்கவும், உண்ணுடன் அவள் மகிழ்ச்சியாக இருக்கவும் கன்னிப் பெண்ணே ஏற்றவள் என்று கூறினார்கள்.

ஆதாரம் : புகாரி 2097, 2309, 5247

ஒரு இளைஞன் தன் காம உணர்வைத் தணித்துக் கொள்ள அவனுக்கு ஈடு கொடுத்து முழு அளவில் திருப்திப்படுத்த கன்னிப் பெண்ணே தகுதியானவள் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்திருந்தும் இந்த அதிகபட்சத் தகுதியைப் பிறருக்கு சிபாரிசு செய்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்காக அதை விரும்பவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்முடைய இருபத்தைந்தாவது வயது முதல் ஐம்பதாவது வயது வரை கதீஜா (40 வயது முதல் 65 வயது வரை) எனும் விதவையுடன் மாத்திரமே வாழ்ந்தார்கள். வேறு எவரையும் மணக்கவில்லை. இருபத்தைந்து வயது முதல் ஐம்பது வயது வரை உள்ள கால கட்டம் தான் ஆண்களின் காம உணர்வு மேலோங்கி நிற்கும் காலம். அதன் பின் படிப்படியாக அந்த உணர்வு குறையத் தொடங்கி விடும்.

நன்றாக அனுபவிக்க வேண்டிய அந்தப் பருவத்தில் ஒரேயொரு மனைவியுடன் விதவையுடன் – தம்மை விட பதினைந்து வயது மூத்த விதவையுடன்  மட்டும் அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் பிற்காலத்தில் செய்து கொண்ட திருமணங்களுக்கு காமஉணர்வு காரணமே இல்லை என்பது இதிலிருந்தும் தெளிவாகின்றது.

இன்னொரு கோணத்திலும் நாம் இதைச் சிந்திக்க வேண்டும். இல்லறத்தில் ஈடுபடுவதற்கு பெண்ணுக்கு முழு ஈடுபாடு இல்லாத போது ஆண் மட்டும் இல்லற உறவை விரும்பினால் அந்த உறவு முழுமையானதாக அமையாது.

கதீஜா (ரலி) அவர்கள் தமது நாற்பதாம் வயது முதல் அவர்கள் மரணமடைந்த அறுபத்தைந்தாம் வயது வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் வாழ்ந்திருக்கிறார்கள். நாற்பதாம் வயது முதலே உடலுறவில் உள்ள ஆர்வம் படிப்படியாகக் குறைந்து, ஐம்பது, ஐம்பத்தைந்தாம் வயதில் அதை அறவே விரும்பாத நிலையைப் பெண்கள் அடைந்து விடுவார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வயதோ இல்லறத்தை பெரிதும் விரும்பக் கூடிய வயது. அவர்களின் மனைவியின் வயதோ அதை அவ்வளவு விரும்ப முடியாத வயது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இளமை வேகத்திற்கு ஈடு கொடுக்கும் நிலையில் கதீஜா (ரலி) அவர்கள் இருந்திருக்க முடியாது. இன்னும் சொல்வதென்றால் பெரும்பாலான பெண்கள் ஐம்பத்தைந்து முதல் அறுபத்தைந்து வயது வரை இல்லற வாழ்வை விரும்ப மாட்டார்கள். கதீஜா அவர்களின் ஐம்பத்தைந்து முதல் அறுபத்தைந்து வயது வரையிலான பத்து ஆண்டுகளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முழுமையான இல்லறத்தில் ஈடுபட்டிருக்க முடியுமா? என்பதும் சிந்திக்கப்பட வேண்டிய ஒன்று.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மிதமிஞ்சிய காமஉணர்வு இருந்தது உண்மையாக இருந்தால், தம் மனைவி இல்லற சுகம் தருவதற்கான தகுதியை இழந்த பின்னும் அவர்களுடன் மட்டுமே பெயரளவுக்கு எப்படி நபியவர்கள் வாழ்ந்திருக்க முடியும்? இல்லற சுகத்தை நாடக்கூடிய வயதில் அது கிடைக்காவிட்டால் இன்னொரு திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்காதா? குறைந்தபட்சம் கதீஜாவுடன் வாழ்ந்த கடைசி பத்தாண்டுகளிலாவது இந்த எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்காதா? அப்படியெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எண்ணமே வரவில்லை. கதீஜா (ரலி) அவர்கள் மரணிக்கும் வரை மறுமணம் பற்றிய சிந்தனை எதுவுமின்றி தான் அவர்கள் இருந்திருக்கிறார்கள்.

அன்றைய அரபுகள் சர்வ சாதாரணமாகப் பத்து முதல் இருபது மனைவியர் வரை மணந்து கொண்டிருந்தனர். அன்றைய காலத்து ஆண்களோ, பெண்களோ எவருமே பலதார மணத்தைத் தவறான ஒன்றாகக் கருதியதில்லை. இந்த நிலையில் நபியவர்கள் மற்றொரு திருமணம் செய்திருந்தால் அவ்ர்களின் மனைவி கதீஜா (ரலி) உட்பட் எவருமே அதைக் குறை கூறி இருக்க மாட்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நல்லொழுக்கம், நேர்மை, நற்குணம், அதிசயிக்க வைக்கும் பேரழகு, இளமை இவற்றையெல்லாம் நன்கு அறிந்திருந்த அன்றைய மக்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பெண் கொடுக்கவும் மறுத்திருக்க மாட்டார்கள். இவ்வளவு வாய்ப்பு இருந்தும், நபியவர்கள் தமது ஐம்பதாம் வயது வரை – கதீஜா மரணிக்கும் வரை இன்னொரு திருமணமே செய்யவில்லை.

இன்னொரு கோனத்திலும் நாம் சிந்திக்க வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மை இறைத்தூதர் என்று அறிவித்துக் கொண்ட காலத்தை விட அவ்வாறு அறிவிக்காத நாற்பது வயது வரையிலான வாழ்க்கை தான் பல திருமணங்கள் செய்வதற்கு வசதியானது.

தம்மை இறைத்தூதர் என்று சொல்லிக் கொள்ளாத காலத்தில் அவர்களின் செயலை யாரும் விமர்சனக் கண்ணோட்டத்துடன் பார்க்க மாட்டார்கள். ஆனால் இறைத்தூதர் என்று தம்மைப் பிரகடனப்படுத்திய காலத்தில் அவர்களின் ஒவ்வொரு செயலும் மற்றவர்களால் விமர்சிக்கப்படும்.

எனவே காம உணர்வுக்காக பல திருமணம் செய்வது அவர்களின் நோக்கமாக இருந்தால் நாற்பது வயது வரை பல மனைவியருடன் வாழ்வதை அவர்கள்  தேர்வு செய்திருப்பார்கள். ஆனாலும் தமது ஐம்பது வயது வரை அறுபத்து வயதுப் பெண்ணுடன் மட்டுமே வாழ்ந்தார்கள் என்பதே அனைத்து விமர்சனங்களுக்கும் தக்க மறுப்பாக அமைந்துள்ளது.

இவ்வளவு வாய்ப்புக்கள் அமைந்திருந்தும் ஒரு வயோதிகப் பெண்ணுடன் மட்டுமே அவர்கள் வாழ்ந்தது அவர்கள் சராசரி மனிதன் விரும்பக் கூடிய அளவை விட குறைந்த அளவு காம உணர்வுக்குத்தான் அவர்கள் முக்கியத்துவம் அளித்திருந்தார்கள் என்பதைத் தெளிவாக அறிவிக்கிறது.

மறுமணம் செய்யாவிட்டாலும்,  தமக்குப் பூரண சுகம் தர முடியாமல் மனைவி அமைந்தால் குறைந்தபட்சம் அந்த மனைவியின் மேல் வெறுப்பாவது ஏற்பட்டிருக்கும். அவர்களின் தாம்பத்திய வாழ்வில் பூசலும், பிணக்குகளும் ஏற்பட்டிருக்கும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காமவெறி கொண்டவர்களாக இருந்திருந்தால் அந்த வெறியைத் தனித்துக் கொள்ள முடியாத போது தாங்கிக் கொள்ள முடியாத ஆத்திரமும், வெறுப்பும் ஏற்பட்டு அவர்களின் வாழ்வு நரக வாழ்வாகத் தோன்றியிருக்கும்.

ஆனால் அப்படி எதுவும் அந்தக் காலகட்டத்தில் ஏற்படவே இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது நாற்பதாம் வயதில் ஹிரா எனும் குகைக்குப் போய் பல நாட்கள் தனித்து இருப்பதை வழக்கமாக கொண்டு இருந்தார்கள். கரடு முரடான அந்த மலையில் ஏறி கதீஜா அவர்கள் நபிகள் நாயகத்துக்கு தேவையான உணவுகளை கொடுத்து விட்டு வருவார்கள். அவ்வாறு அந்தக் குகையில் தங்கி இருந்த போதுதான் தனது தூதராக அவர்களை இறைவன் நியமித்தான். இது இஸ்லாமிய வரலாறு.

காமஉணர்வு மேலோங்கிய ஒருவர் தனக்கென ஒரு மனைவி இருக்கும் போது பல நாட்கள் ஊருக்கு வெளியே உள்ள ஒரு குகையில் போய் தனியாக தவம் இருப்பாரா? நாற்பதாம் வயதில் அவர்கள் தனிமையில் அமர்ந்து சிந்தனையில் ஆழ்ந்திருந்தது அவர்கள் காமஉணர்வில் மிஞ்சியவர்களாக இருக்கவில்லை என்பதற்கான ஆதாரமாக அமைந்துள்ளது.

உடலுறவுக்கும் அப்பாற்பட்ட உளப்பூர்வமான நெருக்கம் தான் அவர்களிடையே இருந்து வந்தது. ஹிரா மலைக் குகையில் தனித்து இருந்து சிந்தித்துக் கொண்டிருந்த காலங்களில், 55 வயதை அடைந்து விட்ட ஹதீஜா (ரலி) அவர்கள் நபியவர்களுக்குத் தேவையான உணவுகளை எடுத்துக் கொண்டு கல்லிலும், முள்ளிலும் கால் கடுக்க நடந்து போய்க் கொடுப்பார்கள்.

அவர்களுக்கு இருந்த வசதிக்கு தமது பணியாளர்கள் மூலமே அதைக் கொடுத்து விட்டு இருக்க முடியும். அவ்வாறு இருந்தும் தாமே எடுத்துச் சென்று நபிகள் நாயகம் அவர்களை உபசரிப்பார்கள் என்றால் அவர்களுக்கிடையே இருந்த நேசம், உடலுறவை மட்டும் அடிப்படையாகக் கொண்டது என்று கூற இயலுமா?

தமக்கு இறைவனிடமிருந்து இறைச் செய்தி வந்ததாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய போது, முஹம்மதுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்று அரபு உலகமே எள்ளி நகையாடியது. எனக்குப் பயமாக இருக்கிறது; என்னைப் போர்த்துங்கள் என்று நடுங்கினார்கள். அப்போது கதீஜா (ரலி) அவர்கள் உங்களுக்கு ஒரு குறைவும் வராது. நீங்கள் அநாதைகளை ஆதரிக்கிறீர்கள், ஏழைகளுக்கு உதவி செய்கிறீர்கள். அடிமைகளை விடுதலை செய்கிறீர்கள். உங்களுக்கு ஒன்றும் நேராது. நீங்கள் அல்லாஹ்வின் தூதர் தான் என ஆறுதல் கூறி அன்று வாழ்ந்த மக்களில் முதன் முதலில் இஸ்லாத்தை ஏற்கும் பாக்கியத்தையும் கதீஜா (ரலி) அவர்களே பெற்றார்கள்.

நபியவர்கள் காமவெறி கொண்டவர்களாக இருந்திருந்தால், அதையே பிரதான நோக்கமாகக் கொண்டிருந்தால் அதற்கு ஈடு கொடுக்க முடியாத கதீஜா (ரலி) அவர்கள் இவ்வாறு கூறியிருக்கவே முடியாது. உலகம் பைத்தியக்காரர் என்று பட்டம் சூட்டுவதற்கு முன் முதலில் கதீஜாவே அந்தப் பட்டத்தைச் சூட்டியிருப்பார்கள்.

காம வெறிக்கெல்லாம் அப்பாற்பட்ட நபியவர்களின் தவவாழ்வை கதீஜா அவர்கள் கண்கூடாகக் கண்டதால் தான் நபிகள் நாயகத்தை இறைத்தூதர் என்று முதலில் நம்பும் பெருமையை கதீஜா (ரலி) பெற்றார்கள்.

கதீஜா (ரலி) அவர்களுக்கும் அந்த நோக்கம் பிரதானமானதாக இருக்கவில்லை. அவ்வாறு இருந்திருந்தால் நபியவர்கள் தவம் செய்யச் சென்ற காலங்களில் அதைத் தடுத்திருப்பார்கள். அவ்வாறெல்லாம் செய்யாது அந்தத் தவவாழ்வுக்குப் பக்கபலமாகவே இருந்தார்கள்.

இதன் காரணமாகவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்கு இறைச் செய்தி வந்ததாகக் கூறிய போது, அநாதைகளுக்கு உதவுதல், ஏழைகளை அரவணைத்தல், அடிமைகளை விடுவித்தல் போன்ற அருங்குணங்களைக் கூறி ஆறுதல் படுத்துகிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அமைந்திருந்த இந்த நற்குணங்களையே கதீஜா (ரலி) அவர்கள் காதலித்தார்கள். வெறும் கட்டுடலை அல்ல என்பதற்கு இவையெல்லாம் சான்றுகளாக உள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காமவெறி கொண்டவர்களாக இருந்திருந்தால் தமக்கு உடல் சுகம் தர இயலாத கதீஜா (ரலி) அவர்கள் மரணித்ததற்காக இடிந்து போயிருக்க மாட்டார்கள். இனியாவது மகிழ்ச்சியில் திளைக்கலாமே என்று எண்ணியிருப்பார்கள். ஆனால் கதீஜா அவர்கள் மரணித்ததற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கவலைப்பட்டது போல் வேறு எவரது இழப்புக்காகவும் கவலைப்பட்டதில்லை.

அவர்களின் கவலையை வர்ணிக்க வார்த்தை தேடிய சரித்திர ஆசிரியர்கள் கதீஜா (ரலி) அவர்கள் மரணித்த ஆண்டை ஆமுல் ஹுஸ்ன் – கவலை ஆண்டு – எனச் சுருக்கமாகக் குறிப்பிடுகிறார்கள். அந்த அளவுக்கு நபியவர்கள் கவலைப்பட்டிருக்கிறார்கள். கதீஜா அவர்களை நினைவில் வைத்திருந்தது போல் வேறு எவரையும் அவர்கள் நினைவு கூரவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியரிலே கன்னியாக இருந்த ஆயிஷா (ரலி) அவர்கள் கூட கதீஜா (ரலி) அவர்களின் இடத்தை அடைய முடியவில்லை. நானே பொறாமைப்படும் அளவுக்கு எப்போது பார்த்தாலும் கதீஜா அவர்களை நபியவர்கள் நிணைவு கூர்வார்கள், புகழ்ந்துரைப்பார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்களே அறிவிக்கிறார்கள்.

நூல் : புகாரி 3816, 3817, 3818, 5229, 6004

அவர்கள் காமஉணர்வு மிக்கவர்கள் என்பது உண்மையென்றால் கதீஜாவை விட நபியவர்கள் ஆயிஷாவை அதிகம் நேசித்திருக்க வேண்டும். ஆனால் ஆயிஷாவால் கூட அந்த இடத்தைப் பிடிக்க முடியவில்லை.

தமது இல்லத்தில் ஆடு அறுக்கப்படுமானால் கதீஜாவின் தோழியருக்குக் கொடுத்தனுப்புங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவார்கள். ஏன் இவ்வாறு கூறுகிறீர்கள் என்று நான் கேட்ட போது கதீஜாவின் தோழியர்களை நானும் விரும்புகிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

நூல் : புகாரி 3816, 3817, 3818, 5229, 6004

இந்த உலகத்தில் உள்ள பெண்களிலேயே மிகவும் சிறந்தவர்கள் இம்ரானுடைய மகள் மர்யமும், குவைலித் என்பவரின் மகள் கதீஜாவும் ஆவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டதாக அலி (ரலி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

நூல் : புகாரி 3432

ஒரு மூதாட்டி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்திக்க ஆயிஷாவின் இல்லத்திற்கு வந்த போது அவர்களுக்கு மரியாதை செய்து தமது மேலாடையை விரித்து, அதில் அந்த மூதாட்டியை அமரச் செய்தார்கள். அந்த மூதாட்டி திரும்பிச் சென்ற பின் இதன் காரணத்தை ஆயிஷா (ரலி) அவர்கள் கேட்ட போது, கதீஜாவை அடிக்கடி இந்தப் பெண் சந்திக்க வருவார். அதுவே காரணம் என்றார்கள்.

நபியவர்கள், கதீஜாவைப் புகழ்ந்துரைத்த நபிமொழிகளையெல்லாம் எழுதினால் நீண்டு கொண்டே இருக்கும் என்பதால் சுருக்கமாகத் தந்திருக்கிறோம்.

தமது இருபத்தைந்தாவது வயது முதல் தமது ஐம்பது வயது வரை நாற்பது முதல் அறுபத்தி ஐந்து வயது கொண்ட கதீஜாவுடன் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நோக்கத்தை உலகுக்குத் தெளிவாக அறிவிக்கின்றது.

ஐம்பது வயது வரை ஒருவருக்குக் காமவெறி இல்லாமல் அதற்கான அறிகுறி கூட இல்லாமல் இருந்து ஐம்பது வயதைக் கடந்த பின் காமவெறி திடீரென்று ஏற்பட்டு விட்டது என்று கூறினால் அறிவுடைய யாரும் அதை ஏற்பார்களா?

2 ஸவ்தா (ரலி)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முதல் மனைவி கதீஜா அவர்கள் மரணித்த பின் ஸம்ஆ என்பாரின் மகள் ஸவ்தா அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள். இவரைப் பற்றிய முக்கியமான விபரங்களை அறிந்து கொள்வோம்.

ஸக்ரான் இப்னு அம்ரு அல்அன்ஸாரி (ரலி) அவர்களும்,  அவர்களின் மனைவி ஸவ்தா (ரலி) அவர்களும் இஸ்லாத்தில் தம்மை இணைத்துக் கொண்டார்கள். இஸ்லாத்தை ஏற்றதற்காக இத்தம்பதியினர் தம் இனத்தவரான அப்துஷம்ஸ் கூட்டத்தினரால் கொடுமைகளுக்கு ஆளானார்கள். தங்களின் கொள்கையைக் காத்துக் கொள்வதற்காக இத்தம்பதியினர் அபீஸீனியா நாட்டுக்கு ஹிஜ்ரத் (நாடு துறத்தல்) செய்தனர். மக்காவில் நல்ல சூழ்நிலை ஏற்பட்டு வி;ட்டது என்ற தவறான தகவலின் அடிப்படையில் மக்காவுக்கே இருவரும் திரும்பி வந்தனர். திரும்பியதும் ஸக்ரான் (ரலி) அவர்கள், தம் மனைவி ஸவ்தா அவர்களை விதவையாக விட்டுவிட்டு மரணமடைந்தார்.

இந்த விதவையைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டாவதாகத் திருமணம் செய்தார்கள். விதவை என்றால் இளம் வயது விதவையோ, நடுத்தர வயது விதவையோ அல்ல. மாறாக இல்லற வாழ்வுக்குரிய தகுதியையே இழக்கத் துவங்கிவிட்ட முதிய விதவையாகவே அவர்கள் இருந்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸவ்தா (ரலி) அவர்களைத் திருமணம் செய்யும் போது ஸவ்தாவின் வயது ஐம்பத்தைந்து. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வயது ஐம்பது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காமஉணர்வு மிக்கவர்கள் என்பது உண்மையென்று வைத்துக் கொண்டால், கதீஜா (ரலி) அவர்களுடன் அவர்கள் வாழ்ந்த வாழ்வு அந்தக் காமஉணர்வுக்கு ஈடு கொடுக்கத்தக்க விதமாக அமைந்திருக்காத நிலையில், இந்த இரண்டாம் திருமணத்தின் போதாவது இளம் பெண்ணை விரும்பியிருக்க வேண்டும். காமஉணர்வைப் பிரதானமாகக் கொண்டவர் நீண்டகாலம் அந்த உணர்வை கட்டுப்படுத்திக் கொண்டவர் இளம் வயதுப் பெண்ணைத் தான் தேர்வு செய்வார்.

இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தேர்வு செய்வதற்கு அன்றைய சமூக அமைப்பில் தடை ஏதும் இருக்கவில்லை. கதீஜா (ரலி) அவர்களின் திரண்ட செல்வங்களுக்கு ஒரே வாரிசாக அவர்கள் இருந்ததால் பணத்தாசையைக் காட்டியாவது இளம் பெண்ணைத் தமக்குத் துணையாக ஆக்கியிருக்க முடியும்.

இவ்வளவு வாய்ப்புகள் இருந்தும் இரண்டாவது மனைவியாக அவர்கள் தேர்ந்தெடுத்தது தம்மை விட ஐந்து வயது அதிகமான இல்வாழ்வுக்கான தகுதியை இழக்கும் நிலையில் இருந்த விதவையான ஸவ்தா (ரலி) அவர்களைத் தான். நிச்சயமாக காமஉணர்வு இதற்குக் காரணமாக இருக்க முடியாது என்பது இதிலிருந்தும் தெளிவாகும்.

கதீஜா (ரலி) அவர்கள் மரணித்த பின் அவர்கள் மூலம் பிறந்த தமது பிள்ளைகளைப் பராமரித்தல் போன்ற காரணம் தான் இதற்கு இருக்க முடியும்.

3 ஆயிஷா (ரலி) அவர்கள்

இதன் பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களைத் திருமணம் செய்கிறார்கள். கதீஜா (ரலி) அவர்கள் மரணித்து மூன்றாண்டுகளுக்குப் பின் தமது ஐம்பத்தி மூன்றாம் வயதில் ஆயிஷா (ரலி) அவர்களைத் திருமணம் செய்கிறார்கள். அப்போது ஆயிஷா (ரலி) அவர்களுக்கு ஆறு வயது மாத்திரமே.

அன்றைக்குப் பால்ய விவாகம் சர்வசாதாரணமாக இருந்ததை இங்கே நாம் நினைவில் கொள்ள வேண்டும். பிறகு இஸ்லாத்தில் அது தடை செய்யப்பட்டு விட்டது.

சிறுவயது ஆயிஷாவை நபிகள் திருமணம் செய்தது ஏன் என்பதை விபரமாக அறிய

சிறிய வயதுடைய ஆயிஷாவை நபிகள் மணந்தது ஏன்?

ஆயிஷா (ரலி) அவர்கள் மட்டுமே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியரில் கன்னியாக இருந்தவர்கள்.

நபிகள் நாயகம் அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களைத் திருமணம் செய்ததற்குக் கூட காமவெறியைக் காரணமாகக் கூற முடியாது.

காமவெறிக்காக திருமணம் செய்பவர்கள் அப்போதைக்கு காம உணர்வைத் தணித்துக் கொள்ளத் தகுதியான ஒருத்தியைத் தான் மணமுடிப்பார்கள். உணர்வுகளை அடிப்படையாகக் கொண்ட காரியங்கள் யாவுமே அப்போதே அதை நிறைவேற்ற வேண்டும் என்ற தன்மை வாய்ந்தவை தான்.

ஒருவனுக்குக் காமஉணர்வு மேலோங்கி பெண்களை அனுபவிக்கும் எண்ணம் வந்துவிட்டால் உடனேயே அந்த உணர்வைத் தணித்துக் கொள்ளத்தக்க பெண்களைத் தான் நாடுவானேயன்றி ஐந்து வருடங்களுக்குப் பின் பருவமடையக் கூடியவளை மணக்க மாட்டான். அவ்வாறு எவரேனும் மணந்தால் அதற்குக் காமஉணர்வு அல்லாத வேறு ஏதோ பின்னணி இருக்கும். எல்லா உணர்வுகளின் நிலையும் இது தான்.

இப்போது ஒருவனுக்குப் பசித்தால் இப்போதே அதற்குரிய உணவைத் தேடுவானே அன்றி, இப்போதைய பசிக்கு மூன்று நாட்கள் கழித்துப் பழுக்கக் கூடிய காய்களைத் தேட மாட்டான்.

நபிகள் நாயகத்துக்கு முதல் மனைவியுடன் கடைசிப் பத்தாண்டுகளாக இல்லற வாழ்வு கிடைக்காத நிலை. இரண்டாம் மனைவியும் அதற்குரிய தகுதியை இழந்துவிட்ட முதிர் விதவை.

இந்த நிலையில் பதின்மூன்று ஆண்டு காலம் இல்வாழ்வை அனுபவிக்கும் வாய்ப்பை இழந்த ஒருவர் – காமவெறி கொண்டவராக இருந்தால்  அடுத்து தேர்ந்தெடுக்கும் மனைவி உடனே அனுபவிக்க ஏற்றவளாக இருக்க வேண்டும் என்றே விரும்புவார்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த நிலையை அடைந்திருந்தும் ஆயிஷா (ரலி) அவர்களை மூன்றாவதாக மணம் புரிந்த போது ஆயிஷா அவர்களின் வயது வெறும் ஆறு மட்டுமே! இல்லறத்துக்குத் தகுதியில்லாத அவர்களைப் பெயரளவுக்குத் தான் திருமணம் செய்கிறார்கள்.

இத்திருமணம் நடந்த பின் ஆயிஷா (ரலி) அவர்கள் தமது தந்தை வீட்டில் தான் இருந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி)யுடன் அப்போது இல்லறம் நடத்தவில்லை. மக்காவை விட்டு நாடு துறந்து மதீனா சென்ற பின்புதான் ஆயிஷா (ரலி அவர்கள் பருவ வயதை அடைந்தார்கள். அதன் பின்னர் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வீட்டுக்கு மனைவியாக அனுப்பப்பட்டார்கள்.

எனவே இத்திருமணத்திற்கு காமவெறியைக் காரணமாகக் கூற இது தடையாக நிற்கிறது.

உலகமெல்லாம் நபியவர்களைப் பொய்யர் எனக் கூறிய போது உண்மையாளர் என்று ஏற்றவர் ஆயிஷாவின் தந்தை அபூ பக்ர் ( ரலி) அவர்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் வசிக்க முடியாத அளவுக்கு நிலைமை முற்றிய போது, எதிரிகள் நபிகள் நாயகத்தைக் கொலை செய்யத் திட்டம் தீட்டிய போது யாருக்கும் தெரியாமல் மதீனாவுக்குப் புறப்பட்டார்கள். உயிரைப் பணயம் வைத்து புறப்பட்ட இந்தப் பயணத்தில் அபூபக்ர் (ரலி) அவர்கள் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் துணையாக வந்தனர். இந்தச் சமுதாயத்திலேயே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அவர் நேசித்த அளவுக்கு வேறு எவரும் நேசிக்க முடியாது என்ற அளவுக்கு நபியவர்களுக்கு நெருக்கமானவர்.

இந்த நேசத்துடன் நெருக்கமான சொந்தமும் ஏற்பட வேண்டும் என்ற காரணம் இருந்தால் மட்டுமே பருவமடையாத ஆயிஷாவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மனந்திருக்க முடியும். இதனால் தான் அபூ பக்கர் (ரலி) அவர்கள் மனமகிழ்வுடன் தம் மகளைத் திருமணம் செய்விக்கிறார்கள்.

பிரத்தியேகமாக ஆயிஷாவைத் தேர்வு செய்ததற்கு நிச்சயமாக இதைக் காரணமாகக் கூற இயலும்.

மற்றவர்களை விட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டும் நான்குக்கு மேல் மணம் முடிக்க சலுகை வழங்கப்பட்டதற்கு இதைக் காரணமாகக் கூற முடியாது. ஏனெனில் ஆயிஷாவை மணக்கும் போது சவ்தா மட்டுமே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மனைவியாக இருந்தார்கள். நான்கு என்ற வரம்புக்கு உட்பட்டதாகவே இத்திருமணம் இருந்தது.

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இளமைக் காலத்திலும், கதீஜாவை மணந்த இறுதிக் காலத்திலும், ஸவ்தாவை மணந்த காலத்திலும் பொங்கியெழாத காமவெறி அவர்களின் ஐம்பத்தி மூன்றாம் வயதில் திடீரென பொங்கி எழ முடியுமா?

இந்தக் கட்டத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூன்று திருமணங்கள் செய்து விட்டிருந்தாலும் கதீஜா (ரலி) மரணமடைந்து விட்டதால் இரண்டு மனைவியருடன் மட்டுமே வாழ்ந்தார்கள். இந்த நிலைமை நபியவர்களின் ஐம்பத்தி ஆறாவது வயது வரை நீடித்தது.

இரண்டு மனைவியருடன் வாழ்ந்தார்கள் என்று கூறுவது கூட சரியாக இருக்காது. ஏனெனில் ஆயிஷாவுடன் மதீனா சென்ற பிறகு தான் வாழ்ந்தார்கள். மூதாட்டி ஸவ்தாவுடன் மட்டும் தான் இந்தக் காலகட்டத்தில் பெயரளவுக்கு வாழ்ந்தார்கள்.

அதாவது ஐம்பது வயது நிரம்பிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஐம்பத்தைந்து வயதுடைய முதிய விதவையான ஸவ்தாவுடனும், இல்வாழ்வுக்குரிய தகுதியைப் பெற்றிராத சிறுமி ஆயிஷாவுடனும் பெயரளவுக்கு இந்தக் காலகட்டத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். ஐம்பத்தி ஆறாவது வயது வரை இந்த நிலையே நீடித்தது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் திருமணங்களுக்குக் காமஉணர்வைக் காரணமாகக் கூறுவோர் இதை இங்கே கவனிக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

இருபத்தி ஐந்து வயதுடைய கட்டழகு இளைஞன் நாற்பது வயது விதவையைத் திருமணம் செய்து அவளுடனேயே தனது ஐம்பது வயது வரை – அவளுடைய அறுபத்தைந்து வயது வரை – வாழ்ந்தால் அறிவுடைய எவரேனும் இதற்குக் காமஉணர்வைக் காரணமாகக் கூற துணிய மாட்டார்.

அதே மனிதன் தனது ஐம்பதாவது வயதில், ஐம்பத்தைந்து வயது விதவையை மீண்டும் திருமணம் செய்தால் அதற்கும் காமவெறியைக் காரணமாகக் கூற எந்த அறிவாளியும் முன்வர மாட்டார்.

ஐம்பத்தைந்து வயதுப் பெண்ணுடன் இல்லறம் நடத்துவது சாத்தியமாகாது என்பதை அறிந்த எவருமே இவ்வாறு கூறத் துணிய மாட்டார்.

திருமணம் செய்யும் நேரத்தில் தான் அந்தப் பெண் ஐம்பத்தி ஐந்து வயதில் இருக்கிறார். நபியவர்கள் மரணிக்கும் காலத்திலோ அப்பெண் அறுபத்தி எட்டு வயதுடையவராக இருக்கிறார். ஐம்பத்தி ஐந்து முதல் அறுபத்தி எட்டு வயது உள்ள பெண்ணிடம் என்ன காமசுகம் அனுபவித்திட இயலும்?

இதே கட்டத்தில் அந்த மனிதர் ஆறு வயது சிறுமியைப் பெயரளவுக்கு மணமுடித்தால் அதற்கும் காமவெறியை நியாயவான்கள் காரணம் காட்ட மாட்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் திருமணங்களில் இது வரை கூறப்பட்ட மூன்று திருமணங்களும் இந்த நிலையில் தான் இருக்கிறது என்பதைக் களங்கம் சுமத்துவோர் கவனிக்க வேண்டும். நபியவர்களின் நான்காவது திருமணத்தைக் காண்போம்.

4- ஹஃப்ஸா (ரலி) அவர்கள்

ஹிஸ்னு பின் ஹூதாபா (ரலி) அவர்களும், அவர்களின் மனைவி ஹஃப்ஸாவும் இஸ்லாத்தை ஏற்றனர். இஸ்லாமிய வரலாற்றில் நிகழ்ந்த இரண்டாவது போராகிய உஹதுப் போரில் கணவரும் மனைவியுமாகப் பங்கெடுத்துக் கொண்டனர்.

அந்தப் போரில் தமது தியாக முத்திரையைப் பதித்து விட்டு ஹிஸ்னு பின் ஹூதாபா (ரலி) அவர்கள் வீர மரணம் அடைகிறார்கள். காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை செய்தல், தண்ணீர் வழங்குதல் போன்ற பணிகளை இந்தக் கட்டத்திலும் ஹப்ஸா (ரலி) அவர்கள் செய்யத் தவறவில்லை. இஸ்லாமிய வரலாறு கண்ட வீரப் பெண்மணிகளில் இவர்களுக்குத் தலையாய இடமுண்டு.

கணவரை இழந்து விதவையாகிப் போன ஹப்ஸா (ரலி) அவர்களைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஐம்பத்தி ஆறாவது வயதில் திருமணம் செய்தார்கள். இந்தத் திருமணம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நான்காவது திருமணம் என்றாலும், கதீஜா (ரலி) அவர்கள் முன்பே மரணித்து விட்டதால் இவர்களையும் சேர்த்து இந்தச் சமயத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மூன்று மனைவியர் தான் இருந்தார்கள்.

ஒரு சமயத்தில் நான்கு பெண்கள் வரை தான் மணந்து கொள்ளலாம் என்று அனைவருக்கும் வழங்கப்பட்டிருந்த பொதுவான அனுமதியை இந்தச் சந்தர்ப்பத்திலும் நபியவர்கள் கடந்து விடவில்லை.

நான்கு பெண்கள் வரை திருமணம் செய்யலாம் என்று மற்றவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொது அனுமதிக்குரிய நியாயங்களே இத்திருமணங்களுக்கும் பொருந்தும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நெருங்கிய தோழர்களில் இரண்டாவது இடத்தைப் பெற்றிருந்தவரும், தமது துணிச்சலான நடவடிக்கைகளால் இஸ்லாமியப் பிரச்சாரத்திற்கு பலம் சேர்த்தவருமான உமர் (ரலி) அவர்களின் மகளாக ஹப்ஸா (ரலி) அவர்கள் இருந்தது இத்திருமணத்திற்கு பிரத்தியேகக் காரணமாக இருக்கலாம்.

இந்தப் பிரத்தியேகக் காரணம் இல்லாவிட்டால் கூட இந்தத் திருமணம் செய்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நான்கு மனைவிக்கு மேல் கூடாது எனும் வரம்பைக் கடந்து விடவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அடுத்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஐந்தாவது திருமனத்தைக் காண்போம்.

5 ஸைனப் பின்த் குஸைமா (ரலி) அவர்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஐந்தாவது மனைவி குஸைமாவின் மகளாகிய ஸைனப் (ரலி) அவர்கள் ஆவார்கள். இவர்கள் முதலில் துபைப் பின் ஹாரிஸ் என்பவருக்கு மனைவியாக இருந்தார்கள். அவர் திடீரென மரணமடைந்த்தால் அவரது சகோதரர் உபைதா பின் ஹாரிஸ் (ரலி) அவர்களுக்கு மனைவியானார்கள். இவர் பத்ருப் போரில் இந்த மார்க்கத்தை நிலைநாட்டச் செய்வதற்காக பங்கெடுத்து அந்தப் போரிலேயே வீர மரணமும் அடைந்தார்.

ஸைனப் (ரலி) அவர்கள் மீண்டும் விதவையானார்கள். இதன் பிறகு அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் அவரைத் திருமணம் செய்தார்கள். இரண்டாண்டுகள் மட்டுமே அவர்களின் இல்லறம் நடந்தது. அதன் பிறகு நடந்த உஹத் போரில் அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் பங்கெடுத்து அந்தப் போரில் வீர மரணம் அடைந்தார்கள். ஸைனப் (ரலி) அவர்கள் மீண்டும் விதவையானார்கள்.

ஏற்கெனவே மூன்று கணவர்களுக்கு வாழ்க்கைப்பட்டு, மூன்று முறை விதவையாகி நின்ற ஸைனப் பின்த் குஸைமா (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஐந்தாவது மனைவியாக ஏற்கிறார்கள்.

ஹிஜ்ரி மூன்றாம் ஆண்டு புனித ரமழானில் இவர்களை நபியவர்கள் மணந்தார்கள். ஹிஜ்ரி நான்காம் ஆண்டு ரபியுல் அவ்வலில் அதாவது எட்டு மாதங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் வாழ்ந்து விட்டு ஸைனப் (ரலி) அவர்கள் மரணமடைந்தார்கள். மூன்று கணவர்களுடன் வாழ்ந்து மூன்று முறை விதவையான ஒரு முதிய வயதுப் பெண்ணைத் திருமனம் செய்ததற்கு காமவெறிதான் காரணம் என்று சிந்திக்கும் எவராவது கூற முடியுமா? இதுவரை சொல்லப்பட்ட திருமணங்களில் எதுவுமே காமவெறியைக் காரணமாகக் கூற முடியாதவாறு தான் அமைந்துள்ளது.

இந்தக் கட்டத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஐந்து திருமணங்கள் செய்து விட்டாலும், கதீஜா (ரலி) முன்னரே மரணித்து விட்டதாலும், ஸைனப் (ரலி) எட்டு மாதங்களில் மரணித்து விட்டதாலும் இப்போது உயிரோடு இருந்தவர்கள் ஸவ்தா, ஆயிஷா, ஹப்ஸா (ரலி) ஆகிய மூவர் மட்டுமே.

இனி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடுத்தடுத்த திருமணங்களைக் காண்போம்.

6 ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஐம்பத்தி ஆறாம் வயதில் தமது ஆறாவது மனைவியாக ஜஹ்ஷ் என்பவரின் மகள் ஸைனப் (ரலி) அவர்களை மணந்து கொண்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல மனைவியரை மணந்து கொண்டதற்காகச் செய்யப்படும் விமர்சனத்துடன் இந்தத் திருமணம் விஷேசமாகவும் எதிரிகளால் விமர்சனம் செய்யப்படுவதுண்டு.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் காமுகராகச் சித்தரிக்க இந்தத் திருமணத்தை அவர்கள் சான்றாகக் கூறுகின்றனர்.

இதில் மாற்றாரின் மீது மட்டும் ஆத்திரப்படுவதில் நியாயமில்லை. முஸ்லிம் அறிவீனர்களே இத்திருமணத்திற்கு கொச்சையான கற்பனைக் கதையை உருவாக்கி ஏடுகளில் ஆதாரமில்லாமல் எழுதி வைத்திருப்பதால் அதனடிப்படையில் இத்திருமணம் கடுமையாக விமர்சனம் செய்யப்படுகின்றது. எனவே இது பற்றிய முழு விபரங்களையும் தெளிவாக அறிந்து கொள்வது அவசியமாகும்.

உக்கால் எனும் அரபியச் சந்தையில் அடிமையாக விற்கப்பட்ட ஹாரிஸாவின் மகன் ஸைத் (ரலி) அவர்களை கதீஜா (ரலி) அவர்கள் விலை கொடுத்து வாங்கினார்கள். சிறுவரான அவர் கதீஜா (ரலி) அவர்களிடம் வளர்ந்து வந்தார்.

கதீஜா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மணந்த பின் அந்த அடிமைச் சிறுவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வழங்கி, நீங்கள் விரும்பினால் இச்சிறுவரை அடிமையாகவே வைத்துக் கொள்ளலாம், நீங்கள் விரும்பினால் விடுதலை செய்து விடலாம் என்று கூறி விட்டார்கள்.

அதன் பின் அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பணியாளராக இருக்கலானார். இந்நிலையில் தன் மகன் மக்காவில் அடிமையாக இருப்பதை அறிந்த ஹாரிஸாவும், அவரது சகோதரர் கஅப் என்பவரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தனர். தம் மகனை விடுதலை செய்யுமாறும் அதற்குரிய விலையைத் தந்து விடுவதாகவும் கூறினார்கள். அதற்கு நபியவர்கள் உங்களுடன் வருவதற்கு ஸைத் ஒத்துக் கொண்டால் நீங்கள் தாராளமாக அவரை அழைத்துச் செல்லலாம்; எனக்கு நஷ்ட ஈடு எதுவும் நீங்கள் தரவேண்டியது இல்லை. அவர் உங்களுடன் வர விரும்பாவிட்டால் அவரை உங்களுடன் அனுப்ப இயலாது என்று கூறி விட்டனர்.

வந்தவர்கள், ஸைத் அவர்களிடம் பேசிப் பார்த்தனர். முஹம்மது என்னை மிகவும் சிறந்த முறையில் நடத்துகிறார். அவரை விட்டு என்னால் வர இயலாது என்று ஸைத் திட்டவட்டமாக மறுத்து விட்டார். இந்தச் சந்தர்ப்பத்தில் ஸைத் இனி மேல் என் மகனாவார். அவர் இனி அடிமையில்லை; நான் அவருக்கு முன் இறந்து விட்டால் என் சொத்துக்களுக்கு அவர் வாரிசாவார், எனக்கு முன் அவர் இறந்து விட்டால் அவருக்கு நான் வாரிசாவேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும், ஸைதுக்கும் இடையே உள்ள உறவைப் புரிந்து கொண்ட அவரது தந்தை மகிழ்ச்சியுடன் திரும்பிச் சென்றார். இந்த நிகழ்ச்சி நடக்கும் போது முஹம்மத் (ஸல்) அவர்கள் நபியாக நியமிக்கப்படவில்லை (அல் இஸாபா)

அன்றிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வந்து இரண்டு ஆண்டுகள் வரை ஸைத் இப்னு முஹம்மத் (முஹம்மதுவின் மகன் ஸைத்) என்றே ஸைத் குறிப்பிடப்பட்டார்.

வளர்ப்பு பிள்ளைகளை அவர்களின் தந்தையர் பெயராலேயே குறிப்பிடுங்கள் (33:5) என்ற வசனம் அருளப்படும் வரை முஹம்மதின் மகன் ஸைத் என்றே அவரைக் குறிப்பிட்டு வந்தோம் என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி புகாரியில் (4782) காணப்படுகிறது.

சொந்த மகன் போலவே ஸைதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இருபத்தைந்தாவது வயது முதல் தமது ஐம்பத்தி ஐந்தாம் வயது வரை வளர்த்து வந்தார்கள். ஸைத் அவர்களின் எல்லாக் காரியங்களுக்கும் நபியவர்களே பொறுப்பாளராக இருந்தார்கள். அதுபோல் ஸைத் அவர்கள் தமது எல்லாக் காரியங்களுக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையே சார்ந்திருந்தார்கள் என்பதைத் தெளிவுபடுத்திடவே இந்த விபரங்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்முடைய தந்தையின் சகோதரியான உமைமா என்பவரின் மகள் ஸைனப் அவர்களை – அதாவது தமது மாமி மகளை – ஸைதுக்கு ஹிஜ்ரி முதல் ஆண்டில் திருமணம் செய்து வைத்தார்கள். மிகவும் உயர்ந்த குலம் என்று பெருமை பாராட்டிய தமது குலத்துப் பெண்ணாகிய தமது மாமி மகளை ஒரு அடிமைக்குத் திருமணம் செய்து வைப்பதென்பது அன்றைய சமூக அபைப்பில் கற்பனை செய்தும் பார்க்க முடியாத புரட்சியாகும்.

ஜஹ்ஷ் உடைய மகள் ஸைனபுக்கும், ஹாரிஸாவின் மகன் ஸைதுக்கும் நடந்த இத்திருமணம் என்ன காரணத்தினாலோ ஓராண்டுக்கு மேல் நிலைக்கவில்லை. அடிக்கடி அவர்களிடையே பிணக்குகள் ஏற்படலாயின. குடும்ப அமைதியே குலைந்து போகும் நிலை உருவாயிற்று. கடைசியில் ஸைனபை தலாக் கூறும் நிலைக்கு ஸைத் (ரலி) அவர்கள் ஆளானார்கள். இது பற்றி திருக்குர்ஆனும் குறிப்பிடுகிறது.

யாருக்கு அல்லாஹ் அருள் புரிந்து (முஹம்மதே!) நீரும் அவருக்கு அருள் புரிந்தீரோ, அவரிடம் உமது மனைவியை உம்மிடமே வைத்துக் கொள்! அல்லாஹ்வை அஞ்சிக் கொள் என்று நீர் கூறியதை எண்ணிப் பார்ப்பீராக! அல்லாஹ் வெளிப்படுத்த இருந்ததை உமது மனதுக்குள் மறைத்துக் கொண்டீர். மனிதருக்கு அஞ்சினீர்! நீர் அஞ்சுவதற்கு அல்லாஹ்வே தகுதியானவன். ஸைத் என்பார் அவரிடம் தன் தேவையை முடித்துக் கொண்ட போது (விவாகரத்துச் செய்த போது) உமக்கு அவரை மணமுடித்துத் தந்தோம். வளர்ப்பு மகன்கள் தம் மனைவியரிடம் தமது தேவையை முடித்துக் கொண்டால் (விவாகரத்துச் செய்தால்) அவர்களை (வளர்ப்புத் தந்தையரான) நம்பிக்கை கொண்டோர் மணந்து கொள்வது குற்றமாக ஆகக் கூடாது என்பதற்காக (இவ்வாறு செய்தோம்). அல்லாஹ்வின் கட்டளை செய்து முடிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது.

திருக்குர்ஆன் 33:37

நபிகள் நாயகத்துக்கு ஸைனபை அல்லாஹ்வே மணமுடித்துத் தந்ததாக இவ்வசனம் கூறுகிறது.

இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. வளர்ப்பு மகனை, மகன் எனக் கருதி மகனுக்குரிய எல்லா உரிமைகளும் வளர்ப்பு மகனுக்கு உண்டு என அன்றைய சமுதாயம் நம்பி வந்தது.

வளர்க்கப்பட்டவர், தனது மனைவியை விவாகரத்துச் செய்த பின் வளர்த்தவர் அப்பெண்ணை மணந்து கொள்ளலாம்; அது, மருமகளை விவாகம் செய்ததாக ஆகாது என்ற சட்டத்தை உலகிற்குச் சொல்ல வேண்டும் என்பது இத்திருமணத்திற்குரிய காரணம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸைனப் மீது ஆசைப்பட்டு, ஸைதை விவாகரத்து செய்யச் சொன்னதாக இஸ்லாத்தின் எதிரிகள் சிலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

ஸைனப் மீது நபிகள் நாயகத்திற்கு ஆசை இருந்திருந்தால் அவர்கள் கன்னிப் பருவத்திலேயே ஸைனபைத் திருமணம் செய்திருக்க முடியும். அவர்கள் தான் அப்பெண்ணிற்குப் பொறுப்பாளராகவும் இருந்தார்கள். ஆனால் அவர்கள் ஸைதுக்கே மணமுடித்துத் தருகிறார்கள்.

எனவே இறைவனின் நாட்டப்படியே இத்திருமணம் நடந்தது. இளமையோடு இருக்கும் போது அவரை மணந்து கொள்ளாமல், பல வருடங்கள் ஸைதுடன் வாழ்க்கை நடத்திய பிறகு அவரை மணந்து கொண்டதற்கு உடல் ரீதியான காரணத்தைக் கூறுவது முற்றிலும் தவறாகும்.

ஸைத் தம் மனைவி ஸைனபை தலாக் கூற விரும்பியதும், அது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அவர் ஆலோசனை செய்ததும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலாக் கூற வேண்டாம் என்று அவருக்குப் போதித்ததும் இந்த வசனத்தில் தெளிவாகக் கூறப்படுகிறது.

இதே வசனத்தில் இறுதிப் பகுதியில் அல்லாஹ் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றை உம் மனதிற்குள் மறைத்துக் கொண்டீர் மக்களுக்கு அஞ்சினீர் என்று இறைவன் கடிந்துரைக்கிறான்.

தம் உள்ளத்தில் மறைத்துக் கொண்ட விஷயம் என்ன என்பது இவ்வசனத்தில் தெளிவாகக் கூறப்படவில்லை. அதைக் கண்டுபிடிக்க முயன்ற சில அறிவிலிகள் எவ்வித ஆதாரமும் இன்றி பல்வேறு கதைகளைப் புனைந்து தம் திருமறை விரிவுரை நூல்களில் எழுதி வைத்துள்ளனர்.

ஸைத் வெளியே சென்றிருந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்க்கக் கூடாத கோலத்தில் ஸைனபைப் பார்த்து விட்டார்களாம். அவர்களின் சொக்க வைக்கும் பேரழகைக் கண்டவுடன் அவர்களை அடைந்து விட வேண்டும் என மனதிற்குள் எண்ணினார்களாம். ஸைத் தலாக் கூற முன் வந்ததும் தலாக் கூற வேண்டாம் என்று வாயளவில் கூறிவிட்டு மனதுக்குள் அவர் தலாக் கூற வேண்டும்;  அதன் பிறகு அவரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டார்களாம். இதைத் தான் இந்த வசனத்தில் இறைவன் குறிப்பிடுகிறானாம். இப்படிப் போகிறது கதை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் மனதில் எண்ணியது இது தான் என்று அல்லாஹ்வும் சொல்லவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் சொல்லவில்லை. ஸைனபைப் பார்க்கக் கூடாத கோலத்தில் பார்த்ததாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் சொல்லவில்லை. ஸைனபும் சொல்லவில்லை. இப்படியொரு சம்பவம் நடந்ததாக ஆதாரப்பூர்வமான எந்த அறிவிப்பும் கிடையாது.

ஒரு ஆதாரமும் இன்றி இவ்வாறு எழுத எப்படித் துணிந்தார்கள்? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்தில் மறைந்திருந்த எண்ணத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்தில் ஊடுருவி இவர்கள் அறிந்தார்களா? அல்லது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கடந்த கால வாழ்வில் ஏதேனும் களங்கத்தைக் கண்டு அதனடிப்படையில் இவ்வாறு அனுமானம் செய்தார்களா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் களங்கப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இஸ்லாத்தின் எதிரிகள் இந்தக் கதையைப் புனைந்துள்ளனர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

இந்தக் கதை எவ்வளவு பொய்யானது என்பதைத் தக்க சான்றுகளுடன் நாம் அறிந்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் நபியவர்கள் தம் மனதில் உள்ளதை மறைத்துக் கொண்டதாகக் கூறப்படுவதன் விளக்கம் என்ன என்பதையும் கண்டறிய வேண்டும். அவற்றை விரிவாகக் காண்போம்.

ஸைத் (ரலி) அவர்கள், ஸைனப் (ரலி) அவர்களைத் திருமணம் செய்த போது ஸைனப் (ரலி) அவர்களின் வயது 34 அல்லது 35 ஆக இருக்கலாம். நேரடியாக இது பற்றிக் கூறப்படாவிட்டாலும் கிடைக்கின்ற குறிப்புகளை வைத்து நாம் இப்படி முடிவு செய்ய இயலும்.

அது வருமாறு:

ஸைத் (ரலி) அவர்களும், ஸைனப் (ரலி) அவர்களும் ஓர் ஆண்டு அல்லது அதை விட சற்று அதிகம் இல்லறம் நடத்தியுள்ளனர் என்று விபரம் கிடைக்கின்றது.

(பார்க்க : இப்னு கதீர் 33:37 வசனத்தின் விளக்கவுரை)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸைனபைத் திருமணம் செய்த போது ஸைனபுடைய வயது முப்பத்தி ஐந்து

(பார்க்க : அல் இஸாபா)

ஸைனப் (ரலி) அவர்களின் 35 வயதில் இருந்து ஸைதுடன் வாழ்ந்த ஓர் ஆண்டைக் கழித்தால் ஸைதுடன் திருமணம் நடந்த போது ஸைனபின் வயது 34 ஆகத் தான் இருக்க முடியும். ஏனெனில் ஸைத் தலாக் கூறி இத்தா முடிந்ததும் உடனேயே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸைனபை திருமணம் செய்ததாக அல்குர்ஆன் 33:38 வசனம் தெளிவாகக் குறிப்பிடுகிறது.

ஸைனப் (ரலி) அவர்களுக்கு 34 வயதில் தான் முதல் திருமணம் நடந்திருக்கும் என்பதும் நம்புவதற்குச் சிரமமானது. சாத்தியக் குறைவானது. ஸைதை மனப்பதற்கு முன் அவர்கள் வேறு கணவருடன் வாழ்ந்து விதவையாகி இருக்க வேண்டும். அல்லது தலாக் கூறப்பட்டிருக்க வேண்டும். 34 வயது வரை முதல் திருமணம் நடக்காமல் இருக்கும் அளவுக்கு வரதட்சனை போன்ற கொடுமைகள் அன்றைய சமுதாயத்தில் இருக்கவில்லை. வேறு காரணங்களும் இல்லை.

இந்த அனுமானம் தவறாக இருந்தாலும் ஸைதைத் திருமணம் செய்யும் போது ஸைனபின் வயது 34 என்பது நிச்சயமான ஒன்று. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணம் செய்யும் போது ஸைனபின் வயது 35 என்பது அதை விடவும் நிச்சயமானது. இந்த அடிப்படையைக் கவனத்தில் கொண்டு அந்தக் கதையின் தன்மையை நாம் அலசுவோம்.

நபியவர்கள் தமது 56 வயதில் ஸைனபைத் திருமணம் செய்த போது ஸைனபுடைய வயது 35 என்றால் 21 வயது வித்தியாசம் வருகிறது. அதனடிப்படையில் ஸைனப் அவர்களுக்கு 15 வயதாக இருக்கும் போது நபியவர்களின் வயது  36 ஆக இருக்கும்.

தன்னுடைய 36 ஆம் வயதில் ஸைனபைத் திருமணம் செய்ய வாய்ப்பு இருந்தும் நபியவர்கள் அப்போது திருமணம் செய்யாமல் இன்னொருவருக்கு வாழ்க்கைப்பட்டு திருமணம் ரத்தாகி இருக்கும் போது தான் திருமணம் செய்வார்களா?

பருவ வயதிலிருந்த ஸைனப் (ரலி) அவர்களை சர்வசாதாரணமாகப் பார்க்கும் வாய்ப்பை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெற்றிருந்தார்கள். மாமி மகள் என்ற நெருக்கமான உறவு அந்த வாய்ப்பை மேலும் அதிகமாக்கியிருந்தது.

அவர்கள் நபியாக ஆன பின்னரும் பெண்களின் ஆடைகள் பற்றியும், அன்னிய ஆண்கள் முன்னிலையில் அலங்கரித்துக் கொள்ளலாகாது என்பது பற்றியும் இறைக்கட்டளை இறங்காத மக்கா வாழ்க்கை முழுவதும் ஸைனப் அவர்களை சர்வசாதாரணமாகப் பார்க்கும் வாய்ப்பு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வாய்த்திருந்தது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் வாழ்ந்த தமது 53 வது வயது வரை ஸைனபைப் பார்த்து இருக்கிறார்கள். 17 வயது ஸைனபைப் பார்த்திருக்கிறார்கள். 20 வயதிலும் பார்த்திருக்கிறார்கள். 25 வயதிலும் பார்த்திருக்கிறார்கள். பெண்களின் அழகு பிரகாசிக்கக் கூடிய 15 முதல் 30 வயது வரையிலான பல்வேறு பருவங்களில் ஸைனபைப் பார்த்து, பேசி, பழகியிருக்கிறார்கள்.

இந்தச் சந்தர்ப்பங்களிலெல்லாம் ஸைனபின் அழகில் சொக்கி விடாத நபியவர்கள் 34 வயதை ஸைனப் அடையும் போது அதுவும் இன்னொருவருக்கு மனைவியாக இருக்கும் போது அவருடைய பேரழகில் சொக்கி விட்டார்கள் என்பதை அறிவுடைய எவரேனும் ஏற்க முடியுமா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஐம்பது வயது வரை அவர்களுக்கு கதீஜா (ரலி) அவர்கள் மனைவியாக இருந்தார்கள். கதீஜா (ரலி) அவர்களின் மரணத்துக்குப் பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மனைவியின் பால் தேவையிருந்தது. கதீஜா (ரலி) அவர்கள் மூலம் பிறந்த குழந்தைகளைப் பராமரிப்பதற்காகவும் அவர்களுக்கு மனைவி அவசியமாக இருந்தது.

ஸைனபின் பேரழகில் மயங்கி விட்டார்கள் என்பது உண்மையானால் கதீஜா (ரலி) அவர்களின் மரணத்திற்குப் பிறகாவது ஸைனபை அவர்கள் மணந்திருக்கலாமே! அதற்குத் தடை எதுவும் இருக்கவில்லையே?

இன்னும் சொல்வதென்லால் கதீஜாவுக்குப் பின் மணந்த ஸவ்தாவை விட, ஆயிஷாவை விட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குழந்தைகளைக் கவனித்துக் கொள்ள இவர்களுக்கல்லவா அதிக அக்கரை இருக்கும். சொந்த மாமி மகள் என்ற உறவு இவர்களுக்கு மட்டும் தான் இருந்தது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் திருமணம் செய்ய ஸைனப் (ரலி) அவர்கள் விரும்பாமல் இருந்திருக்கலாம்; அதன் காரணமாக அவர் அந்தச் சந்தர்ப்பத்தில் அவர்களை மணக்காமல் இருந்திருக்கலாம் என்றும் கருத முடியாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வளர்ப்பு மகனாகிய ஸைதை மணமுடித்துக் கொள்ளுமாறு ஸைனபிடம் கேட்டார்கள். அவர் முன்னால் அடிமை என்பதாலும், தான் குரைஷிக் குலத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் அவரைத் திருமணம் செய்ய ஸைனப் (ரலி) அவர்கள் முதலில் மறுத்து விடுகிறார்கள். உடன் பின்வருமாறு இறை வசனம் இறங்கியது.

அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு விஷயத்தை முடிவு செய்து விட்டால் முஃமினான எந்த ஆணுக்கும், முஃமினான எந்தப் பெண்ணுக்கும் தங்கள் காரியங்களில் சுயவிருப்பம் கொள்ள உரிமையில்லை. யார் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்கிறாரோ அவர் பகிரங்கமான வழிகேட்டில் இருக்கிறார் (33:36) இந்த வசனம் அருளப்பட்ட பிறகே ஸைனப் (ரலி) அவர்கள் ஸைத் (ரலி) அவர்களைத் திருமணம் செய்ய சம்மதிக்கிறார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) எனும் நபித் தோழரால் அறிவிக்கப்படும் இச்செய்தி இப்னு ஜரீர், இப்னு கதீர் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.

ஆரம்பம் முதலே ஸைத் (ரலி) அவர்களை மணந்து கொள்ள ஸைனப் (ரலி) அவர்கள் விரும்பவில்லை என்பதும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வற்புறுத்தலுக்காகவே தமக்குப் பிடிக்காதவரை மணந்து கொள்ள முன்வருகின்றார்கள் என்பதும் இந்த நிகழ்ச்சியின் மூலம் தெளிவாகிறது. நபியவர்களின் வற்புறுத்தலுக்காகவே தமக்கு விருப்பமில்லாத ஒருவரைத் திருமணம் செய்ய முன்வந்த ஸைனப் அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்திருந்தால் மறுத்திருக்க மாட்டார்கள் என்பது இதில் இருந்து தெரிகிறது.

இன்னொரு கோணத்தில் சிந்திக்கும் போதும் அந்தக் கதை பொய்யானது என்பதைத் தெளிவாக உணரலாம். ஸைனபைத் தகாத நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்து விட்டு அவர் மீது ஆசைப்பட்டார்கள் என்றால் அந்தக் கதையை அன்றைய மக்கள் நன்றாகவே அறிவர் (அவர்களில் யாரும் அறியாவிட்டால் இதை எழுதி வைத்த நூல் ஆசிரியர்களுக்குத் தெரிய முடியாது)

இந்தச் செய்தியை ஸைத் அவர்களும் நிச்சயம் அறிந்திருப்பார்கள். அவ்வாறு அறிந்திருந்தால் அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதும் ஆத்திரப்பட்டிருப்பார்கள். அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தையும் சந்தேகித்திருப்பார்கள். அப்படியெல்லாம் எதுவும் நடக்காதது மட்டுமின்றி தம் மனைவியை தலாக் கூறுவது சம்பந்தமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமே ஸைத் ஆலோசனை கேட்கிறார்கள்.

அதன் பின்பும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் அன்புடனும், அளவு கடந்த பாசத்துடனும் முன்னர் இருந்தது போலவே நடக்கிறார்கள். அவர்களின் நம்பிக்கையில், அன்பில், நடத்தையில் எதிலும் எந்த மாற்றமும் ஏற்படவே இல்லை. இதுவும் அந்தக் கதை பொய் என்பதை உறுதிப்படுத்துகிறது.

மூத்தா எனும் போர் ஹிஜ்ரி எட்டாம் ஆண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் 61 வது வயதில் நடந்தது. அதாவது ஸைனபை மணந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நடந்தது. இந்தப் போரில் ஸைத் அவர்கள் தளபதியாகச் சென்று வீர மரணம் அடைந்தார்கள்.

பார்க்க : புகாரி 1246, 2798, 3063, 3757, 4262

ஸைதுடைய மனைவியின் மீது ஆசைப்பட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரைத் தட்டிப் பறித்து மணந்து கொண்டிருந்தால் அதன் பாதிப்பு ஸைதுக்குத் தான் இருந்திருக்கும். அதன் பின்னர் அவர் நபிகள் நாயகத்தின் எதிரியாக மாறி இருப்பார்.

ஆனால் அவ்வாறு ஆகாமல் நபிகள் நாயகத்தின் தளபதிகளில் ஒருவராக இருந்து பல்வேறு போர்க்களங்களில் பங்கு கொண்டு கடைசியாக மூத்தா போரில் உயிர் தியாகமும் செய்தார்.

இதில் இருந்து தெரிய வருவது என்ன? ஸைதுக்கும், ஸைனபுக்கும் இடையே ஒத்துப் போகாமல் மனமுறிவு ஏற்பட்டுத் தான் விவாகரத்து நடந்திருக்கிறது. அவர் தனக்குப் பிடிக்காத மனைவியை விவாகரத்துச் செய்த பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மணந்து வாழ்வு கொடுத்தார்கள் என்பதால் தான் இது ஸைதைக் கடுகளவும் பாதிக்கவில்லை. நபிகள் நாயகத்தின் கட்டளையை ஏற்று உயிரைக் கொடுக்கவும் அவர் தயாராகிறார்.

இப்போரில் முதலில் தளபதி ஸைத் கொல்லப்படுவார். அதன் பின்னர் தன் பெரிய தந்தையின் மகன் ஜாஃபர் கொல்லப்படுவார். பின்னர் காலித் பின் வலீத் தலமையேற்று வெற்றிக்கொடி நாட்டுவார் என்று முன்னரே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லி அனுப்புகிறார்கள். இப்போரில், தான் கொல்லப்படுவோம் என்பதைத் தெரிந்து கொண்டே தான் ஸைத் அவர்கள் படை நடத்திச் சென்றார்கள். இதில் இருந்து ஸைனப் விஷயமாக ஸைத்துக்கு எந்த மனத்தாங்கலும் இல்லை என்பது தெளிவாகிறது.

அது மட்டுமின்றி இன்னொருவர் மனைவியைப் பார்க்கக் கூடாத கோலத்தில் நபியவர்கள் பார்த்து அவரைத் திருமணம் செய்தார்கள் என்றால் அது அந்தக் காலத்து மக்களுக்குத் தான் தெரிந்திருக்கும். அவர்களை இறைத்தூதர் என்று நம்பிய மக்கள் அவர்களை விட்டு விலகி இருப்பார்கள். ஆனால் இப்படி ஒரு காரணம் கூறி ஒரே ஒருவர் கூட இஸ்லாத்தை விட்டு வெளியேறவில்லை என்பதில் இருந்தும் இது ஜோடிக்கப்பட்ட கட்டுக்கதை என்பதை அறியாலாம்.

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கொள்கை ரீதியாகப் பல எதிரிகள் இருந்தனர். இது போன்ற சம்பவம் நடந்திருந்தால் அதை அவர்கள் விமர்சிக்காமல் விட்டிருக்க மாட்டார்கள். ஆனால் அவர்களின் எதிரிகள் கூட இது போன்ற விமர்சனத்தைச் செய்ததில்லை. இதில் இருந்தும் பிற்காலத்தில் இது புணையப்பட்ட கற்பனை என்பதை அறியலாம்.

இந்தக் கதை பொய்யானது என்று தெளிவான பின் மற்றொரு சந்தேகம் நீக்கப்பட வேண்டியுள்ளது. உமது உள்ளத்தில் ஒரு விஷயத்தை மறைத்து வைத்திருந்தீர்! மனிதர்களுக்கு அஞ்சினீர்! என்று அல்லாஹ் மேற்கண்ட வசனத்தில் குறிப்பிடுவது எதை? இந்தக் கேள்விக்கு விடை காண வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது உள்ளத்தில் எதையோ மறைத்தார்கள் என்பது உண்மையே. அது என்ன என்பதை அவர்களும் சொல்லவில்லை. அல்லாஹ்வும் சொல்லவில்லை. இதனாலேயே இப்படி கதை கட்டி விட்டு, விளக்கம் என்ற பெயரால் களங்கத்தை ஏற்படுத்தி விட்டனர்.

கதைகளை அடிப்படையாகக் கொண்டு அதைத் தீர்மானிப்பதை விட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பரிசுத்த வாழ்வையும், இது போன்ற கட்டங்களில் மனித உள்ளங்கள் எவ்வாறு இயங்கும் என்பதையும் அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் உள்ளத்தில் மறைத்து வைத்த எண்ணம் எது என்பது நமக்கே தெளிவாகும். இதற்குப் பெரிய ஆராய்ச்சியோ, ஆதாரமோ தேவைப்படாது. ஒவ்வொருவருக்கும் ஏற்படும் அனுபவங்களே அதை அனுமானிக்கப் போதுமானதாகும்.

ஸைத் (ரலி) அவர்கள் இயல்பிலேயே கொஞ்சம் முன்கோபியாக இருந்தார்கள். ஸைனபைத் திருமணம் செய்வதற்கு முன் உம்மு ஐமன் என்ற பெண்ணை ஸைத் (ரலி) திருமணம் செய்திருந்தார். இவ்விருவருக்கும் உஸாமா என்ற மகன் பிறந்தார். ஸைதைப் போலவே உஸாமாவையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகவும் நேசித்தார்கள்.

அதன் பின் ஸைத் (ரலி) அவர்கள் ஸைனபைத் திருமணம் செய்தார்கள்.

ஸைனபைத் தலாக் கூறிவிட்டு உக்பாவின் மகள் உம்மு குல்ஸூமைத் திருமணம் செய்தார். அவ்விருவருக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்ததும் உம்மு குஸ்ஸூமையும் தலாக் கூறினார் ஸைத்.

அதன் பின் அபூ லஹப் உடைய மகள் துர்ரா என்பவரைத் திருமணம் செய்தார்.

பார்க்க : அல் இஸாபா)

இந்த விபரங்களை இங்கே கூறுவதற்குக் காரணம் ஸைத் (ரலி) அவர்களின் முன்கோபத்தை எடுத்துக் காட்டவே. ஒரே சமயத்தில் நான்கு மனைவியரை மணக்கலாம் என்று மார்க்கம் சலுகை அளித்திருந்ததும் ஒரே சமயத்தில் இத்தனை பேரையும் அவர் மணக்க வாய்ப்பிருந்தும் ஒருவர் பின் ஒருவராக ஸைத் (ரலி) அவர்கள் தொடர்ந்து தலாக் விட்டுக் கொண்டிருந்தது அவர்களின் முன்கோபத்தை எடுத்துக் காட்டுகிறது.

ஸைனப் (ரலி) அவர்களோ ஆரம்பத்திலிருந்தே ஸைதை விரும்பவில்லை. அவ்விருவருக்கும் இடையே சுமூகமான உறவு ஏற்படாமல் போனதற்கு இவ்விருவரின் முரண்பட்ட இந்த சுவாபமே காரணமாகியது. இதையெல்லாம் கவனமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கவனிக்கிறார்கள். அவ்விருவரின் சுபாவங்களும் ஒத்துப் போகாது என்பதை அறிகிறார்கள். இருவரும் அடிக்கடி சன்டையும், சச்சரவும் செய்து அமைதி இழந்து போவதை விட அவ்விருவரும் பிரிந்து விடுவது நல்லது என்று எண்ணுகிறார்கள். இது போன்ற நிலையைக் காணும் ஒவ்வொரு மனிதரும் இவ்வாறே எண்ணுவார்.

ஆனாலும் மனைவியை தலாக் விடுவதாக ஸைத் கூறியவுடன் அவர்களால் அதை வெளிப்படையாக ஆதரிக்க முடியவில்லை. அவ்விருவரும் பிரிந்து விடுவது தான் அவ்விருவருக்கும் நல்லது என்று எண்ணினாலும் அதை வெளிப்படையாகச் சொல்லத் தயங்குகிறார்கள். தலாக் விடுவதாக ஒருவர் கூறியவுடன் அதை ஆதரிக்கிறாரே என மக்கள் எண்ணுவார்களே என்று அஞ்சுகிறார்கள். இது தான் உண்மையில் நடந்திருக்க முடியும் இதனடிப்படையில் இந்த வசனத்தைக் காண்போம்.

உம் மனைவியைத் தலாக் கூறாது தடுத்துக் கொள் என்று கூறினீர். அல்லாஹ் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றை உம் மனதில் மறைத்துக் கொண்டீர் மேலும் மக்களுக்கு அஞ்சினீர். அல்லாஹ்வே நீர் அஞ்சுவதற்கு மிகவும் அருகதையானவன்.

திருக்குர்ஆன் 33:37

தம்பதியினரிடையே சேர்ந்து வாழ முடியாத நிலை ஏற்படும் போது அவ்விருவரும் பிரிந்து வாழ்வதே நல்லது என்று விரும்பக்கூடிய எந்த மனிதரும் வெளிப்படையாக அதைக் கூறத் துணிவதில்லை. அவ்விருவரும் பிரிந்து வாழ்வது என்ற முடிவுக்கு வந்து விட்ட நேரத்திலும் அவ்விருவரும் பிரிந்து விடுவதே அவ்விருவருக்கும் நல்லது என்று மனப்பூர்வமாக விரும்புகின்ற ஒருவர் அதை மனதுக்குள் மறைத்து விட்டு அவ்விருவரும் சேர்ந்து வாழுமாறு தான் வாயால் உபதேசம் செய்வார். இது நடிப்பு என்றாலும் எந்த மனிதரும் இப்படி இந்த விஷயத்தில் நடிக்கத் தான் செய்வார்கள். அனுபவப்பூர்வமாக பலரும் இந்த நிலைமையைச் சந்திக்கின்றனர்.

இந்த இடத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சராசரி மனிதனுக்கு ஏற்படக் கூடிய இது போன்ற தயக்கம் தான் ஏற்பட்டதே தவிர அடுத்தவர் மனைவியை ஆசைப்படக் கூடிய அளவுக்கு கீழ்த்தரமான எண்ணம் நிச்சயமாக ஏற்ப்படவில்லை. அதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கடந்த கால பரிசுத்த வாழ்க்கையும் இந்தப் பொய்ச் செய்தியை முற்றாக நிராகரித்து விடுகின்றது.

நபியவர்கள் விவாக ரத்துச் செய்யாதே என்று ஆலோசனை கூறிய பிறகும் ஸைத் தம் மனைவியை விவாகரத்து செய்வதில் உறுதியாக இருந்து அதைச் செயல்படுத்தி விட்டார்.

இந்த நிலையில் ஸைனப் (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு தானே மனைவியாக ஆக்கியதாக அல்லாஹ் குறிப்பிடுகிறான். அதன் காரணத்தையும் அவனே கூறுகிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்த பகுதியில் உலகில் பல்வேறு பகுதிகளிலும் போலியான உறவு முறை ஒன்று நடைமுறையில் இருந்து வந்தது. அறவே சந்ததி அற்றவர்களும், ஆண் சந்ததி அற்றவர்களும், உதவாக்கரை ஆண் சந்ததிகளைப் பெற்றவர்களும் பிறரது மகனை வளர்ப்பு மகனாக – சுவீகாரப் புத்திரனாக – எடுத்துக் கொள்வர். வளர்ப்பு மகன் என்று பிரகடனம் செய்யப்பட்டவர் பெற்ற மகனுக்கு இருப்பது போன்ற எல்லா உரிமைகளையும் பெற்றவராகக் கருதப்படுவார்.

இப்படி வளர்த்தவர் இறந்து விட்டால் அவரது சொத்துக்களுக்கு வளர்ப்பு மகன் வாரிசாவார். பெற்ற மகனுக்குக் கிடைப்பதைப் போன்ற அதே சொத்துரிமை கூடுதல் குறைவின்றி அவருக்கும் கிடைத்து வந்தது. தந்தையின் பெயரைக் குறிப்பிட வேண்டிய கட்டங்களில் அவர் தமது தந்தையாக தன்னை வளர்த்தவரையே குறிப்பிட வேண்டும் என்பதும் நடைமுறையில் இருந்து வந்தது. தந்தை, மகன் எனும் உறவு அவ்விருவருக்கும் இடையே உண்மையிலேயே ஏற்பட்டு விட்டதாக அவர்கள் நம்பினர்.

இதனால் இன்னும் சில சம்பிரதாயங்களும் ஏற்படுத்தப்பட்டன. வளர்ப்பு மகன் தன் மனைவியை விவாகரத்துச் செய்த பின் அல்லது அவன் இறந்த பின் அவனது மனைவியை வளர்ப்புத் தந்தை திருமணம் செய்வது கூடாத ஒன்றாகக் கருதப்பட்டு வந்தது.

ஏனெனில் அப்பெண் உண்மையிலேயே வளர்ப்புத் தந்தைக்கு மருமகளாகி விட்டதாக அவர்கள் நம்பினர். இதுபோல் வளர்ப்புத் தந்தைக்கு மகள் ஒருத்தி இருந்தால் அவளை அவரது வளர்ப்பு மகன் திருமணம் செய்ய முடியாது. ஏனெனில் அவ்விருவரும் உடன் பிறந்தவராகி விட்டனர் என்பதும் இவர்களின் நம்பிக்கையாக இருந்தது.

போலித்தனமான இந்த உறவு முறையையும், முட்டாள்தனமான இந்தச் சம்பிரதாயங்களையும் தகர்க்க வேண்டும் என்பது இறைவனின் விருப்பம். தெளிவான தீர்க்கமான சிந்தனை உடையவர்களின் பார்வையிலும் இது தகர்க்கப்பட வேண்டிய உறவாகவே இருந்தது. இறைவனுக்கு எதிரான நடவடிக்கையாக இறைவனாலும் இது கருதப்பட்டு வந்தது.

இத்தகைய உறவுகளை அனுமதித்தால் அது ஏற்படுத்தக் கூடிய தீய விளைவுகள் ஏராளம். இதைத் தகர்த்து எறிவதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனான ஸைதுடைய மனைவியை, ஸைது விவாகரத்து செய்த பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைவனே மனமுடித்து வைத்ததாகக் குர்ஆன் கூறுகிறது.

இந்தப் போலித்தனமான உறவுகள் தகர்க்கப்பட வேண்டியவை தாம் என்பதற்கான காரணங்களை நாம் பார்ப்போம்.

முதல் காரணம்

தந்தை, மகன், அண்ணன், தம்பி போன்ற உறவுகள் இறைவனால் தீர்மானிக்கப்படுபவை. இறைநம்பிக்கை அற்றவர்களின் வார்த்தையில் சொல்வதென்றால் இயற்கையால் தீர்மானிக்கப்படுபவை.

இவன் தான் எனக்கு மகனாகப் பிறக்க வேண்டும் என்று எந்தத் தந்தையும் தீர்மானிக்க இ;யலாது.

இவர் தான் எனக்குத் தந்தையாக இருக்க வேண்டும் என்று எந்த மகனும் தீர்மானம் செய்ய முடியாது. எனக்கு அண்ணனாக இவர் தான் இருக்க வேண்டும்; எனக்குத் தம்பியாக இவர் தான் இருக்க வேண்டும் என்றெல்லாம் எவரும் முடிவு செய்ய முடியாது.

அது இறைவனின் தீர்மானப்படி நடக்கக் கூடியதாகும். (அல்லது இயற்கையின் நியதிப்படி நடக்கக் கூடியதாகும்).

ஆனால் தத்தெடுக்கும் போலித்தனமான உறவுமுறைகள் செயற்கையை இயற்கையைப் போல் ஆக்கும் ஏமாற்று வேலையாக உள்ளது.

இரண்டாவது காரணம்

யாருடைய உயிரணுவின் மூலமும், எவருடைய சினைமுட்டை மூலமும் ஒருவன் பிறந்தானோ, அந்த இரத்த உறவை ரத்து செய்து விட்டு ஒரு சம்பந்தமுமில்லாதவர்களைப் பெற்றோர் எனப் பிரகடனம் செய்வது இரத்த சம்பந்தத்தை அர்த்தமற்றதாக ஆக்கி விடுகிறது.

பத்து மாதம் சுமந்து பெற்ற தாயும், பாசத்தைப் பொழிந்து வளர்த்த தந்தையும், பெற்ற பிள்ளையை உரிமையுடன் அழைக்க முடியாமல் போவதை விட வேறு கொடுமை என்ன இருக்க முடியும்? வசதி இல்லை என்ற காரணத்திற்காக வசதியான இடத்தில் நம் பிள்ளை வளர வேண்டுமே என்று சுவீகாரம் வழங்கினாலும் அதனால் அவர்கள் படும் வேதனையை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.

எவ்வளவு கஷ்டம் வந்தாலும் நம் பிள்ளையை நாமே வளர்க்க வேண்டும் என்று இயல்பாக இருக்கின்ற நல்ல பண்பு நாளடைவில் மங்கி யாராவது செல்வந்தர்கள் தத்து எடுக்க மாட்டார்களா? என்ற வியாபார நோக்கம் பெற்றோர்களிடம் மேலோங்கி விடும். இதனால் இதை அடியோடு கிள்ளி எறிய வேண்டும் என்று இஸ்லாம் கருதியது.

மூன்றாவது காரணம்

எவ்வளவு தான் பாசத்தைப் பொழிந்து ஒருவனைத் தத்து எடுத்து வளர்த்தாலும், பெற்ற மகன் போல் வளர்ப்பு மகன் தந்தை மீது உண்மையான பாசத்தைப் பொழிய முடியாது. வசதியான இடத்தில் வாழ வேண்டும் என்பதற்காக அவரைத் தந்தையாக ஏற்கத் துணிந்தவனிடம் இதயப்பூர்வமான நேசத்தை எதிர்பார்க்க முடியாது. இதனால் ஏற்படும் விளைவு என்ன?

வளர்ப்புத் தந்தைக்குப் பின் அவரது வாரிசாகப் போகிறோம் என்று கருதும் வளர்ப்பு மகன் அவர் சீக்கிரமாக சாக மாட்டாரோ என்று எதிர்பார்ப்பான். சீக்கிரத்தில் சாக மாட்டேன் என்று அவர் பிடிவாதமாக வாழ்ந்து கொண்டிருந்தால் இவனே சாவூருக்கு அனுப்பவும் தயங்க மாட்டான். இரத்த சம்பந்தம் இல்லாததாலும், இதயப்பூர்வமாக நேசம் இல்லாத காரணத்தினாலும் சுவீகாரத்தின் நோக்கமே வசதியான வாழ்வைப் பெறுவது தான் என்று ஆகிவிட்டதாலும் இதைத் தான் சுவிகாரப் புத்திரனிடம் பெரும்பாலும் எதிர்பார்க்க முடியும்.

நான்காவது காரணம்

ஒருவனுக்கு அண்ணன், தம்பி, அக்கா, தங்கை போன்ற ஆயிரம் உறவினர்கள் இருந்தாலும் அவன் இறந்த பின் அவனது சொத்துக்களை அவனுடைய பெற்ற மகனே அடைவான்.

பெற்ற மகனுக்கு தந்தையின் சொத்துக்கள் கிடைக்கும் போது அவனுடைய தந்தையின் அண்ணன், தம்பிகளோ, அக்கா, தங்கைகளோ பொறாமைக் கண்ணுடன் பார்க்க மாட்டார்கள். தமக்கெல்லாம் கிடைக்காமல் இவனுக்குக் கிடைத்து விட்டதே என்று எண்ண மாட்டார்கள். ஏனெனில் மகன் என்ற உறவு மற்ற உறவுகளை விட மேலானது என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

ஆனால் யாருக்கோ பிறந்தவன் திடீரென நுழைந்து மகனென்ற போலி உறவின் மூலம் சொத்துக்களை அடைந்து, வசதிகளை அனுபவிக்கும் போது, இரத்த சம்பந்தம் உடைய அவனுடைய அண்ணன், தம்பி போன்றவர்கள் பொறாமைக் கண்ணுடனேயே நோக்குவார்கள். இவ்வாறு நோக்குவதில் நியாயமும் இருக்கிறது. உண்மையிலேயே இந்தப் போலி மகனை விட உண்மையான சகோதர, சகோதரிகள் நெருக்கமானவர்கள் அல்லவா?

ஐந்தாவது காரணம்

மேற்கூறிய அதே காரணத்தினால் எப்போது ஒருவன் யாரோ ஒருவனைத் தத்து எடுக்கிறானோ அப்போதிருந்தே அவனது ஏனைய உறவினர்களை அவன் பகைக்கும் நிலை உருவாகும். உறவினர்களைப் பகைத்துக் கொள்ள இந்த சுவீகாரம் முக்கிய காரணமாக அமைகிறது. ஒரு போலித்தனமான உறவுக்காக உண்மையான உறவுகளைத் துறக்க வேண்டுமா? என்று இஸ்லாம் கேட்கிறது.

ஆறாவது காரணம்

தன் தந்தை அல்லாதவர்களை தந்தை என ஒருவன் கூறுவது மனிதனது ரோஷ உணர்வை மழுங்கச் செய்து விடும். அப்துல்லாஹ்வுக்குப் பிறந்தவனை இப்றாஹீமுக்குப் பிறந்தவன் என்று சொல்லிப் பாருங்கள். அதன் பின் அதன் எதிர்விளைவுகள் எப்படி இருக்கும் என்று கண்டு கொள்வீர்கள். தந்தை இல்லாத ஒருவனைத் தந்தை என்று கூறுவது தன்மான உணர்வுக்கு இழுக்கு என்று கருதுவது தான் மனிதனின் இயல்பு.

எவனோ ஒருவனை தந்தை என்று அதுவும் உண்மையான தந்தை போன்று கருதுவதை விட மானம் கெட்ட நிலை என்ன இருக்க முடியும்? மனித சமுதாயத்தில் இருந்து வருகின்ற இருக்க வேண்டிய இந்த ரோஷ உணர்வை இது போன்ற போலித்தனமான உறவுகள் அடியோடு நாசப்படுத்தி விடுகின்றன.

இது போன்ற இன்னும் பல காரணங்களால் இந்தப் போலித்தனமான உறவை அடியோடு ஒழித்திட இறைவன் எண்ணுகிறான். வளர்ப்பு மகனுடைய முன்னால் மனைவியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைவனே மனைவியாக்கியதாக சொல்லிக் காட்டுகிறான். இது பற்றி இறைவன் கூறுவதை இப்போது பார்க்கலாம்.

யாருக்கு அல்லாஹ் அருள் புரிந்து (முஹம்மதே!) நீரும் அவருக்கு அருள் புரிந்தீரோ, அவரிடம் உமது மனைவியை உம்மிடமே வைத்துக் கொள்! அல்லாஹ்வை அஞ்சிக் கொள் என்று நீர் கூறியதை எண்ணிப் பார்ப்பீராக! அல்லாஹ் வெளிப்படுத்த இருந்ததை உமது மனதுக்குள் மறைத்துக் கொண்டீர். மனிதருக்கு அஞ்சினீர்! நீர் அஞ்சுவதற்கு அல்லாஹ்வே தகுதியானவன். ஸைத் என்பார் அவரிடம் தன் தேவையை முடித்துக் கொண்ட போது (விவாகரத்துச் செய்த போது) உமக்கு அவரை மணமுடித்துத் தந்தோம். வளர்ப்பு மகன்கள் தம் மனைவியரிடம் தமது தேவையை முடித்துக் கொண்டால் (விவாகரத்துச் செய்தால்) அவர்களை (வளர்ப்புத் தந்தையரான) நம்பிக்கை கொண்டோர் மணந்து கொள்வது குற்றமாக ஆகக் கூடாது என்பதற்காக (இவ்வாறு செய்தோம்). அல்லாஹ்வின் கட்டளை செய்து முடிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது.

திருக்குர்ஆன் 33:37

எந்த மனிதருக்குள்ளும் இரண்டு உள்ளங்களை அல்லாஹ் ஏற்படுத்தவில்லை. உங்களின் மனைவியரில் யாரைத் தாயுடன் ஒப்பிட்டீர்களோ அவர்களை உங்கள் தாயார்களாக அவன் ஆக்கவில்லை. உங்களால் வளர்க்கப்படும் பிள்ளைகளை உங்கள் பிள்ளைகளாக அல்லாஹ் ஆக்கவில்லை. இது உங்கள் வாய்களால் கூறும் வார்த்தை. அல்லாஹ் உண்மையே கூறுகிறான். அவனே நேர்வழி காட்டுகிறான்.

திருக்குர்ஆன் 33:4

அவர்களை அவர்களின் தந்தையருடனே சேர்த்து அழையுங்கள்! அதுவே அல்லாஹ்விடம் நீதியானது. அவர்களின் தந்தையரை நீங்கள் அறியாவிட்டால் அவர்கள் உங்களின் கொள்கைச் சகோதரர்களும், உங்கள் நண்பர்களுமாவர். தவறுதலாக நீங்கள் கூறி விடுவதில் உங்கள் மீது குற்றம் இல்லை. மாறாக உங்கள் உள்ளங்களால் தீர்மானித்துக் கூறுவதே (குற்றமாகும்). அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

திருக்குர்ஆன் 33:5

உங்களில் தமது மனைவியரைக் கோபத்தில் தாய் எனக் கூறுவோருக்கு அவர்கள் தாயாக இல்லை. அவர்களைப் பெற்றவர்கள் தவிர மற்றவர் அவர்களின் தாய்களாக முடியாது. வெறுக்கத்தக்க சொல்லையும், பொய்யையும் அவர்கள் கூறுகின்றனர். அல்லாஹ் குற்றங்களை அலட்சியம் செய்பவன்; மன்னிப்பவன்.

திருக்குர்ஆன் 58:2

உங்களுக்குப் பிறந்த புதல்வர்களின் மனைவியரும், (தடுக்கப்பட்டுள்ளனர்.) இரு சகோதரிகளை ஒரே நேரத்தில் மணந்து கொள்வதும் (தடுக்கப்பட்டுள்ளது). நடந்து முடிந்ததைத் தவிர. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

திருக்குர்ஆன் 4:23

இந்த வசனங்களில் போலித்தனமான உறவுகளை இறைவன் அங்கீகரிக்கவில்லை என்பதையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸைனபை இதனாலேயே திருமணம் செய்தனர் என்பதையும் மிகத் தெளிவாக இறைவன் அறிவித்து விடுகிறான்.

அந்த உறவுகள் தகர்க்கப்படத் தான் வேண்டும்; ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்து காட்டித் தான் தகர்க்க வேண்டுமா? வெறும் ஆணையிட்டால், அல்லது அதற்கு அனுமதியுண்டு என்று சொன்னாலே போதுமே! மற்றவர்கள் அதைச் செய்து விடுவார்களே என்ற சந்தேகம் சிலருக்கு வரலாம்.

மேலோட்டமான பார்வையில் இது நியாயம் போலத் தோன்றினாலும் சிந்திக்கும் போது இது தவறு என்பது தெளிவாகும்.

திருமணத்தைப் பொருத்தவரை இவரைத் தான் திருமணம் செய்ய வேண்டும் என்று ஆணையிட முடியாது. அது தனிப்பட்ட நபர்களின் விருப்பத்தின் பால்பட்டது. அனுமதிக்கத் தான் முடியும். மணம் செய்ய அனுமதியுண்டு என்று சொன்னவுடன் செய்து காட்ட முன்வர மாட்டார்கள். அனுமதிக்கப்பட்டவைகளை செய்து தான் ஆக வேண்டும் என்று கட்டாயம் எதுவும் இல்லை.

காலம் காலமாக மகனுடைய மனைவி என்று நம்பி வந்திருக்கும் போது சொந்த மருமகளாக அவளைக் கருதி வந்திருக்கும் போது அனுமதிக்கப்பட்ட பின்னரும் கூட அவர்களை மணக்கத் தயங்கவே செய்வர். மனைவியாகப் பாவித்து உடலுறவு கொள்ள அவர்களின் உள்ளம் எளிதில் இடம் தராது. தங்கள் உள்ளத்தில் அப்படி ஒரு எண்ணத்தை தலைமுறை, தலைமுறையாக வளர்த்துக் கொண்டு விட்டார்கள். சமுதாயம் பரிகசிக்குமோ என்ற அச்சம் வேறு அவர்களின் தயக்கத்தை அதிகமாக்கும்.

உலகத்தின் விமர்சனத்தைப் பற்றிக் கவலைப்படாமல் பாரம்பர்யப் பழக்கத்துக்கு எள்ளளவும் இடம் தராமல் அதைச் செய்து காட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே தகுதியானவர்கள் என்று கருதிய இறைவன் இதற்கு அவர்களையே தேர்வு செய்தான்.

இதனால் சமுதாயத்தின் பலத்த எதிர்ப்புக்கு ஆளாக நேரிடும் என்பதையும் அதற்கடுத்த வசனத்தில் இறைவன் மறைமுகமாகச் சொல்கிறான்.

இறைத்தூதர்கள் இறைவனிடம் செய்திகளை எடுத்துச் சொல்ல வேண்டும், அவனுக்கு அஞ்ச வேண்டும், அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அஞ்சக் கூடாது.(33:39) எவருக்கும் அஞ்சலாகாது என்று இங்கே இறைவன் குறிப்பிடுவதிலிருந்து அஞ்சுவதற்குரிய ஒன்றாக இத்திருமணம் இருந்தது என்று அறியலாம்.

இதுவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆறு திருமணங்களையும், அவற்றுக்கு காமவெறி காரணம் அல்ல என்பதையும் கண்டோம்.

7 உம்மு ஸலமா (ரலி) அவர்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மாமி மகன் அபூ ஸலமா என்ற அப்துல்லாஹ் அஸத் (ரலி) அவர்கள் ஆரம்ப காலத்திலேயே இஸ்லாத்தை ஏற்ற தியாகிகளில் ஒருவராவார். இவர் இஸ்லாத்தை ஏற்றவர்களில் 11வது நபராகத் திகழ்ந்தார். எதிரிகளின் கொடுமை தாங்க முடியாமல் முஸ்லிம்கள் முதன் முதலில் அபீஸீனியா நாட்டுக்கு ஹிஜ்ரத் செய்து சென்ற போது அவர்களில் இவரும், இவரது மனைவி உம்மு ஸலமா என்ற ஹிந்த் (ரலி) அவர்களும் அடங்குவர்.

திரும்பவும் மதீனாவுக்கு நபித்தோழர்கள் ஹிஜ்ரத் செய்து சென்ற போது இந்தத் தம்பதியினரும் அவர்களில் இருந்தனர். அபூ ஸலமா (ரலி) அவர்கள் பத்ருப் போரிலும் பங்கெடுத்துக் கொண்டார்கள். உஹதுப் போரிலும் கலந்து கொண்டு படுகாயம் உற்றவர்களில் இவரும் ஒருவராவார். அதன் பின் ஹிஜ்ரி நான்காம் ஆண்டில் பனூ அஸத் என்ற கூட்டத்தினருடன் நடந்த சிரிய போரில் பங்கெடுத்து மீண்டும் படுகாயமுற்று மதீனா திரும்பினார். அந்தக் காயங்களின் காரணமாகவே மரணத்தைத் தழுவினார்.

இவர் மரணிக்கும் போது இவரது மனைவி உம்மு ஸலமா (ரலி) அவர்களுக்கு பாரா, ஸலமா, உம்ரா, தர்ரா ஆகிய நான்கு குழந்தைகள் இருந்தனர். நான்கு குழந்தைகளுடன் திக்கற்று நின்ற உம்மு ஸலமா (ரலி) அவர்களையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏழாவது மனைவியாகத் திருமணம் செய்து கொண்டார்கள்.

உம்மு ஸலமா (ரலி) அவர்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தில் எத்தனை வயது என்ற தெளிவான குறிப்பு கிடைக்காவிட்டாலும் அவர்கள் வயது முதிர்ந்தவர்களாக இருந்தார்கள் என்பது உண்மை.

ஏனெனில் நபியவர்கள் அவரைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறிய போது நான் வயது முதிர்ந்தவளாக இருக்கிறேன்; என் வயதுடையவர்கள் திருமணம் செய்து கொள்வதில்லை; என்னால் இனிமேல் குழந்தை பெறவும் இயலாது என்று பதிலளித்தார்கள்.

பார்க்க : முஸ்னத் அஹ்மத் 15751

உம்மு ஸலமா அவர்களே தாம் வயது முதிர்ந்தவராக இருப்பதையும், குழந்தை பெறும் பருவத்தைக் கடந்து விட்டதையும், தம் வயதுப் பெண்கள் திருமணம் செய்து கொள்வது இல்லை என்பதையும் காரணம் காட்டி திருமணத்திற்குத் தயக்கம் தெரிவிக்கிறார்கள். இல்லற வாழ்வுக்குரிய தகுதியை இழந்து விட்ட இவர்களைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் திருமணங்களுக்கு காமமே காரணம் என்றிருந்தால் கன்னியர் பலரும் அவர்களைத் திருமணம் செய்து கொள்ள முன்வந்த சமயத்தில், நபியவர்களுக்கு தங்கள் பெண்களை மணமுடித்துக் கொடுக்க பலரும் தயாராக இருந்த நிலையில் இல்லற வாழ்வில் நாட்டம் இல்லாத முதிய வயதுப் பெண்னைத் தேர்ந்தெடுத்திருப்பார்களா? நான்கு குழந்தைகளை வைத்துக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணை காமஉணர்வு மேலோங்கியவர் தேர்வு செய்ய முடியுமா?

இந்தத் திருமணத்துக்கும் காமவெறியைக் காரணமாகக் கூற முடியாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியரின் வயதை கவனத்தில் கொள்வதுடன் ஒவ்வொரு திருமணத்தின் போதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வயது என்ன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இளமை வேகத்துடன் இருக்கும் காலங்களில் எல்லாம் ஒரு திருமணத்துடன் போதுமாக்கிக் கொண்ட நபியவர்கள் தமது ஐம்பத்தியாறு வயதுக்குப் பிறகு தான் பல திருமணங்களைச் செய்யலானார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்தத் திருமணம் நடந்த போது அவர்களின் வயது ஐம்பத்தி ஏழாகும். இருபத்தைந்து வயது முதல் ஐம்பது வயது வரை அன்னியப் பெண்களை ஏறெடுத்தும் பாராமல் முதிய விதவையுடன் மட்டுமே வாழ்க்கையை அமைத்துக் கொண்ட நபியவர்களுக்கு ஐம்பத்தி ஏழாவது வயதில் காமஉணர்வு மேலோங்கியது என்று சொன்னால் அறிவுடைய எவறாவது ஏற்க இயலுமா?

அப்படியே ஏற்பட்டு விட்டது என்று வைத்துக் கொண்டாலும் நான்கு குழந்தைகளுடன் அல்லாடிக் கொண்டிருக்கின்ற இல்வாழ்வில் நாட்டம் இல்லை என்று தாமே ஒப்புக் கொண்டுவிட்ட முதிய விதவையைத் தேர்ந்தெடுப்பார்களா? குழந்தை பெருவதற்குரிய வயதைக் கடந்து அதாவது மாதவிடாய் நின்று விட்ட ஒரு பெண்ணைத் தான் காமஉணர்வு காரணமாக திருமணம் செய்பவர் தேர்ந்தெடுப்பாரா? என்பதை அறிவுடையோர் சிந்திக்கட்டும்.

அடுத்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எட்டாவது திருமணத்தைக் காண்போம்.

8 ஜுவைரியா (ரலி) அவர்கள்

பனுல் முஸ்தலக் என்ற கூட்டத்தினர் இஸ்லாத்தின் பரம எதிரிகளாகத் திகழ்ந்தவர்கள். முஸ்லிம்களுக்குப் பல வகையிலும் தொல்லை தந்து கொண்டிருந்தனர். பனுல் முஸ்தலக் என்ற கூட்டத்தினருடன் ஹிஜ்ரி 6 ஆம் ஆண்டில் அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஐம்பத்தி ஒன்பதாவது வயதில் நபியவர்கள் போரிட்டனர்.

இந்தப் போரில் முஸ்லிம்கள் மகத்தான வெற்றி பெற்றனர். அந்தக் கூட்டத்திலேயே கடுமையான எதிரியாக இருந்த முஸாபிஃ பின் ஸஃப்வான் என்பவர் கொல்லப்பட்டார். போர்க்களத்தில் உயிருடன் பிடிபட்டவர்கள் கைது செய்யப்பட்ட போது முஸாபிஃ பின் ஸஃப்வான் என்பவரின் மனைவியும் அந்தக் கூட்டத்தின் தலைவன் ஹாரிஸ் என்பவரின் மகளுமான ஜுவைரியாவும் அவர்களில் ஒருவராக இருந்தார். பிடிக்கப்பட்ட கைதிகள் அன்றைய போர் தர்மத்தின்படி போர் வீர்ர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்கப்பட்டனர். ஜுவைரிய்யா அவர்கள் ஸாபித் பின் கைஸ் (ரலி) என்ற நபித்தோழருக்குக் கொடுக்கப்பட்டார்.

இதன் பின்னர் ஜுவைரியா அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து நான் பனுல் முஸ்தலக் கூட்டத் தலைவன் ஹாரிஸ் என்பவரின் புதல்வியாவேன். ஸாபித் பின் கைஸ் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட என்னை அவர் ஏழு ஊக்கிய்யா வெள்ளி நாணயம் தந்து விட்டு விடுதலையாகலாம் என்று கூறுகிறார். எனவே என் விடுதலைக்கு தாங்கள் உதவுங்கள் என்று கேட்டார்.

நான் அந்தத் தொகையைத் தந்து விடுதலை செய்து உன்னை மணந்து கொள்கிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெரிவித்ததும், அவர் அதற்குச் சம்மதித்தார். இதன் பின் அவரை நபியவர்கள் மணந்து கொண்டார்கள்.

இந்தத் திருமணத்தின் போது நபியவர்களின் வயது ஐம்பத்தி ஒன்பதாகும். கைதிகளாகப் பிடிபட்டவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னிலையில் கொண்டு வரப்பட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்பெண்ணின் அழகில் மயங்கி காமஉணர்வின் காரணமாக அவரை அனுபவிக்க விரும்பியிருந்தால் தம் பங்குக்கு ஜுவைரியாவை எடுத்துக் கொண்டிருக்கலாம். நபித்தோழர்களில் எவரும் அதை ஆட்சேபித்திருக்க மாட்டார்கள்.

ஆனால் அப்பெண்னை ஸாபித் பின் கைஸ் (ரலி) என்பவருக்கு ஒதுக்கி விடுகிறார்கள். இதன் மூலம் காம உணர்வோ, உணர்ச்சியோ, கவர்ச்சியோ இத்திருமணத்திற்குக் காரணம் அல்ல என்பதை அறியலாம்.

தான் இந்தக் கூட்டத்தின் தலைவி என்று கூறிய பிறகு  தன்னை விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட பிறகு – தான் அவரைத் திருமணம் செய்கிறார்கள். இதனால் ஏற்பட்ட விளைவு என்னவெண்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்பெண்ணை மணந்து கொண்டதை அறிந்த நபித்தோழர்கள் அணைவரும் தங்களுக்குக் கிடைத்த அடிமைகள் அனைவரையும் விடுதலை செய்து விட்டார்கள். நபியவர்கள் சம்பந்தம் செய்து கொண்ட ஒரு கூட்டத்தினரை எப்படி அடிமைகளாக வைத்துக் கொள்வது என்ற எண்ணத்திலேயே அனைவரும் விடுதலை செய்யப்பட்டார்கள். இத்திருமணத்தின் போது ஜுவைரிய்யா (ரலி) அவர்களின் வயது என்னவென்று திட்டவட்டமாகத் தெரியாவிட்டாலும் அவர்களும் முதுமையான வயதுடையவர்களாகத் தான் இருந்திருக்கக் கூடும் என்று அனுமானம் செய்ய இடமுண்டு.

ஸாபித் பின் கைஸ் (ரலி) என்பவருக்கு அப்பெண் கிடைத்ததும் இளமங்கையாகவோ, அல்லது சுண்டி இழுக்கும் பேரழகு கொண்டவராகவோ இருந்திருந்தால் இளைஞரான ஸாபித் இப்னு கைஸ் அவர்கள் ஏழு ஊக்கியா தந்துவிட்டு விடுதலையாகலாம் எனக் கூறியிருக்க மாட்டார். அவர் தாமே அனுபவிக்க எண்ணியிருப்பார். அடிமைகளை அனுபவித்துக் கொள்வதற்கு அன்றைய சமூக அமைப்பில் எந்தத் தடையும் இருக்கவில்லை. அல்லது அவரே கூட அப்பெண்னைத் திருமணம் செய்திருக்கலாம்.

தமக்குக் கிடைத்த பெண்ணை அற்பமான ஏழு ஊக்கியா தந்து விட்டு விடுதலையாகலாம் என்று அவர் கூறியதிலிருந்து ஜுவைரிய்யா அவர்கள் இளமங்கையாகவோ, பேரழகு படைத்தவராகவோ இருந்திருக்க முடியாது என்பது தெளிவு.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் 59 வயதுடைய முதியவராகி விட்டார்கள். அந்தப் பெண்னும் அதே நிலையில் இருக்கின்றார். இவ்விருவருக்கும் நடந்த இத்திருமணத்திற்குக் காமஉணர்வைக் காரணமாகக் கூற முடியுமா?

அந்தக் கூட்டத்தின் தலைவியை மணமுடித்ததன் மூலம் அக்கூட்டத்தினர் முழுமையாக விடுதலை பெற வேண்டும் என்பதே இத்திருமணத்திற்குரிய தனிப்பட்ட காரணங்களில் ஒன்றாக இருக்கலாம்.

(ஏன் பல திருமணங்கள் செய்தார்கள் என்று இறுதியில் நாம் கூறக் கூடிய பொதுவான காரணங்களும் இத்திருமணத்திற்குப் பொருந்தும்) எனவே இத்திருமணத்திற்கும் காமஉணர்வைக் காரணமாக கூற இடமில்லை.

9 உம்மு ஹபீபா (ரலி) அவர்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி ஏழாம் ஆண்டில் (அல்லது ஆறாம் ஆண்டில்) அதாவது தமது 59வது வயதில் உம்மு ஹபீபா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தார்கள். இத்திருமணம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஒன்பதாவது திருமணமாகும்.

உம்மு ஹபீபா அவர்களின் இயற் பெயர் ரம்ளா என்பதாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஆரம்பம் முதல் கடுமையாக எதிர்த்து வந்தவரும், அபூ ஜஹ்ல் பத்ருப் போரில் கொல்லப்பட்ட பின் எதிரிகளின் தலைவராகத் திகழ்ந்தவருமான அபூ சுப்யான் அவர்களின் மகளே உம்மு ஹபீபா (ரலி) அவர்கள். முஆவியா (ரலி) அவர்களின் சகோதரியுமாவார்.

இவரது தந்தை இஸ்லாத்தை ஒழித்திட தீவிரமாக முயன்று கொண்டிருந்த காலத்திலேயே உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றார்கள். இவரது கணவர் அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் என்பவரும் அப்போதே இஸ்லாத்தைத் தழுவினார்.

தந்தையின் கொடுமை தாள முடியாத அளவுக்குச் சென்ற போது ஹபஷா (அபீஸீனியா)வுக்கு தம் கணவருடன் ஹிஜ்ரத் (தியாகப் பயணம்) செய்தார்கள். அபீஸீனியா சென்றதும் சிறிது காலத்தில் இவரது கணவர் அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் இஸ்லாத்தை விட்டு வெளியேறி கிறித்தவராக மதம் மாறினார். கணவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறிய பின்னரும் கூட இவர்கள் இஸ்லாத்தில் உறுதியாக நின்றார்கள்.

சரித்திரத்தில் இத்தனை கொள்கைப் பிடிப்புள்ள பெண்களை அரிதாகவே காண முடியும். தந்தையை விடவும், கணவரை விடவும் கொண்ட கொள்கையே பிரதானம் என்று வாழ்ந்தவர்கள் உம்மு ஹபீபா (ரலி) அவர்கள். அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் மூலம் ஹபீபா என்ற பெண் குழந்தையைப் பெற்றெடுத்ததால் உம்மு ஹபீபா (ஹபீபாவின் தாய்) என்றும் அழைக்கப்பட்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நபியாக ஆவதற்கு 17ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் பிறந்தார்கள். (அல் இஸாபா) இவர்களை நபிகள் நயகம் (ஸல்) அவர்கள் தமது 59ஆம் வயதில் திருமணம் செய்த போது இவர்களுக்கு 37 வயதாக இருந்தது.

கணவர் மதம் மாறியதால் அயல் நாட்டில் இவர்கள் நிர்க்கதியாக கணவரைப் பிரிந்து கொள்கைக்காகப் போராடிக் கொண்டிருந்த போது தான், இதனைக் கேள்விப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாமே உம்மு ஹபீபா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தார்கள்.

அபீஸீனியாவின் மன்னர் நஜ்ஜாஷி (ரலி) அவர்களுக்கு அவரது நாட்டில் நிர்க்கதியாக இருந்த உம்மு ஹபீபா (ரலி) அவர்களை தாம் திருமணம் செய்து கொள்வதாக தூதுச் செய்தி அனுப்பினார்கள்.

இதன் பிறகு நஜ்ஜாஷி (ரலி) அவர்கள் உம்மு ஹபீபா (ரலி) அவர்களை மிகவும் மரியாதை செய்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சார்பில் நானூறு தீனார்கள் (தங்கக் காசுகள்) மஹராகக் கொடுத்து மதீனாவுக்கு அனுப்பி வைத்தார்கள். இதன் பிறகே உம்மு ஹபீபா (ரலி)யைத் திருமணம் செய்தார்கள். இது சுருக்கமான விபரம்.

இந்தத் திருமணத்திற்கும் நிச்சயமாக காம உணர்வு காரணமாக இருக்க முடியாது என்பதை நடுநிலையாளர்கள் ஒப்புக் கொள்வார்கள்.

இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தை ஏற்றவர் உம்மு ஹபீபா (ரலி) அவர்கள். ஆரம்பக் காலத்திலேயே தம் கணவருடன் அபீஸீனியாவுக்கு தியாகப் பயணம் மேற்கொண்டவர்கள்.

சுமார் 15 ஆண்டுகள் உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் அபீஸீனியாவிலேயே தங்கிவிட்டார்கள். உம்மு ஹபீபா (ரலி) அவர்களை இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் பார்த்ததைத் தவிர, இந்தப் பதினைந்து ஆண்டுகளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்ததே இல்லை.

இந்தப் பதினைந்து ஆண்டுகள் இடைவெளியில் இன்னொரு நாட்டில் அடைக்கலம் புகுந்தவர் – கணவரையும் பிரிந்து விட்டவர், ஒரு குழந்தையையும் பெற்று விட்டவர் எத்தகைய அமைப்பில் இருப்பார் என்று கற்பனை கூட செய்ய முடியாது.

அவர்களின் நிறமும், அவர்களின் பருமனும், அழகும் இந்தப் பதினைந்து ஆண்டுகளில் எப்படி மாறியிருக்கும் என்பதையும் தீர்மானிக்க இயலாது. காம உணர்வு தான் இதற்குக் காரணம் என்றிருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உம்மு ஹபீபாவைப் பார்த்து அவர்களின் அழகில் மயங்கியிருக்க வேண்டும். ஒரு பெண்ணை அறவே பார்க்காது திருமணம் செய்தால் அதற்கு காமஉணர்வைக் காரணமாகச் சொல்ல முடியுமா?

20 வயது உம்மு ஹபீபாவைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்திருக்கிறார்கள். அந்த வயதில் வேண்டுமானால் அவர்கள் அழகாக இருந்திருக்கலாம். அழகானவர்களைக் கூட அகோரமாக மாற்றிவிடும் அபீஸீனிய நாட்டில் 15 ஆண்டுகளைக் கழித்த ஒரு பெண், ஒரு குழந்தையையும் பெற்று, கணவனால் கைவிடப்பட்டு கவலைக்கு ஆளான ஒரு பெண் – வெளியில் சென்று தானே உழைத்து உண்ணக் கூடிய ஒரு பெண் 20 வயதில் இருந்த அதே அழகுடன் இப்போதும் இருப்பார்கள் என்று கூறமுடியுமா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உம்மு ஹபீபாவைப் பார்க்காமல் அவர்களுடைய தோற்றம் இப்போது எப்படி இருக்கும் என்பதைக் கூட அறியாமல் உம்மு ஹபிபாவின் நிர்க்கதியான நிலையைக் கேள்விப்பட்ட மாத்திரத்தில் தான் அவரை மணந்து கொள்ளப் போவதாக நஜ்ஜாஷிக்கு தூது அனுப்புகிறார்கள்.

இந்தத் திருமணத்தைப் பற்றி முடிவுக்கு வந்து விட்ட நேரத்திலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உம்மு ஹபீபாவை நேரில் சந்திக்கவில்லை. அவர்களது நிராதரவான நிலையை அறிந்தவுடனேயே அவரைத் திருமணம் செய்ய முடிவு செய்கிறார்கள்.

நியாய உணர்வு படைத்தவர்களே! இந்தத் திருமணத்திற்கு காமஉணர்வு தான் காரணம் என்று சொல்லப்படுவதை இதன் பிறகும் உங்கள் உள்ளம் ஏற்கிறதா?

25வயதில் இல்லாத காமஉணர்வு மரணத்தை நெருங்கி விட்ட 59வது வயதில் தானா திடீரென்று ஏற்பட்டு விடும்?

அதுவும் எப்படி இருப்பார் என்று தெரியாத ஒரு பெண்ணின் மீதா காம உணர்வு ஏற்படும்? ஒரு குழந்தைக்குத் தாயாகிவிட்ட – உடலுறவுக்குரிய தகுதியை இழப்பதற்குரிய கட்டத்தை நெருங்கி விட்ட – அழகையும், இளமையையும் பிரயாணங்களிலும் கவலையிலும் முற்றுமாக இழந்து விட்ட ஒரு பெண் மீது தானா காமஉணர்வு ஏற்படும்? ஒருக்காலும் ஏற்படாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஏனைய திருமணங்களுக்கு காம உணர்வு எப்படி காரணமாக இருக்கவில்லையோ அது போல் இந்தத் திருமணத்திற்கும் அது காரணமில்லை.

10 ஸஃபிய்யா பின்த் ஹுயய் (ரலி) அவர்கள்

இனி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மற்றொரு திருமணத்தைக் காண்போம். இந்தத் திருமணமும் காம உணர்வைக் காரணமாகக் கூற இயலாத அளவுக்கு அமைந்துள்ளதை அறிவுடையோர் உணர இயலும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்பவரை அடுத்தபடியாக மணந்து கொண்டார்கள்.

இவர் ஹாரூன் வம்சா வழியில் உதித்த யூதக் குடும்பத்துப் பெண்மனியாவார். இவர் முதலில் ஸலாம் இப்னு மிக்சம் என்பவரின் மனைவியாக இருந்தார்.

(இவருடைய மற்றொரு மனைவி தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு விஷமூட்டப்பட்ட ஆட்டிறைச்சியை உண்னக் கொடுத்தார்.)

இதன் பின்னர் கினானா இப்னு அபில் ஹகீக் என்பவரை இரண்டாவதாக மனந்து கொண்டார்கள். ஸஃபிய்யாவும், அவரது கணவர் கினானாவும், அவருடைய தந்தை ஹுயய் என்பாரும் மதீனாவில் வசித்து வந்தனர்.

மதீனாவிலிருந்த யூதர்களும், கைபர் பகுதியில் இருந்த யூதர்களும் தேச விரோதச் செயலில் ஈடுபட்டு வந்தனர். செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறி மக்காவின் காபிர்களுக்கு நாட்டு இரகசியங்களைக் கூறி குழப்பம் செய்து வந்தனர். எனவே கைபர் பகுதி யூதர்களுடன் போர் செய்வதற்கான முயற்சியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறங்கினார்கள்.

இதை அறிந்த ஸஃபிய்யாவும், அவரது தந்தையும், கணவரும் மதீனாவைக் காலி செய்து விட்டு கைபருக்குப் புறப்பட்டனர்.

கைபர் போரில் முஸ்லிம்கள் வெற்றி அடைந்தனர். யூதத் தலைவர்களில் பிரதானமானவர்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் ஸஃபிய்யாவின் கணவர் கினானாவும் ஒருவராவார். பலர் சிறைபிடிக்கப்பட்ட போது ஸஃபிய்யாவும் சிறைபிடிக்கப்பட்டார்கள்.

அன்றைய வழக்கப்படி கைதிகள் போர் வீரர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்கப்பட்டனர். திஹ்யா என்பவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து தமக்கு ஒரு கைதியைத் தருமாறு கேட்டு ஸஃபிய்யாவை அழைத்துக் கொண்டார். அப்போது அங்கிருந்த சிலர் அல்லாஹ்வின் தூதரே! இந்தப் பெண் இந்த சமுதாயத்தின் தலைவருடைய புதல்வியாவார். எனவே தாங்கள் இவரை எடுத்துக் கொள்வதே சிறந்தது என்று அவர்கள் கூறினார்கள்.

இதன் பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஃபிய்யாவை விடுதலை செய்து அவரைத் திருமணம் செய்து கொண்டார்கள். இது இத்திருமணத்தின் சுருக்கமான சரித்திரப் பின்னணியாகும்.

இதை ஊன்றிக் கவனிக்கும் அறிவுடைய எவரும் இத்திருமணத்திற்கு காமவெறியைக் காரணமாகக் கூற முன்வர மாட்டார்கள். இதில் கவனிக்க வேண்டிய பல அம்சங்கள் உள்ளன. அந்த அம்சங்கள் யாவும் எதிரிகளின் அடிப்படையற்ற அவதூறைத் தகர்த்து எறிகின்றன.

முதலாவது அம்சம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வயது. இது ஹிஜ்ரி 7ஆம் ஆண்டு நிகழ்ந்துள்ளது. ஹிஜ்ரி 7ஆம் ஆண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வயது 60 ஆகும். ஐம்பது வயது வரை ஒரேயொரு மனைவியுடன் இல்லறம் நடத்திய நபியவர்களுக்கு மரணத்திற்கு நெருங்கிக் கொண்டிருந்த நேரத்தில் தானா காம வெறி ஏற்பட்டிருக்கும்?

இரண்டாவது அம்சம் ஸஃபிய்யாவின் நிலை. ஏற்கனவே இரண்டு கணவர்களுக்கு வாழ்க்கைப்பட்டு விதவையாகிப் போனவரைத்தானா காமவெறி கொண்டவர்கள் தேர்வு செய்வார்கள்?

மூன்றாவது அம்சம் இந்தத் திருமணம் நடந்த சந்தர்ப்பம். அதாவது கைபர் என்ற அந்நிய நாட்டுடன் போரிட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெற்றி அடைந்துள்ள நேரம்! பெரும் தலைகள் எல்லாம் மண்ணில் உருண்டு கிடக்கும் நேரம்! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காமவெறி கொண்டவர்களாக இருந்திருந்தால் இந்தக் கட்டத்தில் எத்தனையோ கன்னியரைக் கவர்ந்து கொண்டிருக்க முடியும். எவரும் அதைத் தடுக்க சக்தி பெற்றிருக்கவில்லை.

பொதுவாகவே அன்றைய உலகில் மன்னர்கள் வெற்றி அடையும் சமயங்களில் விரும்பிய கன்னியரைக் கவர்ந்து கொள்வது சர்வசாதாரணமான ஒன்றாகத் தான் இருந்தது. போர் தர்மம் என்று இதற்கு நியாயமும் கூறப்பட்டு வந்தது.

இவ்வளவு சாதகமான சூழலிலும் எந்தக் கன்னியரையும் ஏறெடுத்துப் பார்க்கவில்லை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். காமவெறி கொண்டவர்கள் தேர்வு செய்யும் எந்த வழியையும் அவர்கள் கைக் கொள்ளவில்லை. இந்தக் கட்டத்தில் கூட இரண்டு கணவர்களுடன் வாழ்ந்த விதவையைத் தேர்ந்தெடுத்தார்கள் என்றால் இதற்குக் காமஉணர்வு எப்படி காரணமாக இருக்க முடியும்?

கடைசியாக கவனிக்கப்பட வேண்டிய அம்சமும் முக்கியமானதாக உள்ளது. அதாவது ஸஃபிய்யாவும், மற்றவர்களும் கைதிகளாகப் பிடிக்கப்பட்டவுடன் அவர்களில் ஸஃபிய்யாவின் அழகில் மயங்கி மணந்து கொண்டார்கள் என்றும் கூற முடியாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஃபிய்யா பற்றியோ மற்றவர்கள் பற்றியோ சிந்திக்கக் கூட இல்லை.

இதனால் தான் திஹ்யா என்பவர் ஸஃபிய்யாவைத் தமக்காக எடுத்துக் கொள்கிறார். அவர் எடுத்துக் கொண்ட சமயத்தில் கூட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆட்சேபனை எதுவும் தெரிவிக்கவில்லை.

பனூ குரைலாவுக்கும், பனூ நுழைர் கூட்டத்துக்கும் தலைமை வகித்த குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று சிலர் அடையாளம் காட்டிய பிறகு தான் அவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விடுதலை செய்து மணக்கிறார்கள்.

ஸஃபிய்யா அழகு படைத்தவராக இருந்தாலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மணந்து கொண்டதற்கு அதுவே காரணம் அல்ல. அழகு காரணம் என்றிருந்தால் எடுத்த எடுப்பிலேயே அவரை மணந்திருக்கலாம்.

யூதர்களின் அரச குடும்பத்துப் பெண் என்று காரணம் கூறப்பட்ட பின்பே அவரை மணந்து கொள்ளும் முடிவுக்கே நபியவர்கள் வருகிறார்கள்.

யூதர்களின் வெறுப்புணர்வைத் தனித்துக் கொள்வதும், இரு சமூகத்தினரிடையே நல்லுறவு ஏற்பட்டதும் இத்திருமணத்தினால் விளைந்த நன்மைகளாகும்.

இது போக ஏனைய திருமணங்களுக்குரிய பொதுவான காரணம் இத்திருமணத்திற்கும் பொருந்தும்.

ஏனைய திருணங்களுக்கு எப்படி காமஉணர்வு தான் காரணம் என்று கூற முடியாதோ அது போல் இத்திருமணத்திற்கும் அதைக் காரணமாகக் கூற முடியாது.

11 மைமூனா (ரலி) அவர்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடைசியாக மைமூனா (ரலி) அவர்களை மணந்தார்கள்.

பர்ரா எனும் இயற்பெயருடைய மைமூனா (ரலி) அவர்கள் ஹாரிஸ் என்பவரின் மகளாவார்.

இவர்கள் உமர் பின் அம்ர் என்பாரை முதலில் மணந்தார்கள்.

அவருக்குப் பின் அபூ ரஹ்ம் பின் அப்துல் உஸ்ஸா என்பாரை மணந்தார்கள்.

இரண்டு கணவர்களுக்கு வாழ்க்கைப்பட்டு அவ்விருவரும் மரணித்த பின் மைமூனா (ரலி) அவர்கள் விதவையாக இருந்தார்கள்.

இவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது அறுபதாவது வயதின் கடைசியில் திருமணம் செய்தார்கள். இத்திருமணத்தின் போது மைமூனா அவர்களின் வயது எவ்வளவு என்பதற்கான தெளிவான குறிப்புகள் நமக்குக் கிடைக்கவில்லை என்றாலும் அவர்கள் ஏற்கனவே இரண்டு கணவர்களை மணந்து பின்னர் விதவையாக இருந்தார்கள் என்பது அவர்கள் நடுத்தர வயதைக் கடந்திருக்க வேண்டும் என்பதற்குச் சான்றாக உள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெரிய தந்தை அப்பாஸ் (ரலி) அவர்கள் உம்முல் பழ்ல் என்ற பெண்னை மணந்திருந்தார்கள். உம்முல் பழ்ல் உடைய சகோதரி தான் மைமூனா. இதன் காரணமாக அப்பாஸ் அவர்களின் பராமாரிப்பில் மைமூனா (ரலி) அவர்கள் இருந்தார்கள். அப்பாஸ் (ரலி) அவர்கள் தாம் அவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மணமுடித்து வைத்தனர்.

மேலும் மைமூனா (ரலி) அவர்கள் தாமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து தம்மை மணந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இவ்வாறு அவர் கேட்டுக் கொண்டதும் தமது பெரிய தந்தையின் பொறுப்பில் அவர் இருந்ததும் இத்திருமணத்திற்கு பிரத்தியேகக் காரணமாகும். எனவே இத்திருமணத்திற்கும் காமவெறியைக் காரணமாகக் கூற முடியாது.

இவை தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் திருமணங்கள். இத்திருமணங்களில் எவையுமோ காமவெறியை அடிப்படையாகக் கொண்டதல்ல என்பதை மட்டும் அவ்வப்போது விளங்கியுள்ளோம்.

உண்மையான காரணங்கள் என்ன?

அப்படியானால் இந்தச் சிறப்பு அனுமதிக்குக் காரணம் என்ன?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை ஏராளமான நபித்தோழர்கள் வழியாகத்தான் முஸ்லிம்கள் அறிந்து கொள்கின்றனர். ஒவ்வொரு நபித்தோழரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நடவடிக்கைகளைப் பார்த்து அறிவிக்கின்றனர். அதே சமயம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வீட்டில், இல்லற வாழ்க்கை நடத்தியது, உண்டது, பருகியது, இரவு வணக்கம் செய்தது போன்ற செய்திகளை நபித்தோழர்களால் அறிந்து கொள்ள முடியாது.

அவர்களுடன் வீட்டில் குடும்பம் நடத்திய மனைவியரால் மட்டும் தான் அறிய முடியும். எனவே அவர்களது மனைவியர் மூலமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் நடந்த அனைத்து விஷயங்களும் உலக மக்களுக்குச் சென்றடைய வேண்டும் என்பதற்காக இறைவனின் தூதர் என்ற அடிப்படையில் இறைவன் இந்த ஏற்பாட்டைச் செய்திருக்கலாம் என்றே கருத முடியும்.

ஒரே ஒரு மனைவி மட்டும் இருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு அவர் மட்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்த செய்திகளை அறிவித்தால் அதில் நம்பகத் தன்மை குறையும். அவர் தவறான தகவலைக் கூறிவிட்டால் அதைச் சான்றாகக் கொண்டு முஸ்லிம்கள் நடக்கும் நிலை ஏற்படும்.

பல மனைவியர் இருந்தால் எந்த மனைவியும் கூடுதல் குறைவாகச் சொல்வதற்குத் தயங்குவார். ஒருவர் தவறாகச் சொல்லி மற்றவர்கள் அதை மறுத்து உண்மையை விளக்குவார்கள். இதனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கிறது. இது போன்ற காரணங்களுக்காகத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல திருமணங்கள் செய்தார்கள்.

பொதுவாக காமவெறி கொண்டவர்களை மதிப்புக்கு உரியவராக மக்கள் கருத மாட்டார்கள். ஆன்மிகத் தலைவரிடம் காமவெறி இருப்பதை அறிந்தால் அவரை நஞ்சென வெறுப்பார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல திருமணங்களைச் செய்வதை தமது கண்களால் பார்த்த மக்கள் மனிதர்களின் பொதுவான இந்த இயல்பின் படி நபிகள் நாயகத்தை எடை போடவில்லை.

அவர்களுடன் இருந்தவர்களில் ஒருவர் கூட இந்தக் காரணத்தைக் கூறி மதம் மாறியதில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதிகம் திருமணம் செய்த கடைசி ஐந்து ஆண்டுகளில் தான் மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை ஏற்றார்கள். ஏறக்குறைய ஒட்டு மொத்த அரபுலகும் அவர்களை ஏற்றுக் கொண்டது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காமவெறி பிடித்தவர் என்றால் அதைக் கண்ணால் கண்டவர்கள் இஸ்லாத்தை வெறுத்து ஒதுக்கி இருப்பார்களே? ஏன் அப்படி நடக்கவில்லை? இதுவும் சிந்திக்க வேண்டிய விஷயமாகும்.

வரலாறுகளைப் படிப்பவர்கள் ஒன்பது மனைவிகள் என்று மட்டும் தான் பார்க்கிறார்கள். அதன் முழு விபரத்தைப் பார்க்காமல் முடிவு செய்து விடுகிறார்கள்.

அந்த வரலாற்றுக் காலத்தில் வாழ்ந்தவர்கள் நபியின் ஒட்டு மொத்த வாழ்க்கையையும் பார்த்தார்கள்.

அவர்கள் திருமணம் செய்து கொண்ட பெண்களின் நிலையையும் பார்த்தார்கள்.

இதுபோன்ற வயதுடைய பெண்களை நாமே மணக்க மாட்டோமே அப்படியானால் இதற்குக் காமவெறி காரணமாக இருக்க முடியாது என்பதையும் அவர்கள் கவனித்தார்கள்.

அதனால் தான் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை ஏற்றனர்.

இன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பல திருமணங்களைக் குறித்து கேள்வி கேட்பவர்கள் நபிகளின் காலத்தில் வாழ்ந்தால் காமவெறி காரணம் அல்ல என்பதை விளங்கி இஸ்லாத்தில் தம்மை இணைத்துக் கொண்டிருப்பார்கள்.

பொதுவாக வெளிஉலகில் நல்லவராகக் காட்சி தரும் சிலர் உண்மையில் நல்லவர்களாக இருக்க மாட்டார்கள். அவர்களைப் பற்றி அவர்களின் மனைவியர் மட்டுமே அறிவார்கள்.

தம் கணவன் நல்லவனா? அல்லது பகல் வேஷக்காரனா? ஒவ்வொரு பெண்ணும் அறிவாள். ஆனாலும் மிகப் பொரும்பாலான மனைவியர் தம் கணவனின் அந்தரங்க வாழ்வைப் பற்றி நன்றாக அறிந்து வைத்திருந்தாலும் அதை அம்பலப்படுத்த மாட்டார்கள். தனது வாழ்க்கை அவனுடன் பின்னிப் பினைந்துள்ளதாலும் அவனைச் சார்ந்தே வாழ வேண்டிய நிலைமை நிலவுவதாலும் கணவனின் கபட நாடகத்தை வெளி உலகுக்கு அம்பலப்படுத்த மாட்டாள்.

ஆனால் ஒரே ஒரு சமயத்தில் மட்டுமே பெண்கள் தம் கணவரின் பலவீனங்களை அம்பலப்படுத்தத் துணிகின்றனர். தனக்குப் போட்டியாக தன் கணவன் மற்றொருத்தியை மணந்து கொள்ளும் போது தான் கணவனின் அந்தரங்க வாழ்க்கை மனைவியால் வெளிச்சம் போட்டுக் காட்டப்படும். பரவலாக இதை நாம் காண்கிறோம். பெண்களின் இயல்பை அறிந்தவர்களுக்கு இதைப் புரிந்து கொள்ள ஆதாரம் எதுவும் தேவையில்லை.

இரண்டு மனைவியரைப் பெற்று விட்டாலே ஒருவனது சாயம் வெளுத்துப் போய்விடும் என்றால் இரண்டுக்கு மேல் பல மனைவியரை அடைந்தவன் தன் நாடகத்தை தொடர்ந்து நடத்த முடியாது. பல்வேறு வயதினராகவும், பல்வேறு பகுதியினராகவும், பல்வேறு குணாதிசயங்களைப் பெற்றவர்களாகவும் பல மனைவியரைப் பெற்று விட்டால் அவனது உண்மை சுயரூபம் வெளிப்பட்டே ஆகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உண்மையையும், நேர்மையையும், நல்லொழுக்கத்தையும் உலக மக்களுக்குப் போதனை செய்தார்கள். இவையெல்லாம் உண்மையிலேயே அவர்களிடம் இருந்தனவா? என்பதை நிரூபித்துக் காட்ட அவர்களின் பலதாரமண்ம் மிகச் சிறந்த அளவு கோலாகும்.

பல திருமணங்கள் செய்ய இறைவன் அவர்களுக்கு மட்டுமே அனுமதியளித்து அத்தனை பேரிடமும் நல்லவராகவும் நடக்கச் செய்து அவர்களிடம் இரண்டு வாழ்க்கை இருந்ததில்லை என்பதை நிரூபித்துக் காட்டினான்.

பல்வேறு வயதினராகவும், பல்வேறு பகுதியினராகவும், பல்வேறு குணாதிசயங்களைப் பெற்றவர்களாகவும் அவர்களின் மனைவியர் இருந்தனர். எல்லா பெண்களுக்கிடையிலும் ஏற்படக் கூடிய சக்களத்தி சன்டைகள் அவர்களுக்கிடையேயும் நடந்ததுண்டு. அவர்களுக்குள்ளே தான் அந்தச் சண்டைகள் நடந்தனவே அன்றி அல்லாஹ்வின் தூதர் அவர்களைப் பற்றி விமர்சனம் செய்யப்பட்டதே இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனைவரிடமும் சமமான முறையில் நடந்து கொண்டாலும் அவர்களையும் மீறி ஆயிஷா (ரலி) என்ற ஒரு மனைவி மீது மட்டும் அதிக அன்பு செலுத்தினார்கள். இதனால் மற்ற மனைவியருக்கு ஆயிஷா மேல் பொறாமை இருந்தது. அப்படி இருந்தும் கூட அவர்களின் அந்தரங்க வாழ்வில் எந்தக் குறையும் இருந்ததாக அவர்கள் விமர்சிக்கவில்லை. விமர்சனம் செய்ய முடியாத அளவுக்கு பரிசுத்த வாழ்க்கையாக அவர்களின் வாழ்க்கை இருந்தது.

இறையச்சம் பற்றி வெளி உலகுக்குப் போதனை செய்து விட்டு வீட்டிற்கு வந்தால் அந்த இறையச்சத்திற்குச் செயல் வடிவம் கொடுக்க நபிகள் நாயகம் அவர்கள் நள்ளிரவில் இறைவனை வணங்க ஆரம்பித்து விடுவதைக் கண்ட பின் அவர்கள் எப்படி நபியவர்களைக் குறை கூற முடியும்?

இம்மையின் நிலையாமை பற்றி போதித்து விட்டு வீட்டுக்கு வந்தால் அதைச் செயல்படுத்தும் விதமாக பல சமயங்கள் பட்டினியோடும், காய்ந்த ரொட்டியுடனும் இரவு பொழுதைக் கழித்த நபியின் உண்மையான வாழ்வை அவர்களால் விமர்சிக்க முடியுமா என்ன?

ஆடம்பரங்களை வெறுத்து ஒதுக்குமாறு மக்களுக்குச் சொல்லி விட்டு வீட்டிற்கு வந்து, கயிற்றுக் கட்டிலில் படுத்துறங்கி கயிற்றின் வரிகள் அவர்களின் முதுகில் ஆழமாகப் பதிந்ததைக் கண்ட பின்பும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பரிசுத்த வாழ்வை அவர்களால் குறை கூற முடிந்திருக்குமா?

மதீனத்து மாமன்னராக ஆன பின்பும், அவர்களின் குடிசையில் செல்வங்கள் வந்து குவிக்கப்பட்ட பின்பும் அவற்றை மக்களுக்கு விநியோகிக்காமல் உறங்க மறுத்த கண்களுக்கு சொந்தக்காரரிடம் என்ன குறை கண்டிருப்பார்கள்?

பொறுமை, அடக்கம் பற்றியெல்லாம் மக்களுக்குப் போதனை செய்து விட்டு, தன்னை விட பலவீனமாக உள்ள மனைவியிடம் கூட பொறுமையைக் கடைப்பிடித்து பண்பாடுகளின் சிகரமாகத் திகழ்ந்த அந்த உயர்ந்த மனிதரிடம் என்ன குறையை அவர்கள் கண்டுபிடிக்க முடியும்?

கடுஞ்சொல் கூறாத, கை நீட்டி அடிக்காத மனைவியரின் வீட்டு வேலைகளிலும் ஒத்தாசை செய்த அந்த உத்தமரிடம் குறை காண்பார்களா என்ன?

உங்களில் சிறந்தவர் யார் எனில் தம் குடும்பத்தினரிடம் சிறந்த முறையில் நடப்பவரே! நான் உங்களை விட குடும்பத்தினரிடம் சிறந்த முறையில் நடக்கிறேன் என்று கூறிய அந்த மாமனிதரை அவர் சொன்னது போலவே நடக்கக் கண்டவர்கள் அவரின் மனைவியர் தான்.

அதனால் தான் மேலே நாம் எடுத்துக் காட்டிய அந்த நற்பண்புகள் பற்றி அவர்களின் மனைவியரே வெளி உலகுக்குச் சொல்ல முடிந்தது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குணம் எவ்வாறு இருந்தது? என்று கேட்ட போது குர்ஆனாகவே அவர்களின் குணம் இருந்தது என்று அந்த மனைவியரால் பதிலளிக்க முடிந்ததும் இதனால் தான்.

அவர் போதிக்கின்ற குர்ஆனில் கூறப்படுகின்ற எல்லாப் பண்புகளும் அவரால் கடைப்பிடிக்கப்பட்டன என்று அவரது மனைவியரே சான்று பகரும் அளவுக்கு சொல்லுக்கும், நடத்தைக்கும் வித்தியாசம் காட்டாதவர் அவர்.

ஒரே ஒரு மனைவி மட்டும் இருந்தால் தன் கணவரைப் பற்றி இப்படிக் கூறி விடலாம். பல மனைவியரைப் பெற்றும் அவர்கள் அனைவருமே இப்படிக் கூற முடிந்தது என்றால் அவரிடம் இரட்டை வாழ்க்கை இருந்தது கிடையாது என்பதற்கு வேறு சான்று தேவையில்லை.

எந்தப் பரீட்சையில் அனைவரும் தோற்று விடுவார்களோ அந்தப் பரீட்சை தான் நபியவர்களுக்கு பல திருமணங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி. அந்தப் பரீட்சை அவர்களின் தூய வாழ்வை நிரூபித்துக் காட்ட அவசியமாகவும் இருந்தது. அவர்களால் அதில் தேறவும் முடிந்தது.

அவர்களைத் தவிர மற்றவர்களுக்கு இந்தப் பரீட்சை தேவையுமில்லை. அவர்களால் இதில் தேறவும் முடியாது.

மேலும் நபியின் மனைவியர் செல்வச் செழிப்போடு இருக்கவில்லை. அவர்களுக்கு மிகவும் நெருக்கமான மனைவி அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் முஹம்மதின் குடும்பத்தினர் தொடர்ந்து இரண்டு நாட்கள் வயிராற உண்டதில்லை என்றார்கள்.

தொடர்ந்து இரண்டு நாட்கள் வயிறு நிறைய உண்ணக் கூட வழி இல்லாமல் தான் அவர்களின் மனைவியர் இருந்தார்கள். உணவுக்கே இக்கதி என்றால் ஏனைய வசதிகளைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை.

கட்டிய கணவரால் வேளாவேளைக்குச் சோறு போட முடியாத போதும், அவர் பல மனைவியரை மணந்து தங்கள் இல்லற சுகத்திலும் குறைவு வைத்த போதும், மற்றவர்களுக்கு இல்லாத கட்டுப்பாடுகள் இவர்களுக்கு விதிக்கப்பட்ட போதும் இவர்களுக்கு இடையே பூசல்கள் ஏற்பட்ட போதும், நபியவர்களின் வாழ்க்கை விமர்சிக்கப்பட முடியாத தூரத்தில் இருந்தது.

எந்த மனிதனும் வாழ்ந்து காட்ட முடியாத பரிசுத்த வாழ்வுக்கு அவர் சொந்தக்காரர் என்று நிரூபிக்க நபியவர்கள் பல திருமணங்களைச் செய்து காட்ட வேண்டியிருந்தது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் எந்த ஒரு சிறு பகுதியும் மக்களைச் சென்றடையாமல் இருக்கக் கூடாது. சிலர் சொல்ல மறந்து விட்டாலும் மற்ற சிலரால் உலகுக்கு அது தெரிய வேண்டும். அந்த ஒளிவு மறைவற்ற வாழ்க்கையை உலகம் கவனிக்க வேண்டும் என்பதும் அவர்கள் பல திருமணங்கள் செய்து கொண்டதற்கான காரணமாகும்.

எப்படியாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தூதுத்துவப் பிரச்சாரத்தை முடக்கிவிட வேண்டும் என்று பல்வேறு திட்டங்கள் அவர்களால் தீட்டப்பட்டன. கிறுக்கன் என்றார்கள், திறமைமிக்க கவிஞன் என்றார்கள், கைதேர்ந்த மந்திரவாதி என்று கூட சொல்லிப் பார்த்தார்கள். ஏசிப் பார்த்தார்கள். அடித்துப் பார்த்தார்கள். ஊரைவிட்டே விரட்டும் முயற்சியில் ஈடுபட்டார்கள். உலகை விட்டே அவரை அப்புறப்படுத்தவும் சதி செய்தார்கள்.

இந்தப் பிரச்சாரத்தை எப்படியாவது முடக்கிவிட வேண்டும் என்பதில் அவர்களுக்கிருந்த வெறித்தனத்துக்கு இவை தக்க ஆதாரங்களாகும். இப்படியெல்லாம் திட்டம் தீட்டிய அவர்கள் நபியவர்களின் தூய வாழ்வைப் பற்றி எந்த விமர்சனமும் செய்யவில்லை.

மற்ற எல்லா ஆயுதங்களை விடவும் பலமான இந்த ஆயுதத்தை அவர்கள் பயன்படுத்தியிருந்தால் அதில் அவர்கள் வெற்றி கண்டிருக்கக் கூடும். ஆனாலும்; கூட நபியவர்களின் பரிசுத்த வாழ்க்கை பற்றி அவர்கள் எந்தக் குறையும் கூறவில்லை. கூறவில்லை என்றால் அவர்களால் கூற முடியவில்லை. கூறினால் எதிரிகளும் கூட நம்ப மாட்டார்கள் என்ற நிலை.

இது போன்ற அவதூறுகளின் எல்லா வாசல்களையும் அல்லாஹ் முழுமையாக அடைத்து விட்டான் அதன் ஒரு பகுதியே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல மனைவியருடன் வாழ்க்கை நடத்தியது.

சுருங்கச் சொல்வதென்றால் நபியவர்கள் காமவெறியில் எந்தத் திருமணத்தையும் செய்ததில்லை. அது தான் காரணம் என்றிருந்தால் அவர்களுக்காக உயிரையும் தியாகம் செய்யும் அளவுக்கு தோழர்கள் கிடைத்திருக்க மாட்டார்கள்.

அவர்களின் அத்தனை மனைவியரும் அவரைப் புகழ்ந்து அவரை அப்படியே பின்பற்றி நடந்திருக்க மாட்டார்கள்.

காமவெறி தான் காரணம் என்றால் காமவெறி மேலோங்கி இருக்கக் கூடிய இளமைப் பருவத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண்களை ஏறெடுத்தும் பார்க்காத வாழ்வை வாழ்ந்திருக்க முடியாது.

காமவெறி தான் காரணம் என்றால் உடலுறவுக்குரிய தகுதியை அறவே இழந்த பெண்களை அவர்கள் மனந்திருக்க மாட்டார்கள்.

காமவெறி தான் காரணம் என்றிருந்தால் மிகப்பெரும் அதிகாரம் படைத்த மன்னர் திருமணம் தான் செய்ய வேண்டும் என்பதில்லை. யாருக்கும் தெரியாமல் தினமும் ஒரு பெண்ணை அனுபவிக்க முடியும். பகிரங்கமாக அறிவித்துவிட்டு பல பெண்களைத் திருமணம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை.

காமவெறி தான் காரணம் என்றால் காமவெறியைத் தூண்டக் கூடிய உணவு வகைகளை அவர் உண்டு பசியும் பட்டினியும் இல்லாத வாழ்க்கை வாழ்ந்தவருக்குத் தான் அது சாத்தியப்படும்.

தொடர்ந்து பல நாட்கள் பட்டினி கிடந்தவருக்கு ஓரிரு பேரீச்சம் பழங்களை மட்டும் அல்லது காய்ந்த ரொட்டிகளை மட்டும், அல்லது குழைத்த மாவை மட்டும் உணவாகப் பெறக் கூடியவரிடம் என்ன காமஉணர்வு இருக்கப் போகின்றது?

பல வேளைகள் உண்ண ஏதும் இருக்காதா என்று கேட்டு விட்டு வீட்டில் இல்லை எனக் கூறியதும் நோன்பு நோற்றவரிடம் என்ன காம வெறி இருக்க முடியும்?

இயல்பிலேயே காமவெறி இருந்திருந்தாலும் அவருடைய வறுமை அதை முழுமையாக அப்புறப்படுத்தியிருக்க முடியும்.

இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டு அம்மாமனிதரின் வாழ்வை ஆராயும் பக்குவத்தை அனைவருக்கும் வழங்க வல்ல இறைவனை இறைஞ்சுகிறோம்.

03.05.2011. 9:26 AM

நூலின் பெயர்: அர்த்தமுள்ள இஸ்லாம்

ஆசிரியர். P.ஜைனுல் ஆபிதீன்

பக்கங்கள் : 48

விலை ரூ. 10.00

மார்க்கத்தின் எச்சரிக்கை!

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும். இந்த இணையதளத்தில் உள்ளவைகளைப் பிரச்சாரம் செய்வதற்காக யாரும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் சில சகோதரர்கள் நமது ஆக்கங்களை அப்படியே பயன்படுத்தி தமது ஆக்கம் போல் காட்டுகின்றனர்.

இன்னாருடைய கட்டுரையில் இருந்து, அல்லது புத்தகத்தில் இருந்து இது எடுக்கப்பட்டது என்று குறிப்பிடாமல் புகழடைவதற்காக இவ்வாறு செய்கின்றனர்.

சில இணைய தளங்களும் என்னுடைய ஆக்கங்களை அப்படியே வெளியிட்டு தம்முடைய ஆக்கம் போல் காட்டுகின்றன. மேலும் சில புத்தக வியாபாரிகளும் எனது நூல் உட்பட மற்றவர்களின் நூல்களைச் சிறிது மாற்றியமைத்து அனாமதேயங்களின் பெயர்களில் வெளியிட்டுச் சம்பாதிக்கின்றனர். உலகைப் பற்றியும் இவர்களுக்கு வெட்கம் இல்லை. மறுமையைப் பற்றியும் பயம் இல்லை.

இஸ்லாத்தில் இவ்வாறு செய்ய அனுமதி இல்லை. இவர்கள் நல்லது செய்யப் போய் மறுமையின் தண்டனைக்கு தம்மைத் தாமே உட்படுத்திக் கொள்கின்றனர்.

பிறரது ஆக்கங்களைப் பயன்படுத்துவோர் இது இன்னாருடைய ஆக்கம் என்று குறிப்பிடாமல் தன்னுடைய ஆக்கம் போல் காட்டுவது மார்க்க அடிப்படையில் குற்றமாகும்.

இவர்களுக்கு அல்லாஹ் விடுக்கும் எச்சரிக்கையை இங்கே சுட்டிக் காட்டுகிறோம்.

தாங்கள் செய்தவற்றுக்காக மகிழ்ச்சியடைந்து, தாம் செய்யாதவற்றுக்காகப் புகழப்பட வேண்டுமென விரும்புவோர் வேதனையிலிருந்து தப்பித்து விட்டார்கள் என்று நீர் நினைக்காதீர்! அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.

திருக்குர்ஆன் 3:188

அர்த்தமுள்ள இஸ்லாம்

முன்னுரை

உலகில் உள்ள மதங்களில் இஸ்லாம மிகச் சிறந்த மார்க்கமாகத் திகழ்கிறது.

ஆனால் இந்த மார்க்கம் எப்படிச் சிறந்ததாகவும், அர்த்தமுள்ளதாகவும் திகழ்கிறது என்பதை முஸ்லிமல்லாதவர்களும் முஸ்லிம்களில் பலரும் அறியாமல் உள்ளனர்.

கடவுளின் பெயரால் மனிதன் தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்வதும்,

கடவுளின் பெயரால் பொருளாதாரத்தைச் சீரழிப்பதும்,

கடவுளின் பெயரைச் சொல்லி மனிதர்களைக் கொடுமைப்படுத்துவதும்,

கடவுளுக்கும் மனிதனுக்குமிடையில் இடைத் தரகர்களை ஏற்படுத்தி சுரண்டுவதும்,

கடவுளின் பெயரால் மனிதனின் சுய மரியாதைக்கு வேட்டு வைப்பதும்

மனிதனைக் கடவுளாக்குவதும்

இன்னும் இது போன்ற காரணங்களால் தான் மதங்கள் வெறுக்கப்படுகின்றன.

ஆனால் இஸ்லாம் இந்த விமர்சனங்களுக்கு எவ்வாறு அப்பாற்பட்டு விளங்குகிறது? என்பதை திருக்குர்ஆன் மற்றும் நபிவழியில் தெளிவு படுத்துவதுடன் அறிவுப்பூர்வமான வாதங்களையும் எடுத்து வைக்கும் சிறந்த நூல்.

முஸ்லிம் அல்லாத நண்பர்களுக்கு இஸ்லாத்தை எளிதில் புரிய வைக்கும் நூல்

அர்த்தமுள்ள இஸ்லாம்

உலகில் உள்ள எல்லா மதங்களும் அர்த்தமுள்ள தத்துவங்கள் என்றே தம்மைப் பற்றிக் கூறிக் கொள்கின்றன.

ஆனால், சிந்தனையாளர்களின் பார்வையில் எல்லா மதங்களும் அர்த்தமற்றவையாகத் தோற்றமளிக்கின்றன.

மதங்கள் யாவும் அர்த்தமற்றவை  என்று கூறும் சிந்தனையாளர்கள் அறிவுபூர்வமான சில வாதங்களை முன் வைத்து வாதிடுகின்றனர்.

இந்த நிலையில் ஒரு மதம் அர்த்தமுள்ளதா? அல்லவா?  என்பதை முடிவு செய்ய வேண்டுமானால் சிந்தனையாளர்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு வாதத்துக்கும் அறிவுபூர்வமான மறுப்பை அந்த மதம் எடுத்து வைக்க வேண்டும்.

மேலும் வலிமையான வாதங்களை முன் வைத்து தன்னிடம் அர்த்தமுள்ளது என்பதையும் அந்த மதம் நிரூபிக்க வேண்டும்.

வலிமையான வாதங்களை முன் வைக்காமல், மாற்றுக் கருத்துடையோரின் வலுவான சான்றுகளையும் மறுக்காமல் தன்னை அர்த்தமுள்ள தத்துவமாக ஒரு மதம் கூறிக் கொண்டால் அதில் உண்மை இல்லை என்றே சிந்தனையாளர்கள் வருவார்கள்.

அரிசி மாவில் கோலம் போடுவதால் எறும்புகளுக்கு அது உணவாக அமையும்,

நெற்றியில் விபூதி பூசினால் தலையில் உள்ள நீரை அது உறிஞ்சும்

என்பது போன்ற பதில்களால் சிந்தனையாளர்களின் வலிமையான கேள்வியில் உள்ள நியாயத்தை மறைத்து விட முடியாது.

அஸ்திவாரம் இல்லாமல் கட்டடம் எழுப்பப்பட்டுள்ளது  என்று விமர்சனம் செய்யும் போது சுவற்றுக்கு அடிக்கப்பட்ட வண்ணம் எவ்வளவு அழகாக இருக்கிறது?  என்று பதில் கூற முடியாது. விழுந்து விடக் கூடிய கட்டடத்தின் சுவர் எந்த வண்ணத்தில் இருந்தாலும் பயன் இல்லை என்றே சிந்தனையாளர்கள் நினைப்பார்கள்.

மதங்கள் அர்த்தமற்றவை  எனக் கூறுவோர் அஸ்திவாரம் பற்றியும், அடிப்படைக் கொள்கைகள் பற்றியும் தான் கேள்வி எழுப்புகிறார்கள்.

எனவே ஒரு மதம் தன்னை அர்த்தமுள்ள தத்துவம் என்று கருதினால் எழுப்பப்படும் எதிர்க் கேள்விகளை உரிய முறையில் எதிர்கொள்வது அவசியம்.

நாமறிந்த வரை இஸ்லாம் தவிர எந்த மதமும் எதிர்க் கேள்விகளை உரிய விதத்தில் அணுகவில்லை.

மதங்கள் அர்த்தமற்றவை  எனக் கூறுவோர் எடுத்து வைக்கும் நியாயமான அனைத்துக் கேள்விகளுக்கும் அதை விட நியாயமான விடையை இஸ்லாம் அளிக்கின்றது.

1. கடவுளின் பெயரால் தன்னையே துன்புறுத்துதல்

மதத்தின் பெயராலும், கடவுளின் பெயராலும் மனிதர்கள் பல வகைகளிலும் தம்மைத் தாமே துன்புறுத்திக் கொள்கின்றனர்.

பக்தியின் பெயரால் மக்கள் தம்மைத் தாமே துன்புறுத்திக் கொள்வதை மதவாதிகள் ஊக்குவிக்கின்றனர்.

மனிதனைத் துன்பத்தில் ஆழ்த்தும் நடவடிக்கைகள் எப்படி அர்த்தமுள்ளவையாக இருக்கும்?  என்று சிந்தனையாளர்கள் நினைக்கின்றனர்.

நெருப்பை வளர்த்து ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் அதில் நடந்து செல்லுதல்,

நாக்கிலும், கன்னங்களிலும் சிறு ஈட்டியைக் குத்திக் கொள்ளுதல்,

சாட்டையால் தம்மைத் தாமே அடித்துக் காயப்படுத்திக் கொள்ளுதல்

குளிரிலும், வெயிலிலும் செருப்பு கூட அணியாமல் கால் நடையாக பல மைல் தூரம் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லுதல்,

வெடவெடக்கும் குளிரில், குளிர்ந்த நீரில் குளித்து விட்டு ஈரத்துணியுடன் கோவிலைச் சுற்றி வருதல்,

கரடு முரடான தரைகளில் ஆண்களும், பெண்களும் உருளுதல்,

தமது தலையில் தேங்காய் உடைத்து காயப்படுத்திக் கொள்ளுதல்,

படுத்திருக்கும் பெண்கள் மீது பூசாரி நடந்து செல்லுதல்,

சிறுவர்களை மண்ணுக்குள் உயிருடன் புதைத்து விட்டு வெளியே எடுத்தல்,

இயற்கையான உணர்வுகளுக்கு எதிராகத் துறவறம் பூணுதல்,

ஆடைகளைத் துறந்து விட்டு நிர்வாணமாக அலைதல்

இன்னும் இது போன்ற நடவடிக்கைகளின் காரணமாகவே மதங்கள் அர்த்தமற்றவை  என்று சிந்தனையாளர்கள் விமர்சனம் செய்கின்றனர்.

கருணையே வடிவான கடவுள் மனிதனைத் துன்புறுத்துவதில் இன்பம் காண்பவனா?

மற்றவர்களால் தனக்குத் துன்பங்கள் ஏற்படக் கூடாது என்று கவனமாகச் செயல்படும் மனிதன் தனக்குத் தானே தீங்குகளை மனமுவந்து வரவழைத்துக் கொள்கின்றானே? இந்த அளவுக்கு மனிதனின் சிந்தனையை மதங்கள் மழுங்கடித்து விட்டனவே?  என்று சிந்தனையாளர்களுக்கு ஏற்படும் கோபத்தின் விளைவு தான் மதங்கள் அர்த்தமற்றவை  என்ற விமர்சனம்.

இஸ்லாம் மார்க்கம் இது போன்ற எந்த நடவடிக்கைகளையும் ஆதரிக்கவில்லை.

ஆதரிக்காதது மட்டுமின்றி இவற்றைக் கடுமையாகவும் இஸ்லாம் எதிர்க்கின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்து மக்கள் தமக்கு துன்பங்கள் நேரும் போது தமது ஆடைகளைக் கிழித்துக் கொள்வார்கள். தமது கன்னத்தில் அறைந்து கொள்வார்கள். இந்தச் செயலைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு எச்சரிக்கை செய்தார்கள்.

கன்னங்களில் அடித்துக் கொள்பவனும், சட்டைகளைக் கிழித்துக் கொள்பவனும், மடத்தனமான வார்த்தைகளைக் கூறுபவனும் நம்மைச் சேர்ந்தவர்கள் அல்லர்.

நூல் : புகாரி 1297, 1298, 3519

தன்னைத் தானே ஒருவன் வேதனைப்படுத்திக் கொண்டால் அவனுக்கும், இஸ்லாத்துக்கும் எந்தச் சம்மந்தமுமில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாகப் பிரகடனம் செய்தார்கள்.

ஒரு முதியவர் தனது இரு புதல்வர்களால் நடத்திச் செல்லப்பட்டதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டார்கள். ஏன் இவர் நடந்து செல்கிறார்?  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விசாரித்தார்கள்.  நடந்து செல்வதாக இவர் நேர்ச்சை செய்து விட்டார்  என விடையளித்தனர். இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  இவர் தன்னைத் தானே வேதனைப்படுத்திக் கொள்வது அல்லாஹ்வுக்குத் தேவையற்றது  என்று கூறி விட்டு வாகனத்தில் ஏறிச் செல்லுமாறு அவருக்குக் கட்டளையிட்டார்கள்.

நூல்: புகாரி 1865, 6701

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நாள் (பள்ளிவாசலில்) உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு மனிதர் வெளியில் நின்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். அவரைப் பற்றி விசாரித்த போது  அவரது பெயர் அபூ இஸ்ராயீல்; (நாள் முழுவதும்) உட்காராமல் வெயிலில் நிற்பதாகவும், எவரிடமும் பேசுவதில்லை எனவும், நோன்பு நோற்பதாகவும் இவர் நேர்ச்சை செய்திருக்கிறார்  என்று மக்கள் கூறினார்கள். இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  அவரைப் பேசச் சொல்லுங்கள்! நிழலில் அமரச் சொல்லுங்கள்! நோன்பை மட்டும் அவர் முழுமைப்படுத்தட்டும்  என்று கட்டளை பிறப்பித்தார்கள்.

நூல்: புகாரி 6704

கடவுளின் அன்பைப் பெறலாம் என்பதற்காக இது போன்ற சிறிய அளவிலான துன்பத்தைக் கூட தனக்குத் தானே ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறி விட்டார்கள்.

பொதுவாக மக்கள் அனைவரும் துறவறம் பூணுவதில்லை என்றாலும் அது உயர்ந்த நிலை என்று மக்கள் நினைக்கிறார்கள். மதகுருமார்கள் போன்ற தகுதியைப் பெற்றவர்கள் துறவறம் பூணுதல் நல்லது என நம்புகிறார்கள். துறவறம் பூணாதவர்களை விட துறவறத்தைப் பூண்டவர் உயர்ந்தவர் என்றும் மக்கள் நம்புகின்றனர்.

ஆனால் இஸ்லாம் இதையும் எதிர்க்கிறது.

கடவுளுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணிப்பதாக ஒருவர் எண்ணிக் கொண்டு துறவறம் பூணுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையாகக் கண்டிக்கிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் உஸ்மான் என்ற தோழர் இருந்தார். அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் துறவறம் பூணுவதற்கு அனுமதி கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதியளிக்க மறுத்து விட்டனர். அவருக்கு அனுமதி அளித்திருந்தால் நாங்களும் ஆண்மை நீக்கம் செய்திருப்போம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மற்றொரு தோழர் ஸஅது பின் அபீவக்காஸ் கூறுகிறார்.

நூல்: புகாரி 5074

ஆண்மை நீக்கம் செய்து கொள்ள சிலர் அனுமதி கேட்ட போது ஏக இறைவனை நம்பியவர்களே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்ததை நீங்கள் தடை செய்து கொள்ளாதீர்கள்  என்ற திருக்குர்ஆன் வசனத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓதிக் காட்டினார்கள்.

நூல்: புகாரி 4615

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் எவ்வாறு இருக்கும்  என்பதை விசாரித்து அறிவதற்காக மூன்று பேர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியரிடம் வந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் பற்றி அவர்களிடம் தெரிவிக்கப்பட்ட போது அவர்கள் (எதிர்பார்த்ததை விட) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறைவாக இருப்பதாகக் கருதினார்கள்.  நபிகள் நாயகம் (ஸல்) எங்கே? நாம் எங்கே? அவர்களின் பாவங்களை அல்லாஹ் மன்னித்து விட்டான். (எனவே அவர்கள் குறைந்த அளவு வணக்கம் செய்வது போதுமானது)  என்று தமக்குள் கூறிக் கொண்டார்கள். அம்மூவரில் ஒருவர்  நான் என்றென்றும் இரவில் தொழுது கொண்டிருப்பேன்  எனக் கூறினார். இன்னொருவர்  நான் ஒரு நாள் விடாது நோன்பு நோற்று வருவேன்  என்றார். மற்றொருவர்  நான் பெண்களை விட்டு அறவே விலகியிருக்கப் போகிறேன்; திருமணமே செய்யப் போவதில்லை  என்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அம்மூவரிடமும் சென்று  இப்படியெல்லாம் பேசிக் கொண்டவர்கள் நீங்கள் தாமா? அறிந்து கொள்ளுங்கள்! நான் உங்களை விட இறைவனை அதிகம் அஞ்சுபவன். அப்படி இருந்தும் நான் (சில நாட்கள்) நோன்பு நோற்கிறேன். (சில நாட்கள்) நோன்பு நோற்காமலும் இருக்கிறேன். (சிறிது நேரம்) தொழுகிறேன். (சிறிது நேரம்) உறங்குகிறேன். பெண்களை மணமுடித்து வாழ்கிறேன். எனவே எனது வழிமுறையைப் புறக்கணிப்பவர் என்னைச் சேர்ந்தவரல்லர்  என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 5063

திருமணத்தின் மூலம் ஒருவர் கடவுளின் பரிசுகளைப் பெறுவார் என்ற அளவுக்கு அதை ஒரு தவமென இஸ்லாம் கருதுகிறது.

உங்களில் ஒருவர் தமது மனைவியுடன் இல்லறம் நடத்துவதும் நல்லறங்களில் ஒன்றாகும்  என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்கள்  அல்லாஹ்வின் தூதரே! எங்களின் உடல் இச்சையின் காரணமாக நாங்கள் இல்லறத்தில் ஈடுபடுகிறோம். இதற்குக் கூட (இறைவனிடம்) பரிசு கிடைக்குமா?  என்று கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  இறைவன் தடை செய்துள்ள வழிகளில் அதை அடைந்தால் அதற்குத் தண்டனை கிடைக்கும் அல்லவா? அது போல் தான் இறைவன் அனுமதித்த வழியில் அதை அடைந்தால் அதற்குப் பரிசு கிடைக்கும்  என்று விளக்கமளித்தார்கள்.

நூல்: முஸ்லிம் 1674

இஸ்லாத்தின் பார்வையில் துறவறம் பூண்டவர்கள் மற்றவர்களை விட எல்லா வகையிலும் தாழ்ந்தவர்களாவர்.

துறவறம் பூண்டவர்களுக்கு ஆண்மை இல்லை என்றால் அவரால் எந்தப் பிரச்சனையும் இல்லை. துறவறம் பூண்டவர்களுக்கு ஆண்மை இருந்தால் நிச்சயம் அவர்கள் தவறான வழியில் அந்த சுகத்தைப் பெற முயல்வார்கள்.

இது தான் மனிதனின் இயற்கை என்பதால் துறவறத்தை குற்றச் செயல் என்று இஸ்லாம் கூறுகிறது.

சில பேர் இல்லற சுகத்தை மட்டுமின்றி சொந்த பந்தங்கள் அனைத்தையும் உதறிவிட்டு காடோ செடியோ  என்று சென்று விடுகிறார்கள்.

இஸ்லாத்தின் பார்வையில் இவர்கள் இன்னும் தாழ்ந்தவர்களாவர்.

ஒரு மனிதன் தன்னைப் பெற்று வளர்த்த தாய், தந்தையருக்குச் சேவை செய்யக் கடமைப்பட்டுள்ளான். சொர்க்கத்தை அடைவதற்கான வழிகளில் அது தலையாயதாக அமைந்துள்ளது.

காடோ செடியோ  என்று புறப்பட்டவர்கள் பெற்றோருக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யாத குற்றவாளிகளாவர். அதனால் கிடைக்கின்ற பெரும் பேறுகளையெல்லாம் இழந்தவர்களாவர்.

பெற்றோரை மட்டுமின்றி உற்றார் உறவினருக்கு உதவுதல்,

அவர்கள் நோய்வாய்ப்பட்டால் விசாரித்தல்,

மரணம் ஏற்பட்ட இல்லம் சென்று ஆறுதல் கூறுதல்,

தீமையான காரியங்கள் நடப்பதைக் கண்டு அதை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தல்,

நன்மையான காரியங்களை மக்களுக்குச் சொல்லிக் கொடுத்தல்,

பொது நலத் தொண்டுகள் செய்தல்

என எண்ணற்ற நன்மைகளைத் துறவிகள் இழந்து விடுகின்றனர்.

எது எக்கேடு கெட்டால் எனக்கென்ன?  என்று  தனது குடும்பத்தையும், ஊரையும், உலகையும் விட்டுச் செல்வது எப்படி உயர்ந்த நிலையாக இருக்க முடியும்?  என்று இஸ்லாம் கேள்வி எழுப்புகிறது.

கடவுளுக்காக அனைத்தையும் துறக்கிறோம் என்று கூறிக் கொண்டு ஆடைகளைத் துறப்பதையும் இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் மட்டும் தனியாக இருக்கும் போது நிர்வாணமாக இருக்கலாமா? என்று நபிகள் நாயகத்திடம் தோழர்கள் கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  நாம் வெட்கப்படுவதற்கு அல்லாஹ் அதிகம் தகுதியுடையவன்  என விளக்கமளித்தார்கள்.

நூல்: திர்மிதீ 2693, 2718

யாருமே பார்க்காத போதும், கடவுள் நம்மைப் பார்க்கிறான் என்று எண்ணி நிர்வாணம் தவிர்க்க வேண்டும்.

மலஜலம் கழித்தல், இல்லறத்தில் ஈடுபடுதல் தவிர மற்ற எல்லா நேரத்திலும் மறைக்க வேண்டியவைகளை மறைத்தே தான் வாழ வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது.

இந்த உலகில் எங்களுக்கு எந்தத் தேவையும் இல்லை  என்று கூறி ஆடைகளை அவிழ்த்துத் திரியும் ஞானிகள்(?) தங்கள் கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால் ஒரு பருக்கையைக் கூட உண்ணாமலும், ஒரு சொட்டுத் தண்ணீரைக் கூட பருகாமலும் இருந்து காட்ட வேண்டும். இந்த இரண்டையும் எந்த நிர்வாணச் சாமியாரும் துறந்ததில்லை. துறக்கவும் முடியாது.

இந்த உலகை அறவே துறந்து வாழ்வது சாத்தியமில்லை என்பதை ஒவ்வொரு கவள உணவை உட்கொள்ளும் போதும் இவர்களே நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எனவே கடவுளுக்காக அனைத்தையும் துறக்கிறோம் என்ற வாதத்தில் ஒருவர் கூட உண்மையாளர்களாக இல்லை.

முழுமையாக உலகைத் துறப்பதை மட்டுமின்றி அறை குறையாக உலகைத் துறப்பதையும் கூட இஸ்லாம் மறுத்துரைக்கின்றது.

ஒவ்வொரு மனிதனும்

தனக்குச் செய்ய வேண்டிய கடமைகள்

தனது பெற்றோருக்குச் செய்யும் கடமைகள்

தனது மனைவிக்கு/ கணவனுக்கு/ செய்யும் கடமைகள்

தனது பிள்ளைகளுக்குச் செய்யும் கடமைகள்

மற்ற உறவினர்களுக்குச் செய்யும் கடமைகள்

உலகுக்குச் செய்ய வேண்டிய கடமைகள்

என அனைத்துக் கடமைகளையும் நிறைவேற்றியாக வேண்டும்.

ஆன்மீகத்தையும், கடவுளையும் காரணம் காட்டி இக்கடமைகளில் தவறி விடக் கூடாது என்று இஸ்லாம் அறிவுறுத்துகிறது.

கட்டிய மனைவியைக் கவனிக்காமல் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவு முழுவதும் வணக்கத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அப்துல்லாஹ் பின் அம்ர் என்ற தோழரைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேள்விப்பட்டு அவரிடம் சென்றார்கள்.  இவ்வாறு செய்யாதே! நோன்பு வை! வைக்காமலும் இரு! தொழவும் செய்! தூங்கவும் செய்! ஏனெனில் உனது உடம்புக்கு நீ செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன. உனது கண்களுக்கு நீ செய்ய வேண்டிய கடமைகளும் உள்ளன. உன் விருந்தினருக்கு நீ செய்ய வேண்டிய கடமைகளும் உள்ளன  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவுரை கூறினார்கள்.

நூல்: புகாரி 1975, 6134

கடவுளுக்காக அறவே தூங்காமல் விழித்திருப்பதும், உடலை வருத்திக் கொள்வதும் கூடாது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தி விட்டனர்.

மதங்களை எதிர்ப்பவர்கள் கூட மேற்கண்ட நடவடிக்கைகளை இஸ்லாம் எதிர்க்கும் அளவுக்கு எதிர்த்திருக்க மாட்டார்கள்.

அப்படி என்றால் நோன்பு என்ற பெயரில் வருடத்தில் ஒரு மாதம் பட்டினி கிடக்குமாறு இஸ்லாம் கூறுவது ஏன்? இது உடலை வருத்துவதில்லையா?

தினமும் ஐந்து நேரம் தொழ வேண்டும் எனக் கூறுவது ஏன்? இன்ன பிற வணக்கங்களைக் கடமையாக்கியது ஏன்? என்றெல்லாம் கேள்விகள் எழலாம்.

பகல் முழுவதும் உண்ணாமலும், பருகாமலும், குடும்ப வாழ்க்கையில் ஈடுபடாமலும் இருப்பது நோன்பு எனப்படும். இது உடலை வருத்திக் கொள்வது போல் தோன்றலாம். உண்மையில் உடலை வருத்துதலோ, உடலுக்குத் தீங்கு ஏற்படுத்துவதோ இதில் இல்லை.

நோன்பு நோற்காத போது இரவு பத்து மணிக்கு ஒருவன் படுக்கைக்குச் செல்கிறான். காலையில் எழுந்து பத்து மணிக்கு உணவு உட்கொள்கிறான். இரவு பத்து முதல் காலை பத்து வரை சுமார் 12 மணி நேரம் உண்ணாமலும், பருகாமலும் தான் மனிதன் இருக்கிறான்.

நோன்பு நோற்பவர், கிழக்கு வெளுத்தது முதல் (சுமார் காலை 5 மணி) சூரியன் மறையும் வரை (சுமார் மாலை 6 மணி) சுமார் 13 மணி நேரம் உண்பதில்லை.

சூரியன் மறைந்து நோன்பு துறந்தவுடனும், படுக்கைக்குச் செல்வதற்கு முன்பும், காலையில் சுமார் 4:30 மணிக்கும் ஆக மூன்று வேளை நோன்பு நோற்பவர் உண்ணுகிறார்.

உண்ணுகிற நேரம் தான் நோன்புக் காலங்களில் மாறுகிறது. உண்ணும் அளவில் மாற்றம் ஏதும் இல்லை.

தினமும் தனது உடலுக்கு எந்த அளவு உணவை ஒருவன் அளித்து வந்தானோ அதே அளவு உணவை நோன்பு நோற்கும் நாளிலும் அளிப்பதால் உடலுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. உடலை வேதனைப்படுத்துதல் என்பதும் இதில் இல்லை.

ஒரே வித்தியாசம் என்னவென்றால் இரவில் சாப்பிட்டதும் தூங்கி விடுவதால் தனது பசியை அவன் உணர்வதில்லை. பகலில் விழித்திருப்பதால் அதை உணர்கிறான்.

இவ்வாறு உணர்ந்து இறைவனுக்காக சில உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்வது அவனது உள்ளத்தைப் பண்படுத்தும்; பக்குவப்படுத்தும். உடலுக்கு ஒரு கேடும் ஏற்படுத்தாது.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.

திருக்குர்ஆன் 2:183

மனிதனை வதைப்பது நோன்பின் நோக்கமன்று. மாறாக படைத்த இறைவனுக்காக இவ்வாறு சிறிய தியாகம் செய்து பயிற்சி பெற்ற ஒருவன், அதே இறைவன் வலியுறுத்தும் ஏனைய நற்பண்புகளைத் தன் வாழ்வில் கடைபிடிப்பான் என்பதே நோன்பின் நோக்கம்.

தனக்கு உரிமையான உணவை இறைவன் தவிர்க்கச் சொல்கிறான் என்பதற்காக சிறிது நேரம் உணவைத் தியாகம் செய்பவன், தனக்கு உரிமையில்லாத பொருட்களைப் பிறரிடமிருந்து திருடி, கொள்ளையடித்து லஞ்சம் வாங்கி, மோசடி செய்து பறித்துக் கொள்ளத் துணிய மாட்டான்.

இந்தப் பயிற்சியைப் பெறாமல் ஒருவன் காலமெல்லாம் பட்டினி கிடந்தாலும் இறைவனிடம் அதற்கு எந்த மதிப்பும் இல்லை என்பது இஸ்லாத்தின் தீர்மானமான முடிவு.

யார் பொய் பேசுவதையும், தீய செயல்களையும் விட்டு விடவில்லையோ அவன் தண்ணீரையும், உணவையும் விட்டு விடுவதில் இறைவனுக்கு எந்தத் தேவையுமில்லை என்பது நபிமொழி.

நூல்: புகாரி 1903, 6057

மாபெரும் இலட்சியத்தை அடைவதற்கான பயிற்சியே நோன்பு  என்பதை இந்த நபிமொழியிலிருந்து அறியலாம்.

தொழுகை எனும் வணக்கமும் இது போன்ற பயிற்சியை மனிதன் பெறுவதற்காகவே இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இறைவன் மிகப் பெரியவன்; நான் அவனது கட்டளைக்குக் கட்டுப்பட வேண்டிய சிறியவன்  என்ற பயிற்சியை மனிதன் இதன் மூலம் பெறுகிறான்.

இவ்வுலகில் மனிதனைக் கவர்ந்திழுக்கக் கூடிய பல விஷயங்கள் உள்ளன. அவற்றில் ஈர்க்கப்படும் மனிதன் தவறான வழிகளிலேனும் அவற்றை அடைய முயல்வான்.

நமக்கு மேலே ஒருவன் கண்காணித்துக் கொண்டிருக்கிறான்  என்ற அச்சம் தான் அவனை இதிலிருந்து தடுத்து நிறுத்தும். முதலில் வைகறை நேரத் தொழுகையை ஒருவன் தொழுகிறான். இதனால் இறைவனைப் பற்றிய நினைவு அவனிடம் மிகைக்கிறது.

இவ்வுலக ஈடுபாடு இறைவனைப் பற்றிய நினைவைச் சிறிது சிறிதாகக் குறைக்கத் துவங்குகிறது. எனவே நண்பகல் நேரத் தொழுகையைத் தொழுகிறான். தொழுதவுடன் இறைவனைப் பற்றிய நினைவு மீண்டும் அவனிடம் மிகைக்கிறது.

மீண்டும் இவ்வுலக ஈடுபாடு இறைவனைப் பற்றிய நினைவைச் சிறிது சிறிதாகக் குறைக்கிறது. மாலை நேரத் தொழுகையைத் தொழுதவுடன் இறைவனைப் பற்றிய நினைவு அவனிடம் மீண்டும் ஏற்படுகிறது.

மீண்டும் இறைவனைப் பற்றிய நினைவு குறைய ஆரம்பிக்கிறது. சூரியன் மறையும் நேரத்தில் மீண்டும் தொழுகிறான். மீண்டும் இவ்வுலக ஈடுபாடு இறைவனைப் பற்றிய நினைவைச் சிறிது சிறிதாகக் குறைக்கிறது. எனவே இரவு நேரத் தொழுகையைத் தொழுகிறான். தொழுதவுடன் இறைவனைப் பற்றிய நினைவு மீண்டும் அவனிடம் மிகைக்கிறது. அந்த நினைவுடனேயே உறங்கச் செல்கிறான். இவ்வாறு நாள் முழுவதும் இறைவனைப் பற்றிய அச்சத்துடன் வாழும் ஒருவன் எல்லா வகையிலும் நல்லவனாகத் திகழ்வான். தனக்குக் கேடு தரும் காரியத்தையும் இவன் செய்ய மாட்டான். பிறருக்குக் கேடு தரும் காரியத்தையும் செய்ய மாட்டான். தொழுது விட்டு எல்லா அக்கிரமங்களிலும் ஒருவன் ஈடுபட்டு வந்தால் அத்தொழுகைக்கு இறைவனிடம் எந்த மதிப்பும் கிடையாது.

தொழுகையை நிலைநாட்டுவீராக! தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும். அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான்.

திருக்குர்ஆன் 29:45

தீமைகளை விட்டும், வெட்கக்கேடானவற்றை விட்டும் தடுப்பதற்கான பயிற்சியே தொழுகை என்பதை இவ்வசனத்திலிருந்து அறியலாம்.

இந்தப் பயிற்சியை ஒருவன் பெறவில்லையானால் அவனது தொழுகை, இறைவன் பார்வையில் தொழுகையே இல்லை என்பதையும் இவ்வசனம் மிகத் தெளிவாகக் கூறுகின்றது.

ஹஜ்ஜுப் பெருநாளின் போது ஆடு, மாடு, ஒட்டகங்களை வசதி படைத்தவர்கள் பலியிட வேண்டுமென இஸ்லாம் கூறுகின்றது.

இவ்வாறு பலியிடப்படும் பிராணிகளின் மாமிசமோ, இரத்தமோ, ஏனைய பொருட்களோ இறைவனுக்குத் தேவை என்பதற்காக இஸ்லாம் பலியிடச் சொல்லவில்லை.

பெருநாள் தினத்தில் ஏழைகள் மகிழ்ச்சியாகவும், பட்டினியின்றியும் இருக்க வேண்டும் என்பதும், இறையச்சத்தை அதிகப்படுத்திக் கொள்வதும் தான் இதன் நோக்கமாகும்.

அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும்.

திருக்குர்ஆன் 22:37

இந்தப் பலியிடுதலிலும் கூட இறையச்சம் என்ற பயிற்சி தான் நோக்கம் என்பதை இவ்வசனம் தெளிவுபடுத்துகின்றது.

இஸ்லாத்தின் எல்லா வணக்க வழிபாடுகளிலும் இந்தப் பயிற்சி தான் பிரதான நோக்கம். இந்தப் பயிற்சி கூட மனிதன் மனிதனாக வாழ்வதற்காகத் தான்.

திருட்டு ஒரு தவறான தொழில் என்பது திருடுபவனுக்கு நன்றாகத் தெரியும். மதுபானம் விற்பது, விபச்சாரத் தொழில் நடத்துவது, லஞ்சம் வாங்குவது, இன்ன பிற மோசடிகளில் ஈடுபடுவது ஆகியவை தவறானவை தான் என்பது அதில் ஈடுபடுவோருக்கு நன்றாகத் தெரியும். தவறு எனத் தெரிந்து கொண்டு தான் அவற்றைச் செய்து வருகின்றனர்.

இத்தகையோரிடம் இவற்றைச் செய்ய வேண்டாம் எனக் கூறினால் அவர்களிடமிருந்து இரண்டு கேள்விகள் பிறக்கின்றன.

1இத்தகைய தொழில்களைச் செய்வதால் எனக்கு என்ன கேடு ஏற்பட்டு விடும்?

2 இவற்றை விட்டு விலகிக் கொண்டால் எனக்கு ஏற்படும் நன்மை என்ன?

இது தான் அந்தக் கேள்விகள்.

உன்னை ஆட்சியாளர்கள் தண்டிப்பார்கள்; சிறையில் வாட வேண்டி வரும்; அதனால் திருட்டிலிருந்து விலகிக் கொள்!  என்று தான் அவனிடம் கூற முடியும்.

அவனிடத்தில் இதற்கு மறுப்பு தயாராக இருக்கின்றது.

நான் திருடுவதைப் பெரும்பாலும் கண்டுபிடிக்க முடியாது.

நூறு முறை நான் திருடினால் ஒரு முறை பிடிபடுவதே சந்தேகம்.

நூறு திருடர்களில் ஒருவர் தாம் பிடிபடுகிறார்.

பல முறை திருடி நான் சேர்த்த செல்வத்திற்காக சிறிய தண்டனை பெற நான் தயார். அல்லது நான் பிடிக்கப்பட்டால் சிறந்த வக்கீலை நியமித்து குற்றமற்றவன் என்று நிரூபித்து விடுவேன் அல்லது நீதிபதியையே விலைக்கு வாங்கி விடுவேன்.

இவற்றையெல்லாம் மீறிச் சிறையில் தள்ளப்பட்டாலும் நான் செத்து விடப் போவதில்லை. வெளியில் இருந்த போது நான் அனுபவித்ததை எல்லாம் உள்ளேயும் அனுபவிக்கும் வழி எனக்குத் தெரியும் என்பான்.

திருட்டு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவதால் எனக்கு எந்தக் கேடும் ஏற்படாது. அப்படி ஏற்பட்டாலும் அதைத் தாங்கும் வலிமை எனக்கு உண்டு  என்று ஒருவன் நம்புவதே குற்றங்களில் தொடர்ந்து அவன் ஈடுபடுவதற்கு முக்கியமான காரணமாக அமைந்துள்ளது.

என்ன கேடு ஏற்படும் என்ற கேள்விக்காவது ஏதோ பதில் சொல்லலாம்.  இவற்றை விட்டு நான் விலகிக் கொண்டால் எனக்குக் கிடைக்கும் நன்மை என்ன?  என்ற கேள்விக்கு எந்த விடையும் கூற முடியாது. இஸ்லாம் மட்டுமே இரண்டு கேள்விகளுக்கும் பொருத்தமான விடையை அளிக்கின்றது.

சர்வ சக்தி மிக்க இறைவன் ஒருவன் இருக்கிறான்; அவன் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறான்; அவனை யாராலும் ஏமாற்றவோ, விலை பேசவோ முடியாது. உலகம் அழிக்கப்பட்ட பின் அனைவரும் அந்த வல்லவனால் உயிர்ப்பிக்கப்பட்டு அவன் முன்னே நிறுத்தப்படுவார்கள். தீயவர்களுக்குக் கடுமையான தண்டனையையும் நல்லவர்களுக்கு மகத்தான பரிசுகளையும் அவன் வழங்குவான்  என்று இஸ்லாம் கூறுகிறது.

இதில் உறுதியான நம்பிக்கை கொண்டவன் ஒருக்காலும் தீய செயல்களில் ஈடுபட மாட்டான். தன்னையுமறியாமல் தீய செயல்களில் ஈடுபட்டாலும் உடனடியாகத் தன்னைத் திருத்திக் கொள்வான்.

ஒவ்வொரு மனிதனும் தனது பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும், மற்ற உறவினர்களுக்கும், உலகுக்கும் செய்ய வேண்டிய கடமைகளில் பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலும், மனிதனுக்கு எந்தக் கேடும் விளைவிக்காத வகையிலும் தான் இஸ்லாம் கூறும் வணக்கங்கள் அமைந்துள்ளன.

தம்மைத் தாமே துன்புறுத்திக் கொள்ளுதல்

தீ மிதித்தல்

தரைகளில் உருளுதல்

துறவறம் பூணுதல்

நிர்வாணமாக அலைதல்

போன்ற எந்த நடவடிக்கைகளையும் இஸ்லாம் ஆதரிக்கவில்லை.

ஆதரிக்காதது மட்டுமின்றி இவற்றைக் கடுமையாகவும் எதிர்க்கின்றது.

எனவே  மதங்கள் மனிதனைத் துன்புறுத்துகின்றன  என்ற விமர்சனம் இஸ்லாத்திற்குப் பொருந்தாது

2. மனிதனை மறந்து விட்டு கடவுளை நினைத்தல்

மதங்கள் அர்த்தமற்றவை  என்று விமர்சனம் செய்யும் சிந்தனையாளர்கள் எடுத்து வைக்கும் மற்றொரு வாதம் மதங்கள் கடவுளின் பெயரால் மனிதனை மறக்கச் செய்கின்றன  என்பதாகும்.

அன்றாடம் உண்பதற்கு உணவில்லாத கோடிக்கணக்கான மக்கள் இருக்கும் போது கோவில் உண்டியலில் கோடிக்கணக்கான ரூபாய்கள் போடப்படுகின்றன.

ஒரு மூக்குத்திக்குக் கூட வழியில்லாத ஏழைப் பெண்கள் கோடிக் கணக்கில் இருக்கும் போது சிலைகளும், கலசங்களும், தேர்களும் தங்கத்தால் செய்யப்படுகின்றன. செல்வந்தர்கள் இதற்காக வாரி வழங்குகின்றனர்.

தேவையுள்ள மனிதர்களுக்குச் செலவிடாமல் எந்தத் தேவையுமற்ற கடவுளுக்குப் பல்லாயிரம் கோடி ரூபாய்கள் செலவிடப்படும் மனித நேயமற்ற காரியங்களைப் பார்க்கும் சிந்தனையாளர்கள்  மதங்கள் அர்த்தமற்றவை  என்று கருதுகின்றனர்.

இஸ்லாத்தைப் பொருத்த வரை இந்த விமர்சனமும் பொருந்தாது. ஏனெனில் இது போன்ற காரியங்களையும் இஸ்லாம் மறுக்கிறது.

கடவுளுக்குச் செய்ய வேண்டிய வணக்கங்கள் இரு வகைகளாக இஸ்லாத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

ஒன்று உடலால் செய்வது.

மற்றொன்று பொருளாதாரத்தால் செய்வது.

தொழுகை, நோன்பு போன்றவை உடலால் செய்யப்படும் வணக்கங்களாகும்.

உடலால் செய்யும் வணக்கங்களை இறைவனுக்காக மட்டுமே செய்ய வேண்டும். வேறு எவருக்காகவும் செய்யக் கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது.

மனிதர்கள் மறக்கப்படுகிறார்கள்  என்ற விமர்சனம் இதில் எழாது.

பொருளாதாரத்தைச் செலவிடுவதில் தான் மனிதர்கள் மறக்கப்படுகிறார்கள் என்ற விமர்சனம் எழும். இது பற்றி இஸ்லாம் கூறுவது என்ன?

மனிதர்கள் நோய் வாய்ப்படுகிறார்கள்.

வறுமையில் உழல்கிறார்கள்.

மன நிம்மதியை இழக்கிறார்கள்.

குழந்தைச் செல்வம் கிடைக்காமல் கவலைப்படுகிறார்கள்.

இது போன்ற துன்பங்களைச் சந்திக்கும் போது  கடவுளே எனக்கு இந்தக் குறையை நிவர்த்தி செய்தால் நான் உனக்காக ஒரு லட்சம் ரூபாய் செலவிடுகிறேன்  என்பது போல் மனிதர்கள் நேமிதம் (நேர்ச்சை) செய்து கொள்கிறார்கள்.

அவர்கள் நினைத்த காரியம் நிறைவேறினால் எந்தக் கடவுளுக்கு நேர்ச்சை செய்தார்களோ அவரது ஆலயத்தில் அந்தக் காணிக்கையைச் செலுத்துகின்றனர்.

துன்பத்திலிருப்பவன் இறைவனுக்காக இவ்வாறு நேர்ச்சை செய்வதை இஸ்லாமும் அனுமதிக்கின்றது.

ஆனால் இறைவனுக்காக பொருளாதாரம் குறித்த எந்த நேர்ச்சையைச் செய்தாலும் அவற்றைப் பள்ளிவாசல் உண்டியலில் போடக் கூடாது.

மாறாக ஏழைகளுக்குத் தான் செலவிட வேண்டும்.

கடவுளே உனக்காகப் பத்தாயிரம் ரூபாய் செலவு செய்கிறேன்  என்று ஒருவர் முடிவு செய்தால் ஏழைகளின் உணவு, உடை, மருத்துவச் செலவு போன்றவற்றுக்காகத் தான் அதைச் செலவிட வேண்டும்.

கடவுளுக்காக நேர்ச்சை செய்த பணத்தில் பள்ளிவாசல் கட்டுவதோ, பள்ளிவாசலுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுப்பதோ கூடாது என்பது இஸ்லாத்தின் கட்டளை.

சிந்தனையாளர்கள் எதிர்பார்ப்பது போல்  கடவுளின் பெயரால் எந்தப் பொருளாதாரத்தையும் செலவிடாதே  என்று ஒருவனிடம் கூறினால், அதை ஏழைக்குத் தான் அவன் செலவிடுவான் என்று கூற முடியாது.

கடவுளுக்கும் செலவிடாமல் ஏழைக்கும் செலவிடாமல் இருந்து விடுவான்.

ஏழைக்குச் செலவிடுவது தான் கடவுளுக்குச் செலவிடுவது  எனக் கூறும் போது கண்டிப்பாக ஏழைகள் பயன் பெற்று விடுவார்கள்.

சிந்தனையாளர்கள் எதிர்பார்ப்பதை விட இது சிறந்ததாக அமைந்துள்ளது.

இவ்வுலகத்தை இறைவன் ஒரு நாள் அழித்து விட்டு எல்லா மனிதர்களையும் மீண்டும் உயிர்ப்பித்து விசாரணை நடத்துவான். மனிதர்களின் நன்மை தீமைகளுக்கு ஏற்ப பரிசுகளையோ, தண்டனைகளையோ இறைவன் வழங்குவான்  என்பது இஸ்லாத்தின் நம்பிக்கை. இது நியாயத் தீர்ப்பு நாள் எனப்படுகிறது.

நியாயத் தீர்ப்பு நாளில் நடைபெறவுள்ள விசாரணையின் ஒரு காட்சியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு விளக்குகின்றனர்.

மனிதனே! நான் நோயுற்றிருந்த போது நோய் விசாரிக்க ஏன் நீ வரவில்லை  என்று நியாயத் தீர்ப்பு நாளில் இறைவன் கேட்பான்.  என் இறைவா! நீயோ அகிலங்களைப் படைத்துப் பராமரிப்பவன். உன்னை நான் எப்படி நோய் விசாரிக்க முடியும்?  என்று மனிதன் பதிலளிப்பான்.  எனது அடியான் ஒருவன் நோயுற்றதை நீ அறிந்தும் அவனை நீ நோய் விசாரிக்கச் செல்லவில்லை. அவனை நீ நோய் விசாரிக்கச் சென்றிருந்தால் அவனிடத்தில் என்னைக் கண்டிருப்பாய்  என்று இறைவன் கூறுவான்.  மனிதனே! உன்னிடம் நான் உணவு கேட்டு வந்த போது எனக்கு உணவளிக்க மறுத்து விட்டாயே?  என்று இறைவன் மீண்டும் கேட்பான்.  நீயோ அகிலத்தையும் படைத்துப் பராமரிப்பவனாக இருக்கிறாய். நான் உனக்கு எவ்வாறு உணவளிக்க இயலும்?  என்று மனிதன் கூறுவான்.  என் அடியான் உன்னிடம் உணவு கேட்டு வந்த போது அவனுக்கு நீ உணவளிக்க மறுத்தது உனக்குத் தெரியாதா? அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அங்கே என்னைக் கண்டிருப்பாய்  என்று இறைவன் கூறுவான்.  மனிதனே! உன்னிடம் நான் தண்ணீர் கேட்டு வந்த போது எனக்குத் தண்ணீர் தர மறுத்து விட்டாயே?  என்று இறைவன் மீண்டும் கேட்பான்.  என் இறைவா! அகிலத்தின் அதிபதியான உனக்கு நான் எவ்வாறு தண்ணீர் தர இயலும்?  என்று மனிதன் கூறுவான்.  எனது அடியான் ஒருவன் உன்னிடம் தண்ணீர் கேட்டு வந்த போது அவனுக்கு நீ தண்ணீர் புகட்டவில்லை. அவனுக்குத் தண்ணீர் புகட்டியிருந்தால் அங்கே என்னைக் கண்டிருப்பாய்  என்று இறைவன் கூறுவான். இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 4661

மனிதனுக்கு உதவுவது தான் இறைவனுக்குச் செய்யும் வணக்கம்  என்பதை இறைவனின் இந்த விசாரணை முறையிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

இஸ்லாத்தில் தொழுகை, நோன்புக்கு அடுத்த கடமையாக ஸகாத் எனும் கடமை உள்ளது.

வசதியுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் தனது சொத்துக் கணக்கைப் பார்த்து, அதில் இரண்டரை சதவிகிதம் வழங்க வேண்டும். வயல்களில் உற்பத்தியாகும் பொருட்களில் மானாவாரிப் பயிர்களாக இருந்தால் ஐந்து சதவிகிதமும் மற்ற பயிர்களில் பத்து சதவிகிதமும் வழங்க வேண்டும். ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய கால்நடைகளிலும் குறிப்பிட்ட சதவிகிதத்தை வழங்க வேண்டும். இதுவே ஸகாத் எனப்படுகிறது.

இதை யாருக்கு வழங்க வேண்டும்? பள்ளிவாசல் கட்டுவதற்கோ, மராமத்துச் செய்வதற்கோ, அதன் நிர்வாகப் பணிகளுக்கோ செலவிட வேண்டுமா? செலவிடக் கூடாது என்று இஸ்லாம் திட்டவட்டமாக அறிவிக்கிறது.

யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டிய (முஸ்லிமல்லாத)வர்களுக்கும், அடிமை(களை விடுதலை செய்வதற்)கும், கடன்பட்டோருக்கும், அல்லாஹ்வின் பாதையிலும், நாடோடிகளுக்கும் தர்மங்கள் உரியனவாகும். இது அல்லாஹ்வின் கடமை. அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.

திருக்குர்ஆன் 9:60

இந்த எட்டு வழிகளில் தான் அதைச் செலவிட வேண்டும். இந்த எட்டுமே மனிதர்களுக்கானது தான். மனிதர்களுக்கு உதவுவதை மார்க்கத்தின் ஐந்து கடமைகளில் ஒரு கடமையாக இஸ்லாம் ஆக்கியுள்ளது.

செலவிட வேண்டிய எட்டு வழிகளில் முஸ்லிமல்லாத மக்களுக்கு வழங்குவதையும் குறிப்பிட்டு மதம் கடந்த மனித நேயத்தை இஸ்லாம் பேணுகிறது.

கடவுளை மற! மனிதனை நினை!  என்பார்கள்.

மனிதனை நினைப்பதற்கு கடவுளை மறக்கத் தேவையில்லை. கடவுளை இஸ்லாம் கூறுகிற படி நினைத்தால் ஏழைகள் அதிகமான நன்மைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள்.

திருக்குர்ஆனில் பிறருக்கு வாரி வழங்குவது பற்றி அதிகமான அளவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

(சொத்தைப்) பங்கிடும் போது உறவினர்களோ, அனாதைகளோ, ஏழைகளோ வந்து விட்டால் அதில் அவர்களுக்கும் வழங்குங்கள்! அவர்களுக்கு நல்ல சொல்லையே கூறுங்கள்!

திருக்குர்ஆன் 4:8

உறவினருக்கும், ஏழைக்கும், நாடோடிக்கும் அவரவரின் உரிமையை வழங்குவீராக! ஒரேயடியாக வீண் விரயம் செய்து விடாதீர்!

திருக்குர்ஆன் 17:26

உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தோருக்கும் உதவ மாட்டோம் என்று செல்வமும், வசதியும் உடையோர் சத்தியம் செய்ய வேண்டாம். மன்னித்து அலட்சியம் செய்யட்டும். அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன் 24:22

உறவினருக்கும், ஏழைக்கும், நாடோடிக்கும் அவர்களின் உரிமையை வழங்குவீராக! அல்லாஹ்வின் முகத்தை நாடுவோருக்கு இதுவே சிறந்தது. அவர்களே வெற்றி பெற்றோர்.

திருக்குர்ஆன் 30:38

அவனை (அல்லாஹ்வை) நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைபட்டவருக்கும் உணவளிப்பார்கள். அல்லாஹ்வின் முகத்துக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம். உங்களிடமிருந்து பிரதிபலனையோ, நன்றியையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எங்கள் இறைவனிடமிருந்து கடுமையும், நெருக்கடியும் நிறைந்த நாளை நாங்கள் அஞ்சுகிறோம்  (எனக் கூறுவார்கள்.)

திருக்குர்ஆன் 76:8,9,10

குற்றவாளிகளிடம்  உங்களை நரகத்தில் சேர்த்தது எது?  என்று (நல்லோர்) விசாரிப்பார்கள்.  நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை  எனக் (குற்றவாளிகள்) கூறுவார்கள்.

திருக்குர்ஆன் 74:40 41, 42, 43, 44

அவர்களது செல்வங்களில் யாசிப்பவர்க்கும், இல்லாதவருக்கும் அறியப்பட்ட உரிமை உள்ளது.

திருக்குர்ஆன் 70:24

எனவே அனாதைகளை அடக்குமுறை செய்யாதீர்! யாசிப்பவரை விரட்டாதீர்!

திருக்குர்ஆன் 93:10

கடன் வாங்கிய) அவன் சிரமப்படுபவனாக இருந்தால் வசதி ஏற்படும் வரை அவகாசம் கொடுக்க வேண்டும். நீங்கள் அறிந்து கொண்டால் அதைத் தர்மமாக்கி விடுவது உங்களுக்குச் சிறந்தது.

திருக்குர்ஆன் 2:280

அல்லாஹ்வுக்காக அழகிய கடன் வழங்குவோர் யார்? அதை அவருக்குப் பன்மடங்காக (இறைவன்) பெருக்குவான். அல்லாஹ் குறைவாகவும் வழங்குகிறான். தாராளமாகவும் வழங்குகிறான். அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.

திருக்குர்ஆன் 2:245

தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன் மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.

திருக்குர்ஆன் 2:261

அல்லாஹ்வின் பாதையில் தமது செல்வங்களைச் செலவிட்டு, பின்னர் செலவிட்டதைச் சொல்லிக் காட்டாமலும், தொல்லை தராமலும் இருப்போருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உள்ளது. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 2:262

தர்மம் செய்து விட்டு அதைத் தொடர்ந்து, தொல்லை கொடுப்பதை விட அழகிய சொற்களைக் கூறுவதும், மன்னிப்பதும் சிறந்தது. அல்லாஹ் தேவையற்றவன்; சகிப்புத் தன்மை மிக்கவன்.

திருக்குர்ஆன் 2:261

அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்காகவும், தமக்குள்ளே இருக்கும் உறுதியான நம்பிக்கைக்காகவும் தமது செல்வங்களை (நல்வழியில்) செலவிடுவோரின் உதாரணம், உயரமான இடத்தில் அமைந்த தோட்டம். பெருமழை விழுந்ததும் அத் தோட்டம் இருமடங்காக அதன் உணவுப் பொருட்களை வழங்குகிறது. பெருமழை விழாவிட்டாலும் தூரல் (போதும்). நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன்.

திருக்குர்ஆன் 2:265

நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அது உங்களுக்கே. அல்லாஹ்வின் திருப்தியைப் பெறவே செலவிடுகிறீர்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் உங்களுக்கே அது முழுமையாக வழங்கப்படும். நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்.

திருக்குர்ஆன் 2:272

தர்மம் செய்யும் ஆண்களுக்கும், பெண்களுக்கும், அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுத்தோருக்கும் பன்மடங்காகக் கொடுக்கப்படும். அவர்களுக்கு மதிப்புமிக்க கூலி உண்டு.

திருக்குர்ஆன் 57:18

தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர்.  நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும், அனாதைகளுக்காகவும், ஏழைகளுக்காகவும், நாடோடிகளுக்காகவும் (செலவிட வேண்டும்.) நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்  எனக் கூறுவீராக!

திருக்குர்ஆன் 2:215

அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள்! பெருமையடித்து, கர்வம் கொள்ளும் எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான்.

திருக்குர்ஆன் 4:36

உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று. மாறாக அல்லாஹ், இறுதி நாள், வானவர்கள், வேதம், மற்றும் நபிமார்களை நம்புவோரும் உறவினர்கள், அனாதைகள், ஏழைகள், நாடோடிகள், யாசிப்போர், மற்றும் அடிமைகளை விடுதலை செய்வதற்கு (மன) விருப்பத்துடன் செல்வத்தை வழங்குவோரும், தொழுகையை நிலை நாட்டுவோரும், ஸகாத்தை வழங்குவோரும், வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுவோரும், வறுமை, நோய், மற்றும் போர்க்களத்தில் சகித்துக் கொள்வோருமே நன்மை செய்பவர்கள். அவர்களே உண்மை கூறியவர்கள். அவர்களே (இறைவனை) அஞ்சுபவர்கள்.

திருக்குர்ஆன் 2:177

மனிதர்களுக்கு உதவுவது தான் கடவுளுக்குச் செய்யும் வணக்கம் என்பதை மேற்கண்ட வசனங்களிருந்து அறியலாம். எனவே கடவுளின் பெயரால் மனிதனை மறக்கச் செய்யும் குற்றத்தை இஸ்லாம் செய்யவில்லை.

3கடவுளின் பெயரால் அக்கிரமங்கள் நியாயப்படுத்தப்படுதல்

மேலோட்டமாகப் பார்த்தாலே அநியாயமாகவும், அக்கிரமமாகவும் தென்படுகின்ற பல காரியங்கள் மதத்தின் பெயரால் நியாயப்படுத்தப் படுகின்றன. மதங்கள் அர்த்தமற்றவை என்ற முடிவுக்கு வருவதற்கு இது போன்ற காரியங்களும் காரணங்களாக அமைந்துள்ளன.

கடவுளை வழிபாடு செய்யும் ஆலயங்களில் பாரபட்சம் காட்டப்படுகிறது. குறிப்பிட்ட இனத்தவர்கள் கடவுளுக்கு மிகவும் நெருக்கமாகச் சென்று வழிபாடு செய்யலாம். மற்றும் சிலர் தூரத்தில் நின்று தான் வழிபாடு நடத்த வேண்டும். இன்னும் சிலர் ஆலயத்திற்குள் நுழையவே கூடாது என்ற நடைமுறையைச் சிந்தனையாளர்கள் காண்கிறார்கள். கடவுளின் பெயரால் இது நியாயப்படுத்தப் படுவதையும் பார்க்கிறார்கள்.

கட்டணம் செலுத்துவோருக்கு கடவுளை வழிபடுவதில் முன்னுரிமை அளிக்கப்படுவதையும், தர்ம தரிசனம் செய்பவர்கள் பின்னுக்குத் தள்ளப்படுவதையும் காண்கிறார்கள்.

முக்கியப் பிரமுகர்கள் வரும் போது பரிவட்டம் கட்டி தனி மரியாதையும், முதல் மரியாதையும் செய்யப்படுவதையும் சிந்தனையாளர்கள் காண்கிறார்கள்.

வழிபாட்டுத் தலங்களில் மட்டுமின்றி ஊரிலும், தெருவிலும் கூட சிலர் புழு பூச்சிகளை விட கேவலமாக நடத்தப்படுகின்றனர்.

தொட்டாலும், பட்டாலும் தீட்டு

சில வீதிகளில் நடமாடத் தடை

தேநீர்க் கடைகளில் தனித் தனிக் குவளைகள்

செருப்பணியத் தடை

பெண்கள் ஜாக்கெட் அணியத் தடை

என்றெல்லாம் மனிதனுக்கு மனிதன் செய்யும் அக்கிரமங்களையும், இதை மதத்தின் பெயராலேயே, கடவுளின் பெயராலேயே செய்வதையும் காண்கின்றனர்.

கடவுள் இப்படித் தான் மனிதர்களைப் படைத்திருக்கிறான். இதை ஏற்றுத் தான் ஆக வேண்டும்  என்று வேத நூல்கள் கூறுவதையும் காண்கின்றனர்.

இந்த அக்கிரமங்களை நியாயப்படுத்தி விட்டு மதங்கள் அர்த்தமுள்ளவை  என்று கூறுவதைச் சிந்தனையாளர்களால் ஏற்க முடியவில்லை.

ஆனால் இஸ்லாத்திற்கு எதிராக இந்த விமர்சனத்தைச் செய்ய முடியாது. ஏனெனில் இஸ்லாம் இதைக் கடுமையாக எதிர்க்கின்றது.

மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.

திருக்குர்ஆன் 49:13

இறைவன் நேரடியாக ஒரு ஜோடி மனிதரைத் தான் படைத்தான். அவர்களிலிருந்து தான் இன்று உலகில் வாழும் அத்தனை மாந்தரும் பல்கிப் பெருகியிருக்கிறார்கள் என்று இவ்வசனத்தின் மூலம் அல்லாஹ் பிரகடனம் செய்கிறான்.

மனித குலம் முழுமையும் ஒரு தாய் தந்தையிலிருந்து தோன்றியவர்கள் என்றால் அவர்களுக்கிடையே பிறப்பின் அடிப்படையில் எந்த ஏற்றத் தாழ்வும் இருக்க முடியாது.

ஒரு தாய் தந்தைக்குப் பிறந்த இரண்டு மகன்களில் ஒருவனை பிறப்பால் உயர்ந்தவன்  என்றும் மற்றவனை பிறப்பால் தாழ்ந்தவன்  என்றும் எவரும் கூற மாட்டோம்.

இத்தகைய சகோதரத்துவம் தான் மனித குலத்துக்கு மத்தியில் உள்ளது என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

மனிதன் தனது முயற்சியால் அடையக் கூடிய கல்வி, பதவி, ஆற்றல், திறமை, நற்பண்புகள், நன்னடத்தை போன்றவற்றால் உயர்ந்தவனாக ஆகலாமே தவிர, குறிப்பிட்ட குடும்பத்தில் பிறந்ததால் உயர்ந்தவனாக ஆக முடியாது  என்பதையும் மேற்கண்ட வசனத்திலிருந்து அறியலாம்.

இதை வெறும் வறட்டுத் தத்துவமாக மட்டும் இஸ்லாம் கூறவில்லை. 14 நூற்றாண்டுகளாக நடைமுறைப்படுத்தியும் வருகிறது.

மனிதர்கள் ஆதாம் ஏவாளிலிருந்து தோன்றினார்கள்  என்று கிறித்தவ மதமும் கூறுகிறது.

ஆனாலும் இஸ்லாம் மட்டுமே இதை நடைமுறைப்படுத்தி வருகிறது.

கிறித்தவம் நடைமுறைப்படுத்தவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

நாடார் கிறித்தவர், தலித் கிறித்தவர் என்றெல்லாம் அவர்களின் முந்தைய ஜாதியும், அதனால் ஏற்படுத்தப்பட்ட ஏற்றத் தாழ்வும் கிறித்தவ மதத்தில் தொடர்வது போல இஸ்லாத்தில் தொடர்வதில்லை. இருவருக்கும் தனித் தனி தேவாலயங்கள் இருப்பது போல் முஸ்லிம்களிடையே இல்லை.

நாடார் முஸ்லிம், தலித் முஸ்லிம் என்பன போன்ற சொற்கள் கூட முஸ்லிம்களிடம் கிடையாது. எந்தச் சாதியைச் சேர்ந்தவன் இஸ்லாத்தை ஏற்றாலும் அவனிடம் இருந்த சாதி அந்த நிமிடமே நீங்கி விடும். அவன் முஸ்லிம் மட்டுமே.

முஸ்லிம்களில் சிலர் அறியாமையின் காரணமாக ஷியா, சன்னி என்பது போல் தங்களைப் பிரித்துக் காட்டினாலும் இஸ்லாம் இதை ஆதரிக்கவில்லை. மேலும் இந்தப் பிரிவுகளைச் சாதியுடன் ஒப்பிடக் கூடாது.

குர்ஆனையும், நபிவழியையும் புரிந்து கொள்வதில் ஏற்பட்ட வேறுபாடு காரணமாக இவ்வாறு பிரிந்துள்ளனர்.

ஷியா பிரிவைச் சேர்ந்த ஒருவர் சன்னி பிரிவில் சேர விரும்பினால் உடனே அதில் சேர முடியும். சன்னி பிரிவைச் சேர்ந்த ஒருவர் ஷியா பிரிவில் சேர முடியும்.

ஆனால் தலித் ஒருவர் விரும்பினால் ஐயராக முடியாது.

மேலும் ஷியாக்களின் பள்ளிவாசல்களில் சன்னிகள் போய்த் தொழலாம். சன்னிகளின் பள்ளிவாசல்களில் ஷியாக்கள் தொழலாம்.

மக்காவில் உள்ள கஅபா ஆலயத்தில் ஷியா பிரிவினர் உள்ளிட்ட அனைவரும் சென்று இறைவனை வழிபடுகின்றனர்.

மேலும் உலகில் உள்ள எந்தப் பள்ளிவாசலிலும் குலம், கோத்திரம், பதவி, பணம் ஆகியவற்றின் அடிப்படையில் எந்த முன்னுரிமையும் தரப்படுவதில்லை. இதை யார் வேண்டுமானாலும் கண்கூடாகப் பார்த்து அறிந்து கொள்ளலாம்

யார் முதலில் வருகிறாரோ அவர் தான் முதல் வரிசையில் நிற்பார். கடைசியாக வந்தவர் கடைசியில் நிற்பார்.

இதில் முஸ்லிம்கள் கடுகளவும் சமரசம் செய்து கொள்ள மாட்டார்கள்.

குடியரசுத் தலைவர்களாக இருந்த ஜாகிர் உசேன், பக்ருத்தீன் அலி அஹ்மத் ஆகியோர் தில்லி ஜும்ஆ பள்ளிவாசலில் பெருநாள் தொழுகையில் பங்கு கொண்டுள்ளனர். அவர்கள் தாமதமாக வந்ததால் இடமில்லாமல் வெட்ட வெளியில் தான் தொழுதனர்.

குடியரசுத் தலைவர் வந்து விட்டார்  என்று ஒரு முஸ்லிம் கூட அவர்களுக்கு முன்னுரிமை அளிக்க முன் வரவில்லை. குடியரசுத் தலைவரும்  என்னை முன் வரிசைக்கு அனுப்புங்கள்  என்று கேட்கவும் இல்லை. கேட்டாலும் முஸ்லிம்கள் இதை ஏற்க மாட்டார்கள்.

கடையநல்லூர் மஜீத், சாதிக் பாட்சா, ரஹ்மான் கான், ராஜா முகம்மது, முகம்மது ஆசிப், அன்வர் ராஜா, உள்ளிட்ட எத்தனையோ தமிழக அமைச்சர்கள் பல சந்தர்ப்பங்களில் பள்ளிவாசலுக்கு வந்ததுண்டு.

காலியாக இருக்கும் இடத்தில் தான் அவர்கள் அமர்ந்தார்களே தவிர அவர்களுக்கு பராக்  சொல்லி முதல் வரிசையில் யாரும் அமர வைக்கவில்லை. அவர்களும் அவ்வாறு கேட்கவில்லை.

எந்தப் பள்ளிவாசலிலும் எவருக்கும் பரிவட்டம் கட்டப்படுவதுமில்லை.

எனவே கடவுளின் பெயரால் அக்கிரமத்தை நியாயப்படுத்தும் குற்றத்தை இஸ்லாம் செய்யவில்லை.

பள்ளிவாசலுக்கு வெளியிலும் தீண்டாமையை இஸ்லாம் அறவே ஒழித்துள்ளது. ஒரு தட்டில் பலரும் சேர்ந்து சாப்பிடும் அளவுக்கு இஸ்லாம் சமத்துவம் பேணுகிறது.

4. சுயமரியாதைக்குப் பங்கம் ஏற்படுத்துதல்

கடவுளை நம்பி அவனை வழிபடச் சொல்லும் மதவாதிகள் படிப்படியாக தங்களையும் கடவுள் தன்மை பெற்றவர்கள் என அப்பாவிகளை நம்ப வைத்து, மக்களைத் தங்களின் கால்களில் விழுந்து வழிபடச் செய்து வருகின்றனர்.

மானத்தோடும், மரியாதையோடும் வாழ வேண்டிய மனிதன், தன்னைப் போலவே மனிதனாக உள்ள மற்றொருவனுக்குத் தலை வணங்கும் நிலையை மதங்கள் தான் ஏற்படுத்தி விட்டன.

எனவே மதங்கள் யாவும் அர்த்தமற்றவை என்பதும் சிந்தனையாளர்களின் வாதம்.

இஸ்லாத்திற்கு எதிராக இந்த விமர்சனத்தையும் செய்ய முடியாது. ஏனெனில் மனிதனை மனிதன் வழிபடுவதை இஸ்லாம் எதிர்க்கும் அளவுக்கு சீர்திருத்த இயக்கங்கள் கூட எதிர்த்ததில்லை.

முஸ்லிம்கள் தங்களின் உயிரை விடவும் மேலாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நேசிக்கின்றனர்.

எந்த மதத்தவரும், கட்சியினரும், இயக்கத்தினரும் தமது தலைவர்களை நேசிப்பதை விட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை முஸ்லிம்கள் அதிகம் நேசிக்கின்றனர்.

அப்படி இருந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை முஸ்லிம்களில் யாரும் வணங்குவதில்லை. அவர்களுக்காகச் சிலை வடிக்கவில்லை. அவர்களை ஓவியமாகத் தீட்டவில்லை. தங்களுக்கு வழிகாட்ட வந்த தலைவர் என்று மதிக்கிறார்களே தவிர அவர்களை முஸ்லிம்கள் ஒருக்காலும் வழிபட மாட்டார்கள்.

தம்மை வழிபடக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரிக்கை செய்து சென்று விட்டார்கள்.

எனக்கு இறைவனிடமிருந்து செய்தி வருகிறது என்பதைத் தவிர மற்ற படி நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன் தான்  என்று அழுத்தம் திருத்தமாக அவர்கள் கூறினார்கள். அவ்வாறு கூறவேண்டும் என்று இறைவனே தமக்குக் கட்டளையிட்டதாகக் கூறினார்கள்.

இந்தக் கட்டளையை திருக்குர்ஆன் 18:110, 41:6 ஆகிய வசனங்களில் காணலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு மண விழாவுக்குச் சென்றார்கள். அங்குள்ள சிறுமிகள் பாட்டு பாடிக் கொண்டிருந்தனர். நபிகள் நாயகத்தைக் கண்டதும்  நாளை நடப்பதை அறியும் நபி நம்மிடம் இருக்கிறார்  என்று கூறினார்கள். இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  இவ்வாறு கூறாதே! முன்னர் பாடியதையே பாடு  என்றார்கள்.

நூல்: புகாரி 4001, 5147

நான் ஹியரா என்னும் நகருக்குச் சென்றேன். அங்குள்ளவர்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிந்து கும்பிடுவதைப் பார்த்தேன். இவ்வாறு சிரம் பணிவதற்கு நபிகள் நாயகமே அதிகத் தகுதியுடையவர்கள்  என்று (எனக்குள்) கூறிக் கொண்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து  நான் ஹியரா என்னும் ஊருக்குச் சென்றேன். மக்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிவதைக் கண்டேன். நாங்கள் சிரம் பணிந்திட நீங்களே அதிகம் தகுதியுடையவர்  என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  (எனது மரணத்திற்குப் பின்) எனது அடக்கத் தலத்தைக் கடந்து செல்ல நேர்ந்தால் அதற்கும் சிரம் பணிவீரோ?  எனக் கேட்டார்கள்.  மாட்டேன்  என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  ஆம்; அவ்வாறு செய்யக் கூடாது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் சிரம் பணியலாம் என்றிருந்தால் கணவனுக்காக மனைவியை அவ்வாறு செய்யச் சொல்லியிருப்பேன்  என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: கைஸ் பின் ஸஅத் (ரலி)

நூல்: அபூதாவூத் 1828

தமது காலில் விழுவதற்கு அனுமதி கேட்கப்பட்ட போது  எந்த மனிதரும் எந்த மனிதரின் காலிலும் விழக் கூடாது  என்று பொதுவான விதியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காரணம் காட்டுகிறார்கள்.

காலில் விழுபவரும், விழப்படுபவரும் இருவருமே மனிதர்கள் தான் என்று கூறி சிரம் பணிதல் கடவுளுக்கு மட்டுமே உரியது எனக் கூறுகிறார்கள்.

உலகம் முழுவதும் கணவர் காலில் மனைவியர் விழுவது அன்றைக்கு வழக்கமாக இருந்தது. அதையே நான் அனுமதிக்காத போது என் காலில் எப்படி விழலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

எத்தனையோ சீர்திருத்தவாதிகள் தங்கள் அபிமானிகளால் இது போன்ற மரியாதை தங்களுக்குச் செய்யப்படும் போது அதை இன்முகத்துடன் ஏற்றுக் கொள்வதை நாம் பார்க்கிறோம்.

வாழும் போதே தமக்குச் சிலை அமைத்த சீர்திருத்தவாதிகளையும், அறியாத மக்கள் தமக்குச் சிலை வைக்கும் போது அதைத் தடுக்காமல் மகிழ்ச்சியடைந்த தலைவர்களையும், தமது மரணத்திற்குப் பின் தமக்குச் சிலை அமைக்க வலியுறுத்திச் சென்றவர்களையும் பார்க்கிறோம். இவர்கள் எதை எதிர்த்தார்களோ அதே காரியம் தமக்குச் செய்யப்படும் போது ஏற்றுக் கொண்டனர். நம்பகத் தன்மையை இதனால் இழந்தனர்.

எனது அடக்கத்தலத்தை வணக்கத் தலமாக ஆக்கி விடாதே  என்று மக்களுக்குத் தெரியும் வகையில் இறைவனிடம் நபிகள் நாயகம் (ஸல்) பிரார்த்தனை செய்தார்கள்.

நூல்: அஹ்மத்: 7054

எனது அடக்கத்தலத்தில் எந்த நினைவு விழாவும் நடத்தாதீர்கள்! எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

நூல்கள் : அபூதாவூத்: 1746 அஹ்மத் 8449

யூதர்களும், கிறித்தவர்களும் தங்கள் இறைத் தூதர்களின் அடக்கத்தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கி விட்டனர். இதனால் அவர்களுக்கு அல்லாஹ்வின் சாபம் ஏற்படும் என்று தமது மரணப் படுக்கையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்தனர்.

நூல் : புகாரி 436, 1330, 1390, 3454, 4441, 4444, 5816

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு எச்சரிக்கை செய்யாவிட்டால் அவர்களின் அடக்கத்தலத்தையும் உயர்த்திக் கட்டியிருப்பார்கள் என நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல் : புகாரி 1330, 1390, 4441

பதினான்கு நூற்றாண்டுகள் கடந்த பின்னரும் நபிகள் நாயகம் அவர்களின் அடக்கத்தலத்தில் இன்று வரை எந்த நினைவு நாளும் அனுசரிக்கப்படுவதில்லை. அவர்களின் அடக்கத்தலத்தில் எவரும் விழுந்து கும்பிடுவதில்லை.

மனிதன் சுயமரியாதையை விட்டு விடக் கூடாது என்று அழுத்தமாகக் கூறிய நபிகள் நாயகம் அவர்கள் தமக்காகக் கூட மற்றவர்கள் சுயமரியாதையை இழக்கக் கூடாது என்று கூறினார்கள்.

சிலைகளுக்கு எந்தச் சக்தியும் இல்லை என்று பிரச்சாரம் செய்த பலர் தமது தலைவரின் சிலைகளுக்கு மாலை மரியாதை செய்து தங்கள் சுயமரியாதையை இழப்பதைக் காண்கிறோம்.

தமது தலைவர் அடக்கம் செய்யப்பட்ட திசை நோக்கி வணங்குவதாக வெளிப்படையாக அறிவிப்பதைக் காண்கிறோம்.

இறந்து போனவர் உணர மாட்டார் என்பது நன்றாகத் தெரிந்தும் அவரது நினைவிடத்தில் மலர் தூவுவதைப் பார்க்கிறோம்.

இவையெல்லாம் பகுத்தறிவுக்கும், சுயமரியாதைக்கும் அப்பாற்பட்டது என்று நன்றாகத் தெரிந்திருந்தும் அதைச் செய்வதைப் பார்க்கிறோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது உயிரையே வைத்திருக்கும் முஸ்லிம் சமுதாயம் அவர்களுக்குச் சிலை வடிக்கவில்லை.

அவர்களின் சமாதியில் விழுந்து கும்பிடவில்லை.

அவர்களுக்காக எந்த நினைவு விழாவும் நடத்தவில்லை.

அவர்களின் அடக்கத்தலத்தில் மலர் தூவுதலும் இல்லை. மலர்ப் போர்வையும் சாத்தப்படுவதில்லை.

எந்த முஸ்லிமுடைய சுயமரியாதைக்கும் அவர்களால் எள்ளளவும் பங்கம் ஏற்படவில்லை.

காலில் விழுந்து கும்பிடுவது கிடக்கட்டும்! அதற்கும் குறைவான மரியாதையைக் கூட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்கவில்லை.

நபிகள் நாயகத்துக்குப் பின் முஸ்லிம் சாம்ராஜ்யத்தின் ஐந்தாவது அதிபராகத் திகழ்ந்தவர் முஆவியா (ரலி). அவர் வெளியே வந்த போது அவரைக் கண்ட அப்துல்லாஹ் பின் ஸுபைர் அவர்களும், இப்னு சப்வான் அவர்களும் எழுந்து நின்றனர். உடனே முஆவியா (ரலி) அவர்கள்  அமருங்கள்! என்றனர்.  தனக்காக மக்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று யார் விரும்புகிறாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக் கொள்கிறார்  என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன் என்றும் முஆவியா (ரலி) கூறினார்கள்.

நூல்கள் : திர்மிதி 2769 அபூதாவூத் 4552

உலகத்தில் நபிகள் நாயகத்தை விட எங்களுக்கு விருப்பமான ஒருவரும் இருந்ததில்லை. ஆயினும் அவர்கள் எங்களை நோக்கி வரும் போது நாங்கள் அவர்களுக்காக எழ மாட்டோம். இதை அவர்கள் கடுமையாக வெறுப்பார்கள்  என்பதே இதற்குக் காரணம்.

நபிகள் நாயகத்துக்கு பத்தாண்டுகள் பணிவிடை செய்த அனஸ் (ரலி) அவர்கள் இதை அறிவிக்கிறார்கள்.

நூல்கள் : அஹ்மத் 12068, 11895 திர்மிதீ 2678

ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) நோய் வாய்ப்பட்டார்கள். அப்போது அவர்கள் உட்கார்ந்த நிலையில் தொழுகை நடத்தினார்கள். நாங்கள் அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதோம். அவர்கள் திரும்பிப் பார்த்த போது நாங்கள் நின்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். சைகை மூலம் எங்களை உட்காரச் சொன்னார்கள். நாங்கள் உட்கார்ந்த நிலையில் அவர்களைப் பின்பற்றித் தொழுதோம். தொழுகையை முடித்தவுடன்  பாரசீக, ரோமாபுரி மன்னர்கள் அமர்ந்திருக்க மக்கள் நிற்பார்களே அது போன்ற செயலைச் செய்ய முற்பட்டு விட்டீர்களே! இனிமேல் அவ்வாறு செய்யாதீர்கள். உங்கள் தலைவர்களைப் பின்பற்றித் தொழுங்கள்! அவர் நின்று தொழுகை நடத்தினால் நீங்களும் நின்று தொழுங்கள்! அவர் உட்கார்ந்து தொழுகை நடத்தினால் நீங்களும் உட்கார்ந்து தொழுகை நடத்துங்கள்  என்று கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் 624

யாருக்கேனும் நிற்க இயலாத அளவுக்கு உடல் உபாதை ஏற்பட்டால் அவர் உட்கார அனுமதி உண்டு.

அந்த அடிப்படையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுவித்தார்கள். ஆனால் பின்னால் தொழுதவர்களுக்கு எந்த உபாதையும் இல்லாததால் அவர்கள் நின்று தொழுதார்கள்.

அவர்கள் நபிகள் நாயகத்துக்கு மரியாதை செய்வதற்காக நிற்கவில்லை. தொழுகையில் அது ஒரு நிலை என்பதற்காகவே நின்றார்கள். எனவே, அவர்களைக் கண்டிக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆனாலும் முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அமர்ந்திருக்க பின்னால் மற்றவர்கள் நிற்பதைப் பார்க்கும் போது  நபிகள் நாயகத்தின் முன்னே யாரும் அமரக் கூடாது  என்பதற்காக நிற்பது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. ஏனைய நாட்டு மன்னர்களுக்கு முன் மக்கள் நிற்பது போல் இது தோற்றமளிக்கின்றது. அந்த வாடை கூட தம் மீது வீசக் கூடாது என்பதற்காக அனைவரையும் அமர்ந்து தொழுமாறு நபிகள் நாயகம் ஆணையிடுகிறார்கள்.

தமக்கு மரியாதை செலுத்துவதற்காக அம்மக்கள் நிற்கவில்லை என்பது நன்றாகத் தெரிந்திருந்தும் அப்படியொரு தோற்றம் கூட ஏற்படக் கூடாது என்று கருதி இதற்கும் தடை விதித்தார்கள்.

தமக்காக நிற்பதையும், குனிவதையும் கூட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்து விட்டதால் தான் உண்மையான முஸ்லிம்கள் பெற்ற தாய் உள்ளிட்ட எவரது காலிலும் விழுவதில்லை. எந்த முஸ்லிம் பெண்ணும் கணவனின் காலில் விழுந்து கும்பிடுவதில்லை. எந்தத் தலைவருக்கும் சிலை வடித்து அவர்களை வழிபடுவதுமில்லை.

எனவே மனிதனின் சுயமரியாதையை இஸ்லாம் பேணுமளவுக்கு எந்த இஸமும் பேணியதில்லை.

சுயமரியாதைக்காக இயக்கம் கண்டவர்கள் கூட தமது தலைவருக்குச் சிலை வடித்து, மாலை அணிவித்து மரியாதை செய்கிறார்கள்.

கற்சிலைகளுக்கு எந்தச் சக்தியும் இல்லை எனக் கூறி பகுத்தறிவு இயக்கம் கண்டவர்கள் தமது தலைவரின் கற்சிலைக்கு மாலை அணிவிப்பது எப்படிப் பகுத்தறிவாகும்?

வழிபடும் சிலைகளை மாற்றிக் கொண்டார்கள். வழிபடும் முறையை மாற்றிக் கொண்டார்கள். பூஜைப் பொருட்களை மாற்றிக் கொண்டார்கள். வழிபாட்டை மாற்றிக் கொள்ளவில்லை.

எனவே சிந்தனையாளர்கள் எதிர்பார்ப்பதை விட இஸ்லாம் மனிதனின் சுயமரியாதையை அதிகமாகவே காப்பாற்றுகிறது.

மத குருமார்களின் கால்களில் விழுவதைப் போலவே சுய மரியாதை இயக்கத்தின் வழிவந்த தலைவர்களின் கால்களில் அவர்களின் தொண்டர்கள் விழுந்து பணிகிறார்கள்.

ஆனால் மத குருமார்களின் கால்களில் விழுந்து பணிவதைக் கூட இஸ்லாம் அடியோடு தடை செய்து விட்டது.

எனவே இந்தக் குற்றத்தையும் இஸ்லாம் செய்யவில்லை.

5. புரோகிதமும் சுரண்டலும்

மதங்கள் யாவும் அர்த்தமற்றவை  என்று கூறுவோர் மதங்களின் பெயரால் நடக்கும் புரோகிதத்தையும், சுரண்டலையும் மற்றொரு சான்றாக முன் வைக்கின்றனர்.

கடவுளை வழிபடுவதாக இருந்தாலும் திருமணம், அடிக்கல் நாட்டுதல், தொழில் துவங்குதல், புதுமனைப் புகுதல், காது குத்துதல், கருமாதி செய்தல் உள்ளிட்ட எந்தக் காரியமானாலும் அதில் மத குருமார்கள் குறுக்கிடுகின்றனர்.

அவர்கள் மூலமாகத் தான் இந்தக் காரியங்களைச் செய்ய வேண்டும் என்று விதி செய்து வைத்துள்ளனர்.

மேலும் பேய், பிசாசு, மாயம், மந்திரம், பில்லி சூனியம், தாயத்து, தட்டு என்று பல வகைகளிலும் மக்களை ஏமாற்றி பணம் பறிப்பவர்களும் மதத்தின் பெயரால் தான் இவற்றைச் செய்கின்றனர்.

இவற்றையெல்லாம் பார்க்கும் சிந்தனையாளர்கள்  தங்களின் வயிற்றுப் பிழைப்புக்காக மத குருமார்கள் உருவாக்கியவை தாம் மதங்கள்  என்று திட்டவட்டமான முடிவுக்கு வந்து விடுகின்றனர்.

ஆனால் இஸ்லாத்துக்கு எதிராக இந்த விமர்சனத்தையும் செய்ய முடியாது.

ஏனெனில் புரோகிதத்தை வேரோடு பிடுங்கி எறிந்த மார்க்கம் இஸ்லாம்.

ஒவ்வொரு மனிதனும், ஆணும் பெண்ணும், நல்லவனும், கெட்டவனும், படித்தவனும், படிக்காதவனும் நேரடியாகவே இறைவனிடம் தனது தேவைகளைக் கேட்க வேண்டும். தனக்கு எந்த மொழி தெரியுமோ அந்த மொழியில் கேட்கலாம். ஏனெனில் இறைவனுக்கு எல்லா மொழியும் தெரியும் என்று இஸ்லாம் கூறுகிறது.

மேலும்  மனிதனின் தனிப்பட்ட வாழ்விலும் புரோகிதர்களுக்கு வேலை இல்லை  என இஸ்லாம் அறிவிக்கிறது.

நபிகள் நாயகம் காலத்தில் அப்துர் ரஹ்மான் என்ற செல்வந்தர் இருந்தார். நபிகள் நாயகத்தின் தலை சிறந்த பத்து தோழர்களில் இவரும் ஒருவர். இவர் ஒரு நாள் நறுமணம் பூசியவராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தார். ஏன் நறுமணம் பூசியுள்ளீர்கள்? என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்டனர்.  நேற்று எனக்குத் திருமணம் ஆகி விட்டது  என்று அவர் விடையளித்தார்.  அப்படியானால் ஒரு ஆட்டை அறுத்து விருந்து அளிப்பீராக  என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

நூல் : புகாரி 2048, 2049, 3781, 3937, 5072, 5153

மதகுருவாகிய நான் இருக்கும் போது என்னை அழைக்காமல், எனக்குச் சொல்லாமல் எப்படி நீர் திருமணம் செய்யலாம்?  என்று அவரிடம் நபிகள் நாயகம் (ஸல்) கேட்கவில்லை. என்னை அழைக்காததால் திருமணம் செல்லாது எனவும் கூறவில்லை.

திருமணத்தை நடத்தி வைக்க மதகுரு அவசியம் இல்லை  என்பதை இதிலிருந்து அறியலாம்.

என் மகளை அவளது சம்மதத்துடன் உனக்கு மணமுடித்துத் தருகிறேன்  என்று பெண்ணைப் பெற்றவர் (அல்லது வேறு பொறுப்பாளர்) கேட்க,  நான் இதை மனமார ஒப்புக் கொள்கிறேன்  என்று மணமகன் கூறினால் திருமணம் முடிந்து விட்டது.

நாளைக்குப் பிரச்சினைகள் வந்தால் உள்ளது உள்ளபடி எடுத்துச் சொல்ல குறைந்தது இரண்டு சாட்சிகள். மணமகன் மணமகளுக்கு மஹர் எனும் மணக் கொடை அளித்தல் ஆகியவை தான் இஸ்லாமியத் திருமணம்.

மந்திரங்களோ, வேறு எந்தச் சடங்குகளோ இல்லை.

அது போல் குழந்தைக்குப் பெயர் சூட்டுதல், வீடு கட்டுதல் போன்ற காரியங்களிலும் புரோகிதருக்கு வேலை இல்லை.

இறந்தவருக்காக அவரது நெருங்கிய உறவினர் தான் பிரார்த்தனையை முன்னின்று நடத்த வேண்டும். இங்கேயும் புரோகிதருக்கு வேலையில்லை.

வியாபாரமோ, தொழிலோ, வீடோ எதை ஆரம்பித்தாலும்  இறைவா! எனது இந்தக் காரியத்தைச் சிறப்பாக்கி வை!  என்று ஒவ்வொருவரும் உளமுருகி இறைவனை வேண்டி விட்டு ஆரம்பிக்கலாம். மதகுருமார்கள் யாரையும் அழைக்கத் தேவையில்லை என்று தான் இஸ்லாம் கூறுகிறது.

மேலும் பேய், பிசாசு, பில்லி சூனியம், மாயம் மந்திரம், சாஸ்திரம், சகுனம், சோதிடம், ஜாதகம், நல்ல நாள், கெட்ட நாள் என்று புரோகிதர்களின் வருமானத்திற்காக உருவாக்கப்பட்ட காரியங்கள் அனைத்தையும் அறவே இஸ்லாம் மறுக்கிறது.

எந்த நாளிலும், எந்த நேரத்திலும் எந்தக் காரியத்தையும் செய்யலாம் என்பது தான் இஸ்லாம் காட்டும் நெறி.

எனவே அர்த்தமற்ற தத்துவம் ஏதும் இஸ்லாத்தில் இல்லை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

6. பண்டிகைகளின் பெயரால்…

மதங்கள் அர்த்தமற்றவை  எனக் கூறும் சிந்தனையாளர்கள் பண்டிகைகள் கொண்டாடும் முறைகளைப் பார்த்து விட்டு மதங்களை வெறுக்கின்றனர்.

நாம் மகிழ்ச்சியுடன் இருப்பதற்காக மற்றவர்களைத் துன்பத்திற்குள்ளாக்குவது எப்படி அர்த்தமுள்ள செயலாக இருக்கும்?  என்று அவர்கள் எண்ணுகின்றனர்.

பண்டிகைகளின் போது பலவிதமான பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன. அந்தச் சப்தமும், நெருப்பினால் ஏற்படும் வர்ண ஜாலங்களும் நமக்குச் சிறிது நேர மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றன.

ஆனால், அதனால் ஏற்படும் விளைவுகள் மோசமாக உள்ளன.

எத்தனையோ குடிசைகள் இதனால் எரிந்து சாம்பலாகின்றன.

உயிர்களும் கூட பலியாகின்றன.

அக்கம் பக்கத்தில் உள்ள அமைதியை விரும்பும் மக்களும், இதய நோயாளிகளும், தொட்டில் குழந்தைகளும் இதனால் அதிர்ச்சிக்கு உள்ளாகின்றனர்.

நச்சுப் புகையின் காரணமாக மற்றவர்களுக்கும், நமக்கும் கூட பாதிப்புகள் ஏற்படுகின்றன.

வசதி படைத்தவர்கள் விலை உயர்ந்த புதுமையான பட்டாசுகள் கொளுத்துவதைக் காணும் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வயிறு எரிகின்றது.

இப்படி இன்னும் பல தீமைகள் இதனால் ஏற்படுகின்றன.

நாம் தீப்பிடிக்காத வீட்டில் இருக்கலாம். குடிசையை இழந்த அந்த ஏழை ஒரு குடிசையை மீண்டும் உருவாக்க எத்தனை நாட்கள் உழைக்க வேண்டும்?

அவன் சிறுகச் சிறுகச் சேர்த்த அற்பமான பொருட்களை மீண்டும் சேர்க்க எத்தனை ஆண்டுகள் உழைக்க வேண்டும்?

இதையெல்லாம் எண்ணிப் பார்க்காது நடக்கும் இந்தக் கொண்டாட்டங்கள் அர்த்தமுள்ளவை தாமா? என்று சிந்தனையாளர்கள் எண்ணுகின்றனர்.

வீதிகளில் பூசணிக்காய்களை உடைத்து விபத்துகளை ஏற்படுத்துவதும், குப்பைகளை வீதிகளில் எரிப்பதும், மாடுகளை வீதியில் விரட்டி அவற்றுக்கு ஆத்திரமூட்டுவதும், வாகனங்களில் செல்பவர்களை மறித்து வாழ்த்துச் சொல்லி அவர்களை நிலைகுலைய வைப்பதும், பஜனைப் பாடல்களை இரவு முழுவதும் உரத்த குரலில் பாடுவதும், பொது இடங்களில் ஆடல் பாடல் கும்மாளம் போடுவதும் நமக்குச் சந்தோஷமாகத் தெரிந்தாலும் இது மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாதா? நாம் மகிழ்ச்சியாக இருப்பதற்காக மற்றவரைத் துன்புறுத்துவதில் என்ன அர்த்தமிருக்கிறது என்றும் அவர்கள் கேட்கின்றனர்.

இந்த விமர்சனத்தையும் இஸ்லாத்திற்கு எதிராக எழுப்ப முடியாது.

தனது கையாலும் நாவாலும் பிறருக்குத் தொல்லை தராதவன் எவனோ அவனே முஸ்லிம்  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

நூல்: புகாரி 10, 11, 6484

ஒரு முஸ்லிம் தனக்கோ, மற்றவருக்கோ துன்பம் இழைக்கக் கூடாது என்பதை முன்னரே விளக்கியுள்ளோம். எனவே முஸ்லிம்கள் கொண்டாடும் பண்டிகைகளில் இது போன்ற காரியங்களைச் செய்ய அனுமதி இல்லை.

முஸ்லிம்களுக்கு இரண்டு பெருநாட்களே உள்ளன.

இவ்விரு பெருநாட்களிலும் புத்தாடைகள் அணியலாம்.

சிறப்பான உணவுகள் சமைத்து உண்ணலாம்.

உடலுக்கு வலிமை தரும் விளையாட்டுகளில் இவ்விரு நாட்களிலும் ஈடுபடலாம்.

இரண்டு பெருநாட்களிலும் நடுத்தர வர்க்கத்தினரும், வசதி படைத்தவர்களும் தான தர்மங்கள் செய்தல்

அதிகாலையில் சிறப்புத் தொழுகையில் ஈடுபடுதல், இறைவனிடம் நல்லருளை வேண்டுதல்

உடலுக்கு வலிமை சேர்க்கும் வீர விளையாட்டுகளில் ஈடுபடுதல்

போன்றவை தான் இஸ்லாமியப் பண்டிகைகளின் போது கடைபிடிக்க வேண்டியவை.

எந்த முஸ்லிமுக்கும், முஸ்லிமல்லாத மக்களுக்கும் இப்பண்டிகைகளால் எந்தவிதமான தொல்லைகளும் இல்லை. இறைவனை நினைவு கூர்வதும், மனிதர்களுக்கு நலம் நாடுவதும் தான் இஸ்லாமியப் பண்டிகைகளில் உள்ளன.

எனவே பண்டிகைகள் என்ற பெயரால் மற்றவர்களுக்கு இடையூறு செய்யப்படுகின்றன என்ற விமர்சனமும் இஸ்லாத்துக்கு பொருந்தாது.

மதங்கள் அர்த்தமற்றவை; மனித குலத்துக்குத் தேவையில்லாதவை என்பதை நிலைநாட்டுவதற்காக கூறப்படும் காரணங்களில் ஒன்று கூட இஸ்லாம் மார்க்கத்துக்கு பொருந்தாது.

எனவே இஸ்லாம் அர்த்தமுள்ள மார்க்கம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

06.07.2009. 14:09 PM

More Articles …