Sidebar

18
Thu, Jun
சமீபத்திய செய்திகள்

நபிமார்களிடம் எடுத்த உறுதிமொழி என்ன?

(ஒற்றுமை மாதம் இருமுறை இதழில் தேர்வு செய்யப்பட்ட திருக்குர்ஆன் வசனங்களுக்கு பீஜே எழுதிய விளக்கம்)

81. "உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும்67 நான் தந்த பின் உங்களிடம் இருப்பதை உண்மைப்படுத்தும் தூதர் உங்களிடம் வந்தால் அவரை நம்புவீர்களா? அவருக்கு உதவுவீர்களா?'' என்று நபிமார்களிடம் அல்லாஹ் உறுதிமொழி எடுத்து95 "இதை ஒப்புக் கொண்டீர்களா? எனது பலமான உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டீர்களா?'' என்று கேட்டபோது, "ஒப்புக் கொண்டோம்'' என்று அவர்கள் கூறினர். "நீங்களே இதற்குச் சாட்சியாக இருங்கள்! உங்களுடன் நானும் சாட்சியாக இருக்கிறேன்'' என்று அவன் கூறினான்.

திருக்குர்ஆன் 3:81

இவ்வசனத்திற்கு பல ஆண்டுகளாக அறிஞர்களில் பலர் தவறான விளக்கம் அளித்து வருகின்றனர். அவர்களின் தவறான விளக்கத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ரஷாத் கலீஃபா என்பவன் தன்னை ஒரு ரஸுல் (இறைத் தூதர்) என்று அறிவித்துக் கொண்டான். இவ்வசனம் உண்மையில் கூறுவது என்ன என்பதை மார்க்க அறிஞர்களில் பலரும் கவனிக்கவில்லை. ரஷாத் என்பவனும் விளங்கிடவில்லை.

நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் இறுதிக் காலத்தில் வரவுள்ளனர். அவ்வாறு அவர்கள் வரும் போது அனைவரும்  அவர்களை ஏற்று உதவ வேண்டும் என்பது தான் இங்கே கூறப்படும் உடன்படிக்கை என்பது பெரும்பாலான அறிஞர்களின் விளக்கம்.

இவர்களது தவறான விளக்கத்தைத் தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்ட ரஷாத் கலீஃபா என்பவன் தன்னை ஒரு ரஸுல் என்று எவ்வாறு பிரகடனம் செய்தான் என்று முதலில் பார்ப்போம்.

7, 8. நபிமார்களிடம் (குறிப்பாக) உம்மிடமும், நூஹ், இப்ராஹீம், மூஸா, மர்யமின் மகன் ஈஸா ஆகியோரிடமும் அவர்களது உறுதிமொழியை95 நாம் எடுத்ததை நினைவூட்டுவீராக! உண்மையாளர்களை அவர்களது உண்மை பற்றி விசாரிப்பதற்காக அவர்களிடம் கடுமையான உடன்படிக்கையை எடுத்தோம். (தன்னை) மறுப்போருக்கு அவன் துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளான்.26

திருக்குர்ஆன் 33:7

இவ்வசனத்தில் நபிமார்களிடம் எடுக்கப்பட்ட உடன்படிக்கையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அடக்கம் என்பது தெரிய வருகிறது. ஏனெனில், உம்மிடமும் என்று இங்கே தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்பட அனைத்து நபிமார்களிடமும் எடுக்கப்பட்டதே இவ்வுடன்படிக்கை. இனி மேல் வரக்கூடிய தூதரை ஏற்க வேண்டும் என்று நபிகள் நாயகத்திடமும் உடன்படிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் நபிகள் நாயகத்துக்குப் பிறகு ஒரு தூதர் வரவிருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது. அந்தத் தூதர் நானாவேன் என்று ரஷாத் கலீஃபா என்பவன் வாதிட்டான்.

பெரும்பாலான அறிஞர்களின் விளக்கமும், அந்த விளக்கத்தின் அடிப்படையில் இவன் எழுப்பிய வாதமும் இரண்டுமே முற்றிலும் தவறானதாகும்.

மேற்கண்ட வசனம் எதிர்காலத்தில் வரவிருக்கிற ஒரு தூதர் பற்றிய முன்னறிவிப்பாகும் என்பது தான் இருவரின் வாதத்துக்கும் அடிப்படை.

முன்னறிவிப்பில் கூறப்படுபவர் யார் என்பதில் தான் இவர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது.

ஆனால் இவ்வசனத்தை கவனமாகப் பார்க்கும் போது இது யாரைப் பற்றியும் முன்னறிவிப்புச் செய்யவில்லையென்பதே உண்மையாகும்.

இவ்வசனம் என்ன சொல்கிறது என்பதை இவ்வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள வாசகங்களை வைத்துத் தான் புரிந்து கொள்ள வேண்டும். வாசக அமைப்புக்கு எதிரான கருத்தை இதற்கு விளக்கமாகக் கூறக் கூடாது. அவ்வாறு யார் கூறினாலும் அது முற்றிலும் தவறானதாகும்.

இவ்வசனம் என்ன சொல்கிறது என்பதை இவ்வசனத்திலிருந்தே அறிவது தான் சரியானதாகும்.

நபிமார்களிடம் இறைவன் உறுதிமொழி எடுத்திருக்கிறான். இதில் எல்லா நபிமார்களும் அடங்குவார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அடங்க மாட்டார்கள் என்று கருதுவதற்கு இவ்வசனம் இடம் தரவில்லை. நபிகள் நாயகத்திடமும் உறுதிமொழி எடுக்கப்பட்டதை 33:7 வசனம் தெளிவாகவும் அறிவித்து விடுகிறது.

எனவே, நபிகள் நாயகம் (ஸல்) உட்பட எல்லா நபிமார்களிடமும் எடுக்கப்பட்ட உடன்படிக்கையையே இவ்வசனம் கூறுகிறது. நபிகள் நாயகத்தை விட்டுவிட்டு மற்ற நபிமார்களிடம் உடன்படிக்கை எடுத்ததாகக் கூறுவது இவ்வசனத்தில் இல்லாத கருத்தும் இவ்வசனத்திற்கு முரணான கருத்துமாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வருகையைப் பற்றி ஏனைய நபிமார்களிடம் தான் உடன்படிக்கை எடுக்கப்பட்டது என்று பெரும்பாலான அறிஞர்கள் இதை விளங்கியதால் இதை நபிகள் நாயகம் (ஸல்) பற்றிய முன்னறிவிப்பு என்று கூறினார்கள்.

இவர்கள் இவ்வாறு முன்னறிவிப்பு என்று தவறாகக் கூறியதைத் தான் ரஷாத் கலிஃபா என்பவன் தனக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டான். இது முன்னறிவிப்பு தான் ஆனால் அது நபிகள் நாயகத்தைக் குறித்த முன்னறிவிப்பு இல்லை. மாறாக, என்னைக் குறித்த முன்னறிவிப்பாகும் என்று வாதிட்டான்.

உம்மிடமும் என்று 33:7 வசனத்தில் கூறப்பட்டுள்ளதால், இந்த முன்னறிவிப்பு நபிகள் நாயகம் (ஸல்) பற்றியதாக இருக்க முடியாது என்றான்.

அதாவது இவ்வசனம் ஒரு முன்னறிவிப்பு என்பதில் இவனும் பெரும்பாலான அறிஞர்களும் ஒன்றுபடுகிறார்கள். யாரைப் பற்றிய முன்னறிவிப்பு என்பதில் தான் இருவருக்கும் கருத்து வேறுபாடு உள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) உட்பட அனைத்து நபிமார்களிடமும் உறுதிமொழி எடுக்கப்பட்டது என்பது உண்மை தான். ஆனால் இதில் எந்த முன்னறிவிப்பும் இல்லை. எனவே, எடுக்கப்பட்ட உடன்படிக்கை என்ன என்பதை அவ்வசனத்திலிருந்தே நாம் ஆராய்வோம்.

உங்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் நான் தந்த பின் இன்னொரு தூதர் உங்களிடம் வந்தால் அவரை ஏற்று உதவ வேண்டும் என்பது தான் உடன்படிக்கை.

அல்லாஹ் ஒரு வார்த்தையைக் கூட தேவையில்லாமல் பயன்படுத்த மாட்டான். நபிமார்களிடம் உடன்படிக்கை எடுக்கும் போது "உங்களிடம் ஒரு தூதர் வந்தால்'' என்று அல்லாஹ் கூறுகிறான். உங்களிடம் என்ற வார்த்தை முதலில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

ஒரு நபிக்குப் பின் இன்னொரு நபி வருவதை இவ்வாசகம் கூறவில்லை. ஒரு நபி வாழ்ந்து கொண்டிருக்கும் போது அவரிடம் இன்னொரு நபி வருவதையே இவ்வாசகம் குறிக்கிறது.

ஸும்ம ஜாஅகும் - பின்னர் உங்களிடம் வந்தால் என்று அல்லாஹ் கூறுவதைத் தான் மார்க்க அறிஞர்களில் பலர் கவனத்தில் கொள்ளத் தவறி விட்டனர்.

"உங்களை நான் நபியாக நியமனம் செய்து விட்டேன். இது உங்கள் தகுதியினாலோ, உழைப்பினாலோ கிடைத்தது அல்ல. மாறாக, நானாக உங்களுக்கு வழங்கியதாகும். நபியாக நியமனம் செய்யப்பட்டதால் இனி மேல் நமது தகுதிக்கு எந்தக் குறையும் ஏற்படாது என்று நினைக்காதீர்கள்! நீங்கள் நபியாக இருக்கும் போதே உங்களிடம் இன்னொரு தூதரை நான் அனுப்பினால் உடனே அவரை நீங்கள் ஏற்க வேண்டும். அவருக்கு உதவி செய்திட முன்வரவேண்டும். இந்த நிபந்தனையின் அடிப்படையிலேயே உங்களுக்கு அந்தத் தகுதி வழங்கப்படுகிறது'' என்பது தான் இவ்வசனத்தின் கருத்தாகும். இதை இவ்வசனத்தின் வாசக அமைப்பே உறுதி செய்கிறது.

இது நபிகள் நாயகத்தைப்  பற்றிய முன்னறிவிப்பு என்று கருதினால் நபிமார்கள் தமது உடன்படிக்கையை நிறைவேற்றவில்லை என்று ஆகிவிடும். "அவரை நம்பி அவருக்கு உதவ வேண்டும்'' என்பது தான் உடன்படிக்கையின் ஷரத்து. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வுலகிற்கு வந்த போது எந்த நபியும் உலகில் இருக்கவில்லை. நபிகள் நாயகத்துக்கு உதவவுமில்லை.

அது போல் ரஷாத் கலீஃபா என்பவனையோ வேறு யாரையோ இது குறிக்கிறது என்று வைத்துக் கொண்டால் அவனை நபிகள் நாயகம் (ஸல்) ஏற்று அவனுக்கு உதவியாக இருந்திருக்க வேண்டும். ரஷாத் கலீஃபாவுக்கு நபிகள் நாயகம் உதவவுமில்லை. அவன் மீது ஈமான் கொள்ளவுமில்லை. எனவே இவ்வசனம் யாரைப் பற்றிய முன்னறிவிப்பும் இல்லை.

மாறாக "நபித்துவம்' என்பது மனிதனின் உழைப்புக்காகவோ திறமைக்காகவோ வழங்கப்படுவதல்ல. அல்லாஹ்வின் கருணையால் வழங்கப்படுவது. வேறொருவருக்கு அதை நான் வழங்கினால் அதற்கு கட்டுப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் இதை வழங்குகிறேன் என்பது தான் உடன்படிக்கை.

1. உங்களிடம் அவர் வந்தால்.

2. அவரை நீங்கள் நம்ப வேண்டும்.

3. அவருக்கு நீங்கள் உதவ வேண்டும்.

ஆகிய வாசகங்கள் இதைத் தெளிவாகக் கூறுகின்றன.

ஒரு நபியை இறைவன் அனுப்பிய பின் அவருக்கு பக்கபலமாக இருப்பதற்காக மேலும் சிலரை அல்லாஹ் அனுப்பியதை 36:14 வசனம் கூறுகிறது. அவ்வாறு அனுப்பப்பட்டவர்களை முதலில் அனுப்பப்பட்டவர்கள் ஏற்றுக் கொண்டனர்.

நமக்குக் கிடைத்த தகுதியை இன்னும் சிலருக்கு அல்லாஹ் பங்கு போட்டுக் கொடுத்து விட்டானே என்றெல்லாம் முதலில் அனுப்பப்பட்டவர்கள் உரிமைக் குரல் எழுப்பக்கூடாது என்று ஏற்கனவே இறைவன் கடுமையான உறுதிமொழி எடுத்த தன் காரணமாகவே 36 வது அத்தியாயத்தில் கூறப்பட்டவாறு ஒரு சமுதாயத்துக்கு ஒரு காலக்கட்டத்தில் பல நபிமார்கள்  அனுப்பப்பட்டனர்.

நபிகள் நாயகம் (ஸல்) வாழும் காலத்தில் துணைக்கு மேலும் சிலரை அல்லாஹ் நியமித்திருந்தால் அதை மனப்பூர்வமாக நபிகள் நாயகம் (ஸல்) ஏற்றுக் கொள்ள வேண்டும்.

யாருடைய விளக்கத்தையும் கவனத்தில் கொள்ளாமல் இவ்வசனத்தைச் சிந்தித்தால் இந்தக் கருத்துக்குத் தான் வர முடியும்.

எனவே, ரஷாத் கலீஃபா என்பவன் தன்னைத் தூதர் என்று கூறிக் கொண்டதற்கு இவ்வசனத்தில் எள்ளளவும் எள் முனையளவும் ஆதாரம் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) பற்றிய முன்னறிவிப்பு என்பதற்கும் இதில் ஆதாரம் ஏதுமில்லை.

இந்த இடத்தில் இவ்வசனத்திற்கு எதிராக முஸ்லிம்களில் பலரிடம் காணப்படும் தவறான நம்பிக்கையையும் சுட்டிக்காட்டும் கடமை நமக்கு இருக்கிறது.

ஹில்ரு நபி என்று ஒருவர் இருக்கிறார். அவர் ஹயாத் நபி. அவர் உலகில் - பூமியில் - இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது தான் அந்த நம்பிக்கை.

அந்த நம்பிக்கை தவறானது என்பதை இவ்வசனம் சந்தேகமற அறிவிக்கிறது.

ஹில்ரு நபி உயிருடன் இருக்கும் போது முஹம்மது நபியவர்கள் அல்லாஹ்வின் தூதராக அனுப்பப்படுகிறார்கள் என்றால் நபிமார்களிடம் எடுக்கப்பட்ட உறுதிமொழியின் படி அவர் என்ன செய்திருக்க வேண்டும்?

நபிகள் நாயகத்தைத் தேடி அவர் ஓடி வந்திருக்க வேண்டும்.

அவர்கள் கஷ்டப்பட்ட நேரத்தில் உதவிகள் புரிந்திருக்க வேண்டும்.

பத்ரு, உஹதுப் போர்களில் பங்கெடுத்திருக்க வேண்டும்.

அவ்வாறு ஏதும் நடக்கவில்லை. நடந்ததாக எந்தச் சான்றும் இல்லை. உயிருடன் அவர் இருந்திருந்தால் அவர் இந்த உடன்படிக்கையை நிறைவேற்றியிருக்க வேண்டும்.

இவ்வசனத்திலிருந்து ஹில்ரு நபி உயிருடன் இல்லை என்பதையும் கூடுதலாக அறிந்து கொள்ளலாம். அல்லது அவர் நபியில்லை என்று கூற வேண்டும். (ஈஸா நபியவர்கள் ஏன் உதவவில்லை என்று கேட்க முடியாது. அவர்கள் இம்மண்ணுலகில் இல்லை. மேலும் ஈஸா நபியவர்கள் உயிருடன் உள்ளனர் என்பதற்கு குர்ஆனில் ஏராளமான சான்றுகள் உள்ளன. அவற்றைப் பின்னர் நாம் விளக்கவுள்ளோம்.

கப்ரு எனும் மண்ணறை வாழ்க்கை குர்ஆனுக்கு எதிரானதா?

(ஒற்றுமை மாதமிருமுறை இதழில் தேர்வு செய்யப்பட்ட வசனங்களுக்கு பீஜே அளித்த விளக்கம்.)

51. ஸூர் ஊதப்படும். உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து தமது இறைவனை நோக்கி விரைவார்கள்.

52. எங்கள் உறக்கத்தலத்திலிருந்து எங்களை உயிர்ப்பித்தவன் யார்?'' என்று கேட்பார்கள்.332 அளவற்ற அருளாளன் வாக்களித்ததும், தூதர்கள் உண்மையெனக் கூறியதும் இதுவே (எனக் கூறப்படும்.)

திருக்குர்ஆன் 36 : 51, 52

உலகம் அழிக்கப்பட்ட பின்னர் மனிதர்கள்     அனைவரும் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவார்கள். மனிதர்கள் செய்த நன்மை தீமைகளுக்கேற்ப சொர்க்கத்தையோ, நரகத்தையோ பரிசாகப் பெறுவார்கள் என்பதை முஸ்லிம்களாகிய நாம் நம்புகிறோம்.

இந்த நம்பிக்கையைப் பொருத்தவரை முஸ்லிம் சமுதாயத்தில் எந்த விதமான கருத்து வேறுபாடும் கிடையாது. மறுமை வாழ்வு தான் இஸ்லாத்தின் அஸ்திவாரமான நம்பிக்கையாக இருப்பதை ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் ஏற்றுக் கொள்கிறது.

உலகம் ஒட்டு மொத்தமாக அழிக்கப்படுவதற்கு முன் மனிதர்கள் தமது வாழ் நாள் முடியும் போது மரணித்துக் கொண்டே உள்ளனர். இவ்வாறு மரணித்தவர்கள் உலகம் முழுமையாக அழிக்கப்படும் காலம் வரை பர்ஸக் எனும் மண்ணறை வாழ்க்கையைப் பெற்றுத் தங்களின் செயல்களுக்கேற்ப தண்டனைகளைப் பெறுகிறார்கள் என்பதும் இஸ்லாமிய நம்பிக்கைகளில் முக்கியமானதாகும்.

கப்ர் வாழ்க்கை அல்லது கப்ரில் வேதனையைப் பொருத்த வரை முஸ்லிம் சமுதாயத்தில் மிகப் பெரும் தொகையினர் நம்பிக்கை வைத்துள்ளனர்.

ஆனாலும், விரல் விட்டு எண்ணக் கூடிய சிலர் மட்டும் கப்ர் வாழ்க்கை என்பதே கிடையாது; என வாதிடுகின்றனர். அவ்வாறு வாதிடுபவர்கள் தங்கள் வாதத்துக்கு ஆதாரமாகக் காட்டும் வசனங்களைத் தான் நீங்கள் மேலே காண்கிறீர்கள்.

யாஸீன் அத்தியாயத்தின் 51, 52 ஆகிய இவ்விரு வசனங்களும் மறுமை நாளில் மனிதர்கள் எழுப்பப்படுவது பற்றிக் கூறுகின்றன.

அவ்வாறு எழுப்பப்படும் போது "எங்கள் உறக்கத்திலிருந்து எங்களை எழுப்பியவர் யார்?'' என்று கேட்டுக் கொண்டே எழுவார்கள் என்று இவ்வசனங்களில் கூறப்படுகிறது. இவ்வாறு எழுப்பப்படுவது குறித்து அவர்கள் கை சேதம் அடைவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

கப்ரில் அவர்கள் வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்தால் எங்கள் உறக்கத்திலிருந்து எங்களை எழுப்பியவர் யார் என்று எப்படிக் கூறுவார்கள்?

எந்த வேதனையும் இல்லாமல், இருந்தால் தான் அவர்களால் இவ்வாறு கூற முடியும். இவ்வாறு எழுப்பப்பட்டது குறித்து அவர்கள் கைசேதமும் கவலையும் அடைகிறார்கள் என்றால் எள்ளளவும் அவர்கள் வேதனை செய்யப்படவில்லை என்பதைச் சந்தேகமற அறியலாம்.

கப்ரில் வேதனை இருப்பதாக ஹதீஸ்களில் கூறப்பட்டாலும் இந்த வசனங்களுடன் அவை நேரடியாக மோதுவதால் அதை நாம் நம்பத் தேவையில்லை என்று இந்தக் கருத்துடையவர்கள் வாதிடுகின்றனர்.

தங்கள் வாதத்துக்கு வலிமை சேர்ப்பதற்காக மற்றொரு சான்றையும் அவர்கள் முன் வைக்கின்றனர்.

அல்லாஹ் யாருக்கும் எந்த அநியாயமும் செய்ய மாட்டான். கப்ருடைய வேதனை இருப்பதாக நம்புவது அல்லாஹ் அநீதி இழைக்கிறான் என்ற கருத்தை மறைமுகமாக உள்ளடக்கியுள்ளது என்பது இவர்களின் மற்றொரு வாதம்.

ஆதம் (அலை) அவர்களின் மகன்களில் ஒருவர் அவர் செய்த ஒரு தவறுக்காக கப்ரில் வேதனை செய்யப்படுவதாக வைத்துக் கொள்வோம். உலகம் அழிவதற்கு பத்து நாட்களுக்கு முன் மரணித்த ஒருவனும் அதே தவறுக்காக கப்ரில் வேதனை செய்யப்படுவதாக வைத்துக் கொள்வோம். இரண்டாமவன் வெறும் பத்து நாட்கள் மட்டுமே கப்ருடைய வேதனையை அனுபவிக்கிறான். ஆனால் ஆதம் (அலை) அவர்களின் மகனோ இலட்சோப லட்சம் வருடங்கள் கப்ரில் வேதனை செய்யப்பட்டுக் கொண்டே இருக்கிறார்.

ஒரே குற்றத்தைச் செய்த இருவரில் ஒருவருக்கு பத்து நாள் தண்டனை என்பதும் இன்னொருவருக்கு பல லட்சம் வருடங்கள் தண்டனை என்பதும் எப்படி நீதியான தீர்ப்பாக இருக்க முடியும்? இத்தகைய அநீதியான தீர்ப்பை இறைவன் வழங்குவானா? என்று இவர்கள் கேட்கின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் இறந்த ஒருவர் தொழுகையை விட்டதற்காக கப்ரில் தண்டிக்கப்படுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அது போல் இன்று மரணித்த ஒருவரும் அதே குற்றத்துக்காகத் தண்டிக்கப்படுவதாக வைத்துக் கொள்வோம். இருவரும் வேதனை செய்யப்பட்ட காலத்தைக் கணக்கிடப்பட்டால் இன்று மரணித்த வரை விட முன்னர் மரணித்தவர் 1400 வருடங்கள் அதிகமான தண்டனை பெற்றிருப்பார். இது தான் இறைவன் வழங்கும் நீதியா? என்றும் இவர்கள் வாதிடுகின்றனர்.

மேலும் கப்ரு வேதனை பற்றி குர்ஆனில் எங்குமே கூறப்படாததையும், தங்கள் வாதத்துக்கு வலிமை சேர்ப்பதற்காகச் சுட்டிக் காட்டுகின்றனர்.

ஆகவே, கப்ரில் வேதனை இருப்பதாக நம்புவது திருக்குர்ஆனை மறுப்பதாகவும் அல்லாஹ்வின் நீதியை சந்தேகிப்பதாகவும் அமைந்துள்ளது என்று அவர்கள் வாதிடுகின்றனர்.

இவர்களின் வாதத்தில் உண்மையுள்ளதா? இவர்களின் வாதம் தவறு என்றால் இந்தக் கேள்விகளுக்கான விடை என்ன?

"எங்கள் உறக்கத்திலிருந்து எங்களை எழுப்பியவன் யார்?'' என்று மனிதர்கள் கூறுவதால் கப்ரு வாழ்க்கை இல்லை என்ற முடிவு முற்றிலும் தவறானதாகும்.

குர்ஆனை முழுமையாக ஆய்வு செய்யாமல் இவ்விரு வசனங்களை மட்டும் தங்கள் மனோ இச்சைப்படி புரிந்து கொண்டதன் விளைவு தான் இந்த வாதம்.

ஒரு உலகத்திலிருந்து இன்னொரு உலகத்தை அடைபவர்கள் முந்தைய உலகில் நடந்தவற்றை மறந்து விடுவார்கள். அப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தது என்பது அவர்களுக்கு அறவே நினைவுக்கு வராமல் போய்விடும். எனவே தான் கப்ரு வேதனையை அனுபவித்தவர்கள் மீண்டும் எழுப்பப்பட்டு வேறு உலகிற்கு கொண்டு செல்லப்பட்டவுடன் கப்ரில் நடந்ததை அடியோடு மறந்து விடுகிறார்கள்.

ஒரு உலகில் நடந்ததை வேறொரு உலகிற்கு இடம் பெயரும் போது மறந்து விடுவார்கள் என்பது நமது கற்பனை அல்ல. மாறாக திருக்குர்ஆனிலேயே இதற்குச் சான்றுகள் உள்ளன.

172, 173. "ஆதமுடைய மக்களின்504 முதுகுகளிலிருந்து189 அவர்களின் சந்ததிகளை உமது இறைவன் வெளியாக்கி, அவர்களை அவர்களுக்கு எதிரான சாட்சிகளாக்கினான். நான் உங்கள் இறைவன் அல்லவா?'' (என்று கேட்டான்.) "ஆம்! (இதற்கு) சாட்சி கூறுகிறோம்'' என்று அவர்கள் கூறினர். "இதை விட்டும் நாங்கள் கவனமற்று இருந்து விட்டோம்'' என்றோ, "இதற்கு முன் எங்களின் முன்னோர்கள் இணை கற்பித்தனர்; நாங்கள் அவர்களுக்குப் பின் வந்த சந்ததிகளாக இருந்தோம்; அந்த வீணர்களின் செயலுக்காக எங்களை நீ அழிக்கிறாயா?'' என்றோ கியாமத் நாளில்1 நீங்கள் கூறாதிருப்பதற்காக (இவ்வாறு உறுதிமொழி எடுத்தோம்.)26

திருக்குர்ஆன் 7 : 172

முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களைப் படைத்தவுடன் அவர் வழியாகப் பிறக்கவுள்ள எல்லா சந்ததிகளையும் வெளிப்படுத்தி "நான் உங்கள் இறைவனல்லவா?'' என்று அல்லாஹ் கேட்டான். அனைவரும் "ஆம்'' என்றனர் என்பதை இவ்வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான்.

"ஆம்' எனக் கூறியவர்களில் நான், நீங்கள் மற்றும் அனைத்து மாந்தரும் அடங்குவோம்.

இவ்வாறு இறைவன் கேட்டதும் நாம் "ஆம்'' எனக் கூறியதும் நமக்கு நினைவில் இல்லை. இறைவன் திருக்குர்ஆன் மூலம் நமக்குச் சுட்டிக் காட்டிய பிறகும் நமக்கு அது நினைவுக்கு வருவதில்லை. இறைவன் கூறுவதால் அதை நாம் நம்புகிறோமே தவிர, நமக்கு நினைவுக்கு வந்து நாம் இதை நம்புவதில்லை.

ஒரு உலகிலிருந்து மறு உலகுக்கு மனிதன் இடம் பெயரும் போது முந்தைய உலகில் நடந்த அனைத்தையும், மனிதன் அடியோடு மறந்து விடுவான் என்பதை இவ்வசனத்திலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

எந்த உலகத்தில் வைத்து அல்லாஹ்  உறுதிமொழி வாங்கினானோ, அந்த உலகத்தில் நாம் மீண்டும் எழுப்பப்படுவோம். உறுதிமொழி வாங்கிய அந்த உலகத்தில் இறைவன் எடுத்த உறுதிமொழி நமக்கு நினைவுக்கு வரும் எனவும் இவ்வசனத்திலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

இறைவன் இருக்கிறான் என்பது எங்களுக்குத் தெரியாதே! என்றெல்லாம் கியாமத் நாளில் யாரும் மறுத்து விடக்கூடாது என்பதற்காகத் தான் அந்த உறுதிமொழி என்று அல்லாஹ் கூறுகிறான். இதிலிருந்து மறுமை நாளில் அந்த உறுதிமொழி நமக்கு நிச்சயமாக நினைவுக்கு வரும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

எந்த உலகில் வைத்து உறுதிமொழி எடுத்தோமோ அந்த உலகை விட்டு வந்ததும் நமக்கு அது நினைவில் இல்லை. மீண்டும் அங்கே சென்றதும் அது நமக்கு நினைவுக்கு வருகிறது என்பதிலிருந்து இந்த உண்மையை நாம் சந்தேகமற அறியலாம்.

கப்ருடைய வாழ்வு என்பது தனி உலகம், திரும்ப எழுப்பப்பட்டு இறைவன் முன்னால் நிறுத்தப்படுவது வேறு உலகம். எனவே, இவ்வுலகத்திலிருந்து இன்னொரு உலகத்துக்குச் செல்லும் போது "எங்கள் உறக்கத்திலிருந்து எழுப்பியவர் யார்?'' என்று கேள்வி கேட்பதை மட்டும் ஆதாரமாகக் கொண்டு கப்ரில் வேதனை இல்லை என்று மறுப்பது அறிவீனமாகும்.

ஒரு உலகிலிருந்து மறு உலகத்துக்கு இடம் பெயர்ந்தது மட்டுமின்றி மற்றொரு காரணத்தினாலும் உறக்கத்திலிருந்து எங்களை எழுப்பியவன் யார் என்று கேள்வியெழுப்பியிருக்கலாம்.

பொதுவாக மனிதன் கடுமையான அதிர்ச்சிக்கு ஆளாகும் போது அதற்கு முன்னிருந்த நிலையை மறந்துவிடுவான். திரும்ப உயிர்ப்பிக்கப்பட்டவுடன் மனிதன் காண்கின்ற பயங்கரமான நிகழ்வுகள் அதற்கு முன் அவன் அனுபவித்த தண்டனைகளை அடியோடு மறக்கச் செய்துவிடுகிறது.

"எங்கள் உறக்கத்திலிருந்து எங்களை எழுப்பியவர் யார்?'' என்று மனிதன் கேட்பதற்கு இதுவும் மற்றொரு காரணமாக அமைந்துவிடுகிறது.

இந்தக் காரணமும் நமது சொந்தக் கற்பனை அல்ல. மாறாக திருக்குர்ஆனிலேயே இக்காரணம் கூறப்பட்டுள்ளதற்கு சான்று உள்ளது.

1. மனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அந்த நேரத்தின்1 திடுக்கம் கடுமையான விஷயமாகும்.

2. நீங்கள் அதைக் காணும் நாளில் பாலூட்டும் ஒவ்வொருத்தியும், தான் பாலூட்டியதை (குழந்தையை) மறந்து விடுவாள். ஒவ்வொரு கர்ப்பிணியும், தன் கருவில் சுமந்ததை ஈன்று விடுவாள். போதை வயப்பட்டோராக மனிதர்களைக் காண்பீர்! அவர்கள் போதை வயப்பட்டோர் அல்லர். மாறாக அல்லாஹ்வின் வேதனை கடுமையானது.

திருக்குர்ஆன் 22:1,2

மனிதன் திரும்ப எழுப்பப்படும் நாளில் காணப்படும் அதிர்ச்சிகரமான நிலைமை, அனைத்தையுமே மறக்கடிக்கச் செய்வதாக இருக்கும். பெற்ற தாய் பிள்ளையைக் கூட மறக்குமளவுக்கு கடுமையானதாக இருக்கும்.

திரும்ப எழுப்பப்படும் மனிதன் அந்த அதிர்ச்சிகரமான நிலையைக் காணும் போது பேரதிர்ச்சிக்கு உள்ளாகிறான். அத்தகைய அதிர்ச்சியின் போது அவன் கூறும் வார்த்தை நூறு சதவிகிதம் உண்மையானதாக இருக்காது. மறுமை நாளின் கொடூரமான நிலை அதற்கு முன் அவன் பட்ட வேதனைகளை மறக்கடிக்கச் செய்து விடுகிறது. அதனால் தான் கப்ர் வேதனையை மறந்து "உறக்கத்திலிருந்து எழுப்பியவர் யார்?'' எனக் கூறுகிறான்.

அதிர்ச்சிகரமான நிலையை அடைந்தவனின் கூற்றாகத் தான் விளக்கவுரைக்கு நாம் எடுத்துக் கொண்ட வசனம் அமைந்துள்ளது. அல்லாஹ்வின் கூற்றாக அமையவில்லை. இறந்தவர்கள் உறங்கிக் கொண்டு இருப்பதாக அல்லாஹ் எங்கேயும் கூறவில்லை.

அதிர்ச்சிக்கு ஆளானவன் இவ்வாறு புலம்புவதாகத் தான் அல்லாஹ் எடுத்துக் காட்டுகிறான்.

மறுமையில் இத்தகைய காஃபிர்கள் புலம்புவதை ஆதாரமாகக் கொண்டவர்கள் நபிகள் நாயகத்தின் கூற்றை மறுப்பது தான் விந்தையிலும் விந்தை.

எனவே கப்ருடைய வேதனையை விடப் பலமடங்கு கடுமையான நிலையைக் கண்ட அதிர்ச்சியின் புலம்பலைத் தான் அல்லாஹ் இங்கு எடுத்துக் காட்டுகிறான் என்பதில் சந்தேகமில்லை.

மேலும் மறுமை நாளில் காஃபிர்கள் இது மட்டுமின்றி இன்னும் பல உண்மைக்கு மாற்றமான கூற்றுக்களைத் தான் கூறுவார்கள். அவர்கள் கூறுவதை அல்லாஹ் எடுத்துக் காட்டுவதால் அதுவே உண்மை நிலை என்று நம்புவதை விட பெரிய அறியாமை எதுவும் இருக்க முடியாது.

இதை நாம் கற்பனையாகக் கூறவில்லை. திருக்குர்ஆன் தான் இவ்வாறு கூறுகிறது.

55. யுகமுடிவு1 ஏற்படும் நாளில் சிறிது நேரம் தவிர தாம் வாழவில்லை என்று குற்றவாளிகள் சத்தியம் செய்து கூறுவார்கள். இவ்வாறே அவர்கள் திசை திருப்பப்பட்டு வந்தனர்.

திருக்குர்ஆன் 30:55

மறுமையில் எழுப்பப்படும் இந்தக் காஃபிர்கள் உறக்கத்திலிருந்து விழித்ததாக மட்டும் கூற மாட்டார்கள். மாறாக, ஒரு மணி நேரம் கூட உலகில் அல்லது கப்ரில் தங்கியிருக்கவில்லை எனவும் கூறுவார்கள். அதுவும் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறுவார்கள் என்று இவ்வசனங்கள் கூறுகின்றன. இதை ஆதாரமாகக் கொண்டு மனிதன் இறந்து ஒரு மணி நேரத்தில் கியாமத் நாள் வந்து விடும் என்று இவர்கள் கூறுவார்களா? அல்லது இவ்வுலகில் சிறிது நேரமே வாழ்ந்தார்கள் என்று கூறுவார்களா? அதிர்ச்சியின் புலம்பல் என்பார்களா?

நிச்சயமாக அதிர்ச்சியின் புலம்பல் என்றே கூறுவார்கள். இது புலம்பல் என்றால் "தூக்கத்திலிருந்து எழுப்பியது யார்?'' என்று இவர்கள் புலம்புவதை மட்டும் எப்படி ஆதாரமாகக் கொள்கிறார்கள்.

காஃபிர்கள் அதிர்ச்சியில் புலம்புவதை ஆதாரமாகக் கொண்டு கப்ரு வாழ்க்கையை மறுப்பதை விட பெரிய அறிவீனம் எதுவும் இருக்க முடியாது.

காஃபிர்கள் உலகில் நடந்த எத்தனையோ விஷயங்களை மறுமை நாளில் மறுப்பார்கள். அவர்களுக்கு எதிராக அவர்களின்  கைகளும், கால்களும் சாட்சியமளிக்கும் என்றெல்லாம் திருக்குர்ஆன் கூறுகிறது. காஃபிர்கள் இவற்றை மறுப்பதால் அவர்கள் அக்காரியங்களைச் செய்யவில்லை என்று அறிவுடைய யாரேனும் விளங்கிக் கொள்வார்களா?

எனவே, காஃபிர்கள் இவ்வாறு கூறுவதிலிருந்து கப்ருடைய வாழ்வு இல்லை  எனக் கூறுவது அறியாமை என்பதில் சந்தேகமில்லை.

மறுமையில் வழங்கப்படும் தண்டனை தவிர வேறு தண்டனை இருப்பதாக குர்ஆனில் கூறப்படவில்லை என்ற இவர்களின் வாதமும் அறியாமையின் வெளிப்பாடு தான். "கப்ருடைய வேதனை' என்ற வார்த்தை தான் குர்ஆனில் கூறப்படவில்லை. அத்தகைய வேதனை உள்ளது பற்றி வேறு வார்த்தைகளால் கூறப்பட்டுள்ளது. இதை அறியாத காரணத்தினால் தான் இவ்வாறு வாதிடுகின்றனர்.

45. எனவே அவர்கள் சூழ்ச்சி செய்த தீங்குகளை விட்டும் அவரை அல்லாஹ் காப்பாற்றினான். ஃபிர்அவ்னின் ஆட்களை தீய வேதனை சூழ்ந்து கொண்டது.

46. காலையிலும், மாலையிலும் நரக நெருப்பில் அவர்கள் காட்டப்படுவார்கள்.349 யுகமுடிவு நேரம்1 வரும்போது ஃபிர்அவ்னின் ஆட்களைக் கடுமையான வேதனையில் நுழையச் செய்யுங்கள்! (எனக் கூறப்படும்)

திருக்குர்ஆன் 40:45,46

கியாமத் நாள் வருவதற்கு முன், ஃபிர்அவ்னுடைய கூட்டத்தினர் நரக நெருப்பின் முன்னால் காலையிலும், மாலையிலும் அதாவது தினந்தோறும் காட்டப்படுகிறார்கள் என்று இவ்வசனங்கள் கூறுகின்றன. கியாமத் நாளில் இதை விடக் கடுமையான வேதனையுள்ளது எனவும் கூறப்படுகிறது. கியாமத் நாளில் கடுமையான வேதனை செய்யப்படுவதற்கு முன் காலையிலும், மாலையிலும் அவர்கள் அன்றாடம் வேதனை செய்யப்படுகிறார்கள் என்று தெளிவாகவே இவ்வசனங்கள் கூறுகின்றன.

இதற்கு விளக்கமாகத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், கப்ருடைய வேதனை பற்றி விளக்கமளித்துள்ளனர். இத்தகைய ஹதீஸ்கள் யாவும் இவ்வசனத்தின் விளக்கவுரைகளே தவிர முரணானவை அல்ல.

சில அதிமேதாவிகள் ஃபிர்அவ்னுடைய கூட்டத்திற்கு மட்டும் உள்ள சிறப்புத் தண்டனை இது; மற்றவர்களுக்கு இது இல்லை என்கின்றனர்.

மற்றவர்களுக்கு இது இல்லை என்று கூறுவதற்கு காஃபிர்கள் மறுமையில் புலம்புவதைத் தவிர இவர்களிடம் வேறு ஆதாரம் கிடையாது.

50. (ஏகஇறைவனை) மறுப்போரின் முகங்களிலும், முதுகுகளிலும் வானவர்கள் அடித்து அவர்களைக் கைப்பற்றும்போது,165 "சுட்டெரிக்கும் வேதனையை அனுபவியுங்கள்!''166 என்று கூறுவதை நீர் பார்க்க வேண்டுமே!

51. நீங்கள் செய்த வினையே இதற்குக் காரணம். அடியார்களுக்கு அல்லாஹ் அநீதி இழைப்பவன் அல்லன்.

52. ஃபிர்அவ்னின் ஆட்களுக்கும், அவர்களுக்கு முன் சென்றோருக்கும் ஏற்பட்ட கதியைப் போலவே (இவர்களுக்கும் ஏற்படும்). அவர்கள் அல்லாஹ்வின் சான்றுகளை மறுத்தனர். அவர்களது பாவங்களின் காரணமாக அவர்களை அல்லாஹ் தண்டித்தான். அல்லாஹ் வலிமை மிக்கவன்; கடுமையாகத் தண்டிப்பவன்.

திருக்குர்ஆன் 8:50, 51, 52

மலக்குகள், அக்கிரமக்காரர்களின் உயிர்களைக் கைப்பற்றும் போது அவர்களை அடிப்பார்கள். மேலும், "சுட்டெரிக்கும் வேதனையைச் சுவையுங்கள்'' எனக் கூறுவார்கள் என்று கூறுகின்ற இறைவன் "ஃபிர்அவ்னின் கூட்ட்த்தினருக்குச் செய்யப்படுவது போல்'' எனவும் கூறுவதை அறிவுடையோர் சிந்திக்க வேண்டும்.

கப்ர் வேதனை பற்றி ஃபிர்அவ்ன் கூட்டத்தார் விஷயமாக மட்டுமே இறைவன் குறிப்பிட்டுள்ளான். மற்றவர்களுக்கு இது இருக்காது என்று யாரும் கருதி விடக்கூடாது என்பதற்காகவே இவ்வசனத்தில் அற்புதமாக இவ்வார்த்தையை இறைவன் பயன்படுத்தியுள்ளான்.

உயிர்களைக் கைப்பற்றிய பின்னர் அளிக்கப்படும் வேதனை ஃபிர்அவ்னுடைய கூட்டத்தினருக்கு அளிக்கப்படும் வேதனை போன்றதாகும் எனக் கூறி மற்றவர்களுக்கும் கப்ரு வேதனை உள்ளது என்று இறைவன் வலியுறுத்திக் கூறுகிறான்.

எனவே கப்ர் வேதனை குர்ஆனில் இல்லை எனக் கூறுவதும், அது குர்ஆனுக்கு எதிரானது என வாதிடுவதும் குர்ஆனை அறியாதவர்களின் கற்பனையில் உதித்ததாகும் என்பதை இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

சிலர் அதிக காலமும் சிலர் குறைந்த காலமும் தண்டிக்கப்படுவது என்ன நியாயம்? என்ற கேள்வியும் தவறாகும். இறைவனின் ஏற்பாடு இது தான் என்பது தெரிந்த பின்னர் இவ்வாறு கேள்வி கேட்கக் கூடாது.

அப்படிக் கேட்டால், அதற்கு நியாயமான விடையும் குர்ஆனிலேயே கூறப்பட்டுள்ளது. நூறு வருடங்களுக்கு முன் ஒருவன் ஒரு பாவத்தைச் செய்கிறான். இன்றைக்கு ஒருவன் அதே பாவத்தைச் செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம். பாவத்தைப் பொறுத்தவரை இரண்டும் ஒரே மாதிரியானவை என்றாலும் குற்றத்தில் இருவருக்கும் இடையே வித்தியாசம் உள்ளது.

நூறு வருடங்களுக்கு முன் பாவம் செய்தவன் தனக்கு அடுத்து வருபவன் அதே பாவத்தைச் செய்திட தைரியமளித்து விட்டுச் செய்கிறான். மற்றவன் அப்பாவத்தைச் செய்வதற்கு முன்மாதிரியாகவும் திகழ்கிறான்.

நூறு வருடத்திற்குப் பின், நாம் செய்யும் அந்தப் பாவத்துக்கு அவன் வழிகாட்டியாக இருந்துள்ளான். நூறு வருடத்தில் நடைபெற்ற அதே பாவத்துக்கும் வழிகாட்டியாக இருந்துள்ளான். எனவே இவன் செய்த தப்புக்கும் தண்டிக்கப்பட வேண்டும். இத்தனை பேரைக் கெடுத்ததற்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும்.

கப்ரு வேதனையின் மூலமே இத்தகைய நீதியை வழங்க முடியும்.

ஆதமுடைய ஒரு மகன் செய்த கொலை தான் உலகில் நடக்கும் எல்லாக் கொலைகளுக்கும் முன்னுதாரணம். அவன் தான் கொலையாளிகளின் வழிகாட்டி. எனவே, அவன் மற்ற எவரையும் விட அதிக நாட்கள் தண்டனை அனுபவிப்பது தான் சரியான நீதியாகும்.

எத்தனை பேரைக் கெடுத்தார்கள் என்ற வகையில் சிந்தித்தால் ஒருவர் அதிக நாட்களும், இன்னொருவர் குறைவான நாட்களும் கப்ரில் தண்டிக்கப்படுவது அநீதி என்று அறிவுடையோர் கூற மாட்டார்கள்.

25. கியாமத் நாளில்1 முழுமையாகத் தமது சுமைகளையும், அறிவின்றி யாரை இவர்கள் வழிகெடுத்தார்களோ அவர்களின் சுமைகளையும்254 சுமப்பதற்காக (இவ்வாறு கூறுகின்றனர்) கவனத்தில் கொள்க! அவர்கள் சுமப்பது மிகவும் கெட்டது.

திருக்குர்ஆன் 16:25

13. அவர்கள் தமது சுமைகளையும், தமது சுமைகளுடன் வேறு சில சுமைகளையும் சுமப்பார்கள்.254 அவர்கள் இட்டுக்கட்டியது பற்றி கியாமத் நாளில்1 விசாரிக்கப்படுவார்கள்.

திருக்குர்ஆன் 29:13

வழிகெடுத்த பாவத்தையும் ஒருவன் சுமந்தாக வேண்டும் என்று இறைவன் கூறுவதால் இவர்களின் இந்த வாதமும் அடிப்பட்டுப் போகிறது.

எனவே, குர்ஆனை முழுமையாக நம்புபவர்கள் கப்ருடைய வேதனையை ஒருக்காலும் மறுக்க மாட்டார்கள்.

ஆண்கள் தங்கம் அனிய குர்ஆன் அனுமதிக்கிறதா?

(மாதமிருமுறை ஒற்றுமை இதழில் தேர்வு செய்யப்பட்ட குர்ஆன் வசனங்களுக்கு பீஜே எழுதிய விளக்கம். இது ஆறாவது தொடர்)

14. பெண்கள், ஆண் மக்கள், திரட்டப்பட்ட தங்க வெள்ளிக் குவியல்கள், அழகிய குதிரைகள், கால்நடைகள், விளைநிலங்கள் ஆகிய மனம் கவருபவற்றை நேசிப்பது மனிதர்களுக்குக் கவர்ச்சியாக்கப்பட்டுள்ளது. இவை இவ்வுலக வாழ்க்கையின் வசதிகள். அல்லாஹ்விடம் அழகிய புகலிடம் உள்ளது.88

திருக்குர்ஆன்: 3:14

இவ்வுலகில் எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் மனோ இச்சைப்படி வாழ்வதற்குத் தான் பெரும்பாலோர் விரும்புகின்றனர். இறை நம்பிக்கையாளர்களுக்கும் இத்தகைய விருப்பம் இருந்தாலும் இறைவனுக்காக அவ்விருப்பத்தைத் தியாகம் செய்து வாழ்கின்றனர்.

எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாத வாழ்க்கையை அல்லாஹ்வே அனுமதித்தால் நாமும் மற்றவர்களைப் போல வாழலாமே என எண்ணுவோர் அதற்கேற்ப யாரேனும் மார்க்கத் தீர்ப்பு தரமாட்டார்களா? என்று எதிர்பார்க்கின்றனர். இத்தகையோரின் பலவீனத்தையும், அறியாமையையும் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட ஒரு கும்பல் இவ்வசனத்தை தங்களுக்குச் சாதகமாக்கி அப்பாவிகளை வழி தவறச் செய்திட முயல்கின்றனர்.

ஆண்கள் தங்க நகைகள் அணிவதும், தங்க, வெள்ளிப் பாத்திரங்களில் ஆண், பெண் இரு பாலரும் உண்பதும், பருகுவதும் தடை செய்யப்பட்டிருப்பதை நாம் அறிவோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்து விட்டதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.

ஆனால் குர்ஆன் மட்டும் போதும் என வாதிடும் வழிகேடர்கள் இவ்வசனத்தை ஆதாரமாகக் காட்டி அல்லாஹ் இவ்வசனத்தில் தங்கத்தை அனுமதித்திருக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) எப்படித் தடுக்க முடியும்? குர்ஆனுக்கு எதிரான இத்தடையை நாம் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

எனவே ஆண்கள் தங்க நகைகளை அணியலாம். தங்கம் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களில் உண்ணலாம்! பருகலாம்! என்றெல்லாம் வாதிடுகின்றனர். தங்க நகை அணிந்து மற்றவர்களைப் போல் வாழ ஆசைப்படுவோருக்கு இவ்வாதம் இனிப்பாகத் தோன்றலாம். நபிகள் நாயகத்தின் கட்டளையை மறுத்தாவது தங்கள் மனோ இச்சைப்படி நடக்க விரும்பலாம்.

ஆனால் இவர்கள் எடுத்து வைக்கும் வாதத்துக்கு இவ்வசனத்தில் இடம் இருக்கிறதா? என்றால் நிச்சயமாக இல்லை.

குர்ஆனைப் பற்றிய அறிவோ, தெளிவான சிந்தனையோ அற்றவர்கள் தான் இவ்வாறு வாதிட முடியும் என்பதை அறிவுடையோர் புரிந்து கொள்வார்கள்.

*             இவற்றை விரும்புவது மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது.

*             இவை இவ்வுலகின் அனுபவப் பொருட்களாகும்

என்ற இரு சொற்றொடர்ககள் தான் இவர்களின் வாதத்திற்கு அடிப்படை.

"அழகாக்கப்பட்டுள்ளது'' என்ற பட்டியலில் தங்கத்தையும் அல்லாஹ் சேர்த்திருக்கும் போது தங்க நகைகள் அணிவதை எப்படித் தடை செய்ய முடியும்?

அல்லாஹ் எதை "அழகாகக் கப்பட்டுள்ளது'' என்று கூறுகிறானோ அதைக் கூடாது என்று கூறுவதை எவ்வாறு ஏற்க முடியும்? என்று இவர்கள் கேட்கின்றனர்.

இன்னும் சொல்வதானால் பெண்களை விரும்புவது அழகாக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுவதிலிருந்து இவ்வசனம் ஆண்களையே முன் நிறுத்திப் பேசுகிறது.

இதை அவர்கள் கவனிக்காததால் இந்தக் கோணத்தில் தமது வாதத்தை அவர்கள் வலிமைப் படுத்தவில்லை. இதையும் கூட நாம் சேர்த்துக் கொள்வோம்.

ஆண்களையே அழைத்து தங்கம் அனுமதிக்கப்பட்டுள்ளது என இவ்வசனம் கூறுவதால் ஆண்களுக்கு தங்கம் அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது உறுதி. இதற்கு எதிராக நபிகள் நாயகத்தின் தடை அமைந்துள்ளதால் அதை ஏற்க வேண்டியதில்லை என்று அவர்கள் சார்பாக அவர்கள் வாதத்தை நாம் வலிமைப்படுத்தி விட்டு அதற்கான விளக்கத்தைக் காண்போம்.

"அழகாக்கப்பட்டுள்ளது'' என்ற வாசக அமைப்பு "அனுமதிக்கப்பட்டுள்ளது'' என்ற பொருளில் அமைந்துள்ளதாக இவர்கள் கருதுவதே அடிப்படையில் தவறான தாகும்.

திருக்குர்ஆனுடைய வழக்கில் அழகாக்கப்பட்டுள்ளது என்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்படாதவைகளுக்கும் பல இடங்களில் பயன் படுத்தப்பட்டுள்ளது.

இத்தகைய வார்த்தை பயன் படுத்தப்பட்டுள்ள சில வசனங்களை நாம் பார்ப்போம்.

108. அல்லாஹ்வையன்றி யாரிடம் அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ அவர்களை ஏசாதீர்கள்! அவர்கள் அறிவில்லாமல் வரம்பு மீறி அல்லாஹ்வை ஏசுவார்கள்.170 இவ்வாறே ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அவர்களது செயலை அழகாக்கிக் காட்டினோம். பின்னர் அவர்களின் மீளுதல் அவர்களின் இறைவனிடமே உள்ளது. அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் அவர்களுக்கு அறிவிப்பான்.

திருக்குர்ஆன்: 6:108

122. இறந்தவனை உயிர்ப்பித்து, மக்களிடையே நடந்து செல்வதற்காக அவனுக்கு ஒளியையும் ஏற்படுத்தினோமே அவன், இருள்களில்303 கிடந்து அதிலிருந்து வெளியேற முடியாமல் உள்ளவனைப் போல் ஆவானா? இவ்வாறே (நம்மை) மறுப்போருக்கு அவர்கள் செய்து வருபவை அழகாக்கப்பட்டுள்ளன.

திருக்குர்ஆன்: 6:122

37. (மாதத்தின் புனிதத்தை) தள்ளிப் போடுவது (இறை)மறுப்பை அதிகப்படுத்துவதாகும். இதன் மூலம் (ஏகஇறைவனை) மறுப்போர் வழிகெடுக்கப்படுகின்றனர். ஒரு வருடம் அதன் புனிதத்தை நீக்கி விடுகின்றனர். மறு வருடம் அதற்குப் புனிதம் வழங்குகின்றனர். அல்லாஹ் புனிதமாக்கிய எண்ணிக்கையைச் சரி செய்வதற்காக அல்லாஹ் புனிதப்படுத்தியதைப் புனிதமற்றதாக்கி விடுகின்றனர். அவர்களின் தீய செயல்கள் அவர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளன. (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் வழிகாட்ட மாட்டான்.

திருக்குர்ஆன்: 9:37

12. மனிதனுக்குத் தீங்கு ஏற்படுமானால் படுத்தவனாகவோ, அமர்ந்தவனாகவோ, நின்றவனாகவோ நம்மிடம் பிரார்த்திக்கிறான். அவனது துன்பத்தை அவனை விட்டு நாம் நீக்கும்போது அவனுக்கு ஏற்பட்ட துன்பத்திற்காக நம்மை அழைக்காதவனைப் போல் நடக்கிறான். இவ்வாறே வரம்பு மீறியோருக்கு அவர்கள் செய்து வந்தவை அழகாக்கப்பட்டுள்ளன.

திருக்குர்ஆன்: 10:12

4. மறுமையை நம்பாமல் இருப்போரின் செயல்களை அவர்களுக்கு அழகாக்கிக் காட்டுகிறோம். எனவே அவர்கள் தட்டழிகின்றனர்.

திருக்குர்ஆன்: 27:4

இவ்வாறே ஃபிர்அவ்னுக்கு அவனது தீய செயல் அழகாக்கிக் காட்டப்பட்டது. (நேர்)வழியை விட்டும் அவன் தடுக்கப்பட்டான். ஃபிர்அவ்னின் சூழ்ச்சி அழிவில் தான் முடிந்தது.26

திருக்குர்ஆன்: 40:37

இது போல் இன்னும் பல வசனங்கள் உள்ளன. இவ்வசனங்கள் அனைத்திலும் 3:14 வசனத்தில் பயன்படுத்தப்பட்டது போன்ற அழகாக்கப்பட்டுள்ளது என்ற வாசகம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களின் வாதத்தின் அடிப்படையில் இவ்வசனங்களைப் புரிந்து கொண்டால் என்னவாகும்?

ஒருவன் இஸ்லாத்தை விட்டே வெளியேறலாம். அதையும் அல்லாஹ் அழகாக்கியதாக மேற்கண்ட வசனங்களை எடுத்துக் காட்டலாம்.

நானே கடவுள் என்று கூட ஒருவன் வாதிடலாம். ஏனெனில் அவ்வாறு கூறிய ஃபிர்அவ்னுக்கு அவனுடைய செயல் அழகாக்கப்பட்டதாக அல்லாஹ் கூறுகிறான். எனவே அவ்வாறு கூறுவதற்கு அனுமதி உள்ளது என்று வாதிடலாம்.

எல்லா தீய செயல்களிலும் ஒருவர் ஈடுபட்டு இதற்கு அனுமதியுள்ளது என்று சாதிக்கலாம். ஏனெனில் தீய செயல்கள் அழகாக்கப்பட்டதாக மேற்கண்ட வசனங்களில் கூறப்படுவதால் அதற்கு அனுமதியுள்ளது என்பது தான் பொருள் என்று கூறலாம்.

இவ்வாறு கூறுபவனை ஞான சூன்யம் என்போம். இத்தகைய ஞான சூன்யங்கள் தான் குர்ஆன் மட்டும் போதும் என்போர். குர்ஆனைப் பற்றிய அரிச்சுவடி கூட அறியாதவர்கள், அளிக்கும் கிறுக்குத் தனமான விளக்கத்தின் விபரீதங்கள் இவை.

"அழகாக்கப்பட்டுள்ளது'' என்பதன் பொருள் "அனுமதிக்கப்பட்டது'' என்பது அல்ல.

மனிதர்களுக்கு அழகானதாகத் தோன்றுகிறது என்பது தான் பொருள். அவற்றில் அனுமதிக்கப்பட்டவையும் இருக்கலாம். அனுமதிக்கப்படாதவையும் இருக்கலாம்.

இந்தச் சாதாரண உண்மையைக் கூட இவர்கள் விளங்கவில்லை.

இவர்கள் சுட்டிக்காட்டும் அதே வசனத்தையே நாம் ஆய்வு செய்து பார்ப்போம். "பெண்களை விரும்புவது அழகாக்கப்பட்டுள்ளது'' என்று அல்லாஹ் கூறுகிறான். எந்தப் பெண்ணை வேண்டுமானாலும்  காதலிக்க அனுமதியுள்ளது என்று இவர்கள் கூறுவார்களா? ஆண்கள் இயல்பிலேயே பெண்களை விரும்புகிறார்கள். மனைவியை அவ்வாறு காதலித்தால் அது அனுமதிக்கப்பட்டதாக ஆகின்றது. மனைவியல்லாதவளை அடுத்தவன் மனைவியை காதலித்தால் அது அனுமதிக்கப்படாததாக ஆகிவிடுகிறது. அனுமதிக்கப்படாததாக இருந்தாலும் அதுவும் சிலருக்கு அழகானதாகத் தான் தெரிகின்றது. அழகாக்கப்பட்டுள்ளது என்பது அனுமதிக்கப்பட்டுள்ளது என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படவே இல்லை என்பது இதிலிருந்து தெரிகிறது.

ஆண் மக்களை விரும்புவது அழகாக்கப்பட்டுள்ளது என இரண்டாவதாகக் கூறப்படுகிறது. இயல்பிலேயே தங்களுக்கு ஆண் குழந்தை வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர் என்பது தான் இதன் கருத்து. ஆண் மக்களைப் பற்றி அழகாக்கப்பட்டுள்ளது என்று அல்லாஹ் கூறுவதால் பெண் மக்கள் பெறுவது ஹராம் என்று யாருமே விளங்கிக் கொள்ள மாட்டார்கள்.

இது போல் தான் இவ்வசனத்தில் கூறப்பட்டவற்றை மனிதர்கள் விரும்புகிறார்கள் என்பது மட்டும் தான் இங்கே கூறப்பட்டுள்ளதே தவிர அனுமதிக்கப்பட்டது எனக் கூறப்படவில்லை. அதுபோல தங்கம் மனிதர்களை ஈர்க்கிறது. அதற்கு ஆசைப்படுகிறார்கள். அதுவும் மனித இயல்பு தான். அனுமதிக்கப்பட்டது என்பது பொருளல்ல.

இவ்விடத்தில் இன்னொரு அம்சத்தையும் நாம் சுட்டிக் காட்டுவது பொருத்தமானதாக இருக்கும்.

தங்கம், வெள்ளியைக் குறிப்பிடும் போது தங்கம் வெள்ளி ஆபரணங்கள் என்று கூறவில்லை. குவியல்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். அனுமதிக்கப்பட்டவற்றின் பட்டியல் தான் இவ்வசனம் என்று ஒரு வாதத்துக்காக வைத்துக் கொண்டாலும் தங்கம் வெள்ளியைக் குவியலாக - சொத்தாக வைத்துக் கொள்ளலாம் என்று தான் கூறப்படுகிறதே தவிர அணிந்து கொள்ளலாம் என்று கூறவில்லை.

ஆண்கள் தங்கள் லாக்கரில் பீரோக்களில் தங்கம் வெள்ளிகளைச் சேர்த்து வைத்துக் கொள்வது பற்றி எந்தத் தடையும் இல்லை. ஆண்கள் அணிவதற்குத் தான் தடையுள்ளது. இவ்வசனம் அணிவது பற்றிப் பேசாததால் நபிகள் நாயகத்தின் தடை இவ்வசனத்தில் உள்ள அனுமதிக்கு எதிரானது என்ற வாதம் அடிப்பட்டு போகும்.

ஒரு வாதத்திற்குத் தான் இவ்வாறு கூறுகிறோம். "அழகாக்கப்பட்டது' என்பதற்கு "அனுமதிக்கப்பட்டது' என்று பொருள் கொள்வதே தவறு என்பதை நினைவில் கொள்க.

பெண்கள் அழகாக்கப்பட்டுள்ளனர் என்றால் அவர்களை அறுத்து பிரியாணி போடலாம் என்று புரிந்து கொள்ள மாட்டோம். தங்கக் குவியல் என்று கூறாமல் தங்க நகை அழகாக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தால் அணிவது பற்றி பேசுவதாக கருதுவதில் அர்த்தம் உள்ளது.

தங்கக் குவியல்கள் என்பது மனிதர்களின் சொத்துச் சேர்க்கும் ஆசையைக் குறிப்பதற்கான சொல் என்பதை இவர்கள் விளங்க வேண்டும்.

இவ்வுலகின் அனுபவப் பொருட்கள் என்று அல்லாஹ் கூறுகிறானே! அதிலிருந்து இவை அனுமதிக்கப்பட்டவை என்று தெரியவில்லையா? எனவும் இவர்கள் வாதிடுகின்றனர். இதுவும் குர்ஆனைப் பற்றிய அறிவு இல்லாததால் எழுப்பப்படும் வாதமேயாகும்.

"இவ்வுலகின் அனுபவப் பொருட்கள்'' என்ற வாசக அமைப்பு ஹலால், ஹராம்  பற்றிப் பேசுவது அல்ல. இவற்றையெல்லாம் மனிதர்கள் அனுபவிக்கிறார்கள். இவற்றில் அனுமதிக்கப்பட்டவையும் இருக்கலாம். அனுமதிக்கப்படாதவையும் இருக்கலாம்.

இதை வெறும் அனுமானத்தில் நாம் கூறவில்லை. "இவ்வுலகின் அனுபவப் பொருட்கள்'' என்ற இதே வாசக அமைப்பு திருக்குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளதை ஆய்வு செய்தே இவ்வாறு கூறுகிறோம்.

23. அவர்களை அவன் காப்பாற்றும்போது, நியாயமின்றி பூமியில் அட்டூழியம் செய்கின்றனர். மனிதர்களே! உங்கள் அட்டூழியம் உங்களுக்கே எதிரானது. இவ்வுலக வாழ்வில் சில வசதிகள் உண்டு. பின்னர் நம்மிடமே உங்கள் மீளுதல் உண்டு. நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அப்போது உங்களுக்கு அறிவிப்போம்.

திருக்குர்ஆன்: 10:23

60. உங்களுக்கு எந்தப் பொருள் வழங்கப்பட்டாலும் அது இவ்வுலக வாழ்க்கையின் வசதியும், அலங்காரமுமாகும். அல்லாஹ்விடம் இருப்பதே சிறந்தது; நிலையானது. விளங்க மாட்டீர்களா?

திருக்குர்ஆன்: 28:60, 42:36

எவையெல்லாம் கொடுக்கப்பட்டனவோ அவையாவும் அனுபவப் பொருட்கள் என்று இவ்வசனங்கள் கூறுவதால் தனக்கு ஹராமான வழியில் கிடைத்தவற்றை ஹலால் என்று வாதிட முடியுமா? அவ்வாறு வாதிடுவதற்கும் இவர்களின் வாதத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

இவர்கள் எடுத்துக் காட்டுகின்ற வசனம் ஹலால், ஹராம் பற்றிப் பேசுகின்ற வசனம் அல்ல. மாறாக மனிதர்களின் பலவீனங்களையும், இயல்பையும் படம் பிடித்துக் காட்டும் வசனங்களாகும். தங்கம் அனுமதிக்கப்பட்டது என்றோ அனுமதிக்கப்படவில்லை என்றோ இவ்வசனம் கூறவில்லை.

எனவே நபிகள் நாயகம் இவ்வசனத்தில் அனுமதிக்கப்பட்டதைத் தடை செய்யவில்லை என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

நபிகள் நாயகத்துக்கு எழுதப்படிக்கத் தெரியுமா?

(ஒற்றுமை மாதமிருமுறை இதழில் தேர்வு செய்யப்பட்ட குர்ஆன் வசனங்களுக்கு பீஜே எழுதிய விளக்கவுரை, நான்காவது மற்றும் ஐந்தாவது தொடர் இது.)

48. (முஹம்மதே!) இதற்கு முன் எந்த வேதத்திலிருந்தும்4 நீர் வாசிப்பவராக இருந்தில்லை. (இனியும்) உமது வலது கையால் அதை எழுதவும் மாட்டீர்!152&312 அவ்வாறு இருந்திருந்தால் வீணர்கள் சந்தேகம் கொண்டிருப்பார்கள்.

திருக்குர்ஆன்: 29:48

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுதப் படிக்க அறிந்திருக்கவில்லை என்பதை முஸ்லிம்கள் அறிந்து வைத்திருக்கின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நடந்தால் பாதம் தரையில் படாது!

அவர்களின் நிழல் தரையில் படாது!

இருளில் நடந்து சென்றால் வீதியெங்கும் வெளிச்சம் பரவும்!

என்றெல்லாம் கட்டுக்கதைகளைக் கூறி சிலர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் புகழ்வதைக் (?) காண்கிறோம். அன்பின் மேலீட்டால் இவர்கள் இப்படிச் செய்தாலும் இதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை. உண்மையான வரலாறுகளின் அடிப்படையில் தான் புகழவேண்டும்.

யார் என்னைப் பற்றி ஒரு செய்தியைப் பொய்யாகக் கூறுகிறாரோ அவர் சென்றடையும் இடம் நரகம் தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்து விட்டனர்.

அறியாத மக்கள் இத்தகைய கட்டுக்கதைகளின்  மூலம் நபிகள் நாயகத்துக்குச் சிறப்புச் சேர்க்க முயல்வது போல் "நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எழுதவும் வாசிக்கவும் தெரியும்'' என்று படித்தவர்கள் தங்கள் பங்குக்கு இட்டுக்கட்டிக் கூறி வருகின்றனர்.

படிப்பறிவைக் கொண்டே மனிதர்களின் தகுதிகள் வரையறை செய்யப்படும் காலத்தில் இவர்கள் வாழ்வதால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் படிக்காதவர் என்று சொல்ல இவர்கள் கூச்சப்படுகிறார்கள். இவ்வாறு கூறினால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சிறப்புக்குப் பங்கம் ஏற்பட்டுவிடுமோ என்று கருதிக் கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எழுதவும், படிக்கவும் தெரியும் என்று வாதிட்டு வருகின்றனர்.

இதற்கு ஆதரவாக சில சான்றுகளையும் எடுத்து வைக்கின்றனர். இந்தச் சான்றுகள் சரியானவை தானா என்பதை ஆய்வு செய்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு படிப்பறிவு இல்லாமல் இருப்பது உண்மையில் தகுதிக் குறைவு தானா? என்பதை ஆராய்வோம்.

படிப்பறிவின்மை பொதுவாக தகுதிக் குறைவாகவே கருதப்பட்டாலும் நபிகள் நாயகத்துக்கு இது தகுதிக் குறைவை ஏற்படுத்தாது ஏனெனில், தகுதிக் குறைவாகக் கருதப்படும் சில விஷயங்கள் சில இடங்களில் தகுதியை அதிகப்படுத்தக் கூடியதாக அமைந்து விடும்.

மனிதர்களுக்கு படிப்பறிவு கூடுதல் தகுதியை ஏற்படுத்தக் கூடியதாக இருந்தாலும் அல்லாஹ்வின் தூதராக நியமிக்கப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு படிப்பறிவு இல்லாமல் இருப்பது தான் சிறப்பாகும்.

எனக்கு இறைவனிடமிருந்து தூதுச் செய்தி வருகிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அந்தச் செய்தி மிகவும் உயர்ந்த இலக்கியத் தரத்தில் அமைந்திருந்தது. இது போல் யாராலும் இயற்ற முடியாது என்று அறைகூவல் விடும் அளவுக்கு அதன் தரம் இருந்தது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் படித்தவராக இருந்திருந்தால் அவர்களின் படிப்புத் திறமையினால் இதை இயற்றியுள்ளார் என்று தான் மக்கள் நினைத்திருப்பார்கள். இதனால் நபிகள் நாயகம் திறமைசாலி என்பது நிரூபணமாகுமே தவிர அல்லாஹ்வின் தூதர் என்பது நிரூபணமாகாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரபு மொழிப் பண்டிதர் என்பதை விட அல்லாஹ்வின் தூதர் என்பது தான் பல்லாயிரம் மடங்கு சிறந்த தகுதியாகும். அவர்கள் எழுதவோ படிக்கவோ தெரிந்திருந்தால் அவர்களை நேரடியாகக் கண்ட மக்கள் அல்லாஹ்வின் தூதர் என்று ஏற்க மாட்டார்கள். அவர் கூறிய தூதுச் செய்தியை அல்லாஹ்வின் வேதம் என்றும் ஏற்றிருக்க மாட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் என்பதை நிரூபிக்க அல்லாஹ் விரும்பி ஏற்படுத்திய நிலை தான் இந்தத் தகுதிக் குறைவு.

எழுதப் படிக்கத் தெரியாதவர் இவ்வளவு உயர்ந்த தரத்தில் செய்திகளைக் கூறுகிறாரே! நிச்சயமாக இவரது திறமையில் இது உருவாக்கப்பட்டிருக்கவே முடியாது. இவர் கூறுவது போல் இறைவனது செய்தியாகத் தான் இருக்க முடியும் என்று அன்றைய மக்கள் நம்புவதற்கு நபிகள் நாயகத்தின் படிப்பறிவின்மை தான் முக்கிய காரணமாக இருந்தது.

இதை நாம் கற்பனை செய்து கூறவில்லை. மேலே நாம் சுட்டிக் காட்டிய வசனத்தில் அல்லாஹ்வே இவ்வாறு தான் கூறுகிறான். எழுதத் தெரிந்திருந்தால் "வீனர்கள் சந்தேகம் கொண்டிருப்பார்கள்'' என்ற வாசகத்தைச் சிந்திப்பவர்கள் இதைச் சந்தேகமற அறியலாம்.

வேறொரு சிறப்பை அவர்களுக்கு அளிப்பதற்காக இதை அல்லாஹ் அவர்களுக்கு வழங்கவில்லை என்று இவ்வசனம் இரண்டாவது கருத்துக்கு இடமின்றி அறிவித்து விடுகிறது.

எழுதப் படிக்கத் தெரிந்திருப்பது சிறப்பானது தான். அதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நபிகள் நாயகத்துக்கு மட்டும் எழுதப் படிக்கத் தெரியாமல் இருப்பது தான் சிறப்பு. இதனால் இறைத்தூதர் என்ற சிறப்பு - உழைப்பால் எவரும் அடைய முடியாத சிறப்பு - அவர்களுக்குக் கிடைக்கிறது.

இதைப் புரிந்து கொண்டால் இந்தக் குழப்பம் விலகி விடும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எழுதவும் படிக்கவும் தெரியும் என்று கூறுபவர்கள் வேறு சில வாதங்களையும் எடுத்து வைக்கிறார்கள்.

திருக்குர்ஆனைப் பற்றி திருக்குர்ஆனில் குறிப்பிடும் போது பல இடங்களில் "கிதாப்' என்றே கூறப்படுகிறது. பகரா அத்தியாயத்தின் ஆரம்பத்தில் "இந்த கிதாபில் எந்தச் சந்தேகமும் இல்லை'' என்று கூறப்பட்டுள்ளது. இப்படி பல இடங்களில் கிதாப் என்றே குர்ஆன் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிதாப் என்பது கதப என்ற வேர்ச் சொல்லிலிருந்து பிறந்தது. கதப என்றால் எழுதினான் என்று பொருள். கிதாப் என்றால் எழுதப்பட்டது - நூல் என்பது பொருள். எழுதப்பட்ட ஏடுகளாகத் தான் குர்ஆன் வழங்கப்பட்டது என்பதை கிதாப் என்ற வார்த்தைப் பிரயோகத்திலிருந்து அறியலாம். எழுதப்பட்ட ஏடுகளாகத் தான் குர்ஆன் வழங்கப்பட்டது என்றால் யாருக்கு அது வழங்கப்பட்டதோ அவருக்கு வாசிக்கத் தெரிந்திருக்க வேண்டும். எனவே, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நிச்சயமாக வாசிக்கத் தெரியும் என்பது இவர்களது வாதம்.

இந்த வாதம் முற்றிலும் தவறாகும். கதப என்ற வார்த்தைக்கு எழுதினான் என்று அகராதியில் பொருள் இருந்தாலும் வேறு அர்த்தங்களிலும் அந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு திருக்குர்ஆனிலேயே ஆதாரங்கள் உள்ளன.

புத்தக வடிவமாகத் தயாரிக்கப்பட்டதை கிதாப் என்று கூறலாம் என்பது உண்மையே. அதை மட்டும் தான் கிதாப் என்று கூற வேண்டும் என்பது தவறாகும்.

நுôல் வடிவம் பெற வேண்டும் என்பதற்காக ஒருவர் மற்றவருக்கு (டிக்டேட்) கூறும் செய்திகளையும் கிதாப் எனக் கூறலாம். இனிமேல் அதற்கு எழுத்து வடிவம் கிடைக்கவுள்ளதே இதற்குக் காரணம்.

அது போல் எழுதப்பட்டதிலிருந்து மனனம் செய்து ஓதிக் காட்டினால் அதையும் கூட கிதாப் என்று கூறலாம்.

எதை நூலாக எழுத வேண்டும் என்று நாம் மனதில் தீர்மானித்திருக்கிறோமோ அதையும் கூட கிதாப் என்று கூறலாம். ஒரு நூலை எழுதுவதாக முடிவு செய்து கொண்டு எழுத ஆரம்பிப்போம். "இந்த நூல் இத்தகைய தன்மையில் அமைந்துள்ளது'' என்று ஆரம்பத்திலேயே நாம் குறிப்பிடுவோம். நூல் முழுமையாக எழுதப்படுவதற்கு முன்பு முன்னுரையிலேயே இந்த நூல் என்ற குறிப்பிடுவது ஏன்? நூல் நமது மூளையில் வடிவம் பெற்று விட்டது. விரைவில் எழுத்து வடிவத்துக்கு வரவுள்ளது என்ற அடிப்படையில் இவ்வாறு கூறுவோம்.

அரபு மொழியில் மட்டும் இல்லாமல் எல்லா மொழிகளிலும் இத்தகைய வார்த்தைப் பிரயோகம் சர்வ சாதனம்.

"சட்டை தைக்க வேண்டும்' என்று கூறுவோம். துணியைத் தான் சட்டையாகத் தைக்க வேண்டும். இனிமேல் அது சட்டையாக ஆகப் போவதால் துணியையே சட்டை எனக் கூறுவோம். சோறு ஆக்க வேண்டும், டீ போட வேண்டும் என்பது போல் ஏராளமாக இது போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் உள்ளன.

இனி மேல் கிடைக்கவுள்ள வடிவத்தைக் கவனத்தில் கொண்டு அந்த வடிவம் கிடைப்பதற்கு முன்பே அந்த வார்த்தையைப் பயன்படுத்துவது எல்லா மொழிகளிலும் சகஜமாகவுள்ளது.

எனவே கிதாப் என்ற வார்த்தைக்கு மேற்கண்ட நான்கு அர்த்தங்கள் உள்ளன என்பதால் எந்த அர்த்தம் செய்வது பொருத்தமானது என்பதை ஆய்வு செய்து தான் முடிவுக்கு வரவேண்டும்.

இந்த நான்கு அர்த்தங்களில் நிச்சயமாக முதலாவது அர்த்தம் செய்யவே முடியாது. எழுதப்பட்ட வடிவில் குர்ஆன் அருளப்படவே இல்லை என்று திருக்குர்ஆன் பல இடங்களில் திட்டவட்டமாக அறிவிப்பதால் மற்ற மூன்று அர்த்தங்களில் ஒன்றைத் தான் கருத்தில் கொள்ள வேண்டுமே தவிர முதல் அர்த்தத்தை நிச்சயமாகக் கொள்ள முடியாது. திருக்குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்படவில்லை என்பதைத் திட்டவட்டமாக அறிவிக்கும் சான்றுகளைப் பார்ப்போம்.

ஏட்டில் எழுதப்பட்ட கிதாபை உம் மீது நாம் இறக்கியிருந்தால் அதையும் தமது கரங்களால் தீண்டியிருப்பார்கள். இது வெளிப்படையான சூனியம் தவிர வேறில்லை எனவும் கூறியிருப்பார்கள்.

திருக்குர்ஆன் 6:7

ஏட்டில் எழுதப்பட்ட நூலை நாம் இறக்கியிருந்தால் அதையும் இவர்கள் விமர்சனம் செய்திருப்பார்கள் என்ற சொற்றொடர் குர்ஆன் எழுதப்பட்டதாக அருளப்படவில்லை என்பதை சந்தே கத்திற்கு இடமின்றி அறிவிக்கிறது.

வானத்திலிருந்து அவர்கள் மீது ஒரு நூலை நீர் இறக்கிவிட வேண்டும் என்று வேதமுடையவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். நிச்சயமாக இவர்கள் மூஸாவிடம் இதை விடப் பெரிய ஒன்றைக் கேட்டனர். அல்லாஹ்வை நேருக்கு நேராக எங்களுக்குக் காட்டுவீராக என்று அவர்கள் கேட்டனர்.

திருக்குர்ஆன் 4:153

எழுத்து வடிவமாக ஒரு நூல் வானிலிருந்து இறங்க வேண்டும். அன்றைய மக்கள் கேட்டதிலிருந்து அவ்வாறு அருளப்படவில்லை என்பதை ஐயத்திற்கிடமின்றி அறியலாம். இறைவனை நேருக்கு நேர் காட்டுவீராக என்று அவர்கள் கேட்டது போன்ற நடக்காத காரியம் எனவும் இவ்வசனம் கூறுகிறது. எழுத்து வடிவமாக அருளப்படவில்லை என்பதற்கு இதுவும் வலுவான சான்றாக உள்ளது.

97. யாரேனும் ஜிப்ரீலுக்கு எதிரியாக இருந்தால் (அது தவறாகும்.) ஏனெனில் அவரே அல்லாஹ்வின் அனுமதியின்படி இதை (முஹம்மதே!) உமது உள்ளத்தில்152 இறக்கினார்.492 "இது, தனக்கு முன் சென்றவற்றை4 உண்மைப்படுத்துவதாகவும், நம்பிக்கை கொண்டோருக்கு நேர்வழியாகவும், நற்செய்தியாகவும் உள்ளது'' என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 2:97

இவ்வேதம் எழுத்து வடிவில் அருளப்படவில்லை. மாறாக ஜிப்ரீல் என்ற வானவர் மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்தில் பதிவு செய்யப்பட்டது என்று திருக்குர்ஆன் கூறுகிறது. எழுத்து வடிவில் அருளப்பட்டிருந்தால் இவ்வாறு கூறப்பட்டிருக்காது. ஜிப்ரீல் ஒதிக் காட்டி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மனதில் பதியவைத்துக் கொண்டார்களே தவிர எழுத்து வடிவில் பெற்று சேகரித்துக் கொள்ளவில்லை.

192. இது அகிலத்தின் இறைவனால் அருளப்பட்டது.

193, 194, 195. எச்சரிக்கை செய்வோரில் (முஹம்மதே) நீர் ஆவதற்காக, உமது உள்ளத்தில்152 தெளிவான அரபு489 மொழியில்227 நம்பிக்கைக்குரிய ரூஹ்444 இதை இறக்கினார்.26&492

திருக்குர்ஆன் 26:192

இறைவனிடமிருந்து ஜிப்ரீல் எனும் வானவர் இச்செய்தியைக் கொண்டு வந்து நபிகள் நாயகத்தின் உள்ளத்தில் போட்டார் என்று திட்டவட்டமாக இவ்வசனமும் கூறுகிறது.

ஏட்டில் எழுதிக் கொண்டு வந்து கையில் கொடுத்தார் எனக் கூறப்படவில்லை.

6. (முஹம்மதே!) இதற்காக (குர்ஆனை மனனம் செய்வதற்காக) அவசரப்பட்டு உமது நாவை அசைக்காதீர்!152

17. அதைத் திரட்டுவதும், ஓதச் செய்வதும் நம்மைச் சேர்ந்தது.

18. எனவே நாம் அதை ஓதும்போது அந்த ஓதுதலைப் பின்பற்றுவீராக!152

19. பின்னர் அதைத் தெளிவுபடுத்துவது நம்மைச் சேர்ந்தது.

திருக்குர்ஆன் 75:16-19

ஜிப்ரீல் எழுத்து வடிவில் கொடுத்திருந்தால் அவசரம் அவசரமாக நபிகள் நாயகம் (ஸல்) மளனம் செய்ய முயற்சிக்க வேண்டியதில்லை. ஜிப்ரில் போன பிறகு எழுத்தைப் பார்த்து மீண்டும் வாசித்து மனதில் பதிய வைத்துக் கொள்ள முடியும். எழுத்து வடிவில் இல்லாததால் தான் மறந்து விடுமோ என்று பயந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நாவை வேகவேகமாக அசைக்கிறார்கள். அவ்வாறு அசைக்கத் தேவையில்லை. இதயத்தில் பதிவு செய்ய வைப்பது என்னுடைய வேலை என்று இறைவன் பொறுப்பேற்கிறான்.

எழுத்து வடிவில் குர்ஆன் அருளப்படவே இல்லை என்பதற்கு இதுவும் மிகத் தெளிவான சான்று.

6, 7. (முஹம்மதே!) உமக்கு ஓதிக் காட்டுவோம்.152 நீர் மறக்க மாட்டீர்.220 அல்லாஹ் நாடியதைத் தவிர. அவன் பகிரங்கமானதையும், மறைவானதையும் அறிகிறான்.26

திருக்குர்ஆன் 87 : 6, 7

நாம் உமக்கு ஓதிக் காட்டுவோம் என்ற வாசகம் எழுத்து வடிவில் அருளப்படவில்லை என்பதைக் கூறுகிறது. அதை நீர் மறக்க மாட்டீர் என்பது மேலும் இதை வலுப்படுத்துகிறது. மறக்க முடியாத நினைவாற்றல் வழங்கப்பட்டிருப்பதால் எழுத்து வடிவம் தேவையில்லை என்பதும் உணரப்படுகிறது.

எனவே திருக்குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்படவே இல்லை என்பது சந்தேகமற நிரூபணமாகிறது. எழுத்து வடிவில் அருளப்பட்டாததால் அவர்களுக்கு எழுதவும், வாசிக்கவும் தெரியும் என்பதும் அடிப்பட்டுப் போகிறது.

நபிகள் நாயகத்துக்கு எழுதவும், வாசிக்கவும் தெரியாது என்பதை திருக்குர்ஆன் தெளிவாகவும் பல இடங்களில் குறிப்பிடுகிறது.

157. எழுதப் படிக்கத்312 தெரியாத152 இத்தூதரை, இந்த நபியை (முஹம்மதை) அவர்கள் பின்பற்றுகின்றனர். தங்களிடம் உள்ள தவ்ராத்திலும், இஞ்சீலிலும்491 இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதை457 அவர்கள் காண்கின்றனர்.25 இவர், நன்மையை அவர்களுக்கு ஏவுகிறார். தீமையை விட்டும் அவர்களைத் தடுக்கிறார். தூய்மையானவற்றை அவர்களுக்கு அனுமதிக்கிறார். தூய்மையற்றவைகளை அவர்களுக்குத் தடை செய்கிறார்.186 அவர்களுடைய சுமையையும், அவர்கள் மீது (பிணைக்கப்பட்டு) இருந்த விலங்குகளையும் அப்புறப்படுத்துகிறார். இவரை நம்பி, இவரைக் கண்ணியப்படுத்தி, இவருக்கு உதவியும் செய்து, இவருடன் அருளப்பட்ட ஒளியையும் பின்பற்றுவோரே வெற்றி பெற்றோர்.

திருக்குர்ஆன் 7 : 157,158

இவ்விரு வசனங்களிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை "உம்மீ' என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

உம்மு என்றால் தாய் என்பது பொருள். உம்மீ என்றால் தாயைச் சார்ந்திருப்பவன் என்பது பொருள். கைக்குழந்தைகள் தாயையே சார்ந்திருப்பதால் கைக்குழந்தைகள் உம்மீ எனக் குறிப்பிடப்பட்டனர். பின்னர் எழுதவும், வாசிக்கவும் தெரியாதவர்கள் இந்த விஷயத்தில் கைக்குழந்தைகளின் நிலையில் இருப்பதால் உம்மீ எனப்பட்டனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அனுப்பப்பட்ட சமுதாயத்தை உம்மீகள் என்று பல இடங்களில் அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான். இவ்விரு வசனங்களிலும் நபிகள் நாயகத்தையும் "உம்மீ'  என்று கூறுகிறான். நபிகள் நாயகம் (ஸல்) எழுதப்படிக்கத் தெரியாமல் இருந்தார்கள் என்பதற்கு இதுவும் சரியான சான்றாக உள்ளது.

4. "இது பொய்யைத் தவிர வேறு இல்லை. இதை இவரே இட்டுக்கட்டிக் கொண்டார். மற்றொரு சமுதாயத்தினரும் இதற்காக இவருக்கு உதவினார்கள்'' என்று (ஏகஇறைவனை) மறுப்போர் கூறுகின்றனர். அவர்கள் அநியாயத்தையும், பாவத்தையுமே கொண்டு வந்துள்ளனர்.

5. "இது முன்னோர்களின் கட்டுக்கதை. அதை இவர் எழுதச் செய்து152 கொண்டார்.312 காலையிலும், மாலையிலும் அது இவருக்கு வாசித்துக் காட்டப்படுகிறது'' எனவும் கூறுகின்றனர்.142

திருக்குர்ஆன் 25 : 4, 5

இந்தக் குர்ஆனை நபிகள் நாயகம் (ஸல்) இட்டுக் கட்டியதாக அவர்கள் கூறினார்கள். மேலும், பலர் இதற்கு உதவியாக இருந்ததாகவும் கூறினார்கள். அப்படிக் கூறும் போது கூட நபிகள் நாயகம் (ஸல்) அவராக எழுதிக் கொண்டார் எனக் கூறாமல் மற்றவர்களை வைத்து எழுதிக் கொண்டார் எனக் குறிப்பிட்டனர். நபிகள் நாயகத்துக்கு எழுதத் தெரியாது என்பது அந்த மக்களுக்கும் நன்றாகத் தெரிந்த காரணத்தினால் தான் எழுதத் தெரிந்தவர்களை வைத்து எழுதிக் கொண்டார் என்று கூறினார்கள். நபிகள் நாயகத்துக்கு எழுதத் தெரியாது என்பதற்கு இதுவும் பலமான சான்றாகவுள்ளது.

"கதப' என்றால் எழுதினான் என்பது பொருள். இக்ததப என்றால் ஒருவரிடம் சொல்லி எழுத வைத்தான் என்பது பொருள். மேலே நாம் எடுத்துக்காட்டிய வசனத்தில் இக்ததப என்ற வார்த்தை தான் இடம் பெற்றுள்ளது.

(தமிழாக்கம் செய்த சிலர் இதைக் கவனிக்காமல் எழுதினார், எழுதிக் கொண்டார் என்று மொழி பெயர்த்துள்ளனர். இது தவறான மொழி பெயர்ப்பாகும். பிறருக்குச் சொல்லி எழுதச் செய்கிறார் என்பது தான் இதன் சரியான மொழி பெயர்ப்பாகும்.)

இவை அனைத்துக்கும் மேலாக சென்ற இதழின் ஆரம்பத்தில் நாம் சுட்டிக்காட்டிய 29:48 வசனம் அமைந்துள்ளது.

இதற்கு முன்னரும் எந்த நூலிலிருந்தும் நீர் வாசித்ததில்லை. இனியும் உமது வலக்கரத்தால் எழுத மாட்டீர் என்று திட்டவட்டமாக இவ்வசனம் அறிவிக்கிறது.

உமது வலக்கரத்தால் எழுதிக் கொண்டும் இருந்ததில்லை என்று சிலர் தமிழாக்கம் செய்திருப்பது தவறாகும். வலாதாஹுத்து என்பது வருங்கால வினைச் சொல்லாகும். இனியும் எழுத மாட்டீர் என்பதே இதன் நேரடியான சரியான மொழிபெயர்ப்பாகும்.

நபியாக ஆவதற்கு முன்பும் நீர் எழுதவில்லை. இனியும் எழுத மாட்டீர் என்று அல்லாஹ் அறிவித்து விட்டதால் நபியாக ஆன பின்பு எழுதப் படிக்க அறிந்திருக்கக்கூடும் அல்லவா? என்று சிலர் வாதம் செய்வதும் தவறு என்பதை இவ்வாசக அமைப்பு நிரூபிக்கின்றது.

குர்ஆன் 23 ஆண்டுகளில் சிறிது சிறிதாக அருளப்பட்டது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை அருளப்பட்டு கொண்டே வந்தது. இதை அனைவரும் அறிவோம். நபிகள் நாயகத்திற்கு ஆரம்பத்தில் எழுதத் தெரியாமல் இருந்து, பிறகு எழுதக் கற்றுக் கொண்டார்கள் என்றும் கூற முடியாது. எழுத கற்றுக் கொண்ட பிறகு அருளப்பட்ட குர்ஆன் நபிகள் நாயகம் (ஸல்) சுயமாக கற்பனை செய்தார் என்ற சந்தேகத்திற்கு உள்ளாகும். அவர்கள் மரணிக்கும் வரை குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டே வந்ததால் மரணிக்கும் வரை எழுதத் தெரியாமல் இருப்பது தான் இறைவேதம் என்று திருக்குர்ஆனை நிரூபித்துக் காட்டும். இதனால் தான் இனியும் எழுத மட்டீர் என்று கூறி கடைசி வரை அவர்களை உம்மியாக எழுதப் படிக்கத் தெரியாதவராகவே அல்லாஹ் ஆக்கிவிட்டான்.

நபிகள் நாயகத்திற்கு எழுதப் படிக்கத் தெரியும் எனக் கூறுவோர் பின்வரும் நிகழ்ச்சியையும் ஆதாரமாகக் காட்டுவார்கள்.

صحيح البخاري 

2698 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ: سَمِعْتُ البَرَاءَ بْنَ عَازِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: لَمَّا صَالَحَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَهْلَ الحُدَيْبِيَةِ، كَتَبَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ بَيْنَهُمْ كِتَابًا، فَكَتَبَ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ، فَقَالَ المُشْرِكُونَ: لاَ تَكْتُبْ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ، لَوْ كُنْتَ رَسُولًا لَمْ نُقَاتِلْكَ، فَقَالَ لِعَلِيٍّ: «امْحُهُ»، فَقَالَ عَلِيٌّ: مَا أَنَا بِالَّذِي أَمْحَاهُ، فَمَحَاهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ، وَصَالَحَهُمْ عَلَى أَنْ يَدْخُلَ هُوَ وَأَصْحَابُهُ ثَلاَثَةَ أَيَّامٍ، وَلاَ يَدْخُلُوهَا إِلَّا بِجُلُبَّانِ السِّلاَحِ، فَسَأَلُوهُ مَا جُلُبَّانُ السِّلاَحِ؟ فَقَالَ: القِرَابُ بِمَا فِيهِ

2698 பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹுதைபிய்யாக்காரர்களிடம் (மக்காவாசிகளான குறைஷிகளிடம் ஹுதைபிய்யா எனுமிடத்தில்) சமாதான ஒப்பந்தம் செய்து கொண்ட போது அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள், அவர்களிடையிலான ஒப்பந்தப் பத்திரத்தை எழுதினார்கள். அப்போது, அல்லாஹ்வின் தூதரான முஹம்மத்' என்று அவர்கள் எழுத, இணைவைப்பவர்கள், அல்லாஹ்வின் தூதரான முஹம்மத்' என்று எழுதாதீர்கள் (என்று சொல்லிவிட்டு) முஹம்மத் (ஸல்) அவர்களை நோக்கி), நீர் அல்லாஹ்வின் தூதராக இருந்திருந்தால் நாங்கள் உம்முடன் போரிட்டிருக்க மாட்டோம் என்று கூறினர். ஆகவே, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம், அதை அழித்து விடுங்கள் என்று கூறினார்கள். அலீ (ரலி) அவர்கள், நான் அதை (ஒரு போதும்) அழிக்கப் போவதில்லை என்று கூறி விட்டார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது திருக்கரத்தால் அதை அழித்தார்கள். நானும், என் தோழர்களும் (மக்கா நகரில்) மூன்று நாட்கள் தங்குவோம். அதில் நாங்கள், ஜுலுப்பானுஸ் ஸிலாஹ்' உடன் தான் நுழைவோம் என்றும் அவர்களுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். மக்கள், ஜுலுப்பா னுஸ் ஸிலாஹ்' என்றால் என்ன? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டனர். அவர்கள், உள்ளிருக்கும் ஆயுதங்களுடன் கூடிய உறை என்று பதிலளித்தார்கள்.

நூல் : புகாரி 2698

நபிகள் நாயகத்துக்கு எழுதத் தெரிந்தால் தானே தமது பெயரைக் கண்டுபிடித்து அழித்திருக்க முடியும் என்று சிலர் வாதிடுகின்றனர்.

எழுதத் தெரியாது என்று தெளிவான சான்று இவ்வளவு இருக்கும் போது சுற்றி வளைத்துக் கொண்டு ஆதாரம் காட்டுகின்றனர்.

இந்த சந்தேகத்தைக் கீழ்க்காணும் ஹதீஸ்கள் முற்றாக நீக்கி விடுகின்றன.

صحيح البخاري 

3184 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُثْمَانَ بْنِ حَكِيمٍ، حَدَّثَنَا شُرَيْحُ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يُوسُفَ بْنِ أَبِي إِسْحَاقَ، قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ: حَدَّثَنِي البَرَاءُ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا أَرَادَ أَنْ يَعْتَمِرَ أَرْسَلَ إِلَى أَهْلِ مَكَّةَ يَسْتَأْذِنُهُمْ لِيَدْخُلَ مَكَّةَ، فَاشْتَرَطُوا عَلَيْهِ أَنْ لاَ يُقِيمَ بِهَا إِلَّا ثَلاَثَ لَيَالٍ، وَلاَ يَدْخُلَهَا إِلَّا بِجُلُبَّانِ السِّلاَحِ، وَلاَ يَدْعُوَ مِنْهُمْ أَحَدًا، قَالَ: فَأَخَذَ يَكْتُبُ الشَّرْطَ [ص:104] بَيْنهُمْ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ فَكَتَبَ هَذَا مَا قَاضَى عَلَيْهِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ، فَقَالُوا: لَوْ عَلِمْنَا أَنَّكَ رَسُولُ اللَّهِ لَمْ نَمْنَعْكَ وَلَبَايَعْنَاكَ، وَلكِنِ اكْتُبْ هَذَا مَا قَاضَى عَلَيْهِ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ، فَقَالَ: «أَنَا وَاللَّهِ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ، وَأَنَا وَاللَّهِ رَسُولُ اللَّهِ» قَالَ: وَكَانَ لاَ يَكْتُبُ، قَالَ: فَقَالَ لِعَلِيٍّ: «امْحَ رَسُولَ اللَّهِ» فَقَالَ عَلِيٌّ: وَاللَّهِ لاَ أَمْحَاهُ أَبَدًا، قَالَ: «فَأَرِنِيهِ»، قَالَ: فَأَرَاهُ إِيَّاهُ فَمَحَاهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ، فَلَمَّا دَخَلَ وَمَضَتِ الأَيَّامُ، أَتَوْا عَلِيًّا، فَقَالُوا: مُرْ صَاحِبَكَ فَلْيَرْتَحِلْ، فَذَكَرَ ذَلِكَ عَلِيٌّ رَضِيَ اللَّهُ عَنْهُ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «نَعَمْ» ثُمَّ ارْتَحَلَ

3184 பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஹுதைபிய்யா ஆண்டில்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உம்ரா செய்ய நாடிய போது மக்காவாசிகளிடம் ஆளனுப்பி மக்காவினுள் நுழைய அனுமதி கேட்டார்கள் அவர்கள் (அடுத்த ஆண்டு உம்ரா செய்ய வரலாம் என்றும்) மூன்று நாட்களுக்கு மேல் அங்கு தங்கக் கூடாது என்றும் ஆயுதங்களை உறைகளில் இட்ட படி தான் நுழைய வேண்டும் என்றும் அவர்களில் எவரையும் (தம் மார்க்கத்தை ஏற்கும்படி) அழைக்கக் கூடாது என்றும் நிபந்தனையிட்டனர். அவர்கள் இருவருக்குமிடையிலான (ஒப்பந்த) ஷரத்துகளை அலீ பின் அபீ தாலிப் (ரலி) அவர்கள் எழுதலானார்கள். அப்போது அவர்கள், இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்து கொண்ட சமாதான ஒப்பந்தமாகும் என்று எழுதினார்கள். மக்காவாசிகள், நீங்கள் அல்லாஹ்வின் தூதர் தாம் என்று நாங்கள் நம்பியிருந்தால் உங்களை (மக்காவினுள் நுழையவிடாமல்) தடை செய்திருக்க மாட்டோம். மேலும், உங்களை நாங்கள் (ஏற்றுக் கொண்டு) பின்பற்றவும் செய்திருப்போம். மாறாக, இது அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது செய்து கொண்ட சமாதான ஒப்பந்தம்' என்று எழுதுங்கள் என்று கூறினர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது தான். மேலும், அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் அல்லாஹ்வின் தூதருமாவேன் என்று கூறினார்கள். ஆனால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுதத் தெரியாதவர்களாக இருந்தார்கள். ஆகவே, அலீ (ரலி) அவர்களிடம்,   அல்லாஹ்வின் தூதர்' என்னும் சொல்லை அழித்து விடுங்கள் என்று உத்தரவிட்டார்கள். அலீ (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் அதை ஒரு போதும் அழிக்க மாட்டேன் என்று மறுத்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அப்படியானால் அ(ந்தச் சொல் இருக்கும் இடத்)தை எனக்குக் காட்டுங்கள் என்று கேட்டார்கள். அலீ (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அதைக் காட்டினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைத் தம் கரத்தால் அழித்தார்கள். பின்பு (அடுத்த ஆண்டு), நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (உம்ரா விற்காக) மக்காவிற்குள் நுழைந்து மூன்று நாட்கள் கழிந்தவுடன் மக்காவாசிகள் அலீ (ரலி) அவர்களிடம் வந்து, உங்கள் தோழரை (மக்காவை விட்டுப்) புறப்படும் படி கூறுங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள். உடனே, அலீ (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அதைத் தெரிவித்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஆமாம் (புறப்பட வேண்டியது தான்) என்று கூறிவிட்டுப் புறப்பட்டார்கள்.

நூல் : புகாரி 3184

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு  எழுதவும் வாசிக்கவும் தெரியாது தமது பெயர் எந்த இடத்தில் உள்ளது கேட்டு அழித்தார்கள் என்று இந்த ஹதீஸ் தெளிவாகச் சொல்கிறது

எழுதத் தெரியாமல் இருப்பது பொதுவாக தகுதிக் குறைவு என்றாலும் அதுவே நபிகள் நாயகத்திற்கு மட்டும் சிறப்பான தகுதியாகும் என்பதில் சந்தேகமில்லை.

நான்கு வகை உணவுகள் மட்டும் தான் ஹாரமா?

(ஒற்றுமை மாதம் இருமுறை இதழில் தேர்வு செய்யப்பட்ட வசனங்களுக்கு பீஜே விளக்கவுரை எழுதினார். அதன் மூன்றாம் தொடர் இது.)

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி,407 அல்லாஹ் அல்லாதோருக்காக சப்தமிடப்பட்டவை42 ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான்.171 வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்படுவோர்431 மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன்:- 2:173

இதே கருத்து 16:115 வசனத்திலும் உள்ளது

"தாமாகச் செத்தது, ஓட்டப்பட்ட இரத்தம், அசுத்தமாகிய பன்றியின் இறைச்சி,407 அல்லாஹ் அல்லாதோருக்காக சப்தமிடப்பட்ட42 பாவமான (உண)வை தவிர வேறு எதுவும் மனிதர் உண்பதற்குத் தடை செய்யப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்ட செய்தியில் நான் காணவில்லை'' என்று கூறுவீராக! யாரேனும் வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்பட்டால்431 உமது இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.171

திருக்குர்ஆன்: 6:145

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களுக்காகப் படையல் செய்யப்பட்டவை ஆகிய உணவுகளை முஸ்லிம்கள் அறவே உண்ணக்கூடாது என்று இவ்வசனங்கள் கூறுகின்றன. இதற்கு பெரிய அளவில் விளக்கம் எதுவும் தேவையில்லை.

ஆனால் இவ்வசனத்தில் அடங்கியிருக்கும் மற்றொரு செய்தியைச் சிலர் தவறாக விளங்கிக் கொண்டு குழம்பிப் போய் இருக்கின்றனர். அந்தச் செய்தியைக் குறித்துத் தான் விளக்கம் தேவைப்படுகின்றது.

குர்ஆன் மட்டும் போதும், நபிகள் நாயகத்தின் வழிகாட்டுதல் தேவையில்லை என்று குர்ஆனுக்கு எதிரான வாதத்தை முன்வைக்கும் அறிவீனர்கள் - குர்ஆனைப் பற்றி சரியான அறிவு இல்லாத காரணத்தால் தாமும் வழிகெட்டு மக்களையும் வழிகெடுக்க எண்ணுகின்றனர்.

இத்தகையோர் வழிகெடுப்பதற்கு பயன்படுத்தும் வசனங்களில் இந்த வசனங்களும் அடங்கும். எனவே, இது குறித்து நாம் விரிவாக ஆராய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

மேலே நாம் எடுத்துக்காட்டிய வசனங்களில் நான்கு உணவுகள் ஹராம் என்பது மட்டும் தெரியவில்லை. மாறாக இந்த நான்கைத் தவிர வேறு எந்த உணவும் ஹராமில்லை என்பதும் தெரிகிறது.

எனக்கு வஹியாக (இறைச் செய்தியாக) அறிவிக்கப்பட்டதில் அந்த நான்கைத் தவிர வேறு எதுவும் ஹராமாக்கப்பட்டதாக நான் காணவில்லை என்ற வாசக அமைப்பிலிருந்தும் தாமாகச் செத்தவை.... ஆகியவற்றைத் தான் ஹராமாக்கியுள்ளான் என்ற வாசக அமைப்பிலிருந்தும் அதை விளங்கலாம்.

எனவே, கழுதை, நாய், கரப்பான் பூச்சி, பாம்பு, பல்லி, தேள், முள்ளம் பன்றி, குரங்கு போன்ற எதுவானாலும் உண்ணத்தக்கதே என்று இவர்கள் வாதிடுகின்றனர். வெளிப்படையாகக் கூறாவிட்டாலும் மலத்தையும் கூட உண்ணலாம் என்பது இவர்களின் வாதத்தில் அடங்கும்.

இவ்வாறு வாதிடக்கூடிய "அறிவு ஜீவிகள்'' தமது வாதத்துக்கு இந்த வசனங்களைத் தான் சான்றுகளாக முன் வைக்கின்றனர்.

இந்நான்கைத் தவிர வேறு எதுவும் ஹராமாக்கப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்படவில்லை என்று அல்லாஹ் தேவையில்லாமல் கூறுவானா? என்றும் இவர்கள் கேட்கின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நாய், கழுதை போன்றவற்றை ஹராம் என்று அறிவித்துள்ளனர். இது குறித்த ஹதீஸ்கள் யாவும் மேற்கண்ட வசனங்களுக்கு முரணாகவுள்ளதால் அவற்றை நம்பக்கூடாது எனவும் வாதிடுகின்றனர்.

மேற்கண்ட வசனங்களில் இவர்கள் வாதிடுவது போன்ற கருத்துக்கள் அடங்கியுள்ளன என்பது உண்மை தான். ஆனால், இது குறித்து சரியான விளக்கத்தை அறிய திருக்குர்ஆனை இன்னும் ஆராய வேண்டும்.

ஹலால் ஹராம் குறித்து அந்த வசனங்கள் தவிர வேறு வசனங்கள் உள்ளனவா? எனவும் தேடிப்பார்க்க வேண்டும். அதன் பிறகு தான் ஒரு முடிவுக்கு வர வேண்டும். இத்தகைய ஆய்வு இல்லாததன் காரணமாகவே கிறுக்குத்தனமான இத்தகைய வாதங்களை முன் வைக்கின்றனர்.

3. செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி,407 அல்லாஹ் அல்லாதோருக்காக சப்தமிடப்பட்டவை42 உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.171 கழுத்து நெரிக்கப்பட்டவை, அடிபட்டவை, (மேட்டிலிருந்து) உருண்டு விழுந்தவை, (தமக்கிடையே) மோதிக்கொண்டவை, வனவிலங்குகள் சாப்பிட்ட பிராணிகள் ஆகியவற்றில் (உயிர் இருந்து) நீங்கள் முறையாக அறுத்தவை தவிர (மற்றவை தடைசெய்யப்பட்டுள்ளன.) பலி பீடங்களில்135 அறுக்கப்பட்டவையும், அம்புகள் மூலம் குறி கேட்பதும்136 (உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.) இது தீயதாகும். (ஏகஇறைவனை) மறுப்போர், உங்கள் மார்க்கத்தை (அழித்திடலாம் என்பது) பற்றி இன்று நம்பிக்கை இழந்து விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்! இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாகப் பொருந்திக் கொண்டேன். பாவம் செய்யும் நாட்டமில்லாமல், வறுமையின் காரணமாக நிர்பந்தத்துக்கு431 உள்ளானோரை அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.42

திருக்குர்ஆன்: 5:3

இவ்வசனமும் விலக்கப்பட்ட உணவுகளைக் குறிப்பிடும் வசனம் தான். இவ்வசனத்தில் முன்னர் கூறப்பட்ட நான்கு உணவுகளையும் கூறி விட்டு மேலும் சில உணவுகள் தடை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

நான்கைத் தவிர வேறு சில உணவுகள் ஹராம் என்று ஹதீஸ்களில் கூறப்படும் போது "குர்ஆனுக்கு முரண்' எனக் கூறி நிராகரித்தவர்கள் இப்போது இந்த வசனமே மேற்கண்ட வசனங்களுக்கு முரணாக இருப்பதைச் சிந்திக்கத் தவறிவிட்டனர்.

நான்கைத் தவிர வேறு எதுவும் ஹராம் இல்லை என்ற கருத்தில் அமைந்த வசனங்களும், நான்கைத் தவிர வேறு சில உணவுகளும் ஹராம் எனக் கூறும் வசனங்களும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை தான். குர்ஆனில் எந்த முரண்பாடும் இருக்காதே! ஆனால் இங்கே முரண்பாடு இருப்பதாகத் தெரிகிறதே என்று சிந்தித்திருந்தால் சரியான தீர்வைக் கண்டிருப்பார்கள்.

திருக்குர்ஆன் ஒரே நாளில் மொத்தமாக அருளப்படவில்லை. சிறிது சிறிதாக 23 ஆண்டுகளில் இறங்கியது என்பதை அனைவரும் அறிவோம். சிறிது சிறிதாக கடமைகளும் கட்டளைகளும் அதிகரிக்கப்பட்டு வந்தன.

அந்த அடிப்படையில் நாம் ஆரம்பமாக எடுத்துக் காட்டிய வசனங்கள் எப்போது அருளப்பட்டனவோ அந்தக் கால கட்டத்தில் அந்த நான்கு உணவுகள் மட்டுமே ஹராமாக்கப்பட்டிருந்தன. இவ்வசனங்கள் அருளப்படுவதற்கு முன் அந்த நான்கு கூட ஹராமாக்கப்படாமல் இருந்தன. எதுவுமே ஹராமாக்கப்படாமல் இருந்த நிலையை மாற்றி நான்கு உணவுகள் முதலில் ஹராமாக்கப்பட்டன. பின்னர் மேலும் சில உணவுகள் ஹராமாக்கப்பட்டன. அதைத் தான் இப்போது நாம் சுட்டிக்காட்டிய 5:3 வசனம் கூறுகிறது.

எனவே நான்கைத் தவிர வேறு ஹராம் இல்லை என்பது ஒரு கால கட்டத்தில் இருந்த நிலைமை. அந்த நிலைமை 5:3 வசனத்தின் மூலம் மாற்றப்பட்டு விட்டது.

இதில் இன்னொன்றையும் நாம் கவனிக்கக் கடமைப்பட்டுள்ளோம். நான்கு உணவுகளை மட்டும் ஹராம் எனக் கூறும் வசனங்களில் இவை மட்டும் தான். இவை தவிர வேறு இல்லை என்பது போன்ற வாசக அமைப்பைப் பயன்படுத்தியுள்ளான்.

ஆனால், இவ்வசனத்தில் இவற்றைத் தவிர வேறு இல்லை என்று குறிப்பிடவில்லை. இவற்றைத் தவிர வேறு ஹராம் இல்லை எனக் கூறாததால், மேலும் ஹராம்கள் இருப்பதற்கான சாத்தியத்தை இவ்வசனம் மறுக்கவில்லை.

இவ்வாறு விளங்கிக் கொண்டால் குர்ஆனுடன் குர்ஆன் முரண்படுகிறதே என்ற ஐயமும் விலகும். ஹதீஸ்கள் குர்ஆனுடன் முரண்படுகிறதே என்ற ஐயமும் விலகும்.

இறுதியாக அருளப்பட்ட வசனத்தில் எவை ஹராமாக்கப்பட்டுள்ளதோ அவற்றை மட்டும் ஹராம் என்று கூற வேண்டியது தானே? ஹராமாக்கும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டும் உரியது தானே? என்று சிலர் கேட்கலாம்.

அல்லாஹ் உமக்கு ஹலாலாக்கியதை நீர் எப்படி ஹராமாக்கலாம் என்று 66:1 வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகிறான். இதிலிருந்து ஹராமாக்கும் அதிகாரம் அல்லாஹ்வுக்குத் தான் உள்ளதே தவிர நபிகள் நாயகத்துக்கு இல்லை எனவும் கூறுகின்றனர்.

இதுவும் அறியாமையின் வெளிப்பாடுதான்.

157. எழுதப் படிக்கத்312 தெரியாத152 இத்தூதரை, இந்த நபியை (முஹம்மதை) அவர்கள் பின்பற்றுகின்றனர். தங்களிடம் உள்ள தவ்ராத்திலும், இஞ்சீலிலும்491 இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதை457 அவர்கள் காண்கின்றனர்.25 இவர், நன்மையை அவர்களுக்கு ஏவுகிறார். தீமையை விட்டும் அவர்களைத் தடுக்கிறார். தூய்மையானவற்றை அவர்களுக்கு அனுமதிக்கிறார். தூய்மையற்றவைகளை அவர்களுக்குத் தடை செய்கிறார்.186 அவர்களுடைய சுமையையும், அவர்கள் மீது (பிணைக்கப்பட்டு) இருந்த விலங்குகளையும் அப்புறப்படுத்துகிறார். இவரை நம்பி, இவரைக் கண்ணியப்படுத்தி, இவருக்கு உதவியும் செய்து, இவருடன் அருளப்பட்ட ஒளியையும் பின்பற்றுவோரே வெற்றி பெற்றோர்.

திருக்குர்ஆன்: 7:157

29. வேதம் கொடுக்கப்பட்டோரில்27 அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பாமல், அல்லாஹ்வும், அவனது தூதரும் விலக்கியவற்றை விலக்கிக் கொள்ளாமல்,186 உண்மையான மார்க்கத்தைக் கடைப்பிடிக்காமல் இருப்போர் சிறுமைப்பட்டு ஜிஸ்யா வரியைத்201 தம் கையால் கொடுக்கும் வரை அவர்களுடன் போரிடுங்கள்!53

திருக்குர்ஆன்: 9:29

அல்லாஹ்வும் அவனது தூதரும் ஹராமாக்கியவைகளை ஹராம் எனக் கருதாதவர்களுடன் போரிடுமாறு  இவ்வசனம் கூறுகிறது. ஹராமாக்கும் அதிகாரம் நபிகள் நாயகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை இவ்வசனம் மிகத் தெளிவாகவே எடுத்துரைக்கின்றது. திருக்குர்ஆனில் தேவையில்லாத ஒரு வார்த்தையும் இருக்காது என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

குர்ஆன் மூலம் ஹராமாக்கப்பட்டவை மட்டும் தான் ஹராம் என்று இருந்தால் அல்லாஹ் ஹராமாக்கியவை என்று மட்டும் அல்லாஹ் கூறியிருக்கலாம். ஆனால், அல்லாஹ்வும், ரசூலும் ஹராமாக்கியவை என்று கூறியது ஏன்? என்பதைச் சிந்திக்க வேண்டும்.

7:157 வசனத்தில் நல்லவைகளை அவர் ஹலாலாக்குவார். கெட்டவைகளை ஹராமாக்குவார் என்று தெளிவாகப் பிரகடனம் செய்யப்பட்டு விட்டது. நான்கைத் தவிர வேறு ஹராம் இல்லை என்றால் இந்த வாசகத்திற்கு எந்தத் தேவையுமில்லை.

"கெட்டவை ஹராம் என்று கூறுகிற இறைவன் அவற்றுக்கான விளக்கத்தை நபிகள் நாயகத்தின் இதயத்தில் போடுகிறான். அதன் மூலம் அவர்கள் ஹராமாக்கப்பட்டதை அறிவிக்கிறார்கள்'' என்பதைத் தவிர இதற்கு வேறு பொருள் இருக்க முடியாது.

எனவே, நான்கைத் தவிர வேறு ஹராம் இல்லை எனக் கூறுவோர் மேற்கண்ட குர்ஆன் வசனங்களையே மறுக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.

அல்லாஹ் உமக்கு ஹலாலாக்கியதை உமது மனைவியரின் திருப்தியை நாடி நீர் ஏன் ஹராமாக்கிக் கொண்டீர் என்ற வசனத்தை (66:1) ஆதாரமாகக் கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எதையும் ஹராம் என்று பிரகடனம் செய்ய அதிகாரமில்லை என்று சிலர் வாதிடுகின்றனர்.

இவ்வசனத்தைச் சரியாக சிந்திக்காத காரணத்தால் இத்தகைய வாதத்தை எழுப்புகின்றனர். அல்லாஹ் ஹலாலாக ஆக்கிய ஒரு பொருளை (தேனை) தமது மனைவியருக்காக தம் மீது மட்டும் ஹராமாக்கிக் கொண்டார்கள். இனி மேல் தேனை உட்கொள்ள மாட்டேன் என்று முடிவு செய்தார்கள். மக்கள் அனைவருக்கும் தேனை ஹராமாக ஆக்கவில்லை.

அல்லாஹ் அனுமதித்த ஒரு பொருள் ஒருவருக்குப் பிடிக்கவில்லையானால் அதை தன்னளவில் அவர் தவிர்த்துக் கொள்ளலாம். அதில் எந்தத் தவறும் இல்லை. ஹலால் என்றாலே உண்பது எப்படி அனுமதியோ, உண்ண மறுப்பதும் அனுமதி என்றே பொருள்.

எனவே அல்லாஹ் ஹலாலாக ஆக்கியதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் மீது மட்டும் விலக்கிக் கொண்டார்கள் என்பதைத் தான் இவ்வசனம் கூறுகிறது.

அல்லாஹ் ஹலாலாக ஆக்கியதை ஹராம் என்று அறிவித்தார்கள் என்று கூறவில்லை. அவ்வாறு எந்த இறைத் தூதரும் கூற மாட்டார்கள்.

அப்படியானால் இந்தச் செயலை இறைவன் ஏன் ஆட்சேபிக்கிறான்? அதற்கான காரணம் அவ்வசனத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. மனைவியரின் திருப்தியை நாடி - தமக்கு அதில் விருப்பம் இருந்தும் விலக்கிக் கொண்டார்களே அது தான் இங்கே ஆட்சேபிக்கப்படுகிறது.

அல்லாஹ் குர்ஆன் மூலம் எவற்றை ஹலால் என்றோ ஹராம் என்றோ கூறவில்லையோ அத்தகைய பொருட்களில் அல்லாஹ்வின் இன்னொரு வகையான வஹி (இறைச் செய்தி)யைப் பெற்று இவை ஹலால் எனவும், இவை ஹராம் எனவும் அறிவிக்கும் அதிகாரம் நபிகள் நாயகத்திற்கு இருக்கிறது. மேலே நாம் எடுத்துக் காட்டிய 7:159, 9:29 ஆகிய இரு வசனங்களும் இதை இரண்டாவது கருத்துக்கு இடமில்லாமல் தெரிவித்து விடுகிறது.

பன்மடங்காகப் பெருகும் வட்டி

(ஒற்றுமை மாதமிருமுறை இதழில் தேர்வு செய்யப்பட்ட வசங்களுக்கு பீஜே விளக்கம் எழுதினார். அதன் இரண்டாவது கட்டுரை இது)

நம்பிக்கை கொண்டோரே! பன்மடங்காகப் பெருகிக் கொண்டிருக்கும் நிலையில் வட்டியை84 உண்ணாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இதனால் வெற்றி பெறுவீர்கள்.

திருக்குர்ஆன்: 3:130

இ ஸ்லாம் மார்க்கம் எல்லாக் காலத்துக்கும் பொருந்தக் கூடிய, நடைமுறைப்படுத்தக் கூடிய வாழ்க்கை நெறியாகும். மார்க்கத்தைப் பற்றிய சரியான அறிவும், ஆய்வும் இல்லாத சிலர் நவீன காலத்துக்கு ஏற்றவாறு இஸ்லாத்தை வளைக்க முயன்று வருகின்றனர். இஸ்லாம் தடை செய்த பல விஷயங்களில் ஈடுபாடு கொண்ட இவர்கள் அதற்கு இஸ்லாமியச் சாயம் பூசி அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர்.

மதுபானத்தை அல்லாஹ் ஹராமாக - விலக்கப்பட்டதாக - ஆக்கியுள்ளான். ஆனாலும், மதுவுக்கு புதுப்புது வியாக்கியானம் கொடுத்து பீர் குடிக்கலாம், பிராந்தி குடிக்கலாம், கள் சாராயம் தான் குடிக்கக் கூடாது என்று கூறி மேலை நாட்டுக் கலாச்சாரத்துக்கு இஸ்லாமிய வர்ணம் பூசுவோர் உள்ளனர்.

இது போன்ற பிரச்சினைகளில் வட்டியும் ஒன்றாகும். வட்டியை அல்லாஹ் தடை செய்து விட்டான். மிகப் பெரிய குற்றம் எனவும் பிரகடனம் செய்து விட்டான்.

275. வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்.83 "வியாபாரம் வட்டியைப் போன்றதே'' என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.

276. அல்லாஹ் வட்டியை அழிக்கிறான். தர்மங்களை வளர்க்கிறான். நன்றிகெட்ட எந்தப் பாவியையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.

277. நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் புரிந்து, தொழுகையை நிலைநாட்டி, ஜகாத்தையும் கொடுத்து வருவோருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உள்ளது. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.

278. நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்!84

279. அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் போர்ப் பிரகடனத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்! நீங்கள் திருந்திக் கொண்டால் உங்கள் செல்வங்களில் மூலதனம் உங்களுக்கு உரியது. நீங்களும் அநீதி இழைக்கக் கூடாது. உங்களுக்கும் அநீதி இழைக்கப்படாது.

திருக்குர்ஆன்: 2:275-2:279

வட்டி வாங்குவோர் நிரந்தர நரகத்தை அடைவார்கள் என்பதும், அல்லாஹ்வுக்கு எதிராகப் போர் பிரகடனம் செய்கிறார்கள் என்பதும் சாதாரணமான எச்சரிக்கை அல்ல. இறைவனை அஞ்சுகிற எந்த முஸ்லிமும் நிரந்தர நரகத்தில் தள்ளுகின்ற காரியத்தை ஒருக்காலும் செய்ய மாட்டான்.

ஆனால், இன்றைய நவீன உலகில் வட்டியை அறவே தவிர்க்க முடியவில்லை. பல உலக நாடுகள் வட்டியைச் சட்டப்பூர்வமாக அங்கீகரித்து விட்டன. வட்டியில்லாத எந்தக் கொடுக்கல் வாங்கலையும் காண முடியவில்லை. அரசாங்கம் கூட வட்டியின் அடிப்படையில் தான் நாட்டு மக்களுக்கு உதவுவதைப் பார்க்கிறோம்.

இதையெல்லாம் பார்க்கும் சிலர் இஸ்லாம் வட்டியைத் தடை செய்துள்ளதே! ஆனால், அது தவிர்க்க முடியாததாக இருக்கிறதே! வட்டியைத் தடை செய்யாமல் இருந்தால் சிறப்பாக இருக்குமே என்றெல்லாம் எண்ணத்  தலைப்படுகின்றனர். வட்டியை அனுமதிக்கின்ற வகையில் அல்லது ஓரளவுக்காவது வட்டியை அனுமதிக்கின்ற வகையில் ஒரு ஆதாரம் இருக்கக் கூடாதா? என்று கருதுவோரின் கண்ணில் பட்ட ஆதாரம் தான் நாம் ஆரம்பமாக எடுத்துக்காட்டியுள்ள வசனம்.

பன்மடங்காகப் பெருகிக் கொண்டிருக்கும் நிலையில் வட்டியை உண்ணாதீர்கள்! என்ற வாசகத்துக்கு புதுமையான விளக்கம் கூறிக் கொண்டு இஸ்லாமும் ஓரளவு வட்டியை ஆதரிக்கவே செய்கிறது என்று கூறினார்கள்.

(திருக்குர்ஆனை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த யூசுப் அலி போன்றவர்களும் இதிலிருந்து தப்பவில்லை. பின்னர் அது திருத்தப்பட்டது)

வட்டிக்கு வட்டி; அந்த வட்டிக்கும் வட்டி என்ற அடிப்படையில் தான் வட்டி வாங்கக் கூடாது. பன்மடங்காகப் பெருக்கப்பட்ட நிலையில் என்று கூறப்படுவதன் விளக்கம் இது தான். எனவே, சாதாரண வட்டி கூடும், கொடும் வட்டி, வட்டிக்கு வட்டி, மீட்டர் வட்டி போன்றவை தான் கூடாது என மேற்கண்ட வசனத்திற்கு விளக்கம் தருகின்றனர்.

அறிவு ஜீவிகள் எனப்படுவோரும் குர்ஆன் மட்டுமே போதும் நபி வழி தேவையில்லை என்று கூறும் குர்ஆனைப் பற்றிய அறிவில்லாதவர்களும் இவ்வாறு கூறுபவர்களில் முக்கியமானவர்களாவர்.

இவர்கள் கூறும் விளக்கம் தவறானது என்பது திருக்குர்ஆனைச் சிந்தித்தாலே விளங்கும்.

2:279 வசனத்தைப் பாருங்கள்!

"நீங்கள் வட்டியிலிருந்து விலகிக் கொண்டால் உங்கள் மூலதனம் உங்களுக்கு உரியது. நீங்களும் அநியாயம் செய்ய வேண்டாம். அநியாயம் செய்யப்படவும் வேண்டாம் என்று அவ்வசனம் கூறுகிறது.

வட்டிக்குப் பணம் கொடுத்தவர்கள் திருந்துவதாக இருந்தால் கொடுத்த கடனை - அசலை - மூலதனத்தை - மட்டும் தான் திருப்பி வாங்க வேண்டும் என்று கூறப்படுவது கவனமாக சிந்திக்கப்பட வேண்டும்.

"கொடுத்த கடனும் சாதாரண வட்டியும் உங்களுக்கு உரியது'' என்று கூறவில்லை. அசல் மட்டுமே சொந்தம் என்று அல்லாஹ் கூறுகிறான். இதிலிருந்து வட்டி சிறிதளவும் அனுமதிக்கப்படவில்லை என்பதை  அறியலாம்.

"பன்மடங்காகப் பெருக்கப்பட்ட நிலையில்'' என்ற வார்த்தையின் பொருள் என்ன என்பதை இப்போது ஆராய்வோம்.

பொதுவாக வட்டி என்பதே சாதாரணமாகப் பன்மடங்காகவே பெருகிக் கொண்டு தான் இருக்கும். சாதாரண வட்டியிலும் கூட அந்த நிலை இருக்கத் தான் செய்யும். "நூறு ரூபாய்க்கு இரண்டு ரூபாய் வட்டி'' என்று வைத்துக் கொள்வோம். எவ்வளவு காலம் கடந்தாலும் இரண்டு ரூபாயை மட்டும் வட்டியாக வாங்கிக் கொள்ள மாட்டார்கள். அந்த மாதம் இரண்டு ரூபாய் அடுத்த மாதம் இரண்டு ரூபாய் அசலைத் திருப்பித் தர எவ்வளவு மாதம் ஆகுமோ அவ்வளவு இரண்டு ரூபாய் என்று பெருகிக் கொண்டே செல்லும்.

பத்து ரூபாய் பொருளை 20 ரூபாய்க்கு விற்றாலும் அத்துடன் உறவு முடித்து விடும். மாதா மாதம் பத்து ரூபாய் கொடுக்க மாட்டோம்.

வட்டியில் - அது எந்த வகை வட்டியானாலும் அது பல்கிப் பெருகிக் கொண்டே தான் இருக்கும். பல்கிப் பெருகுதல் வட்டிக்கு வட்டியில் மட்டும் தான் ஏற்படும் என்பது தவறாகும்.

இதைப் புரிந்து கொண்டு 2:279 வசனத்தையும் சிந்திக்கின்ற யாரும் எல்லாவிதமான வட்டியையும் இஸ்லாம் அடியோடு தடுத்திருப்பதை அறிந்து கொள்வர்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

திருக்குர்ஆன் விளக்கம்

(ஒற்றுமை மாதம் இரு முறை இதழில் பீஜே அவர்கள் தேர்வு செய்யப்பட்ட வசனங்களுக்கு விளக்கவுரை எழுதினார். அதன் முதல் கட்டுரை தான் இது. )

ஈஸா நபியால் முன்னறிவிக்கப்பட்டவர் யார்?

{وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَابَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِنْ بَعْدِي اسْمُهُ أَحْمَدُ فَلَمَّا جَاءَهُمْ بِالْبَيِّنَاتِ قَالُوا هَذَا سِحْرٌ مُبِينٌ (6) وَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَى عَلَى اللَّهِ الْكَذِبَ وَهُوَ يُدْعَى إِلَى الْإِسْلَامِ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ (7)61

இஸ்ராயீலின் மக்களே! நிச்சயமாக நான் உங்களின் பால் (அனுப்பப்பட்ட) அல்லாஹ்வின் தூதராவேன். எனக்கு முன்னுள்ள தவ்ராத் (வேதத்)தை மெய்ப்பிப்பவனாகவும், எனக்குப் பின் வரவிருக்கின்ற அஹ்மத் என்னும் பெயருடைய ஒரு தூதரைப் பற்றி நற்செய்தி கூறுபவனாகவும் (வந்துள்ளேன்) என்று மர்யமின் மகன் ஈஸா கூறியதை நினைத்துப் பாருங்கள்! அவர் (அஹ்மத்) தெளிவான சான்றுகளை அவர்களிடம் கொண்டு வந்த போது இது பகிரங்கமான சூனியம் எனக் கூறி விட்டனர். இஸ்லாத்தின் பால் அழைக்கப்படும் நிலையில், அல்லாஹ்வின் மேல் பொய்யை இட்டுக்கட்டுபவனை விட மிகவும் அநியாயக்காரன் யாரிருக்க முடியும். அல்லாஹ் அநியாயக்கார கூட்டத்தினருக்கு நேர்வழி காட்டமாட்டான்.]

திருக்குர்ஆன் 61:6,7

இ து யாருடைய விளக்கவுரையும் தேவைப்படாத அளவுக்கு மிகத் தெளிவாக அமைந்த வசனமாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்னால் இறைவனின் தூதராக அனுப்பப்பட்ட ஈஸா நபியவர்கள், தமது சமுதாயமான இஸ்ரவேல் மக்களிடம் ஒரு முன்னறிவிப்புச் செய்கின்றனர். எனக்குப் பின்னால் அஹ்மத் என்ற பெயருடைய ஒரு தூதர் வரவிருக்கிறார் என்று அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி முன்னறிவிப்பு செய்ததைத் தான் இவ்வசனம் கூறுகிறது.

ஈஸா நபி மட்டுமின்றி இன்னும் பல நபிமார்களும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வருகை குறித்து முன்னறிவிப்பு செய்திருக்கின்றனர்.

இவ்வளவு தெளிவான வசனத்திற்கு எதற்காக விளக்கவுரை என்று கேட்கிறீர்களா? விளக்கவுரை தேவைப்படாத வசனம். என்றாலும் இவ்வசனத்திற்கு சென்ற நூற்றாண்டைச் சேர்ந்த மிர்ஸா குலாம் அஹ்மத் என்பவன் அறிவுக்குப் பொருந்தாத விளக்கம் கொடுத்தான்.

இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் குறிக்கவில்லை, என்னைத் தான் குறிக்கிறது என்று வாதிட்டான்.

நபிகள் நாயகத்தின் பெயர் "முஹம்மத்' தானே தவிர அஹ்மத் அல்ல. என் பெயர் தான் அஹ்மதாக உள்ளது. எனவே, இவ்வசனத்தில் முன்னறிவிப்பு செய்யப்பட்டவன் நான் தான் என்று வாதிட்டான்.

தானும் ஒரு நபி தான் என்று கூறினான். இவ்வசனத்தில் இவனது வாதத்திற்கு ஏதாவது இடமிருக்கிறதா என்று பார்க்காத ஒரு கூட்டம், அவனையும் நபியென்று நம்பியது. இவர்கள் காதியாணிகள் என்று கூறப்படுகின்றனர். முஸ்லிம் சமுதாயத்தின் அனைத்து தரப்பினராலும், இவர்கள் "முஸ்லிமல்லாத புது மதத்தவர்கள்'' என்று தீர்ப்பளிக்கப்பட்டனர்.

மிர்ஸா குலாம் அஹ்மத் என்பவனைப் பற்றியும் அவன் உருவாக்கிய காதியாணி மதம் பற்றியும் இந்தச் சிறிய அறிமுகம் போதுமானதாகும்.

இனி இவ்வசனத்திற்கு இவன் கொடுத்த விளக்கம் சரிதானா? என்று ஆராய்வோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயர் முஹம்மத் மட்டுமல்ல. அஹ்மத் என்பதும் அவர்களின் பெயர் தான்.

صحيح البخاري 

3532 - حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ المُنْذِرِ، قَالَ: حَدَّثَنِي مَعْنٌ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " لِي خَمْسَةُ أَسْمَاءٍ: أَنَا مُحَمَّدٌ، وَأَحْمَدُ وَأَنَا المَاحِي الَّذِي يَمْحُو اللَّهُ بِي الكُفْرَ، وَأَنَا الحَاشِرُ الَّذِي يُحْشَرُ النَّاسُ عَلَى قَدَمِي، وَأَنَا العَاقِبُ "

எனக்கு ஐந்து பெயர்கள் உள்ளன. நான் தான் முஹம்மத். நான் தான் அஹ்மத். நான் தான் ஹாஷிர். நான் தான் ஆகிப். நான் தான் மாஹீ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

நூல் : புகாரி 3352

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே தமது பெயர்களில் அஹ்மதும் ஒன்று எனக் கூறுகிறார்கள். நபிகள் நாயகத்திற்கு அஹ்மத் என்ற பெயர் கிடையாது என்று கூறிய மிர்ஸா குலாம் அஹ்மத் என்பவன் மார்க்க அறிவற்றவன் என்பது இதிலிருந்து தெரியவரும்.

மிர்ஸா குலாம் அஹ்மத் என்ற இவனது பெயரில் அஹ்மத் என்ற வார்த்தை உள்ளதல்லவா? அதனால் இது தன்னைப் பற்றிய முன் அறிவிப்பு என்றான்.

ஒருவனது பெயர் அப்துல்லாஹ்  என்று இருந்தால் அதில் அப்து என்றும் அல்லாஹ் என்றும் இரண்டு சொற்கள் உள்ளன. (இதன் பொருள் அல்லாஹ்வின் அடிமை) அப்துல்லாஹ் என்ற பெயரில் அல்லாஹ் என்ற சொல் உள்ளதால் நான் தான் அல்லாஹ் என்று யாரேனும் கூறினால் நாம் ஏற்றுக் கொள்வோமா?

பெரியார் தாசன் என்று ஒருவருக்குப் பெயர். ஈ.வெ.ரா. பெரியாரைப் பற்றிக் கூறும் வாசகம் தன்னைத் தான் குறிப்பதாக அவர் வாதிட்டால் அவரை நாம் என்னவென்போம்!

மிர்ஸா குலாம் அஹ்மதின் வாதமும், இவரது வாதமும் சமமானவை தான்.

குலாம் என்றால் ஊழியன், பணியாளன், தாசன் என்று பொருள். குலாம் அஹ்மத் என்றால் அஹ்மத் என்பவரின் தாசன் என்பது பொருள்.

"அஹ்மதின் தாசன்' என்ற பெயருடையவன் "அஹ்மத்' என்பது தன்னையே குறிக்கும் என்று கூற முடியாது.

இன்னும் சொல்வதாக இருந்தால், இவனது பெயரே நபிகள் நாயகத்தின் பெயர் அஹ்மத் என்பதற்குச் சான்றாக உள்ளது எனலாம்.

"அஹ்மதின் தாசன்' என்று இவனது தந்தை இவனுக்குப் பெயர் சூட்டிய போது, அவர் அஹ்மத் என்று யாரை நினைத்திருப்பார்? இவன் கூட இவ்வாறு வாதம் செய்த பின் தன் பெயரை அஹ்மத் என்று மாற்றிக் கொள்ளவில்லை. காலமெல்லாம் "அஹ்மத் தாசன்' (குலாம் அஹ்மத்) என்ற பெயரைத் தான் பயன்படுத்தி வந்தான்.

அஹ்மத் தாசன் என்ற பெயரை இவன் கடைசி காலம் வரை பயன்படுத்தியதிலிருந்து இவன் அஹ்மத் அல்ல என்பதும், அஹ்மத் என்பவரின் தாசனே என்பதும் மிகத் தெளிவாகத் தெரிகிறது. அஹ்மத் தாசன் என்று, பெயர் வைத்திருந்த அவன் அந்த அஹ்மத் யார்? என்ற கேள்விக்கு விடையளிக்க முடியாமலே போய்ச் சேர்ந்து விட்டான்.

மிர்ஸா குலாம் அஹ்மத் என்பவனும் ஒரு நபி என்றே வாதத்துக்காக வைத்துக் கொள்வோம். ஈஸா நபி அவர்கள் நிச்சயமாக இவனைக் குறிப்பிட்டிருக்க மாட்டார்கள். ஏனெனில், அவர்களுக்குப் பின் வரக்கூடிய நபிகள் நாயகத்தைத் தான் முன்னறிவிப்புச் செய்வார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) தான் முக்கிய நபி; தான் அவர்களின் நிழல் நபி என்று தான் மிர்ஸா குலாம் வாதிட்டான். ஒரிஜினலும், நிழலும் வரவிருக்கும் போது, ஒரிஜினலை விட்டு விட்டு நிழலைப் பற்றி யாரேனும் முன்னறிவிப்பு செய்வார்களா?

ஒரு கலெக்டர் பின்னால் வருவதை முன் கூட்டியே ஒருவன் அறிவித்துச் செல்கிறான். கலெக்டருடன் அவரது டிரைவரும் வருவார். அறிவிப்புச் செய்பவன் கலெக்டர் வருகிறார் என்று கூறுவானா? கலெக்டரின் டிரைவர் வருகிறார் என்று கூறுவானா?

முதல்வரும்  18-வது வார்டு உறுப்பினரும்  வந்து கொண்டிருக்கும் போது முதல்வர் வருகையைக் கூறாமல் 18-வது வார்டு மெம்பர் வருகிறார் என்று யாரேனும் அறிவிப்பு செய்வார்களா? என்பதைக் கூட இவனும், இவனது மதத்தவர்களும் சிந்திக்கவில்லை.

இது நபிகள் நாயகத்தைத் தவிர வேறு எவரையும் குறிக்கவே முடியாது என்பதற்கு இந்த வசனத்திலேயே வலுவான ஆதாரம் உள்ளது.

"அவர் (அஹ்மத்) அவர்களிடம் வந்த போது, அவர்கள் சூனியம் என்று கூறிவிட்டனர்'' என்று இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த வசனம் அருளப்பட்ட காலத்திற்குப் பிறகு தான் அஹ்மத் வருவார் என்பது இதன் கருத்தாக இருந்தால் இவ்வாறு கூற முடியாது. "அவர் இனி மேல் வரும் போது சூனியம் எனக் கூறுவார்கள்'' என்று வருங்கால வினையாகச் சொல்லப்பட்டிருக்கும். "அவர் வந்த போது'' என்று சென்ற கால வினைச் சொல் (ஃபலம்மா ஜாஅ) பயன்படுத்தப்பட்டுள்ளது.

"அவர் வந்த போது'' "கூறினார்கள்'' என்று குர்ஆன் கூறுவதால், இவ்வசனம் அருளப்பட்ட காலத்தில் அந்த அஹ்மத் வந்திருக்க வேண்டும். அவர் வந்த பின் அவர்கள் அவரை நிராகரித்திருக்கவும் வேண்டும். அவ்வாறு நடந்திருந்தால் தான் "அவர் வந்த போது'' எனக் கூறியிருக்க முடியும்.

இவ்வசனம் அருளப்பட்ட போது மிர்ஸா குலாம் அஹ்மத் என்பவன் வந்திருக்கவில்லை. இவனைப் பற்றிக் குறிப்பிடுவதாக இருந்தால்  "அவர் வரும் போது'' "சூன்யம் எனக் கூறுவார்கள்'' என்று வசனம் அமைந்திருக்கும்.

"அவர் வந்த போது சூனியம் என்று கூறினார்கள்'' என்று கூறப்படுவதால், இவ்வசனம் அருளப்படும் போதே அஹ்மத் வந்துவிட்டார் என்பது தெளிவு.

இவ்வசனம் அருளப்பட்ட போதே வந்திருந்தவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தானே தவிர, இவ்வசனம் அருளப்பட்ட போது எந்தப் பொருளாகவும் இருந்திராத அஹ்மத் தாசன் (குலாம் அஹ்மத்) அல்ல.

இவ்வசனம் தன்னைத் தான் குறிக்கிறது என்பதற்கு இவன் எடுத்துக்காட்டும் முக்கியமான ஆதாரம் என்ன தெரியுமா? "இஸ்லாத்தின் பால் அழைக்கப்படும் போது அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுபவனை விட அநியாயக்காரன் யார்?'' என்று அடுத்த வசனத்தில் கூறப்பட்டுள்ளது.

இவ்வசனத்தில் "இஸ்லாத்தின் பால் அழைக்கப்படும் நிலையில்" என்ற வாசகத்தை எடுத்துக் கொண்டான். எல்லோரும் என்னைக் காஃபிர்கள் என்று கூறி இஸ்லாத்தின் பால் அழைக்கின்றனர். இஸ்லாத்தின் பால் அழைக்கப்பட்டவன் நான் மட்டுமே. எனவே இது என்னைத் தான் குறிக்கிறது என்பது தான் இவனது ஆதாரம்.

முந்தைய வசனம் இவனைக் குறிக்காது என்பதற்கு போதுமான காரணங்களைக் கூறியுள்ளோம்.

இவன் சுட்டிக்காட்டிய இரண்டாவது வசனம் இவனைக் குறிக்கும் என்பதை நாம் மறுக்க வேண்டியதில்லை. அது இவனைத் தான் (இவனையும் தான்) குறிக்கிறது.

"இஸ்லாத்தின் பால் அழைப்பு விடப்படும் நிலையில் அல்லாஹ்வின் பெயரால் பொய் கூறி நானும் நபி என்று வாதிட்டவனைத் தவிர மிகவும் அநியாயக்காரன் யார்?'' என்பது நிச்சயமாக இவனைக் குறிக்கும். அஹ்மத் என்பது ஒருக்காலும் இவனைக் குறிக்காது.

இன்னொரு விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். மிர்ஸா குலாம் அஹ்மத், நபி வேறு - ரசூல் வேறு என்று வித்தியாசப்படுத்தி, தான் ரசூல் அல்ல நபி தான் என்று கூறினான். "ஒரு ரசூலின் வழியில் பல நபிமார்கள் வருவார்கள். அந்த வகையில் முஹம்மது ரசூல் அவர்கள் வழியில் வந்த நபி தான் நான்'' என்றான்.

இப்படி வாதிட்டவன், இந்த வசனத்தில் ரசூலைப் பற்றித் தான் முன்னறிவிப்புச் செய்யப்பட்டுள்ளதை வசதியாக மறைத்து விட்டான். இந்த வசனத்தில் எனக்குப் பின் வரக்கூடிய ரசூலைப் பற்றி முன்னறிவிப்புச் செய்கிறேன் என்று ஈஸா நபி கூறியதாகக் குறிப்பிடுகிறது.

இவனது வாதத்தின்படி இவன் ரசூல் இல்லை.

பெயரிலும் பொய் சொல்லியதாலும், இவனது வாதப்படியே ரசூலாக இல்லாதிருந்தும் ரசூல் என்று வாதிட்டு பொய்யுரைத்ததாலும், இவன் நபியாகவும் இருக்க முடியாது. பொய்யனும்- மூடனும்- மனநோயாளிகளும்- நபியாக அனுப்பப்பட மாட்டார்கள்.

வழிகேடர்கள், தெளிவான வசனங்களையும் எப்படி திசை திருப்புகிறார்கள் என்பதற்கு ஒரு சோற்றுப் பதமே இது.

(வளரும்)

More Articles …