Sidebar

18
Thu, Jun
சமீபத்திய செய்திகள்

நபிகளும் அல்லாஹ்வும் ஒருவரா?

(ஒற்றுமை மாதமிருமுறை இதழில் தேர்வு செய்யப்பட்ட வசனங்களுக்கு பீஜே எழுதிய விளக்கம்)

எனவே அவர்களை நீங்கள் சொல்லவில்லை. எனினும், அல்லாஹ் தான் அவர்களைக் கொன்றான். (முஹம்மதே) நீர் எறிந்த போது நீர் எறியவில்லை. எனினும் அல்லாஹ் தான் எறிந்தான்; நம்பிக்கையாளர்களை அழகிய முறையில் சோதிப்பதற்காக இவ்வாறு செய்தான். நிச்சயமாக அல்லாஹ் செவியுறுபவன், அறிந்தவன்.

திருக்குர்ஆன்: 8:17

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சந்தித்த முதல் போர்க் களம் பத்ருப் போர் என்பதை நாம் அறிவோம்.

இஸ்லாமிய எழுச்சிக்கு வித்திட்ட இப்போரில் இறைவன் எண்ணற்ற அற்புதங்களை நிகழ்த்தி முஸ்லிம்களுக்கு வெற்றியை வழங்கினான்.

எதிரிகளை விட எண்ணிக்கையில் மூன்றில் இரு மடங்கு குறைவாக முஸ்லிம்கள் இருந்தனர். ஆயுதங்கள், வாகனங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் போன்ற சாதனங்களும் முஸ்லிம்களிடம் இருந்ததை விட எதிரிகளிடம் பல மடங்கு அதிகமாக இருந்தன.

இரு படையினரையும் யார் எடை போட்டுப் பார்த்தாலும் முஸ்லிம்கள் நிச்சயமாகத் தோல்வியைத் தழுவுவார்கள் என்று தான் கணிக்க முடியும். அந்த அளவுக்கு பலவீனமான நிலையில் முஸ்லிம்கள் இருந்தனர். ஆனாலும் இறைவன் - முஸ்லிம்களுக்கு மகத்தான வெற்றியை வழங்கினான்.

* ஆயிரம் வானவர்களை இறைவன் களத்தில் இறக்கினான். (8:9)

* சுறுசுறுப்புடன் போரிடுவதற்காக அதற்கு முன் சிறிய தூக்கத்தை ஏற்படுத்தி முஸ்லிம்களின் இதயங்களை அமைதிப்படுதினான். (8:11)

* அன்றிரவு மழையை இறக்கி அவர்களைத் தூய்மைப்படுத்தியதுடன் அவர்களின் பாதங்களையும் உறுதிப்படுத்தினான். (8:11)

* வானவர்களும் களத்தில் இறங்கிப் போரிட்டனர்.

* எதிரிகளின் உள்ளங்களில் பீதியை ஏற்படுத்தினான். (8:12)

இந்த அற்புதங்களுடன் சேர்த்து நிகழ்த்திய மற்றொரு அற்புதத்தைத் தான் மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

பொடிக் கற்களில் ஒரு கைப்பிடியை எனக்கு எடுத்துவா என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் கூறினார்கள். அவர் எடுத்துக் கொடுத்தார். அதை எதிரிகளின் முகங்களை நோக்கி நபிகள் நாயகம் (ஸல்) எறிந்தனர். எதிரிக் கூட்டத்தின் ஒவ்வொருவர் கண்களிலும் அது படாமல் இருக்கவில்லை. அந்தச் சந்தர்ப்பத்தில் தான் "நீர் எறிந்த போது நீர் எறியவில்லை. எனினும், அல்லாஹ் தான் எறிந்தான்'' என்ற வசனத்தை அல்லாஹ் அருளினான். (நூல்: தப்ரானி)

ஒரு கூட்டத்தை நோக்கி யாரேனும் ஒருவர் பொடிக் கற்களை வீசி எறிந்தால் அவற்றுள் சில கற்கள் சிலர் மீது படலாம். அனைவர் மீதும் அதுவும் குறி வைத்து வீசியது போல் அனைவரின் கண்கள் மீதும் அது படும் எனக் கூற முடியாது.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீசிய பொடிக் கற்கள் குறி வைத்து வீசப்பட்டது போல் எதிரிகளின் கண்களைப் பதம் பார்த்தது. இதைத் தான் மேற்கண்ட வசனத்தில அல்லாஹ் கூறுகிறான்.

மனிதர்கள் கற்களை வீசினால் என்ன விளைவு ஏற்படுமோ அது போன்ற விளைவு ஏற்படாமல் இறைவனே விசினால் எத்தகைய விளைவுகள் ஏற்படுமோ அத்தகைய விளைவுகள் ஏற்பட்டது மற்றொரு அற்புதமாகும்.

இத்தகைய அற்புதங்களால் தான் வெற்றி பெற முடிந்ததே தவிர போரில் பங்கெடுத்தவர்களின் ஆற்றலினால் அல்ல என்பதை உணர்த்தவே இறைவன் இவ்வாறு சுட்டிக் காட்டுகிறான்.

இவ்வளவு தெளிவான வசனத்தையும் சில வழிகேடர்கள் தங்களின் தவறான கொள்கைக்கு ஆதாரமாக ஆக்கிக் கொள்கின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்து ஐநூறு ஆண்டுகளுக்குப் பின் தோன்றியவர்கள் தாம் இந்த வழிகேடர்கள். இவர்கள் நபிகள் நாயகத்தை நேசிக்கிறோம் எனக் கூறிக் கொண்டு வரம்பு மீறி அவர்களைப் புகழலானார்கள். இதன் உச்சகட்டமாக "அல்லாஹ் தான் ரசூல், ரசூல் தான் அல்லாஹ்'' என்றும் கூறத் துணிந்தார்கள்.

அல்லாஹ் வேறு, நபிகள் நாயகம் வேறு அல்ல. இருவரும் ஒருவரே என்றெல்லாம் உளற ஆரம்பித்தார்கள். ஏராளமான கட்டுக் கதைகளையும் இதற்கேற்ப இவர்கள் உருவாக்கினார்கள்.

ஈஸா நபி விஷயத்தில் கிறிஸ்தவர்கள் வரம்பு மீறியதையும் இவர்கள் மிஞ்சினார்கள்.

குர்ஆன் வசனங்களையோ, ஹதீஸ்களையோ வளைத்து தங்களின் உளறலை நியாயப்படுத்த முடியுமா? என்று தேடியவர்களுக்கு மேற்கண்ட வசனம் மிகப் பெரிய சான்றாகத் தென்பட்டது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மனிதராக இருந்தால் இப்படி எறிய முடியுமா? அல்லாஹ்வாக இருந்தால் தானே எறிய முடியும்? அவர்கள் எறிந்ததை அல்லாஹ், தான் எறிந்ததாக அல்லவா கூறுகிறான். எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அல்லாஹ்வும் ஒருவரே என்று இந்த மூடர்கள் உளறலானார்கள்.

இவ்வசம் கூறுவது என்ன என்பதை விளங்காத சில மூடர்களும் இவர்களது வாதத்தில் மயங்கினார்கள். எந்த மார்க்கம் இணை வைத்தலின் வாசலைக் கூட இறுக்கமாக அடைத்ததோ அந்த மார்க்கத்திலேயே இவர்கள் விளையாடலானார்கள். எந்த மார்க்கம் மனிதன் ஒருக்காலும் கடவுளாக முடியாது என அறைகிறதோ அந்த மார்க்கத்திலேயே மனிதரைக் கடவுளாக்கினார்கள்.

ஆனால் இந்த வசனம் அவர்களது வாதத்துக்கு நேர் எதிரானதாகும்.

"நான் கல்லை வீசினால் போதும்! எதிரிகள் ஓட்டமெடுப்பார்கள் என்று முஹம்மதே நீர் நினைத்து விடக் கூடாது. மாறாக குறிப்பிட்ட இந்த நிகழ்ச்சியில் நீர் கல்லை வீசிய போது எனது வல்லமையால் அதைப் பரவச் செய்தேன்'' என்பது தான் இவ்வசனத்தின் கருத்தாகும்.

இது தான் இவ்வசனத்தின் கருத்து என்பதை விளங்கிட வேறு எங்கேயும் நாம் போக வேண்டியதில்லை. இவ்வசனத்திலேயே இதற்கான காரணம் அடங்கியுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பொடிக் கற்களை வீசியதைக் கூறுவதற்கு முன் நபித்தோழர்கள் போரில் எதிரிகளை வெட்டி வீழ்த்தியதை அல்லாஹ் குறிப்பிடுகிறான். "நீங்கள் அவர்களைக் கொல்லவில்லை. மாறாக அல்லாஹ் தான் அவர்களைக் கொன்றான்'' என்று குறிப்பிடுகிறான்.

நபித்தோழர்கள் தமது வாள்களாலும், வேல்களாலும் தான் எதிரிகளை வெட்டி வீழ்த்தினார்கள். நபித்தோழர்களின் கரத்தால் செய்யப்பட்ட இந்த தீரச் செயலுக்கு அல்லாஹ் சொந்தம் கொண்டாடுகிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எறிந்தது பற்றிப் பேசும் போது பயன்படுத்தியது போன்ற வாசக அமைப்பையே இங்கேயும் பயன்படுத்துகிறான். நபிகள் நாயகம் மட்டுமல்ல, பத்ருப் போரில் கலந்து கொண்ட அனைத்துத் தோழர்களுமே அல்லாஹ்வாக இருந்தார்கள் என்று இவர்கள் வாதிட வேண்டுமல்லவா?

அல்லாஹ் தான் நபி, நபி தான் அல்லாஹ் என்று இவர்கள் கூறியது போல் அல்லாஹ் தான் நபித்தோழர்கள். நபித்தோழர்கள் தான் அல்லாஹ் எனவும் கூற வேண்டிய நிலை ஏற்படும்.

பத்ருப் போரில் பல நபித்தோழர்கள் கொல்லப்பட்டனர். இவர்களின் கிறுக்குத் தனமான வாதப்படி அல்லாஹ் தான் கொல்லப்பட்டான் என்று கூறும் நிலை ஏற்படும்.

இந்த வெற்றிக்கு நபிகள் நாயகமோ நபித் தோழர்களோ சொந்தம் கொண்டாடி விடக் கூடாது என்பதற்காகத் தான், தான் நடத்திய அற்புதங்களை இதற்கு முந்தைய வசனங்களில் அல்லாஹ் நினைவுபடுத்துகிறான்.

நானும் உங்களைப் போன்ற மனிதனே என்று தெளிவாக அவர்களை அல்லாஹ் கூறச் சொல்கிறான். (திருக்குர்ஆன் 18:110)

தெளிவான இந்தப் பிரகடனத்தை அலட்சியம் செய்துவிட்டு சம்பந்தமில்லாத உளறலை நியாயப்படுத்த எண்ணுகின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உண்டது, பருகியது, அவர்கள் மலஜலம் கழித்தது, குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டது, மற்றவர்களைப் போல் தாய், தந்தையருக்குப் பிறந்தது, மனைவி-மக்களை இழந்து கவலைப்பட்டது, சித்ரவதைக்கு ஆளானது, நாடு கடத்தப்பட்டது, தமது மனைவியின் மீது எதிரிகள் பழி கூறிய போது உண்மை நிலையை அறியாமல் இருந்தது, ஒரு கூட்டத்தாரின் அழைப்பை ஏற்று அனுப்பிய எழுபது நபித் தோழர்கள் அவர்களால் கொல்லப்படுவார்கள் என்பதை முன்பே அறியாமல் இருந்தது, வறுமையில் உழன்றது,

என ஆயிரமாயிரம் நிகழ்ச்சிகள் மூலம் அவர்கள் தாம் ஒரு மனிதர் என்பதை நிரூபித்துச் சென்ற பிறகும் இப்படி உளறுபவன் அறிவுடையவனாக இருக்க முடியாது.

நபிகள் நாயகத்துக்கும் நபித்தோழர்களுக்கும் மட்டுமல்ல காஃபிர்கள் உள்ளிட்ட எல்லா மனிதர்கள் விஷயத்திலும் கூட இறைவன் இத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளான்.

நீங்கள் விவசாயம் செய்கிறீர்களே! அதைப் பற்றிக் கூறுங்கள்! நீங்கள் தான் அதை விவசாயம் செய்கிறீர்களா? அல்லது நாம் விவசாயம் செய்கிறோமா? (திருக்குர்ஆன் 56:63,64) என்று அல்லாஹ் கூறுகிறான்.

நாம் விவசாயம் செய்வதைக் கூறி விட்டு உண்மையில் நீங்கள் விவசாயம் செய்யவில்லை. நாமே விவசாயம் செய்கிறோம் என்கிறானே! விவசாயிகள் அனைவரும் அல்லாஹ்வா? இந்த மூடர்கள் சிந்திக்க வேண்டாமா?

நீங்கள் விந்துத் துளியாகச் செலுத்துகிறீர்களே! அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கிறோமோ? எனவும் அல்லாஹ் கேட்கிறான். (திருக்குர்ஆன் 56:58,59)

நாம் தான் விந்துத் துளியைத் செலுத்துகிறோம். ஆனாலும், அதைக் குழந்தையாக ஆக்குவதும், ஆக்காது விடுவதும் அவனது கட்டளைப்படி நடப்பது என்று இதைப் புரிந்து கொள்கிறோம்.

நாம் தான் விதைகளை விதைக்கிறோம். ஆனாலும் விதைத்ததை முளைப்பிக்கச் செய்து ஒன்றுக்கு நூறாக இன்னும் அதிகமாக ஆக்குவது அவனது வல்லமையின் பாற்பட்டது என்று இதையும் விளங்கிக் கொள்கிறோம்.

அது போல் தான் மேற்கண்ட வசனத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்னொரு கோணத்தில் சிந்தித்தால் இவர்களது வாதம் எந்த அளவுக்கு அபத்தமானது என்பது எளிதில் விளங்கும்.

நீர் எறிந்த போது

நீர் எறியவில்லை

என இரண்டு சொற்றொடர்கள் இங்கே இடம் பெற்றுள்ளன. நீர் எறிந்த போது எனக் கூறும் போது எறிந்தவர் நபிகள் நாயகம் என்று அல்லாஹ் ஒப்புக் கொள்கிறான். எதை ஒப்புக் கொண்டானோ அதையே நீர் எறியவில்லை எனக் கூறி உடனே மறுக்கவும் செய்கிறான்.

அல்லாஹ்வின் வார்த்தையில் நிச்சயமாக முரண்பாடு இருக்கவே முடியாது. "நான் சாப்பிட்ட போது நான் சாப்பிடவில்லை'' என்று ஒருவன் கூறினால் அதை நாம் அபத்தம் என்போம்.

ஆனால் இறைவன் எப்படி முரண்பட்டுப் பேசுவான் என்பதைச் சிந்திப்பார்களானால் இதன் சரியான பொருளை விளங்கிக் கொள்வார்கள். இப்படி உளறிக் கொட்ட மாட்டார்கள்.

இது போன்ற வார்த்தைப் பிரயோகத்தை நேரடியான பொருளில் நாம் எடுத்துக் கொள்வது கிடையாது. முரண்பட்ட இரண்டுக்கும் இரு வேறு அர்த்தங்களையே நாம் கருத்தில் கொள்வோம்.

நாம் பயிரிடும் போது நாம் பயிரிடுவதில்லை. அல்லாஹ் தான் பயிரிடுகிறான் என்று கூறினால் பயிரிடுதல் என்பதற்கு இரு வேறு இடங்களில் இரு வேறு அர்த்தங்களை நாம் கவனத்தில் கொள்கிறோம்.

நாம் பயிரிடும் போது என்ற சொற்றொடருக்கு தானியத்தை மண்ணில் புதைக்கும் போது நீர் பாய்ச்சும் போது என்று பொருள் கொள்கிறோம்.

நாம் பயிரிடுவதில்லை என்று அடுத்துக் கூறுகிறோம். இந்த இடத்திலும் அதே பொருளைக் கொண்டால் அது உளறலாகி விடும். நாம் முளைக்கச் செய்வில்லை என்று வேறு பொருள் கொள்கிறோம். இப்போது முரண்பட்டதாகவோ உளறலாகவோ ஆகாது.

அதாவது நாம் (பயிரிடும் போது) விதையைப் புதைக்கும் போது நாம் அதைப் (பயிரிடுவது இல்லை) முளைக்கச் செய்வதில்லை என்ற கருத்து வரும்.

இது போல் தான் மேற்கண்ட வசத்திலும் பொருள் கொள்ள வேண்டும்.

நீர் எறிந்த போது

நீர் எறியவில்லை

என்று முரண்பட்ட இரண்டு சொற்றொடர்களில் ஒவ்வொன்றும் வெவ்வேறு பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நீ எறிந்த போது அதாவது பொடிக் கற்களை வீசிய போது,

நீர் எறியவில்லை அதாவது ஒவ்வொருவர் முகத்திலும் நீர் கொண்டு போய்ச் சேர்க்கவில்லை

என்று பொருள் கொண்டால் தான் முரண்பாடில்லாத வாசகமாக அது அமையும்.

இது போன்ற வார்த்தைப் பிரயோகம் அனைத்து மொழி இலக்கியங்களிலும் மக்களின் உரையாடல்களிலும் காணக் கூடியது தான். குர்ஆனுக்கு மட்டும் உரிய இலக்கணம் இல்லை.

பன்னீர் செல்வம் பேசிய போது, பன்னீர் செல்வம் பேசவில்லை. ஜெயலலிதா தான் பேசினார் என்று இப்போதும் நாம் கூறலாம்.

ஆனால் இரண்டு இடத்திலும் வெவ்வேறு பொருளைக் கொள்ள வேண்டும். இல்லா விட்டால் அது உளறல் தவிர வேறு இல்லை.

பன்னீர் செல்வம் பேசவில்லை. அதாவது கருத்து அவருடையதல்ல என்று பொருள் கொண்டால் தான் இந்த வாசக அமைப்பு சரியானதாகும்.

இந்த விதியின் அடிப்படையில் மேற்கண்ட வசனத்திற்குப் பொருள் கொண்டால் எறிந்தது நபிகள் நாயகம். அதைச் சேர்த்து வைத்தது அல்லாஹ் என்ற கருத்து வரும். அல்லாஹ் செய்தது வேறு! அவன் தூதர் செய்தது வேறு. அல்லாஹ் வேறு! அவன் தூதர் வேறு என்பது இதன் மூலம் உறுதியாகும்.

வணங்கப்படுவோர் மரணித்து விட்டனர் என்பது ஈஸா நபியை உள்ளடக்குமா?

(ஒற்றுமை மாதமிருமுறை இதழில் தேர்வு செய்யப்பட்ட வசனங்களுக்கு பீஜே எழுதிய விளக்கம்)

அல்லாஹ்வையன்றி இவர்கள் யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதனையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்பட்டவர்கள். (அவர்கள்) இறந்தவர்கள். உயிருள்ளவர்கள் அல்லர். தாம் எப்போது எழுப்பப்படுவோம் என்பதை அவர்கள் அறியமாட்டார்கள்.

திருக்குர்ஆன் 16:20, 21

ஈஸா நபியவர்கள் மரணித்து விட்டார்கள். உயிருடன் இல்லை என்று வாதிடக் கூடியவர்கள் இவ்வசனங்களையும் தங்களின் கருத்துக்குச் சான்றாக எடுத்து வைக்கின்றனர். அல்லாஹ்வையன்றி யாரெல்லாம் கடவுள் நிலையில் வைத்துப் பிரார்த்தனை செய்யப்படுகிறார்களோ அவர்கள் அனைவரும் மரணித்தவர்கள் என்றும், உயிருடன் உள்ளவர்கள் அல்லர் எனவும் இவ்வசனங்களில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

ஈஸா நபியவர்கள் இறைவனின் நிலையில் வைத்து பிரார்த்திக்கப்படுகின்றார். வணங்கப்படுகின்றார். வணங்கப்படுவோர் யாவரும் மரணித்தவர்கள் என்று கூறப்படுவதால் ஈஸா நபியும் மரணித்து விட்டார்கள் என்பது இவர்களின் வாதம்.

தங்களின் தவறான முடிவை நியாயப்படுத்துவதற்காக திருக்குர்ஆனின் கூற்றைப் பொய்யாக்கவும் இவர்கள் தயாராக உள்ளனர் என்பது இந்த வாதத்திலிருந்து தெளிவாகத் தெரிகின்றது.

இன்று நமது நாட்டிலும் உலகின் பல பாகங்களிலும் உயிருடன் வாழ்கின்ற மனிதர்களை வணங்கக்கூடியவர்கள் உள்ளனர். அவர்களை கடவுளின் அவதாரங்களாக நினைப்பவர்களும் உள்ளனர்.

சாய்பாபா, கல்கி, பங்காரு அடிகளார் போன்றவர்கள் நம் கண் முன்னே வாழ்கிறார்கள். இவர்களைக் கடவுளின் அவதாரங்ளாக எண்ணி வழிபடும் கோடிக்கணக்கான மக்களும் உள்ளனர்.

அல்லாஹ்வையன்றி யாரை நீங்கள் வணங்குகிறீர்களோ அவர்களெல்லாம் இறந்தவர்கள் என்ற வசனம் இவர்கள் கருத்தில் கொண்ட பொருளின்படி இப்போது பொய்யாகி விடுகின்றது. (நவூது பில்லாஹ்)

யாரையெல்லாம் வணங்குகிறார்களோ அவர்களெல்லாம் இறந்தவர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். ஆனால் அல்லாஹ் கூறியவாறு இல்லாமல் வணங்கப்படும் பலர் உயிருடன் உலகில் வாழ்ந்து வருகின்றனர். உயிருடன் நம் கண் முன்னே வாழ்பவர்களை மரணித்தவர்கள் என்று கூறினால் தான் குர்ஆன் வசனம் மெய்யாக முடியும்.

ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்பதற்காக இவ்வாறு வாதம் செய்தவர்கள் சாய்பாபா போன்றவர்கள் குறித்து என்ன சொல்லப் போகிறார்கள்?

சாய்பாபாக்களை விட்டு விடுவோம். இவ்வசனங்கள் அருளப்பட்ட காலத்தில் வணங்கப்பட்ட பலர் உயிருடன் இருந்துள்ளனர். திருமறைக் குர்ஆனிலிருந்தே இதை நாம் அறிந்து கொள்ள இயலும்.

கிறிஸ்தவர்கள் ஈஸா நபியைக் கடவுளின் மகன் என்றனர். இது போலவே மக்காவில் வாழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எதிரிகள் மலக்குகள் என்னும் வானவர்களை அல்லாஹ்வின் புதல்விகள் என்றனர். மலக்குகளை வணங்கியும் வந்தனர்.

உங்களுக்கு ஆண் குழந்தைகளைத் தேர்வு செய்து விட்டு வானவர்களைத் (தனது) பெண் மக்களாக (அல்லாஹ்) ஏற்படுத்திக் கொண்டானா? நிச்சயம் நீங்கள் பயங்கரமான வார்த்தையையே கூறுகிறீர்கள்.

திருக்குர்ஆன்: 17:40

ரஹ்மான் (ஆகிய அல்லாஹ்) சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான் எனக் கூறினார்கள். அவன் தூயவன். மாறாக அவர்கள் மரியாதைக்குரிய அடியார்களாவர்.

திருக்குர்ஆன்: 21:26

ரஹ்மானின் அடியார்களாக உள்ள வானவர்களை பெண்களாக ஆக்கிவிட்டனர். அவர்களைப் படைத்த போது இவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்களா? இவர்களின் கூற்று பதிவு செய்யப்படும். மேலும், இவர்கள் விசாரிக்கப்படுவார்கள். ரஹ்மான் நாடியிருந்தால் நாங்கள் அவர்களை (வானவர்களை) வணங்கியிருக்க மாட்டோம் எனவும் கூறுகின்றனர். இது பற்றி அவர்களுக்கு எந்த அறிவும் இல்லை. அவர்கள் வீண் கற்பனையே செய்கிறார்கள்.

திருக்குர்ஆன்: 43:19, 20

இவ்வசனங்கள் கூறுவது என்ன? வானவர்களை அல்லாஹ்வின் புதல்விகள் என்று மக்கத்து காபிர்கள் கூறியுள்ளனர். அவர்களை வணங்கியும் உள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது.

வணங்கப்பட்டவர்கள் யாவரும் மரணித்தவர்கள் என்றால் இந்த வாதப்படி வானவர்களும் மரணித்தவர்கள் என வாதிட வேண்டும். வானவர்களில் யாரும் இப்போது உயிருடன் இல்லை என்று இவர்கள் கூற வேண்டும்.

ஈஸா நபியைப் பற்றி எந்தத் தவறை கிறிஸ்தவர்கள் செய்தார்களோ அதே தவறைத் தான் வானவர்கள் விஷயத்தில் மக்கத்துக் காபிர்களும் செய்தனர். இறைவனுக்கு மகன் இருக்கலாம் என்ற வாதமும், மகள்கள் இருக்கலாம் என்ற வாதமும் அடிப்படையில் சமமானவை தான்.

ஈஸா நபியை வணங்கியதால் அவர்கள் மரணித்து விட்டார்கள் என்று வாதிட்டால் மலக்குகளை வணங்கியதால் மலக்குகளும் மரணித்து விட்டார்கள் என்று வாதிட வேண்டும்.

மலக்குகளை மட்டுமின்றி ஜின்களையும் மனிதர்கள் வணங்கியுள்ளனர்.

அவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டும் நாளில் "இவர்கள் தாம் உங்களை வணங்கிக் கொண்டிருந்தார்களா?'' என்று வானவர்களிடம் அவன் கேட்பான். அதற்கவர்கள் "நீ தூயவன் - நீ தான் எங்கள் பாதுகாவலன் அவர்களல்ல. மாறாக அவர்கள் ஜின்களையே வணங்கினார்கள். அவர்களில் அதிகமானோர் அவர்களையே நம்பிக்கை கொண்டார்கள்.

திருக்குர்ஆன்: 34:40, 41

அன்றைய மனிதர்கள் ஜின்களை வணங்கினார்கள் என்று இவ்வசனங்கள் கூறுகின்றன. ஒருவர் வணங்கப்படுவது அவர் இறந்துவிட்டார் என்பதற்கான ஆதாரமாக இருந்தால் ஜின்களும் மரணித்து விட்டார்கள் என்று வாதிடவேண்டும். ஈஸா நபி விஷயத்தில் செய்த வாதத்தை ஜின்கள் விஷயத்தில் இவர்கள் செய்வதில்லை.

மலக்குகள் - ஜின்கள் ஆகியோர் வேற்று இனத்தவர்கள். மனித இனத்தில் வணங்கப் படுபவர்களைத் தான் இவ்வசனங்கள் கூறுகின்றன என்று சமாளிப்பார்களானால் அதுவும் தவறு தான். ஏனெனில், உயிருடன் உள்ள மனிதர்களும் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வணங்கப்பட்டுள்ளனர்.

தங்கள் பாதிரிகளையும், மத குருமார்களையும், மர்யமின் மகன் மஸீஹையும் (ஈஸாவையும்) அல்லாஹ்வையன்றி கடவுளர்களாக இவர்கள் ஏற்படுத்திக் கொண்டார்கள். ஒரே ஒரு கடவுளை வணங்குமாறு தவிர இவர்கள் கட்டளையிடப்படவில்லை. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. இவர்கள் இணைவைப்பதை விட்டும் அவன் தூயவன்.

திருக்குர்ஆன்: 9:31

ஈஸா நபியை எவ்வாறு கடவுளாகக் கருதினார்களோ அது போலவே பாதிரிகளையும், மத குருக்களையும் கடவுளாக கருதினார்கள் என்று இவ்வசனம் மிகத் தெளிவாகக் கூறுகிறது. ஒருவர் வணங்கப்படுவது தான் அவரது மரணத்திற்குரிய ஆதாரம் என்ற இவர்களின் வாதப்படி உலகில் எந்தப் பாதிரியாரும், மதக் குருக்களும் உயிருடன் இல்லை என்று இவர்கள் அறிவிக்க வேண்டும். ஈஸா நபியைத் தவிர மற்றவர்கள் குறித்து இவர்கள் அவ்வாறு அறிவிக்க மாட்டார்கள்.

யாரை இவர்கள் அழைக்கிறார்களோ அவர்கள், இறந்தவர்கள் என்று குர்ஆனில் உள்ளதே! இவர்கள் விளங்குவது போன்ற கருத்தை அது தருகிறதே என்ற அடிப்படையான கேள்விக்கு வருவோம்.

திருக்குர்ஆனை அணுக வேண்டிய முறைப்படி அணுகினால் இந்தக் கேள்விக்கு விடை கிடைத்து விடும்.

திருக்குர்ஆனில் பொதுப்படையாக ஒரு இடத்தில் ஒரு செய்தி கூறப்பட்டால் அதற்கு வேறு இடங்களில் ஏதேனும் விதிவிலக்கு கூறப்பட்டுள்ளதா என்று ஆராய வேண்டும். விதிவிலக்குகள் இருக்குமானால் அவற்றைப் பொதுவாகக் கூறப்பட்டதிலிருந்து நீக்கி விட வேண்டும். மனிதன் அநியாயக்காரன், மனிதன் நன்றி கெட்டவன் என்றெல்லாம் திருக்குர்ஆனில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. அதே குர்ஆன் சில நல்லடியார்கள் நன்றியுள்ளவர்களாக நடந்து கொண்டார்கள் எனவும் குறிப்பிடுகிறது. மனிதன் நன்றி கெட்டவன் என்ற பொதுவான வார்த்தைப் பிரயோகத்தை வைத்துக் கொண்டு நபிமார்கள் உட்பட அனைவருமே நன்றி கெட்டவர்கள் என்று முடிவு செய்வது அறியாமையாகும்.

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை வணங்குகிறீர்களோ அவர்கள் நரகத்தின் எரி பொருட்களாவர் என்று குர்ஆன் 21:98 வசனம் கூறுகிறது.

இதனடிப்படையில் மனிதர்களால் வணங்கப்பட்ட ஈஸா நபி உள்ளிட்ட நபிமார்கள், நல்லடியார்கள் அனைவரும் நரகில் போட்டு எரிக்கப்படுவார்கள் என்று புரிந்து கொள்ளக்கூடாது.

இந்த வாசக அமைப்பு இதற்கு இடமளித்தாலும் 21:101 வசனத்திலும், வேறு பல இடங்களிலும் நபிமார்கள் மற்றும் நல்லடியார்களை யாரேனும் வணங்கினால் வணங்கியவர்கள் தான் நரகில் போடப்படுவார்களே தவிர வணங்கப்பட்டவர்கள் நரகில் போடப்பட மாட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்த விதிவிலக்கையும் சேர்த்துத்தான் இவ்வசனத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அது போல் தான் நீங்கள் யாரை வணங்குகிறீர்களோ அவர்கள் இறந்தவர்கள் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். வானவர்கள், பாதிரிகள், ஜின்கள், ஷைத்தான் ஆகியோர் வணங்கப்பட்டாலும் அவர்கள் உயிருடன் உள்ளனர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. அதே போல் ஈஸா நபியவர்கள் இன்னும் மரணிக்கவில்லை என்பதற்கும் சான்றுகளை முன்னரே காட்டியுள்ளோம்.

அவர் கியாமத் நாளின் அடையாளமாவார், வேதமுடையோர் அவர் மரணிப்பதற்கு முன்னால் அவரை நம்பாமல் இருக்கமாட்டார்கள் என்று 43:61, 4:159 ஆகிய வசனங்களில் ஈஸா நபி உயிருடன் உள்ளனர் என்ற விதிவிலக்கு கூறப்பட்டுள்ளது.

ஈஸாவுக்கு முன்னுள்ளவர்கள் மரணித்து விட்டார்கள் (5:75) என்ற வசனம் அவர் மரணிக்கவில்லை என்ற கருத்தை உள்ளடக்கி நிற்கிறது.

இது போன்ற விதிவிலக்குகள் இருக்கும் போது அதைக் கண்டு கொள்ளாமல் அதற்கு உரிய எந்த விளக்கமும் தராமல் 16:20, 21 வசனங்களின் அடிப்படையில் ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என வாதிடுவது அறியாமையும், மோசடியுமாகும்.

9:31 வசனத்தில் பாதிரிகளையும், மதக் குருக்களையும் ஈஸாவையும் கடவுளர்களாக ஆக்கினார்கள் என்று இறைவன் கூறுகிறான். உயிருடன் உள்ள முதலிருவருடன் ஈஸா நபியையும் சேர்த்துக் கூறுகிறான். இறைவன். ஏற்கனவே மரணித்து விட்ட அவரது தாயார் மர்யமை இங்கே கூறாமல் தவிர்க்கிறான்.

உயிருடன் வாழக் கூடியவர்களுடன் ஈஸா நபியையும் சேர்த்துக் கூறியிருப்பது அவர்கள் மரணிக்கவில்லை எனக் கூறும் மற்றொரு சான்றாக அமைந்துள்ளது.

எனவே ஈஸா நபி இறந்துவிட்டார் என்ற இந்த வாதமும் அர்த்தமற்றது என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகின்றது.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

வானத்தில் ஈஸா நபிக்கு உணவு உண்டா?

மர்யமின் மகன் மஸீஹ் (என்னும் ஈஸா) தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவரது தாய் அதிக நம்பிக்கை கொண்டவர். அவ்விருவரும் உணவு உண்பவர்களாக இருந்தனர். நாம் அவர்களுக்குச் சான்றுகளை எவ்வாறு தெளிவுபடுத்துகிறோம் என்பதை கவனிப்பீராக! பின்னர் அவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர் என்பதையும் கவனிப்பீராக!

திருக்குர்ஆன் : 5:75

ஆயினும், ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்ற கருத்துடையோர் மேற்கண்ட வசனத்தை தமது கருத்துக்குச் சான்றாக முன் வைக்கின்றனர். "அவர்கள் இருவரும் உணவு உண்பவர்களாக இருந்தனர்'' என்ற சொற்றொடரை ஆதாரமாகக் கொண்டு ஈஸா நபி மரணித்து விட்டார் எனக் கூறுகின்றனர்.

ஈஸா நபி உயிரோடு இருந்தால் அவர் உணவு உட்கொள்ள வேண்டும். வானத்தில் உணவுப் பொருட்கள் பயிரிடப்படுகின்றனவா? அங்கே எப்படி உணவு உட்கொள்ள முடியும்?

என்றெல்லாம் அற்புதமான (?) கேள்விகளைக் கேட்டு ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்று நிறுவ முயல்கின்றனர். ஈஸா நபி இப்பூமியில் இல்லாததால் அவர் உணவு உட்கொள்ள வில்லையாதலால் அவர் மரணித்து விட்டார் என்பது உறுதி என்பது இவர்களின் வாதம்.

பொதுவாக நபிமார்கள் உணவு உட்கொள்பவர்களாகவே இருந்தனர் எனக் கூறும் 21:8, 25:20 ஆகிய வசனங்களையும் தமது கருத்துக்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

இது அறியாமை நிறைந்த வாதம் என்றாலும் இதை ஒரு வலுவான ஆதாரமாக மாற்றுக் கருத்துடையவர்கள் சித்தரிக்கிறார்கள்.

ஈஸா நபி உயிருடன் இருக்கிறார்களா? இல்லையா? என்பது தான் அடிப்படையான பிரச்சனை. அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்பது நிரூபணமாகிவிட்டால், அதிலிருந்தே அவர்கள் உணவு உண்கிறார்கள் என்றோ அல்லது உணவு உண்ணாமல் வேறு வகையில் உயிருடன் உள்ளனர் என்றோ முடிவு செய்தாக வேண்டும்.

உயிருடன் இருக்கிறார்கள் என்பதிலிருந்து உணவு உட்கொள்கிறார்கள் என்று விளங்குவதற்கு பதிலாக ஈஸா நபி உணவு உண்பது தமக்குத் தெரியவில்லை என்பதிலிருந்து அவர் மரணித்து விட்டார் என்று தலைகீழாக விளங்கிக் கொள்கின்றனர்.

உணவு என்பது அரிசியும், பருப்பும் மட்டும் அல்ல. அல்லாஹ் நாடினால் வாய் வழியாக இல்லாமல் தனது வல்லமையால் உணவளிக்க இயலும் என்பதற்கு திருக்குர்ஆனில் பல சான்றுகள் உள்ளன.

கஹ்ப் அத்தியாயத்தில் நன்மக்கள் சிலரை பல வருடங்கள் தூங்க வைத்ததாக அல்லாஹ் கூறுகிறான். (18:11)

அவர்கள் ஒரு பக்கமாகவே படுத்துக்கிடந்தால் உடலைப் பாதிக்கும் என்பதற்காக வலப்புறமும், இடப்புறமும் புரட்டிப் போடுவதாக 18:18 வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

பல வருடங்கள் உண்ணாமல் ஒருவர் தூங்க முடியுமா? நிச்சயமாக முடியாது. ஒரே பக்கமாகப் படுத்துக் கிடப்பதே முடியாது என்பதால் அவர்களைப் புரட்டிப் போடும் இறைவன் உணவு வழங்கவே இல்லை. இறைவன் மறைமுகமாக ஏதோ ஒரு வகையில் அவர்களுக்கு உணவளித்திருக்க வேண்டும்; அல்லது உணவு உட்கொள்ளாமலேயே உயிர் வாழ்வதற்குரிய ஏற்பாட்டைச் செய்திருக்க வேண்டும். அவர்கள் உணவு உட்கொள்ளாததிலிருந்து அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று கருதுவது அறியாமையாகும்.

இது போல் ஒரு நல்லடியாரை அல்லாஹ் நூறு வருடங்கள் மரணிக்கச் செய்ததாக குர்ஆன் கூறுகிறது.

259. அல்லது ஒரு கிராமத்தைக் கடந்து சென்றவரைப் பற்றி (நீர் அறிவீரா?) அந்த ஊர் அடியோடு வீழ்ந்து கிடந்தது. "இவ்வூர் அழிந்த பிறகு அல்லாஹ் எவ்வாறு இதை உயிராக்குவான்?'' என்று அவர் நினைத்தார். உடனே அவரை அல்லாஹ் நூறு ஆண்டுகள் மரணிக்கச் செய்தான். பின்னர் அவரை உயிர்ப்பித்து "எவ்வளவு நாளைக் கழித்திருப்பீர்?'' என்று கேட்டான். "ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிதளவு நேரம் கழித்திருப்பேன்'' என்று அவர் கூறினார். "அவ்வாறில்லை! நூறு ஆண்டுகளைக் கழித்து விட்டீர்! உமது உணவும், பானமும் கெட்டுப் போகாமல் இருப்பதைக் காண்பீராக!406 (செத்துவிட்ட) உமது கழுதையையும் கவனிப்பீராக! மக்களுக்கு உம்மை எடுத்துக் காட்டாக ஆக்குவதற்காக (இவ்வாறு செய்தோம். கழுதையின்) எலும்புகளை எவ்வாறு திரட்டுகிறோம் என்பதையும், அதற்கு எவ்வாறு மாமிசத்தை அணிவிக்கிறோம் என்பதையும் கவனிப்பீராக!'' என்று அவன் கூறினான். அவருக்குத் தெளிவு பிறந்தபோது "அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன் என்பதை அறிகிறேன்'' எனக் கூறினார்.79

திருக்க்குர் ஆன் 2:259

இந்த நல்லடியாரை உறக்க நிலையில் இறைவன் வைத்தான் என்று ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்ற கருத்துடையோர் விளக்கம் கூறுகின்றனர்.

நூறு வருடங்கள் எதையுமே உண்ணாமல், பருகாமல் அந்த நல்லடியாரை உயிர் வாழச் செய்த இறைவன் ஈஸா நபியை வாழச் செய்வான் என்பதில் மட்டும் சந்தேகம் கொள்கின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவு பகல் 24 மணி நேரமும் தொடர்ந்து பல நாட்கள் நோன்பு நோற்றனர். மற்றவர்களுக்கு அதைத் தடை செய்தனர். "என் இறைவன் புறத்திலிருந்து எனக்கு உணவளிக்கப்படுகிறது'' என்று விளக்கமும் கூறினார்கள்.

(புகாரி 1961, 1962, 1963, 1964)

இந்த உணவு வாய்வழியாக அளிக்கப்படும் உணவு என்றால் நோன்பு முறிந்துவிடும். எனவே, இறைவன் வேறு விதமாக வழங்கும் ஆற்றல் என்பதே இதன் கருத்தாகும்.

அல்லாஹ் ஒருவரை உயிர் வாழச் செய்ய நினைத்தால் அவன் அதற்கான ஏற்பாட்டைச் செய்வான் என்பது ஆச்சரியப்படக்கூடிய ஒன்றல்ல.

பூமியில் மட்டும் தான் உண்பதற்குரிய உணவுகள் உள்ளன என நினைப்பதும் அறியாமையின் வெளிப்பாடுதான்.

"இறைவா! வானிலிருந்து எங்களுக்கு உணவுத் தட்டை அனுப்பு என்று ஈஸா நபி பிரார்த்தனை செய்தார்கள். அதை ஏற்று அல்லாஹ் அதை வழங்கினான் என்பதை 5:114 வசனத்திலிருந்து அறியலாம்.

"வானத்தில் உணவெல்லாம் கிடையாது. பூமியிலேயே தயார் செய்து கொள்ளுங்கள்'' என்று அல்லாஹ் கூறவில்லை. மாறாக வானத்திலிருந்து உணவை இறக்கி வைத்தான். மன் ஸல்வா என்னும் பதார்த்தங்களை மூஸா நபியின் சமுதாயத்திற்கு இறக்கி வைத்ததாக 20:80, 7:160, 2:57 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

இதன் பிறகும் வானத்தில் உணவு கிடைக்குமா என்று கேட்பது அறியாமையில்லாமல் வேறு என்ன?

51:22, 34:24, 16:73 ஆகிய வசனங்களில் வானங்களிலும் உணவு உள்ளன என்பது தெள்ளத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

எனவே, ஈஸா நபி உயிருடன் உள்ளனர் என்பதற்கு மறுக்க முடியாத சான்றுகள் பல உள்ளதாலும், இறைவனைப் பொருத்த வரை உணவு என்பது ஒரு பிரச்சனையே அல்ல என்பதாலும் இவர்களின் இந்த வாதமும் அடிபட்டுப் போகின்றது.

முஹம்மது நபிக்கு முன் வந்த நபிமார்கள் அனைவரும் மரணித்து விட்டார்களா?

ஒற்றுமை மாதம் இருமுறை இதழில் தேர்வு செய்யப்பட்ட திருக்குர்ஆன் வசனங்களுக்கு பீஜே எழுதிய விளக்கம்

144. முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர்.101 அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான்.

திருக்குர்ஆன் 3:144

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உலக முஸ்லிம்களின் ஒரே தலைவராகவும், வழிகாட்டியாகவும் இருக்கிறார்கள். ஆனாலும், அவர்கள் இறைவனின் தூதரே தவிர இறைவனல்லர் என்பதை இவ்வசனம் வலியுறுத்துகின்றது. முஹம்மத் (ஸல்) அவர்கள் மரணித்து விட்டால் வந்த வழியே திரும்பிச் சென்று விடக்கூடாது. இறைவனது தண்டனைக்கு அஞ்சியும், இறைவனது பரிசுகளை எதிர்பார்த்தும் தான் இம்மார்க்கத்தில் இருக்க வேண்டுமே தவிர முஹம்மத் (ஸல்) அவர்களுக்காக இம்மார்க்கத்தில் இருக்கக் கூடாது என்று இவ்வசனம் அழுத்தம் திருத்தமாகக் கூறுகின்றது.

இந்தக் கருத்தைத் தெரிவிப்பதற்காக இவ்வசனம் அருளப்பட்டாலும் இவ்வசனத்தைச் சிந்திக்கும் போது ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்ற கருத்தும் இதனுள் அடங்கியுள்ளதாக சிலர் வாதிடுகின்றனர்.

"முஹம்மது நபிக்கு முன் தூதர்கள் சென்றுவிட்டனர்'' என்ற சொற்றொடரின் அடிப்படையில் இவ்வாறு வாதிடுகின்றனர். முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர் என்றால் அவர்களுக்கு முன் வந்த அனைத்துத் தூதர்களும் மரணித்து விட்டனர் என்பதே பொருள். எனவே, முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு முன் வந்த ஈஸா நபி உள்ளிட்ட அனைத்துத் தூதர்களும் மரணித்து விட்டனர் என்பது இவர்களின் வாதம்.

ஏற்கனவே வந்த தூதர்கள் மரணித்ததை முன்னுதாரணமாகக் காட்டி நபிகள் நாயகம் (ஸல்) மரணிப்பார்கள் என்பதை இறைவன் அறிவிப்பதால் இக்கருத்து மேலும், வலுவடைகின்றது எனவும் கூறுகின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த போது, பெரும்பாலான நபித்தோழர்கள் அவர்களின் மரணத்தை நம்ப மறுத்தனர். அப்போது அபூபக்கர் (ரலி) அவர்கள் இவ்வசனத்தை எடுத்துச் சொல்லித்தான் நபித்தோழர்களைச் சரியான வழிக்குக் கொண்டு வந்தார்கள். இந்த வரலாறு புகாரி (3670, 1242, 4454) மற்றும் பல ஹதீஸ் நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.

இந்த ஹதீஸ்களையும் தங்களின் வாதத்துக்கு வலுசேர்ப்பதற்கு இவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

ஈஸா நபி மரணிக்காமல் இருந்திருந்தால் அபூபக்கர் (ரலி)யின் வாதத்தை நபித்தோழர்கள் ஏற்றிருக்க மாட்டார்கள். ஈஸா நபி மரணிக்காமல் இருப்பது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் ஏன் மரணிக்காமல் இருக்கக் கூடாது என்று எதிர்க்கேள்வி கேட்டிருப்பார்கள்.

அபூபக்கர் (ரலி) இவ்வசனத்தை ஆதாரமாகக் காட்டி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்ததை நிரூபித்தபோது நபித்தோழர்கள் எவ்வித எதிர்க் கேள்வியும் இல்லாமல் ஏற்றுக் கொண்டனர். எனவே, ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்பதை நபித்தோழர்கள் ஏகமனதாக நம்பியிருந்தார்கள் என்பதும் இவர்களின் வாதமாகும்.

திருக்குர்ஆனை அணுக வேண்டிய விதத்தில் அணுகாமல் இந்த வாதத்தை எடுத்து வைக்கின்றனர் ஒரு விஷயத்தைப் பற்றி ஒரு வசனத்தில் கூறப்பட்டதை வைத்து உடனேயே ஒரு முடிவுக்கு வருவது குர்ஆனை அணுகும் வழிமுறையல்ல.

இது பற்றி வேறு வசனங்களில் கூடுதல் விளக்கம் உள்ளதா? அல்லது விதி விலக்குகள் உள்ளனவா? என்றெல்லாம் தேடிப் பார்க்க வேண்டும். அப்படி ஏதும் இல்லாவிட்டால் அந்த ஒரு வசனத்திலிருந்து எது விளங்குகிறதோ அதை அடிப்படையாகக் கொண்டு வாதிடலாம். அவ்வாறு இல்லாமல் பல இடங்களில் அந்த விஷயம் குறித்து கூறப்பட்டால் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரு முடிவுக்கு வருவதே குர்ஆனை அணுகும் முறையாகும்.

திருக்குர்ஆனில் எத்தனையோ வசனங்களில் பொதுவாகக் கூறப்பட்டதற்கு வேறு இடங்களில் விதிவிலக்குகள் கூறப்பட்டுள்ளன. இது தான் குர்ஆனின் தனி நடையாகும்.

இந்த இடத்திலேயே ஈஸா நபியைத் தவிர என்று கூறப்படவில்லையே என்று கேட்பது குர்ஆனின் நடையைப் புரிந்து கொள்ளாதவர்களின் கேள்வியாகும்.

"பெற்றோருக்கு உபகாரம் செய்யுமாறு மனிதனுக்கு நாம் வலியுறுத்தினோம்'' என்று குர்ஆன் கூறுகிறது. மேலும், மனிதனை அவனது தாய் சிரமத்துடன் பெற்றெடுத்தாள் எனவும் கூறுகிறது. (பார்க்க திருக்குர்ஆன் 31:14)

இவ்வசனத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு மனிதர்கள் அனைவரது நிலையும் இதுதான் என்று கூற முடியாது. மனிதன் என்பதில் ஆதம், ஹவ்வா,, ஈஸா ஆகியோரும் அடங்குவார்கள். எனவே, அவர்களுக்கும் தாய், தந்தையர்கள் இருந்தார்கள் என்று ஒருவர் வாதிடுவது எந்தளவு அறிவீனமோ இந்த வாதமும் அது போன்றதாகும்.

இவ்வசனத்தில் மனிதன் என்று பொதுவாகக் கூறப்பட்டாலும் திருக்குர்ஆனின் வேறு வசனங்களில் ஆதம், ஹவ்வா, ஆகியோருக்கு இவ்வாறு பெற்றோரைப் பேணுமாறு கட்டளை பிறப்பித்திருக்க முடியாது என்று அறிந்து கொள்கிறோம்.

மனிதர்களே என்று அழைத்து உங்களை ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம் என்று அல்லாஹ் கூறுகிறான். (பார்க்க திருக்குர்ஆன் 49:13)

இந்த ஒரு வசனத்தை மட்டும் வைத்துப் பார்த்தால் ஈஸா நபிக்கும் தந்தை இருக்க வேண்டும் என்று முடிவு செய்ய இயலும். ஆயினும் வேறு இடங்களில் அவருக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டதால் அவரை இதிலிருந்து நீக்கி விடுகிறோம்.

மனிதனை விந்திலிருந்து படைத்ததாகப் பல வசனங்கள் கூறுகின்றன. இதில் ஆதம், ஹவ்வா, ஈஸா ஆகியோர் விதி விலக்குப் பெற்றது வேறு வசனங்களில் கூறப்பட்டுள்ளது. இது போல் ஏராளமான வசனங்கள் குர்ஆன் முழுவதும் உள்ளன.

எனவே, முஹம்மதுக்கு முன் தூதர்கள் சென்றுவிட்டனர் என்ற வார்த்தைக்குள் ஈஸா நபி அடங்கினாலும் அவர்களுக்கு வேறு இடங்களில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதைக் கவனிக்காததால் தான் இவ்வாறு வாதிட்டு வருகின்றனர்.

ஈஸா நபி கியாமத் நாளின் அடையாளமாக இருக்கிறார்.

ஈஸா நபி மரணிப்பதற்கு முன் அவரை வேதக்காரர்கள் நம்பிக்கை கொள்வார்கள்

என்ற கருத்திலமைந்த இரு வசனங்கள் (43:61, 4:159) பற்றி முன்னர் குறிப்பிட்டுள்ளோம். அவ்விரு வசனங்களும் ஈஸா நபியவர்கள் மரணிக்கவில்லை என்று அறிவிக்கின்றன. இவ்வசனத்தைக் காட்டி ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்று வாதிடுவோர் அவ்விரு வசனங்களை என்ன செய்யச் சொல்கிறார்கள்? வேதத்தில் பாதியை ஏற்று மீதியை மறுப்பவர்கள் தான் இவ்வாறு வாதிட முடியும்.

எனவே அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டார்கள் என்பதையும் இவ்விரு வசனங்களையும் இணைத்து "ஈஸா நபி தவிர மற்ற தூதர்கள் இவருக்கு முன் மரணித்து விட்டார்கள்'' என்று தான் முடிவு செய்ய வேண்டும்.

மனிதனை விந்துத் துளியிலிருந்து படைத்தோம் என்பதையும், ஆதமைக் களிமண்ணால் படைத்தோம் என்பதையும் இணைத்து "ஆதம் தவிர மற்றவர்களை விந்துத் துளியில் படைத்தோம் என்று முடிவு செய்தது போல் தான் இங்கேயும் முடிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு முடிவு செய்யும் போது எந்த வசனத்தையும் நாம் மறுக்கவில்லை. எல்லா வசனங்களும் சேர்ந்து எந்தக் கருத்தைத் தருகிறதோ அந்தக் கருத்தைத் தான் நாம் கொள்கிறோம்.

இவர்களின் வாதம் தவறானது என்பதற்கு மேற்கண்ட இரு வசனங்கள் மட்டுமின்றி மற்றொரு வசனமும் சான்றாக அமைந்துள்ளது. ஏறத்தாழ இந்த வசனத்தைப் போல் அமைந்த அந்த வசனம் இவர்களின் கருத்து தவறானது என்பதைச் சந்தேகமற நிரூபிக்கின்ற விதமாக அமைந்துள்ளது.

75. மர்யமின் மகன் மஸீஹ்92 தூதரைத் தவிர வேறில்லை.459 அவருக்கு முன் பல தூதர்கள் சென்று விட்டனர்.101 அவரது தாய் உண்மையாளர். அவ்விருவரும் உணவு உண்போராக இருந்தனர். இவர்களுக்குச் சான்றுகளை எவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளோம் என்பதைச் சிந்திப்பீராக! பின்னர் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர் என்பதையும் சிந்திப்பீராக!

திருக்குர்ஆன்: 5:75

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி  3:144 வசனம் குறிப்பிடுவது போலவே இவ்வசனம் ஈஸா நபியைக் குறித்துப் பேசுகிறது.

இவ்வசனத்தைக் கவனமாகப் பார்த்தால் ஈஸா நபியவர்கள் மரணிக்கவில்லை என்பது பளிச்சென விளங்கும்.

இவ்வசனம் அருளப்பட்ட காலத்தில் - நபிகள் நாயகம் (ஸல்) வாழ்ந்த காலத்தில் - ஈஸா நபி மரணித்திருந்தார்கள் என்று ஒரு வாதத்துக்காக வைத்துக் கொள்வோம். அவரைக் கடவுளாக நம்புகிற மக்களுக்கு மறுப்புக் கூறும் போது எவ்வாறு கூற வேண்டும்?

"ஈஸா தூதர் தான். அவரே மரணித்து விட்டார்'' என்று கூறினால் அது தான் சரியான பதிலாக இருக்க முடியும்.

மரணித்தவரை எப்படிக் கடவுள் எனக் கருதலாம் என்ற கருத்தை இது அழுத்தமாகச் சொல்லும். ஈஸா நபி மரணித்திருந்தால் அதைச் சொல்ல வேண்டிய இடம் இது தான். ஈஸா நபியைக் கடவுளாக்கியவர்களுக்கு மறுப்புச் சொல்லும் இந்த இடத்தில் இறைவன் பயன்படுத்திய வார்த்தையைக் கவனித்தீர்களா?

"ஈஸா தூதர் தான். அவருக்கு முன்னர் தூதர்கள் சென்று விட்டனர்'' என்று அல்லாஹ் கூறுகிறான்.

அல்லாஹ் ஞானமிக்கவன். நுண்ணறிவாளன். அவன் பொருத்தமற்ற சொற்களைப் பயன்படுத்துவதை விட்டும் தூய்மையானவன். ஈஸா நபி மரணித்திருந்தால் இந்த வாசக அமைப்பு இறைவன் தெளிவாகக் கூறுபவன் அல்லன் என்ற கருத்தைத் தந்து விடும்.

அவரே இறந்திருக்கும் போது அதைக் கூறாமல் அவருக்கு முன் சென்றவர்கள் இறந்து விட்டார்கள் என்று விவேகமுள்ளவர் யாரேனும் பேசுவதுண்டா?

அவருக்கு முன்னர் தூதர்கள் சென்றுவிட்டனர் எனக் கூறி விட்டு அவர்கள் பூமியில் வாழும் போது சாப்பிட்டுக் கொண்டிருந்ததைக் காரணமாகக் காட்டி கடவுள் தன்மையை மறுக்கிறான். அவர் மரணித்திருந்தால் அதையே காரணமாகக் காட்டி இறைவன் தக்க பதில் கூறியிருப்பான்.

முஹம்மதுக்கு முன் தூதர்கள் சென்றுவிட்டனர் என்ற வசனம் அருளப்படும் போது முஹம்மத் (ஸல்) உயிரோடு இருந்தனர் என்று புரிந்து கொள்கிறோம்.

அதுபோல் ஈஸாவுக்கு முன் தூதர்கள் சென்றுவிட்டனர் என்ற வசனம் இறங்கும் போதும் ஈஸா நபி உயிருடன் இருந்தனர் என்று தான் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரே மாதிரியாக அமைந்த இரண்டு இடங்களில் வித்தியாசமாகப் பொருள் கொள்வது ஏற்புடையதன்று.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த போது நபித்தோழர்கள் நடந்து கொண்ட முறையை அவர்கள் ஆதாரமாகக் காட்டுவதும் சரியல்ல.

ஈஸா நபி வருவார்கள் என்ற ஏராளமான ஹதீஸ்களை நபித்தோழர்கள் தான் அறிவிக்கின்றனர். நாம் முன்னர் சுட்டிக் காட்டிய 43:61, 4:159 இரு வசனங்களையும் அறிந்திருந்தனர். ஈஸா நபிக்கு விதிவிலக்கு இருந்ததைச் சந்தேகமற அவர்கள் அறிந்திருந்தனர். நபிகள் நாயகத்துக்கும் அது போல விதிவிலக்கு இருக்கும் என்று அவர்கள் எண்ணியதால் தான் அவர்கள் மரணிக்கவில்லை என்று வாதிட்டனர். நபிகள் நாயகத்துக்கு விதிவிலக்கு இல்லை என்பது அபூபக்கர் (ரலி)யின் வாதத்தின் மூலம் தெரிந்ததும் தங்கள் நிலையை மாற்றிக் கொண்டார்கள்.

ஈஸா நபி வருகை பற்றி அறிந்து கொள்ள 4:159 வசனத்தை ஓதுங்கள் என்று அபூஹுரைரா (ரலி) கூறியதை முன்னர் நாம் குறிப்பிட்டதும், ஈஸா நபியின் வருகை பற்றிய ஹதீஸ்களைப் பல நபித்தோழர்கள் அறிவித்திருப்பதும் நபித்தோழர்களின் நிலைப்பாட்டை நமக்கு விளக்குகிறது.

அனைவருக்கும் சர்வசாதாரணமாகத் தெரிந்த விதிவிலக்குகளை யாரும் ஆதாரமாகக் காட்டிப் பேச மாட்டார்கள்.

வவ்வால் பறவையினமாக இருந்தும் அது பாலூட்டியாக இருப்பது அனைவருக்கும் தெரிந்த விதிவிலக்கு. இது அனைவருக்கும் தெரிந்த விஷயமாக இருப்பதால் "பறவைகள் பாலூட்டுவதில்லை'' என்று நாம் பேசலாம். அதை யாரும் குறை காண மாட்டார்கள். பேசுபவருக்கும் கேட்டவருக்கும் வவ்வால் விதிவிலக்கு என்பது சொல்லாமலேயே தெரியும்.

ஈஸா நபி விஷயம் விதிவிலக்கானது என்பதை நபித்தோழர்கள் நம்பியிருந்ததால் தான் அவர்கள் அதை ஆதாரமாகக் காட்டி கேள்வியெழுப்பவில்லை.

எனவே, இவ்வசனம் ஈஸா நபி மரணித்ததைக் கூறவில்லை. இது போல அமைந்த 5:75 வசனம் அவர்கள் இதுவரை மரணிக்கவில்லை என்று விதிவிலக்கைக் கூறுகிறது என்பதே சரியாகும்.

ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்று கூறுவோர் வேறு சில வாதங்களையும் முன் வைக்கிறார்கள்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

ஈஸா நபி யுகமுடிவு நாளின் அடையாளமாவார்

ஒற்றுமை மாதம் இருமுறை இதழில் தேர்வு செய்யப்பட்ட வசனங்களூக்கு பீஜே எழுதிய விளக்கம்

61. "அவர் (ஈஸா) அந்த நேரத்தின்1 அடையாளமாவார்.342 அதில் நீர் சந்தேகப்படாதீர்! என்னையே பின்பற்றுங்கள்! இதுவே நேர்வழி'' (எனக் கூறுவீராக.)

திருக்குர்ஆன்: 43:61

இவ்வசனம் அருளப்படுவதற்கு முன்பு ஈஸா நபி மரணித்திருந்தார் என்று வைத்துக் கொள்வோம். ஏற்கனவே இறந்த ஒருவர் யுக முடிவு நாளின் அடையாளமாக இருக்கிறார் என்று கூற முடியாது. அவ்வாறு கூறினால் அதற்கு எந்த அர்த்தமும் இருக்காது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூட யுக முடிவு நாளின் அடையாளமாக இருக்கிறார்கள் என்று கூறப்படாத போது அவர்களுக்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன் மரணித்த ஒருவரைப் பற்றி இவ்வாறு கூறவே முடியாது.

யுக முடிவு நாள் நெருங்கும் போது அதை உணர்த்தும் அடையாளமாக அவர் இருக்கிறார் என்றால் யுக முடிவு நாள் நெருங்கும் போது அவரது வருகை அவசியமாகும்.

(இது பற்றி ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அதை நாம் இங்கே குறிப்பிடவில்லை. ஈஸா நபியின் வருகை என்பது குர்ஆனுக்கு முரணானது என்று அறிவீனர் சிலர் வாதிடுவதால் குர்ஆனிலிருந்தே இதை நிரூபிக்கின்றோம்.)

சென்ற இதழில் நாம் எடுத்துக்காட்டிய வசனமும் அதிலிருந்து எடுத்து வைத்த வாதங்களும் இவ்வசனமும் இதிலிருந்து எடுத்து வைத்த வாதங்களும் ஈஸா நபியவர்கள் இனி மேல் தான் மரணிப்பார்கள் என்பதை உறுதியாகக் கூறுவதை அறிந்து கொள்ளலாம்.

ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்று வாதிடக்கூடியவர்கள் சில வசனங்களை ஆதாரமாகக் காட்டுவார்கள். ஆனால், அவர்கள் இவ்விரு வசனங்களுக்கு ஏற்கத்தக்க எந்த விளக்கத்தையும் கூற மாட்டார்கள். இவ்விரு வசனங்களும் குர்ஆனில் இல்லாதது போல் நழுவி விடுவார்கள்.

கீழ்க்காணும் வசன்ங்களை எடுத்துக் காட்டி ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்று எதிர்வாதம் செய்கிறார்கள்.

{ وَإِذْ قَالَ اللَّهُ يَاعِيسَى ابْنَ مَرْيَمَ أَأَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُونِي وَأُمِّيَ إِلَهَيْنِ مِنْ دُونِ اللَّهِ قَالَ سُبْحَانَكَ مَا يَكُونُ لِي أَنْ أَقُولَ مَا لَيْسَ لِي بِحَقٍّ إِنْ كُنْتُ قُلْتُهُ فَقَدْ عَلِمْتَهُ تَعْلَمُ مَا فِي نَفْسِي وَلَا أَعْلَمُ مَا فِي نَفْسِكَ إِنَّكَ أَنْتَ عَلَّامُ الْغُيُوبِ (116) مَا قُلْتُ لَهُمْ إِلَّا مَا أَمَرْتَنِي بِهِ أَنِ اعْبُدُوا اللَّهَ رَبِّي وَرَبَّكُمْ وَكُنْتُ عَلَيْهِمْ شَهِيدًا مَا دُمْتُ فِيهِمْ فَلَمَّا تَوَفَّيْتَنِي كُنْتَ أَنْتَ الرَّقِيبَ عَلَيْهِمْ وَأَنْتَ عَلَى كُلِّ شَيْءٍ شَهِيدٌ (117) إِنْ تُعَذِّبْهُمْ فَإِنَّهُمْ عِبَادُكَ وَإِنْ تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ (118)} [المائدة: 116 - 118]

116. "மர்யமின் மகன் ஈஸாவே! அல்லாஹ்வையன்றி என்னையும், என் தாயாரையும் கடவுள்களாக்கிக் கொள்ளுங்கள்! என நீர் மக்களுக்குக் கூறினீரா?''459 என்று அல்லாஹ் (மறுமையில்) கேட்கும்போது, "நீ தூயவன்.10 எனக்குத் தகுதியில்லாத வார்த்தையை நான் கூற உரிமையில்லாதவன். நான் அவ்வாறு கூறியிருந்தால் அதை நீ அறிவாய். எனக்குள் உள்ளதை நீ அறிவாய்! உனக்குள் உள்ளதை நான் அறிய மாட்டேன். நீயே மறைவானவற்றை அறிபவன்'' என்று அவர் பதிலளிப்பார்.

117, 118. "நீ எனக்குக் கட்டளையிட்டபடி எனது இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்! என்பதைத் தவிர வேறு எதையும் நான் அவர்களிடம் கூறவில்லை. நான் அவர்களுடன் இருக்கும் போது அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். என்னை நீ கைப்பற்றியதும் நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். நீ அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவன்.151 அவர்களை நீ தண்டித்தால் அவர்கள் உனது அடியார்களே. அவர்களை நீ மன்னித்தால் நீ மிகைத்தவன்; ஞானமிக்கவன்'' (எனவும் அவர் கூறுவார்.)26

திருக்குர் ஆன் 5:116, 117, 118

இம்மூன்று வசனங்களிலும் மறுமை நாளில் ஈஸா நபி விசாரிக்கப்படுவதும் அவர்கள் அளிக்கவுள்ள பதிலும் முன்கூட்டியே நமக்கு எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.

இம்மூன்று வசனங்களில் "என்னை நீ கைப்பற்றிய போது'' என்ற சொற்றொடர் உள்ளது. இந்த சொற்றொடர் தான் அவர்களின் ஆதாரமாக இருக்கிறது.

என்னை நீ கைப்பற்றிய போது என்று நாம் மொழியாக்கம் செய்த இடத்தில் "ஃபலம்மா தவஃப்பைத்தனீ' என்ற வாசகம் அமைந்துள்ளது.

இவ்வாசகத்துக்கு "என்னை நீ மரணிக்கச் செய்த போது'' என்பது தான் சரியான மொழிபெயர்ப்பு என்றும்,  என்னை மரணிக்கச் செய்த பின் அவர்களின் நடவடிக்கைக்கு நீயே பொறுப்பு என்று ஈஸா நபியே கூறியுள்ளதிலிருந்து அவர்கள் மரணித்துவிட்டார்கள் என்பதை அறியலாம் என்றும் இவர்கள் வாதிடுகின்றனர்.

தவஃப்பா என்ற சொல் திருக்குர்ஆனில் 25 இடங்களில் இடம் பெற்றுள்ளது. அவற்றில் 23 இடங்களில் மரணிக்கச் செய்தல் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இந்த வசனத்திலும் அவ்வாறே பொருள் கொள்ள வேண்டும் என்பதும் இவர்களின் வாதம்.

இவர்களின் இந்த வாதம் நிராகரிக்கப்படவேண்டிய வாதமாகும். இவர்களின் வாதத்திலேயே இவர்களின் வாதத்துக்கு மறுப்பும் அமைந்திருக்கிறது.

இவர்களின் வாதப்படி 23 இடங்களில் மரணிக்கச் செய்தல் என்று பொருள் கொள்ளப்பட்டிருந்தும் இரண்டு இடங்களில் கைப்பற்றுதல் எனப் பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இவர்களின் வாதம் சரி என்று வைத்துக் கொண்டால் 23 இடங்களில் செய்த பொருளையே மீதி இரண்டு இடங்களுக்கும் செய்திருக்க வேண்டும். எனவே, அந்தந்த இடங்களில் எந்தப் பொருள் சரியானது என்பது தான் கவனிக்கப்பட வேண்டுமே தவிர பெரும்பான்மை அடிப்படையில் எல்லா இடங்களுக்கும் ஒரே அர்த்தம் செய்வது ஏற்கத்தக்கது அல்ல.

இது குறித்து நாம் விரிவாகவே ஆராய்வோம். தவஃப்பா என்ற சொல்லின் நேரடிப் பொருள் மரணிக்கச் செய்தல் அல்ல. முழுமையாக எடுத்துக் கொள்ளுதல் என்பதே அதன் நேரடிப் பொருளாகும். மரணத்தின் மூலம் மனிதன் முழுமையாக எடுத்துக் கொள்ளப்படுவதால் மரணிக்கச் செய்வதை இச்சொல் மூலம் குறிப்பிடுவது வழக்கத்துக்கு வந்தது.

2:224, 2:240, 3:193, 4:97, 6:61, 7:37, 7:126, 8:50, 10:46, 10:104, 12:101, 13:40, 16:28, 16:32, 16:70, 22:05, 32:11, 40:17, 40:77, 47:27 ஆகிய இடங்களில் மரணிக்கச் செய்தல் என்ற பொருளில் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அவன் தான் உங்களை இரவில் கைப்பற்றுகிறான். (6:60)

இவ்வசனத்தில் அதே சொல் இடம் பெற்றாலும் மரணிக்கச் செய்தல் என்று இங்கே பொருள் இல்லை. தூக்கத்தில் ஒருவரைக் கைப்பற்றுதல் என்பதே இதன் பொருளாகவுள்ளது.

அவர்களை மரணம் கைப்பற்றும் வரை வீட்டில் தடுத்து வையுங்கள். (4:15)

மரணம் மரணிக்கச் செய்யும் வரை என்பது கூறியது கூறலாக உள்ளதால் மரணம் கைப்பற்றிக் கொள்ளும் வரை என்ற பொருள் கொள்கிறோம். இங்கும் அதே சொல் தான் இடம் பெற்றுள்ளது.

உயிர்கள் மரணிக்கும் போதும் மரணிக்காதவைகளை அவற்றின் உறக்கத்தின் போதும் அல்லாஹ் கைப்பற்றுகிறான்.(39:42)

இந்த இடத்தில் கைப்பற்றுகிறான் என்று தான் அதே சொல்லுக்குப் பொருள் கொள்கிறோம். மரணிக்கச் செய்தல் என்று பொருள் கொள்வதில்லை.

இவை தவிர மறுமையில் முழுமையாக கூலி தரப்படும் என்பதைக் கூறும் 2:281, 3:161, 3:185, 16:111 ஆகிய வசனங்களிலும் இதே சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வசன்ங்களுக்கு முழுமையாகக் கூலி தரப்படும் என்று தான் பொருள் கொள்ள வேண்டும். மறுமையில் சாகடிக்கப்படுவார்கள் என்று பொருள் கொள்ள முடியாது.

மரணிக்கச் செய்தல், கைப்பற்றுதல், முழுமையாக வழங்குதல் ஆகிய பொருள்கள் இச்சொல்லுக்கு உண்டு. எந்தெந்த இடத்துக்கு எது பொருத்தமானதோ அதை அந்த இடத்தில் செய்ய வேண்டும். மெஜாரிட்டி அடிப்படையில் பொருள் செய்யக் கூடாது.

தொழுகையைக் குறிக்கும் ஸலாத் என்ற சொல்லும், அதிலிருந்து பிறந்த சொற்களும் 109 இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 102 இடங்களில் தொழுகையைக் குறிப்பதற்கும் 7 இடங்களில் அகராதியில் உள்ள அர்த்தத்துக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்படி ஏராளமான சொற்களைக் காணலாம்.

இப்போது விவாதத்துக்கு எடுத்துக் கொண்ட வசனத்தில் இடம்பெற்ற தவஃப்பா என்ற சொல்லுக்கு எவ்வாறு பொருள் கொள்வது?

என்னை மரணிக்கச் செய்த போது என்று இந்த இடத்தில் நாம் பொருள் கொண்டால் அவர் கியாமத் நாளின் அடையாளமாக உள்ளார் என்ற வசனத்துடனும், அவர் மரணிப்பதற்கு முன் வேதமுடையோர் நம்பிக்கை கொள்ளாமல் இருக்க மாட்டார்கள் என்ற வசனத்துடனும் மோதுகின்றது. கைப்பற்றுதல் என்று பொருள் கொண்டால் அவ்விரு வசனங்களுடன் ஒத்துப் போகின்றது.

மரணிக்கச் செய்தல் என்பது எவ்வாறு தவஃப்பாவின் பொருளாக இருக்கிறதோ அது போலவே கைப்பற்றுதல் என்பதும் அச்சொல்லுக்குரிய பொருள் தான். அச்சொல்லுக்குரிய இரண்டு அர்த்தங்களில் எந்த அர்த்தம் ஏனைய வசனங்களுடன் முரண்படாத வகையில் ஒத்துப் போகிறதோ அதைக் கொடுப்பது தான் சரியானதாகும்.

மேலும், ஈஸா நபி கூறிய வாசக அமைப்பும் இக்கருத்துக்கு வலு சேர்க்கின்றது.

நான் உயிருடன் இருந்த வரை அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன் என்று ஈஸா நபி கூறவில்லை.

நான் அவர்களுடன் இருந்த போது பார்த்துக் கொண்டிருந்தேன் என்று தான் ஈஸா நபி கூறுவார்கள்.

இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை நாம் சிந்திக்க வேண்டும். நான் உயிருடன் இருந்த போது எனக் கூறாமல் அவர்களுடன் இருந்த போது என்று கூறுகிறார்கள்.

அதாவது ஈஸா நபி அவர்களுடன் இருந்து கண்காணிக்கும் நிலையையும் அடைவார்கள். அவர்களுடன் இல்லாமல் இருக்கும் நிலையையும் அடைவார்கள் என்பதை இதிலிருந்து ஊகம் செய்யலாம்.

நான் உயிருடன் இருந்த போது என்று கூறி விட்டு ஃபலம்மா தவஃப் பைதனி என்று அவர்கள் கூறினால் அந்த இடத்தில் என்னை மரணிக்கச் செய்த போது என்று தான் பொருள் கொள்ள முடியும். அல்லாஹ் அந்த வார்த்தைகளைத் தவிர்த்து விட்டு முற்றிலும் வித்தியாசமான வார்த்தைப் பிரயோகத்தைப் பயன்படுத்தியுள்ளான்.

தவஃப்பா என்ற சொல்லுக்கு என்னைக் கைப்பற்றிய போது என்று பொருள் கொள்ள வேண்டும் என்பதை இவ்வாசக அமைப்பும் உணர்த்துகின்றது.

அந்த மக்களுடன் ஈஸா (அலை) இவ்வுலகில் வாழ்ந்தபோது அம்மக்களைக் கண்காணிப்பார்கள். அம்மக்களை விட்டும் உயர்த்தப்பட்ட பின் கண்காணிக்க மாட்டார்கள் என்ற கருத்து முன்னர் நாம் சுட்டிக்காட்டிய வசனங்களுடன் அழகாகப் பொருந்திப் போகின்றன.

இது தவிர வேறு சில ஆதாரங்களையும் அவர்கள் முன் வைக்கின்றனர். அவற்றைப் பார்ப்போம். இன்ஷா அல்லாஹ் தொடரும்..

ஈஸா நபியை இறுதிக் காலத்தில் யூதர்கள் ஏற்பார்களா?

ஒற்றுமை மாதம் இருமுறை இதழில் தேர்வு செய்யப்பட்ட வசனங்களுக்கு பீஜே எழுதிய விளக்க உரை

வேதமுடையவர்களில் ஒவ்வொருவரும் அவரது மரணத்திற்கு முன்னர் அவரை நம்பிக்கை கொள்ளாமல் இருக்க மாட்டார்கள். மேலும், நியாயத் தீர்ப்பு நாளில் அவர்களுக்கு சாட்சியாக அவர் இருப்பார்.

திருக்குர்ஆன்: 4:159

நான்காவது அத்தியாயம் 159 வது வசனத்தின் நேரடியான தமிழாக்கம் இது தான்.

வேதமுடையவர்கள் என்பது யூதர்களையும், கிறித்தவர்களையும் குறிப்பிடும் சொல்லாகும்.

யூதர்களைப் பொருத்த வரை அவர்கள் ஈஸா நபியின் பகிரங்கமான எதிரிகளாக இருந்தனர். ஈஸா நபியை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. விபச்சார புத்திரன் (நவூதுபில்லாஹ்) என்றெல்லாம் ஈஸா நபியை விமர்சனம் செய்தனர்.

கிறித்தவர்கள் ஈஸா நபியை நம்பினாலும், மதித்தாலும் அவரை எவ்வாறு மதிக்க வேண்டுமோ அவ்வாறு நம்பவுமில்லை; மதிக்கவுமில்லை. கடவுளின் மகன் என்று அவர்கள் நம்பினார்கள். எனவே, இவர்கள் ஈஸா நபியை நம்ப வேண்டிய விதத்தில் நம்பவில்லை.

இவ்விரு சாராரும் எதிர்காலத்தில் ஈஸா நபியை நம்புகின்ற நிலைமை உருவாகும் என்பதை மேற்கண்ட வசனம் முன்னறிவிப்புச் செய்கிறது.

இம்முன்னறிவிப்பை மக்கள் புரிந்து கொள்ளாத வகையில் சிலர் தவறான மொழிபெயர்ப்புச் செய்துள்ளதால் அதை முதலில் சுட்டிக் காட்டி விட்டு முன்னறிவிப்புக்குள் நுழைவோம்.

அவரை நம்பிக்கை கொள்ளாமல் (இல்லா லயூமினன்ன பிஹி) என்ற சொற்றொடரில் "அவரை' என்ற சொல் யாரைக் குறிக்கும்? ஈஸா நபியைத் தான் குறிக்கும் என்று அனைத்து அறிஞர்களும் எந்தக் கருத்து வேறுபாடும் இன்றி ஒருமித்துக் கூறுகின்றனர். இதற்கு முந்தைய வசனங்களில் ஈஸா நபியைப் பற்றிப் பேசி வருவதால் அது ஈஸா நபியைத் தான் குறிக்கும் என்பதில் எவருக்கும் இரண்டாவது கருத்து இருக்கவில்லை. இதில் யாருக்கும் எந்தக் குழப்பமும் இல்லை.

இதே வசனத்தில் இடம் பெற்றுள்ள "அவரது மரணத்திற்கு முன்னர்'' (கப்ல மவ்திஹி) என்ற சொற்றொடரில் அமைந்த "அவரது'' என்பது யாரைக் குறிக்கும்? இதில் தான் சிலர் தவறான கருத்துக்குச் சென்றுவிட்டனர்.

"வேதமுடையவர் ஒவ்வொருவரும் அவரது (அதாவது தனது) மரணத்திற்கு முன்னர்'' என்று பொருள் கொண்டுள்ளனர்.

வேதமுடையவர் ஒவ்வொருவரும் "ஈஸாவின் மரணத்திற்கு முன்னர்'' என்று பெரும்பாலானவர்கள் பொருள் கொண்டுள்ளனர். பல காரணங்களாôல் இதுவே சரியான மொழி பெயர்ப்பாகும்.

அரபு இலக்கணப்படி இரு விதமாகவும் பொருள் கொள்ள இடமிருக்கிறது. இது போன்ற இடங்களில் எது சரியானது? எது தவறானது என்பதைத் தீர்மானிக்க வேறு வசனங்களில் கூறப்பட்டுள்ள செய்திகளை அடிப்படையாகக் கொள்ள் வேண்டும்.

இந்த இரண்டு மொழிபெயர்ப்புகளில் முதல் மொழிபெயர்ப்பு தவறானது என்பதை விளங்கிட வேறு எங்கேயும் நாம் செல்லத் தேவையில்லை. இந்த மொழி பெயர்ப்பின்படி கிடைக்கும் மொத்தக் கருத்து பொய்யாகவும், கேலிக்குரியதாகவும் அமைந்துள்ளதே இந்த மொழிபெயர்ப்பு தவறு என்பதைச் சந்தேகமற நிரூபித்து விடுகிறது.

இந்த மொழிபெயர்ப்பின் அடிப்படையில் இவ்வசனத்தின் கருத்தைப் பாருங்கள்!

வேதமுடையவர்களில் ஒவ்வொருவரும் தனது மரணத்திற்கு முன்னால் ஈஸா நபியை நம்பிக்கை (ஈமான்) கொள்ளாமல் மரணிக்க மாட்டார்கள். இது தான் முதல் சாராரின் மொழி பெயர்ப்பின்படி கிடைக்கும் கருத்தாகும்.

அதாவது வேதமுடையவர்களான யூதர்களும், கிறிஸ்தவர்களும் என்ன தான் அக்கிரமங்களைச் செய்தாலும் தவறான கொள்கையைக் கொண்டிருந்தாலும் அவர்கள் மரணிப்பதற்கு முன்னால் ஈமான் கொண்டு விடுகிறார்கள்.

இது முஸ்லிம்களுக்குக் கூட கிடைக்காத பாக்கியமாகவுள்ளது. யூதர்களும், கிறிஸ்தவர்களும் மரணிப்பதற்கு முன்னால் முஃமின்களாக மாறியே மரணிக்கிறார்கள். இன்னும் ஆழமாகச் சென்றால் யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் நரகமே கிடையாது. ஏனெனில், அவர்களின் கடைசி நிலை நல்லதாகவே அமைந்து விடுகிறது. இந்த மொழி பெயர்ப்பின் கருத்து இதுதான்.

மற்றவர்களைப் போலவே யூதர்களும், கிறித்தவர்களும் தண்டிக்கப்படுவார்கள் எனக் கூறும் எண்ணற்ற வசனங்களுடன் இக்கருத்து மோதுகின்றது.

ஒவ்வொரு யூதரும், கிறித்தவரும் மரணிக்கும் போது முஃமின்களாக மரணிக்கிறார்கள் என்ற கருத்தை எவருமே சரி என்று ஏற்க முடியாது.

இந்த மொழி பெயர்ப்பு தவறானது என்பது சந்தேகமறத் தெரியும் போது, இரண்டாவது மொழிபெயர்ப்பைத் தான் நாம் ஏற்றாக வேண்டும்.

அவரது மரணத்திற்கு முன் - அதாவது ஈஸாவின் மரணத்திற்கு முன்னால் வேதமுடையவர்கள் ஈஸா நபியை நம்பிக்கை கொள்ளாமல் இருக்கமாட்டார்கள்.

இவ்வசனம் அருளப்படும் போது ஈஸா நபி மரணித்திருக்கவில்லை. அவர் மரணித்திருந்தால் "ஈஸா மரணிப்பதற்கு முன்னால்'' என்று கூற முடியாது. மேலும், நம்பிக்கை கொண்டார்கள் என்று சென்ற கால வினையாகk கூறாமல் நம்பிக்கை கொள்ளாமல் இருக்க மாட்டார்கள் என்று வருங்கால வினையாகக் கூறப்பட்டுள்ளது. ஈஸா நபி மரணிப்பதற்கு முன்னால் எதிர்காலத்தில் யூதர்களும் கிறித்தவர்களும் அவரை நம்புவார்கள் என்பதைத் தவிர இவ்வசனத்திற்கு வேறு எந்தக் கருத்தையும் கொடுக்க முடியாது.

ஈஸா நபியவர்கள் மரணிக்கவில்லை. இனிமேல் தான் மரணிப்பார். அவ்வாறு அவர் மரணிக்கும் நிலை ஏற்படுவதற்கு முன்னால் அனைவரும் அவரைச் சரியான முறையில் நம்புவார்கள் என்பதைத் தவிர இதற்கு வேறு கருத்து இருக்க முடியாது.

இறைவனால் உயர்த்தப்பட்டுள்ள ஈஸா நபியவர்கள் எதிர்காலத்தில் இறங்கும் போது இந்த நிலை ஏற்படுவது ஆச்சரியமான ஒன்றல்ல.

சாட்டிலைட் யுகத்தில் நாம் வாழ்கிறோம். இந்த யுகத்தில் விண்ணிலிருந்து ஒருவர் இறங்கினால் உலகின் அத்தனை செயற்கைக் கோள்களும் அவரைப் படம் பிடித்து நமது வீட்டு டி.வி. பெட்டியில் காட்டி விடும். இவ்வாறு அதிசயமாக ஒருவர் இறங்கும் போது அவர் கூறும் உண்மையை உலகம் நிச்சயம் ஏற்றுக் கொள்ளவே செய்யும்.

திருக்குர்ஆனில் ஒரு செய்தி கூறப்படுமானால் அதை நமது சொந்த அபிப்பிராயங்களைக் கூறி நிராகரிக்கக் கூடாது. "ஈஸாவின் மரணத்திற்கு முன்னால் அவரை வேதமுடையவர்கள் ஏற்கும் நிலை உருவாகும்'' என்றால் இதிலிருந்து அவர் மரணிக்கவில்லை என்று புரிந்து கொள்ள பெரிய ஆராய்ச்சி ஏதும் தேவையில்லை.

ஏற்கனவே மரணமடைந்த ஒருவரைப் பற்றி "அவர் மரணிப்பதற்கு முன்னால் இது நடக்கும்'' என்று கூறவே முடியாது.

ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்று வாதிடும் எந்தக் கூட்டமும் இவ்வசனத்திற்கு வேறு பொருள் கொடுக்கவும் முடியாது. இதை ஒரு அறைகூவலாகவே நாம் விடுக்கிறோம்.

صحيح البخاري

3448  حَدَّثَنَا إِسْحَاقُ، أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ أَنَّ سَعِيدَ بْنَ المُسَيِّبِ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَيُوشِكَنَّ أَنْ يَنْزِلَ فِيكُمْ ابْنُ مَرْيَمَ حَكَمًا عَدْلًا، فَيَكْسِرَ الصَّلِيبَ، وَيَقْتُلَ الخِنْزِيرَ، وَيَضَعَ الجِزْيَةَ، وَيَفِيضَ المَالُ حَتَّى لاَ يَقْبَلَهُ أَحَدٌ، حَتَّى تَكُونَ السَّجْدَةُ الوَاحِدَةُ خَيْرًا مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا»، ثُمَّ يَقُولُ أَبُو هُرَيْرَةَ: " وَاقْرَءُوا إِنْ شِئْتُمْ: {وَإِنْ مِنْ أَهْلِ الكِتَابِ إِلَّا لَيُؤْمِنَنَّ بِهِ قَبْلَ مَوْتِهِ، وَيَوْمَ القِيَامَةِ يَكُونُ عَلَيْهِمْ شَهِيدًا} [النساء: 159

3448 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! விரைவில் (உலக அழிவுக்கு முன்) மர்யமின் மைந்தர் உங்களிடையே நேர்மையாகத் தீர்ப்பளிக்கும் நீதிபதியாக இறங்கவிருக்கிறார். அவர் சிலுவையை உடைப்பார்; பன்றியைக் கொல்வார்; ஜிஸ்யா (எனும் காப்பு) வரியை வாங்க மறுப்பார்; செல்வம் (பெருகி) வழிந்தோடும். எந்த அளவுக்கென்றால் அதை வாங்கிக் கொள்பவர் எவரும் இருக்க மாட்டார். அந்த நேரத்தில், ஒரேயொரு சஜ்தா இந்த உலகத்தையும், அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்ததாக ஆகிவிடும்.

இந்த நபிமொழியை அறிவித்து விட்டு அபூஹுரைரா (ரலி) அவர்கள், வேதம் வழங்கப்பட்டவர்களில் எவரும், தாம் இறப்பதற்கு முன்பாக அவர் மீது நம்பிக்கை கொள்ளாமல் போக மாட்டார். மேலும், மறுமை நாளில் அவர்களுக்கெதிராக அவர் சாட்சியம் அளிப்பார்' (4:159) என்னும் வசனத்தை நீங்கள் விரும்பினால் ஓதிக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.

நூல் : புகாரி: 3448

ஈஸா நபி மரணமடையவில்லை என்பதற்குச் சான்றாக இவ்வசனம் அமைந்துள்ளது. இதற்கு முந்தைய வசனங்களுடன் சேர்த்துப் பார்க்கும் போது இது மேலும் உறுதியாகின்றது.

155. அவர்கள் தமது உடன்படிக்கையை முறித்ததாலும், அல்லாஹ்வின் வசனங்களை ஏற்க மறுத்ததாலும், நியாயமின்றி நபிமார்களைக் கொலை செய்ததாலும், எங்கள் உள்ளங்கள் மூடப்பட்டுள்ளன என்று கூறியதாலும், (இதற்கும்) மேலாக அவர்கள் (ஏகஇறைவனை) மறுத்ததாலும் அவர்களின் உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிட்டான். அவர்கள் குறைவாகவே நம்பிக்கை கொள்கின்றனர்.

156, 157. அவர்கள் (ஏகஇறைவனை) மறுத்ததாலும், மர்யமின் மீது மிகப் பெரும் அவதூறை அவர்கள் கூறியதாலும், அல்லாஹ்வின் தூதரான மர்யமின் மகன் மஸீஹ்92 எனும் ஈஸாவை நாங்களே கொன்றோம் என்று அவர்கள் கூறியதாலும் (இறைவன் முத்திரையிட்டான்.) அவரை அவர்கள் கொல்லவில்லை. அவரைச் சிலுவையிலும் அவர்கள் அறையவில்லை. மாறாக அவர்களுக்கு ஆள் மாறாட்டம் செய்யப்பட்டது.456 இதில் முரண்பட்டோர் சந்தேகத்திலேயே உள்ளனர். ஊகத்தைப் பின்பற்றுவதைத் தவிர அவர்களுக்கு இது குறித்து அறிவு இல்லை. அவர்கள் அவரை உறுதியாகக் கொல்லவே இல்லை.26

158. மாறாக அவரை அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையோனாகவும் இருக்கிறான்.133

159. வேதமுடையோரில்27 ஒவ்வொருவரும் அவர் (ஈஸா, மீண்டும் வந்து) மரணிப்பதற்கு முன் அவரை நம்பிக்கை கொள்ளாமல் இருக்க மாட்டார்கள்.134 கியாமத் நாளில்1 அவர்களுக்கு சாட்சியாக அவர் இருப்பார்.

திருக்குர்ஆன்  4:155, 156, 157, 158, 159

"அவரைக் கொல்லவில்லை. கொல்லவே இல்லை. அவரைத் தன்னளவில் உயர்த்திக் கொண்டான் என்பதையெல்லாம் கூறிய பிறகு தான் மேலே நாம் எடுத்துக்காட்டிய வசனத்தை அல்லாஹ் கூறுகிறான்.

அவரை அவர்கள் கொல்லவில்லை என்றால் தானாக மரணித்திருக்கலாம் அல்லவா? என்று சிலர் உளறினார்கள்.

அவரைத் தன்னளவில் உயர்த்திக் கொண்டான் என்றால் அவரது அந்தஸ்தை உயர்த்தினான் என்று பொருத்தமில்லாத வியாக்கியானத்தைச் சிலர் கூறினார்கள். அவை அனைத்துக்கும் மறுப்பாகத் தான் 159வது வசனம் அமைந்துள்ளது. அவர் மரணமடையவில்லை. இனி மேல் தான் மரணிப்பார் என்று தெள்ளத் தெளிவாக அறிவிக்கிறது.

ஈஸா நபி மரணித்து விட்டார்கள் எனக் கூறுவோர் 4:159 வசனத்திற்கு எந்தச் சமாளிப்பும் கூற முடியாத வகையில் தெள்ளத் தெளிவாக அமைந்துள்ளது.

இவ்வளவு தெளிவான சான்றுக்குப் பிறகும் ஈஸா நபி மரணித்துவிட்டார்கள் என்று வாதிடுவோரின் ஏனைய அர்த்தமற்ற வாதங்களை அடுத்த இதழில் காண்போம்.

திருக்குர்ஆன் விளக்கம்

அல் கஹ்ஃப் (அந்தக் குகை)

பீ. ஜைனுல் ஆபிதீன்

(ஒற்றுமை மாதம் இருமுறை இதழில் பீ.ஜே எழுதிய விளக்கவுரை)

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன். 

கஹ்ஃப் என்ற வார்த்தையின் பொருள் குகை. அல் கஹ்ஃப் என்றால் அந்தக் குகை என்பது பொருள்.  இந்த அத்தியாயத்தின் ஒன்பதாவது வசனம் முதல் இருபத்தி ஆறாவது வசனம் வரை ஒரு குகையில் தஞ்சம் புகுந்த நல்லடியார்கள் குறித்த வரலாற்றுக் குறிப்பு கூறப்படுகிறது.  இந்த அத்தியாயத்திற்கு அல் கஹ்ஃப் (அந்தக் குகை) என்று பெயர் வர இதுவே காரணமாகும். 

இந்த அத்தியாயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மக்கா வாழ்க்கையின் போது அருளப்பட்டது என்பதில் அறிஞர்கள் ஒருமித்த கருத்தில் உள்ளதாக குர்துபி உள்ளிட்ட பல விரிவுரையாளர்கள் கூறுகின்றனர்.  ஆயினும் இதற்கு ஆதாரப்பூர்வமான சான்றுகள் எதையும் இவர்கள் எடுத்துக் காட்டவில்லை. 

இந்த அத்தியாயத்தில் உள்ள வசனங்களில் கூறப்படும் செய்திகளைப் பார்க்கும் போது. சில செய்திகள் மக்காவில் அருளப்பட்டு இருக்கலாம்.  வேறு சில செய்திகள் மதினாவில் அருளப்பட்டு இருக்கலாம் என்று அனுமானம் செய்வதற்கு போதுமான காரணங்கள் உள்ளன.  இன்னும் சில வசனங்களின் அமைப்பைப் பார்க்கும் போது அது மக்காவில் அருளப்பட்டது என்றோ, மதினாவில் அருளப்பட்டது என்றோ முடிவுக்கு வரமுடியாத நிலையில் உள்ளன. 

எனவே, ஒட்டு மொத்தமாக இந்த அத்தியாயம் மக்காவில் அருளப்பட்டது என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.  ஏற்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் கிடையாது. 

இது மக்காவில் அருளப்பட்டது; அல்லது மதினாவில் அருளப்பட்டது என்று நபித்தோழர்கள் கூறியதாக குறிப்பு கிடைக்கும் போது மட்டுமே இது பற்றி நாம் முடிவுக்கு வர வேண்டும். 

அவ்வாறு குறிப்புகள் கிடைக்காத போது மக்கீ, மதனி என்று ஏதாவது ஒன்றைக் கூறியாக வேண்டும் என்பதற்காக எதையாவது கூறுவதை ஒப்புக் கொள்ள முடியாது.  திருக்குர்ஆன் விரிவுரையாளர்களில் பலர் மக்கீ, மதனி என்று எதையாவது கூறியாக வேண்டுமே என்பதற்காகத் தான் கூறியுள்ளனர் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

அல்லாஹ்வின் வார்த்தைகள் என்ற அடிப்படையில் திருக்குர்ஆனின் எல்லா வசனங்களும் சமமானவையே என்றாலும் சில அத்தியாயங்களுக்கு தனிச் சிறப்புகள் இருப்பதாக ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன.  திருக்குர்ஆனின் ஒவ்வொரு அத்தியாயங்களின் சிறப்புகளை எடுத்துரைக்கும் இத்தகைய ஹதீஸ்களில் பெரும்பாலானவை இட்டுக் கட்டப்பட்டவையாகவே உள்ளன.

அல் பகரா, குல்ஹுவல்லாஹ், குல்அஊது பிரப்பின்னாஸ், குல்அஊது பிரப்பில் ஃபலக், அல்ஹம்து, ஆயத்துல் குர்ஸி, அல் கஹ்ஃப் ஆகிய அத்தியாயங்களின் சிறப்பு குறித்த ஹதீஸ்களில் மட்டுமே ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களைக் காண முடிகிறது.  கஹ்ஃப் அத்தியாயத்தின் சிறப்புகள் குறித்தும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளதால் அந்த சிறப்புகளை அறிந்து விட்டு இந்த அத்தியாயத்தின் விளக்கத்திற்குள் நாம் நுழைவோம்.

صحيح مسلم م

257 - (809) وحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ الْغَطَفَانِيِّ، عَنْ مَعْدَانَ بْنِ أَبِي طَلْحَةَ الْيَعْمَرِيِّ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ حَفِظَ عَشْرَ آيَاتٍ مِنْ أَوَّلِ سُورَةِ الْكَهْفِ عُصِمَ مِنَ الدَّجَّالِ».

கஹ்ஃப் அத்தியாயத்தின் முதல் பத்து வசனங்களை யார் மனனம் செய்கிறாரோ அவர் தஜ்ஜாலை விட்டும் பாதுகாப்பு பெறுவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூதர்தா (ரலி)

நூல் : முஸ்லிம்

இந்தப் பத்து வசனங்களுக்கும், தஜ்ஜாலுக்கும் என்ன தொடர்பு என்பதை பத்து வசனங்களுக்கான விளக்கம் நிறைவடையும் போது நாம் குறிப்பிடுவோம் இன்ஷா அல்லாஹ். 

இந்தப் பத்து வசனங்களை மனனம் செய்வது தஜ்ஜாலிடமிருந்து பாதுகாக்கும் கேடயம் என்பதை மட்டும் இப்போது புரிந்து கொண்டால் போதுமானது.

 صحيح مسلم 

فَمَنْ أَدْرَكَهُ مِنْكُمْ، فَلْيَقْرَأْ عَلَيْهِ فَوَاتِحَ سُورَةِ الْكَهْفِ،

உங்களில் யார் தஜ்ஜாலை அடைகிறீர்களோ அவர் அவனை நோக்கி கஹ்ஃப் அத்தியாயத்தின் ஆரம்ப வசனங்களை ஓதட்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (நீண்ட ஹதீஸின் சிறு பகுதி)

அறிவிப்பவர் : நவ்வாஸ் பின் சம்ஆன் (ரலி)

நூல் : முஸ்லிம்

அபூதாவூத் நூலின் அறிவிப்பில்,

سنن أبي داود 

 فَمَنْ أَدْرَكَهُ مِنْكُمْ فَلْيَقْرَأْ عَلَيْهِ فَوَاتِحَ سُورَةِ الْكَهْفِ، فَإِنَّهَا جِوَارُكُمْ مِنْ فِتْنَتِهِ»

"அவனை உங்களில் யார் அடைகிறீர்களோ அவர் அவனை நோக்கி கஹ்ஃப் அத்தியாயத்தின் ஆரம்ப வசனங்களை ஓதட்டும் நிச்சயமாக அது தஜ்ஜாலின் சோதனைகளிலிருந்து பாதுகாக்கும்'' என்று கூறப்பட்டுள்ளது. 

முஸ்லிம் சமுதாயத்தின் மிகப் பெரிய சோதனையாக இருக்கும் தஜ்ஜால் வருகையின் போது ஈமானைக் காக்கும் கேடயமாக இவ்வசனங்கள் அமைந்திருப்பது இந்த அத்தியாயத்திற்கான சிறப்புக்களில் ஒன்றாகும்.

 صحيح البخاري 

3614 - حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، سَمِعْتُ البَرَاءَ بْنَ عَازِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَرَأَ رَجُلٌ الكَهْفَ، وَفِي الدَّارِ الدَّابَّةُ، فَجَعَلَتْ تَنْفِرُ، فَسَلَّمَ، فَإِذَا ضَبَابَةٌ، أَوْ سَحَابَةٌ غَشِيَتْهُ، فَذَكَرَهُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «اقْرَأْ فُلاَنُ، فَإِنَّهَا السَّكِينَةُ نَزَلَتْ لِلْقُرْآنِ، أَوْ تَنَزَّلَتْ لِلْقُرْآنِ»

ஒரு மனிதர் கஹ்ஃப் அத்தியாயத்தை ஓதிக் கொண்டிருந்தார்.  அப்போது வீட்டிலிருந்த கால்நடை ஓட ஆரம்பித்தது.  கஹ்ஃப் அத்தியாயத்தை ஓதிய மனிதர் கவனித்த போது அவர் மீது மேகம் நிழலிட்டுக் கொண்டிருந்தது.  அவர் இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறினார்.  அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "இந்த நிலை குர்ஆனை ஓதும் போது இறங்கிய (சகீனத் எனும்) அமைதியாகும்'' என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர் : பராஃ (ரலி)

நூல் : புகாரி 3614

அல் கஹ்ஃப் அத்தியாயம் இத்தகைய தனிச் சிறப்புகள் வாய்ந்த அத்தியாயம் ஆகும்.  இந்த அத்தியாயத்தின் விளக்கத்தை இனி காணலாம்.

"தனது அடியார் (முஹம்மது) மீது இவ்வேதத்தை அருளிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்''

என்று இந்த அத்தியாயம் துவங்குகிறது. அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் என்று அல்லாஹ் கூறுவதால் அவன் தன்னைத் தானே புகழ்ந்து கொள்கிறான் என்று கருதிக் கொள்ளக் கூடாது. மாறாக அவனது அடியார்களாகிய நாம் அவனைப் புகழ வேண்டும் என்று கற்றுத் தருவதற்காகவே இவ்வாறு குறிப்பிடுகிறான்.

ஃபாத்திஹா அத்தியாயம், அல் அன்ஆம் அத்தியாயம், ஸபா அத்தியாயம், ஃபாதிர் அத்தியாயம் ஆகிய நான்கு அத்தியாயங்களும் எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே என்று துவங்குகின்றன.

ஃபாத்திஹா அத்தியாயத்தில் எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே எனக் கூறி விட்டு உன்னையே வணங்குகின்றோம் என்று தொடர்ந்து கூறுகின்றான்.  உன்னையே வணங்குகின்றோம் என்று அல்லாஹ் கூறினாலும் நாம் அவ்வாறு கூற வேண்டும் என்று கற்றுத் தருவது தான் இதன் கருத்தாகும்.  எனவே, இந்த வசனத்தையும் இவ்வாறு தான் புரிந்து கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வை அவனுடைய அடியார்களாகிய நாம் புகழ வேண்டும் என்பதை மட்டும் கூறாமல் ஏன் அவனை நாம் புகழ வேண்டும் என்ற காரணத்தையும் அல்லாஹ் இங்கே குறிப்பிடுகின்றான். 

அவனது அடியார் மீது இவ்வேதத்தை அருளியது தான் அந்தக் காரணம். "எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே'' என்று துவங்கும் ஏனைய நான்கு அத்தியாயங்களில் அல்லாஹ்வை நாம் ஏன் புகழ வேண்டும் என்பதற்கு இங்கே கூறிய காரணத்தைக் குறிப்பிடவில்லை.  மாறாக அல்லாஹ் அளவற்ற அருளாளனாக இருப்பதாலும், அவன் வானங்கள் மற்றும் பூமியைப் படைத்தற்காகவும், உலகில் உள்ள எல்லாப் பொருட்களும் அவனுக்கு உரிமையானதாக இருப்பதாலும் அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் என்று கூறிய இறைவன், இங்கே திருக்குர்ஆன் எனும் இவ்வேதத்தை அருளியதால் எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று கூறச் சொல்கிறான். 

வேதத்தை அருளியதற்காக நாம் ஏன் அவனைப் புகழ வேண்டும்? அது என்ன அவ்வளவு மகத்தானதா என்றால் நிச்சயமாக மகத்தானது தான். 

அல்லாஹ் இந்தச் சமுதாயத்துக்கு அருளிய அருட்கொடைகளில் அதற்கு ஈடானது ஏதுமில்லை.  தனது அடியார்கள் மீது வேதத்தை அருளிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் என்று கூறிய இறைவன் அதைத் தொடர்ந்து,

"அதில் எந்தக் கோணலையும் அவன் ஏற்படுத்தவில்லை''

என்ற அற்புதமான சொற்றொடரையும் பயன் படுத்தியுள்ளான்.

வேதம் என்பதை சாதாரண புத்தகம் போன்று எண்ணி விடாதீர்கள்.  இந்த வேதம் அத்தகையது அன்று. இவ்வேதத்தில் எந்தக் கோணலும் கிடையாது. ஒரு கோணலும் இல்லாத இவ்வேதத்தை அருளியதால் அவனுக்கே எல்லாப் புகழும் என்று அந்தக் காரணத்திற்கு வலிமை சேர்க்கப்பட்டுள்ளது.

பொய், முரண்பாடு, எல்லாக் காலத்திற்கும் தாக்குப் பிடிக்க முடியாத தன்மை, சொல்வதை தெளிவாகச் சொல்லாமல் குழப்புதல் போன்றவை கோணல் எனப்படும். இதில் எதுவுமே இல்லாமல் ஒரு வழிகாட்டும் நெறியை வழங்கிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.

மறதி, பலவீனம், எதிர்காலம் பற்றிய ஞானமின்மை போன்ற பலவீனங்களைக் கொண்ட மனிதனின் வார்த்தையில் கோணல் இருக்கலாம். இருக்கும். எந்தப் பலவீனமும் இல்லாத அல்லாஹ்வின் வார்த்தையில் கோணல் இருக்கலாகாது. கோணல் இல்லை என்று இங்கே அல்லாஹ் அறை கூவல் விடுக்கிறான்.

இதன் காரணமாகத் தான் திருக்குர்ஆனில் பல இடங்களில் இது போன்றதொரு வேதத்தை எவராலும் கொண்டு வர முடியாது என்று அல்லாஹ் சவால் விடுகிறான்.

23. நமது அடியாருக்கு (முஹம்மதுக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு, (அதில்) நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்!7

திருக்குர்ஆன் 2 : 23

38. "இதனை இவர் இட்டுக்கட்டி விட்டார்'' என்று அவர்கள் கூறுகிறார்களா? "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தையேனும் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வையன்றி உங்களால் இயன்றவர்களைத் துணைக்கு அழைத்துக் கொள்ளுங்கள்!'' என்று (முஹம்மதே!) கூறுவீராக!7

திருக்குர்ஆன் 10 : 38

13. "இவர் இதை இட்டுக்கட்டிக் கூறுகிறார்'' என்று அவர்கள் கூறுகிறார்களா? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இட்டுக்கட்டி, பத்து அத்தியாயங்களை இது போன்று கொண்டு வாருங்கள்!7 அல்லாஹ்வையன்றி உங்களுக்கு இயன்றவர்களை (துணைக்கு) அழைத்துக் கொள்ளுங்கள்!'' என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 11 : 13

88. "இக்குர்ஆன் போன்றதைக் கொண்டு வருவதற்காக மனிதர்களும், ஜின்களும் ஒன்று திரண்டாலும் இது போன்றதைக் கொண்டு வர முடியாது. அவர்களில் ஒருவர் மற்றவருக்கு உதவியாளராக இருந்தாலும் சரியே'' என்று கூறுவீராக!7

திருக்குர்ஆன் 17 : 88

49. "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவ்விரண்டை விட நேர்வழி காட்டும் வேதத்தை அல்லாஹ்விடமிருந்து கொண்டு வாருங்கள்! அதைப் பின்பற்றுகிறேன்'' என்று கூறுவீராக!7

திருக்குர்ஆன் 28 : 49

34. அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் இது போன்ற ஒரு செய்தியை அவர்கள் கொண்டு வரட்டும்.7

திருக்குர்ஆன் 52 : 34

இவை குர்ஆனைப் பற்றி அல்லாஹ் விடுக்கும் அறைகூவல்கள். கோணல் நிறைந்த புத்தகம் குறித்து இது போன்ற அறைகூவல் விட முடியாது.

82. அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.123

திருக்குர்ஆன் 4 : 82

42. இதன் முன்னும், பின்னும் இதில் தவறு வராது.123 புகழுக்குரிய ஞானமிக்கோனிடமிருந்து இது அருளப்பட்டது.351

திருக்குர்ஆன் 41 : 42

இந்த வேதத்தைச் சிந்திக்க மாட்டார்களா? என்று அறைகூவல் விடுக்கும் வேதம் இந்த உலகில் திருக்குர்ஆனைத் தவிர வேறு எதுவும் இல்லை. துருவி ஆராய்ந்தால் கூட இதில், ஒரு முரண்பாட்டைக் கூட காணமுடியாது என்று கூறக்கூடிய வேதமும் இது ஒன்று தான்.

இதில் கோணல் எதுவும் இல்லாத காரணத்தினால் தான் 1400 ஆண்டுகளைக் கடந்த பின்பும் இஅது நடைமுறைப்படுத்தப்படுகிறது. எந்த மாறுதலும் தேவைப்படவில்லை. காலத்தால் இஸ்லாத்திற்குப் பிந்திய எல்லா தத்துவங்களும், கொள்கைக் கோட்பாடுகளும் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் காலத்தை வென்று நிற்கும் ஒரே புத்தகமாக இது திகழ்கிறது.

இஸ்லாத்தின் எதிரிகள் கூட இஸ்லாத்தின் சட்டங்கள் தான் உலகில் அமைதியை ஏற்படுத்தும் என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளக் கூடிய அளவுக்கு ஒரு கோணலும் அற்றதாக உள்ளது.

இருபதாம் நூற்றாண்டில் தீர்க்க முடியாத தீண்டாமைக் கொடுமை முதல் ஏனைய கிரிமினல் குற்றங்கள் வரை வேரோடு அறுத்தெறியப்பட வேண்டுமானால் குர்ஆனை விட்டால் வேறு வழியே கிடையாது என்பது சந்தேகமற நிரூபிக்கப்பட்டு விட்டது.

மயிர் பிளக்கும் வாதங்கள் புரியும் அறிவுலக மேதைகள் எல்லாம் எந்த ஆற்றலும் இல்லாத ஒரு கல்லின் முன்னால் தலைகுனிந்து வணங்கும் நேரத்தில் கையெழுத்து போடத் தெரியாத ஒரு முஸ்லிம் மட்டும் அதைக் கல் என்று சரியாகப் புரிந்து கொள்கின்றான் என்றால் அதற்குக் காரணம் இவ்வேதம் தான்.

எனவே தான் இவ்வளவு அற்புதமான வேதத்தை அருளி அதன் மூலம் மிருகங்களாக இருந்தவர்களை மனிதர்களாக வாழச் செய்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் என்று அல்லாஹ் துதி பாடச் சொல்கிறான்.

இதில் எந்தக் கோணலையும் ஏற்படுத்தவில்லை என்பதுடன் நிறுத்திக் கொள்ளாமல் மேலும் அழுத்தம் கொடுக்கும் விதமாக, "இதை நேரானதாகவும் அருளியிருக்கின்றான்'' என்று கூறுகின்றான். கோணலை ஏற்படுத்தவில்லை. மாறாக நேரானதாக அதை அருளியிருப்பதாகக் கூறி, புகழ் அனைத்திற்கும் அவன் மட்டுமே உரித்தானவன் என்பதை வலியுறுத்துகின்றான்.

"நேரானதாகவும் எவ்விதக் கோணலும் அற்றதாகவும் இவ்வேதத்தை அருளிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்'' என்று கூறினால் சொல்லவருகின்ற கருத்து முழுமை அடைந்து விடும். ஆயினும், இங்கே "தன் அடியார் மீது'' என்ற சொற்றொடரையும் சேர்த்து கூறுகின்றான்.

வேதம் அருளப்பட்டது மட்டும் அருட்கொடை ஆகாது. அருளப்படுவதற்குத் தகுதியானவர் மீது அருளப்பட்டதும் சேர்த்துத் தான் இது அருட்கொடையாகிறது.

வேதத்தில் சில வசனங்களைப் பார்க்கும் போது தெளிவற்றதாகத் தோற்றமளிக்கலாம். ஆனால் யார் மீது இவ்வேதத்தை அல்லாஹ் அருளினானோ அவர் அளித்த விளக்கம் காரணமாக பிரகாசமான தெளிவு தென்படும்.

எனவே தான் "தனது அடியாருக்கு இவ்வேதத்தை அருளிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்'' என்கிறான்.

வேதத்துக்கு நபிகள் நாயகத்தின் விளக்கம் அவசியம் இல்லை என்றால் "தனது அடியார் மீது'' என்ற வாசகம் பொருளற்றதாகி விடும்.

இவ்வேதம் அருளப்பட்டது ஓர் அருள். அதில் ஒரு கோணலும் இல்லாமல் நேராக அமைந்திருப்பது மற்றோர் அருள். மேலும் யாருக்கு அருள வேண்டுமோ அத்தகையவருக்கு அருளியிருப்பது இன்னோர் அருள் எனக்கூறிய இறைவன் அடுத்து வரும் வசனங்களில் இவ்வேதம் என்ன நோக்கத்திற்காக அருளப்பட்டது என்பதை விளக்குகிறான்.

தன்னிடமுள்ள கடுமையான தண்டனை குறித்து எச்சரிப்பதற்காகவும், நல்லறங்கள் புரிந்தோருக்கு நிச்சயமாக அழகான பரிசு இருக்கிறது என்று நற்செய்தி கூறுவதற்காகவும் (இவ்வேதத்தை அருளினான்) அதில் (பரிசாகப் பெறக் கூடிய சொர்க்கத்தில்) அவர்கள் என்றென்றும் நிலைதிருப்பார்கள். (2,3 வசனங்கள்)

திருக்குர்ஆன் எவ்விதக் குறைபாடும், முரண்பாடும் இல்லாமல் அருளப்பட்டதாகக் கூறிய இறைவன் இவ்வசனங்களில் திருக்குர்ஆன் அருளப்பட்ட நோக்கத்தைத் தெளிவுபடுத்துகிறான்.

அந்த நோக்கம் மறுமை வாழ்க்கை குறித்து எச்சரிப்பது தான்.  இந்த ஒரு நோக்கத்திற்காகத் தான் திருக்குர்ஆன் அருளப்பட்டுள்ளது என்பதை மேற்கண்ட வசனங்கள் கூறுகின்றன.

தீமை செய்பவர்கள் சொகுசான இன்பமான வாழ்க்கையை அனுபவிப்பதையும், நல்லறங்களில் ஈடுபடுவோர் துன்பங்களில் உழல்வதையும் இவ்வுலகில் வாழும் மனிதன், காண்கிறான்.

நல்லவனாக வாழ்ந்தால் ஒரு பயனும் இல்லை.  தீயவனாக நடப்பதால் ஒரு கேடும் இல்லை என்று அவனது மனம் கணக்குப் போடுகிறது. அவனும் தீயவனாக மாறிவிடுகிறான்.

இந்த மனநிலையை மாற்றியமைப்பது தான் திருக்குர்ஆன் அருளப்பட்டதற்கான நோக்கம்.

இவ்வுலகில் நல்லவனாக வாழும் போது பல இன்பங்களை இழக்க நேரிட்டாலும், பல துன்பங்களைச் சுமக்க நேரிட்டாலும் நல்லவனாக வாழ்வதில் எந்தப் பயனும் இல்லை என்று நினைத்து விடாதீர்கள்!  மாறாக நீங்கள் இழந்த இன்பங்களை விடப் பல மடங்கு இன்பங்கள் உங்களுக்குக் காத்திருக்கின்றன.

அந்த இன்பங்கள் சொற்பமான நாட்களில் முடிந்துவிடக் கூடியதல்ல.  மாறாக என்றென்றும் நிலைத்திருக்கக் கூடியவை என்று ஆர்வமூட்டுவது தான் திருக்குர்ஆன் அருளப்பட்டதன் நோக்கம்.

நல்ல காரியங்களில் ஈடுபட ஆர்வமிருந்தும் அதனால் எந்தப் பயனும் இல்லையே எனக் கருதுவோரை இந்த நம்பிக்கை நல்வழிப்படுத்தும்.

இது போலவே தீய காரியங்களில் ஈடுபடுபவன், தான் செய்யும் காரியங்கள் தீமையானவை தான் என்று அறிவுப்பூர்வமாக உணர்ந்தாலும், தனது தீய காரியங்களால் மற்றவர்கள் பல விதமான பாதிப்புகளுக்கு ஆளாக நேர்வதைக் கண்கூடாகக் கண்டாலும் அவன் அக்காரியங்களிலிருந்து விலகிக் கொள்ள மறுக்கிறான்.

காரணம், தான் செய்கின்ற தீய காரியங்களால் தனக்கு எந்தக் கேடும் ஏற்படவில்லையே!  தனக்குச் செல்வமும், செல்வாக்கும் புகழும் தானே அதிகரிக்கிறது.  பிறகு ஏன் இக்காரியங்களிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும்? என்றெல்லாம் நினைக்கக் கூடியவன் தீய காரியங்களில் தொடர்ந்து மூழ்கி விடுகிறான்.

தனது ஒவ்வொரு தீயசெயலும் தன்னைப் படைத்த இறைவனால் கண்காணிக்கப்பட்டு பதிவு செய்யப்படுகின்றன.  அவனை எவ்வகையிலும் ஏமாற்ற இயலாது.  இவ்வுலகில் வாழும் போதே தவறுகளிலிருந்து திருந்திக் கொள்ளாமல் இதே நிலையிலேயே மரணித்து விட்டால் கடவுளால் தண்டிக்கப்படுவோம்.  அந்தத் தண்டனை இவ்வுலகில் நல்லவனாக வாழ்ந்தால் அடைகின்ற துன்பங்களை விடக் கடுமையானவை.  தாங்கிக் கொள்ள முடியாதவை என்றெல்லாம் எச்சரிக்கவே இந்தக் குர்ஆன் அருளப்பட்டது.

மரணித்தவுடன் எல்லாம் முடிந்து விடுகிறது என்ற நம்பிக்கை தான் மனிதனது தீய செயல்களுக்கு அடிப்படையாகவுள்ளன.  இந்த அடிப்படையைத் தகர்க்காமல் என்ன தான் சட்டங்கள் போட்டாலும் எத்தனை அறிவுரைகள் கூறினாலும் அதனால் போதுமான பயன் ஏற்படாது.

முதன் முதலில் நம்மைப் படைத்த இறைவன் மீண்டும் படைக்க ஆற்றல் மிக்கவன்.  அவன் மக்கள் அனைவரையும் அழித்த பின் மீண்டும் அனைவரையும் உயிர்த்தெழச் செய்வான்.  உயிர்த்தெழச் செய்தபின் நல்லவர்கள் அழியாப் பேரின்பத்தை அடைவார்கள்.  தீயோர் தாங்க முடியாத நரக நெருப்பில் வீசப்படுவார்கள்.  இந்த அடிப்படை தான் இஸ்லாத்தின் வெற்றிக்கு மூலகாரணம்.

இந்த அடிப்படை தான் மற்ற சமுதாயங்களை விட முஸ்லிம்கள் வீரமிக்கவர்களாகத் திகழ்வதற்கும், மற்றவர்களை விட அதிகமதிகமாக வாரி வழங்கும் வள்ளல் தன்மைக்கும் இன்ன பிற சிறப்புத் தகுதிகளுக்கும் காரணமாக இருந்தது.  இன்றைக்கும் இருக்கிறது.

திருக்குர்ஆனில் கூறப்படுகின்ற வரலாறுகளானாலும், அதில் கூறப்படுகின்ற உவமைகளானாலும், சட்டதிட்டங்களானாலும், கொள்கை முழக்கங்களானாலும் அனைத்துமே அந்த நம்பிக்கையை ஏற்படுத்துவதற்குத் தான் கூறப்படுகின்றன.

மேலே நாம் எடுத்துக் காட்டிய இவ்வசனங்களும் இதைத் தான் கூறுகின்றன.

1,2,3,4. அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். அவனே தனது அடியார் மீது, எவ்விதக் கோணலும் இல்லாத நேரான இவ்வேதத்தை, தனது கடுமையான வேதனை பற்றி எச்சரிப்பதற்காகவும், நல்லறங்கள் செய்யும் நம்பிக்கை கொண்டோருக்கு அழகிய கூலி உண்டு; அதில் என்றென்றும் தங்குவார்கள் என நற்செய்தி கூறுவதற்காகவும், அல்லாஹ் சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான் என்று கூறுவோரை எச்சரிப்பதற்காகவும் அருளினான்.26

தனது கடுமையான தண்டனை குறித்துப் பொதுவாக எச்சரிப்பதற்காக இவ்வேதத்தை அருளியதாக முந்தைய வசனத்தில் இறைவன் கூறினான்.  கடவுளை நிராகரிப்போர், கடவுளுக்கு இணை வைப்போர், கடவுளுக்கு மனைவி மக்களைக் கற்பிப்போர் ஆகிய அனைவரும் அந்தப் பொதுவான எச்சரிக்கைக்குள் அடங்குவார்கள் என்றாலும் கடவுளுக்கு மகன் இருப்பதாகக் கூறுவோரைத் தனியாகக் குறிப்பிட்டு இவ்வசனங்கள் மூலம் இறைவன் எச்சரிக்கிறான்.

ஏற்கனவே கூறிய பொதுவான எச்சரிக்கையில் இவர்களும் அடங்குவார்கள் என்ற போதும் இவர்களைத் தனியாக இறைவன் குறிப்பிட்டுள்ளதிலிருந்து கடவுளுக்கு மகன் இருப்பதாகக் கூறுவது மற்ற இரண்டு குற்றங்களை விடக் கடுமையானது என்பதை விளங்கலாம்.

மனிதர்கள் பேசும் வார்த்தைகளிலேயே இது தான் பெரிய வார்த்தை என்ற சொற்பிரயோகமும் இதைத் தெளிவாக அறிவிக்கின்றது.  இணை வைத்தலில் கடவுளுக்கு மகன் இருப்பதாகக் கூறுவது முதலிடத்தில் நிற்கும் என்பதை இதிலிருந்து உணர்ந்து கொள்ளலாம்.

பொதுவாக மனிதன் தனக்குச் சந்ததி இருப்பதில் பெருமை கொள்கிறான்.  மகிழ்ச்சியடைகிறான்.  சந்ததி இல்லாவிட்டால் இடிந்து போகிறான்.  ஆனால் எல்லாம் வல்ல இறைவனோ தனக்கு சந்ததி இருப்பதாகக் கூறுவதைக் கடுமையாக வெறுக்கிறான். 

மனிதன் ஏன் தனக்கு சந்ததிகள் வேண்டும் என்று விரும்புகிறான்? இந்தக் கேள்விக்கு விடை கண்டால் இறைவன் ஏன் சந்ததிகளை ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்ற கேள்விக்கும் விடை காணலாம்.

மனிதன் குறிப்பிட்ட காலத்தில் தள்ளாத வயதை அடைவான்.  அவனது எல்லா செயல்பாடுகளும் படிப்படியாகக் குறைந்து செயலற்றவனாக ஆகிவிடுவான்.  அந்த நேரத்தில் தன்னைக் கவனித்துக் கொள்ள மற்றவரின் துணை அவனுக்குத் தேவைப்படுகிறது.

அந்த மற்றவன் தனது உதிரத்திலிருந்து உருவானவனாக இருந்தால் தன்னைக் கவனித்துக் கொள்வது நிச்சயம் என்று மனிதன் நினைக்கிறான்.  இதன் காரணமாகவே மனிதன் சந்ததிகளை விரும்புகிறான்.

மேலும் தான் என்றாவது ஒரு நாள் மரணித்து விடுவோம் என்பதையும் மனிதன் அறிந்து வைத்திருக்கிறான்.  தான் சிரமப்பட்டு திரட்டிய செல்வங்களை யாரோ எவரோ அனுபவிப்பதை விட நமது உதிரத்திலிருந்து பிறந்தவன் அனுபவிக்கட்டுமே என்ற எண்ணமும் தான் மனிதன் சந்ததிகளைப் பெற்றுக் கொள்ள நினைப்பதற்கான காரணம்.

ஆனால் கடவுளைப் பொறுத்த வரை அவனுக்கு முதுமையோ, இயலாமையோ, மரணமோ ஏற்படப் போவதில்லை. சந்ததிகள் வேண்டும் என்று ஆசைப்படுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.  இறைவனுக்கு மகனிருக்க முடியாது என்பதற்கு இது ஒரு காரணம்

கடவுள் தன்மை என்பது பங்கு போட்டுக் கொடுக்க முடியாத தனி உரிமையாகும்.  கடவுளுக்குப் பிறப்பவன் நிச்சயம் கடவுளாகத் தான் இருப்பான்.  பிறகு அந்த மகனுக்கும் மகன்கள் பிறப்பார்கள். அவர்களும் கடவுள்களாகவே இருப்பார்கள்.  கடவுள் தன்மையைப் பலரும் பங்கு போட்டுக் கொள்ளக் கூடிய நிலை ஏற்படும்.  போட்டியும், பகைமையும் ஏற்படும்.  இதனால் கடவுளின் பணிகளே பாதிக்கப்பட்டுப் போய் விடும்.

கடவுளுக்கு மகன்களைக் கற்பித்த மதங்களில் தந்தைக் கடவுளுக்கும் மகன் கடவுளுக்கும் சண்டை நடந்த கதைகளைக் காண்கிறோம்.  அண்ணன் கடவுளுக்கும் தம்பி கடவுளுக்கும் சண்டை நடந்திருக்கிற கதைகளை கேள்விப்பட்டுள்ளோம்.

மனிதனுக்கு மகன் இருப்பது நன்மை பயக்கும்.  கடவுளுக்கு மகன் இருந்தால் கேடு தான் ஏற்படும்.

இது போக, கடவுள் என்பவன் எந்தத் தேவையுமற்றவனாக இருக்க வேண்டும்.  சந்ததி இருக்கிறது எனக் கூறும் போது அவனுக்குத் தேவை இருக்கிறது என்று ஆகும்.  சந்ததி மட்டும் தேவை என்று ஆகாது.  கூடவே மனைவியும் தேவை என்று ஆகும்.  அப்புறம் கணவன் கடவுளுக்கும் மனைவி கடவுளுக்கும் நடக்கும் சண்டைகளால் உலகம் ஸ்தம்பித்துப் போகும்.

இந்தக் கேலிக்கூத்துகளுக்கு இடமளிக்கக் கூடாது என்பதற்காகவே அல்லாஹ் தனக்கு மகனோ மகளோ இல்லை எனக் கூறுகிறான்.  அவ்வாறு கூறுவதும், நம்புவதும் கடும் குற்றம் எனவும் எச்சரிக்கிறான்.  இதன் காரணமாகத் தான் சொற்களில் பெரும் பாதகமான சொல் எனக் கூறுகிறான்.

திருக்குர்ஆனில் இந்த ஒரு இடத்தில் மட்டுமல்ல.  பல இடங்களில் இந்தக் குற்றத்தைக் குறித்து இறைவன் எச்சரிக்கிறான். சில இடங்களில் இதைவிடக் கடுமையாகவும் எச்சரித்துள்ளான்.

116. "அல்லாஹ் மகனை ஏற்படுத்திக் கொண்டான்'' எனக் கூறுகின்றனர். அவ்வாறில்லை! அவன் தூயவன்.10 வானங்களிலும்,507 பூமியிலும் உள்ளவை அவனுக்கே உரியன. அனைத்தும் அவனுக்கே அடிபணிகின்றன.

திருக்குர்ஆன் 2 : 116

"வானங்களிலும் பூமியிலும் உள்ள யாவும் அவனது உடமைகள்'' என்பது அற்புதமான சொற்றொடர்.

நாம் ஒரு பொருளைக் காசு கொடுத்து வாங்கி அதை நமது உடமையாக்கிக் கொள்கிறோம்.  அத்தகைய பொருளை நமது சந்ததி என்று நாம் கூறுவோமா? காசு கொடுத்து வாங்கிய காளை மாட்டை இது தான் எனது ஆண் மகன் எனக் கூறுவோர் உண்டா? உடமையாக்கிக் கொண்ட பொருளை யாரும் தனது சந்ததி எனக் கூற மாட்டார்கள்.

அல்லாஹ்வைப் பொறுத்த வரை வானங்களும், (நாம் உள்ளிட்ட) இந்தப் பூமியும் அவனது உடமைகள்.  யாரைக் கடவுளின் மகன் எனக் கூறுகிறார்களோ அவரும் அவனுக்குச் சொந்தமான தட்டு முட்டுச் சாமான் போன்றவர் தான்.  எனவே எனக்கு எவரும் மகனாக முடியாது என்று காரணத்துடன் விளக்குகிறான்.

நாம் சட்டையில் குத்திக் கொண்ட நமது உடமையாக இருக்கின்ற பேனாவை நமது மகன் எனக் கூற மாட்டோம்.  நமக்கும், பேனாவுக்கும் எவ்வளவு வித்தியாசங்கள் உள்ளனவோ அதை விட அதிக வித்தியாசம் கடவுளுக்கும் கடவுளின் மகன் எனக் கூறப்படுபவருக்கும் இடையே உள்ளது.

நம்மைப் பொறுத்த வரை பேனா எந்த நிலையில் உள்ளதோ அது போன்ற நிலையில் படைக்கப்பட்ட எல்லாப் பொருட்களும் இறைவனின் பார்வையில் உள்ளன.  "அனைத்தும் எனது உடமை'' என்ற அற்புதமான சொற்றொடர் மூலம் தனக்குச் சந்ததியில்லை என்பதை அறிவுப்பூர்வமாக விளக்குகிறான்.

இதே வாதத்தை 4 : 171, 10 : 68 ஆகிய வசனங்களிலும் முன்வைக்கிறான்.

101. (அவன்) வானங்களையும்,507 பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவன். அவனுக்கு மனைவி இல்லாத நிலையில் அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். அவன் அனைத்துப் பொருட்களையும் அறிந்தவன்.

திருக்குர்ஆன் : 6 : 101

111. "சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை'' என்று (முஹம்மதே!) கூறுவீராக! அவனை அதிகம் பெருமைப்படுத்துவீராக!

திருக்குர்ஆன் 17 : 111

35. எந்தப் பிள்ளையையும் ஏற்படுத்திக் கொள்வது அல்லாஹ்வுக்குத் தகுதியானதன்று. அவன் தூயவன்.10 ஒரு காரியத்தைப் பற்றி அவன் முடிவெடுத்தால் ஆகு என்றே அதற்குக் கூறுவான். உடனே அது ஆகி விடும்.

திருக்குர்ஆன் 19 : 35

88. "அளவற்ற அருளாளன் பிள்ளையை ஏற்படுத்திக் கொண்டான்'' என்று அவர்கள் கூறுகின்றனர்.

89. அபாண்டத்தையே கொண்டு வந்து விட்டீர்கள்.

90, 91. அளவற்ற அருளாளனுக்குப் பிள்ளை இருப்பதாக அவர்கள் வாதிடுவதால் வானங்கள்507 வெடித்து, பூமி பிளந்து, மலைகள் நொறுங்கப் பார்க்கின்றன.26

92. பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளும் அவசியம் அளவற்ற அருளாளனுக்கு இல்லை.

93. வானங்களிலும்,507 பூமியிலும் உள்ள ஒவ்வொருவரும் அளவற்ற அருளாளனிடம் அடிமையாகவே வருவார்கள்.

94. அவர்களை அவன் சரியாக எண்ணிக் கணக்கிட்டிருக்கிறான்.

95. அவர்கள் அனைவரும் கியாமத் நாளில்1 அவனிடம் தன்னந்தனியாகவே வருவார்கள்.

திருக்குர்ஆன் 19 : 88-95

26. "அளவற்ற அருளாளன் சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான்'' எனக் கூறுகின்றனர். அவன் தூயவன்.10 மாறாக அவர்கள் (வானவர்கள்) மரியாதைக்குரிய அடியார்கள்.

திருக்குர்ஆன் 21 : 26

91. அல்லாஹ் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அவனுடன் எந்தக் கடவுளும் இல்லை. அவ்வாறிருந்தால் தான் படைத்தவற்றுடன் ஒவ்வொரு கடவுளும் (தனியாகப்) போயிருப்பார்கள். ஒருவரையொருவர் மிகைத்திருப்பார்கள். அவர்கள் கூறுவதை விட்டும் அல்லாஹ் தூயவன்.10

திருக்குர்ஆன் 23 : 91

2. அவனுக்கே வானங்கள்507 மற்றும் பூமியின் அதிகாரம் உள்ளது. அவன் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அதிகாரத்தில் அவனுக்கு எந்தப் பங்காளியும் இல்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் படைத்தான். அதைத் திட்டமிட்டு அமைத்தான்.

திருக்குர்ஆன் 25 : 2

4. அல்லாஹ் மகனை ஏற்படுத்த நினைத்திருந்தால், தான் படைத்தவற்றில் தான் நாடியதை எடுத்துக் கொண்டிருப்பான். அவன் தூயவன்.10 அவனே அடக்கியாளும் ஏகனாகிய அல்லாஹ்.

திருக்குர்ஆன் 39 : 4

100. ஜின்களை அல்லாஹ்வே படைத்திருக்கும்போது அவர்களை அவனுக்கு இணையாக்கி விட்டனர். அவனுக்கு ஆண் மக்களையும், பெண் மக்களையும் அறிவில்லாமல் கற்பனை செய்து விட்டனர். அவனோ தூயவன்.10 அவர்கள் வர்ணிப்பதை விட்டும் அவன் உயர்ந்து விட்டான்.

திருக்குர்ஆன் 6 : 100

3. (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.

திருக்குர்ஆன் 112 : 3

3. எங்கள் இறைவனின் மகத்துவம் உயர்ந்தது. அவன் மனைவியையோ, பிள்ளைகளையோ ஏற்படுத்திடவில்லை.

திருக்குர்ஆன் 72 : 3

இவ்வசனங்களில் தனக்கு மகனோ, மகளோ இருக்க முடியாது என்பதற்கு அடுக்கடுக்கான ஆதாரங்களை முன் வைக்கிறான்.

இது தனக்கு எவ்வளவு கோபத்தை ஏற்படுத்தும் எனவும் கூறுகிறான்.

மறுமை நாளில் யாரைக் கடவுளின் மகன் என்று கற்பனை செய்தீர்களோ அவரே ஓர் அடிமையாகத் தான் என் முன்னே நிறுத்தப்படுவார்.  மகனாக அல்ல எனவும் கூறுகிறான்.

இவ்வளவு கடுமையான குற்றமாக இது இருப்பதால் தான் இவர்களுக்குத் தனியாகவும் இறைவன் எச்சரிக்கிறான்.

இந்தச் செய்தியை அவர்கள் நம்பவில்லையானால் அதற்காகக் கவலைப்பட்டு உம்மையே அழித்துக் கொள்வீர் போலும். (வசனம் 6)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த கொள்கையை ஏற்க மறுத்தவர்களைப் பற்றிக் கூறி விட்டு அவர்களுக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகவும் கவலை கொள்வதைப் பற்றி இவ்வசனத்தில் குறிப்பிடுகிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளைக் கேட்டு அதைப் பலரும் நிராகரிக்கலானார்கள்.  இந்த நிராகரிப்பு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கவலையை ஏற்படுத்தியது.  மிகப் பெரிய அளவில் கவலைப்பட்டு தம்மையே அழித்துக் கொள்வார்களோ என்று கருதும் அளவுக்குக் கவலைப்பட்டார்கள்.  இதைத் தான் மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் சுட்டிக் காட்டுகிறான்.

இப்படியெல்லாம் கவலைப் படக் கூடாது என்று இங்கே கூறுகிறானா?. மனித குலத்தின் மீது நபிகள் நாயகத்துக்கு இருந்த அக்கறையைச் சுட்டிக் காட்டி பாராட்டுகிறானா?

இவ்வசனத்தின் வாசக அமைப்பைப் பார்க்கும் போது இரண்டு விதமாகவும் இதைப் புரிந்து கொள்ளும் வகையில் தான் அமைந்துள்ளது.

குடும்பத்திற்காக ஓடாய்த் தேய்கிறாயே என்று ஒருவரிடம் நாம் கூறும் போது இப்படியெல்லாம் தேய வேண்டியதில்லை என்றும் எடுத்துக் கொள்ளலாம் அல்லது குடும்பத்தின் மீது தான் இவனுக்கு எவ்வளவு அக்கறை என்பதை மறைமாகப் பாராட்டுவதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

அது போன்ற நிலையில் தான் இவ்வாசக அமைப்பும் உள்ளது.

எனவே இவ்வசனத்தை மட்டும் எடுத்துக் கொண்டால் எப்படி வேண்டுமானாலும் புரிந்து கொள்ளலாம் என்றாலும் வேறு இடங்களில் இது பற்றி ஏதும் கூறப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்த பின்னர் தான் இந்த இடத்தில் எவ்வாறு பொருள் கொள்வது என்பதைத் தீர்மானிக்க முடியும்.  அவ்வாறு ஆய்வு செய்யும் போது இது குறித்து தெளிவான கருத்தைக் கூறுகின்ற வசனத்தைக் காணமுடிகின்றது.

8. யாருக்கு தனது தீய செயல் அழகாகக் காட்டப்பட்டு, அதை அவனும் அழகானதாகக் கருதினானோ அவனா (சொர்க்கவாசி)? தான் நாடியோரை அல்லாஹ் வழிகேட்டில் விடுகிறான். தான் நாடியோருக்கு நேர்வழி காட்டுகிறான். (முஹம்மதே!) அவர்களுக்காகக் கவலைப்பட்டு உமது உயிர் போய்விட வேண்டாம்.81 அவர்கள் செய்வதை அல்லாஹ் அறிந்தவன்.

திருக்குர்ஆன் 35 : 8

அவர்கள் நேர்வழிக்கு வரவில்லை என்பதற்காக உம்மையே அழித்துக் கொள்ளும் அளவுக்குக் கவலைப்படக் கூடாது என்று 35 : 8 வசனத்தில் தெளிவாகக் கூறுவதால் கஹ்பு அத்தியாயத்தின் மேற்கண்ட வசனத்தையும் இந்தக் கருத்திலேயே புரிந்து கொள்ள வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மையே மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு சமுதாயம் குறித்து கவலைப்படுவது வரவேற்கத்தக்கப் பண்பாடு தானே என்று சிலருக்குத் தோன்றலாம்.  இந்தப் பண்பாடு இருப்பதால் நபிகள் நாயகத்துக்குப் பெருமை தானே சேரும்.  இதை ஏன் இறைவன் கடிந்து கொள்ள வேண்டும்? என்ற சந்தேகம் எழலாம்.

மக்களுக்காகக் கவலைப்படுவது மனிதனின் உயர்ந்த பண்பு தான்.  இறைவன் ஏன் இதைத் தடுக்க வேண்டும்?

இக்கேள்விக்கான விடை இவ்வசனத்தில் கூறப்படாவிட்டாலும் நாம் எடுத்துக் காட்டிய 35 : 8 வசனத்தில் கூறப்பட்டுள்ளது.

ஒருவர் நேர்வழி பெறுவதும், பெறாமல் போவதும் இறைவனின் அதிகாரத்தின் பாற்பட்டதாகும்.  எவரையும் நேர்வழியில் சேர்க்கும் அதிகாரம் எந்த மனிதருக்கும் கிடையாது.  சிலர் நேர்வழி பெற மறுக்கிறார்கள் என்பதற்காக கவலைப்பட்டு தம்மையே அழித்துக் கொள்வது அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடுவதாக அமையும்.  இறைவனின் முடிவைக் குறை கூறுவதாக அமையும்.  அல்லாஹ்வுடைய முடிவில் அதிருப்தி கொள்வதாகவும் இது அமைந்து விடும்.  இந்தக் காரணத்துக்காகத் தான் இப்படி கவலைப்பட்டு தம்மைத் தாமே அழித்துக் கொள்ளக் கூடாது என்று அல்லாஹ் கூறுகிறான்.

இவ்வாறு நாம் சுயகற்பனையை கூறவில்லை.  35 : 8 வசனத்தில் இந்தக் கருத்து அடங்கியுள்ளதைப் பார்க்கலாம்.  "அவன் தான் நாடியவர்களுக்கு நேர்வழி காட்டுகிறான், நாடியவர்களை வழிகேட்டில் விட்டு விடுகிறான்'' எனக் கூறிவிட்டுத் தான் "கவலைப்பட்டு உம்மையே மாய்த்துக் கொள்ள வேண்டாம்' எனக் கூறுகிறான்.

உமக்குச் சம்பந்தமில்லாத ஒன்றுக்காக நீர் ஏன் வீணாகக் கவலைப்பட்டு அழிய வேண்டும் என்ற தோரணையில் தான் இந்த அறிவுரை கூறப்படுகிறது.

صحيح البخاري 

3884 - حَدَّثَنَا مَحْمُودٌ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ ابْنِ المُسَيِّبِ، عَنْ أَبِيهِ، أَنَّ أَبَا طَالِبٍ لَمَّا حَضَرَتْهُ الوَفَاةُ، دَخَلَ عَلَيْهِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعِنْدَهُ أَبُو جَهْلٍ، فَقَالَ: «أَيْ عَمِّ، قُلْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، كَلِمَةً أُحَاجُّ لَكَ بِهَا عِنْدَ اللَّهِ» فَقَالَ أَبُو جَهْلٍ وَعَبْدُ اللَّهِ بْنُ أَبِي أُمَيَّةَ: يَا أَبَا طَالِبٍ، تَرْغَبُ عَنْ مِلَّةِ عَبْدِ المُطَّلِبِ، فَلَمْ يَزَالاَ يُكَلِّمَانِهِ، حَتَّى قَالَ آخِرَ شَيْءٍ كَلَّمَهُمْ بِهِ: عَلَى مِلَّةِ عَبْدِ المُطَّلِبِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَأَسْتَغْفِرَنَّ لَكَ، مَا لَمْ أُنْهَ عَنْهُ» فَنَزَلَتْ: {مَا كَانَ لِلنَّبِيِّ وَالَّذِينَ آمَنُوا أَنْ يَسْتَغْفِرُوا لِلْمُشْرِكِينَ وَلَوْ كَانُوا أُولِي قُرْبَى مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمْ أَنَّهُمْ أَصْحَابُ الجَحِيمِ} [التوبة: 113]. وَنَزَلَتْ: {إِنَّكَ لاَ تَهْدِي مَنْ أَحْبَبْتَ} [القصص: 56]

3884 முஸய்யப் பின் ஹஸ்ன் பின் அபீ வஹ்ப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூதாலிப் அவர்களுக்கு மரண வேளை வந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரிடம் சென்றார்கள். அப்போது அபூ ஜஹ்ல் அவரருகே இருந்தான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், என் பெரிய தந்தையே! லா இலாஹ இல்லல்லாஹ்'- வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை' என்று சொல்லுங்கள். இந்தச் சொல்லை (நீங்கள் சொல்லிவிட்டால் அதை) வைத்து (மறுமையில் நரகத்திலிருந்து விடுதலை கேட்டு) உங்களுக்காக அல்லாஹ்விடம் நான் வாதாடுவேன் என்று சொன்னார்கள். அபூதாலிபே! அப்துல் முத்தலிபின் மார்க்கத்தையா புறக்கணிக்கப் போகிறீர்கள்? என்று அப்போது அபூஜஹ்லும், அப்துல்லாஹ் பின் அபீ உமய்யாவும், கேட்டனர். அவ்விருவரும் இவ்வாறே தொடர்ந்து அவரிடம் பேச இறுதியில் அவர், (என் இறப்பு என் தந்தை) அப்துல் முத்தlஇபின் மார்க்கத்தில் தான் (நிகழும்) என்று அவர்களிடம் சொன்னார். எனவே, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், எனக்குத் தடைவிதிக்கப்படும் வரை நான் உங்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவேன்; என்று சொன்னார்கள். அப்போது தான், இணைவைப்பவர்கள் நரகவாசிகள் தாம் என்பது தெளிவாகிவிட்ட பின்பும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருவதற்கு, அவர்கள் உறவினர்களாயிருந்தாலும் கூட இறைத்தூதருக்கும் இறை நம்பிக்கையாளர்களுக்கும் உரிமையில்லை என்னும் (9:113) திருக்குர்ஆன் வசனமும், (நபியே!) நீங்கள் விரும்பியவரை உங்களால் நேர்வழியில் செலுத்தி விட முடியாது என்னும் (28:56) திருக்குர்ஆன் வசனமும் அருளப்பட்டன.

நூல் புகாரி 3884

ஒருவர் நேர்வழி பெறவில்லை என்பதற்காக கவலைப்படுவதை அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடுவதாக அல்லாஹ் எடுத்துக் கொள்கிறான் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

அவர்களுக்கு நேர்வழி காட்டுவது உமது பொறுப்பு அல்ல.  எனினும் அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு நேர்வழி காட்டுகிறான் (அல்குர்ஆன் 2 : 272) என்ற வசனமும்  நீர் எவ்வளவு தான் ஆசைப்பட்டாலும் பெரும்பாலான மக்கள் நம்பிக்கை கொள்ளக் கூடியவர்களாக இல்லை (அல்குர்ஆன் 12 : 103) என்ற வசனமும் ஏன் கவலைப்படக் கூடாது என்பதை விளக்குகின்றன.

நபிகள் நாயகத்துக்கே இந்த அதிகாரம் இல்லை என்றால் நம்மவர்களின் நிலை என்ன என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

இத்தனை வருடமாக நான் சொல்லியும் கேட்க மறுக்கிறார்களே!  என் தந்தையை என்னால் திருத்த முடியவில்லையே என்றெல்லாம் மாய்ந்து போகும் உரிமை நமக்கு இல்லை.  எடுத்துச் சொல்லும் கடமை தவிர வேறு கடமை நமக்கில்லை என்பதை இவ்வசனத்திலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

இந்த இடத்தில் மற்றொரு விஷயத்தை நாம் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.

கவலைப்படும் படியான நிகழ்வுகள் ஏற்படும் போது நம்மையுமறியாமல் கவலை ஏற்படுவது இயல்பான ஒன்று தான்.  அது நமது அதிகாரத்தின் பாற்பட்டது அல்ல.  இத்தைகைய கவலை இங்கே தடை செய்யப்படவில்லை.  35 : 8 வசனத்திலும் இந்த அத்தியாயத்திலும் கவலைப்பட்டு கவலைப்பட்டு உயிரையே மாய்த்துக் கொள்ளும் படியான கவலைக்குத் தான் தடை விதிக்கப்பட்டுள்ளது.  வாசக அமைப்பிலிருந்தே அதை அறிந்து கொள்ளலாம்.

உயிரைப் போக்கிக் கொள்ளும் அளவுக்குக் கவலைப்பட வேண்டாம் எனக் கூறுவதிலிருந்தே சாதாரணமாக ஏற்படும் கவலைக்கு தடை இல்லை. அது மனித அதிகாரத்தில் இல்லை என்பதை விளங்கலாம்.

நாம் வேண்டிய உறவினரை இழந்து விடும் போது அழுவது அல்லாஹ்வின் தீர்ப்பை மறுப்பதாக ஆகாது.  அதே நேரத்தில் காலமெல்லாம் அதையே நினைத்து பிரலாபித்துக் கொண்டிருப்பது அல்லாஹ்வின் தீர்ப்பை எதிர்ப்பதாக ஆகும். இது போலத் தான் இந்தக் கவலையையும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பொதுவாகக் கவலைப்பட வேண்டாம் என்ற கருத்திலும் சில வசனங்கள் உள்ளன.  அவ்வசனங்களை ஆதாரமாகக் கொண்டு சிறிய அளவில் கூட இதற்காகக் கவலைப்படக் கூடாது என்று நினைக்கலாகாது.  அந்த வசனங்கள் இவை தாம்.

176. (இறை)மறுப்பை நோக்கி விரைந்து செல்வோர் குறித்து நீர் கவலைப்படாதீர்! அவர்கள் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்ய முடியாது. மறுமையில் அவர்களுக்கு எந்த நற்பேறும் இருக்கக் கூடாதென்று அல்லாஹ் நாடுகிறான். அவர்களுக்குக் கடும் வேதனை உண்டு.

திருக்குர்ஆன் 3 : 176

41. நம்பிக்கை கொண்டோம் என்று தம் வாய்களால் கூறி, உள்ளங்களால் நம்பிக்கை கொள்ளாமல் (இறை)மறுப்பை நோக்கி விரைந்து செல்வோர் குறித்தும், யூதர்களைக் குறித்தும் தூதரே கவலைப்படாதீர்! அவர்கள் பொய்களையே அதிகம் செவியுறுகின்றனர். உம்மிடம் வராத மற்றொரு சமுதாயத்திற்காக (உமது பேச்சை) செவியுறுகின்றனர். வார்த்தைகளை அவற்றுக்குரிய இடங்களை விட்டும் மாற்றிக் கூறுகின்றனர். "அது (சாதகமானது) உங்களுக்கு வழங்கப்பட்டால் அதை எடுத்துக் கொள்ளுங்கள்! அது கொடுக்கப்படாவிட்டால் அதைத் தவிர்த்து விடுங்கள்!'' என்று கூறுகின்றனர். அல்லாஹ் சோதிக்க484 நாடுபவரை அல்லாஹ்விடமிருந்து காப்பாற்ற சிறிதும் நீர் அதிகாரம் பெறமாட்டீர். அவர்களின் உள்ளங்களை அல்லாஹ் தூய்மையாக்க விரும்பவில்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவு இருக்கிறது. மறுமையில் கடும் வேதனை உண்டு.

திருக்குர்ஆன் 5 : 41

23. (நம்மை) மறுத்தோரின் மறுப்பு உம்மைக் கவலையில் ஆழ்த்த வேண்டாம். அவர்களின் மீளுதல் நம்மிடமே உள்ளது. அவர்கள் செய்ததை அவர்களுக்கு நாம் அறிவிப்போம். உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் அறிந்தவன்.

திருக்குர்ஆன் 31 : 23

இந்த வசனங்கள் யாவும் காஃபிர்களுக்காக அறவே கவலைப்படக் கூடாது என்று தானே கூறுகின்றன.  உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவுக்குக் கவலைப்பட வேண்டாம் எனக் கூறவில்லையே என்பது தான் அந்தச் சந்தேகம்.

கவலைப்படுதல் என்பது இரண்டு வகைகளில் ஏற்படும்.

நரகத்தில் கிடந்து வேதனைப்படப் போகிறார்களே என்று கழிவிரக்கம் கொண்டு மற்றவர்களுக்காக படுகின்ற கவலை ஒரு வகை.

நமக்கெதிராகத் திரண்டு விட்டார்களே, இவர்களால் நமக்கோ நம்மைச் சேர்ந்தவர்களுக்கோ ஏதும் தீங்கு நேருமோ என்று தமக்காகப் படும் கவலை மற்றொரு வகை.

ஒன்று பரிதாபத்தால் ஏற்படுவது.  மற்றொன்று பயத்தால் ஏற்படுவது. 

ஒன்று மற்றவருக்காகக் கவலைப்படுவது.  மற்றொன்று தமக்காகக் கவலைப்படுவது.

மேற்கண்ட வசனங்கள் யாவும் இரண்டாவது வகையான கவலையைக் குறிக்கின்றன.

அவர்கள் இறை நிராகரிப்பின் பால் விரைந்து செல்வது பற்றிக் கவலைப்படாதே எனக் கூறிவிட்டு அவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனது மார்க்கத்துக்கும் எந்தத் தீங்கும் செய்ய முடியாது என்று அல்லாஹ் கூறுகிறான்.  அவர்களால் ஏதும் தீங்கு நேருமோ என்று பயந்து கவலைப்படாதீர் என்ற கருத்திலேயே இவ்வசனங்கள் அமைந்துள்ளன.  கழிவிரக்கம் கொண்டு மற்றவர்களுக்காகக் கவலைப்படுவதைக் கூறவில்லை.

சங்பரிவாரக் கும்பலைப் பற்றி கவலைப்படாதே என்பதும், மனைவி இறந்ததற்காகக் கவலைப்படாதே என்பதும் ஒரே வகையானது அல்ல. 

இதைப் புரிந்து கொண்டால் ஒருவர் இஸ்லாத்தை ஏற்கவில்லை என்பதற்காக நம்மையே மாய்த்துக் கொள்ளும் அளவுக்குக் கவலைப்படக் கூடாது, அதே சமயம் அக்கறையின் காரணமாக சாதாரணமாகக் கவலை கொள்ள எந்தத் தடையும் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

அவர்களில் அழகிய நல்லறம் செய்பவர் யார் எனச் சோதிப்பதற்காக இந்தப் பூமியின் மேல் உள்ளவைகளை அதற்கு அலங்காரமாக நாம் ஆக்கியுள்ளோம்.  மேலும் அதன் மேல் உள்ளதை வறண்ட மண்ணாகவும் நாம் ஆக்கக் கூடியவர்களே!

(ஏழு மற்றும் எட்டாவது வசனங்கள்)

இவ்விரு வசனங்களிலும் இரண்டு செய்திகள் அடங்கியுள்ளன.

இறைவன் எத்தகைய ஆற்றல் மிக்கவன் என்பது ஒரு செய்தி!

மனிதர்களுக்கு இவ்வுலகில் இன்பங்களை வாரி வழங்கியிருப்பது ஏன் என்பது மற்றொரு செய்தியாகும்.

இவ்வசனத்தில் தனது வல்லமையைக் கூற வெகு தொலைவுக்கு மனிதனை இழுத்துச் செல்லாமல் அவன் எந்த மண்ணில் வாழ்கின்றானோ அந்த மண்ணையே இதற்குக் களமாக்கிக் காட்டுகின்றான்.

எவ்விதக் கவர்ச்சியும், அலங்காரமும் இல்லாமல் கட்டாந்தரையாகக் கிடந்த பூமியின் மேல் மழையை விழச் செய்து அவற்றில் மரம் செடி கொடிகளை முளைக்கச் செய்கிறான்.  இவ்வாறு முளைத்தவுடன் பூமிக்கு புதுப் பெண்ணின் கவர்ச்சி வந்து விடுகின்றது.  இதை நாம்  தான் செய்கின்றோம் என்று இங்கே சுட்டிக் காட்டுகின்றான்.

திருக்குர்ஆனின் வேறு இடங்களில் இன்னும் அழுத்தமாகத் தனது இந்த ஆற்றலை மனிதனுக்குச் சுட்டிக் காட்டியிருக்கின்றான்.

99. அவனே வானிலிருந்து507 தண்ணீரை இறக்கினான். அதன் மூலம் ஒவ்வொரு பொருளின் விளைச்சலையும் வெளிப்படுத்துகிறோம். அதிலிருந்து பசுமையான பயிர்களை வெளிப்படுத்துகிறோம். அடுக்கி வைக்கப்பட்ட தானியத்தை அப்பயிர்களில் வெளிப்படுத்துகிறோம். பேரீச்சை மரத்தின் பாளைகளில் தொங்கும் பழக்குலைகளையும், திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவமரம், மாதுளை ஆகியவற்றையும் (வெளிப்படுத்துகிறோம்.) அவ்விரண்டும் (தோற்றத்தில்) ஒன்றுபட்டதாகவும், (தன்மையில்) வேறுபட்டதாகவும் உள்ளன. அது பலன் கொடுக்கும் போது அதன் பலனையும், அது கனிவதையும் கவனியுங்கள்! நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

திருக்குர்ஆன் 6 : 99

141. படரவிடப்பட்ட, படரவிடப்படாத தோட்டங்களையும், பேரீச்சை மரங்களையும், மாறுபட்ட உணவான தானியங்களையும், (தோற்றத்தில்) ஒன்றுபட்டும் (தன்மையில்) வேறுபட்டும் உள்ள மாதுளை மற்றும் ஒலிவ மரங்களையும் அவனே படைத்தான். அவை பலன் தரும்போது அதன் பலனை உண்ணுங்கள்! அதை அறுவடை செய்யும் நாளில் அதற்குரிய (ஜகாத் எனும்) கடமையை வழங்கி விடுங்கள்! வீண் விரயம் செய்யாதீர்கள்! வீண் விரயம் செய்வோரை அவன் நேசிக்க மாட்டான்.

திருக்குர்ஆன் 6 : 141

4. பூமியில் அருகருகில் அமைந்த பல பகுதிகள் உள்ளன. திராட்சைத் தோட்டங்களும், பயிர்களும், கிளைகளுடையதும் கிளைகளே இல்லாததுமான பேரீச்சை மரங்களும் உள்ளன. ஒரே தண்ணீர் தான் அவற்றுக்குப் புகட்டப்படுகின்றது. (இவ்வாறு இருந்தும்) சுவையில் ஒன்றை விட மற்றொன்றைச் சிறந்ததாக்கியுள்ளோம். விளங்கும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

திருக்குர்ஆன் 13 : 4

11. அதன் மூலம் பயிர்களையும், ஒலிவ மரம், பேரீச்சை, திராட்சை மற்றும் அனைத்துக் கனிகளையும் உங்களுக்காக அவன் முளைக்கச் செய்கிறான். சிந்திக்கும் சமுதாயத்திற்கு இதில் தக்க சான்று இருக்கிறது.

திருக்குர்ஆன் 16 : 11

20. தூர் ஸினாயிலிருந்து வெளிப்படும் (ஆலிவ்) மரத்தையும் (படைத்தோம்.) அது எண்ணெயையும், உண்பவருக்கு குழம்பையும் உற்பத்தி செய்கிறது.

திருக்குர்ஆன் 23 : 20

7. பூமியில் மதிப்புமிக்க ஒவ்வொரு வகையிலும் எத்தனையோ (பயிர்களை) முளைக்கச் செய்துள்ளோம் என்பதை அவர்கள் காணவில்லையா?

திருக்குர்ஆன் 26 : 7

60. (நீங்கள் இணைகற்பித்தவை சிறந்தவையா? அல்லது) வானங்களையும்,507 பூமியையும் படைத்து வானத்திலிருந்து507 தண்ணீரை உங்களுக்காக இறக்கி வைத்தவனா? அதன் மூலம் செழிப்பான தோட்டங்களை முளைக்கச் செய்கிறோம். அதில் ஒரு மரத்தைக் கூட உங்களால் முளைக்கச் செய்ய இயலாது. அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? இல்லை. அவர்கள் (இறைவனுக்கு மற்றவர்களை) சமமாக்கும் கூட்டமாகவே உள்ளனர்.

திருக்குர்ஆன் 27 : 60

27. "வறண்ட பூமியை நோக்கி தண்ணீரை நாமே ஓட்டிச் செல்கிறோம்'' என்பதை அவர்கள் காணவில்லையா? அதன் மூலம் பயிர்களை வெளிப்படுத்துகிறோம். அதிலிருந்து அவர்களும், அவர்களது கால்நடைகளும் சாப்பிடுகின்றனர். அவர்கள் சிந்திக்க மாட்டார்களா?

திருக்குர்ஆன் 32 : 27

36. பூமி முளைக்கச் செய்வதிலிருந்தும், அவர்களிலிருந்தும், அவர்கள் அறியாதவற்றிலிருந்தும் ஜோடிகள்242 அனைத்தையும் உருவாக்கியவன் தூயவன்.10

திருக்குர்ஆன் 36 : 36

21. அல்லாஹ் வானத்திலிருந்து507 நீரை இறக்கி அதைப் பூமியில் ஊற்றுக்களாக ஓடச் செய்கிறான் என்பதை நீர் அறியவில்லையா? பின்னர் அதன் மூலம் மாறுபட்ட நிறங்களைக் கொண்ட பயிர்களை வெளிப்படுத்துகிறான். பின்னர் அது காய்ந்து, மஞ்சள் நிறமாக ஆவதைக் காண்கிறீர். பின்னர் அதைச் சருகுகளாக ஆக்குகிறான். அறிவுடையோருக்கு இதில் அறிவுரை உள்ளது.

திருக்குர்ஆன் 39 : 21

63. நீங்கள் பயிரிடுவதைச் சிந்தித்தீர்களா?

64. நீங்கள் அதை முளைக்கச் செய்கிறீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கிறோமா?

திருக்குர்ஆன் 56 : 63, 64

கடவுள் ஒருவன் இருக்கின்றான் என்பதற்கும், அவனது வல்லமைக்கும் மண்ணில் முளைக்கும் பயிர் பச்சைகள் மிகப் பெரும் சான்றாகவுள்ளதால் தான் இதை முக்கியத்துவத்துடன் அல்லாஹ் சுட்டிக் காட்டுகின்றான்.

இனிப்பான மாம்பழத்தை மா மரம் உற்பத்தி செய்கின்றது என்றால்

மாங்கொட்டையில் அந்த இனிப்பு இருக்கவில்லை.

 அது புதைக்கப்பட்ட மண்ணிலும் அந்த இனிப்பு இருக்கவில்லை. 

ஊற்றுகின்ற தண்ணீரிலோ, வீசுகின்ற காற்றிலோ வெளிச்சத்திலோ இனிப்பு இருந்ததில்லை.

ஆனாலும் மாம்பழங்கள் இனிக்கின்றன. இப்படிப் பல்வேறு சுவைகள் கொண்ட கனிகளை மனிதன் உண்ணும் போது அதைப் பற்றிச் சிந்தித்தால் "சூப்பர் பவர்'  உள்ள ஒருவன் ஆட்டிப் படைக்கின்றான் என்பதைச் சந்தேகமற அறிந்து கொள்வான்.

இலைகள், பூக்கள், காய்கள், கனிகளில் தான் எத்தனை வண்ணங்கள்!  அந்த வண்ணங்கள் எப்படி வந்தன? என்றெல்லாம் ஆராயும் ஒருவன் கடவுளை மறுக்கவே மாட்டான்.

அடிக்கடி பார்த்துப் பழகியதால் நாம் இதை உரிய விதத்தில் சிந்திப்பதில்லை.  மண்ணில் முளைத்தெழும் ஒவ்வொன்றிலும் கணக்கிட முடியாத அதிசயங்கள் புதைந்து கிடப்பதை நாம் சிந்திப்பதில்லை.  எப்போதுமே தூரத்தில் இருப்பது தான் நமக்கு அதிசயமாகத் தோன்றும்.  நம் பக்கத்தில் நிற்கும் அதிசயங்கள் அதிசயமாகத் தோன்றாது.

மனிதன் இதைச் சிந்திக்க மாட்டான் என்பதற்காகத் தான் இம்மண்ணின் மேல் உள்ளவற்றை மண்ணுக்கு அலங்காரமாக ஆக்கினோம் என்று அல்லாஹ் கூறுகின்றான்.

இதை மட்டும் கூறி விட்டு றிறுத்திக் கொண்டால் கூட இதெல்லாம் இயற்கை என்று மனிதன் கூறி விடுவான்.

நாளை வறண்ட பாலைவனமாகவும் நாம் ஆக்குவோம் என்று சேர்த்துக் குறிப்பிடுகின்றான்.

உரிய நேரத்தில் உரிய அளவில் மழை பெய்த பிறகு இயற்கையாக முளைத்தன என்று கூறும் மனிதனே!  உரிய நேரத்தில் மழை பெய்ததும் இயற்கையா?  உரிய அளவில் மழை பெய்ததும் இயற்கையா?  மேலப்பாளையத்தில் பெய்து விட்டு பாளையங்கோட்டையில் பெய்யாமல் இருந்ததும் இயற்கையா?

காற்றும் குளிர்ந்து, தரையும் குளிர்ந்து இதோ மழை வரப் போகின்றது என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது ராஜஸ்தான் பாலைவனத்தில் - அனலாய் கொதிக்கும் பூமியில் - மழையை விரட்டிச் சென்று பெய்விப்பவன் யார்?

இதற்கு இயற்கை என்று எவனும் காரணம் சொல்ல முடியாது அல்லவா? இதனால் தான் தனது வல்லமைக்கு பசுமையை மட்டும் சான்றாகக் கூறி நிறுத்திக் கொள்ளாமல் வறட்சியை ஏற்படுத்துவதும் நாம் தான் எனக் கூறி ஆப்பு வைக்கிறான்.

இந்த இடத்தில் ஏன் இத்தனை வருடங்களாக மழை பெய்யவில்லை என்ற கேள்விக்கு "இயற்கை' என்று விடை கூற முடியாது.  யாரோ ஒருவன் தான் இதற்குக் காரணமாக இருக்கின்றான் என்பது தான் இதற்கு விடையாக இருக்க முடியும்.

இறைவனை மனிதன் நம்ப வேண்டும், அதுவும் சிந்தித்து விளங்கி நம்ப வேண்டும் என்ற காரணத்தினால் தான் இந்த இரண்டு தன்மைகளையும் கூறுகின்றான்.

அவனது வல்லமையைக் காட்டுவது ஒருபுறமிருக்க உன்னைச் சோதித்துப் பார்ப்பதும் இதற்குக் காரணம் என்பதையும் சின்னஞ்சிறு சொற்றொடருக்குள் சேர்த்துக் கூறிவிடுகின்றான்.

அவர்களில் அழகிய நல்லறம் செய்பவர் யார் எனச் சோதிப்பதற்காக இந்தப் பூமியின் மேல் உள்ளவைகளை அதற்கு அலங்காரமாக நாம் ஆக்கியுள்ளோம்.  மேலும் அதன் மேல் உள்ளதை வறண்ட மண்ணாகவும் நாம் ஆக்கக் கூடியவர்களே!

(ஏழு மற்றும் எட்டாவது வசனங்கள்)

கடவுளை எல்லா மதத்தவர்களும் நம்புகின்றனர்.  ஆனால் மற்ற எந்தச் சமயத்தவர்களையும் விட முஸ்லிம்களின் கடவுள் நம்பிக்கை வலிமை மிக்கதாக இருப்பதை யாரும் மறுக்க முடியாது.

பக்திமான்களாக இருந்தவர்கள் கூட தங்கள் வாழ்க்கையில் துன்பங்களைச் சந்திக்கும் போது நாத்திகர்களாகி விடுவதை மற்ற மதத்தவர்களிடம் சர்வ சாதாரணமாகக் காண்கின்றோம்.

கடவுள் என இவர்கள் நம்புகின்ற கற்சிலைகளுக்கு முன்னால் நின்று கொண்டு அதைத் திட்டுகின்ற காட்சியையும், மண்ணை வாரி தூற்றுகின்ற காட்சியையும் பிற மதத்தவர்களிடம் சர்வ சாதாரணமாகக் காண முடிகின்றது.  "கடவுளே! உனக்கு கண் இருக்கிறதா?'' என்றெல்லாம் துன்பம் வரும் வேளையில் புலம்புகின்றவர்களையும் நாம் பார்க்கிறோம்.

கடவுளை நம்புகின்ற மற்ற மதத்தவர்களிடம் காணப்படும் இந்தக் கோளாறு முஸ்லிம்களிடம் காணப்படுவதில்லையே அது ஏன்?

மற்ற மதத்தினர் தவறான அடிப்படையின் மீது தங்கள் நம்பிக்கை எனும் மாளிகைகளை எழுப்பிக் கொண்டது தான் இதற்குக் காரணம்.

இவ்வுலகில் வாழ்கின்ற மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரியான செல்வச் செழிப்புடனும் வசதி வாய்ப்புகளுடனும் இருப்பதில்லை.  சிலர் அதிகமான வசதிகளையும், பதவிகளையும் பெற்றுள்ளனர்.  பலர் இத்தகைய வாய்ப்பைப் பெற்றிருக்கவில்லை.  இதற்குக் காரணம் என்ன என்பதை விளக்கும் போது மற்ற மதங்கள் செய்கின்ற தவறுகள் தான் அடிப்படைக் கோளாறு எனலாம்.

நீ கடவுள் மீது பக்தியுடன் இருந்தால் உனக்கும் எண்ணற்ற வசதிகள் கிடைக்கும் என்று ஏழைகளிடம் அம்மதங்கள் பேசுகின்றன.  சென்ற பிறவியில் நல்ல பக்திமானாக இல்லாததே நீ இப்போது ஏழையாக இருப்பதற்குக் காரணம் என்று அவனுக்கு அறிவுரை கூறுகின்றன.

இதுபோல் வசதி வாய்ப்புகளுடன் உள்ளவனை நோக்கி, கடவுள் உன் மீது அன்பாய் இருக்கிறார்.  நீ நல்லவனாக இருப்பதால் தான் இந்த நிலையை அடைந்திருக்கிறாய் என்றும் சென்ற பிறவியில் நீ நல்லவனாக இருந்ததால் தான் இந்த உயர்ந்த நிலை கிடைத்தது என்றும் பேசுகின்றன.

செழிப்பாய் இருந்தவனுக்கு ஒரு நட்டம் ஏற்பட்டால் "இவன் என்னவோ செய்திருப்பான்' என்று கூறுவதும் இதனால் தான் இப்படி ஏற்பட்டது என்று பேசுவதும் இந்த நம்பிக்கையின் வெளிப்பாடுதான்.

கீழ் நிலையில் இருந்த ஒருவனுக்கு நல்ல நிலை ஏற்பட்டால் அவன் கொடுத்து வைத்திருக்கிறான்.  இவன் புண்ணியம் செய்திருப்பான் என்று காரணம் கூறுவதற்கும் இந்த நம்பிக்கை தான் காரணம்.

இந்த நம்பிக்கை ஆழமாகப் பதிந்த பிறகு ஒரு கேடுகெட்டவன் உயர்ந்த நிலையை அடைவதைப் பார்க்கும் போதும் ஒரு நல்லவன் சொல்லெனாத் துன்பத்தை அடையும் போதும் கடவுள் நம்பிக்கையே அவன் உள்ளத்திலிருந்து விலகி விடுகின்றது.  மதத்தை வளர்ப்பதற்காக பொய்யான காரணங்களைக் கூறி நம்மை ஏமாற்றி விட்டனர் என்று அவனுக்குக் கோபம் ஏற்படுகின்றது.  இதனால் தான் கடவுள் (?) மீதே மண்ணை வாரித் தூற்ற முடிகின்றது.

ஆனால் இஸ்லாம் பொய்யான காரணங்களைக் கூறி மக்களை ஏமாற்றவில்லை.  பொய்யான வாக்குறுதிகள் எதனையும் அளிக்கவில்லை.    எது உண்மையோ அதை மட்டுமே கூறுகின்றது.

இவ்வுலகில் உள்ள ஏழைகள் பலரை நாம் பார்க்கிறோம்.  அவர்கள் அனைவரும் கெட்டவர்களாக இருப்பதில்லை.  அது போல் அனைவரும் நல்லவர்களாகவும் இருப்பதில்லை.  அவர்களின் ஏழ்மை நிலைக்கும் அவர்களது பாவ புண்ணியத்திற்கும் ஒரு தொடர்பும் இல்லை என்பது கண்கூடாகத் தெரிகின்ற உண்மை.

அது போல் செல்வந்தர்களிலும், நல்லவர்களும் கெட்டவர்களும் கலந்தே உள்ளனர்.  இவர்களின் செல்வ நிலைக்கும், பாவ புண்ணியத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லாமலிருப்பதைக் காண்கின்றோம்.

இந்த நிதர்சனமான உண்மையை அப்படியே கூறுகின்ற ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே!

இவ்வுலகில் நல்ல வசதி வாய்ப்புகளுடன் இருப்பதற்கும், நல்லவர்களாக இருப்பதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.  இந்த வசதிகளைப் பெற்ற பிறகும் நீங்கள் நல்லவர்களாக வாழ்கிறீர்களா என்று சோதித்துப் பார்க்கவே இவை வழங்கப்பட்டுள்ளன.  வசதிகள் வந்த பின் அதன் காரணமாக ஆணவம் பிடித்து அலைந்தால் நீ கெட்டவனாவாய்!  அதை மற்றவருக்கு வாரி வழங்கி நற் செயல்களில் உன்னை ஈடுபடுத்திக் கொண்டால் நல்லவனாவாய் என்று இஸ்லாம் கூறுகின்றது.

அது போல் நீ வசதி வாய்ப்புகளைப் பெறவில்லை என்பதால் நீ கெட்டவன் இல்லை.  இந்த வறுமையின் காரணமாக நீ தடம் மாறுகிறாயா அல்லது தடம் புரளாமல் உறுதியாக நிற்கிறாயா? என்று சோதித்துப் பார்க்கவே இந்த நிலை என்று இஸ்லாம் கூறுகின்றது.

செழிப்பு, வறட்சி இரண்டுமே இரண்டு வகையான பரீட்சைகள் என்று இஸ்லாம் கூறுகின்ற காரணத்தினால் தான் முஸ்லிம்கள் எத்தகைய துன்பத்தை அடைய நேர்ந்தாலும் அவர்கள் அதைப் பொறுத்துக் கொள்கின்றனர்.  கடவுளே உனக்குக் கண்ணில்லையா என்று கேட்பதில்லை.

இரண்டு நிலைகளில் எது ஏற்பட்டாலும் இரண்டும் சோதனை தானே தவிர நல்லவன் கெட்டவன் என்று வழங்கப்படும் தீர்ப்பு அல்ல.  இனிமேல் தான் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.  அங்கே நல்ல தீர்ப்பு பெறுவதற்காக வறட்சியிலும், செழிப்பிலும் நிலை குலையாமல் இருக்க வேண்டும் என்று உறுதியான அடிப்படையின் மீது முஸ்லிம்களின் நம்பிக்கை எழுப்பப்பட்டுள்ளது.

அல் கஹ்ஃப் அத்தியாயத்தின் ஏழாவது வசனமும் அந்த அடிப்படையைத் தான் சொல்லித் தருகின்றது.  இப்பூமியில் உள்ள செழிப்புகள் யாவும் நீங்கள் நல்லவர்களாக நடக்கிறீர்களா என்று சோதித்துப் பார்ப்பதற்குத் தான் என்று கூறி முஸ்லிம்களின் நம்பிக்கையைப் பலமான அஸ்திவாரத்தின் மீது எழுப்புகின்றது.  பின் வரும் வசனங்களும் இந்த வசனத்தின் விளக்கவுரைகளாகத் திகழ்கின்றன.

155. ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்களையும், உயிர்களையும், பலன்களையும் சேதப்படுத்தியும் நாம் உங்களைச் சோதிப்போம்.484 பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!

156. தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும்போது "நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்'' என்று அவர்கள் கூறுவார்கள்.

திருக்குர்ஆன் 2 : 155, 156

186. உங்கள் செல்வங்களிலும், உயிர்களிலும் சோதிக்கப்படுவீர்கள்.484 உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்தும்,27 இணை கற்பித்தோரிடமிருந்தும் ஏராளமான சங்கடம் தரும் சொற்களைச் செவியுறுவீர்கள். நீங்கள் சகித்துக் கொண்டு (இறைவனை) அஞ்சினால் அது உறுதிமிக்க காரியங்களில் ஒன்றாகும்.

திருக்குர்ஆன் 3 : 186

35. ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைப்பவரே. நன்மை, தீமையின் மூலம் பரீட்சித்துப் பார்ப்பதற்காக உங்களைச் சோதிப்போம்.484 நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!

திருக்குர்ஆன் 21 : 35

11. விளிம்பில் இருந்து கொண்டு அல்லாஹ்வை வணங்குபவனும் மனிதர்களில் இருக்கிறான். அவனுக்கு நன்மை ஏற்பட்டால் அதில் நிம்மதியடைகிறான். அவனுக்குச் சோதனை ஏற்பட்டால்484 தலைகீழாக மாறி விடுகிறான். இவ்வுலகிலும், மறுமையிலும் அவன் நட்டமடைந்து விட்டான். இதுவே தெளிவான நட்டம்.

திருக்குர்ஆன் 22 : 11

15. மனிதனை அவனது இறைவன் மரியாதையுடன் வாழச்செய்து இன்பத்தையும் வழங்கி சோதிக்கும்போது484 "என் இறைவன் என்னைக் கண்ணியமாக நடத்தினான்'' என்று கூறுகிறான்.

16. அவனது செல்வத்தை அளவுடன் வழங்கி சோதிக்கும்போது484 "என் இறைவன் என்னை அவமானப்படுத்தி விட்டான்'' எனக் கூறுகிறான்.

திருக்குர்ஆன் 89 : 15, 16

எனவே செல்வமும் வறுமையும் சோதனைக்குத் தான் என்பதை உணர்ந்து சோதனையில் தேறிட வல்ல இறைவன் அருள் புரியட்டும்.

"அந்தக் குகை' எனும் பெயர் பெற்ற இந்த அத்தியாயத்தின் எட்டு வசனங்களுக்கான விளக்கத்தை இது வரை நாம் பார்த்தோம்.

ஒன்பதாம் வசனம் முதல் 26வது வசனம் வரை கடந்த காலத்தில் நடந்த ஒரு வரலாறு மிகவும் சுருக்கமாகக் கூறப்படுகிறது.  இந்த வரலாறு ஒரு குகையுடன் தொடர்புடையதாக இருப்பதால் தான் இந்த அத்தியாயத்திற்கு "அந்தக் குகை' - அல் கஹ்ஃப் என்ற பெயர் வந்தது.

முதலில் அந்த வசனங்களின் தமிழாக்கத்தைத் தொடராகப் பார்த்து விட்டு அதன் விளக்கத்தைப் பின்னர் பார்ப்போம்.

9. "அந்தக் குகைக்கும், அந்த ஏட்டுக்கும் உரியோர் நமது சான்றுகளில் ஆச்சரியமானவர்கள்'' என்று நீர் நினைக்கிறீரா?271

10. சில இளைஞர்கள் குகையில் ஒதுங்கிய போது "எங்கள் இறைவா! உன் அருளை எங்களுக்கு வழங்குவாயாக! எங்கள் பணியை எங்களுக்குச் சீராக்குவாயாக!'' என்றனர்.

11. எனவே அக்குகையில் பல வருடங்கள் அவர்களின் காதுகளில் திரையை ஏற்படுத்தினோம்.462

12. அவர்கள் தங்கிய காலத்தை இரு சாராரில் நன்கறிந்தவர் யார் என்பதை அறிவிப்பதற்காகப் பின்னர் அவர்களை எழுப்பினோம்.

13. அவர்களது உண்மை வரலாறை நாம் உமக்குக் கூறுகிறோம். அவர்கள் இளைஞர்கள். அவர்கள் தமது இறைவனை நம்பினார்கள். அவர்களுக்கு நேர்வழியை அதிகமாக்கினோம்.

14. அவர்கள் எழுந்து "நமது இறைவன் வானங்களுக்கும்,507 பூமிக்கும் இறைவனாவான். அவனையன்றி வேறு கடவுள்களைப் பிரார்த்திக்க மாட்டோம். (அவ்வாறு செய்தால்) வரம்பு மீறிய வார்த்தையைக் கூறியவர்களாவோம்'' என்று அவர்கள் கூறியபோது அவர்களது உள்ளங்களை உறுதிப்படுத்தினோம்.

15. இதோ எங்கள் சமுதாயத்தினர் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டனர். அவற்றைப் பற்றி அவர்கள் தெளிவான சான்றைக் கொண்டு வர வேண்டாமா? அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவனை விட மிகப் பெரும் அநீதி இழைத்தவன் யார்?

16. அவர்களையும், அல்லாஹ்வையன்றி அவர்கள் வணங்குபவற்றையும் விட்டு விலகி அந்தக் குகையில் ஒதுங்குங்கள்! உங்கள் இறைவன் தனது அருளை உங்களுக்குத் தாராளமாக அளிப்பான். உங்கள் பணியை எளிதாக்குவான் (எனவும் கூறினர்).

17. சூரியன் உதிக்கும்போது அது அவர்களின் குகையை விட்டும் வலப் புறமாகச் சாய்வதையும், அது மறையும் போது இடப்புறமாக அவர்களைக் கடப்பதையும் காண்பீர்! அவர்கள் அதில் உள்ள விசாலமான பகுதியில் உள்ளனர். இது அல்லாஹ்வின் சான்றுகளில் ஒன்று. அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டினானோ அவரே நேர்வழி பெற்றவர். அவன் யாரை வழிகேட்டில் விட்டு விடுகிறானோ அவருக்கு நேர்வழி காட்டும் பொறுப்பாளரைக் காண மாட்டீர்.

18. அவர்கள் விழித்துக் கொண்டிருப்பதாக நீர் நினைப்பீர்! (ஆனால்) அவர்கள் உறங்கிக் கொண்டுள்ளனர்.462 அவர்களை வலப் புறமும் இடப்புறமுமாகப் புரட்டுகிறோம். அவர்களின் நாய் தனது முன் கால்களை விரித்து வாசலில் உள்ளது. அவர்களை நீர் எட்டிப் பார்த்திருந்தால் அவர்களை விட்டு வெருண்டு ஓடியிருப்பீர்! அவர்களால் அதிகம் அச்சமடைந்திருப்பீர்!

19. அவர்கள் தங்களிடையே விசாரித்துக் கொள்வதற்காக இவ்வாறு அவர்களை உயிர்ப்பித்தோம். "எவ்வளவு (நேரம்) தங்கியிருப்பீர்கள்'' என்று அவர்களில் ஒருவர் கேட்டார். "ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறு பகுதி தங்கினோம்'' என்று (மற்றவர்கள்) கூறினர். "நீங்கள் தங்கியதை உங்கள் இறைவன் நன்கு அறிந்தவன். உங்களில் ஒருவரை இந்த வெள்ளிக் காசுடன் நகரத்துக்கு அனுப்புங்கள்! தூய்மையான உணவு வைத்திருப்பவர் யார் என்பதைக் கவனித்து அதிலிருந்து அவர் உணவை உங்களுக்காக வாங்கி வரட்டும். அவர் எச்சரிக்கையாக இருக்கட்டும்! உங்களைப் பற்றி அவர் யாருக்கும் சொல்ல வேண்டாம்'' என்றும் கூறினர்.413

20. அவர்கள் உங்களைக் கண்டு கொண்டால் உங்களைக் கல்லால் எறிந்து கொல்வார்கள்! அல்லது அவர்களின் மார்க்கத்தில் உங்களை மீண்டும் சேர்த்து விடுவார்கள். அப்போது ஒருக்காலும் வெற்றி பெற மாட்டீர்கள்! (என்றும் கூறினர்.)

21. அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்பதையும், யுகமுடிவு நேரம்1 சந்தேகம் இல்லாதது என்பதையும் அறிந்து கொள்வதற்காக (குகைவாசிகளைப் பற்றி) அவர்களுக்கு இவ்வாறே வெளிப்படுத்தினோம். அப்போது அவர்கள் தமக்கிடையே முரண்பட்டனர். "அவர்கள் மீது ஒரு கட்டடத்தை எழுப்புங்கள்! அவர்களைப் பற்றி அவர்களது இறைவனே அறிவான்'' என்றனர். தமது காரியத்தில் யாருடைய கை ஓங்கியதோ அவர்கள் "இவர்கள் மீது ஒரு வழிபாட்டுத் தலத்தை ஏற்படுத்துவோம்''397 என்றனர்.

22. "(அவர்கள்) மூவர்; நான்காவது அவர்களின் நாய்'' என்று (சிலர்) கூறுகின்றனர். "ஐவர்; ஆறாவது அவர்களின் நாய்'' என்று மறைவானதைப் பற்றி யூகத்தினடிப்படையில் (வேறு சிலர்) கூறுகின்றனர். "எழுவர்; எட்டாவது அவர்களின் நாய்'' என்று (சிலர்) கூறுகின்றனர். "அவர்களின் எண்ணிக்கையைப் பற்றி என் இறைவனே நன்கு அறிந்தவன். சிலரைத் தவிர அவர்களை யாரும் அறிய மாட்டார்கள்''496 என்று (முஹம்மதே!) கூறுவீராக! அவர்கள் குறித்து தெரிந்ததைத் தவிர (வேறு எதிலும்) தர்க்கம் செய்யாதீர். அவர்களைக் குறித்து இவர்களில் ஒருவரிடமும் விளக்கம் கேட்காதீர்!

23, 24. அல்லாஹ் நாடினால் (என்பதைச் சேர்த்தே) தவிர, நாளை நான் இதைச் செய்பவன் என்று எதைப் பற்றியும் கூறாதீர்! நீர் மறந்து விடும்போது உமது இறைவனை நினைப்பீராக! "எனது இறைவன் இதை விட சமீபத்தில் வழிகாட்டக் கூடும்'' என்று கூறுவீராக!26

25. அவர்கள் தமது குகையில் முன்னூறு ஆண்டுகள் தங்கினார்கள் (என்றும்) ஒன்பது ஆண்டுகளை அதிகமாக்கிக் கொண்டனர் (என்றும் கூறுகின்றனர்).

26. "அவர்கள் தங்கிய(காலத்)தைப் பற்றி அல்லாஹ்வே நன்கு அறிந்தவன். வானங்களிலும்507 பூமியிலும் மறைவானது அவனுக்கே உரியது. அவன் நன்றாகப் பார்ப்பவன்!488 நன்றாகச் செவியுறுபவன்.488 அவனன்றி அவர்களுக்கு எந்தப் பொறுப்பாளரும் இல்லை. அவன் தனது அதிகாரத்தில் யாரையும் கூட்டாக்கிக் கொள்ள மாட்டான்'' என்று கூறுவீராக!

குகைவாசிகள் குறித்து குர்ஆன் கூறும் வரலாறு இதுதான். திருக்குர்ஆனில் எத்தனையோ வசனங்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கம் அளித்திருப்பதை நாம் அறிந்திருக்கிறோம்.  ஆனால் ஆச்சரியமான உண்மை என்னவென்றால் குகைவாசிகளின் வரலாறு குறித்து இவ்வசனங்களில் கூறப்பட்டதைத் தவிர நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு வார்த்தையும் கூறவில்லை.  இவ்வசனங்களில் கூறப்பட்டதை விட மேலதிகமாக யார் எதைக் கூறினாலும் அவை வெறும் கற்பனையே தவிர வேறில்லை.  மேற்கண்ட வசனங்களுக்கிடையே இது குறித்து அல்லாஹ்வே நன்கறிந்தவன் என்று கூறப்படுவதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மேலதிகமாக எந்த விளக்கமும் கூறாமல் இருந்தது ஆச்சரியப்படக்கூடிய விஷயம் அன்று.

எனவே இவ்வசனங்களில் கூறப்பட்டவைகளை மட்டும் அடிப்படையாக வைத்துத் தான் அவர்களின் வரலாறை நாம் அறிந்து கொள்ளும் நிலையில் இருக்கிறோம். 

ஆனால் கவலைப்பட வேண்டிய அம்சம் என்னவென்றால் எது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூட எதையும் மேலதிகமாகக் கூறவில்லையோ அது பற்றி விரிவுரை என்ற பெயரில் கட்டுக்கதைகளைப் புனைந்து எழுதியுள்ளனர்.

இவ்வாசகங்களிலிருந்து நாம் அறிந்து கொள்ளும் வரலாறு என்ன?  விரிவுரை என்ற பெயரில் இட்டுக்கட்டப்பட்டவை யாவை? என்பதை இனி காண்போம்.

குகைவாசிகளின் வரலாற்றைக் கூறும் ஒன்பது முதல் இருபத்தாறு வரையுள்ள வசனங்களின் தமிழாக்கத்தை இதுவரை நாம் கண்டோம்.  இனி ஒவ்வொரு வசனத்திற்குரிய விளக்கத்தை விரிவாகப் பார்ப்போம்.

குகை மற்றும் ரக்கீம் உடையவர்கள் நமது அத்தாட்சிகளில் ஆச்சரியமானவர்கள் என்று நீர் கருதுகின்றீரா?

(ஒன்பதாம் வசனம்)

என்று இவ்வரலாற்றை இறைவன் கூறத் துவங்குகின்றான்.

எந்த மனிதனும் வருடக் கணக்கில் உறங்கிட முடியாது.  பல நூறு வருடங்கள் உறங்கி விட்டு மீண்டும் விழித்தெழ முடியாது என்பதை மனிதன் சந்தேகமற அறிந்திருக்கிறான்.  பத்து நாட்கள் ஒருவர் உறக்கத்திலேயே இருக்கிறார் என்று கூறப்பட்டால் கூட அதை மனிதன் நம்ப மாட்டான்.  பல நூறு நாட்கள் அல்ல.  பலநூறு வருடங்கள் சில பேர் தூக்கத்தில் கழித்து விட்டு ஏதும் அறியாதவர்கள் போல் விழித்தெழுந்தார்கள் என்று கூறினால் எந்த மனிதனாலும் அதை நம்ப முடியாது.

இத்தகைய ஒரு நிகழ்ச்சி நிச்சயம் நடந்திருக்க முடியாது என்றே மனிதன் நினைப்பான்.  எனவே தான் இந்த அற்புத வரலாற்றைக் கூறுவதற்கு முன்னால் மனிதர்கள் அதை நம்புவதற்குரிய காரணங்களை இங்கே முதலில் குறிப்பிடுகிறான்.

மனிதர்களே! இதை உங்களது நிலையிலிருந்து நோக்காதீர்கள்.  இதைக் குகைவாசிகளின் சாதனை எனவும் கருதாதீர்கள்.  இதை நிகழ்த்திக் காட்டியவன் யார் என்ற கோணத்தில் இதைச் செவிமடுங்கள்.

இது உங்களையெல்லாம் படைத்து பரிபாலித்து வரும் சர்வ சக்தனாகிய நான் நிகழ்த்திக் காட்டிய அற்புதமாகும்.  நான் இவ்வுலகில் எண்ணிலடங்கா அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியுள்ளேன்.  அந்த அற்புதங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது இது மிகவும் சாதாரணமான நிகழ்ச்சி தான் என்று விளக்குவதற்காகவே "நமது அத்தாட்சிகளில் இது அதிசயமானது என நினைக்கிறீரா?'' என்று கேட்கிறான்.

வானங்களையும், பூமியையும் படைத்திருப்பது, எண்ணற்ற கோள்களைப் படைத்து அந்தரத்தில் மிதக்க விட்டிருப்பது, கோடானு கோடி உயிரினங்களைப் படைத்து அவற்றுக்குள் அதிசயங்களை நிகழ்த்தி வருவது, இவை யாவும் திட்டமிட்டபடி சீராக இயங்குவது போன்ற பேராச்சரியங்களைப் பார்க்கும் மனிதன் - இந்த அதிசயங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் குகைவாசிகள் பற்றிய நிகழ்ச்சியை எவ்வாறு மறுக்க முடியும்?

இறைவனால் எதுவும் இயலும் என்பதை நம்புகின்ற மக்களுக்கு இதை நம்புவதற்கு எந்தத் தயக்கமும் இருக்காது.  இருக்கக் கூடாது என்பதற்காகத் தான் துவக்கத்திலேயே தனது எண்ணற்ற அற்புதங்களை நினைவுபடுத்திக் காட்டுகிறான்.

இறைவனை நம்புகின்ற மக்களைப் பொறுத்த வரை அவர்கள் இந்நிகழ்ச்சியை நம்பிட இவ்வசனத்தில் இறைவன் எழுப்பியுள்ள கேள்வியே போதுமானதாகும்.

ஆனால் இறைவனையும், இறைவனது ஆற்றலையும் நம்பாதவர்கள் இதை எப்படி நம்புவார்கள்?  இது போன்ற அற்புதங்கள் உங்கள் மார்க்கத்தில் இருப்பதை விட அதிகமாகவும், பிரம்மாண்டமாகவும் ஏனைய மதங்களில் இருக்கின்றனவே! என்றெல்லாம் கேள்வி கேட்பவர்கள் இதை நம்ப வேண்டுமானால் இதற்கான தடயங்களைக் காட்ட வேண்டும். அப்போது தான் அவர்கள் நம்பிக்கை கொள்வார்கள். நம்பிக்கை கொள்ளாவிட்டாலும் ஆட்சேபனை செய்யாமலாவது இருப்பார்கள்.

இவர்களது வாதத்தையும் திருக்குர்ஆன் கவனத்தில் கொள்கிறது.  திருக்குர்ஆனில் கூறப்படும் அற்புதமான நிகழ்ச்சிகளுக்குரிய தடயங்கள் இன்றளவும் கிடைத்துக் கொண்டிருப்பது தான் இஸ்லாத்தின் தனிச் சிறப்பாகும்.

நூஹ் நபியவர்கள் காலத்தில் மாபெரும் வெள்ளப் பிரளயம் ஏற்பட்டது.  நூஹ் நபியவர்களும் அவர்களை ஏற்றவர்களும் கப்பல் தயாரித்து அதில் ஏறிக் கொள்ள, மற்றவர்கள் அடியோடு அழிக்கப்பட்டார்கள் என்ற அற்புத வரலாற்றை திருக்குர்ஆன் கூறுகிறது.  அப்போது ஏற்பட்ட வெள்ளப் பிரளயத்தினால் மலை உயரத்துக்கு தண்ணீர் உயர்ந்தது எனவும் திருக்குர்ஆன் கூறுகிறது.  மலை உயரத்துக்கு மேல் தண்ணீர் மட்டம் உயர்வதை யாராலும் நம்ப முடியாது.

இந்த அற்புத நிகழ்ச்சியை நிகழ்த்திய இறைவன், "வெள்ளம் வடியத் துவங்கிய போது நூஹ் நபியின் கப்பல் ஜூதி மலை மீது அமர்ந்தது" (அல்குர்ஆன் 11 : 44) என்று கூறுகிறான்.

மலையின் மீது அமர்ந்த கப்பல் பனிப்பொழிவுகளால் மறைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தது.  பின்னர் இம்மலை மீது உள்ள கப்பலை மனிதர்கள் கண்டு பிடித்தனர்.  இவ்வளவு உயரமான மலை மீது கப்பலைக் கொண்டு போய் யாரும் வைத்திருக்க முடியாது.  மலை மட்டத்திற்கு தண்ணீர் இருந்தால் மட்டுமே கப்பல் மலை உச்சிக்கு வர முடியும் என்ற முடிவுக்கு வந்து அந்த அதிசய நிகழ்ச்சியை உண்மைப்படுத்தினார்கள்.

இதே போல் குகை வாசிகள் குறித்த நிகழ்ச்சியிலும் இறை நம்பிக்கையற்றவர்கள் சந்தேகம் கொள்வார்கள் என்பதை நன்றாக அறிந்து வைத்துள்ள இறைவன் அந்த நிகழ்ச்சிக்கும் அற்புதமான தடயத்தை விட்டு வைத்துள்ளான்.

அந்தத் தடயத்தைக் காணும் உலகம் அதிசயித்து பிரமிக்கிறது.

அந்தத் தடயம் குறித்தும் இதே வசனத்திலேயே வல்ல இறைவன் குறிப்பிடுகிறான்.

அந்தத் தடயம் எது என்பதை இப்போது பார்ப்போம்.

அந்த நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்டவர்கள் ஒரு குகையில் தூங்கிய காரணத்தால் குகை வாசிகள் என்று குறிப்பிடப்படுகின்றனர்.  ஆனால் குகைவாசிகள் என்பதுடன் "ரகீம்'' வாசிகள் - ரகீம் உடையவர்கள் என்றும் இறைவன் குறிப்பிடுகின்றான்.

ரகீம் என்றால் ஏடு, எழுதப்பட்டது என்று பொருள்.  "அர் ரகீம்'' என்றால் அந்த ஏடு என்று பொருள்.

குகையில் தங்கியவர்களைப் பற்றி கூறுவதென்றால் குகைவாசிகள் என்று மட்டும் கூறினால் போதுமானது.  "அந்த ஏட்டுக்குரியவர்கள்'' என்று கூறுவது ஏன்?

ஏதோ ஓர் ஏட்டை அவர்கள் வைத்திருந்தார்கள் என்பதற்காக மட்டும் இவ்வாறு நிச்சயமாகக் கூறப்பட்டிருக்காது.  "அந்த ஏடு' என்று குறிப்பிட்டுச் சொல்வதென்றால் அது ஒரு முக்கியமான ஏடாக இருக்க வேண்டும்.

அந்த ஏடு ஒரு காலத்தில் கண்டெடுக்கப்பட்டு மக்களுக்கு அதில் உள்ள உண்மைகள் தெரிய வேண்டும் என்பதற்காகவே "அந்த ஏட்டுக்குரியவர்கள்'' என்று அல்லாஹ் கூறியிருக்க முடியும்.  அந்த ஏடு யாருக்குமே கிடைக்காது என்றால் "அந்த ஏடு'' என்று முக்கியத்துவப்படுத்தி இறைவன் கூறியிருக்க முடியாது.

அந்த ஏடு தான் இந்நிகழ்ச்சிக்குரிய முக்கியமான தடயம் என்று நாம் கூறுகிறோம்.

சாவுக்கடல் சாசனச் சுருள்கள் மேற்கண்ட தலைப்பில் 1998ம் ஆண்டு ஒரு மாதத்தில் பல தடவை பி.பி.சி. யில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.  அதில் சொல்லப்பட்ட செய்திகள் கேட்போர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவதாக இருந்தது.  இந்த நிகழ்ச்சியின் முதல் ஒளிபரப்பு 1993 ஆம் ஆண்டிலேயே காட்டப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.  அதன் விபரங்கள் :

1947-ஆம் ஆண்டு ஒரு நாள் ஆடு மேய்க்கும் ஓர் அரபுச் சிறுவன், காணாமல் போன தனது ஆட்டுக் குட்டி ஒன்றைத் தேடி சாவுக்கடலை ஒட்டிய ஜோர்டான் நாட்டு மலைப்பகுதிகளில் தேடி அலைந்தான்.  அந்த மலைப்பகுதி கும்ரான் மலைப்பகுதி என்று அழைக்கப்படுகிறது.

ஆட்டுக்குட்டியைத் தேடிய சிறுவன் அங்கிருந்த குகைக்குள் பார்த்த பொழுது, மண் சாடிகளில் சுருட்டி நிரப்பி வைக்கப்பட்ட தோல் ஆவணங்களைக் கண்டிருக்கின்றான்.  அவைகளில் சிலவற்றை எடுத்து வந்து செருப்புத் தொழிலாளியான தன் தந்தையிடம் கொடுக்க, மறுநாள் தந்தையும் மகனும் சேர்ந்து குகைக்குள் இருந்த அனைத்து சுருள்களையும் வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்தார்கள்.

அந்தப் பழைய தோல்களை தமது செருப்புத் தொழிலுக்குப் பயன்படுத்த எண்ணிய அந்தச் சிறுவனின் தந்தை தோல்களில் ஹிப்ரு மொழியில் எழுதப்பட்டிருந்த வார்த்தைகளின் பொருள் புரியாமல், அதை அப்பொழுது ஜோர்டான் மன்னர் ஆட்சியிலிருந்த கிழக்கு ஜெருசலத்தைச் சேர்ந்த ஒரு பழைய புத்தகக் கடைக்காரரிடம் காண்பித்திருக்கிறார்.

ஓரளவு ஹிப்ரு மொழியறிந்த அந்தக் கடைக்காரர் அந்தச் சுருள்கள் பழங்காலச் செய்திகளைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று கருதி, ஒரு சில தீனார்களுக்கு அத்தனை சுருள்களையும் அந்த செருப்புத் தொழிலாளியிடமிருந்து விலைக்கு வாங்கிக் கொண்டார்.  கிறித்தவரான அந்தப் புத்தகக் கடைக்காரர் அந்தச் சுருள்களை அந்நகரில் இருந்த கிறித்தவ ஆலயத்தில் ஒப்படைத்து விட்டார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் சுருள்கள் கண்டெடுக்கப்பட்ட விஷயம் வெளிப்பட்டது.  அதில் உள்ள செய்திகளைத் தெரிந்து கொள்வதற்கு யூதர்களும், முஸ்லிம்களும் ஆர்வம் காட்டினர்.  அப்போது ஜோர்டானை ஆட்சி செய்த மன்னர் ஹுசைன், அந்த சாசனச் சுருள்கள் முஸ்லிம், யூத, கிறித்தவர்கள் அடங்கிய ஒரு குழுவிடம் பொதுவாக ஒப்படைக்கப்பட்டு அவை ஆராயப்பட வேண்டும் என்று விண்ணப்பித்தார்.

ஆனால் கிறித்தவப் பாதிரியார்கள், அது தனியார் சொத்து என்று வாதிட்டு அதைப் பொதுவில் வைக்க மறுத்து விட்டனர். 

கிறித்தவர்களில் பல அறிஞர்களுக்கும் கூட அவைகளைப் படிப்பதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை.  இடைப்பட்ட ஐந்தாண்டு காலங்களில் ஜெருசலத்தில் இருந்த பாதிரிமார்கள் சில குழுக்களை ஏற்படுத்தி கும்ரான் மலைப்பகுதிகளில் இருந்த பொதுங்குகளில் தேடியலைந்து அங்கிருந்த சாசனச் சுருள்கள் அனைத்தையும் தங்கள் கைவசம் கொண்டு வந்து விட்டனர்.  1952ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அனைத்து சுருள்களும் கிறித்தவப் பாதிரிமார்கள் கையில் போய் சேர்ந்து விட்டன.  பதினைந்தாயிரம் மெனுஸ்கிரிப்ட் இவ்வகையில் இருப்பதாக தற்பொழுது கணக்கிட்டுள்ளனர்.

கடந்த ஐம்பதாண்டுகளுக்கு மேல் அந்த சாசனச் சுருள்களில் அடங்கிய செய்திகளை, ஒரு குறிப்பிட்ட கிறித்தவப் பாதிரிகள் அடங்கிய குழு இருட்டடிப்பு செய்து விட்டது. பல கிறித்தவ அறிஞர்களும் ஆராய்ச்சியாளர்களும் அதைப் படிப்பதற்கு ஆர்வம் கொண்டு கேட்ட போதெல்லாம், அவர்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது.

சாசனச் சுருள்களைக் கைவசம் கொண்ட குழுவில் ஒருவர் இறக்க நேரிட்டால் அவருக்குப் பதில் அக்குழுவில் உள்ள மற்றவர்களால் வேறொரு பாதிரியார் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவருக்கு மட்டுமே அதைப் படிப்பதற்கு உரிமை வழங்கப்பட்டு வந்தது.  இவ்விதமாகவே இவ்வளவு காலமும் அந்த சாசனச் சுருள்களின் செய்திகள் ரகசியமாக வைக்கப்பட்டு வந்தது.  இந்த இரகசியக் காப்பில் போப்பாண்டவரின் வாட்டிகன் சபை முன்னணியில் இருந்தது.

தோலில் பதிந்த அந்தப் பழங்கால சாசனம் அழிந்து விடும் நிலையைக் கண்ட அதன் ரகசியக் காப்பாளர்கள் அச்சாசனங்களை மைக்ரோபிலிம் எடுத்தார்கள்.  அதன் ஒரு செட் போட்டோ காப்பிகள் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருக்கும் ஒரு நூலகத்துக்கு ரகசிய பாதுகாப்புக்காக அனுப்பி வைக்கப் பட்டது.

1990-ம் ஆண்டு அந்த நூலகத்துக்குத் தலைவராக ஐஸ்மேன் என்ற அறிஞர் நியமிக்கப்\பட்டார்.  அவர் முன்பே அந்த சாசனச் சுருள்களைப் படிப்பதற்கு ஆர்வம் காட்டி, அதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டவர்.  இப்போது தனது அதிகாரத்தில் உள்ள நூலகத்தில் இருந்து சாசனச் சுருள்களின் நுண்ணிய போட்டோக்களை பெரிய அளவில் போட்டோ எடுக்கச் செய்து அவைகளைப் படித்தார்.  அவற்றைப் படித்தபோது தமக்கு வியப்பு ஏற்பட்டதாக வாக்குமூலம் அளிக்கின்றார்.  இத்தனை காலமும் கிறித்தவ சபை அந்த சாசனச் சுருள்களை மற்றவர்களுக்குக் காட்டாமல் இருந்ததன் உள்நோக்கம் என்ன என்பதையும் புரிந்து கொண்டதாகக் கூறுகின்றார்.

மைக்கேல் வைஸ் என்னும் சிகாகோ பல்கலைக் கழக ஹிப்ரு மொழிப் பேராசிரியர் ஒருவரின் உதவியைக் கொண்டு அந்த சாசனச் சுருள்களில் முக்கியமானது என்று அவர் கருதிய 100 மெனுஸ்கிரிப்ட்-களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிடுகின்றார்.  அந்தப் புத்தக வெளியீடு கிறித்தவ உலகத்தை உலுக்கியது என்றும் குறிப்பாக கிறித்தவ மத ஆலயங்கள் பேரதிர்ச்சியில் உறைந்து போயின என்றும் அந்த டாக்குமென்டரியின் செய்தியாளர் கூறுகின்றார்.

மேற்கத்திய மக்களின் மத நம்பிக்கையைத் தகர்ப்பதாக அந்தப் புத்தக வெளியீடு இருந்தது என்றும் ஆகவே அந்த இரு அறிஞர்களும் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்ற அச்சம் இருந்தது என்றும் அதன் செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.  அப்படி எது நடந்தாலும் அதைத் தாங்கள் எதிர் கொள்ளத் தயாராக இருப்பதாகவும் இதற்கு அஞ்சி ஒரு மிகப் பெரும் பேருண்மையை உலகத்திலிருந்து தாங்கள் மறைக்க விரும்பவில்லை என்றும் அவ்விரு அறிஞர்களும் வெளிப்படையாகக் கூறுவதையும் அந்தத் தொலைக்காட்சி டாக்குமெண்டரி பதிவு செய்து காட்டுகின்றது.

கிறித்தவப் பாதிரியார்கள் இவ்வளவு காலமும் "சாவுக்கடல் சாசனச் சுருள்களை'' ரகசியமாக வைத்திருந்ததன் காரணத்தை அந்த இரு அறிஞர்களும் விளக்குகின்றார்கள்.

இந்த சாசனங்கள் கும்ரான் மலைப்பகுதிகளில் அக்கால ரோமர்களின் ஆட்சியை எதிர்த்து ரகசியமாகக் குடியேறியவர்களால் எழுதப் பட்டிருக்கின்றது.  அவர்கள் "எஸ்ஸீன்ஸ்'' என்ற பெயரால் அழைக்கப் படுகின்றனர்.  அவர்கள் இல்லற வாழ்வைத் துறந்தவர்கள்.  தமது பணியின் கடுமை கருதி அவர்கள் துறவறம் மேற்கொண்டவர்கள்.  ஏசு பிறப்பதற்கு 300 ஆண்டுகளுக்கு முன்பே யூதர்கள் மத்தியில் இந்த இறைப் பணியாளர்கள் இருந்தார்கள்.  அவர்களின் தலைவர்கள் பலர் "மெஸய்யா'' (மஸீஹ்) என்று அழைக்கப்படுகின்றார்கள்.  எனவே மெஸய்யா என்பது ஏசுவுக்கு மட்டும் உள்ள பிரத்தியேகப் பெயர் அல்ல.  ஒரு தலைவர் ரோமர்களால் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டால் மற்றொருவர் அந்தப் பொறுப்புக்கு வருகிறார்.  அதைத் தான் "மஸீஹ் - உயிர்த்தெழுந்தார்' (தங்ள்ன்ழ்ழ்ங்ஸ்ரீற்ங்க்) என்று அவர்கள் கூறி வந்தார்கள்.  மஸீஹை சிலுவை மூலம் கொலை செய்வது யூதர்கள் காலத்தில் இருந்த வழக்கம்.  இப்படி பலர் ரோமர்களால் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.  உதாரணமாக ஜேம்ஸ் என்ற நல்ல தலைவர் இருந்தார்.  அவரும் "மெஸய்யா'' என்றே சாசனத்தில் அழைக்கப்படுகிறார்.  அவரை சிலுவையில் அறைந்தே ரோமர்கள் கொலை செய்கின்றார்கள்.

அந்த "எஸ்ஸீன்ஸ்'களில் இருந்து வந்தவர் தான் ஏசு.  ஆகவே தான் அவரும் "மெஸய்யா' என்று குறிப்பிடப் படுகின்றார். ஏசு ஒன்றும் சாந்த சொரூபி அல்ல.  ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்ட வேண்டும் என்பதெல்லாம் அவர் கொள்கை அல்ல.  இப்போது ஏசுவைப் பற்றி சொல்லப்படுவதற்கு சாசனச் சுருள்களில் எந்த ஆதாரமும் இல்லை.  ஏசு ரோமர்களை எதிர்க்க ரகசியமாக ஒரு படையைத் தயாரித்துக் கொண்டிருந்தார் என்பதற்கே ஆதாரங்கள் இருக்கின்றன.

கிறித்தவ மத ஆலயங்களில் இப்போது ஏசுவின் பெயரால் செய்யப்படும் மதச் சடங்குகளும், வழிபாடுகளும் ஆரம்ப கிறித்தவர்களிடையே நடைபெறவில்லை என்பதையே சாசனச் சுருள்கள் நிரூபிக்கின்றன. இந்தச் சடங்குகளுக்கும் ஏசுவின் பிரச்சாரத்திற்கும், கொள்கை கோட்பாடுகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.  அவை அனைத்தும் "பவுல்' என்பவரால் பிற்காலத்தில் ஏற்படுத்தப்பட்டவை.  மொத்தத்தில் இப்போது ஏசுவின் பெயரால் சொல்லப்படும் அனைத்து கிறித்தவக் கொள்கைகளும் பொய்யானது.  அவற்றை ஏசுவிற்கு அடுத்த தலைமுறையில் வாழ்ந்த உண்மையாளர்களின் வாழ்வில் காண முடியவில்லை.

மேற்கண்டவாறு அறிஞர் ஐஸ்மேன் கூறி வரும்போது, ஒரு யூதரிடம் அவற்றைப் பற்றி வாதம் செய்யும் போது, ஒற் ஸ்ரீர்ய்ச்ண்ழ்ம்ள் ணன்ழ்ஹய் - அது குர்ஆனை உறுதிப்படுத்துகிறது என்று ஆணித்தரமாகக் கூறுகின்றார். அவ்விடத்தில் அந்த வாதம் நிறுத்தப்பட்டு மறு காட்சி காட்டப்படுகின்றது.

இதே முறையில் மைக்கேல் வைஸ் என்ற அறிஞரும் பேசும் போது, ஒற் ஸ்ரீர்ய்ச்ண்ழ்ம்ள் ஒள்ப்ஹம் - அது இஸ்லாத்தை உறுதிப்படுத்துகின்றது என்று கூறுகின்றார். இங்கும் காட்சி மாற்றப்படுகின்றது.  ஆகவே இந்த சாசனச் சுருள்கள் எப்படி குர்ஆனையும் இஸ்லாத்தையும் உண்மைப்படுத்துகின்றன என்று அவர்கள் கூறுகின்றார்கள் என்பதை பார்வையாளர்கள் அறிய முடியவில்லை.  அதன் பிறகு தான் அந்த டாக்குமெண்டரியை நான் பதிவு செய்தேன்.  பலமுறை பார்த்தேன்.  ஓரளவு தெளிவான பின் அந்த அறிஞர்களின் கருத்துக்கு ஆதாரத்தைத் தேடி ஆராய்ச்சியில் இறங்கினேன்.

அந்த ஆராய்ச்சியின் போது திருக்குர்ஆனின் 18-ம் அத்தியாயம் "குகை' என்ற தலைப்பில் இருப்பது என் கவனத்தைக் கவர்ந்தது. அங்கு குகை வாழ் தோழர்களின் ஆச்சரியமான வாழ்க்கையின் செய்திகள் சொல்லப்படுகின்றன. அந்தத் தோழர்கள் ஆரம்ப காலத்தில் ஏசுவின் வழியை மேற்கொண்ட கிறித்தவர்கள் என்று பல அறிஞர்கள் தங்கள் உரைகளில் கூறுகின்றார்கள்.

"தஜ்ஜாலின் பாதிப்பிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள விரும்புபவர்கள் குகை அத்தியாயத்தின் முதல் பத்து வசனங்களை நினைவுபடுத்திக் கொள்ளட்டும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய ஹதீஸ் உள்ளது என்று ஓர் அறிஞர் கூறுகின்றார்.  தஜ்ஜால் என்பதற்கு ஏசு எதிர்ப்பாளர் என்றும் குழப்பவாதி என்றும் பொருள் இருப்பதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.  ஆகவே இதிலிருந்து தஜ்ஜால் யாராக இருக்க முடியும் என்பதையும் நாம் அறிய முடியும் என்பது அவரின் வாதம்.

அந்தச் செய்தியிலிருந்து நாம் ஆச்சரியமான உண்மையைத் தெரிந்து கொள்கிறோம்.

ஈஸா (அலை) அவர்களுக்கு இறைவன் இஞ்சீல் எனும் வேதத்தை வழங்கியதாக திருக்குர்ஆன் பல இடங்களில் கூறுகின்றது.

ஆனால் கிறித்தவ சமுதாயத்திடம் அந்த வேதம் இருக்கின்றதா என்றால் நிச்சயமாக இல்லை எனலாம்.

ஏனெனில் பைபிளின் புதிய ஏற்பாடு என்பது இயேசுவுக்கு கடவுள் வழங்கியதன்று.  மாறாக ஏசுவைப் பற்றி மற்றவர்கள் எழுதிய குறிப்புகள் தான் புதிய ஏற்பாடு.

பைபிளின் பல இடங்களில் இயேசு, ராஜ்ஜியத்தின் சுவிஷேசத்தைப் பிரசங்கித்தார் என்று கூறப்பட்டுள்ளது.

ராஜ்ஜியத்தின் சுவிஷேசம் என்பதை மறைத்துவிட்டு ஈஸா நபியைப் பற்றி உண்மையையும் பொய்யையும் கலந்து எழுதியதே பைபிள்.  (அதிக விபரங்களுக்கு இதுதான் பைபிள் என்ற நமது நூலைப் பார்வையிடுக)

எந்த இறைவேதத்தை அவர்கள் மறைத்தார்களோ அதைத் தான் இயேசுவின் வழிவந்த நல்ல மனிதர்கள் தங்களுடன் எடுத்துச் சென்று குகையில் தங்கினார்கள் என்று முடிவு செய்யப் போதுமான காரணம் இருக்கிறது.

"குர்ஆனை ஒத்திருக்கின்றது'' என்பது தான் அந்தச் சுருள்களைப் படித்த கிறித்தவ அறிஞர்களின் கருத்தாகும்.

இஞ்சீல் எனும் வேதத்தை குர்ஆன் மெய்ப்பிப்பதாக திருக்குர்ஆனும் பல இடங்களில் குறிப்பிடுகின்றது.

அடுத்ததாக அதை வாசித்த பாதிரியார்கள் திட்டமிட்டு மறைத்ததும் அந்தக் கருத்தை உறுதிப்படுத்துகின்றது.  இதுதான் இயேசுவின் வேதமாக இருக்க முடியும், இது அம்பலமானால் காலா காலமாக தாங்கள் போதித்த கொள்கைக்கு சாவுமணி அடிக்கப்படும் என்று இவர்கள் அஞ்சியதே இதை மேலும் உறுதிப்படுத்துகின்றது.

மனிதர்களால் எழுதப்பட்ட ஏட்டுக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளித்து இறைவன் கூறியிருக்க மாட்டான் என்பதும் இக்கருத்தை மேலும் உறுதிப்படுத்துகின்றது.

குகைவாசிகளும் (இவர்கள் திட்டமிட்டு மறைத்த) அந்த ஏட்டுக்குரியவர்களும் நமது அத்தாட்சிகளில் ஆச்சரியமானவர்கள் என்று எண்ணுகிறீர்களா? என்ற வசனத்தை வாசிக்கும் போது நம்மையும் அறியாமலே நாம் ஆச்சரியத்தின் விளிம்புக்குச் சென்று விடுகின்றோம்.

நாற்பது வயதில் தான் சட்டதிட்டங்களா?

(ஒற்றுமை மாதமிருமுறை இதழில் தேர்வு செய்யப்பட்ட குர்ஆன் வசனங்களுகு பீஜே எழுதிய விளக்கம்)

15. தனது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தினோம். அவனை அவனது தாய் சிரமத்துடன் சுமந்தாள். சிரமத்துடனே ஈன்றெடுத்தாள். அவனைச் சுமந்ததும், பால்குடியை மறந்ததும் முப்பது மாதங்கள்.314 அவன் தனது பருவ வயதை அடைந்து, நாற்பது வயதை அடையும்போது "என் இறைவா! எனக்கும் என் பெற்றோருக்கும் நீ செய்த அருட்கொடைக்கு நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் நல்லறத்தை நான் செய்யவும் வாய்ப்பளிப்பாயாக! எனக்காக எனது சந்ததிகளைச் சீராக்குவாயாக! நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நான் முஸ்லிம்களில்295 ஒருவன்'' என்று கூறுகிறான்.340

திருக்குர்ஆன்: 46:15

இவ்வசனம் என்ன கூறுகிறது என்பதில் பல    நூற்றாண்டுகளாக எவருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இருக்கவில்லை.

குர்ஆன் மட்டுமே போதும் என்று கூறிக் கொண்டு குர்ஆன் எந்த மொழியில் அருளப்பட்டதோ அம்மொழியின் அரிச்சுவடி கூட அறியாத ராஷாத் கலீபா என்பவனும் அவனைப் போன்றவர்களும் இவ்வசனத்தைத் தங்களின் நச்சுக் கருத்துக்குப் பயன்படுத்திக் கொண்டு வருகின்றனர்.

நாற்பது வயது வரை மனிதன் மீது எந்தக் கடமையும் கிடையாது. நாற்பது வயது வரை மனிதன் எப்படி வாழ்ந்தாலும் அல்லாஹ் மன்னித்து விடுவான் என்பது இந்த மூடர்கள் இவ்வசனத்துக்கு அளிக்கும் விளக்கமாகும்.

நாற்பது வயதை அடையும் போது என்ற வாசகத்தைத் தான் இவர்கள் தங்களின் கூற்றுக்குச் சான்றாக எடுத்துக் கொள்கின்றனர். இதற்கு அடுத்து வருகின்ற வசனத்தில் இவர்களது நன்மைகளை ஏற்று தீமைகளை மன்னிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அதையும் தங்கள் வாதத்துக்குப் பலம் சேர்ப்பதற்கு எடுத்துக் காட்டுகின்றனர்.

நாற்பது வயது வரை மனிதன் மீது எதுவும் கடமையாவதில்லை என்று வாதிட்டாலும், அது தவறாகும்.

நாற்பது வயதுக்கு முன்பே மனிதன் மீது கடமைகள் சுமத்தப்பட்டு விடுகின்றன. ஆயினும், மன்னிப்புக் கேட்டால் நாற்பது வயது வரை அல்லாஹ் மன்னிப்பான் என்று கூறினாலும் அதுவும் தவறானதாகும்.

இவ்வாறு வாதிடுவதற்கு ஏற்ற வகையில் இவ்வசனம் அமைந்திருக்கவில்லை. இவ்வசனம் என்ன கூறுகிறது என்பதை அறிவதற்கு முன்னால் மனிதன் மீது எப்போது முதல் பொறுப்புகளும், கடமைகளும் சுமத்தப்படுகின்றன என்பதைப் பார்ப்போம்.

அனாதைகள் பருவம் அடைவது வரை அழகிய முறையில் தவிர அவர்களின் சொத்துக்களின் பக்கம் நெருங்காதீர்கள்.

திருக்குர்ஆன்: 6:152, 17:34

பிறரது பராமரிப்பில் வளரும் அனாதைகள் சுயமாகப் பொறுப்பேற்கும் காலம் குறித்து இவ்வசனம் விளக்குகிறது. அனாதைகள் பருவம் அடைந்து விட்டால் தாங்கள் சொத்துக்களைத் தாங்களே நிர்வகித்துக் கொள்வார்கள். அதுவரை தான் மற்றவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்பது இவ்வசனத்தின் வழிகாட்டுதலாகும்.

பருவமடைதல் என்றால் அது தான் நாற்பது வயதை அடைதல் என்று விளக்கம் கூறுவோரும் விபரம் கெட்டவர்களும் உள்ளனர். பருவம் அடைதல் என்றால் உடலுறவு கொள்ளத் தகுதியை அடைதல் தான் என்று அல்லாஹ்வே தெளிவாகக் கூறி விடுகிறான்.

அனாதைகளைப் பரீட்சித்துப் பாருங்கள்! அவர்கள் உடலுறவு கொள்ளும் பருவத்தை அடைந்து அவர்களிடம் நீங்கள் திறமையைக் கண்டால் அவர்களின் செல்வங்களை அவர்களிடம் வழங்கி விடுங்கள்.

திருக்குர்ஆன்: 4:6

உடலுறவு கொள்ளும் பருவம் என்று தமிழாக்கம் செய்த இடத்தில் நிகாஹ் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. "நிகாஹை அவர்கள் அடையும் போது'' என்பதற்கு உடலுறவு கொள்ளும் பருவத்தை அடைதல் என்பதே பொருளாகும். பருவம் அடைதல் என்று எதை நாம் கூறுகிறோமோ அதுவே மனிதன் முதிர்ச்சியடையும் வயதாகும் என்று இவ்வசனத்திலிருந்து அறியலாம்.

சொத்துக்களைப் பாராமரிப்பது பற்றித் தானே இவ்வசனங்கள் கூறுகின்றன. மார்க்கத்தின் சட்ட திட்டங்கள் அதாவது வணக்க வழிபாடுகளுக்கு இவ்வாறு கூறப்பட்டுள்ளதா என்று சிலருக்குத் தோன்றலாம்.

அவ்வாறு கூறப்படாவிட்டாலும் அறிவுடையோர் இதிலிருந்து அதை விளங்கிக் கொள்ள இயலும். ஏனெனில், சொந்தமாக- சுயமாக மனிதன் இயங்கும் வயது இது தான் என்று கூறுவதே போதுமானதாகும்.

ஆனாலும், இவர்கள் எதை விரும்புகிறார்களோ அதையும் அல்லாஹ் கூறாமல் இல்லை.

பிறரது வீடுகளுக்குச் செல்லும் போது அனுமதி கேட்ட பிறகு தான் செல்ல வேண்டும் என்பது திருக்குர்ஆனின் கட்டளையாகும். ஆனால், சிறுவர்கள் அனுமதி கேட்கத் தேவையில்லை என்பதும் குர்ஆனுடைய கட்டளை ஆகும்.

சிறுவர்களுக்கு வழங்கப்பட்ட இந்தச் சலுகை எதுவரை என்றால் நாற்பது வயது வரை அல்ல. மாறாக, பருவம் அடையும் வரை தான் என்று அல்லாஹ் கூறுகிறான்.

இன்னும் உங்களிலுள்ள குழந்தைகள் பருவ வயதை அடைந்துவிட்டால் அவர்களும், தங்களுக்கு (வயதில்) மூத்தவர்கள் அனுமதி கேட்பவர்கள் போல் அனுமதி கேட்க வேண்டும்; இவ்வாறே அல்லாஹ் தன்னுடைய வசனங்களை உங்களுக்கு விவரிக்கிறான்; அல்லாஹ் (யாவற்றையும்) அறிந்தவன்; ஞானமிக்கவன்.

திருக்குர்ஆன் 24:59

சிறுவர்கள் பருவ வயதை அடைந்தவுடன் பெரியவர்களுக்குரிய சட்டத்திற்குள் வந்து விடுகிறார்கள் என்பதை இவ்வசனத்திலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

இப்போது விளக்கத்திற்காக நாம் எடுத்துக் கொண்ட வசனத்திற்கு வருவோம். இவ்வசனத்தில் பருவம் அடைவது நாற்பது வயதில் தான் என்று கூறப்படவே இல்லை. மாறாக அதற்கு எதிரான கருத்தே கூறப்பட்டுள்ளது.

"மனிதன் பருவத்தை அடைந்து மேலும், நாற்பது வயதை அடையும் போது'' என்று தான் இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளது. பருவத்தை அடைவதே நாற்பது வயதில் என்றால் இவ்வாறு கூற முடியாது. இரண்டில் ஏதேனும் ஒன்றைக் கூறினாலே போதுமானதாகும்.

பருவ வயதை அடைதல் என்பது வேறு.

நாற்பது வயதை அடைதல் என்பது வேறு

என்பதை இவ்வசனத்திலிருந்து முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

"நாற்பது வயதை அடையும் போது'' என்ற சொற்றொடரை இங்கே ஏன் குறிப்பிட வேண்டும்? இதற்கு இவ்வசனத்திலேயே விடை கிடைக்கிறது.

பொதுவாக மனிதன் பருவம் அடையும் போது பெற்றோரின் மகத்துவத்தை உணராதவனாக இருக்கிறான். தாய் அவனைக் கஷ்டப்பட்டு சுமந்ததையும், பெற்றதையும் கூட அவன் நினைப்பதில்லை. அவனுக்குத் திருமணம் ஆகும் போது பெற்றோர் மேலும் தேவையற்றவர்களாக மனிதனுக்குத் தோன்றுகிறார்கள். உடல் சுகத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பெற்றோரை, உதாசீனம் செய்கிறான். அவனுக்கு ஒரு குழந்தை அல்லது பல குழந்தைகள் பிறக்கின்றன. அப்போதாவது பெற்றோரின் மதிப்பை உணர்கிறானா என்றால் அதுவுமில்லை.

அவன் பெற்ற பிள்ளை பருவ வயதை அடைந்து அவனையே எதிர்த்துப் பேசும் போது தான் பெற்றோரை மதிக்க வேண்டும் என்ற உணர்வு வருகிறது! நாம் நமது தந்தையை நடத்தியது போலவே நமது மகன் நம்மை நடத்த ஆரம்பித்து விட்டானே என்று அதிர்ச்சியடைந்து காலம் கடந்து பெற்றோரின் மதிப்பை உணர்கிறான். இந்த நிலையை சராசரியாக மனிதன் நாற்பது வயதில் அடைகிறான்.

இருபது வயதில் அவன் திருமணம் செய்திருந்தால் தனது நாற்பதாவது வயதில் 20 வயது மகனைப் பெறுகிறான். 25 வயதில் தாமதமாகத் திருமணம் செய்தால் கூட நாற்பதாவது வயதில் 15 வயது மகனைப் பெற்றிருப்பான்.

தனது பிள்ளை தன்னை உதாசீனம் செய்யும்  போது தான் தந்தையின் மதிப்பை மனிதன் உணர்கிறான். இதற்கு இவ்வளவு காலம் மனிதனுக்கு தேவைப்படுகிறது.

பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு கட்டளை!

கருவில் சுமந்தபோது தாய்பட்ட கஷ்டம்!

பெற்றெடுக்கும் போது அவள் படுகின்ற சிரமம்!

இவற்றையெல்லாம் சுட்டிக் காட்டிய பின் " நாற்பது வயதை அடையும் போது'' என்று கூறுவதிலிருந்து அறிவுடைய யாரும் இதை அறியலாம்.

"என் பிள்ளைகளை எனக்கேற்றவாறு ஆக்கு'' என்று நாற்பது வயதில் மனிதன் வேண்டுவதாகவும் இவ்வசனம் கூறுகிறது. பிள்ளை பெற்று அவன் பருவ வயதை அடையும் போது தான் மனிதன் தனது பெற்றோரை நினைத்துப் பார்க்கிறான் என்பதை இது மேலும் உறுதிப்படுத்துகிறது.

நான் பெற்றோரை மதிக்காதது போல என் பிள்ளைகள் என்னை மதிக்காதவாறு செய்திடாதே! நான் நல்ல முஸ்லிமாக நடந்து கொள்கிறேன் எனக் கூறி திருந்துகிறான். இவ்வசனத்தை ஆரம்பம் முதல் கடைசி வரை கவனமாக வாசிக்கும் போது நாற்பது வயதை அடையும் போது பெற்றோரின் மகிமையை மனிதன் உணர்கிறான் என்பது தான் கூறப்படுகிறதே தவிர நாற்பது வயது வரை ஆட்டம் போட எந்த அனுமதியும் இவ்வசனத்தில் இல்லை.

உடல் முறுக்குடன் மனிதன் இருக்கும் போது தான் அவனை நெறிப்படுத்திட ஒரு வாழ்க்கைத் திட்டம் தேவைப்படுகிறது. உடல் தளர்ந்த பின் பல தீமைகளைச் செய்வதற்குரிய வலுவை உடல்  தானாக இழந்து விடும். இவர்களை விட இளமைப் பருவத்தில் உள்ளவர்களை நெறிப்படுத்தத் தான் சட்ட திட்டங்கள் தேவை.

ஆனால், இந்த மூடர்கள் நாற்பது வயது வரை எப்படி வேண்டுமானாலும் ஆட்டம் போடலாம் என்று நரகின் விறகுக் கட்டைகளாக மாறுகின்றனர்.

நாற்பது வயது வரை எது வேண்டுமானாலும் செய்யலாம் என்பதை நாலைந்து மனநோயாளிகளான இவர்கள் மட்டும் கூறுவதால் இதன் விபரீதம் புரியவில்லை. உலகில் உள்ள அனைவரும் இந்தச் சித்தாந்தத்தைச் கடைப்பிடித்தால் என்னவாகும்? என கொஞ்சம் கற்பனை செய்து பார்த்தால் கூட இது எந்த அளவு ஆபத்து என்பதை உணர்வார்கள்.

இவ்வாறு கூறுகின்றவர்களிடம் நாற்பது வயதுக்கும் குறைவான சிலர் சென்று இழுத்துப் போட்டு உதைத்தால் - இவர்களின் பெண்களிடம் தகாத முறையில் நடந்தால் - இவ்வளவையும் செய்து விட்டு எங்களுக்கு நாற்பது வயது ஆகவில்லை என்பதால் பெரிதுபடுத்தாதீர்கள் என்று கூறினால் இந்த வசனத்தின் சரியான அர்த்தம் அவர்களுக்கு உடனே விளங்கி விடும்.

பருவம் அடைந்தவுடன் சட்ட திட்டங்கள் நடைமுறைக்கு வந்து விடுகின்றன. நாற்பது வயது வரை அவை மன்னிக்கப்படும் என்றே நாம் கூறுகிறோம் என்று இவர்கள் சமாளிக்கக்கூடும்.

அல்லாஹ்வின் மன்னிப்பு என்பது நாற்பது வயதுக்கு மேற்பட்டவனுக்கு இல்லையா? ஐம்பது வயதுடையவன் மன்னிப்புக் கேட்டால் அல்லாஹ் மன்னிக்க மாட்டானா? என்று கேட்டால் திருதிருவென முழிப்பார்கள்!

மன்னிப்புக் கேட்டு மன்னிப்பதற்கு வயது வரம்பு இல்லை. மன்னிப்புக் கேட்காமலே மன்னிப்பு கிடைப்பதற்குத் தான் நாற்பது வயது வரம்பு என்று உளறுவார்கள்!

மனோ இச்சையை மார்க்கமாக்கிக் கொண்டவர்களே! இவ்வசனத்தில் நாற்பது வயதுடையவன் " நான் மன்னிப்புக் கேட்கிறேன்'' என்று பாவமன்னிப்புத் தேடுவதாகத் தான் கூறப்பட்டுள்ளது. பாவமன்னிப்புக் கேட்காமல் மன்னிப்பதாக இங்கே கூறப்படவில்லை என்பதையாவது விளங்க மாட்டீர்களா?

More Articles …