Sidebar

27
Mon, Jul

பன்றி ஹராம்

உண்ணுதல் பருகுதல்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பன்றி ஹராம்

தாமாகச் செத்தவை, இரத்தம் ஆகியவற்றைத் தொடர்ந்து பன்றியின் மாமிசத்தை இறைவன் விலக்கியுள்ளதாக கூறுகின்றான்.

இந்த வார்த்தை மிகவும் விரிவாக ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும். அந்த ஆராய்ச்சியில் இறங்கும் முன் தமிழக முஸ்லிம்களிடம் நிலவும் தவறான வழக்கத்தைச் சுட்டிக்காட்டுவது அவசியமாகிறது.

இறைவன் பன்றியிறைச்சியைத் தடை செய்துள்ளதால் பன்றியை முஸ்லிம்கள் கடுமையாக வெறுக்கின்றனர். இந்த வெறுப்பு எல்லை மீறிப் பன்றி என்ற வார்த்தையைக் கூட அவர்கள் பயன்படுத்துவதில்லை. நாலுகால் பிராணி, கட்டைக்கால், பொல்லாமிருகம் என்பது போன்ற வார்த்தைகளையே பன்றியைக் குறித்துப் பயன்படுத்தி வருகின்றனர்.

பன்றி என்று கூறிவிட்டால் வாயைக் கழுவ வேண்டும், உலூச் செய்ய வேண்டும், குளிக்க வேண்டும் என்றெல்லாம் கூறுவோரும் நம்மிடையே உள்ளனர். இதன் மூலம் தாங்கள் அதிகம் பேணுதல் உள்ளவர்கள் என்று நினைத்துக் கொள்கின்றனர்.

இந்தப் போக்கு பக்தியின் வெளிப்பாடோ பேணுதலின் அடையாளமோ அல்ல. பன்றியை உண்ணக்கூடாது என்று இறைவன் நமக்குக் கட்டளையிட்டுள்ளான். அந்த வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என்று அல்லாஹ்வோ அவன் தூதரோ நமக்குத் தடை விதிக்கவில்லை.

திருக்குர்ஆனில் நான்கு இடங்களில் கின்ஸீர் (பன்றி) எனும் வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

கனாஸீர் (பன்றிகள்) என்ற வார்த்தை ஒரு இடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வார்த்தையே தடை செய்யப்பட்டது என்றால் இறைவன் அந்த வார்த்தையைப் பயன்படுத்தியிருக்க மாட்டான். இறைத்தூதரும் பன்றி என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளனர். அதன் பின்பு வாய் கழுவவில்லை. அந்த வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக உலூச் செய்யவும் இல்லை. உலூச் செய்ய ஏவவுமில்லை.

எனவே இந்த தவறான நம்பிக்கையிலிருந்து முஸ்லிம்கள் விடுபடவேண்டும்.

தடை செய்யப்பட்டவற்றை விளக்கும் போது பன்றி எனக் கூறாமல் பன்றியின் மாமிசம் என்று இறைவன் கூறுகின்றான்.

பன்றியின் அனைத்துப் பாகங்களும் தடை செய்யப்பட்டிருந்தால் பன்றி தடுக்கப்பட்டது என்று இறைவன் கூறியிருப்பான். பன்றியின் மாமிசம் என்று இறைவன் இங்கே கூறுகிறான். எலும்பு, கொழுப்பு, குடல், ஈரல், நுரையீரல், கல்லீரல், இறைச்சி என்று பல்வேறு பொருட்கள் பிராணிகளில் உள்ளன. ஒவ்வொன்றையும் குறிக்க தனித்தனி வார்த்தைகள் உள்ளன. பன்றியின் அனைத்துப் பாகங்களும் தடை செய்யப்பட்டவை என்றால் பன்றி தடை செய்யப்பட்டது என்று இறைவன் கூறியிருப்பான். அவ்வாறு கூறாமல் பன்றியின் இறைச்சி என்ற வார்த்தையை இறைவன் பயன்படுத்தியுள்ளான். அப்படியானால் பன்றியின் இறைச்சியைத் தவிர மற்ற பகுதிகளை உண்ணலமா? என்ற ஐயம் பலருக்கும் தோன்றலாம்!

இவ்வாறு புரிந்து கொள்வதற்கு ஏற்ற வகையில் தான் பன்றியின் இறைச்சி என்ற வாசகம் அமைந்துள்ளது. ஆயினும் பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு பன்றியின் அனைத்துப் பாகங்களுமே ஹராம் என்று விளங்கலாம்.

صحيح البخاري

2236 - حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّهُ: سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ عَامَ الفَتْحِ وَهُوَ بِمَكَّةَ: «إِنَّ اللَّهَ وَرَسُولَهُ حَرَّمَ بَيْعَ الخَمْرِ، وَالمَيْتَةِ وَالخِنْزِيرِ وَالأَصْنَامِ»، فَقِيلَ: يَا رَسُولَ اللَّهِ، أَرَأَيْتَ شُحُومَ المَيْتَةِ، فَإِنَّهَا يُطْلَى بِهَا السُّفُنُ، وَيُدْهَنُ بِهَا الجُلُودُ، وَيَسْتَصْبِحُ بِهَا النَّاسُ؟ فَقَالَ: «لاَ، هُوَ حَرَامٌ»، ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ ذَلِكَ: «قَاتَلَ اللَّهُ اليَهُودَ إِنَّ اللَّهَ لَمَّا حَرَّمَ شُحُومَهَا جَمَلُوهُ، ثُمَّ بَاعُوهُ، فَأَكَلُوا ثَمَنَهُ»، قَالَ أَبُو عَاصِمٍ، حَدَّثَنَا عَبْدُ الحَمِيدِ، حَدَّثَنَا يَزِيدُ، كَتَبَ إِلَيَّ عَطَاءٌ، سَمِعْتُ جَابِرًا رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் மதுபானம், தாமாகச் செத்தவை, பன்றி மற்றும் சிலைகளை விற்பனை செய்வதைத் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்கள்: புகாரி 2236, முஸ்லிம் 2960, திர்மிதீ 1218, நஸயீ 4183, 4590, அபூதாவூத் 3025, இப்னுமாஜா 2158, அஹ்மத் 13948, 13971

பன்றியின் மாமிசத்தை மட்டுமின்றி பன்றியையே விற்பனை செய்ய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துவிட்டதாக இந்த ஹதீஸ் கூறுகிறது. எது விற்பனை செய்யத் தடை செய்யப்பட்டு விட்டதோ அதை உண்பதும் ஹராம் என்பதை முன்னர் விளக்கியுள்ளோம்.

ஆகவே பன்றியின் மாமிசம் என்று குர்ஆனில் கூறப்பட்டிருந்தாலும் பன்றி முழுமையாகவே தடை செய்யப்பட்டு விட்டதாக ஹதீஸ்களில் கூறப்படுவதால் பன்றியை முழுமையாகத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என அறியலாம்.