Sidebar

22
Wed, Jul

233. பதவியைக் கேட்டுப் பெறலாமா?

இவ்வசனத்தில் (12:55) என்னை இப்பூமியின் கருவூலங்களுக்கு அதிகாரியாக நியமியுங்கள் என்று யூஸுஃப் நபி கேட்டதாகக் கூறப்படுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "அதிகாரத்தைக் கேட்காதே! நீ கேட்டு அது உனக்கு வழங்கப்பட்டால் அது உன் பொறுப்பிலேயே விடப்படும். கேட்காமல் உனக்குக் கொடுக்கப்பட்டால் நீ (இறைவனால்) உதவி செய்யப்படுவாய்'' என்று கூறியுள்ளார்கள். (நூல் : புகாரீ 6622)

மேற்கண்ட வசனத்திற்கு முரண்படும் வகையில் இந்த நபிமொழியைப் புரிந்து கொள்ளக் கூடாது.

யூஸுஃப் நபியின் வரலாற்றைப் பற்றிக் கூறும் போது, அதில் கேள்வி கேட்போருக்குத் தக்க சான்றுகள் உள்ளன என்று 12:7 வசனம் கூறுகிறது.

கருவூல அதிகாரியாக என்னை நியமியுங்கள் என்று யூஸுஃப் நபி கேட்ட இந்தச் சம்பவத்திலும் நமக்கு முன்மாதிரி இருக்கின்றது.

பதவி ஆசைக்காகவோ, தகுதியற்ற நிலையிலோ பதவியைக் கேட்கக் கூடாது என்பது தான் மேலே நாம் காட்டியுள்ள நபிமொழியின் கருத்தாக இருக்க முடியும்.

ஒரு பணியை மற்றவர்களை விட நம்மால் சிறப்பாகச் செய்ய முடியும்; அதற்கான தகுதி நமக்கு உள்ளது என்று ஒருவர் கருதினாலோ, அல்லது தகுதியற்றவர்களிடம் ஒரு பணி ஒப்படைக்கப்பட்டு அது பாழ்படுத்தப் படுவதைக் கண்டாலோ அப்பதவியை அவர் கேட்டுப் பெறுவதில் தவறில்லை என்பதற்கு இவ்வசனம் சான்றாகும்.

மேலும் அந்த ஆட்சி, யூஸுஃப் நபியின் மீது பழி சுமத்திச் சிறையில் தள்ளிய ஆட்சியாக இருந்தும், அத்தகைய ஆட்சியில் தமது உரிமையை யூஸுஃப் நபி கேட்டிருக்கிறார்கள்; பதவியும் கேட்டிருக்கிறார்கள்.

இஸ்லாமிய ஆட்சி நடக்காத பகுதிகளில் இது போன்ற பதவிகளையும், உரிமைகளையும் முஸ்லிமல்லாத ஆட்சியாளர்களிடம் கேட்டுப் பெறலாம் என்பதற்கு இது சான்றாக அமைந் துள்ளது.

222. ஜூதி மலை மீது அமர்ந்த கப்பல்

இவ்வசனங்களில் (7:64, 10:73, 11:44, 23:30, 26:121, 29:15, 54:15, 69:12) நூஹ் நபியின் கப்பலை அத்தாட்சியாக மலையின் மேல் விட்டு வைத்திருப்பதாக திருக்குர்ஆன் கூறுகின்றது.

மலை போன்ற உயரத்திற்கு வெள்ளம் வந்தபோது தண்ணீர் வடிந்ததால் ஜூதி மலைக்கு மேலே கப்பல் நிலைகொண்டது. இம்மலை துருக்கி நாட்டின் எல்லையில் அமைந்துள்ளது. துருக்கி நாட்டைச் சேர்ந்த போதான் மாவட்டத்திலுள்ள அரராத் என்ற மலை தான் ஜூதி மலை என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஒரு மலையேறும் குழு அம்மலையை ஆய்வு செய்து பனிப்பாறைகளுக்கு அடியில் கப்பல் துண்டுகள் இருந்ததைக் கண்டுபிடித்துள்ளது.

1969ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 2ஆம் தேதியன்று கிழக்குத் துருக்கியின் ரஷ்ய எல்லையில் அமைந்துள்ள அரராத் மலைத் தொடரில் ஒரு கப்பலின் சில மரப் பகுதிகளை அந்த ஆராய்ச்சிக் குழு கண்டுபிடித்தது.

இம்மலைத் தொடரின் மேற்குப் பகுதியில், 14,000 அடி உயரத்தில் பனியால் மூடப்பட்ட பாறைகளுக்கிடையே 20 மீட்டர் ஆழத்தில், அக்கப்பலின் மரப் பலகைகள் புதைந்து கிடந்தன.

14 ஆயிரம் அடி உயரமுடைய மலையின் மேல் ஒரு கப்பல் நிலைகொண்டுள்ளது என்றால் அந்த அளவுக்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். அதன் காரணமாக அந்த மலைக்கு மேல் கப்பல் மிதந்து கொண்டு இருக்கும் போது வெள்ளம் வடிந்திருக்க வேண்டும். இதனால் அந்தக் கப்பல் மலையின் மீது நிலை கொண்டிருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் ஊகித்துச் சொல்வதை திருக்குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி விட்டது.

மலையின் மேலே கப்பலைக் கொண்டு போய் வைத்தது யார்? என்ற கேள்விக்குத் திருக்குர்ஆன் மட்டுமே தக்க விடை கூறுகிறது.

"அக்கப்பலை அத்தாட்சியாக விட்டு வைத்திருக்கிறோம்; சிந்திப்பவர் உண்டா?'' என்று கூறி, சமீபத்தில் 40 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட இந்த உண்மையை 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் முன்னறிவிப்பு செய்துள்ளது.

203. படைபலம் குறைவாக இருந்தால் போர் கடமையா?

எண்ணிக்கையும், படைபலமும் குறைவாக இருந்தாலும் போரிடுவது கடமை என்று இவ்வசனம் (9:41) கூறுகிறது.

8:66 வசனம் எதிரிகளின் பலத்தில் பாதியளவு இருந்தால் தான் போர் கடமை எனவும், அதை விடக் குறைவாக இருந்தால் போர் கடமையில்லை எனவும் கூறுகிறது. இவ்விரண்டும் முரண் என எண்ணக் கூடாது.

ஏனெனில் திருக்குர்ஆன் 8:66 வசனத்தில் "இப்போது அல்லாஹ் உங்களுக்கு எளிதாக்கி விட்டான்'' என்ற சொற்றொடரைக் கூறி விட்டு, எதிரியின் பலத்தில் பாதி இருக்க வேண்டும் என்று கூறுகிறான். எனவே ஆரம்பத்தில் இருந்த நிலை இதன் மூலம் மாற்றப்பட்டு விட்டது என்பதை அறியலாம்.

நாட்டை ஆட்சி செய்பவர்கள் குடிமக்களைக் காக்கக் கடமைப்பட்டுள்ளார்கள். படைதிரட்டி வருபவர்களை எதிர்த்துக் களமிறங்கினால் தான் மக்களை எதிரிகளிடமிருந்து பாதுகாக்க முடியும். ஆனால் சில நேரங்களில் எதிரிகளின் பலம் மிக அதிகமாக இருக்கும் போது எதிர்த்துக் களமிறங்கினால் மக்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக அவர்களுக்குப் பேரழிவு ஏற்பட்டுவிடும்.

இது போன்ற சந்தர்ப்பங்களில் விட்டுக் கொடுத்து, எதிரிகளுக்குப் பணிந்து, போரைத் தவிர்ப்பது தான் மக்களை அழிவிலிருந்து காக்கும். இந்த வழியைத் தான் அல்லாஹ் இவ்வசனங்களில் தெளிவுபடுத்தி ஆட்சியாளர்களுக்கு அறிவுரை கூறுகிறான்.

எதிரியின் பலத்தில் சரிபாதி பலம் இருந்தால் மட்டும் தான் போர் செய்வது கடமையாகும். அப்படி இல்லாவிட்டால் போரைத் தவிர்த்து மக்களைக் காக்க வேண்டும் என்பதுதான் அந்த அறிவுரை.

போர், பயங்கரவாதம், ஜிஹாத் ஆகியவை குறித்து மேலும் அறிந்திட 53, 54, 55, 76, 89, 197, 198, 199, 359 ஆகிய குறிப்புகளைப் பார்க்கவும்.

201. பிற மதத்தினருக்கு ஜிஸ்யா வரி ஏன்?

இவ்வசனத்தில் (9:29) முஸ்லிம் அல்லாதவரிடம் ஜிஸ்யா வரி வசூலிக்குமாறு கூறப்படுகிறது.

இது பிற மதத்தவர் மீது செய்யும் அக்கிரமம் போல் கருதப்படுகிறது. இது பற்றி உண்மை நிலையை அறிந்து கொண்டால் ஜிஸ்யா வரியை யாரும் குறை கூற மாட்டார்கள்.

இஸ்லாமிய ஆட்சியில் எவ்வாறு வரி விதிக்கப்படுகின்றது?

இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் மீது இஸ்லாம் ஜகாத் எனும் வரியைக் கடமையாக்கியுள்ளது. முஸ்லிம்கள் தங்களிடமுள்ள தங்கம், வெள்ளி, பணம், வியாபாரப் பொருட்கள், ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய கால்நடைகள், விளைவிக்கப்படும் தானியங்கள் மற்றும் பயறு வகைகள் ஆகிய அனைத்திலிருந்தும் ஜகாத் எனும் வரி செலுத்தக் கடமைப்பட்டுள்ளனர்.

தங்கம், வெள்ளி மற்றும் பணத்தில் இரண்டரை சதவீதமும், நீர் பாய்ச்சி விளைவிக்கப்படும் பொருட்களில் ஐந்து சதவீதமும், இயற்கையாக விளையும் பொருட்களில் பத்து சதவீதமும் முஸ்லிம்கள் ஜகாத் எனும் வரி செலுத்தியாக வேண்டும். இது எவ்வளவு கணிசமான வரி என்பதைச் சிந்திக்க வேண்டும்.

ஜகாத் என்பது இஸ்லாமிய அரசால் கட்டாயமாகக் கணக்குப் பார்த்து வசூலிக்கப்பட வேண்டிய வரியாகும். ஜகாத் என்ற பெயரில் பெரும் தொகையை இஸ்லாமியச் சமுதாயம் அரசுக்குச் செலுத்தக் கடமைப்பட்டுள்ளது.

ஏழைகள், பரமஏழைகள், கடன்பட்டிருப்பவர்கள், அடிமைகள், அறப்போருக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட இராணுவ வீரர்கள், மற்றும் நாடோடிகளின் நலனுக்காக இந்த வரியை அரசாங்கம் செலவு செய்யும். சுருங்கச் சொன்னால், ஒரு அரசாங்கம் மக்களுக்குச் செய்ய வேண்டிய அனைத்துக் கடமைகளும் இந்த ஜகாத் எனும் வரியிலிருந்தே செய்யப்பட்டன.

மொத்த அரசாங்கமும், முஸ்லிம்களிடமிருந்து பெறப்படும் ஜகாத் வரியிலிருந்தே நடந்து வரும்போது, அந்த நாட்டில் உள்ள முஸ்லிமல்லாதவர்கள் எந்த வரியும் செலுத்தாமல் இருப்பது நியாயமாகாது.

முஸ்லிம்கள் மட்டும் வரி செலுத்திக் கொண்டிருக்கும் போது முஸ்லிமல்லாதவர்கள் விஷயமாக கீழ்க்காணும் மூன்று வழிகளில் ஒன்றை நடைமுறைப்படுத்தியாக வேண்டும்.

1. முஸ்லிமல்லாதவர்கள் மீது எந்த வரியும் விதிக்காமலிருப்பது.

2. முஸ்லிம்களைப் போலவே முஸ்லிமல்லாதவர்களுக்கும் ஜகாத் வரி விதிப்பது.

3. முஸ்லிமல்லாதவர்கள் மீது வேறு விதமான வரிகள் விதிப்பது.

இதில் முதல் வழியை நடைமுறைப்படுத்தினால் ஏற்படும் விளைவுகளை முதலில் அலசுவோம்.

முஸ்லிம்கள் மட்டும் வரி செலுத்தும் போது முஸ்லிமல்லாதவர்கள் எந்த வரியும் செலுத்தாமல் அரசாங்கத்தின் நன்மைகளைப் பெற்று வந்தால் வரி செலுத்தும் முஸ்லிம்கள் கூடுதலான உரிமையை இயல்பாகவே எதிர்பார்க்கும் நிலை ஏற்படும்.

வரி செலுத்தாமல் அரசாங்கத்தின் பயன்களை முஸ்லிமல்லாதவர்கள் அனுபவிக்கக் கூடாது என்று எதிர்ப்புக் குரல் எழும்.

முஸ்லிம் அல்லாதவர்கள் வரி செலுத்தாததால் அவர்களே கூட தங்கள் உரிமையைக் கேட்கத் தயங்குவார்கள். மனோரீதியாக தாங்கள் இரண்டாம் தரக் குடிமக்கள் என்று எண்ணத் துவங்குவர்.

ஒரு சமுதாயத்திடம் மட்டும் வரி வாங்கி இன்னொரு சமுதாயத்திடம் வரி வாங்காவிட்டால் வரி வாங்கப்படாதவர்களுக்கு அது அவமானமாகவும் ஆகும். வரி வாங்கப்படாமலிருப்பது சட்டப்படியான உரிமை அவர்களுக்கு இல்லை என்பதற்கு அடையாளமாகும். ஆக, இந்த நிலையை நடைமுறைப்படுத்தும் போது இரு தரப்பிலும் எதிர்ப்பு கடுமையாகும்.

தங்களிடம் மட்டும் வரி வாங்கி விட்டு மற்றவர்களுக்கு விலக்களிக்கப்படுவதை முஸ்லிம்களும் எதிர்ப்பார்கள். தங்களிடம் மட்டும் வரி வாங்காததால் தங்களுக்குச் சட்டப்பூர்வ உரிமை வழங்கப்படவில்லை எனக் கருதி முஸ்லிமல்லாதவர்களும் இதை எதிர்ப்பார்கள். எனவே முதல் வழி சாத்தியமாகாது.

இரண்டாம் வழியை நடைமுறைப்படுத்தினால் ஏற்படும் விளைவுகளைப் பார்ப்போம்.

ஜகாத் என்பது ஒரு வரியாக இருந்தாலும், முஸ்லிம்களைப் பொறுத்த வரை தொழுகை, நோன்பு போன்ற மதக் கடமையாகவும் அமைந்துள்ளது.

இந்த ஜகாத் வரியை முஸ்லிமல்லாதவர்கள் மீது திணிக்கும் போது, இன்னொரு மதச் சட்டம் தங்கள் மீது திணிக்கப்படுவதாக அவர்களுக்குத் தோன்றும். இஸ்லாமியர்கள் செய்ய வேண்டிய கடமைகள், வணக்கங்கள் யாவும் தங்கள் மீதும் கடமையாக்கப்பட்டு விடுமோ என்ற அச்சமும் அவர்களுக்கு ஏற்படும். இதை அவர்களால் ஏற்க முடியாது.

முஸ்லிமல்லாதவர்களின் தனிப்பட்ட உரிமையில் இஸ்லாமிய அரசு தலையிடுவதாக அமையும் என்பதால் அவர்கள் மீது ஜகாத் எனும் வரியை விதிக்க முடியாது.

ஜகாத் வரி என்பது அவரவர் சொத்துக்களை மதிப்பிட்டு வசூலிக்கப்பட வேண்டியதாகும். சம்பந்தப்பட்டவர்களும் சரியாகக் கணக்குக் காட்டி ஒத்துழைத்தால் மட்டுமே ஜகாத்தை முழுமையாக வசூலிக்க முடியும். முஸ்லிம்களைப் பொறுத்த வரை அவர்களுக்கு அது மதக் கடமையாக உள்ளதால் இறைவனுக்கு அஞ்சி முறையாக அவர்கள் கணக்குக் காட்டுவார்கள்.

முஸ்லிமல்லாதவர்களைப் பொறுத்த வரை இது ஒரு வரியாக மட்டுமே கருதப்படும். இன்னொரு மதத்தின் கடமை என்பதால் அதில் அவர்கள் முழு ஒத்துழைப்புத் தர மாட்டார்கள். இயன்ற வரை தவறாகக் கணக்குக் காட்டி குறைவான வரி செலுத்தும் வழிகளையே தேடுவார்கள். இந்தக் காரணத்தினாலும் ஜகாத் என்ற வரியை இவர்கள் மீது விதிக்க முடியாது.

வரி விதிக்காமலும் இருக்க முடியாது. முஸ்லிம்களுக்கு விதிப்பது போன்ற வரியையும் அவர்கள் மீது விதிக்க முடியாது.

இப்போது மூன்றாவது வழியை நடைமுறைப்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.

'ஜகாத்' என்ற வகையல்லாத புதிய வரியை அவர்கள் மீது விதிப்பதன் மூலம் இந்தத் தீய விளைவுகளைத் தவிர்க்க முடியும். இந்த அடிப்படையிலேயே 'ஜிஸ்யா' எனும் வரி விதிக்கப்பட்டது. முஸ்லிம்கள் ஜகாத் என்ற பெயரால் ஜிஸ்யாவை விடப் பல மடங்கு அதிகமாக வரி செலுத்தினர்.

இஸ்லாமிய ஆட்சியில் வரி செலுத்துவதில் முஸ்லிம்கள் தான் அதிகம் பாதிப்புக்கு ஆளானார்களே தவிர முஸ்லிமல்லாதவர்கள் அல்ல. இதைப் புரிந்து கொள்ளாத காரணத்தினாலேயே ஜிஸ்யா வரி பற்றி தவறான விமர்சனம் செய்து வருகின்றனர்.

இவ்வசனத்தில் 'இழிந்தவர்களாக' என்று கூறப்படுவது போருக்கு வந்து தோற்று இழிவடைவதைக் குறிப்பதாகும்.

199. எதிரிகளை முழுமையாக முறியடித்தல்

போர் நடத்தும் சூழ்நிலை ஏற்பட்டால் தோற்றவர்களைக் கைது செய்து பின்னர் விடுதலை செய்தல் கூடாது. அவ்வாறு செய்தால் அவர்கள் மீண்டும் படை திரட்டிக் கொண்டு அடுத்த போருக்கு வருவார்கள். அதே சமயம் எதிரிகள் அடியோடு முறியடிக்கப்பட்டு அவர்கள் எதிர்த்துப் போரிடவே அஞ்சும் நிலை ஏற்பட்டால் அப்போது கைது செய்யப்பட்டவர்களைப் பின்னர் விடுதலை செய்யலாம் என்பது இவ்வசனத்தின் (8:67) கருத்தாகும்.

எந்த ஒரு நாடும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இத்தகைய நடவடிக்கையை எடுத்தாக வேண்டும். இதை வன்முறைப் போக்காகக் கருதக் கூடாது.

போர், பயங்கரவாதம், ஜிஹாத் ஆகியவை குறித்து மேலும் அறிந்திட 53, 54, 55, 76, 89, 197, 198, 203, 359 ஆகிய குறிப்புகளைப் பார்க்கவும்.

198. பலவீனமான அரசுகள் மீது போர் கடமையில்லை

முஸ்லிம் நாடுகள் தக்க காரணத்துடன் போரிடுவதை இஸ்லாம் அனுமதிப்பது மட்டுமின்றி அதைக் கடமையாகவும் ஆக்கியுள்ளது.

இந்தக் கடமைக்கு படைபலம் முக்கியமான நிபந்தனையாக ஆக்கப்பட்டுள்ளது. போதிய பலமின்றி களத்தில் இறங்குவது தற்கொலைக்குச் சமமானது.

ஆரம்பத்தில் எதிரிகளின் பலத்தில் பத்தில் ஒரு பங்கு இருந்தால் போர் கடமையாக்கப்பட்டிருந்தது. ஆனால் பின்னர் எதிரியின் பலத்தில் பாதி இருந்தால் தான் போர் கடமை என்று தளர்த்தப்பட்டது. பாதியை விடக் குறைவாக இருந்தால் போர் கடமை இல்லை என்று இவ்வசனங்கள் (8:65,66) வழிகாட்டுகின்றன.

எதிரிகளின் படைபலத்தில் பாதிக்கும் குறைவான நிலையில் முஸ்லிம்களின் படைபலம் இருந்தால் போரிடாமல் இருப்பதோ, எதிரி நாட்டுடன் விட்டுக் கொடுத்து சமரசம் செய்து கொள்வதோ குற்றமாகாது என்பதை இவ்வசனங்களிலிருந்து அறியலாம்.

போர், பயங்கரவாதம், ஜிஹாத் ஆகியவை குறித்து மேலும் அறிந்திட 53, 54, 55, 76, 89, 197, 199, 203, 359 ஆகிய குறிப்புகளைப் பார்க்கவும்.

197. ராணுவ பலத்தைப் பெருக்குவது அரசின் கடமை

படைபலத்தைப் பெருக்கிக் கொள்ளுமாறு இவ்வசனம் (8:60) கூறுகிறது. படை திரட்டுதல் என்பது முஸ்லிம்கள் தமது நாடுகளில் செய்ய வேண்டிய கடமையாகும். ஒரு நாட்டில் சிறுபான்மையாக வாழ்பவர்கள் இவ்வாறு படை திரட்டலாம் என்று இவ்வசனத்தை புரிந்து கொள்ளக் கூடாது.

மக்காவில் இருந்தபோதும், அபிஸீனியாவில் அடைக்கலம் பெற்ற போதும் முஸ்லிம்கள் இவ்வாறு படை திரட்டவில்லை. மாறாக மதீனாவில் நல்லாட்சியை அமைத்த பிறகுதான் இதைச் செய்தார்கள். அப்போது தான் இது சாத்தியமுமாகும்.

ஒரு நாடு உருவான பின் அது தனது பாதுகாப்பைப் பலப்படுத்திக் கொள்வதை யாராலும் குறை கூறமுடியாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நல்லாட்சி அமைத்த பிறகு தான் இந்த வசனம் அருளப்பட்டது என்பதும் அவர்கள் மக்காவில் துன்பத்திற்கு மேல் துன்பத்தை அனுபவித்த போது அருளப்படவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

போர், பயங்கரவாதம், ஜிஹாத் ஆகியவை குறித்து மேலும் அறிந்திட 53, 54, 55, 76, 89, 198, 199, 203, 359 ஆகிய குறிப்புக்ளைப் பார்க்கவும்.

514. பெண்ணுறுப்பைப் பற்றி குர்ஆன் பேசலமா?

இவ்வசனங்களில் (66:12, 21:91) பெண்ணுறுப்பைப் பற்றி குர்ஆன் பேசுவதாகக் கூறி கிறித்தவ போதகர்கள் பொதுவெளியிலும் சமூக ஊடகங்களிலும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அவரிடம் என்று இவ்வசனங்களுக்கு நாம் மொழியாக்கம் செய்திருந்தாலும் அவரது ஃபர்ஜில் என்று தான் மூலத்தில் உள்ளது. ஃப்ர்ஜ் என்பது பெண்ணுறுப்பைக் குறிக்கும் சொல்லாகும். அல்லாஹ்வின் வேதத்தில் இப்படி இருக்கலாமா? என்பது அவர்களின் கேள்வி.

ஆண் உறுப்பையோ பெண் உறுப்பையோ குறிப்பிட்டு பேசுவது தவறா? அது கேவலமானதா? பொதுவாக அப்படிக் கூற முடியாது. அந்த உறுப்பு பற்றி சொல்லும் அவசியம் எழுந்தால் குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும்.

ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ அந்தரங்க உறுப்பில் காயமோ, பிரச்சனையோ இருந்தால் மருத்துவரிடம் அதைப் பற்றி பேசித் தான் ஆக வேண்டும்.

ஆனால் இவ்வுறுப்புக்களைக் குறிப்பிட கொச்சையான சொற்களும் உள்ளன. நாகரிகமாகக் கருதும் சொற்களும் உள்ளன. கொச்சையான சொற்களைத் தவிர்த்து நாகரிகமான சொல்லைப் பயன்படுத்தலாம்

ஐயா எனது மர்ம உறுப்பில், அல்லது அந்தரங்க உறுப்பில் கொப்புளம் உள்ளது; அதற்கு என்ன செய்யலாம் என்று மருத்துவரிடம் பேசினால் அதை யாரும் ஆபாசம் எனக் கருத மாட்டோம். சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படும் போது கொச்சையான சொல்லைப் பயன்படுத்தாமல் நாகரிகமான சொல்லைப் பயன்படுத்துவதை அறிவுடைய யாரும் ஆபாசமாகக் கருத மாட்டார்கள்.

இந்த வசனத்தில் சொல்ல வேண்டிய அவசியம் காரணமாக சொல்லப்பட்டுள்ளதா? நாகரிகமான சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை விளங்கிக் கொண்டால் இந்தக் கேள்வி அபத்தமான கேள்வி என்பது தெளிவாகும்.

ஃபர்ஜ் என்பது பெண்களின் உறுப்பைக் குறிக்கும் பச்சையான சொல்லா என்றால் இல்லவே இல்லை. இது ஆண், பெண் இரு பாலரின் அந்தரங்க உறுப்பைப் பற்றிக் குறிக்கும் நாகரிகமான பொதுவான சொல்லாகும்.

இச்சொல்லை பொது மேடைகளிலும் பயன்படுத்தலாம். யாரும் முகம் சுளிக்க மாட்டார்கள்.

ஆண்களே பெண்களே! உங்கள் அந்தரங்க உறுப்புக்களை தூய்மையான வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னால், சிறுநீர் கழித்த பின் அந்தரங்க உறுப்புக்களைக் கழுவிக் கொள்ளுங்கள் என்று சொன்னால் அது ஆபாசமா? யாரும் அப்படிச் சொல்ல மாட்டார்கள்.

இதே விஷயத்தை …… போன்ற சொல்லைப் பயண்டுத்தி சொன்னால் அதை ஆபாசம் என்று நாம் கூறுவோம்.

அந்தரங்க உறுப்பு என்ற சொல் எப்படி இரு பாலரின் உறுப்பைக் குறிக்குமோ அது போன்ற சொல் தான் ஃபர்ஜ் எனும் சொல்.

உதாரணமாக புகாரி எனும் ஹதீஸ் நூலில் நபிகள் நாயகம் இச்சொல்லைப் பயன்படுத்திய ஹதீஸ்கள் உள்ளன. இவை அனைத்திலும் ஃபர்ஜ் என்ற சொல் இருக்கிறது.

பார்க்க : புகாரி 367, 6284, 5819, 5820, 5821, 582

இந்த ஹதீஸ்களில் ஒரு ஆண் தனது ஃபர்ஜை மறைக்காமல் ஒரு ஆடை அணிய வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இங்கே ஃபர்ஜ் என்பதன் பொருள் அந்தரங்க உறுப்பு எனத் தெளிவாகிறது. பெண்ணின் உறுப்பை இச்சொல்லால் குறிப்பிடுவது போல் ஆணின் உறுப்பையும் இச்சொல்லால் குறிப்பிடலாம் என்று தெரிகிறது.

கிறித்தவ போதகர்கள் கருதுவது போல் இது ஆபாசமான சொல் அல்ல என்பது உறுதியாகிறது.

புகாரி 249, 259, 260, 266. 274, 276, 281, 288 ஆகிய ஹதீஸ்களிலும் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.    

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது தமது ஃபர்ஜை தேய்த்துக் கழுவுவார்கள் என்று அவர்களின் மனைவியரான ஆயிஷா, மைமூனா ஆகியோர் அறிவிக்கிறார்கள் என இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன.

குளிக்கும் போது ஆண்கள் தமது அந்தரங்க உறுப்பைத் தேய்த்து குளிக்க வேண்டும் என்ற சட்டத்தை சொல்லும் போது இவ்வாறு அறிவிக்கிறார்கள்.

பெண்கள் கூட சாதாரணமாகப் பயன்படுத்தும் நாகரிகமான சொல்லே ஃபர்ஜ் என்பது.

ஆண்கள் அந்தரங்க உறுப்பைக் கழுவ வேண்டும் பெண்களும் அந்தரங்க உறுப்பைக் கழுவ வேண்டும் என்று சொன்னால் அது ஆபாசமான சொல் அல்ல. இது போல் ஆண்கள் தமது ஃபர்ஜைக் கழுவ வேண்டும்; பெண்கள் தமது ஃபர்ஜைக் கழுவ வேண்டும் என்று சர்வதாரணமாகச் சொல்லலாம்.

எனவே ஃபர்ஜ் என்ற சொல் குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளதில் கடுகளவும் ஆபாசம் இல்லை.

சொல்ல வேண்டிய இடத்தில் இது சொல்லப்பட்டுள்ளதா என்றால் அப்படித்தான் சொல்லப்பட்டுள்ளது. .

ஒரு பெண்ணுக்கு குழந்தை தரிக்க வேண்டுமானால் கர்ப்பப் பைக்குள் ஆணின் உயிரணு செல்ல வேண்டும். இது தான் அல்லாஹ் ஏற்படுத்திய நியதி. மர்யம் எனும் மேரிக்கு ஆணின் விந்து இல்லாமல் குழந்தையை இறைவன் கொடுக்க முடிவு செய்கிறான். முழு வடிவம் பெற்ற குழந்தையை வயிற்றுக்குள் அனுப்பவில்லை. எல்லாக் குழந்தைகளையும் போல் கருவில் உருவாகி படிப்படியாக வளரும் வகையில் தான் குழந்தையைக் கொடுத்தான்.

உயிரணுவோ, அல்லது குழந்தையை உருவாக்கும் வேறு அணுவோ பெண்ணின் கருவறைக்குச் செல்லாமல் குழந்தை உருவாக முடியாது. கருவறைக்கு உள்ளே அந்தரங்க உறுப்பு வழியாகத் தான் செல்ல முடியும். வாய்க்குள் உயிரணுவைச் செலுத்தினால் அது கருவறைக்குப் போகாது.

இறைவன் நினைத்தால் இந்த வழிமுறை இல்லாமலும் குழந்தையைக் கொடுக்க முடியும். ஆனால் அப்படி இறைவன் நினைக்கவில்லை. அதனால் தான் ஜிப்ரீல் எனும் தேவதூதனை அல்லாஹ் அனுப்பி  அந்த உயிரணுவை ஊதி கருவறைக்கு உயிரணு செல்வதன் மூலம் அந்தக் குழந்தையை அல்லாஹ் வழங்குகிறான்.

மனிதன் ஊதினான் என்றால் ஆடையைக் களைந்து ஊதினான் என்று பொருள் கொள்ள முடியும். உள்ளங்களிலும் ஊடுறுவும் தன்மை பெற்ற வானவர்களுக்கு அது அவசியம் இல்லை. ஆடையைக் களையாமல் அருகில் நின்று ஊதினால் கூட உள்ளே செலுத்த வேண்டிய உயிரணு உள்ளே சென்று விடும்.

குழந்தை எப்படி பெண்ணின் கருவ்றைக்குள் செல்கிறது என்று அறிவியல் பாடம் நடத்தும் போது அதைப் பற்றி பேசினால் அது ஆபாசம் ஆகாது. இன்றைக்கு கணவனின் விந்தை மட்டும் எடுத்து அதில் இருந்து உயிரணுவை மட்டும் பிரித்து பெண்ணுக்குள் செலுத்துகிறார்கள். அந்தரங்க உறுப்பு வழியாகவே செலுத்துகிறார்கள். இப்படி சொல்வது ஆபாசமா? உண்மை விளக்கமா?

இது குறித்து கிறித்தவ போதகர்கள் கேட்கும் கேள்வியில் நியாயம் இல்லை.

மேலும் மற்ற சமுதாய மக்கள் இதைப் பற்றிக் கேட்டால் கூட அதில் நியாயம் உள்ளது. கிறித்தவர்கள் இக்கேள்வியைக் கேட்க முடியாது. அவர்கள் நம்பிக்கை கொண்ட பைபிளிலும் இது போல் தான் சொல்லப்பட்டுள்ளது.

18. இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாராகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடி வருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.

மத்தேயு 1

20. அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளை சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது.

மத்தேயு 1

ஒரு பெண் இன்னாரால் கர்ப்பமானாள் என்று சொன்னால் என்ன அர்த்தம்? அவனால் செலுத்தப்பட்ட உயிரணு மூலம் குழந்தை உருவானது என்று தான் பொருள்.

பரிசுத்த ஆவியால் கர்ப்பவதியானாள் என்றால் அந்தக் குழந்தை உருவாவதற்கான உயிரணு பரிசுத்த ஆவியால் செலுத்தப்பட்டுள்ளது என்று தான் அர்த்தம். கிறித்தவ மத போதகர்கள் இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்?

34. அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்றாள்.

35. தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.

லூக்கா1

ஒரு பெண் மேலே பரிசுத்த ஆவி வரும். அதனால் குழந்தை உண்டாகும் என்றால் அதன் அர்த்தம் என்ன? ஏதோ உடறுறவு கொண்டார்கள் என்பது போன்ற அர்த்தம் இதில் உள்ளது. ஆனால் குர்ஆன் வானவர் ஊதினார் என்று நாகரிகமாக இதைச் சொல்கிறது.

அதே சமயம் இப்படி கேள்வி கேட்கும் கிறித்தவ போதகர்கள் தங்கள் பைபிளில் மலிந்து கிடக்கும் ஆபாசங்களுக்கு பதில் சொல்ல முன்வர வேண்டும்

பார்க்க பைபிளில் ஆபாசங்கள்

More Articles …