Sidebar

17
Mon, Feb
67 New Articles

467. யஹ்யா என்று யாரும் இருந்ததில்லை

விளக்கங்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

467. யஹ்யா என்று யாரும் இருந்ததில்லை

இவ்வசனத்தில் (19:7) ஸக்கரிய்யா நபியின் தள்ளாத வயதில் அவருக்கு ஆண் குழந்தையைக் கொடுத்த செய்தியை அல்லாஹ் சொல்கிறான்.

குழந்தைக்குப் பெயர் சூட்டுவது இறைவன் செய்ய வேண்டிய அளவுக்கு முக்கியமானது அல்ல. அது மனிதனுக்குச் சிரமமானதும் அல்ல. அல்லாஹ் குழந்தையைக் கொடுத்து விட்டால் ஸகரிய்யா நபி பெயர் சூட்டிக் கொள்ள மாட்டார்களா?

இந்தப் பெயருடைய ஒருவரும் இதற்கு முன் இருந்ததில்லை என்ற உண்மையைச் சொல்வதற்காக அல்லாஹ்வே அவருக்குப் பெயரையும் சூட்டியுள்ளான்.

திருக்குர்ஆன் இறைவேதம் என்று நிரூபிக்க இந்த ஒரே ஒரு வசனமே போதுமான சான்றாக அமைந்துள்ளது.

ஸகரிய்யா நபிக்கு ஆண் குழந்தையைக் கொடுக்கும் போதே அதற்கு யஹ்யா என்ற பெயரைச் சூட்டி அல்லாஹ் வழங்குகிறான். இந்தப் பெயரை இதற்கு முன் ஒருவருக்கும் சூட்டியதில்லை எனவும் கூறுகிறான்.

இந்தப் பெயரை இதற்கு முன் சூட்டியதில்லை என்று அன்றைக்கும், என்றைக்கும் எந்த மனிதனாலும் பேச முடியாது.

ஒரு மனிதன் இப்படிச் சொல்வதாக இருந்தால் அவனுக்கு உலகில் உள்ள எல்லா மொழிகளும் தெரிந்திருக்க வேண்டும். அன்று வரை உலகில் பிறந்த, பிறந்து மரணித்த ஒவ்வொரு நபரின் பெயரும் அவனுக்குத் தெரிந்திருக்க வேண்டும். பல்லாயிரம் கோடி மக்களின் பெயர்களுக்குள் யஹ்யா என்ற பெயரில் ஒருவரும் இருக்கவில்லை என்பதையும் உறுதி செய்து கொண்டு அதன் பின்னர் தான் இப்படிக் கூற முடியும்.

இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் கூட இப்படி ஒரு மனிதனால் சொல்ல முடியாது. உலகில் வாழ்ந்த, வாழ்ந்து மறைந்த ஒவ்வொருவரின் பெயரையும் பதிவு செய்ய இயலாது.

யஹ்யா என்ற பெயரில் இதற்கு முன் ஒருவர் இருந்ததில்லை என்ற செய்தி சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் ஸக்கரியா நபியிடம் இறைவன் சொன்னதாகக் கூறப்படுகிறது.

யஹ்யா என்ற பெயரில் இதற்கு முன் ஒருவரும் இல்லை என்று சொன்ன பிறகு உலகில் ஏதாவது ஒரு காலத்தில் பழங்கால ஏடுகளில் யஹ்யா என்ற பெயரில் ஒருவர் இருந்ததாகத் தெரிய வந்தால் இறைவசனம் பொய்யாகி விடும்.

ஸக்கரியா நபியிடம் அல்லாஹ் இப்படிச் சொன்னதாக முஹம்மது நபி சுயமாகக் கற்பனை செய்து சொல்லியிருக்க முடியாது. அப்படிச் சுயமாகச் சொல்ல நினைத்தால் எங்காவது யஹ்யா என்ற பெயரில் ஒருவர் இருந்து விட்டால் என்னாவது என்ற தயக்கமே இது போல் பேசுவதை விட்டும் அவரைத் தடுத்து இருக்கும்.

இப்படி ஒரு பெயரில் இதற்கு முன் ஒருவர் கூட இல்லை என்று இறைவனால் மட்டும் தான் சொல்ல முடியும்.

இன்னும் சொல்லப்போனால் ஸகரிய்யா நபியிடம் இறைவன் இப்படிச் சொன்னதாக யூத கிறித்தவ வேதங்களில் சொல்லப்படாமல் இருந்தும் திருக்குர்ஆன் இப்படிச் சொல்கிறது என்றால் இது இறைவனின் வார்த்தை என்பதில் சந்தேகம் இல்லை.

அனைத்தையும் அறிந்த இறைவனாக நான் இருக்கிறேன் என்று நிரூபிக்கவே அல்லாஹ் இப்படிச் செய்திருக்க வேண்டும்.

எவர் வேண்டுமானாலும், எந்தக் காலத்தில் வேண்டுமானாலும் சோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். இப்படி ஒரு பெயர் சூட்டப்பட்டவர் இதற்கு முன் இருந்ததாக நீங்கள் காட்ட முடியாது என்று அறைகூவல் விடுவது போல் இப்படி இறைவன் பேசியுள்ளான்.

எந்தக் காலத்திலும் இது இருந்ததில்லை; அது இருந்ததில்லை என்று சொல்வது மிகவும் கடினமான விஷயமாகும். ஏனெனில் நமக்குத் தெரியாமல் எங்காவது அது இருந்து தொலைத்து விட்டால் நம்முடைய மானம் கப்பலேறி விடும்.

கடவுளால் மட்டும் தான் இதுபோல் அடித்துச் சொல்ல முடியும்.

இவ்வசனத்தைப் பொய்யாக்க கிறித்தவ சபைகள் யஹ்யா என்ற பெயரில் யாராவது இருந்தால் அதை வைத்தே இஸ்லாத்தைப் பொய்யாக்கி விடலாம் என்று கங்கணம் கட்டி தேடிப்பார்த்தும் அவர்களால் யஹ்யாவைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account