Sidebar

17
Wed, Jun
சமீபத்திய செய்திகள்

அசையும் பூமியை அசையாத பூமி என்று குர்ஆன் கூறுவது ஏன்?

கேள்வி : …உங்களுடைய பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் உறுதியான மலைகளை நிறுவினான்.

 திருக்குர்ஆன் 16:15

என்று இறைவசனம் கூறுகின்றது. ஆனால் பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது. சுற்றுவதும் அசைவுகளால் நிகழ்வது தானே. ஆனால் இறைவன் அசையாதிருப்பதற்காக மலைகளை நிறுத்தியுள்ளோம் என இறைவசனத்தில் வருகிறதே! குழப்பமாக உள்ளது. விளக்கம் தரவும்.

-ஜீ. முஹம்மது ஜலீல், நாகப்பட்டிணம்.

பதில் : திருக்குர்ஆன் வசனம் 16:15-க்கு நீங்கள் குறிப்பிட்டுள்ள தமிழாக்கம் தவறானதாகும்.

'உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக' என்று அதற்குப் பொருள் கொள்ள முடியாது.

'உங்களைப் பூமி ஆட்டம் காணச் செய்யாதிருக்க' என்பது தான் அதன் சரியான அர்த்தமாகும்.

நாம் வாழ்கின்ற இப்பூமி பல்வேறு அடுக்குகளைக் கொண்டதாகும். ஒவ்வொரு அடுக்கும் ஒரே அளவுடையதாகவோ, ஒரே கனம் உடையதாகவோ இல்லை. மேலடுக்கு மென்மையாகவும், கீழடுக்கு கடினமாகவும் உள்ளன.

இவ்வாறு அமைக்கப்பட்ட ஒரு உருண்டையை பூமி சுற்றும் வேகத்திற்கு சுற்றினால் மென்மையான பகுதி வேகமாகவும், கடினமான பகுதி குறைந்த வேகத்திலும் சுற்றும். இதனால் மேல் பகுதி மையப் பகுதியுடன் உள்ள ஈர்ப்பு சக்தியை இழந்து விடும். மேலே உள்ள பொருட்கள் பறக்க ஆரம்பித்து விடும்.

ஒரு பலகையின் மீது ஒரு அட்டையை வைத்து அப்பலகையை வேகமாகத் தள்ளினால் பலகைக்கு எதிர்த்திசையில் அட்டை பறந்து வந்து விழுவதை நீங்கள் காணலாம். இரண்டும் சமமான கனமுடையதாக இல்லாததும், இரண்டுக்கும் இடையே இணைப்பு இல்லாததுமே இதற்குக் காரணம்.

பலகைக்கு மேல் வைக்கப்பட்ட அட்டையையும், பலகையையும் இணைக்கும் வகையில் நான்கு ஆணிகளை அறைந்து இணைத்து விட்டு பலகையை எவ்வளவு வேகமாகத் தள்ளிவிட்டாலும் பலகையின் வேகத்திலும், திசையிலும் அட்டையும் சேர்ந்து செல்லும்.

அது போல் தான் பூமியின் மென்மையாக பகுதியையும், கடினமான பகுதியையும் இணைக்கும் வகையில் ஆணிகளைப் போல் மலைகள் நிறுவப்பட்டுள்ளன. அதனால் தான் அனைத்து அடுக்குகளும் ஒரே சீராகச் சுழல முடிகிறது.

மலைகள் இல்லாவிட்டால் பூமியின் மேற்பகுதி, பூமியின் கீழ்ப்பகுதிக்கு எதிர்த் திசையிலும், மையப் பகுதியின் பிடிப்பை விட்டு விலகியும் தாறுமாறாகச் சுற்றும். நாமெல்லாம் பந்தாடப்படுவோம். இந்த மாபெரும் அறிவியலைத் தான் அவ்வசனம் கூறுகிறது.

(பீஜே எழுதிய அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் எனும் நூலில் இருந்து)

وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنزِلَ إِلَيْكَ وَمَا أُنزِلَ مِن قَبْلِكَ وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ

(முஹம்மதே!) உமக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தையும், உமக்கு முன் அருளப்பட்டதையும் அவர்கள் நம்புவார்கள். மறுமையையும் உறுதியாக நம்புவார்கள்.

திருக்குர்ஆன் 2:4

முஸ்லிம்களில் பெரும்பகுதியினர் தவறாக புரிந்து வைத்திருக்கின்ற வசனங்களில் இதுவும் ஒன்றாகும்.இஸ்லாமியரிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் விஷமிகள் தவறாக பயன்படுத்தும் வசனமுமாகும் இது.முஸ்லிம்களின் தவறான விளக்கத்தை அடையாளம் காட்டுவதுடன் தவறாக பயன்படுத்தும் விஷமிகளுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியது அவசியமாகும்.

அல்குர்ஆனை நம்புவது போலவே முந்தைய வேதங்களையும் நம்புமாறு இவ்வசனம் நமக்கு போதிக்கிறது.முந்தைய வேதங்களை நம்புவது என்றால் முந்தைய வேதங்கள் யாவை என்பதையும் நாம் விளங்க வேண்டும். அவற்றை எப்படி நம்ப வேண்டும் என்பதையும் விளங்க வேண்டும்.

வேதங்கள் எத்தனை

மூஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்ட தவ்ராத்,ஈஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்ட இஞ்சீல்,தாவூத் (அலை) அவர்களுக்கு அருளப்பட்ட ஸபூர் ஆகியவையே முந்தைய வேதங்கள் என்பது பலரது நம்பிக்கை. இந்த நம்பிக்கை முற்றிலும் தவறானது.குர்ஆனையும் சேர்த்து வேதங்களின் மொத்த எண்ணிக்கை நான்கு தான் என குர்ஆனிலும் கூறப்படவில்லை.ஹதீஸ்களிலும் கூறப்படவில்லை.

மேற்கண்ட மூன்று நபிமார்களுக்கும் வேதங்கள் அருளப்பட்டது போலவே ஏனைய நபிமார்களுக்கும் வேதங்கள் அருளப்பட்டிருந்தன என்பதை திருக்குர்ஆனை ஆராயும் போது விளங்க முடிகிறது.

பல்லாயிரக்கணக்கான இறைத் தூதர்கள் இவ்வுலகுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளிலிருந்து இதை நாம் அறியலாம்.இந்த அடிப்படையை கவனத்தில் கொண்டு இந்த விஷயத்தை நாம் ஆராய வேண்டும்.

இறைத்தூதர்கள் எனப்படுவோர் இறைவனிடமிருந்து செய்திகளை பெற்று மக்களுக்கு அறிவிப்பவர்களாவர்.இதை அல்குர்ஆன் 5:99, 5:92, 16:35, 16:82, 29:18, 42:48, 64:12 ஆகிய வசனங்கள் கூறுகின்றன. இறைவனிடமிருந்து வந்த செய்திகளையே அவர்கள் அறிவித்துள்ளனர் என்றால் அவர்களுக்கு இறைச்செய்தி கிடைத்திருக்க வேண்டும்.இறைவனிடமிருந்து எந்த செய்தியையும் மக்களுக்கு அவர்கள் கொண்டு வராவிட்டால் இறைத்தூதர்கள் என்பதற்கு அர்த்தம் எதுவும் இருக்க முடியாது. அந்த இறை செய்திகளே வேதங்கள் எனப்படும்.

இந்த அடிப்படையில் இறைத்தூதர்கள் அனைவரும் இறைவனிடமிருந்து வழிகாட்டு நெறியை பெற்றனர்.அதை மக்களுக்கு அறிவித்தனர் என்பது தெளிவாகும்.

எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்.

திருக்குர்ஆன் 14:4

உலகில் எத்தனையோ மொழி பேசுவோர் இருந்துள்ளனர். இன்றும் இருக்கின்றனர். எந்த சமுதாயத்திற்கு ஒரு தூதர் அனுப்பப்படுவாரோ அந்த சமுதாய மக்களின் மொழியிலேயே அவர் இறை செய்தியை கொண்டு வருகிறார் என்று இந்த வசனம் கூறுகின்றது.முன்னர் குறிப்பிட்ட மூன்று மட்டும் தான் இறைவேதம் என்றால் எபிரேயு மொழியிலும் அரமாயிக் மொழியிலும் மட்டுமே வேதங்கள் வந்துள்ளன என்று ஆகும்.இந்த இரண்டு மொழிகளை தவிர இன்னும் ஏராளமான மொழிகள் உலகில் இருந்தன. அந்த மொழி பேசும் மக்களுக்கெல்லாம் இறைவனிடமிருந்து வழிகாட்டு நெறியோ,செய்திகளோ வரவில்லை என்பது இந்த வசனத்திற்கு முரணாகும்.இறைத்தூதர்கள் அனுப்பபடுவதன் நோக்கத்தையே இது அர்த்தமற்றதாக்குகின்றது.எனவே நபி (ஸல்) காலத்துக்கு முன்பிருந்த எல்லா மொழிகளிலும் இறைத்தூதர்களும் வந்துள்ளனர்.அவர்களுக்கு வேதங்களும் அருளப்பட்டன என்பதே சரியாகும்.

மேலும் எல்லா இறைத்தூதர்கள்களுக்கும் வேதங்கள் வழங்கப்பட்டிருந்தன என்பதை தெளிவாகவும் இறைவன் குறிப்பிடுகிறான்.

மனிதர்கள் ஒரே ஒரு சமுதாயமாகவே இருந்தனர். எச்சரிக்கை செய்யவும், நற்செய்தி கூறவும் நபிமார்களை அல்லாஹ் அனுப்பினான். மக்கள் முரண்பட்டவற்றில் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக உண்மையை உள்ளடக்கிய வேதத்தை அவர்களுடன் அருளினான்.

திருக்குர்ஆன் 2:213

நமது தூதர்களைத் தெளிவான சான்றுகளுடன் அனுப்பினோம். அவர்களுடன் வேதத்தையும், மக்கள் நீதியை நிலைநாட்ட தராசையும் இறக்கினோம். இரும்பையும் இறக்கினோம்.

திருக்குர்ஆன் 57:25

எல்லா நபிமார்களுக்கும் வேதங்கள் அருளப்பட்டன என்பதற்கு தெளிவான சான்றுகள் இவை.மனிதர்களுக்கிடையே எழும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து சரியான வழியை காட்ட அந்த நபிமார்களுடன் வேதங்களையும் சேர்த்தே அருளினான்.வெறும் கையுடன் எந்த தூதரும் வந்ததி்ல்லை.

மூஸா (அலை) அவர்களுக்கு தவ்ராத் எனும் வேதம் வழங்கப்பட்டதை நாம் அறிவோம்.மூஸா (அலை) அவர்களுக்கு வேதம் வழங்கப்பட்டது போலவே இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும் வேதம் வழங்கப்பட்டதாக இறைவன் கூறுகிறான்.

இது முந்தைய வேதங்களிலும், இப்ராஹீம், மூஸாவுடைய வேதங்களிலும் உள்ளது.

திருக்குர்ஆன் 87:18,19

யஹ்யாவே! இவ்வேதத்தைப் பலமாகப் பிடித்துக் கொள்வீராக!

திருக்குர்ஆன் 19:12

முன்னரும் பல வேதங்கள் அருளப்பட்டன என்று இவ்வசனங்கள் கூறுவதுடன் மூஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்டது போல் இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும் வேதம் அருளப்பட்டு இருந்தது என்றும் தெளிவாக அறிவிக்கி்ன்றது.யஹ்யா (அலை) அவர்களுக்கும் வேதம் இருந்தது எனபதையும் அறிவிக்கின்றது. 'முன்னர் அருளப்பட்ட வேதங்கள்' எனும்போது அவை மொத்தமே மூன்று தான் என்று கூறுவது இந்த வசனங்களுக்கு முரணாகும். எத்தனை இறைத்தூதர்கள் வந்தனரோ அத்தனை வேதங்கள் இருந்தன என்பதே சரியாகும்.

இதில் மாற்றுக் கருத்துடையவர்களின் மழுப்பல்கள் சில உள்ளன. அவற்றையும் நாம் அறிந்து கொள்வது பயனுள்ளதாகும்.

அதாவது வேதங்கள் இரண்டு வகை. ஒன்று ஸுஹ்பு எனும் சிற்றேடுகள்,மற்றது கிதாப் எனும் பெரிய ஏடுகள் இந்த மூன்று நபிமார்களுக்கும் வழங்கப்பட்டது கிதாப் எனும் பெரிய ஏடுகள். மற்றவர்களுக்கு (இப்ராஹீம் நபி உடப்ட) வழங்கப்பட்டது ஸுஹுபு எனும் ஆகமங்கள்; என்று இவர்கள் கூறுகின்றனர்.இதற்கு சான்றாக 87:18,19 வசனங்களில் 'ஸுஹுபு' எனும் வார்த்தை இடம்பெற்றுள்ளதைக் காட்டுகி்ன்றனர்.

இவர்களின் இந்த விளக்கம் குர்ஆன் ஹதீஸ் வழக்கிற்கும் அரபு அகராதிகளுக்கும் முரணாகும். 'கிதாப் என்றால் பெரிய புத்தகங்களுக்குத்தான் பயன்படுத்த வேண்டும் என்று கிடையாது.எழுதப்பட்ட எதனையும் கிதாப் என்று கூறலாம்.கிதாப் என்றாலே எழுதப்பட்டது என்பது தான் பொருளாகும்.

சுலைமான் (அலை) அவர்கள் அண்டை நாட்டு அரசிக்கு கடிதம் எழுதி,இஸ்லாத்தின் பால் அழைத்தார்கள். அந்த கடிதம் அப்பெண்ணைச் சேர்ந்த போது

"பிரமுகர்களே! என்னிடம் மகத்துவமிக்க கிதாப் (கடிதம்) போடப்பட்டுள்ளது'' என்று அவள் கூறினாள்.

திருக்குர்ஆன் 27:29

இதன் மூலம் 'கிதாப்' என்பதை ஒரு தாளில் எழுதப்பட்ட கடிதத்துக்கும் கூட குறிப்பிடலாம் என அறிகிறோம்.மேலும் முன்னர் நாம் எழுதிய வசனங்களில் ஏனைய நபிமார்களுக்கு வேதம் வழங்கப்பட்டதாக குறிப்பிடும் இடங்களில் 'கிதாப்' என்ற பதமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

கிதாப் என்பது பெரிய நூல்,ஸுஹுப் என்பது சிறிய நூல் என்ற வாதம் அடிபட்டுப் போவதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

மேலும் திருக்குர்ஆனை முஸ்ஹப் என்று குறிப்பிடும் வழக்கம் நபித்தோழர்கள் காலம் முதல் இருந்து வருகின்றது. இந்த வார்த்தை ஸுஹுப் என்பதிலிருந்து பிறந்ததாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றிக் குறிப்பிடும் போது " இவர் தூய்மையான ஸுஹுபை ஓதுகிறார்.அதில் உறுதியான பல கிதாப்கள் உள்ளன" என்று அல்லாஹ் கூறுகிறான்.(அல்பய்யினா அத்தியாயம் )

திருக்குர்ஆனை ஸுஹுபு என கூறும் இறைவன் அதிலுள்ள அத்தியாயங்களை கிதாப் எனக் குறிபிடுகிறான்.இந்த வசனத்தினடிப்படையில் கூறுவதாக இருந்தால் ஸுஹுப் என்பது பெரிய ஏடுகள்,கிதாப் என்பது சிறிய ஏடுகள் என்று தான் கூற வேண்டும். எனவே மூவரைத் தவிர ஏனைய நபிமார்களுக்கு ஸுஹுப் எனும் சிற்றேடுகள் வழங்கப்பட்டன என கூறுவது தவறான வாதம் என்பதை அறிந்து கொள்ளலாம்.

சுருங்க சொல்வதென்றால் பெரிய வேதங்களானாலும் சிறிய வேதங்களானாலும் அதை கிதாப் என்றும் கூறலாம்;ஸுஹுப் என்றும் கூறலாம்.ஆகவே அனைத்து நபிமார்களுக்கும் வேதம் வழங்கப்பட்டதில் எந்த ஐயமும் இல்லை.

பல நபிமார்கள் அனுப்பப்பட்டிருந்த போதும் 25 நபிமார்கள் பெயர்கள் மட்டும் குர்ஆனில் கூறப்படுவது போலவே பல வேதங்கள் வழங்கப்பட்டிருந்தாலும் நான்கு வேதங்களின் பெயர்கள் மட்டுமே குர்ஆனில் கூறப்படுகின்றன.பெயர் குறிப்பிடப்படும் முந்தைய வேதங்கள் மூன்று தான். ஆனால் பெயர் குறிப்பிடப்படாத இன்னும் பல வேதங்களை இறைவன் அருளினான் என்பதை நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும்.முந்தைய வேதங்களை நம்புதல் என்பதன் சரியான பொருள் இது தான்.

எப்படி நம்ப வேண்டும்?

முந்தைய வேதங்களை எவ்வாறு நம்புவது என்பதை பல முஸ்லிம்கள் அறியாததால் இந்த வசனத்தை கிறித்தவர்கள் திசை திருப்பிக் கொண்டிருக்கிறார்கள்.முதலில் அவர்கள் எவ்வாறு முஸ்லிம்களைக் குழப்புகின்றனர் என்பதை நாம் விரிவாக அறிய வேண்டும்.

மேலே கண்ட 2:4 வசனம் முந்தைய வேதங்களை நம்புமாறு கூறுகிறது.வேதமுடையவர்களில் ஒரு கூட்டத்தினர் அல்லாஹ்வின் வசனங்களை ஓதி வருகின்றனர். (3:113) என்றும் அல்குர்ஆன் கூறுகிறது.இஞ்சீல் வேதத்தையுடையவர்கள் அல்லாஹ் அருளிய வேதத்தின் பிரகாரம் தீர்ப்பளிக்கட்டும் (5:47) எனவும் குர்ஆன் கூறுகிறது. இதுபோல் முந்தைய வேதங்கள் பற்றி அநேக வசனங்கள் கூறுகின்றன. குர்ஆனே முந்தைய வேதங்களை நம்ப சொல்வதால் எங்களது பைபிலையும் நம்புங்கள்! பைபில் கூறும் கொள்கையின் பால் வாருங்கள்! என முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுக்கிறது கிறித்தவ திருச்சபை.

முந்தைய வேதங்களை குர்ஆன் நம்ப சொல்கிறது என்பது உண்மை தான்.எப்படி நம்ப வேண்டுமென்பதையும் அல்குர்ஆன் நமக்கு சொல்லித்தர தவறவில்லை.

முந்தைய வேத்திற்குரியவர்கள் தங்கள் வேதங்களில் சொந்தச்சரக்குகளை திணித்தார்கள்.தங்களது சொந்த இலாபத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வசனங்களை நீக்கினார்கள். அடித்தல், திருத்தல், கூட்டல், குறைத்தல் ஆகிய மாறுதல்களுக்கு முந்தைய வேதங்கள் இலக்காயின. (பார்க்க 2:75,5:41,5:13) என்பதையும் அல்குர்ஆன் சொல்கிறது.

முந்தைய சமுதாயத்திற்கு வேதங்கள் அருளப்பட்டன என்பதை நம்புவதுடன் அவற்றில் மனிதக்கரங்கள் தாராளமாகவே விளையாடின என்பதையும் நாம் நம்ப வேண்டும். அதாவது முந்தைய வேதக்காரர்களிடம் இருப்பது கலப்படங்கள்.அவற்றில் இறைவனின் சில உண்மையான வசனங்கள் இருக்கக்கூடும் என்றாலும் எவை இறைவனின் வார்த்தைகள்? எவை மனிதக கற்பனையில் தோன்றியவை என்பதைக் கண்டு கொள்ள இயலாத விதத்தில் இரண்டும் இரண்டறக் கலந்துள்ளன எனவும் நாம் நம்ப வேண்டும்.முன்னரும் வேதங்கள் அருளப்பட்டன என்று விசுவாசம் மட்டும் தான் கொள்ள முடியுமே தவிர அவர்களிடம் இருப்பவை அனைத்தும் வேதம் தான் என்று நம்பவோ அதில் கூறப்படுவதற்கேற்ப செயல்படவோ அனுமதியில்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.

கூடுதல், குறைவு செய்தார்கள் என்பது மட்டுமன்றி முழுக்க முழுக்க மனிதக் கற்பனைகளால் எழுதி வைத்தவைகளையும் வேதங்கள் என்று முந்தைய வேதக்கார்கள் அறிமுகமும் செய்தனர்.

தம் கைகளால் நூலை எழுதி, அதை அற்ப விலைக்கு விற்பதற்காக "இது அல்லாஹ்விடமிருந்து வந்தது' என்று கூறுவோருக்குக் கேடு தான். அவர்களின் கைகள் எழுதியதற்காகவும் அவர்களுக்குக் கேடு உள்ளது. (அதன் மூலம்) சம்பாதித்ததற்காகவும் அவர்களுக்குக் கேடு உள்ளது.

திருக்குர்ஆன் 2:79

அவர்களில் ஒரு பகுதியினர் உள்ளனர். வேதத்தில் இல்லாததை வேதம் என்று நீங்கள் நினைக்க வேண்டும் என்பதற்காக வேதத்தை வாசிப்பது போல் தமது நாவுகளை வளைக்கின்றனர்.

திருக்குர்ஆன் 3:78

இவர்கள் சுயமாகவே வேதங்களை தயாரித்துக்கொண்டார்கள் என்பதை இந்த வசனங்கள் கூறுகின்றன.இவ்வாறு தான் முந்தைய வேதங்களைப் பற்றி முஸ்லிம்கள் நம்ப வேண்டும்.

இறைவனிடமிருந்து பல சமுதாயங்களுக்கு வேதங்கள் அருளப்பட்டன.அவை அணைத்தும் அதைக் கொண்டு வந்த நபிமார்களின் காலங்களில் முழு உண்மையாகவே இருந்தன.ஆனாலும் வேதங்களை முழுமையாக ஒழித்து விட்டு மனிதக் கற்பனைகளை வேதம் என்று நம்பியவர்களும் இருந்தனர்.நபிமார்கள் கொண்டு வந்த வேதத்துடன் சிலவற்றை சேர்த்து சிலவற்றை நீக்கியவர்களும் இருந்தனர்; என்று நம்புவதே முந்தைய வேதங்களை நம்புவது என்பதன் சரியான பொருளாகும்.தவ்ராத்தோ,இஞ்சீலோ அது இறக்கப்பட்ட விதமாக அப்படியே இன்று உலகில் கிடையாது. கிறித்தவர்கள் இஞ்சீலை விசுவாசியுங்கள் என்று கூறப்படும் வசனங்களை காட்டி தங்கள் பைபிலை இஞ்சீல் என்று ஏமாற்றுவதற்கு இந்த வசனத்தில் எந்த சான்றும் கிடையாது.

(இது குறித்து கூடுதலான விபரங்களை அறிய விரும்புவோர் இது தான் பைபில் என்ற எமது வெளியீட்டை பார்வையிடுக.

மூஸா நபி போடப்பட்டது கடலிலா? ஆற்றிலா?

மூசா நபியை சிறு வயதில் அவரது தாயார் ஆற்றில் போட்டார்களா? அல்லது கடலிலா?

சலாம்

பதில்

أَنْ اقْذِفِيهِ فِي التَّابُوتِ فَاقْذِفِيهِ فِي الْيَمِّ فَلْيُلْقِهِ الْيَمُّ بِالسَّاحِلِ يَأْخُذْهُ عَدُوٌّ لِي وَعَدُوٌّ لَهُ وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِنِّي وَلِتُصْنَعَ عَلَى عَيْنِي(39)20

இவரை (இக்குழந்தையை) பெட்டிக்குள் வைத்து அதைக் கடலில் போடுவாயாக! கடல் அவரைக் கரையில் சேர்க்கும். எனக்கும், இவருக்கும் எதிரியானவன் இவரை எடுத்துக் கொள்வான் (என்று உமது தாயாருக்கு அறிவித்தோம்). எனது கண்காணிப்பில் நீர் வளர்க்கப்படுவதற்காக உம் மீது என் அன்பையும் செலுத்தினேன்.

திருக்குர்ஆன் 20 : 39

وَأَوْحَيْنَا إِلَى أُمِّ مُوسَى أَنْ أَرْضِعِيهِ فَإِذَا خِفْتِ عَلَيْهِ فَأَلْقِيهِ فِي الْيَمِّ وَلَا تَخَافِي وَلَا تَحْزَنِي إِنَّا رَادُّوهُ إِلَيْكِ وَجَاعِلُوهُ مِنْ الْمُرْسَلِينَ(7)28

இவருக்குப் பாலூட்டு! இவரைப் பற்றி நீ பயந்தால் இவரைக் கடலில் போடு! பயப்படாதே! கவலையும் படாதே! அவரை உன்னிடம் நாம் திரும்ப ஒப்படைத்து, அவரைத் தூதராக ஆக்குவோம் என்று மூஸாவின் தாயாருக்கு அறிவித்தோம்.

திருக்குர்ஆன் 28 : 7

மேலுள்ள இரு வசனங்களிலும் கடல் என நாம் மொழிபெயர்த்துள்ள இடத்தில் அல்யம்மு என்ற அரபுச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. கடல் என்பது இவ்வார்த்தையின் பொருள் என பல அரபு அகராதி நூற்களில் கூறப்பட்டுள்ளது. இவ்வார்த்தை கடல் என்ற அர்த்தத்தில் ஹதீஸ்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சிலர் இவ்வார்த்தைக்கு நதி என்ற பொருளும் இருப்பதாகக் கூறுகின்றனர். இவர்கள் தங்கள் கூற்றுக்கு எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை. மூசா (அலை) அவர்களின் தாயார் மூசா (அலை) அவர்களை நைல் நதியில் போட்டார்கள் என்ற கருத்தை அடிப்படையாக வைத்தே இவ்வார்த்தைக்கு நதி என்ற பொருளும் இருப்பதாக இவர்கள் வாதிடுகின்றனர்.

ஆனால் மூசா நபியின் தாயார் நைல் நதியில் தான் போட்டார் என்பதற்கு குர்ஆனிலோ, நபிமொழியிலோ எந்தச் சான்றும் இல்லை. எனவே இவார்த்தைக்குரிய சரியான பொருளின் படி கடலில் போட்டார்கள் என்ற கருத்தே ஏற்புடையது.

18.04.2011. 3:43 AM

மனிதனால் குர்ஆனை சுமக்க முடியும் என்றால் மலையால் ஏன் சுமக்க முடியாது?

? இறைவன் குர்ஆனை இறக்கும் போது, மலையின் மீது இறக்குகின்றேன் என்று கேட்க, என் மீது குர்ஆனை இறக்கினால் வெடித்துச் சிதறி விடுவேன் என்று மலை கூறியதால் மனிதன் மீது இறக்கியதாக இறைவன் கூறுகின்றான். அதிகமாக குற்றம் புரியும் மனிதன் குர்ஆனைச் சுமக்கும் போது, எந்தத் தப்பும் செய்யாத மலையினால் ஏன் தாங்க முடியாது?

டி. திவான் பஜிரா, பெரிய குளம்.

குர்ஆனை மலையின் மீது இறக்குவதாக இறைவன் அனுமதி கேட்டதாகவும், அதற்கு மலை மறுத்ததாகவும் நீங்கள் கூறுவதற்கு குர்ஆன் ஹதீஸில் எந்த ஆதாரமும் இல்லை.

இந்தக் குர்ஆனை ஒரு மலையின் மீது நாம் இறக்கியிருந்தால் அது அல்லாஹ்வின் அச்சத்தால் பணிந்து நொறுங்கி விடுவதைக் காண்பீர். மனிதர்கள் சிந்திப்பதற்காக இந்த உதாரணங்களை அவர்களுக்குக் கூறுகிறோம்.

திருக்குர்ஆன் 59:21

இந்த வசனத்தை அடிப்படையாக வைத்து இவ்வாறு நீங்கள் கேட்டிருக்கலாம். ஆனால் இந்த வசனத்தில் தாங்கள் கூறுவது போன்ற கருத்து இடம் பெறவில்லை.

குர்ஆனில் இடம் பெற்றுள்ள அறிவுரைகள், செய்திகள் ஆகியவற்றின் காரணமாக மலை கூட இறையச்சத்தால் பணிந்து விடும், ஆனால் மனிதன் இந்தக் குர்ஆனைச் சிந்திக்காமல் இருக்கின்றான் என்று இவ்வசனத்தில் அல்லாஹ் உதாரணம் கூறுகின்றான்.

இது மனிதர்கள் சிந்திப்பதற்காக அல்லாஹ் கூறுகின்ற உதாரணம் தான் என்று இவ்வசனத்திலேயே இடம் பெற்றுள்ளதைக் கவனிக்கவும்.

அமானிதம் பற்றித்தான் நீங்கள் கூறியது போன்ற கருத்தில் வசனம் உள்ளது. அது குறித்த விளக்கத்தைக் காண மனிதன் சுமந்த அமானிதம் எது?

22.12.2014. 18:53 PM

ஷைத்தானுக்கு அதிகாரம் வழங்கி விட்டு அவனைவிட்டு பாதுகாப்பு தேடுவதற்கு என்ன அர்த்தம்?

ஷைத்தானுக்கு எல்லா அதிகாரத்தையும் கொடுத்து விட்டு அவனை விட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுவதில் அர்த்தம் இருக்கிறதா?

மனிதர்களை வழிகெடுக்கும் வாய்ப்பை அல்லாஹ்விடம் ஷைத்தான் கேட்டுப் பெற்றுள்ளான் என நாம் அறிந்திருக்கிறோம்.

ஷைத்தான் தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்க அல்லாஹ் அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். நாம் அல்லாஹ்விடம் உதவி தேடினால் மட்டும் சைத்தானிடம் இருந்து அல்லாஹ் நம்மளைக் காப்பானா ?

பதில்

இறைவன் ஷைத்தானுக்கு எத்தகைய அதிகாரத்தை வழங்கியுள்ளான் என்பதைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு மனிதரையும் அவருடைய விருப்பமில்லாமல் வலுக்கட்டாயமாக தவறான பாதைக்கு ஷைத்தான் இழுத்துச் செல்வதில்லை.

தவறான எண்ணங்களை ஏற்படுத்தி தீய காரியங்களின் பால் அழைப்பதும், நன்மையான காரியங்களைப் புறக்கணிக்குமாறு ஏவுவதும் தான் ஷைத்தானால் செய்ய முடியும்.

அவன் ஏற்படுத்திய எண்ணத்திற்குக் கட்டுப்படுபவர்கள் தீமையைச் செய்து விடுகிறார்கள். அவனது ஆசை வார்த்தைக்கு மயங்காதவர்கள் நன்மையின் பால் விரைகிறார்கள்.

மனிதன் தானாகவே ஷைத்தானுக்குக் கட்டுப்பட்டு தவறிழைக்கிறானே தவிர ஷைத்தான் யாரையும் வலுக்கட்டாயமாக அவர்கள் விரும்பாமல் தீமைக்கு அழைத்துச் செல்வதில்லை.

அது போன்று நல்ல விஷயங்களை வெறுப்பிற்குரியதாக நமக்குக் காட்டுவானே தவிர நன்மையான காரியங்களைச் செய்யவிடாமல் ஷைத்தான் யாரிடத்திலும் சண்டைக்கு வர மாட்டான். இதை நாம் நமது வாழ்க்கையில் ஒவ்வொருவரும் அனுபவித்து வருகிறோம்.

தீய எண்ணங்களை ஏற்படுத்துவதும், தவறான வழிகளைக் காட்டுவதும் தான் ஷைத்தானுடைய வேலை என்பதைப் பின்வரும் குர்ஆன் வசனங்களிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்; அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள் (எனவும் கூறினான்). அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நஷ்டத்தை அடைந்து விட்டான்.

திருக்குர்ஆன் 4:119

அவன் தீமையையும், வெட்கக் கேடானதையும், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுவதையும் உங்களுக்குத் தூண்டுகிறான்.

திருக்குர்ஆன் 2:169

அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான்.

திருக்குர்ஆன் 114:5

ஷைத்தானால் மனிதனுக்கு ஏற்படும் தீமை தவறான வழியைக் காட்டுவதைத் தவிர வேறெதுவும் இல்லை என்பதைப் பின்வரும் குர்ஆன் வசனங்களிலிருந்தும் விளங்கிக் கொள்ளலாம்.

அல்லாஹ் உங்களுக்கு உண்மையான வாக்குறுதி அளித்தான். நானும் உங்களுக்கு வாக்குறுதி அளித்து உங்களிடம் வாக்கு மீறி விட்டேன். உங்களை அழைத்தேன். எனது அழைப்பை ஏற்றீர்கள் என்பதைத் தவிர உங்கள் மீது எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனவே என்னைப் பழிக்காதீர்கள்! உங்களையே பழித்துக் கொள்ளுங்கள்! நான் உங்களைக் காப்பாற்றுபவனும் அல்லன். நீங்கள் என்னைக் காப்பாற்றுவோரும் அல்லர். முன்னர் என்னை (இறைவனுக்கு) இணையாக்கியதை மறுக்கிறேன் என்று தீர்ப்புக் கூறப்பட்டவுடன் ஷைத்தான் கூறுவான். அநீதி இழைத்தோருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு

திருக்குர்ஆன் 14:22

மனிதன் மிகவும் பலவீனமானவன். ஒரு நேரம் இல்லாவிட்டால் மற்றொரு சூழ்நிலையில் ஷைத்தானின் ஆசை வார்த்தைகளுக்கு இனங்கி விடுகிறான். இந்தப் பலவீனத்தால் நாம் தவறான வழியைத் தேர்வு செய்து விடக் கூடாது. சரியான வழியில் உறுதியாக இருக்க வேண்டும் என்ற கருத்தில் ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்வின் பாதுகாப்புத் தேடப்படுகின்றது.

ஷைத்தான் நல்லதாகக் காட்டும் தீய காரியங்களை நமக்கு தீய காரியங்களாகவே இறைவன் காட்டி ஷைத்தானுக்கு கட்டுப்படாமல் காப்பாறுவான்.

"என் இறைவா! என்னை நீ வழிகேட்டில் விட்டதால் பூமியில் (தீமைகளை) அழகாக்கிக் காட்டுவேன். அவர்களில் உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட உனது அடியார்களைத் தவிர (மற்றவர்கள்) அனைவரையும் வழிகெடுப்பேன்'' என்று கூறினான்.

"இதோ என்னிடம் நேரான வழி உள்ளது'' என்று (இறைவன்) கூறினான்.

எனது அடியார்களில் உன்னைப் பின்பற்றிய வழிகேடர்களைத் தவிர மற்றவர்கள் மீது உனக்கு எந்த அதிகாரமும் இல்லை.

திருக்குர்ஆன் 15:42-45

எனவே நாம் இந்தப் பிரச்சனையில் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவது அர்த்தமுள்ளது தான்.

இறைவனிடம் நாம் பாதுகாப்புத் தேடும் போது நாம் அடிமை என்பதையும், அல்லாஹ் எஜமான் என்பதையும் வெளிப்படுத்துகின்றோம். தன் அடியார்கள் தன்னிடம் உதவி தேடுவதை இறைவன் மிகவும் நேசிக்கின்றான்.

13.04.2011. 4:40 AM

அர்ஷில் அமர்ந்தான் என்று கூறுவது சரியா?

நீங்கள் உங்கள் மொழிபெயர்ப்பில் இஸ்தவா அலல் அர்ஷ் என்பதை அர்ஷின் மீது அல்லாஹ் அமர்ந்தான் என்று மொழிபெயர்த்துள்ளீர்கள். இஸ்தவா என்பதற்கு அமருதல் என்ற அர்த்தம் கிடையாது. அமருதல் என்பதற்கு அரபியில் ஜலச என்ற வார்த்தை தான் சரியானது என்று சிலர் கூறுகிறார்கள்.

அஹ்மத்

பதில் :

அல்லாஹ் அர்ஷின் மீது அமர்ந்துள்ளான் என்று குர்ஆனில் ஏழு இடங்களில் கூறப்பட்டுள்ளது. இஸ்தவா என்ற அரபுச் சொல் இவ்விடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

إِنَّ رَبَّكُمْ اللَّهُ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ (54)7

உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான்.

திருக்குர்ஆன் 7 : 54

إِنَّ رَبَّكُمْ اللَّهُ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ (3)10

உங்கள் இறைவன் அல்லாஹ்வே. அவனே வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான்.

திருக்குர்ஆன் 10 : 3

اللَّهُ الَّذِي رَفَعَ السَّمَاوَاتِ بِغَيْرِ عَمَدٍ تَرَوْنَهَا ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ كُلٌّ يَجْرِي لِأَجَلٍ مُسَمًّى يُدَبِّرُ الْأَمْرَ يُفَصِّلُ الآيَاتِ لَعَلَّكُمْ بِلِقَاءِ رَبِّكُمْ تُوقِنُونَ(2)13

நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி வானங்களை அல்லாஹ்வே உயர்த்தினான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான்.

திருக்குர்ஆன் 13 : 2

الرَّحْمَانُ عَلَى الْعَرْشِ اسْتَوَى(5)20

அளவற்ற அருளாளன் அர்ஷின் மீது அமர்ந்தான்.

திருக்குர்ஆன் 20 : 5

الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ الرَّحْمَانُ فَاسْأَلْ بِهِ خَبِيرًا(59)25

அவனே வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். அளவற்ற அருளாளனைப் பற்றி, அறிந்தவரிடம் கேட்பீராக!

திருக்குர்ஆன் 25 : 59

اللَّهُ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ مَا لَكُمْ مِنْ دُونِهِ مِن وَلِيٍّ وَلَا شَفِيعٍ أَفَلَا تَتَذَكَّرُونَ(4)32

வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் அல்லாஹ்வே ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். உங்களுக்கு அவனன்றி பொறுப்பாளரோ, பரிந்துரைப்பவரோ இல்லை. நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?

திருக்குர்ஆன் 32 : 4

هُوَ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ يَعْلَمُ مَا يَلِجُ فِي الْأَرْضِ وَمَا يَخْرُجُ مِنْهَا وَمَا يَنْزِلُ مِنْ السَّمَاءِ وَمَا يَعْرُجُ فِيهَا وَهُوَ مَعَكُمْ أَيْنَ مَا كُنْتُمْ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ(4)57

வானங்களையும், பூமியையும் அவனே ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான்.

திருக்குர்ஆன் 57 : 4

மேற்கண்ட வசனங்கள் தான் நீங்கள் சுட்டிக்காட்டும் வசனங்களாகும். இவ்வசனங்களில் ஜலஸ என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. இஸ்தவா என்ற சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.  அவ்வாறிருக்கும் போது அமர்ந்தான் என்று எப்படி பொருள் கொள்ள முடியும்? இதுதான் உங்கள் கேள்வி.

அமர்தல் என்பதற்கு ஜலஸ என்ற சொல் மட்டும் இல்லை. ஏராளமான சொற்கள் உள்ளன. அதில் இஸ்தவா என்பதும் ஒன்றாகும்.

இதே சொல் குர்ஆனில் வேறு இடங்களிலும் அமர்தல் என்ற அர்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

وَقِيلَ يَاأَرْضُ ابْلَعِي مَاءَكِ وَيَاسَمَاءُ أَقْلِعِي وَغِيضَ الْمَاءُ وَقُضِيَ الْأَمْرُ وَاسْتَوَتْ عَلَى الْجُودِيِّ وَقِيلَ بُعْدًا لِلْقَوْمِ الظَّالِمِينَ(44)11

பூமியே! உனது தண்ணீரை நீ உறிஞ்சிக் கொள்! வானமே நீ நிறுத்து! என்று (இறைவனால்) கூறப்பட்டது. தண்ணீர் வற்றியது. காரியம் முடிக்கப்பட்டது. அந்தக் கப்பல் ஜூதி மலை மீது அமர்ந்தது. அநீதி இழைத்த கூட்டத்தினர் (இறையருளை விட்டும்) தூரமாயினர் எனவும் கூறப்பட்டது.

திருக்குர்ஆன் 11 : 44

இவ்வசனத்தில் அமர்ந்தது என மொழிபெயர்த்துள்ள இடத்தில் இஸ்தவா என்ற அரபுச் சொல்லே இடம்பெற்றுள்ளது. இங்கே அமர்தல் என்ற அர்த்தத்தைத் தவிர வேறு எந்த அர்த்தத்தையும் கொடுக்க இயலாது.

இதே போன்று பின்வரும் வசனத்திலும் அமர்தல் என்ற பொருளிலே இவ்வார்த்தை இடம் பெற்றுள்ளது.

فَإِذَا اسْتَوَيْتَ أَنْتَ وَمَنْ مَعَكَ عَلَى الْفُلْكِ فَقُلْ الْحَمْدُ لِلَّهِ الَّذِي نَجَّانَا مِنْ الْقَوْمِ الظَّالِمِينَ(28)23

நீரும், உம்முடன் உள்ளோரும் கப்பலில் அமர்ந்ததும் அநீதி இழைத்த கூட்டத்தை விட்டும் நம்மைக் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் எனக் கூறுவீராக!

திருக்குர்ஆன் 23 : 28

இஸ்தவா என்பதற்கு அமர்தல் என்ற பொருள் இருப்பது இவ்வசனங்களின் மூலம் உறுதியாகிறது.

ஆனால் நீங்கள் குறிப்பிட்ட ஜலச என்ற அரபுச் சொல்லுக்கும் இஸ்தவா அரபுச் சொல்லுக்கும் அமர்தல் என்ற பொருள் இருந்தாலும் இவ்விரு சொல்லுக்கும் இடையே ஒரு வித்தியாசம் இருக்கின்றது.

ஜலச என்ற சொல் சாதாரணமாக தரையில் அமர்வதற்கு அரபு மொழியில் பயன்படுத்தப்படும். ஆனால் இஸ்தவா என்ற சொல் சாதாரணமாக தரையில் அமர்வதற்கு பயன்படுத்தப்படாது. மாறாக உயரமான ஒரு பொருளின் மீது அமர்வதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.

உதாரணமாக கப்பலின் மீது அமர்தல், மலையின் மீது அமர்தல், வாகனத்தின் மீது அமர்தல், மிம்பரின் மீது அமர்தல் ஆகிய அர்த்தங்களில் குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் இவ்வார்த்தை கூறப்பட்டுள்ளது.

வாகனத்தின் மீது அமர்தல் என்ற பொருளில் பின்வரும் வசனத்தில் இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

لِتَسْتَوُوا عَلَى ظُهُورِهِ ثُمَّ تَذْكُرُوا نِعْمَةَ رَبِّكُمْ إِذَا اسْتَوَيْتُمْ عَلَيْهِ وَتَقُولُوا سُبْحانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ(13)43

நீங்கள் அதன் முதுகுகளில் அமர்ந்து உங்கள் இறைவனின் அருட்கொடையை நினைப்பதற்காகவும், எங்களுக்கு இவற்றை வசப்படுத்தித் தந்தவன் தூயவன். நாங்கள் இதற்குச் சக்தி பெற்றோராக இல்லை. நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்வோர் என்று நீங்கள் கூற வேண்டுமென்பதற்காகவும் (அவற்றை வழங்கினான்).

திருக்குர்ஆன் 43 : 13,14

இந்த வசனத்திலும் அதே இஸ்தவா என்ற சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

2914حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ أَبِي النَّضْرِ مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ عَنْ نَافِعٍ مَوْلَى أَبِي قَتَادَةَ الْأَنْصَارِيِّ عَنْ أَبِي قَتَادَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ كَانَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى إِذَا كَانَ بِبَعْضِ طَرِيقِ مَكَّةَ تَخَلَّفَ مَعَ أَصْحَابٍ لَهُ مُحْرِمِينَ وَهُوَ غَيْرُ مُحْرِمٍ فَرَأَى حِمَارًا وَحْشِيًّا فَاسْتَوَى عَلَى فَرَسِهِ رواه البخاري

அபூ கத்தாதா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் மக்காவை நோக்கிச் செல்லும் சாலை ஒன்றில் இருந்த போது இஹ்ராம் அணிந்திருந்த தம் தோழர்களை விட்டுப் பின்தங்கி விட்டார்கள். நான் மட்டும் இஹ்ராம் அணிந்திருக்கவில்லை. அப்போது காட்டுக் கழுதை ஒன்றை நான் கண்டேன். குதிரை மீதேறி அமர்ந்து கொண்டேன்.

நூல் புகாரி 2914

குதிரையின் மீதேறி அமர்தல் என்ற பொருளில் இங்கே இஸ்தவா என்ற சொல் கூறப்பட்டுள்ளது.

4278حَدَّثَنِي عَيَّاشُ بْنُ الْوَلِيدِ حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى حَدَّثَنَا خَالِدٌ عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ خَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي رَمَضَانَ إِلَى حُنَيْنٍ وَالنَّاسُ مُخْتَلِفُونَ فَصَائِمٌ وَمُفْطِرٌ فَلَمَّا اسْتَوَى عَلَى رَاحِلَتِهِ دَعَا بِإِنَاءٍ مِنْ لَبَنٍ أَوْ مَاءٍ فَوَضَعَهُ عَلَى رَاحَتِهِ أَوْ عَلَى رَاحِلَتِهِ رواه البخاري

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தமது வாகனத்தில் நன்கு அமர்ந்து கொண்ட போது ஒரு பால் பாத்திரத்தை.... அல்லது தண்ணீர்ப் பாத்திரத்தை.... கொண்டு வரும்படிக் கூறி, அதைத் தம் உள்ளங்கையில் ....அல்லது தமது வாகனத்தில்.... வைத்தார்கள். பிறகு மக்களைப் பார்த்தார்கள். உடனே நோன்பை விட்டு விட்டவர்கள் நோன்பு நோற்றிருந்தவர்களிடம், நீங்களும் நோன்பை விடுங்கள் என்று சொன்னார்கள்.

நூல் : புகாரி 4277

இந்தச் செய்தியிலும் நன்கு அமர்தல் என்ற பொருளில் இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

1379أَخْبَرَنَا عَمْرُو بْنُ سَوَّادِ بْنِ الْأَسْوَدِ قَالَ أَنْبَأَنَا ابْنُ وَهْبٍ قَالَ أَنْبَأَنَا ابْنُ جُرَيْجٍ أَنَّ أَبَا الزُّبَيْرِ أَخْبَرَهُ أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا خَطَبَ يَسْتَنِدُ إِلَى جِذْعِ نَخْلَةٍ مِنْ سَوَارِي الْمَسْجِدِ فَلَمَّا صُنِعَ الْمِنْبَرُ وَاسْتَوَى عَلَيْهِ اضْطَرَبَتْ تِلْكَ السَّارِيَةُ كَحَنِينِ النَّاقَةِ حَتَّى سَمِعَهَا أَهْلُ الْمَسْجِدِ حَتَّى نَزَلَ إِلَيْهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاعْتَنَقَهَا فَسَكَتَتْ رواه النسائي

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரையாற்றும் போது பள்ளியின் ஒரு தூணாக இருந்த பேரீச்ச மரத்தின் மீது சாய்ந்து கொள்வார்கள். மிம்பர் செய்யப்பட்ட பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதன் மீது அமர்ந்தார்கள்.

நூல் : நஸாயீ

7269حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ عُقَيْلٍ عَنْ ابْنِ شِهَابٍ أَخْبَرَنِي أَنَسُ بْنُ مَالِكٍ أَنَّهُ سَمِعَ عُمَرَ الْغَدَ حِينَ بَايَعَ الْمُسْلِمُونَ أَبَا بَكْرٍ وَاسْتَوَى عَلَى مِنْبَرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَشَهَّدَ قَبْلَ أَبِي بَكْرٍ فَقَالَ أَمَّا بَعْدُ فَاخْتَارَ اللَّهُ لِرَسُولِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّذِي عِنْدَهُ عَلَى الَّذِي عِنْدَكُمْ وَهَذَا الْكِتَابُ الَّذِي هَدَى اللَّهُ بِهِ رَسُولَكُمْ فَخُذُوا بِهِ تَهْتَدُوا وَإِنَّمَا هَدَى اللَّهُ بِهِ رَسُولَهُ رواه البخاري

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறந்த மறு நாள் முஸ்லிம்கள் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு (அவர்களை கலீஃபாவாக ஏற்று) விசுவாசப் பிராமணம் (பைஅத்) செய்து கொடுத்த போது உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது அமர்ந்தார்கள்.

நூல் : புகாரி 7269

மிம்பரின் மீது அமர்தல் என்ற பொருளில் இவ்விரு ஹதீஸ்களில் இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

லிசானுல் அரப் என்ற பிரபல அரபு அகராதி நூலில் இவ்வார்த்தைக்கு இப்பொருள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது ஒரு பொருளின் மேற்பகுதியில் இருத்தல் என்று இதற்கு அர்த்தம் எனக் கூறப்பட்டுள்ளது.

لسان العرب

وقال الأَخفش استَوى أَي علا تقول استَوَيْتُ فوق الدابة وعلى ظهر البيت أَي علَوْتُه واستَوى على ظهر دابته أَي استَقَرَّ

இஸ்தவா என்றால் மேலே இருத்தல் என்பது பொருள். வாகனத்தின் மேலே இருத்தல், வீட்டினுடைய முகட்டின் மீது இருத்தல் என்று கூறப்படும்.

லிசானுல் அரப்

எனவே இறைவன் அர்ஷ் மீது அமர்ந்து உயர்வாக இருக்கின்றான் என்று பொருள் கொள்வதே சரியானது.

இவ்வாறு அர்த்தம் செய்யக் கூடாது என்று கூறுபவர்கள் இவ்வார்த்தைக்கு வேறு விளக்கங்களைத் தருகின்றார்கள். அந்த விளக்கங்கள் அனைத்தும் அரபு இலக்கணத்தின் படி பார்த்தாலும் குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் பார்த்தாலும் தவறாகவே இருக்கின்றன.

09.12.2010. 8:53 AM

அல்லாஹ் போட்ட அணுகுண்டு

அல் ஜன்னத் பத்திரிகையில் பீஜே ஆசிரியராக இருந்த போது, அணு குண்டும் ஏவுகணையும் என்ற தலைப்பில் அளித்த அல்குர்ஆன் விரிவுரையை அல்லாஹ் போட்ட அணுகுண்டு என்ற தலைப்பில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் வெளியீடான அழைப்பு இதழில், மீள் பிரசுரம் செய்தோம். இது, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, இலங்கையில் வெளிவரும் தேசிய நாளேடு ஒன்று இதை மீள் பிரசுரம் செய்தது. மாற்று இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கூட இவ்விரிவுரையைப் பாராட்டி வாசகர்  பகுதிக்கு எழுதியிருந்தனர்.

பாபர் மசூதி 1992 டிசம்பர் 6ஆம் நாள் சங்பரிவாரக் கும்பல்களால் தகர்க்கப்பட்ட போது, இதே 105வது அத்தியாயத்திற்கு நீங்கள் அபாபீல் பறவைகள் எங்கே போயின? என்ற தலைப்பில் விளக்கம் அளித்திருந்தீர்கள்.

இதை ஆன்லைனில் வெளியிட்டால் நேயர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் அனுப்பி வைக்கின்றேன்.

எம்.ஏ.ஹஃபீழ் ஸலஃபி, இலங்கை.

அல்லாஹ் போட்ட அணுகுண்டு

பீ. ஜைனுல் ஆபிதீன்

யானைப் படையினரை உமது இறைவன் எவ்வாறு ஆக்கினான் என்பதை நீர்சிந்திக்கவில்லையா? அவர்களின் சூழ்ச்சியை அவன் முறியடிக்கவில்லையா? அபாபீல் பறவைகளை அவர்கள் மீது அவன் அனுப்பவில்லையா? அப்பறவைகள் சூடேற்றப்பட்ட கற்களை அவர்கள் மீது எறிந்தன. அதனால் அவன், அவர்களை மெல்லப்பட்ட வைக்கோலைப் போன்று ஆக்கினான்.

அத்தியாயம் அல்ஃபீல் : 1-5

இந்த அத்தியாயத்தை ஆய்வு செய்வதற்கு முன், இந்த அத்தியாயம் கூறுகின்ற வரலாறு என்னவென்பதைச் சுருக்கமாக அறிந்து கொள்வோம்.

புனித மக்கா நகரில் இப்ராஹீம் நபியால் மறுநிர்மாணம் செய்யப்பட்ட ஆலயம் உள்ளது. அது கஅபா எனக் குறிப்பிடப்படுகிறது.

இந்த ஆலயம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திற்கு முன்பிருந்தே புனிதத் தலமாக அரபு சமுதாயத்தால் கருதப்பட்டு வந்தது. அரபுகள் கூட்டம் கூட்டமாக இந்த ஆலயம் வந்து வழிபட்டு வந்தனர்.

எமன் நாட்டைச் சேர்ந்த அப்ரஹா என்ற மன்னன், இதனால் பொறாமை கொண்டு, கஅபாவுக்குப் போட்டியாக, தனது நாட்டில் அன்றைய தலைநகராக இருந்த சன்ஆ எனும் நகரில் ஓர்ஆலயத்தை எழுப்பினான். அதன் புனிதம் குறித்துப் பரவலாகப் பிரச்சாரம் செய்தான்.

ஆனாலும், இவனது பிரச்சாரம் எந்தப் பலனையும் அளிக்கவில்லை. கஅபாவை நோக்கிச் செல்லும் கூட்டம் குறையவில்லை.

கஅபா ஆலயம் இருக்கும் வரை தனது நாட்டை நோக்கி மக்கள் வரமாட்டார்கள் என்பதை உணர்ந்து கொண்ட மன்னன், கஅபாவை இடித்துத் தரைமட்டமாக்கிட யானைப் படையைத் திரட்டிக் கொண்டு, மக்காவை முற்றுகையிட்டான்.

ஆனால், அவனால் கஅபா ஆலயத்தை இடிக்க முடியவில்லை. இறைவனால் அனுப்பப்பட்ட அபாபீல் எனும் பறவைகள் கற்களால் தாக்கி, அவனையும் அவனது படையினரையும் அழித்தன.

இது தான், இந்த அத்தியாயத்தில் கூறப்படும் வரலாற்றுச் சம்பவம். இந்த நிகழ்ச்சி நடந்த ஆண்டில் தான், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்தார்கள்.

இந்தச் சம்பவத்தை நினைவுபடுத்தி இறைவன் தனது ஆலயத்தை - உலகில் ஒரே இறைவனை வணங்குவதற்காக, முதலில் எழுப்பப்பட்ட ஆலயத்தை அற்புதமான முறையில் காப்பாற்றியதைத் தான் இந்த அத்தியாயம் குறிப்பிடுகிறது.

இறைவனின் வல்லமையையும் அவனது ஆற்றலையும் விளக்கி, இறை நம்பிக்கையை வலுப்படுத்துவதும், இத்தகைய ஆற்றலுடைய இறைவன், நபிகள் நாயகத்தையும் அவர்களால் உருவாக்கப்பட்ட சமுதாயத்தையும் காப்பாற்றி, அவர்களுக்கு வெற்றியளிப்பான் என்று நம்பிக்கையூட்டுவதும் தான் இந்த அத்தியாயம் அருளப்பட்டதன் பிரதான நோக்கம்.

இந்த அத்தியாயத்தைக் கேட்ட அன்றைய மக்கள், இப்படித் தான் இதைப் புரிந்து கொண்டனர். ஆனாலும், உலகம் உள்ளளவும் தோன்றக் கூடிய மக்களுக்கு, இன்னும் பல படிப்பினைகளும் இந்த அத்தியாயத்தில் அடங்கியுள்ளதை நாம் மறுக்க முடியாது.

இறை நம்பிக்கையாளர்களைப் பொறுத்தவரை, இந்தச் சம்பவத்தை நூறு சதவிகிதம் நம்புவார்கள். ஆனாலும், இறை நம்பிக்கையற்றவர்களின் பார்வையில் இது நம்ப முடியாத நிகழ்ச்சி, கட்டுக்கதை என்று தான் இதைக் கருதுவார்கள்.

நம்புவதற்குச் சிரமமான, அல்லது நம்ப முடியாத கட்டுக் கதைகளைக் கூறுவோர் கேட்பவர்கள் அப்படியே நம்ப வேண்டும் என்பற்காக இதைப் பற்றிச் சிந்திக்கக் கூடாது! கண்ணை மூடிக் கொண்டு நம்புங்கள் என்று தான் கூறுவது வழக்கம்.

ஆனால், இந்த அத்தியாயத்தில் இறை நம்பிக்கையற்றவர்களால் நம்ப முடியாத ஒரு நிகழ்ச்சி கூறப்பட்டாலும், இதன் துவக்கத்திலேயே நீர் சிந்திக்கவில்லையா? என்று கூறப்படுகிறது.

ஆம்! சிந்திக்காது நம்புங்கள் என்று கூற வேண்டிய இடத்தில், சிந்திக்குமாறு தூண்டுகிறது இந்த அத்தியாயம்.

அப்படியானால், இந்த அத்தியாயத்தில் சிந்திக்க வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது என்பது தெளிவாகிறது.

எதைச் சிந்திப்பது? யானைப் படையினரை உமது இறைவன் என்ன செய்தான் என்பதைச் சிந்திக்கவில்லையா? என்று கூறாமல் எப்படி ஆக்கினான் என்பதைச் சிந்திக்கவில்லையா? என்று இந்த அத்தியாயம் கூறுகிறது.

என்ன நடந்தது? என்பதைச் சிந்திப்பதற்கும் எப்படி நடந்தது? என்பதைச் சிந்திப்பதற்கும் மிகப் பெரிய வேறுபாடு உள்ளது.

என்ன நடந்தது? என்பதைச் சிந்தித்தால், நடந்த சம்பவத்தைப் பூரணமாக அறிந்துகொள்க என்பது பொருள்.

எப்படி நடந்தது? எவ்வாறு அவர்கள் அழிக்கப்பட்டார்கள்? என்பதைச் சிந்திக்கச் சொல்கிறான் இறைவன்.

இது எப்படி நடந்தது? இவர்களை அழிக்க எத்தகைய சக்தி பயன்படுத்தப்பட்டுள்ளது? என்பதைச் சிந்தியுங்கள் என்கிறான் இறைவன். அதனால் தான் கைஃப ஃபஅல (எப்படி அழித்தான்) என்ற வாசகத்தைப் பயன்படுத்தியுள்ளான்.

எப்படி அழித்தான் என்பதைச் சிந்திக்கச் சொல்வதன் பயன் என்ன? எப்படி நடந்தது என்பதை ஆராயுமாறு ஒருவரிடம் நாம் கூறினால், அதை அவர் கண்டுபிடித்து, அது போல் செய்ய முடியும் என்ற நிலையில் தான் எப்படி நடந்தது எனச் சிந்தித்துப் பார் என்று நாம் கூறுவோம்.

இது போன்ற வார்த்தைப் பிரயோகமே இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

எறியப்பட்ட கல்லை முதலில் எடுத்துக் கொள்வோம். சூடேற்றப்பட்ட கல் என்று பரவலாக தமிழாக்கம் செய்யப்பட்டு வந்தாலும் அந்தப் பொருளே நமது ஆய்வுக்குப் போதுமானதாக இருந்தாலும், அந்தப் பொருள் சரியானதன்று.

பி ஹிஜாரதின் சிஜ்ஜீல் எனக் கூறினால், சூடேற்றப்பட்ட கல் எனும் தமிழாக்கம் சரியானதாக இருக்கலாம்.பி ஹிஜாரதின் மின் சிஜ்ஜீல் என்று இறைவன் கூறுகிறான். இந்த மின் என்ற வார;த்தை மிகவும் கவனமாக ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும்.

கா(த்)தமுன் மின் தஹபின் என்றால், தங்கம் எனும் மூலத்தாலான மோதிரம் என்று பொருள். ஒரு மூலத்தாலான என்ற கருத்து மின் என்ற சொல்லில் அடங்கியுள்ளது.

ஹிஜாரதுன் என்றால், கல் என்பது பொருள்.மின் சிஜ்ஜீல் என்றால், சிஜ்ஜீல் எனும் மூலத்திலான என்பது பொருள்.

ஹிஜாரதுன் மின் சிஜ்ஜீல் என்றால், சிஜ்ஜீல் எனும் மூலத்தினாலான கல் ஆகும்.

அதாவது, கல் என்றால் வீதியில் கிடக்கும் சாதாரண கல் என்று நினைத்து விட வேண்டாம். மிக மிகக் கடுமையான வெப்பத்தைக் கொண்ட, சிஜ்ஜீல் எனும் மூலத்திலான கல் என்று இறைவன் கூறுகிறான். சிஜ்ஜீல் என்பதன் பொருள் மிகவும் வெப்பமானது என்பது பொருளாகும்.

அணுகுண்டுக்குத் தேவையான யுரேனியம், புளுட்டோனியம் போன்றவை அடிப்படையில் கல் வகை தான். ஆனாலும், கடுமையான வெப்பத்தைக் கொண்டது. வெப்பத்தின் அளவைக் கொண்டு மதிப்பிடக் கூடியது. இத்தனை கிலோ டன் வெப்பமுடையது என்று தான் அதன் சக்தியைக் குறித்துக் குறிப்பிடுகின்றனர்.

மண்ணில் மறைந்து கிடக்கின்ற, மிகவும் கடுமையான வெப்பத்தை வெளிப்படுத்தக் கூடிய, ஒரு மூலப் பொருளால் உருவாக்கப்பட்ட கல் என்று இந்த வசனம் கூறுகிறது.

வெறும் அற்புதம் என்ற வகையில் மாத்திரம் நடத்தப்பட்டதென்றால், அந்தக் கல்லுக்குரிய சக்தியை இறைவன் குறிப்பிட வேண்டியதில்லை. இன்னும் சொல்வதானால், சாதாரண கல்லால் அழிப்பது தான் அற்புதமாகும். சக்தி மிக்க கல்லால் அழிப்பதில் பெரிய அற்புதம் இல்லை.

கல்லின் மூலத்தையும் அதன் தன்மையையும் இறைவன் கூறியிருப்பதிலிருந்தும், அதைச் சிந்தித்துப் பார்க்குமாறு கூறியிருப்பதிலிருந்தும் அற்புதமாக நடந்த சம்பவமாக மட்டும் நினைத்து விட வேண்டாம் என்று மறைமுகமாக உணர்த்தப்படுகிறது.

அதாவது, உலகில் மண் இனத்தைச் சேர்ந்த மூலப்பொருள் ஒன்று உண்டு. அது, கடுமையான வெப்பத்தை வெளிப்படுத்தக் கூடியது. அதில், சிறிய அளவு கூட பெரும் படையை அழிக்க வல்லது. அதைச் சிந்தித்துக் கண்டுபிடித்துக் கொள்ளுங்கள் என்பது தான் இதிலிருந்து புரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.

இது மட்டுமன்றி, அந்தக் கற்களால் தாக்கப்பட்டவர்கள் அழிந்த விதம், இன்னும் நம்மை வியப்பிலாழ்த்துகிறது.

அந்தக் கல் பட்டதும் மூர்ச்சையுற்றார்கள்!, அல்லது அதிர்ச்சியில் பிணமானார்கள் என்றெல்லாம் இறைவன் கூறாமல், மென்று உமிழப்பட்ட வைக்கோல் போலானார்கள் என்கிறான்.

அதாவது இந்தக் கல்லால் தாக்கப்பட்டவர்கள், வெடித்துச் சிதறிக் கூழாகி விட்டனர் என்கிறான். எவரது உடலும் முழு உடலாக இருக்கவில்லை.

அணு சக்தியைப் பயன்படுத்தினால் அதன் மூலம் ஏற்படும் அழிவு எப்படி இருக்குமோ, அதை நம் கண் முன்னே கொண்டு வருகிறான் இறைவன்.

பெரும் படையைத் திரட்டி வந்தவர்கள் மீது போடப்பட்ட அந்த அணுகுண்டு, அளவில் மிகவும் குறைவானதாகும். ஒரு பறவையின் வாயில் குறிபார்த்து வீசுவதற்கு ஏற்ற வகையில், அதிக பட்சமாக பத்து கிராம் எடையைத் தான் வைக்க முடியும். நூறு பறவைகள் வந்திருந்தால் கூட, அவை சுமந்து வந்த கற்களின் மொத்த எடை ஒரு கிலோ தான். ஒரு கிலோவால் ஒரு படையை அழிக்க முடியுமா? அணுகுண்டால் முடியும்.

அது மட்டுமன்றி, இந்தக் கற்களை பறவைகள் சுமந்து வந்து போட்டன என்கிறான் இறைவன்.

சூடேற்றடப்பட்ட கல்லை - படையினரையே அழிக்க வல்ல கல்லை - பறவைகள் வாயில் சுமக்கும் போது, அந்தச் சூட்டினால் பறவைகள் கருகவில்லையே! இது ஏன்?

இதுவும், சிந்திக்க வேண்டிய ஒன்றாகும். சில பேர் கூறுவது போல், அந்தக் கல் பழுக்கச் சூடு படுத்தப்பட்டிருந்தது என்று பொருள் கொண்டால், படையினர் அழிவதற்கு முன், பறைவகள் அழிந்து போயிருக்க வேண்டும்!

இந்தச் சூடு என்பது, வீசி வெடிக்கப்படும் போது தான் வெளிப்படுமே தவிர, வெடிக்காமல் சுமக்கும் போது வெளிப்படாது. எந்த வெடி குண்டையும் நாம் சுமந்தால், நம்மை அது சுடுவதில்லை. வெடிக்கச் செய்தால், அதிலிருந்து வெளிப்படும் வெப்பம் நம்மையே அழித்துவிடும்.

இதிலிருந்து, அந்த வெப்பமான மூலப் பொருளின் தன்மை என்ன என்பதையும் இறைவன் கூறுகிறான்.

அது மாத்திரமன்றி, இத்தகைய வெடிகுண்டுகளை நாம் தூக்கிச் செல்ல வேண்டியதில்லை; இருந்த இடத்திலிருந்தே ஏவி, இன்னொரு இலக்கைத் தாக்க முடியும் என்பதையும், அதாவது ஏவுகணையைப் பற்றியும் இங்கே குறிப்பிடுகிறான்.

உலகில் உள்ள எந்தப் பறவையையும் அபாபீல் என்று கூறுவதில்லை. இது, இறைவனே சூட்டிய பெயர். அவை, இந்தப் பணிக்காக மாத்திரம் அனுப்பிய பறவைகள்.

நாட்டு மக்களுக்குத் தெரியாத பறவையைப் பற்றிக் கூறுகிறான். அது, இறைவனால் அனுப்பி வைக்கப்பட்ட உயிருள்ள பறவையாக இருக்கலாம் என்பதை நாம் மறுக்க வேண்டியதில்லை.

இதையும் சிந்திக்க வேண்டுமல்லவா? தயாரிக்கப்பட்ட வெடிகுண்டுகளைத் தூக்கிக் கொண்டு அலையத் தேவையில்லை. இருந்த இடத்திலிருந்தே பொருத்தலாம். அவை அபாபீல் பறவையைப் போல், பறந்து சென்று குறிப்பிட்ட இலக்கைத் தாக்கி அழித்து விடும் என்பதை விளங்கலாம்.

ஏவுகணை குறித்து வேறு வசனங்கள் உள்ளன. என்றாலும், அணுகுண்டு சக்தி குறித்து விளங்கிட இதுவே போதுமானதாகும்.

இன்றைய அரபுகள் இந்த வசனத்தை ஆய்வு செய்திருந்தால், அல்லது இனியாவது ஆய்வு செய்தால், அந்தப் பகுதியில் சிஜ்ஜீல் எனும் மூலப் பொருளைக் கண்டெடுத்திருக்க முடியும். ஏனோ இதிலெல்லாம் அவர்களுக்கு அக்கறையில்லை.

08.02.2010. 17:58 PM

இறைவன் கூறும் ஸலவாத் என்றால் என்ன?

பி. ஜைனுல் ஆபிதீன்

இது ஒற்றுமை இதழில் வெளியான கட்டுரை. நேயர்கள் பயன் பெறுவதற்காக இங்கே வெளியிடுகிறோம்.

இந்த நபியின் மீது அல்லாஹ்வும் அவனுடைய வானவர்களும் ஸலவாத் கூறுகின்றனர். நம்பிக்கை கொண்டோரே! அவர் மீது நீங்கள் ஸலவாத்தும் நல்ல முறையில் ஸலாமும் கூறுங்கள்!

திருக்குர்ஆன் 33:56

இது முஸ்லிம்கள் அதிக அளவில் செவியுறும் வசனங்களில் ஒன்றாகும். இவ்வசனத்தைத் தமிழகத்தின் மார்க்க அறிஞர்கள் பலர் தவறான பொருள் செய்து அதன் அடிப்படையில் விளக்கம் கூறி வருவதை நாம் காண்கிறோம்.

இவ்வசனத்தில் இரண்டு வாக்கியங்கள் உள்ளன.

1-இந்த நபியின் மீது அல்லாஹ்வும், அவனுடைய வானவர்களும் ஸலவாத் கூறுகின்றனர்.

2-நீங்கள் அவர் மீது ஸலவாத் கூறுங்கள்.

இதில் இரண்டாவது வாக்கியத்துக்கு அனைவரும் சரியாகவே பொருள் கொள்கின்றனர். ஆனால், முதல் வாக்கியத்துக்கு மேற்கண்டவாறு பொருள் கொள்வது தவறாகும்.

இது எப்படி தவறான மொழிபெயர்ப்பாக உள்ளது என்பதை அறிவதற்கு முன் ஸலவாத் கூறுவது என்றால் என்ன என்பதை அறிந்து கொள்வது அவசியமாகும்.

இவ்வசனம் அருளப்பட்ட பின் எவ்வாறு ஸலவாத் கூறுவது என்ற சந்தேகம் நபித்தோழர்களுக்கு ஏற்பட்டது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் உங்கள் மீது நாங்கள் எவ்வாறு ஸலவாத் கூறுவது என்று விளக்கம் கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கீழ்க்காணும் சொற்களைக் கற்றுக் கொடுத்தனர்.

அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக ஹமீதுன் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக ஹமீதுன் மஜீத்.

ஸலாவத் எவ்வாறு கூறுவது என நபித்தோழர்கள் கேட்ட போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு விடையளித்தார்கள் என்ற செய்தி புகாரி (3369, 4798, 6357, 6358, 6360) ஆகிய எண்களுடைய ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்த மேற்கண்ட ஸலவாத்தின் பொருளை அறிந்து கொண்டால் ஸலவாத் கூறுதல் என்பதன் பொருளும் தெரிய வரும்.

இறைவா! இப்ராஹீம் நபிக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும், நீ அருள் புரிந்ததைப் போல் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் அருள் புரிவாயாக!. நீ புகழுக்குரியவன், மகத்துவமிக்கவன்.

இறைவா! இப்ராஹீம் நபிக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் நீ பரகத் புரிந்ததைப் போல் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் பரகத் (மறைமுகமான பேரருள்) செய்வாயாக! நீ புகழுக்குரியவன், மகத்துவமிக்கவன்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த மேற்கண்ட ஸலவாத்தின் தமிழாக்கம் இது தான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருள் புரியுமாறு அல்லாஹ்விடம் நாம் வேண்டுவது தான் ஸலவாத் கூறுதல் எனப்படும் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

மற்ற சமுதாயத்தினர் தங்கள் நபிமார்களை வணக்கத்திற்குரியவர்களாகவும், பிரார்த்தனை செய்யப்படுவோராகவும் ஆக்கி விட்டனர். முஸ்லிம்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அவ்வாறு ஆக்கி விடக் கூடாது என்பதற்கான கேடயமே ஸலவாத் கூறுதல்.

நபிகள் நாயகத்திடம் நமது தேவைகளைக் கேட்காமல் அவர்களுக்காக நாம் தான் இறைவனிடம் கேட்கிறோம். இதிலிருந்து இறந்தவருக்காக நாம் தான் பிரார்த்தனை செய்ய வேண்டுமே தவிர இறந்தவரிடம் பிரார்த்திக்கக் கூடாது என்ற கருத்தும் பெறப்படுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த - தொழுகையில் நாம் ஓதி வருகின்ற - ஸலவாத் மட்டுமின்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரைக் கேட்கும் போது, நாமாக ஓதி வரும் ஸலவாத்தின் பொருளைக் கவனித்தாலும் இந்த உண்மையை உணரலாம்.

அல்லாஹும்ம ஸல்லி வஸல்லிம் வபாரிக் அலைஹி என்று சிலர் கூறுவார்கள். இறைவா! அவர்கள் மீது அருளும், பாக்கியமும் பொழிவாயாக என்பது இதன் பொருள்.

ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று வேறு சிலர் கூறுவார்கள். அவர்கள் மீது அல்லாஹ் அருள் புரிந்து ஈடேற்றமளிப்பானாக என்பது இதன் பொருள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்காக நாம் செய்யும் பிரார்த்தனையே ஸலவாத் என்பதை இதிலிருந்தும் அறிந்து கொள்ளலாம்.

இதை விரிவாக விளக்குவதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

ஸலவாத் கூறுதல் என்பதன் பொருளை விளங்காமல் ஸலவாத் கூறுவதன் மூலம் நபிகள் நாயகத்திடம் நாம் எதையோ வேண்டுவதாகச் சிலர் நினைக்கின்றனர். சாதாரண மக்கள் இவ்வாறு நினைப்பதையாவது மன்னித்து விடலாம். சில மவ்லவிமார்களும், இப்படி விளங்கி வைத்திருப்பது நமக்குப் பெரும் வியப்பாக இருக்கிறது.

நபிகள் நாயகத்திடம் எதையும் கேட்கக் கூடாது. அவர்களுக்காக நாம் தான் கேட்க வேண்டும் என்ற தத்துவத்தை உள்ளடக்கிய ஸலவாத்தை இதற்கு நேர் எதிராக விளங்கியுள்ளனர்.

இனி முன்னர் குறிப்பிட்ட விசயத்திற்கு வருவோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் ஸலவாத் கூறுகிறான் என்று பொருள் கொள்வது எவ்வாறு தவறு என்பதைக் காண்போம்.

நபிகள் நாயகத்திற்காக இறைவனிடம் வேண்டுவதே ஸலவாத் என்பதை விளங்கியுள்ளோம். இதனடிப்படையில் அல்லாஹ் ஸலவாத் கூறுகிறான் என்றால் நபிகள் நாயகத்திற்காக அல்லாஹ் இறைவனிடம் அருளை வேண்டுகிறான் என்ற கருத்து வருகிறது.

அதாவது நாம் கூறுவது போலவே அல்லாஹ்வும் ஸலவாத் கூறுகிறான் என்றால்- அல்லாஹும்ம ஸல்லி வஸல்லிம் வபாரிக் அலைஹி என்று அல்லாஹ் கூறுகிறான் என்றால் - இத்தகைய விபரீத அர்த்தம் வரும்.

இறைவா! நீ அருள் புரிவாயாக என்று அல்லாஹ் எப்படிக் கூறுவான்?

அப்படி அல்லாஹ் கூறினால் அல்லாஹ்வுக்கு மேல் ஒரு அல்லாஹ் இருக்கிறானா?

அந்த அல்லாஹ்விடம் இந்த அல்லாஹ் இவ்வாறு வேண்டுகிறானா?

என்றெல்லாம் பல கேள்விகள் இதில் எழும். அல்லாஹ் ஸலவாத் கூறுகிறான் என்று பொருள் கொள்வது அப்பட்டமான இணை கற்பித்தலாகவே அமையும்.

அப்படியானால் இதன் சரியான பொருள் என்ன?

ஸலவாத் என்ற சொல்லுக்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளன.

  1. பிறருக்காக அருள் வேண்டுதல்.
  2. பிறருக்கு அருள் புரிதல்.

என்பதே அந்த இரண்டு அர்த்தங்கள்.

இச்சொல்லை மனிதர்கள், வானவர்கள், ஜின்கள் உள்ளிட்டவர்களுடன் தொடர்புபடுத்தும் போது, அருள் வேண்டினார்கள் என்று பொருள் கொள்ள வேண்டும்.

இதே சொல்லை அல்லாஹ்வுடன் இணைத்துச் சொல்லும் போது, அருளை வேண்டினான் என்ற பொருளைக் கொள்ளாமல் அருள் புரிகிறான் என்று பொருள் கொள்ள வேண்டும்.

இது நமது புதிய கண்டுபிடிப்பு அல்ல. அரபுக் கல்லூரிகளில் அல்ஃபியா போன்ற இலக்கண நூல்களிலேயே இந்த விபரம் கூறப்பட்டு உலமாக்கள் அறிந்து வைத்திருக்கிற சிறிய விசயம் தான். ஆனாலும், சில உலமாக்கள் தாம் அறிந்ததற்கு மாறாக அல்லாஹ் ஸலவாத் கூறுகிறான் என்று விபரீதம் புரியாமல் மேடைகளிலேயே பேசி விடுகின்றனர்.

இவ்வசனத்திற்கு முழுமையாகப் பொருள் கொள்வதென்றால் கீழ்கண்டவாறு தான் பொருள் கொள்ள வேண்டும்.

இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். வானவர்கள் அவருக்காக அவனது அருளை வேண்டுகின்றனர். நம்பிக்கை கொண்டோரே நீங்களும் அவருக்காக அருளை வேண்டுங்கள்! நல்ல முறையில் அவருக்காக ஸலாம் கூறுங்கள்.

இப்படித் தான் இவ்வசனத்திற்குப் பொருள் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்திருந்தால் அல்லாஹ் ஸலவாத் கூறுகிறான் என்பது போன்ற விபரீதமான சொற்கள் வழக்கத்தில் வந்திருக்காது.

நாம் கூறியதை மேலும் வலுப்படுத்திட இதே அத்தியாயத்தின் 43வது வசனத்தையும் உதாரணமாகக் குறிப்படலாம்.

இருள்களிலிருந்து வெளிச்சத்திற்கு உங்களைக் கொண்டு செல்வதற்காக அவனும், அவனது வானவர்களும் உங்கள் மீது ஸலவாத் கூறுகின்றனர். அவன் நம்பிக்கை கொண்டோரிடம் அன்புமிக்கவனாக இருக்கிறான்.

திருக்குர்ஆன் 33:43

இவ்வசனத்தைக் கவனியுங்கள்! 56 வது வசனத்தில் நபிகள் நாயகத்தின் மீது அல்லாஹ் ஸலவாத் கூறுவதாகக் குறிப்பிட்டது போல் அனைத்து நம்பிக்கையாளர்கள் மீதும் அல்லாஹ் ஸலவாத் கூறுவதாக இவ்வசனம் கூறுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பயன்படுத்திய அதே சொல்லை இவ்வசனத்தில் அனைத்து முஸ்லிம்களுக்கும் இறைவன் இங்கே பயன்படுத்தியுள்ளான்.

அனைத்து முஸ்லிம்களுக்கும் அல்லாஹ் ஸலவாத் கூறுகிறான் என்று இந்த வசனத்திற்கு பொருள் கொள்ளாமல் அல்லாஹ் அருள் புரிகிறான் என்று சரியாக பொருள் செய்யும் உலமாக்கள், அது போன்று அமைந்த 56வது வசனத்திற்கு மட்டும் ஏறுக்கு மாறாகப் பொருள் செய்வதிலிருந்து அவர்கள் அறிந்து கொண்டே தான் தவறான கருத்தைத் தருகிறார்கள் என்பதை அறிய முடிகிறது.

33:43 வசனத்திற்குச் சரியான பொருள் கீழ்கண்டவாறு தான் அமைய வேண்டும்.

இருள்களிலிருந்து வெளிச்சத்திற்கு உங்களைக் கொண்டு செல்வதற்காக அவன் தான் உங்களுக்கு அருள் புரிகிறான். அவனது வானவர்கள் உங்களுக்காக அவனது அருளை வேண்டுகிறார்கள். நம்பிக்கை கொண்டோரிடம் அவன் அன்புமிக்கவனாக இருக்கிறான்.

இவ்வசனத்திற்குப் பொருள் கொள்வது போலவே 33:56 வசனத்திற்கும் பொருள் கொண்டால் எந்தக் குழப்பமும் ஏற்படாது.

பெரும்பாலான உலமாக்கள் சரியான முறையில் இதை விளக்கினாலும் மிகச் சிலர் தவறான பொருள் கொடுப்பதை எடுத்துச் சொல்லி அவர்களைத் திருத்தும் கடமை தங்களுக்கு இருக்கிறது என்பதை மறந்து விடக் கூடாது.

18.01.2010. 9:23 AM

More Articles …