Sidebar

17
Wed, Jun
சமீபத்திய செய்திகள்

லைலத்துல் கத்ர் இரவில் முழுக் குர்ஆனும் அருளப்பட்டதா?

லைலத்துல் கத்ர் இரவில் குர்ஆன் இறக்கப்பட்டது என்று கூறுகின்றார்கள். குர்ஆன் முழுவதுமாக இறக்கப்பட்டதா? அல்லது ஒரு அத்தியாயம் மட்டும் இறக்கப்பட்டதா?

குர்ஆன் ஒட்டு மொத்தமாக ஒரே நாளில் இறக்கியருளப்படவில்லை. சிறிது சிறிதாகவே அருளப்பட்டது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது வாழ்நாளில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அந்தந்தச் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப ஒரு வசனமோ, அல்லது சில வசனங்களோ, அல்லது ஒரு முழு அத்தியாயமோ அருளப்பட்டது.

(முஹம்மதே!) நாமே உமக்கு இக்குர்ஆனைச் சிறிது சிறிதாக அருளினோம்.

திருக்குர்ஆன் 76:23)

மக்களுக்கு இடைவெளி விட்டு நீர் ஓதிக் காட்டுவதற்காக குர்ஆனைப் பிரித்து அதைப் படிப்படியாக அருளினோம்.

திருக்குர்ஆன் 17:106

இவர் மீது குர்ஆன் ஒட்டு மொத்தமாக அருளப்படக் கூடாதா? என (நம்மை) மறுப்போர் கூறுகின்றனர். (முஹம்மதே!) இப்படித் தான் இதன் மூலம் உமது உள்ளத்தைப் பலப்படுத்திட சிறிது சிறிதாகவே அருளினோம்.

திருக்குர்ஆன் 25:32

திருக்குர்ஆன் சிறிது சிறிதாகவே அருளப்பட்டது என்பதையும், அதற்கான காரணத்தையும் இந்த வசனங்கள் தெளிவாகக் கூறுகின்றன.

மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம்.

திருக்குர்ஆன் 97:1

இந்த வசனத்தில் லைலத்துல் கத்ர் எனும் இரவில் அருளப்பட்டது என்று அல்லாஹ் கூறுவது திருக்குர்ஆன் அருளப்பட்டதன் துவக்கம் என்றே புரிந்து கொள்ள வேண்டும்.

படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக!

திருக்குர்ஆன் 96:1

என்ற வசனம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட முதல் வசனமாகும். இந்த வசனம் லைலத்துல் கத்ரு எனும் இரவில் தான் அருளப்பட்டது என்று புரிந்து கொள்ள வேண்டும்.

12.08.2009. 5:04 AM

அல்லாஹ்வின் கைப்பிடிக்கு அளவு என்ன?

ஆதம் (அலை) அவர்களை இறைவன் தனது ஒரு கைப்பிடி மண்ணில் படைத்தான் என்று ஹதீஸ் உள்ளது. அறுபது முழம் அவருடைய உயரம் எனவும் ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் வானங்கள் அவனது கைப்பிடிக்குள் அடங்கும் என்று குர்ஆன் கூறுகிறது. அப்படியானால் அல்லாஹ்வின் கைப்பிடி என்பது அறுபது முழத்தை உள்ளடக்கும் அளவா? வானங்களை உள்ளடக்கும் அளவா?

ராஜ் முஹம்மத், குவைத்.

அல்லாஹ்வைப் பொருத்தவரை அவனது பிரம்மாண்டம் பற்றி நாம் வரையறுக்க முடியாது. ஆனால் அவனைக் குறிப்பிட்ட உயரத்துக்குள் அடக்க முடியாது. சில நேரங்களில் அவன் தனது தோற்றத்தை வானம் பூமியை விடவும் பெரிதாகக் காட்டுவான். சில நேரங்களில் மனிதர்கள் அண்ணாந்து பார்க்கும் சிறிய தோற்றத்திலும் இருப்பான். நிர்ணயித்த அளவு அவனுக்கு இல்லை என்பதால் நீங்கள் கேட்ட விஷயத்தில் முரன்பாடு ஏதும் இல்லை. இது குறித்து ஷேக் அப்துல்லா ஜமாலி விவாதத்தில் ஆதாரங்களை குறிப்பிட்டுள்ளோம்.

04.08.2011. 16:14 PM

இரவை பகல் தொடருமா?

7 : 54 வசனத்தில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை இங்கு சுட்டிக்காட்டுகிறேன். தயவு செய்து விளக்கம் அளிக்கவும் உங்கள் மொழியாக்கத்தில் இரவைப் பகலால் மூடுகிறான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வேறு வேறு தர்ஜுமாக்களில் இரவைக்கொண்டு பகலை மூடுகிறான் என்று மொழிபெயர்த்துள்ளனர்.

இரண்டும் முரண்பாடான கருத்தல்லவா? எது சரி?

இன்னொன்று, அதே வசனத்திற்கு , உங்கள் மொழியாக்கத்தில் பகல், இரவை தொடர்கிறது, என்று சொல்லியுள்ளீர்கள்.

வேறு வேறு மொழியாக்கங்களில் இரவு பகலைத் தொடர்கிறது என்று மொழியாக்கம் செய்துள்ளனர்.

இரண்டும் முரண்பாடான கருத்தல்லவா? எது சரி?

பதில்

நம்முடைய மொழி பெயர்ப்பு தான் சரியானது.

إِنَّ رَبَّكُمُ اللّهُ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ يُغْشِي اللَّيْلَ النَّهَارَ يَطْلُبُهُ حَثِيثاً وَالشَّمْسَ وَالْقَمَرَ وَالنُّجُومَ مُسَخَّرَاتٍ بِأَمْرِهِ أَلاَ لَهُ الْخَلْقُ وَالأَمْرُ تَبَارَكَ اللّهُ رَبُّ الْعَالَمِينَ (54)

யுக்ஷி

அல்லைல

அன்னஹார

என்று மூலத்தில் உள்ளது.

அல்லைல - அன்னஹார என்ற இரண்டு செயப்படு பொருட்கள் இதில் கூறப்பட்டுள்ளன. இவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட செயப்படு பொருள் வந்தால் முதலாவது கூறப்பட்ட செயப்படு பொருளுக்கு ஐ காரம் சேர்த்து அர்த்தம் செய்ய வேண்டும். அதாவது இரவால் என்று கூறாமல் இரவை என்று மொழி பெயர்ப்பது தான் சரியானது.

இரண்டாவதாக கூறப்பட்ட மற்றொரு செயப்படு பொருளாக உள்ள அன்னஹார என்பதற்கு ஐ காரம் சேர்த்து பகலை என்று பொருள் கொள்ளாமல் ஆல் அல்லது மூலம் என்று சேர்த்து பொருள் செய்ய வேண்டும். அதாவது பகலால் பகல் மூலம் என்று கூற வேண்டும். தக்க காரணம் இருந்தால் தவிர இதில் மாற்றம் செய்யக் கூடாது என்பது அரபு இலக்கண விதி

இந்த இலக்கண விதி அனைவரும் அறிந்த விதியாக இருந்தாலும் மற்ற மொழிபெயர்ப்பாளர்கள் இரவு தான் பகலை மூடுகிறது என்று கருதியதால் அந்த அர்த்தம் வர வேண்டுமென்பதற்காக இதை மீறியுள்ளனர். தக்க காரணம் இருக்கும் போது இவ்வாறு மீறுவது இலக்கணப் பிழையாக ஆகாது என்ற அடிப்படையில் அவ்வாறு செய்துள்ளனர்.

ஆனால் இவர்கள் இரவு பகலின் அடிப்படையை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. உலகில் இரவு தான் இயற்கையானது. சூரியன் என்ற ஒரு பொருள் படைக்கப்பட்டதால் தான் பகல் ஏற்படுகிறது. சூரியன் என்ற ஒன்று இல்லாவிட்டால் எப்போதும் இருட்டு தான்.

பூமியின் இயற்கையான தன்மை இருட்டு எனும் போது அதை பகல் தான் மூடுகிறது. பகல் எனும் திரையை நீக்கி விட்டால் இரவாகி விடும்.

இதற்கேற்ப திருக்குர்ஆன் முதல் செயப்படு பொருளாக இரவை கூறி மாபெரும் அறிவியல் உண்மையைக் கூறியுள்ளது. ஆனால் இதை விளங்காமல் கருத்துப் பிழை வந்து விடும் என தவறாக்க் கருதி இலக்கணத்தை மீறி பொருள் செய்துள்ளனர்.

இரவும் அவர்களுக்கு ஒரு சான்று. அதிலிருந்து பகலை உரித்தெடுக்கிறோம். உடனே அவர்கள் இருளில் ஆழ்ந்து விடுகிறார்கள்.

திருக்குர்ஆன் 36:37

இவ்வசனத்தில் இரவில் இருந்து பகலை உரித்து எடுக்கிறோம் என இறைவன் கூறுகிறான். அதாவது இரவின் மீது பகல் எனும் போர்வை போர்த்தப்பட்டுள்ளதாகவும், பகலை உரித்து எடுத்தவுடன் தானாக இரவு வந்து விடுகிறது எனவும் இவ்வசனத்தில் சொல்லிக் காட்டுகிறான். அதே கருத்தைத் தான் நீங்கள் சுட்டிக்காட்டிய வசனமும் சொல்கிறது, நாம் செய்த மொழி பெயர்ப்பு தான் மிகச் சரியானது.

உங்களின் இரண்டாம் கேள்விக்கும் இதிலேயே விடை உள்ளது.

يَطْلُبُهُ حَثِيثاً

அதை இது தொடர்கிறது என்று தான் மூலத்தில் உள்ளது.

எது முதலில் உள்ளதோ அது தான் தொடரப்படும் பொருள் என்பதும், எது பிந்தையதாக உள்ளதோ அது தான் தொடரும் பொருள் என்பதும் தான் சரியான கருத்தாக இருக்க முடியும். எனவே இதிலும் நாம் செய்த அர்த்தம் தான் சரியானது. இரவு தான் இயற்கையானது எனும் போது இரவைப் பகல் தொடர்கிறது என்பதே சரியானது.

29.07.2011. 21:24 PM

பூமியை நெருப்புக் கோழி முட்டை வடிவில் படைத்ததாக குர்ஆனில் உள்ளதா?

இப்படி ஒரு அர்த்தம் இருப்பதாக ஜாகிர் நாயக் கூறி உள்ளார். இது சரியா?

முஹம்மத் அஃப்சல்

பதில் :

நீங்கள் குறிப்பிடும் வசனத்தின் சரியான மொழிபெயர்ப்பு இதுவே.

وَالْأَرْضَ بَعْدَ ذَلِكَ دَحَاهَا (30) 79

இதன் பின்னர் பூமியை விரித்தான்.

திருக்குர்ஆன் 79 : 30)

ஆனால் ஜாகிர் நாயக் இவ்வசனத்திற்கு இவ்வாறு பொருள் கொள்ளாமல் இதன் பின்னர் பூமியை நெருப்புக்கோழி முட்டையின் வடிவில் படைத்தான் என்று மொழிபெயர்த்துள்ளார்.

இந்த வசனத்தில் வரும் தஹா என்ற சொல்லுக்கு நெருப்புக்கோழியின் முட்டை என்று அர்த்தம் உள்ளதாகவும் எனவே பூமியை நெருப்புக் கோழி முட்டை வடிவில் படைத்தான் என்று மொழிபெயர்த்துள்ளார்.

பூமி நெருப்புக் கோழியின் முட்டை வடிவில் அமைந்திருப்பதாகவும் இந்த மாபெரும் விஞ்ஞான உண்மையை இவ்வசனம் கூறுவதாகவும் அவர் வாதிடுகின்றார்.

இவர் கூறுவது போல் தஹா என்ற சொல்லுக்கு இப்பொருள் இருப்பதாக அரபு அகராதி நூற்களிலோ, தஃப்சீர் நூற்களிலோ கூறப்படவில்லை. மாறாக தஹா என்ற இச்சொல்லுக்கு பஸத விரித்தான் என்பதே பொருள் என அனைவரும் கூறுகின்றனர்.

தஹா என்ற இச்சொல்லிலிருந்து பிரிந்து வந்த மத்ஹா, உத்ஹீ போன்ற சொற்களுக்கு நெருப்புக் கோழியின் கூடு என்றும் அது குஞ்சு பொறிக்கும் இடம் என்றும் பொருள் கூறப்பட்டுள்ளது.

நெருப்புக் கோழி தனது கூட்டை தரையில் பரவிய வகையில் விரிவாக அமைக்கக் கூடியது. விரித்தல் என்ற அசலான பொருள் இதனுள் அடங்கியுள்ளது. இதனடிப்படையில் தான் இச்சொற்களுக்கு நெருப்புக் கோழியின் கூடு என்று பொருள் கொள்ளப்படுகின்றது.

தஹா என்ற சொல்லிலிருந்து பிரிந்து வந்த எந்தச் சொல்லுக்கும் நெருப்புக் கோழியின் முட்டை என்ற பொருள் அறவே கிடையாது. பரந்து விரிந்த கூடு என்ற கருத்தில் நெருப்புக் கோழியின் கூடு என்ற பொருள் மட்டுமே உள்ளது.

ஒரு பேச்சுக்கு இவர் கூறுவது போல் துஹ்யா என்ற சொல்லுக்கு நெருப்புக் கோழியின் முட்டை என்று பொருள் இருப்பதாக ஒத்துக் கொண்டாலும் இவருடைய மொழிபெயர்ப்பு சரியாகி விடாது.

ஏனென்றால் துஹ்யா என்பது பெயர்ச் சொல். தஹா என்பது வினைச் சொல். அரபு மொழியில் ஒரு வினைச் சொல்லுக்கு பொருள் கொடுப்பதாக இருந்தால் அந்த வினைச் சொல்லுக்கு என்னென்ன பொருள்கள் கூறப்பட்டுள்ளன என்றே பார்க்க வேண்டும். இதை விட்டுவிட்டு நமது இஷ்டப்படி பெயர் சொல்லிலிருந்து அந்த வினைச்சொல்லுக்கு பொருள் எடுத்தல் கூடாது.

ஒரு வினைச் சொல்லை அரபு அகராதியில் குறிப்பிடுகின்றார்கள் என்றால் அதற்குரிய அனைத்து அர்த்தங்களையும் விவரிக்காமல் விட மாட்டார்கள்.

எந்த அரபு அகராதி நூலிலும் தஹா இந்த வினைச் சொல்லுக்கு நெருப்புக் கோழியின் முட்டை வடிவில் ஆக்கினான் என்று பொருள் கூறப்படவே இல்லை.

எனவே ஜாகிர் நாயக் செய்துள்ள இந்த மொழிபெயர்ப்புக்கு எந்த ஆதாரமும் இல்லை.

விஞ்ஞான உண்மைகளைப் பற்றிப் பேசும் வசனங்கள் குர்ஆனில் இருப்பதைப் போன்று விஞ்ஞானத்தைப் பற்றி பேசாமல் வேறு விஷயங்களைப் பற்றி பேசக்கூடிய வசனங்களும் குர்ஆனில் இருக்கின்றன.

குர்ஆன் வசனங்கள் கூறாத விஞ்ஞானக் கருத்துக்கள் அவ்வசனங்களில் இருப்பதாக வலிந்து வாதிடுவது தவறான போக்காகும். இவ்வாறு செய்தால் இறைவன் கூறாத கருத்தை இறைவன் பெயரால் இட்டுக்கட்டிய குற்றம் ஏற்படும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

14.06.2011. 12:05 PM

முதலில் படைக்கப்பட்டது வானமா பூமியா?

கேள்வி

பூமி முதலில் படைக்கப்பட்டது என்று குர்ஆனில் ஓரிடத்திலும், வானம் தான் முதலில் படைக்கப்பட்டது என்று வேறொரு இடத்திலும் கூறப்பட்டிருப்பதாகக் கிறித்தவர்கள் கூறுகின்றனர்.

இது உண்மையா?

செய்யத் சம்சுத்தீன்.

கிறித்தவர்களின் பைபிளில் ஏராளமான பொய்களையும், ஆபாசங்களையும், முரண்பாடுகளையும் பட்டியல் போட்டு நாம் கேள்வி கேட்டு வருகிறோம். ஆண்டுகள் பல ஓடிய பிறகும் அவற்றுக்கு எந்த பதிலும் அவர்களால் சொல்ல முடியவில்லை.

குர்ஆனிலும் முரண்பாடு என்று கூறி பேலன்ஸ் செய்யும் தந்திரத்தைத் தான் அவர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். ஆனால் அதில் அவர்கள் உண்மையாளர்களாக இல்லை. இல்லாத முரண்பாட்டை இவர்களாகச் சித்தரிக்கின்றனர். அதில் ஒன்று தான் நீங்கள் சுட்டிக்காட்டுவது.

திருக்குர்ஆனின் இரண்டாவது அத்தியாயம் இருபத்தி ஒன்பதாவது வசனத்தில்

அவனே பூமியில் உள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். பின்னர் வானத்தை நாடி, அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்குபடுத்தினான். அவன் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.

என்று கூறப்பட்டுள்ளது. பூமியைப் படைத்த பின்னர் வானத்தைப் படைத்ததாக இவ்வசனம் கூறுகிறது.

قُلْ أَئِنَّكُمْ لَتَكْفُرُونَ بِالَّذِي خَلَقَ الْأَرْضَ فِي يَوْمَيْنِ وَتَجْعَلُونَ لَهُ أَنْدَادًا ذَلِكَ رَبُّ الْعَالَمِينَ (9) وَجَعَلَ فِيهَا رَوَاسِيَ مِنْ فَوْقِهَا وَبَارَكَ فِيهَا وَقَدَّرَ فِيهَا أَقْوَاتَهَا فِي أَرْبَعَةِ أَيَّامٍ سَوَاءً لِلسَّائِلِينَ (10) ثُمَّ اسْتَوَى إِلَى السَّمَاءِ وَهِيَ دُخَانٌ فَقَالَ لَهَا وَلِلْأَرْضِ ائْتِيَا طَوْعًا أَوْ كَرْهًا قَالَتَا أَتَيْنَا طَائِعِينَ (11) 41

பூமியை இரண்டு நாட்களில் படைத்தவனையா மறுக்கிறீர்கள்? மேலும் அவனுக்கு நிகரானவர்களைக் கற்பனை செய்கிறீர்கள். அவனே அகிலத்தின் அதிபதியாவான் என்று கூறுவீராக! நான்கு நாட்களில் அதன் மேலே முளைகளை ஏற்படுத்தினான். அதில் பாக்கியம் செய்தான். அதன் உணவுகளை அதில் நிர்ணயம் செய்தான். கேள்வி கேட்போருக்குச் சரியான விடை இதுவே. பின்னர் வானம் புகையாக இருந்த போது அதை நாடி விரும்பியோ, விரும்பாமலோ நீங்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று அதற்கும், பூமிக்கும் கூறினான். விரும்பியே கட்டுப்பட்டோம் என்று அவை கூறின.

திருக்குர்ஆன் 41 :9

இவ்விரு வசனங்கள் கூறுவதற்கு எதிராகப் பின்வரும் வசனம் பூமி பின்னர் படைக்கப்பட்டதாகக் கூறுகிறது என கிறித்தவ குழுக்கள் கூறுகின்றனர்.

படைக்கப்படுவதில் நீங்கள் கடினமானவர்களா? அல்லது வானமா? அதை அவன் நிறுவினான். அதன் முகட்டை உயர்த்திச் சீராக்கினான். அதன் இரவை மூடி பகலை வெளிப்படுத்தினான். இதன் பின்னர் பூமியை விரித்தான். அதிலிருந்து அதற்கான தண்ணீரையும், மேய்ச்சல் பயிர்களையும் வெளிப்படுத்தினான். மலைகளை முளைகளாக நாட்டினான்.

திருக்குர்ஆன் 79 : 27-30

இந்த வசனத்தில் பூமி பின்னர் படைக்கப்பட்டதாகக் கூறப்படவில்லை. மாறாக பின்னர் பூமியை விரித்ததாகத் தான் கூறப்பட்டுள்ளது. ஒன்றைப் படைப்பதும் அதை விரிவுபடுத்துவதும் வேறுவேறாகும்.

பூமியை அல்லாஹ் முதலில் படைத்து விட்டு, பின்னர் வானத்தைப் படைத்தான். அதன் பின்னர் ஏற்கனவே படைக்கப்பட்டிருந்த் பூமியை விரிவுபடுத்தினான் என்பது தான் இவ்வசனத்தில் இருந்து பெறப்படும் கருத்தாகும்.

பிரபஞ்சத்தில் உள்ள கோள்களில் பூமியில் மட்டுமே உயிரினங்கள் வாழ்வதற்கான ஏராளமான ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளன. பூமியைப் படைத்த பின்னர் அந்த ஏற்பாடுகளைச் செய்ய நான்கு நாட்கள் எடுத்துக் கொண்டதாக பின் வரும் வசனங்கள் கூறுகின்றன.

பூமியை இரண்டு நாட்களில் படைத்தவனையா மறுக்கிறீர்கள்? மேலும் அவனுக்கு நிகரானவர்களைக் கற்பனை செய்கிறீர்கள். அவனே அகிலத்தின் அதிபதியாவான்'' என்று கூறுவீராக! நான்கு நாட்களில் அதன் மேலே முளைகளை ஏற்படுத்தினான். அதில் பாக்கியம் செய்தான். அதன் உணவுகளை அதில் நிர்ணயம் செய்தான்.179 கேள்வி கேட்போருக்குச் சரியான விடை இதுவே.

திருக்குர்ஆன் 41:9,10

பூமியை முதலில் படைத்து விட்டு பிறகு வானத்தை அல்லாஹ் படைத்தான். அதன் பின்னர் பூமியில் பல ஏற்பாடுகளைச் செய்து அதை விரிவாக்கம் செய்தான். அதைத் தான் குர்ஆன் கூறுகிறது. வானத்தைப் படைத்த பின் பூமியைப் படைத்ததாக திருக்குர்ஆன் கூறவில்லை.

எனவே இதில் எந்த முரண்பாடும் இல்லை.

28.10.2011. 13:02 PM

லூத் நபி கூறியதை முரண்பட்டு குர்ஆன் கூறுகிறதா?

குர்ஆனில் முரண்பாடு எனக் கூறும் கிறித்தவர்கள் நபி லூத் (அலை) அவர்களின் சமுதாயத்தின் பதில் இதுவாக இருந்தது என ஓரிடத்திலும் வேறொரு இடத்தில் வேறு ஒரு பதிலைச் சொன்னார்கள் என்றும் உள்ளதாக கூறுகின்றனர். குர்ஆனில் முரண்பாடுகள் இருப்பதாக வாதிடுகின்றனர். விளக்கம் தேவை.

செய்யத் ஷம்சுத்தீன்

லூத் நபிக்கு அவர்களின் சமுதாயத்தார் அளித்த பதிலை அல்லாஹ் இரண்டு இடங்களில் குறிப்பிடுகின்றான். இந்த பதில்கள் வேறுபடுவதால் இதை முரண்பாடாகச் சிலுவை வணங்கிகள் குறிப்பிட்டுள்ளனர்.

فَمَا كَانَ جَوَابَ قَوْمِهِ إِلَّا أَنْ قَالُوا أَخْرِجُوا آلَ لُوطٍ مِنْ قَرْيَتِكُمْ إِنَّهُمْ أُنَاسٌ يَتَطَهَّرُونَ(56)27

லூத்துடைய குடும்பத்தினரை உங்கள் ஊரை விட்டும் வெளியேற்றுங்கள்! அவர்கள் தூய்மையான மக்களாகவுள்ளனர் என்பதே அவரது சமுதாயத்தினரின் பதிலாக இருந்தது.

திருக்குர்ஆன் 27:56

أَئِنَّكُمْ لَتَأْتُونَ الرِّجَالَ وَتَقْطَعُونَ السَّبِيلَ وَتَأْتُونَ فِي نَادِيكُمْ الْمُنكَرَ فَمَا كَانَ جَوَابَ قَوْمِهِ إِلَّا أَنْ قَالُوا ائْتِنَا بِعَذَابِ اللَّهِ إِنْ كُنتَ مِنْ الصَّادِقِينَ(29)29

சரியான வழியைத் துண்டித்து விட்டு ஆண்களிடம் செல்கிறீர்களா? உங்கள் சபையில் அந்த வெறுக்கத்தக்க செயலைச் செய்கிறீர்களா? என்று அவர் தமது சமுதாயத்துக்குக் கூறிய போது, நீர் உண்மையாளராக இருந்தால் அல்லாஹ்வின் வேதனையைக் கொண்டு வருவீராக என்று கூறியதைத் தவிர வேறு எதுவும் அவரது சமுதாயத்தின் பதிலாக இருக்கவில்லை.

திருக்குர்ஆன் 29:29

27:56வது வசனத்தில் லூத்துடைய குடும்பத்தினரை உங்கள் ஊரை விட்டும் வெளியேற்றுங்கள்! என்று கூறியதாகவும்,

29 : 29 வது வசனத்தில் நீர் உண்மையாளராக இருந்தால் அல்லாஹ்வின் வேதனையைக் கொண்டு வருவீராக என்று கூறியதாகவும் சொல்லப்படுகின்றது.

இதைத் தான் முரண்பாடு என்கின்றனர்.

இவர்களுக்கு சிந்திக்கும் திறன் சிறிதளவும் இல்லை என்பது இதில் இருந்து தெளிவாகத் தெரிகிறது.

லூத் நபி அவர்கள் அந்த மக்களுக்குப் பிரச்சாரம் செய்த போது அவர்கள் லூத் நபிக்கு சொன்ன பதில் நீர் உண்மையாளராக இருந்தால் வேதனையைக் கொண்டுவா என்பதாகும்.

அதே சமயம் தங்கள் இனத்தவர்களிடம் அவர்கள் சொன்ன பதில் இவர்களை வெளியேற்றுங்கள் என்பதாகும்.

இவர்களை வெளியேற்றுங்கள் என்பது லூத் நபியை நோக்கிச் சொன்னதல்ல.

இரண்டு வகையான மக்களிடம் அவர்கள் இரண்டு விதமான பதில்களைச் சொல்லியுள்ளனர்.

ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டவர்கள் சார்பில் நான் மன்னிப்பு கேட்கிறேன் என்பதுதான் போப் ஆண்டவரின் பதிலாக இருந்தது.

பாதிரிமார்கள் திருமணம் செய்து கொள்வது தான் இதைத் தடுக்கும் என்பது தான் போப் ஆண்டவரின் பதிலாக இருந்தது.

இப்படி போப் சொன்னதை நாம் எடுத்துக்காட்டினால் இதை முரண் என்று சொல்ல முடியுமா? ஒன்று மக்களுக்கு சொன்னது. மற்றொன்று பாதிரிமார்களுக்குச் சொன்னது. 

இதைப் புரிந்து கொள்வது போல் மேற்கண்ட வசனங்களையும் புரிந்து கொண்டால் இதில் முரண்பாடு உள்ளதாகக் கருத மாட்டார்கள்.

இதில் எந்த முரண்பாடும் இல்லை.

வேதனையைக் கொண்டு வா ஆனால் கொண்டு வராதே எனக் கூறினால் அதாவது வரும் ஆனால் வராது என்று பைபிள் கூறுவது போல் கூறினால் தான் அது முரண்பாடு.

28.10.2011. 13:15 PM

காதுகளில் அடித்தோம் என்பதன் பொருள்?

கேள்வி

உங்கள் திருக்குர்ஆன் மொழியாக்கத்தில் சூரா கஹஃபில் 11 வது வசனத்தை எனவே அக்குகையில் பல வருடங்கள் அவர்களை உறங்கச் செய்தோம் என்று மொழியாக்கம் செய்துள்ளீர்கள். இதே நேரம் ஜான் ட்ரஸ்ட் தர்ஜமாவில் ஆகவே நாம் அவர்களை எண்ணப்பட்ட பல ஆண்டுகள் வரை அக்குகையில் (தூங்குமாறு) அவர்களுடைய காதுகளின் மீது (திரையிட்டுத்) தடையேற்படுத்தினோம் என்று மொழியாக்கம் செய்துள்ளார்கள். எது சரி?

உங்கள் மொழியாக்கத்தில்

فَضَرَبْنَا عَلَى آذَانِهِمْ

என்ற அரபி வாசகத்திற்கான மொழியாக்கம் இல்லை. فِي الْكَهْفِ سِنِينَ عَدَدًا என்ற வாசகத்திற்கு மாத்திரம் தான் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இது தவறுதலாக விடுபட்டதா? அல்லது வேறு விளக்கங்களுக்காக விட்டீர்களா? என்பதைத் தெளிவுபடுத்துமாறு அன்பாய் வேண்டுகிறேன்.

ரஸ்மின், இலங்கை

எல்லா மொழிகளிலும் நேரடிப் பொருள் அல்லாமல் வேறு பொருளில் சில சொற்கள் பயன்படுத்தப்படும். மொழி பெயர்க்கும் போது எல்லா இடங்களிலும் அப்படியே மொழி பெயர்த்தால் சரியான கருத்து கிடைக்காது. எந்த இடத்தில் அப்படியே மொழி பெயர்த்தால் சரியான கருத்து கிடைக்குமோ அந்த இடத்தில் மட்டும் தான் அப்படியே அர்த்தம் செய்ய வேண்டும். அப்படி இல்லாத இடங்களில் அதன் கருத்து என்னவோ அதைத்தான் குறிப்பிட வேண்டும்.

உதாரணமாக வள்ளல் தன்மையைக் குறிக்க கை நீளமானவன்

الاطول يدا

என்று சொல்வார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இச்சொல்லைப் பயன்படுத்தியுள்ளனர்.

باب حدثنا موسى بن إسماعيل حدثنا أبو عوانة عن فراس عن الشعبي عن مسروق عن عائشة رضي الله عنها أن بعض أزواج النبي صلى الله عليه وسلم قلن للنبي صلى الله عليه وسلم أينا أسرع بك لحوقا قال أطولكن يدا فأخذوا قصبة يذرعونها فكانت سودة أطولهن يدا فعلمنا بعد أنما كانت طول يدها الصدقة وكانت أسرعنا لحوقا به وكانت تحب الصدقة

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியரில் ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், 'உங்களின் மரணத்திற்குப் பின் எங்களில் யார் முதலில் வந்து உங்களைச் சேர்வார்?' எனக் கேட்டதற்கு, 'உங்களுள் கை நீளமானவரே!' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர்கள் ஒரு குச்சியை எடுத்துத் தங்களின் கைகளை அளந்து பார்த்த போது ஸவ்தா (ரலி)வின் கைகளே மிகவும் நீளமானவையாக இருந்தன. (ஸைனப் (ரலி) இறந்த) பிறகு தான் கை நீளமானவர் என்பது, அதிகம் தர்மம் செய்பவரைக் குறிக்கிறது என்பதை அறிந்தோம். (ஸைனப்) அவ்வாறு அதிகம் தர்மம் செய்பவராக இருந்ததால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை முதலில் அடைந்தார். மேலும் அவர் தர்மம் செய்வதை (மிகவும்) விரும்பக் கூடியவராகவும் இருந்தார்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல்  : புகாரி 1420

கை நீளமானவர் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னது நேரடிப் பொருளில் அல்ல என்பதை இதிலிருந்து நாம் அறியலாம்.

இதற்கு வள்ளல் என்று தான் மொழி பெயர்க்க வேண்டும். கை நீளமானவன் என்று மொழி பெயர்த்தால் தவறான அர்த்தமாகி விடும்.

ஏனெனில் இச்சொல் தமிழ் மொழியில் திருடனைக் குறிப்பதற்கே பயன்படுத்தப்படும்.

அவன் ஒரு சிங்கம் என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம்.

இந்த இடத்தில் சிங்கம் என்பது வீரனைக் குறிக்கும். அரபு மொழியில் மட்டும் இது வீரனைக் குறித்து தமிழ் மொழியில் அப்படி குறிக்காவிட்டால் வீரன் என்று தான் இங்கே மொழி பெயர்க்க வேண்டும்.

ஆனால் சிங்கம் என்ற சொல்லை வீரனுக்கும் பயன்படுத்துவது தமிழ் மொழியிலும் உள்ளது. அரபி மொழியிலும் உள்ளது. எனவே அவன் ஒரு சிங்கள் என்றே நாம் மொழி பெயர்க்கலாம். தமிழ் கூறும் மக்கள் வீரன் என்று சரியாக புரிந்து கொள்வார்கள். கை நீளமானவன் என்பது அரபியில் வள்ளல் என்ற கருத்தில் பயன்படுத்துகிறார்கள். தமிழ் கூறும் மக்கள் திருடன் என்ற கருத்தில் பயன்படுத்துகிறார்கள். இது போன்ற இடங்களில் கை நீளமானவன் என்று மொழி பெயர்த்தால் வள்ளல் என்று விளங்காமல் திருடன் என்று தான் விளங்குவார்கள். எனவே கை நீளமானவன் என்று பொருள் கொள்ளாமல் வள்ளல் என்று தான் மொழி பெயர்க்க வேண்டும்.  மக்கள் சரியாகப் புரிந்து கொள்வது தான் முக்கியம்.

இது போல் தான் காதுகளில் அடித்தல் என்பது அரபு மொழியில் தூக்கத்தைக் குறிக்க பயன்படுத்துவார்கள். ஆனால் தமிழ் மொழியில் காதுகளில் அடித்தல் என்பதை தூக்கத்தைக் குறிக்க பயன்படுத்தும் வழக்கம் இல்லை.

இந்த நிலையில் காதுகளில் அடித்தோம் என்று நாம் இச்சொல்லுக்கு மொழி பெயர்த்தால் காதுகளில் அல்லாஹ் அடித்தான் என்று தான் தமிழர்கள் புரிந்து கொள்வார்கள். அரபியர்கள் தூங்கச் செய்தோம் என்று புரிந்து கொள்வார்கள்.

எனவே தான் காதுகளில் அடித்தோம் என்பதை எந்த அர்த்தத்தில் அரபுகள் பயன்படுத்துகிறார்களோ அந்த அர்த்தத்தையே நாம் செய்துள்ளோம்.

இதற்கு ஆதாரமாக பிரபலமான மூன்று தப்சீர்களை எடுத்துக் காட்டியுள்ளேன்.

تفسير الطبري

: فضربنا على آذانهم بالنوم في الكهف : أي ألقينا عليهم النوم،

تفسير ابن كثير

فَضَرَبْنَا عَلَى آذَانِهِمْ فِي الْكَهْفِ سِنِينَ عَدَدًا  أي ألقينا عليهم النوم حين دخلوا إلى الكهف، فناموا سنين كثيرة

تفسير القرطبي

عِبَارَةٌ عَنْ إِلْقَاءِ اللَّهِ تَعَالَى النَّوْمَ عَلَيْهِمْ. وَهَذِهِ مِنْ فَصِيحَاتِ الْقُرْآنِ الَّتِي أَقَرَّتِ الْعَرَبُ بِالْقُصُورِ عَنِ الْإِتْيَانِ بِمِثْلِهِ

குர்துபீ, இப்னு கஸீர், தபரி ஆகிய மூன்று தப்ஸீர்களிலும் இதன் கருத்து தூங்கச் செய்தோம் என்பது தான் என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் மற்றவர்கள் நேரடி அர்த்தம் செய்யப் போய் அவர்களுக்கே திருப்தி இல்லாமல் பிராக்கெட்டில் தூங்குமாறு என்று போட்டுள்ளனர்.

மேலும் மற்ற மொழிபெயர்ப்பாளர்கள் ஆதானிஹிம் என்பதற்கு காதுகள் என்று நேரடி அர்த்தம் செய்து விட்டு லரப்னா என்பதற்கு அடித்தோம் என்று பொருள் செய்யாமல் தடை ஏற்படுத்தினோம் என்று மறைமுகமான அர்த்தத்தைத் தான் செய்துள்ளனர். அதாவது அவர்களும் பாதிக்கு நேரடி அர்த்தம் செய்து மீதிக்கு வேறு அர்த்தம் செய்துள்ளனர்.

14.11.2011. 12:58 PM

நேர்வழி ஒன்றா பல வழிகளா?

குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் நேர்வழியைப் பற்றிக் கூறும் போது ஒன்று என்று தான் கூறப்படுகின்றது. ஆனால் 29:69 ம் வசனத்தில் வழிகள் என பன்மையாக அல்லாஹ் கூறுகின்றானே? இதற்கான விளக்கத்தைத் தரவும்.

ஜினான்

பதில்

நேர்வழி என்பது ஒரே வழி தான். பல வழிகள் கிடையாது. இதை திருக்குர்ஆனும், நபி மொழிகளும் தெளிவாக அறிவிக்கின்றன. சில இடங்களில் வழிகள் என்று பன்மையாகக் கூறப்படுவதில் குழப்பம் அடையத் தேவை இல்லை.

எல்லா மொழிகளிலும் சொற்கள் பேரினம் சிற்றினம் என இரு வகைகளில் உள்ளன.

உதாரணமாக உயிரினம் என்பது பேரினம். ஆடு மாடு என்பன போன்றவை சிற்றினம்.

அதாவது உயிரினம் என்பது அதனுள் அடங்கியுள்ள ஆடு மாடு மனிதன் போன்ற பலவற்றை உள்ளடக்கியுள்ளதால் அது பேரினம் எனப்படுகிறது. ஆடு மாடு போன்ற சொற்கள் ஒரு இனத்தை மட்டும் குறிப்பதால் அவை சிற்றினம் எனப்படுகிறது.

பேரினமாக உள்ள சொற்களை ஒருமையாகவும் சொல்லலாம். பன்மையாகவும் சொல்லலாம். உயிரினம் என்றாலும் அனைத்து உயிரினங்களையும் எடுத்துக் கொள்ளும். உயிரினங்கள் என்றாலும் அனைத்து உயிரினத்தையும் எடுத்துக் கொள்ளும்.

சொல்லைக் கவனத்தில் கொண்டால் ஒருமையாகச் சொல்லலாம். அதனுள் பல இனங்கள் அடங்கியுள்ளதைக் கவனத்தில் கொண்டால் பன்மையாகச் சொல்லலாம். பன்மையாக சொல்லும் போது பல சிற்றினங்கள் அதனுள் உள்ளன என்று புரிந்து கொள்ள வேண்டும்.

நகை என்றும் சொன்னாலும் நகைகள் என்று சொன்னாலும் ஒன்று தான்.

நகை என்பது சொல்லைக் கவனித்தும், நகைகள் என்பது அதனுள் அடங்கியுள்ள வளையல் செயின் மோதிரம் உள்ளிட்ட பலவகைகளைக் கவனித்தும் சொல்லப்பட்ட்டுள்ளது.

பரிசு வழங்கப்படும்; பரிசுகள் வழங்கப்படும் என்பது போல் ஏராளமான சொற்கள் இப்படி எல்லா மொழிகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. சொர்க்கம் சொர்க்கங்கள் என்று குர்ஆனில் பல இடங்களில் பயனப்டுத்தப்பட்டுள்ளதையும் இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும்.

வஹீ மட்டுமே மார்க்கம் என்ற அடிப்படையில் இஸ்லாம் என்பது ஒரு வழிதான்.

ஆனால் அதற்குள் தொழுகை, நோன்பு, கொள்கை, சட்டதிட்டங்கள் எனப் பல உட்பிரிவுகள் உள்ளதால் அதைக் கவனத்தில் கொள்ளும் போது நேர்வழிகள் என்றும் சொல்லலாம். இது எல்லா மொழிகளிலும் உள்ள சாதாரணமான நடைமுறை தான்.

23.12.2011. 22:52 PM

More Articles …