Sidebar

08
Sun, Sep
0 New Articles

பணம் கொடுத்து வேலை தேடுவது குற்றமா?

ஹராமான வருவாய்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

பணம் கொடுத்து வேலை தேடுவது குற்றமா?

நான் வேலையில்லாமல் இருக்கிறேன். வேலை வாங்கித் தரும் நிறுவனங்களில் குறிப்பிட்ட தொகையைக் கொடுத்து வேலை வாங்கினால் அது குற்றமா?

பதில்:

அதிகாரிகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும், நீதிபதிகளுக்கும் அளிக்கப்படும் பொருட்கள் பல வகைகளில் உள்ளன.

பிறர் பொருளை நம்முடையதாக ஆக்கிக் கொள்வதற்காக ஒரு பொருளை அதிகாரிகளுக்கோ, நீதிபதிகளுக்கோ கொடுத்தால் அது தடுக்கப்பட்டதாகும். இப்படிக் கொடுப்பது தான் லஞ்சம் எனப்படும். இவ்வாறு கொடுப்பதும் வாங்குவதும் குற்றமாகும்.

உங்களுக்கிடையே (ஒருவருக்கொருவர்) உங்கள் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்! தெரிந்து கொண்டே மக்களின் பொருட்களில் ஒரு பகுதியைப் பாவமான முறையில் சாப்பிடுவதற்காக அதிகாரிகளிடம் உங்கள் பொருட்களைக் கொண்டு செல்லாதீர்கள்!

திருக்குர்ஆன் 2:188

அது போல் வரிசைப்படியும், முன்னுரிமை அடிப்படையிலும் கிடைக்க வேண்டிய உரிமைகளை முன்னரே பெற்றுக் கொள்வதற்காக கொடுக்கப்படும் தொகையும் லஞ்சம் தான். நமக்கு முன்னால் காத்திருப்பவனைப் பின்னால் தள்ளி விட்டு நாம் முன்னால் அடைந்து கொள்வது முறைகேடாகும்.

மற்றவனின் உரிமை பறிக்கப்படுவதற்காக கொடுக்கப்படுவதால் இதுவும் லஞ்சம் தான்.

அது போல் தகுதியின் அடிப்படையில் பங்கிடப்படும் உரிமைகளில் குறைந்த தகுதி உள்ளவர் பணத்தைக் கொடுத்து அதிகத் தகுதி உள்ளவரைப் பின்னால் தள்ளி விட்டு அந்த இடத்தை அடைந்தால் அதுவும் குற்றமாகும். நம்மை விட அதிகத் தகுதி உள்ளவன் காத்திருக்கும் போது அவனைப் பின்னால் தள்ளி விடுவதற்காகக் கொடுக்கப்படும் பணமும் லஞ்சம் தான். இதை வாங்குவதும், கொடுப்பதும் குற்றமாகும்.

மற்றவர்களின் உரிமையைப் பாதிக்காத வகையில் நம்முடைய உரிமையைப் பெறுவதற்காக பல நேரங்களில் பணம் கொடுத்தாக வேண்டியுள்ளது.

மின் இணைப்பு பெற வேண்டும். வீடு கட்டுவதற்கு அனுமதி பெற வேண்டும். அல்லது இது போல் நமக்குச் சேர வேண்டிய உரிமையைப் பெற வேண்டும்.

இது போன்ற காரியங்களைச் செய்து தருவதற்காக பணம் கொடுக்கும் நிலை ஏற்படுகிறது. இப்படி கொடுக்கும் பணத்தின் மூலம் நாம் யாருடைய உரிமையையும் பறிப்பதில்லை. நம்முடைய உரிமையைத் தான் அடைந்து கொள்கிறோம்.

இதைச் செய்வதற்காக அதிகாரிகளுக்கு ஊதியம் அளிக்கப்படுவதால் மக்களிடம் எதையும் பெற்றுக் கொள்ளாமல் தான் செய்து கொடுக்க வேண்டும். அவர்களின் கடமையைச் செய்வதற்காக பணம் வாங்கினால் அது மார்க்கத்தில் குற்றமாகும். கடமையைச் செய்வதற்காக ஒரு முஸ்லிம் லஞ்சம் வாங்க அனுமதி இல்லை.

ஆனால் பணம் கொடுக்காமல் காரியம் ஆகாது என்ற அளவுக்கு கேடு கெட்டவர்கள் ஆட்சி செய்தால் அப்போது நாம் நம்முடைய உரிமையை அடைவதற்காக பணம் கொடுப்பது நிர்பந்தம் என்ற அடிப்படையில் மன்னிக்கப்படும்.

பணம் கொடுக்காவிட்டால் ரேஷன் கார்டு கிடைக்காது என்றால் ரேஷன் கார்டு அவசியம் என்பதால் இது நிர்பந்த நிலையாகி விடுகிறது. இல்லாவிட்டால் நம்முடைய அடிப்படைத் தேவைகளை அடைய முடியாமல் போய் விடும்.

கடமையைச் செய்ய லஞ்சம் கேட்பவனைக் கையும் களவுமாக பிடித்துக் கொடுக்க இயலும் என்றால் அதைச் செய்ய வேண்டும். அவ்வாறு இயலாதவர்கள் குற்றம் பிடிக்கப் பட மாட்டார்கள்.

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக சப்தமிடப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான். வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன் 2:173

மேலும் பார்க்க: திருக்குர் 6:119, 6:145, 16:115

முன்னுரிமை அடிப்படையில் அரசு வழங்கும் வேலை வாய்ப்பு அல்லாமல் தனியார்களுக்கு வேலைக்கு ஆட்களைச் சேர்த்தல் ஆட்களுக்கு வேலை கொடுத்தல் போன்றதை ஒருவர் செய்தால் அது ஒரு உழைப்பாகும். அந்த உழைப்புக்கு கூலி பெறுவதும், கொடுப்பதும் குற்றமாகாது.

நீங்கள் குறிப்பிட்ட பிரச்சனையில் மார்க்கத்திற்கு மாற்றமான அம்சம் எதுவும் இல்லை. எந்த வேலைக்கு எப்படிச் செல்லலாம் என்பது உங்களுத் தெரியாது. இவற்றை அறிந்தவர்களை நீங்கள் அனுகும்போது அவர்களுடைய உதவியால் உங்களுக்கு வேலை கிடைக்கின்றது. இதற்காக நீங்கள் அவர்களுக்குப் பணம் கொடுக்கிறீர்கள்.

இவ்வாறு நீங்கள் செய்யும் போது யாருடைய உரிமையையும் நீங்கள் பறிக்கவில்லை. நியாயத்திற்கு எதிராக நீங்கள் பணம் கொடுக்கவுமில்லை. எனவே இது தவறல்ல.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்த போது தனக்கு வழிகாட்டியாக ஒருவரை ஏற்படுத்தி அவருக்கு கூலி கொடுத்தார்கள்.

صحيح البخاري

2263 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامٌ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: " وَاسْتَأْجَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، وَأَبُو بَكْرٍ رَجُلًا مِنْ بَنِي الدِّيلِ، ثُمَّ مِنْ بَنِي عَبْدِ بْنِ عَدِيٍّ هَادِيًا خِرِّيتًا - الخِرِّيتُ: المَاهِرُ بِالهِدَايَةِ - قَدْ غَمَسَ يَمِينَ حِلْفٍ فِي آلِ العَاصِ بْنِ وَائِلٍ، وَهُوَ عَلَى دِينِ كُفَّارِ قُرَيْشٍ، فَأَمِنَاهُ فَدَفَعَا إِلَيْهِ رَاحِلَتَيْهِمَا، وَوَاعَدَاهُ غَارَ ثَوْرٍ بَعْدَ ثَلاَثِ لَيَالٍ، فَأَتَاهُمَا بِرَاحِلَتَيْهِمَا صَبِيحَةَ لَيَالٍ ثَلاَثٍ، فَارْتَحَلاَ وَانْطَلَقَ مَعَهُمَا عَامِرُ بْنُ فُهَيْرَةَ، وَالدَّلِيلُ الدِّيلِيُّ، فَأَخَذَ بِهِمْ أَسْفَلَ مَكَّةَ وَهُوَ طَرِيقُ السَّاحِلِ "

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் :

(மக்காவைத் துறந்து, ஹிஜ்ரத் செய்து மதீனாவுக்குச் சென்றபோது) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அபூபக்ர் (ரலி) அவர்களும் பனூ அப்து பின் அதீ, பனூதீல் குலத்தைச் சேர்ந்த ஒருவரை (வழிகாட்டியாகக்) கூலிக்கு அமர்த்தினார்கள்.  அவர் தேர்ந்த வழிகாட்டியாக இருந்தார். அம்மனிதர் ஆஸ் பின் வாயிலிலின் குடும்பத்தாரிடம் உடன்படிக்கை செய்திருந்தார்; மேலும், அவர், குறைஷிக்  காஃபிர்களின் மார்க்கத்தில் இருந்தார்.

நூல் : புகாரி 2263

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account